Thinai Theory in Tamilselvi’s Alam|S.Nithya
Abstract
The concept of thinai stands as a testament to the ecological wisdom of the ancient Tamils. By closely observing and understanding the diverse features of the land they inhabited, Tamil communities structured their way of life in harmony with nature. This ecological classification, prominently reflected throughout ancient Tamil literature, continues to influence modern literary works. The foundational elements identified by Tolkappiyar—muthalporul (primary elements such as land and time), karupporul (background elements), and uripporul (human emotions and actions)—are still employed to portray the life and culture of people in contemporary narratives. Despite the passage of centuries, culture remains deeply rooted in the landscape that shapes it. Through the novels of Tamilselvi, it becomes evident that land continues to function as the basis of social identity and cultural expression. In particular, the novel Alam reflects the principles of the thinai theory by vividly portraying landscape, time, and environment as integral components of human experience. This article, therefore, seeks to examine the thinai framework as manifested in Tamilselvi’s Alam, analyzing how land, temporal context, and ecological surroundings contribute to the representation of lived reality and cultural continuity.
Keywords: Tholkappiyam, Tinai Theory, Alam, Su. Tamilselvi
“திணைக் கோட்பாடு அடிப்படையில் தமிழ்ச்செல்வி புதினங்கள்”
ஆய்வுச்சுருக்கம்
தமிழரின் இயற்கை அறிவுக்குச் சான்றாக அமைவது திணைக்கோட்பாடு. தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் பல்வேறு கூறுகளை ஆய்ந்தறிந்து வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். பழந்தமிழ் இலக்கியங்கள் தோறும் இத்திணைக்கோட்பாடு காணப்படுகிறது. இக்கால இலக்கியங்களிலும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு தொல்காப்பியர் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் பண்பாடு நிலத்தை அடிப்படையாகவே கொண்டு அமைகின்றன என்பதை தமிழ்ச்செல்வியின் புதினங்களின்வழி அறியலாம். தமிழ்ச்செல்வியின் அளம் புதினம் வெளிப்படுத்தும் நிலம், பொழுது, சூழல் ஆகியன அடங்கியத் திணைக்கோட்பாட்டினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்: திணைக்கோட்பாடு, நெய்தல் திணை, அளம் புதினம், சு.தமிழ்ச்செல்வி, திணை இலக்கியம்
முன்னுரை
சங்க கால மக்களின் வாழ்வியலானது திணைக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தனிமனிதனாகவும் சமூகமாகவும் திணையினால் ஏற்படக்கூடிய தகவமைப்பினை நன்கு உணர்ந்ததாலேயே மக்கள் திணைவாழ்வியலை முதன்மைப்படுத்தியுள்ளனர். இக்கால இலக்கியங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் திணை வாழ்வியல் கதைப் போக்கினுடே அமைந்துவிடுகிறது. தமிழ்ச்செல்வியின் புதினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றன. அளம் புதினம் கணவனற்றப் பெண்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நிலமும் பொழுதும் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடியத் தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திணை இலக்கியம்
சங்கத்தமிழர் இயற்கை குறித்தான அறிவினை பெரிதும் பெற்று இருந்தனர். இதன் வெளிப்பாடாகவே முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உருவாக்கி அகம் புறம் ஆகிய வாழ்வியல் கருத்துக்களோடு ஒன்றிணைத்து பாடல் புனைந்தனர். “திணை பாடல்கள் புலவர்களின் இயற்கை மீதான நுண் அறிவையும் அவர்களது மானுட வாழ்க்கையும் உண்மை அனுபவத்தை உளவியலைச் சரியாகப் புரிந்து கொண்ட தனித்திறனையும் காட்டுவன. சுருங்க உரைப்பதனின் கூர்ந்த நோக்கு தெளிந்த கருத்து புலப்பாடு ஆகியன திணைச்செய்யுளின் உயிர் எனலாம்.” (தமிழண்ணல், சங்க மரபு, ப.12-13) என்பார் தமிழண்ணல். முற்காலத்தே உருவாக்கப்பட்ட திணை அடிப்படையில் ஆன இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இக்காலத்தே எழுகின்ற இலக்கியங்களும் திணையை விளக்குவதிலும் கையாளுவதிலும் கவனம் பெறுகின்றன. காலத்திற்குத் தகுந்தார் போன்ற திணையியல் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதையும் இக்கால இலக்கியங்களில் காண முடிகிறது. நிலமும் பொழுதும் இவ்வுலகத்தில் வாழக்கூடிய உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமாக அமைவது நிலமும் பொழுதும் ஆகும். எனவே இதனை தொல்காப்பியம்,
“முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி
இயல்பென மொழி இயல் புணர்ந் தோரே” (தொல்.பொருள்.4)
என்று குறிப்பிடுகிறது. மக்களினுடைய பிற வாழ்க்கை முறைகள் முதற் பொருளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை முதன்மையாகக் கொள்ளும் தொழிலானது நிலத்தையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. மக்களினுடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதனாலேயே இதனை தொல்காப்பியர் முதற்பொருள் என குறிப்பிடுகிறார். முதற்பொருள் என்பது உலகத்தின் இயக்கத்திற்கு மட்டுமின்றி மக்களின் வாழ்வியல் கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.
அளம் புதினத்தில் நிலம்
தொல்காப்பியர் நெய்தல் நிலத்தினைக் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆக குறிப்பிடுகிறார்.
“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.பொருள்.5)
கடலையும் கடலை ஒட்டிய மணல் பகுதியை மட்டுமே நெய்தல் திணை என கற்பிக்கப்பட கூடிய வழக்கம் நெடுங்காலமாக சமூகத்தில் விளங்கி வருகிறது. “நெய்தல் என்பதை அலையடிக்கும் கடற்கரையைக் குறிப்பதன்று. இத்தமிழ்நாட்டின் கடற்கரையோரமாகச் சென்றால் கடற்கரையிலிருந்து 50-60 அடி தூரம் பெரும்பாலும் உப்பங்கழியாக இருக்கும்”(சிவத்தம்பி கா., சங்க இலக்கியக் கவிதையும் கருத்தும், ப.41) என்ற கருத்தின் அடிப்படையில் நெய்தல் நிலம் என்பது கடற்கரையோரம் மட்டுமன்றி அதனை ஒட்டி உள்ள பரப்பளவையும் சேர்த்து குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் அளம் புதினமானது நெய்தல் நில மக்களினுடைய வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அளம் புதினத்தின் நிலமானது கடற்கரை ஒட்டி அமைந்துள்ள உப்பங்கழியை அடுத்த நிலப்பரப்பைக் குறிக்கிறது. மருத நிலத்தைப் போன்று உழவுத் தொழிலையும் முல்லை நிலத்தைப் போன்ற ஆநிரை மேய்த்தலையும் இம்மக்கள் மேற்கொண்டாலும் நெய்தல் நிலத்திற்குரிய பண்பாட்டுப் புனைவுகளையும் கொண்ட வாழ்க்கையாகவே அளம் புதினத்தில் வரக்கூடிய கதை மாந்தர்களின் வாழ்வானது அமைந்திருக்கிறது என்பதை ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இதனால் அளம் புதினமானது நெய்தல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கிறது என்பது உறுதிபடுகிறது.
பெரும்பொழுதும் சிறுபொழுதும்
அகப்பொருள் நிகழ்வுக்குரிய பொழுதினையே பெரும் பொழுது, சிறு பொழுது என இருவகையாக பிரிப்பர். ஓராண்டின் ஆறு பகுப்பினைப் பெரும்பொழுது என்றும் ஒரு நாளின் ஆறு பகுப்பினைச் சிறுபொழுது என்றும் வரையறுப்பர். “நிலம் என்ற முதற்பொருள் பருவச் சூழலில் பயனளிக்குவது பருவம் வாய்க்கின்ற போது தான் அது தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்த உணவு என்னும் கருப்பொருள் உருவாக காரணமாவது ‘உணவெனப்படுவது நிலத்துடன் நீரே’ என் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுவதைப் போன்று நிலமும் நீரும் இணைவதற்கு பருவ காலமே ஏற்றதாகிறது. முதல் எனப்பட்ட நிலத்துடன் ஆன பருவ மாற்றங்களில் இணைவு அதன் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் ஆதாரமாக அமைந்து மனித வளர்ச்சிக்கும் அடிப்படையாகின்றது. வாழ்க்கைக்கான இருப்பிற்கான இடமும் காலமும் மனித வாழ்வு எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதாரமாக அமைவதால் இவை இரண்டும் முதற்பொருள்கள் என பெற்றுள்ளன.” (மாதையன் பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும் ப.26) நெய்தல் நிலமானது ஆறு பெரும் பொழுதுகளையும் பெற்றிருக்கிறது. சிறு பொழுதை பற்றி குறிப்பிடும் பொழுது,
“நெய்தல் எற்பாடாதல் மெய்பெறத் தோன்றும்” (தொல்.பொருள்.10)
கதிரவன் எழக்கூடிய காலை பொழுதினை நெய்தலினுடைய சிறுபொழுதாக தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பொழுதானது மக்களினுடைய வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இதனை அளம் புதினம் தோறும் காண இயலுகிறது. அளம் புதினத்தில் வயல் வேலை, உப்பள வேலை என பல்வேறு தொழில்களுக்குக் கிளம்பக் கூடிய மக்கள் பின் இரவிலும் சூரியன் தோன்றுவதற்கு முன்னறான எற்பாடு காலத்தில் புறப்படுகின்றனர். கடற்கரைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் சூரியன் பிரகாசிக்க தொடங்கும் முன்னரே தங்களுடைய வேலைகளை முடித்துவிட எண்ணி எற்பாடு காலத்தைத் தங்களுடைய வேலை காலமாக மக்கள் வைத்திருப்பது பொருத்தம் உடையதாக காணப்படுகிறது. அளம் புதினத்தில் மக்களினுடைய வாழ்வினை திசை மாற்றியமைக்க கூடியதாக பெரும்பொழுதுகள் அமைகின்றன. ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பெய்யக்கூடிய அடை மழையானது புயல் எனவும் வெள்ளமெனவும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கிறது.
‘நந்தனா வருட புயலுக்கு பிறகு ஜனங்கள் பெரும்பாலும் உப்பு கம்பெனிகளை
நம்பி வாழ தொடங்கினார்கள்.’ (அளம்,ப.125)
‘ஐப்பசியில் ஆரம்பித்த மழை விட்ட பாடாய் தெரியவில்லை கார்த்திகையிலும்
அடை மழை தொடர்ந்த.’ (அளம்,ப.151)
‘மன்மத வருடத்துப் புயல் வெள்ளத்துக்குப் பிறகு கடும் பஞ்சம் ஏற்பட்டது’ (அளம்,ப.166)
‘துர்முகி வருடம் வறட்சியாகவே பிறந்தது.’ (அளம்,ப.166)
கால மாற்றங்கள் மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்ளையும் தொழில் மாற்றங்களையும் அளம் புதினம் அடையாளப்படுத்துகிறது. இதனால் பல்வேறு மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதோடு புலம்பெயர்வதற்கும் ஆளாகின்றனர் என்பதை தமிழ்ச்செல்வி வெளிப்படுத்தி இருப்பது ஆய்வின்வழி வெளிக்கொணரப்படுகிறது.
உரிப்பொருள் – இரங்கல்
மக்களினுடைய அக வாழ்வினை சுட்டிக்காட்டுவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். தொல்காப்பியர் ஐந்நிலத்திற்குரிய உரிப்பொருளை,
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே” (தொல்.பொருள்.16)
இன்று குறிப்பிடுகிறார். நெய்தல் நிலத்திற்குரிய உரிப்பொருளாக இரங்கலும் இரங்கல் நிமித்தமும் அமைவதை இறையனார் அகப்பொருள் சுட்டிக்காட்டுகிறது. வினைமேற் சென்ற தலைவனுடைய வருகைக்காக காத்திருக்கக் கூடிய செயல்பாடு நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். அளம் புதினத்தின் சுந்தராம்பாள் கதாபாத்திரம் தன்னுடைய கணவனுடைய வருகைக்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கி காத்திருப்பது நெய்தல் நிலத்தில் உரிப்பொருளோடு பொருந்தி வருகிறது.
“தூரத்துக் கண்ணாடி
துலுக்கங்கையிலாந் தருதாங்
துருப்புடிச்சி மங்காம – நா
தொயரம் வச்சி மங்குறனே” (அளம்,ப.134)
வாழ்வின் பெரும்பகுதியில் தான் கணவன் திரும்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கையிலும் வராமல் போய்விட்டானே என்ற துயரத்திலுமாக சுந்தராம்பாளினுடைய வாழ்வானது கழிகிறது. “நீ என்ன சொன்னாலும் நாங் கேட்க மாட்டங். நாளக்கே ஒங்கப்பா வந்து என்னயில்லாம யாங்கொல்லய எப்புடி வித்தேன்னு கேட்டாக்க நான் என்ன பதிலு சொல்லுற” (அளம், ப.224) என்று நிலத்தை விற்பதற்கு முன்வராமல் தன்னுடைய கணவன் என்றேனும் ஒரு நாள் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு சுந்தராம்பாள் காத்திருப்பது வெளிப்படுகிறது. வேலைக்காக கடல் கடந்து சென்ற கணவன் மீண்டு வராததை எண்ணி இரங்கி காத்திருக்கக்கூடிய சுந்தராம்பாளின் நிலையே நெய்தல் நிலத்தினுடைய உரிப்பொருள் வெளிப்பாடாக அமைகிறது.
முடிவுரை
நெய்தல் நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய அளம் புதினமானது அந்நிலத்திற்கே உரிய முதற்பொருள் மற்றும் உரிப்பொருளை வெளிப்படுத்தி அமைகிறது. கடற்கரை ஓரத்தை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய உப்பங்கழியை அடுத்து இருக்கக்கூடிய நிலப்பகுதியே அளம் புதினத்தின் கதைக்களம் ஆகும். ஆறு பெரும் பொழுதுகளையும் ஏற்பாடு என்ற சிறு பொழுதையும் சரிவர அமைத்திருக்கிறார் புதினத்தின் ஆசிரியர் தமிழ்ச்செல்வி. காலம் மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தையும் காலத்திற்கு தகுந்தார் போல் மனிதன் தன்னுடைய தொழிலையும் வாழ்க்கையும் தகவமைத்துக் கொள்ளக்கூடிய அறிவு திறத்தனையும் வெளிப்படுத்தும் வண்ணம் புதினமானது அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களினுடைய அகவாழ்வை வெளிப்படுத்தக்கூடிய உரிப்பொருள் சுந்தராம்பாளினுடைய வாழ்வில் சரிவர அமைந்துள்ளது. கப்பலுக்குச் சென்ற கணவன் திரும்பி வராத காரணத்தினால் பல்வேறு சூழல்களில் சுந்தராம்பாள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். தன் பிள்ளைகளிடமும் ஊராரிடமும் இரங்கி தன்னுடைய கணவனுடைய வருகைக்காக காத்திருக்க கூடிய சுந்தராம்பாளினுடைய அகவாழ்வு நெய்தல் நிலத்தினுடைய உரிப்பொருளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன்னர் வகுக்கப்பட்ட திணைக் கோட்பாட்டு வாழ்வானது தற்காலத்தில் சாத்தியமில்லை என்றாலும் கூட அதனுடைய கூறுகள் இன்றளவும் மக்களுடைய வாழ்வில் நிலைத்து நிற்கின்றன. தொல்காப்பியர் வகுத்திருக்கக்கூடிய நெய்தல் திணை வாழ்வியல் முறையானது அளம் புதினத்தில் வாழ்வியல் முறையோடு பொருந்தி வருவது இதற்குச் சான்றாக அமைகிறது.
துணைநூற் பட்டியல்
1.இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை,2018
2.சிவத்தம்பி கா., சங்க இலக்கியக் கவிதையும் கருத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை,2009
3.தமிழண்ணல், சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை,2012
4.தமிழ்ச்செல்வி,சு., அளம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2014
5.நக்கீரர் (உ.ஆ.), இறையனார் களவியல் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி,1964
6.மாதையன் பெ., அகத்திணை கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிக்கே]ன்ஸ்,சென்னை,2009
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ. நித்யா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
நெறியாளர்
முனைவர் ப. ஜெயபால்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
Sivavakkiyarum Samudhaaya Vizhippunarvum|Dr.K.Nagammal
Abstract
This study explains how Sivavakkiyar expresses the true nature of God and, through that understanding, outlines the ways to attain Him, while also presenting thoughts that create social awareness for human society. It highlights the Siddhar’s view that the supreme truth lies in seeking the God within oneself rather than wandering in search of Him in the external world. The concept that the formless One should be realized not through external rituals but through inner yogic practices is brought to light. It is also affirmed that such realization unites the individual soul with the Supreme Soul, serving as a powerful means to transcend the cycle of birth and attain liberation.
“சிவவாக்கியரும்சமுதாயவிழிப்புணர்வும்”
ஆய்வுச்சுருக்கம்
இறைவனின் உண்மை இயல்புகளை எடுத்தியம்பி அதன் வாயிலாக அவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறி மானுட சமூகத்திற்கான விழிப்புணர்வு சிந்தனைகளைச் சிவவாக்கியர் பாடியிருப்பதை எடுத்துரைக்கிறது. உன்னுள் இருக்கும் இறவனை உலகில் தேடித் திரியாமல் உன்னுள் தேடுவதே உன்னதமானது என்ற சித்தர் வாக்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. உருவமற்று ஒருவனாய் இருப்பவனைப் புறவழிபாடுகளை விலக்கி யோகத்தால் கூடி கண்டிட வேண்டுமென்ற கருத்தாக்கம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதுவே, ஆன்மாவைப் பரமான்மாவோடு சேர்த்து பிறப்பறுக்கும் ஆயுதமாகவும் அமையவல்லது என்பதும் மெய்பிக்கப்பட்டுள்ளது.
திறவுசொற்கள் : சித்தர், சிவவாக்கியர், சமுதாயம், விழிப்புணர்வு, சடங்குகள், நம்பிக்கை, மூடநம்பிக்கை, இறை, ஆன்மா,ஞானநிலை.
முன்னுரை
இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்ததோடு மானுட சமூகத்தை நெறிப்படுத்திடவும் தவறவில்லை. அவ்வரிசையில் சித்தர் இலக்கியங்கள் தனித்துவமிக்கது. இச்சித்தர்கள் மானுடனாய்ப் பிறந்து அம்மானுட வாழ்வியல் முறையிலிருந்து வேறுபட்டு தன் பிறப்பிற்கான பயனை உணர்ந்து அதனை அடைய போராடிய மகான்களாக வாழ்ந்து காட்டினர். தாங்கள் கண்ட வழிமுறைகளைக் கூறி மக்களைப் பண்படச் செய்தனர். இச்சமூகப் பிடிகளிலிருந்து அவர்கள் விடுபட்டு மேலான இறைநிலையை அடைய வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பாடல்களை எழுதியுள்ளனர். அதன் ஊடாகச் சீர்திருத்தச் சிந்தனைகளை ஊட்டி மானுட இனத்தை விழிப்படைய செய்துள்ள பாங்கு சித்தர் இலக்கியங்களின் முக்கிய கூறாகப் போற்றத்தக்கது. அப்படியான சித்தர் பாடல்களில் சிவவாக்கியர் கூறும் சமுதாய விழிப்புணர் சிந்தனைகளை ஆராய்வது ஆய்வின் நோக்கமாக அமைகிறது.
உருவவழிபாடு
பண்டைய காலம் தொட்டு இன்று வரை இறை நம்பிக்கை என்பது மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஆதிகாலத்தில் இயற்கையைத் தெய்வமாக வணங்கத் தொடங்கிய மனிதர்கள் அதன் தொடர்ச்சியாக உருவ வழிபாட்டை மேற்கொண்டனர். இவ்வாறான நம்பிக்கையில் இறையை ஏற்றுக்கொள்ளும் சிவவாக்கியர் இறைவன் உருவம் உள்ளவன் என்பதையும் கோவிலில் உள்ளான் என்பதையும் ஏற்கவில்லை. அதனை மற்றவர்களும் தெளிவுபட அறிய வேண்டும் என்ற நோக்கில்,
“நட்டகல்லைத்தெய்வம்என்று நாலுபுட்பம்சாத்தியே
சுற்றிவந்துமுணுமுணென்று
சொல்லும்மந்திரம்ஏதடா!
நட்டகல்லும்பேசுமோநாதன்உள்இருக்கையில்!
சுட்டசட்டிசட்டுவம்கறிச்சுவைஅறியுமோ?” (சிவவாக்கியம்,பா.494)
எனப் பாடி உருவ வழிபாட்டைப் புறந்தள்ளி உள்ளிருக்கும் இறையை உலகறிய வேண்டிய உன்னத்தை நிலைநாட்டியுள்ளார்.
உன்னுள் உள்ளான்
உலகில் உள்ள ஒவ்வொரு ஆன்மாக்களிலும் இறைவன் உறைந்துள்ளான் என்ற பேருண்மையை அறியாத பாமர மக்களின் நிலை கண்டு வருந்திய சிவவாக்கியர்,
“ஓடிஓடிஓடிஓடிஉட்கலந்தசோதியை
நாடிநாடிநாடிநாடிநாட்களும்கழிந்துபோய்
வாடிவாடிவாடிவாடிமாண்டுபோனமாந்தர்கள்
கோடிகோடிகோடிகோடிஎண்ணிறந்தகோடியே” (சிவவாக்கியம்,பா.3)
என்ற அடிகளில் இறைவனின் உண்மையான இருப்பிடத்தை உணர்த்தியுள்ளார். அதேபோல, கோயிலும் குளமும் மனதின்கண்ணே இருக்கின்றது. அதைவிடுத்து அவற்றை வெளியில இருப்பதாக எண்ணி அங்கு சென்றும் தீர்த்தமாடியும் அடையும் பயன் ஒன்றுமில்லை ஆகவே, யோகத்தைச் சாதித்து அதன் மூலம் முத்தி நிலையைப் பெற்று கொள்ளுங்கள் என்பதை,
“கோயிலாவது ஏதடா? குளங்களாவதுஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும்குலமாரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும்அழிவதும்இல்லை இல்லைஇல்லையே” (சிவவாக்கியம்,பா.34).
இப்பாடல் வாயிலாக வழிபடுத்துகிறார். இதனையே, “தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” (திருமந்திரம்.1823) என்று திருமூலர் பாடுகிறார். மேலும், உள்ளத்தின் கண்ணே உள்ள சிவபெருமானை நன்றாய் நோக்கிப் பார்க்கும் பட்சத்தில் அவன் வேறு எங்குமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் (சிவவாக்கியம்.33) என்கிறார்.
ஒன்றே தெய்வம்
தெய்வமுண்டு என்று நம்புகின்ற மக்கள் அந்த தெய்வமானது இந்த உலகத்தைக் கடந்தும் உலகத்தின் உள்ளேயும் வியாபித்து இருக்கவல்லது என்பதை உணராது அவனைக் கோயில்கள்தோறும் தேடுவதோடு பல்வேறு உருவங்களில் தேடி திரிகின்றனர். அவ்விறைவன் ஒருவனே என்ற உன்னதம் உணரும் நிலையே வாழ்வின் பெரும்பேறு என்ற பாங்கில்,
“நாழிஅப்பும்நாழிஉப்பும்நாழியானவாறுபோல்
ஆழியோனும்ஈசனும் அமர்ந்துவாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறுஈசனும்இயங்குசக்ரதரனையும்
வேறுவேறுபேசுவார்வீழ்வர்வீண்நரகிலே.” (சிவவாக்கியம்,பா.54)
ஒருபடி உப்பில் ஒருபடி நீரைச் சேர்த்தால் இரண்டுபடி ஆகாமல் ஒருபடி ஆவதுபோலவே அரியும் சிவனும் ஒன்றே என்ற எளிய உவமையால் விளக்கி இதனை அறியாமல் பேதம் சொல்லுகின்றவர்கள் நரகத்தில் விழுந்து அழிவார்கள் என எச்சரிக்கிறார். சிவாக்கியர் சுட்டிய இறைவன் ஒருவனே என்ற இதே சிந்தனையைப் பக்தி இலக்கிய காலத்தில் “ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க” (திருவாசகம்.1) என மாணிக்கவாசகர் செப்புவதைக் காணலாம்.
சாதி -பேதம்
உள்ளன்பைக் காட்டி உறவைப் பலப்படுத்தி சமத்துவம் பேண வேண்டிய மனிதர்கள் சாதி சமயப் பேதங்களால் பிளவுபட்டு நாளுக்குநாள் நலிந்து வரும் இழ்நிலையைப் பொறுக்கமாட்டாதவராய்,
“சாதியாவதுஏதடா? சலம்திரண்டநீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும்ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன்ஒன்றலோ?
சாதிபேதம்ஓதுகின்றதன்மைஎன்னதன்மையோ? ” (சிவவாக்கியம்,பா.46)
உலகில் ஏரி, குளம், கிணறு, ஆறு என்கிற பெயர்களைப் பெற்றவையாக இருந்தாலும் நீர் ஒன்றேயாவது போலவும் ஐம்பூதம் என்கிற பகுப்பிருந்தாலும் பூதங்களென்ற பேர் ஒன்றேயாவது போலவும் அந்த ஐந்து பூதங்களும் வாழ்வதற்கு வெவ்வேறு இடமிருந்தாலும் ஐம்பூதங்களின் வாசல் என்கிற பேர் ஒன்றேயாவது போலவும் காதிலே அணியும் ஆபரணமாகிய தோடு, கையில் அணியும் வளையல், என்கிற பேர் வெவ்வேறாக இருந்தாலும் இவைகளுக்கெல்லாம் பொன் ஒன்றேயாவது போலவும் உலகெங்கிலுமுள்ள எல்லாச் சாதிகளும் ஒன்றேயாகும். இப்படியிருக்க பல்வேறு வகையான சாதி பெயர்களைச் சொல்லி அதிலும் உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி கொள்ளுவது வேதனையை ஏற்படுத்தவல்லது என்ற பேருண்மையை உணர்த்தியுள்ளார். இவ்விடத்தே, “தமிழ்க்குமுகாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களிடையே ஒற்றுமையின்மை பெரிய தடையாயுள்ளது. ஒற்றுமையின்மைக்குக் காரணியங்களாக அவர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகளும் அப்பிரிவுகளிலே அவர்களுக்கு இருக்கும் விடாப்பிடியான பற்றுமே விளங்குகின்றன .” (சாதி ஒழிப்பு,ப.4) என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்து ஒப்பிட்டு நோக்கத்தக்கது. அதேபோல,
பறைச்சியாவதுஏதடா? பணத்தியாவதுஏதடா?
இறைச்சிதோல்எலும்பினும் இலக்கமிட்டுஇக்குதோ?
பறைச்சிபோகம்வேறதோபணத்திபோகம்வேறதோ?
பறைச்சியும்பணத்தியும்பகுத்துப்பாரும்உம்முளே! (சிவவாக்கியம்,பா.39)
எனப் பாடியும் மனித மனங்களைச் சிந்திக்க சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குக் கண்டனக் குரல் கொடுத்த சிவவாக்கியரைப் போலவே விடுதலைக்கவி பாரதியும் “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்” என மொழிவதைக் காணலாம்.
தீண்டாமை
காலங்காலமாக மனிதர்கள் சக மனிதர்களை உயர்வு தாழ்வு கருதி சாதியால் தீண்டத்தகாதவன் என்று வேறுபாடு கற்பித்து அவர்களை மனரீதியான தாக்கத்திற்கு ஆட்படுத்தியது போலவே பெண்களையும் தீட்டென ஒதுக்கிவைக்கும் சமூக அவலம் நீடிப்பதையும்மறுப்பதற்கில்லை. இதனை,
“அறையினில்கிடந்தபோது அன்றுதூய்மைஎன்றிலீர்
துறைஅறிந்துநீர்குளித்த அன்றுதூய்மைஎன்றிலீர்
பறையறிந்துநீர்பிறந்த அன்றுதூய்மைஎன்றிலீர்
புரைஇலாதஈசரோடுபொருந்துமாறதுஎங்ஙனே. (சிவவாக்கியம்,பா.48)
பெண்கள் பூபெய்திய அந்நாட்ளும் தாரை தப்பட்டை சப்பத்துடன் குழந்தை பிறந்த அந்நாட்களும் இறப்பு நாட்களும் தீட்டு என்று சொல்லுகிறீர்களே உடம்பில் உயிர் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்திருக்கின்றான் அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்? எனக் கடுமையாகச் சாடி விழிப்புணர்வோடு சிந்திப்பதும் செயலாற்றலுமே உயிர்களை உய்விக்கும் உண்மையான வழியாகும் என்றப் புரிதலை ஏற்படுத்தியுள்ளார்.
சடங்குகளை விலக்கல்
பிறப்பு முதல் அடக்கம் வரை தொட்டதற்கெல்லாம் சடங்குகளைப் பின்பற்றி காலத்தையும் பொருளையும் செலவிட்டு பொன்னான வாழ்வின் அருமை உணராத அர்ப்பர்களாய் வாழும் மனித இனத்தின் அவல நிலையை,
“பூசைபூசைஎன்றுநீர் பூசைசெய்யும்பேதைகாள்
பூசையுள்ளதன்னிலே பூசைகொண்டதுஎவ்விடம்?
ஆதிபூசைகொண்டதோ,அனாதிபூசைகொண்டதோ?
ஏதுபூசைகொண்டதோ? இன்னதென்றுஇயம்புமே” (சிவவாக்கியம்,பா.36)
என்றவாறு வினா எழுப்பி புறத்தே செய்யும் சடங்குகளை விடுத்து அகத்தே செய்யும் பூசையே வேண்டப்படுவது என உணர்த்துகிறார்.
அவாவை ஒழித்து திருவருள்பெறல்
மனித மனங்களில் எழுக்கிற ஆசையினால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனை மனம் உணர்ந்தாலும் ஆசை அவனை விடுவதில்லை. ஆனால், அப்படியான ஆசையை விட்டுவிட்டால் இறைவனுடைய திருவருளைப் பெறலாம் என்பதை,
“வேணும்வேணும்என்றுநீர் வீண்உழன்றுதேடுவீர்
வேணும்என்றுதேடினும் உள்ளதல்லதுஇல்லையே
வேணுஎன்றுதேடுகின்றவேட்கையைத்துறந்தபின்
வேணும்என்றஅப்பொருள்விரைந்துகாணல் ஆகுமே” (சிவவாக்கியம்,பா.138)
இப்பாடல் விளக்குகிறது.
யோகத்தால் பிறவாமைஅடைதல்
வாழும் வாழ்க்கையில் இன்று இருந்தயொன்று நாளையில்லை இன்றில்லாத ஒன்று நாளை இருக்கலாம் இப்படி உலகப் போக்கு அதனது இயல்பிலிருக்க நாமும் உடன்சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஓட்டம் முடிந்தபின் பந்தயம் முடிந்து விடுகிறது. பந்தயத்தில் ஓடிய நாம் காணாமல் போகிறோம். இதுவரை ஓடிய ஓட்டம் எதற்கு? என்ற வினாவிற்கு வீண் என்பதே சிவவாக்கியரின் விடையாக இருந்துள்ளது அதனால்தான்,
“கறந்தபால்முலைப்புகா, கடைந்தவெண்ணெய்மோர்புகா;
உடைந்துபோனசங்கின்ஓசைஉயிர்களும்உடற்புகா;
விரிந்தபூஉதிர்ந்தகாயும் மீண்டும்போய்மரம்புகா;
இறந்தவர்பிறப்பதில்லைஇல்லைஇல்லைஇல்லையே”. (சிவவாக்கியம்,பா.47)
இவ்வுலகத்தில் ஒருமுறை பசுவின் மடியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாலானது மீண்டும் அந்தப் பசுவின் முலைக்காம்பைச் சேர்வதில்லை. மோரில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகுவதில்லை, சங்கிலிருந்து வெளிப்பட்ட ஓசையானது மறுபடியும் அச்சங்கில் சென்று சேர்வதில்லை, மரத்திலிருந்து உதிர்ந்த பூவும் காயும் மறுபடியும் அந்த மரத்தில்போய் ஒட்டுவதில்லை. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமற்றதோ அதுபோலத்தான் உடலிலிருந்து ஒருமுறை உயிர்ப்போன பிறகு மீண்டும் அவ்வுடம்பில் பிறப்பதில்லை. ஆகவே, உயிருடன் இருக்கும் பொழுதே யோகம் செய்து இறைவனை அடைந்து மீண்டும் பிறவாத நிலையை அடைய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறான யோகத்தைச் செய்வதற்குத் துணை நிற்கவல்லது ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகிய பஞ்சாட்சரம் ஆகும். இதுவே கதவு இல்லாத வாசல் ஆகிய மூக்குக்கு வெளியே நின்று மனிதனின் மூச்சுக்காற்றை முறைப்படி மீண்டும் உள்ளே இழுத்து நிறுத்தும் ஆற்றல் படைத்தது (சிவவாக்கியம்,பா.47) என வலியுறுத்துகிறார். இதனினும் மேலாக, இறவாமுன்னரே இறைவனை வணங்கவேண்டும் இல்லையே நீங்கள் அடையவிருக்கின்ற சிவபாதத்தை இழந்தவர் ஆவீர்கள் (சிவவாக்கியம்,பா.70) என அறிவுறுத்துகிறார்.
நிறைவாக
🎯 இறைவன் உருவமற்ற ஒருவனாய் உள்ளான். அவன் உனக்குள் இருக்கின்றான் அவனை கோயில் குளங்கள் என்று தேடி அலையாமல் இருந்த இடத்திலிருந்து கொண்டே யோகத்தின் மூலமாக மூச்சுக்காற்றை முறைப்படி நிறுத்தி ஒன்றிணைந்திட வேண்டும். அவ்வுயர்நிலையை அடைதல்தான் இந்தப் பிறவியின் பயன் எனப் புலப்படுத்தியுள்ளார்.
🎯 அதனை எய்திட ஆன்மாக்கள் முயல வேண்டும் அந்த முயற்சியைத் தடை செய்யக்கூடிய சமூகத்திற்கு முரணான அல்லது எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுதலை ஒழித்து விழிப்புணர்வு சிந்தனையோடு செயல்படுதல் எத்தகைய அவசியம் என்பதனை உணர்த்தியுள்ளார்.
🎯 உலகெங்கிலும் மண்டி கிடக்கின்ற சாதி, மத பேதத்தையும் தீண்டாமையையும் வேரறுப்பதன் மூலம் மனிதத்தை நிலைநாட்டிட முடியும் என்று ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
🎯 சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற மூடநம்பிக்கைகளைக் களையும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
🎯 மானுட இனத்தின் மேன்மையை நோக்கி செயல்பட உந்தும் இவரது பாடல்கள் அறியாமையால் செய்யும் அற்ப செயல்களை கைவிட வேண்டுமென்பதை அறிவுறுத்தியுள்ளது.
🎯 உலகில் பிறந்து உலகிலேயே உழன்று இன்பமும் துன்பமும் இவ்வுலகியல்பு என்றில்லாது இதற்கும் மேலான பிறப்பறுக்கும் வழிகளை அறிந்து இறையோடு கலந்து இரண்டற வாழும் உன்னதமே உலகில் ஆனந்தம் என்ற பேருண்மையை உலகறியச் செய்துள்ளார்.
துணைநின்ற நூல்கள்
1.இராமசுப்பிரமணியம் வ.த.,(உ.ஆ.), திருவாசகம் மூலமும் உரையும், திருமகள் நிலையம், 2006
2.கோவேந்தன் த., சித்தர் பாடல்கள், (பட்டினத்தார் முதல் பாரதியார் வரை), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2000.
3.சிவவாக்கியர் – சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம், (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்), Project madurai, 2007.
4.சுப்புராசு வீ. வீ., (ப.ஆ.), -பாரதியார் கவிதைகள், சுரா பதிப்பகம்,2011
5.மணிவாசகன் புலவர் அடியன், திருமந்திரம், சாரதா பதிப்பகம், ஜி 4 சாந்தி அடுக்ககம் 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை -14, ஏழாம் பதிப்பு, செப்டம்பர் – 2022.
6.பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாதி ஒழிப்பு, தென்மொழி பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம் 1, வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை-601302,, முதற்பதிப்பு,ஜீன்-2005.
7.வடிவேலு முதலியார்,மா., சிவவாக்கியர் பாடல் மூலமும் உரையும், இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை- 1953.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள்,
உதவிப்பேராசிரியர்,
மொழி பண்பாடு மற்றும் சமூகவியல் துறை (தமிழ்),
அறிவியல் மற்றும் மானிதநேயவியல் புலம்,
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,
இராமாபுரம் வளாகம், சென்னை-89.
An Agricultural Thoughts in Inna Narpathu and Iniyavai Narpathu|M.Muvin
Abstract
Nature has been the primordial companion of humankind since ancient times. Without the Nature forms the foundation of human life, and the central idea of Tamil thought is that humans cannot survive on this earth without the support and guidance of nature. The attachment that humans develop toward nature leads them to live in harmony with it, and this unity itself becomes the basic philosophy of agricultural life. Human livelihood is created through the integration of natural elements such as rain, land, season, and labour. In this context, the universal classic Thirukkural explains the relationship between nature and human life through chapters like “Invocation to God” and “The Greatness of Rain.” Similarly, the didactic texts of the Pathinenkilkanakku corpus, namely Inna Narpathu and Iniyavai Narpathu, indirectly record nature-oriented living while presenting the dual states of pleasure and pain in human life. Iniyavai Narpathu portrays harmonious living with nature, productive labour, and beneficial actions as sources of joy, thereby reflecting the prosperity of an agrarian society, whereas Inna Narpathu points to natural variations, lack of labour, and climatic hardships as sources of suffering, representing the challenges of agricultural life. Therefore, this study aims to analyse the relationship between nature and human life from the perspective of agricultural thought and to demonstrate that a nature-centred way of life, comprising both pleasure and hardship, constituted a stable agricultural philosophy in Tamil culture.
Keywords: Nature, Pleasure, Pain, Human, Society, Ecology.
“இன்னா நாற்பது இனியவை நாற்பதில் வேளாண்மைச் சிந்தனைகள்”
ஆய்வுச் சுருக்கம்
இயற்கை மனித வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. இயற்கையின் துணை, வழிகாட்டுதல் இன்றி மனிதன் வாழ இயலாது என்பதே இயற்கை மையச் சிந்தனையின் கருத்தாகும். இயற்கையின் மீது மனிதனுக்கு உருவாகும் பற்று, அவனை இயற்கையோடு ஒன்றிப்பட்டு வாழும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவ்வொற்றுமைவே வேளாண்மை வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமாகும். மழை, நிலம், காலம், உழைப்பு ஆகிய இயற்கைத் தன்மைகளின் ஒருங்கிணைப்பால் மனிதன் வாழ்வாதாரத்தை உருவாக்குகின்றான். இவ்வகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் இயற்கை–மனிதன் தொடர்பை ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’ ஆகிய அதிகாரங்கள் வழியாக விளக்குகின்றது. இதேபோன்று பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களான இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது ஆகியவை இன்பமும் துன்பமும் என மனித வாழ்க்கையின் இரு நிலைகளை எடுத்துரைக்கும் போது, இயற்கை சார்ந்த வாழ்வியலை மறைமுகமாகப் பதிவு செய்கின்றன. இனியவை நாற்பதில் இயற்கையோடு ஒத்துழைத்து உழைத்து வாழ்தல், பயன்தரும் செயற்பாடு போன்றவை இன்பமாகக் கூறப்படுவது வேளாண்மைச் சமூகத்தின் வளமையை உணர்த்துகின்றது; இன்னா நாற்பதில் இயற்கை மாறுபாடுகள், உழைப்பின்மை, காலநிலைப் பாதிப்புகள் போன்றவை துன்பநிலைகளாக சுட்டப்படுவது வேளாண் வாழ்க்கையின் சவால்களை பிரதிபலிக்கின்றது. ஆகவே, இவ்வாய்வு இயற்கை–மனிதன் உறவினை வேளாண்மைச் சிந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, இன்பமும் துன்பமும் கலந்த இயற்கை வாழ்வியலே தமிழர் பண்பாட்டில் நிலையான வேளாண்மைத் தத்துவமாக அமைந்துள்ளது என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
குறிச்சொற்கள்: இயற்கை, இன்பம், துன்பம், மனிதன், சமூகம், சூழலியல்
முன்னுரை
இயற்கை மனிதனை பக்குவப்படுத்தும் ஓர் அரிய கொடை. வாழ்க்கையை இயற்கையின் பார்வையில் அணுகுபவர்களால், இயற்கையை முழுதாக ரசிக்க முடியும். இதனைப் பற்றிய வெ இறையன்பு அவர்களின் கூற்று பின்வருமாறு,
“ போராட்டம் வாழ்க்கை என எண்ணுபவர்களால் வாழ்வில் வீசுகிற தென்றலையும்,
மழைச்சாரலையும், கலைப்பொருட்களையும் ரசிக்க முடியாது“ ( இறையன்பு வெ, 2019 )
எனும் கூற்றிலிருந்து இயற்கையும், வாழ்க்கையும் இணைந்து இருந்தால் அந்த வாழ்வு இன்பத்தைத் தரும் என்பதை அறிய முடிகிறது. அறங்களைப் போதிப்பது அற நூல்களின் இயல்பு. அவ்வகையில் துன்பம் எவையென்று சொல்லும் இன்னா நாற்பதிலும், இன்பம் எவையென உரைக்கும் இனியவை நாற்பதிலும் வேளாண்மையைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு, இருநூல்களும், இயற்கையை அறம் வலியுறுத்தும் நோக்கில், ஆனால் இன்பம் மற்றும் துன்பம் என்ற எதிரெதிர் கோணத்தில் எவ்வாறு பதிவு செய்துள்ளன என்பது இவ்வாய்வில் நோக்கப்பட இருக்கிறது.
வேளாண்மையின் இன்பமும்,துன்பமும்
விவசாயம் என்பது தமிழர் தம் தொழிலாகக் காலம் காலமாக இருந்து வருகிறது. மருத நிலம் விவசாயத்திற்கான பண்படுத்தபட்ட குடி நிலையாகவே இருந்துள்ளது என்பதற்கு சான்றுகள் சங்க இலக்கியங்களில் இருந்து கிடைக்கின்றன. நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்வதில் மனிதன் மட்டுமல்ல, மண்புழு போன்ற உயிரினங்களும் பயன்படுகின்றன. உணவுக்கு உயிர்மை ஆதாரம் நிலம் என்பதை,
“எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா?
அனைத்துயிர்க்கும் முன்தோன்றிய மூத்த பொருளும் நிலம் அல்லவா ? ” ( அரிபாபு பா.ச., 2014 )
இக்கூற்று நிறுவுகிறது. அற இலக்கியங்களும் விவசாயம் பற்றியும், அது பற்றிய பதிவுகளையும் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைக் காக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சங்க காலம் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய அப்படியொரு பரிதாபகரமான நிலையில் இருந்ததில்லை. விவசாயத்தை வாழ்வியலோடு இணைத்து செம்மையாக அணுக வேண்டிய தேவை தான் இருந்தது. சங்ககாலத்தின் பின் எழுந்த அற நூல்களாகத் திகழும் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பதில் வேளாண்மை பற்றிய பதிவுகள் இருக்கின்றன.
“ ஏருடையான் வேளாண்மை தான் இனிது“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் இனியவை நாற்பது நூலில் இடம்பெற்றுள்ள இவ்வரியானது, சொந்தமாக ஏர் வைத்து உழுபவனின் விவசாயம் காண்பதற்கு இனிது என்கிறது.
“ எருதில் உழவர்க்கு போகீரம் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் இன்னா நாற்பதில் இடம்பெற்றுள்ள இவ்வரியானது, விதைத்த நெல்லுக்கு உரமிடுதல் பொருட்டு எரு ( உரம் ) தேவைப்படும். அத்தகைய உரமில்லாத உழவர்களுக்கு, மண்ணின் ஈரம் போய்விடுதல் துன்பமாகும் என்கிறது. உரம்போட மண்ணில் ஈரமிருத்தல் நல்லது. நிலத்தில் ஈரம் காய்ந்திருந்தால் உரமற்ற உழவர்களுக்குத் துன்பத்தைத் தரும். பாதுகாப்பு இல்லாமல் இருக்கும், அதேசமயம் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கரும்பினைக் காத்தல் கடினம் என்பதை
“ சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் இவ்வரி உணர்த்துகிறது. கொத்துக் கொத்தாய்ப் பழுத்து பறிக்க ஆளின்றி மாம்பழங்கள் நைந்து கீழே விழுந்து கிடத்தல் துன்பம் என்பதை
“ துணர் தூங்கும் மாவின் படுபழம் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் இப்பாடலின் வரி உணர்த்துகிறது. மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள வேளாண்மைச் சிந்தனைகள், அதாவது, உழவு, எருவிடுதல், விளைச்சலைப் பாதுகாத்தல் சிறந்தது என்ற பொருண்மையில் திருக்குறளில் உழவு எனும் அதிகாரத்தில் ஒரு குறட்பா அமைந்துள்ளது.
“ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு“ ( ஹெலினா தே, 2016 )
எனும் குறளில், வயலில் ஏர் ஓட்டி உழுவது நன்று என்றும், அவ்வாறு உழுவதைக் காட்டிலும் உரமிடுவது சிறந்தது என்றும் களை எடுத்த பின் நீர் பாய்ச்சுதலைக் காட்டிலும், நோய் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து காத்தல் சிறப்பு என்கிறது.
வேளாண்மைக்கு ஆதாரமாகும் நீர்
நிரைப் போன்ற எளிமையானதும் ஒன்றுமில்லை. நீரைப் போன்று அத்தியாவசியமான ஒன்றுமில்லை. எந்த உயிருக்கும் நீரும், நீர் சார்ந்த தேவைகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. இதைத் தான் வள்ளுவர்,
“ நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு“ ( ஹெலினா தே, 2016 )
என்று உணர்த்தியிருக்கிறார். மேலும் நீர் தமிழர்களின் வாழ்வில் மிகப் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாக இன்றும், எந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றாலும் கும்பக்கலசத்திற்கு நீரால் பூசைகள் நடத்தப்பட்டு, பின்னர் தெய்வங்கள் உறைவதாக நம்பப்படும், புனித நதிகளில் அல்லது நீர்நிலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்படுகிறது. அதாவது நீரின் மூலமாக தெய்வசக்தி கடத்தப்படுகிறது என்பதனை,
“ தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும் ”
( பரமசிவன் தொ, 2022 )
எனும் கருத்து உறுதிசெய்கிறது. இயற்கையில் நீர் அழகு, அதை தருமத்துடன் காத்தலும் வேண்டும் என்ற பொருளில் இனியவை நாற்பது ,
“ காவொடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே“ (வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
என்கிறது. இவ்வரியானது சோலைகளை வளர்த்தல், அமைத்தல் இனிது அது அறம் என்று கற்பிப்பதோடு, தருமத்திற்காகக் குளம் வெட்டுதல் மிக இனிது என்கிறது. இவ்வரியில் வெறுமனே குளம் வெட்டுதல் என்று கூறியிருந்தால் அது வேளாண்மைக்குப் பயன்படும் குளம் என்று கருதுவதற்கு இடம் உண்டு. அறக்குளம் என்ற சொற்பயன்பாடு, வேளாண்மை முதல் விலங்குகள் நீர் அருந்துதல் வரை எந்த தருமத்திற்கும் பயன்படுத்தும் என்பதைக் குறிக்கிறது. வறண்டு, நீரின்மையால் வாடிக் கொண்டிருக்கும் பயிருக்கு வான் மழை பொழிதல் இனிது என்ற பொருளில்,
“ வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்தல் இனிதே“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் பாடல் இனியவை நாற்பதில் இடம்பெற்றுள்ளது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது வள்ளலாரின் உச்சபட்ச உயிர்நேயம். பயிரின் வாட்டத்தை மட்டுமல்ல, எந்த உயிரின் வாட்டத்தையும் நீரினால் மட்டுமே போக்க முடியும் என்பது நீரின் குறைந்தபட்ச எதார்த்தம். இயற்கையில் நீர் இன்பத்தைத் தருவது எனும் நோக்கில்,
“ கான்யாற்றடைகரை ஊர் இனிது“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
இப்பாடல் வரி, காட்டில் ஓடும் ஆற்றின் கரையின்கண் உள்ள ஊர் இனிது என்கிறது. ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், அதன் கரையில் ஊர் இருத்தல் காண்பதற்கு இனிது என்கிறது. கரையில் உள்ள ஊர் இனியதாக இருப்பதற்குக் காரணம் ஓடும் ஆறு என்பதில் ஐயமில்லை. காட்டில் ஓடும் ஆற்றைக் கொண்டு, இன்னா நாற்பது எனும் நூல் ஒரு இடத்தில் அறம் வலியுறுத்தியுள்ளது. அவ்வரி பின்வருமாறு,
“ …………………………………………… இன்னா கான்யாறிடையிட்ட ஊர்“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
இப்பாடலானது, காட்டாற்றின் இடையில் உள்ள ஊர் இனிதல்ல, இன்னா என்கிறது. ஏனெனில், எப்போது வேண்டுமானால் வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்கள் வரலாம். எனவே, காட்டாற்றின் இடையே ஊர் இருத்தல் துன்பம் என்று கூறுகிறது. ஊரானது ஆற்றின் கரையில் இருக்கும்போது அது இன்பமென்றும், இதே நீரின் இடையில் ஊர் இருக்கும்போது அது துன்பம் என்கிறது. இது சங்க காலத்தில் இருந்த நிலை அல்ல. இன்றும் நீர் சார்ந்த தேவைக்கான சூழலில் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு, சான்றாக பின்வரும் கூற்றினைக் கூறலாம்.
“ இன்று சுமார்300 ஆறுகள் நாடுகளின் தேசிய எல்லைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கைநனைக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே வாழ்கின்றனர். பல்வேறு மொழி, பண்பாட்டுப் பாரம்ரியங்களை ஒருங்கிணைத்துப் பாயும் இந்த நீர் ஆதாரங்களினுள்ளே போர் அபாயத்தையும் தாண்டி அமைதிக்கும் ஒத்துழைப்புக்குமான மெல்லிய இழையோடிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ( ஐங்கரநேசன் பொ, 2010 )
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூற்றானது, நீர் மிக அவசியத் தேவை என்பதால், போரின் தூண்டுதலுக்கும், இதே நீரின் அவசியத்தன்மை கருதி உளவியல் ரீதியான சிந்தனையில் அமைதிக்கான காரணமாகவும் அமைகிறது என்பதை நிறுவுகிறது.
“ நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
இவ்வரியானது, நீச்சல் தெரியாமல், நெடிய நீரை, கடல் நீரையோ அல்லது ஆற்று நீரையோ படகின் துணையின்றி நீந்துதல் துன்பத்தைத் தரும். இயற்கையின் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற அறிவுறுத்தல் நிலையில் நீரைக் கடக்க, படகு தேவை என்பதை உணர்த்துகிறது. குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் ஏறுவதற்கும், இறங்குவதற்குமான வழி துறை, துறை தான் ஆபத்தில் தப்பிக்க வழி, அத்தகைய துறையை அறியாதவன் நீரினுள் இறங்கக் கூடாது என்ற சிந்தனையை
“ துறையறியான் நீரிழிந்து போகுதல் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
எனும் இன்னா நாற்பதின் வரி உணர்த்துகிறது.
முடிவுரை
🔔விவசாயம்இனிமைதான் என்றாலும், அதில் காலங்காலமாக துன்பமும் உள்ளது என்பது இயற்கையைப் பற்றிய புரிதலை மனிதனுக்குப் புகுத்த அற இலக்கியங்களான இன்னா நாற்பது இனியவை நாற்பது முற்பட்டுள்ளன என்பது புலப்படுகிறது.
🔔வேளாண்மைக்கு மட்டுமின்றி, தருமத்திற்காக குளங்கள் வெட்டுதல் நன்று என்ற உன்னத அறத்தை இனியவை நாற்பது பதிவு செய்துள்ளது.
🔔 மழை பருவம் தவறாது பெய்தால், அது இன்பத்தைத் தருவதாகவும், மழை பொய்த்துப் போனால் உலகத்து மக்கட்கெல்லாம் துன்பம் என்ற செய்தியை இன்னா நாற்பது உணர்த்தியுள்ளது
🔔 இயற்கையை புரிந்து கொண்ட மனிதன், அதோடு முரண்பட்டு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டான் என்ற புரிதலையும், அதே சமயம் இயற்கைக்கு எதிராக செயல்படக்கூடாது என்ற இயற்கை சார்ந்த அறங்களையும் இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற அறநூல்கள் வலியுறுத்துகின்றன
துணைநூற்பட்டியல்
1.அரிபாபு பா.ச., 2014, திணைமரபும் நவீனமும், கருத்துப்பட்டறை,. மதுரை, தமிழ்நாடு, இந்தியா
2.இறையன்பு வெ, 2019, வாழ்க்கை, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
3.ஐங்கரநேசன் பொ, 2010, ஏழாவது ஊழி, சாளரம் வெளியீடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
4.பரமசிவன் தொ, 2022, அறியப்படாத தமிழகம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா
5.வேங்கடசாமி ந மு, 2011, இன்னா நாற்பது இனியவை நாற்பது மூ உ, சாரதி பதிப்பகம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
6.ஹெலினா தே, 2016, திருக்குறள் புதிய உரை, விதை வெளியீடு, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
References
1.Aingaranesan, Po. (2010). Seventh Epoch (Ezhavathu Oozhi). Saalaram Publications, Chennai, Tamil Nadu, India.
2.Aribabu, P. S. (2014). Thinai Tradition and Modernity (Thinai Marabum Navinamum). Karuthupattarai, Madurai, Tamil Nadu, India.
3.Helena, De. (2016). Thirukkural – New Commentary. Vidhai Publications, Erode, Tamil Nadu, India.
4.Iraiyanbu, V. (2019). Life (Vazhkai). Vijaya Publications, Coimbatore, Tamil Nadu, India.
5.Paramasivan, Tho. (2022). Unknown Tamilakam (Ariyappadatha Thamizhagam). Kalachuvadu Publications, Nagercoil, Tamil Nadu, India.
6.Venkatasamy, N. Mu. (2011). Inna Narpathu & Iniyavai Narpathu – Commentary (Moolamum Uraiyum). Sarathi Publications, Chennai, Tamil Nadu, India.
ஆய்வாளர்
மு.முவின்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பதிவெண்-B1/TAM23PDEC0214/2023
தமிழ்த்துறை,
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை, தமிழ்நாடு,
ஆய்வு நெறியாளர்
முனைவர் இரா.பரிமளம்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த் துறை,
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ்நாடு.
Sanga illakiyathil Iyarkkai Koorum Maruththuvam|Dr.E.Uvarani
Abstract
The medical knowledge discovered by the Tamils stands as a forerunner of today’s medical world. Contemporary systems such as Siddha medicine have evolved from the ancient tradition of natural medicine. Human beings and nature cannot be separated from one another. The basic needs of humans are food, clothing, and shelter. In that sense, people lived in harmony with nature. Through Sangam literature, this study examines the lifestyle of the Tamils and how they revered and preserved nature. Generally, if the average human lifespan is considered to be sixty years, the people of that period are said to have lived up to a hundred years. The reason for this was their dietary practices and the natural medicines available to them. In those days, food itself was consumed as medicine. However, today food is consumed mainly for taste. As a result, various diseases have emerged. Although science has advanced to great heights, people continue to seek natural medicine and Siddha treatment. The primary reason is that these systems of medicine are believed to have no side effects. Therefore, this study aims to identify how the Sangam Tamils practiced medicine using materials obtained from nature.
“சங்க இலக்கியத்தில் இயற்கை கூறும் மருத்துவம்”
ஆய்வுச் சுருக்கம்
இன்றைய மருத்துவ உலகின் முன்னோடியாகத் தமிழர்கள் கண்ட மருத்துவம் திகழ்கிறது. இன்றைய சித்த மருத்துவம் போன்ற மருத்துவமுறைகள் அன்றைய இயற்கை மருத்துவத்திலிருந்தே வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மனிதனையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம். அவ்வகையில் மனிதர்கள் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்துள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாக தமிழர்கள் வாழ்ந்த நிலையையும் இயற்கையை எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதையும் ஆராய்ந்து அதனை எடுத்துக்காட்டும் வகையில் ஆய்வானது அமைந்துள்ளது. பொதுவாக மனிதனின் ஆயுட்காலம் அறுபது என்றால் அக்காலமக்களின் ஆயுட்காலம் நூறு. அதற்குகாரணம் அம்மக்களின் உணவு முறைமற்றும் இயற்கையில் கிடைந்த மருத்துவம். அன்று உணவையே மருந்தாக உட்கொண்டனர். ஆனால் இன்று சுவைக்கானவே உணவை உட்கொள்கின்றனர். இதன் விளைவாகவே பல்வேறு நோய்கள் உண்டாகின்றது. விண்னைமுட்டும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இயற்கை மருத்துவம் மற்றம் சித்தமருந்துவம் என்ற அடிப்படையிலேயே மக்கள் தேடி ஓடுவதற்கான காரணம் எந்த பின் விளைவுகளும் இல்லாத மருத்துவமுறை என்பதனாலேயே. எனவே இவ்வாய்வானது சங்கத் தழிழர்கள் இயற்கையில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு எவ்வாறு மருத்துவம் செய்தனர் என்பதை கண்டறியும் நோக்கில் அமைந்துள்ளது.
முன்னுரை
சங்க இலக்கியத்தில் இயற்கையில் காணப்படும் விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகொடிகள் என ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுடைய உயிர்கள் பற்றிய பல அரிய நுண்ணிய அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் திணை அடிப்படையில் அறிவியல் செய்திகளை புகுத்தியுள்ளனர். சங்கப் படல்கள் பலவற்றைக் காணும்போது புலவர்கள் கவிநுட்பம் வாய்ந்தவர்களாக மட்டுமற்றி மருத்துவ குறிப்புகளை அறிந்தவர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பது புலப்படுத்துகிறது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய சமூகத்தில் இயற்கையோடு இயைந்து வாழத்தொடங்குவோம் என்ற கருத்தாடலை பெரும்பாலும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்குகாரணம் இயற்கை முறையே சிறந்த முறை என்பதை அறிந்ததன்பொருட்டே. உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் இன்ப துன்பம் என்பது இயற்கையாய் அமைந்துவிடுகிறது. இன்பம் மகிழ்வுறச் செய்கிறது. துன்பம் வருத்தமுறச் செய்கிறது. அத்துன்பத்தைப் போக்குவது மருந்தாகும். அத்தகையமருந்து இயற்கை முறைகள் சங்ககால மக்களின் வாழ்வியலில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை ஆராய்வதன் இவ்வாய்வின் நோக்கமாகும்.
மருத்துவம் – விளக்கம்
‘நோவு, நோதல்’ போன்ற சொற்கள் நோயைக் குறிக்கின்றன. நோயை அறிந்து குணப்படுத்துபவரை‘ மருத்துவர்’ என்று அழைக்கிறோம். நோயுற்றோரின் உடல் நிலையை அறிந்து, அதற்குத் தகுந்தாற் போல பழங்காலத் தமிழ் மருத்துவர்கள் மருந்து கொடுக்கின்றனர். இதனை,
“பொருந்தியன் வேட்டபொருளவின் நினைத்தசொல்
திருந்திய யாக்கையுடன் மருத்துவன் ஊட்டியமருந்து” (கலி.17)
என்ற கலித்தொகைப் பாடல் எடுத்துரைக்கிறது. அறத்தொழில் செய்யும் மருத்துவரை‘அறவோன்’ என்று குறிப்பிட்டனர்.
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது
மருந்து ஆய்ந்துகொடுக்கும் அறவோன்” (நற்.136)
இங்கு நோயினை அறிந்து, அதற்கேற்ற மருந்து கொடுத்த மருத்துவர்களை ‘அறவோன்’ என்று கூறிய செய்தி அறியப்படுகிறது. மருத்துவம் என்பது நோய்களை நீக்கும் கருவியாகும். இது கலை, அறிவியல் அடிப்படையில் அமைந்த சிகிச்சை முறையாகும். மருத்துவம் என்பது நோயைக் கண்டறிவதும் அதனை போக்குவதற்கான உபாயத்தைக் கூறுவதாகும். மருத்துவம் என்பதற்கு செந்தமிழ் அகராதி“ வைத்தியம், பரிகாரம், மருந்து, ஒருவகை யாழ்”1 என விளக்கம் தருகிறது. கழகஅகராதி “வைத்தியம்”2 என்றும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மருத்துவம் என்பதற்கு“ ஒருவகையாழ். வைத்தியம், பரிகாரம், பிரசவம் பார்க்கும் தொழில் என்றும் மருத்துவனை வைத்திவன்”3 என்றும் விளக்கம் தருகிறது.
மருத்துவம் என்பது நோய் பற்றிகற்கும் கல்வி ஆகும். மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பும் அதன் இயக்கத்தில் இயங்க வேண்டும். இயக்கம் நின்று போனாலும் தடைபட்டாலும் நோய் ஏற்படுகிறது என்கிறோம். ஆதனை நீக்கும் முறையே மருத்துவம் அல்லது வைத்தியமாகும். மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் எதிர்த்துப் போராடியும் செயலாற்றி வருகின்றன. செயலாற்றும் உறுப்புகள் செயலின்றி இருந்தால் நோய் வரும் என்பதை சு.நரேந்திரன், “உயிர் எப்போதும் சூழ்நிலையோடு போராடிவருகிறது. போராட்டம் தோல்வி அடையும் போது அதுநோயில் முடியும். வெற்றி அடைந்தால் நலமாகும்”4 என்கிறார்.
மருந்து விளக்கம்
மருந்து என்பது நோய்க்குத் தரும் நிவாரணம். மருந்து என்பது நோய்க்கு செய்யும் பரிகாரம் அல்லது நோய்க்கு செய்யும் வைத்திய முறையாகும். மருந்து என்னும் சொல்லுக்கு “ஒளடதம், பரிகாரம், அமிர்தம். சோறு, குடிதண்ணீர், இனிமை”5 என்று குறிப்பிடுகிறது. மேலும், மருந்து, காற்று வாதநோய் மருத்துவச் சஞ்சீவி, மருந்தாக்க உதவும் புல், மரம், புதல், பூங்கொடி, மருத்துவச்சி-பிரசவம் பார்ப்பவள்; மருத்துவதாதி – நேர்ஸ் (ரேசளந) மருத்துவி, வைத்தியம் செய்பவள்;, மருந்திடு – வசியமருந்தால் வரும் நோய்”6 என விளக்கம் தருகிறது அகராதி. சங்ககாலத்தில் மருத்துவன் தாமோதரனார் என்னும் சங்கப்புலவர் ஒருவர் இருந்துள்ளார். மருந்து என்னும் சொல்லாட்சி இலக்கியங்களில் காணப்படுவதை ஆசை நோய்க்கு மருந்து முண்டால் கொலோ (கம்பராமாயணம், மிதிலை 80) என்றும்,
கடல் கலக்கி மருந்துகைக் கொண்டு (கல்லாடம், பா 41)
என்றும் மருந்தின்று மன்னவன் சீறில் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. சங்ககாலமக்கள் ஏராளமான மூலிகைகள் பற்றியும் அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். இருப்பினும், இன்று போல் அன்றும் பலவிதமான நோய்களாலும் உடல் ஊனங்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாரென்பதைத் தமிழ் இலக்கிய நூல்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளன.
“அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” (நற்.140:10-11)
இங்கு, நோயாளிகளின் துன்பத்தையும், வேதனையையும் துடைப்பது மருந்து என்று நற்றிணை கூறுகிறது.
“அருந்துயர் ஆரஞர் தீர்க்கும் மருந்து” (கலி.குறி.20-21)
என்று கலித்தொகையின் குறிஞ்சிக்கலியிலும் மருந்துக்கு இது போன்ற ஒரு வரையறையும் கூறப்பட்டுள்ளது. நோயாளியின் அருந்துயரையும் கடும் வேதனையையும் தீர்ப்பது மருந்து ஆகும்.
“இன்னுயிர் செய்யும் மருந்து” (கலி.பாலை.31:14)
இவ்வரியின் மூலம் ‘உயிர் காப்பதுமருந்து’ என்றுமருந்தினைஉயிரைப் பாதுகாக்கும் பொருளாகப் பாலைக்கலி வரையறுத்துள்ளமையை அறிய முடிகிறது.
“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்ப” (கலி.பா.16:19-21)
இவ்வரிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட உடம்பினை நோயாளி கொண்டிருந்தால் மருத்துவர் தரும் மருந்து, நோயாளியின் பாதிக்கப்பட்ட உறுப்பினை விரைவாகச் சென்றடைந்து நன்கு வேலை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவம்
தமிழ் மருத்துவம் அல்லது தமிழர் மருத்துவம் என்பது இயற்கையோடு இயைந்த மருத்துவம் ஆகும். காடுகளில், மலைகளில் ஆறுகளின் ஓரங்களில் இயற்கையாகவே காணப்படும் தாவரங்களின் வேர், தண்டு, இலை, பூ, காய், கனி ஆகியவை தமிழ் மருத்துவத்தின் முக்கிய பகுதியாகும். மனிதன் அநாகரீக நிலை, நாகரீக நிலை காட்டுமிராண்டி நிலைஆகிய நிலைகளிலும் செடி, கொடி, காய்கனிகள் உணவாக பயன்பட்டுள்ளது. மருந்தாகப் பயன்பட்டுள்ளது. தமிழ் மருத்துவ முறைகள், என்பது காடுகளில் மறைந்து வாழ்ந்தசித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது. சைவ இலக்கியங்கள் சித்தர்களில் முதன்மையானவர் சிவபெருமான் என்கிறது. சித்தர் இலக்கியங்கள் அகத்திய முனிவரைமுதல் சித்தர் என்கிறது. இவ்வாறுசித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது தமிழ் மருத்துவம். இத்தகைய மருத்துத்தின் வாயிலாகவே பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டு வாழ்ந்துவந்துள்ளனர். மேலும் இம்மருத்துவ முறை இன்று பல்வேறு வகைகளில் (சித்தமருத்துவம், ஹோமியோ, தொடுவைத்தியம், பாட்டிவைத்தியம், ஆயர்வேதம், யுனானி) மக்களிடையே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ முறைகள்
இன்றைய காலக்கட்டத்தில், சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்னும் நிலைகளில் மருத்துவப் பிரிவுகள் உள்ளன. மனிதன் வாழும் காலத்திற்கும் இயற்கை சூழலுக்கும் ஏற்ப இடத்தையும் பண்புகளையும் மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே விதமான உணவு பழக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. அவரவர்கள் தத்தம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உணவுமுறை மாற்றம் அடைகின்றன. இவ்வுணவு முறையில் மாற்றம் ஏற்படுமாயின் நோய் ஏற்படும். அந்நோய்க்கு ஏற்ப மருத்துவ முறைகளும் மாற்றம் பெறுகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில், சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்னும் நிலைகளில் மருத்துவப் பிரிவுகள் உள்ளன. சித்தமருத்துவம் தமிழர்களின் மருத்துவம் சித்த மருத்துவம், சித்தர் மருத்துவம் மிக உயர்ந்தநிலையில் பண்டைய காலக்கட்டங்களில் திகழ்ந்தன. இஃது முதன்மை மருத்துவமாகவும் போற்றப்பட்டன. திருமூலர், இராமதேவசித்தர், கும்பமுனி, இடைக்காடர், சித்த மருத்துவம் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவம் சித்தர் என்னும் சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருளாகும். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகையான யோகத்தின் மூலம் எண் வகையான சித்திகளைப் பெற்றவர் என்னும் பொருளில் சித்தர்கள் எனப் பெயர் பெற்றனர். “அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்” என்னும் எண்பெரும் சித்துக்களை அறிந்தவர் சித்தர் எனப் போற்றப்படுகின்றனர். தன்வந்திரி வால்மீகி சித்தர்கள் பலர் இருந்தாலும் வரையறுக்கப்பட்டசித்தர்கள் பதிணென் சித்தர்கள் ஆவர். அவர்கள்
திருமூலர், இராமதேவசித்தர், கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி, சுந்தரானந்தர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆவர். இவர்கள் மட்டுமின்றி அகப்பேய் சித்தர், இடைக்காட்டுசித்தர். கடுவெளிச் சித்தர், கொங்கணசித்தர் போன்ற சித்தர்களும் காணப்படுகின்றனர். மேல் காணும் சித்தர்கள் மந்திரம், யோகம், பொன்மாற்று, இரசவாதம், விண்ணில் உலாவுதல், கூடுவிட்டு கூடுபாய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியவராவார்கள். இத்தகைய சித்தர்கள் இயற்கையில் விளைந்த காடுகளில் கிடைக்கக் கூடிய இலை, தழை, தண்டு, காய், கனி, பட்டை, விதை போன்றவற்றை பயன்படுத்தி நோய்களை தீர்த்து வைத்துள்ளனர். இவை கை வைத்தியம் என்று அழைத்தனர். இம்மருந்து முறைகளை பல ஆண்டுகள் ஆராய்ந்து அறிந்து கண்டுள்ளனர். மனிதர்களிடம் காணப்படும் நோய்களைப் போக்கும் மருத்துவர்களாய் சித்தர்கள் இருந்துள்ளதை. ”விந்தியமலைக்குத் தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள நாட்டுமக்களின் மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம் என்றும், சித்த மருத்துவம் என்றும் கூறுவர். தமிழ் மக்களின் மருத்துவம் ஆதலால் இதனைத் தமிழ் மருத்துவம் எனவும் கூறுவர். மேலும், பல்வேறு சித்திகளில் வல்ல அறிஞர்களான சித்தர்கள் தம் உள்ளொளியினால் வரையறுக்கப்பட்டு அமைக்கப் பெற்றதும், பதினெண் சித்தர்கள் கொண்ட மருத்துவ அவையினரால் அவ்வப்போது ஏற்கப்பெற்றதுமான மருத்துவமானதால் சித்தமலுத்துவம் எனவும் கூறப்பெறுகிறது”.7
சித்த மருத்துவத்தின் சிறப்பு
மனிதனின் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. இயற்கை மனிதனுக்கு பல்வேறு நன்மையைப் பயக்க வல்லது. அவற்றின் எதிர் திசையில் வாழும் மனிதனுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கான காரணத்தை அறிவதுமிகவும் கடினம். அறிவியல்துறை நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது உண்மை. எனினும் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் தோன்றுவது அறிவியலுக்கு சவால் விடுகின்றன. உடம்பில் ஏற்படும் நோய்கள் முற்றிலும் அழிந்து விடுவதில்லை. முhறாக அந்நோயின் தாக்கம் மட்டுமே குறைக்கப்படுகின்றன. அப்போதைக்கு அதன் வீரியம் குறைக்கப்பட்டாலும் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் சித்த மருத்துவத்தின் சிறப்பே பக்கவிளைவு, எதிர்விளைவு, பின்விளைவு ஏதுமில்லாத சிறப்பினை உடையது என்பதை,
“பக்கத் தெதிர்விளைவுபின்விளைவேதுமிலா
தக்கதியற்கைமருந்து”8 என்கிறார் டாக்டர் சிற்சபை.
இலக்கியத்தில் மருத்துவம்
மனித உடம்பில் நோய் வருவது இயல்பாகவே அமைந்த ஒன்றாகி விடுகிறது. உடல் சரியாக இருந்தால் மட்டுமே மருந்து சரியாக வேலை செய்யும். உடல் மேன்மேலும் கெட்டால் மருந்து நீண்ட நாள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை,
“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்பப்
பெரும் பெயர் மீளி” (கலித் – பா17)
என்னும் அடிகளால் அறியமுடிகிறது. சங்ககாலத்தில் போரும் பூசலும் நிறைந்திருந்தன. போரில் விழுப்புண்பட்டவீரனின் புண்ணை ஆற்றுவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் புண் பெரிய அளவில் இருந்ததால் அதனை ஆற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து உடல் தசையை தைப்பது போல அக்காலத்தில்
“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்னநெடுவெள்ளுசி
நெடுவசிபரந்தவடுவாழ் மார்பின் (பதிற்று – பா 5:2: 1-3)
என மீன் கொத்தியானது நீரில் மூழ்கி மீனை எவ்வாறு உள்ளே சென்று மீனைக் கொத்தி மீண்டும் வெளியே வருகிறதோ அதுபோல விழுப்புண்பட்ட வீரனின் தோல்களில் கூர்மையான ஊசியினைக் கொண்டு தசையை தைத்துள்ளனர். அதாவது இன்றைய மருத்துவத்தின் உயரிய நிலையான அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடி நம் தமிழச் சான்றோர்களே என்பதை நம்மால் அறிய முடிகிறது. கருவுற்ற பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற்படுகிறன்ற வாந்தி, உணர்வினைப் புளியங்காய் கம்டுப்படுத்தும் என்று புளியஙகாயின் மருத்துவக்குணம் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் வயா நோயினால் துன்புற்ற கர்ப்பிணிப் பெண்கள் மண் போன்ற பொருட்களை உண்ணம் பழக்கத்தினைக் கொண்டிருந்தனர். சேர மன்னன்; யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்துபாடும் பொருட்டு குறுங்கோழியூர்கிழார் என்ற புலவர் அவருடையநாட்டில் வயா நோயினால் துன்புறும் கர்ப்பிணிப் பெண்களன்றி அவரது எதிர் நாட்டைச் சேர்ந்து எவரும் அவரது நாட்டின் மண்னை உண்டதில்லை என்று அவரது நாட்டின் பெருமையினைப் புகழ்ந்து பாடியிருப்பதைப் புறநானுற்றின் வாயிலாக அறிய முடிகிறது.
வயவுறுமகளிர் வேட்டுநின் அல்லாது
பகைவர் உண்ணா அரும்மண்ணினையே (புறம் 20, 14-15)
என புறநானூற்றுப் பாடலின் வாயிலாக அறிய முடிகிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய வேம்பு, கடுகு, கீரை வகைகள், நெல்லி போன்ற பொருட்களில் மருத்துவக்குணம் இருப்பதைத் தமிழர்கள் அறிந்திருந்த செய்தியை எட்டுத்தொகை நூல்கள் புலப்படுத்துகின்றன.
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரி
வாங்கு மருப்பியாமொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்துமை இழுது இழுகி
ஐயவிசிதறி, ஆம்பல் ஊதி (புறம் 281)
அதாவது போரில் விழுப்புண் பெற்றதலைவனுக்கு மருந்திட்டுக் காக்க இயற்கையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது. மேலும்,
பெருமலைவிடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடங்கிச்
சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே (புறம் 91)
இங்கு அரிய மலைப்புறத்து உள்ள நெல்லிக்னியைத் தான் உண்ணாது, ஒளையார் உண்டு நீடுவாழ வேண்டுமென்று அதியமான் நெல்லிக்கனியை வழங்கியசெய்தி கூறப்பட்டுள்ளது. இதனால் சாவா மருந்து என்ற பெருமைக்குரிய நெல்லிக்கனியின் மருத்துவப் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மரணத்தையே தள்ளிவைக்கும் வல்லமை கொண்ட நெல்லிக்கனியின் மகத்துவத்தை அன்றைய தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை புலப்படுத்துகிறது.
இசை மருத்துவம்
இசைக்கு மயங்காத உயிர்களே கிடையாது. மனதைக் கட்டுக்குள் வைக்கும் திறன் இசைக்கு உண்டு மனதை மயக்கநிலையில் வைக்கும் ஆற்றல் இசைக்குஉண்டு. மனநோயைப் போக்கும் மாற்று மருந்தாக இசைத் திகழ்கிறது என்பதை,
“மருந்தினால் அன்றி மனக்குறை நோய் மாற்றும்
விருந்தாய் இசையொன் றுடைத்து” (சித்த மருத்துவக்குறள் – பா 227)
என்று சித்தமருத்துவக்குறள் குறிப்பிடுகிறது. இசையால் மட்டுமின்றி நாட்டுப்புறப் பாடலின் வழியேயும் மனநோயைப் போக்க முடியும். சங்க இலக்கியத்தில் தனது கணவன் மார்பின் மீது புலி பாய்ந்ததால் ஏற்பட்ட புண்ணினை ஆற்றுவதற்குக் குறமகள்,
“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவரி விழுப்புண் தனிமார் காப்புஎன
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாட” (மலைப்படுகடாம் – அடி 302-304)
என்னும் மலைபடுகடாம் செய்யுளடியால் அறிய முடிகிறது. இன்னிசையால் மட்டுமின்றி இன்சொல்லை இசைத்துப் பாடுவதாலும் நோயின் தாக்கத்தைப் போக்கவும் குறைக்கவும் முடியும்.
சிரிப்பே மருந்து
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது பழமொழி. சிரித்து வாழ்ந்தால் ஆயள் கூடும் என்கிறது மருத்துவ அறிக்கை. ஒருவர் வாழ்வில் மகிழ்ச்சியாக சிரித்து வாழ்ந்தால் பிணிதாக்கம் இருக்காது. சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்கிறது தமிழ்த் திரை இரைப்பாடல். சிரிப்பு என்பது விலங்குகளிடம் இருந்து மனிதன் மாறுபட்டவனாகக் காட்டக் கூடியது. மக்களின் மன இறுக்கத்தைப் போக்குவது சிரிப்பும் புன்னகையும் ஆகும். இவையே மிகச் சிறந்த மருந்தும் ஆகும். நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்க்கு பகல் கூட இருளாகத்தான் தெரியும் என்பதை,
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற்பட்டன்று இருள் (குறள் 999)
என்னும் குறளால் அறியமுடிகிறது.
உணவுஉண்ணும் முறை
1. அருந்துதல் – மிகக் குறைந்த அளவு உண்ணுதல
2. உண்ணல் – பசீதீர உண்ணல்
3.உறிஞ்சல் – வாயைக் குவித்து உணவு பண்டத்தை உள்ளிழுத்தல்
4. குடித்தல் – கஞ்சி, கூழ் போன்றவை
5.தின்றல் – தின்பண்டங்களை உட்கொளல்
6.துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உண்ணல்
7.நக்கல் – நாக்கினால் துலாவி உட்கொள்ளல
8.நுங்கல் – முழுவதையும் ஒரேவாயில் ஈத்து உறிஞ்சல
9.பருகல் – நீர் வகைகளை உண்ணல்
10.மாந்தல் – வேட்கையுடன் மடமட வெனகுடித்தல்
11.மெல்லல் – கடிய பண்டத்தை பல்லால் கடித்து மென்று உண்ணல்
12.விழுங்கல் – பல்லுக்கும் நாக்கிற்கும் இடையில் தொண்டை வழி
விழுங்கல் போன்ற பன்னிருவகையில் உணவு உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தனர் தமிழர்கள். உணவானது உடலின் எடைக்கும் ஏற்றதாக அமையவேண்டும். குறைந்த அளவோ அல்லது மிகுந்த அளவோ உணவை எடுத்துக்கொள்ளும் போது பலவித விளைவுகளை உடல் சந்திக்க நேரிடுகிறது. உணவு உண்ணும் முறை, காலம் ஆகியவற்றைச் சரியாகப் பின்பற்றினால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இரவில் சில உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சிலவகை உணவுகளை காலையிலும் பிற்பகலிலும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று எவ்வாறு, எந்தளவு, எத்தகைய உணவு, எந்தநேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். என்றுரைக்கிறது. உணவினைபடுத்துக் கொண்டும் நின்று கொண்டும் பொது இடங்களிலும் உண்ணக்கூடாது. சம்மணமிட்டு அமர்ந்து உண்பதே உடலின் செரிமாணத்திற்கு வகை செய்வதாக அமைந்திருக்கும் என்பதை
“கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணா
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று” (ஆசாரக்கோவை பா-23)
என்றுரைக்கிறது. அவ்வாறு உணவு உண்ணும் போதும் பெரியோருடன் அமர்ந்து உண்ணும் போதும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை,
“முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்” (ஆசாரக்கோவை பா-25)
என்றுரைக்கிறது ஆசாரக்கோவை. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய மற்றும் இயற்கை பொருள்களைக் கொண்டு செய்யக்கூடிய உணவு முறைகளையும் அந்தந்த நேரங்களுக்கு ஏற்றார் போல சமைத்து உண்டு நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
முடிவுரை
மனிதன் தோன்றிய நாளிலிருந்தே நோய்களும் காணப்படுகின்றன. மனிதனையும் இயற்கையும் ஒன்றோடொன்று கலந்து உள்ளவை. இவற்றை தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. மனிதனுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு விளைவுகளுக்கும் ஒவ்வொரு மருத்துவம் காணப்படுகின்றன. நோய்களுக்கான மருத்துவ முறைகள் மனிதனுடைய அறிவின் விளைவாக ஏற்பட்டவையாகும். மனிதனுடைய அறிவின் படிநிலை வளர்ச்சியாகப் படிப்படியாகவே மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுவந்துள்ளன. பழந்தமிழர்கள் நோயால் அவதிப்பட்டபோது, அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேடிக் கண்டனர். இன்றைய மருத்துவ உலகின் முன்னோடியாகத் தமிழர்கள் கண்ட மருத்துவம் திகழ்கிறது. இன்றைய சித்தமருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் அன்றைய இயற்கை மருத்துவத்திலிருந்தே வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதை இவ்வாய்வின் மூலம் கண்டறிப்பட்டுள்ளது.
தொகுப்புரை
🎯 மருத்துவம் என்பது நோய் நீக்கும் கருவி என்பதை உணரமுடிகிறது.
🎯மருத்துவம் என்னும் சொல்லுக்கு வைத்தியம், பரிகாரம், மருந்து, பிரசவம் பார்க்கும் தொழில், ஒளடதம், அமிர்தம், இனிமை போன்ற விளக்கத்தால் அறியமுடிகிறது .
🎯 சித்த மருத்துவமே தமிழ் மருத்துவம். மருத்துவம் சித்த, ஆயுர், யுனானி, ஹோமியோபதி ஆகிய நான்கு நிலைகளில் மருத்துவம் அளிக்கப்படுவதை அறியலாகிறது.
🎯 சித்தர்கள் இலை, தழை, தண்டு, காய், கனி, வேர், விதை, பட்டை போன்றவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர். சித்த மருத்துவத்தின் சிறப்பு பக்கவிளைவு, எதிர்விளைவு ஏதும் அற்றது.
🎯 மருந்து உட்கொள்வதால் நோய்தீரும், ஆயுள் கூடும்.
🎯 நோய்க்கான மருந்து இசையும் கூட.
🎯இசை மட்டுமின்றி இன் சொல்லும் நோயைப் போக்கும் என்பதை அறியமுடிகிறது. அறுவை சிகிச்சை பண்டைய காலத்தில் நிகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.
🎯 சிரிப்பே மருந்தாகப் போற்றப்படுகிறது.
🎯 உடல் நலத்திற்கு உணவே அச்சாணி.
🎯 நோயற்ற வாழ்வுக்கு இலைகள், தழைகள், கிழங்குகள், தண்டு, காய், கனி, வேர் ஆகியவையாகும். நோய்க்கான காரணம் தவறான உணவுமுறை.
🎯 நோயாளிக்கும் மருத்துவனுக்கும் பாலமாக அமைவது இயற்கை மருந்து என்பதை அறியமுடிகிறது.
மேற்கோள்கள்
1.செந்தமிழ் அகராதி, ந.சி.கந்தையா பிள்ளை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 1999, ப.எண் 557
2.கழக அகராதி, ப.எண் 741
3.கழக அகராதி, ப.எண் 744
4.தமிழில் மருத்துவம், சு.நரேந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 2003, ப.எண் 60.
5.செந்தமிழ் அகராதி, ந.சி.கந்தையா பிள்ளை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 1999, ப.எண் 557
6.மேலது ப.எண் 242
7.தமிழ் மருத்துவ மாண்பு, டாக்டர் சிற்சபை(க.ஆ), ப.எண் 183
8.மேலது ப.எண் 183
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி
உதவிப் பேராசிரியர்
வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
Velpari Novel Palm Tree and Jasmine|P.Parameshwari
Abstract
He Symbolism of Palm Tree and Jasmine Flower in Su. Venkatesan’s Novel “Veera Yuga Nayagan Velpari” This article explores the symbolic significance of palm trees and jasmine flowers in Su. Venkatesan’s historical novel “Veera Yuga Nayagan Velpari”, winner of the Sahitya Akademi Award. The novel depicts the story of the legendary king Pari and his struggles against the three crowned kings of ancient Tamil Nadu. Through a close reading of the text, this article argues that the palm tree and jasmine flower serve as powerful symbols of Pari’s character, values, and legacy. The palm tree represents Pari’s strength, resilience, and generosity, while the jasmine flower embodies his love, sacrifice, and devotion. By analyzing the novel’s depiction of these symbols, this article sheds light on the cultural significance of palm trees and jasmine flowers in Tamil literature and tradition.
“வேள்பாரிநாவலில்பனையும் முல்லையும்”
ஆய்வு சுருக்கம்
உலகின் மொழிகளில் தனக்கென பெரும் வரலாற்றுச் சிறப்பை பெற்ற மொழி தமிழ் மொழியாகும்.தமிழ் மொழியின் வரலாற்றை தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய இலக்கியங்கள் இன்றுவரை எண்ணற்ற வடிவங்களில் தங்களைக் கட்டமைத்துகொண்டுள்ளன.அவ்வகை இலக்கிய படைப்புகளில் ஒன்றே சங்ககால வரலாற்றை மையமாகக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு .வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் வரலாற்று நாவலாகும். இந்நாவல் தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றையும் மக்களின் வாழ்வியலையும் விரிவாக எடுத்துக்கூறுகின்றது. இந்நாவலின் மையக்கருத்து பனைமரம் நாவலில் எவ்வாறு எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பதனையும் பாரியின் வரலாற்றில் தனக்கென தனிச்சிறப்பைப் பெற்ற முல்லைக்கொடி நாவலில் படர்ந்துள்ள நிலைப்பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை
இக்கட்டுரையில் பனைமரம் அறிவியல் பெயர் Borassus புள்ளினத்தைச் சேர்ந்த தாவரப் பேரினமாகும். சங்க இலக்கியங்களில் இவற்றை போந்தை என்னும் பெயரில் அழைத்துள்ளனர் மற்றும் முல்லைமலர் அறிவியல் பெயர் ஜாஸ்மின். சங்க காலங்களில் முல்லைமலர் நளவம், கொகுடி, செம்முல்லை, மௌவல், குல்லை என்னும் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன. இப்பனைமரம் மற்றும் முல்லைமலர் வேள்பாரி நாவலில் எவ்வாறு கூறப்பட்டுள்ளனர் மேலும் சங்க கால பாடல்களில் இவைகளின் ஆளுமையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
வேள்பாரிநாவலில் பனை
வேள்பாரி நாவலில் எழுத்தாளர் பாரியின் புகழை எத்தனைச் சிறப்பித்து கூறுகின்றாரோ அத்தனை முக்கியத்துவத்தைப் பனைமரத்திற்கும் வளங்கி இருக்கின்றார். பனைமரம் என்பது தனது உடலின் அனைத்து பாகங்களையும் பிறருக்கு கொடுத்து பயன் தருகின்றது. அதற்கு இணையாக பாரியின் கொடைத்தன்மையும் கூறப்படுகின்றது. நாவலின் தொடக்கத்தில் புலவர் கபிலர் நீலன் என்னும் வீரனின் உதவியால் பறம்பு நோக்கிய பயணத்தில் பச்சை மலையைக் கடப்பார் .உடல் சோர்வு பெற்ற கபிலரை ஒரு பெரும் பனை மரத்திடம் அமரச் செய்து நீலன் ஒரு இடம் சென்று திரும்புவான். பின் இருவருக்குமான உரையாடலில் பனைமரம் பற்றி உரையாடப்படுகின்றன. பனைமரம் எங்களின் குல சின்னம் இவை பறம்பு மக்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் தெரியும் பனைமரத்திடம் ஒப்படைத்து விட்டால் எந்தத் தீங்கும் விளைவது இல்லை பனை அவற்றை காக்கும் என்று கூறினான். மேலும் பனைமரம் என்றும் செங்குத்தாக வானுயர வளரும் தன்மையைக் கொண்டது வளைந்து கொடுக்கும் தன்மை பனைக்கு கிடையாது. இவை எங்கள் பறம்பு மலையின் தன்மையை கொண்டது என பறம்புவின் தன்மையை அழகாக கூறுகின்றான். ஒரு மலையின் மக்களின் தன்மையை மரத்துடன் ஒப்புமைப்படுத்தி நாவலின் தொடக்கத்திலேயே பயனைப் பற்றியும் பறம்பு மக்களின் இயல்பைப் பற்றியும் எழுத்தாளர் எடுத்துரைக்கின்றார். இப்பனை மரத்தின் உயர உடல் அமைப்பை நம்மால் கலித்தொகையில் காணமுடிகிறது.
“வான்உற ஓங்கிய வயங்கு ஒலிர் பனைக்கொடிப்
பால்நிற வண்ணன் போல்பழி தீர்த்த வெள்ளையும்”(கலி. பா. 104)
இப்பாடலில் வானுயர ஓங்கி வளரக்கூடியது பனைமரம் பனைமரக் கொடியைக் கொண்டவன் பலராமன் அவனது பால் வண்ண நிறத்தை ஒத்த காளையும் ஏறு தழுவுதல் போட்டியில் காளைகளின் தோற்றங்களைத் தோழி தலைவிக்கு கூறுகின்றாள். இதன் வழி பனைமரத்தின் கம்பீரமான தோற்றத்தையும் அவற்றின் சிறப்பை உணர முடிகிறது. நாவலின் மையப் பகுதியில் வேளிருக்கும் மூவேந்தர்களுக்கும் போருக்கான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது. பாரியின் பிரதிநிதியாக கபிலர் உள்ளார். மூவேந்தர்கள் சார்பில் முகுந்தன் பேச்சினை தொடங்க மூவேந்தர்களோடு இணங்கி போதல்தான் பாரிக்கு நல்லது எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப் போல அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம் என்கிறார் ஆவேசம் கொள்ளும் கபிலர் இல்லையென்றால்? என்று கேள்வி கேட்க “போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார்கள் பாரியின் மகளை மூவேந்தர்களில் ஒருவருக்குத் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் போரில்மாய்வதே பாரியின் வழியென்று நகைத்தனர். கபிலரோ சற்றும் தளராது அவர்களின் ஆணவத்தையே அடியோடு சாய்ப்பது போல “உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும் அவ்வளவு தானே? “ அனைவரும் யாழினை ஏந்தி பறம்பு மலையேறுங்கள் பாட்டிசைத்து பறம்பு மலையேறியவர்கள் கேட்டு “இல்லை” என பாரி கூறியதே இல்லை “மொத்த பறம்பினையே வழங்கி விடுவான்” என சொற்களை வீசி எறிந்தார்.
கோபம் கொண்ட குலசேகர பாண்டியன் கபிலரிடம்” உமது சொற்கள் பற்றியெரியும் பறம்பினைப் பாட அதிக நாள் இல்லை கபிலரே” என ஆவேசம் கொண்டான்.“ நெருப்பில் எறிந்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும்தான். பனையைக் குலசின்னமாகக் கொணடவன் வேள்பாரி நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு என மறுமொழி கூறி கபிலர் அவையைவிட்டு நகர்வதாக கதையை இயற்றியுள்ளார் எழுத்தாளர். நெருப்பில் எறிக்கப்படினும் மீண்டும் முளைக்கும் பனையின் தன்மையை பாரியின் வீரத்துடன் ஒப்புமைப்படுத்தி கூறல் நாவலின் மையமாக பனைமரம் இருப்பதைக் காண முடிகிறது. நாவலின் தொடக்கத்தில் நீலன் பாரி “பனியன் மகன்” என்னும் பெயர் கொண்டதையும் மேலும் பெயராலேயே குல பாடல் உள்ளதை கபிலரிடம் கூறியது போல நாவலின் இறுதியில்
“பனையன் மகனே!பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
திணையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே!- நின்”
என்ற நீண்ட பனையன் மகன் பாடலுடன் நாவல் முடிவு பெறுகிறது. இதன் மூலம் நாவலின் மையமாக தவிர்க்க முடியாத ஒரு குறியீடாக பனைமரம் இருப்பதை நாவல் எடுத்துக்காட்டுகிறது.
சங்க இலக்கியத்தில் பனைமரம்
பனைமரம் சங்ககாலம் தொட்டு இன்று வரையனும் தனக்கென ஒரு பெரும் சிறப்பினை பெற்ற மரமாக விளங்குகிறது மேலும் எழுத்து மரபுக்கு அடிப்படையா அமைந்தது. பனை ஓலையை பதப்படுத்தி பாடல்களை எழுதினர் இன்று பெரிதும் அறியப்படும் தமிழர்களின் 2000 ஆண்டுகால வரலாற்றுக்கு சான்றாக விளங்கும் சங்க இலக்கிய பாடல்களுக்கு அடித்தளமாக விளங்கிய பனை ஓலைகள் ஆகும். மூவேந்தர்கள் தங்களை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ள தனித்தனி மாலையை பயன்படுத்தினர் இவற்றின் சேர மன்னன் தனக்குரிய அடையாளமாக பனம்பூ மாலையை சூடி இருந்த செய்தியை தமிழனின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வருடம்
மாபெருந்தானை மலைந்த பூவும்”(தொல். பொ. நூ.)
சோழ மன்னனின் அடையாளமாக ஆத்தியும் பாண்டியனுடைய அடையாளமாக வேம்புவும் குறிப்பிடப்படுகின்றன தொல்காப்பியர் பனம்பூவை ஏந்து புகழ் பூந்தை என்று குறிப்பிடுகிறார் அதன் பொருள் உயர்ந்த புகழை உடைய பனம்பூ என்பதாகும் சங்ககாலத்தில் பனைமரம் தமிழர்களிடத்தில் எத்தனை உயர்ந்த சிறப்பினை பெற்றிருந்தன என்பதனை நூற்பா வளி உணர முடிகிறது. மேலும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் பாடல்களில் பனைபற்றிய செய்திகளை காண முடிகிறது.
“தோடுஆர் போந்தை தும்பையோடு முடிந்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தக” (சிலம்பு. 27)
இப்பாடல்வழி நீர்ப்படைக் காதையில் செங்குட்டுவன் மாடலானிடம் பாண்டிய மன்னன் இறந்த பின்னர் பாண்டியநாடு என்ன செய்தது என வினவுவதாக அமைகின்றது. இக்காட்சியில் செங்குட்டுவன் தனது தோளில் பனம்பூ மாலையுடன் தும்பை பூமாலையும் அணிந்து கொண்டிருப்பதாக இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியுள்ளார் இப்பாடல்வழி சேர மன்னர்கள் தங்கள் அடையாளமாக பனம்பூவை பயன்படுத்தியவை உணர முடிகிறது. பாரி பிறருக்கு உதவி புரிந்தமைக்கு நிகராக பனைமரம் கூறப்பட்டுள்ளது. அதனைப் போல பனை மரத்தின் கம்பீரமான தோற்றத்தை பிறரின் சிறப்பு மற்றும் வீரத்திற்கு உவமையாக கூறப்படுபவையும் உள்ளன. அற நூலான திருக்குறளில் பனைமரம் ஒரு அளவீடாக கூறப்பட்டுள்ளமையை காண முடிகிறது.
“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரி வார்”(குறள் 104)
இக்குறளில் திணை (சிறிய) அளவு பிறருக்கு உதவி செயினும் அவ்வுதவியால் பயனடைந்தவர் அவற்றைப் பனையளவு எண்ணுவர் என பனையின் தோற்றம் கொண்டு அவற்றை ஒரு அளவீடாக கூறப்படுதலை காணலாம்.
வேள்பாரியில் முல்லை
வேள்பாரி நாவலில் முல்லை மலர் பற்றிய செய்திகள் பெருமளவில் இடம்பெறவில்லை என்றாலும் மூவேந்தர்களுக்கு இணையான வீரம் பொருந்திய தலைவனான பிறருக்கு கொடுத்து வள்ளல் என்னும் சிறப்பினை பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவன் பாரி அவனின் வரலாற்றில் பெரும் சிறப்பினை பெற்று முன்னிலையில் நிற்பது முல்லை மலராகும்.முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. பாரியின் வரலாற்றில் எவராலும் அழிக்க முடியாத ஒரு சொற்றொடர் ஆகும். இப்பெரும் சிறப்பு பெற்ற வரலாற்று நிகழ்வினை எழுத்தாளர் தனது நாவலில் வெளிப்படுத்தும் போக்கினை காணலாம். பாரி தனது மனைவி ஆதினியுடன் வனத்திற்குச் சென்று ஒரு இடத்தில் தேரினை நிறுத்தி செல்கின்றான். மீண்டும் தேரினை அடைந்து மாலை நேர பயணத்திற்கு தேரினை தயார் செய்ய தொடங்குகின்றான் ஆதினி இரு சக்கரங்களில் முல்லைக்கொடிகள் பற்றி கிடப்பதை காண்கின்றாள். பாரியை அழைத்த ஆதினி.” தேரை எடுத்தால் இரு கொடிகளும் அருந்துவிட வாய்ப்புள்ளது இந்த முல்லைக்கொடியை பக்குவமாகப் பின்னோக்கி சுழற்றி வெளியில் எடுத்து விடலாமா? “என கேட்டாள்.பாரி எதுவும் பேசாமல் முல்லை கொடியை பார்த்துக் கொண்டிருந்தான் காற்றில் தேரசைவு கொடுக்க ஆதினி தேரினை அசையாமல் இருக்க கைகளால் பிடித்துக் கொண்டாள் பாரி முல்லைக்கொடியை பிடித்திருந்தான் சற்று நேரத்தில் மீண்டும் காற்று வீறுக்கொண்டே வீசியது ஆதினி பாரியின் கையைப் பற்றி தோல் சாய்ந்தாள். “குகை நமக்கானதாக மாறியது போல தேர் முல்லைக் கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி. முல்லைக் கொடிக்காக தனது தேரினையே கொடுத்த வள்ளல் சிறப்பினை எழுத்தாளர் தன் நாவலில் இவ்வாறாக காட்சிப்படுத்தியுள்ளார். பாரியின் கைப்பற்றி நடந்த ஆதனி படர்வது குறுமுல்லை ஒரு மலர் மலர்ந்தால் போதும் காடே மனக்கும் என சொல்லிவிட்டு பாரியை பார்த்தாள்.முல்லைமலரின் உருவ அமைப்பு மற்றும் அவை தரும் மனம் பற்றிய செய்திகள் நம்மால் நற்றினையில் காண முடிகிறது.
“சிறுவீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலர்ந்தனர்
விசும்பு கடப்பன்ன பொலம் படைக்க கவி மா
படு மழைபொழிந்த தண் நறும் புறவில்
நடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப” (நற்றிணை 361)
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராது தாமதமாக வருகின்றான் தலைவன் தலைவியின் கோபத்தை எண்ணி வருத்தம் அடைகின்றான் இந்நிலையில் தோழி வாயிலர்களுடன் உலர்ந்து பேசுகின்றாள்.குதிரைகள் பூட்டப்பட்ட பெரும் தேரில் வந்த தலைவன் தலையில் முல்லை மலரை சூடி உள்ளான் அவனுடன் வந்த இளைஞர்களும் முல்லை மலரை சூடி உள்ளனர். மலர்கள் சிறியவையே எனினும் அவை பெரும் மனம் வீசும் மலர்களாக இருப்பதாக தோழி கூறுவனவாக அமைந்துள்ளன. இப்பாடலில் முல்லைமலரின் வடிவ அளவு மற்றும் அவற்றின் மனம் வீசும் தன்மையை நம்மால் அறிய முடிகிறது.
சங்க இலக்கியங்களில் முல்லை
எழுத்தாளர் நாவலில் முல்லை மலர் பற்றிய செய்திகளை சில இடங்களில் இயற்கை அழகை விவரிக்கவும் காதலர்களின் காதல் வாழ்வில் முல்லை மலரின் மனம் படர செய்கின்றார் சங்க கால மக்களின் காதல் வாழ்வில் முல்லைமலர் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன சங்க கால பாடல்களில் முல்லை பூவானது காதல், பிரிவு, காத்திருப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக காதலன் பிரிந்த தலைவி அவன் வரும் வழியை முல்லை மலர்களைக் கொண்டு கற்பனை செய்வாள் மேலும் தலைவனின் வருகையை தலைவிக்கு உணர்த்தும் ஒரு பொருளாகவும் முல்லை மலரும் இருந்துள்ளன. மேலும் முல்லைப்பூ தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் பொறுமை கற்பு மற்றும் அன்பின் சின்னமாக சிறப்பிக்கப்பட்டுள்ளது தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் துன்பத்திற்கு காரணமாகவும் முல்லை பூ உள்ளன. தன் பகை மன்னனை வீழ்த்த போர் புரியும் மன்னன் தலைவியை பிரிந்து செல்வான் கார்காலத்தில் மீண்டும் வருவதாக பிரிந்த தலைவன் வருகையை எண்ணி வருந்தி பொறுமையுடன் காத்திருக்கும் தன்மையையும் கார் பிறப்பையும் முல்லை மலர் கூறுகின்றது.
முல்லை இல்ல மோடு மலர கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்நே காலை; காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை
வென்றி வேட்கையோடு தம்மும் உள்ளார் ( அகநானூறு 364)
தலைவன் பிரிவால் வருந்தம் கொண்ட தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள் முல்லை முதலிய பூக்கள் காட்டில் மலர தொடங்கி விட்டன பெரும் கார்காலம் பூமியை நோக்கி தனது கால்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டன காட்டின் விலங்குகள் நீர் பருக வேண்டிய சுனை நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது தலைவன் என்னை பற்றி வருத்தம் கொள்ளாதே பகைவரை வெற்றி கொள்ள வேண்டிய பாசறையில் இருக்கின்றான் தலைவன் என் அருகில் இல்லாத பொழுது எனைக்கொள்வதற்கென்றே பெரும் முனைப்போடு வருகின்றன. கார்காலத்தை நினைவுபெற செய்யும் இம்முல்லை மலர்களும் பூக்கின்றன நான் என்ன செய்வேன் என தலைவி வருத்தமாக கூறுகின்றாள்.கார்காலப் பிறந்தும் தலைவன் குறித்த நேரத்தில் வரவில்லை என்பதை கூறும் முல்லை மலரின் பிறப்பால் தலைவி அடையும் துன்பத்தை தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் நிலையையும் நாம் இப்பாடலில் அறிய முடிகிறது. மேலும் தலைவன் தலைவி பிரிவில் இருவரின் துன்ப நிலை அவர்களை கண்டு முல்லை பூக்கள் நகைப்பதாகவும் மேலும் முல்லை பூக்களை சிரிக்கும் பற்களுக்கு உவமையாக புலவர்கள் சங்ககால பாடல்களில் பாடி இருப்பதை காணமுடிகிறது.
கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
புலர்ஆ புகுதரூஉம் புல்லென மாலை
முல்லை! வாழியோ, முல்லை!- நீநின்
சிறுவெண்முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தருமோ,மாற்று- இது தமியோர் மாட்டே? (குறுந்தொகை 162)
நீரோட்டமான நிலை கொண்ட கார்காலத்தில் பசுக்கள் இல்லம் நோக்கி திரும்ப தொடங்கிவிட்டன. என் இனிய மாலைக்காலத்தில் முல்லைப் பூவே நீ மொட்டு மலர்ந்து இருக்கின்ற இப்பொழுது தனியாக இருக்கும் என்னை கண்டு சிரிக்கின்றாயா?இது தகுமா?என முல்லைமலர் தலைவனை சிரிப்பதாகவும் தலைவன் முல்லைமலிரிடம் தன்னை கேலி செய்வது சரியா என கேள்வி கேட்பதாகவும் புலவர் கூறுவதை பாடலில் கானலாம். மேலும் சங்க கால பாடல்கள் பல இடங்களில் தலைவன் தலைவி இருவரும் முல்லை மலர்களுடன் பேசுவது போன்று மேலும் இருவரின் தன்மையை எண்ணி முல்லைமலர் சிரிப்பது போன்று பல இடங்களில் நாம் பாடல்களை காண இயலும் மனிதனின் அகவாழ்வில் பெரும் பங்கினை முல்லை மலர்கள் கொண்டுள்ளன.
வழிபாட்டில் முல்லை
சங்ககால பாடல்களில் காதல் வாழ்வில் பெரிதும் முல்லை மலரை கையாளும் புலவர்கள் வழிபாட்டிலும் முல்லை மலரை பற்றிய பாடல்கள் இயற்றினர் வழிப்பாட்டிற்கு மலர்கள் என்றும் பெரும் பங்கினை பெற்றுள்ளன அவற்றிலும் சங்க கால பாடல்களின் முல்லை மலர்கள் காதல் வாழ்விற்கு இணையாக வழிபாட்டிலும் ஆளுமை செலுத்தியுள்ளன. மாலை நேர வருகையை உணரும் பெண்கள் தாங்கள் இல்லறம் செழிக்க வேண்டி வீட்டில் விளக்கேற்றி பூக்கள் கொண்டு வழிபடுவர் அவற்றில் முல்லைப் பூக்கள் பெரிதும் பங்கு வகித்தமையை நம்மால் சங்க பாடல்களில் காண முடிகிறது.
“மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின், பைங்கால் பித்தகத்து அவ் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து இரும்பு செய் விளக்கின் ஈரந் தரிக்கொளிஇ நெல்லும் மலரும் தூஉம் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர”(நெடுநல் 36-44)
இப்பாடலின் வழி பெண்கள் செம்முல்லை பூக்களை தட்டில் பரப்பி வைத்து அவை மலர்ந்து மனம் வீச செய்ய மாலை நேரம் வருகை அறிந்து கொள்கின்றனர் என்னும் செய்தியை அறிய முடிகிறது. மாலை நேரம் வருகையை உணரும் பெண்கள் வீட்டில் இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் நெய் துவைத்த திரியணை இட்டு விளக்கேற்றி மேலும் மலரும் நெல்லும்தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி இறைவனை வழிபடுவதை நாம் இப்பாடலில் காணலாம் பெண்கள் வழிபாடு செய்வதிலும் முல்லை மலர்களை சூடி தெய்வத்திற்கு தூவி வழிபாடு செய்த செய்தியையும் நாம் உணரலாம்.
முடிவுரை
பழந்தமிழரின் வாழ்வியலில் ஒன்றான தமிழனின் அடையாளமான முல்லை மற்றும் பனையை எழுத்தாளர் வேள்பாரி நாவலில் கூறியுள்ளார் மனிதனின் அகவாழ்வை குறிக்க முல்லை கொடியையும் பாரின் வீரத்தை பிரதிபலிப்பதாக பனையையும் நாவலில் கூறியுள்ளார். பாரி அழிந்த வரலாற்றின் அடையாளமாக அல்லாமல் எவராலும் என்றும் அழிக்க முடியாத வீரத்தின் அடையாளம் என்பதை உணர்த்தவே நெருப்பில் எறிந்தாலும் மீண்டும் உழைக்கும் பனையை பாரியின் வாழ்க்கை நாவலில் மையை குறியீடாக நூலாசிரியர் கூறியுள்ளார். ஆய்வுக்கு
துணை நின்ற நூல்கள்
1.வீரயுக நாயகன் வேள்பாரி சு. வெங்கடேசன் விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 600 002
2.நற்றிணை மூலமும் விளக்க உரையும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரை பூம்புகார் பதிப்பகம் 127, & பிரகாசம் சாலை சென்னை 600108
3. திருக்குறள் பரிமேலழகர் உரை சாரதா பதிப்பகம் எண் 3 ஸ்ரீ கிருஷ்ணபுரம் தெரு சென்னை 600014
4.கலித்தொகை மூலமும் உரையும் முனைவர் விசுவநாதன் உரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
5.சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும் தொகுதி 11 பேராசிரியர் புலவர் அ மாணிக்கம் எம்.ஏ உரை வர்த்தகமானன் பதிப்பக வெளியீடு சாரதா பிரிண்டர்ஸ் சென்னை 600005
6. சிலப்பதிகாரம் தெளிவுரை ஞா மா மாணிக்கவாசகம் உரை உமா பதிப்பகம் 18 (பழைய எண் 171) பவளக்கார தெரு மண்ணடி, சென்னை-600001
ஆய்வாளர்
ப. பரமேஸ்வரி
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டுத்தமிழ்
ஆய்வு நெறியாளர்
த.காளீஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த் துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளீர் கல்லூரி.
திருவாரூர்
Nugathadi Novel Mun Vaikkum Penniya Aththumeeralgal|Dr.S.Prabakaran
Abstract
Tribal communities are those who live as small, distinct ethnic groups within a specific geographical region, each possessing their own separate language. They traditionally existed without rigid structures of caste or organized religion, rejecting idol worship and instead venerating nature. They engaged in occupations that did not exploit or destroy the environment and led lives in harmony with it. With no hierarchical distinctions between men and women and no strong sense of private property, they carried out all essential tasks themselves—such as washing clothes, cutting hair, and burying the dead. Hunting was done only to meet immediate needs, reflecting their simple and self-sustaining way of life. According to the 2011 Census, there are 36 recognized tribal communities living in Tamil Nadu, constituting approximately 3.5% of the state’s total population. In ancient Tamil ecological classification, land was divided into five regions: Kurinji (mountainous), Mullai (forest), Marutham (agricultural plains), Neithal (coastal), and Paalai (arid). The Kurinji region was inhabited by the Kuravar tribal community. They sustained themselves through occupations such as hunting and honey collection. Since their habitats—mountains and forests—were rich in natural resources, European colonial rulers who governed India, along with Indian capitalist elites, displaced these communities and seized their lands. Forced out of their traditional habitats, the Kuravar people migrated to the plains and took up various occupations for survival. Dominant caste groups and ruling classes compelled many of them into sanitation work. In these new social settings, they—especially the women—faced numerous social, economic, and gender-based challenges. These realities have been reflected in several works of Tamil literature. Notably, the novels Salavaan and Nugathadi by Pandiyakannan address such issues. This article focuses specifically on examining the feminist concerns articulated in the novel Nugathadi.
“நுகத்தடி நாவல் முன்வைக்கும் பெண்ணிய அத்துமீறல்கள்“
முன்னுரை
சிறு சிறு இனங்களாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் தமக்கெனத் தனித்தனி மொழியைக் கொண்டவர்களாக வாழ்பவர்கள் பழங்குடிகள் என்று அழைக்கப்பட்டனர். சாதி, சமயம் இல்லாத உருவ வழிபாட்டை ஏற்காமல் ,இயற்கையை வணங்குகின்ற இயற்கையைச் சிதைக்காத தொழில்களையும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் உடையவர்களாக ஆண், பெண் ஏற்றத்தாழ்வும் சொத்து உணர்வும் அற்றவர்களாக துணிதுவைத்தல், முடிதிருத்துதல், இறந்தவர்களைப் புதைத்தல் முதலிய அனைத்தையும் தாங்களே செய்பவர்களாக தேவைக்கு மட்டும் வேட்டையாடுகின்ற எளிய வாழ்க்கை முறையை கொண்டவர்கள் பழங்குடிகள். தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 36 வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் மொத்தமக்கள் தொகையில் 3.5% ஆகும்.1 தமிழர்கள் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரித்து வாழ்ந்தனர். இதில் குறிஞ்சி நிலத்தை ஆண்டவர்கள் குறவர் இன பழங்குடிகளாவர். இவர்கள் வேட்டையாடுதல், தேனெடுத்தல், போன்ற தொழில்களைச் செய்து வாழ்ந்தனர். இவர்களின் வாழ்விடமான மலை, காடு போன்ற பகுதிகளில் ஏராளமான இயற்கை வளங்கள் நிறைந்திருந்த காரணத்தினால் இந்தியாவை ஆண்ட வெள்ளை இனமக்களும் இந்திய பெருமுதலாளிகளும் இம்மக்களை விரட்டியடித்து அவர்களின் வாழ்விடங்களைக் கைப்பற்றினர். விரட்டியடிக்கப்பட்ட இக்குறவர் இனமக்கள் சமவெளிப் பகுதிகளில் வந்து குடியேறினர். வாழ்வதற்காகப் பல்வேறு தொழில்களைச் செய்தனர். ஆதிக்க சாதியினராலும் ஆளும் வர்க்கத்தினராலும் இம்மக்கள் துப்புரவு பணியாளர்களாக கட்டாயப்படுத்தப் பட்டனர். இங்கும் இம்மக்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தனர் இதனை மையப்படுத்தி தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக பாண்டியக்கண்ணனின் சலவான், நுகத்தடி போன்ற நாவல்கள் அமைகின்றன. இக்கட்டுரையானது நுகத்தடி நாவல் முன்வைக்கும் பெண்ணிய சிக்கல்கள் குறித்து ஆராய்கின்றது.
நாவல் – அறிமுகம்
இந்தியாவில் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடிவரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைச் சித்தரிக்கிறது. பாண்டியக் கண்ணனின் நுகத்தடி நாவல். இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. புதைக்கப்பட்ட மனித வதைகளையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாவலைப் பார்க்கலாம். காலமெல்லாம் நம் கண்களுக்கு கணமுற்று எளிய மக்களைத் துரத்தி துரத்தி துண்டாடப்படுவதும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலோடு பெண் உறுப்புகளைச் சிதைப்பதும் ஆண்களை அடித்துக்கொள்வதும் அன்றாட வாழ்க்கையாகிப் போனதை இந்நாவல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. துப்புறவுத் தொழிலாளர்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் புறக்கணிக்கப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை இந்நாவல் பேசுகிறது.
காலனிய காலத்தில் புழக்கத்தில் இருந்த கொடுஞ்சட்டமான குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) சுதந்திர இந்தியாவில் பிற சாதியினர்களுக் கெல்லாம் (1949) நீக்கப்பட்ட பின்னறும் குறிஞ்சி நில மக்களான குறவர் இன மக்கள் மட்டும் இன்றும் இக்கொடிய சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார்கள். இவர்களை நிழல்களைப் போலத் தொடர்ந்து காவல்துறை வேட்டையாடி வருகிறது. சுகாதாரத் துறையும் துப்புரவு தொழிலாளர்களை அடிமைகளைப் போலவே பாவிக்கிறது. இந்நாவலில் துப்புரவு தொழிலுக்குத் தள்ளப்படும் குமாரின் வாழ்க்கை நம்மைப் பதர வைக்கிறது. அது போல உயிரை பணயம் வைத்து செப்டிக்டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும் நான்கு தொழிலாளியின் அவலம். பல்வேறு கனவுகளுடன் துப்புரவு பணிக்கு வேலைக்கு வரும் சந்திரா நாவல் முழுக்க காவல் துறையால் துரத்தி துரத்தி வேட்டையாடப்படுவது போன்ற பல இன்னல்களை இந்நாவல் பேசுகிறது.
துப்புரவு பணியும் பாலியல் சிக்கலும்
சந்திரா என்ற பெண் தாய் தந்தையை இழந்தவள். இவளை நன்றாகப் படிக்கவைத்து நல்லவேளையில் அமர்த்தவேண்டும் என்று இவள் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். இவளின் தந்தையும் தாயும் ஊருக்கு வெளியே குப்பையைக் கொட்டுவதற்கு குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்லும் போது லாரியில் அடிபட்டு இறந்து போகிறார்கள். பெற்றோர்களை இழந்த சந்திரா தான் படிக்கா விட்டாலும் தன் தம்பி, தங்கைகளையாவது படிக்கவைத்து தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்று நினைத்துத் துப்புரவு தொழிலாளியாக வேலைக்குச் சேருகிறாள். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே அவள் துயரம் தொடங்குகிறது. வருகைப் பதிவு எடுப்பத்தற்காக சந்திரா வரிசையில் நிற்கிறாள் வருகைப்பதிவு தொடங்குகிறது மேஸ்திரி பெயர்களை வாசிக்கிறார் அவைப் பின்வருமாறு;
“முத்தம்மா”
இருக்கேன் எசமா
“மாரியப்பா”
வந்துட்டன் சாமி
“முனியா”
இருக்கன் எசமா………..
என்று ஒவ்வொருவரும் வருகைப் பதிவை உறுதிசெய்து கொண்டனர். துப்புரவு பணியாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்திடும் தவறுகளுக்கு அதிகாரிகள் ஆண்களுக்கென்றால் வேலைபறிப்பும் பெண்களுக்கென்றால் கற்புபறிப்பும் தரும் தண்டனையாகும். புதிதாக வேலைக்கு வந்த சந்திரா துப்புரவுப் பணியாளருக்கானச் சீருடையைச் சரியாக அணிந்திருக்கவில்லை. சேலையை பின் கொசுவம் வைத்து கட்டியிருக்காமல் முன் கொசுவம் வைத்தும் மொட்டி வரை அடி முந்திவிட்டுக் கட்டாமல் பாதம் தழுவியும் கட்டியிருந்தாள். அள்ளி முடிந்து கொள்ளும் கூந்தலைப் பின்னி முடித்திருந்தாள். இது போதாதா இவளை சர்வதேசக் குற்றவாளியாக்க மேலும் இளம்வயதுடைய பெண்ணுக்குத் தண்டணைக் கொடுப்பதென்றால் கரும்பு தின்னும் கூலி போன்றதாகும்.
ஏத்தா ஓம் பேரு என்ன? எனக்கேட்டார் மேஸ்திரி எம்…….பேரு ……. சந்திரா…..ங்க …………..சார் இந்த வார்த்தை மேஸ்திரிக்குப் புதிதாகத் தென்பட்டதால் முதல் முறையாக துப்புரவு பணியாளர்களைப் பார்த்துப் பதறினார். ” சாரா, ஏத்தம் தாண்டி ஒனக்கு என்ன வேலைக்கு வந்துருக்கியா இல்ல ஆட வந்துரிக்கியா?” என்………ங்க………ய்யா ம் நொன்னங்கய்யா போ அங்கபோயி நில்லு என முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு சொன்னார். மற்ற பணியாளர்கள் அனைவரும் தன் பணியைச் செய்வதற்காக அவர்களின் பகுதிக்குச் சென்றவுடன் சந்திராவை அழைத்து ஆய்வாளர் அறையை சுத்தம் செய்ய சொல்கிறார் மேஸ்திரி. இவளும் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது ஆய்வாளர் வெளியில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அலுவலக கதவை மெதுவாக தாழிட்டுவிட்டு அவள் பின்னால் வந்து நின்று பின்புலத்தை நீவத் தொடங்கினான். ஓடிக்கொண்டிருக்கும் மாடு மிரண்டது போல் அவள் துள்ளி முன் மேசைகட்டையில் முட்டிமோதினாள் மேசையில் மோதியதால் மண்டை உடைந்து ரத்தம் சொட்டசொட்ட தப்பித்து ஓடினாள். உடனே ஆய்வாளர் சந்திரா மோதிரத்தை திருடிவிட்டு ஓடிவிட்டதாக பொய்வழக்குப் போடுகின்றனர். காவல்துறையின்பொய்வழக்கும் பாலியல் அத்துமீறளும் நாவல் முழுவதும் காவல்துறையின் வன்முறைகளால் நிரம்பியுள்ளது. காவல்துறைக்கும் குற்றவாளிக்கும் இடையே ஒரு வலுவான கூட்டு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டு அப்பாவி மக்களைக் கூண்டில் ஏற்றுகிறார்கள். அபலைப்பெண் சந்திராவை நரவேட்டை ஆடுகிறார்கள். இவள் மீது பொய்வழக்குப் போடப்பட்டதால் இவளைப் பிடிக்க வந்த ஏட்டையா,
” அடி களவாணி கண்டாரோழி என்று அவள் பிறப்புறுப்பைக் குறிவைத்து சரியாக எத்தினார்.2
போலீசின் கொடூரத் தாக்குதலில் அவள் பழைய சேலை தாறுமாறாய் கிழிந்து உள்ளாடைகள் சல்லடைகளாக மாறியது அவள் அடியைத் தாங்குவதா? முலையை மறைப்பதா? எனப் போராடினாள். இறுதியாக அரைபிணமாக காவல் நிலையத்தில் கிடந்தாள்.”3 பின்பு மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறாள். மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலால் பாதிக்கப்படுகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள். மீண்டும் சிக்குகிறாள் சீரழிக்கிறார்கள். இம்முறை சந்திராவோடு சேர்த்து அம்ஸா, பிரபா என்ற பெண்கள் மீதும் பொய்வழக்குப் புனைந்து தண்டனை என்ற பெயரில் பாவாடை, ஜாக்கெட்டோடு நிற்கவைத்தனர். பின்பு ஜாக்கெட்டை கிழித்து அரை நிர்வாணமாக்கினர். பாவாடை நாடாவை குண்டாந்தடியை வைத்து அவிழ்த்தனர். அம்ஸா, கூனிக்குறுகி கீழே உக்கார்ந்தாள். இதே போன்று மற்ற இருவரையும் நிர்வாணமாக்கினர். பின்பு குண்டாந்தடியில் நன்கு விளக்கெண்ணைத் தடவி உயிர்வாசலில் மெல்லமெல்ல செலுத்தினர். அதன் பின்பு மார்பு, பிட்டம் போன்ற பகுதிகளில் மிளாகாய் பொடியை அப்பினர். அவர்கள் தீ குளத்தில் தத்தளித்தனர்.4
உயிர் வாசலில் ரத்தம் பெருக்கெடுத்துக் கொட்டியது.அரசு மருத்துவமணையில் சேர்த்தாள் மாட்டிக்கொள்வோம் என்ற காரணத்திற்காக இம்முறை தனியார் மருத்துவணையில் சேர்த்து கிழிந்த உயிர் நாடியைத் தைத்தனர். இங்கு சந்திராவின் கிட்னியை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். கிட்னியை இழந்தது கூட தெரியாமல் அங்கிருந்து ஓடுகிறாள். ஓடுகின்ற வழியில் இராமன் என்ற குறவனைச் சந்திக்கிறாள். இவளை போலவே இவர் மீதும் இவர் மனைவி மீதும் பொய்வழக்குப் போட்டு இவரின் கண் முன்பாகவே நான்கு காவலர்கள் இவர் மனைவியை கற்பழித்தனர். இதனால் கோபமுற்ற இராமன் ஒரு காவலரைகொன்று விட்டு தப்பித்து ஓடிவருகிறான் மீண்டும் மாட்டிக் கொள்கிறான் இவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்கும் போடப்படுகிறது. “ நான் திருடிட்டு வந்தத அவகண்டிச்சா நான் கேக்கல. அவளே என்னைய போலீஸ்ல கம்பிளைண்டு குடுத்து புடிச்சி குடுத்தா. அந்த ஆத்திரத்தில போலீஸ் துப்பாக்கியால் குத்தினேன். அத தடுக்க வந்தபோலீசையும் கொலசெஞ்சிட்டு சென்னை போறரயில்ல பாடிய மறைச்சி ஏறியிருக்கும் போது கையும் களவுமாக போலீசார் என்னைய கைது செஞ்சுட்டாங்க”5 என்று பொய் வழக்கு புனைந்ததாக இராமன் கூறுகின்றார். தப்பித்து வந்த சந்திரா எங்குபோவது என்று தெரியாமல் திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல முருகனை வழி பட மயிலம் ஓடுகிறாள். அங்கும் அவள் ஏமாற்றப்படுகிறாள். கொடிய கடத்தல் பேர் வழியிடம் சிக்கி லாட்ஜ் ஓனரிடம் பாலியல் தொழிலாளியாக விற்கப்படுகிறாள். இவளோடு சேர்த்து மேலும் சில அப்பாவிப் பெண்களையும் பாலியல் தொழிலாளிகள் என குற்றம் சுமத்தி காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கிறார்கள். இதுபோல் பிறப் பழங்குடி இனப் பெண்களும் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீரப்பனைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினர் அங்குள்ள பழங்குடிப் பெண்கள் மீதும் பாலியல் அத்து மீறலை நிகழ்த்தியுள்ளது. அவைப் பின்வருமாறு; “ ஈரம்மாளின் சேலையை உருவி எறிந்து மேலாடையைக் கிழித்து அவளை அம்மணமாக்கி விட்டிருந்தார்கள். அவள் புடைத்த வயிறு காட்டி கைகால்களை ஆட்டித் தப்பித்துக் கொள்ளப்பார்த்தாள் குண்டு போலீஸ்காரனும் நடு வயதுக்காரனும் அவலை கீழே படுக்கவைத்து தங்களின் கால்களை அவள் கை மீது ஏறி நின்று அழுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் இளையவன் அவளின் மீது பாய்ந்தான். அவளின் சப்தம் அதிகரிக்கவே அவள் கை மீது நின்றிருந்த குண்டன் அவளது முகத்தில் காலால் அழுத்தினான். அவள் மூச்சுத்திணறி அமைதியானாள். பின்பு குண்டன் பாய்ந்தான் அவளது முகம், உதடு, மார்புகள் கடிபடுவதை உணர்ந்தாள் என்று ச. பாலமுருகன் தனது புதினத்தில் குறிப்பிடுகிறார்.6 எனவே காவல்துறையால் குறவர் பழங்குடியினப் பெண்கள் மட்டும் இன்றி பிறப் பழங்குடியினப் பெண்களும் பாதிக்க பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
ஆசிரியரும் தீண்டாமை மனநிலையும்
சந்திரா படிக்க வசதியற்ற குறவர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவள். இவள் படிக்கும் பள்ளியில் அரசு இலவசமாக வழங்கும் நோட்டு வழங்கப்படுகிறது. இதற்கு அவள் அட்டைப் போடாமல் பள்ளிக்குச் செல்கிறாள். இதனால் கோபமுற்ற ஆசிரியர் “பன்னிமேக்க போறவயெல்லாம் படிக்க வந்துட்டா” என்று சாதிய ஆணவத்தைக் காட்டுகிறார். மேலும் நீ மட்டும் ஜோக்கா சட்டை போட்டுக்குறே என சொல்லிக் கொண்டே அவள் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். அவள் கத்தினாள் துடிதுடித்தாள் அங்கிருந்த அனைத்து ஆண் பெண் மாணவ மாணவிகள் சகிக்க மாட்டாமல் கண்களைப் பொத்திக் கொள்கின்றனர். ஆனால் வாத்தியார் தண்டணைக் கொடுக்கும் சாக்கில் அவளின் இளம் மார்பை ரசித்தார். ஆடை முழுவதையும் கழட்டி விட்டார். அவள் அப்படியே கீழே விழுந்துக் கதறினாள். அவள் கதறல் சத்தம் கல்விச் சாலையை அரற்றியது. ஆனால் யாரும் செவி மடுக்க வில்லை பாலியல் குற்றம் செய்த ஆசிரியரைத் தண்டிப்பதற்கு மாற்றாக நிர்வாகம் அவருக்குத் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கிறது.7
காவல்துறையும் சாதிய மனநிலையும்
குறவர் இனப் பழங்குடியான குமாரும் விருதுநகர் நாடார் சமூகத்தைச் சார்ந்த சுதாவும் காதலித்து வந்தனர். இது சுதாவின் வீட்டிற்குத் தெரிய சுதாவிற்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர். இதனால் சுதா வீட்டை விட்டு வெளியேறி குமாரோடு வந்து விடுகிறாள். உடனே குமாரின் பெற்றோர்கள் குல வழக்கபடி பஞ்சாயத்தில் இருவரையும் விசாரித்து திருமணம் செய்து வைக்கின்றனர். பின்பு காவல்நிலையம் சென்று திருமணத்தைப் பற்றி கூறுகின்றனர். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் சுதாவிடம் பஞ்சாயத்துப் பேசுகின்றனர்.
அவனுக்கும் ஒனக்கும் ஒத்துவராது அந்த கூட்டதுக்கும் ஒனக்கும் கொஞ்சம் கூட ஒட்டாது. அத்துஅத்து ஆயிரம் தாலி கட்டுவாங்க, எடுத்துக் குடிக்கிற கூட்டம் பன்னிமேய்க்கிற பயக, கக்கூஸ் அள்ளறதுதான் அவிய்ங்க வாழ்க்கை அப்புறம் நீயும் அந்த வேலைக்குதான் போகனும் செய்யலேன்னா ரோட்டுல போட்டு அடிப்பான். அவிங்கள கண்டிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாலும் குறவன் பஞ்சாயத்து தீராது. நீ வேற என் ஜாதிக்காரியா போயிட்ட விடுவேனா இவங்க மாறி ஆளுங்க நம்மள மாதிரி ஒசந்த ஜாதிக்காரங்க புள்ளைங்கள குறிவச்சி காதலிக்கிறது மாதிரி அந்த புள்ளைக மனச கெடுத்து கூட்டிக்கிட்டுவந்து பெண்வீட்டு ஆளுகிட்ட பணம் கேட்டு சீட்டிங் போடுவாங்க குடுக்கலைனா அந்த பெண்ண யாருட்டையாவது வித்துபுடுவாங்க அப்புறம் ஒன்குடும்பம் தற்கொலை செஞ்சு சாகும் இது தேவையா சரி எல்லாப் புள்ளைகளும் செய்யிற தப்புத்தான் ஒன் வீட்டாளுங்களே வரச்சொல்லி ஒன்ன அனுப்பி வைக்கிறேன். நடந்தத மறந்துட்டு தாய் தகப்பனோட போகப்பாரு இதை நான் போலீஸ் காரனா இல்லாம ஒரு தகப்பனா இருந்து சொல்லுறேன். நமக்கும் அவிங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்று ஜாதியின் வாஞ்சையை வாரி அவள் மீது தெளித்தார். குமாரையும் மைனரு பொண்ண கடத்திட்டு வந்து பணம், நகை எல்லாத்தையும் பறித்ததா வழக்குப் போட்டு உள்ள தூக்கிப் போட்டுருவன் ஒழுங்கா இந்தப் பொண்ண விட்டுட்டுப் போய்விடு என்று எஸ். ஐ தண்டபாணி மிரட்டினார்.8
முடிவுரை
குறிஞ்சி நில குறவர் இனப் பழங்குடி மக்கள் ஆண்டாண்டு காலமாக காடுகளிலும் மலைகளிலும் தங்களுக்கே உரிய தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களுக்காக தங்களின் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட இம்மக்கள் கட்டாயப்படுத்தி துப்புரவுப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். என்பதை அறிய முடிகிறது. மேலும் பல கனவுகளோடு துப்புரவு வேலைக்கு சேர்ந்த சந்திரா என்ற பெண் அதிகாரியின் பாலியல் இச்சைக்கு இனங்காததால் பொய்வழக்குப் போடப்பட்டு காவல் துறையினரால் விரட்டி விரட்டி வேட்டையாடப்படுவதை அறிந்துகொள்ள முடிகிறது. காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் அவர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக குரலற்ற அப்பாவி மக்களை கைது செய்து பொய் வழக்குப் புனைந்து ஆண்களை அடித்துக் கொல்வதும் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வதும் வழக்கமாகிப் போனதை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினர், மாணவர்களுக்குச் சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறி சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர் ஆகியோர் சாதிய மனநிலையோடு செயல்படுவது சமூகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.
மேற்கோள் நூல்கள்
1.இணையம்
2.பாண்டியக்கண்ணன், நுகத்தடி, ப.29.
3.மேலது, ப. 29.
4.மேலது, ப. 158.
5.மேலது, ப. 131.
6.ச. பாலமுருகன், ப. 56.
7.பாண்டியக்கண்ணன், நுகத்தடி, ப. 89.
8.மேலது, ப. 44.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பிரபாகரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தூய வளனார் கல்லூரி ( கலை&அறிவியல்)
கோவூர், சென்னை.
மௌனம் சில இடங்களிலாவது!|முனைவர் சாரதா சுப்பிரமணி
📜உன்னைத் தொட்டவர்கள் உயரம் தொடுவர் புத்தகம்
📜ஆகாயம் கீழே
பூமி மேலே குடிமகன்களுக்கு
📜குக்கூ எனக் குயிலின் ஓசை
📜கா கா எனக் காகத்தின் ஓசை
📜பக் பக் எனும் வாத்தின் ஓசை
📜பேக் என மயில் அகவும் ஓசை
📜கடிகார முட்களின் அன்பின் இணைப்பு
📜இயற்கையின் சங்கம ஒலிகள்
📜இனிமையுடன் ஒலிக்கிறது
அவரவர் படுக்கையறைத்
தொடுதிரையில்
📜மலருக்கு மலர் தாவி
தேனை உண்ணும் வண்டு
📜பணத்துக்குப் பணம் தாவும்
பொருட்பெண்டிர்
📜கிளைக்குக் கிளை தாவும் குரங்கு
📜இதெல்லாம் ஐந்தறிவு – ஆனால்
ஆறறிவு மனிதனை
மனிதனாகக் கூட மதிக்காமல்
பதவிக்கும் பவுசுக்கும்
தாவிதலைமேல் கொண்டாடும்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்
சில செல்வச் சீமான்கள் போல்
நேற்றைய மழையில்
முளைத்த காளான்கள்
📜மௌனமும் ஒரு வித மொழிதான்
பேசி புரியவைக்க இயலாத சூழல்
பேசினாலும் புரியாத மனிதமற்ற மனிதர்
பேசியும் பேசினாலும் பயன் இல்லாதபோது
அங்கே மௌனம் கொள்வதே புரிதலை
தன் தவறை அவர்கள் மனதில்
ஆழ உழும் மனம் பேசும்
மனம் பேசும் பேச்சிற்கு மனிதன்
பேசும் பேச்சு எம்மாத்திரம் காற்றைவிட
வேகமாக பேசும் மௌனம் பேச்சு
பேசுவோம் மௌனம் சில இடங்களிலாவது..
கவிதையின் ஆசிரியர்
முனைவர் சாரதா சுப்பிரமணி
சென்னை
அம்மன் பக்திப் பாடல்கள்|மா. நந்தினி
அம்மன் விஸ்வரூபம் சக்தி கொண்டவள்
அம்மனின் திருநாமத்தை உச்சரிக்கும் போது மனதில் தீய எண்ணங்கள் அழியும் அம்மன் படைப்பவள் சக்தி;காப்பவள் சக்தி; அழிப்பவள் சக்தி அபயம் என்று அவளை சரண் புகுந்தால் போதும்.
அம்மனை தேவர்கள் வணங்கும் தேவியானவள்.
சொல்லடி சிவசக்தி
என் அன்னையின் உருவே
சக்தியின் உருவே நீயே தான்
சகலமும் நீயே தான்
எல்லாமே நீயாக இருக்க வேண்டும் சக்தியே
பிரபஞ்சம் உன் கண்ணசைவினால் தான் சுழல்கிறது
எனக்கு உன் அருள் வேண்டும்
உன்னை மறக்காத நாளும் இல்லை
உன்னை வணங்காத நாளும் இல்லை சக்தியே
அனுதினமும் உன்னை நினைத்து துதிக்கிறேன்
உன்னை வணங்கும் போது தான்
துயரங்களில் இருந்து கடந்து வருகிறேன்.
அர்த்தநாரி அம்மன்
சிவனின் பாதியும் சக்தியின் பாதியும் அர்த்தநாரியாக அம்மன் வீற்றிருக்கிறாள்.
மங்கையின் கங்கை அணிந்த மகேஸ்வரன் “அர்த்தநாரியா வித்தகம் செய்யும் அருணாச்சலேஸ்வரர்” திருவடியே சரணம்
சிவனும் சக்தியும் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது
சிவன் இவ்வுலகத்தை ஆட்டிப் படைப்பவர் சிவனே
சக்தி இவ்வுலகத்தை ஆள வந்தவள்
சக்தியால் தான் இவ்வுலகம் உதித்து அன்பான உயிர்களை அரவணைக்கும் மகா சக்தியானவள்
திருச்செங்கோடு திருத்தேரில் அம்மையும், அப்பனும் நம்மை காண பவனி வருவார்கள்
தேர் வரும் அழகை பார்க்கும் போது கண் குளிரும் மனம் பக்தியில் பரவசமாகும்.
சிவனின் சரிபாதியாக அர்த்தநாரீஸ்வரர் உடலில் அர்த்தநாரி அம்மனாக தேவியாக வீற்றிருக்கிறாள்.
அம்மனின் ஆலயத்தில் நுழைந்தவுடன்
தேகம் சிலிர்க்கும் உள்ளம் பூரிக்கும்.
சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்
சிவந்த திருமேனி காட்சி தருபவள்
கஷ்டத்தில் இருக்கும் போது
சமயத்தில் உதவ வருபவளே
உன்னை பார்த்தவுடன் தேகம் சிலிர்க்கிறது
சமயபுர மாரியம்மன் ஊர் மக்களை காக்க ஒரு மண்டலம் பச்சை பட்டினி விரதம் இருக்கிறாள்
பூச்சாட்டுதல் வண்ண மலர்களுடன் அம்மனை பார்க்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது
அக்னி சட்டி எடுத்து ஆலயத்தை சுற்றி வரும் பக்தர்களுக்கு நினைத்த காரியத்தை நடத்திக் காட்டும் மகா சக்தியானவள்
சமயபுர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எண்ணியுடன் வேண்டிய வரத்தை தரும் சக்தியானவள்
ஆடி மாதத்தில் ஆலயங்களில் அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்
மாவிளக்கில் பசு நெய் ஊற்றி திரி போட்டு ஜோதி வடிவில் அன்னை அருள் பாலிக்கிறாள்
எலுமிச்சையால் மாலை தொடுத்து எலுமிச்சை மாலை அம்மனுக்கு சாற்றும் போது திருமணத்தடை நீக்குவாள்
திருவிழாவில் சமயபுரம் மாரியம்மன் திருத்தேரில் பவனி வருகிறாள்
சமயபுரம் மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையவள்
அம்மனைப் பார்த்துக் கொண்டு இருக்கணும் போல மனம் ஏங்கும்
பெண்ணின் பாதுகாப்பு குங்குமம் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது தீவினைகள் அகலும்
சமயபுர மாரியம்மன் அம்மனை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியத்தை நிறைவேற்றித் தருவாள்
திருமணத்தடை நீங்கும்
தீராத நோய்களை தீர்த்து வைக்கும் அன்னையாவள்
சமயபுரம் மாரியம்மன் காலடியில் சரணடையுங்கள்
கலியுகத்தில் கண்கண்ட மகா சக்தியானவள்.
மாரியம்மனுக்கு தலைமையாக
சக்தி பீடமாக சமயபுரத்தில்
“சமயபுரம் மாரியம்மன்”
வீற்றிருக்கிறாள்.
சிவந்த மேனி ஆவாள்.
எலுமிச்சை மாலை அணிந்திருக்கிறாள்.
சமயத்தில் வந்து சங்கடங்களை தீர்த்து வைக்கும் மகாசக்தியானவள்.
“மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளினத்தின் எல்லாமும் நீயே நெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும் நெஞ்சில் உன் திருநாமம் பதிய வேண்டும்”
வருடத்தில் ஒரு முறை மாசி மாதத்தில் தொடங்கி பங்குனி வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினியாக விரதம் இருப்பாள்.
உலக மக்களை காத்து வருபவள்.
சிந்தையில் நிறைந்து இருப்பவள்.
சிதறிய எண்ணங்களை ஒன்றாக சேர்ப்பவள்.
உலகநாயகி சக்தியாக வீற்றிருக்கிறாள்.
அம்மனை இராகு காலத்தில் பக்தியுடன் மனதார வேண்டினால் சங்கடங்கள் தீர்ந்து நினைத்த காரியம் கைகூடும்.
“கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்
ஆதிபராசக்தி தான்
அம்மனின் சினத்தை
தணிக்க சிவபெருமான் அம்மனின் காலடியில் சரணடைந்தார்.
“சிவன் இல்லாமல்
சக்தி இல்லை சக்தி இல்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை”
அம்மனின் சக்தியால் ஏழு உலகமும்
சக்தி கண்ணசைவினால் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சக்தி மஞ்சள் அலங்காரத்தில் மகிமை கொண்டவள்.
தாட் சாயினி
பிரஜாபதி தட்சன்,
பிரசூதி மகளாக தாட்சாயினி அவதரித்தவள்
சக்தியின் மறு உருவம் தாட்சாயினி
தட்சன் வளர்த்து வேள்வி தீயில் சிவபெருமானை அழைக்க தட்சன் மறுத்தார்
தாட்சாயினி கோபத்தின் உச்சியில் இருக்கிறாள் கோவத்தின் உச்சியில் தாட்சாயணி இருக்கிறாள்
தட்சன் வேள்வி தீயில் விழுந்து மாய்த்துக் கொண்டாள்
சிவன் தாட்சாயணி தீயில் இருந்து கையில் ஏந்தி வந்தார்
சிவபெருமான் தாட்சாயினி எடுத்து அலைவதை பார்த்த திருமால் சக்கராயுதத்தினால் தாட்சாயினி உடலை தகர்க்கின்றார்
தாட்சாயினி உடல்
பூலோகத்தில் பல இடங்களில் சிதறுகின்றது
ச்க்தி பீடங்கள் விழுந்த இடத்தில் அம்மன் அவதரித்தாள்
சக்தி பீடங்களாக அம்மனை வழிபடுகின்றனர்.
அம்மன் விழுந்த ஒவ்வொரு உறுப்பும் சக்தி பீடமாக
அம்மன் எழுந்தருளி
அருள் பாலிக்கிறாள்.
அம்மனின் கடைக்கண் பார்வையால் கருணையுடன் அரவணைப்பவள்.
அம்மன் தீயதை அழித்து நல்லதே நிலைநாட்டும் சக்தி கொண்டவள்.
இல்லங்களில் அழகாய்
இன்ப தீபம் ஒளிருதே:
இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
ஒரு நாள்
நிறைவேற்றித் தருவார்.
தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
உடலும்,
மனமும் அமைதி அடையும்
கார்த்திகை தீபம் ஏற்றும் போது
இறைவனின் அருளை பரிபூரணமாக
பெறலாம்.
இல்லத்தில் அம்மன் குடிக்கொண்டு இருக்க அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாசலை பெருக்கி சாணம் தெளித்து
அழகான வண்ணக் கோலங்கள் போட்டு வேப்பிலையை வாசலில் தோரணம் கட்டி
அம்மனை பக்தியுடன் நினைத்து பூஜை அறையில் காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அம்மனுக்கு உகந்த மலர்
செவ்வரளி,சாமந்தி,மல்லிகை,
செம்பருத்தி, தாமரை
மலர்களைக் கொண்டு
அம்மனை அலங்கரித்து
மனதார வேண்டினால் நினைத்தது
கைகூடும்.
சக்தி
சாம்பிராணி வாசுகியே இல்லத்தில் சாம்பிராணி புகை போடும் போது
நம் இல்லத்தில் அம்மன் தங்கி விடுவாள்.
அம்மனுக்கு பிடித்த பானகம்,
எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் வகையான பிரசாதங்களை அம்மனுக்கு நைவேத்தியம் அம்மனுக்கு படையலிடும் போது சக்தியின்
அருள் நிச்சயமாக பரிபூரணமாக கிடைக்கும் என்பதே ஐதீகம்.
“அம்மனின் துதி பாடல் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம்,
சகல ஐஸ்வரியங்களும் தரும்
துர்க்கை அம்மனின் துதி பாடல் பாடும்
போது மனம் மகிழ்ச்சியில் பொங்கும்
என்பதே ஐதீகம்.
அம்மனை காண ஆலயத்தில் உள்ளே நுழைந்தால் பக்தி பரவசமாகும்.
இவ்வுலகை
ஆளும் சக்தியானவள்
அம்மன் ஆயுதங்களை கையில் ஏந்தி அருளை வழங்கி வருகிறாள்.
இராகுகால நேரம் தான் அம்மனுக்கு உகந்த நேரமாகும்.
காயத்ரி தேவி
முப்பெரும் தேவியாக காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
காயத்ரி அம்மனை பார்ப்பது கோடி புண்ணியமே
காயத்ரி தேவி
மஞ்சள் அலங்காரத்தில் சிரித்த முகத்த அழகி
அழகான பட்டு வண்ண சேலை உடுத்தி தாமரை மலரை சாற்றி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியத்தை அன்னையாவள்
அகிலத்தை ஆள வந்த ஆதிபராசக்தி அனுதினமும் காயத்ரி அம்மன் ஜொலிக்கிறாள்
ஸ்ரீ காயத்ரி தேவி வேதங்களின் தாயாக கொண்டவள்
ஐந்து தலைகள் கொண்ட காயத்ரி தேவி தாமரை மலரில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்
சங்கு சக்கரம் அங்குசம் கபாலம் தாமரை கையில் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறாள்
காலையில் காயத்ரியாகவும் நண்பகலில் சாவித்திரியாகவும் மாலை சரஸ்வதியாகவும் வீற்றிருக்கிறாள்
காயத்ரி தேவி அம்மனை பௌர்ணமி நன்னாளில் தீபமேற்றி மனதார வேண்டிக் கொண்டால் நினைத்ததை நிறைவேறும் தரும் அன்னையாவள்
காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிக்கும் போது உடலும் மனமும் தூய்மை அடையும் அறிவு ஞானம் கல்வி அருளை வழங்கி கொண்டிருக்கிறாள்.
நிறைந்த பௌர்ணமி,அமாவாசை
நாளில் அம்மனை வழிபட்டால்
செல்வ வளம் பெருகும்.
காயத்ரி தேவி மூன்று வேளைகளிலும்
முப்பெரும் தேவியாக
வீற்றிருக்கிறாள்.
பௌர்ணமி நாளும் காயத்ரி தேவி
அம்மனை வழிபட்டால்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
தினமும் அம்மனை நினைத்து பாமாலை பாடும் போது மனம் தூய்மையடையும்.
அம்மனை வணங்கினால்
எண்ணங்களும் செல்வங்களும் தெளிவாகும்.
நவகிரகங்களை ஆட்சி புரிபவள் சக்தி தேவியே.
தினமும் உன் புகழை பாடி வந்து
செவ்வாய்கிழமைகளில்;
வெள்ளிக்கிழமைகளில்
உன் கோவிலை நாடி வருகிறோம்.
அம்மனின் அழகு பேரழகு
அம்மனை பார்த்து பக்தியுடன்
வணங்கும் போது இப்பிறவி போதாது.
ஆனந்தத்தில் பேரானந்தம் அம்மனின் காலடியில் சரணடைவது
தான்.
எழுத்தாளர் மா. நந்தினி
சேலம்.














