Saturday, April 4, 2026
Home Blog Page 3

Portrayal of Women Characters in the novel Anjalai by Kanmani Gunasekaran|S. VIJI

Abstract
         
       The creator draws inspiration from various aspects of what they see, the experiences they face, and the thoughts shaped by their imagination, and transforms them into characters in the novel. They often get a special place in the mind of readers and they also play an important role in making the characters lively. They drive the progress of the story and ensure its continuity. The novels which have women as lead of the story depict the livelihood of the women. Kanmani Gunasekaran’s women characters also lead a life that depicts these lines. These characters are often weak and lead a low-life. Anjalai Novel explains the livelihood of the women’s life, how it relates with the real life, is the society changed or the old traditions binding the women and this essay analyses the above aspects and gives the findings.


“கண்மணி குணசேகரனின் அஞ்சலை நாவலில் பெண்பாத்திரப்படைப்பு”

முன்னுரை
            
        படைப்பாளர் தான் பார்க்கும் பல காட்சிகள் மூலமாகவும் தனக்குள்ளாகவும் தோன்றும் பலவித எண்ணங்கள் கற்பனைகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டை  கதைமாந்தர்களாக உருவாக்கம் செய்கிறார். நாவல்களில்  கதை மாந்தர்கள் நீங்காத இடத்தை பிடிக்கின்றனர்.கதையின் உயிரோட்டத்திற்கு உதவுகின்றனர்.நாவலின் வளர்ச்சிப்போக்கு  அவர்களை கொண்டே  முன்னேறி செல்கிறது. பெண் கதை மாந்தர்களை தலைமை மாந்தர்களாக வைத்து எழுதப்படும் நாவல்கள் அவர்களின் வாழ்வியலை  எடுத்துரைக்கிறது. இவ்வரிசையில் எழுத்தாளர் கண்மணிகுணசேகரன் அவர்கள் எழுதிய அஞ்சலை நாவலில் இடம்பெறும்  பெண் கதை மாந்தர்களின் வாழ்க்கை முறைகள்  நம் வாழ்வியலோடு எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றியும் பெண்களின் வாழ்வு இக்காலத்தில் மாற்றம் பெற்றுள்ளதா இல்லை இன்னும் பழைய மரபுகளின் முறையே உள்ளதா என்பது பற்றியும்  ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அஞ்சலை
       
       அஞ்சலை  நாவலின் கதை நாயகி.  உழைக்க அஞ்சாதவள் வயல் வேலைகளில் பந்தயம் வைத்து எப்போதும் முந்துவாள். நாற்று நட, களைபறிக்க ,நெல்அடிக்க என அனைத்து வேலைகளையும்  ஆண்களுக்குச் சமமாக செய்பவள். வேலை செய்யும் இடத்தில் ஆண்களிடம் பதமாய் நடந்து கொள்வாள். எல்லா வயல்களின் நடவிலும் இவளின் விரல் நுழைந்து பயிர்களை ஊனியிருக்கிறது.எல்லா பயிர்களுக்கும் குனிந்து களை எடுத்திருக்கிறாள். விளைந்த எல்லா வயல்களிலும் அரிவாள் பாய்ந்திருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பல கனவுகளோடு காத்திருந்த    பருவப்பெண். ஆனால் அவளுடைய வாழ்வை  ஆண் பெண் அனைவரும்  காயப்படுத்துபவர்களாக  அமைந்தனர்.  அக்காவின் கணவன்  அஞ்சலையின் மீது ஆசைப்படுகிறான். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே மாமா சின்னசாமி அனைவரையும் ஏமாற்றி  மாப்பிள்ளையை மாற்றி காண்பித்து  திருமணம் செய்து  வைக்கிறான். தாலி கட்டியவனைப்  பார்த்ததும்  அஞ்சலைக்கு மயக்கமே வந்துவிடுகிறது. அவளுடைய  திருமணக்கனவுகள்  அனைத்தும்  சிலநொடிப் பொழுதில்  தூளாகிப்போனதை எண்ணி நெஞ்சம் குமுறுகிறாள்.”என்ன ஏமாத்திட்டிங்கடா என்ன ஏமாத்திட்டிங்கடா ஆள்மாறாட்டம் பண்ணி என்னக் கொன்னுட்டிங்கடா”-என அழுது புலம்பினாள். (அஞ்-ப-55)        
          பெண்ணுக்கு அச்சம், நாணம், மடம் ,பயிர்ப்பு  எனும் நான்கு பண்புகளை விதித்தது சமூகம். (அச்சம் –பயம்,நாணம்-வெட்கம்,மடம் – நெறிப்படி நடத்தல், பயிர்ப்பு- அருவருப்பு) பெண்கள் அவளாகச் சிந்தித்து பார்க்கக்கூடாது  பெற்றோர் முடிவு செய்யும் ஆணுக்கு கழுத்தை நீட்ட வேண்டும் ஆமையாகப் புலனடக்கி வாழவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தியது.  இது போன்ற அறியாமைக் கருத்துகளை அடியோடு அழித்திட துடித்த பாரதிதாசன்

”தனித்துக் கிடந்திடும் லாயம் –அதில்
தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும்
கணைத்திட உத்தரவுண்டு-வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்”  (35:பெண்ணுக்கு நீதி தொகுதி)
         
         எனப் பெண் அடிமைத்தனத்தைச்  சாடுகிறார். இந்நூல்களையெல்லாம்  படித்திராத அஞ்சலை இயல்பாகவே அச்சம் என்பதை அறியாதவள்  உழைக்க  அஞ்சாதவள் அதனால் யாருக்கும் நாம் அடிமையில்லை  என்பதை உணர்ந்தவள். பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக இல்லாமலிருந்தாலும்  பாரதிதாசன் காண விரும்பும் தமிழ்ப்பெண்ணாக  விளங்குகிறாள். கணவனின் அண்ணனை மாப்பிள்ளை என காண்பித்து ஏமாற்றியதை  தாங்கிக் கொள்ள முடியாமல் தக்காளிச் செடியாய் வதங்கினாள்.மணக்கொல்லையை பார்க்கும் ஆவல் தலைகீழாகி விட்டது.  திருமணம் முடிந்து விட்டது இனிமேல் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும்  என்று  மற்ற பெண்களைப் போல் எண்ணாமல்  பிடிக்காதவனோடு  வாழ்வதில்லை என முடிவு செய்யும் இடத்தில் அச்சமற்ற பெண்ணாக விளங்குகிறாள்.
        
      தன்னுடைய  பிறந்த ஊரான கார்குடலுக்கு போக மனமில்லாமல் மணக்கொல்லையிலே தங்கிவிட்டாள். கணவனிடம்  அடிஉதை வாங்கிகொண்டு அவனுடனே இருக்காமல் திருமணபந்தத்தை உதறிவிட்டு கிளம்புகிறாள். வழியில் தன் அக்காவைப் பார்த்து அவளுடன் தெளார் செல்கிறாள். அக்காவின் கொழுந்தனை மறுமணம்  செய்துகொள்கிறாள். ஆசையுடன் தொடங்கிய வாழ்வு அக்காவிற்கும் கொழுந்தனுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பால் அர்த்தமற்று போகிறது. அவள் வயிற்றிலிருந்த குழந்தை வாழச்சொல்லி கட்டாயப்படுத்தியது. அக்காவின் அனைத்துப்பேச்சுகளையும் மறந்து போகும் வகையில் அழகாக பிறந்தாள் நிலா. மறுமணம் செய்த கணவனின் ஆதரவும் பொய்த்துப்போக  தாய் வீட்டிற்கு செல்கிறாள்.
        
        வள்ளியின் ஆசைப்படி மணக்கொல்லைச் சென்று  முதல் கணவனான மண்ணாங்கட்டி என்கிற கணேசனிடம் வாழ்கிறாள். ஆண்களுக்கு எதிலும்  கட்டுப்பாடு வைக்காத சமூகம் பெண்களின்  இயல்பான ஆசையைக்கூட ஏளனமாய் பேசுகிறது. அஞ்சலையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாதவர்கள் அவளை இழிவாகபேசுகிறார்கள். உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் வடிகால் தேடும் இடங்களில் ஏமாற்றப்படுகிறாள். அக்காவின் கணவன் தொடங்கி கணேசன் அவனுடைய அண்ணன் மத்தளக்காரன் மறுமணம் செய்த ஆறுமுகம் வேலை செய்யும் இடங்களில் உள்ள பண்ணையார்கள் என அனைத்து ஆண்கள் மட்டுமல்லாமல் அக்கா ஓப்படியா என பெண்கள் பலரும் அஞ்சலையின் வாழ்வை காயப்படுத்துகிறார்கள். தன்னுடைய  மகள் நிலாவை குழந்தையிலேயே அம்மா வீட்டில் விட்டுவிட்டாள்.  மகளை தம்பி திருமணம் செய்து கொள்வான்  என்ற  ஆசையும் பொய்த்துப் போகிறது. நிலாவை தன்னுடன் தங்க அழைத்து வருகிறாள். ஆனால் கணவன்  கணேசனுக்கு  அஞ்சலையின் செயல் பிடிக்கவில்லை. அஞ்சலையை அடித்து கேவலமாக பேசுகிறான். முந்திரி  காட்டுக்குள்  தூக்கு போட்டுக் கொள்பவளை  பிள்ளைகள் காப்பாற்றுகிறார்கள். ஆண்கள் இரண்டு மூன்று என திருமணம் செய்தாலும் குறை  சொல்லாத இச்சமூகம்  பெண்கள்  இச்செயலை செய்தால் அவமானப்படுத்துகிறது. அஞ்சலையின்  எண்ணமும் ஏக்கமும் எல்லாப்பெண்களுக்குள்ளும் ஏற்படும் இயல்பான ஆசைதான். அந்த ஆசை நிராசையாகும் போது  எடுத்த முடிவுகள்  அவளை  வாழ்க்கை முழுவதும் அழவைக்கிறது.

பாக்கியம்         
       அஞ்சலையின் அம்மா. கணவன் இல்லாமல் நான்கு பிள்ளைகளை தனியாக வளர்த்தவள்.இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்துவிட்டாள். மூன்றாவது பெண் அஞ்சலைக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை  தேடிக்கொண்டிருந்தாள். பாக்கியத்தின்  எண்ணத்தை அறிந்த மூத்த பெண் தன் கொழுந்தனுக்கு அஞ்சலையை கேட்டாள். இளைய மருமகன் தனக்கு தருமாறு கேட்டான். பாக்கியம் செய்வதறியாது திகைத்தாள். மனதிற்குள்  கணவன் குட்டாரு வந்தான். பேர் போன வேலைக்காரன்  போற இடத்தில் வஞ்சனையில்லாமல்  வேலை செய்வான்.“காற்றே இல்லாத சமயங்களில் கூட வாட்டப்பலி விட்டால் அப்பிடி தூசும் பதரும் பிரிந்து போகும். அந்த வாட்டப்பலியில்  மயங்கி மாவிடந்தல்காரி  பாக்கியம்  அவனை  திருமணம் செய்து கொண்டாள்”.   (அ-ப-26) அள்ளிக்கெடாசினால் விளைந்து சரிகிற வயக்காடு  குட்டாருக்குச் சளைக்காமல்  பாக்கியத்திற்கும் கூழாய்க் குழைகிற சேற்றில் முப்போக விளைச்சலில் பஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது. மூனு பெண் பிறந்து நாலாவதாய் பையன் வயிற்றிலிருக்கும் போது ஏதோ கடித்து  மயங்கி விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தந்தை இல்லாத குறையே தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தாள். சின்ன மருமகன் பேச்சை நம்பி அஞ்சலையை  மணக்கொல்லையில் திருமணம் செய்து வைத்தாள்.   அஞ்சலை  கணவனுடன் கார்குடலுக்கு  வருகிறாள்.  தன் மகளுடன்  வரும் மாப்பிள்ளை மண்ணாங்கட்டியைப்  பார்த்ததும்   அனைவரும்  மருமகன் சின்னசாமியால் ஏமாற்றப்பட்டதை  உணர்ந்து துடிக்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து வருந்துகிறாள்.
         
      மணக்கொல்லையை விட்டு கைக்குழந்தையுடன்  வரும்  மகளை ஆதரிக்கும் இடத்திலும்  அஞ்சலைக்கு  துரோகம் செய்த மூத்த மகளை கண்டிக்கும் இடத்திலும்  தாய்மையின் உண்மை வடிவமாக திகழ்கிறாள். சிறுவயது முதல்  உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறாள். ஒருமகள் குடிகார தம்பியிடமும் இன்னொரு மகள்  பொருத்தமில்லாத கணவனிடமும்  வாக்கப்பட்டதை  எண்ணி  வருந்துகிறாள். ஊராரின் ஏச்சுக்கும்  பேச்சுக்கும்  ஆளாகி  தனியே நிற்கும் போது கணவனை இழந்த   பெண்களின்  ஏக்க மனதையும் இயலாமை நிலையையும்  வெளிப்படுத்துகிறாள்.

வள்ளி            
        மணக்கொல்லையில் பிறந்தவள். அஞ்சலையின்கணவன் மண்ணாங்கட்டிக்கு  சகோதரி உறவு அண்ணி அண்ணி என்று அவள் கொடுத்த பாசம்தான் அஞ்சலையை  மணக்கொல்லையில் வாழவைத்தது.  பேசுவதற்கும்  முந்திரி காட்டிற்கு போவதற்கும்  வள்ளிதான் துணை.

“ நவில்தொறும்  நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை  யாளர்  தொடர்பு”(தி-அ-79)
         
         என்னும் குறளுக்கேற்ப  வள்ளியிடம் பழக பழக அஞ்சலைக்கு  இன்பத்தை தந்தது அவளுடைய நட்பு. மூத்தார் மீது கொண்ட ஆசை தவறு என அஞ்சலைக்கு  எடுத்து கூறி  அவளின்  மனத்தடுமாற்றத்தை  சரிபடுத்தியவள்.  வள்ளி பவழங்குடியில் இருக்கும் மாமனுக்கு  வாக்கப்பட்டு போகப் போகிறாள் என்பதை அறிந்த அஞ்சலை மனம் ஒடிந்து போகிறாள்.   தனக்கு   இருந்த ஒரு துணையும் மணக்கொல்லையை விட்டு போவதை அவளால் ஏற்று கொள்ளமுடியவில்லை. அஞ்சலையின் ஓப்படியா அவளை  என்னவெல்லாம்  பேசப்போகிறாளோ  என்பதை நினைத்த வள்ளியால் பவழங்குடிக்கு  மகிழ்ச்சியாக செல்லமுடியவில்லை.  
               
        அவள் நினைத்தது  போலவே ஓப்படியாவின் பேச்சையும் கணேசனிடம் வாங்கிய அடியையும் தாங்கமுடியாமல் அஞ்சலை  மணக்கொல்லையை  விட்டு போய்விடுகிறாள். சிறிது காலம்  கழித்து தன்னுடைய வீட்டிற்கு வரும் அண்ணி அஞ்சலையை அன்போடு வரவேற்கிறாள் வள்ளி. “அண்ணி நான் மட்டும் இருந்திருந்தா உன்ன மணக்கொல்லையை விட்டு போக விட்டிருக்கமாட்டேன்” (அ-ப-73) என்று  வள்ளி  கூறுவதிலிருந்து அவளுடைய  உண்மையான பாசம் நமக்கு புரிகிறது. நல்ல பண்பு நலன்களை பெற்றிருந்த  வள்ளி  தன்னுடன்  நட்பு கொண்ட   அஞ்சலை நல்ல வழியில்  செல்வதற்கு  அறிவுரை  வழங்கும் இடத்தில் அவளின்   அன்னையாகவே தெரிகிறாள்.

“ மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா–கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே  சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்”(மூதுரை-12)
         
       உருவத்தால் பெரியவர் குணத்தால் சிறியவராதலும் உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியவராதலும் உண்டு  என  ஔவையார் கூறுவது போல்  அதிகம் கல்வி கற்காவிட்டாலும் அஞ்சலையை விட சிறிய பெண் என்றாலும்  வள்ளி குணத்தால்  அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறாள்.போக்கிடம்இல்லாத அஞ்சலையை மீண்டும் மணக்கொல்லைக்குஅழைத்து வந்து கணேசனுடன்  வாழ வைக்கிறாள்.

கல்யாணி            
      அஞ்சலையின் மூத்த அக்கா  தன்னுடைய கொழுந்தனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டவள்.  கணவன் வீட்டை விட்டு வந்த அஞ்சலைக்கு ஆதரவு தந்தவள். கொழுந்தனுக்கு தன் தங்கை  அஞ்சலையை  மறுமணம்  செய்து வைத்தாள். அக்காவின் அன்பு உண்மை  என்னு  நம்பிய அஞ்சலை  அத்தனையும்  நடிப்பு எனத்தெரிய வரும்  போது    உறவுகளையே வெறுக்கிறாள்.கணவன் இருக்க அவனுடைய தம்பியின் மீது ஆசைப்பட்டு  தகாத உறவு வைத்துக்கொள்கிறாள்.

“ புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறுபோல் பீடு  நடை”    (தி-அ-6)
         
       என்று திருவள்ளுவர் கூறுவது போல் ஒழுக்கமில்லாத  மனைவி அமைந்ததால் கல்யாணியின் கணவன்  தலைகுனிவுடன் வாழ்கிறான். தனது கவலையை மறக்க நிறைய குடிக்கிறான்.தன்னை மறந்த நிலையில்  கல்யாணியின் ஒழுக்கம் தவறிய செயல்களை சொல்லி புலம்புகிறான் .இதனை கேட்கும்  அஞ்சலை முதலில் நம்ப மறுக்கிறாள். தன்னுடைய கண்களால் பார்த்தபிறகு  அக்காவையும் கணவனையும் நினைத்து நெஞ்சம் கலங்குகிறாள். அதைப்பற்றி எல்லாம் கல்யாணி கவலைப்படுவதே இல்லை. கொழுந்தனுடன்  மகிழ்ச்சியாக இருக்கிறாள். தங்கையை கொடுமைப்படுத்துகிறாள்.  அஞ்சலை கர்ப்பமானது தெரிந்தவுடன் கோபமும் எரிச்சலும் அடைகிறாள். தனக்கு கிடைக்காத பிள்ளை பாக்கியம் தங்கைக்கு கிடைத்துவிட்டதே என எண்ணி ஆத்திரத்துடன் அஞ்சலையை சித்திரவதை செய்கிறாள்.  கர்ப்பமான பெண் என்றும் பாராமல் வேலை வாங்குவதுடன்  அடித்து காயப்படுத்துகிறாள். சாப்பாடு தராமல் தவிக்கவிடுகிறாள். ஆசை வார்த்தைகளை கூறி தங்கையின்   வாழ்வை அடியோடு மாற்றி  அல்லல்படுத்தியவள்.  தனக்கு பிள்ளை பிறந்தவுடன்  தங்கையை  வீட்டை விட்டு  துரத்தும்  இரக்கமற்றவளாக  இருக்கிறாள்.  அஞ்சலையின் மகள் நிலாவை தம்பி திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில்   தன்னுடைய  பெண்ணை கட்டித்தருவதாக  சொல்கிறாள்.    அவளுடைய  கொடுமை  அஞ்சலையோடு நின்றுவிடாமல்  நிலாவிடமும்  தொடர்ந்தது. தன்னுடன் பிறந்தவள் என்கிற அன்பு சிறிதும் இல்லாமல்  வாழும்  அவள்  நம் வாழ்வில் சந்தித்த  சிலரை நினைவுபடுத்துகிறாள்.

நிலா                      
      அஞ்சலைக்கும்  ஆறுமுகத்திற்கும்  பிறந்த மகள். பாட்டி பாக்கியத்திடம் வளர்ந்தவள் தாய் தந்தை  அன்பை முழுவதும் பெறாதவள். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தாயினால்  அவள் படும்  அவமானங்கள்  சொல்லில் அடங்காதவை .மாமன்  தன்னை திருமணம் செய்து கொள்வான்  என நினைத்ததும் நடக்காமல் போனதால்  தந்தையான ஆறுமுகத்திடம் வருகிறாள். அங்கு தன் பெரியம்மா கல்யாணியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறாள். தங்கையின் மகள் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல்  நிலாவை அடித்துக் காயப்படுத்துகிறாள். கல்யாணியின் கொடுமை தாங்க முடியாமல்  தாய் அஞ்சலையுடன்  மணக்கொல்லைக்கு  செல்கிறாள்.
               
       அந்நிலவினைப்போல்  இந்நிலாவின் மனதிலும்  களங்கமில்லை.ஆனால் தாய் அஞ்சலை செய்த இரண்டு திருமணத்தால்  போகும் இடமெல்லாம்  அவனானப்படுத்தபடுகிறாள்.  தாய் தூக்கு மாட்டி  உயிரைவிட நினைக்கும் போது நிலா  கோபத்தின் உச்சிக்கு  சென்று தான் பட்ட துயரங்களை எல்லாம்   நினைத்து அவளை  அடித்து விடுகிறாள்.   “நாடுமாறி  நீ ஏண்டி சாவப்போற நீ பண்ணனதுக்கு நாந்தான்டி சாவனும்  நானு அப்பனையும் பார்த்ததில்ல  தெளார்க்காரி மொவளக் கொண்டாந்து போட்டியா வைக்கிறா. அங்கியும்  எனக்கு எடம் இல்ல  நீனும்  இங்க சாவப்போறங்கிற எனக்கு யாருடி இருக்கா? அநாதையா நிக்கிற நாந்தாண்டி சாவனும் என்னக் கொன்னுட்டு செத்துப் போடி”(அ-ப-319) என்று நிலா சொல்வது ஆதரவற்ற குழந்தைகளின் உள்ளக்குமுறலாக உள்ளது. துணைக்கு  யாருமில்லாத  பெண்களின்  மனதையும் காட்டுவதாக உள்ளது.

முடிவுரை                                                                    
 
“ ஆடை அணிகலன்கள் ஆசைக்கு  வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழ்வதும்
கெஞ்சுவதுமாக்க் கிடக்கும்  மகளிர் குலம்
மானிடர் கூட்டத்தில்  வலிவற்ற ஓர் பகுதி”(பா.க-வீ-காட்சி-1)
         
       என்று  புரட்சிக்கவிஞர்  சொன்னது போல்  இந்நாவலில்  வரும் பெண்கதை மாந்தர்கள் அனைவரும் வலுவற்ற பகுதியாக  வாழ்கின்றனர். அஞ்சலை கடும் உழைப்பாளி தனக்கு பிடித்த செயலை துணிந்து தைரியமாக செய்பவள். அவளையும் இச்சமூகம் அவதூறு பேசி ஆமையாக மாற்றி விடுகிறது.
 
“ கற்பு நிலையென்று சொல்ல வந்தார் 
இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்”(பா-விடு-5)
           
       மகாகவியின் இக்கூற்றை யாரும் மனதில் இருத்தவில்லை என்றே சொல்லாம்.பெண்களுக்கு கற்பை முன்னிலைப்படுத்தும் இச்சமூகம் ஆண்களுக்கு முன்னிலைப் படுத்த தவறிவிட்டது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்  என்பது இன்றளவும் ஏட்டளவிலே உள்ளது. வரும் காலங்களில்  இந்நிலையை மாற்ற சமூகத்துடன் சேர்ந்து நாமும்  முயற்சி செய்வோம்.
 
துணை நூற்பட்டியல்                      
1.கண்மணி குணசேகரன்                        ­­­­–       அஞ்சலை நாவல்

2.பரிமேலழகர் உரை                              ­­­­–       திருக்குறள்,

3.பாரதிதாசன்                                           ­­­­–      பாரதிதாசன் கவிதைகள்,

4.பாரதியார்                                             ­­­­–    பாரதியார் கவிதைகள்                                           

5.வேங்கடசாமி நாட்டார் .ந.மு                  ­­­­–   நீதிநூல்கள்,

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ.விஜி

முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்)

கலைஞர்கருணாநிதி அரசுகலைக்கல்லூரி

திருவண்ணாமலை

Ilakkiyangalil Pulal Vagai Unavu|D.Rajakumari

Abstract
         
          Moral literature advocates vegetarianism. However, the people of the Sangam period consumed meat in large quantities. Meat was the primary food given by kings to beggars. The people of the Sangam period consumed animals, birds, fish, reptiles, and arthropods. Just as in the present day, there was a custom of preserving meat with salt and then consuming it. Pieces of meat were skewered on iron rods, seasoned with salt, black pepper powder, and mustard, and then roasted and eaten.      


“இலக்கியங்களில் புலால் வகை உணவு”

முன்னுரை         
         சங்ககால மக்கள் போரினையும், காதலையும் மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும்.  மாமிச உணவு மென்மையான மன இயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது.  உடலுக்கும் மனதுக்கும் வலுவையூட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது.  அவற்றுள் ஊர்வனன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும்.  இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கண்டமாகவும், சுட்டும், பொறித்தும் பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம்  இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதையும் அக்கால இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
         
         புலால் உண்ணாமையை நீதி இலக்கியங்கள் கூறுகின்றன.  இருப்பினும் சங்ககால மக்கள் ஊன் உணவை அதிக அளவில் உண்டுள்ளனர்.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, கணுக்காலிகள் போன்றவற்றை உணவில் பயன்படுத்தியுள்ளனர். ஊன், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகைகள் அழைக்கப்படுகிறது.  வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், மாடு, ஆமான், முயல் போன்ற விலங்குகளும் உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக உண்ணப்பட்டன.  இறைச்சியைப் புழுக்கியும், வறுத்தும், சுட்டும், பொரித்தும் உண்டுள்ளனர்.  தமிழர்கள் இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் உண்டனர்.  வேக வைக்கப்பட்ட இறைச்சி ‘வேவிறைச்சி’ என்றும், தீயில் வாட்டப்பட்டது ‘சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது. 

ஊன் சோறு
         
      இன்று பிரியாணி என்று அழைக்கப்படும் இவ்வுணவு அக்காலத்தில் ஊன்சொறு என்ற பெயரால் அன்று செய்யப்பட்டது.  இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.  ஐவகை நிலங்களில் வாழும் மக்கள் பலவகை உணவு முறைகளால் வேறுபட்டாலும் ஒன்றுபட்டிருந்த ஒரு உணவுவகை ஊன்சோறு தான்.  பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சொற்றினை விரும்பி உண்டனர்.  ‘ஊன்’ என்பது இறைச்சியையும் ‘துவை’ என்பது கலந்த தன்மையையும் ‘அடிசில்’ என்பது சமைக்கப்பட்ட உணவினையும் குறிக்கிறது.  ஊன் துவை அடிசில் என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். ‘பிரியாணி’ என்னும் சொல் பிற்காலத்தில் வந்துள்ளது.  ஆனால் பிரியாணி என்னும் உணவு சங்க காலத்திலேயே தமிழ் மக்களாலும் பிறராலும் உண்ணப்பட்டுள்ளது.  பிரியாணி என்னும் சொல் பாரசீகச் சொல்.  ‘பிரியன்’ என்னும் சொல்லிலிருந்து பிரியாணி என்னும் கொல் உருவாகியுள்ளது.  பிரியன் என்றால் சமைப்பதற்கு முன்பாகப் பொரிக்கப்பட்டது என்று பொருள்.  அவர்கள் பிரியாணியை இறைச்சி, அரிசி நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
         
       1398 இல் தைமூர் இந்தியாவிற்கு வரும்போது பிரியாணி என்னும் உணவு வகையும் இந்தியாவிற்கு வந்தது என்று குறிப்பிடுகின்றனர்.  பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்த ஜகாங்கீரின் மனைவியான நூர்ஜகான் இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தார் என்றும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த க்ஷாஜகானின் மனைவியான மும்தாஜ் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகின்றனர்.  இந்தியாவில் பிரியாணி பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனாது என்று வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது.  சேரன் குட்டுவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றபின், தனது வீரர்களுக்கு விருந்தளித்தான்.  அந்த விருந்தில் அவன் வழங்கிய ஊன் துவை அாசிலானது சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றி இருந்தது என உணர்த்தியுள்ளார் புலவர் பரணர்.
         
       செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது.  செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும், வண்மையாகவும் உள்ளன.  ஆனால் எனது கைகள் பிரியாணி என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.  எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார்.

“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின்”
         
       என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காணரம் தெரிவித்துள்ளார் கபிலர். அக்காலத்தில் சமையல்காரன் ‘வாலுவன்’ என அழைக்கப்பட்டான்.  “அவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது”.

விலங்குகளின் இறைச்சி
         
     தங்களுக்கு பயன்படக்கூடிய விலங்குகளை வளர்க்கவும், அவற்றை உணவாகப் பயன்படுத்தவும் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தனர்.  ஆட்டின் இறைச்சி, பசுவின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சி முளவுமா இறைச்சி, யானை இறைச்சி அகிய விலங்குகளின் இறைச்சிகளைத் தமிழ் மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர்.  மனிதன் ஆதிகாலத்தில் இறைச்சியைப் பச்சையாகவே தின்றதாகத் தெரிகிறது.  இதுபற்றி சங்க இலக்கியத்திலும் சிறுகுறிப்பு உள்ளது.  மறவர்கள், கள்விலைக்கு மாறாக நிரையைக் கொடுத்துக் கள்ளுண்டனர் என்றும், அவர்கள் பச்சை இறைச்சியைத் தின்றுவிட்டு ஈர மிக்க கையை வில்லின் புறத்தே தடவினர் என்றும்,

“நிறுத்த வாயந் தலைச் சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரி”
         
       மேற்கூறிய புறநானூற்றடிகள் உரைக்கின்றன.  ஊன் உணவைப் பதப்படுத்திய நிலையை சூடு, புழுக்கு, பொரியல், வறை, வாட்டு, வேவை என்றும் சொற்கள் காட்டுகின்றன.  குழைச்சூடு, கொஞ்சூடு, நெடுஞ்சூடு, வான்சூடு, என்பன சூட்டின் தன்மையை விளக்குவதாகும்.  “இறைச்சியை இரும்பு கம்பியில் கோர்த்துச் சுட்டதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது”.

பறவைகளின் இறைச்சி
         
         சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அளகின் (கோழி) இறைச்சி, ஈதல் இறைச்சி, குறும்பூழ் இறைச்சி, புறா இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகச் சங்ககால இலக்கியங்களில் குறிப்பு காணப்படுகிறது.  விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடிய வேடர்களின் புதல்வர்கள் பறவைகளின் இறைச்சியைத் தின்றதால் அவர்களின் வாய் புலால் நாற்றம் வீசியது என்பதை,

“புள்ளுன் றின்ற புலவுநாறு கயவாய்
வெவ்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்”
         
      என்ற புறநானூற்று அடிகள் உரைக்கின்றன. இலக்கியத்தில் கோழி காட்டுக்கோழி, மனைக்கோழி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.  சேவல் கோழியை ‘அளகு’ என மக்கள் கூறியதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.  கோழி இறைச்சி இன்றும் பெரும்பாலானோரால் உண்ணப்பட்டு வருகிறது.  இதில் நாட்டுக் கோழியே சிறந்ததாகக் கருதப்படுகிறது.  அக்காலத்தில் உள்ளோரும் கோழி இறைச்சியை அதிக அளவில் உண்டுள்ளனர்.  “மருதநில உழவர்கள் தம் உழைப்பால் பெற்ற வெண்மைநிற நெற்சோற்றோடு கோழிப்பெடைப் பொரியலை உண்ணக் கொடுப்பர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது”. கோழியை வீட்டில் அதிக அளவில் வளர்த்தனர்.  விருந்தினர் வந்தால் அக்கோழி விருந்தினருக்கு உணவாகச் சமைத்து கொடுக்கப்பட்டது.  இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோர் விருந்தினர் வந்தால் வீட்டிலிருக்கும் கோழியைச் சமைத்து உண்ணக் கொடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நிலமக்களின் அசைவ உணவாகக் கோழி இறைச்சி மட்டுமே இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.  இன்று அனைத்து நில மக்களின் பிரதான அசைவ உணவாகக் கோழி இறைச்சிக் காணப்படுகிறது.  பிற அசைவ உணவுகள் அந்தந்த நிலம் சார்ந்து மிகுதியாகக் காணப்படுகின்றன.  ஆனால் கோழி இறைச்சி மட்டுமே அனைத்து வகை நிலங்களிலும் மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன.  இவ்வுணவின் வருகையால் பிற அசைவ இறைச்சி உணவுக்கான மாடு, ஆடு போன்ற விலங்கினங்கள் பெரும்பான்மையும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்கள்
         
      சங்கத்தமிழர் பலவகை மீன்களை உண்டுள்ளனர்.  மீன் பண்டமாற்று செய்யப்பட்டு அனைத்து நிலங்களிலும் உண்ணப்பட்டது.  அயிலை மீன், ஆரல் மீன், இறால் மீன், கெடிற்று மீன், சுறா மீன், வரால் மீன், வாளை மீன் ஆகிய மீன்களை உண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலாகவே இருந்தது.  சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்தனர்.  மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டிலைப் பயன்படுத்தினர்.  சிலவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் கண்டறிந்தனர்.  இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர்.
         
       சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டனர்.  மருதம் போன்ற பிற நிலத்தால் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தினர்.  நீர் நிறைந்த வயல்களில் அகப்பட்ட மீன், நண்டு, ஆமை என்பவை உணவாகக் கொள்ளப்பட்டது.  அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் உண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கத் தெரிந்திருந்தனர்.  அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவைகளைப் பொரித்தனர்.  பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றனர்.  குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர்.
         
         முதுகெலும்புடைய உயிரின வகையைச் சேர்ந்த மீன்களை நன்னீரில் வாழ்பவை, உப்பு நீரில் வாழ்பவை என இரண்டாகப் பிரிப்பர்.  ஊன் உணவு வகைகளுள் மீன் உணவு சிறந்ததாகும்.  ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் மீன்கள் மிகுதியாக வாழ்கின்றன.  பண்டைய தமிழரின் புவியல் அமைப்புப்படி மருத நிலங்களில் ஆறு குளங்களிலும், நெய்தல் நிலத்தில் கடலிலும் மீன்கள் பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு புழங்கு பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.  இம்மீன்களைப் பிடிக்கும் அறிவு நுட்பமும், எந்தெந்த மாதங்களில் என்னென்ன மீன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்.

ஊர்வன
         
        ஊர்ந்து செல்வனவற்றில் சங்ககால மக்கள் ஆமை, உடும்பு ஆகியவற்றின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளதாக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  ஊர்வனவற்றில் மெதுவாக செல்லக் கூடியது ஆமையாகும்.  ஆமை நிலத்திலும் வாழும்.  நீரிலும் வாழும்.  ஆமை, கடல் ஆமை, குளத்து ஆமை என இருவகைப்படும்.  இவை வயல்களிலும் காணப்படும்.  “வயலிலுள்ள ஆமையைப் புழுக்கி உண்ட செய்தியை பட்டினப்பாலை கூறுகிறது”.  உழவர்கள் வயலை உழும்பொழுது தம் உழுபடையால் சேற்றில் இருந்து வெளிவந்த ஆமையின் தசையை மலை நிலத்திலிருந்தும், காட்டு நிலத்திலிருந்தும் தம் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கொடுத்துள்ளனர்.
         
        ஆமை இறைச்சியை உண்ணும் வழக்கம் உப்புக் குறவர்களிடம் காணப்படுகிறது.  அக்கால மக்கள் ஆமை இறைச்சியை உண்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.  மீன் பிடித்தல், உப்பை விளைவித்தல், மீனையும் உப்பையும் விற்றல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்ட நெய்தல் நில மக்களான பரதவர்கள் ஆமை இறைச்சியை உண்டனர் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது.

“வயல் ஆமைப் புழுக்கு உண்டும்”
         
        என்ற அடியால் நெய்தல் நில மக்கள் ஆமையை உண்டனர் என்பதை அறிய முடிகிறது.  இன்றும் உப்புக் குறவர்கள் ஆமை இறைச்சியை உண்ணுகின்றனர். பொதுவாக ஆமை என்பது மக்களால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம்.  ஆமை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்பது மக்களின் நம்பிக்கை.  ஒரு வீட்டில் ஆமை புகுந்தால் அந்த வீடு உருப்படாது என்பர்.  ‘ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பது பழமொழி.  அதனால் பிற இனத்தவர் ஆமையை உண்பதில்லை.  ஆனால் உப்புக் குறவர்கள் உண்ணுகின்றனர்.  இப்படி பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதை உண்ணுகின்ற இவர்களும் ஒதுக்கப்படுகின்றனர்.
         
        உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டது.  இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு.  உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் ‘முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு’ என்ற பழைய தொடர் வழக்கில் இருக்கின்றது.  ஊர்வனவற்றில் விரைவாக ஓடும் தன்மை உடையது உடும்பு.  இதன் இறைச்சியைச் சுட்டும், புழுக்கியும், பொரித்தும் பயன்படுத்தியுள்ளனர்.  முட்டை உள்ள உடும்பின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.  இதனை நெடுவாலி என்று அழைத்தனர்.  இறைச்சி வகைகளுள் உடும்பின் இறைச்சியை பழந்தமிழ் மக்கள் சிறந்ததாகக் கருதினர்.  “ஆடவர்கள் உடும்பினைப் பிடித்து அறுத்து அதன் தோலையுரித்துக் கொழுப்பை வீட்டு முற்றத்தில் உறவினர்களுக்கு எல்லாம் கூறு போட்டு கொடுப்பதற்காகக் கொள்ளி வைத்துக் கொளுத்துகின்றனர்.  இதனால் உண்டான நாற்றம் தெருவெல்லாம் சென்று கமழ்கிறது என்று புறநானூற்றில்” உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உரைக்கின்றார்.
         
         அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடினர்.  அவ்வாறு “நாய் கொண்டு வந்து கொடுத்த உடும்பின் தசையை அறுத்து விருந்தினருக்குக் கொடுத்துள்ளனர்.  உடும்பின் கொழுப்பினால் பெய்யப்பட்ட தயிருடன் கூட்டிய கூழினையும், புதிதாகச் சமைத்த பிற நல்ல உணவு வகைகளையும் பாணர்களோடு உடன் வந்த விருந்தினர் பலருக்கும் வழங்கும் விருப்பத்தை உடையவள் என்று புறநானூறு கூறுகிறது”.  கூழில், தயிர், கொழுப்பு போன்றவற்றையும் கலந்துள்ளனர் என்பதையும் வறுமையிலும் அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பாலை நிலத்தில் மழை சிறிதளவு பெய்தது.  குழிகளில் சிறிதளவு நீர் நிரம்பி இருந்தது.  அக்கலங்கிய சேற்றைத் தோண்டிப்பெற்ற ஊற்று நீரிதை; தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையை உடையவர்கள் அங்கு வாழ்ந்தனர்.  அங்குள்ள ஆண்மக்கள் முள்ளம்பன்றியைக் கொல்வர்.  உடும்பின் நிணத்தை அறுப்பர் பின்னர் தீயை மூட்டி அதில் உடும்பினை வாட்டி அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது”.  நீரை முறை வைத்து எடுக்கும் வறுமை நிலையிலும் உடும்பினை அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்பதால் அவர்களின் கொடைப் பண்பினை அறியலாம்.

முடிவுரை         
         அக்கால மக்கள் போரினை மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும்.  மாமிச உணவு மென்மையான இனஇயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது.  உடலுக்கும் மனதுக்கும் வலுவை ஊட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது.  அவற்றுள் ஊர்வன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும்.  இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கட்டமாகவும், சுட்டும், பொறித்தும், பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம்.  இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.அவ்வை துரைசாமிப்பிள்ளை, நற்றிணைஅய்யனார் பதிப்பகம்எண். 4/87, 6 வது தெரு, வினாயகபுரம், காரணை புதுச்சேரி, கூடுவாஞ்சேரி – 603 202.

2.கராசன். வி, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை

3.நாகராசன் . வி, புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை

4.மாணிக்கம். அ, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், 48/1, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர்இ சென்னை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
து. ராஜகுமாரி, எம்.ஏ., எம்.ஃபில்.,
தமிழ்த்துறை

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாலை – 606 603.

ஆய்வு நெறியாளர்
முனைவர் ந. குப்புசாமி
தமிழ்த்துறைத்தலைவர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ரிஷிவந்தியம்இ கள்ளக்குறிச்சி.

Kulanthai Ilakkiyam Sollum Neethigal – Thinamalar Siruvar Malarai Munvaiththu|Dr N.Paramasivam

Abstract
         
          All the literally texts deal with the social realities and the writers psychological condition. Those text were written for those who are grown up both physically and mentally. Ain’t there any literally texts for the children? Yes, but they are very few. Those literally contributions were initiated by daily newspapers. Thus, this research aims to emphasis the literary writings for children written in Dinamalar’s siruvarmalar.


“குழந்தை இலக்கியம் சொல்லும் நீதிகள் – தினமலர் சிறுவர் மலரை முன்வைத்து”
         

        ஏதாவதொரு கருப்பொருளைக் காலந்தோறும் இலக்கியத்திற்குத் தந்து கொண்டிருக்கும் வல்லமையுடையது மொழி. இது காதுகளுக்கு எட்டும் ஒலியளவில் இருந்து ஏட்டில் தவழ்ந்து கண்களுக்குத் தெரியும் ஒளியளவான பின்னர் அது முன்னைக் காட்டிலும் மிகுவலிமை பெற்றது. உணவும் இச்சையும் என இரண்டு நிலைகளை மட்டுமே வாழ்வியலாகக் கொண்;ட விலங்கு நிலையிலிருந்து வாழ்வென்பது இவ்விரண்டையும் தாண்டி ஏதாவது ஒரு செய்தியை மனிதவாழ்விற்குச் சொல்லக் காத்திருக்கிறது என நினைத்து அதைச் சொல்வதற்கான ஊடகமாக மொழியை மனிதன் கண்டுபிடித்ததன் பின்னர் அதை இடையறாது பிறருக்குப் பயிற்றுவிக்கும் பொழுதே வாழ்வியலின் அறமும் வளர்ந்தது மொழியோடு.
         
         ஒரு காலத்திற்குப் பெருங்காதலும் வீரமும் தேவையான பொழுது மற்றொரு காலத்தில் அறம் மட்டுமே தேவையாய் இருந்தது. இவை கழிந்தது போக பக்தியும் காப்பியமும் பெருங்காலத்தைத் தன்னகத்தே கொண்டு தமிழையும் தமிழனின் மொழியாற்றலையும் வெளிக்கொண்டுவந்தது. பேரிலக்கியம் படைப்பினும் அதைப்; பலபடக் கூறினும் மனிதன் சிறுமையுடையவனே என்பதை கூறுவதற்குச் சிற்றிலக்கியங்கள் ஆற்றின் ஊற்றுப்போல் பெருக்கெடுத்துத் தொண்ணூற்றாறு வகையாய்க் கிளைவிட்டன. இப்படிக் காலங்கள் மாறமாற அக்காலத்தே தோன்றிய படைப்பாளனும் காலவோட்டத்தை விட்டுப் பிரியாது மொழி வழியே தன்பயணத்தைத் தொடர்ந்தான்.
         
         அன்பும் அறனும் சொல்லிய பின்னர் இறுதியாகிய நிலையாமையைத் தன் பட்டறிவின் மூலம் சொல்லிய பின்னரும் இலக்கியம் தன்பயணத்தை நிறுத்திவி;ட்டதா எனின் அதுதான் இல்லை. செல்லும் வாகனம் வெவ்வேறாக இருப்பினும் பயணமும் தூரமும் தொடர்ந்து இருப்பது போல சொல்லும் கருத்துகள் காதலாய் வீரமாய் இருப்பினும் இலக்கியம் அடையவேண்டிய தூரம் இன்னும்இன்னும் நெடுந்தொலைவு இருக்கின்றன என்பதை இலக்கணத்தை உடைத்த இலக்கியமான இக்கால இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. பழங்கால இலக்கியத்தின் மொழித்தழும்பாய் இன்றளவும் கோலோச்சும் கவிதையும் நாடகமும் இன்றளவும் புதுப்பிறப்பாய் விளங்கும் உரைநடையும் கட்டுரையும் கதையும் என விரிந்துபரவியது. நிற்க. மேற்கண்ட அனைத்தும் காதலிக்கும் இளவயதுடையவர் முதல் காடேகும் முதியவர் வரையுள்ளோர்க்கு மட்டுமே படைக்கப்பட்டது. இன்றும் யாருக்கு இலக்கியம் இயற்றப்பட வேண்டும் என்ற வினா எழும்பொழுது ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என எழுத்தை அறிமுகப்படுத்திக் கற்றுக்கொடுத்த ஆசிரியரைப் புகழ்கிறோம். உண்மையில் அப்புகழுக்குக் காரணகர்த்தாவாகிய குழந்தைகள் இலக்கியவாசிப்புக்குள் காணாது போகின்றனர். வேர் பிடிப்பதற்கு மண்காரணமாவது போல குழந்தைகள் அறிவாற்றல்பெற இலக்கியம் வேண்டுமல்லவா? எனவே அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்தானே. அவர்களே வருங்காலத்தின் முன்னத்தி ஏர்கள் எனக்கண்டு படைக்கப்பட்டதே இக்கால இலக்கியத்தின் ஆற்றல்மிகு இலக்கியமான குழந்தை இலக்கியமாகும்.

குழந்தை இலக்கிய வகைமைகள்
         
     கதைகள், பாடல்கள் கதைப்பாடல்கள் எனப் பல்வேறு வகைகளில் கிளைத்துப் பெருகியது குழந்தைகளுக்கான இலக்கியங்கள். இவர்களின் விளையாட்டுகளில் பாடல்கள் முன்னர் நிறைய இடம்பெற்றிருந்தன. காரணம் குழந்தைகள் விளையாடும் பொழுது மனது இலகுவாகின்றது. இலகுவாக இருக்கும்பொழுதுதான் பிறர் சொல்லும் சொல் எளிதாக மனதில் பதியும் என்ற அடிப்படையில் விளையாட்டுடன் கூடிய கல்விமுறை புகுத்தப்பட்டது. எனினும் குழந்தைகளுக்கு மனம் சார்ந்ததாக, கல்வி சார்ந்ததாக மட்டும் பாடல்கள் முன்னிருத்தப்படவில்லை என்று அறிதல் வேண்டும். ஏனெனில் உடலின்றி மனமோ அறிவோ இல்லை என்பது யாவரும் அறிந்ததே. அதனால்தான் பாரதிகூட ‘உடலினை உறுதிசெய்’ என்றார். இக்கருத்தை அடியொற்றியே பின்வரும் குழந்தைப்பாடலும் அமைவதைக் காணலாம். இருவர் கைமாற்றிக் கோர்த்துச் சுற்றும்பொழுது,

கோ கோ பிஸ்
கோக்கலங்கா பிஸ்
நாலுகரண்டி நல்லெண்ண
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பைய்யா
வழுக்கிவிட்டா மீனாட்சி
தும்பி தொளசி
தூக்கிவிட்டா மம்மட்டி
கல்யாண வீட்டுல
கண்டெடுத்த மூக்குத்தி
         
      என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே சுற்றிய இருவரும் அசையாது ஆடாது நிலையாக நிற்கவேண்டும். அப்படி நில்லாது கீழே விழுந்துவிடின் விழுந்தவர் தோற்றவராகக் கருதப்படுவார். இதில் வெற்றி தோல்வி என்பதோ பாடலின் கருத்தோ முக்கியம்அல்ல என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஏனெனில் உடல்நலிவு கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்துவிடாமல் இருக்க இம்மாதிரியான விளையாட்டுப் பயிற்சியே முக்கியமாகும். எனவே படைப்பு எனப்படுவது எழுத்தை வலிமையாக்குவது அல்ல அது குழந்தைகளின் உடலை உள்ளத்தை வலுப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதையே புரட்சிக்கவி பாரதிதாசனும் ‘அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்கிறார். (பாரதிதாசன் கவிதைகள்)

தினமலர் நாளிதழில் சிறுவர் இலக்கியத்தின் பங்கு
         
ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்றும் குழந்தைகளுக்கென்று நான்கு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது தினமலர் நாளிதழ். இதில்

ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள்
குழந்தைகளின் சாதனைகள்
உங்களுக்குத் தெரியுமா?
இளம் ஓவியர்கள்
படக்கதை
வார்த்தை விளையாட்டுகள்
வாங்க சிரிக்கலாம்
சின்னச்சின்னப் பூக்கள்
தொடர்கதை
இருவகைப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம்
         
    எனப் பல்வேறு பகுதிகளைக் கொண்டு குழந்தைகளின் இரசனை அறிந்து பகுத்துத்தந்துள்ளது.  மேற்கண்ட வகைமைகளில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்வது ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள் எனும் பகுதியாகும். அப்பகுதியில் மிமிக்ரிபறவை எனப் பலராலும் அழைக்கப்படும் புன்னாகம் எனும் பறவையாகும். இதை ஆங்கிலத்தில் மாக்கிங் என அழைக்கின்றனர். இப்பறவை வடஅமெரிக்காவையும் அதைச்சுற்றியுள்ள பலதீவுகளிலும் உள்ளது என்பதை 1835 இல் சார்லஸ் டார்வின் என்பவர் கண்டறிந்துள்ளார்.
         
         இப்பறவை அமெரிக்காவின் ஐந்து மாகாணங்களில் தேசியப் பறவையாகத் திகழ்கிறது. காரணம,; இது அழகு நிறைந்த பறவையாக இருப்பதாலும் தன்வாழ்நாளில் 200 வகையான ஒலிகளைக்கற்றுப் பிரதிபலிக்கும் புத்திக் கூர்மையாலும் விருப்பத்துடன் இதை வளர்க்கின்றனர். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை ஒருவகைக் குரலிலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வேறுவிதக் குரலிலும் ஒலிக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இவை பெரும்பாலும் பின்னிரவில் பாடும் இயல்புடையது என்றும் முடிவில்லாது தொடர்ச்சியாய் பலகுரலில் பாடும் திறன் கொண்டதென்றும் கூறுகின்றனர்.
          இவ்வாறு பாடுவதற்குத் தனித்த காரணமாகத் தன்குஞ்சுகளை விலங்குகள் மற்றும் எதிரிப்பறவைகளிடம் இருந்து பாதுகாக்கவே பல குரலில் பாடி எதிரியைத் திணறடித்து ஓடச்செய்வதற்குப் பலகுரலைக் கற்கின்றது என்பது ஆச்சர்யமே எனக்கூறி வாசகர்களை வியப்படையச்செய்கிறது இவ்விதழ்.

குழந்தைகளின் சாதனைகள்
         
       உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீர்பான் என்பார் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். தாகம் எடுக்கவே ஆற்றுநீரைக் குடித்தபின் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வாற்றில் இருந்த முதலையானது வீர்பான் காலைக்கவ்வ முதலையைப் பார்;த்து அதிர்ந்து பெருங்குரலெடுத்து அலறியுள்ளார்.
இவரின் அலறல் சப்தம்கேட்டு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த இவரது ஏழுவயது மகன் அஜய்ராஜ் ஒரு குச்சியைக் கொண்டு முதலையைத் தாக்கியுள்ளார். இதனால் வீர்பானை நீருக்குள் இழுத்துள்ளது முதலை. இதைக்கண்ட அஜய்ராஜ் சிறிதும் பதறாது சமயோசிதமாக முதலையை அடித்த குச்சியைக் கொண்டு அதன் கண்களைக் குத்தியுள்ளான். வலிதாங்காத முதலை வீர்பானை விட்டுவிட்டு நீருக்குள் மூழ்கித் தப்பியது. உயிர்தப்பிய வீர்பான் ஊரெல்லாம் இச்செய்தியைக் கூற அஜய்ராஜின் வீரச்செயலை அறிந்த மத்தியஅரசு டிசம்பர் 26, 2025 இல் தேசிய வீரபாலகர் தினத்தில் டில்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் தேசிய வீரபாலர் விருது ஜனாதிபதி பொற்கரத்தால் பெற்றான் அஜய்ராஜ். இவ்விருது வீரத்துடன் கூடிய விவேகத்திற்குக் கிடைத்தது என்பதே பொருந்தும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கட்டான சூழலில் உணர்வுக்கு முக்கியத்துவம் தராது விவேகத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை இவ்விருது உணர்த்தியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?
         
     இப்பகுதியில் பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு அக்கேள்விக்கு அருகிலேயே அதற்கான விடையும் கொடுத்து அறிவைச் சோதிக்கும் , ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளது இப்பகுதி.

இளம் ஓவியர்கள்
         
      மனதை ஒருமுகப்படுத்தி அதன்வழியே தன் விரல்களுக்குக் கொண்டுவந்து காட்டுவது ஓவியம். அவ்வகையில் தான் விரும்பிய தலைவர்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை மனக்கண் வழியே கண்டு வரைந்து காட்டும் முறையில் அமைவது இளம்ஓவியர்கள் பகுதியாகும்.

படக்கதை
         
     படக்கதை என்பது படத்திற்குப் பொருத்தமான கதைகளையும் வரைந்து, படிக்கின்ற குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் ஒழுங்குபடுத்தி படக்கதை அமைத்து அதில் நீதியைச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது படக்கதை.

வார்த்தை விளையாட்டு
         
   இவ்விளையாட்டு மொழியின் வளத்தை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றது. ஒருபொருளைக் கூற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவற்றைக் குழந்தைகளும் உணர்ந்து எழுதும் பொருட்டு வார்த்தை விளையாட்டு அமைந்துள்ளது.

அடைபட்ட கட்டங்களைத் தவிர பிற கட்டங்களில்,
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
         
        எனும் முறையில் அமைந்து சரியான சொற்கோவையை உருவாக்கிப் பொருள்தரும்படி அமையும் விளையாட்டு வார்த்தை விளையாட்டாகும்.

வாங்க சிரிக்கலாம்
   
      இப்பகுதியில் வார்த்தைகள் இன்றி ஓவியம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அந்த ஓவியத்தைக் கொண்டே சிரிப்பினைக் கொடுக்கும் பகுதி இதுவாகும். உதாரணமாக மூன்று காட்சி ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்று சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வழங்குவதை,
முதல்படம்:    மழை வருதல் – மழையில் மனிதனும் அவன்நாய்க்குட்டியும் நனைதல்இரண்டாம்படம்: மழையில் நனையாமல் இருக்க குடையோடு ஒருவர் செல்லுதல்மூன்றாம்படம்:  எஜமானலை விட்டுவிட்டு குடையோடு செல்லும் மனிதருடன் நனையாது இருக்க அந்தநாய்க்குட்டி செல்லுதல். எஜமானர் மழையில் நனைதல்.
          இப்படக்கதை சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வாங்கசிரிக்கலாம் பகுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.

சின்னச்சின்னப் பூக்கள்
         
    குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு அக்குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடும் பகுதியே சின்னச்சின்னப் பூக்கள் பகுதியாகும்.

இருபடங்களுக்கும் உள்ள வித்தியாசம்
         
      ஒரே மாதிரியான ஆனால் சற்றே வேறுபட்ட இருபடங்களைக் கொடுத்து ஏழு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கும் போட்டியாக இப்படங்கள் விளங்கும். இது அனைத்து விதமான வயதுகொண்டவர்களும் விரும்பிக் கண்டுபிடிப்பதாக விளங்குகின்றது,

தொடர்கதை
         
      கதை படிக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்;டவும் அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தையைத் தூண்டும் விதமாகவும் தொடர்கதை அமைந்திருக்கின்றன. முன்னர் இத்தொடர்கதையைப் படிப்பதற்கென்றே நூலகம் சென்றுபடித்த நாட்கள் உண்டு. நூலகங்களும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருந்தன. வாசகர்களின் ஆர்வத்தை உணர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்சு என்பார் வாசகர்களுக்கென 3.7 கோடிப் புத்தகங்கள் வாங்கியுள்ளார். 1800 ஏப்ரல்  24ல் தொடங்கப்பட்ட இந்நூலகம் பன்னிரெண்டு ஆண்டுகள் கழி;த்து பிரிட்டன் இராணுவம் இந்நூலகத்தை அழித்தது. அடுத்த அதிபரான தாமஸ் ஜெபர்சன் என்பார் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய நூலகத்தை அமைத்து அனைவருக்குமான நூல்களை இடம்பெறச்செய்து அறிவுசான்றவர்களாக உருவாக்கினார் என்பர். (முனைவர் இரா.குணசீலன் நிற்க அதற்குத் தக ப.67)

கற்கலாம் பழகலாம்
         
      நம்மிடம் இருக்கின்ற தாள்,அட்டை போன்றவற்றில் அழகுப்பொருள்,கப்பல்,பட்டம் உள்ளிட்டவற்றை எவ்வாறு செய்வது என்ற வழிமுறைகளையும் அவ்வழிமுறைகளைக் கற்றுக்கொண்டவர்கள் எவ்வாறு பிறருக்குக் கற்றுக்கொடுப்பது என்பதை விளக்கும் விதமாகவும் கற்கலாம் பழகலாம் பகுதி இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட அனைத்தும் கீழ்க்கண்ட சிந்தனை வடிவில் அமைந்துள்ளதை,

அறிவியல் அலைகள்                – அடிப்படை அறிவியலை அறிதல்

குழந்தைகளின் சாதனைகள்      – செயல்பட ஊக்கம் கொடுத்தல்

உங்களுக்குத் தெரியுமா?           – ஆர்வத்தைத் தூண்டுதல்

இளம் ஓவியர்கள்                       – எண்ணத்தை மனக்கண்ணால் கொண்டு வருதல்

படக்கதை                                 – கண்ணையும் கருத்தையும் ஒன்றுபடுத்துதல்

வார்த்தை விளையாட்டு             – மொழியாற்றலை உருவாக்கச்செய்தல்

வாங்க சிரிக்கலாம்                      – அறிவும் அறியாமையும் ஒன்றிணைதல்

சின்னச் சின்னப்பூக்கள்             -தொலைவில் உள்ளோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல்

தொடர்கதை                             – சிந்தையையும் ஆர்வத்தையும் வளர்த்தல்

இருபடங்களுக்குள்ள வேற்றுமை – மிக நுண்ணிய பார்வையுடன் அணுகுதல்

கற்கலாம் பழகலாம்                    – இடையறாத தொடர்ச்சியுடன் கற்றல்
       எனப் பல்வேறு கோணங்களில் அணுகி நுண்ணிதின் ஆராய்ந்து சிறுவர்மலராய் மலரச்செய்கிறது தினமலர். இதைப் பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு பக்கங்கள் நான்கு என்ற எண்ணிக்கை மட்டுமே தெரியும். ஆனால் அதைக்கூர்ந்து நோக்கும் பொழுது குழந்தைகளுக்கு எதைத்தரவேண்டும் என்ற பொருப்புணர்வும் இதில் அடங்கியருப்பதை உணரமுடிகிறது. கண்களால் காணும் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய அலைபேசி உலகில் கருத்துக்களால் நிரம்பிய எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராத இன்றைய குழந்தைகள் பெருகியுள்ளனர். இது குழந்தைகளின் கற்றல் குறித்தான கேள்வியையே எழுப்புகின்றது. வாசிப்பதன் முக்கியத்துவத்தை ஜொனாதன் ஸ்விஃப்டர் என்பார் நான் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, அது ஞானமுள்ளதோ அல்லது அற்பமானதோ, அது உயிருடன் இருப்பதாகவும் என்னுடன் பேசுவதாகவும் எனக்குத் தோன்றுகிறது எனக் கூறுகிறார் (வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167) அதுமட்டுமின்றி தனித்த நீதிபோதனைக் கதைகள் பெயரளவுக்குக்கூட இல்லாமல் போவது என்பது இன்றைய குழந்தைகளுக்கு,

🎯எழுத்துக்களை இனம்பிரித்து அறியாமை

🎯சொற்களை எவ்விடத்தில் நிறுத்திப்படிக்கவேண்டும் என்பது குறித்த தெளிவின்மை

🎯படித்தபின்னர் கதையைத் தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியாமை

🎯படித்த பகுதியைப் பிறருக்கு எடுத்துச்சொல்லும் திறனின்மை
           
     ஆகியவை ஏற்படவாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் தனித்த இலவச இணைப்பாக நீதிக்கதைகள் அதிகம் இடம்பெறச்செய்யின் இன்னும் நலம்பயக்கும் சிறார்களுக்கு!

துணைநின்ற நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்

2.முனைவர் இரா.குணசீலன.; நிற்க அதற்குத் தக ப.67

3.வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.பரமசிவம்
தமிழ் இணைப்பேராசிரியர்
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரிதிண்டல்,
ஈரோடு – 638 012.

Family In The Works Of V.Iraiyanbu|Dr P.Vignesh kumar

Family In The Works Of V.Iraiyanbu - Dr P. Vignesh kumar
Abstract
       If a society wants to progress or develop, it has to progress from Economically marginalised family to families living in urban areas. Every individual’s role is essential for that. The family plays a primary role in making an individual a good human being . Such a system of family organization as prevails in India is seen as a source of virtue and a school of virtue for the individual. The system of family system prevailing in our country from ancient times to modern times has been surprising to all the people of the world. This article examines how V. Iraianbu has expressed such thoughts and highlight the values about family in his works.

Keywords:  Contemporary, Family, Passion, Marriage, Honesty, Togetherness, and Motherhood.


“வெ.இறையன்பு படைப்புகளில் குடும்பம்”

ஆய்வுச் சுருக்கம்
     ஒரு சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமுகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் இன்றியமையாததாகும். தனிமனிதனைப் பண்புள்ள மனிதனாக மாற்றுவதில் குடும்பம் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் நிலவும் இத்தகைய குடும்ப அமைப்பு முறையானது அறத்திற்கு உட்பட்டதாகவும், தனிமனிதனுக்கு அறத்தைப் போதிக்கும் பள்ளியாகவும் விளங்குகிறது. நம் நாட்டில் நிலவும் குடும்ப அமைப்பு முறையானது  பண்டைய காலம் முதல் சமகாலம் வரை உலக மக்கள் அனைவரும் கண்டு வியக்கும் விதத்தில் உள்ளது. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என்பதைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குறிப்புச் சொற்கள்:  சமகாலம், குடும்பம், உணர்வு, திருமணம், நேர்மை, ஒற்றுமை, தாய்மை.

முன்னுரை
        தனிமனித முன்னேற்றம் குடும்ப  முன்னேற்றத்திற்கும், குடும்பம்  முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.  எனவே   ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள்  காணப்படுகின்றன. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

குடும்பம்
        ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் சேர்த்ததன் பிணைப்பாக உள்ளது. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது சமுதாயமாகும்.  அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. பண்பாட்டிற்கு ஒரு மனிதனைப் பண்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனை, “பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல் அல்லது திருந்துதல், திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளம் என்று சொல்வது வழக்கம்” (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும், ப.5) என்கிறது. ஒரு மனிதனின் வாழ்வியலை மேம்படுத்தும் ஆற்றல் பண்பாட்டிற்கு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள்  காணப்படுகின்றன. இருப்பினும் இந்தியாவில் நிலவும்  குடும்ப கட்டமைப்பு உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

தாய் தந்தை என்னும் உணர்வு
      தாய் தந்தை உணர்வு என்பது ஒரு வரம். மனிதனின் அடுத்த பரிமாணமே தாய் தந்தை என்னும் உணர்வு. கணவன் மனைவி இருவரும் தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும், அவர்கள் அதுவரை அடையாத மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனைப் பூனாத்தி என்னும் கதையில் “ஆசிரியர் தன்னுடைய மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார். டாக்டர் இது ரொம்ப விலை உயர்ந்த கர்ப்பம் எனவே எந்த வேலையும் செய்யாமல் எந்தப் பயணமும் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி சில குறிப்புகளைத் தந்தார். திரும்பி வரும்போது எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் புதிய அர்த்தம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” (பூனாத்தி, ப.115) என்கிறார். கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைவதுடன், இருவரும் தனக்கு மட்டுமின்றி தன் குழந்தைக்காகவும்  வாழத் தொடங்குகிறார்கள். இந்த மாற்றம் அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்வதுடன், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணம்
       ஆண், பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் முறையாகத் திருமணம் செய்து வைப்பதுபெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணமாகும். இவ்வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழ் மரபில் நிலவிவருவதை நாம் பார்க்கிறோம். சமகாலத்தில் மாறி வரும் சமுதாயத் தேவைக்கு ஏற்ப திருமணம் செய்வோரின் எதிர்பார்ப்பும், திருமண முறைகளும் மாறிவருகிறது. ஒருவர் உயர்ந்த  வேலையில் இருக்கிறார் எனில் அவருக்கு உடனே பெண் தருகிறார்கள். மற்றொரு புறம் ஒருவர் நேர்மையாகப் பணி செய்து பொருள் ஈட்டினாலும் அவர் செய்யும் தொழிலைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பெண் தரச் சமுதாயம் மறுக்கிறது. அதனை ‘செருப்பு விற்பவர்’ என்னும் கதையில், சங்கர் செருப்பு விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவனது பெற்றோர்கள் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவன் செருப்பு விற்கும் கடையில் வேலையில் இருப்பதால் அவனுக்குப் பெண் தர மறுக்கிறார்கள். “பல வீடுகளில் செருப்பை எடுத்துக் கொடுக்கிற உத்தியோகமா” (நரிப்பல், செருப்பு விற்பவர், ப.51) என்று பெண் தரவில்லை. கடைசியில் ஓர் இடம் பிடித்தது. ஆனால் வந்தவள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகத்  திருமணம் செய்து கொண்டாள்.
பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மணமகனுடன் சேர்த்து அவர்களுடைய வேலையைக் கவனிக்கிறார்கள், அத்துடன் சமுதாயம் ஒருவனின் வேலையை எவ்வாறு பார்க்கிறது என்பது வெளிப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் வேலையை மட்டும் பார்க்காது. அவர் செய்யும் வேலையில் நேர்மையாகப் பணம் பெறுகிறாரா என்பதையும், அவர் தனது பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும்  பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பண்டைய காலத்தில் தமிழர் திருமணம்  எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அகநானூறு,

“திண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி 
…………………………………….. 
வதுவை நன்மணம் கழிந்த”      (அகநானூறு.86)
         
          என்னும் வரிகளில் திருமணத்தில் ஊர்ப் பொதுமக்கள், சான்றோர், உற்றார், உறவினர் பலரும் கலந்து கொள்வர். திருமண விருந்து இடையறாது நிகழும். நல்ல நாள் நிமித்தம் எல்லாம் பார்த்துள்ளனர். திங்களை ரோகிணி சேரும் நாளே திருமண நாள். மணவறையை அலங்கரிப்பர். கடவுளை முதலில் வணங்கித் தொடங்குவர். மணமுழவும் முரசும் ஒலிக்கும். மகளிரே திருமணத்தை நடத்தி வைத்தனர். வாகையில் கவர்ந்த இலையுடன் அருகம்புல் கிழங்குடன் கூடிய அரும்மை நூலால் கட்டி மணமக்களுக்குக் கைகளில் காப்புக் கட்டுவர். மண ஒலி முழவொலி மிக்க மணப்பந்தர். இழை அணி அணிவித்தல் (மங்கல நாண்) என்று குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. ஆனால் சம காலத்தில் ஒரு சில இல்லங்களில் பெண்களை வற்புறுத்தித் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்யப்பெறும் திருமணங்களால் எந்த ஒரு பயனும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையே மன வேறுபாடுகளும் சரியான புரிதலின்மையும்  ஏற்படுகிறது. ஆதலால் ஆண்-பெண் இருவருக்கும் மணம் முடிக்க விருப்பம் எனில் அவர்களுக்கு மணம் செய்து வைக்க வேண்டும். அதுவே இன்பமாக வாழ வழி வகுக்கும்.

கணவன் மனைவி புரிதலின்மை
        இல்லறம் நன்றாக இருக்க வேண்டுமெனில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும், சரியான புரிதலும் வேண்டும். இப்பண்பு நலன் சரியாக அமையப் பெறாதபோது விவாகரத்து நடைபெறுகிறது. இதனை ‘நண்பர்கள்’ என்னும் கதையில் ஜீவகாருண்யன் மிருதுனி இருவருக்குமான விவாகரத்து கோர்ட்டில் நடைபெறுகிறது. “நீதிபதி இருக்கையில் கம்பீரமாக தன்சிங் அமர்ந்திருந்தார். ஜோடியாக சிரித்துக்கொண்டே அந்த இருவரும் பேசியவாறு வருவதைப் பார்த்தார். காலம் காயங்களை ஆற்றும் என்ற பழமொழி சரிதான் என்று நினைத்துக் கொண்டார். “அவர்களிடம் உங்கள் முடிவில் மாறி விட்டீர்களா என்று கேட்க. அவர்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தோம். ஒன்றாக செல்வோம், மதிய உணவு அருந்துவோம், ஒருவரிடத்தில் ஒருவர் பேசுவோம். எங்கள் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அப்படியிருந்தவர்கள் தாம். எங்கள் அன்பு நன்றியறிதலாக எப்போதும் முகிழ்க்கும் எனச் சொல்ல நீதிபதி ரொம்ப மகிழ்ச்சி உங்கள் முடிவில் சரியாக இருக்கிறீர்கள் என்றேனும் புரிந்து ஒன்றாக வாழ்ந்தால் சந்தோசம் தான் என்று சொல்லி அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தார்.” (பூனாத்தி, பக்.29,30) என்று குறிப்பிடுவதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குமிடையே சரியான புரிதல் வேண்டும். ஏதோ ஒரு பிரச்சினை நடைபெறுகிறது என்றால் அது சில நாட்களில் மாறிவிடும். அதற்காக உடனே விவாகரத்துக்குச் சென்று விடக்கூடாது. ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்வதாகும். இதனை உணர்ந்து உண்மையான அன்பு கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்தனை வயதானாலும் அன்பு குறையாது என்பதைப் பாரதிதாசன்,

“புதுமலர் அல்ல காய்ந்த 
புற்கட்டே அவள் உடம்பு! 
சதிராடும் நடையாள் அல்லள்.  
தள்ளாடி விழும் மூதாட்டி  
மதியில்ல முகம் அவட்கு  
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்பதொன்றே! (குடும்ப விளக்கு, முதியோர் காதல், ப.274)
         
       என்னும் வரிகளில் வயதான தலைவன் தலைவியைப் பற்றிச் சொல்கிறார். அவளுடைய உடம்பானது புதிதாக மலர்ந்திருக்கும் புது மலர் போன்று இல்லை. காய்ந்து போன புற்கட்டை போன்றுள்ளது. அவள் அழகாக நடந்து செல்லும் பெண்ணைப் போன்று இல்லை. நடக்கும்போதே தள்ளாடி நடப்பவளாக இருக்கிறாள். நிலவைப் போன்று ஒளிவீசுவதாக அவளது முகம் இல்லை. வறட்சியுடைய நிலத்தைப்  போன்று உள்ளது. அவளது கண்கள் குழிகள் உடையதாக உள்ளது. இப்படிப்பட்டவள் என்னுடன் வாழ்கிறாள் என்பது ஒன்றே எனக்கின்பம் தருகிறது என்கிறார். உண்மையான காதல் கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்துணை வயதானாலும் அன்பு குறைவதில்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துவதே இல்லறம் சிறப்பதற்கான வழியாகும்.

இல்லாளின் சிறப்பு
     தற்காலத்தைப் போன்று பண்டைய காலத்துப் பெண்களும் இல்லறக் கடமைகளை ஆற்றுபவர்களாகவே இருந்துள்ளனர். கணவனைப் பேணுதலும், சமையல் செய்தலும், பிள்ளைகளை வளர்த்தலும், கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டைக் காத்தல் என்னும் வேலைகளைப் பெண்களே நெடுங்காலமாகச் செய்து வந்துள்ளனர். அவ்வாறு “வீட்டில் இருந்து இல்லம் சார்ந்த வேலைகளைச் செய்வதாலேயே பெண்களுக்கு “இல்லாள், மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம் பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர்களும் ஏற்பட்டன” என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். (பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், ப.63) என்கிறார்.

       கணவன், மனைவி இருவரும் தன் குழந்தைகளிடம் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு தாய் தனது கணவன் இறந்ததற்குப் பிறகு தங்களுடைய குழந்தையை வளர்க்க எவ்வளவு  கஸ்டப்படுகிறாள் என்பதை, ‘கைமுறுக்கு காரி’ என்னும் கதையில், பொன்னம்மா தனது கணவன் கணேசன் இறந்த பிறகு உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாது இருந்த போது, அவளது அம்மா சொல்லிக்கொடுத்த முறுக்குப் பிழியும் தொழில் ஞாபகத்திற்கு வருகிறது. அதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் வாங்கித் தொழில் செய்கிறாள். அதில் நல்ல முன்னேற்றமும், நல்ல லாபமும் கிடைக்கிறது. அதில் கிடைத்த பணத்தில் “பெரியவள் சாந்தியை திருமணம் செய்து கொடுத்தாள். பெண் லட்சணமாக இருந்ததால் நல்ல இடத்தில் திருமணம் செய்ய முடிந்தது. ஒருத்தியாகவே முன் நின்று கல்யாணம், வளைகாப்பு, பிரசவம் என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்” என்கிறார். (அழகோ அழகு, ப.21)

      இல்லாள் தன்னுடைய கணவனின் இறப்பிற்குப் பிறகு தன்னம்பிக்கையை இழந்து விடவில்லை. தன்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அம்மா சொல்லிக்கொடுத்த கைத்தொழிலைச் செய்கிறாள். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்கிறாள் என்கிறார். இதன் வாயிலாக இல்லாள் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை தன்னுடைய பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவளாகத் திகழ்கிறாள் என்பது வெளிப்படுகிறது. தாய் தன் குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடையவளாக உள்ளாள் என்பதை குறுந்தொகை,

“கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,
…………………………………..
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்.” (குறுந்தொகை, பா.69)
         
     என்னும் வரிகளில் கருமையான கண்களைக் கொண்ட ஆண் குரங்கு பெண் குரங்கு அதனின் குட்டிக் குரங்கு என ஒரு மரக்கிளையில் இரவு நேரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஆண் குரங்கு ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவுகிறது. இரவு நேரம் என்பதால் மற்றொரு கிளையை பற்றாது கீழே விழுந்து இறந்து விடுகிறது. ஆண் குரங்கிடம் மிகுந்த அன்பு கொண்ட பெண் குரங்கு இனி தானும் இறந்து விடவேண்டும் என்று எண்ணுகிறது. இருப்பினும் தன் வயிற்றை தொற்றிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கைப் பற்றி எண்ணுகிறது. தற்போது தன்குட்டி உள்ள நிலையில் அதனை விட்டால் அதனால் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவத் தெரியாது. அதனால் உணவைத் தேடி உண்ணத் தெரியாது என எண்ணுகிறது. ஒருபுறம் தன்னுடைய கணவனிடம் கொண்ட அன்பு, மறுபுறம் தன்னுடைய குட்டியை நினைக்கிறது. பிறகு தன்னுடைய குட்டியைச் சுற்றத்தாரிடம் சென்று சேர்த்து அதனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தானும் கணவன் சென்ற இடத்திற்குச் செல்கிறேன் என்று தன் உயிரை மாய்த்தது என்கிறது. இத்தகைய சிறப்பினை உணர்த்தவே வள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்று பெண்மையைப் போற்றுகிறார். இதன் வாயிலாக பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பை உணர முடிகிறது.

தாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தெரியும்
     உலக மொழிகள் அனைத்திலும் பண்பு நிறைந்த சொல் அம்மா. உலக உயிரினத்தில் தன்னலம் கருதாது ஓர் உயிர் இருக்குமானால் அது தாய்தான்.  ஒரு பெண் தான் தாய்மை அடைந்தேன் என்று தெரியும்போது அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். அத்தகைய அம்மா என்னும் சொல்லுக்குப் பிறமொழிகளில் இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு. அம்மா ‘அ’ உயிர் எழுத்து தன்னுடைய குழந்தைக்கு உயிர் தருபவள். ‘ம்’ மெய்யெழுத்து உயிராகிய குழந்தை உறைவதற்கு உடல் தருபவள். ‘மா’ உயிர் மெய் எழுத்து பத்து மாதம் தன்னுடைய வலிகள் அனைத்தையும் மறந்து பெற்றெடுத்து உயிர்மெய்யாக உலகைக் காணச் செய்பவள் தாய். இதன் பொருட்டு அமைந்ததே அம்மா என்னும் சொல்.
         
     அத்தகைய தாய்மை என்னும் உணர்வில் உள்ள சந்தோசம் மற்றொரு தாய்க்குத் தெரியும் என்பதை இறையன்பு, ‘பூனத்தி’ என்னும் கதையில் வரும் கதைத் தலைவனின் மனைவி ராஜிக்குக் குழந்தை பிறக்கிறது. அப்போது அவள் தான் வளர்த்த பூனை பார்த்தால் சந்தோசப்படும் என்பதை “அழகாக ஆண் குழந்தை பிறந்ததும் அதுநாள் வரை இருந்த தவிப்பு நீங்கியது. மறுநாள் என் மனைவி ஏங்க நம்ம குழந்தையைப் பார்த்தாப் பூனாத்தி சந்தோசப்படுமில்லே.” என்றாள் (பூனாத்தி, ப.119) என்கிறார். தான் தாய்மை அடைந்தேன் என்று தெரிந்ததும் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து தன் கையில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ராஜி தாய்மை அடையும் முன்பு தான் வளர்த்த பூனை குட்டி போட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவள் என்பதாலும் தாய்மையின் உணர்வைப் புரிந்தவள் என்பதாலும் தன்னுடைய குழந்தையைத் தான் வளர்த்த பூனை பார்த்தால் மகிழ்ச்சியடையும் என சொல்கிறாள். இங்கு ஒரு தாயின் உணர்வைப் பிறிதொரு தாய் உணர முடியும் என்பது வெளிப்படுகிறது.

முடிவுரை
      சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும்.குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாக உள்ளது,கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைகிறார்கள்.பெற்றோர் தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவரது ஊதியத்தை மட்டும் பார்க்காது அவர் தனது  பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும்  பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பையும் அறிய முடிகிறது.

துணைநின்ற நூல்கள்
1. வெ.இறையன்பு – பூனாத்தி, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 
    641001. மூன்றாம் பதிப்பு 2017.

2. வெ.இறையன்பு – நரிப்பல் நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர்,  
    சென்னை – 600050. ஏழாம் பதிப்பு 2019.

3. வெ.இறையன்பு – அழகோ அழகு, நியூ செஞ்;சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600098. ஏழாம் பதிப்பு  2019.

4.  தேவ நேயப் பாவாணர், ஞா.- பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்,
தமிழ் மண் பதிப்பகம், சென்னை- 600014. இரண்டாம் பதிப்பு, 2000.

5. நாகராசன்,வி. (உ,ஆ)  – குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் (பி) லிட்
அம்பத்தூர், சென்னை – 600098. முதல் பதிப்பு. 2004.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்  பா. விக்னேஷ்குமார்,
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை – 600 077

Thoughts on the Upliftment of Humankind in Kalithogai|Dr S. Dhandapani

Abstract    
         
            For countless years, as a gracious message handed down by the wise and the learned, as a cultural emblem of the ancient Tamils, and as a perennial spring of knowledge overflowing with love, Kalithogai stands in the Ettuthokai as an agam (interior/love) anthology. While attempting to explore and understand the messages contained in Kalithogai, certain ideas related to the upliftment of humankind that touched my heart appeared repeatedly. This article proceeds with the aim of presenting those ideas under the following subheadings: True wealth that humanity should attain Nothing in this world belongs to us; nothing is permanent One should understand human nature and live accordingly No occupation is inferior One should not burden others by sharing one’s own suffering Control of the mind is essential The principles of the forefathers are the path to progress Patience alone leads to success Today’s reality becomes tomorrow’s dream  Through these themes, this article undertakes a journey to highlight the humanistic and progressive thoughts found in Kalithogai.


“கலித்தொகையில் மனிதகுல மேம்பாட்டுச் சிந்தனைகள்!”

முன்னுரை
    
      ஆண்டாண்டு காலமாய் ஆன்றோர்கள் சான்றோர்கள் அருள்வாக்காய், ஆதிகாலத் தமிழரின் அடையாளச் சின்னமாய், ஆயுளெல்லாம் அன்பு சுரக்கும் அறிவுச்சுணையாய் எட்டுத்தொகையில் அகமாய் அமைந்த கலித்தொகையில், அறிய வேண்டிய செய்திகளை ஆராய முற்பட்டபோது, ஆங்காங்கே கண்பட்டு  என் நெஞ்சம் தொட்ட சில மனித குல மேம்பாட்டுச் சிந்தனைகளைத்  தொகுத்துக் கூறும் நோக்கில் இக்கட்டுரைப் பயணிக்கின்றது.
மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்து
      சொத்து சுகம் தேடி அலையும் மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்துக்களைப் பழமொழிப் பாங்கில் பட்டியலிட்டுத் தந்துள்ளது கலித்தொகை.

“ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தார்க்கு உதவுதல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”   (நெய்தற்கலி 133: 6-14 )
       
       இல்லறம் நடத்துதலில் சிறந்த செயல் என்பது வறியவர்க்கு ஒன்றை உதவுதல். அகவாழ்வில் பாதுகாத்தல் என்பது துணையைப் பிரியாதிருத்தல். மக்கட் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல். அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரை அனுசரித்து நடத்தல். அறிவு எனப்படுவது அறிவு அற்றவர்களின் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல். நட்பில் உயர்ந்த பண்பு எனப்படுவது முன்பு நாம் கூறியதை பின்பு மறுக்காது இருத்தல். நிறை எனப்படுவது மறைபொருளை பிறர் அறியாமல் பாதுகாத்தல். ஆட்சியில் முறை செய்தல் என்பது கொலை குற்றம் புரிந்தோர்க்கு இரக்கமின்றி மரண தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை பழிப்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல் என்று வாழ்வின் உயரிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறது கலித்தொகை.

இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று
      
       களவு ஒழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் பெற்றோர் அவளை அயல்மணம் பேசுகிறார்கள். அதனை அறிந்த தலைவி, தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். செவிலித்தாய் அவளை பல இடங்களில் தேட, எதிரில் வந்த அந்தணரிடம் இது பற்றி வினவ, அவர் செவிலித் தாய்க்குக் கூறிய ஆறுதல் உலக இயல்பினை எடுத்துரைப்பதாக இருந்தாலும் இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று: என்ற தத்துவத்தையும் உணர்த்துவதாக உள்ளது.

“பலவுரு நறுந் சாந்தம் படுப்பவர் கல்லதை
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையவளே”  (பாலைக்கலி 9:11-19  )
மனித சுபாவம் அறிந்து பழகிட வேண்டும்         
      பக்கத்தில் இருக்கும் வரை ஒருவரைப் பாராட்டி புகழ்வது, அவர் சென்றவுடன் அயலாரிடம் அவர் மீது பழித்துற்றுவது போன்றவை அற்பர் செயல்கள் எனக் கலித்தொகையில் சுட்டப்பட்டுள்ளது.

“சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி மற்றுஅவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்” (பாலைக்கலி 25: 15 -16 )

      செல்வக் காலத்தில் ஒருவரோடு நட்பு கொண்டு அவரது செல்வத்தை அனுபவித்து விட்டு அவர் வறுமையுற்றபோது ஓர் உதவியும் செய்யாத நன்றியறிவு அற்றவர், நட்புணர்வு அற்றவர் என்று பாலைக்கலியில் குறிப்பிட்டுள்ளது.

“செல்வத்துள் சேர்ந்து அவர் வளன்உண்டு மற்றுஅவர்
ஒல்கிடத்து உலப்பு இலா உணர்விலார் தொடர்பு போல்” (பாலைக்கலி :25:19-20)        
       ஒருவரோடு நட்பு கொண்ட காலத்தில் அவரைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்டு அந்த நட்பு மாறிய பொழுது அதை பிறருக்குக் கூறும் பெருமையற்றவர் உறவை பீடிலார் தொடர்பு என்கிறது கலித்தொகை.  

“பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து அம்மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்புபோல்” (பாலைக்கலி :25:23-24)
        
       ஒருவரது முகம், கடன்பெறும் போதும் அதைத் திருப்பிக் கொடுக்கும் போதும் வேறுபடுவது புதிதல்ல. இந்த இயல்பு உலகத்தில் என்றும் உண்டு என்ற உளவியல் பார்வையும் கலித்தொகையில் உள்ளது.

உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேராகுதல்
பண்டும் இவ்வுலகத்து இயற்கை”  (பாலைக்கலி :22:1-3)         
        சிற்பி ஒரு சிலையைச் செதுக்கும் பொழுது அதில் அமைத்த உணர்வுகள் யாவும் இறுதிவரை அதில் புலப்படும். அதுபோல நற்பண்பு உடையவர்  வாக்கின் உண்மையை இறுதிவரை காப்பாற்றுவர் என்று மனிதர் இயல்பைத் தெளிவாக உரைத்துள்ளது கலித்தொகை.

“தாய்உயிர் பெய்த பாவை போல
நலனுடையார் மொழிக்கண் தாவார்”  பாலைக்கலி :22:5-6
செய்யும் தொழிலே தாழ்வில்லை
        
       நான் மோர் விற்றுத் திரிவது எம் குலத்துக்குத் தீதன்று. எம் சுற்றத்தார் ஆயராதல் போல் நானும் ஆய்ச்சியே. ஆதலால் நான் மோர் விற்பதில் எந்தத் தீமையும் இல்லை என்ற தலைவியின்  கூற்று செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்துகின்றது. மேலும் குலத்தொழிலின் அவசியத்தை வற்புறுத்துகின்றது. அதுமட்டுமன்றி குலத்தொழிலை வெறுக்கும், ஏற்றுக்கொள்ள மறுக்கும்  இன்றைய கால இளைஞர்களின் மன நிலைக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது.

அஃது அவலம் அன்று மன
ஆயர் எமரானால் ஆயத்தியேம்”  (முல்லைக்கலி 108:9-10
)
நமது துயரத்தைப் பிறருக்குக் கடத்துதல் கூடாது        
     ஆய்ந்து செய்த அணிகலன்களை உடையவளே! பயனில்லாதவற்றைக் கூறாதே. தொலைநாட்டில் உள்ளவர்க்கு நம் துயர் கூறி தூது அனுப்ப வேண்டாம் என்ற தலைவியின்  கூற்று நமது கஷ்டங்களைப் பிறருக்குச் சொல்லி அவர்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற அற்புத நெறியை  உணர்த்துகின்றது.

“ஆயிழாய்! ஆங்கனம் உறையாதி சேயோர்க்கு
நாம்தூது மொழிந்தனம் விடல் வேண்டா”  (பாலைக்கலி 28:21-22)
மனத்தை அடக்கினால் வாழ்வை வெல்லலாம்!         
      சுருக்கமாகப் பேசும் திறன் உடைய தோழி தொலைநாட்டுக்குச் சென்றவரை எண்ணி வருந்தும் என் மனத்தை நீ கூறும் அளவைவிட மிகுதியாகவே கட்டுப்படுத்துகின்றேன். ஆனால் அந்தக் கட்டுப்பாடு உடைகின்றது என்ற தலைவியின் கூற்று மனத்தை அடக்கி ஆளும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதோடு மனத்தை அடக்குதல் எளிதன்று, நாம் எடுக்கும் பயிற்சியும் முயற்சியும் நமது மனத்தை அடக்கினால் நம்மை வெல்வது எளிதன்று என்பதை அருமையாக எடுத்துரைக்கின்றது.

“சேயார் கட் சென்ற என் நெஞ்சினைச் சின்மொழி 
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்மன்”    (பாலைக்கலி 29:10-11)
முன்னோர் கொள்கையே முன்னேற்றப் பாதை        
       தலைவன் தனக்கென்று ஒரு மனை அமைத்துக் கொள்ளும் பொருள்வளம் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ளும் தகுதியை அடைகிறான் என்பது முன்னோர் கொள்கை. இக்கொள்கைக்குச் சான்று முல்லைக்கலியின் பாடல்.

“முற்றிழை ஏஎர் மட நல்லாய் நீயாடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான்”      (முல்லைக்கலி 111:8-12)
       
      சங்ககாலத்தில் களவுக் காதல் சமுதாயத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆயினும் திருமணம் பெற்றோராலும் சுற்றத்தாராலுமே முடிவு செய்யப்பட்டது. எனினும் பெண்ணின் காதலைப் பெற்றோர் அறிந்த பின்பும் ஆடவனின் குணச்செயல்களைப் பற்றி நன்கு கேட்டறிந்த பின்னரே திருமணத்தை முடிவு செய்வர் என்பதையும் கலித்தொகையின் பாடல் விளக்குகிறது.

“மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது எனக்கேட்டுத் திண்ணிதாத்
தெய்வம் மால் காட்டிற்று இவட்கென”    (முல்லைக்கலி 107:30-33)
      
      குறிஞ்சி நிலமக்கள் வேங்கை மர நிழலில் இருந்து மணம் பேசி முடிவு செய்தலும் திருமணம் நடத்துவதும் சங்ககால வழக்கமாக இருந்திருக்கின்றது.

“மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் நம்மலை கிழவோற்கே”    (குறிஞ்சிக்கலி :41:44-45)        
       கணவர் இறந்தபின் கற்புடைய பெண்டிர் வானுலகில் அவரை மீண்டும் தன் கணவனாகப் பெறுவர் என்ற நம்பிக்கையை நெய்தற் கலியில் காணமுடிகிறது.

“மாண்ட மனம்பெற்றார் மாசில் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல்”   நெய்தற்கலி :143:45-46
நிதானம் வெற்றிதரும்        
       ஒரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்தபோது அவன் வாயிலில் வந்து நின்று தாகம் என்றான். அன்னையும் பொற்சொம்பில் நீர் ஊற்றி அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய் என்றாள். நானும் வீட்டிற்கு வந்தவன் யார் என்று தெரியாமல் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தேன். அப்போது தான் தெரிந்தது அவன் என்னவன் என்று. அவன் என்னை இறுகப் பிடித்து இழுத்தான். நான் திடுக்குற்று அஞ்சி அம்மா என்று கத்தினேன். அன்னையும் அலறி ஓடி வந்தாள். நான் நடந்ததை மறைத்து தண்ணீர் பருகிய போது விக்கினான் என்றேன். அன்னையும் அதனை நம்பி மெல்லவே பருகலாகாதா? என்றாள்.  (நடந்தத அறியாமலே). அந்தக் கள்ளன் கடைக் கண்ணாலேயே என்னை கொன்று விடுபவனைப் போல பார்த்தான்.
        கலித்தொகையின் இப்பாடல் ஒரு புரட்சியை ஏற்படுத்திய பாடல். என்னவென்றால், கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கே உரித்தானது என்பது பண்டுதொட்ட சிந்தனை. பாரதிதாசனும் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற இலக்கியத்திலே “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படி கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கானது என்ற ஒரு பிம்பத்தை கலித்தொகை மாற்றி ஆண்களுக்கும் கடைக்கண் பார்வை உண்டு என்ற புரட்சி விதையை இங்கே விதைத்திருக்கிறது.
      மேலும் நடந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பெண்ணின் அன்னையின் மெல்லவே பருகலாகாதா? என்ற கூற்றில் நமக்கானது நமக்கு கிடைக்கும் அவசரம் வேண்டாம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் எதிலும் நிதானம் தேவை. நிதானமே வெற்றி தரக்கூடியது என்பதை நகைச்சுவையோடு இப்பாடல் வலியுறுத்தி இருக்கிறது.

அன்னையும் யானும் இருந்தேமா இல்லீரே
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”     ( குறிஞ்சிக்கலி :51:5-15)
நனவே கனவாகும்      
      விழிப்பு நிலையில் ஆழ்மனத்தில் படிந்த நினைவே கனவிற்குக் காரணம் என்ற ஃபிராய்டின் கருத்திற்கு கலித்தொகை பாடல் ஒன்று வலு சேர்த்திருக்கிறது.

“நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇப்”    (குறிஞ்சிக்கலி 49:3-4)
      
      வளைவான வரிகளை உடைய புலியைத் தாக்கி அதனை வென்ற முயற்சியில் மலைச்சாரலில் உறங்கும் யானைக்கு அந்த நினைவு மனத்தில் இருந்ததால் கனவிலும் அப்புலியைக் கண்டு அங்கு பூத்திருந்த வேங்கை மரத்தை அப்புலி என்று கருதி தன் வலிமையால் வந்த கோபத்திற்கு குத்தி அடியோடு குலைத்து கோபம் தணிந்தது என்று உதாரணமும் தந்துள்ளது.

முடிவுரை     
       மனித குல வாழ்விற்கான உயரிய வாழ்வியல் நெறிகளை பழமொழிகளைப் போன்று ஒரே வரியில்  வளமான சான்று ஆதாரங்களோடு தந்திருக்கின்ற கலித்தொகையைக் கல்விமான்கள் புலவர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் அனைவரும் “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று புகழ்வது பொருத்தமுடையதே என்பதற்கு மேற்கூறியவைகளே சான்றாதாரங்களாகும்.

ஆய்வுக்குப் பெரிதும் துணை நின்ற நூல்
சங்க இலக்கியம் மூலமும் உரையும் ( தொகுதி-6),உரையாசிரியர் முனைவர் சுப. அண்ணாமலைமுதன்மை பதிப்பாசிரியர்கள்முனைவர் தமிழன்னல் & முனைவர் சுப. அண்ணாமலைகோவிலூர் மடாலய பதிப்புவருத்தமானன் பதிப்பகம். முதற் பதிப்பு: ஏப்ரல் 2003

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சீனு. தண்டபாணி,

இணைப் பேராசிரியர் மற்றும் மொழித்துறைத் தலைவர்,

சாரதா கங்காதரன் கல்லூரி (தன்னாட்சி),

வேல்ராம்பட்டு, புதுச்சேரி.

The Agrarian Life of Farmers in Kanmani Gunasekaran’s Novel Korai- S.Viji

கண்மணி குணசேகரனின் கோரைப் புதினத்தில் விவசாயிகளின் வாழ்வியல்-சீ.விஜி
Abstract
           
        The long story written in prose is called a novel. Tamils initially referred to it simply as a novel. Later, it was Tamilized and presented under the name “Puthinam” (fiction). After it was realized that the imaginative beauty and emotional expressions of poetry can also be conveyed in prose, the first form of prose literature to emerge in Tamil was fiction literature. These fictions are written in various genres. Among them, many writers, with concern for society, create fiction based on the difficulties faced by the people.
Among them, writer Kanmani Gunasekaran has created many fictions portraying the livelihood struggles of the rural farming community without losing the essence of the soil. Farming remains an important occupation in our life even today. The collective desire is to further develop this occupation and make our country shine as a self-sufficient nation in agriculture. In this context, the aim of this article is to study the livelihood of farmers depicted in the core fiction.


“கண்மணிகுணசேகரனின் கோரைப் புதினத்தில் விவசாயிகளின் வாழ்வியல்”

முன்னுரை
        
       உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கியேலர் நாவல் என்பர்.தமிழர்களும் ஆரம்பத்தில் நாவல் என்றே அழைத்தனர். பின்பு தமிழ்ப்படுத்தி புதினம் என்ற பெயரால் வழங்கி வருகின்றனர். கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு தமிழ் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது புதின இலக்கியமே ஆகும். இப்புதினங்கள் பல்வேறு வகைகளாக பிரித்து எழுதப்படுகிறது. அதில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல எழுத்தாளர்கள் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை புதினமாக படைக்கின்றனர். அவர்களுள் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் நடுநாட்டு விவசாய மக்களின் வாழ்வியல் சிக்கல்களை மண் மனம் மாறாமல் பல புதினங்களாக படைத்துள்ளார். அவற்றுள் கோரைப் புதினத்தில் இடம்பெறும் விவசாயிகளின் வாழ்வியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேளாண்மை      
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்       
ஊழந்தும் உழவே தலை”(திரு-1031) 
         
      உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர்.

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்ல இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி “(தொல்-பொருள்- மரபு 81) என தொல்காப்பியரும்

“எருது பொழில் செய்யாது ஓடவிடும் கடன் வேளார்க்கு இன்று”(பரி-20-63)
         
      என பரிபாடலும் வேளாண்மையின் சிறப்புகளை எடுத்துக்கூறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பங்களும் வணிக மயமாதலின் தாக்கமும் உழவுத்தொழிலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கோரைப்புதினம்         
      ஒவ்வொரு புதின ஆசிரியரும் சமுதாயத்தைத் தாங்கள் புரிந்து கொண்ட கோணத்தில் நின்று அதற்கேற்பப் பாத்திரங்களைப் படைக்கின்றனர். அவ்வரிசையில் எதார்த்தவாத படைப்புகளை எழுதி தமிழ்ப் படைப்புலகில் பயணித்து வரும் எழுத்தாளர் அ.குணசேகர் என்னும் இயற்பெயர் கொண்ட கண்மணி குணசேகரன். தன் எழுத்துப் பற்றி கண்மணி குணசேகரன் அவர்கள் கூறும்பொழுது என்னைப் போலவே என் கதைகளும் எளிமையானவை. முந்திரிக்காட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையை முருங்கை மரக்கிளையை வெட்டி நடுவது போல பாசாங்கு இல்லாமல் இயல்பான மொழிநடையில் எழுதுகிறேன் என்கிறார்.  இன்றைய விவசாயிகளின் வாழ்வியல் போராட்டத்தை ‘கோரை’ப் புதினத்தில் வரும் உத்தண்டி கதாப்பாத்திரத்தின் மூலம் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்துள்ளார்.

உத்தண்டியின் மகிழ்ச்சி
   
     ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மனதில் பெரிய கனவு ஒன்று இருக்கும். தனக்கென்று சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்பதுதான் அக்கனவு. அதுபோல உத்தண்டிக்கும் ஒரு கனவு இருந்தது. அவனின் கனவு பூரணியை திருமணம் செய்தவுடன் கால் காணி நிலம் வாங்கியதன் மூலம் நிறைவேறியது. முதல் மகசூல் சொல்ல முடியாத மகிழ்ச்சி உத்தண்டிக்கும் பூரணிக்கும் ஆனால் மல்லாட்டை போடுவதா மிளகாய் வைப்பதா என இரு மனசாய் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தார்கள். நமக்கு சொந்தமான நிலத்தில் பயிர் வைத்து குறைந்த அளவு மகசூல் வந்தாலும் விவசாயிகள் மகிழ்வர் என்பதனை உத்தண்டியின் மன உணர்வு மூலமாக எழுத்தாளர் எடுத்துரைக்கிறார்.

கோரையால் ஏற்படும் பிரச்சினைகள்
      
       உத்தண்டியின் மகிழ்ச்சி சிறிது நாள் கூட நீடிக்கவில்லை. நிலம் முழுக்க கோரைச்செடிகள் முளைத்து நின்றன.காலடியில் ரத்தம் கசிகிற மாதிரி ஒரே வலி நெருஞ்சி முள்ளாய் மனதில் குத்துகிற கோரைக்காம்பில் உத்தண்டியால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை நடந்தான். கால்விரல்களில் கோரைகள் நாராய் சிக்கின.கோரையின் நெரிசலில் முழி பிதுங்கிகொண்டிருந்த மல்லாட்டைக் கொல்லையை விட்டு காட்டாமணி வேலி மறிச்சியை நிக்கிவிட்டு ரோட்டுக்கு வந்தான். கோரைப்புல் விளையும் நிலத்தை ஏமாந்து வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு உத்தண்டியை உள்ளுக்குள் சீவு முள்ளாய்க் குத்தி அவனை சின்னாபின்னப் படுத்திக்கொண்டிருந்தது.நல்லா இருந்த ஏங் கொல்ல பூரா கோரையா பூட்டுது என்னானு தெரியல எப்பிடினு புரியல என்று யாரிடம் கேட்பான். ஏற்கனவே  இவன் நிலம் வாங்கியதைப் பார்த்து பொச்சரிப்பில் அவனவன் வயிறு எரிந்து போய் நிற்கிற நிலையில,; இவன் கேட்டு விட்டால் அது வறவோட்டில் தண்ணீர் தெளித்த கதைதான்.சுர்ரென்று பொங்கும், புகையும், கடைசியில் ஆவியாய் வறண்டு போகும் வார்த்தைகள்”என்னடா இப்பதான் புது சாமான்ல இது மொளைச்ச மாதிரி காணி மயிரு வாங்கிட்டனு கோர மொளஞ்சிருக்கு அதுக்கு என்னா காரணம் கொரங்கு நிண்டிருக்கு, அதுக்கு என்னா வைத்தியம்னு ஒம் பூரிப்பப் போட்டு இங்க வந்து ஒடைக்கிறது” என்று சொல்லும் போது  உத்தண்டிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

கோரைக்கான காரணம்
    
     உத்தண்டியின்  வருத்தத்தை புரிந்து கொண்ட செம்புலிங்க கிழவர் நிலத்தை உற்று பார்த்தார். கெஞ்ச நேரம் கழித்து பட்டென்று கேட்டார் இதுவரைக்கும் அந்த கொல்லியல என்னென்ன மாசூலு வச்சிருக்க? மஞ்சள் வச்சேன் அதுக்கு முன்பு மல்லாட்ட போட்டேன்.கொல்ல வாங்கன பிறகு நான் வச்ச மொத மாசூலு மொளகாதான் படபடவென்று ஒப்பித்தான். மொளகா என்றதும் அவருக்கு நெற்றி சுருங்கியது. மொளகாய்க்கு என்ன தீனி வச்ச? என்று கேட்டவுடன் எருவு போட்டேன் புண்ணாக்கு தண்ணி, பிறகு பிஞ்சு நல்லா புடிக்குமுனு சொன்னாங்கனு பன்னி சாணி போட்டேன் என்றதும் கிழவர் பட்டென்று எழுந்து விட்டார். உன்னுடைய நிலத்தின் இந்நிலைக்கு நீயேதான் காரணம் என்று சொல்லி விட்டு அதான் வெர முதல்லுக்கு முகூர்த்தம் கோலிட்டீயே என்றார். அதற்கு உத்தண்டி குழப்பமாக கேட்டான்
 “என்னா பெரிப்பா சொல்றது ஒண்ணும் புரியலிய
 “ பன்னி சாணிதான் வெர முதலு”
 “ பன்னி சாணியா?”
“ஆமா பன்னி என்னாத்த திங்குது”
 “ஓட ஓடப்புல அலம்பும் அப்புறம்  முந்தரிக் கொட்ட நாளையில முந்திரி பழம்”
 “அப்பறம்”
“ எங்கையாவது கரம்பு கத்தாழையில கோரய நிண்டும்” அவனையும் அறியாமல் அவன் வாயிலிருந்து கோரை என்கிற வார்த்தை வந்ததும் மின்னல் வெட்டியது மாதிரி அப்படியே நின்று விட்டான். எங்கையாவுது கோரக்கெழங்க நிண்டன சாணிய அள்ளியாந்து போட்டிருப்ப அது மட மடன்னு கௌம்பிப் போச்சி, கோரன்னா சும்மாவா “ஆட்சா வைரம்”னு வரம் வாங்கி வந்ததாச்ச என்று சொல்லிக்கொண்டே போனார் செம்புலிங்;க கிழவர். மற்றவர்கள் சொல்வதை கேட்கும் அப்பாவி விவசாயிகளின் ஒட்டு மொத்த உருவமாக உத்தண்டி எனும் கதாப்பாத்திரம் உள்ளுக்குள் கலங்கியதை இப்புதினம் உணர்வுடன் உரைக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்
           
    நிலத்தில் கோரை முளைத்ததால்; பூரணிக்கும் உத்தண்டிக்கும் தினமும் சண்டை வந்துகொண்டே இருந்தது.  விளைந்த மிளகாயை விற்கச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பியதை பார்த்த பூரணி “காலையில் சாப்பாட்டுப் பொட்டலம் எடுத்துக்கிட்ட போன பையி எங்க?”
“தே…இங்கதான் இருக்கு” கால்சட்டைப் பையில் மடக்கி வைத்திருந்த மஞ்சள் பையை வெளியே எடுத்தான்.
“என்னா,இது வெறும் பையா இருக்கு” ஏமாற்றமாய் கேட்டாள்.
“ஊம்.பத்து மூட்டைமொளா எடுத்துட்டு போனேன். வித்து கத்த கத்தையா பணம் வாங்கனேன்.அதுல பத்து முழம் பூவும், அரைகிலோ மிச்சரும் வாங்கியாந்து குடுக்கலங்கற. வெளியிலிருந்து வந்தான், ஒரு சொம்பு தண்ணிகிண்ணி சாய்ச்சிக் குடுக்கணும்னு அந்த யோசன கீசன இல்ல இப்பதான் வெறும் பையா இருக்குன்னு”கோபமாய் பேசியபடி குந்தினான். “ஆமா, நீ பத்து மொழம் பூவு வாங்கிட்டு வருவ சீவீச் சிங்காரிச்சி வைச்சிகிட்டு நிக்கலாம்னு இருக்கறன். என்னைக்கு ஒனக்கு வாக்கப்பட்டனோ அன்னையிலேர்ந்து ஒண்ணுமில்லாம பூட்டேன்”என்று அழுதாள். விவசாயிகளின் வீடுகளில் தினமும் நடக்கும் சிறுசிறு மனக்கசப்புகளை  வட்டார மொழியில் மனவலியுடன் எழுத்தாளர் எடுத்துக்கூறியுள்ளார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்         
    உழவர்கள் எனப்படுவோர் எப்போதும் தங்கள் விளைநிலத்தினைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதை

“பயந்த விளை நிலம் உள்ளும் உழவன்”(நாலடி-356)
            
என்ற நாலடியார் பாடலடி குறிப்பிடுகிறது.

“நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்”(நாலடி-179)
         
    உழவர்கள் கடினமாக உழைத்தாலும் நிலவளம் இன்றி பயிர்வளம் சிறக்காது  என  நாலடியார் குறிப்பிடுவதைப் போல, இப்புதினத்தில் வரும் உத்தண்டி கதாப்பாத்திரம் கடினமான உழைப்பாளி ஆனால்  சரியான நிலம் அமையவில்லை. அதனால் பொருளாதாரத்திலும் இல்லற வாழ்விலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விளைச்சல் அதிகமாகும் போது விலை குறைந்து விடுகிறது. விலை அதிகமாகும் போது விளைச்சல் குறைகிறது. உழவுத்தொழிலுக்கு மிக அவசியமானது நீர், அது குறையும் போது எப்பயிரையும்  விளைவிக்க முடியவில்லை. இதனை
 
“ மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்”(நான்-48)
         
      என்னும் நான்மணிக்கடிகை பாடல் வழி அறிந்து கொள்ளலாம். ஊத்தண்டிக்கு சொந்தமாக கிணறும் இல்லை. பக்கத்து நிலத்தில் பயிர் வைப்பவரிடம் இருந்து; கிணற்று நீரை கடன் வாங்கி இறைத்தான். அதனால் விளையும் மகசூலில் முக்கால் பாகம் அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருந்தது. “என்னாத்த சொல்றது அந்த ஆளு அதிசயமா வாரத்தண்ணி வுடறான்னு நேரம் பார்த்து கேனக் கொண்டாந்து குடுக்கிறான். வித்தகாசி ஒரத்துக்கும் எண்ணெய்க்குந்தான் சரியா இருந்தது என்று; உத்தண்டி சொல்லும் வார்த்தைகள் நம்மை வருத்தப்பட வைக்கிறது.
 
“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது”
        எனும் பழமொழியை நினைவுப்படுத்துகிறார் எழுத்தாளர்.

முடிவுரை
  
      இப்புதினம் நடுநாட்டில் ஓர் ஏழைக் குடியானவன் விவசாயத்தில் படும் பாடுகளை மண் மொழியில் கலைநயத்தோடு சித்திரிக்கும் புதினமாக விளங்குகிறது.  நிலத்தில்  முளைந்த கோரைகளை அழிக்க பன்றிகளை அழைத்து வந்து  மறுபடியும்  நிலத்தை வீணாக்கிவிட்டதை  எண்ணி உத்தண்டி வருத்தப்படுவதை படிக்கும் போது கண்களில் நமக்கு நீர் வருகிறது. மனித இனம் தோன்றிய போதே உழவுத்தொழிலும் தோன்றியது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு மாற்றங்கள் அடைந்தாலும், நம் வாழ்வின் முக்கிய தொழிலாக இன்றும் இருப்பது உழவுத்தொழிலே. அத்தொழிலை மேலும் வளர்த்து விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக நம் நாட்டை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். எனவே விவசாயிகளின் பெருமையையும் அவர்கள் படும் துயர்களையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து கூறும் வகையில் இதுபோன்ற நல்ல புதினங்களை எழுத்தாளர்கள்  படைத்தல் வேண்டும்.

துணை நூற்பட்டியல்
1.கண்மணிகுணசேகரன் – கோரை (புதினம்)

2.பதிப்பாசிரியர் குழு(கௌரா பதிப்பகம்)   – நாலடியார் மூலமும் உரையும்
3.பரிமேலழகர் உரை  – திருக்குறள்

4.ந.மு.வேங்கடசாமிநாட்டார்- நான்மணிக்கடிகை

Iniyavaikatral_Article_Publishedஆய்வாளர்  
சீ.விஜி

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

கலைஞர் கருணாநிதி அரசுகலைக்கல்லூரி

ரிஷிவந்தியம்,கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
நெறியாளர்
முனைவர் ந.குப்புசாமி

முதல்வர்,
அரசுகலைக்கல்லூரி
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி

Sangagalath Tamilarin Unavu Muraigal| D. Rajakumari

Abstract 
         
       In the early stages of human life, human society was a hunter-gatherer society. Therefore, humans spent their time hunting for food and consuming natural resources found in the forests. Initially consuming raw meat, humans eventually learned that cooking meat and tubers over a fire enhanced their taste. After discovering fire, they began to cook and boil their food. After the invention of pottery, they adopted methods such as boiling and steaming food. They understood that food not only satisfies hunger but also provides the body with the necessary knowledge and energy. Therefore, they learned to cook food in various ways and to preserve, store, and process food items during times of scarcity.


“சங்ககாலத்தமிழரின்உணவுமுறைகள்”

முன்னுரை
         
     மக்கள் உண்ணும் உணவும் பழக்கவழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தைக் தீர்மானிக்கின்றன என்று பகவத்கீதையும், எவற்றை உண்ண வேண்டும், எவற்றை உண்ண கூடாது என்று இசுலாமியர்களுக்குக் குர்ஆனும், கிறித்துவர்களுக்கு வேத ஆகமும் கூறுகிறது.  இயற்கை உணவு முறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் உள நலத்தையும் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  சங்ககாலம் தொட்டு இன்றைய காலம் வரை உணவின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம்.  மக்கள் பசியோடிருப்பது ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதப்பட்டதனால்தான் ‘உண்ணாவிரதம்’ என்ற போராட்ட முறையே தோன்றியது.  ஆதிமனிதன் நாடோடியாக அலைந்ததற்கும், தற்கால மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதற்கும் உணவே காரணமாகும்.  ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பர்.  நோயின்றி வாழ உண்ணும் உணவே காரணமாக அமைகிறது.
         
      சங்ககால மக்களின் உணவு வகையானது பருவச் சூழ்நிலை, வாழும் நிலத்தின் தன்மை, விளையும் பொருள்கள், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.  அக்கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கும் ஏற்றவையாக இருந்தன.  மேலும் உணவைச் சுவையுறச் சமைப்பதிலும், உண்பதிலும் அம்மக்கள் சிறந்து விளங்கினர் என்பதை இனி இக்கட்டுரையில் காண்போம்.

சமையலுக்குதேவையானஉபகரணம்
         
    நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்படைந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.  நெருப்பு மூட்டி சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்படுகிறது.
 
“முடித்தலைஅடுப்பு” 
“ஆண்டலைஅணங்கடுப்பு” 
“ஆடுநனிமறந்தகோடுயர்அடுப்பு” 
“முரியடுப்பு” 
“களிபடுக்குழிசிகல்அடுப்பு”
         
      என்று பல அடுப்புகள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.  அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது.  மறவர்கள் மண்ணாலான கலங்களில் உணவைச் சமைத்துள்ளனர்.  மண்ணால் செய்யப்பட்ட அடிசில் ஆக்கும் கரிய பாண்டங்கள் உடையும்படி முயல் ஓடியது.  இதனை,
 
“பெருங்கட்குறுமுயல்கருங்கலன்உடைய
மன்றில்பாயும்”
         
     என்ற புறநானூற்று அடிகளால் அறியலாம். உலலோக பயன்பாடு குறித்து நம் முன்னோர்கள் அறிந்திருந்தும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.  இதற்கு காரணம் மண்பாண்டத்தில் சமைப்பதால் வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது.  மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால் உணவு சூடாகவே இருக்கும்.  அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது.  பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன.  இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.  இக்காரணம் கருதியே நம் முன்னோர் மட்பாண்டங்ளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள் உணவு சேமித்து வைக்கும் பொருட்களின் பெயர்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  தயிர் கொடுத்து பொன் பெற்ற தமிழர்கள் அதனைப் பாதுகாக்கும் தயிர்பானையை “குழிசி” என்று அழைத்தனர்.  தயிர்பானையின் முடைநாற்றம் தீர அப்பானையில் விளாம்பழம் இட்டு வைத்தனர் சோறு சமைக்கும் பானைக்கும் குழிசி என்று பெயர். 

🌽 சோறு சமைக்கும் பாத்திரம் “மடா” என்றும் அழைக்கப்பட்டது.

🌽 அப்பம் சுடப் பயன்படும் பாத்திரத்திற்கு “அகல்” என்று பெயர்

🌽 கள் வைக்கும் குடம் “பைங்குடம்” என்று அழைக்கப்பட்டது.

🌽 நீருண்ணும் பாத்திரம் “தொகுவாய்க்கண்ணல்” என அழைக்கப்பட்டது.

🌽 நாழிகையை அளந்து அறிய உதவும் நீர்வைக்கும் பாத்திரம் “குறுநீர்க்கன்னல்” எனப்பட்டது.

🌽 அரிசியைக் கொண்டு கள் தயாரித்தவர்கள் பயன்படுத்திய பாத்திரம் “மலர்வாய்பிழா” என அழைக்கப்பட்டது.

🌽 இரப்போர்கள் வைத்திருந்த பாத்திரம் “மண்டை” என அழைக்கப்பட்டது.  மேற்கண்ட பாத்திரங்களை பயன்படுத்தி சங்கத் தமிழர்கள் உணவு உண்டனர்.

உணவுசமைத்துஉண்டமுறை
         
      சங்கத் தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.  நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம்.  இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர்.  வேக வைக்கப்பட்ட இறைச்சி வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.
         
      இக்காலத்தில் உண்பது போலவே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்தது.  இறைச்சித் துண்டங்களை இரும்புக் கம்பியில் கோர்த்து உப்பும் கருமிளகுப் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டி உண்டுள்ளனர்.  இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தினர்.  பார்ப்பன மகளிர் சமையல் செய்வதில் சமத்தர்.  அக்கலையில் தமக்குள்ள திறமையில் அவர்களுக்குப் பெருமை உண்டு.  இவர்கள் நெய், பால், தயிர், மாங்காய், கொம்மட்டி மாதுளை, கீரை முதலிய காய்வகைகளை சமைத்து உண்டனர்.  மேலும் மாதுளங்காயை மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டுப் பசுவெண்யெயில் பொரித்துப் பார்ப்பார் உண்டனர்.  இதனை
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க்கை பறவைப் பெயர்ப்படு வத்தம்”
என்னும் பெரும்பாணாற்றுப்படை வரிகள் சுட்டுகின்றன.

இலக்கியத்தில் கள்
         
        சங்ககாலத்தில் கள் உண்ணல் ஆண்கள், பெண்கள் அனைவரிடமும் காணப்பட்டது.  கள்ளுண்டலை அக்காலத்தோர் தவறாகக் கருதவில்லை.  இதற்கான காரணம் கள்ளின் பயன் குறித்து அக்காலத்தோர் அறிந்திருக்க வேண்டும்.  தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது.  பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும்.  சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.  காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை 100 – 200 மி.லி அருந்தி வந்தால் போதும் உடல் குளிர்ச்சி பெறும்.  உடல் ஊட்டம் பெறும்.  வயிற்றுப்புண் ஆறிவிடும்.  புளிப்பேறிய கள் மயக்கம் தரும்.  அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும்.  சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும்.  இக்காரணம் கருதியே அரசர்கள் வீரர்களுக்கும் தன்னை நாடி வந்த இரவலர்களுக்கும் மழைபோல் கள்ளை வழங்கினர். கபிலர் போன்ற அந்தணப் புலவர்களும் அதனைப் பாராட்டியே பேசினர்.  ஊர்களின் வளத்தினைப் பேசும்போது கள் மிகுதியையும் இணைத்துப் பேசியுள்ளனர்.  தேறலைப் புளிக்க வைப்பதற்கு அதனை மூங்கில் குழாயினுள் ஊற்றி நிலத்தில் புதைத்து வைத்தனர்.  இதனை

“நிலம்புதைப்பழுநியமட்டின்தேறல்
புல்வேய்கரம்பைக்குழதொறம்பகர்ந்து”
         
     என்ற புறநானூற்று பாடல் வழி அறியலாம்.  தென்னை, பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைத் தவிர வீட்டிலேயே சமைத்த ஒரு வகைக் கள் ‘தோப்பி’ எனப்பட்டது.

கனிவகைஉணவுகள்
         
      மனித ஆரோக்கியத்திற்குச் சிறந்த ஆகாரமாக விளங்குபவைகளில் கனிகளும் ஒன்று.  கனிகள் இறைவன் மக்களுக்காக வழங்கிய உயர்ந்த ஆகாரம் மட்டுமல்ல மருந்தும் ஆகும்.  பெரும்பாலான கனிகளில் ஈரப்பதம் 80 சதவீதம் உள்ளது.  கனிகளை உணவாகச் சாப்பிடச் சொல்வதற்கு இதுவே காரணம் ஆகும்.  நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.  நம் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வதாக இருந்தாலும், ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதாயிருந்தாலும், பூசை செய்யும் போது கனிகளுக்கு முதலிடம் உண்டு. பழங்காலத்தில் காடுகளில் வசித்து வந்த முனிவர்கள், சித்தர்கள் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் காடுகளில் கிடைக்கும் கனிகளையும் சுவைமிக்க காய்களையும், மூலிகை வகைகளையும் உட்கொண்டே வாழ்க்கை நடத்தினார்கள்.  ஒரு மனிதன் வேறெந்த வகை உணவையும் உட்கொள்ளாமல் வெறும் கனிகளை மட்டுமே உட்கொண்டு உடல் நலத்தோடு வாழ்க்கை நடத்திவிட முடியும் என்று உடலியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
         
     கனிகளைச் சங்கத்தமிழர் தனியாகவும், உணவோடு சேர்த்தும் உண்டுள்ளனர்.  ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், தெங்கம்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், பிரம்பின்கனி, பனம்பழம், புளியம்பழம் முதலிய பழங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இல்லை.  அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வநந்தனர்.  அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலங்களில் சிறந்தது வசந்த காலம்.  அதுபோல் கனிகளிலே சிறந்தது நெல்லிக் கனி.  மாதங்களில் சிறந்தது மார்கழி.  அந்த மார்கழி மாதத்தில் கிடைக்கும் கனியும் இதுவே.  நெல்லியை நினைத்தாலே நாவில் நீர் ஊறும்.  நெல்லிக்காய் என்பதை விட நெல்லிக்கனி என்றே அழைக்க வேண்டும்.  நெல்லிக் கனியைக் கடித்துச் சுவைக்கும்போது, முதலில் கசப்பும் புளிப்பும் கலந்த ஒரு விதத் தனிச் சுவை இருக்கும்.  அதைக் கடித்துச் சுவைத்தபின் குழந்தைகள் நீர் அருந்தி அதன் இனிப்பை இன்புறலாம்.  இதை அடிப்படையாக வைத்துத்தான்
 
     
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்
      என்ற பழமொழி எழுந்தது. வடநாட்டிலும் தென்னாட்டிலும் நெல்லி மரத்தை அரசமரத்திற்கு இணையாகவும், அதன் இலைகள் துளசிச் செடிக்குச் சமமாகவும் கருதப்படுகிறது.  பத்துவகையான புனித மரங்களில் நெல்லிமரமும் ஒன்றாகும்.  இந்துக்களில் முதல்நாள் “உபவாசம்” முடித்து உணவு உண்ணத் தொடங்கும் போது நெல்லிக் கனியின் சாற்றையோ, நெல்லிப் பொடியையோ மோரில் கலந்து உண்டபின்பே மற்ற பதார்த்தங்களைச் சாப்பிடத் தொடங்குவது வழக்கம்.

புலால்வகை உணவு
         
        புலால் உண்ணாமையை நீதி இலக்கியங்கள் கூறுகின்றன.  இருப்பினும் சங்ககால மக்கள் ஊன் உணவை அதிக அளவில் உண்டுள்ளனர்.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, கணுக்காலிகள் போன்றவற்றை உணவில் பயன்படுத்தியுள்ளனர். ஊன், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகைகள் அழைக்கப்படுகிறது.  வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக உண்ணப்பட்டன.   ஆட்டுக்கிடாயை வெட்டி வீழ்த்தி, அதன் இறைச்சியைக் கிழித்து சூட்டுக்கோலில் கோர்த்து, சுட்டு, சூட்டிறைச்சியாகச் சமைத்துத் தெய்வங்களுக்கு இலையில் பலி இடுவதைப் போல மன்னன் இரவலர்களுக்குக் கொடுத்ததைப் புறநானூறு
 
“அவிழ் வேண்டுநர்க்கு இடைஅருளளி
விடைவீட்த்துச் சூடுகிழிப்ப”
         
என்று குறிப்பிடுகிறது.  இன்றும் கிராமப்பறங்களில் கருப்பனார் முதலிய தெய்வங்களுக்கு ஆட்டிறைச்சியின் ஈரல் முதலியவற்றைச் சுட்டு படைத்து வழிபடுகின்றனர்.  இதனைச் ‘சுடுவான்பூசை’ என்றும் அழைக்கின்றனர். மருதநில உழவர்கள் தம் உழைப்பால் பெற்ற வெண்மையான நெற்சோற்றோடு கோழிப்பெடைப் பொரியலை உண்ணக் கொடுப்பர் என்பதை
 
“வினைஞர்தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்”
         
      என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் மூலம் அறியலாம்.  கோழியை வீட்டில் வளர்த்தனர்.  விருந்தினர் வந்தால் அக்கோழி விருந்தினருக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது.  இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோர் விருந்தினர் வந்தால் வீட்டிலிருக்கும் கோழியைச் சமைத்து உண்ணக்கொடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரவவகைஉணவுகள்         
       அக்காலத்தோர் திரவ வகை உணவுகளில் முதன்மையானது கூழும், கஞ்சியுமாகும்.  அதிக அளவில் நீர் கலந்து சோறு கரையும் அளவிற்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது.  அரிசி, வரகு, கேப்பை, கம்பு போன்ற தானியங்களைக் கொண்டு கூழ் ஆக்கப்பட்டது.  சங்ககால மக்கள் தானிய வகை உணவுகள், பழங்கள், விலங்கு வகை உணவுகளோடு திவர வகை உணவுகளையும் விரும்பி உண்டனர்.  இவர்களின் உணவு முறைகளில் கள், பால், தயிர், மோர், போன்ற திரவங்கள் இடம் பெற்றன.  பால், மோர் போன்ற திரவங்கள் உடல் குளிர்ச்சிக்காகவும், கள் போதைக்காகவும் பயன்படுத்தப்பட்டது.  கள்ளை தென்னை மரங்களில் இருந்தும் பனை மரங்களில் இருந்தும் தயாரித்தனர்.
         
     பால் உணவைத் தவிர்க்கும் போது உடல் வலிமை குன்றத் தொடங்கும், உடல்நலம் கெடத் தொடங்கும்.  பால் இன்றிப் பிற உணவை மட்டும் உண்போர் பல்வகை நோய்களுக்கும் இலக்காகி விரைவில் மடிவர் என்பது உண்மை.  பால் ஒரு மிகச்சிறந்த உணவுப் பொருள்.  அன்று முதல் இன்று வரை பால் உண்ணப்பட்டு வருகிறது.  ஆட்டுப்பால், பசும்பால், எருமைப்பால் முதலியவை இன்று உண்ணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பால் குறித்த குறிப்புகள் வெளிப்படுகின்றது.  பால் என்பது சங்க காலத்தில் இருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளதாக நற்றிணைப் பாடல் ஒன்று சான்று பகர்கிறது.

“பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர் பொற்கலந்து ருகை
புடைப்பிற் கற்றும் பூந்தலைச் சிறுகோல்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பு தத்துற்று”
         
     என்ற பாடல் வரிகளில் “நம் ஊவலை மறுத்து பாலுணவையும் மறுத்து விளையாடும் பண்புடையவள் நம் மகள்.  அப்படிப்பட்ட நம் மகள் இன்று கணவனின் ஏவலுக்கு ஏற்ப நடப்பதற்குத் தக்க அறிவும், ஒழுக்கத்தையும் எவ்வாறு பொற்றாள்?” என்று நற்றாய் வியப்படைவதாகக் கூறப்பட்டுள்ளது.  ஆகவே, அக்காலத்தில் பிள்ளைகளுக்குப் பாலுணவு வழங்கும் வழக்கம் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

முடிவுரை
         
       சங்ககால மக்கள் சமைப்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட அடிசில்களை பயன்படுத்தினர்.  உணவை சுட்டும், பொறித்தும், பதப்படுத்தியும் உண்டனர்.  கள், பால், மோர், தயிர், நீர் ஆகிய திரவவகை உணவுகளையும், மா, பலா, வாழை, நெல்லி போன்ற பழங்களையும் உண்டுள்ளனர்.  அவர்களின் வாழ்வில் புலால் வகை உணவு முக்கிய பங்கு வகித்திருந்தது.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்க காலத்தில் உணவு வழக்கத்தில் அசைவ உணவும் மிக மிக இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளதை நன்கு அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.அரசு. ஏ. டி, பிணிகளை வெல்லும் கனிகள், பார்வதி கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017.

2.அவ்வை துரைசாமிப்பிள்ளை, நற்றிணை, அய்யனார் பதிப்பகம், எண். 4/87, 6 வது தெரு, வினாயகபுரம், காரணை புதுச்சேரி, கூடுவாஞ்சேரி – 603 202.

3.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098.

4.நாகராசன் . வி,  புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098.

5.மாணிக்கம். அ, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், 48/1, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017.  

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

Iniyavaikatral_Article_Publishedது. ராஜகுமாரி, எம்.ஏ., எம்.ஃபில்.,
தமிழ்த்துறை

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாலை – 606 603.

ஆய்வுநெறியாளர்
முனைவர்ந. குப்புசாமி
தமிழ்த்துறைத்தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

Vijayabaarathi|Dr.P.Senthilnathan

 Abstract
        The gentle Tamil charioteer Bharati, who aspired to nurture and guide the world through the power of song, had also reached great heights in prose—a fact that remains unknown to many even today. It can be understood that his essays function as explanations and extensions of his poetry. The themes of the articles he wrote in India, Vijaya, and Swadesamitran are strikingly original and invite critical debate. Even in his prose style, Bharati’s distinct individuality is clearly evident, particularly through his abundant use of satirical wit. This study is centred on the news articles written by Bharati himself in the Vijaya daily newspaper, which he personally edited and published.

“விஜயபாரதி”

முன்னுரை
    ‘பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று விரும்பிய பைந்தமிழ்த் தேர்ப்பாகன் உரைநடையிலும் உச்சம் தொட்டு இருப்பது இங்கு பலரும் அறியாத ஒன்றாகும். கவிதைகளின் விளக்கமாக அவனது கட்டுரைகள் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இந்தியா,விஜயா, மற்றும் சுதேசமித்திரனில் எழுதியுள்ள கட்டுரைகளின் பொருண்மைகள் விந்தையாகவும், விவாதத்திற்குரியதாகவும் அமைந்துள்ளன. கட்டுரை நடையிலும் பாரதி தனது தனித்தன்மையைக் குறிப்பாக அங்கதச் சுவை மிகுதி பட எழுதி உள்ளமையைக் காணமுடிகிறது. பாரதி தானே நடத்திய ‘விஜயா’ நாளேட்டில் எழுதியுள்ள செய்தியை மையப்படுத்தி இவ்வாய்வு அமைகிறது.

விஜயா
       “பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு விஜயா” ஆகும் 1909-1910 இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிக்கைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மன ஓட்டங்களையும் படம் பிடித்து காட்டுகின்றது”.
இப்பத்திரிக்கையைக்கு எட்டு மாத காலம் ஆசிரியராக இருந்திருக்கிறார், பாரதியின் பத்திரிகைப் பணியில் இந்தியா வார இதழும், சுதேசமித்திரன் நினைவுக்கு வரும் வேளையில் விஜயா அறிமுகமில்லாத இதழாகும்.செல்லம்மாபாரதியின் ‘பாரதி சரித்திரம்’ மற்றும் வ.ரா.வின் ‘மகாகவி பாரதியார்’ இரண்டிலுமே இடம்றா இதழாகும்.
கால ஓட்டத்தில் வார இதழ்களும், மாத இதழ்களும் ஓரளவு தப்புவதற்கான சூழல் உண்டு. ஆனால் நாளேடுகள் தப்புவது  அரிதினும் அரிதாகும். ‘இந்தியா’ வின் அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஏறத்தாழ 120 இதழ்கள் கிடைத்துள்ளன. விஜயாவின் நிலையோ தலைகீழ். மிக அரிதாகக் கிடைத்த இவ்விதழின் பகுதிகளைத்தேடி ஆ.ரா. வேங்கடாசலபதி பிரான்ஸ் வரை சென்று வந்திருப்பதாக தனது ‘விஜயா கட்டுரைகள்’ தொகுப்பு நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விதழ் முதலில் சென்னையிலேயே வெளிவந்திருக்கிறது. பிறகு புதுவையிலிருந்து வெளிவரத் துவங்கியுள்ளது. இவ்விதழும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே செய்தியையே பிரசுரித்தன. விஜயாவின் ஆசிரியராக சி. சுப்பிரமணிய பாரதியே இருந்துள்ளார்.
”1908 அக்டோபர் முதல் 1909 மே வரை சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த விஜயா 1909 செப்டம்பரில் புதுச்சேரிக்கு இடம் மாறியது. இடையில் சில மாதங்கள் ‘விஜயா’ வெளியானதாகத் தெரியவில்லை. இந்தியாவைப் போலவே சென்னையில் பத்திரிக்கையும் (விஜயா) சர்க்கார் தலையீடு இன்றி நடக்க முடியாமல் போகவே அதுவும் புதுவை வந்தது” என்று ரா.அ.பத்மநாபன் குறிப்பிடுவதாக ஆ.ரா. வேங்கடாசலபதி தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இத்துனை இடையூறுகளுக்கும், இன்னல்களுக்குமிடையில் வெளிவந்த விஜயாவில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் சிந்தனைக்கும், பெரும் ஆய்விற்கும் உரியனவாகவே அமைந்துள்ளமையை உணர முடிகிறது. இவ்வாய்வுப்  பொருண்மையும் மிகுந்த சுவாரசியமானதே ஆகும்.

ஆய்வுப் பொருண்மை
       22 ஜனவரி 1910-இல் வெளியான இக்கட்டுரை அன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் அதிகரித்து வந்த ராஜரீக கொலைத் தொழில்களுக்கு முகாந்திரமாக ஸ்ரீமத்கீதை இருப்பதாகவும், மக்களை கொலை செய்யத் தூண்டும் விதமாக அமைந்துள்ளதாகவும் அதனால் ஸ்ரீமத் கீதையைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்தை எதிர்த்தும் பகடி செய்தும் இக்கட்டுரை பாரதியால் எழுதப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

ராணுவச் சட்டம்
       இந்தியாவை ஏறக்குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வந்த போதும், இந்தியர்களின் உண்மை நிலையை அவர்களால் அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம், பாரதமக்களைப் பார்ப்பதற்கு இடையூறாக கிழக்கு தேசத்தின் திரையானது தங்கள் கண்களை மறைத்துக் கொண்டு இருப்பதாக லார்டு மிண்டோ கூறுவதாகச் சொல்லும் பாரதி, இந்தியர்களின் என்ன நிலைமையை இவர்களால் அறிய முடியவில்லை? என கேள்வியும் எழுப்புகிறான். தங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் இந்தியர்களின் குறை கண்களில் தென்படாது என்றும் கூறுகிறான்.
மேலும், ஆங்கிலேயர்கள் வெளியிலிருந்து வரும் எதிர்ப்பைக் கூட சமாளித்து விடுவார்கள். ஆனால், உள்நாட்டு கலவரங்களைச் சமாளிப்பது அவர்களால் இயலாத காரியம். குறிப்பாக, வங்காள மக்கள் ராஜரீக கொலைத் தொழிலில் ஈடுபடுவதற்குக் காரணம், விவேகானந்தரே என்றும் அவருடைய உபந்யாச நூல்களில் அரசுக்கு எதிரான செய்திகள் மலிந்து இருப்பதாகவும் ஆங்கிலேய நிர்வாகம் கண்டடைந்திருப்பதாகவும், அதுசமயம், விவேகானந்தர் தன்னுடைய நூலில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டிருக்கும் நூல் எதுவென நோக்கினால் அது ஸ்ரீமத்கீதை என்பதாக ஆங்கிலேயர்கள் கண்டறிந்ததாகவும், ஆகவே அந்நூலானது ராஜ நிந்தனையான நூல் என்றும் கருதி விட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆகவே, வெளியிலிருந்து வெடிகுண்டு வீசுபவனை விட திரைக்குப் பின்னாலிருந்து அடுப்பங்கரையில் வெடிகுண்டு செய்யும் வங்காளப் பெண்களே அபாயகரமாணவர்கள் என்பதால் இவர்களை அடக்குவதற்காக ‘ராணுவச்சட்டத்தை’ ஆங்கில அரசு இயற்றியது. இதனை, ஆங்கிலோ-இந்திய பத்திரிக்கைகளும் உறுதி செய்தன. ஆகவே, இந்தியர்களைத் தூண்டிவிடும் உபந்யாசங்களைக்கூறும் ‘ஸ்ரீவிவேகானந்த சுவாமிகள்’ மீது அவர்களது துவேஷம் திரும்பியது.

ஸ்ரீமத் பகவத் கீதை
       உலக நன்மைக்காக ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு புனித நூல்கள் தோன்றியுள்ளன. அந்நூல்சார்ந்தும், அதனையொட்டியும், அவற்றை விளக்குமுகமாகவும் பல்வேறு நூல்களும் தோன்றிய வண்ணமேயுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இந்து மதத்தின் புனித நூலாக பகவத் கீதை போற்றப்படுகிறது. அதற்கு முந்தைய வேதங்களும், உபநிடதங்களும் மனித வாழ்விற்கான மேன்மைகளை, கொள்கைகளை, சிந்தனைகளைத் தத்துவங்காளாச் சொல்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த சாராம்சமாகவே ஸ்ரீமத் பகவத்கீதை விளங்குகிறது. இதன் உட்பொருளை அறிய வேண்டுமானால் இந்நூலின் தத்துவங்களையும், உண்மையான நோக்கங்களையும் கற்றறிந்த ஒரு நல்ல ஆசிரியரையடைந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
”பாரத நாட்டின் ஆத்ம ஞானம்; ஆத்ம சக்தி முதலானவற்றின் மேற்பிறையைக் கூட அறியமுடியாத இந்த ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகள் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸூஷமார்த்தங்களை  நமக்கு வெளியிட வந்துவிட்டன! என்ன அதிசயம்! மிஸ்ட்ரஸ் ஆனி பிஜான்டினிடம் கீதா அர்த்தங்களை கேட்பதைவிட ஆங்கிலேய இந்திய பத்திரிகைகள் கூறும் அர்த்தத்தை ஒப்புக் கொள்ளுதல் நலம் எனக் கருதுவாரும் நம்மில் ஒரு பகுதி யாருளர் என்கிறார்”.
பகவத் கீதை கூறும் தத்துவங்களை அறியாத ஆங்கிலேயர் அந்நூலை தடைசெய்ய நினைத்த அவர்களது மூடத்தனத்தைக் கண்டிப்பதோடு எள்ளி நகையாடவும் செய்கிறார். மக்களுக்கான வாழ்வியலை போதிக்கும் ஸ்ரீமத்கீதையைப் படிக்காமலும் படித்தவர்கள் இடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் முற்றிலுமாக ராஜ நிந்தனை கருத்துக்களை அந்நூல் கூறுவதாக அபத்தமாக எண்ணிய ஆங்கிலேயரைச் சாடுகிறார்.

ஆங்கிலேயரும் ஸ்ரீமத் கீதையும்
          ஸ்ரீமத் கீதையை குறை கூறிய ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகளும் ஆங்கிலேயர்களும் கீதை குறித்து ஒரு சிறிதும் அறிந்தவர்கள் இல்லை. அன்றைய சூழலில் இந்தியாவில் வெடிகுண்டு வீசப்பட்டது ராஜரீக கொலை கொள்ளைகளும் நடைபெற்றதற்குப் பகவத்கீதையே காரணம் என்றது சுத்த மூடத்தனம் என்கிறார்.
”ஆரிய நாட்டினர்களுக்கடுக்காத இத்தகைய பயங்கரமான கொடும் செயல்கள் எல்லாம் யாருடையது? ஆரிய நாட்டினுடையதா ஸ்ரீமத் கீதையில் சொல்லி இருக்கிறதா என்பதைப்பற்றி நன்றாய் நினைத்து தங்களுடைய மார்பின் மீது கைவைத்துக்கொண்டு மல்லாந்தவாறு படுத்துக்கொண்டு இந்த ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகள் தங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். உண்மை வெளிவரும். இந்த வெடிகுண்டு முதலிய கொடும் செயல்கள் எல்லாம் நமது பாரதநாட்டின் கேட்டிராத அநாரிக காரியங்கள்”.
ஆகவே, இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அல்லல்பட்டு வந்த வேளையில், ஒரு சில சலுகைகள் கேட்டும் ஆங்கில அரசு செய்து கொடுக்காத காரணத்தினால் முன்யோசனையற்ற சிறுபிள்ளைகள் அன்னிய நாட்டில் நடைபெறுவது போல வெடிகுண்டுகளை பிரயோகித்தனர். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே. ஏனெனில் பாரத மக்கள் மிகவும் சாந்தமான வர்கள். அவர்கள் இதுமாதிரியான கொடுஞ் செயல்களைச் செய்ய ஒருபோதும் துணிய மாட்டார்கள். இருப்பினும் இந்த மாதிரியான செயல்களைச் செய்யத் தூண்டும் விதமாக அமைந்த ஆங்கிலேயரின் பாராமுகம் அடிமைத்தனம் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

ஸ்ரீமத் கீதை கூறும் உபதேசம்
             ஸ்ரீமத் கீதையானது குருஷேத்திர யுத்தகளத்தில் பார்த்தனுக்கு சாரதி சொன்ன உபதேசங்களேயாம். அவ்வுபதேசம் என்பது போர் பற்றியது மட்டுமன்று. அதையும் தாண்டி தத்துவங்கள், ஆத்ம சக்தி சூட்சமங்கள், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு செய்திகளை விளக்கும் நூலாக அமைந்துள்ளது. மாறாக வெடிகுண்டு வைப்பது பற்றியெல்லாம் அது உபதேசிக்க வில்லை என்பதை தெளிவுறுத்தும் விதமாகவும் உண்மையில் என்ன காரணத்திற்காக கீதை உபதேசிக்கப்பட்டது எந்த சூழ்நிலையில் எந்த உத்திகளைப் போதிக்கிறது என்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் பாரதி. ”ஸ்ரீமத் பகவத் கீதையானது குருஷேத்திரம் எனும் யுத்த பூமியில் பாண்டவ கௌரவ சேனைகள் இருபுறத்திலும் அணிவகுத்து சமுத்திரம் போல் நிற்கையில் உலகத்தைக் காத்து தர்ம பரிபாலனம் செய்ய வேண்டியதுதான் சத்திரியனுடைய கடமை. அதற்காக நீ யுத்தம் செய்து பகைவர்களை வென்று நாட்டிற்கு அரசனாகி பிரஜைகளை தரும நீதிமுறையில் பரிபாலனம் செய். இவற்றையெல்லாம் நீயாகவே செய்யும் காரியமல்ல கடவுள் கட்டளை என்ற சாத்வீக புத்தியுடன் யுத்தம் செய் என்று ஸ்ரீ பகவான் பணித்தார். சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு உபாயத்தில் வனவாச, அஞ்ஞாத வாசமெனும் சாம உபாயமும், ஸ்ரீ கிருஷ்ணன் தூது எனும் தான உபாயமும், கர்ண அசுவத்தாமர்களை பரீட்சித்த பேத உபாயமும், தவறிப் போய்விட்ட பிறகு மகா சாந்த மூர்த்தியான ஸ்ரீ பகவான் நான்காவதான தண்டோபாயத்தைக் கொள்ளும்படி பாண்டவர்களுக்கு உபதேசித்தார். ஸ்ரீபகவத் கீதையில் அவனவனுக்கு ஏற்பட்டிருக்கும் தருமத்தை (காரியத்தை) அவனவன் கடவுள் தனக்கு விதித்திருக்கும் கடமை என்று சாத்வீக பக்தியுடன் அயலவர்களின் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும்  பொருட்செய்யாமல் செய்துவர வேண்டியது என்று சொல்லப்பட்டிருப்பது வாஸ்தவம்தான். பார்த்தனும் அப்படியே செய்தான். ஆனால் வெடிகுண்டு வகையறா சங்கதிகள் ஆங்கில, முதலிய ஐரோப்பிய நாடுகளின் துஷ்டவழக்கங்களில் ஒன்றே தவிர மாட்சிமை தாங்கிய பாரத நாட்டின் ஸ்ரீ பகவத் கீதையின் போதனையல்ல என்பதை நாம் உறுதியாக சொல்கிறோம்” என்று பாரதி பகவத் கீதை கூறும் உபதேசங்களை படம்பிடித்துக் காட்டுகிறார்.

முடிவுரை
        ஆங்கிலேய ஆட்சியின் ஒடுக்குமுறைகளுக்கும், பத்திரிக்கை தடை சட்டங்களுக்கும் இடையிலும் பல்வேறு இதழ்கள் ஸ்வதேசம் பேசின. பல வார மாத, இதழ்கள் அடக்குமுறைகளுக்காட்பட்டுக் காணாமலும் போயின. ஆனால் பாரதி நடத்திய விஜயா நாளேடு முடிந்த வரை தாக்குப்பிடித்து பல இன்னல்களுக்கு இடையிலும் தனது பணியைச் செவ்வனே ஆற்றி வந்ததை வரலாறு பறைசாற்றுகிறது. அதற்குச் சான்றாக பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தேடித்தேடித் தொகுக்கப்பெற்ற ’பாரதி ’விஜயா’ கட்டுரைகள்’ என்ற நூல் திகழ்கிறது
ஸ்ரீமத் பகவத் கீதையை ஆங்கில அரசு தடை செய்ய முற்பட்ட சூழலையும், அதன் பின்னணியும், உண்மையில் கீதை கூறும் தத்துவங்களையும், ஆங்கிலேயர்களின் புரிந்து கொள்ள முயற்சிக்காத மூடத்தனத்தையும் ’ஸ்ரீமத் கீதையும் கொடுஞ் செயல்களும்’ என்ற கட்டுரையில் அங்கதச்சுவை தொனிக்க விவரித்துள்ளார் பாரதி. கவிதைகளால் மட்டுமே அறியப்பட்ட பாட்டுக்கொரு புலவன் கட்டுரைகளிலும் ஒளிந்துகொண்டு வார்த்தை விளையாட்டுகளை நிகழ்த்தியிருப்பதை இவ்வாய்வு மூலம் அறிய முடிகிறது.

பார்வை நூல்கள்
1.பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், செம்பதிப்பு 1987.

2.ஆ. ரா. வெங்கடாசலபதி, பாரதி விஜயா கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், மறு அச்சு, அக்டோபர் 2006.

3.தமிழருவி மணியன்,கனவு மெய்ப்பட வேண்டும், விகடன் பிரசுரம்,757, அண்ணா சாலை, சென்னை-2 முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2011.

4.மு.ஸ்ரீனிவாசன், பாரதியின் பார்வையில், விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை-2 முதற்பதிப்பு, அக்டோபர் 2007.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.செந்தில்நாதன்,

உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),

பெரம்பலூர்-621 220.





அறமா,அறிவியலா|ரா.ஷர்மிளா

அறமா,அறிவியலா -ரா.ஷர்மிளா
      அறம் தான் உலக கலாச்சாரங்களின் அடிப்படை. சில வழிபாடுகள் கட்டுப்பாட்டையும் சில வழிபாடுகள் உண்மையையும் நமக்கு புரியவைக்கிறது. இந்தியாவில் பூண்டு கட்டுப்பாட்டை குறைக்கும் என்று கூறுகிறோம். சைனா நாட்டில் பூண்டு மருத்துவ குணம் கொண்ட உணவு என்றும் அது கடவுளுக்கு இணையானது என்றும் கூறுகிறார்கள். ஏன் இவ்வளவு வேறுபாடுகள். வழிபாடுகளை வாழ்க்கை முறைகளோடு பொருத்தி பார்த்தால் அர்த்தமுள்ளதாக தெரியும். வாழ்க்கை ஒரு பாதை. அறம்சார்ந்த வாழ்க்கை ஒரு தவம். தவத்தோடு இணைந்த பயணம் இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
         
      அறம், அறிவியல் இருபாதைகளாக தெரிகிறது. தெளிவான சிந்தனைகளுக்கு அறம் அடிப்படை என்பதை இந்த கதை உணர்த்துகிறது. விதியை மதியால் வெல்லலாம். அந்த காலத்து மனிதர்கள் உறவை, நல்ல உணவு பழக்கங்களை, கடின உழைப்பை நம்பினார்கள். ஒரு பழங்கால அம்மாவும் அறிவியலை நம்பும் மகனுக்கும் இடையே நடக்கும் கதை. ராதா தன் அறம்சார்ந்த கொள்கைகளை மகனிடம் கூறுவாள். தந்தை, தாய் சொல்வதை எத்தனை குழந்தைகள் கேட்கிறார்கள்? ஆனால் எதிர்திசை இருப்பவர்கள் நடுவில் ஈர்ப்பும், விவாதமும் இருக்கும். எதிர், எதிர்திசையில் ஈர்ப்பு இருக்கும். அப்படிதான் முரண்பட்ட கருத்து உள்ளவர்கள் நடுவில் நடக்கும் சம்பாஷனைகளும் தர்க ரீதியாக இருக்கும்.. ராதா, கிருஷ்ணனுக்கு ஒரே மகன். அவன் பெயர் பிரசாத். சின்ன வயசிலேயே குடும்ப விஷயங்களில் அவன் பஞ்சாயத்து அதிகம் இருக்கும். அவன் மற்ற குழந்தைகளை விட அதிகம் யோசிக்கறானோ என்று தாய் தந்தைக்கு சந்தேகம்.

பிரசாத்: சித்தி இன்னைக்கு மௌன விரதமாம். நீ வெளியில போயிருக்கேன்னு செய்கைல சொன்னாங்க. எனக்கு புரியல. அப்புறம் பேப்பர்ல எழுதி காமிச்சாங்க. நான் பயந்தே போயிட்டேன்.

அம்மா: ஆமாம்டா, திடீர்னு என் தோழி சிதம்பரத்துல என்னோட ஸ்கூல் படிச்சவ, சென்னை வந்திருக்கேன்னு போன்ல சொன்னா. வீட்டுக்கு வர முடியாது, ராதா. டீ. நகர் வருவியான்னு சொன்னா. அவ சொந்தகாரங்க வீட்டுல இருக்கா. கால்ல வெந்நீர ஊத்திக்கிட்ட மாதிரி பறக்கறா.என்ன பன்றது? பால்ய சிநேகிதம். மறக்க முடியலை. இப்போ பழைய கதை எல்லாம் புதுசா இருக்கு.

பிரசாத்: எதிர்பார்காம தோழி கூப்பிட்டா நீ சித்திகிட்ட சொல்லி வேற யாரையாவது வீட்டுல இருக்க சொல்லவேண்டியதுதானே?

அம்மா: இப்போ என்ன குறைஞ்சுட்டே? ஒரு நாள் கொஞ்சம் அனுசரிக்ககூடாதா?

பிரசாத்: அம்மா, ஒரு விஷயத்துல இல்ல பல விஷயத்துல நீ தேவையில்லாம கஷ்டப்படறே. உன் வயசுக்கு நீ தேவையானதை யோசி.

அம்மா: தோழி தேவையில்லையா இல்லை சித்தி தேவையில்லையா?

பிரசாத்: அம்மா, சித்தியோட மௌன விரதம் தேவையில்லாதது.

அம்மா: நல்ல விஷயத்தை யாரு செஞ்சாலும் உனக்கு பிடிக்கறது இல்லடா. என்ன குழந்தையோ நீ?

பிரசாத்: இயற்க்கை, அறிவியல் இதை பத்தில்லாம் நீ யோசிக்கவே மாட்டியா?

அம்மா: அன்பு, அடக்கம் வாழ்க்கைக்கு முக்கியம்ன்னு நீ யோசிக்க மாட்டியோ?

அப்பா: அம்மா, பையன் தர்கம்பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? ஒரு தம்பியோ, தங்கையோ இருந்து இருந்தா அம்மாக்கு பிரச்சனை இல்லாம இருந்திருக்கும்.

அம்மா: இது குடும்பம். இங்க நவகிரகம் மாதிரி இருக்ககூடாது.  சூரியன், சந்திரன் மாதிரி இருக்கனும். வேற திசையில் பார்த்தாலும் குடுத்தல் வாங்கல் இருக்கனும். படுக்காம இருக்க கூடாது.

பிரசாத்: உன் புரிதல் தப்பும்மா.

அப்பா: சரி, எல்லாரும் வேலையை பாருங்க.
இப்படித் தான் ராதா மற்றும் கிருஷ்ணனின் வீடு விவாதங்களுடன் இருக்கும். சில பேர் கிளி மாதிரி இருப்பாங்க. பேசினதையே பேசிட்டு. சில பேர் பருந்து மாதிரி இருப்பாங்க. உயர பறக்கனும் பலசாலியா இருக்கனும்ன்னு நினைப்பாங்க. இவங்க வீடு இரண்டாம் ரகம்.

ராதா: இன்னைக்கு பெளர்ணமி அம்பாளுக்கு விசேஷம் கோயிலுக்கு போகனும். ஏங்க வீட்டை பாத்துக்கோங்க.நான் போயிட்டு வந்துடறேன். நீங்க சாயங்காலம் கோயிலுக்கு போங்க.

பிரசாத்: சூரிய ஒளி, சந்திர ஒளி மட்டும் நம்பி இருந்த காலத்துல பெளர்ணமி, அம்மாவாசை, சித்திரை மாசம், எல்லாம் கொண்டாடினாங்க. இப்போதான் அறிவியல் வளர்ந்து வைட் கண்டுபிடிச்சுட்டோமே. இப்போ எதுக்கு இந்த கொண்டாட்டம்.

ராதா: உன்னோட பேச எனக்கு தெம்பு வேணும் கோயிலுக்கு போயிட்டு பிரசாதம் வாங்கி சாப்டுட்டு வர்றேன். என்றாள் ராதா.
கணவனிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமா கோயிலுக்கு சென்றாள். தன் மகனுக்கு நல்ல புத்தி குடுக்கனும்ன்னு வேண்டினாள் ராதா.
பிரசாத் பத்தாம் வகுப்பு படிக்கிறான். படிப்பிலும், பேச்சிலும் அவன் திறமைசாலி.
பிரசாத் ஒருநாள் பள்ளி பாடங்களை படித்துக்கொண்டு இருந்தான்.  ராதா சொன்னாள் சத்தமாக படி கேட்க நல்லா இருக்கு.

பிரசாத்:. சத்தமாக படித்தால் ஒரு வேகம் வருது. படித்தது மனனம் ஆகுது. ஆனால், மௌனமாக படிக்கும்பொழுது அதன் பொருள் புரியுது.

ராதா: உன் மொழி அழகாக உள்ளது.
பிரசாத்: அம்மா சொற்சுவையை நீ விரும்பறே. பொருள் சுவையை நான் விரும்பறேன். ஆழமா சிந்திக்கற பழக்கம் உனக்கு இல்லை.
கிருஷ்ணன்: அம்மாவ குறைசொல்லாட்டி உனக்கு தூக்கம் வராதோ? அவ மனசை நீ ரசிக்க கத்துக்கோ.

பிரசாத்: அதுக்குதான் நீங்க இருக்கீங்களேப்பா.
அவன் ஒரு வித்யாசமான மகனாக இருந்தான்.
அன்பை விட விமர்சனங்களை தான் அதிகம் யோசித்தான்.
நேர்மையாக இருப்பதைவிட குணங்களை புரிந்து நடப்பது முக்கியம் என்று அவனுக்கு புரிந்தது. நட்பாக இருப்பது நம் வெற்றியை தக்கவைத்து கொள்ள உதவும் என அவன் புரிந்துகொண்டான். அந்த நட்பு தான் அறம் என்று அவன் புரிந்து கொண்டான். நேர்மை, நட்பு என்ற இரண்டு வாழ்க்கை பாடங்களை தன் தாய் மூலமாக அவன் புரிந்து கொண்டான்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் மனிதனுக்கும் என்னால் யாரையும் கொல்லும் பலம் உள்ளது என்று நினைக்கும் சிங்கத்துக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. பலவீனம் இருக்கும் பொழுதுதான் உதவி, நட்பு புரியும். அந்த பலவீனம் அறத்தை, அன்பை வளர்க்கிறது.
பிரசாத் பள்ளியில் நடத்திய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டான்.
பயிற்சி செய்து போட்டியில் வெற்றி அடைந்தான். மாநில அளவிலான போட்டியில் தேர்வானான். பயிற்ச்சி செய்யும்பொழுது அவன் வெற்றி பெற கூடாது என்று சிலர் நினைத்தனர்.
அவன் உணவில் மயக்கமருந்தை கலந்துவிட்டனர். நீச்சலடிக்கும்பொழுது மயங்கியதால் அவனால் சரியாக மூச்சுவிடமுடியவில்லை. எலும்பு முறிவும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவன் தோழி சுசீலா ஒரு நல்ல துணையாக இருந்தாள். அவன் தாய் ராதா மற்றும் தந்தை கிருஷ்ணனிடம் இருந்த உண்மையான அன்பை உணர இந்த பலவீனமான சூழ்நிலை ஏதுவாக இருந்தது.

சுசீலா: நட்பு என்னும் போர்வையில் பகை இருக்கும். அறிவியல் என்ற போர்வையில் வியாபார நோக்கு இருக்கும். நாம தான் புரிஞ்சுக்கனும்.

பிரசாத்: என் அம்மா உணர்வுபூர்வமா சிந்திக்கறாங்க. புதுமைங்கற பேர்ல நான்தான் அப்பாவியா இருக்கேன். அம்மா சொல்ற வழில நடந்திருந்தா எனக்கு இந்த அளவு கஷ்டம் வந்திருக்காது.

சுசீலா: அறிவு, திறமை, அழகு மூணுமே ஆபத்தானது, விலைமதிக்க முடியாதது. அனுபவ அறிவு தான் சில உண்மைகளை நமக்கு புரிய வைக்கிறது.

பிரசாத்: நான் இந்த போட்டிக்காக பயிற்ச்சி செய்யும் பொழுதே அம்மா சொன்னாங்க. உன் மேல பொறாமை படுவாங்க. நீ வெளிப்படையா பேசாதேன்னு. அம்மா தேவையில்லாம யோசிக்கறாங்கன்னு நான் நினைச்சேன்.
சுசீலா சூடான பாலை பிலாஸ்கில் இருந்து ஊற்றி குடுத்தாள். பள்ளி பாடங்கள் பற்றி சொன்னாள்.

ராதா: ஒரு மாசம் கழிச்சு வந்துடுவான். நீ வந்து பேசறது அவனுக்கு ஆறுதலா இருக்கு கண்ணா.

சுசீலா: ஆன்ட்டீ, அவனுக்கு பத்தாம் வகுப்பு பாடம் தண்ணீ குடிச்ச மாதிரி. அவன் நல்லா வருவான் என்றாள்.
அவள் சென்றபிறகு பிரசாத் அம்மாவிடம் பாவ மன்னிப்பு கேட்டான். அவன் மனம் பேசியது.

பிரசாத்: கண்திருஷ்டி, பெறாமை, பேராசை, கர்வம் இதை பற்றி நீ சொல்லும்பொழுது, இது இயற்க்கையானது இல்லை அறிவியல் ரீதியானது இல்லைன்னு நான் நினைச்சேன்.

அம்மா: தேள், பாம்பு ஆசைபட்டு கடிப்பதில்லை. அது அதன் குணம். நல்லது, கேட்டதை இயற்க்கை படைச்சிருக்கு. அதை அறம், பண்பு முதலிய குணங்களை கொண்டு நாம தான் கண்ணா புரிஞ்சிக்கனும்.
நீ வாட்டசாட்டமா அழகா இருக்கே. அப்பாவும் நீயும் அண்ணன், தம்பி மாதிரி இருக்கீங்கன்னு நிறைய பேரு சொன்னாங்க. அந்த திருஷ்டி தான் டா உன்னை படுக்க வச்சிடுச்சு என்றாள்.
அம்மா வார்த்தைகளில் இருந்த “உண்மை” பிரசாதிற்க்கு புரிந்தது.

பிரசாத்: நீ சொல்லற விஷயம் உண்மையானது. ஆனால், நீ உணர்ச்சி வசப்பட்டு பேசற மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடு அம்மா. உன் அனுபவம் எனக்கு இப்போ தான் புரியுது.
ராதா: என் அனுபவம் அறமாக பக்தியாக மாறி விட்டது. உன் அறிவுக்கு என் மனசு புரிஞ்சது எனக்கு சந்தோசமா இருக்கு பிரசாத். படிப்பு வேற வாழ்க்கை பாடம் வேற. நீ வாழ்க்கையை புரிஞ்சிக்க என்னோட கையை புடிச்சிட்டு வா.

பிரசாத்: சரி அம்மா.
ராதா மகனை கட்டி பிடித்து முத்தம் இட்டாள்.
படிப்பறிவு உள்ளவர்கள் அறம் மற்றும் அறிவியலை சிந்திப்பார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் அறம் பற்றி சிந்திப்பார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் சிந்தனையிலும் வாழ்க்கையின் நிஜங்கள் தெளிவாக இருக்கும். “பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”.

சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷர்மிளா,

ஆதம்பாக்கம்.

Alaraal Arilakum Varalattruch Seithikal|Geetha T

அலரால் அறியலாகும் வரலாற்றுச் செய்திகள்
Abstract
          Sangam literature serves as a treasure trove of knowledge about the history of the Tamil people. Sangam literature is categorized into two themes: Akam (internal/personal) and Puram (external/public). The Akam works of Sangam literature effectively illustrate the pre-marital and marital customs of the Tamil people. The fact that the characters in these works—the hero, heroine, confidante, mother, foster mother, and friend—are referred to without using their proper names reflects the cultural traditions of our ancient Tamils. The hero and heroine have to navigate through several stages in society during their clandestine and married lives. One such stage is the emergence of gossip. Gossip arises when the clandestine relationship of the hero and heroine becomes public knowledge, and also when the hero is involved in extramarital affairs during their married life, and this becomes known to the community. Historical information is also embedded within such instances of gossip. The objective of this article is to bring this information to light.


“அலரால் அறியலாகும் வரலாற்றுச் செய்திகள்”

முன்னுரை
         
         வரைவு (திருமணம்) கடாஅதலின் (வலியுறுத்தல்) பொருட்டே அலர் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் களவு மணம் தவறாகக் கொள்ளப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்ற தலைவனைத் தாமாகவே தேடிக் கொள்வதும், களவு மணம் புரிவதும், உடன்போக்கில் ஈடுபடுவதும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தினை அறிந்த ஊர்ப் பெண்டிர் அவர்கள் உறவைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது தலைவன், தலைவி, களவு வாழ்வு கற்பு வாழ்வாக மலரவே துணையாக இருந்துள்ளது என்பது விளங்கும். ஆணின் மனம் என்றும் களவு வாழ்வினையே நீட்டிக்க விரும்பும். ஏனெனில் களவு காலத்தில் எந்தவித சுமையும் இன்றித் தலைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே தலைவனின் மனம் பெரிதாக எண்ணும். ஆனால் தலைவி மனமோ தனக்குச் சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதி கிடைப்பதனையே பெரியதாக எண்ணும். நேரடியாகத் தலைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறுவது அவன் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைச் சுட்டுவதாக அமையும். ஆனால் தலைவியைப் பற்றிப் பிறர் தவறாகக் கூறினால் அதனைத் தலைவனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே ‘‘அலர்” தோன்றியதாகக் கூறி மிகுதியும் அக இலக்கியத்தில் வரைவு கடாஅதல் நிகழ்கின்றது. வரைவு கடாதலின் பொருட்டே அலரும் விரித்துரைக்கப்படுகிறது. அகநானூற்றில் அலர் வழி அறியலாகும் வரலாற்றுச் செய்தியை இக்கட்டுரை ஆராய்கிறது

அலர் – விளக்கம்         
     அலர், அம்பல், கவ்வை ஆகியவை ஒத்த பொருளைத் தரும் சொற்களாகும். இலக்கியத்தில், கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் “பழிச்சொல்” என்று குறிக்கப்படுகின்றது. மன்னன் தவறு செய்தால் அவனைத் திருத்துவதற்காகக் கூறும் சொற்கள் ‘‘செவியறிவுறூஉ” என்று சுட்டப்படுகின்றது. ஆனால் களவுக் காலத்தில் தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கையில் ஊர்ப்பெண்கள் கூறும் சொற்களே அம்பல், அலர், கவ்வை என்று சுட்டப்படுகின்றது. அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல் என்றும் அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், ‘‘அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று, இன்னிதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்” என்று விளங்குவர்.
கௌவை என்பதற்குக் ”கலக்கம், துன்பம், பழிச்சொல்” எனறு தமிழ்ப்பேரகராதி பெருள் கூறும். ஆகவே இளம் பெண்ணின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் என்றும் குறிக்கப்படும் எனலாம்.

அலர் தூற்றுவோர்
       சங்க இலக்கியங்களில் அலர் தூற்றுபவர் பெண்களாகவே சுட்டப்படுகின்றனர். இதனை,

வெவ்வாய்ப் பெண்டிர் (குறுந். 373, அகம். 50)
அலர் வாய்ப் பெண்டிர் (நற். 36)
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)
அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம். 203)
         
அலர் தூற்றுபவர்களாகப் பெண்களே அமைகின்றனர் என்பதை இச்சான்றுகளின் வழி அறியலாம்.

தலையாலங்கானம் போர்
         
        தலையாலங்கானத்துப் போர் என்ற போர் சங்ககாலத்தில் நடந்த தலைசிறந்த புகழ்பெற்ற போராகும் இப்போர் நெடுஞ்செழியனுக்கும் ஏழு மன்னர்களுக்கும் இடையில் நடந்தது. போரில் நெடுஞ்செழியன் வென்றான். இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று. சோழ நாட்டில் உள்ள இவ்வூரில் சோழனுடன் சேர்ந்து போரிட்ட சேரனையும், திதியனையும், எழினியையும், எருமையூரனையும், இளங்கோ வேண்மானையும், பொருணனையும் ஒருவனாக நின்று பாண்டியன் நெடுஞ்செழியன் போரிட்டுத் தோற்றோடச் செய்தான். தலையாலங்கானத்தில் பெற்ற இப்பெரு வெற்றியின் காரணமாகவே இவன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற’ பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறான். எழுவரின் போர்முரசுகளையும், வெண்கொற்றக் குடைகளையும் செழியன் தன்னகப் படுத்திக்கொண்டான்.  பலரும் புகழும்படிப் படைகளைக் கொன்று குவிக்கும் களவேள்வி செய்தான். அப்போது வெற்றி பெற்ற செழியனின் படைவீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் போல ஊர் அலர் தூற்றுகிறது என்று தலைமகள் தலைமகனிடம் கூறுவதை,

கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,    
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!    (அகம்.36 : 13-23)
         
என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதன்வழி அலர் தூற்றுவதற்குப் போரின் ஆராவார ஒலியை ஒப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

குறுக்கைப் பறந்தலைப் போர்
         
      எவ்வி என்னும் வள்ளல் மிழலை நாட்டின் நீடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். மிழலை நாடு இப்போது திருவீழிமிழலை என்று வழங்கப்படுகிறது. இந்த ஊருக்கு அண்மையில் அன்னியூர் என்னும் பகுதி உள்ளது. அன்னி என்னும் அரசன் இதனை ஆண்டுவந்தான். அவன் பெயரால் இந்த ஊரின் பெயர் அமைந்துள்ளது. இந்த அன்னிக்கும் பொதியமலை நாட்டு மன்னன் திதியன் என்பவனுக்கும் இந்தக் குறுக்கைப் பறந்தலை என்னும் ஊரில் போர் நடந்தது. போரில் அன்னி கொல்லப்பட்டான். எவ்வி அறிவுரையைக் கேளாமல் போரிட்டு அன்னி மாண்டான். அன்னி கோசர் குடி மன்னன். அவனது காவல்மரம் புன்னை. இந்தக் காவல்மரம் போரின்போது வெட்டி வீழ்த்தப்பட்டது. அதனைக் கண்டு வயிரியர் ஆரவாரத்துடன் தம் யாழில் இன்னிசை பாடினர். அந்த யாழிசை போல அவரையும் என்னையும் பற்றி அந்த ஊர் மக்கள் அலர் தூற்றட்டும் என்று தலைவி தோழியிடம் கூறுவதை,

அரி நுண் பசலை பாஅய்,
பீரத்துஎழில் மலர் புரைதல் வேண்டும்.
அலரே,அன்னி குறுக்கைப்பறந்தலை,
திதியன்தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,      
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும்பெரிதே                 (அகம்.45 : 7-12)
         
          என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதன் வழி அன்னிக்கும் திதியனுக்கும் நடந்த போர் பற்றியும், போரின் இறுதியில் காவல் வெட்டப்படும் மரபினையும், வெற்றிக்குப்பின் வயிரியர் ஆர்த்த வெற்றி இசை முழக்கத்தைம் அதனோடு அலர் ஒப்பிட்டுப் பேசப்பட்டதையும் அறியமுடிகிறது.

பரூவூர்ப் போர்
         
       கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எனப்படும் பழமலை பரணிடப்பட்டது 2011-10-11 யவ வாந வந்தவழி இயந்திரம் ஊரைச் சூழ்ந்துள்ள ஊர்களில் ஒன்று பருவூர். இது சங்ககாலத்தில் நெல் விளையும் நிலமாகத் திகழ்ந்தது. இந்த ஊரில் சேர வேந்தன் பொறையனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து சோழனைத் தாக்கினர். சோழப் பெருவேந்தன் சார்பில் அஃதை என்ற பெண்ணின் தந்தை போரிட்டான். போரில் இருபெரு வேந்தரும் இறந்தனர். போர் நடந்த இடம் பருவூர்ப் பறந்தலை. இந்தப் போரில் இருபெரு வேந்தந்தர்களின் போர்யானைகளையும் அஃதை தந்தை கைப்பற்றிக்கொண்டான். இந்தச் செய்தி ஊருக்கெல்லாம் தெரிந்தது போலத் தலைவன் பரத்தை ஒருத்தியோடு ஊரில் திரிந்தது ஊருக்கெல்லாம் தெரிந்து அலராகிவிட்டது என்று தோழி தலைவனிடம் கூறித் தலைவனை அவன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லித் தடுப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. இதனை,

செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,          
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே           (அகம்.96 : 11-18)
என்ற அடிகளின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.

நெடுஞ்சேரலாதன் – கடம்பர் போர்
         
        கடம்பர் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் கதம்பர்ஜ1ஸ என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர். கடம்பர் என்போர் குயவர் குலத்தை சார்ந்தவர் என்று பொருள் இருக்கிறது சங்க இலக்கியகளில் குயவு தொழில் செய்பவர்கள் கடம்பகுலத்தான் என்று கூறுகிறது. கடம்பர் கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன.பாணன்(பாட்டு) பறையன்(தோல் இசை) துடியன்(நடிகன்) கடம்பன் (முரசு)எனும் நால் வகை குடிகளில் ஒன்றாக கடம்ப இனம் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்ப மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான். அந்த முரசத்தின் ஒலி போன்று நீ பரத்தையுடன் கொண்ட நட்பை மக்கள் அலர் பேசுவதாக தலைவி தலைவனிடம் கூறுவதை,

தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,           
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய              (அகம்.347 : 1-7)
என்ற அடிகளானது பதிவுசெய்துள்ளன.

எழினி – மத்தி போர்
         
          மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும் இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின் வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின் பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று. இந்த மத்தியின் நாட்டில் இருந்த ஓர் ஊர் கழார். அது காவிரிக்கரையில் இருந்தது. வெண்மணிவாயில் என்பது இவன் நாட்டில் இருந்த ஓர் ஊர் என்றும், கழார் என்னும் ஆற்றங்கரையூர் இவனது தலைநகர் என்றும் கூறுவர். இவன் பரதவன் கோமான் என்றும் கூறப்படுதலால், இவனது ஊர் கடற்கரையை ஒட்டி இருந்த ஆற்றங்கரையூர் என்பது பெறப்படும். மத்தியின் நாட்டில் உள்ள கடலலை முழங்குவது போன்று ஊரார் அலர் தூற்றுவதாக தோழி தலைவியிடம் கூறுவதை,

நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,              
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே (அகம்,211 : 12-17)
என்ற அடிகளின் வழி அறிந்து கொள்ளலாம்.

கட்டி – தித்தன் – பாணன் போர்
         
        பாணன், கட்டி இருவரும் சேர்ந்துகொண்டு உறையூர் அரசன் தித்தன் வெளியனைத் தாக்க வந்தனர். உறையூர் அவையில் பாடும் பாணர்கள் கிணையை முழக்கினர்.  அந்த முழக்கத்தைக் கேட்ட இருவரும் போர் முரசம் முழங்குகிறது என்று எண்ணி அஞ்சிப் போரிடாமலேயே ஓடிவிட்டனர். அந்தச் செய்தி அறிந்து உறையூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் போல உன்னையும் அவளையும் பற்றி அலர் தூற்றுகின்றனர் என்று தலைவனிடம் தோழி கூறுவதை,

வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,           
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே          (அகம்.226 : 13-17)
என்ற அடிகள் பதிவு செய்துள்ளன.

முடிவுரை
         
          சங்க காலத்தில் அலர் பேசுவது என்பது ஒரு மரபாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. அலர் பேச்சின் மூலம் தலைவன் தலைவி திருமணம் உறுதி செய்யப்படுகிறது. அதாவது உடன்போக்கிலோ அல்லது தமர் கொடுப்பவோ திருமணம் செய்யும் சூழல் உருவாகிறது. அலர் தூற்றுவதற்குப் பெரும்பாலும் போரில் வீரர்கள் முழங்கும் முழக்கத்தினையோ அல்லது கடல், ஆறு போன்றவற்றின் ஆராவாரத்தையோ ஒப்பிடுவதைக் காணமுடிகிறது. அலர் தூற்றுலதின் சங்ககால வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

பார்வை நூல்கள்
1.செயபால்.இரா., (உ.ஆ), அகநானூறு மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல் – 2004.

2.மேலது, குறுந்தொகை மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல் – 2004.

3.மேலது, நற்றிணை மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல்

Iniyavaikatral_Article_Publishedஆய்வாளர்
திருமதி தி.கீதா,

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)
தமிழ்த்துறை

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்),

திண்டல், ஈரோடு –  9.

பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

நெறியாளர் 
முனைவர் ந.பரமசிவம்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்),

திண்டல், ஈரோடு –  9.
பாரதியார் பல்கலைக்கழகம்,கோவை. 

Keeranur Zakir Rajavin Puthinangalil Samuthaayach Sinthanaigal|M.Mohammed Rukman

Abstract
         
           Among Islamic Tamil writers, Keeranur Jagirraja is a prominent creator who has established his presence in various fields such as short stories, novels, criticism, literary discourse, and literary forum discourse. Through his literary works, it is his nature to convey special and big messages in a few words, taking the lifestyle of the people, social standing, cultural strategies, feminism, the lives of marginalized people, and Islamic religious principles as the basis. The main objective of this article is to examine the social thoughts expressed in the author’s novels.

“கீரனூர் ஜாகிர்ராஜாவின் புதினங்களில் சமுதாயச் சிந்தனைகள்”
         
         இசுலாமியத் தமிழ் எழுத்தாளர்களுள் சிறுகதை, புதினம் , விமர்சனம்,  இலக்கியப் பேச்சு, இலக்கிய மன்றக் கூட்டச் சொற்பொழிவு என்று  பன்முக நோக்கில் தன் இருப்பை நிறுவிக் கொண்டிருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா  தலை சிறந்த படைப்பாளி ஆவார். இவரின் இலக்கியப் படைப்புகள் மூலம் மக்களின் வாழ்வியல், சமூக நிலைப்பாடு, பண்பாட்டு உத்திகள், பெண்ணியம்,விளிம்புநிலை மக்களின் வாழ்வு, இஸ்லாமியச் சமயக் கொள்கைகள் ஆகியவற்றை அடிநாதமாகக்  கொண்டு   சிறப்புற மிகப்பெரிய செய்திகளையும் சில சொற்களால் சொல்வது இவரின் இயல்பு. ஆசிரியரின் புதினங்களில் வெளிப்படும் சமுதாயச் சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் தலைமை நோக்கமாக அமைகின்றது.

முதிர்கன்னியின்துயர் 
         
      இன்றைய சமுதாயத்தில் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை என்பது அதிகமாகவே  காணப்படுகிறது. காரணம் வரதட்சணை. அதுவும் இல்லை என்றால் ஏதேனும் ஒரு குறையினைக் கூறுகிறார்கள். ஒரு பெண் குண்டாக இருந்தால் பூசணிக்காய் மாதிரி குண்டாக இருக்கிறாள் என்கிறார்கள். ஒல்லியாக இருந்தால் முருங்கைக்காய் மாதிரி ஒல்லியாக இருக்கிறாள் என்கிறார்கள்.  முடி கம்மியாக இருந்தால் தேங்காய்க் குடுமிப் போல் முடி இருக்கிறது, கண்கள் வெளித் தள்ளியிருந்தால் பெருங் கண்ணாக இருக்கிறது என்கிறார்கள். கண்கள் உள்ளே சென்று இருந்தால் பொந்துக் கண்ணாக இருக்கிறது என்கிறார்கள். உதடு வீங்கி இருந்தால் உதடி என்று சமுதாயம் ஒதுக்குகிறது. ஆகவே இவ்வுலகில் எல்லா பொருள்களிலும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் பெண்ணானவள் தட்டிக் கழிக்கப்பட்டு திருமண வாழ்க்கையில் பின்னடைவினை அடைகிறாள். இதை  ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் கையாண்டுள்ளார். அமானுல்லா புரோக்கர் தனது மகளுக்கு வரும் வரன்கள் தட்டிக் கொண்டே செல்கின்றன என்ற மனவேதனையும் ஆதங்கமும் அடைவதுடன் உறவுக்காரர்கள் யாரும் தன் மகளை மணம்முடிக்க முன்வரவில்லை என்றும்  மனவேதனையை வெளிப்படுத்துகிறார். இதனை ஆசிரியர்,

” ‘ஊரும் உறவும்’ என்றதும் அமானுல்லா புரோக்கருக்கு கோபம் வந்துவிட்டது. ‘சொந்தத்துல ஏழெட்டு மாப்பிள்ளைங்க இருக்கானுங்களே. எவனாச்சும் நம்ம புள்ளைய கட்டிக்க சம்மதிச்சானுங்களா? நெறம் கம்மி பல்லு கோணல் வாய் கோணல்ன்னு காரணஞ் சொல்லி தட்டிக் கழிச்சானுங்கதான். நீ என்னமோ ஊரு ஒறவுங்குற. அவனுங்க கெடக்கறானுங்க சல்லிப் பயலுக” (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, ப.24)
         
        எனும் வரிகளில் சுட்டிக்காட்டுகிறார். எனவே ஆண்கள் பெண்களுக்கு வாழ்க்கை தர முன் வருதல் வேண்டும். கன்னிப் பெண்கள் விடிகின்ற பெருமூச்சு இச்சமூகத்தை எரிக்கும் நெருப்பு என்பதை உள்ளத்தில் கொண்டு ஏழை குமரிப் பெண்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி திருமணம் முடிக்க வேண்டும் இன்னும் கருத்தினை ஆசிரியர் இங்கு மறைமுகமாகச் சாடுகிறார்.
 குடும்பச் சூழல் காரணமாக பெண்கள் வேலைக்குச் சென்றுத் தன்னுடைய வாழ்நாளில் பாதி நாட்களைக் கழிக்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளை முன்னெடுத்து நடத்துகிறார்கள். பொறுப்புகள் மிகுந்திருப்பதால் அவர்கள் திருமண வாழ்வைக் குறித்து சிந்திக்க மறந்து விடுகிறார்கள். தனக்கான துணையைத் தேடி இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர்.இதனை ஆண்டாள் பிரியதர்ஷினி,

“வனவாசம் தாண்டியும்வந்துசேராதராமனைத் தவிர்த்துக்கிளம்புகிறாள் சரஸ்வதிதானேவில்லேந்தி” (ஆண்டாள் பிரியதர்ஷினி, சரஸ்வதியின் ஆயுத எழுத்து,  ப.89)
         
       இவ்வரிகளில் பெண்ணே இனியாவது உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடு என வழிபடுத்துவதை அறிய முடிகிறது.
 
இறைச்சியில் கலப்படம்         
        இவ்வுலகில் பல்வேறு பணி வாய்ப்புகளில் பல சிரமங்களுக்கு இடையில் நாம் பணம் சம்பாதிப்பதன் நோக்கம் இரண்டே இரண்டுதான். நாம் பிடித்ததை எல்லாம் உண்ண வேண்டும் என்பதற்காகவும் பிடித்ததை எல்லாம் நாம் வாங்கி அதனை உபயோகப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான். ஆனால், நாம் வாங்கி உண்ணும் உணவுகளில் கலப்படம் என்பது பல்கிப் பெருகிவிட்டது. மல்லித்தூளில் மாட்டுச் சாணத்தைக் கலப்பதும் மஞ்சளில் கான்பிளவர் மாவைக் கலப்பதும் இயல்பாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். இதைவிடக் கொடுமை என்னவென்றால் கோழிக்கு ஊசி செலுத்தி ஆறு மாதத்தில் வளர வேண்டிய கோழியை இரண்டு மாதத்தில் பருமனடையச் செய்து  அதனை நாம் உண்ணுகின்ற வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அது உடலுக்கு மிகவும் கெடுதி என்பதை நாம் அறிவோம். அதையும் மிஞ்சும் அளவிற்கு மீனுக்கும் ஊசி செலுத்துதல், மருந்து தெளித்து விடுதல் போன்ற வக்கிரகங்கள், வன்முறைகள் இந்த சமூகங்களில் நடந்துக் கொண்டிருக்கின்றன. இவை உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு தரக்கூடியாது. இப்படிப்பட்ட நிலையை தன்னுடைய ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ஆசிரியர் கொடுவா வகாபு மூலம்  காட்டுகிறார்.

“ஏப்பா கோழிக்கடைக்காரனுவல்லாம் கிலோ எண்பது தொன்னூறுன்னு போர்டு மாட்டி டெய்லி ஐநூறு கிலோ அறநூறு கிலோ விக்கிறானுவ… நம்மாளுவ கோழி குண்டில என்னென்ன ஊசிபோட்டு கண்டமேனிக்கு அத சதப்போட வைக்கிறானுவன்னு புரிஞ்சுக்காம கண்ண மூடிக்கிட்டு தின்னு தொலைக்கிறானுவ…’ என்றான்.மீன்ல ஏதோ கெமிக்கல கலக்கறானுவ அது இதுன்னு டிவில சொல்றானுவப்பா. ஜனங்க அத நம்பிட்டு வரமாட்டேங்குதுவ…”       (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, பக்159-160)
         
       மேற்கண்ட வரிகளின் மூலம் நாம் இதை அறிய முடிகிறது. எனவே உண்ணும் இறைச்சியில் கலப்படம் என்பது நஞ்சை விதைப்பதற்கு சமம். எனவே அப்படிப்பட்ட தேவையற்ற காரியங்களால் சில சமயம் உயிர் பறிபோகும் அபாயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் நாம் விழிப்புணர்வுடன் இறைச்சியினை வாங்குதல் வேண்டும்.

தாயன்பு           
      தன்னுடையக் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அதை தொட்டுத் தொட்டு ரசித்து இன்பம் அனுபவித்தவள் தாய். தன்னுடைய குழந்தை கருப்பா சிகப்பா என்று தெரியாது. எப்படிப்பட்ட தோற்றப் பொழிவுடன் இருக்கும் என்று தெரியாது. ஆணா, பெண்ணா என்று தெரியாது, ஆனால், குழந்தைப் பிறக்கும் முன்பே கருவிலிருந்து நம்மை நேசிக்கத் தொடங்கியவள்  நம்முடையத் தாய். அப்படிப்பட்ட தாயை நாம் மதிக்க வேண்டும். தாய்மையைப் போற்ற வேண்டும்.
நான்மணிக்கடிகை தாய்மையின் சிறப்பினை கூறுகையில்,

“…….ஈன்றாளோடுஎண்ணக் கடவுளும் இல்” ( நான்.57:3-4)
         
           என்ற அடிகள் ஒருவருக்கு தாயை விட சிறந்த தெய்வம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தாயின் பாதத்தில் சொர்க்கம் இருப்பதையும் தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தாய்மையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாக அமைகிறது. வடக்கேமுறிஅலிமா புதினத்தில் அஹமது குட்டி தன்னுடைய தாயின் உயிர் பிரியும் வேளையில் அருகில் இருந்து பணிவிடைகள் செய்தார் என்பது ஆசிரியரால் புதினத்தில் காட்டப்பட்டுள்ளது.

“தாயின் காலடியில் சுவர்க்கமிருப்பதால் அஹமதுகுட்டி அருகிலிருந்து பணிவிடைகள் செய்தார்.” (கீரனூர் ஜாகிர்ராஜா, வடக்கேமுறிஅலிமா, ப.15)
           
       எனும் வரிகளில் ஆசிரியர் சுட்டுகிறார். பெற்றோர் உயிருடன் இருக்கும் பொழுதே நாம் அவர்களைக் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு நாம் மதிப்பு செய்ய வேண்டும். அவர்களுடைய எண்ணங்களை நாம் வண்ணங்களாக்க வேண்டும். நம் சிறுவயதில் நம்மை அவர்கள் எப்படிப் பேணிப் பாதுகாத்தார்களோ அதுபோல நாமும் அவர்களை கண்ணின் மணியாய் கருத்தின் ஒளியாய்ப் பேணிப் பாதுகாத்தல் மறுமைக்கும் நமக்கு நல்வினையாக அமையும். எனவே பெற்றோரின் மனம் நோகடிக்காத குழந்தை எதுவோ அதுவே நல்ல குழந்தை என்பதும் ஆசிரியரால் மறைமுகமாக இங்கு சுட்டிச் செல்லப்படுகிறது.

பணியிடத்தில் பெண்களின் நிலை
         
          பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் ஏதோ ஒரு வறுமையின் காரணமாகவோ, குடும்பத்தில் குடும்பத் தலைவன் சரியில்லாததன் விளைவாகவோ பணிக்குச் செல்லும் அவலநிலை இச்சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் அதைப் பணியிடத்தில் முதலாளிமார்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். யாரும் இல்லாத நேரத்தில் பணிப் பெண்களிடம் தகாத வார்த்தைகளும் இச்சை உணர்வைத் தூண்டக்கூடிய விதமாகவும் அவர்களின் மன உணர்வுகளைத் தூண்டிப் பார்க்கும் வண்ணமாகவும் நடந்துக் கொள்வது இச்சமூகத்தில் மறைமுகமாக  ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ரெடிமேட் கடையில் நடக்கக்கூடிய முதலாளித்துவ வக்கிரகங்களை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளது இவ்விடம் காட்டப்படுகிறது.

“ஒங்கம்மாவுக்கு இன்னுமா பீரியட் வர்ரது நிக்கல?”“என்ன திடீர்னு சதப்போட்ருக்க… வீட்ல மாப்ள கீப்ள பாக்கறாங்களா என்ன? இடுப்புல்லாம் பிதுங்கிக் கெடக்கு…” (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, ப.128)

          இவ்வாறெல்லாம் பணிப்பெண்களிடம் முதலாளிமார்கள் பேசுமாறு அமைத்துக் காட்டியுள்ளார். பெண்களுக்கு திரும்பி பேசத் தெரியாமல் எல்லாம் இல்லை. எதிர்த்துப் பேசினால் நம்மை வேலையை விட்டு முதலாளிக்கு தூக்கி விடுவாரோ, சோற்றுக்கு என்ன செய்வது, கடன்காரன் தொல்லைக்கு என்ன பதில் சொல்வது என்பதற்கு அஞ்சி, தங்கள் மனதுக்குள் நொந்து யாரிடமும் சொல்ல முடியாமல் உளவியல் ரீதியாகவும் பணிப்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்னும் நிலைப்பாடு நோக்கலாகிறது. எனவே பணிப் பெண்களின் மன உளவியலையும் உள்ள கிடக்கைகளையும் வாழ்வியல் போராட்டங்களையும் ஆசிரியர் இவ்விடம் எடுத்துக்காட்டியுள்ளது சமூகத்தில் நான்கு பேர் இனியாவது பணிப்பெண்களிடம் முறையாக, மரியாதையாக நடந்து கொள்ள வாய்ப்பளிக்கும் என்னும் நோக்கத்திலேயே இவ்வாறு ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியலும் விருத்தசேதனமும்
         
            விருத்தசேதனம் என்பது ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்யும் முறை ஆகும். இது ‘கத்னா’ என்றும் சொல்லப்படுகிறது. விருத்தசேதனம் செய்வதன் மூலமாக ஆணுறுப்பில் ஏற்படுகின்ற சிக்கல்கள் பலவற்றிற்கு தீர்வாக அமைகிறது என்று அறிவியல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நபிகள் நாயகம் காலம் தொட்டு  இஸ்லாமியர்கள் தொன்றுதொட்டு செய்யக்கூடிய  பண்பாடாக இருக்கிறது. இஸ்லாமியப் பண்பாடுகளை வாழ்வியல் விழுமியங்களை தன்னுடைய புதினங்களில் ஆசிரியர் முத்தாய்ப்பாய் கையாண்டுள்ளது இஸ்லாமிய மக்களுடைய வாழ்வியலையும் பண்பாடையும்  இச்சமூகத்திற்கு எடுத்துக் கூறி அதன் நல்வினைகளைப் புகட்டுவதற்கு சொல்லப்பட்டவை ஆகும். ஆகவே அதன் நல்வினைகள் யாவையும் மக்கள் அறியவும் இது ஒரு தொடுகோடாக அமைகின்றன.

“மாலி கத்தியைத் தீட்டி சற்றைக்கெல்லாம் “தீன் தீன் முஹம்மது.தீன் நீன் முஹம்மது…”என்று சேர்ந்து குரல் எழுப்பினார்கள். ரத்தம் தோய்ந்த கத்தியைக் கழுவிக் கொண்டான் மாலி அவன் கையில் வெற்றிலைத் தாம்பூலத்துடன் மடிந்து நூற்றியொரு ரூபாய் கொடுத்த குட்டிலெவை குழுமியிருந்தவர்களைக் காவத்துடன் பார்த்தார்.கத்னா செய்யப்பட்ட ரகமத்துல்லாவும் இக்பாலும் பாயில் படுக்க . துணி உரசாமலிருக்க இருவருக்கும் உயரத்தாக்கிக் கட்டியிருந்தது” கீரனூர் ஜாகிர்ராஜா, துருக்கிதொப்பி, ப.158
           
        விருத்தசேதனத்தின்  முறைப்பாடுகளை ஆசிரியர் இவ்விடம் எடுத்துக்காட்டி இருக்கிறார். பிரான்மலை கள்ளர் சமூக இனத்தினர் கூட விருத்தசேதனம் செய்து கொள்வது இன்னும் வழக்கத்தில் இருக்கிறது என்னும் செய்தி இங்கு கூடுதலாக தரப்படுகிறது. எனவே ஆணுறுப்பில் சிறுநீர் தேங்குவதால் பல்வேறு நோய்க்கிருமிகளும் தொற்றுகளும் ஏற்பட அபாயங்கள் இருப்பதால் ஆண்கள்  விருத்தசேதனம் செய்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

ஊனமுற்றோர்களின் நிலை
         
         இந்த உலகில் நாம் மிகவும் பாவப்பட்டவர்களாக உடல் ஊனமுற்றோரை நினைக்கிறோம். ஆனால் உடல் நன்றாக இருப்பவரைக் காட்டிலும் உடல் ஊனமுற்றோர் பல்வேறு துறைகளில் தங்களுடைய இருப்பை நிலை நிறுத்தி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒருவரை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. யாரையும் மனச்சோர்வு அடைய வைக்கக் கூடாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். யாருடைய மனதும் புண்படாமல் நடந்துக் கொள்ள வேண்டும். உடலாலோ, மொழியாலோ, செய்கையாலோ உடல்மாறுபாடு உடையவர்களை நாம் தாழ்வாகப் பேசும் பொழுது அவர்களுக்குள் தன்னை அறியாமல் மனச்சோர்வும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும் என்பதை மீன் குகைவாசிகள் புதினத்தில் ஆசிரியர் சலீமின் உள்ளக் கிடக்கையின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். ஆகவே நாம் கேலி, கிண்டல்கள் செய்வது நமக்கு அந்த நேரத்தில் இன்பம் அளிப்பதாக நினைக்கிறோம். ஆனால் நம்முடைய ஒவ்வொரு சிரிப்பும் ஊடல் ஊனமுற்றோரை மன மனநோவினை அடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே அப்படிப்பட்ட நிலைகளில் இருந்து உடல் ஊனமுற்றோரையும் நம்மில் ஒருவராக கருதிக்காத்தல் வேண்டும். சிலர் உடல் ஊனமுற்றோரை பார்ப்பதே கெட்ட சகுனமாக கூட எண்ணுகிறார்கள். அதையெல்லாம் தவிர்த்து நம்மில் ஒருவர், நம் குடும்பத்தில் ஒருவர் என்று எண்ணினால் இந்த சமூகம் வளம்பெறும் என்பதையும் ஆசிரியர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நா மாடியில் வந்து உக்காரும்போதெல்லாம் இவுளுங்க என்னெ நொண்டி நொண்டின்னு சீண்டிவிட்டுக்குட்டே இருப்பாளுங்க. என்ன செய்வாளுங்க தெரியுமா? அக்கா தங்கச்சிங்க மூணு பேரு. ஒருத்தி என்னால் காலுக்கு செருப்புப் போட முடியாதுன்டு கை ரெண்டுலயும் செருப்ப மாட்டிகிட்டு காட்டுவா. இந்தவெயிலத் தாங்க முடியாம கையில செருப்ப மாட்டி தரையில் ஊனிக்கிட்டே மாடிக்கி வருவேன்ல, அத கிண்டல பண்ணுவா. ரெண்டாவதுள்ளவ கைய காலத் தரையில் வச்சு என்ன மாதிரியே தவழ்ந்து காட்டுவா. இன்னொருத்தி நா பின்னால் குந்திக் குந்தி மாடிக்கி ஏறி வருவேன்ல அப்டி நடிச்சுக் காட்டுவா. மரி இருந்தப்ப இவுளுங்க அராஜகம் ரொம்ப இருந்துச்சு. மரியும் ஒன்னப்போலவே இதெல்லாங் கண்டுக்கமாட்டா. என்னா இதெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது…” (கீரனூர் ஜாகிர்ராஜா,மீன்குகைவாசிகள், ப.143)
         
         நொண்டி, குருடு, ஊமை, செவிடு என்று குறைகளை வக்கிரகப்படுத்தாமல் அவர்களது உள்ளக் கிடக்கைகளையும் உணர்வுகளையும் நாம் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும் என்பதையும் ஆசிரியர் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். ஆகவே தன்னுடைய எழுத்தின் இருப்பை ஆணித்தரமாக பல்வேறு ஆக்கங்களை முன்னிறுத்தி சமுதாயத்திற்கு வளமானக் கருத்துக்களை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கீரனூர் ஜாகிர்ராஜா பதிவு செய்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

குதிக்கிற, ஓடுகிற, தாவுகிற,
விதவிதமாய் நடக்கிற,
ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை
பாடல்களுக்கு தாளமிடுகிற,
நீந்துகிற மலையேறுகிற,
புல்வெளிகளில் திரிகிற,
தப்பியோடுகிற,
போருக்குச் செல்கிற,
படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல
நேசித்தவரை நாடிச் செல்கிற,
சிகரெட்டை நசுக்குகிற,
மயானங்களிலிருந்து திரும்புகிற,
விலங்கு பூட்டப்பட்ட,
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட,
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற,
வரிசையில் நிற்கிற,
தையல் எந்திரத்தில் உதறுகிற,
சுருங்கிய தோலுடைய,
நரம்புகள் புடைத்த,
சிரங்கு தின்ற,
குஷ்டத்தில் அழுகிய,
முத்தமிட தூண்டுகிற கால்கள்.
 
யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்.
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும். 
பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்..!”
                             (மனுஷ்ய புத்திரன்,என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள், ப. 38)
         
         இக்கவிதையின் மூலம் மனுஷ்ய புத்திரன் பல்வேறு வகையான கால்களைக் காட்டுகிறார். இருப்பினும் போலியோ பாதிக்கப்பட்ட தன்னுடைய கால்களை ஊனமுற்ற ஒருவர் பெட்டிக்கடியில் யாரும் பார்த்து விடாத வண்ணம் மறைத்து வைப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே ஊனமுற்றோர்கள் பிறர் தன்னைக் கேலி, கிண்டல் செய்து விடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள் என்பது இதன் மூலம் அறிய இயலுகிறது. எனவே அவர்களின் உளப் பாங்கினை அறிந்து நாமும் அவர்களை நோவினை செய்யக்கூடாது என்பதையும் இங்கு ஆசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார்.

நிறைவுரை
         
          முதிர்கன்னிகள் இல்லாத சமூகமாய் என்று இச்சமூகம் தலை எடுக்குமோ அன்றே நாடு வளமுடையதாக அமையும் எனலாம். உண்ணும் உணவுப் பொருட்களில் கலப்படத்தை ஏற்படுத்துவதன் மூலமாக அது மனித உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகப்பெரிய தீங்கினை ஏற்படுத்துகிறது. இருப்பவன் தொலைப்பதும் இல்லாதவன் தேடுவதும் தாயின் அன்பாகும்.எனவே,நம்முடையப் பெற்றோரை  பேணிப் பாதுகாத்தல் வேண்டும். குடும்ப சூழ்நிலையால் பணிக்கு வரும் பெண்களிடத்தில் கண்ணியமான முறையில் முதலாளிமார்கள் நடந்து கொள்வது அப்பணிப்பெண்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். விருத்தசேதனம் உடல் நலத்திற்கு நலவாக அமைகிறது. பல நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அவை சமயம் சார்ந்த ஒன்றாக நாம் கருதாமல் உடல்நலம் சார்ந்ததாக கருதுதல் வேண்டும். சமூகமுன்னேற்றம் அடைய வேண்டுமானால் இவ்வாக்கக் கூறுகளில் தனித்த நிலையுடன் முன்னேற்றம் பெறுவதை விட வேறு வழியே இல்லை என நாம் ஒல்லும் வகையில் உணர்தல் வேண்டும்.

பார்வைநூல்கள்
1. கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு கீரனூர் புக்ஸ், 48/25,5A தென்றல் நகர், முனிசிபல் காலனி, தஞ்சாவூர் – 613 007. இ. ப – மார்ச் 2025

2. கீரனூர் ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள்,எதிர்வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002, இ. ப ஆகஸ்ட் 2013

3. கீரனூர் ஜாகிர்ராஜா, வடக்கேமுறிஅலிமா, எதிர்வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002 மு.ப – டிசம்பர் 2013

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
திரு. மு. முகமது ருக்மான்,
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம் )
தமிழ்த்துறை,
எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி,
கௌரிவாக்கம், சென்னை – 14.

Death Rituals in Tamil Culture:  Traditional norms and Social Interaction (A Study Based on the Pattipalai Division of  Batticaloa)

தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு
Abstract
          
       Rituals occupy a significant place in Tamil cultural anthropology. Among them, death rituals hold a distinctive position in both their structural and emotional dimensions, as they are deeply interwoven with the everyday lived experiences of the people. This study investigates how death—an unavoidable natural event—becomes a social and religious process of identity construction within Tamil culture. Death rituals function as cultural mechanisms that reorganize social relationships, express spiritual beliefs, and embody emotional responses.
                     
            Although Tamil communities have observed diverse forms of death rituals from ancient times to the present, many traditions have been altered, discontinued, or reshaped through formal regulations, while several customs continue to be preserved across generations. The influence of colonial ideologies and Sanskritization also emerges as an important factor shaping the contemporary understanding and performance of these rituals.The primary objective of this study is to explain the cultural norms, ritual procedures, and religious practices associated with death ceremonies, and to examine their contribution to the Tamil life-cycle system. Drawing on literary sources, folk traditions, and contemporary social practices, the study highlights how death rituals operate as a social structure that reinforces     
        
              Tamil identity and sustains cultural values and meanings related to existence and mortality. Focusing on the death-related practices of the Pattipalai division in the Batticaloa littoral, the research analyses how a communities closely structured cultural system is preserved and transmitted through ritual performance. As the Batticaloa littoral community has retained a relatively traditional way of life compared to other regions, and given the absence of prior systematic studies on this theme, the present research seeks to fill an essential scholarly gap.

Keywords: Tamil culture, death rituals, social custom, religious belief, symbolism of death.


“தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு: மரபும் சமூக ஊடாட்டமும் (மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)”

ஆய்வுச் சுருக்கம்
         
       தமிழர் பண்பாட்டியலில் சடங்குகள் முக்கியமாகின்றன. குறிப்பாக மக்களது நடைமுறை வாழ்வியலில் பின்னிப் பிணைந்துள்ள சடங்குளில் மரணச் சடங்கானது அதன் அமைப்பியல் மற்றும் உணர்வியலிலும் ஏனையவற்றை விட தனித்துவமான கவனிப்பை பெறுகின்றது. இவ்வாய்வு தமிழர் கலாச்சாரத்தில் மரணம் எனும் இயற்கைச் சம்பவம் எவ்வாறு ஒரு சமூக மற்றும் மத அடையாளச் செயல்முறையாக மாறுகிறது என்பதை ஆராய்கிறது. மரணச் சடங்குகள் சமூக உறவுகளை மீளமைக்கும் கலாச்சார நிகழ்வுகளாகவும், ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடாகவும், உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன. தமிழர் தொல்சீர் வரலாறு முதல் இற்றை வரை மரணச் சடங்குகள் பற்றிய பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றில் பல வழக்காறுகள் இல்லாமல்லாக்கப்பட்டும் பல விதிமுறைகள் திணிக்கப்பட்டும் வந்தும் உள்ளன. இன்னும் பல மரபுமுறைகள் தொடர்ச்சியாகவும் பேணப்படுகின்றன. இவற்றில் காலனியசித்தாந்தம் மற்றும் சமஸ்கிரத மயமாக்கம் என்பவற்றின் ஆதிக்கம் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முனைப்பாகவும் உள்ளது. ஆய்வின் முக்கிய நோக்கம், இறப்புச் சடங்குகளில் இடம்பெறும் மரபு, விதிமுறைகள் மற்றும் மதச் செயல்பாடுகள் ஆகியவை தமிழர் வாழ்க்கைச் சுழற்சியில் ஆற்றும் பங்களிப்பை விளக்குவதாகும். இலக்கிய ஆதாரங்கள், மக்கள் மரபுகள், மற்றும் தற்கால சமூக நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு, இறப்புச் சடங்குகள் தமிழர் அடையாளத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் சமூக கட்டமைப்பாகவும், வாழ்வியல் அம்சங்களில் நிலையான வடிவாகவும் விளங்குவதை வெளிப்படுத்துகிறது. ஒர் சமூகம் தமக்குள் கொண்டிருக்கும் இறுக்கமான கட்டமைப்பு அதன் இயங்கியலில் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப் படுகின்றன என்பதனை மட்டக்களப்பு படுவான்கரை பட்டிப்பளை பிரதேச மக்களின் மரணச்சடங்கு சார் நடைமுறைகளை ஆய்வு எல்லலையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப் படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பிரதேச மக்களின் வாழ்வுமுறை மற்றும் வழாக்காறுகள் ஏனைய பிரதேச மக்களின் வாழ்வைவிட இன்னும் பழமை மாறாது தொடர்ச்சியாக பேணி வருவதனாலும்;, இவ்விடயம் சார்ந்து இதுவரை எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.

திறவுச் சொற்கள்
 : தமிழர் கலாச்சாரம், இறப்புச் சடங்கு, சமூக மரபு, மத நம்பிக்கை, மரணக் குறியீடுகள்

அறிமுகம்         
          ஒவ்வொரு சமூகங்களும் அல்லது குழுக்களும் தங்களால் பேணி வரும் மொழி பண்பாடு கலை தொழில் குறித்த மரபுகள் தொடர்ச்சியாக கை மாறவும்,  பேணவும், பாதுகாக்கவும் உரிமையுடவர்களாக உள்ளனர். இன்றைய சூழலில் வெவ்வேறு சமூகப் பிரிவினரும் கொண்டாடும் மரபுகள், பண்பாடுகள் பல மாறுதல்களை கண்டுதான் வந்திருக்கின்றன. அவை ஏற்றும், ஏற்காமலும், திணிக்கப்பட்டும், திட்டமிட்டும் ஆதிக்க அறிவின் பிடியில் பௌதீக மற்றும் சமூக எதார்த்தத்தை விட அதிக ஆற்றல் கொண்ட  மிகை எதார்த்தத்தினை உள்வாங்கி சமகால அறிவு கட்டி எழுப்புகின்றது. இக் கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தின் உலகமயமாக்கம், காலனியம், சமஸ்கிரத பரவலாக்கங்களின் கொள்கைகள் தமிழர் பண்பாட்டு வாழ்வு மரபுகளை கபளிகரம் செய்யவும் தமக்கேற்றால் போல் தமது கொள்கையாக்கங்களை வெகுஜனப்படுத்தவும், அதன் மூலம் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் உலக மூலதனத்தை விருத்தி செய்யவும், தடையாக உள்ள உள்;ர் பண்பாடு மற்றும்மரபுசார் அறிவியல்களை முற்று முழுதாக அழித்து நிர்மூலப்படுத்துவதையே கருத்தில் கொண்டு செயல்படுத்தின. மானிட வாழ்வானது கால ஓட்டத்தோடு இணைந்த பிறப்பு – இறப்பு – பிறப்பு சுழற்சித்தன்மை கொண்டது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இளமை, பருவமடைதல், முதுமை எனும் வரிசையில் நிலைமாற்றங்கள் ஏற்படுகின்றன.

“வாழ்வியல் பண்பாடுகளுக்குரியது ஆகையால் மேற்கூறிய உயிரியல் நிலையில்அமையும்   இந்த நிலைமாற்றங்கள் பண்பாட்டு வயப்படுகின்றன.இதில் ஒவ்வொரு நிலைமாற்றங்களும் ஒரு சடங்கு நிகழ்வோடு பண்பாட்டு  வயப்படுகிறது.” (பக்தவத்சல பாரதி 2002:18)
         
       சமூக குழுக்கள் தாம் கடைப்பிடித்த மரபுகள்  விதிகளாக்கப்பட்டு இவ்விதிகளை சமூக ஊடாட்டமாக கையளிக்கும் தன்மையினை சமூகநெறி கைமாறுதலிற்கான பொறிமுறையாக கட்டமைத்தும் இருக்கின்றது. சடங்கென்பது சமயம் அல்லது மரபுவழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். ஒரு மனிதரின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை குறித்து ஒவ்வொரு சமூகமும் அவை தொடர்பான சடங்குகளை கொண்டிருக்கின்றது. இங்கு நம்பிக்கை மிக உயிர்ப்பு தன்மையானதாக அமையும்.
சடங்குகள் செய்யப்படுவது குடும்பங்கள் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்ப துயரங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளை தண்டிக்க, இயற்கையை  வசப்படுத்த, விஞ்சிய ஆற்றலை பெற என்றவாறு பல்வேறு  நோக்கங்கள்  மற்றும் எதிர்பார்ப்புகளை முன்னிட்டு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் மக்களினால் கூட்டாக மேற்கொள்ளப்படுபவையாகவும் உள்ளன. தமிழர் பண்பாட்டியல் பல்வேறு வகையான வாழ்க்கை வட்டச் சடங்குகளை கொண்டுள்ளது. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பிறந்தநாள் விழாக்கள், பருவமடைதல், திருமணம், வளைகாப்பு, இறப்பு, நினைவு நாள் கடைப்பிடித்தல் என பல அடங்குகின்றன. இதில் மரணச்சடங்கு ஏனையவற்றை விட உணர்வு நிலைப்பட்ட செயல்பாடுகளும் பல்வேறு பண்பாட்டு அம்சங்களும் காணப்படும் ஒன்றாக விளங்குகின்றது. மனித வரலாற்றில் இறப்பினை பெருந்துயராக கொண்டு இறந்தவரின் உடலை ஏனையோர் புசித்தல், தங்களுடன் நீண்ட நாள் வைத்து பாதுகாத்தல், புதைத்தல், புதைத்த உடலை ஒவ்வொரு வருடமும் புதைத்த இடத்திற்கு சென்று தோண்டியெடுத்து சடங்கு செய்தல், எரித்தல், இறந்தவருடன் உடன் கட்டையேறுதல் என மரணம் தொடர்பான பல நம்பிக்கைசார் நடைமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சமூக இனக்குழுக்களதும் மரணம் தொடர்பான சடங்குப் பண்பாடு வெவ்வேறு தன்மை கொண்டவை.
    
“தமிழர் மத்தியில் காணப்படும் மரணச்சடங்குகள் பிரதேசத்துக்கு பிரதேசம் வெவ்வேறு வகையில் பன்முகப்பட்டவை. அவை நிகழ்த்தப்படும் காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணிகளை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன”.  (பக்தவத்சல பாரதி 2002:183) “ஒவ்வொரு சமூகத்தின் சடங்குகளும் தனித்தன்மைகள் கொண்டிருப்பினும் பண்பாடுகளுக்கு இடையில் நிகழும் சடங்குகளை ஒப்பிட்டு ஆராயும் போது இவற்றுக்கிடையே பொதுத்தன்மைகள் காணப்படுவதையும் அறிய முடிகிறது”. (பக்தவத்சல பாரதி 2002:183)
         
     இவ்வாய்வின் எல்லையாக குறிப்பிடப்படும் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசம் ஏனைய பிரதேச நடைமுறைகளை விட இங்கு சற்று வித்தியாசமான மரணச்சடங்கு முறைகள் உள்ளன. குறிப்பாக குடி மரபின் தாக்கம் அதனூடான மரணச்சடங்கின் கட்டமைப்பும் ஆக்கப்பட்டு தொடர்ச்சியாக பேணப்படும் தன்மையினை அவதானிக்க முடியும். இப்பிரதேச மக்களின் இச்சடங்கு முறைமையில் குடிசார் நடைமுறைகள் உள்ளீர்க்கப்பட அடிப்படைக் காரணமாய் அமைவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் குடிமுறை சடங்குப் பாரம்பரியமாகும். இவ்வாலய நடைமுறைப் பண்பாடுகளின் இயக்கமே மரணச்சடங்கிலும் தாக்கம் செலுத்துகின்றது. தமிழ் பண்பாட்டில் எண்ணிக்கையில் அதிக சடங்கு முறைகள் காணப்படுகின்ற போதும் ஆய்வு தலைப்பை அடிப்படையாகக் கொண்டு மரணச் சடங்கே இதன் ஆய்வின் பொருண்மையாக உள்ளது. எனவே மரணச் சடங்கு முறையில் உள்ள மரபு, விதி, சமூகம் சார் விடயங்கள் என்பவற்றைக் கொண்டு மரணத்திற்கு முன்னும், பின்னும் உள்ள சடங்குகளின் ஒழுங்கமைப்புகள், இறந்தவர்களின் குடும்பங்களின் மனநிலையில் அவர்களது துக்கத்தில் சமூகத்தின் பங்கெடுப்புகள், சடங்குகள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ஆற்றுப்படுத்தலில் தாக்கம் செலுத்துகின்றன என்பதையெல்லாம் மானிடவியல் நோக்குடன்  ஆராயப்படுகின்றது.

இலக்கிய மீளாய்வு
         
        தமிழர் சமூகத்தில் மரணியம் (ஆழசவயடவைல) குறித்த சிந்தனை தத்துவம், மனிதவியல், சமூகவியல், மரபியல் ஆகிய துறைகளில் விரிவாகப் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள ஆய்வுகள், தமிழர் மரணச் சடங்குகள் அநவயிhலளiஉயட (இயற்பின் புறம்பான) சிந்தனை, சமூக ஒற்றுமை, மற்றும் சடங்கு தொடர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு உலகக் காட்சியாக இருப்பதைக் காட்டுகின்றன. இவ்வாய்வு, இத்துறையில் முன்னர் வெளிவந்த முக்கியமான கோட்பாடுகள் மற்றும் ஆய்வுகளை ஒருங்கிணைத்துப் பரிசீலிக்கிறது.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தின் மரணச் சடங்கு தொடர்பான ஆய்வுகள் மிக வரையறுக்கப்பட்டுள்ளன. மரணியத்தை தத்துவம், சடங்கு, சமூக அமைப்பு ஒருங்கிணைந்த பார்வையில் அணுகும் ஆய்வுகள் குறைவு. மரணச் சடங்குகளில் இன்றைய மாற்றங்கள் குறித்து தனித்த ஆய்வுகள் இல்லை. இத்தகு இடைவெளிகளை இவ்வாய்வு நிரப்புகிறது. பண்டைத் தமிழர் சிந்தனையில் மரணம் ஒரு முடிவாக அல்ல ஒரு நிலைமாற்றமாக கருதப்படுகிறது. ஆய்வின் ஆதாரங்களில், மரணம் என்பது “உயிர் நிலையற்றது” என்ற உண்மையையும், அதனுடன் “சமூக நெறியின் நிலைத்தன்மை” என்பதைவும் வலுப்படுத்தும் வாழ்க்கைக் கூறாக விளக்கப்படுகிறது. பு. துழாn ளுயஅரநட (2002) போன்ற ஆய்வாளர்கள், தமிழர் மரபில் மரணத்தை ஏற்றுக்கொள்வது ஒரு தனித்துவமான பண்பாட்டு சடங்கு அமைப்பின் மூலம் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்றனர்.

மரணச் சடங்கும் அதன் ஒழுங்குமுறையும்
         
      மனிதர் தோன்றிய காலம் முதல் சடங்குகளும் தோன்றி விட்டன மனித வாழ்வியலில் சடங்குகள் நீங்காத இடம் பிடித்துள்ளது.  சடங்கினை வாழ்வுச் சடங்கு, இறப்புச் சடங்கு என பிரித்தும் பார்க்கலாம் அவற்றை மங்கல சடங்கு, அமங்கல சடங்கு எனவும் அழைக்கும் முறைமையுண்டு.
    
“இறப்புச் சடங்கு செய்யப்படுவதன் நோக்கம் தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்த, இறந்தவர்கள்  கடவுளர்களாக இருந்து அவர்கள் குடும்பத்தை வழிநடத்தவும், அக்குடும்பத்திற்கும் இறந்தவருக்கும் உள்ள உறவை முறித்து கடவுளின் பாதத்தை சென்றடையவும் என்ற நம்பிக்கையில் பல நெறிமுறைகள் செய்யப்படுகின்றன.” (முனைவர், ரா.பிரித்தா, உதவி பேராசிரியர் புறநானூற்றில் இறப்புச் சடங்குகள்)
         
      ஆய்வின் எல்லைக்குட்படுத்தப்பட்ட படுவாங்கரைப் பிரதேசம்  நகரத்தை அண்டிய பிரதேசங்களை விட கலை, கலாசார, பண்பாட்டு மரபு முறைவுகளுடன் மக்கள் இணைந்து வாழுகின்ற ஓர் தன்மையினைக் அவதானிக்க முடியும்.  இதற்கு அடிப்படை நகரமயமாக்கத்தின் தாக்கம் குறைவு மேலும் முப்பது வருட கால யுத்தத்தின்பிடியில் இப்பிரதேசம் காணப்பட்டதும் இன்னுமொரு காரணமாகும்.
கொக்கட்டிச்சோலை ஆலயத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் குடிமுறை மரபிற்குட்பட்டவையாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அதன் இறுக்கம் சார் விதிமுறைகள் மரணச் சடங்கு நெறிமுறையிலும் தாக்கம் செலுத்துகின்றது எனலாம்.

பிரதேசத்தில் குடிமுறை 
         
      குடி மற்றும் சாதி முறைகள் பற்றி மட்டக்களப்பு மான்மியம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு குகன் குல முக்குக வரலாறு, முக்குகர் தொடர்பான கல்வெட்டுப் பாடல்கள், மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம், மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்ற நூல்கள் ஊடாக மட்டக்களப்பின் பூர்வீக குடிகள் குடியேற்றங்கள் தொடர்பாக அறியக்கூடியதாக இருக்கின்றது.  பிரதேசத்தில் தற்போதைய நிலையில் கீழ் வரும் குடிகளை அடையாளப்படுத்த முடியும். உலகிப்போடிகுடி, படையாட்சிகுடி, பணிக்கனார்குடி, கச்சிலாகுடி, கோப்பிகுடி, பெத்தான்குடி சட்டிகுடி, பொன்னாச்சி குடி என்பனவாகும். இக்குடிகளின் ஒழுங்குமுறையிலேயே தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா பொன்னாச்சி குடியினருக்கும், இறுதி நாள்த் திருவிழா  உலகிப்போடி  குடியினருக்குமாக மேற்கூறிய முறையே ஒவ்வொரு குடியினருக்குமாக நடைபெறும். இதேபோன்று குடிமுறைமை அடிப்படையில் மரணச்சடங்கின் விதிமுறைகளும் கட்டமைக்கப்படுகின்றது. இனி மரணச்சடங்கில் காணப்படும் செயலொழுங்கு முறையினை ஆராயலாம். இது ஒரு ஒழுங்குமுறையில் நிகழ்த்தபடும்.

ஒப்பாரி வைத்தல்
         
          ஒருவர் இறந்தவுடன் அக் குடும்பத்தில்  இருப்போர் சத்தமிட்டு ஒப்பாரி வைப்பர். சத்தமிட்டு அழுகின்ற முறைமை ஒப்பாரி வைத்தல் என அர்த்தப்படுகின்றது. ஒப்பாரி சத்தம் கேட்டவுடன் அயற் சூழலில் உள்ள அனைவரும் ஒன்றிணைவர். அவ்விடத்தில் ஆரம்ப கட்ட வேலைகளை செய்வர் வேலி பிரித்தல், வளவினை சுத்தப்படுத்தல், பந்தல் நாட்டுதல், இருக்கைகளை ஏற்பாடு செய்தல் என பல அடங்கும். ஒப்பாரி  செய்து அழுதலில் இறந்தவரின் பெருமைகளை சொல்லி பாடல் வடிவில் அழுகின்ற முறையை அவதானிக்கலாம். மரணம் நிகழ்ந்த ஊூரில் ஒப்பாரிப் பாடல்கள் பாடக்கூடிய பலர் இருப்பர் மரண செய்தி கேட்டவுடன் அவர்கள் அவ்விடத்தில் வந்து விடுவர் மலையகம், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் தொழில்முறை சார் ஒப்பாரி பாடல்பாடும் குழுவினர்  காணப்பட்டும் இருக்கின்றனர். அதேபோன்று மார்படித்துப் பாடும் பாடல் முறைகளையும் குறிப்பிடலாம். பட்டிப்பளை பிரதேச மரணச்சடங்குகளில் மரணவீட்டிற்கு வருகின்ற இறந்தவரின் உறவுகளை கட்டி அணைத்து  ஒப்பாரி வைத்து அழுகின்ற முறையினைக் காணலாம். கீழ்வருமாறு இப் பாடல் அமையும்.

எண்டழகு ராசாவே ராசாவே
என்னை விட்டு போனியே ராசாவே ராசாவே
எண்டழகு ராசாவே
எண்டழகு ராசாவே  (ந.தெய்வானை வயது-75)
எனப் பல்வேறு வகையில் பாடுவோரின் கற்பனைக்கு அமைவாக ஒப்பாரிப் பாடல் அமையும்.

சாவியளம் சொல்லுதல்
         
      ஒரு வீட்டில் இறந்த செய்தியை ஏனையோருக்கு எடுத்துச் செல்லும் நபரை சாவியளம் சொல்லி என அழைப்பர். அவரை இழவு சொல்லி எனவும் கூறப்படுகிறது. இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து இல்லாத அன்றைய சூழலில் அயல் கிராமங்களுக்கு சென்று குறித்த நேரத்துக்குள் இறந்தவர் செய்தியை அறிவித்து அவர்களை அழைத்து வரும் பொறுப்பு இவருக்குண்டு. எனவேதான் அவருக்கான ஊதியம் கிடைக்கப்பெறும் மிக விரைவாக செயல்படக்கூடிய ஒருவராகவும் அதே போல் சமூகங்கள் ஏனைய கிராமங்கள் மற்றும் நல்ல ஆளுடைத் தொடர்பு கொண்டவராகவும் இவர்கள் காணப்படுவர்.

ஊர்த்தலைவரை அழைத்தல்         
     பட்டிப்பளைபிரதேச மக்களிடையே கிராமங்கள் தோறும்; இடம்பெறும் மரணச் சடங்கின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஊர்த் தலைவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்று சடங்கிற்குரிய வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும்  என்பதனையும் மரணச் சடங்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஏனைய விடயங்களை தயார் செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்குவர்.

பறையடித்தல்
         
        மரணச் சடங்கில் இறந்தவரின் வசதி வாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு பறையிசை நிகழ்த்தப்படும். ஒருவர் இறந்து விட்டார் என்பதனை பிறருக்கு அறிவிப்புச் செய்வதாக இப்பறை அறிவிப்பு அமையும். இதற்காக பறையர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு பொருத்தங்கள் பேசி அதன் மூலம் அவர்களை வழிநடத்தும் பண்பு காணப்படும். இதற்கு பொறுப்பாக அக்கிரமத்தில் ஒருவர் இருப்பார். அவரிடம் கூறுமிடத்து குறித்த நபர் பறையிசைக் கலைஞர்களை அழைத்து வரவும், அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் உரியவராவர்.

கூரை முடி வைத்தல்
         
       குடிப் பாரம்பரியம் உள்வாங்கபட்டதன் பின் அதாவது முக்குகச் சட்டத்தின் கீழ் கூரை மூடி வைத்துக் கொள்ளும் பண்பாடு உருவாகின்றது. இறந்தவர்களின் குல கௌரவத்தை எடுத்துக்காட்டி அவருக்கு மரியாதை செய்வதற்காக இவை செய்யப்படுகின்றன. பட்டிப்பளைப்பிரதேச மரணச்சடங்குகளில் கூரைமுடி வைத்தல் முறையினை சலவை தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இதனைச் செய்வார். இறந்தவரின் வீட்டின் மேற்கூரையில் கும்பங்கள் வைத்து சடங்கு செய்யும் முறையினை இது குறிக்கின்றது. முக்குகர் குடிப் பிரிப்புகளை வைத்தே கும்பங்களின் எண்ணிக்கை அமையும் இதனை நன்மைக்கும் தீமைக்கும் ஆன கூரை முடி எனக் கூறுவர். இது பற்றி “சாதித் தெய்வ கல்வெட்டு”;  கீழ்வரும் பகுப்பில் வகுத்துள்ளது.

இல    குடி    கூரைமுடி

1.கலிங்க குடி         – 13

2.உலகிப்போடி குடி-11

3.படையாட்சி குடி  -09

4.வேளாளர்            -07

5.ஏனைய குடிகள்  -03 
எனும் அடிப்படையில் அமையும் இதனை

சீர்  பெற்றிலங்குவுயர் வாழிழநகர் மேவு தென்னவன் சென்னி கொங்கன்தீரரென மூவரரசான்டு வருநாளிலே திறமை நலமேவுவரிசை செய் திட்ட மரபெக் காலமும் பூசுரன் நிரலரசன் வணிகருழவர்சிறைகள் பதினெட்டு டனவர்கள் பெருவரிசை தீர்த்துட்ட செய்தியது கேள்பார் பெற்ற பரிதிக்குல கலிங்க மரவினோர் பதின்மூன்று கும்பமும்தேங்கினுயர் பாழை தனிப்பாவாடை மேற்கட்டி தாரை தவில் குழல்வீணை       
                                                                                     (நன்மைக்கும் தீமைக்குமான கும்ப வரிசை கல்வெட்டுப் பாடல்)
இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல்         
       இறந்தவரின் உடலை சுத்தம் செய்யும் சடங்காக இது அமையும். ஒரு கட்டில் அல்லது உயரமான ஒரு பலகையில் இறந்தவரை வைத்து சுற்றி துணியினால் கட்டி அல்லது ஏனையோரால் பிடித்து தண்ணீரைக் கொண்டு அவர் மேல் ஊற்றுவர். இறந்தவர் ஆணாக இருப்பின் நாவித சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களால் முகச்சவரம் செய்யும் முறையும் காணப்படுகின்றது.
 
“இறக்கப் போயினும் சிறக்க போக வேண்டும்” எனும் பழமொழியும் இப்பிரதேசத்தில் புழங்கு நிலையில் உள்ளது. (அருள்ராஜசிங்கம், வயது-68)
         
         எனவே கணவனை இழந்த பெண்கள் மூவர் மூன்று குடத்தில்  மேலே இருவர் துணி பிடித்து வர (வெள்ளை படித்தல்) கிணற்றில் நீர் எடுத்து வருவர். இறந்தவர் ஆண் அல்லது பெண் என்பதற்கு அமைவாக தாய் தந்தை கணவன் அல்லது மனைவி பிள்ளைகள் என யாரோ ஒருவர் குளிப்பாட்டும் செயலில் ஈடுபடுவர். பின்னர் அவரது உடலுக்கு வாசனைத் திரவியங்கள் தெளித்து புதிய ஆடைகள் அணிவித்து நெற்றியில் திருநீறு சந்தனம் பூசி வீட்டின் உள்ளே அல்லது வெளியே ஏனையோர் பார்வையிட இறந்தவரின் உடல் வைக்கப்படும். இறந்தவரை சாமுலை பக்கம் தலை வைத்து காலை எதிரே நீட்டி (சாமுலை என்பது தென்மேற்குத் திசையாகும்) தலைப்பகுதியில் தேங்காய் எண்ணெய் விளக்கு வைப்பர்.
பாடை கட்டுதல்
         
      பாடை கட்டுதல் என்பது நுணுக்கமும் அறிவும் கொண்ட செயற்பாடாகும். இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்வதற்கான வலிமையாகவும் அதனுள் இறந்தவர்களின் உடலை வைத்து சுமக்க கூடிய வகையில் அளவுடையதாகவும் கட்டுதல் வேண்டும். அத்துடன் விதிமுறைகளுக்கு அமைவாக அதன் முடி மற்றும் அழகியலுடன் கட்டுதல் அவசியம். பாடைகட்டுவதற்கு அதிக பணம் செலவழிப்பதில்லை பெரும்பாலும் இயற்கை உள்ளீடுகளையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். பாடை கட்டுதலென்பது எல்லோராலும் செய்யக் கூடிய செயற்பாடன்று. அதற்கு அக்கிராமத்தில் அனுபவம் மற்றும் அது சார்ந்த அறிவுள்ளவர்கள் காணப்படுவர். அவர்களே பாடைகட்டும் வேலைப் பாடுகளைச் செய்வர்

மடு வெட்டுவதற்காக ஆட்களை மயானத்திற்கு அனுப்புதல்
         
       இறந்தவரின் உடலினை அடக்கம் செய்யும் நேரத்தினை தீர்மானித்த பின்பு கடமை செய்வதற்கு இரண்டு மணித்தியாலத்திற்கு முன் மூவரை மயானத்துக்கு அனுப்புவர். இவர்கள் அவ்வூரில் மடுவெட்டுவதற்கு பிரபல்யமானவராக இருப்பர். இறந்தவரின் உடலை புதைப்பதற்கு சரியான அளவு கொண்டதாய் வெட்டுதல் வேண்டும். செல்கின்றவர்களிடம் மண்வெட்டி, கத்தி ஆகிய இரண்டு ஆயுதங்களை கொண்டு செல்வர். அதற்கு மேல் கொண்டு செல்ல முடியாது எனும் மரவுண்டு. அத்துடன் மூன்று பேர் மட்டுமே செல்ல முடியும். இங்கு செல்கின்றவர்களுக்கு ஒரு போத்தல் மதுபானம் வழங்கும் முறை இப்பிரதேசத்தில் உள்ளது.

வீட்டில் நடைபெறும் சடங்குகள்
         
      இறந்தவரை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு  முன் வீட்டில் செய்யும் நிகழ்வு இதுவாகும். மயானத்திற்கு வீட்டிலுள்ள பெண்கள் செல்ல இயலாது என்பதனாலேயே இக்கடமை வீட்டில் நடைபெறுகிறது. இதில் முதலாவதாக தந்தை அல்லது தாய் இறந்தால் பிள்ளைகளும், பிள்ளைகள் இறந்தால் தந்தையும் இவர்கள் எவரும் இல்லாத நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் ஒரு உறவினர் கடமைகளைச் செய்வர். ஆண்களாலேயே முதற்கடமை செய்யப்படும். இருவர் மேலே வெள்ளை பிடிக்க தலையில் மஞ்சள் கலந்த அரிசியினை வட்டி எனும் பாத்திரத்தில் எடுத்து வெள்ளைத் துணியினால் மூடி இறந்தவரின் உடலை எட்டு முறை வலம் வந்து அவரது அருகில் முழங்காலில் பின்புறமாக கையை பின் வைத்து மூன்று தடவை அரிசி மற்றும் தண்ணீரை தெளிப்பர். அதன் பின் கிராமத் தலைவர் குடிகள் சார்ந்து ஒவ்வொரு குடிகளையும் அழைப்பர். குறித்த குடியினை பிரதிபலிக்கும் வகையில் யாரோ ஒருவர் மேற்கூறிய வகையில் கடமையினைச் செய்வர். இறந்தவரின் உடலை சுற்றி வலம்வரும் எண்ணிக்கை பின்வருமாறு அமையும்.
 
உலகிப் போடி குடி – 7 
கலிங்ககுடி – 6 
படையாட்சி குடி – 5 
பணிக்கனார்குடி – 4 
கச்சிலாகுடி – 3 
கோப்பி குடி – 2 
பெத்தான்குடி – 1   (வே. மகேசரெத்தினம் 2015 : 18)
         
       அவற்றை செய்த பின்பு குடும்பத்தின் ஏனைய உறவினர்களால் வாய்க்கரிசி போடப்பட்டு கால் கழுவும் பண்பாடும் காணப்படும். வாய்க்கரிசி மற்றும் தண்ணீர் மூன்று தடவை வாயில் இட்டு காலினையும் கழுவுவர். பின்னர் பட்டினத்தார் பாடல் மற்றும் தேவாரம் பாடி பாடையில் தூக்கி வைக்கப்படும். இறுதியில் பாடையின் நடுவே அமையும் கூராக அமைக்கப்பட்ட கம்பில்  முடி பொருத்தப்படும். அடுத்து வீட்டின் வாயிலை விட்டு வெளியேறும் போது மூன்று தடவை முன் பின் இழுத்து நகர்த்தப்படும் மரபுண்டு. இறந்தவரின் உடலை கொண்டு செல்கின்ற போது நெற்பொரி தூவுதல், சிறு பந்தினை முன் பின் எறிதல் என்பனவும் நடைபெறும். கடமை செய்தவர்கள்  பாடையின் முன் தலையில் நீர் நிரப்பிய கூடத்தில் சிறு விறகு துண்டு ஒன்றினையும் இணைத்து சுமந்து செல்வார். இவையனைத்திற்கும் காரண காரியங்கள் உண்டு.

சந்தி மறித்து ஆடுதல்
         
        பறையிசை கலைஞர்களால் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும்போது பிரதான சந்திகளில் பறை அடித்து சந்தி மறித்து ஆடுவர். இதன் போது வெள்ளை துணி ஒன்றினை விரித்து இருப்பர்  அச்சந்தர்ப்பத்தில் சுற்றி இருப்போர் தங்களால் முடிந்த பணத்தினை இத்துணியில் போடுவர். பாடையினை தூக்கிச் செல்லும்போது கால்ப் பகுதி முன்னாலும் தலைப்பகுதி பின் புறமாகவும் இருக்கும் வகையில் நால்வர் தூக்கிச் செல்வர்.

மயானத்தில் நடைபெறும் கடமைகள்
         
         மயானத்துக்குச் சென்றவுடன் மூன்று தடவை பாடையினை தூக்கி வெட்டிய மடுவினைச் சுற்றி ஓரிடத்தில் வைத்த பின்  உள்ளிருக்கும் இறந்தவரின் உடலை வெளியே எடுத்து  வீட்டிற்குச் சென்று இறந்தவரின் உடலை பார்க்க முடியாதவர்களுக்காக மீண்டும் திறந்து  காண்பிக்கும் நடைமுறையுண்டு. பின்னர் வெட்டிய மடுவில் இறந்தவரின் உடலை வைத்து கொள்ளிக்குடம் ஏந்தி வந்தவரால் மூன்று தடவை மண் மற்றும் நீர் விடப்படும். தொடர்ந்து ஏனையோரால் மண் போடப்படும். மடு முறையாக மூடப்பட்டு நான்கு மூலைகளிலும் நான்கு இளநீர் வைக்கப்படும். பின்னர் தேவாரம் பாடி இறந்தவருக்கு கடமை செய்தவர் கொள்ளிக்குடத்தை தலையில் வைத்து மூன்று தடவை சுற்றி வர அதில் நாவித சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  ஒவ்வொரு  சுற்றுக்கும் ஒரு தடவை நீர் நிரப்பிய குடத்தில்  கத்தியினால் வெட்டி விடுவர். அவ்வாறு மூன்று தடவை இது நடைபெற்றதும் குடத்தை கீழே போட்டு பின் பக்கம் பார்க்காமல் முன்னே பார்த்து மயானத்தை விட்டு வெளியேறுவர். இங்கு பறையர் சமூகத்தைச் சேர்ந்த பறையிசைக் கலைஞரால் நிலம் கூறும் நிகழ்வும் நடைபெறும் அவர் பறையில்  இசைத்து “மேலே வானம் சாட்சி கீழே பூமி சாட்சி ஆறடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட நிலத்தை…..” என்று தொடங்கி நிலத்தை விற்பார். அதன்போது ஒரு இறைசால் என்று பெறுமதியை முன் வைக்க ஏனையோரும் தொடர்ச்சியாக விலையினை வைத்து இறுதியில் ஏழு இறைசால் வரைக்கும் கொண்டு சென்று பின் ஊர்த் தலைவரால் அரிசி, ஒற்றை எண் கொண்ட பணம், வெள்ளைத் துணி என்பன அவருக்கு வழங்கப்படும். இறைசால் என்பது அக்காலத்தில் பயன்படுத்திய பணத்திற்குரிய பெயரை குறிக்கின்றது. இறந்தவரின் உடலை புதைக்கும் மரபு மட்டுமன்றி பிணத்தை எரிக்கும் நடைமுறையும் இப்பிரதேச மக்களிடையே காணப்படுகின்றன. இம்முறை பொருளாதார ரீதியாக வசதி படைத்தோராலேயே செய்யப்படுகின்றன. கடந்த பத்து வருட தகவலின்படி இரண்டு பிணங்களே எரிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.  அவ்வாறாயின் அதற்கென மயானத்தில் வேறு வகையான கிரியை முறைகள் உண்டு இப்பிரதேச மக்களிடையே புதைக்கும் பாரம்பரியமே அதிகம் காணப்படுகின்றது.

மாத்து மாற்றுதல்
         
      இறந்தவரின் உடலை அடக்கம் செய்து விட்டு வரும் வழியில் மாத்து மாற்றும் எனும் பாரம்பரியம் காணப்படும். இதனை ஊர்த்; தலைவர் வழிநடத்திச் செல்வார். சலவைத் தொழிலாளர் சமூகத்திலிருந்து குறித்த மரணச் சடங்கினை வழிநடத்தியவர் உறவினர்கள் இருக்கத்தக்கதாக மாத்திடுவார். இங்கு மன்முனை தேசம், மட்டக்களப்பு அதன் பின்பு ஏனைய கிராமங்களில் பெயர்களை கூறி ஒவ்வொரு துணியாக எடுத்துப் போடுவார் இறுதியில் விதானை, ஊர்ப்போடி, உடையார் ஆகியோருக்கு மாத்து சொல்லப்படும். அவ்வாறு செய்த பின்பு அவருக்கான கொடுப்பனவு ஊர் தலைவரால் வழங்கப்படும். மாத்து மாற்றுதல் என்பது  எட்டாம் நாள் சடங்கு வரைக்கும் வீட்டில் இருக்கின்றவர்கள் அணிவதற்காக  வழங்கப்படுகின்ற உடையை குறிக்கின்றது. அதேபோல் மயானத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து வீடு செல்கின்ற போது வீட்டின் வளவிற்கு முன் வாசலில் மஞ்சள்  கலந்த நீரை தலையில் தெளித்து கை, கால் கழுவி உள்ளே செல்லும் வழக்கமும் உண்டு. இதனோடு மூன்றாம் நாள் வரைக்கும் இளநீர் வைத்தல், மரணம் நடைபெற்று மூன்றாம் நாள் இரவு பொங்கல் வைத்தல,; எட்டாம் நாள் சடங்கு செய்தல். இதன் போது மயானம் சென்று  மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்ற ஒற்றை எண் அடிப்படையில் உறவினர்கள் சென்று பால் ஊற்றி வரும் சடங்கும் காணப்படும். இத்துடன் முப்பத்தியொராம் நாள்ச்; சடங்கும் நடைபெறுகிறது. அதன் போது “மகாளயம்” சடங்கு நடைபெறுவதைப் போன்று இறந்தவருக்கு விருப்பமான படையல்கள் செய்து உறவினர்களை அழைத்து விருந்தளிக்கின்ற ஒரு முறமையும் உண்டு.

மரணச் சடங்கின் வரவும் மாற்றமும்
         
       மரணச் சடங்கு பண்பாட்டு மரபுகள் இப்பிரதேச  மக்களிடையே அதன் அமைப்பாக்க ரீதியில் பலவை மாற்றம் பெற்று இருக்கத்தான் செய்கின்றன. குடி மற்றும் சமஸ்கிரத தாக்கங்கள் அதிகமான மரபுசார் நெறிமுறைகளை மாற்றியுள்ளன. அத்துடன் தற்கால நவீன இலத்திரனியல் தொடர்பாடல் மற்றும் ஏனைய சாதனங்களும் இதற்கு இன்னுமொரு காரணமாய் அமைகின்றது. குறிப்பாக  சாவியளம் சொல்லியின் பணிகள் தற்போதைய சூழலில்  மிகக் குறைவு. இதனை இன்றைய நவீன தொழில்நுட்ப தொடர்பாடல் சாதனங்கள் செய்கின்றன.  மரணம் நிகழ்ந்தவுடன் பிறருக்கு செய்தியை கடத்துவதற்காக வழங்கும் பறையிசை  தற்கால சூழலில் குடும்பங்களின் கௌரவம், அந்தஸ்தினை வெளிப்படுத்துகின்ற முறையினை அவதானிக்க முடியும். பாடை கட்டுதலிலிருந்து அதனோடு இணைந்த அனைத்து ஒழுங்கு விதிகளும் பல மாற்றங்களை  எதிர்கொண்டு தான் இருக்கச் செய்கின்றன. நகர் பிரதேசங்களை அவதானிக்குமிடத்து  உலோக கம்பிகளால் பாடையினை நிரந்தரமாக ஒட்டி இழுத்துச் செல்லும் தன்மைகளையும் அவதானிக்கவும் முடியும். பலர் மோட்டார் வாகனங்களிலும் இறந்தவரின் உடலை கொண்டு செல்கின்றனர். இவை போன்று மாத்து மாற்றுதல், கடமைகள் செய்தல் என்ற பல்வேறு நிலையில் மரபுகள் மாற்றம் பெற்றிருக்கின்றன. இதற்கு சாதிசார் பாகுபடுத்தல், இயற்கை உள்ளீடுகளை பெறுவதிலுள்ள தடைகள், இது பற்றிய அறிவு நுணுக்கம் தெரிந்தோர் இன்மை, நவீன இயந்திரங்களின் வருகை என பல காரணங்களை மரபின் மாற்றத்திற்குரிய காரணங்களாக அடையாளப் படுத்த முடியும்.

“அண்மைக்காலத்தில்  உலகமயமாகி வரும் அறிவு “பொருளாதார அறிவு” என அழைக்கப்படுகிறது. அது தொழில்நுட்ப அறிவு என்றும் அறியப்படுகிறது. உயர் ஆற்றல் கொண்ட நிர்வாக அறிவு, மேலாண்மை அறிவு என்றும் மதிக்கப்படுகிறது. அது எந்திர அறிவாகவும், பொறியியல் அறிவாகவும், மின்னறிவாகவும் உள்ளது. இவையெல்லாம் அந்த அறிவின் சிறப்புகள் ஆகும். ஆயின் அது சமூக அறிவாக இல்லை மானுட அறிவாக இல்லை சமூக நீதி, அறம், அழகியல், பண்பாடு ஆகியவை இவ்வாறு இடம்பெறுவதில்லை. அறிவு இன்றைய உலகமயமாக்கலில் எத்துறை வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதேவேகத்தில் அதன் சமூக பண்பை இழந்து வருகிறது.” (நா முத்துமோகன் 2017 6)
         
      மரணச்  சடங்கின் ஒழுங்கமைப்பென்பது முற்போக்கானது அல்லது பிற்போக்கானது என்பதை தாண்டி ஒரு சமூகம் இச்சடங்கு நடைமுறைகளை எவ்வாறு அதன் அமைப்பாக்கத்தில் இறுக்கமாக கொண்டுள்ளது என்பதனை புரிதல் அவசியமாகின்து.

மரணச்  சடங்கில் சமூக பங்களிப்பு
         
        ஒரு சமூகம் தமது அறிவு, திறன், நுட்பம், மரபு, பண்பாடு, சமூக ஒருங்கிணைவு என அனைத்தையும் பயன்படுத்தும் முறை மரணச்சடங்கில் காணப்படுகிறது. இறந்தவரின் வசதி வாய்ப்பு கௌரவம் தாண்டி இறுதிச் சடங்கில் சமூகம் கலந்து கொண்டு தமது பங்களிப்பை ஏதோ ஒரு வகையில் செய்கின்ற தன்மையினை அவதானிக்க முடியும். சமூகம் கூட்டாக இணைதல், குடும்பத்தின் துயரில் பங்கு கொள்ளுதல், பந்தல் அமைத்துக் கொடுத்தல், சாவியளம் சொல்லுதல், பாடை கட்டுதல், கூரை முடி வைத்தல், கடமை செய்தல், தேவாரம் பாடுதல், வைகுந்தம்மானை பாடுதல், உணவு சமைத்துக் கொடுத்தல், மயானம் வரை சென்று இறுதிச் சடங்குகளில் பங்கு கொள்ளல்,  பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாக இருப்பின் அவர்களுக்கு முடிந்த பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குதல், இறந்தவர் சமூக முன்னேற்றங்களில் ஈடுபட்டவரெனின் அவரது பெருமைகளை கூறி இரங்கல் செய்தி ஆற்றுதல் என்ற பல்வேறு பங்களிப்பினை ஓர் சமூக அமைப்பாக்கத்தில் வலுவாக மரணச்சடங்கு கொண்டுள்ளது. இவை இன்றைய சூழலில் தன்னிறைவு மற்றும் சுயசார்வான இருப்பியலை பரவலாக்கம் செய்யவும் நீடித்து நிலைத்து நிற்கும் சமூக அபிவிருத்தியை பேணவும் ஓர் ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை கொண்டு செல்ல வெகுஜனப்படுத்தப்பட வேண்டியவையாகும். இறந்தவரின் குடும்ப உறவுகளின் மனரீதியான உணர்வுகள் விவரிக்க முடியாதவை. இந்நிலையினை புரிந்து சமூக அமைப்பாக்கம் உளவியல் ஆற்றுப் படுத்தலை அல்லது குணப்படுத்தலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக உளவியல் நோக்கில் அணுக சமூக கட்டமைப்பு சில பொறிமுறைகளைக் கொண்டுள்ளது. குறித்த குடும்பத்தின் சகல நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதன் மூலம் ஒப்பாரி, வைத்தல் கட்டி அணைத்து அழுதல், இறந்தவர்களின் பெருமைகளை இரங்கல் செய்தியாக தெரிவித்தல், இரவு நேரங்களில் கூட்டாக வந்து தங்கி நின்று பொழுதினைக் கழித்தல், அம்மானை பாடுதல் என அனைத்திலும் உளவியல் ரீதியாக துக்கங்களில் பங்குகொண்டு ஆற்றுப்படுத்துகின்ற முறையினை அறியலாம்.

முடிவு மற்றும் கலந்துரையாடல்
         
       மரணியம் என்பது தமிழரின் வாழ்வியல் சிந்தனையின் அடித்தளம். அது மரணத்தைப் பற்றிய அச்சத்திலிருந்து அல்ல, வாழ்வை முழுமையாக உணர்ந்த ஒரு தத்துவநிலைமையிலிருந்து உருவானது. உயிரின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, ஒவ்வொரு நாளையும் நெறிப்படி வாழ்வது என்ற மனித நேயப் பார்வை மரணியத்தின் மையக் கருத்தாகும். இருந்தும் சமகால மரணச் சடங்கு மரபுகள் குடும்பம், அந்தஸ்த்து, கௌரவம் என பொருளாதார ரீதியாக மாற்றம் பெற்றுள்ளது. சடங்கின் பின் வணிகமும், பெருமுதலாளித்துவமும் மறைந்துள்ளது. தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு: மரபும் சமூக ஊடாட்டமும் எனும் தலைப்பிலான இவ்வாய்வு மரணத்தின் நிலையில் நின்று ஓர் சமூகம் தன்னை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் சில பொறிமுறைகளைக் கொண்டிருக்கிறது. சடங்கு ஒன்றினை செய்வதன் ஊடாக அச்சமுகம் ஓர் அமைப்பிற்குள் அல்லது இறுக்கத்திற்குள் இருக்கும் அதேவேளை குறித்த சடங்கினைச் செய்ய வேண்டுமெனில் அச் சமூகம் சிறந்த அமைப்பாக்கம் அல்லது இறுக்கத்திற்குள் இருக்க வேண்டும். இவை சுழற்சி முறையில் நடைபெறும் இதனை இவ்வாறு காட்டலாம்.

சமூக அமைப்பாக்கம் – சடங்கு – சமூக வலுவாக்கம்       
      பட்டிப்பளை  பிரதேசத்திலுள்ள மரணச் சடங்கு பண்பாட்டு முறைமை ஒரு சமூகத்தை அமைப்பாக்கம் செய்வதில் பங்குவகிக்கின்றது என்பதனை சமூகப் பங்களிப்பு மற்றும் மரணச் சடங்கில் காணப்படும் செயலொழுங்கு கட்டமைப்புகள் மூலம் நிரூபிக்க முடியும். அத்துடன் மரணச் சடங்கு முறையிலுள்ள பிற்போக்கு அல்லது சமகாலத்திற்கு எதிரானதாக கருதும் சில விடயங்களை உரையாடலுக்கு உட்படுத்தல் அவசியமானது. குறிப்பாக குடிமரபு ரீதியாகவுள்ள உயர்வு தாழ்வு, கூட்டாக இயங்குதலில் அல்லது ஒரு பொது வெளியில் சாதிரீதியாக குறித்த ஒர் சமூகத்தை கீழானவர் எனக் காட்டுவது, குறிப்பாக கூறின்  கூரை முடி வைத்தல் மற்றும் சுற்றி வந்து கடமை செய்யும்போது காட்டப்படும் பாரபட்சம். அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறான தரப்பினரின் மனநிலை சார் உணர்வுகள் போன்றவையும், விளிம்பு நிலை சமூகங்களான பறையர், நாவிதர், சலவை தொழில் செய்வோர் ஆகியோர் கவனத்தில் கொள்ளும் விதம், மேலும் இச்சடங்கில் பெண்கள் வெறுமனே அழுகின்றவர்களாகவும் ஊதியம் செய்கின்றவர்களாகவும் கட்டமைத்துள்ள ஆணாதிக்க  பார்வை ஆழமாக பார்க்கப்பட வேண்டியவை. சமஸ்கிருத ஊடுருவல், காலனிய கருத்தாக்கம் மற்றும் உலகமயமாக்கம் போன்றவையின் விளைவு தற்கால சடங்கு முறையில் அதிக தாக்கம் காணப்படினும் இவற்றின் அதிகாரத்துவ பரவலாக்கத்திற்கு முன்னிருந்த தொன்மையான மரணச் சடங்கின் செயலொழுங்கு என்ன? அதனை மாற்றியதில் அல்லது மாற்றுவதன் தேவையின் தொடர் ஆய்வும் உரையாடலும் அவசியமாகின்றது. இன்றைய நவீன சமுதாயத்தில் மரணியத்தின் செய்தி – பொருளாதார வேகத்தின் நடுவே ஒழுக்க நெறி மறையக் கூடாது என்பதே. அது மனிதரை வாழ்வின் பொருள் உணர்த்தும் தத்துவமாக, “மனித வாழ்வின் சமநிலைத் தத்துவம்” என்ற புதிய பரிணாமத்தை நோக்கி வளர்கிறது. அதனால், மரணியம் என்பது கடந்தகாலத்தின் மரபு அல்ல அது காலம் கடந்த மனித வாழ்வின் நிலையான நெறியியலாகும்.

உசாத்துணை
1.முத்துமோகன். ந. (2017), அறிவின் உலகமயக்காலும் அறிவுச் சமூக பண்பாட்டில் வேர்கொள்ளல், மொழிதல், தொகு, 4, 1-13.

2.பக்தவக்சலபாரதி, ப. (2002), தமிழர் மானிடவியல். திருச்சி அடையாளம், தமிழ்நாடு.

3.பெர்னாட்சா, ச. முத்துகமரன், பி. (2016), இந்திய கலை வரலாறு, சாமிநாதர் நூல்நிலையம்.

4.முத்துமோகன். ந. (2014), பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும். செஞ்சுரி வுக்கவுஸ்.

5.விவேகானந்தராசா, த,(2014), உறவுகளின் பாலமாய் இளவு சொல்லிகள், மறுகா.

6.புரித்திகா, இரா, முனைவர், (09,இல 5, 2021), புறநானுற்றில் இறப்புச் சடங்குகள், அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ்.

7.சுப்பிரமணியன், க, நா. (2005). தமிழர் பண்பாட்டு வரலாறு. சென்னை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.

8.Radhakrishnan, S. (1923/1927). Indian Philosophy (Vol. 1–2). OUP

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

இ.குகநாதன்

முதுதத்துவமாணி ஆய்வாளர்,

ஆசிரியர் SLTS 2-II,  
மட்டக்களப்பு,
இலங்கை


இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »