இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

இலக்கியக் கொள்கை – இலக்கியத் திறனாய்வு – இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. எனினும் இவற்றுக்குள் சில வேறுபாடுகளும் உண்டு. காலந்தோறும் இலக்கியங்கள் படைக்கப்பட்டு அவ்வப்போது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன. இலக்கியத்தைக் கற்கும் போதும், கற்பிக்கும்போதும் அதன் கால வரிசை தேவைப்படுகிறது. இலக்கிய ரசனையை விரும்பி அதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கூறுவதும் இலக்கியக் கல்வியில் அடங்குகிறது. இலக்கியம் காலந்தோறும் வெளிப்படுத்தும் நெறிமுறைகளையும் இது உணர்த்துகிறது. இவ்வாறு இலக்கியம் கற்றுக் கொள்ளக் கூடிய முறைகளில் வேறுபாடுகள் புலப்படுகின்றன.

இலக்கிய வரலாறும் ஓர் ஆய்வின் அடிப்படையில் தான் செய்யப்பட்டு ஒத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல இலக்கியத் திறனாய்வும் சில விதிமுறை ஆய்வுகளின் வழியே நிகழ்கிறது. இலக்கியத் திறனாயவிற்கு முடிவு செய்யும் ஆற்றலும் உண்டு. இலக்கிய வரலாறு எழுதுவோரும் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்த முடிபுகளைக் கொண்டே படைக்கின்றனர். படைப்புப் பற்றியும் மதிப்பீடு பற்றியும் அறிந்து கொள்ளாமல் இலக்கிய வரலாறு எழுதப்படுவதில்லை. எனவே வரலாற்று அறிஞர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் உருவான காலம் வெவ்வேறாக இருக்கும். தொகுக்கப்பட்ட காலமும் வேறுபடலாம். திறனாய்வு உதவியுடன் இவ்விலக்கியங்களின் காலத்தை அறியமுடியும். எனவே இலக்கிய வரலாறு சிறப்பாக அமையத் திறனாய்வு முறை தேவைப்படுகிறது. வரலாற்றுத் தொடர்பின்றி அமையும் திறனாய்வும் தவறாகி விடும். இந்த அடிப்படையில் இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு. இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன என்று கூறலாம்.

திறனாய்வு என்றால் என்ன? அதன்  விளக்கம்

திறனாய்வு, விமர்சனம் என்னும் இருசொற்களும் இலக்கிய ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கியத் திறனாய்வு என்பது இலக்கியத்தின் திறனை ஆய்தல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை முதன் முதலாக பேராசிரியர். அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் தம்முடைய இலக்கியக் கலை என்னும் நூலில் பயன்படுத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் CRITIC, CRITICISM என்னும் இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிஸ்பேக்கன் என்பவர் தம்முடைய கட்டுரை ஒன்றில் CRITIC என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதுபோல ஜான்டிரைடன் என்னும் கவிஞர் CRITICISM என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 1944-இல் ஆ.முத்துசிவன் விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். கிரேக்கச் சொல்லான கிரிட்டிகோஸ் (KRITIKOS) என்னும் சொல்லிலிருந்து CRITICISM என்னும் சொல் உருவாக்கப்பட்டது. KRITIKOS என்பதன் பொருள். முடிபு கூற முடிந்த ஒன்று என்பர். ஒன்றை நடுநிலையோடு கவனித்துக் கூறப்படும் அனைத்தும் திறனாய்வு என்றும் அதனைச் செய்யும் அவர்களைத் திறனாய்வாளர் என்றும் கூறுவர்.

திறனாய்வு என்பதற்கு அறிஞர்களின் கருத்துகள்

  1. உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும் என்பர் மேத்யூ ஆர்னால்டு.
  2. கவிஞன் அல்லது வண்ண ஓவியனின் அறச் சிந்தனையை உணர்வதும், அதைப் பிரித்து அறிவதும், விளக்குவதும் திறனாய்வின் மூன்று படிநிலை’ என்பது வால்டர் பேட்டன் தரும் விளக்கம் ஆகும்.
  3. இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு என்பர் விக்டர் யூகோ.
  4. ‘கலைஞன் எதைக் கூற முயல்கிறான்; அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதி உடையது தானா? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்’ என்பர் ஸ்பிங்கான்.
  5. திறனாய்வாவது ஒரு கலையினை நுண்ணறிவு கொண்டு உணர்ந்து அதன் தரத்தினை மதிப்பீடு செய்வதாகும் என்பது சி.டி. வின்செஸ்டர் கருத்து ஆகும்.
  6. ஓர் இலக்கியத்தின் தரத்தினையும் குறைபாடுகளையும் இலக்கியத் திறனாய்வாளன் தன்னுடைய அறிவும் பயிற்சியும் கொண்டு அதைப் பற்றிய தன்னுடைய முடிவினை வழங்குவதே இலக்கியத் திறனாய்வு என்பார் வில்லியம் ஹென்றி அட்சன்.

இவ்வாறாக ‘திறனாய்வு’ என்பதற்குப் பொருள் விளக்கம் பலவாறு பெறப்படுகிறது.

இலக்கியத் திறனாய்வு

டாக்டர் மு. வரதராசனார் இலக்கிய ஆராய்ச்சி என்னும் தமது நூலில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்பதற்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார். அவை,

  1. இலக்கியங்களில் காணும் உவமை, உணர்ச்சி, கற்பனை, வடிவம், பொருள் முதலியவற்றைக் கொண்டு இலக்கியக் கொள்கைகளை உருவாக்குவது.
  2. இலக்கியத்தின் பொது மற்றும் சிறப்பைக் காணுவது.
  3. இலக்கியம் வாழ்க்கைக்காகவா? கலை இன்பத்திற்காகவா? என்று ஆராய்வது.
  4. இலக்கியத்தை நுகரும் முறை கூறல்; நுகர்வோனுக்குரிய அடிப்படைத் தகுதியை வகுத்தல்.
  5. படைப்போன், நுகர்வோன் இருவருக்குமுள்ள இடைவெளி குறைவு என்பதை உணர்த்தல்.
  6. இலக்கியங்களை மேலும் படைக்கத் தூண்டுதல் போன்றனவாகும்.

திறனாய்வின் நோக்கம்

திறனாய்வின் நோக்கம் அல்லது பணி, அடிப்படையில் இலக்கியத்தை மையமிட்டது. திறனாய்வு வினாக்களை எழுப்பி, விடை தந்து, வினாக்களையும் எதிர் கொள்கிறது.

இலக்கியம் ஒரு கலையாக, ஒரு சாதனமாக ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறபோது, அதனுடைய சாத்தியங்களையும், வழிகளையும் திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் ஒரு புதிராக வருணிக்கப்படுமானால் அந்தப் புதிரைத் திறனாய்வு விடுவிக்க முயல்கிறது. இலக்கியம் மக்களுக்கானது: மக்களைப் பற்றி பேசுகிறது; மக்களிடம் போகிறது: மக்களைப் பாதிக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அந்த உறவுகளை இனங்கண்டு விளக்குகிறது.

இலக்கியம் ஒரு காலத்தை, ஒரு இடத்தைப் பற்றி எழுந்திருக்கிறது என்று வருணிக்கும்போது அதன் கால, இட, அச்சுக்களை (TIME, SPACE, AXIS) திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் பிரத்தியேகமாகப் பல கூறுகளையும், பண்புகளையும், உத்திகளையும் கொண்டிருக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அதனை ஆழ்ந்து சென்று புலப்படுத்துகின்றது. இலக்கியம் பல செந்நெறிகளையும்(TRENDS], பல இலக்கியப் போக்குகளையும் (MOVEMENTS], பல கருத்துக்களையும் [CONCEPTS], கொண்டிருப்பது என்று வருணிக்கப்படுமானால், திறனாய்வு பொருத்தமான தளங்களில் காலூன்றி, இலக்கியத்தின் இந்த இயங்கு நிலைகளையும் கோணங்களையும் பகுத்து ஆராய்கிறது.

முடிவுரை

இவ்வாறு திறனாய்வு விசாலமான பணிகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதோடு, இலக்கியத்தை ஒரு தளமாகக் கொண்டு, திறனாய்வு ஒரு அறிவுத் தேடலாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி இலக்கியத்தைக் காலம், இடம் என்ற பரிமாணங்களில் இடைவெளியை நிரப்பிப் புரிந்து கொள்ளுதலுக்குத் துணை நிற்கிறது. இலக்கியத்தை விளக்கி, மதிப்பீடு செய்து. வாசிப்புகளுக்குப் பல பரிமாணங்களைத் தருகிறது.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here