Saturday, April 4, 2026
Home Blog

Irattai Kapiyangal Kaattum Panpattu Kurugal| S.Ramachandran

இரட்டை காப்பியங்கள் காட்டும் பண்பாட்டு கூறுகள்
Abstract
         
          This article examines the cultural values depicted in the twin epics Silappathikaram and Manimekalai. These classical Tamil works reflect the social, ethical, and cultural life of ancient Tamil society. The study highlights how literature serves as a mirror of civilization, revealing customs, traditions, moral principles, and social structures of the time. A key focus is on the concept of culture as expressed through language, literature, arts, religion, political systems, education, and social practices. The epics emphasize the importance of moral conduct, charity, and virtuous living. Concepts such as timely charity (aram), hospitality (virundhombal), and righteous living are strongly embedded in the narratives. The characters of Kovalan, Kannagi, Kaundiyadigal, and Madhavi exemplify these values through their actions and experiences.
  The paper also discusses the significance of hospitality as a core social value, where guests are treated with respect and care. The role of women in upholding household and social ethics is also evident, particularly through characters who demonstrate compassion, responsibility, and moral strength. Furthermore, Manimekalai emphasizes the eradication of hunger and poverty as the highest form of charity. The epic portrays humanitarian service as a central ethical duty, advocating for feeding the hungry and alleviating suffering as the noblest form of virtue. In conclusion, the twin epics collectively portray a comprehensive picture of ancient Tamil cultural and ethical values, highlighting the importance of righteousness, charity, hospitality, and social responsibility as fundamental elements of Tamil civilization.


“இரட்டைக் காப்பியங்கள் காட்டும் பண்பாட்டுக் கூறுகள்”

முன்னுரை
         
    சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் கொண்டு விளங்கிறது. இக்காப்பியத்தில் கூறப்படும் பண்பாடு பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே உள்ளடக்கியது.  இது பழக்கத்தாலும், பயிற்சியாலும், முயற்சியாலும் மனித மனத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துவதாகும். இக்காப்பியத்தில் புதைந்து கிடக்கும் அக்கால மக்களின் உண்மையான வாழ்வியல் கூறுகளுள் பண்பாடு குறித்த கருத்துகளை இக்கட்டுரை ஆராயும்.

பண்பாடு
         
       ஓரினத்தின் பண்பாடு அதன் இலக்கியம், நடையுடை, மொழி, கலைகள் குறிக்கோள் சமயக் கொள்கை, அரசியற்கொள்கை, அரசியல் வரலாறு, சமுதாய நிலை, பெண்களின் நிலை, அறிவியல் சிறப்பு, கல்வி நிலையங்கள் மூலமே விளக்கமுறுகின்றது;1 என்று தட்சினாமூர்த்தி கூறுகிறார். பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக பண்பாடு நிலையினை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளிலிருந்தே அறிகிறோம். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பிறரை வாழ்த்துகின்ற பொழுது உள்ளன்போடு வாழ்த்துவது வாழ்த்தாகும். வாழ்த்து என்பது வாழ்வைச் சிறப்பித்து உரைப்பதால் வாழ்த்தாயிற்று. அது மிகச் சிறந்த அறப்பண்பாடாக இருந்ததோடு மட்டுமல்லாது, அவர் செய்த செயல் இன்னும் சிறக்க அது ஒரு தூண்டு கோலாக அமையக்கூடிய சிறப்புதன்மை உள்ளது.   இளங்கோவடிகள் கோவலன், கண்ணகி திருமண விழாவை முதல் காதையில் நம் கண்முன் காட்சிப் படுத்துகிறார். அவ்விழாவைக் காண மகளிர் அனைவரும் வருகின்றதை வரிசைப்படுத்துகிறார். பெண்மைக்கு விளக்கமாக அணி மணி புனைந்து வந்த சிலர் மகளிர்,

காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அனுக்2
         
       என்று சில மலர்களைத் தூவி திருமணத் தம்பதிகக்கு வாழ்த்துக் கூறும் செய்தியைக் காண முடிகிறது.

அறம் செய்யும் காலம்
         
       பொதுவாக அறம் என்ற சொல்லுக்குத் தானம், தர்மம் என்று கூறுவார்கள், ஆனால் நல்ல செய்ல்கள் எல்லாமே அறமாகும் என்பர். அறச்செயல்களை அன்றே செய்ய வேண்டும், காலம் தாழ்த்த கூடாது, வலக்கையால செய்யும்  தானம் இடக்கைக்கு தெரியக் கூடாது, ஏனெனில் வலக்கையில் இருந்து இடக்கைக்கு மாறும் நேரத்தில் மனம்மாறக் கூடும் என்பதே அதன் நோக்கமாகும். இதனை,

நாளை செய்குவம் அறம் எனில் இன்றே
கேள்வி நெல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுனீர் உலகில் முழுவதும் இல்லை3
         
       என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.  காலத்தை வரையறுத்து வாழ்வோர் உலகில் எவருமில்லை. அறச்செயல்களை நாளை செய்வோம் என்றால் இன்றே உயிர் போனாலும் போகும். ஆகையால் உடனே அறச்செயல்கள் செய்யவெண்டும் என்ற கருத்து புலனாகிறது. ஒருவரின் நல்லறப் பயனானது அவருக்கு மட்டுமில்லாது அவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நல்வினை தீவினை எனும் இருவகை வினைகளில் நாம் எதைச் செய்தாலும அதற்குரிய பலன் வந்தே தீரும் என்பது நியதியின் பண்பாடாகும். ஆகவே என்றும் நல்லறம் புரிதல் நம்மையத் தரும் பண்பாடாகக் கருதப்படுகிறது.

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே4 
         
      என உரைக்கிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகார காப்பியத் தலைவி கண்ணகி கோவலனை பிரிந்து இருந்த காலங்களில் தன்னால் நல்லறம் செய்ய முடியாமல் போனதை தன் கனவனிடம் சொல்லி வருந்தியதை இளங்கோவடிகள் கூறுகிறார்.

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பில்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை5
         
      எனும் வரிகள் அவலத்தை தெளிவுப்படுத்துகின்றன.

விருந்தோம்பல்
         
       இல்லறத்தில் கனவனும் மனைவியும் இணைந்து ஆற்ற வேண்டிய அறம் எனும் விருந்தோம்பல் பண்பாடாகும். காலம் தொட்டு நிகழ்ந்து வரும் இவ்பண்பாட்டை தொல்காப்பியர் விருந்துதோம்பலையும் இணைத்துக் கூறுகிறார். இதனை,

விருந்துபுறந்தருதலும் சுற்ற ஓம்பலும்6         
     என்ற வரிகளில் அறியப்படுகிறது. சிலப்திகாரத்தில் மாநகர பெண்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர். இடையர்குல பெண்ணான மாதிரியும், ஐயையும் கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் ஆகிய மூவரையும் வரவேற்று அவர்கள் தங்குவதற்கு இடமும் சமைப்பதற்கு புதிய பாத்திரங்கம் வழங்கி ஐயை என்பவள் கண்ணகிக்கு உதவி செய்வதையும் நோக்குகின்ற பொழுதும் இடையற்குல பெண்ணான மாதரி கலக்கமுற்று வந்தவரையும் பாதுகாத்து இருந்தாள் என்பது புலனாகிறது.
         
        அடைக்கலக்காதையில் கவுந்தியடிகள் கண்ணாகியை மாதிரியிடம் அடைக்கலப்படுத்தும் போது, அவளுடைய குலப் பெருமையை எடுத்துரைக்கிறார். இவள் பெரும் வாணிகனின் செல்வமகள் இவளை யார் வேண்டுமானலும் தன் வீட்டிற்கு விருந்தாக விரும்பி அழைத்துச் செல்வர். அப்படிப்பட்ட பேரழகும் கற்பிற் சிறந்தவள் என்று பலவாறு கவுந்தியடிகள் கூறுகிறார். இதை,

மங்கல மடந்தையை நன்னீர் ஆட்டி
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி
தோமன் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆய்இமை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு7
         
      எனும் பாடல் வரிகளில் கவுந்தியடிகள் மாதிரியிடம் கண்ணகிக்குத் தோழியாகவும் தாயாகவும் இருந்து பாதுகாப்பளித்துக் காப்பாயாக என்ற கருத்து வெளிப்படுகிறது.

அறப்பண்புகள்
         
       மாதரி தெய்வத்திற்குப் பால் சோறு படையல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கவுந்தியடிகளை கண்டு இருக்கரம் கூப்பி வணங்கினாள் இப்பண்பு அறத்தின்பாற்பட்ட செயலாகும்.

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்இய
புறம்சிறை மூதூர்ப் பூங்கண் இலக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
         
என்னும் வரிகளால் தெளியலாம். மேலும் மாதரி நாள்தோறும் அறப்பயன் செய்து வருவதை அடைக்கலக்காதையில்,

ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்கைஒர் கொடும்பாடு இல்லை
தீதிலள் முதுமகள் செவ்வியல் அனியள்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்8
         
      என்ற வரியின் மூலம் வெளிப்படுகிறது. தவத்தில் சிறந்த முனிவர்கள் அடைக்கலமாகக் கொடுக்கப்படுகின்ற பொருளை நன்றாகப் பாதுகாத்து, ஒப்படைப்பதெ இல்லறத்தில் இருக்கும் மனைவியின் கடமையாகும்.

மணிமேகலை காட்டும் பண்பாடு
         
      ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதர்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக உங்கள் முனிவர்கள் பசு வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரைவிட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்கு தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்

பசிப்பிணி அகற்றல்
மணிமேகலைக் காப்பியம்,

“பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க்9
         
      என வாழ்த்தித் தொடங்குகின்றது. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார். பாரதி. அதுபோல பசிப்பிணிப் போக்கும் அறம் செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது.

மண்டினி நாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டிக் கொடுத்தோர்  உயிர்கொடுத்தோர்10
         
என்பதனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார். அவர் பசியின் கொடுமையைப் பின்வருமாறு விளக்குவார்.

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த
கல்விப்பெரும்புனை விடூஉம் நாண அணிகளையும் மான்எழில்
சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறஙடகடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி11
         
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள  அறத்தில் எல்லாம் சிறந்தது. என்பதனை

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே உலகின்மெய்ந்நெறி வாழ்க்கை12
         
என்று வற்புறுத்துகின்றார்.

முடிவுரை         
    பண்டைத் தமிழர்களின் அறப்பண்புகளாகிய அறம் செய்யும் காலம், தானம், விருந்தோம்பல், பாதுகாத்தல், உபசரிப்பு முதலியவைகளை சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மாதரி, ஐயை முதலிய பாத்திரங்களில்  வாயிலாகப் பண்பாட்டைக் காண முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.22

2.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- மங்கல வாழ்த்துப் பாடல் 1:61,62

3.மேலது- சிலம்பு நடுகற் காதை -28 179-182

4.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 வெண்;பா

5.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 71-73

6.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம்; கற்பியல் – 11

7.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- அடைக்கலக்காதை -15 131-136
8.மேலது- சிலம்பு அடைக்கலக் காதை -15 120-123,130

9.துரை. தண்டபாணி – மணிமேகலை பதிகம். 116, 117

10.மேலது- பாத்திரம் பெற்ற காதை 95,96

11.மேலது- பாத்திரம் பெற்ற காதை 76, 80

12.மேலது- பாத்திரம் பெற்ற காதை 92, 94

துணை நூற்பட்டியல்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு,

2.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு.

3.மாணிக்கவாசன்-சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா பதிப்பகம்.

4.துரை. தண்டபாணி – மணிமேகலை தெளிவுரை, உமா பதிப்பகம்.

5.க.ப.அறவாணன் – சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், தமிழ்கோட்டம்

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ.இராமச்சந்திரன்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்)
வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்)
திண்டல், ஈரோடு மாவட்டம்.

Medicine in folk literature|M.Seethala devi

Aim of Research
      
            Folk medicine is an medicine which has come through man’s real-world wisdom or practical knowledge. Each and every house has a spices-box in which each box contains an Indian long pepper, cumin, fenugreek and coriander seeds. Those seeds were then used by the villagers   as an medical properties. They used the natural herbs, seeds, roots, plants, vine flowers and cinnamons that were available either in wilderness or in farm lands.  Such kinds of excellent medicinal procedures were learnt either by hereditary by hereditary or by hearsay or by Tamil literatures by the Tamil people.  The folk medicine in the life of Tamils was evident in the Tamil literature and also suggesting the ways of the protecting the folk medicine.  Thus, this article’s aim is to throw some light on the research on the procedures and the benefits of the folk medicines found in the folklores.


“நாட்டுப்புற இலக்கியங்களில் மருத்துவம்”

ஆய்வின் நோக்கம் (Objectives of the Study)                              
         நாட்டுப்புற மருத்துவம் என்பது மனிதனின் பட்டறிவு வாயிலாக வந்த மருத்துவ முறையாகும். வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி போன்ற பொருட்களையே கிராமத்து மக்கள் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். மேலும் காட்டு வெளியிலும், வயல்வெளிகளிலும், இயற்கையில் கிடைக்கும் விதைகள், வேர்கள், மரச்செடி, கொடிகளின் பூக்கள், பட்டைகள், பச்சிலைகள், போன்றவற்றை மருந்தாக மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு சிறப்பு பெற்ற மருத்துவ முறைகளைத் தமிழகத்தில் உள்ள கிராம மக்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாகவும் ,செவி வழி செய்தியாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும், தமிழர் வாழ்க்கையில் நாட்டுப்புற மருத்துவத்தின் பங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதையும், மக்கள் அறிவு (Folk Knowledge) எனும் கருத்தை மருத்துவத்தின்வாயிலாக ஆராய்வதையும், நாட்டுப்புற மருத்துவம் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும், நாட்டுப்புற மருத்துவத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தல் பற்றியும், அறிந்தும் பயன் பெறுகின்றோம்.எனவே நாட்டுப்புற மருத்துவ முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும் நாட்டுப்புற இலக்கியங்களில் இடம்பெறுமாறு ஆராய்வதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை         
       நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் இலக்கியம் ஆகும் இது ஒரு வாய்வழி இலக்கியம் என்றும் கூறலாம். நாட்டுப்புறக்கலைகளின் ஒரு கூறாக நாட்டுப்புற மருத்துவம் அமைகிறது. நாட்டுப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நாட்டு மருத்துவம் சித்த மருத்துவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களின் மூலம் பல மருத்துவ செய்திகளை நாட்டுப்புற மக்கள் கூறுகின்றனர்“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த பழமொழி. செல்வம் உள்ளவர்களிடம் நோய்கள் அதிகமாக இருப்பது இன்றைய வாழ்க்கை முறைக்கு உண்மையாகும். நோயற்ற வாழ்வு பெற மனிதனிடம் தோன்றிய சிந்தனை வெளிப்பாடே நாட்டுப்புற மருத்துவமாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது. மனித நாகரிகத்தின் தொடக்கமே நாட்டுப்புறவியலில் தான் உள்ளது. அந்த வகையில், பழங்கால மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த மருத்துவ முறைகள் மற்றும் நம்பிக்கைகளை அறிந்து கொள்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

நாட்டுப்புற இலக்கியம்   
     இயற்கை நம்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த ஆதிகால மனிதர்கள் நோய் ஏற்பட்டபோது நோயைப் போக்கி தங்கள் உடல்நலம் காக்க மருத்துவ குணம் உடைய செடி, கொடிகள், மரங்களை நாடி இருக்கின்றார்கள். பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பழமொழி“உடம்பை முறித்து கடம்புக்கு கொடு” என்பதாகும் அதாவது கடம்பு என்பது ஒரு மரம் நன்றாக வேலை செய்து களைப்பு நீங்க கடம்பு மரத்தினால் செய்த கட்டிலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அனுபவ பழ மொழி கூறுகிறது. இயற்கையாக கிடைத்த பச்சிலைகளை மருந்தாக சாப்பிட்டு எந்தவித ஆபத்துகளும் இல்லை என்று தெரிந்ததும். அவற்றையே தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்கள் இவ்வாறு தோன்றிய வாய்மொழி முறையை மக்கள் தொடர்ந்து வழி வழியாக பயன்படுத்தும் வகையில் செவிவழிச் செய்தி யாகப் பரப்பினார்கள் இவ்வாறு மருத்துவம் தோற்றம் பெற்றன.
                 
       மருத்துவம் தோன்றிய காலத்தை வரையறுத்து கூற இயலாவிட்டாலும் மனிதன் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கிய காலமே மருத்துவம் தோன்றிய காலம் என்று கூறலாம்.  நாட்டுப்புற மருத்துவம் நாட்டுப்புறவியலை போலவே விவசாயிகள் பண்பாட்டிலிருந்து (Peasant Culture) தோன்றியதாகும். என்பார் சண்முகசுந்தரம் (1997:192) உயிர்கள் தோன்றியபோதே நோய்களும் தோன்றியுள்ளன. மனிதன் அந் நோயைப் போக்கிக் கொள்ள வழியைக் கண்டறிந்த போது மருத்துவம் தோன்றலாயிற்று. மனித சமுதாயம் இயற்கை நிலையிலிருந்து உற்பத்தி சேகரிப்பு என்ற நிலைக்கு மாற காட்டுமிராண்டித்தனம், அநாகரிகம் போன்றவற்றிலிருந்து வளர்ந்து நாகரீகம் அடைந்தது. இக்காலகட்டத்தில் மருத்துவமும் வளர்ச்சி அடைந்தது

மருத்துவம் தோன்ற காரணம்           
       ஆதிகால மக்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் நாடோடிகளாக வாழ்ந்தனர். தங்களுக்கென ஒரு இருப்பிடம் எதுவும் இல்லாமல் புல் தரைகளிலும், புதர் மறைவிலும், குகைகளிலும், மரங்களின் நிழல்களிலும், தங்கி இளைப்பாறினர். அவ்வாறு இருக்கும் போது உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதிகம் நோயுற்று இருந்தபோது அதனை குணமாக்கும் நோக்கில் பல முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டதன் விளைவே இயற்கை மருத்துவம் ஆகும். விலங்குகள் கூட உடல்நல குறைவாக இருக்கின்றபோது மருத்துவ செடிகளைத் தேடி உண்பதும் உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். நாயானது தனது உணவு கோளாறு காரணமாகப் புற்களை உட்கொண்டு வாந்தி பண்ணி விடுவதைப் பார்த்து இருக்கின்றோம். ஆகவே எல்லா உயிர்களும் ஒருவகையில் இயற்கை மருத்துவ முறையை வழி வழியாக கடைபிடித்து வந்துள்ளன. விலங்குகளின் தலைமை விலங்காகிய மனிதனிடம் இவ்வகை மருத்துவம் மிக வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
          
       நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுபுற மருத்துவம் என்பர். அதாவது ‘தமிழக கிராமப் புறங்களில் நாட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்” கூறுவார்.     (ETHNOLOGY MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETHNOIATRY, ETHNOATRICS) நோய் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது இயற்கையும், காலநிலையும் என்றே கூறலாம். நாடோடி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒவ்வாமைகளும் சுற்றுச்சூழல் மாசுகளும் அவனை நோய்வாய்ப் பட வைக்கிறது அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே மருத்துவம் தோன்ற காரணமாக இருக்கிறது.

நாட்டுப்புற மருத்துவத்தின் பெயர்கள்               
        நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்பது நாட்டுப்புற மக்களால் மரம் செடி, கொடி, இலை, பூ காய் கறி, பட்டை வேர் கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுவதால் இப்பெயர் வழங்கல் ஆயிற்று. நாட்டுப்புற மருத்துவத்தை இனம் சார் மருத்துவம், மக்கள் சார் மருத்துவம், மக்கள் நல பண்பாட்டு, இனவியல், என பல பெயர்களால் அழைப்பர் என்கிறார் சக்திவேல் (1992:253) நாட்டுப்புற மருத்துவத்தை வீட்டு வைத்தியம்,நாட்டு வைத்தியம், செய்முறை வைத்தியம், கை மருந்து வைத்தியம், பாட்டி வைத்தியம், சிடுகா மருந்து, என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
        நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுப்புறங்களில் கிடைக்கும் மருந்து பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால் நாட்டு வைத்தியம், என்றும் வீட்டில் வைத்து மருந்து தயாரிக்கப்படுவதால் வீட்டு வைத்தியம், என்றும் கையினால் மூலிகைகளை நசுக்கி, கசக்கி, சாறு எடுத்து நோயின் மருந்தாக உபயோகப்படுத்துவதால் கைமுறையை மருத்துவம், என்றும் கைதேர்ந்தவர்களால் செய்யப்படுவதால் கை மருத்துவம், என்றும் வீட்டு பெரியோர்களால் செய்யப்படுவதால் பாட்டி வைத்தியம், என்றும் மக்கள் பயன்படுத்தும் மருந்து செடி, கொடிகளைப் பச்சிலை என்பர்  என்று சண்முகசுந்தரம்(1994:140) கூறுகிறார். இம்மருத்துவமானது பச்சிலை எனப்படும் மூலிகைச் செடி கொடிகளைக் கொண்டு செய்யப்படுவதால் பச்சிலை மருத்துவம் அல்லது மூலிகை மருத்துவம், என்றும் இம்மருந்துகளைப் பாமர மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் பாமரர் மருத்துவம், என்றும் பாமர மக்களால் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருவதால் பாமர மக்களின் பரம்பரை மருத்துவம் என்றும், மருந்துப் பொருட்களின் துகள்களைக் (பொடி) கொண்டு செய்யப்படுவதால் சிடுகா மருந்து என்றும், பல்வேறு பெயர்களைப்பெற்றுள்ளன. மேலும் நாட்டுப்புற மக்களால் நாட்டுப்புற மருத்துவம் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பு
                  
         நாட்டுப்புற மருத்துவம் நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் ஆற்றல் படைத்தது இதனால் எதிர் விளைவும் ஆபத்தும் இல்லை அறிவியல் ரீதியாக மருந்து கண்டுபிடிக்கப்படுகின்ற சில மருந்துகளும் இந்த இயற்கை மருத்துவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கொடுக்கப்படுகின்ற Liv.52 என்ற மருந்தைக் கூறலாம் இது  கிழகாய்நெல்லி என்று சொல்லப்படுகின்ற கீழாநெல்லி அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து நோயாளிக்கு கொடுத்து வர மஞ்சள் காமாலை குணமாகும் என்பது நாட்டுப்புற பாட்டி மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
                
       உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்திற்கு அடிப்படை உந்துதலாக அமைந்துள்ளது. அரேபியா, சீனா, மலேசியா, எகிப்து, நாடுகளில் பரவலாகப் பாமர மக்களால் பல்வேறு நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவ முறைகளைப் பின் பற்றி தீர்வு கண்டுள்ளார்கள்.  என்பதை உலக மருத்துவ ஆய்வாளர்கள் பல அறிவியல் முறையில் சோதனை செய்து வெற்றி கண்டனர் என்பார் வெங்கடேசன் (1976:140). ஆனால் ஆங்கில மருத்துவ மருந்துகளை உட்கொண்டால் ஒரு நோய் குணமாகி வேறு ஒரு நோயை உண்டாக்கும் அம்மருத்துவம் பக்க விளைவுகள் கொண்டது. எனவே நாட்டுப்புற மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதை அறியமுடிகின்றது.

நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்                         
      நாட்டுப்புற மருத்துவத்தை பற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவ்வகையில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி பல வகைகளாகப் பாகுபடுத்தி உள்ளனர். டான் யோடர் (Don Yoder) நாட்டுப்புற மருத்துவத்தை1. இயற்கை மருத்துவம் (2. மத மாந்திரீக மருத்துவம் (Magico Religious Medicine) என இரண்டாக பகுக்கின்றார். நாட்டுப்புற மருத்துவம் காலந்தோறும் தன்நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தன்னிகரில்லாத் தமிழ் மருத்துவம் நாட்டுப்புற மருத்துவமாகும். இவரது பாகுபாடு அமெரிக்க நாட்டுப் புற மருத்துவ முறையை ஒட்டியதாகும் தமிழக நாட்டுப்புற மருத்துவ முறையில் சில தனித்தன்மைகளும் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புற மருத்துவத்தை சண்முகசுந்தரம் (1994:143) அவர்கள் இயற்கை மருத்துவம் *மதமாந்தரீக மருத்துவம் *நம்பிக்கை மருத்துவம் *திட்டமிட்ட மருத்துவம் *முரட்டு மருத்துவம் என ஐந்தாக வகுத்துள்ளார். மேற்கூறிய கருத்துகளின் வழி ‘இயற்கை சார்ந்த பட்டறிவின் துணை கொண்டு நாட்டுப்புற மக்களால் எளிய முறையில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் என விளங்கிக் கொள்ளலாம்.  இவ்வாறு நாட்டுப்புற மருத்துவ முறைகளை வகைப்படுத்தலாம்.

இயற்கை மருத்துவம் – சித்த மருத்துவம் – மந்திர மருத்துவம் – கை மருத்துவம் – குழந்தை மருத்துவம்
இயற்கை மருத்துவம்
               
      இயற்கை மருத்துவம் ஆனது மனிதனின் நோய்களுக்கு இயற்கையில் கிடைக்கின்ற மூலிகைகளும், தாவரங்களிலும், தாதுக்களிலும், விலங்கு பொருட்களிலும், உள்ள குணங்களை அறிந்து பயன்படுத்துவதாகும். இது இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதே சிறந்ததாகும். மேலும் வீட்டு மருத்துவம், நம்பிக்கை மருத்துவம், என்றும் பகுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற மருத்துவத்திற்கு இயற்கைப் பொருள்களே ஆதாரமாகக் கொள்ளப் படுகின்றன. இந்த இயற்கைப் பொருள்களைக் கொண்டு மருந்துகள் தயாரித்து உட்கொள்வதன் மூலமும், பூசிக்கொள்வதன் வாயிலாகவும் நோய்கள் போக்கப்படும் முறையே இயற்கை மருத்துவ முறையாகும். என்று கூறுகின்றனர்.
 
உணவு
           
      நாட்டுப்புற மருத்துவத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இயற்கைப் பொருள்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாகவே உட்கொள்வதைக் காணலாம். கீரை வகைகள், தண்டுகள், கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம் போன்ற பொருட்களை இயல்பாகவே அம்மா தினசரி சமையலில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை நாட்டுப்புற மருத்துவத்திற்கு சான்றாக

மஞ்சள் காமாலை நோய்
🎯 கீழாநெல்லி மஞ்சள் கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து 9 நாள் சாப்பிட வேண்டும்.

🎯 உப்பில்லாத பால் சோறு சாப்பிட வேண்டும் சித்திரமூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும். கரிசலாங்கண்ணி இலையைக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து நான்கு நாள் சாப்பிட வேண்டும்,

நெஞ்சு வலி              
மான் கொம்பினை, வெண்கடுகு, பெருங்காயம், முதலியவற்றை சேர்த்து அரைத்து மார்பில் பூச வலி குறையும்.

உடம்பு வலி
🎯 ஏலம், இஞ்சிசாறு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

வயிற்று வலி
🎯 சுக்கு பொடி ஒரு சிட்டிகை சிலாத்து பற்பம் சேர்த்து சுடு தண்ணீரில் சாப்பிடவும்

பல் வலி
🎯 நாயுருவியால் பல் விளக்கவும்

🎯 கருவப்பட்டை தூள், படிகார பஸ்பம், கல்நார் பஸ்பம், முதலியவற்றை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் அசைவு, பல் வலி, பல்லில் ரத்தம் ஒழுகல், முதலியவற்றை குணப்படுத்தும்.

மார்பு வலி
         
    தாமரைப்பூ, ரோஜா மொட்டு, பூமி சர்க்கரை கிழங்கு, கோரைக்கிழங்கு செம்பருத்தி பூ, கொத்தமல்லி, அரைக்கீரை விதை, சம எடை எடுத்து அரைப்படி தண்ணீரில் வட்ட காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தத்தோடு, கோழி முட்டை வெள்ளை கரு, கலந்து காலை, மாலை கொடுக்கவும் பத்தியவார சாரம் நீக்கவும்.

முகப்பொலிவு
🎯 ரோஜா இதழ்களைப் பயன்படுத்தவும் 

🎯 பப்பாளி இலை சாறுடன் கடலை மாவு தேன் கலந்து பயன்படுத்தவும்

🎯 தயிருடன் எலுமிச்சை சாறு பயன்படுத்தவும் 
         
     இவ்வாறாக பண்டைய காலம் தொட்டே மனிதன் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்கினான். என்பதை இயற்கை மருத்துவ அறிவையும் அதன் மீது அவன் கொண்ட நம்பிக்கையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வீட்டு மருத்துவம் (Home Medicine)            
      வீட்டு மருத்துவம் என்பது வீட்டில் உள்ள பெரியவர்கள் கையாளும் மருத்துவ முறையானது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிறது. இதனை வீட்டு சிகிச்சை முறை (Home. Remedies) எனலாம். நாட்டுப்புற மக்கள் தம் நாகரிகமும் பண்பாடும் மரபு மீறாமல் பழங்காலம் தொட்டு போற்றுப்படுவதாகும். பண்டைய பண்பாட்டுடன் கலந்த மருத்துவ முறையைப் பாட்டி வைத்தியம் எனச் சொல்வதும் உண்டு இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. மூலிகைகளின் இலைகள், வேர், பட்டை, தண்டு, போன்ற இயற்கையான தாவரங்களிலிருந்து மருத்துவ முறையை அமைத்துக் கொள்வதாகும். இதனை மூலிகை மருத்துவம் அல்லது பச்சிலை மருத்துவம் என்று நம் முன்னோர்கள் கூறுவதும் உண்டு.

பாட்டி வைத்தியம்
          
     வயது முதிர்ந்த பெரியவர்களால் மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையை பாட்டி வைத்தியம் எனப்படும். இது வாய் வழியாக கூறப்படுகின்ற எளிய மருத்துவ முறையாகும். இம்மருத்துவம் மக்களின் பட்டறிவில் தோன்றி அனுபவத்தில் வாழ்ந்து வருவதால் இதன் மீது மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டுப்புற மருத்துவம் பல நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கு தாய் ஆகும் என்பது சக்திவேலின் (1992:173) கருத்தாகும். இதனை மருத்துவத்தின் தாய் என்று கூறுவதும் பொருத்தமாக உள்ளது. குழந்தைகளுக்காக செய்யப்படும் மருத்துவ முறைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாட்டி மருத்துவம் ஆகும்.

ஒடிவு முறிவு மருத்துவம்             
         குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போதோ அல்லது ஓடும் போது திடிரென்று கீழே விழுந்து விட்டாலோ அதனால் ஏற்படுகின்ற ஒடிவு முறிவுகளை மருத்துவர்கள் பலமாக நிமிர்த்தி, நேராக கட்டி, மருத்துவம் செய்யும் முறை ஒடிவு முறிவு மருத்துவம் ஆகும். இம் மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாக வைத்தியக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே செய்து வருகின்றனர். மருத்துவர்கள் தனது கல்வியை ஆசான் எனப்படும் குருவிடம் முறையாக கற்று வருகின்றனர். குரு தன் மாணவர்களுக்கு உடலில் காணப்படும் வர்மங்களையும், நோய் ஏற்பட்டால் அதனை நீக்கும் மருத்துவ முறைகளையும், எண்ணெய், கசாயம், குளிகை, தைலம், போன்ற மருந்து பொருட்களை தயாரிக்கவும் குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கின்றனர். இவர்கள் இதனை குலத் தொழிலாகவே கொண்டிருக்கின்றனர். ஒடிவு முறிவு கொண்ட நோயாளிக்கு நோயின் தன்மையைப் பொறுத்து எண்ணெயில் மூழ்கச் செய்தும், தடவியும் உள் மருந்தாக தைலம் கசாயம்முதலியவற்றைக் கொடுத்தும் நிவாரணம் அளிக்கின்றனர். சான்றாக கேரளா, பாபநாசம், புத்தூர், போன்ற ஊர்களில் இம்மருத்துவ முறை செயல்பட்டு வருகிறது.

நம்பிக்கை மருத்துவம்
            
        நாட்டுப்புற மக்கள் சில நோய்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மருத்துவத்தைச் செய்கின்றனர். இச்செயல் மூடத்தனமாக இருந்தாலும், நம்பினவர் கைவிடப்படார் என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவம் செய்து நோயைக் குணப்படுத்துகின்றனர். நம்பிக்கை மருத்துவ முறையானது. மத-மாந்திரீக மருத்துவம், முன்னெச்சரிக்கை மருத்துவம், முரட்டு மருத்துவம், அதிர்ச்சி மருத்துவம், பிற நம்பிக்கை மருத்துவம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மத மாந்திரீக மருத்துவம் என்பது தனக்கு ஏற்பட்ட நோயைத் தீர்ப்பதற்கு மதத்தையும், மந்திரவாதத்தையும், மாந்திரீகத்தையும், நம்புகின்றனர். பொதுவாக உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, உள்ளம்(மனம்) போன்ற பல காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன. அந் நோய்களைத் தீர்ப்பதற்கு மாந்திரீக மருத்துவத்தை மக்கள் நாடுகின்றனர்.

முன்னெச்சரிக்கை மருத்துவம்
               
       முன்னெச்சரிக்கை மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன்பே  உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்  குறிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகற்காயை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்

திட்டமிட்ட மருத்துவம்
            
     திட்டமிட்ட மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன் அவை ஏற்படாமல் இருக்க உணவுப் பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து பயன்படுத்துதல் திட்டமிட்ட மருத்துவ முறையாகும். என்கிறார்கள்.

முரட்டு மருத்துவம்       
      முரட்டு மருத்துவம் என்பது சில மருத்துவ முறைகளை முரட்டுத்தனமாக கையாண்டு வருவது உண்டு இதனை முரட்டு மருத்துவம் என்று அழைப்பர். சான்றாக: பேய் ஓட்டுதல், சூடு வைத்தல், இரும்பு கம்பியால் அடித்தல், போன்றவற்றைக் கூறலாம்.
அதிர்ச்சி மருத்துவம் 
           
     அதிர்ச்சி மருத்துவம் என்பது அதிர்ச்சி கொடுத்து நோயைக் குணப்படுத்துவதாகும்.அதிர்ச்சி மருத்துவமாக தலையில் தட்டுதல், காதில் ஊதுதல், போன்றவற்றை சான்றாக கூறலாம்.

இலக்கியங்களில் நாட்டுப்புற மருத்துவம்                
   இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, உண்மைகளையும், உணர்ச்சிகளையும், வெளிப்படுத்துவதாகும். இயற்கையோடு இணைந்து வாழும் பாமர மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் படம் பிடித்து காட்டுவது தான் இலக்கியம் என்கிறார்கள். அரசனுக்காகப் போரிடச் சென்று போரில் விழுப் புண்களைப் பெற்ற அரசனின் காயங்களுக்கு அத்தி மரத்தின் பாலை எடுத்துப் போட்டனர். இதனை புறநானூற்றுப் பாடலில் கூறுகிறது.

இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல! (புறம் 180 3 -6 )        
         இறைவனின் கண்ணில் இருந்து குருதி வருவதைப் பார்த்த கண்ணப்ப நாயனார் வனங்கள் எங்கும் சென்று வனத்திடை வளர்ந்த மூலிகைகளைப் பறித்து வந்து மருந்து பிசைந்து வார்த்தார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதனை

“கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள விந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ?” வென்றலு மருங்கு நின்ற
வச்சிலை நாணன் றானு “நானிது வறிந்தே” னென்பான்,  (பாடல் 108)       
       என்ற பாடல் எடுத்து இயம்புகிறது மேலும் வள்ளுவர் திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் பழந் தமிழரின் மருத்துவம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். திருக்குறள் 942 மற்றும் 945 ஆகியவை ‘மருந்து’ (பொருட்பால்) அதிகாரத்தில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வலியுறுத்துகின்றன. முந்தைய உணவு செரித்ததை அறிந்து உண்டால் மருந்து தேவையில்லை (942) எனவும், உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்து அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வு அமையும் (945) எனவும் வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை
     
     நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவத்தின் மீது நம்பிக்கைகள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைகளே நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகளையும் அவற்றின் வகைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.  எனவே மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நாட்டுப்புற மருத்துவமே சிறந்தது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.

துணைநூல் பட்டியல்
1.நாட்டுப்புற இயல் ஆய்வு – டாக்டர் சு.சக்திவேல் மணிவாசகர் பதிப்பகம் நூல் வெளியீடு சென்னை 600108

2.டாக்டர். ச. சண்முகம், சித்த மருத்துவ வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2005.

3.இரா. இராசமாணிக்கனார், தமிழ் இலக்கியமும் மருத்துவமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1978.

4.திருக்குறள் புலியூர் தேசிகன் உரை -பாரதி பதிப்பகம் சென்னை

5.க. நாகராசன், சித்த மருத்துவம் – கோட்பாடும் பயனும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வெளியீடு, 2009.

6.மா. இராமமூர்த்தி – தமிழ் நாட்டுப்புற மருத்துவம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.

7.சி. சுந்தரராமன் – நாட்டுப்புற பண்பாடு மற்றும் மரபு மருத்துவம், மணிவாசகர் பதிப்பகம், மதுரை, 2010.

8.இரா. சண்முகசுந்தரம் – நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், 2001.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மு.சீதளாதேவி 
முதுகலை இரண்டாமாண்டு
Iniyavaikatral_Article_Publishedதமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்
நெறியாளர்
இ.அமுதா
உதவிப்பேராசிரியர்  
தமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்

தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள்|ஓசூர் மணிமேகலை

தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள் - மணிமேகலை
       லக்கியம் என்பது ஒரு இலக்கு. ஒரு இலக்கை மையமாக வைத்துப் பாடுவது, எழுதுவது இலக்கியம் ஆகும். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. ‘நல்லதன் நலமும் தீயதன் தீமையும் இவை என இனம் காட்டி எண்ணத்தை விரிவு படுத்துவது இலக்கியம்’  இப்படிப்பட்ட சிறப்புமிக்க இலக்கியத்தில் குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் பங்கு அளப்பரியதாகும். எக்காலத்தை எடுத்துக் கொண்டாலும் பெண் கவியின் படைப்புகள் சிறப்பு வாய்ந்ததாகவும், உணர்வுப்பூர்வமானதாவும், நிதர்சனத்தை அனுபவித்துக் கூறும் ஆற்றல் உடையதாகவும் விளங்குகின்றன.

சங்க இலக்கியம்
          
       சங்க இலக்கியத்தை நாம் காண்போமாகில் சங்க இலக்கியம் ஒரு பண்பாட்டுப் பெட்டகமாய் விளங்குகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி கற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்துள்ளனர் பெண்பாற்புலவர்கள். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகின் உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல் புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது. அறம், மறம், காதல், இன்பம், இயற்கை இவற்றோடு இணைந்து வாழ்ந்த சங்க காலப் பெண்டிர் கல்வியறிவும் பெற்றிருந்ததால் படைப்பாளிகளாகத் திகழ்ந்து பெண்டிர் வாழ்க்கையைப் பதிவு செய்தனர். தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் சங்க காலத்தில் ஆண்பாற்புலவர்களுக்கு சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை பெற்றிருந்தனர்.

          ஓசூர் மணிமேகலைஅவ்வையார், அஞ்சில் அஞ்சியார், அஞ்சியத்தை மகள் நாகையார், அல்லூர் நன்முல்லையார், அணிலாடும் முன்றிலார் ஆதிமந்தி, ஒக்கூர் மாசாத்தியார் , பாரி மகளிர், வெண்ணிக் குயத்தியார், காக்கைபாடினியார், பொன்முடியார் போன்ற இன்னும் பல பெண்பாற் புலவர்கள் ஆற்றிய அரும்பங்கு அளவிடற்கரியது. சில பெண்பாற் புலவர்களின் இயற்பெயர் தனிப்பாடல்களிலோ அத்தொகுப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பயன்படுத்திய சொற்களிலிருந்து பெயர் வைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, செம்புலம்பற்றி ஒருவர் பாடுகிறார். அக்கவித்திறம் கண்டு செம்புலப் பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.
’ஈன்று புறந்தருதல் முதற்கடமை’ என்ற பொன்முடியாரின் வரி சமூகத்தில் பெண்ணின் நிலையை அடையாளப்படுத்துகிறது. சமுதாய நலனுக்காகவும், வீரத்துடன் செயல்படவும் ஆண் குழந்தைகளைப் பெற்று தருவதும், அவர்கள் போரில் கொல்லப்படும் போது பெருமிதம் அடைவதும்தான் சிறப்பு என சங்க இலக்கியம் புனைந்துரைக்கின்றன.
‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்நடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ‘
         
          குடும்பத்தை விட மன்னனுக்கு, நாட்டிற்குச் செய்கின்ற போர் முதன்மையானது என்ற கருத்து பொன்முடியாரின் பாடலில் வெளிப்படுகிறது. அரசகுல பெண்டிர் முதல் குறமகள் வரை பல்வேறு தொழில் செய்தோறும் பாடியுள்ளனர். பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தம் கவிதைகள் மூலம் உடைத்து எறிந்தனர்.
’செல்வோம் செல்வோம்’  என்று சென்று கொண்டே இருக்கும் தன்மையைப் பெற்ற செல்வத்தைத் தேடி காதலியரை விட்டுப் போக வேண்டாம் என்ற உண்மையை காமக்காணி பசலையார் உணர்த்துகிறார். கைமைத்துயரை தாயங் கண்ணியார் கலங்க வைக்கும்படி பாடியுள்ளார். ‘கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியோடு இனி புல்லென்றனையாள்  வளம் கெழு திருநகர்’ என்று பாடுகிறார் இப்படித் தம் சொந்த முயற்சியால் கவிபாடும் திறனை வளர்த்து சாதித்த பெண்டிர் எத்தனையோ பேர் உள்ளனர்.
         நிறை கர்ப்பமடைந்த பெண் ஆமை மணல்மேட்டில் மறைந்து நின்று புலால் நாறும் முட்டையை இட்டு மறைத்து வைக்கும் பிளவுடைய வாயைப் பெற்ற ஆண் ஆமை, குஞ்சு வெளிப்படும் வரை முட்டையைப் பாதுகாக்கும் என்ற அரிய அறிவியல், விலங்கியல் செய்தியை நப்பசலையார் பதிவு செய்த நுட்பம் வியப்பிற்குரியது.

“நடுங்கின்று அளித்து என்நிறைஇல் நெஞ்சம்
அரும்புகொடி சிதைய வாங்கி கொடுங்கழிக்
குப்பை பெண் மணற் பக்கம் சேர்த்து
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று புதைக்
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை”
 
         எப்படிப்பட்ட அறிவியல் செய்தி பாருங்கள். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்று வள்ளுவர் தாயின் மகிழ்வு எப்போது அதிகம் என்று கூறுகிறார்.  பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற்புலவர் அதற்கும் மேலாக ‘ஈன்ற பொழுதின் அவன் இறந்த செய்தி மகிழ்ச்சி என்கிறார். படிக்கும் போது ஒரு நொடி நம் இதயம் துடிப்பதை நிறுத்திவிடும். கொக்கின் மெல்லிய இறகுபோன்ற நரைத்த கூந்தலை உடைய வயதான தாயின் இளைய மகன் போரில் எதிர்த்து வந்த யானையை கொன்றுவிட்டு அவனும் இறந்துவிட்டான். இச்செய்தி கேட்டு ஈன்ற பொழுதினும் அகம் மகிழ்ந்தாள் என பூங்கண் உத்தரையார் என்ற பெண்பாற்புலவர் பாடுகின்றார்.

நாட்டுப்பற்றுடைய வீரத்தாய் அவள்.
‘மீன்உண்ணக் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவர்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே’
         
       என்று புறநானூறு கூறுகிறது. பிற்கால இலக்கியங்களில் இந்த அளவு முன்னுரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சங்க காலப் பெண்டிர் நிலை பல கூறுகளில் சிறந்து விளங்கினாலும் சமூக அமைப்பில் மேட்டுக்குடிப் பெண்கள், சிறுகுடிப் பெண்கள் என்ற நிலை பிரித்துப் பார்க்கச் சங்க இலக்கியம் களம் அமைத்து தருகிறது. அப்படிச் சிறுகுடிப் பெண்களாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்படுத்தப்படும் விரலியர் அகம் புறமென்னும் இரு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட பெண் ஆளுமைகள் விறலியராக நேரடிப் பதிவு செய்துள்ளனரா என்ற ஆராய்வோமானால் ஔவையார், ஆதிமந்தி ஆகிய இருவர் பாடல்களிலும் விறலியராகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஔவையார் அதியமானின் புகழ் பாடும் பாட்டு ஒன்றில் தன்னை விறலியாக இனம் காட்டிக் கொள்கிறார். ஆதிமந்தியின் பாடலில் தன்னை ஆடு மகள் என்று கூறுவதால் விறலி என்று தெரிகிறது. ஔவை தன்னை விறலியாக எண்ணி மகிழும் சூழலில் ஆதிமந்தி அதை எண்ணி துயரப்படுகிறார். ஆதிமந்தி அரசியாக வாழ்ந்தவள் ஆட்டனத்தியை மணந்து கொண்ட காரணத்தால் ஆடு மகளாக வேண்டிய நிலை எண்ணி வருந்துகிறாள். எனினும் இலக்கியபடைப்பில் எவ்வித தொய்வுமில்லை. ஔவையாரைப் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை.  பெண்பாற் புலவர்களுக்கு பெருமையான எடுத்துக்காட்டாய், வழிகாட்டியாய் விளங்கியவர். ஔவையாருக்குப் பின் வந்த பல பெண்பாற் புலவர்கள் ஔவையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வேதகாலம்
             
       வேதகாலத்திலும் பெண்பாற் புலவர்கள் பெருமைக்குரியவர்களாக போற்றப்பட்டனர். அகஸ்திய பகிநீ, அபாலா ஆத்ரேயி, இந்திராணி போன்ற பலர் வேதம், ஞானம் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.

பக்தி இலக்கியம்
         
       பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்மையார் அந்தாதி என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்தார். இசைத் தமிழால் இறைவனைப் பற்றி முதன் முதலில் பாடியவர் இவர். அற்புதத் திருவந்தாதி போன்ற பதிகங்கள் பிற்கால தேவாரப் பதிகங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றன. ஆண்டாளின் திருப்பாவை பக்தி மட்டுமல்ல இயற்கையின் அழகை இனிய தமிழில் வர்ணிக்கும் அழகுப் பாக்கள். அதன்பின் அதன்பின் பெண்களின் பங்கு அந்த அளவிற்குப் பேசப்படவில்லை.
  கவிக்குயில் சரோஜினி அம்மையார் காலத்தில் தமிழ்ப் பெண்கள் யாரும் பெரிய அளவில் கவிதை எழுதியதாகச் செய்திகள் இல்லை. 1986 இல் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பு ‘சொல்லாத சேதிகள்’ மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் 2001 இல் தமிழ் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ வெளியானது பெண்ணியம், வன்கொடுமை இவற்றை முன்னிறுத்தி பல பெண் கவிஞர்கள் உருவாகினர்.

தற்காலம்         
       தற்காலப் பெண்கவிஞர்கள் பத்திரிகைகளிலும், திரைப்படங்களிலும், முகநூல், இணைய தளங்களிலும் எண்ணற்ற கவிதைகளை படைத்துக் கொண்டுள்ளனர். லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்திரி, வெண்ணிலா என்று இன்னும் பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணற்ற பெண்கள்  உலக அளவில் எழுச்சிமிக்கக் கவிதைகள் படைத்து, சமுதாய அவலங்களின் முகத்திரையைக் கிழித்து ஏற்றமிகு சமுதாயம் உருவாக எழுத்தெனும் கூராயுதத்தை எடுத்து இருக்கின்றனர்.
       
         ‘கவிதைதான் எங்கள் ஆதி இலக்கிய வடிவம்’ என்ற முழக்கம் கவி வரிகளுக்கு மேலும் உரமூட்டுகிறது. சிறுகதை, கட்டுரை, புதினம் போன்ற பல தளத்தில் தங்கள் திறமைகளை நிரூபித்தாலும் கவிதை வரிகளின் வீச்சு, சாடல் இச்சமுதாயத்தை விழிப்படைய வைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமூகம், உலகமயமாதல் என்ற தளத்தில் மரபு, புதுக்கவிதை, நவீன கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களில் பயணித்து தமிழ்க் கவிதையையே உலகமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் சமகாலப் பெண் கவிஞர்கள். உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளை அச்சமின்றி தங்கள் படைப்பில் வெளிப்படுத்துகின்றனர். வாழ்வின் அனுபவங்களை செயற்கைத் தனமின்றி வெளிப்படுத்தும் திறன் இன்றைய பெண் கவிஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பெண்ணியத்தை மதிக்காத சமூகத்தை கேள்விக் கணைகளால், வலிமை வரிகளால் கேட்கத் துவங்கி விட்டாள் பெண். ‘யார் அடிப்பது மனசின் ஒட்டடை..’ என்பது கவிஞர் தாமரையின் வரி. உழைக்கும் பெண்ணின் வலியை இதைவிட வலிமையாகச் சொல்ல முடியுமா!
             
        அண்மையில் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு, பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துகள், பெண்ணிய அரசியல் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பெண் ஆளுமைகள் தங்கள் கருத்தை சமூகத்தில் அறையும் படி சொல்லும் திறத்தைக் கண்கூடாகக் காண்கின்றோம். பாலியல் வன்முறை, வன்கொடுமை போன்றவை கலாச்சாரத்தை சீரழிக்க விடாமல் சாதி, மத, இனப் பாகுபாடு ஒழிய, சுற்றுச்சூழல் தூய்மை, இயற்கை பாதுகாப்பு, நீர் வளம் காத்தல், இளைய சமுதாயத்தை நெறிப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுக் கருவை மையமாகக் கொண்டு எண்ணற்ற கவி படைத்து சமூக சேவை எண்ணத்துடன் பெண்கள் முன் வரவேண்டும்.  ‘வாளினும் கூர்மையானது பேனா முனை’ என்ற கருத்தை உண்மையாக்க பெண் கவிஞர்கள் எழுச்சியுடன் இன்னும் வீரியமிக்க படைப்புகளைப் படைக்க வேண்டும்.

“நுகத்தடியை எறிந்து விட்டு
சகத்தினிலே இன்னும்
சாதிக்க மறந்துவிட்ட
சிறகுகளை விரித்து
புறப்பட்டு விட்டாளவள் புயலாக!
புகழ வேண்டாம் பூவென்று கூறி
விருட்சம் தாங்கும் வேரவள்
தென்றலெனக் கூறி நிறுத்தி விடாதீர்கள்!”
          
         காலத்தால் அழியாத படைப்புகளில் வாழ்ந்து இவ்வுலகை இயக்கிக் கொண்டிருப்பாள் என்றும் பெண்!

Iniyavaikatral_Article_Published
 
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

தமிழ்ச்செம்மல்  ஓசூர்  மணிமேகலை


நிலாப்பெண்ணாகிய கொற்றவை|கவிதை|முனைவர் சாரதா சுப்பிரமணி

நிலாப்பெண்ணாகிய கொற்றவை-கவிதை-முனைவர் சாரதா சுப்பிரமணி
📍 என்னம்மா ஒசரம்மா பனைமரம் தோற்றுப்போகும்

நெடுக வளர்ந்த நெஞ்சுரத்த ரோசக்காரி

எல்லா வேலைகளையும் தான் மட்டுமே

தனி ஒருத்தியாக நின்று செய்யும்

சீலைக்காரி சீலை அவளுக்குப் பிந்தததோ

இல்லை அவளே சீலைய விரும்பி உடுத்தினாளோ

பொருத்தம்னா பொருத்தம் வானுக்கும் நிலவுக்குமானது..!


 

📍 கருங்குவளை கண்ணழகி

ரோசாஇதழ் உதட்டழகி

கைவீசி பூமி மேல நடந்தா

என் ஆத்தா மதுரை மீனாட்சியம்மனே

தேரில் உலா வருவது போல

கண்டோர்கள் கைகூப்பி வணங்கும் கைக்காரி..!


 

📍 காணி நிலம் என்றாலும் தன்

உடல் உழைப்ப மட்டுமே நம்பும்

தன்னம்பிக்கையின் தகவிடம் சுறுசுறுப்பின் ஊற்றிடம்

அவள் கொலுசும் கெட்டிக்கொலுசுச் சத்தமும்

அவளின் இரும்பு இதயத்தை உடைப்பதற்கு

உரசி காலிலேயே தோற்றுப் போய்விடும்..!


 

📍 நீ அன்பு எனும் பூவுக்கு

மட்டுமே முகம் மலர்வாய் புன்னகைப்பாய்

அடுப்பங்கரையினிலே அஞ்சு வகை செய்யியல

நான் உன் முந்தானை பிடிக்கையிலே

என்னை அள்ளி எடுத்து உன்

மார்பக வியர்வைத்துளியோடு ஈரமாக எனை

அனைத்து சமையல் சுவைக்கும் விஞ்சிய

முத்தமிடுவாயே முத்தத்தில் உன் மெய்

முத்தத்திற்கு என்மெய் எல்லாம் பொய்யாகி

உசுறு கொடுத்த நேரத்தை விட

நீ அள்ளி அனைக்கும் ஒவ்வொரு

நொடியும் நான் மீண்டும் பிறக்கிறேனடி உன்

முத்தமழையில் நனைந்து நான் நனைக்கும்

மூத்திரமும்  கழிக்கும் மலமும் முகம்

கோணாமல் வாரி எடுப்பாயடி அன்றலர்ந்த மலராய்..!


 

📍 நான் உணவு உண்ணவில்லை நிறௌய உண்ணவில்லை

என்று கோபப்படும் உன் பொய்

கோபத்தில் கூட என்னையே சுற்றி

எனக்காகவே வாழும் கண்கண்ட தெய்வமடி..!


 

📍 உலகம் சுற்றுது என்பார்கள் நீ எனக்காக

பத்துக்குப் பத்தடி வீட்டையே சுற்றிச்சுற்றி

ரங்கராட்டினத்தையே உன் தோற்கடிக்க வைப்பாயடி

ஒரு கையில் கரண்டி ஒரு கையில்

விளக்குமாறு காலில் சக்கரம் சுழலும்

காலைக் கதிரவனின் ஒளியை உன்

கரங்கள் எதிர்கொண்டழைக்கும்

கொற்றவையாய் நிலாப்பெண்ணே..!


 

📍 அன்னையே எனக்கு உசுறு கொடுத்தவளே

உன் உழைப்பும் தன்னலம் கருதா

மனமும் எடுத்துச் சொல்ல சொற்கள்

இன்றி பிறவியின் பயன் உன்னால்

என்னும் நன்றியோடு அன்பு எனும்

இதய ஆன்மாவிற்கு கவிமாலை சொல்மாலையாய்

இன்னும் நிறைய சொல்வேன் நிரம்பச் சொல்வேன்..!


 

📍 என் ஆத்தா ரோசக்காரி பாசக்காரி

ரோசாப்பூ ரவிக்கைக்காரி

நேர்மைக்காரி வீரமங்கைகாரி..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் சாரதா சுப்பிரமணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

எஸ். எஸ். எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெருங்களத்தூர்,
சென்னை

தாத்தாவின் சில்லறை காசு|கவிதை|ச. கார்த்திக்

தாத்தாவின் சில்லறை காசு-கவிதை-ச. கார்த்திக்
🔔மரத்திற்கு முத்தம்

தருகிறது

மரங்கொத்தி.


 

🔔தாடியுற்ற ஆலமரத்தடியில்

கீழ்

சலூன் கடை.


 

🔔ஊரே உறங்கிய பிறகு

யாரை பார்க்க வந்ததோ

இந்த நிலவு.


 

🔔தன்னைப் போலவே

நடித்துக் காட்டுகிறது

தன் நிழல்.


 

🔔மரங்கள் ஒருபோதும்

இலைகளை சொந்தம் என்று

கொண்டாடுவதில்லை.


 

🔔நூலால் கைது செய்யவே

மனமே இல்லை

சிரிக்கும் பூக்கள்.


 

🔔ஒன்றும் அறியாத மாட்டை

விரட்டுகிறான்

சிறுவன்.


 

🔔குடிகாரனை எப்போது

எழுப்பி வீட்டுக்கு அனுப்பியது

மழைத்துளி.


 

🔔விளையாடும் குழந்தை

பலூனை விற்கும்

வறுமையில்.


 

🔔ஊழல் வழக்கு

உயிரோடு இருக்கிறது

நீதிமன்றத்தில்

உயிர் போன பிறகு.


 

🔔கடல் அலைகள்

யாருக்கும் கைக் கொடுப்பதில்லை

லைகள் போல் பிறந்திருக்கலாம்.


 

🔔நான் நட்டு வைத்த மரம்

என்னோடு பேசியதில்லை

பறவையோடு உறவாடுகிறது.


 

🔔இறப்பதும் தண்ணீரில்

ஒருபோதும்

எந்த மீனும்

கரையை பார்த்ததில்லை.


 

🔔நெல் அறுவடையில்

இந்த முறையாவது

கடன் நீங்குமோ என

தூக்கத்தில் ஒரு ஏக்கம்..


 

🔔வாங்கும் கைகள் இருக்கும் வரை

ரோஜா

விற்றுக் கொண்டுதான் இருக்கும்.


 

🔔வேரின் தன்மையை

வெளிப்படுத்துகிறது

இலை உதிர்ந்த மரம்..


 

🔔தாத்தாவின் சில்லறை காசு

பேரனுக்கு

பொக்கிஷம்.


 

🔔கடவுளுக்கு காது

கேட்டிருந்தால்

கருவறை விட்டு

என்றோ ஓடி இருப்பார்.


 

🔔இருளில் இருந்தே

தாய்மொழி அறிந்தேன்

அது என் தாயின்

கருவறையோடு

ஒட்டியே இருந்தது.


 

🔔நீல வானத்திற்கு

மறு உருவம்

இருள்.


 

🔔உயிர் இல்லாத ஒவியம் கண்டு,

உயிர் பயத்தில் ஒடுகிறது
எலி.

சாயல் வானம்

சிவந்த மேகம்

சூரியன் உறக்கம்.


 

🔔மாலை ரசிக்க

முரசாக ஒலிக்கும்

சிறிய அருவிகள்.


 

🔔பசி மறந்த புன்னகை

யாசகனிடம் கேட்டேன்

வாழ்வின் ரகசியத்தை.


 

🔔நிழலை தேடி

ஓடுகின்றோம்

வெயில்காலத்தில்

மரக்கன்றுகளை

நடுவதை மறந்துவிடுகிறோம்

மழைக்காலத்தில்.
                       
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ்
இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி),
திருப்பத்தூர்

ஆதிகால ‘நாகப் புடவு’ பாறை ஓவியங்கள்|மூ.செல்வம்

ஆதிகால 'நாகப் புடவு' பாறை ஓவியங்கள்
முன்னுரை
         
       தேனி அருகே உலகத்தரம் வாய்ந்த ‘நாகப் புடவு’ பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: ஆஸ்திரேலியப் பழங்குடி கலைகளோடு ஒத்துப்போகும் ஆதிமனிதன் ரகசியங்கள்! வைகை நதி நாகரிகத்தின் தொட்டில் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் குமணன்தொழு அருகே மலைக்குகையில் மிகத் தொன்மையான பாறை ஓவியங்களை கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான, மூ. செல்வம் கண்டறிந்துள்ளார்.

நாகப் புடவு: ஒரு வரலாற்றுப் பெட்டகம்         
      வருசநாடு மலைப்பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ‘நாகப் புடவு’ என்றழைக்கப்படும் பிரம்மாண்ட குகைத்தளம் அமைந்துள்ளது. சுமார் 30 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் குகை, தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட ஆதிமனித வாழ்விடங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஆய்வாளர் மூ.செல்வம் தெரிவிக்கிறார்.

ஓவியங்களின் தனிச்சிறப்பு
         
இந்தக் குகையில் 6 அடி முதல் 20 அடி உயரம் வரை மிக அடர்த்தியாக ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
நாகப் புடவு
வண்ணங்கள்
         
      சிவப்பு நிறம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

நுட்பம்
         
    சொரசொரப்பான பாறைப் பகுதியைத் தேய்த்து வழுவழுப்பாக்கி, திட்டமிட்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சாரங்கள்         
       20 அடி உயரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதைக் கொண்டு, அன்றைய மனிதர்கள் மரச் சாரங்கள் அமைத்து பெரும் சிரத்தையுடன் இவற்றை வரைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஓவியங்களுடன் ஒப்பீடு
         
      நாகப் புடவு இங்குள்ள மனித உருவங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ஓவியங்களை விட முற்றிலும் மாறுபட்டுள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியா (Aboriginal Rock Art) மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள பழங்கால ஓவியங்களோடு இவை ஒத்துப் போகின்றன.
கதிர்வீச்சு உருவங்கள் (Radiation Figures): தலைப்பகுதியில் கதிர்கள் சூழ்ந்தது போன்ற அமைப்பு, தெய்வத் தன்மையையோ, ஆவி வழிபாட்டினையோ அல்லது குழுத் தலைவனையோ குறிப்பதாக இருக்கலாம்.

 
மெய்யியல் கோட்பாடு
         
            நீண்ட உடற்கோடுகள் வானுக்கும் பூமிக்கும் இடையிலான ஐம்பூதங்களின் தொடர்பைக் குறிப்பதாக இருக்கலாம்.

முக்கியக் காட்சிகள்
         
          நாகப் புடவுஎக்ஸ்ரே ஓவியம்: ஒரு விலங்கின் உட்பகுதியையும் காட்டும் ‘எக்ஸ்ரே’ பாணி ஓவியம் இங்குள்ளது. இது ஒரு காட்டு எருமை அல்லது ஆமையைக் குறிக்கலாம். விலங்கு-மனித பிணைப்பு: மனித உருவங்களுக்கு அருகே மான் அல்லது காட்டுப் பசுவின் உருவங்கள் உள்ளன. இது ‘விலங்கு ஆவி’ மனிதனுக்குள் புகுந்து ஆற்றல் அளிப்பதாக நம்பப்பட்ட சடங்கு முறையுடனான பழந்தமிழரின் மெய்யியல் கோட்பாட்டை காட்டுவதாக உள்ளது.

இயற்கை மனிதன்
         
        கை, கால்களில் இலை தழைகளுடன் சிவப்பு நிற கோடுகளால் வரையப்பட்டுள்ள மனித உருவம், அக்கால மனிதர்களின் இயற்கையுடனான பிணைப்பையும், வழிபாட்டு முறைகளையும் பறைசாற்றுகிறது.

முடிவுரை
         
          காக்கப்பட வேண்டிய காலத்தின் சுவடுகள் இந்த ‘நாகப் புடவு’ ஓவியங்கள் வெறும் சித்திரங்கள் மட்டுமல்ல; அவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூதாதையர்களின் வாழ்வியல், மெய்யியல் அறிவு மற்றும் கலை அறிவின் சாட்சியங்கள். அடுத்தடுத்த காலகட்டங்களில் வண்ணங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பது, இந்த இடம் ஒரு புனிதத்தலமாக நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டதை உணர்த்துகிறது. உலகளாவிய தொல்லியல் வரைபடத்தில் தேனி மாவட்டத்தை இடம்பெறச் செய்யும் இந்த வரலாற்றுச் சின்னங்கள், தற்போது இயற்கைச் சீற்றங்களாலும் போதிய பராமரிப்பின்மையாலும் சிதையும் நிலையில் உள்ளன. தமிழக அரசும், தொல்லியல் துறையும் இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மண்ணில் புதைந்து கிடக்கும் இதுபோன்ற உண்மைகளை மீட்டெடுப்பதன் மூலமே, தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உரக்கச் சொல்ல முடியும். ஓவியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய ஆசிரியர் செல்வம் அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலைத் தமிழாசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம்.

திடீர்மாப்பிள்ளை|சிறுகதை|அ.சுகந்தி அன்னத்தாய்

திடீர் மாப்பிள்ளை- சிறுகதை-அ. சுகந்தி அன்னத்தாய்
      சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோட்டில் அமைந்திருந்த அந்தத் திருமண மண்டபத்தின் பிரம்மாண்டமான வாசனை, ஏசி காற்றின் குளிர்ச்சியோடு கலந்து ஒருவிதமான செயற்கை மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பதும், சந்தனம் பூசுவதும் கூட அங்கே ஒரு சடங்காக அல்லாமல், ஒரு கடமையாகத் தெரிந்தது.
சுமதி அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். மேடையில் அவள் மாமியாரின் தம்பி வீட்டிற்கு மருமகளாகப் போகும் அந்தப் பெண் – இந்திரா மதினியின் மகள் – ஒரு தேவதையைப் போல அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் நின்று, அந்தத் தோழி பெண் செய்துகொண்டிருந்த சிறு சிறு உதவிகள் சுமதியின் கண்களைத் தாண்டி, அவளது நினைவுகளைச் சுழற்றி அடித்தன.
கண்களை மூடினாள். அந்த ஏசி குளிர்ச்சி மறைந்து, செம்மண் புழுதி பறக்கும் அடைக்கலாபுரத்தின் வெப்பம் அவளது மேனியில் உரசுவதை உணர முடிந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு…

“சுமதி… சீக்கிரம் வாம்மா, எல்லாரும் கிளம்பிட்டாங்க!” – அம்மாவின் குரலில் ஒரு படபடப்பு இருந்தது.

தேவர்குளத்திலிருந்து அடைக்கலாபுரத்திற்குப் வேணி பஸ்சில் பயணம். ஏழு அல்லது எட்டு வயதுச் சிறுமிக்கு அது ஒரு பெரும் உலகப்போர் போலத் தெரிந்தது. அந்தப் பயணம் எதற்காக?  என்ன விஷேசம்? எதற்காக எல்லாரும் பட்டுச் சேலை உடுத்தி, நகைகளை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்? எந்தக் கேள்விக்கும் விடை தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அம்மா அவளுக்காக அந்த வருடம் வாங்கித் தந்திருந்த ‘காப்பி நிறத்தில் மஞ்சள் புட்டா போட்ட பாவாடையும், மஞ்சள்  சட்டையும்’ தான் அவளது உலகம்.

அடைக்கலாபுரம் விலக்கில் இறங்கியபோது, சாலை அவளை மிரட்டியது. ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இப்போது இருப்பதைப் போலத் தார்ச் சாலைகள் இல்லை. காலில் செருப்பு இருந்தாலும், அதை  கைகளில் பிடித்துக்கொண்டு நடப்பதே அந்த கிராமத்துச் சிறுமிகளுக்குப் பெருமை.

“அம்மா… யாருக்குக் கல்யாணம்?” – சுமதி கேட்டாள்.

“கல்யாணம் இல்ல. நம்ம முத்தாபரணம் பாட்டியின் மகன் ஆசிர் மாமா மகள் இந்திராவுக்குச் சடங்கு.” என அம்மா விரிவா சொன்னது அவளுக்குப் புரியவில்லை. ஆசிர் மாமா யார்? இந்திரா யார்? சடங்குனா என்ன? மனதில் எழுந்த கேள்விகளைப் புறம் தள்ளி, சாலையோர தரிசு நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த கறுப்பு நிற வெள்ளாடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அம்மாவைப் பின்தொடர்ந்து விஷேச வீட்டை அடைந்தாள் சுமதி.

முற்றத்தில் போடப்பட்டிருந்த அந்தப் பந்தல், தென்னங்கீற்றுகளின் வாசத்தோடு சுமதியை வரவேற்றது. அந்த வயதில் அதுவரை ஒரு திருமண மண்டபமும் பார்த்தது இல்லை.

‘ககர’ ‘வகரங்களைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத அந்த மழலைப் பருவத்தில் ஒருமுறை பால்காய்சுற வீட்டிற்கு அம்மாவுடன் சென்று விட்டுத் திரும்பும்போது, பாலத்தில் அமர்ந்திருந்த வக்கீல் தர்மா சித்தப்பாவும்,  சந்திரன் சித்தப்பாவும் எங்க போய்விட்டு வர்ற? என்று கேட்க, ‘ட(க)ல்யாண வீட்டிற்கு’ என்றும், “என்ன சாப்பிட்ட?” என்று கேட்டதற்கு ‘டு(கூ)ட்டாஞ்சோறும் டா(வா)ழைக்காக் டூ(கூ)ட்டும் என்று கூற, அதிலிருந்து அவர்கள் இவளைப் பார்க்கும்போதெல்லாம் அதைச் சொல்லி கிண்டல் செய்வதும் தொடர்ந்தது.

இன்று அந்தப்பந்தல் அவளுக்குக் கண்ணாமூச்சி விளையாடக் கிடைத்த ஒரு மிகப்பெரிய களமாகவே தெரிந்தது.

பந்தலின் ஒரு மூலையில், மஞ்சள் நீர் குளியல் முடிந்து, ஈரத்தலையோடு ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தான் இந்திரா மதினி என்பது கூட அப்போது சுமதிக்குத் தெரியாது. அவரைச் சுற்றிப் பெரியவர்கள் கூடிப் பேசியவாறு அவரை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென மேளச் சத்தம் ஊரையே கூட்டியது. ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“எல்லாம் சரிதான். சடங்கு நேரம் ஆகுது. துணை மாப்பிள்ளைக்கு என்ன பண்றது?” – கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

பெரியவர்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அங்கே விளையாடிக்கொண்டிருந்த சுமதியைப் பார்த்த அடைக்கலாபுரம் பாப்பா சித்தி அவளது கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“ஏன் யோசிக்கிறீங்க? இதோ தூத்துக்குடி பாப்பா மகள் நிக்கிறாளே… இவ அத்தை மக முறைததானே. இவளே துணை மாப்பிள்ளையா நிக்கட்டும். முறைக்கு முறையும் ஆச்சு… பாசத்துக்குப் பாசமும் ஆச்சு!” என்றார்.

எதுவும் தெரியாமல் சுமதி திகைத்து நின்றாள். கூடியிருந்தோர் அவளது காப்பி நிறப் பாவாடையையும் மஞ்சள் நிற சட்டையையும் சரி செய்தனர். ஒரு துண்டை எடுத்து அவளது தலையில் விறைப்பாகக் கட்டினர்.

“இப்பப் பாரு… மாப்பிள்ளை அம்சமா இருக்கான்!” – யாரோ சொல்ல, சுமதிக்குப் பயமும் சிரிப்பும் ஒருசேர வந்தது.

தான் ஒரு பெண் என்பதும், தனக்குக் கட்டப்பட்டிருப்பது ஆண் தலைப்பாகை என்பதும் தெரியாத அந்தப் பால்ய வயதில், அவள் அந்தப் பெண்ணிற்கு (மதினிக்கு) அருகில் ‘துணை மாப்பிள்ளையாய்’ வந்து நின்றாள்.

“என்ன சுமதி.. யோசனையில இருக்க? வா மாப்பிள்ளை வீட்டுச் சார்பா நீயும் சீர் வரிசை வைக்கணும்!” இந்திரா மதினியின் அதே குரல். சுமதி கண்களைத் திறந்தாள்.

காலம் எவ்வளவு விசித்திரமானது! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் யாருக்குத் துணை மாப்பிள்ளையாய் நின்றாளோ, அவருடைய மகளையே இன்று தன் மாமியாரின் தம்பி வீட்டு மருமகளாக வரவேற்க, மாப்பிள்ளை வீட்டார் சார்பாகத் தயாராக நின்றாள். அன்று ஒரு சடங்கிற்காகக் கட்டிய தலைப்பாகை, இன்று இரு குடும்பங்களின் கௌரவமான பந்தமாக மாறியிருந்தது.

சுமதி எழுந்து மேடையை நோக்கி நடந்தாள். அந்தச் செம்மண் வாசனை இன்னும் அவளது மூச்சில் கலந்திருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

அடைக்கலாபுரத்தின் அந்தப் பழைய வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தல், ஒரு தனி உலகமாகவே காட்சியளித்தது. வெயிலின் தகிப்பைத் தடுத்து, தென்னங்கீற்றுகள் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த குளிர்ச்சியைத் தரையில் பரப்பிக் கொண்டிருந்தன. சுமதிக்கு அப்போது தெரியாது, தான் அணிந்திருந்த அந்த மஞஞ்ச புட்டாப் போட்ட காப்பி கலர் பாவாடைக்கும், அந்தத் திடீர் தலைப்பாகைக்கும் இடையே ஏதோ ஒரு விசித்திரமான பொருத்தம் இருப்பதை.

“இங்க பாரு சுமதி, அசைக்காம அப்படியே நில்லு…” என்று சொல்லி, இரத்தினமணி அத்தை அவளது இடுப்பில் ஒரு துண்டை விறைப்பாகக் கட்டினார். காலையில் விளையாடும்போது கலைந்திருந்த அவளது தலைமுடியைச் சரி செய்து, அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை மடித்துக் கம்பீரமாகத் தோளில் இட்டனர்.
பெண்ணாய் வந்து, பிஞ்சுப் பருவத்தில் ஆண் வேடம் பூண்ட அந்தச் சிறுமிக்கு அது ஒரு வேடிக்கை விளையாட்டாகவே இருந்தது. அவள் எதற்காக அங்கே நிற்கிறாள்? அந்தப் பெண்ணிற்கு (மதினிக்கு) அவள் ஏன் துணையாக இருக்க வேண்டும்? – இந்தத் தர்க்கங்கள் எதற்கும் அவளிடம் விடை இல்லை. ஆனால், எல்லாரும் அவளை ‘மாப்பிள்ளை’ என்று அழைத்தபோது, அவளது சின்னஞ்சிறு இதயத்தில் ஒரு புதிய பெருமிதம் கிளைவிட்டது.

மேளச் சத்தம் திடீரென வேகம் எடுத்தது. சடங்குப் பெண்ணான அந்தப் பெண்ணை (இந்திரா மதினி) எங்கோ அழைத்துச் சென்றனர். சுமதியை அவருக்கு அருகிலேயே நடக்கச் செய்தனர்.

“ஊர்வலம் கிளம்புது… எல்லாரும் வாங்க!” – ஒரு குரல் கட்டளையிட, ஊரே திரண்டது.

அடைக்கலாபுரத்தின் தெருக்களில் அந்த ஊர்வலம் மெல்ல நகரத் தொடங்கியது. முன்னால் மேளம் அதிர, பின்னால் பெண்கள் குலவையிட, அந்தச் சிறுமி தலைப்பாகையுடன் கம்பீரமாக நடந்து வந்தாள். வழியோரம் நின்றவர்கள் எல்லாம், “யாருப்பா இந்தத் துணை மாப்பிள்ளை? பொண்ணு கணக்கா அழகா இருக்கே!” என்று பேசிக்கொண்டது அவளது காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
ஊர்வலம் ஊரின் பொதுக் கிணற்றை அடைந்தது. அது வெறும் கிணறு அல்ல; அந்த ஊரின் ஜீவநாடி. அங்கேதான் அந்த முக்கியமான சடங்கு நடந்தது. கிணற்றில் நீர் இறைத்து, ஒரு பித்தளைக் குடத்தில் அந்த நீரை நிறைத்து பெண்ணின் இடுப்பில் ஏற்றினர்.
அந்தப் பிஞ்சுக் கால்களுக்கு அந்தக் கிணறும் வீடும் ஒரு பெரிய தூரமாகத் தெரிந்தது. ஆனால், தான் ஒரு ‘மாப்பிள்ளை’ என்ற அந்தப் பொறுப்புணர்வு, அவளது மெல்லிய கால்களுக்கு ஒரு அசாத்திய பலத்தைத் தந்தது. குடத்தைச் சுமந்து வந்த அந்தப் பெண்ணுடன் அவள் பந்தலை நோக்கித் திரும்பிய அந்த நடை, ஒரு வீரப் பயணம் போலவே அவளுக்குத் தோன்றியது.
மீண்டும் பந்தலை அடைந்தபோது, அங்கே வரிசையாக மக்கள் மொய் எழுதக் காத்திருந்தனர். சடங்குப் பெண்ணிற்கு அன்பளிப்பு வழங்கியவர்கள், அருகில் நின்றிருந்த இந்த ‘குட்டி மாப்பிள்ளை’யையும் கவனிக்கத் தவறவில்லை.

“இந்தாடா மாப்பிள்ளை… உனக்கு ஒரு அஞ்சு ரூபாய்!” – என்று சொல்லி எபநேசர் தாத்தா அவளது கையில் ஒரு சுருங்கிய ஐந்துரூபாய் தாளைத் திணித்தார்.
அடுத்தடுத்து ஐந்து ரூபாய்களும், பத்து ரூபாய்களும் அவளது கைகளில் சேரத் தொடங்கின. காலையிலிருந்து ஓடியாடி விளையாடிய களைப்பெல்லாம் அந்தப் பணத்தாள்களைப் பார்த்தவுடன் மாயமாய் மறைந்து போனது. அந்த எட்டு வயதுச் சிறுமிக்கு, அந்தத் தலைப்பாகை கௌரவத்தையும், அந்த மொய்ப் பணம் ஒரு பெரிய விடுதலையையும் தந்தது போல உணர்ந்தாள்.
அந்தத் தருணத்தில் அவள் ஒரு அத்தை மகள் என்பதோ, சடங்கு என்பது ஒரு உறவு முறையின் அடையாளம் என்பதோ அவளுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், தான் ஒரு ‘மகுடம் சூடிய இளவரசன்’ என்பது மட்டும்தான்.
திடிரென ஒலித்த கொட்டி மேளம் சுமதியின் சிந்தனையைக் களைக்க, மேடையில் இப்போது மணமகன் இந்திரா மதினியின் மகளான மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் அந்த உன்னதத் தருணம் நிகழ்ந்து கொட்டிருந்தது. சுமதி  பழைய நினைவுகளிலிருந்து மீண்டு, மணப்பெண் ரம்யாவின் முகத்தைப் பார்த்தாள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் யாருக்குத் துணையாக நின்று நிறைகுடம் சுமந்தாளோ, அந்தப் பெண்ணின் வாரிசு இன்று சுமதியின் புகுந்த வீட்டு உறவின் குடும்பத்துள் நிறைகுடமாக நுழையப் போகிறாள்.

“மதினி…” – சுமதி மெல்ல இந்திரா மதினியின் கைகளைப் பற்றினாள்.

“அன்னைக்கு உறவுகள் எனக்குக் கொடுத்த அந்த அஞ்சு பத்து ரூபாய் மொய்ப்பணத்தை விட, இன்னைக்கு நீங்க உங்க மகளையே எங்க குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறதுதான் மதினி எனக்குப் பெரிய மொய்!” – சுமதியின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
இந்திரா மதினி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் முப்பது ஆண்டு காலப் பாசம் முழுமையாக உறைந்திருந்தது.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. சுமதியின் வீடு அன்று களைகட்டியிருந்தது. புதுமணத் தம்பதிகளான இந்திரா மதினியின் மகளையும், தன் மாமியாரின் தம்பி மகனையும் விருந்திற்கு அழைத்திருந்தாள் சுமதி.
வீடு முழுவதும் மல்லிகைப் பூக்களின் மணமும், சமையலறையிலிருந்து வந்த நெய் மணமும் கமிழ்ந்து கொண்டிருந்தன. விருந்து முடிந்து எல்லாரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாமியாரும் தம்பியும் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்க, சுமதி மெல்லத் தன் மருமகளை (மதினியின் மகளை) அருகே அழைத்தாள்.

“வாம்மா… இங்கே வந்து உட்கார்,” என்று சோபாவில் தன் அருகில் அமர வைத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு புதிய இடத்திற்கு வந்த தயக்கமும், அதே சமயம் சுமதியின் மீதான மரியாதையும் கலந்திருந்தது.

“உங்க அம்மா கிட்ட பேசினியா? எல்லாரும் சவுக்கியமா?” என்று நலன் விசாரித்த சுமதி, “நான் ஏற்கனவே உனக்குச் சொந்தம் தெரியுமா?” என்று கூறி சிரிக்க,

“ஆமாம் மதினி. அம்மா சொல்லியிருக்காங்க” என்றவள் உரிமையுடன், “நீங்க சமைச்ச வத்தக்குழம்பு இன்னும் நாவிலேயே நிக்குது. உங்க கைமணமே தனி தான் மதினி!” என்று  சொல்ல, சுமதி அவளைக் குறும்பாகப் பார்த்தாள்.

“இரு இரு… என்னது ‘மதினி’யா? உனக்கு நான் அத்தை முறையாக்கும்! உங்க அம்மா இந்திராவுக்கு நான் அத்தை மக முறைங்கிறதை மறந்துட்டியா?” என்றாள் உரிமையுடன்.
ரம்யா வழிந்து கொண்டே, “இல்ல மதினி… அவர் (தன் கணவர்) உங்களை அக்கானு கூப்பிடுறாரே, அதான் நான் மதினினு கூப்பிட்டேன்” என்றாள்.

“அது சரி. தம்பி பொண்டாட்டிங்கிற முறையில என்னை நீ மதினின்னு கூப்பிடலாம், ஆனா ரத்த சொந்தத்துல நான் உனக்கு அத்தை! திவாகர் எனக்குத் தம்பி, அதனால அவன் என்னை அக்கானு கூப்பிடுறான். ஆனா உனக்கு நான் அத்தை முறை” என்று உறுதியுடன் கூறியவள், “அதுமட்டும் இல்ல…ரம்யா! அதைவிட ஒரு பெரிய ரகசியம் இருக்கு. ‘அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பன்’னு ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரியுமா? அன்னைக்கு உங்க அம்மா சடங்குக்கு மீசை முளைக்காத மாப்பிள்ளையா நான் தான் நின்னேன்!” என்றாள் சுமதி.

சுற்றி அமர்ந்திருந்த மாமியாரும் தம்பியும் ஆச்சரியத்துடன் பார்க்க, சுமதி முப்பது  வருஷத்து ரகசியத்தைப் பொட்டலம் பிரித்தாள்.

“முப்பது வருஷம் முன்னாடி அடைக்கலாபுரத்துல உங்க அம்மாவுக்குச் சடங்கு நடந்தப்ப, துணை மாப்பிள்ளையா நிக்க ஆள் இல்லை. அப்போ எட்டு வயசுச் சிறுமியா அங்க விளையாடிக்கிட்டு இருந்த எனக்குத் தலைப்பாகையைக் கட்டி, ஒரு மாலையைப் போட்டு உங்க அம்மா பக்கத்துல உட்கார வச்சிட்டாங்க. அன்னைக்கு உங்க அம்மாவுக்கு நான் தான் ‘திடீர் மாப்பிள்ளை’! அந்த முறையில பார்த்தா, நான் உனக்குச் சித்தப்பா முறை கூட வரும் போலிருக்கே!” என்றாள் சிரித்துக்கொண்டே.

இதைக் கேட்டதும் அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது. ரம்யாவின் கணவன் அவளைப் பார்த்து, “பார்த்தியா… நான் உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எங்க அக்கா உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிட்டாங்க!” என்று கேலி செய்ய, ரம்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“நிஜமாவா அத்தை? உங்ககிட்ட இவ்வளவு பெரிய கதை இருக்கா? அம்மா இதைச் சொல்லவே இல்லையே!” என்று வியந்தாள் ரம்யா.

”ஆமாம்மா… அன்னைக்கு அந்தச் செம்மண் பாதையில நான் கௌரவமா நடந்து வந்ததும், உங்க அம்மா நிறைகுடம் சுமந்தப்ப துணையா நடந்ததும் இப்போ நினைச்சாலும் நேத்து நடந்தது போல இருக்கு. அன்னைக்கு உங்க அம்மாவுக்குத் துணையா நின்ன அந்தச் சிறுமிதான், இன்னைக்கு உனக்குத் துணையா இந்த குடும்பத்தில இருக்கேன். உங்க அம்மாவுக்குத் துணை மாப்பிள்ளையா நின்றதற்கு எனக்கு அஞ்சு, பத்து என மொய்ப்பணம் கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு உன்னை  எங்க குடும்பத்துக்கு மருமகளா அனுப்பி, அதைவிடப் பெரிய பொக்கிஷத்தைத் தந்துட்டாங்க,” என்று சுமதி நெகிழ்ச்சியுடன் முடித்தாள்.
அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது, தன் புகுந்த வீட்டில் தான் ஒரு அந்நியப் பெண் அல்ல; முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சடங்கின் மூலம் பிணைக்கப்பட்ட அதே குடும்பத்தின் ஆணிவேர் என்பது. சுமதியின் தோளில் தலை சாய்த்துக்கொண்ட மருமகள் ரம்யாவின் முகம், ஒரு நிறைகுடமாகப் பொலிந்தது.

காலம் தன் போக்கில் பத்தாண்டுகளை உருட்டித் தள்ளியிருந்தது. அந்தப் பழைய அடைக்கலாபுரத்துச் செம்மண் வாசனை சுமதியின் எழுத்துகளில் இப்போது ஒரு தீராத நதியாக ஓடிக்கொண்டிருந்தது.
சமீபத்தில், திருநெல்வேலியில் நடைபெற்ற ராஜ் மாமாவின் மகள் அமுதா மதினி வீட்டுத் திருமண விழாவில் சுமதி கலந்து கொள்ள சென்ற போது, மண்டபம் முழுவதும் உறவினர்களின் கூட்டம், மேளச் சத்தம், இடைவிடாத பேச்சுக்கள் என கலகலப்பாக இருந்தது. அந்த நெரிசலுக்கு நடுவே, சுமதி தன் கையில் ஒரு புதிய புத்தகப் பொட்டலத்தைச் சுமந்து கொண்டு இந்திரா மதினியைத் தேடினாள்.
மதினி ஒரு மூலையில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமதியைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் கூடியது.

“வா சுமதி.. இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கிறது அபூர்வமாப் போச்சு. பெரிய எழுத்தாளர் ஆயிட்டே. உன் படைப்புகள் ஒன்றொன்றும் பழைய நம்ம ஊரையும், உறவையும் நினைவூட்டுது!” என்று உரிமையுடன் வரவேற்றார்.

சுமதி தான் கொண்டு வந்திருந்த தன் புதிய சிறுகதைத் தொகுப்பான ‘சுருள் வீச்சு’ புத்தகத்தை அவரிடம் நீட்டினாள். “இது உங்களுக்காக மதினி… இப்போதான் அச்சாகி வந்திருக்கு. முதல் சில பிரதிகள்ல ஒண்ணு உங்களுக்குக் கொடுக்கணும்னு தான் எடுத்துட்டு வந்தேன்.” என்றாள்.
மதினி அந்தப் புத்தகத்தை ஆசையாக வாங்கிக் கொண்டார். அட்டையில் இருந்த ஓவியத்தையும், சுமதியின் பெயரையும் மெல்லத் தடவிப் பார்த்தவர், சட்டென்று ஒரு ரகசியக் குரலில் கேட்டார்.

“எல்லாம் சரி… ஆனா ‘நம்ம கதை’ இதுல இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

சுமதி சிரித்துக்கொண்டே, “இல்லை மதினி… அதுக்கான கரு இன்னும் மனசுக்குள்ளேயே இருக்கு. அதை ஒரு தனிப் படைப்பாவே கொண்டு வரணும்னு நினைக்கிறேன். சீக்கிரம் வந்துடும்!” என்றாள்.

அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயன் மாமா மகள் அகிலா மதினி ஆர்வமாக, “அது என்ன விசேஷமான கதை?” என்று கேட்க,
”அது எங்களுக்குள் ஒரு ரகசியம்” என்றார் சிரித்தவாறு இந்திரா மதினி.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அப்படி என்ன ரகசியம்? எங்களுக்கும் சொல்லுங்களேன்!” என்று ஆர்வ மிகுதியில் கேட்டார் அகிலா.

இந்திரா மதினி ‘சுருள் வீச்சு’ புத்தகத்தைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு கலகலவென்று சிரித்தார்.
”அதை இப்போ சொல்ல முடியாது… அந்த ரகசியம் கதையான பின்னாடி நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!” என்று கூறி அந்த ரகசியத்தை ரகசியமாகவே காத்தார்.

அந்தப் பரபரப்பான திருமண மண்டபத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்துச் சடங்கில் எதேச்சையாகக் கட்டப்பட்ட அந்தத் தலைப்பாகை, ஒரு புத்தகத்தின் வடிவில் இருவருக்கும் இடையே ஒரு பாசப் பாலமாக நின்றது. மதினியின் அந்த வசீகரப் புன்னகையும், “நம்ம கதை” என்று அவர் கேட்ட அந்த உரிமையும் சுமதிக்குள் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.
அந்தப் பழைய நினைவுகளின் ஈரத்தோடும், மதினிக்குக் கொடுத்த வாக்குறுதியின் கனத்தோடும், அன்று இரவு தன் மேசை விளக்கின் ஒளியில் சுமதி ஒரு புதிய காகிதத்தை நிமிர்த்தினாள். தீராத அன்பின் சாட்சியாக, ‘திடீர் மாப்பிள்ளை’ என்று தலைப்பிட்டு அந்தக் கதையை எழுதத் தொடங்கியிருந்தாள் சுமதி.

சிறுகதையின் ஆசிரியர்

அ. சுகந்தி அன்னத்தாய்,

தமிழ்த்துறை
உதவிப் பேராசிரியர்,

ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட்  மகளிர் வைணவக் கல்லூரி,

குரோம்பேட்டை, சென்னை. 44.

Contemporary Social Impacts in the Poetry of  Palani Bharathi|V. Jayakumar

Abstract
        Literature has been a mirror of time from the Sangam period to the present. Poetry is the oldest form of literature and also being as universal language. Poetry reflects the problems of all fields of society and seeks to  find its solutions. The poems of the poet Palanibharathi, who deals in his poetic style in a proper way and become an echo of the contemporary social influences. The purpose of this article is to show that not only his simplicity but also the aesthetics of the poems and the sense of social welfare which denotes the uniqueness of his poems. Those poems make the reading enjoyable and make you think through the poetic works of the poet Palanibharathi.

Keywords: Society; Social Impact; Representation; Catastrophe; Religion; Ethnicity; Violence; Godhra; Baghdad; Tsunami; Rain; Marakkanam.


“கவிஞர் பழநிபாரதியின் கவிதைகளில் சமகால சமுதாயத் தாக்கங்கள்”

ஆய்வுச் சுருக்கம்
      படைப்பிலக்கியம் என்பது சங்க கால முதல் இக்காலம் வரையிலும் காலக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது. படைப்பிலக்கியத்தில் கவிதை  மிகப்  பழமையானது, மொழியைப் போன்று உலகளாவியது. சமுதாயத்தின் அனைத்துவித களங்கள் சார் சிக்கல்களைப் பிரதிபலித்து அதற்குரிய தீர்வு காண முற்படுவதும் கவிதை. இதனை உரிய வகையில் தன் கவிதை நடையில் கையாளும் கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள் சமகாலத்தே நிகழும் சமுதாயத் தாக்கங்களின் எதிரொலியாக அமைகின்றது. பழநிபாரதியின் கவிதைகள் வாசகனின் வாசிப்பினை சுவையாக்குவதற்கும் சிந்திக்க வைப்பதற்கும் கவிதைகளின்  எளிமை, அழகியல் மட்டுமல்ல, கூடுதலாக சமுதாய நலன் சார் உணர்வும் அவர் கவிதைகளின் தனித்துவம் என, பழநிபாரதியின் கவிதை நூல்கள்  வழியாக  எடுத்துக்காட்டுவதாக  இக்கட்டுரையின்  நோக்கம் அமைகின்றது.
 
குறிப்புச் சொல் : சமுதாயம் – தாக்கம் – வெளிப்பாடு – பேரழிவு – மதம் – இனம் – வன்முறை – கோத்ரா – பாக்தாத் –  ஆழிப்பேரலை – மழை – மரக்காணம்.
முன்னுரை
      சங்ககாலத்தில் காதலையும் வீரத்தையும் போராட்ட காலத்தில் விடுதலை வேட்கைகளையும் பிற்காலத்தை நவீனத்துவத்தையும் நகரமயமாதலையும் வெளிக்கொணரும் கருவியாக இருந்து வருகிறது. அவ்வகையில் கவிஞர் பழனி பாரதி சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை தன் கவிதை வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது படைப்புகள் அமைகின்றன. குறிப்பாக கவிஞர் பழனி பாரதியின் கவிதைகளில் இயற்கை பேரழிவும், சமுதாயத்தில் அரங்கேற்றமாகும் சாதிய இனப்படுகொலைகளும், நிறம் சார்பாக சமுதாயத் தாக்கங்களின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சமுதாயத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் இன்னல்கள் இழப்புகள் அவரைப் பெரிதும் பாதித்துள்ளது என்பது அவர் கவிதைகளின் வாயிலாகப் புலப்படுகிறது.

கோத்ரா
பேரழிவுகள் இருவகைகளில் நிகழ்கிறது. இயற்கை சீற்றம் மற்றொன்று இன மத பிரிவினைகளால் நிகழ்த்தப்படுகின்றது. மத வெறியின் எதிரொலியாக,

“ஓலம்
நடு எழுத்து வெட்டப்பட்டு
குஜராத்தில்
ஓங்கி ஒலிக்கிறது
ஓம் என்று.   
பழம் கொறிப்பதை மறந்து
பிணம் கொறிக்கத் தொடங்கிவிட்ட
இராமர் அணில்களுக்காக 
ரயில் பெட்டிகள்
சவப்பெட்டிகளாகி
சுமந்து வருகின்றன
மனிதர்களை”   (புறாக்கள் மறைந்த இரவு பக்21-22)
      27 பிப்ரவரி 2002 அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது அயோத்தியில் இருந்து திரும்பிய இந்து யாத்திரிகர்கள் மற்றும் கர சேவகர்கள் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீ விபத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது எனலாம். கோத்ரா ரயிலில் மூட்டப்பட்ட மதத்தீயில் குறி வைத்து சாம்பலாக்கப்பட்ட போது தானும் சாம்பலானதாக கவிஞர் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

பாக்தாத்
     ஒவ்வொரு காலத்திலும் நடைபெற்ற ஒவ்வொரு போரும், அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் பயிற்சி பெற, ஆதிக்கம் செலுத்த முயலும் சுயநலத்தினையும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஏற்படும் இழப்புகள் சமூக நீதிக்கு எதிரானதாகவே அமைகிறது. அவ்வகையில்,

“அண்ணாந்த குழந்தைகளின்
சூரியனைத் துண்டாடுகிறது
வானூர்திகளின்
சீரும் இருட்டு
ஏந்தும் கைகளில்
வந்து விடுகின்றன
அவர்களின்
கடைசிச் சாப்பாடு”   (புறாக்கள் மறைந்த இரவு ப-23)
      ஈராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போரில் ஆயிரக்கணக்கானப் பொதுமக்களை கொன்றதும், சித்திரவதை செய்ததும் முற்றிலும் நீதிக்கு எதிரானதாகும். மனித வரலாற்றில் இது போன்ற இனப்படுகொலைகளும் கொடூரமும் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. இந்த அநீதியின் பிரதிபலிப்பாக இக்கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாவற்றையும் இழந்த மனித இனத்தின் குரலாகவும் ஒரே போரில் அகதிகளான மக்களின் இன்னல்களையும் கவிஞர் பழனி பாரதியின் வரிகள் சுட்டிக் காட்டுகின்றன. வன்முறைகளுக்கு எதிராக வினா எழுப்பும் கடமை எழுத்தாளர்களுக்கும் உண்டு. சமகாலத் தாக்கங்களுக்கு குரல் கொடுக்கும் நிலைப்பாட்டினை கவிஞர் கொண்டிருப்பது இக்கவிதை வாயிலாக அறியப்படுகிறது.

ஆழிப்பேரலை
        மழை இயற்கையின்  அடையாளம். இயற்கை இரு வகைகளில் பிரதிபலிக்கக் கூடியது. ஒன்று அழகு மற்றொன்று அழிவு. அதற்கு உதாரணமாக,

ஒதுங்கும்
மனிதர்கள் பார்த்து
ஓலை குடிசைக்குள்
விம்மி விம்மி
அழுதது மழை… (புறாக்கள் மறைந்த இரவு ப-26)
     ஆழிப் பேரலை என்பது கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம். நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் ஒரு பெரிய கடல் அலை என்று அறிவியல் கூறுகின்றது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரிழந்தனர். ஆழிப்பேரலையின் நீரிலும் நிலத்திலும் பாதிப்பாதியாகப் புதைக்கப்பட்ட உடலைப் பார்த்து கடலோர குடிசைகள் அழுவதாக கவிஞர் அழுகையை பதிவு செய்கிறார்.  அகதிகளின் வாழ்க்கையை ஆழிப்பேரலை ஏராளமான மக்களுக்கு கொடுத்துச் சென்றது என்ற கருத்து ஒரு கவிஞராக மட்டுமல்ல சாமானிய மனிதனாக அவரின் மனவேதனையை சுட்டிக் காட்டுகிறது.

மழை 2005
         
     மழையை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அதே மழையின் சீற்றம் மனிதர்களுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தக் கூடியது. அழகுக்கு உவமையாகும் மழை பல மக்களின் அழுகைக்கு காரணமான சூழலைக் கவிஞர்

போரில்
அனாதைகளான பெண்களின் கண்ணீரை போல்
கொட்டி தீர்த்தது மழை              (புறாக்கள் மறைந்த இரவு ப-27)
       2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழையில் ஆயிரக்கணாக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த மழையின் பொழிவு போரில் உறவுகளை இழந்து தவிக்கும் பெண்களின் கண்ணீர் கொட்டித் தீர்ப்பது போல் பெய்ததாக கவிஞர் உவமை கூறுகிறார். உடமைகளையும் உறவுகளையும் இழந்து தவித்த மக்களின் துன்ப நிலையை கவிஞர் தன் கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

மரக்காணம்
     
“வன்முறை” மனிதம் தன் சுயத்தை மறந்து வேறு ஒன்றை சுயமாக நிரூபிக்க கையில் எடுக்கின்ற தவறான முறைமை எனலாம். அதன் நிரூபணமாக
சித்ராப் பௌர்ணமி
நிலவில் தெறித்தது
யாருடைய ரத்தம்  (வனரஞ்ஜனி ப – 103 )
      என்ற கவிதையானது தமிழகத்தையே உலுக்கிய 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இந்த வன்முறையில் பல குடியிருப்புகள், தலித் மக்களின் கடைகள், அரசு பேருந்துகள் உட்பட சில வாகனங்கள் தீக்கு  இரையாக்கப்பட்டும், பல மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சாதிய மக்களின்   குடியிருப்புகள் மட்டும் எரிக்கப்பட்டிருப்பதும், சாதிய அடக்குமுறையையும் பறை சாற்றுகிறது. இனம் சார் பிரிவினையும், சாதியமும் ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்தில் இன்னும் அரங்கேற்றமாகிக் கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை ஏற்க முடியாத ஓர் சக மனிதராக கவிஞர் கேள்வி எழுப்பும் தன்மையில் சாமானியர்கள் குரலாக இந்தக் கவிதை அமைகிறது.

கல்பர்கி
         
      படைப்புகளின் வழியாக ஒர் எழுத்தாளர் சக எழுத்தாளரின் குரலாக ஒலிப்பது சாத்தியமாகிறது. ஒருமித்த  கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, பிரதிபலிப்பது போல அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது படைப்பாளனின் கருத்துரிமையை பறைசாற்றுகிறது. அவ்வகையில் கவிஞர்

அவன் எழுத்தை
அழிக்க நினைக்கிறீர்கள்
சாகாத அவனது எழுத்து
முன்னிலும் வேகமாய்
மறுவாசிப்புக்குள்ளாகும்
உங்கள் மனைவியின் மூலமாக
உங்கள் மகனுக்கு   ( வனரஞ்ஜனி ப – 96 )
         
      என்ற கவிதையில், கர்நாடக மாநில மூத்த எழுத்தாளரான கல்பர்கி 30 ஆகஸ்ட் 2015 படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக வினா எழுப்புகிறார். சக எழுத்தாளருக்கு நிகழ்ந்த வன்முறை கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது. கல்பர்கியின் எழுத்துக்கள் அவரின் கொலைக்கு காரணமான வன்முறையாளர்களை, அவரது படைப்புகள்  விரைவாக   மறுவாசிப்புக்குள்ளாகும் என்கிறார் கவிஞர் பழநிபாரதி. சக எழுத்தாளனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு  பதில் கேட்கும் கவிஞரின் இக்கவிதை, எழுத்தாளர்களுக்கு துணை நிற்கும் உளப்பாங்கினை வெளிப்படுத்துகிறது.

விஷ்ணுப்பிரியா ஐ.பி.எஸ்.
         
       தனி மனிதனுக்கு சமூகம் கொடுக்கும்  அழுத்தங்கள் நிறைந்த சூழல், அவனது சுயத்தினை மாற்றுகிறது அல்லது காணாமல் போகச் செய்கிறது.  அழுத்தங்களில் காணாமல் போன உண்மைக்காக,

உண்மை
கண்ணாடியின் முன்
தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது
கண்கள்
டைந்த சில்லுகளில்
உண்மையின் ஒரு முகம்
பத்து
நூறு
ஆயிரம்
லட்சமென
விரியத் தொடங்கின ( வனரஞ்ஜனி ப – 74 )
       என்ற கவிதை வரிகள் இடம்பெறுகின்றன. உண்மையாக இருப்பவருக்கு சமுதாயத்தில்  பல்வேறு கோணங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வகையில்  காவல் துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா ஐ.பி.எஸ் அவர்களின் தற்கொலை கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது. விலை பேச முடியாத ஓர் காவல்துறை அதிகாரியின் இழப்பு மக்களிடையே பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மைக்காகக் குரல் கொடுக்கும் சமுதாய உறவுகளில் ஒருவராகக் கவிஞரின் இக்கவிதை அமைகிறது.

வைக்கம் விஜயலட்சுமி
         
       இசை யாவரையும் மகிழ்விக்கின்றது. குரல் வெறும் ஒலி மட்டுமல்ல. அது உயிரின் ஊற்றாக அமைகின்ற ஒன்று என்பதைக் கவிஞர்

உன் குரலில் பெருகுகிறது
ஒரு ஜீவநதி
நீ பார்க்கவே இல்லை
பாடிக்கொண்டே இருக்கிறாய்
சூரிய ஒளியில் மின்னியபடி
காற்றில் விரியும்
ஒரு கலாபத்தில்
விரிந்து சுழல்கின்றன
உன் நீல விழிகள்          ( வனரஞ்ஜனி ப – 60 )
       என்ற கவிதை வரிகளில் சுட்டுகிறார்.பார்வைப் புலமிழ்ந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களின் குரலுக்குப் பரிசாக இக்கவிதை அமைகின்றது. கலைத்துறையில் திறன் மூலமாக உயர முடியும் என்பதற்கு உதாரணமாக அமையும் அவரின் உழைப்பை ஊக்குவிக்கும்  கவிஞர் உளப்பாங்கு இக்கவிதையில் புலப்படுகிறது.

அய்லான்
         
     அகதிகளின் வாழ்க்கை வலிகளால் நிரம்பப்பெற்றது. அவர்களின் வாழ்க்கை சமநிலை இழந்த வாழ்க்கைக்கு உதாரணமாகிறது.

நீ கடவுளைப்
படம்பிடித்திருக்கிறாய்
டெமிர்
அவன்
இந்த உலகைப் பார்க்கப் பிடிக்காமல்
தலை கவிழ்ந்துபடுத்துக்கிடக்கிறான்     ( வனரஞ்ஜனி ப – 31 )
         2015 ல் துருக்கியில் போட்ரம் கடற்கறையில் உயிரிழந்த அகதிச் சிறுவன் அலன் குர்தி     (அய்லான்)  உடலைப் புகைப்படக் கலைஞர் நிலுபர் டெமிர் எடுத்த புகைப்படம் அகதிகளின் நெருக்கடியை உலகிற்கு உணர்த்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (Time Magazine time. com/ 4162306 / alan-kurdi-syria-drowned-boy-refugee-crisis/) இச்செய்தியை உலகிற்க்கு காட்டிய புகைப்படக் கலைஞரின் செயலைக் கண்டு நெகிழும் கவிஞரின் படைப்பாக இக்கவிதை அமைகிறது.

முடிவுரை
🎯 கவிதைகள் படைப்பாளரின் படைப்புத் தன்மைகளில் வேறுபடுகின்றது. 

🎯 அவ்வகையில் கவிஞர் பழநிபாரதியின்  கவிதைகள்  சமகால தாக்கங்களின் வெளிப்பாடாகவே அமைகின்றன.

🎯 சமகாலக் கவிஞர்களின்  கவிதைகளில் கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள்  வேறுபட்ட பார்வை கொண்டதாகவும்,  சமூக நலன் கருதும் தனித்த சொல்லாட்சித் தன்மையோடும், இருப்பது அவரின் தனித்தன்மையை  பதிவு செய்கின்றது.

Bibliography

1.Palani Bharathi. Puraakkal Maraindha Iravu (The Night When the Doves  Disappeared).Chennai: Kumaran Publications, 2014.
2.Palani Bharathi. Vanaranjani. Chennai: Kumaran Publications, 2016.
துணைநூற் பட்டியல்
1.புறாக்கள் மறைந்த இரவு, கவிஞர் பழனிபாரதி,2014. குமரன் பதிப்பகம் – 19 கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை–17.
2.வனரஞ்சனி, கவிஞர் பழனிபாரதி,2016. குமரன் பதிப்பகம் – 19 கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை–17.
வலைதளங்கள்
1.Time Magazine time.com/4162306/alan-kurdi-syria-drowned-boy-refugee-crisis/..
2.விக்கிப்பீடியா
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
Iniyavaikatral_Article_Publishedவ.ஜெயக்குமார்,
பகுதி நேர முனைவர் பட்ட  ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்-28.
ஆய்வு நெறியாளர்
முனைவர் மூ.சிந்து,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்-48.

அனுபவ பாடம்|சிறுகதை|ரா. ஷர்மிளா

அனுபவ பாடம் - ரா. ஷர்மிளா
கேட்ரீங் டெக்னாலஜி காலேஜ் பஸ் பல கதைகளை சுமந்து சென்றது. சென்னை டீ. நகரில் இருந்த காலேஜ்க்கு எதுக்கு காலேஜ் பஸ்ல போனும்.  மைலாபூருக்கும்  டீ.நகருக்கும் அரசு பேருந்தில் சென்றால் தூரம் அரைமணி நேரம். காலேஜ் பஸ்லயும் அதே நேரம் தான். ஆனா பிரண்ஸ் கூட நிறைய கதை பேசலாம்.
         
தீபா வீட்டுல அடுக்கடுக்கா கேள்விகள். அவ படிக்கிற கேட்ரீங் டேக்னாலஜிக்கு கிண்டல் வேற.

தீபா அம்மா: “நீ படிச்சுட்டு செய்யறத நான் படிக்காமலே செய்யறேன்”

தீபா அப்பா: த பாருடி பணக்காரங்க விதவிதமா சாப்டுவாங்க. ஸ்பிரீங் ரோல், சூுசி, ராப், பர்கர், மேக்ரோனி, பாஸ்தா, நூடில்ஸ் இதெல்லாம் உனக்கு தெரியுமா. வத்தக்குழம்பு, மோர்குழம்பு, சாம்பார், ரசம், புளிசாதம் இதுகள வச்சுட்டு நீ கடை போடற.

அம்மா: அது சரி. நூலப் போல சேல தாயப் போல பிள்ள. என் சாமார்த்யம் உங்க கண்ணுக்கு தெரியல.

தீபா: அம்மா நான் படிச்சுட்டு வேலைய கத்துட்டு பிசினஸ் பன்ன போறேன். அப்போ என் யூடியூப் சேனல்ல பழங்கால சமையலையும் புதுயுக சமையலையும் பயன்களோட சொல்ல போறேன்.

அம்மா: அப்படி சொல்லு என் தங்க கட்டி. பாரம்பரிய சமையல்ல எவ்வளவு ஆரோக்கியம். நாம தான் அதை எடுத்து சொல்லனும்.  அப்புறம், ஏண்டி காலேஜ் பஸ்ல லவ் ஸ்டோரி ஓடுதுன்னு சொன்னியே. எல்லாரும் ஏதோ ஜோடியா லவ்வர்ஸ் பார்க் மாதிரி இருக்குன்னு சொன்னியே.

தீபா: ஆமாம்மா. லவ் பன்றது இப்போ ஒரு டைம் பாஸ்.

அப்பா: நீ கவர்மென்ட் பஸ்ல போ. கண்ணை, காதை, வாயை மூடிட்டு இரு தங்கோ. அப்ப தான் மனசு அலைபாயாது. என் பொன்னு என் சொத்துன்னு பெருமைபட்டார்.

தீபா: எனக்கு திருமண வாழ்க்கையை விட என் லட்சியம் தான் முக்கியம் பா.

அம்மா: என் வைராக்கியம் அப்படியே இருக்கு என் பொன்னுகிட்ட.

அப்பா: பிரசவ வைராக்கியம், மரண வைராக்கியம்ன்னு அந்த காலத்துல சொல்லுவாங்க. அது நிரந்தரம் இல்லன்னும் சொல்லுவாங்க.

அம்மா : ஆமா. சில பேரு காரியம் ஆகற வரை வைராக்யமா இருப்பாங்க. காரியம் ஆன அப்புறம் எல்லாத்தையும் விட்டுடுவாங்க.

தீபா: இப்ப என்ன சொல்ல வர்றீங்க.

அம்மா : நீ சமையல்ல “டாப்பா” வருவே. ரொம்ப ஆர்வமா இருக்கேன்னு சொன்னோம்.

சில வேலைக்கு அறிவு வேனும். சில வேலைக்கு பேச்சு சாமார்த்யம் வேனும். சில வேலைக்கு அழகுணர்ச்சி வேனும்.
உதாரணத்துக்கு ஒரு பேங்கல வேலை செய்யறவளுக்கு பொது அறிவு வேனும். ஒரு துணி கடைல வேலை செய்யறவளுக்கு பேச்சு சாமர்த்யமும் அழகுணர்ச்சியும் வேனும். சமையல் வேலை செய்யறவளுக்கு அழகுணர்ச்சியும் பேச்சு சுவாரஸ்யமும் வேனும்.
தீபாக்கு அழகுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் நிறைய இருந்தது. ஆனால் பேச்சு சாமார்த்யம் தான் கம்மி.
அவ காலேஜ் பிரபசர் அதை தான் சொன்னார். “தீபா நம்ம வேலைல சோசியலா பழகறது ரொம்ப முக்கியம். நீ உன் வட்டத்தை விட்டு வெளியில வரனும்”. தீபா குடும்பம் பழமைவாதிங்க. இந்த காலத்து “தேவை” புரியாதவங்க. அவ வேலைல இருந்த வேகம் பேச்சுல இருக்கல.

தீபா கனவுகள் சுமந்து லட்சியப் பார்வையோட காலேஜ்க்கு போனா. அவ நினச்ச மாதிரியே படிப்பு முடிஞ்சு கேம்பஸ் இன்டர்வியூல ஒரு பெரிய ஹேட்டல்ல வேலை கிடைக்குது.
வேலைக்கு போக அப்பா, அம்மா கிட்ட கேட்டு புது வண்டி வாங்கறா. அவ வேலைக்கு சேரும் பொழுதே
சில ரூல்ஸ் சொன்னாங்க. சுத்தமா இருக்கனும், பீக் சீசன்ல லீவ் போட கூடாது, கஸ்டமர்ஸ் கம்ளெயின்ட் பன்ன கூடாதுன்னு முதலாளி சொன்னாரு. தீபாவும் ஆமோதித்தாள்.
தீபா தன்னோட வேலை, சம்பளம் பத்தி அப்பாகிட்ட சொன்னா.

தீபா அப்பா: கவர்மென்ட் வேலைல கார்ப்ரேட் கம்பெனி வேலைல நிறைய முதலாலிங்க இருப்பாங்க. பிரைவேட் கம்பெனில, பிரைவேட் ஸ்கூல்ல, ஹேட்டல்ல ஒரு முதலாளி தான். அந்த ஒரு முதலாளிய திருப்தி படுத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம ஒரு பத்து வருஷம் ஓடி போயிடும்.

தீபா: ஆமாம்பா நல்ல பேரு எடுத்துட்டா நிறைய நாள் வேலை பார்கலாம். முன்னேற்றம் அடையலாம்.

தீபா அப்பா: நீ நல்லா வருவேம்மான்னு வாயார மகளை ஆசிர்வதித்தார்.

அந்த ஹேட்டல் ல தினசரி உணவு மற்றும் கல்யாண கேட்ரிங் கும் எடுத்து செய்வார்கள். இவள் பொறுப்பாக இருப்பதால் “கல்யாண கேட்ரிங்” குழு ல வர்ற பெரிய ஆர்டர்களை பாத்துக்கிட்டா. சாப்பாடு ருசியா இருக்கனும், ஆரோக்கியமா இருக்கனும், சரியான அளவு ல இருக்கனும். சாப்பாடு விக்கற விலைக்கு அதை வீண் பன்ன கூடாதுங்கறது தீபாவின் எண்ணம்.

ஒரு பெரிய மனிதரின் கல்யாண ஆர்டர் வந்தது.

கஸ்டமர்: கல்யாண சாப்பாடு, தாம்பூலம் எல்லாம் ஐயர் சம்பிரதாயம் படியே இருக்கட்டும். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷனுக்கு பாப் கான், பேல் பூரின்னு இல்லாம ஏதாவது வித்யாசமா சொல்லுங்க மேடம்.

தீபா: காபி, டீ கூட ராகி ஹாட் சாக்கலேட், மோஜிடோ பானம் குடுக்கலாம்.
அப்புறம் பாம்பே ஜவ்வரிசி வடை, சேலத்து தட்டு வடை எங்க கேட்ரீங்கோட சிக்னேசர் டிஷ் அதை கண்டிப்பா ரசிப்பாங்க சார்.

கஸ்டமர்: சரிங்க மேடம் முந்நூறு பேர் இரண்டு வீட்டுலயும் சேத்து வருவாங்க. வர்றவங்க சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லனும். அது தான் முக்கியம்.

தீபா: எங்க சமையல் உங்களுக்கு நல்ல பேரு வாங்கி குடுக்கும் சார்.
அவ சாப்பாடு வீண் பன்னாம சரியா சமைக்கனும்ன்னு நினச்சது ஆபத்தா போயிடுச்சு.

முந்நூறு பேருன்னு கணக்கு சொன்னாரு. ஆனா, முந்நூத்தி அம்பது பேர் வந்தாங்க. பேல் பூரி, லேமன் ஜூஸ் காப்பி போட்டு கடைசில வந்தவங்கள சமாளிச்சா தீபா.
ஸ்பெஷல் அயிட்டமான “பாம்பே ஜவ்வரிசி வடை, சேலம் தட்டு வட, ராகி டார்க் சாக்லேட், மோஜீட்டோ  தீர்ந்து போயிடுச்சு.
கஸ்டமர் பணம் குடுக்க வந்தப் போ கம்ளெயின்ட் பன்றாரு

கஸ்டமர்: உங்க பேரு மார்க்கெட்ல நல்லா இருக்கறதால தான் நான் செலவு ஆனாலும் “நல்ல பேர் ” கிடைக்கும்ன்னு நினச்சேன்.
முதலாளி: ஏன் சார்? நல்லா நடந்தது இல்ல.

கஸ்டமர்: எனக்கு திருப்தி இல்ல. கடசியா வந்தவங்களுக்கு சாப்பாடு சரியா இருக்கல

தீபா: சார் நீங்க முந்நூறு செல்லிட்டு முந்நூத்தி ஐம்பது பேர் வந்தா நாங்க என்ன செய்யறது? சமாளிச்சு செஞ்சோம்.

கஸ்டமர்: அதிக ஆளுங்க வந்தா என்ன பன்னனும்ன்னு நீங்க கேட்கவே இல்ல.

தீபா: இந்த அனுபவம் பல திருமணங்கள்ல எங்களுக்கு வந்திருக்கு. நாங்க சமாளிக்க தான் சில உணவுகள வச்சிருக்கோம்.

முதலாளி: தொழிலதிபர், சினிமா பிரபலங்கள் எதை எதிர்பாப்பாங்கன்னு எங்களுக்கு தெரியும். நீங்க விஜய் டிவி புகழ் ஆலியா மானசாவோட க்ருஹப்ரவேசம் பாத்தீங்களா? நாங்க தான் பன்னோம். சின்ன சின்ன கம்ப்ளெயின்ட் இருக்கலாம். எங்க கஷ்டத்தை வார்த்தைகள்ல விளக்க முடியாது சார்.

கஸ்டமர்: புரியுது சார். சொல்லனும்ன்னு தோனிச்சு. அதான். இந்தாங்க உங்ககிட்ட பேசின பணம்ன்னு குடுத்தாரு.
அவர் போன பிறகு முதலாளி தீபாக்கு “அனுபவ பாடம்” எடுத்தாரு. இதோ பாரு தீபா கஸ்டமர் குறை சொன்னா நாம குறையே இல்லன்னு வாதாடறத விட நிறைகள சொல்லி திசை திருப்பனும். நீங்க நாம பன்ன தப்பையே சொல்றீங்க. கஸ்டமர் கிட்ட பேச தெரிஞ்சுக்கோங்கன்னாரு.
தீபாவிற்க்கும் எப்படி பேசி சமாளிக்கனும்ன்னு புரிஞ்சது. புத்தக பாடத்தை விட அனுபவ பாடம் விலைமதிப்பானதுன்னு தீபா புரிஞ்சுக்கிட்டா.

சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,

ஆதம்பாக்கம்,

சென்னை.

Bhakti and the Service of Temple Cleaning|Dr.Sangeetha

Abstract                            
           
         Thirunavukkarasar, who was born in the Vellalar community, incarnated in a small village called Thiruvamur in the present-day Cuddalore district. He lived in this world until the age of 81. Though born into a Saiva family, he embraced Jainism and followed ascetic life for a long time. Out of respect for his sister, bound by affection and love, he returned to the Saiva path nearly 1300 years ago. He demonstrated through his life that liberation (mukti) can be attained not only through devotion but also by engaging in service works such as cleaning temples, regardless of caste, religion, or social differences.  After reverting to Saivism, he accepted various turns of life, endured hardships, and reflected upon the true meaning of human existence through his writings. According to the Periya Puranam, Mahendravarman Pallava, who later abandoned Jainism, inflicted many sufferings upon Appar (Thirunavukkarasar). In every religion, rare individuals emerge who dedicate themselves to society through acts of devotion and noble service. Thirunavukkarasar’s life proves that true bhakti does not end with temple worship alone but extends to service activities such as temple-cleaning and selfless service to people.


“பக்தியிலும் உழவாரப்பணி”

ஆய்வுச் சுருக்கம்          
      வேளாளர் குடியில் தோன்றிய திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருவாமூரில் ஒரு சிற்றூரில் அவதரித்து, 81 வயது வரை உலக வாழ்க்கையில் வாழ்ந்து சைவ குடியில் பிறந்து, சமணராக மாறி நெடுங்காலம் துறவு பூண்டு சகோதரிக்கு மதிப்பளித்து அன்புக்கு கட்டுப்பட்டு, பாசத்திற்கு உடன்பட்டு, 1300 ஆண்டுகளுக்கு முன்பே பக்தியோடு சேர்ந்து ஜாதி, மத, பேதம் இன்றி உழவாரப்பணிகள் செய்து முக்தியடைய முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். சைவராக மீண்டும் மாறி வாழ்க்கையில் ஏற்படும் பல திருப்பங்களை ஏற்றும், பல இன்னல்களைக் கடந்தேறி வாழ்க்கைப் பயன் எதுவென உணர்ந்து எழுதியவர் . மகேந்திரவர்ம பல்லவனும் சமண சமயத்தை கைவிட்ட அப்பருக்கு பல இன்னல்கள் புரிந்தான். என்று பெரிய புராண வரலாறு கூறுகின்றது.. ஒவ்வொரு சமயங்களிலும் சில மனிதர்கள் அபூர்வமாக தோன்றுகிறார்கள் பக்தியோடு கூடிய பல நல்ல செயல்களை மக்களுக்குச் செய்து வந்துள்ளார்கள். பக்தி என்பது ஆலய வழிபாடு தாண்டி உழவாரப்பணிகள் செய்வதிலும் மக்களுக்கு தொண்டு செய்வதிலும் அமைந்துள்ளது என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

முன்னுரை
       
      திருநாவுக்கரசர் வரலாறுகளை ஆராயும் பொழுது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இல்லத்தில் தாய் தந்தை இறந்து விட்டால். பெண் என்பவள் தாயாக மாறி அக்குடும்பத்தை காத்து வருவாள் என்பதை திருநாவுக்கரசர் பதிகங்களைப் படித்ததின் மூலம் அறிய முடிகிறது. சகோதரனுக்காக திருமணம் செய்யாமல் வாழும் தமக்கையார் திலகவதியார் கடவுளுக்கு உழவாரப் பணிகள் செய்து ஒவ்வொரு ஊர்களாக சென்று கொண்டிருந்தாலும் அவரின் செயல்களுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது வாழ்நாளை அர்ப்பணித்த திலகவதி அம்மையாரும் மிகச்சிறந்த ஒரு துறவியே! ஆவார். பெண்களுக்கு மிகச்சிறந்த மதிப்பு இருந்தது. அரசன் பல துன்பங்கள் தந்தாலும் தனது சகோதரி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்தி நல்ல ஒரு சகோதரனாக மாறும் செயல் இன்றைய காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவுகள் பணத்தாலும் புகழாலும் சொத்துக்களாலும் பிரிவடைந்து வரும் நிலையில் இவர்களது வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த உதாரணமாக நமக்கு அமைந்துள்ளது.

திருநாவுக்கரசரின் தொண்டு நெறி       
      ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியைச் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே போற்றுவார்கள். திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 310 தனித்தும் திருஞானசம்பந்தருடன் பல சிவன் கோவிலுக்கு சென்றும் பாடல்களை பாடினார். ஏழை எளியவர், பிணியோர் வறியோர், முதுமையுடையோர் என அனைத்து மக்களும் அவருடைய அன்புக்கு ஆட்பட்டு இருந்தனர். அப்பூதியடிகள் என்ற அந்தணர் ஒருவர் திருநாவுக்கரசரை தம் வழிபாட்டுத் தெய்வமாகவே கொண்டிருந்தார் என்பது திருநாவுக்கரசர் புராணத்திலிருந்து மனிதன் மனதனை  வணங்கலாம் என்ற வரலாறும் இங்குதான் தோன்றியது.யேசு பிரானை, நபிகள் நாயகத்தை மக்கள் கடவுளின் அவதாரமாக வணங்குவது போல் திருநாவுக்கரசரையும் . அனைத்துக் கோவில்களிலும் கடவுளுக்கு அருகில் வைத்து தேவார முதலிகளாக  வழிபாடுகள் செய்வது என்பது தமிழர்கள் மரபாக அன்று தொட்டு இன்று முதல் வந்து கொண்டுள்ளது.

திருநாவுக்கரசருடைய தமிழ்
        அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே”:                            
         
        திருநாவுக்கரசரின் தமிழ் உள்ளத்தை தொடக்கூடியது எவ்வுயிரிலும் சிவத்தையும் சக்தியையும் இணைத்துக் காண வேண்டும் என்ற தத்துவம் இவரிடம் விளக்கம் பெற்றுள்ளது. கடவுளை இப்படியன், இந்த நிறத்தன், இவ்வண்ணத்தில் தான் இவன் இறைவன் என்று எழுதி காட்டாது உயர்ந்த தத்துவத்தை இவர் வாக்கில் முதன் முதலில் காண்கின்றோம்.

மருள்நீக்கியாரின் இசைச் சிறப்பு
           
     மருள்நீக்கியார், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் பத்துப் பண்கள் கொல்லி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம் ,சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம், பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி.  திருநாவுக்கரசர் உடைய தேவாரத்தில் அகத்துறைப் பாடல்கள் பல உள்ளது. தாண்டகம் என்ற செய்யுலில் இலக்கணத்தை கையாண்டு பாடியுள்ளார். அதனாலே என்னவோ இவருக்கு தாண்டக வேந்தர் என்று பெயர் உண்டு. இசையிலும் சொல் வன்மையிலும், பொருட்செறிவிலும், சிறந்தோங்கி விளங்கியுள்ளார். தொண்டு செய்வதும் மெய்யுணர்வு பாதையில் நடக்க வேண்டும் என்பது இவரது துணிவு.

ரோமாபுரி பாதிரியார்
         
        தமிழ் பற்றால் ரோமபுரி பாதிரியார் ராபர்ட்  டி நொபிலி 1577 களில் தமிழகம் வந்து தமிழால் ஈர்க்கப்பட்டு  ஓராண்டிற்குள் தமிழ் பயின்று தமிழில் உள்ள  பாடல்களிலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டு ஒரு தமிழர் போலவே தானும்  தலையில் குடிமை வைத்துக் கொண்டும், பூணூல் அணிந்தார். மக்களுக்கு தமிழிலேயே  போதனைகளை செய்து வந்துள்ளார்‌. தமிழ் உரைநடை நூல்களையும் வழங்கி உள்ளார் .தமிழ் மேல் கொண்ட பற்றும் தமிழின் ஈர்ப்பும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கிணங்க அனைத்து மக்களையும் தன் பால் ஈர்த்து மாற்றக் கூடிய சக்தி தாய் தமிழாம் தமிழ் மொழிக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது.

நான் எனது தவிர்த்தல்
         
       “ என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று இவர் பாடினார்.  ‘நான்’ ‘எனது’ என்று மனிதன் ஆசைகள் தான் இன்று போர்களும் பூசல்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. நான் என்ற அகந்தையில் தான் ஆண், பெண் சமத்துவம் இன்றி பல பெண்களும் ஆண்களும் இன்று நீதிமன்றத்தினை நாடிக் கொண்டிருக்கிறார்கள் நான் என்னும் சிறுகை அறுப்பவர்கள் ஆகின் கடவுளின் திருவருள் தானாக வந்தெய்தும் என்பது சைவ சமயம் மட்டுமல்ல சமணம், பௌத்தம், வைணவம், கிருத்துவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களுமே அதனைத் தான் போதிக்கிறது. மக்கள் முன்பு திடீரென்று திறந்து நின்றது .நுழைவதற்கு நூலுணர்வு வேண்டாம், சொல்வன்மை வேண்டாம். செல்வம் வேண்டாம். காட்டுக்கும் மலைக்கும் ஓட வேண்டாம். இறைவன் மாட்டு இணையறாது வேட்கையும் எப்பொருளையும் அவன் வடிவமாக காணும் காட்சி பெயரும் போதுமானவை. இந்தக் கொள்கைகள் எல்லாம் சான்றோர் வளர்த்து வந்தனர். நாம் பெற்ற பேரின்பத்தை மறையாது வரையாது மற்றவர்களும் மக்களும் பயன்பட வேண்டும் என்று அன்றைய காலத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் எண்ணினர். வெளி, வழி, தீ, நீர், நிலம் எனும் ஐம்பூதங்களிலும் பேசுகின்ற சொல்லிலும் எண்ணுகின்ற எண்ணங்களிலும், நடக்கின்ற செயல்களிலும்; பண்ணுகின்ற தர்மங்களிலும், கடவுள் கலந்து உள்ளார் என்பதை வலியுறுத்தி, எண்ணம், செயல், ஆகியவற்றில் தூய்மை வேண்டும் என்று மக்களுக்குப் புரிய வைக்க பல ஞானிகள் தோன்றினார்கள். அதில் மிகச்சிறந்தவர் திருநாவுக்கரசர்.
ஆணும் பெண்ணும் சமம்       
        1300 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமயத்தில் தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள் என்று கடவுளை வைத்து திருநாவுக்கரசரின் தேவாரம் (திருநாவுக்கரசர் சுவாமிகள்) பாடல்களில் “அம்மையும் அப்பனையும்” என குறிப்பாக அப்பன் நீ, அம்மை நீ என்ற வரிகளால் பாடப்பட்ட பாடல்களில் பெற்றோரின் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. தேவாரம் – ஆறாம் திருமுறையில் பதிகம் எண் 95இந்த பாடல் தனித் திருத்தாண்டகம் என அறியப்படுகிறது. அதாவது, தீவிரமான மந்திரபா பாணியிலே ஒரு கட்டமாக முழுமையாக பாடப்பட்டுள்ளது பாடலின் சில வரிகள்,

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்துநீ,  (பா.எண் 96அடிக்(1) தேவாரம் )
         
          இறைவன் நீ – ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.இந்த வரிகள் “அப்பன் நீ, அம்மை நீ” எனச் சொல்லும் ஓர் அருமையான விரிவான போதனையை கொண்டுள்ளது. பெரும் முக்கியத்துவம் இறைவனை, அனைத்து உறவுகளையும் உள்ளடக்கிய ஒரே உருவாகக் காணும் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்துகிறது இதிலே “அப்பன்” (தந்தை) மற்றும் “அம்மை” (மாதை) என இரு உறவுகளும் ஒரே நேரத்தில் ஒருவன் (இறைவன்) என்ற உணர்வை தரும் உருவாக்கமாய் பாடப்படுவது இந்த பாடலின் சிறப்பாகும் மற்ற திருமுறைப் பாடல்களில் “அப்பன் நீ, அம்மை நீ” – திருமுறை 6-95, தனித் திருத்தாண்டகம்: ஒரே பாடலில் இறைவன் அனைத்து உறவுகளாகவும், பொருளாகவும், ஊராகவும், பொன்னாகவும் மணியாகவும் திகழ்கிறார் பாடலில் ஒரு குலம் என்பதில்  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் உணரமுடிகிறது.
         
         திருநாவுக்கரசர் ஆணும் பெண்ணும் சமம் என்பது போல அவருடைய வாழ்க்கையின் 81 ஆண்டு காலத்தில் பாடிய பாடல்களிலும் ஆங்காங்கே இடம்பெற்று இருப்பது அவர்களுடைய ஆண் பெண் சமநீதிகளையும், சரிநிகர் சமமே அனைவரும் என்ற ஒரு உயர்ந்த தத்துவத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தாய் தந்தையை இழந்த திருநாவுக்கரசர். தமக்கையால் வளர்க்கப்பட்டதால் தனது சகோதரியின் பேச்சைக் கேட்டு சைவ நெறியை உணர்ந்து மீண்டும் சைவத்திற்கே திரும்பினார் என்பதின் மூலம் 1300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு மதிப்பளிக்கும் பண்பாடு பழக்கம் நமது சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது என்பதை அறிய முடிகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் இக்காலகட்டங்களில் பெற்றோர்களின் முக்கியத்துவத்தை கடவுளின் வழி அம்மையப்பன் என்று உணர்த்தியுள்ளார்.

தொண்டு செய்வதுதான் சிறப்பு      
       மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து கருணை இறக்கம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை பல்வேறு இலக்கண, இலக்கியங்கள், நமக்கு சான்றுகளாகப் பகர்கின்றன. கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் செப்பேடுகளும் கண்முன் காட்சியாக நமக்கு அமைந்துள்ளது. தொண்டு செய்வதும் மெய்யுணர்வின் பாதையில் நடக்க வேண்டும் என்பதும் திருநாவுக்கரசரது ஆழமான துணிவு. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இவர் பாடியது மட்டுமல்லாமல் கோயில்களில் புல், பூண்டுகளைச் செதுக்கியும், அலகினால் பெருக்கியும், சாணத்தால் மெழுகையும், தூய்மைப் படுத்தியும் திருப்பணிகளை இவர் செய்து வந்தார். அதற்காக இவர் எப்போதும் தம் கையில் புல் செதுக்கும் உழவாரப்படை யொன்றை தாங்கிக் கொண்டே இருந்தார்.’’ நான்’’ என்னும் முனைப்பை அறவே ஒழித்த மெய்ஞானி இவர் .தம்  வாழ்நாளின் இறுதி வரை  “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” எனக் கூறி வாழ்ந்தவர் .சிவானந்த வடிவமாகிய திருப்புகழ் ஊரில் சிவபெருமான் திருவடிக்கு கீழ் அமர்ந்திருந்தார் என்று பெரிய புராணம் நமக்கு கூறியுள்ளது. நபிகள் நாயகம் வரலாற்றிலும் நபிகளோடு அபூபக்கர் என்பவர் பல இடங்களில் உடனிருந்து நபிகளுக்கு ஏற்படும் இன்னல்களை எல்லாம் போக்கினார் என்று குர்ஆனும் மொழிகிறது.

ஆயிரத்தி முன்னூறு ஆண்டுக்கு முன் உழவாரப்பணி
தலம்: விழுப்புரம் (திருவிழுப்புரம்)
உழவாரப்பணி பாடல்
வேதியர் தொழுதேத்தும் விழுப்புரத்து எனையும்
ஆதியவன் அருள்செய்தான் அடியனேன் உழவன்
ஓதியவேதத்தினோடு உணர்ந்திருந்தவனே
சீதமல்கும்இளம்திரு நீலமாமலர்க்கொன்றே.அடிக்(2)தேவார   ( பாடல்70)
         
          வேதியர்கள் வணங்கும் திருவிழுப்புரத்தில் உள்ள இறைவன், என்னைப் பொருளற்றவனாக இருந்த போதும் அருள் செய்தான். நான் அவனுக்கு உழவன். வேதங்களோடு நிலைத்திருப்பவனே, குளிர்ச்சி தரும் அழகிய நீல மலர் கொண்டவனே! ஏழ்மையில் இருந்தாலும் உனக்கு பணி செய்து கிடப்பதே என் பாக்கியம் என்று கூறியுள்ளார்.

ஓதுவார் தொழுதேத்தும் விழுப்புரத்து எனையும்
ஆதியவன் அருள்செய்தான் அடியனேன் உழவன்
பாதியோர் பாகமொன்றும் பங்குடையவனே
நீதியோடு நின்றநெறி நீள்கடல்பொலிந்தானே.(அடிக்.3)
       தேவார
    வேதங்களை ஓதுவோர் வணங்கும் விழுப்புரத்து இறைவன் என்மீது அருள்செய்தான்.அதனால் நான் அவனுக்கான உழவன். அர்த்தநாரீசுவரனே! நீதியுடன் நிலைத்திருப்பவனே, கடலெனப் பரந்தவன்! இப்பொழுதும் நீதியுடன் நமக்கு காட்சி தருபவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு தொண்டு செய்வது யாம் பெற்ற பாக்கியம் என்றும் கூறியுள்ளார் விழுப்புரத்தான் என்று திருநாவுக்கரசர் அழைப்பதில் இருந்து இப்பொழுது உள்ள விழுப்புரத்தில் அவர் பல காலம் தங்கி இருந்து பல உழவாரப் பணிகளைச் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஊனினொடு உயிர்அவனைச் சொல்லியுய்ந்தவர்க்கே
ஞானமருளிச் செய்தவனே நானுமுன்னடி சேர்ந்தேன்
ஆனையின்வரையினொடும் அமரர்க்கென்றவனே
தேனமரும்மலர்க்கொன்றே திருவிழுப்புரத்தானே.(அடிக்கு.4. தேவாரம்)
         
      உடலும் உயிரும் அவனைச் சொல்லித் தப்பியவர்க்கு ஞானம் அருள்பவன்! நானும் உன் அடியில் சேர்ந்தேன். இறைவன் மேல் பக்தி மட்டும் போதாது பல தொண்டுகளையும் செய்து இறைவனை அடைய முடியும் என்பதற்கு திருநாவுக்கரசரே மிகச் சிறந்த சான்றவர். தேவர்களுக்கு அருள் புரிவவன்! தேன் மலரும் கொன்றை மலரும் சூடினவன்! ! கொன்றை மலர் என்பது சங்க காலம் முதல் நம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது..

“கூடி மகிழும் மக்கள், ஓங்கி இசை பாடுவார்”     
        அக்காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து  வாழ்ந்துள்ளனர்.

முடிவுரை   
      மனிதர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த நம் முன்னோர்கள் பக்தியின் மூலம் கடவுளை அடைய முடியும் என்றும். மக்களுக்கு சேவைகள் செய்து அதனால் இறைவனின் பாதங்களை அடையலாம்.. பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல் உடன்பிறப்புகளை பாதுகாத்தல் .ஆண் பெண் சரிநிகர் சமம். ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மக்கள் பயன்படுத்தும் குளங்களையும், ஆறுகளையும், நதிகளையும் தூய்மையாக வைத்திருப்பதும்  பக்தி தான் என்றும், மக்களுக்குப் பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் பணியாகும். பக்தியால் தமிழால் இறைவனோடு ஒன்ற முடியும் என்று பல முன்னோர்கள் நமக்கு வகுத்துள்ளார்கள். ஏழைகளுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும். உடல் தூய்மை, மனத் தூய்மை, ஊரையும் தூய்மையாக வைத்திருந்தனர். தேவாரப் பாடல்களை வாசிக்கும் பொழுது பக்தி மட்டும் அதில் இடம்பெறவில்லை மனிதனுடைய வாழ்க்கை நெறிகள், மக்கள் வாழ்கின்ற இடங்கள் அவர்களுக்கான தேவைகள், வாழ்க்கை நெறிகள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், திலகவதியார் தனக்கு மனம் பேசி முடித்து இருந்த மணமகன் இறந்து விட்டதால் , இறுதிவரை திருமணமே செய்யாமல்  வாழ்ந்த திலகவதிஅம்மையும் மிகச் சிறந்த பக்தியில் துறவறம் மேற்கொண்ட பெண் என்பதை அறிய முடிகிறது. மனக்கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதை அறிய முடிகிறது. எந்த மதமாக, இனமாக இருந்தாலும், அம்மதத்தில் முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே நாட்டில் அமைதியும், சிறந்த பண்பாடும் நல்ல சமுதாயமும் உருவாகும்.

துணை நூற்பட்டியல்
1. நல்லாசிரியர் சு குப்புசாமி, திருநாவுக்கரசர் (எ) அப்பர் பெருமான்,நிவேதிதா பதிப்பகம், சென்னை.

2. டாக்டர் ஜெகத்ரட்சன், திருநாவுக்கரசர் தேவாரம், ஆழ்வார் ஆய்வு மையம் வெளியீடு சென்னை.

3.புலவர் வி.சிவஞானம் திருநாவுக்கரசர் தேவாரம் முதல் தொகுதி.விஜயா பதிப்பகம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த. சங்கீதா .எம்.ஏ.எம்.எட்.பி.எச்டி.
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 
ஆவடி சென்னை.

Uzhaiyar kutrum Unarchi Velipadukalum|Sathish S

உழையர் கூற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளும்
Abstract
          Tamil literary tradition has a long historical background spanning over twenty centuries. In this tradition, the majority of literature is internal, which expresses the feelings of the human heart such as love, separation, expectation, morality, and family relationships with artistic flair. Internal literature not only talks about the love of the hero and heroine, but also talks about social problems, family events, and changes in mood through internal and external means. The statement is considered a very important element in the internal literary tradition. Tholkappiyar and Narkavirasa Nambi have formulated a clear grammatical tradition regarding who is speaking? On whose behalf are they speaking? In what emotional stage are they speaking? Among the statements, this article presents the Uzhaiyar statement as a unique research site. This study focuses on the Uzhaiyar statements in the Akananuru two songs of the Sangam female poet Okkur Masathiyar, and examines the emotion sexually symbolic messages, psychological moods, and internal and external structures revealed through them.


“உழையர் கூற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளும்
”

முன்னுரை
      தமிழ் இலக்கிய மரபு இருபது நூற்றாண்டுகளைக் கடந்த நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும். இம்மரபில் அக இலக்கியம் பெரும்பான்மை இலக்கியமாக இருந்து, மனித உள்ளத்தின் உணர்வுகளான காதல், பிரிவு, எதிர்பார்ப்பு, ஒழுக்கம், குடும்ப உறவுகள் ஆகியவற்றை கலை நயத்துடன் வெளிப்படுத்துகிறது. தலைவன், தலைவியின் காதலை மட்டுமன்றி, உள்ளுறை மற்றும் இறைச்சி வழியாக சமூகச் சிக்கல்கள், குடும்ப நிகழ்வுகள், மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் பேசுகிறது. அக இலக்கிய மரபில் கூற்று மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யார் பேசுகிறார்கள்? யார் சார்பாக பேசுகிறார்கள்? எந்த உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள்? என்பதைக் குறித்தத் தெளிவான இலக்கண மரபைத் தொல்காப்பியரும், நாற்கவிராச நம்பியும் வகுத்துள்ளனர். கூற்றுகளில் உழையர் கூற்று என்பது தனித்த ஆய்வுத் தளமாக இக்கட்டுரை முன்வைக்கிறது.  இந்த ஆய்வு, சங்க பெண்பால் புலவரான ஒக்கூர் மாசாத்தியாரின் அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெறும் 2 உழையர் கூற்றுப் பாடல்களை மையமாகக் கொண்டு, அவற்றின் வழி வெளிப்படும் உணர்ச்சிகள் மற்றும் பாலியல் குறியீட்டுச் செய்திகள், உளவியல் மனநிலைகள் மற்றும் உள்ளுறை, இறைச்சி அமைப்புகளை ஆராய்கிறது.

ஒக்கூர் மாசாத்தியார்
       இயற்பெயர் சாத்தியார். பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூருக்கு அருகிலுள்ள ஒக்கூரில் பிறந்தவர். மறவர் குடியைச் சேர்ந்த பெண்பாற் புலவராவார். இவரது பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றில் இரண்டும் (324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275), புறநானூற்றில் ஒன்றும் (279) இடம்பெற்றுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களை பாடி இருந்தாலும், அவற்றின் வழி ஆழமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

உழையர் – பொருளும் இலக்கிய இடமும்
         ‘உழையர்’ என்ற சொல் உடன் இருப்பவர், அருகில் இருப்பவர் என்ற பொருளைக் குறிக்கிறது. அக இலக்கிய மரபில் இந்த இடத்தைப் பெரும்பாலும் தோழி வகிக்கிறாள். எனவே, உழையர் கூற்று என்பது தோழிக்கு அடுத்த நிலையில் உள்ள பணிப்பெண் என இலக்கிய மரபில் திண்மமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உழையர், தலைவியின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், சமூக ஒழுக்கத்திற்கும் தனிப்பட்ட ஆசைக்கும் இடையிலான பாலமாகவும் செயல்படுகிறார்.

விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! (அகம். பா.324)
      வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. அழகிய ஆபரணங்கள் அணிந்த, மென்மையான தோள்களையுடைய, இனிய மொழி பேசும் தலைவி. அவள் தளிர்போன்ற இளம் கிளியை அன்புடன் எடுத்துத் தாயைப் போல பேணுகிறாள். மழைபெய்து செழித்த பசுமையான பயிர்கள் நிறைந்த நிலத்தில், பறை போன்ற வட்டமான சுனைகளில் நீர்த்துளிகள் விழ, மொட்டுகள் குதித்து மலரும். மலர்களின் மணம் காற்றில் பரவி, வண்டுகள் தேனுண்டு மயங்கிச் சுழலும் இவ்வாறு வளம் செழிக்கும் நாடு தலைவனுடையது.  குளிர்ந்த நிலத்தின் ஓரமாகச் செதுக்கப்பட்ட பாதையில், நீரின் வேகத்தைப் போல விரைந்து செல்லும் பாம்பைப் போன்ற வேகத்துடன், நெடிய பெருமை உடைய தலைவனின் தேரு முல்லை மாலை நேரத்தில் ஊருக்குள் புகுகிறது.

இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் …..
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. (அகம். பா.384)
      வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. அமைதியாக இருந்த வேந்தன் போரைத் தொடங்கி முடித்துக்கொண்டான். காதல் வேட்கையோடு நான் தேரில் ஏறினேன். இதுதான் எனக்குத் தெரியும். வழியில் நிகழ்ந்தது எதுவும் எனக்குத் தெரியாது. என் இல்லத்துக்கு வந்துவிட்டேன். இங்கே முயல் குட்டிகள் விளையாடுகின்றன. ஊரின் முல்லை நில வயலில் வரகு விளைந்திருக்கிறது. என் மனைவி இருக்கும் வீட்டின் முன் நிறுத்தி “இறங்கு” என்கிறாய். வியக்கிறேன். காற்றையே குதிரையாக்கித் தேரில் பூட்டித் தேரை ஓட்டிவந்தாயா? உருவம் இல்லாத உன் மனத்தையே குதிரைகப் பூட்டித் தேரை ஓட்டி வந்தாயா? வலவ! (தேரோட்டியே) நீதான் சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் தேரோட்டியின் மார்பைத் தழுவிக்கொண்டான். தலைவிக்கு இனி விருந்துதான் எனும் கருத்து தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்துகிறது.

உழையரின் உணர்ச்சி குறியீடுகள்
     உழையர் என்பவர் தலைவியுடன் எப்போதும் உடனிருந்து அவர்களின் மனநிலையை அறிந்திருப்பவர். தலைவன் பிரிந்தபோது தலைவியின் புலம்பல், வருத்தம், காதல், ஏக்கம் ஆகியவற்றைக் கேட்டு ஆறுதல் கூறுபவர். தலைவி, தலைவனிடம் நேரடியாகச் சொல்ல முடியாத உணர்வுகளை உழையர் மறைமுகமாக எடுத்துரைப்பார். தலைவன், தலைவி இருவருக்கும் இடையிலான உணர்ச்சித் தொடர்பை பாதுகாப்பவர். இவர் தலைவன் தலைவியின் கற்பு வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறார். அக இலக்கியங்களில் பெண்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்கிறது தொல்காப்பியம். இதனை,

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை” (தொல்காப்பியம் – பொருள் – களவியல் 116)
     எனும் நூற்பாவின் மூலம் உணர்வுப்பூர்வமான ஆசைகளை நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ சொல்லப்படாது. உவமை, உருவகம், இயற்கைச் சின்னங்கள், உடல் மாற்றங்கள் போன்ற குறியீடுகள் மூலம் வெளிப்படுத்தலாம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், அகத்திணையில் ஒருவரின் பெயர் நேரடியாக இடம் பெறுவதில்லை என்பதனை,
“மக்கள் நுதலிய அகனைந்திணையும்,
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்” (தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா 57)
     
        எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல் மெலிவு, நிறமாற்றம் (பசலை), கண்ணீர், தூக்கமின்மை, அலங்காரம் கைவிடுதல் போன்றவை உடல்சேர்க்கை மீதான ஆவலின் குறியீடுகளாகத் தலைவியினிடத்தில் அமைகிறது என்பதனை மெய்பாட்டியலில்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப”. (தொல்காப்பியம் மெய்பாட்டியல் நூற்பா.3)         
         எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், மழை, மலர் மலர்தல், தேனீ – மலர் தொடர்பு, காற்றின் தீவிரம், இரவின் நீளம் போன்றவை இணைவு, கரைபுரிதல், உடன்படுதல் போன்ற உணர்வுகளைத் தலைவன் தலைவி பிரிந்துள்ள கார்கால நிலை சுட்டுகிறது. “இரவு நீள்கிறது” என்பது தலைவி தனிமையில் உள்ளாள். தலைவியின் தோழியர் இரவு முழுவதும் உடன் இருந்தலும் தனிமையினை உணர்கிறாள். அவ்வாறு உணரும் போது தலைவிக்கு மனதில் நிறைய சிந்தனைகள் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றி பயம் தோன்ற தொடங்குகிறது. ஏனெனில், தலைவனின் வருகை பற்றிய கவலை மற்றும் இருவரும் களவு காலத்தில் இருந்த காதல் நினைவுகளை அசைப்போடுகிறாள். “பனிமூட்டம் சூழ்கிறது” என்பது தலைவியின் மனநிலை தெளிவில்லமால் இருப்பதை உணர்த்துகிறது. மேலும், மனதில் தெளிவு இல்லாமல் குழப்பம், மனஅழுத்தம் அல்லது சிந்தனை மந்தம் ஏற்படும் நிலையைக் குறிப்பதாக உள்ளது.  தலைவி அரிவைப் பருவத்தவள், திருமணத்திற்கு ஏற்ற வயதை உடையவள். களவு வாழ்வை மேற்கொண்டுள்ளாள். இவளது தோள்கள் முங்கில் போல் உள்ளன. அவ்வாறான தலைவி பூக்களின் வாசம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவள். இவை தலைவியின் கூடல் உணர்வினை வெளிப்படுத்தும் செயலாக விளங்குகிறது. நறுமணப் பொருட்கள் நேரடி உடலுறவுக்கு உதவும் உணர்வுகளைத் தூண்டுவதோடு, ஒட்டுமொத்த உடலியல் ஆரோக்கியத்தையும், பாலியல் செயல்பாட்டையும் மேம்படுத்தும் என்பது பழங்காலம் தொட்டு கூறும் வழக்கு உள்ளது.  
         
        மொட்டு சற்று விரிந்த நிலையிலும், மலர் முழுமையான வளர்ச்சியினையும் கொண்டது. இதனை புலவர் தலைவிக்கு உவமையாக கூறுகிறார். தலைவி தலைவனைக்காணத வரை மொட்டாகவும், தலைவனை காணும்போது மலராகவும் மாறுகின்றாள். அதனால் தலைவன் தேரில் தனது ஊருக்குள் வரவேண்டும் என்று தலைவி விரும்புகின்றாள். தலைவன் தன் “இல்லம் புகுதல்” புகுதல் வேண்டும் என்று விரும்புகின்றாள். “இல்லம் புகுதல்” என்பது ஒருவரின் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய விரும்பும் மனநிலை அல்லது திருமணம் வாழ்வை மேம்படுத்தி குடும்பத்தை அமைத்துக்கொள்ளும் உளவியல் மனோபாவம் என்பதாகும். இதற்குப் பின்புலமாகச் சில முக்கிய உளவியல் காரணிகள் உள்ளன. பாதுகாப்பு தேவை என்பது இங்கு வாழும் அனைத்து மனிதர்களும் எண்ணக்கூடியது. அவ்வகையில் தனிமையை விடவும் நிலைத்த, நிலையான பாதுகாப்பான வாழ்வினை நாடும் மனநிலைக்குத் தலைவி உட்பட்டுள்ளாள். அதோடு இன்றி அன்பும் பாசமும் ஒருவரிடம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதும் அன்பைப் பகிர்ந்து பெற வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பமும் தலைவியின் உணர்வு நிலையில் மட்டும் இன்றி உழையரின் உணர்வாகவும் விளங்குகிறது. எனவே, தலைவிக்குப் பாலியல் இன்பத்தைப் பூர்த்தி செய்ய வல்லவன் தலைவன். அவன் பாலியல் ரீதியாக மட்டுமின்றி தலைவிக்குப் பாதுகாப்பினை நல்குபவனகாவும் தலைவன் இருப்பான் என்று தலைவியின் மன எண்ணத்தை இலைமறைக்காய் போல் உழையர் தலைவின் பாலியல் உணர்ச்சியையும் கூறுகின்றார்.  
சமூக அங்கீகாரம் மற்றும் குடும்பம் அளிக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பொறுப்பு உணர்வுகள் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குவதை இங்கு அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டும் என்பதனை மன முதிர்ச்சி கொடுக்கிறது. இதனை எரிக்சன் (Erikson) கூறும் உளவியல் மன வளர்ச்சி Intimacy vs Isolation நிலையுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. நெருக்கமான உறவுகளை உருவாக்கும் ஆவலில் தலைவி மேற்கண்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றாள். கபிலரின் குறுந்தொகை 18-ஆம் பாடல் உரைப்பதுப்போல,

“சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!” (குறுந்தொகை 18)
          ஒருவேளை தலைவன் தலைவியின் உணர்வுகளை ஏற்காது காலம் தாழ்துதல் என்ற செயலினை செய்தல் தலைவி தனிமை உணர்வின் மிதான வெறுப்பில் பசலைப்படர்ந்து மரணம் நெருங்கும் என்றுரைக்கிறார். பாம்பு நீரில் நிந்துவதுபோல், தலைவன் தன்னுடன் கலவியில் ஈடுபட விருப்பும் மனநிலையில் தலைவி உள்ளாள் என்பதை உணர்த்துகிறது. இந்த உவமை, தலைவனின் விருப்பம் இயல்பாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருப்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. மேலும், தலைவியின் இந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில், குளிர்ச்சியும் செழிப்பும் நிறைந்த தனது இளமை அழகையும், உணர்வுகளைத் தூண்டும் செழுமையான தேக அழகையும் தலைவி தானே எடுத்துரைக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறாள். இது தலைவியின் உளவியல் மாற்றத்தையும், கலவியின்மீது அவள் மனம் முழுமையாகச் சாய்ந்த நிலையையும் காட்டுகிறது. பறை போன்ற வட்டவடிவச் சுனையும் அதிலிருந்து வடியும் நீரும், தலைவி, தலைவன்மீது கொண்ட அளவுகடந்த காதலைச் சுட்டிக்காட்டுகின்றது. தலைவியினுடைய காதல் பொங்கி வழியும் சுனை நீரைப் போல் வெளிப்படுகிறது. ஆனால் தலைவனோ, வறண்ட காலத்தில் தாகம் மிகுந்த ஒருவருக்கு கிடைக்கும் சிறிய துளி நீர் தாகத்தைத் தீர்க்க முடியாதது போல, தனது ஆசையை அடக்கிக் கொண்டவனாக விளங்குகிறான். இவ்வாறு தலைவி – தலைவன் காதல் நிலைகளின் வேறுபாட்டை உழையர் தம் கூற்றின் மூலம் முன்னிலைப் படுத்துகிறார் என்பதை அறியமுடிகிறது.
கம்பராமாயணத்தில் ராமன் வில்லை எடுக்கும்போது, வில் முறிந்த சத்தம் மட்டுமே அனைவரின் காதில் விழுகிறது. ஆனால் வில்லை உயர்த்திய காட்சி யாருக்கும் தெரியவில்லை என சீதை கூறுகிறாள். இதுபோலவே, இங்குத் தலைவனுக்குத் தேரில் ஏறியது மற்றும் ‘இறங்கு’ என்ற சொல் மட்டும் நினைவில் உள்ளது. இடைப்பட்ட உணர்ச்சிப் பயணம் மறைந்துவிடுகிறது. வெளிப்படையான நிகழ்வு மட்டும் சமூக நினைவில் நிலைத்து, உள் உணர்வுகள் மறைவதைக் உழையர் கூற்று சுட்டிக்காட்டுகிறது.

முடிவுரை
      ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இடம்பெறும் உழையர் கூற்று, அக இலக்கிய மரபின் உள்ளுறை, இறைச்சி அமைப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றுகளாக விளங்குகின்றது. உழையர் கூற்று தலைவி, தலைவன் உணர்வுகளின் வேறுபாடு, பாலியல் குறியீட்டு வெளிப்பாடு, உளவியல் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. எனவே, அக இலக்கியத்தில் கூற்று என்பது வெறும் உரையாடல் அல்ல. அது சமூக உளவியல், இலக்கியக் கட்டமைப்புகளை இணைக்கும் முக்கியமான தளமாகும்.

துணைநின்றவை
1.இளம்பூரணர் – தொல்காப்பியம் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1985.

2. நாற்கவிராச நம்பி – அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், 2017

3.சாமிநாத ஐயர், உ.வே. (பதிப்பு). அகநானூறு, 1920

4.வையாபுரிப்பிள்ளை எஸ். கம்பராமாயணம் மூலமும் உரையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு 1957.

5.முருகேச‌பாண்டிய‌ன் ந. ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் பாலிய‌ல்: ஆண் – பெண் உற‌வு நிலை, சன் லாக்ஸ் இதழ், தொகுதி 8 – 2024.

6.Erikson, E. H. (1968). Identity: Youth and Crisis. New York: Norton. Intimacy vs Isolation.

7.Sigmund Freud, The Interpretation of Dreams (1900)
8.Sigmund Freud, Three Essays on the Theory of Sexuality (1905)

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சதிஷ் சி,
உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம். ஜி. ஆர். கல்லூரி,
ஓசூர் – 635 130.

Cultural Imprints in the Material Culture of the Kattunayakan Community|Selvaraj D

காட்டுநாயக்கன் மக்களின் புழங்கு பொருள்களில் பண்பாட்டுப் பதிவுகள்
Abstract
         
      Material culture constitutes a vital dimension of community life, embodying the social practices, ecological adaptations, and symbolic meanings embedded within a people’s lived experience. Among the Kattunayakan community of South India, everyday utilitarian objects function not merely as instruments of subsistence but as repositories of indigenous knowledge and cultural memory. Rooted in a forest-based livelihood, the Kattunayakans fashion their material objects primarily from locally available natural resources, demonstrating a sophisticated understanding of ecological balance, sustainability, and environmental adaptation. This study categorizes Kattunayakan material objects into three interrelated domains: domestic implements, occupational tools, and ritual or belief-oriented artifacts. Such a classificatory framework facilitates a systematic analysis of the ways in which material forms encode social organization, customary practices, and intergenerational knowledge transmission. Objects such as the conch (sangu) and the karugamani thaali transcend functional utility, operating as enduring symbols of identity, kinship, and spiritual belief. By foregrounding these artifacts as cultural texts, the study underscores the epistemological significance of Kattunayakan material culture. In the context of rapid modernization and cultural transformation, documenting, identifying, and preserving these indigenous knowledge systems becomes an urgent scholarly and ethical imperative.

Keywords : Kattunayakan; material culture, indigenous knowledge systems, tribal heritage, cultural continuity; ritual symbolism


“காட்டுநாயக்கன் மக்களின் புழங்கு பொருள்களில் பண்பாட்டுப் பதிவுகள்”

ஆய்வுச் சுருக்கம்
         
     புழங்குப் பொருட்கள் என்பவை மக்களுடைய வாழ்வியலில் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுகின்றன. மக்களினுடைய தேவைக்காகவும் வசதிக்காகவும் பல்வேறு பொருட்களை உருவாக்கிக் கொண்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட பொருட்கள் நீண்ட தேவையைக் கொண்டிருப்பின் மட்டுமே மக்களுடைய வழக்காறுகளோடு பிணைந்து காணப்படும். புழங்கு பொருட்கள் சார்ந்த நம்பிக்கைகள் உருவாகின்ற பொழுது தேவையைக் கடந்தும் அப்பொருட்கள் மக்களுடைய வாழ்வில் நிலைத்து நிற்கும் தன்மையை எய்துகின்றன. காட்டுநாயக்க இன மக்கள் பயன்படுத்தக்கூடிய புழங்கு பொருட்களை மூன்று வகைகளாகப் பிரித்து ஆராய்வதன் மூலம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை ஆராய இயலும். மலைகளில் தங்களுடைய வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்ட மக்கள் தங்களைச் சுற்றி அமைந்துள்ள சூழலில் இருந்து பெறக்கூடிய பொருட்களைக் கொண்டே புழங்கு பொருட்களை உருவாக்கினர். இதனைக் கருத்தில் கொண்டு காட்டுநாயக்க மக்களினுடைய புழங்கு பொருட்களை ஆராய்கின்ற பொழுது பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் மரபு நிலை தொடர்ச்சியையும் அறிய முடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள்: காட்டுநாயக்கர், புழங்கு பொருட்கள், இல்லம் சார்ந்த புழங்கு பொருட்கள், சங்கு, கருகமணி தாலி, பண்பாட்டுப் பதிவுகள்

முன்னுரை
         
       பண்பாடு என்பது உடனே தோன்றி மறைவது அன்று. மக்களினுடைய வாழ்வில் பெற்ற அனுபவங்களில் இருந்தும் தோல்விகளிலிருந்தும் பெறப்பட்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோற்றம் பெறக் கூடிய வழக்காறுகள் நீண்ட நாள் மக்களினுடைய நினைவிலி மனதில் இருந்தும் வாய்மொழியாகவும் கடத்தப்பட்டு பண்பாடாக உருப்பெறுகிறது. அவ்வாறான பண்பாட்டை வளர்க்கக்கூடிய வழக்காறுகளுள் புழங்கு பொருளும் ஒன்று. மக்களினுடைய தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக உருப்பெற்றவையே புழங்கு பொருட்கள். புழங்கு பொருட்களின் வடிவமைப்பும் பயன்பாடும் நீண்ட காலமாக மக்களால் கடத்தப்பட்டும் திருத்தி அமைக்கப்பட்டும் கொண்டு வருகின்றன. இதனால் புழங்க பொருள் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், பயன்பாடுகள் ஆகியவை காலம் கடந்தும் மக்களினுடைய பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்றன. காட்டுநாயக்க இன மக்களின் புழங்கு பொருட்கள் சார்ந்த பண்பாட்டுப் பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரையானது அமைகிறது.

புழங்கு பொருட்கள் விளக்கம்     
       புழங்குதல் என்பதற்கு மெய்யப்பன் தமிழகராதி பழகுதல் (மெய்யப்பன் தமிழ் அகராதி, ப.781) என்றும் கழகத்தமிழ் அகராதி கையாளுதல், வழங்குதல் (கழகத்தமிழ் அகராதி, ப.641)என்றும் நர்மதாவின் தமிழகராதி உபயோகத்தில் இருத்தல், பயன்கருதி கையாளப்படுதல் (நர்மதாவின் தமிழகராதி, ப.670) என்றும் தமிழ் லெக்சிகன் கையாளுதல் (தமிழ் லெக்சிகன், ப.2792) என்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி வழக்கில் இருக்கும் நிலை (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி, ப.274)  என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உபயோகித்தல் அல்லது வழக்கில் இருக்கும் நிலை, பண்பாடு (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.751) என்றும் பல்வேறு அகராதிகள் விளக்கங்கள் தருகின்றன.
         
         மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் கையாளக் கூடிய பரும வடிவப் பொருட்களையே புழங்குபொருட்கள் என்று அறிஞர்கள் அடையாளப்படுத்துகின்றனர். புழங்கு பொருட்கள் மக்களின் தேவை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு தோற்றம் பெறுகின்றன. “பண்பாடும் புழங்கு பொருட்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. ஏனெனில் புழங்கு பொருட்கள் அனைத்தும் பண்பாட்டோடு ஒன்றிணைந்தே காணப்படுகின்றன. அவை பண்பாட்டு மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்டு காணப்பட்டாலும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியே காணப்படுகின்றன. இதனை பொருளும் பண்பாடும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை; நறுக்குத் தெறித்தாற்போன்று மிகக் குறைந்தபட்ச வரையறையாகச் சொன்னால் பண்பாட்டின் கண்ணாடி புழங்கு பொருட்கள் என்றும் கூறலாம்.” (பக்தவத்சல பாரதி,1980,ப.165) எனவே மக்களின் வாழ்வியலோடு பண்பாட்டுக் கூறினையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன என்றறிய முடிகிறது.

புழங்கு பொருட்களின் வகைகள்         
      ஒரு இனத்தின் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் வாழ்க்கைக்குத் துணை செய்யும் அனைத்துப் பொருள்களையும் புழங்கு பொருட்கள் எனலாம். மக்களின் அன்றாட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் புழங்கு பொருட்களே ஆகும்.  காட்டுநாயக்க இனமக்களின் வாழ்வினையும் பழக்கங்களையும் கொண்டு,
1.இல்லம் சார் பொருட்கள்,
2.தொழில் சார் பொருட்கள்,
3.வேட்டைக்காகப் பயன்படுத்திய பொருட்கள்
          எனப் புழங்குப் பொருட்களை மூன்று வகைகளாகப் பகுக்க இயலும். வேட்டையாடுதலே இம்மக்களின் பூர்வீகத் தொழில் என்பதால் அதனைத் தனித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இல்லம் சார் பொருட்கள்:
அ.சிணுக்கு வாரி
         
      பெண்களின் தலையில் ஏற்படக்கூடிய சிக்கினை அகற்றுவதற்குப் பயன்படக் கூடிய “சிணுக்கு வாரி” என்பது இரும்பினாலானப் புழங்குபொருளாகும். இதனை மக்கள் “சிக்கால்குச்சி” என கூறுகின்றனர். இவர்களின் தாய்மொழியான தெலுங்கில் ‘சிக்காள் புள்ள’ என்றும் கூறுவர். பூப்புச்சடங்கின் போது பூப்பெய்திய பெண்ணிற்குத் தாய் மாமன் சீரில் ஒன்றாகக் கொடுக்கின்றனர். தீய சக்தியிலிருந்து காக்கும் ஆற்றலைக் கொண்டதாக மக்கள் இப்பொருளைக் கருதுகின்றனர். எரிகின்ற விளக்கில் சிணுக்கு வாரி குச்சியின் முனையை சூடுபடுத்தி பிறந்த குழந்தைக்குத் தலை நெற்றியிலும், இரு கைகளிலும், இரு கால்களிலும் மற்றும் குழந்தை அடிவயிற்றிலும் சூடு வைக்கின்றனர். குழந்தைக்கு எவ்வித நோய் தாக்கமும் ஏற்படக்கூடாது என்றெண்ணி இச்சடங்கினை மேற்கோள்கின்றனர். பனியாரம், அப்பளம் போன்ற பலகாரங்களை எண்ணெயில் இட்டு பொறித்தெடுப்பதற்கும் இச்சிணுக்குக் குச்சியைப் பயன்படுத்துகின்றனர். நம்பிக்கை அடிப்படையிலும் பயன்பாடு அடிப்படையிலும் சிணுக்குக் குச்சி பண்பாட்டில் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது.

ஆ.முறம்
         
     பா வடிவில் அல்லது சதுர வடிவில் அல்லது முக்கோண வடிவில் மூங்கிலால் தயாரிக்கப்படும் தட்டையானப் பொருளினை முறம் என்றழைப்பர். உணவுக்காகப் பயன்படுத்துகின்ற அரிசி, பருப்பு, சோளம், கம்பு போன்ற தானியங்களில் உள்ள தூசுகளையும் சிறிய கற்களையும் களைந்து எடுப்பதற்காக முறமானது பயன்படுகிறது. பிறப்புச்சடங்கின் போது பிறந்த குழந்தையை முதல் மூன்று நாட்கள் இம்முறத்தில் படுக்க வைக்கின்றனர். இம்முறத்தை “மொறத்த” என்றும் முக்கோண வடிவ முறத்தினை “சொளக” என்றும் இம்மக்கள் கூறுகின்றனர்.

இ. வெத்தலைப் பெட்டி
         
    வெத்தலைப் பெட்டி இம்மக்களின் வாழ்வில் முக்கிய புழங்கு பொருளாகும். வெற்றிலையினைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பெட்டி “வெற்றிலை பெட்டியாகும்”. ஈச்சமரத்துக்கிளையின் மட்டையில் பின்னப்பட்ட பெட்டியானது கையளவு உடையதாகவும் கைக்கு அடக்கமாகவும் அமைந்திருக்கும் வகையில் உருவாக்குகின்றனர். பணம், நகை, பாசி போன்ற பொருட்களை வைத்து பாதுகாத்து கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஈ. சங்கு
         
     காட்டு நாயக்க இனமக்கள் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தி அடைந்ததும் தாய்ப்பாலிற்கு இணையான பசுவில் இருந்து பெறப்படும் பால் உணவாகக் கொடுக்கப்படுகிறது. அந்த பால் சங்கின் மூலமாக குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. இச்சங்கானது வெண்கலத்தாலும், வெள்ளியாலும் வட்ட வடிவிலும் அதன் மேல் மூடி கொண்டும், கைப்பிடியோடும் விளிம்பில் பால் ஊட்ட சிறிய கால்வாய் போன்ற அமைப்போடும் தயாரிக்கப்படுகிறது. சங்கு பல்வேறு இனமக்களின் புழங்குபொருளாக இருந்தாலும் இம்மக்களின் வடிவமைப்பு வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

உ. கருகமணி தாலி
         
     கருமை நிறத்தினைக் கொண்ட ஒரு வகை பாசியினை கருகமணி என்றழைக்கின்றனர். இந்த கருக மணியானது காட்டுநாயக்கன் இன பழங்குடி பெண்கள் கழுத்தில் அணிகின்ற  அணிகலன் ஆகும். இதனைத் தாலி என்ற பொருண்மையில் கையாள்கின்றனர். ஏழு வெள்ளை நிற நூலினை எடுத்து மஞ்சள் கலந்து நீரில் நனைத்துப் பின்னர் கருகமணி கோர்க்கப்பட்டு அதன் மையத்தில் தங்கு பொட்டும் கோர்க்கப்படுகிறது. திருமணத்தின் போது மாப்பிள்ளை கருகமணி தாலியைத் திரைக்கு மேலே நீட்டுகிறான். துணைப் பெண் தாலியை வாங்கி மணமகளின் கழுத்தில் காட்டுகிறாள். கருகமணி அணிந்த பெண் திருமணம் முடிந்தவள் என மற்ற திருமணமாகாத ஆண்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு குறியீடாகவும் பயன்படுத்துகின்றது.

தொழில் சார் பொருட்கள்:
அ. குடுகுடுப்பை
         
         குறி சொல்லும் தொழில் செய்யும் காட்டு நாயக்க இனமக்கள் பயன்படுத்தும் இசைக் கருவி குடுகுடுப்பையாகும். இக்கருவியை ஆண்கள் மட்டுமே குறி சொல்லப் பயன்படுத்துகின்றனர். பகல், இரவு நேரங்களில் இக்கருவியினை இசைத்துக்கொண்டே குறிசொல்வர். குடுகுடுப்பைத் தயாரிப்பதற்கு மரக்கட்டையையும், வெண்கலத்தையும் பயன்படுத்துகின்றனர். உருள் வடிவம் போன்ற இருக்கக்கூடிய மரக்கட்டையின் திறந்த நிலையில் ஆட்டின் சவ்வினை இருபுறங்களில் மூடி நன்கு கட்டி ஒரு வளையம் பொருத்தப்படுகிறது. இதனை ‘சந்திர வளையம்’ என அழைக்கின்றனர். இரு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ள வளையத்தை ஒன்றோடு ஒன்றாக இறுகப்பற்றுமாறு சிறிய நூலினைக் கொண்டு கட்டுகின்றனர். நூலின் முனையில் தேன் மெழுகு போன்ற சிறிய உருண்டை அமுக்கி வைக்கப்படுகிறது. இறுதியாக உடுக்கையின் மையப்பகுதி நீளமான துணி கொண்டு கட்டப்படுகிறது. இத்துடனே சில வெண்கல மணிகளும் கட்டப்பட்டு இருக்கும். ஈஸ்வரன் (சிவபெருமான்) எல்லா மக்களுக்கும் தொழில் பிரித்து தரும்பொழுது இந்த இன மக்களுக்கு மட்டும் சித்து உடுக்கையைக் (குடுகுடுப்பை) கையில் கொடுத்து குறி சொல்லி பிழைத்துக்கொள் என்று கூறினார் என்ற தொன்மக்கதையும் மக்களிடையே நிலவிவருகிறது. மக்கள் தங்கள் தொழிலுக்குரிய கருவியைத் தாங்களே செய்து கொள்கின்றனர்.

ஆ. ஓலைச்சுவடி
         
      குறிசொல்வதற்கு இம்மக்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு பொருள் ஓலைச்சுவடியாகும். ஓலைச்சுவடி என்பது பனை ஓலையால் ஒன்று முதல் இரண்டு அடி கொண்டவையாகத் தயாரிக்கப்படுகிறது. இதனை ஆண், பெண் என இருவரும் குறி சொல்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஓலைச்சுவடியில் புராணக்கதைகளை மையமாகக்கொண்டு கதாபாத்திரங்களை வரைந்திருப்பர். எடுத்துக்காட்டாக: பனை ஓலையின் இரு பக்கங்களிலும் இராமன், முருகன், சீதை, அனுமன், ஜக்கம்மாள், பூதம், பேய் போன்றவற்றின் உருவங்கள் வரையப்பட்டிருக்கும். இவை மட்டும் இல்லாமல் சூரியன், நிலவு, விண்மீன்கள், சூலம் போன்ற சின்னங்களும் வரையப்பட்டிருக்கும். ஒலைச்சுவடியினைச் சுற்றி வைக்கப்படுகின்ற நுனியின் அரை அடி நீளம் கொண்ட கம்பி ஒன்று கட்டி வைக்கப்பட்டிருக்கும். மக்களின் வாழ்வின் போக்கினை இப்படங்கள் கொண்டு குறியாகச் சொல்கின்றனர்.
வேட்டைக்காகப் பயன்படுத்திய பொருட்கள்         
      காட்டு நாயக்க இனமக்களின் தொழில்களுள் வேட்டையாடுதல் மிக முக்கியமானதாகும். உணவுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொழிலாகும். அதன் பயன்பாட்டுக் கருவிகளையும் மக்களே செய்து கொண்டனர். தேவைக்கும் பயனுக்கும் தகுந்தாற்போல் தயாரிக்கப்படுகிறது.

அ. கவண்கல் 
         
     காட்டுநாயக்கன் பழங்குடியினர் பயன்படுத்துகின்ற வேட்டைப் புழங்குப் பொருட்களுள் ஒன்று கவண்கல்லாகும். கவண்கல் ஆனது ஆங்கில எழுத்து “A” வடிவில் இருக்கும். இதனை ” A ” வடிவில் இருக்கும் மரக்கம்பு, கயிறு அல்லது இரப்பர் நாடா சேர்த்துக்கட்டி உருவாக்குகின்றனர். அதனை சிறிய விலங்குகள் வேட்டையாடப் பயன்படுத்துகின்றனர்.

ஆ. குத்துவெட்டி
         
   குத்துவெட்டி விலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படும் கருவியாகும். இந்த பொருளினைப் பெரும்பான்மையாக ஆண்களே கையாளுகின்றனர். காட்டுநாயக்கன் மக்கள் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வந்த போது வேட்டைக்குச் செல்வர். சிறுத்தை, புலி, மான் போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக இப்பொருள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு அடி உயரம் கொண்டு நான்கு அடி குச்சியினைக் கைப்பிடியாகக் கோர்த்தும் நுனி முனையாது மிக கூர்மையான ஈட்டி போன்ற அமைப்பினையும் கொண்டிருக்கும்.

இ.சக்கி முக்கி 
         
      சக்கி முக்கி என்பது ஒரு விதமான வெண்மை நிற கல்லாகும். இக்கல்லிற்கு இம்மக்களால் வழங்கப்படும் பெயர் “வெங்கட்ராயி” என்பதாகும். அதனைத் தமிழில் “வெங்கட்சாங்கல்” என்ற பெயரால் வழங்குகின்றனர். இக்கல்லுடன் இரும்பு உருக்கு ஒன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் “இலவம்பஞ்சு” சேர்க்கப்படுகிறது. கல்லையும் இரும்பையும் உரசும் பொழுது உராய்வின் காரணமாக நெருப்பு பொறி உருவாகின்றது. இந்த நெருப்பு பொரியானது இலவம்பஞ்சில் படும்பொழுது நெருப்பு உண்டாகிறது. அந்த சிறிய நெருப்பினைப் பெரிய துணியில் வைத்து பற்ற வைக்கின்றனர்.  நெருப்பில் இருந்து வருகின்ற புகையினை எலிப் பொந்துகளில் முயல் பொந்துகளில் மற்றும் குகையில் வசிக்கும் நரி போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கும் நெருப்பினைச் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
ஈ.இலவம் பஞ்சு
         
      தீப்பெட்டி இல்லாத காலத்தில் நெருப்பு உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு புழங்கு பொருள் இலவம் பஞ்சு ஆகும். 150 வருடங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசித்து வந்த காலத்தில், இம்மக்கள் இலவம்பஞ்சு மரத்திலிருந்து கிடைக்கின்ற காயினை நெருப்பில் சுட்டு அதில் இருக்கின்ற பஞ்சினைக் கருக்கி பனங்கொட்டையில் சேகரித்து வைத்துக்கொண்டனர். அதனை அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது சக்கி முக்கி கல்லோடு இணைத்து நெருப்பினை உண்டாக்கினர். இதனை ‘உலோவம் பஞ்சு’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

உ. பனங்கொட்டைக் குடுவை
         
      பனை மரத்திலிருந்து அழுகிய நிலையில் விழும் பனம் பழத்திலிருந்து பனங்கொட்டை கிடைக்கிறது. இந்த பனங்கொட்டையினைக் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் தீப்பெட்டிக்கு நிகராகப் பயன்படுத்துகின்றனர். மழை, வெயில் பாராமல் அலைந்துதிரிந்து வேட்டையாடச் செல்வர். அவ்வாறு வேட்டையாடிய விலங்கின் உணவினைச் சமைப்பதற்கும் குகைகளில் உள்ள நில பொந்துகளில் உள்ள விலங்குகளை வெளியேற்றுவதற்கும் நெருப்பு தேவைப்பட்டது. அந்த நெருப்பு உருவாக்குவதற்கு உலோகம் பஞ்சு தேவைப்பட்டது. அப்பஞ்சினை மழையில் நனையாதவாறு பாதுகாப்பதற்கு பனங்கொட்டைகளைப் பயன்படுத்தினர். பனங்கொட்டை விளிம்பில் சிறிய துளை ஒன்றினை உருவாக்கி அதில் கருக்கியப் பஞ்சினைச் சேமித்து வைப்பர்.

முடிவுரை
         
      மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பிணைந்திருக்கக் கூடிய வழக்காறுகள் பண்பாடாக உருப்பெறுகிறது. மக்களின் மரபுசார்ந்த அறிவினையும் வாழ்வியல் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகப் பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. காட்டு நாயக்க இனமக்கள் பயன்படுத்தும் புழங்குப் பொருட்கள் தொடர்நிலை அறிவு வளர்ச்சியினை வெளிப்படுத்துகிறது. இல்லம் சார்ந்து பயன்படுத்தக் கூடியப் பொருட்கள் நம்பிக்கை அடிப்படையிலும் பயன்பாட்டு அடிப்படையிலும் மக்கள் வாழ்வில் நிலைத்திருக்கின்றன. வேட்டையாடுதல் சார்ந்த புழங்கு பொருட்களை ஆராய்கின்ற போது அப்பொருட்கள் பலமுறை முயற்சிக்குப் பின் உருவானது என்று அறிய முடிகிறது. காட்டு நாயக்க இன மக்கள் இயற்கையிலிருந்து பெற்றிருந்த அறிவினையும் அம்மக்கள் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வியலையும் இனங்காண முடிகிறது. காட்டுநாயக்க இனமக்களின் புழங்குப் பொருட்களை ஆராய்கின்ற போது நீண்டதொரு பண்பாட்டுத் தொடர்ச்சியினை வெளிப்படுத்துகிறது.

தகவலாளர் பட்டியல்
1.பாப்பாத்தி,60, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

2.ஜோதி, 50, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

3.காளியம்மாள், 80, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

4.முத்து, 72, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

துணைநூற்பட்டியல்
1.மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம்,2009

2.கழகத்தமிழ் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1964

3.நர்மதாவின் தமிழகராதி, நர்மதா பதிப்பகம்,2018

4.தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம்,1982

5.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், 2005.

6.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா வெளியீடு, 2020

7.பாரதி பக்தவத்சல சி., பண்பாட்டு மானுடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1980.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

த.செல்வராஜ்,

முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்),

தமிழ் உயராய்வுத்துறை,

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),

கோவை – 641 018.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »