Abstract
In the period following the arrival of Europeans, Western artistic and literary ideas had a significant impact on Tamil knowledge and cultural traditions. However, they failed to instill awareness among Tamils about the oppression embedded in their minds. In response to this, Tamil scholars who rediscovered Tamil heritage endeavored to challenge the mythological and epic literature that undermined the people’s self-awareness and to create rational literature against it. As a result, a major social revolution occurred in Tamil society. Among those who initiated such social revolution, Bharathidasan was a very important figure. He was a pioneering poet who emphasized ideas of equality and women’s liberation in Tamil society. He opposed the patriarchal mindset that had kept women in subjugation during that time and stressed women’s rights, freedom, and equality. This essay presents, with appropriate evidence, the social equality ideas emphasized by Bharathidasan.
Key Words :
Rationality, Equality, Women’s Rights, Abolition of Caste, Self-Respect, Untouchability, Evolutionary Development, Social Justice, Intellectual Heritage, Gender Equality, Superstition, Aesthetics, Logic, Classification, Immeasurability, Women’s Rights Recovery, Women’s Liberation, Political Liberation, Thorn, Medicinal Herbs, Self-Knowledge and Skill.
“பாரதிதாசனின் சமத்துவக்கோட்பாடு: பெண் விடுதலை“
ஆய்வுச்சுருக்கம்
ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் தமிழ் அறிவு/பண்பாட்டு மரபில் மேலைநாட்டுக் கலை, இலக்கியக் கருத்துக்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவை தமிழர்களின் மனதில் மண்டிக்கிடந்த மடமைக்கு எதிரான விழிப்புணர்வினை விதைக்கலாயின. இப்பின்புலத்தில் தமிழ் மரபினை மீளுணர்ந்த தமிழறிஞர்கள் மக்களின் தன்னறிவுத்திறனை மழுங்கடிக்கும் புராண, இதிகாச இலக்கியங்களை எதிர்க்கவும் அதற்கு எதிரான பகுத்தறிவு இலக்கியங்களைப் படைக்கவும் முற்பட்டனர். இதன் விளைவாகத் தமிழ் மண்ணில் மிகப்பெரிய சமூகப்புரட்சி உருவானது. அவ்வாறான சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள் பாவேந்தர் பாரதிதாசன் மிக முக்கியமானவர். தமிழ்ச் சமூகத்தில் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளை வலியுறுத்திய முன்னோடிக் கவிஞரான பாவேந்தர் பாரதிதாசன் பெண்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்த ஆண்மையச் சிந்தனைகளை எதிர்த்தார். இவர் தனது படைப்புகளின் வழி பெண்களின் உரிமை, சுதந்திரம், சமத்துவம் முதலானவற்றின் தேவையை வலியுறுத்தினார். அவ்வாறு பாவேந்தர் பாரதிதாசனால் வலியுறுத்தப்பட்ட சமூக சமத்துவக் கருத்துக்களை இக்கட்டுரை எளிமையாக அதற்குரிய சான்றுகளுடன் எடுத்தியம்புகின்றது.
கருவிச் சொற்கள்:
பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, தீண்டாமை, பரிணாம வளர்ச்சி, சமூக நீதி, அறிவுப்பாரம்பரியம், பாலினச் சமத்துவம், மூடப்பழக்கம், அழகியல், தர்க்கம், வகிபாகம், அளப்பரிய, பெண் உரிமை மீட்பு, பெண் விடுதலை, அரசியல் விடுதலை, முயற்கொம்பு, மூலிகைகள், தன்னறிவுத்திறன்.
முன்னுரை
தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் பெண் உரிமை மீட்பு மற்றும் பெண் விடுதலை குறித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கள் மிகவும் ஆழமானவை; அவசியமானவை. பாரதியின் வழியில் வந்த இவர், தன் படைப்புகள் மூலம் பெண் விடுதலைக்கான புதியதொரு சமூக வரைபடத்தையே வரைந்துக் காட்டியிருக்கிறார். இவர் பெண் விடுதலைக்கு முதற்படியாகவும், முக்கியத் தேவையாகவும் கருதியது பகுத்தறிவுக் கல்வி. கல்வி கற்ற பெண்ணால்தான் ஒரு குடும்பத்தையும், அதன் வழியே சமூகத்தையும் சீர்திருத்த முடியும் என்று இவர் காத்திரமாக நம்பினார். இதனை முன்னிறுத்தி குடும்ப விளக்கு, இருண்ட வீடு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முதலான படைப்புக்கள் பல படைத்திருக்கிறார். இவற்றில் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் நூலில் சமூக சமத்துவத்தை பெண்பாலின சமத்துவத்திலிருந்து தொடங்க வேண்டுமென்றும் ‘குடும்ப விளக்கு’ நூலில் கற்ற பெண்களின் சிறப்பையும், ‘இருண்ட வீடு’ நூலில் கல்லாத பெண்களால் குடும்பம் எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை நயமாகவும் நறுக்குத்தெறித்தார்போன்றும் எடுத்துரைத்துள்ளார். இது குறித்து விரிவாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
பகுத்தறிவுப் பார்வையில் சமத்துவம்
தமிழர்களுக்கான தனித்துவத்தையும் சுயசிந்தனை மரபையும் மீட்டெடுப்பதில் அளப்பறிய பங்காற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். இவரின் பகுத்தறிவுப் பார்வையே இதற்கு அடிப்படை. பகுத்தறிவு எனப்படுவது அறிவியல் முறையில் நிரூபிக்காத வரை மனிதரை ஆளும் சக்தி மனிதரே ஆவர். மனிதரை விஞ்சிய சக்தி இம்மண்ணுலகில் இல்லை என்பதை எல்லாக் கோணங்களிலும் ஆய்ந்து அறிய அறிவுறுத்தும் அறிவு. மனிதனுக்கு மேலான சக்தி என்ற ஒன்றைக் குறிப்பிட்டு அதன் வழி மக்களைச் சுரண்டுகின்ற/மேலாதிக்கம் செய்கின்ற ஆதிக்க வர்க்கத்தினருக்கு எதிராக கிளர்ந்தெழுந்து; விளிம்புநிலை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இப்பகுத்தறிவுக் கொள்கையின் தலையாய நோக்கமாகும். ’அனைத்து மனிதர்களும் சமமானவர்களே’ என்ற எண்ணம் மனிதர்களிடம் தோன்றப் பகுத்தறிவே அடித்தளமிட்டது. தமிழகத்தில் பகுத்தறிவு வாதத்திற்கு மிக நீண்ட சமூகப் பின்புலம் உண்டு. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வாக்கு, சாதியமைப்பிற்கு எதிரான சித்தர்களின் பாடல்கள், திருவள்ளுவரின் ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ மற்றும் ’ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பன போன்ற திருக்குறள்கள் முதலானவை தமிழ்ச் சமூகத்தின் ஆதி பகுத்தறிவுச் சிந்தனைகளாகும். தமிழகத்தின் பகுத்தறிவு சிந்தனை என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமல்ல; அது சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, சுயமரியாதை, மற்றும் சமூக நீதி ஆகியவற்றுடன் ஒருசேரப் பிணைக்கப்பட்டது. சமூகப் பிரச்சினைகள் பலவாறு இருப்பினும் இவையனைத்திற்கும் அடிப்படை பெண்ணடிமைத்தனம் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் . எனவே, பெண் விடுதலை, பெண்ணுரிமை, பெண் கல்வி முதலானவையே இவற்றிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை தன் படைப்புகளின் வழி தமிழுலகிற்கு அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கின்றார்.
சமத்துவம்: பெண் விடுதலை
மனித குலத்தின் மிக உயரிய சிந்தனை/ இலக்கு எனக் குறிப்பிடப்படுவது சமத்துவம். அழகியலையும் அன்பையும் வீரத்தினையும் புகழையும் பாடுபொருளாகக் கொண்ட தமிழ் இலக்கிய மரபில் மனிதத் தன்மையை எடுத்துரைக்கும் விதமாகவும் மனிதனை மனிதன் மதிக்கும் மனப்பக்குவத்தைக் கற்பிக்கும் நோக்கிலும் உருவானதொரு உயரியக் கொள்கை சமத்துவம். பதினெட்டாம் நூற்றண்டிற்குப் பின்னான காலகட்டதில் சமத்துவம் குறித்த கருத்துக்கள் இலக்கியங்களின் மிக முக்கிய இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமத்துவம் குறித்தக் கருத்துக்கள் முழுவீச்சில் எடுத்தாளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுயமரியாதை இயக்கத்தின் வகிபாகம் அளப்பரியது. இவ்வியக்கக் கருத்தாக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இலக்கியம் படைத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதிதாசனின் சமத்துவக் கொள்கையில் பெண்ணுரிமை என்பது பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டின் பெண்கள் அடிமைகளாக இருக்கும் வரை சாத்தியமில்லை என்பதை அவர் ஆணித்தரமாக நம்பினார். இதனை, சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் கவிகுறுங்காவியத்தில் வஞ்சி என்ற பாத்திரத்தின் வாயிலாக அவர் பெண்ணடிமைத்தனத்தை காத்திரமாகச் சாடுகிறார். வஞ்சி அறிவுத்திறன் கொண்ட மூலிகைகளைத் தேடிச் செல்ல விழைகிறாள். அதனைத் தடுக்கும் விதமாகக் குப்பன் பல காரணங்களைச் சொல்லும்போது, அவள் சீறி எழுந்து கேட்கும் கேள்விகள் பாரதிதாசனின் பெண்ணுரிமைச் சிந்தனைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கின்றன. இதனை,
“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே“. (பாரதிதாசன் கவிதைகள்-ப. 6)
என்ற அடிகளால் அறியமுடிகின்றது. இவ்வடிகளில் ‘முயற்கொம்பு’ என்ற உவமை மிகவும் முக்கியமானது. முயலுக்கு எக்காலத்திலும் கொம்பு முளைக்காது என்பது இயற்கை. அதைப் போலவே, பெண்களை அடிமைகளாகக் கொண்டிருக்கும் ஒரு நாடு, அந்நியரிடமிருந்து விடுதலை பெற்றாலும் அது உண்மையான விடுதலையாகாது என்கிறார். மேலும், சமூக விடுதலையுடன் கூடிய அரசியல் விடுதலையே மக்களுக்கான முழு விடுதலை என்கிற எதார்த்தத்தை பாரதிதாசன் தன் படைப்புகளில் முன்வைக்கிறார். மேலும், பெண்களை ஊமைகள் என்றும், அறிவற்றவர்கள் என்றும் கருதும் ஆண்களின் வளர்ச்சி நிலையை அவர் ‘ஆமை’ நிலைக்கு ஒப்பிடுகிறார். ஆமை ஆபத்து வரும்போது தன் ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்வது போல, பெண்கள் அறிவற்றவர்களாக இருக்கும் நாட்டில் ஆண்களும் கோழைகளாகவும், முன்னேற்றமடையாதவர்களாகவுமே இருப்பார்கள் என்பதனை இவடிகளின் வழி வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். மேலும், பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுமேயாயின் அது எதிகாலச் சந்ததியினருக்கு இழைக்கப்படும் தீங்கு என்கிறார். இதனை,
“புலன் அற்ற பேதையாயப் பெண்ணைச் செய்தால்
அந்நிலம் விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே” (பாரதிதாசன் கவிதைகள்–ப. 3)
என்ற அவரின் அடிகள் புலப்படுத்துகின்றன. இதில், பெண்கல்வி இல்லாத சமூகம் விளைச்சலற்ற நிலத்திற்கு ஒப்பானது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
மூலிகைகளும் தன்அறிவுத்திறனும்
பாவேந்தர் பாரதிதாசன் தன் படைப்புகளில் புராண, இதிகாசக் கதைகளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையின் வழிச்சென்று அவர்களின் தன்அறிவுத்திறனைத் தூண்ட முயல்கிறார். அதாவது, கம்பராமாயணக் கதையில் ‘சஞ்சீவி மலை’யில் அனுமன் விட்டுச் சென்றதாகச் சொல்லப்படும் இரண்டு அற்புத மூலிகைகளைச் தன்அறிவுத்திறனின் குறியீடாகக் கொண்டே ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் கவிக்குறுங்காவியம் படைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இக்காவியக்கதையின் மையக்கரு. இதன் வழி ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பகுத்தறியும் தன்னறிவுத்திறன் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதை பாரதிதாசன் முன்மொழிகிறார். அவை, ஒன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அறிவாற்றலை உள்வாங்கி உணர்தல் , இரண்டாவது, உலகில் உள்ள பிற நாட்டவர்களின் வாழ்முறையை விளங்கிக்கொள்ளுதல். இவ்விரண்டும் உலக அறிவை மையமிட்டவை. மனிதர்களுள் சமத்துவம் ஏற்பட வேண்டுமெனில், அவர்களுக்கு உலகளாவிய பார்வை வேண்டும் என்ற கருத்தைச் சுமந்தபடியே இக்கருத்துக்கதை இலக்கியச்சுவையோடு நயமாக நகர்கிறது. இது மனிதராயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை அறிவு. இவ்வறிவைப்பெற வேண்டுமெனில் ஒவ்வொருவரும் தன்னைப்போல் பிறரையும் பிறரைப்போல் தன்னையும் உய்த்துணரும் திறன் பெறவேண்டும் என்கிறார் பாரதிதாசன். இது மனிதகுலம் பெறவேண்டிய மகத்தான அறிவு, இதனை உயிரினும் மேலாக் கொள்ளவேண்டும் என்பதை,
“மூலிகையைத் தேட முடியாவிட்டால், மலையின்
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்” (பாரதிதாசன் கவிதைகள்-ப. 3)
என்ற இவ்வடிகள் மெய்ப்பிக்கின்றன. அதாவது, பகுத்தறிவு பெறாத மனிதர் இருப்பதை விட இறப்பது மேல் என்பதுடன், எவ்வித பேதமுமின்றி உலக மக்களை ஒன்றாகப் பார்த்து அரவணைக்கும் இவ்வறிவு இல்லாத மனிதர் உயிர் வாழ்வதை விட வீழ்ந்திறப்பது நல்லது என்பதையும் எடுத்துரைக்கின்றன. இவ்விதப்பட்ட இம்மூலிகையை/தன்னறிவை வஞ்சி எனும் ஒரு பெண் கதாப்பாத்திரம் தேடுவதாகப் படைத்திருக்கிறார் பாரதிதாசன். வஞ்சி இந்த மூலிகைகளைத் தேடுவதன் நோக்கம், உலக அறிவைப் பெற்று அதன் மூலம் தன் சமூகத்தின் அறியாமையைப் போக்க வேண்டும் என்பதுடன் பகுத்தறிவுக்கல்வி ஒன்றே பெண்ணினத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் என்பதனையும் இவ்விடத்தில் பதிவுசெய்திருக்கின்றார். மேலும், குப்பன் எனும் ஆண் கதாப்பாத்திரம் இந்த மூலிகைகளைப் பறிக்கத் தயங்குவதாகவும் ஆனால் வஞ்சி எனும் பெண் அம்மூலிகைகளை அச்சமின்றிப் பறித்தெடுப்பதாகவும் படைத்திருக்கின்றார். இதனை,
“பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே
வீரம் பெருக்கெடுத்து நிற்கின்றாள்” (பாரதிதாசன் கவிதைகள்-ப. 48)
என்று பாராட்டத்தக்க வகையில் ஒரு வீரப் பெண்ணாக் காட்சிப்படுத்துகிறார். இவ்வடிகள் பெண்ணின் அறிவுத் தேடல் என்பது உயிரைப் பணயம் வைத்தாவது அடையப்பட வேண்டிய ஒன்று என்பதையும் பென்ணிடமிருந்து இப்புரட்சி தொடங்கினால் மட்டுமே இச்சமூகத்தால் இதனை உற்றுணர இயலும் என்பதையும் வஞ்சியின் இக்கூற்றால் மெய்ப்பிக்கிறார்.
சமகாலச் சமூகச் சூழலில் சமத்துவம்
’பெண் என்பவள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்’ என்ற பிரெஞ்ச் பெண்ணியவாதி ’சைமன் – டி- பெளவாயரின் அரசியல் சிறப்புமிக்க கருத்திற்கிணங்க தமிழ்ச் சமூகச் சூழலில் பெண் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உற்றுநோக்கவேண்டியது அவசியமாகிறது. இதனை பாரதிதாசன் வெகு சிரத்தையோடு செய்திருக்கிறார். இவரின் படைப்புகளில் வெளிப்படும் பகுத்தறிவுச் சிந்தனையின் மிக முக்கியப் பரிமாணம் பெண் விடுதலை. சடங்குகளின் பெயராலும், குடும்ப அமைப்பின் பெயராலும் பெண்கள் முடக்கப்படுவதை சஞ்சீவி பர்வதத்தின் சாரல், குடும்ப விளக்கு, இருண்ட வீடு முதலான தனது படைப்புகளின் வழி கடுமையாக எதிர்த்திருக்கிறார். இவர் இதனை தன்னுடைய ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் கவிக்காவியத்தில் ஒரு காதல் கதையின் பின்னணியில், உருவகங்கள், அங்கதச் சுவை முதலான மரபிலக்கண முறையில் பேசியிருக்கிறார். இதிலும் குறிப்பாக, பெண்ணுரிமை மற்றும் பகுத்தறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு அறிவுசார் புரட்சியை முன்னெடுத்திருக்கிறார். பாரதிதாசனின் படைப்புகள் படைக்கப்பட்டு அரைநூற்றாண்டுக்கு மேலாகி இருப்பினும், அவை முன்வைத்த சமத்துவக் கருத்துக்கள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கின்றன. பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழியாத, மதப்பிரிவினைகள் இன்னும் நீடிக்கின்ற, பொருளாதார இடைவெளிகள் குறையாத இன்றையச் சமூகத்திற்குப் பாரதிதாசனின் படைப்புகள் காலத்தின் கட்டாயத் தேவை. அதேபோல், பாரதிதாசன் முன்னிறுத்திய பெண்ணுரிமை, பெண் விடுதலை, பாலின சமத்துவம் முதலானவை இக்காலகட்டத்தின் மிக முக்கியமானத் தேவை. ஏனெனில், அறிவு, வீரம், பகுத்தறிவு மற்றும் சமத்துவ நோக்கு கொண்ட பெண்களால்தான் ஒரு சீரான சமூகத்தை உருவாக்க முடியும்.
முடிவுரை
பாரதிதாசனின் பார்வையில் பெண் விடுதலை என்பது சமூகச் சமத்துவத்திற்கான அடிப்படை. எனவே, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் குடும்ப வாழ்வில் தன்னுடன் இருக்கும் பெண்ணை ஆண் மேலாதிக்கம் செய்து அடிமைப்படுத்துவது மனிதத்தன்மையற்றச் செயல். குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு களம். இதில், ஆண்கள் மட்டுமே முடிவெடுக்கும் அதிகார மையமாக இருப்பதை இவர் கடுமையாக எதிர்க்கிறார். குடும்ப நிர்வாகத்திலும், சமூக வெளியிலும் பெண்ணுக்கு ஆணைப் போன்றே சமமான உரிமை இருக்க வேண்டும் என்றும் பெண்கள் சமையல் செய்யும் இயந்திரங்களாக இல்லாமல், நாட்டின் உரிமைகளை மீட்கும் அறிவுச் சுடர்களாக மாறவேண்டும் என்பதையும் பாவேந்தர் பாரதிதாசன் காத்திரமாக எடுத்துரைக்கின்றார். ஆண் பெண் இருவரும் குடும்பக் கடமைகளையும் சமுதாயக் கடமைகளையும் ஆற்ற வேண்டியவர்கள். எனவே, இயற்கையான பால் வேறுபாட்டினைத் தவிர இருவருக்குமிடையே வேறெந்த ஏற்றத்தாழ்வுகளுமின்றிசமத்துவமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருத்தலே சமூகச் சமத்துவத்திற்கு வழிவகுக்கும். சமத்துவமே சமூக விடுதலையைப் பெற்றுத்தரும்.
துணைநூல் பட்டியல்
1. காலந்தோறும் பெண், ராஜம் கிருஷ்ணன், தாகம் பதிப்பகம், சென்னை -17, 1994
2. பாரதிதாசனும் பொதுவுடைமைத் தத்துவமும் பாவேந்தரும் மொழிபெயர்ப்பும், மருதநாயகம், ப. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்- தஞ்சாவூர், 2003.
3. பாரதிதாசன் கவிதைகள், பரமசிவன். தொ(தொ. ஆ), நியூ சென்சூரி புக் ஹவுஸ், சென்னை. 1992.
4.பாரதிதாசனின் மார்க்சியம், ஜெகநாதன். ஆ, அகரம் வெளியீடு, கும்பகோணம், 1996.
5. பெரியார் களஞ்சியம்(ஆறாம் தொகுதி), கி. வீரமணி (தொ. ஆ), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை – 7, 1991.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ. கார்வண்ணன்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
சென்னை – 600061.






