Monday, September 8, 2025
Home Blog Page 37

சிறுதாயம் விளையாட்டு

நாட்டுப்புற கலைகளுள் குறிப்பிடும்படியாக உடல் மற்றும் ஆரோக்கியத்தினை வளர்ப்பதில் மிக முக்கிய இடம் விளையாட்டிற்கு உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளுள் உடல் சார்ந்த விளையாட்டுகள் மூளை சார்ந்த விளையாட்டுகளில் மகளிர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறன் சார்ந்த நாட்டுப்புற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். சங்க காலத்தில் இருந்தே பல்வகை விளையாட்டுகளை மகளிர் விளையாடி வருகின்றனர். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தற்காலத்தில் விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம், இயந்திரமயமான வாழ்க்கையும், பொருளாதார நெருக்கடியும், தொலைக்காட்சியும் ஆகும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியன இயல்பாகவே கிடைத்தன. அதனால், மகளிர் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர். இந்நிலையில் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினர், ஆனால், இன்றைய சூழலில் கணவன், மனைவி என்ற நிலைப்பாட்டில் கணவனின் வருமானத்தோடு மட்டுமல்லாமல் மனைவியின் வருமானமும் தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக, மகளிர் தங்களுடைய குடும்பத்தைக் காப்பதற்குத் தொழிலை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையிலான நேரம் குறுகுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சூழலில் விளையாட்டுகள் தேய்ந்து போகின்றன.

நாட்டுப்புற மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். நாட்டுப்புற விளையாட்டுகளுள் சிறுதாயம் விளையாட்டு கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நாட்டுப்புற மக்களிடையே விளையாடப்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு, பெண்களால் விளையாடப்பட்டு வருகின்றது. இது தாயாட்டத்திலிருந்து மாறுபட்டது. இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டை தாயம் விளையாட்டு என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்படுகின்றது. இவ்விளையாட்டு, ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனியே இரண்டு பிரிவினரும் விளையாடும் விளையாட்டாக இருக்கின்றது.           

            சிறுதாயக்கட்டத்திற்கு இவ்விளையாட்டு எதிரெதிரே இருவரும் அமர்ந்து புளியாங்கொட்டைகளை தெரித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் கட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

சிறுதாயக்கட்டம்

            நான்கு மையப்பகுதியை மலைகளாக வைத்துக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த கட்டத்தின் மையப்பகுதி இரண்டு பேருக்கும் பொதுவான பகுதியாகும். இதைப் பழமலை என்கிறோம். ஒரு பக்கத்திற்கு ஐந்து கட்டங்கள் விதமாக முதலில் ஆறு கோடுகளும், குறுக்க வாட்டில் ஆறு கோடுகளும் இருக்கும். குறுக்கில் ஐந்து கட்டங்களையும் நெடுக்கில் ஐந்து கட்டங்களையும் வரையறுத்துக்கொள்கின்றனர்.

சிறுதாயம் கட்டம் வரைய பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாடப்படும் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கட்டத்தை வரைந்துக் கொள்கின்றனர். கட்டத்தை வரைவதற்குக் கோவை இலை, சுண்ணாம் கட்டி தீச்சட்டி ஓடு, செம்மண் கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுதாயம் விளையாடுவோர் நேரம்

            சிறுதாயம் விளையாட்டில் இரண்டு நபர்கள் பங்கெடுத்துக்கொள்வர். இந்த விளையாட்டைப் பெண்கள் மட்டும் விளையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் சிறுவர்களும் ஆடவர்களும் விளையாடுவதுண்டு. இவ்விளையாட்டுப் பகலிலும் இரவு நேரங்களிலும் ஓய்வான நேரத்தில் விளையாடப்படுகிறது.

விளையாட்டுக்களம்

            வேலைக்குச் செல்லும் மகளிர் ஓய்வு நேரங்களிலும், தோட்ட வேலைசெய்யும் நேரங்களிலும், கழனியில் வேலை செய்யும் நேரங்களிலும், மரங்களின் நிழலிலும், மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகளிர் பாறைகளின் மேற்புறத்திலும் கட்டங்கள் வரைந்து விளையாடுகின்றனர். பெரும்பாலும் வீட்டின் உள்ளே பெண்கள் இவ்விளையாட்டை விளையாடுகின்றனர்.

சிறுதாயாட்டத்திற்குப் பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெண்மையாகும் வரை இக்கொட்டைகளைக் கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பர். “ஒரு சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வதும் உண்டு. நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடப்படுவதும் விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வர்.”1

            இவ்விளையாட்டில் கொட்டைகளின் வெண்மைப்பகுதி மேல் நோக்கி இருப்பதை வைத்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். நான்கு காய்களும் வெண்மையாகத் தெரிந்தால் அது நான்காகக் கணக்கிடப்படுகின்றன. அதுவே, நான்கு கொட்டைகளும் கவிழ்ந்து கருப்புப் பகுதி தெரிந்தால் எட்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

எருக்கம் பூ

            புளியங்கொட்டை இல்லாத, கிடைக்காத சூழ்நிலையில், விளையாட்டிற்கு எருக்கன் பூவைப் பயன்படத்துவதுண்டு. எருக்கன் செடியில் மொட்டின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் பூ பகுதியைக் கொண்டு விளையாடுகின்றனர்.

            எருக்கம் பூவைப் பயன்டுத்தும்போது விளையாட்டில் பூ செங்குத்தாக இருப்பதையும் சாய்ந்து விழுந்து இருப்பதையும் வைத்துக் கணக்கிடுகின்றனர்.

            விளையாடும்பொதுது நான்கு பூவும் செங்குத்தாக இருந்தால் எட்டுஎனவும், நான்கு பூவும் சாய்ந்திருந்தால் அதை நான்கு எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். மூன்று பூ செங்குத்தாக நின்றால் மூன்று எனவும், ஒன்று இரண்டு பூ செங்குத்தாக இருப்பின் இரண்டு, ஒன்று எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு எருக்கன் பூவை வைத்து விளையாடப்படுகின்றது.

“புளியங்கொட்டை இல்லாத சூழ்நிலையில் விளையாட்டிற்கு எருக்கம் பூவைப் பயன்படுத்தப்படுகின்றது. புளியங்கொட்டை இருந்தால் புளியங்கொட்டையையே பயன்படுத்துவர்.”2

விளையாட்டில் காயை நகர்த்துவதற்குப் பயன்படும் பொருட்கள்

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாயாட்டத்தை விளையாடுவதற்கு, புளியங்கொட்டை, புன்னைக்கொட்டை, கரிசட்டி ஓடு, எருக்கன்பூ இவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். கட்டத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப நகர்த்திச் செல்ல, சில பொருட்களைப் பயன்படுத்துவதுண்டு. அதாவது, அடையாளக் குறிப்புகளுக்காகத் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் சில கற்கள் விதைகள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று போலவே நான்கு பொருட்களையும் சேர்க்கின்றனர் எதிர் அணியும் அதே போன்று ஒரே மாதிரியாகச் சேகரிக்கின்றனர். ஆனால், இரண்டு அணியினரும் ஒரே வகையான பொருளைத் தேர்வு செய்வதில்லை. ஒருவர் பெரிய கற்களைப் பயன்படுத்தினால் எதிரணியினர் சிறிய கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

தாயம் விளையாடும் முறை

சிறுதாயம் விளையாட்டை விளையாடும்பொழுது இரண்டுபேர் இணைந்துதான் விளையாடத்தொடங்குகின்றனர். அவ்வாறு விளையாடும்போது கட்டத்தின் எதிர்ரெதிரே புறமாக ஒருவருக்கு ஒருவராக அமர்ந்துகொண்டு விளையாடத்தொடங்குவர். அவர்களுள் யார் முதலில் விளையாட்டைத் தொடங்குவது என ஒருமனதாகப் பேசி முடிவெடுத்து, நீ முதலில் தொடங்கு என்று சொல்லி, விளையாட்டைத் தொடங்குவர். அவ்வாறு தொடங்கும்போது முதலில் விளையாடக்கூடிய நபர் எருக்கன் பூ, அல்லது புளியங்கொட்டைகளைக் கொண்டு விளையாடும்போது அதில் என்ன எண்ணிக்கை விழுகிறதோ அந்த எண்ணிக்கையில் காயைக் கட்டத்தில் நகர்த்தத் தொடங்குகிறார்கள்.

 ஒரு நபர் நான்கு காய்கள் வீதம், கட்டத்திற்குள் வைத்திருப்பர். நான்கு என எண்ணிக்கை விழுந்தால் இரண்டு காய்களையும், நான்கு காய்களும் கருப்பாக விழுந்தால் நான்கு காய்களையும் கட்டத்தில் இறக்குகின்றனர். அதற்குமேல் ஒன்று விழுந்தால் ஒன்று என்றும், இரண்டு, மூன்று என எண்ணிக்கை விழுந்தால் முறையே காய்களை இறக்குகின்றனர். அந்தக் கட்டத்தில் உள்ளிருக்கும் காய்களை நகர்த்தத்தொடங்கியவுடன் நான்கு என எண் விழுந்தால் நான்கு கட்டங்களையும், எட்டு விழுந்தால் எட்டு கட்டங்களையும் கடந்து செல்கின்றன.

சிறுதாயம் விளையாட்டு முறைகளில் தாய் மலையில் காய் வெட்டப்படாது. இரண்டு அணியினருடைய காய்களை வெட்டுக்கட்டங்கள், மறு ஆட்டம் (அ) கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, தொக்கை பழம் எடுக்கும் மலை எனப்பல நிலைகள் கையாளப்படுகின்றன.”3 என்பதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது.

தாய்மலை

தாய்மலை என்பது, கட்டத்திற்குள் நகர்த்தத் தொடங்கும் இடங்களைக் குறிக்கும். இம்மலையைக் ‘காய் இறக்கும் மலை’ என்றும், முதல் ‘தாய் மலை’ என்றும் அழைப்பர்.”4 எட்டு, நான்கு எண்ணிக்கை விழுந்தவுடன் கட்டத்திற்கு வெளியே வைத்திருக்கக்கூடிய நான்கு கற்களுள் இரண்டு கல்லை (அ) நான்கு கல்லை, தாய் மலையில் வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து விழக்கூடிய ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கை அடிப்படைக்கேற்ப அந்தக் காயைக் கட்டத்தில் நகர்த்துகின்றனர். இரு அணியினரும் 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ஆகிய கட்டங்களில் காய்களை நகர்த்தி வெட்டிக்கொள்ளலாம்.

1.ஆவது மலை, 5 ஆவது மலை, 9.ஆவது மலை, 13.ஆவது மலைகள் தவிர, வெளிக்கட்டங்களில் காய்கள் நின்றால், எதிரணியினர் எண்ணிக்கை அடிப்படையில் காய்களை வெட்டுகின்றனர். வெட்டுவது என்பது இரு அணியினருக்கும் பொதுவானது, அதேப்போல் உள் கட்டங்களுள் உள்ள 25 ஆவது கட்டமான பழம்மலை தவிர, மற்ற கட்டங்களில் காய்களை வெட்டுவர்.

மறுஆட்டம் (அ) கையாட்டம்

நான்கு, எட்டு, ஒன்று எண்ணிக்கை விழுந்தால், அதற்குக் கையாட்டம் என்று பெயர். இதை விளையாடுபவர் காய்களை குலுக்கிப்போட்டு மீண்டும் விளையாடுவர்”5

வெட்டாட்டம்

எதிரணியினரின் காய்களுள் ஏதாவது ஒரு காயை வெட்டுவர். இதற்கு ‘வெட்டாட்டம்’ என்று பெயர். இந்த வெட்டாட்டத்தில் மறுபடியும் புளியங்கொட்டைகளைக் குழுக்கிப் போடுவர். இது மறுமுறை விளையாட மீண்டும் வாய்ப்புத் தருவதாகும்.

கோடிமலை

            தாய் மலையிலிருந்து காய்களை இறக்கிக் கட்டத்தில் நகர்த்திக் கொண்டு வரும்பொழுது, 13 ஆவது மலையைக் ‘கோடிமலை’ என்று அழைக்கின்றனர். இம்மலையில் காய்கள் இருந்தால், பழம் எடுப்பதற்கு உரிய மலையாகவே கோடி மலை கருதப்படுகிறது. இதற்கு நிரம்பி விட்டது என்று பொருள்”6 இது வாய்மொழிச்செய்தியாகும்.

வெளிகட்ட தொக்கை

வெளிகட்டங்களான 14 ஆவது 15 ஆவது 16 ஆவது கட்டங்களில் காய் நின்றால் தொக்கை என்று கூறுகின்றனர். இக்கட்டங்களில் இருக்கும் காய்கள், உள்கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், எதிரணியினருடைய காய்களை வெட்டினால் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

உள்கட்டத்தொக்கை (அ) பழம் எடுக்கும் மலை

இம்மலையை ‘வெற்றிமலை’ என்றும் ‘பழம் எடுக்கும் மலை’ என்றும் அழைக்கின்றனர். 24 ஆவது கட்டத்தில் காய் நிற்கும்போது தொக்கை என்பர். தாயம் போட்டுத் தொக்கையில் உள்ள காய்களைப் பழமெடுப்பர். இரு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னும் பழமாகினாலும், இறுதியில் எந்த அணியினர் முதலில் பழம் எடுக்கிறார்களோ? அவர்களே வெற்றிபெற்றவர் ஆவார்.

விளையாட்டின் விதிமுறைகள்

சிறுதாயாட்டத்தை நான்குபேர் விளையாடும் பொழுது இரண்டுபேர் விளையாடுவது போலவே, விளையாடலாம் என்பது விளையாட்டின் விதிமுறை. காய் வீசுவது மட்டும் சுழற்சி அடிப்படையில் வந்து கொண்டிருக்கையில், அதில் ஒரே அணியில் இருப்பவர்கள் அவர்களுக்குரிய காயை நகர்த்தி;க் கொள்ளவேண்டும் என்பது விதிமுறையாகும்.”7

            விளையாடுபவர்கள், ஆட்டத்தில் காய்களைப் பயன்படுத்தும்போது, காய்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. அதேப்போல கற்கள் என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.

            சிறுதாயாட்டத்தில், புளியங்கொட்டையை விளையாடும் களத்தில் போடும் பொழுது ஒன்று விழுந்தால் ஒரு தாயமாகும். ஒரு தாயத்திற்கு ஒரு காயை மட்டும் தாய் மலையில் இறக்குதல் வேண்டும் என்பது விளையாட்டின் நெறிமுறையாகும். ஆனால், எட்டு, நான்கு எண்ணிக்கையில் விழுந்தால் விளையாட்டில் காய்களின் நகர்வுகளுக்கு மட்டும் இந்த எண்ணிக்கைகளைப் பயன்படுத்துவதுண்டு. குறைவான நேரத்தில் விளையாட்டை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், விளையாட்டில் காயை விளையாட்டுக் களத்தில் குலுக்கிப் போடும்போது நான்கும் எட்டும் விழுந்தால் நான்கிற்கு ஒரு காயையும், எட்டிற்கு இரண்டு காய்களையும் தாய்மலையிலிருந்து இறக்கவேண்டும்.

முதலில் கொட்டையை விளையாட்டுக்களத்தில் குலுக்கிப்போட்டு நான்கு, எட்டு தாயம் விழும் எண்ணிக்கையில் காய்களை, முதல் மலையில் இறக்கினால், எதிரணியினர் ஒன்பதாவது மலையில் காய்களை இறக்க வேண்டும் என்பது விதிமுறை.

முன் கட்டத்தில் சுற்றி வந்து ஏதாவது ஒரு காய், பழம் எடுக்கும் மலையில் தொக்கையில் உட்கார்ந்து விடும். தொக்கையில் உட்கார்ந்த காயைத் தாயம் போட்டுத்தான் பழமாக்க முடியும். மற்ற எந்த எண்கள் விழுந்தாலும் தொக்கையிலிருந்து பழம் எடுக்க முடியாது. எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும் என்பது விதிமுறை.

எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே, உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும். ஒருவருடைய காயை, வெட்டி விட்டுத் தன் காய்களை உள்கட்டத்தில் கொண்டு சென்று விட்டால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஒவ்வொரு காய்களையும் அடுக்கி பிடித்துக் கீழே போடக் கூடாது. அப்படி கீழே போட்டு விழும் எண்ணிக்கைக்குக் காய்களைக் கட்டத்திற்கு நகர்த்தமாட்டார்கள் என்பது விதிமுறை.

விட்டுக் கொடுத்தல்

            ஒரு சில நேரங்களில் நட்பு ரீதியில் எதிரணியினரும் வெற்றி பெறட்டும் என்னும் நோக்கில், காய்களை வெட்டுபவர், வெட்டாமல் போவதும் உண்டு.

சமூகப் பின்புலம்

சிறுதாயாட்டம் விளையாடும் பெண்களின் உறவு முறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விளையாட்டை வீட்டின் அருகாமையிலேயே விளையாடுகின்றனர். நெருங்கிய உறவு முறைக்காரர்கள் மட்டும் வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்றனர். அதேப்போல் ஆண்கள் வீதியிலும், பொது இடங்களிலும் பல விளையாட்டுகளை விளையாடுகின்றனர். ஆனால், பெண்கள் அது போன்று விளையாடுவதில்லை. அதாவது, சமூகத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுந்த மகாபாரதத்தில் ஆணாதிக்கத்தை மையப்படுத்தி நாடு, நகரம், ஊர் எல்லாவற்றையும் தாயக் கட்டையை உருட்டி இழந்ததை இந்த விளையாட்டுப் புலப்படுத்துகின்றது. ஆனால், சிறுதாயாட்டத்தில் பொருளையோ, பிறவற்றையோ வைத்து விளையாடுவதில்லை என்பதும், கால மாற்றம், சமுதாய மாற்றத்திற்கான விழிப்பாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

குடும்பத்தை நர்வாகம் செய்வதில் பெண்ணின் பங்கு அளப்பரியாதாகும். பெண் சமுதாயம் தாயாட்டத்தினை விளையாடுவதற்குப் பொதுவிடங்களைத் தவிர்ப்பது என்பது, இதைச் சூதாட்டம் என்ற நிலையில் பார்க்கப்படும் கண்ணோட்டமாகும். ஆனால், கட்டையை உருட்டுவதை விட பெரும்பாலும் புளியங்கொட்டையைக் கொண்டு விளையாடும் சிறுதாய விளையாட்டையே பெண்கள் விரும்பி விளையாடுகின்றனர். புளியங்கொட்டைகளைப் பயன்படுத்துதல் குடும்பத்தை நிர்வாகிக்கும் முறையினை உணர்த்துகிறது. கணவன், குழந்தைகள், மாமியார், மாமனார் ஆகியோரை நிர்வகிக்கும் பொறுப்பினை வளர்க்கின்றது.

சிற்றூர்ப் பகுதியில் வாழும் மக்கள் உழவுத்தொழிலையும் பிற தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தொழில்களில் ஈடுபடுவதால் உழைத்துக் களைப்பைப் போக்கும் ஓய்வான நேரங்களில் அவர்கள் குழுவாக இருந்து இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, அக்கா ஆகியோர் சேர்ந்து விளையாடுவது குடும்ப உறவுகளைப் பேணிக்காக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 குடும்ப உறவுகளோடு கட்டங்களைப் போட்டுத் தனித்தனியாக விளையாடும் பொழுது, அந்த உறவு முறைகளில் ஏற்படும் உறவினைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டில் பொருளையோ? பணத்தையோ வைத்து விளையாடுவதில்லை. ஆனால், அன்புக்கு மட்டும் ஏங்கி விளையாடப்படும் இவ்விளையாட்டுப் பொழுது போக்கு விளையாட்டாகவே நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு விதமான வழக்குச் சொற்களைச் சொல்லி விளையாடுகின்ற முறையையும் இவ்விளையாட்டில் பார்க்க முடிகிறது. கூழோ? கஞ்சியோ? தண்ணீரோ? வந்த உறவுக்காரர்களுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு விளையாட்டைத் தொடங்கும் முறையானது, பகுத்துயிர் வாழ்தலும், பல்லுயிர் ஓம்புதலுமாகிய விருந்தோம்பலைப் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

விளையாட்டின் நன்மைகள்

சிறுதாயாட்டமானது பெண்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நுட்பமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதற்கு இந்த விளையாட்டு உதவி புரிகின்றது. குடும்ப உறவு முறைகளைப் பேணிக் காக்கும் பொருட்களான புளியாங்கொட்டையும் எருக்கம்பூவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இனக்குழு சமுதாயத்தில் சிறுதாயாட்டம் பெரும்பாலும் முல்லை நிலத்து விளையாட்டாகவே இருக்கிறது. இந்த விளையாட்டுப் பெண்களின் குடம்பத்தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்தள்ளது.

சிறுதாயாட்டத்தில் வாழ்க்கை தத்துவம்

யார் எங்கு ஆரம்பித்தாலும் இறுதியில் சேர வேண்டியது ஓர் இடம்தான் என்பதை உணர்த்தும் விதமாகச் சிறுதாயம் விளையாட்டு அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதும், உதைப்பதும், வீழ்த்துவதும், ஒன்று சேர்வதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைக் கொள்வதும், நான் போராட வேண்டும், நீ போராட வேண்டும், என இப்படி இரண்டு பேரும் ஓரிடத்தில் வாழ்க்கையை நிறைவு செய்வதுமான வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துகிறது. இந்தப் போராட்டத்தில் எந்தக் காயும் வெட்டப்படலாம். காய்கள் மாட்டிக் கொள்ளாமல் வெற்றிபெறுவதே மகிழ்ச்சியான செய்தியாகும்.

முடிவுரை

சிறுதாயாட்டம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மகளிர் விளையாடும் விளையாட்டாகவே உள்ளது. இவ்விளையாட்டுப் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் விளையாடப்படுகின்றது. சிறுதாயாட்டத்திற்குப் புளியங்கொட்டைகள் அல்லது எருக்கம் பூக்களை விளையாட்டுக்களத்தில்; கீழே போட்டுப் பயன்படுத்துகின்றனர். தாய்மலை, மறுஆட்டம், கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, வெளிகட்ட தொக்கை, உள்கட்ட தொக்கை, தொக்கைபழம் எடுக்கும் மலை என்ற நிலைகளில் கிருஷ்ணகிரி  வட்டாரத்தில் சிறுதாயாட்டம் முறை அமைந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி வட்டாரத்தில்  மாறுபட்டிருப்பதை அறிய முடிகிறது. மகளிர் சமுகப் பின்புலத்தோடுதான் சிறுதாயாட்டத்தை விளையாடுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்து மகளிர் தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களோடு மட்டும்தான் விளையாடுகின்ற முறையை இந்த விளையாட்டில் பார்க்க முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.          நேர்க்காணல் பச்சையம்மாள் (24), மத்தினேரி, தேதி 10.4.15

2.          நேர்க்காணல் தமிழரசி (17), இராமபுரம், 2.05.15

3.          நேர்க்காணல் கண்ணம்மா (36), திம்மாபுரம், 4.5.14

4.          நேர்க்காணல் உமா (18), ஏரிக்கொல்லை, 22.04.15

5.          நேர்க்காணல் இரஞ்சிதா (30), செம்படமுத்தூர், 18.6.16

6.          நேர்க்காணல் பாஞ்சாலை (50), மாதேப்பட்டி 6.6.15

7.          நேர்க்காணல் சங்கீதா (22), செம்படமுத்தூர், 8.6.16

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்-635130.

அலைபேசி எண் : 9943259247

மின்னஞ்சல் : aathmalingam1977@gmail.com

நற்றிணைக் காட்டும் யானைகளும் உணர்ச்சி மிகு வாழ்க்கையும்

உலகத்தில் வாழும் ஐந்தறிவு உயிர்களில் யானையும் ஒன்று.  பெரிய உருவமும் அதிக எடையும் கொண்ட விலங்கு.  நிலத்தில் வாழும் மனிதர்களைத் தவிர்த்து யானைகள் மிக நீண்ட காலம் உயிர் வாழக் கூடியதாகும்.  யானைகளைப் பொறுத்தவரைத் தனியாக இருப்பதில்லை.  கூட்டமாகவே வாழ்கின்றன.  தனியாக இருக்கும் யானை மதம் பிடித்து அலைந்து திரியும் என்பார்கள். யானையினங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்வு மிக்கதாகவும், அறிவுச்சார்ந்த நிலைகளில் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிப் புரியும் வகையில் யானையினங்கள் இருந்து வருகின்றது.  சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில விலங்கான யானைகள் நற்றிணைப் பாடல்களின் வாயிலாக நோக்கும் போது உணர்ச்சி மிகு வாழ்க்கையினை நடத்துகிறது எனலாம்.

பெருங்களிறும் மடப்பிடியும்

          சங்க இலக்கியத்தில் யானையைப் பற்றியச் செய்திகளும் அவைகளின் வாழ்க்கை முறையினைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதகம், கைமா, உம்பல், வாரணம், அசனாவதி, அத்தி, அத்தினி,அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆணை, இயம், இரதி, குஞ்சரம், இராசகுஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, கரி, அஞ்சனம் போன்ற பலப் பெயர்கள் யானையைக் குறிக்க சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆண் யானையைக் களிறு என்றும் பெண் யானையைப் பிடி என்றும்  குட்டியைக் கன்று என்றும் சொல்வர்.  வீரம் மிகுந்த ஆண் யானையை களிற்று யானை என்று கூறுவர்.  இங்கு களிறு என்பதும் யானை என்பதும் ஒரே பொருளில் வருவதைக் காணலாம்.  ஒரு வேளை களிறு என்பது யானை இனங்களில் ஒரு பெயராக அக்காலத்தில் குறித்து வந்திருக்கலாம்.  இவையன்றி களிறு என்பதற்கு வீரம் என்ற பொருள்படவும் அமைந்து, அதனால் வீரம் மிகுந்த யானையைக் களிறு என்று அழைத்திருக்க வாய்ப்பு உண்டு.  பின்னாளில் அதுவே களிற்றுயானை என புலவர்கள் சொல்லியிருப்பார்கள்.  பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை இருக்க வேண்டுமென பெரியோர்கள் சொல்லுவார்கள்.  அதனால்தான் பெண் யானையை மடப்பிடி என்று புலவர்கள் அழைத்திருப்பது வியக்கத்தக்கது.  ஆக பெண் யானைகளுக்கு மடம் என்ற பண்பு இருந்திருக்கிறது என அறியமுடிகிறது.

நற்றிணையில் யானை

          வெண்கோட்டு யானை, வயக்களிறு, பெருங்களிறு, வேழம், மா, பைங்கண் யானை, பரும யானை, ஒருத்தல், மடப்பிடி, புகர்முகவேழம் என நன்றினைப் பாடல்களில் குறிக்கப்படுகிறது.

          “இருந்செறு ஆடிய கொடுங்கவுள், இயவாய்,

          மாரி யானையின் மருங்குல் தீண்டி”  (நற்:141:1-2)

          செம்மை நிறமுடைய தலையையும், வளைந்த கொடுமை தன்மையுள்ள துதிக்கைகளை உடையனவும், ஏந்திய தந்தங்களை கொண்டதும், அகன்ற வாயையும் உடைய கரிய மேகம் போல் இருக்கும் யானைகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் யானைகள் மதத்தால் செருக்குண்டு கடிய சினமும் வலிமையையும் உடையது (நற்-103) என நன்றிணைப்  பாடல் குறிப்பிடுகின்றது.

உணவும் வாழிடமும்

          யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும்.  இவை மூங்கில் மற்றும் கரும்பு போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.  யானைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.  நற்றிணைப் பாடல் ஒன்றில்,

          “சூல் முதிர் மடப்பிடி, நான் மேயல் ஆரும்” (நற்.116:5)

          கருவுற்ற ஒரு பெண் யானையானது தன்னுடைய பசியைப் போக்க மூங்கிலின் கொழுத்த முளைப்பகுதியை ஒடித்து தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டதாம் என கூறுகிறது.  அதைப்போல பசியால் வருந்திய மென்மையான தலையை உடைய பிடி வருந்தமுற்று நின்றதாம்.  அதனைக்கண்ட பெரியகளிற்று யானையானது பக்கத்தில் இருக்கும் ஓமை மரத்தை முறித்து அதனுடையப் பட்டையை தன் பிடிக்கு உணவாகக் கொடுத்ததாம் (137,279) குழியில் ஊறிய நீரை யானையினம் சென்று உண்ணுதல் (240), நன்றாக உண்ட யானைகள் இத்தி மரத்தின் நிழலில் வந்து உறங்குகிறது (162) என நன்றிணைப் பாடல்கள் கூறுகின்றது. நன்கு வளர்ந்த  யானைகள் நாள் ஒன்றுக்கு  140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன என ஆய்வு குறிப்பிடுகிறது.  தற்போது காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்கப்படுவதால் தாவர உண்ணிகளான யானைகளுக்கு உணவுகள் கிடைப்பது அரியதாகிறது. மனிதர்களின் வேளாண்மை விரிவாக்கத்திற்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர்.  காடுகளில் வாழ்ந்து வரக் கூடிய யானைகள் எங்கே செல்வது எனத் தெரியாமல் காடுகளாய் இருந்து மாற்றிய விவசாய நிலங்களை அழிக்கிறது.  மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்குகிறது. இதனால் மனிதர்களால் யானைகள் கொல்லப்படுகின்றன.  யானைகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது யானைகள் எங்கு செல்லும்.  இவ்வாறான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முரண்பாடுகளால் ஆண்றொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாக ஆய்வு கூறுகின்றது. யானைகள் தனக்குத் தேவையான செடி, கொடி, பட்டை போன்ற தாவர உண்ணிகள் கிடைக்கப்பெறாததால் தான் ஊருக்குள் வந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் நாசப்படுத்தியும் விடுகின்றன என்பதை அறியலாம்.

உடலமைப்பு

          பெரும்வாரியான யானையினங்கள் ஆப்பிரிக்கக்காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.  பெரிய உருவம், தந்தம், துதிக்கை, சிறிய கண், நீண்டக் காதுகள், புடைத்த நெற்றி மேடுகள், நான்கு கால்கள், சிறிய வால் என யானையின் உடலமைப்பு அமைந்திருக்கும்.  ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரியவையாக இருக்கும்.

(i) தும்பிக்கை

          யானைக்குக் தும்பிக்கைப் போன்று மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும் எனும் பழமொழி நம்மிடையே உண்டு.  அதுபோல யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கையே ஆகும்.  நற்றிணையில்,

          “இரும் பிணர்க் தடக்கை நீட்டி, நீர் நொண்டு

          பெருங்கை யானை பிடி எதிர் ஓடும்”  (நற்.186:2-3)

          நீர் சேருகின்ற இடத்தில் யானையானது தனது நீண்ட துதிக்கையால் தண்ணீரை உண்டது என்கிறது இப்பாடல்.  மேலும் வலிமை மிகுந்த நீண்ட துதிக்கையைக் கொண்டது யானை (நற்.194),யானைகள் தும்பிக்கையின் நுனியால்தான் மூச்சு விடுகின்றன (நற்.253), யானையின் தும்பிக்கைகள் தினைக்கதிர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன(நற்.344). யானைகளின் தும்பிக்கைகள் 40,000 தசைகளாலும்; எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியதுமாகவே அமைந்திருக்கிறது.  தும்பிக்கையின் உதவியால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்கமுடியும்.  உணவு உண்ணுவதற்கும், பகை விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வளையமாகவே தும்பிக்கை அமைகின்றது.

(ii) தந்தங்கள்

          யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன.  இவைகளுக்கு யானைக்கோடு என்று பெயர்.  இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டும் தான் தந்தம் உண்டு.  பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து யானைகளுக்கும் தந்தம் உண்டு.  இந்தத் தந்தமே யானையின் கடைவாய் பற்களின் வளர்ச்சிதான் இப்படி நீண்டு இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

          யானைகளின் தந்தங்கள் 10 அடி வரை வளரக் கூடியதாகும்.  90 கிலோ கிராம் எடை வரை இருக்குமாம்.  யானையின் தந்தத்திற்கு மக்களிடத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு. யானையின் தந்தத்தை வெட்டி அணிகலன்களாகவும், கதவு, நாற்காலி, படுக்கைக் கால்;கள் எனச் செய்து கொள்வதனால் மக்கள் தந்தத்திற்கு பெருமளவு பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.  நற்றிணையில்,

          “புலியொடு பொருத புண் கூர் யானை

          நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்” (நற்;.65:5-6)

          புலியுடன் சண்டையிட்ட யானையானது தோற்று ஓடியது.  அதைக் கண்ட கானவர்கள் அம்பெய்தி அந்த யானையைக் கொன்றனர்.  யானையின் தந்தத்தை கானவர்கள் எடுத்தார்கள் என ஆசிரியர் கூறுகின்றார்.  இறந்த யானையின் தந்தத்தை எடுத்து பாறையின் மீது காய வைத்தார்கள் என்றும் நகங்களை ஊனின்றுப் பிரித்து எடுத்தார்களாம் கானவர்கள் (நற்.114) என்றும், யானையின் ஒற்றைத் தந்தத்திற்கு அருவியின் நீரை உவமையாகவும் சுட்டப்படுகிறது (நற்.24). மனிதர்களின் சுயநலத்திற்காக யானைகள் கொல்லப்பட்டுப் தந்தங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

(iii) காதுகள்

          யானைகள் நன்குப் பெரிய அகன்ற மடல் போன்;ற காதுகளைக் கொண்டுள்ளன.  யானையினுடைய செவியானது ஆம்பல் இலைப் போன்று அகலமாக உள்ளது என,

          “முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை” (நற்.230:1)

          நற்றிணைப் பாடல் கூறுகின்றது.  தாமரை இலைப்போல் யானையின் காதுகள் உள்ளன (நற்.310:2)என்றும், முறம் போன்ற பெரிய காதுகளை உடையது யானைகள் என உவமையாகக் கூறப்படுகின்றன.  யானையின் உடலில் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக காதுகள் பெரியதாக இயற்கை அமைத்திருக்கிறது.  காதுகளை அசைத்து காற்று குளிர்விக்கப்பட்டு உடலினுள் வைக்கப்படுகிறது.  அதனால் தான் யானைகள் எப்போதும் தன் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

(iv) கால்களும் தோலும்

          யானைகள் வலிமையான கால்களைக் கொண்டுள்ளன.  தன் உடல் எடையை தாங்குவதற்கேற்பச் செங்குத்தான கால்களும், அகன்றப் பாதங்களும் பெற்றுள்ளன.  இளைப்பாறுதலைத் தவிர மற்ற நேரங்களில் அமருவதில்லை.  தண்ணீரில் யானைகள் நன்றாக நீந்தக் கூடியவை.  யானையின் தோல் மிகவும் தடிப்பானது. தோலின் தடிமன் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் அளவுடன் உள்ளதாக இருக்கும்.  யானைகள் தன் தோல்களின் மூலம் உணர்வு திறனை வளர்த்துக் கொள்கின்றது.

(v)அறிவாற்றலும் புலன் உணர்வும்

விலங்கு இனங்களில் யானையின் மூளையே பெரியதாகும்.  யானைகள் நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டது.  அவை மட்டுமல்லாமல் யானையினுடைய கண்கள் சிறியவையாக இருப்பதால் கிட்டப்பார்வையைக் கொண்டது.  அதனால் கேட்கும் திறனையும், மோப்பத் திறனையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

          “களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடுநீறு” (நற். 302:7)

மக்கள் நடந்துச் செல்லக் கூடிய சுர வழியிலே யானைகள் ஒன்றோடு ஒன்று கால்களால் உதைத்து விளையாடியதால் அவ்விடமானது புழுதி நிறைந்துக் காணப்பட்டது என நற்றினைக் கூறுகின்றது. வெளிநாடுகளில் யானைகளுக்கு இடையில் கால்பந்து விளையாட்டை வைத்து வெற்றிப் பெற்ற யானைகளுக்குப் பரிசு வழங்குவதை நாம் தொலைக்காட்சியில் கண்டிருப்போம்.  அதைப் போல செக்குடியரசு நாட்டில் பராகுவே நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆசியாவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் யானை 12 ஓவியங்களை வரைந்திருக்கிறது.  அவ்வோவியங்களை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் (21.09.2012,ப.16) வெளியிடப்பட்டுள்ளது.  யானைகள் தண்னுணர்வு கொண்டவை.  தன்னையும், தன் இனத்தையும் விரைவில் அறிந்து கொள்ளும். யானைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என  நற்றினைக் கூறுகிறது.

                             “சிறு கண்யானைப் பெருங் கை ஈர் இனம்

                          குளவித் தன் இயம் குழையத் தீண்டி” (நற்.232:1-2)

          சிறியக் கண்ணையும், பெரிய கையையும் உடைய ஆண், பெண் யானைகள் பச்சை நிறமுடைய வயல்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் குளத்திலே குளிக்குமாம்.  அப்போது ஊடலின் காரணமாக இரு யானைகளும் மலை வாழையை உண்ணாது ஊடலைப் போக்க வழியைத் தேடிக் கொண்டிருக்குமாம்.  ஊடல் தீர்ந்தவுடன் பலா மரத்தினுடைய இனியப் பழத்தை உண்டு மகிழ்ந்ததாம்.  இப்படி உணர்வு மிக்க யானைகள் பல வாழ்ந்து வந்திருக்கிறது.

உணர்ச்சி மிகு வாழ்க்கை

    யானைகள் எப்போதும் தன் குடும்பத்துடன் சேர்ந்தே வாழும் பழக்கமுடையது. தன் குடும்பத்தில் வாழும் பிடிக்கும், கன்றுக்கும் பாதுகாப்பாக ஆண் யானைகள் இருந்து வருகின்றன.  சில நேரங்களில் மனிதர்களைப் போலவே அன்பைக் காட்டுவதில் ஒப்பற்றதாக யானைகள் விளங்குகின்றது.  கன்றுடன் பிடி நீருக்காக வந்து நின்றன. (நற்.105:4) என்றும்,

                              “பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப பத்தர்

                          புன் தலை மடப்பிடி கன்றொரு ஆர.” (நற். 92:6-7)

  பசுக்களுக்காக வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியிலே, களிற்றுயானையானது தன்னுடைய பிடியும், கன்றும் தண்ணீர் நிறைய உண்ணுமாறு செய்து தாகத்தைத் தீர்த்ததாம். பெண் யானையுடன் ஆண் யானையானது மிகுந்த விருப்பமுடன் சேர்ந்தது (317) என்றும், பிடியானது மிகுந்த வலியுடன் கன்று ஈனுகிறது.  பிடியின் வலியைப் பொறுக்க மாட்டாத ஆண் யானையானது வெளியே வந்து காத்து நின்றதாம்.  கன்று பிறந்தவுடன் கலங்கிய கண்ணீருடன் தன் பிடியையும்  கன்றையும் பார்த்தது(399:6-7) என்றும், கன்றை ஈன்ற பிடி பசியால் துடித்தது.

ஆண்யானை உணவுக்காகத் திணையைக் கவரச் சென்றது (393:2-4) பிறந்த இளம் கன்றுகள் தன் உடலை வேங்கை மரத்திலே தேய்த்துக் கொண்டதாம் (362:7) உணவுக்காக வெளியேச் சென்றிருந்த ஆண் யானை திரும்பி வந்து பார்க்கும் போது பெண் யானை இல்லாமல் போகவே; மனம் பயம் கண்டு பிளிருமாம் (317:1) ஒரு வேளை பெண் யானை இறந்தால், அவற்றைத் தாங்கிக் கொள்ளாத ஆண்யானையானது திணைக் காட்டிற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது (108:2) போன்றச் செய்திகள் நற்றிணையில் யானைகள் குடும்பம் நடத்தும் பாங்கினைச் சுட்டுகின்றது.  மனிதர்களுக்கு நிகராக அன்பு காட்டி உணர்ச்சி மிகுந்த வாழ்க்கையினை வாழ்ந்துக்கொண்டிருக்கிறது யானைகள் என்பதை அறியலாம்.

தொன்றுத் தொட்டு வரும் பகை

          நற்றிணையில் யானைக்கு பெரும்பகையாக புலியே இருந்து வருகின்றது.  கன்றுடைய வேழம் புலிக்கு பயந்து குட்டியைக் காத்து நின்றதாம். (நற்.85:5) யானையைப் பார்த்து புலி அஞ்சி ஓடியது (நற்.217:2) எனவும், சங்க இலக்கியங்களில் குறும்.141:4-5, 343:1-3, மலைபடு.307-309 கலி.38:6-7, 42:1-2, 48:1-7, 49:1-2, 52:1-4,  அகம்.332: 2-9 போன்ற செய்யுள்களில் யானையானது புலியைத் தாக்கிக் கொன்றச் செய்தி இடம் பெறுகின்றது. நற்றிணையில்,

                   தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்

                 கொன்ற யானைக் செங் கோடு கழாஅ.” (நற்.247:1-2)

          வலிமை மிகப் பெற்றுள்ள யானை தொன்றுதொட்டு வரும் பகையினால் சினந்து புலியைக் கொன்றதாம், நுழைய முடியாத குகையிடத்தில் யானை கரும்புலியைத் தாக்கிக் கொன்றது (நற்.151:2-3) போன்றச் செய்திகள் யானைக்கும் புலிக்கும் உள்ள தொடர்பை நினைவுப்படுத்துகின்றது. பல சிங்கங்கள் சேர்ந்து தனித்து வந்த யானையைக் கொல்லும்.  ஆனால், இதுவும் அரியதாகவே காணப்படுகிறது.  சங்க காலத்தில் புலிகளுக்கும் யானைகளுக்கும் சண்டை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பொதுவாக யானைகளை எந்தவொரு விலங்கும் வேட்டையாடுவதில்லை.

கடும் போராளிகள்

          ஆய் அண்டிரன் பல யானைகளை வைத்திருந்தான் (237), போர்க்காலங்களில் விரைந்து நடக்கும் யானைப் படைகள் இருந்து வந்தன (381, 43) காவல் மதிலைப் பலவற்றைச் சிதைக்கும் களிறுப் படைகள் (150)இருந்தன எனச்; செய்திகள் நற்றிணைப் பாடல்கள் கூறுகின்றன.  அக்கால மன்னர்கள் யானையின் மீது ஊர்ந்துக் செல்லவும். போர்க்களத்தில் யானைகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தார்கள்.

              “பொருத யானை வெண்கோடு கடுப்ப” (நற்.225:2)

முருகக் கடவுளின் வலிமையை ஒத்த சினமுடைய யானையானது போர்களத்திலேப் போரிட்டது. அப்போது அதனுடைய வெண்மையான தந்தம் குருதி படிந்து சிவந்திருக்குமாம்.  அப்படி சிவந்திருந்த குருதிப் படிந்த தந்தத்தை வேங்கை மரத்திலே குத்தி குத்தி துடைத்துக் கொள்ளுமாம் (நற்.202) இப்படி யானைகள் கடும் போராளிகளாக இருந்து வந்தன.

          யானைகளைக் கட்டிக் காப்பவருமான பாகர்கள் சரியான முறையில் உணவுக் கொடுத்தும் நன்றாகப் பாதுகாத்தும் வர வேண்டும்.  ஆனால் பாகர்கள் யானையை துருப்பு முள்ளாலேக் குத்தி துன்புறுத்தி தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் உண்டு.  அக்கால மக்கள் யானையை மதித்தார்கள்.  அதனால்தான் என்னவோ விநாயகர் கடவுளுக்கு யானையின் முகம் இட்டு போற்றி வணங்குகிறார்கள்.  இறைவன் படைத்த அரிய படைப்புகளில் யானையினங்களும் ஒன்று. அவற்றினைப் பாதுகாப்போம்; பாரம்பரியம் காப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தன்னம்பிக்கை கட்டுரை – 2

மனப்பான்மையை உயர்த்துங்கள்

    உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எது தடையாக உள்ளது? என்பதைக் கவனிக்க வேண்டும். புறத்தடைகள் அல்ல. அகத்தடைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும். மனதில் உள்ள தடைகள் என்ன? எதற்கெடுத்தாலும் ஒரு தயக்கம். இதை நம்மால் செய்ய இயலுமா? இயலாதா? தோல்வியுற்றால் மற்றவர்கள் தம்மை கேலிசெய்வார்கள் கீழ்த்தரமாகப் பேசுவார்கள் என்ற எண்ணம். ஒரு செயல் தன்னால் செய்யப்பட வேண்டும் என்ற நிலையிலும் அதைச்செய்யாமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? என்று பார்ப்பது தன்கடமைகளைத் தட்டிக்கழிப்பது போன்ற எண்ணங்களே அகத்தடைகள் எனக் கூறலாம். இவ்வாறான மனோநிலை நிகழ்ந்தால் தனக்கு நன்றாகத்தெரிந்த செயலைக்கூட செய்வதற்குத் தயக்கம் ஏற்படும். தாழ்ந்த மனோபாவம் எவ்வாறு ஏற்படுகிறது என்று பார்த்தோமானால், சிறுவயதில் உடன் பிறந்தவர்களால், உறவினர்களால், நண்பர்களால், சுற்றியுள்ள சூழ்நிலையால் உண்டாகி இருக்கும். உதாரணமாகப் பெற்றோர்களில் பலர் தனது குழந்தைகளுக்கு எந்தவிதமான செயலையும் செய்ய விடுவதே இல்லை. பற்களைச் சுத்தம் செய்வதிலிருந்து குளிப்பது, பள்ளிக்குச் சென்றுவிட்டு வருவது சமைப்பதுவரை தானே எல்லாவற்றையும் செய்து விடுவார்கள். “இது உனக்கு ஒன்றும் செய்யத்தெரியாது. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிடுவார்கள். குழந்தைகளை ஒன்றும் அறியாதவர்களாக அனுபவம் அற்றவர்களாக வளர்த்து விடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்ந்து பொது வாழ்க்கைக்கு செல்லும்போது, உறவினர்களால் நண்பர்களால் மிகவும் தாழ்வாகப் பேசப்பட்டு தனக்கு எதுவும் சரியாகச் செய்ய வரவில்லை. இனி நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேவையற்ற விமர்சனங்களால் நாளடைவில் தானேதன்னை தாழ்வாக எண்ணும் நிலை ஏற்பட்டு விடும். இந்த எண்ணத்தால் மீள முடியாமலும், ஒருசெயலை செய்ய இயலாமலும் தள்ளாடும் நிலை உருவாகிவிடுகிறது.

அனுபவங்களைக் கற்றுக்கொடுங்கள்

          ஒரு குழந்தையிடம், ஒரு செயலைச் செய்யுமாறு தூண்டவேண்டும். அச்செயலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். பலமுறை தவறிவிடும். ஒரு வேலையை செய்யும் போது உன்னால் முடியும் என்று ஊக்குவித்தலில் ஒரு குழந்தை வளர்ந்தால், அது வெற்றியாளனாக மாறும். ஒரு குழந்தைக்கு பென்சில் கூட பெற்றோர்கள் சீவிக்கொடுத்து, நீ சீவினால் முள் உடைந்துவிடும் என்று அதன் திறனை தாழ்மைப்படுத்தும் சூழலில் வளரும் குழந்தை தன்னம்பிக்கை அற்றதாக மாறி அது மற்றவரை நம்பும் தன்னை நம்பாது. தனக்கு ஒன்றுமே செய்ய வராது என்று தன் முயற்சியை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும். இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தை கையாலாகாதவன் என்று சமுதாயத்தால் பேசப்பட்டு மதிப்பில் கடைக்கோடிக்குத் தள்ளப்படுவான்.

     எனவே ஒரு குழந்தையைப் பல விமர்சனங்களுக்கு இடையிலோ, அதிகாரத்தைக் காட்டியோ, வெறுத்து ஒதுக்கும் நிலையிலோ வளர்க்காமல், பல அனுபவங்களைக் கொடுத்து அவற்றின் மூலம் அவர்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டு சமுதாயத்தில் தன்னை முழுமனிதனாக மதிப்புமிக்கவனாக வாழச்செய்ய வேண்டும்.

2.2 உங்களுக்கு உரியதைக் கண்டறியுங்கள்

           காட்டில் வாழும் மிருகங்களில் வீரம்மிக்கது சிங்கமும் சிறுத்தையுமாகும். இந்த மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள பல மிருகங்கள் தம்மை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும். எந்த நிலையிலும் எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற உண்மையை அறிந்தனவோ என்னவோ அந்த மிருகங்கள் தாக்கவரும் மிருகங்களைக் காட்டிலும் வேகமாக ஓடும். அப்போதுதான் அதுபிழைக்கும் இல்லையென்றால் தாக்கப்பட்டுவிடும். சிங்கத்தைவிட மான் வேகமாக ஓடும்; ஓட வேண்டும். இந்தக் காட்டுசூழலில் மிருகங்களில் மிக உயரமான நீண்ட கழுத்தைக் கொண்டது ஒட்டகச்சிவிங்கி. அது கருவுற்றுக் குட்டி ஈனும்போது நின்றுகொண்டே ஈனும். அப்போது அதன் குட்டிக்கு உயரத்திலிருந்து விழுவதால் உடல் அடிபட்டு அந்த வலியால் அது எழந்திருக்காமல் அப்படியே படுத்திருக்கும். அதன் உடல் முழுவதும் குருதி சிவப்பாகக் காணப்படும். இவ்வாறு சிறிதுநேரம் கடந்ததும் தாய் ஒட்டகச்சிவிங்கி தன்காலால் எட்டி உதைக்கும். குட்டி எழும்வரை உதைத்துக் கொண்டே இருக்கும். அந்த அடியின் வலி தாங்கமுடியாமல் குட்டி எழுந்து ஓட ஆரம்பிக்கும். தாய் தன்குட்டியை அழைத்துக்கொண்டு வேறுஇடம் சென்றுவிடும். தாய் அவ்வாறு குட்டியை உதைப்பதற்குக் காரணம், குருதியின் வாசனை சிங்கம் போன்ற வேட்டையாடும் மிருகங்களுக்குத் தெரிந்துவிட்டால் அது குட்டியைத் தின்றுவிடும். குட்டி அந்த ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தாய் வலியை தானே தருகிறது. இவ்வாறு பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குப் பல கடினமான அனுபவங்களைக் கொடுத்திருந்தால், அவர்கள் சமுதாயத்தில் எப்படி நிலைநாட்டி கொள்வது என்பதை கற்றுத் தெளிந்திருப்பார்கள். பெற்றோர்களில் சிலர் தம்குழந்தைகளுடன் மற்றவரை ஒப்பிட்டுப் பேசி இவரை தாழ்த்திப்பேசுவது உன்னால் ஒன்றும் ஆகாது என்று பேசிப்பேசி நம்பவைப்பது. இவையெல்லாம் தாழ்மையான மனோபாவத்திற்கு இட்டுச்செல்கின்றன.

2.3 மனநிலையை மாற்றுங்கள்

         தவறு செய்தால் சரியாகr செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாகக் கவனித்தோமென்றால் தவறு செய்வதும் ஒரு அனுபவமே. நடந்தவை நடந்ததுவிட்டன. சென்ற காலம் திரும்பாது. இனி அந்த தாழ்மையான எண்ணத்திலிருந்து தன்னை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை சிந்தனை செய்யலாம்.

       உங்களை மீட்பதற்கு எந்தக் காரணத்தையும் முன்வைக்காமல் ஆர்வத்துடன் தொடங்குங்கள். முதலில் ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் முயற்சிக்கு எவையெல்லாம் தடையாக உள்ளன; எவையெல்லாம் சரியாக உள்ளன என்பதை தனித்தனியாக எழுதுங்கள். தடையாக உள்ள செயல்படுகளை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று மாற்ற முடியாதவை. அடுத்து மாற்றக்கூடியவை. மாற்ற முடியாதவைகளான முகம் கறுப்பாக இருப்பது. காது நீளமாக இருப்பது ஆகும். ஆனால் சிலர் கறுப்பாக இருந்தாலும் கலையான முகத்தைப் பெற்றிருப்பார்கள். சிலர் காதுகள் நீளமாக இருந்தாலும் அழகான கண்களைப் பெற்றிருப்பார்கள். எனவே அழகானவற்றை இறைவன் கொடுத்துள்ளார் என்று உயர்வாகத் தன்மனதில் எடுத்துக்கொள்வதும் கறுப்பாக இருக்கிறோம் என்று தாழ்வாக நினைப்பதும் உங்கள் மனோநிலையில்தான் உள்ளது. இறைவன் படைத்த உங்கள் உறுப்புகளில் இல்லை. இவற்றை உங்களால் மாற்ற இயலாது.

2.4 முடிந்தவற்றை மாற்றுங்கள்

         மாற்றமுடிந்த தடைகள், குணங்கள், செயல்கள், பழக்கங்கள் உங்களிடம் இருக்கும். இவற்றை நீங்கள் முயற்சி செய்தால் மாற்ற முடியும். உதாரணமாக உங்களால் காலையில் ஐந்து மணியளவில் எழுந்திருக்க முடியாது. ஆனால் எழுந்துவிட்டால் அன்று முழுவதுமே உங்கள் செயல்களை ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்வீர்கள். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு இந்தத் தூக்கம் தடையாக உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் இதுவரை ஏழுமணிவரை உறங்கும் நீங்கள் ஒருநாளில் அரைமணி நேரம் முன்னதாக எழுந்து ஒவ்வொரு நாளும் உறங்கும் நேரத்தைக் குறைத்துத் தினமும் அதிகாலை ஐந்துமணிக்கு எழுந்துவிடும் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள். இது உங்களால் மாற்ற முடிந்த தடை.

      ஒவ்வொன்றும் இவ்வாறு உங்களின் முயற்சியால் நீங்கள் செய்யும் செயல்கள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களிடம் எவை குறையாக உள்ளன என்பதைக் காட்டிலும் எவை நிறைவாக உள்ளன என்பதை உணருங்கள்.

2.5 உங்களின் கைவந்த கலை

           நிறைவானவற்றைக் கொண்டு உங்களை எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை சிந்தனை செய்யுங்கள். அழகான மார்க்கம் ஒன்று புலப்படும். ஒரு காட்டில் பலவகையான மிருகங்கள் வாழ்ந்தன. அந்த மிருகங்களில் உருவத்தில் பெரிதாக இருப்பவை ஒன்றுசேர்ந்து கூட்டம் நடத்தின. யானைகள், சிங்கம், புலி போன்றவை சேர்ந்து பேசி தமது மிருகஇனத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தலாம் என்று முடிவு செய்தன. மற்ற மிருகங்களும் இதற்கு ஒப்புதல் அளித்தன. பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, கல்வி கற்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அவைகளுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்பட்டன. அவை நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், மரமேறுதல், குழியை பறித்தல், பறத்தல், கூடு கட்டுதல், உயரம் தாண்டுதல், கூவுதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. இவை அனைத்தும் ஏற்கனவே எல்லா மிருகங்களுக்கும் கற்றுத் தரப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

       போட்டிகளில் முதலாவதாக மரம்ஏறும் போட்டி. குரங்குகள் மிக வேகமாக மரம் ஏறிவிட்டன. மற்ற மிருகங்கள் முடியாமல் தோல்வியைத் தழுவின. நீச்சலடிக்கும் போட்டியில் முதலைகளிடம் மற்றவை தோற்றன. குழித்தோண்டும் போட்டியில் பன்றிகள் வெற்றி பெற்றன. குழி தோண்டிய பறவைகளுக்கு இறக்கைகள் முறிந்து விட்டன. பறக்கும் போட்டியில் பருந்துகள் பரிசை வென்றன. மற்றவை தோல்வி அடைந்தன. இவ்வாறு உங்களுக்கு எந்த துறையில் வல்லமை அதிகம் என்று கவனியுங்கள். அதனை எவ்வாறு செய்தால் மற்றவரை விட சிறப்பாகச் செய்ய இயலும் என்பதை உணருங்கள். இல்லை என்றால் பறவைகள் குழிதோண்டி இறக்கைகளை உடைத்துக் கொண்டதைப் போல ஆகிவிடும்.

2.6 உங்களுக்கானதை முயற்சி செய்யுங்கள்

        உங்களுக்கான இடம் எது? துறை எது? என்பதை அறிந்து அதில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். விடாமல் உழையுங்கள். யாருக்கு எது தகுந்தது? தகுதியானது? என்று ஒன்று உள்ளது. அதைவிடுத்து எல்லாவற்றையும் முயன்று, தோல்வி அடைந்து தன்னை தாழ்த்திக்கொண்டு துன்பப்பட வேண்டாம். இவையெல்லாம் சிந்தனை செய்து தவிர்க்கப்பட வேண்டியவை.

      நீங்கள் சிந்தனைகளை உங்கள் மீது கொண்ட எண்ணங்களை உயர்த்துங்கள். தாழ்மைப்படுத்தும் எண்ணம் மறைந்தோடிவிடும். மனதில் மற்றவர்களைப் பற்றிய எண்ணம் உயர்வானதாக இருக்கலாம். ஆனால், உங்களைத் தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டாம். தன்னை உயர்வாக நினைத்தால் மட்டுமே தன்னம்பிக்கை ஏற்படும். இவனை வெல்ல நான் பிறந்துள்ளேன் என்ற உயர்வான எண்ணம் உருவாகும். எந்த நிலையிலும் இந்த எண்ணம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

         எண்ணங்களை மேன்மைப்படுத்துங்கள். “இந்தச் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற நான் பிறந்துள்ளேன். இந்த நாட்டிற்கு நானே அரசன் நானே சேவகன். இங்கு ஒவ்வொரு மாற்றத்தையும் என்னால் செய்ய முடியும்” என்ற எழுச்சியான எண்ணங்களைக் கொண்டு செயல்களாக மாற்றி பழக்கமாக்கிக் குணமாக மாறினால் நீங்கள் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.

      எனவே மனதின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க உள்ளத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்களை உயர்த்துங்கள். மற்றவர் மீது நீங்கள் கொண்ட எண்ணத்தை அல்ல.

     வீரத்தின் சிறப்புப் போர் செய்வதில் உள்ளது. உங்களின் உயர்வு மனப்பானமையில் உள்ளது.

ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி

நாலணா சில்லரை (சிறுகதை)

iniyavaikatral.in

 

 அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன.  அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று நாற்காலி. ஆனாலும் கட்டிலில் மன இறுக்கத்தோடு படுத்திருந்தார் காசி தாத்தா. கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொள்ள கூட மனம் வரவில்லை. வழியட்டும் விடு என்று விட்டுருந்தார். வயசில் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அப்படியெல்லாம் இருந்தாச்சு. இந்த உலகத்துல என்னன்ன தப்பெல்லாம் பண்ணக்கூடாதோ அதுவெல்லாம் பண்ணியாச்சு. அதனால கல்யாணம் கூட தாமதமாகத்தான் நடந்தது. அவளும் என் கையில ஒரு பொண்ண பெத்துக் கொடுத்துட்டு போய் சேந்துட்டா. என் மனைவி வந்த அப்புறம்தான் நான் என்னையே உணர்ந்தேன். என்ன பன்ன? கடவுள் அதுக்குள்ள அவளை என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டாரு. அவ போனதுல யாருக்கு வருத்தமோ இல்லையோ, கண்டிப்பா எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. நானும் என் மகள் மஞ்சுளாவும் அநாதையாகவே உணர்ந்தோம். என் பொண்ண நல்லா படிக்க வைச்சன். அவ பெரிசான பிறகு கடனவுடன வாங்கி நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணி வைச்சுட்டேன். மாப்பிள்ள கூட நல்லவருதான். எனக்கு அப்புறம் என்பொண்ண நல்லா வைச்சிப்பாரு என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாச்சு. ஒரு ஆம்பள கொழந்தை இருக்கு. என் பொண்ணு வர போறப்பல்லாம் என்கிட்ட இருக்கிற ஏதாவது ஒன்ன கொடுத்துபுடுவேன். இப்பல்லாம் முன்னமாதிரி வேலைக்கு போவ முடியறதுல்ல. கையிலயும் காசு இல்ல. இங்க ஊருக்காரங்ககிட்ட அப்பப்ப கடன் வாங்கி செலவு பாத்துகிட்டேன். கல்யாண கடன் வேற அப்பப்ப கண்ணு முன்னாலேயே நிக்குது. இன்னிக்கு காலையில வேற கடன் கொடுத்த பைனான்சியர் வீட்டுக்கு முன்னால நின்னு கத்திட்டு போனாரு. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மஞ்சுளா வந்துட்டு போனா… நினைத்துப் பார்க்கிறார் காசி தாத்தா.

“அப்பா… அப்பா….” என்று சொல்லிக்கொண்டே தான் வாங்கி வந்த பழங்களை ஒர் ஓரமாக வைத்தாள் மஞ்சுளா.

“வாம்மா மஞ்சுளா… மாப்பிள்ள எப்படி இருக்காரு? வாடா… வாடா… என் செல்லக்குட்டி” என்று தன்னோட பேரனை தூக்கி தோளோடு சாய்த்துக் கொண்டார் காசி தாத்தா.

“அவரு நல்லாயிருக்காருப்பா… நீங்க எப்படி இருக்கீங்க…” என்றாள் மஞ்சுளா

“ம்ம்… நல்லாயிருக்கம்மா.. ” என் ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

“என்னாப்பா வீடு இப்படி அலங்கோலமா வைச்சிருக்கீங்க” என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்க்காமலே வீட்டை சுத்தப்படுத்த தயாரானாள். அப்பாவின் அழுக்கு துணிகளையும் துவைத்து காயவைத்தாள். கொஞ்சம் அரிசி போட்டு சமைக்கவும் செய்தாள். அதற்குள் பையன் ஆய் போய்விட, காசிதாத்தா அவனை வெளியில் கொண்டுபோய் உட்காந்து பிடித்துக்கொண்டார்.

     “மஞ்சுளா… மஞ்சுளா… குழந்தைக்கு ஆய் கழுவி விடும்மா… என்று காசி தாத்தா மகளை அழைத்தார். மஞ்சுளாவும் மகனை நன்றாக கழுவிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். தந்தையும் மகளும் சாப்பிட அமர்ந்தார்கள்.

     “அப்பா… அப்பா….”

     “என்னம்மா சொல்லு”

     “ஒன்னுமில்ல… உங்க பேரனுக்கு வர வெள்ளிக்கிழமையோட ஒரு வயசாகுது. அத கொண்டாடனுமின்னு அவரு ஆசைப்படரார்”

“அதுக்கென்னமா சந்தோசம்தானே! கொண்டாடிடுவோம்!

“அதுக்கில்லப்பா புகுந்த ஆத்துல நீங்க ஏதாவது பேரனுக்கு நகை போட்டிங்கன்னா நல்லாயிருக்குமின்னு அவர் நினைக்கிறார். அதுமட்டுமில்லாம எனக்கும் அது பெருமைதானப்பா.. அதனால…. இந்தாங்கப்பா பணம். இதவச்சு ஏதாவது நகை எடுத்துட்டு வாங்கப்பா… என்று விக்கி முக்கி சொல்லி முடித்தாள் மஞ்சுளா.

“கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அப்பறம் பொண்ணுகிட்ட காசு பணம் வாங்குறது தப்புமா! எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்க…”.

“உங்க மாப்பிள்ளதான் கொடுத்துட்டு வரச்சொன்னாருப்பா”

“வேணாம்மா நானே பாத்துக்கிறேன்”

“எப்படிப்பா உங்காளால முடியும். சொன்னா புரிஞ்சுக்கோங்கப்பா. புடிவாதம் புடிக்காதிங்க”

“நான் என் பேரனுக்கு பவுணு எடுத்துட்டு வருவேன். பெரிய கேக்கும் வாங்கிட்டு வருவேன். “டே பேராண்டி உன்னோட முத பொறந்தநாள நாம சூப்பரா கொண்டாடிடுவோம். ஏன்னா அடுத்த பொறந்தநாளைக்கு நான் உங்க பாட்டிக்கிட்ட போனாலும் போயிடுவேன்” என்றார்.

“அப்பா அப்படியெல்லாம் சொல்லாதிங்க… நீங்க எனக்கு வேணும்பா… சாப்பிடுங்க” என்றாள்.

     மஞ்சுளா போன பிறகு கட்டிலில் படுத்த காசி தாத்தாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. காலையில் கடனுக்காக பைனான்சியர் திட்டியது, இப்போது பேரனுக்கு  பிறந்தநாள் செலவு மனசு குழம்பியிருந்து. வீட்டில் சுத்தமாக காசே இல்லையே! யாரிடம் பணம் கேட்பது. இந்த வயதான கிழவனை நம்பி யார் பணம் கொடுப்பார்கள். தலை கிறுகிறுத்தது.

     அன்று காலையிலேயே காசி தாத்தா எழுந்து கொண்டார். எப்பாடுபட்டாவது காசப் பொரட்டி பேரனுக்கு பவுணு எடுத்துட வேண்டியதுதான். இன்னிக்கு காசுதான் எல்லாமே. பணம் இருந்தாத்தான் மதிப்பு. ஒரு மனுசன் நல்லவனா கெட்டவனான்னு யாரும் பார்ப்பதில்லை. பணம் இருக்கான்னுதா பார்க்கிறாங்க… என்று மனசோடு புலம்பிக்கொண்டே நடையைக் கூட்டினார். கோபாலன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தார்.

     “தாத்தா டீ போடட்டுமா?” என்று கோபாலன் கேட்டான்.

      “ம்ம்… போடு கோபாலு” என்றார். கோபாலு அப்பா காலத்துல இருந்தே தினமும் இந்த டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடரது காசி தாத்தாவுக்கு வழக்கம். ஒருசில நேரங்களில மறந்துபோய் காசு கொடுக்காம வீடு வரைக்கும் போயிட்டு அப்புறம் ஓடி வந்து கொடுத்துட்டு போவாரு. அதெல்லாம் ஒரு காலம். கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டுப் போனான் கோபாலன்.

     “தம்பி கோபாலு! கொஞ்சம் நில்லுப்பா…”

     “என்ன தாத்தா…”

     “எம்பேரனுக்கு முதபொறந்தநாளு… ஏதாவது செய்யலாமுன்னு இருக்கன். இப்ப என்கிட்ட காசு சுத்தமா இல்ல. இன்னும் ஒரு மாசத்துல நான் குடியிருக்கிற வீட்ட வித்துட்டு மக வீட்டுக்கே போயிடலாமுன்னு தோனுது. அதான் நீ ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்தின்னா… நானு ஒரு மாசத்துக்குள்ள திருப்பிக் கொடுத்துடுவேன் கோபாலு” என்றார் காசி தாத்தா. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு சரி என ஒத்துக்கொண்டான் கோபாலன். கடை உள்ளேச் சென்று வெளியே வந்த கோபாலன் எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை காசிதாத்தாவிடம் கொடுத்தான்.

     “தம்பி… நாலாயிரம்தான் இருக்கு! இன்னும் ஒராயிரம் இருந்தா கொடேன். இது பத்தாது தம்பி”

     “தாத்தா என்கிட்ட அவ்வளவுதான் இருக்கு.  இதுகூட சீட்டுக்கு வைச்சிருந்த பணம்தான். நீங்க கேட்டதால கொடுத்தேன். நான் வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே குடித்த டீ டம்ளரை எடுத்தபடியே உள்ளேச் சென்றான் கோபாலன்.

பேரனுக்கு கால்பவுணுக்கு மோதிரம் எடுத்தாச்சு. “மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குள்ள முடிக்கணுமுன்னு பாத்தா மூவாயிரத்து எழுநூறு ஆயிடுச்சி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மீதி இருக்கிற காசுக்கு பழம், பூ, அழகான பூப்போட்ட சட்டை எல்லாம் எடுத்துட்டு கையில வெறும் ஐந்து ரூபாதான் இருந்தது. இந்தக்காச வச்சிட்டுதான் பொண்ணு ஊருக்கு போவனும். ஊருக்கு போனபின்னாடி திரும்பி வர்ரதுக்கு……. பாத்துக்கலாம்….. போ….. என்று நினைத்துக் கொண்டார்.

அன்று மதியம் நாலு மணிக்கே பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விட்டார். “இங்கேயிருந்து 12ம் நம்பர் பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே முக்கால் ரூபா ஆகும். அந்தப்பக்கம் 1B  பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே காலுரூபா ஆகும். ஒன்னும் பிரச்சனை இல்ல. பேரனோட பொறந்தநாளுக்கு போயிரலாம்” என்று கணக்கு போட்டுக்கொட்டிருந்தார். பஸ்சு வர்ர திசையே வெறித்துப் பார்த்து சலித்துப் போனார்.  நாம சீக்கிரம் வரும்போது பஸ் லேட்டா வரும். நாம லேட்டா வரும்போது பஸ் சீக்கிரமா வந்துரும். அதுபோலத்தான் அன்னிக்கும் நடந்தது. அந்த ஊருக்கு முன்னால ஊருல ஏதோ சாதி பிரச்சனைனால மக்கள் எல்லோரும் ரோட்டுல வந்து உக்காந்துட்டாங்க. அதனால நாலு பத்துக்கு வரவேண்டிய பஸ் ஐஞ்சரைக்குத்தான் வந்தது. காசி தாத்தாவுக்கு மனசு படபடத்தது.

“ஆறு மணிக்கு பொறந்தநாள கொண்டாடுறோம்ன்னு மஞ்சுளா சொல்லிச்சே. இப்பவே ஐஞ்சரை ஆயிடுச்சி. நாம எப்ப ஊருக்கு பொறதுன்னு தெரியலையே”

அனைவரும் பஸ்ஸில் ஏறினார்கள். காசிதாத்தா தன்னோட கையில் இருக்கிற ஐந்து ரூபாயையும் கையில் பிடித்துக்கொண்டிருந்த கட்டை பையையும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

“எல்லோரும் சில்லரையை கையில் எடுத்துக்கோங்க.. என்கிட்ட சுத்தமா சில்லரையே கிடையாது. ஐஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு நூறு நூறு ரூபாவா கொடுத்து என்கிட்ட சில்லரை வாங்க நினைக்காதிங்க” என்று கத்திக்கொண்டே  காசிதாத்தாவிடம் வந்தார். கண்டக்டரிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டார்.

கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட்டு “டிக்கெட்… டிக்கெட்… டிக்கெட்…” என்றபடியே பஸ்ஸின் அடுத்தப்பகுதிக்கு செல்ல முயன்றார்.

“கண்டக்டர் தம்பி…. எனக்கு நாலணா சில்லரை பாக்கி இருக்கு தம்பி” என்றார்.

“வெயிட் பண்ணுங்க… நான் என்ன அச்சா அடிக்கிறன். டிக்கெட் கொடுத்துட்டு வந்து தரன்” பேருந்து கொஞ்ச தூரம் சென்றது. ”இப்பவே ஐஞ்சே முக்கால் ஆயிடுச்சி. இன்னேரம் எல்லோரும் வந்திருப்பார்களே! இன்னும் தாத்தா வரலன்னு பேரன் நினைப்பானே! மஞ்சுளாவ அவுங்க வீட்டுல உள்ளவங்க தப்பா பேசுவாங்களே! மாப்பிள்ள என்ன நினைப்பாரு! தெரியலையே…. ஐயோ….இந்த பேருந்து வேற நத்தை போல ஊருதே.

கண்டக்டர் டிக்கெட் எல்லாம் கொடுத்துவிட்டு காசிதாத்தாவை கடந்தார். ”தம்பி என்னோட நாலணா சில்லரை பாக்கி இருக்குபா” என்றார்.

“யோ… பெரியவரே உன்னோட நாலணாவா நான் வச்சிட்டு மாடி வீடா கட்டப்போறேன். இருய்யா தரேன்” என்று கோபத்துடன் காசிதாத்தாவை முறைத்து பார்த்துவிட்டு சென்றான். தற்போது வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்தது. மழை பொத்துக்கொண்டு ஊத்தும் போலிருந்தது. காத்து தூக்கி அடிக்க தயாராகயிருந்தது. பேருந்தில் கூட்டம் கொஞ்சகொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே போனது. பேய் மழை கொட்டியது. பஸ்சிலும் ஆங்காங்கே ஒழுக ஆரமித்தது. அந்தக்காற்றிலும் குளிரிலும் காசிதாத்தாவுக்கு முகம் வேர்த்துதான் போயிருந்தது. சீக்கிரம் பொண்ணு வீட்டுக்கு போவனும். இன்னொருபுறம் கண்டக்டர் கொடுக்குற நாலணா இருந்தாதான் அந்தாண்ட பஸ்ஸ புடிக்க முடியும்.  என்கிட்ட காசு இல்ல… அந்த நாலணா சில்லரை எனக்கு வேணும்முன்னு எப்படி கேட்குறது. வயசும் ஒத்துக்கல. கௌரவம் வேற தடுக்குது. ஆனா கேட்கனுமுன்னுதான் காசிதாத்தா கண்டக்டர்கிட்ட போறார். அதுக்குள்ள அவர் இறங்குற இடமும் வந்திருச்சு.

     “எல்லாரும் இறங்குங்க… எல்லாரும் இறங்குங்க… ”

     கொட்டுற மழையில் படியிலிருந்து ஏறிய ஒருவரை, “யோவ் நில்லுய்யா… இறங்கட்டும். அப்புறம் ஏறிக்குவ… இறங்குய்யா…” ஆனால் அடிக்கிற மழையில அவர் கண்டக்டர் சொன்னத காதுலயே வாங்கிக்கல… அடிச்சு புடிச்சு பஸ்சுல ஏறிக்கிட்டார்.

“கண்டக்டர் தம்பி என்னோட பாக்கி நாலணா சில்லரையை கொடுப்பா.. என்னோட இடம் வந்திருச்சு…”

“யோவ் என்னய்யா உன்னோட ரொம்ப ரோதனையா போச்சு… வயசான காலத்துல என் உயிர வாங்கவே வரீங்களா!”  என்று பையைப் பார்த்துவிட்டு என்கிட்ட நாலணா சில்லரையே இல்ல. அப்புறம் வாங்கிக்கோ… இப்ப கீழ இறங்கு” டிரைவர் ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தான். 

“என்ன அப்பறம் வாங்கிக்கிறதா…. எனக்கு இப்பவே வேணும்” “ஐயோ நாலணா இல்லையன்னா எப்படி ஊருக்கு போறது. முழிக்கிறார் காசி தாத்தா.

“தரமுடியாது… கீழ இறங்குய்யா…” 

“சில்லரைய வாங்காம நான் இந்த இடத்த விட்டு இறங்கமாட்டேன்”

“என்னய்யா போராட்டம் பன்றியா? உன்ன என்ன பன்றன் பாரு” என்று காசி தாத்தாவின் கையைப் பிடித்து பேருந்தில் இருந்து இறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான் கண்டக்டர்.

“ஏப்பா… அவரோட காச கொடுத்தின்னா அவரே இறங்கிடுவாருல்ல” என்று பஸ் கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

“உனக்கென்ன… உங்க வேலைய மட்டும் பாருங்க… எல்லாம் எனக்கு தெரியும்!

மீண்டும் வலுக்கட்டாயமாக காசிதாத்தாவை வெளியே தள்ள முயன்றான். முடிந்தவரை தம்கட்டிப்பார்த்தார். முடியவில்லை… ஓய்ந்து போனார். படிக்கட்டில் கால் வைத்தவரை கண்டக்டர் ஒரு தள்ளுதள்ளினான். கால் வழுக்கியது. கையில் வைத்திருந்த சில்லரை சிதறியது. பை ஒரு பக்கமாக பறந்தது. நேராக மழைத் தண்ணீர் தேங்கியிருந்த குட்டையில் தலைக்குப்புற விழுந்தார். மழை துளியானது அவரை விழுங்கியது. மனதில் தோன்றிய எண்ணப் போராட்டங்களைக் கண்ணீரோடு சேற்றால் அப்பியிருந்தது. பேருந்து கண்டக்டரின் விசிலுக்கு முன்னே நகர்ந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தலைகொண்டம்மன் கோயில் வழிபாட்டு முறையும் விழாவும் (ஆய்வுக்கட்டுரை)

 
 

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்”

(தொல்.அகத்திணை.நூ.5)

என்று தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களுக்கு திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய நான்கு நிலக்கடவுள்கள் இருந்திருக்கின்றனர் என்கிறார். இறைவழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதிய ஒன்றன்று.  பன்னெடுங் காலத்திற்கும் மனிதன்  தன்னை அச்சுறுத்திய இயற்கையை வணங்கினான். தனக்கு ஊறு விளைவித்த உயிரினங்களைப் பயத்தின் காரணமாகவும் தனக்கு இணக்கமாக இருந்து இறந்த உயிரினங்களை அன்பின் காரணமாகவும் வணங்கினான். இம்முறை வழிபாடு எந்த நூற்றாண்டில் யாரால் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்பது அறிய முடியாத ஒன்று.

     பிற்காலத்தில் மனிதன் தனக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எல்லாம் தன் முதாதையர்கள், போரில் வீரமரணம் அடைந்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள்தான் காரணமென்று நடுகல் வைத்து வழிபட்டான். இவ்வழிபாட்டு முறையே சிறுதெய்வ வழிபாட்டிற்கு கால்கோல் இட்டது எனலாம். இக்கருத்தை மெய்பிக்கும் வகையில் “இயற்கை வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து பல தெய்வ வழிபாட்டுக் கொள்கை ஏற்பட்டது. அதில் கிராமப் பகுதியில் உள்ள அம்மன், மதுரை வீரன், முனியாண்டி, கருப்பண்ணசாமி, காத்தவராயன், ஆரியமாலா, ஆகியோர் சிறுதெய்வங்கள் எனப்பட்டனர். முன்னோர்களின் நினைவாகவே சிறுதெய்வங்கள் அமைக்கப்பட்டன”1 என்று பறைச்சாற்றுகின்றார் அநங்கன். கரகப்பட்டியில் பச்சைநாச்சியம்மன், வேட்டை நாச்சியம்மன், பட்டாளம்மன், செல்லியம்மன், அங்காளம்மன் ஆகிய சிறுதெய்வங்களோடு தலைகொண்ட அம்மனையும் மக்கள் வணங்குகின்றனர். இச்சிறுதெய்வங்களில் தலைகொண்ட அம்மனைப் பற்றிய வரலாறும் வழிபாட்டு முறைகளும் இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

தலைகொண்டம்மன் கோயில் அமைவிடம்

     தலைகொண்டம்மன் கோயில் தர்மபுரி கிருஷ்ணகிரிக்கு இடையில் உள்ள காரிமங்கலம் எனும் இவ்வூரில் இருந்து கிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கரகப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கு திசையில் ஆற்றங்கரையின் மருங்கில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இக்கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது இவ்வழிபாட்டுத்தலம்.

கோயில்அமைப்பு

 
 

வடக்கு வாசல்படியினைக் கொண்டுள்ள தலைகொண்டம்மன் கோயில்   எண்பது அடி அகலமும் நூற்றுபத்து அடி நீளமும் பத்தடி உயரமும் கொண்ட மதில் சுவரை உடையது. இராசகோபுத்திற்கு முன் பலிபீடமும் அம்மனின் சிங்க வாகனமும் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் முதலில் இடது பக்கத்தில் இருப்பது நவகிரக கோயில். அதை அடுத்து இக்கோயிலில் வாழ்ந்து இறந்த பூசாரியின் நினைவிடம் அமைந்துள்ளது. கருவறைக் கோயிலுக்குப் பின் இடபுறத்தில் விநாயகர் கோயிலும் வலது புறத்தில் முருகன் கோயிலும் அமைந்துள்ளது. தென்மேற்கு மூலையில் தலகொண்டான் எனும் ஆண்தெய்வத்திற்கான தனிக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்திற்கும் இராசகோபுரத்திற்கும் இடையில் நான்கு தனித்தனி ஊஞ்சல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பஞ்சலோகத்தால் ஆன அரை அடி உயர அம்மன் சிலையின் ஆகும். இச்சிலைக்குப் பின்னால் ஐந்து அடி உயர மூன்று அம்மன் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் பற்றி மக்களின் கூற்று

     தலகொண்டம்மனின் தாய்வீடு தர்மபுரி பக்கத்தில் உள்ள மூக்கனூர் மலை என்றும், அம்மலைக்குத் தன் கணவனிடம் சொல்லாமல் சென்ற அம்மன் அவர் வருவதற்குமுன் தான்வீடு திரும்ப வேண்டும் என்று குதிரையின் மேல்ஏறி மூக்கனூர் மலையில் இருந்து ஒரேத்தாவு தாவி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறுப்படுகிறது. அந்தளவிற்குத் தன்னுடைய கணவன் மீது பற்றும் பக்தியும் கொண்டவராக இத்தாய் விளங்குகின்றாள். குதிரை குதித்த அந்த அச்சு கோயிலின் பக்கத்தில் பெரியாற்றுப் பாறையில் இன்றளவும் இருக்கின்றது. 

பெயர்க்காரணம்

     தலைகொண்டம்மன் என பெயர் வருவதற்கு மக்களிடையே வாய்மொழிக் கதைகள் பேசப்படுகின்றன. அக்கதை இத்தலப் பெயருக்கான காரணங்களைக் கூறுகின்றது.   தொடக்கக் காலத்தில் அம்மன் என்ற பெயரிலே இருந்த இச்சிறுதெய்வத்தின் சிலையை கள்வன் ஒருவன் களவாடிச் சென்றபோது கண் தெரியாமல் போனது. அதனால் சிலையை அங்கிருந்த வயல்வெளியிலேயே போட்டுவிட்டு சென்று விட்டான். அவற்றை அறியாத விவசாயி ஒருவன் தன் வயல் வரப்பில் அம்மன் சிலை இருப்பது தெரியாமல் வரப்பை வெட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மண்வெட்டி அம்மனின் தலையில் பட்டுவிடுகிறது. பட்டவுடனே இரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அத்தவறைச் செய்த விவசாயின் தலை அப்பொழுதே துண்டாகி விழுந்தது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

     தன் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி தன் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டால் என்னுடைய தலை முடியைத் தருகிறேன் என்பதற்குப் பதிலாக என் தலையையே தருகிறேன் என்று வேண்டிக்கொண்டாளாம். இவள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் அக்குழந்தை வீட்டில் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கின்றாள். பின்னர்தான் அவள் நினைவுக்கு வருகின்றது அவள் வேண்டியது. அதனால் பயந்து போய் எங்கெங்கோ சென்று மறைகின்றாள். மறைந்தாலும் சொன்னதைச் செய்யாத அப்பெண்ணின் தலையை அம்மனே கொய்து எடுத்தார். அவ்வாறு கொய்து எடுத்ததால் அன்று முதலே இவ்வம்மனுக்குத் தலகொண்டம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டாள். இக்கருத்து ஒருவருக்கொருவர் முரண்பாடாக கூறினாலும் தலையை வெட்டிய செய்தி மட்டும் ஒன்றாகவே இருக்கிறது. இதன்மூலம் தலையைக் கொய்து எடுத்ததால் தலைக்கொண்டம்மன் என்ற பெயர் வந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

வழிபடும் இனக்குழுக்கள்

     சமத்துவ சிறுதெய்வ கோயிலுக்குச் சிறந்த சான்றாக விளங்குவது கரகப்பட்டி தலைகொண்டம்மன் கோயில்தான். பெரும்பாண்மையான சிறுதெய்வக் கோயில்கள் ஒருசில இன மக்களுக்கு மட்டும் வழிபடும் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் விளங்குகின்றது. சிறுதெய்வக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தைத் தவிர இதர சாதியினரை உள்ளே நுழைய அனுமதிப்பதுக் கூட கிடையாது. இம்முறைகளுக்கெல்லாம் மாறாக அமைந்துள்ளது இந்த ஒரு கோயில் மட்டும்தான்.

 இக்கோயிலுக்குப் பூசாரியாக வெள்ளாளக்கவுண்டர்கள் இருக்கிறார்கள். இத்தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் வேளாளர், பறையர், வன்னார், ஆகியோர் ஆவார்கள். இக்கோயிலுக்கு உரிமை பூண்டுள்ள கிராமங்கள் மொத்தம் பதினெட்டு ஆகும். இப்பதினெட்டுக் கிராமங்களில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஒன்று கூடிதான் கோயிலுக்குச் சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவையும் எடுப்பர். கோயிலுக்கு முன்னால் இருக்கக்கூடிய ஊஞ்சல் கம்பம் கூட குரவர் இன மக்களால் எடுத்துவரப்பட்டு இரவோடு இரவாக வேண்டுதலின் பொருட்டு நட்டு வைத்துவிட்டு சென்றனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள். 

வழிபடும் முறைகள்

     பெரும்பாண்மையான சிறுதெய்வங்களுக்கு உயிர்பலிடும் முறை வழக்கமான ஒன்றுதான். அதற்கு விதிவிலக்கு அல்ல தலைகொண்டம்மன் கோயில். “தர்மபுரி பகுதியில் இருக்கும் மக்கள் காளிக்கு எருமை கிடாவை பலியிடுகின்றனர். மாரியம்மனுக்கு ஆட்டுக்கிடாவைப் பலியிடுகின்றனர். மற்ற சில சிறுதெய்வங்களுக்கு பன்றிகளைப் பலியிடுகின்றனர்”2 என்கிறார் இரா.இராமகிருஷ்ணன்.

     தலைகொண்டம்மனுக்கு ஆடு, கோழி தவிர வேறெந்த உயிரினங்களையும் பலியிடுவது இல்லை. பசுக்களையும் இளம் காளைகளையும் கோயிலுக்கு நேர்ந்து (நேர்த்திக்கடன்) விட்டாலும் அதை பலிஇடுவது இல்லை. பசு, ஆடு, மாடு, கோழி போன்றவைகளை இக்கோயிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். இக்கோயிலுக்கு நேர்ந்துவிடும் பசுக்களையும் காளைகளையும் இப்பகுதி மக்கள் இறைவியாகவே போற்றி மதிக்கின்றனர். இதற்கு சான்றாக நேர்ந்து விட்ட காளை ஒன்று இறந்து விட்டது. இறந்த காளையை கோயிலுக்கு முன்னால் இருக்க கூடிய இராசகோபுரத்திற்கு அருகில் புதைத்து அதன்மேல் நந்தி சிலையை நிறுவி இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

விழாக்கள்

     மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபடும் முறையே விழாவாகும். அனைத்து முக்கிய தினங்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் கோயிலுக்கு விழா எடுப்பதே சிறப்பு. விழா எடுப்பதற்கு முன் அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுகூடி  முன்னேற்பாடுகள் பற்றியும் விழாவின்போது மேற்கொள்ளப்படும்  செயல்கள், கட்டுபாடுகள், ஆகியவை ஆலோசிக்கப்பட்டு விழா தொடங்குகிறது. இம்மக்கள் கோயிலுக்கு எடுக்கும் விழாவை ‘ஜாத்தரை’ என்கின்றனர். ஜாத்திரை மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும். 

     இதில் ஆண் தெய்வத்திற்கான கரகத்தைப் பறையர்களும், பெண் தெய்வத்திற்கான கரகத்தை வேளாளக் கவுண்டர்களும் எடுக்கின்றனர். இவர்கள் தவிர வேறு சாதியினர் கரகத்தைத் தொடுவது கூட இல்லை.

  • விழாவின் முதல்நாள் வீடுகள், தெருக்கள், கோயில் என அனைத்தும் சுத்தம் செய்து காப்புக் கட்டுகின்றனர். காப்புக் கட்டுபவர் அவ்வூரின் தோட்டியாவார்.
  • இரண்டாம் நாள் மேளதாளத்துடன் இசைக்கருவிகள் முழங்க கரகக்காரரின் வீட்டில் இருக்கும் கரகத்தைக் கரகக்காரரின் துணையோடு கரக கலசம் மற்றும் அம்மனின் வாள், பிரம்பு ஆகிவற்றை எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஆற்றில் சுத்தம் செய்து அக்ரஹாரம் என்னும் ஊரின் மண்டில் (பொதுவிடத்தில்) வைத்து பூசை நடத்துகின்றனர். அதேபோல் ஆண் கரகத்தை ஆண்கரகத்தாரரும் அங்கு வந்து அக்கரகத்தை சேர்கின்றனர்.
  • மூன்றாம் நாள் மாலை ‘மகுமேரி’ என்னும் நிகழ்வு நடைபெறும். ஓவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வேடம் அணிந்து மண்டினை அலங்கரிப்பர். மகுமேரி என்றால் வன்னியர் இனத்தில் ஒரு குடும்ப வகையாறாக்கள் அவர்களின் குல வழக்கப்படி வெவ்வேறு விதமாக வேடமிட்டுக் கொண்டு குறும்பர் பலகை எடுத்தும், பூங்கரகம் எடுத்து வந்தும் சிறப்பு செய்கின்றனர். அப்பொழுதே ஆண் கரகமும் பெண் கரகமும் ஒன்று சேரும் நிகழ்வும் நடைபெறுகின்றன.
  • நான்காம் நாள் செங்கமுத்தம்மன் கோயிலில் ‘சொக்குபுடி சோறு’ சாப்பிட்டக் குதிரை, அம்மன் அருளோடு வேகமாக அம்மனைப் பார்க்க கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடியே வந்து தலைகொண்டம்மன் கோயில் ஊஞ்சலில் உள்ள கரகத்தை நுரைப் பொங்கும் வாயால் முத்தமிட்டு ஊஞ்சலை ஆட்டும். ஆட்டியபின் கரகம் கருவறையில் கொண்டு வைக்கப்படுகின்றது.
  • ஐந்தாம் நாள் கருவறையில் கரகத்தை கரகக்காரர்களின் துணையோடு ஆண்கரகத்தை பறையர்களும், பெண்கரகத்தை வேளாளர்களும் மேளதாளத்துடன் வீட்டிற்கு கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கும்.மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் நடக்கும் நிகழ்வகள் விலங்குகளோடு அப்பகுதி மக்கள் பிணைந்துள்ள நிலையினை எடுத்துக்காட்டுகின்ற. விழாவின் கடைசிநாளன்று வேளாளக் கவுண்டர்களுடைய கூளி ஆட்டம் (எருதாட்டம்) ஆடப்படுகிறது. அதன்தொடர்ச்சியாக வன்னியர்களின் கூளியும்  மண்டை (பொதுவிடம்) அலங்கரிக்கும்.

முடிவுரை

     மக்கள் கூறும் ஊர்ப்பெயர்க் காரணங்களும் வழிபாட்டு முறைகளும் விழாக்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தலைகொண்டம்மன் எனும் சிறுதெய்வம் முன்னொரு காலத்தில் போர்க்கடவுளாகவும் போர் புரிந்து வீர மரணம் அடைந்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

சான்றெண் விளக்கம்

1. அநங்கன், ஆலய வழிபாடு, அழகு பதிபகம், சென்னை – 49,  ப.9

2. இரா.இராமகிருஷ்ணன், தகடூர் நாட்டு திருக்கோவில்கள்,  நாம் தமிழர் பதிப்பகம், சென்னை-5, ப.50

தகவலாளர்கள் பட்டியல்

1.     அமராவதி, வயது – 58, வேளாளக்கவுண்டர், கரகப்பட்டி.

2.    தலகொண்டான், வயது – 40, பறையர், கரகப்பட்டி

3.   செல்வி, வயது – 60, வன்னியர், கிரியானஅள்ளி

 

 ஆசிரியர் : திரு.இல.பெரியசாமி, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130. 

 

 

தலைகொண்டம்மன் நுழைவாயில்

சங்க இலக்கியத்தில் விழாக்கள் (ஆய்வுக்கட்டுரை)

 

         பண்டையக் காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனதிற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலை முடிந்து வீடு திரும்பியவன், கையில் கிடைத்தப் பொருட்களை வைத்துக்கொண்டு இசைத்தும் ஆடியும் பாடியும் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான். அதுவே பெரியதாகவும், அனைத்து உறவுகளையும் ஒன்று கூட்டி விழாவாகச்  செய்தால் எப்படி இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். விழா நடத்துவதற்கு காரணம் வேண்டுமே! தெய்வத்தின் திருப்பெயரைச் சொல்லி மக்களை அழைத்து விழாக்கொண்டாடினான். புது ஆடை உடுத்தியும், இல்லையென்று வந்தவருக்கு வேண்டியவைகளைக் கொடுத்தும் தன்னுடையக் குலம் இவ்பூவுலகில் நிலைபெறச் செய்தான். “மனிதன் வேட்டையாடினான். ஓய்வாக இருந்தபோது தன் களைப்பைப் போக்க ஆடிப்பாடினான். இதன் பயனாக விழா கொண்டாடி மகிழ்ந்தான். கிழமைக்கு ஒருநாள் விடுமுறை எடுததுக்கொண்டான். சங்ககாலத்தில் தைநீராடல், கார்த்திகை விழா, ஓணவிழா, இந்திரவிழா, உள்ளி விழா, பூந்தொடை விழா முதலிய விழாக்கள் குறிக்கின்றன”1 என்று பா.இறையரசன் குறிப்பிடுகின்றார்.

விழாக்கள் என்றால் என்ன?

          விழவு, சாறு, திருவிழா, பண்டிகை, நோன்பு, திருநாள் என விழாவிற்கு வேறுபெயர்களாகச் சுட்டுவர். “விழாக்கள் உடலுக்கு ஓய்வும், உள்ளத்திற்கு இன்பமும் தரவல்லன. எனவே மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாடுவதால் விழா என்று அழைக்கப்படுகிறது. விழா எனும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தொன்றியது. இதற்கு விருப்பம், பற்று ஆகியபொருள்கள் உள”2 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார். பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் நிகழ்வினை விழா என்கிறோம். விழாக்களைப் பொது விழாக்கள், வழிபாட்டு விழாக்கள் என்று இருவகைப்படுத்தலாம். பொது விழாக்களை ஆண்டுவிழாக்கள், தின விழாக்கள், வாழ்வியல் சார்ந்த விழாக்கள் ( திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா போன்றவைகள்) என வகைப்படுத்தலாம். வழிபாட்டு விழாக்களை தேர்த்திருவிழா, எருது விடும் விழா, குடமுழக்கு விழா எனப் பிரிக்கலாம்.

விழாவும் விருந்தோம்பலும்

          பெரும்பாலான விழாக்கள் ஒற்றைப்படை நாட்களிலே நடைபெற்றன. முதல் நாள் பொங்கல் வைப்பது, இரண்டாம் நாள் கிடா வெட்டி உறவுகளுக்குச் சோறிடுவது, மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழாவினை முடித்து விடுகின்றனர். அக்காலத்தினர் இரவு நேரங்களில் சமைத்தப் பாத்திரிங்களில் ஒரு பிடி சோறையாவது வைப்பர். ஏனெனில் இரவு நேரத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால், இல்லையென்று சொல்லாது உணவிட்டு மகிழ்வார்கள். திருவிழாக்கள் என்பது உறவுகளைக் கூட்டி சோறிடுதலே முக்கிய நோக்காக அமைகின்றது.

கூடி வாழும் பண்பு

          வறுமையின் காரணமாகவும், உறவுகளின் மூலமும் பிரிந்து சென்றவர்கள் கூட திருவிழாக்காலங்களில் சரியான நேரத்திற்கு உள்ளூர்க்கு வந்து விடுகின்றனர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுதலை திருவிழாக்களில் பார்க்க முடியும். விவசாயிகள் மழை வருவதற்கு வெயில் காலத்தில் விழா எடுக்கின்றார்கள்.  பெரும்பாலும் தெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் நடைபெறுவதைக் காணமுடியும். “கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. திருவிழாவிற்கு பொதுமக்கள் பல பகுதியில் இருந்து வந்தனர். அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் ஆகியவை கூறப்படுகிறது”3 என்று பா இறையசரன் கோயில்கள் மூலமே திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார். விழாக்களைப் பொறுத்தவரையில் அரசன் முதல் ஆண்டி வரை மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது எனலாம்.

விழாக்களினால் ஏற்படும் நன்மைகள்

1.     அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவாட முடிகிறது

2.     விருந்தோம்பல் பண்பு வெளிப்படல்

3.     நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வு ஒருநிலைப்படுத்தல்

4.     விழாக்களினால் திருமணம் நிச்சயமாதல்

5.     தெய்வங்களுக்கு வழிபாடுகள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்துதல்

ஆகியவைகள் திருவிழாக்காலங்களில் மக்களுக்கு நன்மைகளாக அமைகின்றன. மேலும், விழாக்காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைந்திருக்கும் என்பதை ‘கல்லென விழவு’ என்ற புறநானூற்றுத் தொடரால் ஏற்றுக்கொள்ளலாம். கல் என்பது ஓசையை உணர்த்தும் ஓர் இடைச்சொல்”4 என்று கண்ணப்ப முதலியார் கூறுகின்றார். இக்கட்டுரையில் சங்க இலக்கியங்களில் விழாக்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

சங்ககால திருவிழாக்கள்

சங்க காலத்தில் அழகியக் குடில்களையுடைய சிற்றூரில் எப்பொழுதும் விழாக்களைக் கொண்டாடி மகிழும் ஊராகத் திகழ்ந்தது என்கிறது குறுந்தொகை,

“சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற” (குறும்.41:2)

          இங்கு சாறு என்னும் சொல் விழாவினைக் குறித்தது. சிற்றூர் மட்டும் அல்லாது பல தரப்பட்ட மக்கள் வாழுகின்ற நகரத்திலும் விழாக்களினால் மிகுந்த ஆரவாரம் உண்டானது.

“பேர்ஊர் கொண்ட ஆர்கலி விழவின்

செல்வாம் செல்வாம் என்றி என்று, அன்று இவன்

நல்லோர் நல்ல பலவால் தில்ல” (குறும்.223:1-3)

 

விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால், அவ்விடத்தில் வாழுகின்ற நல்லோர்களைப் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நற்சொற்களைப் பெற்று நம்முடைய வாழ்வு சிறக்க உதவும் என்கிறாள் தலைவி. பண்டையத் தமிழ் மக்கள் விழாக்களை இறைவனைத் தொடர்புப் படுத்தியே நடத்தி வந்தனர். ஏதேனும் ஒரு கடவுளை முன்னிறுத்தியே விழாக்கள் கொண்டாடப்பட்டது. நற்றிணையில், “விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!” (நற்.19:5)

அரும்பு முதிர்ந்த தாழை மரங்களை கொண்டு வந்து விழா நிகழும் இடத்தினை அழகுப்படுத்துவர். அத்தாழை மரங்களின் உள்ள நறுமணம் விழா நடைபெறும் களமெல்லாம் வீசும்.

மகளிர் அலங்கரித்தல்

          விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும்,  நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடையப் பூக்களைப் பறித்து    தலை நிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

“மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்

                   பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

என்கிறார் ஆசிரியர். பெண்கள் அணிகின்ற தழையாடைக்கு அழகு செய்யும் விதமாக நெய்தற் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கின்றனர் (அகம்.70:12). ஊரில் நடைபெறும் விழாவானது எவ்வாறு சிறப்புடன் விளங்குகின்றதோ, அதுபோல் தன்னுடையப் பெண்மையும் சிறப்புடையவனாக விளங்கியது என்கிறாள் தலைவி,

                 “விழவு மேம்பட்ட என் நலனே” (குறும்.125:3-4)

இப்பாடல் வரிகள் மூலம் திருவிழாக்களினால் பெண்களிடைய உண்டாகும் தன்னம்பிக்கை எடுத்தாளப்பட்டுள்ளது.

ஒழிவில்லாத விழாக்கள்

          விழாக்கள் பகல் பொழுதில் நடைபெற்றாலும், இரவு நேரத்தில் நிலவொளியில் ஆடல் பாடல் என பார்ப்பது மிகவும் இனிமையுள்ளதாக தோன்றும். நற்றிணையில்,

                                      “நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,

                                        கலி கெழு மறுகின், விழவு அயரும்மே” (நற்.348:1-4)

மகிழ்வுடன் விழா எடுக்கும் இந்நேரத்தில் நிலவின் ஒளியும், மத்தளத்தின் இசையும் (அகம்.4:14) தலைவிக்கு மிக்க காமத்தை உண்டாக்கின.  தலைவன் இல்லாது இவ்விழாவில் கலந்து கொள்ளுதல் துயரத்தை ஏற்படுத்தியது. ஆகவே கணவன் மனைவி என்று கூட்டகூட்டமாய் திருவிழாவினைக் காண வந்திருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. மாதம் மும்மாரி பொழிந்திருக்கிறது. அக்கால மக்கள் செல்வசெழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். பகைவர்களுக்கு அச்சத்தை தரக்கூடிய பழமை வாய்ந்த இவ்வூர். ஒழிவில்லாத விழாக்களை என்றும் கொண்டுள்ளது என அகநானூறு (115:1) உரைக்கின்றது.

பங்குனி விழா

          தமிழக மக்களிடையே மிக பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழாவாகும். இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,

“உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்

    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

          பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரி பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற தருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.

“பல்பொடி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

                 ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து” (அகம்.149:15 – 16)

          பாண்டிய மன்னன் ஆட்சி புரிகின்ற மதுரை மாநகரில் கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடையது. அனைத்து வீடுகளிலும் மயில் தோகையினைத் தொங்கவிட்டிருப்பார்கள். இடைவிடாது நடைபெறும் விழாக்களையுடைய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அங்கே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகபெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.

இந்திர விழா

          சங்க காலத்தில் இந்திரவிழா நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் மக்கள்  நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவைகளையே கடவுளாக வணங்கி வந்தனர்.  ஐம்பூதங்களின் தலைவராகவும், இயற்கையின் தெய்வமாகவும் இந்திரனே விளங்கினார். மருதநில கடவுள் இந்திரன் ஆவார். வருடா வருடம் இந்திரனுக்கு விழா எடுத்து கொண்டாடி மகிழ்வது வழக்கமாகிக் கொண்டிருந்தனர். அன்றைய விழாக்களில் சிறந்ததாக இந்திரவிழா கொண்டாப்பட்டது.

“இந்திர விழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

நறுமணம் மிக்க பூக்களைச் சூடிய நடன மங்கையர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழாவில் மக்கள்  கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். கடைகள், வாண வேடிக்கை என களைக்கட்டும். சிலம்பில்,

“கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்

   தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து

               மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலம்பு.5:144-146)

          விழா தொடங்குகிறது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காகக் கொடியேற்றுதல் மரபு. இந்திர விழாவின் போது வச்சிரக்கோட்டத்திலிருந்தும் முரசை கச்சணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றி ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள். விழாவின் தொடக்கம் முடிவு பற்றிய விவரங்களை முரசறைந்து தருநிலைக் கோட்டத்தில் கொடி வானளாவப் பறக்குமாறு ஏற்றப்பட்டது.

காமன் விழா

          இளவேனிற் காலத்தில் நடக்கக்கூடிய விழாவாகும். மன்மதனே காமன் என்று அழைக்கப்படுகிறார்.  காமன் விழா மக்கள் இன்பமாகப் பொழுதை கழிக்கக் கொண்டாடிய ஒரு விழாவாகும். சிற்றூர்களில் மழை வேண்டி மன்மதனுக்கு விழா எடுக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதை அறியலாம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் காமனை வணங்குவதால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. கலித்தொகையில்,

“வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி.35:14)

          நீர் நிறைந்த ஆற்றின் கரையில் குடிக்கொண்டிருக்கும் மன்மதனுக்கு பரத்தையர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழா எடுக்கின்றனர்.  அவ்விழாவில் தலைவனும் கலந்து கொண்டு தன்னுடன் உறவாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

“விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ” ( கலி.30:13)

காமனுக்கு எடுத்த விழாவில் தலைவன் பரத்தையருடன் விளையாடியதை நினைத்து வருத்தம் அடைகின்றாள்.  காமவேளுக்குச் செய்யும் விழாவில் தலைவன் இல்லாத தலைவிக்கு தனிமைத் துயரம் துன்பத்தைக் கொடுத்தது. கலித்தொகையில்,

“காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என” (கலி.29:24)

என்கிறார் ஆசிரியர். “காமன் விழாவை உயர்ந்தவன் விழா, வில்லவன் விழா முதலிய பெயர்களில் கொண்டாடுவதையும், அவ்விழா இளவேனிற் காலத்தில் நடைபெற்றது”5என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார்.

கார்த்திகை விழா

          கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரண திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படும் விழா. சிவபெருமான் திரிபுர அசுரரை கண்டு சிரித்து எரித்ததை நினைவூட்டும் வகையில்  இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். எங்கும் ஒளி பரவி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அகநானூற்றில்,

                                  “அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்

                                   மறுகுவிளக் குறுத்து மாலை நோக்கி” (அகம்.141:8 – 9)

மழை பெய்து ஓய்ந்த சாயங்காலம். வானில் நிறம் மங்கி இரவை நெருங்கிற்று. மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற வீதிகளில் திருவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

                  “பெருவிழா விளக்கும் போலப் பலவுடன்” (அகம்.185:11)

கார்த்திகைத் திருநாளில் இடும் விளக்குகளைப் போல, இலவ மரங்களின் பூக்கள் பூத்திருக்கிறது. இந்நாளில் அறம் செய்வதற்கு நன்னாள். அன்றையத் தினத்தில் விளக்கில் ஏற்றப்பட்ட ஒளியானது வானத்து நட்சத்திர சந்திரனின் ஒளியை விட மிஞ்சி நிற்கும் (நற்.202:910) பாடல் அடிகள் குறிப்பிடுகிறது.

புனல் விழா

          நீர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. நீர் இன்று அமையா உலகம் பொல என நற்றிணை உரைக்கும். மனித தேவையின் மிகவும் இன்றியமையாதன  ஒன்று தண்ணீர்தான். இவ்வுலகமானது வறண்டு விட்டால் நிலத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் மண்ணில் புதைய வேண்டியதுதான். அன்றைய மக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலை ஆடி மகிந்தனர். ஆடிப்பெருக்கின் நாளன்று காவிரி கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.

                                             “மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை

                                              கலிகொள் சுற்றமொடு கரிகால் காண” ( அகம்.376:3-5)

நன்றாக வளர்ந்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றந்தாருடன் ஆரவாரம் மிக்க புனல்விழாவினைக் கண்டு மகிந்தான் என்கிறார் ஆசிரியர். அகநானூற்றில் (222:4-7) மிகுந்த அழகு பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல்விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.

தைத்திருவிழா

          இக்காலத்தில் பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. உழவர்களின் அறுவடை நாளை தைத்திருவிழாவாகக் கொண்டாப்படுகிறது. “மழைப்பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் ஆயமகளிர்கள் விழாச் சிறப்புக்களைப் பற்றி  முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்”6என்கிறார் நா.வானமாமலை. சூரிய பகவானுக்கு நெல்லும் பூவும் இட்டு, ஏர்க்கலப்பை முன்னே பொங்கல் வைத்து இறைவனை வணங்குகின்றனர்.

                                            “நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்

                                            தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், விடியற்காலையில் குளிர்ந்த நீரில் தைத்திங்கள் நோன்பிற்காக  இளமகளிர்கள் நீராடுகின்றார்கள். பாவை நோன்பிற்கும் இவ்வாறு நீராடுதலும் உண்டு.  இவ்வகை நோன்பின் பயனாக பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் என்னை விரும்பி நாடி வருவான் என தலைவி நம்புகிறாள். தன்னிடம் உள்ளப் பொருளை பிறருக்குக் கொடுத்து உதவுகிறாள் (நற்றிணை.80:7) என்றும், தை்திருநாளில் இறைவனை வழிப்பட்டு நிற்கும் தலைவிக்கு வகைவகையாய் அணிகலன்கள் புனைந்து பொலிவுப்பெற்று   (கலித்தொகை.59:13)  விளங்கினாள்.

முழவு விழா

 முழவு என்பது இசைக்கருவிகளில் ஒன்றாகும். விழாக்காலங்களில் மேளம் அடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடுவார்கள். முழவுக்கருவி விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டதும், வட்டமாகவோ சதுரமாகவோ இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். நெருப்பில் சூடு பறக்கக் காட்டி அடிப்பார்கள். நற்றிணையில்,

                        “முழவு கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220:6)

சிறுவர்கள் பனைமடலில் செய்யப்பட்டக் குதிரையை வீதியில் இழுத்து வருகின்றார்கள். இவ்விளையாட்டு செயலுக்கு முழவு அடித்து ஆடியும் பாடியும் வருகிறார்கள். திருவிழாக்களின் போது அடிக்கின்ற மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் ஆடுவார்கள். அவ்வாட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். முழவு விழா என்பது தனியாக நடைபெறக்கூடியது இல்லை. விழாக்காலங்களில் முழவு இசைக்கப்படும். இந்நிகழ்வானது பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடைபெறும்.

 உள்ளி விழா

          கொங்கு மண்டலத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறுவது உள்ளிவிழா. கொங்கர்கள் இடுப்பில் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்ற விழாவாகும்.

                              “கொங்கர்கள் மணிஅரை யாத்து மறுகின் ஆடும்

                               உள்ளி விழவின் அன்ன” ( அகம்.368:16-18)

என்று அகநானூறு உரைக்கும். இவ்விழாவினைக் காண வந்த மக்களின் ஆரவாரம் மிகப்பெரிது.

வில் விழா

          வெற்றிப்பெற்ற மறவனின் வில்லினை வைத்து கொண்டாடப்படுவது.    இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி வீரத்தைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் வீரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த எண்ணி தெருக்களில் தம்மில் தாம் மாறுபட்டு போர் செய்கிறார்கள். தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் உடையவர்கள் மறவர்கள்.

                                     “மள்ளர் குழிஇய விழவினானும்” (குறும்.31:1)

என்று குறுந்தொகை கூறுகிறது. போரிலே வெற்றி கண்ட வில்லினை சிறப்பிக்கும் பொருட்டு வீரர்கள் கூடி எடுக்கும் விழாவாக அமைந்துள்ளது.

பூந்தொடை விழா

          படைக்கலப் பயிற்சி பெற்று திரும்பிய வீரர்களை அரகேற்றும் விழாவாகும். பெரும் வீரனான தன் மகன் பயிற்சி முடிந்து வீடு திரும்புகிறான். அவனுடைய வெற்றி இவ்வுலகம் காணட்டும் என்று தங்களின் வீடுகளில் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன்னால் பரந்துபட்ட இடத்தில் மணல் பந்தலிட்டு துணங்கைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.

“வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்

   பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

                தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்.187:7-9)

பயிற்சி காலத்தில் விற்போர், வாட்போர், குதிரையேற்றம், யானையேற்றம், மதிலைக் காத்தலும் அழித்தலும், முன்னின்று சண்டையிடுதல் போன்றவற்றைக் கற்று தெளிந்து வந்தள்ள மழவர்கள் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடினார்கள்.

கோடியர் விழா

          கோடியர் என்போர் கூத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள், விரலியர்கள் என அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விழா நிகழ்த்துகிறார்கள்.

“கோடியர்  விழவு கொள் மூதூர் விறலி பின்றை

முழவன் போல அகப்படத் தழீஇ,” (அகம்.352:4- 6)

என்கிறது அகநானூறு. ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் இணைந்து பழமையான ஓர் ஊரின்கண் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் ஆடுவோர்கள், பாடுவோர்கள், முழவு வாசிப்போர்கள் என அவரவர்களின் திறனை மக்களிடையே வெளிப்படுத்துவார்கள். விழா நேரங்களில் ஆடும் கூத்தர்கள் வெவ்வேறான ஒப்பனைகளுடன் திகழ்வார்கள் என்று புறநானூற்றுப் பாடல் அடிகள் (29:22-23) குறிப்பிடுகின்றன.

ஓணவிழா

          பலம் வாய்ந்த அசுரரை அழித்தும், பொன்னால் செய்த மாலையை அணிந்தும், கருநிறம் உடைய திருமால் பிறந்த திருவோண நட்சத்திர நன்னாளில் ஊரிலுள்ளோர் விழா எடுப்பர். தங்களைத் திருமாலாக நினைத்து அழகுப்படுத்திக்கொண்டு நடனம் புரிவர்.

“கணம் கொள் அவுணர்க கடந்த பொலந்தார்

     மாயோன் மேய ஓண நல் நாள்” (மதுரை.590-591)

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகத்தப்பெற்றது. அவ்விழாவில் யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கேரள மக்கள் மட்டும் ஓணவிழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் விழாவைப் பற்றியக் குறிப்புகள்

v தழையாடையை உடுத்திய தங்கைமார்கள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் மீன்களை விற்று வருவார்கள். (அகம்.320:3-5)

v “விழவும் மூழ்த்தன்று, முழவும் தூங்கின்று” (நற்.320:1) – ஊரினர் நடத்திய திருவிழாவும் முடிவுற்றது. மத்தளங்களின் ஓசையும் அடங்கிவிட்டது என்று விழா முடிந்த நிகழ்வினை நற்றிணை உரைக்கிறது.

v விழா நடைபெறுவதற்கு முன் முந்நீர் (ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர்) கொண்டு வந்து இறைவனைத் தொழுது, ( புறம்.9:10) பின் தொடங்குவார்கள்.

v குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபட்டு விழா கொண்டாடுகின்றார்கள் என்று புறநானூறு (17:1-4) கூறுகிறது.

v பல சிறப்புகளையுடைய பாசறையில் சிறு சோற்று விழாவினை வீரர்கள் கொண்டாடி மகிந்தார்கள். (புறம்.33:22)

v புறப்புண்ணுக்கு நாணி சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலால் அவ்வூரில் விழாக்களே மக்கள் மறந்து போயினர். ( புறம். 65:1-4)

v போர் தொடங்குவதற்கு முன்னும், போரில் வெற்றிப்பெற்ற பின்பும் விழா எடுப்பார்கள். (புறநானூறு.84:3-5)

v விழாக்காலங்களில் செம்மறி ஆட்டுக்கறியை உண்ணல். (புறம்.96:6)

விழாக்கள் பற்றியச் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன.

முடிவுரை

          வழிபாட்டை முன்னிறுத்தியே விழாக்கள் நடபெறுவதால் ஆங்காங்கே சிறுமாறுபாடு அடைகின்றன. விழாக்களின் தோன்றலே மக்களின் மனம் மகிழ்வுதான். கடன் பெற்றாவது விழாவினை நன்முறையில் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற நாலு பேருக்காவது வயிறு நிரம்ப உணவு கொடுக்க வேண்டும்.  விழாக்காலங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தன்னிறைவு பெறவும், பிரிந்து சென்ற உறவுகளை மீண்டும் சந்திக்கக் கிடைக்கும் விழாவினை மக்கள் எந்நாளும் வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.

சான்றெண் விளக்கம்

1.     பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, பக்.237-242

2.     கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, பக்.5-6

3.     பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, ப.235

4.     கண்ணப்ப முதலியார், கட்டுரைக்கொத்து, அம்மையப்பர் அகம், சென்னை -7, ப.40

5.     கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, ப.51

6.     நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), NCBH, சென்னை – 98, பக்.14-15

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தேன்மொழியாள் என்கிற தேவதை – சிறுகதை

     நடுசாமம். என்மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. ஜீரோவாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் என் மனைவி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது கள்ள கபடமற்ற முகம். நான்என் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. ஆனாலும் என்னுடய மனம் மட்டும் இப்பவும் பதற்றத்திலே இருந்தது. காற்றாடிசுத்தின வேகத்தில் என் மனைவி தேன்மொழியாளின் நெற்றிப்பொட்டு வகிரில், ஒற்றைவெள்ளை முடி மட்டும் காற்றில் பறந்தது. என்னுடையப்பார்வை அந்த வெண்முடி மேலே இருந்தது. எப்போதுஅந்த வெண்முடி நெற்றி வகிரில் படியும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

     வெண்முடிஎன்னை முறைத்துப் பார்த்தது. கண்களைஉருட்டி கோபக்கணைகளைத் தொடுத்தது. சிலநேரம் சிணுங்கியது, அழுதது, வெறித்தது, அநாதையாய் உணர்ந்தது. எனக்குஎவ்வாறு அந்த வெண்முடியை சமாளிப்பது என்று தெரியவில்லை. எந்த பதிலைக் கூறினால் அவ்வெண்முடி சாந்தமாகும் என்று யூகிப்பதற்கு கூட முடியவில்லை. அந்த ஒற்றை வெண்முடி இன்னும் அடங்காமல் நீள் வாக்கிலேயே ஆடிக்கொண்டிருந்தது. என்னை ஆட்டிக்கொண்டிருந்தது.

     இன்றுமாலை நான் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட் சென்றிருந்தேன். பொருட்களை எல்லாம் வாங்கியபின் பில் கொடுத்துவிட்டு திரும்புகையில்தான் அந்த முகத்தைப் பார்த்தேன். இருபது வயதுடைய சின்னப்பெண் அவள். அதேமுகம்தான். மனம்திக்கென்று நின்றுவிடும் போல் உணர்வு. இதுஎப்படி சாத்தியம். பலவருடங்களுக்கு முன்பு பார்த்த அதே முகம். அதேசிரிப்பு. அதேவயது. என்னுள்என்ன நடக்கிறது. ஒருவேளைஎனக்கு மட்டும் அப்படித் தெரிகிறதா என்ன? என்நாடி நரம்புகளிலும் இரத்த நாளங்களிலும் ஊடுருவிச்சென்ற அந்தப்பெண் இங்கு எப்படி? இவ்வளவுகாலத்திற்குப் பின் கடவுள் எதற்காக என் கண்ணில் காட்ட வேண்டும். அதுவும்அதே வயதில்! ஒருவேளைபிரம்மையாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

அப்போதுதான்பக்கத்தில் இருக்கும் அச்சிறுபெண்ணின் கையைப் பிடித்தப்படி நின்று கொண்டிருந்த என்னவளைக் கண்டேன். அப்போதுபார்த்ததற்கு கொஞ்சம் மாறித்தான் இருக்கிறாள். உடம்பு போட்டுவிட்டது. முகம் உப்பி பூசினார் போன்று இருந்தது. அவளுக்கும்வயசாகியிருந்தது. அவளும் என்னைக் கண்டாள். அந்தச்சின்னப்பெண் மகளாகவோ இல்லை பேத்தியாகவோ கூட இருக்கலாம். ஆனால் என்னவளின் சிறுவயது தோற்றத்தினைப் அப்படியே பெற்றிருந்தாள். என் கண்கள் அவளைப் பார்ப்பதை நிறுத்தவே இல்லை. அவளும்என்னை அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதனால்தான்என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கள் இருவரின் கண்களும் இந்த உலகத்தை நிறுத்தி மெய் மறந்து நின்றுகொண்டிருந்தோம். அந்த கண்கள் என்னை சுட்டெரித்துவிடும் போல் இருந்தது. என்னைஏமாற்றிய கயவனே! உன்னைஎன் இரு கைகளால் கொல்லாமல் விடமாட்டேன் என்றிருந்தது. ஆனாலும் இப்போதும் உன்னை நேசிக்கிறேன். என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்பது போல் இருந்தது. எல்லாவற்றுக்கும்மேலாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அம்மாஅம்மாஎங்கமாபாத்திட்டு இருக்க…”  என்றாள் மகள். எந்தவிதமானபதிலும் அவளிடம் இல்லை. மீண்டும்அவளின் உடம்பைக் குலுக்கி, “அம்மாஅம்மா.. யாரதுஅந்த அங்கிள்?” என்றாள்மகள். என்னவள்மௌனமே பதிலாகத் தந்தாள். கடையில்இருந்து அந்தச் சாலை முடியும் வரை என்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேச் சென்றாள். அவளும்பேசவில்லை. நானும்பேச முற்படவில்லை.

என்ன வெண்முடி என்னால் பன்ன முடியும்? என்அழகான வெண்முடியே உனக்கு துரோகம் இழைக்க நான் விரும்பவில்லை. ஆனாலும் நீ ( மனைவி ) வந்த பிறகு அவளை முற்றிலும் மறந்து போயிருந்தேன். இன்று அவளைச் சந்தித்தப் பிறகு  என் மனம் நடுக்கம் அடைகிறது. நான்யாருக்கு துரோகம் இழைத்திருக்கிறேன்! யாருக்கு உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். காற்றில் இன்னும் அசைந்து கொண்டிருந்தது அந்த வெண்முடி. அதுபடுக்கிற வரை எனக்கு நிம்மதி இல்லை. இதற்குநான் பதில் கூறியே ஆகவேண்டும்.

அப்பா ஒயர்மேன். அப்போஅப்போஊர்ஊராக மாறிக்கொண்டே இருப்பார். அன்றுஅம்மாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அப்பாவுக்குடிரான்ஸ்பர் ஆயிடுச்சி, அதனாலநாங்க முன்னால போறோம். நீஇந்த வாரம் கடைசியில வந்திருடா என்று விலாசத்தை சொன்னார்கள். நான் அம்மா சொன்னதை குறித்துக்கொண்டேன். என்னாடா இதுவேற அப்பப்ப என்று சலிப்பாய் இருந்தது.

வாரக் கடைசியில அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தேன். பேருந்த விட்டு கீழ இறங்கினதும்தான் தெரிந்தது, ஒரேகாடு. அந்தகாட்டுக்குள்ள ஒரு வண்டி ரோடு மட்டும்தான். எனக்கு பக்கென்றது. என்னா பன்றதுன்னு ஒன்னுமே புரியல. அப்போஒரு பெண் அந்த பக்கமா சைக்கிள்ள போய்ட்டு இருந்தா. பாக்கிறதுக்குஅழகா தெரிந்தா. மனசுஅந்த பொண்ணுகிட்ட பேசினா நல்லா இருக்கும்முன்னு தோனிச்சு. அப்பஅங்க முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

என்னங்கபெரியவரே ஊருக்குள்ள எப்படி போறதுஎன்றேன். அவர் கொஞ்சம் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பின்னால  திரும்பிஏலேசுபாசுபா….” என்றார்.

என்னங்கதாத்தாஎன்றாள்அப்பெண். நான்அவளுடைய பெயர் சுபா என்று தெரிந்துகொண்டேன்.

இந்ததம்பி ஊருக்குள்ள போகனுமாம்.  கொஞ்சம் வழிகாட்டிடுமாஎன்றார். அப்பெண்என்னை பார்த்தாள். சிறிது நேரம் கழித்து, “நான்போறேன், பின்னாலேவாஎன்றுசொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளை மிதிக்க ஆரமித்தாள். நான் அவளுக்கு பின்னாலயே நடக்க ஆரமித்தேன். அவளுடைய சைக்கிள் மிதிக்கு என்னால தாக்குப் பிடிக்க முடியல. அப்பெண்ணைநான் தவற விட்டுட்டேன். கிடைச்ச ஒரு வாய்ப்பும் பறிபோயிடுச்சே என்று என்னையே நொந்துகொண்டேன். கொஞ்ச தூரம் அந்த சாலையிலே நடந்து சென்றேன். அவள்அங்கு நின்று கொண்டிருந்தாள்.

என்னங்க…. என்ன இவ்வளவு மெதுவா வாரிங்கஎப்பவீடுப்போய் சேர்றதுஎன்றாள்.

ஏங்கநீங்க சைக்கிள்ள வேகமா போறதுக்கும் நான் நடந்து வரதுக்கும் வித்தியாசம் இருக்குள்ளஅதான்! என்றேன்.

ஏதோ புரிந்தவளாய், “சரி சைக்கிள் கேரியர்ல வந்து உட்கார்என்றாள்.

நானும்கேரியரில் உட்கார்ந்தேன். உட்கார்ந்தவுடன், “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டுஎன்றபாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. அப்படிஒரு வாசம் அப்பெண்ணிடமிருந்து! எனக்காகவேஇவள் பிறந்தவள். கடந்தபிறவில் இவள்தான் என்னுடைய மனைவி. என்னுடையகாதல் தேவதை என்றெல்லாம் மனம் நினைத்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ஏதோ அவள் என்னிடம் பேசியது போல் தோன்றியது. ஆனால்எனக்குதான் ஒன்றுமே கேட்கவேயில்லை. அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போல,

என்னங்கஇங்கையே கீழ இறங்கிக்கோங்கஇதுக்கு மேல ஊருக்குள்ள உங்கள சைக்கிள்ள உட்காரவச்சி கூட்டிட்டுப் போனாஅதுதப்பாயிடும். அதனால இந்த வழியாவே போங்கஊருக்குள்ளபோயிடலாம்என்றுசொன்னாள். நான்அவள் அழகினைப் பருகிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலை அங்கு இருக்கக்கூடிய டவுன்ஷிப்புக்கு சென்றுவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அந்தப்பெண் சரியாக அதே நேரத்தில் வந்தாள். நான்பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தாள். கொஞ்ச தூரம் சென்றவள், பின்னால்என்னை திரும்பிப் பார்த்து

என்னங்கவாங்கசைக்கிள்ளவந்து ஏரிக்கோங்க. நான் ஊருக்குள்ள போய் விட்டிடுரேன்என்றாள். சைக்கிள்ளஉட்கார்ந்தவுடன்தேங்ஸ்என்றவார்த்தை மட்டும் என்னிடமிருந்து வந்தது.

எங்க போய்ட்டு வாரிங்க, என்றகேள்வியில் ஆரமித்து என் ஜாதகத்தையே தெரிந்து கொண்டாள். சும்மாலொட லொடன்னு பேசிட்டே இருந்தாள். எனக்குகொஞ்சம் அறுவையாக இருந்தாலும் அவளுடன் இருப்பது, பேசுவதுஎன சுகமாகத்தான் இருந்தது. மீண்டும்அதே இடத்தில் என்னை இறக்கி விட்டாள். நேற்றுசொன்ன அதே பதிலைத்தான் இன்றும் சொன்னாள். சிரிப்பாய்ரசித்துக்கொண்டேன்.

அடுத்தநாள்மாலை பேருந்து நிறுத்தம். தினமும்நாங்கள் சந்தித்து பேசிக்கொள்வோம் என்று நான் கொஞசம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இன்று என்னுடன் சகஜமாகப் பேசினாள். அவள்பேசுவதே கொஞ்சிப் பேசுவதாக தோன்றியது.

என்னங்கநானே பேசிட்டு இருக்கேன். நீங்கஏதாவது சொல்லுங்கஎன்றுஎன்னை கேட்டாள்.

உங்கபேரு என்ன?”

சுபநித்யராஜேஸ்வரி

சுபா.. நித்யா.. ராஜேஸ்வரி…. என்னங்க நான் எப்படிங்க கூப்பிடுறது

உங்களுக்குஎப்படி கூப்பிடனும்ன்னு தோனுதுா அப்பிடியே கூப்பிடுங்க

சுபாஉங்க கல்லூரி வாழ்க்கை பத்தி சொல்லுங்கஎன்றேன். முதன்முதலில் அவளை சுபா என்று சொன்னதில் இனிப்பு சாப்பிட்டது போன்ற உணர்வு எனக்கு.

நான்ரொம்பெல்லாம் படிக்க மாட்டேன். சுமாராத்தான்படிப்பேன். பிரண்ஸோடநல்லா ஊர் சுத்துவேன். கொஞ்சமா சாப்பிடுவேன். நல்லா பேசுவேன்என்றாள்.

அதான்தெரியுதேஎன்றேன்மெதுவாக..

என்னசொன்னிங்கஎன்றாள்.

நீநல்லா பேசுறஅதுஅழகாயிருக்குஎன்றேன்.

அப்படியா! ஆனா எங்க பாட்டிதான் எப்பவும் என்னை வாயாடி! வாயாடி! வாயாடி! ம்பாங்க

உன்னையேவாயாடின்னு சொல்லுறாங்களா! அந்த கிழவிய போட்டு தள்ளிடலாமா?”

ஐயோ ! வேண்டாம்பாநல்ல கிழவி

சரிஎனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா? கேட்டா ஏதாவது தப்பா எடுத்துகுவாளோன்னு எனக்கே ஒரு பயம்தான். இருந்தாலும்கேட்டேன். அவளின்சம்மதம் பெற்றவுடன்,

இல்லகாலையில அடிக்கிற பவுடர் இன்னும் முகத்துல களையாம அப்படியே இருக்குதே எப்படி?”

எனக்குஎப்பவுமே என்னை அழகு படுத்திகிறது ரொம்ப பிடிக்கும். அப்பஅப்ப முகம் கழுவி பவுடர் போட்டுக்குவேன். அதனால பேக்குல எப்பவும் மேக்கப் திங்ஸ் வச்சிட்டே இருப்பேன்

ம்ம்ம்நீ பெரிய ஆள்தான்அத்துடன்அன்றைய பொழுது முடிந்தது.

அடுத்த நாள், அவளோடுசிறு வகுப்பில் படித்த பெண் ஒருத்தியை சந்தித்தோம். 

 ஹாய் நித்யா எப்படியிருக்க? பாத்து ரொம்பநாளாச்சு?” என்றாள்.

முகம் திருப்பியவளாய் அப்பெண்ணிடம் பேசாமல் சென்றுகொண்டிருந்தாள். நான் ஒன்றும் புரியாமல் சுபாவையே பார்த்துக்கொண்டு அவள் பின்னாடியே ஓடினேன்.

 என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீமாட்டுக்கும் போய்ட்டே இருக்கே…”என்றாள்அப்பெண்.

எயபேரு என்னாடி.. நீஎன்னாடி கூப்பிடுறஎயபேரு நித்யாவா.. என்னோடபேரு சுருக்கிக் கூப்பிடுற உரிமைய உனக்கு யாரு கொடுத்தது. எங்கவீட்டுலயே எம்பேற முழுசாத்தான் கூப்பிடுவாங்க. இல்லன்னா சாமியாட்டம் ஆடிடுவேன். அந்தஉரிமை எம் புருஷனுக்கு மட்டுதான் உண்டுஎன்றுபடபடவென்று பட்டாசாய் வெடித்தாள். அப்பதான் எனக்கு அது தட்டியது. நான்அவளை சுபான்னு கூப்பிட்டா ஒன்னுமே சொல்லுறது இல்லையே என்று தோணிச்சு. என்மேல அவளுக்கு ஏதோ ஒன்னு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். மௌனமாய் மனதில் புன்னகைத்துக் கொண்டேன்.

சாரிப்பாஇனிமேல் சுபநித்யராஜேஸ்வரின்னே கூப்பிடுறேன்என்றாள். சிலவாரங்கள் அப்படியே சென்றன.  எங்களுக்குள் இருக்கிற நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி உரிமையோடு பேசவும், கோபப்படவும், ஒன்னா சந்தோசத்தை அனுபவிக்கவும் செஞ்சோம். அன்றைக்குஅதேபோல சைக்கிள்ள தள்ளிகிட்டே பேசிட்டு வந்துட்டிருந்தோம்.

இன்னிக்குஎங்க காலேஜ்ல நடந்த ஒரு ஜோக்க உங்ககிட்ட சொல்லலாமா?” என்றாள்.

எனக்கும்அவள பேச வச்சி கேட்கிறது ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதனால ம்ம்ம்என்றேன்.

பொண்ணுகளுக்குமுன்னால இருக்கிறது, பசுமாட்டுக்கு பின்னால இருக்கிறது அது என்ன?“ என்றுசிரிச்சுக்கிட்டே கேட்டாள். எனக்குசுருக்கென்று கோபம் தலைக்கேறியது. அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அரைந்தேன்.

என்னாவயசாச்சி உனக்கு, என்னாபேச்சுப் பேசுறஉனக்குவாய்க்கொழுப்பு அதிகம். ஒன்னும்தெரியாத மாதிரி இருந்திட்டு என்னா பேச்சு பேசுறஒன்னும்தெரியாத பாப்பாவாம் போட்டுகிட்டாளாம் தாப்பாவாம்சும்மா சொன்னாங்க

அவள் கன்னத்தில் கை வைத்தபடி கண்களில் நீர் தாரைதாரையாக வந்து கொண்டிருந்தது. அழுகை விம்மலாக மாறியிருந்தது. அவள் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்க ஆரமித்தாள். நானும் பின்னாலயே நடந்தேன். இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் மனசு வலித்தது. நான்யார் அவளை அடிப்பதற்கு? அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று பல யோசனைகள் தூக்கம் கலைந்து துக்கத்தில் மூழ்கியிருந்தேன். அடுத்து வருகின்ற ஒரு வாரமும் அவளுக்காகக் காத்திருந்து காந்திருந்ததுதான் மிச்சம். அவள்வரவே இல்லை. ஒருவேளை கல்லூரி விடுமுறையாக இருக்குமோ! இல்லை, உடம்பு சரியில்லாம இருக்குமாஇல்லன்னாவேற எதாவது பிரச்சனை ஆகியிருக்குமா என்று மனசு பலவாறாக யோசிக்க ஆரமித்தது. அன்னிக்கும்சுபாவுக்காக காத்திருந்தேன். அவள் வருவதாக தெரியவில்லை. அந்த காட்டுப்பகுதியில் நடக்க ஆரமித்தேன். தூரத்தில் யாரோ சைக்கிளில் நிற்பதாக தெரிந்தது. உற்றுகவனித்தேன். ஆமாம்! சுபாதான். எனக்கு கோபம். அதனால்அவளிடம் பேசாமல் தாண்டிச் சென்றேன்.

ம்ம்ம்…. நில்லுங்கஉங்ககிட்டபேசனும்அவள்அழுதாள். அழுகைக்குகாரணம் கேட்டேன்.

நான்உன்னை அடிச்சதுக்காக அழுவுறயா? அப்படின்னாசாரி..சாரிசாரி…”

நான்ஒன்னும் அதுக்காக அழுவுல.. நீங்கஎன்னப் பாத்து அப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டிங்களேநான் என்ன அப்படியா?” என்றுதேம்பினாள். கண்டிப்பாக அன்று அவளை என்ன வார்த்தை சொல்லி திட்டினேன் என்று நிச்சயமாக எனக்கு நினைவு இல்லை. “நீயேசொல்லுஎன்றேன்.

ஒன்னுதெரியாத பாப்பாவாம்…” என்று இழுத்தாள்.

என்னைமன்னிச்சிரு. ஆமாம்! நான்உன்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது. சாரிசாரிசுபா.”

காலேஜ்லபிரண்ஸ்ஸல்லாம் சொல்லிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. அதுல தப்பு எதுவும் இருக்காதுன்னு நினைச்சுதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்புறம் பிரண்ஸ்கிட்ட அதபத்தி கேட்டபோதுதான் என்னை திட்டிடாளுவ.. அத போய் ஆம்பிளைகிட்ட சொல்லுவாங்களான்னு. அப்பதான் எனக்கு புரிஞ்சது. அதுக்குwomen-cow ‘W’ தான் விடைஎன்றுசொன்னாள். விடையைநினைத்து எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒருகேள்விக்கு எப்படியெல்லாம் விடை கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். சிறுதுநேர உரையாடலுக்குப்பின் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

நாளைக்குஉனக்கு பிறந்தநாள். நான் உன்கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு சொல்லனும். அதுநம்ப வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமானது. அதுமட்டுமல்லாமல் உனக்காக சிறப்பு பரிசும் வச்சிருக்கேன்என்றாள் சுபா. எனக்குபொறந்தநாள்ன்னு அப்போதுதான் ஞாபகம் வந்தது. சுத்தமாமறந்து போச்சு.

என்னசொல்லுவ…. என்னபரிசுஇப்பவேசொல்லேன்!” என்றேன். சுபா, என்கிட்டமுகத்தை கொண்டு வந்தாள். அவளுடையஆட்காட்டி விரலோடு நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து என் மூக்கை ஆழத்திப் பிடித்து ஒரு திருகு திருகினாள்.

காத்திருநான் நாளைக்கு சொல்லுறேன் பக்கி…” என்றாள்.

மிருதுவானகைகள் முதன்முதலில் என்னுடைய மூக்கைப் பிடித்து ஆட்டுகிறது. என்ன ஒரு சுகம். மிதப்பதுபோல் உணர்வு. அவளின்கைகளில் இருந்து வந்த வாசம் என்னை கிரங்கடித்தது. அப்படியே கண் மூடி நின்றிருந்தேன். கொஞ்ச தூரம் சென்ற அவள் கூப்பிட்ட பிறகே திரும்பிப்பார்த்தேன். கையசைத்தாள். அவள் அந்த தெருவை கடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். நாளைய கனவோடு வீட்டிற்குச் சென்றேன். வீட்டின்முன் டெம்போ வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அம்மாதான் சொன்னாங்க,

அப்பாவுக்குகும்பகோணத்துல டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. நாளைக்கே அங்க இருக்கனும்ன்னு, நான்பதறினேன். எவ்வளவுகெஞ்சியும் என்னால் அங்கே இருக்க முடியவில்லை. சுபாவின் நினைவுகளோடு அந்த ஊர் எல்லையை கடந்தேன்.

வெண்முடிஎன்னைப் பார்த்து சிரித்தது. மனசுலஇருக்கிறதெல்லாம் கொட்டியாச்சு. மனசும் நிம்மதியாச்சு. திருமணமான இத்தனை வருடங்களில் என் கருவைச் சுமந்தவள். என்உடலோடு உடலாக இருந்தவள். எனக்கொன்றுஆனால் முதலில் துடித்துப்போனவள். எனக்காக அழுபவள். பார்த்துபார்த்து கவனிப்பவள். என் மனைவி தேன்மொழியாள். அவளைத் தவிர இந்த உலகத்தில் யாரும் என்னை சிறப்பாகப் பாத்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.  என்உதடுகளை குவித்து மனைவியின் நெற்றி வகிரில் முத்தமிட்டேன். என் முத்த அனலில் வெந்து சாம்பலானது அந்த வெண்முடி. இன்னும்உறங்கிக்கொண்டிருக்கிறாள் தேன்மொழியாள் என்கிற என் காதல் தேவதை.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான மூங்கில் கூடைகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. 

            இன்றைய வளரும் தலைமுறையினருக்குப் பிளாஸ்டிக், இரப்பர்,  தோல் ஆகியவற்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய கூடைகள் மிகஎளிதாக கிடைப்பதால் மூங்கில் கூடையை மறந்தே போயுளளனர் எனலாம்.  மூங்கில் கூடையைப் பயன்படுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன.

  • காற்று இடைவெளி இருப்பதால் கூடையில் வைத்திருக்கும் பொருட்கள் காற்றோட்டமான சூழல் ஏற்படும்.
  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்டது என்பதால் நீண்ட நாட்கள் தாங்கும்.
  • நோய்க்கிருமிகளின் ஊடுறுவல் அதிகம் இருக்காது.
  • பார்வைக்கும் அழகாக இருக்கும்.     
  • கூடையின் மேல்பகுதியில் வளைவு இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். 
  • ஒருவேளை மக்கினாலும் மண்ணுக்கு உரமாக மாறிவிடும்.
இலக்கியத்தில் கூடை பின்னுவோர்
        சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் கூடை பின்னும் தொழில் செய்யும் கம்மியர்களைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன. 
            
    “கைவல் கம்மியன் முடுக்கலின், புரைதீர்ந்து” (நெடுநல்வாடை.85)
 
            கைத்தொழிலில் வல்லமை பெற்ற தச்சர்கள் இடைவெளி தோன்றாமல் பல மரச்செதில்களை ஒன்றாகச் சேர்த்து முடுக்கி மதிலின் வாயிலை உருவாக்க முடியும் என்கிறார் நக்கீரர். கூடையைப் பின்னுகின்றது போலவே இங்கு மதிலின் வாயிலை மூங்கில் குச்சியை ஒன்றோடு ஒன்று சேர்த்து பின்னுதல் வேண்டும் என்கிறார்.  தமிழகக் காடுகளில் மூங்கிலின் வளர்ச்சி அபரிதமானது. இலக்கியங்களில் மூங்கிலைப் பற்றிய குறிப்பகள் பல இடங்களில் காண முடியும். 

     மூங்கிலை வெட்டியும் சீவியும் கூடை பின்னுகின்ற தொழிலாளிகள் இன்றைய தலைமுறையில் கொஞ்சகொஞ்சமாகக் குறைந்து வருகிறார்கள்.  மக்கள் யாரும் மூங்கில் கூடையை விரும்பாததால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக்  குலத்தொழிலை விட்டுவிட்டு பிறதொழில்கள் செய்ய முற்படுகின்றனர். 

  இனியவைக் கற்றலின்   தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்போம்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

உழைப்பு

 

சுறுசுறுப்பாய் ஓடு

சோம்பலை நீக்கு

விடியற்காலையே விழித்திடு!

 

விண்ணை தொட்டிட

எழுவாய் தோழா!

 

எறும்புகளைப் பார்

தனக்கு வேண்டியஉணவைத்

தானே சுமந்து செல்லும்

 

காக்கை குருவிகள் தங்கிட

களம் ஒன்று அமைத்திடுமே

 

உழைக்கும் மனிதனே

உயிராய் நினைப்பான் நாட்டை!

 

ஏறு பிடித்து சேற்றில் உழுதாதான்

சோற்றிலே கைவைத்து உண்ண முடியும்!

 

உழைப்புதான் ஆடவர்க்கு உயிர்

உழைப்புதான் புருஷ லட்சனம்பழமொழியே!

 

சுறுசுறுப்பாய் இரு

சோம்பலை நீக்கி

உழைத்து முன்னேறுவாய்

வாழ்வில் வெற்றி பெறுவாய்

கவிஞர் முனைவர் க.லெனின்

சைக்கிளுக்கு ஒருரூபாய் வாடகை

     ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த செல்லம்மா பாட்டி செத்துப்போச்சு. முடியாம கிடந்தப்ப மகன், மகள், பேரக்குழந்தைகள் என எல்லாரும் செல்லம்மா பாட்டிக்கு பாலு ஊத்துனாங்க. ஆனா பாட்டி உசிரு ரொம்ப கெட்டி போல. சாவே நெருங்கல. கடைசியா அந்த கிராமத்துக்காரர் ஒருத்தர் செல்லம்மா பாட்டியோட புருஷன் சன்னாசிய, பால ஊத்த சொன்னாரு. சன்னாசி தாத்தாவும் பால பாதிகூட ஊத்துல பாட்டியோட தலை தொங்கிடுச்சி. ஓ ன்னு பெரிய அழுகுரல் வேற. அங்கிருந்த எல்லோரும் ஒரே நேரத்துல தலையை விரிச்சிப்போட்டுகிட்டு கத்த ஆரமிச்சாங்க. வெளிய இருந்த சொந்தகாரங்களும் “ஐயோ! செல்லம்மா கிழவி செத்துப்போச்சா… பாவம்” என்று மூக்கின் மேல் விரல் வைத்து இழவு வீட்டின் வாசலில் கொஞ்ச நேரம் நிற்கிறார்கள். ஒவ்வொருத்தராக தூக்கம் வரவே களைய ஆரமித்தனர். கூட்டம் களைய களைய அழுகையும் சத்தமும் கொஞ்சகொஞ்சமாக குறைய ஆரமித்தமித்தது. வயசான கிழவி பாரு. கொஞ்ச நாளவே உடம்புக்கு முடியாம இழுத்துகிட்டு கிடந்தது. அந்த கிழவிக்கு பீ மூத்திரம் அள்ளுரதுல மருமக ரெண்டு பேத்துக்கும் ஏகப்பட்ட மனகசப்பு வேற.

     செல்லம்மா கிழவி செத்தது யாருக்கு நன்மையோ இல்லையோ? அந்த வூட்டு மருமகள்கள் ரெண்டு பேத்துக்கும் ஒரே சந்தோசம். ஏன்னா? இனிமேல் பீ மூத்திரத்தை அள்ள வேண்டாம் பாரு அதான். சாகரதுக்கு முன்னாடி அந்த பாட்டி மருமகளுக தான் செத்ததுக்கு அப்புறம் சண்ட போடக்கூடாதுன்னு, தான்கிட்ட இருந்த அறுபது பவுணயும் சரிபாதியா பிரிச்சி கொடுத்திருச்சி. தான் போட்டுருக்கிற எட்டு பவுண். அப்புறம் சன்னாசி தாத்தா கையில கழுத்துல போட்டுருக்கிற மூணு பவுணு. ஆக மொத்தம் பதினோரு பவுணுதான் இப்ப அவங்ககிட்ட இருக்கு. இதுகூட இல்லன்னா அநாத பொணமா போகனுமேன்னுதான் எடுத்து வச்சிருக்கு அந்த கிழவி.

     அந்த செவுத்து ஓரத்துல கழுத்துல போட்டிருந்த துண்ட வாயில வச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருந்தாரு சன்னாசி தாத்தா. அந்த நேரத்துல தகவல் அறிந்த ஊர் பண்ணையார் வர்ரார். பண்ணையாரை பாத்தவுடனே தேம்பி தேம்பி அழுகிறார் சன்னாசி. பண்ணையாரும் அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்கிறார். பொழுது விடிந்துவிட்டது. செல்லம்மா கிழவி செத்ததை ஊர் சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும். முடிந்தவரை எல்லா ஊருக்கும் சொல்லி அனுப்பியாகிவிட்டது. கடைசியா செல்லம்மா கிழவிக்கு தங்கச்சி ஒருத்திக்கு மட்டும் தகவல் சொல்லனும். யார அனுப்புறதுன்னு பண்ணையார் யோசித்து கொண்டிருந்தார். அப்பதான் அவருக்கு பச்ச மிளகாய் ஞாபகம் வந்தது.

     பேருக்கு ஏத்தமாதிரி காரமாகத்தான் இருப்பான் அவன். அதுகூட அவனுக்கு உண்மையான பேரு இல்ல. மாரிமுத்து என்ற பேருதான் உண்மையான பேரு. அப்பா அம்மா இல்லாதவன். ஒரு காலத்துல கிழவி ஒருத்தி கைக்குழந்தையோட வந்தா. இந்த ஊருலயே தங்கி இவன வளத்துகிட்டு வேலைபாத்தா. இவன் சின்ன வயசா இருக்கும்போது பச்சமிளகாய கடிச்சு கடிச்சு சாப்பிடுவான். கொஞ்சம் கூட காரமே தெரியாது. தண்ணிகூட குடிக்கமாட்டான். அதனால, கூட இருக்குற பசங்க எல்லாம் இவனை பச்சமிளகாய்ன்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க. வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இவனும் அநாதயாயிட்டான். யாரு எந்த வேல சொன்னாலும் செய்வான். கொடுக்குறத வாங்கிக்குவான். அதுலையே திண்ணுக்குவான். இவனப் பாக்கனுமின்னா ஊர் மொக்குல இருக்குற பிள்ளையார் கோயில்ல பாக்கலாம். ஏன்னா? அங்கதான் அப்பஅப்ப அபிஷேகம் நடந்திட்டு இருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்ற எண்ணம்தான் அவனுக்கு.

     “ஏலே கருப்பா, புள்ளையார் கோயில்ல பச்சமிளகா இருப்பான். நான் வரச்சொன்னதா அவனை வரச்சொல்லு” என்றார் பண்ணையார்.

     “சரிங்கய்யா… உடனே சொல்லிடறேன்” என்றான் கருப்பன்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பச்சமிளகாய் இழவு நடந்த வீட்டிற்கு வந்து விட்டான். பண்ணையாரைக் கண்டவுடன் பயபக்தியோடு அருகில் சென்று நின்று கொண்டான்.  “ஏண்டா பச்சமிளகா நம்ம செல்லம்மா பாட்டியோட தங்கச்சி ஆரியபாளையத்துல வாக்கப்பட்டுருக்கு. அவுங்க குடும்பத்துக்கு இழவு செய்திய சொல்லிட்டு வந்திரு. இந்தா ரெண்டு ரூபாய். ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கு. இன்னொரு ரூபாய்க்கு சாப்பிட்டுக்கு” என்றார் பண்ணையார்.

“ஐயா, வழி எப்படி போவணும்” என்றான் பச்ச மிளகாய்

“ஏலே கருப்பா, இவகிட்ட ஆரியபாளையத்திற்கு வழிய சொல்ற” என்றார் பண்ணையார்.

பச்சமிளகாய தனியே அழைச்சிட்டு வந்த கருப்பன், “அடேய், நேரா பனியேரிக்கு போய்டு. பனியேரி கரையிலயே போனின்னா மதுரவீரன் கோயில் ஒன்னு வரும். அந்த கோயில்ல இருந்து வடக்கால ஒரு மண்ணு சாலை போகும். அந்த சாலை முடியரப்ப ஒரு தோட்டம் தெரியும். அதான் செல்லம்மா பாட்டியோட தங்கச்சி பாட்டி தோட்டம். அங்கதான் நீ போயி இழவு செய்திய சொல்லனும்” என்றார் கருப்பன்.

“சரிங்கண்ணா அப்படியே செய்திடுரேன்”

“சரி போற வழியில கயறுகாரங்க ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு போடா..”

“சரிங்கண்ணா…“

கையில் இருந்த ஒரு ரூபாக்கு கயறுகாரங்க ஹோட்டல்ல முடிந்தவரை நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. அடுத்த ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். சைக்கிளில் பிரேக், காத்து எல்லாம் சரியாக இருக்கா என்று பாத்துக்கொண்டான் பச்சமிளகாய். பனி ஏரியில் செல்லும் போது ஏரியின் அழகை ரசித்துக்கொண்டேப் போனான். இரண்டொரு இடங்களில் மீனவர்கள் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏரிகளின் நடுவில் சுற்றியிருக்கின்ற கருவேலமரங்களை பற்றி எண்ணிக்கொண்டே போனான். தண்ணிக்குள்ள யார் வந்து இந்த கருவேலமரங்களை நட்டிருப்பார்கள்? இந்த மரமானது எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று எண்ணிக்கொண்டான்.

மதுரைவீரன் கோயிலை கடக்கும்போது பச்சமிளகாயின் மனசு நடுங்கத்தான் செய்யது. பெரிய பெரிய குதிரைகள், நாய் சிலைகள் என அமர்க்களப்படுத்திருந்தனர். அவன் அதையெல்லாம் புதியதாகப் பார்ப்பவன்போல் பார்த்துக்கொண்டிருந்தான். எப்படியோ இழவு செய்தி சொல்ல வேண்டிய தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான் பச்சமிளகாய்.

 தோட்டத்திற்கு வந்தாச்சு. இழவுச் செய்தியை மட்டும் சொல்லனும்” என்று யாரையோ தேடினான். அங்கு ஒரு பெண்மணி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவள் தங்கச்சிப்பாட்டிக்கு மருமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க… செல்லம்மா பாட்டி செத்து போச்சுங்க..” என்றான். அந்த பெண்ணிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. மீண்டும் சொன்னான். மீண்டும் எந்தவொரு பதிலும் அப்பெண்ணிடம் இல்லை. அப்போது தோட்டத்தில் இருந்து வேர்த்து வியர்த்தபடி வெயிலுக்கு முக்காடிட்டபடி ஒரு கிழவி வந்தாள். “யாருப்பா நீ?” அந்த பொண்ணு வாய் பேசாது. என்னன்னு என்கிட்ட சொல்லு” என்றாள்.

“செல்லம்மா பாட்டி செத்துப்போச்சி..” என்றான்.

முகம் சுருங்கியது. கைக்கால் வெடவெடத்தது. கண்களில் நீர் அப்பியது. அப்படியே சுருண்டு விழுந்தாள் அக்கிழவி. எல்லோரும் ஓடி வந்தார்கள். அழுகை பெரிதானது. சொந்தகாரங்க எல்லாம் ஒன்னு சேந்தாங்க. மாட்ட வண்டியில பூண்டி உடனே கிளம்பினாங்க. பச்சமிளகாயும் அவுங்க வண்டி பின்னாடியே சைக்கிள்ள போனான்.

     இரவு மணி 6.00 க்கு வீடு போய்ச்சேர்ந்தான் பச்சமிளகாய். செல்லம்மா பாட்டிக்கு நடக்க வேண்டிய அத்தனைச் சடங்குகளும் நன்றாக நடந்து முடிந்தன.  உறவுக்காரங்க எல்லோரும் அவுங்க அவுங்க ஊருக்கு திரும்பி போய்ட்டு இருந்தாங்க. பண்ணையார் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி சன்னாசி தாத்தாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பச்சமிளகாய் வாசலில் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

     “என்னாடா பச்சமிளகாய், எங்கடா போயிருந்த பாட்டிக்கு வாக்கரிசி கூட போடலியே” என்றார் பண்ணையார்.

     “ஐயா நீங்கதான இழவுச் செய்தி சொல்ல அனுப்பினிங்க”

     “ஆமாண்டா… அனுப்புனேன். அவுங்களே வந்துட்டு காரியத்த முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டாங்க… நீ என்னாடான்னா இப்பதான வர்ர..”

     “ஐயா, நீங்க கொடுத்த ரெண்டு ரூபாய்ல ஒரு ரூபாய்க்கு நல்லா சாப்பிட்டேன். இன்னொரு ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இழவு சொல்ல போனேன்”

     “அதுக்கும் நீ தாமதமா வர்ரதுக்கும்  என்ன சம்பந்தம் பச்சமிளகா”

     “எனக்குதானே சைக்கிளே ஓட்டத்தெரியாது! நான் சைக்கிளை தள்ளிகிட்டே போயிட்டு தள்ளிகிட்டே வந்தேன். அதான் தாமதமா ஆயிடுச்சிங்யா…”

“என்ன! உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதா”

“ஆமாங்கய்யா”

“போடா புண்ணாக்கு பயலே… உன்கிட்ட வேலை சொன்னது என் தப்புதான். சரி சைக்கிள் ஓட்டத்தெரியாதுல்ல அப்புறம் எதுக்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டுப் போன”

“பண்ணையார் சொல்லுக்கு மறுவார்த்தை ஏதுங்கய்யா… நீங்கதான சொன்னிங்க ஒரு ரூபாய்க்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துக்குன்னு அதான்” என்றான் பச்சமிளகாய்.

அவன் திட்டுருறானா இல்ல புகழுறானான்னு தெரியாம முழித்துகொணடிருந்தார் பண்ணையார்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தன்னம்பிக்கை கட்டுரை – 1

     

தன்னம்பிக்கை கட்டுரை
முனைவர் நா.சாரதாமணி

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உலகில் அனைத்தும் வசப்படும் முயற்சி செய்யுங்கள். இந்த வாசகத்தை வாசிக்கும்போது ஒரு வினா எழுகிறது. அது எப்படி எல்லாம் வசப்படும்? அதாவது தூக்கனாங்குருவி அழகாக மாடிவீடு போல தன்கூட்டைக் கட்டும். ஆனால் ஆறறிவு மனிதனால் இயலாது. தேன்கூடு விந்தையான ஒன்று. அதுவும் அந்தத் தேன்ஈக்களால் கட்ட இயலும். இந்த மனிதனால் இயலாது. அதைப்போல, மனிதனால் ஒரு துறையில் சிறப்பாகத் தன்னை நிலைநிறுத்த முடியும். உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதனால் வசப்படுத்த முடியும். விடாமுயற்சி செய்யுங்கள்.

     நமது பூமியின் மொத்த பரப்பு என்ன? என்பதையும் அதன் அகலம், உயரம், துருவங்கள், உயர்அழுத்தம் பூகம்பம், எரிமலைகள் என்று எத்தனையோ அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நமது விஞ்ஞானிகள் கண்டு கூறியுள்ளனர்.  ஆனால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், மனதிற்கு உள்ள ஆற்றலையும் இன்னும் அளவிட்டு கூற இயலவில்லை. ஏனென்றால் அது அளவிடற்கு அப்பாற்பட்டது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சாதனைகள் செய்து மனித சமூகத்தை உயர்த்தப் பிறப்பெடுத்தவர்கள். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இந்த உலகம் வசப்படும் என்பதில் ஐயமில்லை.

சாதிப்பதில் தளராதீர்

     மனிதன் பிறப்பு முதல் இறப்பை நோக்கி செல்கிறான். இது அனைவரும் அறிந்ததே. என்றாவது ஒருநாள் பிறந்த குழந்தை வளர்ந்து இறந்தாக வேண்டும். எனவே அதற்கு முன்பே தனக்குப் பிடித்த ஆக்கபூர்வமான ஒன்றை சாதித்தே ஆகவேண்டும். மனிதனால் ஏதாவது ஒரு துறையில் கண்டிப்பாகச் சிறப்பாகச் சாதனை படைக்க முடியும். இது உண்மை. அவ்வாறு சாதிக்க என்ன செய்யலாம்? முதலில் ஒரு மனிதன் தனக்கு என்ன பிடிக்கும், எந்த துறையில் ஆர்வம் அதிகம், என்று தன்னைதானே தெளிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மற்றவர்களின் சம்பாசனைகளை அலசுவது என்றால் மிகவும் விருப்பம். ஆனால் அவ்வாறு மற்றவர்களை கவனித்தால் ஒருபோதும் தன்னைக் கவனிக்க இயலாது. எனவே மனிதன் தம்மை உணர வேண்டும். கவனிக்க வேண்டும். எது குறைவாக உள்ளது என்பதை தெளிய வேண்டும்.

மாற்றும் வழிகள்

     ஒரு மனிதன் முதலில் தன்னைதானே உயர்வாக நினைக்க வேண்டும். இந்நிலை மனதில் வருவதற்கு பல இன்னல்கள், கவலைகள், தடைகள் போன்றவற்றைக் கடந்து மனம் ஓரளவிற்கு பக்குவம் அடைந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சிலகுறைகள் இருப்பது இயற்கையானதே. எனவே மனிதர்களின் மனதிலும் குறைகள் இருப்பது இயல்பானது இவைதாழ்வுமனப்பான்மை, சட்டென்று கோபம் வருதல், மற்றவரின் முன்பாகப் பேசுவதற்கு தயக்கம்காட்டுதல், போன்றவை அவரவர் வாழ்க்கைச் சூழலின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். அதனை மாற்ற வேண்டும். உங்களை மாற்ற நீங்கள் முயற்சித்தால் மட்டுமே முடியும். உதாரணமாகத் தாவரவியல் வள்ளுநர்கள் தாவரங்களை நன்றாக உற்றுக்நோக்கி கவனிப்பார்கள். சில தாவரங்கள் நன்றாக வளரும் மலர்கள் பெரிதாக இருக்காது. நன்றாக மலரும் ஆனால் அழகான வண்ணத்தில் இருப்பதில்லை. இது குறையாகத் தெரியும்போது அதை நீக்க அழகான பெரிய மனம் கவரும் வண்ணங்களில் பூக்கும் தாவரங்களின் கிளைகளை எடுத்துக் கொண்டு குறையாக உள்ள தாவரத்தில் ஒருகிளையை எடுத்துவிட்டு அதன் இடத்தில் முன்பே எடுத்த வண்ணமலரின் கிளையை ஒட்டி கட்டிவிடுவார்கள். இந்தக் கிளைக்கும் குறை தாவரத்திலிருந்து நீர் உரம் எல்லாம் சேர்ந்து வளர்ந்து அந்தக் குறை நீங்கி நிறைவான வண்ண மலர்களை தரும். ஒரு தாவரத்தில் நிறைவைக் காணவேண்டும் என்று விரும்பும் மனித இனம்தம்மனதிலும் உள்ள குறைகளை நீக்கி நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.

எண்ணம் செயலாக மாறவேண்டும்

      மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை அவனது உடல் மாறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் உங்கள் எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் செயலாக மாறவேண்டும். சிலர் மற்றவரின் விமர்சனங்களால் அழுத்தப்பட்டு, மனம் குழம்பி தன்னுடைய இயல்பானக் குணத்தை அறியாமல் வேறு ஒன்றை தனதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் விதி என்று தன்னைத்தானே நொந்துகொண்டு காலத்தை முடித்துவிடுகின்றனர். தீயவழிகளில் சென்று சமுதாயத்திற்குக் கேடான பல செயல்களைப் புரிந்து தன்னையும் அழிவான பாதைக்கு இழுத்து சென்றுவிடுகின்றனர் இவ்வாறான கேடான எண்ணங்கள் தன்மனதில் இருந்தால் அவற்றை நீக்கிக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.

குறைகளை நீக்குங்கள்

     குறை என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. உணவில் சேர்க்கும் இஞ்சியின் புறம் நஞ்சு என்பார்கள். எனவே அதன் தோல் நீக்கப்பட வேண்டியது. மாம்பழத்தில் விதையை உண்ண முடியாது. பலாப்பழத்தில் தோல் நீக்கப்பட வேண்டியது. எனவே நீக்கப்பட வேண்டியவை ஆயிரக்கணக்கானவை உள்ளன. என்றாலும் உங்களிடம் பயன்மிக்க திறமைகள் உன்னத குணங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு உங்களின் குறைகளை நிறைகளாக மாற்றுங்கள். இயற்கை, இலையுதிர் காலங்களில் காய்ந்த ஆடையை நீக்கி வசந்தகாலங்களில் பசுமையாகத் துளிர்த்துக் கொள்வதுபோல உங்களை செம்மையாக மாற்றிக்கொள்ளுங்கள். நான் அறிந்த ஒரு சிறுவன், அவன் அம்மாவிடம் கூறுவான் “என்னை எது பயமுறுத்துகிறதோ அதை, அதன் அருகிலேயே சென்று பார்த்துவிட்டு வருவேன். அதன் பின்னர் எனக்கு அச்சம் வராது” என்பான். பயம் உங்களிடமிருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்று.

 மாறாத குறையை நிறையாக மாற்றுங்கள்

சிலநேரங்களில் குறைகளும் உயர்வையே தரும். ஒரு மலைபிரதேசம் அடிவாரத்தில் அழகான கிராமம். அங்கு இளைஞர்களிடையே பல போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் ஓட்டப்பந்தயமும் ஒன்று. ஒட்டப்பந்தயம் என்றால் அது சாதாரணமாக மைதானத்தில் ஓடுவது அல்ல. மலைப்பாதையில் ஓடுவது. அது சுமார் இருநூறு மீட்டர் ஓட்டம். அந்த ஓட்டத்தின் நடுவில் ஐம்பது மீட்டர் தூரம் ஒத்தையடி பாதையாகச் செல்லும். சிறிது தவறினால்கூட மலையிலிருந்து பாதாளத்தில்தான் விழவேண்டும். எழும்பும்கூட கிடைக்காது.

இவ்வாறான பாதையில் ஓடி வெற்றி பெறுபவர்களுக்குப் பலத்த பரிசுகள் காத்திருந்தன. பந்தயத்தின் துவக்கத்தில் ஐம்பதுபேர் ஓட ஆரம்பித்தனர். சிறிது தூரத்தில் இருப்பதுபேர் நின்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டு பயந்து இருபதுபேர் நீங்க, மற்ற ஒன்பது பேர், நண்பர்களால் தடுக்கப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தொடக்கம் முதல் இறுதிவரை ஓடிச்சென்று பரிசுகளைத் தட்டிச்சென்றார். எல்லோருக்கும் வியப்பு! பிறகுதான் தெரிந்தது அவர் காது கேளாதவர் என்று. மற்றவர்கள் பிறர் பேச்சைக்கேட்டு பயம் தொற்றிக்கொள்ள போட்டியைத் தவிர்த்தனர். ஆனால் இவர்மட்டும் காது கேளாததால் மற்றவரின் பேச்சு தன்னை ஒன்றும் செய்யாமல் இருந்ததால் இறுதி வரை ஓடி வென்றார். இங்கு அவரின் குறை பயனைத்தந்தது. அதுபோல மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களால் தாழ்மையான மனப்பான்மையில் இருப்பவர்கள் நம்நாட்டில் அதிகம். எனவே மற்றவர்கள் உங்களை பற்றி கூறுவது உண்மையான கணிப்பு அல்ல. உங்களை பற்றி நீங்கள் தீர்மானிப்பதே சரியான கணிப்பு என்பதை உணருங்கள். உங்களைப் பற்றிய எண்ணம் உங்களுக்கு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் மாற்றுங்கள். எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ, அவன் உலகத்தை அறிந்தவன் என்பர். விதிப்பதற்கு எதுவும் இல்லை. உலகில் மாற்றுவதற்கும், மாறுவதற்கும் நிறைய உள்ளன. எனவே உங்கள் தலைவிதி உங்கள் கையில்தான் உள்ளது. அதை நிறைவாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இறைவன் மனிதஉடலில் குறை உறுப்புகளின் திறனை மற்ற உறுப்பகளில் அமைத்துள்ளான். எனவே குறை உடலில் இல்லை. மனதில்தான் உள்ளது.

ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி

மறக்க முடியுமா (சிறுகதை)

 

நீண்ட நாளுக்குப் பிறகு அவன் வெளியூர் வேலையிலிருந்து தன் ஊருக்கு வந்து மகிழுந்தை எடுத்து மண் சாலையில் புழுதி பறக்க ஓட்டிக்கொண்டு போகும்போது ஆடுகள் தன் எதிரே வந்துக்கொண்டு இருந்தது பக்கமாய் வந்ததும் ஆடுகள் தன்னை கடந்துபோகட்டும் என்று மகிழுந்தை நிறுத்தி சாளரத்தைப் பாதியாக திறந்து வெளியே பார்த்தான். ஆடு மேய்ப்பவளின் ஒரு கையில் குச்சி ஒன்றும், இடுப்பில் இரண்டு வயது குழந்தையை அணைத்தபடி மற்றொரு கையில் தூக்குச் சட்டியும் இருந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை அழுக்காகவும், காதிலும் மூக்கிலும் ஒன்றுமில்லாமலும், நெற்றியில் பொட்டு இல்லாமலும், தலைமுடியில் பூவும் இல்லாமலும் முடியெல்லாம் முகத்தில் விழுந்திந்த முடியைக் குச்சி வைத்திருக்கும் கையாலே சரி செய்துக்கொண்டு அவனைப் பார்த்து விட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு போனாள்.

                பெயர் தான் முல்லைக்கொடி. ஆனால், இலையையும் பூவையும் உதிர்த்துவிட்ட முல்லைக்கொடி போல் அவள் காட்சியளித்தாள்.

                பெயர்தான் மகிழன். ஆனால், முல்லைக்கொடி அவனைக் கடந்துசென்ற பிறகு அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை

                மகிழன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டு போகையில் அவன் மனதில் பல எண்ணங்கள் திரைபோட்டன பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றின. அவை

                அவன் வெளியூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்து தன் மூன்றக்கு மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு தொலை தூரக் கருவி தன் ஊரைப் பார்த்தான். ஒரு பக்கம் தென்னந்தோப்பும் நெல் வயல்களும், மறுபக்கம் வாழைத் தோட்டமும் கரும்பு வயல்களும் எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளித்தன அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கையில் மண் சாலை வழியாகத் தன் ஊருக்கு கிழக்குப் பக்கமாக இருக்கின்ற மேட்டு நிலத்தில் ஆடு மேய்ப்பதற்காக இரண்டு பெண்கள் ஆட்டை ஓட்டி வந்தார்கள் அதை தொலைதூரக்கருவியில் பார்த்த பெண்களில் ஒருத்தி அழகென்றால் அவ்வளவு அழகு. ஒரு அழகு இன்னொரு அழகை சுமந்து கொண்டு போவதுபோல் ஆட்டின் பின்னால் வந்தாள். அந்த அழகைப் பார்க்க அவன் மொட்டை மாடியிலிருந்து இறங்கி அவசர அவசரமாக ஓடி வந்து முல்லைக் கொடியைப் பார்ப்பதற்குள் அவள் கடந்துபோய்விட்டாள். ஆனால், மகழனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதயம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது போல் அவனுக்குத் தோன்றியது.

                கல்லூரியில் படித்த பெண்களில் இவ்வளவு அழகான பெண்களை நான் பார்த்ததே கிடையாதே. இவள் யாராக இருக்கும் ஆடு மேய்க்கும் குடும்பத்திலா பிறந்திருப்பாள் ச்சே! ச்சே! இருக்காது. அந்த ஊருக்கு விருந்தாளியாக வந்திருப்பாள். அவள் உறவினர்களுடன் ஆடு மேய்ப்பதற்காக வந்திருக்கலாம் என்று தனக்குள் நினைத்தான்.

                அவள் எந்த ஊராக இருக்கும்? எங்கு படிப்பாள்? கம்பன் இராமனின் உடல் அழகை வருணித்ததைவிட, புகழேந்தி தமயந்தியின் அழகை வருணித்ததைவிட இவள் இவ்வளவு அழகாக இருக்கிறாளே! இவள் அழகுக்கு யாரும் நிகரில்லை என்று நினைத்துவிட்டு அவள் மீண்டும் எப்பொழுது வருவாள்? அவளை எப்போது பார்ப்பது? அவள் என் உயிரை குடித்துவிட்டாள் என்று நினைத்து நனைத்து ஓர் இரவு கழிவதற்குள் அவன் பட்ட பாடு எத்தனை எத்தனையோ! மறுநாள் காலையில் முல்லைக்கொடியும், நெய்தலியும் வரும் வழியில் காத்திருந்தான். அவர்கள் ஆடுகளை ஓட்டிவருவதைப் பார்;த்ததும். மகிழன் மனது திருவிழா வைத்ததுபோல இருந்தது.

                அவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள் அவனுடைய மனம் அவர்களைத் தொடர்ந்து செல்லலாமே! என்றது இருந்தாலும் சிறிது நேரம் கழித்துச் சென்றான். அவர்களிடம் எப்படி பேசுவது என்று தயங்கினான். அவர்களே! என்ன சாமி வேண்டும்என்றார்கள்.

                ஆட்டுப்பால் குடித்தால் உடல் பலம் பெருகும் என்று கூறி எனக்கு ஆட்டுப்பால் வேண்டும் என்றான்.

                சாமி உங்களைப் பார்த்தால் உயர்ந்த குடியில் பிறந்தவர் போல் தெரிகிறதுஎன்றார்கள்.

                பரவாயில்லை உங்களுடைய சோற்றுச் சட்டியின் மூடியில் பால் கறந்து கொடுங்கள்என்றான்.

                ஏ! முல்லைகொடி ஆட்டின் காலை பிடித்தக்கொள். நான் பால் கறக்கிறேன்என்று தோழி நெய்தலி கூறி பாலை கறந்து பூப்போன்ற முல்லைகொடி கையில் கொடுத்தாள்.

                அவனும் வாங்கி பாலைப் பருகினானோ இல்லையோ கண்ணால் அவள் அழகைப் பருகினான்.

                மீண்டும் வருகிறேன்என்று கூறி விட்டு விட்டு வீட்டிற்கு வரும்போது இந்த கிறுக்கின் அழகு என்னைக் கிரக வைக்கிறது. திக்கு முக்காட செய்கிறது. தரைமீது நடக்க முடியாமல் செய்கிறது. தன்னுடைய மனசு கட்டுக்கு அடங்காமல் அவளிடமே ஓடச் செய்கிறது. தினர வைக்கிறது பதரவைக்கிறது. குளிர், காய்ச்சல் வர வைக்கிறது என்று நினைக்கின்றபோதே வீடுவந்து சேர்ந்தான். தன் படுக்கையின் மேல் போர்வையை எடுத்து போர்த்தி படுத்துக்கொண்டான். ஆனால் கண் மூடினாலும் மனசின் கதவு மூடவில்லை.¬

                அவள் மனசுக்குள் இறக்கி அவனுடைய உயிரை குடைகிறாள்!

                அவனுடைய இரவுக்கு வெளிச்சமாக நிலவாய் வந்து  நிற்கிறாள்.

                அவன்  இதயத்தை கூறுபோட்டு விற்கிறாள்.

                பக்கத்தில் அழைத்து பேசாமல் துரத்துகிறாள். அவள் அழகை பயன்படுத்தி அவனை அடிமை யாக்குகிறாள்.

                இப்படிப்பட்ட பெண்னை அவன் நினைகையில் காமன் கெஞ்சிய பிறகும் கண்டுக்கொள்ளாமல் போகின்ற அழகை கொண்டவள் பாரதி கனவில் குயில் பாட்டில் தோன்றிய பெண்ணைவிட இவள் அழகானவள்  என்று நினைத்து மறுநாள் அவளைப் பார்த்ததும் கேட்டுவிட வேண்டும் என்று இரவு முழுக்க உறக்கம் கொள்ளாமல் விழித்திருந்தான் கோழி கூவியதும் மகிழனுக்கு உயிர் வந்ததுபோல் இருந்தது.

                பொழுது விடிந்ததும், அவள் வழக்கம்போல் வரும் வழியில் சென்று அமர்ந்து கொண்டான். ஆனால், அவள் வரவில்லை. அதற்கு பதிலாக அவளுடைய தந்தையார் ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தார்.

                முல்லைகொடிக்கு என்னாச்சோ? ஏதாச்சோ என்று அவன் மனம் படபடத்தது.

                அவன் மகிழுந்தை எடுத்தக்கொண்டு நகரத்திற்கு செல்லலாம் என்று நினைத்து புறப்பட்டான்.

                ஊரை கடப்பதற்கு முன்னாலே அவள் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். மகிழுந்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகே சென்றான். அவ்வழகின் அருகே நிற்கமுடியாமல் தவித்தான் அவளே என்ன சாமிஎன்று கேட்டாள்.

                மகிழன் தயங்கி, தயங்கி பேச ஆரம்பித்து நான் உன்மீது அன்பு செலுத்தகிறேன். உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்என்று கூறினான்.

                சரி நீங்கள் கேட்டதில் தவறேதும் கிடையாது ஆனால், நாங்கள் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் நீங்களோ! உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். நாங்கள் ஆடு மாடு மேய்க்கின்றவர்கள். எங்கள் மீது சாணம் கோமியம் போன்ற நாற்றமும் நாங்கள் இருக்கும் இடத்திலும் எப்போதும் வீசுமே! அதுமட்டுமல்லாமல்  ஆடுகள் இறந்து விட்டால் அதை வெட்டி உறவினர்க்குக் கொடுத்துப் போக மீதியை உப்புக்கண்டம் போட்டு பாறை மீது காய வைப்போம் அதை காகம், பருந்து  வந்து  எடுத்தக்கொண்டு  போகாமலிருக்க பறவைகளை ஓட்டுவோம். அதைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன், என்மீது புலால் நாற்றம் வீசுகிறது. ஆகவே உங்களுக்கும், எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதுஎன்று கூறி மறுத்து விடுகிறான்.

                மேலும் உங்கள் உயர் குடியிலே பிறந்த உங்கள் தந்தையார் கைக்காட்டுகின்ற பெண் ஒருத்தியை மணந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை நல்லாயிருக்கும், நானும் எங்கள் குடியிலேயே பிறந்த ஆடவன் ஒருவனை மணந்து கொள்கிறேன், நீங்கள் வந்த வழியாக போகலாம் என்றாள்.

               முடியாது நீ சம்மதம் சொல் நாம் இரண்டு பேரும் எங்கோ சென்று திருமணம் செய்து கொண்டு ஏதாவது ஒரு வேலை செய்து நிம்மதியாக வாழலாம்என்றான் மகிழன்.

                நாம்  இரண்டு பேரும் நிம்மதியாக வாழலாம். ஆனால், இவ்வூரில் இருக்கின்றவர்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள்என்றாள்.

                அதற்கு மகிழன் ஏன் என்றான்.

                நீங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர் நான் தாழ்ந்த குடியில் பிறந்தவள் நான் உங்களை மயக்கி அழைத்துச் சென்றுவிட்டேன் என்று கூறி  உங்கள் ஆள்முன் எங்கள் ஊரில் இருப்பவர்களை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் கூரையைப் பிரித்தப் போட்டு தீயிடுவர்கள் காதலர்கள் எங்கே? என்று கேட்டு மேலும் கொடுமை செய்வார்கள். நம்மை தேடி வந்து கண்டு பிடித்து உங்கள் தந்தையார், என் மானத்தையே வாங்கி விட்டாயேஎன்று கூறி நம்மை வெட்டி ஆற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ போட்டு விடுவார்கள். அப்படி இல்லையென்றால் உன்னை மட்டும் அழைத்துக்கொண்டு, என்னைக் கொன்று தொடர் வண்டி பாதையில் வீசிவிட்டுச் செல்வார்கள். இதெல்லாம் நமக்குத் தேவையா?

                நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையைரை வேதனையில் தவிக்கவிட்டு விட்டு ஏன் நாம் இன்பத்தைத் தேடிப் போக வேண்டும். ஏதோ எங்கள் ஊரில் உள்ளவர்கள் உங்கள் ஊரின் மேட்டு நிலத்தில் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு போய் மேய்க்கின்றார்கள். உங்கள் ஊரில் உள்ளவர்களும் எங்கள்  ஊரைக் கடந்துதான் போக வேண்டும். நம்முடைய செயலால் இரண்டு ஊர்களுக்கும் சண்டை ஏற்பட்டு காலம் முழுவதும்  தீராத பகையாக இருந்துவிடும். ஆகவே நம் காதல் பொருந்தாதுஎன்று கூறிவிடுகிறாள்.

                அதற்கு மகிழன் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே!என்றான்.

                அதற்கு முல்லைக்கொடி காதலுக்கு உயர்வு தாழ்வு இருக்கிறது நீங்கள் படிச்சவங்க அதனால், புரிந்துகொண்டு புறப்படுங்கள் என்றாள்.

                அவன் நகரத்திற்குப் புறப்படாமல் கனத்த இதயத்தோடு வீட்டிற்கு திரும்பி விட்டான்.

                அவனுடைய காதல் செடி ஒரே நாளில் பூத்துத் குளுங்கி, காய்ந்து கனிக்காமலே காய்ந்து கருகி பட்டுப் போய்விட்டது.

                உலகத்தில் தீயைப் போல் மக்களை அழித்து கொரோனா காய்ச்சல் போல் அவனுடைய காதலை உயர்வு, தாழ்வு என்ற நோய் அழித்தது.

          அவன் இதயத்திலிருந்து அவள் ஏணி இல்லாமலே இறங்கிவிட்டாள்.

                கூட்டுக்குள் இருந்த குஞ்சு இறக்கை முற்றியதும் அந்த கூட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் பறந்து சென்றதை போல் அவனுடைய நெஞ்சங்குழியிலிருந்து முல்லை கொடி பறந்துவிட்டாள்.

                முல்லை கொடி பேசிய ஒவ்வொரு  வார்த்தையும்  அவனை சாட்டையில்லாமல் அடிப்பதுபோல் இருந்தது.

                அவனுடைய வெளிச்சத்திற்கு கருப்பு பூசிவிட்டாள். அவனுடைய வண்ண நிறமாக வானவில் ஒரே நிறமாக மாறிவிட்டது.அங்கு அவ்விருவரும் பேசியது யாருக்கும் தெரியாது. இந்த நினைவுகள் எல்லாம் ஒரு நொடியில் வந்து மறைந்தது. அவனுக்கும் திருமணமாகி இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.அவளுக்கும் திருமணம் நடந்த முதலாண்டே கணவன் நோய்வாய் பட்டு இறந்துவிட்டான்.  அவளுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தால் அவள் கணவன் இல்லாதவள், ஊர் தவறுதலாக பேசும் என்று மகிழன் நினைத்தான்.

   என்னத்தான் காலங்கள் மாறினாலும், அவளை மறக்க முடியுமா? அதனால், ஒவ்வொரு முறையும் அவளை கடக்கும்போதெல்லாம் அவன் இதயத்தின் ஓரத்தில் ஏதோ ஒன்று குத்துவதுபோலே வலிக்கிறது.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »