Tuesday, June 2, 2026
Home Blog

A Comparative study of SunyaSampashanai in Thirumantram and Pooranam concept in Vethathiriyam| S.Gnanasambandan

திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூர
Abstract
          SunyaSampashan is a symbol in the Siddha tradition. Delivering the message they were trying to convey. Guru’s blessing is necessary to understand its meaning. Thirumoolar gives 70 hymns entitled SunyaSampashanai in the ninth Tantra of the Thirumantram. These hymns with yogic techniques indicate attaining God through yoga, attaining perfection and attaining rapture. Similarly, Vedatri Maharishi explains this state in Vethathiriyam philosophy as Pooranam. And calling this nothingness and pure space, this self-directed and compressed itself expanded into atoms, PanchaBuddhas, multi-living beings and eventually blossomed into man in the state of mind. This is the history of the universe, says Vethathiri. When man stands in morals and practices penance in the way of yoga, his soul merges with God in the primordial realm of purity. Attains bliss. This is what Vethathiri explains as Mukti and perfection.
Key Words: Shunyam, Nothingless, Absolute Space – Pooranam: Fullness, Abundance, all the whole.
“திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூரணமும் ஓர் ஒப்பீடு”
ஆய்வுச் சுருக்கம்
          சித்தர்களின் நெறியில் சூன்ய சம்பாஷனை என்பது ஒரு குறியீடு. பரிபாஷையாக தாங்கள் கூறவந்த செய்தியை உரைப்பது. இதன் பொருளை விளங்கிக் கொள்ள குருவின் உபதேசம் அவசியம். திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் திருமூலர் 70 பாடல்களைத் தருகிறார். யோக நுட்பங்களுடன் அமைந்த இப்பாடல்கள் யோகத்தின் வழியாக இறைவனை அடைதல், முழுமை பெறுதல், பேரானந்தநிலை எய்துதல் என்பதைக் குறிப்பதாக அமைகிறது. அதுபோலவே வேதாத்திரியத் தத்துவத்தில் இந்த நிலையினைப் பூரணம் எனும் பொருளில் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும் இதனை ஒன்றுமில்லாத ஒன்று என்றும் சுத்தவெளி என்றும் இதுவே தன்னைத்தானே இயக்கி இறுக்கிக்கொண்டு அணுக்களாகவும், பஞ்சப் பூதங்களாகவும், பல்லுயிர்களாகவும் விரிந்து மனம் என்ற நிலையில், இறுதியில் மனிதனாக மலர்ந்தது. இதுவே பிரபஞ்சச் சரித்திரம் என்கிறார் வேதாத்திரி. மனிதன் ஒழுக்க நெறியில் நின்று யோகத்தின் வழியில் தவம் பயின்று, அதிலேயே நிலைத்துப் பூரணம் என்ற நிலையில் அவனது ஆன்மா ஆதிநிலையான சுத்தவெளியில் இறைநிலையுடன் ஒன்றிக் கலக்கிறது. பேரின்பநிலையை அடைகிறது. இதுவே முக்தி எனவும், முழுமைப்பேறு எனவும் வேதாத்திரி மகரிஷி பூரணநிலையினை விளக்குகிறார்.
முன்னுரை
     உயர்ஞானப் பொருளைப் பக்குவப்பட்ட உயிர்களுக்கு அறிவிக்கும் முகமாக உள்முகமாக சிந்திக்கத் தூண்டி, நிஷ்டையில் கூடுவதற்கு வழிவகுக்கும்படி அமைந்துள்ளது. திருமந்திரத்தில் தத்துவ நுட்பங்கள் புதைந்துள்ள ஞானச் சக்கரம்
சூன்ய சம்பாஷனை என்பது
🌻குறியீட்டு மொழி,
🌻மறைபொருள்
🌻புதைபொருள், ஆழ்பொருள்
🌻உட்பொருள் கூற்று
🌻இரக்கமற்ற மொழி
🌻இரகசிய மொழி
🌻இரட்டை மொழி
🌻உறங்கும் மொழி
🌻சந்தி மொழி – சந்தியா மொழி
🌻கமுக்க மொழி
🌻திரையிட்ட மொழி
🌻தலைகீழ் மொழி
🌻மயக்குமொழி
🌻முரண்பாட்டு மொழி
    திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் – ஒன்பதாம் தந்திரத்தில் 22 தலைப்புகளில் 17ஆவது தலைப்பில் 70 பாடல்கள் சூன்ய சம்பாஷனை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. சூன்ய சம்பாஷனை என்பது மறைபொருள் கூற்று என்று சில பதிப்புகளில் வேறு வேறாக குறிப்பிடப்படுகிறது. எனினும் ஞானப்பொருளை மறைவாகப் பேசுவது என்ற விளக்கமும் உரைக்கப்பட்டுள்ளது. சூன்ய சம்பாஷனையில் சூன்யம் என்றால் என்ன? சூன்யம் என்பது வெட்டவெளி, சுட்டவெளி என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுவே சும்மா – சிதாகாசம் – சொல் இறந்த தூவெளி – வேதாந்த வெளி – பாழ் என்று சித்தர்களால் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி சுத்தவெளி சூன்யம், இருள் என்று பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்ற அந்தநிலை பூரணம் எனவும் அந்த நிலையை அடைவதே நமது முழுமைநிலை, முக்தி என்கிறார்.
மறைபொருள் கூற்று
       மறைபொருள் கூற்று என்பது கூறவந்த கருத்தைப் புதைபொருளாகக் கூறி மேலோட்டமாக, சாதாரணப் பொருளைக் கூறுவது. ஞானியர், மகான்கள் ஞானப் பொருளை நேரடியாகச்க் கூறாமல் மறைத்துக் கூறினர். இது சித்தர்களின் நெறிகளில் ஒன்றாகும். வேதமரபினர், வைதிக மரபினர், சித்தர்கள், சமயத் தத்துவங்களை நேரடியாக சீடருக்கு  கூறமாட்டார்கள். தீட்சையில் முறையிலே உட்பொருளாக உரைப்பார்கள். காரணம் பக்குவப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும் பின்னர் அதைப் பின்பற்ற முடியும் என்பதால் திருமந்திரத்தில் திருமூலர் பல பாடல்கள் மறைபொருளாகப் கூறியுள்ளார்.       
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே (திருமந்.2251)
    உலகப்பொருள் நாட்டம் கொண்டவர்க்கு இறையாற்றல் புலப்படுவதில்லை என்பதை மரத்தால் செய்யப்பட்ட யானையைக் கொண்டு விளக்க முற்படுகிறார் திருமூலர். “சூன்ய சம்பாஷனை” என்ற தலைப்பில் உள்ள 70 பாடல்களில் முதல் 12 பாடல்களில் மனம் அறிவில் அடங்க நல்ல எண்ணங்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். சிற்றின்பம் நாடாது, இந்திரிய வழி செல்லாது உடலில் கலந்துள்ள இறைவனை உணர்ந்து ஒளிநிலை பெற தீமை, பகை, சமன் செய்ய முயல வேண்டும். ஞானத்தால் இறைவனை அடைதலுக்கு 14 பாடல்களையும் மீதம் உள்ள 56 பாடல்களில் சகஸ்ரார தளத்தை அடைந்து பேரின்பநிலை பெறவேண்டும் என்பதை வெளிப்படையாக வலியுறுத்துகிறார்.
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசை பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் பொன் ஆமே         (திருமந்.2869)
      உலக இன்பத்தில் சூழ்ந்து கயல் மீனைக் காண்பவர் பிறவிக்கு மீண்டும் மீண்டும் உட்படுபவர். சிவமாகிய முயலை அடைய விரும்பி சரியை, கிரியை, யோகம், ஞானம் நெறிகளில் படிப்படியாக முயலுகின்றவர் பக்குவ நிலையினைப் பெற்று ஞானத்தால் இறைவனை அடைவர். எனவே “சூன்ய சம்பாஷனை” என்பது சூன்யமாகிய வெட்ட வெளியைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. எனவே மறைபொருள் கூற்று என்பதைவிட சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பே பொருத்தமாக அமைகிறது என்கிறார் முனைவர் சுடலி தியாகராஜன் தமது “பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம்” எனும் நூலில்*.
அமிர்தம் பருகல்
     சகஸ்ரார தளத்தில் அமிர்தம் பருகுதலை பல இடங்களில் மறைபொருளாக “சூனய சம்பாஷனையாக” திருமந்திரத்தில் குறிக்கப்படுகின்றன.
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித் தின்பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாரே (திருமந்.2847)
    மனத்தை வைராக்கியமாகக் கொண்ட மூங்கில் முளையில் எழுந்த வேம்பில் பொருந்தியுள்ள முதுகுதண்டைப் பனைமரத்தோடு ஒப்பிடுகிறார். முதுகுத் தண்டின்கீழ் குண்டலினியாகிய பாம்பைத் தலைஉச்சியில் எழுப்பி அமுதம் உண்பாரின்றி வேம்பு பயன் தராது என்பதைத் திருமூலர் சூன்ய சம்பாஷனையாக கூறுகின்றார்.
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முளைமேல் அமிர்தம் பொழிய வைத்தானே திருமந்.2842)
     புருவமத்தித் தியானத்தின் விளைவு உச்சந்தலையாகிய சகஸ்ரார தளத்தை எய்தும். அப்போது அங்கே உள்ள சுரப்பிகள் புதுவகை நீரைச் சுரக்கும். அதைத் திருமூலரும் அமுது என்கிறார்.
உண்ணீர் அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர் சமாதி யமர்ந்து தீராநலங்
கண்ஆற்றோடே சென்று கால்வழி மாறுமே (திருமந்.882)
      உண்ணீர் அமுதம் என்பது காயத்துள் ஊறும் அமிர்தம் ஆகும். அதுபோல தாமரை என்று இங்கு சகஸ்ரார தளத்தையும், கால்வழி என்பது காற்றாகிய மூச்சையும் (வாசியோகம்) திருமூலர் மறைபொருளாக விளக்குகிறார்.
வள்ளலாரின் வெட்ட வெளி அனுபவம்
      வெட்டவெளி பற்றியும் வெளியில் கிட்டும் சுகானுபவம் பற்றியம் வள்ளலார் தம் அருட்பெருஞ்சோதி அகவலில் உரைக்கின்றார். *பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், சுடலி தியாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்.90
🪔தன்னுள் தன்னை அறியச் செய்வதால் தனிவெளி என்றும்,
🪔ஞானப் பேரின்பம் நல்குவதால் ஞானசுகோதய வெளி என்றும்,
🪔மெய்ப் பொருள் தரிசனம் கிட்டுவதால் ஆனந்தவெளி என்றும்,
🪔ஞானயோகம் காட்டும் யோகானந்தத் திருவெளி என்றும்,  வள்ளல்பெருமான் குறிப்பிடுகின்றார்.
       சிதாகாசம் எனப்படும் வெட்டவெளியில் ஆன்மாவைக் கலந்து மரணமிலப் பெருவாழ்வைக் காண்பதே சித்தர்களின் குறிக்கோள். அத்தகு கலப்பே பேரின்பம். சிதாகாசம் மெய்வெளியை அடைவதற்கு ஆன்மா பக்குவம் பெற வேண்டும். மெய்ப்பொருளாகிய இறைவனோடு இரண்டறக் கலக்க ஆன்மா சமநிலை பெறவேண்டும். ஞானவழியில் யோக வழியில் இத்தகு சாயுச்சிய நிலை அடைவதையே ஆன்ம பயணத்தின் முடிவாக சித்தர்கள் கருதுகின்றனர்.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி அக்கச்சி மயில் குயிலாச்சுதடி
-திருவருட்பா 6ஆம் திருமுறை, 129 அருட்காட்சி (2211)
       வள்ளல்பெருமான் தலை உச்சியில் திகழும் இந்த அமுத ஊறலை நாதாந்த இன்பமாக காண்கிறார். விந்துவாகிய மயில் தலை உச்சியில் விளங்கும்போது அமிர்தம் சுரக்கும்.  அதனால் விந்துவாகிய மயில் நடனமாடும்.  பின்னர் அந்த மயிலே குயிலாக நாதமாக மாறும்.  விந்து தத்துவ அனுபவம் நாத தத்துவ அனுபவமாக விளைவதுதான் மயில் குயிலாச்சுதடி என்பதாகும் எனத் தவத்திரு ஊரன் அடிகள் தமது சன்மார்க்க விருத்தியில் விளக்குகிறார்.
உச்சிக்குள் அமர்ந்த உயர் வாழ்வு
ஊன் கொண்ட தேகத்திலே உச்சி மீதினிலே
நான் கண்ட நடனமதை நண்பர்களே சொல்லுகிறேன்
மான் கண்ட வேகத்திலே மருளுகின்ற நடையதுபோல்
நான் கண்ட நடனமதை நண்பர்களே சொல்லுகிறேன். (ஞா.க.1477)
     வேதாத்திரி மகரிஷி துரிய தவத்தில் ஆழ்ந்து இருக்கும்போது தாம் பெற்ற அனுபவத்தை நடனமாக ஆனந்த நிலையாக அடைந்த பேறுஎன்கிறார்.
ஔவைக்குறளில் அமிர்த தாரை என்னும் பரிபாஷை
ஆனகலசத் தமிர்தத்தை அறிந்து உண்ணில்
போனகம் வேண்டா மற்போம் (அவ்.குறள் – அமுதத் தாரணை பாடல் எண்.4)
     தலைஉச்சியில் சுரக்கும் கலச அமிர்தத்தை உண்ணும்போது சாப்பாடு என்பது தேவையற்றதாகி விடுகிறது. யோகியர்கள் உலகில் கிடைக்கும் உணவைப் பொருட்படுத்துவதில்லை.  இந்த அமிர்தம் தைலத் தாரையாக உச்சியிலிருந்து நாவுக்கு வந்து எட்டுவதால் அது அவர்களுக்குப் பசியையும் தூக்கத்தையும் அகற்றிப் பரம ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. வெளியிலிருந்து ஏற்கப்படும் உணவுகள் சிலவற்றை உடல் ஏற்றுக்கொள்வதில்லை  அப்போது அது துன்பத்தை ஏற்படுத்தும்.  ஆனால் உள்ளிருந்து ஊறும் அமிர்தம் செரிமானம் என்ற ஒன்றில்லாத காரணத்தால் உயிரையும் உடலையும் நன்றாகப் பேணுகிறது. ஆகவே யோகியர்கள் முழுநிலவு அன்று பௌர்னமி தவம் இயற்றும்போது சந்திர மண்டலத்தில் ஊறும் அமிர்தத்தை உண்டு நீண்ட நாட்கள் உணவின்றி யோக நிலையில் நிலைத்து இருப்பார்கள் என்கின்றனர் சித்தர் ஆய்வாளர்கள்.
மேலையமிர் தமிதை விலங்காமற் றனுண்ணில்
காலனை வஞ்சிக்கலாம் (அவ்.குறள் – அமுதத் தாரணை பாடல் எண்.7)
    சிரசில் விளையும் அமிர்தத்தை ஒழியாமல் உண்டால் காலனை வஞ்சிக்கலாம்.  அதனால்தான் திருக்கடவூர் தலத்தின் இறைவர் மூலவர் அமிர்தகடேஸ்வரர் என்றும், அவர் காலனைக் காலால் உதைத்தல் என்பது இறப்பினைத் தவிர்த்து இளமையோடு எப்போதும் இருக்கும் நிலை.
தலைகீழ் மொழி (சந்தி மொழி)
     பேரா.டி.என்.கணபதி தமது சித்தர்களின் குறியீட்டு மொழியும் திருமூலரின் சூன்ய சம்பாஷனையும் என்ற நூலில் குறிப்பிடுவதாவதுசித்தர்களின் சூன்ய சம்பாஷனையை உலட்பாம்ஸி – தலைகீழ் மொழி (சந்தி மொழி) என்கிறார்.
உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆகும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே (திருமந்.869)
      தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என்பது மணிபூரகத்தில் உதித்து எழும் சோதியாகிய அக்கினியை தலைஉச்சியாகிய சிரசில் ஏற்றும் மந்திரவித்தையை அறிந்தவர் இல்லை. அப்படி அறிந்தால் தலை உச்சியில் தோன்றும் சிவஒளியின் முன் சீவ ஒளி கலப்புறும். சிவனுக்கு முன் சீவன் கலப்புறும் நிலை.
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத் தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழிஅதுவாமே (திருமந்.588)
🪔வீணாத்தண்டு – நடுநாசி – சுழுமுனை
🪔கோணா மனம் – வெளியில் செல்லாத தடுக்கப்பட்ட மனம்
🪔காணாக்கண் – கேளாசெவி – புலன் அடங்கி இருத்தல்
          இதுவே வாழ்நாள் அடைக்கும் வழி. சூன்யம் என்பது ஒன்றுமில்லாமை அன்று. அது பொருள்தன்மையற்றுப் போதல் அது கால இடக் கட்டுப்பாடுகளுக்கு அடங்காத ஒரு திறந்தவெளிப் பரிமாணம். அது காட்சிக்கு அடங்காத நிலை.
எண்களில் குறியீட்டு மொழி
அஞ்செழுத்திலே (1) பிறந்து அஞ்செழுத்திலே (2) வளர்ந்து
அஞ்செழுத்தை (3) ஓதுகின்ற பஞ்ச (4) பூத பாவிகாள்
அஞ்செழுத்தில் (5) ஓரெழுத்தை அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே  (சிவவாக்கியர் . 20)
அஞ்செழுத்து ஐந்து முறை வருகிறது.
முதல் ஐந்து – புலன்கள் 5 அல்லது ஐந்து கோசங்கள்
2ஆவது ஐந்து – பஞ்ச பிராணன்கள்
3ஆவது ஐந்து – பஞ்சாட்சரங்கள்
4ஆவது ஐந்து – ஐந்து பூதங்கள்.
ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பதெழுத்தின் அடைவை யறிந்தபின்
ஐம்பதெழுத்தே அஞ்செழுத்தா மே (திருமந்.2698)
அட்சரங்கள் 50  அமைந்துள்ள இடங்கள்

அட்சரங்கள் 50  அமைந்துள்ள இடங்கள்

🪔மூலாதாரம் –4 அட்சரங்கள்
🪔சுவாதிஸ்டானம் – 6 அட்சரங்கள்
🪔மணிப்பூரகம் – 10 அட்சரங்கள்
🪔அநாகதம் – 12 அட்சரங்கள்
🪔விசுத்தி – 16 அட்சரங்கள்
🪔ஆக்கினை – 2 அட்சரங்கள்
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் இவை யோகக் காட்சியில் விளங்கும் – சா – வே- போ சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்தி..உலகியலில் காணாத காட்சியை கேட்காத ஒலிகளை யோகானுபவம் தருகிறது என்கிறார் வள்ளலார்.
வேகாத கால் பரம அணுவேயாகும்
வெந்த வெல்லாம் இதன் மோதல் இயக்கத்தால் ஆம்
சாகாத்தலை ஆதிநிலையே அன்றோ
சாத்திரங்கள் கூறுவதைப் புரட்டிப் பாரீர்
போகாப் புனல் அறிவே புத்திக்குள்ளே
புகுந்து புகுந்தே அனைத்தும் போகும் நிற்கும் (ஞா.க.1411)
🪔தலைகால் புரியவில்லை என்பது பிராணன் கால் கட்டைவிரலில் புறப்பட்டு தலை உச்சியில் விளங்குவது (வாசி யோகம்)
🪔விட்டகுறை – பிராணனை இடகலை பிங்கலை வழியாக செலுத்துதல்
🪔தொட்ட குறை – மூலாதாரத்தை தொட்டு சுழுமுனை வழியாக மேலே ஏற்றுதல்.
🪔கூறைஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?தலைஉச்சியாகிய சகஸ்ரார தளத்தில் மனம் அடங்கி நாதமாகிய ஒலியை உணரவல்லார்க்கு சுத்தவெளியாகிய வைகுந்த பதியில் இறைநிலை உணரமாட்டார்.
ஆதி நிலையே சூனியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி
ஒன்றும் இல்லாத ஒன்று இருளாக குறைவிலா நிறைவாக,
பூரணமாக மௌனமாக உள்ளது.
உடலுக்குள் உயிர், உயிர்க்குள் அறிவு என்று உள்ளுணர்ந்து
மனதை அறிவில் ஒடுக்கி நிற்கு நிலையினை போன்றது
அதற்கு முன்னதாக ஏதும் இருந்ததில்லை
எனவே அதனை “ஆதி: என்கிறோம். (ஞா.க.1479)
      பெருவெளியே தெய்வம் என்ற கருத்தும், அந்த வெளியின் தன்மாற்றமே இப்பிரபஞ்சம் என்ற உணர்வும், வேதாத்திரிய இறைத் தத்துவத்தின் சிறப்பு அம்சங்களாகும். அனைவருக்குள்ளும் ஊடுருவி நிற்கின்ற மெய்ப்பொருள் ஒன்றே ஆனதால் ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழவேண்டும் என்பதே வேதாத்திரிய சமுகவியல் சிந்தனையின் அடிப்படையாக அமைகிறது.
பூரண நிலையினைச் சீடருக்கு வாக்கிறந்த உபதேசமாக உரைத்தல்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்
 (பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், மதுரை காண்டம், கடவுள் வாழ்த்துபாடல் 14).
   இங்கே இறைவன் தட்சிணாமூர்த்தியாக சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரண நிலையாக இறைவன் இருக்கிறான். அவனே எல்லாமாகவும் இருக்கிறான். மறைகளுக்கும் அப்பாலும் இருக்கிறான் என்கிறார் திருவிளையாடல் புராணத்தில் தட்சிணாமூர்த்தி துதியினை அருளிய பரஞ்சோதி முனிவர்.
வேதாத்திரியின் சூன்யம் மற்றும் பூரணம் தத்துவம் குறித்த ஒப்பீடுகள்.
திருமந்திரத்தில் யோகத்தின் வழியாக இறைவனை அடைதல், முழுமை பெறுதல், பேரானந்தநிலை எய்துதல் என்பதைச் சூன்யநிலை என்றும், வெட்டவெளி என்றும் திருமூலர் எடுத்துக்காட்டுகிறார்.  அதுபோலவே வேதாத்திரிய தத்துவத்தில் இந்த நிலையினை பூரணம் எனும்பொருளில் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும் இதனை ஒன்றுமில்லாத ஒன்று என்றும் சுத்தவெளி என்றும் இதுவே தன்னைத்தானே இயக்கி இறுக்கிக்கொண்டு அணுக்களாகவும், பஞ்ச பூதங்களாகவும், பல்லுயிர்களாகவும் விரிந்து மனம் என்ற நிலையில் இறுதியில் மனிதனாக மலர்ந்தது. இதுவே பிரபஞ்சத்தன்மாற்றச்சரித்திரம் என்கிறார் வேதாத்திரி. மனிதன் ஒழுக்க நெறியில் நின்று யோகத்தின் வழியில் தவம் பயின்று, அதிலேயே நிலைத்துப் பூரணம் என்ற நிலையில் அவனது ஆன்மா ஆதிநிலையான சுத்தவெளியில் இறைநிலையுடன் ஒன்றிக் கலக்கிறது. பேரின்பநிலையை அடைகிறது. இதுவே முக்தி எனவும், முழுமைப்பேறு எனவும் வேதாத்திரி பூரணநிலையினை விளக்குகிறார்.
சூன்யம் குறித்த மகரிஷி பாடல்கள்
       சூன்யம் உறுதிப்பொருள் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. முன்னர் ஆதி நிலையை உணர்ந்தோர் தோற்றங்கள் அனைத்தும் இயங்கிக்கொண்டு உள்ளன. அதனால் மனமும் இயங்கிக்கொண்டு உள்ளது. மன அலைச்சூழலைக் குறைத்து இயக்க நிலையைக்கழித்தால் மிச்சம் இருக்கும் இருப்பு என்பது பாழ் என்ற வெட்டவெளியாகும். இதுவே சூன்யம், இருள் என்று அழைத்தனர் ஞானியர். இருளாக உள்ள சூன்யம்தான் கோடான கோடி சூரியன், சந்திரன், கோள்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கும் வலிமையான உறுதிப்பொருளாக உள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
சூனியமாம் இருள் ஏதுமற்றதென்றும்
சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நன்று
சூனியமே கோடானுகோடி அண்ட
சூரியன் சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்
சூனியமே வலிமைமிக்க உறுதியாய் நின்று
சொரூப கோடிகளை இறுக்கி இயக்கு தன்றோ?
சூனியத்தை அணு நிலையாய்க் கொண்டு
சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன் (ஞா.க. 1380)
சூனியம் – ஆதிநிலை அறிதல்
       மனிதப் பிறவியின் நோக்கம் தனது ஆதிநிலையை அறிந்து, பேரறிவாகிய தெய்வீகத்தில் தமது சிற்றறிவை இணைத்துக் கொள்வதுதான். ஆறாவது அறிவு பெற்ற மனிதன் பெற வேண்டிய பேறாகிய முழுமைப்பேறாகும். அவ்வாறு தனது ஆதிநிலையை ஒருவர் அறிய எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள், சடப்பொருள்கள், சீவன்கள் ஆகிய தோற்றப் பொருட்களையும், ஐம்புலன் உணர்வுகளையும், ஒவ்வொன்றாக மனதிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அறிவுதான் மிஞ்சும். அந்த அறிவையும் கழித்துவிட்டால் மீதம் இருப்பது இருள், அகண்டம், நிர்விகற்பம், மௌனம் என்கிற ஆதிநிலையான சூன்யம் ஆகும். அறிவு அரூபம், ஆதிநிலையான தெய்வமும் அரூபம். இதுவே ஆதிநிலையை அறியும் வழியாகும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
ஆதிநிலை அறியவென்றால் அறிவைக் கொண்டு
அணுமுதலாய் அண்டபிண்ட தோற்றம் மற்றும்
சோதி, சப்தம், இவையோடு மணங்கள் என்று
சொல்லுலுகின்ற அனைத்தையுமே ஒவ்வொன்றாக
ஊதித்தள்ளி விட்டுவர, கடைசியாக
உனது அறிவே, அதையும் கழித்துவிட்டால்
மீது என்ன? இருள், அண்டம், நிர்விகற்பம்
மௌனமெனும் சூனியமே இதுவே ஆதி (ஞா.க.1377)
 சூனியத்தை எப்படி காணுவது?
 எண்ணுவதால் பார்வையினால் சூனியத்தை
இன்னபடி என அறிய முடிந்திடாது
எண்ணத்தால் யூகித்தே சூனியத்தை
ஏதோ ஒருவாறாக உணரலாகும் (ஞா.க. 1534)
      எண்ணுவதாலேயோ பார்வையாலேயோ சூனிய நிலையாகிய இருப்பு நிலையை இப்படித்தான் உள்ளது என்று மனிதனால் அறியமுடியாது. எண்ணத்தைக் கொண்டு உத்தேசமாகக் கணிக்கும் யூகத்தினால்தான் உணரமுடியும். எண்ணத்தை எண்ணத்தில் லயிக்கச் செய்யும் குண்டலினி தவம் பழகுபவர்கள் எண்ணம், நினைப்பு இன்றி ஒடுங்கி இருக்கும் நிலையில் சூனியத்தை உணர நேரிடலாம் என்கிறார் மகரிஷி.
பூரணம்
      ஒன்றுமில்லாத ஒன்று இருளாக, குறைவில்லா நிறைவாக பூரணமாய் மௌனமாக நிற்கும் நிலையினைப் போன்றது. இதற்கு முன்பாக ஏதும் இல்லாதிருந்ததால் இதனை ஆதிநிலை என்கிறார் வேதாத்திரி.
ஒன்றுமிலலா ஒன்று இருள், பூரணம், மௌனம்
உள்ளுணர்ந்து ஒடுங்கிநிற்கும் நிலையைப் போன்று
ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஆதியில்லை
ஒளி, வெளிச்சம், இயக்கம் அணு அதன் பூரிபபு
ஒன்றுமிலா ஒன்று இந்த நான்கானாலும்
ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தாகும்
ஒன்றுமில்லா ஒன்றின் இரகசியத்தைக் கண்டால்
உண்டு என்பது இல்லை என்பது இரண்டும் ஒக்கும் (ஞா.க.1379)
கடவுள் – பூரணம்
கடவுள் ஒன்றே பூரணமாம் உவமையில்லை
கருத்தொடுங்கில் கருத்தறிந்த நிலையில் மௌனம்
கடவுள், அணு. ஒலி, ஒளி, இறுக்கம் இவையாக உள்ளான்
கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக (ஞா.க.1388)
      கடவுள் என்ற ஒன்றுதான் குறைவில்லா நிறைவானது. பூரணமானது. ஆகவே இதை உவமை காட்டி விளக்க முடியாதது. தவத்தில் ஒடுங்கி உணர்வு நிலையில் மௌனமாக உணர வேண்டும். பூரணம் என்ற சொல்லுக்கு முழுமை என்பதே பொருளாகும். பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்துவிட்டால் மிஞ்சுவது பூஜ்யம்தான். எனவேதான் கண்ணதாசன் பாடல் ஒன்று இதை
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன். 
                        (கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்: வளர்பிறை)
     என்கிறது. பூரணம் இறைநிலையின் அம்சம். தவத்தின் வழியாக மனத்தை ஒடுக்கி இதைக் கண்டிடலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
தொகுப்புரை
     சித்தர்களின் பரிபாஷை என்ற நெறியில் ஞானப்பேருண்மையினை சீடனுக்கு விளக்கும் சித்தர்நெறியில் திருமூலரும் இறைநிலையினை சூன்யநிலையாக திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் உணர்த்துகிறார். வெட்டவெளியாகிய சூன்யத்தை யோகத்தின் வழியாக தவநெறிகளை விளக்கி மாணவர் தம்மை மேம்படுத்திக்கொண்டு தம்முள் தாமாக உணர்ந்த ஆனந்த நிலையினை அமுதம் பருகுதல் என்ற வகையில் உணர்த்துகிறார் திருமூலர். வேதாத்திரி மகரிஷியும் தாம் வந்தநிலையே சுத்தவெளியிலிருந்துதான் என்கிறார். அந்தவகையில் சுத்தவெளி சூன்யம், இருள் என்று பலவாறாக பெயரிட்டு அழைக்கப்படுகின்ற அந்தநிலை பூரணம் என்றும் அந்த நிலையை அடைவதே நமது முழுமைநிலை. இதுவே நம்மை நாம் அடையவேண்டிய நிலையுமாகும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இக்கட்டுரையின்வழி திருமூலர் கூறும் ஒன்றுமில்லாத ஒன்றாகிய சூன்யம் என்பதும், எல்லாம் அடங்கியுள்ள பூரணம் என்ற நிலையும் இருப்புநிலையான இறைநிலையின் தன்மையினை உணர்த்துவதே என்பதாம்.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
1.திருமந். திருமந்திரம் பாடல் எண்  (திருமந்திரம் பாடல்களின் எண்கள் திருமந்திரமும் மூலமும் தெளிவுரையும் – பேரா.ஆ.மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம் என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளவையாகும்).
2.அவ்.குறள் அவ்வைக்குறள்
3.சிவ.            சித்தர் சிவவாக்கியர் பாடல்
4.ஞா.க.         ஞானக் களஞ்சியம் (தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி)
துணைநூல் பட்டியல்
1.திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் – புலவர் அ.மாணிக்கம், வர்த்தமாணன் பதிப்பகம். சென்னை.
2.சித்தர்களின் குறியீட்டு மொழியும் திருமூலரின் சூன்ய சம்பாஷனையும், பேரா டி.என.கணபதி, ரவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.
3.பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், முனைவர் சுடலி தியாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.சித்தர் பாடல்கள், ஞா.மணிக்கவாசகன், உமா பதிப்பகம், சென்னை
5.ஔவைக்குறள் மூலமும் ஞான தீபார்த்த உரையும், ப.வடிவேலு செட்டியார், பி.இரத்தின நாயகர் சன்ஸ், சென்னை
6.ஞானக்களஞ்சியம், பாகம் 1- 2, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு.
7.திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா ஆறாம் திருமுறை, வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வெளியீடு.
8.திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர், மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
9.சித்தர் தத்துவம், க.நாராயணன், மாரி பதிப்பகம், புதுச்சேரி.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச.ஞானசம்பந்தன்,
அறங்காவலர்,
வேளச்சேரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை,
சென்னை 600 042.

 

 

திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூரணமும் ஓர் ஒப்பீடு PDF

Silapathikarathil Marabu Valippatta Nambikkaikal|P.Thaneswari

சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள்
Abstrct
          Hope is the main source of human life. This hope is the impetus that makes a person move forward towards the next stage of development. A life without hope will become unstable and capsize like a boat without an oar. Good hopes create positive thoughts in the human mind and support the rise of life. The Tamil epic silappathikaram clearly show that various beliefs of the people and their manifestations. This study will reveal that although some of the beliefs included in it may seen like superstitions at first galance, they can be soothing to the mind and a psychological source of comfort to the soul in specific situation of human life.

“சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள்”

முன்னுரை
          மனித வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக விளங்குவது நம்பிக்கை. இந்த நம்பிக்கையே ஒரு மனிதனை அடுத்த கட்ட வளர்ச்சிநிலைகளை நோக்கி முன்னேறச் செய்யும் தூண்டுகோலாக அமைகின்றது. நம்பிக்கையற்ற வாழ்க்கை துடுப்பில்லாத படகைப் போன்று நிலைமாறிக் கவிழ்ந்து விடும். நல்ல நம்பிக்கைகள் மனித மனதில் நேர்மறைச் சிந்தனைகளை உருவாக்கி வாழ்க்கையின் உயர்வுக்குத் துணை நிற்கின்றன. முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் மக்களின் பல்வேறு வகையான நம்பிக்கைகளையும் அவற்றின் வெளிப்பாடுகளையும் தெளிவாகக் காட்டுகிறது. இதில் இடம் பெறும் சில நம்பிக்கைகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மூட நம்பிக்கைகள் போல் தோன்றினாலும் அவை மனித வாழ்வின் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மனதை ஆற்றுப்படுத்தும் தன்மையுடையதாகவும், உள்ளத்துக்கு ஆறுதலளிக்கும் உளவியல் ஆதாரமாகவும் அமைகின்றன என்பதை இவ்வாய்வு உணர்த்தும்.
பிறப்பு பற்றிய நம்பிக்கை
          சமண சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகளுள் முக்கியமானதாக விளங்குவது மறுபிறப்புக் கொள்கையாகும். அதன்படி ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் அடிப்படையில் அடுத்த பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும் என நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு என்ற கர்ம விதியை வலியுறுத்துகிறது.
கோவலன், கண்ணகியின் முற்பிறப்பு
          சிலப்பதிகாரத்தில் மறுபிறப்புக் கொள்கை தொடர்பான நம்பிக்கைகள் பல இடங்களில் வெளிப்படுகின்றன. கண்ணகி தன் முற்பிறப்பில் கணவனுக்காக மேற்கொள்ள வேண்டிய நோன்பினை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக இப்பிறவியில் கோவலனைப் பிரிய நேர்ந்ததாக, ‘பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக” என (சிலப்.9, காதை:56வரி) கண்ணகியின் தோழி தேவந்தி கூறுவது குறிப்பிடத்தக்கது.
          கோவலன் முற்பிறப்பில் பரதன் என்ற பெயரில் வாழ்ந்த போது சங்கமன் என்னும் வணிகனை அரசனிடம் ஒற்றன் எனக் குற்றம் சாட்டி கொலைத் தண்டனை வழங்கச் செய்த செய்தியை,
‘சங்கமன் என்னும் வணிகன் தன்னை
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவன்” (காதை 23: வரி 151-152)
          என்ற வரிகளில் அறிகிறோம், கோவலன் கண்ணகி பற்றிய முற்பிறப்புக் கதைகளில் உண்மை என்ன என்பது விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவை வெளிப்படுத்தும் அடிப்படைச் சிந்தனை மிக முக்கியமானதாகும். ஒருவன் இப்பிறவியில் செய்யும் செயல்களுக்கேற்ற பிரதிபலனை மறுபிறவியில் அனுபவிக்க நேரிடும் என்ற நம்பிக்கை மனிதனை ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது.
நிமித்தங்கள்
          நிமித்தம் அல்லது சகுனம் என்பது  பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும். பழங்காலத்திருந்தே சகுனங்கள் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ‘புறப்பொருள் வெண்பா மாலை” என்னும் நூலில் இத்தகைய நிமித்தம் அறிதல் ‘விரிச்சி” என்ற பெயரில் விளக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வரப் புறப்படுவதற்கு முன் விரிச்சி கேட்டல் மரபு வழக்கில் இருந்தமை அறியப்படுகிறது. இவ்வாறு நிமித்தம் அறிந்து கூறுவதற்கென்றே ‘நிமித்தகர்” இருந்தனர். வெற்றி பெற்ற அரசன் நிமித்தம் அறிந்து கூறிய நிமித்தகர்களுக்கு பெருமளவில் கொடைகள் வழங்கிய செய்தியும் அறியப்படுகின்றன. சிலம்பில்,
“குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன்று உண்டு
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு
நான் முலை ஆயம் நடுங்குடி நின்றிரங்கும்
மான் மணி வீழும் வருவது ஒன்று உண்டு”
          எனக் கூறுவதன் மூலம் பாற்குடத்தில் ஊற்றிய பால் உறையாமை, எருதுகளின் கண்களில் நீர் வழிதல், உரியல் வைத்த நெய்யை எடுத்து உருக்கினால் அது உருகாமை, பசுக்கள் நடுங்கி நிற்றல், பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் தானே அறுந்து விழுதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் தீ நிமித்தங்களாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. இத்தகைய தீ நிமித்தங்களையெல்லாம் கண்ட மாதரி குறவைக் கூத்தை நிகழ்த்துவதன் மூலம் துன்பம் நீங்கி நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் குரவைக் கூத்து நிகழ்த்துகிறாள். இதன் வழியாக, வழிபாடு மற்றும் மரபுசார் சடங்குகளின் மூலம் தீமைகளைத் தணித்து நன்மையை உருவாக்கும் பண்பாட்டு நம்பிக்கை வெளிப்படுகிறது.
நல்ல நாள் பார்த்தல்
          நல்ல நாள் பார்த்தல் என்பது மக்களிடையே நிலவும் ஒரு பண்பாட்டு நம்பிக்கைகயாகக் கருதப்படுகிறது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணங்களிலும், புதிய செயல்பாடுகளைத் தொடங்கும் நிலையிலும் அவை நன்மை பயக்கும்  வகையில் ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பது மரபாகும். இதற்காக சுப முகூர்த்தங்களையும், நல்ல நேரங்களையும் சோதிடர்களிடம் கேட்டறிந்து அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட நல்ல நாளிலேயே நற்செயல்களைத் தொடங்குவது வழக்கமாகும். இந்நடைமுறை தொன்று தொட்டு தமிழர் வாழ்வியல் மரபில் இடம்பிடித்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கமாக விளங்குகிறது.
          சிலப்பதிகாரத்தில் பன்னிரு ராசிகளின் கோள்களின் நிலைகளை ஆராய்ந்து உணர்ந்த நிமித்தகர் வட திசை நோக்கிப் படையெடுக்க இதுவே உகந்த காலம் என்கிறார். (25:26-31) வாளும் குடையும் முரசும் நிமித்தம் பார்த்த பின்னரே நிலைபெயர்க்கப்;பட்டன. புதிய செயல்களைத் தொடங்கும் முன்னர் நிமித்தம் பார்த்தமை இதன் மூலம் புலப்படுகிறது. மந்திரம் செய்தல், தெய்வ பூஜை செய்தல், மருந்திடுவது, சகுனம் பார்ப்பது சூழ்ச்சி செய்வது, தகுந்த இடமும் நேரமும் கருவியும் பார்பது என எட்டுக் கூறுகளையும் தமக்குத் துணையாகக் கொண்டு வாழ்பவர்கள் திருட்டைத் தொழிலாக் கொண்ட தீயவர்களாகும் என சிலப்பதகாரம் சுட்டிக் காட்டுகிறது. (16:178-179) இதன் மூலம் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர் கூட தகுந்த காலத்தையும் நேரத்தையும் ஆராய்ந்து செயல்பட்டனர் என்பது அறியப்படுகிறது.
கனவு நம்பிக்கை
          கனவுகள் என்பது நம் ஆழ் மனதின் எண்ண ஓட்டங்களே ஆகும். மனிதனின் ஆழ் மனதில் நிகழும் சிந்தனைகளின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. மனிதன் உறங்கும் நிலையிலும் மூளை முழுமையாகச் செயலிழக்காமல் விழிப்புணர்வுடன் இயக்குவதால் கனவுகள் தோன்றுகின்றன. குறிப்பாக ஒருவர் அதிக கவனம் செலுத்தும் அல்லது மனதில் ஆழமாகப் பதிந்த நினைவுகள் கனவுகளாக வெளிப்படுவது இயல்பானதாகும். இவ்வாறு தோன்றும் கனவுகள் முன்னறிவிப்பு உத்தியாகவும் கருதப்பட்டுள்ளன. மேலும் மனிதன் காணும் கனவுகளுக்கு நல் விளைவுகளும் தீய விளைவுகளும் உண்டு என்ற நம்பிக்கையும் சமூகத்தில் நிலவுகின்றது.
கண்ணகி கண்ட கனவு
        சிலப்பதிகாரத்தில் கண்ணகி தான் கண்ட கனவைத் தன் தோழி தேவந்தியிடம் கூறுகிறாள்,
“கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதி உள்பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடு தேள் இட்டு என் தன் மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்”
          என்று தான் கண்ட கனவை காற்சிலம்பை எடுத்துக் கொண்டு மதுரைக்குச் செல்வது முதற்கொண்டு மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுதல், கண்ணகி பாண்டிய மன்னனிடம் வாதாடுதல், இறுதியில் கணவனுடன் வானுலகம் செல்லுதல் வரை உள்ள நிகழ்வுகள் அனைத்தையும் கண்ணகி கனவாக விளக்குகிறாள். இவ்வாறு கூறப்படும் கனவும் பின்வருவனவற்றை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகளாக அமைகின்றன என்பதைக் காண முடிகிறது.
கோவலன் கண்ட கனவு
          கோவலன் தான் கண்ட கனவை தன் நண்பனான மாடலமறையனிடம் எடுத்துரைக்கின்றான். அதில் கண்ணகி மிகுந்த துயருறவும் தான் அணிந்திருந்த ஆடை பிறரால் பறிக்கப்பட்டு பன்றியின் மீது ஏறிச் செல்லவும், காமதேவன் தன் மலர் அம்புகளை வீசி எறிந்து விட்டு கண் கலங்கி நிற்கவும், புத்த துறவியிடத்தில் மாதவி தன் மகள் மணிமேகலையை ஒப்படைக்கவும் ஆகிய கனவுகள் நேரில் நிகழ்வதைப் போல் தமக்குத் தோன்றியதாக விளக்குகிறான். நள்ளிருள் கழிந்த பின் காலைப் பொழுதில் கண்ட கனவில் தோன்றிய தீமைகள் நிகழ்வாகி விடுமோ என்ற அச்சத்துடன் கூறுகிறான். (காதை 15: வரி 95-105) இதன் மூலம் அதிகாலையில் காணப்படும் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடையே நிலவியிருந்ததை அறிய முடிகிறது.
கோப்பெருந்தேவியின் கனவு
          கோப்பெருந்தேவியின் கனவில், மன்னன் ஆட்சி செலுத்தும் செங்கோலும், வெண்கொற்றக்குடையும் தரையில் முறிந்து விழுவ போன்றும் அரண்மனை வாசலில் கட்டியிருந்த மணிகள் ஓயாது ஒலித்து உள்ளத்தை நடுங்கச் செய்யவும், இரவில் வானவில் தோன்றவும், பகலில் நட்சத்திரங்கள் தோன்றி எரிந்து விழவும், எட்டுத் திசைகளும் அதிரவும் கனவு தோன்றுகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் இயற்கைக்கு மாறானதாக இருப்பதால் அவை தீமையின் அறிகுறிகளாகப் புரிந்து கொள்ளப்பட்டன என்பது புலப்படுகிறது.
முடிவுரை
        சிலம்பின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக பிறப்பு பற்றிய நம்பிக்கைகள், சகுனம் பார்த்தல், நல்ல நாள் பார்த்தல், கனவுகளின் பொருள் பற்றிய எண்ணங்கள் ஆகியவை முக்கியமான நம்பிக்கைகளாகக் காணப்படுகின்றன. மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை மனிதனை ஒழுக்க நெறியில் நிலை நிறுத்துவதாய் உள்ளது. சகுனத்தின் மூலம் எதிர்வரும் தீமைகளை அறிந்து வழிபடுவதன் மூலமும் மரபுசார் சடங்குகளின் மூலமும் அதன் தீமையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. திருடர்களும் கூட நல்லநாள் பார்த்துத் திருடச் சென்றுள்ளனர் என்பதன் மூலம் நல்ல நாள் பற்றிய மக்களின் நம்பிக்கை புலப்படுகிறது. கனவுகள் முன்னறிவிப்பு உத்தியாக மக்களால் நம்பப்பட்டதை அறிய முடிகிறது.
          இந்த நம்பிக்கைகள் அனைத்தும் மனித வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி நிகழ்வதை உணர்த்தி, தன்னிலைப் பரிசோதனை செய்து தவறுகளைச் சீர் செய்து நன்னெறியில் நிலைத்திருக்கவும் வாழ்வின் நிலையாமையை உணர்த்தவும் உதவுகின்றன என்ற புரிதலும் வெளிப்படுகின்றது.
பார்வை நூல்கள்
1.சுப்பரமணியன்,ச.வே., சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், 13,தீனதயாளு தெரு, சென்னை, முதற்பதிப்பு – 1998, விலை.90.00
2.சீனிச்சாமி.து., தமிழில் காப்பியக் கொள்கை (முதல் தொகுதி) எட்டாம் உலகத் தமிழ் மாநாடு, பதிப்புச் சுழல்நிதி வெளியீடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்காவூர், டிசம்பர் – 1994, விலை.100.00
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப.தனேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கோபி கலை மற்றும் அறிவியில் கல்லூரி,
கோபி, தமிழ்நாடு.

 

சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள் PDF

தூரத்தில் நீ..! துடிப்பில் நான்..!!|கவிதை|கவிஞர் க.கலைவாணன்

தூரத்தில் நீ..! துடிப்பில் நான்..!! - கவிஞர் க.கலைவாணன்
🌹இந்தப் புவியில்
இன்னொடி மலர்கின்ற
எண்ணற்ற காதல்
ஒன்றிணைந்தால் ! – அவை
உன் இரு கண்களுக்குள்ளே
அடங்கிவிடும்..!
🌹இந்த உலகில்
வானளவு நிலைநின்ற
மொத்த தியாகங்கள்
உன் நெஞ்சில் நுழைந்தால்
உன் நிலையக் கண்டு நொறுங்கிவிடும்..!
🌹உன் பார்வையில் பட்டதால்…
உன் சிந்தனையில் சிறை கொண்டேன்..!
🌹உன் இதய துடிப்பில் இணைந்ததால்
உன் சுவாசம் பெற்று உயிர் பிழைத்தேன்..!
🌹ஏனடி வானம் தொடும்
காதல் கொள்கிறாய்..!
வீணடி உன்னோடு
நான் சேராமல் நேர்ந்தால்..!
🌹ஈருயிர் வென்று கொள்ளும்
காதல் இன்பம் தரும்..!

 

🌹ஈர் இதயம் வலியோடு
கொள்ளும் காதல் போதைதரும்..!
🌹என்னைக் காண முடியாமல்
உடல் மெலிந்து
சுவாசம் வற்றி
தேகம் சுருங்கி
கண்கள் பிதுங்கி நிற்கிறாய்..!
🌹உன்னைக் கண்டால் 
போதும் என
மலை உச்சி ஊர்ந்து வந்தேன்..!
🌹ஒரே ஒரு நொடி மட்டும்
என்னைக் காண
அந்த இறைவன் தந்தான்..!
🌹 இந்த உலகமே 
உனதாகியது போல்
 பேரதிர்ச்சி உனக்கு..!
🌹 நீ கொண்ட
வலி மிகுந்த கண்ணீர் !
நான் ஏழு கடலை வற்றினாலும்
தேம்பி அழும் கண்ணீரால் நிரம்பும்
துயரத்தில் தள்ளியது..!
🌹 நீ விடும் கண்ணீர்
எனக்காக மட்டுமே..!
நீ சுவாசிக்கும் மூச்சு
என் பெயர் இல்லையேல்
அது விஷம் உனக்கு..!
🌹இந்த உலகில்
உன்னைவிட
இந்தக் காதலின் அர்த்தத்தை
எனக்கு உணர்த்திருக்க இயலாது.!
🌹உன்னுள்
நீ கொள்ளும் நரக வேதனை
என்னுள்
வேண்டுமென வரம் கொண்டேன்..!
🌹இந்த வலியும்
ஒரு சுகம் தான் !
அளவுகடந்த காதல்
அருகில் இருந்தும் தூரம்..!
🌹ஆக மொத்தம் நீ காதல் தீ..!!
கவிதையின் ஆசிரியர்
 கவிஞர் க.கலைவாணன்,
ஓசூர் – 635 109.

V. O. Chidambaranar’s Commentary on the Tirukkural: A Textual Perspective|Dr. E. Kothandaraman

Abstract

          V. O. Chidambaram Pillai (V.O.C.) was a distinguished scholar who possessed proficiency in both Tamil and English. He was a multifaceted personality, serving as a lawyer, writer, orator, trade union leader, and freedom fighter. His political career was marked by integrity, discipline, and determination. Deeply interested in Tamil literature, he studied classical works and contributed significantly through his essays and poems. He also translated several English works into Tamil, thereby enriching Tamil literary culture. In 1892, inspired by the powerful and patriotic writings of Bal Gangadhar Tilak, V.O.C. became one of his devoted followers. Besides actively participating in India’s freedom struggle, he motivated and encouraged others to join the movement. This study highlights the literary contributions, political ideals, nationalist activities, and enduring legacy of V. O. Chidambaram Pillai in the history of India and Tamil society.
Keywords : V. O. Chidambaram Pillai, Freedom Struggle, Tamil Literature, Nationalism, Bal Gangadhar Tilak, Trade Union Movement.

“உரையியல் நோக்கில் வ. உ. சியின் திருக்குறள் உரை”

ஆய்வுச்சுருக்கம்
      வ.உ.சி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றிக் கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார். மேலும் சில ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துமுள்ளார். வ.உ.சி. 1892 ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார். இவர், தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார்.
கருச்சொற்கள்
      திருக்குறள் உரை – வ.உ.சி. யின் உரைத்திறன் -பொருள் மாறுபாடு – கூற்று வேறுபாடு – பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல் – நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல் – இலக்கணக் குறிப்புடனான உரை – எளிய விளக்கம், சிறப்பு விளக்கம்.
முன்னுரை
     கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமையில் இருந்து இறக்கும் வரை வ. உ. சி. யின் சிந்தனையில் திருக்குறள் நிறைந்திருந்தது. அதன் விளைவாகத் திருக்குறளுக்கு உரையும் இயற்றினார். மேலும் இன்னிலை, சிவஞான போதம் போன்ற நூல்களுக்கு உரையும் பல்வேறு படைப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார்.  அவற்றுள் இக்கட்டுரை அவரது உரைத்திறத்தை வெளிப்படுத்தும் முகமாக விளங்கும் திருக்குறளை முன்வைத்து “உரையியல் நோக்கில் வ. உ. சி யின் திருக்குறள் உரை” என்ற தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
திருக்குறள் உரை
    திருக்குறளுக்கு உரை கண்டவர் பலர். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற உரையாசிரியர்களேயன்றி இருபதாம் நூற்றாண்டிலும் அறிஞர் பலர் திருக்குறளுக்கு உரை எழுதினர். வ.உ.சி. திருக்குறள் முழுமைக்கும் உரை கண்டவர். ஆனால், அவரால் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்து வெளியிட முடிந்தது இது பற்றி வ உ.சி. தம் நூலின் முன்னுரையில் கூறுகிறார்.
   “எல்லாம் வல்ல இறைவன் அருளால் திருவள்ளுவ நாயனார் திருக்குறளுக்குயான் இயற்றியுள்ள உரையில், அறப்பாலுரை மூலத்துடன் அச்சாகி முற்றுப்பெற்றது. அதனை அச்சிடத் தொடங்கிய காலையில் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். அறப்பால் மூலமும் உரையும் முந்நூறு பக்கங்கள் ஆகின்றன. பொருட்பால் மூலத்திற்கும் உரைக்கும் முந்நூறு பக்கங்களுக்கு மேலாகுமென்றும், இன்பப்பால் மூலத்திற்கும் உரைக்கும் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் ஆகுமென்றும் நினைக்கிறேன். அதுபற்றி, ஒவ்வொரு பாலையும் அதனதன் உரையையும் தனித்தனி ஒவ்வொரு புத்தகமாக வெளியிடத்துணிந்து, இப்பொழுது அறப்பாலையும் அதன் உரையையும் ஒரு புத்தகமாக்கி வெளியிடுகின்றேன்”1.
வ. உ.சி.யின் உரைத்திறன்
      வ. உ. சி. யின் உரைத்திறன் பற்றிக் கணிக்கும்போது அவர் திருக்குறளின் முப்பாலுக்கும் உரை விளக்கம் கண்ட சிறப்பினைக் கூறுதல் இன்றியமையாததாகும். வ.உ.சி. யின் அறத்துப்பால் விருத்தியுரை 1935 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. அடுத்த ஆண்டே வ. உ. சி காலமானதால் பிற இரு பகுதிகளுக்குரிய உரை வெளிவரவில்லை. பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றிற்கு வ.உ.சி. எழுதிய உரையின் கையெழுத்துப் படிகள் கிடைத்தன. அவற்றையும் சேர்த்து மூன்று பகுதிகளுக்குமான உரைகளின் மூலம் வ. உ. சியின் உரைத்திறன் இங்கே விளக்கப்பெறுகிறது. திருக்குறளுக்கு உரை எழுத நேர்ந்ததற்கான காரணத்தைத் தம் உரைப்பாயிரத்தில் பின்வருமாறு குறிக்கின்றார் வ. உ. சி.
     இவ்வுரைகளெல்லாம் கற்பதற்குப் பெரியனவாகவும், அறிதற்கு அரிய தமிழ்நடையில் எழுதப்பெற்றனவாகவும், பிழைபட்ட மூலபாடங்கள் சிலவற்றைக் கொண்டனவாகவும், சில குறள்களுக்கு நுண்ணிய அறிவுடையார் ஏற்றுக்கொள்ள இயையாத பொருள்களை உரைப்பனவாகவும் காணப்படுகின்றன. அவைபற்றி, திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இயற்றினேன்; இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றேன்”2.
      வ.உ.சி.யின் திருக்குறள் உரை பாடவேறுபாடு காணல், பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல், நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல் போன்ற பல்வேறு சிறப்பு நலன்களைப் பெற்றுத் திகழ்கின்றது.
அறத்துப்பால் பாடவேறுபாடு காணல்
“தகுதி யெனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின்”      (நடுவுநிலைமை, குறள்: 111)
          பிறர்க்குச் செய்யவேண்டிய கடமைகளை நடுவாக நின்று செய்யின், அந்நடுவுநிலைமை ஓர் அறமாம் என்னும் கருத்தமைந்த குறளில், ‘பகுதியால்’ என்னும் சொல்லைப் ‘பகுதியார்’ என்று வ.உ.சி. குறிப்பிடுகிறார். உற்றார், நண்பர், நொதுமலர், பகைவர் ஆகிய நான்கு பகுதியினர் என்னும் பொருளமைந்த அச்சொல், முந்திய உரையாசிரியர்களால் ‘பகுதியால்’ என்று குறிக்கப்பெறுகிறது. அதற்கு வ.உ.சி கூறும் பாடவேறுபாடு விளக்கம் படித்தற்குரியது. வேண்டுவதாய ஆர் விகுதியை விடுத்து, வேண்டாததாய் ஆல் உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்கமாட்டாராகலானும் பகுதியால் என்பது ஏடுபெயர்த்தெழுதியோனால் நேர்ந்த பிழையெனக் கொள்க”3.
“நத்தம்போல் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது” (புகழ், குறள்: 235)
          பிறர்க்கு ஈவோரும் பிறருக்காக உயிர் வழங்குவோரும் பெரியர் என்னும் கருத்தமைந்த இக்குறளில் ‘நத்தம்போல் கேடு’ என்பதை ‘நத்தம் போர் கேடு’ என்று வ.உ.சி. பாடம் கொள்ளுகிறார். முந்திய உரையாசிரியர்களால் ‘நத்தம்போல்’ என்று கொள்ளப்பெறுகிறது. அதற்கு வ.உ.சி., இக்குறளின் மூன்றாஞ்சீரின் முதற்சொல்லாகிய ‘உளது’ என்பது ‘ஆகும்’ என்னும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல்போல, இக்குறளின் முதற்சீரின் முதற்சொல்லாகிய ‘நத்தம்’ என்பதும் ‘ஆம்’ அல்லது ‘போர்’ என்பது போன்ற பொருள் தரும் சொல்லோடு சேர்ந்து நிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததாயிருக்க, அச்சொல்லை விடுத்துப் பொருள்கோளுக்கு வேண்டாத ‘போல்’ என்னும் ஓரசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகலின் ‘தத்தம்போல்’ என்பது ஏடுபெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையெனக் கொள்க”4 என்று கூறுகிறார். ‘நத்தம் போர் கேடு’ என்பதற்கு ‘ஆக்கத்தைப் போர்த்த கேடு’ என்று பொருள் கூறி அதுவே சரியான பாடம் என்று விளக்கம் கூறி நிறுவுவது அவருடைய உரைத்திறனை வெளிக்காட்டுகிறது
பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல்
“இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை” (இல்வாழ்க்கை, குறள்:41)
          என்னும் குறளில், மூவர் என்பதற்குப் பரிமேலழகர் பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்று பொருள் கூறுகிறார். ஆனால், வ.உசி. இயல்புடைய மூவர் என்பதற்குத் தாய், தந்தை, தாரம் ஆகிய மூவர் என்று புதிய உரை தரும் சிறப்பு படித்தற்குரியது.
நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல்
“கொடுப்ப தழுக்றுப்பான் சுற்ற முடுப்பதஉ
முண்பதஉ மின்றிக் கெடும்” (அழுக்காறாமை, குறள்: 166)
          என்னும் குறளுக்கு வ.உ.சி. பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தன் ஆக்கத்திற்கு ஆதாரமாகிய சுற்றத்தையும் தன் உடையையும் உணவையும் இழப்பான் என்று பொருள் கூறுகின்றார். இதன் மூலம் கொடுப்பது அழுக்கறுப்பானுடைய சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று பொருள் கூறும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வ.உ.சி வேறுபடுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் நினைக்கத்தக்கது. அவ்வாறு உரைத்தல், ஒவ்வொருவனும் செய்த வினைகளின் பயன்கள் அவனவனையே சேரும் என்ற வடமொழி தென்மொழி நூல் வழக்கிற்கு முரண்படும். அதனால் அவ்வுரை பொருந்தாது”5.
 “இயல்பி னானில் வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.   (இல்வாழ்க்கை, குறள்: 47)
       என்னும் குறளில், ‘முயல்வார்’ என்னும் சொல்லுக்குப் பொருளுரைப்பதில் உரையாசிரியர் பலரும் வேறுபடுகின்றனர் ‘முயல்வார்’ என்பதற்கு, ‘வீட்டுப்பேற்றை அடைய முயல்பவர் என்று வ.உ.சி. பொருள் கூறுகிறார். ‘முயல்வார்’ என்பதற்கு வீடுபேறெய்த முயலும் துறவோர் எனப் பொருள் கண்ட வ.உ.சி.யின் உரையே விழுமியது”6 என்று குறிப்பிடுவது அவருடைய உரைத்திறனைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும்,
“மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற”    (அறன் வலியுறுத்தல், குறள்: 34)
 என்னும் குறளுக்கு “உள்ளத்தின்கண் குற்றமில்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம். மனத்துக்கண் குற்றமுள்ளவனாய்ச் செய்யப்படுவன துன்பம் தருவனவாகிய மறங்களாம் என்று உரை கூறுகிறார் வ.உ.சி. அறத்திற்கு மாசின்மையாகிய பண்புமட்டும் போதாது, செயலும் வேண்டும். என்னும் கருத்தில் குற்றமில்லாதவனாய்ச் செய்யப்படுவது என்று கூறும் வ.உ.சி. உரை சிறப்புடையதாகும் என்பார்”7 இரா. சாரங்கபாணி.
பொருட்பால்
 பொருட்பாலிலும் பல குறட்பாக்களில் பாடவேறுபாடும் உரை வேறுபாடும் காண்கிறார் வ.உ.சி. சில இடங்களில் எளிமையான விளக்கங்களும் சில இடங்களில் சிறப்பான விளக்கங்களும் தருகிறார். சில இடங்களில் இயலின் பெயரை மாற்றுகிறார். சான்றாக ‘அங்கவியல்’ என்பதை ‘அமைச்சியல்’ என்று வ உ.சி. குறிப்பதைக் கொள்ளலாம்.
எளிய விளக்கம்
“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்க்கட் பட்ட திரு”  (கல்லாமை, குறள்:408)
    என்னும் குறளுக்கு, “கல்லாதவனிடத்து செல்வம் உண்டாயின், அச்செல்வச் செருக்கினால் அவன் பிறருக்குத் தீங்கிழைப்பானாகலான் அவனது செல்வம் அவ்வாறு தீங்கிழையாத கற்றாரது வறுமையினும் இன்னாது’ என்று மிக எளிமையான விளக்கத்தைத் தருகிறார்.
சிறப்பு விளக்கம்
“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.    (கேள்வி, குறள்: 411)
          என்னும் குறளுக்கு ‘அகலம்’ என்னும் பகுதியில் சிறப்பான விளக்கம் தருகிறார். ”செவியாற் பெறுஞ் செல்வமாவது கேள்வி, கேள்வி, செல்வத்துட் சிறந்த செல்வமும் ஆம் என்றவாறு சிறந்த செல்வம் தலையாய செல்வம் ஆகாதோவெனின், ஆகுதலுங் கூடும். சிறந்த செல்வம் சிறப்பொடு வந்த செல்வம். தலையாய செல்வம் தலையாய பயன்களையெல்லாம் அளிக்குஞ் செல்வம். அறநெறியால் வந்த ஒரு காசும் சிறந்த செல்வமாம். ஆனால் அது தலையாய பயன்களையெல்லாம் அளிக்கும் ஆற்றல் இல்லாதது. தலையாய பயன்களாக இம்மையின்பம், இம்மைப்புகழ், மறுமையின்பம், வீடு, கேள்வி, நெறியால் சிறந்த செல்வமும் பயனால் தலையாய செல்வமும் ஆனமையால் அஃது அவ்விரண்டுமாம்.” அறநெறியில் வந்த ஒரு காசும் சிறந்த செல்வம்; ஆனால் அது தலையாய பயன்களையெல்லாம் அளிக்கும் ஆற்றல் இல்லாதது என்று, ‘தலையாய’ என்பதற்கு நுட்பமாகப் பொருளுணர்த்தும் சிறப்பு படித்து மகிழத்தக்கது.
“தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்”       (பகைத்திறம் தெரிதல், குறள்:876)
என்னும் குறளுக்கு வ.உ.சி தரும் விளக்கம் சிறப்பானது.
பாட வேறுபாடு
“மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
இடுக்கண் இடப்பா டுடைத்து”   (இடுக்கண் அழியாமை, குறள்: 624)
          என்னும் குறளில் ‘வாயெல்லாம்’ என்ற சொல்லை வ.உ.சி. ‘வாய் செல்லும்’ என்று பாடம் கொள்கிறார். வாயெல்லாம் என்பது முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஈண்டு ‘எல்லாம்’ என்ற சொல் இன்றியமையாததன்று; ‘செல்லும்’ என்ற சொல் இன்றியமையாதது. ஆகலான் செல்லும் என்பதே ஆசிரியர் பாடம் எனப்பட்டது” என்று வ.உ.சி. பாட வேறுபாடு கூறுகிறார்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து”            (சொல்வன்மை, குறள்: 645)
       இக்குறட்பாவில் ‘வெல்லுஞ்சொல் இன்மை’ என்பதற்கு ‘வெல்லுதலின்மை’ என்று பாடம் கொள்கிறார் வ.உ.சி. பிற உரையாசிரியர்கள் ‘வெல்லுஞ்சொலின்மை’ என்று குறிப்பிடுகிறார்கள். வ.உ.சி. கூறும் இந்தப் பாட வேறுபாடானது, பிறிதோர் சொல் என்றமையால், வெல்லுஞ்சொல் என்று மீண்டும் சொல்லுதல் மிகையாம். அஃது ஏடு பெயர்த்து எழுதினோரால் நேர்ந்த பிழை எனவும் வெல்லுதலின்மை என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. பிறிதோர் சொல் என்றபின் வெல்லுஞ்சொல் என்று கூறுதல் மிகையேயாகும். அதனால் ‘வெல்லுஞ்சொலின்மை’ என்பது பிழைப்பட்ட பாடம், ‘வெல்லுதலின்மை’ என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க என்னும் வ.உ.சி.யின் விளக்கம் அறியத்தக்கது.
பொருள் வேறுபாடு
      வ.உ.சி. யின் உரை பல இடங்களில் பிற உரையாசிரியர்களோடு மாறுபடுகிறது.
“உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”          (கல்வி, குறள்: 395)
    என்னும் குறளில் ‘ஏக்கறுதல்’ என்பதற்கு ‘ஒரு சொல்’ என்று பரிமேலழகரும் ‘கர்வம் நீக்குதல்’, ‘தாழ்ந்து நிற்றல்’ என்று வ.உ.சி.யும் பொருள் கூறுகின்றனர்.
“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்”                (அறிவுடைமை, குறள்:421)
          என்னும் குறளில், அறிவு ‘அரசனுக்கு’ அழிவு வராமல் காக்கும் கருவி என்னும் பரிமேலழகரின் கருத்துக்கு மாறாக அறிவு ‘ஒருவனுக்கு’ அழிவு வராமல் காக்கும் கருவி என்று வேறுபாடு காட்டுகிறார்.
“அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு”          (பொச்சாவாமை, குறள்: 534)
          என்னும் குறளில் ‘நன்கு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், ‘செல்வம்’ என்று பொருள் கூறுகிறார். ஆனால் வ.உ.சி. நன்கு என்பதற்கு ‘நல்வினை’ என்று பொருள் கூறுவது குறிக்கத்தக்கது.
இலக்கணக் குறிப்பு மறுப்பு
வ.உ.சி. தம் பொருட்பால் உரையின் பல இடங்களில் பிற உரையாசிரியர்களின் இலக்கணக் குறிப்புகளை மறுத்துத் தம் கருத்தைக் கூறியுள்ளார்.
“ஆக்க மிழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்”            (ஊக்கமுடைமை, குறள்: 593)
        என்னும் குறளில், ‘அல்லாவார்’ என்னும் சொல்லுக்கு வ.உ.சி. ‘அல்லலுறா’ என்னும் சொல்லைப் பாடமாகக் கொள்கிறார். பிற உரையாசிரியர்கள் கொள்ளும் அல்லாவார் என்னும் பாடத்தை வ.உ.சி. மறுக்கிறார். அல்லாவார் என்பது துன்பமுறுதல் என்னும்பொருள் தரும். அல்லாத்தல் என்பதிலிருந்து வந்த பலர்பால் எதிர்மறை வினைமுற்று என்றும் அஃது இன்ன இலக்கணப்படி அவ்வாறு வந்ததென்றும் கற்பிக்க வேண்டி யிருத்தலான், அதனை ஆசிரியர் பாடம் எனக் கொள்ளாமல் ‘அல்லலுறார்’ என்பதே பாடம் எனக் கொள்ளப்பட்டது என்று வ.உ.சி. கூறும் விளக்கம் அவருடைய இலக்கண அறிவைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
“சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு”                (ஊக்கமுடைமை, குறள்: 597)
          இக்குறளில் ‘பட்டுப்பாடு’ என்னும் சொல்லுக்குப் ‘பட்டும் பாடு’ என்று பாடங்கொள்கிறார் வ.உ.சி. பிற உரையாசிரியர்கள் பட்டுப்பாடு என்று குறித்துள்ளனர். “உயர்வு சிறப்பும்மை ஈண்டு இன்றியமை யாததாகலான், அப்பாடம் பிழைப்பட்ட பாடம் என்றறிக; சிதைவிடத்தும் என்பது செய்யுள் விகாரத்தால் உம்மை கெட்டு நின்றது” என்னும் வ.உ.சி.யின் விளக்கம் மனங்கொளத் தக்கது. வ.உ.சி. தம் பொருட்பால் உரையில் காட்டியுள்ள பாட வேறுபாடு, இலக்கண வேறுபாடு முதலியவற்றைப் படிக்கும்போது அவருடைய தமிழ்ப் புலமையை உணர முடிகிறது.
இன்பத்துப்பால்
     இன்பத்துப்பாலில் வ.உ.சி.யின் உரை எளிய விளக்கம், சிறப்பு விளக்கம், பாட வேறுபாடு, பொருள் வேறுபாடு, கூற்று வேறுபாடு, இலக்கண வேறுபாடு போன்ற பல்வேறு நலஞ்செறிந்ததாய்த் திகழ்கின்றது.
எளிய விளக்கம்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து” (தகையணங்குறுத்தல், குறள்: 1085)
          என்னும் குறளுக்கு, “கூற்றமோ (என் உயிரை வருத்துகின்றமையால்), கண்ணோ (என்னைப் பார்த்தலால்) பிணையோ (அஞ்சுகின்றமையால்), இளம் பெண்ணின் பார்வை இம்மூன்று தன்மைகளையும் உடையது” என்று வ.உ.சி. கூறும் எளிய விளக்கம் மனங்கொளத்தக்கது.
“வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்த்த விரல்”     (அவர்வயின் விதும்பல், குறள்: 1261)
     என்னும் குறளுக்கு, “புல்லியவாதல் – நுண்ணிய பொருள்களைக் காணமாட்டாதனவாதல்; நாள்களை இழைத்தலாவது சுவரின் கண் சிவப்புநீர் முதலியவற்றால் ஒரு நாளுக்கு ஒரு கோடாக விரல்கொண்டு இழுத்தல் ஒரு நாளன்றிப் பலநாள் சுவரின்கண் கோடிழுத்தலும் வழிபார்த்தலும் செய்தலான் விதுப்பாயிற்று” என்னும் விளக்கம் கற்பவர் நெஞ்சில் தடையின்றிப் பதியும் வண்ணம் எளிமையாக அமைந்திருப்பது வ.உ.சி யின் உரையாற்றலைப் புலப்படுத்துகிறது.
சிறப்பு விளக்கம்
இன்பத்துப்பாலில் அமைந்த பல குறட்பாக்களுக்குச் சிறப்பான விளக்கங்கள் கூறியுள்ளார் வ.உ.சி.
“மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்”    (நலம் புனைந்துரைத்தல், குறள்: 1116)
          என்ற குறளுக்கு வ.உ.சி. தரும், வான்மீன்கள் தத்தம் இடங்களில் நிலையாக நில்லாது ஓடித் திரிதலைப் பார்த்த தலைமகன், மதிக்கும் தலைமகளது முகத்திற்கும் வேற்றுமை அறியாது அவை கலங்கித் திரிகின்றனவோ என்று ஐயமுற்றுக் கூறியவாறு என்னும் விளக்கம் குறிக்கத்தக்கது.
“காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி”  (நாணுத்துறவுரைத்தல், குறள்: 1131)
          என்னும் குறளுக்கு, வ.உ.சி. தரும் விளக்கம் அரியது. மடல் என்பது ஆகுபெயர், மடலூர்தலுக்கு ஆயினமையால், மடலூர்தலாவது, வேட்கையுற்ற தலைமகன் தாழை அல்லது பனையோலையால் குதிரை ஒன்று செய்து அதன்மீது ஏறித் தான் இன்னாள்மீது காமமுற்று வருந்துவதாகக் கூறிக்கொண்டு ஊரார் யாவரும் காணும்படியாக ஊர்சுற்றி வருதல். அவ்வாறு ஊர் சுற்றி வந்த தலைமகனுக்கு அவன் காதலித்த பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல் அரசனது கடமை. இது முற்காலத்தில் தமிழ் நாட்டில் நடந்துவந்த வழக்கம். இப்பொழுதும் இம் மடலூர்தல் தமிழ்நாட்டில் சிற்சில சாதியாருக்குள் நிகழ்ந்து வருகின்றது. அதனைப் ‘பொய்க்குதிரை ஏறுதல்’ என்று சொல்லுகின்றனர். அவ்வாறு மடலூர்தலால் தலைமகன் உடம்பில் ஓலை முதலியன கிழித்து உடம்பில் புண் உண்டாதலும் அதனின்று வெண்ணீர் வடிதலும் உண்மை என்று கூறுகின்றனர் என்னும் விளக்கம், வ. உசி.யின் உரைச்சிறப்பாகும்.
கூற்று வேறுபாடு
இன்பத்துப்பாலின் சில குறள்களில் தலைமகன், தலைமகள், தோழி ஆகியோரது கூற்றுகளிலும் பரிமேலழகரிடமிருந்து மாறுபடுகிறார் வ.உ.சி.
“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில”                 (குறிப்பறிதல், குறள்: 1100)
          இக்குறளை, வ.உ.சி. ‘தலைமகன் கூற்று’ என்று கூறுகிறார். ‘தோழி கூற்று’ என்பார் பரிமேலழகர்.
“நோத லெவன்மற்று நொந்தாரென்றஃ தறியுங்
காதல ரில்லா வழி”                (புலவி, குறள்:1308)
          வ.உசி, பாடம் – ‘தலைமகள் கூற்று; பரிமேலழகர் பாடம் ‘தலைமகன் கூற்று’.
“துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி”                (நெஞ்சொடு புலத்தல், குறள்; 1299)
          இதில், வ.உ.சி.பாடம் – ‘தலைமகள் கூற்று’, பரிமேலழகர் பாடம் ‘- தலைமகன் கூற்று’
பாட வேறுபாடு
அறத்துப்பால், பொருட்பாலைப் போலவே இன்பத்துப்பாலிலும் பல குறள்களில் பாட வேறுபாடுகளைக் காணமுடிகிறது. அவற்றுள் சில எடுத்துக்காட்டப் பெறுகின்றன.
“அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு” (தகையணங்குறுத்தல், குறள்: 1081)
          என்னும் குறளில், ‘கனங்குழை’ என்னும் சொல்லுக்குக் ‘கணங்குழை என்று வ.உ.சி பாடம் கொள்கிறார். இச்சொல்லைப் பரிமேலழகர் ‘கனங்குழை’ என்று எடுத்தாள்கிறார்.
“செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முறாஅர்போன் றுற்றார் குறிப்பு”         (குறிப்பறிதல், குறள்: 1097)
          இக்குறளில் வரும் ‘சிறுசொல்’ என்பதை ‘செறுசொல்’ என்று பாடம் கொள்கிறார் வ.உ.சி. பரிமேலழகர் ‘சிறுசொல்’ என்று குறிக்கிறார்.
“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்”   (புணர்ச்சி மகிழ்தல், குறள்: 1105)
          என்னும் குறளில், வ.உ.சி. பாடம் – ‘தோட்டாழ்’; பரிமேலழகர் பாடம் ‘தோட்டார்’. இம்மூன்று சான்றுகளிலும் பாடவேறுபாடுகாட்டி, பரிமேலழகரோடு மாறுபடுகின்ற வ.உ சி. மணக்குடவர் பாடத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்.
“தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை”        (குறிப்பறிவுறுத்தல், குறள்:1277)
          என்னும் குறளில் ‘வளைகள் தோளைவிட்டுக் கழன்றன’ என்பது பரிமேலழகர் உரை ‘வளைகள் கையை விட்டுக் கழன்றன’ என்பது வ.உ.சி. உரை.
இலக்கண விளக்கம்
இன்பத்துப்பாலின் குறட்பாக்கள் பலவற்றுக்கு இலக்கண விளக்கத்தோடு கூடிய உரை கூறியுள்ளார் வ.உ.சி.
“கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்” (படர்மெலிந்திரங்கல், குறள்: 1162)
          என்னும் குறளில், “தொழிற்பெயரெலாந் தொழிற் பெயரில என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படி ‘நாண்’ என்பது உகரமும் வல்லெழுத்தும் பெற்று நின்றது” என்னும்               வ. உ. சி. யின் விளக்கம் அவருடைய இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது.
முடிவுரை
       திருக்குறளுக்கு உரையாசிரியர்களிடையே பாட வேறுபாடு இருப்பினும் அவ்வேறுபாடுகளை அவர்கள் அடிக்குறிப்பில் தந்துள்ளனர். ஆனால் வ.உ.சி யோ மூலத்திலேயே வேறுபாடுகளைக் காட்டி, அவற்றைக் காரணத்தோடு விளக்கியுள்ளார். பரிமேலழகர் உரையினைச் சில இடங்களில் ஏற்றும் பல இடங்களில் மறுத்துமுள்ளார். வ.உ.சி. தாம் எழுதிய திருக்குறள் உரையில் இயல் பாகுபாடு, அதிகார வைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்துள்ளார் என்றாலும், குறட்பாக்களின் சில சொற்களுக்கு உரையாசிரியர்கள் குறிப்பிடாத புதுப்பொருள் வழங்கியமை, சில குறட்பாக்களுக்கு நேரடியான, எளிய விளக்கங்கள் தந்துள்ளமை, இன்றியமையாத இலக்கணக் குறிப்புகள் சேர்த்துள்ளமை போன்ற நயங்கள் காரணமாக வ.உ.சி.யின் உரை சிறப்பினைப் பெறுகிறது.
அடிக்குறிப்புகள்
1.திருக்குறள் அறப்பால் – விருத்தியுரை, கழகப் பதிப்பு, பக். 5-6
2.மேலது, பக்.13-14
3.மேலது, பக். 65-66
4.மேலது, ப.124)
5.மேலது, ப. 92)
6.திருக்குறள் உரை வேற்றுமை – அறத்துப்பால், ப.99
7.மேலது, ப. 66).
துணைநூற்பட்டியல்
1.மா. ரா. அரசு (தொ. ஆ), வ.உ.சி. கட்டுரைகள், பாரி நிலையம், சென்னை, 1989.
2.முனைவர் எஸ். கண்ணன், வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.
3.வ.உ.சி, திருவள்ளுவர் திருக்குறள்: அறத்துப்பால், இணைய வழி நூல்.
4.இரா. சாரங்கபாணி, திருக்குறள் உரை வேற்றுமை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1992.
5.செ. திவான், வ.உ.சியும் திருக்குறளும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, 2001.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஏ. கோதண்டராமன்,
இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் – II),
மீனம்பாக்கம், சென்னை – 600 061.

 

உரையியல் நோக்கில் வ. உ. சியின் திருக்குறள் உரை PDF

Principles of Land Administration in Tamils Life|Dr. D. Rani Elizabeth

தமிழர் வாழ்வியலில் நிலநிர்வாகக் கோட்பாடுகள்
Iniyavaikatral peer reviewed

Bharathidasan’s Theory of Equality: Women’s Liberation|Dr.A.Karvannan

பாரதிதாசனின் சமத்துவக்கோட்பாடு பெண் விடுதலை

Abstract

Iniyavaikatral peer reviewed
 
 

An Analytical Study of Vallalar’s Epistemological Philosophy|Dr.M.Thamarai selvi

வள்ளலார் வகுத்த அறிவுக் கொள்கை
Abstract
       Knowledge is regarded as the greatest wealth of humanity, while ignorance is viewed as the root of poverty and human suffering. According to Vallalar, those who possess wisdom are endowed with every form of prosperity, for knowledge grants not only intellectual ability but also material well-being, moral strength, happiness, and success in life. A knowledgeable person is capable of understanding the future, acting with foresight, and living in harmony with ethical and social values. In contrast, those deprived of knowledge remain truly impoverished, even if they possess wealth, status, opportunities, and worldly resources. Without wisdom, they are unable to utilize these resources meaningfully or attain fulfillment in life. Hence, Vallalar strongly emphasizes that knowledge is indispensable for all human beings, as it alone leads individuals toward self-realization, social progress, and enduring happiness. This study aims to explore and elucidate Vallalar’s philosophical perspectives on knowledge and to analyze how the true purpose and benefits of knowledge should be manifested in individual life and society.

Keywords
          Analytical Wisdom – Supreme Divine Consciousness (Arutperunjothi) – Rational Intelligence – Subtle Insight – Grace-Oriented Knowledge and Delusive Knowledge – True Spiritual Enlightenment as the Ultimate Fruit of Knowledge.


“வள்ளலார் வகுத்த அறிவுக் கொள்கை”

ஆய்வுச் சாரம்
       அறிவே மக்களுக்குச் செல்வம் அறிவின்மையே வறுமை. அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவுடையவர்க்குத் திறமையுண்டு; செல்வம் உண்டு; வாழ்க்கையில் வெற்றியுண்டு; இன்பம் உண்டு ; எதிர்காலத்தை அறிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அறிவிலார் என்னுடையரேனும் இலர். அறிவிலார்க்கு இடம், பொருள், ஏவல் எல்லாமிருந்தும் பயனில்லை;அவற்றை அநுபவிக்கும் வழியை அறியமாட்டார்கள்; அவர்களுக்குத் திறமையோ, வாழ்க்கையில் வெற்றியோ, இன்பமோ எதுவும் இருக்க முடியாது. இதனால்தான் அறிவு அனைவர்க்கும் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அறிவின் பயன் இப்படியாக வெளிப்பட வேண்டும் என்னும் வள்ளாரின் கொள்கைகளை  விளக்கிச் செல்வதே இவ்வாய்வின் நோக்கம்.

கருச் சொற்கள்       
ஆராயும் அறிவு – பேரறிவாகிய அருட்பெருஞ்சோதி – பகுத்தறிவு – நுண்ணறிவு – அருள் அறிவும் மருள் அறிவும் – உண்மை ஞானமே அறிவின் பயன்.

முன்னுரை
      உலக மக்கள் எல்லோரும் சிந்தனாசக்தியுடையவர்களாகி நுண்ணறிவு பெற்று விளங்குவார்களாயின் உலகம் ஒன்றுபடும். எல்லோரும் சமாதானமாக வாழ்வர்; வீண்சண்டை சச்சரவுகள் நடைபெற வழியில்லை. இந்த உண்மையை ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்திருந்தனர். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ் நூல்களில் காணலாம். தமிழரின் இச்சீரிய கொள்கையையே நமது புரட்சிப் புலவரும், கருணைச் செல்வருமான வள்ளலார் எல்லோரும் விளங்க இனிய பாடல்களின் மூலம் விளக்கியுள்ளார்.

ஆராயும் அறிவு
      அறிவிலே பொது அறிவு, சிறப்பறிவு என்று இரண்டுவகை. பொது அறிவு, பசி, தாகம், சரீர இன்பம் இவற்றை உணர்தல், இவற்றைத் தேடுவதிலேயே வாழ்நாளைப் போக்கல். இவ்வறிவு மக்களினம், விலங்கினம், பறவையினம் எல்லாவற்றிற்கும் பொது. இவ்வறிவு உயிருள்ள – நடமாடும் – பிராணிகளிடமெல்லாம்உண்டு. ஆனால் சிறப்பறிவு மக்களுக்கு மட்டிலும் சொந்தம். நல்லது இது ; தீயது இது ; செய்யத் தகுந்தது இது ;  செய்யத் தகாதது இது; இதைச் செய்தால் இப்படி முடியும் என்றெல்லாம் சிந்தனை செய்து செயலில் இயங்கும் அறிவே சிறப்பறிவாகும். இந்தச் சிறப்பறிவு படைத்தவர்கள் சிலர்தான். அவர்களால் தான் இவ்வுலகம் இயங்குகிறது; இவ்வுலகம் நாகரிகம் பெற்றிருக்கிறது; இவ்வுலகம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மக்களிடமும் அதாவது பெரும்பாலான மக்களிடம் சிறப்பறிவு இருந்தால் இவ்வுலகம் இன்னும் உயர்ந்த நிலையிலிருக்கும். இந்தச் சிறப்பறிவு – படிப்பினால் – புத்தகப் படிப்பினால் மட்டும் உண்டாவதில்லை. பிறர் சொல்லிக் கொடுப்பதனாலும் வருவதில்லை. தானே உணர்வதனால் வளர்வதாகும். ஓதா விட்டாலும் உலகப் போக்கை உய்ந்துணர்ந்து சிந்தனை செய்வதனால் வருவதாகும். இது பற்றிய வள்ளலார் கருத்து கீழ்வருமாறு

“ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெரும் சோதி”.  (திருவருட்பா; 2 அருட்பெருஞ்சோதி அகவல் – 12)       
     அருட்பெரும் ஜோதி என்பதற்கு இரக்கத்தோடு கூடிய பேரறிவு என்பதே பொருள். வெளிச்சத்தில் எல்லாவற்றையும் காண முடியும். அதுவும் பெரிய வெளிச்சத்தால் காணமுடியாத பொருள் எதுவும் இருக்க முடியாது. ஆதலால்தான் அறிவை ஒளியென்றும், ஜோதி யென்றும், விளக்கென்றும் குறிப்பிடுகிறார் இராமலிங்கர்.”புத்தங்களைப் படிக்காமலே உலக நிலைமையை உணர்ந்துகொள்ளும்படியான அறிவை எனக்களித்தாய், மற்றும் செய்யக்கூடிய செயல்களுக்கெல்லாம் ஆதரவாகவும் இருக்கின்றாய். இரக்கத்தோடு கூடிய பேரறிவாகிய நீதான் இந்த நிலையை எனக்களித்தாய்!” என்பதே மேலே சுட்டியுள்ள அடிகளின் பொருள். இந்தச் சிறப்பறிவை அவர் பாராட்டும் முறை,

“ஏடகத்தே எழுதாத மறைகள் எல்லாம் களித்தே
என் உள்ளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதி 
                                       (அருட்பெருஞ்சோதி அகவல்;பெறாப்பேறு; (பா.எண் – 4642)       
      என்று உண்மையை வெளியிடுகிறார். “ஏடுகளிலே – அதாவது சாத்திரங்களிலே – வேதபுராண இதிகாசங்களிலே எழுதப்படாத இரகசியங்களையெல்லாம் என் உள்ளத்தில் களிப்போடு எழுதச் செய்தாய்; எனக்கே உரிமையாக என் உள்ளத்தில் வளர்ந்திருக்கின்ற அறிவே!” என்பதே இவ்வடிகளின் பொருள். ஆகவே படிப்பதனால் மட்டும் உலக நிகழ்ச்சியை மக்களின் மனோநிலைமையை உலகம் மாறிக்கொண்டு வரும் போக்கை உணர்ந்துகொள்ள முடியாது. சிந்தனா சக்தியால் தான் உலகப் போக்கை உணர்ந்துகொள்ள முடியும் என்று முழக்கஞ் செய்கிறார்.

பேரறிவாகிய அருட்பெருஞ்சோதி
      இவ்வுலகில் பேரறிஞராகக் கருதப்படுகிறவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலே தேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றனர். சிலர் அரசியல் துறையிலே வல்லுநர்கள்; சிலர் பொருளாதாரத் துறையிலே தேர்ந்தவர்கள் ; சிலர் கதைகள் கட்டுரைகள் எழுதுவதிலே தேர்ந்தவர்கள்; சிலர் கற்பனைகள் நிறைந்த கவிதைகள் புனைவதிலே அறிஞர்கள்; சிலர் வைத்தியத் துறையிலே வல்லவர்கள் ; சிலர் சிற்பத் துறையிலே சிறந்தவர்கள்; சிலர் விஞ்ஞானத் துறையிலே வித்தகர்கள் என்றிவ்வாறு பலர் தங்கள் தங்கள் துறையிலே இணையற்றவர்களாக விளங்குகின்றனர். ஆயினும் இவர்கள் எல்லோரும் நம் தமிழ்நாட்டுப் பெருந்தகையார் இராமலிங்கம் அவர்கள் கருத்துப்படி பேரறிவு படைத்தவர்கள் அல்லர். இவர்கள் இரக்கத்தோடு கூடிய பேரறிவு படைத்தவர்களாயிருந்தால் உலகினரை ஒன்று சேர்க்க உழைப்பர். உலகத்தினரை ஒரே சமுதாயமாக்க உழைப்பர். உலக ஒற்றுமையைக் கருதுவோர் இக்கூட்டத்தினருள் ஒருவரேனும் இருந்தால் அவர்கள் அருட்பொருஞ்சோதியைக் கண்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

     இந்த இரக்கத்தோடு கூடிய பேரறிவு அதாவது அருட்பெருஞ்சோதியை – யார் பெறமுடியும்? சாதிப்பற்றை விட்டவர்கள் – இனப்பற்றை ஒழித்தவர்கள் – சமயப்பற்றை மறந்தவர்கள் – தேசப்பற்றைக் கூடத் துறந்தவர்கள் தான் பெறமுடியும். தன் சாதியிலே  மட்டிலும் பற்றுள்ளவர்கள் மற்ற சாதியினரிடம் அன்புகாட்ட இடமில்லை; தன் இனத்தைப் பெரிதெனக் கூறுபவர்கள் மற்ற இனத்தாரிடம் வெறுப்புக் காட்டுவர் ; தன் சமயத்திலே மட்டும் வெறிகொண்டவர்கள் மற்ற சமயத்தவர்களை வெறுப்பார்கள் ; தன் தேசம் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை படைத்தவர்கள் மற்ற நாட்டினரை அடக்கியாள முயல்வார்கள் இவைகளையெல்லாம் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இத்தகைய பற்றுடையவர்களிடம் இரக்கம் ஏது? பேரறிவு ஏது? இவைகளை விட்டவர்கள் உள்ளத்தில்தான் இரக்கத்துடன் கூடிய பேரறிவு தோன்றும். இக்கருத்தை,

“சமயம் குலம்முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றி அருட்பொரும் சோதி (அருட்பெருஞ்சோதி அகவல் 4615 – 293)   
     என்று விளக்கியிருக்கிறார் இராமலிங்கர்.

பகுத்தறிவு
      சிந்தனாசக்தி படைத்தவர்களே இவ்வுலகத்தில் துன்பமில்லாமல் வாழமுடியும் சிந்தனாசக்தியின் மூலம் வளர்ந்த பகுத்தறிவின் வழியில் நடப்பவர்களே உலகத்தில் பயன்பெற்று வாழமுடியும். உலக ஒற்றுமைக்கு மக்கள் ஒரே குலமாக வாழ்வதற்கு, முட்டுக்கட்டைகளாக இருக்கின்ற சாதி, மத, பொருளாதாரச் சண்டைகளைப் பகுத்தறிவுவாதிகளே ஒழிக்க முடியும். பகுத்தறிவின் மூலம் துன்பமில்லாமல் வாழக்கூடிய வழியை அறிந்தவர்கள் தான் இவ்வுலகில் எண்ணிய நன்மைகளையெல்லாம் பெற்று வாழமுடியும். பகுத்தறிவு தான் எண்ணியவற்றையெல்லாம் கொடுக்கும் இயல்புடையது என்றெல்லாம்  வீரமுழக்கம் செய்கிறார் வள்ளலார்.

எனைத்தும் துன்பிலா இயல்பளித்து, எண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெரும் சோதி. (அருட்பெருஞ்சோதி அகவல் ; 4615 – 321)
         
      ஆதலால் பகுத்தறிவையே வாழ்க்கைக் கருவியாக உலக மக்கள் கொள்ளவேண்டும் என்பதே நமது தமிழ் வள்ளலாரின் ஆவல். இந்த நிலை உலகில் என்று ஏற்படுகிறதோ அன்றே உலகில் ஒற்றுமை நிலவும். உலக மக்கள் எண்ணிய இன்பங்களையெல்லாம் பெற்று இன்புறுவர் என்பதும் உறுதி. வெறும் பகுத்தறிவு மட்டிலும் போதாது, அது இரக்கத்தோடு கூடிய பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களுக்கு அறிவு வேண்டும். எல்லா மக்களுக்கும் அறிவுவேண்டும். அறிவில்லாதவர்கள் யாரும் இருத்தல் கூடாது ., மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக இருந்தால் தான் சமூகத்திலே அமைதி நிலவும், கொலை, கொள்ளை, வஞ்சகம், சூது முதலிய தீமைகள் தலைகாட்டாது..ஆதலால் நாடெங்கும் மக்களின் அறிவை வளர்க்கக்கூடிய சாதனங்களை அமைக்க வேண்டும். இது அரசாங்கத்தின் முதற்கடமை .குடிமக்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அரசும் ஆடி, அசைந்து விழுந்துவிடாமல் நன்றாக இயங்கும். மக்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு அடையளாம் என்ன? அறிவு வளர்ந்திருப்பதன் பயன் என்ன? அறிவு வளர்ந்திருந்தால் நாடு எப்படியிருக்கும்? மக்கள் சமூகம் எப்படியிருக்கும்? இவைகளைச் சிந்திப்பது பகுத்தறிவுடையார் கடமை

நுண்ணறிவு
     வள்ளலாரின் இக்கருத்தே பண்டைத் தமிழரின் கருத்தாகும். எழுத்துப் புத்தகங்களைக் கற்றல் ஒரு தொழில்தான். ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் துறையில் தேர்ந்திருப்பது போல், சிலர், கவிகளை காவியங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். கல்வி, படிப்பு, கற்றல், படித்தல், ஓதல் முதலிய கல்வியைக் குறிக்கும் சொற்களெல்லாம் தொழிற் பெயர்களாக இருக்கின்றன. இதைக்கொண்டே கல்வியும் ஒரு தொழில்தான் என்பதைக் காணலாம்.செந்நாப் புலவராகிய திருவள்ளுவர் கல்வி வேறு, அறிவுவேறு என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் 
உண்மை யறிவே மிகும்”(குறள் – 373)
         
        என்பது வள்ளுவர் வாக்கு. எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு நுட்பமான பொருள்களைக் கூறும் நூல்களைக் கற்றிருந்தாலும் அது அறிவாகாது. ஒருவனுடைய இயற்கையறிவே எக்காரியத்திலும் முன்னிற்கும். இதுவே குறளின் கருத்து.அந்த இயற்கை அறிவுதான் சிந்தனாசக்தியென்பது. எந்தப் பொருளைக் கண்டாலும், அந்தப் பொருளின் தன்மையை ஆராய்ந்து அறியவேண்டும். எந்தச் செய்தியைக் கேட்டாலும் அந்தச் செய்தியின் உண்மையைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். இதுவே அறிவு வளர்வதற்கு வழி. இவ்வழியில் தங்கள் அறிவைத் தீட்டிக்கொண்டவர்களே நுண்ணறிவாளர்கள்.

அருள் அறிவும் மருள் அறிவும்
       துன்புறும் உயிர்களிடம் இரக்கம் காட்டுவதே அறிவின் பயன். மனித சமூகம் எப்பொழுதும் தனித்து வாழமுடியாது.  பல மக்கள் பலதிறப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர்.பலதிறப்பட்ட தொழில்களே உலகை உருவாக்கி வருகின்றன; மக்களை வாழும்படிச் செய்துவருகின்றன; மக்கள் சமூகத்தை மேலும் மேலும் நாகரிகம் அடையச் செய்து வருகின்றன. இந்த உண்மையை உணராதவர்கள், மதம்,சமூகம், வகுப்பு, இனம் என்ற பேதம் பாராட்டுவர். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொடுமைப்படுத்தும் நிலை மாறவேண்டும். இந்த மாற்றம் எப்பொழுது மனித சமூகத்தில் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அறிவு பரிமளிப்பதாக எண்ண முடியும். மனித சமூகத்தை ஒன்றாக நினைக்காத அறிவு அறிவல்ல; அது அறியாமைதான்.
“அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் 
மருள் அறிவு என்றே வகுத்தமெய்ச் சிவமே”(அருட்பெருஞ்சோதி அகவல் ; 4615 – 488)
         
      இவ்வடிகளை ஊன்றி நோக்கினால் எது அறிவு, எது அறிவின்மை என்பது புலப்படும். இரக்கத்தோடு கூடிய அறிவு ஒன்றுதான் அறிவு, பிற, அறிவு என்று சொல்லப்படுவன எல்லாம் அறிவல்ல, அறியாமைதான். அறிவின் பயனை அறிந்தால் உலகம் தூங்காது ; சோம்பிக் இடக்காது ; உலக மக்கள் உண்மை உணர்வார்கள் ; ஏமாந்திருக்கும் மக்கள் கூட்டம் விழித்தெழும் ; சுரண்டுவோர்க்கு இடங்கொடுக்கமாட்டார்கள் ; எல்லா மக்களும் ஏக்கம் இன்றி வாழ்வர்.

“தூக்கம் தொலைந்து, சூரியன் தோன்றினன், 
ஏக்கம் தொலைத்தேன்”.(திருவருட்பா; திரு உந்தியார் – 4897)
         
       அறிவுபெற்ற ஒவ்வொரு மகனும் சொல்லிக் கொள்ளவேண்டியது இது. “என்னுடைய உறக்கம் ஒழிந்தது, விழிப்படைந்தேன் அறிவுச் சூரியன் உதயமாகிவிட்டான், அவனுடைய வெளிச்சத்தால் என்னை அடிமையாக்கிய தளைகளைக் கண்டறிந்தேன்; அவைகளை அறுத்தெறிந்தேன்; துன்பத்தைத் தொலைத்தேன், விடுதலை பெற்றேன், இன்பத்தை நுகர்கின்றேன்” என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும்.

உண்மை ஞானமே அறிவின் பயன்
       கொடுமை செய்தல் கூடாது, எல்லார்க்கும் நலம் செய்தல் வேண்டும் என்று பேசாதார் இல்லை. ஆனால், செய்கையோ வேறு. சீவகாருண்யம் என்று சொல்லிக்கொண்டு எறும்புக்கு அரிசிபோடுகிறார்கள்; காக்கைக்குச் சோறு போடுகின்றனர்; பாம்புக்குப் பால் வார்க்கின்றனர்; சோம்பித் திரியும் பிச்சைக்காரர்களுக்குச் சோறு போடுகின்றனர்; ஆனால், அல்லும் பகலும் உழைக்கும் மக்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. நாள் முழுதும் வயல்களிலும், தோட்டங்களிலும் உழைக்கின்றனர்; பண்டங்களைப் பெருக்குகின்றனர்; அவர்கள் உழைப்பின்றேல் உலகம் இயங்காது. இத்தகைய உழைப்பாளிகளிடம் இரக்கம் காட்டாதவர்கள் எவ்வளவோ பேர். ஆனால் அவர்கள் வெளிஆடம்பரத்திற்காகச் செய்யும் தருமம் பல.அவை தருமம் ஆகுமா? மக்கள் மனத்தில் உள்ள இம்மயக்கம் ஒழியவேண்டும். மயக்கத்தை உண்டாக்கக் கூடிய கருவிகள் ஒழியவேண்டும். மது மயக்கமாவது சில மணிநேரம் இருந்து பிறகு மறைந்துவிடும்; மடமையால் ஏற்பட்ட மயக்கம் எளிதில் தெளியாது.மடமைக்குக் காரணமாக இருக்கும் கருவிகள் பல. இக்கருவிகள் மதத்தின் பேரால் -சட்டங்களின் பெயரால் சாத்திரங்களின் பெயரால் – பழக்கவழக்கங்களின் பெயரால் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஒழிந்தால்தான் உண்மை ஞானம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்; மக்கள் அனைவரும் இன்பத்தை அடைவார்கள்.

“வெவ்வினைக் காடெலாம் வேரோடு வெந்தது;
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது;
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது;
சித்திகள் யாவும் செய்திடத் தந்தது”   (அருட்பெருஞ்சோதி அகவல்அருள் அற்புதம் – 4912)       
     “இவ்வுலகில், கொடுமைகள், தீவினைகள், காடுபோல் மண்டிக் கிடந்தன.அந்தக் கொடுவினைக் காடுகள் இன்று வேரோடு வெந்து சாம்பலாயின. கொடிய பெரிய வஞ்சனைகள் வளர்ந்து கொண்டிருந்தன. அந்த வஞ்சனைகள் இனி வளர்ச்சியடைய முடியாது அழிந்தன. இப்பொழுது உண்மையான அறிவு வந்து விட்டது. அதுவும் நன்றாக அழிக்க முடியாததாக உறுதியாக வளர்ந்துவிட்டது நினைக்கும் செயல்களையெல்லாம் செய்து வெற்றியடையயும் வல்லமையைத் தந்துவிட்டது” இது வள்ளலார்வாய்மொழி, இதுவே அறிவின் பயன்.

முடிவுரை
    முதலில் மனதிலே இரக்கத்துடன் வாழ்தல்; இரண்டாவது சோம்பலின்மை; மூன்றாவது கொடுமைகளை அழிப்பது, நான்காவது மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; ஐந்தாவது உண்மையான அறிவுடன் எண்ணிய இன்பங்களைப் பெற்று எல்லா மக்களும் ஒன்றுபட்டு இனிது வாழ்வது என இவையே அறிவின் பயன் எனக் கூறும் வள்ளலார்,

“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர்”  (குறள் – 430)  
 
     எனும் வள்ளுவரின் கருத்தை வலியுறுத்துவதன் வழி, இத்தகைய அறிவின் பயனை மனித சமூகம் பெறவேண்டும் எனும் தன் உள்ளக்கிடக்கையையும்  தெளிவுபடுத்துகிறார்.

துணைநூல் பட்டியல்
1. இராமலிங்க அடிகள் (ஆ), திருவருட்பா ஆறாம் திருமுறை, சன்மார்க்க தேசிகன்,  ஊரன் அடிகள் (ப.ஆ), சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்-607303, தென்னார்க்காடு மாவட்டம்.1989.

2. சாமி சிதம்பரனார் (ஆ), கி.ஜெயக்குமார், ப.சரவணன் (ப.ஆ), வடலூரார் வாய்மொழி, லாவண்யா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.2002

3.முனைவர் பா.அருள் செல்வி (ஆ), திருவருட்பா நோக்கமும் பயனும், அருள்சோதி, பதிப்பகம், காஞ்சிபுரம், 1999.

Iniyavaikatral peer reviewed
 
முனைவர் ம. தாமரைச் செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஒருங்கிணைப்பாளர் – பிற மொழிகள் துறை
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் – 2)
மீனம்பாக்கம், சென்னை – 600 061.

 

வெள்ளந்தி|சிறுகதை|சுந்தரிமணியன்

வெள்ளந்தி-சிறுகதை- சுந்தரிமணியன்
          ந்திமாலையின் சூரியக் கிரணங்கள் மறையும் நேரம் வானத்தில் பறந்து கொண்டிருந்த கரிச்சான் குருவிகளும் மரங்களில் தங்களின் கூடுகளைத் தேடிப் போகும் பறவையினங்களின் ஒலிகளும் காதுகளில் ரீங்காரமிட்டன. தன்னை மறந்து பின்புறக் கொல்லையில் வந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த மதுவந்திக்கு, மாலையில் வீசிய தென்றல் காற்றும் சேர்ந்து மனதை மயக்கியது. அந்திமந்தாரைப் பூக்களின் மணமும் அடுக்கு மல்லியின் நறுமணமும் மூக்கைத் துளைத்தன.

      மதுவந்தி படித்து முடித்து நல்ல கம்பெனியில் கைநிறையச் சம்பாதிக்கிறாள். படிப்பில் சாதித்து முடித்தவளுக்கு மனித மனங்களைப் படிப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதுவும் தன்னுடன் வேலை பார்க்கும் பரமேஸ்வரி அக்காவைப் புரிந்து கொள்வது சற்றுச் சிரமம்தான். அவளிடம் மிகவும் அன்பாகப் பழகும் அவர், திடீரென மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு எரிந்து விழுவார். பின்பு ஒரு வாரத்திற்கு ஏன் என்றே காரணம் தெரியாது. என்னவென்று கேட்டால் ஒண்ணுக்கும் உதவாத காரணத்தைச் சொல்வார். அந்த நேரம் அவளுக்குப் ப்ரமோசன் வந்து சம்பளம் ஏறியிருக்கும்.

       மற்ற நேரங்களில் வீட்டில் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்து தருவதும் மாலையில் வடையும் டீயும் வாங்கித் தருவதும் என பணத்தைத் தண்ணியாகச் செலவழிப்பாள். வேண்டாம் என்று மதுவந்தி தடுத்தாலும் விடுவதில்லை. சாப்பிடு, சாப்பிடு என்று தாங்குவார். இது என்ன மாதிரிப் பாசம் என்பதை மதுவந்தியால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவரது வேலைகளில் கடினம் என்று நினைப்பதை எல்லாம் அவளிடம் தந்து,

“மது இதைக் கொஞ்சம் செய்து தறியா? எனக்குக் கொஞ்சம் பிடிபட மாட்டேங்குது”

       “சரிக்கா. கொண்டாங்க முடிப்போம்” என்று உடனே செய்து கொடுப்பாள் மதுவந்தி. அவள் செய்து முடித்தவுடன் உடனே ஏதாவது வாங்கித் தருவார். வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும் விடுவதில்லை. மது ஓரிரு சமயங்களில் இவர் வாங்கிக் கொடுப்பதற்காக வேலை பார்ப்பது போல் தோன்ற தவிர்க்கப் பார்ப்பாள். இது அவளுக்குள் குற்ற உணர்வைக் கொடுக்கும். இன்னொன்று எதற்கெடுத்தாலும் எம்.டியைப் பார்த்தால் மிகவும் குனிந்து அவர் சொன்னதையெல்லாம் ஏற்கும் குணமும் அவருக்குத் தேவைப்படுவதை வாங்கிக் கொடுப்பதிலும் பரமேஸ்வரி அக்கா கில்லாடிதான். எம்.டி இதற்கெல்லாம் மசிகின்ற ரகமில்லை என்பதால் மறுத்துவிடுவார். இதைப் போன்ற பலவற்றில் மகிழ்கின்ற யார் மாட்டினாலும் அவர்களைத் தக்க விதத்தில் கவனித்து தனக்கான ப்ரமோசனையோ, தனக்குத் தேவையான காரியத்தையோ சாதித்துக் கொள்வதில் மும்முரமாய் இருப்பாள் பரமேஸ்வரி.

        ஆனால் யார் புதிதாக ஆபிஸிற்கு வந்தாலும் அவர்கள் மேல் அவர் காட்டும் அன்பும் கரிசனமும்,

      “பரமேஸ்வரி அக்கா ரொம்ப வெள்ளந்தியா இருக்காங்களே” என்பர். ஆமாம் பரமேஸ்வரி அக்கா உண்மையில் பாவம்தான். அதனால்தான் இருபத்தெட்டு வயதில் தனது குடிகாரக் கணவனைப் பறிகொடுத்துவிட்டு கையில் சின்னக்குழந்தையுடன் தாயின் வீட்டிற்கு வந்தவர் என்பதும், பின்பு டைப் படித்து, ஒரு வழியாக வேலையில் அமர்ந்தவர் என்பதும் அவர் வாயால் கேட்கும்போது பாவமாகத்தான் இருக்கும். இருபத்தெட்டு வயதில் கணவனைப் பறிகொடுப்பது எவ்வளவு கொடுமை என்று நினைத்துக் கொள்வாள் மதுவந்தி. காலம் போகப் போக அவர் மிகவும் சமர்த்தர்தான் இல்லாவிட்டால் மேலதிகாரிகளை காக்கா பிடித்து மகனுக்குத் தனது கம்பெனியிலேயே நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்திருப்பாரா என்று நினைத்தாள் மது.

       ஆனால் கம்பெனியில் யாருக்குப் ப்ரமோசன் வந்தாலும் உயர்வு வந்தாலும் அவருக்குக் கிறுக்குப் பிடித்துவிடும். எவ்வளவு நட்பான தோழிகளாக இருந்தாலும் அவரின் வெறுப்பும் அவ்வப்போது வெளிப்பட ஆரம்பிக்கும். நிறைய நகை போட்டு, நல்ல சேலைகட்டி, அவரின் கீழ் உள்ளவர்கள் வந்தால் அவருக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்குத் தீங்கு செய்வதும், உச்சகட்டமாக கரித்துக் கொட்டுவதும் அவரின் வழக்கமாகிப் போனது.

      அன்றொரு நாள் மதுவந்தி தனது அத்தை மகளின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு அப்படியே ஆபிஸ் வந்தவளைப் பார்த்த பரமேஸ்வரி,

        “மது என்ன இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்க. உனக்கு இந்த சேலை நல்லாயிருக்குப்பா. இங்க வா நகையைப் பார்ப்போம்” என்றார். பக்கத்தில் வந்து நின்ற மதுவந்தியின் கழுத்தில் இருந்த ஆரத்தைத் தொட்டுப் பார்த்தவர்,

“இது எத்தனை பவுன்?” என்று கேட்க,

“ஏழு பவுன்கா” என்ற பதிலில் பொறாமை கொண்டு,

“ம். நல்லாருக்கு” என்றார். மறுநாள் மதுவந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆபிசே வரமுடியாமல் போனது. மதுவந்தியின் தோழி நிலா சொன்னாள் ,
“இந்த பரமேஸ்வரி அக்கா கண்ணு வச்சுடுச்சுன்னு நினைக்கிறேன். அவங்க ஏதாவது வியந்து சொன்னாலே முடியாமப் போயிடுது. நீ சொன்னால் கிண்டல் பண்ணுவ. அவங்க மனதின் பொறாமை அப்படீ” என்றாள்.
“
போடீ அதெல்லாம் ஒண்ணுமில்ல. திருமண வீட்டில் சாப்பிட்டது ஒத்துக்காம போயிருக்கும்” என்றாள் மதுவந்தி.

      இப்படிப் பலமுறை நடந்த செயல்களால் ஆபிஸில் பலரும் பலவாறு பேசிக்கொண்டனர். ஆனால் மனித மனங்களின் தேவையில்லாத எண்ணங்கள் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறதோ என்று நினைத்தாள் மதுவந்தி. இன்னொன்று வாழவேண்டிய வயதில் வாழமுடியாமல் போனதால்தான் மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பரமேஸ்வரி அக்காவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லையோ என்று கூடத்தோன்றியது.

         இன்னொரு நாள் கம்பெனியில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. எம்.டி மதுவந்தியைக் கூப்பிட்டு ஒரு பைலை எடுத்துவரச் சொன்னார். மது தனது டேபிளுக்குச் சென்று பைலைத் தேடி எடுத்து வைத்துவிட்டு, டீ குடிப்பதற்காக கேண்டீனுக்குச் சென்றாள். டீ குடித்து விட்டு வந்து பார்த்தால் டேபிளில் இருந்த பைல் காணாமல் போய்விட்டிருந்தது. எவ்வளவு தேடியும் பைல் கிடைக்கவில்லை. மதுவந்திக்குக் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது. எம்.டி ஐந்து மணிக்கு வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது? திட்டுவாரே என மனம் பலவாறு சிந்தித்தது.

      ஆபிசில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று கேட்டாள். ஒருவரும் எனக்குத் தெரியாது, நான் பார்க்கவில்லை எனச் சொல்ல, பரமேஸ்வரி அக்காவிடமும் மது போய்க் கேட்க, “எனக்குத் தெரியாதும்மா” என்றார்.
ஐந்து மணிக்கு ஆபிசிற்கு வந்த எம்.டி மதுவைக் கூப்பிட்டனுப்ப,

      “சார் பைல டேபிளில் வைத்திருந்தேன் காணல. யார் எடுத்தாங்கன்னும் தெரியல. காலைல எப்படியாவது எடுத்துத்தரேன் சார்” என்றாள். உடனே முகம் மாறிய எம்.டி,
“இது உங்களொட பொறுப்பற்ற தன்மையக் காட்டுது மது. ஒரு பைல உங்களால பத்திரமா வச்சுக்க முடியல. நீங்களெல்லாம் என்ன வேலை செய்யறீங்க” என்று கத்த, கையைப் பிசைந்து நின்று கொண்டு கலங்கிய மதுவந்தியை,

        “போங்க. நாளைக்காவது பாத்து எடுத்துட்டு வாங்க” என்றார். எம்.டி அறையை விட்டு வெளியே வந்த மதுவந்தி கலங்கிய மனதுடன் தனது இருப்பிடம் நகர்ந்தாள். ஆபிசில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற ஆரம்பித்தனர். இந்த பைல் அப்படி எங்கதான் போயிருக்கும்? யாரோ வேணும்னு எடுத்து வச்சிருப்பாங்களோ, அல்லது பழிவாங்கும் விதமா அப்படிப் பண்ணிருப்பாங்களோ? எனப் பலவாறாக சிந்தனைகள் திக்குத் தெறியாமல் ஓடின.

        எதுக்கும் ஆபிசில் இருந்த பியூன் ராமசாமியைக் கேட்போம் என்று நினைத்த மது,

“அண்ணா. நான் கேண்டின் போகும்போது என் சீட்டுக்கு யாராவது வந்தாங்களா? நீங்க எதுவும் பாத்தீங்களா?” என்றாள்.

      “ஆமாம்மா. நீங்க கேண்டின் போனப்ப யாரும் சீட்ல இல்ல. பரமேஸ்வரி மேடம் மட்டும் உங்க சீட்டுக்கு வந்தாங்க” என்றான். உடனே தன்னையும் அறியாமல் வியந்து போன மது, அவசரமாக பரமேஸ்வரி அக்காவின் டேபிளுக்குச் சென்று பக்கத்தில் இருந்த பீரோவைத் திறந்தாள். பைல்கள் எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொரு பைலாக எடுத்துப் பார்த்தவள். பைல்களுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த ஒரு பைலை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள். அதுதான் எடுத்துவைத்திருந்த அதே பைல்தான். அதை எடுத்து தனது பீரோவில் வைத்தவள்,

     “அண்ணா பரமேஸ்வரி அக்காட்ட அவங்க பீரோவில் பைல் எடுத்தத சொல்லாதீங்க. கேட்டா எனக்குத் தெரியாதுண்ணு சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்” என்றாள். ராமசாமியும் ஆமோதிக்க, எழுந்து நிம்மதியாக வீட்டுக்குக் கிளம்பினாள்.

      பரமேஸ்வரி அக்கா ஏன் இப்படி செய்தாங்க? என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்திருந்தாள் மதுவந்தி. மறுநாள் ஏதேச்சையாகக் கேட்பதுபோல் பரமேஸ்வரியிடம் சென்று,

    “அக்கா. நேத்து உங்க பீரோல்லதான் பைல் இருந்தது. எப்படிக்கா? நீங்க எடுத்தீங்களா?” என்ற மதுவந்தியைப் பார்த்து,
        
“டேய் என்னடா இப்படீ சொல்லிட்ட. நான் போய் பைல எடுப்பனா? சத்தியமா நான் எடுக்கல. யார் எடுத்து வச்சாங்கன்னும் தெரியல. எனக்கென்னமோ நம்ம ரெண்டு பேரும் பழகறதப் பார்த்து சண்டை மூட்டிவிடனும்னு யாரோ செஞ்ச வேலையா இருக்குமோ?”

     என்று ஒன்றுமறியாத அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டாள் பரமேஸ்வரி. மதுவந்திக்கு அவளைத் திட்டுவதா, உண்மையில் அவர் சொல்வதுபோல் மற்றவர்கள் செய்திருக்கலாமோ என நொடிப் பொழுது யோசித்தவள், ச்சே இருக்காது, இந்த அக்கா தான் மாட்டக்கூடாது என்பதற்காகப் பொய் சொல்லுகிறாள் என்பது மட்டும் புரிய வெள்ளந்தியாக நடித்த பரமேஸ்வரி அக்காவின் நிஜரூபம் கொடூரமாக விசுவரூபம் எடுப்பதுபோல் மதுவந்திக்குத் தோன்றியது.

சிறுகதையின் ஆசிரியர்
சுந்தரிமணியன்,
புதூர்.

 

An Introduction of Marathi Literature|Gayathri.S

மராத்தி இலக்கியம் – ஓர் அறிமுகம்
Abstract
         
        Marathi literature is recognized as one of the distinctive literary traditions among Indian language literatures, marked by a rich heritage and continuous development. Centered in the state of Maharashtra, this literature has evolved in close association with political history, religious movements, social transformations, the spread of education, and modern intellectual currents. Marathi literature functions not merely as a linguistic expression but also as a social document that reflects the lived experiences, culture, resistance to authority, and reformist aspirations of the people. This research article provides a comprehensive overview of the development of Marathi literature from its origins to the modern period. It examines various phases such as Bhakti literature, the Pandit tradition, political awakening, colonial transformations, modern literary forms, as well as Dalit and feminist writings, each discussed in detail to highlight their contributions to the evolution of Marathi literary discourse.


“மராத்தி இலக்கியம் – ஓர் அறிமுகம்”

முன்னுரை
       மராத்தி இலக்கியம் இந்திய மொழி இலக்கியங்களில் தனித்துவமான மரபும் தொடர்ச்சியான வளர்ச்சியும் கொண்ட இலக்கியமாக விளங்குகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த இந்த இலக்கியம், அரசியல் வரலாறு, சமய இயக்கங்கள், சமூக மாற்றங்கள், கல்வி பரவல் மற்றும் நவீன சிந்தனைகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மராத்தி இலக்கியம் ஒரு மொழியின் இலக்கியமாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, அதிகார  எதிர்ப்புணர்வை மற்றும் சீர்திருத்தக் கனவுகளை வெளிப்படுத்தும் சமூக ஆவணமாகவும் செயல்பட்டுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை மராத்தி இலக்கியத்தின் தோற்றம் முதல் நவீன காலம் வரை அதன் வளர்ச்சியை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. பக்தி இலக்கியம், பண்டித மரபு, அரசியல் எழுச்சி, காலனிய கால மாற்றங்கள், நவீன இலக்கிய வடிவங்கள், தலித் மற்றும் பெண்ணிய எழுத்துகள் ஆகிய அனைத்தும் இதில் தனித்தனியாக விவாதிக்கப்படுகின்றன.

மராத்தி மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்
      மராத்தி மொழி இந்தோ–ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக மொழியியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இது மகாராஷ்டிரப் பிராகிருதம் மற்றும் அபப்ரஷம் ஆகிய மொழிநிலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாக உருவானது. ஆரம்பகாலத்தில் மராத்தி வாய்மொழி மரபாகவே இருந்து வந்தது. காலப்போக்கில் அரசியல் அதிகாரம், மத இயக்கங்கள் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவை மொழியின் எழுத்து வடிவ வளர்ச்சிக்கு வழிவகுத்தன. நானேகாட் கல்வெட்டுகள், சடவாகனர் கால நாணயங்கள் பின்னர் யாதவ வம்சத்தின் கல்வெட்டுகள் மராத்தி மொழியின் வரலாற்றுப் பயணத்தை உணர்த்துகின்றன. இவ்வாறான சான்றுகள் மராத்தி மொழி மக்களின் அன்றாட வாழ்வுடன் நெருக்கமாக இணைந்திருந்ததை காட்டுகின்றன.

ஆரம்பகால மராத்தி இலக்கியம்பக்தி இயக்கத்தின் தோற்றம்
13ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இயக்கம் மராத்தி இலக்கிய வளர்ச்சியில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியது. சமஸ்கிருதம் போன்ற உயர்மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி, பொதுமக்கள் பேசும் மொழியில் இறைநம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இந்த இயக்கத்தின் அடிப்படை.

ஞானேஸ்வர், நாமதேவர், துக்காரம்
       ஞானேஸ்வரின் ஞானேஸ்வரி¹ மராத்தி இலக்கியத்தின் அடித்தள நூலாகக் கருதப்படுகிறது. பகவத் கீதையின் கருத்துகளை மராத்தி மொழியில் எளிமையாக விளக்கும் இந்த நூல், சமயத்தையும் மொழியையும் பொதுமக்களுக்கு நெருக்கமாக்கியது. ஞானேஸ்வரின் எழுத்து நடை, தத்துவ ஆழமும் கவித்துவ நயமும் இணைந்ததாக அமைந்துள்ளது. நாமதேவின்  அபங்கங்கள் சமூக சமத்துவம் மற்றும் இறைபக்தியை வலியுறுத்துகின்றன. அவர் சமய அனுபவத்தை தனிப்பட்ட ஆன்மிக உணர்வாக மட்டுமல்லாமல் சமூக உணர்வாகவும் வெளிப்படுத்தினார். துக்காராமின்  கவிதைகள் மராத்தி பக்தி இலக்கியத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன. இவரது பாடல்களில் மனித வாழ்க்கையின் துயரங்களும் நம்பிக்கைகளும் இயல்பாக வெளிப்படுகின்றன. எளிய மொழியில் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியதே துக்காரத்தின் தனித்துவமாகும்.

பண்டித இலக்கிய மரபு
        பக்தி மரபுடன் இணையாக பண்டித இலக்கிய மரபும் வளர்ந்தது. இந்த மரபில் புராணங்கள், இதிகாசங்கள், சமய விளக்க நூல்கள் ஆகியவை எழுதப்பட்டன. சமஸ்கிருத இலக்கியத்தின் தாக்கம் இருந்தாலும், மராத்தி மொழியின் சொந்த இலக்கிய அடையாளம் இம்மரபில் உருவானது.

மராத்திய அரசியல் மற்றும் இலக்கியம் எழுச்சி
         சிவாஜி மகாராஜாவின் காலத்தில் உருவான மராத்திய அரசியல் எழுச்சி இலக்கியத்திலும் பிரதிபலித்தது. வீரரசம், தேசபக்தி மற்றும் சுயமரியாதை உணர்வுகளை வெளிப்படுத்தும் பவாடா  பாடல்கள் இந்தக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இவை மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்கின. 19ஆம் நூற்றாண்டில் காலனிய கால மராத்தி இலக்கியம், சமூகத்திலும் இலக்கியத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அச்சுத் தொழில்நுட்பம், மேற்கத்திய கல்வி மற்றும் புதிய சிந்தனைகள் மராத்தி இலக்கியத்தை நவீன திசைக்கு இட்டுச் சென்றன.

உரைநடை வளர்ச்சி
      செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் கட்டுரை எழுத்து மரபுகள் இந்தக் காலத்தில் வளர்ந்தன. பாலசாஹெப் ஜாம்பேகர், விஷ்ணுசாஸ்திரி சிப்லுங்கர் போன்றோர் உரைநடையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

சமூக சீர்திருத்த இலக்கியம்
      ஜோதிபா பூலே, கோபால கணேஷ் அகர்கர் போன்றோர் சமூக சீர்திருத்தக் கருத்துகளை தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்தினர். சாதி அமைப்பு, கல்வி, பெண்கள் நிலை போன்ற கருத்துக்கள்  இக்கால இலக்கியத்தின் மையமாக இருந்தன.

நவீன மராத்தி கவிதை, நாவல், நாடக இலக்கியம்
         20ஆம் நூற்றாண்டில் மராத்தி கவிதைகள் புதிய வடிவங்களையும் புதிய மொழி வெளிப்பாடுகளையும் பெற்றது. கேசவ்சுத், பால்கவி, விந்தா கரந்திகர் போன்றோர் மராத்தி கவிதையை நவீன உணர்வுகளுடன் இணைத்தனர். மராத்தி நாவல்கள்  சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் முக்கிய இலக்கிய வடிவமாக வளர்ந்தது. குடும்ப அமைப்பு, சமூக மாற்றங்கள், மனித உளவியல் போன்றவை நாவல்களில் பேசப்பட்டன. ஹரி நாராயண் ஆப்தே, வி. வி. ஷிர்வாட்கர், பி. எல். தேஷ்பாண்டே ஆகியோர் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்கள் ஆவர். மராத்தி நாடகம் சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகளை மேடையேற்றும் ஊடகமாகச் செயல்பட்டது. விஜய்  தெண்டுல்கர் போன்றோர் நவீன மராத்தி நாடகத்திற்கு விமர்சனத் தன்மையையும் சமூகக் கேள்விகளையும் கொண்டு வந்தனர்.

தலித் இலக்கியம்
          20ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் மராத்தி தலித் இலக்கியம் ஒரு முக்கிய இலக்கிய இயக்கமாக உருவெடுத்தது. இது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அனுபவங்களையும் மக்களின் எதிர்க்குரலையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த இயக்கம் வெறும் இலக்கியப் போக்காக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வு மற்றும் சுயமரியாதை உணர்வை வளர்த்த ஒரு பண்பாட்டு இயக்கமாகவும் கருதப்படுகிறது. மராத்தி இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்தின் மையமாக கொண்டு வரப்பட்டன. பாபுராவ் பாகுல், நாம்தேவ் தசால், தயா பவார் போன்றோர் மராத்தி தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் கவிதைகள் மற்றும் சிறுகதைகளில் சாதி ஒடுக்குமுறை, வறுமை, நகர்ப்புற விளிம்பு வாழ்க்கை, கல்வி மறுப்பு போன்ற அனுபவங்கள் அலங்காரமற்ற மொழியில் வெளிப்படுத்தப்படுகின்றன.

பெண்ணிய மராத்தி இலக்கியம்       
       மராத்தி பெண் எழுத்தாளர்கள் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக பதிவு செய்தனர். குடும்பம், சமூகம் மற்றும் தனிப்பட்ட அடையாளம் போன்றவை இவர்களின் எழுத்துகளில் முக்கியமாக முக்தாபாய், சாவித்ரிபாய் பூலே, மற்றும் தாராபாய் ஷிண்டே ஆகியோர் பெண்ணிய எழுத்துக்களின் முன்னோடியாக திகழ்கின்றனர்.

முடிவுரை
    மராத்தி இலக்கியம் அதன் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் கலை, அரசியல், பண்பாடு எனப் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வந்துள்ளது. இம்மாற்றங்களால் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. பக்தி இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை மராத்தி இலக்கியத்தின் வளர்ச்சியானது, இந்திய இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தை வழங்குகிறது.

துணைநூற்பட்டியல்               
1. Deshpande, G. S., History of Marathi Literature, Popular Prakashan, Mumbai, 2007.

2.Callewaert, Winand M., The Hagiographies of Namdev, Manohar, New Delhi, 1996.

3.Ranade, R. D., Mysticism in Maharashtra, SUNY Press, Albany, 1983.

4. Zelliot, Eleanor, From Untouchable to Dalit, Manohar, New Delhi, 1992.

5. Tulpule, S. G., Classical Marathi Literature, Popular Prakashan, Mumbai, 1979.

6. Kulkarni, P. V., History of Medieval Marathi Literature, Popular Prakashan, Mumbai, 1993.

7. Rege, Sharmila, Writing Caste/Writing Gender, Zubaan, New Delhi, 2006.

8. Mukherjee, Meenakshi, The Perishable Empire, Oxford University Press, New Delhi, 2000.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
Iniyavaikatral peer reviewedசி.காயத்ரி

ஆராய்ச்சி மாணவி

சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்.

நெறியாளர்
முனைவர் தி.சிந்தியா

உதவிப் பேராசிரியர்

சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்.

 

Sanga Kaala Makkalin Unavumuraikal|Dr.C.Ramamirtham

Abstract          
           The Tolkappiyam and Sangam literature were the mirrors that reflected the life of the ancient Tamils. They divided the land into five parts and the time into two parts, namely, the great time and the small time. The theme, Tolkappiyar has formulated. He has mentioned food in the next position to God in the subject matter. The reason for this is that food is essential for humans. It can be seen that rice occupied the primary place in the diet of the ancient Tamils, while cereals occupied a secondary place. Apart from these dietary patterns, the food varied according to each region. Such food styles can be seen as a manifestation of the maturity of Tamil taste, advanced civilization, medical knowledge, and health consciousness. It can be seen from literature that the ancient Tamils ​​had a strong habit of eating meat and eating nuts. This article is about examining such food systems.

திறவுச்சொற்கள்
                     
      சமைத்து உணவு முறை, அரிசி உணவு,தானிய உணவு, வேட்டுவர்களின் உணவு முறை, ஊன்சோறு, இறைச்சியின் வகைகள், திரவ உணவுகள், புளிப்பு, இனிப்பு உணவு வகைகள்.


“சங்க கால மக்களின் உணவு முறைகள்”

முன்னுரை
         
        பழந்தமிழர்களின்  வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்கியது தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஆகும். நிலத்தினை ஐந்தாகவும், பொழுதினை  பெரும்பொழுது ,சிறுபொழுது  என இரண்டாகவும் பிரித்துள்ளனர். கருப்பொருளை,
“தெய்வம் உணாவே மா மரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்:964)
     என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.கருப்பொருளில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவைக் குறிப்பிட்டுள்ளார்.  அதற்கு காரணம் மனிதனுக்கு  உணவு அவசியமான ஒன்றாகும். அத்தகைய உணவு முறைகளை ஆராய்வது குறித்து இக்கட்டுரை அமைகின்றது.   
சமைத்து உணவு முறை       
      உலகில் முதன் முதலில் உணவை நாகரிகமாகச் சமைத்து உண்டவன் தமிழனே என்றும், முதன் முதலில் குழம்பு காய்ச்சப்  பெற்றது தமிழகத்திலேயே என்றும் ஞா.தேவநேயப்பாவணர் கூறுகிறார். பழந்தமிழர்களிடம் நில வேறுபாட்டிற்கேற்ப உணவு முறையும் மாறியிருந்தது. ‘ஐவனம்’ என்னும் மலை அரிசி, தினை, மூங்கில் அரிசி முதலியன குறிஞ்சி நில மக்களின் உணவாக அமைந்திருந்தன. முல்லை நில மக்கள் தினைச்சோற்றையும் பாலையும் உணவாகக் கொண்டிருந்தனர். ஐவகை நிலத்தில் உள்ளவர்கள் அரிசி உணவோடு மரக்கறியை உண்பதோடு புலால் உணவையும் உட்கொண்டனர். புலால் உணவோடு கள்ளும் சேர்த்து உண்டனர் என்று அறிய முடிகிறது. இயல்பாக அமைந்த ஐந்து நில மக்களின் வாழ்வில் கள்ளும் புலால் உணவும் இடம்பெற்றிருப்பதை இலக்கியங்கள் வழி அறியலாம்.

அரிசி உணவு       
     பழந்தமிழர்கள் உணவில் அரிசியே முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. அவை காடைக் கண்ணியரிசி, குதிரைவாலியரிசி, சாமையரிசி, தினையரிசி, வரகரிசி, புல்லரிசி என ஆறு வகையாகப் பிரித்தனர். அந்த ஆறு வகை அரிசியும் நெல்லிலிருந்து பெறப்படும் அரிசிக்கு ஈடாகப் போற்றப்படவில்லை. நெல்லின் வகைகளைக் குறிக்கும் வேறு பெயர்களை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை,  ஐவனம், அகம் என்று பல பெயர்களாக நெல் பிரிக்கப்பட்டுள்ளது.
           நெல்லை வேகவைத்துக் குற்றி அதிலிருந்து எடுக்கப்படும் அரிசியைத் தமிழர் ‘புழுங்கல் அரிசி’ என்றனர். நன்கு குற்றப்பட்டு உமியும் தவிடும் நீக்கப்பட்ட அரிசியைக் ‘குத்தலரிசி’ என்றனர். நன்கு சுத்தம் செய்யப்படாத அரிசியைக் ‘கொழியலரிசி‘ என்றனர். தமிழர் புழுங்கல் அரிசியையே விரும்பி உண்டு இருக்கிறார்கள் புழுங்கல் அரிசி உடல் சூட்டைத் தணிக்கும் இயல்புடையது. அதனால் தமிழர்கள் உணவில் புழுங்கல் அரிசியே பெரிதும் இடம்பெற்றுள்ளது. அரிசியைப் பருப்பு வகைகளோடு கலந்து ‘பொங்கல்’ செய்தனர். ‘அரிசி அடைகள்’ மற்றும் அரிசியை ஊறவைத்து அரைத்துத் தோசையாக்கி உண்டிருக்கிறார்கள் எனலாம்.

தானிய உணவு       
      அரிசிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் தங்கள் உணவில் தானிய வகைகளுக்கு இடம் தந்தனர். அவர்கள் உணவில் வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தத் தானியங்களைக் கொண்டு கஞ்சியும் கூழும் களியும் செய்து தமிழர்கள் உண்டனர். எள், உளுந்து போன்ற தானிய வகைகளைப் பயன்படுத்தித் திண்பண்டங்கள் செய்துள்ளனர். பழந்தமிழர்கள் தானிய வகைகளுள் நெல்லரிசி உணவையே தலைசிறந்ததாகக் கருதினர். தூய வெள்ளையாய் அரிசி தீட்டப்பட்டதைப் பின்வரும் பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

“இருங்காழ் உலக்கை இரும்பு முகந்தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு” (சிறுபாண் :193.4)
         
        காலை, நண்பகல், மாலை என மூன்று நேரங்களிலும் பண்டைய தமிழர்கள் அரிசி உணவு உண்டு வந்தனர். காலை உணவும் நண்பகல் உணவும் உழவர்க்கும், கூலியாளர்களுக்கும் பழஞ்சோறும் பழங்கறியும் ஊறுகாயும் ஆகும். புதுக்கறியாயின் நெருப்பில் வாட்டியதும் துவையலுமாக இருக்கும். இரவு உணவே  புதுச்சமையலாகக் கொள்ளப்பட்டது.

“மென்புலத்து வயால் உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புகஅருந்தி“(புறம் :532)
         
       உழவர்கள் மங்கல நாளும், விழா மற்றும் விருந்து நாட்களைத் தவிர பிற நாட்களில் நெல்லரிசிச் சோறு உண்பதில்லை. வரவு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய தானியங்களையே பகல் உணவாக உண்டனர் என்று புறநானூறு சுட்டுகின்றது.

வேட்டுவர்களின் உணவு முறை       
      காடுகளிலிருந்து கிடைக்கும் காயும், கனியும், கிழங்கும் நிறைந்து காணப்படுவது வேட்டுவர்களின் குடியிருப்புகளாகும். அவர்கள் கூத்தர்களுக்கு நெய்யில் பொரித்த பன்றித் தசையோடு, வேகவைத்த தினைச்சோறும் உண்ணக் கொடுத்தனர் என்று கீழ்வரும் பாடல் சுட்டுகின்றது.

“ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு
வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல்
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
அகமலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெருகுவிர்“ (மலைபடு:170-185)       
     மலையிலே விளைகின்ற பொருள்களான தேன், தினை, கனி, ஊன்கறி இவை தவிர, மூங்கில் குழாயினுள் ஊற்றி நீண்ட நாள் புளிக்க வைத்த கள்ளையும், அருவி நீர் அடித்துக் கொண்டு வந்த பலாக்கொட்டைகளையும் மாவாக்கி புளியம்பழத்துடன் மோர் கூட்டி மூங்கில் அரிசியும் கடமான் கறியையும் உடும்பின் கொழுத்த தசையையும் உண்ணக் கொடுத்தனர் என்று மலைபடுகடாமில் உள்ள பாடல் வரிகள் சுட்டுகின்றன.

ஊன்சோறு       
       ஊன்சோறு அல்லது புலவு பண்டைய காலத்தில் தமிழகத்திலேயே தோன்றியிருந்தது என்பதனைச் சங்க கால பாடல்கள் மூலம் அறியலாம்.
 
“ மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்” (புறநானூறு: 113)
“ புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருந்தும்” (புறநானூறு: 33)
“ அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்”( புறநானூறு: 360)
 
என வரும் பாடல் வரிகள் மூலம் ஊன்சோறு பற்றி அறியலாம்.

இறைச்சியின் வகைகள்       
     மருதநில மக்கள் வெண்ணெல் சோற்றைக் கோழி இறைச்சியின் வற்றலோடு உண்ணும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதனை,

“ தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வலசி 
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவீர்”( பெரும்பாண் :253- 256)
         
     என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. பசி அறியாத வளம் வாய்ந்த பெரிய ஊரில் உழவர்தம் முயற்சியாலான வெண்மையான சோற்றைக் கோழிப் பொறியலோடு உண்டதைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவுபடுத்துகிறது. இறைச்சியின் வகைகளில் உடும்பின் இறைச்சியே தலை சிறந்ததாகக் கொண்டனர்.
 
“ உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்“( புறநானூறு: 325)
         
       என்ற வரிகள் மூலம் உடும்பின் இறைச்சியை வீரர்கள் நெருப்பிலிட்டு வாட்டி உண்டதையும் மேலும் ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைய தமிழர்கள் விரும்பி உண்டதனை (புறநானூறு: 33, 13, 262, 365, 366) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகின்றது.

திரவ உணவுகள்       
     அரசரும், மறவரும், பாணரும், பொருநரும், புலவர் சிலரும், உழவரும், குடிப்பு வகைகளுள் கள்ளையே சிறந்ததாகக் கொண்டனர். இது இயற்கைக் கள், செயற்கைக் கள் என இரு வகைகளாகும். மேலும், மேல் நாட்டிலிருந்து புட்டிகளில் வந்த மதுவையும் பருகினர் என்பதை,

“யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்”( புறநானூறு: 56)       
       என்ற பாடல் வரி உணர்த்துகின்றது. மேலும், கள்ளினைப் பக்குவப்படுத்திக் கலங்களிலும் மூங்கில் குழாய்களிலும் இட்டு மூடிப் பலநாள் மண்ணில் புதைத்து வைத்த கள்ளின் கடுமைக்கு தேள் கொட்டும, பாம்புக் கடியும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. இதனை புறம் :120,392, அகம்: 348 என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம்.

புளிப்பு,இனிப்பு உணவு வகைகள்       
   கடுகு,கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யில் தாளிப்பதனை இலக்கிய வழக்கில்’குய்‘,’குய்யுடை அடிசில்’ ( புறம் :127) என இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுசுவை உணவைச் சமைத்து உண்டனர். அறுசுவைகளில் தமிழர்களுக்குச் சிறந்தவை இனிப்பும் புளிப்பும் ஆகும். இதை, வெப்பநாட்டின் இயல்பாகக் கொள்ளப்பட்டது எனலாம்.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது, உடீஇ,
தான் துடிந்து அட்ட தீம்புளிப் பாகர்“(குறும்: 164)
“பாலிற் பெய்தவும் பாகில் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி”( புறம்: 381)
         
     என்ற பாடல் வரிகளின் மூலம் சங்ககால தமிழர்கள் புளிக் குழம்பு வைத்து உண்டதையும், பால் கலந்த வெல்லப்பாகு கொண்டு செய்த தின்பண்டங்களையும் இனிமையென விரும்பி உண்டதையும் அறிய முடிகின்றது.

முடிவுரை         
      பழந்தமிழர்கள் உணவு வகைகளுள் நெல்லே முதன்மையிடத்தைப் பெற்றிருந்ததையும், தானிய வகை உணவுகள் துணைமை இடத்தைப் பெற்றிருந்ததையும் காணமுடிகின்றது. இவ்வுணவு முறைகளைத் தவிர ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்றவாறு உணவுகள் வேறுபட்டன. இத்தகைய உணவு முறைகள் தமிழரின் சுவை முதிர்ச்சியையும், தலைசிறந்த நாகரிகத்தையும், மருத்துவ அறிவையும், உடல்நல உணர்ச்சியையும் ஒருங்கே காட்டுவனாக அமைந்துள்ள தன்மையை உணரலாம். பழந்தமிழரிடம் புலால் உணவு உண்ணும் வழக்கமும், கள் உண்ணும் வழக்கமும் மிகுந்திருந்ததை இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.  

பயன்பட்ட நூல்கள்
1.இளம்பூரணனார் (உ . ஆ ) –  2005, தொல்காப்பியம் பொருளதிகாரம் ,சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.

2.சோமசுந்தரனார்,பொ.வே.(உ.ஆ) _ 1961 , குறுந்தொகை ,  கழக வெளியீடு, சென்னை

3.செயபால்இரா – 2004, அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி.லிட்), சென்னை.

4.புறநானூறு – 1947,  துரைசாமிப்பிள்ளை ஒளவை சு (உ. ஆ), கழக வெளியீடு, சென்னை .

5.சாமிநாதையர் உ. வே(தொ.ஆ) – 1986, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர். 

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்சி. இராமாமிர்தம்

தமிழ் உதவிப்பேராசிரியர்

மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம் – துறை

அறிவியல் மற்றும் மனிதநேயவியல் புலம்
 
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
 
இராமாபுரம், சென்னை – 89.

 

The Seasonal Management of the Ancient Tamils|Dr. K.Chitra

பழந்தமிழரின் பருவகால மேலாண்மைச் சிந்தனைகள்
Abstract
     Through  Sangam literature, we gain insight into how the ancient Tamils ​​confronted changing seasons and the specific strategies they adopted within their daily lives to adapt to these seasonal shifts. Land and time are defined as the primary foundational elements of human existence. Lands are classified into five distinct types, while the ever-changing seasons are categorized into six. In Sangam literature, terms such as Archiram, Munpani, Pinpani, Ilavenil, Kuzhavi Venil, Sevvi Venil, Kodai, Kaar, and Koothir are employed to designate these various seasons. The Kaar season specifically denotes the monsoon period, characterized by continuous rainfall. Sangam literature reveals a tradition of associating the timely and unfailing occurrence of seasonal rains with the presence of good governance. Among the vocabulary related to rain, terms such as Thuvalai and Aarpeyal are particularly noteworthy; Thuvalai refers to a light drizzle, while Aarpeyal signifies heavy, torrential rain. Through Sangam texts, we learn that the rainy season was perceived and recorded as a symbol of lush greenery, a tangible benefit of good governance, the very seed of agriculture, and a cherished time for the expression of love between a hero and a heroine. These texts also indicate that specific sections of homes—such as the Venilpalli (summer quarters) and Koothirpalli (winter quarters)—were constructed and designated to suit the distinct requirements of the summer and rainy seasons. This architectural practice serves as a testament to the ecological awareness and seasonal management expertise possessed by the Tamils ​​of that era. Furthermore, the literature highlights that the winter season was broadly divided into two distinct phases: Munpani (early winter) and Pinpani (late winter). Poets of the era vividly illustrate the severity of the cold during this season—characterized by the scattering of tiny dewdrops—noting that the intensity of the frost was so extreme that even lotus blossoms would wither and perish. A verse from the Kurunthogai anthology reveals that, during the winter months, it was customary for people to bathe in warm water. Finally, terms such as Vemmai, Uruppam, Veyil, and Theral are utilized in the literature to describe and evoke the various aspects of the summer season. The following passage illustrates the usage of gooseberries during the summer season. Sangam literature vividly portrays the hardships faced by living beings—including animals—as they contend with the heat, amidst water bodies that have dried up during the summer months. It is evident that the challenges of the summer season were a reality in ancient Tamil  as well.

“பழந்தமிழரின் பருவகால மேலாண்மைச் சிந்தனைகள்”

ஆய்வுச்சுருக்கம்
        பழந்தமிழர் மாறும் பருவ காலங்களை பழந்தமிழர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் தம் வாழ்வியலில் அவர்கள் மேற்கொண்ட  பருவ காலங்களுக்கான  திட்டமிடல்கள்  குறித்த பதிவுகளையும் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.  மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் நிலமும் பொழுதும் முதன்மையாக வரையறுக்கப்பட்டுள்ளது.  நிலங்கள் ஐந்து வகையாகவும் மாறி வரும்  காலங்கள் ஆறு வகையாகவும் வகுக்கப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் இப்பருவ காலங்களைப் பதிவு செய்யும் சொற்களாக அற்சிரம், முன்பனி, பின்பனி, இளவேனில், குழவி வேனில், செவ்வி வேனில், கோடை, கார், கூதிர் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. கார்காலம் என்பது தொடர்ச்சியாக மழை தரும்  பருவமழைக் காலத்தைக் குறிக்கும். பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்திப் பாடும் வழக்கத்தை சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது.மழை சாரந்த சொற்களாக துவலை,  ஆர்பெயல் உள்ளிட்டவை இங்கு குறிப்பிடத்தக்கன. துவலை என்பது சிறு தூறலையும்  ஆர்பெயல் என்பது மிகுதியான மழையையும் குறித்து வழங்குகின்றது. மழைக்காலம்   என்பது  பசுமையின் அடையாளமாகவும் நல்லாட்சியின் பலனாகவும் வேளாண்மைக்கு வித்தாகவும் தலைவன் தலைவியன் அன்புக்குரிய காலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. வெயில்காலம், மழைக்காலம் ஆகிய பருவகாலங்களுக்கு ஏற்ற வகையில் வீட்டின் பகுதிகள் (வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி) அமைக்கப்பட்டிருந்தன என்பதை இதன்வழி அறியமுடிகிறது.  இது அக்காலத்தழிழர் தம் சூழலியல் அறிவையும் பருவ கால மேலாண்மையையும் எடுத்துக்காட்டுகிறது. பனிக்காலம் முன்பனி, பின்பனி என இரண்டு பகுதிகளாக அமைந்ததை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிறு சிறு துளிகளாக பனித்துளி சிதறும் கடுமையான குளிர்காலத்தில் தாமரை மலரும் கரிந்து போகும் அளவிற்கு பனியின் கொடுமை இருந்ததை புலவர் எடுத்துக்காட்டுகின்றார். குளிர்காலங்களில் வெண்ணீர் எடுக்கும் பழக்கம் இருந்தமையைக் குறுந்தொகை்ப பாடல் எடுத்துக்காட்டுகின்றது.வெயில்காலத்தோடு தொடர்புடைய சொற்களாக வெம்மை, உருப்பம், வெயில், தெறல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோடை காலத்தில் நெல்லிக்காய் பயன்பாடு இருந்தமையைக் கீழ்க்காணும் தொடர் எடுத்துக்காட்டுகின்றது. வேனிற்காலங்களில் நீர் வற்றிய நீர்நிலைகள் வெப்பத்தை எதிர்கொள்ளும் விலங்குகள் முதலான உயிரினங்களின் துயரம் யாவும் சங்க இலக்கியங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழந்தமிழகத்திலும் வேனிற்கால சவால்கள் இருந்தமை  புலனாகிறது.

முன்னுரை
 
     பழந்தமிழர் சுழலும் காலங்களை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும்  இருநிலைகளில் எதிர்கொண்டனர்.  பெரும்பொழுதுகள்  கால நிலை மாற்றங்களுடன்  கூடியது. சிறுபொழுதுகள் ஒரு நாளில் எதிர்கொள்ளும் 24 மணிநேரங்களின் சிறுபகுதிகள்.  சங்க இலக்கியங்களின் வழி மாறும் பருவ காலங்களை பழந்தமிழர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் தம் வாழ்வியலில் அவர்கள் மேற்கொண்ட  பருவ காலங்களுக்கான  திட்டமிடல்கள் குறித்த பதிவுகளையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

வாழ்வின்  முதற்பொருள்
         
       மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் நிலமும் பொழுதும் முதன்மையாக வரையறுக்கப்பட்டுள்ளது.  நிலங்கள் ஐந்து வகையாகவும் மாறி வரும்  காலங்கள் ஆறு வகையாகவும் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர் நிலப்பிரிவுகளான  முல்லைகுறிஞ்சிமருதம்நெய்தல்,  பாலை  இவற்றுக்கு உரிய பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பதிவுசெய்கின்றது.  குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும்; முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; முன்பனிக் காலமும்; மருதத்துக்கு எல்லாப் பருவகாலங்களும், நெய்தலுக்கு முன்பனிக் காலமும்;   பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில் ஆகிய காலங்களும் உரியவை. அனைத்து நிலங்களிலும் அனைத்து பருவங்களும் மாறி மாறி வரும் என்றாலும் ஒரு நிலத்துக்கு  சிறப்புக்குரிய காலமாக இப்பருவ காலங்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய பருவ காலங்களே ஓர் ஆண்டின் ஆறு பெரும்பொழுதுகளாக  வரையறுக்கப்பட்டுள்ளன.

தமிழர்வகுத்த பருவங்கள்
        நாள்காட்டிகள் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் இவை பயன்பாட்டில் இல்லாத பழங்காலத்தில் மாறும் பருவ நிலைகளை மிக நுட்பமாகக் கண்காணித்து பருவகாலங்களை ஆறு வகையாகப் பழந்தமிழர் வகுத்திருந்தனர்.

பெரும்பொழுதுகள்
கார்காலம் (ஆவணி – புரட்டாசி)

கூதிர்காலம் (ஐப்பசி – கார்த்திகை)

முன்பனிக்காலம் (மார்கழி – தை)

பின்பனிக்காலம் (மாசி – பங்குனி)

இளவேனிற்காலம் (சித்திரை – வைகாசி)

முதுவேனிற்காலம் (ஆனி – ஆடி)
         
மேலும் ஒரு நாளின் பொழுதுகளை சிறுபொழுதுகள் என வரையறுத்து ஆறு வகையாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன.,

வைகறை (அதிகாலை நேரம்)

விடியல்

நண்பகல்

மாலை

எற்பாடு  (சூரியன் மறையும் நேரம்)

யாமம் (நள்ளிரவு)

      சங்க இலக்கியங்களில் இப்பருவ காலங்களைப் பதிவு செய்யும் சொற்களாக அற்சிரம், முன்பனி, பின்பனி, இளவேனில், குழவி வேனில், செவ்வி வேனில், கோடை, கார், கூதிர் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இக்காலங்களை தமிழர்கள் எவ்வாறு மேலாண்மை செய்தனர் இப்பருவ காலத்திற்கு ஏற்றாறு எங்ஙனம் தங்களது வாழ்வியலை வகுத்துக்கொண்டனர் என்பதை சங்க இலக்கியப்பதிவுகள் சில  எடுத்துக்காட்டுகின்றன. தற்காலத்தில் பருவகாலங்களை எதிர்கொள்தல் மிகவும் சவாலானதாக உள்ள சூழலில் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் நோக்கத்தக்கனவாக உள்ளன.

கார்கால மேலாண்மை       
     கார்காலம் என்பது தொடர்ச்சியாக மழை தரும்  பருவமழைக் காலத்தைக் குறிக்கும். மழைக்காலத்தில் பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள்  பெரும் சவாலாக உள்ள இக்காலத்தில் பழந்தமிழகத்தின் மழைக்காலம் குறித்த பதிவுகள் சிந்திக்கத் தக்கனவாக உள்ளன.  பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்திப் பாடும் வழக்கத்தை சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது.
”வானம்  பொழுதொடு சுரப்ப ” (நற்.89)
       பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்தி நற்றிணை இலக்கியம்  எடுத்துக்காட்டுகிறது. நல்லாட்சி நடைபெறும் நாட்டில் வானம் பருவம் தவறாது தேவைப்படும் காலத்தில் மழை பெய்யும் என்ற சிந்தனை புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் சங்க இலக்கியங்களில் கார் காலம் குறித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கனவாகக் கீழ்க்கண்ட தொடர்களைக் குறிப்பிட முடிகின்றது. 

கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து…(புறம்.120-2)
வேனில் நீங்கக் கார் மழை தலைஇய (ஐங்குறுநூறு 484-1)
         
       இவ்விரு தொடர்களும் பருவகாலத்து மழையைக் குறித்து வழங்குகின்றன. வேனில் காலம் முடிந்து கார்காலத்தில் பொழியும் மழையை உழவர்கள் வேளாண்மைக்குப் பயன்படுத்தியமையை புறநானூற்றுத் தொடர் குறிப்பிடுகிறது. அவ்வகையில் கார் கால மழையின் காரணமாக காடு செழிப்புற்றதை ஐங்குறுநூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது. மேலும் மழை சாரந்த சொற்களாக துவலை,  ஆர்பெயல் உள்ளிட்டவை இங்கு குறிப்பிடத்தக்கன. துவலை என்பது சிறு தூறலையும்  ஆர்பெயல் என்பது மிகுதியான மழையையும் குறித்து வழங்குகின்றது. மழைக்காலம்   என்பது  பசுமையின் அடையாளமாகவும் நல்லாட்சியின் பலனாகவும் வேளாண்மைக்கு வித்தாகவும் தலைவன் தலைவியன் அன்புக்குரிய காலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.

குளிர்கால  மேலாண்மை       
       சங்க இலக்கியங்களுள் நெடுநல்வாடை குளிர்கால வருணனை மிகுதியாக இடம்பெறும்  நூலாக விளங்குகின்றது. காடுகள், வேளாண்மை நிலங்கள்  போன்றவை எல்லாம் கட்டிடங்கள் மலிந்த வாழிடங்களாக மாறிவிட்ட இக்காலத்திலும்  பனிக்காலம்  உயிர்களை வாட்டும் நிலை உள்ளது. இந்நிலையில் இயற்கை சூழ்ந்த பழங்காலத்தில் பனிக்காலம் எத்தயைதாக இருந்திருக்கும் என்பதை நெடுநல்வாடை இலக்கியம் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. 

”மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள் ” (நெடு.9-12)
       குன்றும் குளிரும் அளவிற்கான பனிக்காலத்தில் மாடுகள் மேய்ச்சலை மறந்து பறவைகள் மந்திகள், கறவை மாடுகள்  உள்ளிட்ட உயிரினங்கள் குளிரால் நடுங்கித் துன்புற்றதை இவ்வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. கடும் குளிர் இனநிரைகளை மேய்க்கும் கோவலர்கள் நடுங்கும் அளவிற்கு இருந்ததையும் அவர்கள் அதனை நெருப்பால் சமாளித்ததையும் கீழ்க்காணும் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.

”மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையு நடுங்க..”(நெடு.7,8)
          ஆடு, மாடு போன்ற இனநிரைகளை மேய்க்கின்ற கோவலர்கள் பனிக்காலத்தில்  கைகளில் நெருப்புக்குச்சிகளைக் கொண்டு பனியை சமாளித்த தன்மையை அறியமுடிகின்றது.

“வேனிற்பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப்பள்ளி குறுங்கண் அடைத்து “ (சிலம்பு 4 – 60,61)
         
         என்ற தொடர்களில் கூதிர்ப்பள்ளி குறித்த செய்தி இடம்பெறுகிறது. வேனிற்பள்ளி என்பது வெயில் காலங்களில் பயன்படுத்தப்படும் படுக்கை அறையாகவும் கூதிர்ப்பள்ளி என்பது குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் அறையாகவும் இருந்துள்ளது. “இப்பள்ளிகள் மாட அடுக்குகளிலோ அன்றி வீட்டின் பக்கப்பரப்புக் கூட்டுகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும்” (முனைவர் கோ. தெய்வநாயகம் – தமிழர் கட்டிடக்கலை-ப.50) வெயில்காலம், மழைக்காலம் ஆகிய பருவகாலங்களுக்கு ஏற்ற வகையில் வீட்டின் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை இதன்வழி அறியமுடிகிறது.  இது அக்காலத்தழிழர் தம் சூழலியல் அறிவையும் பருவ கால மேலாண்மையையும் எடுத்துக்காட்டுகிறது.மனையுறை புறாக்கள் தங்கும் மதலைப்பள்ளி (நெடு.50) என்ற குறிப்பும் அக்கால மனிதனின் சூழல் பாதுகாப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது. மேலும் சங்க இலக்கியங்களில் குளிர்காலத்தை எடுத்துக்காட்டும்  தொடர்களாக கீழ்க்காணும் தொடர்களை அறியமுடிகின்றது.

பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம்  (நற்.86-4)
வாடை தூக்கும் வருபனி அற்சிரம் (அகம்.78-10)
கூதிர் அற்சிரத்து ஊதை (அகம். 183-13)
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை(நற்.89-7)
  மேற்குறிப்பிடப்பட்டுள்ள சங்கஇலக்கியத் தொடர்கள்  பனிக்காலத்தின் கடுமையை நயமாக எடுத்துக்காட்டுகின்றன.  பனிக்காலம் முன்பனி, பின்பனி என இரண்டு பகுதிகளாக அமைந்ததை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப்பானாள் – (அகம் 163-8)
       மேற்குறிப்பிட்ட தொடரில் சிறு சிறு துளிகளாக பனித்துளி சிதறும் கடுமையான குளிர்காலத்தில் தாமரை மலரும் கரிந்து போகும் அளவிற்கு பனியின் கொடுமை இருந்ததை புலவர் எடுத்துக்காட்டுகின்றார். குளிர்காலங்களில் வெண்ணீர் எடுக்கும் பழக்கம் இருந்தமையைக் குறுந்தொகை்ப பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயரோ (குறுந்.277)
என்ற தொடர் பாத்திரத்தில் வெண்ணீர் சேமித்து அருந்தும் வழக்கம் பழந்தமிழரிடத்து இருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது.

வேனிற்கால  மேலாண்மை
      வேனிற்காலம் என்பது இளவேனில் முதுவேனில் என இரண்டு பிரிவுகளாக மிதமான வெப்பகாலம் (மார்ச், ஏப்ரல்) மற்றும் கடும் வெயில் காலத்தைக் (மே) குறிக்கிறது. தமிழ் மாதங்களில் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்கள் இப்பருவ காலத்திற்கு உரியவை.  வெயில்காலத்தோடு தொடர்புடைய சொற்களாக வெம்மை, உருப்பம், வெயில், தெறல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொற்கள் முறையே

முளி முதல் மூழ்கிய வெம்மை(கலித்தொகை 16-15)
ஒண்கதிர் உருப்பம் …(அகநானூறு – 181-8)
வெயில் வீற்றிருந்த சுரம் …(நற்றிணை 84-9)
செஞ்ஞாயிற்றுத் தெறல் …(புறநானூறு 20-8)
குழவி வேனில் விழவு (கலி.35-9)
         
      ஆகிய தொடர்களில் பயின்று வந்துள்ளன. கடுமையான வெப்ப காலத்தை எதிர்கொள்ளும் வழக்கம் பழங்காலத்திலிருந்தமையை இச்சொற்கள் எடுத்துக்காட்டுகின்றன. வெப்பத்தை அளிக்கும் கதிரவனைக் குறிக்கும் சொற்களாக ஞாயிறு, எல், கதிர், கதிரோன் கனலி, சுடர், செங்கதிர்ச்செல்வன், செஞ்ஞாயிறு, திகரி, பகல், பகலோன், பரிதி, அலரி, சுடர் ஆகியவை சங்க இலக்கியங்களில் வழங்குகின்றன.

வாழிடங்கள்
      பழங்கால மக்களின் கட்டடக்கலைத்திறன்களுள் வாழிடங்கள் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை.  இலக்கியங்களில் இல்லம், இல், குரம்பை, குடில், சிற்றில், கோவில், பள்ளி,மனை ஆகிய சொற்கள் வாழிடங்கள் தொடர்பானவையாக அமைகின்றன. வீட்டின் பகுதிகளாக சுவர், விட்டம், கூரை, தூண், கம்பம், கால், மதலை, சாலகம், அட்டில், திண்ணை ,கடை, வாயில், இடைகழி, மாடம், அரமியம், முற்றம் ஆகிய சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்குகின்றன. வெயில்காலம் மழைக்காலம் உள்ளிட்ட பருவ காலங்களை எதிர்கொள்ளும் வகையில் வீட்டின் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. சான்றாக,

சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல் (மதுரைக். -358)
வேனிற்பள்ளி தென்வளி தரும் ..(நெடுநல்.61)
         
 ஆகிய தொடர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. வெயில்காலங்களில் வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் காற்று வருவதற்காக சன்னல்கள் மட்டுமின்றி வேனிற்கால படுக்கை அறைப்பகுதி வீடுகளில் அமைக்கப்பட்டிருந்தன என்பதை

“வேனிற்பள்ளி தென்வளி தரூஉம் ..” – நெடு.57
என்ற தொடர் எடுத்துக்காட்டுகிறது.

வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற்பள்ளியேறி – சிலம்பு 8- 17,18)       
     என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் வேனிற்பள்ளி பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.

நீர்நிலை மேலாண்மை
     பழந்தமிழர் வாழ்வியலில் நீர்ப்பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. குளம்,அகழ், அசும்பு, அயம், இலஞ்சி, ஏரி, கயம், குட்டம், குண்டு, கேணி, சுனை, குழி, தடம், தடாகம், படு, பழனம், பொய்கை, வாவி, புதவு, மடை, கிணறு, கூவல், கேணி, படு, பத்தல் ஆகிய சொற்கள் பல்வேறு  நீர்நிலைகள் குறித்து வழங்குகின்றன. இவை அக்காலத்து மக்களின் நீர்ப்பாதுகாப்பு மற்றும்  பயன்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேனிற்காலங்களில் நீர் வற்றிய நீர்நிலைகள் வெப்பத்தை எதிர்கொள்ளும் விலங்குகள் முதலான உயிரினங்களின் நிலைகள் யாவும் சங்க இலக்கியங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழந்தமிழகத்திலும் வேனிற்கால சவால்கள் இருந்தமை இதன்வழி புலனாகிறது.

வேனிற் காலத்திற்கு ஏற்ற உணவு முறைகள்
     பருவ கால மேலாண்மையில் பழந்தமிழரின் உணவுமுறைகள் குறிப்பிடத்தக்கன. உணவு முறைகளைச் சுட்டும் சொற்களாக அடிசில், அயினி, அவிழ்,கூழ், கொண்டி, சொன்றி , நாட்சோறு,பதம்,வல்சி,  புற்கை, மிதவை, கூழ், புளிங்கூழ், புளி மிதவை, கஞ்சி ஆகியவை பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கோடை காலத்தில் நெல்லிக்காய் பயன்பாடு இருந்தமையைக் கீழ்க்காணும் தொடர் எடுத்துக்காட்டுகின்றது.

”கோடை உதிர்த்த…. பசுங்காய்(அகம்.315-11)
      நுங்கின் சாறு, தெங்கின் நீர், கரும்பின் சாறு(தாழை நீர்)  பலாவின் தேறல், கனியுள் சாறு ஆகிய நீர் ஆகாரங்கள் பழந்தமிழர் உணவு வழக்கத்தில் இருந்தமையை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தொகுப்புரை       
       பழந்தமிழர் கார்காலம், கோடை காலம், பனிக்காலம் ஆகிய பருவ காலங்களை எதிர்கொள்ளும் வகையில் தமது வாழ்வியல் முறைகளை வகுத்துக்கொண்டனர் என்பது சங்க இலக்கியங்கள் வழி புலனாகிறது. வாழிடங்கள் பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை புலனாகிறது. உணவுமுறைகள் பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் பின்பற்றப்பட்டதை அறியமுடிகிறது. பருவ காலங்களில் உயிர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் ஆகியவை சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

பார்வை நூல்கள் 
1.முனைவர் கோ. தெய்வநாயகம் – தமிழர் கட்டிடக்கலை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை -2002

2.சங்க இலக்கியச் சொல்வளம் – பா.ரா.சுப்பிரமணியன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை,2025

3.இலக்கியமும் சூழலியலும் – முனைவர் யாழ் சு. சந்திரா –மீனாட்சி புத்தக நிலையம் – 2015

4.பத்துப்பாட்டு மூலமும் உரையும் – ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ.)  – மெய்யப்பன் பதிப்பகம்-2003
5.தமிழ் இணையக் கல்விக்கழகம் 

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.சித்ரா
உதவிப்பேராசிரியர் (தமிழ்)
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
இராமாபுரம், சென்னை.

 

Socio-Cultural Depictions in the Novels Amma Vandhal and Vamsavriksham|B.Lakshmi

Abstract
         
        The two novels, Amma Vandhal and Vamsavriksham, intricately portray various social facets such as family structure, traditions, religious beliefs, the status of women, and generational shifts. In Amma Vandhal, the moral codes governing the traditional family unit, the role of the mother, and societal norms are prominently depicted. This novel clearly illustrates the constraints placed upon women’s lives as well as societal expectations regarding them. Vamsavriksham offers a profound chronicle of family traditions and the evolution of mindsets across generations. The conflicts arising between conservatism and modern thought constitute a central theme in this novel. Both novels clearly reflect the socio-cultural fabric of their respective contexts. These two works stand as significant literary texts that demonstrate how a society’s traditional values ​​interact with and undergo changes necessitated by the passage of time.
 

“அம்மா வந்தாள், வம்சவிருட்சம் நாவல்களில் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகள்”

ஆய்வுச்சுருக்கம்
         
         அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் குடும்ப அமைப்பு, மரபுகள், மத நம்பிக்கைகள், பெண்களின் நிலை, மற்றும் தலைமுறை மாற்றங்கள் போன்ற பல்வேறு சமூக கூறுகளை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன. அம்மா வந்தாள் நாவலில், பாரம்பரிய குடும்ப அமைப்பில் உள்ள ஒழுக்க விதிகள், தாயின் பங்கு, மற்றும் சமுதாயத்தின் நெறிமுறைகள் முக்கியமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இதில், பெண்களின் வாழ்க்கை கட்டுப்பாடுகள் மற்றும் சமூக எதிர்ப்பார்ப்புகள் தெளிவாகக் காட்டப்படுகின்றன. வம்சவிருட்சம் நாவல், குடும்ப மரபு மற்றும் தலைமுறைகளின் சிந்தனை மாற்றங்களை ஆழமாக பதிவு செய்கிறது. பழமைவாதமும் நவீன சிந்தனையும் இடையே உருவாகும் முரண்பாடுகள், இந்த நாவலில் முக்கிய கருப்பொருளாக உள்ளது. நாவல்களில் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. இவ்விரு நாவல்களும்  சமூகத்தின் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் காட்டும் முக்கியமான இலக்கியங்களாக விளங்குகின்றன.

முன்னுரை
         
        நாவல்கள் சமூக வாழ்க்கையை ஆழமாகப் பதிவு செய்யும் தன்மை கொண்டவை. குடும்ப அமைப்பு, பெண்களின் நிலை, மரபு மற்றும் நவீன மாற்றங்கள் போன்றவை நாவல்களில் விரிவாக சித்தரிக்கப்படுகின்றன. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் எஸ்.  எல். பைரப்பாவின் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் அக்கால சமூக வாழ்க்கையையும் பண்பாட்டுச் செய்திகளையும் பதிவு செய்கின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில் நாவல்களில் இடம்பெறும் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகளை ஆய்வு செய்து அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

சமுதாயவியல் திறனாய்வு
         
      இலக்கியங்கள் பெரும்பாலும் சமுதாயத்தை மையமிட்டும் சமுதாயக் காரணிகளை தன்னகத்தே கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் இலக்கியத்தின் வளர்நிலைக்கும் வீழ்ச்சிக்கும்  சமுதாயச் செயல்பாடுகள் முக்கியப்  பங்காற்றுகின்றன. எனவே, இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவை எதார்த்தவாத அழகியலை கொண்டுள்ள  படைப்புகள் பதிவுசெய்கின்றன. அவற்றிற்கிடையே அமைந்துள்ள உறவினைப் பற்றி ஆராய   சமுதாயவியல் திறனாய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. சமுதாயவியல் திறனாய்வில் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக அறிஞர்கள் பலர் கருத்துரைத்துள்ளனர். சான்றாக தே பெர்னால்ட் என்னும் பிரான்சு நாட்டு அறிஞர் இலக்கியம் என்பது சமுதாயத்தின் புலப்பாடு என்று கூறுகிறார். இவ்வாறன வரையறைகளின் வழி இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவு புலனாகிறது.

தமிழில் சமுதாயவியல் திறனாய்வு முயற்சிகள்
         
     இலக்கியத்தை சமுதாய விழுமியங்களின் அடிப்படையில் அணுகுவதென்பது தமிழில் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் ஒரு வழிமுறையாகும். அறிஞர்கள் பலர் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவில் பங்காற்றியுள்ளனர். சமுதாயவியல் திறனாய்வு, மார்க்சிய திறனாய்வு என்று இலக்கியம் குறித்த சமுதாய நோக்கு இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் தலித்தியம், பெண்ணியம், பின் காலணியம் முதலிய திறனாய்வு முறைகளும் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவினை ஆராய்வதாகவே அமைந்துள்ளன. இவ்வாறு இலக்கியம், சமுதாயம் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவினை ஆராய்ந்த அறிஞர்களாக க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோவை ஞானி, தமிழவன், அ.மார்க்ஸ் போன்ற அறிஞர்களைக் குறிப்பிடலாம். 

அம்மா வந்தாள் மற்றும் வம்ச விருட்சம் சமுதாயப் பதிவுகள் 
         
       வம்ச விருட்சம் நாவலில் இடம்பெறும் சீனிவாசன் என்ற கதைமாந்தரும் அம்மா வந்தாள் நாவலில் இடம்பெறும் அப்பு என்ற கதைமாந்தரும் வேதம் கற்றவர்களாக காட்டப்படுகின்றனர்.  வேதம் கற்றல் என்பது பாரம்பரியமாக பிராமணச் சமூகத்திற்கே உரிய கல்வி உரிமையாக கருதப்பட்டதால், இவ்விரு குடும்பங்களும் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவை என்று உய்த்துணர முடிகிறது. மேலும் அப்புவின் தந்தையும் சீனியின் தாத்தாவும் வேதக் கல்வியை பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களாக இருப்பது பிராமணச் சமூகத்தின் கல்வி மரபை பதிவு செய்வதாக உள்ளன. 

சமுதாயச் சிக்கல்
         
      சமுதாயத்தால் தனிமனிதன் எவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகிறான் என்பதை இந்த இரண்டு நாவல்களும் விளக்குகின்றன. எடுத்துக்காட்டாக அலங்காரத்தம்மாள், இந்து ஆகிய பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக தடைகள் எழுவதை அம்மா வந்தாள் நாவல் பதிவு செய்கிறது. அவ்வாறே நஞ்சுண்ட பண்டிதர் குழந்தைபேறு இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த ஒரு கூத்து கலைஞர் ஷாமதாசர் என்பவர் வாயிலாக தம் மனைவி அச்சம்மாவை கருவுற செய்து நஞ்சுண்ட பண்டிதர் குழந்தைபேறு அடைவதாக வம்சவிருட்சம் நாவலில் கூறப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாலியல் ஒழுகலாறுகளில் சமூகத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைவதும் அவற்றின் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவதும் புலனாகிறது.
  இவ்விரு நாவல்கள் சமூகத்தில் நிலவிய கட்டுப்பாடுகள் ஒழுக்க விதிகள் மற்றும் அவற்றால் மனித உணர்ச்சிகள் எவ்வாறு சிதைவடைகின்றன என்பதைக் காட்டுகின்றன. குடும்பம் மற்றும் மனித உறவுகளுக்கு இடையே உருவாகும் உணர்ச்சிகள் இவ்விரு நாவல்களிலும் இயல்பாகவே வெளிப்படுகின்றன. 

பெண்களின் சிக்கல் 
         
         காத்தியாயினி இந்து ஆகிய இரு பெண் கதை மாந்தர்களும் சமூக ரீதியாக ஒத்த தன்மையை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருவருமே கணவனை இழந்த பெண்கள். ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், பெண்களின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இரட்டை நிலை இங்கு வெளிப்படுகிறது. இவ்விரு பெண்களும் சமூக கட்டுப்பாடுகளை எதிர்த்து தங்களின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இவை அக்கால சமூகத்தில் பெண்களின் நிலையை உணர்த்தும் முக்கியமான சமூகப் பதிவுகளாக அமைகின்றன. 

குடும்பச் சிக்கல்கள் 
         
         சதாசிவராயரும் அலங்காரத்தம்மாளும் மரபார்ந்த குடும்ப அமைப்பினைக் கொண்டிருந்த போதும்  சமூக ஒழுக்க விதிகளுக்கு எதிரான உறவுகளில் ஈடுபடுகின்றனர். சதாசிவராயர் தன் மனைவி நாகலட்சுமியுடனும் மகனுடனும் வாழ்ந்த போதிலும், தன் வரலாற்று நூல் தொகுப்பில் துணையாக இருந்த கருணாவை மறுமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இத்திருமணம் செய்து கொண்ட போது இரு மனைவிகளுக்கு எதிரான சட்டம் இந்தியாவில் இல்லை. ஆனால், அவர் அவளுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை. மறுபுறம் அலங்காரத்தம்மாள் சிவசுவுடன் தொடர்பு கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்றிருந்தாலும், திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்விரு நிகழ்வுகளும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய செயல்களாக காட்டப்பட்டு  சமூகத்தில் நிலவிய ஒழுக்க கோட்பாடுகளில் நடைமுறையில் நிலவும்  முரண்பாடுகளின் நிலையை பதிவு செய்கின்றன.

முதுமைச் சிக்கல்
         
        தி. ஜானகிராமன் முதியவர்களின் மனநிலையை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்கிறார். அம்மா வந்தாள் நாவலில் வயதான தாயின் தனிமை, அன்புக்கான ஏக்கம், குடும்பத்தில் புரிதல் இல்லாமை போன்ற பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. வம்சவிருட்சம் நாவலில் முதியவர்கள் பழைய மரபுகளைப் பிடித்துக் கொள்வதும், இளம் தலைமுறையினருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் போன்றவை சிக்கல்களாகக் காட்டப்படுகின்றது. ஆகவே, இவ்விரு நாவல்களிலும் முதுமை என்பது உடல் பலவீனம் மட்டுமல்ல, மன வேதனை மற்றும் குடும்ப மோதல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன.

சமுதாயத் தீர்வுகள்
         
      படைப்புகளில் முன்வைக்கப்பட்டுள்ள சமுதாயச் சிக்கல்களுக்கு நாவலாசிரியர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்வுகளை முன்வைத்திருக்கலாம் அல்லது தீர்வுகளை வாசகர்கள் ஊகிக்கும்படி ஆசிரியர் இடம் ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். இத்தகைய தீர்வுகளை சமுதாயத் தீர்வுகள் என்று அழைப்பது மரபு. அம்மா வந்தாள், வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களிலும் சமுதாயத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரு நாவல்களிலுமே பெண்கள் மீது குடும்பம் என்னும் நிறுவனம் வைக்கும் அழுத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காத்தியாயினி, அலங்காரத்தம்மாள் ஆகிய இருவருமே தங்களின்  பாலியல் விருப்பத்திற்கு எதிராக குடும்பத்தினரால் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அலங்காரத்தம்மாளின் மனநிலையை மகன் அப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவள் காசிக்கு சென்று தனிமையில் தன் வாழ்வை நிறைவு செய்வதாக தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே காத்தியாயினி, ராஜா என்பவர் மீது கொண்ட காதலை அவளுடைய குடும்பம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ராஜாவுடன் வாழ்க்கையைத் தொடர நினைத்து அதேசமயம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் உள்ளகிறாள். இறுதியில் காத்தியாயினியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடும்பம் என்னும் நிறுவனம் நாம் நினைப்பதுபோன்று உறுதியான குருதி தொடர்பால் அமைவது அல்ல என்ற உண்மையை உணர்கின்றனர். இவ்வாறு செயற்கையான போலி கவுரவத்திற்கு குடும்ப வாழ்வில் இடமில்லை என்பதை ஒரு தீர்வாக எஸ்.எல். பைரப்பா வம்சவிருட்சம் நாவலில் முன்வைத்துள்ளார். 
         
      அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் சமூகக் கட்டுப்பாடுகள் மனிதர்களின் உணர்ச்சிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.  பெண்களின் மறுமணத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளாமல், ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் இரட்டை நிலை வெளிப்படுகிறது. இதற்கு தீர்வாக ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் சமூகத்தில் வளர வேண்டும். விதவைப் பெண்களின் மறுமணத்தை தவறாக பார்க்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குடும்பத்தினரும் சமூகமும் பெண்களின் தனிப்பட்ட முடிவுகளை ஆதரிக்க வேண்டும்.
       
       மேலும், ஒழுக்க விதிகள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் கருவியாக அல்லாமல், பெண்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். திருமணம், மறுமணம் போன்ற விஷயங்களில் சட்டம் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்று, வேலை செய்து பொருளாதா ரீதியில் முன்னேறினால், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும். ஆகவே சமத்துவம், கல்வி, சட்ட விழிப்புணர்வு மற்றும் குடும்ப ஆதரவு ஆகியவை இணைந்தால் சமூகச் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அம்மா வந்தாள், மற்றும் வம்சவிருட்சம் நாவல்களில் வெளிப்படும் பண்பாட்டுப் பதிவுகள்
         
       பண்பாடு என்ற சொல் மனிதர்களோடு மட்டுமே தொடர்புடையது.  மனிதனைப் பிற உயிரினங்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது. மனிதன் மட்டுமே பண்பாட்டை கொண்ட விலங்காவான் என்பர். பரிணாம வரிசையில் மனிதனுக்கு கீழுள்ள வாலில்லாக்  குரங்கினங்கள், தேனீக்கள், எறும்புகள், ஆகியவற்றின் வாழ்க்கையில் நெறிப்படுத்தப்பட்ட நடத்தைகள் காணப்படுவதால் பண்பாடு என்ற சொல் மனிதனுக்கு மட்டுமே உரியது என்று கூறுவது பொருத்தமுடையதாக தோன்றவில்லை என்றும் கூறுவர். பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையைக் குறிக்கும் முக்கியமானக் கருத்தாகும். அது மனிதன் கற்றுக்கொள்ளும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அறிவு, கலை, சட்டம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே, பண்பாடு மனித வாழ்வின் முழுமையான வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
         
         பண்பாடு பிறப்பால் கிடைப்பதல்ல அது சமூகத்தில் வாழும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்படுவது. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மொழி, சடங்கு, பழக்கவழக்கங்கள் மூலம் பரிமாறப்படுகிறது. மேலும், பண்பாடு நிலையானதல்ல, அது காலத்தின்படி மாறிக்கொண்டே இருக்கும். புதிய சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றங்கள் பண்பாட்டை மாற்றுகின்றன. அதே நேரத்தில், பாரம்பரிய அம்சங்களும் தொடர்கின்றன. எனவே பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் அதன் வளர்ச்சியையும் மாற்றத்தையும் புரிந்துகொள்ள உதவும் முக்கிய கூறாகவும் அமைகின்றது.

பண்பாடும் இலக்கியமும்         
       இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக கிராம வாழ்க்கையைச் சித்தரிக்கும் படைப்புகளில், அங்குள்ள மக்களின் வாழ்வியல் முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை நுட்பமாகப் பதிவு செய்யப்படுகின்றன. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகள், அவர்களின் உணர்வுகள், சமூக உறவுகள் ஆகியவை பண்பாட்டின் பிரதிபலிப்பாக அமைகின்றன. மேலும், மொழி பயன்பாடு, சொற்றொடர்கள், பழமொழிகள் போன்றவை ஒரு சமூகத்தின் அடையாளமாக விளங்குகின்றன. அவை அந்தச் சமூகத்தின் சிந்தனை முறையையும் வாழ்க்கை அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் இலக்கியங்களில் இயல்பாக கலந்து வரும் போது, அது வாசகர்களுக்கு அந்தச் சமூகத்தை நேரடியாக அனுபவிக்கும் உணர்வை வழங்குகின்றது. எனவே, இலக்கியப் படைப்புகள்  சமூகத்தின் பண்பாட்டு பதிவுகளாகவும் செயல்படுகின்றன என்பதைக் காணலாம்.

பண்பாட்டுப் பதிவுகள் 
         
        வம்ச விருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் பிராமண சமூகத்தின் வாழ்வியல் ஒழுகலாறுகள், பண்பாட்டு ஒழுகலாறுகள்,  குடும்ப அமைப்பு மற்றும் சமுதாய முரண்பாடு ஆகியவற்றை இயல்பாக பதிவு செய்துள்ளன.

வேதக்கல்வி 
         
      வம்சவிருட்சம் நாவலில் சீனிவாச பண்டிதர் வேதக் கல்வியில் சிறந்தவராக காட்டப்படுகிறார்.  தன் அடுத்த தலைமுறைகளிலும் வேதக் கல்வி தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தம்முடைய பேரனுக்கும் கல்வியை கற்பிக்கிறார். வேத மரபும், குடும்ப மரபு தொடர்ச்சியும் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பிராமண சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. பெண்கள் குடும்பத்திற்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வாழ வேண்டியவளாக வம்சவிருட்சம் நாவலில் காட்டப்படுகிறனர். காத்தியாயினி கணவனை இழந்த பிறகு சமூக விதிகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறாள். கணவனை இழந்த பெண் என்ற காரணத்தால் அவளது உடை, நடத்தை, ஆசைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அம்மா வந்தாள் நாவலில் கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கையை நேரடியாக காட்டப்படவில்லை. வம்ச விருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் ஒரே விதமான பிராமண சமூகப் பின்னணியை கொண்டிருந்தாலும் பண்பாட்டை பதிவு செய்யும் முறையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன. வம்ச விருட்சம் நாவலில் தாய்மை, குழந்தை பேறு, வம்சத் தொடர்ச்சி, மரணம் ஆகிய யாவும் சடங்குகளுடன் இயைந்தும் மரபை மையமிட்ட ஒன்றாக காட்டப்படுகின்றன. மகனை காக்க தாய் விரதம் இருப்பது, நாக பிரதிஷ்டை போன்ற சடங்குகள் மேற்கொள்வது, வம்ச வளர்ச்சிக்காக சமூக ஒழுக்கங்கள் கடைபிடிக்கப்படுவது, சிரார்த்தங்கள் விதிமுறைப்படி நடத்தப்படுவது போன்றவை அந்த கால பிராமண சமூகத்தின் பண்பாட்டு வாழ்க்கையை தெளிவாக  பதிவு செய்கின்றது. இதற்கு மாறாக அம்மா வந்தாள் நாவலில் இத்தகைய சடங்கு சார்ந்த பண்பாடுகள் பெரிதும் இடம்பெறுவதில்லை.
           அம்மா வந்தாள் நாவலில் தாய்மை, சடங்குகளால் அல்ல வாழ்க்கை சுமை, பொறுப்பு மற்றும் தியாகம் மூலமாக வெளிப்படுகிறது. குழந்தை பேறு அல்லது வம்ச தொடர்ச்சி போன்ற கருத்துக்கள் சடங்குகளாக அல்லாமல் குடும்ப அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சமூக நிகழ்வாக மட்டுமே வெளிப்படுகிறது. இவ்வாறு வம்சவிருட்சம் நாவல் மரபு மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு பண்பாட்டைப் பதிவு செய்கிறது என்றால், அம்மா வந்தாள் நாவல் சடங்குகளில் இருந்து மாறுபட்டு நடைமுறை வாழ்க்கை சார்ந்த ஒன்றாக பண்பாட்டை எதிர்கொள்கிறது. அம்மா வந்தாள் நாவலில் இடம்பெற்றுள்ள அலங்காரத்தம்மாள் மற்றும் சிவசு ஆகியோருக்கு இடையே அமைந்துள்ள உறவினை இதற்குச் சான்றாகக் கூறலாம். அவ்வாறே அப்பு, இந்து ஆகியோரின் உறவையும் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்வைக்க முடியும். இதன்மூலம் காலப்போக்கில் பிராமணச் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களும் மதிப்பீடுகளின் மாறுபாடுகளும் தெளிவாக உணர்த்தப்படுகின்றன. வம்சவிருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் ஒப்பிடப்பட்ட நிலையில் பண்பாட்டு நோக்கில் எஸ். எல். வைரப்பாவின் வம்சவிருட்சம் நாவலை விட தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் நடைமுறை சார்ந்த நோக்கை அதிகம் வற்புறுத்துகின்றது.

முடிவுரை 
         
        தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் எஸ். எல். பைரப்பாவின் வம்ச விருட்சம் ஆகிய இவ்விரு நாவல்களும் சமூகக் கட்டுப்பாடுகள், மனித உணர்ச்சிகள் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்களின் நிலை, குடும்ப அமைப்பு,  மரபு மற்றும் நவீன மாற்றங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது வம்சவிருட்சம் மரபு சார்ந்த பண்பாட்டை வலியுறுத்த அம்மா வந்தாள் நடைமுறை வாழ்க்கை சார்ந்த அணுகுமுறையை அதிகமாக முன்னிறுத்துகிறது. எனவே இவ்விரு நாவல்களும் சமூக மாற்றங்களையும் மனித உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள துணைபுரியும்  முக்கியமான இலக்கிய பனுவல்களாக விளங்குகின்றன.

பார்வை நூல்கள்
1.இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், முனைவர்க.பஞ்சாங்கம், அன்னம் பதிப்பகம்.

2.பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி, மெய்யப்பன் பதிப்பகம்.

3.சமூகவியலும் இலக்கியமும், க.கைலாசபதி, காலச்சுவடு பதிப்பகம்.

4.அம்மா வந்தாள், தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், 2014.

5.வம்சவிருட்சம், எஸ்.எல்.பைரப்பா, தமிழில் – கே.நல்லதம்பி, 2024.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பை.லட்சுமி,
Iniyavaikatral peer reviewedமுனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம்,  ஆந்திரா – 517426.
நெறியாளர்
முனைவர்.கு.பத்மநாபன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம்,  ஆந்திரா – 517426.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »