Abstract
Tamil literary works vividly portray the lifestyle and cultural values of the Tamil people. Tamils are known for their rich history and excellence in civilization and culture. They followed a virtuous way of life and acted with careful planning and strong adherence to principles. Tamil society established ethical codes of conduct and understood how to classify and inhabit lands according to their natural environment. From Sangam literature to contemporary literary works, Tamil texts clearly reflect this ecological and social awareness. Through Tamil literature, which serves as a historical source for understanding Tamil life and culture, this study highlights the land administration skills and environmental management practices of the Tamil people.
Keywords: Tamils, Land Administration, Lifestyle, Literature.
“தமிழர் வாழ்வியலில் நிலநிர்வாகக் கோட்பாடுகள்”
ஆய்வுச் சுருக்கம்
தமிழிலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுபவைகள். நாகரிகத்திலும் பண்பாட்டிலும் தலைசிறந்த வரலாற்றைக் கொண்டவர்கள் தமிழர்கள். அற வாழ்வியலை மேற்கொண்டு திட்டமிட்டுப் கொள்கைப்பிடிப்போடு செயல்படுவதைக் கோட்பாடாகக் கொண்டவர்கள். அவர்கள் ஒழுக்கநெறியோடு வாழ்வதற்குக் கொள்கைகளை வகுத்து, தாங்கள் வாழ்ந்த நிலத்தைச் சூழலுக்கேற்ப வகைப்படுத்தி வாழும் தன்மை அறிந்தவர்கள் என்பதைச் சங்க கால இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை எடுத்துக்காட்டுகின்றன. தமிழர் வாழ்வியலின் வரலாற்று ஆதாரங்களான தமிழ் இலக்கியங்கள் வழி, தமிழர்தம் நிலநிர்வாகத் திறனை எடுத்துக்காட்டுவதாய் இவ்வாய்வு அமைகிறது.
திறவுச் சொற்கள் : தமிழர்கள், நிலநிர்வாகம், வாழ்வியல், இலக்கியங்கள்.
முன்னுரை
நிர்வாகம் என்பது, ஒரு அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்து அதற்கான திட்டங்களை உருவாக்கிக் கிடைக்கக்கூடிய வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி இலக்குகளை அடைவதே எனக் கட்டற்ற கலைக்களஞ்சியம் கூறுகிறது. மனித சமூகம் இயங்குவதற்கு அனைத்து நிலைகளிலும் சிறந்த நிர்வாகம் தேவைப்படுகிறது. நிர்வாகத் திறன் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை. பழந்தமிழர்கள் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களாக விளங்கினர். தமிழர்கள் வாழும் வகையறிந்து செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, திட்டமிட்டு, வழிநடத்தி, தாங்கள் வாழ்ந்த நிலத்தை வரையறுத்து, அதில் கிடைக்கக்கூடிய வளங்களைச் செம்மையான வகையில் பயன்படுத்தி, மேன்மையான வாழ்க்கை என்ற இலக்கை அடைந்தனர் என்பதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நில நிர்வாகம்
பழந்தமிழகம் இயற்கைச் சூழலுடன் கூடிய நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. தமிழக மக்களின் வாழ்வியல் இந்நிலப்பரப்பைச் சார்ந்து அமைந்திருந்தது. எனவே, தமிழ் இலக்கியங்கள் நில அடிப்படை இலக்கியமாகத் தோன்றி வளர்ந்தன. தமிழகம் முன்பு இயற்கைச் சூழலில் மலை, காடு, ஆற்றுப் பாசன வயல், கடற்கரை நிலம் என நான்கு சமனிலைப் பகுப்புடன், தனித்தனியான வட்டார வழக்குகளுடன் திகழ்ந்தது. இவற்றில் தோன்றிய மக்கள் வாழ்வியல், நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் போல்வனவும் தனித்தனி இயல்புடையனவாய் வளர்ந்தன. இதனால், தமிழிலக்கியம் இந்நில அடிப்படைக் கூறுகளுடனும் இயல்புகளுடனும் திணை இலக்கியம் என நிலவழிப்பட்ட இலக்கியமாகத் தோன்றி வளரலாயிற்று. இந்நான்கு நிலம் தவிர, மலையும் காடும் சார்ந்த பகுதிகள் கோடைகாலத்தில் வறட்சியுற்று, மக்கள் போக்குவரத்துக்கேற்ற நிலமாயின. இவற்றைச் சுரம் என்றும் பாலை என்றும் அழைத்து, பிரிவு பற்றிய இலக்கியத்தை இப்பின்னணியில் பாடலாயினர். இதனால் திணை இலக்கியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப் பிரிவுகளை உடையதாயிற்று. திணை என்ற சொல் முதலில் நிலத்தைக் குறித்துப் பின்னர் அந்நில மக்களின் வாழ்க்கை ஒழுகலாற்றையும் அவ்வொழுகலாற்றைப் பற்றிப் பாடப்பட்ட இலக்கியத்தையும் குறித்தது எனத் தமிழண்ணல் காட்டும், தமிழர்களின் ஐவகை நிலப்பாகுபாட்டை ஷாஜகான்கனி எடுத்துக்காட்டியுள்ளார் (திணை வரலாறு, பக்க எண். 12). குறிஞ்சி நிலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய தமிழன் படிப்படியாகத் தேவையின் காரணமாகத் தொடர்ந்து முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைத் தேடி தனக்கு ஏற்றவகையில் நிர்வாகம் செய்து வாழ்ந்திருக்கிறான் என்பதைச் சங்ககால இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
நிலம்
நிலம் என்பது, நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதி பொருள் தருகிறது. ஐம்பெரும் பூதங்களுள் முதலாவது நிலம். தொல்காப்பியம்,
நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங்
லந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் (தொல்., பொருள்., மரபியல், 635)
உலகம் நிலம், தீ, நீர், வளி, விசும்பு என ஐவகை பூதங்களால் ஆனது என்கிறது. நிலத்தை மண், உலகம், வயல், நன்செய், புன்செய், ஞாலம், புவி, பூமி, வையகம் என்றெல்லாம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மனிதனின் வாழ்விற்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, உறையுள். இவற்றைத் தருவது நிலம். நிலம் உணவுக்காக விளைநிலமாகப் பயன்பட்டு உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ளது. உடையை உற்பத்தி செய்வது, உறைவிடமாக மக்களைப் பாதுகாப்பது நிலம். இத்தகைய நிலத்தைத் தமிழர்கள் அதன் தன்மைக்கேற்ப பாகுபடுத்தி, தேவையானவற்றை உற்பத்தி செய்து வாழ்ந்தனர்.
நிர்வாகம்
உலக மக்களில் தமிழர்கள் மட்டுமே வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து, ஒழுக்க நெறியோடு முறைப்படி வாழ்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. புறப்பொருள் வெண்பாமாலை,
மண்திணி ஞாலத்துத் தொன்மையு மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று (புற.வெ.மா.,க.ப.,குடிநிலை, ப.35)
என்று மண் செறிந்த பூமியிடத்துப் பழமையும் அஞ்சாத வீரமும் கொண்டு, பிறரறியும் பழமையான குடியின் பெருமையைச் சொல்கிறது. மேலும்,
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முற்தோன்றி மூத்த குடி (புற.வெ.மா.,க.ப.,குடிநிலை, ப.35)
எனக் கல், மண் தோன்றுவதற்கு முன்பே வீரத்தோடு தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்கிறது. இப்படிப் புகழ் பெற்ற தமிழர்கள் நிலத்தின் சிறப்புக் கருதி பொதுவாக அதனைப் பெண்ணாக உருகப்படுத்தும் போது, தாயாக, மகளாக நினைந்து நிலமடந்தை என்றும் நிலமகள் என்றும் பூமித்தாய் என்றும் வருணிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தமிழறிஞர் பெ. சுந்தரனார், நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரத்தில் தமிழ் வணக்கப் பாடலாக நிலத்தைப் பெண்ணாக உருவகித்து, நிலமடந்தை என்று பாடியுள்ளார். வள்ளுவர்,
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (குறள், 1040)
என்று நிலத்தைப் பெண்ணாக உருவகித்துள்ளார்.
ஐவகை நிலப்பாகுபாடு
மலையும், காடும், வயலும், கடலும், மணற்பரப்புமான நிலத்தின் தன்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்த காரணத்தினால், நிலத்தை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பாகுபடுத்தி வாழ்ந்த வரலாற்றைத் தொல்காப்பியம் வழி அறியமுடிகிறது.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(தொல்.பொருள்.அகத்திணையியல், நூ., 5)
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல். பொருள். அகத்திணையில், நூ.,1)
என்றும்,
அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல். பொருள். அகத்திணையில், நூ., 2)
என்றும் சுட்டுகிறது. தமிழர்கள், மலையும் மலை சார்ந்த நிலப் பகுதியைக் குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த நிலப் பகுதியை முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலப் பகுதியை மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த நிலப் பகுதியை நெய்தல் எனவும் மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலப் பகுதியைப் பாலை எனவும் பிரித்து வாழ்ந்தனர் என்பதைத் தமிழிலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. இது நிலநிர்வாகத்தின் அடிப்படைச் செயல்களுள் முதன்மையானது என்பதைக் காட்டுகிறது. மேலும், இந்த ஐவகை நிலங்களின் தன்மைக்கேற்ப அதற்குரியவாகவும் அந்நிலங்களில் உள்ளனவாகவும் இருக்கும் கருப்பொருள்களை,
தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப
(தொல். பொருள். அகத்திணையில், நூ., 20)
தெய்வம், உணவு, விலங்கு, மரம், புள், பறை, தொழில், பண் வகைப்படுத்தியுள்ளதின் வழி தமிழரின் நிர்வாகத்திறன் சுட்டப்பெறுகிறது.
தமிழர் வாழ்வியலில் நிலம்
மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பண்படுத்தி, பயன்படுத்தும் முறையை அறிந்து சமூக முன்னேற்றத்திற்கான வழி முறைகளைக் கண்டறிந்தான் தமிழன். உணவு மனித இனம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும்.
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீருநிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே (புறநானூறு, 18:18-23)
உடம்புக்கு உணவு வழங்கியவர் உயிர் தந்தவராக மதிக்கப்படுவர். உணவு என்பது நிலம் நீர் ஆகியவற்றின் கொடை. நீரையும் நிலத்தையும் சேர்த்து வைத்தவர். உடம்பையும் உயிரையும் படைத்தவர். உணவை உற்பத்திச் செய்வதற்கு நிலம் அடிப்படை. இவ்வடிகளில் குடபுலவியனார் நிலத்தின் சிறப்பையும் நீரின் சிறப்பையும் உணர்த்துகிறார். பழந்தமிழர் தொன்மைச் சமுதாயம் வேட்டை சமூகம் ஆகும். அதனைத் தொடர்ந்து ஆநிரைகளை மேய்த்து வளர்க்கும் சமூகம் உருவானது. இதன் வளர்ச்சியாக நிலவுடமைச் சமூகம் உருவானது. காட்டு விலங்குகள் வழி உழுதலை அறிந்து, தானியங்களை உழுது பயிரிட்டனர். ஆநிரைகளின் உதவியோடு உழு கருவிகளை உருவாக்கி உழவுத் தொழிலைச் செய்தனர். “மனிதச் சமூக வரலாற்றில் சாகுபடி, உழவு என்ற வாழக்காறு தோன்றிச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்பது வரலாறு கூறும் உண்மை” (திணை வரலாறு, பக்க எண். 119) என்று வேளாண்மைத் தோன்றிய வரலாறு எடுத்துக் காட்டப்பெறுகிறது.
தமிழர் ஒழுக்கமும் நிலப்பாகுபாடும்
குறிஞ்சியில், ஆநிரைகளை வேட்டையாடி வந்து தலைவியோடு தலைவன் இணைந்த அக ஒழுக்கம் இந்நிலத்தில் தோன்றியது. தலைவன் உண்டது போக இருந்த ஆநிரைகளைச் சேமித்தான். ஆநிரை உடைமைப் பொருளானது. முல்லை அக ஒழுக்கமாகிய தலைவி தலைவனுக்காக இருத்தலில் உழவுத்தொழில் தோன்றியது. நிலம் உடைமைப் பொருளானது. “முல்லை நிலக் காடுகளில் ஆடு மாடு மேய்த்தல் மற்றும் உழவு என்னும் தொழில் செய்துவந்த தமிழர், உழவினை மேம்படுத்தும் பணியாக, ஆற்றங்கரைக் காடுகளை அழித்து வயல்களாகச் செய்தனர். செய்யப்பட்டதால் வயல் செய் எனப்பட்டது” (திணை வரலாறு, பக்க எண். 131). ஊடலும் அதைத் தீர்த்தலும் மருதத்திணை ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய திணைகளுக்கு உரிய உரிப்பொருள்கள் விரவியது நெய்தல் திணை. இரங்கல் என்பது தலைவனின் பிரிவை ஆற்ற முடியாமல் புலம்புதல் ஆகும். நெய்தல் திணைக் காலத்தில் கடல் வணிகம் வளமாக இருந்தது. பாலைத்திணையில் பல காரணங்களால் தலைவன் நாடு கடந்து சென்றதால், தலைவி பிரிவுத் துயரில் தனித்து இருந்தாள். இவ்வாறாக நிலம் மனிதனின் வாழ்வியலோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருந்தது.
நிலநிர்வாகத்தின் இன்றியமையாமை
குறிஞ்சி நில மலைகள், காடுகள் சூழ்ந்த முல்லை நிலம், பசுமை நிறைந்த வயல்களான மருத நிலம், மணற்பரப்புகளை உடைய நெய்தல் நிலம் போன்றவை அந்நில மக்களின் வாழ்க்கயோடு இயைந்திருந்தன. இயற்கையின் மிகப்பெரிய கொடை நிலம் ஆகும். நிலத்தைப் பாதுகாத்து, நிலங்களின் தன்மைக்கேற்ப உற்பத்தி பொருள்கள் விளைவித்தான் பண்டை தமிழன். இயற்கையை மனிதன் தன் அறிவால் பயனுள்ளதாக மாற்றி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான். பழந்தமிழன் வாழ்ந்த வாழ்க்கை போல் இன்றைய மக்கள் வாழ வேண்டும்.
முடிவுரை
பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வை வாழ்ந்தனர். ஐம்பூதங்களில் முதன்மையான நிலத்தைப் பாகுபடுத்தி, அவற்றிற்கேற்றார் போல் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். திட்டமிடுதலில் சிறந்த விளங்கிய அவர்கள், வாழ்வின் அடிப்படை ஆதாரமான உணவை அளிக்கும் நிலத்தை நிர்வாகம் செய்த முறையை எடுத்துக்காட்டுவதாக அமைந்த இக்கட்டுரை, நிர்வாகத்தின் பொருண்மையை விளக்கி, இலக்கியங்கள் காட்டும் பழந்தமிழர்களின் நிலநிர்வாக திறனைப் பாடல்களின் வழி நிறுவியுள்ளது.
துணை நூற்பட்டியல்
1.இளம்பூரணார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பம், 2019.
2.புலியூர்க் கேசிகன், (உ.ஆ), புறப்பொருள் வெண்பாமாலை, சாரதா பதிப்பகம், 2009.
3.வரதராசனார், மு.வ., திருக்குறள் தெளிவுரை, பாரி நிலையம், 2014.
4.சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் உரையும், டாக்டர். உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 1971.
5.வேங்கடசாமி நாட்டார், ந.மு., துரைசாமிப் பிள்ளை, ஔவை சு., மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2005.
6.வேங்கடசாமி நாட்டார், ந.மு., நல்வழி, பாரி நிலையம், சென்னை, 2016.
7.ஷாஜகான் கனி, முனைவர் வெ.மு., திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் தே. இராணி எலிசபெத்
துறைத்தலைவர், தமிழ்த்துறை
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
சென்னை 600 099.






