Saturday, April 4, 2026
Home Blog Page 39

இரட்டைக் காப்பியங்களில் சமூக நிறுவனங்களும் சமூக மதிப்புகளும்

iniyavaikatral.in

குடும்பம்

            தொல்பழஞ் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாக இருந்து பின்னர் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது சமூகவியலார் கருத்து. சிலப்பதிகாரத்தில் தாய்வழிச் சமூக எச்சங்களைக் காணமுடிகிறது. மங்கல வாழ்த்துப் பாடலில் தலைமைப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இளங்கோவடிகள்.

            “போகநீன் புகழ்மன்னும் புகார் நகரதுதன்னில்

            மாக வாணிகர் வண்கை மாநாய்க்கன் குலக்கொம்பர்             (சிலம்பு.1:22,23)

                என முதலில் கண்ணகியை அறிமுகப்படுத்துகின்றார். இதற்கு உரை கூறும் அடியார்க்கு நல்லார் “சுவர்க்கம் பவணமென்னும் இவற்றிற்குள்ள புகழும் போகமும் நிலை பெற்ற அப்புகார் என்னும் நகரின்கண் மழைப்போல் வழங்கும் கையையுடைய மாநாய்க்கனுடைய குலத்தில் தோன்றிய கொம்பும் கொடியும் போல்வாள்” என்பார். எனவே இவள் கொழு கொம்பில் படர வந்த கொடி அல்லள் கொம்பும் கொடியும் இவளே என்பது இதன் பொருள். கொலைக்களக் காதையில் கோப்பெரும் தேவியைக் குறிப்பிடுமிடத்தும் ‘குலமுதல் தேவி’ என்றே குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. இருப்பினும் இவை வெறும் எச்சங்களாகவே எஞ்சி நிற்கின்றன.

            சிலம்பு மேகலை ஆகிய இருகாப்பியங்களில் இடம்பெறும் கண்ணகி, ஆதிரை ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒரே நிலையினவாகக் காட்சி அளிக்கின்றன. திருமணமாகி யாண்டு சிலவே கழிந்த நிலையில் மாதவிபால் சென்ற கோவலனை எண்ணி அவன் வரவுக்குக் காத்திருந்த கண்ணகி நிலையை,

            அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய

            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

            மங்கல அணியிற் பிரிதணி மகிழாள்

            கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பக்

            பவள வாணுதல் திலகம் இழப்ப

            மையிடுங் கூந்தல் நெய்யணி மறப்பக்

            கையறு நெஞ்சத்துக் கண்ணகியன்றியும் (சிலம்பு 4:47-57) என்று கூறுவார் என்று பாடுகின்றார். மங்கல அணியைத் தவிர பிறவற்றை எல்லாம் கண்ணகி இழப்ப தவள வாள் நகையை மட்டும் கோவலன் இழப்ப ஊதுலை குருகின் உயிர்த்து ஒடுங்கினள் என்கின்றார். சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி குலம் தரும் வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தகும் என்று கோவலன் தன் மீதே கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.

            ஆதிரையை

            ‘ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று

            வான்தரு கற்பின் மனையுறை மகளிரின்

            தான் தனி ஓங்கிய தகைமைய ளன்றோ

            ஆதிரை நல்லாள்”                                                                         (மணி. 16:76-79)

என்று அறிமுகப்படுத்துகின்றார். ஆதிரையின் கணவன் சாதுவனை,

            ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

            சாதுவன் என்போன் தகவிலன் ஆகி

            அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

            கணிகை ஒருத்தி கைதூண் நல்க

            வட்டினும் சூதினும் வரன் பொருள் வழங்கி

என்று குறிப்பிடுகின்றார்.

            தன் செல்வத்தையெல்லாம் மாதவிக்கு ஈந்தவன் கோவலன் பரத்தையர் தொடர்பு மட்டும் அல்லாது வட்டினும் சூதினும் வான்பொருள் இழந்தவன் சாதுவன். இத்தகு கணவன்மாரையும் தெய்வங்களாகக் கருதி வாழும் குடும்ப அமைப்பைத்தான் சிலம்பும் மேகலையும் காட்டுகின்றன.

திருமணம்

            களவும் கற்பும் பழந்தமிழரின் மணமுறைகளாகக் காணப்பட்டன. “கற்பாவது நல்வாழ்வு என்றும் களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் கொள்க” என்பர். “கற்பெனப்படுவது களவின் வழிந்தே” என்கிறது இறையனார் களவியல் உரை (ஐ.15) எனவே களவும் கற்பும் பழந்தமிழரின் இல்லறாவாழ்வின் இரு முக்கிய கூறுகள் என்பது புலனாகும் இதைதான் தொல்காப்பியம்

            “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

            கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

            கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது (தொல்.கற்பு.140) என்றும்

            கொடுப்போர் இன்றியும் கரண முண்டே

            புணர்ந்துடன் போகிய காளையான”            (தொல்.பொருள்.கற்பு.141) என்றும் கூறுவர்.

      தலைவன் தலைவியின் களவு கற்பாக மாற இருவழிகள் வழக்கில் இருந்தன. ஒன்று கொடுப்பக் கொள்வது – அதாவது தலைவியின் பெற்றோர் தம் மகளைத் தலைவனுக்குக் கொடுக்கக் கொள்வது. இரண்டாவது கொடுப்போர் இன்றி உடன்போக்கை மேற்கொண்டு கொள்வது.

வ.சுப.மாணிக்கனார், பெற்றோர் கூட்டுவிக்கும் இயல்பு மணம் வழக்கில் இருந்தது எனக் கூறுகின்றார். அதற்குச் சான்றாக.

“கழியக் காதலராயினும் சான்றோர்

பழியொடு வரும் இன்பம் வெஃகார்

வரையின் எவனோ வான்தோய் வெற்ப

கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின்

மணப்பருங் காமம் புணர்ந்தனம யறியார்

தொன்றியல் மரபின் மன்றல் அயர (அகம்.112)

என்னும் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

            ‘தொன்றியல் மரபின் மன்றல்’ என இயல்பு மணத்தைப் பெற்றோர் கூட்டுவிக்கும் மணத்தைத் தோழி சுட்டுதலை நினைக.

            மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலில் நிகழ்த்தியக் காமக் களவினைத் தலைவியின் பெற்றோர் அறியாத நிலையில் வைத்தே மரபு மன்றல் செய்து விடவேண்டும் என்று தோழி ஆசைப்படுகிறாள். காதலனுக்குள் எவ்வளவு அன்பிருந்தாலும் நீடித்தக் களவின்பம் பழிதருவது என்று தலைவனை இடித்துரைக்கிறாள். களவுக்கு அஞ்சுகின்றனர் என்பதுதானே இதன் உட்கிடை. (தமிழ்க்காதல்-ப.110) என்பார்.

            இங்கு நீடித்த களவின்பம் பழி தருவது என்று அவரே குறிப்பிட்டுள்ளமையும் எண்ணத்தக்கது. எனவே அவன் கூறுவதுபோல களவு பழி தருவது அன்று நீடித்த களவே பழிதருவது எனத் தலைவி கூறுவது இங்கு எண்ணத்தக்கது. எனவே இறையனார் களவியல் உரை கூறுவதுபோல் “கற்பெனப்படுவது களவின் வழித்தே” (இறையனார் களவியல். 15) என்பதும் களவொழுக்கமின்றி தனிக் கற்புமுறை முன்பு வழங்கியதில்லை. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. பு.12) என்னும் கருத்துமே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

            பழந்தமிழர் மரபு திருவள்ளுவர் தொடங்கி பின்வந்த கம்பர் வரை தொடருகின்றது. சுயம்வரத் திருமணத்தில் அதுவும் போட்டியை மையமாகக் கொண்ட சுயம்வரத்தில் களவுக்கான வாய்ப்பே இல்லை என்றாலும் இப்பழுந்தமிழர் மரபைப் புகுத்தி கம்பர் காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

            ஆனால் பெற்றோர் நிச்சயித்த மணத்தை அதாவது களவற்ற மணத்தை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்துகின்றார்.

            அவரை

            இருபெரு குரவரு மொருபெரு நாளான்

            மணவணி காண மகிழ்ந்தனர் என்றும்                   

(மங்கல வாழ்த்துப் பாடல். 40-43)

            சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

            மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித்

            தீவலஞ் செய்வது காண்பார் ணோன்பென்னை”

                                                                        (மங்கல வாழ்த்து.51-3) என்று கூறுகின்றார்.

            இதற்கு உ.வே.சா. அவர்கள் “மதியம் சகடணைந்த நாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்குகாட்ட இவன் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவந்திற் செய்த தவம் யாதுகாண் ணெண்பாராயும்.” என்று விளக்கம் தருவார் அடியார்க்கு நல்வார். (ப.41)

            இரண்டுவிதமான மரபு மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. ஒன்று இங்கு தமிழருக்கு உரியதாக இருந்த பொதுவான மணச் சடங்குகள் சாதிவாரியான சடங்குகளாக மாற்றம் பெற்றமையை அறியமுடிகிறது. கிடைநிலை திணைமுறை வாழ்க்கை செங்குத்து அமைப்பிலான சாதிய அமைப்பு வாழ்க்கை முறையாக மாற்றம் பெற்றதையும் இது காட்டுகிறது.

இனக்குழு / சாதி

            சங்க இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை முறைக்கு மாறான சாதிய அமைப்பு முறை பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டாலும் இனக்குழு வாழ்க்கைமுறையே வழக்கில் இருந்துள்ளது. சங்க காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள் என்றாலும் அவருடைய பண்பாடு பழக்கவழக்கங்கள் பழந்தமிழருடைய வாழ்க்கை முறையில் எந்த அளவிலும் பாதிக்கவில்லை என்ற சீனிவாச ஐயங்காருடைய கூற்றும் இதனை அரண் செய்யும்.

            சங்கம் மருவிய காலத்திலேதான் ஆரிய பண்பாட்டுக்கூறுகள் குறிப்பாக, சாதிய அமைப்பு முறைகள் கால்கொள்ளத் தொடங்கின. எனவேதான் கிடையின் நிலை சமுதாய அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையும் செங்குத்துநிலை சமுதாய அமைப்பான சாதிய அமைப்புமுறையும் இரட்டைக் காப்பியங்களில் பதிவாகியுள்ளன.

            மரக்குடி தாயத்து வழிவளம் சுரவாது

            அறக்கொடிபோல் அவிந்து அடங்கினர் எயினர்

மரக்குடி மக்கள் தம் கடமையான ஆநிரை கவர்தலை மறந்து அறக்குடி மக்களாக மாறிவிட்டனர்.

            பொற்றொடிமாதர் பிறந்த குடிப்பிறந்த

            விற்றொழில் வேடர்குலனே குலனும்

            பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த

            எய்வில் எயினர் குலனே குலனும்

            ஆய்தொடி நல்வாள் பிறந்த குடிப்பிறந்த

            வெய்வில் எயினர் குலனே குலனும்                           (சிலம்பு 12:5,6,7)

            இந்தப் பாடல் வரிகளைப் பாடும்போது இளங்கோவடிகள் எயினர் குலத்தவராகவே மாறி பெருமிதம் கொள்வதைக் காணமுடிகிறது. ஒரு பார்வையாளனாக இருந்து எழுதாமல் பங்காளனாகவே மாறிவிடுகிறார்.

            ஆய்ச்சியர் பாடுகின்ற ஆய்ச்சியர் குரவையிலும்

            மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய

            சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

            திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே           (சிலம்பு 17:35)

என்று பாடுகின்றார்.

            மனம், மெய், மொழி ஆகியவற்றால் வழிபடுவதை முக்கரணவழிபாடு என்பர். இளங்கோவடிகள் மாற்றான முக்கரண வழிபாட்டுமுறையை அறிமுகப்படுத்துகின்றார். இப்பாடல் வரிகள் ஊணோடும் உயிரோடும் கலந்து இளங்கோவடிகளைத் திருமால் பக்தனாகவே காட்டுகின்றன. குன்றக்குரவையிலும் இதே நிலை காணப்படுகிறது.

            சிலப்பதிகாரம் சாதிய அமைப்பு முறையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது. மங்கல வாழ்த்துப்பாடல் இயற்கை வாழ்த்தாகக் காணப்படினும் உண்மையில் அது அரச வாழ்த்தே எனலாம். சோழனின் அருள்மிகுந்த வெண்கொற்றக்குடை போல் தண்ணொளி பரப்பியதால் திங்களையும் சோழனின் ஆணைச்சக்கரம்போல் மேருவை வலம் வருதலால் ஞாயிற்றையும் அவன் அருள்போல் மேநின்று சொரிதலால் மாமழையையும் போற்றுவோம் என்கிறார். மூவேந்தருடைய தலைநகரங்கள் ஆட்சிக் சிறப்பு போன்றவையும் சிறப்பாகவே பேசப்படுகின்றன.

            அந்தணர் சிறப்பு அவர்களது அறுந்தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவையும் சிறப்பித்தது பேசப்படுகின்றன. சேரனிடம் பரிசு பெற்று வந்த பராசகன் தக்கிணன் என்ற சிறுவன் வேதம் ஓதியதைக் கேட்டு பரிசு பொருள்கள் தந்து அவன் வழிச் சென்றான். காவலர் அப்பொருள் கண்டு படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என சிறைக்கோட்டத்தே இட்டனர். வார்த்திகன் மனைவி விட்ட கண்ணீரைக் கண்டு ஐயைக் கோயில் கதவும் அடைத்தது அறிந்த அரசன் என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும் கடனென திருத்தங்கால் வயலூரை இறையிலி நிலமாகக் தந்து கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்கு திருமார்பினை அளித்து அவளது தணியா வேட்கையைச் சிறிது தணித்தார் என்பார்.

            ஆக ஒரு காவலன் செய்த குற்றத்திற்கு அரசனை மார்பு நிலத்தில் படும்படி வணங்கவைத்து அரசரும் வணங்கும் உயர்ந்தோர் அந்தணர் என்பதைக் காட்டவே இக்கதையைப் படைத்துள்ளார் எனலாம்.

            நால்வகை வருணத்து நலங்கே மொழியுவும் (சிலம்பு: 182) என்னும் தொடருக்கு உரைகூறும் அடியார்க்கு நல்லார் நால்வகை வருணத்து ஒளியாவன அந்தணன் – வெள்ளை, அரசன் – சிவப்பு, வசியன் – பச்சை, சூத்திரன் அந்தமில் கருமை என்பர். கொலைக்களக் காதையில் உணவு உண்ணும் கோவலனை

            அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்

            உரியவல்லாம் ஒருமுறை கழித்து (சிலம்பு:16:44,45)

என்று பாடுகின்றார். இவற்றை நோக்கும்போது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வரிசை முறை சிலப்பதிகார காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

            எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனக்குழு அமைப்பு முறைக்கு மாற்றான சாதி அமைப்பு முறையும் கிடைநிலை அமைப்புக்கு மாறான செங்குத்து அமைப்பு முறையும் உறுதிபட்டுவிட்டதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

கற்பு

            சமூக மதிப்புகளில் கற்புக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூகத்தின் சீரான இயக்கத்திற்குக் கற்பு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தும் தொல்காப்பியர் பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து கற்பை முதல் தகுதியாகக் குறிப்பிடுகின்றார். உயிரினும் சிறந்தது நாண். நாணினும் சிறந்தது கற்பு என்று கூறுகின்றார். இந்நூற்பாவுக்கு ‘கற்பித்தபடி ஒழுகுவது’ அதாவது கணவன் கற்பித்தபடி ஒழுகுவது என்று உரை வகுக்கின்றனர். வள்ளுவர் உள்ளத் திண்மையைக் கற்பு என்று கூறுகின்றார். திண்மை என்பதற்கு ‘உள்ள உறுதி’ எனப் பொருள் கொண்டால் மன உறுதியே கற்பு எனலாம். பிற்கால ஒளவையார் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்கிறார். இதற்கு உரை எழுதும் ஈ.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோர் சொன்ன சொல்லில் இருந்து வழுவாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு ஆகும் என்று கூறியுள்ளனர். ஆக கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளப்பட்டமை புலனாகிறது.

            பிற ஆடவர் நெஞ்சில் இடம்பெறாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு என்பது சாத்தனார் தரும் விளக்கம்.

            மண்டிணி ஞாலத்து மழைவளம் தரூஉம்

            பெண்டீராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்                                                (மணிமேகலை 22:45, 46)

ஒரு பெண்ணை பார்க்கும் ஆண் அவளைத் தன் உள்ளத்தில் இருத்திவிட்டால் அந்தப் பெண்ணின் கற்புக்கு பங்கம் நேர்ந்து விட்டதாகவே கொள்வர்.

            ககந்தன் என்னும் மன்னனுடைய மகன் காவிரியாடி விட்டு வந்த மாருதி என்ற பெண்ணைப் பார்த்து ‘நீ வா’ என்று அழைத்து விட்டான். எனவே முத்தீப் பேணும் முறையை யான் இழந்தேன் என்று சதுக்க பூதத்திடம் முறையிட்டனள்.

மேலும்,

            “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

            பெய்யென பெய்யும் பெருமழை யென்றவப்

            பொய்யில் புலவன் பொருளுறை கேளாய்                          (மணிமேகலை 22: 59-61)

என்ற வள்ளுவர் வாக்கை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். கொண்டவனையே முதல் தெய்வமாய் வழிபடும் பெண் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றாள் என்ற வள்ளுவரின் கருத்து, சாத்தனாருக்கும் உடன்பாடே எனலாம். எனவேதான் அத்தகு பெண்ணை ‘வான்தரும் கற்பினள்’ என்று கூறுகின்றார்.

            துறவியான கவுந்தியடிகள் கற்பில் சிறந்த கண்ணகியைத் தன் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளுகின்றார்.

            கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது

            பொற்டிடை தெய்வம் யாம் கண்டிலமால்                           (சிலம்பு.2:143,144)

என்று கூறி மேலும் இத்தகு பெண்டிர் உள்ள நாட்டில் வானம் பொய்யாது, வளம் குன்றாது வேந்தர் கொற்றம் சிதையாது என்று கூறுகின்றார். ஊரலருரைத்த காதையில் மணிமேகலை இந்திரவிழாவில் ஆடவேண்டும் என்றதற்கு

            கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்

            மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்

            கண்ணீராடிய கதிரிள வனமுலை

            திண்ணிதிற் திருகித் தீயில் பொத்திக்

            காவலன் பேரூர் களையெரி யூட்டிய

            மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை                              (மணி 2: 50-55)

என்கிறாள்.

            எனவே மணிமேகலையைத் தன்னுடைய மகள் என்பதைக் காட்டிலும் மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றாள்.

அறம்

            அறம் என்ற சொல் நுட்பமான பொருளுடையது. இச்சொல் காலத்துக்கும் இடத்திற்கும் ஏற்பப் பல்வேறு பொருள்களைத் தந்து செறிவுடையச் சொல்லாகச் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது. அறம் இறைவனின் ஆணை என்றும் அறத்திற்கு மாறான, செயல்களைச் செய்தல் இறைவனையே மீறுதல் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ‘தக்கன சொல்லி நிற்றல்’ அறம் என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆக மனத்தையும் வாக்கையும் செயலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் எனலாம்.

            அறத்துக்கு, சாத்தனார் புது விளக்கத்தைத் தருகின்றார். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி’

            பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும்

            சிறந்த தம் கல்வியும் மாயும்                                                                (நாலடி.285)

என்கிறது நாலடியார். இப்பசிப்பிணியால் ஏற்படும் இழிவை சாத்தனார்

            குடிப்பிறப்பு அழிக்கம் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்வி பெரும்புணை விடூஉம்

            நாண் அணி களையும் மாண் எழில் நீக்கும்

            பூண்மூலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

            பசிப்பிணி என்னும் பாவி                                                                       (மணி.11:76-80)

உயர்குடி பிற்பை அழக்கும், கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணமாகிய ஆபரணத்தை நீக்கும். மனை மக்களோடு புறங்கடை நிறுத்தும். எனவே உலகில் பல துன்பங்களுக்கு நிலைகளனாயுள்ள இப்பசிப்பிணியைப் போக்குதலே தலையாய அறம் என்று கூறுகின்றார் சாத்தனார்.

            யாருக்கு அறம் செய்ய வேண்டும் என்பதையும் சாத்தனார் வரையறுக்கின்றார்.

            ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வார்

            ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

            மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

            மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

            உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே                                 (மணி.11:93-96)

        என்கிறார் கைமாறு எதிர்ப்பார்த்துச் செய்யப்படும் அறம் ஒரு வியாபாரம். எனவேதான் அத்தகையோரை அறவிலை வணிகன் என்று கூறுகின்றார்.

            மறுமை கருதிச் செய்யப்படும் அறமும்கூட ஒருவகையில் வாணிகம் தான் இம்மைச் செய்தது மறுகைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் என்று பாடுகின்றார் முடமோசியார். (புறம்.134)

            எனவே எவ்வகையிலும் கைமாறு செய்ய இயலாத நிலையில் உள்ள காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுதல் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக இசைந்து உடன் ஊட்டிட வேண்டும் (மணி 13:111-113) என்கிறார்.

            ஒருவனுடைய மறுமை இம்மை ஆகிய இரண்டையும் கெடுப்பதான இப்பசிப்பிணியைப் போக்குவதுதான் உலகின் மிகச் சிறந்த அறம். இதை அருளறம், அன்புகொள்ளறம், தாங்கா நல்லறம், பெருமைசால் நல்லறம், மலையாவறம், மிக்கவறம் முன்னவன் போதியின் நல்லறம் என்றெல்லாம் வழங்கி அறத்தின் இன்றியமையாமையைக் காட்டுகின்றார்.

            “அறம் எனப்பட்டது யாதென கேட்பின்

            மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்

            மேன்மக்களுக்குரியதாக இலக்கியம் வலம் வந்த காலத்திலேயே சாமான்ய மக்களைப் பற்றி சிந்தித்த முதல் சமுதாயச் சிந்தனையாளர் சாத்தனார். ஒரு நாட்டின் குடிமகன்கள் அனைவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசு வழங்கவேண்டும் என்று கூறுகின்றார். இதை அவர் செயலாக்கம் செய்த விதம் வேண்டுமானால் குறைபாடுடையதாக இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டம் ஃ சிந்தனை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தக் கூடியதே. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

முடிவுரை

            தாய்வழிச் சமூக அமைப்பு சிதைவுற்று, தந்தை வழிச் சமூக அமைப்பு தோற்றம் கொண்டமையையும் தாய்வழிக் குடும்ப அமைப்பு தந்தைவழிக் குடும்ப அமைப்பாக மாற்றம் எய்தியமையையும் சிலம்பும் மேகலையும் தெளிவுபடுத்துகின்றன.

            கணவன் பரத்தையர் ஒழுக்கமுடையவனாக வட்டு, சூது போன்ற தீய பழக்கவழக்கங்களால் வான், பொருள் இழந்தவனாக இருப்பினும் மனைவி மட்டும் ஒழுக்கமுடையவளாகவும் கணவன் நலத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்று இரு நூல்களும் வலியுறுத்துகின்றன.

            சமத்துவமாகக் கிடைநிலையில் இருந்த இனக்குழு சமுதாய அமைப்பு சிதைந்து உயர்வு தாழ்வு கொண்ட செங்குத்து அமைப்பான சாதிய சமுதாய அமைப்பு உருப்பெற்றுவிட்டமையை இரட்டைக் காப்பியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்,

தமிழ்த்துறை,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம்.

குதிரை குட்டியின் வழக்கு – கிராமத்துச் சிறுகதை

iniyavaikatral.in

The case of the pony

ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

வழியிலே ஒரு இட்லிக் கடையைக் கண்டான் அவன். சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது. பிடித்திருந்த குதிரையைப் பக்கத்தில் உள்ள  எண்ணெய் ஆட்டுகின்ற செக்கில் கட்டினான். கையோடு கொண்டு வந்திருந்த கொல்லை கரைத்து குதிரைக்கு வைத்தான்.

சுடச்சுட இட்லியை புட்டு வாயிலே போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கைகழுவினான். செக்கில் வந்து குதிரையைப் பார்த்த போது குதிரை குட்டி போட்டிருந்தது. குதிரையையும் குட்டியையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அப்போது அங்கு வந்த செக்கன்,

“நீ குதிரையை மட்டும்தான் செக்கில் கட்டிவிட்டுச் சென்றாய். குட்டியை நீ கொண்டு வரவே இல்லை. இந்தக் குட்டியை என்னுடைய எண்ணெய் செக்குதான் குட்டியாகப் போட்டது. அதனால் உனக்கு நான் குட்டியைத் தரமாட்டேன்” என்று சொன்னான்.

குதிரைக்காரன் எவ்வளவு பேசியும் குட்டியைச் செக்கனிடமிருந்து வாங்க முடியவில்லை. வழக்கு ஊர் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஊர்க்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் கேட்பதாக தெரிவில்லை. வழக்கும் முடிந்தபாடில்லை.

சரியென்று வழக்கானது ஏழூர்க்காரர்கள் சேர்ந்து செய்யும் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஏழூர் பஞ்சாயத்துக்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் பிடிவாதமாய் குதிரைக்குட்டி எனக்குத்தான் சொந்தம் என்று வாதாடினான்.

இது என்னாடா வம்பா போச்சு! வழக்கு இழுத்துக்கொண்டே போகுதேன்னு ஊர்மக்கள் நினைச்சாங்க. சரின்னு ஏழூர் பஞ்சாயத்துக்காரங்களும் வடக்குல  இருக்குற குள்ள நரிக்கிட்ட இந்த வழக்க கொண்டு போனாங்க.

வழக்குக்குண்டான  செய்தியை குள்ள நரிக்கிட்ட சொன்னாங்க. குள்ளநரியும் கேட்டுச்சு..

“சரி… வர்ற ஞாயிற்றுக்கிழமைதான் அனைவருக்கும் லீவு. அதனால  அன்னிக்கே பஞ்சாயத்த வச்சிப்புடுவோம். ஆறு மணிக்கெல்லாம் ஏழூர் மக்களையும் பஞ்சாயத்து ஆட்களையும் வரச்சொல்லிடுங்க. நானு ஏழு மணிக்காட்டம் வந்திடுறேன்” ன்னு நரி சொல்லிடுச்சி.

அன்னிக்கு ஊர்மக்கள் எல்லோரும் காலையிலேயே ஆறு மணிக்கெல்லாம் பஞ்சாயத்துல கூடிட்டாங்க. நரி வருவதற்கு இந்தா இப்ப வரும். இந்தா அப்ப வருமுன்னு பாத்துப் பாத்துக் கண்ணு பூத்துப் போச்சு.

சாயுங்காலம் ஆறு மணிக்கு வந்துச்சாம் குள்ளநரி.  எல்லோரும் நரிக்கிட்ட போயி,

“என்ன நரியண்ணே… காலையில ஆறு மணிக்குப் பஞ்சாயத்துன்னா… நீங்க சாயுங்காலம் ஆறு மணிக்கு வாரீங்களே… ” அப்படின்னாங்களாம்.

“பஞ்சாயத்துக்கு புறப்பட்டுக்கிட்டு இருந்தேனா…. அந்த நேரம் பார்த்து பிரம்மன்கிட்ட இருந்து ஒரு அழைப்பு… என்னான்னா… தெக்க வங்காளவிரிகுடா கடலு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருந்திச்சி. நெருப்ப அணைக்க வரகு வக்கீல மேல போட்டு மூடி அணைச்சிட்டு வருவதற்று நேரமாயிடுச்சி” அப்படின்னுதாம்.

வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாத செக்கன்,

“அதெப்படி வங்காளவிரிகுடா கடலு பத்திகிட்டு எரியும்” அப்படின்னானாம்.

            குள்ளநரி, செக்கானை பக்கத்தில் கூப்பிட்டதாம், செக்கானின்  கன்னத்தில் ஓங்கி ரெண்டு அறைவிட்டு, “ஏண்டா செக்கு குதிரைக்குட்டிப் போடும்போது – வங்காளவிரிகுடா கடலு நெருப்புல பத்திகாதாடா” என்று கேட்டதாம்.

            செக்கன் தலைதெரிக்க அவ்விடத்தை விட்டு ஓடினானாம். வழிப்போக்கனும் குதிரையையும் குட்டியை அழைத்துக்கொண்டுச் சென்றானாம்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சமூகவியல் நோக்கில் ஆசாரக்கோவை

iniyavaikatral.in

ஆசிரியர் : பெருவாயின் முள்ளியார்

காலம் : கி.பி. 7 –கி.பி. 8

பாடல் :100 (தற்சிறப்புப்பாயிரத்துடன் : 101)

பாவகை: பல்வேறு வெண்பா வகைகள்

      பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்தும் பழம்பாடல்கள் அடிப்படையில், ‘ஆசாரக்கோவை’ என்பது, பதினெட்டு நூல்களுள் பதினான்காம் நூலாகச் சுட்டப்படுகிறது. ‘ஆசாரக்கோவை’ என்பதற்கு நன்னடத்தைகளின் தொகுப்பு எனப்பொருள் கூறலாம்.

            ‘ஆசாரம்’ என்பது வடசொல். இதற்குத் தமிழில் ஒழுக்கம், நெறி, முறை, வழி எனப் பல சொற்கள் உண்டு. இச்சொற்கள் கூறும் பொருளைத்தான் வடமொழி ‘ஆசாரம்’ என வழங்குகிறது. ‘ஆசாரம்’ என்றால் பின்பற்றக்கூடியவை என்பதும் பொருளாகும்.

            ‘கோவை’ என்பது தமிழ்ச்சொல். ‘கோவை’ என்றால் தொகுப்பு என்பது பொருளாகும். பின்பற்றக்கூடிய ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களைத் தொகுத்தளிப்பது என்பது, ஆசாரக்கோவை என்பதன் பொருளாகும். ஆசாரம், கோவை என்ற இந்த இரண்டு சொற்களும் சேர்ந்து, இது ‘ஆசாரக்கோவை’ என்று ஆயிற்று.

            ஆசாரம் – ஒழுக்கம்; நடத்தை. கோவை – தொகுப்பு. எனவே, பொதுவகையான ஒழுக்கங்களோடு, அன்றாட வாழ்வில் மானுடர் கடைப்பிடிக்க வேண்டியதாகப் பெருவாயின் முள்ளியார் கருதும் ஒழுக்கங்களை அல்லது பின்பற்றுமாறு அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் கோவைப்படுத்திக் கூறுவதால், இப்பாடல் தொகுப்புக்கு ‘ஆசாரக்கோவை’ என்பது பெயராயிற்று. இப்பெயர், ஆசாரங்களின் கோவை, ஆசாரங்களைத் தொகுத்தமைத்த கோவை என்றும் பொருள்படும்.

            கொள்ளத்தக்க ஆசாரங்களையும் – தள்ளத்தக்க ஆசாரங்களையும் தெளிவுபடுத்தி, இவற்றைச் செய் என்றும், இவற்றைச் செய்யாதே என்றும் வரையறுத்துக் கூறும் நூல்கள் வடமொழியில் ‘ஸ்மிருதிகள்’ எனக் கூறப்படுகின்றன. இந்த ஸ்மிருதிகளுடன் ஒப்பவைத்துக் கருதத்தக்கதாக ‘ஆசாரக்கோவை’ திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியராகக் கூறப்படும் முள்ளியாரின் முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாயின் என்பது இவரது தந்தையின் பெயராகவோ,கயத்தூர் என்ற ஊரின் பகுதியாகவோ இருக்கலாம். இவர் புதுக் கோட்டைநாட்டுக் குளத்தூர் வட்டத்திலுள்ள பெருவாயில் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் முடிவுரைத்துள்ளார். எனவே இவர், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என வழங்கப்படுகிறார்.

              இவர் தமிழுடன் வடமொழியிலும் புலமையுள்ளவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. எனினும், இவர் இயற்றிய ‘ஆசாரக்கோவை’ யிலுள்ள பாடல்களில் மிகுதியான வடமொழிச் சொற்கலப்பைக் காண முடியவில்லை. இரண்டடி முதல் ஐந்தடி வரையிலான பலவகையான வெண்பாக்கள் இந்நூலில் காணப்படுகின்றன.

           குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா முதலிய பலவகையான வெண்பாக்களும் இந்நூலினுள் இடம்பெற்றுள்ளன. பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் போன்ற நூல்களின் உரைகளில் இந்நூற் செய்யுள்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்றுள்ளது.

     ஆசாரக்கோவையில் இடம்பெற்றுள்ள செய்யுள்களில், ‘வைதீக’ சமயத்தின் பிரித்தாளும் கருத்துகள் உட்கலந்துள்ளதாகத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். மேல்கீழ் பேதங்களை இந்நூல் கண்டிக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். “எனினும், இந்த ஆசாரக்கோவையிலே சாதிக்கொரு நீதியென்று பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு. சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை…. (பதினென் கீழ்க்கணக்கும் பழந்தமிழர் வாழ்வும், பக். 115 – 116) எனவே, ஆசாரக்கோவையை ஒரு ‘பொதுச்சுகாதார நூல்’ என்றே சொல்லிவிடலாம்” என்பார் சாமி. சிதம்பரனார்.

            புறத்தூய்மையுடன் அகத்தூய்மையையும் பேசுவது, இந்நூலுக்குள்ள தனிப் பெருமையாகும். இந்நூலில் பேசப்படும் பெரும்பான்மையான ஆசாரங்கள், வடமொழியிலுள்ள சுக்ர ஸ்மிருதியிலிந்து தொகுத்தவையாய் இருக்கலாம் எனத் தம் ஆசாரக்கோவைப் பதிப்பின் முன்னுரையில் தி. செல்வக் கேசவராய முதலியார் குறிப்பிட்டுள்ளார். (ஆசாரக்கோவை, மூன்றாம் பதிப்பு . 1916, கலாரத்னாகரம் வெளியீடு, சென்னை, பக்கம். 6) எனினும்  பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளை,

“ஆர்எயில் மூன்றும் அழித்தான் அடிஏத்தி

ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான், ஆசாரம்

யாரும் அறிய, அறனாய மற்றவற்றை

ஆசாரக்கோவை எனத் தொகுத்தான், தீராத்

திருவாயிலாய திறல் வண்கயத்தூர்

பெருவாயின் முள்ளி என்பான்.”

         என்ற தற்சிறப்புப்பாயிரத்தைக் கூர்ந்தாராய்ந்து, ‘ஆரிடத்து’ என ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், ‘தொகுத்தான்’ என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக்கோவைப் பொருள்கள் தொகுக்கப்பெற்றனவென்று கொள்ளுதலே தக்கது” என விளக்கமளிக்கிறார். மேலும் அவர், சுக்கிர ஸ்மிருதி எனப்படும் உஸனஸ் ஸம்ஹிதை, ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், விசிஷ்ட தர்ம  சூத்திரம், மனு தர்ம சாஸ்திரம், ஸங்க ஸ்மிருதி, லகுஹாரித ஸ்மிருதி, லகுசாதாதபம், லகு அத்திரி ஸ்மிருதி  ஆகியவை எல்லாம் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன என்றுமுரைக்கிறார்.

     இவ்வாறு பல்வேறு ஸ்மிருதிகளிலிருந்து கருத்துகளைக் கடன் வாங்கியுள்ள ஆசாரக்கோவை, அந்த ஸ்மிருதிகளின் பொதுவான காலமான கி.பி. 600க்குப் பிற்பட்டவை என்றும், இக்கருத்துகள் தமிழ்நாட்டில் பரவி ஆசாரக்கோவைக்குள் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவில் வந்திருக்கலாம் என்றும் யூகிக்கிறார். (இராதா செல்லப்பன், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி முன்னுரைகள், கவிதை அமுதம் வெளியீடு, திருச்சி, முதல் பதிப்பு. 2010, ப. 248 – 251)

           இந்நூலின் தற்சிறப்புப்பாயிரத்தில், “ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி”  எனக் கூறப்படுவது கொண்டு, இந்நூலாசிரியரைச் ‘சைவர்’ எனப் பலர் கருதுகின்றனர். மேலும், வேள்வியைப் போற்றிப் பார்ப்பனரை முன்னிறுத்துவதுடன், சமணருக்கு மறுப்பாக நீராடுதலையும் முள்ளியார்  வலியுறுத்துகிறார். நின்று உண்ணும் பழக்கமுடைய சமணருக்கு மாறாகச் சைவரின் நின்று உண்ணக்கூடாது என்ற கருத்தை இவர் முதன்மைப்படுத்துகிறார்.(பா.23) அன்றாட ஒழுகலாறுகள் பற்றிய பல வைதீகக் கருத்துகளும் இந்நூலில் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளதால், இந்நூலாசிரியரைச் ‘சைவர்’ எனத் திறனாய்வாளர் பலர் அறுதியிடுகின்றனர்.

            தெய்வத்தைத் தாம் அறியும் வழியில் வணங்குக எனக் கூறும் முள்ளியார், மாலைப்பொழுதில் தாம் வணங்கும் தெய்வத்தை நின்று தொழுதல் பழி (பா.9) என்றுமுரைக்கிறார். அதாவது, அமர்ந்திருந்து தெய்வத்தை வணங்க வேண்டும் என்கிறார். இத்தகைய நம்பிக்கைகள், வைதீகச் சைவ வழிப்பட்டவையாகலாம். இந்நூல் கூறும், ஒருவர் செல்லும்போது பின்நின்று கூப்பிடாமையும் – தவறியும் எங்குச் செல்கிறீர் எனக் கேளாமையும் (பா.58), அந்திப்பொழுது கிடவாமையும் (பா.29), வடக்குத்திசையிலும் கோணங்களிலும் தலைவைத்துப் படுக்காமையும் (பா.30), அந்திநேரத்தில் முகங்கழுவித் தெய்வம் தொழுதலும்(பா.9) சைவத் தமிழரிடம் நிலையான வாழ்வு பெற்றுள்ளதாக ஆ. வேலுப்பிள்ளை துணிகிறார். மேலும் அவர்,  “ஏனைய அறநூல்கள் பெரும்பாலும் பொதுவான ஒழுக்கங்களைக் கூறுவன. இந்நூலாசிரியர் அவற்றை மாத்திரமன்றி நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகளை அல்லது நித்திய ஒழுக்கங்களையும் கூறியுள்ளார்…. சமண பௌத்தரது அகிம்சைப் பிரச்சாரம் தமிழ் நாட்டில் பெற்ற வெற்றியை இது காட்டுகிறது…… அறத்தின் அடிப்படை உலக வாழ்க்கையைச் சிறப்பிக்க உதவ வேண்டும் என்ற கொள்கை திருக்குறளில் காணப்படுவதிலும் தெளிவாக இந்நூலில் காணப்படுகிறது” என்றுமுரைக்கிறார். (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப. 88 – 90)

         இந்நூலில் காணப்படும்,  முந்தையோர் கண்ட முறை, ஆய்ந்த அறிவின் அவர், யாவரும் கண்ட நெறி, நல்லறிவாளர் துணிவு, பேரறிவாளர் துணிவு, மிக்கவர் கண்ட நெறி, நுண்ணிய நூல் அறிவினார், அசையாத உள்ளத்தவர், நெறிப்பட்டவர், நூன்முறையாளர் துணிவு, திறங்கண்டார் (தெளியக் கற்றோர்) கண்டநெறி,  பெரியார், திறப்பட்டார் (ஒருவழிப்பட்டார்), மெய்யாய காட்சியவர் (உண்மை அறிவுடையவர்), ஐயமில் காட்சியவர் போன்ற தொடர்களின்வழி இந்நூலாசிரியர், தம் காலத்திற்கு முன் வாழ்ந்த பெருமக்களின் நல்லுரைகளை ஏற்று இவ்வொழுக்கநூலைச் செய்திருப்பதை அறியலாம். இந்நூல் சுக்ர ஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்றும், தௌமியர் பாண்டவருக்குக் கூறிய உபதேசத்தைத் தழுவியது என்றும் இந்நூற்சாரம் தொடர்பாகப் பல்வகைக் கருத்துகள் கூறப்படுகின்றன. அவை விரிவாக ஆராயத்தக்கன.

            இந்நூலில் நீராடல், ஆடை அணிதல், உணவுகொள் முறைமை, உண்ணும் திசை, வாயைத் தூய்மை செய்யும் வகை, நீர்பருகும் முறைமை, தூங்கும் முறைமை போன்றவை கொள்ளத்தக்க ஆசாரங்களாகப் பெருவாயின் முள்ளியாரால் கூறப்பட்டுள்ளன. எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்து உண்ணாமை, அந்திப்பொழுது செய்வன தவிர்வன எனத் தள்ளத்தக்க  ஆசாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

            இந்நூலை, வழிநூல் வகைகளுள் ஒன்றாகிய மொழிபெயர்ப்பு நூலுக்குச் சிறந்த சான்றாக, இலக்கண விளக்க உரையாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். அந்தணர் உயர்வு இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘கீழ்மக்கள்’‘புலை’ போன்ற தற்காலம் ஏற்காத பல சொற்றொடர்கள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் கூறும் ஆசாரங்கள் அனைத்தும் இன்றைய சனநாயகச் சமூகத்துக்கு உவப்புடையதாக இருக்க இயலாது. குறிப்பாக, ஆசாரக்கோவையில் வருணதருமம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பார் கருத்தைப் புறக்கணித்து விடுவதற்கில்லை. (காசி மாரியப்பன், ஆசாரக்கோவையும் வைதீகமும், பக்.1 – 15)( நவீன நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு, தேசியக் கருத்தரங்கு 27.12.2007 – 28.12.2007, நாமக்கல், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வெளியீடு,)

            19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பாட்டும் தொகையுமான சங்க நூல்களையும், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் பழுத்த புலமையாளர்கள் சிலர் பதிப்பித்து வெளியிட்டனர். ஆறுமுக நாவலர், சி.வை தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்ற தமிழ்ப் பதிப்பு முன்னோடிகள் இப்பணிகளைச் சிறப்பாகச் செய்தனர். ஆனால் பிறகு வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இவ்வாறு செம்மையான பதிப்பு முறைமையுடன் பதிப்பிக்கப்படவில்லை. எனவே, இன்றளவிலும்கூட திருக்குறளும் நாலடியாரும் தவிரப் பிற கீழ்க்கணக்கு நூல்களுக்கான மிகத் திருத்தமான ஆய்வுப்பதிப்புகளுக்கான ஒரு சமூகத்தேவை இருப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது. (இரா.வெங்கடேசன், இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள்: ஆசாரக்கோவை பதிப்பும் உரையும் நூல் உருவாக்கப் பின்புலமும், ப. 148) (சு.துரை- கா.கோ.வேங்கடராமன் (தொ.ஆ.), (அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆய்வரங்கம் : 03.02.2010 – 05.02.2010, நீதி இலக்கியங்களும் பதிப்புகளும் வெளியீடுகளும்)

     இதுகாறும் வெளிவந்துள்ள ஆசாரக்கோவை பதிப்புகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்வது. திருமணம் செல்வக் கேசவராய முதலியாரின் பதிப்பாகும். ஆசாரககோவைக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதியதாகக் கூறப்படுவது உண்மையன்று எனக் கூறிப் பழைய பொழிப்புரையை நச்சினார்க்கினியரின் உரையாகக் கருதுவது தவறென்று நிலைநாட்டிய பெருமை தி.செ.கே.முதலியாருக்கே உரியதாகும்.

        “இந்நூலுக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அது பொழிப்புரை. அவ்வுரை ஒருவாறு கண்ணழிவு செய்து உள்ளபடியே பதிப்பித்திருக்கிறது. ஒவ்வொரு பாவிலும் உரைத்துள்ள ஆசாரங்கள் கண்ணழிவின்கீழே எளிய தமிழில் எழுதிச் சேர்ந்திருக்கின்றன. பற்பல ஆசாரங்களின் சம்பிரதாயங்களை இக்காலத்தறிவது கூடாமையால், கருத்துரையில் பிழைபட்ட இடங்களை ஆன்றோர் பிழைத்துக்கோடல் வேண்டும். அடியேனைப் பழிப்பதில் பயனன்று. பாக்களையேனும் இழவாமல் பாதுகாத்தல் வேண்டும் என்பதொன்றுமே இந்நூலினை அச்சிட்ட நோக்கம.; ஒரோவிடத்துப் பாடபேதமும் சில குறிப்புகளும்  காட்டியிருக்கின்றன. பழையவுரைக்கு மாறான புதுச்சரக்கு ஒன்றும் கலந்திராது. இந்நூல் முதன்முதல் கி.பி. 1857இல் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் இலட்சுமிவிலாச அச்சுக்கூடத்தில் பிரசுரமாயிற்று. அதை ஒட்டி 1893 இல் பி.டி.வி. செங்கல்வராய நாயகருடைய ஆர்பனேஜ்  அச்சுக்கூடத்தில் ஒரு பதிப்பும், அப்பால் உரிய திருத்தங்களோடு 1898இல் மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில் ஒரு பதிப்பும் பிரசுரமாயின. சில காலத்துக்குமுன் பிரதிகள் செலவாகிவிட்டமையால் இப்பதிப்பு வெளிவருகின்றது” எனத் தம் மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரையில் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் குறிப்பிட்டுள்ளார். (தி.செ.கே.மு., ஆசாரக்கோவை, மூ.ப: 1916, பக். 6 – 7) இப்பதிப்பை அடிப்படை ஆதாரமாக ஏற்று, சமூகவியல் நோக்கில் ஆசாரக்கோவையைப் பற்றி ஆராய முனைவது, இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            ‘ஆசாரம்’ அதாவது ‘ஒழுக்கம்’ என்பது யாது? இக்கேள்விக்கு விடை தருவதாகத்தான் ஆசாரக்கோவையின் முதல்பாடல் அமைகிறது. ஆசாரத்திற்குரிய விதையாக அதாவது ஆசார வித்தாக, எட்டுக்குணங்கள் கூறப்படுகின்றன.

“நன்றி அறிதல்; பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்இனத்தாரோடு நாட்டல் இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து”(பா. 1)

1.      நன்றியறிதல் – பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் இருத்தல்.

2.  பொறைஉடைமை – அறியாமை காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.

3. இன்சொல் – யாரிடமும் கடுஞ்சொல் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்.

4.  இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை – எந்த உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்.

5.  கல்வி  -சிறந்த கல்வியைப் பயன்பாட்டு நோக்கிலான வாழ்வியல் கல்வியையும் சேர்த்துக் கற்றல்.

6.    ஒப்புரவு ஆற்ற அறிதல் – உலக நடையை அறிந்து உலகத்தோடு ஒட்டி வாழ அறிதல்

7. அறிவுடைமை  – எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைத் தானே சிந்தித்துச் சுயமாக அறிந்துகொள்ளும் அறிவுடைமை.

8.   நல்இனத்தாரோடு நட்டல் நல்லொழுக்கமும் நட்புமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து வாழ்தல்.

            இவை எட்டும் சாதி, மதம், இனம், நாடு, மொழி, பால் என வேறுபாடுகள் பலவற்றையும் கடந்தநிலையில் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசாரங்களாகும். எனவேதான்,இவ்வெட்டையும் ‘ஆசாரவித்து’ என்கிறார் பெருவாயின் முள்ளியார். இவ்வெட்டையும் பெறுவது என்பது எளிதன்று. ஆழமான முயற்சியாலும், முறையான பயிற்சியாலும், இயல்பான வளர்ச்சியாலுமே இது சாத்தியமாகும். எனினும், இவ்வெட்டுக் குணங்களைப் பெற முனைதலும், பெற்றுச் சிறந்தலுமே வாழ்வின் இலக்காதல் வேண்டும். இங்கொரு கேள்வி எழுகிறது. இந்த ஆசாரங்களை வளர்த்துக்கொள்வதால் மனிதன் அடையும் நன்மைகள் யாவை?

“பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு

நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை

இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்

ஒழுக்கம் பிழையாதவர்”(பா. 2)

1.          நல்ல குடிப்பிறப்பு

2.          நெடிய வாழ்நாள்

3.          செல்வம்

4.          அழகு

5.          நிலத்துக்கு உரிமை அல்லது சொந்த வீட்டுக்கான உரிமை

6.          சொல்லின் மேன்மை அல்லது வாக்குச்சுத்தம்

7.          கல்வி

8.          நோயின்மை

       இந்த எட்டையும், ‘ஆசாரம்’ பிழையாதவர் அடைவர் என்கிறது ஆசாரக் கோவை. நல்லவேளையாக ‘வீடுபேற்றையும்’ பயன்களுள் ஒன்றாக முள்ளியார் குறிக்கவில்லை! இந்த உலகப் பயன்கள்மீதுதான் அவருக்குக் கண் என்பது, சமூகவியல் நோக்கில் மிகவும் சாதகமான அம்சமாகும். இவ்வெட்டையும் யார்தான் வேண்டாம் என்பார்கள்? ஆனால், இங்கு ‘ஆசாரம்’ என்பது யாது? என்பதுதான் சிக்கல். குறிப்பிட்ட சில சாதியினரின் மேலாண்மைக்காகக் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கங்களை எல்லாருக்கும் பொதுவான ஒழுக்கங்களாக ஏற்க இயலுமா என்பதுதான் கேள்வி.

          பொதுவாக அறநூல்கள் என்பவை, பற்றுக்கோடில்லாமல் தறிகெட்டுத் திரியும் மனிதர்களைப் பண்படுத்தவும், ‘பொதுஅமைதி’ பேணும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ‘சமூகம்’ என்ற இலட்சிய அமைப்பிற்கு ஓரளவிற்கேனும் ஏற்றவாறு அவர்களை உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன. ‘அறம்’ இல்லாமல் மனிதன் வாழ இயலாது. எனினும், அந்த ‘அறம்’ விதிகளையும் விலக்குகளையும் கணக்கிலெடுத்தே கட்டமைக்கப்பட வேண்டும்.

            சுத்தமாக இருப்பது என்பது, அனைவருக்கும் நன்மை தருவதுதான். ஆனால், சுத்தத்தின் பெயரைச் சொல்லி, இன்னொருவரை ‘நீ அசுத்தம்’ எனச் சுயநலவாதி ஒருவர் தாழ்மைப்படுத்தும்போது, அங்கு அதிகாரம் ‘பிறர் வாழ்வுரிமையில்’ குறுக்கிடும் ‘அத்துமீறல்’ நிகழ்கிறது. இதை மனிதநேயம் கொண்டோர் ஏற்பதற்கில்லை. இத்தகைய பார்வையுடன் முழுமையாக உடன்படுகிறவராக ஆசாரக்கோவையின் ஆசிரியரைக் கூற இயலவில்லை.

            “எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீத்தேவர்

            உச்சந் தலையோடு இவையென்ப யாவரும்

            திட்பத்தால் தீண்டாப் பொருள்”(பா. 5)

            “எச்சிலார் நோக்கார் புலை திங்கள் ஞாயிறு நாய்

            தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென

            நன்கறிவார் நாளும் விரைந்து”(பா.6)

            “நிரல்படச் செல்லார் நிழல்மிதித்து நில்லார்”(பா. 83)

      என்றெல்லாம் ‘தீண்டாப்பொருள்கள்’ பற்றி முள்ளியார் பேசுவன, இன்றைய சனநாயக காலத்துக்குச் சிறிதும் பொருந்தாத பிற்போக்கு கருத்துகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

            சுத்தம் – அசுத்தம் என்ற இருமை, அவரவர் வாழ்நிலை மற்றும் தொழில் சூழல்களுக்குக் கட்டுப்பட்டதாகும். தம் வசதிக்கேற்ப மானுடர் இவற்றைப் பேணுவதே இயல்பாகும். ஒரு கூட்டத்தார் வழக்கத்தை இம்மாதிரி செயல்பாடுகளில் மற்றவர்மீது திணிப்பது விரும்பத்தக்கதன்று. எப்பொழுதெல்லாம் மனிதன் நீராட வேண்டும் என்பது பற்றி, ஆசாரக்கோவையின் பத்தாம் பாடல் அறிவுறுத்துகிறது.

“தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலோடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயுறாது ஆடுக நீர்”(பா. 10)

1.          தன்னால் வழிபடப்படும் கடவுளை வணங்கும்போதும்

2.          தீய கனவைக் கண்டபோதும்

3.          தூய்மையின்மை உண்டானவிடத்தும்

4.          உண்ட உணவை வாந்தி எடுத்தபோதும்

5.          மயிர் களைந்தபோதும்

6.          உண்ணும் முன்பும்

7.          நெடும்போது தூங்கிய பிறகும்

8.          புணர்ந்த பிறகும்

9.          கீழ்மக்களின் உடலைத் தொட்டபோதும் (கீழ்மக்கள் மெய்யுறல்)

10.        மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும்

     எனப் பத்து இடங்களை ஆசாரக்கோவை பட்டியலிடுகிறது. இந்த ஆசாரங்களுள் சில மேல்சாதி மக்களுக்குரியனவாகும். பிறரிடமிருத்து தம்மை வேறுபடுத்திச் சமூக மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்கள், இந்த ஆசாரங்களைப் புனைந்து வழக்கப்படுத்தினர். முடிவெட்டி வந்தபிறகு நீராடுவது, உண்ணும் முன்னும், தூங்கியெழுந்த பின்னும், புணர்ச்சிக்குப் பிறகும், மலம் சிறுநீர் கழித்த பிறகும் நீராடுவது என்பதெல்லாம் பழங்கால நவீன வசதிகளற்ற காலத்தில் வேண்டுமானால் ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாம். இந்நவீனகாலத்தில் இவையெல்லாம், தம்மைப் பிறரினும் நாகரீகமானவராகக் காட்ட விரும்புவோரின் ‘உயர்வு தாழ்வு பாராட்டும்’ மனத்தின் புனைவு வெளிப்பாடுகளேயாகும். இவற்றைப் பொதுச் சுகாதார நெறிகளாகக் கருதித் தம்மளவில் ஒருவர் பேணுவதில் குற்றமில்லை. ஆனால் பெருவழக்காக அது அவ்வாறில்லை. காலங்காலமாகத் தொடரும் சாதிசார் வழக்கமாகவே தமிழ்ச் சூழலில் பேணப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மையாகும். மேலும், ஆசாரக்கோவையார், ‘கீழ்மக்களைத் தொட்டவிடத்து நீராட வேண்டும்’ எனக் கூறுவதில் வெளிப்படுவது, அவரது ‘சாதி மேலாண்மை’ பேணும் வைதீகச்சைவம்சார் பேதமனமே என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.

“நீர்தொடார் நோக்கார் புலை”(பா. 13)

“இருதேவர் பார்ப்பார் இடைபோகார்”( 31)

“படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்”(பா. 36)

“அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல்”(பா.44)

“ஈன்றாள் மகள் தம் உடன்பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும்

தாங்கற்கு அரிதாகலான்” (பா.65)

“தம்மேனி நோக்கார்”( பா.77)

“மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டீர்க்கு உவப்பன”( பா.82)

         என்றெல்லாம் ஆசாரக்கோவையார் கூறும் பல கருத்துகளை, இன்று சிறிதும் ஏற்க இயலாது. இப்பாடல்களில், பார்ப்பனரின் மேலாண்மை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், ‘கீழ்மக்கள்’ என்ற சொல்லாட்சி பரவலாக இடம்பெற்றுள்ளதும் கடுமையான விமர்சனத்துக்குரியதாகும். நீரைத் தம்மீது தெளித்துக்கொள்ளாமல் புலையரை நோக்கக்கூடாது (பா.13) என்றும், காய்ச்சலாய் இருக்கும்போதுக்கூடத் ‘தலை முழுகாமல்’ கழுத்துவரை மட்டும் குளிக்கக்கூடாது என்றும், இரண்டு பார்ப்பனருக்கு நடுவில் நடந்து செல்லக்கூடாது (பா.31)  என்றும், படையே வந்தாலும் தம்மாடை பிறர்மீது படுமாறு ஓடக்கூடாது (பா.36) என்றும், அந்தணரிடம் நாள் கேட்டு நல்ல செயல் செய்க என்றும், புலையரிடம் நாள் கேட்டுச் செய்யற்க (பா.92) என்றும் இந்நூல் கூறுவனவற்றை இன்றைய காலமும் மனிதரும் சிறிதும் ஏற்கவியலாது. இவை கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளாகும்.

             அறியாதவர்முன் பெண் நிற்கக்கூடாது (பா.44)  என்றும், தாய் மகள் உடன்பிறந்தவள் எனினும் அவர்களுடன் தனியே ஆண் தங்கக்கூடாது(பா.65)  என்றும், தம் மேனியழகைக் (கண்ணாடி முதலியவற்றில்) குலப்பெண்கள் விரும்பிப் பார்க்கக்கூடாது (பா.77)  என்றும், தம் கணவரது உடல் வடிவத்தையன்றிப் பிற ஆண்களின் வடிவழகை மனைவியர் வியந்து பார்க்கக்கூடாது (பா.77) என்றும், தலைமுடியைக் கோதுதலும் கைந்நொடித்தலும் குலமாதருக்கு ஆகாது (பா.77) என்றும் பொதுமகளிர் வாழும் இடத்துக்கு அருகில் இல்லறத்தார் வீடெடுத்தால் அவர்தம் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும் (பா.82) என்றும பெருவாயின் முள்ளியார் கூறுவன யாவும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கக் கருத்துகளே! இவை இக்காலத்துக்குச் சிறிதும் ஒவ்வாத பெண்விரோதக் கருத்துகளாகும். இது ஆசாரக்கோவையின் ஒரு முகம் எனினும், அதற்கு மற்றுமொரு முகமும் உள்ளது. அனைவருக்கும் பொதுவான அறக்கருத்துகள் சிலவற்றைக் கூறுவதற்கும், ஆசாரக்கோவை முயன்றுள்ளது.

            துன்பத்துள் துன்புற்று ஆனால் அதைப் பொறுத்து வாழவேண்டும் என்றும், இன்பத்துள் இன்புற்றுப் பிறருக்கு இன்பமளிக்குமாறு வாழவேண்டும் என்றும், அன்பற்றவர் இல்லம் புகாமல் வாழவேண்டும் (பா.79) என்றும் ஆசாரக்கோவை கூறுவன இன்றும் பின்பற்றத்தக்கனவே. பெற்றோரைத் தொழுது எழுந்தபிறகே செயல்களைச் செய்ய வேண்டும் (பா.4) என்றும், அரசன் ஆசிரியன் தாய் தந்தை முன்பிறந்த தமையன் இவர்களைத் தொழுது வணங்கிவிட்டு விடியலில் எழவேண்டும்(பா.16) என்றும்; முள்ளியார் கூறுவனவும் ஏற்கத்தக்கனவே. எனினும் இவை, நிலவுடைமைச் சமூகத்தில், ‘குடும்ப அமைப்பு’ நிலைபெறுவதற்காகப் பேணப்பட்ட அறங்களே எனலாம். பௌர்ணமி நாளில், பல்துலக்கக்கூட மரத்திலிருந்து குச்சியை ஒடிக்கக்கூடாது என்றும், அந்நாளில் மரம் வெட்டுவதும் கூடாது (பா.17) என்றும் ‘ஆசாரக்கோவை’ அறிவுறுத்துகிறது. இதிலுள்ள சமயநோக்கை நீக்கிவிட்டுச் சுற்றுச்சூழல் பார்வையில் காணும்போது, மரம் வெட்டக்கூடாது என்ற குரலை  இன்றும் ஏற்கலாம்.

            கால் கழுவிய பின்னர் நீர் உலர்வதற்கு முன்னர் உண்க என்றும், காலைக் கழுவிய ஈரம் உலர்வதற்கு முன்பு படுக்கைமீது ஏறாது விடுக (பா.19) என்றும் கூறப்படும் கருத்துகள் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கால் கழுவி நீர் உலர்வதற்குமுன் உண்டால் ஆயுள் நீளும் என்றும், கால் கழுவிய ஈரம் காயாமல் படுக்கைமீது ஏறினால் ஆயுள் குறையும் என்றும் மனுநீதி கூறுவதுடன், இதனை ஒப்பிடலாம். கிழக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணவேண்டும் (பா.20) என்றும், விருந்தினர்- மூத்தோர்- பசு- பறவை- குழந்தைகளுக்குத் தராமல் சாப்பிடக் கூடாது (பா.21) என்றும், வாசற்படியிலிருந்து உண்ணக்கூடாது (பா.22)  என்றும், கிடந்தும் நின்றும் வீடன்றி வெளியிடத்திருந்தும் கட்டில்மீதிருந்தும் உண்ணுதல் தகாது (பா.23) என்றும்  உண்ணும் முறைமையைப் பற்றி ஆசாரக்கோவை அறிவுறுத்துகிறது.

            “கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்

            சிறந்து மிக உண்ணார் கட்டில்மேல் உண்ணார்

            இறந்தொன்றும் தின்னற்க நின்று”(பா.23)

         என்று, நின்றுண்பதைக் கடுமையாக ஆசாரக்கோவை கண்டிப்பதற்குச் சமணர் நின்றுண்ணும் பழக்கத்தினராக இருந்ததே காரணமாகலாம். மேலும், “அந்திப்பொழுது கிடவார் நடவாரே உண்ணார்” (பா.29) என்று ஆசாரக்கோவை கூறுவதும், விளக்கு வைப்பதற்குமுன் உண்டுவிடும் வழக்கமுள்ள சமணருக்கு மறுப்பாகத்தான் எனக் கருதலாம்.  ஆனால், வயதில் பெரியவர் பந்தியிலிருந்து எழுவதற்குமுன் வயதில் சிறியவர் பந்தியைவிட்டு எழக்கூடாது என்றும், பெரியவர்க்குமுன் சிறியவர் உண்ணுதல் மரபன்று (பா.24) என்றும் ஆசாரக்கோவை கூறுவன இன்றும் தமிழரிடம் வழக்கத்தில் உள்ளன. உண்ணும்போது உடம்பை இரண்டு கையாலும் சொரியக்கூடாது (பா.28) என்ற கூற்றும் ஏற்கத்தக்கதே. எனினும், இன்றைய மருத்துவர்களும் ஏற்கும்வகையில், ஆசாரக்கோவையின் 25ஆம் பாடலில்,

            “கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப

            மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

            துய்க்க முறைவகையால் ஊண்”(பா.25)

         எனக் கூறப்பட்டுள்ளது. இனிப்பானவற்றை முதலிலும், பிற சுவையுள்ளவற்றை இடையிலும், கசப்பானவற்றை இறுதியிலும் உண்க என்ற ஆசாரக்கோவையின் அறிவுரை இன்றும் பின்பற்றத்தக்கதே. இப்படியெல்லாம் உணவுண்ணும் முறைமை பற்றி ஆசாரக்கோவை விரிவாகப் பேசியுள்ளபோதிலும், கள்ளுண்ணாமையையும் புலால்மறுப்பையும் பெரிதாக வலியுறுத்தி ஏதும் கூறவில்லை என்பதும் ஆராயத்தக்கதாகும். சமண பௌத்த நெறிமுறைகளைக் கடுமையாக எதிர்த்த பிற்கால வைதீகம், சமண பொளத்தரின் உயிர்க்கொல்லாமை, புலால்மறுப்பு, கள்ளுண்ணாமைக் கொள்கைகளைத் தான் ஏற்றுக்கொண்டதோடு, சமணம் பௌத்தம் போல் அவற்றைப் பொதுமக்களுக்கு வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. பிராமணருக்கும் பிற உயர்சாதியினருக்கும் உரியதாக அவற்றை வரையறுத்துக் கொண்டு, காலப்போக்கில் சமூக வாழ்வில் அவற்றின் மேன்மையை மெல்லமெல்ல உறுதிப்படுத்திக்கொள்ளும் தந்திரத்தைத் திட்டமிட்டு வைதீகம் நிறைவேற்றியதாகக் கருதலாம்.

            “பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார்

            பகல் பெய்யார் தீயினுள் நீர்” (பா.33)

        பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கியும் மலசலம் கழிக்கக்கூடாது; பகலில் நெருப்பில் நீர் ஊற்றி அதை அவிக்கக்கூடாது என்றெல்லாம் ஆசாரக்கோவை கூறுவனவற்றை இன்று யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தீப்பெட்டி, கேஸ்அடுப்பு, லைட்டர், மின்சாரம் இல்லாதகாலத்தில் ‘பகல்நெருப்பை’ அணைப்பது பாவமாய்க் கருதப்பட்டிருப்பது இயல்புதானே! நீர்நிலையில் நின்றபடி எச்சில் உமிழ்ந்து வாய் அலம்புதலை ஆசாரக்கோவை கண்டிக்கிறது. (பா.35) இது நீர்மாசு பற்றிய அச்சமாய் இருக்கலாம். ஒருவர் அமர்ந்துள்ள இடத்திற்கும் விளக்கிற்கும் இடையே யாரும் போகக்கூடாது (பா.36) என்றும், கடமையை அறிந்த அறிஞர் சுவர்மேல் எச்சில் உமிழார் (பா.36)  என்றும் தடைசெய்கிறது ஆசாரக்கோவை. இவற்றை இன்றும் ஏற்கலாம்.

            இன்றைக்குச் சாலைகளிலும், அலுவலக இடங்களிலும், பொதுப் பூங்காக்களிலும், பிற இடங்களிலும் எச்சில் துப்பியும் சிறுநீர் கழித்தும் இயற்கைச்சூழலை மானுடர் மாசுபடுத்தி விடுவதைக் காண்கிறோம். இதைக் கண்டிக்கும் பாடலொன்றும் ஆசாரக்கோவையில் காணப்படுகிறது.

            “புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்

            தேவகுலம் நிழல் ஆநிலை வெண்பலி என்று

            ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்

            சோரார் உணர்வு உடையார்”(பா.32)

1.          புல்வெளி

2.          விளைநிலம்

3.          பசுஞ்சாணம்

4.          சுடுகாடு

5.          பொதுவழி

6.          நீர்நிலைகள்

7.          கோவில்

8.          மரநிழல்

9.          பசு மேய்க்கும் இடம்

10.        சாம்பல்

     என்ற இந்தப்பத்து இடங்களிலும் உமிழ்நீர், சிறுநீர், மலம் கழித்தலை அறிவுடையார் செய்யார் என்ற ஆசாரக்கோவையின் குரலுக்குச் சுற்றுச்சூழல் நோக்கில் இன்று பெரும்மதிப்புண்டு.

“தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டு ஊன்கொள்ளார்”(பா. 39)

       எனத் ‘தமக்கென்று நல்லவர் சமைக்கமாட்டார்’ என்றும், ‘தெய்வப் பொருட்டன்றி தம் காரணத்தால் ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைக் கொள்ளலாகாது’   என்றும் ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது. முதலில் கூறியது நிலவுடைமைச் சமூக மனோபாவமாகலாம். அடுத்துக் கூறியது, புலால்மறுப்புப் பற்றிய ஆசாரக்கோவையின் நடைமுறைத் தந்திரத்திற்குச் சான்றாகும். மனுநீதியிலும் இத்தகைய கருத்தே காணப்படுகிறது. (தமிழ்நாடன், மநு தர்மம், திருத்திய விரிவான பதிப்பு, 1993, ப.95, குயில்பண்ணை வெளியீடு, சேலம்.)

            பஞ்சமாபாதகங்கள் (கள், களவு, சூது, கொலை, பிறர்மனை விழைதல்) புரிவோர் நிரயத்துச் செல்வழி அதாவது நரகத்திற்கான பாதைக்குரியோர் (பா.37)  எனக் கூறும் ஆசாரக்கோவை, புண்ணியப்பொருள்கள் கிடைத்தால் புண்ணியம் ஆய தலையோடு உறுப்புறுத்த (பா.41) என அவற்றைத் தலையிலும் கண்ணிலும் ஒற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.             இங்குப் புண்ணியம் என்ற பிற்காலச் சொல் வழக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

            “தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்

             ஈராறு நாளும் இகவற்க என்பதே

             பேரறிவாளர் துணிவு” (பா.42)

            மனைவிக்கு மாதப்பூப்பு நிகழுமிடத்து மூன்றுநாளுக்கு அவள் முகத்தைக் கணவன் காணக்கூடாது., மூன்றுநாள் கழித்துத் தலைமூழ்கியப்பின் 12நாளுக்குக் கணவன் அவளைப் பிரியக்கூடாது என்ற மேற்பாடலின் கருத்து குழந்தைப்பேற்றுடன் தொடர்புடையதாகும். இது தொல்காப்பியத்திலும் காணப்படுகிறது.

            “பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

             நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

             பரத்தையிற் பிரிந்த காலையான” (தொல்.பொருள்.சூ.187)

            வடமொழி ஸ்மிருதி மரபை மட்டுமின்றித் தமிழ் மரபிற்கேற்பச் சில கருத்துகளையும் ஆசாரக்கோவை எடுத்தாண்டுள்ளதற்கு, இது சான்றாகும். உச்சிப்பொழுது, நள்ளிரவு, மாலை, காலை, திருவாதிரை, திருவோணம், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, பிறந்தநாள் ஆகியவற்றில் கலவி கூடாது என்கிறது ஆசாரக்கோவை (பா.43). இதனை இன்று யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. கல்லியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி என்ற ஐவகை நாளும் இகழாது அறமும் விருந்தும் செய்க (பா.48) என அன்னதானத்தை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. இங்குக் கல்லியாணம் என்ற பிற்காலச் சொல்வழக்கு கையாளப்பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும். உடை, நடை, சொற்சோர்வு (சொற்செலவு), வைதல் ஆகிய நான்கும் நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் குடிமைக்கும் தக்கவாறு அமையவேண்டும் எனப் படிநிலைச் சமூக அமைப்பை ஆசாரக்கோவை பரிந்துரைக்கிறது. (பா. 49)

            மின்ஒளி, வீழ்மீன், வேசையர்கோலம், பகற்கிழவோன் முன்ஒளி மற்றும் பின்ஒளி ஆகிய ஐந்து ஒளிகளையும் உடல்நலம் பேணுவோர் நோக்கக்கூடாது என்கிறார் முள்ளியார்.(பா.51) சூரியகிரகணத்தைக்கூட அதற்குரிய கண்ணாடி அணிந்து பார்க்கலாம் என்பதுதான் இன்றைய விஞ்ஞானம். சூரியனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்ற குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. சூரியனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண்கொண்டு பார்க்காதே என்பார் பாரதியார்! (சீனி. விசுவநாதன் (ப.ஆ.), பாரதியார் கவிதைகள், மு.ப.1991, ப.461, சென்னை)

             கள்குடித்துக் களித்தாடுகின்ற கள்ளாட்டுக் கண்ணும்  (பா. 55) நில்லாதே எனக் கூறினாலும், வெளிப்படையாகக் கள்ளுண்ணாதே எனத் திருக்குறள் போல ஆசாரக்கோவை வலியுறுத்துவதில்லை. வறுமை பெருகிய காலத்தும் குடியொழுக்கம் நீங்கிய தொல்வரவில் தீர்ந்த தொழில் (பா.56) செய்யக்கூடாது என்ற முள்ளியாரின் அறிவுரையில் ‘சாதித்தொழில் பேணும் வைதீக மனம்’ ஒளிந்துள்ளது எனலாம். பகல் வளரார் நோயின்மை வேண்டுபவர் (பா.57) என்ற அறிவுரை, இன்றும் பொருத்தப்பாடு உடையதே. உடல் கெடுவதற்கும், தொப்பை வளர்வதற்கும் பகல் தூக்கமே காரணம் என்பதை இன்றைய மருத்துவரும் ஏற்கின்றனர். ஆன்று அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு செல்லுமிடத்து யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்(பா.60) என்ற கருத்துதான், பிறகு உயர்சாதியராகிய பெரியோர்முன் செருப்பணிந்தும் குடைபிடித்தும் செல்லக்கூடாது என மாறியிருக்கவேண்டுமெனலாம்.

            நான்மறையாளரைப் பெற்றோரைப் போல் பாவனை செய்தொழுக வேண்டும். (பா.61) என்ற அறிவுரையில், பிராமணரைப் பொதுமக்கள் பேணும் முறை பற்றிக் கட்டளையிடுகிறது ஆசாரக்கோவை. எனினும், சமூகத்தில் தம்முடன் வாழும் பிறருடன் பழகிக் கலக்கவேண்டிய முறைமை பற்றிப் பிராமணருக்கு ஏதும் சொல்லாமல் மௌனம் காப்பதிலிருந்து, முள்ளியாரின் மேட்டுக்குடி மனநிலையைத் தெளியலாம். இவ்வாறு அதிகாரத்துக்கும் ஆளுவோருக்கும் ஏற்ற நெறி முறைகளையே பின்பற்றத்தக்க ஆசாரங்களாக  முள்ளியார் பாடியுள்ளார் என்பதற்குப் பின்வரும் பாடலும் சான்றாகும்.

            “முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்

            தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்

            இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று

            காக்கை வெள் என்னும் எனின்”(பா.69)

            மன்னன் செய்வனவற்றை வெறுக்காதே, மன்னனுடன் கலகம் செய்யாதே, அவன் முகத்துக்கு எதிரில் நிற்காதே, அவன் தனியே இருக்கும்போது உன் வேலையைப் பற்றிப் பேசாதே, நன்மை தரும் சொற்களைக் கேட்காமல் கூறாதே, காக்கை வெண்ணிறமுடையது என்று மன்னன் கூறினால் மறுக்காமல் அதையும் ஏற்றுக்கொள் என்கிறார் பெருவாயின் முள்ளியார். மேலும் அவர், பாம்பு- அரசன்- நெருப்பு- சிங்கம் என்ற நான்கும் இளைய எளிய பயின்றன என்று நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தவிர்க்கமுடியாது என்றுமுரைக்கிறார். (பா.84) இதற்கும் மேற்சென்று அறம், மணம், தொழில், வீடு ஆகிய நான்கையும் அரசனைக் காட்டிலும் பெரியதாகச் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சேர்த்த செல்வமெல்லாம் (அரசனால்) அழியும் என்றும் எச்சரிக்கிறார்.(பா.85) இதுதான் ஆசாரக்கோவையின் கருத்துக்களம். அதிகாரவர்க்கத்தின் கருத்தியலுடன் சிறிதும் மோதாமல் அதை அப்படியே பொறுத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவதற்கான தத்துவத்தளத்தைக்  கட்டமைப்பது. இதைத்தான் முள்ளியார் செய்துள்ளார். இதனிடையிடையே பொதுச் சுகாதாரமும் நாகரீகமும் பேணும் வகையில், சிற்சில நற்கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

            “நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்

            இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்

            அசையாது நிற்கும் பழி”(பா.73)

          கொட்டாவி விடுதலையும், காறி உமிழ்தலையும், தும்முதலையும் பெரியார் கூடிய  சபைமுன் (இங்குச் சபை என்பது மன்னர் அவைதான்) செய்யாதே என்பதிலுள்ள ‘தர்ம சங்கடத்தைப்’ புரிந்துகொள்ளலாம். ஆனால்,‘மன்னன்முன் சிரிக்காதே’ ‘மன்னன்முன் கொட்டாவி விடாதே’ என்பதில் அதிகாரத்துக்குப் பணியும் அடிமை மனப்போக்கல்லவா ஒளிந்துள்ளது!

      மனைவியைச் சினந்துகொண்டு நெடுநேரம் வீட்டில் இருக்காதே எனக் கணவன் – மனைவி சண்டை முற்றாமலிருக்க ஆசாரக்கோவை கூறும் “இல்லத்து உறுமி நெடிதும் இராஅர்”(பா.80) என்ற ‘ஆண்நோக்கு’ யோசனையைச் சிறிது ரசிக்கலாம். பன்றியாய் உறுமும்  இந்த ‘ஆண்புத்தி’, இன்றளவிலும் தமிழ்ச் சமூகத்தில் நீடித்துக்கொண்டுதானே இருக்கிறது! எனினும், “புலையரையும் நன்கறிவார் கூறார் முறை ”(பா.80) என்ற முள்ளியாரின் தொடரைச் சிறிதும் ரசிப்பதற்கில்லை. இன்றளவிலும் சாதி பாராமல் மாமன் மச்சான் என்று முறைவைத்து விளிக்கும் பழக்கம் தமிழரிடம் இருந்துவருகிறது என்பதை மறைத்துவிடமுடியாது.

            எறும்பின் சுறுசுறுப்புடனும், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனுடனும், கூடிவாழும் காக்கையின் பெருங்குணத்துடனும் மானுடர் வாழப் பழகவேண்டும் என ஆசாரக்கோவை கூறுவதை ஏற்பதில் தடையில்லை. (பா.96) பல்லுயிர் பேணும் பண்பாடாகவும், இதனைக் காணலாம். எனினும், ஆசிரியருக்குத் தக்கணை கொடுக்குமாறு ஆசாரக்கோவை வலியுறுத்துவதில் (பா.3) ஒளிந்திருப்பது, ஆசிரியர் நலனேயன்றி மாணவர் நலனன்று. அக்காலத்தில் ஆசிரியர்களாகப் பெரும்பாலும் அந்தணர்களே இருந்தனர் என்பதால், இது அவர் நலம் பேணும் கருத்தே எனலாம். தக்கணை கொடுக்காதவிடத்தும், கொடுக்கவியலாத மாணவனுக்கும் கல்வி கற்பிக்கும் கடன் ஆசிரியருக்கு உண்டு எனக் கூறியிருந்தால்தானே ஆசாரக்கோவையைப் பொதுநீதி பேசும் நூலென்று கொள்ளமுடியும்! எனினும், விதிகளை மட்டுமல்லாமல், தவிர்க்கவியலாத சூழல்களில் சிலருக்கு விலக்குகளையும் ஆசாரக்கோவை அனுமதிக்கிறது.

1.          அறியாத தேசத்தான்

2.          வறியோன்

3.          மூத்தோன்

4.          சிறுவன்

5.          பிணம்

6.          பயந்தாங்கொள்ளி

7.          பெருந்தீனிக்காரன்

8.          அரசனிடம் பணி செய்பவன்

9.          மணமகன்

         ஆகிய ஒன்பதுபேருக்கும் ஆசாரக்கட்டுப்பாடு இல்லை என்கிறார் முள்ளியார். எனவே, இறுகிய ஆசாரவிதி நூலாக ஆசாரக்கோவை அமையாமல், நெகிழ்வான மற்றும் நீக்குப்போக்கான பொதுச்சுகாதார நூலாக அமைகிறதெனலாம். எனினும், ஆசாரக்கோவையின் குறைபாடுகளைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளவும் இயலும்.

     இரண்டாம் பாலினமாகப் பெண்களைக் கருதுதல், அரசர்- அந்தணர் முதலிய அதிகார வர்க்கத்தாரைப் போற்றுதல், சாதி அமைப்பைப் பாதுகாத்தல், அடித்தட்டு மக்களை மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்தல், நிலவுடைமைச் சமூகப் பழக்க வழக்கங்களை ஆதரித்தல், பல்வேறுபட்ட வாழ்க்கை முறைமைகளையும் செம்மைப்படுத்த அல்லது தரப்படுத்த அல்லது ஒன்றாக்க முனைதல், பொதுமைப்படுத்த இயலாதவற்றைப் புறக்கணித்தல், பிறப்பு முதல் இறப்பு வரையிலான மானுட வாழ்வை இனி எப்போதும் மாற்ற முடியாத வகையில் ஒழுங்குபடுத்தத் திட்டமிடல், ஒழுங்கைப் பேணுவோருக்குச் சொர்க்கத்தையும் ஒழுங்கை மீறுவோருக்கு நரகத்தையும் பரிந்துரைத்தல், உலக வாழ்வைப் பெரிய சிக்கல்கள் இல்லாமல் மன இசைவுடன் கடப்பதற்குரிய நடைமுறை ஒழுகலாறுகளை வலியுறுத்தல் என ‘உலகியல்’ நீதிநூலாக ஆசாரக்கோவையைத் துணியலாம். ஒழுங்கின்றிக் கெடாமல் ஒழுங்காக வாழ்ந்து உலகியல் இன்பங்களைத் துய்க்க வேண்டுமென்ற கருத்தியலையே ஆசாரக்கோவை முதன்மைப்படுத்துகிறது. வாழ்க்கை வெறுப்பை விடவும் வாழ்க்கை விருப்பே ஆசாரக்கோவையில் மிகுந்துள்ளது. பிற அறநூல்களிலிருந்து ஆசாரக்கோவையைக் குறிப்பிடத்தக்க அளவில் இப்பண்பே வேறுபடுத்துகிறது எனலாம்.

            பொதுவாக அறநூல்கள், ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினரை நோக்கி அல்லாமல், பொதுச்சமுதாயம் முழுவதையும் நோக்கியே பேசுகின்றன. இதற்கு ஆசாரக்கோவையும் விலக்கன்று. இந்நூலினுள் துறவு, புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை, புலனடக்கம், உடல் மற்றும் செல்வ நிலையாமை, ஊழ்வினை, மறுபிறப்பு, பழம்பிறப்பு, குறிப்பிட்ட சில பெருந்தெய்வ வழிபாடுகள் ஆகியன வலியுறுத்தப்படவில்லை. மாறாக, நடைமுறை மனித வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்பாடுகளையும் கணக்கிலெடுக்கும் பொதுவான வாழ்முறை ஒன்றைச் சமய வேறுபாடின்றி ஆனால் வைதீக மேலாண்மைச் சாய்வுடன் நிலைநிறுத்தும் முயற்சியே ஆசாரக்கோவையில் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக,

            “சமணர் அமைத்த வழியில், வைதீக சமயத்தவர் சென்று அறநூல்கள் எழுதியுள்ளனர். சூழலுக்கேற்ற வாழ்வுக்கு அவர் தம்மைத் தயாராக்கிக்கொள்வதை இது காட்டுகிறது” (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப.94) என்பார் ஆ.வேலுப்பிள்ளை. இக்கருத்து பெரும்பாலும் ஏற்கத்தக்கதாகும். சமண பௌத்தரின் சிறப்பான கொள்கைகள் பலவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு, அதேநேரத்தில் சாதியமைப்பையும் வைதீகம் தக்கவைத்துக்கொண்ட வரலாறே ஆசாரக்கோவையின் சாரமாகும்.

            மனிதன் மகத்தானவன், தவறுகள் செய்ய அவன் தயங்குவதில்லை, தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறிச் செல்லவும் அவன் அறிவான். சுதந்திர வெளியில் செயல்படும் அவனது நடமாட்டம், அப்படியே விடப்பட்டால், அது அவனுக்கே ஆபத்தாகிவிடலாம் என்ற அக்கறையால்தான் அறநூல்கள் தோன்றுகின்றன. விதிகள் தோன்றும்போதே, விதிவிலக்குகளையும் மனிதன் தோற்றுவித்துவிடுகிறான். விதிகளே மீறுவதற்காகத்தான் என்ற தவறான புரிதலிலிருந்து அவனைத் திருப்பித் திருப்தியற்று அலைந்துகொண்டிருக்கும் அவன் மனத்துக்குக் குறைந்தபட்ச அமைதியை அல்லது ஆறுதலையேனும் உறுதிசெய்யும் நோக்குடன்தான் அறநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மேலும்மேலும் சாகசங்களையும் சவால்களையும் மகிழ்ச்சிப் பரவசங்களையும் வேண்டும் மனித மனங்களுக்கான தடுப்பரண்களாகச் செயலாற்றுகின்றன. தம் விதிகளுக்குள் மனிதன் முழுமையாகக் கட்டுப்பட்டுவிட மாட்டான் என்பதைப் பிறரைவிடவும் அறநூல் ஆசிரியர்கள் நன்கறிவர். எனினும், வேகத்தடைகளை எழுப்பும் முயற்சிகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இப்படித்தான் ஆசாரக்கோவை ஆசிரியரும், பலவகை ஒழுக்கவிதிகளை மனிதனுக்கு வகுத்துத்தர முனைந்துள்ளார். இவற்றுள் பல ஆளுவோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டவைதாம். ஆனால், அனைவருக்கும் பயன்படும்வகையிலான சில நல்லாறுகளையும் அவர் உருவாக்கித் தந்துள்ளமையை மறுத்துவிடுவதற்கில்லை.

            ஆசாரக்கோவையிலுள்ள கருத்துகளை நாம் ஏற்கலாம், மறுக்கலாம், எதிர்க்கலாம், பழிக்கலாம், தூற்றலாம், போற்றலாம், புறக்கணிக்கலாம். ஆசாரக்கோவை –  அனைவரும் கற்றறிய வேண்டிய நூல் – எப்படி வாழவேண்டும் என்றும், எப்படி வாழக்கூடாது என்றும் அறிவதற்காக மட்டுமன்று – குறிப்பிட்ட சில அதிகார நெறிமுறைகள் எவ்வாறு உருவாகிச் சமூக அங்கீகாரம் பெறுகின்றன என்பதுடன், அவற்றுக்கான நியாயமான எதிர்வினைகள் எவ்வாறு இயல்பாக மேற்கிளம்பிப் புதிய அறிதல்களைச் சாத்தியப்படுத்துகின்றன என்பதையும் புரிந்துகொள்வதற்காக, நாம் ஆசாரக்கோவையைப் படித்துத்தான் ஆகவேண்டும். சனநாயக காலத்துக்கு ஒவ்வாத ஒழுக்க நியதிகளை இந்நூல் தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், நம் புறவாழ்வின் பொதுநியதிகளையும்-  அகவாழ்வின் அடிப்படை ஒழுங்குகளையும் கட்டமைப்பது பற்றிய ஓர் இன்றியமையாத சமூகத்தேவையை இந்நூல் அதற்குரிய ‘வைதீகச் சைவம்சார்’ அரசியல் நோக்குடன் முன்னெடுத்துள்ளதையும் காணத்தான் வேண்டும். சுருங்கக்கூறின், ஆசாரக்கோவை – ஆசாரவாதிகளும் ஆசார மறுப்பாளர்களும் கற்றறிய வேண்டிய ஓர் இலக்கிய நூலன்று, ஆனால் தீவிர விவாதத்திற்குரிய ஓர் ஆளும்வர்க்கச் சமூகவியல் ஆவணம் எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா. இராமன்   

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,       

அரசு ஆடவர் கலைக்கல்லூரி,

நந்தனம், சென்னை – 35.

பொங்கு தமிழே உயிர்!                     

பாவகை : நேரிசை வெண்பா

பண்பாடு நாகரிகம் போற்றும் தமிழ்மொழியே!

பண்பட்ட நன்மொழி யாள்நீயே! – தண்மொழியே!

எண்ணச் செயலை முடிக்கும் அமிர்தமே!

மண்ணுலகம் போற்றுமொழி யே!        – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

நின்னில் நனைந்த மரமாய் இருந்தேனே!

என்னுள் நறுமணமாய் ஆனாயே! – தண்டமிழே!

என்னவென்று சொல்வேனோ நின்சீரை!  திக்கெட்டும்

உன்புகழை ஏற்றிடுவேன் நான்!            – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

இலக்கணம் கற்றுத் தமிழினிமை உண்டேன்

இலக்கியம் கற்றனுப வித்தேன் இளந்தமிழே!

சங்கத் தமிழின் அகப்புறத்தில்  மூழ்கினேன்

பொங்கு தமிழே உயிர்!                     – (இரு விகற்ப நேரிசை வெண்பா)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

வாய்பாடு : மா மா காய்  மா மா காய்

குறையே யில்லாத் தமிழ்மொழியே!

              குன்று தோறும் மணப்பாயே!

கறையே யில்லாத் தாய்மடியே!

              கொட்டிக் கிடக்கும் ஆழ்கடலே!

முறையாய்  பயின்று வந்தாலே

              மகிழ்ச்சிப் பெற்று வாழ்வோமே!

 நிறைவாய் மனமும் பெற்றிடவே

              பொங்கு தமிழைப் பாடுவோமே!

கவிஞர் முனைவர் க.லெனின்

ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts





நீங்கள் வாழ்வில் உயர்வது உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையில்தான் உள்ளது. ஆதலால் சமுதாயத்தில் உயர்வதற்கு உங்களின் உடல் ஒத்துழைக்கின்றதா? கவனியுங்கள். மனம், மூளை, கண்கள், கைகள், கால்கள் என்று அனைத்தும் உங்களுக்கு உழைக்க தயாராக இருக்கின்றனவா? இந்தக் கேள்விக்கு ஆம் என்பது பதில் என்றால் நிச்சயம் நீங்கள் ஹீரோதான்.

        தொடுக்கப்பட்ட வினாவிற்குப் பலரின் பதில் இல்லை என்றே வரும். வெற்றிபெற வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் அதிகாலையில் கண்கள் உறக்கத்தைத் துறக்க மறுக்கும். கால்கள் எழுந்து நடக்க தயங்கும். உடல் சோம்பலில் சுகம் கண்டு செயல்பட மறுக்கும். இவ்வாறு உங்களின் உறுப்புகளே உழைக்க மறுத்தால் மற்றவர்கள் எவ்வாறு அக்கரை கொள்வார்கள். எனவே நீங்கள் பிறந்த இச்சமுதாயத்தில் மாற்றப்பட வேண்டியவை நீக்கப்பட வேண்டியவை என்று எத்தனையோ பொதிந்துள்ளன. அந்த மாற்றங்களை இளைஞர்களே கொண்டு வரலாம். அவ்வாறு சமுதாயத்தின் மாற்றத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு மாறப்போகும் காட்சியை இப்போதே உங்கள் மனக்கண்களால் காணுங்கள். எந்த நேரமும் அதே சிந்தனையுடனே உலவுங்கள். உறங்கும் போதும் அதே காட்சிகளைக் கனவிலும் கண்டீர்களேயானால், உங்களின் இலட்சிய பாதையை நோக்க உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் செய்யும் கைமாறு

       மனதில் நற்சிந்தனைகள் தோன்றி அவை செயலாக உருவெடுக்கும் போது துணையாக யாரும் இல்லையே என்று தோன்றும். மற்றவர்களை உதவிக்கு அழைக்கலாமா என ஏங்கும். வேண்டாம் யாரும் உங்களுக்கு உதவ வரவேண்டாம். மற்றவர்களுக்காகக் காத்திருந்தால் மணித்துளிகள் விரையமாகும். உலகில் எவற்றை இழந்தாலும் பெற்று விடலாம். ஆனால் உயிர்போன்ற நேரத்தை, நாட்களை இழந்தால் மீண்டும் பெற இயலாது. செயலைச் செய்ய தொடக்கத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும். நீங்கள் தொடர்ந்து செயல்பட்டால் நீரில் எழுதப்பட்ட எழுத்து போல கஷ்டங்கள் காணாமல் மறைந்து விடும். “தயங்கினால் உடலும் சுமைதான். எழுந்து நடந்தால் இமயமும் உங்கள் காலடியில் தான்” தேங்கி கிடக்கும் தண்ணீர் நாற்றமெடுக்கும். ஓடிக்கொண்டிருக்கும் நீரே தூய்மையானது. எனவே உங்களின் சிந்தனைகளைச் சமுதாய மாற்றத்திற்காகப் பயன்படுத்துங்கள். உங்களின் சிந்தனைகள் உதாரணமாக, நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் ஏழ்மையில் இருப்பவர்களை முன்னேற ஒருவழியை ஏற்படுத்தி அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நினைக்கலாம். உமது சமுதாயத்தைப் பிச்சைக்காரர்களே இல்லாத ஒன்றாக மாற்ற வேண்டும் என எண்ணலாம். இளைஞர் தீயவழியில் செல்லாமல் நல்வழியைப் பின்பற்ற மார்கத்தைத் தேடலாம். இவ்வாறு எத்தனையோ உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்க்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றாமல் உங்களின் சமுதாயத்திற்காக உங்களை மனிதனாக உருவாக்கிய இயற்கைக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு என்று கடமையாற்ற வேண்டும்.

மேன்மை தரும் இலக்குகள்

          உங்களுக்குப் பிடித்த ஆசை சமுதாயத்திற்கு ஒரு வளர்ச்சியை பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட உங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை தரும் மாற்றத்தை உண்டு பன்னக்கூடாது. அது சுயநலம் என்ற பெயரில் தள்ளப்பட்டு விடும்.

        உதாரணமாக ரைட் சகோதரர்கள் பறவைகள் போல பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசை உலகத்தில் உள்ள மனித சமுதாயமே பறப்பதற்கு வழிவகுத்தது. கடின உழைப்பைக் கொண்டு பல போராட்டங்களின் இறுதியில் அடைய வேண்டியது பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும்.

        மற்றவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ! நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். உதவும் இடத்தில் இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். கொடுக்கும்கை மேலிருக்கும் வாங்கும்கை தாழ்ந்திருக்கும். எனவே உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். பல வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு சன்னல் இருக்கும் அதற்கு எதிராக இன்றொன்றை வைப்பார்கள் காரணம் வெளியில் செல்ல வழி இருந்தால் மட்டுமே காற்றும் கூட உள்ளே நுழையும். உழைக்க தயாராக இருந்தால் மட்டுமே சில ஆக்கச்செயல்கள் உங்களை வந்து சேரும். ஒரு பிரச்சனை உங்களை தேடி வருகிறது என்றால் அதனை தீர்வு காணும் மார்க்கமும் உங்களிடமே உள்ளது என்பது பொருளாகும். எவற்றைக் கொண்டும் அச்சம் கொள்ளலாகாது. வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று உங்களின் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும், நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதன் பயன் உங்களையே வந்து சேரும்.

        ஆயிரமாயிரம் பசுக்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் விடப்பட்ட கன்று ஒன்று அதன் தாய்ப்பசுவைச் சென்று அடைந்துவிடும். அந்தத் தன்மை கன்றுக்கு உண்டு. அதைப்போன்று செய்யும் செயலின் பலன் சேர்வது உறுதி. பெய்த நீரானது பள்ளங்களை நோக்கியே செல்லும், சென்று அவற்றை நிறைவடையச் செய்யும். அதைப்போல உங்களின் இலக்குகளால் ஆக்கச் சிந்தனைகளால் இந்தச் சமுதாயத்தை நிறைவடையச் செய்யுங்கள்.

உங்களின் உள்ளே உன்னதம்

             இந்த உலகத்தில் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் செயல்களைச் செய்யும் ஆக்கசக்தி உங்களிடமே உள்ளது. இதை உணர்தல் வேண்டும்.

       ஒரு காட்டில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவனுக்கு பசி எடுத்தது. அவ்வழியில் ஒரு மரத்தில் பழங்கள் பழுத்து தொங்கின. அதைப்பார்த்த அவன் ஓடிச்சென்று மரத்தில் ஏறி பழங்களைப் பறித்து தின்றான். பின்னர் கிளையின் நுனியில் இன்னும் கனிந்த பழங்கள் தென்பட அந்த நுனிப்பகுதிக்கு செல்ல கிளை ஒடிந்து கீழே விழப்போனவன் அடுத்த ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு தொங்கினான். அங்கிருந்து தரை சிறிது தூரமாகத்தான் தெரிந்தது. அவன் பயத்தில் அலற ஆரம்பித்தான். நடுங்கினான் என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்த ஆரம்பித்தான். அந்த அலறல் காடு முழுவதும் கேட்டது. சில நிமிடங்களில் அங்கு ஒருவர் வந்தார். இவன் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பதற்றத்துடன் கத்தினான். கீழே இருந்த நபர் இவன் மீது ஒரு கல்லை விட்டெறிந்தார். இவனுக்கு கோபம் வந்தது “என்னை காப்பாற்றச் சொன்னால் கல்லால் அடிக்கிறாயா?” என்று கேட்டான். மீண்டும் அந்த நபர் இன்னொரு கல்லையும் விட்டெரிந்தார். அவனுக்கு கோபம் வந்து “இரு வருகிறேன். உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மரத்தின் சிறிது மேலுள்ள கிளையைப் பற்றிக்கொண்டான். மீண்டும் அந்த நபர் ஒன்றும் பேசாமல் கல்லை எடுத்து அவன்மீது எறிந்தார். உடனே மரத்தில் இருந்த அவன் கீழே இருக்கும் நபரை அடிப்பதற்காக மெதுவாக எம்பி மேலுள்ள கிளையில் தன்காலை வைத்து ஏறிவிட்டான். பின்னர் கோபத்துடனே சரசரவென்று மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அடிக்கச் சென்றான். “ஏன் என்னை கல்லால் அடித்தாய்” என்று அதட்டினான். அந்த நபர் “நான் உன்னை அடிக்க வில்லை காப்பாற்றினேன் எவ்வாறென்றால் மரக்கிளையில் தொங்கும்போது உங்கள் மனம் பயத்தில் மூழ்கியிருந்தது. உடல் வியர்த்தது. கால்கள் நடுங்கின. மேலே ஏற இயலாமலும் கீழே இறங்க முடியாமலும் கத்தினாய். நான் கல்லால் அடித்ததும் அந்தப் பயம்நிலை மாறி கோபம் வந்தது. நடுக்கம் மாறி மேலே ஏறுவதற்கான வேகம் வந்தது. கீழே இறங்கும் நிதானம் உண்டானது. நான் கல்லால் அடிக்கவில்லை என்றால் நீ பயத்தால் கத்திக்கொண்டேதான் இருப்பாய் இறங்க மாட்டாய். இறங்கும் சக்தி உன்னிடமே இருந்தது. ஆனால் அதை நான்தான் வெளிக்கொணர்ந்தேன். எனவே நான் தான் உன்னை காப்பாற்றினேன்”. என்றார்.

         இவ்வாறு உலகில் உள்ள ஆக்கங்கள் எல்லாமே செய்து முடிக்கும் தன்மை மனிதர்களிடம் உள்ளது. ஆனால் பலருடைய வாழ்வில் அந்த மாதிரியான நிகழ்வு நடப்பதே இல்லை. அந்த ஆக்கசக்தியை பத்திரமாகவே வைத்துக் கொள்கிறார்கள்.

தீமையற்றவை நல்லவையே

       தீமையை ஏற்படுத்தாத ஒவ்வொரு சிந்தனையும் ஆக்கச்சிந்தனையே ஆகும். பலர் வாழ்வில் வளர்ந்து காதல் செய்து திருமணம் புரிந்து குழந்தையைப் பெற்று காலம் முடிந்து மறைந்து விடுகிறார்கள். இது என்ன வாழ்க்கை. இம் மாதிரியான வாழ்க்கையை மிருகங்களும் வாழ்கின்றன. எனவே மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ வேண்டும்.

        இவ்உலகில் எத்தனையோ உயிர்களைப் பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் குறைந்த அறிவுடன் பிறக்க மனிதர்கள் மட்டும் ஏன் ஆறறிவு படைத்த சிந்தனைதிறன் மிக்கவராகப் பிறக்க வேண்டும்? சிந்திக்க வேண்டாமா? மனிதனிடம் மட்டுமே மற்ற உயிர்களையும் காப்பாற்றும் திறன் உள்ளது என்பதுதான். மனிதன் இந்தப் பிறவியில் மட்டுமே மற்றவர்களுக்கு நன்மை செய்யும் திறன் படைத்தவன். இதை பலர் உணர்வதில்லை. இந்த மனிதனை படைத்த பிறகு எந்த உயிரையும் இறைவன் படைக்கவில்லை. காரணம் மனிதனே எல்லா உயிர்களையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதாலேயே ஆகும்.

எனவே இலக்கு என்பது மற்றவர்களுக்கு சமுதாயத்திற்கு பயன்படுமாறு இருக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கச்சிந்தனைகள் மனதில் தோன்றி நல்வழி பிறக்கும்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

தமிழர் பண்பாட்டில் வெற்றிலை | Betel in Tamil Culture

வெற்றிலை என்றால் என்ன? | வெற்றிலைக்கதையும் காரணமும் | வெற்றிலையின் வகைகள் | வெற்றிலையின் பகுப்பு முறைகள் | இலக்கியங்களில் வெற்றிலை | வெற்றிலை வளர்ப்பு | கொடி பதியம் போடுதல் | செம்பக்கால்| பாக்குவிதை நடுதல் | குத்தகை முறை| கொடி இறக்குதல்| உரமும் பாதுகாப்பும் | விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் | ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் | ஏணி | வெற்றிலைக்கிள்ளுதல் | வெற்றிலை விற்பனை நிலை | மண்டி |சந்திக்கும் பிரச்சனைகள் |கெடு வெற்றிலை | வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்| பழக்கவழக்கங்கள் |வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

முன்னுரை

      மண்ணில் விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுக்குப் பல நன்மையே செய்கின்றன. செடி கொடி மரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பலனை நமக்கு அளித்து வருகின்றன. இலை பூ காய் கனி என அனைத்துமே உயிர்கள் வாழ் துணையாக நிற்பதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் செய்கின்றன. தானியங்கள், கிழங்குகள், காய்கள், கனிகள் போன்ற வரிசையில் இலை என்னும் சொல்லக்கூடிய கீரைவகைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலையில் உண்டாகக் கூடிய கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை உணர முடிகின்றது. இச்சுவையானது பல்வேறு மருத்துவக்குணங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் கார்ப்புச் சுவையுடைய வெற்றிலை என்னும் கொடியானது தமிழகத்தில் ஆங்காங்கு பயிரிட்டு வருகின்றனர். தமிழ் பாரம்பரியத்தில் வெற்றிலைக்கு முதல் மரியாதை தரப்படுகின்றது. மங்கல நிகழ்ச்சிகளில் தாம்பூலம் என்கிற பெயரில் வெற்றிலையை முதன்மை படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலைக்கொடியின் வளர்ப்பு பயன்பாடுகள் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையின்கண் காண்போம்.

வெற்றிலை என்றால் என்ன?

         வெறுமை + இலை, வெற்று + இலை = வெற்றிலை. இங்கு வெற்று என்பது வெற்றி என்பதைக் குறிக்கின்றது. வெற்றிலைக்கால், வெற்றிலை தோட்டம் என்பார்கள். உலகினில் பல்வேறு இலைகள் இருப்பினும் இவ்வெற்றிலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதே ஆகும். வெற்றிலை Piper Betle என்கின்ற தாவரவகையாகும். ஆங்கிலத்தில் Betel Pepper என்பர். மிளகு வரிசை, மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்தது. வெற்றிலைக்கு வேறுப்பெயர்களாகத் தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியிலும் வெற்றிலை, வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, திரையல், வேந்தன், இகனி எனத் தமிழிலும் உண்டு. “வெற்றிலைக்குத் தமிழகம் பூர்வீகம் இல்லை என்கின்றார்கள். இவ்வகையான தாவரத்தை மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்”1 இந்தியாவைத் தவிர மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகளவில் தமிழகத்தில் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கருர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் பொன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

வெற்றிலைக்கதையும் காரணமும்

             வெற்றிலையானது மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றாலும் தமிழகத்தில் அதற்கென்று கதை ஒன்றும் உள்ளது. சங்ககாலத்தில் இரண்டு ஆடு மேய்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டுப்போய் விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும்மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில் செல்வது என்பது போட்டியாக நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான்தான் வெற்றிப்பெற்றேன் என்றான். வெற்றிப்பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே சென்று வெற்றிப்பெற்றமைக்கு அடையாளமாகத் தன்கையில் வைத்திருந்த இலையைக்காண்பித்தான். அதைபார்த்த பெரியோர்கள் நீ வெற்றிப்பெற்றதால் வெற்றி + இலை = வெற்றிலை எனக் கூறியுள்ளனர். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு எந்தவொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர்.

         பூமியில் வெற்றிலைக்கொடி இல்லாமல் இருந்ததாம். இந்திரலோகத்து அரம்பைகளில் ஒருத்தி சாபம் பெற்றுப் பூமிக்கு வந்தாளாம். அவளோ தாம்பூல ரசிகை. பூமியில் வெற்றிலை கிடையாது என்று அவளுக்குத் தெரியும். பூமிக்கு வெற்றிலைக்கொடியைத் தனது மறைவிடத்தில் ஒளித்துக்கொண்டு வந்தாளாம். ஆகவேதான் வெற்றிலைக்கு அதன் தற்போதைய வடிவமும் மணமும் கிடைத்ததாம். அந்தக்கதையை வாசித்த பலர் வெற்றிலையை முகர்ந்து பார்த்துக் கிளர்ச்சியுற்று ஆமோதித்ததுண்டு. (கி.ரா. கதைகளிலிருந்து)

       இவ்வாறாக வெற்றிலையைப் பற்றிய கதைகளும் அவை இவ்வுலகிற்கு வந்த காரணங்களும் மக்களிடையே நம்பப்பட்டு வருகின்றன.

வெற்றிலையின் வகைகள்

  • வெள்ளை வெற்றிலை என்கிற கற்பூர வெற்றிலை – இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • கருப்பு வெற்றிலை – கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.
  • காப்பி வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும். (தங்க நிறத்தில்)
  • பேகருப்பு வெற்றிலை – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும்.

இவ்வெற்றிலையானது அனைத்து வகைகளிலும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. கொழுந்து வெற்றிலை : கொழுந்து வெற்றிலை என்பது தளிராக இருக்கும்போதே பறித்துக்கொள்வது.

2. முத்தின வெற்றிலை : நன்றாக உருவான பிறகுப் பறித்துக்கொள்வது.

வெற்றிலையின் பகுப்பு முறைகள்

1. கொடியில் தனியாகக் கிளைவைத்து இருப்பது பாலை வெற்றிலை ஆகும். அதாவது நல்ல வெற்றிலை என்பார்கள்.

2. கொடியிலே வெற்றிலை வருவது சக்கை வெற்றிலை என்பார்.

3. கோணலாகவும் காய்ந்ததும் வேண்டமென்று ஒதுக்குவதும் கழுவன வெற்றிலைகள் ஆகும்.

105 வெற்றிலை (100 – 105 வரை தோரயமாக) – 1 கவுளி

2 கவுளி சேர்ந்தது – 1 கட்டு

30 கட்டு (அதாவது 60 கவுளி) – 1 வத்து

1 முழம் என்பது – 4 கொடி

200 கொடி சேர்ந்தது – 1 கட்டு

50 முழம் சேர்ந்தது – 1 கட்டு

இவ்வாறாக வெற்றிலையின் பகுப்பு முறைகள் வைக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் வெற்றிலை

         வெற்றிலை பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் நிறையவே காணக்கிடக்கின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெற்றிலை சம்பந்தப்பட்ட குறிப்புகளும் மக்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் விதமும் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. மதுரை நகர வீதிகளில் நாளங்காடியில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அங்கு பண்டங்களை வாங்க மழவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றனர்.

“நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்” ( மதுரை.401)

           மழவர்கள் நன்கு வளர்ந்த கொடியிலிருந்து பறிக்கப்பட்ட வெற்றிலையை அங்காடியிலிருந்து பெற்று சங்கை சுட்டு உண்டாக்கிய சுண்ணாம்பையும் சீவிய பாக்கையும் சேர்த்து வாயிலே எச்சில்ஊற மென்று சுவைத்தார்கள். அப்படிப்பட்ட மழவர்கள் பண்டங்களை வாங்கும் வரையில் உயர்ந்த மாடங்களின் நிழலிலே தங்கியிருந்தார்கள் என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இதன்மூலம் வெற்றிலையோடு பாக்கும் சுண்ணாம்பும் மதுரையில் நாளங்காடி தெருவில் விற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

“உண்டுஇனிது இருந்த உயர்பே ராளர்க்கு

அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்த”

                                                                                                                          (சிலம்பு. கொலைக்களக்காதை.54-56)

     மதுரையில் ஆய்ச்சியர்கள் உடனிருந்து கவுந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி தன்னுடைய கணவன் கோவலனுக்குக் கண்ணகி இனியதும் சுவையுடையதுமாகிய உணவினைச் சமைக்கின்றாள். சாப்பிட்டு முடித்த கோவலனுக்கு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியும் பாக்கும் சேர்த்துச் சுருளாக மடித்துத் தருகின்றாள் கண்ணகி என்கிறார் இளங்கோவடிகள்.

“அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;” (கம்ப.காட்சிப்.15)

        மெல்+அடகு = மென்மையான வெற்றிலை. இலங்கையில் சிறைபட்டிருக்கும் சீதை கூற்றாக மேற்கண்ட வரி அமைந்துள்ளது. என்னுடைய கணவன் இராமபிரான் சாப்பிட்ட பின்பு வெற்றிலையை மடித்துக்கொடுக்க நான் அவருடன் இருக்கவில்லையே என வருந்துவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.

“சந்த பூக்கச் சாடை பாக்கிலை

கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்”

                                                                                             (சிலம்பு.இந்திரவிழா ஊரெடுத்த.157) என்கிறது.

வெற்றிலை வளர்ப்பு

       வெற்றிலை வளர்ப்புப் பகுதியைத் தோட்டம் என்கின்றனர். வெற்றிலை சாகுபடி என்பது மற்ற விவசாயிகளைக் காட்டிலும் தனித்துவமானது ஆகும். ஏனெனில் வெற்றிலை வளர்ப்பில் காலம், சூழ்நிலை, மண், தண்ணீர் போன்றவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகுந்த போராட்டங்களையேச் சந்தித்து வருகின்றனர். கருமண், செம்மண், சேடைமண் உள்ள இடங்களில் வெற்றிலைப்பயிர்கள் நன்றாக வளரும் என்கிறார்கள் வெற்றிலை விவசாயிகள். குறிப்பாக ஏரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மண் அதிக சத்துகள் நிறைந்ததாகவும் இலைகள் நன்றாக வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

          ஒரு செவ்வக வடிவிலான நிலத்தை டிராக்டரில் உழுவதைக் காட்டிலும் மாட்டு உழவுக்கொண்டு ஆழமாக உழ வேண்டும். அதுவும் முதலில் கிழக்குத் திசையிலிருந்து ஏர் ஓட்டினால் அடுத்து, தெற்கிலிருந்து ஓட்ட வேண்டும். அடுத்து மேற்குத்திசை, வடக்குத்திசை என மொத்தம் நான்குமுறை மாட்டு உழவால் ஆழமாக உழவேண்டும். ஒரு பக்கமாகத் தண்ணீர் செல்வதற்குப் பாத்திக்கட்டி தெற்கு வடக்காக ஒன்றடி வாக்கில் வாய்க்கால் போட வேண்டும். நிலத்தில் இரண்டரை அடிவிட்டு பாத்திக்கட்ட வேண்டும்.

கொடி பதியம் போடுதல்

         பாத்திப்போட்டவுடன் தண்ணீரானது நிலம் முழுவதும் நன்றாகப் பாய்ந்து ஊறவேண்டும். முதலில் தங்களுடைய மண்ணில் எந்த வெற்றிலையைப் போட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு பதியம் போடக்கூடிய கொடியை ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தோட்டத்திலிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கியும் கொள்கின்றனர்.

         பதியம் போடுதல் என்பது அனைவராலும் செய்ய முடியாது. இத்தொழிலில் பலகாலம் இருந்து பழக்கம் பட்டவர்களே பதியம் போடுகின்றனர். மேலும் அவர்களின் கையில் பதியம் போட்டால் வெற்றிலை நன்றாக வளரும் என நம்பிக்கையும் கொள்கின்றனர். அதற்குச் ‘சீவிக்கட்டுதல்’ என்று அழைப்பர்.

      நிலத்தைச் சுற்றிலும் பாக்கு மரத்தாலான பட்டையை இறுக்கிக்கட்டி தென்னங்கீற்றைக் கொண்டு கட்டுகின்றார்கள். இந்த வேலியானது காற்றிலிருந்து வெற்றிலைக்கொடிகளைப் பாதுகாக்கும் என்கின்றனர். மேலும் வேலியைச் சுற்றிலும் ஐந்து அடிக்கு ஒன்றாக வாழைக்கன்றினை நட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுகின்றனர்.

முதலில் அகத்தி, சௌண்டல் மற்றும் முருங்கை விதையை ஊன்றுகின்றனர். இது ஆடி மாதத்தில் துவங்கப்படுகிறது.  அகத்தி நன்றாக வளர்ந்த பிறகு ஐப்பசியில் வெற்றிலைக்கொடி பதியம் போடப்படுகிறது. சௌண்டல் செடியானது கொஞ்சநாள் விட்டுத்தான் வளரும். வெற்றிலைக்கொடியை எடுத்துக்கட்டுவதற்கு அகத்தி மரம் தேவைப்படுகிறது. அகத்தி மரம் மூன்று வருடங்களுக்குள் பட்டுப்போய் விடும். அதன்பிறகு சௌண்டலில் சேர்த்துக் கொடிக்கட்டுவார்கள். ஒருசில நேரங்களில் மூங்கில் குச்சிகளை மண்ணில் ஊன்றி கொடி கட்டப்படுகின்றன.

    வெற்றிலைக்கு நிழல் அவசியம் என்பதால் அகத்தியையும் சௌண்டலையும் முருங்கையும் துணைப்பயிர்களாகப் பயிரிட்டு வருகின்றனர்.

செம்பக்கால்

       இளம்பருவ வெற்றிலை கொடியைச் ‘செம்பக்கால்’ என்பார். ஆரம்பக்கட்ட வளர்ச்சி என்பதால் பாத்துப்பாத்துச் செய்தாக வேண்டும். நான்கு நாளைக்கு ஒருமுறை கட்டாயம் தண்ணீர் கட்ட வேண்டும். வெற்றிலை கொடிக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்தால் கொடி அழுகிவிடும். மண்ணில் ஈரம் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். அதனால் எப்போதும் கொடிக்காலில் ஈரப்பதத்துடனே இருப்பது அவசியமாகிறது. ஏனெனில் வெற்றிலை தோட்டம் மிகுந்த வெப்பசலனமாக இருக்கும். தொட்டத்தில் வேலை செய்பவர்கள் வேட்டி சட்டையில்லாமல் கோவணம் அல்லகு கால் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள்.

பாக்குவிதை நடுதல்

     வெற்றிலைப் பயிரோடு பாக்குக் கன்றுகளை நட்டு ஊடுபயிராக வளர்க்கவும் செய்கின்றனர். பாக்குப்பழங்களாக இருப்பின் தைமாதம் விதைப்போடுவார்கள். ஒருவேளை பாக்குக்கன்றுகளாக இருப்பின் வெற்றிலைக்கொடி பதியம்போட்டு அடுத்த ஆடியில் நடப்படுகின்றது. வெற்றிலை தோட்டம் அழிந்தவுடன் பாக்கு மரக்கன்றுகளை வளர்த்து அதிலிருந்து பாக்குக்காய்களை உற்பத்திச் செய்கின்றனர்.

குத்தகை முறை

      நிலம் வைத்திருப்பவரிடமிருந்து விவசாயி ஒருவர் வெற்றிலை கொடி நடுவதற்குக் குறைந்தபட்சம் நான்கு வருடத்திற்குக் குத்தகை கேட்பார். குத்தகைக்குப் பணம் மட்டும் பெற்றுக்கொள்வாரும் உண்டு. பாக்குக்கன்றுகளை வளர்த்தும் பணமும் கொடுக்கவேண்டும் எனவும் குத்தகை பேசப்படும். குத்தகைமுறை என்பது ஆளுக்காளுக்கு மாறுபட்டு நிற்கும். பாக்கு மரங்கள் குழை தள்ளியவுடன் நிலவுரிமையாளரிடம் நிலத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும். காய்ந்துபோனது அனைத்தும் குத்தகை எடுத்தவருக்கும் பச்சையாகவுள்ள அனைத்தும் நிலவுரிமையாளருக்கும் பொருந்தும் எனவும் குத்தகை பேசப்படுகிறது. குத்தகை என்பது கூட்டாகவும் தனியாகவும் செய்யப்படும். பொதுவாக அரை ஏக்கர்க்கு இரண்டு ஆண் விவசாயிகள் கட்டாயம் தேவைப்படுகின்றனர். இதனை ’தோட்டம் பேசுதல்’ என்றும் சொல்லப்படுகிறது.

கொடி இறக்குதல்

       முதலில் செம்பக்கால் வெற்றிலையைக் கிள்ளயவுடன் கொடியை இறக்கி வைக்கவேண்டும். ஆடியில் பதியம் போட்டால் அடுத்த ஆடியில் கொடி இறக்குவார்கள். வெற்றிலை அகத்தியிலும் சௌண்டலிலும் நாரால் கட்டப்பட்டிருக்கும். கொடிக்கு இடதுப்பக்கம் ஒருஅடி குழி வெட்டி அகத்தியில் கட்டியிருக்கும் கொடியை எடுத்து மண்ணில் பதியம் போடுவார்கள். எடுத்துக்கட்டின கொடி என்பது அனைத்து அகத்தி மரங்களிலும் சரியாகப் பொருந்தி நேராகக் காணப்படும். இந்தச் சமயங்களில் ஏரியிலிருந்து மண்ணைக் கொண்டுவந்து கொட்டி வெற்றிலைக்கு உண்டான சத்தினை அதிகப்படுத்துவார்கள். ஆறுமாதம் கழித்து வலதுபுறமாகக் கொடி இறக்குவார்கள். அப்போது இவ்வெற்றிலைக்கொடியானது ‘முத்தினக்கால்’ என்று அழைக்கப்படும்.

உரமும் பாதுகாப்பும்

     மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணமே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஏரிமண், களிமண், சேடை மண் ஆகியவற்றையும் பிற இடங்களிலிருந்து எடுத்துவந்து கொட்டப்படுகிறது. இதனால், மண் சத்து நிறைந்தாகவும் வெற்றிலை கொடிகள் நன்கு வளர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இங்கு வெற்றிலையில் நோய் ஏற்பட்டால் மோரில் தண்ணீர் கலந்து தெளித்தலும் மொளகா பவுடர், சாம்பல் போன்றவைகளைத் தூவுதலும் நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர். ஒருசில விவசாயிகள் மட்டும் காம்ப்ளக்ஸ் (மருந்து) வாங்கி தெளிப்பதும் உண்டு. காம்ப்ளக்ஸ் தெளித்தால் ஒருவாரத்திற்கு வெற்றிலை கிள்ள மாட்டார்கள்.

விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள்

வெற்றிலை வெட்டி (இனியவை கற்றல்)
இனியவை கற்றல் – தமிழர் பண்பாட்டில் வெற்றிலை

கேள்விக்குறி வடிவிலான கத்திகள் ( பெரிதும் – சிறிதும் ), வெற்றிலை வெட்டி (நகவெட்டி, வெற்றிலை வெட்டும் கருவி), மண்வெட்டி, கடப்பாறை, ஆட்டுக்கால் ஏணி அல்லது கோஷம் ஏணி போன்றவைகள் அனைவரது வீட்டிலும் இருக்கும். அக்கால வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் அனைவரும் சைக்கிளையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தச் சைக்கிளில் வெற்றிலையும் சிறியதாகக் கத்தி ஒன்றையும் எப்போதும் வைத்தே இருப்பார்கள்.

          வெற்றிலை கத்தி                    இனியவை கற்றல்

ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் ஏணி

         ஏழுபளுவு உள்ள ஏணியில் மேலே ஓட்டையிட்டு இரண்டு கம்புகளாக முன்பகுதியில் நிறுத்தப்படும். தனியாக நிற்கும் ஏணிக்கு பாதுகாப்பாக இக்கொம்புகள் நிற்கின்றன.

வெற்றிலைக்கிள்ளுதல்

     வெற்றிலைக்கிள்ளும்போது மேற்கூறிய பகுப்புமுறைகளில் எவ்வகையான வெற்றிலையைக் கிள்ளப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றிலை வெட்டியை வலதுகையில் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வெற்றிலையைக் கிள்ளவேண்டும். கிள்ளிய வெற்றிலையை இடதுகையில் ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். அடுக்கிய வெற்றிலைகள் நூறிலிருந்து நூற்றைந்து வரையாக இருக்கலாம். இதை கவுளி என்பர். இப்படியாக அறுபது கவுளிகளைக் கொண்டது ஒரு வத்தாகக் கருதப்படுகிறது. ஒரு வத்தாகத்தான் தென்னங்கீற்றால் கட்டி விற்பனைக்குக் கொண்டுச்செல்வார்கள். இதனை ‘தென்னங்கோட்டை ’ என்பார்கள்.

வெற்றிலை விற்பனை நிலை

        வெற்றிலை விற்பனை என்பது காலச்சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். விவசாயிகள் கிள்ளிய வெற்றிலையை மார்கெட் மற்றும் மண்டி என இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

அ) மார்கெட்

       அனைத்து விவசாயிகளும் வெற்றிலைகள் கொண்டுவரும் சந்தை ஆகும். அவ்சந்தையில் ஏலம் விடுவதற்கென புரோக்கர்கள் செயல்படுவார்கள். தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் வெற்றிலை வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் வெற்றிலையின் தரம்பார்த்து ஏலம் கேட்பார்கள். இங்கு புரோக்கர்கள் மூலமாகத்தான் வெற்றிலையை வாங்கவோ விற்கவோ முடியும். நூற்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்வார்கள். பணமும் உடனடியாக விவசாயிகளின் கைகளில் கொடுத்துவிடுவார்கள். மார்கெட் என்பது சுற்றுவட்டாரத்தில் ஒன்றுதான் இருக்கும். விவசாயிகளும் இவற்றைவிட்டால் அடுத்து மண்டிக்குத்தான் செல்லவேண்டும்.

ஆ) மண்டி 

     வெற்றிலை விவசாயத்தில் பழக்கப்பட்டவரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநில வியாபாரிகளை நன்கு அறிதவர்களும் தனியாக வெற்றிலை மண்டி வைத்திருப்பார்கள். இதுபோல் பல நபர்கள் ஆங்காங்கே வெற்றிலை மண்டி நடத்துவார்கள். நாம் யாருடைய மண்டியிலும் வெற்றிலையை விற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய வெற்றிலையை வெளியூர்களில் விற்றுவிட்டு அதற்கேற்றவாறுதான் பணம் கொடுப்பார்கள். இந்த வகையில் பணம் உடனடியாகக் கையில் பணம் கிடைக்காது. இவ்வகையான முறையானது தற்போது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெற்றிலைக்கு நல்லவிலை போகும். மற்ற நேரங்களில் குறைந்த அளவிலேயே விற்கும்.

வெள்ளை வெற்றிலை ரூபாய் 2000 – திற்கு விற்பனை ஆகுமென்றால்,

கருப்பு வெற்றிலை ரூபாய் 2000 – திற்கும்,

சக்கை வெற்றிலை ரூபாய் 4000 – திற்கும் (காலத்திற்கேற்ப)

கழுவுன வெற்றிலை ரூபாய் 600 – க்கும்,

காபி வெற்றிலை சுமார் ரூபாய் 3500 – க்கும் விற்பனை ஆகும்.

        இவற்றில் காபி வெற்றிலை இருபது நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிள்ள முடியும். மற்ற வெற்றிலைகளை இருபத்தைந்து நாட்களுக்குள்ளே கிள்ள முடியும்.

சந்திக்கும் பிரச்சனைகள்

             வெற்றிலை விவசாயிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். தங்களுடைய சொந்தநிலம் என்றால் குத்தகை பிரச்சனை வராது. இல்லையெனில் நிலம் குத்தகை பேசுவதற்கு போதும்போதும் என்றாகிவிடும். நிலத்துக்காரர்கள் பேசின ஆண்டுகள் முடிந்தவுடன் காலிசெய்துவிட வேண்டும் என்பார்கள். அப்போதுதான் நம்முடைய வெற்றிலைப் பயிர் நன்றாக வளர்ந்திருக்கும். இப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது. குத்தகை என்றாலும் இரண்டு நபரோ அல்லது நான்கு நபரோ அதற்குமேலுள்ள நபர்களோ சேர்ந்துதான் குத்தகை எடுப்பார்கள். மொத்தமாகச் செலவு செய்ததற்கு அனைத்து விவசாயிகளும் பணத்தொகையைப் பங்கிட்டுக்கொள்வார்கள். கொடிக்காலின் சரிபாதியாக ஆளுக்காளுக்குப் பிரித்துக்கொள்வார்கள்.

         கூட்டுமுறை விவசாயம் என்பது ஒருப்பக்கம் நல்லதே என்றாலும் சில நேரங்களில் சிக்கலிலும் முடிந்துவிடுகிறது. ஏதாவது ஒருஆள் தோட்டத்தைவிட்டு விலகுகின்றார் எனில் வேறொரு ஆளை அவ்வளவு எளிதாக உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். அப்படியும் வரவேண்டும் என்றால் இங்குள்ள கட்டுப்பாடுகளைச் சொல்லி அதற்கு சம்மதம் பெற்ற பின்னரே அனுமதிப்பர். இல்லையெனில் விட்டுச்சென்ற கொடிக்காலை இருக்கின்ற அனைவரும் பணத்தொகையைக் கொடுத்துவிட்டு சரிப்பாதியாகப் பிரித்துக்கொள்கின்றனர். இவற்றில் யாரேனும் ஒருவரே கூட வாங்குவதும் உண்டு. நிலத்துக்காரர் தன்னுடைய நிலத்தில் நெல், கரும்பு, சோளம் என ஏதாவது பயிரிட்டுயிருந்தால் பகலில் அவர் தண்ணீர் கட்டிக்கொள்வார். அப்படியானால் வெற்றிலை விவசாயிகள் இரவில்தான் தண்ணீர் கட்ட முடியும். உதாரணமாக ஐந்துபேர் கூட்டாக இருக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் ஒருவர் மட்டும் இரவு நேரத்தில் அனைவரது கொடிக்காலுக்கும் தண்ணீர் கட்டவேண்டும். நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னொருவர் தண்ணீர் கட்டுவார். இப்படி ஒவ்வொருவராகச் சுழற்சிமுறையில் தண்ணீர் கட்ட வேண்டும். சிலநேரங்களில் இரண்டு பேர்கூட தண்ணீர் கட்டுகிறார்கள். ஆனால் அதிகப்படியாக இரவில் ஒருவரே தண்ணீர் கட்டுகிறார்கள்.

      இரவுநேரம் என்பதால் இருட்டு, பறவைகளின் சத்தம், விஷப்பூச்சிகள், பாம்புகள் என விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். சிலநேரங்களில் அமானுஷிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்று கற்பனையிலோ அல்லது பயத்திலோ காட்டை விட்டு ஓடியும் வந்துள்ளனர்.

கெடு வெற்றிலை

       ஒருவருக்கு இந்த நாளன்று வெற்றிலையைத் தருவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டால், சரியாக அந்தநாளில் சொன்னச்சொல் தவறாமல் வெற்றிலையைக் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் சரியான சண்டைகளும் வருவதுண்டு. இதற்கு ’கெடு வெற்றிலை’ என்பர். இத்தகுநிகழ்வானது வெற்றிலை விவசாயிகள் புரோக்கர்களிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்றுக்கொள்வதுண்டு. அப்பணத்தை திருப்பி தரமுடியாமல் வெற்றிலையாகக் கொடுத்துக் கழித்துக்கொள்வார்கள். மாறுபட்டு நின்றால் பணத்தைத் திருப்பிக் கேட்பார்கள். வெற்றிலை தோட்டத்தில் கொடிக்காலில் இந்த இரண்டு கால்களும் கெடு வெற்றிலைக்காக ஒதுக்கப்பட்டது என வைத்துக்கொள்வர்.

வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்

  • வெள்ளை வெற்றிலையை வாயில்போட்டு மென்று தின்றால் வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கும்.
  • வெற்றிலை என்பது மனித உடலில் ஜீரண சக்திக்கு வழிவகுக்கிறது.
  • வெற்றிலை பாக்கோடு சுண்ணாம்பு சேர்த்து மெல்லும்போது உடலுக்குச் சுண்ணாம்பு சத்துச் சேர்கிறது. இதனால் பற்கள் வலிமையுள்ளதாக மாறுகிறது.
  • இரண்டு வெற்றிலைகள், கைப்பிடியளவு வேப்பிலைகள், அருகம்புல் ஒரு கைப்பிடியோடு அரைலிட்டர் தண்ணிரீல் நன்றாகச் சுடவைத்து அவற்றை வடிகட்டி மூன்று வேளையும் குடித்து வந்தால் சக்கரை நோயானது கொஞ்சகொஞ்சமாய் குணமாகும்.
  • வெற்றிலையோடு மிளகும் தேங்காய்த்துண்டும் சேர்த்து வாயில் மென்று முழுங்கினால் தேள் விஷம் நீங்கும் என்பார்கள்.
  • நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெற்றிலைசாரும் இஞ்சிசாரும் சமஅளவு கலக்கிக் கொடுத்தால் தீரும்.
  • நெஞ்சுசளி உள்ளவர்களுக்கு வெற்றிலையோடு மஞ்சள், மிளகுச் சேர்த்துக் கசாயம் செய்து கொடுப்பதை இன்றளவும் நம் வீடுகளில் பார்க்கலாம்.
  • பாலில் வெற்றிலை சாரை கலந்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
  • வெற்றிலையால் உமிழ்நீர் பெருகும். பசியை உண்டாக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரக்க வைக்கும். காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை வலுபடுத்தும். உடம்பில் நறுமணத்தை அதிகரிக்கும்.
  • யானைக்கால் வீக்கத்திற்கும் வலி நிவாரிணியாகவும் வெற்றிலையானது பயன்படுகிறது.
  • தொடர் இருமலை கட்டுப்படுத்த வெற்றிலையோடு கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் குணமாகும்.
  • வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி உடம்பிலுள்ள கட்டிகளின்மேல் பற்றாகப் போட்டால் கொப்புளங்கள் பழுத்து உடையும்.
  • வெற்றிலைக்கொடியின் வேரைச் சுவைத்து விழுங்கினால் வெங்கலத்தைப்போல் குரல்வளம் பெருகும்.
  • பாம்புக் கடித்தவர்களுக்கு வெற்றிலைச்சாறு கொடுத்தால் விஷம் முறியும். அதனால்தான் நாகவல்லி எனவும் அழைக்கின்றனர்.
  • இரவுப் படுக்கும்முன் வெற்றிலைச் சாறுடன் ஓமத்தைச் சேர்த்துக் குடித்து வர மூட்டுவலி, எலும்புவலி ஆகியவை குணமாகும்.
  • வெற்றிலை இலைகளைத் தலையில் ஒட்டிக்கொண்டால் ஒற்றைத்தலைவலி, தலைபாரம், தலைவலி உடனடியாக நீங்கும்.
  • உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகளைக் கொண்டது.
  • வாய் சம்பந்தப்பட்ட புண்களைக் குணமாக்குகிறது.
  • வெற்றிலையில் நார்ச்சத்து 84.4 சதவீதமும், புரதசத்து 3.1 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.8 சதவீதமும் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, தயமின், ரிபோபிளேவின், புரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
  • தீக்காயங்கள் பட்ட இடத்தில் கொழுந்து வெற்றிலையைக் கட்ட புண்கள் விரைவில் ஆறும்.
  • சிறுகுழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்படும்போது வெற்றிலை காம்பைக் கிள்ளி ஆசானவாயினுள் நுழைத்து வைத்தால் சிறுதுநேரத்தில் மலம் வெளிப்பட்டுக் குழந்தையின் வயிறு தூய்மையாகும்.
  • வெற்றிலையோடு தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து சொரி, சிரங்கு, படை மீது தடவினால் குணமாகும்.

பழக்கவழக்கங்கள்

வெற்றிலையோடு பாக்குச் சேர்த்து தாம்பூலம் என்கின்றனர்.

சுபநிகழ்ச்சிகளான திருமணங்கள், வரவேற்பு, நிச்சயதார்த்தம், பண்டிகைகள் போன்ற மங்கல நிகழ்வுகளில் தாம்பூலம் என்பதை முன்னிறுத்தியே நடத்தப்படுகிறது.

மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் பாக்கு வெற்றிலையை மாற்றிக்கொண்டால் பாதித்திருமணம் முடிந்துவிட்டது என்றே அர்த்தம். இதற்கு நிச்சயதார்த்த தாம்பூலம் என்றே கூறுவர். இப்படி செய்வது என்பது மரியாதை நிமித்தமாகவும் லட்சுமிகடாஷம் கிடைக்கும் எனவும் நம்பினர்.

வெற்றிலை – பாக்குப் போடுவது ஆண்பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டவுடன் மனைவி கணவனுக்கு வெற்றிலை தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழர் பண்பாட்டில் இருந்துவருவதைக் காணலாம்.

பண்டையக் காலத்தில் தங்களுடைய அழகுப்பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தனர்.

’வெற்றிலைப்பெட்டி’ என்ற ஒன்றை சிலர் இன்றளவும் வைத்திருப்பதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெற்றிலை பயிரிடப்பட்டாலும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குத் தனிச்சிறப்பு உண்டு. “வெற்றிலைக்குக் கும்பகோணம்” என்பார்கள். இதற்குச் ’சேட்டு வெற்றிலைகள்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு.

மொகலாய மன்னர்கள் வெற்றிலை பழக்கத்திற்காகப் பெரும்பணத்தைச் செலவு செய்தார்கள். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச்செலவுக்காகச் சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதும் ஒதுக்கி வைத்தார் என்ற செய்தியும் இருக்கிறது.

மார்க்கோபோலோ, ஷான்மார்ஷ் போன்ற சர்வதேச பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலைப் போடும் பழக்கத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டால் கையால் எடுத்துத் தரக்கூடாது. ஏனெனில் நள்ளிரவில் பேய்கள் அழகிய சினிமா நடிகைகள்போல் வேடம் புனைந்து வந்து வழிமறித்து வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்குமாம். விரலால் எடுத்துக்கொடுக்க கூடாது. கத்தியால் எடுத்துத் தரவேண்டும்.

வெற்றிலையில் ஆண் – பெண் வெற்றிலையும் உண்டு என்கிறார்கள். வெற்றிலையின் பின்பக்கம் காம்புக்குக் கீழே கோடு நேர்ச்சரியாக இருந்தால் பெண் வெற்றிலை எனவும், கோணல்மானலாக இருப்பின் ஆண் வெற்றிலை எனவும் அழைக்கின்றனர்.

கிராமங்களில் வயல், தோட்டம், காடு, விளைநிலங்களில் வேலைப்பார்க்கும் ஏழைமக்கள் ஓய்வு நேரத்தில் வெற்றிலைப்போடுவதும் பகிர்ந்து அளிப்பதும் இனாம் கேட்பதும் தினந்தோறும் நடப்பவையே ஆகும்.

வெற்றிலைப் போடும் பழக்கம் தமிழகத்தில் நிறைய மக்களுக்கு உண்டு.

ஆடைகளில் விழும் வெற்றிலைக்கரையானது ‘அம்மா என்றாலும் ஆத்தா என்றாலும் போகாது!’

நல்ல உணவுக்குப்பின் தாம்பூலம் தருவது நன்று.

வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களிடையே பெரியோர்கள் சொல்லி வைப்பார்கள்.

முடிவுரை

        தமிழர்ப்பண்பாடு என்பது பல்வேறு காரண காரியங்களாலும் பழக்கவழக்கங்களாலும் நாகரீகப் பண்பாட்டோடு இணைந்து வரையறுக்கப்பட்டது. தமிழ்ப்பேசும் மக்கள் ஒவ்வொருவரும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க போராடி வருகின்றனர். தமிழர்ப் பண்பாட்டோடு ஒத்துப்போகிற அனைத்தும் பாதுக்காக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலைப் பயிரிட்டும் சபகாரியங்களுக்கும் பயன்படுத்தியும் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உட்புகத்தியும் வந்துள்ளனர். தமிழ் மக்களின் மனதோடு வெற்றிலை என்பது வெற்றிக்கொண்டு விட்டது எனலாம்.

            வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை நிலங்களிலே தோட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு சாதி, மதம் என்கிற பேதம் எதுவுமில்லை. தொழில் தெரிந்த அனைவரும் வெற்றிலைப் பயிர் செய்கின்றனர். மருத்துவக்குணம் நிறைந்த இவ்வெற்றிலைத் தொழிலை இன்றை இளம்தலைமுறையினர் மறந்து போயுள்ளனர். தமிழர் பாரம்பரியத்தைக் காக்கவும் வெற்றிலைத்தொழிலை நடத்தவும் இளைஞர்களும் முன்வர வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.திரு.மு.கணேசன் நாயக்கர், வயது 65, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி, வெற்றிலை வியாபாரி – வெற்றிலையைப் பற்றிய முழுத்தகவல் அளித்துள்ளார்.

2.திரு.கந்தன் உடையார், வயது 85, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி – வெற்றிலையைப் பற்றியத் தகவல் அளித்துள்ளார்.

3.இணையத்திலிருந்து,

       1.தினமணி, தமிழரின் அகவாழ்வில் வெற்றிலை பாக்கு, வே.சிதம்பரம். 20.09.2012.

       2.theebamttamil.com, தமிழர் வாழ்வில் வெற்றிலை பாக்கு, 06.08.2016.

      3.Wordpress.com, வெற்றிலை பாக்கு தொடர்பான வரலாறு, 11.01.2013

      4.Sudhgar Krishnan channel, வெற்றிலை வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்கள், 16.09.2020

      5.ஆய்வுக்கட்டுரை, நாஞ்சில்நாடன், தீதும் நன்றும் (18) வெற்றிலை

     6.வெற்றிலை, 01.01.2017, மூலிகை அறிவோம், சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தண்டனை | சிறுகதை

மத்தியான நேரம். சித்திரகுப்தன் எருமை மாட்டின் கொம்பின் நுனியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். நன்றாகத் தண்ணீர் ஊற்றி கழுவினார். இருந்தும் அந்த எருமை மாடு கருகருன்னு இருட்டுப் போல கருப்பா இருந்தது. சிவந்த கண்களும் முறுக்கிய கொம்பும் யாருக்கும் பயத்தை வரவழைக்கும்.  பளிங்கு பாறையின் முன்னால் எமதர்மராஜா அலங்கரிக்கப்பட்ட உடையோடு நெஞ்சை நிமிர்த்தி ஒருமுறை அகலமாய் வாயைத் திறந்து சிரித்துக்கொண்டார். அவரின் கர்ஜனையால் எமலோகமே அதிர்ந்தது. எருமை மாட்டின் மீது அமர்ந்து கொண்டு  இன்றையத் தொழிலுக்குப் பூலோகம் கிளம்பிவிட்டார்.

      ராஜன் மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வயித்துப்புள்ளத்தாச்சி லட்சுமி மூடப்பட்ட அந்த அறையின் ஒரு பகுதியில் இரண்டு கால்களும் விரிந்த நிலையில் படுத்துக் கிடந்தாள். லட்மியால் வேதனை பொறுக்க முடியவில்லை. அவளைச் சுற்றிலும் சிஸ்டர்கள் நாலு பேர் இருந்தார்கள். லட்சுமியின் நெஞ்சுப்பகுதிக்கு அடியிலிருந்து கை வைத்து வயிற்றை நன்றாகக் கீழ் நோக்கி தள்ளிக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் தலைப்பகுதி மெல்லமெல்ல வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே நடப்பது பற்றி அறியாத ராஜன், தன்னுடைய விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தான். மனசு வேற வேகமாக இயங்கியது.  குழந்தை வெளியே வந்து கத்தியது. குழந்தையின் சத்தம் ராஜனின் காதுகளில் சங்கீதமாய் ஒலித்தது. எமன் இதற்கு மேல் பொறுமையில்லாதவராய்  பாசக்கயிற்றினை ராஜன் மீது வீசினார்.  குழந்தை பிறந்த மகிழ்ச்சி கொந்தளிப்பில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மருத்துவரை உடனடியாக வரவழைக்கப்பட்டு ராஜனுக்கு சோதனை செய்யப்பட்டது. ராஜன் மாரடைப்பால் இறந்து விட்டான்  என்றார் மருத்துவர். அங்கிருந்தவர்களின் அழுகை ஒப்பாரியாய் மாரிப்போனது.

“பொறந்த குழந்தைய  ஒருமுறை கூடப் பாக்காம போயிட்டாரே…” “புள்ளப் பெத்துக்கிடக்குற மக லட்சுமி எழுந்து வந்து கேட்டா நா என்ன சொல்றது. கடவுளே.. என் மருமகப்புள்ளைய கொடுத்திடு. கடவுளே உனக்கு கண்ணில்லையா… இன்னும் வாழவே இல்லையே… அதுகுள்ள கூட்டிட்டு போயிட்டியே… ஆஆச்ச்ச்சு… ஆஆச்ச்சு…” என்று ஒப்பாரி வைத்தாள் லட்சுமியின் அம்மா.

ராஜன் கழுத்தில் கயிறை இறுக்கமாகக் கட்டி பூமியிலிருந்து எமலோகம் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் எமன்.  எருமை மாட்டின் வாலில் ராஜனை கட்டிப்போடப்பட்டது. கொஞ்ச நேரம் தான் இறந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனிடம் இல்லை. கொஞ்சகொஞ்சமாகத் தான் இறந்து எமனுடன் விண்ணுலகம் சென்று கொண்டிருக்கிறோம் என புரிய ஆரமித்தது ராஜனுக்கு. அழுதான். கண்ணீர் விட்டான். எமனிடன் கேள்விகள் பல கேட்டான்.

“எதற்காக என்னை இவ்வளவு சீக்கிரம் அழைத்துச் செல்கிறீர்” “நான் ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைச்சதில்லையே” “நான் என்ன தவறு செய்தேன்” “பிற்ந்த என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் சாகடித்துவிட்டீர்களே? அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் ஊரையே கொள்ளை அடிக்கின்றார்களே! அவர்களை முதலில் சாகடிக்க வேண்டியதுதானே… என்னை ஏன் பிடித்து வந்தீர்கள்” ராஜன் எமனிடம் வாதம் செய்தான். எமதர்மராஜாவின் உதட்டிலிருந்து புன்னகை மட்டுமே வந்தது. கெஞ்சியும் பார்த்துவிட்டான். மிஞ்சியும் பார்த்துவிட்டான். எமன் வாயிலிருந்து ஒரு பதிலும் வருவதாக இல்லை. சோர்ந்து போய் படுத்துவிட்டான்.

எமனுக்கு எப்படியாவது தம்முடைய வாகனத்தை பூமியை விட்டு தாண்டியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார்.  எமதர்மராஜா  சில நேரங்களில் அழுத கண்ணீரைப் பார்த்தவுடன் மனம் இளகி பிடித்து வந்த உயிரை மீண்டும் விட்டுவிடுவார். அதனால்தான் அதிசியக்கும்படியாகச் சில மனிதர்கள் இறந்து போய் மீண்டும் பிழைத்துக்கொள்கிறார்கள். செத்துப்போயிட்டார்ன்னு சுடுகாடு வரை சென்றவர்கள் கூட மூச்சுவிட்டு எழுந்து நிற்பதைக் காணமுடியும்.  இதனால் பல நேரங்களில் மூம்மூர்த்திகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் எமன். பூமியைத் தாண்டிவிட்டால் என்ன அழுதாலும் மீண்டும் உயிரானது உடலிடம் போய்ச்சேராது. ஆகவேதான் எருமை வாகனம் பூமியைத் தாண்டும் வரை ராஜன் மீது தன்னுடையப் பார்வை விழதாபடிக்கும், காதில் எச்சொல்லும் கேட்காதபடிக்கும் முகத்தை அங்கும் இங்கும் திரும்பிய படியே வைத்திருந்தார். இதோ எருமை வாகனம் பூமியைத் தாண்டிவிட்டது. இனிமேல் தான் இரக்கப்பட்டாலும் இந்த உயிர் உடலில் சேராது. அதனால் கவலையில்லை. மனம் திருப்திவுடன் பலமாகச் சிரித்தார். எமனின் சிரிப்பைக் கேட்டு அதிர்ந்து போனான் ராஜன். இப்பொழுது ராஜனின் சந்தேக கேள்விகளுக்கு எமன் பதிலளிக்கத் தயாரானார்.

“மானிடா… உன் கேள்விகளை இப்பொழுது கேள்…”

“சாக வேண்டிய வயது அல்ல எனக்கு. என் உடலில் எந்த நோயும் இல்லை. அப்படியிருக்க எதற்காக என்னைக் கொன்று அழைத்துச் செல்கின்றீர்” – ராஜன்

“எல்லாம் உன்னுடைய கர்மவினை. உன்னுடையப் பாவங்கள் உன்னைக் கொன்றுவிட்டன”

“கர்மவினையா… நான் என்ன பாவம் செய்தேன். நான் யாருக்கும் கெட்டது பண்ணினது இல்லையே. என்னால் முடிஞ்ச உதவிகளை நாள்தோறும் செய்திட்டுதான இருந்தேன். அப்புறம் எப்படி பாவம் செய்தேன்?”

“நீ பாவம் செய்ததனால்தான் இப்படி குறைஞ்ச வயசுல வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறேன்”

“எரும மாட்ட நிறுத்து எம ராஜனே. நான் பாவம் செய்யவில்லை. தவறுதலாக என்னை அழைத்து வந்துவிட்டீர்கள். உடனடியாக என் உயிரை உடலுடன் சேர்த்து வையுங்கள்” என்றான்.

“ஆ…ஆ…ஆ… மீண்டும் எமனின் சிரிப்பு. மானிடனே நீ இந்த ஜென்மத்தில் நல்லவனாய்தான் இருந்தாய். ஆனால் போன ஜென்மத்தின் பாவம் உன்னை இந்த ஜென்மத்திலும் துரத்துகிறது” என்றார் எமன்.

“என்ன போன ஜென்மத்து பாவமா?”

“ஆமாம்! கடந்த பிறவியில்  நீ செய்த பெரும்பாவம் உன்னை இன்றும் துரத்துகிறது”

“நான் செய்தது பாவமாக இருப்பின் அதற்குரிய தண்டனையை அந்தப் பிறவியிலேயே அனுபவிக்கவில்லையா? ஏன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும்?”

“ம்… சரியான கேள்விதான்? நீ அப்போதும் அனுபவித்தாய்! இப்போதும் அனுபவிப்பாய்?”

“எதற்காக இரண்டு தண்டனை எனக்கு?”

“என்ன இரண்டு தண்டனையா? யார் சொன்னது உனக்கு? உன்னுடைய மொத்த தண்டனை ஏழு ஆகும். இப்போதுதான் இரண்டு கழிந்திருக்கிறது. இன்னும் ஐந்து பாக்கி உள்ளது”

“என்னது… இன்னும் வரும் பிறவிகளிலும் தண்டனையா? அப்படி என்ன தவறு செய்தேன் எமதர்மராஜா? – என்றான் ராஜன். அவன் செய்த பாவங்களை எமன் சொல்லலானார்.

கடந்த பிறவியில் நீ பிறந்து மூன்று வயதானதும் உன்னுடைய தகப்பனார் காலமானார். அது அவருடைய வினைப்பயன். அதன்பிறகு உன்னை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் உன் தாய். மறுதிருமணம் செய்யாமல் உனக்காகவே வாழத்தொடங்கினாள். ஆண்களின் கழுகுப்பார்வையில் தப்பித்துப் படாதபாடுபட்டு தன்னையும் காத்துக்கொண்டு உன்னையும் நன்கு வளர்த்து வந்தாள். உன்னை ஆளாக்கி திருமணமும் செய்து வைத்தாள். உன் மனைவி பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தாள். அவளுக்கு நீதான் உலகம். உன் பிள்ளைகள் நட்சத்திரம். ஒருநாள் வயதாகி படுத்தப்படுக்கையாகி விட்டாள். காலமாற்றத்தால் உன் மனைவி மாமியாரைக் கொடுமைப்படுத்த ஆரமித்தாள். கணவனாகிய உன்னிடம் அம்மாவைப்பற்றி தரக்குறைவாகப் பேசினாள். நீ  மனைவி மீது கொண்ட மோகத்தால் எல்லாமும் மறந்து பெற்றெடுத்த அன்னையை வெறுத்து ஒதுக்கினாய். உன் ஆயையும் நீ பெற்றெடுத்த பிள்ளைகளின் ஆயையும் கழுவிய அந்தத்தாய்யின் மலத்தை கழுவ ஆளில்லை.

“கண்டவளுக்கெல்லாம் பீ… மூத்திரம்… அள்ளவா என்னை எங்க அப்பனும் ஆத்தாவும் பெத்துப்போட்டுருக்காங்க” சிலிர்த்துக்கொண்டாள் மருமகள்.

சரியானப் பராமரிப்பு இல்லாதனால அவளின் உடம்புகளில் கொப்புளம் ஏற்பட்டது. கொப்புளத்திலிருந்து சீல் வடிந்தது. கொஞ்ச நாளுக்கு அப்புறம் அப்புண்களிலிருந்து புழு நெளிய ஆரமித்தது. அத்தாயின் மீது கடும் துர்நாற்றம் வீசியது. மகனாகிய நீ உன் அம்மாவை யாருமில்லாக் காட்டிலே தனியாக விட்டுப்போனாய். வெயிலின் தாக்கத்தினால் அன்றே உடல் வெந்து கண்ணீருடன் இறந்தாள். அத்தாயின் கண்ணீரே உன்னை இந்த அளவிற்கு கொண்டுபோய் விட்டுள்ளது. நீயும் ஒருநாள் கிழவனாவாய். உனக்கும் அந்நிலைமை உருவாகலாம் என்றார் எமன். ராஜனுக்கு தான் செய்த பாவவினைகள் புரிந்தது. தனக்கு கொடுக்கப்பட்டத் தண்டனை சரியானதுதான் என்பதை உணர்ந்தான். அதற்குள் இருவரும் எமலோகம் வந்து சேர்ந்தார்கள்.

எமன் வருவதைக் கண்ட எமகாத வீரர்கள் ஓடி வந்தார்கள். எமனை வணங்கிய அவர்கள், ராஜனைப் பிடித்துக்கொண்டார்கள்.  

“எமகாதர்களே… எல்லாம் சரியாக நடக்கிறதா? என்றார் எமன்.

“நல்லபடியாக நடக்கிறது மகாராஜா. இவனை உடனடியாக அவ்விடத்தில் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்” என்றார்கள் எமகாதர்கள்.

கொப்பரையில் எண்ணை ஊற்றப்பட்டது. விறகு வைக்கப்பட்டு தீ மூற்றப்பட்டது. எண்ணையினுள்ளே ராஜன் இறக்கப்பட்டான். கொஞ்சகொஞ்சமாகச் சூடு பரவியது. அந்நேரத்தில் ராஜனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

“எமதர்மராஜா… எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.

“உன்னுடைய சந்தேகத்தை இப்போதே கேட்டுக்கொள். இல்லையெனில் அடுத்த ஜென்மத்தில்தான் என்னை பார்க்கவும் பேசவும் முடியும்” சிரித்துக்கொண்டே சொன்னார்.

“நான் செய்த குற்றத்திற்கு ஏற்றத் தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மனைவியாகிய அவளுக்குத் தண்டனை இல்லையா” என்றான்.

பலமாக சிரித்தார் எமன். “வினையின் பயன். விதியின் விளையாட்டு யாரையும் விடாது. இன்று உன் மனைவியாய் இருக்கின்றாளே லட்சுமி அவள்தான் உன்னுடைய முந்தைய பிறவியிலும் மனைவி ஆவாள். யாரை வெறுத்து ஒதுக்கினாளோ! யாருடைய மலத்தை தொட தயங்கினாளோ! அவளே உன் மகளாய் பிறந்துள்ளாள். லட்சுமிதான் அக்குழந்தையின் மலத்தை துடைக்க வேண்டும்.  ஆம்! உன்னுடைய தாய்தான் உனக்கு மகளாய் பிறந்துள்ளாள். கணவனை இழந்த உன் தாய் அனுபவித்த அனைத்தும் அவளும் அனுபவிப்பாள். வேண்டாமென்று ஒதுக்கிய தாயை இன்று அவளே அணைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பாள். உடல் என்பது வடிவம் மட்டுமே. உயிரால் விளையும் ஆன்மாவே என்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.

ராஜனின் உடல் எண்ணையில் கரைந்து போய் அடுத்தப் பிறவிக்கானக் கருப்பைக்காகக் காத்திருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்கள்

முன்னுரை

            150 கலிப்பாக்களைக் கொண்டது கலித்தொகை. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒவ்வொரு புலவராக ஐந்து திணைகள் பற்றியும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி-கபிலர், மருதம்-மதுரை மருதனிளநாகனார், முல்லை-சோழன் நல்லுருத்திரன், நெய்தல்-நல்லந்துவனார். ஆகியோர் பாடியுள்ளனர்.

            கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார். ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் புலவர்களால் பாராட்டப் பெறுவது கலித்தொகை. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்களை ஆராயலாம். பாலைக்கலியில் 35 பாடல்கள் உள்ளன.

விழுமியம்:

            வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உரைப்பதை ‘விழுமியம்’ என்ற சொல்லால் குறிப்பர்.

பாலைப் பாதை:

            பாலையின் கொடுமையை இந்நூலைப் போல விரிவாகப் பிற நூல்களில் காணமுடியாது. பாலை வழியில் செல்பவர்களின் நாக்கு வறண்டு விடுகின்றது. தண்ணீர் கிட்டவில்லை. துயரால் தடுமாறுகின்றார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது. அக்கண்ணீர் நாவை நனைத்துச் சிறிது ஆறுதல் அளிக்கிறதாம்.

                        “உள்நீர் வறப்பப் புலம் வாடு நாவிற்குத்

                                தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந்துயரம்

                                கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு. (பாலைக்கலி, பாடல் எண்-5)

            இத்தகைய காட்டில் ஆறலைக் கள்வர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வழிச் செல்பவர்களை மறித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளை அடிப்பதற்குப் பொருள் இல்லை எனில், வழிச் செல்பவர்களைக் கொன்று அவர்களின் உடல்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்கின்றார்கள்.

                        “கடுங்கண் மறவர் தாம்

                        கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்

                        துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வெளவலின்

                        புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆரிடை” (பாடல்-3)

எவ்வளவு கொடுமை! இக்காட்டில் பறவைகள் செல்லவில்லையாம்.

அன்பின் மாட்சி:

            பொருளீட்டச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி தடுத்து நிறுத்துகிறாள் தோழி. அப்போது தலைவியின் அன்பினைப் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்.

            “மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்

            கானம் – தகைப்ப, செலவு” (பாடல்-2)

            “உயிர் வாழாள், நீ நீப்பின்”, என்று தலைவியின் அன்பு உணர்வைத் தலைவனிடம் எடுத்துரைக்கிறாள் தோழி.

            “பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?

            ஓழிக, இனி பெரும! நின் பொருட் பிணிச் செலவே”  (பாடல்-3)

என்கிறாள் தோழி. தன்னையும் உடன் அழைத்துச்செல்க என வேண்டுகின்றாள் தலைவி.

            “துன்பம் துணையாக நாடின், அது அல்லது

            இன்பமும் உண்டோ, எமக்கு?”

            இணைந்து செல்லும் அந்த இன்பத்தின் முன் துன்பமும் பொறுத்தற்கு எளிதேயாகும் என்ற தலைவியின் உள்ளப்பண்பை இதன் வழி உணர முடிகிறது.

நிலையற்ற பொருள்:

            பொருள் நிலையற்றது. செல்வம், இளமை, யாக்கை நிலையாமை குறித்துப் பாலைக்கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன. பொருளோடு திரும்பி வரும்போது, அதற்குள் போய்விடும் தலைவியின் உயிரை மீட்டுத் தரும் சக்தியும் பொருளுக்கு உளதாமோ? என்கிறாள் தோழி.

“இன் உயிர் தருதலும் ஆற்றுமோ

                        முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே” (பாடல்-6)

தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி. இல்வாழ்வு நெறியே பொருள் என்கிறாள் தோழி.

            “பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்

            திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?”  (பாடல்-7)

என்கிறாள் தோழி.

                                    “மன்னவன் புறந்தர வருவிருந்து ஒம்பி,

                                     தன் நகர் விழையக் கூடின்,

                        இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே”        (பாடல்-7)

            விருந்தினரைப் பேணி, தலைவனுடன் கூடிக் கலந்து இன்புறுதலே தலைவிக்குச் சிறப்பு. நிலையற்ற பொருளும், தலைவியின் பால் பெறுகின்ற இல்லற இன்பமும் ஒன்றேயாகும் என்கிறாள் தோழி.

            வாழ்க்கைக்குத் தேவை பொருளை விட இல்லற வாழ்வில் பிரியாது கூடி வாழ்ந்து இணைந்து நிற்றலே என்பதைப் பாலைக்கலிப்பாடல் கொண்டு அறிய முடிகிறது.

அறம் உரைத்தல்:

            முக்கோற்பகவர் வழி அறம் உரைக்கப்படுகிறது. பெண்ணிற்குப் பிறந்த இடத்துப்பாசம் இல்லறக்கடமை தொடங்கும் போது பின் சென்றுவிடுவது இயல்பு என்பதைப் பாடல் குறிப்பிடுகிறது.

                        “பல உறு நறுஞ்சாந்தம், படுப்பவர்க்கு அல்லதை,

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்”     (பாடல்-8)

சந்தனம் மலையிலே பிறந்தாலும், மலைக்குப் பயன்தராது, பூசிக்கொள்பவர்க்கே பயன்தரும். அது போல உம் மகளும் ஓர் ஆடவனுக்குத்தான் பயன் நல்குவாள் என்கிறது பாலைக்கலி. குடும்ப வாழ்வை, நீதிகள் கூறி இணைத்து வைக்கும் பாங்கினை இப்பாடல் தெளிவிக்கிறது. முத்து, நீரில் பிறந்தாலும் நீருக்கு உதவா, இசை யாழிலே பிறந்தாலும் யாழுக்கு உதவா என்பன போன்ற நீதிகள் வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தலைவியரின் அக வாழ்வு நெறி குறித்து இப்பாடல் உரைக்கிறது.

                        “கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

                        சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

                        அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே”.

தலைசிறந்த கற்பினள் நும் மகள். அவளுக்கு எத்துன்பமும் செய்யாதீர். சிறந்தவனான தன் தலைவனோடு அவள் சென்று விட்டாள். அவர்கள் கொண்ட முடிவு சற்றும் அறநெறி தவறாத ஒழுக்கம் என்பதை அறிக என்கின்றனர் முக்கோற்பகவர். (முத்தலைக்கோல் ஏந்திய சான்றோர்)

நம்பிக்கைகள்:

            தலைவன் இன்னமும் வரவில்லையே என ஏங்கிய தலைவிக்குத் தோழி ஆற்றுவிக்கிறாள். அப்போது பல்லி ஒலி செய்கிறது. இது, தான் சொல்வதை ஆமோதிப்பது போல் உள்ளது. அச்சமயம் உன் இடக்கண்ணும் துடிக்கிறது. தலைவர் வந்துவிடுவார் என்கிறாள் தோழி. இதன் வழி பல்லி ஒலி, பெண்கட்கு இடக்கண் துடித்தல் ஆகிய நம்பிக்கைகளை அறிய முடிகிறது.

                        “பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

                        நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே” (பாடல்-10)

என்கிறாள் தோழி.

இளமை நிலையாமை:

            தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லல் நல்லதன்று. இளமை நிலையில்லை. பொருளீட்டலை விட தலைவியோடு இணைந்து, பிரியாது வாழும் வாழ்வே நல்வாழ்வு என்கிறாள் தோழி.

                        “இளமையும் காமமும் நின் பாணி நில்லா”…..

                        கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு

                        மாற்றுமை கொண்ட வழி”     (பாடல்-11)

            கூற்றமும் மூப்பும் உளவென்ற உண்மையை மறந்தவரோடு ஒன்றாகக் கூடிப் பொருள் தேடிப் போக எண்ணுகிறாய். அது நன்மக்கள் செல்லும் வழியன்று. அறநெறிக்கு மாறான பாதை எனக்கூறி தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி.

                        “கவவுக் கைவிடப் பெறும் பொருட் திறத்து

                         அவவுக் கைவிடுதல், அது மனும் பொருளே”    (பாடல்-13)

பொருளின் மீதுள்ள அவாவைக் கைவிடுவாயாக. அதனைக் கைவிட்டுத் தலைவியுடன் பிரியாமல் கூடியிருப்பதே நிலையான உண்மைச் செல்வம் என்கிறாள் தோழி.

“செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?” (பாடல்-14)

            செம்மையான வழிகளிலிருந்து மாறுபட்டுச் சென்று பொருள் தேடுவார்க்கு, அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாக விளங்கும் என உரைக்கிறாள் தோழி. நல்வழியில் பணம் ஈட்டல் வேண்டும் என்ற சிறந்த நீதியை இப்பாடல் சுட்டுகிறது.

                        “இளமையும் தருவதோ, இறந்த பின்னே?”

            இளமை நிலையில்லை என்பதைக் கூறுகிறது இப்பாடல்., அகவாழ்வு தான் புறவாழ்வான பொருள், கல்வி, தொடர்பு ஆகியனவற்றினுள் சிறந்தது என்கிறது இப்பாடல்.,

                        “பொய் அற்ற கோள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ,

                        “பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப்படர்ந்து, நீ”

என்கிறாள் தோழி.

                        “ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

                         ஓன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிது அரோ

                        சென்ற இளமை தரற்கு”.                                  (பாடல்-17)

எனக் கூறுகிறாள் தோழி.

கற்பின் பெருமை:

            மழையும், ஞாயிறும், காற்றும் வேண்டுமோ என்றவளுக்கு, “உன் கற்பின் பெருமையால், அறக்கடவுள் தானே சென்று உதவும். அப்படியிருக்கும்போது, நீ இறைவனிடம் வேண்டுவது ஏன்?” என்று தலைவியின் கற்பின் உயர்வைக் கூறி மனக்கலக்கத்தைப் போக்குகிறாள் தோழி.

                        “தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் – தேமொழி!

                        வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்” (பாடல்-15)

இதன்வழி தலைவியின் கற்பின் உயர்வினை எண்ண முடிகிறது.

            எப்பொருள் இன்பத்திலும் தன் காதலுடன் கூடிப்பெறும் அக இன்பம் ஒன்றே சிறப்பு. சென்று போன இளமையை மீட்டுத்தருவது எவர்க்கும் அரிது என்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது.

            இளமை நிலையில்லை என்பதை மேற்கண்ட பாலைக்கலிப் பாடல்கள் விளக்கியுரைக்கின்றன.

சொல் தவறாமை:

            ஆசை மிகுந்த போது புகழ்ந்தாய், இப்போது ஒதுக்கிச் செல்கிறாய். தலைவனே நீ, சொன்ன சொல் போற்றாதவன் என இடித்துரைக்கிறாள் தோழி.

                        “உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

                        கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்

                        பண்டும் இவ் வுலகத்து இயற்கை” (பாடல்-21)

பொருளைக் கடனாகப் பெறும்போது காட்டிய முகபாவமும், திரும்பத் தரும்போது தோன்றும் முகபாவமும் மாறுபட்டுத் தோன்றல் உலக இயற்கை என்பதை இப்பாடல் தெளிவிக்கிறது. சொல் தவறக்கூடாது என்பதை இப்பாலைக்கலிப் பாடல் வழி அறிய முடிகிறது.

இழிவான செயல்:

            நட்பாயிருக்கும் காலத்திலே அவரின் இரகசியச் செய்திகளை அறிந்து கொண்டு, பின்னர் பிரிந்த காலத்தில் பிறருக்கு அந்த இரகசியங்களை வெளிப்படுத்துவது இழிவு.

“பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம்மறை

 பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்”?(பாடல்-24)

செல்வம் உடையவராக இருந்தபோது உறவு கொண்டு அனுபவித்து, பின் அவர் வறுமையுற்ற போது ஒதுங்கிச் செல்லும் உணர்வற்றவரின் உறவு சிறப்பானதன்று என்கிறது பாலைக்கலி.

                        “செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்

                        ஓல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?”   (பாடல்-24)

எனவே, தலைவனே தலைவியை விட்டுப்பிரியாதே. மழை பெய்யாது போனால் உலகு வருந்தும். அதுபோல தலைவி உன் அருள் இல்லையெனில் வருந்துவாள் எனக்கூறி வாழ்வில் கூடியிருத்தலைப் புலப்படுத்துகிறது இப்பாடல்.

பொறுமை தேவை:

            அவசரப்படாது பொறுமையுடன் இருப்பின் நல்லது கிட்டும். மனம் வெதும்பிக் குயிலையும், தலைவரையும் வெறுத்துப் பேசாதே. விரைந்து வருவார் என்கிறாள் தோழி.

            “புரிந்து நீ எள்ளும், குயிலையும், அவரையும் புலவாதி”        (பாடல்-32)

தலைவர் வருவார் என நற்சொல் கூறி நெறிப்படுத்தும் தோழியின் செயல் உணரற்குரியது.

முடிவுரை

            பாலைத் திணை வழி பிரிவை உணர்த்தும் பாலைக் கலிப்பாடல்கள் சமூக விழுமியங்களைத் தெளிவாக உரைத்துள்ளன. அவ்விழுமியங்களை மனதிற் கொண்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது உறுதி.

துணை நின்ற நூல்

            கலித்தொகை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. திருத்திய பதிப்பு-1982.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ச.ஈஸ்வரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தேசியக்கல்லூரி (தன்னாட்சி),

திருச்சிராப்பள்ளி.

பாலம் (சிறுகதை)

பாலத்திற்கு முன்னால் இருக்கும் மனித சிலைக்கு நடந்து போகின்றவர்கள், வாகனத்தில் போகின்றவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு ஐந்து நிமிடம் நின்று மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதைப் பார்த்த அந்த ஊருக்குப் புதியதாக வந்த ஒருவர் அதே ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் கேட்டார்.

            பெரியவர் சொல்லத்த தொடங்கினாhர். இந்த ஆற்றன் குறுக்கே பாலம் கட்டிய பிறகுதான் இந்த ஊரில் படித்தவர்கள் அதிகமாக உள்ளார்கள். பெரிய பெரிய வேலையில் உள்ளார்கள். இதற்கு காரணம் யார் தெரியுமா இதோ சிலையாய் நிற்கிறாரே அவர்தான்.

            அவர் அப்படி என்ன பெரியதாக செய்தார் என்று புதியவர் கேட்டார். அதற்கு பெரியவர் மேலும் சொல்லத் தொடங்கினார். இந்த ஊருக்குப் பக்கத்து நகரத்திற்கும் உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டர் தான். ஊருக்கும் நகரத்திற்கும் இடையில் வற்றாத ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலம் கட்டுவதற்கு முன்பு அந்த நகரத்திற்கு போக வேண்டும் என்றால் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

            மழை காலங்களில் அதிகமாக நிர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடு;ம்போது மக்கள் ஆற்றைக் கடந்து நகரத்திற்கு போக முடியாமல் தத்தளிப்பார்கள்.

            மழைகாலங்களில் நகரத்திற்கு செல்லவேண்டுமானால் பத்துக் கிலொ மீட்டர் சுற்றி போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

            காய் கறிகள் வாங்க விற்க, பிள்ளைகள் பள்ளிக்குப்போக, மக்கள் ஊருக்கு சேரிக்குப் போக நோயாளிகள் மருத்துவ மனைக்குப்போக எல்லாவற்றிற்கும் இந்த ஊர் மக்கள் அந்த நகரத்தை நம்பியிருந்தது. பள்ளி, மாணவ மாணவிகள் ஆற்றைக் கடந்து செல்லும்போது பள்ளி சீருடையைப் பையில் வைத்து, பையைத் தலைமீது வைத்துக்கொண்டு கழுத்துவரை வரும் தண்ணீரில் நடந்து கரையை அடைந்து சீருடையை மாற்றிக்கொள்வார்கள். சில நேரம் கால் தவறி ஆற்றில் விழுந்தால் புத்தகமெல்லாம் நனைந்துவிடும். அப்போது மாணவர்கள் மற்றும் இதை பார்த்தவர்கள் நெஞ்சம் நீரில் உடல் நனைந்ததைவிட கண்ணீரில் நனைந்தது அதிகம். சில பெற்றோர்கள் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற ஆசையில் ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்த்தி காலையிலும் மாலையிலும் தன் தோளின் மீது ஏற்றிக்கொண்டு போய் கொண்டு வருவார்கள். ஆற்றில் கால் தவறி விழுந்தால் நீந்திக்கொள்வதற்காக சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்கள்.

            ஆற்றில் எப்போது தண்ணீர் அதிகமாக, குறைவாக வருகிறது என்று யாருக்குமே nதியாது. ஒவ்வொரு முறையும் மக்கள் ஆற்றைக் கடக்கும்போது தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். உயரமான மாணவர்களிடம் தன் பையைக்கொடுத்துவிட்டு இளைய மாணவர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து, நனைந்த உடையை கழற்றிவிட்டு பள்ளி சீருடையை மாற்றிக்கொண்டு நனைந்த துணியை பிழிந்து தன்மீது போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்று அதை அங்கு இருக்கும் செடிகொடி மீது காய வைத்து மீண்டும் மாலையில் அதை எடுத்து ஆற்றுப்பக்கம் வந்ததும் பள்ளி சீருடையைக் கழட்டிவிட்டு அதை மாற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து வீட்டிற்கு வருவார்கள். இது வழக்கம் போல் நடக்கும். இது மக்களுக்கு பழகிப்போனதாகவே இருக்கும்.

            ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் தண்ணீர் குறையும் வரை பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் இறங்கி வந்தால் ஆளை அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு முறை ஒருவர் மாட்டை மேய்ச்சலுக்காக காலையில் ஆற்றைக் கடந்து ஓட்டிக்கொண்டு போய் மேய்த்துக்கொண்டு ஆற்றுக்கிட்ட வருவதற்குள் இருட்டாகிவிட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் மாட்டை ஓட்டிக்கொண்டு இறங்கிவிட்டார். அவரையும், மாட்டையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் மனம் கலங்கிப்போனார்கள்.

            இந்த ஆறு எத்தனையோ பேரை பலிவாங்கிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லாத காரணத்தால் பக்கத்து வீட்டுக் கைக்குழந்தை வைத்திருந்த ஒருத்தி குழந்தையோடு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ஆற்றில் அழைத்துச் செல்லும்போது அவர்களையும், உடல் நிலை சரியில்லாக் குழந்தையை எடுத்துச்சென்ற தாயையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. மேலும், வரம் வாங்கி பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து பள்ளிக்கு அனுப்பும்போது ஆறு அடித்துக்கொண்டு போனதை அறிந்த ஒரு தாய் துயரம் தாங்காமல் மகன் சென்ற இடத்திற்கே நான் போய்விடுகிறேன் என்று ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட துயரம் ஊரை உளுக்கியது.

            ஊரில் ஒருவர் தன் மகனை வெளியூரில் படிக்க வைத்தார். அவன் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக தன் ஊருக்கு வரும்போது ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த அவன் அப்பா பட்ட துயரத்திற்கு அளவே கிடையாது.

            ஆறு அந்த ஊரில் உள்ளவர்களை ஒருவரை அடுத்து ஒருவரை பலி வாங்கிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் பார்த்த ஊர்மக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அடுத்த ஊரில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தார்கள். தலைவரும் படித்து பார்த்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்றுகூறி அவர்களை அனுப்பினார். இதுபோல பல தலைவர்கள் மாறியும் பாலம் கட்டவில்லை. இது ஊர் மக்களுக்கு வருத்தமாகவே இருந்தது.

            மேலும், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியும், சாலை மறியல் செய்தும் பலன் கிடைக்காமல் ஏமாந்து போனார்கள். முதலமைச்சருக்கு மனு அனுப்பியதில் பலன் கிட்டவில்லை. இதையெல்லாம் பார்த்து வந்த அதே ஊரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அந்த ஆற்றை கடந்துபோய்தான் படித்தான். அவனோடவே முதல் வகுப்பிலிருந்து படிக்கும் ஒரு மாணவன் அவனுக்கு நண்பனாக இருந்தான். அந்த நண்பனுக்கு அப்பா, அம்மா யாருமே கிடையாது. அனாதை விடுதியில் இருந்து தங்கி படித்து வந்தான். அந்த நண்பனை அவன் அப்பா அம்மாவிடம் கூறி தன் வீட்டிற்கே அழைத்துக்கொண்டு இரண்டுபேரும் ஆற்றைக் கடந்துபோய் படித்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து செல்லும்போதும் வரும்போதும் நாம் நல்லா படித்து மாவட்ட ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிவிடலாம் என்று இரண்டு பேரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்த நண்பன் நான்தான் முதலில் ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு பாலம் கட்டுவேன் என்று கூறுவான். அதற்கு அவன் யார் பாலம் கட்டினால் என்ன நம்ம ஊருக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்க போகுது என்று கூறினான்.

            ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று நண்பன் போகவில்லை. அவன் மட்டும் வருத்தத்தோடு பள்ளிக்குப் போனான். வீட்டிற்கு மாலையில் வரவில்லை. அவன் கேட்டான் அதற்கு அவன் அப்பா, அம்மா உன் நண்பனை வெளிவூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்று கூறினார்கள். நண்பனும் அவனுடைய அப்பாவிடம் சென்று அப்பா நானும் நண்பன் படிக்கும் பள்ளியில் படிக்கிறேன் என்னையும் அங்கே சேரத்திவிடுப்பா என்று கேட்டான். அதற்கு அவனுடைய அப்பா வேண்டாம்பா நம்மிடம் பணம் வசதி இல்லை விடுதியில் தங்கி படிக்கவேண்டியிருக்கும். அதனால் அவன் மட்டும் படிக்கட்டும் என்று மனவேதனையோடு கூறினார். அதற்கு அவன் பெரிய பெரிய நகரத்தில் நிறைய அரசு விடுதி இருக்கிறது அதில் தங்கி படிக்கிறேன். அப்படி இல்லை என்றால் நான் இங்கே படித்தால் என்னையும் ஆறு அடித்துக்கொண்டுப் போகலாம் நாளை உன்னையும் அடித்துக்கொண்டுப் போகலாம் இது நம்ம ஊருக்க கடவுள் எழுதிய விதி இதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.

            மேலும், அதற்கு அவன் அப்பா விதியை மாற்ற முடியாததை நான் என் உயிரைக் கொடுத்தாவது இந்த விதியை மாற்றுவேன். என்னை வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சினான். அதற்கு அவன் அப்பா ஊரில் உள்ள படித்த ஒருவரை அழைத்துக்கொண்டு வெளியூரில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். அவன் அப்பாவிடம் அப்பா நான் நல்லா படித்து அரசு வேலைக்குபோகும் வரை நான் ஊருக்கு வருவதில்லை என்று கூறி அப்பாவை வழி அனுப்பி வைத்தான்.

            அதற்கு பிறகு அவன் பள்ளியிலும் தங்கிய அரசு விடுதியிலும் நண்பனைத் தேடி பாரத்தான் கிடைக்கவில்லை. சரி அவன் வேற பள்ளியில் படித்து வேற விடுதியில் தங்கி இருப்பான் என்றாவது ஒரு நாளைக்கு பார்ப்போம் என்று நினைத்து நல்ல படித்து பள்ளியில் முதலிடத்தில் வந்தான். பள்ளிக் கல்லூரி படிப்பு முடித்து ஆட்சியர் பணிக்கு பயிற்சி எடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று நண்பன் இருந்த அதே மாவட்டத்திற்கு ஆட்சியாளராக பணிபுரிய வந்து முதன் முதலாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேலையைத் தொடங்கினார். இவன் ஆட்சியாளராக ஆனதும் ஊரே பெரிதும் வரவேற்றன. அவனுடைய நண்பனின் வயதான அப்பா இதைப் பார்த்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

            பாலத்தின் வேலை மிக வேகமாக நடந்தது பாலம் கட்டி முடிந்ததும், யாரையும் இந்த ஆறு பலி வாங்காது என்று ஊர் மக்கள் நினைத்தார்கள். அவனும் எண்ணினான். பாலத்திற்கு திறப்பு விழா ஏற்பாடு நடைபெறுகிறது. ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள் ஒலிபெருக்கி பாடிக்கொண்டிருந்தது. வாழைமரம் பாலத்தின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருந்தது. காகிதப்பூ தோரணம் ஊர் முழுவதும் கட்டியிருந்தார்கள். தென்னையின் கீற்றுகள் அங்கங்கே தொங்கப்பட்டு இருந்தது. ஊர் மக்களும் புதிதாக சுதந்திரம் கிடைத்ததுப் போல் இருந்தார்கள். சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கம் ஊர்க்காரர்களும் பாலத்தின் திறப்பு விழாவிற்கு வந்து கூடியிருந்தார்கள்.

            பாலத்தைத் திறப்பதற்கு ஆட்சியாளரை அழைத்தார்கள், அவர் வந்ததும் எல்லோரும் கடவுளை போல் கை கூப்பி வணங்கினார்கள். ஆட்சியாளர் பாலத்தை திறந்து வைத்தபோது எல்லோரும் இந்த ஆறு இனிமேல் யாரையும் பலி வாங்காது என்று கைத்தட்டி மகிழ்ந்தார்கள். ஆட்சியாளர் பாலத்தின் வழியே நடந்து வரும்போது தன் நண்பனுடைய அப்பாவிடம் என் நண்பன் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் நீ ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் பள்ளிக்கு போகாமல் இருந்தபோது உன் நண்பன் மட்டும் பள்ளிக்குப் போக ஆற்றில் இறங்கியபோது தண்ணீர் வேகமாக வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது. இதை உனக்கு சொன்னால் நீயும் நண்பன் போன இடத்திற்கு நானும் போய்விடுகிறேன் என்று கூறி ஆற்றில் குதித்து விடுவாய் என்று உன்னிடம் சொல்லாமல் வெளியூர் பள்ளியில் சேர்த்து விட்டோம் என்று பொய் கூறினேன். அதற்கு என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

            அவன் அப்பா கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தான், கண்களில் கண்ணீர் ததுமபின. இனிமேல் இந்த ஆறு என் நண்பனை பலி வாங்கியது அல்லாமல் நீ யாரையும் பலி வாங்காது என்று கூறி பாலத்தின் சுவரைப் பிடித்து இந்த ஆறு தான் என் நண்பனை பலிவாங்கியது என்று மனதுக்குள் எண்ணி எட்டி பார்த்தார். கால் தவறி ஆற்றில் விடந்துவிட்டார். ஆறு அடித்தக்கொண்டுபோய்விட்டது. இந்த ஆறு ஆட்சியாளரையும் பலி வாங்கிவிட்டதே என்று மக்கள் எல்லோரும் கத்தி, கதறி யார் பெற்ற மகனோ நம்ம ஊருக்குப் பாலம் கட்டி திறந்து வைத்த பிறகு ஆற்றில் விழுந்துவிட்டாரே என்று கூறி புலம்பினார்கள் அதற்கு அப்புறம் ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நமக்கு பாலம் கட்டித்தந்தவர் கடவுள் மாதிரி என்று கூறி பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைக்க வேண்டும் என்று பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைத்தார்கள் அன்று முதல் சிலையை கடக்கும் முன்பு அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு போகிறர்கள். இந்த கதையை கேட்ட புதியவர் கண்ணீர் விட்டார். இதை பார்த்து ஏன் அழுகிறாய் என்று கதை கூறிய பெரியவர் கேட்டார். அதற்கு புதிதாக வந்தவர் அங்கு சிலையாக நிற்கக் கூடியவர் என் நண்பன் தான் என்று கூறி, நான் ஆற்றில் அடித்துக்கொண்டு போகும்போது வெகு தூரம் போய் ஒரு செடியில் மயக்க நிலையில் மாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த வசதி படைத்த ஒருவர் என்னை மருத்துவ மனைக்கு கொண்டுபோய் காப்பாற்றினார். அவரிடம் நான் எங்க ஊருக்குப் போவதில்லை மீண்டும் அந்த ஆறு என்னை அடித்துக் கொண்டு போய்விடும் என்று கூறினேன். அவரும் வெளியூரை சேர்ந்ததனால் என்னை அவருடைய ஊரிலே பள்ளியில் சேர்த்து நல்ல படிக்க வைத்து ஆட்சியாளராக ஆக்கினார். இப்போது இந்த மாவட்டத்திற்கு புதிதாக வந்த ஆட்சியாளர் நான் தான் என்று கூறி நானும் இதே ஊரில் பிறந்தவன் தான் இந்த ஊர் மாற்றமடைந்திருக்கிறது என்று உன்னிடம் கேட்டான் என்று கூறி முடித்து தன் நண்பனுடைய சிலைக்கு பக்கத்திலுள்ள பூக்கடையில் பூ மாலை வாங்கி போட்டு மரியாதை செலுத்திவிட்டு அவனுடைய சேவையைத் தொடங்கினான்.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்க

1.மறக்க முடியுமா (சிறுகதை)

2.இருளில் ஓர் அலறல் | சிறுகதை

இருளில் ஓர் அலறல் | சிறுகதை

            ஊர் ஓரம் மலைப் பக்கம் ஒரு சின்னக் குடிசை. அந்த குடிசையில் விளக்கின் ஒளியை தவிர வேறு எந்த ஒளியும் இல்லை. இருள் சூழ்ந்திருந்தது. எங்கோ ஊரில் கொஞ்சம் ஆரவாரம் கேட்கிறது.

            அவள் மட்டும் தென்னை ஓலையால் பின்னப்பட்டக் கதவைப் பிடித்துக்கொண்டு கால் கடுக்க நின்று எதிர்பார்த்தக் கொண்டிருந்தாள் பார்த்து பார்த்து அவள் இருவிழிகளும் தேய்ந்தனஇ மனதில் ஏதோ பயம். அன்று நிலவும் விண்மீண்களும் ஒன்று கூட வெளியே தலைகாட்டவில்லை. நிலவு குளிர்எடுக்க மேகத்தைப் போர்த்திக் கொண்டது. அவளுக்கோ துக்கம் தொண்டையை இறுக்கிப்பிடித்தது.

            ஊரில் கேட்ட கொஞ்சம் ஆரவாரமும் கேட்கவில்லை. பயம் அவளைத் துரத்த அப்போது ஒரு சத்தம். அந்த சத்தம் யாரோ நடந்து வருவது போல் அவளுக்குக் கேட்கிறது. காதையும் பார்வையையும் அந்தப் பக்கம் திருப்பினாள். இருளில் ஓர் உருவம். மட்டும் தெரிந்தது அப்போது அவளுக்குக் காத்திருப்பது சுகமாகத் தெரிந்தது. நிலவுக்கு வியர்வை கொட்ட தன் மேகப் போர்வையை எடுத்தது. நிலவு தனக்கு விடுதலை கிடைத்ததுபோல் எங்கும் ஒளியை வீசினான். வெளிச்சத்தில் அவள் எதிர்பார்த்த உருவம் தெரிந்தது அவளுக்குப் பயம் பறந்துபோய் சிறகு முளைப்பதுபோல் இருந்தது.

            அந்த உருவம் அவளுடைய ஆசை நாயனக். அவன் பக்கம் வந்ததும் ஏங்க இவ்வளவு ஆநரம் என்று கேட்டாள். இது என்ன புதுசு நான் எப்போதும் வருவதுபோல்தான் வருகிறேன். இன்றைக்குக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நானும் நகரத்தில் கூலி வேலையை முடித்து விட்டு ஐந்து மைல்கள் நடந்து வர வேண்டும் என்றான். அதற்கு அவள் நான் பயந்தே போய்விட்டேன். உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள். இனிமேல் வேகமாக வந்திருங்க என்றாள். (அவன் வேகமாக வருவதற்கு என்ன வாகனமா) சரி சோற்றைப்போடு எனக்குப் பசிக்குது என்றான்.

            அவளும் சோற்றை ஆக்கி வைத்தவிட்டு அவனுக்காக காத்திருந்தாள். வயிறு பசியெடுக்க அவர் வரட்டும் சாப்பிடலாம் என்று பசியை அடக்கி வைத்திருந்தாள்.

            கடப்பாரையைப் பிடித்து பிடித்து காப்பு ஏறிய கையைப் பார்த்து முத்தமிடுவாள். அது அவனுக்கு அன்று நாள் முழுவதும் கஷ்டப்பட்டது அத்தனையும் மறந்துபோகும்.

            அவர்கள் அந்த ஊரிலே அனாதையாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கென்று யாரும் உறவினர்கள் கிடையாது.

            காலையில் அவள் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அவனை எழுப்பி வாங்க குளிங்க வேலைக்கு நேரமாச்சு என்பாள். அவள் உடனே எழுந்து குளித்துவிட்டு பாசமாக பரிமாறிய சோற்றைச் சாப்பிட்ட பிறகு மதிய உணவு எடுத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டுப் புறப்படுவான். அவள் வாசப்படி ஓரமாய் அவன் மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தக் கொண்டே இருப்பாள்.

            அவன் வேலைக்குப்போன பிறகு. அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். அவன் போன பிறகு திரும்பி வரும் வரைக்கும் அவனுக்காகவே காத்திருப்பாள். அவன் கால்கள் நடந்து நடந்து தேய்ந்துப் போயின. அவை அவளுக்காகத் தேய்கிறது என்று சுகமாக நினைப்பாள்.

அவன் எவ்வளவு வேகமாக வந்தாலும் இருட்டாகிவிடும். அதற்கு வேலி ஓரத்தில் இருக்கும் மின்மினிப் பூச்சி வெளிச்சத்தைத் தரும். அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள குழந்தை வந்துவிட்டது. அவள் வேலையைச் செய்ய பையன் கை விடவில்லை என்றால் வாசலில் உள்ள வேப்பமரத்தில் தூளிகட்டி  பையனை அதில்போட்டு விட்டு தன் வேலையைச் செய்வாள். மரத்தில் இருக்கும் குயில் தாலாட்டு பாட தென்றல் தூளியை ஆட்ட குழந்தை தூங்கிவிடும்.

மாலை நேரத்தில் அப்பா வருகிறார் பார் என்று குழந்தைக்கு அவர் வருகின்ற வழியைக் காட்டிக் கொண்டு இருப்பாள். அவள் வந்த பிறகு குழந்தையைத்  தூக்கும் வரைக்கும் மாற்றி மாற்றி கொஞ்சுவார்.

அந்த ஆண்டவன் அவனுக்காக அவளையும் அவளுக்காக அவனையும் படைக்கப்பட்டது போல் இருந்தது. இயற்கையே அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது.

அவள் நாம் அனாதையாக இருக்கிறொம் நமக்கென்று ஒரு சொந்தமும் இல்லை என்று கண்ணீர் விட்டாள். அவன் ஏன் வேதனைப்படுகிறாய் பக்கம் ஆறு ஓடுகிறது. அவை குளிப்பதற்கு குடிப்பதற்கு நீர் தருகிறது. சொந்தம் ஒன்று இருந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்க மாட்டார்கள், நிலா வெளிச்சத்தைத் தருகிறது. காற்று பணம் வாங்காமல் வீசுகிறது. இயற்கையே நம் சொந்த பந்தம் இனி அழவேண்டாம் என்று அவன் கண்ணத்திலிருந்த கண்ணீரை துடைத்தான். அதற்கு அவள் இல்லிங்க நாம் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வோம் நம் பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து சொந்தத்தைச் சேர்த்துக் கொள்வோம். நம் மகனை மருத்தவராகவும் பெண்ணை ஆசிரியராகவும் நல்ல முறையில் படிக்க வைத்து மற்றவருக்குப் பொதுச் சேவை செய்ய வைப்போம். அனாதை இல்லாத உலகத்தைப் படைப்போம் என்றாள். இவனும் அதற்கு சரி என்றான்.

அவள் மீண்டும் கர்ப்பமானாள். அவனே காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்து முடித்துவிட்டு அவளை ஓய்வு எடுக்கச்சொல்லி விட்டு வேலைக்குப் புறப்படுவான்.

அன்று அவன் வேலைக்குப் புறப்பட்டான். அவள் மனசு ஏதோ பறிகொடுத்ததுபோல் இருந்தது. அவரை இன்று வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லலாமா  என்ற எண்ணம். ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை அப்படி அவள் சொல்லியிருந்தால் அவளைவிட வேலை முக்கியமா என்று நின்றிருப்பானோ என்னவோ? அவன் மறைவிற்குப் பின்னும் எட்டிப் பார்க்கிறாள்.

அவளோ நிறைமாத கர்ப்பிணி. அவளால் மகனைக்கூட எடுக்க முடியவில்லை. அவன் வெலைகடகு நகரத்திற்குப் போய் சேர்ந்திருப்பான் அவளோ பெண் குழந்தைப் பிறக்கும் என்று பெருமகிழ்ச்சியடைந்தாள். உடனே குழந்தை பிறக்க வலி ஏற்பட்டது. அப்பா, அம்மா என்று கத்துகிறாள். அக்கம் பக்கம் ஆளில்லை வயிற்றை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அழுகின்ற குழந்தையின் தூளியை ஆட்டுகிறாள். கீழே விழுகிறாள்  புரள்கிறாள் எழுந்து கத்துகிறாள்.

அவன் அவன் நினைப்பாகவே வேலை செய்ததனால் கடப்பாரையை எங்கே குத்தவது என்று தெரியாமல் தன் பாதத்தில் குத்திக் கொள்கிறான். அய்யோ என்று கத்துகிறான். இரத்தம் நிறைய வெளியேறுகின்றது.

உடனே அவனை மருத்தவமனைக்குப்போ என்று அனுப்பிவிட்டார்கள்.

மருத்தவமனைக்கு வந்ததும் மருத்தவர் இல்லை மாலை ஆறு மணிக்கு வருவார் என்றார்கள். அவன் அதுவரைக்கும் காத்திருந்து மருத்துவரைப் பார்த்தவிட்டு நொண்டி நொண்டி வருகிறான். கருமை நிற இருட்டு, நிலவை குளிர் ஆடை போர்த்திக்கொண்டது. மேகம் வானத்தை விட்டு கீழே வந்து விழவதுபோல் கருமையாக இருந்தது. வழியே தெரியவில்லை. மின்னல் மின்னினால் தான் வழிதெரிகிறது.

வானம் லேசாகத் தூரல் போடத் தொடங்கியது. காற்று வீசியடிக்க மின்னல் கீற்றுகள் வானம் முழுவதும் பறக்க அவனும் மழையால் முழுமையாக நனைந்துக்கொண்டு குளிரால் நடுங்கி ஒடுங்கி தள்ளாடி வருகிறான்.

அவன் நடக்க முடியாமல் துன்பப்படுவதைப் பார்த்த பூமி வாகனம் ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. ஆனால் அவன் புனிதமானப் பாதம் பூமியில் படாமல் போய்விடும் என்று கொடுக்கவில்லை.

வானம் அவன் நனைந்துகொண்டு போவதைப் பார்த்து ஒரு குடை ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. குடை கொடுக்கமுடியாவிட்டாலும் மழையை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நிறுத்தமுடியவில்லை. ஏன் என்றால் அவன்படும் துன்பக் காட்சியைப் பார்த்து வானமே கண்ணீர்விட்டது.

அவன் காதுகளுக்கு எங்கோ இருட்டில் குழந்தை அலறல் சத்தம் கேட்கிறது. வீட்டிற்கு பக்கம் வரவர வீட்டிலிருந்து வந்தது. அவனுக்கு பயம் ஏற்பட்டது வீட்டில் விளக்கு எரியவில்லை. அவள் தூங்கியிருப்பாளோ? விளக்கை காற்று அனைத்திருக்குமோ? என மனம் ஏதேதோ நினைக்கலாயிற்று. அவன் வீட்டிற்கு நுழைவதற்கு முன்பே பாதி உயிர் போனமாதிரி இருந்தது.

அவள் குழந்தை பிறக்க முடியாமல் வயிற்று வலியால் கத்திக் கத்தி அவள் உடலிலிருந்து உயிர் அறுபட்டு அவன் வரவதற்கு கொஞ்சமுன் அவனை தேடிச் சென்றது.

அவன் வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் பற்ற வைத்தான். அவள் இறந்து கிடப்பதை பார்த்து. அய்யோ என்று கத்தினான். அவன் மீதி உயிரும் போய்விட்டது. அவர்கள் உயிர்கள் அந்த மகனைச் சுற்றி சுற்றி வந்தன.

மழை பெய்யாமல் நின்றது. தென்றல் வீசாமல் நின்றது, ஆறு ஓடாமல் நின்றது, பூ பூக்காமல் இருந்தது, நலவு ஒளியை காட்டாமல் இருந்தது, கொடி படராமல் நின்றது பூமி சுற்றாமல் நின்றது, தளிர் தளிர்க்காமல் நின்றது, இவையெல்லாம் அவர்கள் இறப்புக்கு கொஞ்சம் நேரம் இறங்கள் செலுத்திவிட்டு பிறகு அதன் தன் வேலைகளைச் செய்ய தொடங்கின

ஆனால், இரவெல்லாம் தென்னை ஓலையால் வேயப்பட்ட வீட்டில் தனி ஒரு அலறல் ‘சத்தம்’.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்கவும்

1.மறக்க முடியுமா (சிறுகதை)

அகநானூற்றுப் பாடல்களில் தலைவனின் ஒழுக்க நெறிமுறைகள்

சங்ககால மக்களின் அகவாழ்வைக் குறிப்பது அகத்திணையாகும். அகத்திணை ஒழுக்கமானது ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் காதல். இல்லற வாழ்வைக் குறிப்பதாகும். இவ்வகையான ஒழுக்கத்தை அகநானூற்றுப் பாடல்கள் உணர்த்துகின்றன. அசு ஒழுக்கங்களை அறிந்து கொள்ளவும், படிப்பவர் இன்புறவும். புலவர் சில உத்திமுறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள் உள்ளுறை உவமம் ஒரு உத்திமுறை ஆகும். உள்ளுறை பாடல்கள் தலைவனின் ஒழுக்க நெறிகனைத் தலைவி மறைமுகமாகச் சுட்டுவதைப் போல உள்ளது. அதற்காகப் பரணரின் மருதத் திணைப் பாடல்கள்ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.

சமூக ஒழுக்கம் பரத்தையும் கள்ளும்

சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியை விடுத்து பரத்தையிடம் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கமாகும். இதற்குத் தொல்காப்பியர்,

கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்

உள்ளத்தூடல் உண்டு என மொழிப (தொல். 1179)

எனக் கூறுகின்றார். இதேபோன்று கள் அருந்துதல் ஏற்றுக் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் (235) இதற்குச் சான்றாகின்றது. இதன்மூலம் பரத்தை ஒழுக்கமும், கள்ளும் சமூக ஒழுக்கமாக இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், அவை இல்லற வாழ்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாக இல்லை என்பதனையும் சங்கப் பாடல்கள் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன.

கள்ளின் தீதும் தலைவனின் ஒழுக்கக் குறைபாடும்

அகநானூறு ஆய்வுக்கோவை 2011 தலைவன் தலைவியை விடுத்துப் பரத்தையோடு மகிழ்ந்து இருந்தான் இச்செயல் தலைவிக்கும் ஊர்ப் பொதுமக்களுக்கும் தெரிந்தது. ஊரார் அலர்படுத்தினர். அலரின் காரணமாக வீட்டிற்குச் சென்ற தலைவனைத் தலைவி வாயில் மறுக்கின்றாள்.

தலைவி தலைவனிடம், நெருப்புக் கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையே விளைந்து, சிவந்த நெற்கதிர்களை அறுத்துக் கவிழ்க்கின்ற உழவர்களுக்கு கள்ளினை ஏற்றிக்கொண்டு பலகாலமாக வந்து செல்லும் வண்டி, ஏதேனும் ஒரு சூழலில் சேற்றிலே புதைந்து விடுவதுண்டு. அது போன்ற சமயங்களில் அவ்வண்டியை விடுவிக்கும் பொருட்டுச் சிறந்த கரும்புகளை அதன் சக்கரத்திலே அடுக்கும் வளமிக்க ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள்.

கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்

ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர” (116: 3-4)

இங்குப் பரத்தை அறிவை மயக்கும் கள்ளுக்கும், தலைவி நாவிற்கும், மனதிற்கும் சுவைதரும் கரும்புக்கும் தலைவன் கலங்கிய சேற்றைப் போன்ற மனதிற்கும் இணையாக்கப் பட்டுள்ளது இப்பாடலில் தலைவன் தலைவியோடு கூடிய இல்லறத்தைச் சேற்றில் புதைத்து, இழிவான வாழ்வை தரும பரத்தையை நாடிய ஒழுக்கக் குறைபாட்டை எடுத்து உரைக்கின்றது.

மேலும், இதேபோன்றே தலைவனின் ஒழுக்கக் குறைப்பாட்டைக் கூறும் (அகநா 196. 1-4) பாடலும் இடம் பெறுகின்றது கள் மிகுதியாக உடைய பாக்கத்தில் நீண்ட செடிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அச்செல்வமிக்க பகுதியில் பாணர்கள் வைகறை வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துறையிடத்துப் பெரிய வயிற்றினையுடைய வரால் மீன் அகப்பட்டது அம்மீனினுடைய துடியின் கண் போன்ற கொழுவிய துண்டத்தினை விற்றனர் அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கள்ளுண்டு களித்து ஆடினர் அவர்கள் ஆடிய மயக்கத்தில மீண்டும் மீன்வேட்டைக்குச் செல்வதை மறந்து உறங்கினர். உறங்கிய கணவன்மார்களுக்கு அவரவர் மனைவியராகிய பாண்மகளிர் அதிகாலையில் அவ்வுணவானது ஆம்பலது அகன்ற இலையானது உணவு கொடுத்தனர் சுடுகின்ற சோற்றுத் திரளோடு பிரம்பின் புளிப்பும் ஆக்கிய புளிக்கறியை இட்டு உண்பித்தனர். அத்தகைய தன்மையுடைய வீரனே எனத் தலைவி கூறுகின்றாள்.

இங்குப் பாணன் தன்மை தலைவனுக்கும் பாண் மகளிரின் செயல்பாடு தலைவிக்கும், மயக்கம் தரக்கூடிய கள்ளைப் பரத்தைக்கும் ஒப்பாகக் கூறப்படுகின்றது. தலைவன் இல்லற வாழ்க்கைக்காகப் பொருளீட்டச் செல்கிறான் ஈட்டிய பொருளை இல்லறத்திற்காகச் செலவிடாமல் பரத்தையோடு கூடிய மகிழ்ச்சிக்காகச் செலவிடுகிறான். அவ்வாறு தன் கடமையை மறந்த தலைவனுக்குக் கற்பு ஒழுக்கமுடைய – தலைவி உணவளிக்கின்றாள். அதாவது ஒழுக்கமுடைய தலைவியின் பண்பு உணவளிப்பதும், ஒழுக்கமற்ற தலைவனின் பண்பு பரத்தையுடன் செலவழிப்பதையும் உள்ளுறையாகக் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கக் குறைபாட்டில் பாணன் துணை

பாணன் துணையோடு தலைவன் பரத்தையோடு மகிழ்ந்திருந்தான் தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டு தலைவியிடம் சென்றபோது ஊடல் வெளிப்பட்டது அதனால், அவன் தோழியிடம் வாயில் வேண்டினான் அதற்குத் தோழி பரத்தையுடன் கூடியிருந்தமையால் உண்டான அலர் குறித்துக் கூறுகின்றாள்.

தோழி தலைவனிடம் ஆண் சங்கு சருச்சரை பொருந்திய வயிற்றினையும், பிளந்த வாயினையும் உடையது. அது கதிர்ப் போன்ற கூர்மையான மூக்கினை உடைய ஆரல்மீன் துணை கொண்டது. அத்துணையோடு ஆண் சங்கு ஆழமான நீர்ப் பெருக்கத்தை உடைய பெண் சங்கினோடு கூடும். அத்தகைய நீர் நிறைந்த அகன்ற வயல்களையுடைய புதுவருவாயையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 246 1-4).

இங்கு ஆண் சங்கு தலைவனையும், ஆரல்மீன் பாணனையும், பரத்தைக்குப் பெண் சங்கும் இணையாகக் கூறப்படுகிறது. பாணன் துணையோடு இல்லற வாழ்விற்கு மீளமுடியாத, துன்பந்தரும் பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் ஒழுக்கக் குறையைத் தோழி வெளிப்படுத்துகின்றாள்.

அலரும் ஆக்கமும்

தலைவன் பரத்தை ஒழுக்கம் மேற்கொள்கின்றான். அவன் செயலை ஊரார் இழிவுபடுத்துகின்றனர். அதன் பிறகு தலைவன் தன் வீட்டிற்குச் செல்கின்றான். அவன் செயலைத் தலைவி கடிந்து கூறுகின்றாள்.

ஊரலர் ஏற்பட்ட பிறகு வீடு திரும்பும் தலைவனிடம் தலைவி, அழகிய மயில் வயலுக்கு அருகில் இருந்தது. வயலிடத்தில உள்ள உழவர்கள் செருக்குடன் ஆரவாரம் செய்தனர். அதற்கு அஞ்சிய மயிலானது பறந்து சென்று தெய்வத்தையுடைய குன்று பொலிவனைப் பெறுமாறு தங்கியது. அத்தகைய ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 266 16-19).

 இப்பாடல் தலைவனை மயிலுக்கும், ஊர் மக்களை உழவர்களுக்கும், தலைவியிருக்கும் இல்லத்தைத் தெய்வத் தையுடைய குன்றுக்கும் உள்ளுறையாகக் கூறப்படுகின்றது. அதாவது தலைவன் பரத்தையுடன் இருப்பதை தலைவியும் ஊர் மக்களும் அறிந்தனர். ஊரார் தலைவனை இழிவு படுத்தினர். அதனலால் அவன் அப்பரத்தையிடமிருந்து வீட்டைஅடைகின்றான் இங்கு ஒழுக்கக்கேட்டை ஊரார் வெளிப்படுத்துவது புலனாகின்றது.

முடிவுரை

தலைவன் தலைவியை விடுத்து பரத்தையை நாடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாகப் பண்டைய பாடல்கள் சிலவற்றில் வெளிப்படுகிறது. இருப்பினும், இவ்வொழுக்கம் தவறானது. களையப்பட வேண்டியது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு உரிய நாகரிகமான வெளிப்பாட்டுக் கருவியாக உள்ளுறை உவமம் உள்ளது. சங்க காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டதாக பரத்தமை ஒழுக்கம் இருந்தாலும் அது கூடாதது விலக்கப்பட வேண்டியது என்ற தனிமனித சமுதாய ஒழுக்கச் சிந்தனையாக இவ்வுள்ளுறை உவமம் சார்ந்த பாடல்கள் அமைந்துள்ளன எனத் துணியலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்

எம்.ஜி.ஆர். கல்லூரி, ஓசூர்.

திரௌபதை – சிறுகதை

அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ததும்ப வீற்றிருந்தனர். அனேகமாக அப்புகைப்படம் குழந்தையின் முதலாம் பிறந்தநாளன்று எடுத்திருக்கிறார்கள். அடுத்தப் புகைப்படம் கோவிந்தன் வெண்மதி மகன் முத்து மகள் ஜானகியுடன் குடும்பப் புகைப்படமாக அந்தச் சுவற்றினை அலங்கரித்திருந்தார்கள். அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும்  கண்ணாடியின் பிம்பம்  அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது.

            வெண்மதி குடும்பப்பெண். மாநிறம் கொண்ட பூங்கொடியாள். வெண்மதியின் முகத்தில் கருணையே எஞ்சி நிற்கும். அவள் முகத்தைப் பார்க்கும் எவராயினும் தலையசைத்து விழி பார்வையில் மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டும். வெண்மை குணம் கொண்ட கற்புக்கரசி. பருத்திக்காட்டில் களை எடுத்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் வடிகின்ற வேர்வையை முந்தானையால் அவ்வவ்போது துடைத்துக் கொள்கிறாள். மாலை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் அவளைச் சுட்டது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றே ஆகவேண்டும். கூலிப்பணம்தான் வெண்மதியின் குடுபத்திற்கு சோறு போடுகிறது. உடம்போ மனமோ எவ்வளவு துன்பப்பட்டாலும் வேலைக்கு ஓடிவிடுவாள். வேலையில்லாத நேரத்தில் அவள் மனம் மிகவும் வருத்தமடையும். இன்றையப் பொழுதின் கூலி போயிடுச்சே என நொந்துக்கொள்ளுவாள். வீட்டு வேலைகளையும் துய்மையாக வைத்திருப்பதிலும் ரொம்ப கவனம் கொளளுவாள். களை எடுக்க ஒவ்வொரு முறையும் மண்ணில் களைக்கொத்தினைக் கொத்தும்போதும் அழகிய பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டாள். பருத்திக் காட்டில் மனம் சிந்தையில் ஆழ்ந்து போனாள்.

            “ஏலே… மதி! உம் மொவ அழுதுட்டு ஓடீயாறா… பாருடி” என்றாள் பருத்தில் காட்டில் வேலை செய்யும் கிழவி ஒருத்தி. தலை நிமிர்ந்து பார்த்த மதி கொஞ்சம் பதறித்தான் போனாள். வேகமாய் மகள் ஓடிவரும் திசையை நோக்கி நடந்தாள்.

            “ஜானகி என்னாச்சுடி… ஸ்கூல்க்கு போயிட்டு உன்னையும் அண்ணனையும் வீட்டுலதான இருக்கச் சொன்னேன். இங்க ஏ ஓடியாற..” – என்றாள் மதி.

            அழுது கொண்டிருந்த ஜானகி, “அம்மா… அண்ணாக்கு வயித்து வலி. அழுவுறான்” என்று தத்தித்தத்தி சொன்னாள். மதிக்கு மனசு என்னவோ செய்தது. திரும்பி நின்று வேலை செய்பவர்களைப் பார்த்தாள். வேலை செய்பவர்கள் அனைவரும் மதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மதியின் உள்ளம் அனைவருக்கும் புரிந்தது. “மதி.. நீ வீட்டுக்குப் போயி மகனை கவனி. நாங்க உன்னோடதையும் சேர்த்துக் களை வெட்டிடுறோம்” என்றார்கள். வெண்மதி வீட்டை நோக்கி ஓடினாள்.

            வீட்டு வாசலில் வயிற்றைப் பிடித்தப்படி சுருண்டு படுத்திருந்தான் முத்து. மகனை அந்த நிலையில் பார்த்தவுடன் ஓடிப்போய் மகனை அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நீர்வீழ்ச்சியாய் விழுந்தது. தன்னுடைய வயிற்றில் முதலில் பூத்த பூவல்லவா! முதலில் நின்ற உதிரத்தில் உருவான கருவல்லவா! அதுதான் துடித்துப்போய்விட்டாள். அக்கிராமத்தில் உள்ள மருத்துவச்சியிடம் கூட்டிட்டு போய் காட்டுகிறாள். முத்துவின் அடிவயிற்றில் தொட்டுப்பார்த்தாள். சூடு ஆறப்பட்ட நல்லெண்ணையைக் கொஞ்சம் எடுத்து வயிற்றில் தடவி நீவி விடுகிறாள். வெந்தையத் தண்ணீயை முத்துவுக்கு ஊட்டிவிடுகிறாள். 

“ஒன்னுமில்ல வெண்மதி சூடுதான். நல்லெண்ணையைத் தடவி வெந்தையத் தண்ணியக் கொடுத்திருக்கென் கொஞ்ச நேரத்துல வலி கொறஞ்சு சரியாயிடும். வீட்டுக்கு கூட்டிட்டு போயி மோரு இல்லன்னா இளநீரு ஏதாவது கொடுத்து தூங்க வையிடி” என்றாள் மருத்துவச்சி.

வரும் வழியில் பால்கார வீட்டில் காசுக்கு மோரை வாங்கினாள் மதி. வீட்டுக்கு வந்தவுடன் மோரில் தேவையான அளவு உப்பைக் கலந்துகொடுத்து மகன் முத்துவை பாய் விரித்து படுக்கவைத்தாள். மாலை மயங்கி இரவை நெருங்கிகொண்டிருந்தது. வீட்டு வேலைகளைக் கவனிக்க மும்பரமானாள். அரிசையைக் களைந்து ஊறவைத்தாள். காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைத்தாள். விறகை வைத்து அடுப்பினைப் பற்ற வைத்தாள். உலைக்கு பாத்திரத்தை எடுக்க குடிசையின் மூலைப்பகுதிக்குச் சென்றாள். அடுக்கி வைக்கப்பட்டிருந்தப் பாத்திரத்தில் சோறு வடிக்கும் பாத்திரம் காணாமல் போயிருந்தது. சிந்தித்தவளாய் வெளியே வந்து பாத்திரங்கள் கழுவும் இடத்திலே பார்த்தாள். அங்கேயும் அப்பாத்திரம் இல்லை. அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இது தன்னுடைய கணவனுடைய வேலைதான். கணவன் கோவிந்தனைச் சமாளிப்பது என்பது வெண்மதிக்கு ஒவ்வொரு நாளும் போர்க்களத்தில் விட்ட அம்பாய் நெஞ்சில் குத்தியது. அம்பை பிடிங்கி இரத்தத்தைத் துடைத்து காயத்திற்கு மருந்து போடவேண்டும். அம்பு விட்டவனை எதிர்த்து நின்று போரிடவும் அவனின் நெஞ்சை பிளக்கவும் எங்கள் பாரம்பரியம் பெண்களுக்குச் சொல்லித்தரவில்லையே.  அந்த அளவிற்கு கோவிந்தனைக் குடிப்பழக்கம் ஆட்டிப்படைத்தது. விற்றுவிற்று குடித்ததன் விளைவாக இன்று குடிசை வீட்டில் இருக்கிறான். வெண்மதியோ ஆனமட்டும் திருத்த முயற்சி செய்தாள். கோவிந்தனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. நாலு நாள் வேலைக்கு செல்வான். அந்தக்காசை வைத்துக்கொண்டு ஒருமாதமாய் குடிப்பான். இதுல சூதாட்டம் வேற. வெண்மதிக்கு எல்லாம் பழகிப்போனது. ஆனால் இன்று உலைப்பாத்திரம் இல்லாதது அவளை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.

சமையல் செய்து ஜானகிக்குக் கஞ்சி சோற்றினை ஊற்றிவிட்டாள். முத்து வயிற்று வலி என்று மோர் மட்டும் போதும் என தூங்கிவிட்டான். பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள். தன்னுடையப் பிள்ளைகளை நினைத்து எப்போதும் பெருமை கொள்வாள். ஆறு வயதில் முத்துவும் நான்கு வயதில் ஜானகியும் வளர்ந்து நன்றாகப் படித்து செல்வசெழிப்பில் இருக்க வேண்டும் என எந்நேரமும் இறைவனை வேண்டிக்கொள்வாள். குடிசையின் கதவுகள் திறக்கப்பட்டு கோவிந்தன் தள்ளாடும் போதையில் உள்ளே வந்தான். வெண்மதி முன்னே சென்று தாங்கிப்பிடித்தாள். மதுவின் வாடை வயிற்றை குழற்றியது. அவனை அமரவைத்து சோற்றைப் பரிமாறினாள். வெண்மதிக்கு கணவன் மீது கடுங்கோபம் இருப்பினும் அந்நேரத்தில் காண்பிக்க விரும்பவில்லை.

“புள்ளைங்க.. சாப்டாங்களா மதி” – கோவிந்தன்

“முத்துவுக்கு உடம்பு சரியில்லை. வயித்துவலி ரொம்ப துடிச்சிப்போயிட்டான். மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போன, இப்ப பரவாயில்ல. மோரு மட்டும் குடிச்சிட்டு தூங்கிட்டான்” என்றாள் வெண்மதி

“என்ன பையன் சாப்பிடலையா?” என்று தன் தட்டில் இருந்த சோற்றை ஒரு பிடி எடுத்து தூங்கிக்கொண்டிருக்கிற மகனுக்கு ஊட்டிவிட்டான். முத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் உதடுகளில் பட்டு சோறு கீழே விழுந்தது. வெண்மதி கணவனைத் தடுத்துச் சரியாகச் சாப்பிட வைத்தாள். குடிசையின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதிகாலையில் சீக்கிரமாய் எழுந்து கொண்டாள். சமையல் முடித்து வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் போதை தெளிந்து எழுந்தான் கோவிந்தன். மதி…மதி.. என்று வெண்மதியை நெருங்கியவனுக்கு, அவள் கையில் இருந்த கரண்டியைக் கோவிந்தன் மீது எறிந்தாள். உடம்பை வளைத்துக் கரண்டியிடமிருந்து தப்பித்துக்கொண்டான் கோவிந்தன்.

“யோ.. வீட்டுல வைச்சிருந்த உலைப்பாத்திரத்தை எடுத்துட்டு போயி வித்து குடிச்சிருக்கியே.. இது நல்லாவா இருக்கு”  கோவிந்தன் தலை தொங்கப்போட்டு அமைதியாய் நின்றான். “ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதுங்க முகத்தப் பாருய்யா.. இப்படியே நீ பண்ணிட்டு இருந்தின்னா இந்தப் புள்ளையங்களோட எதிர்காலம் என்னா ஆவுறது. அத கொஞ்சமாவுது நினைச்சிப் பாக்கிறியா..” கொஞ்ச நேரம் கோபத்தில் கத்தி முடித்தாள் வெண்மதி. சிறிது நேரத்திற்குப் பிறகு “என்னை மன்னிச்சிடு மதி” என்றான் கோவிந்தன். அப்படி என்ன மந்திரமோ தந்திரமோ… உடனே வெண்மதி உதட்டில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். கணவன் மீது பாசம் அதிகம். அவன் மீது மிகுந்த அக்கறை உடையவள். தன் முந்தானையில் இருந்து ரூபாய் முப்பதை எடுத்து கோவிந்தனிடம் கொடுத்து ரேஷன் கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள். “குடிச்சிட்டு வந்துராத… வீட்டுல கொஞ்சம் கூட அரிசி இல்ல. புள்ளையங்க ஸ்கூல் போகட்டும். நீ ரேஷனுக்குப் போயிட்டு அரிசி வாங்கிட்டு வந்து வீட்டுல வச்சிட்டு அப்புறமா போ..” என்று சொல்லிவிட்டு வேலைக்காக வயக்காட்டிற்கு ஓடினாள்.

ரேஷன் கடை செல்லும் வழியில் வேப்பமர நிழலில் பிள்ளையார் கோவில் இருந்தது. சிலைக்கு முன் பகுதியில் பாகவதர் ஒருவர் ஒருசில பேருக்கு மகாபாரதக்கதையைக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது பீஸ்மரின் பிறப்பை பாடலடியோடு பாடினார். சிலைக்கும் மரத்துக்கும் பின் பகுதியில் சில ஆண்கள் ரம்மி சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். கோவிந்தன் ரேஷன் கடைக்குச் சென்று அரிசியை வாங்கி வைத்துவிட்டு இந்தப் புள்ளையார் கோயிலுக்கு வந்துவிட வேண்டும் என்று வேகமாக நடக்க ஆரமித்தான்.

அப்போது புள்ளையார் கோயிலிலிருந்து, “ஏ கோவிந்தா… எங்கடா போற” என்றது ஒரு குரல்.

“அரிசி வாங்க ரேஷனுக்குப் போறன்”

“இப்பதான் நானும் சக்கரை வாங்கலாமுன்னு போயிட்டு வந்தன். இதோ பாரு மஞ்சப்பை. கடையில ஒரேக்கூட்டம். அதுதான் திரும்பி வந்துட்டேன். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால போனா கூட்டம் குறைஞ்சிரும்” என்றான். அவன் பேச்சைக் கேட்டு, அப்புறமா வாங்கிக்கலாம் என்று அரசமரத்தடியில் உட்காந்தான் கோவிந்தன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கோவிந்தனும் அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட ஆரமித்தான். ரேஷனுக்காக வைத்திருந்த முப்பது ரூபாயை பந்தையக்கட்டணமாக வைத்து ஆடினான். முதல் சுற்று ஆட்டத்தில் முப்பதுக்கு அறுபதாகக் கிடைத்து வெற்றி கிட்டியது. ஆசை யாரை விட்டது. பாகவதரின் மகாபாரதக்கதை இப்போது சூதாட்டப்படலத்தில் சகுனியின் பகடைக்காய்களைப் பற்றிக் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தச் சுற்றில் தான் வைத்திருந்த அறுபது ரூபாயையும் விட்டுவிட்டான் கோவிந்தன். திருதிருவென்று முழித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான். கருத்த உடலில் முறுக்கிய மீசையோடு எதிரில் உட்காந்திருக்கும் அழகேசனின் பார்வை கோவிந்தன் மேல் பட்டது.

“என்ன கோவிந்தா? காசு இல்லன்னா கிளம்பிட்டே இரு..” என்றான் அழகேசன். கோவிந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரிசி வாங்க வெண்மதி கொடுத்த பணம் மொத்தமும் போச்சு.

“அழகேசண்ணே கடனா முப்பது ரூபாய் கொடுங்கண்ணா சாயுங்காலத்துக்குள்ள கொடுத்திடுறேன்” என்றான் கோவிந்தன்.

“காசல்லாம் தரமுடியாது. வேணுமின்னா எதையாவது வைச்சு ஆடு. நீ ஜெயிச்சிட்டன்னா உன்னோட முப்பது ரூபா காசையும் கொடுத்திடுறேன். இதைவிட்டா என்னால வேற எதுவும் செய்ய முடியாது” என்றான் அழகேசன். இப்போது பாகவதர் திரௌபதையை துச்சாதணன் தலைமுடியைப் பற்றி இழுத்து வரும் காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் “டே கோவிந்தா.. உன் பொண்டாட்டிய வச்சு ஆடுறா” என்றான். கோவிந்தன் மௌனம் காத்தான். அழகேசனின் கறுத்த உதட்டில் சிரிப்பு வந்துபோனது. கோவிந்தனை ஏளனமாகப் பார்த்தபடியே சீட்டை இரண்டு கைகளாலும் நன்றாகக் குலுக்கி கோவிந்தனின் முன் வைத்தான். “சம்மதம் என்றால் சீட்டை வெட்டி போடு.. இல்லையென்றால் போயிட்டே இரு” என்றான் அழகேசன். சிறிது நேர அமைதிக்குப்பின் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டான் கோவிந்தன். பாகவதர் கதையில் திரௌபதை துகிலுரியப்பட்டாள். கண்ணன் அவளைக் காப்பாற்றினான்.

ஆடிய ரம்மி ஆட்டத்தில் ஏழு ஆட்டங்களிலும் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றியடைந்தான் அழகேசன். கோவிந்தன் முழுமையாகத் தோற்று தன்னை இழந்து காணப்பட்டான். கண்கள் அழும் நிலைக்கு வந்துவிட்டன. ஓடி விடலாமா என்று தோன்றியது. நைசாக எழுந்திருக்க முயற்சி செய்தான். அதற்குள் அழகேசனின் கை கோவிந்தனின் வேட்டியை உருவியது. இப்போது கோவிந்தன் அரை நிர்வாணத்தில் இருந்தான்.

“என்னா ஓட பாக்குற… உன் பொண்டாட்டிய வைச்சு ஆடினில்ல. போயி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா” என்றான் அழகேசன்.  அவன் சொன்ன அந்த வினாடியே அழகேசனின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான் கோவிந்தன்.

“ஏண்டா பொண்டாட்டியை வச்சு விளையாண்டுட்டு உனக்கெல்லாம் ரோஷம் வருதா” என்று கோவிந்தனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் அழகேசன். கோவிந்தனின் மூக்கு உடைந்து இரத்தம் வாயை நிரப்பியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு மண்ணில் உருண்டு சண்டையிட்டுக்கொண்டனர்.

அன்னிக்குன்னு பாத்து வெயில் ரொம்ப அதிகமா அடிச்சுது. வயக்காட்டில் நெல் நாற்றை வரிசையாக நட்டுக்கொண்டிருந்தாள் வெண்மதி. வெயிலின் சூட்டை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் குனிந்து வேலை செய்யும் போது முதுகுப் பகுதி வெயில் பட்டு வெடித்துவிடுவது போன்று உணர்ந்தாள். முழங்கால் வரை சேற்றுப்பகுதியில் இருந்தது. உடம்பெல்லாம் சேறு சகதி. வியர்வையால் உடம்பே அழுகிபோனது மாதிரி உணர்வு. அந்நேரத்தில் பம்புசெட்டில் தண்ணீர் எடுத்துவிடப்பட்டு வயக்காலில் ஓடிக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த நாற்று முடிச்சை அப்படியே வைத்துவிட்டு ஓட்டமாய் ஓடி பம்புசெட்டில் தலையைக் காண்பித்தாள். ஜில்லென்ற குளிர் தண்ணீர் அவளின் புடவையை நனைத்தது. வியர்வையை நீக்கியது. உள்ளத்தில் கலந்து பரவசத்தை உண்டாக்கியது. நெஞ்சில் பட்டு அதன் ஈரத்தை உணர்ந்தாள் மதி. எப்படி இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கின்றதே என்று நினைத்துக்கொண்டாள். அவள் தலையை இன்னும் நன்றாகத் தண்ணீரில் காண்பித்தாள். அந்தக் கிழவிதான் இப்போதும் மதியை இழுத்து ஊருக்குள் கோவிந்தனும் அழகேசனும் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தியைக் கூறுகிறாள். நனைந்த உடல். விரித்தக் கூத்தல். அழுத கண்கள் என விரைந்து ஓடுகிறாள் கிராமத்தை நோக்கி..

கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வெண்மதி உள்ளே நுழையும் போது அழகேசனின் வலது கை கோவிந்தனின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறது. மற்றொரு கை கோவிந்தனின் இரண்டு கைகளையும் மடக்கி பிடித்திருக்கிறது. “உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு… உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு…” என்னும் வார்த்தையைத் தவிர அழகேசனின் வாயில் இருந்து வேற எந்தவொரு வார்த்தையும் வரவே இல்லை.

அந்தச்சொற்கள் வெண்மதியின் இதயத்தைக் கூரிய முள்ளால் கிளித்தது போன்று இருந்தது. அதே இடத்தில் அழுத கண்ணீரோடும் தலையில் அடித்துக்கொண்டும் அமர்ந்தாள். அவளின் அழுகை அழகேசனின் காதுகளில் விழுந்தன. அழகேசன் வெண்மதியைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை கோவிந்தனை விட்டுவிட்டு ஒரு கையால் மீசையைத் தடவியபடியும் மறுகையால் வேட்டியை தூக்கிப்பிடித்தபடியும் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தான். எல்லோரும் வெண்மதியின் அழுகையைப் பார்த்து கண்கலங்கினர். கோவிந்தன் தன்நிலையைக் கண்டும் வெண்மதியின் வேதனைக் கண்டும் வெட்கப்பட்டான். தன் மனைவியின் அவமானத்தை நினைத்து சாக துடித்தான்.

“ஏண்டா பொறம்போக்குப் பயலே… யாராவது பொண்டாட்டிய சூதுல வச்சி ஆடுவாங்களாடா… ஏற்கனவே வச்சி விளையாடினவங்களோட கதை உனக்கு தெரியாதாடா..” கூட்டத்தில் ஒருவர்.

“உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி புள்ளையங்க.  இப்படியெல்லாம் செய்யுற நீ நாளைக்கு இவளையும் விக்கமாட்டின்னு என்னடா நிச்சயம்” – கூட்டத்தில் ஒருவர்.

“இந்தாம்மா வெண்மதி… இன்னுமா இவனை நம்புற. இவன வச்சுகிட்டு இன்னும் கொற காலத்த எப்படி ஓட்டப்போற. இவ கூட வாழுறதை விட செத்துப்போலாம்” – கூட்டத்தில் ஒருவர்.

ஒவ்வொருவராய் செல்ல கூட்டம் கலைந்தது. கோவிந்தன் கிழக்கு திசையை நோக்கி ஓடினான். நடைபிணமாய் குடிசைக்குள் வந்தாள் வெண்மதி. முத்துவும் ஜானகியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து போனது அக்குழந்தைகளுக்கு. அம்மாவின் பக்கத்தில் கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டனர். இரவு நேரமாகியும் கோவிந்தன் இன்னும் வரவேயில்லை.

மணி பதினொன்றை தாண்டியிருந்தது. வெண்மதியின் மனம் நெருப்பாய்க் கொதித்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் மகனை எழுப்பினாள். மகளை அணைத்து தூக்கிக்கொண்டாள். ஜானகி தூங்கி வழிந்தாள். அம்மாவின் தோளில் அவளின் வாய் வழியே வழிந்த எச்சில் மதியின் நெஞ்சைத் தொட்டது. அம்மா கூப்பிட்ட உடனே மகன் முத்துவும் நடக்க ஆரபித்தான். வயக்காட்டுக் கிணறு. மகளை மடியில் கிடத்தி அழுகின்றாள். தன்னுடையத் தாலியைக் கழற்றி கிணத்து மேட்டில் வைக்கின்றாள். மகன் அம்மாவையே உற்று பார்க்கின்றான். இந்த நேரத்தில் யாராவது வந்து என்னுடைய மனதை மாற்ற மாட்டார்களா என்றும் மதியின் மனம் எண்ணுகிறது. ஆனாலும், வாழப்பிடிக்கவில்லை.  பிள்ளைகளையும் என் கணவர் அநாதையாக விட்டுவிடுவார். அதனால் அவர்களையும் என்னுடனே அழைத்துக்கொள்கிறேன். இறைவனை வேண்டுகிறாள். அம்மாவையும் அப்பாவையும் நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறாள். மகளை ஒருபக்கமும் மகனை ஒருபக்கமும் தூக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாள். முத்துவுக்கு ஓரளவுக்கு புரிய ஆரமித்தது. அம்மா இந்தக் கிணற்றில் குதிக்கப்போகிறாள் என்று நினைத்தான்.

“அம்மா வேண்டாம்மா… எனக்கு பயமா இருக்கு.. என்ன விட்டுடுமா.. அம்மா பயமா இருக்கும்மா…” கெஞ்சுகிறான் முத்து.

“இந்த உலகம் பொல்லாதது. உன்னை வாழவிடாது. நீ என்னுடனே வந்து விடு” என்று மனதை இரும்பாக்கிக்கொண்டாள். அடுத்த வினாடி கிணற்றுக்குள் குதித்து விட்டாள். கலைந்த கூந்தல் வானத்தை நோக்கி மேலெழும்புகின்றன. வெண்மதியே போகதே… மேலே வா.. என்பது போல் இருந்தது.  முத்து மூச்சை இழுக்க முடியாமல் அம்மாவை உதைத்து வெளியே வர பார்க்கிறான். ஜானகியும் தூக்கம் கலைந்து அம்மாவை விட்டு வெளிவர முயற்சிக்கிறாள். ஆனால் வெண்மதியின் பிடியே வெற்றி பெறுகிறது. இருவரும் மூர்ச்சையான பின்பு தன்னையும் இழக்கிறாள். கிணற்றின் தண்ணிரின் மேலே ரெண்டு மூன்று கொதி வந்தவுடன் எப்போதும் போல் அமைதியானது அக்கிணறு. முழுநிலவு பௌர்ணமியின் பிம்பம் இப்போது அக்கிணற்றில் தெரிந்தது.

அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும்  கண்ணாடியின் பிம்பம்  அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது. அப்புகைப்படத்திற்கு கோவிந்தன் கையில் வைத்திருந்த மாலையை அணிவித்தான். ஓ… வென்று வாய்விட்டு அழுத அவனுடைய அழுகையானது எங்கும் ஒலித்தது. உடம்பு முழுவதும் மண்ணெண்னையால் ஊற்றிக் கொண்டதனால் பக்கத்தில் இருக்கும் விளக்கினைக் கோவிந்தன் தன்மேல் சாய்த்தவுடன் அனலாய் பற்றி எரிந்தது கோவிந்தனின் உடலும் அக்குடிசையும். அந்த நெருப்பின் புகையானது வானத்து மேகத்தில் கரைந்து போனது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »