Ilakkiyangalil Pulal Vagai Unavu|D.Rajakumari
Abstract
Moral literature advocates vegetarianism. However, the people of the Sangam period consumed meat in large quantities. Meat was the primary food given by kings to beggars. The people of the Sangam period consumed animals, birds, fish, reptiles, and arthropods. Just as in the present day, there was a custom of preserving meat with salt and then consuming it. Pieces of meat were skewered on iron rods, seasoned with salt, black pepper powder, and mustard, and then roasted and eaten.
“இலக்கியங்களில் புலால் வகை உணவு”
முன்னுரை
சங்ககால மக்கள் போரினையும், காதலையும் மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும். மாமிச உணவு மென்மையான மன இயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது. உடலுக்கும் மனதுக்கும் வலுவையூட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது. அவற்றுள் ஊர்வனன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும். இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கண்டமாகவும், சுட்டும், பொறித்தும் பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம் இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதையும் அக்கால இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
புலால் உண்ணாமையை நீதி இலக்கியங்கள் கூறுகின்றன. இருப்பினும் சங்ககால மக்கள் ஊன் உணவை அதிக அளவில் உண்டுள்ளனர். மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது. சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, கணுக்காலிகள் போன்றவற்றை உணவில் பயன்படுத்தியுள்ளனர். ஊன், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகைகள் அழைக்கப்படுகிறது. வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், மாடு, ஆமான், முயல் போன்ற விலங்குகளும் உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக உண்ணப்பட்டன. இறைச்சியைப் புழுக்கியும், வறுத்தும், சுட்டும், பொரித்தும் உண்டுள்ளனர். தமிழர்கள் இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் உண்டனர். வேக வைக்கப்பட்ட இறைச்சி ‘வேவிறைச்சி’ என்றும், தீயில் வாட்டப்பட்டது ‘சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.
ஊன் சோறு
இன்று பிரியாணி என்று அழைக்கப்படும் இவ்வுணவு அக்காலத்தில் ஊன்சொறு என்ற பெயரால் அன்று செய்யப்பட்டது. இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. ஐவகை நிலங்களில் வாழும் மக்கள் பலவகை உணவு முறைகளால் வேறுபட்டாலும் ஒன்றுபட்டிருந்த ஒரு உணவுவகை ஊன்சோறு தான். பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சொற்றினை விரும்பி உண்டனர். ‘ஊன்’ என்பது இறைச்சியையும் ‘துவை’ என்பது கலந்த தன்மையையும் ‘அடிசில்’ என்பது சமைக்கப்பட்ட உணவினையும் குறிக்கிறது. ஊன் துவை அடிசில் என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். ‘பிரியாணி’ என்னும் சொல் பிற்காலத்தில் வந்துள்ளது. ஆனால் பிரியாணி என்னும் உணவு சங்க காலத்திலேயே தமிழ் மக்களாலும் பிறராலும் உண்ணப்பட்டுள்ளது. பிரியாணி என்னும் சொல் பாரசீகச் சொல். ‘பிரியன்’ என்னும் சொல்லிலிருந்து பிரியாணி என்னும் கொல் உருவாகியுள்ளது. பிரியன் என்றால் சமைப்பதற்கு முன்பாகப் பொரிக்கப்பட்டது என்று பொருள். அவர்கள் பிரியாணியை இறைச்சி, அரிசி நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
1398 இல் தைமூர் இந்தியாவிற்கு வரும்போது பிரியாணி என்னும் உணவு வகையும் இந்தியாவிற்கு வந்தது என்று குறிப்பிடுகின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்த ஜகாங்கீரின் மனைவியான நூர்ஜகான் இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தார் என்றும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த க்ஷாஜகானின் மனைவியான மும்தாஜ் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் பிரியாணி பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனாது என்று வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது. சேரன் குட்டுவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றபின், தனது வீரர்களுக்கு விருந்தளித்தான். அந்த விருந்தில் அவன் வழங்கிய ஊன் துவை அாசிலானது சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றி இருந்தது என உணர்த்தியுள்ளார் புலவர் பரணர்.
செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது. செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும், வண்மையாகவும் உள்ளன. ஆனால் எனது கைகள் பிரியாணி என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார்.
“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின்”
என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காணரம் தெரிவித்துள்ளார் கபிலர். அக்காலத்தில் சமையல்காரன் ‘வாலுவன்’ என அழைக்கப்பட்டான். “அவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது”.
விலங்குகளின் இறைச்சி
தங்களுக்கு பயன்படக்கூடிய விலங்குகளை வளர்க்கவும், அவற்றை உணவாகப் பயன்படுத்தவும் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். ஆட்டின் இறைச்சி, பசுவின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சி முளவுமா இறைச்சி, யானை இறைச்சி அகிய விலங்குகளின் இறைச்சிகளைத் தமிழ் மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். மனிதன் ஆதிகாலத்தில் இறைச்சியைப் பச்சையாகவே தின்றதாகத் தெரிகிறது. இதுபற்றி சங்க இலக்கியத்திலும் சிறுகுறிப்பு உள்ளது. மறவர்கள், கள்விலைக்கு மாறாக நிரையைக் கொடுத்துக் கள்ளுண்டனர் என்றும், அவர்கள் பச்சை இறைச்சியைத் தின்றுவிட்டு ஈர மிக்க கையை வில்லின் புறத்தே தடவினர் என்றும்,
“நிறுத்த வாயந் தலைச் சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரி”
மேற்கூறிய புறநானூற்றடிகள் உரைக்கின்றன. ஊன் உணவைப் பதப்படுத்திய நிலையை சூடு, புழுக்கு, பொரியல், வறை, வாட்டு, வேவை என்றும் சொற்கள் காட்டுகின்றன. குழைச்சூடு, கொஞ்சூடு, நெடுஞ்சூடு, வான்சூடு, என்பன சூட்டின் தன்மையை விளக்குவதாகும். “இறைச்சியை இரும்பு கம்பியில் கோர்த்துச் சுட்டதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது”.
பறவைகளின் இறைச்சி
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அளகின் (கோழி) இறைச்சி, ஈதல் இறைச்சி, குறும்பூழ் இறைச்சி, புறா இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகச் சங்ககால இலக்கியங்களில் குறிப்பு காணப்படுகிறது. விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடிய வேடர்களின் புதல்வர்கள் பறவைகளின் இறைச்சியைத் தின்றதால் அவர்களின் வாய் புலால் நாற்றம் வீசியது என்பதை,
“புள்ளுன் றின்ற புலவுநாறு கயவாய்
வெவ்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்”
என்ற புறநானூற்று அடிகள் உரைக்கின்றன. இலக்கியத்தில் கோழி காட்டுக்கோழி, மனைக்கோழி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. சேவல் கோழியை ‘அளகு’ என மக்கள் கூறியதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன. கோழி இறைச்சி இன்றும் பெரும்பாலானோரால் உண்ணப்பட்டு வருகிறது. இதில் நாட்டுக் கோழியே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் உள்ளோரும் கோழி இறைச்சியை அதிக அளவில் உண்டுள்ளனர். “மருதநில உழவர்கள் தம் உழைப்பால் பெற்ற வெண்மைநிற நெற்சோற்றோடு கோழிப்பெடைப் பொரியலை உண்ணக் கொடுப்பர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது”. கோழியை வீட்டில் அதிக அளவில் வளர்த்தனர். விருந்தினர் வந்தால் அக்கோழி விருந்தினருக்கு உணவாகச் சமைத்து கொடுக்கப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோர் விருந்தினர் வந்தால் வீட்டிலிருக்கும் கோழியைச் சமைத்து உண்ணக் கொடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நிலமக்களின் அசைவ உணவாகக் கோழி இறைச்சி மட்டுமே இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இன்று அனைத்து நில மக்களின் பிரதான அசைவ உணவாகக் கோழி இறைச்சிக் காணப்படுகிறது. பிற அசைவ உணவுகள் அந்தந்த நிலம் சார்ந்து மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் கோழி இறைச்சி மட்டுமே அனைத்து வகை நிலங்களிலும் மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வுணவின் வருகையால் பிற அசைவ இறைச்சி உணவுக்கான மாடு, ஆடு போன்ற விலங்கினங்கள் பெரும்பான்மையும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்கள்
சங்கத்தமிழர் பலவகை மீன்களை உண்டுள்ளனர். மீன் பண்டமாற்று செய்யப்பட்டு அனைத்து நிலங்களிலும் உண்ணப்பட்டது. அயிலை மீன், ஆரல் மீன், இறால் மீன், கெடிற்று மீன், சுறா மீன், வரால் மீன், வாளை மீன் ஆகிய மீன்களை உண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலாகவே இருந்தது. சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்தனர். மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டிலைப் பயன்படுத்தினர். சிலவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் கண்டறிந்தனர். இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர்.
சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டனர். மருதம் போன்ற பிற நிலத்தால் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தினர். நீர் நிறைந்த வயல்களில் அகப்பட்ட மீன், நண்டு, ஆமை என்பவை உணவாகக் கொள்ளப்பட்டது. அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் உண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கத் தெரிந்திருந்தனர். அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவைகளைப் பொரித்தனர். பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றனர். குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர்.
முதுகெலும்புடைய உயிரின வகையைச் சேர்ந்த மீன்களை நன்னீரில் வாழ்பவை, உப்பு நீரில் வாழ்பவை என இரண்டாகப் பிரிப்பர். ஊன் உணவு வகைகளுள் மீன் உணவு சிறந்ததாகும். ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் மீன்கள் மிகுதியாக வாழ்கின்றன. பண்டைய தமிழரின் புவியல் அமைப்புப்படி மருத நிலங்களில் ஆறு குளங்களிலும், நெய்தல் நிலத்தில் கடலிலும் மீன்கள் பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு புழங்கு பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர். இம்மீன்களைப் பிடிக்கும் அறிவு நுட்பமும், எந்தெந்த மாதங்களில் என்னென்ன மீன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்.
ஊர்வன
ஊர்ந்து செல்வனவற்றில் சங்ககால மக்கள் ஆமை, உடும்பு ஆகியவற்றின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளதாக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஊர்வனவற்றில் மெதுவாக செல்லக் கூடியது ஆமையாகும். ஆமை நிலத்திலும் வாழும். நீரிலும் வாழும். ஆமை, கடல் ஆமை, குளத்து ஆமை என இருவகைப்படும். இவை வயல்களிலும் காணப்படும். “வயலிலுள்ள ஆமையைப் புழுக்கி உண்ட செய்தியை பட்டினப்பாலை கூறுகிறது”. உழவர்கள் வயலை உழும்பொழுது தம் உழுபடையால் சேற்றில் இருந்து வெளிவந்த ஆமையின் தசையை மலை நிலத்திலிருந்தும், காட்டு நிலத்திலிருந்தும் தம் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கொடுத்துள்ளனர்.
ஆமை இறைச்சியை உண்ணும் வழக்கம் உப்புக் குறவர்களிடம் காணப்படுகிறது. அக்கால மக்கள் ஆமை இறைச்சியை உண்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மீன் பிடித்தல், உப்பை விளைவித்தல், மீனையும் உப்பையும் விற்றல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்ட நெய்தல் நில மக்களான பரதவர்கள் ஆமை இறைச்சியை உண்டனர் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது.
“வயல் ஆமைப் புழுக்கு உண்டும்”
என்ற அடியால் நெய்தல் நில மக்கள் ஆமையை உண்டனர் என்பதை அறிய முடிகிறது. இன்றும் உப்புக் குறவர்கள் ஆமை இறைச்சியை உண்ணுகின்றனர். பொதுவாக ஆமை என்பது மக்களால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம். ஆமை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்பது மக்களின் நம்பிக்கை. ஒரு வீட்டில் ஆமை புகுந்தால் அந்த வீடு உருப்படாது என்பர். ‘ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பது பழமொழி. அதனால் பிற இனத்தவர் ஆமையை உண்பதில்லை. ஆனால் உப்புக் குறவர்கள் உண்ணுகின்றனர். இப்படி பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதை உண்ணுகின்ற இவர்களும் ஒதுக்கப்படுகின்றனர்.
உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டது. இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு. உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் ‘முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு’ என்ற பழைய தொடர் வழக்கில் இருக்கின்றது. ஊர்வனவற்றில் விரைவாக ஓடும் தன்மை உடையது உடும்பு. இதன் இறைச்சியைச் சுட்டும், புழுக்கியும், பொரித்தும் பயன்படுத்தியுள்ளனர். முட்டை உள்ள உடும்பின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை நெடுவாலி என்று அழைத்தனர். இறைச்சி வகைகளுள் உடும்பின் இறைச்சியை பழந்தமிழ் மக்கள் சிறந்ததாகக் கருதினர். “ஆடவர்கள் உடும்பினைப் பிடித்து அறுத்து அதன் தோலையுரித்துக் கொழுப்பை வீட்டு முற்றத்தில் உறவினர்களுக்கு எல்லாம் கூறு போட்டு கொடுப்பதற்காகக் கொள்ளி வைத்துக் கொளுத்துகின்றனர். இதனால் உண்டான நாற்றம் தெருவெல்லாம் சென்று கமழ்கிறது என்று புறநானூற்றில்” உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உரைக்கின்றார்.
அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடினர். அவ்வாறு “நாய் கொண்டு வந்து கொடுத்த உடும்பின் தசையை அறுத்து விருந்தினருக்குக் கொடுத்துள்ளனர். உடும்பின் கொழுப்பினால் பெய்யப்பட்ட தயிருடன் கூட்டிய கூழினையும், புதிதாகச் சமைத்த பிற நல்ல உணவு வகைகளையும் பாணர்களோடு உடன் வந்த விருந்தினர் பலருக்கும் வழங்கும் விருப்பத்தை உடையவள் என்று புறநானூறு கூறுகிறது”. கூழில், தயிர், கொழுப்பு போன்றவற்றையும் கலந்துள்ளனர் என்பதையும் வறுமையிலும் அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பாலை நிலத்தில் மழை சிறிதளவு பெய்தது. குழிகளில் சிறிதளவு நீர் நிரம்பி இருந்தது. அக்கலங்கிய சேற்றைத் தோண்டிப்பெற்ற ஊற்று நீரிதை; தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையை உடையவர்கள் அங்கு வாழ்ந்தனர். அங்குள்ள ஆண்மக்கள் முள்ளம்பன்றியைக் கொல்வர். உடும்பின் நிணத்தை அறுப்பர் பின்னர் தீயை மூட்டி அதில் உடும்பினை வாட்டி அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது”. நீரை முறை வைத்து எடுக்கும் வறுமை நிலையிலும் உடும்பினை அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்பதால் அவர்களின் கொடைப் பண்பினை அறியலாம்.
முடிவுரை
அக்கால மக்கள் போரினை மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும். மாமிச உணவு மென்மையான இனஇயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது. உடலுக்கும் மனதுக்கும் வலுவை ஊட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது. அவற்றுள் ஊர்வன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும். இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கட்டமாகவும், சுட்டும், பொறித்தும், பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம். இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.அவ்வை துரைசாமிப்பிள்ளை, நற்றிணைஅய்யனார் பதிப்பகம்எண். 4/87, 6 வது தெரு, வினாயகபுரம், காரணை புதுச்சேரி, கூடுவாஞ்சேரி – 603 202.
2.கராசன். வி, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை
3.நாகராசன் . வி, புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை
4.மாணிக்கம். அ, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், 48/1, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர்இ சென்னை
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
து. ராஜகுமாரி, எம்.ஏ., எம்.ஃபில்.,
தமிழ்த்துறை
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி
திருவண்ணாலை – 606 603.
ஆய்வு நெறியாளர்
முனைவர் ந. குப்புசாமி
தமிழ்த்துறைத்தலைவர்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ரிஷிவந்தியம்இ கள்ளக்குறிச்சி.
Kulanthai Ilakkiyam Sollum Neethigal – Thinamalar Siruvar Malarai Munvaiththu|Dr N.Paramasivam
Abstract
All the literally texts deal with the social realities and the writers psychological condition. Those text were written for those who are grown up both physically and mentally. Ain’t there any literally texts for the children? Yes, but they are very few. Those literally contributions were initiated by daily newspapers. Thus, this research aims to emphasis the literary writings for children written in Dinamalar’s siruvarmalar.
“குழந்தை இலக்கியம் சொல்லும் நீதிகள் – தினமலர் சிறுவர் மலரை முன்வைத்து”
ஏதாவதொரு கருப்பொருளைக் காலந்தோறும் இலக்கியத்திற்குத் தந்து கொண்டிருக்கும் வல்லமையுடையது மொழி. இது காதுகளுக்கு எட்டும் ஒலியளவில் இருந்து ஏட்டில் தவழ்ந்து கண்களுக்குத் தெரியும் ஒளியளவான பின்னர் அது முன்னைக் காட்டிலும் மிகுவலிமை பெற்றது. உணவும் இச்சையும் என இரண்டு நிலைகளை மட்டுமே வாழ்வியலாகக் கொண்;ட விலங்கு நிலையிலிருந்து வாழ்வென்பது இவ்விரண்டையும் தாண்டி ஏதாவது ஒரு செய்தியை மனிதவாழ்விற்குச் சொல்லக் காத்திருக்கிறது என நினைத்து அதைச் சொல்வதற்கான ஊடகமாக மொழியை மனிதன் கண்டுபிடித்ததன் பின்னர் அதை இடையறாது பிறருக்குப் பயிற்றுவிக்கும் பொழுதே வாழ்வியலின் அறமும் வளர்ந்தது மொழியோடு.
ஒரு காலத்திற்குப் பெருங்காதலும் வீரமும் தேவையான பொழுது மற்றொரு காலத்தில் அறம் மட்டுமே தேவையாய் இருந்தது. இவை கழிந்தது போக பக்தியும் காப்பியமும் பெருங்காலத்தைத் தன்னகத்தே கொண்டு தமிழையும் தமிழனின் மொழியாற்றலையும் வெளிக்கொண்டுவந்தது. பேரிலக்கியம் படைப்பினும் அதைப்; பலபடக் கூறினும் மனிதன் சிறுமையுடையவனே என்பதை கூறுவதற்குச் சிற்றிலக்கியங்கள் ஆற்றின் ஊற்றுப்போல் பெருக்கெடுத்துத் தொண்ணூற்றாறு வகையாய்க் கிளைவிட்டன. இப்படிக் காலங்கள் மாறமாற அக்காலத்தே தோன்றிய படைப்பாளனும் காலவோட்டத்தை விட்டுப் பிரியாது மொழி வழியே தன்பயணத்தைத் தொடர்ந்தான்.
அன்பும் அறனும் சொல்லிய பின்னர் இறுதியாகிய நிலையாமையைத் தன் பட்டறிவின் மூலம் சொல்லிய பின்னரும் இலக்கியம் தன்பயணத்தை நிறுத்திவி;ட்டதா எனின் அதுதான் இல்லை. செல்லும் வாகனம் வெவ்வேறாக இருப்பினும் பயணமும் தூரமும் தொடர்ந்து இருப்பது போல சொல்லும் கருத்துகள் காதலாய் வீரமாய் இருப்பினும் இலக்கியம் அடையவேண்டிய தூரம் இன்னும்இன்னும் நெடுந்தொலைவு இருக்கின்றன என்பதை இலக்கணத்தை உடைத்த இலக்கியமான இக்கால இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. பழங்கால இலக்கியத்தின் மொழித்தழும்பாய் இன்றளவும் கோலோச்சும் கவிதையும் நாடகமும் இன்றளவும் புதுப்பிறப்பாய் விளங்கும் உரைநடையும் கட்டுரையும் கதையும் என விரிந்துபரவியது. நிற்க. மேற்கண்ட அனைத்தும் காதலிக்கும் இளவயதுடையவர் முதல் காடேகும் முதியவர் வரையுள்ளோர்க்கு மட்டுமே படைக்கப்பட்டது. இன்றும் யாருக்கு இலக்கியம் இயற்றப்பட வேண்டும் என்ற வினா எழும்பொழுது ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என எழுத்தை அறிமுகப்படுத்திக் கற்றுக்கொடுத்த ஆசிரியரைப் புகழ்கிறோம். உண்மையில் அப்புகழுக்குக் காரணகர்த்தாவாகிய குழந்தைகள் இலக்கியவாசிப்புக்குள் காணாது போகின்றனர். வேர் பிடிப்பதற்கு மண்காரணமாவது போல குழந்தைகள் அறிவாற்றல்பெற இலக்கியம் வேண்டுமல்லவா? எனவே அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்தானே. அவர்களே வருங்காலத்தின் முன்னத்தி ஏர்கள் எனக்கண்டு படைக்கப்பட்டதே இக்கால இலக்கியத்தின் ஆற்றல்மிகு இலக்கியமான குழந்தை இலக்கியமாகும்.
குழந்தை இலக்கிய வகைமைகள்
கதைகள், பாடல்கள் கதைப்பாடல்கள் எனப் பல்வேறு வகைகளில் கிளைத்துப் பெருகியது குழந்தைகளுக்கான இலக்கியங்கள். இவர்களின் விளையாட்டுகளில் பாடல்கள் முன்னர் நிறைய இடம்பெற்றிருந்தன. காரணம் குழந்தைகள் விளையாடும் பொழுது மனது இலகுவாகின்றது. இலகுவாக இருக்கும்பொழுதுதான் பிறர் சொல்லும் சொல் எளிதாக மனதில் பதியும் என்ற அடிப்படையில் விளையாட்டுடன் கூடிய கல்விமுறை புகுத்தப்பட்டது. எனினும் குழந்தைகளுக்கு மனம் சார்ந்ததாக, கல்வி சார்ந்ததாக மட்டும் பாடல்கள் முன்னிருத்தப்படவில்லை என்று அறிதல் வேண்டும். ஏனெனில் உடலின்றி மனமோ அறிவோ இல்லை என்பது யாவரும் அறிந்ததே. அதனால்தான் பாரதிகூட ‘உடலினை உறுதிசெய்’ என்றார். இக்கருத்தை அடியொற்றியே பின்வரும் குழந்தைப்பாடலும் அமைவதைக் காணலாம். இருவர் கைமாற்றிக் கோர்த்துச் சுற்றும்பொழுது,
கோ கோ பிஸ்
கோக்கலங்கா பிஸ்
நாலுகரண்டி நல்லெண்ண
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பைய்யா
வழுக்கிவிட்டா மீனாட்சி
தும்பி தொளசி
தூக்கிவிட்டா மம்மட்டி
கல்யாண வீட்டுல
கண்டெடுத்த மூக்குத்தி
என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே சுற்றிய இருவரும் அசையாது ஆடாது நிலையாக நிற்கவேண்டும். அப்படி நில்லாது கீழே விழுந்துவிடின் விழுந்தவர் தோற்றவராகக் கருதப்படுவார். இதில் வெற்றி தோல்வி என்பதோ பாடலின் கருத்தோ முக்கியம்அல்ல என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஏனெனில் உடல்நலிவு கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்துவிடாமல் இருக்க இம்மாதிரியான விளையாட்டுப் பயிற்சியே முக்கியமாகும். எனவே படைப்பு எனப்படுவது எழுத்தை வலிமையாக்குவது அல்ல அது குழந்தைகளின் உடலை உள்ளத்தை வலுப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதையே புரட்சிக்கவி பாரதிதாசனும் ‘அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்கிறார். (பாரதிதாசன் கவிதைகள்)
தினமலர் நாளிதழில் சிறுவர் இலக்கியத்தின் பங்கு
ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்றும் குழந்தைகளுக்கென்று நான்கு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது தினமலர் நாளிதழ். இதில்
ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள்
குழந்தைகளின் சாதனைகள்
உங்களுக்குத் தெரியுமா?
இளம் ஓவியர்கள்
படக்கதை
வார்த்தை விளையாட்டுகள்
வாங்க சிரிக்கலாம்
சின்னச்சின்னப் பூக்கள்
தொடர்கதை
இருவகைப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம்
எனப் பல்வேறு பகுதிகளைக் கொண்டு குழந்தைகளின் இரசனை அறிந்து பகுத்துத்தந்துள்ளது. மேற்கண்ட வகைமைகளில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்வது ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள் எனும் பகுதியாகும். அப்பகுதியில் மிமிக்ரிபறவை எனப் பலராலும் அழைக்கப்படும் புன்னாகம் எனும் பறவையாகும். இதை ஆங்கிலத்தில் மாக்கிங் என அழைக்கின்றனர். இப்பறவை வடஅமெரிக்காவையும் அதைச்சுற்றியுள்ள பலதீவுகளிலும் உள்ளது என்பதை 1835 இல் சார்லஸ் டார்வின் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இப்பறவை அமெரிக்காவின் ஐந்து மாகாணங்களில் தேசியப் பறவையாகத் திகழ்கிறது. காரணம,; இது அழகு நிறைந்த பறவையாக இருப்பதாலும் தன்வாழ்நாளில் 200 வகையான ஒலிகளைக்கற்றுப் பிரதிபலிக்கும் புத்திக் கூர்மையாலும் விருப்பத்துடன் இதை வளர்க்கின்றனர். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை ஒருவகைக் குரலிலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வேறுவிதக் குரலிலும் ஒலிக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இவை பெரும்பாலும் பின்னிரவில் பாடும் இயல்புடையது என்றும் முடிவில்லாது தொடர்ச்சியாய் பலகுரலில் பாடும் திறன் கொண்டதென்றும் கூறுகின்றனர். இவ்வாறு பாடுவதற்குத் தனித்த காரணமாகத் தன்குஞ்சுகளை விலங்குகள் மற்றும் எதிரிப்பறவைகளிடம் இருந்து பாதுகாக்கவே பல குரலில் பாடி எதிரியைத் திணறடித்து ஓடச்செய்வதற்குப் பலகுரலைக் கற்கின்றது என்பது ஆச்சர்யமே எனக்கூறி வாசகர்களை வியப்படையச்செய்கிறது இவ்விதழ்.
குழந்தைகளின் சாதனைகள்
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீர்பான் என்பார் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். தாகம் எடுக்கவே ஆற்றுநீரைக் குடித்தபின் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வாற்றில் இருந்த முதலையானது வீர்பான் காலைக்கவ்வ முதலையைப் பார்;த்து அதிர்ந்து பெருங்குரலெடுத்து அலறியுள்ளார். இவரின் அலறல் சப்தம்கேட்டு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த இவரது ஏழுவயது மகன் அஜய்ராஜ் ஒரு குச்சியைக் கொண்டு முதலையைத் தாக்கியுள்ளார். இதனால் வீர்பானை நீருக்குள் இழுத்துள்ளது முதலை. இதைக்கண்ட அஜய்ராஜ் சிறிதும் பதறாது சமயோசிதமாக முதலையை அடித்த குச்சியைக் கொண்டு அதன் கண்களைக் குத்தியுள்ளான். வலிதாங்காத முதலை வீர்பானை விட்டுவிட்டு நீருக்குள் மூழ்கித் தப்பியது. உயிர்தப்பிய வீர்பான் ஊரெல்லாம் இச்செய்தியைக் கூற அஜய்ராஜின் வீரச்செயலை அறிந்த மத்தியஅரசு டிசம்பர் 26, 2025 இல் தேசிய வீரபாலகர் தினத்தில் டில்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் தேசிய வீரபாலர் விருது ஜனாதிபதி பொற்கரத்தால் பெற்றான் அஜய்ராஜ். இவ்விருது வீரத்துடன் கூடிய விவேகத்திற்குக் கிடைத்தது என்பதே பொருந்தும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கட்டான சூழலில் உணர்வுக்கு முக்கியத்துவம் தராது விவேகத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை இவ்விருது உணர்த்தியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
இப்பகுதியில் பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு அக்கேள்விக்கு அருகிலேயே அதற்கான விடையும் கொடுத்து அறிவைச் சோதிக்கும் , ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளது இப்பகுதி.
இளம் ஓவியர்கள்
மனதை ஒருமுகப்படுத்தி அதன்வழியே தன் விரல்களுக்குக் கொண்டுவந்து காட்டுவது ஓவியம். அவ்வகையில் தான் விரும்பிய தலைவர்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை மனக்கண் வழியே கண்டு வரைந்து காட்டும் முறையில் அமைவது இளம்ஓவியர்கள் பகுதியாகும்.
படக்கதை
படக்கதை என்பது படத்திற்குப் பொருத்தமான கதைகளையும் வரைந்து, படிக்கின்ற குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் ஒழுங்குபடுத்தி படக்கதை அமைத்து அதில் நீதியைச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது படக்கதை.
வார்த்தை விளையாட்டு
இவ்விளையாட்டு மொழியின் வளத்தை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றது. ஒருபொருளைக் கூற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவற்றைக் குழந்தைகளும் உணர்ந்து எழுதும் பொருட்டு வார்த்தை விளையாட்டு அமைந்துள்ளது.
அடைபட்ட கட்டங்களைத் தவிர பிற கட்டங்களில்,
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
எனும் முறையில் அமைந்து சரியான சொற்கோவையை உருவாக்கிப் பொருள்தரும்படி அமையும் விளையாட்டு வார்த்தை விளையாட்டாகும்.
வாங்க சிரிக்கலாம்
இப்பகுதியில் வார்த்தைகள் இன்றி ஓவியம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அந்த ஓவியத்தைக் கொண்டே சிரிப்பினைக் கொடுக்கும் பகுதி இதுவாகும். உதாரணமாக மூன்று காட்சி ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்று சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வழங்குவதை, முதல்படம்: மழை வருதல் – மழையில் மனிதனும் அவன்நாய்க்குட்டியும் நனைதல் இரண்டாம்படம்: மழையில் நனையாமல் இருக்க குடையோடு ஒருவர் செல்லுதல் மூன்றாம்படம்: எஜமானலை விட்டுவிட்டு குடையோடு செல்லும் மனிதருடன் நனையாது இருக்க அந்தநாய்க்குட்டி செல்லுதல். எஜமானர் மழையில் நனைதல். இப்படக்கதை சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வாங்கசிரிக்கலாம் பகுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.
சின்னச்சின்னப் பூக்கள்
குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு அக்குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடும் பகுதியே சின்னச்சின்னப் பூக்கள் பகுதியாகும்.
இருபடங்களுக்கும் உள்ள வித்தியாசம்
ஒரே மாதிரியான ஆனால் சற்றே வேறுபட்ட இருபடங்களைக் கொடுத்து ஏழு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கும் போட்டியாக இப்படங்கள் விளங்கும். இது அனைத்து விதமான வயதுகொண்டவர்களும் விரும்பிக் கண்டுபிடிப்பதாக விளங்குகின்றது,
தொடர்கதை
கதை படிக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்;டவும் அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தையைத் தூண்டும் விதமாகவும் தொடர்கதை அமைந்திருக்கின்றன. முன்னர் இத்தொடர்கதையைப் படிப்பதற்கென்றே நூலகம் சென்றுபடித்த நாட்கள் உண்டு. நூலகங்களும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருந்தன. வாசகர்களின் ஆர்வத்தை உணர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்சு என்பார் வாசகர்களுக்கென 3.7 கோடிப் புத்தகங்கள் வாங்கியுள்ளார். 1800 ஏப்ரல் 24ல் தொடங்கப்பட்ட இந்நூலகம் பன்னிரெண்டு ஆண்டுகள் கழி;த்து பிரிட்டன் இராணுவம் இந்நூலகத்தை அழித்தது. அடுத்த அதிபரான தாமஸ் ஜெபர்சன் என்பார் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய நூலகத்தை அமைத்து அனைவருக்குமான நூல்களை இடம்பெறச்செய்து அறிவுசான்றவர்களாக உருவாக்கினார் என்பர். (முனைவர் இரா.குணசீலன் நிற்க அதற்குத் தக ப.67)
கற்கலாம் பழகலாம்
நம்மிடம் இருக்கின்ற தாள்,அட்டை போன்றவற்றில் அழகுப்பொருள்,கப்பல்,பட்டம் உள்ளிட்டவற்றை எவ்வாறு செய்வது என்ற வழிமுறைகளையும் அவ்வழிமுறைகளைக் கற்றுக்கொண்டவர்கள் எவ்வாறு பிறருக்குக் கற்றுக்கொடுப்பது என்பதை விளக்கும் விதமாகவும் கற்கலாம் பழகலாம் பகுதி இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட அனைத்தும் கீழ்க்கண்ட சிந்தனை வடிவில் அமைந்துள்ளதை,
அறிவியல் அலைகள் – அடிப்படை அறிவியலை அறிதல்
குழந்தைகளின் சாதனைகள் – செயல்பட ஊக்கம் கொடுத்தல்
உங்களுக்குத் தெரியுமா? – ஆர்வத்தைத் தூண்டுதல்
இளம் ஓவியர்கள் – எண்ணத்தை மனக்கண்ணால் கொண்டு வருதல்
படக்கதை – கண்ணையும் கருத்தையும் ஒன்றுபடுத்துதல்
வார்த்தை விளையாட்டு – மொழியாற்றலை உருவாக்கச்செய்தல்
வாங்க சிரிக்கலாம் – அறிவும் அறியாமையும் ஒன்றிணைதல்
சின்னச் சின்னப்பூக்கள் -தொலைவில் உள்ளோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல்
தொடர்கதை – சிந்தையையும் ஆர்வத்தையும் வளர்த்தல்
இருபடங்களுக்குள்ள வேற்றுமை – மிக நுண்ணிய பார்வையுடன் அணுகுதல்
கற்கலாம் பழகலாம் – இடையறாத தொடர்ச்சியுடன் கற்றல்
எனப் பல்வேறு கோணங்களில் அணுகி நுண்ணிதின் ஆராய்ந்து சிறுவர்மலராய் மலரச்செய்கிறது தினமலர். இதைப் பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு பக்கங்கள் நான்கு என்ற எண்ணிக்கை மட்டுமே தெரியும். ஆனால் அதைக்கூர்ந்து நோக்கும் பொழுது குழந்தைகளுக்கு எதைத்தரவேண்டும் என்ற பொருப்புணர்வும் இதில் அடங்கியருப்பதை உணரமுடிகிறது. கண்களால் காணும் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய அலைபேசி உலகில் கருத்துக்களால் நிரம்பிய எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராத இன்றைய குழந்தைகள் பெருகியுள்ளனர். இது குழந்தைகளின் கற்றல் குறித்தான கேள்வியையே எழுப்புகின்றது. வாசிப்பதன் முக்கியத்துவத்தை ஜொனாதன் ஸ்விஃப்டர் என்பார் நான் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, அது ஞானமுள்ளதோ அல்லது அற்பமானதோ, அது உயிருடன் இருப்பதாகவும் என்னுடன் பேசுவதாகவும் எனக்குத் தோன்றுகிறது எனக் கூறுகிறார் (வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167) அதுமட்டுமின்றி தனித்த நீதிபோதனைக் கதைகள் பெயரளவுக்குக்கூட இல்லாமல் போவது என்பது இன்றைய குழந்தைகளுக்கு,
🎯எழுத்துக்களை இனம்பிரித்து அறியாமை
🎯சொற்களை எவ்விடத்தில் நிறுத்திப்படிக்கவேண்டும் என்பது குறித்த தெளிவின்மை
🎯படித்தபின்னர் கதையைத் தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியாமை
🎯படித்த பகுதியைப் பிறருக்கு எடுத்துச்சொல்லும் திறனின்மை
ஆகியவை ஏற்படவாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் தனித்த இலவச இணைப்பாக நீதிக்கதைகள் அதிகம் இடம்பெறச்செய்யின் இன்னும் நலம்பயக்கும் சிறார்களுக்கு!
துணைநின்ற நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்
2.முனைவர் இரா.குணசீலன.; நிற்க அதற்குத் தக ப.67
3.வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.பரமசிவம்
தமிழ் இணைப்பேராசிரியர்
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி திண்டல்,
ஈரோடு – 638 012.
Family In The Works Of V.Iraiyanbu|Dr P.Vignesh kumar
Abstract
If a society wants to progress or develop, it has to progress from Economically marginalised family to families living in urban areas. Every individual’s role is essential for that. The family plays a primary role in making an individual a good human being . Such a system of family organization as prevails in India is seen as a source of virtue and a school of virtue for the individual. The system of family system prevailing in our country from ancient times to modern times has been surprising to all the people of the world. This article examines how V. Iraianbu has expressed such thoughts and highlight the values about family in his works.
Keywords: Contemporary, Family, Passion, Marriage, Honesty, Togetherness, and Motherhood.
“வெ.இறையன்பு படைப்புகளில் குடும்பம்”
ஆய்வுச் சுருக்கம்
ஒரு சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமுகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் இன்றியமையாததாகும். தனிமனிதனைப் பண்புள்ள மனிதனாக மாற்றுவதில் குடும்பம் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் நிலவும் இத்தகைய குடும்ப அமைப்பு முறையானது அறத்திற்கு உட்பட்டதாகவும், தனிமனிதனுக்கு அறத்தைப் போதிக்கும் பள்ளியாகவும் விளங்குகிறது. நம் நாட்டில் நிலவும் குடும்ப அமைப்பு முறையானது பண்டைய காலம் முதல் சமகாலம் வரை உலக மக்கள் அனைவரும் கண்டு வியக்கும் விதத்தில் உள்ளது. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என்பதைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிப்புச் சொற்கள்: சமகாலம், குடும்பம், உணர்வு, திருமணம், நேர்மை, ஒற்றுமை, தாய்மை.
முன்னுரை
தனிமனித முன்னேற்றம் குடும்ப முன்னேற்றத்திற்கும், குடும்பம் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
குடும்பம்
ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் சேர்த்ததன் பிணைப்பாக உள்ளது. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது சமுதாயமாகும். அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. பண்பாட்டிற்கு ஒரு மனிதனைப் பண்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனை, “பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல் அல்லது திருந்துதல், திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளம் என்று சொல்வது வழக்கம்” (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும், ப.5) என்கிறது. ஒரு மனிதனின் வாழ்வியலை மேம்படுத்தும் ஆற்றல் பண்பாட்டிற்கு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் இந்தியாவில் நிலவும் குடும்ப கட்டமைப்பு உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
தாய் தந்தை என்னும் உணர்வு
தாய் தந்தை உணர்வு என்பது ஒரு வரம். மனிதனின் அடுத்த பரிமாணமே தாய் தந்தை என்னும் உணர்வு. கணவன் மனைவி இருவரும் தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும், அவர்கள் அதுவரை அடையாத மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனைப் பூனாத்தி என்னும் கதையில் “ஆசிரியர் தன்னுடைய மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார். டாக்டர் இது ரொம்ப விலை உயர்ந்த கர்ப்பம் எனவே எந்த வேலையும் செய்யாமல் எந்தப் பயணமும் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி சில குறிப்புகளைத் தந்தார். திரும்பி வரும்போது எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் புதிய அர்த்தம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” (பூனாத்தி, ப.115) என்கிறார். கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைவதுடன், இருவரும் தனக்கு மட்டுமின்றி தன் குழந்தைக்காகவும் வாழத் தொடங்குகிறார்கள். இந்த மாற்றம் அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்வதுடன், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணம்
ஆண், பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் முறையாகத் திருமணம் செய்து வைப்பதுபெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணமாகும். இவ்வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழ் மரபில் நிலவிவருவதை நாம் பார்க்கிறோம். சமகாலத்தில் மாறி வரும் சமுதாயத் தேவைக்கு ஏற்ப திருமணம் செய்வோரின் எதிர்பார்ப்பும், திருமண முறைகளும் மாறிவருகிறது. ஒருவர் உயர்ந்த வேலையில் இருக்கிறார் எனில் அவருக்கு உடனே பெண் தருகிறார்கள். மற்றொரு புறம் ஒருவர் நேர்மையாகப் பணி செய்து பொருள் ஈட்டினாலும் அவர் செய்யும் தொழிலைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பெண் தரச் சமுதாயம் மறுக்கிறது. அதனை ‘செருப்பு விற்பவர்’ என்னும் கதையில், சங்கர் செருப்பு விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவனது பெற்றோர்கள் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவன் செருப்பு விற்கும் கடையில் வேலையில் இருப்பதால் அவனுக்குப் பெண் தர மறுக்கிறார்கள். “பல வீடுகளில் செருப்பை எடுத்துக் கொடுக்கிற உத்தியோகமா” (நரிப்பல், செருப்பு விற்பவர், ப.51) என்று பெண் தரவில்லை. கடைசியில் ஓர் இடம் பிடித்தது. ஆனால் வந்தவள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகத் திருமணம் செய்து கொண்டாள். பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மணமகனுடன் சேர்த்து அவர்களுடைய வேலையைக் கவனிக்கிறார்கள், அத்துடன் சமுதாயம் ஒருவனின் வேலையை எவ்வாறு பார்க்கிறது என்பது வெளிப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் வேலையை மட்டும் பார்க்காது. அவர் செய்யும் வேலையில் நேர்மையாகப் பணம் பெறுகிறாரா என்பதையும், அவர் தனது பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும் பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பண்டைய காலத்தில் தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அகநானூறு,
“திண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி
……………………………………..
வதுவை நன்மணம் கழிந்த” (அகநானூறு.86)
என்னும் வரிகளில் திருமணத்தில் ஊர்ப் பொதுமக்கள், சான்றோர், உற்றார், உறவினர் பலரும் கலந்து கொள்வர். திருமண விருந்து இடையறாது நிகழும். நல்ல நாள் நிமித்தம் எல்லாம் பார்த்துள்ளனர். திங்களை ரோகிணி சேரும் நாளே திருமண நாள். மணவறையை அலங்கரிப்பர். கடவுளை முதலில் வணங்கித் தொடங்குவர். மணமுழவும் முரசும் ஒலிக்கும். மகளிரே திருமணத்தை நடத்தி வைத்தனர். வாகையில் கவர்ந்த இலையுடன் அருகம்புல் கிழங்குடன் கூடிய அரும்மை நூலால் கட்டி மணமக்களுக்குக் கைகளில் காப்புக் கட்டுவர். மண ஒலி முழவொலி மிக்க மணப்பந்தர். இழை அணி அணிவித்தல் (மங்கல நாண்) என்று குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. ஆனால் சம காலத்தில் ஒரு சில இல்லங்களில் பெண்களை வற்புறுத்தித் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்யப்பெறும் திருமணங்களால் எந்த ஒரு பயனும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையே மன வேறுபாடுகளும் சரியான புரிதலின்மையும் ஏற்படுகிறது. ஆதலால் ஆண்-பெண் இருவருக்கும் மணம் முடிக்க விருப்பம் எனில் அவர்களுக்கு மணம் செய்து வைக்க வேண்டும். அதுவே இன்பமாக வாழ வழி வகுக்கும்.
கணவன் மனைவி புரிதலின்மை
இல்லறம் நன்றாக இருக்க வேண்டுமெனில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும், சரியான புரிதலும் வேண்டும். இப்பண்பு நலன் சரியாக அமையப் பெறாதபோது விவாகரத்து நடைபெறுகிறது. இதனை ‘நண்பர்கள்’ என்னும் கதையில் ஜீவகாருண்யன் மிருதுனி இருவருக்குமான விவாகரத்து கோர்ட்டில் நடைபெறுகிறது. “நீதிபதி இருக்கையில் கம்பீரமாக தன்சிங் அமர்ந்திருந்தார். ஜோடியாக சிரித்துக்கொண்டே அந்த இருவரும் பேசியவாறு வருவதைப் பார்த்தார். காலம் காயங்களை ஆற்றும் என்ற பழமொழி சரிதான் என்று நினைத்துக் கொண்டார். “அவர்களிடம் உங்கள் முடிவில் மாறி விட்டீர்களா என்று கேட்க. அவர்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தோம். ஒன்றாக செல்வோம், மதிய உணவு அருந்துவோம், ஒருவரிடத்தில் ஒருவர் பேசுவோம். எங்கள் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அப்படியிருந்தவர்கள் தாம். எங்கள் அன்பு நன்றியறிதலாக எப்போதும் முகிழ்க்கும் எனச் சொல்ல நீதிபதி ரொம்ப மகிழ்ச்சி உங்கள் முடிவில் சரியாக இருக்கிறீர்கள் என்றேனும் புரிந்து ஒன்றாக வாழ்ந்தால் சந்தோசம் தான் என்று சொல்லி அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தார்.” (பூனாத்தி, பக்.29,30) என்று குறிப்பிடுவதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குமிடையே சரியான புரிதல் வேண்டும். ஏதோ ஒரு பிரச்சினை நடைபெறுகிறது என்றால் அது சில நாட்களில் மாறிவிடும். அதற்காக உடனே விவாகரத்துக்குச் சென்று விடக்கூடாது. ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்வதாகும். இதனை உணர்ந்து உண்மையான அன்பு கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்தனை வயதானாலும் அன்பு குறையாது என்பதைப் பாரதிதாசன்,
“புதுமலர் அல்ல காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்.
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியில்ல முகம் அவட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்பதொன்றே! (குடும்ப விளக்கு, முதியோர் காதல், ப.274)
என்னும் வரிகளில் வயதான தலைவன் தலைவியைப் பற்றிச் சொல்கிறார். அவளுடைய உடம்பானது புதிதாக மலர்ந்திருக்கும் புது மலர் போன்று இல்லை. காய்ந்து போன புற்கட்டை போன்றுள்ளது. அவள் அழகாக நடந்து செல்லும் பெண்ணைப் போன்று இல்லை. நடக்கும்போதே தள்ளாடி நடப்பவளாக இருக்கிறாள். நிலவைப் போன்று ஒளிவீசுவதாக அவளது முகம் இல்லை. வறட்சியுடைய நிலத்தைப் போன்று உள்ளது. அவளது கண்கள் குழிகள் உடையதாக உள்ளது. இப்படிப்பட்டவள் என்னுடன் வாழ்கிறாள் என்பது ஒன்றே எனக்கின்பம் தருகிறது என்கிறார். உண்மையான காதல் கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்துணை வயதானாலும் அன்பு குறைவதில்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துவதே இல்லறம் சிறப்பதற்கான வழியாகும்.
இல்லாளின் சிறப்பு
தற்காலத்தைப் போன்று பண்டைய காலத்துப் பெண்களும் இல்லறக் கடமைகளை ஆற்றுபவர்களாகவே இருந்துள்ளனர். கணவனைப் பேணுதலும், சமையல் செய்தலும், பிள்ளைகளை வளர்த்தலும், கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டைக் காத்தல் என்னும் வேலைகளைப் பெண்களே நெடுங்காலமாகச் செய்து வந்துள்ளனர். அவ்வாறு “வீட்டில் இருந்து இல்லம் சார்ந்த வேலைகளைச் செய்வதாலேயே பெண்களுக்கு “இல்லாள், மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம் பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர்களும் ஏற்பட்டன” என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். (பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், ப.63) என்கிறார்.
கணவன், மனைவி இருவரும் தன் குழந்தைகளிடம் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு தாய் தனது கணவன் இறந்ததற்குப் பிறகு தங்களுடைய குழந்தையை வளர்க்க எவ்வளவு கஸ்டப்படுகிறாள் என்பதை, ‘கைமுறுக்கு காரி’ என்னும் கதையில், பொன்னம்மா தனது கணவன் கணேசன் இறந்த பிறகு உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாது இருந்த போது, அவளது அம்மா சொல்லிக்கொடுத்த முறுக்குப் பிழியும் தொழில் ஞாபகத்திற்கு வருகிறது. அதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் வாங்கித் தொழில் செய்கிறாள். அதில் நல்ல முன்னேற்றமும், நல்ல லாபமும் கிடைக்கிறது. அதில் கிடைத்த பணத்தில் “பெரியவள் சாந்தியை திருமணம் செய்து கொடுத்தாள். பெண் லட்சணமாக இருந்ததால் நல்ல இடத்தில் திருமணம் செய்ய முடிந்தது. ஒருத்தியாகவே முன் நின்று கல்யாணம், வளைகாப்பு, பிரசவம் என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்” என்கிறார். (அழகோ அழகு, ப.21)
இல்லாள் தன்னுடைய கணவனின் இறப்பிற்குப் பிறகு தன்னம்பிக்கையை இழந்து விடவில்லை. தன்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அம்மா சொல்லிக்கொடுத்த கைத்தொழிலைச் செய்கிறாள். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்கிறாள் என்கிறார். இதன் வாயிலாக இல்லாள் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை தன்னுடைய பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவளாகத் திகழ்கிறாள் என்பது வெளிப்படுகிறது. தாய் தன் குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடையவளாக உள்ளாள் என்பதை குறுந்தொகை,
“கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,
…………………………………..
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்.” (குறுந்தொகை, பா.69)
என்னும் வரிகளில் கருமையான கண்களைக் கொண்ட ஆண் குரங்கு பெண் குரங்கு அதனின் குட்டிக் குரங்கு என ஒரு மரக்கிளையில் இரவு நேரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஆண் குரங்கு ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவுகிறது. இரவு நேரம் என்பதால் மற்றொரு கிளையை பற்றாது கீழே விழுந்து இறந்து விடுகிறது. ஆண் குரங்கிடம் மிகுந்த அன்பு கொண்ட பெண் குரங்கு இனி தானும் இறந்து விடவேண்டும் என்று எண்ணுகிறது. இருப்பினும் தன் வயிற்றை தொற்றிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கைப் பற்றி எண்ணுகிறது. தற்போது தன்குட்டி உள்ள நிலையில் அதனை விட்டால் அதனால் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவத் தெரியாது. அதனால் உணவைத் தேடி உண்ணத் தெரியாது என எண்ணுகிறது. ஒருபுறம் தன்னுடைய கணவனிடம் கொண்ட அன்பு, மறுபுறம் தன்னுடைய குட்டியை நினைக்கிறது. பிறகு தன்னுடைய குட்டியைச் சுற்றத்தாரிடம் சென்று சேர்த்து அதனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தானும் கணவன் சென்ற இடத்திற்குச் செல்கிறேன் என்று தன் உயிரை மாய்த்தது என்கிறது. இத்தகைய சிறப்பினை உணர்த்தவே வள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்று பெண்மையைப் போற்றுகிறார். இதன் வாயிலாக பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பை உணர முடிகிறது.
தாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தெரியும்
உலக மொழிகள் அனைத்திலும் பண்பு நிறைந்த சொல் அம்மா. உலக உயிரினத்தில் தன்னலம் கருதாது ஓர் உயிர் இருக்குமானால் அது தாய்தான். ஒரு பெண் தான் தாய்மை அடைந்தேன் என்று தெரியும்போது அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். அத்தகைய அம்மா என்னும் சொல்லுக்குப் பிறமொழிகளில் இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு. அம்மா ‘அ’ உயிர் எழுத்து தன்னுடைய குழந்தைக்கு உயிர் தருபவள். ‘ம்’ மெய்யெழுத்து உயிராகிய குழந்தை உறைவதற்கு உடல் தருபவள். ‘மா’ உயிர் மெய் எழுத்து பத்து மாதம் தன்னுடைய வலிகள் அனைத்தையும் மறந்து பெற்றெடுத்து உயிர்மெய்யாக உலகைக் காணச் செய்பவள் தாய். இதன் பொருட்டு அமைந்ததே அம்மா என்னும் சொல்.
அத்தகைய தாய்மை என்னும் உணர்வில் உள்ள சந்தோசம் மற்றொரு தாய்க்குத் தெரியும் என்பதை இறையன்பு, ‘பூனத்தி’ என்னும் கதையில் வரும் கதைத் தலைவனின் மனைவி ராஜிக்குக் குழந்தை பிறக்கிறது. அப்போது அவள் தான் வளர்த்த பூனை பார்த்தால் சந்தோசப்படும் என்பதை “அழகாக ஆண் குழந்தை பிறந்ததும் அதுநாள் வரை இருந்த தவிப்பு நீங்கியது. மறுநாள் என் மனைவி ஏங்க நம்ம குழந்தையைப் பார்த்தாப் பூனாத்தி சந்தோசப்படுமில்லே.” என்றாள் (பூனாத்தி, ப.119) என்கிறார். தான் தாய்மை அடைந்தேன் என்று தெரிந்ததும் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து தன் கையில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ராஜி தாய்மை அடையும் முன்பு தான் வளர்த்த பூனை குட்டி போட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவள் என்பதாலும் தாய்மையின் உணர்வைப் புரிந்தவள் என்பதாலும் தன்னுடைய குழந்தையைத் தான் வளர்த்த பூனை பார்த்தால் மகிழ்ச்சியடையும் என சொல்கிறாள். இங்கு ஒரு தாயின் உணர்வைப் பிறிதொரு தாய் உணர முடியும் என்பது வெளிப்படுகிறது.
முடிவுரை
சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும்.குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாக உள்ளது,கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைகிறார்கள்.பெற்றோர் தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவரது ஊதியத்தை மட்டும் பார்க்காது அவர் தனது பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும் பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பையும் அறிய முடிகிறது.
துணைநின்ற நூல்கள்
1. வெ.இறையன்பு – பூனாத்தி, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 641001. மூன்றாம் பதிப்பு 2017.
2. வெ.இறையன்பு – நரிப்பல் நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600050. ஏழாம் பதிப்பு 2019.
3. வெ.இறையன்பு – அழகோ அழகு, நியூ செஞ்;சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600098. ஏழாம் பதிப்பு 2019.
4. தேவ நேயப் பாவாணர், ஞா.- பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும், தமிழ் மண் பதிப்பகம், சென்னை- 600014. இரண்டாம் பதிப்பு, 2000.
5. நாகராசன்,வி. (உ,ஆ) – குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் (பி) லிட் அம்பத்தூர், சென்னை – 600098. முதல் பதிப்பு. 2004.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் பா. விக்னேஷ்குமார்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை – 600 077
Thoughts on the Upliftment of Humankind in Kalithogai|Dr S. Dhandapani
Abstract
For countless years, as a gracious message handed down by the wise and the learned, as a cultural emblem of the ancient Tamils, and as a perennial spring of knowledge overflowing with love, Kalithogai stands in the Ettuthokai as an agam (interior/love) anthology. While attempting to explore and understand the messages contained in Kalithogai, certain ideas related to the upliftment of humankind that touched my heart appeared repeatedly. This article proceeds with the aim of presenting those ideas under the following subheadings: True wealth that humanity should attain Nothing in this world belongs to us; nothing is permanent One should understand human nature and live accordingly No occupation is inferior One should not burden others by sharing one’s own suffering Control of the mind is essential The principles of the forefathers are the path to progress Patience alone leads to success Today’s reality becomes tomorrow’s dream Through these themes, this article undertakes a journey to highlight the humanistic and progressive thoughts found in Kalithogai.
“கலித்தொகையில் மனிதகுல மேம்பாட்டுச் சிந்தனைகள்!”
முன்னுரை
ஆண்டாண்டு காலமாய் ஆன்றோர்கள் சான்றோர்கள் அருள்வாக்காய், ஆதிகாலத் தமிழரின் அடையாளச் சின்னமாய், ஆயுளெல்லாம் அன்பு சுரக்கும் அறிவுச்சுணையாய் எட்டுத்தொகையில் அகமாய் அமைந்த கலித்தொகையில், அறிய வேண்டிய செய்திகளை ஆராய முற்பட்டபோது, ஆங்காங்கே கண்பட்டு என் நெஞ்சம் தொட்ட சில மனித குல மேம்பாட்டுச் சிந்தனைகளைத் தொகுத்துக் கூறும் நோக்கில் இக்கட்டுரைப் பயணிக்கின்றது. மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்து சொத்து சுகம் தேடி அலையும் மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்துக்களைப் பழமொழிப் பாங்கில் பட்டியலிட்டுத் தந்துள்ளது கலித்தொகை.
“ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தார்க்கு உதவுதல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” (நெய்தற்கலி 133: 6-14 )
இல்லறம் நடத்துதலில் சிறந்த செயல் என்பது வறியவர்க்கு ஒன்றை உதவுதல். அகவாழ்வில் பாதுகாத்தல் என்பது துணையைப் பிரியாதிருத்தல். மக்கட் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல். அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரை அனுசரித்து நடத்தல். அறிவு எனப்படுவது அறிவு அற்றவர்களின் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல். நட்பில் உயர்ந்த பண்பு எனப்படுவது முன்பு நாம் கூறியதை பின்பு மறுக்காது இருத்தல். நிறை எனப்படுவது மறைபொருளை பிறர் அறியாமல் பாதுகாத்தல். ஆட்சியில் முறை செய்தல் என்பது கொலை குற்றம் புரிந்தோர்க்கு இரக்கமின்றி மரண தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை பழிப்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல் என்று வாழ்வின் உயரிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறது கலித்தொகை.
இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று
களவு ஒழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் பெற்றோர் அவளை அயல்மணம் பேசுகிறார்கள். அதனை அறிந்த தலைவி, தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். செவிலித்தாய் அவளை பல இடங்களில் தேட, எதிரில் வந்த அந்தணரிடம் இது பற்றி வினவ, அவர் செவிலித் தாய்க்குக் கூறிய ஆறுதல் உலக இயல்பினை எடுத்துரைப்பதாக இருந்தாலும் இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று: என்ற தத்துவத்தையும் உணர்த்துவதாக உள்ளது.
“பலவுரு நறுந் சாந்தம் படுப்பவர் கல்லதை
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையவளே” (பாலைக்கலி 9:11-19 )
மனித சுபாவம் அறிந்து பழகிட வேண்டும்
பக்கத்தில் இருக்கும் வரை ஒருவரைப் பாராட்டி புகழ்வது, அவர் சென்றவுடன் அயலாரிடம் அவர் மீது பழித்துற்றுவது போன்றவை அற்பர் செயல்கள் எனக் கலித்தொகையில் சுட்டப்பட்டுள்ளது.
“சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி மற்றுஅவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்” (பாலைக்கலி 25: 15 -16 )
செல்வக் காலத்தில் ஒருவரோடு நட்பு கொண்டு அவரது செல்வத்தை அனுபவித்து விட்டு அவர் வறுமையுற்றபோது ஓர் உதவியும் செய்யாத நன்றியறிவு அற்றவர், நட்புணர்வு அற்றவர் என்று பாலைக்கலியில் குறிப்பிட்டுள்ளது.
“செல்வத்துள் சேர்ந்து அவர் வளன்உண்டு மற்றுஅவர்
ஒல்கிடத்து உலப்பு இலா உணர்விலார் தொடர்பு போல்” (பாலைக்கலி :25:19-20)
ஒருவரோடு நட்பு கொண்ட காலத்தில் அவரைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்டு அந்த நட்பு மாறிய பொழுது அதை பிறருக்குக் கூறும் பெருமையற்றவர் உறவை பீடிலார் தொடர்பு என்கிறது கலித்தொகை.
“பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து அம்மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்புபோல்” (பாலைக்கலி :25:23-24)
ஒருவரது முகம், கடன்பெறும் போதும் அதைத் திருப்பிக் கொடுக்கும் போதும் வேறுபடுவது புதிதல்ல. இந்த இயல்பு உலகத்தில் என்றும் உண்டு என்ற உளவியல் பார்வையும் கலித்தொகையில் உள்ளது.
“உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேராகுதல்
பண்டும் இவ்வுலகத்து இயற்கை” (பாலைக்கலி :22:1-3)
சிற்பி ஒரு சிலையைச் செதுக்கும் பொழுது அதில் அமைத்த உணர்வுகள் யாவும் இறுதிவரை அதில் புலப்படும். அதுபோல நற்பண்பு உடையவர் வாக்கின் உண்மையை இறுதிவரை காப்பாற்றுவர் என்று மனிதர் இயல்பைத் தெளிவாக உரைத்துள்ளது கலித்தொகை.
“தாய்உயிர் பெய்த பாவை போல
நலனுடையார் மொழிக்கண் தாவார்” பாலைக்கலி :22:5-6
செய்யும் தொழிலே தாழ்வில்லை
நான் மோர் விற்றுத் திரிவது எம் குலத்துக்குத் தீதன்று. எம் சுற்றத்தார் ஆயராதல் போல் நானும் ஆய்ச்சியே. ஆதலால் நான் மோர் விற்பதில் எந்தத் தீமையும் இல்லை என்ற தலைவியின் கூற்று செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்துகின்றது. மேலும் குலத்தொழிலின் அவசியத்தை வற்புறுத்துகின்றது. அதுமட்டுமன்றி குலத்தொழிலை வெறுக்கும், ஏற்றுக்கொள்ள மறுக்கும் இன்றைய கால இளைஞர்களின் மன நிலைக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது.
“அஃது அவலம் அன்று மன
ஆயர் எமரானால் ஆயத்தியேம்” (முல்லைக்கலி 108:9-10 )
நமது துயரத்தைப் பிறருக்குக் கடத்துதல் கூடாது
ஆய்ந்து செய்த அணிகலன்களை உடையவளே! பயனில்லாதவற்றைக் கூறாதே. தொலைநாட்டில் உள்ளவர்க்கு நம் துயர் கூறி தூது அனுப்ப வேண்டாம் என்ற தலைவியின் கூற்று நமது கஷ்டங்களைப் பிறருக்குச் சொல்லி அவர்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற அற்புத நெறியை உணர்த்துகின்றது.
“ஆயிழாய்! ஆங்கனம் உறையாதி சேயோர்க்கு
நாம்தூது மொழிந்தனம் விடல் வேண்டா” (பாலைக்கலி 28:21-22)
மனத்தை அடக்கினால் வாழ்வை வெல்லலாம்!
சுருக்கமாகப் பேசும் திறன் உடைய தோழி தொலைநாட்டுக்குச் சென்றவரை எண்ணி வருந்தும் என் மனத்தை நீ கூறும் அளவைவிட மிகுதியாகவே கட்டுப்படுத்துகின்றேன். ஆனால் அந்தக் கட்டுப்பாடு உடைகின்றது என்ற தலைவியின் கூற்று மனத்தை அடக்கி ஆளும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதோடு மனத்தை அடக்குதல் எளிதன்று, நாம் எடுக்கும் பயிற்சியும் முயற்சியும் நமது மனத்தை அடக்கினால் நம்மை வெல்வது எளிதன்று என்பதை அருமையாக எடுத்துரைக்கின்றது.
“சேயார் கட் சென்ற என் நெஞ்சினைச் சின்மொழி
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்மன்” (பாலைக்கலி 29:10-11)
முன்னோர் கொள்கையே முன்னேற்றப் பாதை
தலைவன் தனக்கென்று ஒரு மனை அமைத்துக் கொள்ளும் பொருள்வளம் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ளும் தகுதியை அடைகிறான் என்பது முன்னோர் கொள்கை. இக்கொள்கைக்குச் சான்று முல்லைக்கலியின் பாடல்.
“முற்றிழை ஏஎர் மட நல்லாய் நீயாடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான்” (முல்லைக்கலி 111:8-12)
சங்ககாலத்தில் களவுக் காதல் சமுதாயத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆயினும் திருமணம் பெற்றோராலும் சுற்றத்தாராலுமே முடிவு செய்யப்பட்டது. எனினும் பெண்ணின் காதலைப் பெற்றோர் அறிந்த பின்பும் ஆடவனின் குணச்செயல்களைப் பற்றி நன்கு கேட்டறிந்த பின்னரே திருமணத்தை முடிவு செய்வர் என்பதையும் கலித்தொகையின் பாடல் விளக்குகிறது.
“மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது எனக்கேட்டுத் திண்ணிதாத்
தெய்வம் மால் காட்டிற்று இவட்கென” (முல்லைக்கலி 107:30-33)
குறிஞ்சி நிலமக்கள் வேங்கை மர நிழலில் இருந்து மணம் பேசி முடிவு செய்தலும் திருமணம் நடத்துவதும் சங்ககால வழக்கமாக இருந்திருக்கின்றது.
“மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் நம்மலை கிழவோற்கே” (குறிஞ்சிக்கலி :41:44-45)
கணவர் இறந்தபின் கற்புடைய பெண்டிர் வானுலகில் அவரை மீண்டும் தன் கணவனாகப் பெறுவர் என்ற நம்பிக்கையை நெய்தற் கலியில் காணமுடிகிறது.
“மாண்ட மனம்பெற்றார் மாசில் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல்” நெய்தற்கலி :143:45-46
நிதானம் வெற்றிதரும்
ஒரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்தபோது அவன் வாயிலில் வந்து நின்று தாகம் என்றான். அன்னையும் பொற்சொம்பில் நீர் ஊற்றி அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய் என்றாள். நானும் வீட்டிற்கு வந்தவன் யார் என்று தெரியாமல் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தேன். அப்போது தான் தெரிந்தது அவன் என்னவன் என்று. அவன் என்னை இறுகப் பிடித்து இழுத்தான். நான் திடுக்குற்று அஞ்சி அம்மா என்று கத்தினேன். அன்னையும் அலறி ஓடி வந்தாள். நான் நடந்ததை மறைத்து தண்ணீர் பருகிய போது விக்கினான் என்றேன். அன்னையும் அதனை நம்பி மெல்லவே பருகலாகாதா? என்றாள். (நடந்தத அறியாமலே). அந்தக் கள்ளன் கடைக் கண்ணாலேயே என்னை கொன்று விடுபவனைப் போல பார்த்தான். கலித்தொகையின் இப்பாடல் ஒரு புரட்சியை ஏற்படுத்திய பாடல். என்னவென்றால், கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கே உரித்தானது என்பது பண்டுதொட்ட சிந்தனை. பாரதிதாசனும் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற இலக்கியத்திலே “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படி கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கானது என்ற ஒரு பிம்பத்தை கலித்தொகை மாற்றி ஆண்களுக்கும் கடைக்கண் பார்வை உண்டு என்ற புரட்சி விதையை இங்கே விதைத்திருக்கிறது. மேலும் நடந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பெண்ணின் அன்னையின் மெல்லவே பருகலாகாதா? என்ற கூற்றில் நமக்கானது நமக்கு கிடைக்கும் அவசரம் வேண்டாம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் எதிலும் நிதானம் தேவை. நிதானமே வெற்றி தரக்கூடியது என்பதை நகைச்சுவையோடு இப்பாடல் வலியுறுத்தி இருக்கிறது.
“அன்னையும் யானும் இருந்தேமா இல்லீரே
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” ( குறிஞ்சிக்கலி :51:5-15)
நனவே கனவாகும்
விழிப்பு நிலையில் ஆழ்மனத்தில் படிந்த நினைவே கனவிற்குக் காரணம் என்ற ஃபிராய்டின் கருத்திற்கு கலித்தொகை பாடல் ஒன்று வலு சேர்த்திருக்கிறது.
“நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇப்” (குறிஞ்சிக்கலி 49:3-4)
வளைவான வரிகளை உடைய புலியைத் தாக்கி அதனை வென்ற முயற்சியில் மலைச்சாரலில் உறங்கும் யானைக்கு அந்த நினைவு மனத்தில் இருந்ததால் கனவிலும் அப்புலியைக் கண்டு அங்கு பூத்திருந்த வேங்கை மரத்தை அப்புலி என்று கருதி தன் வலிமையால் வந்த கோபத்திற்கு குத்தி அடியோடு குலைத்து கோபம் தணிந்தது என்று உதாரணமும் தந்துள்ளது.
முடிவுரை
மனித குல வாழ்விற்கான உயரிய வாழ்வியல் நெறிகளை பழமொழிகளைப் போன்று ஒரே வரியில் வளமான சான்று ஆதாரங்களோடு தந்திருக்கின்ற கலித்தொகையைக் கல்விமான்கள் புலவர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் அனைவரும் “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று புகழ்வது பொருத்தமுடையதே என்பதற்கு மேற்கூறியவைகளே சான்றாதாரங்களாகும்.
ஆய்வுக்குப் பெரிதும் துணை நின்ற நூல்
சங்க இலக்கியம் மூலமும் உரையும் ( தொகுதி-6), உரையாசிரியர் முனைவர் சுப. அண்ணாமலை முதன்மை பதிப்பாசிரியர்கள் முனைவர் தமிழன்னல் & முனைவர் சுப. அண்ணாமலை கோவிலூர் மடாலய பதிப்பு வருத்தமானன் பதிப்பகம். முதற் பதிப்பு: ஏப்ரல் 2003
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சீனு. தண்டபாணி,
இணைப் பேராசிரியர் மற்றும் மொழித்துறைத் தலைவர்,
சாரதா கங்காதரன் கல்லூரி (தன்னாட்சி),
வேல்ராம்பட்டு, புதுச்சேரி.











ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


