Sunday, July 20, 2025
Home Blog Page 36

சங்ககால உப்பு வணிகர்களின் வாழ்வியல் சிக்கல்கள்

          பண்டைய மனிதன் தன்னுடைய நிலத்தில் விளைந்தப் பொருட்களை தான் மட்டும் பயன்படுத்தியது அல்லாமல் பிற நிலத்து மக்களுக்கும் கொடுத்து வந்தான். பிற நிலங்களில் விளைகின்ற பொருட்களையும் வாங்கி உபயோகிக்கவும் செய்தான்.  அப்படிப்பட்ட மனிதன் காலப்போக்கில் ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்கி பண்டமாற்றுக்கு வழிவகுத்தான். அந்த நிலையே கொஞ்ச கொஞ்சமாக மாறி உள்நாட்டு வாணிபத்துக்கு வழிவகுத்தது எனலாம். அவ்வகையில் நெய்தல் நிலத்தைச் சார்ந்த மக்கள் உப்பை விளைவித்து பிற நிலங்களில் வாழக்கூடிய மக்களுக்கு விற்று வாழ்ந்து வந்தனர். உப்பு விற்கும் மக்களின் உணர்ச்சி போராட்டங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும் இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைக்கிறது.

உப்பு விளைவித்தல்

            நிலத்தில் எவ்வாறு உழவு மேற்கொண்டு வேலைச் செய்தார்களோ அவ்வாறே பரதவர்கள் கடல் என்ற நிலத்திலே உப்பை விளைவித்தனர் என சங்கப் பாக்கள் கூறியிருக்கின்றன. நற்றிணையில்,

                        “நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி

                         வானம் வேண்டா உழவின் எம்” (நற்.254:10-11)

என்னும் அடிகளில், பரதவர்கள் ஒரு நேரிய இடத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். மழை நீரை எதிர்பாராது கடல் நீரைக் கொண்டு உப்பை விளைவிப்பார்கள். அப்படிப்பட்ட வேளாண்மையை உடையது இந்த கடற்கரைச் சோலை என்கிறார் ஆசிரியர். மீனையும், விளைவித்த உப்பையும் ஊர்ஊராகச் சென்று விற்றதை அகநானூறு (140) குறிப்பிடுகிறது. தந்தையுடன் சேர்ந்த இளமகள் ஒருத்தியின் செயல் பின்வருமாறு சுட்டப்படுகிறது.

                        “இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உளுந்தும்” (அகம்.280:8)

                        “கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்

                         தேன் இமிர் அதன்கரைப் பகுக்கும்” (அகம்.280:12-13)

    என்னும் அடிகளில், தன் தந்தை கடலில் இருந்து கொண்டு வந்த முத்தையும் மீனையும் விற்றுப் பொருள் சேர்த்தாள் என்று அகநானூற்று ஆசிரியர் கூறுகின்றார். உப்பங்கழியில் உழாமலே கல் உப்பினை விளைவித்த (நற்:140)  செய்தியையும் காணமுடிகிறது.  

உப்பு வணிகர்கள்

            கடலில் விளைந்த உப்பினை வண்டி வண்டியாக ஊர்ஊராக சென்று விற்று வருகின்ற தொழிலைச் செய்பவர்களை உமணர்கள் என அழைத்தனர்.  இவர்களுடைய தொழில் மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். சங்கப்பாடல்களில் இவர்களைப் பற்றியக் குறிப்புகள் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன.

உமணரும் உப்பு வண்டியும்

            கடலில் உப்பு வணிகர்கள் வரும் வரை பரதவர்கள் செய்வித்த உப்பினை குவியலாக கூட்டி வைப்பர். உப்பு வணிகர்கள் வந்தப் பின்பு பரதவர்கள் விலைக் கூறி விற்று விடுவார்கள் என நற்றிணை (331) கூறுகிறது. உப்பினை ஏற்றிக் கொண்ட உமணர்கள்,

                        “உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன” (குறும்.388:4)

    என்னும் அடியில் ‘வண்டியினை வரிசையாக நிறுத்திக் கொண்டார்களாம். உப்பினை ஏற்றிக் கொண்டு வரிசையில் நிறுத்தினர்’ என்னும் செய்தி சுட்டப்படுகிறது. நற்றிணையும் (354) இச்செய்தியினைக் குறிப்பிடுகிறது. கள்வர்களின் பயத்தால் உப்பு வணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து செல்வது வழக்கமாயிருந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்றனர் எனும் செய்தியை குறுந்தொகை (124) தருகிறது. எருதுகளை ஒன்றாகக் கட்டி செல்வதற்குத் தயாராகும் செய்தி அகநானூற்றில் (30) கூறப்பட்டுள்ளது. நற்றிணையில் உமணர்கள் உப்பின் விலையைக் கூறி விற்பதை,

                        “……………………….. உமணர்

                         வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி

                         கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

                         மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்” (நற்.4:7-10)

    என்னும் அடிகளில், ‘உப்பு வணிகர்கள் வெண்மையான கல்லுப்பின் விலையைக் கூறிக் கூட்டமாகிய ஆநிரைகளை ஒலியெடுப்பியப் படியே செல்வார்கள். அப்படி செல்லும் போது வண்டியின் சக்கரத்தில் கட்டியிருக்கும் மணியின் சத்தம் கேட்டு வயலில் உள்ள கருங்கால் வெண்குருகுகள் அஞ்சும்’ என ஆசிரியர் கூறுகின்றார்.

            உப்பு வணிகர்கள் பல புரிகளையுடைய நீண்ட கயிற்றினால் வண்டியை எருதுகளின் கழுத்தில் பூட்டுவார்கள். ஏற்றமான இடங்களில் வண்டியை ஓட்டும்போது உமணர்கள் எருதுகளை அதட்டி ஓட்டுவார்கள். அப்போது ஒரு வித ஓசையை எழுப்பி அதன் மூலம் வண்டியை விரைவாகச் செலுத்துவார்கள் என்னும் குறிப்பு காணப்படுகிறது.

                        “பகடு துறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ

                         உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஓட” (அகம்.173:10-11)

என்று அகநானூற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இன்றும் மாட்டு வண்டிகளை ஓட்டுவோர் இது போன்ற சத்தத்தை எழுப்பி வண்டியை ஓட்டுதலைக் காணலாம்.

உப்பை விற்றல்

            உவர் நிலத்திலே விளையும் குன்று போல் குவிந்து இருக்கக் கூடிய உப்பின் குவியலை உப்பு வணிகர்கள் மலை நாட்டு ஊர்களுக்குக் கொண்டு போய் விலைக் கூறி விற்பார்கள் என்பதனை,

                        “உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை

                         மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை

                         கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த” (நற்.138:1-3)

என்று நற்றிணை கூறுகிறது. உப்பு வணிகருடைய வாழ்க்கை நிலையில்லா வாழ்க்கை என்றும், உப்பினை விலைக் சுறி விற்ற உமணர்கள்,

                        “தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்

                         கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை

                         உரனுடைச் சுவல பகடுபல பரப்பி

                         உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்” (அகம்.159:1-4)

என்ற பாடலில் சுட்டப்படுகின்றனர். இப்பாடலில் எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்து விட்டு, வரகினைச் சமைத்து உண்டார்கள் என்றும், இளைப்பாறினார்கள் உமணர்கள் என்றும் அந்த அடுப்பினை அவ்விடத்தே விட்டுச் சென்றனர் என்றும் அகநானூறு கூறுகிறது. ஆக உப்பு விற்கின்ற உமணர்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையை ஒத்திருந்துள்ளது. அவர்கள் ஓரிடத்தில் தங்கி இருந்தாலும், உப்பு வாங்கி மலையோரப் பகுதிகளான (குறிஞ்சி) முல்லை மருத நிலமக்களுக்கு விற்கும் நோக்கில் செல்வதால் தங்கள் குடும்பத்தை விட்டு அதிக நாள் பிரியும் வாய்ப்பும் உண்டு.

            மேலும் உப்பு வணிகரின் வண்டியினுடைய அச்சு முறிந்து போனால் அதை வீசி எறிந்து விடுவர் என நற்றிணை (138) கூறுகின்றது. இதே போல் புறநானூற்றிலே,

                        “எருதே இளைய நுகம் உணராவே

                         சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே” (புறம்.102:1-2)

என்னும் அடியிலும் மேற்கண்ட செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது. வண்டியில் உப்பாகிய பண்டம் அதிகம் ஏற்றப்பட்டது. இளம் வயதுடைய எருதுகள் வண்டியை இழுத்தலை அறியாமல் நிற்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வண்டியானது பள்ளத்தே சென்றாலும், மேட்டிலே ஏறினாலும் அவ்விடத்து வரும் இடையூற்றை நினைத்து முன்னெச்சரிக்கையாக அச்சு மரத்தின் கண்ணே காவலாகிய மோச்சையை சேர்த்துக் கட்டியிருப்பர் என ஆசிரியர் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. “உப்பளங்களிலிருந்து தலைச் சுமையாகக் கொண்டு சென்றும் நாட்டின் பலப்பகுதிகளிலும் விற்றனர்”1 என்று டாக்டர் ந.சுப்பிரமண்யன் குறிப்பிடுகிறார். இதனால் மாட்டு வண்டிகள் மட்டுமல்லாது முதுகிலும், தலையிலும் சுமந்து வந்து உப்பை விற்று வந்தனர் என்பதை அறியமுடிகிறது.

            பாலை வழியில் உமணர்கள் செல்லும் போது கள்வர்கள் பயம் இல்லாமல் செல்வதற்காக சத்தம் எழுப்பியும் மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியும் கேட்கும் என அகநானூறு (17) கூறுகிறது. உமணர்கள் செருப்பை அணிந்து இருந்தார்கள் என்றும், கோலினைக் கையில் உடையவர்கள் என்றும்,

                        “தோல்புரை சிரற்றுஅடி கோலுடை உமணர்” (அகம்.191:4)

என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது. கல்வி அறிவில்லா உப்பு வணிகர்கள் என அகநானூறு (257) கூறுகின்றது. ஊர்ஊராக சுற்றும் உமணர்கள் ஏதாவது ஒரு மர நிழலில் நின்று இளைப்பாறுதலும் உண்டு என அகநானூற்றில் (295) பாடல் ஒன்று கூறுகின்றது. அதைப்போல,

                        “………………………. உமணர்

                         கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்” (அகம்.329:5-6)

என்று உப்பு வணிகர்கள் வளைந்த நுகத்தடியில் சிவந்த கயிறுக் கொண்டு பூட்டியபடி வைத்திருப்பார்கள். இவ்வண்டியானது துன்பம் தரக்கூடிய புழுதியுடன் காற்று சுழன்றடிக்கும் வகையில் வேகமாகச் செல்லுமாம். காட்டு வழியிலேச் செல்லும் உப்பு வணிகர்கள் (புறம்:313:5) சீறூர் சிறுவர்கள் குப்பைகளின் மீதேறி நின்று எத்தனை என எண்ணுவார்களாம் (புறம்:116:7-8). ஆனால் அவர்களுக்குள் சண்டை, சச்சரவு போன்ற பாகுப்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. வண்டிகளை எண்ணிய சிறுவர்கள் அந்த உமணச் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவார்கள் என சிறுபாணாற்றுப்படை (55) கூறுகிறது.

            வண்டிகளில் பூட்டப்பட்ட எருதுகள் சோர்ந்து போகும் இடத்து வேறு எருதுகளையும் உடன் கூட்டிப் போகும் வழக்கம் இருந்து வந்தது என்பதை,

                        “பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி” (பெருபாண்.66-67)

என்னும் அடியினால் அறியமுடிகிறது. மேலும், உமணர்கள் கல்லென்னும் ஆராவாரத்தையுடைய எருதுகளை உசுப்பியும், ஒருவரோடு ஒருவர் சொல்லாடியும் கூட்டமாக செல்வார்களாம். அப்படி செல்வதால் கள்வர் பயம் அற்றுப் போகும் என்பதை,

                        “எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக

                         மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்” (பெரும்பாண்.பா.66-67)

என்னும் அடிகளில், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகின்றார்.

கழுதையில் ஏற்றி உப்பை விற்றல்

            எருது வண்டிகள் இல்லாதோர் கழுதைகளின் முதுகில் வைத்து உப்பை விற்று வந்தனர் என்பதை,

                        “நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

                         குறைக்குளம்பு உதைத்து கல்விறழ் இயவின்” (அகம்.207:5-6)

என்னும் அடிகளில், நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை உமணர்கள் மூட்டைகளாகக் கட்டி, வெண்ணிற கழுத்தினைக் கொண்ட கழுதைகளின் முதுகிலே வைப்பர். மேற்கு திசையில் உள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று விலைக் கூறி விற்பார்களாம் என அகநானூறு பாடல் தெரிவிக்கின்றது. நெல்லுக்கு உப்பு நேர் என்று கூறி உமணர்கள் உப்பை விற்றனர் என்ற செய்தி (அகம்.390, நற்.254) ஆவது பாடலிலும்இடம்பெறுகின்றது. “உமட்டியர் எனப்படும் உமண மகளிரும் உப்பு விற்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். உப்பு கடற்கரைப் பகுதியில் மட்டுமே கிடைத்தாலும், எல்லோருக்கும் உணவில் இன்றியமையாது தேவைப்படும் பொருளாதலாலும், நாட்டின் பிற பகுதிகளுக்கு அதிக அளவில் எடுத்துச் சென்று விற்கப்பட்டது”2 உமணப் பெண்களும் உமணர்களோடு சேர்ந்து உப்பை விற்றனர் என முனைவர் அ.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

            உப்பை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் உமணர்களின் வாழ்க்கை பல சிக்கல்களை உடைத்தாயினும், தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்து விளங்கினார்கள்.

சான்றெண் விளக்கம்

1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமண்யன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,  

 இரண்டாம் பதிப்பு – 2010, ப.307.

2. அகநானூற்றில் பெண்கள், முனைவர் அ.ஜெயக்குமார், பல்லவி பதிப்பகம்-ஈரோடு, முதல் பதிப்பு – 2008, ப.87

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

நான்மணிக்கடிகை உணர்த்தும் நன்நட்பு

போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தில் மனிதன் தன் கை,கால்களை ஊன்றி நிற்பதற்கே அவனுடைய வாழ்நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. வாழ்க்கையில் முட்டி, மோதி வெற்றிப் பெற்றவனே இவ்வுலகத்தை ஆள்கிறான். தோற்றுப்போனவன் மீண்டும் மீண்டும் தோற்று ஒருநாளில் வெற்றியை நெருங்குகிறான். ஆனால், ஏற்கனவே வெற்றிப் பெற்றவன் தோற்றுப்போனவனின் வெற்றியைத் தடுக்க, மீண்டும் அம்மனிதன் தோல்வியையேச் சந்திக்கின்றான். வெற்றித் தோல்விகள் இரு மனிதர்களுக்குள்ளே அல்லது இரு தரப்பினருக்குள்ளேயே நிர்ணிக்கப்படுகிறது. அவ்வாறு வெற்றிப் பெற்றவனிடம் நற்பண்புகள் காணப்படுமாயின் அவனுடன் சேர்ந்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஒரு மனிதனின் உள்ளத்தைக் கணக்கிடும் போது அவனின் ஒழுக்கமும், நற்பண்புகளுமே மக்களின் மனதில் என்றுமே நிற்கும்.

இரு மனிதர்களிடம் காணப்படும் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவற்றை தவிர்த்து நட்பு பாராட்டப்படுமாயின் இவ்வுலகினில் நல்லதொரு ஆட்சியை நடத்தலாம். கடந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு நம்மிடையே இல்லாதப்பட்சத்தில்தான் நாட்டை ஆங்கிலேயரிடம் தாரைவார்த்து விட்டோம். அவர்களும் நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு வந்தார்கள். “நாடு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்” என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய நட்புகள் பகைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன எனலாம். அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் சொல்லப்பட்டிருக்கும் நல்ல நட்பின் பெருமையும், சிறுமையையும் இக்கட்டுரையின்கண் ஆராயலாம்.

 நான்மணிக்கடிகை:

            நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் ஆவார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவினால் பெயர்ப்பெற்ற நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஓவ்வொரு கருத்துக்களும் சிறப்பு வாய்ந்தவையாகவே கருதப்படுகிறன. “கடிகை என்பதற்குரிய பொருள்களில் துண்டம் என்பதும் ஒன்றாம். எனவே, நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும்” என முனைவர் வே.இராமநாதன் அவர்கள் கூறுகின்றார். தெளிந்த தமிழ்ச்சொற்களோடு எளிமையாகப் பாடல்களைக் கொண்டிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பினைக் காட்டுகிறது.

சங்ககாலத்தில் நட்பு:

            சங்ககாலத்திலே நட்பைச் சிறந்ததாகக் கருதினர். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், கபிலர் – பரணர், அதியமான் – ஒளவையார் ஆகியோரின் நட்பினை உதாரணமாகக் காட்ட முடியும். நட்பின்மேல் அன்பும், ஆழ்ந்த பற்றும் சங்க காலத்திலே இருந்து வந்தது எனலாம். அரசன் புலவனென்று பாராமல் நல்ல நட்பானது அன்றாடம் வளர்ந்து வந்தது. தோழிக்காக அதிசய நெல்லிக்கனியைக் கொடுத்ததும், நண்பனுக்காக உயிரை துட்சமென மதித்து உயிரை விடுவதும் இன்றும் நம்நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. ஒரு பக்கத்தில் போர் சண்டையென இருப்பினும் நட்பு பாராட்டும் நல்உள்ளங்களையும் இருக்கக் காண்கிறோம்.

 நான்மணிக்கடிகையில் நட்பு:

            நட்பைப் பற்றி எந்நூலூம் பேசாமல் இருந்ததில்லை. நான்மணிக்கடிகையும் நட்பைப் பற்றி விளம்புகிறது. நண்பன் பக்கத்தில் இருக்கும் போது கவலையில்லை, மன உறுதி மிகும், முகம் புத்துணர்ச்சி பெறும் போன்றவை மட்டுமில்லாமல் நண்பர்களுக்கிடையேக் காணப்படும் ஒற்றுமை, வேறுபடும் தன்மை, பிரிவுகள், நண்பனுக்காகவே வாழ்தல், உதவி செய்தல், நண்பனை மதிப்பிடும் முறை போன்றவற்றைப் பற்றி பேசுகிறது.

 நகையினிது நட்டார்:

            தோல்விகளாலும், துன்பங்களாலும் துவண்ட மனிதனின் இதயமானது ரொம்பவே கனத்துப் போயிருக்கும். அப்பொழுது மனதில் உள்ள துயரத்தை மற்றவர்களிடம் பகிரவே நினைப்பான். எல்லோரிடமும் தன் அந்தரங்கத்தை வெளிப்படுத்த முடியுமா? அதனால், தனக்கு நெருங்கிய நண்பனைத்தான் தேடுவான். அந்த நண்பனிடம் தன்னுடைய கஸ்டத்தைச் சொல்லி அழுவான். அழுகையின் முடிவில் கண்ணீராய் துன்பம் கரைந்து போகும். அக்கண்ணீரை முகமலர்ச்சியுடன் நண்பன் துடைப்பான்;. நான்மணிக்கடிகையில்,

            “நகையினிது நட்டார் நடுவன்” (நான்மணி.38:1)

            “நசைநலம் நட்டார்கண் நந்தும்” (நான்மணி.26:1)        

போன்ற பாடல்கள் நண்பர்கள் ஒருசேர இருக்கும்போது முகமலர்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்து காணப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர். துன்பத்தில் இருந்து மீட்டு இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளவே நண்பன் வருகின்றான். ஆனால்; இக்காலத்தில் முகத்தில் மட்டும் நட்பை வைத்துக்கொண்டு அகத்தில் வஞ்சனையை சூடிக்கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் கூட,

                 “முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து

                அகம்நக நட்பது நட்பு” (குறள்.786)

            முகத்தில் தோன்றுவது நட்பல்ல. உள்ளத்தில் தோன்றுவதுதான் நட்பு என்கிறார். இக்காலக்கட்டத்தில் சிரித்துப் பேசும் எல்லோரையும் நண்பனாக்கிப் பார்க்க முடிவதில்லை. வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில் அவை ஏமாற்றத்திலேயே முடியும்.

நட்டார்கண் விட்ட வினை:

    நண்பர்களுக்குள்ளே உண்மைதான் முதலில் இருக்க வேண்டும். உண்மைப் பொய்யாகும்போது அங்கு விரிசல் ஏற்படுகிறது. பொய் சொன்னால் நட்பானது கெட்டழியும் என்கிறார் விளம்பிநாகனார்.

                  “—————————— நாடாமை

                  நட்டார்கண் விட்ட வினை” (நான்மணி.27:3-4)

        நண்பர் ஒருவரிடத்தில் ஒரு வேலையைச் சொன்ன பின்பு, மீண்டும் அவ்வேலையை தன் நண்பனால் செய்ய முடியுமா என்று சந்தேகிப்பது மிகப்பெரியத் தவறாகும். தன்னுடைய நண்பர் இக்காரியத்தைச் செய்ய முடியும்யென நம்பித்தான் வேலையைக் கொடுக்கின்றீர். பிறகு சந்தேகப்பட்டு நல்ல நண்பனை இழக்கவே நேரிடுகிறது. இதுபொன்ற நிலை ஒருசில மனிதர்களிடம் இன்றும் கானப்படுகின்றன. இது மற்றவர்களிடம் நாம் கொண்டிருக்கும் நம்பகத்தன்னையைக் குறிக்கிறது. ஒரு மனிதனிடத்தில் இப்போக்கானது தொடர்ந்து காணப்படுமாயின் அவனின் மனமானது மிகுந்த குழப்பத்துடனும், தன் சொந்த பந்தகளைக்கூட சந்தேகப்பட்டு வாழ்க்கையை இருண்ட நகரத்துக்குள் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே மனிதனின் மனம் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுத்தப் பின்பு அவற்றை ஆராய்ந்து மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது.

 நண்பர்களின் தன்மை:

        உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடனே வாழ்வார்கள். அவர்களுக்குள் சின்னசின்னச் சண்டைகள் வரினும் தன் உற்ற நண்பர்களுக்கு தீய செயல்களை மட்டும் ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஒரு நண்பனின் நல்லகுணமும், தன்மையும் எப்பொழுது நமக்கு தெரிய நேரிடுகிறது என்றால், அந்த நண்பனை விட்டுப் பிரிந்து தனிமையில் துன்பப்படும்போதுதான் உயிர் நண்பனின் நினைப்பு வருகின்றது.

                             “—————————————————-ஒருவன்

                            கெழியின்மை கேட்டால் அறிக: பொருளின் ”   (நான்மணி.63:1-2)

            ஒருவன் கேடு செய்வதில் இருந்து அவன் தனக்கு நட்பில்லாதவன் என்பதை அறியலாம் எனச் சுட்டுகிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் இவ்வுலகினில் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட தீய நண்பர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்கு நண்பனுடைய நன்மதிப்பு தெரிவதில்லை என்றேச் சொல்லலாம். நட்பைப் பற்றி அறிய நேரும்போது ஒருவர்கூட இவர்களிடத்தில் நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. இவற்றை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்.

 நண்பர்கள் உரைக்கும் இன்சொல்:

            நண்பர்கள் தீயச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவர்களுடைய நட்பு நீண்ட காலம் நீடிப்பது குறைவே. எந்நேரத்திலும் நுனிப்பொழுதினும் கூட நண்பர்களிடம் மாறுபட்டு நிற்கக்கூடாது. அவர்களின் நட்பில் சூது, வஞ்சகம், பொறாமை ஏற்படுமாயின் அந்நட்பு உடனடியாய் பிரியும் என்பதை,

                    “நாவன்றோ நட்பறுக்கும்? தேற்றமில் பேதை

                   விடுமன்றோ வீங்கிப் பிணிப்பான்?” (நான்மணி.80:1-2)

           இக்கூற்றின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் நண்பன் தவறானப் பாதைக்குச் செல்லும்போது தடுத்து நிறுத்துபவனே உண்மையான நண்பன். தவறானப் பாதைக்குச் செல்லும் நண்பனோ அப்பேச்சைக் கேட்க மறுப்பான். மேலும் தனக்கு அறிவுரை சொன்ன நண்பன் மீது கோபமும் வெறுப்பும் அடைவதுடன் நட்பு முறிந்துபோகும் அளவிற்கு பிரச்சனையும் செய்வான். ஆனாலும் நண்பனுக்காக பொறுமையுடன் அவனை வழிநடத்த வேண்டும். அந்நண்பன் கோவப்படுவதற்கு காரணம் அவன் போகின்ற கீழானச் செயலே ஆகும் என்பதை அறிந்து நட்புடன் பழகுதலே அன்பு நிறைந்த வழியாகும். நான்மணிக்கடிகையில் நண்பனுடைய சொல்லானது இன்சொல் என்கிறது,

                                            “—————————————— பண்ணிய

                                           யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல்;” (நான்மணி.100:2-3)

            நட்புடையார் இடித்துரைக்கும் சொல் வலிமையுடையதாயினும் முடிவில் யாழினைப் போன்று இனிமையினையே தரும் என்கிறார் ஆசிரியர். ஆகையால் நண்பர்கள் எப்போதும் கெடுதல் செய்ய மாட்டார்கள். காலமாற்றத்தால் நண்பர்களுக்குள் வெறுப்பினை உண்டாக்கி நட்பினை அழிக்கவும் செய்கிறது.

நண்பரை வாழச் செய்க :

            இன்றையக் காலச்சூழ்நிலையோடு ஒப்பிடும்போது நட்பில் ஆயிரம் மாற்றங்கள் உண்டாயிருக்கின்றன. பள்ளி வாழ்க்கையில் மிட்டாய் கொடுத்து பக்கத்தில் அமர வைத்து நான் இருக்கின்றேன் என்று சொன்ன முதல் நண்பனை இன்று எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் சில நண்பர்கள் வந்து போகின்றார்கள். எத்தனை பேர் நண்பனுக்காகத் தோள் கொடுக்கச் சென்றார்கள்? தோள் கொடுக்க வந்தார்கள்? எண்ணிப்பார்த்தால் ஒன்றுமே இல்லை. அன்றைய ஆண்-பெண் நட்புகளில் புனிதம் இருந்தன. போற்றுதலுக்குரிய மரியாதை இருந்தன. இன்று வேறுவிதமாய் இருக்கின்றன. இன்றைய ஆண்-பெண் நண்பர்களே ஒழுக்கமாக நடந்து கொண்டால் கூட இச்சமூகம் அப்பெண்ணைப் பழிதூற்றவே செய்கிறார்கள். இதனால் இங்கு நட்பானது மறுக்கப்படுகிறது. பெண் தோழிகள் என்றால் அவர்களின் நட்பு பள்ளி, கல்லூரி வரைதான். திருமணத்திற்குப் பிறகு வெறும் நலம் விசாரித்தல் மட்டுமே அவர்களுக்குள் நடக்கிறது. ஆண் நண்பர்கள் எனில் இன்பமானலும் துன்பமானலும் சரி உடனே மதுக்கடைக்கு மொய் வைக்கச் சென்று விடுகிறார்கள். இவர்களா நல்ல நண்பர்கள்? என நினைக்கத் தோன்றுகிறது. “இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்ஃ788) என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு நினைவுக்கூறத்தக்கது. நட்பு என்ற பெயரினால் புகைக்கும், மதுவுக்கும் அடிமையாகி வாழ்க்கையே சீரழிந்து கெட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய இளைய சமூதாயத்தினர். நான்மணிக்கடிகை கூறும் நல்ல நண்பன் எங்கே இருக்கின்றான் என்று தேட வேண்டியிருக்கிறது. அந்த நல்ல நண்பன் எங்குமில்லை. நமக்குள்தான் தூங்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதை அறிய வேண்டும்.

            தான் கெட்டாலும் நண்பர்களை ஒன்றாக வாழச்செய்வதுதான் உண்மையான நட்பு. அந்நட்பானது அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணமாக இருக்கின்றது.                                

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

சங்ககால இலக்கியத்தில் கூத்துக்கலையின் வளம்

iniyavaikatral.in
பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த மனிதனுக்குப் பொழுது போக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும், தன் அறிவு சார்ந்த காரணங்களிலும் தன்னை கலையின் மீது ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். காலையில் எழுந்து வயலுக்குச் சென்று வேலை செய்து மாலை வீடு திரும்பும் உழவனுக்கு உடல் அசதியோடு மனச்சுமையும் கூடியிருக்க வேண்டும். அவன் சந்தோசத்தில் இருக்க வேண்டிப் பாடலைப் பாடியும், கைகளைத் தட்டியும் இசையை எழுப்பி இருக்க வேண்டும். அல்லது பொருட்களைத் தட்டியோ உரசியோ  ஒலி எழுப்பி இருக்க வேண்டும். அதனோடு நடனம்  ஆடித் தான் மட்டும் சந்தோசம் அடையாமல் தன்னைப் போன்ற பிற மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும். இசையோடு கூடிய நடிப்புக்கலையே கூத்துக்கலையாகும். மக்களை இன்புறச் செய்யும் நிகழ்ச்சி கூத்து ஆகும். இக்கலையில் மக்கள், மன்னர்கள், புலவர்கள் என்று அனைவரும் பங்கு பெற்றனர். விறலியர், வயிறியர், கோடியர், கண்ணுளர், ஆரியர் எனக் கூத்தர்களை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவ்வகை கூத்துகலைப் பற்றி இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

காதலும் கூத்தும்

            காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும், குறியிடம் குறிப்பிடுவதற்கும், தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதற்கும் இக்கூத்துக்கலை களமாக விளங்கியுள்ளது. கலித்தொகையில்,

                        “தொழீஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை

                         அரக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்” (கலி.104:69-70)

என்று மகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தியதைக் காணமுடிகிறது. இவ்வகைக் கூத்தில் தலைவி, தோழியோடு ஆடியதையும், அப்போது தலைவன் தலைவியைக் காண வருவதையும், அவர்களிடையே காதல் மலர்வதையும் பாடலாசிரியர் சுட்டுகிறார். ஆட்டனத்தியை எதிர்ப்பார்த்த ஆதிமந்தி இத்துணங்கைக் கூத்தில் இருப்பானோ என்று சுற்றிப் பார்த்ததாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

            தலைவன் காதிற் குழையும் கழுத்தில் மாலையும் அணிந்து குறுகிய பல வளையல்களையும் அணிந்தவனாய் விழாக்காலத்தில் தலைவியோடு துணங்கை ஆடியதாகப் பின்வரும் நற்றிணைப்பாடல் எடுத்துரைக்கிறது.

                        “குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்

                         விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல” (நற்.50:2-3)

என்னும் அடிகள் மேற்கூறிய செய்தியினை உரைப்பதைக் காணலாம். “மதுரைத் தமிழ்க் கூத்தனார் தமிழரின் கூத்துக்களை ஆடிக்காட்டுவதில் புகழ்பெற்றிருந்தார்”1 என்று வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை குறிப்பிடுவது இங்கு சிந்தித்தற்குரியது.

புறமும் கூத்துக்கலையும்

            போர்க்காலங்களில் வீரர்களை ஊக்கப்படுத்தவும், எழுச்சியூட்டவும் பழங்காலத்தில் கூத்துகள் நடத்தப்பட்டன. இதனை அகநானூற்றின் 22ஆம் பாடல் உறுதி செய்கிறது. கூத்து வகைகளில் முன்தேர்க்குரவை, பின்தேர்க் குரவை என இரண்டு வகைக் கூத்துக்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகைக் கூத்துக்களைப் பற்றி தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களும் இயம்புகின்றன. பதிற்றுப்பத்தில் கூட,

                        “குருதி பனிற்றும் புலவுகளத் தோனே

                         துணைவகை ஆடிய வலம்படு கோமான்” (பதிற்று.57:3-5)

மேற்கண்ட அடிகள் துணங்கைக் கூத்து போர்க்காலங்களில் நிகழ்த்தப்பட்டதை உறுதிசெய்கின்றன.

குரவைக் கூத்து

            “பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களுள் ஒன்று குரவைக்கூத்து. குரவைக் கூத்தின் மலை நடனம் என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. ஏழு அல்லது ஒன்பது மகளிர் கூடி ஆடும் ஆட்டம் என்று உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளுதல் குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும்”2 என்று பாக்யமேரி குறிப்பிடுவது குரவைக் கூத்தின் நிகழ்த்துமுறையை விளக்கியுரைக்கிறது. எனவே இக்கூத்தினைப் பெண்கள் மட்டும் ஆடியிருக்க வாய்ப்பில்லை. ஆண்களும் பெண்களும் கலந்து ஆடியிருக்க வேண்டும். இவ்வகையான குரவைக் கூத்து ஆடுவதால் தலைவன் தலைவியின் நெருக்கம் அதிகமாக்கப்படுவதற்கான சூழல் உருவாவதை உணரலாம்.

                        “வணங்கு இறைப் பணைத்தோள் எவ்வளை மகளிர்

                         துணங்கை நாளும் வந்தன் அவ்வரைக்” (குறும்.364:5-7)

பரத்தையானவள் தலைவியைப் பழித்துரைக்கிறாள். அவளைக் தண்டிக்க நினைத்த தலைவி குரவைக்கூத்து விழா நடக்கும் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்நாளும் வந்தது. இப்போது பரத்தை யாருடன் குரவைக் கூத்து ஆடுகின்றாள் எனப் பார்ப்பதாக ஆசிரியர் உரைக்கின்றார்.  இக்குரவைக் கூத்து சில நேரங்களில் குடும்பங்களில் குழப்பம் தோன்றுவதற்கும் வழிகோலியது. கலித்தொகையின் 65ஆம் பாடலும், பரத்தையோடு தலைவன் குரவை ஆடுவதால் அதனைக் கண்ட தலைவி வருத்தமுறுவதும் பாடலடிகளில் சுட்டப்படுகின்றன. இச்செய்தியினைக் கலித்தொகையின் 66ஆம் பாடலும், நற்றிணையின் 50ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 328ஆம் அடியும் எடுத்துரைக்கக் காணலாம். அகநானூற்றில் இக்குரவைக் கூத்து, கீழ்க்காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது என கூறுகிறது.          

                      “குரவை தழீஇ யாம் மரபுளி பாடி

                         தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்” (கலி.103:75-76)

 என்னும் கலித்தொகை அடிகளில் குரவைக் கூத்தில் ஏற்றினை அடக்கிய தலைவனும் கலந்துகொண்டு சுற்றத்தார் மகிழும்படி ஆடியதை அறியமுடிகிறது.

குரவைக் கூத்தின் நன்மைகள்

            குரவைக் கூத்தினை வெறும் பொழுதுபோக்குத் தன்மை மட்டும் கொண்டதாகக் கருதிவிட முடியாது. இதன் மூலம் சமுதாய நன்மைகள் பல நிகழ்ந்தன.

                1. “ஒரு நிலத்தினைச் சேர்ந்த மக்கள் பிறிதொரு நிலத்தில் சென்று குரவை நிகழ்த்தினர். சமுதாய ஒற்றுமை மேலோங்கியது.

               2. ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுக்களைப் போலவே குரவைக் கூத்து சிறந்த பொழுது போக்காக

                விளங்கியன.

             3. சூதாட்டம் முதலான தீய பொழுது போக்குகளில் இருந்து இளைஞர்களை மன மாற்றம் செய்தன.

           4. குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப்பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று

              பலவித இசைக்கருவிகள் குரவையால் பயன்பட்டன.

         5.குரவைச் செய்யுள் என்ற மரபு பாவியற்றும் புலமைத் திறத்தை வளரச் செய்ததனைக் குரவையினால் ஏற்பட்ட மிகப்பெரிய 

           நன்மையாகக் கருதலாம். இது கூத்து இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பெரிய வரவாகும்”3

    என்று குரவைக் கூத்தினால் நிகழ்ந்த நன்மைகளைப் பட்டியலிடுவர் பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள்.

துணங்கைக் கூத்து

            குரவைக்கு முன் தோன்றி குரவைக்கு முன்னரே வழக்கிழந்து போனது இக்கூத்து வகை. துணங்கைக் கூத்து அதிகம் போர்ச்செய்திகளை எடுத்துரைக்கப் பயன்பட்டது. இதில் மகளிர் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததைக் காணமுடிகிறது. பரத்தையர்கள் பாடும் துணங்கைக் கூத்து எனக் கலித்தொகையும் (70), பெண் வேடமிட்டு பெண்களுடன் சேர்ந்து ஆடுகின்றான் தலைவன் என்றும், பிறகு துணங்கைக் கூத்து ஆடியவுடன் ஆண் எனத் தெரிந்ததும் தலைவனின் ஆடை கிழிந்து போனதாகவும் கலித்தொகையின் 73ஆம் பாடல் எடுத்துரைக்கிறது. இரவு நேரத்தில் துணங்கைக் கூத்து நிகழ்த்தியதாகப் பதிற்றுப்பத்து (52) குறிப்பிடுகிறது.

வெறியாட்டு

            கூத்து வகைகளில் ஒன்றான வெறியாட்டு என்பது பெண்களுக்காக நிகழ்த்தப்படுவதாக இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பெண்களுக்குப் பேய் பிடித்து விட்டதாக நற்றாய் நினைத்துக்கொண்டு வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தினர். தலைவிக்குத் தலைவனுடன் காதல். தலைவி தலைவனை நினைத்து உருகுகின்றாள். தலைவனோ வருவேன் என்று சொல்லிச் செல்கிறான். தலைவனுடன் பேசாமலும், பார்க்காமலும் இருக்கும் தலைவி உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றாள். எப்பொருளைப் பார்த்தாலும் தலைவனின் முகமே தெரிகின்றது. இவ்வாறு காதல் நோயால் வாடும் தலைவியின் நிலை தவறாக நற்றாயினாலும் செவிலியினாலும் புரிந்துகொள்ளப்பட்டு இது பேய் பிடித்ததின் விளைவு என்று எண்ணி வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

                        “கிழவோன் அறியா அறிவினள் இவளென

                         மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்” (தொல்.பொருள்.களவு.நூ.27)

             என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, நம் குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து நட்பு கொள்ளத் தெரியாத அறிவினையுடையாள் என நற்றாயும் செவிலியும் எண்ணிக் குற்றமற்ற சான்றோரிடத்துக் கூறுகின்றனர் என்று உரைப்பதைக் காணலாம்.

                        “மறிக் குரல் அறுத்து தினைப் பிரப்பு இரீஇ

                         செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் இறங்க

                         தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா” (குறும்.263:1-3)

          என்ற பாடலின் வழி வெறியாட்டானது, களவொழுக்கத்தில் உடன்பட்டு நிற்கும் தலைவியின் நிலையை அறியாத நற்றாய் வெறியாட்டு நிகழ்ச்சி நடத்தத் தயாராகின்றாள். வெள்ளாட்டின் குட்டியினது கழுத்தை அறுத்து, தினை அரிசி நிரம்பிய பிரம்பின் கூடையை வைத்து, ஆற்றின் நடுவே அமைந்த மணல் திட்டில், பல இசைக்கருவிகள் ஒலிக்க, வேலன் முதலியோரை ஆவேசித்துப் பல தெய்வங்களை வேண்டுவார்கள் என்று  உரைக்கின்றது.

            பாவை ஒன்றில் பொறி இணைத்து விட்டால் அது எவ்வாறு தானே இயங்கி ஆடுமோ அவ்வாறு வெறியாட்டு ஆடினார்கள் என்று அகநானூறு (98) கூறுகின்றது. திருமுருகாற்றுப்படையில் தெய்வம் ஏறப்பட்டு வெறியாட்டு ஆடப்படுவதையும் (273), இவ்வெறியாட்டு ஒரு விழாவிற்கு ஒப்பாகக் கருதப்பட்டதையும் அறியலாம்.

                        “பொய்மணல் வரைப்பில் கழங்கு படுத்து அன்னைக்கு

                         முருகு என மொழியும் வேலன் மற்று – அவன்” ( ஐங்குறு.249:1-2)

            புதிதாகக் கொண்டுவரப்பட்ட மணலைப் பரப்பி அதன் மேல் வெறியாட்டுக் களம் அமைக்கப்பட்டதையும் அன்னையால் வரவழைக்கப்பட்ட வேலன் மணலின் மீது கழற்சிக்காய்களைப் பரப்பிய பின் குறிபார்த்துத் தலைவியின் மெலிவிற்குக் காரணம் உரைப்பான் என்னும் செய்தி இடம்பெறுகிறது. இதன்வழி வெறியாட்டு ஒரு பேயோட்டும் சடங்காக நிகழ்த்தப்பட்டதை அறியலாம்.

                        “முதுவாய் பெண்டிர் அது வாய் கூற

                         களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி

                         வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து

                         உருவச் செந்திணை குருதியொடு தூஉய்

                         முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம்.22:7-11)

              என்ற அடிகளில் முருகவேளை வழிபடுவதற்கு வேலனை வெறியாட்டு நிகழ்த்த நற்றாய் அழைத்தமை புலப்படுகின்றது. வெறியாட்டு குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்றன. நற்றிணையில் 268, அகநானூற்றில் 370, ஐங்குறுநூற்றில் 245, 248, குறுந்தொகையில் 53, 360ஆம் பாடல் ஆகியவை வெறியாட்டு நிகழ்த்தப்படும் சூழலை மிக விரிவாகப் பேசுகின்றன. வேலன் முதலாயினாரிடம் வெறியாட்டு முதலிய செயல்களைச் செய்யுமாறு கூறி, முடிவில் இவளை அணங்கிய துறைவனைத் தாய் அறிந்து கொண்டாள் என ஆசிரியர் கூறுகின்றார். எனவே வெறியாட்டு நிகழ்த்தப்படுவது பெரும்பாலும் நோய்த்தீர்த்தற் பொருட்டு மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளதை இதன்வழி அறியமுடிகிறது.

          இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருப்பினும், துன்பப்பட்ட மனிதனுக்கு ஆடலும் பாடலும்தான்; என்றைக்கும் புத்துணர்வை தருகின்றன. மேலைநாடுகளில் ஏனோ தானோவென்று ஆடுகின்ற மனிதர்களுக்கு மத்தியில் ஒரு கோட்பாட்டோடு உன்னதமான கலையைப் போற்றவும் வளர்த்திடவும் தமிழன் செய்திருக்கிறான். நாகரீக தோற்றத்தினால் திரைப்படம், இணையம் இவற்றின் தொடர்பால் பழங்காலத்து செவ்வியக் கலையான இக்கூத்துகலைகள் மக்களிடம் வழக்கிழந்து போய்விட்டன. ஆனாலும், கிராமங்களில் நடைபெறவிருக்கும் திருவிழாக்களின் போது இக்கலைகளைக் காணமுடியும்.

சான்றெண் விளக்கம்:

1.கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், சென்னை – 13, ப.157

2.எஃப். பாக்கியமேரி, காலந்தோறும் தமிழர் கலைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை-14,ப.64

3.மேலது.ப.69                     

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

 

 

 

 

                                    

பேய்க்கதை

 

     இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி என்னுடைய அப்பா சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார். நானும் மனதை அலையவிடாமல் அப்படியே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா பேச ஆரம்மிச்சார்ன்னா பேசிக்கொண்டே இருப்பார். அவர் எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிற பையன்தான் நான். அப்பாவும் உண்மையோடு தன்னோட கற்பனையையும் சேர்த்து உண்மைச் சம்பவம் போல் சொல்லுவதில் கைத்தேர்ந்தவர். அப்படித்தான் அன்றும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

      அச்சமயத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. டொக்… டொக்… டொக்… நாங்கள் அச்சத்தத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் எங்களின் உரையாடலில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். விளக்கு வெளிச்சத்தில் சமையலில் இருந்த அம்மாதான் கதவைத் திறக்கப்போனாள். ஆனால் வாயில் மொனகிக் கொண்டே சென்றாள். கண்டிப்பாக அது எங்களைப் பற்றித்தான் என்பது நன்றாகப் புரிந்தது. வாசலில் அத்தை, “வாம்மா… மாமா எப்படி இருக்கிறாரு… பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா…” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போனார். “எல்லாரும் சுகம்தான் அண்ணே!” என்கிற வார்த்தை மட்டும் வந்தது. எனக்கு தூரத்து அத்தை ஒருத்தி வந்திருக்கிறாள். எங்க அப்பாவுக்கு தங்கை முறை வேணும். நானும் “வாங்க அத்தை…” என்றேன். அம்மா கொடுத்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டே “என்னப்பா நல்லாயிருக்கியா… சின்ன வயசுல பாத்தது. நெடுநெடுன்னு பெரியவனா வளந்துட்ட…” என்றாள் கிருஷ்ணவேணி அத்தை. வெட்கம் வந்தவனாய் தலைகுனிந்து மெளனமாய் புன்னகைத்துக்கொண்டேன். அம்மாவும் அத்தையும் சிரித்துக் கொண்டார்கள். அம்மா பாய்ப் போட மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டாள் அத்தை.

 “என்னாம்மா இந்த நேரத்துல…”அப்பா கேட்டார். நம்ம கிழக்கத்தியாரு இருக்காருல்ல… அவரோட மருமகப்பிள்ளை நடேசன் செத்துப்போயிட்டாரு. அவருக்கு நாளை காலையில காரியம். அதான் போகிற வழியில அண்ணனைப் பாத்திட்டு போலாம்முன்னு வந்தேன். “நீ ஏன்னா எழவுக்கு வரல்ல” என்றாள் அத்தை. “எனக்கு தகவல் தெரியாது. யாருமே சொல்லல பாத்திங்களா! நல்ல மனுஷன். இப்பத்தான வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தாரு… என்னாச்சும்மா!” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அப்பா. ஆமாண்ணா அந்தச்சேதி உங்களுக்குத் தெரியாதா? அவரு பேயப்பார்த்து பயந்துபோய் செத்துட்டார்ன்னு சொல்றாங்கண்ணா! என்றாள் அத்தை. இருட்டில் கொஞ்சமான வெளிச்சத்தில் நான் காதை தீட்டிக்கொண்டு அத்தைக் கூறும் விஷயத்தைக் கேட்கத் தயாரானேன். இனி அத்தை சொல்லுகிற மாதிரி கதை போகும்.

வெளிநாட்டுல இருந்து துணிமணி, சென்ட், ரேடியோ, டார்ச் லைட்டுன்னு நிறைய வாங்கிட்டு வந்தாரு. அக்கா தங்கச்சின்னு எல்லாத்துக்குமே கொடுத்தாரு. புள்ளைங்க நல்லா படிக்கனும் என்பதற்காக லேப்டாப் கூட வாங்கி வந்திருக்கிறாரு. ஒருவாரம் வீட்டிலேயே மனைவி புள்ளையங்களோட சந்தோஷமாதான் இருந்திருக்கிறாரு. அவரோட மனைவிதான் எப்பவும் மாட்டுல பால் கரந்து சொஷைட்டில ஊத்திட்டு வருவாங்க. அன்னிக்கு வெள்ளிக்கிழமை. அந்தம்மா பால பீச்சிட்டு சொஷைட்டுக்குக் கிளம்ப தயாரா இருந்தாங்க. “இன்னிக்கு நான் போய் ஊத்திட்டு வரேன்டி… நானும் வந்ததிலேருந்து வீட்டிலேயே அடைந்து கிடக்குறன். கொஞ்சம் ரோட்டுப் பக்கம் போய் நண்பர்களையெல்லாம் பாத்திட்டு வந்திர்ரனே…” என்றார் நடேசன். “சரி போய்ட்டு சீக்கிரம் வந்துருங்க” என்கிறாள் நடேசனின் மனைவி. பால் கேனை சைக்கிளில் மாட்டிக்கிட்டு சொஷைட்டுக்குக் கிளம்புகிறார் நடேசன். அவரு இருக்கிற தெருவுக்குப் பக்கத்துல சுடுகாடு. சுடுகாட்டத் தாண்டிதான் ரோட்டுக்குப் போகணும். நடேச அண்ணனும் ரோட்டுக்குப் போயி பால ஊத்திட்டு நண்பர்களோட நல்லா பேசிட்டு இருட்டுற சமயத்துல வீட்டுக்குப் போலாம்முன்னு கிளம்புகிறார்.

அப்ப மணி ஆறுல இருந்து ஆறரைகுள்ள இருக்கும். பகல் மறைஞ்சி இரவு வர்ர நேரம். இருட்டும் பகலும் கலந்ததொரு மத்திமகாலம். நடேச அண்ணனும் ரோட்டுல இருந்து கிளம்பி சுடுகாட்டு நுழைவாயில நுழைகிறார். அப்ப அந்த நுழைவாயில்ல ஒரு பொண்ணு தன்னந்தனியா நின்னிட்டு இருக்கு. கழுத்த நிறைய நகைகள். புன்னகை ததும்பும் உதடுகள். கண்களுக்கு மை இட்டிருக்கிறாள். சைக்கிள்ள போனவரு கொஞ்சம் நிறுத்தி, தலையைத் திருப்பி “என்னம்மா நீ ராமசாமி வாத்தியாரு மகதான… இந்த நேரத்துல இங்க ஏன் நின்னுட்டு இருக்கிற… அதுவும் சுடுகாடு வேற..” என்கிறார் நடேசன். “எங்க வீட்டுக்காரரு மல்லி வாங்கி வர்ரன்னு போயிருக்கார்ண்ணா…” என்றாள் அந்தப்பெண். “சரிம்மா… உன் புருஷன் வர்ர அப்ப வரட்டும். நீ தனியா இந்த சுடுகாட்டுல நிக்க வேண்டாம். வா… நான் ஊருக்குள்ளதான் போறேன். சைக்கிள்ள வந்து உட்காரு உன்ன வீட்டுல போய் விட்டுறேன்” என்கிறார் நடேசன். “நான் இங்க இல்லன்னா வீட்டுகாரரு தேடுவாரு… நீங்க போங்கண்ணா நான் அவரு கூடவே வர்ரேன்” என்றாள் அப்பெண். “சொன்னா கேளும்மா.. உம்புருஷன் என்ன சின்ன பையனா? நீ வா… அவன் வீட்டுக்கு வந்திருவான்” என்று வலுக்கட்டாயமாக அழைக்கின்றார் நடேசன். அந்தப் பெண்ணும் வேறுவழியின்றி சைக்கிளில் பின்னால் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள். சைக்கிள் கனமாக இல்லாமல் காத்தாக மிதந்து கொண்டிருந்தது.

போகிற வழியில் நடேசன் விசாரித்துக் கொண்டே செல்கிறார். அவளும் எந்தவித தயக்கமுமின்றி கேட்கிற கேள்விகளுக்குப் பதில் தருகிறாள். நான் என் மாமா மேல உசிரா இருக்கிறதாகவும், அவரு எப்பவும் என்கூடத்தான் இருக்கணும் என்றும் அந்தப் பெண் நடேசனிடம் கூறுகிறாள். நடேசனும் “புருஷன் மேல இப்படி அன்பா இருக்கிறது நல்லதுதான். பரவாயில்ல வாத்தியாரு நல்ல பிள்ளையாப் பாத்து உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு… பரவாயில்லா… மாமனார் மாமியார் எல்லாம் எப்படி?” என்று கேட்டுக் கொண்டே சுடுகாட்டின் எல்லையைத் தாண்டுகிறார் நடேசன். எல்லையைத் தாண்டி கொஞ்ச தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டே சென்ற நடேசன் என்னம்மா சத்தத்தையே காணும் என்று சைக்கிளை நிறுத்தி பின்னால் திரும்பிப் பார்க்கின்றார். திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்தப் பெண் சைக்கிள் கேரியரில் இல்லை. “என்னாடா இது! எப்போது இறங்கிக் கொண்டாள். சொல்லிக்கொள்ளாமலே இறங்கிக் கொண்டாளே… எங்கு இறங்கியிருப்பாள். கணவன் மேல அம்புட்டு பாசம். சரி நாம வீட்டுக்குப் போவோம்” என்று சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார் நடேசன்.

வீட்டுக்கு வந்தவுடன் பால்கேனை தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வைத்து விட்டு தன்னோட கைக்கால்களை அலும்புகிறார் நடேசன். ஈரத்துடன் வீட்டிற்குள்ளேச் சென்று துண்டு எடுத்து துவட்டுகிறார். மூக்கின் வழியே நெத்திலி மீன் வாசம் பிடிக்க, வாசனையின் வழியில் தன்னோட மனைவியைத் தேடி சமயற்கட்டிற்குச் செல்லுகிறார்.

மீன் வாசம் மூக்கத் துளைக்குது போ…

கொஞ்சம் பொறுங்க எல்லோரும் சாப்பிட்டுடலாம்.

“சரி, சுடுகாட்டு நுழைவாயில்கிட்ட அந்த ராமசாமி வாத்தியாரு மகளைப் பாத்தன். கழுத்துல நகையைப் பொட்டுக்கிட்டு அவ புருஷங்காரன் ரோட்டுக்கு மல்லி வாங்கியாரப் போயிருக்கானாம். அதுக்காக அந்த இடத்துல பயமே இல்லாம நின்னுட்டு இருக்கா! நான்தான் வாம்மா வீட்டுல போய் உட்டுறன்னு சொல்லி சைக்கிள்ள ஏத்திட்டு வந்தன். சுடுகாட்டுக்குத் தாண்டி வரப்ப நான் மாட்டுக்கும் பேசிட்டே வரேன் அந்தப் பொண்ணு சத்தமே இல்லாம இருந்துச்சி. திரும்பிப் பார்த்தா அந்தப் பொண்ணக் காணும். சொல்லாம கொல்லாம இறங்கிட்டா” என்றார் நடேசன்

என்னங்க சொல்லுறீங்க… அந்தப்பொண்ணு செத்துப்போயி மூணுமாசம் ஆகுது.

சும்மா விளையாடாதா! அந்தப்பொண்ண நான் என்னோட சைக்கிள்ள உட்காரவச்சிட்டு வந்தன் தெரியுமா?

நான் எதுக்குக்குங்க உங்ககிட்ட விளையாடப்போறேன். உண்மையாலுமே அந்தப் பொண்ணு செத்துப்போச்சு! நீங்க கனவு கண்டிருப்பிங்க. அத உண்மைன்னு நம்பி என்கிட்ட கேட்கிறீங்க…

எப்படி செத்துபோச்சு அந்தப் பொண்ணு?

அவுங்க புருஷன் வீட்டுக்குடும்பம் கஞ்சக்குடும்பமாம். எதுக்கும் நையாப் பைசா செலவு பண்ணமாட்டாங்களாம். இந்தப் பொண்ணு அங்க போயி ரெண்டு வாரம் ஒழுங்காத்தான் போயிட்டிருந்ததாம். அதன்பிறகு, உங்க அப்பா வீட்டுல அத கொண்டு வா இத கொண்டு வான்னு அடிச்சிருக்காங்க.. இவளும் முடிஞ்சவரை அப்பாக்கிட்ட இருந்து பணம் நகை எல்லாம் வாங்கி கொடுத்திருக்கா… கர்ப்பமா இருக்கிறவள கூட உதச்சி கீழ தள்ளி கருவ கலச்சிட்டாங்களாம் பாவிங்க! பொறுத்து பொறுத்து பாத்தா அடி தாங்க முடியல! அவங்களோட கொடுமையும் எல்லை மீறிடிச்சு! ஒருநாளு தூக்குல தொங்கிட்டா! என்ன பன்றது. நல்ல பொண்ணு! அவ தலஎழுத்து அப்படி… சரி வாங்க சாப்பிடலாம் என்றாள் நடேசனின் மனைவி.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?

ஊருக்கே தெரியும்! வாத்தியாருவுட்டு அம்மா அந்தப் பொண்ணு செத்து பிணமா கிடந்தபோது தலையிலையும் மார்லயும் அடிச்சிகிட்டு இதெல்லாம் சொல்லி அழுவனாங்க…

மனைவி சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நடேசனின் இதயம் ஒரு நொடி நின்றேப் போனது. அன்று ஏதோ வயித்துக்காக சாப்பிட்டுவிட்டு தூங்கப் போனான். படுக்கையில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். நினைவுகள் முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான். உயிரோடுப் பார்த்தப் பெண். செத்துப்போனவளையா நான் பார்த்து இருக்கிறேன். அப்போ! அப்போ! அது பேயா! பேயா! திடுக்கென்று தூக்கிப்போட்டது நடேசனுக்கு. மனதில் ஏதோதோ நினைத்தும் பயனில்லாமல் அப்பெண்ணின் உருவமே தோன்றியது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். பயம் தெளிய தன்னுடைய மனைவியின் மேல் ஒற்றைக் காலை தூக்கிப் போட்டுக்கொண்டான்.

ரம்மியமான சுடுகாடு. பிணம் எரிந்ததனால் ஆங்காங்கு புகை மண்டலம். சைக்கிளில் நடேசன். பால் கேனை வண்டியில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே பார்த்த சுடுகாடுதான். ஓடியாடி விளையாண்ட சுடுகாடுதான். எத்தனையோ முறை வீட்டில் கோபித்துக் கொண்டு அந்தச் சுடுகாட்டில் படுத்து உறங்கியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் இல்லாத ஒரு சுகம் இன்றைக்கு. ரோஜா இதழ்களும் சாமந்தி மலர்களும் தூவிய பஞ்சு மெத்தை ஒன்று அவனுக்கு தென்பட்டது. இவையெல்லாம் பார்த்துக்கொண்டே கொஞ்ச தூரம் சைக்கிளை ஓட்டிச்சென்றான். மீண்டும் அதேப்பெண். முகம் கடுத்தவனாய் அப்பெண்ணைப் பாராமல் சைக்கிளை விரைவாக மிதிக்கின்றான். “அண்ணா… நில்லுங்கள்! என் கணவர் வந்துவிட்டார். இதோ பாருங்கள் அண்ணா” என்று தலையில் சூடிய மலர்களை காண்பிக்கின்றாள்.  

நீ பெண்ணல்ல பேய்… என்னை அழைக்காதே போ.. போ… போ… என்கிறார் நடேசன்.

அண்ணா ஆ…ஆ… வா… வா… வா… வா… வா… என கையசைத்து கூப்பிடுகிறாள் அப்பெண்.

நான் வரமாட்டேன் போ… நான் வரமாட்டேன்… நான் வரமாட்டேன்…

என்னங்க… என்னங்க… என்று நடேசனின் உடம்பைக் குலுக்கி அவனை எழுப்பிவிட்டாள். தூக்கத்துல இப்படி கத்திறீங்க… பாருங்க குழந்தைங்க கூட முழிச்சிட்டாங்க… ஏதோ பாத்து பயந்திருக்கிங்க போல காலையில உங்களுக்கு மசூதிக்குப் போயி பாடம் போடனும்.

நடேசனுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. காலையில் ஒரே காய்ச்சல். பாடம் போட்டும் பயனில்லை. ஒருவாரம் காய்ச்சல் நீடித்தது. அப்போ அப்போ தூக்கித்தூக்கிப் போட்டது. அப்புறம் கத்துவார். நான் வரமாட்டேன் போடி என்பார். அவ என்ன கைக்காட்டி கூப்பிடுறா என்பாராம் தன் மனைவியிடம். போனவாரம்தான் செத்து போனாரு என்று சொல்லி முடித்தாள் கிருஷ்ணவேணி அத்தை.

தூறல் நின்றபாடில்லை. மின்சாரமும் வந்தபாடில்லை. என் மனசு முழுவதும் அந்தப்பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது. “சரி எல்லாரும் கை கழுவுங்க சாப்பிடலாம்” என்று அம்மா சமயலறைக்குள் நுழைத்தாள்.

x

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

கிராமத்துக்கதைகள் – 2

 

பாம்பும் காகமும்

          ஒரு காட்டில் அரசமரம் ஒன்று இருந்தது. அந்த அரசமரத்திற்கு கீழே பாம்பு புற்று இருந்தது. தினமும் காகமானது தன்னுடைய கூட்டிலே முட்டை ஈன்று விட்டு இரை தேட செல்லுமாம். காகம் மரத்தை விட்டுச் சென்றவுடன் கீழே இருக்கும் பாம்பானது மரத்திற்கு மேலே சென்று காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்து விடும். திரும்பி வந்து பார்க்கும் காகத்திற்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. முட்டை வைத்து குஞ்சு பொறிக்க முடியவில்லையே என்று வேதனையில் துடித்தது.

          நாம் சென்றவுடன் தினமும் தன்னுடைய முட்டையை உடைத்துச் சாப்பிடுவது யார்? என்று கண்டறிய நினைத்தது. ஒருநாள் காகமானது இரைக்குத் தேடுவது போல் சென்றுவிட்டு பாதி வழியிலேயே திரும்பி வந்தது.

          பாம்பு காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த காகத்திற்கு கோபம் தலைக்கேறியது. பாம்பை தன்னுடைய மூக்கிலே கொத்தி சாகடிக்க வேண்டும் என்று பாம்பைத்  துரத்தியது.  காகம் வந்ததை அறிந்த  பாம்பு சீக்கிரமாய் மரத்தின் கீழிறங்கி புற்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டது. அதன்பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

          இந்தப் பாம்பை கொல்ல வேண்டும். அப்போதுதான் தன்னுடைய முட்டையைக் காப்பாற்ற முடியும் என்று காகம் யோசனை செய்தது. காகத்திற்கு இப்போது யோசனை ஒன்று வந்தது.

          நேராக அந்த நாட்டு ராஜாவின் அந்தபுரத்திற்குப் பறந்து சென்றது காகம். அந்த புரத்தில் தன்னுடைய நகையெல்லாம் கழட்டி வெளியே ஒரு ஓரதத்தில் வைத்துவிட்டு  ராணி குளித்துக் கொண்டிருந்தாள்.  இந்தக் காகமானது ராணியின் நகையில் ஒரு ஆபரண நகையை மட்டும் வாயிலே கவ்விக்கொண்டு மேலே பறந்தது. இதைப்பாரத்த ராணி,

          “காவலர்களே ஓடிவாங்கள்… காவலர்களே ஓடிவாங்கள்… என்னுடைய நகையை காகம் ஒன்று தூக்கிச் செல்கிறது” என்று கத்தினாள்.

          பெண் காவலர்கள் ஓடிச்சென்று ஆண்காவலர்களிடம் சொல்ல, ஆண்காவலர்கள் அந்த காகத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். காகமோ நேராகச் சென்று பாம்பு இருக்கும் புற்றுக்குள் போட்டுவிட்டு மரத்தின் மேல் போய் அமர்ந்து கொண்டது.

          ராணியும் தோழிகளும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். காவலர்கள் பாம்பு புற்று என்று தயங்கி நின்றார்கள். ராணிக்கோ நகை வேண்டும். அதனால் புற்றை உடைத்து நகையை எடுங்கள் என்று கட்டளை இட்டாள்.

          புற்று உடைக்கப்பட்டது. புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்தது. காவலர்களால் பாம்பு கொல்லப்பட்டது. புற்றில் இருக்கும் நகையை காவலர்கள் எடுத்த ராணியிடம் ஒப்படைத்தார்கள்.

          இப்போது அரசமரத்தில் காகம், குஞ்சுகள் பொறித்துச் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

கிராமத்துக்கதைகள் – 1

நாயும் பொன்னும்

          இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்!

ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்யும். பின்பு அவர்களால் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ளும் .இதுதான் அந்த நாயினுடைய அன்றாடம் வேலையாக இருந்தது.

அப்போது நாயானது கர்ப்பமாக இருந்தது. ஒரு நல்ல நாளில்  இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று எடுத்தது. நாய் வயிற்றில் மனித குலம் சேர்ந்த பெண்களா! என்று அந்த ஊர்மக்கள் அனைவரும் வியந்து போயினர்.

எப்படியோ அப்படி இப்படியென்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும்  வளர்த்தது. தனக்கு ஊர்மக்கள் கொடுக்கக் கூடிய கூழையோ கஞ்சியையோ தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுத்தது. இரண்டு பெண் பிள்ளைகளும் பெரியவர்களாக ஆயினர்.

பெரியவள் கொஞ்சம் அழகாய் இருப்பாள். வெள்ளையாகவும் மூக்கு முழியுமாகவும் இருப்பாள். இளையவள் கொஞ்சம் கருப்பு. எடுப்பாக இருக்க மாட்டாள்.

அந்த ஊரைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன்  நாயின் பெரிய பொண்ணை காதலித்தான். பொண்ணு பார்க்க அழகாக இருக்கிறாள் என்று நாய் பெற்ற பிள்ளைதான் என்றும் பாராமல் அந்த பையனுடையப் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர்.

சிறியவளுக்குக் கல்யாணம் நடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அழகும் இல்லை. நாய் பெற்ற பிள்ளைதானே என்று யாரும் கட்டிக்கொள்ள முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் அந்த ஊரின் ஏழைப்பையன் ஒருவன் சின்னவளைக் கட்டிக்கொள்ள முன்வந்தான். அவனுக்கு பெற்றோர்களும் கூட பொறந்தவங்களும் யாரும் இல்லை. அவனும் எங்கெங்கோ பொண்ணுப் பார்த்து சலித்துவிட்டான். அவன் அநாதை என்பதற்காக யாருமே பொண்ணு தர மறுத்து விட்டார்கள்.  இருவருக்கும் திருமணம் நடந்தது.

மீண்டும் நாய் அநாதையானது. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து விட்டாகிவிட்டது. இனிமேல் தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் முன்னேப் போலவே இப்போது வேலை அவ்வளவாகச் செய்ய முடியவில்லை. சோர்ந்து சோர்ந்து உட்காந்து கொண்டது.

“சரி எவ்வளவு நாள்தான் இப்படியே உட்காந்து கொண்டிருப்பது. நம்மாலும் ஒன்றுமே முடியவில்லை. அதனால், நம்முடைய பெரிய பொண்ணு வசதியாதான இருக்கா.. அங்க போயிடுவோம். நாம மாட்டங்கும் ஒரு ஓரமா வாழ்ந்திட்டுப் போயிடுவோம்” என்று பெரிய மகள் வீட்டுக்குச் சென்றது.

வீட்டு வாசலுக்குச் சென்று தன்னுடைய மகளை அழைத்தது. பெரிய மகளும் வெளியே வந்தாள்.

“ஏண்டி நாயே.. இங்க எதுக்கு வந்த நீ? உன்னெல்லாம் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்ல்ல… ஏற்கனவே எங்க மாமியார் நாயி பெத்த மொவதானே… என்ன கொண்ட வந்தன்னு திட்டிட்டு இருங்காங்க.. இதுல நீ வேறயா… போடி என் வீட்டவுட்டு” என்றாள்

அழுதபடியே வீதியில் நடந்து வந்தது. சரி தன்னுடைய சின்ன பொண்ணு வீட்டுக்குப் போவோம்ன்னு போச்சு. சின்ன மொவ,

“வாம்மா வா… ஞா கூடயே இங்கையே இருந்திரு. உனக்குன்னு தனியா உளை வைக்கப்போறோம். நாங்க சாப்பிடுறத கொஞ்சம் நீயும் சாப்பிட்டுட்டு இருந்துட்டு போ… ” என்றாள் சின்ன மகள்.

வாழ்க்கை அப்படியே சென்றது. ஒருநாள் நாயானது சின்ன மகளைக் கூப்பிட்டது.

“எம்மாடி… நான் செத்துப் போனேன்னா.. என்னை கொண்டு போயி மண்ணுல புதைச்சிடாதே. ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வை. ஒரு மாசத்துக்கு அப்புறமா எடுத்து பாரு. என்கிட்ட ஏ எதுக்குன்னு எல்லாம் கேள்வி கேட்காத” என்றது அந்த நாய்.

ஒருநாள் அந்த நாய், சொன்னது போலவே செத்துப் போச்சு. தங்கச்சிக்காரி அக்காவுக்கு அம்மா செத்துப்போனத சொல்லி அனுப்பினா… அவ வர்ற மாதிரி தெரியல. சரின்னு அம்மா சொன்ன மாதிரியே ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வைச்சுட்டா…

ஒருமாசம் கழிச்சி பெட்டிய தொறந்து பார்த்தா… பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பெட்டி நிறைய பொன்னும் முத்தும் மாணிக்கமும் பவளமும்  நிறைந்திருந்தது.

சின்னவள் இவ்வளவு நகையையும் அளந்து பார்க்க வேண்டும் என்று எண்ணினாள். அதற்காக அவளுக்குப் படி (அளக்கும் பொருள்) தேவைப்பட்டது.  படி யார் வைத்திருப்பார். பொருள் இருந்தால்தானே அளக்க முடியும். அதனால் அந்த ஊரில் யாரிடத்தில் படி இருக்குமென்று யோசனை செய்தாள். ஊரிலே பணக்காரி அக்காதான். அவளிடமே படி வாங்கி வந்து அளந்துவிட வேண்டும் என்று அக்காவிடம் செல்கிறாள்.

“அக்கா… படி இருந்தா கொடுக்கா..”

“எதுக்குடி படி உனக்கு?” என்றாள் அக்கா

“வீதியில பருப்பு வித்திட்டு வராங்க. அதான் வாங்களாமுன்னு படி கேட்டன்க்கா” தங்கச்சி

வீட்டுக்குள் சென்ற அக்காளுக்கு  சந்தேகம். படியில் உள்ளே சின்னதாய் புளியை ஒட்ட வைத்துக் கொடுக்கிறாள்.

படியை வாங்கி வந்த தங்கச்சியும் பொன்னையும் மாணிக்கத்தையும் முத்துக்களையும் அளந்து போடுகிறாள். தங்கச்சிக்கு சந்தோசம் அதிகம். அப்பாடா அம்மா போகும்போது தனக்கு  நிறைய கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள் என்று பெருமிதம் கொண்டாள்.

படியை மீண்டும் அக்காளிடம் கொடுக்கும் போது அக்காகாரி படியினுள்ளே ஒட்டியிருந்த புளியைத் தேய்த்து எடுக்கிறாள். அப்புளியில் சின்னதாய் ஒரு மாணிக்க கல் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறாள். குட்டு வெளிப்பட்டு விடுகிறது.

“ஒன்னுமில்லாத உனக்கு எப்புடிடி இந்தக் கல் கிடைச்சது” என்று மிரட்டும் தோரணையில் கேட்கிறாள் அக்கா.

பயத்தில் அம்மா நாய் சொன்னதையும் தான் செய்ததையும் அக்காளிடம் சொல்லுகிறாள். தங்கை போன பிறகு அக்காகாரி, தெருவில் சுற்றித்திரிந்த நாய்யொன்றை உலக்கையால் அடித்து பெட்டியில் பூட்டி வைக்கிறாள். எப்போதும் ஒருமாதம் ஆகும் என்று காத்திருக்கிறாள்  அக்காகாரி.

அன்றுடன் ஒருமாதம் முடிகிறது. சந்தோசமாய் பெட்டியைத் திறந்து பார்க்கிறாள். குப்பென்ற வாடை அந்த அறை முழுவதும் அடித்தது. அந்த நாத்தத்தில் சுருண்டு விழுந்தாள் அக்காகாரி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தூரிகை

வாசலில் ஆண்களும் பெண்களுமாய் செருப்புகளை வரிசையாக விடப்பட்டிருந்தார்கள். இராமன் சீதையைக் கண்டுபிடித்தான். சீதை இராமனுக்காகக் காந்திருந்தாள். சொந்த பந்தங்கள் கூடி திருமணம் பொருத்தம் பார்க்க அங்கே குழுமி இருந்தார்கள். அக்கூட்டத்தின் நடுவே தலை நிமிராமல் மாப்பிள்ளை நடேசனும் உட்காந்திருந்தான். ஆள் கொஞ்சம் கருப்புதான். தலைமுடி அடர்த்தியா இல்லையன்னாலும் சொட்ட இல்ல. பார்க்க வாட்ட சாட்டமான ஆண்பிள்ளைதான். வெத்தல பாக்கு பழம் பூ தாம்பாலத்தில் கூட்டத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்தன.

     மீனாட்சி மா நிறத்தவள். ஜன்னலுக்கு நேரே கட்டியப் புடவையோடு உட்காந்திருந்தாள். மீனாட்சியின் தாயார் அம்சவேணி அவளுக்கு மல்லிகையை நிறைய தலையில் சூடிக்கொண்டிருந்தாள். அவர்களுக்குள் எந்தவொரு சம்பாசனையும் அங்கே நடக்கவில்லை. மௌனமே நிலவியது. தாயுள்ளம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை முக்கால் பங்கு அனுமானித்துக் கொண்டாள் மீனாட்சி.

     மகளைச் சந்தையில் கூறுக்கட்டி விற்க அம்சவேணிக்கு விருப்பமில்லை. பின்னன்ன, முத்துன கத்திரிக்கா சந்தைக்கு வந்துதான ஆகனும்! யாரும் வாங்கலன்னா காய் அழுகி யாருக்கும் உதவாது குப்பையிலேதான தூக்கிப் போடனும். அதுக்கு குறைஞ்ச விலக்கொடுத்தாலும் வித்துட்டா, குழம்புக்குக் கறிக்காச்சும் உதவுமே! என எண்ணியவளாய் அம்சவேணி அங்கிருந்து எழுந்து கூட்டத்தில் ஒருத்தியாகி விட்டிருந்தாள்.

     மீனாட்சி கண்ணாடியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் கண்ணாடிக்கும் அத்தனைப் பொருத்தம். கண்ணாடிக்கு வாய் இருந்திருந்தால் மீனாட்சியை திட்டித் தீர்த்திருக்கும். கால்கள் இருந்திருந்தால் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்திருக்கும். என்ன செய்ய? அது கண்ணாடி ஆயிற்றே! மீனாட்சியின் முகம் கண்ணாடி முழுவதும் பரவியிருந்தது. அவளின் மென்மையான உதடுகள் எதையோ சொல்ல வாயெடுத்தது. ஆனால் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. மீனாட்சி மௌனித்திருந்தாள். கண்ணாடியும் மௌனம் காத்தது. ஜன்னல் வழியே காற்று மெள்ள வீசியது. அவளுடையக் கூந்தல் இடுப்பு வரை நீண்டிருந்தது. கூந்தலில் வைக்கப்பட்டிருந்த மல்லிகையின் ஈரம் ஜாக்கெட்டை நனைத்து ஈரமாக்கியது. தென்றல் காற்றானது ஈரம்பட்ட முதுகை வருடித்தான் கொடுத்தது. ஆனந்த இன்பத்தை ரசித்துக் கொண்டே கண்ணாடியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. பரந்து பட்ட அவளின் தோள்களில் மென்மையான நான்கு விரல்கள் தொட்டன.  இப்போதும் மீனாட்சியின் கண்கள் கண்ணாடியிலிருந்து அகலவேயில்லை. கொஞ்சம் திரும்பி யாரென்று கூடப் பாரக்கத்தோனவில்லை. ஏனென்றால் அந்த கை ஏற்கனவே பழக்கப்பட்டிருந்த கையாகவே தோன்றியது. என்னோட கை என் உடல்களைத் தீண்டும் போது எனக்கு எந்தவொரு உணர்வும் புதுமையும் தெரிவதில்லையே. அதுபோலத்தான் இந்தக் கை. இந்தக் கையை நான் பலமுறை பிடித்திருக்கிறேன். முகர்ந்திருக்கிறேன்.  எனக்கு எப்படி இந்தக் கை தொட்டவுடன் சிலிர்ப்பு வரும். இன்னும் மீனாட்சியின் முதுகிலிருந்து அந்தக் கை எடுக்காமல் அப்படியேதான் இருந்தது. இப்போது மீனாட்சியும் கண்ணாடியின் பிம்பத்தில் ஒருத்தியாகியிருந்தாள்.

     “நீ கண்ணாடியைப் பாத்துட்டு இருந்தா, இந்த உலகத்துல எது நடந்தாலும் நீ அசையவே மாட்டியே… அப்படி என்னதான் பாத்திட்டு இருக்கடி..” என்று சொல்லிக் கொண்டே முன்பக்கமாய் வந்து நின்றாள் மல்லிகா.

     மீனாட்சியின் அன்பு தோழி மல்லிகா. பாவாடைச் சட்டைப் போட்டதிலிருந்து இன்று வரை ஒன்றாய் வளர்ந்தவர்கள். மல்லிகாவின் வீடு ரெண்டு வீதி தள்ளிதான் இருக்கிறது. காலையிலேயே மல்லிகாவை தூக்கத்திலிருந்து எழுப்பி, “இன்னிக்கு என்ன பொண்ணுப் பாக்க வராங்கடி, நீ கண்டிப்பா வந்தரணும்” என்று சொல்லிப்புட்டுதான் வந்தாள் மீனாட்சி. மல்லிகாவுக்கும் சந்தோசம்தான். ஆனால் மீனாட்சி போகும்போது சொல்லிய அந்த வார்த்தை மனசை நொறுங்க வைத்தாலும், மீனாட்சியின் நிலையில் இருந்து பார்க்கும் போது அது சரியாகவேப் பட்டது. கதவுப்பக்கத்தில் போன மீனாட்சி “அடியேய் மல்லிகா…” “சொல்லுடி..” “நீ எங்க வீட்டுக்கு வரும்போது பின்வாசல் வழியா வாடி ப்ளிஸ்…” மறுவார்த்தையை மல்லிகாவிடம் இருந்து எதிர்ப்பார்க்காமல் வெளியே சென்று கொண்டிருந்தாள் மீனாட்சி.

           “ஏண்டி இவ்ளோ நேரம்” – மீனாட்சி

           “குழாய்ல தண்ணீ வந்திருச்சி, துணியெல்லாம் அலசிப்போட்டுட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சிடி… அதுமட்டுமில்லாம நானா கட்டிக்கப்போறேன்” காலையில மீனாட்சி சொன்ன வார்த்தைக்குச் சரியான சவுக்கடிக் கொடுத்தாள் மல்லிகா.

     “அதிகபிரசங்கி.. அதிகபிரசங்கி…” என்று மல்லிகாவின் தலையில் ரெண்டு கொட்டு கொட்டினாள் மீனாட்சி. “உண்மையச் சொல்லனுமின்னா நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா… என் கண்ணே பட்டிடும் போலிருக்கு…” – மல்லிகா. மீனாட்சி சிரித்தாள். கண்ணாடியிலுள்ள பிம்பமும் சிரித்தது.

     பொண்ணக் கூட்டிட்டு வாங்க… ஊர் பெரியவர் உரக்கச் சொன்னார்.  அம்சவேணி தன்னோடப் பொண்ணு கையில டீயைக் கொடுத்தனுப்பினாள். டீயைக் கையில் வாங்கியவுடனே மீனாட்சியின் மனம் நடுங்கத் தொடங்கியது. இவனாவது பொண்ணப் புடிச்சிருக்கு… கல்யாணத்த எப்ப வச்சிக்கலாமுன்னு கேட்க மாட்டானா..? இல்ல, டீயைக் குடிச்சிட்டு ஊருக்குப்போயி சொல்லி அனுப்புறேன்னு சொல்வானா? மனசு குழம்பித்தான் போயிருந்தது.

     மீனாட்சி மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒவ்வொருத்தருக்காய் டீ கொடுத்துக் கொண்டே வந்தாள். இப்போது மாப்பிள்ளைக்கு டீ கொடுக்கிறாள். மாப்பிள்ளை நடேசன் குனிந்து கொண்டே டீயை எடுக்கிறான். மீனாட்சியின் முகம் வாடின. மாப்பிள்ளைக்கு எதற்காக டீ கொடுக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை மூஞ்சப் பாக்கணும். மாப்பிள்ளை பொண்ணு மூஞ்சப் பாக்கணும் என்கிறதுக்குத்தானே.. மாப்பிள்ளை டீ எடுத்துக்கொண்டப் பின்பும் மீனாட்சியின் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. தான் கற்பனித்த உள்ளத்தில் உருவான உருவம் இவர்தானோ? அந்த உருவம் மனதிலே பதிந்து காதல் கீதம் தீட்டாதோ என எண்ணி உருகுகிறாள். “மாப்பிள்ளை தம்பி கொஞ்சம் பொண்ண நிமிர்ந்து பாருங்க…” என்றாள் மீனாட்சியின் தூரத்து அத்தை ஒருத்தி.

     நடேசன் மீனாட்சியை நிமிர்ந்துப் பார்க்கிறான். மீனாட்சியும் நடேசனை உற்றுப் பார்க்கிறாள். நடேசனின் ஒற்றைக் கண் பார்வையால் தீயிலே கருகிய புழுவாய் எரிகிறாள் மீனாட்சி.  மாப்பிள்ளை நடேசனோ தன்னுடைய ஊனத்தை நினைத்து வருத்தத்துடன் தலைகுனிகிறான். சிவந்த கண்களில் கண்ணீர் நிரம்ப உறவுகளுக்காகச் சிரித்த முகத்தோடு தன் அறைக்குள் நுழைகிறாள். மீண்டும் கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்க்கிறாள். கண்களை நிறைத்த கண்ணீர் கண்ணாடியில் சொட்டாய் விழுந்தது.

     கண்ணாடியின் முகம் கண்களாக விரிய, அலைகளை ஆக்கிரமித்துக் கொண்டது கண்ணீர்த்துளிகள். “என்னடி விசும்புற..” அம்மா அம்சவேணி மீனாட்சியின் பின்புறமாய் நின்று கொண்டிருந்தாள். “உனக்கு மூணு வயசிருக்கும். உங்க அப்பாவும் மாமாவும் கிணத்துல குளிச்சிட்டு இருந்தாங்க. நீ கிணத்து மேட்டுல நின்னுட்டு கிணத்துப் பூண்டுச் செடியைக் கிள்ளிக்கிட்டு விளையாடிட்டு இருந்த. அந்த நேரத்துல மாமா கிணத்து மேட்டுல இருந்து தண்ணிக்குள்ள குதிக்கிறதப் பாத்து நீயும் குதிச்சிட்ட. குதிச்ச நீ நேரா பம்பு செட்டுல விழுந்து தாடையைக் கிழிச்சிட்டு இரத்த வெள்ளமா மயங்கி தண்ணில மூழ்கின. உடனே உங்க அப்பா தண்ணில இருந்து உன்னையத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாரு. வேலைக்குப் போயிருந்த எனக்கு சேதி கெடச்சவுடனே உன்னப் பார்க்க ஓடோடி வந்தேன். ஆனாலும் பார்க்க முடியல. அப்புறம் டாக்டர் வந்த சொன்னாரு, “தாடையில ரொம்ப அடிப்பட்டிருக்கு. தாடை கிழிஞ்சித் தொங்குது. இழுத்துப் புடிச்சிதான் தையல் போடனும். உங்க பொண்ணோட முகமே மாற வாய்பிருக்கு” என்று சொன்ன போது தலையில இடி விழுந்த மாதிரி சுர்ர்…ன்னுது. ஆரம்பத்தில உன்னைப் பார்க்கும் போது மனசு வலிக்கும். போகப்போக மனசு கல்லாயிடுச்சி. கொஞ்ச நாள்ல உங்க அப்பாவும் போய்ச் சேந்துட்டாரு. கடங்காரனுகளும் இருக்கிறதப் புடிங்கிட்டானுவ… நான் எப்படி உன்னை காப்பாத்தப் போறன்னு மனசு நோகிடுச்சி. இந்த கல்யாணத்துக்கு நீ சம்பதிச்சே ஆகனும்டி…”

     “அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு கண்ணே இல்லம்மா”

     “கண் இல்லன்னா என்னாடி? உன்ன கண்ணும் கருத்துமா வச்சிக் காப்பாத்துவாண்டி”

     “என்னோட முகம் இப்படி ஆனதுக்கு நான் என்ன செய்ய முடியும். அந்த கடவுளுக்கே கண் இல்லையோ என்னுமோ! அதான் கண் இல்லாத ஒருத்தனுக்கு என்னை கட்டி வைக்கப் பாக்கராரு…எனக்கு கல்யாணமே வேண்டாம்மா…”

     “போடி போக்கத்தவளே… நான் போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் உனக்கு ஒரு பாதுகாப்பு வேணாம்மா…”

     “அதெல்லாம் ஒன்னும் வேணாம். என்னோட மூஞ்சி கூர்மையா இருக்குது. அதனால ஊனம் இருக்கிறவங்கள மட்டுதான் கட்டிக்கனுமா…ம்மா”

     “வந்த மாப்பிள்ள எல்லாம் பொண்ணப் புடிக்கல… பொண்ணப் புடிக்கல…ன்னு சொல்லும் போது எங்க நான் பெத்தது சொத்தையாயிடுச்சேன்னு அடிவயிறு கலங்கிப் போகுதடி”

     “நான் அழகா இல்லையாம்மா”

     “யாரு சொன்னது. நீ அழகுதான். உன் மனசு யாருக்கும் வராதுடி செல்லம்”

     “மல்லியாவுக்குக் கூடவாம்மா”- மீனாட்சி.

     “அவளுக்கென்ன அவ மாமங்காரன் சிங்கப்பூர்ல இருக்கான். அவனுக்காகக் காத்துக்கிட்டு இருக்கா… நீ அப்பிடியா மீனாட்சி. கல்யாணத்துக்கு ஒத்துக்கோடி” – அம்சவேணி

     சாப்பிட்ட ரசத்தின் மனமும் குழம்பின் வாசனையும் தென்றல் காற்றில் இரண்டறக் கலந்தன. பார்த்துக்கொண்டிருந்தக் கண்ணாடியைச் சுவற்றிலே வீசி எறிந்தாள். அக்கண்ணாடி சுக்கு நூறாய் வெடித்து சிதறின. சிதறியக் கண்ணாடி பிம்பத்தில் ஓவியமாய் தெரிந்தாள் மீனாட்சி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தாய்மை

iniyavaikatral.in
    கருப்பு நிறச்சாலையில் சக்கரம்சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கரவாகனத்தில் ஒய்யாரமாய்கேசவன், அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். எதிர்க்காற்றில் தலைமுடி தென்னங்கீற்றாய்ப் பறந்தது. அலுவலகத்தில் அன்றைய வேலை பரப்பரப்பாக ஓடியது அவனுக்கு. “கேசவனுக்கு என்னாச்சுஇன்னிக்கு ஒரேசிரிப்பும் கும்மாளுமாக இருக்கிறார்என்று அலுவலகத்தில் அரசபொறசலாகப் பேச்சு அடிப்பட்டது. அன்றைய தினமும் புதியதாய்தான் பட்டது அவனுக்கு. அந்த சந்தோசத்தை மனதிலே நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டான்.

     கேசவன் சார்கேசவன் சார்என்று பியுன் ஆறுமுகம் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமலே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போய்க்கிடந்தான். திடுக்கிட்டவனாய், என்னஆறுமுக அண்ணே! என்றான். உங்கள மேனேஜர்சார் கூப்பிடுறார் என்றுசொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். தன் மேசையில் இருக்கும் நான்கு ஐந்து பைல்களை எடுத்துக்கொண்டு மேனேஜர் ரூமிற்குள் சென்றான். கதவை மெல்லியதாக தள்ளிவணக்கம்சார்நான் உள்ளேவரலாமாஎன்றான். வாங்கஆனந்தன். எடுத்து வந்த பைல்களை மேசையின்மீது வைத்தான். கையெழுத்துப்போட ஏதுவாகச் சரியானப் பக்கத்தை அடையாளமிட்டு சிறுசிறு பேப்பர் துண்டுகளைச் சொருகிவைத்திருந்தான். பைல்களில் கையெழுத்து இட்டவாறே, என்ன கேசவன்டெல்லிக்கு மெயில்அனுப்பிட்டிங்கிளா? அனுப்பிட்டேன்சார்தூத்துக்குடியில இருந்து வந்த பணத்த நம்ம அக்கௌண்ட்ல மாத்திட்டிங்களா? நேத்தே மாத்திட்டேன்சார்…. கேசவனிடம் கேட்குற கேள்விக்குப் பதில் மட்டுமே வந்தது.

மனதில் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட நரைத்து வெளுத்துப்போன முடியைக் காட்டிலும் அனுபவத்தையே மிகுதியாகக்கொண்டிருப்பவரிடம் விடுமுறை எவ்வாறு கேட்பது. ஏதாவது சொல்லிவிட்டால், என்றபயம் வேறு. பயந்தால் நடப்பது ஒன்றுமில்லை. அந்த ரூமின் கதவினை அடைவதற்குள் ஒருமுடிவினை எடுத்தாக வேண்டும்.  இதோகதவின் பிடியைபிடித்து திறந்தாகிவிட்டது. சார்என்று மெதுவாக இழுத்தான் கேசவன். என்னகேசவன், சொல்லுங்கஎனக்கு இன்னிக்கு மதியம் லீவு வேணும் சார்.. புன்னகைக்கு மாறகொஞ்சம் நெரம்தேவைப்பட்டது மேனேஜர்க்கு. சரி எடுத்துக்கோ.. தேங்ஸ்சார். மறுபடியும் கதவின்பிடியினை இழுத்தான். இப்போது மேனேஜர்அழைக்கின்றார். “ஒருநிமிஷம் கேசவன்பிடியைஇலேசாக விட்டபடியேதிரும்பிப் பார்க்கின்றான்.

     என்ன விஷியமுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா கேசவன்” “எனக்குஎனக்கு இன்னிக்கு கல்யாண நாள் சார்என்று தட்டுதடுமாறிச் சொல்லி முடித்தான். வாழ்த்துக்களை கைக்குலுக்களோடு பகிர்ந்து கொண்டார் மேனேஜர். பேசிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். அலுவலகத்தில் இருந்த அத்தனைக் கண்களும் அவர்கள் இருவரைச் சுற்றியே இருந்தது. தனியேப் போனவன், மேனேஜரோடு வருகிறானேபதவி உயர்வாக இருக்குமோ என்று பலரின்வயிற்றில் எரிந்துகொண்டிருந்தது.  கேசவனுக்கு இன்னிக்கு கல்யாணநாளாம்என்று பட்டாசு வெடித்ததுபோல் பட்டென்று சொல்லிமுடித்தார் மேனேஜர்.  தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத்தயாரானான்.  இதுஎத்தனையாவது கல்யாணநாள்என்றது ஒருகுரல். திரும்பிப் பார்க்காமலேநாலாவது என்றுசொன்னான். வாயில் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. உதடுகள் புன்னகைத்தன.

கேசவன் ஆயிரம் கனவுகளோடு வீட்டிற்குள் நுழைந்தான். மதிமுகம். மயில்தோகையாய் கருநிறக்கூந்தல். கையினால் பார்த்துப்பார்த்துத் தொடுக்கப்பட்ட மல்லிகையைக் கூந்தலில் சூடியிருந்தாள் ஆர்த்தி. சிவப்பும் மஞ்சளும் கலந்த பட்டுப்புடவை. கேசவன் வைத்தக்கண்வாங்காமல் தன்மனைவியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாங்கஎன்னைஅப்படி பார்க்கீறிங்க?” என்று ஆர்த்தி சொன்னதுதான் தாமதம். கையில் இருந்த பேக்கை கீழேப்போட்டுவிட்டு ஆர்த்திஎன் ஓடி வந்தவன் இடுப்புக்கு மேலேதூக்கி ஒருசுற்று சுற்றினான்.  என்னாங்கபுதுசா கல்யாணம்ஆன மாதிரி? விடுங்கஎன்று பொய்வெட்கத்துடன் கேசவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் ஆர்த்தி.

     சாயங்காலம் சூரியன்மறைய கொஞ்ச நேரமே இருந்தது. இருவரும் பக்கத்தில்உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார்கோயில், சர்ச், மசூதி என ஒரு கோயிலையும் கடவுளையும் விடாமல் வணங்கினார்கள். அந்தவீதியிலேயே நல்ல ஹோட்டலா பார்த்து இருவரும் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டார்கள். வீட்டிற்கு வரமணி ஒன்பதை தாண்டியிருந்தது. படுக்கை அறை ஜன்னலின் சுவாசத்தால் பிரகாசமாய் இருந்தது. மல்லிகையின் வாசனை மூக்கின் நுனியை நாணச்செய்தது. ஜீரோ வாட்ஸ் பல்பைத்தவிர விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.  வெற்றுடம்போடு லுங்கி மட்டும்அ ணிந்தவாறு கேசவன் படுத்திருந்தான். கேசவனின் முடிகள் நிறைந்த மார்பில் கன்னம் வைத்து படுத்திருந்தாள்  ஆர்த்தி. இருவருக்குள்ளும் எந்தவிதமான சம்பாசனைகளும் அங்கே நடைபெறவில்லை. மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது. கண்மூடி லயித்திருந்தான் கேசவன்.  மெல்லியதாகஓர் அழுகை. தேம்பலுடன் கண்ணீரைக் கரைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி. “என்ன ஆர்த்தி அழுவுற.. என்னாச்சு உனக்கு?” விசும்பலையே பதிலாகத் தந்தாள். “என்னன்னு சொன்னதான தெரியும்” “எனக்கு குழந்தை வேணும்நமக்குதான்குழந்தையே பிறக்காதுன்னுடாக்டர் சொல்லிட்டாருல்ல..  என்ன பன்றது ஆர்த்தி. ஆர்த்தியின் அழுகை பீறிட்டது. உள்ளத்தின் குமுறலைக் கண்ணீராக வடித்தாள். அக்கண்ணீரானது கேசவனின்மார்பு முடியை நனையச்செய்தது. அது அவனை வெட்கப்பட வைத்தது. ஆர்த்தியின் கூந்தலைமெல்ல வருடிய படிமார்போடு இறுக்கிக்கொண்டான் கேசவன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை முக்கியமானதாகும்.  அதுவரை மூடியிருந்த கண்களை இருட்டிலே நன்றாக திறந்து பார்த்தான் கேசவன்.  எங்கும் மயானமாகக் காட்சியளித்தது அவனுக்கு. ஆர்த்தியின் அமைதி வேறு அவனுள் புகுந்துமனதை கரையானாய் அரித்துக்கொண்டிருந்தது.  கேசவனே பேச்சை ஆரமித்தான். “ஆர்த்திநாஒன்னு சொல்லட்டுமாம்என்ற ஒலி அவளிடமிருந்து வந்தபிறகே பேச ஆரமித்தான். “நாமரெண்டு பேரும் நாளைக்கு அனாதை விடுதிக்கு போவோம். நீயும் நானும் அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்ப்போம். நமக்கு பிடிச்சகுழந்தையாப் பார்த்து எடுத்துவந்து வளர்ப்போம். இதைப்பத்தி நீஎன்ன நினைக்கிற..” தட்டுதடுமாறி ஈனச்சுரணையில் சொல்லிமுடித்தான். ஆர்த்தியின் மனம்குட்டையைக் குழப்பின. சேறாயிருந்தன.  தான்கொஞ்சி விளையாட குழந்தை இல்லையே என்ற எண்ணமே அவளை முழுவதும் தின்றுகொண்டிருந்தது. இருவரும் அழுத கண்ணகளாய் நனைந்தனர். கேசவனின் மார்பில் படுத்திருந்த ஆர்த்தி அழுது அழுதுக ண்கள் சொருகி எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.

     இரவு விடியலைநோக்கி நகர்ந்தது. ஆர்த்தி சிறுநீர்க் கழிப்பதற்காகக் கட்டிலிருந்து எழுந்திருந்தாள். கண்களைச் சுத்தமாகத் திறக்க முடியவில்லை. துக்கமும் தூக்கமும்அ வளை ஓரிடத்தில் நிலைகொள்ளமுடியாமல் தவிக்கச்செய்தது. பழகிய வீடு. கண்ணைத் திறக்காமலே புழக்கடைக்கு வந்தாள். காலினைச் சற்றே அகல விரித்து புடவையைக் கொஞ்சம் மேலுயர்த்தினாள். தன் வயிற்றில் தங்கிய ஒன்று கீழே இறங்குவதாக நினைத்து தன்னையே மெய்மறந்து நின்றாள். இன்னும் முடியவில்லை சிறுநீர். கண்களையும் திறந்துபார்க்க இயலவில்லை. மூக்கின் ஓரம் நாற்றத்தை உணர்ந்தாள். என்னவாயிருக்கும் அந்தநாற்றம். கண்களைத்தான் திறக்கமுடியவில்லை. ஆனாலும் தன்னை கூர்மையாக்கி கொண்டாள் ஆர்த்தி. எவ்வளவு முயன்று பார்த்தாலும் அந்த வாசனையை அவளால் உணரவே முடியவில்லை. க்யிங்.. க்யிங்காதிலேரீங்காரம். கேட்கத் துடிக்கும்ரீங்காரம். என்ன ஓசையாக இருக்கும். ஆனாலும் அந்த ஓசையைத் திரும்பதிரும்ப கேட்க ஆவலாயிருந்தாள் ஆர்த்தி. உதடுகள் முணுமுணுத்தன. கண்களைத் திறந்து என்னவென்று பார்க்க ஆசைப்பட்டாள். கண்ணைத் திறக்க இவ்வளவு நேரமா? எப்படியாவது என் கண்ணை திறந்துவிடு இறைவனே என்று வேண்டிக்கொண்டாள். காதில்கேட்ட ரீங்காரமும் மூக்கின் நாசியைத்தொட்ட வாசனையுமே அவளை கண்ணை திறக்கச்செய்தது.

     புழக்கடை ஓரத்தில்முள் வேலி. வேலிக்குப்பக்கத்தில் அழுக்குசாக்கில் ஒருபச்சிளம் குழந்தை. புழக்கடைக்குமேற்கு பக்கத்தில் சின்னதாய் சந்து தெற்குப்புறச் சாலையை ஒட்டி இருந்தது. அந்தக் குழந்தை அப்போதுதான் பிறந்திருக்க வேணடும். தொப்புள் கொடிக்கூட இன்னும் சரியாக அறுக்கப்படவில்லை. பிறந்த குழந்தையின் உடம்பிலே இரத்த சிதள்கள் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. ஆர்த்தி குழந்தையைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள சிலமணித்துளிகள் தேவைப்பட்டன. தெற்குப்புறச் சாலையில் மறைவாக இருக்கும் இச்சந்தில் ஒருகர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கலாம். ஏதோ காரணங்களுக்காக இக்குழந்தையை இங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறாள் என்று அணுமானிக்க முடிந்தது ஆர்த்திக்கு. வீட்டுக்குள் ஓடியவள் வட்டாவில் தண்ணீரை நிரப்பி வந்தாள். இரண்டுகால்களுக்கும் நடுவிலே  குழந்தையைப் படுக்கவைத்தாள். தண்ணீரைத் தொட்டுக் குழந்தையின் பிஞ்சு உடம்பினை தடவுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அங்கமாக ஆர்த்தியின் வீணை வீரல்கள் நீவுகின்றன. குழந்தையின் தொடுதலையை எண்ணி எண்ணி மனம் சுகத்தை அடைந்துகொண்டிருந்தன. குழந்தையின் இரத்த சிதள்களைத் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் ஆர்த்தி.

     கண் விழித்தகேசவன் படுக்கையில் மனைவி இல்லாததை அறிந்து திடுக்குற்றான். குழந்தை இல்லாததை எண்ணி தற்கொலை ஏதாவது பண்ணியிருப்பாளோ என்று நினைத்துப்பார்க்கவே கொடுரமாக இருந்தது அவனுக்கு. “ஆர்த்திஆர்த்திஒவ்வொரு அறையாய் மூச்சு வாங்கியபடி பார்த்தான். புழக்கடையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்து அங்கு வந்து சேர்ந்தான். முதுகு புறமாய் மனைவியைப் பார்த்த சந்தோசத்தில் பெருமூச்சுவிட்டான்.  ஓடிவந்து ஆர்த்தியின் முன்நின்று, “இங்கஎன்ன பன்ற…” கேட்டவுடன் குழந்தையைப் பார்த்தஅ திர்ச்சியில் உறைந்துபோனான். “யாருது குழந்த? இங்க எப்படி வந்தது? உனக்கு எப்படி கிடைச்சது? கேள்விகளை அடுக்கிக்கொண்டேச் சென்றான். நடந்ததை பொறுமையாகச் சொன்னாள் ஆர்த்தி. வாயைபிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான் கேசவன். “எவ்ளோ அழகா கொளுகொளுன்னு இருக்கு. இந்தக் குழந்தையக் கடவுளே அனுப்பிவச்சு நமக்குகுழந்தை இல்லாக்குறையை தீர்த்துவச்சிட்டாரு. நான் யாருக்காகவும்இந்தக் குழந்தைய விட்டுத்தரமாட்டேன். இவன் என்னோடப் பிள்ளஎன்று மார்போடு குழந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். குழந்தை தனக்குமடி கிடைத்துவிட்டது என்பதாய்க் கண்ணை மூடிஉறங்கியது.

     சேவல் விடிலைகூவி அழைத்தது. கதிரவன்அந்த ஊரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தான். அந்தச்செய்தி ஊர்முழுக்கப் பரவியது. “வாங்கடாவாங்கடா.. கேசவன் வீட்டுல ஏதோ குழந்த கிடைச்சிருக்காம்பாக்கலாம்..“ என்று குழந்தையைப் பார்க்க கேசவனின் வீடுமுழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குட்டிப் பசங்க குழந்தையைப் பார்க்கமுடியாமல் பெரியவர்களின்கால் இடுக்குகளில் புகுந்து தலையை மட்டும் நீட்டி பார்த்துவாய் மேல் கைவைத்தனர். “குழந்தஎவ்ளோ அழகாசெவப்பா.. இருக்கு பாரடா…” இரண்டுவாண்டுகளின் பேச்சுகள் அவை. கூட்டத்திலே சலசலப்பு. ஆளாளுக்கு பேச்சுகள் பலவிதம். “இவ்ளோஅழகான குழந்தய பெத்துப் போட்டுபோறதுக்கு அவளுக்கு எப்படி மனசுவந்ததோ தெரியலையேகூட்டத்தில் ஒருகுரல்.  அனாதையா பச்சப்புள்ளயப் பெத்துப்போட்டு எங்கயோபோயிட்டாஅவ எங்கையில கிடைச்சான்ன நாக்கபுடிங்கிகின்னு சாவுற மாதிரி நாலு கேள்வி கேட்பேன். தேவுடியாகுழந்த உடம்புலஇருக்கிற ஈரம் காயிரதுக்கு முன்னாடியேஇப்படி தொப்புள் கொடி உறவ அறுத்துட்டுபோயிட்டாளே…” என்றது கூட்டத்தின் மற்றொரு குரல். “அதுஇதுன்னுவாய்க்கு வந்தபடிதப்பா பேசாதிங்கஅவளுக்கு என்ன நிலமையோஎன்னவோ…” கூட்டத்தின்நடுவே கணிரென்றுஒரு குரல்.  அக்கூட்டத்தின் பேச்சரவம் முழுவதும் குறைந்தது. மூச்சு விடும்சப்தமும் ஆங்காங்கே இறுமும் சத்தமும்தான் கேட்டது.

     ஆர்த்தியின் மடியில்இருந்த குழந்தை அழத்தொடங்கியது. இந்தஅழுகைக்கு காரணம், தன்தாயை இவர்கள் திட்டுகிறார்களேஎன்று அழுகிறதா? இல்லை, தனக்கு பசிக்கிறது உணவு கொடுக்க யாரும் முன்வரவில்லையே என்றுஅழுகிறதா? தெரியவில்லை. குழந்தை அழுது கொண்டுதானிருக்கிறது. கேசவன் பால்வாங்கி வருவதற்காகவண்டியை ஸ்டார்ட்செய்கிறான். கூட்டத்தின் நடுவே ஆர்த்தியின் மடியில் குழந்தை. கூட்டத்தில் உள்ள அனைத்து கண்களும் ஆர்த்தியையேப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் அழுகையையும் பார்க்கிறார்கள். இன்னும் ஓரிருவினாடிகளில் அக்குழந்தை அழுது அழுது விக்கி இறக்கப்போகிறது. ஆர்த்தி என்ன நினைத்தாலோ, உடனே மாராப்பைவிலக்கி தன்னுடையமார்பு நுனியைக் குழந்தையின் வாயிலேதிணித்தாள். குழந்தையின் அழுகை நின்றது. எதுவரையில் இது நீடிக்கும். கேசவன் பால்வாங்கி வரும்வரையிலா? இல்லை, இந்தமார்பில் பாலே சுரக்காது என்று அந்த குழந்தைக்குத் தெரியும்வரையிலா? ஆனாலும் எது எப்படியாயிருந்தாலும் உண்மையிலேயே ஆர்த்தி இன்று தாய்மை அடைந்துவிட்டாள்! தாய்மை அடைந்துவிட்டாள்!

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

“பெருஞ்சித்திரனார் பாவியத்தில் ஐயையின் காதல்”

உலகத்தில் எல்லா உயிர்களும் காதலால் வாழ்கின்றன. காக்கை,குருவி போன்ற பறவையினங்களும், ஐந்தறிவுப் படைத்த விலங்கினங்களும் காதலிக்க தவறுவதில்லை. இந்த ஜீவராசிகளின் காதலுக்கு யாரும் எதிர்ப்பேர் கருப்புக்கொடியோ காட்டுவதில்லை. அவைகளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாயச்; சேர்ந்து வாழும். ஆனால், பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வரும் மனித இனம் காதலுக்கு எதிப்பையும், ஏமாற்றத்தையும் துன்பங்களையுமே தருகின்றது. மேற்கத்திய நாடுகளில் அவ்வளவாக எதிர்ப்புகள் இல்லை என்றாலும் இந்தியா, அரபு நாடுகளைப் போன்றப் பழமையையும் பண்பாட்டையும் மறக்காமல் வாழும் ஒரு சில நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

பெருஞ்சித்தனாரின் பாவியம்

            காதலிக்க இருமனங்கள் இருந்தால் போதும். வேறென்ன வேண்டும். நம் நாடானது சமூகங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. சுhதி,மதம் என்ற போர்வைக்குள் மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறாhகள். புழமைவாதம் அவர்களின் உயிர் மூச்சாக இருக்கின்றது. இவர்களை மீறி எப்படி இரு மனங்கள் காதலிக்க முடியும். அப்படியேக் காதலித்தாலும் ஆணாதிக்கம் பெண்மையைக் காலால் மிதித்து நசுக்கின்றதே. இவ்வுலகத்தில் மக்கள் இனத்தைத் தோற்றுவித்த மாதரை உள்ளத்தாலும், உடலாலும் துன்புறுத்தப்பட்டு அழிக்கச் செய்கின்றதே இந்த ஆணாதிக்கம். “ஆணின் பண்பாடு மனம் எவ்விதக் கட்டுகளாலும் இறுக்கமடையவில்லை. மாறாகப் பெண்ணைப் பண்பாடு இறுக்கி மனோநிலையைப் பாதிப்பது சமூகத்தில் கண்கூடாகத் தெரிகிறது” என முனைவர் அரங்க மல்லிகா கூறுகிறார். பெண்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களும், துயரங்களும் நீக்க முடியாதவனாக அமைகின்றது. அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் நடந்த காதல் சோகங்களை நம் கண் முன்னே நிறுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர் பெருஞ்சித்தரனார்.

ஐயையின் வாழ்க்கை:

            புதினிக்குன்றம். புலியூர் கிராமத்தில் தன் அத்தை முத்தம்மாளுடன் வாழ்கிறாள் ஐயை. பிறந்தவுடன் தாயையும், தந்தையையும் பறிக்கொடுத்தவள். யாரும் இல்லாத அநாதையாக இருந்த ஐயையை அவளின் அத்தை எடுத்து வளர்க்கின்றாள். கணவனை இழந்த முத்தம்மை தன் மகன் செம்மலை நகரிலேப் படிக்க வைக்கிறாள். படிப்புச் சரியாக வராததால் பாதியிலேயே நின்ற ஐயை ஆடு மேய்க்கப் புறப்படுகிறாள். தினமும் ஆட்டை ஓட்டி மலைப்பகுதிக்குச் சென்று மேய்த்து விட்டு மீண்டும் பட்டியில் அடைப்பதுதான் ஐயையின் வேலை.

                                                “காலை யிருந்து மாலை வரையிலும்

                                                நூலிடை வருத்த நுதல்நனி வெயர்ப்ப

                                                ஆடுகள் மேத்தல் ஐயை வழக்கம்? ” (ஐயை.45-47)

            ஐயையின் மீது அவளின் அத்தை உயிரையே வைத்திருந்தாள். பாசத்தைக் கொட்டினாள். தனக்கு மகள் இல்லையே என்று வேதனைப்பட்டுக் கொணடிருந்த முத்தம்மைக்கு நல்ல மகளாக ஐயை இருந்தாள். ஐயைக்கு எண்ணைத் தடவி தலை வாரி பூ முடிப்பாள், பொட்டு வைப்பாள். சுற்றிப் போடுவாள். தன் விழி அகலாமல் ஐயையைப்,

                                         “பேடையெகி னம் போல் நடக்கும் பெற்றியை

                                                விழியகற் றால் உவந்து வியப்பாள்!

                                                பழிமே வாமல் பாவையைக் காத்தாள்!” (ஐயை.96-98)

பார்த்து ரசிப்பாள். ஐயையை தன் மகன் செம்மலுக்குக் கட்டி வைத்து மருமகளாக்கி விட வேண்டும் என்ற ஆசையும் முத்தம்மைக்கு உண்டு.

ஐயையின் காதல்

            தன்னுடைய அத்தை மகனான செம்மல் மீது உயிர்க்கும் அதிகமான காதலைச் சேர்த்து வைத்திருந்தாள். எப்போழுதும் செம்மலின் நினைப்பாகவே இருந்தாள். ஆட்டை மேய்கும் போது கூட ஆடுகளை ஓட்டுவாள்;; பிறகு செம்மலின் நினைப்பு வர அப்படியே நின்றுடுவாள். அதற்குள் ஆடு பள்ளத்தில் இறங்கி ஓடும். நினைவு திரும்பி மீண்டும் ஆட்டை ஓட்ட கையிலேக் கொம்பைத் தூக்கிக்கொண்டு ஓடுவாள்.

                                                “ஆட்டுக் கூட்டமோ அவளுணர் வறியாது

                                                மேட்டில் ஏறும்: பள்ளத்திறங்கும்!

                                                ஓட்டி ஒருபுறம் சேர்ப்பாள் ஒருநொடி!

                                                மீண்டும் நெஞ்சில் அவனுரு மின்னும்!” (ஐயை.64-68)

            செம்மலின் வரவை எண்ணி ஒவ்வொருக் கற்களாக அடுக்குவாள். கற்கள்தான் குவிந்ததே தவிர செம்மல் ஒருநாளும் வரவே இல்லை. ஆனால் அவளின் அன்பான நினைவிலும் செம்மலின் நினைவே மிகுந்திருந்தது.

கனவிலும் காதல்:

            செம்மலிடம் இருந்து முத்தம்மைக்கு கடிதம் ஒன்று வருகின்றது. படிப்பு முடிந்து விட்டது இன்னும் முப்பது நாட்களில் வருவதாக கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஐயைக்கு, கடிதத்தில் தன்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட கேட்கவில்லையே என்று வருத்தம். ஐயை என்ற அடிமை பேதை இருக்கின்றாளா? இறந்தாளா? ஏன ஒரு வரிக்கூட எழுதவில்லையே. அப்படி நான் என்ன பிழை செய்தேன் எனக் காதலின் மிகுதியால் தன் அத்தையிடமே கேட்கின்றாள். திருக்குறளில்,

                                    “நனவினால் நல்கா தவரைக் கனவினால்

                                    காண்டலின் உண்டுஎன் உயிரியர்” (குறள்.122-1213)

            நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் இருக்கிறது என தலைவியின் நிலைப் பற்றி வளளுவர்   கூறுகிறார். கனவிலே அத்தானின் முகத்தையும், அள்ளும் விழி அழகையும், பழகு நெஞ்சையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு காயைப் பொறித்தெடுத்தாள். ஒரு காயை வெட்டி மோர்க்குழப்பு வைத்தாள். ஒன்றைப் பருப்பிலே வேகவைத்தாள். ஒரு காயைச் சீவி உறைத்தயிர் ஊற்றி உறைப்புக்கு மிளகோடு சேர்த்து வைத்தாள். உருகாத நெய்யை உருக்கி உருகுகின்ற அன்பால் உண்ணுவதற்கு பெருவாழை இலை விரித்து பெரும்படையை இட்டாள் ஐயை. தினமும் குன்றுக்குச் செல்வாள்? அங்கு நன்கு விளைந்த கதிரோடும் இலையோடும் மரத்தோடும் தன்னைப் பற்றியும் தன் காதல் பற்றியும் பேசி வருவாள்.

ஐயையின் மகிழ்வு:

            புலியூருக்கு செம்மல் வருகின்றான். முத்தம்மையும் ஐயையும் வாசல் வந்து அவனது இருக்கைகளை வாங்கி வந்து குடியிலே வைக்கின்றனர். ஐயைக்கு செம்மல் வந்ததில் பெரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். அழகிய மலரை மாலையாகத் தொடுப்பதும், ஆட்டுக் குட்டியினை அன்போடு அணைப்பதும், கால் சிலம்பு ஒலிக்க தாவி நடப்பதும், தன் கூந்தலில் வாசனை நிறைந்த மலரினைச் சூடுவதும், செம்மலின் நகர்ப் பற்றியச் செய்திகளைக் கேட்பதும், அவன் பேசும் அழகை ரசிப்பதும், குறுநெல் புடைத்து அன்போடு உண்ணக் கொடுப்பதும், உண்பதைப் பார்த்து மகிழ்வதும், ஏடு கொணர்வதும், எழுதுகோல் எடுத்துக் கொடுப்பதும், பாடெனக் கேட்டால் பாடுவதும் என அவனே எல்லாம் என மனதை முழுமையாக காதலில் தன்னை மறந்தாள்.

                                                “மின்னென மானென மீனெனத் திரிவதும்

                                                அத்தான் கண்முன் அடிக்கடி மேய்ந்த

                                                முத்து நகைச்சியின் மொய்ம்புக் குறும்புகள்!” (ஐயை. 417-419)

            ஐயையின் மனம் முழுக்க செம்மலின் எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது. தனக்கு வரப்போகின்ற வாழ்க்கையை நினைத்து பெருமிதம் கொண்டாள். இக்காதலுக்கு சாதி,மதம் தடையில்லை. உறவுகள் தடையில்லை. ஆசைக்கனவை நிறைவேற்றுவதில் மனம் தடைக்கற்களாய் மாறிப்போனது.

காதல் முறிந்தது:

            தன் காதலை செம்மலிடம் சொல்ல துடித்தாள் ஐயை. அதற்கேற்ப காலமும் விரைவில் வாய்த்தது. ஆடுகளை ஓட்டி குன்றுக்குப் புறப்பட்டாள். ஆடுகள் மேய்ந்தன. பெருங்கல் மேல் ஐயை அமர்ந்தாள். அப்போது செம்மல் அங்கே வருகின்றான். அப்போது,

                                                “உள்ளமும் அன்பைக் காதலால் வளர்த்து

                                                ஊனும் கொள்ளாது உறக்கமும் இன்றி

                                                பனியினும் குளிரினும் வெயிலினும் சாகாது

                                                பிழைந்துக் கொண்டுள பேதை ஏழையின்

                                                தழைத்த அன்பினை உணர்வீரா?”  (ஐயை.476-483)

            தன் காதலைப் பற்றி ஐயை கூறுகிறாள். ஆனால் செம்மலோ தும்பை என்ற பெண்ணின் மீது வைத்துள்ள காதலைப் பற்றிக் கூறுகிறான். ஐயையின் தலையில் இடி விழுந்தது. நெஞ்சு நொறுங்கியது. மயங்கி விழுகின்றாள். அப்போது ஆந்தை அலறியது., தனி நாய் தொண்டை கிழிய ஊளையிட்டது. கழுத்து மணி ஒலிக்கக் காளைகள் இராப்புல் அருந்தாக் கத்தின. ஐயையின் உடல் அசைவற்று இருந்தாள். முத்தம்மை தன் மகனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் செம்மல் கேட்காமல் தும்பையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாகக் கூறுகிறான். அதற்கு முத்தம்மை மகனை வீட்டை விட்டுச் செல்லுமாறு கூறுகின்றாள். அவனும் வீட்டை விட்டுச் சென்று தும்மையை மணந்துக் கொண்டு ஓர் ஆண்பிள்ளைக்கும் தந்தையாகின்றான்.

இளமையைக் கடிதல்

            முறித்;து விட்டுப்போன செம்மலை மறக்க முடியாமல் தவித்தாள் ஐயை. இந்த உள்ளமும் உடலும் செம்மலுக்கு பயன்படாமல் போனதை எண்ணித் துடித்தாள்.

                                    “இறவாக் காதற்கு இளமையைக் கடிந்தாள்” (ஐயை.605)

            தன்னுடைய காதல் மெய்மையைப் போற்றும் கற்பின் பெருமையைக் காறி உமிழ்ந்தாள். தாய்தந்தையை இழந்து அன்பாய் நேசித்தவனையும் துறந்து மனச்சுமையை அதிகமாக கூட்டிக்கொண்டாள். செம்மல் வந்தால் தன் அத்தையிடம் சொல்லி தும்பையிடம் பேசி இரண்டாதாரமாகக் கூட மணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் ஐயைக்கு இருந்தது.

தாய்மை உள்ளம்

            தன் காதலை மறக்கவும் முடியவில்லை, மறைக்கவும் முடியவில்லை. ஆடுகளை ஓட்டி குன்றுக்குச் செல்வாள். மீண்டும் இயற்கையின் மீது தன் மனச்சுமையினைக் கொட்டித்தீர்ப்பாள். அவன் வரவை எண்ணி அடுக்கியக் கற்களை மீண்டும் எண்ணத் துவங்குவாள். அப்படியிருக்க ஒருநாள் செம்மலும் – தும்பையும் இறந்து பட, அவர்களின் மகன் சேரனை ஐயையிடம்  ஒப்படைத்து விடுகிறான் ஒருவன். சேரனை அள்ளி முத்தமிடுகிறாள் ஐயை,

                                                “செம்மா துளைஇதழ் சிரித்திட மலர்ந்தே

                                                ‘அம்மா’ என்றான்! அள்ளி எடுத்தே

                                                நூறு முறைசொல், நுங்குவாய் திறந்து என” (ஐயை.932-935)

            அம்மா என அழைக்கக் கேட்டு காதல் உள்ளம் தாய்மை உணர்வைப் பெறுகின்றாள். குழந்தையின் விளையாட்டிலும்; பேச்சிலும்;; அழகிலும் கொஞ்ச கொஞ்சமாக செம்மலை மறக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அவ்வவ்போது செம்மலின் நினைவும், இம்மையில் இல்லையென்றாலும் மறுமையிலாவது மணக்க வேண்டும் என மனதை மயக்கிக்கொண்டிருந்தது. தன் மகன் சேரனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். தானும் அவனோடு சேர்ந்துப் படித்தாள். நகருக்கு அழைத்துச் சென்று கல்லூரிப் படிப்பை படிக்க வைக்கிறாள். சேரனும் நன்றாகப் படிகின்றான். சேரனுக்கு நெய்தல் என்ற பெண்னை சொந்தமாக்கி விட்டு உயிர் துறக்கிறாள் ஐயை.

தெய்வக் காதலாள்

            சமூக வரலாற்றில் எத்தனையோ காதல் வாழ்ந்து வந்திருக்கலாம். அவற்றில் பாதி வெற்றியும் மீதி தோல்வியும் பெற்றிருக்கலாம். பெருஞ்சித்திரனார் படைத்த ஐயையின் பாத்திரம் வியப்புக்குரியது. ஒரு கிராமத்தில் சாதாரணமான பெண்களின் இயல்பான நிலை, வீடு, இடம் அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆகியவையை அழகாகப் படைத்துள்ளார். இந்த ஐயையின் படைப்பானது ஆசிரியரின் வாழ்கையில் நடந்த சம்பவமாகவே நான் கருதுகிறேன். பெண்ணினத்தை துச்சமாக நினைக்கின்ற ஆணாதிக்கத்தை இப்படைப்பிலேக் காணமுடியும். ஒரு பெண் தன்னுடைய அன்பான காதல் கிடைக்கவில்லையென்றாலும், அவனையே நினைத்து உள்ளம் உருகி வாழ்கிறாள். அவன் பெற்ற மகனை தன் பிள்ளை போல் வளர்த்து ஆளாக்கி விடவும் செய்கிறாள். இதைவிட ஒரு காதலுக்கு வேறென்ன செய்ய முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

முடிவுரை:

            ஐயையின் காதலை வானம், மழை, நீர், காற்றெல்லாம் சொல்லும். ஐயை இறந்த பின்பு குன்றிலே செம்மல் வர சேர்த்து வைத்திருந்த கற்களைக் கொண்டு வெண்மேடைக் கட்டி, அங்கு வெண்பளிங்கு சிலையொன்றை ஐயைக்கு எழுப்புகிறான் சேரன். ஐயையின் காதல் இவ்வுலகம் உள்ளவரை வாழும். காதலுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஐயையின் உறைவிடமானது கோயிலாகக் கொண்டு விழா எடுப்புது நலம்.

             

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

                     

 

 

 

 

       

“ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடை ஆளுமை”

        ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான் கண்டதை உண்டான் மரப்பொந்து, குகை எனத் தங்கி தட்பவெப்பங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான்.  இவ்வுலகத்தில் நிலைபெற, கரடு முரடாக இருந்த மலையைக் காடாக்கினாhன்.  காட்டை வயலாக்கினான்.  உடலுழைப்பையே அதிகமாகக் கொடுத்துப் பல நிலங்களைத் தனதாக்கிக் கொண்டான்.  அந்நிலங்களில் மக்கள் பலர் வேலைச்  செய்திருப்பார்கள்.  அம்மனிதனே தலைவனாகியிருப்பான்.  ஐந்திணை நிலத்தில் உள்ள மக்களின் செயல்பாட்டுத் திறனுக்கேற்ப சிறுகுடித் தலைவனே பின்னாளில் மன்னனாகியிருப்பான்.  “தமிழகத்தில் ஒரு மன்னரின் கோலில் கீழ் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை முல்லை நிலத்திலேயே தோன்றியிருக்கக்கூடும்”1 என டாக்டர் ந. சுப்ரமண்யன் கூறுகிறார். முல்லை நிலத்தில் உள்ள மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருக்கும் தொடர்பே  இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  முல்லை நிலத்தில் ஆநிரைகளைக் கவர்தலும் மீட்டலும் நடைபெற்றிருக்கிறது.  இதன் அடிப்படையிலேயே மன்னர்கள் இருவருள்ளும் சண்டை நிகழ்ந்து வந்துள்ளது என்பதை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

            தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பெரும்வேந்தர்களால் ஆளப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி.  பெரும் நிலப்பரப்பு, வீரம், அனைத்து நிலங்களும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனத் திண்ணம் போன்றவையே இம்மூவேந்தர்களையும் பேரரச மரபாக வரலாறு சுட்டுகின்றது.  பரந்து விரிந்த இம்மண்ணிலே எத்தனையோ  தலைவர்கள் தோன்றியிருப்பார்கள்.  அவர்களும் தனக்கென ஒரு நிலம், மக்கள்,  சமுதாயத்தை உருவாக்கி நலம் பெற ஆட்சி நடத்தியிருப்பார்கள்.  வல்லமை உள்ள மன்னர்கள் குறுநில மன்னர்களை வலிய போருக்கு அழைத்துத் தோற்கடித்துள்ளார்கள்.  அந்நிலத்தில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். “அரசன், இறைவன், காவலன், மன்னன், வேந்தன் ஆகிய சொற்கள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக ஆட்சி பெற்றிருந்த போதிலும் மன்னன், வேந்தன் என்ற இவ்விரு சொற்களின் ஆளுமையே மிகுதி.  மன்னர் என்ற சொல் குறுகிய மன்னனையும், வேந்தன் என்ற சொல் முடியுடை ஆட்சித்தலைவராகிய சேர, சோழ, பாண்டியரையும் குறிக்கின்றது”2 என அரங்க. இராமலிங்கம்  அரசர்களின் பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகின்றார்.  அப்பேரரசர்கள் போர் நடக்காமல் இருக்க அக்குறுநில மன்னர்களைக் கப்பம் கட்டும்படி வலியுறுத்தினார்கள். 

இப்படிப் பெயரே இல்லாமல் குணமும் பண்பும் நிறைந்த எத்தனையோ சிற்றரசர்கள் வரலாற்றில் இடம் பெறாமல் போயிருக்கிறார்கள்.  அந்த வகையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடைத்திறனும், ஆளுமையும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

மன்னன் நல்லியக்கோடன்

            ஆற்றுப்படை – வழிப்படுத்துதல், நெறிப்படுத்துதல், பரிசில் பெற்ற பாணன் ஒருவன் வறுமையில் வாடும் மற்றொரு பாணனிடம் ஓய்மானாட்டு நல்லியக்கோடனிடம் பரிசிலைப் பெறுமாறு கூறுகின்றான்.  தொண்டடை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் ஓய்மான் நாட்டில் மாவிலங்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன்.  இவனுடைய ஆட்சியின் கீழ் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.

            “உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்” (சிறுபாண். 122)

            தமிழகத்தில் சிறந்து விளங்கிய குடிகளுள் ஒன்று ஓவியர்குடி ஆகும்.  ஓவியர் குடியில் பிறந்ததனால் நல்லியக்கோடன் ஓவியர் பெருமகன் எனப்பட்டான்.  ஓவியர் குடியே பின்னாளில் ஓய்மாநாடு என்றானது.  இவ் “ஓவியர் குடி நாகர் குடியினுள் ஒரு பிரிவாகும்”3 என நாராயண வேலுப்பிள்ளை கூறுகிறார்.  நீண்ட மூங்கில் மரங்கள் நிறைந்து விளங்குகின்ற மலையை உடையவன் நல்லியக்கோடன் ஆதலின் இவனைக் குறிஞ்சி நிலத்தலைவன் எனச் சான்றோர்கள் கூறுவார்கள்.  வீரத்திலும் குணத்திலும் சங்ககால மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்தவன்.

சேர, சோழ, பாண்டியர்கள்

            பெரிய வாயையுடைய எருமை, கொழுத்த மீன்கள்  காலடியிலேயே பட்டு நசுங்கும்படி வயலியே இறங்கி நடந்தது.  அங்குள்ள செங்கழுநீர் மலர்களை மேய்ந்தது.  மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கின்ற ஒரு பலா மரத்தின் நிழலை அடைந்தது.  தேன் கமழும் அந்தச் செங்கழுநீர் மலர்களை மென்று கொண்டே காட்டு மல்லிகைகள் நிறைந்த படுக்கையிலேப் படுத்துக் கொண்டது.

                        “கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்

                        கழுநீர் மேய்ந்த கடவாய் எருமை

                        பைங்கறி நிவந்த பலவின் நிழல்” (சிறுபாண். 41-43)

இவ்வடிகளால் எருமையின் செயலை எடுத்துக் காட்டுவதன் வாயிலாகச் சேர நாட்டின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் விளக்குகிறார்  ஆசிரியர். கொற்கையின் செல்வம் முத்தும் உப்புமாகும்.  மதுரை மாநகரமானது மகிழ்ச்சி மிகுந்திருக்கின்ற மக்கள் வாழும் தெருக்களையுடையது என்றும்,   தமிழ்சங்கம் நிலைபெற்று மதுரையில் வளர்ந்தது எனவும், பாண்டிய நாட்டின் வளத்தையும், தமிழின் சிறப்பைப் பற்றியும் ஆசிரியர் உரைக்கின்றார்.

              “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்

               மகிழ் நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 66-67)

      மேலும் வயல்களிலே தாமரைகள் பூத்திருக்கின்றன.  அத்தாமரைகளிலே வண்டுகள் தங்கள் பெடைகளைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பன்ணைப் பாடிக் கொண்டிருக்கின்றன எனச் சோழ நாட்டின் வளத்தைக் குறிப்பிடுகிறார்.  நல்லியக்கோடனுடைய நாட்டிலே  எண்ணற்ற செல்வங்கள் இருந்தன,  வளமிகுந்த சேர பாண்டிய சோழ நாட்டைக் காட்டிலும் வற்றாத செல்வங்கள் குவிந்திருந்தன.  ஓய்மானாடே உயர்ந்த செல்வமுடைய நாடு என்பதைக் குறிக்கவே முடியுடை வேந்தர்கள் மூவர் நாட்டையும் புகழ்ந்து பாடுகின்றார்”4 என சாமி சிதம்பரனார் கூறுகின்றார்.

            நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடனின் சிறப்பைக் கூறும்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வலிமை, வளத்தை விட நல்லியக்கோடனின் வளம் மேன்மையுடையது என்பதை அறியலாம்.

கடையெழு வள்ளல்கள்

            சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமல்லாமல் கடையெழு வள்ளல்களை விடவும் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறந்தவனாகவே விளங்குகின்றான்.

            “பெருங்கல் நாடன் பேகன்

            மறம்பின் கோமான், பாரியும்

            கழல்தொடித் தடக்கை, காரியும்

ஆர்வ நன்மொழி, ஆயும்

            அரவக் கடல்தானை அதிகனும்   

            நளிமலை நாடன், நள்ளியும்

            ஓரிக் குதிரை, ஓரியும்” (சிறுபாண். 85-113)

            பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி போன்ற ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையைப் புகழ்ந்த பின்னர் இவர்களுக்குப் பிறகு நல்லியக்கோடன் ஒருவனே நடத்தி வந்தான் என ஆசிரியர் குறிப்பிடுவது நல்லியக்கோடனின் உன்னதக் கொடைத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

வறுமையிலும் வண்மை

            நாட்டிலே என்னதான் வாரிக் வாரிக் கொடுக்கும் மன்னன் இருந்தாலும், தவறாது பொழியும் மழை பொய்த்து விட்டால் மக்களால் என்ன செய்ய முடியும்?  தன்னை நாடி வந்தவர்களுக்கு கைமாறு பார்க்காமல் உதவின நல்லியக்கோடனுடைய ஓய்மானாட்டிலும் வறட்சியால், பஞ்சத்தால் வறுமை உண்டாயிற்று,

            “வளைக்கைக் கிணைமகள், வள்ளுகிர்க்குறைத்த

            குப்பை வேளை உப்பிலிவெந்ததை,

            மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து” (சிறுபாண். 136-138)         

பசியினால் வருந்தி வாடுகின்ற கிணைவாசிப்போன் மனைவி அவள் வீட்டிலே உணவை ஆக்குவதற்கு ஒரு பண்டமும் இல்லை. உடனே அவள் குப்பையிலே பயிரான வேளைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளியெடுத்தாள்.  உப்பில்லாமல் வேகவைத்தாள். அண்டை வீட்டார்கள் அதைப் பார்த்தால் பரிகசிப்பார்களே என்று நாணமடைந்து வாயில் கதவைச் சாத்திக் தாளிட்டுக் கொண்டாளாம்.  வீட்டினுள்ளே நிறைந்த தன் சுற்றந்துடன் உண்டாள் என ஆசிரியர் குறிக்கின்றார்.  சேர, சோழ, பாண்டியர் மற்றும் கடையெழு வள்ளல்களின் சிறப்பையும், கொடைத் திறனையும் கூறிய ஆசிரியர் இப்படிப்பட்ட வறுமை நிலையையும் கூறியுள்ளார்.  தன் மக்கள் பஞ்சத்தால் வாடி வருந்தும் போது நல்லியக்கோடனே நேரில் வந்து நலம் விசாரித்தும், அக் குடும்பத்திற்கு தேவையான கொடையளித்தும் இருக்க வேண்டும் என்பதால் தான் ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.  மன்னனே நேரடியாக மக்களின் குறையைக் கேட்டுத் தீர்த்து வைத்துள்ளான் என்பது நல்லியக்கோடனின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது.        

விருந்தோம்பல் பண்பு

            தன்னை நாடி வந்தவர்களுக்கு வயிராற உணவைக் கொடுத்தவன் நல்லியக்கோடன்.  நெய்தல் நிலத்திலே வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள்.

            “வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்” (சிறுபாண். 163) வறல் குழல் என்பது காய்ந்த கருவாட்டைக் குறிக்கும். இந்தக் கருவாட்டுக் குழம்பினைச் சுடச்சுட ஒவ்வோரிடத்தும் பெற்றுக் கொள்ளலாம்.  வேடர் குலப் பெண்கள் சோற்றோடு புளியைச் சேர்த்துச் சமைப்பார்கள். தான் வேட்டையாடிக் கொண்டு வந்த ஆமானையும் சமைப்பார்கள்.  புளிச் சோற்றோடு ஆமான் கறியையும் விருந்தினர்க்கு இட்டுத் தானும் உண்டார்கள்.  

            உழவர் குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள்.  வயல்களிலே பிடித்த நண்டையும், காட்டிலே விளைந்த பீர்க்கங்காயையும் சேர்த்து சமைத்தார்கள் என்பதை,

            “இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த    

            அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,

            கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவிர்;” (சிறுபாண். 193-195)

என ஆசிரியர் கூறுகிறார். இவ்வாறு எயினர்கள், வேடர்கள், உழவர்கள் ஆகியோர் விருந்தோம்பலைச் செய்து வந்தார்கள். அரசனான நல்லிக்கோடன் தான் மட்டும் விருந்தோம்பலைக் கடைபிடித்ததோடு நின்றுவிடாமல் தன் மக்களையும் அவ்வாறு செய்ய வைத்து   நாட்டில் உள்ள மக்களிடையே உதவும் பண்பையும் வளர்த்தான். மேலும் மூங்கிலின் உட்பட்டையை உரித்தலைப் போன்று தூய ஆடையினை உடுக்கத் தருவான்.  பாம்பின் நஞ்சேறி மயக்கினார்ப்போன்று களிப்புத் தரும் கள்ளைப் பருகத் தருவான்.  வீமன் மடை நூலில் குறித்தப்படி சமைக்கப்பட்டப் பல்வேறு உணவு வகைகளை அவனே பக்கத்தில் நின்று பரிசிலரை உண்ணச் செய்யும் தகைமையுடையவன் நல்லியக்கோடன் என்னும் மன்னன்.  முடிவேந்தரின் அரண்களை அழித்து அப்பகைவர் நாட்டில் பெற்ற பொருள்களைக் கொண்டு தன்னை நாடி வந்தவர்களின் வறுமையைப் போக்கியவன்.  பாணர்களுக்கு வேலைப்பாடு அமைந்த தேர், யானை, குதிரை முதலியவற்றையும், பல வகையான ஆடை, அணிகலன்களையும் அளவின்றித் தந்து உதவக் கூடியவன் ஆவான்.          

நல்லியக்கோடானின் குணநலன்கள்

            போர் வீரர்களும், பெண்களும், மக்கள் பலரும் நல்லியக்கோடனின் குண நலன்களைப் போற்றுகின்றனர். வேந்தனிடம் இருக்க வேண்டிய பண்புகளாக “1)ஆண்மை, 2) அருள், 3) கொடை, 4) காட்சிக்கு எளிமை. 5) நாள்தோறும் நல்லற வினைகள் செய்தல், 6) அன்பு மனைவியரைப் பிரியாமை,”5 போன்றவை கண்டிப்பாக வேண்டும் என அரங்க. இராமலிங்கம் கூறுகிறார்.  சிறுபாணாற்றுப்படையில்; நல்லியக்கோடனைப் பற்றிக் குறிக்குங்கால்

            “செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,

                இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,

                செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ரத்த,” (சிறுபாண். 207-209)

என்கிறார். சான்றோரும், போர் மறவரும், அரிவையரும், பரிசிலரும் அவனை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.  செய்ந்நன்றி மறவாப் பண்பினன், சிற்றினம் சேராச் சிறப்பினன், இனிய முகத்தினன், அவன் வீரத்திற்கு அஞ்சிப் பகைவர்கள் அடிபணிவார்கள்.  அவனுடைய அருளும் திறன், வெகுளாமைப் பண்பு, அஞ்சாமை, ஆண்மை முதலியவை நல்லியக்கோடனின் குணநலன்களாகக் கூறப்படுகின்றன.

            தாய், தந்தை, ஆசிரியர், தமையன், அந்தணர், அறவோர் ஆகியோரைப் பலகாலும் வணங்கும் தன்மை உடையவன். உழவர்களுக்கு நிழல் போன்றவன். பரிசிலருக்கு நல்லியக்கோடன் தந்தையைப் போன்றவன்.

            வறுமையுற்றுக் கிடக்கும் மக்களுக்குத்தான் கொடை தேவைப்படும். உழைப்பினால் செல்வ நிலைகளில் வளர்ச்சி பெற்று இருக்கும் மக்களுக்குக் கொடையும் மன்னனின் அவரவணைப்பும் தேவைப்படாது.  ஆனால் வறுமை நிலையில் வாடிக் கிடக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி புரிதலே உண்மையான அன்பாக இருக்க முடியும்.  இத்தமிழகத்தில் பல அரசர்கள் ஆண்டிருப்பினும், வெளியில் தெரியாத ஓய்மானாட்டு நல்லியக் கோடனின் கொடையும் ஆளுமையும் பாராட்டத்;தக்கது.

சான்றெண் விளக்கம்

1.         சங்ககால வாழ்வியல், டாக்டர்.ந.சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ப.49

2.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க. இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.30

3.         பத்துப்பாட்டு (முதற்பகுதி) எம். நாராயண வேலுப்பிள்ளை, முல்லை நிலையம், சென்னை, ப.113.

4.         பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், சாமி. சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை, ப.67.

5.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.98.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

பரத்தையர்கள் ஓர் ஆய்வு

மங்கையராய் பிறப்பதற்கேநல்ல

மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”.

            என்று பெண்மையின் சிறப்பை கவிமணி பாடியதற்கு இணங்க நம் நாட்டின் பெண்கள் கண்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாய், மகள், மனைவி, தோழி என பல்வேறு படி நிலைகளில் தன்னை இவ்வுலகிற்கே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பெண்களின் வாழ்வு அலைக்கழிக்கப்படுவதும், தூக்கி எறியப்படுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. அவ்வாறு தொன்று தொட்டுவரும் மனிதர்களின் வாழ்க்கையில்பரத்தையர்என்றொரு குலம் காலம் காலமாய் மனித சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

யார் இந்த பரத்தையர்கள்?

            பழங்காலத்தில் தன் நகரத்தை விட பக்கத்தில் உள்ள நகரம் செல்வ சிறப்புமிக்கது எனில், உடனே அந்நகரை கைப்பற்ற எண்ணம் உருவானது. அக்கால மன்னர்களுக்கு அதன் விளைவாக எதிர் நாட்டு மன்னனை வழிய அழைத்துப் போரிட்டனர். இப்போரில் வெற்றி தோல்வி என்பது இரு நாட்டு மன்னர்களுக்கு தான். ஆனால் இப்போரிலோ உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையோ பல. மனிதர்கள் மட்டுமின்றி குதிரை, யானை போன்ற விலங்குகளும் தான்.

            இப்படிப்பட்ட பொறாமை, வஞ்சகம், ஆசை உள்ள காலக் கட்டத்தில் பகை நாட்டு மன்னனை தோற்கடித்த கையோடு அவ்வீரர்கள் அந்நாட்டில் உள்ள பொன், பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். இது போதாது என்று பெண்களின் தலைமுடியினை அறுத்து தன் தேரை இழுக்கப் பயன்படுத்தினான் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. மேலும் போரிலே இறந்த வீர மறவர்களின் மனைவி அன்றிரவே தன் கணவனோடு தீயினுள் புகுவாள். இல்லையென்றால் பகை நாட்டு மன்னன் பெண்களை வழிய இழுத்து செல்வான். அங்கு அவன் நாட்டிலே அடிமைகளாகவும், வீரர்களுக்கு தன் உடல் மூலம் விருந்து படைப்பவளாகவும் இருந்து சாகவேண்டும். இப்படியெல்லாம் புண்படுவதைவிட இன்றே கணவனோடு தீ புகுதல் தகும் என மகளிர்கள் நினைத்திருக்க வேண்டும். ‘‘இதுவே, பின்னாளில் உடன்கட்டை ஏறுவதற்கு காரணமாய் இருந்ததது’’1என முனைவர். .முத்துச்சிதம்பரம் கூறுகின்றார்.

            கணவனோடு தீ புகுந்த மகளிர்களின் மகள்கள் தன் பெற்றோரை இழந்து அநாதை ஆக்கப்பட்டு இருக்கலாம். அந்த சின்னஞ்சிறு வயதில் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அந்த ஊரில் உள்ள கோவில்களில் வாசலை கூட்டியும், பெருக்கியும் வேலை செய்து அங்கு கொடுக்கும் உணவினை உண்டு தனது வாழ்க்கையினை நடத்தியிருக்கலாம். சொந்தபந்தம் இல்லாத அவர்களை சில ஆண் நாயக வர்க்கத்தினர் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்திருக்கலாம். காலம் செல்லச் செல்ல இதுவே தொழிலாக மாறி இருக்க வேண்டும்.

தொல்காப்பியர் கூறும் பரத்தையர்கள்

பரத்தையர்கள் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்கு முன்னே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தனது கற்பியலில்

            பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்

            நீர்த்தகன்று உறையார் என்மனார் புலவர்

            பரத்தையற் பிரிந்த காலையான” (தொல்.கற்பு.185)

எனத் தலைவன் தன் மனைவிக்கு பூப்பு வெளிப்பட்டு பன்னிரெண்டு நாளும் அகலமாட்டான். அதன்பிறகு பரத்தையரின்; இல்லத்திற்கு செல்வான் என்றும், தொல்காப்பியர் பரத்தையரைகாமக்கிளத்தியர்எனவும் அழைக்கின்றார்.

சங்க காலமும் பரத்தையரும்

            சங்க கால இலக்கியத்தில் அகப் பொருள் பாடல்களில் பரத்தையர் பிரிவுச் செய்தியைக் காணலாம். குறிப்பாக மருதத் திணை பாடல்களில் மிகுதியாக காணப்படும். சங்க காலத்தைப் பொறுத்தவரைபரத்தமை என்பது ஒழுக்கமாகவே கருதப்பட்டிருக்கிறதுபரத்தை, கணிகையர், சேரிப் பரத்தையர், காம கணிகையர், காதல் பரத்தையர், காம கிளத்தியர், உரிமை மகளிர் எனப் பல்வேறு பெயர்களுடன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவ்வகை பரத்தியர்களில் இரு வகை உண்டு. முதலாவதாக தினம் தினம் ஒரு ஆடவரோடு தம் வாழ்க்கையை நடத்திய பரத்தியர்கள் சேரிப்பரத்தியர் அல்லது காம கணிகையர் எனப்பட்டனர். இரண்டாவதாக ஏதேனும் ஒரு ஆண் மகன் மேல் விருப்பம் கொண்டு அவன் ஒருவனோடு மட்டும் சேர்ந்து வாழ்தல், ஆனால் அவர்கள் திருமணம் மட்டும் செய்வதில்லை என்ற குறிக்கோளும் இருந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக கோவலன், மாதவி உறவைச் சுட்டிக் காட்டலாம்.

பரத்தையரின் வாழ்க்கை

            மதுரைக் காஞ்சியில்; பரத்தை ஒருத்தி கூர்மையான பற்களையும், மூங்கில் போன்ற தோளினையும், கைவந்திகை என்னும் அணிகலனும், நீண்ட கருமயிரினை உடையவளும், இனிமையாக பேசும் திறனுடையவளான இவள், தன்னை அழகு செய்து கொண்டு வீதிகளில் மெத்தென நடந்து இளைஞர்களை கைத்தட்டி அழைத்தாளாம் என்பதனை,

            மயில் இயலோரும், மட மொழியோடும்,

            கைஇ மெல்லிதின் ஒதுங்கி, கைஎறிந்து,

            கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப” (மதுரை.418-420)

என ஆசிரியர் கூறுகின்றார். மேலும் காமம் நுகர்ச்சியின்றி வேறொன்றையும் அறியாத இளைஞர்களை மயக்கி புணர்ந்தார்கள். இவர்கள்;நீண்ட வீதிகளிலும் வீடுகள் தோறும் கையில் மணம் கமலும் பூக்களை ஏந்தியவர்களாய் நிற்பார்களாம்.   ஐங்குறுநூற்றில் பரத்தையர் வீட்டிற்கு சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது, இதற்கு அன்பே காரணம் என ஆசிரியர் கூறுகிறார். “ஆண்கள் பரத்தையர்களின் வீட்டிற்கு போகும் குணமுடையவராக இருப்பினும், இல்லாவிடினும் எப்போதும் அன்புடன் தான் இருந்தார்கள்”2 என சாமி சிதம்பரனார் கூறுகிறார்.

            பண்டைய தமிழர்கள் பலதாரமணம் புரிந்து வந்துள்ளனர். தலைவன் பரத்தையரிடம் செல்வதும், தலைவி ஊடல் கொள்வதும் தன் குழந்தையை முன்னால் நிறுத்தி தலைவன் தலைவியின் ஊடலை தணிப்பதும், பரத்தை தன் தலைவனின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதும்; அதனைக் கண்ட தலைவி பரத்தையை திட்டுவதும் மருதத்திணையில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும். இப்பரத்தையர்களால் பல குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் எழுந்தது. பரிபாடல் தலைவி ஒருத்தி பரத்தையை காமுகர்க்கு பொதுமகளின் இரண்டு இதழ்களும் சேர்த்த பன்றித் தொட்டி, உழுகின்ற சால் என பழித்துரைக்கிறாள்(பரி.20). இப்பரத்தையர் ஒழுக்கத்தினை சான்றோர்களும், பெண்களும் கண்டித்தும் இருக்கிறார்கள்.

வள்ளுவர் குறளில் பரத்தையர்

            பெண்இயலார் எல்லோரும், கண்ணின் பொது உண்பர்

            நன்னேன், பரத்தநின் மார்பு” (குறள்.132-1)

            என வள்ளுவர் பரத்தையர்கள் உன் மார்பினை கண்ணால் கண்டு அனுபவிப்பர். ஆதலால் நான் உன்னை அணைக்கமாட்டேன் என தலைவி கூறுகிறாள். ஆக இருண்ட காலத்தில் களவு, சூது, பொய், வஞ்சகம் இவையெல்லாம் நடந்திருக்கும்போது கண்டிப்பாக பரத்தையரின் வாழ்க்கையும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

தேவாரக் காலம்

            சமணமும், பௌத்தமும், இசையும், நடனத்தையும் அறவே வெறுத்தன. ஏனெனில் அவை காமம் விளைவிக்கும் என்பதால். ஆனால் சைவம், வைணவம் போன்ற மதங்கள் இசையையும், நடனத்தையும் போற்றியது. அப்போது நடனம் கற்றுக் கொண்ட நடன மகளிர்கள் வேத்தியல், பொதுவியல் போன்ற கூத்துக்களை ஆடினர். “மதுரையில் அரசன் முன்னால் நாடக கணிகையர் நடன அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவர்களுக்கு பாண்டியன் தலைக்கோலிப் பட்டம் அளித்ததோடு, அவர்கள் ஆடல், பாடல்களுக்கு 1008 கழஞ்சு பொன் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டனர்.”3 என முனைவர் எஃப் பாக்ய மேரி கூறுகிறார்.

பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்

            சிலம்பில் மாதவியின் தோற்றமே கணிகையர் குலத்தை வெளிக்காட்டத்தான் என்பது போலவே ஆசிரியர் அமைத்திருக்கின்றார். தனது குலத்தொழிலான பரத்தமையை ஏற்கும்படி தாய் சித்ராபதி மாதவியிடம் கூறுகின்றாள். நடனத்தில் கற்று தேர்ந்துள்ள மாதவியும் பரத்தமை தொழிலுக்கு ஒத்துக்கெண்டு கூனியிடம் ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவரை இங்கு கூட்டி வா என கூறுகிறாள். இதனை,

நூறு பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன,

மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து,”(சில்மபு.164-167)

            கோயிலில் மாதவியின் நடனத்தை கண்டு ரசித்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கி, அன்றிரவே மாதவியுடன் இன்பம் நுகர்ந்தான். சோழர் காலத்தில் கோயில்களில் ஆடவும் பாடவும் நிவந்தங்கள் கொடுக்கப்பட்டன. “தஞ்சைக் கோயிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆளுக்கொரு வேலி நிலம் கொடுக்கப்பட்டது. பதிலியார் என இவர்கள் பெயர் பெற்றனர். இக்காலத்தில் திருவிழாக்களில் இவர்களது நடனம் தவறாது இடம் பெற்றது.”4

நாயக்கர் காலம்

            தேவரடியார்கள் என்ற வழக்கம் நாயக்கர் காலத்தில் தேவதாசி முறை என மாறிப்போய் இருந்தது. “நாயக்கர் மன்னர் காலத்தில் தேவதாசிகள் என்போர் கோயில்களில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் பூசையின் போது சிலைக்கு முன் நடனமாடியதோடு இறைவனுக்கு உணவூட்டியதாக டாக்டர் .தட்சிணாமூர்த்தி கூறுகிறார். கோயிலுக்கு பெண்களைப் பொட்டுகட்டும் வழக்கம் இவர்கள் காலத்தில் இருந்தது. அரண்மனையில் இருந்த அரசன் சிலைக்கு முன் நின்று ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மகளிர் நடனம் ஆடினர் என்கிறார் நியுனிசு.”5

கணிகையர்கள் கற்று வைத்திருக்க வேண்டிய கலைகள்:

1.         வேத்தியல் மற்றும் பொதுவியல் கூத்துக்கள்

2.         பந்தெறிந்து ஆடதல்

3.         உணவு வகை பற்றிய கலை

4.         காதற்கலையின் எல்லா செயல்களும்

5.         திறம்படவும் நயம்படவும் பேசுங்கலை

6.         பிறர் காணாது திரியும் கலை

7.         பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை

8.         வேடமணிதல்

9.         சோதிடம் முதலிய 64 கலைகளை உணர்ந்திருத்தல்6

கணிகையர் இவையெல்லாம் கற்றிருக்க வேண்டுமென முனைவர் .சுப்ரமண்யன் கூறுகின்றார். இப்பரத்தையர்கள் தங்களது தொழிலை செய்யாது விடுப்பின் தண்டனையும் தரப்பட்டது.

இக்காலத்தில் பரத்தையர்

            பரத்தையர் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும், புன்சிரிப்பையும் மயக்கும் கண்களையும் எப்போதும் தன்னிடத்தில் கொண்டிருப்பவர்கள். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற எத்தனையோ இலக்கியங்கள் இவர்களின் நிகழ்வுகளை சொல்லி இருக்கின்றது. இத்தொழிலுக்கு காவல்துறை கடுமையான தண்டனையும் தருகின்றது. இருப்பினும் சினிமா மற்றும் கையில் காசு உள்ள செல்வந்தர்களின் கடற்கரை ஓர பங்களாவிலும் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வை தொலைத்த இந்த பெண்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.         பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் .முத்துச்சிதம்பரம், முத்துப்பதிப்பகம், திருநெல்வேலி. ஐந்தாவது பதிப்புஅக்டோபர் 2005,-91.

2.         எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்புஜூலை 2008,-37

3.         காலந்தோறும் தமிழர் கலைகள், முனைவர் எஃப்.பாக்யமேரி, அறிவுப்பதிப்பகம், சென்னை. முதல்பதிப்புமார்ச் 2008,-48

4.         மேலது. -84.

5.         மேலது. -85

6.         சங்ககால வாழ்வியல், முனைவர் . சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இரண்டாம் பதிப்புஜனவரி 2010, -398

 

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »