Saturday, April 4, 2026
Home Blog Page 43

எழுதிகச் சாங்கியம்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல், பெய, நூற்பா ]) என்பார் தொல்காப்பியர். அதே போன்று மனித இனம் நிகழ்த்தும் எல்லாச்சடங்களும் பண்பாட்டுப்பொருள் குறித்தனவையாகும் ‘சடங்கு’ என்பது குறிப்பிட்ட இடத்தில் (களம்) குறிப்பிட்டகாலத்தில் எவரைக் கொண்டு எவருடன் சேர்ந்து செய்ய வேண்டும் என நனவுநிலையில் (Con scious) நிகழ்த்தப்படுவதாகும் என்கிறார் அலெக்சாண்டர் (1978, 1982), “சடங்குகள் சில குழல்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக இவை கூட்டுத்தன்மை வாய்ந்தவை (Collective) சமூகம் சார்ந்தவை (Social) ஆகும்” (பக்தவத்சலபாரதி, டிசம்பர் 2002).

கொங்கு நாடு மலைகளினாலும் ஆறுகளினாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாகும் இப்பகுதியில் வேளாளர், கைக்கோளர், வன்னியா, நாவிதர், ஏகாலி1, ஆசாரி, குயவர், சக்கிலியர் போன்ற பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் கொங்கு நாட்டுக் கவுண்டர்கள். இவர்களது முதன்மைத்தொழில் வேளாண்மை ஆகும். இவர்கள் நடத்தும் சாங்கியங்களில் ஒன்று ‘எழுதிகச் சாங்கியம்’ ஆகும்.2 இது சுமங்கலிப் பெண்ணிற்குச் செய்யப்படும் ஒரு சடங்காகும். அதாவது சுமங்கலிப் பெண்ணினுடைய குழந்தையின் திருமணத்திற்கு முன் இச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது.

எழுதிகம் பெயர்க்காரணம்

‘எழுதிங்கள்’ என்ற சொல்லின் திரிபு ‘எழுதிகம்’ எனலாம் ஏழு + திங்கள் = எழுதிங்கள் ஆகும். ‘ஏழு’ என்பது எண்ணையும் ‘திங்கள்’ என்பது மாதத்தையும் குறிக்கிறது. இச்சாங்கியம் ஏழு மாதம் விரதம் இருந்து செய்வதினால் ‘எழுதிங்கள் சாங்கியம்’ எனப்பெயர் பெற்றது எனலாம். தற்போது பௌர்ணமி நாளன்று மட்டும் விரதமிருந்து எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துகின்றனர். எழுதிகம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரதம் இருப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.

எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துபவர்கள்

புடவைக்காரர்3, சாங்கியக்காரம்மாள்4 ஆகிய இருவரும் சாங்கியம் கொங்கு நாட்டுப்புறவியல் செய்ய தகுதிப் பெற்றவர்கள் ஒவ்வொருபிரிவிலும் அந்தப்பிரிவினரே சாங்கியம் செய்கின்றனர். இச்சாங்கிய நிகழ்த்துதலில் நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோரும் கவுண்டர்களின் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சாங்கியப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாவிதருக்கு ‘பேழைக் கூடை5 தூக்கும் பணியும், ஏகாலி ‘பந்தம்6 பிடிக்கும் பணியும், சக்கிலியருக்கு சாங்கியப் பெண்ணிற்குச் செருப்பு அணிவிக்கும் பணியும் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சாங்கியம் இவர்களின் துணையோடு ‘பெண்’7 ணின் தாய் வீட்டில், இரவு நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது.

எழுதிகச்சாங்கியம் நிகழ்த்தும் முறை

ஒரு பெண்ணிற்கு அப்பெண்ணின் தாய்வீட்டார் எழுதிகச் சாங்கியம் செய்ய முடிவு செய்கின்றனர். நல்லநாள் அறிந்து இச்செய்தியைப் பெண்ணின் புகுந்தவீட்டிற்குத் தெரிவிக்கின்றனர். தாய்வீட்டார் சாங்கியப் பெண்ணிற்கும் அவளது குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுக்கின்றனர். புடவைக்காரர், சாங்கியகாரம்மா, நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து இச் செய்தியை அறிவிக்கின்றனர்.

சாங்கியம் நிகழும் இடத்தில் ‘முகூர்த்தக்கால்”8 இட்டு பந்தல் போடுகின்றனர். அவ்விடத்தை மெழுகிக் கோலம் போட்டு அதற்குப் புற்று மண்ணால் கரைக்கட்டுகின்றனர் குழவிக்கல், உரல், ‘நுவத்தடி9, கோடாலி10 போன்றப் பொருட்களைச் சேகரிக்கின்றனர். தாய் வீட்டிலிருந்து யாரேனும் ஒருவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வருகின்றனர். பெண் வீட்டு உறவிளரும், தாய்வீட்டு உறவினரும் சாங்கிய நிகழ்விடத்திற்கு வருகின்றனர்.

வீட்டினுள்ளும் சாங்கியம் நிகழும் பந்தலடியிலும் விளக்கேற்றுகின்றனர். புடவைக்காரர் பந்தலடியில் விளக்கிற்கருகில் சாணிப் பிள்ளையாருக்கு அருகம்புல் குத்திவைக்கின்றார். அதன் மீது மஞ்சளும் பூவும் தூவுகின்றனர். சாங்கியக்காரம்மாள் சமைக்கப்பட்ட பச்சரிசிச் சோற்றில் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்து ஒன்பது உருண்டைகளாகப் பிரிக்கின்றார். கம்பு மாவினால் ஆன கொழுக்கட்டையைத் தயார் செய்கின்றனர். சுருப்பட்டி பதித்து வைத்துத் தினை மாவினை ‘பிரிமனை11 மீது வைக்கின்றனர். நாவிதர் ‘விரிக்கட்டு12 மூட்டையை வீட்டினுள் போடுகின்றார். கோடாலிக்குச் சிகப்புத் துணிக் கட்டுகின்றார். உரல், நுவத்தடி, கோடாலி மற்றும் பாத்திரங்களுக்குத் திருநீறு, சந்தனம், சிகப்பு பொட்டுகளை வைக்கின்றார். புடவைக்காரர் அரசு இலை, ‘மஞ்சள் கோம்பு”13 இரண்டையும் மஞ்சள் கலந்த வெள்ளை நூலில் சுட்டுகின்றார். நாவிதர் ஒவ்வொரு பாத்திரத்திற்கும். ஒவ்வொரு பொருளுக்கும் அரசு இலை மஞ்சள் கொம்பாலாள கயிற்றைக் கட்டுகின்றார். ஏகாலி ‘பந்தம்’ பிடித்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டினுள் போடப்பட்டிருக்கும் விரிக்கட்டின் மீது சுமங்கலிப் பெண்ணையும் அவளது தோழியையும் அமரச்செய்து பின்னர் அவர்களை ‘விரிக்கட்டிலிருந்து’ சாங்கிய நிகழ்விடத்திற்கு அழைத்து ‘முக்காலியில்14 கிழக்குப் பார்த்து அமரவைக்கின்றனர். புடவைக்காரர் சோற்றில் நெய்கலந்து பிசைந்து அவர்களுக்குப் பொட்டு வைக்கிறார். கற்பூரம் காட்டிய பிறகு அதைக்கையால் ‘வழித்து’த் தள்ளிவிடுகிறார். பின்னர் ‘சருவுசட்டி’15 யைப் பெண்ணின் தலைக்கு மேல்பிடித்து ஒரு செம்புத் தண்ணீரை மூன்றுமுறை ஊற்றுகின்றார். புடவைக்காரர் செய்ததைப்போல் இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் அந்தப் பெண்ணிற்குச் செய்கின்றனர். பின் பெண்ணிற்குச் சாம்பிராணிக் கரண்டியில் நெய்ப்புகைக் காட்டுகின்றனர். பிறகு மூன்று செஞ்சோற்று உருண்டைகளைப் புடவைக்காரர் பெண்ணிற்குச் சுற்றிப்போடுகின்றார். நாவிதர் ‘புளியாக்கை”16 யைப் பெண்ணின் தலைமேல் பிடிக்க புடவைக்காரர் அது வழியாக நீர் ஊற்றுகின்றார். நீர் ஊற்றியதும் நாவிதர் புளியாக்கையைப் பெண்ணின் உடல் வழியாக கீழே இறக்குகின்றார். இதே போன்று இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் செய்கின்றனர். இறுதியாக நாவிதர் மூன்று புளியாக்கையையும் பிய்த்துப் போடுகின்றார். புடவைக்காரரும், சாங்கியக்காரம்மாக்களும் பெண்ணின் முகத்தில் மஞ்சள் பூசுகின்றனர். பிறகு பெண்ணின் தலையில் மூன்று செம்புத்தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்பு அப்பெண் குளித்துவிட்டு ஏகாலி கொடுத்த பழைய சீலையைக் கட்டிக்கொள்கிறாள். இப்பழைய சீலை ‘வண்ணான் மாத்து’ என அழைக்கப்படுகிறது.

“தோழி”17 சாங்கியக்காரம்மாளுடன் நுவத்தடி மீது குதிகால் படும்படி நிற்கிறாள். மற்றொரு சாங்கியகாரம்மா பெண்ணிற்கு சிசுப்பை (குங்குமம்) இடது நெற்றியிலிருந்து வலது நெற்றி வரை பூசுகின்றார். புடவைக்காரர் பெண்ணின் தொண்டைப் பகுதியில் நெய்விடுகிறார். அது தொப்புளை நோக்கி வரும்போது சாங்கியகாரம்மா துடைத்து விடுகின்றார். அதேபோன்று முதுகு தண்டுவடத்தின் மேல் பகுதியில் நெய்விடுகின்றனர். தண்டு வடத்தின் கீழ் பகுதிக்கு வரும்போது துடைத்து விடுகின்றார்.

பெண் ஒரு குழந்தையையும், தோழி ஒரு குழவிக்கல்லையும் இடுப்பில் வைத்துக்கொண்டு சாங்கியப் பந்தலைச் சுற்றி வருகின்றனர். மூன்றாவது சுற்றில் பெண் உரலை உதைத்துத் தள்ளிவிட்டு ‘விரிக்கட்டில்! தோழியுடன் அமர்கிறாள். சாங்கியக்காரம்மா இருவரிடமிருந்து குழந்தையையும், குழவிக்கல்லையும் பெற்றுக் கொள்கின்றனர். பெண், தோழி, சாங்கியகாரம்மாவில் ஒருவர் ஆகிய மூவரும் மீண்டும் நுவத்தடியில் அமருகின்றனர். மூவருக்கும் வாழைஇலை போட்டு கொழுக்கட்டையைப் பரிமாறுகின்றனர் கொழுக்கட்டையை உண்டு விரதம் முடிந்ததும் பெண் குளிக்கச் செல்கிறாள்.

ஏகாலி விரித்த துணியில் சாங்கியக்காரம்மாவில் ஒருவர் ஒரு செம்புத் தண்ணீர், தேங்காய், பழம் ஆகியனவற்றை வைத்து முக்காலியில் அமருகின்றார்.தாய் வீட்டார் சீர்வரிசைகளை அவர்முன் வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நாவிதரின் மனைவி உரக்கக் கூறுகின்றார் பெண் சீர்வரிசைகளைப் பெற்றுக் கொள்கின்றாள். பிரிமனையின் மீது கருப்பட்டியைப் பொதித்து வைத்த தினை மாவுருண்டையை பேழைக் கூடையில் நாவிதர் எடுத்து வைக்கின்றார். சிகப்புத் துணி சுற்றிய கோடாரியால் பெண், புடவைக்காரர், சாங்கியகாரம்மாக்கள், நாவிதர் ஆகிய ஐவர் சேர்ந்து தினைமாவினைத் துண்டாக்குகின்றனர். துண்டான மாவை ‘ஏகாலி’ துணியோடு எடுத்து வைத்துக் கொள்கின்றார். பெண் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது சக்கிலியர் அவருக்குச் செருப்பு அணிவிக்கிறார். தாய் வீட்டார் பெண்ணை மீண்டும் அவளது கணவன் வீட்டில் சேர்க்கின்றனர். அடுத்தநாள் பெண் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்கின்றனர். இதுவே எழுதிகம் நடைபெறும் முறையாகும்.

நம்பிக்கைகள்

எழுதிகச்சாங்கியம் செய்து கொள்ளவில்லை என்றால் குலம் விருத்தியடையாது. எழுதிக நிகழ்வில் நெய்விடும்போது நேராகவராமல் பக்க வாட்டில் சென்றாலும், தினைமாவில் இருக்கும் கருப்பட்டி ‘வேத்திருந்தாலும்”18 அப்பெண்ணிற்கும், அக்குலத்திற்கும் துன்பம் நேரிடும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும், இச்சாங்கியம் செய்து கொண்ட பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், குழந்தை பெற இயலாத பெண் இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது. என்றும் கருதுகின்றனர்.

ஆய்வுப்பார்வை

எழுதிகச் சாங்கியத்தில் நிகழ்த்தப்படும் உரல் உதைத்தல், தினைமாவுபிளத்தல், குழந்தையைத் தூக்கிச் சுற்றுதல் போன்ற நிகழ்வில் குறியீட்டுத் தன்மைகள் காணப்படுகின்றன. பிராய்டின் உளப்பகுப்பாய்வு நோக்கில் உரலும், உலக்கையும் பெண்குறி, ஆண்குறிகளாகவும் இரண்டும் இணைவது உடலுறவாகவும் கருதப்படுகின்றது. இக்கருத்தின்படி இச்சாங்கியத்தில் உரலை உதைத்துத் தள்ளுதல் என்பது ஆணும் பெண்ணும் உடலுறவுக்கொள்வதை கட்டுப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

தினைமாவினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ள சுருப்பட்டி பெண்ணின் கருப்பையில் கருவாக வளரும் குழந்தையின் குறியீடு பேற்றினைத் தடை செய்வதாகக் கொள்ளலாம். இக்கருத்தினை எழுதிகச் சாங்கியம் செய்து கொண்ட பெண்கள் குழந்தைப்பேறு அடையக் கூடாது என்பது இச்சாங்கியத்தின் மீதான விதி இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

இப்பெண்களே இச்சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை நிகழ்த்தும் தகுதி கொண்டவர்கள் எனச் சமூகம் இவர்களுக்கு ஒரு தகுதியை வழங்கினாலும் கணவனை இழந்தவளோ, குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்ணோ இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு பெண் கருத்தரிப்பு செய்வதைத் தடைசெய்வதாக உள்ளது. அதாவது, எழுதிகச் சாங்கியம் என்பது கொங்கு நாட்டுக் கவுண்டர்களின் ஒரு தனிப்பட்ட வாழ்வியல் சடங்காக இருந்தாலும் அது ஒரு பெண்ணின் குழந்தைப் பேற்றினைத் தடைசெய்வதாக அமைந்துள்ளது எனலாம் இது ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்டதொரு சமூகத் தகுதியை வெளிப்படையாக வழங்குவதன் மூலம் கருத்தடையை மறைமுகமாகப் பொதிந்து வைத்துள்ளது எனலாம்.

அடிக்குறிப்புகள்

1.‘ஏகாலி’ என்பது வண்ணாரைக் குறிப்பதாகும்.

2. ‘சாங்கியம்’ என்பது சடங்கு என்பதைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல்லாகும்.

3. புடவைக்காரர், புடவைக்குரிய சாங்கியத்தைச் செய்து அவ்இனத்தின் ஆணைக் குறிப்பது. கொண்ட

4. சாங்கியகாரம்மாள், எழுதிகச் சாங்கியம் செய்துகொண்டு, சாங்கியம் செய்யும் அவ்வினத்தின் பெண்ணைக் குறிக்கும்.

5.பேழைக்கூடை என்பது மூங்கில் சிம்பால் செய்யப்பட்ட ‘ப’ வடிவான கூடையாகும். இது நாவிதர் வீட்டில் மட்டுமே இருக்கும்.

6. ‘பந்தம்’ என்பது துணியைச் சாணியில் நனைத்துச் சுற்றி வைத்துள்ள குச்சியாகும். அந்தத் துணியில் நெருப்பைப் பற்ற வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பார். இவ்வாறு செய்வதினால் இரவில் நிகழ்த்தும் ‘சடங்குகளுக்கு வெகுநேரம் வெளிச்சம் தருகின்றது.

7. ‘பெண்’ எழுதிகச் சாங்கியம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக கையாளப்படுகின்றது.

8. ‘முகூர்த்தக்கால்’ – பந்தல் போட முதல் குச்சியில், நவதானியத்தை மஞ்சள் துணியில் கட்டி கற்பூரம் காட்டி நடுவதைக் குறிக்கிறது.

9. ‘நுவத்தடி’ ஏரில் இரண்டு மாட்டையும் இணைக்கும் மொத்தமான கொங்கு நாட்டுப்புறவியல் குச்சியாகும்.

10. ‘கோடாலி’ மரத்தை வெட்டும் இரும்புக் கருவியாகும்.

11. பிரிமனை பானை போன்ற பாத்திரங்களை விழாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது. இது வைக்கோலினால் ஆன வட்டவடிவான வளையமாகும்.

12,’விரிக்கட்டு’ வைக்கோல் மூட்டை

13.மஞ்சள் கிழங்கை ‘மஞ்சள்கோம்பு’ என்று கூறுவர்.

14.’மூக்காலி’ மூன்று கால்களைக் கொண்ட இருக்கையாகும்.

15. ‘சருவுசட்டி’ – வட்ட வடிவமான செம்புப் பாத்திரமாகும்.

16.’புளியாக்கை’ புளியங்குச்சியை வட்டவடிவமாகக் கட்டி அதைச் சுற்றி புளியமர இலையைக் கட்டியிருப்பது.

17. பெண்ணின் சகோதரனின் மனைவி ‘தோழி’ என்று கூறப்படுகிறது.

18. ‘வேத்தல்’ இயல்புநிலைமாறி குழைந்த நிலையைக் குறிக்கிறது.

துணைநூற்பட்டியல்

1. ‘தொல்காப்பியம்’ ச.வே.சுப்பிரமணியம் உரை

2. பக்தவத்சல பாரதி ‘தமிழர்மானிடவியல்”, 2002.

தகவலாளர்கள்

 1. ஆறுமுகம், 45, நாவிதர், திம்நாயக்கன்பட்டிஇராசிபுரம் (வ)நாமக்கல்,

 2.பெருமாயி.37. க/பெ. ஆறுமுகம், நாவிதர், திம்நாயக்கன்பட்டி இராசிபுரம் (வ), நாமக்கல்.

3. பெரியசாமி கவுண்டர், 60, புடவைக்காரர், மல்லியகரை (அஞ்) ஆத்தூர்’ (வ) சேலம்.

4. இரா. குணசேகர்,40, கவுண்டர், ஐய்யர்தோட்டம், அரசநத்தம் (அஞ்)) மல்லியகரை, ஆத்தூர் (வ) சேலம்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

www.kelviyumpathilum.com

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

உங்களுடைய இடற்பாடுகளைக் கையாள கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால் அடுத்து இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இலட்சியத்தை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு மாறினால் அவை இலட்சியங்கள் அல்ல. ஆசைகளே ஆகும். அடையும்வரை மாறாமல் இருப்பவையே இலட்சியம் ஆகும். அவ்வாறான இலக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடைவதற்கு எவ்வகையான அவமானங்களும், புறக்கணிப்புகளும் துரோகங்களும் விளைந்தாலும் நீங்கள் செல்லும் பாதையிலிருந்து விலகாதீர்கள். திடமனத்துடன் போராடுங்கள். கடினப்பட்டு தேடும் எதுவும் நிலைத்திருக்கும். எளிமையாகக் கிடைப்பவை வந்த மாயத்தில் சென்று விடும். அது பொருளாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. இதுவே நியதி. நீங்கள் கொண்டிருக்கும் இலக்கால் உங்களுக்கோ உங்களின் சமுதாயத்திற்கோ நன்மை விளைப்பதாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதில் நீரில் மூழ்கியவன் மூச்சுவிட, வெளியே வருவதற்கு எவ்வளவு வேகமாக செயல்படுகிறானோ அந்த வேகத்துடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

நெருப்பில் இட்ட சொர்ணம் ஜொலிக்கும்

      ஒரு இலக்கை அடைவதற்கு பல வகைகளில் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். சிலரின் பகையைப் பெறவேண்டி வரும். சில உறவுகள் நீங்கி செல்லக்கூடும். பலர் கேளியாகப் பேசக்கூடும். சிலரின் விமர்சனங்கள் உங்களின் மனதிடத்தையே ஆட்டம் காணச்செய்யும். இவையெல்லாம் நடக்கும். ஆனால் உங்களின் இலட்சிய பாதையிலிருந்து மனம், எப்போதும் விலகாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நீங்கள் பயணித்தால் நெருப்பில் இட்ட சொர்ணம் போல நீங்களும் மிளிரலாம். இதில் ஐயமில்லை.

       கிராமப்புறங்களில் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் சமைப்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவார்கள். அடுப்பில் வைக்கப்பட்ட விறகு எரிந்து கரியாக மாறிவிடும். அந்த அடுப்புக்கரியும் உலகில் விலையுயர்ந்த வைரமும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். இரண்டும் கார்பன்தான். ஒருநாள் இந்த இரண்டும் சந்திக்க நேர்ந்தது. கரி வைரத்திடம் கேட்டது! “நாம் இருவரும் ஒரே இனம்தான். ஆனால் நீ மட்டும் எவ்வாறு ஜொலிக்கிறாய்? மனிதர்கள் எல்லோரும் உன்னை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். உன்னை பெறுவதற்கு நிறைய உழைக்கிறார்கள். ஆனால் என்னுடைய நிலை மிகவும் தாழ்மையாக உள்ளது. என்னை அள்ளி குப்பையில் கொட்டுகிறார்கள் இதற்கு என்ன காரணம்?” வைரம் கூறியது, “நான் இந்த பூமியில் நிலநடுக்கம் போன்றவற்றால் உள்ளே அழுத்தப்பட்டு, பூமியின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு அழுத்தத்தால் நெருக்கப்பட்டு ஒராண்டு, இரண்டாண்டுகளல்ல பலஆயிரம் வருடங்கள் அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு பொறுமையாக உள்ளேயே இருந்தேன். எனக்கு கொடுக்கபட்ட எல்லாவகையான இடற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு இருந்ததால் என்உடல் இறுகி திடமாக மாறிவிட்டது. மனிதர்களால் தோண்டி எடுக்கப்பட்டுப் பூமியின் மேல் வந்து தீட்டப்பட்டு அழகாக ஜொலித்ததால் அடுப்புக்கரியாக இருந்த நான் வைரம் என்ற பெயரைப் பெற்றேன்” என்று கூறியது. எல்லாவற்றையும் தாங்கும் மனோதிடம், எதிர்கொள்ளும் தின்மை மனதிற்கு வேண்டும். அப்போதுதான் வரலாறு படைக்க இயலும்.

முன்னேற்றம் உங்கள் கையில்

        இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும். முன்னேற்றம் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பது மேலான பேச்சு ஆகும். பேசுதல் என்பது ஒரு கலை. மற்றவரிடம் தண்மையாகப் பேச வேண்டும். தான்என்ற அகங்காரத்துடனோ வேண்டாத வெறுப்பாகவோ, அதிகாரத்துடனோ, பேசினால் அநதச் செயல் அங்கு நடைபெறாது. தங்களின் முகபாவனை பேச்சு என்பது மற்றவரை கவனிக்க செய்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நீங்கள் தொடங்கும் செயல் முடியும். உங்களின் பணிவான பேச்சு எவ்விடம் தேவையோ அவ்விடத்தில் பண்புடனே பேசுங்கள். அதற்கு நன்றாக மனதை பக்குவம் செய்து கொள்ளுங்கள். இதுவே இலக்கை அடைவதற்கான நடைமுறை என்பதில் தெளிவாகுங்கள்.

வாயில் இருக்கிறது வழி

           ஒரு பொன் மொழி உண்டு “நீ எப்போதெல்லாம் உன் வாயை திறக்கிறாயோ அப்போதெல்லாம் உன் மனதை திறக்கிறாய்” என்று கூறுவதுண்டு. பேச்சு என்பது தெளிவாகத் தேவையான சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை அன்னைத்தெரசா அவர்கள் தான்நடத்தும் குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டுவதற்காகச் செல்வந்தர் ஒருவரை காணச்சென்றார். அப்போது அந்தச் செல்வந்தர் எவ்வகையான மனநிலையில் இருந்தாரோ! தெரியவில்லை. தெரசா அவர்கள், செல்வந்தரிடம் தமக்கு நிதயுதவி செய்யுமாறு கேட்டார் அப்போது அவர் “ஒன்றுமில்லை போ” என்று கூறினார். ஆனாலும் அன்னை அவர்கள் அந்த இடம்விட்டு நகரவில்லை. செல்வந்தரை காணவந்த சிலரும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். செல்லாமல் நின்று கொண்டிருந்த அன்னை அவர்களைப் பார்த்து “நீ இன்னும் போகவில்லையா”  என்று அதட்டினார்.  “ஏதேனும் உதவி செய்யுங்கள்”என்று அன்னை கேட்டபோது, “இந்தா பெற்றுக்கொள்” என்று அவர் அன்னையின் மீது காரி உமிழ்ந்தார். அதை தன் கைகளில் ஏந்தி கொண்டு “ஐயா இதை நான் பெற்றுக்கொள்கிறேன் பசியுடன் இருக்கும் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்” என்றார். இதைக்கேட்டவுடன் அந்தச் செல்வந்தரின் மனம் மாறியது. அவரே அன்னையைப் பாராட்டி அதிகமான நிதியைக் கொடுத்து உதவினார். இவ்வாறு தான் எடுத்துக்கொண்ட செயலை எவை நேர்ந்தாலும் செவ்வனே செய்து முடிக்கும் மனதிடம் வேண்டும். பேச்சுத் தின்மைவேண்டும். பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தனை செய்து கொள்ள வேண்டும். ஆனாலும் சிந்தித்த எல்லாவற்றையும் பேசி விடக்கூடாது. பேச்சு என்பது ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும்.

       உங்களுடைய மனம் இலக்கை அடைவதில் பிடிவாதமாக இருந்தால் உங்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் செயல்பட தொடங்கும். உங்களின் மூளையும் ஒளி பெற்றதைப் போன்று உணரும். இரவில் தூங்கவும் தோன்றாது. மனம் சோம்பலையும் வென்றுவிடும். உடல் பசியையும் பொருட்படுத்தாது. உங்களின் மூளை, மனம், உடல், ஆன்மா என்று எல்லாவற்றிலும் இலக்கை அடையும் வேகம் இரண்டறக் கலந்துவிடும். பின்னர் ஒவ்வொன்றும் ஒன்றை நோக்கியே பயணிக்கும். இந்த நிலையை  அடைந்துவிட்டால் நீங்கள் இலச்சியத்தை அடைவதை உங்களால்கூட தடுக்க இயலாது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணருங்கள்.

     உங்கள் இலக்கில் மனம் வையுங்கள். வரலாறு படைப்பவர்கள் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

முன்னுரை

இந்த ஆய்வுக் கட்டுரை நற்றிணையில் வருகின்ற முல்லைத்திணைப் பாடல்கள் மட்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவற்றில் தலைவன் கூற்றில் வருகின்றப் பாடல்கள் மட்டும் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறன. மொத்தம் தலைவன் கூற்று பாடல்கள் பதிமூன்று (21,42,59,81,139,142,161,169,221,142,321,371,374) ஆகும்.

இக்கட்டுரையில் தலைவன் தலைவியின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுதல், மழையை வாழ்த்துதல், முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறுதல், விருந்து செய்தல், குரல கேட்டல், வருந்துதல், நம்பிக்கைகள் வேட்டுவர் வாழ்க்கை, இடையர் வாழ்க்கை போன்றவைகள் கூறப்படுகிறது.

அன்பை வெளிக்காட்டுதல்

இவற்றில் வினைமுடிந்து வீட்டிற்கு வரும் போது வழியில் நடக்கும் நிகழ்வைப் பார்த்தத் தலைவனுக்குத் தலைவி மீது அன்பு வெளிப்படுகிறது. அவை, கானக்கோழி, நாங்கூழ்ப் புழுவைக் கவரும் அப்புழுவைக் கொன்று தன்பெடைக்கு ஊட்ட வேண்டும் பெருமையோடு அப்பெடையை நோக்கும் நிலையை உவ்விடத்தில் காண்பாயாக (21) என்றும், கார்ப்பருவம் தொடங்கியது. மடப்பத்தையுடைய பிணைமான் நீங்கி பெயரும் களர்நிலத்தில் மருண்டு விழிக்கும் கண்களுடைய தன் கூட்டத்தினின்று தவறி விலகி ஓடும். அதனை நீங்காத விருப்பமுடைய நெஞ்சத்துடன் சென்று தேடும் ஆண்மானை உவ்விடத்தில் காண்க (242) என்றும் தேரபாகனுக்கு கூறி விரைவாக தேரை செலுத்துக என்று தலைவன் கூறினான்.

மழையை வாழ்த்துதல்

இதில் தலைவன் வினைமுற்றி வந்த பள்ளிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது. அதாவது தலைவியுடன் முயங்கி, அவள் நலனை இனிதாக நுகர்ந்த தலைவன் கார்ப்பருவத்தில் பெய்கின்ற மழையை நோக்கி “மேகமே உதவி புரிந்தனை நீ உலகத்துக்கு ஆதாரமாகப் பலரும் தொழும்படி மலைச்சிகரங்களில் நின்று உலவுவாயாக” என வாழ்த்தினான்(139). மழையினால் ஏற்படும் குளிரச்சியால் தலைவன் தலைவியை தழுவி கிடந்தனன் என்றும் கார்ப்பருவம் வரும் முன்னவே வினைவே. வினைமுடித்து மீண்டனன் என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது.

முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி

மழைப் பெய்ததால் உண்டான தவளைகளின் ஒலிகளால் நம் தேர்மணிக்குரலைத் தலைவன் அறியவில்லை. உடனே நான் வருவது குறித்து தெரிவிப்பீர் என ஏவலரை ஏவினேன். அவர்கள் சென்று அறிவிக்கவே, அவள் நீராடி தன்னை புனைந்து கொள்ளும் நான் செல்லவும் அவள் என்னை அணைத்து மகிழ்ந்து நிலைமுன் நிகழ்ந்தது அது மறத்தற்கரியது (142). அதனால் தேரை விரைவாக ஓட்டுமாறு பாகனை வேண்டுதல் இந்தப் பாடல் முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது.

விருந்து செய்தல்

பூண்கள் தாழ்ந்த மார்பில் பொருந்தி இருக்கும் அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீ சீதறி விழும்படி அழுதவண்ணம் இருப்பவள், அழகிய மாமை நிறம் பொருந்திய காதலி நம்மைக் கண்டவுடன் ( தன் அவலம் நீங்கி) நமக்கு விருந்து செய்யும் விருப்பத்துடன் சமையல் அறைக்குள் புகுவாள் உரிய விருந்தை வருந்தி ஆக்கி களைப்படைந்த நிலையில் மகிழ்ச்சி மிகுந்த முகத்தினாய் நகையைக் கொண்டு நாம் என விளங்குவாள். அந்த நகை முகம் காணும் பொருட்டு விரைவாகத் தேரைச் செலுத்து என்று தேர்பாகனுக்கும் (81), வழியிடைக் கண்டாரிடம் புதியவர்களுக்கும் (374) தலைவன் கூறுதல்.

குரல் கேட்டல்

பாகனே! நம் காதலி தன் புதல்வன் துயிலுமிடம் அடைந்து எந்தையே வருக! என்று கூறும் மொழியைக் கேட்டு மகிழும் வண்ணம் தேரை விரைந்து செலுத்துக (21) என்று மகிழ்ந்துரைத்தான் தலைவன். இதனை,

பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஓல்கி

வந்தீக எந்தை என்னும்

ம்தீம் கிளவி கேட்கும் நாமே”

என்ற பாடலடியாகும்.

வருந்துதல்

தலைவி மாலைப் பொழுதிலே. நாம் இல்லாமையினால் வெறுமையாக இருக்கும் மனையைப் பார்த்து வருந்தி நிற்பாள் (321) என்றும், மேகம் மழைத் தொடங்கிற்று நம் காதலி இதனைக் கண்டு அழத் தொடங்கியிருப்பாள் ஆயர்தல்லோசை அவள் அழகையை மிகுவிக்கும் (371) என்றும் தேரை வினவாகச் செலுத்துக் என்று தலைவன் தேர்ப்பாகவிடம் கூறினாள்.

நம்பிக்கைகள்

தலைவன் நம் வரவை காக்கை புட்கள் முன்னரேச் சென்று அறிவித்தனவோ(161) என்று தேர்ப்பாகனுக்கும் நாம் தலைவியைப் பிரிந்ததனால் உண்டாகும் துன்பம் தீர இப்போது நாம் வருவதனை நம் மாலையின்கண் உள்ள சுவரிடத்தில் உள்ள பல்லி பலப்படியாக இயம்பி அறிவுறுத்துமோ (169) என்று தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறினான். இப்பாடல்களின் மூலம் அக்கால மக்களின் நம்பிக்கைகள் வெளிப்படுகிறது.

வேட்டுவர் வாழ்க்கை

காட்டில் உடும்பைக் கொன்று, வரிதத தவளையை அகழ்ந்தெடுத்தும்; நெடிய கோடுகளைக் கொண்ட புற்றுகளை வெட்டி ஆண்டுறையும் ஈசலகளை மண்ணைத் தோண்டி எடுத்தும் பகலில் முயலை வேட்டையாடியும் வாழும் வேட்டுவன் இரவின்கண் தன் அழகியத் தோளில் சுமந்து வந்து பல்வேறு வகைப்பட்ட பண்டங்களைப் பொதிந்த மூட்டையுடனே ஏனையக் கருவிகளையும் வீட்டியிலேயேப் போட்டுவிட்டு மறந்து மிகுதியான பருகியக் கள்ளின் மயக்கத்தில் செருக்குற்று கிடப்பான் (39) என்பது அறியமுடிகிறது.

இடையர் வாழ்க்கை

மழைக் காலத்தின் இறுதிநாளில் பால் விலைக் கூறும் இடையன் கையில் பலவாகியப் காலிட்டுப் பின்னிய உறியுடன், தீக்கடைக்கோல் முதலானக் கருவிகள் பலவற்றை இட்ட தோற்பையினையும், ஒருசேர சுருட்டி கட்டினான் அவற்றை பனையோலைப் பாயோடுச் சேர்த்துக் கட்டி முதுகில் சுமந்து சென்றான். நுண்ணியப் பல நாதிவலைகள் அவனுடைய உடம்பில் ஒரு பகுதியை நனைத்தன. கையில் இருந்த கோலை ஊன்றி அதனிடம் ஒரு காலை ஊன்றியவனாய் ஒடுங்கி நின்ற அவளிடையன் நாவை மடித்தப்படி ‘வீளை’ ஒலியை எழுப்பினான். அவ்வொலிக் *கேட்ட ஆட்டுக்கூட்டம் வேற்றிடங்களில் திரியாது மயங்கி அவ்வண்ணமே தங்கி நிற்கும் (142) காட்டு பகுதியில் அமைந்துள்ளது தலைவியின் ஊர் என்று தலைவன் பாகனுக்கு கூறுகிறான்.

முல்லையின் நறுமணம் கமலும் மலரை, ஆடுகின்ற தளையையுடைய ஆட்டை மேய்க்கும் வலிய கைகளை உடைய இடையன் இரவிலே கொய்து வெண்மையாபை பனங்குருத்தின் பொழுவுடனே சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிவான் (169) தலைவன் நெஞ்சிற்குச் சொல்லும் போது வெளிப்படுகிறது. மேலேக் கூறியச் செய்திகளைப் பார்க்கும் போது தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

இக்கட்டுரையில் முல்லை நில மக்களின் வாழ்க்கையைக் கூறும்போது பெண்கள் வீட்டில் இருத்தல்,விருந்து செய்தல், புதல்வனைப் பெற்று வளர்த்தல், தலைவனுடன் கூடுதல், தலைவன் இல்லாத போது அவன் வரும் வரையிலும் வருந்தி காத்திருத்தல், இனிமையான குரலில் பேசுதல், விருந்தினர் வரக் காக்கை கரைதல், நினைத்தது பலிக்கச் சுவரிலே பல்லி இயம்புதல் போன்ற நம்பிக்கையும் நம்புதல், ஆண்கள் பொருளீட்டச் செல்லுதல், போருக்குச் செல்லுதல், தலைவியுடன் கூடியிருத்தல்,வேட்டையாடுதல், ஆடுகள் மேய்த்தல், பால் விற்றல், புல்லாங்குழல் ஊதுதல், களைப்பு ஏற்படும் போதும் மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் கள் குடித்தல்,பலவகையான உண்டு வாழ்ந்தார்கள்.தலைவியுடன் சேர்ந்து இருக்கும் போது பொழிகின்ற மழையை வாழ்த்துதல், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தல் தேர்ப்பாகன் தேரை ஓட்டுதல் போன்றவைகள் தலைவன் கூற்றுப்பாடல்களிருந்து வெளிப்படுகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635109.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

அம்மாவிற்காக ஒப்பாரி – கவிதை

பழுத்தப் பழம் அழகாயிருக்கும்

பயன்படாது யாருக்கும்!

மரத்தில் மூப்பு எட்டி

மரணத்தை தொட்டு நிற்கும்!

விவரம் தெரிந்த நாளில்

உதட்டு எச்சில் காய்ந்து

அம்மா என அழுகையில்…

அநாதையாய் உணர்ந்தேன்!

 

சொல்லி அழ யாருமில்லை

சொந்த பந்தங்களும் கூட இல்லை!

 

ஒருநாள்

ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்…

ஓரக்கண்காட்டி – உன்னை

ஒருத்திக்கு மட்டுமே நானென,

உறவாட வந்தானே… தெரிந்த

ஊர்க்காரி சொன்னாளே!

 

கருவாய் வயிற்றில்

உருவாய் எனைக்கொடுத்து

ஊர்வம்பு பேசிடவும் ஏசிடவும்

ஓடினானே! என் அப்பன் ஓடினானே!!

 

மானம் காத்திட

மசக்கையை மறந்து

துரத்தி அடித்தனரே… உன் பெற்றோர்கள்

துரத்தி அடித்தனரே..!

 

தனியாய் வாழ்ந்து

தடைகள் பல கடந்-தாயே!

 

சாலையில் செல்லும்

சிலரைக் கைக்காட்டி…

அப்பா என்றழைத்த போது

கூனிக்குருகி நின்றாயே!

 

என் அம்மாவே – உன்

இதயத்தை  முள்ளால் கீறி

ஏலம் விட்ட இச்சமூகமே

வெட்கப்படு! வெட்கப்படு!!

 

பெண்ணின் பிறப்பை

பண்பட்ட வாழ்வை

சிதைத்த சமூகமே!

ஒழிந்து போ…

ஒழிந்து போ…

 

பழுத்தப் பழம் அழகாயிருக்கும்

பயன்படாது யாருக்கும்!

மரத்தில் மூப்பு எட்டி

மரணத்தை தொட்டு நிற்கும்!

 

மனதைக் கெடுத்த என் அப்பனும்

மானம் வாங்கிய மக்களும்

மூச்சை அடக்கிய எமனும்

என் ஒப்பாரியை கேள்!

 

கல்வி கற்று

கருத்தாய் நின்று

பணிவாய் வளர்ந்தேனே…

பணியில் உயர்ந்து

பாசத்தோடு ஓடி வருகையில்

உன் இறப்பு செய்தியா

என் செவிகளில் கேட்க வேண்டும்!

 

என் ஒப்பாரி வானைச் சுட

என் ஒப்பாரி பூமியை பிளக்க

நானும் உன்னுடன் கலந்தேனே – அம்மா

நானும் உன்னுடன் கலந்தேனே!!!

கவிஞர் முனைவர் க.லெனின்

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

போட்டியில் ஒருவர்க்குக் கிடைப்பது வெற்றி அல்லது தோல்வியே. வெற்றியால் கிடைப்பது மகிழ்ச்சி. தோல்வியால் கிடைப்பது அனுபவம். வெற்றி பெறுவதைவிட தோல்வியடைந்து பாருங்கள், மனதில் நிறைய சிந்தனைகள் உருவாகும். மூளை சுறுசுறுசுறுப்பு அடையும். ஏன் தோல்வி வந்தது என்று வினா எழும். உங்களால் ஏற்பட்டதா? அல்லது மற்றவர்களால் உண்டானதா? என்னசெய்ய மறந்து விட்டீர்கள்? என்ன செய்திருக்க வேண்டும்? அணுகுமுறை என்ன? எந்த மனப்பக்குவம் அடைய வேண்டும். இன்னும் எவ்வகையான மனப்பயிற்சி வேண்டும்? என்ற இத்தனை வினாக்களும் தோன்றும்.

        மனம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும். வைரஸ் வந்துவிட்டால் கம்ப்யூட்டர் செயலிழந்து நிற்பது போல, உள்ளம் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கும். அந்த நேரத்தில் ஒன்றும் யோசிக்க தோன்றாது. யோசித்தாலும் சரியான தெளிவு ஏற்படாது. எனவே மனம் தெளிவாக அமைதி அடைந்தபிறகு, தோல்விக்கான காரணம் என்ன? நிதானமாக யோசித்தால் உங்களுக்கு எழுந்த எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும்.

தோல்விக்கு நன்றி சொல்லுங்கள்

        தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள் என்ற இந்த வாக்கியம் எப்போதோ படித்த ஞாபகம். இது எவ்வளவு பெரிய அனுபத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது. தோல்விகள் உங்களை மீண்டும் மீண்டும் எழுவதற்கு தூண்டுகிறது. எழச்செய்கிறது. வீழ்ந்தால் எழமுடியும் என்ற நம்பிக்கையை பெறச்செய்கிறது. எனவே ஒருபோதும் தோல்வியை வீழ்ச்சி என்று எண்ணாதீர்கள். அது வீழ்ச்சி அல்ல எழுச்சி ஆகும். நீங்கள் அடையும் உயர்வும் தாழ்வும் உங்களால் ஏற்பட்டவை என்பதை உணருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைத்தால் அது உங்களின் உழைப்பு விடாமுயற்சியால் கிடைக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் சிபாரிசால் கிடைக்கக்கூடாது. அவ்வாறு கிடைத்தால் அது தோல்வியே ஆகும். அந்த மாதிரியான எளிமையாகக் கிடைக்கும் வெற்றிகள் சூரியன் ஒளி பட்டதும் பனி விலகுவது போல அது காணாமல் போய்விடும்.

          நீங்கள் அந்த சவாலை போட்டியை எதிர்கொள்ள அத்தனை முயற்சி செய்தும் தோல்வி கிட்டியது என்றால் அதுவும் நல்ல அனுபவமே. ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவனுக்கு உண்டாகும் பிரச்சனைகளே என்பதை உணருங்கள். எப்போதுமே வெற்றியை நோக்கியே உங்கள் சிந்தனையைச் செலுத்தாமல் தோல்வியால் பல மனிதர்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப்பெறுங்கள். எப்போதுமே நிழலிலேயே இருந்தால் அதன் குளிர்ச்சி தெரியாது. ஆனால் சிறிது வெய்யிலில் சென்று வாருங்கள் நிழலின் அருமையை அப்போது உணர்வீர்கள்.

விழுந்தாலும் எழுந்திருங்கள்

        ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்குக் கூறினார். “நீங்கள் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாலும் பரவாயில்லை. ஆனால், மற்றவர்களைப் பார்த்து எழுதி பெறும் மதிப்பெண்கள் நூறாக இருந்தாலும் அவை உமக்கு வேண்டாம். ஏனென்றால் உமது உழைப்பால் பெற்ற மதிப்பெண்கள் தன்னம்பிக்கையைத் தரும். மற்றவர்களால் வந்தவை மனத்தாழ்ச்சியையே தரும். பெறுவது வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அவை உங்களால் பெற்றவையாக இருக்க வேண்டும்.”என்று கூறினார்.

எனவே நீங்கள் பெறுவது சிறிதளவே என்றாலும் நன்றானதே. மற்றவர்களால் கிடைக்கப்பெறுவது இந்த உலகளவே ஆனாலும், நாளடைவில் அது மனதளவில் உங்களுக்குள்ள தனித்திறனைக் குறைத்துவிடும்.

        தோல்விகள் எந்தப் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன? அவற்றை மீண்டும் வராமல் நீக்குவது எவ்வாறு? என்பதை சிந்தனை செய்ய வேண்டும். ஒரு பிரச்சினைக்கு மூன்று வகையில் தீர்வு காணலாம். ஒன்று, அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு மாற்றியமைப்பது. மூன்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. ஒரு பிரச்சனையை மாறாது என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்க இயலாது என்றால் விட்டுவிடுவது நல்லது. வெற்றியை அடைவது எளிதல்ல. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வதே சிறந்த வெற்றி.

இடர்பாடுகள் இயல்பானவை

            வெற்றியை உங்கள் வாழ்நாளில் நிலை நாட்ட வேண்டுமென்றால் இன்னல்கள், துன்பங்கள், கவலைகள், இழப்புகள், மனக்காயங்கள் என்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தனை வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்து தெளிந்து அதிலிருந்து இதுதான் நடைமுறை என்று மனதை பண்படுத்திக்கொண்டால் மட்டுமே இந்த வெற்றித் தோல்விகளை ஏற்றுக்கொள்ள இயலும்.

         வெளி நாட்டில் வாழ்ந்த ஒரு இளைஞன் சிறு வயதில் நன்றாகப் படித்தான். நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். சிறந்த கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றான். பெற்றவுடன் வெளிநாட்டு கம்பெனி அவனுடைய அறிவுக்குச் சிறந்த வேலையைக் கொடுத்து அதிக ஊதியத்தையும் கொடுத்தது. எனவே அவனுக்கு சிறு வயதிலிருந்தே எல்லாமே கிடைத்தன. திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் நன்றாக வாழ்ந்தான். ஆண்டுகள் சில கடந்தன. ஒரு நாள் நாளிதழில் வெளிவந்த தகவல், அந்த இளைஞன் தன்மனைவி குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுக்கொண்டான். இங்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்த மாணவனுக்கு எல்லா வயதிலும் குறையே இல்லாமல் அனைத்தும் கிடைத்தன. ஆனால் இவ்வாறு நடந்ததற்கு காரணம் என்ன? உண்மையில் என்ன நேர்ந்தது என்றால், அம்மாணவனின் வாழ்க்கையில் தோல்வியே கண்டதில்லை. இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ காரணத்தால் அவனுடைய வேலை பறிபோனது. அதை சமாளிக்க தன்சொந்த வீடு, காரையும் விற்றான். பின்னர் இவற்றை சீரணித்துக்கொள்ள முடியாமல் இவ்வாறு கொலை செய்து விட்டான் என்ற செய்தி கிடைத்தது. கவனியுங்கள்! அந்த இளைஞனுக்கு அவ்வப்போது தோல்விகள் கிடைத்திருந்தால், பல அனுபவங்களைக் கற்றிருப்பான். வாழ்வில் எந்த நிலையையும் சமாளிக்கும் திறனைப் பெற்றிருப்பான். இறப்பு என்பது நேர்ந்திருக்காது. எனவே மனித வாழ்வில் இடர்பாடுகளும் இயல்பானவை என்பதை உணருங்கள்.

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

தடைகளைத் தாண்டுங்கள்

       மனித வாழ்வில் பிரச்சனைகள் என்பவை எல்லா காலக்கட்டங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை சமாளிக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை சுகமானதாகவே காணப்படும். ஒருநாள் என்பது இரவும் பகலும் சேர்ந்தது போல, மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் சேர்ந்தது ஆகும்.

         சிலருக்கு எவற்றை பிரச்சினையாக எடுத்து கொள்வது. சாதாரணமானவை எவை என்ற தெளிவுகூட இருக்காது. சிலருக்கு இடற்பாடுகள் தேடி வரும். சிலருக்கு துன்பங்கள் வரத்தேவை இல்லை. அவர்களே சென்று வரவழைத்துக் கொள்வார்கள். ஒருவர் புகைவண்டியில் பயணம் செய்தார். அவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார். நீங்கள் எங்கு செல்கிறீர்கள். அவர் சென்னையில் தாம்பரம் செல்ல வேண்டும் என்றார். அப்பாடா, இவருக்கு பெருமூச்சு வந்தது. காரணம் இவரும் அந்த இடத்தில்தான் இறங்க வேண்டும். எனவே அவ்விடம் வந்ததும் தனக்கும் கூறுமாறு ஒரு கட்டளையை வைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்பு அடுத்த ஸ்டேஷனில் டிபன் வாங்க வேண்டும் என்று கவலைப்பட்டார். கிடைக்கவில்லை என்றால் என்று வேதனையடைந்தார். ரயில் நிலையம் சென்றதும் அழைத்துப் போக ஆள் வரவில்லை என்றால்? என்று கவலையுற்றார்

இவ்வாறு சிலர் வேதனைப்படுவதையே பழக்கமாகக் கொண்டிருப்பர். அவையே அவர்களுக்கான பிரச்சினைகள். நீங்கள் மனதில் இவ்வாறுதான் நடக்க வேண்டும். இவை கிடைக்க வேண்டும். மற்றவர் இவற்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் போது, எண்ணியபடி அவை நடக்காத பட்சத்தில் பிரச்சனையாகவே தோன்றும். எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்காதபோது உலகில் நடக்கும் எந்தச் செயலும் ஒன்றும் செய்யாது. அது பிரச்சினையாகவும் தோன்றாது. எனவே வெற்றியோ தோல்வியோ எவை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் தெளிந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதே.

இன்னல்கள் தேவைதான்

       சுயநலமாகத் தனது, நான், தான் மட்டும் என்று வாழும் மனித உலகத்தில் இன்னல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. உங்கள் மனதில் எந்தச் செயலையும் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டாம். ஏனென்றால் அவை மாறி நடந்தால் நடத்தப்பட்டால் அது உங்களுக்கு பிரச்சனை ஆகிவிடும். இடர்பாடுகளும் இல்லாத வாழ்க்கை இங்கு எவருக்கும் இல்லை. இது தின்னம் எனும்போது அவற்றை எதிர்கொள்ளும் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே தங்களால் இயலாது என்ற மனநிலையை மாற்றி அவற்றை நிகழ்த்தவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உங்கள் மனம் உணரச்செய்ய வேண்டும். தோல்வியைக் கண்டு துவழாமல் அவற்றை ஏற்றார் போல எவ்வாறு மாற்றி அமைப்பது என்ற சிந்தனை வேண்டும்.

      மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பங்கள், தோல்விகள், இடற்பாடுகளும் இன்னல்களும் இழப்புகளும் நிகழ்ந்தால் மட்டுமே அது முழுமையான வாழ்க்கையாகும். உணவில் அறுசுவை இருந்தால் தான் விருந்து சிறக்கும். அதைப்போல இன்பம் மட்டுமே மனித வாழ்க்கை ஆகாது. அது அரைகுறை வாழ்க்கையே ஆகும். எனவே எல்லாவற்றையும் கடந்து செல்லும் மன திடம் உங்களுடையது என்றால் இச்சமுதாய நாயகன் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

அலமேலு மங்கை

            பார்வதி வீட்டு கல்யாணம். தளைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி அம்மா வந்தவர்களையெல்லாம் வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. பந்தலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள் தேவி.

            தேவி… தேவி… என்று உரக்கக் கத்திக்கொண்டே வெளிப்பந்தலுக்கு வந்தாள் பார்வதி அம்மா. “அம்மா..” என்று கத்தியபடி ஸ்கூல்ல சின்னப்பசங்க கை தூக்கி சொல்லுவாங்களே, அதுபோல் கை தூக்கி சொன்னாள். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க. பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. அவுங்கள போயி நீ கவுனி. நான் இவுங்களப் பாத்துக்கிறேன்” என்றாள். பார்வதி அம்மாவுக்கு எப்போதும் தேவி தன்னுடன் இருந்தா ஆயிரம் யானைகள் கூட இருப்பதாக நினைப்பு. தேவியை   எப்போதும் விட மாட்டா. எப்ப பார்த்தாலும் தேவி.. தேவியின்னு கூப்பிட்டுக்கொண்டே இருப்பாள். ரெண்டு பேத்துக்கும் அப்படியொரு பொருத்தம். பார்வதி அம்மாயின் வீட்டுக்காரர் கூட ஓரிரு முறை கோபப்பட்டிருக்கிறார். “உனக்கு நான் புருசனா… இல்ல தேவி புருசனா” என்று கேட்டே விட்டார். ஆனால் பார்வதி அம்மாவிடமிருந்து மௌனம்தான் பதிலாக வந்தது.

            கல்யாண வீட்டில் மேல் மாடிக்கதவு தட்டப்பட்டது. உள்ளிருந்த ஒருத்தர் கதவை திறந்து என்ன? என்பது போல கேட்டார். “அம்மா உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டு கொடுக்கச்சொன்னாங்க” என்றாள் தேவி. “வாங்க..” என்று கதவை திறந்து விட்டுப்போனார். எப்படியாவது பொண்ணப் பாத்துடனும் என்ற எண்ணம் சித்ராவின் மனதில் இருந்தது. உள்ளே நுழைத்த அவளது கண்கள்  பொண்ணைத்தான் முதலில் தேடியது. அதற்குள் உள்ளேயிருந்தவர்கள் டீ, காபி, கூல்டிரிங்ஸ் என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். “கொண்டு வந்து தரங்க” என்று சொல்லிக்கொண்டே கூட்டத்தின் நடுவே உட்காந்திருக்கும் பொண்ணையும் பார்த்து விட்டாள். பொண்ணு அழகுதான். தம்பிக்கு ஏத்தமாதிரி அழகா இருக்கு என மனதில் நினைத்துக் கொண்டாள். சற்றும் தாமதிக்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய விருந்தினைக் கொடுத்தாள். அப்போது பார்வதி அம்மாவின் கணவனுடைய அண்ணன் சுந்தரமும் அவரது மனைவி பாக்கியமும் காரிலிருந்து வந்திரங்கினார்கள். “வாங்க அக்கா… வாங்க மாமா…” என்று முன்னால் ஓடி வந்து வரவேற்றாள் பார்வதி அம்மாள். அவர்களிடத்தில் ஒரு புன்னகையோடு சின்னதாக உதட்டு சிரிப்பு மட்டுமே வெளிவந்தன. பாக்கியத்திற்கென்ன தன்னோட ரெண்டு பசங்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சுட்டா. பசங்களும் பணமா குவிக்கிறாங்க. எப்பவும் பார்வதி அம்மாவைவிட நான்தான் உசத்தின்னு காமிச்சிப்பா. வீட்டுக்கு வந்த முத மருமகள் நான்தானே. எனக்குதான் எல்லாமே என்று நினைத்து கொண்டிருந்தவள். ஆனால் பார்வதி அம்மா வந்த பிறகு பாக்கியத்தை அவரது மாமியார் கொஞ்சம் மட்டம் தட்டவே ஆரமித்தார். ஆரபத்தில் இந்தச் சண்டையானது ஓரளவுதான் இருந்தது. போகப் போக குடுமிப்புடிச் சண்டையாக மாறி கணவன் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டாள் பாக்கியம். அப்போதிலிருந்தே பார்வதி அம்மாவைக் கண்டாலே பாக்கியத்திற்குப் பிடிக்காது. அவளிடம் யாராவது குழைந்து பேசினால் கூட மூக்கில் வேர்த்து பொங்கி விடுவாள். கல்யாணத்திற்கு போகவே கூடாது என்று சுந்தரத்திடம் சண்டையிட்டாள்.  சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில்தான் இன்று பாக்கியம் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். ஆனாலும் இந்தக் கல்யாணம் நின்னா அவளுக்கு சந்தோசம்தான்.

            கெட்டி மேளம் கொட்டிட திருமணம் அழகாய் முடிந்தது. திருமணம் முடிந்ததோ இல்லையோ எல்லோரும் சாப்பாட்டுக்கு ஓடினார்கள். இது எல்லா திருமணத்திலும் நடக்கக் கூடியதுதான். கல்யாணத்தப் பாத்திட்டு எவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டு வேலைக்கோ அல்லது மற்ற அவசர காரியங்களுக்கோ செல்வார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. கூட்டமாய் சென்று சாப்பாட்டு இலையை நிரப்பினார்கள். முன்னே சென்றவர்கள் இடம் பிடித்தார்கள். பின்னே சென்றவர்கள் அடுத்தப் பந்திக்காக சாப்பிட உட்காந்தவர்களின் பின்னாலே நின்று கொண்டார்கள்.

            ஒரு பக்கம் வரவேற்பு நடைபெற்றது. வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒன்றினை கையில் பிடித்தவாறு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம் என்றும் புகைப்படத்திலும் வீடியோவிலும் பதிவாகி விடவேண்டும் என பல்லை இளித்துக் கொண்டு முகம் காட்டி நின்றார்கள். பரிசுப்பொருட்களும் குவிந்தன. மொய்ப்பணமும் சிறுக சிறுக சேர்ந்து கொண்டிருந்தன. வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு வாயாற வாழ்த்திவிட்டு சென்றார்கள். இரவு நெருங்கினதும் மாப்பிள்ளையும் பொண்ணையும் புது வாழ்க்கை தொடங்கிட அந்த அறைக்குள் அனுப்பினார்கள். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கப்போனாள் பார்வதி அம்மா. கடந்த ஐந்து வாரங்களாக ரயில் வண்டி போல தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஓய்வே இல்லை. இப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. கீழேப் பாய் போட்டு இரண்டு கால்களையும் நீட்டி சுவற்றோடு சாய்ந்து உட்காந்தாள். அவளின் இரண்டு கால்களும் கடுகடுத்தன. முட்டிக்கால் வலியால் தன்னுடைய இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கொடுத்தாள். அப்போதுதான் தேவியின் ஞாபகம் வந்தது. “அடியே… தேவி.. தேவி…” என்று கத்தினாள். அம்மா… என்றபடியே ஓடோடி வந்தாள். பார்வதி அம்மாவின் இரண்டு கால்களையும் நேராக நீட்டிப்போட்டு மென்மையாக அமுக்கினாள் தேவி. தேவியின் அமுக்கும் கைப்பதம் யாருக்கும் வராது என்று எண்ணினாள். அப்படியே சொக்கிப்போய் மெய்மறந்து தேவியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யாரிந்த தேவி? இருபத்தியேழு வருசத்திற்கு முன்னாடி எங்க குலசாமி கோயில்ல ஒத்தையா நின்னிட்டு இருந்தா… ஆமாம்!  எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தை இல்லை. போகாத கோயிலும் இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. பண்ணாத வைத்தியமும் இல்லை. என்கிட்ட குறையா? அவர்கிட்ட குறையா?ன்னு தெரியல. டாக்டரும் ஆளுக்கு ஒரு மாதிரி சொல்லி எங்கள தினமும் சாகடிச்சாங்க. இதுல எங்க மூத்தாரு பொண்டாட்டி பாக்கியம் அக்கா வேற, அப்பப்ப எங்களப்பத்தி குறை சொல்லிகிட்டே இருந்தாங்க… குழந்தை இல்லாததனால மாமியாருக்கு என்மேல வெறுப்பு உண்டாச்சு. என்னோட வீட்டுகாரருக்கு வேறொரு கல்யாணம் பண்ணிடலாமுன்னு பாக்கியம் அக்கா சொன்னப்ப உண்மையிலேயே என் அடிவயிறு கலங்கிடுச்சு. வாழ்க்கையே அர்த்தமற்றதாய் போனமாதிரி உணர்ந்தேன். செத்துடலாமுன்னு கூட நினைச்சேன். அழுது அழுது கண்ணீரும் வறண்டு போச்சு. அப்பதான் எனக்கு அலமேலு மங்கை ஞாபகம் வந்தது. அலமேலு மங்கை எங்க குலசாமி. அம்மா அடிக்கடி சொல்லுவா.. உனக்கு ஏதாவது கஸ்டமுன்னு வந்ததுன்னா நம்ம அலமேலு மங்கையை நினைச்சுக்கோன்னு… அப்பதான் நினைச்சேன் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்த அலுமேலு மங்கையாலதான் முடியுமுன்னு.

அடுத்த நாள் காலையிலேயே நானும் அவரும் அலமேலு மங்கை குலசாமி கோவிலுக்கு கிளம்பினோம். அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில புடவையும், கருகமணி, மூக்குத்தி, கண்ணு, உப்பு என அனைத்தும் எடுத்துட்டு போனோம்.  நேரா போயி அம்மனின் கால்லே விழுந்தேன். “எனக்கு வாழ்க்கை கொடு! ய வயத்துல ஒரு புள்ளய கொடுத்து என்ன வாழ வையி…  உனக்கு  என் உசிரையே தரேன்“ என்று எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மீது சத்தியம் செய்தாள் பார்வதி அம்மா. இப்போது அம்மன் அலமேலு மங்கையின் கண்கள் ருத்தரமாய் சிவந்தது. பூஜைகள் அனைத்தும் முடிந்தன. கோயிலின் பின்பக்க குளக்கரை படிக்கட்டில் பார்வதி அம்மா அவரது கணவரிடம் அழுது கொண்டிருந்தாள். “நான் உன்ன விட்டுட்டு இன்னொருத்தி கூடயெல்லாம் வாழ மாட்டேன் பார்வதி. உன்னை விட என்ன யாரு அன்பா கவனிச்சுப்பா… சொல்லு..! கவலைப்படாத அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்றார். அப்போது அந்தக் குளக்கரை மறுதிசையில் படிக்கட்டு  ஓரத்தில் தண்ணீரில் கால் வைத்தபடியே  பெண்  ஒருத்தி முந்தனையை வாயில் பொத்தியபடி அழுது கொண்டிருந்தாள். “ஏங்க அங்க பாருங்க ஒரு பொண்ணு அழுதுட்டு இருக்கா.. யாருன்னு தெரியலையே… வாங்க போயி கேட்கலாம்” என்று கணவனை இழுத்துக் கொண்டு போனாள்.

“யாரும்மா நீ? இங்க என்ன பன்ற..” என்றாள் பார்வதி அம்மா. அந்தப் பெண்ணின் விசும்பும் சத்தம்தான் அதிகமாய் கேட்டது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் பேசத்தொடங்கினாள். “இந்த ஊருதான். பேரு தேவி. நான் ஒரு அநாதை. என்ன வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இப்ப எங்க போறது, என்ன பன்றதுன்னு தெரியாம உட்காந்திருக்கேன்” என்றாள் அப்பெண். அந்தப் பொண்ணைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. “சரிம்மா… எங்ககூட வந்திரியா? நான் உன்னை பாத்துக்கிறேன்” என்றால். தலையை மட்டும் ஆட்டினாள் அப்பெண்.

அந்த மாதமே பார்வதி அம்மாவின் வயிற்றில் கரு தங்கியது. அவளின் உள்ளத்து உணர்ச்சிக்கு அளவே இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் பறந்தாள். மாமியார் மருமகைளை உள்ளங்கையில் தாங்கினாள். ஆனால் பாக்கியத்திற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. கரு கலைவதற்கு தன்னால் முயன்றதை செய்ய தீர்மானம் செய்து கொண்டாள். இத்தனையிலும் தேவிக்குத்தான் மிக்க மகிழ்ச்சி. அன்று முதல்  பார்வதி அம்மாவை கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள். அவள் பெயர் பார்வதிதான். தேவிதான் அன்பின் மிகுதியால் முதன்முதலாக பார்வதி அம்மா என்றழைத்தாள். அதன்பிறகு அதுவே நிலையாகிப் போனது.

என்னுடைய வயிர் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாக தொடங்கிய காலத்திலிருந்தே தேவிதான் எல்லாமே. என்னை குளிப்பாட்டி வயிற்றை தடவிக் கொடுத்து தூங்க வைப்பதில் இருந்து அவளின் பங்கு அசாத்தியமானது. அதிலும் நான் வாந்தி எடுக்கும் போதும், வயிற்றில் வலி ஏற்படும் நேரத்தில் கூட அவளின் மென்மையான தடவுதலின் எத்தனையோ முறை மெய்மறந்து போயிருக்கிறேன்.  பிரசவ நேரங்களில் கூடவே இருந்தாள். பொறுத்துக்கொள்ள முடியாமல் தொண்டை கிழிய கத்திய போது தேவியின் கையை பற்றியவுடன் ஏதோ வலியில்லாமல் போனதை உணர்ந்தேன். என்னை இழந்து சுகமாய் இருப்பது போல் உணர்வு இருந்தது. அன்று என்னை எவ்வாறு உணர்தேனோ அப்படியே இன்றும் உணர்ந்தேன். பார்வதி அம்மாவுக்கு கண்கள் சொக்கி இமைகள் மூடி தூக்கம் வந்தது.

நான் கொடுத்த மஞ்சள் புடவையோடு குலசாமி  அம்மன் அலமேலு மங்கை நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். நான் அம்மனின் பாதங்களில் விழுந்தேன். அம்மனோ… ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள். நான் என்னவென்று புரியாமல் தவித்தேன்.

“பார்வதி அம்மா… எனக்கு சத்தியம் செய்து கொடுத்ததை வாங்க வந்திருக்கிறேன்”

“என்ன சத்தியம்” புரியாமல் தவித்தாள் பார்வதி அம்மா

“ஆமாம்! கஸ்டம் வரும்போது கடவுளிடம் அதைத் தரறேன்.. இதைத் தரேன்னு சொல்லி நீங்கள் கேட்டதை வாங்கிட்டு போயிரிங்க… எல்லாம் நல்லதா முடிஞ்சவுடனே, எங்ககிட்ட பேசுனதை சொன்னதை அப்படியே மறந்தும் போயிடுறீங்க. நல்லா யோசனை பண்ணிப்பாரு பார்வதி அம்மா”

யோசனையில் ஆழ்ந்தாள். புத்திக்கு செய்த சத்தியம் புரிந்தது. ஆமாம்.. என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“உன் உசிரைக் கொடு.. எனக்கு பலி கொடு… உன் சத்தியத்தை உண்மையாக்கு..” என்றாள் அம்மன் அலமேலு மங்கை.

“இல்ல இப்பத்தான் என் மகனுக்கு கல்யாணம் நடந்திருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ள பேரன் பேத்தியைப் பாத்திருவேன். அப்புறமா நீ என்ன எடுத்துக்க”

“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் உன் கூடவே நான் இருக்கிறது. நீ இப்ப தருவ… அப்ப தருவ…ன்னு..”

“அலமேலு மங்கை அம்மன் என்கூடவே இருக்கா… உண்மையா? அப்படின்னா யாரது?

“நல்லா யோசிச்சுப்பாரு பார்வதி அம்மா”

“ஆமாம்! ஆமாம்! ‘பார்வதி அம்மா’ என்று கூப்பிடும் இக்குரலை இதற்கு முன் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆமாம்! இது தேவியின் குரலா! என்ன தேவியின் குரலா! கொஞ்சமாய் புரிய ஆரமித்தது. கல்யாணத்திற்கு பட்டுப்புடவை எடுக்க துணிக்கடைக்குச் சென்றிருந்தோம். துணிகள் அனைத்தும் எடுத்து முடித்ததும் தேவிக்கும் சேர்த்து புடவை எடுத்தோம். அப்ப தேவி, “பார்வதி அம்மா எனக்கு உன் கையால மஞ்சள் நிறத்துல புடவை எடுத்துக்கொடும்மான்னு கேட்டா”. நானும் எடுத்துக்கொடுத்தேன். கல்யாணத்துல தேவி கட்டியிருந்த சேலையும் குலசாமி அலமேலு மங்கைக்கு முதன்முதலா நான் கொண்டு சென்ற சேலையும் ஒன்னா இருக்கு. அப்படின்னா.. தேவிதான் அலமேலு மங்கையா!

அலமேலு மங்கையின் சிரிப்புச் சத்தம் இந்த பூமியையே அதிர வைத்தது. ஆமாம்! கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ண… இப்ப என்னாச்சு.. பயப்படுறீயா.. நீ கேட்ட மாதிரி ஒரு குழந்தையும் கொடுத்துட்டன். உன் கூடவே இருந்து உன்னையும் குழந்தையும் பாத்துகிட்டன். இப்பதான் உன் பையன் கல்யாணம் முடிஞ்சி புது வாழ்க்கையும் ஆரமிச்சிட்டான்ல்ல. இதுக்கப்புறமும் உன் பின்னாலயே என்னால அலைய முடியாது. நீ சொன்ன மாதிரி உசுரை கொடுத்திரு.. நான் போயிடுறேன்.

“சரிதான். நான் கொடுக்கிறன். ஆனால் என் புள்ளய தினமும் பாத்திட்டு இருக்கனும். அப்படின்னா இப்பவே இந்த உசிரை எடுத்துரு” என்றாள் பார்வதி அம்மா.

அலமேலு மங்கையின் மூக்குத்தி அணிந்த அழகான முகம் ஒளிர்ந்தது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த  பார்வதி அம்மாவின் உடல் நிலத்தில் சரிந்தது. சாந்தி முகூர்த்தத்தில் மணப்பெண்ணின் அடிவயிறு இனித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

http://kelviyumpathilum.com/

தொல்காப்பிய வினா விடைகள் (PG TRB| NET|SLET|TET|TNPSC) – 6

தமிழ் இலக்கிய வினா விடைகள் PG TRB| NET|SLET|TET|TNPSC -3

பெண்ணியக் கோட்பாடுகள்

முன்னுரை

            உலகம் ஆண் பெண் என்னும் இருபாலராருலும் உருவாக்கப்பட்டிருக்கிறது  இரண்டும் சேர்ந்த ஒன்றே உலகம் எனப்படும்.  இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது என்பதனைச் சான்றோர் அறிவர்.  இருப்பினும் பெண் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்றும், ஆணின் கட்டுப்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் பெண்ணின் உணர்வுகளுக்குத் தடை போட்ட சூழலில் தான் பெண்ணியம் தோன்றியது.  தொடக்க காலத்தில் பெண்களுக்குச் சமூகம் பலவகையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.  கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது.  கணவணை இழந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து, காவி உடை அணியச் செய்தது.  அத்தோடு மட்டும் நில்லாமல் தனியாகப் பாய் படுக்கை, தனி வட்டில் என கொடுத்து அவர்களை தற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நிலையும் எய்தியது. இந்நிலையை மாற்ற பாரதியார், பெரியார், திரு.வி.க. போன்ற சான்றோர்கள் கைம்மை மணத்தை வலியுறுத்தினர். மேலும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்றும், கல்வி கற்றப் பெண்ணால் தான் தன் ககுடும்பத்தை சரிவர பராமரிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.

பெண்ணிய திறனாய்வும், அணுகுமுறைகளும்

            சமூக எதார்த்தத்தின் மிகப் பெரிய பரப்பளவில் பெண்ணின் நிலை சமூக தத்துவார்த்த வெளியீடுகள் எளிதாக விளக்கியிருக்கின்றனர் என்பதை பெண்ணியத் திறனாய்வுகள் நம்புகின்றன.  ஏங்கெல்லாம் பெண்களின் நிலைப்பாடு விளக்கப்படவில்லையோ அங்கு அவாகளது நிலைப்பாட்டினை பாலியல் ரீதியான விளக்கம் செய்து சிதைத்திருக்கின்றனர்.  1960 – களிலிருந்து இன்றுவரை பெண்ணியம் பலரையும் பலவேறு வழிகளில் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் தோற்றமும், வளர்ச்சியும் வெவ்வேறுபட்ட குறிக்கோள்களை உட்கொண்டதாக இருந்தது.  இந்தியாவில் பெண்கள் சதி, வரதட்சணை, உயிரோடு எரிப்பது, பால்ய விவாகம், பெண்ணைப் பாலியல் பொருளாகக் கையாளுவது, சந்தைப் பொருளாக விளம்பரங்களில் பயன்படுத்துவது,சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அடிமைத்தனம், சுரண்டல்கள் போன்றவைகளால் ஒடுக்கப்படுகின்றார்கள்.

            மற்றுமொரு நிலையில், நிலையில் ஆணாதிக்கச் சமுதாயம் பெண்ணைத் தாயாக, தாய்க் கடவுளாக உயர்வு நவிற்சி நிலையில் கூறி வந்திருக்கிறது.  இது பெண் ஆசி வழங்கக் கூடியவள், செயல்பாட்டு நிலைக்கு உட்படாதவள் என்ற கொள்கைக்கும் சாதகமாக உள்ளது.

பெண்ணியம் சொல்லாட்சி

            ‘பெண்ணியம்’ என்னும் சொல் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைன் கூறுகின்றனர்.  ‘பெண்ணியம்’ என்னும் சொல் ஆங்கிலத்திலுள்ள ‘பெமினிசம்’ என்ற சொல்லிற்கு இணையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  இச்சொல் ஆங்கிலத்திலிருந்து எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதனை,

            “ஆங்கிலத்தில் ‘feminism’ என்று வழங்கும் கலைச்சொல்லையே தமிழில் பெண்ணியம் என்று கூறுகிறோம்.  இந்த ஆங்கிலச்சொல் பெண்ணைக் குறிக்கும்.  இச்சொல் ‘famine’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது.  ‘பெண்’ என்னும் சொல்லுக்கு ‘பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள்’ என்று பொருள்.  பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலினச் சமத்துவக் கோட்பாடுகளையும் குறிப்பிட்டு வருகின்றது.” 1 என்று கூறுகிறார் முத்துச் சிதம்பரம்.

            பெண்ணைப் பல்வேறு நிலைகளிலும் முன்னிறுத்தி அவர்களின் வழியாக சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் பெண்ணியம், பெண்ணியவாதம், பெண்னுரிமை ஏற்பு என்னும் சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கி வருகின்றன என்னும் நோக்கில் ச. முத்துச்சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம்.  மேலும் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரேமா கூறுகையில்,

‘feminism’ என்ற ஆங்கிலச் சொல் ‘famine’ என்ற இலத்தீன் சொல்லின் திரிபு ஆகும் .  பெண் என்னும் சொல் பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள் என்று கூறப்படும் போது முதலில் பெண்களின் பாலியல் பண்புகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது.  பின்பே பெண்ணின் உரிமையை பேசுவதற்காக குறிப்பிட்ப்பட்டது.”2 என்று கூறுகிறார்.  பொதுவாகப் பெண்ணியம் என்ற சொல்லாட்சியானது ஒரே வகையான கருத்தை எடுத்தியம்புவதாக உள்ளது.  ஆண் – பெண் என்னும் இருபாலரையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், பாலியல் ரீதியான கருத்துக்களை எடுத்தியம்புவதற்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது எனலாம்.

            1894 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முறையாக இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. 

            “ பெமினிசம் என்ற சொல் பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது”3 என்று பொருளை தந்துள்ளதாக சி.என.;குமாரசாமி கூறியுள்ளார்.  இக்கருத்திற்கு வலுசேர்க்கம் வகையில் சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதியில்,

            feminism என்பதற்கு பெண் உரிமை ஏற்பு கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.”4

            அதாவது, பெண்ணிய இயக்கம் என்பது பெண்களுக்காக போராடும் இயக்கமாகும்.  பெண்ணியத்திற்கு உலகில் உள்ளஅனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியாகவும், முக்காலத்திற்குமுரிய ஒரு விளக்கத்தை கொடுக்க இயலாது.  இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைப் பற்றிய உணர்வு நோக்கு, செயல் இவைகளைப் பொறுத்து மாறுபடும் என்று கூறுவர்.

பெண்ணியம் விளக்கம்

            உலக மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள், பெண்களது சமூக, பொருளாதார அரசியல் நிலை உலகெங்கும் ஆடவரைக் காட்டிலும் தாழ்வாகவே உள்ளது.  முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவாக இருந்தாலும், பழமைக்குமப் பழமையும், முன்னேற்றத்திற்கு முன்னேற்றமும் ஒருங்கே பெற்றிற்கும் இங்கிலாந்தாக இருந்தாலும், மக்கள் பெருக்கத்திற்கு பெயர் போன சீனாவாக இருந்தாலும், இஸ்லாமிய தேசமாக இருந்தாலும, ஜனநாயக நாடான இந்தியாவாக இருந்தாலும் இவை எல்லா இடங்களிலும் பெண்கள்pன் நிலை மட்டும் இரண்டாமிடத்ததாகவே இருந்து வருகின்றது.  இதை மாற்ற மேற்கொள்ளம் முயற்சிகளே பெண்ணியப் பிறப்பிற்கு வித்தானது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

            “சமூகத்திலும், வேலைதளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் பெண்ணியத்தின் பரந்துபட்ட வரையறையாக இப்போதைய நிலையில் கொள்ளலாம்.”5 என்று மொலினா தேன்மொழி கூறும் கூற்று மெய்பித்துக் காட்டுவதாக உள்ளது.

            பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் நிலையினைக் கண்டு அவர்களின் சுதந்திரத்திற்காக ஆண்களும் அவர்களுடன் இணைந்து பாடுபடும் நிலை நிலவி வந்தது என்பதனை மேற்கண்ட ஆசிரியரின கூற்றின் வழியாக இறிய முடிகிறது. மேலும்,

            “பெண்ணியம் பெண்ணின் சமூகத் தகுதி நிலை குறித்து இதுவரையில் எடுத்துரைக்கப்பட்ட இலக்கியத் தரவுகளை மறுபரிசீலனை செய்யப் பெரிதும் உதவியாக இருக்கிறது.”6 என்று அரங்க மல்லிகா அவர்களின் கூற்றிலிருந்து பெண்ணின் தற்போதைய நிலை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

            சுங்க காலத்தில் பெண் எல்லா உரிமைகளையும் பெற்றுத் திகழ்ந்தாள் என்று பழம் பெருமை பேசுபவர்கள் கருத்துரையாடுகின்றார்கள்.  ஆனால் பழைய மரபுகள் பெண்ணை அப்படியொன்றும் பெருமை படுத்தியிருக்கவில்லை.  வேதகாலம் தொட்டு ஒரு தாய், ஆண் மக்களைப் பெற்றதனாலேயே பெருமை படுத்தப்பட்டிருக்கிறாள்.  தாயாண்மைக்  காலத்தில் அவளுடைய கணவனாகிய ஆண்மகனுக்கு முதன்மையாக இருந்ததில்லை.  ஏனென்றால் ஒரு ஆண்மகனைப் பெறும் தாயானவள் அவனை நல்ல பொருப்புள்ளவனாக உருவாக்கக் கடமைபட்டிருக்கிறாள் இக்கருத்தினை வலியுறுத்தவே திரு.வி.க. ஒரு பெண் பிறவி எடுத்ததன் நோக்கமே காமத்திற்கும் அடுப்பூதுதல் போன்ற பணி செய்வதற்கும் மட்டும்; அன்று.  குழந்தைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து ஆளாக்கி சான்றோனாக்குவதே அவளின் தலையாயக் கடமையாகும்.     

            “யான் பெண்ணின் வயிற்றில் தோன்றினேன், பெண்ணுக்குள் பிறந்தேன், பெண்ணுடன் வாழ்ந்தேன், என் வாழ்விற்கு நான் தொழும் அன்பு தெய்வம் பெண்ணாகவே இருக்கிறது…”7 என்னும் கருத்து ஈண்டு நோக்கதக்கதாகும்.

பெண்ணடிமைத் தனத்தின் பரிணாமங்கள்

            இந்தியாவில் முதன்முதலில் தாய்வழிச் சமூக அமைப்பு இருந்தாலும், அது நாளடைவில் மாற்றம் பெற்று தந்தை வழிச் சமூகமாக மாற்றம் பெற்றப்பின், குடும்பம், பொருளாதாரம், அரசியல் மதம் என முதன்மையாக சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆண்களே கையப்படுத்தி கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவு தொடங்கினர்.           

காலம் செல்லச் செல்ல பெண்ணடிமையும், ஆண்மேலாதிக்கமும் படிப்படியே தழைத்து, அவற்றின் விளைவுகள் பெண்ணின் சுரண்டல்களின் பல வடிவங்களாய்க் கிளைவிட்டு வளர ஆரம்பித்தன.இதன்விளைவாக பெண்சிசுக்கொலை, இளம் வயது திருமணம், பாலியல் கொடுமைகள், பெண்களைத் தனிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, சமகூலியின்மை, கைம்மை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு இந்தியப் பெண்கள் ஆட்படுத்தப்பட்டனர்.  இவ்வாறு ஆட்படுத்தப்பட்ட பெண்களுக்கு உரிமை வழங்குவதில் அரசு காட்டும் ஈடுபாடு பற்றி வாசுகி கூறும் கருத்து ஏற்புடையது.

“ஓர் உயிரின் உரிமையை இன்னொன்று கட்டுப்படுத்தி, அதன் நன்மைகளை தான் பெற முயல்வது உரிமை பறிப்பு ஆகும்.  பேண்ணுரிமையும் அப்படிப்பட்டதே, பெண்ணுக்குரிய உரிமைகளைப் பறித்துவிட்டு அவளுக்கு எந்த அளவுக்கு உரிமை வழங்கலாம் என்று தீர்மானிக்க மாநாடுகள் கூட்டுவது முரண்பாடாக உள்ளது.”8  ஏன்று கூறுகிறார்.

            அன்றைய நாட்களிலிருந்து உலகையே புரட்டிப் போடும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்றிருந்த காலத்திலும், ஒரு பெண்ணுக்கு, வீடு, கணவன், பிள்ளைகள் என்ற நெறியே வாழ்வின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.  பேண்ணின் வாழ்க்கையில் இன்று புதிது புதிதாக முளைத்திருக்கும் சிக்கல்கள் எல்லாமே இந்த மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகின்றன.  தெய்வத்தைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவன் மட்டுமே மேலானவள்.  ஆப்படிப்பட்டக் கணவனை மகிழ்வித்து, அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவனால் பெற்றிருக்கும் வாழ்வுக்கு எவ்வித பங்கமும் வராமல் வாழ்ந்து நன்றிக் கடன் செலுத்தக் கூடியவள் பெண் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.  

முடிவுரை

            பெண்ணின் சகூகத் தகுதி நிலை என்பது ஆணின் சார்பாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  கல்வி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் பெண் தனித்து நின்றும், குழுவாகச் சேர்ந்திருந்தும, பொது நிலையிலிருந்தும் ஆற்றக்கூடிய வாழ்க்கைப் பணிப்பகிர்வு ஆணின் குடும்ப முன்னேற்றம் கருதியதாக இருக்கிறது.   பெண்ணிய கோட்பாடுகள் குறித்து பல அறிஞர்கள் மொழிகின்றனர்.  பெண்ணியம் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொய்யவும் பெண்ணியம் தெளிவான விவரங்களை முன் வைக்கிறது எனலாம்.

சான்றெண் விளக்கம்

1.          ச.முத்துச்சிதம்பரம், பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்

2.          இரா.பிரேமா, பெண்ணியம் அணுகுமுறைகள்

3.          சி.என்.குமாரசாமி, பெண்ணிண நோக்கில் பாரதி

4.          MADRAS UNIVERSITY, ENGLISH TAMIL DICTIONARY

5.          மொலினாதென்மொழி(மொ.ஆ) பெண்ணியவாதம், அதன் அவசியம் குறித்த சில கேள்விகள்

6.          ஆரங்க மல்லிகா, தமிழ் இலக்கிமும், பெண்ணியமும்.

7.          திரு.வி.க, பெண்ணின் பெருமை

8.          வாசுகி, பெண்ணியம் பேசலாம் வாங்க.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி

           உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை

           செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

            ஓசூர் – 635 126

எட்டுத்தொகையில் அறம்

முன்னுரை

  பண்டைத் தமிழ் நாகரீகத்தினையும், சிறந்த சிந்தனையின் ஊற்றாகவும் விளங்குவது சங்க இலக்கியங்களே.  அத்தகைய  சங்க இலக்கியங்களை மூன்றாகப் பகுத்தனர் நம் முன்னோர்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,பதினெண்கீழ்கணக்கு.  இவற்றில் முன்னிரண்டும் சங்க காலத்தது, மற்றொன்று சங்கம் மருவிய காலத்தது.

                                    ‘கல் தோன்றி மண்தோன்றா காலத்தே

                                    முன் தோன்றியது நம் மூத்தத் தமிழ்குடி’

என்னும் கூற்றிலிருந்து நம் தமிழ் மொழியானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும்.  பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் சாதி மத பேதமின்றி வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளம், அவர்கள் அகம் புறம் என்று பிரித்துக் கொண்டு ஆங்காங்கே குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.  அதன் பின் தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களை ஐந்திணைகளாகப் பகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.  திணை என்றால் எழுக்கம் என்பது பொருள்.  அதற்கேற்ப சங்கத் தமிழர்கள் புறவொழுக்கத்தோடு அக வொழுக்கத்தையும் கடைபிடித்து ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு மாறாமல் வாழ்ந்து வந்தனர்.  அத்தகைய அறவொழுக்கத்தினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

நற்றிணையில் அறம்:

            தலைவி தலைவனிடத்து குறையே கண்டாலும், அக்குறையை வெளிப்படையாகக் கூறாமல் நயமாக தோழியிடம் கூறுகிறாள்.

                                    “பகல் எரி சுடரின் மேனி சாயவும்,

                                     பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்

                                     எனக்கு நீ உரையாயாயினை: நினக்கு யான்

                                     உயிர் பகுத்தனன் மாண்பினன் ஆகலின்”1

குறிஞ்சித் திணையில் தோழிக்கு தலைவி அறத்தோடு நிற்றல்; என்னும் துறையில் அமைந்துள்ளது இப்பாடல்.  பாங்கியற் கூட்டத்தில் தலைமகளின் குறையைத் தீர்ப்பதற்கு தோழி முற்படுகின்றாள்.  ஆதனால் அவள் தலைவியிடம் ‘நின் மேனி வாடிற்று: நெற்றி ஒளி குன்றிற்று ஆனால் அவற்றின் காரணத்தை நீ உரைக்கவில்லை.  ஆயினும் நான் அறிவேன் என்கிறாள்.  ஆதற்குத் தலைவி அதற்காக நீ வருத்தப்படாதே தினைப்புனத்தில் தலைவன் என் முதுகை அணைத்தான் அதனால் அவ்வாறு இருக்கிறேன் என்று தோழியிடம் நயமாகக் கூறி தன் ஒழுக்கம் குன்றாதவாறு அறத்தோடு றிற்கின்றாள். 

தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்றாலும் தலைவியின் மேல் கொண்ட காதலால் தலைவியிடம் சேர நினைக்கின்றான்.  அப்பொழுது தலைவி ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று பயந்து விருந்தினனை வீட்டிற்கு அழைத்து வருகின்றான். 

“தடமருப்பு எருமை மடநடைக் குழவி

                                     தூண் தொறும்  யாத்த கான் தகு நல் இல்,

                                     கொடுங்குழைப் பெய்த செழுஞசெய் பேழை

                                     சிறுதாழ் குழை பெய்த மெல் விரல் சேப்ப”2

தன் கைகள் சிவக்க தலைவி அட்டில் சமைக்கிறாள்.  தலைவன் விருந்தொடு வருகின்றான்.  தலைவன் மீது இருக்கும் கோபத்தை விருந்தினர் முன் காட்டக் கூடாது என்பதற்காக தலைவி தன் அழகிய முல்லை போன்ற எயிறு காட்டி சிரிக்கின்றாள்.  தன் குடும்பத்தில் நடப்பது பிறருக்கு தெரியக் கூடாது என்பதற்காக தலைவி அவ்வாறு நடந்து கொள்கின்றாள்.

குறுந்தொகையில் அறம்

            குறுகிய அடிகளை உடையதாயினும் வாழ்க்கைக்குத் தேவையான செறிந்தக் கருத்துக்களை தருவதனால் சங்க இலக்கியத்தில் குநற்தொகையை ‘நல்ல குறுந்தொகை’ என்று கூறினர் சங்கத் தமிழர்.  குறிஞ்சி நிலத்தில் வாழும் குரங்குகள் கூட பிரிவினைத் தாங்காது அப்படிப்பட்ட இரவுப் பொழுதில் தலைவன் தலைவியை சந்திக்க நினைப்பது தவறு என தோழித் தலைவிக்கு மறுப்பு தெரிவிப்பதிலிருந்து அவர்களின்  ஒழுக்கம் இங்கு புலப்படுகிறது.

                                    “கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,

                                     கைம்மை உய்யாக் காமர் மந்தி 

                                     கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,

                                     ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து – உயிர் செகுக்கும்

                                     சாரல் நாட!  நடுநாள்

                                     வாரல்: வழியோ! வருந்தும் யாமே!”3

இருளில் தாவுதலையுடைய ஆண் குரங்கு, சாவினை அடைந்ததாக,கணவன் இல்லாமல் வருந்தும் கைம்மை வாழ்வினை பொறாது, தன் கணவனால் விரும்பப்பட்ட பெண் குரங்கு, தன் தொழிலை இனிக் கற்க வேண்டாத தன்னுடையக் குட்டிகளை சுற்றத்தாரிடம் அடைக்கலப்படுத்தி, உயர்நத மலைப்பக்கத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும்.  வுpலங்குகள் கூட அறத்தொடு நிற்கும் நாட்டுக்குத் தலைவனே இரவுக்குறியில் தலைவியை சந்திப்பது தவறல்லவா? ஏன்று  தலைவனிடம் மறுத்துக் கூறுகிறாள்.

            தன் தாய் வீட்டில் பாலும் சோறும் உண்டத் தலைவி, தன் கணவன் வீட்டில் நடந்து கொள்ளும் விதம் நம் தமிழர் பண்பாட்டின் உயர்வினை விளக்கிக்அ காட்டுகிறது. 

                                    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,

                                     கழுவுறு கலிங்கம்  கழாஅது உடீஇ

                                     குவளை உண்கண் குய்ப்புகைக் கழுமத்

                                     தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

  இனிது’ எனக் கணவன் உண்டலின்

                                     நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒன்னுதல் முகனே”4

தலைவி இல்லறம் நிகழ்த்தும் சிறப்பினை நேரில் கண்டறிந்து வந்த செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியின் அடிசில் ஆக்கும் திறமும் தலைவனின் அன்போடு இயைந்த பாராட்டு மொழிகளும் அப்புகழ் மொழிகளால் தலைவி செருக்கு கொள்ளாது அகத்தே மகிழும் அரிய பண்பு செவிலியால் கண்டறியப்பட்டது தெற்றென விளங்கும்.

ஐங்குநூற்றில் அறம்:

            தலைவன் தலைவியை மணந்து கொள்வேன் என்று உறுதி கூறி தலைவன் பொருள் தேட செல்வதும், தோழி தாயிடம் வந்து அறத்தொடு நிற்றலும் ‘அஞ்சாதே’ தலைவன் திரும்புவான் இது உறுதி என தோழி தாயிடம் உரைக்கின்றாள்

                                    “அன்னை, வாழி! வேண்டு அன்னை!புன்னையொடு

                                     ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்

                                     இவட்கு அமைந்ததனால் தானே;

                                     துனக்கு அமைந்தன்று, இவன் மாமைக் கவினே”5

தலைவியின் கற்புக்கு எவ்வித பங்கமும் நேரவில்லை.  தலைவன் தலைவியை கைவிடான் இனி தலைவனுக்கே உரியது என எடுத்துக் கூறுகிறாள்.

            வினையின் காரணமாக நீங்கிச் செல்லும் தலைவன் தான் வருவதாக கூறிச் சென்ற கார்ப்பருவம் வருவதற்கு முன்னதாக வந்தமையை,

                                    “ஆர் குரல் எழிலி அழி துளி சிதறிக்

                                     கார் தொடங்கின்றால், காமர் புறவே;

                                     வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்

                                     தாழ் இருங்கூந்தல்! வம்மதி விரைந்தே”6

கார் பருவத்தில் சொல்லச் சென்றான் தலைவன்.  ஆனால் அதன் வரவுக்கு முன்னரே வந்தான்.  தன் காதலியோடு புறவிற்குச் சென்றான்; அப்பொழுது கார்பருவம் வந்தது; அது கண்டு மகிழ்ந்து, தான் முன்னரே வந்தமைத் தோன்றக் காதலியிடம் இவ்வாறு கூறினான்.  தலைவன் சொன்ன சொல் தவறாமல் நடந்து கொண்ட முறை இப்பாடலின் வழி அறியப்படுகிறது.

அகம் கூறும் அறம்

            பொருள்  தேடச் சென்றத் தலைமகன் இடையில் தலைவி நினைவு வர தன் நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறான் .

                                    “அகல்வாய் வானம் மால் இருள் பரப்ப,

                                     பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு

                                     சினவல் போகி புன்கண் மாலை,

                                     அந்த நடுகல் ஆள் என உதைத்த

                                     கான யானை கதுவாய் வள் உகிர்”7

காட்டு யானையானது பாலை வழியில் உள்ள நடுகல்லை ஆள் என நினைத்த உதைத்தமையால் வளவிய பெருநகம் சிதைவுற்று பனை நுங்கின் தோடு போல முறிந்து வீழும்; அருளிலாக் கொடுமையுடைய ஆரலைக் கள்வர் கொள்ளைக் கொள்வதற்குப் பதுங்கிக் கிடக்கும் இடத்தே காட்டின் கொடுமையால் வருவார் போவார் இன்மையால் தம் வறுமையை நீக்குவாரைக் காணமாட்டாத இடமான கொடிய சுரவழி அம்மாலைக் காலத்தே நின்று தலைவியை நினைத்துத் தலைவன் வருந்துகின்றான்.

            குடும்ப வாழ்க்கையில் மட்டுமன்றி, அரசியலிலும் மக்களைப் பேணிக்காப்பதிலும் தமிழர்க்கு நிகர் தமிழர்தான் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.  அதில் புறநானூறு பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம் இதனுள் தமிழகத்தின கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திய புரவலர்கள் புலவர்களை போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும், மன்னர் தம் மானப் பண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த் திணவுற்று அறமுறைப் பிறழாது போர் புரிந்து, மார்பில் வேலேற்ற மைந்துடை காளையரின் வீரப் பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்கள் பிறவும் புறநானூற்றில் மிக அழகுற எடுத்துரைக்ப் பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் போருக்குச் செல்லும் அரசர்களு; அறத்தோடு நடந்துகொள்ளும் முறைமை இங்கு குறிப்பிடத் தக்கது.

                                    “ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்

                                     பெண்டிரும் பிணியுடையீரும், பேணி, பேணித்

                                     தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

                                     பொன் பொல் புதல்வர் பெறாஅதீரும்,

                                     எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சோமின் என”8

இப்பாடலில் ‘அறத்தின் நெறியின்படி பெருவழுதியின் இயல்பினை கூறுகிறார்.

முடிவுரை

            இவ்வாறாக சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் மக்களின் வாழ்க்கையை தெற்றென விளக்கும் கருத்துக் கவூலங்களாக விளங்குகின்றன.  ‘ஓரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் எட்டுத்தொகையில் அகம் புறம் இவை இரண்டிலும் திணை பிரித்து அதற்கேற்ப மக்கள் வாழ்ந்தனர்.  அகத்திணை அன்பின் ஐந்திணையில் மனையியல் வாழ்க்கைப் பற்றியும், புறத்திணையை பன்னிரெண்டாகப் பிரித்து அரசியல் வாழ்க்கையையும் விளக்கி மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் அறச்சிந்தனைணைத் தூண்டுவதாக அமைந்தள்ளது போற்றுதற்குரியது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி

           உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை

           செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

            ஓசூர் – 635 126

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

‘மொழி நம் விழி’ என்று பேராசிரியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அதுபோல நம் கண்ணின் கருமணியை இமை எவ்வாறு மென்மையாகப் பாதுகாக்கின்றதோ அவ்வாறு நாமும் நம் மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். காரணம், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் தமிழுக்கும் உயரிய மேன்மைகளும் பெருமைகளும் உண்டு. அதனை எடுத்துரைக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளோம். மொழியுணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உதிரத்தில் ஊறியிருக்க வேண்டியவை. மொழியை இகழ்ந்தால் அவனுடைய இனத்தை இகழ்ந்ததற்குச் சமமாகும். ஆகவே, மொழி வாயிலாக மனித இனத்தின் மாண்புகளை அடையாளம் காணலாம். இதன் அடிப்படையில் ‘தொன் மொழியாம் தமிழ் மொழியின்’ சிறப்புகளை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

இந்திய மொழிகள்

                இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்களைச் சார்ந்த 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும், இந்தியாவில் மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன எனவும் இந்தியாவை மொழிகளின் ‘அருங்காட்சியகம்;’ எனவும் பேராசிரியர் அ. அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். மொழியியலாளர்கள் இந்தியாவில் வழங்கும் மொழிகளை நால்வகை மொழிக்குடும்பங்களுள் அடக்குவர். அதனை,

1. இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்

2.திராவிட மொழிக் குடும்பம்

            3.ஆஸ்திரோ ஆசிய மொழிக்குடும்பம்

             4.சீனோ – திபெத்திய மொழிக்குடும்பம்

இவ்வகையினுள் இந்தோ – ஆரிய மொழிகளே இந்தியாவில் வழங்கி வருவதைக் காண்கிறோம். சமஸ்கிருதம், இந்தி, உருது, வங்காளம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, மைதிலி, இராஜஸ்தானி, அஸ்ஸாமி, காஷ்மிரி முதலிய மொழிகள் இவ்வகையினவாகும். ஆஸ்திரோ – ஆசிய மொழிக்குடும்பத்தின் கிளையாகிய முண்டா மொழிகள்  இந்தியாவில் வழங்குகின்றன. சந்தாலி, முண்டாளி, ஹோ, கொற்கு போன்ற மொழிகளும் இவ்வகையே சாரும். இவைபோன்று இந்தியாவில் வழங்குகின்ற திராவிட மொழிகள் துளு, படகா, கன்னடம், இருளா, கொடகு, கோடா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி பெங்கோ, முண்டா, கொலாமி, நாயக்கி, பர்ஜி, கடபா, ஒல்லாரி, சில்லூர்,குருக், மால்டோ, பிராகுயி போன்றவையாகும். மேலும், நேபாளி மணிப்புரி முதலிய மொழிகள் இந்தியாவில் வழங்குகின்றன. இவை சீனோ – திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளாகும், ஆனால், தமிழ் மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவையாக அமைந்திருப்பது சிறப்புக்குரியவொன்றாகும். இம்மொழிக்குரிய சிறப்பியல்புகளை இனிவரும் பகுதிகளில் காணலாம்.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

                தொன்மைச் சிறப்பாலும் இலக்கிய வகைமைச் சிறப்பாலும் தனித்தன்மையாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் தனித்து நிற்கும் ஒரே மொழி தமிழ்மொழி, இம்மொழி உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளிலேயே ‘பன்னாட்டு மொழி’ என்ற தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மொழிதான் என்பதை அனைவரும் அறிந்தவொன்றே. மேலும், அதுமட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக நடைமுறையில் இருந்து வருகின்றது. உலக மொழிகளில் எழுந்த முதல் மொழி மற்றும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் திகழ்வதையும் இங்கு அறியத்தக்கதாகும். தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் இலத்தின் கிரேக்கம், முதலியன போலத் தமிழ்மொழியும் உயர்தனிச் செம்மொழி என்பதனை நிறுவியுள்ளார். மேலும், இவரைப் போல் “எடுக்க எடுக்க குறையாதது கொடுக்க கொடுக்க மாளாதது நம் தமிழ் மொழியின் வளம் – வல்லமை தமிழ் இனியது அழகியல் ஆற்றல் மிக்கது, சொற்செறிவும் பொருட் செறிவும் நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது அது தொன்மையானது தூயது” என்று 1967-இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் உண்மையை இன்றும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

                அண்ணா எடுத்துரைப்பதற்கு முன்பே 15.03.1951-ஆம் நாளன்று சாகித்திய அகாதெமியின் தொடக்க மாநாட்டில் மத்தியில் மத்திய அரசின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த திரு. மௌலானா அபுல்கலாம் ஆசாத் உரையாற்றும் போது ‘தமிழ் வளமான, தொன்மையான இலக்கிங்களைப் பெற்றுள்ளது. தமிழ் உண்மையாகவே ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம். மேலும், தொல்காப்பியத்தில் தமிழ் என்னும் சொல்லாட்சி ‘தமிழென் கிளவியும் அதனோரற்றே’ (எழுத்து-386) என்னும் நூற்பாவில் இடம்பெற்றுள்ளதை உணரலாம்.

தமிழ் என்ற சொல்லில் ‘த’- வல்லினமும் மி – மெல்லினமும் ழ் – இடையினமும் ஆகிய மூவின எழுத்துச் சேர்க்கை தமிழ் ஆயிற்று என்பர். மேலும், உலகில் தோன்றிய மொழி தமிழ், மாந்தன் பேசிய முதல் மொழி தமிழ், தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் உலக மொழிகட்கு வேராகவும் இருப்பது, ‘முதல் மொழியாகவும், மொழிக்குடும்பத்திற்கும் உலகக் கிளை மொழிகளுக்குத் தாயாகவும் அமைந்த மொழி தமிழாகும். உலக மொழிகள் ஐயாயிரத்துள்ளும் வேர்ச்சொல் காண்பதற்கு எளிதாகவும், மிகுதியாகவும் இடம் தரும் மொழியும் தமிழே. அஃது இயன் மொழி ஆதலால் பெரும்பான்மை சொற்களின் வேர் வடிவை அல்லது வேர் உறுப்பை இன்றும் தாங்கி நிற்கிறது’ என்கிறார் பாவாணர். மனோன்மணியம் சுந்தரனாரும்,

‘சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

என்றும்,

‘கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்’

‘உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல அயிடினும்’

என்றும் புகழ்ந்து பாடியிருப்பதன் மூலம் நம் மொழியின் ஆழத்தை உணர்கிறோம்.

                தமிழ் இலக்கியம் கி.மு நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்களைக் கொண்டு வானளாவி வளர்ந்திருந்த நிலையைக் காண்கிறோம். அதோடு, உலகிலேயே தமிழை பக்தியின் மொழி என்று தனிநாயக அடிகளார் குறிப்பிடுவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். மேலும், வடமொழியான பாணிணியத்திற்கும் முற்பட்ட தொல்காப்பியம் உலகின் முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. பொருள் இலக்கணம் உலகில் வேறுமொழிகளில் காணப்படாத ஒன்று. தமிழ் இலக்கியத்தின் காலத்தை நிர்ணயிப்பது கடினம் என்று இந்தியக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’

என்று பிங்கல நிகண்டு இயம்பும்.

‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே’

என்ற கம்பன் தொடரில் தமிழ் இனிமை என்ற பொருளில் எடுத்தாளப்படுகிறது. மேலும், தன்னேரில்லாத தமிழ், என்றும்

                                        ‘இருந்தமிழே  உன்னால் இருந்தேன்  இமையோர்

                                         விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’

என்று தமிழ் விடு தூது தமிழின் பெருமையைப் பகர்கின்றது. மேலும்,

‘தமிழுக்கும் அமுதென்று பேர்’

என்றும் பாரதிதாசன் பைந்தமிழ் இனிமையைப் பறைசாற்றுகிறார். அதுமட்டுமல்லாமல், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றும்,

                                      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச் சொல்லே’

என்றும்,

                                     ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

                                            இனிதாவது எங்கும் காணோம்’

என்று பாரதியார் எடுத்தியம்புவதையும் காணலாம். இச்சான்றுகளைக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழிலக்கியங்களில் மொழியின் சிறப்பியல்புகள்

                மக்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உலகளாவிய பண்பாட்டு எண்ணம் தமிழ் இனத்திற்கே உரியதாகும். எனவேதான்,

‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ (புறம். 92)

என்று கணியன் பூங்குன்றனார் குறிப்பிடுகிறார். மேலும்,

‘பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’

என்ற சங்கப் பாடல் உயர்வு தாழ்வு இன்றி மக்கள் அனைவரும் ஒன்றே என்ற வாழ்வியல் சிந்தனையை உணர்த்துகின்றது. மேலும், புறநானூற்று (204 ஆம் பாடல்) எனக்குக் கொடுத்திடு என்று இரத்தல் இழிந்தன்று, அவ்வாறு கேட்டார்க்குக் கொடுக்க மாட்டேன் எனக் கூறி மறுத்தல் அவ்விரத்தலைவிட இழிந்தன்று ஒருவன் இரப்பதற்கு முன்பாகவே அவன் குறிப்பை முகத்திலிருந்து அறிந்துகொண்டு இதனைக் கொள்க எனக் கொடுத்தல் உயர்ந்தது. அவ்வாறு கொடுக்கும்போது இரவலர் அதனைக் கொள்ளேன் என மறுத்தல் அக்கொடைச் செயலைக் காட்டிலும் உயர்ந்தது என்று இரத்தலுக்கு மிக அழகான கருத்தை முன்வைத்திருப்பது எந்த மொழியிலும் இருக்காது ஒன்று என்றே கூறலாம்.

                குறுந்தொகையில், ஒருவர்மீது வைத்திருக்கின்ற நட்பு குறித்து சொல்லும்போது நிலத்தைவிட அகலமானது, வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது என்ற சிந்தனையாழம் மிக்க பாடல் எந்தவொரு இலக்கியத்திலும் இல்லை என்றே கூறலாம். இதனை,

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல் ……….

………. நாடனொடு நட்பே’ (குறுந் – 03)

என்ற பாடல் உணர்த்தி நிற்கின்றது. மேலும்,

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி’

என்று புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடுகிறது.

‘கற்கை நன்றே கற்கை நன்றே’

பிச்சை புகினும் கற்கை நன்றே’

எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என்று வெற்றி வேற்கையில் அதிவீரராம பாண்டியன் கூறியிருப்பது மேன்மை தரக்கூடியதாகும். மேலும், முரசு கட்டிலில் ஏறிய மோசிகீரனாரை வாளால் வெட்டிக் கொல்லாது கவரி எடுத்து வீசினான் சேரமான் காவலன் இரும்பொறை. இதைப்போன்று அரிதிற்பெற்ற நெல்லிகனி ‘நெடுநாள் வாழச் செய்வது’ என்பதை அறிந்த அதியமான் தானுண்ணாது ஒளவைக்களித்துத் தமிழ் வளர்க்கச் செய்தான். மேலும், குமணன் எனும் புலவரின் வறுமையைப் போக்க தன் தலையையும் கொடுக்க முன் வந்தான். இத்தகைய சங்க இலக்கியச் செய்திகள் தமிழ்ப் புலமையும் புலவர்களின் பெருமையையும் போற்றுவனவாக அமைந்திருப்பதை இதன் தெளிவாக அறிகின்றோம்.

                மேலும், சிலப்பதிகாரம் வழக்குரைக் காதையில் இகதலில்லாத சிறப்பினை உடையவரான இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயரினைத் தீர்த்தவன் சிபி சக்கரவர்த்தி, அவனல்லாமலும் கடைவாயில் மணியின் நாவானது அசையப் பசுவின் கடைக் கண்களினின்றும் வடிந்த கண்ணீர் தன் நெஞ்சினைச் சுடத் தானே பெறுதற்கரிய புதல்வனைத் தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவன் மனுநீதிச்சோழன் என்று எல்லா உயிரும் சமம் என நினைத்து நீதி வழங்கிய மன்னர்கள் இருந்தார்கள் என்று வேற்றுமொழி இலக்கியத்திலும் இல்லாத செய்தியை நம்  செம்மொழிச் சிலம்பின் கண்ணகி பாத்திர வழி அறியலாம்.

இந்திய மொழிகள் அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்:

பிறமொழி அறிஞர்களின் கூற்று

                அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி, கால்டுவெல், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், மாக்ஸ் முல்லர், ஹிராஸ் பாதிரியார், ஸ்காட் எலியட் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களை நோக்கும்போது தமிழ்மொழியின் உன்னதத்தை தமிழ்நாட்டினர் உணரும் வகையில் கூறியிருப்பதை எண்ணத்தக்கதாகும்.

‘உலகம் தோன்றிய முதன் முதலில் பேசப்பட்ட மொழி தமிழாகத்தான் இருந்திருக்க வேண்டும்’ என்கிறார் அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி. இவரைப் போல் ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் ‘திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியால் நிலைபெற்று விளங்கும் தமிழ் என்றும் ‘தமிழ் மொழி’ செம்மொழியே’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘தமிழ் மொழி பழமை மிகுந்த சிறப்பு வாய்ந்த மொழி’ என்று அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தமிழின் தொன்மையினைச் சிறப்புகளைத் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

                ‘மதுரமான மொழி என்று வால்மீகியார் தமிழை வாயார புகழ்வதைப்போல தமிழுக்கு நிகர் வேறு மொழி கிடையாது’ என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார். மேலும், பிரிட்டானிகா கலை களஞ்சியம், இந்திய மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ் இலக்கியம் எனக் குறிப்பிடுவதைக் காணலாம். ‘சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன’ என ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுவது போற்றத்தக்கதாகும். ஸ்காட் எலியட் என்பவர் ‘தமிழ்நாடு லெமூரியாவில் இருந்தபோது எகிப்து நாடு நீருள் இருந்தது’ என்கிறார். எனவே எகிப்து தோன்றுவதற்கு முன்பே தமிழ்நாடு தோன்றியிருக்கவேண்டும் என்பார். மேலும், சமுத்திர குப்தனின் அமைச்சனாகிய சாணக்கியர் தான் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பாண்டிய நாட்டின் தலைநகராகிய கபாடபுரத்தினை ‘பாண்டியக் கபாடம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அசோகரின் கல்வெட்டுக்களிலும், தமிழ் நாட்டைப்பற்றி அதிலும் சிறப்பாக மூவேந்தர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கி.மு 150-இல் வாழ்ந்த பதஞ்சலி என்பாரும் காஞ்சிபுரத்தைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிறமொழி இலக்கியங்களில் தமிழின் தாக்கம்

                தமிழர்களின் தலை சிறந்த பண்பாடாகக் கருதப்படும் பொங்கல் திருநாளைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் பிறநாட்டு இலக்கியங்களிலும் இடம்பெற்றிருப்பதை இக்கட்டுரை வாயிலாக அறியலாம். அதாவது, சங்க இலக்கியங்களுக்கும் மன்யோசு போன்ற ஜப்பானியக் காதல் பாடல்களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகள் தொடக்க நிலையில் உள்ளன என்றும், ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிற்கும் தமிழகப் பொங்கல் திருவிழாவிற்கும் உள்ள ஒற்றுமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சேர வேந்தன் பாரதப் போhரில் படை வீரர்களுக்கு உணவு கொடுத்தான் என்று புறநானூறும், பதிற்றுப்பத்தும் கூறுகின்றன. சுமித்திரா, பர்மா போன்ற கீழை நாடுகளில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் தமிழர் திருவிழாக்களைப் போன்று நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கோவில்களில் திருப்பாவை அங்கு நடைபெறும் திருமணங்களும் தமிழர் திருமண முறைப்படியே நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாலையில் தமிழர் கிரேக்க, உரோம் நாடுகளோடு வணிகம் நடத்தினர் என்பதை அறிகிறோம். கி.மு.10 ஆம் நூற்றாண்டின் அரசனாகியவர்களைப் பொருட்களும் தமிழ் நாட்டுக் கப்பல்கள் மூலம் கொண்டு செயல்பட்டன. கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயில் தோகைகளும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவிற்குக் கடல் வழியாகச் சென்றன. கிரேக்க நாட்டிற்கு இஞ்சியும் மிளகும் சென்றன. ரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் அந்நாட்டுடன் தமிழ்நாட்டிற்குக் கடல் வணிக உறவு இருந்தது. அக்காலத்து ரோம் நாயணங்கள் தமிழ் நாட்டின்  புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. ரோமர்கள் தமிழ் நாட்டு முத்துகளையும் யானைத் தந்தங்களையும், மெல்லிய ஆடைகளையும் பெற்று மகிழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிகின்றோம்.

                திருக்குறளை இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும், ஜெர்மன் மொழியில் கிராலும், பிரெஞ்சு மொழியில் ஏரியலும், வடமொழியில் அப்பாதீட்சிதரும் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சாலைட்சரின் திருக்குறளைப் போல் அறிவார்ந்த அறநெறிகளைத் தாங்கிய இலக்கியம் உலக இலக்கியங்களில் எங்கும் இல்லை என்ற கருத்து தமிழின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், தமிழ்மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகின் வேறு எங்கனும் இல்லையென்று மேனாட்டறிஞர்களாகிய பெஸ்கி மற்றும் போப் போன்றோர் வியந்து மொழிவதையும் இங்கு எண்ணத்தக்கது.

                புராண இதிகாசங்களிலும் மொழி சார்ந்த பதிவுகள் காணப்படுகிறது. குறிப்பாக, வடமொழியின் முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே ‘முத்து’ முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. மேலும், தருமனின் இராசூய யாகத்திற்குத் தமிழ் மூவேந்தரும் வந்திருந்தனர் என்றும், திரௌபதியின் சுயம்வரத்திற்குப் பாண்டியன் வந்தான் என்றும், அருச்சுனன் பாண்டிய இளவரசி சித்திரங் கதையை மணந்தான் என்றும் மகாபாரதம் பகர்கின்றது. கி.மு. 5 ஆம் அண்டில் தோன்றிய      வால்மீகி இராமாணயத்தில் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் பேசப்படுகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு

உலக மொழிகள் எத்தனையோ இருந்த போதிலும் ‘ழ’ என்னும் ஒலியன் தமிழ், மலையாளம் ஆகிய இரு திராவிட மொழிகளில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. தமிழுக்கே உரிய சொற்கள் பிற மொழிகளில் கலந்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது. அவற்றில் குறிப்பிட்ட சொற்களை மட்டும் கீழ்க்காணும் அட்டவணை வாயிலாக அறியலாம்.

சொற்கள் தமிழ் மலையாளம்      கன்னடம் பாஜி
உப்புஉப்புசுப்பு
பன்றிபன்றி பன்னி
செவி செவி செவி  
ஈ (கொடு) 
தான் தான் தான்
பால்    பால்  பால் 
இரண்டு இரண்டு இரண்டு
நான் நான் நான்
நாம் நாம் நாம்
திராவிட மொழிகளின் ஒலியன்கள்

இக்கட்டுரையின் வாயிலாகத் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளையும், இந்திய மொழி அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு ஆகியவற்றை அறியமுடிகின்றது. இதன் மூலம் தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழின் மேன்மையையும் அதன் தரத்தையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.

துணை நின்ற நூல்கள்

 1. தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1998

 2. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1903

 3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியாருக்குநல்லாருரையும், உ.வே.சா

   நிலையம், சென்னை,

 4. புறநானூறு மூலமும் உரையும், பதிப்பாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 

   சென்னை, 2004

 5. தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, நாமக்கல்.

 6. தமிழ் இலக்கிய வரலாறு, அ. ஜெயம், ஜனகா பதிப்பகம், சென்னை,

 7. தமிழ் இலக்கிய வரலாறு, ச. ஈஸ்வரன், நிர்மலா பதிப்பகம், சென்னை.

 8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் ஜி.ஜான்சாமுவேல், மாதவி பதிப்பகம்,

   சென்னை, 1975.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 109

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

மக்கள் தங்களின் அறிவு நுட்பத்தினால் தேவைக்கு ஏற்ப பல வகையான தூய்மை செய்யும் பொருட்களைக் கண்டுபிடித்தனர். ஆவற்றைத் துடைப்பம், விளக்குமாறு, சீமாறு போன்ற பெயர்கள் வைத்தனர். இச்சீமாறு பல இன மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தனக்கென தனிப் பண்பாட்டைக் கொண்ட கொங்கு பகுதி மக்களிடையேயும் சீமாறு பயன்பாடு காணப்படுகிறது. கொங்கு மக்கள் தூய்மை செய்ய துடையப்பம், விளக்குமாறு, சீமாறு, நாகிரிஞ்சி மாறு, விராலிமாறு, பூந்துடைப்பம் போன்ற பல வகைகளைப் பயன்படுத்துகின்றனர். இச்சீமாறு தூய்மை செய்வதோடு அவர்களது பண்பாட்டில் பெறும் இடம் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்க முற்படுகின்றது.

சீமாறு – விளக்கம்

சீவங்குச்சி + மாறு = சீமாறு என்பதாகும். சீவங்குச்சி என்பது தென்னை ஓலையிலிலருந்து எடுக்கப்படுவதாகும். மாறு என்பது அசுத்தத்தைத் தூய்மையாக மாற்றக் கூடியது. அதாவது சீவங்குச்சியால் அசுத்தத்தை மாற்றும் கருவி சிமாறு என்று பொருள் கொள்ளலாம். இச்சீமாறே விளக்குமாறு என்று கூறுகின்றனர்.இச்சீமாறைக் கொண்டு வீடு, வாசல், தானியம் போன்ற வற்றைத் தூய்மை செய்கின்றனர். தூய்மை செய்யும் துடைப்பதிற்கு ஊகந்தாள், தென்னை நரம்பு, ஈர்த்தோலை முதலியவற்றால் குப்பை, துசுமுதலிய விலக்கச் சேர்த்த பொருள்களின் கற்றை என்று அபிதானசிந்தாமணி கூறுகின்றது.

திருநெல்வேலி பகுதியில் இச்சீமாற்றை ‘வாரியல்’ என்று குறிப்பிடுகின்றனர். கொங்கு பகுதியில் வாழும் தெலுங்கு மொழிபேசும் மக்கள் தென்னம் பர்க்க என்றும், கன்னட மொழி பேசக்கூடியவர்கள் தென்னம் பர்கோ என்றும் கூறுகின்றனர்.

சீமாறின் அமைப்பும் தயாரிப்பு முறைகளும்

            கொங்கு பகுதியில் உள்ள சீமாறு குறைந்தது ஐம்பத்தைந்து செ.மீ நீளமும் நான்கு செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. இந்த சீமாறை தென்னை ஓலையிலிருந்தே தயாரிக்கின்றனர். தென்னை மரத்தின் ஓலையை மட்டை என்கின்றனர். மட்டையின் இரண்டு பக்கமுள்ள நீளமாக உள்ள ஓலையை சோவை என்றும் அந்தச் சோவையின் மையப்பகுதியில் உள்ள நரம்பைச் சீவங்குச்சி, தென்னங்குச்சி, ஈக்குக் குச்சி என்றும் கூறுகின்றனர். இந்தச் சீவங்குச்சியைக் கொண்டே சீமாறு தயாரிக்கின்றனர்.

தென்னை மரத்திலிருந்து தானே பழுத்து விழும்மட்டைசீமாறு தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். விழும் மட்டையில் பழுது இல்லாத மட்டையைக் கூரிய ஊசி கொண்டு சோவையையும் சீவங்குச்சியையும் பிரித்தெடுக்கின்றனர். ஒரு மட்டையை முழுவதும் பிரித்தப் பிறகு ஒவ்வொரு சீவங்குச்சியையும் மட்டையிலிருந்து தனித்தனியாக பிடுங்கி ஒன்றாகச் சேர்க்கின்றனர். அவற்றை ஒன்றானகச் சேர்த்துத் தற்காலிகமாகத் தென்னை சோவையாலே கட்டுகின்றனர். இதே போன்று மற்றொரு மட்டையிலிருந்தும் சீவங்குச்சியைப் பிரித்தெடுக்கின்றனர். மட்டையின் தளவுப்பகுதி சோவை நீளம் குறைவாக இருப்பதினால் நற்பது செமீ. நீளத்திற்கு உள்ள தளவு மட்டையின் சீவங்குச்சியைப் பயன் படுத்துவதில்லை.

            சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிடுங்கியப் பகுதியை அடிப்பகுதி என்றும், சோவையின் விளிம்புப் பகுதியைத் தளவு(நுனி)ப் பகுதி என்றும் கூறுகின்றனர். இரண்டு மட்டையிலிருந்து சேகரித்தச் சீவங்குச்சிகளை அடிப்பகுதியில் அரையடி(பதினைந்து செ.மீ) இடைடிவெளி விட்டு இறுக்கி கட்டுகின்றனர். கட்டுவதற்காக வலுவான கட்டுக்கொடி(மெல்லியதான கொடி), பனை மட்மையின் நரம்பாகிய அகினி, சரடு, பிளாஷ்டிக் கயிறுகள் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒர் சீமாறு தயாரிக்க இரண்டு மணிநேரம் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.

ஒருசிலர் சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிரித்தெடுக்க அரிவாள்மணை, கத்தி போன்ற கருவிகளையும் பயன்படுத்துவதுண்டு. பழுத்த மட்டை மட்டுமின்றி பச்சை (இளம்) மட்டையிலும் சீமாறு தயாரிக்கின்றனர். பச்சை மட்டையால் தயாரிக்கப்படும் சீமாற்றை வீடு கூட்டமட்டும் பயன்படுத்துகின்றனர். சீவங்குச்சிகளைப் பிரித்தெடுத்த மட்டையையும், சோவையையும் அடுப்பெரிக்கப் பயன் படுத்துகின்றனர். பச்சைமட்டையாக இருந்தால் காய்ந்தபிறகு பயன்படுத்துகின்றனர்.

சீமாறு தயாரிப்பவர்கள்

சீமாறுதயாரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். வீட்டுவேலை, விளைநிலத்து வேலை இல்லாத பொழுதும் ஆடு மாடு மேய்கின்ற பொழுதும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் சீமாறு தயாரிக்கின்றனர்.

ஒரு முறை சீமாறு தயாரிக்கத் தொடங்கினால் குறைந்தது ஒரு வருடத்திற்குத் தேவையான நான்கு ஐந்து (தேவையைப் பொருத்து)சீமாறுகளைத் தயாரித்து வைத்துக்கொள்கின்றனர். தயாரித்தச் சீமாறுகளை மழையில் நனைந்து விடாமலும், வெயிலில் படாமலும் வீட்டினுள்(எளிதில் மற்றவர் கண்ணில் படாததது போன்று)மறைவாகப் பாதுகாக்கின்றனர். சீமாறின் தேவை ஏற்படும் பொழுது மட்டும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

தென்னைமரம் இல்லாதவர்கள் தென்னை மரம் வைத்திருப்பவர்களிடம் சென்று மட்டையை வாங்கிக்கொள்கின்றனர். கொடுக்கும் மட்டைக்கு உரிமையாளர் தொகை ஏதும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு சீமாறு தயாரிக்கம் அளவே கொடுப்பர். ஆதிக மட்டைகள் கேட்பின் தொகைக்காகக் கொடுக்கின்றனர்.தற்போது கடைகளில் விலைக்கு விற்கின்றனர். ஒரு சீமாறின் விலை பதினைந்து முதல் இருபது வரை விற்பனை செய்கின்றனர்.

சீவக்கட்டை

கூட்டிக் கூட்டித் தேய்ந்து போன சீமாறைச் ‘சீவக்கட்டை’ என்று கூறுகின்றனர். அதாவது ஐம்பது, அறுபது செ.மீ நீளமுள்ள சீமாறு தேய்ந்து முப்பது,முப்பத்தைந்து செ.மீட்டற்கும் குறைவானதைக் குறிக்கும். இச்சீவக்கடைடையை ஆடு அடைக்கும் இடமாகிய பட்டியைக் கூட்டவும், மாடுகட்டும் கட்டுதாரியைக் கூட்டவும் பயன்படுத்துகின்றனர். தற்போது ஒரு சிலர் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

கட்டுத்தாரியைக் கூட்டும் பொழுது பாதி சீவகட்டை தரையில் படும்படி பிடித்து அழுத்திக் கூட்டுகின்றனர்.  அவ்வாறு அழுத்திக் கூட்டும்;பொழுதே கட்டுத்தாரி தூய்மை அடைகிறது. சாய்வாக அழுத்திக் கூட்டுவதைப் ‘படுக்குப்போட்டு கூட்டுதல்’ என்று கூறுகின்றனர். அதே மாற்றை நேராக பிடித்தும் கூட்டுவதும் உண்டு. இவ்வாறு செய்தால் மாடுகள் தின்றது போக மீதித் தீனியை அரித்து எடுக்க எளிதாக அமைகிறது என்கின்றனர்.

ஆடுகள் அல்லது மாடுகளை அடைக்கும் இடத்தில் குப்பைகள் மிகுந்து இருக்கும். அவ்விடத்தைப் புதுசீமாறில் அகற்றும் பொழுது தூய்மையாக்அகற்ற முடிவதில்லை. தேய்ந்த சீமாறாக இருப்பின் எளிதில் அதிகமானக் குப்பைகளைக் கூட்டமுடிகிறது.

வீடு கூட்டுதல்

வீடு கூட்டுவதற்கும் ஒருசிலர் சீமாறையே பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது. வீடு கூட்டுவதற்குப் பச்சை மட்டையில் தயாரித்தச் சீமாறையே பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். இளம் மட்டையால் தயாரிக்கும் சீமாறு என்பதினால் வீடு கூட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. ஆனால் இச்சீமாறைக் கொண்டு களம், கட்டுதாரி முதலியவற்றைக் கூட்ட பயன்படுத்த முடிவதில்லை. கூட்டினாலும் பழுத்த மட்டையில் கூட்டுவது போல் இருப்பதில்லை என்கின்றனர்.

பொதுவாக வாசல், களம், கட்டுத்தாரிவீடு போன்றவற்றை கூட்டும் பொழுது சீமாறை ஒரு கையாலே பிடித்து கூட்டுகின்றனர். அதிகப் பரப்பளவுஎன்றால் இரு கைகளாலும் கூட்டுகின்றனர். ஒருசிலர் இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி கூட்டுவதுண்டு.

உணவகங்களில் சீமாறு

உணவகங்களில் சீமாறு பயன்படுத்துகின்றனர். உணவகங்களில் தோசை, புரோட்டா போன்ற உணவு தயாரிக்கும் போது சீமாறு பயன்படுகிறது.  தோசை கல்லில் எண்ணெய் துடவுவதற்கும் அக்கல்லில் நீர் தெளித்துக் கூட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். சிறிய தோசைக் கல்லாக இருந்தால் அதில் துணி கொண்டு எண்ணெய் தேய்க்க எளிதாக இருக்கின்றது. பெரிய கல்லாக இருப்பதனால் சீமாறு தான் எளிதாக இருக்கின்றது என்கின்றனர். இதில் வீடு வாசல் கூட்டும் மாறு அளவிற்கு அதிக சீவங்குச்சிகளைப் பயன்படுத்துவதில்லை. சீமாறில் கால்பங்கு அளவு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தச் சீமாறைக் குப்பைகளைக் கூட்ட பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர்.

நம்பிம்பிக்கைகள்

சீமாறு தொடர்பான நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது. அதாவது சீமாறின் மீது தவறுதலாகக் கூட கால் படக்கூடாது. கால்பட்டால் உடனே அதை தொட்டு வணங்க வேண்டும். சீமாறைத் தாண்டிச் செல்வது கூடாது. தவறுதலாகத் தாண்டிச் சென்றுவிட்டால் மீண்டும் ஒரு முறை கடந்து சந்த பக்கமிருந்து சீமாறைத் தாண்டவேண்டும். அவ்வாறு செய்தால் செய்த குற்றம் விலகும். சீமாறைக் கூட்டிய பிறகு அடிப்பகுதியோ, தளவுப் பகுதியோ தரையில் இருப்பது போன்று நிற்கவைக்கக் கூடாது. உறவினர்கள் வரும்பொழுது அவர்களின் பார்வையில் சீமாறு படுவது போன்று வைக்கக் கூடாது. இதுபோன்ற தவறுகளைச் செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்குத் துன்பம் நேரிடும் எனக் கருதுகின்றனர்.

மேலும் வீட்டின் வாசற்படியின் குறுக்கே சீமாறை வைத்தால் வீட்டிற்கு வரும் செல்வம் திரும்பிச் சென்றுவிடும் என்றும், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வீடு வாசல் போன்றவற்றைக் கூட்டினால் வீட்டில் உள்ள செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர். சீமாறை லட்சுமியாகக் கருதுகின்றனர்.

சீர் வரிசைகளில் சீமாறு இடம்பெறுவதில்லை. திருமணமான பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் சீமாறு கொடுப்பதில்லை என்கின்றனர். இதுபோன்ற நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது.

தீய ஆவிகளை விரட்டுதல்

உறங்கிக் கொண்டிருக்கும் குழுந்தையின் தொட்டிலுக்கு அடியிலும், பேய் ஓட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் ஒருசில நேரங்களில் இடைவிடாது அழுது கொண்டே இருப்பர். சிறிது நேரத்திற்கு ஒருமுறை அழத்தொடங்கும் சரியாக உறங்காது. இதற்குத் தீய ஆவிகளே காரணம் எனக் கருதுகின்றனர். அது போன்ற சமயங்களில் குழந்தை உறங்கும் தொட்டிலுக்கு அருகிலோ, குழந்தைப் படுத்திருக்கும் இடத்தின் தலைப் பகுதிக்கு அருகிலோ சீமாறை வைப்பதுண்டு. அவ்வாறு செய்தால் குழந்தை அழுவதில்லை எனக் கூறுகின்றனர். அதாவது தீய ஆவிகளை விரட்டும் ஆற்றல் சீமாறுக்கு உண்டு என நம்புகின்றனர்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் உறங்கும் போது ஒருசில நாட்களில் தீயகனவு தோன்றும். அதுபோன் சமயங்களில் சீமாறைத் தலைக்கருகில் வைத்து உறங்குகின்றனர். ஓரிரு நாட்களுக்குப் பிறகு தீயகனவு நின்ற சீமாறைப் பயன்படுத்துவதில்லை. வாசல் கூட்டும் கூட்டும் சீமாறே தொட்டில், கட்டில் இவற்றின் அடியில் பயன்படுத்துகின்றனர்.

தீய ஆவிகள் யாரேனும் ஒருவரைப் பற்றிக் கொள்வதுண்டு. அவ்வாறு பற்றிக் கொள்ளும் ஆவிகளைப் பேய் என்கின்றனர். அந்தப் பேயை அவர் உடலிலிருந்து அகற்ற சீமாறாலே அவரை அடிக்கின்றனர். அவரை அடித்தால் பேய் பயந்து ஓடிவிடும் என்கின்றனர். இவ்வாறு ஒருவரை சீமாற்றால் அடிக்கும் போது பேய்க்குத்தான் வலிஏற்படும் பேய்பிடித்தவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.

திருஷ்டி கழித்தல்

கண்திருஷ்டி தொடர்பான நம்பிக்கைகளும் கொங்கு பகுதி மக்களிடையே காணப்படுகின்றன. அதாவது குழந்தைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய்களினால் உடல் நலகுறைவு ஏற்படுவதுண்டு. அப்போது மருத்துவச்செலவு செய்தும் உடல் குணமடையவில்லையெனில் அதை கண்திஷ்டி என்கின்றனர். இதனை ‘கல்லடிப்பட்டாலும் கண்ணடிப்படக் கூடாது என்று கூறுகின்றனர். கண்திருஷ்டியல் உடல் நலம் குறைவு ஏற்படுவதுண்டு. அக்குழந்தையை மாலை நேரத்தில் கிழக்கு நோக்கி அமரச்செய்கின்றனர். பிறகு சீமாறைத் தொட்டு வணங்கி சீமாறின் மையப்பகுதியைப்பிடித்து வலது கையால் எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி திருஷ்டி பட்டவர்களின் முகத்திற்கு முன்பாக முப்பது செ.மீ இடைவெளியில் பிடித்துச் சுழற்றுகின்றனர். சுழற்றும் போது வலபுறமும், இடபுறமும் மாற்றி மாற்றி மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் சுழுற்றுகின்றனர். இவ்வாறு செய்தாய் கண்திருஷ்டி விலகும் எனக்கூறுகின்றனர்.

இரண்டுவயது குழந்தை முதல் நாற்பது, ஐம்பது வயது வரை உள்ளவர்களுக்கும் இது போன்று திருஷ்டி சுழற்றும் வழக்கம் உள்ளது.இத்திருஷ்டியைத் திருமணமான, வயதான பெண்களே சுழற்றிக் கழிக்கின்றனர். ஒருசில பெண்கள் தங்களுக்குள் திருஷ்டி ஏற்பட்டிருந்தாலும் அவர்களே சீமாறை தங்கள் முகத்திற்கு முன்பு சுழற்றிக்கொள்கின்றனர்.

குழந்தைகளுக்குத் திருஷ்டி கழித்தவுடன் அச்சீமாற்றிலிருந்து நான்கு, ஐந்து குச்சிகளை பிடுங்கிக் கொள்கின்றனர். அக்குச்சிகளை வீட்டிற்கு வெளியே ஏதேனும் ஒரு ஓரமாகத் தீமூட்டி அதில் குச்சிகளை ஒன்று சேர்த்து நான்கு ஐந்து துண்டுகளாக்கிப் போடுகின்றனர். இவ்வாறு செய்தால் கண்திருஷ்டி விலகும் என்கின்றனர்.

வாக்குக்கேட்டல்

            சகுனம் பார்ப்பதை வாக்குக் கேட்டல் என்று கூறுகின்றனர். அதில் சீமாறு மூலம் வாக்குக் கேட்கும் மரபும் காணப்படுகின்றது. வாக்குக் கேட்கும் பொழுது சீமாறைத் தொட்டு வணங்கி எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி தரையை நோக்கியபடியும் தளவுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு பிடித்துக் கொள்கின்றனர். பிடித்துக் கொண்ட சீமாறினுள் குத்துமதிப்பாக அதாவது பத்தில் ஒருபங்கு இருக்குமளவு  கைவிரல்களினால் பிரித்துக்கொள்கின்றனர். பிரித்தப் பகுதியில் ஒரு விகிதம் இருக்கும் சீமாறின் குச்சிகளை இரண்டு இரண்டாகச் சேர்த்து எண்ணுகின்றனர். அவ்வாறு பிரிக்கும் பொழுது ஒற்றைக் குச்சித் தனியாகவோ அல்லது இரண்டு குச்சிகள் சேர்ந்தோ வரும். ஒற்றைக்குச்சி வந்தால் ‘வாக்கு’க் கொடுத்துள்ளது என்கின்றனர். அதே இரண்டுக்குச்சிகள் சேர்ந்து வந்தால் ‘கட்டிடுச்சி’ எனக் கூறுகின்றனர். அதாவது வாக்கு கொடுத்தல் என்பது எண்ணிய நிகழ்வு தடையின்றி நடைபெறும் என்றும் கட்டிடுச்சி என்பது திட்டமிட்ட நிகழ்வு தடைபடும் என்பதையும் உணர்த்துகின்றது.

இவ்வாறு வாக்குக் கேட்பது இரவு நேரங்கிளல் பார்ப்பதில்லை. இரவு நேரங்களில் பார்ப்பின் தவறாந வாக்கைக் கொடுத்துவிடுவதாகக் கருதுகின்றனர். இச்சீமாறினால் வாக்குக் கேட்கும் மரபு வயதானப் பெண்களிடம் மிகுதியாகக் காணப்படுகின்றது.

சடங்குகளில் சீமாறு

சீமாறு தூய்மை செய்யும் கருவியாக மட்டுமின்றி மக்கள் நிகழ்த்தும் சடங்குகளிலும் இடம் பெறுகின்றது. பூப்பெய்தியப் பெண்ணுக்கு அருகாமையிலும், மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் போதும் இறப்புச் சடங்கின்போதும் சீமாறைப் பயன்படுத்துகின்றர்.

பூப்பெய்தியப் பெண்ணை பூப்பெய்திய நாளிரிருந்து ஐந்து நாட்களோ, ஏழுநாடகளுக்குப் பிறகோ வீட்டினுள் அனுமதிப்பர். அதுவரை அப்பெண் அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீட்டின் வெளியிலேயே இருக்கின்றாள்.(ஒருசிலர் வீட்டின் ஒரு மூலையிலோ தங்கவைக்கின்றனர்) அந்த இடத்தில் அப்பொண்ணின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் சீமாறை வைக்கின்றனர். பூப்புச்சடங்கு முடிந்ததும் சீமாற்றை எப்போதும் போலப் பயன்படுத்துகின்றனர்.

பூப்பெய்தியப் பெண்ணை தீய ஆவிகள் எளிதில் பற்றிக்கொள்ளும். ஆதை தடுக்குச் சீமாறை வைப்பதாக் கூறுகின்றனர். சீமாறை வைத்தால் பெண்ணிடம் வராமல் விலகிச்சென்றுவிடும் என்கின்றனர்.

மழை இல்லாத காலங்களில் மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் வழக்கம் உள்ளது. மழைக்கஞ்சி எடுத்து முடித்தபிறகு சீமாறு, முறம் போன்றவற்றைச் சுடுகாட்டில் எறிந்துவிடுகின்றனர். இவ்வாறு செய்தால் மழைவரும் என நம்புகின்றனர்.

இறப்புச் சடங்கின்போது சீமாறு தாண்டுதல் நிகழ்வு உள்ளது. ஒருவர் உடலுக்குக் கொல்லிவைத்தவர் வீட்டிற்குள் நுழையும் போது சீமாறைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்றனர். அதற்காகக் கொல்லி வைத்தவர் வீட்டிற்கு வரும் முன்பே சடங்க நிகழ்த்துபவர்கலில் ஒருவர் வீட்டு வாசலில் சீமாறின் அடிப்பகுதி இடப்பக்கமும் தளவுப்பகுதி வலது பக்கமும் இருக்கும்படி வைத்திருக்கின்றனர். கொல்லிவைத்தவர் அந்தச் சீமாறைத் தாண்டியபிறகே வீட்டினுள் நுழைகின்றனர். அவ்வாறு தாண்டிச் சென்றால் துன்பம் விலகும் இல்லையெனில் வீட்டில் உள்ள அனைவருக்கும் துன்பம் ஏற்படும் எனக்கருதுகின்றனர்.

விளையாட்டில் சீவங்குச்சி

விளையாட்டில் சீவங்குச்சிகளைப் பயன்படுத்தி விளையாடும் மரபு கிராமபுற குழந்தைகளிடம் காணப்படுகின்றது. இவ்வாறு விளையாடும் விளையாட்டை நூறாங்குச்சி, அலுங்காங்குச்சி என்றும் கூறுகின்றனர். இவ்விளையாட்டை இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் விளையாடுவர்.

சீமாற்றிலிருந்து தேவைக்கேற்ப இரண்டு குச்சிகளைத் தனியாக எடுத்துக்கொள்கின்றனர். அக்;குச்சிகளை மூன்று செ.மீ அளவில் பத்துக் குச்சிகளை உடைத்துக்கொள்கின்றனர். ஏழு செ.மீ அளவில் ஒரு குச்சியை உடைத்து விளையாடுகின்றனர். சீவங்குச்சியின் நீளம் விளையாடுபவர்களைப் பொருத்தே அமைகின்றது. இந்த விளையாட்டில் ஒரு குச்சியை எடுக்கும் பொழுது மற்ற குச்சிகள் நகராமல் இருக்கவேண்டும். நகர்ந்தால் தோற்றதாகக் கணக்கில் கொள்ளப்படும். இந்த விளையாட்டு சிறுவர்களிடம் பொறுமையையும் கூர்மையான சிந்தனையையும் உருவாக்கும் விதமாக அமைத்திருக்கிறது எனலாம்.

சீமாறு பிஞ்சிடும்

 சீமாறு தொடர்பான வாய்மொழி வழக்காறுகள் பெண்களிடையே காணமுடிகிறது. அதாவது ஏதேனும் ஒரு சூழலில் ஒர் ஆண் ஒரு பெண்ணிடம் அவள் விருப்பம் இன்றி தவறான வார்ததைப் பேசியோ, தவறுதலாக நடக்க முற்படுவதுண்டு. அதுபோன்ற சமயத்தில் அந்நப் பெண் ‘சீமாறு பிஞ்சிடும்’ என்று கூறுகின்றனர். சீமாறு பிஞ்சிடும் என்ற சொல் சீமாற்றாலே அடித்துவிடுவேன் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வழக்காறைப் பெண்களே பயன்படுத்துகின்றனர். பெரும்பாண்மையும் இவ்வாறு சொல்வதுண்டு ஆனால் செய்வதில்லை என்கின்றனர்.

சீமாறின் செயல் அசுத்தத்தைப் போக்குவதாகும். தீய எண்ணம் கொண்டவனைச் சீமாறால் அடித்தால் அசுத்தம் விலகுவதைப் போல் அவன் மனதில் உள்ள அசுத்தமும் விலகும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி தீய எண்ணம் கொண்டவனை ஒரு அருத்தமாகவே கருதுவதையும் குறிக்கிறது.

தொகுப்புரை

கொங்கு பகுதி வாழ்மக்கள் தங்களிடம் உள்ள தென்னை மட்டையும், தங்களிடம் உள்ள சிறு பொருட்களின் உதவியாலும் சீமாறு தயாரிக்கின்றனர். சீமாறு தயாரித்தச் சூழல் மாற்றம் பெற்றுக்கடைகளில் பணத்திற்கு வாங்கும் நிலையுள்ளது. தற்போது செயற்கையாகப் பிளாஷ்டிக் மூலம் சீமாறு தயாரிக்கின்றனர். நம்பிக்கைகள்யாவும் அவர்களின் வாழ்க்கைச் செழுமையடைய கடைபிடிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. பூப்புச்சடங்கு, மழைக்கஞ்சி எடுத்தல், இறப்புச்சடங்குகளில் சீமாறைப்பயன்படுத்துகின்றனர். பெண்களிடம் அதைசார்ந்த வழக்காறுகளும் காணமுடிகிறது.

தகவளாலர் பட்டியல்

1.          ப. சுப்பரமணியம் 63 பியூசி நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், நாமக்கல்

2.          பார்வதி 37 பி.காம் வடவள்ளி கோவை

3.          கை.மகேஷ்வரி 33 பி.காம் வடவள்ளி கோவை

4.          கை.பாப்பாத்தி 50 இல்லை ஆத்தூர் சேலம்

5.          வா.கலையரசி 26 பி.எஸ்சி. பிஎட் ஆத்தூர் சேலம்

6.          வெ.புவனேஷ்வரி 33 எம்.ஏ. எம்.ஃபில், கிருஷ்ணகிரி

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

k.shivatamil@gmail.com

சிறுதாயம் விளையாட்டு

நாட்டுப்புற கலைகளுள் குறிப்பிடும்படியாக உடல் மற்றும் ஆரோக்கியத்தினை வளர்ப்பதில் மிக முக்கிய இடம் விளையாட்டிற்கு உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளுள் உடல் சார்ந்த விளையாட்டுகள் மூளை சார்ந்த விளையாட்டுகளில் மகளிர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறன் சார்ந்த நாட்டுப்புற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். சங்க காலத்தில் இருந்தே பல்வகை விளையாட்டுகளை மகளிர் விளையாடி வருகின்றனர். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தற்காலத்தில் விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம், இயந்திரமயமான வாழ்க்கையும், பொருளாதார நெருக்கடியும், தொலைக்காட்சியும் ஆகும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியன இயல்பாகவே கிடைத்தன. அதனால், மகளிர் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர். இந்நிலையில் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினர், ஆனால், இன்றைய சூழலில் கணவன், மனைவி என்ற நிலைப்பாட்டில் கணவனின் வருமானத்தோடு மட்டுமல்லாமல் மனைவியின் வருமானமும் தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக, மகளிர் தங்களுடைய குடும்பத்தைக் காப்பதற்குத் தொழிலை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையிலான நேரம் குறுகுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சூழலில் விளையாட்டுகள் தேய்ந்து போகின்றன.

நாட்டுப்புற மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். நாட்டுப்புற விளையாட்டுகளுள் சிறுதாயம் விளையாட்டு கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நாட்டுப்புற மக்களிடையே விளையாடப்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு, பெண்களால் விளையாடப்பட்டு வருகின்றது. இது தாயாட்டத்திலிருந்து மாறுபட்டது. இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டை தாயம் விளையாட்டு என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்படுகின்றது. இவ்விளையாட்டு, ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனியே இரண்டு பிரிவினரும் விளையாடும் விளையாட்டாக இருக்கின்றது.           

            சிறுதாயக்கட்டத்திற்கு இவ்விளையாட்டு எதிரெதிரே இருவரும் அமர்ந்து புளியாங்கொட்டைகளை தெரித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் கட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

சிறுதாயக்கட்டம்

            நான்கு மையப்பகுதியை மலைகளாக வைத்துக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த கட்டத்தின் மையப்பகுதி இரண்டு பேருக்கும் பொதுவான பகுதியாகும். இதைப் பழமலை என்கிறோம். ஒரு பக்கத்திற்கு ஐந்து கட்டங்கள் விதமாக முதலில் ஆறு கோடுகளும், குறுக்க வாட்டில் ஆறு கோடுகளும் இருக்கும். குறுக்கில் ஐந்து கட்டங்களையும் நெடுக்கில் ஐந்து கட்டங்களையும் வரையறுத்துக்கொள்கின்றனர்.

சிறுதாயம் கட்டம் வரைய பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாடப்படும் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கட்டத்தை வரைந்துக் கொள்கின்றனர். கட்டத்தை வரைவதற்குக் கோவை இலை, சுண்ணாம் கட்டி தீச்சட்டி ஓடு, செம்மண் கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுதாயம் விளையாடுவோர் நேரம்

            சிறுதாயம் விளையாட்டில் இரண்டு நபர்கள் பங்கெடுத்துக்கொள்வர். இந்த விளையாட்டைப் பெண்கள் மட்டும் விளையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் சிறுவர்களும் ஆடவர்களும் விளையாடுவதுண்டு. இவ்விளையாட்டுப் பகலிலும் இரவு நேரங்களிலும் ஓய்வான நேரத்தில் விளையாடப்படுகிறது.

விளையாட்டுக்களம்

            வேலைக்குச் செல்லும் மகளிர் ஓய்வு நேரங்களிலும், தோட்ட வேலைசெய்யும் நேரங்களிலும், கழனியில் வேலை செய்யும் நேரங்களிலும், மரங்களின் நிழலிலும், மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகளிர் பாறைகளின் மேற்புறத்திலும் கட்டங்கள் வரைந்து விளையாடுகின்றனர். பெரும்பாலும் வீட்டின் உள்ளே பெண்கள் இவ்விளையாட்டை விளையாடுகின்றனர்.

சிறுதாயாட்டத்திற்குப் பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெண்மையாகும் வரை இக்கொட்டைகளைக் கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பர். “ஒரு சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வதும் உண்டு. நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடப்படுவதும் விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வர்.”1

            இவ்விளையாட்டில் கொட்டைகளின் வெண்மைப்பகுதி மேல் நோக்கி இருப்பதை வைத்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். நான்கு காய்களும் வெண்மையாகத் தெரிந்தால் அது நான்காகக் கணக்கிடப்படுகின்றன. அதுவே, நான்கு கொட்டைகளும் கவிழ்ந்து கருப்புப் பகுதி தெரிந்தால் எட்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

எருக்கம் பூ

            புளியங்கொட்டை இல்லாத, கிடைக்காத சூழ்நிலையில், விளையாட்டிற்கு எருக்கன் பூவைப் பயன்படத்துவதுண்டு. எருக்கன் செடியில் மொட்டின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் பூ பகுதியைக் கொண்டு விளையாடுகின்றனர்.

            எருக்கம் பூவைப் பயன்டுத்தும்போது விளையாட்டில் பூ செங்குத்தாக இருப்பதையும் சாய்ந்து விழுந்து இருப்பதையும் வைத்துக் கணக்கிடுகின்றனர்.

            விளையாடும்பொதுது நான்கு பூவும் செங்குத்தாக இருந்தால் எட்டுஎனவும், நான்கு பூவும் சாய்ந்திருந்தால் அதை நான்கு எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். மூன்று பூ செங்குத்தாக நின்றால் மூன்று எனவும், ஒன்று இரண்டு பூ செங்குத்தாக இருப்பின் இரண்டு, ஒன்று எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு எருக்கன் பூவை வைத்து விளையாடப்படுகின்றது.

“புளியங்கொட்டை இல்லாத சூழ்நிலையில் விளையாட்டிற்கு எருக்கம் பூவைப் பயன்படுத்தப்படுகின்றது. புளியங்கொட்டை இருந்தால் புளியங்கொட்டையையே பயன்படுத்துவர்.”2

விளையாட்டில் காயை நகர்த்துவதற்குப் பயன்படும் பொருட்கள்

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாயாட்டத்தை விளையாடுவதற்கு, புளியங்கொட்டை, புன்னைக்கொட்டை, கரிசட்டி ஓடு, எருக்கன்பூ இவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். கட்டத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப நகர்த்திச் செல்ல, சில பொருட்களைப் பயன்படுத்துவதுண்டு. அதாவது, அடையாளக் குறிப்புகளுக்காகத் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் சில கற்கள் விதைகள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று போலவே நான்கு பொருட்களையும் சேர்க்கின்றனர் எதிர் அணியும் அதே போன்று ஒரே மாதிரியாகச் சேகரிக்கின்றனர். ஆனால், இரண்டு அணியினரும் ஒரே வகையான பொருளைத் தேர்வு செய்வதில்லை. ஒருவர் பெரிய கற்களைப் பயன்படுத்தினால் எதிரணியினர் சிறிய கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

தாயம் விளையாடும் முறை

சிறுதாயம் விளையாட்டை விளையாடும்பொழுது இரண்டுபேர் இணைந்துதான் விளையாடத்தொடங்குகின்றனர். அவ்வாறு விளையாடும்போது கட்டத்தின் எதிர்ரெதிரே புறமாக ஒருவருக்கு ஒருவராக அமர்ந்துகொண்டு விளையாடத்தொடங்குவர். அவர்களுள் யார் முதலில் விளையாட்டைத் தொடங்குவது என ஒருமனதாகப் பேசி முடிவெடுத்து, நீ முதலில் தொடங்கு என்று சொல்லி, விளையாட்டைத் தொடங்குவர். அவ்வாறு தொடங்கும்போது முதலில் விளையாடக்கூடிய நபர் எருக்கன் பூ, அல்லது புளியங்கொட்டைகளைக் கொண்டு விளையாடும்போது அதில் என்ன எண்ணிக்கை விழுகிறதோ அந்த எண்ணிக்கையில் காயைக் கட்டத்தில் நகர்த்தத் தொடங்குகிறார்கள்.

 ஒரு நபர் நான்கு காய்கள் வீதம், கட்டத்திற்குள் வைத்திருப்பர். நான்கு என எண்ணிக்கை விழுந்தால் இரண்டு காய்களையும், நான்கு காய்களும் கருப்பாக விழுந்தால் நான்கு காய்களையும் கட்டத்தில் இறக்குகின்றனர். அதற்குமேல் ஒன்று விழுந்தால் ஒன்று என்றும், இரண்டு, மூன்று என எண்ணிக்கை விழுந்தால் முறையே காய்களை இறக்குகின்றனர். அந்தக் கட்டத்தில் உள்ளிருக்கும் காய்களை நகர்த்தத்தொடங்கியவுடன் நான்கு என எண் விழுந்தால் நான்கு கட்டங்களையும், எட்டு விழுந்தால் எட்டு கட்டங்களையும் கடந்து செல்கின்றன.

சிறுதாயம் விளையாட்டு முறைகளில் தாய் மலையில் காய் வெட்டப்படாது. இரண்டு அணியினருடைய காய்களை வெட்டுக்கட்டங்கள், மறு ஆட்டம் (அ) கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, தொக்கை பழம் எடுக்கும் மலை எனப்பல நிலைகள் கையாளப்படுகின்றன.”3 என்பதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது.

தாய்மலை

தாய்மலை என்பது, கட்டத்திற்குள் நகர்த்தத் தொடங்கும் இடங்களைக் குறிக்கும். இம்மலையைக் ‘காய் இறக்கும் மலை’ என்றும், முதல் ‘தாய் மலை’ என்றும் அழைப்பர்.”4 எட்டு, நான்கு எண்ணிக்கை விழுந்தவுடன் கட்டத்திற்கு வெளியே வைத்திருக்கக்கூடிய நான்கு கற்களுள் இரண்டு கல்லை (அ) நான்கு கல்லை, தாய் மலையில் வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து விழக்கூடிய ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கை அடிப்படைக்கேற்ப அந்தக் காயைக் கட்டத்தில் நகர்த்துகின்றனர். இரு அணியினரும் 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ஆகிய கட்டங்களில் காய்களை நகர்த்தி வெட்டிக்கொள்ளலாம்.

1.ஆவது மலை, 5 ஆவது மலை, 9.ஆவது மலை, 13.ஆவது மலைகள் தவிர, வெளிக்கட்டங்களில் காய்கள் நின்றால், எதிரணியினர் எண்ணிக்கை அடிப்படையில் காய்களை வெட்டுகின்றனர். வெட்டுவது என்பது இரு அணியினருக்கும் பொதுவானது, அதேப்போல் உள் கட்டங்களுள் உள்ள 25 ஆவது கட்டமான பழம்மலை தவிர, மற்ற கட்டங்களில் காய்களை வெட்டுவர்.

மறுஆட்டம் (அ) கையாட்டம்

நான்கு, எட்டு, ஒன்று எண்ணிக்கை விழுந்தால், அதற்குக் கையாட்டம் என்று பெயர். இதை விளையாடுபவர் காய்களை குலுக்கிப்போட்டு மீண்டும் விளையாடுவர்”5

வெட்டாட்டம்

எதிரணியினரின் காய்களுள் ஏதாவது ஒரு காயை வெட்டுவர். இதற்கு ‘வெட்டாட்டம்’ என்று பெயர். இந்த வெட்டாட்டத்தில் மறுபடியும் புளியங்கொட்டைகளைக் குழுக்கிப் போடுவர். இது மறுமுறை விளையாட மீண்டும் வாய்ப்புத் தருவதாகும்.

கோடிமலை

            தாய் மலையிலிருந்து காய்களை இறக்கிக் கட்டத்தில் நகர்த்திக் கொண்டு வரும்பொழுது, 13 ஆவது மலையைக் ‘கோடிமலை’ என்று அழைக்கின்றனர். இம்மலையில் காய்கள் இருந்தால், பழம் எடுப்பதற்கு உரிய மலையாகவே கோடி மலை கருதப்படுகிறது. இதற்கு நிரம்பி விட்டது என்று பொருள்”6 இது வாய்மொழிச்செய்தியாகும்.

வெளிகட்ட தொக்கை

வெளிகட்டங்களான 14 ஆவது 15 ஆவது 16 ஆவது கட்டங்களில் காய் நின்றால் தொக்கை என்று கூறுகின்றனர். இக்கட்டங்களில் இருக்கும் காய்கள், உள்கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், எதிரணியினருடைய காய்களை வெட்டினால் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

உள்கட்டத்தொக்கை (அ) பழம் எடுக்கும் மலை

இம்மலையை ‘வெற்றிமலை’ என்றும் ‘பழம் எடுக்கும் மலை’ என்றும் அழைக்கின்றனர். 24 ஆவது கட்டத்தில் காய் நிற்கும்போது தொக்கை என்பர். தாயம் போட்டுத் தொக்கையில் உள்ள காய்களைப் பழமெடுப்பர். இரு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னும் பழமாகினாலும், இறுதியில் எந்த அணியினர் முதலில் பழம் எடுக்கிறார்களோ? அவர்களே வெற்றிபெற்றவர் ஆவார்.

விளையாட்டின் விதிமுறைகள்

சிறுதாயாட்டத்தை நான்குபேர் விளையாடும் பொழுது இரண்டுபேர் விளையாடுவது போலவே, விளையாடலாம் என்பது விளையாட்டின் விதிமுறை. காய் வீசுவது மட்டும் சுழற்சி அடிப்படையில் வந்து கொண்டிருக்கையில், அதில் ஒரே அணியில் இருப்பவர்கள் அவர்களுக்குரிய காயை நகர்த்தி;க் கொள்ளவேண்டும் என்பது விதிமுறையாகும்.”7

            விளையாடுபவர்கள், ஆட்டத்தில் காய்களைப் பயன்படுத்தும்போது, காய்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. அதேப்போல கற்கள் என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.

            சிறுதாயாட்டத்தில், புளியங்கொட்டையை விளையாடும் களத்தில் போடும் பொழுது ஒன்று விழுந்தால் ஒரு தாயமாகும். ஒரு தாயத்திற்கு ஒரு காயை மட்டும் தாய் மலையில் இறக்குதல் வேண்டும் என்பது விளையாட்டின் நெறிமுறையாகும். ஆனால், எட்டு, நான்கு எண்ணிக்கையில் விழுந்தால் விளையாட்டில் காய்களின் நகர்வுகளுக்கு மட்டும் இந்த எண்ணிக்கைகளைப் பயன்படுத்துவதுண்டு. குறைவான நேரத்தில் விளையாட்டை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், விளையாட்டில் காயை விளையாட்டுக் களத்தில் குலுக்கிப் போடும்போது நான்கும் எட்டும் விழுந்தால் நான்கிற்கு ஒரு காயையும், எட்டிற்கு இரண்டு காய்களையும் தாய்மலையிலிருந்து இறக்கவேண்டும்.

முதலில் கொட்டையை விளையாட்டுக்களத்தில் குலுக்கிப்போட்டு நான்கு, எட்டு தாயம் விழும் எண்ணிக்கையில் காய்களை, முதல் மலையில் இறக்கினால், எதிரணியினர் ஒன்பதாவது மலையில் காய்களை இறக்க வேண்டும் என்பது விதிமுறை.

முன் கட்டத்தில் சுற்றி வந்து ஏதாவது ஒரு காய், பழம் எடுக்கும் மலையில் தொக்கையில் உட்கார்ந்து விடும். தொக்கையில் உட்கார்ந்த காயைத் தாயம் போட்டுத்தான் பழமாக்க முடியும். மற்ற எந்த எண்கள் விழுந்தாலும் தொக்கையிலிருந்து பழம் எடுக்க முடியாது. எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும் என்பது விதிமுறை.

எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே, உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும். ஒருவருடைய காயை, வெட்டி விட்டுத் தன் காய்களை உள்கட்டத்தில் கொண்டு சென்று விட்டால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஒவ்வொரு காய்களையும் அடுக்கி பிடித்துக் கீழே போடக் கூடாது. அப்படி கீழே போட்டு விழும் எண்ணிக்கைக்குக் காய்களைக் கட்டத்திற்கு நகர்த்தமாட்டார்கள் என்பது விதிமுறை.

விட்டுக் கொடுத்தல்

            ஒரு சில நேரங்களில் நட்பு ரீதியில் எதிரணியினரும் வெற்றி பெறட்டும் என்னும் நோக்கில், காய்களை வெட்டுபவர், வெட்டாமல் போவதும் உண்டு.

சமூகப் பின்புலம்

சிறுதாயாட்டம் விளையாடும் பெண்களின் உறவு முறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விளையாட்டை வீட்டின் அருகாமையிலேயே விளையாடுகின்றனர். நெருங்கிய உறவு முறைக்காரர்கள் மட்டும் வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்றனர். அதேப்போல் ஆண்கள் வீதியிலும், பொது இடங்களிலும் பல விளையாட்டுகளை விளையாடுகின்றனர். ஆனால், பெண்கள் அது போன்று விளையாடுவதில்லை. அதாவது, சமூகத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுந்த மகாபாரதத்தில் ஆணாதிக்கத்தை மையப்படுத்தி நாடு, நகரம், ஊர் எல்லாவற்றையும் தாயக் கட்டையை உருட்டி இழந்ததை இந்த விளையாட்டுப் புலப்படுத்துகின்றது. ஆனால், சிறுதாயாட்டத்தில் பொருளையோ, பிறவற்றையோ வைத்து விளையாடுவதில்லை என்பதும், கால மாற்றம், சமுதாய மாற்றத்திற்கான விழிப்பாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

குடும்பத்தை நர்வாகம் செய்வதில் பெண்ணின் பங்கு அளப்பரியாதாகும். பெண் சமுதாயம் தாயாட்டத்தினை விளையாடுவதற்குப் பொதுவிடங்களைத் தவிர்ப்பது என்பது, இதைச் சூதாட்டம் என்ற நிலையில் பார்க்கப்படும் கண்ணோட்டமாகும். ஆனால், கட்டையை உருட்டுவதை விட பெரும்பாலும் புளியங்கொட்டையைக் கொண்டு விளையாடும் சிறுதாய விளையாட்டையே பெண்கள் விரும்பி விளையாடுகின்றனர். புளியங்கொட்டைகளைப் பயன்படுத்துதல் குடும்பத்தை நிர்வாகிக்கும் முறையினை உணர்த்துகிறது. கணவன், குழந்தைகள், மாமியார், மாமனார் ஆகியோரை நிர்வகிக்கும் பொறுப்பினை வளர்க்கின்றது.

சிற்றூர்ப் பகுதியில் வாழும் மக்கள் உழவுத்தொழிலையும் பிற தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தொழில்களில் ஈடுபடுவதால் உழைத்துக் களைப்பைப் போக்கும் ஓய்வான நேரங்களில் அவர்கள் குழுவாக இருந்து இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, அக்கா ஆகியோர் சேர்ந்து விளையாடுவது குடும்ப உறவுகளைப் பேணிக்காக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 குடும்ப உறவுகளோடு கட்டங்களைப் போட்டுத் தனித்தனியாக விளையாடும் பொழுது, அந்த உறவு முறைகளில் ஏற்படும் உறவினைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டில் பொருளையோ? பணத்தையோ வைத்து விளையாடுவதில்லை. ஆனால், அன்புக்கு மட்டும் ஏங்கி விளையாடப்படும் இவ்விளையாட்டுப் பொழுது போக்கு விளையாட்டாகவே நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு விதமான வழக்குச் சொற்களைச் சொல்லி விளையாடுகின்ற முறையையும் இவ்விளையாட்டில் பார்க்க முடிகிறது. கூழோ? கஞ்சியோ? தண்ணீரோ? வந்த உறவுக்காரர்களுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு விளையாட்டைத் தொடங்கும் முறையானது, பகுத்துயிர் வாழ்தலும், பல்லுயிர் ஓம்புதலுமாகிய விருந்தோம்பலைப் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

விளையாட்டின் நன்மைகள்

சிறுதாயாட்டமானது பெண்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நுட்பமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதற்கு இந்த விளையாட்டு உதவி புரிகின்றது. குடும்ப உறவு முறைகளைப் பேணிக் காக்கும் பொருட்களான புளியாங்கொட்டையும் எருக்கம்பூவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இனக்குழு சமுதாயத்தில் சிறுதாயாட்டம் பெரும்பாலும் முல்லை நிலத்து விளையாட்டாகவே இருக்கிறது. இந்த விளையாட்டுப் பெண்களின் குடம்பத்தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்தள்ளது.

சிறுதாயாட்டத்தில் வாழ்க்கை தத்துவம்

யார் எங்கு ஆரம்பித்தாலும் இறுதியில் சேர வேண்டியது ஓர் இடம்தான் என்பதை உணர்த்தும் விதமாகச் சிறுதாயம் விளையாட்டு அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதும், உதைப்பதும், வீழ்த்துவதும், ஒன்று சேர்வதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைக் கொள்வதும், நான் போராட வேண்டும், நீ போராட வேண்டும், என இப்படி இரண்டு பேரும் ஓரிடத்தில் வாழ்க்கையை நிறைவு செய்வதுமான வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துகிறது. இந்தப் போராட்டத்தில் எந்தக் காயும் வெட்டப்படலாம். காய்கள் மாட்டிக் கொள்ளாமல் வெற்றிபெறுவதே மகிழ்ச்சியான செய்தியாகும்.

முடிவுரை

சிறுதாயாட்டம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மகளிர் விளையாடும் விளையாட்டாகவே உள்ளது. இவ்விளையாட்டுப் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் விளையாடப்படுகின்றது. சிறுதாயாட்டத்திற்குப் புளியங்கொட்டைகள் அல்லது எருக்கம் பூக்களை விளையாட்டுக்களத்தில்; கீழே போட்டுப் பயன்படுத்துகின்றனர். தாய்மலை, மறுஆட்டம், கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, வெளிகட்ட தொக்கை, உள்கட்ட தொக்கை, தொக்கைபழம் எடுக்கும் மலை என்ற நிலைகளில் கிருஷ்ணகிரி  வட்டாரத்தில் சிறுதாயாட்டம் முறை அமைந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி வட்டாரத்தில்  மாறுபட்டிருப்பதை அறிய முடிகிறது. மகளிர் சமுகப் பின்புலத்தோடுதான் சிறுதாயாட்டத்தை விளையாடுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்து மகளிர் தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களோடு மட்டும்தான் விளையாடுகின்ற முறையை இந்த விளையாட்டில் பார்க்க முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.          நேர்க்காணல் பச்சையம்மாள் (24), மத்தினேரி, தேதி 10.4.15

2.          நேர்க்காணல் தமிழரசி (17), இராமபுரம், 2.05.15

3.          நேர்க்காணல் கண்ணம்மா (36), திம்மாபுரம், 4.5.14

4.          நேர்க்காணல் உமா (18), ஏரிக்கொல்லை, 22.04.15

5.          நேர்க்காணல் இரஞ்சிதா (30), செம்படமுத்தூர், 18.6.16

6.          நேர்க்காணல் பாஞ்சாலை (50), மாதேப்பட்டி 6.6.15

7.          நேர்க்காணல் சங்கீதா (22), செம்படமுத்தூர், 8.6.16

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்-635130.

அலைபேசி எண் : 9943259247

மின்னஞ்சல் : aathmalingam1977@gmail.com

நற்றிணைக் காட்டும் யானைகளும் உணர்ச்சி மிகு வாழ்க்கையும்

உலகத்தில் வாழும் ஐந்தறிவு உயிர்களில் யானையும் ஒன்று.  பெரிய உருவமும் அதிக எடையும் கொண்ட விலங்கு.  நிலத்தில் வாழும் மனிதர்களைத் தவிர்த்து யானைகள் மிக நீண்ட காலம் உயிர் வாழக் கூடியதாகும்.  யானைகளைப் பொறுத்தவரைத் தனியாக இருப்பதில்லை.  கூட்டமாகவே வாழ்கின்றன.  தனியாக இருக்கும் யானை மதம் பிடித்து அலைந்து திரியும் என்பார்கள். யானையினங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்வு மிக்கதாகவும், அறிவுச்சார்ந்த நிலைகளில் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிப் புரியும் வகையில் யானையினங்கள் இருந்து வருகின்றது.  சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில விலங்கான யானைகள் நற்றிணைப் பாடல்களின் வாயிலாக நோக்கும் போது உணர்ச்சி மிகு வாழ்க்கையினை நடத்துகிறது எனலாம்.

பெருங்களிறும் மடப்பிடியும்

          சங்க இலக்கியத்தில் யானையைப் பற்றியச் செய்திகளும் அவைகளின் வாழ்க்கை முறையினைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதகம், கைமா, உம்பல், வாரணம், அசனாவதி, அத்தி, அத்தினி,அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆணை, இயம், இரதி, குஞ்சரம், இராசகுஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, கரி, அஞ்சனம் போன்ற பலப் பெயர்கள் யானையைக் குறிக்க சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆண் யானையைக் களிறு என்றும் பெண் யானையைப் பிடி என்றும்  குட்டியைக் கன்று என்றும் சொல்வர்.  வீரம் மிகுந்த ஆண் யானையை களிற்று யானை என்று கூறுவர்.  இங்கு களிறு என்பதும் யானை என்பதும் ஒரே பொருளில் வருவதைக் காணலாம்.  ஒரு வேளை களிறு என்பது யானை இனங்களில் ஒரு பெயராக அக்காலத்தில் குறித்து வந்திருக்கலாம்.  இவையன்றி களிறு என்பதற்கு வீரம் என்ற பொருள்படவும் அமைந்து, அதனால் வீரம் மிகுந்த யானையைக் களிறு என்று அழைத்திருக்க வாய்ப்பு உண்டு.  பின்னாளில் அதுவே களிற்றுயானை என புலவர்கள் சொல்லியிருப்பார்கள்.  பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை இருக்க வேண்டுமென பெரியோர்கள் சொல்லுவார்கள்.  அதனால்தான் பெண் யானையை மடப்பிடி என்று புலவர்கள் அழைத்திருப்பது வியக்கத்தக்கது.  ஆக பெண் யானைகளுக்கு மடம் என்ற பண்பு இருந்திருக்கிறது என அறியமுடிகிறது.

நற்றிணையில் யானை

          வெண்கோட்டு யானை, வயக்களிறு, பெருங்களிறு, வேழம், மா, பைங்கண் யானை, பரும யானை, ஒருத்தல், மடப்பிடி, புகர்முகவேழம் என நன்றினைப் பாடல்களில் குறிக்கப்படுகிறது.

          “இருந்செறு ஆடிய கொடுங்கவுள், இயவாய்,

          மாரி யானையின் மருங்குல் தீண்டி”  (நற்:141:1-2)

          செம்மை நிறமுடைய தலையையும், வளைந்த கொடுமை தன்மையுள்ள துதிக்கைகளை உடையனவும், ஏந்திய தந்தங்களை கொண்டதும், அகன்ற வாயையும் உடைய கரிய மேகம் போல் இருக்கும் யானைகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் யானைகள் மதத்தால் செருக்குண்டு கடிய சினமும் வலிமையையும் உடையது (நற்-103) என நன்றிணைப்  பாடல் குறிப்பிடுகின்றது.

உணவும் வாழிடமும்

          யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும்.  இவை மூங்கில் மற்றும் கரும்பு போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.  யானைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.  நற்றிணைப் பாடல் ஒன்றில்,

          “சூல் முதிர் மடப்பிடி, நான் மேயல் ஆரும்” (நற்.116:5)

          கருவுற்ற ஒரு பெண் யானையானது தன்னுடைய பசியைப் போக்க மூங்கிலின் கொழுத்த முளைப்பகுதியை ஒடித்து தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டதாம் என கூறுகிறது.  அதைப்போல பசியால் வருந்திய மென்மையான தலையை உடைய பிடி வருந்தமுற்று நின்றதாம்.  அதனைக்கண்ட பெரியகளிற்று யானையானது பக்கத்தில் இருக்கும் ஓமை மரத்தை முறித்து அதனுடையப் பட்டையை தன் பிடிக்கு உணவாகக் கொடுத்ததாம் (137,279) குழியில் ஊறிய நீரை யானையினம் சென்று உண்ணுதல் (240), நன்றாக உண்ட யானைகள் இத்தி மரத்தின் நிழலில் வந்து உறங்குகிறது (162) என நன்றிணைப் பாடல்கள் கூறுகின்றது. நன்கு வளர்ந்த  யானைகள் நாள் ஒன்றுக்கு  140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன என ஆய்வு குறிப்பிடுகிறது.  தற்போது காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்கப்படுவதால் தாவர உண்ணிகளான யானைகளுக்கு உணவுகள் கிடைப்பது அரியதாகிறது. மனிதர்களின் வேளாண்மை விரிவாக்கத்திற்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர்.  காடுகளில் வாழ்ந்து வரக் கூடிய யானைகள் எங்கே செல்வது எனத் தெரியாமல் காடுகளாய் இருந்து மாற்றிய விவசாய நிலங்களை அழிக்கிறது.  மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்குகிறது. இதனால் மனிதர்களால் யானைகள் கொல்லப்படுகின்றன.  யானைகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது யானைகள் எங்கு செல்லும்.  இவ்வாறான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முரண்பாடுகளால் ஆண்றொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாக ஆய்வு கூறுகின்றது. யானைகள் தனக்குத் தேவையான செடி, கொடி, பட்டை போன்ற தாவர உண்ணிகள் கிடைக்கப்பெறாததால் தான் ஊருக்குள் வந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் நாசப்படுத்தியும் விடுகின்றன என்பதை அறியலாம்.

உடலமைப்பு

          பெரும்வாரியான யானையினங்கள் ஆப்பிரிக்கக்காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.  பெரிய உருவம், தந்தம், துதிக்கை, சிறிய கண், நீண்டக் காதுகள், புடைத்த நெற்றி மேடுகள், நான்கு கால்கள், சிறிய வால் என யானையின் உடலமைப்பு அமைந்திருக்கும்.  ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரியவையாக இருக்கும்.

(i) தும்பிக்கை

          யானைக்குக் தும்பிக்கைப் போன்று மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும் எனும் பழமொழி நம்மிடையே உண்டு.  அதுபோல யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கையே ஆகும்.  நற்றிணையில்,

          “இரும் பிணர்க் தடக்கை நீட்டி, நீர் நொண்டு

          பெருங்கை யானை பிடி எதிர் ஓடும்”  (நற்.186:2-3)

          நீர் சேருகின்ற இடத்தில் யானையானது தனது நீண்ட துதிக்கையால் தண்ணீரை உண்டது என்கிறது இப்பாடல்.  மேலும் வலிமை மிகுந்த நீண்ட துதிக்கையைக் கொண்டது யானை (நற்.194),யானைகள் தும்பிக்கையின் நுனியால்தான் மூச்சு விடுகின்றன (நற்.253), யானையின் தும்பிக்கைகள் தினைக்கதிர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன(நற்.344). யானைகளின் தும்பிக்கைகள் 40,000 தசைகளாலும்; எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியதுமாகவே அமைந்திருக்கிறது.  தும்பிக்கையின் உதவியால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்கமுடியும்.  உணவு உண்ணுவதற்கும், பகை விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வளையமாகவே தும்பிக்கை அமைகின்றது.

(ii) தந்தங்கள்

          யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன.  இவைகளுக்கு யானைக்கோடு என்று பெயர்.  இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டும் தான் தந்தம் உண்டு.  பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து யானைகளுக்கும் தந்தம் உண்டு.  இந்தத் தந்தமே யானையின் கடைவாய் பற்களின் வளர்ச்சிதான் இப்படி நீண்டு இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

          யானைகளின் தந்தங்கள் 10 அடி வரை வளரக் கூடியதாகும்.  90 கிலோ கிராம் எடை வரை இருக்குமாம்.  யானையின் தந்தத்திற்கு மக்களிடத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு. யானையின் தந்தத்தை வெட்டி அணிகலன்களாகவும், கதவு, நாற்காலி, படுக்கைக் கால்;கள் எனச் செய்து கொள்வதனால் மக்கள் தந்தத்திற்கு பெருமளவு பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.  நற்றிணையில்,

          “புலியொடு பொருத புண் கூர் யானை

          நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்” (நற்;.65:5-6)

          புலியுடன் சண்டையிட்ட யானையானது தோற்று ஓடியது.  அதைக் கண்ட கானவர்கள் அம்பெய்தி அந்த யானையைக் கொன்றனர்.  யானையின் தந்தத்தை கானவர்கள் எடுத்தார்கள் என ஆசிரியர் கூறுகின்றார்.  இறந்த யானையின் தந்தத்தை எடுத்து பாறையின் மீது காய வைத்தார்கள் என்றும் நகங்களை ஊனின்றுப் பிரித்து எடுத்தார்களாம் கானவர்கள் (நற்.114) என்றும், யானையின் ஒற்றைத் தந்தத்திற்கு அருவியின் நீரை உவமையாகவும் சுட்டப்படுகிறது (நற்.24). மனிதர்களின் சுயநலத்திற்காக யானைகள் கொல்லப்பட்டுப் தந்தங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

(iii) காதுகள்

          யானைகள் நன்குப் பெரிய அகன்ற மடல் போன்;ற காதுகளைக் கொண்டுள்ளன.  யானையினுடைய செவியானது ஆம்பல் இலைப் போன்று அகலமாக உள்ளது என,

          “முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை” (நற்.230:1)

          நற்றிணைப் பாடல் கூறுகின்றது.  தாமரை இலைப்போல் யானையின் காதுகள் உள்ளன (நற்.310:2)என்றும், முறம் போன்ற பெரிய காதுகளை உடையது யானைகள் என உவமையாகக் கூறப்படுகின்றன.  யானையின் உடலில் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக காதுகள் பெரியதாக இயற்கை அமைத்திருக்கிறது.  காதுகளை அசைத்து காற்று குளிர்விக்கப்பட்டு உடலினுள் வைக்கப்படுகிறது.  அதனால் தான் யானைகள் எப்போதும் தன் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

(iv) கால்களும் தோலும்

          யானைகள் வலிமையான கால்களைக் கொண்டுள்ளன.  தன் உடல் எடையை தாங்குவதற்கேற்பச் செங்குத்தான கால்களும், அகன்றப் பாதங்களும் பெற்றுள்ளன.  இளைப்பாறுதலைத் தவிர மற்ற நேரங்களில் அமருவதில்லை.  தண்ணீரில் யானைகள் நன்றாக நீந்தக் கூடியவை.  யானையின் தோல் மிகவும் தடிப்பானது. தோலின் தடிமன் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் அளவுடன் உள்ளதாக இருக்கும்.  யானைகள் தன் தோல்களின் மூலம் உணர்வு திறனை வளர்த்துக் கொள்கின்றது.

(v)அறிவாற்றலும் புலன் உணர்வும்

விலங்கு இனங்களில் யானையின் மூளையே பெரியதாகும்.  யானைகள் நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டது.  அவை மட்டுமல்லாமல் யானையினுடைய கண்கள் சிறியவையாக இருப்பதால் கிட்டப்பார்வையைக் கொண்டது.  அதனால் கேட்கும் திறனையும், மோப்பத் திறனையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

          “களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடுநீறு” (நற். 302:7)

மக்கள் நடந்துச் செல்லக் கூடிய சுர வழியிலே யானைகள் ஒன்றோடு ஒன்று கால்களால் உதைத்து விளையாடியதால் அவ்விடமானது புழுதி நிறைந்துக் காணப்பட்டது என நற்றினைக் கூறுகின்றது. வெளிநாடுகளில் யானைகளுக்கு இடையில் கால்பந்து விளையாட்டை வைத்து வெற்றிப் பெற்ற யானைகளுக்குப் பரிசு வழங்குவதை நாம் தொலைக்காட்சியில் கண்டிருப்போம்.  அதைப் போல செக்குடியரசு நாட்டில் பராகுவே நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆசியாவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் யானை 12 ஓவியங்களை வரைந்திருக்கிறது.  அவ்வோவியங்களை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் (21.09.2012,ப.16) வெளியிடப்பட்டுள்ளது.  யானைகள் தண்னுணர்வு கொண்டவை.  தன்னையும், தன் இனத்தையும் விரைவில் அறிந்து கொள்ளும். யானைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என  நற்றினைக் கூறுகிறது.

                             “சிறு கண்யானைப் பெருங் கை ஈர் இனம்

                          குளவித் தன் இயம் குழையத் தீண்டி” (நற்.232:1-2)

          சிறியக் கண்ணையும், பெரிய கையையும் உடைய ஆண், பெண் யானைகள் பச்சை நிறமுடைய வயல்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் குளத்திலே குளிக்குமாம்.  அப்போது ஊடலின் காரணமாக இரு யானைகளும் மலை வாழையை உண்ணாது ஊடலைப் போக்க வழியைத் தேடிக் கொண்டிருக்குமாம்.  ஊடல் தீர்ந்தவுடன் பலா மரத்தினுடைய இனியப் பழத்தை உண்டு மகிழ்ந்ததாம்.  இப்படி உணர்வு மிக்க யானைகள் பல வாழ்ந்து வந்திருக்கிறது.

உணர்ச்சி மிகு வாழ்க்கை

    யானைகள் எப்போதும் தன் குடும்பத்துடன் சேர்ந்தே வாழும் பழக்கமுடையது. தன் குடும்பத்தில் வாழும் பிடிக்கும், கன்றுக்கும் பாதுகாப்பாக ஆண் யானைகள் இருந்து வருகின்றன.  சில நேரங்களில் மனிதர்களைப் போலவே அன்பைக் காட்டுவதில் ஒப்பற்றதாக யானைகள் விளங்குகின்றது.  கன்றுடன் பிடி நீருக்காக வந்து நின்றன. (நற்.105:4) என்றும்,

                              “பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப பத்தர்

                          புன் தலை மடப்பிடி கன்றொரு ஆர.” (நற். 92:6-7)

  பசுக்களுக்காக வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியிலே, களிற்றுயானையானது தன்னுடைய பிடியும், கன்றும் தண்ணீர் நிறைய உண்ணுமாறு செய்து தாகத்தைத் தீர்த்ததாம். பெண் யானையுடன் ஆண் யானையானது மிகுந்த விருப்பமுடன் சேர்ந்தது (317) என்றும், பிடியானது மிகுந்த வலியுடன் கன்று ஈனுகிறது.  பிடியின் வலியைப் பொறுக்க மாட்டாத ஆண் யானையானது வெளியே வந்து காத்து நின்றதாம்.  கன்று பிறந்தவுடன் கலங்கிய கண்ணீருடன் தன் பிடியையும்  கன்றையும் பார்த்தது(399:6-7) என்றும், கன்றை ஈன்ற பிடி பசியால் துடித்தது.

ஆண்யானை உணவுக்காகத் திணையைக் கவரச் சென்றது (393:2-4) பிறந்த இளம் கன்றுகள் தன் உடலை வேங்கை மரத்திலே தேய்த்துக் கொண்டதாம் (362:7) உணவுக்காக வெளியேச் சென்றிருந்த ஆண் யானை திரும்பி வந்து பார்க்கும் போது பெண் யானை இல்லாமல் போகவே; மனம் பயம் கண்டு பிளிருமாம் (317:1) ஒரு வேளை பெண் யானை இறந்தால், அவற்றைத் தாங்கிக் கொள்ளாத ஆண்யானையானது திணைக் காட்டிற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது (108:2) போன்றச் செய்திகள் நற்றிணையில் யானைகள் குடும்பம் நடத்தும் பாங்கினைச் சுட்டுகின்றது.  மனிதர்களுக்கு நிகராக அன்பு காட்டி உணர்ச்சி மிகுந்த வாழ்க்கையினை வாழ்ந்துக்கொண்டிருக்கிறது யானைகள் என்பதை அறியலாம்.

தொன்றுத் தொட்டு வரும் பகை

          நற்றிணையில் யானைக்கு பெரும்பகையாக புலியே இருந்து வருகின்றது.  கன்றுடைய வேழம் புலிக்கு பயந்து குட்டியைக் காத்து நின்றதாம். (நற்.85:5) யானையைப் பார்த்து புலி அஞ்சி ஓடியது (நற்.217:2) எனவும், சங்க இலக்கியங்களில் குறும்.141:4-5, 343:1-3, மலைபடு.307-309 கலி.38:6-7, 42:1-2, 48:1-7, 49:1-2, 52:1-4,  அகம்.332: 2-9 போன்ற செய்யுள்களில் யானையானது புலியைத் தாக்கிக் கொன்றச் செய்தி இடம் பெறுகின்றது. நற்றிணையில்,

                   தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்

                 கொன்ற யானைக் செங் கோடு கழாஅ.” (நற்.247:1-2)

          வலிமை மிகப் பெற்றுள்ள யானை தொன்றுதொட்டு வரும் பகையினால் சினந்து புலியைக் கொன்றதாம், நுழைய முடியாத குகையிடத்தில் யானை கரும்புலியைத் தாக்கிக் கொன்றது (நற்.151:2-3) போன்றச் செய்திகள் யானைக்கும் புலிக்கும் உள்ள தொடர்பை நினைவுப்படுத்துகின்றது. பல சிங்கங்கள் சேர்ந்து தனித்து வந்த யானையைக் கொல்லும்.  ஆனால், இதுவும் அரியதாகவே காணப்படுகிறது.  சங்க காலத்தில் புலிகளுக்கும் யானைகளுக்கும் சண்டை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பொதுவாக யானைகளை எந்தவொரு விலங்கும் வேட்டையாடுவதில்லை.

கடும் போராளிகள்

          ஆய் அண்டிரன் பல யானைகளை வைத்திருந்தான் (237), போர்க்காலங்களில் விரைந்து நடக்கும் யானைப் படைகள் இருந்து வந்தன (381, 43) காவல் மதிலைப் பலவற்றைச் சிதைக்கும் களிறுப் படைகள் (150)இருந்தன எனச்; செய்திகள் நற்றிணைப் பாடல்கள் கூறுகின்றன.  அக்கால மன்னர்கள் யானையின் மீது ஊர்ந்துக் செல்லவும். போர்க்களத்தில் யானைகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தார்கள்.

              “பொருத யானை வெண்கோடு கடுப்ப” (நற்.225:2)

முருகக் கடவுளின் வலிமையை ஒத்த சினமுடைய யானையானது போர்களத்திலேப் போரிட்டது. அப்போது அதனுடைய வெண்மையான தந்தம் குருதி படிந்து சிவந்திருக்குமாம்.  அப்படி சிவந்திருந்த குருதிப் படிந்த தந்தத்தை வேங்கை மரத்திலே குத்தி குத்தி துடைத்துக் கொள்ளுமாம் (நற்.202) இப்படி யானைகள் கடும் போராளிகளாக இருந்து வந்தன.

          யானைகளைக் கட்டிக் காப்பவருமான பாகர்கள் சரியான முறையில் உணவுக் கொடுத்தும் நன்றாகப் பாதுகாத்தும் வர வேண்டும்.  ஆனால் பாகர்கள் யானையை துருப்பு முள்ளாலேக் குத்தி துன்புறுத்தி தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் உண்டு.  அக்கால மக்கள் யானையை மதித்தார்கள்.  அதனால்தான் என்னவோ விநாயகர் கடவுளுக்கு யானையின் முகம் இட்டு போற்றி வணங்குகிறார்கள்.  இறைவன் படைத்த அரிய படைப்புகளில் யானையினங்களும் ஒன்று. அவற்றினைப் பாதுகாப்போம்; பாரம்பரியம் காப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »