Wednesday, June 3, 2026
Home Blog Page 37

கோபம் | சிறுகதை

கோபம் | சிறுகதை

கோபம் – சிறுகதை

          என்னதான் பெண்ணாக இருந்தாலும் இப்படி கோபம் வரக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள் அதைப்போலத்தான் அவளும் சட்டென்று கோபப்பட்டாலும் குழந்தைகள் மீதும் கணவன் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பாள்.

            கோபத்தில்  எடுக்கின்ற முடிவு சரியில்லை என்பார்கள். ஒரு நாள் தன் கணவனுக்கும் அவளுக்கும்  வாய்ப் பேச்சால் சண்டை வந்தது. சண்டை நீண்டுக்கொண்டே போனது. பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். கணவன் இப்படி பேசிக்கொண்டு போனால் முடிவு வேற விதமாகப் போய்விடும் என்று நினைத்து தேநீர் கடைக்குப்போய் தேநீர் குடித்தவிட்டுவந்தால்  அவளுடைய கோபம் அடங்கும் என்று பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தேநீர் கடைக்குப் புறப்பட்டு தேநீர் குடித்துவிட்டு அங்கே உட்கார  மனசு வரவில்லை, மனசு ஏதேதோ நினைக்கலாயிற்று.

            அவள் அவர் பேசிய வார்த்தையை நினைத்து நினைத்து பார்த்தாள். அவள் எதையுமே யோசிக்காமல் கட்டிலின் மேலே இருக்கின்ற விசிறியில் தூக்குப்போட்டுக்கொள்ள தன்னுடைய சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு இருந்தாள். அவன் வந்தான் அவன் நினைத்த மாதிரியே கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தான். கதவு திறக்கப்படவில்லை. எல்லா சாளரமும் மூடியிருந்தது. படுக்கையறை சாளரம் மட்டும் திறந்திருந்தது. அதன் வழியே பார்த்தான். திகைத்துப்போனான்! வேண்டாம்மா நான் சொல்வதைக்கேள். இதற்கு மேல் உன்னுடன் சண்டைபோடமாட்டேன். உன் காலையாவது பிடித்து கெஞ்சி கேட்கிறேன். தூக்குப்போட்டுக் கொள்ளாதே! நம் பிள்ளைகள் அனாதையாகிவிடும், நீ இல்லை என்றால்  நானும் இறந்தே போய்விடுவேன், நான் சொல்வதைக்கேள். வந்து கதவைத் திற. ஐயோ! நான் என்ன செய்வேன்? கடவுளே! என் மனைவியை எப்படியாவது காப்பாற்று என்று கத்தினான் கதறினான். அவன் கண்முன்னே விசிறியில் கட்டப்பட்டிருந்த சேலையைக் கழுத்தில் சுருக்கு வைத்துக்கொண்டு கட்டிலின்மீது இருந்து குதித்தாள், அவன் அய்யோ அய்யோ! என்று கத்திக்கொண்டு அக்கம் பக்கம் இருந்தவர்களைக் கூப்பிட்டு கதவைப் கடப்பாறையால் பெயர்த்துவிட்டு உள்ளே போவதற்குள் அவள் உயிர் உடலை அறுத்துவிட்டு வெளியேறிச் சென்றது.

            அவர்கள் அவள் கழுத்தில் இரக்கும் சுருக்கு சேலையைக் கத்தியால் வெட்டி எடுத்தார்கள் அவளுக்கு உயிர் இருக்கக் கூடாதா! அவள் செத்திருக்கமாட்டாள். என்றெல்லாம் நினைத்தான். அவளின் கழுத்தை சேலை நெருக்கியதில் நாக்கு வெளியே வந்துவிட்டது. அவன் நாக்கை வாயின் உள்ளே தள்ளினான். மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போகலாமா? என்று வந்தவர்களைப் பார்த்து செஞ்சினான். அதற்கு அவர்கள் இவள் இறந்தவிட்டாள். நீ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால் சாவு கிடங்கில் போட்டுவிட்டு எப்படி செத்தாள் என்று காவல்துறை விசாரனை நடத்தவார்கள். இதை கண்ணும் காதும் வைத்தமாதிரி மிக வேகமாக எரித்தவிடவேண்டும் அதனால், உங்களுடைய சொந்த பந்தத்துக்குச் சொல்லிவிடு, பிணத்தை சீக்கிரமாய் எடுக்கவேண்டும் என்றார்கள்.

            வீட்டின் முன்னால இருக்கின்ற மரத்தின் நிழலில் கட்டிலைப்போட்டு பிணத்தைப் படுக்கவைத்தார்கள். இறந்த செய்தியைக்கேட்ட அக்கம்  பக்கத்தில் இருப்பவர்கள் வந்துவிட்டார்கள்.

            பிள்ளைகளும் வகுப்பை முடித்துவிட்டு பாடசாலையிலிருந்து வந்து அம்மா இறந்து போனதைப் பார்த்து கதறி அழுதார்கள். அதைப் பார்த்த மற்றவர்களின் கண்களிலும் கண்ணீர் பெறுக்கெடுத்தன.

            அவன்  மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைத் தலைமீது வைத்துக்கொண்டு பூமியை நோக்கியவனாய் கண்களில் கண்ணீர் வந்து பூமியை நனைத்தபடியும், மூக்கில் ஒழுகி தரையைப் பார்க்கிறபடி உட்கார்ந்திருந்தான்.

            அவள் உயிர் எமலோகத்திற்கு போகாமல் தன்னுடைய உடலைப் பார்க்க வந்தது. வந்து பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டது. பிள்ளைகள் கதறுவதைப் பார்த்து அந்த ஆவியே அழுதது. பிள்ளைகளைக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, தூக்க முடியவில்லை, தன் கணவனிடம் போய் அழாதிங்க! என்று கண்ணீரைத் துடைத்தது, துடைக்க முடியவில்லை தன் உடலைப்போய் தொட்டுதொட்டுப் பார்த்தது அசையவே இல்லை. அசைவற்று இருந்தது. அங்கு இருந்த ஒரு அம்மா இந்த பிள்ளைகளை விட்டு விட்டு போவதற்கு எப்படித்தான் அவளுக்கு மனசு வந்ததோ தெரியவில்லையே! நாளைக்கு அந்த பிள்ளைகளுக்கு யார் தண்ணிர் ஊற்றுவார்கள், சாப்பாடு யார் ஊட்டுவார்கள். யார் தலைவாரி பூச்சூடுவார்கள். பாடசாலைக்குப்போக பேருந்தில் யார் ஏற்றுவார்கள், அவன்  ஆண் இதையெல்லாம் செய்வானா? என்னதான் கோபம்  வந்தாலும் இப்படி செய்யக்கூடாது. அந்தப் பிள்ளைகள் முகத்தைப் பார்க்கக்கூடாதா! அவனுக்கும்  வேற சின்ன வயசு இன்னொரு திருமணம் செய்துகொண்டால் அவள் இந்த பிள்ளைகளை நல்லா பார்ப்பாளோ? இல்லை கொடுமை செய்வாளோ, இல்லை படிக்க போகவிடாமல் ஆடு, மாடு மேய்க்கவைப்பாளோ என்னவோ? தெரியவில்லையே! என்னத்தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது. பொம்பளைக புத்தி பொட கழுத்தில் உள்ளது என்பார்கள் அதேபோல இவளும் செய்துவிட்டாளே! என்று பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மாவிடம் கூறினாள். இதைக் கேட்ட அவள் ஆவி தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. நம் பிள்ளையை நாம் தான் கண்ணும் கருத்துமாய் பார்த்தக்கொள்ள வேண்டும் நம்ம பிள்ளைகள்  நிறைய படிக்க வேண்டும். நாளைக்கு பிள்ளைகள்  பாட சாலைக்குப் போக வேண்டும். நாம் சாக கூடாது என்று நினைத்து எமலோகத்திற்கு அவள் உயிர் பறந்து  சென்று எமதருமராசனை பார்த்தது. அந்த உயிரை பார்த்து ஏன் இவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறாய் என்று கேட்டார். ஐயா என்னை மன்னித்து விடுங்கள் நான் சாக கூடாது. நான் தெரியாமல் தூக்குப் போட்டுக்கொண்டேன். என்னுடைய உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலில் புகுந்துக்கொள்கிறேன் என்று கேட்டது அதற்கு எமன் என்னது? உன் உயிரை விடுவதா? என்ன பேசுகிறாய்? அப்படியெல்லாம் விட முடியாது! என்றார், ஐயா அப்படி சொல்லாதிங்க! என் பிள்ளைகள் கதறுவதை என்னால் பார்க்க முடியவில்லை உன் காலை பிடித்துக்கொண்டு கேட்கிறேன், என் உயிரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியது. அதற்கு எமன் எடுத்த உயிர் எடுத்ததுதான். உன் உயிரைவிட முடியாது. அவன் காலைப் பிடித்துக்கொண்டு அவன் பாதம் நனைகிற அளவுக்கு ஆவி  கண்ணீர்விட்டது. பெண்யென்றால் பேய் இரங்கும்  என்பார்கள். அவள் உயின் கோலத்தைப் பார்த்த எமன் இங்க பாருங்கம்மா! எனக்கு மேலே ஒருவர் இருக்கிறார். அவர் தான் அழித்தல் தொழிலைப் பார்க்கின்ற சிவன். அவரை போய் பார், அவர் சொல்லியதால் தான்  உன்னுடைய உயிரை நான் எடுத்தேன் என்று கூறினார்.

            அந்த உயிர் சிவனைப் போய் பார்ப்பதற்கு முன் நம் உடலை எடுத்துவிட்டார்களோ! என்னவோ! என்று பூலோகத்திற்கு வந்து தன் உடலைப் பார்த்தது. பிள்ளைகள் அம்மா எழும்மா! எழும்மா! என்று கத்த முடியாமல் அழுதன. அவள் ஆவி தன் பிள்ளைகளைக் கட்டிப்பிடித்து அழுந்தது. என் பிள்ளைகள் என்றும் இப்படி அழுந்ததே கிடையாது இன்று இப்படி அழுகிறார்களே! நான் தெரியாமல் தூக்குப் போட்டுக் கொண்டேன் என்று நினைக்கும்போது அவள் கணவனைக் கூப்பிட்டு எல்லோரும் வந்து விட்டார்களா! தாய்வீட்டு சீதனம் கொண்டு வந்தவிட்டார்களா! சீக்கிரமாய் பிணத்தை எடுத்து எரிக்கவேண்டும் என்றார்கள். அதைக் கேட்டதும் அவள் உயிர் சிவபெருமானைநோக்கிப் பறந்தது.

            சிவபெருமானைப் பார்த்து, ஐயா! நான் தெரியாமல் தூக்குப்போட்டு இறந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு புத்தி வந்தது. என் பிள்ளைகள் அனாதை யாகிவிடும். என் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என் உயிரை விட்டுவிடுங்கள் என் உடலில் புகுந்து என் பிள்ளைகளையும் என் கணவரையும் நல்லப்படியாகப் பார்த்துக்கொள்வேன். கோபத்தினால் தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். என் உயிரை விட்டு விடங்கள் என்று கெஞ்சி கூத்தாடியது. அதற்கு சிவன், என்னம்மா! சொல்லற எடுத்த உயிரை  மீண்டும் விடவதா? அப்படி விட்டால் பூலோகம் தாங்காது, அதனால் எதுவும் பேசாமல் போய்விடு! என்று கடும் கோபத்தில் சொல்லிவிட்டார். அங்கு பேசிக் கொண்டு இருக்கும்போது நம்ம உடலை எடுத்துவிடுவார்கள் என்று இருக்கும்போது உயிர் படபடத்தது திக்திக் என்று அடித்துக்கொண்டது.தன் உடலை ஓடி வந்து பார்த்தது. தன்னுடைய அம்மா அவள் உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாயேம்மா என்று அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுந்தது அத்தாய்க்கும் தெரியாது.

            சரி நேரமாச்சு! பிணத்தின் மேலே இருக்கின்ற மாலையெல்லாம் எடுத்துவிட்டு குளிப்பாட்ட எடுத்துவாங்க! பாடை கட்டி முடித்தாகிவிட்டது என்ற வார்த்தையை அவள் உயிர் கேட்டதும். சிவலோகத்திற்கு ஓடியது. சிவபெருமானை பார்த்து, என்னை உன் மகள் மாதிரி நினைத்துக்கொண்டு உன் உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலை எடுக்கப்போகிறார்கள். என்று கெஞ்சியது. அதற்கு சிவபெருமான் தன் தவத்தைக் களைத்ததற்காக என்னுடைய மருமகனையே நெற்றிக்கண்ணால் சுட்டெரித்து என் மகளை விதவையாக்கியவன் அவள் வந்து கெஞ்சியும் அவனை உயிர்பெறச்செய்யவில்லை அதனால், நீ புறப்படு என்று கூறினார், ஐயா! என் கணவன் உன் காலையாவதே பிடித்துக்கொள்கிறேன் நீ சாகாதே என்று கெஞ்சியும் நான் அவர் பேச்சை கேட்காமல் செத்துவிட்டேனே என்று நினைத்துக்கொண்டு, பூலோகத்திற்கு அவ்வுயிர் ஓடிவந்து பார்த்தது பூவால் பாடையெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பிணத்தை அதன்மீது வைத்தவிட்டார்கள். இதைப்பர்த்து மறுபடியும் சிவலோகத்திற்கு தன் உயிர் ஓடியது. சிவபெருமானின் காலைப்பிடித்தக்கொண்டு கண்ணீர்விட்டு கதறியது. இதைப்பார்த்த சிவபெருமான் இந்த உயிரை கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வாங்க என்று இங்கு இருப்போருக்குச் சொன்னதும் அந்த உயிரை பெண்ணோட உயிர் என்று கூட பார்க்காமல் கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வந்தார்கள். மீண்டும் அந்த உயிர் பூலோகத்திற்கு ஓடிவந்தது. நிலவு, நட்சத்திரம், சூரியன், மேகம், மழை, வானம் போன்றவர்கள் அந்த உயிர் சிவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் அலைவதைப் பார்த்து கண்ணீர் விட்டன. என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து அவர்களும் இருந்தனர்.

            உயிர் வந்து வீட்டுகிட்ட பார்த்தது. உடல் இல்லை அங்க இருந்த ஒரு அம்மா நற்று என்னோட இன்நேரத்தில் பேசினால். ஆனால், இன்று இல்லையே என்று புலம்பினாள். அதைக்கூட காதில் வாங்காமல் பிணத்தை எடுத்தக்கொண்டு போகும் வழியே பார்த்து ஓடியது பாடையில் பிணம் பாதி தூரம் போய்க்கொண்டு இருந்தது. சுடுகாட்டிற்குப் போவதற்குள் மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார்ப்போம் என்று எமலோகத்திற்குச் சென்றது எமதருமராசனைப் பார்த்து ஐயா! உன் பெயரிலேயே தருமராசா என்று இருக்கிறது அதனால், என் உயிரை தருமமாக விட்டுவிடுங்க என்று கெஞ்சியது. யாம்மா நான்தான் சொன்னேனே போய் சிவபெருமானைப் பார் என்று கூறினார். அதற்கும்  நான் போய் பார்த்தேன் முடியாது என்று கூறிவிட்டார். நீங்க தான் எப்படியாவது அவரிடம் சொல்லி என் உயிரை பூலோகத்திற்கு விடச் சொல்லவேண்டும் என்று அவள் உயிர் கெஞ்சியது. அதற்கு எமன் நான் உடன் வருகிறேன். ஆனால் நீதான் கேட்க வேண்டும் என்று எமதருமராசனும் உடன்சென்றார். சிவபெருமானைப் பார்த்து, ஐயா! என் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள். என் உயிரை எப்படியாவது விட்டுவிடுங்கள் என்று கண்ணீரைத் தாரைத் தாரையாக விட்டு அழுதது. இதனைக் கண்ட சிவபெருமான் எமனைப்  பார்த்து கேட்டார். இந்த உயிரை என்னசெய்வது எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டிங்குது என்று கூறினார். அதற்கு எமன் ஒரு வயசான பாட்டி என்னை எப்பவந்து எமன் கூட்டிப்போகும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால், இந்த உயிரை விட்டுவிட்டு அதற்கு பதிலாக அந்த பாட்டி உயிரை எடுத்தக்கொள்வோம் என்று கூறினார். அதற்கு சிவபெருமான் ஏதோ செய் மீண்டும் வந்து இங்கு கெஞ்சக் கூடாது என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எமன் உடனே அந்த பாட்டி உயிரை எடுத்துக்கொண்டு அந்த உயிரை விட்டுவிட்டார். அந்த உயிருக்கே உயிர் வந்ததுபோல் இருந்தது. எமனுக்கு நன்றி சொல்லிவிட்டு வேகமாக ஓடிவருகிறதைப் பார்த்த நிலா, நட்சத்திரம், சூரியன், வானம், மழையெல்லாம் மகிழ்ச்சியடைந்தன.

            ஓடிவந்துபார்த்தால் விறகு கட்டையை சுடுகாட்டில் மேடையாக அடுக்கிவைத்து அதன்மீது பிணத்தை வைத்து வெட்டியான் தீ வைத்தான் மெதுவாக எறிய ஆரம்பித்தது. அந்த எரிகின்ற உடலில் உயிர் புகுந்து தன் உடலோடு சேர்ந்த பிறகு கீழே குதித்தது. என்னைக் காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க என்று கத்தியது வெட்டியான் பேய்தான் வந்துவிட்டது என்று நினைத்து பிணத்தை எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டையால் அடித்துக் கொன்று எரிக்கின்ற நெருப்பில் எடுத்துப்போட்டு எரித்துவிட்டார்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர்.

மேலும் பார்க்க,

1.மறையாத வடு

2. பாலம் | சிறுகதை

சங்க இலக்கியமும் தொல்லியலும்

சங்க இலக்கியமும் தொல்லியலும்

“சங்க இலக்கியமும் தொல்லியலும்”

       தொல்லியலை “ஆர்க்கியாலஜி” என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதன் பொருள் “ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்” என்பதாகும். பண்டைக்கால மக்கள் விட்டுச் சென்ற பொருட்களை மேற்பரப்பிலோ அல்லது பூமியை அகழ்ந்தோ எடுத்து அவற்றின் மூலம் அவர்கள் வாழ்ந்த வரலாற்றை உய்த்தறிந்து கூறுவதே தொல்லியல் ஆகும்.

            தொல்லியல் என்பது அகழ்வராய்ச்சியை மட்டும் குறிப்பது அல்ல. பழங்காலக் கல்வெட்டு, செப்பேடு, நாணயம், முத்திரை, மோதிரம் முதலிய அணிகலன்கள், ஓலைப் பட்டயம் போன்ற பல பொருட்களைக் குறிக்கும். இப்பரந்த தொல்லியல் சான்றுகளில் பல சங்ககாலக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்தொல்பொருள்களின் காலத்தை அறிவியல் முறைப்படி கண்டுபிடிக்க இக்காலத்தில் வாய்ப்பு உள்ளதால் சங்கத்தின் இருப்பு, காலம், அவை கூறும் செய்திகளின் உண்மைத் தன்மை இவைகள் உறுதிப்படுகின்றன.

சங்கம்

            மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததை இலக்கியம் வழி அறிகிறோம். மதுரை “தமிழ்க்கூடல்” “தமிழ்கெழு கூடல்” “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர்களால் தமிழோடு இணைத்துக் கூறப்படுகிறது. ஒரு சமயம் மாங்குடி மருதன் சங்கத்தலைவராக இருந்ததாக ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. முற்காலப் பாண்டியர் செப்பேடுகளில் சங்கம் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. பராந்தகன் வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டில்,

            “தென்மதுரா புரம்செய்தும் அங்கதனில்

            அருந்தமிழ்ச் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்”

என்ற தொடர் உள்ளது. (97-98)

இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,

            “மதுராபுரிச் சங்கம் வைத்தும்

            மாபாரதம் தமிழ்ப் படுத்தும்”

என்று கூறப்படுகிறது (102-103). அதே செப்பேட்டில் தமிழோடு வடமொழிப் பிரிவும் சங்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

            “வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும்

            உளமிக்க மதியதனால் ஒண்டமிழும் வடமொழியும்

            பழுதறத்தான் ஆராய்ந்து”

என்பது அப்பகுதியாகும் (93-93).

அகத்தியர்

            தொல்காப்பியருக்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்து “அகத்தியம்” என்ற இலக்கண நூல் செய்தார் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட செய்தி. அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் தொல்காப்பியரும் ஒருவர் என்பர்.

            பாண்டியரின் பழமையான செப்பேடுகளில் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு கூறப்படுகிறது.

            “அகத்தியனொடு தமிழ் தெரிஞ்சும்” (சிவகாசி செப்பேடு 48)

            “அகத்தியனொடு தமிழ் ஆய்ந்தும்” (தளவாய்புரச் செப்பேடு 88)

            “தென் வரைமிசைக் கும்போத்பவனது

            தீந்தமிழால் செவி கழுவியும்” (சின்னமனூர்ப் பெரிய செப்பேடு 81-82)

என்பன அப்பகுதிகள் ஆகும்.

சேரர்

            கரூர் மாவட்டம், புகலூர் வேலாயுதம்பாளையத்தில் ஆறுநாட்டார் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டில் பதிற்றுப்பத்து 7,8,9 ஆம் பத்துக்கு உரிய சேர மன்னர்கள் அதே வரிசையில் கூறப்பட்டுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் பேரனும், பெருங்கடுங்கோ மகனுமான இளங்கடுங்கோ இளவரசனாக ஆனபோது யாற்றூர்ச் செங்காயபன் என்ற மூத்த சமணத் துறவிக்குக் கல்படுக்கை அமைத்துக் கொடுத்ததை அக்கல்வெட்டுக் கூறுகிறது.

            “மூத்த அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைப்

            கோ ஆதன் செல்லிருப்பொறை மகன்

            பெருங்கடுங்கோன் மகன் இளங்

            கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்”

என்பது அக்கல்வெட்டாகும். சேரமான் கோதைக்குப் படைத் துணைவன் பிட்டங்கொற்றன். அவன் பெயரும் அவன் மகள் கொற்றியின் பெயரும் ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

            கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் வனப்பகுதியில் சேரபுழா என்னும் ஆற்றங்கரையில் உள்ள பாறையில் பழந்தமிழ் எழுத்தில் “கடும்மி புத சேர” என்ற தொடர் வெட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இத்தொடருக்குக் “கடுமான் சேரல்” என்று பொருள் கொள்கின்றனர். சித்தோடு அருகேயுள்ள கருமலைக் கல்வெட்டில் “குட்டுவன்செய்” என்ற பெயர் பழந்தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. சேரர் மரபில் “சேய்” என்று குறிக்கப்படுபவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் என்பவனே. இது அம்மன்னனைக் குறிக்கலாம்.

            சேரரின் உருவமும் பழந்தமிழ்ப் பெயரும் பொறிக்கப்பட்ட “மாக்கோதை” “மாக்கோக்கோதை” “குட்டுவன்கோதை” “கொல்லிப் பொறை” “கொல்லிரும் பொறை” காசுகள் கிடைத்துள்ளன. ஆதன், அந்துவன் என்பன சேரர்க்கு உரிய பெயர்கள், (சேரலாதன், ஆதன், அழிசி, அந்துவன் சேரல்) அழகர்மலை, குன்னக்குடி, புகலூர், எடக்கல் போன்ற பல இடங்களில் இப்பெயர்கள் காணப்படுகின்றன.

            யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கரூரில் ஆட்சிபுரிந்த கொங்குச் சேரரில் ஒருவன். அம்மன்னன் பற்றிய ஒரு ஆவணம் “மாந்தரஞ்சேரல் பதிகம்” என்ற பெயரில் கிடைத்துள்ளது. மாந்தை எனத் தன் பெயரில் ஒரு நகர் உண்டாக்கி அங்கு ஐயன் என்னும் சாத்தன் கோயில் எடுத்தான் என்று கூறுகிறது.

            “உதியனது நன்மரபில் பதிஎனவே வந்தமர்ந்த

            ஆய்ந்துணர்வு கொளும்புனித மாந்தரஞ் சேரல்மன்னன்

            மாந்தையெனத் தன்நாமம் மருவஒரு நகர்அமைத்து

            பாந்தமுடன் ஐயன் என்னும் பகர்சாத்தன் தளிஎடுத்து”

என்பது மெய்க்கீர்த்திப் பகுதி. திருப்பூர் மாவட்டத்தில் வள்ளிஎறிச்சல் கிராமத்தில் “மாந்தபுரம்” என்னும் ஊர் இன்றும் உள்ளது. அங்குள்ள சிவாலயம் மாந்தீசுவரம். அங்குள்ள கோயில் “நாட்டராயன் – நாச்சிமுத்து ஐயன் கோயிலே” மாந்தரஞ்சேரல் எடுத்த சாத்தன் கோயிலாகும். சிவாலய அமைப்பின்றி உள்ள சிறு கோயில் ஒன்று மாந்தீசுவரர் கோயில் என்ற பெயரில் அவ்வூரில் உள்ளது. அது மாந்தரஞ்சேரலின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம்.

செப்பேட்டில் வஞ்சி

            கரூருக்கு “வஞ்சி” என்ற பெயர் உண்டு. அதனால் சிலர் சேர மரபின் அனைவர்க்கும் கரூர் வஞ்சியே தலைநகர் என்று கூறுவர். சேரர் வஞ்சி பெரியாற்று முகத்துவாரத்தில் கடல் ஒலி கேட்கும் இடத்தில் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கொங்கு நாட்டை வென்று கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சேரர்கள் கரூர் முதலிய சில ஊர்கட்கு வஞ்சி என்று பெயர் வைத்துள்ள விபரம் திருப்பூர் அருகே கிடைத்த அனுப்பப்பட்டிச் செப்பேடு மூலம் தெரிகிறது.

            “கொங்கு மலைநாடும் குளிர்ந்தநதி பன்னிரண்டும்

               சங்கரனார் தெய்வத் தலம்ஏழும் – பங்கயஞ்சேர்

               வஞ்சிநகர் நாலும் வளமையால் ஆண்டருளும்

               கஞ்சமலர்க் கையுடையோன் காண்”.

            என்பது அப்பாடலாரும். “நாலு வஞ்சியும் சேரப்படைத்த” என்பது ஒரு செப்பேட்டுத் தொடர். கரூர் அருகில் “முசிறி” என்ற சேரர் துறைமுக நகர்ப் பெயருடன் ஓர் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.         ஒரு தனிப்பாடல் மூலம் சேலம், தாராபுரம், கரூர், மூலனூர் என்ற நான்கு ஊர்களும் “வஞ்சி” எனப் பெயர் பெற்றிருந்தது தெரிகிறது.

            “மாந்தரர்க்கும் மற்றுவரு மன்னவர்க்கும் கொங்குவஞ்சி

            ஏந்துபுகழ் சேர்தலைமை ஏய்ந்தபதி – சார்ந்திலகு

            சேலமொடு தாரா புரியும் திகழ்கருவூர்

            மூலனூர் ஆக மொழி”

என்பது அப்பாடலாகும். தாராபுரம் “பெருவஞ்சி” எனப்பட்டது. இவ்வூர்களில் வஞ்சியம்மன் கோயில்கள் இருப்பது சிறப்புச் செய்தியாகும்.

சோழர்

        தேரிருவேலியில் அகழாய்வில் கிடைத்த பானையொன்றில் “நலங்கிள்(ளி) என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில்

            “கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்

            நெடுங்கதிர் நெல்லின் வல்லம்கிழவோன் நல்லடி”

என்பான் குறிக்கப்படுகின்றான். சோழரின் அன்பில் செப்பேட்டில் கோச்செங்கட்சோழன் மகன் நல்லடி என்று குறிக்கப்பட்டுள்ளார். உறந்தைத் தலைவன் “தித்தன்” என்பவனை அகமும், புறமும் பாராட்டுகிறது. “தித்தன்” பெயர் பொறித்த மோதிரம் கரூரில் கிடைத்துள்ளது.

பாண்டியர்

            நெட்டிமையார் என்ற சங்கப் புலவர் கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த பாண்டியன் பற்றிக் குறிப்பிடுகிறார். “முந்நீர் விழாவின் நெடியோன்” எனப்படும் அப்பாண்டிய மன்னன் “வடிம்பலம்ப நின்ற பாண்டியன்” என்றும் அழைக்கப்படுவான்.

அம்மன்னன் பற்றி நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,

            “மிக்கெழுந்த கடல்திரைகள்

            சென்றுதன் சேவடி பணிய

            அன்று நின்ற ஒருவன்”

என்றும், பராந்தக பாண்டியன் கல்வெட்டில் மெய்க்கீர்த்திப் பகுதியில்,

            “மன்னர்பிரான் வழுதியர்கோன்

            வடிம்பலம்ப நின்றருளி

            மாக்கடலை எறிந்தருளி”

என்று குறிப்புகள் வருகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் வயதில் முடிசூடினான். அவனை வெல்ல சேரன், சோழன் ஆகிய அரசர்களும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய சிற்றரசர்களுமாக எழுபேர் இணைந்து போரிட்டனர். நெடுஞ்செழியன் ஆலம்கானம் என்ற இடத்தில் ஒரே பகலில் எழுவரையும் வென்று “தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று பெயர் பெற்றான். இதனை நக்கீரர்,

            “கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்

            ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச்

            சேரல் செம்பியன் சினம்கெழு திதியன்

            போர்வல் யானைப் பொலம்பூண் எழினி

            நார்அரி நறவின் எருமை யூரன்

            தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்

            இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்று

            எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்

            முரைசொடு வெண்குடை அகப்படுத்து”

என்று பாடியுள்ளார் (அகம் 36).

இச்செய்தி இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,

            “தலையாலங் கானத்துத் தன்னொக்கும் இருவேந்தரை

            கொலைவாளின் தலைதுமித்தும் குரைத்தலையின் கூத்தொழித்தும்”

என்று கூறப்பட்டுள்ளது. பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டிலும் “ஆலங் கானத்து அமர்வென்றம்” என்று கூறப்பட்டுள்ளது.            மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் கணியநந்தாசிரியன் என்ற சமணத்துறவிக்கு கடலன், வழுதி என்று பெயர் பெற்ற நெடுஞ்செழியன் காலத்தில் கல் படுக்கை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்நெடுஞ்செழியன் மேற்கண்ட தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா அல்லது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனா என்பது தெரியவில்லை. “பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி” பல சங்கப் பாடல்களில் குறிக்கப்பட்ட பாண்டிய மன்னன். நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,

            “கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாம்தவிர்த்த

            பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்”

என்று அம்மன்னன் குறிக்கப்படுகிறான்.

            “பெருவழுதி” “வழுதிபெருவழுதி” என்று பழந்தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை இம்மன்னன் வெளியிட்ட நாணயமாக இருக்கலாம். மாங்குடி மருதனாரால் பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்ட இலக்கியம் “மதுரைக் காஞ்சி”. பத்துப்பாட்டில் ஆறாவது இலக்கியம். அந்நூலின் தொடக்கமாக அமைந்தது “ஓங்குதிரை வியன்பரப்பில்” என்ற தொடராகும். பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு “ஒங்குதிரை வியன்பரப்பில்” என்றே தொடங்குகிறது.

மீன் சின்னம்

            பாண்டியர்க்குரியது மீன் சின்னம். சில எழுத்தாளர்கள் பாண்டியர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்து மிகப் பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலில் ஒற்றை மீன் சின்னத்தைப் பார்த்தவுடன் இது “பாண்டியர்காலக் கோயில்” என எழுதியுள்ளதைப் பல  நூல்களிலும், கட்டுரைகளிலும் காண்கிறோம். இரட்டை மீன்களுடன் நடுவே செண்டு உள்ள மீன் சின்னம் தான் பாண்டியர் சின்னம் ஆகும்.

            “வானார்ந்த பொற்கிரிமேல்

              வரிக்கயல்கள் விளையாட” என்பது பாண்டியர் மெய்க்கீர்த்திப் பகுதி.

சோழநாட்டை வென்ற பாண்டியர்கள் தம்மோடு தங்கள் நாட்டுச் சிற்பிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பல இடங்களில் பாறைகளில் தங்கள் மீன் சின்னத்தைப் பொறிக்கச் செய்துள்ளனர். சோழர் செப்பேட்டில் எல்லைகூறும் சில இடங்களில் “இணைக் கயல்கள் பொறித்துக் கிடந்த பாறைக்குத் தெற்கும்” என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன.

பாரி மகளிர் தொடர்பான செய்திகள்

            பாரி மறைவிற்குப் பின்னர் பாரியின் நண்பரும், அவைக்களப் புலவருமாகிய கபிலர் “பாரி மகளிரைப் பார்ப்பாற்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்துப் பாடியது” என்று புறநானூறு 113ஆம் பாடல் அடிக்குறிப்புக் கூறுகிறது. பின்னர் புறநானூறு 236 ஆம் பாடலில் “வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது” என்ற குறிப்பும் காணப்படுகிறது.

            பறம்புமலையிலிருந்து பாரி மகளிருடன் புறப்படும்போதே பார்ப்பனரிடம் அடைக்கலம் கொடுக்கக் கபிலர் முடிவு செய்திருப்பாரானால் பாரி மகளிரை இருங்கோவேள், விச்சிக்கோ முதலிய சிற்றரசர் அவையில் நிறுத்தித் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் கெஞ்சிக்கேட்க வேண்டும்? எனவே புறநானூறு அடிக்குறிப்பின் மீது ஐயம் ஏற்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் முதலாம் ராசராசன் காலப் பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டு பாரி மகளிரைத் திருக்கோயிலூர் மலையமான் மக்களுக்குத் திருமணம் செய்வித்து விட்டுத் தீப்பாய்ந்து கபிலர் உயிர்துறந்தார் என்று கூறுகிறது.

            “தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்

            மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்

            பெண்ணை மலையர்க்கு உதவிப் பெண்ணை

            அலைபுனல் அழுவத்து அந்தரிட் சம்செல

            மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்

            கனல்புகும் கபிலக் கல்”

என்று இந்நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டுப் பாடல் பகுதியாகும்.   இராசராசன் காலத்துக்கு முற்பட்ட கண்டராதித்த சோழனின் இரண்டாமாண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கோயிலூர் மலையமான் வழிவந்த சித்தவடவன் என்பானைப் புகழும் போது,

            “பாரி மகளிரைப் பைந்தொடி முன்கை

            பிடித்தோன் வழிவரு குரிசில்”

என்று கூறுகிறது. சிவகங்கை மாவட்டம், பிரான்மலைதான் பாரியின் பறம்புமலை. அம்மலை (இப்போது திருக்கொடுங்குன்றம்) அடிவாரத்தில் உள்ள மங்கைநாதர் கோயில் கல்வெட்டில் “தேனாற்றுப் போக்கு வடபறப்பு நாடு, தென்பறப்பு நாடு” என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. மங்கைநாதர்கோயிலே பாரீச்சுரம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. “முன்னூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு” என்று புறநானூறு கூறும். கல்வெட்டில் முன்னூறு ஊர்ப்பற்று என்ற தொடர் காணப்படுகிறது.

பட்டினப்பாலை

            பத்துப்பாட்டில் ஒன்பதாவதாக இடம் பெற்ற நூல் பட்டினப்பாலை. சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இந்நூல் பாடிய புலவருக்கு மன்னன் 16 லட்சம் பொன் பரிசாகக் கொடுத்தான் என்று கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் கூறுகிறது. சங்கரசோழன் உலாவும் தமிழ்விடுதூதும் 16 கோடி பொன் அளித்ததாகக் கூறும்.

            “தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன்

            பத்தொடு ஆறு நூறாயிரம் பொன்பெறப்

            பண்டு பட்டினப் பாலை கொண்டதும்” என்பது கலிங்கத்துப்பரணி.

            சோழன் முதல் பராந்தகன் “மதுரை கொண்ட கோப்பரகேசரி” என்று பட்டம் பெற்றான். பின்னர் வந்த பல சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து வென்றனர். மதுரைக்கு அந்தகம் விளைவித்தவன் என்ற பொருளில் சோழ இளவரசர்கள் மதுராந்தகன் என்று பெயர் சூட்டப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பின் பட்டம் பெற்ற மூன்றாம் ராசராசன் காலத்தில் சோழநாடு வலிமை குன்றியது. இதைக் கண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெரும்படை திரட்டி வந்து மூன்றாம் ராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி வஞ்சம் தீர்த்துக் கொண்டான். மாடமாளிகை கூட கோபுரங்கள் அனைத்தையும் இடித்தான். ஆடரங்குளை அழித்தான். தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்தினான்.

            ஒரு புலவர் இந்த வெற்றியையும், பாண்டியன் செய்த அழிவையும் பாடியவர். கரிகாற் பெருவளத்தான் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் நினைவாக எடுத்த 16 கால் மண்டபம் மட்டும் சோழநாட்டில் அழியாமல் நின்றது என்று பாடினார். இப்பாடல் திருவெள்ளறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

            “வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்

            அறியாத செம்பியன் காவிரி நாட்டு அரமியத்துப்

            பறியாத தூண்இல்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

            நெறியால் விடும்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”

என்று அப்பாடலாகும்.

மலைபடு கடாம்

            பத்துப்பாட்டில் பத்தாவதாக உள்ள நூல் மலைபடுகடாம். பல் குன்றக்கோட்டத்து செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய நூல். 583 வரிகளையுடையது.       நன்னனது மலை நவிரமலை. நவிரமலையில் பல்வேறு அருவிகள் நீர் விழுகிறது. இது ஒரு பெரிய யானையின் மதநீருக்கு ஒப்பானது என்று பாடிய காரணத்தால் இந்நூல் “மலைபடுகடாம்” என்று பெயர் பெற்றது.

            செங்கம் ரிஷபேசுவரர் கோயிலில் ஒரு கல்வெட்டுப் பாடல் உள்ளது. நன்னனின் மலை இலக்கியம் பெற்றது. அருவிகள் உள்ள மலை. ஆனால் இன்று காங்கேயன் கண் சிவந்தால் (கோபித்தால்) அருவிகள் விழும். இரத்த ஆறுதான் புரளும் என்று காங்கேயனின் வீரமும் நயமும் தோன்றப் புலவர் பாடியுள்ளார்.

அப்பாடல் கல்வெட்டு,

            “ஸ்ரீ

            வண்டறைதார் மன்னர் மலைபடைத்தென் மன்னரைவென்

            கண்டதிறல் காங்கேயன் கண்சிவப்பப் – பண்டே

            மலைகடாம் பாட்டுண்ட மால்வரை செஞ்சோரி

            அலைகடாம் பாட்டுண் டது”.

என்பதாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் மலைபடுகடாம் பற்றி குறிப்பு வருகிறது. பிற்காலப் பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் மகன் ஆட்கொண்ட தேவன் மலைபடுகடாம் புகழ்பெற்ற நன்னன் மலையில் தனது வெற்றிச் சின்னத்தைப் பொறித்தான் என்று அக்கல்வெட்டுப் பாடல் குறிக்கிறது.

            “நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்

            வெல்புகழ் அனைத்தும் மேம்படத் தங்கோன்

            வாகையும் குரங்கும் விசயமும் தீட்டிய

            அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்”

என்பது அப்பாடலாகும்.

சில சங்கப் புலவர் பற்றிய குறிப்பு

            இராமநாதபுரத்தில் உள்ள சீமாறன் சீவல்லவன் கல்வெட்டொன்றில் “இருப்பைக்குடி கிழவன் எட்டி சாத்தன் என்பவன் தமிழ்கெழு கூடலில் சங்கப் பலகையில் வீற்றிருந்தவர் வழிவந்தவன்” என்று குறிக்கப் பெறுகிறார். செங்கை மாவட்டம், திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் “பெருநம்பி முத்தமிழ் ஆசான்” என்பவர் சங்கப் புலவர் சாத்தனார் வழிவந்தவர் என்று குறிக்கப் பெறுகிறார்.

            மதுரை மருதன் இளநாகனார் திருப்பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடும் பொழுது “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிடுகின்றார். திருப்பரங்குன்றில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டு ஒன்று “அந்துவன் கொடுப்பித்தவன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கீரன், கீரனார், நக்கீரன், இளங்கீரன், பெருங்கீரன் என்று பல புலவர்கள் பெயர் பெற்றுள்ளனர். புகலூர் ஆறுநாட்டார் மலையில் “கீரன்” எனப் பெயர் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் உள்ளன. ஓமன் நாட்டில் கிடைத்த ஒரு பானையோட்டில் கீரன் என்ற பெயர் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மோசிகீரனார், முடமோசியார் என்ற பெயர்களில் வரும் மோசி என்ற ஊர்ப் பெயர் தொண்டூர் பழங்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

யவனச் சான்றுகள்

            சங்க இலக்கியங்களில் யவனர் பற்றிய குறிப்பு பல இடங்களில் வருகின்றன.

            “யவனர் தந்த வினைமாண் நன்கலம்

            பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம் 149)

            “யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்” (புறம் 56)

            “யவனர் ஓதிம விளக்கு” (பெரும் 315)

            “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” (நெடு 101)

            “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (முல் 61)

என்பன அவற்றுள் சில.  தொல்லியல் மேற்பரப்பாய்விலும், அகழாய்விலும் பலவிதமான ரோமானியர் தொடர்பான பொருட்கள் கிடைக்கின்றன.

1.ரோமானியர் மட்டுமே பயன்படுத்தும் “அரிட்டைன்” “ரௌலடெட்” ஓடுகள் பல தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.

2.உருவமும் பெயரும் பொறித்த ரோமானிய மன்னர் காசுகள் பல கிடைத்துள்ளன.

3.ரோமானியர் பயன்படுத்தும் மதுக்குடங்களான “அம்போரா” மதுக்குடங்கள், எச்சங்கள் பல கிடைத்துள்ளன.

4.ரோமனிய சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன.

இத்தியாவில் கிடைக்கின்ற ரோமானிய மன்னர் காசுகளில் 80 விழுக்காடு தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானியக் குடியிருப்பு உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் சங்ககால ஊர்கள்

            சங்க இலக்கியம் குறிப்பிடும் 17 ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1.அரிக்கமேடு (வீரை முன்துறை)

2.அழகன் குளம் (மருங்கூர்ப்பட்டினம்)

3.உறையூர் (உறந்தை)

4.கரூர் (கருவூர்)

5.காஞ்சிபுரம் (காஞ்சி)

6.காவிரிப்பூம்பட்டினம் (புகார்)

7.கொடுமணல் (கொடுமணம்)

8.கொற்கை (கொற்கையம் பெருந்துறை)

9.தருமபுரி (தகடூர்)

10.திருக்கோவிலூர் (கோவல்)

11.திருத்தங்கல் (தங்கால்)

12.பொருந்தல் (பொருந்தில்)

13.மதுரை (பெரும்பெயர் மதுரை)

14.வசவசமுத்திரம் (நீர்ப்பெயற்று)

15.மாங்குடி (உயர்ந்த கேள்வி மாங்குடி)

16.வல்லம் (சோழர் வல்லம்)

17.கொடுங்கலூர் (முசிறி)

மேற்கண்ட ஊர்களில் நடைபெற்ற அகழாய்வில் கொற்கையின் காலம் கி.மு.850 என்றும், கொடுமணலின் காலம் கி.மு.500 என்றும், பொருந்தல் காலம் கி.மு.490 என்றும் அறிவியல் முறைப்படி நடைபெற்ற கரிப்பகுப்பாய்வு (ஊ14) காலக்கணிப்புப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த நாகரிகத்துடன், சிறந்த எழுத்தறிவு பெற்று விவசாய உற்பத்தியுடன் கைத்தொழிலும் வல்லவர்களாய் ரோம நாடு, வடநாடு, இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலிய பகுதித் தொடர்புடன் சங்க கால மக்கள் வாழ்ந்தது தெரிகிறது. பல்வேறு கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். நிலையாக ஊர்கள் அமைத்து வாழ்ந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

கடல் பணமும் வெளிநாட்டுச் சான்றுகளும்

            ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகட்டு முற்பட்டதாகக் கருதப்பெறும் தொல்காப்பியம் “கலத்திற் சேரல்” என்று கடல் பயணத்தைக் குறிக்கிறது. அன்றைய தமிழர்கள் கடல் பயணத்திற்குப் பெண்களை அனுமதிக்கவில்லை. “முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை” என்பது தொல்காப்பிய நூற்பா.

            “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

            வளிதொழில் ஆண்ட உரவோன்”

என்பது புறநானூற்றுப் பாடல், “அலைகடல் நடுவுள் பல கலம்” செலுத்தியவர்கள் தமிழர்கள். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி.

            சங்க இலக்கியங்களில் வெளிநாட்டவர் (யவனர்) பற்றிய குறிப்பு உள்ளது. அண்மைக் காலம்வரை வெளிநாட்டில் சங்ககாலத் தமிழர் பற்றிய சான்றேதும் கிடைக்காமலிருந்தது. அண்மைக் காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் சங்ககாலப் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.

1.எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் உள்ள தொன்மையான நகரம் குவாசிர் அல்காதிம். அங்கு அமெரிக்கத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழ் எழுத்தில் “கண்ணன்” “சாத்தன்” என்று எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

2.எகிப்து நாட்டில் பெறனிகே என்ற இடத்தில் பழந்தமிழில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

3.தாய்லாந்து நாட்டில் கிளாங்தோம் என்ற இடத்தில் சோழருடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது.

4.தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் பொன் மாற்றுக் காணும் உரைகல் “பெரும்பத்தன் கல்” எனும் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ளது.

5.தாய்லாந்து நாட்டில் பூகாதாங் என்ற இடத்தில் “தூதோன்” என எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

6.ஓமன் நாட்டில் கோர் ரோரி என்ற இடத்தில் “ணந்தைகீரன்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

7.எகிப்து நாட்டில் குவாசிர் அல் காதிம் என்ற ஊரில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் “பனை ஒறி” என இருமுறை எழுதப்பட்ட ஒரு மட்கலம் கிடைத்துள்ளது.

8.வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள “பேபிரஸ்” என்னும் பழந்தாளில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. கிரேக்க மொழியிலும், பழந்தமிழிலும் எழுதப்பட்ட அந்த ஆவணத்தில் முசிறியைச் சேர்ந்த தமிழ் வணிகன் ஒரு கப்பலில் கொண்டு சென்ற வாசனைப் பொருட்கள், தந்தப் பொருட்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. இது போல் பல தமிழக வணிகர்கள் அக்கப்பலில் பொருள்களைக் கொண்டு சென்றார்கள் இந்த ஆவணம் கான்ஸ்டாண்டிநோபில் வணிகருக்கும் சேரநாட்டு முசிறி வணிகர்கட்கும் ஏற்பட்ட ஒப்பந்தமாகும்.

9.கொற்கையில் கிடைத்த பானை ஓடு ஒன்றில் யவனக் கப்பல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓரியை வென்ற காரி

            தகடூர் அதியமான் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக் காரிமீது படையெடுத்த போது கொல்லிமலை ஓரி அதியமானுக்குப் படை உதவி செய்தான். தக்க சமயம் வாய்த்த போது ஓரி மீது போர் தொடுக்கக் காரி எண்ணியிருந்தான். அதன்படி காரி ஓரியின் கொல்லிமலை நாட்டை முற்றுகையிட்டுத் தாக்கினான். கொல்லிமலை நாடு காரி வசம் ஆகியது. ஓரியும் போரில் கொல்லப்பட்டான்.

            கொல்லிமலையைப் பெறவேண்டும் என்று நெடுநாள் எண்ணியிருந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொல்லிமலையை காரி அன்பளிப்பாக வழங்கினான்.  பெருஞ்சேரல் இரும்பொறை இந்நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டுத் தன் உருவம் பொறித்த “கொல்லிப் பொறை” கொல்லிரும்பொறை என்று காசுகளை வெளியிட்டான். இதனைப் புறநானூறு,

            “முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி

             செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

             ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

             செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி”

என்று கூறுகிறது. கண்டாராதித்தன் காலக் கல்வெட்டொன்று மலையமான் திருமுடிக் காரி வழி வந்த சித்த வடவன் என்பானைப் புகழும்போது,

            “வல்வில் ஓரியை மதவலி தொலைத்த

             செல்பரி மிகுந்த சித்த வடவன்”

என்று புகழுகிறது. இக்கல்வெட்டின் மூலம் மலையமான் திருமுடிக்காரி கொல்லிமலை வல்வில் ஓரியைப் போரில் வென்ற செய்தி உறுதிப்படுகிறது. எடக்கல்லில் கிடைத்த பழந்தமிழ்க் கல்வெட்டில் “பல்புலி தாத்த காரி” என்ற தொடர் காணப்படுகிறது.

அதியமான்

            தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் அதியமான் மரபினர்.  அதியமான் நெடுமான் அஞ்சி மகன் எழினி. அஞ்சி – எழினி என்ற பெயரை மாறி மாறி வைத்துக் கொண்டனர்.  இவர்கள் சேரர் மரபினர் என்பர்.  பனைமரம் இவர்களின் லட்டிகம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  தகடூர் யாத்திரையில் சேரனிடம் அதியமான் பற்றிக் கூறும்போது “உம்பி (உன் தம்பி) என்று புலவர் கூறுகிறார்.  கல்வெட்டில் “சேரன் அதிகன்”, “வஞ்சியர் குலபதி” என்ற தொடர்கள் காணப்படுகின்றன.

            திருக்கோயிலூர் மலையமானோடு போரிட்ட அதியமான் மலையமான் தலைநகரை அழித்தான் என்று அவ்வையார் கூறுகிறார்.  திருக்கோயிலூருக்கு மிக அருகில் உள்ள ஜம்பை என்ற ஊரில் உள்ள குன்றுப்பகுதியில்,

            “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி”

என்ற கல்வெட்டொன்று பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பில் காணப்படுகிறது.  அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பெறும் “சதியபுத்திரர்” என்ற சொல்லே “ஸதிய புதோ” என்று ஜம்பைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.  சிலர் “சதிய” என்று அசோகன் கல்வெட்டில் வரும் பெயரைச் “சத்திய” என்று தவறாக உணர்ந்து “வாய்மொழிக் கோசரோடு” தொடர்புபடுத்துவது தவறாகும்.

வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபு

            இவர்கள் பழனிமலைத் தலைவர் மரபினர்.  இவர்கள் சேரர்கட்கு மகட்கொடைக்கு உரியவர்கள்.  பதிற்றுப்பத்துக் கூறும் எட்டு அரசர்களில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பெருஞ்சேரல் இரும்பொறை மூவரும் பழனி வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபின் மகள் வழிப் பிறந்தவர்கள் ஆவர்.  இவர்கள் முறையே 4,6,8 பத்துக்கு உரியவர்கள்.

            அழகன் குளம் அகழாய்வில் “பதுமன் கோதை” என்று பழந்தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது.  இக்கோதை (சேரர்) வேளாவிக் கோமான் பதுமன் தேவியர் ஒருவரின் மகனாக இருக்கக்கூடும்.

மலையமான்

            திருக்கோயிலூர் மன்னன் மலையமான்.  மலையமான் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்துள்ளது.  இது மலையமான் மரபினர் வெளியிட்ட நாணயமாக இருக்கக்கூடும். பண்ணன், வெளியன் என்பவர்கள் சங்க இலக்கியம் கூறும் தலைவர்கள்.  கொடுமணல் அகழாய்வில் “பண்ணன்” என்ற பெயரும், அரிட்டாபட்டி பழந்தமிழ்க் கல்வெட்டில் “வெளியன்” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

புலவர் செ.இராசு,

ஈரோடு.

சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

      உலக அளவில் வளரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத தொழில்களாகக் கருதப்படுபவை உழவும், வணிகமும் ஆகும். இதனை அடியொட்டியே அந்நாட்டின் பொருளாதார வலிமையும் அமைகிறது. செல்வம் பெருகுவதற்கும், அதனை வழங்கிக் கொடையில் மேம்படுவதற்கும் இவை துணை புரிவன, இதனையே

                        “மீக்கூறும்……………..

                        வியல் மேவல் விழுச் செல்வத்து

                        இருவகையான் இசை சான்ற

                        சிறுகுடிப் பெருந்தொழுவர்”

என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. உழவுத் தொழில் நாட்டு அளவிலும் வணிகம் உலக அளவிலும் அமைந்தது. மிகப் பழங்காலத் தொட்டே கடல்கடந்து சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதைத் தொல்காப்பியமே உறுதி செய்கிறது. தமிழ் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செலல் நிலவழி, நீர்வழி ஆகிய இரண்டு வழிகளைக் கொண்டிருந்தனர். ‘இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்’ என்னும் நூற்பாவிற்கு உரை எழுதியவர்கள் காலினும் கலத்தினும் எனச் சுட்டினர். உற்பத்தி செய்வதற்குரிய மூலப் பொருட்களைப் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து சேர்ப்பதும், உற்பத்தி செய்த பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் என வணிகர்கள் செயல்பட்டனர். இதற்கு நீர்வழியையும் நிலவழியையும் பயன்படுத்தினர். அக்காலத்தே மேலை நாட்டினராகிய கிரேக்கர், யவனர், பாபிலோனிய நாட்டுக் கோசியர்கள் தமிழகத்தோடு கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். கடல் வணிகத்தில் அதிகம் ஈடுபட்டுப் பெருஞ் செல்வத்தை ஈட்டி வந்ததே ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உருவாகக் காரணமாகியிருக்கும். இத்தகைய வணிகத்திற்குத் தமிழகம் நீர்வழியைப் பயன்படுத்தியமையைச் சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகவே சுட்டியுள்ளன. அதற்குப் பயன்பட்டன கலங்கள் எனச் சுட்டப்பட்டன. சங்க இலக்கியத்தில் கலங்கள்

கலங்களின் வகைகள்

            அம்பி, புணை (பிணை), திமில், நாவாய், வங்கம், கலம், ஒடம், மிதவை, பஃறி, நீரணிமாடம், தோணி என்பன சங்க இலக்கியங்களின் வழி அறியப்படுவன.

                        ‘நன்கலம் பரிசின் மாக்கட்கு நல்கி’

                        ‘கடன் மண்டு தோணி,

                        முந்நீர் வழங்கு நாவாய் – எனப் புறநானூறும்,

                        ‘கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால்’ எனச் சிலம்பும்,

                        ‘இரவெனம் ஏமாப்பில் தோணி’

                        ‘பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும்’-எனத் திருக்குறளும்,

                        ‘ஓடம் புனைகலம் பெய்த தோணி’

எனச் சீவகசிந்தாமணியும் இப்பெயர்களைக் குறித்துள்ளன. நீரில் மரங்கள் மிதப்பதைக் கண்டவன் அவற்றில் ஏறி நீரைக் கடக்க முயன்றுள்ளான். அதில் வெற்றிபெற்றதால் தனது திறமையினால் மரங்களை ஒழுங்குபடுத்தி பலவற்றை ஒன்றாக இணைத்துக் கட்டுமரம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளான். மனிதன் முதன் முதலில் நீரைக் கடக்கக் கண்டுபிடித்த சாதனம் மிதவை. இதுவே பிற்காலப் படகுகளின் தாய் எனலாம். சங்க இலக்கியங்களில் கட்டுமரத்தைப் புணை என்று குறித்துள்ளனர். மரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டுவதால் பிணை எனக் குறிக்கப்பட்டதே புணையாகியிருக்கும். மிதவை என்பது உள்ளூரில் ஏரி குளங்களில் பயன்பட்டதாக இருக்கலாம். மிதவை என்பதற்குத் தெப்பம் என்றும் புணை என்பதற்குத் தெப்பம், கால்விலங்கு மூங்கில் என்றும் அகராதி பொருள் தருகிறது. மேலும் ஆற்றின் ஓரமாக வளர்ந்த மூங்கில்களைக் கொண்டு புணைகள் அமைக்கப்பட்ட காரணத்தாலும் மூங்கில் என்னும் பொருள் கொண்ட புணை என்ற சொல் மரக்கலத்தின் பெயராக ஆகியிருத்தல் கூடும். இவையே ஆறுகளில் புனல் விளையாட்டிற்குப் பயன்பட்டதாக அறிகிறோம்.

            வணிகத்தின் பொருட்டுப் பெரிய மரக்கலங்களில் சென்றோன் அம்மரக்கலம் கடலில் பெரிய அலைகளால் உடைபட்டுப் போகப் புணையாகிய தெப்பத்தில் கரை சேர்ந்ததாகக் கூறுவதை மணிமேகலைக் காப்பியம் வழி அறியமுடிகிறது. எனவே கட்டுமரத்தைப் புணை எனச் சுட்டியமை உறுதியாகிறது.

பஃறி

உள்ளூர்களில் உப்பைவிற்று அதற்கு ஈடாக நெல்லைப் பெற்று வந்தனர் என்பதனை

            “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

            நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”

            எனப் பட்டினப்பாலை சுட்டுகிறது. இப்படகுகள் கட்டுத்தறியில் குதிரைகளைப் பிணிப்பது போல் உப்பங்கழியைச் சார்ந்த தறிகளில் கட்டியிருப்பர் எனவும் மொழிகிறது.

அம்பி

சிறிய மரக்கல வகையைச் சார்ந்த ஒன்று அம்பி. அம்பு என்ற சொல்லிலிருந்து திரிந்த ஒன்றாகக் கருதுவர். ஓற்றை மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலமாகவும் அமையலாம். இக்கலத்தின் முன்பகுதி குதிரைமுகம் / யானை முகம் / சிங்க முகம் போன்று காணப்பட்டதாகச் சிலம்பின் (13:176) வழி அறியமுடிகிறது. இது ஆட்களை ஏற்றி அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு செல்லும் வகையில் பயன்பட்டதை அறியமுடிகிறது. குகன் ஆயிரம் அம்பிக்கு நாயகன் எனச் சுட்டப்பட்டமை ஈண்டு குறிக்கத் தக்கதாகும். மீன் பிடித்தல் தொழிலிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய உதவாது ஒழிந்த அம்பி என நற்றிணைப் பாடல் சுட்டுவதால் இக்கலம் உள்நாட்டிலேயே அதிகம் (ஆறு) பயன்பட்டிருக்க வேண்டும் என உணரமுடிகிறது.

திமில்

கட்டுமரம், கலம், கப்பல் என்ற பொருள்களை அகராதி சுட்டுகிறது. இது பெரும்பான்மையும் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுறாமீன் வேட்டைக்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒருவகைக் கட்டுமரமே. இது திண்மையும் உறுதியும் உடையதாதலின் சுறாமீன் வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கொடுந்திமில் எனக் குறுந்தொகையுள் சுட்டப்பட்டுள்ளது. திமில் என்னும் கலனில் விளக்கு பயன்படுத்தப்பட்டமையும், கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கைக் கொண்டு அடையாளம் கண்டு தம்மிடம் (கரையை அடைவர்) சேர்வர் என்றும் நற்றிணை, புறநானூறு, பட்டினப்பாலை, அகநானூறு ஆகிய இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

ஓடம்

தொன்மையான காலந்தொட்டுத் தமிழகத்தில் நீரைக்கடக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதுவும் சிறிய மரக்கல வகை. நீரில் வேகமாக ஓடுவதால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கும். ஓடக்கோல் என்றழைக்கப்படும் நீண்டகோலினாலே ஆற்றில் செலுத்தப்பட்டது.

நீரணிமாடம்

சிறிய படகு வகை. உல்லாசப் படகுப் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்ட கலம்.

தோணி

ஒரே மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலம். தொள் என்னும் வினையடியிலிருந்து தோன்றியிருக்கக் கூடும். தொள் என்பது குழித்து எடுப்பது என்னும் பொருள் தரும் சொல்லாகும். தோள் – தொடு – தோடு – தோண்டு. பெரிய மரக்கலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கரைக்கு கொண்டு வந்ததனை

                        “கலம் தந்த பொற்பரிசம்

                        கழித் தோணியான் கரை சேர்க்குந்து”

எனப் புறநானூறு சுட்டுகிறது. குதிரைகள் கடல்நீரைப் பிளந்து செல்லும் தோணிகள் போலப் பகைவருடைய படைமுகத்தைப் பிளந்து செல்லும். கடல் மண்டு தோணியின் படை முகம் போல’ எனவும் புறநானூறு சுட்டுகிறது. இதனால் விரைந்து செல்லக் கூடியது என்பதும் தெளிவாகிறது. பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், மீன் பிடித்தலுக்கும் தோணி பயன்பட்டதனை பின்னர் வந்த இலக்கியங்களும் சுட்டுகின்றன.

நாவாய்

கடலில் செலுத்தப்படும் பெரிய கலத்துக்கு ‘நாவாய்’ என்று பெயர். புகார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகளால் தாக்குண்டு தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் அசைந்தன. அவற்றின் மீது காணப்பட்ட பாய்மரத்தின் கொடிகள் பறந்தன என்பதனை

                        “வெளில் இளிக்கும் களிறுபோல

                        தீம் புகார்த் திரை முன் துறை

                        தூங்கு நாவாய் துவன்று இருக்கை

                        மிசைக் கூம்பின் நசைக் கொடியும்’

என்ற அடிகளால் பட்டினப்பாலை சுட்டுகிறது. நாவாய் என்னும் கலம் பண்டைத் தமிழர்களால் வணிகக் காற்றின் வரவு செலவு அறிந்து ஓட்டிச் செல்லப்பட்டது.

                        “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

                        வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”

என்கிறது புறநானூறு.

            நாவாய்கள் குதிரைகளை மேற்றிசையிலிருந்து வடதிசைக் கண்ணிலிருந்தும் கொண்டுவந்தன. மேலும் வடதிசைக்கண் விளையும் நுகர் பொருள்களான மணியும் பொன்னும் பிறவும் கப்பலில் வந்து இறங்கின எனப் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது. இச்சான்றுகளின் மூலம் நாவாய் என்னும் கலம் பண்டைக் காலங்களில் காற்றின் துணையினால் செலுத்தப்பட்ட ஒரு பாய்மரக்கப்பல் என்றே கருதமுடிகிறது. முற்காலத்தில் காணப்பட்ட நாவாய்கள் யானை போன்ற அமைப்பில் முன் பின் பகுதிகள் சுருங்கியும் நடுப்பகுதி விரிந்தும் பரந்துபட்டுச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

கலம்

பாத்திரம், அணிகள், கப்பல் முதலியவற்றைக் குறிக்கப்பயன்படும் சொல். பெரிய பாய்மரக் கப்பல்கள் மரப் பலகையால் செய்யப்பட்டிருத்தலால் அவை மரக்கலம் என்ற பெயரில் அழைக்கப்படலாயினர். கலத்திலுள்ளவை பாயும், கயிறும், பாய்மரமும், சிதையும் நிலையிலுள்ள மரக்கலத்தைப் ‘பயின்’ என்ற ஒரு வகைப் பசையினால் சீர்செய்துள்ளனர்.

இதனை,

                        சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்

                        இதையும் கயிறும் பிணையும் இரியச்

                        சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

                        திசை அறி நீ கானும் போன்ம்”         (பரிபாடல்.10:53-55)

என்ற அடிகளால் அறியலாம்    கடற்கரையில் அமைந்துள்ள பெரிய வீடுகளின் மேலே ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு கலங்கள் கரையை வந்தடைவதற்கு உதவின என்கிறது பெரும்பாணாற்றுப்படை. இச்சான்றின்வழி கடற்கரையை அடுத்து உயர்ந்த இடங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தமையும் இரவில் அவ்வீடுகளில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கின் ஒலி கடலிலே காணப்படும் கலங்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்து கலங்கள் கரையை வந்தடைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன என்றும் தெரியவருகிறது.

வங்கம்

        வங்கம் என்ற கலமும் ஒரு பெரிய மரக்கல வகையே. அகராதியில் வங்கத்திற்குப் பெரியகப்பல், அலை, கடல் எனப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கு அல்லது வங்கு கால் என அழைக்கப்படும் சட்டங்கள் கலங்கள் கட்டுவதற்கு மூலக் கருவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வங்குக் கால்களால் கட்டப்பட்ட முதல் பெரிய மரக்கலத்துக்கு வங்கம் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்றும் வங்காள விரிகுடாக் கடலின் வழியாகவே இக்கலம் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் வங்கம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

            தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று பட்டினப்பாலை மிக விரிவாக உணர்த்துகிறது. வெளியே அனுப்புவதற்குக் குவிந்திருக்கும் பண்ட மூட்டைகளின் மீது சோழனுடைய புலிவடிவம் முத்திரையிடப்பட்டது. முத்திரையிடப்படாத பண்டங்கள் வெளியேற முடியாது என்றும் கூறுகிறது. இவ்வளவு கட்டுக்காவலுடன் ஏற்றுமதியும் இறக்குமதியும் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. குதிரை, மிளகு, பொன், மணி, அகில், முத்து, ஆரம், துகில், ஈழ உணவு போன்ற பொருட்கள், விளைபொருட்கள், கருப்பூரம், பன்னீர், குங்குமம் போன்ற பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களாக விளங்கின.

            கடற்படையில் சிறந்திருந்தமைக்கும் தமிழிலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. கடல்பிறக்கோட்டிய குட்டுவன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன், பெரும்பாணாற்றுப்படை நீர்வழியே நிலைநாட்டி வென்றமை.

            திமில், அம்பி, தோணி ஆகியனவே பெரும்பான்மையும் மீன்பிடிக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திமில் என்னும் கலத்தில் வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடித்தமையினை நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் ஆகிய நூல்கள் குறித்துள்ளன. திமில் என்னும் கலம் இரண்டு பக்கங்களிலும் பிறைபோன்று மேல்நோக்கி வளைந்து உள்ளிடம் அகன்று முனைகள் குறுகிக் காணப்படும் கலமாகும். மேலும் இதனைக் கொடுந்திமில், நெடுந்திமில், திண்திமில், நிரைதிமில் என அடைகொடுத்தும் சுட்டியுள்ளனர்.

            நீரில் உல்லாசப் பயணம் செல்லப் படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். பரிபாடலில் நீரணிமாடம் என்னும் ஒரு உல்லாசப்படகு சுட்டப்பட்டுள்ளது. இது நடுவே அகன்றும் முன் பின் சுருங்கியும் காணப்படுவது. இதன் நடுவே உட்காருவதற்கு ஏற்பச் சிறு மண்டபம்போல் ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கும் எனப் பாடல் சுட்டுகிறது. சிலப்பதிகார நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நீரணிமாடத்தில் தென்கரையை அடைந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

            பண்டைத்தமிழ் மக்கள் கப்பற்கலையில் சிறந்து விளங்கினர் என்பதை, அவர்கள் கடல் வணிகத்தில் புகழ்பெற்று விளங்கியிருந்ததன் மூலமும் கடற்போர், கடற்கொள்ளை, மீன் பிடித்தல், உல்லாசப் பயணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு அவர்கள் பயன்படுத்திய கலங்கள் வாயிலாகவும் உறுதி செய்யமுடிகிறது. மேலும் பல்வேறு வகையான கலங்களைச் சமைத்து அவற்றைச் செலுத்தியமை அவற்றில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்தமையும் இதனை உறுதிசெய்வனவாகும். கப்பற்கலைக்கு உதவிக் கூறுகளாகத் திகழும் துறைமுகங்கள், கலங்கரை விளக்கங்கள், சுங்கச் சாவடிகள் திறம்படக் கையாளப்பட்டமை கலங்களின் உறுப்புகளாகிய நங்கூரம், ஓடக்கோல், குடுப்பு, பாய்மரம் பயன்படுத்தியமை இவற்றின் அங்கமாகிய காற்று, அலை, ஓதம், விண்மீன்கள் போன்ற இயற்கை உதவிக் கூறுகளை அறிந்து செயல்பட்டமை முதலியன தமிழனின் அறிவுத்திறத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுவனவாகும்.

நங்கூரம்

கடலிலோ, ஆற்றிலோ செலுத்தப்படும் கலங்களை நிறுத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் பெயரே நங்கூரம் எனப்படும். இது முற்காலங்களில் கல்லினால் ஆன ஒரு கருவியாகவே இருந்துள்ளது. கலங்களின் உருவத்திற்கு ஏற்ப நங்கூரத்தின் எடையும் காணப்படும். கல்லை நங்கூரமாகப் பயன்படுத்திவந்த மக்கள் பிற்காலத்தே மரத்தினால் நங்கூரம் செய்து அதில் ஒரு கல்லைக் கட்டி நீரில் இறக்கிக் கலங்களை நிறுத்தி வந்தனர். பின்னர் நங்கூரம் இரும்பினால் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது. மதுரைக்காஞ்சி வாயிலாகப் பழந்தமிழகத்தில் கல் நங்கூரம் பயன்படுத்தப்பட்ட உண்மை தெரியவருகிறது.

            கடலில் காலவரையறைக்குட்பட்டு ஏற்படும் கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு ஓதங்கள் என்று பெயர். இதனைக் கடல் ஏற்றம், கடல் இறக்கம் என இன்று குறிப்பிடுகிறோம். ஓதம் என்பதற்குள்ள பல்வேறு பொருள்களுள் நீர்ப் பெருக்கு என்பது ஒன்றாகும் (வுனைநள). வேலி ஏற்றம் அல்லது கடல் ஏற்றம் என்பது கடலில் நீர் மிகுந்து கரையை நோக்கி வருவதாகும் (ர்iபா வுனைநள). வேலி இறக்கம் என்பது கடலில் நீர் உள்வாங்குவதாகும் (டுழற வுனைநள). கடற்கரைப் பரப்பிலிருக்கும் தாழை, கழியில் நீர் குறையுங்கால் தாழ்ந்தும், கழியில் ஓதம் மிகும்போது உயர்ந்தும் அலைதலைப் போலத் தலைவியின் நெஞ்சம் வருந்தியதாகக் குறுந்தொகைப் பாடல் (340) சுட்டுகிறது.

            ஓதங்களுக்கு மூல காரணங்களாக அமைவன சூரியனும் சந்திரனும். பூமி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒன்றையொன்று ஈர்க்கும் திறன் கொண்டவை. ஈர்ப்புவிசை கோள்களின் பொருண்மைக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் இடையேயுள்ள தொலைவிற்கு எதிர் விகிதத்திலும் அமைந்துள்ளது. சூரியனின் பொருண்மை அதிகமாயினும் அது வெகு தொலைவில் இருப்பதால் அதனின் பொருண்மை மிகவும் குறைந்து காணப்பட்டாலும் மிக அருகாமையில் இருக்கும் சந்திரனே பூமியிலுள்ள பொருள்களை ஈர்ப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் ஓதங்கள் அளவில் மிகுந்து காணப்படுகின்றன. இதனைத் தங்களது வாழ்நாளில் கண்டு உணர்ந்த பண்டைத் தமிழர்கள் சந்திரனுக்கும் ஓதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நம்பினர். சந்திரன் பௌர்ணமி நாளில் மிகத் தெளிவாக விளங்கியதால் கடலும் பொங்கும் அலைகளை உடையதாயிருந்தது. ஓதமும் கரையை மோதிப் பெயர்த்;து சென்றது என்கிறது நற்றிணைப் (335) பாடல்.

            மேலும் அகநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, ஐங்குநூறு ஆகிய நூல்களிலும் இத்தகு சான்றுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதனைப்போன்றே வானநூல் அறிவுமிக்கோர் தமிழர் என்பதனையும் இவ்விலக்கியங்கள் சுட்டிச் சென்றுள்ளன.

            தமிழர்கள் மிகத் தொன்மைக் காலந்தொட்டே நீரியல் மற்றும் வானியல் அறிவைப் பெற்றிருந்தனர். கடலில் நீரோட்டங்களைக் குறித்த அறிவு அவர்களுக்கு மிகுதியாகவே இருந்திருக்கிறது. நீரின் ஓட்டம், கடலின் ஆழம் ஆகியன அறிவதற்குத் தாவுக்கயிறு என்ற ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு நீண்ட கயிற்றின் நுனியில் ஒரு கல் கட்டப்பட்டிருக்கும். ஒரு கலத்தில் செல்லும் மீனவர்கள் எதிரேவரும் கலத்தில் இருக்கும் மீனவரிடம் நீரோட்டம் எந்தத் திசையிலிருந்து எந்தத்திசைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொள்வர். நீரோட்டத்தைக் கொண்டு கடலில் எந்த இடத்தில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதனை உணர்ந்திருந்தனர். கடல் நீரின் நிறத்தைக் கொண்டும் மீன்கள் கிடைப்பதனைத் தீர்மானிப்பர். எவ்வகை மீன்கள் கிடைக்கும் என்பதனை இதன்வழி அறிவர். இன்னின்ன காலங்களில் கலங்கள் செல்வதற்கேற்ற பருவக்காற்றுகள் வீசும் என்றும் அந்தக் காலங்களில் கடல் கொந்தளிப்பு இருக்காது என்றும் மழையும் குறைவாக இருக்கும் என்றும் அறிந்து செயல்பட்டனர்.

            நடுக்கடலில் இருக்கும் போது கரையை அறிந்துகொள்வதற்குப் படகோட்டிகள் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

1.          தாவுக்கயிறு என்பதன் மூலம் ஆழந்தை அறிந்து கொள்ளுதல்

2.          நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகள் கரையைக் கண்டு அடைவதற்குப் பறவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பறவை வெளியே பறந்து வட்டமடித்து மீண்டும் அந்தக் கலனுக்கே திரும்பிவிட்டால் கலன் கரையை அடையவில்லை என்பது பொருளாம்.

      பழந்தமிழகத்தில் கப்பற்கலை குறித்த செய்திகளைக் காணும்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஒரு வணிகக் கேந்திரமாக விளங்கியது. பல்வேறு நாடுகளிலிருந்து பண்டங்கள் தமிழகக் கடற்கரைக்கு வந்தமை, தமிழகத்தில் கிடைத்த பொருட்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை, தமிழகத் துறைமுகங்களில் சுங்கச் சாவடிகள் இருந்தமை, சுங்கச் சாவடிகள் திறம்படச் செயல்பட்டமை ஆகியன இதனை உறுதிசெய்வனவாகும். பல்வேறு வகையான கலங்களைப் பயன்படுத்தியிருத்தலின் தங்கள் அறிவு நுட்பத்தால் ஆக்கவும் பழுதுபார்க்கவும் முடியும் என்பதைப் புலப்படுத்தியுள்ளனர். வணிகத்தின் பொருட்டும், மீன்பிடிப்பதற்கும், கடல் பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், கடற்போருக்கும் பயன்படும் விதத்தில் ஆக்கப்பட்ட கலங்கள் அவர்களது தொழில் திறத்தை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன.

            காற்றின் உதவியினால் கலங்களில் பாய்கட்டிச் செலுத்த முடியும் என்பதை அறிந்து கலங்களைச் செலுத்தியுள்ளனர். கலங்களைச் செலுத்திச் செல்வதற்கேற்ற உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர். படகு உறுப்புக்களின் உதவிக்கூறுகள் மட்டுமின்றி இயற்கை உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. மேலும் இவை அனைத்திற்கும் அடிப்படைத் தேவையான வானியல் அறிவைப் பெற்றிருந்தமையும் வியக்கத்தக்கதாகும். இவ்வாறு கப்பற்கலையை வளர்த்து வந்ததன் மூலம் தமிழர்கள் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் மேம்பட்டுத் திகழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.சபாபதி (ஓய்வு)

இணைப்பேராசிரியர்,

தேசியக்கல்லூரி,

திருச்சிராப்பள்ளி -620 001.

விறன்மிண்ட நாயனார்‌ புராணம்

விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார்‌

        விறன்மிண்ட நாயனார்‌ சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில்‌ பிறந்தவர்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அளவற்ற பக்தியும்‌ அன்பும்‌ கொண்டிருந்தார்‌. சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவப்‌பணிகள்‌ செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாக்‌ கருதினார்‌.

         ஒருமுறை விறன்மிண்ட நாயனார்‌ திருவாரூரில்‌ வீற்றிருக்கும்‌ தியாகராஜப்‌ பெருமானை வணங்க அங்கு வந்தார்‌. விறன்மிண்ட நாயனார்‌ வந்த அச்சமயத்தில்‌, சைவசமயக்‌ குரவர்களில்‌ ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும்‌ திருவாரூர்‌ ஆலயத்திற்கு வந்திருந்தார்‌. சுந்தரர்  ஆலயத்தில்‌ அமர்ந்திருந்த பல சிவனடியார்களைக்‌ கண்டும்‌ அவர்களை வணங்காமல்‌ ஒதுங்கி வந்தார்‌.

       அடியார்களை மதியாது ஆலயத்தினுள்‌ சென்ற சுந்தரரைக்‌ கண்ட விறன்மிண்ட நாயனாருக்கு, ‘சுந்தர மூர்த்தி நாயனார்‌ சிவனோடு நட்புறவு கொண்டவராக இருக்கலாம்‌. இருப்பினும்‌ இப்படி சிவனடியார்களை மதிக்காமல்‌ செல்வது நல்லதில்லையே’ என்று எண்ணி மனம்‌ வருந்தினார்‌.

       சுந்தர மூர்த்தி நாயனாரின்‌ மேலும்‌ அவருக்கு வடக்கு வாசலில்‌ திருக்காட்சி அளித்த தியாகேசப்‌ பெருமானின்‌ மீதும்‌ கோபம்‌ கொண்டு, “திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும்‌ புறம்பு; அவனை ஆண்ட சிவனும்‌ புறம்பு” என்றார்‌.

     இனி திருவாரூக்குத்‌ தான்‌வருவதில்லை என்று சபதம்‌ செய்தார்‌. அதோடு மட்டுமின்றி திருவாரூருக்குச்‌ சென்றுவரும்‌ சிவனடியார்களின்‌ கால்களையும்‌ வெட்டுவேன்‌ என்று கூறி, ஆண்டிப்பந்தல்‌ என்ற ஊரில்‌ தங்கியிருந்தார்‌.

     சிவனடியார்கள்‌ மீது விறன்மிண்ட நாயனார்‌ கொண்ட பக்தியை உலகுக்குத்‌ தெரிவிக்க விருப்பம்‌ கொண்டார் சிவபிரான்‌. சிவனடியார்‌ உருவம்‌ தாங்கி ஆண்டிப்பந்தல்‌ வந்தார்‌. விறன்மிண்ட நாயனாரைச்‌ சந்தித்தார்‌. தான்‌ திருவாரூரிலிந்து வருவதாகக்‌ கூறினார்‌.

       அதைக்கேட்டு கோபம்‌ கொண்ட விறன்மிண்ட நாயனார்‌, அச்சிவனடியாரின்‌ கால்களை வெட்டுவது என்று வாளை ஓங்கிக்‌ கொண்டு ஒடினார்‌. சிவனடியாரும்‌ அவரைக்கண்டு பயந்ததுபோல்‌ ஓடிக்‌ கொண்டேயிருந்தார்‌. விறன்மிண்ட நாயனாரும்‌ அச்சிவனடியாரைத்‌ துரத்தி துரத்தி அவரையறியாமல்‌ திருவாரூருக்கே வந்துவிட்டார்‌.

      உடனே அந்தச்‌ சிவனடியார்‌, விறன்மிண்ட நாயனாரை நோக்கி, “திருவாரூர்‌ மண்ணை மிதிக்க மாட்டேன்‌ என்று சபதம்‌ செய்தாயே; இப்போது திருவாரூருக்கு வந்து விட்டாயே!” என்று கேலியாகப்‌ பேசினார்‌. இதனால்‌ கோபமடைந்த விறன்மிண்ட நாயனார்‌, தன்‌ கைகளிலிருந்த அந்த வாளால்‌ தன்‌ கால்களையே வெட்டிக்‌ கொண்டார்‌. உடனே சிவனடியார்‌ உருவிலிருந்த சிவபெருமான்‌, நாயனாரைத்‌ தடுத்தாட்கொண்டார்‌.

        விறன்மிண்ட நாயனார்‌ சிவனடியார்‌ மீது கொண்ட அன்பை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும்‌, திருத்‌தொண்டத்‌ தொகையைப்‌ பாடினார்‌. அதைக்‌ கேட்ட விறன்மிண்ட நாயனார்‌ பெருமகிழ்ச்சி அடைந்தார்‌. சுந்தரருடன்‌ நட்பு கொண்டார்‌. இவ்வாறு வாழ்ந்த விறன்மிண்ட நாயனார்‌, இறுதியில்‌ சிவஜோதியில்‌ கலந்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

     தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 26+8=34 என்று குறிப்பிடுகின்றது. பிற்கால யாப்பியல் நூல்களான யாப்பருங்கலக்காரிகை, 8 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம்), யாப்பருங்கலம் 7 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு), காக்கை பாடினியம் மற்றும் இலக்கண விளக்கம் 6 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை), வீரசோழியம் 4  உறுப்புகளையும் (அசை, சீர், அடி, தொடை), கொண்டுள்ளது. பிற்கால யாப்பியல் நூல்களில் அசை என்பது பொதுவாக கூறப்பெற்றுள்ளது.  தொல்காப்பியர் அசையை நான்காகப் பகுக்கிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் அதை இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான அசை எனும் உறுப்பை மையமாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொல்காப்பியர் கூறும் அசை வகைகள்

            தொல்காப்பியர் அசையை மூன்றாவது உறுப்பாகக் கொண்டுள்ளார். இதனை, இயலசை, உரியசை என்று குறிப்பிடுகிறார். மேலும், இயலசையையும் உரியசையையும் இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். இயலசை என்பது நேரசை, நிரையசை என்றும், உரியிசை என்பது நேர்பு, நிரைபு என்றும் குறிப்பிடுகிறார். இதனை,

                        “இயலசை முதலிரண் டேனவை உரியசை”

(தொல்.பொருள்,நூ. 314)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

                        “குறிலே நெடிலே குறிலினை குறில்நெடில்

                        ஒற்றொரு வருதலோடு மெய்ப்பட நாடி

                        நேரும் நிரையும் மென்றிசிற் பெயரே”

(தொல். பொருள், நூ. 312)

       என்று அசை வகைகளைக் குறிப்பிடுகிறார். மேலும், தொல்காப்பியர் உரியசையில் நேர்பு, நிரைபு எனும் இருவகை அசைகளை சுட்டுகிறார். இது நேரசையோடும் நிரையசையோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகரம் ஆகிய இருவகை உகரமும் சேர்ந்துவரின் அவை நேர்பு, நிரைபு என்று கொள்ளப்படும் என்று குறிப்பிடுகிறார். இதனை,

“இருவகை உகரமோ டியந்தவை வரினே

நேர்பு நிரைபும் ஆகும் என்ப

குறிலிணை உகரம் அல்வழியான”

(தொல். பொருள், நூ. 313)

        எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. தொல்காப்பியத்திற்குபின் தோன்றிய பிற்கால யாப்பியல் நூல்கள் நேர்பு, நிரைபு எனும் அசை வகைகளைக் குறிப்பிடவில்லை என்பதை அறியமுடிகிறது. மேலும், நேர்பசை வரும் இடங்களை மூன்றாகப் பகுக்கிறார். அவை,

                        ♥ நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்ரசையாதல்

                        ♥  நெடில் ஒற்றைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

                        ♥ தனிக்குறில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

என்று குறிப்பிடுகிறார். மேலும், நிரைபசை வரும் இடங்களை நான்காகப் பகுக்கிறார். அவை,

                       ♥  குறிலிணை தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥  குறிலினை ஒற்றினைச் சார்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்.

என்று குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

யாப்பருங்கலம் – அசை வகைகள்

      எழுத்துக்கள் அசைந்து சேர்ந்து ஒலிப்பதால் இது அசை எனப்படுகிறது. மேலும், எழுத்துக்கள் தனித்து நின்றும் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வருவதாலும் அசை உண்டாகின்றது. இதனை,

                        “எழுத்து அசைந்து இசைகோடலின் அசையே”

      எனும் யாப்பருங்கல விருத்தி. மேலும், அசை வகைகளை 1. நேரசை 2. நிரையசை என்று இரண்டாகப் பகுத்துக் கூறியுள்ளார், நேரசையை,

                        “நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும்

                        நடைபெறும் நேரசை நால்வகை யானே” (யா.க. நூ. 6)

       எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. குறில், நெடில் தனியாக வந்தும், அதனோடு ஒற்றடுத்து வந்தாலும் அது நேரசை எனப்படும். இதனை நான்காகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது. மேலும், நிரையசையை,

                        “குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்

                        நெறிமையின் நான்காய் வருநிரை யசையே” (யா.க. நூ.8)

        எனும் நூற்பாவின் மூலம் இருகுறில் இணைந்து வந்தும் குறில் நெடில் இணைந்து வந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்து வந்தும் குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வருதலும் நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இவர் நேரசைக்கும் நிரையசைக்கும் தனித்தனி நூற்பாக்களை கூறுகிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் இவை இரண்டையும் சேர்த்து ஒரே நூற்பாவாகக் கூறியுள்ளனர் என்பதையும்  அறியமுடிகிறது.

யாப்பருங்கலக்காரிகை  – அசை வகைகள்

            அசை வகைகளை குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும், வருவது நேர் அசை என்றும், நிரையசையை இருகுறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இதனை,

                        “குறிலே நெடிலே குறிலினை ஏனைக் குறில்நெடிலே

                        நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்

                        றறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்

                        வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே” (யா.கா.5)

     என்று காரிகை / நூற்பாவின் மூலம் அறியமுடிகின்றது. மேலும், நூற்பாவிலேயே நேரசை, நிரையசைக்குரிய எடுத்துகாட்டுகளையும் சுட்டிச் சென்றுள்ளதையும் அறியமுடிகிறது. மேலும்,

            யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் நேர், நிரை அசைகளை சிறப்பசை, சிறப்பில் அசை என்று புதுப்பெயர் சூட்டியுள்ளார். எழுத்துக்கள் மொழியாகவே அமைந்து பொருள் பெற்று நிற்பது ‘சிறப்பசை’ என்றும், மொழிக்கு உறுப்பாக அமைந்து நிற்பன ‘சிறப்பில் அசை’ என்று வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

காக்கை பாடினியம் – அசை வகைகள்

            தொல்காப்பியருக்குப் பின் தோன்றிய காக்கை பாடினியம் அசையை நேரசை, நிரையசை என்று சுட்டாமல் தனியசை என்றும், இணையசை என்றும் இருவகையாகக் கையாண்டுள்ளார். இதனை,

                        “தனியசை என்றா இணையசை என்றா

                        இரண்டென மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே”  (கா. பா. நூ.5)

எனும் நூற்பாவின் வழி அறியமுடிகிறது. மேலும், இணையசை / நிரையசையில் இரண்டு நெடில் எழுத்துக்களோ அல்லது நெடிலை அடுத்து குற்றெழுத்தோ நிரையசையாய் வருதல் இல்லை என்று குறிப்பிடுகிறார். இதனை,

                        “நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்

                        இணையசையாதல் இலவென மொழிப” (கா. பா. நூ.6)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளதையும் அறியமுடிகிறது.

இலக்கண விளக்கம் – அசை வகைகள்

            இந்நூல் ஐந்திலக்கண நூலாகும். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூல் யாப்பிலக்கணத்தில் அசை வகைகளைக் குறிப்பிடும்போது, ஏனைய பிற்கால யாப்பியல் நூல்களைப் போலவே நேர் அசை, நிரை அசை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “நேர்நிரை என அசை ஓரிரண்டு ஆகும்” (இ.வி.நூ.713)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. நேரசை 4 என்றும், நிரையசை 4 என்றும் மொத்தம் 8 வகையாக குறிப்பிடுகின்றார். இதனை,

                        “நெடிலும் குறிலும் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நடைபெறும் நேரசை நான்கு; நீங்காக்

                        குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நெறிவரும் நிரையசை நான்கும் ஆகும்” (இ.வி. நூ.714)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

            குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேர் அசை என்று குறிப்பிடுகிறார். நிரையசையை குறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், குறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

வீரசோழியம் – அசை வகைகள்

      வீரசோழியம் அசையை முதல் உறுப்பாகக் கொண்டுள்ளது. கலமும், காரிகையும் குறிப்பிடுவதைப் போன்றே அசையை நேர், நிரை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “குறிலு நெடிலு மெனுமிசை நேரசை; குற்றெழுத்துப்

                        பெறின்முன் இவையே நிரையசை யாம்; பிழைப் பில்லைபின்பொற்

                        றிறினும்; அசையிரண் டொன்றின்முற் சீர்மூ வசையொன்றிநேர்

                        இறுவ தடைச்சீர்; நிரையிறிற் பிற்சீர் எனவியம்பே”   (வீ.சோ. நூ. 105)

எனும் நூற்பாவின் மூலம் இவரும் நேரசை, நிரையசை என்று இரண்டாகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

தொகுப்புரை

    தொல்காப்பியர் அசை வகைகளை இயலசை 2 (நேர், நிரை), உரியசை 2 (நேர்பு, நிரைபு) என்று நான்காக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

      பிற்கால யாப்பியல் நூல்கள் அசை வகைகளை நேர், நிரை என்று இரண்டாகப் பகுத்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

      காக்கை பாடினியம் நேரசையை தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும் குறிப்பிட்டுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலம் நேரசைக்கு ஒரு நூற்பாவும் நிரையசைக்கு ஒரு நூற்பாவும் தனித்தனியே கூறியுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலக் காரிகை அசைகளைக் கூறும் நூற்பாவிலேயே அதற்கான எடுத்துக்காட்டுகளையும் காரிகை ஆசிரியர் கூறிச்சென்றுள்ளதை அறியமுடிகிறது. மேலும், யாப்பருங்கல விருத்தியுரை அசை வகைகளை சிறப்பசை என்றும் சிறப்பில் அசை என்றும் வகைப்படுத்தியுள்ளதை அறியலாகிறது.

  ♥வீரசோழியமும், இலக்கணவிளக்கமும் ஒரே மாதிரியான அசை வகைகளைக் கொண்டுள்ளன. நேரசை 4, நிரையசை 4 என எட்டாக வகைபடுத்தியுள்ளதையும் அறியலாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ல.திலிப்குமார்,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

அரசு ஆடவர் கலைக் கல்லூரி,

கிருட்டினகிரி – 635 001.

மனதை ஊக்கப்படுத்துங்கள் – தன்னம்பிக்கை கட்டுரை

மனதை ஊக்கப்படுத்துங்கள்

மனதை ஊக்கப்படுத்துங்கள்

     நீங்கள் உங்களின் இலக்கை அடைவதற்கு போராடத் தொடங்கி விட்டீர்கள் என்றால் தடைக்கல்லாக உங்கள்முன் நிற்பது விமர்சனங்களே ஆகும். இவ்வுலகில் பெற்றோர்களைத் தவிர வேறுயாரும் உங்கள் முன்னேற்றத்தில் இன்பம் காண மாட்டார்கள். எனவே உறவு, நட்பு, அலுவலகம் போன்ற எல்லா இடங்களிலிருந்தும் உங்களுக்கு கிடைப்பவை எதிர் மறையான விமர்சனங்களே ஆகும். உங்களிடமே ஆகாது என்பதற்கு நிறைய உதாரணங்களை முன்வைப்பார்கள். முடியாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைப்பர். நடக்காது என்று ஏளனமாக பேசிச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் இந்தப் பூமியில் சீர்குலைக்கப் பிறந்தவர்கள். இவர்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இவர்கள் வடிகட்டிய சுயதுரோகிகள் எனலாம்.

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

         மற்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியும்,  அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யலாம் என்று. ஆனால் சோம்பித் திரிவார்கள். படிக்கும் காலத்தில் ஊர் சுற்றாமல் ஒழுங்காகப் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் என்று எல்லாம் அறிந்தும் ஊதாரித்தனமாகச் செலவளித்துத் தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்பவர்கள் இவர்கள்தான். அவ்வாறு தனக்கே துரோகத்தைச் செய்துகொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் நல்லது நினைப்பர்? மற்றவர்கள் முன்னேறிவிட்டால் இவர்களால் தாங்க இயலாது. பாவம் பொறாமையில் கொதிப்பார்கள். இம்மாதிரியான பிறவிகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

         எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டியே பேசுவார்கள். எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தன்னை எவ்வாறு மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது. விமர்சனங்களைப் பற்றி கண்ணதாசன் கூறுவார். “போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நில்லேன் அஞ்சேன்” என்று. எனவே மற்றவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுங்கள்

       நினைவில் கொள்ளுங்கள்! மற்றவரின் தூற்றுதலோ போற்றுதலோ உங்களுக்கு தேவையோ தேவையற்றதோ முதலில் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். சுய ஊக்குவிப்பே உண்மையானது. இவ்வாறு அல்லாமல் மற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதையே மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பாராட்டும் மனம் என்பது எல்லோருக்கும் வராது. தெளிந்த மனத்தவருக்கே அது கைகூடும்.

           உங்களை வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ளுங்கள். சுயசோதனை செய்து கொள்ள உங்களிடம் இருக்கும் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை யாது? அணுகுமுறை யாது? எவ்வளவு காலத்தில் வெற்றியை ஈட்ட முடியும்? இந்த வினாக்களுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்கவேண்டும். அந்தப் பதிலும் காரணத்துடன் அமைய வேண்டும். சில செயல்களுக்கு பலம் மட்டுமே போதாது. எந்த நேரத்தில் எவ்வாறு என்ற நுணுக்கங்களை கையாளவேண்டும். உங்களை வீழ்த்தும் பலவீனத்தை எவ்வாறு நீக்குவது. அல்லது பலமாக மாற்றுவது போன்ற சுய மதிப்பீடு செய்து கொண்டு, ஒரு வினையை ஆக்கபூர்வமாக செய்ய இயலும் என்ற மனத்தெளிவு வந்தவுடன் எவற்றைப்பற்றியும் நீங்கள் ஆலோசிக்க தேவையில்லை. உங்கள் இலட்சிய செயல்பாட்டை துவக்கலாம்.

மற்றவர்கள் மகிழட்டும்

      உங்கள் செயல்களுக்கு மகுடம் சூட்டுபவர் யாரேனும் இருந்தால் அவர்களை அருகிலேயே வைத்ததுக் கொள்ளவும். இழிவுபடுத்துபவர் இருந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் விட்டு விலகிவிடுங்கள். உங்களை தாழ்த்துபவர் உறவினரே அல்ல. உங்களின் ஆற்றலைக் கொண்டு திறனைப்பெருக்கி ஊக்கத்தை கூட்டுங்கள் வெற்றிப்பாதையில் செல்லுங்கள். உங்களின் வெற்றியானது மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கட்டும். அதை அடைவதற்கு நீங்கள் பல இன்னல்களை அடைந்திருந்தாலும் அதனால் மற்றவர்க்கு பயனைத்தரும் என்றால் தயங்காமல் செய்யுங்கள். தான்பெற்ற துன்பங்கள் தன்னுடனே இருக்கட்டும். ஆனால் மற்றவராவது பயன்பெறட்டும் என்ற தியாக எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.

தியாக மனோபாவம்

         ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு அறையில் திரையிடப்பட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இரண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தனர். அந்த நோயாளிகளும் நீண்ட நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே மனம் வெதும்பிய நோயாளி திரையின் மறுபக்கத்தில் இருந்த நோயாளியிடம் “சார் எனக்கு இப்படியே படுத்திருப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். “சார் நான் நலமாகவே மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்” என்றார். மனம் வெதும்பிய நோயாளி “அப்படியா? எவ்வாறு இது சாத்தியம்”? காரணம் என்ன? அதற்கு அவர் “சார் இங்கு ஒரு சன்னல் உள்ளது அதன் வழியாக இயற்கையைப் பார்க்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது” என்றார். “அப்படியென்றால் நீங்கள் பார்க்கும் காட்சிகளை எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். “சார் இந்த சன்னலின் வழியாக ஒரு மலை தெரிகிறது. அதில் அருவி ஒன்று உருவாகி அழகாக நீர் கொட்டுகிறது. அதனால் அந்த மலை பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. பூங்கா ஒன்று தெரிகிறது. அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் அழகான பறவைகள் என்று இருக்கின்றன சார். அதனால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். இவற்றை கேட்டவுடன் நோயாளிக்கு வெதும்பிய மனம் நிம்மதியானது. அதுமட்டுமல்லாமல் தினமும் தனக்கு கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் உரையாடல் ஒவ்வொரு நாளும் நடந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது. மனம் வெதும்பிய நோயாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் மாலைவரை அந்த நோயாளியை அறைக்கு அழைத்து வரவில்லை. ஆதலால் நர்சிடம் கேட்க “சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவருக்கு அதிகாலையில் மூன்றுமணி இருக்கும். உடலுக்கு முடியாமல் போனது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், உயிர் பிழைக்கவில்லை இறந்து விட்டார்” என்றாள். இவருக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது. தினமும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திய ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்று அவரின் கண்கள் கலங்கின. சில நிமிடங்கள் கழித்து “சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். எனது இந்த படுக்கையை அந்தப்பக்கம் மாற்றிவிடுங்கள்” என்றார். சரி என்று அந்த சிஸ்டரும் மாற்றினார். இவர் கேட்டார் “சிஸ்டர் இங்கு ஒரு சன்னல் இருந்ததல்லவா அது எங்கே? என்றதும் “சன்னலா, இங்கு ஒன்றுமே இல்லையே” என்றாள். “என்ன சிஸ்டர் அவர் தினமும் சன்னலில் பார்க்கும் காட்சிகளை என்னிடம் பேசி பகிர்ந்து கொள்வார் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்?” “சார் இங்கிருந்த நோயாளி பிறவியிலேயே பார்வையற்றவர்” என்று கூறியதும் தான் இவருக்கு புரிந்தது அவரின் தியாக மனம். ஆமாம் அவர்தான் பார்வையற்றவர் என்ற தன்னுடைய சோகத்தை மற்றவரிடம் காட்டாமல் மற்றவரை அந்த  வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் காணாத இயற்கை காட்சிகளையெல்லாம் கூறினார். அது எவ்வளவு பெரிய தியாகமனப்பான்மை. அசந்து விட்டார் இந்த நோயாளி.

         நீங்கள் இங்கு கவனிக்க வேண்டியது பிறவி பார்வையற்றவராக இருக்கும் நோயாளி சில நாட்களிலேயே இறக்கும் நிலையில் இருப்பவர். அவரின் உடல் எந்த அளவிற்கு வேதனையை வலியை ஏற்படுத்தும். அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு தன்சோகம் மற்றவரை தாக்கக்கூடாது என்று எண்ணி உற்சாகமாகப் பேசி மற்றவரின் வேதனையை மாற்றுகிறார். இந்த மாதிரியான பெருந்தன்மை, நேர்மை உங்களிடம் இருக்கிறதா? என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்காக அல்ல மற்றவர்க்குத்தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் செயல்பாட்டில் மெத்தனப்போக்கு உருவாகிவிடும். எனவே மெய்யான தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் தனித்திறனை இனம் காணுங்கள்

        மனிதர்களில் பலர், மற்றவரின் விமர்சனங்களால் உந்தப்பட்டு தன்னுடைய சுயதிறமைகள் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். உங்கள் சூழ்நிலையின் காரணமாகச் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். இவ்வாறான தாழ்வான மன நிலையை மாற்ற நீங்கள் செய்த செய்யப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

       ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாத்தது. அதன் முட்டைகளில் ஒன்றை நீக்கிவிட்டுப் பருந்தின் முட்டை வைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. அடைகாத்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தன. பருந்தின் குஞ்சும் வெளியே வந்தது. அது கோழிக்குஞ்சுகளுடனே எந்தவித வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தது. அதுவும் சில மாதங்களில் கோழிகளைப் போன்றே ஒலி எழுப்பியது. சிறிது உயரமே அதனால் பறக்க முடிந்தது. அதற்கு தான் பருந்தின் குஞ்சு என்பதே தெரியாது. ஆனால் அதன் உண்மையான திறன் என்ன? மேகத்தையும் கடந்து மேலே பறக்கும் அசாத்திய சக்தி கொண்டது. ஆனால் அது கோழிகளுடனே சேர்ந்துகொண்டு கோழியாகவே தன்னை நினைத்துக்கொண்டது. கோழியாகவே இறந்தும் போனது. இவ்வாறே இங்கு பலரின் வாழ்க்கை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்களோ அவ்வாறே மாறிவிடுகின்றனர். ஆனால் அவரவர்க்கென்று தனித்தனி திறமைகள் உள்ளன. அவற்றை இனம் காணவேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதைச் செய்ய வரும் எது சிறப்பாக வரும் எதுவெல்லாம் சுமாராக செய்ய முடியும் தன் குருதியில் தசை நரம்புகளில் மூளையில் ஊறியிருக்கும் ஆற்றல் எது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் சாதனை படைக்கலாம்.

           உங்களின் உள்மனதை ஊக்கப்படுத்த வேண்டும். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அடையப்போகும் வெற்றியை அதனால் ஏற்படும் பயனை மற்றவர் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாளடைவில் அதை உங்கள் ஆழ்மனம் நம்பத்துவங்கும். ஆழ்மனதிற்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணங்கள் செயல்களாக மாறும். செயல் வெற்றியைத் தேடித்தரும். இதில் ஐயமில்லை.

            மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் உண்மையில் மாமனிதர்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மெய்ப்பொருள்‌ நாயனார்‌ வரலாறு

மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள்‌ நாயனார்‌

      சேதி நாட்டில்‌ திருக்கோவலூரில்‌ அரசாட்சி புரிந்த மன்னரே மெய்ப்பொருள்‌ நாயனார்‌ ஆவார்‌. சிவனடியார்களின்‌ வேடத்தை மெய்ப்பொருளாக இவர்‌ கருதியதால்‌ மெய்ப்பொருளார்‌ என்று மக்களால்‌ அழைக்கப்‌பட்டார்‌. பகை அரசர்களை வென்று நாட்டைக்‌ கண்ணெனக்‌ காத்தார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ அடி.யவர்கவின்‌ மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. ஆலயங்களில்‌ பல திருத்தொண்டுகள்‌ புரிந்து வந்தார்‌. தனக்கு உடைமையான பொருள்கள்‌ அனைத்தும்‌ அடியவர்க்கு உடையது என்று கருதினார்‌ மெய்ப்பொருளார்‌.

       மெய்ப்பொருளார்‌ மீது முத்தநாதன்‌ என்ற ஓர்‌ அரசன்‌ பகை கொண்டான்‌. அவன்‌, “மெய்ப்பொருளாரை போரில்‌ வெல்ல இயலாது, அதனால்‌ வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும்‌” என்று தீர்மானித்தான்‌. சிவனடியார்கள்‌ மீது மெய்ப்பொருளார்‌ கொண்டிருந்த அரும்பக்தியை அறிந்திருந்தான்‌ முத்தநாதன்‌.

      ஒருநாள்‌ இரவு முத்தநாதன்‌ அடியவர்‌ வேடம்‌ பூண்டான்‌. இடுப்பில்‌ ஒரு கத்தியை மறைத்து வைத்தான்‌. மெய்ப்பொருளாரின்‌ அரண்மனைக்கு வந்தான்‌. அரண்‌ மனையிலிருந்த காவலாளி தத்தன்‌, மன்னர்‌ உறங்குவதாகக்‌கூறி அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனைத்‌ தடுத்தான்‌.

      அவன்‌ காவலாளியிடம்‌, “நான்‌ அரசர்க்கு வேதப்‌பொருளைக்‌ கூறும்பொருட்டு வந்துள்ளேன்‌. என்னைத்‌தடுக்காதே!” என்று தத்தனை விலக்கிவிட்டு அரண்‌மனைக்குள்‌ நுழைந்தான்‌.

       அப்போது மெய்பொருளார்‌ கட்டிலில்‌ உறங்கிக்‌கொண்டிருந்தார்‌. அவரது அருகில்‌ அரசியார்‌ அமர்ந்து, மன்னர்க்கு விசிறிக்‌ கொண்டிருந்தார்‌. அடியவழைக்‌ கண்டதும்‌ அரசியார்‌, மெய்ப்‌பொருளாரைஎழுப்பினாள்‌. மெய்ப்பொருளாரும்‌ விழித்து அடியவரைக்‌ கண்டதும்‌ எழுந்து வணங்கினார்‌.

       “அடியவரே! இந்நேரத்தில்‌ என்னைக்‌ காண வந்ததன்‌ காரணம்‌ என்னவோ?” என்று கேட்டார்‌. உடனே அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதன்‌, “மெய்ப்பொருளாரே! இறைவன்‌ என்னிடம்‌ ஆகமப்‌ பொருளொன்றைக்‌ கூறினார்‌. அதை நான்‌ ஓலையில்‌ குறித்து வைத்துள்ளேன்‌. அதைத்‌ தாங்களுக்கு உரைத்திடவே வந்துள்ளேன்‌! என்று நயமாகப்‌ பேசினான்‌.

      மெய்ப்பொருளாரும்‌, “சிவாகமத்தைக்‌ கேட்பது நான்‌ செய்த பாக்கியமன்றோ! உடனே அதை என்னிடம்‌ படித்துக்‌ காட்டுவீராக!” என்றார்‌.

       உடனே அடியவர்‌, “நான்‌ ஆகமத்தைப்‌ படிக்கையில்‌ உன்‌ மனைவியார்‌ அருகில்‌ இருக்கக்‌ கூடாது!” என்று கூறினான்‌. அகைக்கேட்டு நாயனார்‌, தன்‌ மனைவியை அவ்விடத்தை விட்டுப்‌ போய்விடுமாறு கூறினார்‌. அடியவர்‌ வேடம்‌ பூண்டிருந்த முத்தநாதனும்‌, இதுதான்‌ தக்கநேரம்‌ என்று, தன்‌ இடுப்பிலிருந்த ஒலையை எடுப்பதுபோல்‌, கத்தியை எடுத்து மெய்ப்பொருளாரைக்‌ குத்தினான்‌. தான்‌ குத்துப்பட்ட நிலையிலும்‌, மெய்ப்‌ பொருளார்‌ அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை வணங்கியபடிச்சாய்ந்தார்‌.

    ஏற்கெனவே சந்தேகத்திலிருந்த தத்தன்‌, தற்செயலாக அரண்மனைக்குள்‌ நுழைய, அங்கே மன்னர்‌ மெய்ப்‌பொருளார்‌ அடியவரால்‌ குத்துப்பட்டதைக்‌ கண்டான்‌. உடனே தன்‌ உடைவாளை உருவி, அடியவரின்‌ மீது வீச முயன்றான்‌.

      அதைக்கண்ட மெய்ப்பொருளார்‌, “தத்தா! இவர்‌ அடியவர்‌. அவரை ஒன்றும்‌ செய்யாதே!” என்று தடுத்தார்‌. அதைக்கேட்ட தத்தன்‌ மன்னரிடம்‌, “நான்‌ இப்போது என்ன செய்ய வேண்டும்‌?” என்று கேட்டான்‌. மெய்ப்‌பொருளாரும்‌, “தத்தா] இவ்வடியவர்க்கு இவ்வூர்‌ மக்கள்‌ எவராலும்‌ தீங்கு நேராதபடி பாதுகாப்புடன்‌ அனுப்பி வைப்பாயாக!” என்று ஆணையிட்டார்‌.

      அரசனை அடியவர்‌ ஒருவர்‌ கத்தியால்‌ குத்திவிட்டார்‌ என்று அறிந்த அவ்வூர்‌ மக்கள்‌, முத்தநாதனைச்‌ சூழ்ந்து கொண்டார்கள்‌. ஆனால்‌ தத்தனோ, அவர்களைத்‌ தடுத்து மன்னரின்‌ ஆணையை அவர்களிடம்‌ கூறினான்‌.

       அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை நகரின்‌ எல்லையில்‌ கொண்டுவிட்டு, அரண்மனை இரும்பி, மெய்ப்‌ பொருளாருக்குச்‌ செய்தியை அறிவித்தான்‌.

     அதுவரை உயிர்‌ பிரியாதிருந்த மெய்ப்பொருளார்‌ அதைக்கேட்டு, அடியவரைக்‌ காத்த தத்தனுக்கு நன்றி தெரிவித்தார்‌. அரண்மனையில்‌ இருந்தவர்களிடம்‌ அடியவர்‌ திருத்தொண்டை வழுவாது செய்யும்படிக்‌ கட்டளையிட்டார்‌. சிவனைச்‌ சிந்தித்தார்‌.

    அக்கணத்தில்‌ சிவபெருமானும்‌ நாயனாருக்குத்‌ திருக்காட்சி தந்தார். மெய்ப்பொருள்‌ நாயனாரைச்‌ சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

 

மறையாத வடு | சிறுகதை

மறையாத-வடு

விடிந்தால் சுதந்திர தின விழா அதனால், ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல இடங்களில் கொடி ஏற்ற நாடு முழுவதும் தட புட வேலைகள் விடிய விடிய நடந்து கொண்டிருந்தது.

அரசு வேலையில் இருப்பவர்கள் இந்த முறை சுதந்திர தின விழா ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டது. மற்ற நாளில் வந்திருந்தால் ஒரு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் என நினைத்து வருத்தப்பட்டார்கள்

அவள் கோழி கூவுவதற்கு முன்பு எழுந்து வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலமிட்டு, முகம் கழுவி, தலைவாரி எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் நாங்களும் நல்லாஇருக்க வேண்டும் விடியிறது நல்ல பொழுதா இருக்க வேண்டும் சாமி என்று வேண்டி திருநீற்றை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைத்து கொண்டே காலையில் மார்க்கெட்டுக்குப்  போனால்தான் நல்ல காய்கறி கிடைக்கும், இல்லை என்றால் சொத்தல், பொத்தல்தான் கிடைக்கும் என்று கூறி தன் மகனை எழுப்பினாள். அவனும் எழுந்துமுகத்தைக் கழுவிக்கொண்டு ‘என்னம்மா’ காய்கள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்  உனக்குத் தான் தெரியுமே என்ன என்ன காய்கள் வாங்கி வருவது என்று கூறினாள்.

அவன் எப்போதுமே வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையில்தான் காய்களை வாங்கி வருவான்.

என்றுமே சோகம்  தெரியாத இன் முகத்தோடு இருப்பவன். அவன் மிதிவண்டியை எடுத்து புறப்படுவதற்கு முன்பு அவள் என் நெஞ்சு லேசாக வலிக்கிற மாதிரி இருக்கிறது என்றாள்.

அதற்கு அவன் நீ இரவெல்லாம் ஒரே பக்கமாய் படுத்திருப்பாய் அதனால், வலிக்கும் என்று கூறி புறப்பட்டான்.

அவன் போன பிறகு அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திர உலையில் பாதி பருப்பு வெந்திருக்கும் ஆனால், அவளால் வேலை செய்ய முடியாமல் நெஞ்சி வலித்ததனால், மகன் வரமாட்டானா என்று எதிர் பார்த்திருந்தாள்.

மகன் வந்து  பார்த்தான், அடுப்பு நனைந்து அவளும் மழையில் நனைந்தவள் போல் முழுமையாக வியர்வையால் நனைந்து படுத்திருந்தாள். அவன் மனம் படப்படத்தது, என்னாச்சோ, ஏதாச்சோ என்று தன் தாயை தூக்கி தன் மார்பில் சார்த்தினான். அவள் மூன்று முறை வானத்தை நோக்கியவளாய் வாயைத் திறந்து மூடி நான்காவது முறை தன் மகனின் மடியில் படுத்துக்கொண்டு கண்களை மூடி விட்டாள்.

    அவன் அம்மா, அம்மா எழும்மா எழும்மா என்று எழுப்பினான் அவள் உயிர் உடலை விட்டுச் சென்றதை அறிந்த அவன் அம்மா என்று கதறின கதறல் எமலோகத்தைத் திரும்பிப்பார்க்கச் செய்தது மட்டும் அல்லாமல் ஊரில் உள்ள காக்கை, குருவி, காடை, கௌதாரி என்ற எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படியானது. அவள் இறப்பு எல்லோருக்கும் கைபேசி மூலம் காட்டுத் தீயைபோல் பரவியது.

அவனுடைய உலகம் இருண்டு நின்றுபோனது, பூமியும் பிளந்து வானமும் இடிந்து வீழ்ந்தது, நிழல் தந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்தது, பூ மரமெல்லாம் பட்டுப் போனது, ரசித்த இயற்கையெல்லாம் வெந்து கருகிப் போனது.

இறப்பின் செய்தி அறிந்த மக்கள் அவரவர்கள் வயதிற்கேற்ப வந்து சேர்ந்தார்கள். வந்த பெண்கள் அவனைப் பிடித்துக்கொண்டு உன்னை அனாதையாக விட்டு விட்டுப் போய்யிட்டாளே….  என்று சிலபேர் உண்மையாகவும், கடமைக்காகவும் அழுதார்கள்.அவனுடைய மூன்று அக்காவும் ஒரு தங்கையும் சொகுசுந்திலும் தூரத்திற்கு தகுந்தார்போல் நடந்தும் வந்து தம்பி நம்ம அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாளே என்று அவனைப் பிடித்து உழுக்கினார்கள். பிறகு மூக்கை சிந்தி போட்டுவிட்டு அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தார்கள். நேரம் ஆக ஆக அவங்க நான்கு பேரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவன் மட்டும் அம்மா சாகுவது தெரிந்திருந்தால் என்னிடம் என்ன பேசியிருப்பளோ என்று அழுது கொண்டிருந்தான்.

ஊரில் உள்ள பெரியவர் ஒருவர் நல்ல நேரத்தில் பிணத்தை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு அவன் எங்க அம்மாவை பிணம் என்று சொல்லாதே! என்று துக்கம் தாங்காமல் கத்தினான். நேற்று இந்த நேரத்தில் எங்க அம்மா உயிரோடு இருந்தாங்க இப்போ இல்லையே என்று தேம்பி தேம்பி அழுதான்.இன்னொருவர் நல்ல நேரம் நான்கு மணி முடிவதற்குள்ள பாடியை எடுக்க வேண்டும்என்றதனால் எல்லாம் வேலையும் நடந்தது. எங்க அம்மா உயிர் பெற்று வந்திட கூடாதா, நடந்ததெல்லாம் பொய்யென்று இருந்திடக் கூடாது என்று ஏங்கினான். ஒருவருக்கு எதிர்பாராததுநடந்து விட்டால் அது பொய்யாகக் கூடாதா என்று நினைப்பார்கள் அதைத்தான் அவனும் நினைத்தான்.

ஒருவர் கேட்டார் உன் அம்மா மூத்தவங்க அவங்களை எரிப்பதா? புதைப்பதா? என்றுஅதற்கு அவன் எங்க அம்மா எரிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால், புதைத்து விடுங்க என்று சொல்லக் கூட தைரியமில்லாமல் கூறினான்.

பிணத்தை எடுங்க என்று சொல்லி பாடையில் வைத்து, எடுத்துக்கொண்டுபோய்  குழிக்கிட்ட வைத்துச் சடங்குகளெல்லாம் செய்தபோது இன்றோடு அம்மா மண்ணுக்குள்ளே போறாங்களே, அம்மா என்ற வார்த்தை இன்று முதல் மறையப் போகுதே என்னை அனாதையாக விட்டுட்டு போறாயே என்று கத்திக் கதறி யார் அடக்கினாலும் அடங்காமல் கீழே விழுந்து புரண்டு, புரண்டு அழுதான். அவன் அழுவதைப் பார்த்த காக்கா, குருவி கண்களிலும், இதுவரைக்கும் அழாத கல்நெஞ்சம் உடைவர்கள் கண்களிலிருந்தும் அழாமலேகண்ணீர் வந்தன. மேலும் புல்லும், பூவும் பனித்துளியாகவும். செடியும், மரமும் இலைகளாகவும் கண்ணீர் உதிர்த்தன. தென்றல் வாயை மூடி அழுதது. அந்த வழியே போகுகின்ற எமன் அவனிடமிருந்து அவன் தாயைப் பிரித்து விட்டோம் என்று நினைத்து இதற்கு பரிகாரமாக நானும் என் தாயை இழந்து கண்ணீர் விடவேண்டும் என்று உண்மையாகவே கண்ணீர் விட்டான். மேகமும் சொல்ல முடியாத துக்கத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது.

பிணத்தை குழிக்குள்ளே இறக்கினார்கள் பிணத்தை மண் போட்டு மூடுவதற்குள் நகைகளை கழட்டுங்கள் என்ற வார்த்தை கேட்பதற்குள் அக்கா, தங்கை நான்கு பேரும் குழியைச் சுற்றி வந்து நின்றார்கள். காதிலும், மூக்கிலும் கழற்றினால் ஒரு பவுன் நகை தேறும். இந்த ஒரு பவுன் நகைக்கு நான்கு பேரும் என்கிட்ட கொடு, உன்கிட்ட கொடு என்று அம்மா நகை எனக்குத்தான் சொந்தம், உனக்குதான் சொந்தம் என்று சண்டை போட்டுஆளுக்கொரு நகையைப் பிடிங்கிக்கொண்டு தாய்க்குக் குழியில் ஒரு பிடி மண் போட்டார்களோ இல்லையோ எனக்கு வேலையிருக்கு, உனக்கு வேலை இருக்கு என்று வந்த வேகத்தை விட போகும் வேகத்தில் ஆர்வம் காட்டினார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் சிலபேர் பிணத்தை எடுப்பதற்கு முன்பும், மீதி இருந்தவர்கள் எடுத்த பின்பும் சென்று விட்டார்கள். அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடியது. நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவன் மட்டும் என்ன பாவம் செய்தானோ, ஏன் இப்படி அவல நிலை ஏற்பட்டது.

அவன் தாய் உயிர் விட்ட நேரம் என்னும் எட்டு மணியையும், நாள் என்னும் ஞாயிற்றுக் கிழமையும், விழா என்னும் சுதந்திர தின விழாவையும் வெறுத்து ஒதுக்கியவனாய் தாயைப் புதைத்த இடத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.

இருட்டிய பிறகும் அங்கே அவன் இருந்ததைப் பார்த்த அந்த வழியே வந்த ஒரு பெரியவர் அவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு புறப்பட்டார். அவனுக்கு வீட்டிற்கு வரும் தூரம் அதிமாய் தெரிந்தது. அவன் தோப்பிலே இருக்கும் தனிமரம் போல் ஆகிவிட்டான்.

அவன் அந்த ஓட்டை படிந்த கூரை வீட்டில், அம்மா ஆறு மணிக்கே லேசாக நெஞ்சுவலி என்று சொன்ன உடனே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ என்று நினைத்து, நினைத்து உண்ணாமல் உறங்காமல் தாய் படுத்த இடத்தைத் தடவி, தடவி பார்த்து அந்த இரவு முழுவதும் அழுவதற்குக் கூட முடியாமல் தொண்டை வரண்டு போய் வார்த்தை வெளி வர முடியாமல் அழுதது யாருக்கும்கேட்க வில்லை.

அவன் உயிர் சென்றிடுமோ இல்லை அழப்போவானோ, அப்படி இல்லையென்றால் தாயை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகாத எண்ணம் ஷமறையாத வடு|வாக இருந்து காலம் முழுவதும் ஈட்டியைப் போல் குத்தித் துன்புறத்துமோ.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இயற்பகை நாயனார்‌

இயற்பகை-நாயனார்

இயற்பகை நாயனார்‌

     சோழநாட்டிலே காவிரிப்பூம்பட்டினம்‌ என்னும்‌ ஊரில்‌, வணிகர்‌ குலத்திலே பிறந்தவர்‌ இயற்பகை நாயனார்‌ ஆவார்‌. இவர்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌. சிவபெருமான்‌ மீது பெரும்பக்தி கொண்டிருந்தார்‌. சிவனடியார்கள்‌ மீதும்‌ பேரன்பு கொண்டிருந்த இவர்‌, தன்னைத்‌ தேடிவரும்‌ அடியவர்கள்‌ எதைக்‌ கேட்பினும்‌ அதைத்‌ தயங்காது வழங்கி வந்தார்‌. 

       சிவபெருமான்‌ இயற்பகையாரின்‌ அடியார்‌ பக்தியை உலதிற்குக்‌ காட்ட திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணமே திருநீறு அணிந்த வேதியர்‌ கோலம்‌ கொண்டார்‌. இயற்‌பகையாரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. அவர்‌, இயற்பகையாரிடம்‌, “ஒரு பொருளை வேண்டியே இங்கே வந்துள்ளேன்‌. அதைத்‌ தருவீரோ?” என்று கேட்டார்‌.

    இயற்பகையார்‌, அவ்வேதியரை வணங்கி, “தாங்கள்‌ கேட்ட பொருள்‌ என்னிடம்‌ உள்ளதென்றால்‌, நிச்சயமாகத்‌ தருவேன்‌!” என்றார்‌.

       வேதியரும்‌, “நான்‌ உன்‌ மனைவியைத்தான்‌ வேண்டுகிறேன்‌. அவளை எனக்குத்‌  தருவீரோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டதும்‌, “அடியவரே! மிக்க மகிழ்ச்சி. தாங்கள்‌ என்னிடம்‌ உள்ள பொருளைக்‌ கேட்டதற்கு நன்றி!” என்று கூறி தன்‌ மனைவியாரை அழைத்தார்‌. வேதியர்‌ வேண்டியதை மனைவியாரிடமும்‌ கூறினார்‌. அப்பெண்‌மணியும்‌ அடியவர்‌ தொண்டே சிறந்தது என்று அதற்குச்‌சம்மதித்தார்‌.

        அடியவருடன்‌ புறப்படத்‌ தயாரானார்‌. உடனே அடியவர்‌ இயற்பகையாரை நோக்கி, “நீர்‌ உன்‌ மனைவியை எனக்குத்‌ தந்துவிட்டீர்‌. ஆனால்‌ உன்‌ சுற்றத்தாரும்‌ இவ்வூரிலுள்ளவர்களும்‌ இதற்குச்‌ சம்மதிக்க மாட்டார்கள்‌. அதனால்‌ நான்‌ உமது மனைவியுடன்‌ இவ்வூர்‌ எல்லையைக்‌ கடக்கும்வரை எனக்குப்‌ பாதுகாப்பு தர வேண்டும்‌!” என்று கூறினார்‌.

        இயற்பகையாரும்‌, “தாங்கள்‌ இந்த ஊர்‌ எல்லையைக்‌ கடக்கும்வரை நானே உங்களுக்குத்‌ துணையாக வாள்‌ ஏந்தி வருகிறேன்‌!” என்று கூறியபடி, அடியவருடன்‌ புறப்பட்டார்‌.

         ஒரு சிவனடியார்‌ இயற்பகையாரின்‌ மனைவியை அழைத்துச்‌ செல்வதையும்‌, அவர்களுக்கு இயற்பகையாரே காவலுக்குச்‌ செல்வதையும்‌ கண்டு சுற்றத்தாரும்‌ ஊராரும்‌ கடுங்கோபம்‌ கொண்டனர்‌.

       அவர்கள்‌ இயற்பகையாரிடம்‌ வந்து, “உன்‌ மனைவியை யாரோவொரு வேதியனுடன்‌ அனுப்பத்‌ துணிந்தது மட்டுமல்லாமல்‌, அவர்களுக்குக்‌ காவலாய்‌ வேறு செல்கிறாயே! உனக்கு புத்தி கெட்டுப்‌ போனதோ[” என்று கேட்டனர்‌.

      இயற்பகையார்‌ சுற்றத்தாரிடம்‌, “ பேசாமல்‌ விலகிப்‌போய்விடுங்கள்‌. இல்லையென்றால்‌ உங்கள்‌ உயிர்‌ உடலில்‌ தரிக்காது” என்று கூறினார்‌.

        சுற்றத்தாரும்‌ நாயனாரை நோக்கி, “மனைவியை வேற்று மனிதருடன்‌ அனுப்பிவிட்டு, வீரம்‌ பேசுகிறாயே. உனக்கு நாணமாக இல்லையா? உனக்கு நாணம்‌ இல்லாமல்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நாங்கள்‌ இதற்கு ஒப்புக்‌ கொள்ள மாட்டோம்‌” என்று கூறி வேதியரை நோக்கி ஓடினார்கள்‌. வேதியரைத்‌ தாக்குவதற்குக்‌ கை ஓங்கினார்கள்‌.

        இதைக்கண்ட இயற்பகையாரின்‌ கோபம்‌ எல்லை கடந்தது, அவர்‌ தன்‌ கையிலிருந்த வாளால்‌ வேதியரை நெருங்கியவர்களை எல்லாம்‌ சரமாரியாக வெட்டி வீழ்த்தினார்‌. வேதியரைத்‌ தாக்க முயன்ற அனைவரும்‌ உடல்‌ துண்டாகி விழுந்தனர்‌. பின்‌ வேதியரையும்‌ அவரோடு செல்லும்‌ தன்‌ மனைவியையும்‌ அழைத்துக்‌ கொண்டு திருச்சாய்க்காடு என்ற இடத்திற்கு வந்தார்‌.

      அங்கு வந்ததும்‌, வேதியர்‌ இயற்பகையாரிடம்‌, “இனி உன்‌ துணை எனக்குத்‌ தேவையில்லை. நீர்‌ திரும்பிச்‌ செல்லலாம்‌!” என்று கூறினார்‌. இயற்பகையாரும்‌ திரும்பி நடந்தார்‌. சிறிது தூரம்‌ நடந்த இயற்பகையார்‌ காதில்‌ “இயற்பகையே!அபயம்‌” என்ற வேதியரின்‌ குரல்‌ கேட்டது.

      வேதியருக்கு மீண்டும்‌ இவ்வூர்‌ மக்களால்‌ ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று பதைபதைத்த இயற்பகையார்‌ திரும்பி வேதியரை நோக்கி ஓடினார்‌. என்னே ஆச்சரியம்‌! அங்கே வேதியரைக்‌ காணவில்லை. மனைவியார்‌ மட்டும்‌ நின்று கொண்டிருந்தார்‌.

        அக்கணமே சிவபெருமான்‌ உமாதேவியாரோடு இடபவாகனத்தில்‌ திருக்காட்சி நல்கினார்‌. “இயற்பகையே! நீ அடியவர்‌ மீது கொண்ட பேரன்பு என்னை மகிழ்ச்சியடையச்‌ செய்தது. நீயும்‌ உன்‌ மனைவியும்‌ சிவலோகம்‌ வந்தடையுங்கள்‌!” என்று தருவாய்‌ மலர்ந்‌தருளினார்‌.

இயற்பகை நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ பிறவிப்‌ பெருங்கடல்‌ கடந்தனர்‌. சிவலோகம்‌ சென்றடைந்தனர்‌.

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.இயற்பகை நாயனார்

இளையான்குடி மாற நாயனார்‌

இளையான்குடி-மாற-நாயனா

        இளையான்குடி என்னும்‌ ஊரில்‌ வேளாளர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ மாறனார்‌ என்பவர்‌ ஆவார்‌. வேளாண்மையில்‌ பெரும்‌ செல்வம்‌ ஈட்டிய இவர்‌ சிவபெருமான்‌ மீதும்‌ அடியவர்‌ மீதும்‌ அரும்பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்‌களுக்கு அமுது படைப்பதை அரும்பெரும்‌ தொண்டாகக்‌கருதி செய்து வந்தார்‌.

      மாறனாரின்‌ பெருமையை உலகுக்கு அறிவிக்க சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. அதனால்‌ மாறனாரின்‌ மலை போன்ற செல்வம்‌ கரையத்‌தொடங்கியது. வறுமை மெல்ல மெல்ல நாயனாரைப்‌ பற்றிக்‌கொண்டது. மாறானர்தன்னிடமிருந்த பொருள்களை விற்றுவிற்று அடியவர்களுக்கு அமுது படைக்கும்‌ தொண்டினை விடாது செய்து வந்தார்.  வறுமை முற்றியது. பலரிடம்‌ கடன்‌பெற்று அடியவர்க்கு அமுது படைத்தார்‌ நாயனார்‌.

        அவ்வாறிருக்கையில்‌ ஒருநாள்‌ இரவு உண்ண உணவு ஏதுமின்றி பசியோடு தன்‌ குடிசை வீட்டில்‌ படுத்திருந்தார்‌. அது மழைக்காலம்‌. வெளியில்‌ கடும்மழை பெய்து கொண்டிருந்தார்‌. அவ்வேளையில்‌ வீட்டின்‌ கதவு தட்டப்பட்டது. மாறனார்‌ எழுந்து கதவைத்‌ திறந்தார்‌. வாசலில்‌ அடியவர்‌ ஒருவர்‌ நின்றிருந்தார்‌. அடியவரைக்‌ கண்ட மாறனார்‌, அவரை வீட்டினுள்‌ அழைத்து, அவரது தேகம்‌ துடைத்திட துண்டு தந்து, அமரச்‌ செய்தார்‌.

       பிறகு மனைவியிடம்‌ வந்து அடியவர்க்கு ஏதேனும்‌ உண்ணத்‌ தரவேண்டுமே என்று கூறினார்‌. வீட்டிலே அரிசி சிறிதும்‌ இல்லை. மாறனாரும்‌ அவரது மனைவியும்‌ என்ன செய்தென்று புரியாமல்‌ தவித்தனர்‌. உடனே அவரது மனைவியார்‌, “இன்று வயலில்‌ விதைநெல்‌ தூவினோமே. அந்நெல்மணிகளை எடுத்து வருவீராயின்‌, அடியவர்க்கு அமுது படைக்கலாம்‌!” என்று யோசனை கூறினார்‌.

       மாறனாரும்‌, மழையைப்‌ பொருட்படுத்தாது, தலையில்‌ ஒரு கூடையைக் கவிழ்த்தபடி வயலுக்கு ஓடினார்‌. அங்கே நாற்றங்கால்‌ நீரில்‌ மிதந்து கொண்டிருந்த நெல்மணிகளைச்‌ சேகரித்து கூடையில்‌ அள்ளினார்‌. வீட்டை நோக்கி நடந்தார்‌.

         அரிசிக்கு நெல்‌ வந்து சேர்ந்தது. நெல்லை வறுத்து குத்தி அரிசியாக்க வேண்டுமே? அதற்கு விறகு வேண்டும்‌ என்று நாயனாரைக்‌ கேட்டார்‌. உடனே நாயனார்‌, தன்‌ வீட்டுக்‌கூரையின்‌ தாங்கு கட்டைகளை உருவித்தந்தார்‌. அவரது மனைவியாரும்‌ அக்கட்டைகளை விறகாக எரித்து நெல்லை வறுத்தார்‌. உரலில்‌ இட்டு அதைக்‌ குத்தி அரிசியாக்கி அமுது உண்டாக்கினார்‌.

       கறி சமைக்க காய்‌ ஏதேனும்‌ கொண்டு வரும்படி நாயனாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌ மனைவியார்‌. உடனே நாயனார்‌ வீட்டின்‌ பின்புறத்திற்குச்‌ சென்று அங்கு வளர்ந்திருந்த குப்பைக்‌ கரைகளைப்‌ பறித்து வந்தார்‌. அதைச்‌ கொண்ட மனைவியார்‌ கரி சமைக்கார்‌

     மனைவியார்‌ சமைத்து முடித்ததும்‌ நாயனார்‌, “அடியவரே! உணவு சமைத்தாகிவிட்டது. உணவு அருந்த வாருங்கள்‌! என்றபடியே, அடியவர்‌ படுத்திருந்த இடத்திற்கு வந்தார்‌. கணநேரத்தில்‌ அவ்வடியவர்‌ மறைந்தார்‌. அவ்விடத்தில்‌ சிவபெருமான்‌ உமாதேவியாருடன்‌ இடப வாகனத்தில்‌ தோன்றினார்‌. இறைவன்‌ நாயனாரை நோக்கி,

         “மாறனாரே! அடியவர்களைத்‌ தேடி அன்றாடம்‌ அமுதூட்டிய அன்பரே! உமது மனைவியாருடன்‌ எம்மிடம்‌ வந்து சேர்வீராக! அங்கு எல்லா இன்பங்களையும்‌ துய்ப்பீராக!” என்று இருவாக்கருளினார்‌.

          இளையான்குடி மாற நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ சிவலோகம்‌ சென்று பேரானந்தத்தில்‌ மூழ்கினர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார்‌

        தில்லையில்‌ குயவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ திருநீலகண்ட நாயனார்‌ ஆவார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அரும்‌ பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்களுக்கு திருவோடு செய்து கொடுப்பதைப்‌ பெரும்‌பேறாகக்‌ கருதினார்‌ இவர்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌.

        ஒருமுறை திருநீலகண்டர்‌ பரத்தையிடம்‌ சென்று வந்தார்‌. அதையறிந்த அவரது மனைவியார்‌ நாயனாரிடம்‌ பேசுவதை நிறுத்திக்‌ கொண்டார்‌. இல்லறத்தரசிக்குரிய பணிகளைச்‌ செய்தார்‌. எனினும்‌ நீலகண்டரைத்‌ தீண்டாது இருந்தார்‌. ஒருமுறை நாயனார்‌, தன்‌ மனைவியைத்‌ தீண்ட முற்பட்டபோது, அவர்‌ மனைவியார்‌, “நீர்‌ என்னைத்‌ தீண்டுவீராயின்‌ நான்‌ உயிர்‌ தரிக்க மாட்டேன்‌. இது நீலகண்டத்தின்‌ மீது ஆணை என்று சிவபெருமான்‌ மீது ஆணையிட்டார்‌. அன்றிலிருந்து இருவரும்‌ ஒரு வீட்டில்‌ இருந்தும்‌ உடல்‌ தொடர்பின்றி இருந்தனர்‌. அடியவர்க்கு தொண்டு புரிந்தும்‌ வந்தனர்‌. ஆண்டுகள்‌ பல ஓடின. நீலகண்டரும்‌ மனைவியாரும்‌ முதுமை அடைந்தனர்‌.

      நீலகண்டரையும்‌ அவரது மனைவியாரையும்‌ மீண்டும்‌ இணைத்திட சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணம்‌ ஒரு அடியவர்போல உருவம்‌ கொண்டு, நீலகண்டரின்‌ வீட்டை அடைந்தார்‌.

          நீலகண்டரிடம்‌ ஒரு திருவோட்டைத்‌ தந்து, “அன்பரே! இத்திருவோட்டை பாதுகாத்து வைப்பீராக. இத்திருவோடு தன்னுள்‌ வந்த பொருட்களை எல்லாம்‌ புனிதம்‌ அடையச்‌ செய்யும்‌ சக்தி பெற்றது. இதை நான்‌ வந்து கேட்கும்போது தருவீராக!” என்று கூறினார்‌. நீலகண்டரும்‌ மிக்க மகிழ்ச்சியோடு அதைப்‌ பெற்று வீட்டில்‌ வைத்தார்‌. அடியவர்‌ பெருமானும்‌ சென்றுவிட்டார்‌.

      நாட்கள்‌ பல கடந்தன. சிவபெருமானது திருவருளால்‌ திருவோடு காணாமல்‌ போயிற்று. சிலநாளில்‌ அடியவர்‌ மீண்டும்‌ நீலகண்டரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. தன்‌ திருவோட்டைத்‌ தருமாறு கேட்டார்‌. நீலகண்டரோ திருவோட்டை எங்கும்‌ தேடினார்‌. கிடைக்கவில்லை. மனம்‌ பதைத்தார்‌. அடியவரிடம்‌ சென்று வணங்கி, திருவோடு காணாமல்‌ போனதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ மிக்க கோபம்‌ கொண்டார்‌.

       அதைக்‌ கண்டு நடுங்கிய நீலகண்டர்‌, தான்‌ பழைய திருவோட்டிற்குப்‌ பதிலாக புதிதாக வேறு திருவோடு செய்து தருவதாகக்‌ கூறினார்‌. அடியவரோ பெருமை மிக்க தன்‌ பழைய திருவோடே வேண்டும்‌ என்று கூறினார்‌. நீலகண்டர்‌ அது காணாமல்‌ போய்விட்டதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ அதை நம்பவில்லை.

        “என்‌ பெருமை மிக்க திருவோட்டை நீர்‌ ஒழித்து வைத்துக்‌ கொண்டு, என்னை ஏமாற்றப்‌ பார்க்கிறாயோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டு, நீலகண்டர்‌, “ஐயா! என்‌மேல்‌ ஆணையாக நான்‌ அதைத்‌ திருடவில்லை!” என்று கூறினார்‌. இருப்பினும்‌ அடியவர்‌ அதை நம்பவில்லை.

      அவர்‌, “உன்‌ மேல்‌ ஆணைசெய்ய வேண்டாம்‌. உனக்கு மகன்‌ இருந்தால்‌ அவன்‌ கையைப்‌ பற்றிக்‌ கொண்டு, குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறினார்‌. அதற்கு நாயனாரோ, தனக்குக்‌ குழந்தைகள்‌ இல்லை என்று கூறினார்‌. உடனே அடியவர்‌, “அப்படியானால்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌!” என்று கூறினார்‌.

    அதற்கு நாயனாரோ, தான்‌ மனைவியோடு நெடுங்‌காலம்‌ ஊடல்‌ கொண்டிருப்பதாகக்‌ கூறினார்‌. உடனே அடியவர்‌, “என்னுடைய திருவோட்டைக்‌ களவாடியது உண்மைதான்‌. அதனால்தான்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய மறுக்கிறீர்‌. நான்‌ இவ்வழக்கை அந்தணர்கலிடம்‌ எடுத்துச்‌ செல்லப்‌போகிறேன்‌. அவர்கள்‌ வழக்கை விசாரிக்கட்டும்‌!” என்று கூறிச்‌ சென்றார்‌. அந்தணர்களிடமும்‌ வழக்கைக்‌ கூறினார்‌.

     அந்தணர்கள்‌ நீலகண்டரை அழைத்தனர்‌. வழக்கை விசாரித்தனர்‌. அவர்கள்‌ நீலகண்டரிடம்‌, “அடியவரது திருவோட்டை நீர்‌ களவாடவில்லை என்றால்‌ உம்‌ மனைவியாரின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்க வேண்டும்‌!” என்று உத்தரவிட்டனர்‌. என்ன செய்வதென்று புரியாது தவித்த நீலகண்டர்‌, ஒரு நீண்ட கோலை எடுத்து, அதன்‌ ஒரு முனையைத் தான்‌பற்றிக்‌ கொண்டு, மறுமுனையை தன்‌ மனைவியாரிடம்‌ பற்றிக்‌கொள்ளச்‌ செய்து இருவரும்‌ குளத்தில்‌ மூழ்கி எழுந்தனர்‌.

     அதைக்கண்ட அடியவர்‌, “கோலைப்‌ பற்றியபடி இருவரும்‌ மூழ்கினால்‌ நான்‌ நம்பமாட்டேன்‌. இருவரும்‌ கைகளைப்‌ பற்றிக்கொண்டு குளத்தில்‌ மூழ்கினால்தான்‌ நம்புவேன்‌!” என்று கூறினார்‌. யாதொரு வழியும்‌ தெரியாது தவித்த நீலகண்டர்‌, மனைவியாரிடம்‌ தன்மீது ஊடல்‌ கொண்ட காரணத்தை எல்லாம்‌ மானத்தை விட்டுக்‌ கூறினார்‌. மனைவியோடு குளத்தில்‌ மீண்டும்‌ மூழ்கி எழுந்தார்‌.

       மறுகணமே நீலகண்டருக்கும்‌ அவரது மனைவியாருக்கும்‌ முதுமை நீங்கியது. இருவரது உடல்களும்‌ இளமைத்‌ தோற்றம்‌ கொண்டன. அருகில்‌ நின்ற அடியவரும்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌.

     அவ்வேளையில்‌ சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனத்தில்‌ திருக்காட்சி அருளினார்‌. நீலகண்ட நாயனாரும்‌ அவரது மனைவியாரும்‌ பெருமானையும்‌ அன்னையையும்‌ பணிந்து தொழுதனர்‌.

       சிவபெருமானும்‌ அவ்விருவரிடம்‌, “இவ்வாலிபத்‌ தோற்றத்துடனே எம்‌ அருகில்‌ எப்போதும்‌ இருப்பீர்களாக!” என்று இருவரையும்‌ சிவலோகம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

சுந்தரர் வரலாறு

சுந்தரர்-வரலாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌

63 நாயன்மார்களில் ஒருவர்

        திருமுனைப்பாடி நாட்டிலுள்ள இருநாவலூரில்‌ ஆதிசைவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ ஆவார்‌. இவரது தந்தை சடையனார்‌தாய்‌ இசைஞானியர்‌ ஆவர்‌. பெற்றோர்‌ அவருக்கு இட்ட பெயர்‌ நம்பியாரூரர்‌. நம்பியாரூரர்‌ சிறுபிள்ளையா௧ இருக்கையில்‌, அவரைக்‌ கண்ட அந்நாட்டு மன்னரான நரசிங்கமுனையார்‌ அக்குழந்தையைத்‌ தனக்கே தருமாறு சடையனாரிடம்‌ கேட்டார்‌. சடையனாரும்‌ தந்தார்‌. நம்பியாரூரரும்‌ அரண்மனையில்‌ அந்தணக்‌ குழந்தையாகவே வளர்க்கப்‌பட்டார்‌. இவ்வாறு நம்பியாரூரர்‌ சிறப்புற வளர்ந்து திருமணப்‌ பருவத்தை எட்டினார்‌.

    புத்தூரில்‌ வசித்து வந்த சடங்கவி சிவாச்சாரியரின்‌ புதல்வியை, நம்பிக்கு மணம்‌ செய்து வைக்க சடையனார்‌ ஏற்பாடுகள்‌ செய்தார்‌. அதை ஊரில்‌ அனைவருக்கும்‌ தெரிவித்தார்‌. திருமண நாளும்‌ வந்தது. சடங்குகள்‌ எல்லாம்‌ நடந்தேறின.  நம்பியாரூரரும்‌ திருமணப்‌ பந்தலுள்‌ அமர்ந்தார்‌. சிவபிரான்‌, ஏற்கனவே தான்‌ கூறியபடி நம்பியாரூராரைத்‌ தடுத்தாட்‌கொள்ள நினைத்தார்‌.

சிவபெருமான்‌ தடுத்தாட்கொளல்‌

      சிவனடியாரைப்‌ போன்று வடிவெடுத்த சிவபிரான்‌, கையில்‌ ஒரு சிறிய ஒலையுடன்‌, திருமணப்‌ பந்தலிற்குள்‌ நுழைந்தார்‌. சபையோர்‌ சூழவிருந்த நம்பியாரூரரும்‌ அவரை வணங்கினார்‌. சிவனடியாரும்‌ தான்‌ வந்த காரணத்தை சபையோர்முன்‌ கூறினார்‌.

“நம்பியாரூரா! நீ எனக்குப்‌ பரம்பரை அடிமை. இத்திருமணத்தை உதறிவிட்டு என்‌ பின்னே வா!” என்றார்‌.

     நம்பியாரூரார்‌ சினம்‌ கொண்டு, “அந்தணருக்கு அந்தணர்‌ எப்படி அடிமையாக முடியும்‌? அதற்கு என்ன சாட்சி உள்ளது? என்று கடுமையாக வினவினார்‌.

    சிவனடியாரும்‌, “இதோ என்‌ கையிலுள்ள ஓலைதான்‌ அதற்குச்‌ சாட்சி. ஒலையை உன்னிடம்‌ காட்டத்‌ தேவையில்லை. நீ என்‌ பின்னே வா” என்று நடக்கலானார்‌. சினம்‌ கொண்ட நம்பியாரூரரும்‌, சிவனடியாரின்‌ பின்னே சென்று ஒலையைப்‌ பறித்துக் கிழித்தெறிந்தார்‌.

     உடனே சிவனடியாரும்‌ அருகில்‌ நின்றிருந்தவர்களைப்‌ பார்த்து, “என்‌ ஓலையை இவன்‌ கிழித்ததனால்‌, இவன்‌ என்‌ அடிமை என்பது உறுதியாயிற்று. இன்னும்‌ இதை மெய்பிக்கவேண்டும்‌ என்றால்‌ என்னோடு திருவெண்ணெய்‌ நல்லூருக்கு வாருங்கள்‌ என்றபடி நடந்தார்‌. எல்லோரும்‌ சிவனடியாரின்‌ பின்னே, திருவெண்ணெய்‌ நல்லூருக்குச்‌ சென்றார்கள்‌.

     திருவெண்ணெய்நல்லூரில்‌, சான்றோர்கள்‌ நிறைந்த சபைக்குச்‌ சென்றார்‌ அச்சிவனடியார்‌. நடந்தவற்றைக்‌ கூறினார்‌. அச்சான்றோர்களும்‌, “அந்தணர்க்கு அந்தணர்‌ அடிமையாதல்‌ வழக்கிலில்லையே? நீர்‌ கூறுவதை எப்படி நம்புவது? என்று வினவினர்‌.

அதற்கு அச்சிவனடியார்‌, “இதோ, நம்பி கிழித்தது படிஒலைதான்‌. மூல ஓலை என்னிடம்‌ இருக்கிறது, எடுத்து வருகிறேன்‌” என்று ஆலயத்தின்‌ சன்னிதிக்குப்‌ போய்‌ அதை எடுத்து வந்தார்‌. சான்றோர்களால்‌ அவ்வோலை வாசிக்கப்பட்டது. பின்‌, நம்பியாரூரரின்‌ பாட்டனாரின்‌ கையெழுத்தோடு ஒப்பிடப்பட்டு, அது உண்மையென்பது உறுதிப்படுத்தப்‌பட்டது. நம்பியாரூரரும்‌ கலங்கி நின்றார்‌. பின்‌ அனைவரும்‌, “சரி, அடியவரே! இவ்வோலையில்‌ உமது ஊர்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ என்று எழுதப்‌பட்டுள்ளதே. இங்கு உமது வீடுதான்‌ எங்குள்ளது?” என்று கேட்டனர்‌.

      அதற்கு அடியவரும்‌, “இதோ என்னிருப்பிடம்‌ இங்குள்ளது!” என்றபடி திருக்கோயிலினுள்‌ சென்று மறைந்தார்‌. நம்பியாருரார்‌ மட்டும்‌ தனியாக ஆலயத்தினுள்‌ பிரவேசித்தார்‌. உள்ளே சிவனடியாரைத்‌ தேடினார்‌. காணவில்லை. அங்கே, சிவபிரான்‌, உமாதேவியருடன்‌ ரிஷப வாகனத்தில்‌ நம்பிக்குக்‌ காட்சிக்‌ கொடுத்தார்‌. நம்பியாரூராரும்‌ மெய்‌சிலிர்த்தார்‌. பரமனை இருகரம்‌ கூப்பி வணங்கினார்‌. கயிலையில்‌ நடந்தவை அனைத்தும்‌ நினைவிற்கு வந்தது. எளியவன்‌ தன்‌ வேண்டுதலின்‌ பொருட்டு தன்னை தடுத்தாட்கொண்ட பெருமானின்‌ கருணை நினைந்து சிந்தையுருகினார்‌.

       சிவபெருமானும்‌ நம்பியை நோக்கி, “நீ என்னை வன்மையான வார்த்தைகளால்‌ பேசினாய்‌. எனவே இன்றுமுதல்‌ நீ ‘வன்தொண்டன்‌’ என்று அழைக்கப்படுவாய்‌ என்று இருவாக்கு அருளினார்‌. நம்பியாரூரரும்‌ ‘பித்தா பிறைசூடி’ என்னும்‌ திருப்‌ பதிகத்தைப்‌ பாடினார்‌.

      திருமணம்‌ தடைபட்டதால்‌, சடங்கவி சிவாச்சாரியாரின்‌ புதல்வியும்‌, நம்பியின்‌ நினைவாகவே இருந்து சிவனடி சேர்ந்தாள்‌. வன்தொண்டரோ அன்று முதல்‌ சிவபெருமானைத்‌ திருப்பதிகங்களால்‌ பாடித்‌ தொழுது வந்தார்‌. பல தருத்தலங்களுக்குச்‌ சென்று திருவதிகை என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

      திருவதிகை, அப்பர்‌ சுவாமிகள்‌ உழவாரப்‌ பணி செய்த இத்திருத்தலம்‌. எனவே அம்மண்ணை மிதிக்கக்‌ கூடாது என்ற எண்ணத்தில்‌ஆலயத்திற்குச்‌ செல்லாமலேயே இறைவனை வணங்கி அருகிலுள்ள மடத்தில்‌ படுத்தார்‌. அப்போது சிவபிரான்‌ கிழ அடியவராக வந்து சுந்தரரின்‌ அருகில்‌ படுத்தார்‌. தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையின்மீது படும்படி வைத்தார்‌. அதைக்கண்ட வன்தொண்டர்‌ சற்று தள்ளிப்‌ படுத்தார்‌. மீண்டும்‌ கிழ அடியவர்‌, தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையில்‌ வைத்தார்‌.

       வன்தொண்டருக்குச்‌ சற்று கோபம்‌ வந்தது. அவர்‌ அம்முதியவரை நோக்கி, “அடியவரே! நீர்‌ செய்வது முறையா?” என்று கேட்டார்‌. கிழ அடியவரும்‌, “என்ன வன்தொண்டா? என்னைத்‌ தெரியவில்லையோ ?]” என்ற படி மறைந்தார்‌. அப்போதுதான்‌ அவ்வடியவர்‌ யாரென்று வன்‌தொண்டருக்குப்‌ புரிந்தது. இறைவனின்‌ கருணையை நினைத்து மெய்‌ சிலிர்த்தார்‌.

     பிறகு திருவாரூர்‌ சென்றடைந்த வன்தொண்டரின்‌ பக்திக்கு மெச்சிய சிவபெருமான்‌, நம்பியாரூரைத்‌ தன்‌தோழராக ஏற்றுக்‌ கொண்டார்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டு வாழவும்‌ பணித்தார்‌. அதனால்‌ நம்பியாரூர்‌ தம்பிரான்‌ தோழர்‌ என்ற பெயர்‌ பெற்றார்‌. மேலும்‌ சிவபிரான்‌ நம்பியாரூரிடம்‌, “யாம்‌ உன்னைத்‌ தடுத்து ஆட்கொண்ட போது இருந்தபடி திருமணக்‌ கோலத்திலேயே எப்போதும்‌ இருப்பாயாக!” என்று கூறினார்‌. நம்பியாரும்‌ திருமணக்‌கோலம்‌ தாங்கியே எங்கும்‌ போய்‌ வந்தார்‌.

பரவையாரோடு இல்லறம்

     இந்நிலையில்‌, திருவாரூரில்‌ பரவை நாச்சியார்‌ என்ற மங்கையைக்‌ கண்டார்‌. அவர்மீது நம்பியார்‌ காதல்‌ கொண்டார்‌. பரவையாரும்‌ நம்பியார்‌ மீதுமையல்‌ கொள்ள இருவருக்கும்‌ பெற்றோர்‌ மணம்‌ செய்து வைத்தனர்‌. இருவரும்‌ இல்லறம்‌ நடத்தத்‌ தொடங்கினர்‌.

   ஒருநாள்‌ அடியவர்களுடன்‌ கோயிலில்‌ அமர்ந்திருந்த நம்பியாரூரர்‌ முன்‌ சிவபிரான்‌ காட்சி தந்தார்‌. திருத்‌தொண்டத்‌ தொகை” பாடும்படிக்‌ கூறினார்‌. நம்பியாரும்‌ அதைப்‌ பாடினார்‌.

      ஒருமுறை குண்டையூர்‌ என்னும்‌ ஊரிலே கிழவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ கனவிலே தோன்றிய சிவபிரான்‌, “வன்தொண்டருக்காக உம்மிடம்‌ நெல்‌ அனுப்பியுள்ளோம்‌. அவற்றை வன்தொண்டரிடம்‌ சேர்ப்பிப்பாயாக!” என்று கூறினார்‌.  கண்விழித்த கிழவர்‌, தன்‌ ஊர்‌ முழுவதும்‌ நெல்‌ மலையாகக்‌ கிடக்கக்‌ கண்டார்‌. உடனே நம்பியாரூரருக்குச்‌ செய்தி அனுப்பினார்‌. நம்பியாரூரார்‌ குண்டையூர்‌ வந்து நெல்மலைகளைக்‌ கண்டார்‌. பின்‌ சிவபெருமானை வேண்ட, சிவபூத கணங்கள்‌ வந்து அவற்றை திருவாருக்கு எடுத்துச்‌ சென்றன. நம்பியாரும்‌, பரவையாரும்‌ அவற்றை ஊர்‌ மக்களுக்கு வழங்கினர்‌.

      ஒருமுறை திருநாட்டியத்தான்குடி என்னும்‌ ஊரிலுள்ள கோட்புலியார்‌ நம்பியாஞரனின்‌ பெருமைகளைக்‌ கேட்டறிந்‌தார்‌. அவர்‌ தன்‌ இரு புதல்விகளான சிங்கடியையும்‌, வனப்பகையையும்‌ திருமணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌ என்று நம்பியாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. நம்பியாரூரரோ, இவ்விரு மங்கையரும்‌ தம்‌ புதல்வியர்‌ போன்றவர்கள்‌ என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்‌. அவ்விருவரையும்‌ தம்‌பதிகங்களில்‌ வைத்துப்‌ பாடிச்‌ சிறப்பித்தார்‌.

செங்கல்‌ பொன்னானது

      ஒரு பங்குனி உத்திரத்‌ திருநாள்‌ செலவிற்கு பொருள்‌ ஏதுமின்றித்‌ தவித்த பரவையார்‌, நம்பியாரூரரிடம்‌ தெரிவித்தார்‌. நம்பியாரும்‌ திருப்புகலூர்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. அன்று அவர்‌ அக்கோயிலின்‌ அருகேயுள்ள மடத்தில்‌ ஒரு செங்கல்லைத்‌ தலையணையாக்கி உறங்கினார்‌. சிவபிரான்‌ அருளால்‌ செங்கல்‌ பொன்னாக மாறியது. பரவையாரின்‌ குறையும்‌ நீங்கியது. இவ்வாறு பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்ற சுவாமிகள்‌, சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. பொன்னும்‌ பொருளும்‌ பெற்றார்‌.

     திருமுதுகுன்றம்‌ என்னும்‌ இடத்தில்‌ உறைந்தருளும்‌ சிவபெருமானைப்‌ பாடித்துதித்தார்‌. பெருமான்‌ நம்பியாருக்குப்‌ பன்னிரண்டாயிரம்‌ பொன்‌ தந்தார்‌. அப்போது நம்பியார்‌, சிவபிரானிடம்‌ இப்பொன்னைத்‌ திருவாரூரில்‌ தந்தால்‌, சிறப்பாகவிருக்கும்‌ என்று வேண்டிக்‌ கொண்டார்‌. சிவபெருமான்‌, “வன்தொண்டரே! இப்பொன்னை மணிமுத்தா நதியில்‌ இடுவீராக! பிறகு திருவாரூர்‌ சென்று அக்கோயில்‌ குளத்தில்‌ எடுத்துக்‌ கொள்வீராக!”  என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ அப்பொன்னை நதியில்‌ விட்டுவிட்டு, மாற்று உரை பார்க்கும்‌ பொருட்டு ஒரு சிறு துண்டு பொன்னை மட்டும்‌ வெட்டி எடுத்துக்‌ கொண்டார்‌. திருவாரூர்‌ சென்றார்‌. திருவாரூர்‌ மக்கள்‌ அறிய பொன்னை அவவூரின்‌ குளத்திலே எடுத்தார்‌. இரு பொன்னின்‌ மாற்றும்‌ ஒத்ததாக இருந்தது. சுந்தரரின்‌ பெருமையை மக்கள்‌ அறிந்தனர்‌.

       வன்தொண்டர்‌ பின்‌ பல திருத்தலங்களுக்குச்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. திருக்குருகாவூர்‌ என்ற இடத்திலும்‌, திருக்கச்சூர்‌ என்னுமிடத்திலும்‌ நம்பியாரூரர்‌ உணவின்றித்‌ தவித்தார்‌. அவ்வேளைகளில்‌ சிவபிரானே அடியவர்‌ கோலத்தில்‌ வந்து சுந்தரரின்‌ பசியைத்‌ தீர்த்தார்‌; தாகம்‌ தணித்தார்‌. இவ்வாறு சிவபிரான்‌ நம்பியாஞூரரைத்‌ தன்‌ தோழராகவே பாவித்து பல இடங்களில்‌ அருள்‌ செய்தார்‌.

     நம்பியாரூரரும்‌ இவ்வாறு பல திருத்தலங்களை வழிபட்டு தொண்டை நாடு வந்தார்‌. திருக்காஞ்சி, காமக்‌கோட்டம்‌ முதலிய இடங்களுக்குச்‌ சென்று இறைவனை வழிபட்டார்‌. இறுதியில்‌ திருவொற்றியூர்‌ வந்து சேர்ந்தார்‌.

சங்கிலி நாச்சியாரோடு திருமணம்‌

      திருவொற்றியூரில்‌ ஞாயிறு கிழவர்‌ என்பவரின்‌ புதல்வி சங்கிலியார்‌ என்னும்‌ மங்கை உமையன்னையிடம்‌ மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்க பெற்றோர்‌ பல வரன்களைத்‌ தேடினர்‌. ஆனால்‌ சங்கிலியாருக்கோ, ‘தான்‌ ஒரு சிவனடியாருக்கு மனைவியாகவே பிறந்தவள்‌’ என்ற உணர்வு தோன்றியிருந்தது. அதனால்‌ பெற்றோர்‌ கொண்டுவந்த வரன்களை எல்லாம்‌ மறுத்து வந்தார்‌.

       அவ்‌வேளையில்‌ சுந்தரமூர்த்தியார்‌ திருவொற்றியூர்‌ வந்தார்‌. அக்கோயிலில்‌ இருந்த சங்கிலியாரைக்‌ கண்டார்‌. காதல்‌ கொண்டார்‌. சங்கிலியாரைக்‌ கண்ட பொழுது முதல்‌, அவருக்கு அப்பெண்ணின்‌ நினைவாகவே இருந்தது. எனவே சிவபிரானிடம்‌, “இப்பெண்ணை நான்‌ மணக்க வேண்டும்‌!” என்று வேண்டினார்‌. இறைவனும்‌ அவ்வாறே நடக்கும்‌” என்று அருள்‌ செய்தார்‌.

     சுந்தரரைக்‌ கண்ட நாள்‌ முதல்‌ சங்கிலியாரும்‌ தன்‌ மனதை, நம்பியாரூரரிடம்‌ பறி கொடுத்திருந்தார்‌. அவ்வாறிருக்கையில்‌, ஒருநாள்‌ சிவபிரான்‌, சங்கிலியாரின்‌ கனவில்‌ தோன்றி, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்து கொள்ள விரும்புவதாகக்‌ கூறினார்‌. அதற்கு சங்கிலியாரோ, “பெருமானே! சுந்தரர்‌ ஏற்கனவே திருவாரூரில்‌ ஒரு பெண்ணைத்‌ திருமணம்‌ செய்துள்ளாரே! என்னை மணம்‌ செய்தால்‌ என்றேனும்‌ ஒருநாள்‌ என்னைப்‌ பிரிந்து திருவாரூர்‌ சென்றுவிட மாட்டாரோ!” என்று கேட்டார்‌.

       அதற்கு இறைவன்‌, “சுந்தரன்‌ அவ்வாறு செய்யாமலிருக்க, நீ அவனிடம்‌, உன்னைப்‌ பிரிந்து போகாதபடி சத்தியம்‌ வாங்கிக்‌ கொள்‌!” என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பிறகு சிவபிரான்‌ சுந்தரரின்‌ கனவில்‌ தோன்றி, “ நீ சங்கிலியார்‌ மேல்‌ வைத்த காதலை அவரிடம்‌ தெரிவித்தாகி விட்டது. ஆனால்‌ நீ அவளிடம்‌, அவளைப்‌ பிரிந்து போக மாட்டேன்‌ என்ற சத்தியம்‌ செய்து தர வேண்டும்‌” என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ இறைவனிடம்‌, “நான்‌ கோயிலின்‌ கருவறையின்‌ முன்‌ சத்தியம்‌ செய்து தருகிறேன்‌. பெருமானே! நீர்‌ அப்போது அக்கோயிலில்‌ உள்ள மகிழ மரத்தின்‌ கீழ்‌ வீற்றிருக்க வேண்டும்‌!” என்று கேட்டுக்‌ கொண்டார்‌. இறைவனும்‌ சம்மதித்தார்‌.

       ஆனால்‌ சிவபிரான்‌ தன்‌ திருவிளையாடலைத்‌ தொடங்கினார்‌. நேராக, சங்கிலியாரின்‌ கனவில்‌ சென்று, “சுந்தரன்‌ உன்னிடம்‌ சத்தியம்‌ செய்யும்போது, மகிழ மரத்தின்‌கீழ் சத்தியம்‌ செய்யும்படி கேட்டுக்‌ கொள்‌! என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பின்‌ செய்தியைத்‌ தன்‌ தோழிகளிடம்‌ கூறினார்‌.

      மறுநாள்‌ கோயிலில்‌ சங்கிலியார்‌ மறைந்திருக்க, அவரின்‌ தோழிகள்‌, சுந்தரரிடம்‌ ‘சங்கிலியாரைப்‌ பிரிய மாட்டேன்‌’ என்று சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டார்கள்‌. சுந்தரரும்‌ கோயிலின்‌ கருவறை முன்‌ சத்தியம்‌ செய்யச்‌ சென்றார்‌. தோழிகளோ, மகிழ மரத்தின்‌ அடியில்‌ சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டனர்‌. சுந்தரர்‌ என்ன செய்வதென்று புரியாமல்‌ விழித்தார்‌. வேறு வழியில்லாமல்‌ சத்தியம்‌ செய்து தந்தார்‌. அதைக்கண்ட சங்கிலியார்‌ மனம்‌ வருந்தினார்‌.

     சுந்தரருக்கும்‌ சங்கிலியாருக்கும்‌ திருமணம்‌ நடைபெற்றது. இருவரும்‌ மகிழ்ச்சியாக இல்லறம்‌ நடத்தினர்‌. சில மாதங்கள்‌ சென்றபின்‌, நம்பியாருராருக்கு திருவாரூர்‌ நினைவு வந்தது. அவர்‌ பரவையாரிடம்‌ செல்லநினைத்தார்‌. சங்கிலியாரிடம்‌ விடை பெற்றார்‌. இறைவனின்‌ தோழராக இருப்பினும்‌ சத்தியம்‌ தவறலாமோ? அதனால்‌ சிவபிரான்‌ சுந்தரரின்‌ இரு கண்களிலும்‌ பார்வையைப்‌ பறித்து விட்டார்‌. சுந்தரர்‌ கண்பார்வையின்றி தவித்தார்‌. இறைவனிடம்‌ தொழுதார்‌. பலநாட்களுக்குப்‌ பிறகு திருவெண்பாக்கம்‌ என்னுமிடத்தில்‌

       இறைவன்‌ சுந்தருக்கு ஒரு ஊன்று கோல்‌ தந்தார்‌. அதைப்‌ பெற்றுக்கொண்டு, பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்று, பதிகங்கள்‌ பாடி சிவபிரானைத்‌ தொழுதார்‌ சுந்தரர்‌. அவ்வாறு வருகையில்‌ காஞ்சி ஏகாம்பரநாதரைத்‌ தொழுகையில்‌ ஒற்றைக்‌ கண்ணில்‌ மட்டும்‌ பார்வை வந்தது. பிறகு பலத்‌ திருத்தலங்களைத்‌ தொழுது வருகையில்‌, திருத்துமுத்தி என்னும்‌ இடத்தில்‌ சிவபிரானை மனம்‌ வருந்தித்‌ தொழுதார்‌. மறு கண்ணிலும்‌ பார்வை பெற்றார்‌.

      இவ்வாறு பயணம்‌ செய்து இறுதியில்‌ திருவாரூர்‌ சென்றடைந்தார்‌. ஆனால்‌ பரவையார்‌, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்த செய்தி அறிந்து அவர்‌ மீது கடுங்கோபம்‌ கொண்டிருந்தார்‌.

சிவபெருமானைத்‌ தூது விடல்‌

      பரவையாரைக்‌ காணச்‌ சென்ற சுந்தரரை, பரவையார்‌ வீட்டினுள்ளேயே அனுமதிக்க மறுத்தார்‌. அவருடன்‌ பேசவும்‌ மறுத்தார்‌. சுந்தரர்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தி அவவூர்க்‌கோயில்‌ மண்டபத்திற்கு வந்து அமர்ந்தார்‌. பரவையார்‌, தன்னை வெறுத்ததை சுந்தரரால்‌ பொறுக்க முடியவில்லை. அவ்விரவே, தியாகேசப்‌ பெருமானைத்‌ தொழுதார்‌. ‘தன்‌மீது கோபம்‌ கொண்ட பரவையாரை ஆறுதல்‌ செய்து, தன்னை மீண்டும்‌ சேரும்படிச்‌ செய்ய வேண்டும்‌” என்று வேண்டினார்‌. சிவபெருமானும்‌ சுந்தரருக்காக அந்த நடுநிசியிலும்‌ பரவையாரிடம்‌ தூது செல்லச்சம்மதித்தார்‌.

      மறுகணமே சிவபிரான்‌ அடியவர்‌ கோலம்‌ கொண்டார்‌. தேவர்களையெல்லாம்‌ பிற அடியவர்களாக கோலம்‌ கொள்ளச்‌ செய்தார்‌. பரவையார்‌ வீடு நோக்திச்‌ சென்றார்‌. பரவையாருக்கு சுந்தரர்‌ மீது கோபம்‌ இன்னும்‌ அடங்கவில்லை. நடுநிசியிலும்‌ உறங்காது விழித்திருந்தார்‌.

    அவ்வேளை, சிவபெருமான்‌ அடியவர்‌ கோலத்தில்‌ சென்றார்‌. சுந்தரர்‌ மீது தவறேதும்‌ இல்லை என்று எடுத்துரைத்தார்‌. ஆனால்‌ பரவையார்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அவர்‌ அவ்வடியவரிடம்‌, “சுந்தரர்‌ எனக்கு வஞ்சகம்‌ செய்தார்‌!அதனால்‌ நான்‌ அவரை ஏற்றுக்‌ கொள்ள இயலாது!” என்று கூறிவிட்டார்‌.

    சிவபிரானும்‌ திரும்பி, சுந்தரரிடமே வந்தார்‌. நடந்ததைக்‌ கூறினார்‌. உடனே சுந்தரரும்‌, “பரவையார்‌ நித்தம்‌ வழிபடும்‌ சிவனே தூது வந்தார்‌ என்று அறிந்தும்‌, என்னை ஏற்றுக்‌ கொள்ள மறுக்கிறாளோ பரவையார்‌ இல்லாது என்னால்‌ உயிர்‌ வாழ முடியாது. எனக்காக நீர்‌ மீண்டும்‌ ஒருமுறை தூது செல்ல வேண்டும்‌!” என்று பணிந்து வேண்டினார்‌.

    சுந்தரர்‌ மீது பெருங்கருணை கொண்ட சிவபிரான்‌, மீண்டும்‌ பரவையார்‌ வீட்டிற்கு, தேவர்கள்‌ புடைசூழச்‌ சென்றார்‌. இந்நிலையில்‌ பரவையாரின்‌ மனதில்‌, ‘சற்று முன்பு வந்தது சிவபெருமானே!’ என்ற எண்ணம்‌ உதித்தது. ‘ஐயோ! நான்‌ நித்தம்‌ வணங்கும்‌ பெருமான்‌, என்னைத்‌ தேடி வந்தாரே! நான்‌ அவரைத்‌ திருப்பி அனுப்பினேனே!’ என்று கலக்கமுற்றிருந்தார்‌. அவ்வேளையில்‌ மீண்டும்‌ சிவபிரான்‌ தன்னைத்தேடி வரும்‌ உணர்வு அவருள்‌ தோன்றியது.

      இம்முறை சிவபிரான்‌, வந்து கேட்கும்‌ முன்பே, பரவையார்‌ பெருமானை வணங்கித்‌ துதித்தாள்‌. சுந்தரரை ஏற்றுக்‌ கொள்ளச்‌ சம்மதித்தார்‌. சிவபிரானும்‌ செய்தியைச்‌ சுந்தரிடம்‌ தெரிவித்தார்‌. சுந்தரரும்‌ வணங்கினார்‌

      நம்பியாரும்‌ பரவையாரும்‌ மீண்டும்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டனர்‌. சுந்தரர்‌, சிவபெருமானை ஒரு பெண்ணிற்காகத்‌ தூது அனுப்பியதை அவ்வூரில்‌ இருந்த ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ என்ற அடியவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியவில்லை. அவர்‌ சுந்தரர்‌ மீது கோபம்‌ கொண்டார்‌. ஆனால்‌, கலிக்காமரின்‌ கோபத்தை மாற்ற திருவுள்ளம்‌ கொண்டார்‌ சிவபிரான்‌. அவருக்கு சூலை நோயை உண்டாக்கினார்‌.

        அந்நோயை சுந்தரர்‌ நீக்குவார்‌ என்று சொல்லி, கலிக்காமருக்கும்‌ சுந்தரருக்கும்‌ இடையே நட்புண்டாகச்‌ செய்தார்‌. இருவரும்‌ அதன்‌ பிறகு ஒருவர்‌ மீது ஒருவர்‌ மாறாப்‌ பேரன்பு கொண்டிருந்தனர்‌.

      பிறகு சுந்தரர்‌, பாண்டி நாட்டிலுள்ள பல இருத்தலங்‌களுக்கும்‌ சென்று சிவபிரானை வழிபட்டார்‌. அதுபோல்‌, மலை நாட்டை ஆண்டு கொண்டிருந்த சேரமான்பெருமாள்‌ என்னும்‌ மன்னர்‌, சிவபக்தியில்‌ சிறந்து நின்றவர்‌. அவரோடு சுந்தரரை நட்புறவு கொள்ளச்செய்தார்‌ சிவபிரான்‌. அவர்கள்‌ இருவரும்‌ நட்பு கொண்டனர்‌. சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரரின்‌ மீது பேரன்பு வைத்திருந்தார்‌. சுந்தரரும்‌ மலைநாடு சென்று, சேரமான்‌ பெருமாளுடன்‌ சிலகாலம்‌ தங்கியிருந்து இருவாருக்குத்‌ திரும்பினார்‌.

       அவ்வேளையில்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரருக்கு ஏராளமான பொன்னும்‌ பொருளும்‌ தந்து வழியனுப்பினார்‌. சிவபிரானோ, எப்பொருளையும்‌ சுந்தரருக்குத்‌ தானே நேரடியாகத்‌ தரவேண்டும்‌ என்று திருவுள்ளம்‌ கொண்டார்‌. சுந்தரரின்‌ உடன்‌ வந்த அடியவர்களின்‌ பொன்னையும்‌ பொருளையும்‌ திருடர்களாய்‌ கோலம்‌ கொண்ட சிவகணங்கள்‌ கொண்டு பறித்தார்‌. திருமுருகன்‌ பூண்டி என்னும்‌ தலத்தில்‌ மீண்டும்‌ தந்தார்‌.

சுந்தரர்‌ இவ்வாறு பலத்‌ திருத்தலங்களைச்‌ சென்று தரிசித்து, திருப்புக்கொளியூர் என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

முதலையுண்ட பாலகனை உயிர்ப்பித்தல்‌

          சுந்தரர்‌, திருப்புக்கொளியூர்‌ தலத்து பெருமானைத்‌ தொழுது, மாடவீதி வழியே வந்து கொண்டிருந்தார்‌. அப்போது அவ்வீதியில்‌ எதிர்‌ எதிரே அமைந்த இரு வீடுகளைக்‌ கண்டார்‌.  ஒரு வீட்டில்‌ மங்கல மேளச்‌ சத்தம்‌ கேட்டது. எதிர்‌ வீட்டில்‌ அழுகுரல்‌ கேட்டது. என்ன நடந்தது என்று சுந்தரர்‌, அவவீடுகளுக்குச்‌ சென்று கேட்டார்‌. மங்கலமேளம்‌ கேட்ட வீட்டில்‌ ஒன்பது வயது பாலகன்‌ ஒருவனுக்கு உபநயனம்‌ நடந்து கொண்டிருந்தது.

         பிறகு, சுந்தரர்‌ அழுகுரல்‌ கேட்ட வீட்டிற்குள்‌ சென்றார்‌. காரணம்‌ கேட்டார்‌. அக்குடும்பத்திலுள்ள ஒரு பாலகன்‌ கடந்த ஆண்டு, நண்பனுடன்‌ குளத்தில்‌ குளிக்கச்‌ சென்றான்‌. அப்போது, அக்குளத்திலிருந்த ஒரு முதலை அப்பாலகனைக்‌ கடித்து விழுங்கியது. அவன்‌ இறந்து ஓர்‌ ஆண்டு முடிவுற்றிருந்தது.

    இன்று எதிர்‌ வீட்டுப்‌ பாலகனுக்கு உபநயனம்‌ நடக்கையில்‌, இவ்வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள்‌ புதல்வனின்‌ நினைவு வந்தது. அவர்கள்‌ அழுது கொண்டிருந்தனர்‌. ஆனால்‌, சுந்தரரைக்‌ கண்டதும்‌ அவர்கள்‌ தங்கள்‌ கவலையை மறந்து, அவரை வரவேற்று உபசரித்தனர்‌. அக்காட்சி சுந்தரரின்‌ மனதைத்‌ தொட்டது. அவர்‌, அக்குடும்பத்திலுள்ளோர்களிடம்‌, இறந்து போன பாலகனை முதலை விழுங்கிய குளம்‌ எங்கே உள்ளது என்று கேட்டறிந்து, அவர்களையும்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்கு சென்றதும்‌, சிவபெருமானை நினைத்துப்‌ பதிகம்‌ பாடி பாலகனை அழைத்தார்‌.

       இறந்து போன பாலகன்‌, ஓர்‌ ஆண்டில்‌ எவ்வளவு வளர்ச்சி பெற்றிருப்பானோ, அப்பருவத்தில்‌ முதலையின்‌ வாயிலிருந்து வெளிவந்தான்‌. அவனது பெற்றோர்கள்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்‌. சுந்தரை வணங்கி, ஆனந்தக்‌ கண்ணீர்‌ வடித்தனர்‌.

மலைநாடு வருதல்‌

        ஏற்கனவே, சுந்தரரின்‌ மீது பேரன்பு கொண்டிருந்த மலைநாட்டு மன்னர்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரர்‌ ஒவ்வொரு திருத்தலங்களிலும்‌ நடத்திய அற்புதங்களைக்‌ கேட்டறிந்து, அவரை எப்போது காண்போம்‌ என்று காத்திருந்தார்‌.

        அவ்வேளையில்‌ சுந்தரரும்‌ மலைநாடு சென்றடைந்‌தார்‌. அவரைக்‌ கண்ட சேரமான்‌ பெருமாள்‌, எல்லையில்லா ஆனந்தம்‌ அடைந்தார்‌. சுந்தரரும்‌, சேரமான்‌ பெருமாளும்‌ எந்நேரமும்‌ சேர்ந்தே சிவபிரானைத்‌ தொழுதனர்‌. பல நாட்கள்‌ கடந்தன.

        ஒருநாள்‌ சுந்தரரைத்‌ தேடினார்‌ சேரமான்‌ பெருமாள்‌. காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம்‌ கேட்டார்‌. சுந்தரர்‌ திருவஞ்சை களத்தியப்பனை வணங்கச்‌ சென்றிருப்பதாகக்‌ கூறினர்‌. சேரமான்‌ பெருமாளும்‌ தன்‌ வெள்ளைக்‌ குதிரையில்‌ ஏறிப்‌ புறப்பட்டார்‌. திருக்கோயிலை நெருங்கினார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌, கோயிலினுள்ளிருந்து வெளியே வந்தார்‌. அப்போது சேரமான்‌ கண்ட காட்சி திருக்கயிலையிலிருந்து கணங்கள்‌ சூழ ஒரு வெள்ளை யானை இறங்கி வந்தது. சுந்தரரை தன்‌ முதுகில்‌ ஏற்றியது. பின்‌ விண்ணுலகம்‌ தாண்டிப்‌ பறந்தது.

    சுந்தரரை ஒரு கணமும்‌ பிரிந்திருக்க இயலாத சேரமான்‌ பெருமாள்‌ மனம்‌ பதைத்தார்‌. தன்‌ வெள்ளைக்‌ குதிரையின்‌ காதில்‌ சிவபஞ்சாட்சர மந்திரத்தைக்‌ கூறினார்‌. விண்ணுக்குக்‌ கிளம்பி, அவ்வெள்ளை யானையைத்‌ தொடரும்படிக்‌கூறினார்‌. குதிரை உயரே கிளம்பியது. சுந்தரரை ஏற்றிச்‌சென்ற யானையை வலம்‌ வந்தபடியே பறந்து வந்தார்‌ சேரமான்‌.

       இறுதியில்‌ இருவரும்‌ கைலாயத்தை அடைந்தனர்‌. அங்கு சுந்தரரைக்‌ கண்டதும்‌ பல வாயில்கள்‌ திறந்தன. சுந்தரர்‌ அவைகளில்‌ நுழைந்து சென்றார்‌. சேரமானும்‌ பின்‌ தொடர்ந்து சென்றார்‌. ஒரு வாயிலில்‌ சுந்தரர்‌ நுழைந்தார்‌. சேரமான்‌ பெருமாள்‌ நுழையுமுன்‌ வாயில்‌ அடைபட்டது. சுந்தரர்‌ இவ்வாறு பல வாசல்களைக்‌ கடந்து சிவபெருமானின்‌ முன்‌ வந்து நின்று வணங்கினார்‌. பெருமானும்‌, “சுந்தரா! நான்‌ உன்னை மட்டும்தானே வரும்படிக்‌ கூறினேன்‌. வேறு யாரையேனும்‌ அழைத்து வந்தாயோ என்று வினவினார்‌.

      சுந்தரர்‌ சிவபிரானை வணங்கி, “பெருமானே! என்‌ மீதுள்ள அன்பினால்‌ சேரமானும்‌ என்னைத்‌ தொடர்ந்தார்‌. இப்போது கயிலையின்‌ வாசலில்‌ நிற்கின்றார்‌! என்றார்‌. சிவபிரான்‌, சேரமானையும்‌ கயிலையினுள்‌ வரும்படி ஆணையிட்டார்‌. கயிலை வந்ததன்‌ காரணம்‌ கேட்டார்‌. சேரமான்‌, “பெருமானே! சுந்தரை வணங்கி நானும்‌ வலம்‌ வந்தேன்‌. திருக்கயிலையை அடைந்து விட்டேன்‌.

       சுந்தரைப்‌ பிரிந்து என்னால்‌ பூவுலகில்‌ வாழ இயலாது!” என்று வணங்கினார்‌. இறைவன்‌ திருவுள்ளம்‌ பூரித்தார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகளை முன்போல, தன்‌ பணி புரிய ஆலால சுந்தரராய்‌ விற்றிருக்கச்‌ செய்தார்‌ இறைவன்‌. பின்‌, சேரமானின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சி, சேரமான்‌ பெருமாளையும்‌ கணங்களுக்குத்‌ தலைவராக்கினார்‌.

சுந்தரர்‌ மண்ணுலகம்‌ ஏன்‌ வந்தார்‌?

     சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ திருக்கையிலாயத்தில்‌ சிவபிரானுக்குத்‌ திருப்பணி புரியும்‌ ஆலால சுந்தரராய்‌ இருந்தார்‌. ஒருநாள்‌ கயிலாயத்‌ தோட்டத்தினுள்‌ சென்ற சுந்தரனார்‌, அங்கே பார்வதி தேவியின்‌ தோழியரான கமலினி, அநிந்திதை என்ற இரு தேவ கன்னிகையரை நோக்கி மனதில்‌ சிறிது சலனம்‌ கொண்டார்‌.

        இதனையறிந்த சிவபிரான்‌, சுந்தரரை நோக்கி, “பெண்‌ மீதான காமத்தைக்‌ கடந்தாக வேண்டும்‌. அதனால்‌ பூமியில்‌ பிறந்து காமம்‌ தணிந்து வருவாயாக!” என்று பணித்தார்‌.

        அதனால்‌ மனம்‌ கலங்கிய சுந்தரரோ, சிவபெருமானை நோக்கி, “பூமியில்‌ பிறக்க சபிக்கப்பட்டேன்‌. இருப்பினும்‌ நான்‌ பூலோக ஆசைகளில்‌ சிக்கிக்‌ கொள்ளும்போது, நீ என்னைத்‌ தடுத்தாட்கொள்ள வேண்டும்‌ என்று வேண்டிக்‌கொண்டார்‌. அதன்படியே செய்வதாக சிவபிரானும்‌ வாக்களித்தார்‌. தான்‌ சுந்தரனுக்கு வாக்களித்தபடியே, திருமணப்‌ பந்தத்தில்‌ சிக்கிக்‌ கொள்ளவிருக்கும்‌ சுந்தரனை, தடுத்தாட்‌கொண்டார்‌. பின்‌ சுந்தரமூர்த்தியாரே, வேண்டியபடி பரவையாரையும்‌, சங்கிலியாரையும்‌ அவரோடு சேர்ப்பித்து இல்லறத்தில்‌ ஈடுபடச்‌ செய்தார்‌. பின்‌, மீண்டும்‌ பிறவாதபடி திருக்கயிலையில்‌ அணைத்துக் கொண்டார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »