முனைவர் சு.சோமசுந்தரியின் ‘சில்லாட்டை’ சிறுகதை நூல் ஒரு பருந்துப்பார்வை
தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.
தெளிவான சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனுபவ வெளிப்பாடுகளை சிறப்புற சிறுகதைகளாக்கித் தருவதில் வல்லமையுள்ளவராகத் தெரிகிறார். அலுவலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட சங்கடங்களை அத்துமீறல் கதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் எனக்குப் பிடித்தது பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இருப்பது. கார்குழலி உதாரணம். அதே போல ஒரு சராசரி அப்பாவின் மனநிலை, அவரின் இழப்பு, அவர் சார்ந்து குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றிச் சொல்லிச் செல்கிறது அப்பா கதை. மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமானது.. ஒரு தாய்க்கு கொள்ளி போடாத மகன்.. மருமகனையே கொள்ளிப் போடச்சொல்லும்உறவுகள்…யதார்த்தமானகதை.
நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் அனுபவங்களின் தொகுப்பாகவும் இவரின் கதைகள் அமைந்துள்ளன. ஈரமற்ற மனித மனங்களைக் காணும்போது தனக்குள் துடிக்கவும், ஏக்கமுறவும் ஒருத்தி…தாகத்துக்கு தண்ணீர் தராமல் நின்ற மக்களின் நடுவே இறந்துபோன உயிரைப் பற்றிப் பேசும் கதையாய் ஈரம் கதை எழுதப்பட்டிருக்கிறது. உடைந்து போன கலசங்கள் நல்ல கதை. வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரது வாழ்வுநிலை பற்றிப் பேசும் கதை ஏகாந்தம்… உண்மைக்கதை போன்றுள்ளது. கதையை நகர்த்தும் பாணியும் மனதில்ஏதோ ஒன்றை உணர்த்திச் செல்கிறது. சொரியலாக ஆங்காங்கே பிரசுரமான கதைகளை வாசித்திருந்தாலும், தொகுப்பாக இணைத்து வாசிக்கையில் கதைகளின் சிறப்பு உணரப்படும் என்றே கருதுகிறேன். கட்டுரை, விமர்சனங்கள் என இவர் எழுதியிருந்தாலும் கதைகளில் காட்டும் ஆர்வம் நம்மையும் உடன் இருத்தி அழைத்துச்செல்லும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் எளிமையான உரைநடை, கதைசொல்லும்பாங்கு ‘இது எனது கதை.. என்னை அல்லது எங்களைப் பற்றிய கதைகள் என ஒவ்வொரு கதைகளும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அவைதான் கதாசிரியருக்குக் கிடைத்த கிடைக்கப்போகும் வெற்றியுமாகும். தான் காணும் மாந்தர்களை உள்வாங்கி அசைபோட்டு, அசைபோட்டு பாத்திரங்களாக்கி கதைகள் எழுதும்போது அவைகள் அல்லது அக்கதாபாத்திரங்கள் நம்முள் ஒருவராக மாற்றி பாதிப்பையும் நமக்குத் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது. சமகால வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துத் தந்திருக்கிறார்.
சினிமாத்தனம் இல்லை. திருமணத்தில் நல்ல துணை வாய்த்தால் வாழ்வு சிறக்கும். இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும். துன்பம் தொடரும். கடைக்குட்டி கதையின் பாத்திரங்கள் கிராமத்து மனிதர்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆரவாரமில்லாமல் கதைநகர்கிறது.. அநேக கிராமத்து பெண்களின் வாழ்க்கை, அவர்களின் திருமணவாழ்க்கை, புகுந்த இடத்தில் முகம் கொடுக்கின்ற வேதனைகள் கணவனின் நோய்.. யாவற்றையும் எப்படி எதிர்கொள்கிறாள் எனச் சொல்லும் கதைகடைசிப்பிறவி.’வீட்டில் அடுப்பு எரியாவிட்டாலும் நான்தான் காரணமா? ஆண்கள் எதற்குமே காரணம் ஆகமாட்டீர்களா? தொட்டதெற்கெல்லாம் பெண்ணைத்தான் இந்தச் சமூதாயம் குறைசொல்லுமா? இப்படிக் கணவனிடம் கேட்டாலும் சமூகத்தைப் பார்த்து கேட்டது போலிருந்தது. உரையாடல்கள் அளவாக இருப்பினும் மனதை தொட்டுச்செல்கிறது. சிந்திக்காத சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் பல சோகங்கள் அளவிற்கு அதிகமாகத் திணிக்கப்படுகிறதோ?
ஆசிரியர் மீதான காதலை சொல்லமுடியாமல்.. தனக்குள் அரும்பிய காதலால் பாடங்களில் அதீத கவனம் செலுத்தியவள்.. தனக்காக அவன் இல்லை என்றானதும் உடைந்துபோகும் மாணவியின் கதை(கானல்நீர்) அழகியலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சிறந்த கதைசொல்லியென ஒவ்வொரு கதையினூடாகவும் நிருபிக்கிறார் ஆசிரியர். கிராமத்தில் சில நம்பிக்கைகள் இன்னும் இருக்கின்றன. மூடநம்பிகைகளே அவை என கடந்து சென்றாலும் கணத்தில் அதன்மீதான பார்வை நம்மையறியாமலேயே வந்து தங்கிக்கொள்வதை குளியலறை விபத்துகள் கதையில் அருமையாகச் சொல்கிறார். குளவிகூடு கட்டினால் நன்மை பயக்கும் என்பதை நமது பாட்டிமார் சொல்வார்கள் எனினும் பல தடவைகள் நிராகரித்திருக்கிறோம். எதிர்பாராமல் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தேறுகையில் அகமகிழ்ந்து போகிறோம். அதுதான்.. அப்படித்தான் என்றே நினைப்போம். கதையின் நாயகியின் நிலையிலும் பொருத்திப் பார்க்கையில் சரியோவென(குளவிகூடுகட்டினால்..) நினைக்கத்தோன்றுகிறது.
ஆசிரியரின் கல்வி, வாசிப்பனுபவம், பயிற்சி நிறையப் பெற்றிருப்பதினால் தான் எடுத்தாண்ட கதைக் கருவை அழகுற சிறுகதையாக்குவதில் வல்லமை பெற்றிருப்பது அனைத்துக் கதைகளிலும்காண்கிறோம். தனக்கொரு நியாயம் மற்றவர்க்கொரு நியாயம் கற்பிப்பவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பதற்கு இளம்பரிதி பாத்திரம் உதாரணம். ஆண் மனைவியை இழந்தால் மறுமணம் பற்றிப் பேசுபவர்கள் பெண் விதவையானால் மறுத்துப் பேசுபவர்களும் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள்தான்.மேலும் தன்மீதான குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லாமல் மனைவி மீதே கோபப்படும் இளம்பரிதி இந்தச் சமூகத்தின் இன்னொரு பிரகிருதி (சமத்துவம்).
காதலித்துத் திருமணம் செய்திருந்தும், வேலைக்குப் போகாத, மனைவியின் சுகதுக்கங்களில் துணையாக இல்லாத கணவனிடமிருந்து விலகிச்செல்லும் சூழல் அல்லது தீர்மானம் எடுக்கும் கமலிகாவின் முடிவும் சரியெனவே பட்டது. இன்றும் வேலைக்குப் போகும் பெண்களின் மனஉளைச்சல்கள் எழுத்தில் சொல்லிவிடமுடியாதுதான். ‘இனிமேல் என்னால் எல்லாம் வேலைக்குப் போகமுடியாது. முன்னாடி மாதிரியில்ல..இப்ப எனக்கு உடம்புக்கு முடியல. நான் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்காத..குடும்பத்தை நீதான்பாத்துக்கணும்.’ கமலிகாவின் இறுதி மனநிலையின் மாற்றத்திற்குக் காரணமாயிற்று. கமலிகா போன்றவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் எனலாம்(சில்லாட்டை).
அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் கதைசொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது. பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியிருக்கிறார். தவம் கதையிலும் தன்வாழ்வை, கடமையைத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் பெண் அதுவே சரியான முடிவுதான் என மனஉறுதிகொண்டு செயல்படுவது சூழலின் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என உணரமுடிகிறது. துன்பங்கள் நேர்கையில் மனதும் ஒரு கணத்தில் உறுதியுடன் செயல்பட்டு விடவும் கூடும். அக்கணத்தில் அதுவே சரியெனவும் உறுதிகொள்ளவும் வைத்துவிடுவது இயல்பே. ஒவ்வொரு கதைகளிலும் இழையோடும் பாசம், காதல், காமம் சாராத அன்பு, அந்நியோன்யம், விரிசல் வந்துவிடாதபடி குடும்ப உறவை நேர்த்தியாக இணைத்து நகர்த்தியபடி ஒவ்வொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. கணவன் இருக்கும் போதே பொட்டிட்டு ஒரு புகைப்படம் எடுக்க விரும்பிமுடியாமல் இறந்து போகும் தாய்…ஆச்சியுடன் ஐஸ்கிறீம் வாங்கி நட்பாய் வாழும் கயல்விழியும் மனதினை வசீகரிக்கிறது.
ஒரு பெண்ணை மகளாகப் பெற்ற பவித்ராவின் மனநிலையும் அவள் சந்தித்த நிகழ்வுகளும்…ஒருவனை தவறாக எடைபோட்டு விட்ட தன்கழிவிரக்கமும்…மகளிடம் சொல்லி ஆறுதல்படுவதும்யதார்த்தம். மாணவி ஒருத்தியின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் கதை பீதி. வீட்டுவேலைக்குள் அல்லல்படுதல், படிப்பில் ஆர்வமின்மை, சாட்டுச்சொல்லுதல், வீட்டுப்பாடம் செய்யாமல் வருதல் இப்படி நமது பள்ளிக்காலங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது.
இனியன், தென்றல், மரகதம் அம்மாள், பூனைக்குட்டிகள்…இவர்களைச் சுற்றிய கதை (பூனைக்குட்டியும்காதலும்)..பூனைகள் மீதான தென்றலின் காதலும், பூனைகளைக் கண்டாலே வெறுப்பாகும் மரகதம் அம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக பூனைமீது விருப்பம் கொள்வதும்…கடைசியில் பூனைகுட்டிகள் போட்டாதும் தோட்டத்து வீட்டில் கொண்டுபோய் விடச்சொல்ல..தென்றலின் வருத்தம்..அழகான கதை…பூனை உள்ள எல்லா வீடுகளின் நடக்கும் கதையாகக் கூடக் கொள்ளலாம். முகமூடி கதையில் மதுமிதா தனித்துவமானவள். அழகி…மற்றவர்கள் போலல்லாமல் வித்தியாசமாய்த் தெரிந்தாள்..கல்லூரி வாழ்க்கை பிடித்துப் போனாலும் அவளின் தோழிகளைப் போல வாழாது.. அசௌகரியாக உணர்கின்றாள். கல்லூரி வாழ்க்கை பலருக்கு நன்றாக அமையாது போய்விடுவதும், மதுமிதா போன்ற பெண்கள் படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்துவிடுவதும்.. இயல்பான கதை..தன்னை இழந்துவிடாமல் இருந்ததைப்போல… வேலையும் கண்டிப்பு எனும் முகமூடி அணிந்தே வாழப் பழகிக்கொள்ளும் பல மதுமிதாக்களில் ஒருத்தியாகிப் போனவளின் கதை…நன்றாக கருத்தைச் சொல்லும் கதை.
இவரின் கதைகளில் வர்ணனைகள் அதிகமில்லை.. வார்த்தை ஜாலங்கள் விளையாடவில்லை. தோழிகள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் போக சங்கமியும் குடும்பம், வேலை என சங்கமிக்கு..அவளுள் இருந்த கவிதை எழுதும் ஆர்வமும் கணவனுக்காக மௌனமாகிவிட…வேலை பார்க்கும் இடத்தில் அவளின் தோழி தன் தோழர்களுடன் அவள் டைரியில் எழுதி வைத்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி அவளின் பிறந்தநாள் பரிசாகத் தந்துவிட..அவளின் மகிழ்ச்சி மேலிட..நம்மையும் வசீகரிக்கிறாள். தனித்தனியே இதழ்களில் வாசித்திருக்கிறேன். இப்போது நூலாக வரும்போது தொகுத்து வாசிக்க முடிந்திருக்கிறது. வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான் என்பார்கள். இங்கு சோமசுந்தரி அவர்களின் இக்கதைத் தொகுதியை வாசித்ததன் மூலம் எனக்குள் அதிக தாக்கங்களையும், நினைவுகளையும் மீட்ட வைத்திருக்கிறது. நிறைய எழுதல் வேண்டும். புதியதாய் எழுத்துக்கள் வரல்வேண்டும். அவை இலக்கிய உலகிற்குச் செழுமைகள் சேர்க்கவேண்டும்…வாசகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.
நூல் விமர்சனம்
திரு முல்லை அமுதன்
இலண்டன்
Expression of Love in Tamil and Marathi Novels from an Thematological Perspective|Gayathri S
Abstract
Literature is not only a medium for expressing human emotions and experiences but also a powerful tool for representing society. Across world literatures, love has remained a central theme. In Tamil literature, from the Sangam period onwards, love has occupied a significant place under the Agam tradition. In modern literary forms such as the novel, love continues to function as a key theme that reflects both the psychological and social dimensions of human life. As K. Na. Subramaniam observes, “the novel is an art form that expresses the experiences of human life.” In this context, the present study adopts a thematic approach to examine how love is portrayed in Tamil and Marathi novels, highlighting its emotional, psychological, and social manifestations.
“அடிக்கருத்தியல் நோக்கில் தமிழ், மராத்தி நாவல்களில் காதல் உணர்வு வெளிப்பாடு”
முன்னுரை
இலக்கியம், மனித வாழ்க்கையின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் வடிவமாக மட்டுமல்லாமல் சமூகத்தை வெளிப்படுத்தக்கூடிய கருவியாகவும் உள்ளது. உலகின் பல மொழி இலக்கியங்களிலும் காதல், முக்கியமான கருப்பொருளாக காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்திலிருந்தே காதல், அகப்பொருள் மரபாக முக்கிய இடம் பெற்றுள்ளது. நவீன இலக்கிய வடிவமான நாவலிலும் காதல், மனித வாழ்க்கையின் உளவியல் மற்றும் சமூக அனுபவங்களை வெளிப்படுத்தும் கருப்பொருளாக எவ்வாறு விளங்குகிறது என்பதையும், க.நா. சுப்ரமணியம் கூறுவதுபோல் “நாவல் என்பது மனித வாழ்க்கையின் அனுபவங்களை வெளிப்படுத்தும் கலை வடிவமாகும்.”¹ இக்கட்டுரை, அடிக்கருத்தியல் நோக்கில் தமிழ் மற்றும் மராத்தி நாவல்களில் காதல் உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராய்கிறது.
அடிக்கருத்தியல் நோக்கும், நாவல் இலக்கியங்களும்
இலக்கிய ஆய்வில் அடிக்கருத்தியல் அணுகுமுறை என்பது ஒரு இலக்கிய படைப்பில் மையமாக விளங்கும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அதன் பொருள் மற்றும் சிந்தனையை ஆராயும் முறையாகும்.“ஒப்பியல் இலக்கிய ஆய்வில் அடிக்கருத்து ஒரு முக்கியமான ஆய்வு கருவியாகும்.”² அடிக்கருத்தியல் நோக்கில் இலக்கியங்களை ஆராய்வது மூலம் மனித வாழ்க்கையின் பொதுவான அனுபவங்களையும் சமூக சிந்தனைகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. நாவல் இலக்கியத்தில் காதல் உணர்வு பெரும்பாலும் பின்வரும் அம்சங்களோடு தொடர்புடையதாக காணப்படுகிறது:
🎯 மனித உணர்வு
🎯 சமூக உறவு
🎯 பண்பாட்டுக் கட்டமைப்பு
🎯 உளவியல் வெளிப்பாடு
இதனால் காதல் ஒரு தனிப்பட்ட உணர்வாக மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் கருப்பொருளாக விளங்குகிறது.
தமிழ் நாவல்களில் காதல் உணர்வு
தமிழ் நாவல்களில் காதல் உணர்வு பெரும்பாலும் சமூக மற்றும் பண்பாட்டு சூழலோடு இணைந்து வெளிப்படுகிறது.“தமிழ் இலக்கியம் மனித உணர்வுகளையும் சமூக வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் கலை வடிவமாக விளங்குகிறது.”³என்ற கருத்து தமிழ் நாவல்களில் காதல் உணர்வு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
பண்பாட்டுக் கட்டமைப்பு
தமிழ் சமூகத்தில் குடும்ப அமைப்பு மற்றும் பண்பாட்டு மரபுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தமிழ் நாவல்களில் காதல் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது.இதனால் காதல் என்பது தனிநபரின் உணர்வாக இருந்தாலும் அது குடும்ப உறவுகள், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பண்பாட்டு மதிப்புகளால் கட்டுப்படுத்தப்படும் உணர்வாக நாவல்களில் வெளிப்படுகிறது.வரலாற்று நாவல்களில் காதல் வீர உணர்வோடும் பண்பாட்டு மரபுகளோடும் இணைந்து காணப்படுகிறது.
சமூக சித்தரிப்பில் காதல்
சமூக நாவல்களில் காதல் உணர்வு தனிநபர் உணர்வாக மட்டுமல்லாமல் சமூக சூழல், மரபு மற்றும் மனித உறவுகளோடு தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது. சமூக வாழ்க்கையில் நிலவும் குடும்ப அமைப்பு, மரபுகள், சாதி மற்றும் சமூக ஒழுக்கநெறிகள் ஆகியவை காதல் உறவுகளை பாதிக்கும் அம்சங்களாக நாவல்களில் வெளிப்படுகின்றன. இதனால் சமூக நாவல்களில் காதல் ஒரு உணர்ச்சி அனுபவமாக மட்டுமல்லாமல் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் சித்தரிக்கப்படுகிறது.“இலக்கியம் மனித வாழ்க்கையின் உண்மைகளை வெளிப்படுத்தும் கலை வடிவமாகும்.”⁴ எனவே சமூக நாவல்களில் காதல் மனித உறவுகளின் சிக்கல்களையும் சமூக அமைப்புகளின் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான கருப்பொருளாக அமைகிறது.
உளவியல் காதல்
நவீன தமிழ் நாவல்களில் காதல் மனித மனத்தின் உளவியல் அனுபவங்களோடு தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது. மனித மனத்தின் உணர்ச்சிகள், ஆசைகள், ஏமாற்றங்கள், நினைவுகள் மற்றும் உள்ளார்ந்த போராட்டங்கள் ஆகியவை காதல் சித்திரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.“நாவல் இலக்கியம் மனித மனத்தின் உளவியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் கலை வடிவமாகும்.”⁵ இதனால் நவீன தமிழ் நாவல்களில் காதல், மனித மனத்தின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் விளங்குகிறது
மராத்தி நாவல்களில் காதல் உணர்வு
மராத்தி நாவல் இலக்கியங்கள், சமூக மாற்றங்களோடு தொடர்புடையதாக வளர்ந்துள்ளது. இந்திய இலக்கிய வளர்ச்சியைப் பற்றி, “Indian novels reflect the relationship between individual emotions and social realities.”⁶ இந்தக் கருத்து இந்திய நாவல்கள் மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளையும் சமூக சூழலையும் இணைத்து சித்தரிக்கின்றன என்பதை விளக்குகிறது. மராத்தி நாவல்களில் காதல் உணர்வு பின்வரும் அம்சங்களோடு தொடர்புடையதாக உள்ளது:
🎯 சமூக சீர்திருத்தம்
🎯 தனிநபர் சுதந்திரம்
🎯 உளவியல் அனுபவம்
சமூக சீர்திருத்தக் காதல்
சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தால், மராத்தி நாவல்கள் மனித சமத்துவம், பெண்களின் சுதந்திரம் மற்றும் சமூக நீதி போன்ற கருத்துகளை முன்னிறுத்துகின்றன. இவ்வாறு காதல் மனிதர்களின் தனிப்பட்ட உறவாக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தை நோக்கி செல்லும் சிந்தனையாகவும் நாவல்களில் உருவெடுக்கிறது.
தத்துவக் காதல்
மராத்தி நாவல்களில் காதல் உணர்வு தத்துவ மற்றும் நெறி சிந்தனைகளோடு தொடர்புடையதாகவும் வெளிப்படுகிறது. மனித வாழ்க்கையின் அர்த்தம், நெறி மதிப்புகள், தனிநபரின் உள்ளார்ந்த உணர்வுகள் போன்ற அம்சங்களை ஆராயும் கருப்பொருளாக காதல் பயன்படுத்தப்படுகிறது. “Marathi fiction explores the psychological and moral dimensions of human emotions.”⁷ என்ற பாலச்சந்திர நாமதே அவர்களின் கருத்து மராத்தி நாவல்கள் மனித உணர்வுகளின் உளவியல் மற்றும் நெறி பரிமாணங்களை ஆராய்கின்றன என்பதை அறிய முடிகிறது.
முடிவுரை
தமிழ் மற்றும் மராத்தி நாவல்களில் காதல், முக்கியமான கருப்பொருளாக இருந்தாலும் அவை வெளிப்படும் விதத்தில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழ் நாவல்களில் காதல் பெரும்பாலும் குடும்ப அமைப்பு மற்றும் பண்பாட்டு மரபுகளோடு தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது. மனித உறவுகள் மற்றும் சமூக மதிப்புகள் காதல் சித்திரிப்பில் முக்கிய இடம் பெறுகின்றன. மராத்தி நாவல்களில் காதல் சமூக மாற்றம் மற்றும் தனிநபர் உரிமைகளுடன் தொடர்புடையதாக வெளிப்படுகின்றது. இதனால் இரண்டு மொழிகளின் நாவல் இலக்கியங்களும் மனித வாழ்க்கையின் உணர்வுகளையும் சமூக அனுபவங்களையும் வெளிப்படுத்துவதாக இருந்தாலும் வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் தனித்துவமான பார்வைகளை வழங்குகின்றன.
அடிக்குறிப்புகள்
1.க.நா. சுப்ரமணியம், தமிழ் நாவல் வரலாறு, சென்னை: காலச்சுவடு பதிப்பகம், 2005, பக். 45.
2.க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், பக். 102.
3.மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை: பாப்புலர் பதிப்பகம், 1998, பக். 210.
4.ஜெயகாந்தன், இலக்கியமும் மனித வாழ்க்கையும், பக். 65.
5.தி. ஜானகிராமன், நாவல் இலக்கிய சிந்தனைகள், பக். 73.
6.Sisir Kumar Das, History of Indian Literature, Vol. 2, p. 301.
7.Bhalchandra Nemade, Marathi Literary Criticism, p. 88.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சி.காயத்ரி
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்),
தமிழ்த்துறை,
சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
நெறியாளர்
முனைவர் தி.சிந்தியா,
உதவிப் பேராசிரியர்,
சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
Land, Memory, and Ritual: A Study on Decolonial Playwriting Strategies in the Modern Theatre of Eastern Sri Lanka
நிலம், நினைவு மற்றும் சடங்கு: கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க
நாடக எழுத்துருவாக்க உத்திகள் பற்றிய ஆய்வு
ஆய்வுச் சுருக்கம்
இவ்வாய்வு கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்க உத்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. குறிப்பாக, நிலம் சார்ந்த பிணைப்பு, பண்பாட்டு நினைவுகள் மற்றும் மரபுவழிச் சடங்குகள் எவ்வாறு காலனிய மேலாதிக்கச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, ஒரு தன்னாட்சிமிக்க கலை வெளிப்பாட்டை உருவாக்குகின்றன என்பதை இது பகுப்பாய்வு செய்கிறது. கிழக்கிலங்கையின் தனித்துவமான கூத்து மரபுகள் மற்றும் சடங்கியல் கூறுகள் நவீன நாடகப் பிரதிகளில் எவ்வாறு மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன என்பது குறித்து இவ்வாய்வு விரிவாக விளக்குகிறது.
1. தோற்றுவாய்
காலனிய ஆதிக்கம் என்பது நிலப்பரப்பைக் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாமல், ஒரு இனத்தின் சிந்தனை முறை, மொழி மற்றும் கலை வடிவங்களையும் சிதைக்கிறது. ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில், குறிப்பாகக் கிழக்கிலங்கையில், காலனியக் கல்வியும் மேலைநாட்டு நாடக மரபுகளும் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்தன. இருப்பினும், கடந்த சில பத்தாண்டுகளாக, மண்ணின் மணமும் மரபுச் செழுமையும் கொண்ட காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2. நிலம்: வாழ்விடமும் போராட்டக் களமும்
நாடக எழுத்துருவாக்கத்தில் நிலம் என்பது வெறும் பின்புலம் மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு அடையாளம். கிழக்கிலங்கை நாடகங்களில் நிலம் பின்வரும் நிலைகளில் கையாளப்படுகிறது:
மண்ணின் மணம்: நாடக உரையாடல்களில் கிழக்கிலங்கைத் தமிழ் வட்டார வழக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் காலனிய மொழி மேலாதிக்கம் தகர்க்கப்படுகிறது.
நில மீட்பு: போரினாலும் இடப்பெயர்வினாலும் பறிபோன நிலங்கள் குறித்த நினைவுகள் நாடகப் பிரதிகளில் ஆவணப்படுத்தப்படுகின்றன.
3. நினைவு: வரலாற்றை மீட்டெடுத்தல்
காலனிய வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்களின் வரலாறாகவே இருக்கிறது. காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கம் நினைவு என்பதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.
வாய்மொழி வரலாறு: மக்களிடையே புழங்கும் கதைகள், பாடல்கள் மற்றும் மூத்தோர் வழியான நினைவுகள் நாடகப் பிரதிகளின் உள்ளடக்கமாகின்றன. மறக்கப்பட்ட மாந்தர்கள்: அதிகாரபூர்வ வரலாற்றில் இடம்பெறாத விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை நாடக எழுத்துக்கள் மையப்படுத்துகின்றன.
முக்கியச் சொற்கள்: காலனிய நீக்கம், நவீன அரங்கு, கிழக்கிலங்கை, நாடக எழுத்துருவாக்கம், சடங்கு, பண்பாட்டு நினைவு.
ஆய்வு அறிமுகம்
காலனிய நீக்க எழுத்துருவாக்கம்: வரைவிலக்கணமும் வரலாற்றுப் பின்னணியும்
காலனிய நீக்கக் கோட்பாடு: ஆழமான கருத்தியல் விரிவு
1. நவீனத்துவமும் காலனியத் தன்மையும்
காலனிய நீக்கம் என்பது வெறும் காலனிய எதிர்ப்பு அல்ல. காலனிய எதிர்ப்பு என்பது பெரும்பாலும் ஒரு நாட்டின் எல்லைகளிலிருந்து ஆதிக்க சக்திகளை வெளியேற்றுவதோடு நின்றுவிடுகிறது. ஆனால், அனிபல் கிஜானோ (Quijano, 2000) விளக்குவது போல, காலனிய ஆட்சி முடிந்த பின்னரும் எஞ்சியிருக்கும் அதிகாரப் படிநிலைகளே காலனியத் தன்மை என அழைக்கப்படுகின்றன. வால்டர் மிக்னோலோ (Mignolo, 2011) தனது ஆய்வுகளில், நவீனத்துவம் என்பது காலனியத் தன்மையிலிருந்து பிரிக்க முடியாதது என்று வாதிடுகிறார். மேலைநாடுகள் தங்களை நாகரிகமடைந்தவர்கள் என்றும், மற்றவர்களை பின்தங்கியவர்கள் என்றும் தரம் பிரித்ததே இந்த நவீனத்துவத்தின் இருண்ட பக்கமாகும். அரங்கக் கலையில், மேலைநாட்டு யதார்த்தவாதம் மட்டுமே உயர்ந்தது என்ற பிம்பம் இதன் மூலமே கட்டமைக்கப்பட்டது. இதனைத் தகர்ப்பதே காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
2.அகஸ்டோ போயல்: ஒடுக்கப்பட்டோரின் அரங்கு
காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கத்திற்குத் தத்துவார்த்த ரீதியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர் பிரேஸில் நாட்டு அறிஞரான அகஸ்டோ போல். அவர் தனது ஒடுக்கப்பட்டோரின் அரங்கு (1979) எனும் நூலில், மேலைநாட்டு அரிஸ்டாட்டிலிய நாடக முறையை விமர்சிக்கிறார்.
அதிகார நீக்கம்: அரிஸ்டாட்டிலின் நாடக முறை பார்வையாளர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை வெறும் ஏற்பாளர்களாக மாற்றுகிறது. இது ஒரு வகையான சிந்தனை காலனியாக்கம் என்று போயல் கருதுகிறார். பார்வையாளரே நடிகர்: போயல் நாடக எழுத்துருவாக்கத்தில் பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக மாற்றுகிறார். இது மேலைநாட்டு நான்காவது சுவர் என்ற கோட்பாட்டைத் தகர்த்து, கலையை மக்களுக்கான அதிகாரமளிக்கும் கருவியாக மாற்றியது (Boal, 1979).
3. நுகுகி வா தியாங்கோ: மொழி மற்றும் பண்பாட்டு மீட்பு
ஆப்பிரிக்க அறிஞரான நுகுகி வா தியாங்கோ (Thiong’o, 1986), காலனிய நீக்கம் என்பது மனதிலிருந்து தொடங்க வேண்டும் என்கிறார். அவரது ‘Decolonising the Mind’ நூல் முன்வைக்கும் முக்கியமான வாதங்கள்:
மொழியின் அரசியல்: ஒரு சமூகம் தனது தாய்மொழியில் கலை உருவாக்கம் செய்யும்போது, அது தனது வரலாற்றையும் உலகக் கண்ணோட்டத்தையும் பாதுகாக்கிறது. ஆங்கிலம் அல்லது ஐரோப்பிய மொழிகளில் நாடகங்களை எழுதுவது என்பது, காலனியவாதிகளின் கண்களால் உலகைப் பார்ப்பதாகும். மண்ணின் அழகியல்: தியாங்கோ மேலைநாட்டு நாடக அரங்குகளைத் தவிர்த்து, திறந்தவெளிகளில், மக்களின் சடங்குகளையும் கூத்துக்களையும் மையப்படுத்தி நாடகங்களை உருவாக்கினார். இது கிழக்கிலங்கை போன்ற செழுமையான கூத்து மரபுகளைக் கொண்ட சூழலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கோட்பாடாகும்.
4. நேர்க்கோட்டு கதைசொல்லலுக்கு மாற்றான வடிவங்கள்
காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கம் மேலைநாட்டு ‘தொடக்க நடு முடிவு’ என்ற நேர்க்கோட்டு அமைப்பை மறுக்கிறது.
வட்ட வடிவக் கதைசொல்லல்: கிழக்கின் சடங்குகளிலும் கூத்துக்களிலும் காலம் என்பது நேர்க்கோடாக அமையாமல், ஒரு சுழற்சி முறையாக அல்லது வட்ட வடிவாக அமைகிறது.
பன்முகக் குரல்கள்: மேலைநாட்டு நாடகங்கள் ஒரு நாயகன் அல்லது தனிமனிதனை மையப்படுத்துகின்றன. ஆனால் காலனிய நீக்கப் பிரதிகள் சமூகத்தையே மையப்படுத்துகின்றன. இதில் குழுசார் எழுத்துருவாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
5. அறிதலியல் கீழ்ப்படியாமை
காலனிய நீக்க எழுத்துருவாக்கம் என்பது ஒரு அறிதலியல் கீழ்ப்படியாமை ஆகும் (Mignolo, 2009). அதாவது, மேலைநாட்டு அழகியல் விதிகளை அப்படியே ஏற்க மறுப்பதாகும். கிழக்கிலங்கை அரங்கைப் பொறுத்தவரை, கூத்துக்களில் காணப்படும் கோமாளி பாத்திரம் அல்லது அண்ணாவியார் பாத்திரம் என்பது வெறும் கலைப் பாத்திரங்கள் அல்ல, அவை அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும், சமூகத்தோடு உரையாடும் காலனிய நீக்கக் கூறுகள். இந்த உத்திகளை நவீன நாடக எழுத்தில் கொண்டு வரும்போது, அது உலகளாவிய அளவில் ஈழத்து அரங்கிற்கு ஒரு தனித்துவமான தத்துவ அடையாளத்தை வழங்குகிறது.
நிலம், நினைவு மற்றும் சடங்கு: கருத்தியல் விளக்கம்
இவ்வாய்வின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் நிலம், நினைவு மற்றும் சடங்கு ஆகியவற்றை காலனிய நீக்க நோக்கில் பின்வருமாறு வரையறுக்கலாம்:
நிலம்: காலனியச் சிந்தனையில் நிலம் என்பது சுரண்டுவதற்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், காலனிய நீக்கப் பார்வையில் நிலம் என்பது வாழ்விட அரசியலோடு தொடர்புடையது. பிரான்ட்ஸ் ஃபேன்ன் (Fanon, 1961) தனது ‘The Wretched of the Earth’ நூலில் குறிப்பிடுவது போல, காலனிய நீக்கம் என்பது நிலத்தை மீட்டெடுப்பதிலிருந்து தொடங்குகிறது. நாடகப் பிரதிகளில் நிலம் ஒரு கதாபாத்திரமாகவே உருப்பெற்று, சமூகத்தின் அடையாளம் மற்றும் உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாறுகிறது.
நினைவு: ஆதிக்க சக்திகள் ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தழிக்கும் போது, ‘நினைவு கூர்தல்’ என்பது ஒரு கலகமாக மாறுகிறது. இது அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்றாக, மக்களின் வாய்மொழி கதைகள் மற்றும் கூட்டு நினைவுகளை நாடக எழுத்தின் ஊடாக ஆவணப்படுத்துவதாகும். எட்வர்ட் சையத் (Said, 1978) தனது ‘Orientalism’ நூலில் விளக்குவது போல, காலனியவாதிகள் கட்டமைத்த கீழ்த்திசை குறித்த போலிப் பிம்பங்களை உடைக்கத் துல்லியமான பண்பாட்டு நினைவுகள் அவசியமாகின்றன.
சடங்கு: மேலைநாட்டு நாடகம் என்பது பெரும்பாலும் அறிவுச் சார்ந்த விவாதமாக இருக்கும்போது, சடங்கு என்பது உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பங்கேற்பாகும். சடங்குகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் லிமினாலிட்டி எனும் இடைநிலைப் பண்பைக் கொண்டவை (Turner, 1969). கிழக்கிலங்கையின் கூத்து மற்றும் வழிபாட்டுச் சடங்குகள் வெறும் மதச் சடங்குகள் அல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டு உணர்வைத் தாங்கி நிற்கும் கலை ஊடகங்கள். நாடக எழுத்தில் இவற்றை இணைப்பது மேலைநாட்டு நாடக விதிகளுக்கு விடப்படும் சவாலாகும்.
கிழக்கிலங்கை நவீன அரங்கின் அறிவுப்புலப் பின்னணி: மரபு மீட்டுருவாக்கத்திலிருந்து மீளுருவாக்கம் நோக்கி
கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்கச் சிந்தனைகள் முகிழ்வதற்கு, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இரண்டு விதமான கருத்தியல் நகர்வுகள் அடிப்படையாக அமைகின்றன. ஒன்று மரபைப் பல்கலைக்கழகத் தளத்தில் நிலைநிறுத்திய ‘மீட்டுருவாக்கம்’, மற்றையது மரபிற்குள்ளேயே சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ‘மீளுருவாக்கம்’.
1.மரபு மீட்டுருவாக்கம்: வித்தியானந்தன், சிவத்தம்பி மற்றும் மௌனகுரு
முதற்கட்டமாக, பேராசிரியர் சு. வித்தியானந்தன் (1962) அவர்கள் கூத்து மரபிற்குப் பல்கலைக்கழக மட்டத்தில் அறிவுசார் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கா. சிவத்தம்பி (1981) அரங்கவியலைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்து, தமிழ் அரங்கு ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நிறுவினார். பேராசிரியர் சி. மௌனகுரு (1998) அவர்கள் கூத்தின் உடல் மொழியை நவீன மேடைக்கு ஏற்றவாறு செழுமைப்படுத்தினார். இவர்கள் ‘காலனிய நீக்கம்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தாவிட்டாலும், மேலைநாட்டு அழகியல் மேலாதிக்கத்திற்கு மாற்றாக மண்ணின் கலை வடிவங்களை முன்னிறுத்தி, ஓர் அறிவுத் தன்னாட்சிக்கு அடித்தளமிட்டனர்.
2.பேராசிரியர் சி. ஜெயசங்கர்: கூத்து மீளுருவாக்கம்
ஈழத்து அரங்கியல் சூழலில் ‘மீளுருவாக்கம்’ என்ற சொல்லாடலை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அதனை ஒரு செயல்வாதமாக முன்னெடுத்தவர் பேராசிரியர் சி. ஜெயசங்கர் ஆவார். இவரது அணுகுமுறை என்பது மரபைப் பாதுகாப்பதுடன் நின்றுவிடாமல், மரபு வழிப்பட்ட கலைகளுக்குள் உறைந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களை அகற்றி, அவற்றைக் காலத்திற்கேற்ப மக்கள் மயப்படுத்துவதாகும். பிரதி மாற்றமும் சமூக விடுதலையும்: ஜெயசங்கர் அவர்கள் பாரம்பரியக் கூத்துக்களின் மாறாத இயல்புகளைப் (வடிவம், இசை, ஆடல்) பேணிக்கொண்டே, அதன் பிரதிகளில் காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த சாதிய இழிவுகள் மற்றும் பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளை நீக்கிப் புதிய எழுத்துருக்களை உருவாக்கினார்.
கலைஞர்களின் தன்னாட்சி: கூத்தை வெறும் மேடை அலங்காரமாகப் பார்க்காமல், கூத்துச் சமூகத்தவர்களையே (கூத்தர்) கொண்டு இம்மாற்றங்களை நிகழ்த்தினார். இது காலனிய நீக்கக் கோட்பாடு வலியுறுத்தும் ‘சுய-பிரதிநிதித்துவம்’ என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.
பிற்போக்குத்தனங்களைச் சாடுதல்: கூத்து மீளுருவாக்கம் என்பது மரபை வழிபடுவதல்ல, மாறாக மரபில் உள்ள சனநாயகப் பண்புகளைக் கண்டறிந்து, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்குக் கலையை ஒரு விடுதலைக் கருவியாக மாற்றுவதாகும் (ஜெயசங்கர், 2005).
கிழக்கிலங்கை அரங்கில் காலனிய நீக்கக் கட்டமைப்பு
கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க எழுத்துருவாக்கம் என்பது வெறும் மேலைநாட்டு நாடகங்களின் மொழிபெயர்ப்பு அல்ல, அது மண்ணின் அழகியலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு தன்னாட்சிப் பயில்முறையாகும். இதனைப் பின்வரும் மூன்று முதன்மை வழிமுறைகள் ஊடாக விளக்கலாம்:
1.வட்டார மொழி மீட்பு காலனியக் கல்வி முறையானது ஒரு தரப்படுத்தப்பட்ட மொழியையே அறிவுத்தளத்திற்கு உரியதாகக் கட்டமைத்தது. இது ஈழத்துச் சூழலில் பேச்சுத் தமிழை விடுத்து, எழுத்துத் தமிழை அல்லது மேலைநாட்டுத் தழுவல் மொழியை நாடக மேடைகளில் திணித்தது. காலனிய நீக்க எழுத்துருவாக்கம் இந்த மொழி மேலாதிக்கத்தைத் தகர்க்கிறது. பேச்சு மொழியின் அரசியல்: கிழக்கிலங்கையின் (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) தனித்துவமான வட்டாரப் பேச்சு வழக்குகள் நாடகப் பிரதிகளில் முதன்மை பெறுகின்றன. இது மேலைநாட்டு மொழித் தூய்மைவாதத்தை உடைப்பதுடன், அந்தந்த நிலப்பரப்பின் ஆன்மாவை மேடையில் கொண்டு வருகிறது.
அதிகார நீக்கம்: செந்தமிழ் பேசும் கதாபாத்திரம் அறிவாளியாகவும், வட்டார வழக்கு பேசும் கதாபாத்திரம் கோமாளியாகவும் காட்டப்பட்ட காலனியச் சித்தரிப்புகளை மாற்றி, வட்டார மொழியை அதிகாரத்தின் மொழியாகவும், அறிவுத் தளத்தின் மொழியாகவும் இவ்வெழுத்துருக்கள் முன்னிறுத்துகின்றன.
2.கூத்து உத்திகளின் நவீனமாக்கம்
வடமோடி, தென்மோடி மற்றும் வசந்தன் கூத்துக்களின் ஆடல், பாடல் மற்றும் இசை வடிவங்கள் காலனிய நீக்க அரங்கின் முதுகெலும்பாக அமைகின்றன. இவை வெறும் மரபுச் சின்னங்களாகப் பார்க்கப்படாமல், நவீன காலப் பிரச்சினைகளைப் பேசும் வீரியமிக்க அரங்க மொழியாக மாற்றப்படுகின்றன. வசன ஆதிக்கத்தைத் தகர்த்தல்: மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை நம்பியிருக்கும் வேளையில், கிழக்கிலங்கை காலனிய நீக்கப் பிரதிகள் கூத்தின் ஆடல் மற்றும் பாடல் வழியாகக் கதை சொல்கின்றன. இது ஐரோப்பிய யதார்த்தவாத சட்டகத்தை உடைக்கிறது.
சமகாலப் பிரச்சினைகள்: மரபுவழி இசைக் கருவிகளான மத்தளம், சல்லாரி போன்றவற்றைப் பயன்படுத்தி, போருக்குப் பிந்தைய வாழ்வியல், நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் பெண்ணியச் சிந்தனைகள் கூத்து வடிவத்திலேயே நவீனப் பிரதிகளாக உருவாக்கப்படுகின்றன (சிவத்தம்பி, 2005). இது பழமைக்கும் நவீனத்திற்கும் இடையிலான ஒரு காலனிய நீக்கப் பாலமாகும்.
ஆய்வுச் சிக்கல்
ஈழத்து நவீன அரங்கியல் வரலாற்றில், மேலைநாட்டு நாடகப் பயில்முறைகள் ஒரு கட்டமைப்பு ரீதியான செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளன. குறிப்பாக, அரிஸ்டாட்டிலின் நாடகக் கோட்பாடுகள் மற்றும் ஐரோப்பிய மேடை அமைப்பு முறைகள் நவீனத்துவம் என்ற பெயரில் திணிக்கப்பட்டன. இது கிழக்கிலங்கையின் செழுமையான கூத்து மரபுகளை பழமையானவை அல்லது நாட்டார் கலைகள் எனச் சிறுமைப்படுத்தும் போக்கினை உருவாக்கியது. மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை மற்றும் தனிமனித மையவாதத்தை நம்பியிருக்கும் வேளையில், கிழக்கிலங்கை மரபு வடிவங்கள் ஆடல், பாடல் மற்றும் கூட்டுப் பங்கேற்பை வலியுறுத்துகின்றன. இந்த வசன ஆதிக்க மற்றும் யதார்த்தவாத மேலைநாட்டு முறைகளுக்கும், கிழக்கிலங்கையின் முழுமையான அரங்கு எனும் பண்பிற்கும் இடையில் பெரும் முரண்பாடு நிலவுகிறது. மேலைநாட்டு உத்திகளை அப்படியே பின்பற்றுவது, ஒரு கலைஞனைத் தனது சொந்த பண்பாட்டு வேர்களிலிருந்து துண்டித்து, அவனை ஒரு அறிவுசார் காலனித்துவ நிலைக்குத் தள்ளுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதும், மண்ணின் மரபுகளைக் காலனிய நீக்க ஆயுதமாக எவ்வாறு கையாள்வது என்பதுமே இங்குள்ள முதன்மையான ஆய்வுச் சிக்கலாகும்.
ஆய்வின் நோக்கம்
இவ்வாய்வு, கிழக்கிலங்கையின் நவீன நாடக எழுத்துருவாக்கத்தில் நிலம், நினைவு, சடங்கு ஆகிய மூன்றையும் வெறும் அழகியல் கூறுகளாகப் பார்க்காமல், அவற்றை மேலாதிக்கத்தை எதிர்க்கும் அரசியல் கருவிகளாக அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலம்: காலனியச் சிந்தனையில் நிலம் என்பது சுரண்டுவதற்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், காலனிய நீக்கப் பார்வையில் நிலம் என்பது வாழ்விட அரசியலோடு தொடர்புடையது (Fanon, 1961). நாடகப் பிரதிகளில் நிலம் ஒரு கதாபாத்திரமாகவே உருப்பெற்று, சமூகத்தின் அடையாளம் மற்றும் உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாறுவதைக் கண்டறிதல் இவ்வாய்வின் நோக்கமாகும்.
நினைவு: ஆதிக்க சக்திகள் ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தழிக்கும் போது, நினைவு கூர்தல் என்பது ஒரு கலகமாக மாறுகிறது. அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்றாக, மக்களின் வாய்மொழி கதைகள் மற்றும் கூட்டு நினைவுகளை நாடக எழுத்தின் ஊடாக ஆவணப்படுத்துவதை இவ்வாய்வு ஆராய்கிறது.
சடங்கு: சடங்குகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் லிமினாலிட்டி எனும் இடைநிலைப் பண்பைக் கொண்டவை (Turner, 1969). கிழக்கிலங்கையின் கூத்து மற்றும் வழிபாட்டுச் சடங்குகள் வெறும் மத நிகழ்வுகள் அல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டு உணர்வைத் தாங்கி நிற்கும் கலை ஊடகங்கள். நாடக எழுத்தில் இவற்றை இணைப்பதன் மூலம் மேலைநாட்டு நாடக விதிகளுக்கு விடப்படும் சவாலை இவ்வாய்வு பகுப்பாய்வு செய்கிறது.
ஆய்வு முறைமையியல்
இவ்வாய்வானது கிழக்கிலங்கை நவீன நாடகங்களில் நிலவும் காலனிய நீக்கக் கூறுகளைக் கண்டறிவதற்காக முறையான சமூக-அழகியல் ஆய்வு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
1.ஆய்வு அணுகுமுறை: பண்புசார் ஆய்வு முறை
இவ்வாய்வு முழுமையாகப் பண்புசார் ஆய்வு முறையை அடிப்படையாகக் கொண்டது. காலனிய நீக்கம் என்பது மனித உணர்வுகள், பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் அரசியல் புரிதல்கள் சார்ந்தது என்பதால், புள்ளிவிபரங்களை விடவும் ஆழமான விளக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விளக்கமுறை ஆய்வு: நாடகப் பிரதிகளில் நிலம், நினைவு மற்றும் சடங்கு எவ்வாறு குறியீடுகளாகவும் உத்திகளாகவும் கையாளப்பட்டுள்ளன என்பதை விவரிக்க இவ்வணுகுமுறை பயன்படுகிறது.
பகுப்பாய்வு முறை: காலனிய நீக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடகப் பிரதிகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் உட்பொருளைக் கண்டறிய இவ்வணுகுமுறை உதவுகிறது.
ஆய்வு எல்லை
ஆய்வின் ஆழத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பின்வரும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன:
கால எல்லை: இவ்வாய்வு 2000 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலப்பகுதியை மையப்படுத்துகிறது. ஈழத்துச் சூழலில் 2000ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலப்பகுதியே போர்க்கால மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்வியலை நாடகங்கள் வழி ஆவணப்படுத்திய மிக முக்கியமான காலகட்டமாகும்.
புவியியல் எல்லை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தை (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) மையமாகக் கொண்ட நாடகச் செயல்பாடுகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
நாடக வகைமை: வணிக நோக்கம் கொண்ட நாடகங்களைத் தவிர்த்து, அழகியல் மற்றும் சமூக அரசியலை முதன்மைப்படுத்தும் ‘நவீன நாடகங்கள்’ மற்றும் ‘மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்கள்’ மட்டுமே ஆய்வின் எல்லைக்குள் வருகின்றன.
தரவுப் பகுப்பாய்வு முறை
சேகரிக்கப்பட்ட தரவுகள் ‘உள்ளடக்கப் பகுப்பாய்வு’ முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. நாடகப் பிரதிகளில் உள்ள வசனங்கள், பாத்திரப் படைப்புகள் மற்றும் குறியீடுகள் எவ்வாறு மேலைநாட்டு நவீனத்துவத்தை மறுதலித்து, மண் சார்ந்த அழகியலை முன்னிறுத்துகின்றன என்பது கோட்பாட்டு ரீதியாக ஒப்பிடப்பட்டு முடிவுகள் எட்டப்படுகின்றன.
நிலம்: புவிசார் அரசியலும் நாடக வெளியும்
காலனிய நீக்க ஆய்வுகளில் நிலம் என்பது வெறும் மண் சார்ந்த பரப்பு மட்டுமல்ல, அது அதிகாரத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு வெளிப்பாடு.
நாடக மேடையில் நிலம் குறியீடாகப் பயன்படுத்தப்படும் விதம்: மேலைநாட்டு நாடகங்களில் நிலம் என்பது பெரும்பாலும் ஒரு காட்சிப் பின்புலமாக மட்டுமே அமையும். ஆனால் கிழக்கிலங்கை நவீன நாடகங்களில் நிலம் ஓர் ‘ஆளுமையாக’ மாற்றப்படுகிறது. மேடையில் பயன்படுத்தப்படும் மண், பனை ஓலைகள், மற்றும் திறந்தவெளிச் சூழல் போன்றவை நிலத்தின் மீதான மக்களின் உரிமையை நிலைநிறுத்தும் குறியீடுகளாகின்றன. இது நிலத்தைச் சுரண்டும் பொருளாகப் பார்த்த காலனியப் பார்வைக்கு மாற்றாக, நிலத்தை ஒரு தாயாகவும், வாழ்வாதாரமாகவும் காட்டும் மண்ணின் அழகியலை முன்வைக்கிறது.
நில இழப்பு மற்றும் மீளுருவாக்கம்: ஈழப் போருக்குப் பிந்தைய சூழலில் நில அபகரிப்பு, இடம்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கல் போன்றவை மக்களின் வாழ்வியலைச் சிதைத்துள்ளன. நவீன நாடக எழுத்துருவாக்கம் இந்த நில இழப்பை வெறும் துயரமாகப் பதிவு செய்யாமல், நிலத்தை மீட்பதற்கான ஒரு அரசியல் ஆவணமாக மாறுகிறது. இழந்த நிலங்கள் குறித்த ஏக்கமும், மீண்டும் அந்த நிலத்தில் வேரூன்றுவதற்கான வேட்கையும் நாடகப் பிரதிகளின் உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்துகின்றன.
வட்டார மொழிப் பயன்பாடு: மொழிவழி நில அடையாளம்: நிலம் என்பது மொழியோடு பிணைக்கப்பட்டது. காலனிய மேலாதிக்கம் ஒரு தரப்படுத்தப்பட்ட மொழியைத் திணித்தபோது, கிழக்கிலங்கை நாடகங்கள் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கே உரிய தனித்துவமான வட்டார வழக்குகளைப் பயன்படுத்துகின்றன. இது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் மொழி அடையாளத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதுடன், அந்த நிலத்தின் ஆன்மாவை மேடைக்குக் கொண்டு வரும் காலனிய நீக்க உத்தியாகும்.
நினைவு: ஆவணப்படுத்தலும் மீளுருவாக்கமும்
காலனியம் என்பது ஆதிக்கம் செலுத்தியவர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்கிறது. அதனைத் தகர்ப்பதற்கான கருவியாக நினைவு பயன்படுத்தப்படுகிறது. நாட்டுப்புறக் கதைகளும் காலனிய வரலாற்று எதிர்ப்பும்: ஆதிக்கச் சக்திகளால் மூடநம்பிக்கைகள் என ஒதுக்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகளையும் புராணங்களையும் நவீன நாடகங்களாக மாற்றுவதன் மூலம், அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்று வரலாறு எழுதப்படுகிறது. மக்கள் மத்தியில் புழங்கும் வாய்மொழி மரபுகள் நாடகப் பிரதிகளாக மாறும் போது, அது மக்களின் சுய-மதிப்பை மீட்கிறது.
கூட்டு நினைவு: ஒரு சமூகத்தின் வலிகள், போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் தனிமனித நினைவுகளாக இல்லாமல், ஒரு கூட்டு நினைவாக நாடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. போர்க்கால அனுபவங்களை நாடகமாக்குவது என்பது ஒரு கூட்டுச் சமூகத்தின் காயங்களுக்குக் கலை வழி சிகிச்சை அளிப்பதாகும். இது சமூகத்தின் வரலாற்றைத் தொலைக்காமல் பாதுகாக்கும் ஆவணப்படுத்தல் பணியாகும். வரலாற்றுப் புனைவுகளை மறுவாசிப்பு செய்தல்: ஏற்கனவே உள்ள இதிகாசங்கள் அல்லது வரலாற்று நிகழ்வுகளை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து ‘மறுவாசிப்பு’ செய்வது காலனிய நீக்க உத்தியாகும். எடுத்துக்காட்டாக, இராவணன் அல்லது ஏகலைவன் போன்ற பாத்திரங்களை மையப்படுத்தி, அவர்களின் தரப்பு நியாயங்களைப் பேசுவது மேலாதிக்க வரலாற்றுப் பிம்பங்களை உடைப்பதாக அமைகிறது.
சடங்கு: மரபுவழி நுட்பங்களின் நவீனப் பயன்பாடு
சடங்கு என்பது பழமையானதல்ல, அது நிகழ்காலத்தின் ஆற்றல்மிக்க போராட்ட வடிவம் என்பதை நவீன அரங்கு நிரூபிக்கிறது. சடங்கியல் கூறுகளை நவீன மேடைக்குக் கடத்துதல்: வடமோடி, தென்மோடி கூத்துக்களில் காணப்படும் சந்தித் தாளங்கள், கலாலயம் மற்றும் வசந்தன் கூத்துக்களின் வட்ட வடிவ ஆடல் முறைகள் நவீன நாடகப் பிரதிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. இது மேலைநாட்டு நான்காவது சுவர் எனும் தடையை உடைத்து, பார்வையாளர்களைச் சடங்கின் ஒரு பகுதியாக மாற்றுகிறது.
ஆடல் மற்றும் பாடல் மூலம் வசன ஆதிக்கத்தைத் தகர்த்தல்: மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை முதன்மைப்படுத்தி, அறிவுக்கு வேலை தருகின்றன. ஆனால் கிழக்கிலங்கை அரங்கு ஆடல் மற்றும் பாடல் மூலம் உணர்வுகளோடும் ஆன்மாவோடும் உரையாடுகிறது. இது காலனிய அறிவுசார் மேலாதிக்கத்தை உடல் மொழி வழியாக எதிர்கொள்ளும் முறையாகும்.
யதார்த்தவாதத்திற்கு மாற்றான சடங்கு சார் அரங்கியல்: யதார்த்தவாதம் என்பது உலகை அப்படியே பிரதிபலிப்பதாகக் கூறிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மேலைநாட்டுப் பார்வையைத் திணிக்கிறது. இதற்கு மாற்றாக, சடங்கு சார் அரங்கு என்பது நிதர்சனத்தையும் குறியீடுகளையும் இணைத்து ஒரு அதி-யதார்த்த அனுபவத்தை வழங்குகிறது. மேடையைச் சடங்கு வெளியாக்க மாற்றுவதன் மூலம், கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு சமூகத்தின் இருப்புக்கான அடையாளம் என்பது நிலைநிறுத்தப்படுகிறது.
கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு
1.தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களின் எழுத்துருவாக்க உத்திகளை ஒப்பிடுதல்
கிழக்கிலங்கையின் நவீன நாடகப் பிரதிகளைப் பகுப்பாய்வு செய்யும்போது, அவை மேலைநாட்டு நாடகங்களின் கட்டமைப்பை முற்றாக நிராகரித்து, ‘மண் சார்ந்த அழகியலை’ எவ்வாறு கையாளுகின்றன என்பதை அறிய முடிகிறது.
பிரதிசார் ஒப்பீடு: உதாரணமாக, பேராசிரியர் சி. ஜெயசங்கரின் ‘கூத்து மீளுருவாக்க’ அடிப்படையிலான நாடகங்களையும், பிற நவீன நாடகங்களையும் ஒப்பிடும்போது, நிலம் மற்றும் நினைவு என்பன பொதுவான இழையாக ஓடுகின்றன. மேலைநாட்டு நாடகங்களில் காணப்படும் ‘சிக்கல்-உச்சம்-தீர்வு’ என்ற அமைப்பு முறைக்கு மாற்றாக, இங்கு ‘சடங்கு-ஆற்றுகை-கூட்டுணர்வு’ எனும் வட்டவடிவ அமைப்பு முறை கையாளப்படுகிறது.
மேற்கோள்களின் வழி பகுப்பாய்வு: நாடகப் பிரதிகளில் இடம்பெறும் ‘இந்த நிலம் எமது மூதாதையரின் மூச்சுக் காற்றைத் சுமந்து நிற்கிறது’ அல்லது ‘கூத்து என்பது வெறும் ஆட்டம் அல்ல, அது எமது இருப்புக்கான போர்’ போன்ற வசனங்கள், நிலத்தையும் சடங்கையும் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றுவதை உறுதிப்படுத்துகின்றன. இவை வெறும் வசனங்கள் அல்ல, காலனிய நீக்க அரசியலின் ‘உரிமைக் குரல்கள்’ ஆகும்.
2.காலனிய நீக்கச் சிந்தனையும் கலைஞனின் படைப்பாற்றல் விடுதலையும்
காலனிய நீக்கம் என்பது ஒரு கலைஞனைத் தளைப்படுத்தியிருந்த ‘அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து’ விடுவிக்கிறது.
அழகியல் விடுதலை: ஒரு கலைப் படைப்பு என்பது மேலைநாட்டாரால் அங்கீகரிக்கப்பட்ட யதார்த்தவாத முறையில் இருந்தால் மட்டுமே அது உயர்தரக் கலை என்ற போலி பிம்பத்தை காலனிய நீக்கச் சிந்தனை உடைக்கிறது. இது கலைஞனைத் தனது சொந்தப் பண்பாட்டு மூலதனமான கூத்து, வசந்தன் பாடல் மற்றும் நாட்டுப்புறக் கலைகளைத் தயக்கமின்றிப் பயன்படுத்தத் தூண்டுகிறது.
சுய- பிரதிநிதித்துவம்: ஒரு கலைஞன் தனது கதையைத் தனது சொந்த மொழியில், தனது நிலத்தின் குறியீடுகளைக் கொண்டு சொல்லும்போது அவனது படைப்பாற்றல் உச்சம் பெறுகிறது. நுகுகி வா தியாங்கோ (1986) குறிப்பிடுவது போல, மனதைக் காலனிய நீக்கம் செய்வது ஒரு கலைஞனுக்குத் தன்னாட்சியையும், தற்சார்பையும் வழங்குகிறது. இதுவே கிழக்கிலங்கை கலைஞர்களை உலகளாவிய அரங்கிற்கு மாற்றான ஒரு புதிய அழகியலை உருவாக்கத் தூண்டியுள்ளது.
3.சமூக மாற்றத்தில் இத்தகைய நாடகங்களின் தாக்கம்
காலனிய நீக்க நாடகங்கள் வெறும் கலை வெளிப்பாடுகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாகவும் செயல்படுகின்றன.
அடையாள மீட்பு: போரினாலும் இடப்பெயர்வினாலும் சிதைந்த ஒரு சமூகத்திற்கு, அவர்களின் சடங்குகளையும் நிலத்தையும் நாடகங்கள் வழி மீளக் காட்டுவது, அவர்களின் தொலைந்துபோன கூட்டு அடையாளத்தை மீட்க உதவுகிறது. இது சமூகத்தின் உளவியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
அதிகாரப் படிநிலைகளைத் தகர்த்தல்: குறிப்பாக ‘கூத்து மீளுருவாக்கம்’ போன்ற முயற்சிகள், கூத்துச் சமூகத்திற்குள் இருந்த சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கின. மரபு மாறாமல் பிற்போக்குத்தனங்கள் மாற்றப்பட்டபோது, அது சமூகத்தில் உள்ள விளிம்புநிலை மக்களுக்குக் கலை வழி அதிகாரமளிப்பதாக அமைந்தது.
மாற்று வரலாறு: அதிகாரபூர்வமான ஆவணங்களில் இடம்பெறாத சாமானிய மக்களின் வரலாற்றை நாடகங்கள் பதிவு செய்யும்போது, அது எதிர்காலத் தலைமுறைக்கான ஒரு ‘மாற்று வரலாற்று ஆவணமாக’ மாறுகிறது. இது மேலாதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்பட்ட பொய் வரலாறுகளைச் சமூகத் தளத்தில் முறியடிக்கிறது.
முடிவுரை
1.ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு
இவ்வாய்வானது கிழக்கிலங்கை நவீன நாடகச் சூழலில் ‘நிலம், நினைவு மற்றும் சடங்கு’ ஆகியவை வெறும் அழகியல் கூறுகளாக அன்றி, ஆழமான காலனிய நீக்க அரசியல் கருவிகளாகச் செயல்படுவதைக் கண்டறிந்துள்ளது. ஆய்வின் ஊடாக எட்டப்பட்ட முதன்மையான கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
அழகியல் தன்னாட்சி: கிழக்கிலங்கை அரங்கு மேலைநாட்டு யதார்த்தவாத மற்றும் நேர்க்கோட்டு கதைசொல்லல் முறைகளைத் தகர்த்து, கூத்து மற்றும் சடங்கு சார் அரங்கியல் மொழியை வெற்றிகரமாக முன்னிறுத்தியுள்ளது.
அறிதலியல் விடுதலை: ‘நிலம்’ என்பது வாழ்வாதாரமாகவும், ‘நினைவு’ என்பது மாற்று வரலாறாகவும், ‘சடங்கு’ என்பது கூட்டு மனசாட்சியைத் தூண்டும் கருவியாகவும் நாடக எழுத்துருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேலைநாட்டு நவீனத்துவத்தின் ‘அறிவுசார் மேலாதிக்கத்தை’ எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க உத்தியாக மாறியுள்ளது.
உள்-காலனிய நீக்கம்: காலனிய நீக்கம் என்பது புறச் சக்திகளை எதிர்ப்பதுடன் நின்றுவிடாமல், நமக்குள்ளே உறைந்து கிடக்கும் சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளைச் ‘சடங்கு மீளுருவாக்கம்’ ஊடாகக் களைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2.வருங்கால ஆய்வாளர்களுக்கான பரிந்துரைகள்
கிழக்கிலங்கை அரங்கச் சூழலில் காலனிய நீக்க ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. எதிர்கால ஆய்வாளர்கள் பின்வரும் திசைகளில் தங்கள் ஆய்வுகளை விரிவுபடுத்தலாம்:
ஒப்பீட்டு ஆய்வுகள்: கிழக்கிலங்கை அரங்குக்கும், பிற தென்னக (இந்தியா) அல்லது இலத்தீன் அமெரிக்க நாடுகளின் காலனிய நீக்க அரங்கச் செயல்பாடுகளுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
தொழில்நுட்பம் மற்றும் மரபு: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன மேடைத் தளவாடங்கள் எவ்வாறு மரபுவழிச் சடங்குச் சிதைவுகள் ஏற்படாமல் காலனிய நீக்க அரங்கிற்குப் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த ஆய்வு.
உடல் மொழிப் பகுப்பாய்வு: கூத்தின் ஆடல் முறைகள் மற்றும் சடங்குசார் உடல் அசைவுகள் காலனிய நீக்க அரசியலில் எவ்வாறு மொழியைக் கடந்த ஒரு கருத்தாடலை உருவாக்குகின்றன என்பதை ஆழமாக ஆராய்தல்.
உசாத்துணை
1.சிவத்தம்பி, கா. (1981). பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
2.சிவத்தம்பி, கா. (2005). ஈழத்தில் தமிழ் நாடகம். கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம்.
3.ஜெயசங்கர், சி. (2005). மக்களும் அரங்கும். மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, மட்டக்களப்பு.
4.மௌனகுரு, சி. (1998). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு.
5.வித்தியானந்தன், சு. (1971). தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை.
6.Boal, A. (1979). Theatre of the Oppressed. London: Pluto Press.
7.Fanon, F. (1961). The Wretched of the Earth. New York: Grove Press.
8.Mignolo, W. D. (2009). Epistemic Disobedience, Independent Thought and Decolonial Freedom. Theory, Culture & Society.
9.Quijano, A. (2000). Coloniality of Power, Eurocentrism, and Latin America. International Sociology.
10.Said, E. W. (1978). Orientalism. New York: Pantheon Books.
11.Thiong’o, N. W. (1986). Decolonising the Mind: The Politics of Language in African Literature. London: James Currey.
12.Turner, V. (1969). The Ritual Process: Structure and Anti-Structure. Chicago: Aldine Publishing.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
கலாநிதி அழகையா விமலராஜ்,
முதுநிலை விரிவுரையாளர்,
நடன நாடகத்துறை,
சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
Land Based Agriculture in Sangam Literature|Dr.S.Sathishkumar
Abstract
In the world, Life sustaining food, Self respecting dress and Safe place to stay are essential for for human life. These are basic requirments. Among these, food is essential not only for human being but also all living organism. The profession of producing food is called agriculture. Agriculture varies, according to nature of the soil. In this essay, we analyse the agricultural systems of “ofir geographical landscapes of Sangam age”
Key Words: Agriculture, Food, Dress, Shelter, Organisms.
“சங்க இலக்கியத்தில் நிலம்சார் வேளாண்மை”
ஆய்வுச்சுருக்கம்
உலகில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை உயிர்காக்கும் உணவு, மானம் காக்கும் உடை, மற்றும் பாதுகாப்புடன் வாழும் இருப்பிடமாகும். இவை அடிப்படைத் தேவைகள் என விளிக்கப்படுகின்றன. இவற்றுள், முதலாவதாக இடம்பெறும் உணவானது மனிதன் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. இந்த உணவை உற்பத்தி செய்யும் தொழிலே வேளாண்மை எனப்பட்டது. இந்த வேளாண்மை மண்ணின் தன்மைக்கேற்ப மாறுபட்டது. அவ்வகையில் சங்க காலத்தில் ஐவகை நிலங்களிலும் நடைபெற்ற வேளாண் முறைகள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிப்புச்சொற்கள்: வேளாண்மை, உணவு, உடை, இருப்பிடம், உயிரினங்கள்.
முன்னுரை
சங்க காலத்து மக்கள், தாம் வாழும் இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்பத் தமது வேளாண்மையை வகுத்துக்கொண்டனர். நிலத்தின் அடிப்படையிலும் அது சார்ந்து செய்யும் தொழிலின் அடிப்படையிலும் மக்கள் பகுக்கப்பட்டனர். அதற்கேற்ப அவர்களின் வாழ்வு இயற்கை சார்ந்ததாக அமைந்திருந்தது. இதன்மூலம் இடத்திற்கு ஏற்ப தொழில் செய்தால்தான் செய்யும் தொழிலைச் செம்மையாக எந்த இடர்ப்பாடுகளுமின்றிச் செய்யமுடியும். இடத்திற்கு ஒவ்வாத பணியை மேற்கொள்வது கடுமையான உழைப்பை ஏற்கும். மேலும் அதில் முழுமையான பயன் கிடைக்காதுஎன்பதையுணர்ந்துபழந்தமிழ் மக்கள் இடத்திற்கு ஏற்ப உழைப்பினை மேற்கொண்டனர். அவ்வகையில் சங்க இலக்கியத்தில்காணலாகும்நிலம்சார் வேளாண்மை பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
ஐவகைத்திணை
மலைகளும் குன்றுகளும் அவை சார்ந்த நிலங்களும் ‘குறிஞ்சி’ எனப்பட்டது. மலைகளை அடுத்து நீர் நில்லாது ஓடும் காட்டுப் பகுதிகளை ‘முல்லை’ என்று குறிப்பிடுவர். நீர் வளப்பம் நிறைந்து விளங்கி பசுமை மாறாமலிருக்கும் வயலும் அவை சார்ந்த பகுதிகளும் ‘மருதம்’ எனப்பட்டன. ஆறுகள் யாவும் கலந்து நிற்கும் பெருநீர்ப் பகுதியான கடலும்; கடல் சார்ந்த பகுதியையும் ‘நெய்தல்’ என்றனர். மழையின்மையால் தமது நிலையிலிருந்து மாறும் நிலப்பகுதி ‘பாலை’ எனப்பட்டது. இங்கு நீர்வளம் இன்மையால் இதை ஒரு நிலமாகப் பெருமளவில் பண்டைத்தமிழர் குறிப்பிடவில்லை. இதனை,
“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”(தொல்.பொருள்.அகத்..5)
என்ற தொல்காப்பியரின் கூற்றின்வழி அறியலாம். இந்தத் திணைகள் அனைத்தும் கவிஞர்கள் தாம் வாழ்ந்த இடம் மற்றும் காலம் என்ற அடிப்படைகளில் தமது கருத்துக்களைச் சொல்லுவதற்காகப் பயன்படுத்திக்கொண்ட குறியீடுகள் ஆகும். இதனை, “மனிதனின் உணர்வு நிலைகளைக் காலத்தோடு இணைத்தற்கும் நுணுகிய காரணம் உண்டு. எந்தெந்தக் காலங்களில் எத்தகைய உணர்வுகள் பெருகுமோ அக்காலங்களைக் குறிப்பிட்ட உணர்வுக்கான காலங்களாகப் பகுத்துள்ளனர். உணர்வு நிலையில் நின்று பார்க்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை குறியீடாகவே இருக்கின்றன” (திணை உணர்வும் பொருளும், ப.21) என்று வெ.பிரகாஷ் கூறும் கருத்தின்மூலம் அறியமுடிகிறது. சங்க இலக்கியத்திலுள்ள பாடல்களை இன்னின்ன திணையைச் சார்ந்தவை என்று தொல்காப்பியம் கூறும் முதல், கரு மற்றும் உரிப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டு அவை பயின்று வரும் பாடல்களை திணைவாரியாக பின்வந்த ஆய்வாளர்கள் பகுத்தனர். இவ்வண்ணம், புலவர்கள் சங்கப்பாடல்களில் இயல்பாக வேளாண்மை சார்ந்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை திணைவாரியாக, முதல், கரு மற்றும் உரிப்பொருளைக்கொண்டு பிரித்துள்ளனர். அவற்றைக்கொண்டு ஒவ்வொரு திணையிலும் நடைபெற்ற வேளாண்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.
குறிஞ்சி நில வேளாண்மை
குறிஞ்சி நிலத்தில் சிலம்பன், வெற்பன் ஆகியோர் தலைமக்களாகவும் குறவர், குறத்தியர் குடிமக்களாகவும் வாழ்ந்தனர். இவர்களில் பொருப்பன், சிலம்பன், வெற்பன் உள்ளிட்ட பெயர்களே மலை என்ற பொருளில் அமைந்துள்ளது. ‘சிலம்பு, பொருப்பு, வெற்பு’ ஆகிய சொற்கள் மலையைக் குறிக்கும் சொற்களாகும். மலையில் வாழ்வதால் இம்மக்களுக்கு மேற்கண்ட பெயர்கள் ஆகிவந்துள்ளன.நான்கு வகையான நிலங்களில் நடந்த வேளாண்மையில் குறிஞ்சி நில வேளாண்மையே தொன்மை வாய்ந்தது. இதனை, “குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது” (பழந்தமிழர் வேளாண்மை, ப.6) என்று கூறுவதால் அறியலாம். இந்நிலத்தில் தினை விதைத்தல், தினையைக் காத்தல், தினை அறுத்தல், கிழங்கு அகழ்தல், தேனெடுத்தல் போன்ற தொழில்கள் நிகழ்ந்துள்ளன. குறிஞ்சி நிலமக்கள் தம் உணவுக்காக வேட்டையாடுதலையும் மேற்கொண்டுள்ளனர். அது குறித்து,
“உடும்பு கொலீஇ, வரிநுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கொண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல” (நற்.59:1-3)
என்ற பாடல் கூறுகிறது. வேட்டையாடுதலானது வேளாண்மை வரலாற்றில் பழமையானது. குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுதல் இருந்தமையால் குறிஞ்சிநில வேளாண்மையே தொன்மையானது என்பது தெளிவாகிறது. மேலும், குறவர்கள் மலையில் தேனெடுத்ததை,
“அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப” (அகம்.322:12)
என்ற அடியின்மூலம் அறியலாம். இங்கு வேட்டையாடுதல், தேனெடுத்தல் மட்டுமின்றி வேளாண்மையும் நடந்துள்ளது. குறிஞ்சிநிலம் பாறைகள் மிகுந்துள்ள பகுதி என்பதால் அங்கு கலப்பை கொண்டு உழவுசெய்யவும், நன்செய் பயிர்கள் விளைவிக்கவும் இயலாது. உழுவதற்கு இங்கு கால்நடைகளும் வளர்க்கப்படவில்லை. ஆகவே, இங்கு ஏரினைக்கொண்டு உழாமல் பயிர்செய்துள்ளனர். இதனை,
“தொய்யாது வித்திய துளர்படு துடவை” (மலைபடு.122)
என்று நன்னன்சேய் நன்னனார் குறிப்பிடுகிறார். இங்கு மூங்கிலில் விளைந்த அரிசியும், ஐவன நெல்லும், தினையும் அதிகமாக விளைந்தன. மேலும் வரகு, எள், அவரை, சாமை போன்றவையும் இங்கு விளைந்தன. இதனை,
“கீழு மேலு மெஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகரிய,
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோட்பதமாக” (புறம்.120:8-11)
என்ற பாடலின்வழி அறியலாகிறது. இவ்வாறு குறிஞ்சி நிலத்தில் புன்செய் பயிர்களே விளைவிக்கப்பட்டுள்ளன என்பதையும் இது மலைப்பகுதியென்பதால் நிலத்தை உழாமல் பயிர் செய்தததையும் அறியமுடிகிறது.
முல்லை நில வேளாண்மை
முல்லை நிலத்தில் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் என்போர் தலைமக்களாகவும், ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், கோவலர், கோவித்தியர், பொதுவர், பொதுவியர் என்போர் குடிமக்களாகவும் வாழ்ந்தனர்.இங்கு ஆடு, மாடுமற்றும் எருமை மேய்த்தலே அதிகமாக நடைபெற்றது. இதனை, இங்குள்ள ஆயர், ஆய்ச்சியர் என்ற சில காரணப்பெயர்களின்மூலம் அறியலாம். இந்த ஆயர்கள் ஆடுமேய்ப்பவர்கள் மற்றும் மாடுமேய்ப்பவர்கள் என்று இரு வகையினர் இருந்தனர். இதனை,
“புல்லினத் தாயர் மகனேன், மற்றியான்.
ஒக்கும்மண்
புல்லினத் தாயனை நீயாயிற் குடஞ்சுட்டு
நல்லினத் தாயர் எமர்” (கலித்.113:8-10)
என்ற பாடலின்வழி தலைவன் ஆடு மேய்க்கும் ஆயராகவும், தலைவி மாடுமேய்க்கும் ஆயராகவும் இருந்தது அறியலாகிறது. இவர்களைவிட எருமை மேய்ப்போர் சிறந்தவராகக் கருதப்பட்டனர் என்பதை,
“கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஓரான்” (மேலது.103:33)
என்ற அடி சுட்டுவதைக்காணலாம்.இவர்கள் வாழ்ந்த குடில்கள் வரகுக்கயிற்றால் வேயப்பட்டும் ஆட்டுக்கிடாயின் தோல் பாயலாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த இல்லத்தின் முற்றத்தில் முளைகள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நீண்ட தாம்புக் கயிறுகள் இருந்தன. அவை, ஆநிரைகளைக் கட்டிவைக்கப் பயன்பட்டன என்பதை,
“கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுதாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்,
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்” (பெரும்.150-154)
என்ற அடிகள் அறிவிப்பதால் இவர்களின் வாழ்க்கை ஆநிரை சார்ந்தே இருந்தது என்பது புலப்படுகிறது. ஆகவே, இவர்கள் ஆநிரை சார்ந்த உணவுகளை உட்கொண்டதுடன் விற்பனையும் செய்தனர். இதனை, “முல்லை நிலத்தில் ஆடு, மாடு, எருமைகள் வளர்க்கப்பட்டன. இதுவே முதன்மையான தொழிலாக நடைபெற்றது. பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதுடன் விற்பனையும் செய்தனர்.” (சங்ககால வேளாண்மை, ப.181) என்று இரா.மனோகரன் குறிப்பிடுவதால் அறியலாகிறது. எனினும் இங்கு ஆநிரைகளை மேய்த்தலுடன் நிலத்தை உழுது வேளாண்மையும் நடந்துள்ளதை,
“பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்” (அகம்.262:2)
என்ற அடி சுட்டுகிறது. மேலும், இங்கு வரகு, கேழ்வரகு, அவரை போன்ற பயிர்கள் வேளாண்மைசெய்யப்பட்டுள்ளன. இங்கும் மழையை எதிர்நோக்கியே விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதனை,
“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகள அவரையொடு
இந்நான் கல்லது உணாவு மில்லை” (புறம்.335:4-6)
என்ற பாடல் கூறுவதால் அறியலாம்.இவர்தம் வாழ்வை, “முல்லை நிலத்து மக்களின் வாழ்க்கை குறிஞ்சி நிலத்து மக்களின் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது” (பழங்காலத் தமிழர் வாணிகம், ப.4) என்று மயிலை.சீனி வேங்கடசாமி பதிவிட்டுள்ளார். முல்லைநில மக்கள் குறிஞ்சி நிலமக்களைவிட அறத்திலும், உணவிலும் தன்னிறைவு பெறுவதிலும் உயர்ந்தநிலை அடைந்திருந்ததை அவர்கள் ஆநிரை மேய்த்தல் மற்றும் பயிர்செய்தல் என இரு தொழில்களை மேற்கொண்டதிலிருந்து அறியமுடிகிறது.இவர்கள் குறிஞ்சிநில மக்களைவிட பொருளாதார நிலையில் உயர்ந்து வாழ்ந்துள்ளனர். விருந்தோம்பல் என்பது அனைவராலும் செய்யக் கூடியதுதான். எனினும் வேளையற்ற வேளையில் விருந்து வந்தால் விருந்தினரை ஓம்ப, வளம் அதிகம் தேவைப்படும். அவ்வகையில், எதிர்நோக்கா நேரத்தில் முல்லை நிலமக்கள் விருந்தினரைப் போற்றுவதைக் கற்பாகக் கருதினர் என்பதை,
“அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பு” (நற்.142:8,9)
என்ற அடிகள் விளக்கக் காணலாம். இவ்வாறு ஆநிரை மேய்த்தலுடன் புன்செய் வேளாண்மை செய்தமையால் முல்லைநில மக்களின் வாழ்வானது குறிஞ்சிநில மக்களைவிட வளம்மிக்கதாக இருந்துள்ளது எனலாம்.
மருத நில வேளாண்மை
மருத நிலத்தில் ஊரன், மகிழ்நன் போன்ற பெயர்களில் தலைமக்களும் களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்என்ற குடிமக்களும் வாழ்ந்தனர். உழவர், உழத்தியர் என்ற பெயர்கள் இவர்கள் மேற்கொள்ளும் உழவுத்தொழிலின்மூலம் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. ‘உழத்தல்’ என்பதற்கு ‘துன்பப்படுதல்’ என்று பொருள். பல துன்பங்களை அடைந்து செய்யும் தொழில் என்பதால் உழவு என்றும் அதனைச் செய்வோர் உழவர் என்றும் குறிப்பிடப்பட்டனர்.மருதநில மக்கள் வேளாண்மைத் தொழிலையே உயிர்த்தொழிலாக கொண்டுள்ளனர்.இந்நிலத்தை உழுது பண்படுத்தி வேளாண்மை செய்துள்ளமையைப் பின்வரும் பெரும்பாணாற்றுப்பாடல் அடிகள் எடுத்தியம்புகின்றன.
“கார் ஏறு பொருத கண்அகன் செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்” (பெரும்,210-211)
கலப்பை முல்லை நிலத்தினை விட, மருத நிலத்திலேதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முல்லை நிலத்தில் கலப்பை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி என்பதால் எந்த இடர்ப்பாடுமின்றி தொடர்ந்து உழ இயலாது.ஆனால், மருத நிலத்தில் நன்கு உழ இயலும். இங்கு வேளாண்மை செய்து விளைந்த செந்நெல், வெண்ணெல் ஆகியவை இன்றியமையா உணவாக இருந்தன. மேலும் இங்கு கிடைத்த மீன், நண்டு போன்றவற்றையும் இந்நில மக்கள் உணவாக உட்கொண்டுள்ளனர்.மருதநிலத்தின் சிறப்பை, “மருத நிலத்தில்தான் தமிழரின் நாகரிகமும், பண்பாடும் வளம்பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருதநிலத்தில் செம்மையாக செழித்து வளர்ந்தன” (பழங்காலத் தமிழர் வாணிகம்,ப.5) என்று மயிலை. சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். மருதநிலம் என்பது குறிஞ்சிநிலத்தில் பெய்த மழை முல்லைவழியே ஓடிவந்து நடந்து செல்வதைப்போல் நீர்வளம் சேர்ப்பதாகும். இந்நிலம் குறிஞ்சி நிலத்தைப் போன்ற கடினமான நில அமைப்போ, முல்லை நிலத்தைப் போன்ற காடான பகுதியோ அல்ல. ஆகவே, பாறையை உழ முடியாத துன்பமோ, காட்டை எரித்துப் பண்படுத்தவேண்டியச் சூழலோ நிலவவில்லை. அதனால் பயிர்செய்தல் செம்மையாக நடைபெற்றுள்ளது.
நெய்தல் நில வேளாண்மை
நெய்தல் நிலத்தில் துறைவன், சேர்ப்பன், கொண்கன், புலம்பன், மெல்லன் என்னும் பெயரையுடைய தலைமக்களும் பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், திமிலர் மற்றும் நனையர் என்னும் பெயரையுடைய குடிமக்களும் வாழ்ந்தனர். கடலின் துறையைச் சார்ந்து இவர்தம் வாழ்க்கை அமைந்ததால் ‘துறைவன்’ என்ற பெயர் காரணப்பெயராக உள்ளது.இந்நிலம் கடலும் கடல்சார்ந்த பகுதியும் ஆதலால் மக்கள் மீன்பிடிப்பதையே முதன்மைத் தொழிலாகவும், உப்பளங்களில் உப்பு விளைப்பதைத் துணைத் தொழிலாகவும் கொண்டனர். இங்கு இன்றியமையா உணவு மீன் ஆகும்.மேலும், இவர்கள் கருவாட்டோடு அரிசியை நீரில் கழுவாமல் சமைத்த உணவை உண்டுள்ளனர். இதனை,
“வாராது அட்ட, வாடுஊண், புழுக்கல்” (பெரும்.100)
என்ற அடி அறிவிக்கக் காணலாம். மீனானது எப்போதும் கடலில் கிடைப்பதாகவே இருந்தாலும் மழை மற்றும் புயல்கள் ஏற்படும்போது மீன்பிடித்தல் இயலாது. ஆகவே, நெய்தல் நில மக்களுக்கு மீன்கள் மிகுதியாகக் கிடைக்கும் காலத்தில் அவற்றைத் தேவைக்கு அளவாகப் பயன்படுத்திக் கொண்டு மிகுதியாகயிருக்கும் மீன்களை அங்கு கிடைக்கும் உப்பைப் பயன்படுத்திக் கருவாடாக மாற்றி எல்லாக் காலத்திலும் பயன்படும் வகையில் சேமித்துவைத்து அவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர். எனினும் இங்கு வேளாண்மையும் நடந்துள்ளது என்பதை,
“சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின்
நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
மேழகத் தகரோ டெகினங் கொட்கும்” (பெரும்.324-326)
என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெய்தல் நிலத்தைப் பற்றிக் கூறுமிடத்து, நெல் விளைந்ததைப் பற்றியும், அதற்குப் பயன்பட்ட எருதுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் வீதிகளில் இருந்ததையும் குறிப்பிடுகிறார். இதன்மூலம் இந்நிலத்தில் வேளாண்மை நடந்ததை அறியமுடிகிறது.மேலும், இங்கு உப்பு அதிக அளவில் விளைவிக்கப்பட்டமையால் வேறு நிலத்திலுள்ள மக்களுக்கு உப்பைக் கொடுத்து வேறு பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்வகையில் நெய்தல் நிலத்தில் வேளாண்மையும், உப்பு விளைவித்தலும்; நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.
பாலை நிலம்
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாவதைப் போல, பிற நிலங்களும் இயற்கையின் மாற்றங்களால் பாலை நிலமாக மாறுவதற்குவாய்ப்புள்ளது. இந்நிலத்தில் எயினர், எயிற்றியர் என்ற தலைமக்களும் மறவர், மறத்தியர் என்ற குடிமக்களும் வாழ்ந்தனர். இவர்தம் முதன்மைத்தொழில் வழிப்பறி செய்தலாகும். மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்ற பொருள் உண்டு. உடலில் வீரம் உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு மறவர் என்ற பெயர் காரணப் பெயராயிற்று. இவர்கள் பிறர் பொருட்களைக் கொள்ளையடித்ததால் ‘ஆறலைக்கள்வர்’ என்றும் அழைக்கப்பட்டனர். ஆறு என்றால் வழி; அந்த வழியில் கொள்ளையடிப்பதால் இவர்களுக்கு இப்பெயர் வந்துள்ளது.
“வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செங்கணை தொடுத்த செயிர் நோக் காடவர்” (நற்.298:1,2)
என்ற அடிகளில் ஆயர்களின் ஆநிரைகளை ஆறலைக்கள்வர் கவர்ந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மேட்டுப் பகுதியான நிலத்தில் விளைந்த ஈச்சம் விதை போன்ற பெரிய அளவிலான நெல்லரிசிச் சோற்றை உண்டதை,
“களர் வளர்ஈந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்விழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச் சூல்……..” (பெரும்.130-132)
என்ற அடிகள் எடுத்தியம்புகின்றன. இதன்மூலம் பாலை நிலத்து மேட்டுப்பகுதியில் நெல் விளைந்ததை அறிய முடிகிறது. இவ்வாறுபாலை நிலத்து மக்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டதை, “பாலை நில மக்களும் மற்ற நிலத்தவரைப் போல், தங்களது நிலங்களில் கிடைத்த உணவுப் பொருட்களையே உண்டு வாழ்ந்துள்ளனர்” (சங்க இலக்கியத்தில் உணவு முறைகளும் மருத்துவப்பயன்பாடுகளும், ப.24) என இர.செங்கமலச் செல்வி குறிப்பிடுவதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.இதன்மூலம் நெய்தல் நிலமக்கள் கொள்ளையடிப்பதை மட்டுமே செய்யாமல், தங்கள் நிலத்தில் கிடைத்த பொருட்களையும்பயன்படுத்தினர் என்பதை அறியவியலுகிறது. ஆகவே, பாலை நிலத்து மக்கள் விளைவித்து உண்டு வாழவே கருதியுள்ளனர் என்பதை அவர்கள் மேட்டுப்பகுதிநிலத்தில் வேளாண்மை செய்ததைக் கொண்டே அறிய முடிகிறது. ஆனால் காலநிலை, பருவமழை, நிலத்தின் இயல்பு போன்ற காரணிகளால் தமக்குத் தேவையான முழுமையான உணவைத் தயாரிக்க முடியாத காரணத்தாலேயே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்இங்கு புலனாகிறது. ஐவகை நிலத்திலும் நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்கள் விளைந்துள்ளன. இந்த நிலங்களில் நடந்த வேளாண் முறைகள் தற்காலத்திலும் பல இடங்களில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. விளைவித்தலே மனித வளர்ச்சிக்கு ஆதாரமாகும். இதனை, “உற்பத்திச் சக்திகளின் மீது ஆதிக்கம் பெறுவது தான் மனித குல முன்னேற்றத்தின் ஊற்றுக்கண்களாகும்” (சங்க இலக்கியத்தில் வேளாண்மை, ப.14) என்று மார்க்ஸ் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். ஆகவே, நிலங்களில் விளையும் விளைச்சலே மானுட வளர்ச்சிக்கு அடிப்படை என்பது தெளிவாகிறது.அவ்வகையில் பாலையிலும் அந்நிலத்தின் தன்மைக்கேற்ப வேளாண்மை நடந்துள்ளமை புலப்படுகிறது.
முடிவுரை
குறிஞ்சி நிலத்தில் புன்செய் பயிர்களே விளைவிக்கப்பட்டுள்ளன. இது மலைப்பகுதியென்பதால் நிலத்தை உழாமல் பயிர் செய்துள்ளனர். முல்லைநில மக்கள் ஆநிரை மேய்த்தலுடன் புன்செய் வேளாண்மை மேற்கொண்டதையும், மருதநிலத்தில்பயிர்செய்தல் செம்மையாக நடைபெற்றுள்ளதையும், நெய்தல் நிலத்தில் வேளாண்மையாகஉப்பு விளைவித்தல்நிகழ்ந்துள்ளதையும்பாலைநிலமக்கள்உணவைத் தயாரிக்க முடியாத காரணத்தாலேயே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், விளைச்சலே மானுட வளர்ச்சிக்கு அடிப்படை என்பது இங்குதெளிவாகிறது.
துணைநூல் பட்டியல்
1.கலித்தொகை– விசுவநாதன் அ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011
2.நற்றிணை– பாலசுப்பிரணியன் கு.வெ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
3.புறநானூறு– பாலசுப்பிரணியன் கு.வெ.(உ.ஆ)விசுவநாதன் அ.(உ.ஆ)நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
4.அகநானூறு– செயபால் இரா (உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
5.தமிழிலக்கியத்தில் வேளாண்மை அறிவியல்– செயராமன் ந.வீ,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 028.முதற்பதிப்பு 1998.
6.சங்ககால வேளாண்மை– மனோகரன்.இரா, காவ்யா வெளியீடு, சென்னை-600 024.முதற்பதிப்பு 2017.
7.சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம்– மாதையன்.பெ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 098.முதற்பதிப்பு 2004.
8.சங்க இலக்கியத்தில் உணவு முறைகள்– செங்கமலச் செல்வி.இர-முனைவர் பட்ட ஆய்வேடு, எம்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி-642 001. 2017
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. சதீஸ்குமார்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
மதுரவாயில், சென்னை – 600 095.
Ancient literature in the context of Tamil literature|Dr P.Gokulnath
Abstract
In traditional, ancient stories, mythological literature was composed with a rich poetic structure, incorporating truths essential to society. Myths serve as a powerful means to convey that upholding righteousness in human life is the foremost principle. The incorporation of theological elements as the central theme can be said to have contributed to the enhancement of religious devotion among the people. Myths greatly helped in the flourishing of divinity, equality, and humanism. The mythological literature, composed with profound themes, has emerged in three categories: the glory of God, the sacred places where God resides, and the history of devotees. Among these three categories, myths about the sacred places where God graciously resides were the ones that arose in greater numbers in later periods. The local legends that arose in connection with sacred sites describe the glories of the deity, the place, and the sacred waters, as well as worship philosophies, moral principles, ways for beings to attain spiritual elevation, grammatical richness, the supremacy of the Supreme Being, and extraordinary valor. This article aims to examine and explain the initial stages and developmental trends of these ancient literary works, which are rich in literary merit, inspire a sense of morality in people’s lives, and guide them towards righteousness.
Key Words : Myths – Puranas – Deity – Sacred site – Holy water – Virtues – Fundamental principles – Tradition – Upanishad – Scripture – Group – Logic.
“தமிழிலக்கியப் பரப்பில் தொன்ம இலக்கியங்கள்”
ஆய்வுச் சுருக்கம்
மரபு வழிவந்த பழமையான கதைகளில் சமூகத்திற்குத் தேவையான மெய்மைகளைப் புகுத்தி செறிவான யாப்புக் கட்டமைப்போடு தொன்ம இலக்கியங்கள் பாடப்பட்டன. மானுட வாழ்வில் அறத்தைப் பேணுவதே தலையாய நெறி என்பதை உணர்த்திட தொன்மங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இறையியல் சார்ந்த கூறுகளைக் கருவாக அமைத்தமை மக்களிடையே பக்தியுணர்வு மேம்படக் காரணமாகவும் அமைந்தது எனலாம். இறையாண்மை, சமத்துவம், மானுடப்பண்பு எனும் மூன்றும் சிறக்க தொன்மங்கள் பெரிதும் உதவின. உறுதிப் பொருள்கள் அமையப் பாடப் பெற்ற தொன்ம இலக்கியங்கள் இறைமாண்பு, இறைவன் வீற்றிருக்கும் தலங்கள், அடியார் வரலாறு என்ற மூவகைப் பகுப்பில் தோன்றியுள்ளன. இம்மூ வகைப் பகுப்பினுள் இறைவன் அருளார்ந்து வீற்றிருக்கும் தலங்கள் மீதான தொன்மங்களே பிற்காலத்தில் அதிக அளவில் எழுந்தன. தலம் சார்ந்து எழுந்த தலபுராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புகள் வழிபாட்டுத் தத்துவங்கள், அறநெறிகள், உயிர்கள் மேன்மை அடைவதற்கு உண்டான வழிவகைகள், இலக்கணச் செறிவு, பரம்பொருளின் பரத்துவம், செயற்கரிய பராக்கிரமம் முதலியவை கூறப்பட்டுள்ளன. அத்தகைய இலக்கியச் செழுமையுடன் திகழ்ந்து மக்களின் வாழ்வில் ஒழுக்கவுணர்வைத் தூண்டுவதோடு அறநெறிக்கு இட்டுச் செல்லும் இத்தொன்ம இலக்கியங்களின் தொடக்க நிலை வளர்ச்சிப் போக்கு முதலியவற்றை ஆராய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
திறவுச் சொற்கள் : தொன்மங்கள் – புராணம் – மூர்த்தி – தலம் – தீர்த்தம் – அறங்கள் – உறுதிப்பொருள்கள் – மரபு – உபநிடதம் – சாத்திரம் – குழு – தருக்கம்.
தொன்மம் விளக்கம்
தொன்மம் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இணையாக ஆங்கிலத்தில் ’மித்’ (Myth) என்ற சொல் வழங்கப்படுகிறது. இச்சொல் தொடக்க காலத்தில் செய்தி, மொழி, உபதேசம் எனும் பல பொருள்களில் வழங்கி வந்தவுடன் நிகழ்ச்சி, வரலாறு என்ற பொருள்களையும் அது தந்தது. அரிஸ்டாட்டில் தமது கவிதையியலில், மிதாசு (Mythos) என்ற சொல்லை, ’கதைக்கரு’ என்னும் பொருளில் அதற்கு எதிர்ப்பதமாக லோகோசு (Logos) என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். இப்பொழுது தொன்மம் எனும் சொல் பல துறைகளில் வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதவியல், உளவியல், மத ஒப்பியல், சமூகவியல், இலக்கியம், நாட்டுப்புறக்கலை, நுண்கலைகள் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் தொன்மம் பேசப்படுகின்றன. (பேரா.க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு – பக் .5) என்பர் அறிஞர். ”தொன்மம் எனில் அது மிகப்பழைய மரபு வழி வந்த கதை; இக்கதையின் ஆசிரியர் யார் என்பதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல இயலாது என்றும்; இயற்கை இயைந்த ஆற்றல்களுக்கு உட்பட்டு இவ்வுலகம் ஏன் இங்கனம் இயங்குகிறது; இந்நிலவுலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஏன் இவ்வாறு நடக்கின்றன என்பதை இச்சொல் விளக்குகின்றது” (கதிர், மகாதேவன், தொன்மம் பக்.34-35) என்பது தொன்மம் குறித்து ஆராய்ந்த அறிஞரின் கருத்தாகும்.
தொன்மத்திற்கு அகராதிகள் தரும் விளக்கம்
தொன்மம் என்பதன் வேர்ச்சொல் தொன்மை. இச்சொல் பழமை எனும் பொருளை தருகிறது. இதற்குப் பழமை, பாவின் எண்வகை வனப்பின் ஒன்று (கழகத்தமிழகராதி, பக்.581) என்றும்; பழைமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது (அபிதான சிந்தாமணி, பக்.902) என்றும்; பழங்கதை, புராணம் ( தமிழ் – தமிழ் அகரமுதலி , பக். 627) என்றும்; பழமை, உரைவிரவி வரப் பழைய கதைப் பொருளாகச் செய்யப்படுவது ( செந்தமிழ் அகராதி, பக்.391) என்றும் அகராதிகள் பொருள் விளக்கம் தந்துள்ளன. மேற்கண்ட விளக்கங்கள் தொன்மம் பழங்கதை என்பதையும் பழங்காலம் தொட்டு வழங்கும் புகழ்பெற்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் இலக்கியங்கள் என்பதையும் அறிய முடிகிறது.
தொன்மமும் புராணமும்
புராணம் என்ற பெயராலும் தொன்மம் வழங்கப்படுகிறது. புராணம் என்பது வடசொல். இது ’புரா – நவ’ என்ற இரு அடிச்சொற்களில் இருந்து தோன்றியது. இதன் பொருள் பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழ்வது என்பதாகும். ”நம்ப முடியாத கூறுகள் அடங்கிய பழங்கதைகளின் தொகுதியே புராண மரபுக் கதைகள். நடப்பியல் அற்புத நவிற்சியாக மாறி இயற்கையிகந்தக் கூறுகளைப் பெற்றுச் சமய நம்பிக்கையில் கால்கொண்டு சடங்குமுறைகளில் வெளிப்பட்டுத் தொன்மை வடிவெடுக்கிறது” (வையை மலர், மலர்-3, பக்.412) என்ற கருத்தின் வாயிலாகத் தொன்மையும் புராணமும் சொல்லடிப்படையில் வேறுபட்டாலும் பொருளால் ஒன்றாவது புலனாகிறது.
தொல்காப்பியம் கூறும் தொன்மம்
செய்யுளுக்குரிய எண்வகை வனப்புகளுள் ஒன்றாகத் தொன்மை என்பதனை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
”தொன்மை தானே சொல்லுங் காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே”. ( தொல்.பொ.நூ.எ.538)
என்ற நூற்பாவின் மூலமாக தொன்மையாவது உரையோடு பொருந்தி வந்த பழமையாகிய பொருள் மேல் வருவது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்மொழியில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தொன்மக்கதைகள் வழங்கி வந்ததையும் அவை இலக்கியங்களாகப் படைக்கப்பட்டிருந்ததையும் உணரமுடிகிறது.
இலக்கியமும் துன்பமும்
இலக்கியத்தில் தொன்மங்கள் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்மங்கள் இலக்கியத்திற்குப் பாடுபொருளாகவும் கருத்து விளக்க உத்தி முறைகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளன. சங்கம், அறம், பக்தி, காப்பியம், சிற்றிலக்கியம், புதுக்கவிதை என எவ்வகை இலக்கியமாக இருப்பினும் அவற்றுள் தொன்மத்தின் பங்களிப்பைக் காணமுடிகிறது. புராணக்கதைகளில் உள்ள பெயர்களைக் குறியீடுகள் போல இக்கால கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் கையாண்டு வருகின்றனர்.
புராணம் பொருள் விளக்கம்
புராணம் என்பது வடமொழிச் சொல். இச்சொல்லிற்குப் பழமை, பழங்கதை, வியாசரால் சொல்லப்பட்ட புனித நூல்கள் எனும் பொருளில் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. ( தமிழ் லெக்சிகன்- தொகுதி-5, பக். 2772) சதுரகராதி ’புராணம்’ என்ற சொல்லுக்கு ’கதை, காந்தம் முதலிய புராண பழமை’ என்று விளக்கம் தருகின்றது. ( வீரமாமுனிவர் – சதுரகராதி, பக்.161) என்பது புராணம் பற்றி அகராதிகள் தரும் விளக்கமாகும்.
புராணத்தின் பழமை
அதர்வண வேதகாலத்திலேயே புராண நூல்கள் சிறந்த இலக்கியங்களாக விளங்கியது. புராணம் என்னும் சொல் உபநிடதங்களிலும் சாத்திரங்களிலும் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் புராண செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது புராணத்தின் பழமை நன்கு புலனாகிறது.
வேத காலத்தில் புராணம்
புராணம் நான்கு வேதங்களுக்கு அடுத்த நிலையாக ஐந்தாவது வேதமாகக் கருதப்படுகிறது வேத காலத்தில் புராணம் பழைய கதைகளாக இருந்தனவேயன்றி நூல்களாக இருக்கவில்லை. இந்திய நாட்டுப் பண்டை இலக்கியம் வேதநூல் எனவும் இதிகாசப் புராண நூல் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. கி.மு நான்காம் நூற்றாண்டில் கௌடிலியர் தமது அர்த்த சாத்திரத்தில் ’அரசகுமாரர்கள் முக்கியமாகக் கற்க வேண்டிய நூல்களுள் புராணமும் ஒன்று’ என கூறியுள்ளார். ( கலைக்களஞ்சியம், புராணம் தொகுதி -7, பக்.436)
புராணங்கள் தோன்றி வளர்ந்த நிலை
புராணங்கள் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளை கடந்து வந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே தெய்வ வணக்கப் பாடல்களும் இயற்கையைத் தம் வயப்படுத்தும் மந்திரங்களும் இனக்குழுக்களின் வரலாறுகளும் மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வந்தன. தொடக்க காலத்தில் சமுதாய உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகள் காலப்போக்கில் குழு தலைவர்களின் கதைகளாக மாறி வளர்ந்தன. பிற்காலத்தில் குழுக்களில் பிரிவு ஏற்பட்டுச் செல்வம் காரணமாக மக்களிடையே உயர்வு தாழ்வுகள் தோன்றின. இந்நிலையில் குலங்கள் ஒன்று சேரும்போது, வென்று அடைக்கப்பட்டு அரசுகளோடு இணையும் போதும் பழங்காலம் பற்றிய புராணங்கள் தோன்றின. தெய்வங்களைப் பற்றியும் வமிசங்களைப் பற்றியும் பல கதைகளைக் குழுத் தலைவர்களாகவும் அரசர்களாகவும் பௌராணியர்கள் படைத்தார்கள் இக்கருத்துப் புராணங்கள் தோன்றிய சூழலை விளக்குவதாக அமைகிறது.
புராணங்களில் காணப்படும் இலக்கியக் கொள்கை
புராணங்கள் என்பன உலகின் தோற்றமும் அதன் அழிவும் புதுப்பித்தலும் தெய்வ மரபும் முனிவர் குலமும் மனுவந்தரம் எனும் மனுக்களின் ஆட்சியும் சூரிய சந்திர அரச குலங்களின் தோற்றமும் (வமிசாமரபு) ஆகிய ஐந்தையும் விளக்கிக் கூற வேண்டும் என்பது வடநூற் கருத்தாகும். சிருட்டி, மனுவந்தரம், அரசமரபு, தலம், தீர்த்தம், விரதம், மந்தரம், யோகம், நியமம், பக்தி, ஞானம், கர்மம், துதி, அர்ச்சனைக்குரிய அட்டோத்திர சகத்திரளாமம், தருமம், சிவன், திருமால் முதலிய தேவன் அவதார லீலை (திருவிளையாடல்) முதலியவை எல்லாப் புராணங்களிலும் பொதுவாகக் காணப்படும். (கலைக்களஞ்சியம் – புராணம் தொகுதி-7, பக் – 436,437) என்பர்.
புராண இலக்கணம்
புராணம் என்பது கதை, காந்தம் முதலிய புராணம், இது கலைஞானம், அறுபத்து நான்கில் ஒன்று, பழங்கதை, பூருவம், உலகத்தின் தோற்றக் கேடுகளும் பாரம்பரியங்களும் மந்வத்ந்தரங்களும் பரம்பரைக் கதைகளும் ஆகிய இவைந்தையும் கூறலால் பஞ்சலட்சணம் எனப்படுவது. (தமிழ் மொழி அகராதி – பக்.1064) என்று அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.
புராணங்களின் வகைகள்
வடமொழியில் புராணங்கள் மூன்று பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
1.மகா புராணங்கள்
2.உப புராணங்கள்
3.அதி புராணங்கள்
என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் பதினெட்டு எனும் எண்ணிக்கையில் உள்ளன. இவையனைத்தும் வியாசரால் தொகுக்கப்பட்டன என்பர். மகா புராணங்கள் பதினெட்டு என்பதை திவாகர நிகண்டு,
”மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
மற்பம் வைணவம் பாகவதம் சைவம்
இலிங்கப் பௌடிகம் நாரதம் காருடம்
பிரம கைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம்
பிரம்மாண்டம் ஆக்கிநேயம் பிரம்மம் என்றிவை
பாற்படு பதினென் புராணமாகும்.” ( தி.நி.2453,பக்.189)
எனவரும் நூற்பாவில் உரைக்கிறது.
புராணக் கதைகள்
ஒரு கருத்தைச் சொல்லுகின்ற போது அதை எளிமையாகக் கதை வடிவில் கூறுவது பழங்கால மரபு. அவ்வாறு கூறினால் அக்கருத்தை அனைவரும் எளிமையாக விளங்கிக் கொள்ள இயலும். புராணக் கதைகள் கடவுளரையும் அடியவரையும் அவர்கள் செயல்களையும் பொருளாக உடைய பழங்கதைகளையே கூறுகின்றன. புராணக் கதைகள் இடம், காலம் முதலிய எல்லைகளைக் கடந்தும் விரிந்தும் வரும். கதை நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரிவு அடைந்தாலும் ஒரு கதைக்கு மறுகதை பிறப்பதாலும் புராணக் கதைகள் விரிந்து பெருகும் இயல்புடையன.
புராணத்தினால் ஏற்படும் நன்மை
புராணம் படித்ததால் மக்களிடையே நல்லொழுக்கம், ஆசாரம், தெய்வபக்தி, கூட்டுறவு, நாகரீகம், வாழ்க்கையில் நிறைவு, இன்பம், பொதுஅமைதி, தன்னலமின்மை, தன்னம்பிக்கை முதலியன வளர்ந்து வந்தன என்று (கலைக்களஞ்சியம் தொகுதி 7 பக்.438) மு.அருணாசலம் குறிப்பிடுகிறார். பாமர மக்களுக்கு புராணங்கள் எளிய முறையில் சமய உண்மைகளை எடுத்துரைக்கின்றன என்பது இதனால் அறியப்படுகிறது.
தமிழ் புராணங்களின் தொன்மை
தமிழ் இலக்கணங்களில் புராணம் என்பதற்கு நேர்முகமாக இலக்கணம் கூறப்படவில்லை. அதனால், வடமொழியிலுள்ள புராண இலக்கணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் தமிழில் புராணங்களுக்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியத்தில்,
“…………..
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனப்
பொருந்தக் கூறிய…….” ( தொல்.பொ.செய்யுளியல் நூ.எ.310)
எனக் கூறப்பட்ட எண்வகை வனப்புகளுள் ’தொன்மை’ என்னும் ’வனப்பு’ நூலே பிற்காலத்தில் புராணங்கள் எனப்பட்டன. ’தொன்மை’ எனினும் ’புராணம்’ எனினும் ஒக்கும். தொன்மை தூய தமிழ்ச்சொல் புராணம் வடசொல் இத்துனையே வேற்றுமை இரண்டிற்கும் பொருள் ஒன்றேயாம்
”அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணிய தாளமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருமால்”
(சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை, பா.அ.179-181)
எனும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார், ’அறவோர் பள்ளி முதலிய எல்லாவற்றிலும் தர்மம் போதித்தலும் புராணம் படித்தலும் பிறவுமாகிய செயல்கள் நடந்தன என்று விளக்கம் அளிக்கிறார். மேலும், புராணம் என்பது தகைமை சான்ற வரலாறு என்பதைத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் தசபுராணம், லிங்க புராணம் ஆகிய பதிகப் பாடல்களின் வழி எடுத்துரைக்கிறார். தசபுராணம், சிவபெருமான் ஆலகால விடமுண்ட வரலாற்றையும், லிங்கபுராணம் திருமாலும், பிரம்மனும் இறைவனது அடிமுடி தேடிய வரலாற்றையும் கூறுகின்றன. திருமூலர் இலிங்க புராணம் என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார். அதில் சிவபெருமானின் ஐந்து பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார்.. மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் சிவபுராணம் குறிப்பிடத்தக்கது. இது சிவனது அனாதி முறைமையாகிய பழமை எனப்படுகிறது.
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை” ( திருவாசகம் – பா.எ.19)
என்ற அடியும் சுட்டதக்கது. எனவே, தமிழிலும் மிகப் பழங்காலந்தொட்டே புராணம் என்று சொல்லத்தக்க வகையில் நூல்கள் இருந்துள்ளன என்பது புலனாகிறது.
தமிழ் புராணங்கள்
பழைய புராணங்கள் கால மாற்றத்தில் கிடைக்காமல் அழிந்துவிட்டன. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன 12 ஆம் நூற்றாண்டில் அட்டாதசபுராணம் கன்னிவன புராணம் என்று இரண்டு புராணங்கள் எழுந்தன என்பதைச் சாசனங்கள் காட்டுகின்றன. கிடைக்கின்ற புராணங்களில் சேக்கிழார் பாடிய ’பெரியபுராணமே’ முதல் புராணமும் மிகவும் பழமையானதுவும் ஆகும்.( மு அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு 14ஆம் நூற்றாண்டு பக்கம் 61) கட்சியப்ப முனிவரால் கந்தபுராணம் பதினான்காம் நூற்றாண்டில் பாடப்பெற்றது. பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் உள்ள புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. உமாபதி சிவாச்சாரியார் பாடிய கோயில் புராணமே முதல் தலபுராணமாகும். அதிவீரராம பாண்டியரால் கூர்ம புராணம், லிங்க புராணம், கந்தபுராணத்தில் ஒரு பகுதியான காசிக்காண்டம் ஆகியன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய அண்ணனாக வரதுங்க பாண்டியன் பிரம்மொத்திர காண்டத்தைத் தமிழாக்கினார். இதே காலத்தில் வடமலையப்பன் என்பவர் மச்ச புராணத்தையும் செவ்வைச் சூடுவார் பாகவத புராணத்தையும் பாடினார். பதினெட்டாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனப் புலவரான கச்சியப்ப முனிவர் ’விநாயக புராணம்’ (பார்க்கவ புராணம்) என்னும் உப புராணத்தைத் தமிழில் செய்யுள் வடிவில் பாடினார். மேலும், இவர் திருவானைக்காப் புராணம், தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய தலபுராணங்களையும் காஞ்சிப் புராணத்தின் ஒரு பகுதியையும் பாடினார். இவரது ஆசிரியரான சிவஞான முனிவர் இதே காலத்தில் காஞ்சிப் புராணம் பாடினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சூத சங்கிதையைத் தமிழில் பாடினார். மேலும், திருநாகைக்காரோணப் புராணம், அம்பர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், குடந்தைப் புராணம், மாயூரர்ப் புராணம், திருத்துருத்திப் புராணம் முதலிய ஏராளமான தலபுராணங்கள் படைத்தார். இருபதாம் நூற்றாண்டில் தமிழில் செய்யுள் வடிவில் தாராபுரத்தைச் சேர்ந்த வேலாயுதபண்டிதர் என்பவரால் ’சிவமகா புராணம்’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரியோர்களின் வரலாற்றைப் புராணமாக பாடும் மரபு உண்டு. இதையொட்டி கடவுள் மாமுனிவர் என்பவரால் மாணிக்கவாசகர் உடைய வரலாற்றினை கூறும் ’திருவாதவூரடிகள் புராணம் பாடப்பட்டது. இதே நூற்றாண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ’புலவர் புராணம்’ பாடினார். அசலாம்பிகை அம்மையார் காந்தியடிகள் வரலாற்றைக் ’காந்தி புராணம்’ என்று பாடியுள்ளார். தமிழில் பிற சமயத்தவர்களும் புராணம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய உமறுப்புலவர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை ’சீறாப்புராணம்’ என்ற புராணமாகப் பாடியுள்ளார். பத்தொன்மதாம் நூற்றாண்டில் ’முகைதீன் ஆண்டவர் புராணம்’ என்ற ஒரு புராணமும் எழுந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை சொல்லும் தேம்பாவணி என்னும் நூலை புராண நடையில் பாடியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் சிரவையாதீனம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் காரமடை தலபுராணம், அன்னியூர்ப் புராணம், கெளசைப் புராணம் முதலிய நூல்களை பாடியுள்ளார். அடிகளாசிரியர் இதே நூற்றாண்டில் அரசிலிக்காதை என்னும் தலபுராணம் பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழில் புராணம் என்ற அமைப்பில் பழங்காலம் தொட்டு பல வகையான புராணங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன.
புராணம் சொல்லாட்சி
புராணம் என்னும் சொல்லாட்சி சங்கச் சான்றோர் இலக்கியங்களில் இல்லை எனினும் தொல்காப்பியர் கூறும் தொன்மை என்னும் இலக்கிய வகை புராணங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் களவியில் உரையில் மாபுராணம், பூதபுராணம் என்னும் புராணங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மணிமேகலை சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதையில்,
”காதல் கொண்டு கடல் வணன் பூராணம்”
( மணி.சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை – பா.அ 98)
எனக் குறிக்கப்படுகிறது. மணிமேகலா தெய்வம் உலகத்தில் உள்ள பெண்களின் வடிவத்தை ஏற்று மனியறைப் பீடிகையை வளம் வந்து புத்த தேவனை வணங்கும் பொழுது,
”புலவன் தீர்த்த புண்ணியன் புராணம்”
( மணி. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை பா.அ.98)
எனப் பாடுகிறார். புராணம் என்னும் சொல் பழமை என்னும் பொருளையும் புராணன் என்னும் சொல் பழமையானவன் என்பதையும் குறிக்கின்றன . சமய உணர்வுடைய பெருமக்கள் புராணங்களை உயர்வாக கருதுகின்றனர். வேதக்கல்விக்கு அங்கமாகப் புராணம் ஓதுதல் கருதப்படுகிறது. புராணத்தினை,
”சிறப்புடைய புராணங்களுணர்த்தும் வேதச்
சிரப் பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றால் சைவத்திறத்தவர் ”
என்று புராணங்கள் பெருமை ஆன்றோரால் பேசப்படுகின்றது.
புராணங்களின் பயன்
மக்களின் உள்ளத்தை அறிவுப்பகுதி, உணர்வுப்பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இலக்கணம், தர்க்கம், அறிவியல், கலைகள், மெய்ப்பொருள், ஆய்வு ஆகியவற்றால் அறிவிப்பகுதி வளம் பெறும். உணர்வுப் பகுதியே அறிவைக் காட்டிலும் பேணிக்காத்தற்கு உரியது. உணர்வே செயல்களாகப் பரிணமிக்கும். செயல்களே நன்மை தீமைகளாக இன்ப துன்பங்களையும் புண்ணிய பாவங்களையும் கொடுக்கும். எனவே உணர்வை வெளிப்படுத்தல் இன்றியமையாதது. உணர்வு இலக்கியப் பயிற்சியால் தான் வளம் பெறும். தொன்றுதொட்டு புராணங்கள் சிறந்த பகுதியாக இருந்து வருகின்றன. ஆதலால், புராணங்களுக்கு இலக்கியத்திலும் சரித்திரத்திலும் சிறந்த இடமுண்டு என எண்ணலாம்.
புராணம் என்னும் தமிழ் இலக்கியப் பாகுபாடு
தமிழ் இலக்கியங்களில் மூவகையான புராணங்கள் காணப்படுகின்றது. முதலாவது, இலக்கியங்களில் தெய்வத்தின் அருளை ஒரு தலச் சார்பின்றி புனைந்து கூறும் புராணங்கள். இவ்வகைக்கு உதாரணம் மச்ச புராணம், கூர்ம புராணம், சிவமகா புராணம், கந்தபுராணம் முதலியன. இவை, வடமொழி புராணங்களைத் தழுவி செய்யப்பட்டன. வடமொழியில் இவ்வகைப் புராணங்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட சில நூல்கள் வடமொழி மூலநூலின் பகுதிகள் ஆயினமையின் காண்டங்கள் எனப் பெயர் பெற்றன. உபதேச காண்டம், காசிக்காண்டம் என்பன இவ்வகைக்கு சான்றுகள் ஆகும். இரண்டாவது, இறைவன் புகழை ஒரு தலத்துடன் சார்ந்து கூறும் புராணங்கள். இவையே தலபுராணங்கள் எனப்பட்டன. இவை அத்தலத்தின் பெருமையோடு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைக் கூறுவன. திருவிளையாடற்புராணம், காஞ்சிப்புராணம், பேரூர்ப் புராணம் முதலியன இவ்வகைக்குச் சான்றுகள் ஆகும். மூன்றாவது இறையடியார்களின் வரலாற்றைப் பாடும் புராணங்கள். திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், திருவாதவூர் அடிகள் புராணம் என்பன இவ்வகையில் அடங்கும். இவ்வாறு புராணங்கள் தமிழில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. அதற்கு முன்பும் அவை இருந்துள்ளன என்றாலும் தற்போது கிடைக்காத காரணத்தால் அவை பற்றி விளக்கமாக எதுவும் கூற இயலவில்லை. அவை சமய உணர்வையும் அறவுணர்வையும் சமுதாயத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளன என்பதில் மட்டுமே இரு வேறு கருத்துக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவுரை
மனித வாழ்வை நன்னெறியில் செலுத்துவதற்கு ஏற்புடைய இலக்கிய வகையாகத் தொன்ம இலக்கியங்கள் திகழ்கின்றன. தொன்மை எனும் சொல்லே பழமையின் சாரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. முன்னோர் பேணிய நெறிகளை தலைமுறை கடந்தும் கொண்டு செலுத்தும் இலக்கியமாகத் தொன்மங்கள் விளங்குகின்றன. பரம்பொருளின் அருட்திறத்தை உணர்த்தி அறநெறியில் வாழ்வியலை அமைத்துக் கொள்ளக் காலந்தோறும் எழுந்த தொன்ம இலக்கியங்களே காரணமாக அமைகின்றதெனலாம். அறத்தோடு சேர்ந்து பிற்காலத்தில் புதிய பல இலக்கிய வடிவங்கள் தோன்றவும் தொன்மை இலக்கியங்கள் வழியமைத்துள்ளன. இலக்கியச் செறிவும் யாப்பு நெறியும் சிறந்த தொன்ம இலக்கியத்தின் சில கூறுகளை முதன்மையாகக் கொண்டு பிற்காலப் புலவர்கள் தம் மனவுணர்விற்கு ஏற்ப புதிய இலக்கியங்களை உருவாக்கினர். இறைவனின் பரத்துவத்தை விளக்குவதோடு, சமுதாய மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட தொன்ம நூல்கள் காலந்தோறும் இலக்கிய வகைகள் பல தோன்றவும் காரணமாக அமைந்துள்ளன என்பது இவ்வாய்வில் கண்ட மெய்மையாகும்.
துணைநூற்பட்டியல்
🎯அருணாசலம். மு – தமிழ் இலக்கிய வரலாறு, பதிப்பு – தி பார்க்கர், சென்னை, முதற்பதிப்பு – 2005
🎯இதழ் – வையை மலர், மலர் – 3, மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு, மதுரை, முதற்பதிப்பு- 1976.
🎯கந்தையா, ந.சி. – செந்தமிழ் அகராதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, திருத்திய பதிப்பு – 1999.
🎯கலைக்களஞ்சியம் தொகுதி – 7 , தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1974.
🎯கழகப் புலவர் குழுவினர் – கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு – 1974.
🎯கெளமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ) – தமிழ் மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2003.
🎯கெளமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ) – தொல்காப்பியம் – பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு – 2011.
🎯சண்முகம் பிள்ளை, மு. (தொ.ஆ) – தமிழ் – தமிழ் அகர முதலி, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு – 1985.
🎯சிங்காரவேலு முதலியார், ஆ, (நூ.ஆ) – அபிதான சிந்தாமணி, ஏசியன் எஜீகேசனல் சர்வீஸஸ், புதுதில்லி, மறுபதிப்பு – 1982.
🎯சுப்பிரமணியன், ச.வே. (ப.ஆ) – தமிழ் நிகண்டுகள் தொகுதி – 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு – 2008.
🎯பஞ்சாங்கம், க. பேரா. (நூ.ஆ) – தொன்மத் திறனாய்வு, வெளியீடு: அன்னம், சென்னை,இரண்டாம் பதிப்பு – நவம்பர் 2014.
🎯மகாதேவன், கதிர் – தொன்மம், செல்லப்பா பதிப்பகம், மதுரை, முதற்பதிப்பு – 2008.
🎯மாணிக்கவாசகர் – திருவாசகம், சைவநூல் அறக்கட்டளை, சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2011.
🎯வீரமாமுனிவர், (நூ.ஆ), இன்னாசி, சூ. டாக்டர் (ப.ஆ) – சதுரகராதி, சந்தியா பதிப்பகம், சென்னை, பதிப்பு – 2005.
🎯வேங்கடசாமி நாட்டார்,ந.மு. (உ.ஆ) – சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2008.
🎯வேங்கடசாமி நாட்டார்,ந.மு. (உ.ஆ) – மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.கோகுல்நாத்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
கோயம்புத்தூர்.
Tamil Literature and Types of Culture|Dr.A.Ranjani
Abstract
This research article examines the definitions and various categories of Tamil literature and culture. Rather than approaching these concepts solely through the lens of Western sociologists, this study integrates them with the specific context of Tamil society and its literary traditions. Culture serves as the fundamental identity of a society. This paper elucidates 12 distinct cultural elements, ranging from Geographical Culture to Universal Culture, using evidence from landmark Tamil literary works such as Tolkappiyam, Sangam literature, Thirukkural, and the poems of Subramania Bharati. By aligning foreign scholarly theories with the lived realities of Tamil society, the primary objective of this article is to create a new dimension in the field of cultural studies.
Keywords
Geographical Culture, Primary Culture, Subculture, Counterculture, Alternative Culture, Mixed/Hybrid Culture, Implicit/Inherent Culture, Ideal Culture, Universal Culture, Tamil Literature, Tolkappiyam, Thirukkural.
“தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வகைகளும்”
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வகைகளும் குறித்த வரையறைகளையும் அதன் பல்வேறு வகைகளையும் மேலைநாட்டுச் சமூகவியலாளர்களின் பார்வையில் மட்டும் அணுகாமல், தமிழகச் சூழலோடும் தமிழ் இலக்கியங்களோடும் இணைத்து ஆய்வு செய்கிறது. பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். நிலவியல் பண்பாடு முதல் பொதுமைப் பண்பாடு வரை 12 வகையான பண்பாட்டுக் கூறுகளைத் தமிழ் இலக்கியச் சான்றுகளான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகளின் வாயிலாக இக்கட்டுரை விளக்குகிறது. வெளிநாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளைத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம், பண்பாட்டு ஆய்வுகளில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
திறவுச் சொற்கள்
நிலவியல் பண்பாடு, முதன்மைப் பண்பாடு, உட்பண்பாடு, எதிர்ப்பண்பாடு, மாற்றுப்பண்பாடு, கலப்புப் பண்பாடு, உள்ளார்ந்த பண்பாடு, உகந்த நிலைப்பண்பாடு, பொதுமைப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள்.
முன்னுரை
பண்பாட்டிற்கான வரையறைகளும் அதன் வகைகள் தொடர்பான விளக்கங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு பண்பாட்டியியலாளர், சமூகவியலாரின் கருத்துக்கள் அவர்களின் நாட்டுச் சூழலை அடிப்படையாக வைத்து விளக்கப்படுள்ளன. தமிழகப்பண்பாட்டு ஆய்வாளர்களும், சமூகவியலாரும் பண்பாட்டினை விளக்குவதற்கு ஆங்கில நூற்களை விளக்கும் போது வெளிநாட்டவரின் விளக்கங்களைப் பெரும்பாலும் மொழிபெயர்த்து தருகின்றார்களே தவிர அதனை தமிழ்ச்சூழலினடிப்படையில் ஆய்வினை முழுமையாக நிகழ்த்தவில்லை எனலாம். இக்கட்டுரை பண்பாட்டு வகைகளைக் தமிழ்ச்சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வினை நிகழ்த்தும் புது முயற்சியாகும். தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வரையறைகளும் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றை ஏற்கனவே எழுதி கருத்தரங்கில் வெளியாகியுள்ளது. அவற்றில் தமிழ் இலக்கியத்தினடிப்படையில் பண்பாட்டு வரையறைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இக்கட்டுரை பண்பாட்டு வகைகளை தமிழ் இலக்கிய அமைப்பினை ஒட்டி ஆய்வு செய்கிறது.
பண்பாட்டினை அதன் தன்மை சார்ந்தும், இடச்சார்பு நோக்கியும், பின்பற்றுவோர் அடிப்படையிலும், பொருள் நிலை அடிப்படையிலும், சிறப்பிடம் பெறுதல் நோக்கியும் பலவாறாக வகைப்படுத்தலாம். இவற்றுள் ஒன்றன் பண்பு ஒன்றுடன் ஊடாடிக் காணப்படலாம். எனினும் சிறப்பு நோக்கி அவை தனி வகைகளாக இங்குக் காட்டப் பெற்றுள்ளன. அவையாவன. 1. நிலவியல்பண்பாடு, 2. முதன்மைப் பண்பாடடு, 3. எதிர்ப்பண்பாடு, 4. மாற்றுப்பண்பாடு, 5. கலப்புப் பண்பாடு, 6. உள்ளார்ந்த பண்பாடு, 7, வெளிப்படைப்பண்பாடு, 8, உகந்தநிலைப் பண்பாடு, 9. உண்மைப்பண்பாடு, 10. தனிமனிதப்பண்பாடு, 11. குழுப்பண்பாடு, 12. பொதுமைப் பண்பாடு போன்றவைகள் தமிழ்ச் சமூகத்தினடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன.
நிலவியல் பண்பாடு
மனிதனுடைய பண்பாடானது அடிப்படையில் நிலவியல் சார்ந்தது. நிலத்தில் ஏற்படுகின்ற அவனுடைய வாழ்வியல் சார்ந்த பழக்க வழக்கங்களே காலப்போக்கில் பண்பாடாகப் பரிணமிக்கின்றன. அந்த வகையில் நிலவியல் சார்ந்த பண்பாடு பண்பாட்டினுடைய நிலைக்களமாக அடிப்படையாக அமைகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேடி நாடோடிகளாக அலைந்த மனிதன், காலப்போக்கிலே நிலையாக ஒரிடத்தில் குடியேறக் தொடங்கினான். அந்த இடத்தினுடைய வசதி, வாய்ப்புக்களுக்கு ஏற்ப அவனுடைய வாழ்க்கை முறையை அவன் அமைத்துக் கொண்டான். குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்தவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான உணவிற்காக வேட்டைத் தொழிலைச் செய்தான். காலப்போக்கி அவன் முல்லை நிலம் வந்தபோது வேட்டைச் சமூகமாக இருந்த அவன் ஆடுமாடுகனைப் பிடித்து வைக்கவும், வளர்க்கவும் பழகத் தொடங்கினான். இதன் வளர்ச்சி நிலையாக மருத நிலத்திற்கு அவன் வருகிறபோது அங்கே நல்ல வயல், நீர் கிடைத்தது அந்தச் சூழலில் அவன் தன் வாழ்க்கையை மேலும் வளமுடையதாக மாற்றினான். கடல் சார்ந்த இடங்களிலே வாழ்ந்த மக்கள் கடலைத் தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டனர். மீன் பிடித்தலும், உப்பு விளைவித்தலும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளாயின. அதனடிப்படைவில் அவர்களுடைய பண்பாடு வளரத் தொடங்கியது. இப்படி நிலம் சார்ந்து தொடங்குகின்ற இந்தப் பண்பாடே பண்பாட்டின் அடிப்படைக் களம் என்பதை நாம் உணரமுடியும். தமிழ் இலக்கியங்கள் தொடக்க காலத்திலேயே திணை அமைப்பிலான பாடல்களைக் கொண்டிருந்தன. சங்கப்பாடல்கள் அனைத்தும் திணை அடிப்படையில் அமைந்தவை. அந்த வகையில் தமிழர்களின் தொன்மைக்காலத்தை உற்றுநோக்கும் போது, அவர்களுடைய பண்பானது நிலவியல் சார்ந்ததாக அமைந்திருக்கின்றது.
தமிழர்களின் அகவாழ்வியலுக்கும் புறவாழ்வியலுக்கும் நிலமே அடிப்படை என்பதனை தமிழின் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் துணை கொண்டறியலாம். தொல்காப்பியர் தமக்கு முந்தைய கால இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்று அதனடிப்படையிலே தன் நூலைச் செய்தார். அந்நூலல் குறிஞ்சி என்ற மலைசார்ந்த நிலம் புணர்தல் என்ற ஒழுக்கத்தோடு இயைபுபடுத்திப் பேசப்படுகிறது. அந்நிலத்திற்குரிய போராக வெட்சிப் போர் குறிப்பிடப்படுகிறது. ‘ஆநிரை கவர்தல்‘ என்ற இந்தப் போர் முறையானது. தமிழர்களின் வேட்டைச் சமூகப் போர் முறையைக் குறிப்பிடுகின்றது. வேட்டைச் சமூகப் பண்பாட்டிடையிருந்தவர்கள் காலப்போக்கில் தமிழ்ல் போர்முறைத் தொடக்கமாக ‘ஆநிரை கவர்தல்‘ என்ற இந்த வெட்சிப் போரை வைத்தனர். அந்த வகையில் தமிழர்களின் வாழ்வானது அனைத்து நிலைகளிலும் நிலம் தொடர்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வகையில் உற்று நோக்கும் போது பழந்தமிழக மக்களுடைய பண்பாட்டுத் தளங்களை நாம் தெளிவாக உணர இயலும்.
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே“ (தொல். பொருள்.புறத்.இளம்)
என்ற தொல்காப்பியத் தொடருக்கு உரை எழுதுகின்ற தொல்காப்பியத்தின் முதல் உரை ஆசிரியரான இளம்பூரணர், “வெட்சி, குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறு எனில் நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த மலை நிலத்தின் கண் நிகழ்வதாலும் அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆநிரையை களவிற்கோடல் குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்ததாலாலும் அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாததாலும் அதற்கு அது புறனாம்“1 என்று விளக்கம் தருகின்றார். எனவே தமிழர்களின்வாழ்வு நிலம் சார்ந்தது என்பதனையும் அந்நிலத்தின் வழியாக பலதாப்பட்ட பண்பாட்டுக் கருத்துக்கள் உருவாக இருக்கின்றன என்பதை நாம் உணர இயலும். சங்கப் பாடல்களும் இக்கருத்திற்குச் கான்றாக அமைவதையும் நாம் காணலாம்.
முதன்மைப் பண்பாடு
முதன்மைப் பண்பாடானது “ஒரு சமுதாயத்தின் பெரும்பாலானோரால் அல்லது ஒரு நாட்டின் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்படும் பண்பாடாகும்.“2 சிறு தெய்வ வழிபாட்டில் பலியிடுதல் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையோரால் கடைபிடிக்கப்படும் ஓர் பண்பாடாகும். இதனை முதன்மைப் பண்பாடென்று கருதலாம். முதன்மைப் பண்பாடு என்பது ‘அறம்’ மற்றும் ‘பகிர்வு’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
🏀யாதும் ஊரே யாவரும் கேளிர்: (புறநானூறு – 192) – உலக மக்கள் அனைவரையும் உறவினராகக் கருதும் உலகளாவிய நோக்காகும்.
🏀பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்: (கலித்தொகை – 133) – பண்பாடு என்பது உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப வாழ்வதாகும். ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், நம்பிக்கைகள், மற்றும் வாழ்க்கை முறையைக் குறிப்பதாகும். இது ஒரு நாகரிகத்தின் அடையாளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது.
உட்பண்பாடு
ஒரு சமுதாயத்தில் பல்வேறு பண்பாட்டைக் கொண்டோர் இடம்பெற்றிருப்பர் அவர்களுள் ஒரு வகையினர் அச்சமுதாயத்தினுடைய அனைத்துப் பண்பாடுகளையும் முழுமையாக கொண்டிராமல் தங்களுக்கென்று சில தனிப்பட்ட பண்புகளை மேற்கொண்டிருமப்பர் இதன்மூலம் அந்த முதன்மைப்பண்பாட்டிலிருந்து சற்று விலகினாலும் முதன்மைப்பண்பாட்டிற்கு உட்பட்டே அவர்கள் அமைவர். அவர்களின் அப்பண்பாடு உட்பண்பாடு என்று அழைக்கப்படும். சான்றாக ஒரு சமுதாயத்திலுள்ள இளைஞர்கள் தங்களின் நடத்தை முறைகள், செயல் முறைகள், போன்றவற்றின் மூலம் அந்தச் சமுதாயத்தின் மொத்த பண்பாட்டிலிருந்து சற்றே விலகிச் சில குறிப்பிட்ட பண்புகளை, தனித்தன்மைகளைக் கொண்டவர்களாக இருப்பர். இப்பண்பாடு இளைஞர் உட்பண்பாடு என்றழைக்கப்படும். ஒரு பெருமரத்தின் வேர்கள் மண்ணிற்குள் மறைந்திருப்பது போல, ஒரு சமூகத்தின் முதன்மைப் பண்பாட்டிற்குள் பல நுட்பமான உட்பண்பாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைதான் அச்சமூகத்தின் பன்முகத்தன்மையை (Diversity) உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.”
“வினையே ஆடவர்க்குயிரே” (குறுந்தொகை – 135)
இங்கு ‘ஆடவர்’ (ஆண்கள்) என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் செயல்பாட்டு முறையை (வினையே உயிர்) இலக்கியம் பிரித்துக் காட்டுகிறது. இது பொதுவான சமூகம் சார்ந்த பண்பாட்டிற்குள், ஒரு குறிப்பிட்ட பாலினக் குழுவிற்கான உட்பண்பாட்டு மதிப்பீடாகக் கருதப்படுகிறது.
எதிர்ப்பண்பாடு
ஒரு சமுதாயத்தின் முதன்மைப்பண்பாட்டில் இயங்கும் உட்பண்பாடானது சில நேரங்களில் சில தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதோடு அந்த முதன்மைப்பண்பாட்டிற்கு நேர்எதிராக அமைவதற்கும் வாய்ப்புண்டு. அந்நிலையில் அப்பண்பாடானது ‘எதிர்ப்பண்பாடு‘ என்றழைக்கப்படுகிறது. புலால் உணவு உண்ணுதல் என்ற பண்பாட்டினையுடைய ஒர் இனக்குழுவில் சிலர் பிற கொள்கைகளால் சைவ உணவு முறைக்கு மாறியிருப்பர். அந்நிலையில் அவர்களுடைய அந்தச் சைவ உணவு முறைக்கு மாறியிருப்பர். அந்நிலையில் அவர்களுடைய அந்தச் சைவ உணவு முறை என்ற உணவுப்பண்பாடானது புலால் உண்ணுதலென்ற முதன்மைப் பண்பாட்டிற்கு எதிர்ப்பண்பாடாகும்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”
என்ற அவரது வரிகள், நிலவிய வன்முறை கலந்த பண்பாட்டிற்கு எதிரான ஒரு கருத்தியல் புரட்சியாகும். இது சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக அமைகிறது.
மாற்றுப்பண்பாடு
ஒரு சமுதாயத்தில் முதன்மைப் பண்பாட்டினை மேற்கொள்வோரில் சிலர், சில காரணங்களுக்காக அந்த முதன்மைப் பண்பாட்டினுடைய உட்பண்பாட்டில் ஒரு பண்பாட்டிற்கு மாற்றாக மற்றொன்றினைக் கைக்கொண்டிருப்பர். இந்நிலையில் இப்பண்பாடானது மாற்றுப்பண்பாடு என்றழைக்கப்படும் சான்றாக மட்டைப்பந்தாட்டம் ஆடுவோரில் (Cricket) சிலர் பாதுகாப்புக்கருதி மட்டைப் பந்தாட்டத்திற்குரிய பந்தினை விடுத்து பூப்பந்தாட்டத்திற்குரிய (Tennis) பந்தினைக் கொண்டு மட்டைப்பந்தாடுவர். இந்நிலையில் மட்டைப்பந்தாட்டத்தில் பூப்பந்தாட்ட பந்தினைக் கொண்டு ஆடுவதென்பது ஒரு மாற்றுப் பண்பாடென்று கருதலாம். தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய மாற்றம் வழிபாட்டு முறையில் நிகழ்ந்தது. சிலைகளுக்கோ அல்லது உருவங்களுக்கோ பூசை செய்வது ஒரு ‘முதன்மைப் பண்பாடு’ என்றால், அதற்கு மாற்றாக அறிவைப் போற்றும் விதமாக ஒளியை (தீபத்தை) மட்டும் வழிபடுவது ஒரு மாற்றுப் பண்பாடாக உருவெடுத்தது. உருவ வழிபாட்டை விடுத்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற ஒளியை வழிபடச் சொன்னது, நிலவும் வழிபாட்டுப் பண்பாட்டிற்கு அவர் முன்வைத்த ஒரு சிறந்த ‘மாற்றுப்பண்பாடு’ ஆகும்.
கலப்புப் பண்பாடு
பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளைக் கொணடிருக்கின்ற மக்கள் ஒன்றியைந்து ஓரிடத்தில் வாழும் போது தோன்றுகின்ற பண்பாட்டினைக் கலப்புப் பண்பாடு என்று அழைப்பர். கலப்புப் பண்பாடு என்பது தனித்த அடையாளங்களை அழிப்பதல்ல, மாறாகப் பல வண்ணங்கள் சேர்ந்து ஒரு அழகான ஓவியமாக மாறுவது போன்றது. சான்றாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு வகைப்பட்ட மொழி. பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இணைந்து வாழ்வதைப் பாரதியார் தனது பாடல்களில் ஒரு ஒருமைப்பாட்டுப் பண்பாடாகப் பார்க்கிறார்.
“முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்
சிந்தை யொன்றுடையாள்” – பாரதியார்
வெவ்வேறு மொழிகள் (பதினெட்டு மொழிகள்) பேசும் மக்கள் இருந்தாலும், அவர்கள் இந்தியர் அல்லது தமிழர் என்ற ஒரு பண்பாட்டுப் புள்ளியில் இணைவதைக் கலப்புப் பண்பாட்டின் ஒரு வடிவமாக நாம் கொள்ளலாம்.
உள்ளார்ந்த பண்பாடு
மக்கள் மனத்தில் பதிந்துள்ள பண்பாட்டு விதிகளின் அடிப்டையிலான நடத்தை முறைகளின் தொகுப்பே உள்ளார்ந்த பண்பாடாகும். சமுதாயத்தில் நிகழும் நில நிகழ்ச்சிகளின் வழியே இவற்றை உணர இயலும் மனத்தளவில் வெளிப்படையாக இவை தெரிவதில்லை புறநிகழ்ச்சிகள் மூலமாகவே இவை வெளிப்படுகின்றன. எனவே இவ்வகைக் கூறுகளின் தொகுப்பு ‘உள்ளார்ந்த பண்பாடு‘ என்று மானிடவியலாளரால் அழைக்கப்படுகின்றது. திருவள்ளுவர் ‘பண்புடைமை’ அதிகாரத்தில், வெளியே தெரியாத ஆனால் மனிதனை மனிதனாக மாற்றும் அகப்பண்புகளைப் பற்றிப் பேசுகிறார்.
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்” (குறள் – 991)
அன்பு வைத்திருப்பதும், நல்ல குடிப் பண்புகளைக் கொண்டிருப்பதும் ஒருவனிடம் இயல்பாகவே (உள்ளார்ந்த நிலையில்) இருக்க வேண்டிய பண்புகள். இவை அவன் பிறரோடு பழகும் போதுதான் வெளியே தெரியும் என்கிறார். உள்ளார்ந்த பண்பாடு என்பது ஒரு மனிதனின் ‘மனச்சாட்சி’ மற்றும் ‘சமூக ஒழுக்கம்’ இணைந்து உருவாக்கும் ஒரு மென்பொருள் (Software) போன்றது.
வெளிப்படை பண்பாடு
ஒரு சமுதாயத்தின் நடத்தை முறைகளை வெளிப்படுத்தும் கூறுகள் அனைத்தும் இதனுள் அடங்கும், பெரும்பாலும் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளால் அறியப் பெறுபவை அனைத்தையும் வெளிப்படைப் பண்பாடு என்று கொள்வது பொருத்தமுடையது. உள்ளார்ந்த பண்பாடு வெளிப்படை பண்பாடு ஆகிய இரண்டும் இணை நிலையில் அமைவனவாகும். “இவை ஒன்றோடொன்று தொடர்புடையவாதலின் இவற்றை இணைத்தே பார்க்க வேண்டும் என்று கூறுவாறுமுண்டு“3 எனினும் இவை இரண்டிற்குமிடையிலே அடிப்படை வேறுபாடுகள் நுட்பமாகக் காணப்படுவதால் இவற்றை தனித்து நோக்குவதே சிறந்த முறையாகத் தோன்றுகிறது. அந்நுட்பமாக வேறுபாட்டை பிரித்தறிவோமாயின் உள்ளார்ந்த பண்பாடேன்பது மக்களின் மனதில் இடம் பேற்றுள்ள விதிகளின் அடிப்படையில் நிகழும் நடைமுறையென்றும் வெளிப்படைப் பண்பாடு பொருள் சார் கூறுகளால் வெளிப்படக் கூடியதாதலாலும் இவை தனித்தனி வகையின் என்று கொள்வது பொருத்தம்.
உகந்த நிலைப்பண்பாடு
மக்கள் தங்களுடைய வாழ்வில் பின்பற்றத் தகுந்த நெறிமுறைகள். இவை, பின்பற்றத்தகாதெனப்பட்டுள்ளன. இவையே உகந்தநிலை பண்பாடு என்றழைக்கப்படும். உகந்தநிலை பண்பாடு என்ற தொடரை விட இதனை குறிக்கோள் நிலைப்பண்பாடு என்று அழைப்பது பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. திருக்குறளில் வள்ளுவர் உகந்தநிலை பண்பாடு பற்றிய பாட்டோன்றினை செய்துள்ளார்
ஊழில் உட்பக்கமும் காண்பர் ……….. (குறள்)
என்ற குறளில் அவர் உகந்தநிலைப் பண்பாட்டினைச் சுட்டியுள்ளார். ஊழ் என்பது மிகவும் வலியது அதனை வெல்வதற்கு முடியாது என்ற கருத்து ஒன்று மக்கள் மனதில் இருந்தாலும் அதனை வென்று முடிப்பவர் தாராத முயற்சி செய்பவர் என்ற ஒரு குறிக்கோளனை அவர்தம் பாடலில் சொல்லுகின்றார். எனவே இது ‘உகந்தநிலை பண்பாட்டிற்கு‘ அதாவது குறிக்கோள் நிலைப் பண்பாட்டிற்குச் சான்றாக விளங்குகின்றது.
பொதுமைப் பண்பாடு
உலகிலுள்ள அனைத்துப் பண்பாடுகளையும் ஒரு சேர நோக்கும் போது அவற்றிற்கிடையே சில பொதுமைக் கூறுகளைக் காணமுடியும். இவையே பண்பாட்டுப் பொதுமைகள் என்றழைக்கபப்டுகின்றன. அனைத்துப் பண்பாடுகளுக்கிடையே பண்பாட்டு பொதுமைகள் காணப்படுவதற்குக் காரணம் மனிதனுடைய அடிப்படைப் தேவைகளாகிய உணவூட்டல், உறுப்பினர்களை நெறிப்படுத்துதல், பாதுகாப்பளத்தல் இனத்தின் நிலைபேறுடைய தன்மைக்கு வழிகோலுதல் இளம்பிள்ளைகளைப் பண்பாட்டு வயமாக்கள் போன்றவை ஒரு சில பண்பாட்டிற்கு மட்டுமே உரியவை என்றல்லாமல் அனைத்துப் பண்பாட்டினருக்கும் இன்றியமையதானவையாக உள்ளன. இவையே பண்பாட்டுப் பொதுமைகள் ஏற்படுவதற்குக் காரணங்களாக அமைகின்றன.
பண்பாட்டுப் பொதுமைகள் ஒவ்வொறு பண்பாட்டிலும் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டுக் காணப்படுவதுமுண்டு. இயற்கைச் சூழலும் சமுதாயச் சூழலும். இதற்குக் காரணங்களாகும். பண்பாட்டுப் பொதுமைகளைப் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர்களுள் கிளாக்விஸ்லர் (Clark Wissler) குறிப்பிடத் தகுந்தவராவார். அவர் பண்பாட்டுப் பொதுமைகளைப் பண்பாட்டுத்திட்டம் (Culture Scheme) என்று குறிப்பிடுகின்றார். 1. மொழி 2. உணவு, வீடு. போக்குவரத்துச் சாதனங்கள், உடை. கருவிகள், பொருள்கள், தொழில்கள், 3. கலை, 4. மரபுக கதைகள் 5. சடங்குகள், மூடநம்பிக்கைள் 6. குடும்பம். திருமணம். சமுதாயக் கட்டுப்பாடு. விளையாட்டுகள், பிற தொடர்புடைய சமுதாய நிறுவனங்கள். 7. சொத்துப் பரிமாற்றமுறைகள் வணிகம் 8. அரசு, சட்டம் 9. போர் என்ற ஒன்பது வகையான பொதுமைக் கூறுகளை எடத்துரைக்கிறார். இவரைப் போல் பல அறிஞர்கள் கூறும் பொதுமைக் கூறுகளும் இந்த ஒன்பது வகைக்குள்ளேயே பெரும்பாலும் அடங்குவதை அறிய முடிகிறது.
முடிவுரை
பண்பாட்டு வகைகளை நுட்பமாக ஆராய்ந்து அவற்றைத் தமிழ்ச் சூழலுக்குப் பொருத்தி விளக்கும்போது, அக்கருத்துக்கள் மிகவும் தெளிவுபெறுகின்றன. சங்க இலக்கியங்கள், திருக்குறள், தமிழ் சமூகத்தின் இன்றைய பண்பாட்டு கூறுகளோடு இணைத்துப் பார்க்கும் போது பண்பாட்டு வகைகளை நன்கு விளக்கவும் முடிகிறது, நன்கு விளங்கவும் முடிகிறது. பண்பாடு என்பது ஒரு தேக்கமடைந்த நிலையல்ல; அது நிலவியல் அடிப்படையில் தொடங்கி, சமூகத் தேவைகளுக்கேற்ப உட்பண்பாடாகவும், எதிர்ப்பண்பாடாகவும், மாற்றுப்பண்பாடாகவும் பரிணமிக்கின்றது. சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாடு ‘நிலவியல் பண்பாட்டிற்கும்’, வள்ளலாரின் சிந்தனைகள் ‘எதிர்ப்பண்பாட்டிற்கும்’, சென்னையின் வளர்ச்சி ‘கலப்புப் பண்பாட்டிற்கும்’ சிறந்த சான்றுகளாக அமைவதை இக்கட்டுரை நிறுவியுள்ளது. இத்தகைய ஆய்வுகள், மேலைநாட்டுக் கோட்பாடுகளைத் தமிழ்ச் சமூகத்தின் வேர்களோடு இணைத்துப் புரிந்துகொள்ளப் பெருந்துணையாக அமையும்.
சான்றெண் விளக்கம்
1.பதிப்புத்துறை (பதி. ஆ)தொல்காப்பியம் புறத்திணையில் உரைவளம். ப. 5 (தமி)ரு.
2.பக்தவச்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.150
3.மேலது, ப.169
4.மேலது, ப.171-173
5.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் – பொருளதிகாரம், புறத்திணையியல், நூற்பா 1-இன் விளக்கம்.
6.பண்பாட்டு வரையறை, சமூகவியல் மற்றும் மானுடவியல் கலைச்சொல் விளக்கங்கள்.
7.உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைப் பண்பாடு, பண்பாட்டு மானுடவியல் கோட்பாடுகள் குறித்த ஒப்பாய்வு.
பார்வை நூல்கள்
1.தொல்காப்பியம் – பொருளதிகாரம் (இளம்பூரணர் உரை), சாரதா பதிப்பகம், சென்னை.
2.புறநானூறு, மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3.கலித்தொகை, சங்க இலக்கியத் தொகுப்பு.
4.திருக்குறள், பரிமேலழகர் உரை, கழக வெளியீடு.
5.பாரதியார் கவிதைகள், பாரதி பதிப்பகம்.
6.பரமசிவன், தொ., பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம்.
7.அகத்தியலிங்கம், ச., தமிழர் பண்பாடு, மணிவாசகர் பதிப்பகம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்அ. ரஞ்சனி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620002.
Sanga Ilakkiyathil Vaniyalum Suriyanum|G. Salammal
Abstract
Astronomy and the Sun occupy a central place in early human understanding of nature and time, as reflected in classical Tamil (Sangam) literature. The Sun is portrayed not only as a celestial body but also as a vital force governing daily life, agricultural cycles, seasonal changes, and directional awareness. Astronomical knowledge in these texts reveals an awareness of natural rhythms and their practical applications in organizing human activities. The relationship between astronomy and the Sun highlights the integration of scientific observation with cultural expression in ancient Tamil society. Thus, the Sun emerges as both a symbolic and functional element within the broader framework of early astronomical thought.
“சங்க இலக்கியத்தில் வானியலும் சூரியனும்”
முன்னுரை
வானின் கண் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலை வானியல் என்று வானியலாளர்கள் அழைக்கின்றனர். பூமிக்கும், அதன்காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளைக் குறிக்கும் நிலையே வானியல் ஆகும். “நாம் வாழும் பூமியைச் சுற்றிலும், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள காற்று மண்டலம் அடர்த்தி அதிகமானதாக இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் காற்று மண்டலத்தில் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது. காற்று மண்டலம் முழுவதையும் கடந்து சென்றால், காற்றே இல்லாத மண்டலம் இருக்கிறது. அதுவே விண்வெளி என்றழைக்கப்படுகிறது.” (இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், 2001, ப.72) என்ற கருத்து வானியல் எது என்பதைப் பதிவு செய்துள்ளது. இத்தகு வானின்கண் இருக்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் செயல்பாட்டை ஆராய்ந்து அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது வானியலாக அமைகிறது.
வானியல் ஆராய்ச்சி
அறிவியல் பிரிவுகளில் முதன் முதல் தோன்றியதில் வானியலும் ஒன்று. மனிதன் வானத்தைக் கண்ணால் உற்று நோக்கி மேலே நிகழ்கின்ற செயல்பாட்டை என்று கூர்ந்து நோக்கி ஆராய ஆரம்பித்தானோ அன்றே வானியல் பற்றிய அறிவு தோன்றிவிட்டது. மனிதன் ஆரம்ப காலகட்டத்தில், வானின் செயல்பாட்டினை ஒட்டிதான் நாட்களையும் மாதங்களையும் நேரங்களையும் வகுத்துக்கொண்டான் என்பது யாவரும் அறிந்த ஒன்று. மனிதனின் பல்வேறு செயல்களில் வானியலின் பங்கு இன்றியமையாததாக இடம்பிடித்துள்ளது. இதனை. “எப்பொழுது உழ வேண்டும், எத்திசையில் கப்பல் செலுத்த வேண்டும் என்பதை நட்சத்திரங்கள் மற்றும் நிலாவைக் கொண்டு கணித்தார்கள். சூரியன் மற்றும் நிலா வானத்தில் வலம் வருவதை வைத்துதான் அன்றைய மனிதர்கள் கால அட்டவணைகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டியிருந்தது.” (கே.ஆர்.பாலாஜி, அறிவியல் என்றால் என்ன?, 2006,ப.26) என்ற கருத்தின் வழி அறியமுடிகிறது. படிப்படியாக வளர்ந்த வானியல் வளர்ச்சியானது, தொலைநோக்கிக் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மேலும் துரித நிலையில் வளர்ந்தது. தொலைநோக்கியின் வழி, வானத்து நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிக்க ஆரம்பித்தனர். சூரியன் மற்றும் அதன் கோள்களின் தன்மை, நிலா தேய்ந்து வளர்தல், நட்சத்திரத்தின் தூரம், அதன் ஒளியின் தன்மை, இது போன்ற பேரண்ட நிகழ்வுகளைக் கணித்தனர்.
மேலும், விண்வெளிக்குச் செயற்கை கோள்கள் ஏவிய காலம் வளர்ந்த நிலையில் அங்கே பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அங்கே எந்தெந்த கிரகங்களில் மனிதன் வாழலாம், சூரியன் போன்று வேறுகோள்கள் இருப்பதும், இதுபோன்ற துல்லியமான ஆய்வுகள், செலுத்துகின்ற செயற்கைக்கோள்கள் படம் எடுத்து அனுப்பி வானியல் வளர்ச்சியை மேலும் துரிதமாக்கியுள்ளது. “தொலைநோக்கினைக் கண்டுபிடித்தபின், தொலைநோக்கியின் உதவி கொண்டு வான மண்டலத்திலுள்ள கிரகங்களைப் பற்றி அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர். அதன் பயனால் வானமண்டலத்தில் பல சூரியன்களும், பல நிலவுகளும், பற்பல கிரகங்களும் இருக்கின்றன என்பதும், நமது சூரியக் குடும்பத்தைப் போல பல சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரிய வந்தது.” (இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், 2001, ப.72) என்ற கருத்து அதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வகையில் வானின்கண் சூரியன் செயல்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
சூரியனின் தன்மை
சூரியனின் இயக்கமே மக்கள் உயிர்வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. சூரிய ஒளி இல்லையென்றால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்காது. தாவரத்திற்குப் பச்சையம், ஒளிச்சேர்க்கை இல்லை,உணவு உற்பத்தி இல்லை, மனிதனுக்குப் பசி ஏற்படாது. ஆதலால் தான் சூரிய ஒளி இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. சூரியனைச் சுற்றி ஒன்பது துணைக்கோள்களும், துணைக்கோள்களைச் சுற்றி சிறு கோள்களும் உள்ளன. எரிசக்திகள், பெட்ரோலியம் போன்றன சூரிய ஆற்றலால்தான் நமக்குக் கிடைக்கின்றன. சூரியனுக்குப் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனில் தோன்றும் கரும்புள்ளி மற்ற பகுதிகளைக்காட்டிலும் குளிர்ச்சியானது என்பது அறிஞர்களின் முடிவு. சூரியனில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. அதுவே சூரியனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய அறிவியலாளர்கள் சூரியனின்உள்பகுதியை ஆராய்ந்து பலவாறு எடுத்துக் கூறியுள்ளனர். அதில் ஒரு கருத்தான “கொரனா, சுடர்க் கொழுந்துகள், குரோமோஸ்பியர் என்னும் நிறவட்டம், போட்டோஸ்பியர் என்னும் ஒளிவட்டம். இந்த நான்கினுள் உள்ளே இருக்கும் அடுக்கு போட்டோஸ்பியர் என்னும் ஒளிக்கோளம் இதன் பின்தான் வாயுக்கள் நிரம்பிய நெருப்பு உலையாக சூரியனின் உட்பரப்பு உள்ளது. இந்த ஒளி அடுக்கிற்குக் அடுத்தது பின்புற அடுக்கு ஒன்று இதற்கு அடுத்தது நிறஅடுக்கு எனும் குரோமோஸ்பியர். இதற்கு அடுத்ததாக அமைந்திருப்பது ‘கொரனா’ எனும் ஒளிவட்டம். இவைகள் எல்லாம் சேர்ந்ததுதான் சூரியனின் வளிமண்டலம் ஆகிறது.” (வி.எஸ். நாராயணன், மக்கள் விஞ்ஞானம்.10, 1985, பக் 194,195) என்பதாகும்.
சூரியனின் இயக்கம்
பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது சூரியன். பூமிக்கு மிகஅருகில் இருக்கும் கோள் இதுவே. சூரியனே இப்புவியில் உயிர்வாழக் காரணமாக இருக்கின்றான். சூரியனுக்கு ஈர்ப்பு ஆற்றல் உண்டு. ஆதலால்தான் தனது ஈர்ப்பு ஆற்றலால் எட்டுக் கோள்களையும், அவற்றின் துணைக்கோள்களையும், குறுங்கோள்களையும், வால் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்கச் செய்கிறது என்பது வானியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் அன்றே இதனை அறிந்து கூறிய வானியல் அறிஞர்கள் இருந்துள்ளதை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் தன்னுடைய பாடலில் குறிப்பிடுவதை,
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரி நிலைஇய காயமும் என்றிவை
சென்றிளந் தறிந்தோர் போல வென்றும்
சினைத்தென் பாரும் உளரே’’ (புறம். 30)
என்ற பாடல் அடிகள் குறிப்பிட்டுள்ளன.சோழ நாட்டின் அறிவு வளத்தைப் பாராட்ட விழைந்த புலவர், சூரியன் செல்லுகின்ற திசையையும், அதன் இயக்கத்தையும் அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்விட்டமும், காற்று இயங்கும் திசையும் காற்றின்றி வெற்றிடமாக உள்ள வானத்தையும் நேரில் சென்று அறிந்து சொல்லும் அறிஞர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுவதின் வழி, காற்று இருக்கும் அல்லது வெற்றிடம் பற்றி அறிந்திருந்த பழந்தமிழரின் வானியல் நுட்பத்தை அறியமுடிகிறது.
சூரியனின் வெண்ணிறம்
சூரியனின் ஒளியையும் நிறத்தையும் வெண்மை என்று கூறுவர். வெண்மை என்பது தனிநிறமன்று, ஏழு நிறங்களின் கலவை என்பது நியூட்டனின் கருத்து. சூரியனில் “ஏஐடீபுலுழுசு” என்ற ஏழு வண்ணங்களின் கலவை உண்டு என்பதை இன்றைய வானியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இதனை அன்றே கூறிய வானியல் அறிஞனான தமிழனின் சிறப்பை,
“எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கால்சேர்வு மறைய” (குறிஞ்சி.215-216)
என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதில் வரும் ஏழுர்பு என்பது ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றது. அதாவது கதிரவன் ஏழு குதிரை பூட்டிய தேரில் வருதல் என்பது ஏழு வண்ணமாகிய ஊதா, நீலம், கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
கதிரின் தன்மை
சூரியனில் பல்வேறு கதிர் வீச்சுகள் இருப்பதை மேலே கண்டோம். இக்திர்வீச்சாலே பூமிக்கு வெப்பம் கிடைக்கின்றது என்பதையும் பார்த்தோம். சூரியக்கதிரானது நீண்ட அலைநீளம்கொண்ட அகச் சிவப்புக் கதிர் முதல் குறைந்த அலைநீளம் கொண்ட புறஊதாக் கதிர் வரையிலான கதிர்வீச்சுகளைக் கொண்டது. இக்கதிர் வீச்சில் சில தீங்கு விளைவிக்கக்கூடியது.. இக்கதிர்வீச்சே அல்லது சூரியனின் கதிரே, சூரிய மையத்தில் உண்டாகும் வெப்பத்தை வானவெளி முழுவதும் பரவச்செய்கிறது. “சூரியனின் உட்புறத்திலிருந்து வெளியாகும் ஆற்றலை விண்வெளி எங்கும் பரப்புவது இதுதான். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் குறுக்களவு உடையது.’’ (வி.எஸ். நாராயணன், மக்கள் விஞ்ஞானம்-10. 1985, ப.105) என்ற கருத்து அதனை மெய்ப்பிக்கிறது. சூரியக் கதிர்வீச்சுக் காரணமாகவே நிலமும் வளிமண்டலமும் சூடாகிற வானியல் அறிவை ஆதியிலே பழந்தமிழர்கள் அறிந்திருந்ததை,
“வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று” (நற்.163:9-10) என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன.
சூரியினின் தெற்கு நோக்கிய செலவு
வடக்கு அரைக்கோளத்தில் நண்பகலில் சூரியன் தெற்கு திசையில் உச்சநிலை அடைகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர்) சூரியனின் பாதை தெற்கு நோக்கி சாய்ந்து காணப்படுகிறது. மேலும், குளிர்கால சங்கிராந்தியின் போது (டிசம்பர் 21-22), சூரியன் அதன் தெற்கே மிகத் தொலைதூரப் பாதையில் (தட்சிணாயனம்) பயணிக்கிறது. சூரியன் தென்கிழக்கில் உதித்து, தெற்கு வானில் உயர்ந்து, தென்மேற்கில் மறையும் இந்தக் காலம் குளிர்காலமாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் காலம் மழையும் பொழியும் காலமாக அமைகிறது. அந்த அறிவியல் நிகழ்வைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
“விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து” (அகம்.13:12-13)
என்ற அடிகள் அதனைக் குறிப்பிட்டுள்ளன.
வெப்பம் அதிகரிக்கக் காரணம்(அ) பசுமை இல்ல விளைவு மாற்றம்
பூமிகிக்குத் தேவையான வெப்பத்தையும் ஒளியையும் சூரியனே அளிக்கிறது. சூரியனே பூமிக்கருகில் இருக்கும் மிகப்பெரிய விண்மீனாகும். பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு தோராயமாக 149,600,000 கிலோமீட்டர்கள் ஆகும். இத்தொலைவைச் சூரிய ஒளி சுமார் 8 நிமிடங்கள் 19 வினாடிகளில் கடக்கிறது. இவ்வாறு செயல்படும் வெப்பம் சில நேரங்களில் அதிகரித்துப் பூமியை அதிக வெப்பநிலைக்கு உள்ளாக்குகிறது. இதற்கு மனிதனே காரணமாகிறான். பசுமை இல்ல விளைவு பாதிக்கப்படும் போது சூரியனின் வெப்பம் அதிகரித்து வாட்டுகிறது. பசுமை இல்ல விளைவு என்பது சூரியன் பல்வேறு வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது. அகச் சிவப்பு கதிர்கள், புறஊதாக்கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றோடு நாம் காணும் ஒளிக்கதிர்களையும் சூரியன் வெளியிடுகிறது. சூரியனின் இவ்வெப்பக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏறத்தாழ 25ரூ வெப்பக் கதிர்கள் விண்வெளிக்கே திருப்பி அனுப்பப்படுகின்றது.
பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களும் வளிமண்டலத் துகள்களுமே இதற்குக் காரணம். ஏறக்குறைய 20ரூ வளிமண்டலத்தால் ஈர்க்கப்படுவதால் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், புறஊதாக் கதிர்கள் பூமியைத் தொடுவதில்லை. பூமியின் பல்வேறு வளிமண்டல அடுக்குகளைத் தாண்டி ஊடுருவி 50ரூ வெப்பம் பூமியின் தரையைத் தொடுகிறது. அதன் பெரும்பகுதியை(85ரூ)மரம், செடி, மண், கல் போன்றவை ஈர்க்கின்றன. மீதமுள்ள 15ரூ வெப்ப ஆற்றல் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது. அதனை விண்வெளிக்குப் போகாமல் தடுக்கும் நிகழ்வே பசுமை இல்ல விளைவு. இதனை, “வெப்பக் கதிர்கள் விண்வெளிக்குப் போகாமல் தடுப்புச்சுவர்கள் போல் நீராவி, கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை செயல்படுகின்றன. அதனால் மீண்டும் வெப்பக்கதிர்கள் பூமிக்கே திருப்பிவிடப்படுகின்றன. இப்படியாக வெப்பம் ஒரு வகையில் பூமியில் தங்குகிறது. இதனையே பசுங்குடில் விளைவு என்பார்கள்’’ (க. பலராமன், பழந்தமிழில் அறிவியல், 2009, ப.14) என்ற கருத்தின் வழி அறியலாம். இந்தப் பசுமை குடில் விளைவு மனித சக்தியால் பாதிப்படைந்து வெப்பம் அதிகரிக்கிறது. அதாவது பல்வேறு எரிப்பொருள்களை எரிப்பதில் வெளியாகும் கரியமிலவாயு, மரத்தை அழித்தல், தொழிற்சாலைக் கழிவு, மோட்டார் வாகன புகை ஓசோனை அதிகரிக்கச் செய்தல், இதனால் ஏற்படும் தூசி துகள்கள் போன்றன அதற்குக் காரணமாகிறது. இதனை தான் உலக வெப்பநிலையாதல் என்கின்றனர். பாலைவனக் கொடுமையைக் கூற வந்த புலவர் பசுங்குடில் பாதிப்பைச் கூறிய வானியல் சிந்தனையை
“வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று” (நற்.163:9-10)
என்ற அடிகள் வெளிப்படுத்தியுள்ளன. அக்காலத்தில் பாலைவனமே மிகுந்த வெப்பமாக இருந்தது. அங்கே வீசும் காற்று அதன் புழுதிகளை, மண் துகள்களை மேலே கொண்டு சென்று சூரியனின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கச் செய்தது மட்டுமின்றி, வானத்தையே கொதிக்கச் செய்தது என்பது பசுங்குடில் பாதிப்பு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
கிரகணம்
சூரியனும் நிலவும் பகல்-இரவு நேரங்களில் ஒளியைத் தந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. இந்த ஒளி சில நேரங்களில் பூமியிலிருந்து முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தொலைந்து விடுகிறது. அதனை ‘கிரகணம்’ என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ‘கிரகணம்’ என்றால் ‘மறைக்கப்படுதல்’ என்று பொருளாகும். “விண்வெளியில் உள்ள ஒரு பருப்பொருளின் தோற்றத்தை இடையில் வரும் மற்றொரு பொருள் முழுவதுமாகவோ பகுதியாகவோ தடுப்பது அல்லது ஒளியைக் குறைப்பது கிரணம் என்றழைக்கபடுகிறது’’ (ப.ஐயம்பெருமாள், தமிழக வானவியல் சிந்தனைகள், 2006, ப.92) என்ற கருத்து கிரகணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே கிரகணம் பற்றிய வானவியல் அறிவைப் பெற்றிருந்தனர். அதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
“என்று ஊழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்” (பரி.19:48-49)
என்ற பரிபாடல் அடிகள் சந்திரன், சூரியன் என்ற இரண்டும் வானின் கண் இல்லாமல் போன கிரகணக் குறிப்பை கேள்வி கேட்கும் தன்மையில் குறிப்பிட்டுள்ளன. இக்கிரகணம் சூரியன், சந்திரன் என்ற இரண்டு வகையில் அமைவதையும் அறியமுடிகிறது.
சூரிய கிரகணம்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. இந்நிலையே சூரியகிரகணம் ஏற்படக் காரணமாகிறது. சூரிய கிரகணம் அமாவாசை நாளன்றுதான் ஏற்படும். எல்லா அமாவாசை நாளன்றும் சூரிய கிரகணம் ஏன் ஏற்படுவதில்லையென்றால், புவியைச் சந்திரன் சுற்றிவரும் வழியும் சூரியனைப் புவிச் சுற்றி வரும் வழியும் ஒன்று போல இல்லாததே ஆகும். புவியைச் சந்திரன் 29 நாட்களில் சுற்றி வருகிறது. அது சில சமயங்களில் புவியின் வழிக்கு மேற்புறத்திலும் சில சமயங்களில் புவியின் வழிக்குக் கீழேயும் செல்கிறது என்பது காரணமாக அமைகிறது. சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டால் முழுசூரியகிரகணம் என்றும், பகுதி மறைக்கப்பட்டால் பகுதி சூரியகிரகணம் என்றும் கூறுவர். புவியைப் பொறுத்தவரையில் ஓர் ஆண்டில் இரண்டு முதல் ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படுவதுண்டு. “கிரகணம் ஏற்படும்போது சந்திரன் இருண்ட வட்டமாகத் தென்படுகிறது. அது சூரியன் முழுவதையும் மறைத்து விடுகிறது. ஆனால், சூரியன் விளிம்பைச் சுற்றி மட்டும் ஒரு குறுகிய வளையம் காணப்படுகிறது. இந்த மெல்லிய ஒளிவளையம் ‘அன்னுலஸ்’ என்று அழைக்கப்படுகிறது. சந்திரனின் வட்டத்தின் ஒரு பகுதி மட்டும் சூரியனுக்கும் புவிக்குமிடையே வரும்போது அரை குறையாகக் கிரகணம் ஏற்படுகிறது’’. (வி.எஸ். நாராயணன், மக்கள் விஞ்ஞானம்-2, 1985, ப.107) என்ற கருத்து கிரகணத்தின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூரிய கிரகண நிகழ்வைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதை,
“அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து” (புறம்.174:1-3)
என்ற அடிகள் வெளிப்படுத்தியுள்ளன.
தொகுப்புரை
🔔அறிவியல் துறைகளில் மிகப் பழமையானது, வானியல் துறை. இந்த வானியல்துறைக்கும், அதன் அறிவியல் சிந்தனைக்கும் அதன் ஆராய்ச்சிக்கும் வித்திட்டவன் பழந்தமிழன்.
🔔சூரியனின் செயல்பாட்டால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்திருந்தனர்.
🔔சூரியன் திடப்பொருள் இல்லை திரவம் என்றும், சூரிய சந்திர கிரகணம் பற்றியும் அறிந்திருந்ததை உணரமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், அஸ்வினி புக் கம்பெனி, சென்னை- 600 014, முதற்பதிப்பு – 2001.
2.பாலாஜி.கே.ஆர், அறிவியல் என்றால் என்ன?,சாருலதா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 014, முதல் பதிப்பு- 2006.
3.நாராயணன், வி.எஸ். மக்கள் விஞ்ஞானம், இருவர் ஸ்டார் பிரசுரம், சென்னை-600 005, முதற்பதிப்பு, டிசம்பர்-1984.
4.சுப்ரமணியன்.ச.வே, எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும், தொகுதி-1,2,3 மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 108.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
கோ.சாலம்மாள் ,
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்(தமிழ்) ,
வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) ,
திண்டல், ஈரோடு மாவட்டம்.
Mullai Nila Aayargalin Vazhviyal|Dr.A.Janarthali Begam
Abstract
Literature that is very old and therefore mature in terms of time is considered as classical literature. Sangha literature is considered to be the most ancient of Tamil literatures. It originated in ancient times when there was a system called Sangam. Tamil language is an ancient high-class classical language and this ancient and ancient literature is spoken in association with the Sangha. The subjunctive tradition found in Sangha literature is based on the quintessence tradition the first substantive epithet tradition the propositional tradition the general attribute the field reference the reference object. During the Sangam period, the lands were divided on the basis of tenancy. They are Kurinji, Mullai, Marutham, Weaving, Balai. The purpose of this article is to mention the life of Aayyars who are the people living in Mullai land.
“முல்லை நில ஆயர்களின் வாழ்வியல்”
ஆய்வுச்சுருக்கம்
காலத்தால் மிகவும் பழமையும் அதனால் முதிர்ச்சியுமுடைய இலக்கியங்கள் தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் என்று கருதப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களுள் காலத்தால் பழமை வாய்ந்தது என்று கருதப்படும் இலக்கியம் சங்க இலக்கியமாகும். இது சங்கம் என்ற அமைப்பு இருந்த பழங்காலத்தில் தோன்றியதாகும். தமிழ்மொழி தொன்மை வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாகும் இவ்வுயர்வும் பழமையும் புலப்படத் தழிழானது சங்கத்துடன் இணைந்துப் பேசப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் காணப்படும் அகப்பொருள் மரபானது ஐந்திணை மரபு, முதல் கரு உரிப்பொருள் மரபு, கூற்று முறை மரபு, பொதுமைப் பண்பு, துறைக் குறிப்பு, குறிப்புப் பொருள் என்ற பலவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சங்ககாலத்தில் திணை அடிப்படையில் நிலங்களைப் பிரித்து வைத்திருந்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதாம். இதில் முல்லை நிலத்தில் வாழும் மக்களான ஆயர்களின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திறவுச்சொற்கள்: சங்கம், கழகம், இடையர், உறி, கார்காலம்.
முன்னுரை
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் அல்லது அக்கூற்றுக்களை நிகழ்த்தும் மாந்தர்கள் பெரிதும் நிலமக்களும் தலைமக்களுமே ஆவர். அரசர், அந்தணர் போன்ற உயர்ந்த மக்களைப் பாடும் பாடல்களும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. வணிகர், வேளாளர் பற்றி பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் தவிர அடியோர், வினைவலர்; முதலியோரும் பாடல்களில் ஏதேனும் ஒருவகையில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளனர். மேலும் கொல்லர், தச்சர், குயவர், நூல் நூற்போர், புலைத்தியர் போல்வாரும் சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர்.
“ கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசும் தமிழ்” (திருவிளையாடற்புராணம், திருநாட்டு.57)
என இறைவனே சங்கத் தலைவனாக அமர்ந்து வளர்த்த பெருமையுடையது தமிழ் என்று திருவிளையாடற்புராணம் எடுத்துரைக்கின்றது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மக்களின் வாழ்கை முறையில் ஒன்றுதான் முல்லை நில வாழ்வியல். முல்லை நிலத்தில் வாழும் மக்களை கோவினத்தர், கோட்டினத்தர், இடையர்கள், ஆயர்கள் என்றெல்லாம் அழைத்தனர். அத்தகைய ஆயர்களின் வாழ்கை முறையே இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.
முல்லை நில அமைப்பியல்
முதற்பொருள் கார்காலம், மாலை, கருப்பொருள் பதினான்கும், உரிப்பொருள், இருத்தலும் இருத்தல் நிமித்தமும், இவற்றின் திணை அமைப்பு காடும் காடு சார்ந்த இடமும். வினையின் கண் சென்ற தலைவன் கார்காலம் வந்தவுடன் திரும்பிவிடுவேன் என்று கூறிச் செல்கிறான். அவன் குறித்த கார்காலம் வந்துவிட்டது தலைவன் வரவோ தாமதமாகிறது. இது என்றெண்ணி மீள்வானே என்பதனை,
“பெருந்தேன் மாரிப் பேதைப் பித்திக” (குறுந்தொகை 94)
என்னும் பாடல் அடிகள் மூலம் தலைவியின் ஆற்றுதலை உணரமுடிகிறது. தலைவன் முல்லையிடமும் பாகனிடமும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவதாகவும், தலைமக்கள் இனிமையுடன் இருக்கும் இல்வாழ்க்கைச் செய்திகளைக் கூறுவதாகவும் முல்லைத்திணையில் காணமுடிகிறது. தொல்காப்பியரில் தொல்காப்பியத்தில் முல்லை நில ஆயர்கள் பற்றிய குறிப்பினை
” ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணை பெயர்
ஆவயின் கிழவரும் உளரே” (தொல்காப்பியம்,பொருள்.அகம்.21)
ஆயர் முல்லை நில மக்கள் பெயர் என்று குறிப்பிடுகிறார். இதன் வழி தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர் வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்கு கிடைக்கின்றன. மேலும் ஆயர் என்னும் சொல்லே தொல்காப்பியர் காலத்தில் முல்லை நில மக்களைக் குறிக்க வழங்கி வந்தது என்பதை உணரலாம். சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்த மக்களை ஒத்த மதுரை நகர வாழ்வையும் ஒருபுறமும் எளிய பழக்கவழக்கங்களை உடைய ஆயர் நாட்டுப்புற வாழ்வை மறுபுறமாக இளங்கோவடிகள் சித்தரிக்கின்றார் மதுரை நகரிலும் ஆயர்கள் நகரத்தை விட்டு ஒதுங்கி ஒரு சேரியிலேயே வாழ்கின்றனர் பாடி, சேரி, பள்ளி என முடியும் ஊர்களின் பெயர்கள் ஆயர் குடியிருப்பை குறிப்பை ஆகும் .இவ்வகையில் சிலப்பதிகாரம் மதுரை காண்டத்தில் புறஞ்சேரி இருத்த காதை என்ற ஒரு காதை இடம் பெறுகிறது. இதில் உள்ள சேரி என்னும் சொல் ஆயர் குடியிருப்பில் குறிக்கிறது கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி ஆகிய இருவரையும் மாதிரி என்னும் ஆயர் குல பெண்ணிடம் அடைக்கலப்படுத்துகிறார் அப்போது ஆயர் குடியிருப்பினை இளங்கோவடிகள் அழகாக வர்ணித்து இருப்பார். வருணக் கோட்பாடு வேரூன்றாத சங்க காலத்தில் ஆயர் தம்மை அரசரோடு ஒத்தவராக கூறிக் கொண்டனர் என்பதை முல்லைக்கலிப் பாடல் வழி உணர முடியும்.
” வீ வில் குடிப்பின் இருங்குடி ஆயிரம்”(முல்லைக் கலி 5:7)
சங்க கால ஆயர்கள் நகரத்தில் வாழ்ந்ததில்லை முல்லை என்ற காடு வாழ்விடமாகவே கிராமவாசிகளாகவே திகழ்ந்தனர். அவர்களின் மாடு காப்பார் என்றும் ஆடு மேய்ப்பார் என்றும் இரண்டு பிரிவுகள் இருந்தன. முன்னவர் கோவிந்த தாயார் என்றும் பின்னவர் புள்ளினத்தார் என்றும் வழங்கப்பட்டனர். முல்லையில் கார்காலத்தில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கொன்றை மலர்கள் குண்டு குண்டாக சதங்கைகள் போல் காட்சியளிக்கின்றன. குறவர்கள் கவலைக் கிழங்கு தோண்டுவதால் ஏற்படும் குழிகளில் கொன்றை மலர்கள் குவிந்து கிடக்கின்றன. மாலையில் முல்லைப் பூக்கள் எங்கும் நிறைந்து மணக்கின்றன. யானைகள் மேய்ப்புலத்தை நாடிச் செல்கின்றன. முல்லைக் கொடிகள் படந்த பகுதியில் அவை செல்லும் போது கொடிகள் அவற்றின் கொம்புகளில் சிக்கி அறுபடுகின்றன. அக்கொடிகள் யானைகளின் கொம்புகளில் கிடந்து அவற்றுக்கு அழகு சேர்க்கின்றன. மழையில்லாத காலத்தில் காயா மரங்கள் பொலிவிடத்து நிற்கின்றன. மழை பெய்ததும் துளிர்த்துக் கிளைகள் தோறும் மயிற்கழுத்தின் நிறமொத்த பூக்கள் நிறைகின்றன.
ஆடுகளை மேய்ப்பவர்கள் பட்டிகளில் ஆட்டின் திரளோடு தங்கி விடுகின்றனர். ஆடுகளிடம் கறந்த பாலை இடையர்கள் வீடு சேர்த்து, மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளோடு இருப்பவர்க்குச் சோறு கொண்டு மீளுகின்றனர். மழை பெய்யும்போது இடையர்கள் பனையோலையால் செய்யப்பட்ட பறியோலையால் தம்மை மறைத்துக் கொள்கின்றனர். உளுந்தின் காய்களையும் அறுகம்புல்லையும் உண்ணுகின்றன. மான் கூட்டங்கள் பரல் கற்களிடையே தேங்கி நிற்கும் நீரைக் குடித்து பூக்கள் மணம் வீசும் புதர்களின் நிழலில் படுத்துத் தூங்கும். முல்லை நிலச் செம்மண் நிலங்களில் வரகு செழித்து வளர்கிறது. பெருமழை பெய்யும் போது காட்டாறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அவற்றின் கரையிடத்தே அசைந்து செல்லும் தோகை மயில்கள் கார்மேகக் கூட்டங்களைக் கண்டு அகவுகின்றன. காட்டுக் கோழிகள் புதரருகே இரை தேடுகின்றன. காலையில் மேய்புலம் சென்ற மாடுகள் கழுத்து மணியசைய, மாலையில் வீடு திரும்புகின்றன. வயிறு நிறைய மேய்ந்த அவை மெதுவாக அசைந்து நடப்பதால் அதற்கேற்பக் கழுத்து மணிகளும் மெதுவாக அசைந்து அனிய ஒலியை எங்கும் நிறைக்கின்றன. இத்தைகைய அழகிய காட்சிகள் காணும் இடம் முல்லை நிலமாகும்.
சங்க இலக்கியங்கள் தமிழரின் வாழ்வின் நிகழ்வுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும், பழக்கவழக்கங்களையும், நீதிநெறி முறைகளையும், வழிகாட்டும் முறைகளையும், இயற்கையோடு இயைந்த முல்லை நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையின் சூழலான காடுகளைச் சார்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆயர் எனப்படுவர். தயில், மோர், வெண்ணெய் போன்றவற்றை விற்று இயற்கையாக விளைந்த தினை அரிசியை உணவாக உண்டு வாழ்ந்தனர். தலைவன் தலைவியரிடையே கனிகின்ற அன்பே இன்பப்பாலமாக இருக்கும். இவர்கள் இணைந்து இன்புற்று பிரியாது வாழும் வாழ்க்கையே விரும்புவார்கள். இருப்பினும் சமூகத்தில் ஒருவராக இருக்கும் அவர்கள் சமூகக் கடமைகளை செய்தாக வேண்டும். இந்தக் காரணத்தால் பிரிவு நேரிடுகிறது. அந்நேரத்தில் தலைவி மிகவும் துன்பப்படுவாள். மாலை நேரங்களில் ஆநிரைகளை பராமரிப்பதும், வினைமேற் சென்ற தலைவனை எதிர் நோக்கியும் காத்திருப்பாள்.
“ கானம் காரெனக் கூறினும் யானோ
தேறேன் அவர்பொய் வழங்கலாரே” (குறுந்தொகை 21)
தலைவன் குறித்த நேரத்தில் வருவேன் என்ற சொல்லை நம்பி தலைவி உறுதியுடன் காலம் பொய்த்தாலும் தலைவர் பொய் கூற மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருந்தாள் தோழி கார்காலத்தில் பூக்கும் கொன்றை மலர் பூத்துள்ளது தலைவன் வரவில்லையே என்ற சொல்லுக்குத் தலைவி மறுத்துரைக்கிறாள். தலைவன் மீது கொண்ட உறுதியும் நம்பிக்கையும் இங்கு வெளிப்படுத்துகிறாள் தலைவி பித்திகை மலர் பூத்ததுள்ளதை அறிந்த தலைவி கார்காலம் என்று அறியாமல் பூத்துள்ளது என்று மறுத்துக் கூறுகிறாள்.
” பெருந்தண் மாரிப் பேதைப் பித்தகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்ததுவே” (குறுந்தொகை 94)
என்ற பாடல் வரிகளால் சங்க கால தலைவி தலைவன் மேல் வைத்துள்ள நம்பிக்கை உணர்வை அறிய முடிகிறது. மேலும் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் கார்காலப் பித்திகை முகையின் தோற்றமே தலைவிக்கு வேதனை ஊட்டுகின்றது. மேலும் இடி முழக்கமிட்டுப் பொழியும் மழை ஓசையினையும் அவள் கேட்கின்றாள். எங்கோ நெடுந்தொலைவான நாட்டில் உள்ள தலைவன் இதே ஓசையினை கேட்டால் அடையக்கூடிய வேதனை எத்தகையது என்று தோழியை வினவுகின்றாள். இதனை
” சென்ற நாட்டை கொன்றையும் பசுவீ
நம் போற் கசக்கும் காலைதம் போற்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிக்கோட்டு
இரலை மானையும் காண்பர்கொள் நமரே” (குறுந்தொகை 183)
பிரிவுத் துயரால் பசலை படரும் என் மேனி போல் பசந்து தோன்றும் கொன்றை மலர்கள் அவர் உள்ள நாட்டில் பசந்து தானே தோன்றும் அந்நேரத்தில் தம்மை போலவே பெண் துணையைப் பிரிந்து திரியும் ஆன்மானைத் தலைவர் காண்பாரோ என்பது தலைவியின் உள் அகம் தெளிவு உறுத்தும் குறிப்பு
” படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்…
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப்ப அன்ன முல்லை வெண்முகையே” (குறுந்தொகை 35)
ஆநிரை மேய்த்து மீளும் இடையர் தலையிலே சூடியுள்ள முல்லை முகைகளைத் தலைவிக்கு காட்டி தலைவர் வருவதாக கூறிய பருவம் வந்துவிட்டது. அவர் வருகையை வாய் திறந்து சொல்வனப்போல் உள்ளன இந்த முல்லைகள் என்று தோழி தேற்றுவதும் உண்டு. தலைவனை நீங்கி தனிமை துயரில் இருக்கும் தலைவியின் மனநிலையை முல்லை மலரும் பொழுது தான் மாலை என்று பிறர் சொல்லுவது தலைவிக்கு விளங்கவில்லை. துணையின்றி பிரிந்திருக்கும் காதலருக்கு சேவல் கூவும் காலையாயினும் கதிரவன் காயும் கடும் பகலாயினும் எல்லாம் ஒரே மாலை நேரம்தான் என்கிறாள். இதனை
” முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் வபெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவி வேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊருக்கே”( குறுந்தொகை 28)
பிரிவால் வாடும் தலைவிக்கு நள்ளிரவில் அமைதி தாங்க முடியவில்லை. இடுகாட்டு அமைதி கொழுவிற்கும் நள்ளிரவிலே ஊரே தூங்குகிறது. இவளுக்குத் தூக்கம் வரவில்லை துயரமும் தாங்க முடியவில்லை. சுவரிலே போய் முட்டினாள் என்ன நம்மை நாமே அடித்துக் கொண்டால் என்ன அல்லது ஏதேனும் ஒரு சாக்கிட்டு அ ஆ ஒஓ என்று கூவி கதறினால் என்ன என்றெல்லாம் நினைவுகள் எழுந்து பேய்க் கூத்தாடுகின்றன. தலைவியின் மனதிலே இவள் படும் பாடு சிறிதும் அறியாமல் ஊர் முழுவதும் தூங்குவதும் நள்ளிரவு மற்றவர்களுக்கு துணை புரிவதும் என்ன இவற்றையெல்லாம் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் துன்புறுகிறாள் என்பதை மேற்கூறிய பாடல் விளக்குகிறது. சங்ககால ஆயர்களின் உணவு, உடை, அணிகலன்கள் ,இருப்பிடம், தொழில்கள், பண்டமாற்று, விருந்தோம்பல், நம்பிக்கைகள், வழிபாடு, திருமணம் ,விளையாட்டு போன்றவற்றைச் சங்க இலக்கியப் பாடல்களில் மூலம் அறிய முடிகிறது. ஆயர்கள் பலவித உணவு வகைகளை உண்டனர் பால் மற்றும் பால் பொருட்கள் தானிய வகைகள் அவர்களது உணவு பட்டியலில் சிறப்பிடம் பெற்றிருந்தன. அகநானூற்றுப் பாடலில் தயிரோடு வரகரிசி யுகடன் ஈசலைச் சேர்த்து ஆயர்கள் ஆக்கிய புலியம் சோற்றினை குறிப்பிடுகின்றது.
” களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,”(அகநானூறு 394 1 – 9)
திருமண விழாவில் உன் மனைவி பாற்சோறு ஊட்ட, நீ உண்ண, எங்களது இல்லத்துக்கு வருக, என்று தோழி தன் தலைவியின் காதலனை அழைக்கிறாள். களாப்பழம் புளித்து இனிக்கிறது. விளாம்பழம் பழுத்திருக்கிறது. சிறிய தலையை உடைய செம்மறி ஆட்டுப் பால் பழுப்பு நிறம் ஏறித் தயிராக விளைந்திருக்கிறது. இதமான புனத்தில் விளைந்த வரகரிசி அவலில் (அவைப்பு) கார் காலத்தில் புற்றிலிருந்து பறக்கும் ஈசலைப் பிடித்துப் போட்டுச் சமைத்த புளிப்பொங்கல் இருக்கிறது. பசுமாட்டு (சேதான்) வெண்ணெய் இருக்கிறது. அதனை உருக்கிய நெய்யை ஊற்றி உன் இளையர் (காவல்தோழர்) உண்ணலாம். அதன் பின்னர், நீயும் பாற்சோறு உண்ணலாம். இவ்வாரபக ஆக்கிய சோற்றில் வெண்ணெய் உருகி ஓடுமாறு விட்டு விலையருக்கு உண்ண தருகிறாள் ஆயமகள் என்பதை இப்பாடல் வழி உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆயர்கள் தொழில்
கையில் தீக்கடை கோள் முதலான கருவிகளுடன் தோற்பையை வைத்திருக்கும் இடையன் ஒருவன் பால் விலை கூறி விட்டதை நற்றிணை காட்டுகிறது தம் ஆட்டுத்தொகுதியுடன் வயலிலேயே இடை அமர்த்தி தங்கிவிடும் இடையர் அவற்றின் பாலைக்கரந்து ஊருக்குள் எடுத்துச் சென்று விற்று தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களுடன் திரும்புவதை
” பாரிடை கையர் மறியினத்து ஒழியப்
பாலோடு வந்து கூழ்வோடு பெயரும்
ஆடுடை இடை மகன்” (குறுந்தொகை 222)
என்ற குறுந்தொகை பாடல் வரிகள் உணர்த்துகின்றன. உலகெங்கிலும் ஆ வானது அருமை போற்றப்படுவதாயினும் முல்லை நில மக்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் பசுக்களும் காளைகளும் வளர்த்து வந்தனர். மேலும் அவற்றுடன் ஆட்டையும் எருமைகளையும் விரும்பினர் இதனை
” நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்” (பெரும்பாணாற்றுப்படை 160 165)
இனிய தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து, தயிர் புளியாகத் தெளித்த வாயையுடைய மோர்ப்பானையை தலைசும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு, புதிய மோரை விற்கும், மாமை நிறம் கொண்ட மேனியையும், சிறிய அணிகலங்கள் அசைகின்ற காதுகளையும், மூங்கில் போன்ற தோளினையும், குறியதான நெறிப்பு உடைய கூந்தலையும் உடைய இடையர்குலப் பெண், மோர் விற்றதனால் உண்டான நெல் முதலியவற்றால் சுற்றத்தார் எல்லோரையும் உண்ணும்படி செய்து, பின்னர் தான் நெய்யை விற்கும் விலைக்குக் கட்டியான பொன்னை வாங்காமல் அவ்விலைக்கு எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கருவாகிய கன்றுகளையும் வாங்குவாள். மடிந்த வாயையுடைய இடையர் . இந்நில மக்கள் ஆநிரைகளை அம்மை வந்தால் அப்பன் வந்தான் என்று உறவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர் ஆநிரைகளை தூய்மை மற்றும் தெய்வத்தன்மை பொருந்தியதாக கருதினார் போர்க்காலத்தில் ஆநிரைகளை கவர்தல் பேரிழப்பாக கருதப்பட்டது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய திருப்பாவையில் காயாமரத்து உச்சியை தொட முயன்று அதன் மலர்களை உதிர்த்து தள்ளி துளசிகாடெல்லாம் நீர் பெருகி தேங்கசெய்து திருமாலுக்குறியா பாற்கடல் ஆக்கியது இத்தகைய சிறப்பை
“வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தே ஓர் என் பாவாய்” (திருப்பாவை 3)
எனப் பாடப் படுவதால் அறியலாம். மேலும் ,
“கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்
சோற நனைத்தில்லம் சேறாக்கும்” (திருப்பாவை 12)
கன்றுகளை நினைத்து இரக்கம் கொண்டு கனைத்தபடி எருமைகள் மடியில் இருந்து பாலைச் சொறிந்து வீடு முழுதும் சேராகும்படியான செல்வங்களை உடையவர்கள் ஆயர்கள் என்பதால் முல்லை நில மக்களின் வளமான செழிப்பான வாழ்வை அறிந்து கொள்ள முடிகிறது. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலையும் அறிந்திருந்தனர். அவர்கள் வீட்டில் வெண்ணெய் வைக்கும் உறியானது மண் பாண்டத்தில் செய்யப்பட்டவையாகும். “மண் பாண்ட தொழில் செய்வோரை களஞ்சை கோ, வேட்கோவர்கள் என அழைத்தனர் .இதனை புறநானூற்றின் 228 ,256 ,238 ஆகிய பாடல்கள் எடுத்து மொழிகின்றன .வேட்கோவர் குடியிற் பிறந்த வென்னி குயத்தியாரின் பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளமையை உணரற் பாலதாகும்.” (சி. சேதுராமன், செவ்விளக்கிய புதுமைகள், பக் 90) என்பதிலிருந்து முல்லை நில மக்கள் மண் பாண்டத் தொழிலிலும் சிறந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.
“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், தாயர்” (முல்லைப்பாட்டு 13- 17)
சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன் தாயினைக் காணாது துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக் குளிரால் நடுங்கிக்கொண்டு, தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள இடையர் குலப்பெண், “வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த, உன்னுடைய தாய் இப்பொழுதே வருவர். என்றெல்லாம் கன்றினை தேற்றுவது போல் முதுபெண்டிர் தலைவிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நற்சொல் கேட்டதாக கூறுவதூக அமைகிறது..
ஏறு தழுவுதல்
முல்லை நிலத்தில் வாழக்கூடிய கொடிய புலி போன்ற விலங்குகளிடமிருந்து பசு கூட்டங்களை காப்பதற்கு வீரம் மிகுந்த ஆண்களை கண்டறிவதற்கு உருவாக்கப்பட்டது ஏறு தழுவுதல் ஆகும் ஏறு தழுவும் நிகழ்வினை முல்லை கலி
” சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒ
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாகை
ஈன்றன ஆய மகள் தோள்
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்” (முல்லைக்கலி 101)
சிவனின் கூரிய ஆயுதம்போல் , சீவிக் கூர்த்தீட்டப்பட்ட கொம்புடைய ஏறு தழுவப் புகுந்தனர் இணைந்து திடலில் இடிபோல் முழக்கம் எழச் சவால் ஏற்றுமணத்தோடு மண்புழுதியும் எழ பெண்கள் வரிசையாகச் சுற்றி நிற்க துறையும் ஆலும் தொன்மை வலுவுடைக் கடம்பமும் முறையாகத் தொழுதுப் பாய்ந்தனர் . மதம்பிடித்த யானையைவிடச் சீறும் காளையை விடாமல் அடக்குவீரானால் வெற்றிப் பதாகையோடு வெல்வீர் ஆயர் மகள் கரம்கொல்லும் எருதை அடக்குபவர்க்கு அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட எம்பெண்டிரைக் கொடுப்போம் யாம் முல்லை நில பெண்கள் வீரமிக்கவர்கள் என்பதை ஏறு தழுவுதல் வாயிலாக அறிய முடியும்.
” கொள்ளேற்றுக் கோடு அஞ்சு வானை
மறுமையும் ஃபுல்லான ஆய மக்கள்” (முல்லைக்கலி 103)
என்றும் மகளிர் வீரத்தை புலப்படுத்துகிறது. ஆயர் குடும்பத்தில் பெண் குழந்தை பருவம் எழுதியவுடன் வீட்டில் காலையும் வளர்க்கத் தொடங்கி விடுவார்கள் கூறிய கொம்புடைய காளையை அடக்குபவனுக்கே அப்பெண் மனம் செய்து கொடுக்கப்படுவாள் இன்று ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு எருது கட்டு போன்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இடையர்கள் வாழும் பகுதி பாதுகாப்பு உடையது என்பதை அகநானூற்று பாடல்
” கடைக் கோல் சிறு தீ அடைய மாட்டி
திண்கால் உறியன் பானையன்
அதளன் நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவிடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரிஇ “(அகநானூறு 174)
ஆட்டுக் குட்டியினைக் காப்பதற்காகக் குள்ளநரியினை விரட்டுவதற்கு வாயினை மடித்துச் சீல்க்கை என்னும் ஒலி எழுப்பி குள்ளநரி அஞ்சி ஓடும் படி செய்வார்கள் இடையர்கள்.
முடிவுரை
சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவரவருக்கான வாழ்க்கையினை தனித்தனியே வகுத்து வைத்திருந்தனர். குறிஞ்சி குறிஞ்சி நிலத்தை அடுத்த முல்லை நிலக்காட்டில் வாழும் மக்கள் இனமே ஆயரின மக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய தொழிலான ஆடு மாடு மேய்த்தல் அவற்றில் வரக்கூடிய பொருட்களை விற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொண்டனர். முல்லை நிலத்திற்குரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளை தன்னகத்தை கொண்டு சிறப்பான முறையில் முல்லை நில மக்கள் வாழ்ந்ததை நாம் மேற்கூறிய கட்டுரையின் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த சங்ககால மக்களின் வாழ்க்கை முறையினை இன்றளவும் பின்பற்றிய அவர்கள் சென்று கொண்டிருந்தாலும் அவற்றினை அனைத்தும் மக்களுக்கும் தெரிவிக்கும் நோக்கோடே இக்கட்டுரை அமைகிறது என்ற எண்ணத்துடன் நிறைவு நிறைவு செய்யப்படுகிறது.
துணைநூற்பட்டியல்
1.செ. சாரதாம்பாள், சங்க செவ்வியல் சங்க கிரேக்க ஒப்பீடு, மீனாட்சி புத்தக நிலையம், முதலி தெரு, மதுரை -625001, முதற்பதிப்பு 2010.
2.சி.சேதுராமன், செவ்வியலக்கியப் புதுமைகள், பாவை பப்ளிகேசன்ஸ், இராயப்பேட்டை, சென்னை -600014. பதிப்பு 2021.
3. ஞா மாணிக்கவாசகன், உரையாசிரியர், சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை 60001, ஏழாம் பதிப்பு 2014.
4.கா கோவிந்தன், முல்லைக்கொடி, தமிழ் தாய் பதிப்பகம், சென்னை 64 , முதல் பதிப்பு 2001.
5.கு.வெ. பாலசுப்ரமணியன், குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை – 600098, மூன்றாம் பதிப்பு 2007.
6.கு.வெ. பாலசுப்ரமணியன், கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,சென்னை -600098. மூன்றாம் பதிப்பு 2007.
7. கு.வெ. பாலசுப்ரமணியன், பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை – 600098, மூன்றாம் பதிப்பு 2007.
8. தி.மகாலட்சுமி, குறுந்தொகையில் இயற்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை -600113, முதல் பதிப்பு – 2015.
9.ஞா.மாணிக்க வாசகன், பத்துப்பாட்டு மூலமும் விளக்கமும், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை-600001, மூன்றாம் பதிப்பு 2016.
10.கு.வெ. பாலசுப்ரமணியன், அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை -600098, மூன்றாம் பதிப்பு 2007.
11.ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, முதற்பதிப்பு 2020.
12.சாமி சிதம்பரனார், பத்துப்பாட்டும் பண்டையத் தமிழரும், சாமி சிதம்பரனார் இலக்கிய நிலையம், சென்னை-600094, 1986.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.ஜனார்த்தலி பேகம்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி-20
அவள்!|சஹானா க ச
🧚🏻♀️ஆவதும் பெண்ணாளே!
அழிவதும் பெண்ணாளே!!
இந்த மனிதப் பிறவி
பெண்ணில் அடங்கும் என்பவன்
யாதும் அவளால் ஆன பிறகும்
யாதுமானவளுக்கான
இடம் இங்கு ஏன் இல்லை?
🧚🏻♀️பேதை

பெரும் பேதையவளின்
கள்ளமறியாத சிரிப்பிலே
பயம் விதைக்கின்ற சமூகம்…
🧚🏻♀️பெதும்பை
முளைப்பருவப் பிஞ்சு மனதில்
காயம் பொறிக்கின்ற பார்வைகள்…
🧚🏻♀️மங்கை
மலர்வதற்குள் நெறிக்கின்ற
கட்டுப்பாடுகளின் சங்கிலி…
🧚🏻♀️மடந்தை
வாழத் தொடங்கும் வேளையிலே
விருப்பம் கேட்காத வழக்கம்…
🧚🏻♀️அரிவை
அறிவோடு நின்றால்
அடக்க நினைக்கும் சமூகம்…
🧚🏻♀️தெரிவை
தெரிந்து சொன்ன சொற்களையும்
தவறெனத் திரிக்கும் வார்த்தைகள்…
🧚🏻♀️பேரிளம்பெண்
பொறுப்பு சுமந்த தோள்களில்
கனவுகள் சுருங்கும் நிலை…
🧚🏻♀️முதுமங்கை
மூப்பு வந்த பின்னரும்
மூடிய குரலாய்
முப்பொழுதும் நிற்கும் அவள்..!
கவிதையின் ஆசிரியர்
சஹானா க ச
இரண்டாம் ஆண்டு சமூகவியல்
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,
திண்டல், ஈரோடு-12.
Irattai Kapiyangal Kaattum Panpattu Kurugal| S.Ramachandran
Abstract
This article examines the cultural values depicted in the twin epics Silappathikaram and Manimekalai. These classical Tamil works reflect the social, ethical, and cultural life of ancient Tamil society. The study highlights how literature serves as a mirror of civilization, revealing customs, traditions, moral principles, and social structures of the time. A key focus is on the concept of culture as expressed through language, literature, arts, religion, political systems, education, and social practices. The epics emphasize the importance of moral conduct, charity, and virtuous living. Concepts such as timely charity (aram), hospitality (virundhombal), and righteous living are strongly embedded in the narratives. The characters of Kovalan, Kannagi, Kaundiyadigal, and Madhavi exemplify these values through their actions and experiences. The paper also discusses the significance of hospitality as a core social value, where guests are treated with respect and care. The role of women in upholding household and social ethics is also evident, particularly through characters who demonstrate compassion, responsibility, and moral strength. Furthermore, Manimekalai emphasizes the eradication of hunger and poverty as the highest form of charity. The epic portrays humanitarian service as a central ethical duty, advocating for feeding the hungry and alleviating suffering as the noblest form of virtue. In conclusion, the twin epics collectively portray a comprehensive picture of ancient Tamil cultural and ethical values, highlighting the importance of righteousness, charity, hospitality, and social responsibility as fundamental elements of Tamil civilization.
“இரட்டைக் காப்பியங்கள் காட்டும் பண்பாட்டுக் கூறுகள்”
முன்னுரை
சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் கொண்டு விளங்கிறது. இக்காப்பியத்தில் கூறப்படும் பண்பாடு பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே உள்ளடக்கியது. இது பழக்கத்தாலும், பயிற்சியாலும், முயற்சியாலும் மனித மனத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துவதாகும். இக்காப்பியத்தில் புதைந்து கிடக்கும் அக்கால மக்களின் உண்மையான வாழ்வியல் கூறுகளுள் பண்பாடு குறித்த கருத்துகளை இக்கட்டுரை ஆராயும்.
பண்பாடு
ஓரினத்தின் பண்பாடு அதன் இலக்கியம், நடையுடை, மொழி, கலைகள் குறிக்கோள் சமயக் கொள்கை, அரசியற்கொள்கை, அரசியல் வரலாறு, சமுதாய நிலை, பெண்களின் நிலை, அறிவியல் சிறப்பு, கல்வி நிலையங்கள் மூலமே விளக்கமுறுகின்றது;1 என்று தட்சினாமூர்த்தி கூறுகிறார். பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக பண்பாடு நிலையினை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளிலிருந்தே அறிகிறோம். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பிறரை வாழ்த்துகின்ற பொழுது உள்ளன்போடு வாழ்த்துவது வாழ்த்தாகும். வாழ்த்து என்பது வாழ்வைச் சிறப்பித்து உரைப்பதால் வாழ்த்தாயிற்று. அது மிகச் சிறந்த அறப்பண்பாடாக இருந்ததோடு மட்டுமல்லாது, அவர் செய்த செயல் இன்னும் சிறக்க அது ஒரு தூண்டு கோலாக அமையக்கூடிய சிறப்புதன்மை உள்ளது. இளங்கோவடிகள் கோவலன், கண்ணகி திருமண விழாவை முதல் காதையில் நம் கண்முன் காட்சிப் படுத்துகிறார். அவ்விழாவைக் காண மகளிர் அனைவரும் வருகின்றதை வரிசைப்படுத்துகிறார். பெண்மைக்கு விளக்கமாக அணி மணி புனைந்து வந்த சிலர் மகளிர்,
காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அனுக்2
என்று சில மலர்களைத் தூவி திருமணத் தம்பதிகக்கு வாழ்த்துக் கூறும் செய்தியைக் காண முடிகிறது.
அறம் செய்யும் காலம்
பொதுவாக அறம் என்ற சொல்லுக்குத் தானம், தர்மம் என்று கூறுவார்கள், ஆனால் நல்ல செய்ல்கள் எல்லாமே அறமாகும் என்பர். அறச்செயல்களை அன்றே செய்ய வேண்டும், காலம் தாழ்த்த கூடாது, வலக்கையால செய்யும் தானம் இடக்கைக்கு தெரியக் கூடாது, ஏனெனில் வலக்கையில் இருந்து இடக்கைக்கு மாறும் நேரத்தில் மனம்மாறக் கூடும் என்பதே அதன் நோக்கமாகும். இதனை,
நாளை செய்குவம் அறம் எனில் இன்றே
கேள்வி நெல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுனீர் உலகில் முழுவதும் இல்லை3
என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாம். காலத்தை வரையறுத்து வாழ்வோர் உலகில் எவருமில்லை. அறச்செயல்களை நாளை செய்வோம் என்றால் இன்றே உயிர் போனாலும் போகும். ஆகையால் உடனே அறச்செயல்கள் செய்யவெண்டும் என்ற கருத்து புலனாகிறது. ஒருவரின் நல்லறப் பயனானது அவருக்கு மட்டுமில்லாது அவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நல்வினை தீவினை எனும் இருவகை வினைகளில் நாம் எதைச் செய்தாலும அதற்குரிய பலன் வந்தே தீரும் என்பது நியதியின் பண்பாடாகும். ஆகவே என்றும் நல்லறம் புரிதல் நம்மையத் தரும் பண்பாடாகக் கருதப்படுகிறது.
நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே4
என உரைக்கிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகார காப்பியத் தலைவி கண்ணகி கோவலனை பிரிந்து இருந்த காலங்களில் தன்னால் நல்லறம் செய்ய முடியாமல் போனதை தன் கனவனிடம் சொல்லி வருந்தியதை இளங்கோவடிகள் கூறுகிறார்.
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பில்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை5
எனும் வரிகள் அவலத்தை தெளிவுப்படுத்துகின்றன.
விருந்தோம்பல்
இல்லறத்தில் கனவனும் மனைவியும் இணைந்து ஆற்ற வேண்டிய அறம் எனும் விருந்தோம்பல் பண்பாடாகும். காலம் தொட்டு நிகழ்ந்து வரும் இவ்பண்பாட்டை தொல்காப்பியர் விருந்துதோம்பலையும் இணைத்துக் கூறுகிறார். இதனை,
விருந்துபுறந்தருதலும் சுற்ற ஓம்பலும்6
என்ற வரிகளில் அறியப்படுகிறது. சிலப்திகாரத்தில் மாநகர பெண்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர். இடையர்குல பெண்ணான மாதிரியும், ஐயையும் கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் ஆகிய மூவரையும் வரவேற்று அவர்கள் தங்குவதற்கு இடமும் சமைப்பதற்கு புதிய பாத்திரங்கம் வழங்கி ஐயை என்பவள் கண்ணகிக்கு உதவி செய்வதையும் நோக்குகின்ற பொழுதும் இடையற்குல பெண்ணான மாதரி கலக்கமுற்று வந்தவரையும் பாதுகாத்து இருந்தாள் என்பது புலனாகிறது.
அடைக்கலக்காதையில் கவுந்தியடிகள் கண்ணாகியை மாதிரியிடம் அடைக்கலப்படுத்தும் போது, அவளுடைய குலப் பெருமையை எடுத்துரைக்கிறார். இவள் பெரும் வாணிகனின் செல்வமகள் இவளை யார் வேண்டுமானலும் தன் வீட்டிற்கு விருந்தாக விரும்பி அழைத்துச் செல்வர். அப்படிப்பட்ட பேரழகும் கற்பிற் சிறந்தவள் என்று பலவாறு கவுந்தியடிகள் கூறுகிறார். இதை,
மங்கல மடந்தையை நன்னீர் ஆட்டி
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி
தோமன் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆய்இமை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு7
எனும் பாடல் வரிகளில் கவுந்தியடிகள் மாதிரியிடம் கண்ணகிக்குத் தோழியாகவும் தாயாகவும் இருந்து பாதுகாப்பளித்துக் காப்பாயாக என்ற கருத்து வெளிப்படுகிறது.
அறப்பண்புகள்
மாதரி தெய்வத்திற்குப் பால் சோறு படையல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கவுந்தியடிகளை கண்டு இருக்கரம் கூப்பி வணங்கினாள் இப்பண்பு அறத்தின்பாற்பட்ட செயலாகும்.
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்இய
புறம்சிறை மூதூர்ப் பூங்கண் இலக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
என்னும் வரிகளால் தெளியலாம். மேலும் மாதரி நாள்தோறும் அறப்பயன் செய்து வருவதை அடைக்கலக்காதையில்,
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்கைஒர் கொடும்பாடு இல்லை
தீதிலள் முதுமகள் செவ்வியல் அனியள்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்8
என்ற வரியின் மூலம் வெளிப்படுகிறது. தவத்தில் சிறந்த முனிவர்கள் அடைக்கலமாகக் கொடுக்கப்படுகின்ற பொருளை நன்றாகப் பாதுகாத்து, ஒப்படைப்பதெ இல்லறத்தில் இருக்கும் மனைவியின் கடமையாகும்.
மணிமேகலை காட்டும் பண்பாடு
ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதர்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக உங்கள் முனிவர்கள் பசு வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரைவிட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்கு தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்
பசிப்பிணி அகற்றல்
மணிமேகலைக் காப்பியம்,
“பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க்9
என வாழ்த்தித் தொடங்குகின்றது. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார். பாரதி. அதுபோல பசிப்பிணிப் போக்கும் அறம் செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது.
மண்டினி நாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டிக் கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்10
என்பதனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார். அவர் பசியின் கொடுமையைப் பின்வருமாறு விளக்குவார்.
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த
கல்விப்பெரும்புனை விடூஉம் நாண அணிகளையும் மான்எழில்
சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறஙடகடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி11
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள அறத்தில் எல்லாம் சிறந்தது. என்பதனை
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை12
என்று வற்புறுத்துகின்றார்.
முடிவுரை
பண்டைத் தமிழர்களின் அறப்பண்புகளாகிய அறம் செய்யும் காலம், தானம், விருந்தோம்பல், பாதுகாத்தல், உபசரிப்பு முதலியவைகளை சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மாதரி, ஐயை முதலிய பாத்திரங்களில் வாயிலாகப் பண்பாட்டைக் காண முடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.22
2.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- மங்கல வாழ்த்துப் பாடல் 1:61,62
3.மேலது- சிலம்பு நடுகற் காதை -28 179-182
4.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 வெண்;பா
5.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 71-73
6.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம்; கற்பியல் – 11
7.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- அடைக்கலக்காதை -15 131-136
8.மேலது- சிலம்பு அடைக்கலக் காதை -15 120-123,130
9.துரை. தண்டபாணி – மணிமேகலை பதிகம். 116, 117
10.மேலது- பாத்திரம் பெற்ற காதை 95,96
11.மேலது- பாத்திரம் பெற்ற காதை 76, 80
12.மேலது- பாத்திரம் பெற்ற காதை 92, 94
துணை நூற்பட்டியல்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு,
2.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு.
3.மாணிக்கவாசன்-சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா பதிப்பகம்.
4.துரை. தண்டபாணி – மணிமேகலை தெளிவுரை, உமா பதிப்பகம்.
5.க.ப.அறவாணன் – சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், தமிழ்கோட்டம்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ.இராமச்சந்திரன்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்)
வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்)
திண்டல், ஈரோடு மாவட்டம்.
Medicine in folk literature|M.Seethala devi
Aim of Research
Folk medicine is an medicine which has come through man’s real-world wisdom or practical knowledge. Each and every house has a spices-box in which each box contains an Indian long pepper, cumin, fenugreek and coriander seeds. Those seeds were then used by the villagers as an medical properties. They used the natural herbs, seeds, roots, plants, vine flowers and cinnamons that were available either in wilderness or in farm lands. Such kinds of excellent medicinal procedures were learnt either by hereditary by hereditary or by hearsay or by Tamil literatures by the Tamil people. The folk medicine in the life of Tamils was evident in the Tamil literature and also suggesting the ways of the protecting the folk medicine. Thus, this article’s aim is to throw some light on the research on the procedures and the benefits of the folk medicines found in the folklores.
“நாட்டுப்புற இலக்கியங்களில் மருத்துவம்”
ஆய்வின் நோக்கம் (Objectives of the Study)
நாட்டுப்புற மருத்துவம் என்பது மனிதனின் பட்டறிவு வாயிலாக வந்த மருத்துவ முறையாகும். வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி போன்ற பொருட்களையே கிராமத்து மக்கள் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். மேலும் காட்டு வெளியிலும், வயல்வெளிகளிலும், இயற்கையில் கிடைக்கும் விதைகள், வேர்கள், மரச்செடி, கொடிகளின் பூக்கள், பட்டைகள், பச்சிலைகள், போன்றவற்றை மருந்தாக மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு சிறப்பு பெற்ற மருத்துவ முறைகளைத் தமிழகத்தில் உள்ள கிராம மக்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாகவும் ,செவி வழி செய்தியாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும், தமிழர் வாழ்க்கையில் நாட்டுப்புற மருத்துவத்தின் பங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதையும், மக்கள் அறிவு (Folk Knowledge) எனும் கருத்தை மருத்துவத்தின்வாயிலாக ஆராய்வதையும், நாட்டுப்புற மருத்துவம் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும், நாட்டுப்புற மருத்துவத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தல் பற்றியும், அறிந்தும் பயன் பெறுகின்றோம்.எனவே நாட்டுப்புற மருத்துவ முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும் நாட்டுப்புற இலக்கியங்களில் இடம்பெறுமாறு ஆராய்வதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை
நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் இலக்கியம் ஆகும் இது ஒரு வாய்வழி இலக்கியம் என்றும் கூறலாம். நாட்டுப்புறக்கலைகளின் ஒரு கூறாக நாட்டுப்புற மருத்துவம் அமைகிறது. நாட்டுப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நாட்டு மருத்துவம் சித்த மருத்துவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களின் மூலம் பல மருத்துவ செய்திகளை நாட்டுப்புற மக்கள் கூறுகின்றனர்“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த பழமொழி. செல்வம் உள்ளவர்களிடம் நோய்கள் அதிகமாக இருப்பது இன்றைய வாழ்க்கை முறைக்கு உண்மையாகும். நோயற்ற வாழ்வு பெற மனிதனிடம் தோன்றிய சிந்தனை வெளிப்பாடே நாட்டுப்புற மருத்துவமாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது. மனித நாகரிகத்தின் தொடக்கமே நாட்டுப்புறவியலில் தான் உள்ளது. அந்த வகையில், பழங்கால மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த மருத்துவ முறைகள் மற்றும் நம்பிக்கைகளை அறிந்து கொள்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.
நாட்டுப்புற இலக்கியம்
இயற்கை நம்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த ஆதிகால மனிதர்கள் நோய் ஏற்பட்டபோது நோயைப் போக்கி தங்கள் உடல்நலம் காக்க மருத்துவ குணம் உடைய செடி, கொடிகள், மரங்களை நாடி இருக்கின்றார்கள். பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பழமொழி“உடம்பை முறித்து கடம்புக்கு கொடு” என்பதாகும் அதாவது கடம்பு என்பது ஒரு மரம் நன்றாக வேலை செய்து களைப்பு நீங்க கடம்பு மரத்தினால் செய்த கட்டிலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அனுபவ பழ மொழி கூறுகிறது. இயற்கையாக கிடைத்த பச்சிலைகளை மருந்தாக சாப்பிட்டு எந்தவித ஆபத்துகளும் இல்லை என்று தெரிந்ததும். அவற்றையே தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்கள் இவ்வாறு தோன்றிய வாய்மொழி முறையை மக்கள் தொடர்ந்து வழி வழியாக பயன்படுத்தும் வகையில் செவிவழிச் செய்தி யாகப் பரப்பினார்கள் இவ்வாறு மருத்துவம் தோற்றம் பெற்றன.
மருத்துவம் தோன்றிய காலத்தை வரையறுத்து கூற இயலாவிட்டாலும் மனிதன் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கிய காலமே மருத்துவம் தோன்றிய காலம் என்று கூறலாம். நாட்டுப்புற மருத்துவம் நாட்டுப்புறவியலை போலவே விவசாயிகள் பண்பாட்டிலிருந்து (Peasant Culture) தோன்றியதாகும். என்பார் சண்முகசுந்தரம் (1997:192) உயிர்கள் தோன்றியபோதே நோய்களும் தோன்றியுள்ளன. மனிதன் அந் நோயைப் போக்கிக் கொள்ள வழியைக் கண்டறிந்த போது மருத்துவம் தோன்றலாயிற்று. மனித சமுதாயம் இயற்கை நிலையிலிருந்து உற்பத்தி சேகரிப்பு என்ற நிலைக்கு மாற காட்டுமிராண்டித்தனம், அநாகரிகம் போன்றவற்றிலிருந்து வளர்ந்து நாகரீகம் அடைந்தது. இக்காலகட்டத்தில் மருத்துவமும் வளர்ச்சி அடைந்தது
மருத்துவம் தோன்ற காரணம்
ஆதிகால மக்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் நாடோடிகளாக வாழ்ந்தனர். தங்களுக்கென ஒரு இருப்பிடம் எதுவும் இல்லாமல் புல் தரைகளிலும், புதர் மறைவிலும், குகைகளிலும், மரங்களின் நிழல்களிலும், தங்கி இளைப்பாறினர். அவ்வாறு இருக்கும் போது உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதிகம் நோயுற்று இருந்தபோது அதனை குணமாக்கும் நோக்கில் பல முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டதன் விளைவே இயற்கை மருத்துவம் ஆகும். விலங்குகள் கூட உடல்நல குறைவாக இருக்கின்றபோது மருத்துவ செடிகளைத் தேடி உண்பதும் உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். நாயானது தனது உணவு கோளாறு காரணமாகப் புற்களை உட்கொண்டு வாந்தி பண்ணி விடுவதைப் பார்த்து இருக்கின்றோம். ஆகவே எல்லா உயிர்களும் ஒருவகையில் இயற்கை மருத்துவ முறையை வழி வழியாக கடைபிடித்து வந்துள்ளன. விலங்குகளின் தலைமை விலங்காகிய மனிதனிடம் இவ்வகை மருத்துவம் மிக வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுபுற மருத்துவம் என்பர். அதாவது ‘தமிழக கிராமப் புறங்களில் நாட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்” கூறுவார். (ETHNOLOGY MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETHNOIATRY, ETHNOATRICS) நோய் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது இயற்கையும், காலநிலையும் என்றே கூறலாம். நாடோடி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒவ்வாமைகளும் சுற்றுச்சூழல் மாசுகளும் அவனை நோய்வாய்ப் பட வைக்கிறது அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே மருத்துவம் தோன்ற காரணமாக இருக்கிறது.
நாட்டுப்புற மருத்துவத்தின் பெயர்கள்
நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்பது நாட்டுப்புற மக்களால் மரம் செடி, கொடி, இலை, பூ காய் கறி, பட்டை வேர் கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுவதால் இப்பெயர் வழங்கல் ஆயிற்று. நாட்டுப்புற மருத்துவத்தை இனம் சார் மருத்துவம், மக்கள் சார் மருத்துவம், மக்கள் நல பண்பாட்டு, இனவியல், என பல பெயர்களால் அழைப்பர் என்கிறார் சக்திவேல் (1992:253) நாட்டுப்புற மருத்துவத்தை வீட்டு வைத்தியம்,நாட்டு வைத்தியம், செய்முறை வைத்தியம், கை மருந்து வைத்தியம், பாட்டி வைத்தியம், சிடுகா மருந்து, என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுப்புறங்களில் கிடைக்கும் மருந்து பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால் நாட்டு வைத்தியம், என்றும் வீட்டில் வைத்து மருந்து தயாரிக்கப்படுவதால் வீட்டு வைத்தியம், என்றும் கையினால் மூலிகைகளை நசுக்கி, கசக்கி, சாறு எடுத்து நோயின் மருந்தாக உபயோகப்படுத்துவதால் கைமுறையை மருத்துவம், என்றும் கைதேர்ந்தவர்களால் செய்யப்படுவதால் கை மருத்துவம், என்றும் வீட்டு பெரியோர்களால் செய்யப்படுவதால் பாட்டி வைத்தியம், என்றும் மக்கள் பயன்படுத்தும் மருந்து செடி, கொடிகளைப் பச்சிலை என்பர் என்று சண்முகசுந்தரம்(1994:140) கூறுகிறார். இம்மருத்துவமானது பச்சிலை எனப்படும் மூலிகைச் செடி கொடிகளைக் கொண்டு செய்யப்படுவதால் பச்சிலை மருத்துவம் அல்லது மூலிகை மருத்துவம், என்றும் இம்மருந்துகளைப் பாமர மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் பாமரர் மருத்துவம், என்றும் பாமர மக்களால் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருவதால் பாமர மக்களின் பரம்பரை மருத்துவம் என்றும், மருந்துப் பொருட்களின் துகள்களைக் (பொடி) கொண்டு செய்யப்படுவதால் சிடுகா மருந்து என்றும், பல்வேறு பெயர்களைப்பெற்றுள்ளன. மேலும் நாட்டுப்புற மக்களால் நாட்டுப்புற மருத்துவம் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பு
நாட்டுப்புற மருத்துவம் நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் ஆற்றல் படைத்தது இதனால் எதிர் விளைவும் ஆபத்தும் இல்லை அறிவியல் ரீதியாக மருந்து கண்டுபிடிக்கப்படுகின்ற சில மருந்துகளும் இந்த இயற்கை மருத்துவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கொடுக்கப்படுகின்ற Liv.52 என்ற மருந்தைக் கூறலாம் இது கிழகாய்நெல்லி என்று சொல்லப்படுகின்ற கீழாநெல்லி அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து நோயாளிக்கு கொடுத்து வர மஞ்சள் காமாலை குணமாகும் என்பது நாட்டுப்புற பாட்டி மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்திற்கு அடிப்படை உந்துதலாக அமைந்துள்ளது. அரேபியா, சீனா, மலேசியா, எகிப்து, நாடுகளில் பரவலாகப் பாமர மக்களால் பல்வேறு நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவ முறைகளைப் பின் பற்றி தீர்வு கண்டுள்ளார்கள். என்பதை உலக மருத்துவ ஆய்வாளர்கள் பல அறிவியல் முறையில் சோதனை செய்து வெற்றி கண்டனர் என்பார் வெங்கடேசன் (1976:140). ஆனால் ஆங்கில மருத்துவ மருந்துகளை உட்கொண்டால் ஒரு நோய் குணமாகி வேறு ஒரு நோயை உண்டாக்கும் அம்மருத்துவம் பக்க விளைவுகள் கொண்டது. எனவே நாட்டுப்புற மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதை அறியமுடிகின்றது.
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்
நாட்டுப்புற மருத்துவத்தை பற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவ்வகையில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி பல வகைகளாகப் பாகுபடுத்தி உள்ளனர். டான் யோடர் (Don Yoder) நாட்டுப்புற மருத்துவத்தை1. இயற்கை மருத்துவம் (2. மத மாந்திரீக மருத்துவம் (Magico Religious Medicine) என இரண்டாக பகுக்கின்றார். நாட்டுப்புற மருத்துவம் காலந்தோறும் தன்நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தன்னிகரில்லாத் தமிழ் மருத்துவம் நாட்டுப்புற மருத்துவமாகும். இவரது பாகுபாடு அமெரிக்க நாட்டுப் புற மருத்துவ முறையை ஒட்டியதாகும் தமிழக நாட்டுப்புற மருத்துவ முறையில் சில தனித்தன்மைகளும் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புற மருத்துவத்தை சண்முகசுந்தரம் (1994:143) அவர்கள் இயற்கை மருத்துவம் *மதமாந்தரீக மருத்துவம் *நம்பிக்கை மருத்துவம் *திட்டமிட்ட மருத்துவம் *முரட்டு மருத்துவம் என ஐந்தாக வகுத்துள்ளார். மேற்கூறிய கருத்துகளின் வழி ‘இயற்கை சார்ந்த பட்டறிவின் துணை கொண்டு நாட்டுப்புற மக்களால் எளிய முறையில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் என விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு நாட்டுப்புற மருத்துவ முறைகளை வகைப்படுத்தலாம்.
இயற்கை மருத்துவம் – சித்த மருத்துவம் – மந்திர மருத்துவம் – கை மருத்துவம் – குழந்தை மருத்துவம்
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் ஆனது மனிதனின் நோய்களுக்கு இயற்கையில் கிடைக்கின்ற மூலிகைகளும், தாவரங்களிலும், தாதுக்களிலும், விலங்கு பொருட்களிலும், உள்ள குணங்களை அறிந்து பயன்படுத்துவதாகும். இது இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதே சிறந்ததாகும். மேலும் வீட்டு மருத்துவம், நம்பிக்கை மருத்துவம், என்றும் பகுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற மருத்துவத்திற்கு இயற்கைப் பொருள்களே ஆதாரமாகக் கொள்ளப் படுகின்றன. இந்த இயற்கைப் பொருள்களைக் கொண்டு மருந்துகள் தயாரித்து உட்கொள்வதன் மூலமும், பூசிக்கொள்வதன் வாயிலாகவும் நோய்கள் போக்கப்படும் முறையே இயற்கை மருத்துவ முறையாகும். என்று கூறுகின்றனர்.
உணவு
நாட்டுப்புற மருத்துவத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இயற்கைப் பொருள்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாகவே உட்கொள்வதைக் காணலாம். கீரை வகைகள், தண்டுகள், கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம் போன்ற பொருட்களை இயல்பாகவே அம்மா தினசரி சமையலில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை நாட்டுப்புற மருத்துவத்திற்கு சான்றாக
மஞ்சள் காமாலை நோய்
🎯 கீழாநெல்லி மஞ்சள் கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து 9 நாள் சாப்பிட வேண்டும்.
🎯 உப்பில்லாத பால் சோறு சாப்பிட வேண்டும் சித்திரமூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும். கரிசலாங்கண்ணி இலையைக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து நான்கு நாள் சாப்பிட வேண்டும்,
நெஞ்சு வலி
மான் கொம்பினை, வெண்கடுகு, பெருங்காயம், முதலியவற்றை சேர்த்து அரைத்து மார்பில் பூச வலி குறையும்.
உடம்பு வலி
🎯 ஏலம், இஞ்சிசாறு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
வயிற்று வலி
🎯 சுக்கு பொடி ஒரு சிட்டிகை சிலாத்து பற்பம் சேர்த்து சுடு தண்ணீரில் சாப்பிடவும்
பல் வலி
🎯 நாயுருவியால் பல் விளக்கவும்
🎯 கருவப்பட்டை தூள், படிகார பஸ்பம், கல்நார் பஸ்பம், முதலியவற்றை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் அசைவு, பல் வலி, பல்லில் ரத்தம் ஒழுகல், முதலியவற்றை குணப்படுத்தும்.
மார்பு வலி
தாமரைப்பூ, ரோஜா மொட்டு, பூமி சர்க்கரை கிழங்கு, கோரைக்கிழங்கு செம்பருத்தி பூ, கொத்தமல்லி, அரைக்கீரை விதை, சம எடை எடுத்து அரைப்படி தண்ணீரில் வட்ட காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தத்தோடு, கோழி முட்டை வெள்ளை கரு, கலந்து காலை, மாலை கொடுக்கவும் பத்தியவார சாரம் நீக்கவும்.
முகப்பொலிவு
🎯 ரோஜா இதழ்களைப் பயன்படுத்தவும்
🎯 பப்பாளி இலை சாறுடன் கடலை மாவு தேன் கலந்து பயன்படுத்தவும்
🎯 தயிருடன் எலுமிச்சை சாறு பயன்படுத்தவும்
இவ்வாறாக பண்டைய காலம் தொட்டே மனிதன் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்கினான். என்பதை இயற்கை மருத்துவ அறிவையும் அதன் மீது அவன் கொண்ட நம்பிக்கையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வீட்டு மருத்துவம் (Home Medicine)
வீட்டு மருத்துவம் என்பது வீட்டில் உள்ள பெரியவர்கள் கையாளும் மருத்துவ முறையானது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிறது. இதனை வீட்டு சிகிச்சை முறை (Home. Remedies) எனலாம். நாட்டுப்புற மக்கள் தம் நாகரிகமும் பண்பாடும் மரபு மீறாமல் பழங்காலம் தொட்டு போற்றுப்படுவதாகும். பண்டைய பண்பாட்டுடன் கலந்த மருத்துவ முறையைப் பாட்டி வைத்தியம் எனச் சொல்வதும் உண்டு இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. மூலிகைகளின் இலைகள், வேர், பட்டை, தண்டு, போன்ற இயற்கையான தாவரங்களிலிருந்து மருத்துவ முறையை அமைத்துக் கொள்வதாகும். இதனை மூலிகை மருத்துவம் அல்லது பச்சிலை மருத்துவம் என்று நம் முன்னோர்கள் கூறுவதும் உண்டு.
பாட்டி வைத்தியம்
வயது முதிர்ந்த பெரியவர்களால் மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையை பாட்டி வைத்தியம் எனப்படும். இது வாய் வழியாக கூறப்படுகின்ற எளிய மருத்துவ முறையாகும். இம்மருத்துவம் மக்களின் பட்டறிவில் தோன்றி அனுபவத்தில் வாழ்ந்து வருவதால் இதன் மீது மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டுப்புற மருத்துவம் பல நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கு தாய் ஆகும் என்பது சக்திவேலின் (1992:173) கருத்தாகும். இதனை மருத்துவத்தின் தாய் என்று கூறுவதும் பொருத்தமாக உள்ளது. குழந்தைகளுக்காக செய்யப்படும் மருத்துவ முறைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாட்டி மருத்துவம் ஆகும்.
ஒடிவு முறிவு மருத்துவம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போதோ அல்லது ஓடும் போது திடிரென்று கீழே விழுந்து விட்டாலோ அதனால் ஏற்படுகின்ற ஒடிவு முறிவுகளை மருத்துவர்கள் பலமாக நிமிர்த்தி, நேராக கட்டி, மருத்துவம் செய்யும் முறை ஒடிவு முறிவு மருத்துவம் ஆகும். இம் மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாக வைத்தியக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே செய்து வருகின்றனர். மருத்துவர்கள் தனது கல்வியை ஆசான் எனப்படும் குருவிடம் முறையாக கற்று வருகின்றனர். குரு தன் மாணவர்களுக்கு உடலில் காணப்படும் வர்மங்களையும், நோய் ஏற்பட்டால் அதனை நீக்கும் மருத்துவ முறைகளையும், எண்ணெய், கசாயம், குளிகை, தைலம், போன்ற மருந்து பொருட்களை தயாரிக்கவும் குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கின்றனர். இவர்கள் இதனை குலத் தொழிலாகவே கொண்டிருக்கின்றனர். ஒடிவு முறிவு கொண்ட நோயாளிக்கு நோயின் தன்மையைப் பொறுத்து எண்ணெயில் மூழ்கச் செய்தும், தடவியும் உள் மருந்தாக தைலம் கசாயம்முதலியவற்றைக் கொடுத்தும் நிவாரணம் அளிக்கின்றனர். சான்றாக கேரளா, பாபநாசம், புத்தூர், போன்ற ஊர்களில் இம்மருத்துவ முறை செயல்பட்டு வருகிறது.
நம்பிக்கை மருத்துவம்
நாட்டுப்புற மக்கள் சில நோய்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மருத்துவத்தைச் செய்கின்றனர். இச்செயல் மூடத்தனமாக இருந்தாலும், நம்பினவர் கைவிடப்படார் என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவம் செய்து நோயைக் குணப்படுத்துகின்றனர். நம்பிக்கை மருத்துவ முறையானது. மத-மாந்திரீக மருத்துவம், முன்னெச்சரிக்கை மருத்துவம், முரட்டு மருத்துவம், அதிர்ச்சி மருத்துவம், பிற நம்பிக்கை மருத்துவம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மத மாந்திரீக மருத்துவம் என்பது தனக்கு ஏற்பட்ட நோயைத் தீர்ப்பதற்கு மதத்தையும், மந்திரவாதத்தையும், மாந்திரீகத்தையும், நம்புகின்றனர். பொதுவாக உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, உள்ளம்(மனம்) போன்ற பல காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன. அந் நோய்களைத் தீர்ப்பதற்கு மாந்திரீக மருத்துவத்தை மக்கள் நாடுகின்றனர்.
முன்னெச்சரிக்கை மருத்துவம்
முன்னெச்சரிக்கை மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன்பே உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
திட்டமிட்ட மருத்துவம்
திட்டமிட்ட மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன் அவை ஏற்படாமல் இருக்க உணவுப் பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து பயன்படுத்துதல் திட்டமிட்ட மருத்துவ முறையாகும். என்கிறார்கள்.
முரட்டு மருத்துவம்
முரட்டு மருத்துவம் என்பது சில மருத்துவ முறைகளை முரட்டுத்தனமாக கையாண்டு வருவது உண்டு இதனை முரட்டு மருத்துவம் என்று அழைப்பர். சான்றாக: பேய் ஓட்டுதல், சூடு வைத்தல், இரும்பு கம்பியால் அடித்தல், போன்றவற்றைக் கூறலாம்.
அதிர்ச்சி மருத்துவம்
அதிர்ச்சி மருத்துவம் என்பது அதிர்ச்சி கொடுத்து நோயைக் குணப்படுத்துவதாகும்.அதிர்ச்சி மருத்துவமாக தலையில் தட்டுதல், காதில் ஊதுதல், போன்றவற்றை சான்றாக கூறலாம்.
இலக்கியங்களில் நாட்டுப்புற மருத்துவம்
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, உண்மைகளையும், உணர்ச்சிகளையும், வெளிப்படுத்துவதாகும். இயற்கையோடு இணைந்து வாழும் பாமர மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் படம் பிடித்து காட்டுவது தான் இலக்கியம் என்கிறார்கள். அரசனுக்காகப் போரிடச் சென்று போரில் விழுப் புண்களைப் பெற்ற அரசனின் காயங்களுக்கு அத்தி மரத்தின் பாலை எடுத்துப் போட்டனர். இதனை புறநானூற்றுப் பாடலில் கூறுகிறது.
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல! (புறம் 180 3 -6 )
இறைவனின் கண்ணில் இருந்து குருதி வருவதைப் பார்த்த கண்ணப்ப நாயனார் வனங்கள் எங்கும் சென்று வனத்திடை வளர்ந்த மூலிகைகளைப் பறித்து வந்து மருந்து பிசைந்து வார்த்தார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதனை
“கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள விந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ?” வென்றலு மருங்கு நின்ற
வச்சிலை நாணன் றானு “நானிது வறிந்தே” னென்பான், (பாடல் 108)
என்ற பாடல் எடுத்து இயம்புகிறது மேலும் வள்ளுவர் திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் பழந் தமிழரின் மருத்துவம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். திருக்குறள் 942 மற்றும் 945 ஆகியவை ‘மருந்து’ (பொருட்பால்) அதிகாரத்தில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வலியுறுத்துகின்றன. முந்தைய உணவு செரித்ததை அறிந்து உண்டால் மருந்து தேவையில்லை (942) எனவும், உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்து அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வு அமையும் (945) எனவும் வள்ளுவர் கூறுகிறார்.
முடிவுரை
நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவத்தின் மீது நம்பிக்கைகள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைகளே நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகளையும் அவற்றின் வகைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நாட்டுப்புற மருத்துவமே சிறந்தது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.
துணைநூல் பட்டியல்
1.நாட்டுப்புற இயல் ஆய்வு – டாக்டர் சு.சக்திவேல் மணிவாசகர் பதிப்பகம் நூல் வெளியீடு சென்னை 600108
2.டாக்டர். ச. சண்முகம், சித்த மருத்துவ வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2005.
3.இரா. இராசமாணிக்கனார், தமிழ் இலக்கியமும் மருத்துவமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1978.
4.திருக்குறள் புலியூர் தேசிகன் உரை -பாரதி பதிப்பகம் சென்னை
5.க. நாகராசன், சித்த மருத்துவம் – கோட்பாடும் பயனும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வெளியீடு, 2009.
6.மா. இராமமூர்த்தி – தமிழ் நாட்டுப்புற மருத்துவம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.
7.சி. சுந்தரராமன் – நாட்டுப்புற பண்பாடு மற்றும் மரபு மருத்துவம், மணிவாசகர் பதிப்பகம், மதுரை, 2010.
8.இரா. சண்முகசுந்தரம் – நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், 2001.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு.சீதளாதேவி
முதுகலை இரண்டாமாண்டு
தமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்
நெறியாளர்
இ.அமுதா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்














