இலக்கியத் திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

இன்றையச் சூழலில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. அவற்றையெல்லாம் தரம் பிரித்து தகுந்தது இவையென இருப்பவைகள் சிலவேதான். நூல்களைத் திறனறிந்து பார்க்க திறனாய்வாளர்களும் விமர்சனர்களும் தேவைப்படுகின்றார்கள். அனைவராலும் திறனாய்வாளராகச் செயல்பட முடியாது. அவற்றிற்கென்று தனிப்போக்கும் நோக்குத்தன்மையும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. அவர்களே சிறந்த திறனாய்வாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்காலத்தில் வெங்கட்சாமினாதன், அசோகமித்திரன், அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி. பா. மதிவாணன், த. முருகேசபாண்டியன், க, பஞ்சாங்கம், ராஜ்கௌதமன் முதலியோர் நல்ல திறனாய்வாளர்களாகவும் விமரிசனம் செய்பவர்களாகவும் உள்ளனர்.  இங்கு திறானாய்வாளர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பேராசிரியர் இரா.மருதநாயகம் கூறுவது உற்றுநோக்கத்தக்கது.

திறனாய்வாளர்களிடையே அமைய வேண்டிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தரப்படுகின்றன.

  1. திறனாய்வாளர், பல நூல்களைக் கற்றறிந்தவராகவும், பழுத்தப் புலமை உடையவராகவும், புதிது புதிதாய்ப் பயின்று இன்புறும் இயல்புடையவராகவும் இருத்தல் வேண்டும். விரிந்து பரந்துபட்ட நூலறிவு அவருக்கு மிகவும் இன்றியமையாதது.
  2. ஒரு மொழி நூல்களில் மட்டுமன்றிப் பலமொழி நூல்களிலும் இலக்கிய அனுபவம் பெற்றவராய் இருப்பது நல்லது. அப்போதுதான் இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளைத் திறம்பட வெளியிட முடியும்.
  3. கவிதை, நாடகம், புதினம் போன்ற எந்தத் துறையைப் பற்றித் திறனாய்வு செய்கின்றாரோ அந்தத் துறை சார்ந்த மற்றும் அதனோடு தொடர்புடைய பல நூல்களையும். கலை நுணுக்கச் செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இலக்கியத்தைப் பன்முறை பயின்று பயின்று அதன் உயிர்ப்பான பகுதியைத் தெள்ளத் தெளிய உணர்ந்து கொள்ள வேண்டும்.
  5. நூலின் நிலையான பகுதிகள் எவை, நிலையில்லாத பகுதிகள் எவை என்பதைப் பகுத்தறிய வேண்டும்.
  6. பயில்வோர்க்கு மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய சிக்கலான பகுதிகள் நூலில் இருப்பின் அவற்றை வெளிப்படுத்திக் காட்டி மூலநூல் ஆசிரியரின் நோக்கத்தை நன்கு புரிய வைக்கவேண்டும்.
  7. இலக்கியம் படைத்தவர் சில கலை நுணுக்கங்களாலும்,  அறக்கோட்பாடுகளாலும் இயக்கப்பட்டிருந்தால் அவற்றைத் திறனாய்வாளர் தெரிந்து தெளிய வேண்டும்.
  8. கால வெள்ளத்தைக் கடந்து ஒரு நூல் வாழ்வதற்குரிய காரணங்களை. நூலாசிரியரின் படைப்பாற்றலை மற்றவர்களும் கண்டு மகிழும் வகையில் வெளிக் கொணர வேண்டும்.
  9. திறனாய்வாளர், நூலைப் பற்றிய ஒரு கருத்தைத் தன் சிந்தனைக்குள் அடைத்துக் கொண்டு அதை நிறுவுவதற்கான ஆதாரங்களை அரிதின் முயன்று வலிய இழுத்து வந்து வெளிப்படுத்தலாகாது. தன் படைப்பின் மூலம் நூலாசிரியர் வலியுறுத்துவதை வெளிக் கொணர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  10. நூலாசிரியரின் தனிச்சிறப்பினையும், உள்ளத்து உணர்வுகளையும், கற்பனைத் திறனையும் கண்டறிய முனைய வேண்டும்.
  11. வரலாற்றுப் பின்னணியையோ. குறிப்பிட்ட சமூகச் சூழலையோ மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருந்தால் அப்பின்னணியை அல்லது சூழலைத் திறனாய்வாளன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
  12. ஒரு நூலைச் சாதாரண மக்கள் சுவைத்து மகிழ்வதற்கும், கலைத்துறை வல்லுநர்கள் சுவைத்து மகிழ்வதற்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே திறனாய்வாளர் இவ்வேறுபாட்டின் உண்மை நிலையை எடுத்துக் காட்டிப் பொதுமக்களின் சுவையுணர்வினை மேன்மேலும் பண்படுத்தி உயர் தரமான நிலைக்கு உயர்த்த வேண்டும்.
  13. ஒரு சிலர் அரைகுறைப் பயிற்சியால் ஒரு நூலின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு, சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களைப்  பரப்பிவிடக்கூடும். அக்கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி அசைக்க முடியாதபடி நிலைத்து விடுதலும் உண்டு.  அந்நிலையில், திறனாய்வாளர், நூலுக்குரிய உண்மையான தகுதியை மதிப்பீடு செய்து மற்றவர் உணர்ந்து கொள்ளுமாறு தெளிவுப்படுத்த வேண்டும். பிழையாக மலிந்துவிட்ட தவறான கருத்துக்களைக் களைந்தெறிய வேண்டும்.
  14. புற்றீசல் போல வளர்ந்து வரும் இலக்கிய நூல்களுள் இறவாதத் தன்மை உடைய இலக்கியங்கள் இவை என்று சுட்டிக்காட்டும் துணிவு திறனாய்வாளருக்கு அமைய வேண்டும்.
  15. மானிடவியலின் கடந்த கால வரலாற்றைப் பற்றி அறிவு தெளிவு மிக்கவராகவும், அருள் ஒழுக்கம் பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இவை போன்றன திறனாய்வாளருக்குரிய இன்றியமையா தகுதிகளாகக் கருதப்படுகின்றன.

திறனாய்வாளருக்குரிய பணிகள்

“இலக்கியத்தை நன்கு புரிந்து அனுபவிக்கும் இயல்பை வளர்ப்பதே இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியாகும் என்று திறனாய்வுப் பணி குறித்து டி.எஸ். எலியட் என்பார் குறிப்பிடுகின்றார். இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியினைக் காணும் போது உரையாசிரியர்களின் பணி திறனாய்வுப் பணியே என அறியலாம். திறனாய்வாளர்கள் செய்துள்ள பணிகளைக் கீழ்வருமாறு பகுத்துக் காட்டலாம்.

1 மூலநூற் பொருளைத் தெளிவாகக் காட்டுதல்.

2 அரிய சொல்லாட்சி, சொற்றொடர்களின் சிறப்பான பொருளை நன்கு விளக்கிக் காட்டல்.

3. இயல், இலம்பகம், அதிகாரம், காதை, படலம், போன்ற பல உட்பிரிவுகளை உடைய ஒரு நூலினுள் குறிப்பிட்ட ஓர் உட்பிரிவுக்குரிய சிறப்பிடத்தை நன்கு புலப்படுத்துல்.

4. நூல் நுவலும் கருத்துக்களைத் தொடக்கத்தில் தொகுத்துச் சொல்லுதல்.

5.நூற் பொருளால் ஏற்படக் கூடிய சிக்கலையும், முரண்பாடுகளையும் விளா-விடைமுறையில் தீர்த்து வைத்தல்; பயில்வோரின் ஐயத்தினைப் போக்கித் தெளிவுபடச் செய்தல்.

6. பிழையான கருத்துக்களைத் தக்கச் சான்றுடன் மறுத்தல்.

7.பாட பேதம் இருப்பின் அவற்றை வெளிக்கொணர்தல்.

8.குறிப்பிட்ட நூற்பொருளின் பின்னணியில் நமக்குத் தெரியா வண்ணம் மறைந்து கிடக்கும் அரிய செய்திகளை வெளிப்படுத்துதல்.

9.மூலநூலில் இடைச் செருகல் இருப்பின் அவற்றைக் களைந்து எறிய முற்படுதல்.

10. காப்பியம் போன்ற இலக்கிய வகையில் வரும் கதைக் கோப்பையும், பல்வகை மனிதரின் பல்வகைப் பட்ட பண்புகளையும் செயல்முறைகளையும் காவியக் கட்டுக்கோப்புக்கு ஏற்ற வண்ணம் இயைபு படுத்திக் காட்டல்.

11.நூலின் போக்கிற்குப் பொருத்தமானவை இவை என்றும், பொருத்தமற்றவை இவை என்றும் சுட்டிக்காட்டுதல்.

12 உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றை நயமுடன் விரித்துக் காட்டுதல்.

13. மூலநூலில் மறைந்துவிட்டதாகக் கருதப்படும் செய்யுள்களைக் கண்டறிந்து கூறுதல்.

14. இசை, நாடகம் போன்ற துறைகளைப் பற்றிய அரிய கலைச் செல்வங்களை ஆங்காங்கே கொண்டு வந்து வெளிப்படுத்தல்.

15. பழங்கால நாட்டுப்பாடல்,விடுகதைப் பாடல், பழமொழி போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளை உரையிற் செய்து அழியாது காத்தல்.

16. உரைகள் வாயிலாகத் தம் கால மக்களின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், பண்பாடு, அரசியல் மற்றும் சமுதாயச் சூழ்நிலைகள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டல், மேற்கண்ட போற்றப்படுகின்றன.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையக் கட்டுரைகள்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here