Wednesday, June 3, 2026
Home Blog Page 44

பழமைவாதம் (Primitivism)

பிரிமிடிவிஸம் எனப்படும் பழமைவாத இலக்கிய இயக்கம் மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த புதியபாணிக் கலை இயக்கத்தில் (Modern Art) தோன்றிய ஒரு வகையான உருவவாதப் போக்காகும். ஹென்றி ரூசோ (Henri Roussew 1844-1910) வின் படைப்புக்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகக் கருதப்படுகின்றன.

பழமைவாதக் கொள்கை

தொல்பழங்காலச் சழுதாயத்திற்குரிய கலை இலக்கியப் பாணிகளை, அதாவது வளர்ச்சியடையாத, எளியையான, குழந்தைத்தனமான, மிகவும் எளிதான பாணிகளைப் பின்பற்றுவதன் மூலம் பழமையைப் போற்றுவது இதன் கொள்கை.

குகைகளில் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் ஆடுமாடுகளை வரைந்த பாணியிலும் அவன் ஆண், பெண் உருவங்களை எவ்வாறு ஆடையணியின்றி வரைந்திருப்பானோ அவ்வகையில் ஓவியங்களை வரைவதும், இந்த அடிப்படையில் இலக்கியங்களைப் படைப்பதும் எனலாம்.

இந்த அடிப்படையில் பழமைவாதம் வரலாற்றுப் பூர்வமாக வளர்த்து வந்துள்ள கலை இலக்கிய விதிமுறைகளையும் உத்தி வகையில் நாம் பெற்றிருக்கிற வெற்றிகளையும் துணிவாக மறுப்பதாகும்.

 இப்பழமைவாதம் எதையும் மிகைப்படுத்தலும், எதார்த்த நிலையை விளக்குவதாகச் சித்தரிக்கப்படும் தனிநபர் விளக்கத்தில் செயற்கையே சிறந்ததெனக் காட்டிப் போலிச்செல்வாக்குப் பெற முயலும் ஒருவகைப் போக்காகும்.

பழமைவாதம்

 பழங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதைப் பொற்காலம் எனப் போற்றுவதும் இப்பழமைவாதத்தின் ஒரு கூறாகும்.  இப்பழமைவாதத்தின் சிலகூறுகள் சர்ரியலிஸத்தின் ஒரு கூறாக இருப்பதும் அறியத்தக்கது.

தமிழில் பெருஞ்சித்தனார் கவிதைகளும் உரை நடைகளும் இப்பழமை வாதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். தமிழ் உரைநடை எவ்வளவோ, வேகமும் விறுவிறுப்பும் ஆழமும் அகலப்பார்வையும் நிறைந்ததாய் வளர்ந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சங்ககால நடையில் எழுதுவது அவர் இயல்பு.  இதைப் பழமை வாதம் எனலாம்.

பார்வை நூல்

1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து

1.புனைவியல் (Romanticism)

புனைவியல் (Romanticism)

ரொமாண்டிசிஸம் எனப்படும் புனைவியலின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினம். புனைவியலின் இலக்கணம் ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கோணத்தில் விளக்கப்பட்டுள்ளன.

புனைவியல் என்றால் என்ன?

Romanticism என்னும் இச்சொல் ரொமான்ஸ் அல்லது நாவல் என்று பொருள்படும். Romanz என்னும் பழைய பிரஞ்சுச் சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது.  Romantic ஒரு காலத்தில் வீர தீரச் செயல்கள் நிறைந்த, உணர்ச்சி வயப்படுத்துகிற, கட்டுக்கடங்காத கற்பனை நிறைந்த செய்திகளைக் கொண்ட இலக்கிய வகையைக் குறிக்கும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல், வீரம், இயற்கை, இறந்த நிகழ்ச்சிகள், தனிமனித முக்கியத்துவம், தன்னுணர்ச்சிப் புலப்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாகக் கற்பனைச் சார்வு ஆகிய கூறுகள் மிகுந்துள்ள படைப்புகளைப் புனைவியல் கலை இலக்கியம் எனலாம். ஆகவே இதைப் புனைவியல் என்பது பொருந்தும்.

புனைவியலின் இலக்கணம்

இடைக்காலத்தில், இது முன்மை மரபியலுக்கு எதிராகத் தோன்றி வளர்ந்துள்ளது. தானென்னும் தன்முனைப்புடைய தனிநபர் ஆளுமை, தீவிரமான சமுதாய எதிர்ப்பு, அறியமுடியாத புதிர்த்தன்மை, உணர்ச்சிவயப்பாடு, கற்பனை,  உலகச்சஞ்சரிப்பு, வழக்கத்திலுள்ள சட்ட விதிகளிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முழுமையான சுதந்திரம் ஆகியன இவற்றைப் புனைவியலின் இலக்கணங்களாகச் சொல்லலாம்.

புனைவியல் பற்றி அறிஞர்களின் கருத்துகள்

  • பிரான்சு நாட்டில் விக்டர் ஹியூகோ (Victor Hugo,1802-1885)  என்பவர் இலக்கியத்திற்கு முன்மை மரபு விதிக்கப்பட்டிருந்த தடைகள், விதிமுறைகள் ஆகியவற்றிலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதும் அரசியல் கருத்துக்களை அரசியல்வாதிகளால் புரட்சிகரமாக ஆதரிப்பதும் ஆகிய இலக்கியத் தாராள வாதத்தை (libralism in literature) வலியுறுத்துகிறார்.
  • ஹென்ரிச் ஹெய்னே (Heinrich Heine, 1797-1856) என்னும் ஜெர்மானியர் கலை, இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் இடைக்காலப் பழைமைக்குப் புத்துயிரளித்தலே புனைவியலின் நோக்கம் என்கிறார்.
  • வால்டர் பாட்டர் (Watter Pater, 1839-1894) என்னும் ஆங்கில எழுத்தாளர் வழக்கத்திலிருந்த புனைவியலழகில் புதுமை சேர்ப்பது என்று கூறுகிறர்.

வேறுசிலர் புனைவியல் இயக்கம் என்பது விரும்பத்தகாத எதார்த்தத்திலிருந்து தப்பி ஓடுதல் என்று விளக்குகிறார்கள்.

  • வேட்ஸ் வொர்த் (words worth) முதல் ஸர் வால்டர் ஸ்காட் (sir watter scot) வரை மாறுபட்ட நோக்கும் போக்கும் உடைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் இப் புனைவியலுக்குள் அடங்குவதால் இதன் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினமே.
  • சுருங்கச் சொன்னால் புனைவியல் முன்மை மரபியலுக்கு எதிர்ப்பாக எழுந்து எதார்த்தவாதத்திற்கு மறுப்பாக அமைந்த ஒரு இலக்கிய இயக்கம் எனலாம். புனைவியல் பற்றித் திறனாய்வாளர் தி. க. சிவசங்கரன் அவர்கள் கூறும் கருத்துக்களும் மனங்கொளத்தக்கவை.

இலக்கியத்தில் புனைவியல்

ஆங்கிலத்தில் வேட்ஸ்வார்த், கோல்ரிஜ், பைரன், ஷெல்லி, கிட்ஸ், போ –  போன்றவர்கள் புனைவியல் கவிஞர்களாகக் கருதப்படுகின்றனர். ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் (As you like it) என்பதும் புனைவியல் நாடகமாகக் கருதப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், கந்தபுராணம் போன்றவைகள் புனைவியல் கூறுகள் காணப்படுகின்றன.  

விக்கிரமாதித்தன் கதை. திருவிளையாடல் புராணம், மதனகாமராசன் கதை, பிரதாப முதலியார் சரித்திரம், கல்கியின் பொன்னியின் செல்வன், பாத்திபன் கனவு, கலைஞர் கருணாநிதியின் புதையல் போன்ற நூல்களையே புனைவியல் இலக்கியங்களாகச் சொல்லலாம்.

அதீத கற்பனைவாதம்

ரொமாண்டிஸசிம் என்பதை அதீத கற்பனைவாதம் என்று சொல்லலாம். இன்றைய வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் துயரங்களையும் நேருக்குநேர் காண மறுத்து அவற்றிலிருந்து தப்பியோடி ஒரு சொர்கத்தீவில் திளைத்துக் கொண்டிருப்பதே அதீதக் கற்பனைவாதம்.

இப்போக்கு இன்றைய பத்திரிக்கைகளில் மக்களின் பார்வையைத் திசை திருப்புவதற்கும், அவர்களது போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் ஒரு சிறந்த ஆயுதமாக இது பயன்படுகிறது.

ரெவல்யூஷனரி ரொமாண்ட்டிசிஸம் என்பது மனித வாழ்வில் சுரண்டலும், அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது எனக்கருதும் புதுமை எழுத்தாளர்கள் தாம் கனவுகாணும் எதிர்காலச் சமுதாயம் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு அதீதக் கற்பனாவாதத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்போது “புரட்சிகரமான அதீதக் கற்பனாவாதம்” (ரெவல்யூஷனரி ரொமண்ட்டிசிசம்) என்ற புதுப்பெயரைப் பெறுகிறது.

பாரதியின் பாஞ்சாலிசபதத்தையும் பாரதிதாசனின் புரட்சிக் கவிதையையும் மாக்சிம் கார்க்கியின் ‘புயல் பறவையின் கீதம்’ போன்ற படைப்புக்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.!

முடிவுரை

            இன்றைய மக்களுக்கு சொல்லக்கூடிய கருத்துகளில் நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன.  அதற்காகப் படைப்பாளர்கள் தன்னுடைய கற்பனை திறத்தால் புதியதொரு படைப்பினை உண்டாக்கினர். அவைகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருந்தன.  மனித எண்ணத்திற்கு அப்பாற்பட்டவையாக இவ்புனைவியல் என்பது இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.

பார்வை நூல்

1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து

அன்பின் ஐந்திணை

கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஹாஜியின் கையில் இருந்த ஈரம் என் இதயத்தை ரணமாக்கியது. எங்கையோ நன்றாக வாழக்கூடியப் பெண் ஹாஜி. என்னை காதலித்தப் பாவத்திற்காக மலையுச்சியில் தற்கொலை செய்து கொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறாள். ரெண்டு பேரும் நிறைய அழுதாகிவிட்டது. இனிமேல் எங்களால் வாழவே முடியாது என்ற பட்சத்தில்தான் இந்த முடிவினை எடுத்துள்ளோம். கடைசியாகக் கண்களைத் திறந்து என் ஆருயிர் காதலியை ஒருமுறை பார்த்தேன். அவள் நன்றாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள். கிட்டதட்ட பதினாறாயிரம் அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த எங்களின் மேல் சில்லென்ற காற்று பரவியது. இருப்பினும் அவளின் முகம் கண்ணீராலும் வியர்வையினாலும் சோர்ந்து காணப்பட்டது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். “ஹாஜி…. ஐ..ஐ.. லவ்..லவ்..லவ்.. யு..” என்று உரக்க கத்தினேன். அவளும் பதிலுக்கு ”ஐ லவ் யு மகிழன்” என்றாள். இந்த வார்த்தையை அவளிடம் முதன்முதலாக நான் கேட்ட போது எப்படி மகிழ்ந்தேன் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் மனசு இனிக்கிறது. மீண்டும் அதே வார்த்தையைக் கேட்கின்றேன். ஹாஜியை இனிமேல் என்னால் பார்க்க முடியாது. அவளுடன் சேர்ந்து வாழவும் முடியாது. எங்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்தது. இப்படி இன்னும் என்னன்னவோ நினைக்கத் தோன்றியது. என்னாடா சாவும் போது வழவழன்னு பேசறான்னு நினைக்கிறிங்களா? காலத்தின் சூழ்நிலைகள் நம்மை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கும். அன்று நானும் அப்படித்தான் ஆகியிருந்தேன். ரெண்டு பேரும் ஒரே முடிவுடன் உச்சி மலையில் இருந்து குதிக்கத் தயாரானோம். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு எகிறிய போது, பின்னால் இருந்து ஒரு முரட்டு கை என் வலக்கையை அழுத்திப் பிடித்து இழுத்தது.

            ரெண்டடி பின்னால் வந்து விழுந்தவுடன்தான் கண்களைத் திறந்து பார்த்தேன். என் மேலேயே ஹாஜியும் வந்து விழுந்தாள். எங்களின் முன்னால் வெள்ளை உடை அணிந்த ஃபாதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரின் முகம் மிகவும் பிரகாசமாயிருந்தது. அவரின் பக்கத்தில் நின்ற இருவர் கறுப்பாகவும் குண்டாகவும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை இழுத்துப் போட்டிருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு சிஸ்டரும் நின்னுட்டு இருந்தாங்க.  அப்போ அந்த சிஸ்டர் என் கன்னத்தில் ”ப்ளார்” என்று அறை விட்டார்கள். கையை இடுப்பில் வைத்துக் கொண்டு என்னை முறைத்துப் பாரத்தார் சிஸ்டர். கன்னத்தில் கை வைத்தப்படி கண் கலங்க அவர்களை உற்றுப்பார்த்தேன். ஹாஜி என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.

            கொடைக்கானல் மலைப்பிரதேசம். ஆங்காங்கு பள்ளங்களும் காடுகளும் பெரியபெரிய கற்களும் நிறைந்த பகுதி. அப்போது வலுக்கட்டாயமாக அவர்களின் வாகனத்தில் ஏற்றப்பட்டோம். கொஞ்சநேரப் பயணத்திற்குப் பிறகு தேவலாயத்திற்கு வந்து சேர்ந்தோம். சின்னதா ஒரு கோயில். இல்ல… சர்ச்.. ஆமாம்! தேவாலாயம். அந்த தேவாலாயத்திற்கு உள்ளே சில பெஞ்சுக்களைக் கடந்து நாங்கள் இருவரும் அமர்தோம். எங்களின் முன்னால் சென்று கொண்டிருந்த ஃபாதர் திரும்பி அந்தக் குண்டர்களை நோக்கி அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாம். இயேசுவின் பிள்ளைகளான அவர்களைத் தனியாக விடுங்கள் என்றார். தனியாக விடுங்கள் என்றபோது சிஸ்டரை நோக்கித்தான் சொன்னார். இப்போது எங்களைத் தவிர அங்கு யாரும் இல்லை.

            சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு கத்தி அழுதேன். இன்னும் வேகமாக கத்தி அழுதேன். “மகிழன் அழாத… மகிழன்… சொன்னா கேளு.. அழாதா…” என்று என்னை ஆறுதல்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஹாஜி.

            “இல்ல ஹாஜி… நான் தப்பு பண்ணிட்டேன். போராடி ஜெயிக்கத் தெரியாதவன் எதுக்காக காதலிக்கனும். அதுவும் மதம் மாறி. என்னோட ஆசிரியர் ஜெய்க்குமார் அடிக்கடி சொல்லுவாரு தற்கொலை செய்யிறது கோழைத்தனம். இந்த உலகத்துல மனுசனா பிறந்ததுக்கே லாயக்கு இல்லாதவன்தான் அப்படிச் செய்வான்னு சொல்லுவாரு. அவருடைய மாணவன் நானா இப்படி செய்யத் துணிந்தேன். நான் மட்டும் சாவுறது இல்லாமா உன்னையும் சேர்த்து கொல்ல நினைச்சேனே! நான் பாவி.. நான் கொலைகாரன் ஹாஜி. என்னை மன்னிச்சுடு” என்று தேம்பி தேம்பி அழுதான் மகிழன். மகிழனின் கண்களையே பார்த்துக்கொண்டு அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள் ஹாஜி.

“ஒன்னுமில்ல மகி.. ஒன்னுமில்ல மகி..” – ஹாஜி

“நாம இனி ஒன்னா வாழனும். சாகக் கூடாது. வாழ்க்கையில போராடுவோம். ஜெயிக்கிற வரை போராடுவோம்” என்றான்.

அவர்கள் இருவரும் அமைதியாக தனக்கு எதிரேயுள்ள இறைவன் ஏசுநாதரின் திருமுகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். இறைவனின் முகம் அவர்களுக்குள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னால் இருந்துவந்த ஃபாதர் “என்ன குழந்தைகளா எப்படி இருக்கீங்க?” என்றார்.

“நல்லா இருக்கேன் ஃபாதர்” என்றான் மகிழன்.

“நீ எப்படிம்மா இருக்க..” என்றார்.

“நான் நல்லா இருக்கேன் ஃபாதர். ஆனா.. மகிதான் கொஞ்சம் மனசு உடைஞ்சு இருக்கான்” என்றாள் ஹாஜி.

ஃபாதர் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அவருடையக் கையில் சின்னதா சிலுவை ஒன்று இருந்தது. வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். “சரி.. நான் இப்ப உங்கள எதுவும் கேட்கல. ரெண்டு நாள் ஆகட்டும். எங்க தேவாலயத்துக்குப் பின்னால ஒரு வீடு இருக்கு. அங்க தங்கிக்கிங்க என்றார். தேவாலயத்தில் மூன்று வேலையும் நல்ல சாப்பாடு. நிம்மதியான தூக்கம். அங்கு இருப்பவர்கள் அனைவரும் அவர்களிடையே அன்பு பாராட்டினார்கள். தேவாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஆண்டவரை வணங்கிச் சென்றனர். மகிழன் அங்கு வருகின்றவர்களைப் பார்க்கும் போது நம்முடைய உறவினர்கள் யாராவது வருவார்களா என்று எண்ணுவதும் உண்டு. அந்த தேவாலயப் படிக்கட்டில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தான். பிறகு வேகமாக பின்னால் இருந்த தன் வீட்டிற்குச் சென்றான். ஹாஜி அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். “ஹாஜி எனக்கு போரடிக்குது. கொஞ்சநேரம் வெளியப் போயிட்டு வரேன்” என்றான். அவளிடமிருந்து ம்..என்ற ஒலி மட்டுதான் வந்தது. ஆனால் கண்களில் காதலை வைத்துக்கொண்டு மனசில் வலியோடுதான் அவளும் இருந்தாள். அந்த நிலையில் மகிழனை தனியாக அனுப்புவது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மகிழனின் முகத்தில் சாகனும் என்ற சலனம் அறவே போயிருந்ததை அவளால் உணர முடிந்தது. 

கால் போன வாக்கில் கொடைக்கானலைச் சுற்றித்திரிந்தான். எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. நாய் மாதிரி அலைந்தான். நாயும் எங்கே போய் விட்டாலும் மறுபடியும் தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிடும் என்பார்கள். அதுபோலத்தான் மகிழனும் வேட்டை நாயைப் போல வேட்டையாட எண்ணினான். அந்த வேட்டை பெரியதாக இருக்கவேண்டுமென எண்ணினான்.

மாலை நேரம். அந்தக் கடையில் கூட்டம் அலை மோதின. கடையை நெறுங்க நெறுங்க வாசனை மூக்கை துளைத்தது. பனையாரக் கடை. வயதான இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கடையின் உள்ளே இருந்தார்கள். ஒரு பெண் பனையாரச் சட்டியில்  மாவை ஊற்றினாள். இன்னொரு பெண் பக்கத்தில் இருந்த பெரியப் பானையில் இருந்த அரிசி மாவினைக் கரைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஆண், வாடிக்கையாளருக்கு கையில் காசை வாங்கி பனையாரத்தை காகிதத்தில் சுற்றிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவின் கைச்சுவையில் பனையாரம் தின்றது ஞாபகம். கைப்பையில் ஒரு இருபது ரூபாய் இருந்தது.

“இருபது ரூபாய்க்கு பனையாரம் தாங்கண்ணா” என்றேன். அந்தக் கூட்டத்தின் நடுவே நானும் பனையாரம் வாங்கிட்டு வெளியே வந்தேன். இருட்டு சூழ ஆரபித்தது. இதற்கு மேல் இங்கு இருக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்பொழுதுதான் ஹாஜியின் நினைப்பு வந்தது. “ஐயோ பாவம்! ஹாஜி என்ன பண்ணுவாள். காலையில் வந்தேன். நான் இல்லாததை நினைத்து எப்படி வருந்தியிருப்பாள். ஹாஜியை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இதயத்தை கூரிய முள்ளால் குத்துவது போன்று இருந்தது.

வீட்டிற்குள் நுழைத்த போது ஹாஜி தலையில் முக்காடிட்டபடி அல்லாவை வணங்கி கொண்டிருந்தாள். பிராத்தனை முடியும் வரை எதுவும் பேசாமல் மெதுவாகச் சென்று அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான். பிராத்தனை முடித்த ஹாஜி மகிழனைக் கண்டவுடன் கட்டிக்கொண்டாள். வேகமாக அழுதாள். தன் பற்களால் மகிழனின் தோள் பட்டையின் எலும்பை இறுகக் கடித்தாள்.

“ஹே… ஹாஜி என்ன பன்ற வலிக்குது..”

“என்ன விட்டுட்டு எங்கப் போன? நேரமாகியும் நீ வராததை நினைச்சு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா?”

“சாரிடா.. இனிமேல் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்” என்றான். “இந்தா உனக்காக பனையாரம் வாங்கிட்டு வந்தேன். சாப்பிடு” என்றான். ஆளுக்கொரு பனையாரமாக எடுத்துச் சாப்பிட்டார்கள்.

ஹாஜி சாப்பிட்டுக்கொண்டே, “ஃபாதர் சாயுங்காலம் வந்தார். நம்மளபத்தி கேட்டார். நானும் சொன்னேன். நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கரதாவும், உனக்கு ஒரு வேலை வாங்கி தரதாகவும் சொன்னார். நீ என்ன சொல்லுற மகி” என்றாள். மகிழன் யோசனையில் ஆழ்ந்தான்.

“அப்பா.. அம்மா.. ஞாபகம் வரலியா ஹாஜி..”

“எப்படி வரமாலிருக்கும். எங்க வாப்பாவை பாக்கனும் போல இருக்கு. அம்மா மடியில படுத்து தூங்கனும். அண்ணாகிட்ட சண்டை போடனும்ன்னு தோனுது. ஆனா.. இப்ப எதுவும் முடியாது” என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“உனக்கு மகி… நீ எப்படி ஃபீல் பன்ற..”

“நானும்தான். ஆனா! வாழ்க்கையில நாம ஜெயிக்கனும். அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஃபாதர் சொன்ன மாதிரி வேலைக்கு போங்க.. நானும் ஏதாவது ஒரு வேலைக்குப் போறேன்”

மகிழன் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. தனித்தனியாக ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொண்டார்கள். விளக்கு அணைக்கப்பட்டது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஹாஜியும் கண்ணயர்ந்தாள்.  இப்போது அவனுடைய முகமெல்லாம் வியர்த்தது. அந்த சாலையின் வளைவு அழகாயிருந்தது. நிழலொடு கூடிய அற்புதமான இடம். அருவிலிருந்து கொட்டுகிற தண்ணீர் அதன் பக்கத்தில் எப்போதும் ஊற்றிக்கொண்டே இருந்தது. அங்கே அவனின் கைகளையும் கால்களையும் யாரோ கட்டி உச்சி மலையிலிருந்து கீழே தூக்கிப்போட்டார்கள். மேலிருந்து கீழே விழும்போது தலையெல்லாம் சுற்றியது. அடிவயிறு கொலகொலவென்று ஏதோ செய்தது. பெரிய பாறையில் தலை மோதி சுக்கு நூறானது. “ஹாஜி… ” என்றவாறு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான். ஹாஜியும் விழித்துக்கொண்டாள்.  உடபெல்லாம் வியர்வையால் நனைந்து போயிருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஹாஜி அவசரமாக ஓடி தண்ணீர் கொண்டு வந்தாள். அந்த டம்ளரில் ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான். அவனுடைய கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள் அவள். அவனுடையத் தோளில் சாய்ந்து மேல்கையில் தன்னுடைய சிவந்த உதடுகளைப் பதித்து கண்ணீர் கரைய இரண்டு கண்களையும் மூடினாள்.

“ஹாஜி என்கூடவே இருப்பியா… என்னவிட்டு போகமாட்டியே..”

“கண்டிப்பா போக மாட்டேன் மகி” அவனின் முகம் இப்பொழுது மலர்ந்திருந்தது. விடியற்காலையில் எழுந்தவுடன் இருவரும் ஃபாதரை பார்க்கச் சென்றார்கள். தூக்கக் கலக்கத்தில் அதுவும் அந்த நேரத்தில் அவர்களை அங்கு பார்த்தவுடன் கொஞ்சம் பதறித்தான் போனார்.

“என்னாச்சு மகிழன்” – ஃபாதர்

“நாங்க தனியா ஒரு கடை போடலாமுன்னு இருக்கோம்” – மகிழன்.

“கடையா? புரியல எனக்கு? என்ன கடை? எப்படி நடத்துவீங்க? எங்க நடத்துவீங்க? பணம் வேண்டாமா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேச்சென்றார் ஃபாதர்.

“நீங்க கேட்கிறது சரிதான் ஃபாதர். சின்னதா ஹோட்டல் நடத்தலாமுன்னு இருக்கோம். எங்க அப்பா ஊர்ல ஹோட்டல்தான் வச்சிருக்கார். நான் நல்லா சமைப்பேன். எங்ககிட்ட கையில ஒன்னும் இல்ல. அதுக்கு உங்க உதவி மட்டும் வேணும். அதுக்காக, அன்னிக்கு எங்கள மலை உச்சியில் இருந்து காப்பாற்றின போது ரெண்டு பேரு உங்ககூட இருந்தாங்க இல்ல… அவுங்கள எங்க கூட அனுப்பனும். அப்புறம் மளிகைக் கடை, பாத்திரக்கடை, மற்றப் பொருட்கள் வாங்குவதற்கு நீங்க சொன்னதா சொல்லி கடன் கொடுக்கனும். தப்பா நினைச்சுக்காதீங்க..! கண்டிப்பா சாயுங்காலத்திற்குள் எல்லா கடனையும் அடைச்சு உங்க பேர காப்பாத்திருவேன்” என்றான்.

யோசித்துவிட்டு, “உன்னோட துடிப்பு புரியுது. உங்களுக்கு நானே காசு தரனே. அப்புறமா கொடுங்களேன்” என்றார்.

“இல்ல ஃபாதர். யாருன்னே தெரியாத எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிட்டிங்க. இனிமேல் உங்ககிட்ட இருந்து நாங்க கேட்கிற இது ஒன்னு மட்டும் போதும் ஃபாதர்” என்றான். அதற்கு மேல் ஃபாதரால் ஒன்றும் பேச முடியவில்லை. சரியென்று ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த பையன் எங்கே கடை போடுவான். எப்படி கடை நடத்துவான் என்று புதிராக இருந்தது அவருக்கு.

அகஸ்டினும், ஸ்டீபனும் வந்து விட்டார்கள்.  ஹாஜியுடன் சேர்ந்து மகிழன் நேற்று பாரத்த, கனவில் கண்ட அந்த இடத்திற்குச் சென்றான். தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த கத்தியால் நால்வரும் அந்த இடத்தை சீர் செய்ய ஆரமித்தார்கள்.  இரண்டு மணி நேரத்திற்குள் அந்த இடம் மேலும் அழகாய் மின்னியது. மேற்கு நோக்கி வரும் சாலையானது சற்று வளைந்து வடக்குப் பக்கமாகச் செல்லும் பாதை. அந்த வளைவில் உள்ள மரங்களைத் தூண்களாக்கி பந்தல் போட்டாகி விட்டது. ஒருசில செடிக்கொடிகளை வெட்டியவுடன் பின்னால் இருந்த அருவி நன்றாகத் தெரிந்தது. அருவி தண்ணீர் இவர்களின் பின்பக்க கடை வாசலை நனைத்து சென்றது. 

ஃபாதர் சொல்லியதாக மளிகைப் பொருட்கள், பாத்திரம் என வாங்கினார்கள். எல்லாவற்றையும் கடைக்குக் கொண்டு சென்றார்கள். கடையில் ஹாஜியோடு துணைக்கு  ஸ்டீபனையும் வைத்துவிட்டு அகஸ்டினோடு மகிழன் வெளியேச் சென்றான்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத சுற்றுலாதலம் கொடைக்கானல். நிறைய பேருந்துகள். தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிருந்தும் மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நிறையக் கடைகள். விற்பனை நிலையங்கள், டூரீஸ்ட்டுகள், பேக் – கார்கள், ஹோட்டல்கள் என திரும்புகிற திசைகள் எல்லாம் கூட்டம்தான். அவர்கள் நின்ற எதிர் திசையில் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

“அகஸ்ட்டின் அந்த பேருந்தை எப்படியாவது நிறுத்துங்கள்” – மகிழன்

அகஸ்ட்டின் அந்த பேருந்து முன்னால் போய் நின்று கை அசைத்தார். வண்டியின் வேகம் குறைந்து நின்றது. டிரைவர் சீட்டுக்கு ஓடினான் மகிழன்.

“சார்.. மதியம் சாப்பாடு ரெடியாயிருக்கு.. மத்த இடத்துல கொடுக்கிறத விட பத்து ரூபா குறைச்சே கொடுங்க. இல்லன்னா… உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்முன்னு சொல்லுங்க. சைவம், அசைவம்  எதுவாயிருந்தாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவோம். எங்ககிட்ட உள்ளூர் ஆள் இருக்கு. அவங்கள உங்கக் கூட அனுப்பி இந்த கொடைக்கானலையே இலவசமா சுத்தி காண்பிக்கிறோம்” என்று ஒருசில வினாடிகளுக்குள் சொல்லி முடித்தான் மகிழன். அதற்குள் பின்னால் நின்று கொண்டிருந்த பேருந்து ஹார்ன் அடித்துக் கொண்டேயிருந்தது.

“இல்லப்பா… நாங்க ஏற்கனவே புக் பண்ணிட்டோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் வண்டியை டிரைவர் நகர்த்த ஆரமித்தார். மகிழன் அந்த டிரைவருக்கு நன்றியைக் கூறிவிட்டு அடுத்தப் பேருந்தை நெருங்கினான். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எல்லா பேருந்துகளிலும் ஒரே பதில்தான்.

“கொடைக்கானல் பெரிய டூரீஸ்ட் ஏரியா. அதுதான் எல்லாம் புக் ஆகியே வருது. ஆனாலும் காலையிலிருந்து உன்னோட முயற்சியும், தன்னம்பிக்கையும், செய்யுற வேலையில கவனம், ஆர்வத்தையும் பாக்குறன். கண்டிப்பா முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். நமக்கு ஒரு பேருந்து கூடவா கிடைக்காமல் போயிடும் தம்பி” என்றார் அகஸ்டின். இப்பொழுது மணி காலை பதினொன்றை தாண்டியிருந்தது. ஹாஜியின் நினைப்பு அவ்வப்போது மகிழனுக்கு வந்துவந்து சென்றது. அப்பொழுது மீண்டும் ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழன் டிரைவரிடம் பேசினான். டிரைவர் புதியவர் ஆதலால் எங்கே சாப்பிடுவது, தங்குவது, சுற்றிப்பார்ப்பது என தெரியாமல் வந்திருக்கிறார்கள். மகிழன் பேசியது டிரைவருக்கும், அப்பேருந்தின் தலைவராக இருக்கும் ஒருவருக்கும் பிடித்துப் போனது. சரி என்று ஒத்துக்கொண்டார்கள். என்னன்ன சாப்பாடு என்று குறிப்பெடுத்துக்கொண்டார்கள். சைவம், அசைவம் என இரண்டுமே அந்தக் குறிப்பில் இருந்தது. ரெண்டு மணிக்கு உணவு செய்யப்பட்டுவிடும் என்றும், கூடவே சுற்றிக் காண்பிபதற்கு அகஸ்ட்டினையும் அனுப்பி வைத்தான். அந்த தலைவர் மகிழன் கையில் குறிப்பிட்டத் தொகையை திணித்து முன்பணமாக வைத்துக்கொள் என்றார். மகிழன் இந்நேரம் மகிழ்ந்துதான் போனான். மகிழன் பேசியதையும், சாமர்த்தியமாக நடந்து கொண்டு முன்பணம் பெற்றுக்கொண்டதையும் நினைத்து “நல்ல புத்திசாலி பையன்தான்” எனப் பெருமைப்பட்டுக்கொண்டார் அகஸ்டின்.

ஹாஜி-மகிழன்-ஸ்டீபன் ஆகிய மூவரும் விரைவாக வேலையைப் பார்க்க ஆரமித்தார்கள். மகிழனுக்கு நெருப்பும் கரண்டியும் புதிதல்ல. சோறு, குழம்பு, பொறியல், சிக்கன் வறுவல், முட்டை, மீன் குழம்பு, மீன் வறுவல் என வரிசையாய் செய்தாகிவிட்டது. ஹாஜிக்கு உண்மையாலும் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். இஸ்லாமியப் பெண்களுக்கு அசைவ சமையல் பற்றிச் சொல்லித்தர வேண்டுமா? சமையலில் மகிழனுக்கு அங்கங்கு நிறைய டிப்ஸ்களைக் கொடுத்து அசத்தினாள். இறுதியாக அடுப்பில் ரசம் முட்டைக்கொதி வந்து வாசனை அவ்விடம் முழுவதும் பரவியது. பேருந்தும் சரியான நேரத்திற்கு வந்து பயணிகள் இறங்கினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உணவு பரிமாறும் வேலையும், பயணிகளின் சிரிப்பொலியும், வாசனையுமே நிறைந்திருந்தது.

குளுமையான இடம். நிறைவான சாப்பாடு. நல்லத்தண்ணீர். அவர்களுக்குப் பிடித்துத்தான் போயிருந்தது. பேசியதை விட நூறு ரூபாயை அதிகமாகவே கொடுத்துவிட்டுச் சென்றார் பேருந்து தலைவர்.

“தம்பி.. நான் டூரிஸ்ட் புரொக்கர். நானும் இப்பதான் தொழில் ஆரமிச்சேன். கொடைக்கானல் புதுசுதான். இங்க யாராவது ஆள் போட்டு பாத்துக்கனுமின்னு நினைச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தினமும் ரெண்டு மூணு வண்டி வரும் அவுங்களுக்கு சாப்பாடு போட்டு சுத்தி காண்பிச்சிரு. உனக்கு தர வேண்டிய கமிஷன் மற்றும் சாப்பாட்டு காசும் கொடுத்திடுறேன்” என்றார்.

மகிழனுக்கு தலைகால் புரியவில்லை. “ரொம்ப நன்றி சார்” என்றான். பேருந்து புறப்பட்டது. முதல் நாளே நம்ம தொழில் வளர விதை போட்டாச்சு என்ற சந்தோசம்.  பாத்திர பண்டம் என அனைத்துக்கும் பணத்தைப் பிரித்து வைத்தனர். சமையலில் மீதியானப் பொருள்களை வண்டியில் ஏற்றினார்கள்.   ஃபாதர் அங்கு வந்தார். அகஸ்டினும், ஸ்டீபனும் மகிழனைப் புகந்து தள்ளினார்கள்.

“இந்த இடத்துல நானே செட் போட்டு தரேன். நகராட்சிகிட்ட பேசி உரிமையும் வாங்கிதரேன்” என்றார். அகஸ்டின், ஸ்டீபன் இருவருக்கும் அவர்களுக்குண்டான கூலியைப் பிரித்துக் கொடுத்தான். ஃபாதரின் காரிலே மகிழனும் ஹாஜியும் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த ஃபாதர் இறைவனே தன்னிடம் அனுப்பி வைத்ததாக கருதினார்.

அன்று இரவு. ஆளுக்கொரு படுக்கையில் படுத்திருந்தனர். விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இருவரும் பேசிக்கொண்டனர். அவளுக்கு மகிழனை நினைக்கும் போதெல்லாம் புதிராகவே தெரிந்தான். அவனை நேசித்தது முதல் இன்று வரை அப்படித்தான் இருந்தான். மற்றவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத சில விஷியங்களைக் கூட செய்து காட்டக்கூடிய திறமைப் படைத்தவன். நிறைய பேசுவான். அவன் கூட இருந்தா ஒரு நல்ல எனர்ஜி கிடைக்கும். தற்கொலை பத்திக்கூட அவன்தான் முதல்ல என்கிட்ட பேசினான். அவன் சொன்னப்ப பயம்தான் முதல்ல கண்ணுக்கு தெரிஞ்சுது. எங்க காதல் வீட்டுல எல்லாம் தெரிஞ்சு என்னை அடிச்சாங்க. எங்க சொந்தகாரங்க மகிழனையும் அடிச்சும் மிரட்டியும் இருக்காங்க. எப்படியோ வீட்டை விட்டு வெளிய வந்து நான்தான் கொடைக்கானல் போயி செத்து போலாம்ன்னு ஐடியா கொடுத்தேன்.  ப்பா.. என்னன்வோ ஆகிடுச்சு. மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு.

“நம்ம ஹோட்டலுக்கு என்ன பேரு வைக்கலாம் மகிழன்” – ஹாஜி

“எம்மதமும் சம்மதம். சாதிகள் வேரோடு அழிய ஒற்றுமை மனிதரிடத்தில் பிறக்க வேண்டும். ஒற்றுமை வலுபெற வேண்டுமானால் அன்பால் மட்டுமே மானுடம் ஜெயிக்கும். அதனால் அன்பின் ஐந்திணை என்று வைக்கலாம் என எண்ணுகிறேன்” என்றான் மகிழன்.

ஹாஜி படுக்கையை விட்டு எழுந்து தலையை உயர்த்தி மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்

ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள்.

            ஏழாவது அண்ணன் மட்டும், ஐயோ… தங்கைக்கு சாப்பாடு இல்லையே என்று தனக்கு போடப்பட்ட சாப்பாட்டில் பாதியைத் தனக்கு வேண்டாம் என்று வேண்டுமென்றே வைத்து விடுவான். தங்கையும் அண்ணன் வைத்திருந்த அந்தச் சாப்பாட்டை உண்பாள்.

            ஆறு அண்ணன்களை விடவும் ஏழாவது அண்ணன் மீதுதான் அதிகம் பாசம் கொண்டிருந்தாள். அவனும் தங்கச்சியின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான். ஆறு அண்ணன்மார்களுக்கும் திருமணமும் நடைபெற்றது. ஏழாவது அண்ணனுக்கு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்கள். ஆனால் அவன், தங்கைக்கு திருமணம் செய்து செய்து வைத்த பிறகே தான் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான்.

            ஒருநாள் எப்போதும் போலவே தங்கைக்காரி அனைத்து அண்ணன்களுக்கும் உணவு சமைக்கிறாள்.  அன்று காலை அவள் வீட்டு புழக்கடியில் பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பை அடித்து நன்றாகக் கழுவி  தலை வேறாகவும் உடம்பு வேறாகவும் வெட்டுகிறாள். வெட்டிய பாம்பு கறித்துண்டுகளை அழுதபடியே அடுப்பில் வைத்து சமைக்கிறாள்.

            ஆறு அண்ணன்களுக்கும் நல்ல உணவையும் ஏழாவது அண்ணனுக்கு மட்டும் பாம்பு கறி உணவையும் புட்டியில் எடுத்து வைக்கிறாள். காட்டுக்குச் சென்றவுடன் சாப்பிடுவதற்கு ஆறு அண்ணன்களை மட்டும் அழைக்கின்றாள். ஏழாவது அண்ணன் மட்டும் இன்னும் நெல்லு வயலுக்குத் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தான்.

            ஆறு அண்ணன்களும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டு வேலைப்பார்க்க வயலுக்குச் செல்கின்றனர். அதன்பிறகே கடைசி அண்ணனைக் கூப்பிடுகிறாள். தட்டு நிறைய வெள்ளையான சாப்பாட்டைப் போட்டு பாம்பு கறியை ஊற்றுகிறாள்.  சாப்பிட்ட அண்ணன்காரனுக்கு கசப்பு தோன்றவே, மனதில்  பாசக்கார தங்கச்சி விஷத்தையா வைக்கப்போகிறாள். அப்படியே வச்சாலும் ஆசையுடனே செத்தும் போகலாம் என்று உணவை அள்ளி அள்ளி சாப்பிட்டான்.

            கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வாயில் நுரை தள்ளி மல்லாந்து செத்துப்போகிறான் கடைசி அண்ணன்.

            சில மாதங்களுக்குப் பிறகு தங்கச்சிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. ஆறு அண்ணன்களும் ஆறு அண்ணிமார்களும் திருமணத்தை தடபுடலாக நடத்துகின்றனர். சாப்பாடு வரவேற்பு என அசத்துகின்றனர்.

விடிந்தால்  கல்யாணம். மணமகள் ஜோடனைக்கு மல்லிகைப் பூ மட்டும் எங்கேயும் கிடைக்க வில்லை. ஊர் முழுவதும் கேட்டாச்சு… பாத்தாச்சு…. பொண்ணு பூ இல்லாம வெறும் தலையா நின்னா…

அப்போ! யாரோ ஒருத்தர், “அம்மாடி உங்க அண்ணன புதைச்ச இடத்துல மல்லி பூவா பூத்துருக்கு. வேணுமின்னா போயி பறிச்சுக்க புள்ள” என்றார்கள்.

            அண்ணன் செத்த சமாதிக்குத் தங்கச்சிக்காரி ஓடுகிறாள். அண்ணன் கால்மேட்டுல விழுந்து அழுகிறாள்.

புதைச்ச மண்ணுல மல்லிகைப் பூவா பூத்துருக்கு. ஒன்னொன்னா பறிச்சா.. ஊசியால கோத்தா… மல்லிகைப் பூ மாலையைக் கழுத்துல  போட்டா… கழுத்துல போட்டவுடனே மல்லிகைப்பூ பாம்பா மாறிப்போச்சு. கழுத்துல இருந்து வெளியே எடுத்துப் பார்த்தா மல்லிகைப்பூவா இருக்கு. மீண்டும் கழுத்துல போட்டா பாம்பா மாறுது.

            அழுது ஒப்பாரி வைக்குறா….

            அதுக்கு மண்ணுக்குள்ள இருக்குற அவுங்க அண்ணன் பாடுகிறான்,

                        “வாழ அண்ண! அடிச்சிருக்கு

                        வடநாடு போயிருக்கும்

                        ரெட்டி இரு கொண்டைக்கு

                        நிலைக்குமா என் பூ !

                        பலிக்குமா என் பூ! – என்கிறான். தங்கச்சிக்காரியும்,

            “சிரிக்கி அண்ணிமாருங்க பண்ண வேல இது. சொத்துக்கு ஆசப்பட்டு பண்ணிய காரியம் இது. நான் இந்த ஊருல ஒருத்தன காதலிச்சேன். அத அண்ணிமாருங்க ஆறு பேரும் பாத்துட்டாங்க. எனக்கு அந்த பையன கட்டி வைக்கனுமுன்னா உன்னை கொல்லச்  சொன்னாங்க…” மூக்கைச் சிந்தி அழுதாள்.

            நீ கொல்லவில்லை ஆனாலும் நாங்க அவன  (உன்னை) கொல்லத்தான் போறோம்ன்னு சொன்னாங்க..

            “அவுங்க கையில நீ சாவுறதவிட நானே உன்னை கொன்னுடலாமுன்னு நினைச்சேன். அண்ணே”

            “உன் பசிய எனக்கு கொடுத்தியே அண்ணே… எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுண்ணே… உன்னோட மாலை என் கழுத்துல ஏறனும் அண்ணே… அதுதான் எனக்கு நீ கொடுக்கிற பரிசு அண்ணே.. ” என்று நீண்ட ஒப்பாரியை வைத்து விட்டு மல்லிகைப் பூ மாலையை கழுத்தில் சூடினாள். இப்போது மாலையாய் தொங்கிக் கொண்டிருந்தது அவளுடைய கழுத்தில்.

            அவளுக்கு அண்ணனின் வாழ்த்தில் கல்யாணம் நடந்தேறியது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

பண்டைய தமிழ் நாகரீகம், மொழிச் சிறப்பு பண்பாட்டு கலாச்சாரம் முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதரமாக, செய்தி ஊற்றாக விளங்குவது சங்க இலக்கியம். சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வரும் வீர மறவர்களின் வாழ்க்கை முறைகளாகப் போர்ச் செய்திகள், வாழ்க்கை விழுமியங்கள், அரசமரபு போன்றவற்றை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

முன்னுரை

மனித சமுதாய வரலாறு ஒவ்வொரு சமுதாயத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட தூலத்தில் அரசு என்பது இருந்ததில்லை எனக்காட்டுகிறது. ஆங்காங்குப் பழங்குடிக் குழுக்களும், குலஅமைப்புகளும் இருந்து மக்கள் கூட்டங்களை நெறிப்படுத்தி வழிகாட்டின. அவை சமுதாயத்திற்கு வழிகாட்டி நெறிபடுத்தத் தேவையான விதிகளையும். உறவுகளையும், ஒழுகலாறுகளையும் பண்புகளையும் படைத்துக்கொண்டன. அரசு தோன்றிய பிறகு அவை அறநெறிகளாகவும், பழக்கவழக்கங்களாகவும் காலத்திற்கேற்ப மாறி புதுபொலிவுடன் இன்றளவும் நின்று நிலவி பெருமை சேர்த்து வருகின்றன. உழைப்பு, நேர்மை, அறம், வாயமை, உண்மை, இன்னா செய்யாமை, ஒப்புரவு போன்ற பண்புகள் எல்லாம் இவ்வாறு உருபெற்று தொடர்வனவே, புறநானூறு பொங்கிவரும் வீரத்தின் புலனாறு செந்தமிழ் மறவரின் வரலாறு செங்கழல் அணிந்த வேந்தர்களின் சீற்றம் குருதியாக, வெகுளியால் வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்க்களப்பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன. ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவு மிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல் இத்தகைய புறநானூறு கிடைத்திராவிடில் பண்டைத்தமிழகம் வீரப்பண்பாட்டை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புக் கிட்டியிருக்காது. போர் நாகரீகத்தைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியிருக்காது.

மூவேந்தர் பற்றிய செய்திகள்

மூவேந்தரைப் பற்றிய பாடல்களில் சேரர், பாண்டியர், சோழர் என்று வரிசை மாற்றிய முறையில் முதல் பதினெட்டுப்பாடல்கள் உள்ளன. புவியியல் முறைப்படி இம்முறைவைப்பே சரியானதாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் அரசர்க்கும், பிறர்க்கும் அறநிலையை எடுத்துக்கூறும் பாடல்களும், பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றப்படைப் போன்ற ஆற்றுப்படைச் செய்யுள்களும் இடையிடையே அமைந்து காணப்படுகிறன. பெரும்பாலான இடங்களில் திணை, துறை முதலிய அமைப்பில் பாடல்களுக்கிடையேத் தொடர்பு காணப்படுகிறது. மக்கட்சமுதாயம் போர்ப்பற்றியச் சிந்தனையில் மூழ்கியிருந்தக் காலம் தொன்மையான காலம் அடிப்படை வாழ்விற்குப் போரே ஆணிவேர் என்று மனிதன் எண்ணியிருந்தக்காலமாகக் கருதப்படுகிறது. பண்டைக்கால வாழ்விற்குப் போர் அடித்தனமாக அமைந்திருப்பதை வரலாறும், இலக்கியமும் எடுத்துக்காட்டுகின்றன. தொல்காப்பிய புறத்திணையியலில்,

“ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று உலகத் தியற்கை”(தொல்.நூற்:76)

 என்ற அடிகள் தொன்று தொட்டு மனிதர் முரண்பட வாழ்ந்த நிலை தொடர்ச்சியானது என்பதை உணர்த்துகின்றது. போருக்காக மக்களிடையே நிலவி வந்த நோக்கம் தலைமைப் பற்றியதாகவே இருந்தது. செல்வம், செல்வாக்கு, புகழ், அறம், அதிகாரம், செருக்கு, சீனம் முதலிய அனைத்து நிலைகளிலுமே போர்ப்பற்றிய எண்ணம் மக்களிடையே ஊடுருவியிருந்தது. போரில் ஏற்படும் விளைவுகள் அவ்வக்காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததையும் சங்கப் பாடல்களிலிருந்து அறியமுடிகிறது.

போரின் தொடக்க நிலை

ஆநிரைகளை கொள்ளலும், மீட்டலுமே போர் நாகரீகத்தின் தொடக்க நிலைகளாகும். தேவையான செல்வத்தை ஈட்டி அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான இடத்திற்கு மேலும் தன் பரப்பை விரிவு படுத்திக்கொள்ளவும், இனக்குழுத்தலைவன் தன் கூட்டத்திற்கானப் போதிய இடமும் வளமும் தேவை என்பதன் காரணம் கருதியும் போர்ப்புரியத் தொடங்கினான்.

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம்

வேண்டிப் பொது சொற் பொறாஅ

திடஞ்சிறி தென்னும் ஊக்கம் துறப்ப” (புறம்.8)

என்னும் புறநானூற்றுப் பாடலடிகள், சேரமான் கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன் தன் குடிமக்களின் வசதிக்காக, ஊக்கம் துரப்ப பிறநாட்டின் இடங்களைக் கவர் முற்பட்டமையைக் கூறுவதாக அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. தன ஆணைக்கு மாற்றார் அடிபணிய வேண்டும், தன் செங்கோலும் வெண்குடையும் போற்றப்பட வேண்டும், இவற்றிற்குரிய மதிப்பினை பிறர் தருதல் வேண்டும் முதலிய எண்ணங்கள் மன்னன் மனதில் ஓங்கியிருந்துள்ளது. அனைத்தும் தன் ஆட்சிக்கு. உட்படவேண்டும் என்ற உணர்வும் இதிலடங்கும் நிரை கவர்தலிலிருந்து, நிலம் கவரும் நோக்கிற்கு மாறிய காலகட்டம் என்பதை அறியமுடிகிறது, “போர் இயல்பானது. பொதுவாக மனித குலத்திற்கு ஒத்தது. அது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்றெல்லாம் சமூக இயலாரும். மானுட இயலாறும் கருதுவர் என்று டாக்டர் ந.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.

போர் வீரர்கள்  

வீரர்கள் என்றும், மறவர்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் சான்றோன் என்ற சொல்லாலும் சங்க இலக்கியத்துள் குறிக்கப்பட்டுள்ளனர்.

  “தேர்தர வந்த சான்றோர் எல்லாம் ” (புறம்.63)

எனவரும் பாடலடிகளில் பாங்கினை அறிய முடிகிறது. இதனையே பதிற்றுப்பத்து

“நோய்புரித் தடக்கைச் சான்றோர்”(பதிற்று 14)

எனப் பதிற்றுப்பத்து ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது. புறப்பாடல்களின் மூலம் இளைஞருக்குச் சிறுவயது முதலே சினவுணர்ச்சியும் மறப்பண்பும் இருந்தமையை அறியமுடிகின்றது. போரிலே வெற்றிபெறும் வீரர்க்குப் பரிசும், நிலமும் தருவதுப் பற்றியச் சிந்தனையைப் புறப்பாடல்கள் சில குறிப்பிடுகின்றன. மாற்றான் நாட்டைக் கொள்ளையிடுதல் போன்ற நிகழ்வுகளோடு மன்னனுடன் வீராகள் பங்கேற்றனர். பகைவரது வயலில் புகுந்துக் கொள்ளையிட்டும், பகைவர் நாட்டை அனிபூட்டியும் அழித்தனர். இதனால் வீரர்களுக்கு நிலம் கிடைத்தது. மன்னன நிலம் தந்தபோது வளமிக்க மருதநிலத்தைக் கேட்டுப்பெற்றனர் வீரரின் உரிமை இங்கு நிலைநாட்டப் பெறுவதை இதன் மூலம் அறியலாம்.

போர் நடப்பதற்கான சிலச் சூழ்நிலைகளையும் ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர்,

“1.சாதிமுறைச் சமுதாய உணர்ச்சி

2.அமைதி மனத்திற்கு வறட்சி உண்டாக்குதல்

3.வீரமும் துணிச்சலும்

4.மனிதற்கு இயற்கையான போரிடும் தன்மை

5.தற்காப்பு நியமம்

6. வெகுளியும், பொறாமையும்

7. மீதூரும் உள்ளக்கிளர்ச்சி” 1

போன்ற காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில்தான் போர் ஆரம்பமாகிறது. இப்படி தனிமனிதனின் மேலோங்கிய எண்ணங்களினால் போர்க்களங்கள் உண்டாகின்றன.

ஆட்சியின் ஆளுமை

ஆட்சியில் மன்னரிடையே வீரம், மானம் பெரிதாகக் கரதப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணாணால் சிறைபிடிக்கப்பட்டப்பின் காவலரிடம் நீகேட்டுக் காலந்தாழ்த்தி வரும்படி ஆனதற்கும், இரந்து பெறவேண்டியது எண்ணியும் உயிர் துறந்தான். இதனை தொண்டைமான் இளந்திரையனின் பாடலில்,

“கால்பார் கோத்து ஞாலத்தியக்கும்

காவற் சாகா டுகைப்போன்

மாணின் ஊறின் றாகி யாறினுது படுமே”(புறம்.185)

எனவரும் பாடலில் ஆட்சியென்னும் சக்கரத்தை செலுத்துவோன் மாட்சிமை பெற்றிருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் பகை என்னும் சேற்றில் அழுந்தி அழிய நேரிடும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. எனவே சான்றோர் வகுத்த நெறிப்படி ஆட்சி அமைய வேண்டும் என்பதை இக்கருத்து உணர்த்துகிறது. போர்களத்துப் பொருவதும், வெற்றி கொள்வதும் மன்னாக்குப் பொழுது போக்கு அதே சமயம் தாம் செய்த போரின் விளைவுகளை, அழிவுகளை, அவலங்களை எண்ணி அமைதியுற்றனரா என்னும் செய்திப் புறப்பாட்டில் காண்பது அரிதாக உள்ளது போருக்கு ஊக்கியப் புலவர்கள் சிலர், மன்னனின் போர் வெற்றியைத் தணிவித்து வாழ்க்கையில் இனிது காணுமாறு தூண்டியுள்ளதை, மழைப் பொயத்தாலும், நாடு வறுமையுற்றாலும் மக்களின் இயற்கையான செயல்வினைகள் பாழ்பட்டு முறைபிறழ்ந்தாலும் இவ்வுலகம் மன்னரைப் பழிக்கும் என்பதை சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் சிறப்பினைப் பற்றி இளங்கோவடிகள் கூறுவது இங்கே நினைவுக்கூறத்தக்கது.

“மழைவளங் கரப்பின் வான்பேரச்சம்

பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி” (சிலம்பு 25)

எனவரும் பாடலடிகள் மன்னனுடைய ஆட்சியின் அருமைபற்றி விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாசறையில் அரசன்

ஓர் அரசன் போருக்குச் செல்லும்போது எதிரி நாட்டுக்கு அருகில் பாசறை அமைத்து அப்பாசறையில் இரவில் தங்கி பகலில் போரிடுவான் என்பது இங்கு குறிப்படத்தக்கது பகலில் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத் தமிழர் மரபாகக் கொண்டிருந்தனர். புலவர் பெருங்குன்றூர்கிழார் படைகளின் இரவு காலச் செயலினைக் குறிக்கும் பாடல்வழி, பகற்காலப் போரின் கடுமையை உய்த்துணர வைக்கின்றார். நெடுநல்வாடை இரவு நேரத்தில் பாசறைகளில் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசரின் கடமை உணர்வையும், செயல்களையும் எடுத்தியம்புகின்றது. நெடுஞ்செழியன் வாடைக்காற்றுடன் மழைத்துளியும் வீசுகின்ற இரவு நேரத்திலும், படைத்தலைவன உதவியுடன் சென்றுக் காயமுற்ற வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறினான் என்ப,

 “நூல்கால் யாத்த மாலை வெண்குடை

துவ்வென்று அசைஇ, தாதுளி மறைப்ப

நுளளென யாமத்தும் பள்ளி கொள்ளான்,

சிலரொடு திரிதரும் வேந்தன்,

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (நெடுநல்.184-188)

அக்கால மன்னர்களிடத்தில் பகை அரசனிடம் போர்ச்செய்து நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு இருப்பினும், அவர்களுக்குள்ளே சில விதிமுறைகளுக்கு உட்பட்டே போர் நடந்தேறியது. இதனால் பகலில் போரிடுவதும், இரவில் போரை நிறுத்துவதும் வழக்கமாயிருந்துள்ளன என்பது புலனாகிறது மேலும், “அக்காலத்தில் தகுந்த காரணமின்றிப் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிலே தலையிடமாட்டார்கள். போரால் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. படைகளும் பண்டங்களும்தான் போர்க்களத்திலே பாழாகும். பொதுமக்களுக்கு அறிவித்தப் பின்னரே போரினைத் தொடங்குவார்கள்”2 என்று சாமி.சிதம்பரனார் கூறுவதிலிருந்து அறியலாம்.

புலவர் பெருமை

மன்னை பாசறையில் தங்கியிருந்த காலத்தில்கூட புலமைக்குப் பெருமதிப்பு கொடுத்தான். எனவே சங்ககால புலவர்களின் நிலை செம்மையுடையதாக இருந்தது. புலவர்களின் சீர்மிகு பண்பாலும், உரிமைக் காரணமாகவும் மன்னனை அவன் என்றும் புலவனை அவர் என்றும் வழங்கியிருப்பதை சங்கப்பபாடலகளின்வழி அறியலாம் அதேபோல் மன்னனும் தமிழ்ப் புலவர்களால் பாடப்பெறுவதையேத் தனக்குரியத் தகுதியாகக் கருதினான் புலவர் நாவிற்கு மதிப்பிருந்தக் காரணத்தாலேயேப் புலவர்கள் தங்களைப் பெருமையாக எண்ணிக் கொண்டதுண்டு. இத்தகையப் புலவர்கள் அரண்மனையில் சென்றுப் பாடுவது மட்டுமின்றி. பகைநாட்டிடத்தேப் பாசறை அமைத்துத் தங்கியிருந்த மன்னனிடமும் சென்று பாடி பரிசில்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

மனிதர் வாழ்ந்த விதத்தை உணர்த்தும் இலக்கியம், வாழவேண்டிய நெறியையும் காட்டலைலது புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டவை வெறும் போர்க்களச் செய்திகள் மட்டும் அல்ல. புறச்சிந்தனையில், அறச்சிந்தனையின் ஆணிவேர் செறிந்திருக்கக்காணலாம் பேரிலக்கியமாக கருதப்படும் புறத்தில் வாழ்வியல் சிந்தனைகள் அறநெறிக்கு அடிப்பயைானவையாக அமைகின்றன. அதாவது. சமுதாயம் என்பது தனி மனிதர்கள் சேர்ந்த கூட்டமைப்பாகும். தனிமனிதர்கள் செய்யும் அறங்கள் சமுதாய மேம்பாட்டை உருவாக்குகின்றன. சமுதாயத்தில் மக்களால் தனிமனித அறத்தை தடைப்பிடிக்கப்படும் அறங்கள் சமுதாய அறங்களாகும். அகப்பொருளிலும், சமுதாய அறத்தை புறப்பொருளிலும் காணமுடிகிறது. பண்டைத்தமிழர்கள் மறுவுணர்வுடன், அறவுணர்வும் உடையவர்களாகத் திகழ்ந்துள்ளனர். மொத்தத்தில் புறநானூறு சங்கத்தமிழர்களின் வீரவாழ்க்கையினை எடுத்தியம்பும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் பவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு 2010, ப.159.

2. மேலது.ப.161 3.எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம் சென்னை. இரண்டாம் பதிப்பு: 2008, ப.217.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி,

ஓசூர் 635 109.

எட்டுத்தொகையில் அறம்

பெண்ணியக் கோட்பாடுகள்

கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

இலக்கியங்கள் மனித மனங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒருவனது நடைமுறை வாழ்க்கையில் அமையும் நிகழ்வுகள் (இன்பம், துன்பம், வாழ்க்கைச்சிக்கல்) அவனது இலக்கியப் படைப்பிலும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, இது கவிஞனின் மன அழுத்தம். கற்பனை, அனுபவம் போன்றவற்றினால் எழும் ஆளுமையின் வெளிப்பாடாகும். கம்பர் வடமொழி இராமாயணததைத் தழுவித் தமிழில் கம்பராமாயணம் என்ற கதை நூலை இயற்றினார். அதில் எண்ணற்ற காட்சி நிகழ்வுகள் தோன்றினாலும் இக்கதையின் திருப்பு முனையாக அமைவது மந்தரை சூழ்ச்சிப்படலம். கைகேயி சூழ்வினைப் படலம் ஆகிய இரண்டும் ஆகும். இவ் இரண்டு படலத்திலும் கூனியின் மனத்தையும் கூனியால் பாதிக்கப்படும் கைகேயின் மனத்தையும் பற்றிக் கூறுகின்றது. கூனி, கைகேயின் மன உணர்ச்சிகளை உளவியல் அறிஞர் சிக்மன்ஃபிராய்டின் “உளவியல் கோட்பாடு” அடிப்படையில் ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

மந்தரைச் சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப்படலம் : கதைச்சுருக்கம்

இராமன் சிறுவயதாக இருக்கும் போது கூனியின் வளைந்த முதுகில் மண்உருண்டையை அம்பாகச் செய்து எறிகின்றான். அடிவாங்கிய கூனி அவன்மீது மிகுந்த சினம் கொண்டு அவனைப் பழிவாங்க நினைக்கிறாள். ஆனால், கூனி ஒரு வேலைக்காரியாக இருப்பதினால் அரச மகனான இராமனை நேரடியாக வஞ்சித்துக் கொள்ள முடியவில்லை. தசரத மன்னன்பரதன் கோசாம்பி (தாய் பிறந்த கேகய மன்னன் நாட்டிற்கு) நாட்டிற்குச் சென்றிருந்தபோது இராமனுக்கே முடிசூட்டு விழா ஏற்பாடு செய்கின்றான்.

“ஏவின வள்ளுவர் இராமன் நாளையே

              பூமகள் கெழுநனாய்ப் புனையும் மௌவிஇக்” (கம்.பாடல்:33)

என்று கூறி மக்களுக்கு முடிசூட்டும் நிகழ்வை அறிவிக்கின்றனர். தெளிந்த சிந்தனையிலும், நாளை இராமன் முடிசூட்டப் போகிறான் என்ற மன மகிழ்ச்சியில் உறங்கிக் கொண்டிருந்த கைகேயிடம் கூனி செல்கிறாள். கொடிய விடமுள்ள பாம்பு (இராகு) மதியை விழுங்க வரும்போது ஒளியை வீசுவதைப் போல, உனக்குப் பெரிய துன்பக்கட்டம் நெருங்கி வரும் போதும் கவலைப்படாமல் உறங்குகிறாய் என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி எதிரிகளை அழிக்கும் வில்லைக் கையிலேந்திய என்மக்கள் செம்மையாக இருக்கும் போது என்கென்ன கவலை. உலக வேதத்தை ஒத்த இராமனைப் பெற்ற எனக்குத் துன்பமா? என்கிறாள். இவ் மந்தரை கைகேயிடம் நீ செல்வம் இழக்கப் போகிறாய். இராமனுக்கு முடிசூட்டுவதனால் நின்மகன் பரதன் பயனற்றுப் போகிறான், தசரதன் நெடுங்காட்டிற்குள் பரதனை அனுப்பியதன் சூழ்ச்சி இப்பொழுதாவது அறிந்துகொள். பரதனுக்குக் கிடைக்க வேண்டிய பதவி (அரசுரிமை) புல்லில் கொட்டிய அமுதம் போல பயனற்றுப் போயிற்றே என்று சினத்துடன் உரைக்கின்றாள்.

மேலும், உன் மீது பகை கொண்டு துன்புறுத்தாவிட்டாலும் மனம் நோகும்படி தொடர்ந்து துன்பத்தை உண்டாக்குவர். இது மட்டுமன்றி உன்னிடம் இரங்கி வந்தவர்களுக்குப் பிச்சைக்கொடுக்க முடியால் கோசலையிடம் “தா” என்று இரங்கி நிற்பாயா? இலலை உன் தந்தைக்கும் சீதையின் தந்தைக்கும் போர் நேருமானால் இராமன் உனக்கு உதவி செய்வானா? மனைவிக்கு உதவி செய்வானா என்பதை அறிந்து செயல்படு என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி தூயசிந்தனை திரிந்து, நல்லருள் துறந்தாள். இரக்கம் இன்மை எல்லாம் கெடநின்றாள். அப்போது கூனியை விருப்பத்துடன் பார்த்து நீ என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறாய், என்மகன் முடிசூட்ட வழிசொல் என்கிறாள் கைகேயி. அதற்கு கூனி தசரத மன்னன் விரும்பித்தந்த இரண்டு வரத்தையும் பெற்றுக்கொள். இரண்டு வரங்களில் ஒன்றினால் அரசாட்சியைப் பெற்றுக் கொண்டு, மற்றொன்றின் மூலம் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டில் திரியும் படியும் செய் என்றாள்.

தசரதன் துவண்ட நிலையில் படுத்துக்கிடக்கும் கைகேயின் உடலைத் தூக்க அவள் தசரதன் கையை விலக்கி எதுவும் பேசாமல் தரையில் விழுகிறாள். உன்னை இந்த நிலைக்கு ஆட்படுத்தியது யார் சொல், இப்போதே கொன்று விடுகிறேன் என்கிறான் தசரதன். என்மீது உமக்குக் கருணை இருக்கிறதா? என்கிறாள் கைகேயி. உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். விரும்பியதைக் கேள். இது உன் மகன் இராமன் மீது சத்தியம் என்கிறான். அதற்கு அவள் முன்பு அளிக்கவிருந்த இரண்டு வரங்கள் எனக்கு வேண்டும் என்கிறாள். இரண்டு வரங்களில் ஒன்று என்மகன் பரதன் நாடாள வேண்டும், சீதையின் கணவனாகிய இராமன் காடாளவேண்டும் என்கிறாள். இதைக் கேட்ட தசரதன் இவளைவிட தீயவள் இவ்வுலகில் இருக்க முடியாது என்று எண்ணிமடிந்து விழுகின்றான், அழுகின்றான், புலம்புகின்றான். கைகேயி கண்டு கொள்ள வில்லை. தசரதன் அவளிடம் நீ சிந்தனை செய்து கொல்கிறாயா? இல்லை உன்னை தூண்டி விட்டார்களா? என்கிறான். அதற்கு, அவள் நீ வரங்களைத் தரவில்லை என்றால் மடிந்து சாகப்போகிறேன். அவ்வாறு செய்தால் பழி உன் மீதுதான் வரும் என்கிறாள். உன்மகன் பரதன் நாடாளட்டும். ஆனால், என் மகன் இராமன் காட்டிற்குச் சென்றால் அவனைப் பார்க்காது இறந்து விடுவேன் உன் எண்ணத்தை மாற்றிக்கொள் என்று காலில் விழுந்து கெஞ்சிக்கேட்கிறான் தசரதன். வரங்களைக் கொடுத்து நிறைவேற்றாதிருப்பது என்னநியதி என்கிறாள். தசரதன் எது கூறியும் கைகேயி தன்முடிவிலிருந்து விலகாமலிருந்தாள். தசரதன் “ஈந்தேன் ஈந்தேன்” என்று கூறி வரங்களைக் கொடுக்கின்றான். இதன் படி இராமன் காட்டிற்குச் சென்றான் என்பது கதையாகும்.

சிக்மன்ஃபிராய்டின் உளவியல் கோட்பாடு

 ஃபிராய்டு மனித மன அமைப்பினை மூன்று பிரிவுகளைக் கொண்டதாக விளக்குகிறார். அவை இச்சை உணர்ச்சி, தன் முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி என்பவையாகும். இச்சை உணர்ச்சி என்பது மனிதன் பிறக்கும் போதிலிருந்தே இருப்பது; பிறப்பிலேயே பெற்றுக்கொண்டது ஆகும். இச்சை உணர்ச்சி வேறு எதனையும் பொருட்படுத்தாது; தனது தேவையை உடலின் துணையோடு தீர்த்துக்கொள்ள முனையக் கூடியது. கருத்துச் சொல்வது எனின் இச்சை உணர்ச்சி என்னும் பகுதியில்தான் மனிதனின் அடிப்படையான உணர்வுகள் உறைந்துள்ளன. இங்கிருந்துதான் `அவை மனித உடல், செயல்பாடுகள் வழி வெளிப்படுகின்றன.

பண்பாட்டுணர்ச்சி என்பது புறஉலகின் பண்பாட்டுப் பகுதியாகும். இதுவே, பண்பாட்டில் காணப்படும் சட்டம், ஒழுங்கு பற்றி விதிமுறைகள் ஆகும். இதற்கு நேர் எதிரானது இச்சையுணாச்சி பண்பாட்டுணர்ச்சி தொடர்ந்து இச்சையுணர்ச்சியினைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும். அதனை, முழுமையாகத் தடைசெய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாத போதிலும் தொடர்ந்து இச்சையுணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும்.

இச்சை உணர்ச்சிக்கும் பண்பாட்டுணர்ச்சிக்கும் இடையே பாலமாக அமைவது தன் முனைப்பு ஆகும். இது பண்பாட்டுணர்ச்சியைக் (சமூக ஒழுங்கு, விதிமுறைகள்) காரணம் காட்டி இச்சையுணர்ச்சியைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு இச்சையுணர்ச்சியிலான இயல்பான, கட்டுப்பாடற்ற செயல்பாட்டைப் பண்பாட்டுணர்ச்சி மூர்க்கமாக எதிர்க்கும். இவ்விரண்டுக்கும் இடையே தன்முனைப்பு செயல்பட்டு இச்சையுணர்ச்சி அதன் முழு வீச்சோடும் பரிமாணத்தோடும் எழாமல் தடுக்கும்” (உஷா நம்பூதிரிபாடு சா.பிலவேந்திரன் கட்டுரையிலிருந்து, 2003),

சிக்மன் ஃபிராய்டு குறிப்பிடும் அமுக்கப்பட்ட உணர்வுகள் என்பது பாலியல் உணர்வுகளை மட்டும் குறிப்பதன்று. அது பண்பாட்டில் காணப்படும் எல்லா வகையான அமுக்கப்பட்ட உணர்வுகளையும் குறிக்கிறது என்கிறார். இதனையே நலங்கிள்ளி “காமயிச்சை என்பது வெறும் உடல்சார்ந்த பாலியல் தினவு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. இது முதன்மை நிலையில் மனம் சார்ந்த உணர்வு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என (1999-2000) குறிப்பிடுகிறார்.

அமுக்கப்பட்ட உணர்வுகள் எப்போதும் கனவுகளாக மட்டுமல்லாமல் “மாறுவேட வடிவிலேயோ, அரைகுறை மாறுவேட வடிவிலேயோ ஆசைகள் கனவாகலாம். அமுக்கப்பட்ட எண்ணங்கள் தணிக்கை செய்யப்பட்டுக் கனவாக வெளிப்படுகையில் அடையாளங்கண்டு கொள்ள இயலா வடிவில் வெளிப்படவதோடு மட்டுமன்றி பண்பாட்டிற்கு இசைவான வகையில் திட்டமிட்ட அமைப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்” என பிராய்டின் கருத்தைப் பிலவேந்திரன் எடுத்துரைக்கின்றார் (2003, எண்.22).

இக் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டுள்ள “கூனி கைகேயி ஆகிய இருவர்களுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் பண்பாட்டு அடிப்படையில அமுக்கப்பட்ட உணர்வு ஒன்று வெளிப்படும் விதத்தைக் காணலாம்.

இக்கதையின் மையப்பொருள் இராமன் முடிசூட்டப்படாமல் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். இந்நிகழ்விற்கான காரணம் இராமன் கூனியின் வளைந்த முதுகில் மண் உருண்டையால் அடித்ததாகும். தவறு செய்த இராமனைக் கூனி உடனடியாகத் தண்டித்திருக்கலாம். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை. அவள் கொண்டிருந்த இந்த தண்டனை என்ற எண்ணத்தை மனதின் இச்சை உணர்ச்சி எனலாம். இவ்வாறு அவள் இராமனைத் தண்டிக்காமலிருந்ததிற்குக் காணரங்கள் பல உண்டு. அவன் அரசப் பரம்பரையைச் சார்ந்தவன். அரச பரம்பரையைச் சார்ந்த ஒருவரை அவரது தொழிலாளி தண்டித்தல் கூடாது என்பது பண்பாட்டு விதியாகும். இந்த பண்பாட்டு விதியைப் பண்பாட்டுணர்ச்சி எனலாம். இந்த பண்பாட்டு விதியின் அடிப்படையிலேயே கூனியின் தன்முனைப்புச் செயல்பட்டு அது, கூனி இராமனைத் தண்டிப்பதைத் தடுத்தது. ஆனால், இந்த உணர்வு கூனியின் மனதில் பதிந்துகிடந்தது. ஒருவரது அமுக்கப்பட்ட எண்ணம் பிற வழக்காறுகளின் வழியாக வெளிபப்டும் என்பது ஃபிராயிடியத் தத்துவத்தின் அடிப்படையாகும். அதன்படி கூனியின் மனதிலுள்ள இராமனைத் தண்டிக்க வேண்டும் என்ற இச்சை உணர்ச்சி அதற்கான நேரத்தை எதிர்பர்த்துக் கொண்டிருந்தது. அது இராமனின் முடிசூட்டு விழாவின்போது கைகேயி உடனான கருத்தாடலாக மாறியது. அதாவது, கூனி கைகேயியுடன் கலந்து பேசி அவளது எண்ணத்தை மாற்றியமைக்கிறாள். அப்போது கூனியின் தன்முனைப்பு குறைந்து இச்சை உணர்ச்சி செயல்படத் தூண்டுகிறது. இதன் விளைவே இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். அதாவத, கூனியின் இச்சை உணர்ச்சி செயல்பாட்டை இக்கதையாடல் எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

எழுதிகச் சாங்கியம்

நன்னெறி உணர்த்தும் உவமைகள்

மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அனுபவத்தை முன்னிறுத்தியே நடைபெறும். ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும் மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே அனுபவிக்கின்றான். தன்னுடைய வாழ்நாளில் இன்பத்தை மட்டும் நுகரும் மனிதன் சில நேரங்களில் தீயவைக்கும் அடிமையாகிறான். அப்பொழுது அவனை திருத்த வேண்டியுள்ளது. அதற்காக எழுதப்பட்டதுதான் அறநூல்கள். அறநூல்கள் அறத்தை வலியுறுத்தி மனிதனை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல உதவுகின்றன. மனித சமுதாயம் நல்லன்புடன் வாழ வேண்டுமாயின் அங்கு சான்றோர்களும் அறநூல்களும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி நூலினை இவ்வாய்வுக்கட்டுரைக்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

            நன்னெறி வெண்பா நாற்பதும் அரிய நீதிக்கருத்துக்களைச் சொல்லியுள்ளன. அப்பாடல்களில் பொதிந்து கிடக்கின்ற உவமைநலனை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிவப்பிரகாச சுவாமிகள்

            காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருக்களாக இருந்த குமாரசாமி தேசிகர்க்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசர். இவருக்கு வேலையர், கருணையர் என்னும் இளைய சகோதரர்கள் இருவரும், ஞானாம்பிகை என்னும் தங்கையும் இருந்தனர். சிவப்பிரகாசர் இளம் வயதிலேயே தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கியதோடு கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு நிலையை மேற்கொண்டிருந்தார். தாமிரபரணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டார்.

            அண்ணாமலை ரெட்டியார் சிவப்பிரகாசருக்கு அளித்த முன்னூறு பவுனையும் ஆசிரியர் தம்பிரான் அவர்களுக்குக் காணிக்கையாக வைத்து உபசரித்தார். ஆனால் ஆசிரியரோ அவற்றை ஏற்காமல், ‘இது எனக்கு வேண்டியதில்லை. புலவர்களை இகழும் செருக்குடைய புலவர் ஒருவர் திருச்செந்தூரில் உள்ளார். அவரது செருக்கை அடக்கி, என்னை வந்து வணங்கச் செய்வதே நீ எனக்கு தரும் காணிக்கையாகும்’ என்றார் தம்பிரான். சுpவப்பிரகாசரும் அதற்கு இணங்க உடனே திருச்செந்தூர் சென்று முருகபெருமானைத் தரிசித்தார். கோவிலில் வலம் வருகையில் செருக்குடைய புலவர் எதிர்ப்பட்டார். அவரிடம், நாம் இருவரும் நீரோட்ட யமகம் (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒரு வகை பாவகை) பாடுவோம். வுpரைவாகப் பாடி முடித்தவர்க்கு இயலாதவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாடத்தொடங்கினார் சிவப்பிரகாசர். நீரோட்ட யமக அந்தாதியாக முருகக்கடவுள் மீது முப்பது  கட்டளைக் கலித்துறை பாடி முடித்துவிட்டார். அதுவரை ஒரு செய்யுள் கூட பாடாமல் விழித்துக்கொண்டிருந்த செருக்குடைய புலவர், நான் அடிமையானேன் எனக் கூறி சிவப்பிரகாசரை வணங்கினார். அவரை அழைத்து வந்து தம் ஆசிரியர் தம்பிரானிடம் அடிமை ஆக்கினார். ஆசிரியரும் சிவப்பிரகாசரைப் போற்றி வாழ்த்தினார்.

            சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறி, நால்வர் நால்மணிமாலை, திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணிமாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சகக் கலிப்பா, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோணசைல மாலை முதலான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினோறாம் நூற்றாண்டு ஆகும். இவர் தம் முப்பத்திரண்டாம் வயதில் சிவபாதம் அடைந்தார்.

உவமை – விளக்கம்

            தண்டி உரையாசிரியர் உவமை என்ற சொல்லிற்கு உவமானம் என்றும் உவமேயம் என்றும் கூறுகிறார். ஆங்கிலத்தில் சிமிலி என்பர். தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை ஏதேனும் ஒரு வகையில் ஒப்பிட்டு காண்பது உவமை எனப்படும். “உவமை என்பது ஒரு கருத்தை விளக்குதல் இது ஒரு சிறந்த முறை”1 என கோதண்டபாணி பிள்ளை அவர்கள் கூறுகிறார். உவமைகள் இரு சொற்களைக் கொண்ட தொகைச்சொல்லாக அமையும். முதலில் நிற்கும் சொல் உவமையாகவும் அடுத்து நிற்கும் சொல் உவமிக்கப்படும் பொருளாகவும் கொள்ளப்படும். உவம உருபுகள் இன்றியும் உவமைப்பொருளை உணர்த்தும். கவிஞன் தான் காணும் பொருளுக்கு உவமையை வெளிப்படுத்த எண்ணுகிறான். அப்பொருளின் உயர்வைக் காட்டிட அதனினும் உயர்ந்த பொருளையே உவமையாகவும் சொல்லுகின்றான். உவமையானது பொருளை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். “தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரையில் உவமை என்றால் உருவகம், உள்ளுறை, இறைச்சி என்பனவும் அடங்குகிறது”2 என்கிறார் ரா.சீனிவாசன். தொகை உவமம், விரி உவமம் என இருவகைப்படுத்தலாம். தொகை உவமம் என்பது மறைந்து வருவன. விரி உவமம் என்பது உவமை உருபில் உள்ள  பொதுத்தன்மையும் விரித்துக் கூறப்படுவது ஆகும்.

தொல்காப்பியத்தில் உவமைகள்

            தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் உவமை இயல் என்னும் பகுதியில் உவமையின் இலக்கணத்தைச் சுட்டியுள்ளார். உவமை என்பது பொருளின் தன்மையை விளக்கிச்செல்வது என்கிறார் தொல்காப்பியர்.

                                    வினைபயன் மெய்உரு என்ற நான்கே

                                    வகைபெற வந்த உவமைத் தோற்றம்” (தொல்.உவமயியல்.நூ.1)

            வினை, பயன், மெய், உரு ஆகியவைகள் பொருளின் தன்மையை எடுத்துக்கூறுகின்றன என்கிறார். வினை உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை தொழில் அடிப்படையில் அமைய வேண்டும். பயன் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நன்மை, தீமை போன்ற பயன்களின் அடிப்படையில் அமைய வேண்டும். மெய் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை அளவு, வடிவு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உரு உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நிறம், பண்பு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். தண்டியலங்காரத்தில் உவமையைப் பற்றி,

                                    பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

                                    ஒன்றும் பலவும் பொருளோடு பொருள்புணர்ந்து

            ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டி.பொருளணியியல்.நூ.30)

            பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகாவும் பலவாகவும் வரும் பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமை ஆகும். தொல்காப்பியர் கூறிய வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கையும் தண்டியலங்கார ஆசிரியர் பண்பு, தொழில், பயன் என மூன்றில் அடக்கிக் கொண்டார். “உவம உருபுகள் பெயர், வினை, இடைச்சொற்கள் ஆகிய அனைத்துமாக வருகின்றன”3 என்கிறார் ரா.சீனிவாசன். தொல்காப்பியரின் கூற்றிக்கிணங்க நன்னெறியில் உவமை ஆராயப்படுகின்றன.

பசுவின் பாலை கறப்பது போல

            தனக்கு உதவி புரியாதவரிடம் ஒரு உதவி பெற விரும்பினால் கன்றைக்கொண்டு பசுவின் பாலை கறப்பது போல அவருக்கு வேண்டியவரை அவரிடம் அனுப்பி அந்த உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது நன்னெறிப்பாடல்.

                                    கன்றினால் கொள்ப கறந்து” (நன்னெறி.3)

            இங்கு கறந்து என்பது தொழிலைக் குறித்து வந்தமையால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலில் ஒருவருடைய மனதை அறிதல் பற்றியக் குறிப்பு வருவதால் குணம் தன்மையையுடைய உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மழையாகப் பொழிவது போல

            கடல்நீரை மேகம் கொண்டு சென்று மழையாகப் பொழிவது போல, பிறருக்கு உதாவாதவர்களுடைய பெருஞ்செல்வத்தை யார் எடுத்து அனுபவிக்pறாரோ அவர் தம்முடையதாகவே பாவிப்பார்.

                                    பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு” (நன்னெறி.4)

            கடல்நீர் ஆவியாகி மேகமாய் பரவி மழையாகப் பொழிந்து மக்களுக்குப் பயனை அளிக்கிறது. யாருக்கும் பயன்படாத செல்வமும் மக்களுக்குப் பயன்பட்டு இன்பத்தை அளிக்கிறது. இப்பாட்டில் பயன் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உமிநீங்கிப் பழமை போல்

            நெல்லின் உமி சிறிது நீங்கி, மறுபடியும் இணைந்தாலும் முளைக்கும் வலிமையை இழந்து விடும். அதுபோல, நெருங்கிய நண்பர்கள் இருவர் வேற்றுமையால் பிரிந்து மீண்டும் கூடிய போதிலும் அந்த நட்பானது முன்புபோல் நெருக்கமாக இருக்காது.

                                    நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்” (நன்னெறி.5)

            நெல்லில் இருந்து உமி நீங்கி இருப்பது தொழில் நிமித்தமாக அமைந்தது. தொழிலைச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நண்பர்களின் பிரிவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் குண நலன்களைக் கூறிச்சென்றதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளது.

கண் இரண்டும் ஒன்றையே காண்பது போல

            இரண்டு கண்களும் சேர்ந்து ஒரு பொருளினைப் பார்ப்பது போல, அன்புள்ள கணவனும் மனைவியும் வேற்றுமை இன்றி நல்ல காரியத்தையே செய்வார்கள்.

                                    கண்இரண்டும் ஒன்றையே காண்” (நன்னெறி.6)

             உடலில் உள்ள பாகமான கண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளும் குணம் போல

            வெள்ளத்தைக் கரைபோட்டுத் தடுப்பது அரியதா? அல்லது கரையை உடைத்து விடுவது அரியதா? சீறி எழுகின்ற கோபத்தை அடக்கிக்கொள்ளும் குணமே அரியதாகும்.

                                    கொள்ளும் குணமே குணம் என்க –வெள்ளம்” (நன்னெறி.8)

            மனிதர்கள் கோபத்தைக் குறைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கோபமானது சில சூழ்நிலைகளில் மனிதனை அழித்துவிடக்கூடியது. அலைகடலில் எழுகின்ற வெள்ளத்தை விட கோபம் கொடியது என்கிறார் ஆசிரியர் சிவப்பிரகாசர். கோபம் என்கிற குணத்தை சொல்லுவதால் உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் இருளைப் போக்குவது போல்

            சந்திரன் தன்னுடைய களங்கத்தை நீக்கிக் கொள்ள நினையாமல் வானத்திலே நின்று உலகின் இருளைப் போக்குவது போல், மேன்மை மிக்கவர் தன் துன்பத்தைப் பெரியதாகக் கருதாமல் பிறருக்கு நேரிட்ட துன்பத்தை நீக்குவார்.

                                    நிறை இருளை நீக்கும் மேல் நின்று” (நன்னெறி.10)

                                    “கலையளவு நின்ற கதிர்” (நன்னெறி.13)

            சான்றோர்கள் தன்னுடைய துன்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிறருக்காகவே வாழ்வர். நிலவைப் போல, தான் எவ்வளவுதான் தேய்ந்து போய் மீண்டும் புதியதாய் பிறந்தாலும் மக்களுக்கு வெளிச்சத்தைத் தருவதை நிறுத்துவதில்லை. நிலவின் வடிவத்தை சொன்னதால் மெய் உவமையும், சான்றோர்களின் குணத்தோடு மக்களுக்கு ஆற்றும் பயனைச் சொல்லியுள்ளதால் பயன் உவமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடல்நீர் உப்பங்கழியிலும் பாய்வது போல

            கடலானது தன்னை அடுத்துள்ள உப்பங்கழியிலும் சென்று பாய்வது போல, மென்மையானவர்கள் தம்மைச் சார்ந்தவர்கள் தாழ்ந்து இருப்பினும் தங்களைப் பெரிதாகக் கருதாமல் அவர்கள் இருக்குமிடம் சென்று அவர்களுடைய துன்பத்தை நீக்குவார்கள்.

                                    கழியினும் செல்லாதோ கடல்” (நன்னெறி.16)

            கடல் நீரானது உப்பங்கழிலும் சென்று பாய்ந்தது தொழிலைக் குறித்தது. அதனால் வினை உவமையும், மேன்மையானவர்கள் தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வதால் பயன் உவமையும் வந்துள்ளது.

நெருப்பில் இட்ட நெய் போல

            முற்றிய நோயினால் வேதனையுறும் பிற அங்கங்களைப் பார்த்துக் கண்ணானது கலங்குவது போல, உயர் குணம் உடையோர் மற்றவர்களின் நோயைக் கண்டு தமக்கு வந்த நோய் எனக் கருதி நெருப்பில் இட்ட நெய் போல உருகுவர்.

            பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்” (நன்னெறி.20)

            மனிதனின் அங்கங்கள் மற்றும் கண் பற்றி கூறுவதால் மெய் உவமையும் சான்றோரின் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

ஆகாயகங்கையின் பெருக்கு அடங்கி விடுவது போல

            சிவபெருமானின் சடாமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் பெருக்கு அடங்கிவிடுவது போல, எழுத்தின் உண்மைப்பொருளை உணராதவர்களின் கல்வி அறிவானது உண்மைப் பொருளை அறிந்தவர் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

                        ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்” (நன்னெறி.21)

            ஆகாயகங்கையின் பெருக்கு, கல்வியின் அறிவு என்கிற தொழில் சம்பந்தமான கருத்துக்களைச் சொல்லி செல்வதால் வினை உவமை வந்துள்ளது.

எறும்பு ஊற கல் தேய்வது போல

            எறும்புகள் ஊர்வதனால் கல் தேய்வது போல பெண்களுடன் ஆண்கள் பேசிப்பழகி வந்தாலும்கூட தவத்தினால் பெற்ற மன உறுதியானது நாளடைவில் தளர்ந்து விடும்.

                                    எறும்பு ஊரக் கல் குழியுமே” (நன்னெறி.23)

            தவத்தினால் பெற்ற மனஉறுதி என்னும் செயலை வலியுறுத்திச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேப்பம் பழம் போல

            சேழிப்பான சோலையில் வண்டுகள் மலர்ப்படுக்கையை விரும்பிச் செல்லும். காக்கைகளோ வேப்பம் பழத்தைத் தேடி ஓடுவது போல், ஒருவரிடம் நற்குணங்கள் இருந்த போதிலும் அற்பர்கள் குற்றங்களையே எடுத்துக் கூறிக்கொண்டிருப்பார்கள்.

            சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றே” (நன்னெறி.24)

            காக்கையின் தொழில் வேப்பம் பழத்தை நாடிச்செல்வது. அதனால் வினை உவமையும் குணங்கள், குற்றங்கள் பற்றி உரைப்பதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

நன்னெறியில் பிற உவமைகள்

            நன்னெறியில் இன்னும் சில உவமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவைகள்,

  • தெப்பத்தில் வைக்கப்பட்ட கடினமான பொருளும் எளிதாவது போல – கடினம், எளிமை என்கிற அளவினைச் சுட்டியுள்ளதால் மெய் உவமை பயின்று வந்துள்ளது. (நன்னெறி.25)
  • கடினமான தின்பண்டங்களை பற்கள் மென்று நாவுக்கு சுவை அளிப்பது போல – சுவை என்கிற பண்பை உணர்த்துவதால் உரு உவமை வந்துள்ளது. (நன்னெறி.27)
  • வானத்தில் உள்ள மான், பூமியில் உள்ள புலியைக் கண்ட பயப்படாதது போல – மான், புலி என்கிற வடிவத்தைச் சொல்வதால் மெய் உவமையும், பயம்கொள்ளாமை என்பது தொழிலைக் குறித்து நின்றதால் வினை உவமையும் பெற்று வந்துள்ளன.  (நன்னெறி.29)
  • கொம்பின் அடியை கை தடுத்து ஏற்றுக்கொள்வது போல – உடல் உறுப்பின் கை என வந்துள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. (நன்னெறி.31)
  • கதவுக்கு தாழ்ப்பாள் இல்லாதது போல – கதவு என்கிற வடிவத்தைப் பற்றிக் கூறுவதால் மெய் உவமை வந்துள்ளது. (நன்னெறி.32)
  • பூவானது மலர்ந்த அன்றே மணம் தந்து பின் கெடுவது போல – பூ, மணம், எனப் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும், கெடுதல் என்பதைக் கொண்டு தொழில் உவமையும் பயின்று வந்துள்ளன. (நன்னெறி.39)
  • ஆபரணங்கள் அணிந்த மன்னர், அணியாத அறிஞரைப் போல – மன்னர், அறிஞர் ஆகிய இருவரை ஒப்புமைப் படுத்தியதால் மெய் உவமை சொல்லப்பட்டுள்ளது. (நன்னெறி.40)

முடிவுரை

            சுவப்பிரகாச சுவாமிகள் அருளிய வெண்பாக்கள் அனைத்தும் இனிமையானவைகள். படிக்கத் தூண்டும் அமுதசுரபி. ஓவ்வொரு பாடலிலும் அழகான கருத்துக்களைப் பதித்து எடுத்தியம்பியுள்ளார். அவர்தம் பாடல்களின் அதிகப்படியான உவமைகள் கையாண்டிருக்கிறார். உவமைகள் கூறாத கவிஞன் நல்லதொரு இலக்கியத்தை படைக்க முடியாது என்பார்கள். தொல்காப்பியரின் வழிநின்று வினை, பயன், மெய், உரு என்கிற நான்கின் அடிப்படையில் உவமைகள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளேன். ஒருசிலப்பாடல்களில் இரண்டு வகையான உவமைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான உவமைப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும்.

சான்றெண் விளக்கம்

1.முதற்குறள் உவமை, கு.கோதண்டபாணி பிள்ளை, பாரி நிலையம், சென்னை- 1, முதற்பதிப்பு-1956,ப.5

2.சங்க இலக்கியத்தில் உவமைகள், டாக்டர் ரா.சீனிவாசன், அணியகம், சென்னை -30, ப.9

3.மேலது.ப.55

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

எப்போதும் துணைநிற்பது நம்பிக்கை

வாழ்க்கையில் முன்னேற உதவும் கை நம்பிக்கை. மனிதனுக்கு எத்தனை உறவுகள் கைக்கொடுத்தாலும், அவையெல்லாம் உடன்நிற்கும். ஆனால் நம்பிக்கை மட்டுமே இறக்கும்வரை துணைநிற்கும். இலக்கை அடைவதற்கு முதலில் எண்ணம் உதிக்க வேண்டும். அடிக்கடி தோன்றினால் அது ஆசையாக மாறும். ஆசை மீண்டும் மீண்டும் தோன்றினால் அது திட்டமாக மாறுகிறது. திட்டம் கனவாக மாறி அதுவே செயலாக மாறினால் இவை இலக்கை அடைவதற்கான ஏணிப்படிகள் என்று கூறலாம்.

      உழைத்தால் மட்டுமே ஒன்றைச் சாதனையாக மாற்ற முடியும். சிலருக்குச் செயல்களைச் செய்வதில் அச்சம் ஏற்படும். அந்தப் பயமே அவர்களுக்குத் தடையாக இருக்கும். கோடிக்கணக்காகச் செலவுசெய்து கப்பலைக் கட்டுவது கடலில் செல்வதற்காகவே. அது மூழ்கிவிடுமோ என்று பயந்து கொண்டே கரையில் வைத்திருந்தால் எப்படி சாத்தியமாகும். கடலில் புயல் போன்றவற்றால் கப்பலைக் காக்க நங்கூரம் இட்டு வைத்துக்கொள்ளலாமே தவிர பயம் இருக்கக்கூடாது. இருந்தால் இலக்கை நோக்கி ஒரு அடியைக்கூட எடுத்து வைக்க இயலாது.

நீங்கள் இருக்கிறீர்களா? வாழ்கிறீர்களா?

           நீங்கள் சமுதாயத்தில் பார்த்தீர்களேயானால் பலர் விலங்குகளைப் போல உயிருடன் இருப்பார்கள். சிலர்மட்டுமே வாழ்வார்கள். உயிருடன் இருப்பது என்றால் மீன் பிடிப்பவர்கள் கடலில் செல்லும்போது பாய்மரக்கப்பலில் பாய் ஒன்றை விரித்துக் கட்டி விடுவார்கள், அது காற்று எந்தத் திசைநோக்கி தள்ளுகிறதோ அந்தத் திசையில் காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல செல்லும். மீனவர்களும் எந்தவித சலனமும் இல்லாமல் மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அவ்வாறே பலர் வாழ்க்கை செல்லும் திசையில் தானும் சென்று முடிந்ததைச் சம்பாதித்து உண்டுஉறங்கி காலத்தையும் முடித்துவிடுவர். இதையே “இருப்பது” என்று கூறப்படுகிறது. வாழ்வது என்பது இலக்கை ஏற்படுத்திக்கொண்டு அடைவதற்கு ஏற்படும் தடைகளை நீக்கி எதிர் நீச்சலிட்டு தான் நினைப்பதைப் போல சமுதாயத்தை மாற்றி ஆக்கத்தை புரிபவர்களே வாழ்பவர்கள் என்று கருதப்படுவார்கள். எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழவேண்டுமே தவிர ஏதோ வாழ்க்கை போனபோக்கில் தானும்சென்று பிறவியை வீணாக்கக்கூடாது.

தன்னம்பிக்கை வேண்டும்

        நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மைதான் செய்கிறீர்கள் என்றால் அந்த நற்செயல் வெற்றி அடையும். இது தின்னமாகும். வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை வேண்டும். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது வரும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இன்று இரவு மனிதர்களால் உறங்கச் செல்ல முடியும். நாளை என்பது வராமலும் போகலாம். ஆனால் மனதில் காலையில் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கும். அதைப்போலவே நீங்கள் கொண்ட இலட்சியத்திலும் நம்பிக்கை வேண்டும்.

          ஒரு ஊரில் பாட்டி ஒருவர் தன்பேத்தியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது எட்டுவயது பேத்திக்குக் கதை ஒன்று கூறினார். “ஒரு நாட்டில் இராஜ்யம் இழந்த ராஜா மகன் இருந்தான். அவனுடைய அம்மா ராணி வீடுவீடாகச் சென்று உழைத்த பணத்தை சந்தையில் கொடுத்து விட்டு பூனைக்குட்டியைக் கொள்முதல் செய்தான். கோபம் கொண்ட ராணி தன் தாய்வீடு போகத்  தனியாக விடப்பட்டான். பேத்தி கேள்வி கேட்டாள், “பாட்டி இப்படிகூடவா ஒருவன் இருப்பான்” கதை தடைபட்டது. அந்த எட்டுவயது பிஞ்சு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. பல வருடங்கள் சென்று தானும் வாழ்க்கை என்ற சந்தையில் எல்லாவற்றையும் இழந்து விட்டு, “இப்ப தெரியுது பாட்டி அப்படி ஒரு ராஜகுமாரன் இருந்திருப்பான்” என்றாள் பேத்தி. கதை தொடர்ந்தது “சொன்னா நம்பனும் பூனைக்குட்டி மாயமோதிரம் தர அசடு ராஜாவானான்” என்று கதையை முடித்தாள் பாட்டி. அது மாயமோதிரம் அல்ல. தனக்கான நம்பிக்கை என்று மனதில் நினைத்தாள் அப்பெண். மீண்டும் எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் போதும் இழந்தவற்றையெல்லாம் பெற்றுவிடலாம்.

கற்றுக்கொள்ளும் மனோபாவம்

        இந்த உலகில் மற்றவரைப் போல பிறந்து வளர்ந்து இறக்காமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மிகவும் துணையாக நிற்பது நம்பிக்கை ஆகும். ஒருவருக்கு தன்மீது நம்பிக்கை வரவில்லை என்றால் அவருக்கு பல இன்னல்களும் துன்பங்களும் ஏற்பட்டு அவநம்பிக்கையை உண்டாக்கி இருக்கும். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களில் எழுபது சதவிகிதம் உங்களால் ஏற்படுபவையே. மீதி முப்பது சதவிகிதம் மற்றவர்களால் ஏற்படுகின்றன. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவரவர் செயல்பாடுகளே அவர்களுக்குத் துன்பம் தருகின்றன. தான் என்ற அகந்தையும் ஒரு காரணமாகலாம். இந்தக் குணம் கொண்டவர்களால் எதையும் சரிவர கற்றுக்கொள்ள இயலாது. கற்றுக்கொண்டால்தான் ஒரு செயலை செவ்வனே செய்ய முடியும். தனக்கு தெரியாதவற்றை மற்றவரிடம் கற்றுக்கொள்ளும் பணிவான தன்மை வேண்டும். அவ்வாறு அல்லாமல் இவனிடம் நான் கற்றுக்கொள்வதா? என்ற ஆணவம் இருந்தால் அது எதையும் கற்றுக்கொள்ள விடாது. தலையில் கனம் ஏறி தீயவற்றைச் செய்யத் தூண்டும். இந்தச் சூழலில் இலக்கை அடைவது என்பது ஒருபோதும் நடவாது. எனவே தான் என்ற எண்ணத்தை நீக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பு வரவேண்டும் என்றால் பல நல்ல செயல்களை உங்களுக்கோ அல்லது சேர்ந்த மற்றவர்களுக்கோ செய்திருக்க வேண்டும். ஒருவர் தன்னை மதிக்க தெரிந்துகொண்டால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் நன்மைகளையே விளைவிக்கும். தன்னை மதிக்க தெரிந்த ஒருவரால் தீமைகளைச் செய்ய முடியாது. இவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டால் உங்கள் மீது நம்பிக்கை தானாகவே பிறக்கும். தடைகள் வந்தாலும் இடையில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

           தேசத்தந்தை மகாத்மா தமது அகிம்சை போராட்டத்தையும் சத்தியாக்கிரகத்தையும் சிலகாலம் ஒத்திவைக்க நேரிட்டது. ஆனால் தகுந்தகாலம் வந்ததும் மீண்டும் தொடரப்பட்டு வெற்றி பெற்றது. அது மகாத்மா காந்தியின் நம்பிக்கை. எத்தனைமுறை கீழே விழுந்தாலும் எழக்கூடிய நம்பிக்கை. இதுவே சாதிப்பதற்கான தன்னம்பிக்கை.

நம்பிக்கை தரும் ஆற்றல்

        அம்மன் கோவிலில் நடக்கும் விழாக்களைப் பார்த்திருப்பீர்கள் இறுதி நாளன்று பூ மிதித்தல் என்ற ஒன்று நடத்துவார்கள். பூ மிதித்தல் என்பது பூவை மிதிப்பது அல்ல. அது நெருப்பு அம்மன் கோவிலில் முன்பாகச் சுமார் இரண்டு அடி ஆழத்தில் ஐந்து மீட்டர் தூரத்தில் குழியைத் தோண்டுவார்கள், அதில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு மரக்கட்டைகளையும் விறகுகளையும் போட்டு எரிப்பார்கள்.

அது எரிந்து நெருப்பு கனகன என்று அனல் பறக்கும். மாலை வரை அது கனென்று கொண்டே இருக்கும். மாலை ஐந்து மணி அளவில் பெண்களும் ஆண்களும் குறிப்பிட்ட நாட்களில் விரதமிருந்து தண்ணீர் ஊற்றிகொண்டு அந்த நெருப்பில் நடப்பார்கள். இது எப்படி சாத்தியம்? ஸ்டவ் பற்ற வைக்கும் போதும் ஊதுபத்தி கொழுத்தும் போதும் சிறிது  தீப்பட்டால் கூட சூட்டு கொப்புளங்கள் போடவைக்கும். எவ்வாறு? அதன் மீது நடக்கும் போது நெருப்பு சுடவில்லை? காரணம் நம்பிக்கை. அம்மனுக்காகத் தீ மிதிக்கின்றோம் அது ஒன்றும் சுடாது என்று அந்த மக்களுக்கு மனதில் உள்ள நம்பிக்கை. கவனியுங்கள் இது எவ்வளவு பெரிய அசைக்க முடியாத நம்பிக்கை. அறிவியல் ஆய்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஒரு மனிதனின் நம்பிக்கை என்பது காட்டையும் நாட்டையும் எரிக்கும். நெருப்பால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வாறு இருக்கும் போது உங்களின் நம்பிக்கை உறுதியாக இருந்தால் மற்ற தடைகள் எல்லாம் தவிடுபொடி ஆகாதா? சிந்தித்து பாருங்கள்.

விடா முயற்சி

           தன்கையே தனக்குதவி என்பதை விட நம்பிக்கையே தனக்கு துணை என்று கூறலாம். நீங்கள்தான் என்ற அகந்தையை நீக்கி பணிவான மனநிலை கொண்டு மற்றவர்களிடம் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு சாதிக்க ஒரு இலக்கை ஏற்படுத்தி அதனை அடைய பல போராட்டங்களை எதிர் கொண்டு பொறுமையைக் கடைபிடித்து உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் வானமும் தொட்டுவிடும் தூரம்தான்.

ஹோண்டா பைக் பார்த்திருப்பீர்கள் அதை உருவாக்கியவர் ஹோண்டா என்பவர் ஆவார். அவருக்கு சிறு வயதிலேயே மோட்டார் இஞ்சினைச் சிறிது மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு பிறகு அவர் அந்தச் சூழ்நிலையை அடைந்ததும், பணத்தைச் செலவுசெய்து இஞ்சினை மாற்றி ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால் யாரும் அவரை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவரின் பேச்சைக்கூட யாரும் செவிமடுக்கவில்லை. இவரும் சலைக்காமல் நம்பிக்கையுடன் பலமாதங்கள் நடந்தார். இறுதியாக ஒரு கம்பெனியில் பார்க்கலாம் என்று கூறினார்கள். பின்னர் அவ்செயல்பாட்டைப் பயன்படுத்தி பார்ப்பதற்குச் சில மாதங்கள் ஓடின. ஒரு கம்பெனி இவரின் இஞ்சினுக்குப் பச்சைக்கொடி காட்டியது. உடனே கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அந்த இஞ்சினைத் தயாரிக்கிறார். பெருமளவில் பொருள் இழப்பு ஏற்பட்டு மூடப்பட்டது. வேறு ஊருக்கு சென்று வீடுவாசல் என்று எல்லாவற்றையும் விற்று மீண்டும் கம்பெனியைத் தொடங்குகிறார். சில ஆண்டுகள் கடந்தன. தீ விபத்து ஏற்பட்டு கம்பெனி முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. ஆனாலும் அவர் மனம் தளராமல் நம்பிக்கையுடன் சில ஆண்டுகளில் மீண்டும் கம்பெனி ஆரம்பித்து நடத்தி வெற்றிபெற்றார் ஹோண்டா. எனவேதான் உலகத்திற்கு ஹோண்டா பைக் கிடைத்தது. இது விடா முயற்சி.

பதறிய நாக்கினால் நட்பு கெடும். விடாமுயற்சியால் தாழ்மை கெட்டு மேன்மையுறும்.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

விஜய் வித்யாலாயா கல்லூரி, தர்மபுரி.

முள் செடி (விஷ முள்)- நிமிடக்கதை

நான் சின்னவயதில் இருக்கும்போது ஒரு விஷ முள் செடிகூட தென்படவில்லை. ஆனால், இப்போது எல்லா இடத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டது ஏரியில் இச்செடி வானுயர வளர்ந்து ஏரியின் அழகை கெடுத்துவிட்டது.

                சராசரி ஒரு செடிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டால் இந்தச் செடிக்கு மட்டும் இருபது லிட்டர் தண்ணிர் தேவைப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டு எங்குமே வறட்சி காணப்படுகிறது. மழையும் குறைந்துவிட்டது. எல்லோருடைய வீட்டிலும் எரிவாயு இருப்பதால் அடுப்பெறிக்க விறகு வெட்டுவதில்லை.

                நான் அரசாங்க அதிகாரிகளிடம் பேசினேன். அதை, அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நியாயவிலை கடையில் உள்ள தகவல் பலகையில் செய்தி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அது, ஏரியில் இருக்கின்ற முள்செடிகளை வீட்டிற்கு ஐந்து செடிகள் வேரோடு பிடுங்கினால் நியாயவிலைக் கடையில் ஒரு அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு மா, பலா, வாழைக்கன்றும் அதனுடன், ஒரு தென்னங்கன்றும் கொடுக்கப்படும் என்றும், எரிவாயு இருப்பு இல்லாததனால் இரண்டு மாதம் வழங்கப்படமாட்டாது என்றும் செய்தி இருந்தது. இந்தச் செய்தி ஊர் முழுக்கக் காட்டுத் தீப்போல் பரவியது.

                உடனே ஏரியில் கத்தி, கடப்பாரை, மண்வெட்டியோடு ஊர் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ஏரியைச் சுத்தப்படுத்திவிட்டனர். கொடுத்தக் கன்றுக்கு மழை வரும் வரை வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு ஐந்து குடம் தண்ணிர், லாரியில் கொண்டுவந்து தரப்பட்டது.

                இப்போது மரங்கள் வளர்ந்து பலன் தருகின்றன. மழை தவறாமல் பெய்கின்றது. விவசாயம் நல்லபடியாக நடக்கின்றது. ஊரைப் பார்த்தால் நந்தவனம்போல் காட்சியளிக்கிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

மறக்க முடியுமா (சிறுகதை)

நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

தமிழ்த்துறை,

ஓசூர் – 635 130

9952779278

விடுதலைப் பண்ணையம்

கொங்குப் பகுதிகளில் வழக்கில் உள்ள நிலமேலாண்மை முறைகளில் விடுதலைப் பண்ணையம் எனப்படும் வாரத்திற்கு விடுதல் குறித்து சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் சேகரித்த தரவுகளைக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

அதிக அளவு நிலம் வைத்திருக்கும் ஒரு சில நில உரிமையாளர்கள் ஆட்கள் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, நிர்வாகம் செய்ய இயலாமை போன்ற காரணங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படுவதுண்டு. இத்தகைய சூழலில் விவசாயம் செய்யத் தெரிந்தவரிடம் தன்னுடைய நிலத்தைப் பயிர் செய்வதற்காக அனுமதி அளிக்கின்றனர். அவ்வாறு அனுமதியளிக்கும்போது குத்தகைக்கு விடுதல், போகியத்திற்கு விடுதல், வாரத்திற்கு விடுதல் போன்ற ஒப்பந்த முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

குத்தகை முறை என்பது கால அளவினை அடிப்படையாகக் கொண்டு பயிர் செய்வதற்காக அனுமதித்தல் ஆகும். இம்முறையில் குறைந்தது மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை நிலத்தை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக் காலம் முடியும் வரை இலாபம் ஏற்பட்டாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் குத்தகைத் தொகையினை வருடா வருடம் கொடுத்து விடவேண்டும். விவசாயி தனது நிலத்தின் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட அளவுத் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு விவசாயம் செய்ய அனுமதிப்பதைப் “போகியத்திற்கு விடுதல்” என்கின்றனர். முன்பணத்தைத் திருப்பித் தரும் வரை நிலத்தில் பயிர் செய்கின்றார். போகியத்திற்காக வாங்கிய பணத்திற்கு விவசாயி வட்டி கொடுப்பதில்லை.

நில உரிமையாளர் ஒரு பருவ காலத்திற்கு மட்டும் தன் நிலத்தை விவசாயம் செய்யத் தெரிந்தவர்களிடம் விடுகின்றார். இவ்வாறு விடுவதை “வாரத்திற்கு விடுதல்” என்கின்றனர். இதை “விடுதலைப் பண்ணையம்” என்றும் கூறுகின்றனர்.

தானியம். அதனை பயிர்செய்தால் பூமி குளிர்ச்சி அடையும் என்பது பொள் ளாச்சி மக்களின் நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. சிறந்த நிலமேலாண்மை ஆகும். நிலத்தின் தரம் கெட்டுவிடாமல் இருக்க கொங்கு மக்கள் பயிர்ச் சுழற்றி முறையைக் கடைப்பிடித்தனர். தீர்வளம் குறைந்த மேட்டு நிலங்களில் கம்பு, ராகி, சோளம், தட்டை, பாசிப்பயிறு போன்ற தானிய வகைகளை ஒன்றைமாற்றி ஒன்று எனப்பயிரிட்டு நிலத்தின் சத்தைச் சமன் செய்து வந்துள்ளனர். வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களைப் பயிர்செய்யும் பொழுது என்று நட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு வாழையின் இடையே வெங்காயம், தட்டை போன்ற குறைந்த கால பயிர்களையும் பயிர் செய்து வந்துள்ளனர்.

நில மேலாண்மை

வைகாசி மாதம் பூமியின் மேல் பகுதி மட்டுமல்லாது அடிப் பகுதியும் சூடாக இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் பூமியின் அடியில் ஈரப்பதம் இருக்கும். நிலத்தை நெல் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக ஆக்கப் பத்து உழவு ஓட்ட வேண்டும். பிறவகைத் தானியங்களை விதைக்க நான்கு முதல் ஆறு உழவு போதும். ‘அதிர ஓடினால் முதிர விளையும்’ என்பது கொங்கு வட்டாரப் பழமொழி. நிலம் அதிரும்படியாக மாடுகளை ஓட விட்டால், தானியங்கள் நன்கு முதிர்ந்து விளையும் என்பது இதன் பொருள்.

அதாவது நெல்விளையும் வயல்களில் விதைப்பதற்கு முன்பாக 12 நாட்கள் குளம்போல் நீரைத்தேக்கி மண்ணை நன்றாக வறவிட்டு விடு வார்கள். தேக்கிய நீரில் எருக்கஞ் செடிகளையும் ஆமணக்குச் செடிகளையும் போடுவார்கள். நீரில் ஊறிய அச்செடிகள் அழுகும். ஆறு நாட்களுக்குப் பிறகு ஊறிய அக்களத்தில் பத்து இருபது மாடுகளை விரட்டி விரட்டி ஓட விடுவார்கள். காளை மாடுகளை இவ்வாறு ஓடவிடும் பொழுது அச்சத்தால் அம்மாடுகள் சிறுநீரையும் சாணத்தையும் கழித்துக்கொண்டே ஓடும். குளத்தில் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த எருக்கள் மற்றும் ஆமணக்குச் செடிகளின் மீது மாடுகளின் கழிவுகளும் விழுந்து, மாடுகளின் கால்களில் மிதிபட்டு மண் மிருதுவாகி உரங்களும் அதனுடன் நன்கு கலந்துவிடும்.

நீர் வற்றத் தொடங்கும் பொழுது ஏறு பூட்டி உழ ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே நன்கு மண்ணோடு கலந்துவிட்ட செடிகளும், கழிவுகளும் உழத் தொடங்கியதும் மேல்மண் அடியில் சென்று, அடிமண் மேலே வரும். இப்படிச் செய்வதால் நிலம் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்துக் கொள்கிறது. பத்து உழவு ஓட்டினால்தான் நிலம் பூ போன்று மென்மையாக ஆகும்.

நெல்வயல் எப்பொழுதும் கால் வைத்தால் புதைந்து போகக் கூடிய அளவிற்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாற்றை மாற்றி நடும்பொழுது விரலால் நிலத்தைக் குத்தி அந்த ஓட்டையில் நான்கு ஐந்து நெல் நாற்றுகளை நடமுடியும். நாற்று உழுது உழுது மென்மையாகச் செய்கிறார்கள்.

விதைப்பிற்காக உழுது நிலத்தைச் சமன்செய்யப் பரம்புப்பலகை என்னும் பலகையைப் படுக்கை வாக்கில் நிறுத்தி அதன் இரு ஓரங்களிலும் இரு இரும்பு வளையங்களை அமைத்து அந்த வளையத்தைக் கயிற்றின் ஒரு முளையுடன் இணைத்து மறுமுனையை மாட்டின் நுகத்துடன் இணைத்து விடுவார்கள். அந்தப் பரம்புப்பலகையின் மேல் ஏறி ஒருவர் நின்றுகொள்ள மாடு அந்தப்பலகையை நிலம் முழுவதும் இழுத்துச்செல்லும் அப் பொழுது நிலம் சமம் ஆகும்.

உரம் போடும் முறை

உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு என்ற நிலமேலாண்மையில், உழுது பயிரிட்ட நிலத்திற்கு ஏற்ற உரத்தை இடுவது மிக அவசியம். நிலத்திற்கு உரமாக ஆட்டுப்புளுக்கை, மாட்டுச்சாணம், எருக்கஞ்செடி, ஆமணக்குச்செடி, அடுப்புச்சாம்பல், குப்பைமண் ஆகியவற்றையே பயன்படுத்தியுள்ளனர். செடிகளில் பூச்சி விழுந்தால் கோமியத்தையோ, சூளைச் சாம்பலையோ செடிகளின் மீது தெளித்தும், போட்டும் அவற்றை அழித்துள்ளனர். நிலத்திற்கு உரம் போடப் பட்டிபோடுதல் என்ற முறையைக் கையாண்டுள்ளனர்.

அதாவது ஐம்பது முதல் நூறு ஈடுகளை விதைப்பிற்கு முன்பாக நிலத்தில் பரம்புப்பட்டி அமைத்து இரவு முழுவதும் விட்டுவிடுவார்கள். ஆட்டுப்புழுக்கையும் சிறுநீரும் நிலத்திற்கு உரமாகும். ஆட்டைப் போன்றே மாடுகளையும் பட்டி போடுவார்கள். நிலத்தின் அள வைப் பொறுத்துப் பட்டி போடுதல் மாதக்கணக்கில் நீடிக்கும் இவ்வாறு நிலத்தின் பயனைப் பல தலைமுறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் இயற்கை உரங்களை இட்டுப் பாதுகாத்து வந்தனர்.

 முப்பது வருடங்களுக்கு முன்புவரை நெல் வயல்களுக்குப் பன்றியின் கழிவுகளை இடும் வழக்கம் இப்பகுதியில் இருந்துள்ளது. இரசாயன உரங்களின் வருகைக்குப் பின்பும் கூட இப்பகுதி மக்கள் நிலத்திற்கு இயற்கை உரங்களையே அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

நினைவுகூறல்

மாடுகளை ஓடவிட்டு நிலத்தைப் பக்குவப்படுத்தியதன் அடையாளமாகவும் பட்டி அமைத்து உரம்போட்டதன் அடையாள மாகவும் இன்றும் மாட்டுப்பொங்கல் அன்று பட்டி நோம்பி கொண்டாடப் படுகிறது. பட்டி நோம்பி அன்று அவரவர் தோட்டத்தின் மையப்பகுதியில் மூங்கில் பிளாச்சி கரும்பு, வாழை, மா இலை, முக்கத்தான் கொடி போன்ற வற்றால் பட்டி அமைக்கின்றனர். அந்தப்பட்டிக்குள் ஐந்து பானைகளை வைத்துப் பொங்கல் வைத்து அதற்கு முன்பாகச் சிறுகுழியை வெட்டி அதில் மாட்டின் சாணம் கரைத்த நீரை ஊற்றுகின்றனர். பொங்கல் பொங்கியதும். அந்தக் குழிக்குள் மாட்டை விரட்டி விட்டுப் பட்டியைச் சுற்றிவரச் செய்கின்றனர்.

தற்பொழுது உடல் உழைப்பிற்குப் போதிய வலிமையின்மை காரணமாகவும் நீர்ப் பற்றாக்குறை காரணமாகவும் பொள்ளாச்சி வட்டாரத்தின் பெரும் பகுதி தோப்புகளாகவும் மாறிவிட்டன. நெல்வயல் களில் காட்டி வந்த நிலமேலாண்மையை இப்பொழுது தென்னங் கன்றுகளை நடுவதில் காட்டுகின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நிலத்தை ஒரு தாய் பிள்ளையைப் பராமரிப்பது போல் பராமரித்து வந்தார்கள். எந்தப் பட்டத்தில் எதை விதைக்க வேண்டும் விதைக்கும் விதைக்கு ஏற்ப எத்தனை முறை உழ வேண்டும் என்பதில் மிகுந்த அனுபவம் உடையவர் களாக இருந்தனர், நிலம் உழுதிருப்பதைப் பார்த்தே இந்நிலத்தில் விளையும் தானியம் எத்தகையது என்பதை முடிவு செய்கின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நில மேலாண்மையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

எழுதிகச் சாங்கியம்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல், பெய, நூற்பா ]) என்பார் தொல்காப்பியர். அதே போன்று மனித இனம் நிகழ்த்தும் எல்லாச்சடங்களும் பண்பாட்டுப்பொருள் குறித்தனவையாகும் ‘சடங்கு’ என்பது குறிப்பிட்ட இடத்தில் (களம்) குறிப்பிட்டகாலத்தில் எவரைக் கொண்டு எவருடன் சேர்ந்து செய்ய வேண்டும் என நனவுநிலையில் (Con scious) நிகழ்த்தப்படுவதாகும் என்கிறார் அலெக்சாண்டர் (1978, 1982), “சடங்குகள் சில குழல்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக இவை கூட்டுத்தன்மை வாய்ந்தவை (Collective) சமூகம் சார்ந்தவை (Social) ஆகும்” (பக்தவத்சலபாரதி, டிசம்பர் 2002).

கொங்கு நாடு மலைகளினாலும் ஆறுகளினாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாகும் இப்பகுதியில் வேளாளர், கைக்கோளர், வன்னியா, நாவிதர், ஏகாலி1, ஆசாரி, குயவர், சக்கிலியர் போன்ற பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் கொங்கு நாட்டுக் கவுண்டர்கள். இவர்களது முதன்மைத்தொழில் வேளாண்மை ஆகும். இவர்கள் நடத்தும் சாங்கியங்களில் ஒன்று ‘எழுதிகச் சாங்கியம்’ ஆகும்.2 இது சுமங்கலிப் பெண்ணிற்குச் செய்யப்படும் ஒரு சடங்காகும். அதாவது சுமங்கலிப் பெண்ணினுடைய குழந்தையின் திருமணத்திற்கு முன் இச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது.

எழுதிகம் பெயர்க்காரணம்

‘எழுதிங்கள்’ என்ற சொல்லின் திரிபு ‘எழுதிகம்’ எனலாம் ஏழு + திங்கள் = எழுதிங்கள் ஆகும். ‘ஏழு’ என்பது எண்ணையும் ‘திங்கள்’ என்பது மாதத்தையும் குறிக்கிறது. இச்சாங்கியம் ஏழு மாதம் விரதம் இருந்து செய்வதினால் ‘எழுதிங்கள் சாங்கியம்’ எனப்பெயர் பெற்றது எனலாம். தற்போது பௌர்ணமி நாளன்று மட்டும் விரதமிருந்து எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துகின்றனர். எழுதிகம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரதம் இருப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.

எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துபவர்கள்

புடவைக்காரர்3, சாங்கியக்காரம்மாள்4 ஆகிய இருவரும் சாங்கியம் கொங்கு நாட்டுப்புறவியல் செய்ய தகுதிப் பெற்றவர்கள் ஒவ்வொருபிரிவிலும் அந்தப்பிரிவினரே சாங்கியம் செய்கின்றனர். இச்சாங்கிய நிகழ்த்துதலில் நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோரும் கவுண்டர்களின் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சாங்கியப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாவிதருக்கு ‘பேழைக் கூடை5 தூக்கும் பணியும், ஏகாலி ‘பந்தம்6 பிடிக்கும் பணியும், சக்கிலியருக்கு சாங்கியப் பெண்ணிற்குச் செருப்பு அணிவிக்கும் பணியும் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சாங்கியம் இவர்களின் துணையோடு ‘பெண்’7 ணின் தாய் வீட்டில், இரவு நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது.

எழுதிகச்சாங்கியம் நிகழ்த்தும் முறை

ஒரு பெண்ணிற்கு அப்பெண்ணின் தாய்வீட்டார் எழுதிகச் சாங்கியம் செய்ய முடிவு செய்கின்றனர். நல்லநாள் அறிந்து இச்செய்தியைப் பெண்ணின் புகுந்தவீட்டிற்குத் தெரிவிக்கின்றனர். தாய்வீட்டார் சாங்கியப் பெண்ணிற்கும் அவளது குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுக்கின்றனர். புடவைக்காரர், சாங்கியகாரம்மா, நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து இச் செய்தியை அறிவிக்கின்றனர்.

சாங்கியம் நிகழும் இடத்தில் ‘முகூர்த்தக்கால்”8 இட்டு பந்தல் போடுகின்றனர். அவ்விடத்தை மெழுகிக் கோலம் போட்டு அதற்குப் புற்று மண்ணால் கரைக்கட்டுகின்றனர் குழவிக்கல், உரல், ‘நுவத்தடி9, கோடாலி10 போன்றப் பொருட்களைச் சேகரிக்கின்றனர். தாய் வீட்டிலிருந்து யாரேனும் ஒருவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வருகின்றனர். பெண் வீட்டு உறவிளரும், தாய்வீட்டு உறவினரும் சாங்கிய நிகழ்விடத்திற்கு வருகின்றனர்.

வீட்டினுள்ளும் சாங்கியம் நிகழும் பந்தலடியிலும் விளக்கேற்றுகின்றனர். புடவைக்காரர் பந்தலடியில் விளக்கிற்கருகில் சாணிப் பிள்ளையாருக்கு அருகம்புல் குத்திவைக்கின்றார். அதன் மீது மஞ்சளும் பூவும் தூவுகின்றனர். சாங்கியக்காரம்மாள் சமைக்கப்பட்ட பச்சரிசிச் சோற்றில் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்து ஒன்பது உருண்டைகளாகப் பிரிக்கின்றார். கம்பு மாவினால் ஆன கொழுக்கட்டையைத் தயார் செய்கின்றனர். சுருப்பட்டி பதித்து வைத்துத் தினை மாவினை ‘பிரிமனை11 மீது வைக்கின்றனர். நாவிதர் ‘விரிக்கட்டு12 மூட்டையை வீட்டினுள் போடுகின்றார். கோடாலிக்குச் சிகப்புத் துணிக் கட்டுகின்றார். உரல், நுவத்தடி, கோடாலி மற்றும் பாத்திரங்களுக்குத் திருநீறு, சந்தனம், சிகப்பு பொட்டுகளை வைக்கின்றார். புடவைக்காரர் அரசு இலை, ‘மஞ்சள் கோம்பு”13 இரண்டையும் மஞ்சள் கலந்த வெள்ளை நூலில் சுட்டுகின்றார். நாவிதர் ஒவ்வொரு பாத்திரத்திற்கும். ஒவ்வொரு பொருளுக்கும் அரசு இலை மஞ்சள் கொம்பாலாள கயிற்றைக் கட்டுகின்றார். ஏகாலி ‘பந்தம்’ பிடித்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டினுள் போடப்பட்டிருக்கும் விரிக்கட்டின் மீது சுமங்கலிப் பெண்ணையும் அவளது தோழியையும் அமரச்செய்து பின்னர் அவர்களை ‘விரிக்கட்டிலிருந்து’ சாங்கிய நிகழ்விடத்திற்கு அழைத்து ‘முக்காலியில்14 கிழக்குப் பார்த்து அமரவைக்கின்றனர். புடவைக்காரர் சோற்றில் நெய்கலந்து பிசைந்து அவர்களுக்குப் பொட்டு வைக்கிறார். கற்பூரம் காட்டிய பிறகு அதைக்கையால் ‘வழித்து’த் தள்ளிவிடுகிறார். பின்னர் ‘சருவுசட்டி’15 யைப் பெண்ணின் தலைக்கு மேல்பிடித்து ஒரு செம்புத் தண்ணீரை மூன்றுமுறை ஊற்றுகின்றார். புடவைக்காரர் செய்ததைப்போல் இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் அந்தப் பெண்ணிற்குச் செய்கின்றனர். பின் பெண்ணிற்குச் சாம்பிராணிக் கரண்டியில் நெய்ப்புகைக் காட்டுகின்றனர். பிறகு மூன்று செஞ்சோற்று உருண்டைகளைப் புடவைக்காரர் பெண்ணிற்குச் சுற்றிப்போடுகின்றார். நாவிதர் ‘புளியாக்கை”16 யைப் பெண்ணின் தலைமேல் பிடிக்க புடவைக்காரர் அது வழியாக நீர் ஊற்றுகின்றார். நீர் ஊற்றியதும் நாவிதர் புளியாக்கையைப் பெண்ணின் உடல் வழியாக கீழே இறக்குகின்றார். இதே போன்று இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் செய்கின்றனர். இறுதியாக நாவிதர் மூன்று புளியாக்கையையும் பிய்த்துப் போடுகின்றார். புடவைக்காரரும், சாங்கியக்காரம்மாக்களும் பெண்ணின் முகத்தில் மஞ்சள் பூசுகின்றனர். பிறகு பெண்ணின் தலையில் மூன்று செம்புத்தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்பு அப்பெண் குளித்துவிட்டு ஏகாலி கொடுத்த பழைய சீலையைக் கட்டிக்கொள்கிறாள். இப்பழைய சீலை ‘வண்ணான் மாத்து’ என அழைக்கப்படுகிறது.

“தோழி”17 சாங்கியக்காரம்மாளுடன் நுவத்தடி மீது குதிகால் படும்படி நிற்கிறாள். மற்றொரு சாங்கியகாரம்மா பெண்ணிற்கு சிசுப்பை (குங்குமம்) இடது நெற்றியிலிருந்து வலது நெற்றி வரை பூசுகின்றார். புடவைக்காரர் பெண்ணின் தொண்டைப் பகுதியில் நெய்விடுகிறார். அது தொப்புளை நோக்கி வரும்போது சாங்கியகாரம்மா துடைத்து விடுகின்றார். அதேபோன்று முதுகு தண்டுவடத்தின் மேல் பகுதியில் நெய்விடுகின்றனர். தண்டு வடத்தின் கீழ் பகுதிக்கு வரும்போது துடைத்து விடுகின்றார்.

பெண் ஒரு குழந்தையையும், தோழி ஒரு குழவிக்கல்லையும் இடுப்பில் வைத்துக்கொண்டு சாங்கியப் பந்தலைச் சுற்றி வருகின்றனர். மூன்றாவது சுற்றில் பெண் உரலை உதைத்துத் தள்ளிவிட்டு ‘விரிக்கட்டில்! தோழியுடன் அமர்கிறாள். சாங்கியக்காரம்மா இருவரிடமிருந்து குழந்தையையும், குழவிக்கல்லையும் பெற்றுக் கொள்கின்றனர். பெண், தோழி, சாங்கியகாரம்மாவில் ஒருவர் ஆகிய மூவரும் மீண்டும் நுவத்தடியில் அமருகின்றனர். மூவருக்கும் வாழைஇலை போட்டு கொழுக்கட்டையைப் பரிமாறுகின்றனர் கொழுக்கட்டையை உண்டு விரதம் முடிந்ததும் பெண் குளிக்கச் செல்கிறாள்.

ஏகாலி விரித்த துணியில் சாங்கியக்காரம்மாவில் ஒருவர் ஒரு செம்புத் தண்ணீர், தேங்காய், பழம் ஆகியனவற்றை வைத்து முக்காலியில் அமருகின்றார்.தாய் வீட்டார் சீர்வரிசைகளை அவர்முன் வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நாவிதரின் மனைவி உரக்கக் கூறுகின்றார் பெண் சீர்வரிசைகளைப் பெற்றுக் கொள்கின்றாள். பிரிமனையின் மீது கருப்பட்டியைப் பொதித்து வைத்த தினை மாவுருண்டையை பேழைக் கூடையில் நாவிதர் எடுத்து வைக்கின்றார். சிகப்புத் துணி சுற்றிய கோடாரியால் பெண், புடவைக்காரர், சாங்கியகாரம்மாக்கள், நாவிதர் ஆகிய ஐவர் சேர்ந்து தினைமாவினைத் துண்டாக்குகின்றனர். துண்டான மாவை ‘ஏகாலி’ துணியோடு எடுத்து வைத்துக் கொள்கின்றார். பெண் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது சக்கிலியர் அவருக்குச் செருப்பு அணிவிக்கிறார். தாய் வீட்டார் பெண்ணை மீண்டும் அவளது கணவன் வீட்டில் சேர்க்கின்றனர். அடுத்தநாள் பெண் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்கின்றனர். இதுவே எழுதிகம் நடைபெறும் முறையாகும்.

நம்பிக்கைகள்

எழுதிகச்சாங்கியம் செய்து கொள்ளவில்லை என்றால் குலம் விருத்தியடையாது. எழுதிக நிகழ்வில் நெய்விடும்போது நேராகவராமல் பக்க வாட்டில் சென்றாலும், தினைமாவில் இருக்கும் கருப்பட்டி ‘வேத்திருந்தாலும்”18 அப்பெண்ணிற்கும், அக்குலத்திற்கும் துன்பம் நேரிடும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும், இச்சாங்கியம் செய்து கொண்ட பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், குழந்தை பெற இயலாத பெண் இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது. என்றும் கருதுகின்றனர்.

ஆய்வுப்பார்வை

எழுதிகச் சாங்கியத்தில் நிகழ்த்தப்படும் உரல் உதைத்தல், தினைமாவுபிளத்தல், குழந்தையைத் தூக்கிச் சுற்றுதல் போன்ற நிகழ்வில் குறியீட்டுத் தன்மைகள் காணப்படுகின்றன. பிராய்டின் உளப்பகுப்பாய்வு நோக்கில் உரலும், உலக்கையும் பெண்குறி, ஆண்குறிகளாகவும் இரண்டும் இணைவது உடலுறவாகவும் கருதப்படுகின்றது. இக்கருத்தின்படி இச்சாங்கியத்தில் உரலை உதைத்துத் தள்ளுதல் என்பது ஆணும் பெண்ணும் உடலுறவுக்கொள்வதை கட்டுப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

தினைமாவினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ள சுருப்பட்டி பெண்ணின் கருப்பையில் கருவாக வளரும் குழந்தையின் குறியீடு பேற்றினைத் தடை செய்வதாகக் கொள்ளலாம். இக்கருத்தினை எழுதிகச் சாங்கியம் செய்து கொண்ட பெண்கள் குழந்தைப்பேறு அடையக் கூடாது என்பது இச்சாங்கியத்தின் மீதான விதி இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

இப்பெண்களே இச்சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை நிகழ்த்தும் தகுதி கொண்டவர்கள் எனச் சமூகம் இவர்களுக்கு ஒரு தகுதியை வழங்கினாலும் கணவனை இழந்தவளோ, குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்ணோ இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு பெண் கருத்தரிப்பு செய்வதைத் தடைசெய்வதாக உள்ளது. அதாவது, எழுதிகச் சாங்கியம் என்பது கொங்கு நாட்டுக் கவுண்டர்களின் ஒரு தனிப்பட்ட வாழ்வியல் சடங்காக இருந்தாலும் அது ஒரு பெண்ணின் குழந்தைப் பேற்றினைத் தடைசெய்வதாக அமைந்துள்ளது எனலாம் இது ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்டதொரு சமூகத் தகுதியை வெளிப்படையாக வழங்குவதன் மூலம் கருத்தடையை மறைமுகமாகப் பொதிந்து வைத்துள்ளது எனலாம்.

அடிக்குறிப்புகள்

1.‘ஏகாலி’ என்பது வண்ணாரைக் குறிப்பதாகும்.

2. ‘சாங்கியம்’ என்பது சடங்கு என்பதைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல்லாகும்.

3. புடவைக்காரர், புடவைக்குரிய சாங்கியத்தைச் செய்து அவ்இனத்தின் ஆணைக் குறிப்பது. கொண்ட

4. சாங்கியகாரம்மாள், எழுதிகச் சாங்கியம் செய்துகொண்டு, சாங்கியம் செய்யும் அவ்வினத்தின் பெண்ணைக் குறிக்கும்.

5.பேழைக்கூடை என்பது மூங்கில் சிம்பால் செய்யப்பட்ட ‘ப’ வடிவான கூடையாகும். இது நாவிதர் வீட்டில் மட்டுமே இருக்கும்.

6. ‘பந்தம்’ என்பது துணியைச் சாணியில் நனைத்துச் சுற்றி வைத்துள்ள குச்சியாகும். அந்தத் துணியில் நெருப்பைப் பற்ற வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பார். இவ்வாறு செய்வதினால் இரவில் நிகழ்த்தும் ‘சடங்குகளுக்கு வெகுநேரம் வெளிச்சம் தருகின்றது.

7. ‘பெண்’ எழுதிகச் சாங்கியம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக கையாளப்படுகின்றது.

8. ‘முகூர்த்தக்கால்’ – பந்தல் போட முதல் குச்சியில், நவதானியத்தை மஞ்சள் துணியில் கட்டி கற்பூரம் காட்டி நடுவதைக் குறிக்கிறது.

9. ‘நுவத்தடி’ ஏரில் இரண்டு மாட்டையும் இணைக்கும் மொத்தமான கொங்கு நாட்டுப்புறவியல் குச்சியாகும்.

10. ‘கோடாலி’ மரத்தை வெட்டும் இரும்புக் கருவியாகும்.

11. பிரிமனை பானை போன்ற பாத்திரங்களை விழாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது. இது வைக்கோலினால் ஆன வட்டவடிவான வளையமாகும்.

12,’விரிக்கட்டு’ வைக்கோல் மூட்டை

13.மஞ்சள் கிழங்கை ‘மஞ்சள்கோம்பு’ என்று கூறுவர்.

14.’மூக்காலி’ மூன்று கால்களைக் கொண்ட இருக்கையாகும்.

15. ‘சருவுசட்டி’ – வட்ட வடிவமான செம்புப் பாத்திரமாகும்.

16.’புளியாக்கை’ புளியங்குச்சியை வட்டவடிவமாகக் கட்டி அதைச் சுற்றி புளியமர இலையைக் கட்டியிருப்பது.

17. பெண்ணின் சகோதரனின் மனைவி ‘தோழி’ என்று கூறப்படுகிறது.

18. ‘வேத்தல்’ இயல்புநிலைமாறி குழைந்த நிலையைக் குறிக்கிறது.

துணைநூற்பட்டியல்

1. ‘தொல்காப்பியம்’ ச.வே.சுப்பிரமணியம் உரை

2. பக்தவத்சல பாரதி ‘தமிழர்மானிடவியல்”, 2002.

தகவலாளர்கள்

 1. ஆறுமுகம், 45, நாவிதர், திம்நாயக்கன்பட்டிஇராசிபுரம் (வ)நாமக்கல்,

 2.பெருமாயி.37. க/பெ. ஆறுமுகம், நாவிதர், திம்நாயக்கன்பட்டி இராசிபுரம் (வ), நாமக்கல்.

3. பெரியசாமி கவுண்டர், 60, புடவைக்காரர், மல்லியகரை (அஞ்) ஆத்தூர்’ (வ) சேலம்.

4. இரா. குணசேகர்,40, கவுண்டர், ஐய்யர்தோட்டம், அரசநத்தம் (அஞ்)) மல்லியகரை, ஆத்தூர் (வ) சேலம்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

www.kelviyumpathilum.com

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

உங்களுடைய இடற்பாடுகளைக் கையாள கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால் அடுத்து இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இலட்சியத்தை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு மாறினால் அவை இலட்சியங்கள் அல்ல. ஆசைகளே ஆகும். அடையும்வரை மாறாமல் இருப்பவையே இலட்சியம் ஆகும். அவ்வாறான இலக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடைவதற்கு எவ்வகையான அவமானங்களும், புறக்கணிப்புகளும் துரோகங்களும் விளைந்தாலும் நீங்கள் செல்லும் பாதையிலிருந்து விலகாதீர்கள். திடமனத்துடன் போராடுங்கள். கடினப்பட்டு தேடும் எதுவும் நிலைத்திருக்கும். எளிமையாகக் கிடைப்பவை வந்த மாயத்தில் சென்று விடும். அது பொருளாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. இதுவே நியதி. நீங்கள் கொண்டிருக்கும் இலக்கால் உங்களுக்கோ உங்களின் சமுதாயத்திற்கோ நன்மை விளைப்பதாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதில் நீரில் மூழ்கியவன் மூச்சுவிட, வெளியே வருவதற்கு எவ்வளவு வேகமாக செயல்படுகிறானோ அந்த வேகத்துடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

நெருப்பில் இட்ட சொர்ணம் ஜொலிக்கும்

      ஒரு இலக்கை அடைவதற்கு பல வகைகளில் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். சிலரின் பகையைப் பெறவேண்டி வரும். சில உறவுகள் நீங்கி செல்லக்கூடும். பலர் கேளியாகப் பேசக்கூடும். சிலரின் விமர்சனங்கள் உங்களின் மனதிடத்தையே ஆட்டம் காணச்செய்யும். இவையெல்லாம் நடக்கும். ஆனால் உங்களின் இலட்சிய பாதையிலிருந்து மனம், எப்போதும் விலகாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நீங்கள் பயணித்தால் நெருப்பில் இட்ட சொர்ணம் போல நீங்களும் மிளிரலாம். இதில் ஐயமில்லை.

       கிராமப்புறங்களில் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் சமைப்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவார்கள். அடுப்பில் வைக்கப்பட்ட விறகு எரிந்து கரியாக மாறிவிடும். அந்த அடுப்புக்கரியும் உலகில் விலையுயர்ந்த வைரமும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். இரண்டும் கார்பன்தான். ஒருநாள் இந்த இரண்டும் சந்திக்க நேர்ந்தது. கரி வைரத்திடம் கேட்டது! “நாம் இருவரும் ஒரே இனம்தான். ஆனால் நீ மட்டும் எவ்வாறு ஜொலிக்கிறாய்? மனிதர்கள் எல்லோரும் உன்னை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். உன்னை பெறுவதற்கு நிறைய உழைக்கிறார்கள். ஆனால் என்னுடைய நிலை மிகவும் தாழ்மையாக உள்ளது. என்னை அள்ளி குப்பையில் கொட்டுகிறார்கள் இதற்கு என்ன காரணம்?” வைரம் கூறியது, “நான் இந்த பூமியில் நிலநடுக்கம் போன்றவற்றால் உள்ளே அழுத்தப்பட்டு, பூமியின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு அழுத்தத்தால் நெருக்கப்பட்டு ஒராண்டு, இரண்டாண்டுகளல்ல பலஆயிரம் வருடங்கள் அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு பொறுமையாக உள்ளேயே இருந்தேன். எனக்கு கொடுக்கபட்ட எல்லாவகையான இடற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு இருந்ததால் என்உடல் இறுகி திடமாக மாறிவிட்டது. மனிதர்களால் தோண்டி எடுக்கப்பட்டுப் பூமியின் மேல் வந்து தீட்டப்பட்டு அழகாக ஜொலித்ததால் அடுப்புக்கரியாக இருந்த நான் வைரம் என்ற பெயரைப் பெற்றேன்” என்று கூறியது. எல்லாவற்றையும் தாங்கும் மனோதிடம், எதிர்கொள்ளும் தின்மை மனதிற்கு வேண்டும். அப்போதுதான் வரலாறு படைக்க இயலும்.

முன்னேற்றம் உங்கள் கையில்

        இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும். முன்னேற்றம் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பது மேலான பேச்சு ஆகும். பேசுதல் என்பது ஒரு கலை. மற்றவரிடம் தண்மையாகப் பேச வேண்டும். தான்என்ற அகங்காரத்துடனோ வேண்டாத வெறுப்பாகவோ, அதிகாரத்துடனோ, பேசினால் அநதச் செயல் அங்கு நடைபெறாது. தங்களின் முகபாவனை பேச்சு என்பது மற்றவரை கவனிக்க செய்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நீங்கள் தொடங்கும் செயல் முடியும். உங்களின் பணிவான பேச்சு எவ்விடம் தேவையோ அவ்விடத்தில் பண்புடனே பேசுங்கள். அதற்கு நன்றாக மனதை பக்குவம் செய்து கொள்ளுங்கள். இதுவே இலக்கை அடைவதற்கான நடைமுறை என்பதில் தெளிவாகுங்கள்.

வாயில் இருக்கிறது வழி

           ஒரு பொன் மொழி உண்டு “நீ எப்போதெல்லாம் உன் வாயை திறக்கிறாயோ அப்போதெல்லாம் உன் மனதை திறக்கிறாய்” என்று கூறுவதுண்டு. பேச்சு என்பது தெளிவாகத் தேவையான சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை அன்னைத்தெரசா அவர்கள் தான்நடத்தும் குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டுவதற்காகச் செல்வந்தர் ஒருவரை காணச்சென்றார். அப்போது அந்தச் செல்வந்தர் எவ்வகையான மனநிலையில் இருந்தாரோ! தெரியவில்லை. தெரசா அவர்கள், செல்வந்தரிடம் தமக்கு நிதயுதவி செய்யுமாறு கேட்டார் அப்போது அவர் “ஒன்றுமில்லை போ” என்று கூறினார். ஆனாலும் அன்னை அவர்கள் அந்த இடம்விட்டு நகரவில்லை. செல்வந்தரை காணவந்த சிலரும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். செல்லாமல் நின்று கொண்டிருந்த அன்னை அவர்களைப் பார்த்து “நீ இன்னும் போகவில்லையா”  என்று அதட்டினார்.  “ஏதேனும் உதவி செய்யுங்கள்”என்று அன்னை கேட்டபோது, “இந்தா பெற்றுக்கொள்” என்று அவர் அன்னையின் மீது காரி உமிழ்ந்தார். அதை தன் கைகளில் ஏந்தி கொண்டு “ஐயா இதை நான் பெற்றுக்கொள்கிறேன் பசியுடன் இருக்கும் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்” என்றார். இதைக்கேட்டவுடன் அந்தச் செல்வந்தரின் மனம் மாறியது. அவரே அன்னையைப் பாராட்டி அதிகமான நிதியைக் கொடுத்து உதவினார். இவ்வாறு தான் எடுத்துக்கொண்ட செயலை எவை நேர்ந்தாலும் செவ்வனே செய்து முடிக்கும் மனதிடம் வேண்டும். பேச்சுத் தின்மைவேண்டும். பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தனை செய்து கொள்ள வேண்டும். ஆனாலும் சிந்தித்த எல்லாவற்றையும் பேசி விடக்கூடாது. பேச்சு என்பது ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும்.

       உங்களுடைய மனம் இலக்கை அடைவதில் பிடிவாதமாக இருந்தால் உங்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் செயல்பட தொடங்கும். உங்களின் மூளையும் ஒளி பெற்றதைப் போன்று உணரும். இரவில் தூங்கவும் தோன்றாது. மனம் சோம்பலையும் வென்றுவிடும். உடல் பசியையும் பொருட்படுத்தாது. உங்களின் மூளை, மனம், உடல், ஆன்மா என்று எல்லாவற்றிலும் இலக்கை அடையும் வேகம் இரண்டறக் கலந்துவிடும். பின்னர் ஒவ்வொன்றும் ஒன்றை நோக்கியே பயணிக்கும். இந்த நிலையை  அடைந்துவிட்டால் நீங்கள் இலச்சியத்தை அடைவதை உங்களால்கூட தடுக்க இயலாது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணருங்கள்.

     உங்கள் இலக்கில் மனம் வையுங்கள். வரலாறு படைப்பவர்கள் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »