Saturday, April 4, 2026
Home Blog Page 37

மாற்றி யோசியுங்கள்

மாற்றி-யோசியுங்கள்

    தன்னம்பிக்கை கட்டுரை – 10    

         உங்களின் மனதை அழகான பூந்தோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான சிந்தனைகளை மட்டும் உள்ளே விடுங்கள். மனதில் எந்தவித இறுக்கமும் இருக்கக்கூடாது. பாறையின் உள்ளே நீர் நுழையாது. மன இறுக்கத்தில் மேலோங்கிய சிந்தனைகள் நுழைவதில்லை.

          உங்களின் மனநிலையை பொறுத்தே பேச்சுகள் செயல்பாடுகள் வெளிப்படும். நீங்கள் முன்னேற நினைத்தால், உங்கள் மனம் பெருந்தன்மையால் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். மற்றவரின் நற்சிந்தனைகளையும் ஏற்க கூடியதாக இருக்க வேண்டும். சில வெறுப்புகள் கோபங்கள் மற்றவரால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டு உங்களுக்கு நீங்களே மனக்கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டால் உங்களால் எதையும் சாதிக்க இயலாது. அந்த கட்டுப்பாடுகள் வெளியே செல்ல விடாது.

மனம் குப்பைத்தொட்டி அல்ல

     மனதில் தேவையற்ற கீழான எண்ணங்கள் மற்றவரின் விமர்சனம் என்ற குப்பைகள் எல்லாவற்றையும் மனதில் நிரப்ப வேண்டாம். ஆரோக்கியமாக வைத்திருங்கள். குப்பைத் தொட்டியாக மாற்றிவிடாதீர்கள். மனதில் என்ன தேவையோ அவை மட்டுமே இருக்க வேண்டும். வேண்டாதவற்றை வைத்திருக்கக் கூடாது. வேண்டாதவை மனதில் இருந்தால், தேவையானவை தொலையக்கூடும். சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை மனதை ஒரே மாதிரியாக வைத்திருக்க வேண்டாம். மாற்றங்களே மாறாதவை.

        உலகின் மாற்றங்களை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதேநேரத்தில் சிந்தனையிலும் மன எண்ணங்களிலும், மாற்றம் நடைபெற வேண்டும். ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் வேறானவை. உலகில் பலஆயிரம் கோடிபேர் வாழ்ந்திருப்பார்கள், இப்போதும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருடைய கைரேகையும் வேறாகவே உள்ளது. எனவே அவர் இவ்வாறு நடக்கக்கூடாது. இவர் அப்படி பேசக்கூடாது என்றெல்லாம் ஒரு அரணை எழுப்ப வேண்டாம். சிறிது சிந்தனையை மாற்றுங்கள்.

தடைக்கல்லே படிக்கல்

          நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது தொடக்கத்திலேயே தடை வந்துவிட்டால் உங்களுக்கு பயம் வந்துவிடும். உதாரணமாக, ஒரு கல்லூரியில் சேர விண்ணப்பம் பூர்த்தி செய்ய அமர்ந்து கொண்டு பேனாவை திறக்கிறீர்கள் அதிலிருந்து அதிகப்படியான மை விண்ணப்பத்தில் ஊற்றி விடுகிறது. உடனே என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று அச்சம் கொள்வீர்கள். சிலர் விண்ணப்பிக்காமல் விட்டு விடுவார். சிலர் விண்ணப்பித்தாலும் படிக்கும் காலத்தில் ஏதேனும் சிறிய விபத்து ஏற்பட்டாலும் இதற்குதான் ஆரம்பத்தில் மை கொட்டியது என்று எதற்கு எதையோ காரணம் கூறிக்கொண்டு சதா எதிர் மறையான எண்ணங்களை மனம் முழுவதும் நிரப்பி வைத்துக்கொள்வர். அந்தப் படிப்பு முடியும்வரை எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு அச்சத்துடனே நடமாடிக்கொண்டு இருப்பார்கள்.

சிந்தனைகளை மாற்றுங்கள்

       எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர். அவருக்கு எதைத் தொடங்கினாலும் பச்சை கொடி தெரியவே தெரியாது. தடைகள்தான் வரும். ஒரு ஊருக்கு புறப்பட்டு சென்றால் பேருந்து வராது. ஒரு செயலைச் செய்ய ஒருவரை நாடிச்சென்றால் அந்தநபர் முன்னரே வெளியில் சென்றிருப்பார். வருவதற்கு சிலநாட்கள் ஆகும் என்பார்கள். படிக்க வேண்டி தகவலை திரட்ட போன் செய்தால் “சுவிச் ஆஃப் என்று வரும். ஒரு வண்டி வாங்க கம்பெனிக்கு சென்று கையெழுத்து இடும் போது “லைட் ஆஃப்” ஆகிவிடும். ஒரு நேர்காணலுக்குப் பள்ளிக்கு புறப்படும் போது வண்டி ஸ்டார்ட் ஆகாது. இவ்வாறெல்லாம் நடந்தாலும் அவர் சலைக்கமாட்டார் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார். “அந்த வேலை எனக்குத்தான் என்பது முடிவாகி விட்டது. நான் முயற்சிப்பதே மீதம் உள்ளது” என்பார். அவர் கூறியவாறே நடக்கும். ஒரு நாள் அவரிடமே கேட்டேன்” இவ்வாறு எதற்கெடுத்தாலும் உங்களுக்கு தடங்கள் வருகிறதே! உங்கள் மனம் பின்வாங்க வில்லையா? மனதிற்கு சோர்வு வரவில்லையா? என்று. அதற்கு அவர் சிரித்துவிட்டு கூறினார். “செயலைச் செய்யத்தொடங்கும் போது எவற்றுக்கெல்லாம் தடங்கல்கள் வருகிறதோ அவையெல்லாம் எனக்கானவை என்பதை நான் உணரும்வரை அச்சமாகவே இருந்தது. அதன் பின்னர் அந்தத் தடங்கல்கள்தான் எனக்கு கிடைக்கும் வெற்றியை முன்னரே அறிவிக்கின்றன என்ற உண்மையை நான் தெரிந்து கொண்டேன். கிடைக்கும் தடைகளே எனது படிக்கல் என்று புரிந்தவுடன் மகிழ்ந்தேன்.ஆ னால் தடையில்லாமல் ஒரு செயலை முடித்துவிட்டேன் என்றால் அது என்னிடம் நிலைக்காது. இது என் அனுபவம்” என்றார். கவனியுங்கள் தடைகள் வந்தால் செயல்களை நிறுத்திவிட அவர் நினைக்கவில்லை. மாறாக எனக்கு தடைகள் வரவேண்டும். அவற்றை மீறி வெற்றியடைய வேண்டும் என்று மாற்றி யோசித்தார்.

எதார்த்தம் ஏற்கலாம்

         வண்டியில் செல்கிறீர்கள் விழுந்து விட்டால் எப்படி என்று நினைப்பதைவிட விழுந்தால் என்ன ஆகும்? காயம் படும். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சரிசெய்து கொள்ளலாம். அதிக பட்சமாக உயிர் போகும். உயிர் என்பது எப்போது செல்லவேண்டுமோ அது அப்போது தான் செல்லும். இதனை மாற்ற யாராலும் முடியாது. இந்த எதார்த்தத்தை மனத்தில் ஏற்றுக்கொண்டால் அச்சப்பட வேண்டியதில்லை. மனிதபிறவி மீண்டும் கிடைக்குமோ! இல்லையோ தெரியாது. இப்போது உள்ள இந்த வாழ்க்கையைத் தைரியமாக பெருந்தன்மையாக உயர்ந்த செயல்களால் மற்றவர்க்கு நன்மை செய்து வாழலாம். அதை அச்சப்பட்டு துயரப்பட்டு மற்றவரை ஏமாற்றி கீழே தள்ளி உரிமைகளைப் பறித்து ஏன் இந்த குறுகிய வாழ்க்கை. எனவே மாற்றி யோசியுங்கள். நடைமுறையில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சிந்தனையை மாற்றுங்கள்.

முடியும் வரை முயலுங்கள்

     நாட்டையே தன் இராகத்தால் குரல் வளத்தால் கட்டிப்போடும் பாடகர் இசைஞானி இளையராஜாவை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் முதன்முதலில் ஒரு பாடலை பாடுவதற்காக வந்துநின்று தொடங்கும் போது மின்சாரம் நின்று போனது. மீண்டும் அவர் விடாமல் பாடியே ஆகவேண்டும் என்று பாடி முடித்து பதிவு செய்த்தைப் போட்டுப் பார்க்கலாம் என்று டேப்ரெக்கார்டரில் போட்டு ஆன் செய்தால் அதில் பாடல் கேட்கவே இல்லை. பாடல் பதிவாகவில்லை. சினிமாத்துறை என்பது மிகவும் பரந்தது. அதில் வாய்ப்பு கிடைத்தது குதிரைக் கொம்பு. அவ்வாறு வாய்ப்பு கிடைத்து பாடல் பதிவாகவில்லை என்றால் மனம் எவ்வாறு இருக்கும்? யோசியுங்கள். ஆனால் அவர் தன்மனதில் எந்தவிதமான எதிர் மறையான எண்ணத்தையும் நினைக்காமல் மீண்டும் பாடினார் இசையமைத்தார். இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அறியும்படி உயர்ந்துள்ளார். இதன் காரணம் அவரின் செயலை முடியும்வரை முயன்றார்.

மற்றவரை மாற்ற நீங்கள் மாறுங்கள்

      சிலர் எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்கள். அது அவர்களுடைய இயல்பு. குறை காண்பது ஒரு மனநோய் என்று மனவியலாளர் கூறுகின்றனர். குறை காண்பவரையும் எந்த மனநிலையில் கூறுகிறார்கள. அவர்களின் தேவை என்ன? என்று மெய்யான பொருளைக் கண்டறியுங்கள். உங்களின் மனதை இதமாக மாற்றிக்கொண்டு அவர்களைப் பற்றி சிந்தனை செய்வது நல்லது. மனம் என்பது எல்லா திசைகளிலும் பறக்கும் குதிரை போன்றது. அதனை கட்டுக்குள் வைத்து வசந்தகாலத்தின் பசுமை போன்று சீராக்கிக் கொண்டு அதன்பின்னர் மற்றவர்க்கு நற்சிந்தனைகளை அளியுங்கள். மற்றவர்கள் நீங்கள் நினைப்பது போல் மாற வேண்டும் என்று எண்ணுவதைவிட நாமே நம்மை மாற்ற முடியவில்லை. அவ்வாறு இருக்க மற்றவர்கள் எவ்வாறு மாறுவார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

       மாற்றம் வேண்டுமென்றால் உங்களிடம் மாற்றத்தை நிகழ்த்துங்கள். தீய எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு பிடிவாதமாக விடாமல் இருந்தால் உங்களுக்குள்ளே எந்த மாற்றமும் நிகழாது. ஆதலால் முதலில் நீங்கள் மாறுங்கள்.

பகையை மாற்றுங்கள்

      இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் இங்குள்ள உணவைப் பெறும் உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் உரிமை.

       யாரிடமும் பகைபாராட்ட வேண்டாம். மற்றவர் மீது உங்களுக்கு பகை உணர்வு இருந்தால் மனதில் பழிவாங்கும் எண்ணங்களே உருவாகும். வெளியிடப்படாத கோபம் வஞ்சமாக மாறும். ஆதனால் மற்றவரைப் பகைவராக என்ன வேண்டாம். ஒருவர்க்கு நண்பர் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். நட்பால் ஒருவரின் குணத்தை கணிக்கலாம். பகை என்பது சமமான நபரிடம் மட்டுமே உருவாகும். “உன் பகைவன் யாரென்று கூறு, உன் தரம் என்ன என்று கூறுகிறேன்” என்ற வாக்கியம் ஒன்று உள்ளது.

       பலர் வாழ்வின் சிறு வயதில் அண்ணன் தம்பிகளாகப் பாசத்துடன் வளர்வார்கள். அண்ணனை யாரேனும் அடித்தால் தம்பி ஓடிச்சென்று அடித்தவனை உதைப்பான். தம்பியை மற்றவர் வம்புக்கு இழுத்தால் அண்ணன் சென்று சட்டையைப் பிடிப்பான் “யாரடா என் தம்பியை வம்புக்கு இழுப்பது” என்று சத்தமிடுவான். இவ்வாறு இருக்கும் சகோதரர்கள், திருமணம் ஆகி குழந்தைகளைப் பெற்றதும் சொத்துக்குச் சண்டை செய்கிறார்கள். ஒரு வரப்பிற்காக அவ்வயலையே விற்று வக்கீல்களுக்கு பீஸ் கட்டிய அண்ணன் தம்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

          பகையுணர்வு மனதை ஆட்கொண்டு விட்டால் அது ஆரோக்கியம் பாசம் உறவு சொந்தம் சகோதரத்துவம் என்று எதையும் பார்க்காது. பகை பழி தீர்ப்பதை மட்டுமே பார்த்திருக்கும். எனவே பகை எண்ணங்களை மனதில் நுழைய விடாதீர்கள்.

           மனிதர்களின் மனதில் நல்லெண்ணங்கள் புகுவதைவிட தீயவை விரைவாக நுழைந்துவிடும். மனதில் நல்ல பழக்கங்களைப் பதிய வைப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் தீய எண்ணங்களுக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். அவை தானாகவே மனதின் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளும். இது இயல்பான ஒன்று.

மாற்றமே லாபம்

       மனதில் மாற்றம் ஏற்படால் அதுவே மிகப்பெரிய லாபம். படித்த கதையொன்று, ஒருவர் வாழைப்பழக்கடை வைத்திருந்தார். அந்த கடையில் ஒரு இளைஞனும் வேலை செய்தான். ஒருமுறை முதலாளி நிறைய வாழைத்தார்களை வாங்கி குடோனில் வைத்தார். பழங்களும் பழுத்து விட்டன. சந்தைக்குக் கொண்டு சென்றும் என்ன காரணமோ தெரியவில்லை பழங்கள் விற்பனை ஆகவில்லை. அடுத்தநாள் அவை மேலும் கனிந்து நிறம் மாறத்தொடங்கின. சிறு புள்ளிகளும் ஏற்பட்டன. இதனால் முதலாளிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் மிகவும் கவலை அடைந்தார். அழுகிய பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வேலை செய்யும் இளைஞனை அழைத்து அவற்றை பள்ளத்தில் கொட்டுமாறு பணித்தார். அதற்கு அவன் பழங்களை தான் எடுத்துக்கொள்வதாக கூறினான். முதலாளியும் சரி என்று தலையசைத்தார். இந்த வேலை செய்யும் இளைஞன் பழங்களை அள்ளி எடுத்துக்கொண்டு தெருக்களின் சந்திப்பில் வைத்தான் “ஐயா இவை புள்ளி விழுந்த புளிப்பான விட்டமின்கள் நிறைந்தவை. வெளிநாட்டு வாழைப்பழஙகள். இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அம்மா வாருங்கள் இந்தப் பழங்கள் விற்று தீர்ந்தால் இனி கிடைக்காது” என்று கூவினான். சுமார் இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் பழங்கள் விற்று தீர்ந்தன. இளைஞன் மாற்றி யோசித்தான். லாபம் அடைந்தான். முதலாளி முடியாமல் விட்டதை இவன் முடித்துக்காட்டினான்.    

உங்கள் ஆக்கங்களை ஏற்றுக்கொள்ள இந்தச் சமுதாயம் கைநீட்டி அழைக்கிறது.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

விமர்சனங்கள்-ஒரு-பொருட்டல்ல

தன்னம்பிக்கை கட்டுரை தொடர் – 9

        நீங்கள் உங்களின் இலக்கை அடைவதற்கு போராடத் தொடங்கி விட்டீர்கள் என்றால் தடைக்கல்லாக உங்கள்முன் நிற்பது விமர்சனங்களே ஆகும். இவ்வுலகில் பெற்றோர்களைத் தவிர வேறுயாரும் உங்கள் முன்னேற்றத்தில் இன்பம் காண மாட்டார்கள். எனவே உறவு, நட்பு, அலுவலகம் போன்ற எல்லா இடங்களிலிருந்தும் உங்களுக்கு கிடைப்பவை எதிர் மறையான விமர்சனங்களே ஆகும். உங்களிடமே ஆகாது என்பதற்கு நிறைய உதாரணங்களை முன்வைப்பார்கள். முடியாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைப்பர். நடக்காது என்று ஏளனமாக பேசிச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் இந்தப் பூமியில் சீர்குலைக்கப் பிறந்தவர்கள். இவர்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இவர்கள் வடிகட்டிய சுயதுரோகிகள் எனலாம்.

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

         மற்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியும்,  அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யலாம் என்று. ஆனால் சோம்பித் திரிவார்கள். படிக்கும் காலத்தில் ஊர் சுற்றாமல் ஒழுங்காகப் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் என்று எல்லாம் அறிந்தும் ஊதாரித்தனமாகச் செலவளித்துத் தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்பவர்கள் இவர்கள்தான். அவ்வாறு தனக்கே துரோகத்தைச் செய்துகொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் நல்லது நினைப்பர்? மற்றவர்கள் முன்னேறிவிட்டால் இவர்களால் தாங்க இயலாது. பாவம் பொறாமையில் கொதிப்பார்கள். இம்மாதிரியான பிறவிகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

         எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டியே பேசுவார்கள். எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தன்னை எவ்வாறு மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது. விமர்சனங்களைப் பற்றி கண்ணதாசன் கூறுவார். “போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நில்லேன் அஞ்சேன்” என்று. எனவே மற்றவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுங்கள்

       நினைவில் கொள்ளுங்கள்! மற்றவரின் தூற்றுதலோ போற்றுதலோ உங்களுக்கு தேவையோ தேவையற்றதோ முதலில் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். சுய ஊக்குவிப்பே உண்மையானது. இவ்வாறு அல்லாமல் மற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதையே மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பாராட்டும் மனம் என்பது எல்லோருக்கும் வராது. தெளிந்த மனத்தவருக்கே அது கைகூடும்.

           உங்களை வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ளுங்கள். சுயசோதனை செய்து கொள்ள உங்களிடம் இருக்கும் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை யாது? அணுகுமுறை யாது? எவ்வளவு காலத்தில் வெற்றியை ஈட்ட முடியும்? இந்த வினாக்களுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்கவேண்டும். அந்தப் பதிலும் காரணத்துடன் அமைய வேண்டும். சில செயல்களுக்கு பலம் மட்டுமே போதாது. எந்த நேரத்தில் எவ்வாறு என்ற நுணுக்கங்களை கையாளவேண்டும். உங்களை வீழ்த்தும் பலவீனத்தை எவ்வாறு நீக்குவது. அல்லது பலமாக மாற்றுவது போன்ற சுய மதிப்பீடு செய்து கொண்டு, ஒரு வினையை ஆக்கபூர்வமாக செய்ய இயலும் என்ற மனத்தெளிவு வந்தவுடன் எவற்றைப்பற்றியும் நீங்கள் ஆலோசிக்க தேவையில்லை. உங்கள் இலட்சிய செயல்பாட்டை துவக்கலாம்.

மற்றவர்கள் மகிழட்டும்

      உங்கள் செயல்களுக்கு மகுடம் சூட்டுபவர் யாரேனும் இருந்தால் அவர்களை அருகிலேயே வைத்ததுக் கொள்ளவும். இழிவுபடுத்துபவர் இருந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் விட்டு விலகிவிடுங்கள். உங்களை தாழ்த்துபவர் உறவினரே அல்ல. உங்களின் ஆற்றலைக் கொண்டு திறனைப்பெருக்கி ஊக்கத்தை கூட்டுங்கள் வெற்றிப்பாதையில் செல்லுங்கள். உங்களின் வெற்றியானது மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கட்டும். அதை அடைவதற்கு நீங்கள் பல இன்னல்களை அடைந்திருந்தாலும் அதனால் மற்றவர்க்கு பயனைத்தரும் என்றால் தயங்காமல் செய்யுங்கள். தான்பெற்ற துன்பங்கள் தன்னுடனே இருக்கட்டும். ஆனால் மற்றவராவது பயன்பெறட்டும் என்ற தியாக எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.

தியாக மனோபாவம்

         ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு அறையில் திரையிடப்பட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இரண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தனர். அந்த நோயாளிகளும் நீண்ட நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே மனம் வெதும்பிய நோயாளி திரையின் மறுபக்கத்தில் இருந்த நோயாளியிடம் “சார் எனக்கு இப்படியே படுத்திருப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். “சார் நான் நலமாகவே மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்” என்றார். மனம் வெதும்பிய நோயாளி “அப்படியா? எவ்வாறு இது சாத்தியம்”? காரணம் என்ன? அதற்கு அவர் “சார் இங்கு ஒரு சன்னல் உள்ளது அதன் வழியாக இயற்கையைப் பார்க்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது” என்றார். “அப்படியென்றால் நீங்கள் பார்க்கும் காட்சிகளை எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். “சார் இந்த சன்னலின் வழியாக ஒரு மலை தெரிகிறது. அதில் அருவி ஒன்று உருவாகி அழகாக நீர் கொட்டுகிறது. அதனால் அந்த மலை பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. பூங்கா ஒன்று தெரிகிறது. அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் அழகான பறவைகள் என்று இருக்கின்றன சார். அதனால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். இவற்றை கேட்டவுடன் நோயாளிக்கு வெதும்பிய மனம் நிம்மதியானது. அதுமட்டுமல்லாமல் தினமும் தனக்கு கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் உரையாடல் ஒவ்வொரு நாளும் நடந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது. மனம் வெதும்பிய நோயாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் மாலைவரை அந்த நோயாளியை அறைக்கு அழைத்து வரவில்லை. ஆதலால் நர்சிடம் கேட்க “சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவருக்கு அதிகாலையில் மூன்றுமணி இருக்கும். உடலுக்கு முடியாமல் போனது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், உயிர் பிழைக்கவில்லை இறந்து விட்டார்” என்றாள். இவருக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது.

          தினமும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திய ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்று அவரின் கண்கள் கலங்கின. சில நிமிடங்கள் கழித்து “சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். எனது இந்த படுக்கையை அந்தப்பக்கம் மாற்றிவிடுங்கள்” என்றார். சரி என்று அந்த சிஸ்டரும் மாற்றினார். இவர் கேட்டார் “சிஸ்டர் இங்கு ஒரு சன்னல் இருந்ததல்லவா அது எங்கே? என்றதும் “சன்னலா, இங்கு ஒன்றுமே இல்லையே” என்றாள். “என்ன சிஸ்டர் அவர் தினமும் சன்னலில் பார்க்கும் காட்சிகளை என்னிடம் பேசி பகிர்ந்து கொள்வார் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்?” “சார் இங்கிருந்த நோயாளி பிறவியிலேயே பார்வையற்றவர்” என்று கூறியதும் தான் இவருக்கு புரிந்தது அவரின் தியாக மனம். ஆமாம் அவர்தான் பார்வையற்றவர் என்ற தன்னுடைய சோகத்தை மற்றவரிடம் காட்டாமல் மற்றவரை அந்த  வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் காணாத இயற்கை காட்சிகளையெல்லாம் கூறினார். அது எவ்வளவு பெரிய தியாகமனப்பான்மை. அசந்து விட்டார் இந்த நோயாளி.

         நீங்கள் இங்கு கவனிக்க வேண்டியது பிறவி பார்வையற்றவராக இருக்கும் நோயாளி சில நாட்களிலேயே இறக்கும் நிலையில் இருப்பவர். அவரின் உடல் எந்த அளவிற்கு வேதனையை வலியை ஏற்படுத்தும். அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு தன்சோகம் மற்றவரை தாக்கக்கூடாது என்று எண்ணி உற்சாகமாகப் பேசி மற்றவரின் வேதனையை மாற்றுகிறார். இந்த மாதிரியான பெருந்தன்மை, நேர்மை உங்களிடம் இருக்கிறதா? என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்காக அல்ல மற்றவர்க்குத்தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் செயல்பாட்டில் மெத்தனப்போக்கு உருவாகிவிடும். எனவே மெய்யான தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் தனித்திறனை இனம் காணுங்கள்

        மனிதர்களில் பலர், மற்றவரின் விமர்சனங்களால் உந்தப்பட்டு தன்னுடைய சுயதிறமைகள் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். உங்கள் சூழ்நிலையின் காரணமாகச் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். இவ்வாறான தாழ்வான மன நிலையை மாற்ற நீங்கள் செய்த செய்யப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

       ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாத்தது. அதன் முட்டைகளில் ஒன்றை நீக்கிவிட்டுப் பருந்தின் முட்டை வைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. அடைகாத்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தன. பருந்தின் குஞ்சும் வெளியே வந்தது. அது கோழிக்குஞ்சுகளுடனே எந்தவித வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தது. அதுவும் சில மாதங்களில் கோழிகளைப் போன்றே ஒலி எழுப்பியது. சிறிது உயரமே அதனால் பறக்க முடிந்தது. அதற்கு தான் பருந்தின் குஞ்சு என்பதே தெரியாது. ஆனால் அதன் உண்மையான திறன் என்ன? மேகத்தையும் கடந்து மேலே பறக்கும் அசாத்திய சக்தி கொண்டது. ஆனால் அது கோழிகளுடனே சேர்ந்துகொண்டு கோழியாகவே தன்னை நினைத்துக்கொண்டது. கோழியாகவே இறந்தும் போனது. இவ்வாறே இங்கு பலரின் வாழ்க்கை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்களோ அவ்வாறே மாறிவிடுகின்றனர். ஆனால் அவரவர்க்கென்று தனித்தனி திறமைகள் உள்ளன. அவற்றை இனம் காணவேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதைச் செய்ய வரும் எது சிறப்பாக வரும் எதுவெல்லாம் சுமாராக செய்ய முடியும் தன் குருதியில் தசை நரம்புகளில் மூளையில் ஊறியிருக்கும் ஆற்றல் எது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் சாதனை படைக்கலாம்.

           உங்களின் உள்மனதை ஊக்கப்படுத்த வேண்டும். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அடையப்போகும் வெற்றியை அதனால் ஏற்படும் பயனை மற்றவர் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாளடைவில் அதை உங்கள் ஆழ்மனம் நம்பத்துவங்கும். ஆழ்மனதிற்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணங்கள் செயல்களாக மாறும். செயல் வெற்றியைத் தேடித்தரும். இதில் ஐயமில்லை.

     மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் உண்மையில் மாமனிதர்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

அர்த்தநாரி சிறுகதை (Arthanari Short Story)

அர்த்தநாரி-சிறுகதை

      சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 மணி. அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சுவற்றில் ஆங்காங்கே அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொங்கும் திரைச்சீலைகள் அந்தப் படுக்கையறையை மேலும் அழகுப்படுத்தின. படுக்கையில் உள்ள போர்வைகள் கொஞ்சம் கூட கசங்காமல் சலவை போட்டதுபோல் இருந்தன. அவனுடைய நெகிர்ந்தெடுத்த தலைமுடி நீண்டிருந்தது. அவ்வவ்போது தலைமுடியைக் கோதிக்கொண்டான் பார்த்திபன். இரண்டு தலையணைகளை முன்னால் இட்டு அதற்கு மேல் கணினியை வைத்திருந்தான். சம்மணம் இட்டு இருகாதுகளிலும் ஹெட்போன் மூலம் ஆண்ட்ரூ லைன்னிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.

              “ஹலோ,  நளபாகம் சுவை உணவகத்தின் உரிமையாளர் திரு.பார்த்திபன்… நான் சிங்கப்பூரிலிருந்து ஆண்ட்ரூ லைன் பேசுறேன்”

              “யா.. நான் பார்த்திபன்தான் பேசுறன். சொல்லுங்க லைன்”

              என் மகளின் திருமண விழாவிற்கு தென்னகத்து இந்திய உணவு பரிமாறிட இருக்கின்றோம். தங்களுடைய நளபாக சுவை உணவுப் பற்றி இணையத்தில் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் அமெரிக்கா நியூயார்க் நகரில் தங்களின் உணவின் சுவையை சுவைத்திருக்கிறார். ரொம்ப நன்றாய் இருப்பதாகவும் சொன்னார்.  நானும் எங்கள் உறவுகளும் தென்னிந்திய உணவை சுவைக்க ஆயுத்தமாக  உள்ளோம்” என்றார் ஆண்ட்ரூ லைன்

       “ரொம்ப சந்தோசம் லைன். உங்களுக்கு எந்த வகையான பேக்கேஜ் வேண்டும். வெளிநாடுகளில் ஐநூறுக்கும் மேற்பட்டவை மட்டும்தான் எடுத்துக்கொள்வோம். அதற்கு கீழ் உள்ள பேக்கேஜ்களால் எங்களுக்கு நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐநூறு முதல் ஆயிரம் என ஐயாயிரம் வரை ஒருநாளில் எங்களால் சமைத்துத் தரமுடியும். பேக்கேஜ் அதிகம் ஆகஆக பணமும் குறையும். இது இல்லாமல் விமானப்போக்குவரத்துக்கான செலவுகளில் முக்கால் பங்கு தங்களிடமிருந்து வசூலிக்கப்படும். பாத்திரங்கள், ஆட்கள், உங்களுடைய விழா நிறைவு வரை சிங்கப்பூரில் இருக்கின்ற எங்களின் கேட்டரிங் ஆட்கள் உடனிருந்து பணிபுரிவார்கள். எங்களுடைய நிறுவனத்தில் உலகம் முழுவதிலிருந்தும் கேட்டரிங் ஆட்கள் வேலை செய்கிறார்கள்” – பார்த்திபன்

       “எனக்கு சைவ உணவாக ஆயிரம் பேர் சாப்பிடுகின்ற மாதிரி வேண்டும். ஆனால், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள தூரம் 3,440 கிலோ மீட்டர். 3.45 மணி நேரம். எங்களுக்கு சரியான நேரத்தில் சுடச்சுட உணவு கிடைத்து விடுமா?” என்றார் லைன்

    “விழாவின் தேதி மற்றும் உணவு வந்து சேரவேண்டிய நேரம் ஆகியவையைக் குறிப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே நான் அனுப்பி வைத்துவிடுகிறேன்” என்றான் பார்த்திபன். கொஞ்சம் உரையாடலுக்குப்பின் அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டான். அந்த விபரங்கள் அடங்கிய  மெயிலையும் தன்னுடைய மேனேஜர்க்கு அனுப்பி தகவலைச் சொன்னான். போதும் என்றானது அவனுக்கு. இரண்டு பக்க நெற்றியிலும் கை வைத்துக்கொண்டு குனிந்து கொண்டான். கண்கள் தூக்கத்தை தேடின. கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அம்மாதான் காபியுடன் நின்றிருந்தாள். இவனும் தூங்கமாட்டான். அம்மாவையும் தூங்க விடமாட்டான். மணிக்கு ஒருதரம் இப்படி காபி டம்ளரை எடுத்துக்கொண்டு வந்து விடுவாள். மற்ற வேலைக்காரர்கள் யாரும் அவனின் அறைக்கு வருவதில்லை. சுடச்சுட காபி டம்ளரை மகனிடம் நீட்டினாள் அகிலாண்டம். கையில் வாங்கி வாயில் உறிஞ்சத்தொடங்கினான். விடியற்காலை இரவில்  இருவரும் மௌனமாய் இருந்தார்கள்.

      ஆரம்பத்தில் பார்த்திபனின் அப்பா நளன் சாதாரணமாய்தான் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்தார். அகிலாண்டத்தின் கைப்பக்குவம், வாடிக்கையாளர்களைக் கவரும் அப்பாவின் பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் ஹோட்டல் பெரிய அளவில் வளர்ந்தது. பார்த்திபனின் அறிவு இன்று நளபாகம் சுவை உணவகம் என உலகளவில் பேசப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பார்த்திபனின் வளர்ச்சியைக் கண்டு, அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்பார்கள். எப்படி சாத்தியம்? கொஞ்ச நாள்களிலேயே அசுர வளர்ச்சி? என்று பிரமித்துபோனவர்கள் ஆயிரம் பேர். அவனின் வளர்ச்சியைப் பிடிக்காமல் வயிற்றெரிச்சலுக்கு மாத்திரையை விழுங்கியவர்கள்  ஏராளம்.

“தம்பி….நான் சாயுங்காலம் சொன்னது பத்தி என்ன நினைக்கிற?” – அகிலாண்டம்மா.

“அம்மா… எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா? நான் எப்படிம்மா கல்யாணம் செஞ்சுகிறது. பாவம்! ஒரு பெண்ணோட வாழ்க்கைய கெடுக்கச் சொல்லிறியா?” – பார்த்திபன்

    அப்பாவுக்குப் பிறகு உன்னை நான் கவனிச்சிக்கிட்டேன். எனக்கு பிறகு யாரு உன்ன பாத்துக்கிறது? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமாடா? இப்படியே இருந்தா எப்படி? உன்ன நினைச்சா எனக்கு கவலையா இருக்கு!

       அம்மா… அதுக்காக நான் எப்படிம்மா? எனக்கு கல்யாணம்மல்லாம் வேண்டாம்மா?- அம்மாவை ஏக்கமாய்ப் பார்த்தான்.

     பாக்கிறவங்க எல்லாம் உம்மகனுக்கு எப்ப கல்யாணம்? எப்ப கல்யாணம்? ன்னு கேட்கிறாங்க. கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியல.. நான் என்ன பண்றது.!

        மதுரம் சொன்னதை மாலையே பார்த்திபனிடம் சொல்லியிருந்தாள். மதுரத்தின் கிளினிக்கில் ஒரு விதவைப் பெண் வேலை செய்கிறாள். கல்யாணம் ஆகி மூன்று மாதத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். ஏழைப்பெண்ணான அவளுக்கு ஒரு துணை வேண்டும். அந்தத் துணை நம் பார்த்திபனாகவே இருக்கட்டுமே! நான் அவளுடன் கலந்து பேசி சம்மதம் தருவதாகவும் உறுதியளித்திருந்தாள் மதுரம்.  அம்மாவை முறைத்துப் பார்த்தவனாய் மீண்டும் நெற்றியின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு தலைக்கவிழ்ந்தான்.

        முதல்நாளில் காலை மணி 11:00. அகிலாண்டம் மகனின் நினைவுகளில் மூழ்கியிருந்தாள். வாசலில் காலிங் பெல்லின் ஒலி திரும்ப திரும்ப கேட்டது. நினைவுகளிலிருந்து விடுபட்டவளாய் கதவை திறக்கப்போனாள் அகிலாண்டம்.

“ஹாய் அகிலா….” வந்தவள் அகிலாண்டத்தை இறுக்கமாகக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

“வாடி மதுரம். எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாளாச்சே.. வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் அகிலாண்டம்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க. நானும் ரொம்ப சந்தோசமா இருக்கேன். சென்னையில ஒரு வேல விஷியமா வந்தன். அதான் போற வழியில உன்னையும் ஒரெட்டு பாத்துட்டு போயிரலாமுன்னு வந்தேன். சரி நீ எப்படி இருக்க? உன்னோட பையன் எங்க?” – மதுரம்

“ம்… இருக்கேன்” முகம் வாடியவளாய் சொன்னாள். “சரி உன்னோட டாக்டர் வேலையெல்லாம் எப்படி போகுது?” – அகிலாண்டம்

“நல்லா போகுது. ஆனா நீ ஏ ஒருமாதிரியா இழுத்துட்டுச் சொல்லுற.. என்னாச்சு அகிலா”

“எனக்கென்னா கவலை இருக்க போவுது. என் பையனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு வச்சிட்டன்னா என்னோட கடமை முடிஞ்சிரும்”

“செஞ்சிட்டா போச்சு. அதுக்கென்ன?“

“அவன் கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லுறான். எனக்கும் அவன் சொல்லுறது சரிதான்னு தோனுது. ஆனா மனசு கேட்க மாட்டங்குதே. ஆமாம் மதுரம்! உனக்கு தெரியாததா?”

“நான்தான் உனக்கு பிரசவமே பாத்தன். கவலைப்படாத என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு? எப்படியும் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம். சரி எங்க உன்னோட பையன்? கடைசியா அவன நான் அண்ணா இறக்கும்போது பாத்திருந்தேன்” என்று ஆவலாய் கெட்டாள் மதுரம். அந்த அறையின் ஒரு பக்கத்தில் பார்த்திபனின் புகைபடம் தெரிந்தது. பார்த்திபனை ஒருமுறை பார்த்துவிட்டு அசந்துபோனாள். அழகோவியமாய் பிரகாசித்தான் அவன்.

 “மதுரம் அத்தை சொன்னதா சொன்னல்ல அதுபத்தி என்ன நினைக்கிற தம்பி” என்றாள் அகிலாண்டம். சிறிது நேர யோசனைக்குப் பிறகு பார்த்திபன் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“சரிம்மா… எனக்கு சம்மதம். ஆனா! அந்தப்பொண்ணுக்கிட்ட என்னைப் பற்றி எல்லாத்தையும் சொல்லிடுங்க. பின்னால ஏதாவது பிரச்சனையின்னா அது சரியிருக்காது. அதனால அந்தப்பொண்ணுக்கு ஓகேன்னா.. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” – பார்த்திபன்

     பார்த்திபன் இவ்வளவு சீக்கிரமாய் ஒரு நல்ல பதிலைச் சொல்லுவான் என்று அகிலாண்டம் எதிர்ப்பார்க்கவில்லை. அகிலாண்டம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். விடிந்ததும்  உடனே மதுரத்திற்கு போன் செய்து சொல்லியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அகிலாண்டம். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தப் பண்ணு என்று கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அந்த ஆயிரம் பொய்யையும் பார்த்திபனுக்காக மதுரமும் அகிலாண்டமும் பெண் வீட்டாரிடம் சொல்லி சம்மதம் பெற்றுவிட்டார்கள்.

         ஒரு நல்ல நாளில் பார்த்திபனுக்கும் கல்பனாவிற்கும் திருமணம் நடந்தது.  முதலிரவு அறை அழகாய் தோரணத்துடன் அலங்கரிப்பட்டிருந்தன. பூவின் வாசனையும் ரம்மியமான வெளிச்சமும் நிலவின் குளிர்ச்சியும் அந்த இரவை சொர்க்கமாக்கியது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கல்பனாவும் அடுத்த ஓரத்தில் பார்த்திபனும் படுத்திருந்தனர். ஆனால் இருவரும் உறங்கினார்கள் என்று சொல்ல முடியாது. மனதில் ஆயிரம் ஆசைகளோடு இருமனங்களும் எண்ணங்களில் மூழ்கியிருந்தன. கல்பனாவிற்கு அந்த வீடு, இடம், வேலையாட்கள், உபசரிப்பு, கழுத்தில் தொங்கிய மிதமிஞ்சிய ஆபரணங்கள் என எல்லாமே புதியதாய் இருந்தன. குடிசை வீட்டில் மண்தரையில் கிடைத்ததை உண்ட அவளுக்கு இங்கு நடப்பது எல்லாம் புதியதாய் தோன்றியது.

        ஆனால் இந்தப் பணக்கார வேஷம் அவளை திக்குமுக்காட வைத்தது. குளிக்கச் சென்றால் நான்கு பெண்கள் உடன்வந்து மஞ்சளையம் சந்தனத்தையும் பூசுகின்றனர். வெள்ளி தட்டில் நாக்குக்கு சுவையான உணவு. மயிலிறகாய் பஞ்சுமெத்தை. ஆனால், முதலிரவில் பார்த்திபன் தன்னிடம் நெருங்கி வராதது, அதுபற்றி யாரும் என்னிடம் எதுவும் கேட்காமலிருப்பது என்னுடைய கடந்த திருமணத்தின் போது எத்தனை கேலிகள், கிண்டல்கள். ஒருவேளை நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதாலோ? அவருக்கு ஏற்னவே திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்டாள் என்று மதுரம் மேடம் சொன்னார்களே! அப்பாவும் அம்மாவும் என்னால் கஷ்டப்படக்கூடாது. இனியும் என்னால் ஏற்படுகின்ற சிரமத்தையும் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது, நாமும் வாழ்க்கையை இழந்து நிற்கின்றோம் அவரும் வாழ்க்கையை இழந்து வாடுகின்றார் அதனால்தானே திருமணத்திற்கு சம்மதித்தோம். பணக்கார வீட்டில் விட்டில்பூச்சியாய் அகப்பட்டுக்கொண்டோமோ? மிகவும் குளம்பிப்போயிருந்தாள் கல்பனா. 

       கல்பனாவின் கேள்விகளுக்கு அகிலாண்டம்தான் அவ்வப்போது எதையாவது சொல்லி சமாளிப்பாள். தன்னுடையக் குடும்பத்தைப் பற்றியும் பார்த்திபனின் திறமையையும் அவனின் வளர்ச்சியையும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வாள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இந்தத் தொன்னூத்தியொரு இரவுகளில் இருவரும் கட்டிலில் இரண்டு பக்க விளிம்புகளிலேயே படுத்திருந்தனர். கல்பனா கீழே சமையல் முடித்து மேலே வரும்போது குளித்து தன்னை முழுமையாக அலங்கரித்துக்கொண்டு விடுவான். ஒருநாள் கூட அவனின் வெற்றுடம்பைக் கூட கல்பனா பார்த்த்தில்லை. மகிழ்வாக ஒருநிமிடம் கூட பேசியது இல்லை.

        பார்த்திபனை கல்பனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. கணவன் தன்னை முழுமையாக ஆட்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அவன் பார்க்காத நேரத்தில் ரசிக்கவும் செய்தாள். ஆனாலும் தன்னை விலக்கி வைப்பதன் காரணம்தான் அவளுக்குப் புரியவில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக திருமணத்திற்கு சம்மதம் சொல்லி தாலி கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? மனம் பல்வேறாய் சிந்திக்கத்தொடங்கியது. இன்று இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினாள்.

        இரவு அலுவலகத்திலிருந்து வந்த பார்த்திபன் நேராக குளியலறைக்குச் சென்றான். கல்பனாவும் பின்னாலே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். குளியலறையில் பார்த்திபன் குளிக்கின்ற தண்ணீர் சத்தம் கேட்டது. பார்த்திபனுடன் என்ன பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று வரிசைப்படுத்திக்கொண்டாள். மனம் புண்படாமல் என் காதலை அவரின் இதயத்தைத் துளைத்து எடுக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள். தண்ணீரின் சத்தம் நின்றுபோனது. ஒன்றை துணியால் உடம்பு முழுவதையும் மறைத்தவாறு ஒரு கையால் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்தான். படுக்கையில் கல்பனா அமர்ந்திருப்பதைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் பார்த்திபன். என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென முழித்தான். கல்பனாவே அங்கு நிலவிய சூழலைக் களைத்தாள்.

     “என்னங்க என்ன புடிச்சிருக்கா” என்றாள் கல்பனா. எப்படி கேட்டாள் என்பதை அவளாளயே உணரமுடியவில்லை. ஏதோதோ கேட்க வேண்டும் என்று நினைத்தவள் திடிரென்று இப்படி கேட்டுவிட்டாள். பல்லைக் கடித்துக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.  கல்பனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று திக்கு முக்காடிப்போனான்.

“நீ வெளிய போ… நான் டிரஸ் மாத்தனும்” என்றான் பார்த்திபன்

“போக மாட்டேன். நான் உன் பொண்டாட்டிதான என் முன்னாலயே டிரஸ் மாத்து. நானும் பாக்குறன்” – கல்பனா.

“நீ இப்ப போக போறியா? இல்லையா? நீ போகலன்னா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” – பார்த்திபன்

“இப்ப எதுக்கு கோப்படுறீங்க! நான் என்ன கேட்டுட்டன். என்னை புடிச்சிருக்கா? இல்லையான்னு சொல்லுங்க? நான் போயிடுறன்” – கல்பனா. பார்த்திபனின் கையில் இருந்த சாயப்பாட்டிலை ஓங்கி தரையில் அடித்தான். அடித்த வேகத்தில் உடைந்து அதனுள் இருந்த சாயம் அந்த அறை முழுவதும் பரவியது. “வெளிய போ…..” என்று உக்கிரமாகக் கத்தினான். எதையோ பேச வந்து இங்கு வேற எதுவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தாள். கலகம் பண்ணா வழிப் பிறக்கும் என்பார்கள். என்னோட வாழ்க்கைக்கு தேவை பணம் இல்லை. அன்புதான். அன்பை பெறுவதற்கு அக்கலகத்தில் முழுமையாக ஈடுபடவேண்டும்  என்று எண்ணினாள் கல்பனா.

      சிதறிய சாயத்தின் துளிகள் கல்பனாவின் முகத்திலும் தெளித்திருந்தது. பார்த்திபனின் உக்கிரமான கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். “போக முடியாது. நான் உன் பொண்டாட்டிதான.. நான் எதுக்கு போகனும்” என்றாள்.

“ஏண்டி இப்படி அலையிற… அப்பவே சொன்ன எங்க அம்மகிட்ட கல்யாணம் வேண்டாம்மா… வேண்டாம்மா.. ன்னு அவுங்கதான் கேட்கல. ஏதோ ரோட்ல போற ஒன்னப் புடிச்சு என் தலையில கட்டி வைச்சிட்டாங்க”  தன்னிலை மறந்து பேசினான் பார்த்திபன். இதற்குமேல்  கல்பனாவால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“நான் அலையிறனா… நான் அலையிறனா… நான் ரோட்டுல போற ஒன்னா.. பேசுவ… நீ பேசுவ.. ஏன்னா நீ பணக்காரனாச்சே! கல்யாணம் பண்ணி மூணு மாசம் ஆச்சு. அவள அம்மாவாக்க முடியல. நீயெல்லாம் பேசுற… ஆமா எனக்கு ஒரு டவுட். நீ ஆம்பிளயா… சொல்லு நீ ஆம்பளயா..” தன்னையே இழந்து பேசினாள் கல்பனா.

                             “ஆமாம் நான் ஆம்பளைதான்” – கத்தினான் பார்த்திபன்.

       “அப்புறம் ஏன் கட்டில் விளிம்புல போயி போயிப் படுத்துக்கிற. நான் பொம்பளன்னு நினைச்சன்” – கல்பனா

       “ஆமாம் நான் பொம்பளதான்! எனக்கு எந்த ஆண் மேலயும் ஆசை வராது. எந்த பெண் மேலயும் ஆசை வராது. ஏன்னென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன் நான்! ! பார் என்னை” என்று உடலில் கட்டியிருந்த ஒற்றைத்துணியை நீக்கினான். முழு நிர்வாணம் ஆனான்.  மின்சாரம் நின்று போனது. முன்னிரவில் சாளரத்தின் வழியாய் நேர்திசையில் முழுபௌர்ணமி வெண்மையாய் உருண்டையாய் தெரிந்தது. ரம்மியமான நிலவொலியை ஒத்த வெளிச்சத்தில் பார்த்திபனின் முழு நிர்வாணத்தைக் கண்டாள். இடது பக்கத்தொடை நடுவே பெண்ணுறுப்பும் நேராக நெஞ்சில் சின்னதாய் முலையும், வலப்பக்கத் தொடை நடுவே ஆணுறுப்பும் நேராக நெஞ்சில் வட்டமாய் காம்பும் இருந்தன. கயிலாயத்தில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒன்றாய் திருநீலகண்டனாய் இருப்பது போன்ற காட்சி. முழுகோளமாய் தலையில் நிலவுடன் ருத்ரனாய் காட்சியளித்தான் பார்த்திபன்.

       கைகள் கோர்த்தன. கண்கள் கலங்கின. மனம் மகிழ்ந்தது. கல்பனா அப்படியே மயக்கமடைந்தாள். பஞ்சு மெத்தையில் மயிலெனப் படுத்திருந்தாள். அவளின் முகம் தாமரையாய் ஒளிர்ந்தது. கண்கள் மூடியிருந்தன. ஆணும் பெண்ணும் ஓர் உடலில். எப்படி சாத்தியம்? உண்மையிலேயே பார்த்திபன் தில்லைவாணனா? இறைவனையே நேரில் பார்த்தது போன்ற காட்சியல்லவா? நான் என்னுடைய பிறவிப்பயனை அடைத்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். மூடியிருந்த கல்பனாவின் கண்களிலின் ஓரத்திலிருந்து கண்ணீர் துளியானது வழிந்தது. கல்பனாவின் உடலும் இப்போது சில்லென்றானது.

சிறுகதையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்

iniyavaikatral@gmail.com

சங்க இலக்கியத் தொகுப்பும் அதன் சமூகப் பின்புலங்களும்

சங்க-இலக்கியத்-தொகுப்பும்-அதன்-சமூகப்-பின்புலங்களும்

      ‘பாட்டும் தொகையும்’ என்றும், ‘தொகைநூல்கள் என்றும், ‘எட்டுத்தொகை நூல்கள்’, ‘பத்துப்பாட்டு நூல்கள்’ என்றும், ‘சங்க இலக்கியங்கள்’ என்றும், ‘பதினெண் மேற்கணக்கு நூல்கள்’ என்றும் கூறப்பட்டு, இன்று நாம் வழங்கி வருகின்ற பழந்தமிழ் இலக்கியங்கள்,

1.          பாடப்பட்ட காலம்

2.          எழுதப்பட்ட காலம்

3.          தொகையாக்க காலம்

4.          இலக்கண காலம்

5.          உரைக் காலம்

6.          பதிப்புக் காலம்

        என்ற படிநிலைகளில் உருவாகி, இன்று நம் கைகளில் கிடைத்துள்ளது. இப்படிநிலைகளில் பல்வேறு அரசியல், சமய, மொழிநிலைகளின் ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக தொகைநூல்களின் தொகையாக்க அரசியல், சமய, மொழிப் பின்னணிகள் என்ன என்று காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            இன்றைக்குச் சங்க இலக்கியங்கள் என்று பெயரிடப்பெற்று, நம் பார்வைக்கு வந்துள்ளகிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் பல்வேறு இடங்களிலிருந்து பாடப்பட்டு, பின் எழுதப்பட்டு அதற்குப்பின் தொகுக்கப்பட்டவை. தொகுக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய வரலாறு, அவற்றின் பின்னணி, அவற்றின் தேவை போன்றவை முதலில் விளக்கப்பட வேண்டும்.

            தொகைநூல்கள் எட்டாக நமக்குக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் குறுந்தொகை, நடுந்தொகை (நற்றிணை), நெடுந்தொகை (அகநானூறு), புறத்தொகை (புறநானூறு) என்ற நான்கு மட்டும்தான் தொகைநூல்கள். மற்ற நான்கும் ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து ஆகியவை தொகுக்கப்பட்ட காலத்தில் (சற்று முன் அல்லது சமகாலத்தில்) உருவாக்கப்பட்டவைசேர்க்கப்பட்டவை.

            பாடல்வரிகளான அடிகளின் அடிப்படையில்தான் 4-8 (குறுந்தொகை) 9-12 (நடுத்தொகை) 13-31 (நெடுந்தொகை) முதலில் தொகுக்கப்பட்டன. இவ்வடிகளுக்குப் புறம்பாக உள்ளவை புறத்தொகை. இறையனார் களவியல் உரை காலத்தில்தான் (கி.பி 7-ஆம் நூற்றாண்டு) நாம் இன்று குறிப்பிடுகின்ற அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறையனார் களவியல் உரையில் ‘பத்துப்பாட்டு’ என்பதோ, ‘பாட்டும் தொகையும்’ என்பதோ, ‘தொகைநூல்கள்’ என்பதோ, ‘பதினெண் மேற்கணக்கு’ என்பதோ குறிக்கப்பெறவில்லை. கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேராசிரியரின் தொல்காப்பிய உரையில்தான் ‘பாட்டினும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க’ (செய்யுளியல் 50) என்று எடுத்தாளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

            கி.பி 7-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை மூலம் ‘சங்கச் செய்யுள்’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. சமணச் சங்கத்திற்குப் போட்டியான வைதீகச் சங்க உருவாக்கமாகவும் சமணர்களின் எழுத்துத் தொகுப்பு முயற்சிக்கு எதிரான தொகையாக்க முயற்சியாகவும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடப்பட்டன. கே.என். சிவராஜபிள்ளை இவற்றைச் ‘சங்கச் செய்யுள்’ என்றழைக்கக் கூடாது என்றும் தவறான சொல்வழக்கு என்றும் குறிப்பிடுகின்றார். க. கைலாசபதி இவற்றை ‘பாண்பாட்டு’ என்று அழைக்கலாம் என்கிறார்.

            தொகையாக்கத்தில் சமயம், அரசியல், மொழிக்கல்வி என்ற பின்னணிகள் தொழிற்பட்டுள்ளன. அரசியல் என்பது பாண்டியரைமதுரையை முன்னிறுத்தும் போக்கு களவியல் உரை மூலம் வெளிப்படுகின்றது. தொகுத்தார், தொகுப்பித்தாரில் சோழர்கள் இடம்பெறவில்லை. பதிற்றுப்பத்து சேரர்களுக்குரியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தொகையாக்கத்தில் சோழர்கள் இடம்பெறவில்லை என்றாலும், புறப்பாடல்களில் சோழ மன்னர்கள் பாண்டியர், சேரர்களைவிட அதிகம் இடம்பெற்றுள்ளனர் (70 பாடல்கள்) என்பது முரணாக உள்ளது. பாணர் பாடியதாகக் கருதப்பெறும் பழம் பாடல்களில் சோழர்கள் அதிகமாகவும், புலவர்கள் பாடியதாக உள்ள பாடல்களில் சேர, பாண்டியரும் இடம்பெற்றுள்ளனர்.

            தொகையாக்கத்தின்போதுகூட திணை, துறை, கூற்று போன்றவை கொடுக்கப்படவில்லை. உரையாசிரியர் காலத்தில் அல்லது பதிப்புக் காலத்தில் இவை குறிக்கப்பெற்றவை. மேலும், ‘கொளு’ என்கிற அடிக்குறிப்பிற்கும் பாடல்களுக்கும் தொடர்பு இல்லாமல் அமைந்துள்ளன. சான்றாக, குறிப்பிட்ட மன்னனின் (சேர, சோழ, பாண்டியர்) பெயர் அடிக்குறிப்பில் இடம்பெற, பாடல்களின் செழியன், கிள்ளி, வளவன், மாறன், பொறையன் என்று பொதுப்பெயர்களிலேயே சுட்டப் பெறுகின்றனர். அரசப்புலவர்கள் 15 பேர் பாடியதாக அடிக்குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அதற்கான தரவு பாடல்களில் இல்லை.

            பாணர்கள் பாடிய பாடல்கள் தொன்மையானவை. அவை வாய்மொழிப் பாடல்களாக வெளிப்பட்டவை. அவை அகப்பாடலால் ஆனவை. புலவர்களின் செய்யுள் மரபில் வந்தவை. ஆசிரியப்பாவால் இயன்றவை. பாணர் பாட்டுக்கும் புலவர் செய்யுளுக்கும் கால இடைவெளியால் வேறுபாடுண்டு.

            ‘புலவர்களின் அதிகாரமும் தகுதியும் பாணர்களின் அதிகாரத்திற்கும் தகுதிக்கும் காலத்தாற் பிற்பட்டன’ என்ற க. கைலாசபதியின் கூற்று பாணர்கள் முந்தியவர்கள் என்பதையும், புலவர்கள் பிந்தியவர்கள் என்பதையும் உறுதிசெய்கிறது. (பக்.175)

            “தொல்காப்பியர் காலத்தில் ‘அகவல்’ என்னும் பெயர் ஆசிரியம் என்னும் பெயரால் அகற்றப்பட்டு விட்டது.” (பக்.175) என்ற கூற்றும் அகவல் பாடுவதற்குரிய பாண்மரபாக இருந்து ‘ஆசிரியம்’ என்று செய்யுள் எழுதுவதற்குரிய புலவர் மரபாக மாறியதைக் காட்டுகிறது.

            எழுத்துரு கையாளப்பட்டபோது, பாடப்பட்டவற்றுள் சில எழுத்துவடிவம் பெறலாயின. எழுதப்பட்ட காலத்துத் தேவைக்கேற்ற பாடல்களே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எழுதப்பட்ட முயற்சியும் சமணர்களால் உருவானது என்பதை கா.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அக்காலகட்டம் மதஞ்சார்ந்த கல்வியாக அல்லாமல் இருந்தது என்பதை முதற்காலகட்ட தொகைப்பாக்கள் உணர்த்துகின்றன.

            எழுத்து சார்ந்த கல்வியும் பாட்டும் வந்தவுடன் இலக்கணத்தில் ஒரு மொழியின் எழுத்து, சொல் பற்றிய சிந்தனை உருவாகின்றது. பேச்சுமொழி எழுத்துமொழியாக உருவெடுக்கின்ற சூழலிலும் பிறமொழி ஊடாடுகின்ற நிலையிலும் ஒரு மொழியின் எழுத்து, சொல் போன்றவை சுட்டப்பட வேண்டிய அல்லது வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றது. அதனைத் தொல்காப்பியம் சிறப்புற நிறைவேற்றியுள்ளது. எழுத்தும் சொல்லும் மொழியின் இலக்கணம். இதற்கடுத்து, இலக்கியத்தின் இலக்கணமாகிய பொருளதிகாரம் முன்வைக்கப்படுகின்றது. இலக்கியத்தின் உருவ, உள்ளடக்க, உத்தி மற்றும் யாப்பு குறித்துப் பேசப்படுகிறது. தொல்காப்பியத்தின் இந்தப் பொருளதிகாரம் குறித்த கருத்துக்கள் இன்றையவரையில் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கு இட்டுச் செல்கின்றது.

            அகம், புறம் என்பதற்குத் தொல்காப்பியத்தில் விளக்கம் இல்லை. எழுத்து, சொல் அதிகாரங்களில் தலைச்சூத்திரம் அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு இல்லை. இதுபற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னரே குறிப்பிட்டுள்ளார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்குப் புறனடை அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு அமையவில்லை. மேலும் தலைவன் கூற்று இருப்பதுபோல் தலைவி கூற்று இடம்பெறவில்லை. இதுபற்றி இளம்பூரணர் கூறுகையில் ‘தலைமகன் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினர் போலும்’ என்கிறார். மேற்குறித்த ஐயங்களுக்குத் தெளிவான விடைகள் ஏதமில்லை. பொருளதிகாரம் பின்னர் சேர்க்கப்பட்டது என்ற கருத்தும், தொல்காப்பியம் ஒருவரால் எழுதப்பட்டதன்று என்ற கருத்தும், ஒரு சிந்தனைப் பள்ளியின் கருத்துருவாக தமிழ் இலக்கணம் எழுந்ததன் வடிவமே ‘தொல்காப்பியம்’ என்ற கருத்தும் குறிப்பிடத்தக்கது.

            தொல்காப்பியத்திற்கு முன்னரே பாடப்பட்டு, எழுதப்பட்ட, கல்விநிலையில் பயிலப்பட்ட பழந்தமிழ் நூல்கள் என்ற வரிசையில் குறுந்தொகை, நெடுந்தொகை, நடுந்தொகை, புறத்தொகை போன்றவற்றின் இலக்கண மரபுகளும், தொல்காப்பியத்தின் சமகாலத்தில் நிலவிய இலக்கியத் தரவுகளின் இலக்கண மரபுகளும் இடைச்செருகலாக வந்த இலக்கண மரபுகளும் கொண்ட களஞ்சியமாகவே தொல்காப்பியம் விளங்குகின்றது.

            அகப்பாடலுக்குரிய பா வடிவமாகிய கலி, பரிபாட்டு இரண்டும் தொல்காப்பியத்தில் சுட்டியிருப்பது பழைய தமிழ்ப் பாடல்களுக்கு என்றால் அப்பாடல்களில் கலி, பரிபாடல் கொண்ட பாடல்களின் சான்றில்லை. எல்லாமே அகவல் அல்லது ஆசிரியப்பா வடிவங்களே. சமகால இலக்கியத்தில் பயின்றிருக்கிறதென்றால் கலித்தொகை, பரிபாடலுக்குப் பின் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

            மற்றொருநிலையில், முன்பிருந்த அகத்துக்குரிய கலி, பரிபாட்டு பாவகை வழக்கொழிந்த நிலையில், புதிய உள்ளடக்கம் கொண்டு பழைய வடிவங்கொண்டவையாக வெளிப்பட்டிருக்க வேண்டும். கலித்தொகை பிற்காலத்தது என்பதற்கு, பாலைக்கலியில் இளவேனில் காலம் தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தும் காலமாகச் சுட்டப்பட, பழைய இலக்கியங்களில் கார்காலமே தலைவியை வருத்தும் காலமாகச் சுட்டப்பட்டிருப்பதன் மூலம் உறுதி செய்யலாம். அவ்வாறே தொடக்கத்தில் மக்கள் காதலுக்குரிய பரிபாடல் வடிவம் தெய்வமும் காதலும் இணைந்த ஒன்றாக பிற்காலப் பரிபாடல் வடிவமாக வெளிப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

            தொகையாக்க காலத்தில் சிற்றரசுகளை அழித்துப் பேரரசுகள் நிலைநிறுத்தப்பட்டது. பாண்டியர், சேரர்கள் தொகுப்பித்தவர்களாக அடிக்குறிப்புகள் சுட்டுகின்றன. இறையனார் களவியல் உரையில் அரசியல் நிலையில் பாண்டியர்களைச் சார்ந்தும் சமயநிலையில் சைவத்தைச் சார்ந்தும் சமணர்களுக்கு எதிராகச் சங்க நடவடிக்கையைக் காட்டித் தமிழை இறைவர்களோடு சேர்த்தும் கட்டமைக்கப்பட்ட முயற்சி வெளிப்படுவதாக கா. சிவத்தம்பி முதல் இன்றுவரை பல அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தொகையாக்க அரசியலுக்கு மாறாக, சோழர்கள் பற்றிய பாடல்கள் புறத்தொகைப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதும், பாண்டியர், சேரர்தம் முயற்சி பலனளிக்கவில்லையா? தொகையாக்க முயற்சியில் சோழர்தம் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

            தொகையாக்கத்திற்குப் பின்னரே, உரை முயற்சிகள் தொடங்குகின்றன. சமணராகிய இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியதும் பேராசிரியர், நச்சினார்க்கினியர் அதற்குப்பின் உரை எழுதியதும் வரலாற்றுண்மை. பத்துப்பாட்டு போன்றவற்றிற்கு நச்சினார்க்கினியரின் உரையை நாம் காணமுடிகின்றது. உரையாசிரியர்கள் மூலமாகவே சங்கப்பாட்டு என்பதும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பதும் திணை, துறை, கூற்று போன்றவையும் அகம், புறம் என்பதற்கு விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. உரையாசிரியர்களின் மகத்தான பங்களிப்பு என்பது, தொல்காப்பியம் மற்றும் பழந்தமிழ் நூல்களை இழக்காமல் காத்ததோடு தம்காலச் சிந்தனைகளுக்கேற்ப அவற்றை மறுவாசிப்பு செய்து இடையறவுபடாமல் காத்துவந்ததாகும்.

            அச்சுப்பண்பாடு அறிமுகமான 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான பதிப்பு முயற்சிகள் உரையாசிரியர்களுக்கடுத்த மாபெரும் பணியைச் செய்தது. ‘கொளு’ என்கிற அடிக்குறிப்புகள் இன்னாரை இன்னார் பாடியது என்ற வரையறைகள் இப்பதிப்புக் காலத்தில்தான் செய்யப்பட்டன. பிரதிபேதம், பாடபேதம் போன்றன உரையாசிரியர் காலத்தில் தொடங்கப்பட்டாலும் பதிப்புக் காலத்தில் அவை செம்மைவடிவம் பெறலாயின. மாற்றி எழுதுதல், நீக்குதல், இடைச்செருகல் போன்றவைகள் இப்பதிப்புக்காலத்தில் செய்யப்பட்டன.

            மேற்கூறியவற்றால், எழுதப்பட்ட காலத்திலிருந்து இலக்கண உருவாக்கம், தொகையாக்கம், உரையாக்கம், பதிப்பாக்கம் என்ற பல்வேறு படிநிலைகளில் பாடப்பட்ட பழந்தமிழ் நூல்கள் குறிப்பாக, தொகைநூல்கள் சமய, அரசியல், மொழிக்கல்வி என்ற பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு இன்றைக்குக் கைகளில் தவழுகின்ற இலக்கியங்களாக, இறுதிவடிவம் பெற்றவையாக, அடிப்படைத் தரவுகளாக விளங்குகின்றன என்பது புலனாகின்றது.

பயிலரங்கப் பொழிவிற்குப் பயன்பட்ட நூல்கள்

1.          மு.வை. அரவிந்தன்                                –           உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம்,

சிதம்பரம், 1983.

2.          க. கைலாசபதி                                      –           தமிழ் வீரநிலைக் கவிதை,

கு.வெ.பாலசுப்பிரமணியன்,

(மொழிபெயர்ப்பு), குமரன் பதிப்பகம்,

சென்னை, 2006.

3.          அ. பாண்டுரங்கன்                              –           தொகை இயல், தமிழ் ஆய்வரங்கம்,

புதுச்சேரி, 2007.

4.          பா. இளமாறன்                                   –           பதிப்பும் வாசிப்பும் : தமிழ் நூல்களின்

பதிப்பு மற்றும் ஆய்வு

சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

5.          கா. சிவத்தம்பி                                  –           சங்க இலக்கியமும் கவிதையும் கருத்தும்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,

சென்னை, 2009.

6.          சிலம்பு நா. செல்வராசு                   –           சங்க இலக்கிய மறுவாசிப்பு –

சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள்

காவ்யா, சென்னை, இரண்டாம் பதிப்பு 2009.

7.          து. சீனிச்சாமி                                  –           செவ்வியல் இலக்கியம்

புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010.

8.          க. ஜவகர்                                        –           திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்

காவ்யா, சென்னை, 2010.

9.          பெ. மாதையன்                              –           தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களில்

காலமும் கருத்தும்

நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2011.

10.        ப. மருதநாயகம்                           –           தமிழின் செவ்வியல் தகுதி

இராச குணா பதிப்பகம், சென்னை, 2012.

11.        துளசி ராமசாமி                           –           பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்களே

விழிகள் பதிப்பகம், சென்னை, 2012.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ம.மதியழகன்

பேராசிரியர்

புதுவைப் பல்கலைக்கழகம்

இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

இலக்கியத்திறனாய்வின் பயன்கள்

திறனாய்வினால் சமுதாயத்திற்கும் இலக்கியப் படைப்பு வரலாற்றிற்கும் பயன்கள் உண்டாகின்றன. இலக்கியத் திறனாய்வில் கீழ்க்காணும் பயன்கள் உண்டாகின்றன.

  1. சிறந்த கலைப்படைப்புத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  2. இலக்கியக் கொள்கைகள் உருவாகின்றன.
  3. புதிய இலக்கியங்களைப் தூண்டப்படுகின்றனர்.
  4. இலக்கிய வரலாற்றிற்குத் தேவையான தகவல்கள் கிடைக்கின்றன.
  5. இலக்கியத் திறனாய்வு வரலாறு உருவாகிறது.
  6. இலக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் நீங்குகின்றன.
  7. சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
  8. கலையின் சிறப்பும் அதனைக் கற்போர்க்கு உண்டாகும் மகிழ்வும் சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  9. கலை, கலைக்காக மட்டுமன்று. கலை சமூகத்திற்காகவும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தல்.
  10. தனிமனிதரின் ஆளுமை, தனி இலக்கியச் சிறப்பு முதலியன அறிந்து கொள்ளப்படுகின்றன.

இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

தன்னம்பிக்கை கட்டுரை – வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வாய்ப்புகளைப்-பயன்படுத்துங்கள்

          மனிதப்பிறவியும் உயிர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புதான். பல உயிர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு மனித பிறப்பிற்கு மட்டுமே கிடைக்கும். எனவே உலகில் கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் சிறந்த வாய்ப்புதான். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பலருக்கு வாய்ப்புகளைத் தேடிப்போக வேண்டும். அதாவது வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை கட்டுரை : வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

       படிக்கின்ற மாணவனுக்கு தன்திறனை வெளிப்படுத்த பருவத்தேர்வு ஒரு வாய்ப்பு. ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நழுவ விட்டார் என்பதை உணரவேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

             படித்த காப்பியக்கதை ஒன்று. வணிகனின் மகள் ஒருத்தி பத்தரை என்பவள். திருமணப்பருவத்தில் இருந்தாள். அப்போது இரவு நேரத்தில் இரத்தினங்களைத் திருடிச்செல்ல ஒரு கள்வன் வந்தான். வணிகன் வீட்டுக்குள் நுழைந்த அவனைப் பார்த்ததும் அவன் மீது காதல் வயப்பட்டாள். சில மாதங்கள் கடந்ததும் தன் தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் அவள் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக இருந்து தந்தையின் சம்மதத்துடனே திருமணமும் செய்து கொண்டாள். ஆண்டுகள் சில கடந்தன. ஒருநாள் ஏதோ காரணம் பற்றிப் பத்தரைக்கும் அவள் கணவனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டத்தில் அவள், “நீ ஒரு கள்வன் தானே என்று கூறிவிடுகிறாள். இதனை மனதில் வைத்துகொண்ட அவன் இவளை பழிவாங்குவதற்காக எதிர்பார்த்திருந்தான். ஒருநாள் பத்தரையிடம் குலதெய்வக்கோவில் ஒன்று மலைமீது உள்ளது. அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம்” என்று கூறினான். உடனே அவளும் மகிழ்ந்து தன்னை அணிகளால் அலங்காரம் செய்துகொண்டு புறப்பட்டாள். இருவரும் மலை உச்சிக்கு செல்கின்றனர். அங்கு ஒரு கோவில் உள்ளது. இது நமது குலதெய்வம் வணங்கு என்று கூறுகிறான். இவளுக்கு காரணம் புரிந்துவிட்டது. இவன் தம்மை கொலை செய்வதற்கு இங்கு அழைத்து வந்துள்ளான் என்று மனதிற்குள் தெளிந்து கொண்டு அவள் “தெய்வத்தை வணங்குவதற்கு முன்பு தங்களையும் மூன்று முறை வலம் வந்து வணங்கிக் கொள்கிறேன்” என்றாள். அவனும் சரி என்று தலையசைத்தான். உடனே கைகளைக் கூப்பி அவனை ஒன்று இரண்டு என்று வலம் வந்து மூன்றாவது முறையாக அவனைப் பின்னால் இருந்து தள்ளிவிட்டாள். அவன் மலையின் உச்சியிலிருந்து அதலபாதாளத்தில் விழுந்தான். இங்கு நீங்கள் கவனிக்க வேண்டும். அவளை அவன் கொன்றுவிடுவான் என்பதை அறிந்து, அவளே ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறாள்.  தன்உயிர் பிழைக்கும் வாய்ப்பு. இவ்வாறான நிலையில் வேறுவழியில்லை. தற்கொல்லியை முற்கொல்லல் என்பதை இங்கு காணமுடிகிறது.

சொல்லிக்கொண்டு வருவதில்லை வாய்ப்பு

            வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத்தட்டாது. வாய்ப்பு வருவதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படிப்பை முடித்துவிட்டு பள்ளி ஒன்றுக்கு வேலை தேடி செல்கிறீர்கள் அங்கு தலைமையில் இருப்பவர் எங்கே வகுப்பில் பாடம் நடத்துங்கள் பார்க்கலாம்” என்று கூறினால் உடனே மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவ்வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும். எனவே உங்களைத்தேடி வருவதை பிடித்துக் கொள்ள நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

           ஒரு கோயிலில் பூஜை செய்யும் குருக்கள் ஒருவர் எப்போதுமே இறைவனின் சிந்தனையில் இருப்பார். இறைவனின் நாமத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் அவ்வூரில் அதிக மழை பெய்தது. ஏரி நிரம்பியது. மாலை நேரமும் வந்துவிட்டது. ஒரு சிறுவன் ஓடி வந்து ஐயா மழை நீர் ஏரியில் சேர்ந்ததால் ஏரியின் கரை விரிசல் விட்டுள்ளது. அதனால் ஊர் மக்கள் எல்லோரும் மேடான பகுதியை நோக்கி செல்கின்றனர். நீங்களும் வாருங்கள் சென்று விடலாம்” என்றான். அவர் “என்னை காப்பாற்ற என் இறைவன் வருவார் நீ போ” என்று சொல்லி அனுப்பிவைத்தார். சிறிது நேரம் சென்றதும் சிறுவன் கூறியவாறே ஏரியின் சுவர் உடைந்து ஊருக்குள் நீர் வந்துவிட்டது. அப்போது மற்ற மக்கள் அனைவரும் ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இவரையும் அழைத்தனர் ஆனால் “நான் வணங்கும் இறைவன் என்னை காப்பாற்ற வருவார் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டார். சிறிது நேரம் சென்றது. நீர் நிறைய வந்து ஊரே நிரம்பிக்கொண்டு இருந்தது. அப்போது நீரில் யாராவது மாட்டிக்கொண்டு உள்ளனரா என்று பார்த்துக்கொண்டு இருவர் பரிசலில் வந்து வீட்டுக் கூறையின்மீது நின்றிருந்த இவரை அழைத்தனர். “இறைவன் நேரில் வந்து என்னை அழைத்தால் மட்டுமே வருவேன். உங்களுடன் நான் வரப்போவதில்லை. நீங்கள் செல்லுங்கள்” என்று கூற அவர்களும் சென்றுவிட்டனர். நீர் மட்டம் அதிகமாகி குருக்களை நீர் மூழ்கடித்தது. அவரும் இறந்து விட்டார். சொர்க்கத்திற்குச் செல்கிறார், அங்கு சண்டையிட இறைவனை அழைக்கிறார். அங்கிருந்த தேவர் ஒருவர் ஏனய்யா? என்று வினவ நடந்தவற்றை கூறிய குருக்கள் “இறைவன் என்னை காப்பாற்ற ஏன் வரவில்லை” என்று கூறி முடித்தார். அதற்கு அந்தத் தேவர் “ஐயா இறைவன் எப்போதும் நேரில் வரமாட்டார் மற்றவர் மூலம் நல்ல வாய்ப்புகளை நல்குவார். உமக்கு மூன்று முறை பிழைத்துக்கொள்ள வாய்ப்பளித்தார். அதுபுரியாமல் இத்தனைக்காலம் இறைவனை வணங்கி என்ன பயன்? இறைவனின் இந்தச் செயலைக்கூட அறியவில்லை” என்றார் தேவர். எனவே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும்போது அதை உணர்ந்து கொண்டு நழுவாமல் பிடித்துவிடுங்கள்.

        வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாய்ப்பை பயன்படுத்துவது. இன்னொன்று வாய்ப்பை உருவாக்குவது.

எதுவும் நடக்கலாம்

           மனித சமுதாயத்தில் அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். நாளை என்பது இல்லாமலே போகலாம். அவ்வாறு நிலையற்ற வாழ்க்கை வாழும் இந்தச் சமுதாயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை இரும்பை கவரும் காந்தம் போல் இழுத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறுவதற்காகப் பத்துப்பேரை கூட கீழே தள்ளிவிட்டு மேலேறும் மனிதர்கள் வாழும் சமூகம் இது. எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும். தானே பெரிய பதவி வகிக்க வேண்டும். இதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை முகவரி இல்லாமல் செய்வது என்று சிலர் முனைப்புடன் இருக்கும் இன்றையச்சூழலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

         படித்த மகாபாரதக்கதை ஒன்று. அழகான புறாக்கள் இரண்டு வானில் பறந்து கொண்டு காதல் செய்தன. பின்னர் அடர்த்தியான மரத்தில் அமர்ந்து கொண்டன. சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடன் ஒருவன் இரண்டு புறாக்களையும் ஒரே அம்பு கொண்டு வீழ்த்த குறிபார்த்தான். அதை கவனித்த பெண்புறா அச்சம் கொண்டு ஆண் புறாவிடம் “நாம் இந்த இடம் விட்டு பறந்து விடலாம் வாருங்கள் கீழே கவனியுங்கள் வேடன் நம்மை குறி பார்க்கிறான்” என்றது. ஆண் புறா”அவசரப்படாதே அவ்வாறெல்லாம் பறக்க முடியாது. மேலே வானத்தில் பார். நாம் பறந்தால் பருந்துக்கு இரையாவோம்” என்றது. பெண் புறா பயத்தில் நடுங்கியது” மேலே பருந்து சுற்றுகிறது. கீழே வேடன் குறிபார்க்கிறான். இங்கு அமர்ந்தாலும் தவறு. மேலே பறந்தாலும் தவறு. இன்று நாம் இறப்பது உறுதி”என்றது. “இல்லை அவ்வாறெல்லாம் அச்சம் கொள்ளாதே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். என்றது ஆண்புறா. அதே நேரத்தில் வேடன் அம்பை குறிபார்த்து விட்டான். விடும்போது அவனுடைய பாதம் எதன் மீதோ வைக்கப்பட்டது. அவன் பாதத்தில் ஏதோ ஒன்று சுருக்கென்று கடிக்க அவன் வில்லின் குறிதவறி மேலே வட்டமிட்ட பருந்தின் மேல் சென்று அம்பு தைத்தது. அப் பருந்து கீழே தரையில் வீழ்ந்தது. அந்த வேடனும் பாதத்தில் பாம்பு கடித்ததால் வலியால் துன்பப்பட்டான். இப்போது இரண்டு எதிரிகளும் முடிந்து விட்டனர். எமனுடைய மேல் கீழ் பற்களுக்கு இடையே அகப்பட்டாலும் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பும் உண்டு. பின்னர் அந்தப் புறாக்கள் ஆனந்தமாக மேலே பறந்து சென்றன.

சோம்பலுடன் நட்பு வேண்டாம்

          சிலர் படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடப்பார்கள். சிலர் அதிக சம்பளம் கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி காலத்தைக் கழிப்பார்கள். இந்த இருவகையினருமே வாழும் வாய்ப்புகளை நழுவ விடுபவர்கள். இவ்வாறான மனிதர்களிடம் நட்பு கொண்டால் மற்றவரையும் அவர்களைப்போல சோம்பேறிகளாக மாற்றிவிடுவர்.

       சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பு முடிந்ததும் வேலைக்குச் சென்று அதற்குத் தன்னை தகுதியாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை சிறிது சிறிதாகச் செய்து தன்நிலையை உயர்த்திக் கொள்வர். இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் கற்றுக்கொள்பவை ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு பண்பு இருக்கிறது. இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் தோல்வி அடைந்தவரிடமும் வெற்றி பெற்றவரிடமும் எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்ற அனுபங்களைக் கற்றுக்கொள்ளலாம். எனவே கற்றுக்கொள்ள வாய்ப்புகள் எவர் மூலமாகவும் கிடைக்கலாம். எவரையும் சாதாரணமாக எண்ணிவிடலாகாது. பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இல்லை என்றால் நீங்களே பலருக்கு உதவுமாறு வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

     வாய்ப்புகளை ஏற்படுத்தும் திறன் சரிவரப்பெற்ற நீங்கள் எதிர்காலத்தில் மெய்யாகவே பெரிய நிர்வாகத்திற்கு எஜமானர்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

திறனாய்வு உத்திகள் என்றால் என்ன? உத்தியின் வகைகள் யாவை?

இலக்கியத் திறனாய்வு உத்திகள்

           உத்தி என்னும் சொல் பல்பொருள் நிலையினது. ‘உந்து’ எனும் அடிப்படைச் சொல் தொடர்பில், ஆபரணத் தொங்கல், சீதேவி உருவம் பொறித்த தலையணி என்னும் பொருண்மைகள் அமைகின்றன. “உக்தி என்ற அடிப்படையில் பேச்சு என்னும் பொருள் உணர்த்தப்படுகின்றது. வடமொழிச் சொல் மரபுத் தொடரில் சேர்க்கை, முப்பத்திரண்டு வகை உத்திகள் போன்றவை சுட்டப்படுகின்றன.

உத்தி என்பதன் விளக்கம்

          ஆங்கிலத்தில் டெக்னிக் என்னும் சொல்லால் இவ்வுத்திநிலை குறிக்கப்படுகின்றது. உந்துதல், பொருத்துதல் என்ற வினை அடிப்படையில் பாடுபொருளைக் கவிஞன் பொருத்தமுற வெளியிடும் பாங்கு அல்லது முறை உத்தி என்பதாகக் கொள்ளப்பட்டது எனக் கருதலாம். இந்த தனிச்செயல்முறை நுணுக்கத்திறம் பல வகைகளாக விரிந்து வெளிப்படுவதனை இலக்கியக் கலைச்சொல் அகராதிகளும், இலக்கியத் திறனாய்வு நூல்களும், இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளும் காட்டுகின்றன. ஒவ்வொரு கவிஞனின் தனித்தன்மையும் இவ்வுத்திகளைக் கையாளும் முறையில் வெளிப்படுகின்றது.

         மரபு உத்திகளைப் பயன்படுத்தலும், புதுவகை உத்திகளை உருவாக்குதலும் என இரு அடிப்படை நிலைகள் அமைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கியத் திறனாய்வின் நோக்கமே படைப்பாளனின் உத்திகளை இனம் கண்டு கொள்வதில்தான் நிறைவுறுகிறது எனும் எண்ணம் உத்தி பற்றிய ஆய்வின் முதன்மையை உணர உதவுகிறது. படைப்பாளனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், படைப்பாற்றலுக்கு ஏற்பவும் உத்திகள் உருவாகியும் பெருகியும் அமைவதினால் உத்திபற்றிய கொள்கைகள் கட்டுப்பட்ட வரையறைக்கு அப்பாற்பட்டுச் செல்கின்றன எனக் கூறலாம்.

உத்தியின் இயல்பு

       பல்வகைத் திறனாய்வு முறைகளில் உத்திமுறைத் திறனாய்வும்ஒன்றாக அமைகின்றது. செய்தி தெரிவிப்பதைவிட ஆற்றலுடைய வெளியீடே உத்தியின் நோக்கமாக அமைகின்றது எனலாம். இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும் பொருள், வடிவம், வெளியீடு ஆகிய மூவிடத்தும் உத்திகள் இடம்பெற வாய்ப்பு அமைகின்றது.

பகுப்பு நெறி

    பொருளும், வடிவமும், வெளியீடும் தாமே உத்திநிலை பெற்றும், தமக்கேற்ற உத்திவகைகள் பெற்றும் அமைகின்றன. எல்லா வகை இலக்கியங்களுக்கும் பொதுவான சில உத்தி வகைகள் அமையலாம். அதே வேளையில் சில இலக்கிய வகைகளிலேயே கையாளப்படுவனவும் அமையலாம். இவற்றில் முன்னதைப் பொது உத்தி எனவும் பின்னதைச் சிறப்புத்தி எனவும் குறிப்பர்.

          பொதுவாக இலக்கியத்தைப் பொருளும் அமைப்பும் என இரு பகுப்புக் கொண்டு அவற்றிற்கேற்ப பொருள் உத்தி அமைப்பு உத்தி என்றோ, அகஉத்தி – புறஉத்தி என்றோ பகுக்கலாம். எனினும் இலக்கிய வடிவின் வெளியீட்டு முறையில் கதை உத்தி, காப்பிய உத்தி, நாடக உத்தி என்னும் முறையில் காண்பது பொருத்தமானதாகும்.

         தமிழ்மொழி இலக்கணத்தின் ஐம்பகுப்பு அடிப்படையில் உத்திகளை அணுகுதலும் உண்டு. எழுத்து உத்தி, சொல் உத்தி, பொருள் உத்தி, யாப்பு உத்தி, அணி உத்தி என ஒலிநிலை உத்தியை எழுத்து பகுப்பிலும், தொடர் உத்தியைச் சொல் பகுப்பிலும், மடக்குப் போன்ற மீண்டு வரல்களை அணிப் பகுப்பிலும் இவ்வாறு அடக்கலாம்.

உத்தியின் வகைகள்

       உத்திகள் எவையெவை என்பது பற்றிய எண்ணம் பல்வகை நூல்களில் பரந்து அமைகின்றது. நடை, கவிதை, மொழி, ஒலிநயம் போன்றன இதனுள் அடக்கப்படுகின்றன. உரையணிகளாக உருவகம், உவமை,மீமரபு உவமை போன்றனவும் இங்கு இடம் பெறும். அங்கதப் போலி ஓர் ஆய்வுமுறை இலக்கிய உத்தியாகக் கொள்ளப்படுகின்றது. பிற எல்லாக் கலைகளையும் விட இலக்கியம் ஏற்றமும், சிறப்பும் கொள்வதற்கு ஏற்ப, அதன் உத்திகளும், உயர்வும், பொருத்தமும், வகைமையும், பயிற்சியும், புதுமையும் இலக்கியத் திறனாய் வகைகளும் வளர்ச்சியும் கொண்டு அமைகின்றன. பல்வகை உத்தி பற்றிய விளக்கம் இக்கருத்திற்கு அரண் செய்யும். எனினும் உத்திகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். அவையாவன,

1.ஒலிநிலை உத்திகள்

2.சொல்நிலை உத்திகள்

3. பொருண்மைநிலை உத்திகள்

4.தொடரமைப்பு உத்திகள்

5.கூற்றுநிலை உத்திகள்

6.வெளியீட்டுநிலை உத்திகள்

7.அணிநிலை உத்திகள்

8. வடிவநிலை உத்திகள்

9.அமைப்புநிலை உத்திகள்

10.யாப்புநிலை உத்திகள்

என்பனவாகும்.

இலக்கியத்திறனாய்வில் உத்திகள்

1.ஒலிநிலை உத்திகள்

       மொழிக்கு அடிப்படையாக அமையும் ஒலி, சில உத்தி வகைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது. சொற்பொருளுக்கும், உணர்வு வெளியீட்டிற்கும், பிற சூழல்களுக்கும் ஏற்பக் கவிஞன் இலக்கியத்தில் ஒலியைப் பயன் கொள்ளும் போது ஒலியடிப்படை உத்திகள் உருவாகின்றன. ஒலிக்குறிப்புச் சொற்களை (Onomatopoeal) பயன்படுத்தல் ஒரு வகை ஒலி உத்தியாகின்றது.

‘நெடுநீர் குட்டத்துத் துடுமென பாய்ந்து (புறம்243)

‘கண்ண டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ (மலைபடு-352)

        தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்பாகிய வண்ணம் ஒலி அடிப்படையில் பலவகைகளைக் கொண்டு அமைதல் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

‘மாவா ராதே மாவா ராதே’ (புறம் – 273 – 1)

‘வாரா ராயினும் வரினு மவர்நமக்

சியாரா கியரோ தோழி’ (குறுந் – 110 -1,2)

        போன்றன முறையே நெடுஞ்சீர் வண்ணம், அகைப்பு வண்ணத்திற்குச் சான்றாக்கப்படுகின்றன. இலயப்போக்கும் (Cadence) இவற்றுடன் ஒலி உத்தியாக வைத்துக் கருதத்தக்கது எனலாம். கருத்து அழுத்தம் தரும் ஒலிமுடிவு என்ற நிலையில் ஆசிரியத்தின் ஈற்று ஏகாரம், வெண்பாவின் ஓரசை முடிபு போன்றன கருதத்தக்கன.

‘பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே’ (ஐங்குறு – 55 4)

‘யாண்டும் இடும்பை இல’ (குறள் – 4)

2. சொல்நிலை உத்திகள்

      சொல் ஆட்சி, சொற்பயிற்சி, சொல்திறன் இவற்றின் அடிப்படையில் வருவன சொல்நிலை உத்தியாகக் கருதத்தக்கன. கவிதையின் திறன்மிக்கச் சொல்நடைக்கு வாய்ப்பாகப் பல சொல்நிலை உத்திகள் அமைகின்றன. அடைச்சொற்கள் (epithets) தொடர்ந்த ஆட்சி காரணமாகவும், குறிப்பிட்ட பொருள் தேர்ச்சிக் காரணமாகவும் உத்திநிலை பெறுகின்றன.

      இளங்கோவடிகள் பன்முறை பயன்படுத்தும் ‘மாமலர் நெடுங்கண் ‘மாதவி’: மாடலனைக் குறிக்கும் ‘மாமறை முதல்வன்’; பழந்தமிழ் இலக்கியத்தில் பன்முறை பயிலும் ‘மாந்தளிர் மேனி’ போன்றவற்றை இங்கு கருத்தில் கொள்ளலாம்.

     தொன்மைச் சொல் மீது ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக பழஞ்சொற்களைப் பயன்படுத்தலும் கவிதை முறையாக அமைகின்றது. இலக்கிய நடையில் பின்பற்றப்படும் உத்திமுறையாக இது காணப்படுகின்றது. இல்லக்கிழத்தி, இளிவரல், அல், அப்பு, புகன்றிடுவேன், சூட்டுவேன் போன்ற முற்காலச் சொல்வடிவங்கள் மிக அண்மைக் கால இலக்கியத்துள் பயின்று வருவதை சான்றாகக் காட்டலாம்.

     பல்பொருளுடைய ஒரு சொல் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் ஓரிடத்தில் பயன்படுத்தப்படுவதும் ஒரு உத்திமுறை ஆகும்.  சான்று.

‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட’ (சிலம்பு – 53-54) என்பதாகும்.

       கவிதை அடியின் தொடக்கமும், முடிவும் ஒரே சொல்லாக அமையப் பெறுவதும் உத்திவகையாகக் கருதத்தக்கதாகும். தொடர், தொடர் பகுதி என்பதிலும் இது அமையும். உதாரணமாக,

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாத் தலை’ (குறள் – 411)

என்பன போன்று வரும் குறட்பாக்களைக் குறிப்பிடலாம்.

3. பொருண்மை நிலை உத்திகள்

       சொல்நிலை உத்திகளுடன் தொடர்பு கொண்டு அமைவன பொருண்மை அடிப்படை உத்திகள். சொல்கொள்ளும் பொருண்மை காரணமாக ஏற்படும் உத்தி. பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட வெளியீட்டு உத்தி, முரண்பொருண்மை, மயக்கப் பொருண்மை, பல் பொருண்மை பெருக்கு என இப்பொருண்மை உத்திகள் பரந்து விரிகிறது.

முரண் உத்தி:

       முரணான அல்லது தம்முள் எதிரான இரு கருத்துக்களை அருகருகே அமைத்துக் கூறும் முரண் உத்திமுறை பொருண்மை உத்திமுறையின் வகைகளுள் ஒன்றாக அமைகின்றது. சான்றாக,

‘ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண்’ (ஆத்திச்சூடி – 8,9)

‘நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று’ (குறள் -222)

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

4. தொடரமைப்பு உத்திகள்

          தொடரமைப்பு அடிப்படையிலும், பல உத்திகள் அமைந்து காணப்படுகின்றன. விளி, கேள்வி, பதில், எதிர்வாதம், வியப்பு. இணைத்தொடர், பழமொழி எனப் பல வகைகளாக இது விரிகின்றது. முன்னிலை மொழிகளும், படர்க்கை அழைப்புகளுமாக விளித்தொடர்கள் வாழ்வில் அமைவது போன்று இலக்கியத்திலும் அமைகின்றன.

     கேட்பன போலவும் கிளக்குந போலவும் கொண்டு ஞாயிறு, திங்கள், அறிவு, நாண் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி மொழியும் தலைவியின் காமமிக்க கழிபடர்கிளவியாக அமைவன இலக்கியத்திற்கு உத்தியாக அமைகின்றது

‘தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்தேரும்.

எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க

அம்மென் இணர அடும்பு கான் அன்னங்காள்

நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்’

என்றமைந்த சிலப்பதிகாரப் பாடலை தொடரமைப்பு உத்திக்குச் சான்றாகக் காட்டலாம்.

5.கூற்றுநிலை உத்திகள்

          தொடரமைப்பு உத்திகளிலிருந்து சிறிது வேறுபட்டு அமைவன கூற்றுநிலை உத்திகள். இவற்றை பாத்திரங்கள் செய்திகளைத் தரும் கூற்று உத்திகள் எனவும், ஆசிரியன் இலக்கியத்தை அளிக்கும் முறைவகை உத்திகள் எனவும், இலக்கியத்தில் அமையும் கூற்றுநிலை உத்திகள் எனவும். இலக்கியத்தில் பயன்படும் வெளியீட்டு முறை உத்திகள் எனவும் பலநிலைகளில் கூறலாம்.

     இலக்கியத்தை அளிக்கும் முறையில் நனவோடை அல்லது உட்தனிமொழி (Interior Monologue) என்பனவும் கூற்றுநிலை உத்தியாகக் காணப்படுகின்றன. உளவியல் புதின ஆய்வாளர் இதனைச் சிறப்பாகக் சுட்டுகின்றனர். தலைவி நெஞ்சுக்கு உரைப்பதாக வரும் அகப்பாடலில் இவ்உட்தனிமொழி அமைகின்றது.

“உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ

யாருழைச் சேறிஎன் நெஞ்சு” (குறள்-1248)

என்ற குறட்டாவினை கூற்றுநிலை உத்திமுறைக்குச் சான்று காட்டலாம்.

6.வெளியீட்டு நிலை உத்திகள்

         வருணனை, கற்பனை, எதிர்மை (Irony) போன்றவை வெளியீட்டு நிலை உத்திகளாக அமைகின்றன. சில நோக்கம் கருதியும், பயன் எதிர்பார்த்தும், நயம் விரும்பியும், நிறைவு விழைந்தும் இவ்வுத்திகள் கையாளப் பெறுகின்றன.  

        பின்புல வருணனை உத்திக்கு கடனாக அமைவதை அகப்பாடல்கள் காட்டுகின்றன. காலம் மற்றும் இடம் பற்றி குறிப்புத் தருவதோடு உள்ளுறை இறைச்சிக்கும் இது களனாகின்றது. காப்பியம் போன்ற நெடும் யாப்புகளில் பாத்திர வருணனை, செயல் வருணனை, செலவு வருணனை போன்ற பல அமைந்து உறுப்பு நிலைபெறுகின்றன.

       வருணனை என்பது சொல்லில் அமைக்கப்படும் காட்சியாகும். ஒரு பொருள், காட்சி, மாந்தரின் தோற்றம் அல்லது பண்பினைக் காட்சிப் படுத்துவது வெளியீட்டு உத்தியாகும். பண்பு. பாத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டவோ, மாற்றியமைக்கவோ, கதைக் கருவின் வளர்ச்சிக்கு வாய்ப்பாகத் தடைகளை ஆக்கவோ, நீக்கவோ இது உதவுகின்றது.

“தாழ்இருள் தூமிய மின்னித் தண்ணென

வீழ்உறை இனிய சிதறி, ஊழின்

கடிப்புஇகு முரசின் முழங்கி, இடித்திடித்தும்

பெய்க இனி, வாழியோ பெருவான்.. -” (குறு-270)

        என்ற குறுந்தொகைப் பாடலில் மழைக் காட்சி உணர்த்தப்படுகின்றது. கண், செவி, ஆகிய இருபுலனுக்கும் ஏற்ப இச்சொற்காட்சி அமைந்துள்ளது. மேற்கண்ட பாடலை வெளியீட்டு உத்திக்கு தக்கச் சான்றாகக் காட்டலாம்.

7.அணிநிலை உத்திகள்

        கூற்றுமுறை உத்திகளுடன் ஓரளவு தொடர்பு கொள்வன அணிநிலை உத்திகள். இலக்கிய அமைப்பில் பெருமளவில் இவை பயன்படுகின்றன. அழகு, விளக்கம், தெளிவு. நயம் போன்ற பன்முகப் பயன்பாட்டில் இவை இடம் பெறுகின்றன. கூற்று முறை அணிகளை (Figure of Speach) மூன்று வகையாகப் பிரித்து ஆராய்கின்றனர். ஒன்று கூறுகளை இணைப்பதால் உருவாவது; இரண்டு கூறுகளை நீக்குவதால் உருவாவது; மூன்று ஒத்த அல்லது இணையான ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

        இவ்வாறன்றி, காதுக்கு நயம் அளிப்பன; மனத்துக்கு இன்பம் அளிப்பன; இரண்டையும் கவருவன என்ற பிறிதொரு அடிப்படையிலும் மூன்று பகுப்புக்களில் காண்பது உண்டு. உவமை, உருவகம் முதலான அணிகளின் பயன்பாடு பல்வேறுபட்டதாக  அமைகின்றது.

          தெளிவுப்படுத்தவும், விளக்கம் காட்டவும், ஊக்கம் ஊட்டவும். இயங்காப் பொருளை இயக்கவும், தொடர்பினைத் தூண்டவும், நகைச்சுவை உணர்வினை எழுப்பவும், அழகுணர்ச்சியை ஏற்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. முருகியல் இன்பப்பயன் அணிநிலை உத்திகளின் முதன்மை நோக்காக அமைகின்றது.

        அணிகளுள் உவமையே தலைமையும், சிறப்பும் பொருந்தியதாகக் ஒப்புமைப்படுத்திக் கூறும் இவ்வுவமைகள் இலக்கியத்திற்கு நயம் கருதப்படுகின்றது. வெவ்வேறு வகையைச் சேர்ந்த இருபொருள்களை சேர்க்கின்றன. உவமைகள் கையாளப் பெறாத இலக்கியங்களே இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

       உவமைக்கு அடுத்து இடம் வகுப்பது “உருவகம் எனலாம். கருத்தும், கருவியும் ஆகிய இரு கூறுகளால் இவ்வுருவகம் அமைந்ததாக விளக்குவர். இவற்றுள் கருத்து என்பது கூறவிழைந்த பொருள்; கருவி என்பது அக்கருத்து வெளிவரும் உருவம்.

இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார காவியத்தில்,

“கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழிந்தாங்கு

இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்

திங்களும் ஈண்டுத் திரிதல் உண்டுகொல்”

             என்று இந்திரவிழா காணவந்த பெண்களைத் திங்களாகவும். வானவல்லியாகவும், கமலமாகவும், கூற்றமாகவும் காட்டுவது முழு உருவகமாக அமைகின்றது. உருவகம் பல ஒருபொருள்மேல் தொடர்ந்து வந்து ‘மாலை உருவகமாக அமைதலும் உண்டு.

”———————————————–வானச்

சோலையிலே பூத்த தனிப்பூவோ, நீதான்

சொக்க வெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ”

       என்று தம் புரட்சிக்கவி காவியத்தில் ‘நிலவினை’ மாலை உருவகமாக அமைத்துக் காட்டியிருப்பது உருவக உத்தீக்குச் சான்றாகிறது.

       நுண்பொருளுக்குப் பருப்பொருள் வடிவம் கொடுத்து ஆற்றல் உடையதாகச் செய்து. இலக்கியப் படைப்பிற்கு உதவுவதில் உவமையும். உருவகமும் முன்னிற்கின்றன. இவ்வுருவகம் குறியீட்டு நிலைக்கு உயரும் போது பிறிதொரு உத்தி உருவாகின்றது (Symbol) குறியீட்டின் சிறப்பு அது உணர்த்தும் குறிப்புப் பொருளிலும், உருவகத்தின் நேரடித் தொடர்பினை விட்டு மீள்வதிலும் அமைகின்றது என்பர்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்ததுகாடு – தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

என்ற பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ சிறந்ததொரு குறியீடு எனலாம்.

          உணர்வுக்கு முதன்மை கொடுத்து இலக்கியம் இயற்றப்படுகிறது. சுவையணி, மெய்ப்பாடு பற்றிய எண்ணங்கள் இங்கு சிந்திக்கத்தக்கது. படைப்போனின் உணர்வு வெளிப்பாடும், கற்போனின் உணர்வுப் பிரதிபலிப்பும் ஆகிய இருநிலைகள் இங்கு அமையலாம். தன்னுணர்ச்சிக் கவிதையில் கவிஞனின் சொல்லாட்சி அவன் உணர்வை வடித்துத் தருவதில் வெற்றிக் காண்பதனை உத்திச் சிறப்பாகக் கொள்ள முடிகின்றது. உணர்வின் மிகுதிக்கேற்பச் சொல், தொடர், வெளியீட்டமைப்பும் உருவாகின்றன.

“பார், சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்

எத்தனை தீப்பட்டெரிவன? ஓகோ!

என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்! வெம்மைத் தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி

நீலப் பொய்கைகள்! அடடா…” (பாஞ்சாலி சபதம் – 152)

எனும் பாரதி பாடல் அடிகள் இதற்குச் சான்றாகின்றன.

8. வடிவநிலை உத்திகள்

      அணிநிலை உத்தியினின்று ஓரளவு வேறுபட்டு நிற்பன, அழகு, நயம், புதுமை, பயன் போன்ற பல்நோக்குக் காரணமாக அமைவன வடிவுநிலை உத்திகளாகும். நூல் அல்லது இலக்கிய வகைக்கு ஏற்ப அதன் உத்திகள் வேறுபட்டு உருவாகின்றன. எல்லா மொழியிலும் பெரும்பாலும் பண்டைய இலக்கியங்கள் செய்யுள் வடிவில் அமைந்தமையால் யாப்பு உத்திகளும் இடம்பெற வாய்ப்பு மிகுகின்றது.

       காப்பியம், நாடகம் போன்ற தொடர்நிலை இலக்கியங்கள் பல அமைப்பியல் உத்திகட்கு கடனாகின்றன. பாடு பொருள் ஆக்கத்திற்குக் கவிதைத் தலைவியின் அருள் வேண்டுதல் (INVOCATION) காப்பியத் தொடக்க உத்தியாக அமைகின்றது. காப்பியத்துக்கு மட்டுமன்றி எந்த நூலுக்கும், இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் இறைவாழ்த்துத் தொடக்கம் இடம் பெறுவது மரபுத் தொடர்ச்சிக்காட்டும் உத்திவகைகளுள் ஒன்றாக அமைதல் குறிப்பிடத்தக்கது.

      காப்பியக் கதைத் தொடக்க உத்தியாக நடுவில் தொடங்குதல் என்பது அமைகின்றது. காப்பிய உத்தி நிலையிலிருந்து பரந்து தற்காலத்தில் நாடகம், கதை, புதினம் போன்ற புனைவுகளுக்கும் இது விரிந்துள்ளது.

        இடைக்காட்சி (Interlude) பண்டை நாடக் கூறாக அமைந்துள்ளது. இடைவேளையை நிரப்பி இவை அமைகின்றன. குழுப் பாடகரும் (Chorus) நாடகப் போக்கிற்கு உதவும் உத்திநிலையில் நாடகாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டனர்.

       நகைச்சுவை இடையீடு தொடர்நிலை இலக்கியத்தின் மற்றொரு உத்தியாகத் தென்படுகிறது. ஒரு காட்சியாகவோ, கிளைக்கதையாகவே கூட இது அமையமுடியும். சீரியமுனைப்பு உள்ள நாடகத்தில் இடையில் வந்து உணர்வுத் தணிப்புச் செய்தல் இதன் முக்கிய நோக்கமாக அமைகின்றது. முன் நிகழ்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து பின் தொடரும் நிகழ்வுக்கு மனத்தைச் செலுத்தவும் இது உதவுகிறது. சிலம்பில் கொலைக்களக் காட்சிக்குப்பின் அக்கொடுமையின் உணர்வுத் தணிப்பாசித் தொடரும் ஆய்ச்சியர் குரவையின் இசையும் ஆடலும் இங்கு நினைக்கத்தக்கன. சிலப்பதிகாரம் காப்பியமாயினும், நாடகப் பாங்குடைமை பற்றி இக்கூறு இணைவுப் பொருத்தம் புலப்படுகின்றது.

          சிக்கல் அவிழ்தல் (Denuouement) தொடர்நிலை இலக்கிய முடிப்பு உத்தியாகக் கருதத்தக்கது. நாடகம், காப்பியம், கதை போன்ற பலவகை இலக்கியங்கள் இதனைக் கொண்டு முடிகின்றன. தொடக்கம் முதல் முடிவுவரை ஆக்க அமைப்புக் கூறுகளுடன் இணைந்து வரும் இவ்வுத்தி முறைகளுடன், அடியார்க்கு நல்லார் கூறும் முகம், பிரதிமுகம், கருப்பம். விளைவு. துய்த்தல் ஆகியனவற்றை இணைத்து நினைக்கலாம். கதைப் போக்குக்கு உரிய படிநிலை உத்திகளாக இவை அமைகின்றன எனலாம்.

9.அமைப்புநிலை உத்திகள்

          தொடர்நிலை இலக்கியங்கள் சிலவற்றின் இவ்ஆக்க அடிப்படையின் அமைப்பு உத்திகள் ஒரு பாலாக, பிற சில கூறுகளின் அடிப்படையிலும் அமைப்பு உத்திகள் காணப்படுகின்றன. அமைப் பொருண்மைகள் சில இலக்கங்களிடையே அமைந்து, அவற்றை ஆட்சிநிலை உத்தியாகக் கருதச் செய்கின்றன. ஒரு அடிப்படை நிகழ்வுக் சூழல், பாத்திரம் அல்லது உருவருணனையில் இவ்அமைப்புப் பொருண்மை வாழ்வியலிலும் அவ்வாறே இலக்கியத்திலும் அமைந்து தொன்மை வகை அமைப்பொருண்மையாகச் சுட்டப்படுகின்றது.

       ஒரு பெண் கல்லாகுதலும் மீண்டும் தன் உருப்பெறலும், கண்ணகி கூறும் கற்புடைப் பெண் கதையிலும் அகலிகை வாழ்விலும் அமைந்து நிகழ்வுச் சூழலில் ஒருமை காட்டுகின்றது. கணவனால் கைவிடப்பட்ட பெண், அனாதைக் குழந்தை, மாற்றாந்தாய் போன்ற பல பாத்திரங்கள் பலகால பல்வகை இலக்கியங்களில் அமைந்து பாத்திரம் – பண்பு அடிப்படையில் அமைப் பொருண்மை காட்டுகின்றன. சாபமளித்தல், போரில் வீரச் செயல்புரிதல், நெய்தல் தலைவி காமம் மிக்க கழிபடர்க்கிளவியுடன் இரங்கல் போன்ற பலவற்றின் பயிற்சியால் செயல் அமைப் பொருண்மை காணப்படுகின்றது.

      பழமையான கருத்து ஒன்று மீண்டும் இலக்கியத்தில் மற்றும் கற்பனைப் படைப்பில் பயின்று வருவதற்குக் காரணம் அது படைப்போனின் ஆழ்மனத்தில் பதிந்து கிடத்தலே எனவும் இத்தகு கருத்துகள் மக்களின் ஆழ்மனப் பதிவுகள் எனவும் உளவியல் அடிப்படையில் கருதுவர். இவ்வாறு ஒர் அடிப்படை அமைப்பொருண்மையைக் கையாளுவதன் வாயிலாகக் கவிஞன் தன் எண்ணங்களை வெளியிடுவதாலும், தன் நோக்கம் நிறைவேறுவதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாலும் அவை உத்திநிலை பெறுகின்றன எனலாம்.

10. யாப்பு நிலை உத்திகள்

       யாப்பு உத்திகள் செய்யுள் இலக்கிய வகைகளில் மிக இன்றியமையாத இடம் பெறுகின்றன. செய்யுளின் ஒழுங்கமைப்புக்கு மிகத் தேவையான உத்திநிலையை யாப்பு வடிவம் அளிக்கிறது. செய்யுள் அடியின் பொருள் ஒழுங்கு, பாடலின் ஓசை ஒழுங்கு, ஒலி விட்டசை போன்ற பல கூறுகளைக் கருதுவதற்கு இடம் அமைகின்றது.

         யாப்பின் இன்றியமையாக் கூறாக ஓசையொழுக்கு அமைகின்றது. செய்யுளின் ஆக்க உறுப்புகளில் இது இடம் பெறுகிறது. படைப்பாசிரியனின் கருத்து, பொருள் இவற்றிற்கேற்ற வெளியீட்டு நிலையில் உருவாகும் பாங்கு இதன்கண் அமைவதால் இதில் ஆக்குவோனின் தனித்தன்மையும் வெளிப்படுகின்றது. சிறந்த பாடல்களில் உணர்வோடு ஒன்றியே ஓசையொழுங்கு புலப்படுகின்றது.

      கவிஞனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அவன் கையாளும் பாடுபொருளுக்கு ஏற்பவும் யாப்பு உத்திகள் உருவாகின்றன; கையாளப்படுகின்றன. இதனால் மரபு யாப்பு வரைமுறைக்கு உட்பட்டே இலக்கியம் பலவும் ஆக்கப்படுகின்றபோதும், உத்தி வேறுபாடுகளும், புதுமைகளும், தனித்தன்மைகளும் இடம் பெறுகின்றன.

          வெளியீடே உத்திக்கு மிகுதியான இடம் அளித்த போதும், வெளியீட்டுக் கூறுகளே பெரும்பான்மையாக உத்தி உருப் பெற்றபோதும், பொருளும் வடிவும் கூட உத்திக்கு இடனாயும் உத்தியாயும் இயன்ற நிலை மேற்கண்ட செய்திகளால் புலப்படுகின்றன. இதன் அடிப்படையில் இலக்கியத் திறனாய்வு உத்திகள் அமையப் பெற்று ஆய்வு மேற்கொண்டு இலக்கியத்திற்கு வலிமையும், பொலிவும் சேர்க்கின்றன எனில் அது மிகையாகாது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடல்கள் ஓர் ஆய்வு

காரிமங்கலம்-வட்டார-ஒப்பாரிப்-பாடல்கள்-ஓர்-ஆய்வு

ஆய்வுச்சுருக்கம்

            காரிமங்கலம்  வட்டார மக்களிடம் புதைந்து கிடக்கும் ஒப்பாரிப் பாடல்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாய்வு நிகழ்த்தப்படுகின்றது.  அதோடு அம்மக்களிடம் உள்ள உறவு நிலையில் பிணைப்பும் அவர்களின் சுகதுக்கங்கள் என அனைத்தும் ஒப்பாரியின் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் காண்கின்றோம்.  மேலும், ஒப்பாரிப் பற்றிய அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி, காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடலின் அமைப்பு முறைகள் ஆகியன இவ்வாய்வில் எடுத்தாளப்பட்டுள்ளன.

திறவுச்சொற்கள்

காரிமங்கலம் ஒப்பாரிப் பாடல்கள், ஒப்பாரி, ஒப்பாரி அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி போன்றன.

முன்னுரை

மனிதன் இசையிலே பிறந்து  இசையிலே வளர்ந்து இசையிலே இறக்கின்றான். இக்கூற்றை நாட்டுப்புற இலக்கியம் நிருபிக்கின்றது. பிறக்கும் பருவத்தில் தாலாட்டு, வளரும் பொழுதில் காதல் பாடல்கள், இறக்கும் பொழுது ஒப்பாரி என மனித வாழ்வில் இடம்பெற்று இசையாகத் திகழ்கின்றது. இவ்வாறாக மனிதன் வாழ்வில் ஒரு அங்கமாக ஒப்பாரி பாடல் விளங்குகின்றது. இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் மனிதனின் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. மனிதனின் வாழ்க்கைச் செயல்பாடுகள் உறவுநிலைகள் பெருமைகள் அவனுடைய சேவைகள் அனுபவித்த இன்பத்தின் நிகழ்வுகள்   ஆகியவற்றை நினைவு படுத்துவது ஒப்பாரியாகும். இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் காரிமங்கல வட்டார மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. இப்பாடல்களை ஆய்ந்து அம்மக்களின் பண்பாட்டு நிலைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஒப்பாரி பொருள்

            இறந்தவர்களை நினைத்துப் பாடப்படும் பாடல்கள் ஒப்பாரிப்பாடல்கள் எனப்படும். வாழ்வின் முன்னுரை தாலாட்டு என்றால், முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டும் ஒப்பாரியும் பெண்குலத்தின் படைப்பாகும். ஒப்பாரியே ஒப்பு + ஆரி எனப் பிரித்துப் பொருள் கொள்வர்.  நாட்டுப்புறவியல் அறிஞர் சு. சக்திவேல் அவர்கள் “இறந்தவர்களை நினைத்துப் பாடும் பாடலே ஒப்பாரி என்பார். இறந்தவர்களின் இழப்பை எண்ணி இறந்தவர்களையும் தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதும் ஒப்பாரியாகும்”1 என்கிறார்.

            “தமிழில் ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல் பாட்டு, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு எனப் பல வகையாகக் கூறுவர். பாதுகாப்பை இழந்தபோதும் பாதுகாக்கப்பட வேண்டியதை இழந்தபோதும் பெண்களின் ஒப்பாரியில் சோகம் வெளிப்பட்டு நிற்கின்றது”2  என்கிறார் சு.சக்திவேல். மேலும், இரத்த உறவினர்களையோ நட்பு அடிப்படையில் நெருக்கமானவர்களையோ மதிப்புமிக்க செல்வம் முதலிய உடைமைகளையோ இழக்கும்போது ஏற்படும் சோகத்தின் வெளிப்பாடாக ஒப்பாரி (இழப்புப் பாடல்கள்) அமைகின்றது.

ஒப்பாரி அகராதி விளக்கம்

            ஒப்பாரி என்ற சொல்லுக்குப் பல்வேறு அகராதிகள் பொருள் விளக்கத்தைத் தருகின்றன. அவ்வகையில் கதிர்வேற்பிள்ளையின் தமிழ் அகராதி “இறந்தவர் பொருட்டு பாடும் அழுகைப்பாட்டு”3 என்று பொருள் வைக்கின்றது. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி “இழவு வீட்டில் இறந்துபோனவரைக் குறித்த அழுகையும் புலம்பலும் பாட்டுவடிவில் வெளிப்படுவது”4 என்கிறது. சென்னைப் பல்கலைக்கழக பேராகராதி “அழுகைப்பாட்டு”5 என சுட்டுகின்றது. தமிழ் – ஆங்கில அகராதி “ஒப்பு சொல்லி அழுதல் என்று பொருள் கூறுகிறது அதோடு பெண்களால் பாடப்படுவது என்றும் இறந்தவர்களுக்கும் அடுத்துப் பிற பொருள்களுக்கும் ஒப்பு சொல்லி பாடுவது”6 என்று கூறுகிறது. இவ்வாறாகப் பல்வேறு அகராதிகள் பொருளுரைக்கிறது. ஆகவே ஒப்பாரி என்பது இறப்புக்காக மட்டுமே பாடப்படுவதாகும் என்பதை அறியமுடிகிறது.

இலக்கியங்களில் ஒப்பாரி

            ஒப்பாரி குறித்த செய்திகள் பிற்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் குறித்துக் கீழ்க்கண்ட இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சித்தர் பாடல்,

                        “அவரவர் அழும்போது ஒப்பாரி சொல்லி

                        அழுகின்ற வயணம் கண்டேன்”7

என்று குறிப்பிடபட்டுள்ளது. அதாவது இறப்பின்போது ஒவ்வொரு மனிதர்களும் அழுகின்ற நிலையினைக் கண்டேன் என்ற பொருள் அமைந்திருக்கின்றது. அதேபோல் அருணகிரிநாதர் பாடலில்,

                        “சமர்படுகளத்து ஒப்பாரி வைத்திருக்கும்

                        அஞ்ஞானம் விட்டனன்”8

என்று இடம்பெறுகிறது. போர்க்களத்தில் ஒப்பாரி வைக்கின்ற நிலையை குறிப்பிடுகின்றார். மேலும்,

                        “படுகளத்தி  லொப்பாரியாகிய

                        கருணை மொழியை கூறுவாருண்டோ”9

என்ற பாடலடி ஒப்பாரியைப்பற்றி குறிப்பிடுகின்றது. இவற்றின் அடிப்படையில் காணும்போது ஒப்பாரி என்பது ஆரம்பக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே வழங்கப்படுகின்றதை இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இறப்புச் சடங்கும் ஒப்பாரியும்

            பொதுவாக இறப்பு நிகழ்ந்த நாள் முழுவதும் ஒப்பாரி பாடப்படுகின்றது. நீத்தார்க்கடன் எனப்படும் கருமாதிச்சடங்கு நடைபெறக்கூடிய சமூகத்தைப் பொறுத்து 5, 7, 9, 11 நாள் வரை ஒவ்வொரு நாளும் ஒப்பாரி பாடுவர். காலையிலும் மாலையிலும் நெருங்கிய உறவினர்கள் புடைசூழ இறந்தவரின் வீட்டில் ஒப்பாரிப் பாடுவது மரபாகும். அதேபோல் இறந்து மூன்றாவது மாதம், பதினோராவது மாதம் இறந்தவருக்கென்று வீட்டில் படையல் வைத்து வழிபடுவர். அப்போதும்கூட ஒருசிலர் ஒப்பாரி பாடுவதைக் காணமுடிகிறது.

காரிமங்கல வட்டார ஒப்பாரி

            மேற்கண்ட நிலைகளில் ஒப்பாரிப் பாடல்கள் அமைகின்றன. இவற்றின் வரிசையில் காரிமங்கல வட்டார ஒப்பாரிப் பாடல்களைக் காணலாம். அந்தவகையில், தந்தையை இழந்த மகள் பாடும் பாடல்,

                        “தலைமயிரை விரிச்சுவிட்டு

                        தருமபுரிபோய் நின்னா – என்னைத்

                        தருமபுரி வைத்தியரு

                        தங்கிப்போ இன்னாரு – நான்

                        தங்க முடியாது – எங்கப்பா வீட்டு

                        தங்ககரதம் சிக்காது ……”10

என்று தந்தை இறந்த செய்திகேட்டு வேகமாகப் பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப்போகச் சொல்கிறார்கள். ஆனால் இவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வருகிறாள் என்ற செய்தியை இப்பாடலைப் பாடியவரின் விளக்கத்திலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும்,

                        “சேலத்தான் பட்டெடுத்தால்

                        சீருக் குறையுமின்னு

                        மொரப்பூரான் பட்டெடுத்தால்

                        மோப்புக் குறையுமின்னு

                        காரிமங்கலம் பட்டெடுத்தா

                        கலையழகு குறையுமுன்னு

                        அல்லி தரிமூட்டி

                        செல்லிக்குப் பட்டுடுத்தி ……”11

என்ற பாடலின் மூலம் தன் தங்கையின் விதவைக் கோலத்தைக் கண்டு அண்ணன் அழுகின்ற நிலையை அறியமுடிகிறது. கணவன் இறந்தபின் மனைவிக்கு அவளுடைய சகோதரர்கள் கோடிப்புடவை எடுத்துக் கொடுப்பார்கள். இப்புடவையைக் கோடித்துணி என்றும் அழைப்பர். நல்ல காரியங்களுக்குப் பட்டெடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே கோடித்துணி வாங்கும் நிலை ஏற்பட்டதைக் குறித்து தங்கை வருந்துகின்றாள். நல்ல காரியங்களுக்கு கடைகளைத்தேடி நல்ல பட்டெடுத்த அண்ணன் இக்காரியத்துக்கும் ஊர்ஊராக அலைந்து நல்ல பட்டெடுத்தாரோ என்று சொல்லி அழுகின்றாள். தங்கையின் சொல்கேட்டு அண்ணன் அழுகின்றான் என்ற செய்தியை இவ்வட்டார ஒப்பாரிப் பாடல்கள் மூலம் அறியலாம். மேலும்,

            தங்கிப்போ, சேலத்தான், மொரப்பூரான், காரிமங்கலத்தான் என்பது வட்டார வழக்கைச் சுட்டிநிற்கின்றது. தங்கிப்போ என்பது அமரு, உட்காரு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. உறவு நிலைகளில் முதன்மை இடத்தைப் பெறுவது தாயாவாள். அத்தகைய தாய் இறந்தபோது இவ்வட்டார மக்களின் இறப்புப்பாடல் இத்தகைய அமைப்பில் அமைகிறது.

                        “நடுபட்ட வடுகெடுத்து என்ன பெத்தவளே

                        நெத்தியிலே பொட்டு வச்சி

                        இனிக்கபேசி அனுப்புனியே எம்மா

                        இன்னிக்கி இப்புடி விட்டுட்டியே”12

என்று பாடுகின்றனர். பெரும்பாலும் தாய் இறந்துவிட்டால் தலைமாட்டில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதரிகதரி அழுபவள் அவளுடைய பெண் பிள்ளையே ஆவாள். ஆண்பிள்ளை அவ்வாறு அழுவதில்லை. அத்தகைய பெண் பிள்ளையானவள் நடுபட்ட வடுகெடுத்து தலைவாரி அழகு செய்தவளே நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்தோடு என்னை அனுப்பி வைத்தவளே என்று தன்தாயின் இழப்பை எண்ணிப் பாடுகின்றாள்.

            தாய் இறந்து போனதால் மகளுக்கு உண்டான சோகத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஒப்பாரிப்பாடல் அமைகிறது. அதாவது, தாய் ஒரு ஊரிலும் மகள் வேரொரு ஊரிலும் வாக்கப்பட்டு வாழ்கின்றாள். மகளானவள் எழுதப்படிக்கத் தெரியாதவள். தாய் வீட்டிலிந்து கடிதம் வருகின்றது அக்கடிதத்தைத் தபால்காரனையே படிக்கச்சொல்லி மகளானவள் தாய் இறந்த செய்தியை அறிந்துகொள்கிறாள். பிறகு பெற்ற பிள்ளையைவிட்டு கட்டிய கணவனையும் விட்டு ஓடோடி வருகிறாள் அவ்வேளையில் தாய்க்காகப் பட்டுப்புடைவை வாங்க நினைத்து பல ஊர்களுக்குச் செல்கின்றாள். அவ்வூர்களில் தாய்க்கேற்ற பட்டுப்புடவை கிடைக்காததால் தரியிலே நெய்து தாம்புலத்தட்டில் ஏந்தி கண்ணீர் கரைபுரண்டோட தாய் வீட்டிற்கு வந்து சேர்கின்றாள். இச்செய்தியானது,

                        “எழுதி படிச்சவரே இங்கிலீசு கத்தவரே எடுத்துப் படிச்சுப்பாரே

                          இது வாழ்வோலையோ சாவோலையோ

                         சாவோலை என்றதுமே அவுரேவும் கேக்காம

                         கைப்புள்ளையும் எடுக்காம பொட்டியில பணமெடுத்தா

                        எனக்கு பொழுதேறி போகுமுன்னு சட்டியில பணமெடுத்தா

                        சாய்ங்காலம் ஆகுமுன்னு உரியில பணமெடுத்து ஓடிவந்தேன்

                       டேசனுக்கு – திருட்டு இரயில் ஏறி திருப்பத்தூர் போயிரங்கி

                        திருப்பத்தூர் செட்டியாரே என்ன பெத்த சீதாவும் செத்துவிட்டா

                        செகப்பு கலருல சிறுகலரு தாருமண்ணா?”13

          என்ற ஒப்பாரிப்பாடலில் அமைகின்றது. மனதை உருக வைக்கும் பாடல் ஏட்டில் எழுதப்பெறவில்லை என்றாலும் காரிமங்கல வட்டார மக்களின் மனதில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலில் ‘அவுரேவும்’ என்ற சொல் கணவனைக் குறிப்பதாகும். கணவனைக் கடவுளுக்கு மேலாக இப்பகுதி பெண்கள் நினைப்பதால் அவரிகளின் பெயர்களை எந்தக் காரணத்திற்கும் சுட்டி சொல்லமாட்டார்கள். ஆகவே இச்சொல்லானது இவ்வட்டார மக்களின் வழக்குச்சொல்லாகும்.

     தாயின் இறப்பில் அழுவதைக்காட்டிலும் தந்தையின் இழப்பில் பெண்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாவற்றையும் சொல்லி கண்ணீரே வற்றுகின்ற அளவிற்கு மகளானவள் அழுவாள் என்பதை,     

                       “கால் சிலம்பு ரோசாவே பூவே

                        காலஞ்சென்ற மல்லி மொக்கே

                        காலஞ்சென்ற நாளையிலே எப்பா

                        கட்டிலில சாஞ்சிருந்தா

                        கட்டிலுக்கு அழகு உண்டு எப்பா

                        இந்த நாட்ல எனக்கும் காவல் உண்டு

                        கட்டிலிட்டு கால் வாங்குனா

                        கட்டிலுக்கும் அழகில்ல

                        காவலுக்கும் ஆலில்ல”14

           எனும் மகளின் ஒப்பாரியை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் கால் வாங்குனா என்ற சொல்லுக்கு எழுந்து போதல், அவ்விடத்தை விட்டு நீங்குதல் என்ற பொருளில் வருகிறது.

அண்ணன் தங்கை உறவில் வெளிப்படும் ஒப்பாரி

            அண்ணன் தங்கை உறவு நிலைகளைப் பற்றி பல திரைப்படங்களில் காணமுடிகிறது. அவ்வாறு அண்ணன்களும் தங்கைமார்களும் மிகுந்த பாசம் கொண்டவர்கள். அத்தகைய சூழலில் அண்ணன் இறந்தபோது,

            “குங்கும எண்ணெய் எடுத்து என்ன பெத்த குயிலா குளிக்கும் தண்ணி

                        கொல்லையில போய்பாயும் கொல்லபுரம் தண்ணியில

                        கொண்டலறி பூ பூக்கும் கொண்டலறி பூ அறுத்து

                        என்ன பெத்த குயிலாலுக்கு கோபுரம் போல் தேருகட்டி

                        என்ன பெத்த குயிலால எடுத்துவச்சி………”15

       எனத் தங்கையை இழந்த அண்ணன் தன்தங்கை வளரும் பருவத்தில் அவள் பூந்தோட்டம் வைத்து வளர்த்த நிலையையும் அப்பூவே அவளுடைய தேர்ப்பாடைக்கு வந்ததை எண்ணி அண்ணன் புலம்புவதைக் காணமுடிகிறது. அதேபோல்,

                        “ஆத்துக்கு அந்தாண்ட ஆடு மேய்க்கும் அண்ணாவே

                        நா ஆட்டுமணி சத்தம் கேட்டு அல்லி மொளகா அரைப்பேன்

                        அவரைக்காய் நாருரிப்பேன்……… ………”16

          என்று அண்ணன் மீது பாசம்கொண்ட தங்கை அவன் தன்னோடு இருந்த காலத்தில் அவர் வரும் சத்தம் கேட்டே அவருக்கு பிடித்தமான அவரைக்காய் குழம்பு செய்து வைத்துக் காத்திருந்த தங்கையின் புலம்பலில் தெரிகிறது. அதோடு தங்கையை அண்ணன் வளர்த்த விதத்தையும் தங்கை அண்ணன்மீது கொண்ட பாசத்தையும் நினைத்து மனமுருகிப் பாடுவதை இவ்வட்டார மக்களிடம் காணமுடிகிறது.

புகுந்த வீட்டில் பெண்படும் துன்பம்

            ஒப்பாரி பாடும்போது பெண்கள் தாங்கள் முதலில் வாழ்ந்த வீடான தந்தை வீட்டிற்கு வந்ததும் அவர்களுடைய பழைய நினைவு வருகிறது. அதை இப்போது வாழும் வீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பாரி வைக்கும் பாடல்,

                        “தங்க மலைமேலே தாலறுக்க போனேனே

                        தாளறுத்தா பாவமில்ல எம்மா என்னை

                        தட்டிஅடிச்சா கேட்பாறு இல்ல

                         ——————————————————————–

                        மாங்கா மரத்தடியில் மயில்போல குந்தியிருந்த எம்மா

                        என்ன மயிலுன்னு பாக்காம மருந்துபோட்டு கொன்னாங்க

                        பச்ச இலப்பமரம் பலசாதி வேப்பமரம்

                        படிக்காத ராஜனுக்கு எம்மா உம் பார்வதியும் மாலையிட்டா

                         நாள்முதலா எம்மா தேங்காய் இளநீரோ தீராத கண்ணீரோ …..”17

       என்ற பாடலின் மூலம், பெண் புகுந்த வீட்டிற்கு போனபின் கணவன் சொல்லைக் கேட்டு நடந்தாலும் கூட அங்கு இருக்கும் பிறரையும் மதித்து நடக்க வேண்டும். அதில் சிறுதவறு ஏற்பட்டாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து இப்பெண்ணை சாடுகின்றனர் என்பது புலனாகிறது. அதனாலே ‘தடடி அடிச்சா கேட்பாரில்ல’ எனும் அடி மாமியார் வீட்டில் அடிக்கின்ற கொடுமையை அப்பெண் பதிவு செய்கின்றாள். மேலும், ‘குண்டு போட்டு சுட்டாங்க’ ‘மருந்து போட்டு கொன்னாங்க’ என்ற சொல்லானது தன்னை கொன்று விடுவார்கள் என்பதை மிகுந்த அச்சத்தோடு கூறுகின்றாள். ‘தேங்கா இளநீரோ எம்மா தீராத கண்ணீரே’ என்னும் அடி மாமியார் வீட்டில் அழது அழுது கண்ணீரே வற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

            விதவைப் பெண்ணொருத்தி திருமணமான தம்பதியர்களைக்கண்டு,

                        “வடக்கே மதுரையில வடமதுர வீதியில

                        எஞ்சோட்டு பொண்ணுங்கெல்லாம்

                        செம்மையா பொலக்கிறாங்க

                        ஒரு செல்வெடுத்து கொஞ்சராங்க ……”18

      என்று மனம் வெதும்பி பாடுகிறாள். காரணம், சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் அவளால் அவள் தோழிகளைப்போல் பிள்ளைக் குட்டிகளோடு வாழாது தன்வாழ்வே பாலைநிலமாய் போனதாக எண்ணி வருத்தப்படுவதை இப்பாடலில் காணமுடிகிறது.

தொகுப்புரை

                        இவ்வாறாகக் காரிமங்கல வட்டார மக்களிடம் தாய், தந்தை, அண்ணன், கணவன் ஆகிய உறவு நிலைகளில் பிண்ணிப்பினைந்தவர்கள். இறந்தபோது அவர்களின் உள்ளத்தில் தங்கியிருந்த சோகமானது ஒப்பாரிப் பாடலாக வெளிப்படுகின்றது. அப்பாடலின் மூலம் அம்மக்கள் பேசுகின்ற வழக்குச் சொற்களும் புலப்படுகின்றன. இவ்வட்டார மக்கள் தாலாட்டுப் பாடலையும்கூட  ஒப்பாரிப் போலவே  பாடுவதைக் காணமுடிகிறது.உறவுகள் என்பது மனிதனோடும் மனிதனின் இரத்தத்தோடும் இரண்டறக் கலந்தவையாகும். இவ்வகையான இரத்த உறவுகள் நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்ற போது உள்ளத்திலிருந்து சோகம் உருவெடுக்கும் இவ்வார்த்தைகளே காரி மங்கல வட்டார மக்களின் ஒப்பாரிப்பாடலாகும் என்பதை ஆய்வில் அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.          சு.சக்திவேல், நாட்டுப்பறவியல் ஆய்வு, ப. 182

2.          மேலது, ப. 59

3.          எஸ்.கௌமாரீஸ்வரி, நா.கதிர்வேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ப. 322

4.          பாராசுப்ரமணியன், கிரியாவின் தமிழகராதி, ப. 201

5.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

6.          தமிழ் ஆங்கில அகராதி, ப. 567

7.          சித்தர் பாடல்கள், பா. 2

8.          அருணகிரியார் பாடல், ப. 6: 25

9.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

10.        10 முதல் 18 வரையுள்ள பாடல்கள் அனைத்தும் காரிமங்கல வட்டார மக்களிடம் சேகரித்தது.

ஆய்வாளர் பெயர்                                                                                   நெறியாளர் பெயர்

திரு.இல.பெரியசாமி                                                                               முனைவர் க.லெனின்

முனைவர் பட்ட ஆய்வாளர்,                                                                    உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,                                                     தமிழாய்வுத்துறை,

பெரியார் பல்கலைக்கழகம்.                                                                   எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,        

தொலைபேசி எண் : 97861 80599                                                            தொலைபேசி எண் : 70102 70575

மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com                                           மின்னஞ்சல் முகவரி leninkesavan@outlook.com

நேர்காணல் | சிறுகதை

நேர்காணல் சிறுகதை

            பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது.  கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கத்தில் விளம்பரக் கட்டம் ஒன்று இருந்தது. அவ்விளம்பரத்தில் “ஒப்பாரி” பற்றிய சிறந்த கட்டுரைக்கு ஐந்து இலச்சம் பரிசுத்தொகை மற்றும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளும் இலட்சத்தில் போடப்பட்டிருந்தன. ராம் மனம் மகிழ்ந்தான். எப்படியாவது ஒப்பாரி பற்றிய ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைத் தர வேண்டும். பரிசுகள் கிடைக்காவிட்டாலும் கட்டுரையை முன் வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது.

      படித்தவனுக்கு அறிவு அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் படித்தவன் தோற்று போவதையும் படிக்காத அனுபவமுள்ள சிலர் பல நேரங்களில் வெற்றியடைவதையும் பார்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு படிப்பும் அனுபவமும் அவசியம் வேண்டும். எவன் ஒருவன் ஏன்? எப்படி? எங்கே? என்ன? எப்பொழுது? என்று கேள்வி கேட்கின்றானோ அவனே வெற்றிக்கு சொந்தகாரனாகிறான். ராமும் அப்படித்தான். பிஎச்டி முடித்து விட்டு அரசு அலுவலகம் ஒன்றில் கிளர்க்காக வேலை செய்கின்றான். வேலை விட்டால் வீடு என்று இயந்திர வாழ்க்கையைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருப்பான். கிடைத்த வேலையைப் பிடித்த மாதிரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது பிஎச்டி என்ற எண்ணம் வரும். அப்பொழுதெல்லாம் எதையாவது யோசித்து ஏன்? எப்படி? எப்பொழுது? என்று தனக்குத்தானே கேள்வியைக் கேட்டு கொள்வான். அம்மாதான் சும்மா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அம்மாவோட அண்ணன் பொண்ண கட்டிக்கினுமா! ஆனாலும் நான் இவ்வுலகத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றேன். 

      “டே ராம்… என்ன யோசனையில இருக்க. காலியான காபி டம்ளரை கீழே வச்சிட்டு அப்புறமா படிடா. அப்பப்ப மரம் மாதிரி அசையாம நின்னுற… எனக்கு வேற பயமா இருக்குடா!” என்று புலம்பித் தள்ளினாள் அம்மா சந்திரா.

      “அம்மா… நீ தேவையில்லாம பயப்படாதம்மா.. எனக்கு ஒன்னும் இல்ல!”

      “வயசாகிட்டே போவுது. காலகாலத்துல கல்யாணம் நடந்தா நா நிம்மதியா இருப்பேன்”

      “சரிம்மா… உன் அண்ணன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். போதுமா..” அம்மாவின் வாய்யடைக்க ராமின் தந்திரம்தான் இது. இதற்கு மேல் அம்மா எதுவும் பேசாமல் சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.  மீண்டும் செய்தித்தாளில் மூழ்கினான். 

             கள்ளக்குறிச்சிக்குப் பக்கத்தில உள்ள அந்தக் கிராமத்தைப் பற்றி பிஎச்டி ஆய்வு மேற்கொள்ளும் போதே அறிந்து வைத்திருந்தான். அக்கிராமத்தில் மேனாள் என்கிற கிழவி ஒருத்தி இருந்தாள். முடி நரைத்து கூன் விழுந்து தோல் சுருங்கி நடை தள்ளாடும் ஊருக்கு அழும் பிறப்பைக் கொண்டவள். அக்கிராமத்தில் யாருடைய இறப்புக்கும் மேனாள்தான் ஒப்பாரி வைப்பாள். அவளுக்கு கூலிக்கு மாரடிக்கிற வேலை. நடு ராத்திரி ரெண்டு மணி வாக்குல போனான்னா… செத்தவரை வச்சு புகழ்ந்தும் ஊர்க்கூட்டியும் மாரடிச்சு அழுவா. அழுததுக்கு விடிஞ்சவுடனே காச வாங்கிட்டு வந்து கொஞ்சமா கஞ்சிக் காச்சி குடிச்சிட்டுப் படுத்துக்குவா. ஏதோ மனசில நினைச்சவளாய் மீண்டும் மனதோடு மனதாய் அழுதுட்டே இருப்பா! மேனாளை ஏற்கனவே ராம் சந்தித்திருக்கிறான். மேனாள் அவ்வளவாக யாரோடும் பேச மாட்டாள். ராமிற்கு உடனடியாக சுந்தரம் மாமாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ராம் சென்ற சமயம் சுந்தரம் எங்கையோ வெளியில் செல்ல முற்பட்டிருந்தான்.

“வாடா மாப்ள… எங்க காலையிலயே இந்தப் பக்கம்” என்றார் சுந்தரம்.

         “ஒரு வேல விஷியமா வெளிய போவனும். வா போகலாம்” என்று உரிமையோடு சொன்னான் ராம். அம்மாவின் மூன்றாவது தம்பிதான் சுந்தரம். மற்ற இரண்டு மாமன்களை விட சுந்தரம் மேல்தான் ராம் ரொம்ப பிரியமா இருப்பான். சுந்தரத்துக்கு இன்னும் குழந்தை இல்ல. ராம்தான் சுந்தரத்துக்கு எல்லாமே. வீட்டுல எதாவது செஞ்சாலும் சுந்தரமே மறந்து போனாலும் கூட சுந்தரத்தின் மனைவி அஞ்சலை உடனே கொண்டு போய் கொடுத்து விட்டு வருவாள்.

         “உங்க அத்தை வெண்பொங்கல் செஞ்சி வச்சிருக்கிறா.. சாப்பிட்டுட்டு டிவி பாத்திட்டு இரு. செத்த நேரம் நான் வசூலுக்குப் போயிட்டு வந்துடறேன்” என்றான். சுந்தரத்தின் அடுத்தப் பதிலை எதிர்பாராமல் வீட்டின் உள்ளே நுழைந்தான் ராம்.

           ஒற்றையடிச் சாலையாய் இருந்ததை இப்போது விசாலமாய் நான்கு வழிச்சாலையாய் மாறி இருந்தது. பைக்கில் சென்று கொண்டிருந்த ராம் பழைய நினைவுகளில் மூழ்கினான். நண்பர்களோடு இக்கிராமத்திற்கு ஏற்கனவே வந்திருந்த மகிழ்ச்சியை நினைத்துக்கொண்டான். மதிய வெயில் உச்சியைத் தொட்டு நின்றது.

         “மாப்ள எங்கயாவது வண்டிய நிறுத்தி கூல்ரிங்ஸ் சாப்பிட்டு போலாமா?” – சுந்தரம். “இல்ல மாமா.. இப்பவே ரொம்ப லேட். சீக்கிரம் போலாம். மேனாள் பாட்டியைப் பாரத்துட்டு நேராநேரத்துக்கு வீட்டுக்கு வரனுமில்ல. அதுவும் இல்லாம உங்க வீட்டு வெண் பொங்கல்ல சாப்பிட்டு வயிறு தொம்முன்னு இருக்கு” – ராம். சுந்தரம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

         பொட்டல் காடு. ஈரப்பசை இல்லாத ஓட்டிய மணலாய் நீண்டதொரு பரப்பு. மணலை ஒட்டிய கரைகள். கரைகள் தோறும் பனை மரங்கள் விண்ணை தொட்டு நிற்கும் அளவிற்கு வளர்ந்திருந்தன. பனை மரத்திற்கு அடியில் முள் வேலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வேலியில் படப்பங்கொடிகள் படர்ந்திருந்தன. அக்கொடிகளைப் பசு மாடுகளும் ஓரிரண்டு ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. வேலிக்கு அடுத்து பத்து பதினைந்து குடிசை வீடுகள் குறுக்கும் நெடுக்குமாய் கட்டியிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்தன. மேனாள் கிழவி வீடும் அங்குதான் இருந்தது. வண்டியில் இருந்து இறங்கியவுடன் ராம்தான் முன்னே நடந்தான். மேனாள் கிழவியின் வீடு பூட்டு போடப்பட்டிருந்தது.

        “மாமா.. பூட்டு போட்டுருக்கு. மேனாள் பாட்டி எங்க போயிருக்குன்னு தெரியல. பக்கத்துக் குடிசையில போயி கேட்டுப்பாத்துட்டு வாங்க..” சுந்தரம் போனவுடன் அக்குடிசையின் கதவுக்கு பக்கத்தில் இருக்கும் திட்டில் அமர்ந்து கொண்டான். அன்று மேனாள் பாட்டி அந்த இடத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். எதிர்புறம் உள்ள திட்டில் ராம் உட்காந்திருந்தான். ஆறு வருடங்கள் ஆனாலும் மேனாள் பாட்டியின் முகம் தெளிவாய் ஞாபகமிருந்தது ராமிற்கு. அதற்குள் சுந்தரமும் வந்து சேர்ந்தான்.

         “மாப்ள.. பக்கத்தில இருக்கிற குடிசை எல்லாமே பூட்டு போட்டுருக்கு. இந்நேரத்துல எல்லோருமே வேல எதுக்காவது போயிருப்பாங்க போல… யாருமே இல்ல” இருவரும் வண்டி நின்ற இடத்திற்கு வந்தார்கள்.  அப்போது முள் வேலிப்பகுதியில் ஆடு மாடுகளை அதட்டிக்கொண்டிருந்தாள் அப்பெண்.

      “மாமா… வரும் போது வெறும் ஆடு மாடுகள்தான மேய்ஞ்சிட்டு இருந்தது. அங்க பாரு மாமா… யாரோ ஒரு பெண் போல தெரியுது”

“ஆமாம் மாப்ள! உச்சி வெயிலுல பேயா இருக்குமா! உடனே கிளம்பிடலாம்பா..”

        சுந்தரம் மாமாவை முறைத்தப்படியே.. “மாமா பேயும் இல்ல. பிசாசும் இல்ல.. வாங்க அந்தப் பொண்ணுகிட்ட போயி விசாரிக்கலாம்” என்றான் ராம். பயந்தபடியே சுந்தரம் ராமின் பின்னாடியே வந்து கொண்டிருந்தார்.

      பின்புறமாய் தெரிந்தாள் அவள். பச்சைக்கலர் ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பழைய முழுக்கைச் சட்டையோடு நின்றிருந்தாள். தலையை முடிச்சு கொண்டை போட்டிருந்தாள். கொண்டைப்போட்ட தலையில் வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க கிழிந்து போன அழுக்குத் துணி ஒன்றினை வேடு கட்டிருந்தாள்.  கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அந்த ஆட்டை அதட்டிக்கொண்டிருந்தாள்.

     அப்பெண்ணின் முதுகுக்குப் பின்னால் இருந்து முதலில் ராம் பேசினான். “இந்தாம்மா… மேனாள் பாட்டி வீடு பூட்டியிருக்கு. அவுங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?” என்றான்.

       “யாரு மேனாள் கிழவியா?” என்று திரும்பி ராமை பார்த்தாள். அவளின் உள்ளம் கருக்கெனச் சுருங்கிப் போனது. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். உள்ள அழுகையும் கண்களில் தெரியும் நீரின் துளியும் பெருக்கெடுத்தன. அவ்விடத்தில் நிற்க முடியாதவளாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓட முற்பட்டாள்.

           என்ன நடக்கிறது என்பதைப் புரியாதவனாய் குழம்பிப் போனான் ராம். “ஹலோ.. ஹலோ.. நில்லும்மா… ஏன் ஓடுறா. நாங்க உங்ககிட்ட அட்ரஸ்தான விசாரிச்சோம். ஹலோ…” என்றார் சுந்தரம். இப்போது ராமும் சுந்தரமும் அப்பெண்ணின் பின்னாலயே ஓடினார்கள். அவள் திரும்பி, “என் பின்னால எதுக்கு வறீங்க… யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க. இது கிராமம். அப்புறம் கண்ணு காது வச்சு பேச ஆரபிச்சிடுவாங்க.. போங்க…” என்று தழுதழுத்தக் குரலிலே சொன்னாள். அவள் சொல்லிக்கொண்டே அந்த மாட்டுத் தொழுவத்தினுள் புகுந்தாள். இப்போது ராமும் சுந்தரமும் மாட்டுத்தொழுவத்தின் வாயிலில் நின்றிருந்தார்கள். உள்ளே அப்பெண் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அவ்விடத்தை விட்டு போய்விடலாமா என்று கூட தோன்றியது ராமிற்கு. அதற்குள் அப்பெண் வெளியே வாசலுக்கு வந்து ராமின் கண்களையே உற்றுப்பார்த்தாள். ராமும் அப்பெண்ணை கவனித்தான். அவளின் முகம் கறுத்துப் போயிருந்தது. உதடுகள் வெடிப்புகள் தோன்றி காய்ந்து போயிருந்தன. கழுத்துப்பக்கம் சிறுசிறு கொப்புளங்களாலோ அல்லது வெயிலின் உக்கிரத்தாலோ அல்லது அவள் அடிக்கடி கைகளால் சொரிந்ததனாலோ கறுப்பு தோலிலும் சிவந்து போய் தடித்துக் காணப்பட்டது. அவளின் முகவாய் தாடையில் ஒரு சின்னதாய் வெட்டு தழும்பு. ராமின் மனம் இப்போது எதையோ நினைத்து உருகியது. அப்படியே அவளின் கண்களைக் கூர்ந்து கவனித்தான். அக்கண்கள் அன்பையும் கருணையும் வெளிப்படுத்தின. கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

          “ஜீவிதா… ஜீவிதா… நீயா.. நீ எப்படி? இங்க? ஜீவிதா.. ஜீவீ..ஜீவீ…” கேள்விகளை அடுக்கி பதிலுக்காக ஏங்கினான். மாட்டுத்தொழுவத்தில் ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. பக்கத்தில் இரண்டு கயிற்றுக் கட்டில்கள். ஒரு கட்டிலில் சேலை முந்தானை கீழே கிடக்க சுருக்கங்களுடன் இரண்டு மார்பகங்களும் தொங்கிக் கொண்டு வாய் நிறை புகையிலையை அடக்கிக்கொண்டு கிழவி ஒருத்தி உட்காந்திருந்தாள். அடுத்தக் கட்டிலில் என்னையையும் மாமாவையும் உட்காரச்சொன்னாள். நாங்கள் இருவரும் தலைகுனிந்தே நின்றிருந்தோம். ஜீவிதா ஏதோ நினைத்தவளாய் அக்கிழவியின் முந்தானையை எடுத்து மாராப்பை மூடினாள். கட்டிலில் இருவரும் அமர்ந்தபின் எதிர்புறமாய் சாணி தரையில் அமர்ந்து கொண்டாள் ஜீவிதா.

       கல்லூரியில் என்னுடன் படித்தவள். படிப்பில் கவனம் கொண்டவள். காரியத்தில் கண்ணாய் இருப்பாள். பேச்சுக்குப் பேச்சு ஏச்சுக்கு ஏச்சு என்றிருப்பவள். எம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஜீவீ.. என்றுதான் அழைப்போம். எதனால் அப்படி கூப்பிடுகிறோம் ஏன் அவ்வாறு கூப்பிடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் கூப்பிடிகிறோம். ஒருமுறை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது விளையாட்டாக டிபன் பாக்சை அவளின் பின்பகுதியிலிருந்து எடுக்க முற்பட்டேன். அப்போது தெரியாதனமாக டிபன் பாக்சின் முனைப்பகுதி அவளின் தாடையில் பட்டு இரத்தம் கொட்டியது. நான் வௌவௌத்துப் போனேன். ஜீவீ மயக்கம் அடைந்து விட்டாள்.  மாணவர்களின் கூட்டம் சேர்ந்து விட்டது. மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார்கள். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜீவீ மறுபடியும் கல்லூரிக்கு வந்தாள். என் தாடையை உடைத்த மாதிரி ராமின் தாடையையும் உடைப்பேன் என்று என்னை கல்லூரி முழுக்க துரத்தியது அனைத்து மாணவர்களும் அறிவார்கள்.  கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு… ஜீவிதாவே பேச ஆரமித்தாள்.

           “நான் ஒரு பையன லவ் பண்ணேன். உங்களுக்கு யாருக்கும் இந்த விஷியம் தெரிய வாய்ப்பில்லை. நானும் எங்க வீடடுல எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவுங்க யாருமே என்னோட காதலுக்கு ஒத்துக்கல எங்க வீட்டுல என்னை பொண்ணுப் பாக்க வந்த அன்னிக்கு எங்க குடும்பத்தை எதிர்த்துகிட்டு அவரோட வந்துட்டேன். கல்யாணம் ஆனதும் என்னை அவரு நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனா கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல வயக்காட்டுல எலிக்கு வச்சிருந்த கரண்டுல என் வீட்டுகாரர் கால வச்சி அங்கயே கருகி செத்துட்டாரு..” சொல்லும்போதே தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து மூக்கைப் பொத்திக்கொண்டு அழத்தொடங்கினாள் ஜீவிதா.

           விதவை, புருசன வாரிக்கொடுத்தவ.. புருசனயே கொன்னுட்டா… ராசி இல்லாதவன்னு என்னை கொஞ்ச கொஞ்சமா ஒதுக்க ஆரமிச்சாங்க. கேட்கறதுக்கு ஆளிள்ள. போகிறதுக்கு எங்கும் வக்கில்ல.. பொறந்த வீடும் என்னை  தவிக்கவுட்டு தலைமுழுகிட்டாங்க. புகுந்தவூடும் அறுத்துவுட்டுடாங்க. சோறு தண்ணி கிடையாது. நல்ல துணிமணி கிடையாது. மாடு மாதிரி கால முத இரவு வரை வேலை செஞ்சிட்டே இருக்கனும். இல்லன்னா அடிதான். நெருப்புல சூடு கூட வைப்பாங்க தெரியுமா?

“யாரு சூடு வைப்பாங்க” – ராம்

      “அந்த வூட்டுல இருக்கிற எல்லாரும்தான்” கண்கள் சிவக்க மூக்கு விடைக்க அழுத கண்ணீரோடு ஜீவிதா சொல்லுகின்றதை கேட்க கேட்க எனக்கு வயிறு பற்றி எரிந்தது. மனசு வேதனையால் துடித்தது.

      “இதோ இந்த கிழவி என் வீட்டுக்காரரோட பாட்டிதான். வயசானதால வாய் பேச முடியறதுல்ல.. ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அங்கேயேதான். நான்தான் அள்ளிக் கொட்டுவேன். அந்த நாத்தம் அவுங்களாள தாங்கிக்க முடியல. அதான் கிழவியையும் துணைக்கு என்னையும் இந்த பொட்டல் காட்டிற்கு அனுப்பிட்டாங்க. எங்களுக்குன்னு இங்க யாரும் உறவுகள் இல்ல. தானா மழை பேஞ்சு மொழைக்கிற இடத்துல நின்னு இருக்கிற ஆட்டையும் மாட்டையும் காப்பாத்துறோம். ஏதோ எங்க பொழப்பும் ஓடுது” கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஜீவிதா.

      “ஆமாம்! நீ என்ன பண்ற ராம். கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை பசங்க..” – ஜீவீ

        ராமிடமிருந்து ஜீவிதாவின் கேள்விக்கு பதில் வரவில்லை. மாறாக, “நீதான படிச்சிருக்க இல்லையா.. நல்ல வேலைக்கு ஏதாவது போகலாம் இல்லையா?” என்றான்.

      “இந்தக் கிழவியை வச்சிக்கிட்டு நான் எங்கிட்டுப் போறது”

         “ஜீவீ எனக்கொரு யோசனை. நீ குரூப் எக்சாம் – கு படிக்கலாம்மில்ல.. பாட்டியை பாத்துகிட்டே இருக்கலாம். வெளிய மாடு மேய்க்கும் போதும்கூட படிக்கலாம். பாட்டியும் உன்கூடவே வரப்போறது இல்ல. அதுக்கு அப்புறம் உன்ன யாரு பாத்துப்பா. உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? நீ படிச்சு அரசாங்க வேலைக்குப் போ.. அதுதான் உன்னை வாழவைக்கும்” – ராம்.

        “சரிதான் ராம். நான் இனிமேல் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமானால் எனக்கென்று அடையாளம் இருக்க வேண்டுமென்றால் படித்து அரசாங்க வேலைக்குச் சென்றே ஆக வேண்டும். இல்லையெனில் இம்மண்ணோடு மண்ணாக புழுவுக்கு இரையாக ஆக வேண்டியதுதான். என் வாழ்வு இனி படிப்பில் மட்டும்தான்” – ஜீவிதா

      குரூப் எக்சாமிற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் நானே வாங்கி தருவதாக உறுதியளித்தேன். என் தோழிக்கு நான் செய்த இரத்தக்கறையைத் துடைக்கவும் அதற்கு பரிகாரமாகவும் ஒரு வாய்ப்பாக எண்ணினேன். தொழுவத்திலிருந்து வெளியில் வரும்போது மனம் இரங்கலையும் அதிகப்படியானத் துன்பத்தையும் அடைந்திருந்தது. உள்ளேயிருந்து மீண்டும் ஜீவிதாவின் குரல்..

       “ஆமாம்! நீ கேட்டல்ல மேனாள் கிழவி. அது கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் செத்து போச்சு”.

சிறுகதையின் ஆசிரியர்

 முனைவர் க.லெனின்

iniyavaikatral@gmail.com

இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன? வகைகளைக் குறிப்பிடுக? | What is literary Criticism? Specify types?

திறனாய்வு வகைகள்

        இலக்கியத் திறனாய்வானது இலக்கியக் மற்றும் கோட்பாட்டோடு, மனித சிந்தனைக் கருத்துநிலைகளை உட்படுத்திஅமைந்துள்ளது.  திறனாய்வு நிகழ்வதற்கான காரணங்களை வகுத்துக் கொண்டு, அதன்வழி திறனாய்வினைப் பலவகைகளாகப் பிரித்துள்ளனர். கொள்கை அதனை வெளிப்படுத்தும் சமுதாயவியல் கருத்து அணுகுமுறையாக விதிமுறை, விளக்கமுறை, பகுப்புமுறை, செலுத்துமுறை, எனப் பலவழிப்பட்ட செல்நெறிகளை உடையதாக திறனாய்வு அமைந்தாலும், மேலைநாட்டினர் விளக்கமுறைத் திறனாய்வுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். விளக்க முறைத் திறனாய்வானது திறனாய்வு வகைதனில் பொதுவானதாக தோற்றமளிக்கிறது. இவ்வகைத் திறனாய்வை ஒப்பீட்டு முறையில் அடக்கிக் கூறுவதும் உண்டு.

இலக்கியத் திறனாய்வின் வகைகள் (What is literary Criticism? Specify types?)

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) – Click Here

2.விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism) – Click Here

3.உளவியல் முறைத் திறனாய்வு (Phychological Approach) – Click Here

4.வரலாற்று முறைத் திறனாய்வு (Biographical Criticism) – Click Here

5.சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism) – Click Here

6.ஒப்பீட்டுத் திறனாய்வு (Comparative Criticism) – Click Here

7.பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) – Click Here

8.செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Judicial Method) – Click Here

9.பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism) – Click Here

10.ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு (Aesthetic Criticism) – Click Here 

11.முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism) – Click Here

12.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ( Evaluation method performance) – Click Here

       திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

 

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு | What is the Evaluation method performance

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு

      திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இலக்கியத்தைப் பற்றிய முழு மதிப்பீட்டு நிலையை (Evaluation) அடியொற்றி அமைவது மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஓர் இலக்கியத்தை பகுத்தும், தொகுத்தும், விளக்கியும், ஆய்தற்கும் உளவியல் தன்மையையோ, சமுதாய உண்மையையோ, அளவிட்டுரைப்பதற்கும், அதனின் உண்மை நிலையை மதிப்பீடு செய்வதற்கும் இத்திறனாய்வு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

       அவற்றோடு மட்டுமல்லாமல், ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய உண்மையை ஆழமாகவும், திறம்படவும் ஆராய்வதற்கு மதிப்பீட்டு முறை இன்றியமையாதது ஆகிறது, மதிப்பீட்டு முறையில் இலக்கியத்தின் தரம், தகுதி. சிறப்பு, சீர்மை, பண்பு பற்றியக் கூறுகளும், இலக்கியத்தின் மதிப்பும் (Literary Value) விழுமிய நிலையில் மதிப்பீட்டுரைக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டு சிலமுறையில் சில வகையான அளவுகோல்கள் மற்றும் வரையறைகள் காணப்படுகின்றன. அவை ‘சமுதாய மதிப்பு’ என்ற நிலையில் அமைந்துள்ளது. 

     இத்திறனாய்வு முறையானது திறனாய்வுக் கோட்பாட்டிற்கு ஒரு தூண்போல விளங்குகிறது என்கிறார் ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் (Principles of Literary Criticism) அவர்கள். அவரின் கூற்றுப்படி நோக்குகையில்,

1. மதிப்பு பற்றிய கணக்கீடு

2. தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடு

       இவை இரண்டும் மதிப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இரு தூண்களாக விளங்குகின்றன. சிறந்த இலக்கியம் எது என்பதற்கும், அல்லாத இலக்கியம் எது என்பதையும் கண்டறிய இவைப் பெரிதும் துணை செய்கின்றன.

      ‘சுடர்த்தொடீஇ கேளாய்’ – எனத் தொடங்கும் குறிஞ்சிக்கலி பாட்டில், ‘நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்’ – என்று தலைவி தான் காதலுற்ற தலைவனின் இயல்பினைத் தோழியிடம் சொல்லுமிடத்து,

1. தலைவியின் உளப்பாங்கு

2. தாயின் பரிவு

3. சமுதாய ஒழுக்கம்

       ஆகியவை இப்பாடலில் ஆழமாகவும், உண்மையாகவும், சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம், உள்ளடக்கம் பற்றி எழுந்த முதல்நிலை மதிப்பீட்டின் அடித்தளமான நிகழ்வே ஆகும். மதிப்பீட்டு முறைத் திறனாய்வில்

1. கதை

2. கதை சொல்கிற பாணி

3. நாடகப் பாங்கு

4.நடையியல் கூறுகள்

5.மெல்லிய உணர்வுகள்

         என இவை இலக்கிய முறையில் கவனம் சார்ந்தவையாக உள்ளன.

          திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

முடிபுமுறைத் திறனாய்வு

   

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

     திறனாய்வாளன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட வரையறைகளையும், அளவுகோல்களையும் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு இலக்கியம் பற்றிய முடிவினை அல்லது தீர்ப்பினைத் தரக்கூடிய தன்மைப் பெற்றதாக அமைவது முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

      முடிபுமுறைத் திறனாய்வில், மேலைநாட்டினரான சாட்விக் (Chadwick), கெர் (W.P. Ker), பவுரா (C.M. Bowra) போன்றோர் கூறிய கோட்பாடு முறைகள் ஒட்டியேத் தீர்வு அமைகிறது. இதனை தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய நிலைக் கண்டோ, சிறுகாப்பியத்தின் தன்மையை வைத்தோ, இளங்கோவின் சிலம்பினையும், கம்பனின் இராமாயணத்தையும், செவ்வியல் பண்புகளை வைத்து ஆய்வு செய்து. மேலைநாட்டினரின் கோட்பாடுகளோடு பொருத்தி, இது சரியான காப்பியம், சரியான காப்பியம் அன்று என்ற முடிவினை ஒருவர் தருபவராயின் அதனை ஏற்றுக்கொள்ளுதல் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

           இன்றையக் காலகட்டத்தில், நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், என இக்காலத்தில் வெளிவரக்கூடிய இலக்கியங்கள் அனைத்தும் மேலைநாட்டார் கூறுகின்ற விதிகளை பெற்று, முடிபுகளைக் கூறுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட இலக்கியங்களில் ஒரே அளவுடைய அல்லது ஓரேவிதமான வரையறை கூறுகளை உடைய விதிகளைப் பொருத்திப் பார்த்து இலக்கியத்தின் தரத்தை உயர்த்தச் செய்வது இந்த வகையானத் திறனாய்வின் பண்பு ஆகும்.

       மேலைநாட்டினரின் கூற்றுகள், குறிப்புரைகள். எல்லாம் கல்வியில் சார்ந்த பட்ட ஆய்வேடுகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு, தமிழில் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நிலை எல்லா வகையான இலக்கியங்களுக்கும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் ஒரே காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே வரன்முறையைப் பெற்று அமையவில்லை. முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

      முடிபுமுறைத் திறனாய்வானது இலக்கியங்களைப் போற்றுவதற்கு ஓரளவு துணைபுரிகின்றன. புதிய வடிவங்களை வளர்த்தெடுக்கச் செய்கிறது. சோதனை முறைகளைத் தவிர்த்து வருகிறது. புதிய இலக்கியங்களைப் போற்றும் தன்மை பழங்காலம் முதல் இருந்துள்ளது. முடிபுமுறைத் திறனாய்வின் இந்தப் போக்கினை பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இலக்கியக் கலை என்னும் நூலில் சாடியுள்ளார்.

        சங்க இலக்கியப் பாடல்களை முடிபு முறைத் திறனாய்வில் திறனாய்வு செய்தோமானால் ஒரே கருத்தை திரும்பக் கூறுவது போன்று அமைந்துவிடுவதால், இவ்வகையானத் திறனாய்வுக்குச் சிலர் அஞ்சுவதும் உண்டு.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »