Sunday, April 5, 2026
Home Blog Page 36

இளையான்குடி மாற நாயனார்‌

இளையான்குடி-மாற-நாயனா

        இளையான்குடி என்னும்‌ ஊரில்‌ வேளாளர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ மாறனார்‌ என்பவர்‌ ஆவார்‌. வேளாண்மையில்‌ பெரும்‌ செல்வம்‌ ஈட்டிய இவர்‌ சிவபெருமான்‌ மீதும்‌ அடியவர்‌ மீதும்‌ அரும்பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்‌களுக்கு அமுது படைப்பதை அரும்பெரும்‌ தொண்டாகக்‌கருதி செய்து வந்தார்‌.

      மாறனாரின்‌ பெருமையை உலகுக்கு அறிவிக்க சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. அதனால்‌ மாறனாரின்‌ மலை போன்ற செல்வம்‌ கரையத்‌தொடங்கியது. வறுமை மெல்ல மெல்ல நாயனாரைப்‌ பற்றிக்‌கொண்டது. மாறானர்தன்னிடமிருந்த பொருள்களை விற்றுவிற்று அடியவர்களுக்கு அமுது படைக்கும்‌ தொண்டினை விடாது செய்து வந்தார்.  வறுமை முற்றியது. பலரிடம்‌ கடன்‌பெற்று அடியவர்க்கு அமுது படைத்தார்‌ நாயனார்‌.

        அவ்வாறிருக்கையில்‌ ஒருநாள்‌ இரவு உண்ண உணவு ஏதுமின்றி பசியோடு தன்‌ குடிசை வீட்டில்‌ படுத்திருந்தார்‌. அது மழைக்காலம்‌. வெளியில்‌ கடும்மழை பெய்து கொண்டிருந்தார்‌. அவ்வேளையில்‌ வீட்டின்‌ கதவு தட்டப்பட்டது. மாறனார்‌ எழுந்து கதவைத்‌ திறந்தார்‌. வாசலில்‌ அடியவர்‌ ஒருவர்‌ நின்றிருந்தார்‌. அடியவரைக்‌ கண்ட மாறனார்‌, அவரை வீட்டினுள்‌ அழைத்து, அவரது தேகம்‌ துடைத்திட துண்டு தந்து, அமரச்‌ செய்தார்‌.

       பிறகு மனைவியிடம்‌ வந்து அடியவர்க்கு ஏதேனும்‌ உண்ணத்‌ தரவேண்டுமே என்று கூறினார்‌. வீட்டிலே அரிசி சிறிதும்‌ இல்லை. மாறனாரும்‌ அவரது மனைவியும்‌ என்ன செய்தென்று புரியாமல்‌ தவித்தனர்‌. உடனே அவரது மனைவியார்‌, “இன்று வயலில்‌ விதைநெல்‌ தூவினோமே. அந்நெல்மணிகளை எடுத்து வருவீராயின்‌, அடியவர்க்கு அமுது படைக்கலாம்‌!” என்று யோசனை கூறினார்‌.

       மாறனாரும்‌, மழையைப்‌ பொருட்படுத்தாது, தலையில்‌ ஒரு கூடையைக் கவிழ்த்தபடி வயலுக்கு ஓடினார்‌. அங்கே நாற்றங்கால்‌ நீரில்‌ மிதந்து கொண்டிருந்த நெல்மணிகளைச்‌ சேகரித்து கூடையில்‌ அள்ளினார்‌. வீட்டை நோக்கி நடந்தார்‌.

         அரிசிக்கு நெல்‌ வந்து சேர்ந்தது. நெல்லை வறுத்து குத்தி அரிசியாக்க வேண்டுமே? அதற்கு விறகு வேண்டும்‌ என்று நாயனாரைக்‌ கேட்டார்‌. உடனே நாயனார்‌, தன்‌ வீட்டுக்‌கூரையின்‌ தாங்கு கட்டைகளை உருவித்தந்தார்‌. அவரது மனைவியாரும்‌ அக்கட்டைகளை விறகாக எரித்து நெல்லை வறுத்தார்‌. உரலில்‌ இட்டு அதைக்‌ குத்தி அரிசியாக்கி அமுது உண்டாக்கினார்‌.

       கறி சமைக்க காய்‌ ஏதேனும்‌ கொண்டு வரும்படி நாயனாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌ மனைவியார்‌. உடனே நாயனார்‌ வீட்டின்‌ பின்புறத்திற்குச்‌ சென்று அங்கு வளர்ந்திருந்த குப்பைக்‌ கரைகளைப்‌ பறித்து வந்தார்‌. அதைச்‌ கொண்ட மனைவியார்‌ கரி சமைக்கார்‌

     மனைவியார்‌ சமைத்து முடித்ததும்‌ நாயனார்‌, “அடியவரே! உணவு சமைத்தாகிவிட்டது. உணவு அருந்த வாருங்கள்‌! என்றபடியே, அடியவர்‌ படுத்திருந்த இடத்திற்கு வந்தார்‌. கணநேரத்தில்‌ அவ்வடியவர்‌ மறைந்தார்‌. அவ்விடத்தில்‌ சிவபெருமான்‌ உமாதேவியாருடன்‌ இடப வாகனத்தில்‌ தோன்றினார்‌. இறைவன்‌ நாயனாரை நோக்கி,

         “மாறனாரே! அடியவர்களைத்‌ தேடி அன்றாடம்‌ அமுதூட்டிய அன்பரே! உமது மனைவியாருடன்‌ எம்மிடம்‌ வந்து சேர்வீராக! அங்கு எல்லா இன்பங்களையும்‌ துய்ப்பீராக!” என்று இருவாக்கருளினார்‌.

          இளையான்குடி மாற நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ சிவலோகம்‌ சென்று பேரானந்தத்தில்‌ மூழ்கினர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார்‌

        தில்லையில்‌ குயவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ திருநீலகண்ட நாயனார்‌ ஆவார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அரும்‌ பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்களுக்கு திருவோடு செய்து கொடுப்பதைப்‌ பெரும்‌பேறாகக்‌ கருதினார்‌ இவர்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌.

        ஒருமுறை திருநீலகண்டர்‌ பரத்தையிடம்‌ சென்று வந்தார்‌. அதையறிந்த அவரது மனைவியார்‌ நாயனாரிடம்‌ பேசுவதை நிறுத்திக்‌ கொண்டார்‌. இல்லறத்தரசிக்குரிய பணிகளைச்‌ செய்தார்‌. எனினும்‌ நீலகண்டரைத்‌ தீண்டாது இருந்தார்‌. ஒருமுறை நாயனார்‌, தன்‌ மனைவியைத்‌ தீண்ட முற்பட்டபோது, அவர்‌ மனைவியார்‌, “நீர்‌ என்னைத்‌ தீண்டுவீராயின்‌ நான்‌ உயிர்‌ தரிக்க மாட்டேன்‌. இது நீலகண்டத்தின்‌ மீது ஆணை என்று சிவபெருமான்‌ மீது ஆணையிட்டார்‌. அன்றிலிருந்து இருவரும்‌ ஒரு வீட்டில்‌ இருந்தும்‌ உடல்‌ தொடர்பின்றி இருந்தனர்‌. அடியவர்க்கு தொண்டு புரிந்தும்‌ வந்தனர்‌. ஆண்டுகள்‌ பல ஓடின. நீலகண்டரும்‌ மனைவியாரும்‌ முதுமை அடைந்தனர்‌.

      நீலகண்டரையும்‌ அவரது மனைவியாரையும்‌ மீண்டும்‌ இணைத்திட சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணம்‌ ஒரு அடியவர்போல உருவம்‌ கொண்டு, நீலகண்டரின்‌ வீட்டை அடைந்தார்‌.

          நீலகண்டரிடம்‌ ஒரு திருவோட்டைத்‌ தந்து, “அன்பரே! இத்திருவோட்டை பாதுகாத்து வைப்பீராக. இத்திருவோடு தன்னுள்‌ வந்த பொருட்களை எல்லாம்‌ புனிதம்‌ அடையச்‌ செய்யும்‌ சக்தி பெற்றது. இதை நான்‌ வந்து கேட்கும்போது தருவீராக!” என்று கூறினார்‌. நீலகண்டரும்‌ மிக்க மகிழ்ச்சியோடு அதைப்‌ பெற்று வீட்டில்‌ வைத்தார்‌. அடியவர்‌ பெருமானும்‌ சென்றுவிட்டார்‌.

      நாட்கள்‌ பல கடந்தன. சிவபெருமானது திருவருளால்‌ திருவோடு காணாமல்‌ போயிற்று. சிலநாளில்‌ அடியவர்‌ மீண்டும்‌ நீலகண்டரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. தன்‌ திருவோட்டைத்‌ தருமாறு கேட்டார்‌. நீலகண்டரோ திருவோட்டை எங்கும்‌ தேடினார்‌. கிடைக்கவில்லை. மனம்‌ பதைத்தார்‌. அடியவரிடம்‌ சென்று வணங்கி, திருவோடு காணாமல்‌ போனதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ மிக்க கோபம்‌ கொண்டார்‌.

       அதைக்‌ கண்டு நடுங்கிய நீலகண்டர்‌, தான்‌ பழைய திருவோட்டிற்குப்‌ பதிலாக புதிதாக வேறு திருவோடு செய்து தருவதாகக்‌ கூறினார்‌. அடியவரோ பெருமை மிக்க தன்‌ பழைய திருவோடே வேண்டும்‌ என்று கூறினார்‌. நீலகண்டர்‌ அது காணாமல்‌ போய்விட்டதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ அதை நம்பவில்லை.

        “என்‌ பெருமை மிக்க திருவோட்டை நீர்‌ ஒழித்து வைத்துக்‌ கொண்டு, என்னை ஏமாற்றப்‌ பார்க்கிறாயோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டு, நீலகண்டர்‌, “ஐயா! என்‌மேல்‌ ஆணையாக நான்‌ அதைத்‌ திருடவில்லை!” என்று கூறினார்‌. இருப்பினும்‌ அடியவர்‌ அதை நம்பவில்லை.

      அவர்‌, “உன்‌ மேல்‌ ஆணைசெய்ய வேண்டாம்‌. உனக்கு மகன்‌ இருந்தால்‌ அவன்‌ கையைப்‌ பற்றிக்‌ கொண்டு, குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறினார்‌. அதற்கு நாயனாரோ, தனக்குக்‌ குழந்தைகள்‌ இல்லை என்று கூறினார்‌. உடனே அடியவர்‌, “அப்படியானால்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌!” என்று கூறினார்‌.

    அதற்கு நாயனாரோ, தான்‌ மனைவியோடு நெடுங்‌காலம்‌ ஊடல்‌ கொண்டிருப்பதாகக்‌ கூறினார்‌. உடனே அடியவர்‌, “என்னுடைய திருவோட்டைக்‌ களவாடியது உண்மைதான்‌. அதனால்தான்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய மறுக்கிறீர்‌. நான்‌ இவ்வழக்கை அந்தணர்கலிடம்‌ எடுத்துச்‌ செல்லப்‌போகிறேன்‌. அவர்கள்‌ வழக்கை விசாரிக்கட்டும்‌!” என்று கூறிச்‌ சென்றார்‌. அந்தணர்களிடமும்‌ வழக்கைக்‌ கூறினார்‌.

     அந்தணர்கள்‌ நீலகண்டரை அழைத்தனர்‌. வழக்கை விசாரித்தனர்‌. அவர்கள்‌ நீலகண்டரிடம்‌, “அடியவரது திருவோட்டை நீர்‌ களவாடவில்லை என்றால்‌ உம்‌ மனைவியாரின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்க வேண்டும்‌!” என்று உத்தரவிட்டனர்‌. என்ன செய்வதென்று புரியாது தவித்த நீலகண்டர்‌, ஒரு நீண்ட கோலை எடுத்து, அதன்‌ ஒரு முனையைத் தான்‌பற்றிக்‌ கொண்டு, மறுமுனையை தன்‌ மனைவியாரிடம்‌ பற்றிக்‌கொள்ளச்‌ செய்து இருவரும்‌ குளத்தில்‌ மூழ்கி எழுந்தனர்‌.

     அதைக்கண்ட அடியவர்‌, “கோலைப்‌ பற்றியபடி இருவரும்‌ மூழ்கினால்‌ நான்‌ நம்பமாட்டேன்‌. இருவரும்‌ கைகளைப்‌ பற்றிக்கொண்டு குளத்தில்‌ மூழ்கினால்தான்‌ நம்புவேன்‌!” என்று கூறினார்‌. யாதொரு வழியும்‌ தெரியாது தவித்த நீலகண்டர்‌, மனைவியாரிடம்‌ தன்மீது ஊடல்‌ கொண்ட காரணத்தை எல்லாம்‌ மானத்தை விட்டுக்‌ கூறினார்‌. மனைவியோடு குளத்தில்‌ மீண்டும்‌ மூழ்கி எழுந்தார்‌.

       மறுகணமே நீலகண்டருக்கும்‌ அவரது மனைவியாருக்கும்‌ முதுமை நீங்கியது. இருவரது உடல்களும்‌ இளமைத்‌ தோற்றம்‌ கொண்டன. அருகில்‌ நின்ற அடியவரும்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌.

     அவ்வேளையில்‌ சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனத்தில்‌ திருக்காட்சி அருளினார்‌. நீலகண்ட நாயனாரும்‌ அவரது மனைவியாரும்‌ பெருமானையும்‌ அன்னையையும்‌ பணிந்து தொழுதனர்‌.

       சிவபெருமானும்‌ அவ்விருவரிடம்‌, “இவ்வாலிபத்‌ தோற்றத்துடனே எம்‌ அருகில்‌ எப்போதும்‌ இருப்பீர்களாக!” என்று இருவரையும்‌ சிவலோகம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

சுந்தரர் வரலாறு

சுந்தரர்-வரலாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌

63 நாயன்மார்களில் ஒருவர்

        திருமுனைப்பாடி நாட்டிலுள்ள இருநாவலூரில்‌ ஆதிசைவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ ஆவார்‌. இவரது தந்தை சடையனார்‌தாய்‌ இசைஞானியர்‌ ஆவர்‌. பெற்றோர்‌ அவருக்கு இட்ட பெயர்‌ நம்பியாரூரர்‌. நம்பியாரூரர்‌ சிறுபிள்ளையா௧ இருக்கையில்‌, அவரைக்‌ கண்ட அந்நாட்டு மன்னரான நரசிங்கமுனையார்‌ அக்குழந்தையைத்‌ தனக்கே தருமாறு சடையனாரிடம்‌ கேட்டார்‌. சடையனாரும்‌ தந்தார்‌. நம்பியாரூரரும்‌ அரண்மனையில்‌ அந்தணக்‌ குழந்தையாகவே வளர்க்கப்‌பட்டார்‌. இவ்வாறு நம்பியாரூரர்‌ சிறப்புற வளர்ந்து திருமணப்‌ பருவத்தை எட்டினார்‌.

    புத்தூரில்‌ வசித்து வந்த சடங்கவி சிவாச்சாரியரின்‌ புதல்வியை, நம்பிக்கு மணம்‌ செய்து வைக்க சடையனார்‌ ஏற்பாடுகள்‌ செய்தார்‌. அதை ஊரில்‌ அனைவருக்கும்‌ தெரிவித்தார்‌. திருமண நாளும்‌ வந்தது. சடங்குகள்‌ எல்லாம்‌ நடந்தேறின.  நம்பியாரூரரும்‌ திருமணப்‌ பந்தலுள்‌ அமர்ந்தார்‌. சிவபிரான்‌, ஏற்கனவே தான்‌ கூறியபடி நம்பியாரூராரைத்‌ தடுத்தாட்‌கொள்ள நினைத்தார்‌.

சிவபெருமான்‌ தடுத்தாட்கொளல்‌

      சிவனடியாரைப்‌ போன்று வடிவெடுத்த சிவபிரான்‌, கையில்‌ ஒரு சிறிய ஒலையுடன்‌, திருமணப்‌ பந்தலிற்குள்‌ நுழைந்தார்‌. சபையோர்‌ சூழவிருந்த நம்பியாரூரரும்‌ அவரை வணங்கினார்‌. சிவனடியாரும்‌ தான்‌ வந்த காரணத்தை சபையோர்முன்‌ கூறினார்‌.

“நம்பியாரூரா! நீ எனக்குப்‌ பரம்பரை அடிமை. இத்திருமணத்தை உதறிவிட்டு என்‌ பின்னே வா!” என்றார்‌.

     நம்பியாரூரார்‌ சினம்‌ கொண்டு, “அந்தணருக்கு அந்தணர்‌ எப்படி அடிமையாக முடியும்‌? அதற்கு என்ன சாட்சி உள்ளது? என்று கடுமையாக வினவினார்‌.

    சிவனடியாரும்‌, “இதோ என்‌ கையிலுள்ள ஓலைதான்‌ அதற்குச்‌ சாட்சி. ஒலையை உன்னிடம்‌ காட்டத்‌ தேவையில்லை. நீ என்‌ பின்னே வா” என்று நடக்கலானார்‌. சினம்‌ கொண்ட நம்பியாரூரரும்‌, சிவனடியாரின்‌ பின்னே சென்று ஒலையைப்‌ பறித்துக் கிழித்தெறிந்தார்‌.

     உடனே சிவனடியாரும்‌ அருகில்‌ நின்றிருந்தவர்களைப்‌ பார்த்து, “என்‌ ஓலையை இவன்‌ கிழித்ததனால்‌, இவன்‌ என்‌ அடிமை என்பது உறுதியாயிற்று. இன்னும்‌ இதை மெய்பிக்கவேண்டும்‌ என்றால்‌ என்னோடு திருவெண்ணெய்‌ நல்லூருக்கு வாருங்கள்‌ என்றபடி நடந்தார்‌. எல்லோரும்‌ சிவனடியாரின்‌ பின்னே, திருவெண்ணெய்‌ நல்லூருக்குச்‌ சென்றார்கள்‌.

     திருவெண்ணெய்நல்லூரில்‌, சான்றோர்கள்‌ நிறைந்த சபைக்குச்‌ சென்றார்‌ அச்சிவனடியார்‌. நடந்தவற்றைக்‌ கூறினார்‌. அச்சான்றோர்களும்‌, “அந்தணர்க்கு அந்தணர்‌ அடிமையாதல்‌ வழக்கிலில்லையே? நீர்‌ கூறுவதை எப்படி நம்புவது? என்று வினவினர்‌.

அதற்கு அச்சிவனடியார்‌, “இதோ, நம்பி கிழித்தது படிஒலைதான்‌. மூல ஓலை என்னிடம்‌ இருக்கிறது, எடுத்து வருகிறேன்‌” என்று ஆலயத்தின்‌ சன்னிதிக்குப்‌ போய்‌ அதை எடுத்து வந்தார்‌. சான்றோர்களால்‌ அவ்வோலை வாசிக்கப்பட்டது. பின்‌, நம்பியாரூரரின்‌ பாட்டனாரின்‌ கையெழுத்தோடு ஒப்பிடப்பட்டு, அது உண்மையென்பது உறுதிப்படுத்தப்‌பட்டது. நம்பியாரூரரும்‌ கலங்கி நின்றார்‌. பின்‌ அனைவரும்‌, “சரி, அடியவரே! இவ்வோலையில்‌ உமது ஊர்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ என்று எழுதப்‌பட்டுள்ளதே. இங்கு உமது வீடுதான்‌ எங்குள்ளது?” என்று கேட்டனர்‌.

      அதற்கு அடியவரும்‌, “இதோ என்னிருப்பிடம்‌ இங்குள்ளது!” என்றபடி திருக்கோயிலினுள்‌ சென்று மறைந்தார்‌. நம்பியாருரார்‌ மட்டும்‌ தனியாக ஆலயத்தினுள்‌ பிரவேசித்தார்‌. உள்ளே சிவனடியாரைத்‌ தேடினார்‌. காணவில்லை. அங்கே, சிவபிரான்‌, உமாதேவியருடன்‌ ரிஷப வாகனத்தில்‌ நம்பிக்குக்‌ காட்சிக்‌ கொடுத்தார்‌. நம்பியாரூராரும்‌ மெய்‌சிலிர்த்தார்‌. பரமனை இருகரம்‌ கூப்பி வணங்கினார்‌. கயிலையில்‌ நடந்தவை அனைத்தும்‌ நினைவிற்கு வந்தது. எளியவன்‌ தன்‌ வேண்டுதலின்‌ பொருட்டு தன்னை தடுத்தாட்கொண்ட பெருமானின்‌ கருணை நினைந்து சிந்தையுருகினார்‌.

       சிவபெருமானும்‌ நம்பியை நோக்கி, “நீ என்னை வன்மையான வார்த்தைகளால்‌ பேசினாய்‌. எனவே இன்றுமுதல்‌ நீ ‘வன்தொண்டன்‌’ என்று அழைக்கப்படுவாய்‌ என்று இருவாக்கு அருளினார்‌. நம்பியாரூரரும்‌ ‘பித்தா பிறைசூடி’ என்னும்‌ திருப்‌ பதிகத்தைப்‌ பாடினார்‌.

      திருமணம்‌ தடைபட்டதால்‌, சடங்கவி சிவாச்சாரியாரின்‌ புதல்வியும்‌, நம்பியின்‌ நினைவாகவே இருந்து சிவனடி சேர்ந்தாள்‌. வன்தொண்டரோ அன்று முதல்‌ சிவபெருமானைத்‌ திருப்பதிகங்களால்‌ பாடித்‌ தொழுது வந்தார்‌. பல தருத்தலங்களுக்குச்‌ சென்று திருவதிகை என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

      திருவதிகை, அப்பர்‌ சுவாமிகள்‌ உழவாரப்‌ பணி செய்த இத்திருத்தலம்‌. எனவே அம்மண்ணை மிதிக்கக்‌ கூடாது என்ற எண்ணத்தில்‌ஆலயத்திற்குச்‌ செல்லாமலேயே இறைவனை வணங்கி அருகிலுள்ள மடத்தில்‌ படுத்தார்‌. அப்போது சிவபிரான்‌ கிழ அடியவராக வந்து சுந்தரரின்‌ அருகில்‌ படுத்தார்‌. தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையின்மீது படும்படி வைத்தார்‌. அதைக்கண்ட வன்தொண்டர்‌ சற்று தள்ளிப்‌ படுத்தார்‌. மீண்டும்‌ கிழ அடியவர்‌, தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையில்‌ வைத்தார்‌.

       வன்தொண்டருக்குச்‌ சற்று கோபம்‌ வந்தது. அவர்‌ அம்முதியவரை நோக்கி, “அடியவரே! நீர்‌ செய்வது முறையா?” என்று கேட்டார்‌. கிழ அடியவரும்‌, “என்ன வன்தொண்டா? என்னைத்‌ தெரியவில்லையோ ?]” என்ற படி மறைந்தார்‌. அப்போதுதான்‌ அவ்வடியவர்‌ யாரென்று வன்‌தொண்டருக்குப்‌ புரிந்தது. இறைவனின்‌ கருணையை நினைத்து மெய்‌ சிலிர்த்தார்‌.

     பிறகு திருவாரூர்‌ சென்றடைந்த வன்தொண்டரின்‌ பக்திக்கு மெச்சிய சிவபெருமான்‌, நம்பியாரூரைத்‌ தன்‌தோழராக ஏற்றுக்‌ கொண்டார்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டு வாழவும்‌ பணித்தார்‌. அதனால்‌ நம்பியாரூர்‌ தம்பிரான்‌ தோழர்‌ என்ற பெயர்‌ பெற்றார்‌. மேலும்‌ சிவபிரான்‌ நம்பியாரூரிடம்‌, “யாம்‌ உன்னைத்‌ தடுத்து ஆட்கொண்ட போது இருந்தபடி திருமணக்‌ கோலத்திலேயே எப்போதும்‌ இருப்பாயாக!” என்று கூறினார்‌. நம்பியாரும்‌ திருமணக்‌கோலம்‌ தாங்கியே எங்கும்‌ போய்‌ வந்தார்‌.

பரவையாரோடு இல்லறம்

     இந்நிலையில்‌, திருவாரூரில்‌ பரவை நாச்சியார்‌ என்ற மங்கையைக்‌ கண்டார்‌. அவர்மீது நம்பியார்‌ காதல்‌ கொண்டார்‌. பரவையாரும்‌ நம்பியார்‌ மீதுமையல்‌ கொள்ள இருவருக்கும்‌ பெற்றோர்‌ மணம்‌ செய்து வைத்தனர்‌. இருவரும்‌ இல்லறம்‌ நடத்தத்‌ தொடங்கினர்‌.

   ஒருநாள்‌ அடியவர்களுடன்‌ கோயிலில்‌ அமர்ந்திருந்த நம்பியாரூரர்‌ முன்‌ சிவபிரான்‌ காட்சி தந்தார்‌. திருத்‌தொண்டத்‌ தொகை” பாடும்படிக்‌ கூறினார்‌. நம்பியாரும்‌ அதைப்‌ பாடினார்‌.

      ஒருமுறை குண்டையூர்‌ என்னும்‌ ஊரிலே கிழவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ கனவிலே தோன்றிய சிவபிரான்‌, “வன்தொண்டருக்காக உம்மிடம்‌ நெல்‌ அனுப்பியுள்ளோம்‌. அவற்றை வன்தொண்டரிடம்‌ சேர்ப்பிப்பாயாக!” என்று கூறினார்‌.  கண்விழித்த கிழவர்‌, தன்‌ ஊர்‌ முழுவதும்‌ நெல்‌ மலையாகக்‌ கிடக்கக்‌ கண்டார்‌. உடனே நம்பியாரூரருக்குச்‌ செய்தி அனுப்பினார்‌. நம்பியாரூரார்‌ குண்டையூர்‌ வந்து நெல்மலைகளைக்‌ கண்டார்‌. பின்‌ சிவபெருமானை வேண்ட, சிவபூத கணங்கள்‌ வந்து அவற்றை திருவாருக்கு எடுத்துச்‌ சென்றன. நம்பியாரும்‌, பரவையாரும்‌ அவற்றை ஊர்‌ மக்களுக்கு வழங்கினர்‌.

      ஒருமுறை திருநாட்டியத்தான்குடி என்னும்‌ ஊரிலுள்ள கோட்புலியார்‌ நம்பியாஞரனின்‌ பெருமைகளைக்‌ கேட்டறிந்‌தார்‌. அவர்‌ தன்‌ இரு புதல்விகளான சிங்கடியையும்‌, வனப்பகையையும்‌ திருமணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌ என்று நம்பியாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. நம்பியாரூரரோ, இவ்விரு மங்கையரும்‌ தம்‌ புதல்வியர்‌ போன்றவர்கள்‌ என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்‌. அவ்விருவரையும்‌ தம்‌பதிகங்களில்‌ வைத்துப்‌ பாடிச்‌ சிறப்பித்தார்‌.

செங்கல்‌ பொன்னானது

      ஒரு பங்குனி உத்திரத்‌ திருநாள்‌ செலவிற்கு பொருள்‌ ஏதுமின்றித்‌ தவித்த பரவையார்‌, நம்பியாரூரரிடம்‌ தெரிவித்தார்‌. நம்பியாரும்‌ திருப்புகலூர்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. அன்று அவர்‌ அக்கோயிலின்‌ அருகேயுள்ள மடத்தில்‌ ஒரு செங்கல்லைத்‌ தலையணையாக்கி உறங்கினார்‌. சிவபிரான்‌ அருளால்‌ செங்கல்‌ பொன்னாக மாறியது. பரவையாரின்‌ குறையும்‌ நீங்கியது. இவ்வாறு பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்ற சுவாமிகள்‌, சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. பொன்னும்‌ பொருளும்‌ பெற்றார்‌.

     திருமுதுகுன்றம்‌ என்னும்‌ இடத்தில்‌ உறைந்தருளும்‌ சிவபெருமானைப்‌ பாடித்துதித்தார்‌. பெருமான்‌ நம்பியாருக்குப்‌ பன்னிரண்டாயிரம்‌ பொன்‌ தந்தார்‌. அப்போது நம்பியார்‌, சிவபிரானிடம்‌ இப்பொன்னைத்‌ திருவாரூரில்‌ தந்தால்‌, சிறப்பாகவிருக்கும்‌ என்று வேண்டிக்‌ கொண்டார்‌. சிவபெருமான்‌, “வன்தொண்டரே! இப்பொன்னை மணிமுத்தா நதியில்‌ இடுவீராக! பிறகு திருவாரூர்‌ சென்று அக்கோயில்‌ குளத்தில்‌ எடுத்துக்‌ கொள்வீராக!”  என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ அப்பொன்னை நதியில்‌ விட்டுவிட்டு, மாற்று உரை பார்க்கும்‌ பொருட்டு ஒரு சிறு துண்டு பொன்னை மட்டும்‌ வெட்டி எடுத்துக்‌ கொண்டார்‌. திருவாரூர்‌ சென்றார்‌. திருவாரூர்‌ மக்கள்‌ அறிய பொன்னை அவவூரின்‌ குளத்திலே எடுத்தார்‌. இரு பொன்னின்‌ மாற்றும்‌ ஒத்ததாக இருந்தது. சுந்தரரின்‌ பெருமையை மக்கள்‌ அறிந்தனர்‌.

       வன்தொண்டர்‌ பின்‌ பல திருத்தலங்களுக்குச்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. திருக்குருகாவூர்‌ என்ற இடத்திலும்‌, திருக்கச்சூர்‌ என்னுமிடத்திலும்‌ நம்பியாரூரர்‌ உணவின்றித்‌ தவித்தார்‌. அவ்வேளைகளில்‌ சிவபிரானே அடியவர்‌ கோலத்தில்‌ வந்து சுந்தரரின்‌ பசியைத்‌ தீர்த்தார்‌; தாகம்‌ தணித்தார்‌. இவ்வாறு சிவபிரான்‌ நம்பியாஞூரரைத்‌ தன்‌ தோழராகவே பாவித்து பல இடங்களில்‌ அருள்‌ செய்தார்‌.

     நம்பியாரூரரும்‌ இவ்வாறு பல திருத்தலங்களை வழிபட்டு தொண்டை நாடு வந்தார்‌. திருக்காஞ்சி, காமக்‌கோட்டம்‌ முதலிய இடங்களுக்குச்‌ சென்று இறைவனை வழிபட்டார்‌. இறுதியில்‌ திருவொற்றியூர்‌ வந்து சேர்ந்தார்‌.

சங்கிலி நாச்சியாரோடு திருமணம்‌

      திருவொற்றியூரில்‌ ஞாயிறு கிழவர்‌ என்பவரின்‌ புதல்வி சங்கிலியார்‌ என்னும்‌ மங்கை உமையன்னையிடம்‌ மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்க பெற்றோர்‌ பல வரன்களைத்‌ தேடினர்‌. ஆனால்‌ சங்கிலியாருக்கோ, ‘தான்‌ ஒரு சிவனடியாருக்கு மனைவியாகவே பிறந்தவள்‌’ என்ற உணர்வு தோன்றியிருந்தது. அதனால்‌ பெற்றோர்‌ கொண்டுவந்த வரன்களை எல்லாம்‌ மறுத்து வந்தார்‌.

       அவ்‌வேளையில்‌ சுந்தரமூர்த்தியார்‌ திருவொற்றியூர்‌ வந்தார்‌. அக்கோயிலில்‌ இருந்த சங்கிலியாரைக்‌ கண்டார்‌. காதல்‌ கொண்டார்‌. சங்கிலியாரைக்‌ கண்ட பொழுது முதல்‌, அவருக்கு அப்பெண்ணின்‌ நினைவாகவே இருந்தது. எனவே சிவபிரானிடம்‌, “இப்பெண்ணை நான்‌ மணக்க வேண்டும்‌!” என்று வேண்டினார்‌. இறைவனும்‌ அவ்வாறே நடக்கும்‌” என்று அருள்‌ செய்தார்‌.

     சுந்தரரைக்‌ கண்ட நாள்‌ முதல்‌ சங்கிலியாரும்‌ தன்‌ மனதை, நம்பியாரூரரிடம்‌ பறி கொடுத்திருந்தார்‌. அவ்வாறிருக்கையில்‌, ஒருநாள்‌ சிவபிரான்‌, சங்கிலியாரின்‌ கனவில்‌ தோன்றி, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்து கொள்ள விரும்புவதாகக்‌ கூறினார்‌. அதற்கு சங்கிலியாரோ, “பெருமானே! சுந்தரர்‌ ஏற்கனவே திருவாரூரில்‌ ஒரு பெண்ணைத்‌ திருமணம்‌ செய்துள்ளாரே! என்னை மணம்‌ செய்தால்‌ என்றேனும்‌ ஒருநாள்‌ என்னைப்‌ பிரிந்து திருவாரூர்‌ சென்றுவிட மாட்டாரோ!” என்று கேட்டார்‌.

       அதற்கு இறைவன்‌, “சுந்தரன்‌ அவ்வாறு செய்யாமலிருக்க, நீ அவனிடம்‌, உன்னைப்‌ பிரிந்து போகாதபடி சத்தியம்‌ வாங்கிக்‌ கொள்‌!” என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பிறகு சிவபிரான்‌ சுந்தரரின்‌ கனவில்‌ தோன்றி, “ நீ சங்கிலியார்‌ மேல்‌ வைத்த காதலை அவரிடம்‌ தெரிவித்தாகி விட்டது. ஆனால்‌ நீ அவளிடம்‌, அவளைப்‌ பிரிந்து போக மாட்டேன்‌ என்ற சத்தியம்‌ செய்து தர வேண்டும்‌” என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ இறைவனிடம்‌, “நான்‌ கோயிலின்‌ கருவறையின்‌ முன்‌ சத்தியம்‌ செய்து தருகிறேன்‌. பெருமானே! நீர்‌ அப்போது அக்கோயிலில்‌ உள்ள மகிழ மரத்தின்‌ கீழ்‌ வீற்றிருக்க வேண்டும்‌!” என்று கேட்டுக்‌ கொண்டார்‌. இறைவனும்‌ சம்மதித்தார்‌.

       ஆனால்‌ சிவபிரான்‌ தன்‌ திருவிளையாடலைத்‌ தொடங்கினார்‌. நேராக, சங்கிலியாரின்‌ கனவில்‌ சென்று, “சுந்தரன்‌ உன்னிடம்‌ சத்தியம்‌ செய்யும்போது, மகிழ மரத்தின்‌கீழ் சத்தியம்‌ செய்யும்படி கேட்டுக்‌ கொள்‌! என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பின்‌ செய்தியைத்‌ தன்‌ தோழிகளிடம்‌ கூறினார்‌.

      மறுநாள்‌ கோயிலில்‌ சங்கிலியார்‌ மறைந்திருக்க, அவரின்‌ தோழிகள்‌, சுந்தரரிடம்‌ ‘சங்கிலியாரைப்‌ பிரிய மாட்டேன்‌’ என்று சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டார்கள்‌. சுந்தரரும்‌ கோயிலின்‌ கருவறை முன்‌ சத்தியம்‌ செய்யச்‌ சென்றார்‌. தோழிகளோ, மகிழ மரத்தின்‌ அடியில்‌ சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டனர்‌. சுந்தரர்‌ என்ன செய்வதென்று புரியாமல்‌ விழித்தார்‌. வேறு வழியில்லாமல்‌ சத்தியம்‌ செய்து தந்தார்‌. அதைக்கண்ட சங்கிலியார்‌ மனம்‌ வருந்தினார்‌.

     சுந்தரருக்கும்‌ சங்கிலியாருக்கும்‌ திருமணம்‌ நடைபெற்றது. இருவரும்‌ மகிழ்ச்சியாக இல்லறம்‌ நடத்தினர்‌. சில மாதங்கள்‌ சென்றபின்‌, நம்பியாருராருக்கு திருவாரூர்‌ நினைவு வந்தது. அவர்‌ பரவையாரிடம்‌ செல்லநினைத்தார்‌. சங்கிலியாரிடம்‌ விடை பெற்றார்‌. இறைவனின்‌ தோழராக இருப்பினும்‌ சத்தியம்‌ தவறலாமோ? அதனால்‌ சிவபிரான்‌ சுந்தரரின்‌ இரு கண்களிலும்‌ பார்வையைப்‌ பறித்து விட்டார்‌. சுந்தரர்‌ கண்பார்வையின்றி தவித்தார்‌. இறைவனிடம்‌ தொழுதார்‌. பலநாட்களுக்குப்‌ பிறகு திருவெண்பாக்கம்‌ என்னுமிடத்தில்‌

       இறைவன்‌ சுந்தருக்கு ஒரு ஊன்று கோல்‌ தந்தார்‌. அதைப்‌ பெற்றுக்கொண்டு, பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்று, பதிகங்கள்‌ பாடி சிவபிரானைத்‌ தொழுதார்‌ சுந்தரர்‌. அவ்வாறு வருகையில்‌ காஞ்சி ஏகாம்பரநாதரைத்‌ தொழுகையில்‌ ஒற்றைக்‌ கண்ணில்‌ மட்டும்‌ பார்வை வந்தது. பிறகு பலத்‌ திருத்தலங்களைத்‌ தொழுது வருகையில்‌, திருத்துமுத்தி என்னும்‌ இடத்தில்‌ சிவபிரானை மனம்‌ வருந்தித்‌ தொழுதார்‌. மறு கண்ணிலும்‌ பார்வை பெற்றார்‌.

      இவ்வாறு பயணம்‌ செய்து இறுதியில்‌ திருவாரூர்‌ சென்றடைந்தார்‌. ஆனால்‌ பரவையார்‌, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்த செய்தி அறிந்து அவர்‌ மீது கடுங்கோபம்‌ கொண்டிருந்தார்‌.

சிவபெருமானைத்‌ தூது விடல்‌

      பரவையாரைக்‌ காணச்‌ சென்ற சுந்தரரை, பரவையார்‌ வீட்டினுள்ளேயே அனுமதிக்க மறுத்தார்‌. அவருடன்‌ பேசவும்‌ மறுத்தார்‌. சுந்தரர்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தி அவவூர்க்‌கோயில்‌ மண்டபத்திற்கு வந்து அமர்ந்தார்‌. பரவையார்‌, தன்னை வெறுத்ததை சுந்தரரால்‌ பொறுக்க முடியவில்லை. அவ்விரவே, தியாகேசப்‌ பெருமானைத்‌ தொழுதார்‌. ‘தன்‌மீது கோபம்‌ கொண்ட பரவையாரை ஆறுதல்‌ செய்து, தன்னை மீண்டும்‌ சேரும்படிச்‌ செய்ய வேண்டும்‌” என்று வேண்டினார்‌. சிவபெருமானும்‌ சுந்தரருக்காக அந்த நடுநிசியிலும்‌ பரவையாரிடம்‌ தூது செல்லச்சம்மதித்தார்‌.

      மறுகணமே சிவபிரான்‌ அடியவர்‌ கோலம்‌ கொண்டார்‌. தேவர்களையெல்லாம்‌ பிற அடியவர்களாக கோலம்‌ கொள்ளச்‌ செய்தார்‌. பரவையார்‌ வீடு நோக்திச்‌ சென்றார்‌. பரவையாருக்கு சுந்தரர்‌ மீது கோபம்‌ இன்னும்‌ அடங்கவில்லை. நடுநிசியிலும்‌ உறங்காது விழித்திருந்தார்‌.

    அவ்வேளை, சிவபெருமான்‌ அடியவர்‌ கோலத்தில்‌ சென்றார்‌. சுந்தரர்‌ மீது தவறேதும்‌ இல்லை என்று எடுத்துரைத்தார்‌. ஆனால்‌ பரவையார்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அவர்‌ அவ்வடியவரிடம்‌, “சுந்தரர்‌ எனக்கு வஞ்சகம்‌ செய்தார்‌!அதனால்‌ நான்‌ அவரை ஏற்றுக்‌ கொள்ள இயலாது!” என்று கூறிவிட்டார்‌.

    சிவபிரானும்‌ திரும்பி, சுந்தரரிடமே வந்தார்‌. நடந்ததைக்‌ கூறினார்‌. உடனே சுந்தரரும்‌, “பரவையார்‌ நித்தம்‌ வழிபடும்‌ சிவனே தூது வந்தார்‌ என்று அறிந்தும்‌, என்னை ஏற்றுக்‌ கொள்ள மறுக்கிறாளோ பரவையார்‌ இல்லாது என்னால்‌ உயிர்‌ வாழ முடியாது. எனக்காக நீர்‌ மீண்டும்‌ ஒருமுறை தூது செல்ல வேண்டும்‌!” என்று பணிந்து வேண்டினார்‌.

    சுந்தரர்‌ மீது பெருங்கருணை கொண்ட சிவபிரான்‌, மீண்டும்‌ பரவையார்‌ வீட்டிற்கு, தேவர்கள்‌ புடைசூழச்‌ சென்றார்‌. இந்நிலையில்‌ பரவையாரின்‌ மனதில்‌, ‘சற்று முன்பு வந்தது சிவபெருமானே!’ என்ற எண்ணம்‌ உதித்தது. ‘ஐயோ! நான்‌ நித்தம்‌ வணங்கும்‌ பெருமான்‌, என்னைத்‌ தேடி வந்தாரே! நான்‌ அவரைத்‌ திருப்பி அனுப்பினேனே!’ என்று கலக்கமுற்றிருந்தார்‌. அவ்வேளையில்‌ மீண்டும்‌ சிவபிரான்‌ தன்னைத்தேடி வரும்‌ உணர்வு அவருள்‌ தோன்றியது.

      இம்முறை சிவபிரான்‌, வந்து கேட்கும்‌ முன்பே, பரவையார்‌ பெருமானை வணங்கித்‌ துதித்தாள்‌. சுந்தரரை ஏற்றுக்‌ கொள்ளச்‌ சம்மதித்தார்‌. சிவபிரானும்‌ செய்தியைச்‌ சுந்தரிடம்‌ தெரிவித்தார்‌. சுந்தரரும்‌ வணங்கினார்‌

      நம்பியாரும்‌ பரவையாரும்‌ மீண்டும்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டனர்‌. சுந்தரர்‌, சிவபெருமானை ஒரு பெண்ணிற்காகத்‌ தூது அனுப்பியதை அவ்வூரில்‌ இருந்த ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ என்ற அடியவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியவில்லை. அவர்‌ சுந்தரர்‌ மீது கோபம்‌ கொண்டார்‌. ஆனால்‌, கலிக்காமரின்‌ கோபத்தை மாற்ற திருவுள்ளம்‌ கொண்டார்‌ சிவபிரான்‌. அவருக்கு சூலை நோயை உண்டாக்கினார்‌.

        அந்நோயை சுந்தரர்‌ நீக்குவார்‌ என்று சொல்லி, கலிக்காமருக்கும்‌ சுந்தரருக்கும்‌ இடையே நட்புண்டாகச்‌ செய்தார்‌. இருவரும்‌ அதன்‌ பிறகு ஒருவர்‌ மீது ஒருவர்‌ மாறாப்‌ பேரன்பு கொண்டிருந்தனர்‌.

      பிறகு சுந்தரர்‌, பாண்டி நாட்டிலுள்ள பல இருத்தலங்‌களுக்கும்‌ சென்று சிவபிரானை வழிபட்டார்‌. அதுபோல்‌, மலை நாட்டை ஆண்டு கொண்டிருந்த சேரமான்பெருமாள்‌ என்னும்‌ மன்னர்‌, சிவபக்தியில்‌ சிறந்து நின்றவர்‌. அவரோடு சுந்தரரை நட்புறவு கொள்ளச்செய்தார்‌ சிவபிரான்‌. அவர்கள்‌ இருவரும்‌ நட்பு கொண்டனர்‌. சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரரின்‌ மீது பேரன்பு வைத்திருந்தார்‌. சுந்தரரும்‌ மலைநாடு சென்று, சேரமான்‌ பெருமாளுடன்‌ சிலகாலம்‌ தங்கியிருந்து இருவாருக்குத்‌ திரும்பினார்‌.

       அவ்வேளையில்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரருக்கு ஏராளமான பொன்னும்‌ பொருளும்‌ தந்து வழியனுப்பினார்‌. சிவபிரானோ, எப்பொருளையும்‌ சுந்தரருக்குத்‌ தானே நேரடியாகத்‌ தரவேண்டும்‌ என்று திருவுள்ளம்‌ கொண்டார்‌. சுந்தரரின்‌ உடன்‌ வந்த அடியவர்களின்‌ பொன்னையும்‌ பொருளையும்‌ திருடர்களாய்‌ கோலம்‌ கொண்ட சிவகணங்கள்‌ கொண்டு பறித்தார்‌. திருமுருகன்‌ பூண்டி என்னும்‌ தலத்தில்‌ மீண்டும்‌ தந்தார்‌.

சுந்தரர்‌ இவ்வாறு பலத்‌ திருத்தலங்களைச்‌ சென்று தரிசித்து, திருப்புக்கொளியூர் என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

முதலையுண்ட பாலகனை உயிர்ப்பித்தல்‌

          சுந்தரர்‌, திருப்புக்கொளியூர்‌ தலத்து பெருமானைத்‌ தொழுது, மாடவீதி வழியே வந்து கொண்டிருந்தார்‌. அப்போது அவ்வீதியில்‌ எதிர்‌ எதிரே அமைந்த இரு வீடுகளைக்‌ கண்டார்‌.  ஒரு வீட்டில்‌ மங்கல மேளச்‌ சத்தம்‌ கேட்டது. எதிர்‌ வீட்டில்‌ அழுகுரல்‌ கேட்டது. என்ன நடந்தது என்று சுந்தரர்‌, அவவீடுகளுக்குச்‌ சென்று கேட்டார்‌. மங்கலமேளம்‌ கேட்ட வீட்டில்‌ ஒன்பது வயது பாலகன்‌ ஒருவனுக்கு உபநயனம்‌ நடந்து கொண்டிருந்தது.

         பிறகு, சுந்தரர்‌ அழுகுரல்‌ கேட்ட வீட்டிற்குள்‌ சென்றார்‌. காரணம்‌ கேட்டார்‌. அக்குடும்பத்திலுள்ள ஒரு பாலகன்‌ கடந்த ஆண்டு, நண்பனுடன்‌ குளத்தில்‌ குளிக்கச்‌ சென்றான்‌. அப்போது, அக்குளத்திலிருந்த ஒரு முதலை அப்பாலகனைக்‌ கடித்து விழுங்கியது. அவன்‌ இறந்து ஓர்‌ ஆண்டு முடிவுற்றிருந்தது.

    இன்று எதிர்‌ வீட்டுப்‌ பாலகனுக்கு உபநயனம்‌ நடக்கையில்‌, இவ்வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள்‌ புதல்வனின்‌ நினைவு வந்தது. அவர்கள்‌ அழுது கொண்டிருந்தனர்‌. ஆனால்‌, சுந்தரரைக்‌ கண்டதும்‌ அவர்கள்‌ தங்கள்‌ கவலையை மறந்து, அவரை வரவேற்று உபசரித்தனர்‌. அக்காட்சி சுந்தரரின்‌ மனதைத்‌ தொட்டது. அவர்‌, அக்குடும்பத்திலுள்ளோர்களிடம்‌, இறந்து போன பாலகனை முதலை விழுங்கிய குளம்‌ எங்கே உள்ளது என்று கேட்டறிந்து, அவர்களையும்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்கு சென்றதும்‌, சிவபெருமானை நினைத்துப்‌ பதிகம்‌ பாடி பாலகனை அழைத்தார்‌.

       இறந்து போன பாலகன்‌, ஓர்‌ ஆண்டில்‌ எவ்வளவு வளர்ச்சி பெற்றிருப்பானோ, அப்பருவத்தில்‌ முதலையின்‌ வாயிலிருந்து வெளிவந்தான்‌. அவனது பெற்றோர்கள்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்‌. சுந்தரை வணங்கி, ஆனந்தக்‌ கண்ணீர்‌ வடித்தனர்‌.

மலைநாடு வருதல்‌

        ஏற்கனவே, சுந்தரரின்‌ மீது பேரன்பு கொண்டிருந்த மலைநாட்டு மன்னர்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரர்‌ ஒவ்வொரு திருத்தலங்களிலும்‌ நடத்திய அற்புதங்களைக்‌ கேட்டறிந்து, அவரை எப்போது காண்போம்‌ என்று காத்திருந்தார்‌.

        அவ்வேளையில்‌ சுந்தரரும்‌ மலைநாடு சென்றடைந்‌தார்‌. அவரைக்‌ கண்ட சேரமான்‌ பெருமாள்‌, எல்லையில்லா ஆனந்தம்‌ அடைந்தார்‌. சுந்தரரும்‌, சேரமான்‌ பெருமாளும்‌ எந்நேரமும்‌ சேர்ந்தே சிவபிரானைத்‌ தொழுதனர்‌. பல நாட்கள்‌ கடந்தன.

        ஒருநாள்‌ சுந்தரரைத்‌ தேடினார்‌ சேரமான்‌ பெருமாள்‌. காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம்‌ கேட்டார்‌. சுந்தரர்‌ திருவஞ்சை களத்தியப்பனை வணங்கச்‌ சென்றிருப்பதாகக்‌ கூறினர்‌. சேரமான்‌ பெருமாளும்‌ தன்‌ வெள்ளைக்‌ குதிரையில்‌ ஏறிப்‌ புறப்பட்டார்‌. திருக்கோயிலை நெருங்கினார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌, கோயிலினுள்ளிருந்து வெளியே வந்தார்‌. அப்போது சேரமான்‌ கண்ட காட்சி திருக்கயிலையிலிருந்து கணங்கள்‌ சூழ ஒரு வெள்ளை யானை இறங்கி வந்தது. சுந்தரரை தன்‌ முதுகில்‌ ஏற்றியது. பின்‌ விண்ணுலகம்‌ தாண்டிப்‌ பறந்தது.

    சுந்தரரை ஒரு கணமும்‌ பிரிந்திருக்க இயலாத சேரமான்‌ பெருமாள்‌ மனம்‌ பதைத்தார்‌. தன்‌ வெள்ளைக்‌ குதிரையின்‌ காதில்‌ சிவபஞ்சாட்சர மந்திரத்தைக்‌ கூறினார்‌. விண்ணுக்குக்‌ கிளம்பி, அவ்வெள்ளை யானையைத்‌ தொடரும்படிக்‌கூறினார்‌. குதிரை உயரே கிளம்பியது. சுந்தரரை ஏற்றிச்‌சென்ற யானையை வலம்‌ வந்தபடியே பறந்து வந்தார்‌ சேரமான்‌.

       இறுதியில்‌ இருவரும்‌ கைலாயத்தை அடைந்தனர்‌. அங்கு சுந்தரரைக்‌ கண்டதும்‌ பல வாயில்கள்‌ திறந்தன. சுந்தரர்‌ அவைகளில்‌ நுழைந்து சென்றார்‌. சேரமானும்‌ பின்‌ தொடர்ந்து சென்றார்‌. ஒரு வாயிலில்‌ சுந்தரர்‌ நுழைந்தார்‌. சேரமான்‌ பெருமாள்‌ நுழையுமுன்‌ வாயில்‌ அடைபட்டது. சுந்தரர்‌ இவ்வாறு பல வாசல்களைக்‌ கடந்து சிவபெருமானின்‌ முன்‌ வந்து நின்று வணங்கினார்‌. பெருமானும்‌, “சுந்தரா! நான்‌ உன்னை மட்டும்தானே வரும்படிக்‌ கூறினேன்‌. வேறு யாரையேனும்‌ அழைத்து வந்தாயோ என்று வினவினார்‌.

      சுந்தரர்‌ சிவபிரானை வணங்கி, “பெருமானே! என்‌ மீதுள்ள அன்பினால்‌ சேரமானும்‌ என்னைத்‌ தொடர்ந்தார்‌. இப்போது கயிலையின்‌ வாசலில்‌ நிற்கின்றார்‌! என்றார்‌. சிவபிரான்‌, சேரமானையும்‌ கயிலையினுள்‌ வரும்படி ஆணையிட்டார்‌. கயிலை வந்ததன்‌ காரணம்‌ கேட்டார்‌. சேரமான்‌, “பெருமானே! சுந்தரை வணங்கி நானும்‌ வலம்‌ வந்தேன்‌. திருக்கயிலையை அடைந்து விட்டேன்‌.

       சுந்தரைப்‌ பிரிந்து என்னால்‌ பூவுலகில்‌ வாழ இயலாது!” என்று வணங்கினார்‌. இறைவன்‌ திருவுள்ளம்‌ பூரித்தார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகளை முன்போல, தன்‌ பணி புரிய ஆலால சுந்தரராய்‌ விற்றிருக்கச்‌ செய்தார்‌ இறைவன்‌. பின்‌, சேரமானின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சி, சேரமான்‌ பெருமாளையும்‌ கணங்களுக்குத்‌ தலைவராக்கினார்‌.

சுந்தரர்‌ மண்ணுலகம்‌ ஏன்‌ வந்தார்‌?

     சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ திருக்கையிலாயத்தில்‌ சிவபிரானுக்குத்‌ திருப்பணி புரியும்‌ ஆலால சுந்தரராய்‌ இருந்தார்‌. ஒருநாள்‌ கயிலாயத்‌ தோட்டத்தினுள்‌ சென்ற சுந்தரனார்‌, அங்கே பார்வதி தேவியின்‌ தோழியரான கமலினி, அநிந்திதை என்ற இரு தேவ கன்னிகையரை நோக்கி மனதில்‌ சிறிது சலனம்‌ கொண்டார்‌.

        இதனையறிந்த சிவபிரான்‌, சுந்தரரை நோக்கி, “பெண்‌ மீதான காமத்தைக்‌ கடந்தாக வேண்டும்‌. அதனால்‌ பூமியில்‌ பிறந்து காமம்‌ தணிந்து வருவாயாக!” என்று பணித்தார்‌.

        அதனால்‌ மனம்‌ கலங்கிய சுந்தரரோ, சிவபெருமானை நோக்கி, “பூமியில்‌ பிறக்க சபிக்கப்பட்டேன்‌. இருப்பினும்‌ நான்‌ பூலோக ஆசைகளில்‌ சிக்கிக்‌ கொள்ளும்போது, நீ என்னைத்‌ தடுத்தாட்கொள்ள வேண்டும்‌ என்று வேண்டிக்‌கொண்டார்‌. அதன்படியே செய்வதாக சிவபிரானும்‌ வாக்களித்தார்‌. தான்‌ சுந்தரனுக்கு வாக்களித்தபடியே, திருமணப்‌ பந்தத்தில்‌ சிக்கிக்‌ கொள்ளவிருக்கும்‌ சுந்தரனை, தடுத்தாட்‌கொண்டார்‌. பின்‌ சுந்தரமூர்த்தியாரே, வேண்டியபடி பரவையாரையும்‌, சங்கிலியாரையும்‌ அவரோடு சேர்ப்பித்து இல்லறத்தில்‌ ஈடுபடச்‌ செய்தார்‌. பின்‌, மீண்டும்‌ பிறவாதபடி திருக்கயிலையில்‌ அணைத்துக் கொண்டார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் வாழ்வியலில் தைப்பொங்கல்

காரிமங்கலம்-வட்டார-வேளாளர்கள்-வாழ்வியலில்-தைப்பொங்கல்

முன்னுரை

ஒரு சமுதாயத்தைத் தெரிந்துகொள்ள அவர்களின் வாழ்வியலை ஆய்வதே சிறப்புடையதாக இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், வழிபாட்டுமுறைகள் விழாக்கள் அனைத்தையும் உற்றுநோக்கினால் அம்மக்கள் பற்றிய தெளிவு பிறக்கும். அந்த வகையில் காரிமங்கலம் பகுதியில் இருக்கும் வேளாளகவுண்டர்களின் வாழ்வில் தைப்பொங்கல் பெறும் இடத்தை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் வாழ்வியலில் தைப்பொங்கல்

ஊர் கூடுதல்

                பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடுகின்றனர். பானைக்குத் தேவையான விறகு சேகரிப்பது, வாசலைக் கொத்தி செப்பனிடுவது, மண்ணால் அடுப்புக்கல் செய்வது வெங்கலிச்சான் கல் எடுத்து இதை தோணி உரலில் போட்டு சிறுமிகள் இடித்துக் கோலமாவு உருவாக்குவது எனத் தொடக்க வேலைகளைப் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை செய்து வருகின்றனர். அதோடு ஊர் மக்கள் ஒன்றுகூடி விழாவிற்கான செயல்பாடுகள் விழாவின்போது மக்கள் நடந்துகொள்ளும் முறைகள், ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது முதலான அனைத்து முடிவையும் எடுப்பதைக் காணமுடிகிறது.

‘மேரை’ வழங்குதல்

                மேரை என்பதற்கு “‘மரியாதை’ என்றும் ‘குடிமக்களுக்குக் களத்தில் கொடுக்கும் தானியம்’”1 என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. அதற்கேற்ப காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் தங்களின் வேளாண்மை சிறக்க பேருதவிபுரியும் மக்களுக்கு நெல் அல்லது நெற்கதிரோடு கூடிய கட்டை அன்பாக வழங்குவர். அவ்வாறு வேளாண் கருவி உருவாக்கித் தரக்கூடிய கொல்லர்கள், ஆடை வெளுப்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், தோட்டிவேலை பார்ப்பவர்கள், சால், பரி தைத்துக் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பட்ட குடிகளுக்கும் மேரை வழங்கப்படுகிறது. ‘மேரை’ என்பது பொருளாக இல்லாமல் பணமாகப் பெற்றுக்கொள்வதைக் தற்காலத்தில் ஒருசில இடங்களில் பார்க்கமுடிகிறது. இது அம்மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது.

போகியும் காப்புக்கட்டுதலும்

                                “பழையன கழிதலும் புதியன புகுதலும்

                                வழுவலக்கால வகையி னானே”  (நன்னூல். நூ. 462)

என்ற நன்னூலாரின் வாக்கிற்கிணங்க பழைய பொருட்களை எடுத்துவிட்டு, புதிய பொருட்களை வீட்டில் சேர்க்கின்றனர். வீடு தூய்மை செய்வதனால் வந்த குப்பையை வெளியே கொட்டி எரிக்கின்றனர். அன்றே மண்டு (பொதுவிடம்)  தூய்மை செய்து அங்கு கூலி கட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் கம்பம், ஜெகினி ஆகியவற்றிற்கு சுண்ணாம்பு மற்றும் செம்மண் சாயம் பூசி அம்மக்களே அழகு படுத்துகின்றனர். அதோடு தோட்டத்தில் இருக்கும் தென்னை, மா முதலிய மரங்களுக்கும் அதே சாயம் பூசப்படுகிறது.

                நெல்லு பில்லால் கயிறு திரித்து அதில் வேப்பிலையைச் செருகி ஊரின் முக்கிய தெருக்கள் மற்றும் கோயில் முன்பாகத் தோரணத்தைத் தோட்டியால் கட்டப்படுகிறது.  மக்களும் அவரவர் வீடு, கொட்டகை, நெற்போர் ஆகியவற்றை சுற்றி பண்ணைப்  பூ, பூலாப் பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து சொருகி வைக்கின்றனர். இந்நிகழ்வைதான் காப்புக் கட்டுதல் என்கின்றனர்.

தைப்பொங்கல்

                ஆடிமாதத்தில் விதைத்த நெல்விதை தைக்கு முன்னால் அறுவடையாகின்றது. பொங்கல் விழாவானது நெல்லைக் களத்திற்குத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகக் அமைகிறது. தை முதல்நாளே தமிழர்களின் அறுவடை நாளாகக் கொண்டாடுகின்றனர். பொங்களன்று காலையில் சூரியன் உதயத்தின்போது பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இப்பகுதியில் இருக்கும் மக்கள் பிற்பகல் பொழுதில் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அங்கு அடுப்பு வெட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

இலக்கியங்களில் பொங்கல்

                சங்ககாலம் முதற்கொண்டு பொங்கல்விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது என்பதனை பல்வேறு இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இதனை,

                                “மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்

                                மான் தடி புழுக்கி ய புலவு நாறு குழிசி

                                வான் கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றி,

                                சாந்த விறகின் உவித்த புன்காம்;” (புறம். 168: 8 – 11)

என்ற பாடலில் புலவர் சாத்தனார், மரைபசுவில் கறந்த நுரைக்கொண்ட இனிய பாலை தினை அரிசியோடு சந்தனக்கட்டையால் அடுப்பெரித்து புதுப்பானையில் சேர்த்துப் பொங்கல் வைத்து பலரும் உண்டு மகிழ்ந்த விதத்தை அழகுறத் தெளிவுபடுத்துகின்றார்.

                                “பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்

                                தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்”  (பெரும்.230 – 231)

எனப் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் உழவுத் தொழிலைப் போற்றுகின்றார். அதிலிருந்து வெளிப்படுவது தமிழர்கள் பண்ணெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அறுபடை விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அதோடு நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகைப் பாடல்களிலும் பொங்கல் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் காவற்பூதத்திற்கு பூவையும் பொங்கலும் வைத்துத் தமிழ் மக்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

                                “மதுக்குலாம் அலங்கல் மாலை

                                மங்கையர் வளர்த்த செந்தீப்

                                புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” (சீவகசிந்தாமணி: 1821)

எனும் பாடல் அடியின் மூலம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தாமணியில் சங்கத் தமிழன் புதுப்பானையில் பாலோடு புத்தரிசியிட்டு பொங்கல்வைத்து வழிபட்டான் என்பதை இதன் மூலமாக அறியமுடிகிறது.

பொங்கலும் பகிரிந்துண்ணும் வழக்கமும்

                பொங்கலன்று ஊரிலுள்ள அனைவரும் பொங்கல் வைப்பதில்லை மாறாக, ஒருசில குடும்பம் மட்டுமே பொங்கல் வைக்கின்றனர் மற்றவர்கள் மாட்டுப் பொங்கலன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். அதற்கு காரணம் மக்கள் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்’ என்ற பண்பு படைத்தவர்கள் தமிழர்கள். தான்செய்த உணவைப் பிறருக்குக் கொடுத்துதவும் எண்ணம் அவர்களின் இரத்தத்தில் ஊரி நிற்பதால் தைப்பொங்கல் கொண்டாடுபவர்கள் வீட்டிற்கு மற்றவர்கள் வந்து உணவுண்பதும் அடுத்தநாள் மாட்டுப் பொங்களன்று அவர்களுடைய வீட்டிற்கு இவர்கள் சென்று விழாவைச் சிறப்பிப்பதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

மாட்டுப் பொங்கல் (பட்டி பொங்கல்)

                விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருப்பவை மாடுகள். அதனால், தைப்பொங்கலன்று சூரியனை வணங்கிவிட்டு தன்வாழ்வு சிறக்க உதவியாய் இருந்த கண்முன் இருக்கும் கடவுளாய்ப் போற்றப்படும் மாடுகளுக்கு அடுத்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கலன்று விடியற் காலையில் மன்னால் செய்த அடுப்புக்கல்லை மூட்டி அதன்மேல் புதுப்பானையேற்றி அதில் உப்பிட்டு அதனுடனேயே பாலோடு நீர் கலந்து ஊற்றுகின்றனர். பின் இறைவனையும் முன்னோர்களையும் வணங்கி அடுப்பைப் பற்றவைக்கின்றனர். அடுப்பில் இருக்கும் பானையை ஒரு குடுவைக் கொண்டு மூடுகின்றனர். பானையில் இருக்கும் பால் பொங்கி வழியும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிடுகின்றனர்.

                                ”பொங்கலே பொங்கல் மாட்டுப்பொங்கல்

                                பட்டிப் பெருக பால்பானை பொங்க!

                                நோவும் நொடியும் தெருவோடு போக…”2         

அவ்வாறு பொங்கி வழிவது கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு என்றால் வாழ்வில் சிறப்பு என்றும் தெற்குப் பக்கத்தில் வழிந்தால் முன்னோர்களுக்கு ஆகாது என்றும் கருதுகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் முன்னோர்கள் மீது எவ்வளவு பற்றோடும் பக்தியோடும் இருக்கின்றனர் என்பது புலனாகிறது.

பட்டி கட்டுதல்

                சாணத்தைக் கொண்டு வீடுபோல நாலுமூல சதுரமாகப் பிடித்துக் கிழக்குப் பகுதியில் வாசல்வைத்து அதன் முன்புறத்தில் பெரிய சாணஉருண்டைப் பிடித்து வைக்கின்றனர். முதலில் வைத்த சாணஉருண்டையைக் காட்டிலும் சற்று சிறிய உருண்டையாகச் செய்து அதை சதுரமாக உள்ள சாணத்தின் மேல் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், நெத்திகண்ணாடிப் பூவோடு அருகம்புல்லையும் சேர்த்து அழகுபடுத்துகின்றனர். அந்தப் பட்டிக்குள் வெள்ளை நிறத்துணியால் மத்தை சுற்றி வைக்கின்றனர், அதோடு கிழங்கோடு கூடிய மஞ்சள்செடி, ஆவாரம் பூ, பூலாப்பூ, கடமுடையான் புல் ஆகியவற்றை சேர்த்து வைக்கின்றனர்.

                பட்டியின் மத்தியில் தலைவாழை இலைபோட்டு அதில் பால்பொங்கலை வைத்து அங்கே உண்டான அவரைக்காய்க் கொட்டை சேர்த்த பூசணிக்காய் குழம்பு அதில் சேர்க்கின்றனர். அதில் நெய், வெல்லம், தேன், வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து படையல் போடுகின்றனர். படையல் பக்கத்தில் வெல்லம் சேர்த்த குழிபன்னியாரம் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இறுதியில் ஒரு தட்டில் மஞ்சள் அரிசியும் மற்றொரு தட்டில் படையல் உணவையும் இருவர் எடுத்துக்கொண்டு முதலில் செல்பவர் அரிசியை இறைத்து பொங்கலோ என்று சொல்லிக்கொண்டும் பின்செல்பவர் கையில் இருக்கக்கூடிய தழுகி உணவை இறைத்து பொலியோ என்று கூறி அங்கிருக்கக்கூடிய பசுக்கூட்டத்தை மூன்று முறை வலம் வந்து மீதம் இருக்கும் அரிசியையும் தழுகியையும் வைத்து வணங்குவர். பிறகு படையல் உணவை எடுத்துப் பிசைந்து அங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் உருண்டையாகக் கொடுப்பர்.

                ஒருசிலர் மாட்டுத் தொழுவத்திற்கு முன்  பாத்திரத்தில் பொங்கல் வைத்து பின்வட்டமாகச் சாணத்தால் மெழுகி ஓர் உருண்டை பிடித்துவைத்து அதன்மேல் அருகம்புல், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு முன்னால் வெற்றிலைப்பாக்கில் இரண்டு வாழைப்பழம் ஊதுவர்த்தி ஏற்றி வழிபட்டு பின் உணவை மாடுகளுக்கு உண்ண கொடுப்பர். அன்றே மாட்டுத் தொழுவத்தில் படையலுக்கு வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அதை பாதியளவுக்கு உரித்து உரிக்காத பகுதியைச் சாணத்தில் அழுத்தி வைத்து அதை மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அதை கைப்படாமல் வாயால் சாப்பிட அழைக்கின்றனர். அதை சாப்பிட வருவோர், சாப்பிடும் தருவாயில் சானத்தில் அழுத்தி விடுகின்றனர். இது அம்மக்களின் அறியாமையால் செய்கின்றனர் என்று சொன்னாலும் சானத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் தன்மை உள்ளது என்பதை உணர்ந்த நம் தமிழ் முன்னோர்கள் காலம் காலமாக இதைச் செய்துவருகின்றனர்.

முன்னோர் வழிபாடு

                ஒவ்வொரு குடும்பத்திற்குமென கூடம் உள்ளது. அந்த ஆண்டில் இறந்தவரை கூட்டத்தில் சேர்க்கும் நிகழ்வு மாட்டுப்பொங்கலன்று நடக்கும். இறந்தவருக்கான கல்லை ஆற்றில் எடுத்து அதற்கு நீராட்டி அக்கல்லை ஆற்றங்கரையில் இருக்கும் அழிஞ்சி மரத்தின்கீழ் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து அதற்கு முன்னால் இறந்தவர் வாழ்வில் எடுத்துக்கொண்ட உணவுப்பொருட்கள் மற்றும் சாராயம் முதலானவற்றை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். பின் மேலதாளம் முழங்க அந்த கல்லை எடுத்துக் கொண்டு கூடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். இந்நிகழ்வைக் கூட்டத்தில் சேர்த்தல் என்கின்றனர் இப்பகுதி மக்கள். அக்கூடத்தில் உள்ள முன்னோர்களுக்கு வழிபாடு செய்பவர் கூடத்தில் உள்ள அனைத்து கற்களையும் கழுவி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு முன்னால் முன்னோர்களுக்காக செய்துவைத்த வெல்லம் சேர்த்த அரிசிமாவு தோசையைச் சுட்டு முன்னோர்களுக்குப் படைப்பர் இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சடங்கு முறையாகும். இதன் மூலம் முன்னோர்கள் மீது பற்றும் பக்தியும் கொண்டவர்களாக இருப்பது தெளிவாகிறது.

அம்மன் வழிபாடு

                மாட்டுப்பொங்கலன்றே மாரியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனை வழிபடுவதற்கு முன் ஒரு செம்பில் மஞ்சள் தண்ணீர் மற்றும் மஞ்சள் துணி பூசைக்குத் தேவையான வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு, ஊதுவர்த்தி, கற்பூறம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பறை இசைக்க மணி ஒலிக்க ஒரே ஓட்டமாகப் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் கோயில் இருக்குமிடத்திற்கு ஓடிச்சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மன்களுக்கு எடுத்துச்சென்ற மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அதன்மேல் மஞ்சள் துணியைச் சாற்றி பழம் பூ வைத்து வழிபாடு செய்து அங்கு உடைத்த தேங்காய்த் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு ஒரே மூச்சகாக மீண்டும் வந்த வழியே ஓடிச்சென்று மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபாட்டை முடிக்கின்றனர்.

அனைவருடைய ஆடு, மாடுகளையும் ஓட்டிச்சென்று தலைக்கொண்டம்மன் கோயில் முன்பாக மாடுவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வின் இறுதியில் கோயிலுக்கு முன் ஒரு சிறுகல்லிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதனை தலைகொண்டம்மனாகப் பாவித்து அதற்கு கிடா வெட்டுகின்றனர். அந்தக் கிடா இரத்தத்தை அங்கு சூழ்ந்திருக்கக்கூடிய மக்கள் எடுத்துச் சென்று ஆடுமாடுகளுக்கு பூசுகின்றனர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் ஆடுமாடுகளுக்கு எந்த நோய் நொடியும் வராது என்ற நம்பிக்கை நிலவுவதைக் காணமுடிகிறது. அந்தக் கிடாதலையை ஒருவர் எடுத்துக்கொண்டு பூசாரி மணியடித்துக் கொண்டு, அடுத்தவர் தேங்காய் உடைத்த தீர்த்தத்தை கையில் எடுத்துக் கொண்டு, அங்கு குழுமி இருக்கும் ஆடுமாடுகளை சுற்றி பொங்கலோ, பொலியோ என்று கூறிக்கொண்டு மூன்றுமுறை வலம் வருகின்றனர். பின்னர் மாடுகளைக் கோயில் சுற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இது அப்பகுதி மக்கள் தலைகொண்டம்மன்மீது கொண்ட பக்தியை வெளிக்காட்டுகிறது.

கானும் பொங்கல்

                பொங்கலின் மூன்றாவது நாள் கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் அவர்களின் குலதெய்வக் கோயிலான பெருமாளப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பட்டாளம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும்போது ஆற்றங்கரை மருங்கில் உள்ள நாகருக்கும் பொங்கலிட்டு கோழி, கிடா முதலானவற்றை வெட்டி வழிபாடு செய்கின்றனர். அங்கு செய்யும் உணவுகளை அங்கேயே உண்டுவிட்டு வரவேண்டும் இல்லையேல்  தெய்வ குத்தம் ஆகிவிடும் என்று அங்கிருக்கக்கூடிய மக்களுக்கு மாமிசம் முதலான உணவுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்கின்றனர். இந்நிகழ்வு சாதாரணமாக ஒரு மனிதன் உணவை மற்றவருக்கு கொடுப்பதற்கு மனம் வராது. மாமிசம் என்றால் அரவே கொடுப்பதற்கு முன்வரமாட்டார். இறையோடு சம்பந்தப்படுத்திச் சொன்னால் பயத்தின் காரணமாகவோ அல்லது தெய்வத்தின் மீதுள்ள மரியாதைக் காரணமாகவோ பகிர்ந்துண்ணும் நிலை தோன்றும். அதை உணர்ந்த முன்னோர்கள் ஒருசில மனித செயல்பாடுகளில் இம்மாதிரியான இறை நம்பிக்கையைப் புகுத்திச் சென்றிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

எருதுகட்டு

                ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாடுஓட்டம், மாடுவிடுதல், கூலியாட்டம், கூலிபிடித்தல், எருதாட்டம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்விளையாட்டு சங்ககாலம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை,

                                ”மருப்பில்  கொண்டும், மார்பு உறத்  தழீஇயும்

                                எருத்திடை அடங்கியும், இமில்இறப் புல்லியும்

                                தோள்இடைப் புகுதந்தும், துதைந்துபாடு ஏற்றும்,

                                நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச்சாடி,” (கலி.முல்லை.105 :30 – 34)

எனும் கலித்தொகை பாடலடி உணர்த்துகிறது. காளை என்பது அவர்களுடைய கௌரவமாகக் கொள்ளப்படுகிறது. எருதுகட்டு என்பது எருதினைக் கட்டி விளையாடும் வீரவிளையாட்டாகும். இப்பகுதியில் எருதின் கழுத்தில் பெரிய கயிரு ஒன்று கட்டப்படுகிறது. அக்கயிற்றைச் சுற்றி துணி சுற்றப்படுகிறது. இது மக்கள் இழுக்கும்போது மாட்டிக் கழுத்தை கயிறு அருக்காமல் இருக்கச் செய்யப்படுகிறது. ஒரு முப்பதடி வடக்கயிறை எடுத்து அதன் நடுப்பகுதி மாட்டின் கழுத்துக் கயிரோடு பிணைக்கப்படுகிறது.

                மக்கள் அந்தக் கயிற்றை முன்பக்கமும், பின்பக்கமும் அந்தக் கயிற்றைக் கொண்டு இழுத்தப் பிடித்துக்கொள்கின்றனர். அப்போது மாட்டிற்கு முன் மூன்று குச்சியின்மேல் ஒரு குடவை மூடி அதற்கு மனிதன் போல வேடமிடவைத்து எருதின் முன் நிறுத்துகின்றனர். அங்கு குழுமியிருக்கும் கூட்டத்தைப் பார்த்த எருது கோபத்தில் வேடம் தரித்து வைத்திருக்கக்கூடிய குடுவையைக் கொம்பால் தூக்கியெரிந்து தன்கோபத்தை வெளிக்காட்டுகிறது. அப்போது கூலியாட்டும் வீரர்கள் ஒரு நிலமான குச்சியில் துணியைச் சுற்றி கூலியின் முன்காட்ட கூலி நாலுக்கால் பாய்ச்சலில் அவரை முட்டித்தள்ள முற்படுகிறது. அந்நேரத்தில் முன்னும் பின்னும் கயிறைப் பிடித்து நிற்கக்கூடிய வீரர்கள் விட்டுப் பிடிக்கின்றனர். இம்மாதிரியாகச் செய்துகொண்டே கோயிலை மூன்றுமுறை வலம் வருகின்றனர். கடைசியாகக் கோயில் பூசாரி தீர்த்தம் கொண்டுவந்து கூலியின் மீது தெளிக்க கூலிக்குச் சொந்தக்காரர் கூலியைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். இவ்வாறு இப்பகுதியில் எருதுகட்டு நடைப்பெறுவதைக் காணமுடிகிறது.

எருதாட்டம்

                வேளாளர் சமூக மக்கள் எருது, மாடுகளைத் தங்களின் குலக்கடவுளுக்கு இணையாகப் போற்றி வணங்குகின்றனர். அதற்குச் சான்று திங்களன்று மாடுகள் பிறந்தநாள் என்று உழவு உழுவதைச் செய்யமாட்டார்.

                காரிமங்கலம் வட்டம் கரகப்பட்டி கிராமத்தில் இருக்கும் வேளாளர்கள் எருதுகட்டு முடித்தப்பின் எருதாட்டம் ஆடுகின்றனர். எருதிற்குப் பயன்படுத்திய வடக்கயிரை வட்டமாக வைத்து அதற்குப் பூசாரி மஞ்சள், பூ, குங்குமம் வைத்து பூசை செய்வார். அப்போது கூலியாடுபவர் (எருதைப்போல ஆடுபவர்) காவிவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டைதீட்டிக்கொண்டு நடுவில் குங்குமம் வைத்து நிற்பார். பூசாரி மணியடிக்க அங்கு சூழ்ந்திருக்கும் மக்கள் ஓசையெழுப்பிக் கொக்கரிக்கச் செய்வார்கள். அப்போது கூலியாடுபவருக்கு அருள் வந்து அங்கு வட்டமாக வைத்திருக்கும் வடத்திற்கு மத்தியில் சென்று நின்றவுடனே அங்கு குழுமியிருக்கும் மக்கள் வடத்தினைச் சூழ்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றனர். வடத்திற்கு உள்ளிருப்பவர். ஆடிக்கொண்டே வடத்தைப் பிடித்திருக்கக் கூடியவர்களைத் தன்தலையால் இழுத்து முட்டுவார். அதற்கு மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அவர் முட்டுவதற்கு ஏதுவாக ஒவ்வொருவராகப் பிடித்துக் கொடுப்பார்.

இந்நிகழ்வு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் நடைபெறும். இந்நிகழ்வு முடிந்தபின் வடக்கயிரைப் பிடித்திருந்தவர்கள் கூலியாடியவரும் கோயிலுக்கு முன்னால் வந்து மாமன், மச்சான், அண்ணன், தம்பி என அவர் இவர் காலில் விழ முற்படுவதும், இவர் அவர்காலில் விழ முற்படுவதுமான நிகழ்வைக் காணமுடிகிறது. இவையனைத்தும் அம்மக்கள் எருதுகட்டின்போது எருதிற்கு ஏற்படும் வலியை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதோடு ஒருவரையொருவர் மதிக்கக்கூடிய பண்பும் இவ்விழாவில் புலப்படுகிறது.

வழுக்கு மரம்

                எருதுகட்டு முடிந்தபின் அங்கு குழுமியிருக்கக்கூடிய இளைஞர்கள் வழுக்குமரம் ஏறுகின்றர். கிரிஸ் தடவிய மரத்தில் ஒருவர் ஏற மற்ற இளைஞர்களும் உதவிபுரிவர். மேல் ஏறி போகபோக அங்கு இருக்கக்கூடிய இளம் பெண்கள் ஏறாமல் இருக்க தண்ணீரை முகத்தில் பீச்சியடிப்பார்கள். இது மாதிரியாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க கடைசியில் இளைஞர்களின் கூட்டு முயற்சியால் வழுக்கு மரத்தின் உச்சத்தைத் தொட்டு வெற்றிபெறுகின்றனர். இந்நிகழ்வு இளைஞர்களின் விடாமுயற்சியை வெளிக்காட்டுகிறது.

பூப்பத்திரிகை பங்கிடல்

                கடைசிநாள் ஊர்க்கூடி பொங்கலுக்குச் செலவழித்த பணம் முதலான வரவு, செலவு கணக்குகளைப் பார்த்தபின் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பக்கூடாது என்று வெற்றிலையில் பாக்கு வைத்து அதோடு வாழைப்பழம், தேங்காய்சில் வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனுப்புகின்றனர். இதற்கு பூப்பத்திரிகை பங்கிடல் என்கின்றனர். இந்நிகழ்வு அவர்களின் உயரிய பண்பை வெளிக்காட்டுகிறது.

முடிவுரை

                தொடக்ககாலம் முதலே வேளாண்மையை நம்பியிருக்கும் தமிழ்க்குடிகள் வேளாளர்கள் ஆவர். இவர்கள் தம் வேளாண்மைக்கு இணக்கமானவர்களை அந்நியர்களாகப் பார்ப்பதில்லை. குறிப்பாகப் காரிமங்கலம் வேளாளர் இனமக்கள் பிற சமுதாய மக்களை மதிப்பதோடு அவர்களோடு இணக்கமாக இருக்கின்றனர். வேளாண்மை சிறக்கப் பேருதவிபுரியும் விலங்குகளிடத்தும் பேரன்பு கொண்டவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

தொகுப்புரை

                விழா என்றால் மக்கள் கூடி முடிவெடுக்கும் திறனும், பொங்கலின்போது தாங்கள் தன்குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இல்லாமல் பிற சமுதாயத்தினரையும் தன்குடும்பம்போல் கொடுத்துதவும் தன்மையும் காணமுடிகிறது.

                போகியன்று ஊரைத் தூய்மை செய்து காப்புக்கட்டும் வேலையை பிற சமுதாய மக்களோடு இவர்களும் சேர்ந்து செய்வதை சாதியபேதமற்று இருப்பதைக் காணமுடிகிறது.

                பொங்கலில் தனக்கு உணவுப் பொருளை விளைவிக்க ஏதுவாக இருந்த இறைவனை வழிபடுவதோடு அவ்வேளாண்மையை தங்களுக்குக் கற்றுத்தந்த முன்னோர்களை வழிபடும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்துவருகின்றனர்.

                பகிர்ந்துண்ணும் வழக்கம் என்பது தமிழனுக்கே உரித்தானது. அதற்கேற்ப அம்மக்களுக்கும் நாகருக்கும் மாரியம்மனுக்கும் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் என எங்குகோழி ஆடு வெட்டி பொங்கல் வைத்தாலும் அதை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என்றும் அங்கேயே சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையேல் வீட்டிற்கு ஆகாது என அவர்கள் மட்டுமல்லாமல் அங்கு கூடியிருப்போருக்கும் உணவு வழங்கி அகமகிழ்வதைக் காணமுடிகிறது.

                மனிதரைப்போல் மிருகங்களுக்கும் வலி என்பது இருக்கும் என்பதை உணரவைக்க இவர்களுள் ஒருவரைக்கொண்டு எருதாட்டம் ஆடுவது மெய் சிலிர்க்கவைக்கிறது. பிறர் மேல் கால், கை படுவது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு போரும்விதமாகக் குனிந்து வணங்கும் வழக்கம் இவர்களிடையே காணமுடிகிறது.

References

1.Tamil Wiktionary from Internet

2. Lakhsmanan, Karagapatti, Karimangalam.

Reference Books

1.Thiruthakka Dever.,                                              –           Sivagasindamani                                                                                                                                   Uma Publications, Chennai

2. Parimanam.,                                                          –         Kazhiththogai,

                                                                                          NCBH, Ambatore, Chennai – 98

                                                                                          First Edition – 2007.

3. Parimanam.,                                                          –         Perumpaanatrupadai,

                                                                                          NCBH, Ambatore, Chennai – 98

                                                                                           First Edition – 2007.

4. Parimanam.,                                                          –          Puranaanuru

                                                                                           NCBH, Ambatore, Chennai – 98

                                                                                           First Edition – 2007.

5.Puzhiyur Kesigan,                                                 –           Nannool (Kandigaiyurai)

                                                                                           Saratha Publications, Chennai – 600 014.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திரு.இல.பெரியசாமி                                                                                

முனைவர் பட்ட ஆய்வாளர்,                                                                

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,                                                    

பெரியார் பல்கலைக்கழகம்.                                                                  

தொலைபேசி எண் : 97861 80599                                                            

மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com                                         

பண்டைய தமிழர் திருமண முறைகள்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

       திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் அல்லது மகள் தங்களுக்கான பருவம் வந்தவுடன் தாய், தந்தை என்னும் நிலையை அடைவதற்கான ஒன்று கூட்டுதல் சடங்காகச் சமுதாயத்தால் நிகழ்த்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் நடத்தி வைப்பதற்கு முன்னர் களவு மணம் என்பது பழங்கால மணமாக நிகழ்ந்துள்ளதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறாகத் திருமணம் சார்ந்த செய்திகளை முன்வைத்து இவ்வாய்வுக்கட்டுரை நிகழ்த்தப்படுகின்றன.

முன்னுரை

       பண்டையக்காலத்தில் திருமணமுறை என்பது ஆணும் பெண்ணும் நேரில் சந்தித்து மனமும் உடலும் ஒருங்கே அமைந்து களவு என்னும் காதலை உரித்தாக்கிக் கொள்கின்றனர். “உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் காதலர்க்கு உரிய” (நம்பியகப் பொருள் அகம்.34) என்பார் நாற்கவிராச நம்பி. களவுக்குப் பிறகே ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு கற்பு என்னும் இல்லறத்தில் சேருகின்றனர். வாழ்நாள் முழுவதும் தனக்காகவே வாழும் ஒருவரை கண்டு தெளிந்து திருமணம் செய்துகொள்ளும் பாங்கினைச் சங்க இலக்கியங்களின் வாயிலாகச் சொல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட இல்லறமானது சமூகத்தில் மக்களால் பெரிதும் போற்றப்பட்டது எனலாம்.

தொல்காப்பியர் குறிப்பிடும் திருமணமுறை

       தொல்காப்பியர் திருமணம் தோன்றியதற்கான காரணமாகப் ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்கிறார். களவில் பொய்யான அன்பு தோன்றிய பின்னரும் திருமணத்தைக் கட்டாயப்படுத்திச் சேர்த்தல் நடைமுறை உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு களவில் ஏற்பட்ட அன்பின் வெளிபாடு உருவாகும் என்பதாகும்.

       “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

        கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

         கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”   (தொல்.பொருள்.கற்பு.நூ.1)

என்று குறிப்பிடுகிறார். அதாவது கற்பென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, சடங்கோடு பொருந்திய மரபின் அடிப்படையில், தலைவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியை, அவர்களுடைய தந்தையும் தமையன்மாரும் மணஞ்செய்து கொடுக்க, மணந்து கொள்ளுதல் ஆகுமென்று விளக்கமளிக்கிறார்.

அம்பலும் அலரும்

       ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு மணம் புரிந்து கொள்ளவும் தலைவனையும் தலைவியையும் பெற்றோர்கள் பார்த்து மணம் புரிந்து  வைக்கவும் (தெய்வம் கூட்ட) ஆகிய இரண்டையும் நம்பியகப்பொருள் ஆசிரியர் இயற்கைப் புணர்ச்சி எனக் குறிப்பிடுகிறார்.

       “தெய்வம் தன்னில் எய்தவும் கிழத்தியின்

         எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி”(நம்பி.அகத்.நூ.32)

என்ற நூற்பாவானது தெளிவாகக் காட்டுகிறது. இதன்வழி காதல் செய்யும் தலைவிக்கும் தலைவனுக்கும் ஊரில் அலரும் அம்பலும் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். இதனைத் தொல்காப்பியர் கூறும்பொழுது,

       “அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்

        அங்கதன் முதல்வன் கிழவனாகும்”  (தொல்.பொருள்.களவு.நூ.49)

என்று அம்பல், அலர் இரண்டுமே களவொழுக்கத்தினைத் தெளிவுப்படுத்துதலால் வருவதாகும். இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் தலைவன் என்பர். அம்பல் – முகிழ்த்தல். அதாவது ஒருவரையொருவர் முகக்குறிப்பினாலே தோற்றுவித்தல். அலர் என்பது வெளிப்படச் சொல்லுதல் ஆகும். சங்க இலக்கியத்தில் இத்தகுச்சூழல் நற்றிணையில் காணப்படுகிறது.

                “சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

                 மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி

                 மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”(நற்.149:1-3)

என்னும் பாடலடிகள் அம்பல் நிகழுமாற்றைத் தெளிவுபடுத்துவதைக் காணலாம். ஊரில் உள்ள பெண்டிர் சிலராகவும் பலராகவும் தெருக்களில் கூடி, அவர்களின் கடைக்கண் குறித்துக் காட்டியும் சுட்டு விரலை மூக்கில் வைத்துப் பழிச்சொற் கூறியும் திரிவதால், அப்பழிச்சொற்களை அன்னை கேட்டு உண்மையென நம்பி, சினம் கொண்டாள் என்கிறது பாடல். இவ்வாறு காதலுக்கு எதிர்ப்பு நிகழ்வதைக் காணமுடிகிறது. இற்செறிப்புக் குறித்த தகவல்களையும் (அகம்.7,20,201,), (நற்.4), (கலி.124) சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. எதிர்ப்புகள் ஒருபுறம் இருப்பினும் பெரும்பாலான காதலர்களின் களவு வாழ்க்கையானது திருமணத்திலேயே முடிந்திருக்கிறது.

உடன்போக்கு

       தலைவன் தலைவியருக்கு இடையிலான காதலை அவரவர் பெற்றோர்கள் ஏற்காத பொழுது, இருவரும் உடன்போக்குச் செல்ல முற்படுகிறார்கள். குறுந்தொகை தலைவி ஒருத்தி, உடன்போக்கில் சென்று விடுகிறாள். அவளைத் தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்பொழுது கண்டோரின் கூற்றாகப் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது.

        “வில்லோன் காலன கழலே தொடியோள்

         மெல்லடி மேலவும் சிலம்பே”(குறுந்.7:1-2)

ஆடவன் கால்களில் வீரக்கழல் அணிந்திருந்தான் என்றும் அவன் வளையல் அணிந்த கைகளையுடையவளும் மெல்லிய அடிகளின் மேல் சிலம்பும் அணிந்திருந்தவளுமாகிய தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்றான் என்றும் கூறுகின்றாள். இதனைக் கலித்தொகை,

       “பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லது

        மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்

        நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே”  (கலி.9:12-14)

என்று ஒத்த அன்புடைய இருவர் சேர்தலே இயல்பு என்பதைக் கண்டோர் உணர்த்துகின்றனர். இவ்வாறான செய்திகள் சங்க இலக்கியப் பாடல்கள் (குறுந்.56), (ஐங்.374), (நற்.29), (அகம்.117,145,165,219,383) பலவற்றில் இடம்பெறுகின்றன. தன் மகள் தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த நற்றாய் தனக்கு இது முன்னமே தெரிந்திருந்தால் திருமணம் நடத்தி வைத்திருப்பேனே என்று புலம்புவதாக அகநானூற்றின் 315ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மேலும் இதுபோல் உடன்போக்குச் சென்ற தலைவியால் பெற்றோர்கள் துன்பப்படுதலும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

திருமணம் பேசுதல்

       ஊரில் ஏற்பட்ட அலரும் அம்பலும் வீட்டுக்குத் தெரிய வருகின்றது. ஒருசில பெற்றோர்கள் தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்தும் கொடுத்திருக்கிறார்கள். தலைவியுடைய காதல் தாய்க்குத் தெரிய வரும்போது, அவள் வதுவைக்கு (திருமணம்) நாள் குறிக்கின்றாள். அதனால் தலைவி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். இதனைக் குறுந்தொகையின் 248ஆம் குறிப்பிடுகிறது. மேலும் குறிஞ்சி நில மக்கள் வேங்கைப் பூ மலரும் காலத்தையே திருமணம் முடிக்கும் நாளாகக் கொண்டிருந்தனர் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

       “மென்தோட் கிழவனும் வந்தனென் நுந்தையும்

         மன்றல் வேங்கைக் கீழ் இருந்து

        நயந்தனன் அம்மலை கிழவோர்க்கே”(கலி.41:42-43)

என்று தலைவனுக்குத் தலைவியை மணம் முடிக்கும் காலம் குறிஞ்சி மலரும் காலமாகக் குறிக்கப்பட்டதைப் பழங்கால வழக்கமாகக் கொள்ளலாம். இச்செய்தி கலித்தொகையின் 38ஆம் பாடலிலும் குறுந்தொகையின் 367ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. பொய்மை இல்லாத தலைவனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் விரும்பியதைக் கலித்தொகை (107), ஐங்குறுநூறு (145) ஆகிய இலக்கியங்கள் சுட்டுகிறது. தனக்கும் தலைவனுக்கும் திருமணம் நிகழப்போகிறது என்பதை அறிந்த தலைவி பசலை நீங்கப்பெற்று, புத்துணர்ச்சியோடு காணப்பட்டாள் என்பதை ஐங்குறுநூறு கூறுகிறது.

மகட்பேசுதல்

       தலைவன் தலைவியைத் தன் சுற்றத்தாரோடு சென்று மகட்பேசி முடிக்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. “காதலுக்குத் திருமணமின்றேல் சமுதாயத்திற்கு வாழ்வில்லை. ஆதலின் அகத்திணை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை – மன்றலை – வலியுறுத்தினர் என்க”1 என்ற வ.சுப. மாணிக்கனாரின் கூற்றாக மன்றலின் முக்கியத்துவத்தைப் பொன்னுசாமி குறிப்பிடுகிறார்.

              “அம்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்

                 வந்தனன் எதிர்ந்தனர் கொடையை

                 அம்தீம் கிளவி பொலிக நின் சிறப்பே”(ஐங்.300:2-4)

என்ற பாடலில் பெரிய மலையினை உடைய தலைவன் தன் சுற்றத்தாருடன் பெண் பார்ப்பதற்காக வருவதையும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கிய தலைவியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் காணமுடிகிறது. இதேசெய்தி நற்றிணையிலும் (393) இடம்பெறுகிறது. தனக்குப் பெண் கொடுக்க முற்பட்ட தலைவியின் பெற்றோர்களுக்கும் தமர்க்கும் தன்னுடைய ஒரு நாட்டையே எழுதிக் கொடுத்துள்ளான் தலைவன். இதனை,

       “ஒண் தழை அயரும் துறைவன்

        தண் தழை விலை என நல்கினன் நாடே”(ஐங்.147:2-3)

என்ற பாடல் காட்டுகிறது. எனவே “மணமகன் வீட்டார் பெண் கேட்டு வருவதும் பெண் வீட்டார்க்கு அவன் பரிசம் அல்லது முலைவிலை என்னும் பொருட்கொடை நல்குவதும் பழங்காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது”2 என்னும் இறையரசனின் கூற்று இங்கு சிந்தித்தற்குரியது. பெண்களுக்குப் பொருள் அளித்தோ அல்லது அவள் பொருளுடன் வருவதோ அவளுக்கான பொருளியல் பாதுகாப்பினை நல்கியது எனலாம். “திருமணம் தவிர்க்க முடியாதது, இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளுவோமேயானால் நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முடியும்”3 என்று பெர்னாட்சாவின் கூற்றைச் சான்று காட்டுகிறார் மு. பொன்னுசாமி. இவரது கூற்றுப்படிப் பணமும் பொருளும் இல்லாமல் மனம் சார்ந்த வாழ்க்கையாக அமைவது நன்றாகும். புதிய மலர்களைச் சூட்டி தலைவிக்குத் திருமண ஏற்பாடுகளைப் பெற்றோர்களும், தமையன்மாரும் செய்வதைக் கலித்தொகை (114) குறிப்பிடுகிறது. தலைவனும் தன் மலையிடத்து உள்ள குடியிருப்புக்கள் எல்லாம் பொலிவு பெறுமாறு செய்தும் மன மகிழ்ச்சியுடனும் சுற்றத்துடனும் இருந்தான் (நற்.393) என்று திருமண நிகழ்வை நற்றிணை குறிப்பிடுகிறது. திருமணத்தில் களவு மணம் அல்லாது “ஆடவன் அத்தை மகள் அம்மான் மகளை மணப்பதும், பெண் மக்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குங்குமப்பொட்டு அணிவதும் தமிழரின் வழக்கங்கள்”4  எனக் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார்.

திருமணப் பொருத்தம்

       திருமணத்திற்குரிய பொருத்தங்களாகத் தொல்காப்பியர் சிலவற்றை முன்மொழிகிறார். ஆடவனுக்கும் பெண்ணிற்கும் இருக்கவேண்டிவைகளாக இவை பழங்காலத்தில் கருதப்பட்டிருக்கலாம்.

       “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

         உருவு நிறுத்த காமவாயில்

        நிறையே அருளே உணர்வொடு திருவென

        முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”  (தொல்.பொருள்.மெய்ப்.நூ.25)

என்ற தொல்காப்பிய நூற்பாவில், திருமணத்திற்கு இருக்க வேண்டியப் பத்துப் பொருத்தங்களாக, ஒத்த பிறப்பும்  ஒத்த ஒழுக்கமும் ஒத்த ஆண்மையும் ஒத்த ஆண்டும் அழகும் அன்பும்  நிறையும் அருளும்  அறிவும் செல்வமும் என்று வரிசைப்படுத்துகிறார். இவ்வாறு பொருத்தம் பார்த்து நல்ல மணநாளை குறிப்பதற்கு ஏதுவாக வேங்கை மலரும் பூத்தது (அகம்.133). மண நாள் குறித்தவுடன் மழவர்கள் திருமணத்திற்குச் செல்வதற்காகத் தன்னை மிகவும் அழகுப்படுத்திக்கொண்டார்கள் என ஐங்குறுநூறு (432) கூறுகிறது.

திருமணம் நிகழும் முறை

       சங்ககாலத் திருமண முறை குறித்து அதிகப்படியான பாடல்களில் குறிப்புகள் இல்லை. ஆனால் அகநானூற்றில் இது பற்றி விரிவான விளக்கம் இடம்பெறுகிறது.

       “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

        பெருஞ் சோற்று அமலை நிற்ப நிரைகால்

         தண் பெரும் பந்தர்த் தரு மணல் நெமிரி

        மனை விளக்குறுத்து மாலை தொடரி

        கனை இருள் அகன்ற கவின்பெறு காலை

         கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

         கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

        உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்

        பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

         மன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர

        புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

         வாள் இழை மகளிர் நால்வர் கூடி

         கற்பினின் வழாஅ நற்பல உதவிப்

        பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என

        நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி

        பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

        வதுவை நல்மணம் கழிந்த பின்றை”(அகம்.86:1-17)

என்ற பாடலில், திருமண நாளன்று உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்தப் பொங்கலொடு பெருஞ் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நடந்து கொண்டே இருந்தது. வரிசையாகக் கால்களைக் கொண்டு குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்திருந்தனர். அப்பந்தலிலே கொண்டு வந்த மணலைப் பரப்பினார்கள். மனையின் கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர்.

       அந்நாளானது தீய கோள்கள் நீங்கப்பெற்ற வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற ரோகிணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் மணநாளாகக் குறித்தார்கள். அந்நாளிலே மணம் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் தலையில் நீர்க் குடத்தினைச் சுமந்தவராய்ப் புதிய அகன்ற மண்டை என்னும் கலத்தினை ஏந்தியவராய் ஒன்று கூடுவார்கள். முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக எடுத்துத் தந்த வண்ணம் இருந்தனர்.

       தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் வழுவாது நல்ல பலவற்றினும் உதவியாக இருந்து, நின்னை மனைவியாகப் பெற்ற நின் கணவனைப் பேணிக் காக்கும் பெருவிருப்பத்தை உடையை ஆகுக எனக் கூறி வாழ்த்தினர். வாழ்த்தியவராய் நீரோடு குளிர்ந்த இதழ்களுடைய மலர்களை நெல்லுடன் கலந்து அவளது பலவாகிய கரிய கூந்தலையுடைய தலையிலே தூவினர். இவ்வாறாக வதுவை மணமும் நடந்து முடிந்தது. இச்செய்தி அகநானூற்றின் 136ஆவது பாடலிலும் கலித்தொகையின் 115ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகின்றன. ஆனால் மேற்குறிப்பிடும் திருமண முறையில் தாலி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. வாழ்த்துச் சொல்லுதல் மட்டும் வந்துள்ளது. வாழ்த்துதலுக்கு அத்தனைப் பெரிய மதிப்பும் அதனுடைய உயர்வும் இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிப்பாட்டில் தலைவியின் வீட்டார் தலைவனிடத்தில் பெண்ணைக் கொடுக்கும் செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

              “நேர் இறை முன்கை பற்றி நுமர்தர

                 நாடு அறி நல்மணம் அயர்கம்”(குறிஞ்சி.231-232)

என்னும் அடிகள் தலைவியின் வீட்டார் பெண்ணளிப்பதைக் காட்டுகின்றன. இவ்வாறே சான்றோர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் திருமணமாக (அகம்.385) (சிலம்பு.1:47), (சீவக.2697) இலக்கியங்களில் காணமுடிகின்றன.

சிலம்பு கழித்தல்

       பெண்ணிற்குத் திருமணத்திற்கு முன்னர் சிலம்பு கழித்தல் என்னும் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிலம்பு கழித்த பின்னரே ஒரு பெண் திருமணம் செய்யத் தகுதியானவளாகக் கருதப்பட்டாள்.

              “நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்

                எம் மனை வதுவை நல்மணம் கழிக”(ஐங்.399:1-2)

என்னும் அடிகளில் பெண்களுக்கு மணமாகும் முன்பு பெற்றோர் அணிவிக்கும் கன்னிச் சிலம்பினைத் திருமணத்திற்கு முன்னர் கழிப்பது ஒரு மரபாகும். அதனைச் சிலம்புகழி நோன்பு என்றனர். இத்தகு நோன்பு தலைவியின் வீட்டில் நிகழ்த்துவது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது (நற்.229).

தாலி

       மணமான பெண்களின் அடையாளக் குறியீடாக விளங்குவது தாலி எனப்படும் மங்கள நாண் ஆகும். சங்க இலக்கியத்தில் தாலியைப் ‘புதுநாண்’ (குறுந்.67:3) என்று குறிக்கின்றனர். இது வேப்பம்பழம் போன்ற வடிவத்தில் இருந்ததாகக் குறுந்தொகைக் குறிப்பிடுகிறது. “கழுத்தில் தடையாக அணிந்த நூல் தாலி என்று பெயர் பெற்றது. தாலிக்கே நூல் என்ற பெயர் உண்டு. தாலியிழந்த பெண்ணை நூலிழந்தவள் என்பர். தாலி பொன்னால் செய்யப்பட்ட பொற்றாலி என்று பெயர் பெற்று இருந்தாலும் அதனுள்ளே மங்கல நாணாகிய நூலை இடும் வழக்கம் இன்றும் உண்டு. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க ஐம்படைத்தாலி கட்டுவது வழக்கம்”5 என ரா.பி. சேதுப்பிள்ளை கூறுகின்றார். விக்கிப்பீடியாவில் தாலி என்ற சொல்லானது, “ஆண் பெண்ணுக்குக் கட்டும் ஒருவகை கழுத்துச் சங்கிலி ஆகும். தாலி அணிந்த ஒரு பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கியக் குறியீடு. தாலி கட்டும் வழக்கம் திராவிட மக்களிடம் காணப்படுகின்றது. பெண்ணியப் பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம் மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஓர் ஆண் ஆதிக்கச் செயற்பாடாகப் பார்க்கப்படுகின்றது”6 என்ற விளக்கம் பெண்ணிற்கான குறியீடாகத் தாலி விளங்குவதை எடுத்துரைக்கிறது.

தாலி பெயர்க்காரணம்

       “தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத்தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டிக் கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத்தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்) தாலியின் சூட்சூமம் மஞ்சள், கயிறு, கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மாங்கலியம், மங்கலவணி எனச் சொல்லும் தாலியை மண் அடையாள வில்லையைக் குறிக்கும்”7 என விக்கிப்பீடியா தாலி என்பது பற்றியும் அதன் விளக்கம் அடங்கியப் பொருள் பற்றியும் கூறுகிறது.

       தாலி அணிந்த பெண்களை “வாலிழை மகளிர்”(குறுந்.386:3) என வெள்ளி வீதியார் குறுந்தொகை நூலில் அழைக்கின்றார். “தாலி கட்டும் வழக்கத்தை முதன் முதல் தெரிவிக்கும் கல்வெட்டுக் கி.பி. 958 ஆம் ஆண்டுக்கரியதாகும் என்று கே.கே. பிள்ளை கூறுவதாக”8 இறையரசன் கூறுகின்றார். தாலி என்ற ஒன்றை ஒருத்தி அணிந்திருந்தாளானால் அவள் ஒரு ஆடவனுக்கு உரியவள் என்பதைக் காண்போர் உணர்வர். அவளை காம நோக்குடன் பார்ப்பதோ அல்லது வேறு தவறான நடத்தைகளுக்கு இணங்கச் செய்வதையோ தவிர்ப்பர். எனவே தாலியானது பெண்ணிற்குப் பாதுகாப்பளிப்பதாக இச்சமூகம் கருதுகிறது எனலாம்.

பிள்ளைப்பேறு

       திருமணம் ஆன பிறகு கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தங்களின் இறுதிக் காலம்வரை வாழ வேண்டுமானால், பொருளையும் பொன்னையும் விட பிள்ளைப்பேறு அவசியமான ஒன்றாகும். இந்நிலையைக் குறுந்தொகைக் கூறும்போது,

       “புதல்வற் றழீஇயினன் விறலவன்

        புதல்வன்தாய் அவன் புறம் கவை இயினளே”(குறுந்.359:5-6)

என்னும் அடிகளில் மணம் கமழ்கின்ற மலர்ப்படுக்கையில் தலைவன் பெரும் அன்பால் தன்னுடைய புதல்வனைத் தழுவியவாறு உறங்குகின்றானாம். அதைக் கண்ட தலைவி பாசத்துடன், புதல்வனைத் தழுவிக் கிடக்கும் தன் கணவனின் புறத்தைத் தலைவி வளைத்துக் கொண்டதாகப் பாடல் குறிப்பிடுவதை அறியலாம்.

       “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

         நன்கலம் நன்மக்கட் பேறு”(குறள்.6:10)

என்று திருக்குறள், மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலமாகும் என்றும் மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன்களாகும் என்றும் குறிப்பிடுகிறது.  உடன்போக்கில் சென்ற தலைவி திருமணம் முடிந்து தன் பெற்றோர்களைப் பார்க்க வருகிறாள் என்று ஐங்குறுநூறு (400) கூறுகின்றது. உடன்போக்கில் சென்ற மகளின் தவறுகளை மறந்து அவர்களை எல்லா நிலைகளிலும் ஏற்றுக் கொள்கின்றனர் தலைவியினது பெற்றோர்கள். தலைவன் தலைவியை விட்டுவிட்டு இரண்டாவதாகக் காமக்கிழத்தியை அறநூல் கூறிய வழியில் பெருமணம் புரிந்தான் என கலித்தொகை (96) கூறுகின்றது. சங்க காலத்தில் ஆடவர்கள் மனைவியைத் திருமணம் செய்தும் காமக்கிழத்தி, பரத்தையரிடம் செல்வது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக வைத்திருந்தனர் என இதனால் அறியலாம். ஆனாலும் வள்ளுவரின் கூற்றுப்படி ஊடலுக்குப்பின் காமம் இனிது என்பதற்கிணங்க தலைவனும் தலைவியும் இல்லறம் சிறப்புடன் அமைய வாழ்ந்தனர் என்கிறது சங்க இலக்கியங்கள். “இல்லறத்திற்குப் பின் முதுமை தொடங்கும்பொழுது கணவனும் மனைவியும் ஊரின் கண்ணே தனியே இருந்து தவவாழ்க்கை மேற்கொள்ளுதல், ஒரு சமூகக் கட்டுப்பாடாக இருந்துள்ளது”9 என மு. கோவிந்தசாமி சொல்வது இங்கு எண்ணுதற்குரியது. அக்கால சமூகத்தினர் கடைசிவரை தன்னுடைய துணையைப் பிரியாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

முடிவுரை

       தன்னுடைய எதிர்கால துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் வழங்கப்பட்டிருந்தது. தமிழரின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் பற்றிய பழக்கங்களும் வழக்கங்களும் இன்றுவரை நம் சமுதாயத்தில் பயன்படுத்தி வருகின்றோம். திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்துபோவது இல்லை வாழ்க்கை. பந்தம், பாசம், அனுசரிப்பு, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல் என்ற ஐந்தின் அடிப்படையில் தொடங்குவதுதான் திருமணம்.

சான்றெண் விளக்கம்

1. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள்,  

     ப.180.

2. பா. இறையரசன், மு.நூ., ப.270.

3. மு. பொன்னுசாமி, மு.நூ., ப.180.

4. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.65.

5. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழகம் அலையும் கலையும், ப.177.

6. தமிழ் விக்கிப்பீடியா.

7. மேலது.

8. பா. இறையரசன், மு.நூ., ப.270.

9. மு. கோவிந்தசாமி, தமிழக வரலாறு, ப.49.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130,

 Gmail : iniyavaikatral@gmail.com

புறப்பொருள் வெண்பாமாலையில் போர்ச்செய்திகள்

புறப்பொருள்-வெண்பாமாலையில்-போர்ச்செய்திகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

       பண்டைய கால மக்கள் அகத்திலும் புறத்திலும் சிறந்து விளங்கினார்கள். அகம் மட்டுமே மனிதனை வாழ வைத்துவிட முடியாது. மனிதன் புறம் சார்ந்த சமூகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். புறச்செய்திகளிலும் புறம் சார்ந்த நூல்களிலும்தான் அன்றைய தமிழின மக்கள் வாழ்ந்த வாழ்வியலை அறிய முடிகிறது. அம்மக்கள் பயன்படுத்திய பேசிய எழுதிய பார்த்த தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட என எதையும் அறிய ஏதுவாகிறது. தெய்வங்கள், வீரமறவனின் குடிப்பெருமை, பாராட்டுதலும் பரிசும், கூத்துக்கலைகள், பாதீடு, ஒற்று, பெண் மறுத்தல், போர்க்கருவிகள், உழவும் வாணிபமும், அறக்கோட்பாடு, ஆற்றுப்படுத்துதல், கணிவன், பேய்கள், பூக்கள், விலங்குகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இடங்கள், கையறுநிலைகள் போன்றவைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வாய்வானது முழுவதும் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

       போர் நடைபெற்ற அக்காலத்தில் மக்களின் நிலை என்ன? அம்மக்கள் வாழ்வதற்கான அணுகுமுறைகளையும், நாட்டிற்காகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீரமறவர்களுக்குள்ளும் மனம் (அன்பு) இருக்கிறது என்பதையும், அவர்களும் முறையான வாழ்க்கையினை வாழக்கற்றுக் கொண்டவர்கள்தான் என்பதையும் முன்வைக்க முயல்கிறது இவ்வாய்வு.

முன்னுரை

      காடுகளில் மனிதன் நாடோடியாக வாழ்ந்து வந்தவன் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நாகரிக வாழ்க்கையை அடைகின்றான். தன்னுடைய சமூகத்தை நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் நற்ஒழுக்கத்துடனும் நிலை நிறுத்த அவனுக்கு பல யுகங்கள் தேவைப்பட்டிருக்கும். அவ்வாறு பண்பட்ட சமூகம்தான் சங்ககால சமுதாயம். அன்றைய மக்கள் எண்ணம், செயல், வாழும் முறைகள் என தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள். சங்ககாலம் பொற்காலம் என்றும் சங்க இலக்கியங்கள் பொற்இலக்கியங்கள் என்றும் அழைக்கலாம். அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களில் அன்றைய மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் போது அகத்தையும் (காதலும்) புறத்தையும் (வீரமும்) முன்நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்கள் மூலம் அக கருத்துக்களே நிரம்பி வழிகின்றன. ஆங்காங்கே புறநூல்கள் கொஞ்சமாய் வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. தலைவன் தலைவியிடம் காதலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்  அவர்களின் வாழ்க்கை புறச்செய்திகளால்தான் சூழ்ந்து கிடக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். புறப்பொருளில்தான் அம்மனிதனின் வாழ்வியலை வெளிக்கொணர முடியும். அதனாலயே புற இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.

தெய்வங்கள்

     மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையே தெய்வங்கள்தான். தெங்வங்கள் இல்லையென்றால் இந்நேரத்தின் மனிதர்கள் காட்டாறு போல தறிகெட்டுப் போயிருப்பார்கள். மனிதனின் எண்ணத்தில் கடவுள் பயம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை வாழ்க்கை என்ற ஒரு நேர்கோட்டில் செல்ல வைத்திருக்கிறது. தெய்வங்கள் மூலமாகவே தங்களுடைய பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டான். புறப்பொருள் வெண்பாமாலையில், கொற்றவை, முருகன், சிவபெருமான், திருமால் ஆகிய கடவுள்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளன.

                ‘‘ஒளியின்நீங்கா விறல்படையோள்

              அளியின்நீங்கா அருள்உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:18)

     அன்னை வழிப்பட்ட தமிழ்ச்சமுதாயத்திற்கு முதற்கடவுளாக விளங்குபவள் கொற்றவை தெய்வமாகும். இத்தெய்வம் வீரம் செறிந்தவளாகவும் பிறருக்கு அச்சத்தை தரக்கூடியவளாகவும் உடையவள். மேலும் பேய்க்கூட்டத்தைப் படையாகவும் கொண்டுள்ளாள் என்கிறது புறப்பொருள் வெண்மாலை. படை வீரர்கள் கொற்றவையின் அருளினைப் பாராட்டி மகிழ்கின்றனர். தங்களுடைய வெற்றிக்காரணமான கொற்றவைத் தெய்வத்தை மறவர்கள் வணங்குகின்றனர்.

                                    ‘‘சூழும்நேமியான் சோஎறிந்த

              வீழாச்சீர் விறல்மிகுத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:36)

     கருணை குணம் கொண்டவன். உலகத்தைக் காக்கும் தொழிலினைச் செய்பவன் திருமால். போர் மறவர்கள் வெற்றிப்பெற்றதால் அவ்வெற்றிக்கு காரணமான திருமாலை கந்தழி என்னும் துறை மூலம் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். மேலும் வெற்றிப்பெற்ற தன்னுடைய அரசனை திருமாலுக்கு நிகராக நினைத்து போற்றுகிறார்கள்.

     போர்மறவர்கள் சிவப்பெருமானைப் பூக்கொண்டு வணங்குதலும், முருகக்கடவுளைப் பூச்சொறிந்து வணங்குதலும் செய்கின்றனர். முருகன் வள்ளி இருவரையும் ஒன்றாய் சேர்த்து வணங்கியுள்ளனர். தங்களுடைய அரசன் வணங்கும் தெய்வத்தை மறவர்கள் உயர்த்தி பாடி மகிழ்கின்றார்கள்.

                           ‘‘வயங்கியபுகழ் வானவனைப்

                            பயன்கருதிப் பழிச்சினர் பணிந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:40)

     உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்கும் பொருட்டு பழிச்சினர் பணிதல் என்னும் துறையாக அமைகின்றது. போர்மறவர்கள் இவ்வுலகப் பேறுகளைக் கருதி இறைவனை வாழ்த்தி வணங்குகின்றனர். தெய்வப்பெண்கள் ஆண்தெய்வங்களை விரும்புவது போல மானிடப்பெண்களும் கடவுளை விரும்பியள்ளனர். பண்டையக் காலக்கட்டத்தில் ஆண்களும் பெண்களும் இறைவனை வழிப்பட்டு வந்துள்ளனர். போருக்குச் செல்லும் முன் இறைவனை வழிபடுதலும் வெற்றிப்பெற்ற பின்பு மகிழ்ச்சியில் இறைவனைப் போற்றித்துதித்தலும் உண்டு.

குடிப்பெருமை

உலகம் தோன்றியபோதே வீரத்தின் அறிகுறியாய் வாளோடு தோன்றிய குடி மறவனின் குடி. தமிழ் இனத்தவரே முதல் குடியாவர். புறப்பொருள் வெண்பாமாலையில் குடிநிலை என்னும் துறையில் கரந்தை மறவர்கள் தம்முடைய தொன்றுதொட்ட குடிப்பெருமையினைப் பறைச்சாற்றுகிறார்கள்.

          ‘‘மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்

             கொண்டுபிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.2:13)

     காஞ்சி மறவர்கள் போரின்கண் தமது மறப்பெருமைகளை பெருங்காஞ்சி என்னும் துறையின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். போரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போரிட்ட மறவனின் ஆண்மைத்திறத்தினைப் போற்றியது.

            ‘‘தொல்மரபின் வாட்குடியின்

             முன்னோனது நிலைகிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:10)

     மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்து பாடுதலை முதுமொழிக்காஞ்சி கூறுகிறது. தொன்று தொட்டு வாளை ஏந்தி போர்ச்செய்கின்றவர்கள் மறவர் குடியே. அக்குடிக்கண் பிறந்த முன்னொனது தந்தையின் பேராற்றலைப் புகழ்ந்து பாடுவதாகும். மரபு மாறாமல் துடி கொட்டுபனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்து கூறுகிறது துடிநிலை என்னும் துறை.  வேதம் உணர்ந்த பார்ப்பண குடியை மேம்பட எடுத்துரைத்தது பார்ப்பன வாகை ஆகும்.

                     ‘‘செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்

                        இருநிலம் காவலன் இயல்புஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:16)

     இப்பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்பவன் அரசன். அவன் போர்க்களத்தில் பகைவரை வருத்துகின்ற சிவந்த நெடிய வேலினை ஏந்தியவன் ஆவான். அம்மன்னனின் இயல்புகளை மிகுத்து அரச முல்லை என்ற துறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசனின் நற்பண்புகளையும் எடுத்துக் கூறுவதாகவும் அமைகின்றது. பகைவரை பெறாத போதும் மிகுந்த சினம் கொண்டது மறக்குடி ஆகும். அக்குடி மென்மேலும் உயர்கின்ற ஆண்மைத்தன்மையினையும் ஒழுக்கத்தினையும் ஏறாண்முல்லை என்னும் துறையில் சொல்லப்பட்டுள்ளது.

     நடுவுநிலைமையையுடைய சான்றோர்களின் குடிப்பெருமையைக் கூறுகிறது. ஒரு வீரமறவன் போரில் இறந்துபட்டான். அப்போது அந்த மறவனின் வீரத்தைப் பார்த்த நட்பு மறவர்களும் பகை மறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றி அவனுடைய உடலைப் பார்த்து அம்மறவனின் குடியைப் புகழ்ந்து பேசுகின்றனர் என்னும் செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் நாகரிகமாகவும் பண்பாடு கொண்டவராகவும் அக்கால மக்கள் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

பாராட்டும் பரிசும்

மறவர்களின் வீரச்செயலுக்கு பாராட்டும் பரிசும் அக்காலத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட பாராட்டுச் செயல்களை மறவர்களும் விரும்பினார்கள். பகைவென்ற மறவனை அரசன் பாராட்டிப் பரசளித்தலை பேராண் வஞ்சி என்னும் துறை கூறுகிறது.

                ‘‘மறவேந்தனில் சிறப்புஎய்திய

                    விறல்வேலோர் நிலைஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:8)

வெற்றிக்காக விழுப்புண்ணை ஏற்ற மறவர்களுக்கு அரசன் முத்துமாலைகளைப் பரிசாகத் தந்து சிறப்பித்துக் கூறுவதனால் மாராய வஞ்சி எனப்பட்டது. அரசனால் சிறப்பிக்கப்பெற்றதனால் அம்மறவர் வெற்றி பொருந்திய வேலினைக் கொண்டவராக இருப்பார். எதிர் நிற்கும் பகை வேந்தர்களுக்கும் படை வீரர்களுக்கும் முன்சென்ற மறவன் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறுகிறது நெடுமொழி வஞ்சி என்னும் துறையாகும். இந்தத் துறையானது தற்புகழ்ச்சி ஆயினும் அவனுடைய வீரச்செயலைப் பிறருக்கு காட்டுவதில் அவன் தயங்கவில்லை. அதன் மூலம் பகைநாட்டு மறவர்களின் மனதளவில் நிலைக்குலைய செய்துள்ளான்.

                                 ‘‘மைந்துஉயர மறம்கடந்தான்

                                   பைந்தலைச் சிறப்புஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:9)

     பகைவரின் வலிமையைக் கெடுத்துத் தம் வலிமை வெளிப்படும்படியாகப் போர்த்தொழில் செய்தவன் காஞ்சி மறவன். வீரமறவன் போர்க்களத்தில் பகைவரால் தலை வெட்டப்பட்டு இறந்தான். அம்மறவனின் தலையைக் கொண்டு வந்த மற்றொரு மறவனுக்கு அரசன் பெரும்பொருள் கொடுத்துச் சிறப்பு செய்கின்றான். மேலும் இறந்த மறவனின் புகழைப் பராட்டியும் அவனை நினைத்து மனம் வருந்தி இருத்தலும் உண்டு.

     பகைவரின் உயிரை உண்ண மேகம் போல விரைந்து பாய்ந்து வரும் குதிரையின் மாண்பினையும் குதிரைப்படை வீரர்களின் மறமாண்பினையும் எடுத்துக்கூறுவது குதிரை மறம் என்னும் துறையாகும். மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது எயிற்போர் என்னும் துறையாகும். மன்னனின் பிறந்தநாளன்று வலிய யானைகளையும் சிவந்த பொன்னையும் பரிசாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் விருப்பமுடன் மகிழ்ந்திருந்தனர். இந்நிகழ்வினை நாள் மங்களம் என்னும் துறை எடுத்துரைக்கிறது. மன்னர்கள் தன்னுடைய நாட்டிற்காக உயிரை விட்ட மறவர்களுக்கு பரிசினைக் கொடுத்துப் பாதுக்காத்துக் கொண்டான்.

பங்கிட்டுக்கொடுத்தல் (பாதீடு)

     பண்டையக்கால சமூகத்தில் தான் கொண்டு வந்த பொருளினை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தான் உழைத்த பொருளே ஆனாலும் கவர்ந்து கொண்டு வந்த பொருளே ஆனாலும் ஊர்ப்பொதுவில் வைத்து அவற்றினை பெரியோர்கள் முன்னிலையில் பங்கிட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வினைப் புறப்பொருள் வெண்பாமாலை பாதீடு என்கிறது.

         ‘‘கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை

          அவர்அவர் வினைவயின் அறிந்துஈந் தன்று  ’’ (பு.வெ.மாலை.கொளு.1:12)

     பகைவர்களைத் தங்களுடைய கொல்லுகின்ற அம்பினை விட்டு கொன்றுவிட்டு அவர்களுடைய ஆநிரைகளைக் கவர்ந்து வந்தனர் வெட்சி மறவர்கள். அவ்வாறு கைப்பற்றி வந்த ஆநிரைகளை அவரவர் தகுதிகேற்பப் படைதலைவன் பகிர்ந்து அளித்துள்ளான் என்கிற பாதீடு என்ற துறை. பகைவரைத் தம் படையினரால் வெற்றி கொண்டவன் வஞ்சி வேந்தன். அவன் தம் மறவர்களால் பகைவர்கள் மேலும்மேலும் அழிவுற வேண்டுமென நினைத்தான். அதற்காகத் தம் மறவர்களை பாணர்கள் புகழவும் வீரமுரசு ஆராவாரிக்கவும் புகழ்ந்தான். அரிவாள் போன்று வளைந்த கோடுகளை உடைய புலியை ஒத்தவர்களான வீர மறவர்கள் உரிய வரிசை முறையில் அழைத்து அவர்களுக்கு வேண்டுமளவிற்கு பெருஞ்சோற்றுத் திரளை நிறையக் கொடுத்தான் என்கிறது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாகும்.

     தேன் மிகுந்து நறுமணம் வீசும் கள்ளினைக் காஞ்சி வேந்தன் தன்னுடைய வீரர்களுக்கு வயிறு நிரம்ப கள்ளினை ஊற்றிக்கொடுத்தான். மேலும் பகை நாட்டு வீரர்களுக்கும் ஊருக்கு வெளியே கள் கிடைக்கப்பெற்றது என்கிறது கட்காஞ்சி என்னும் துறை. தனக்கு கிடைத்ததைத் தான்மட்டும் உண்டு அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுத்து அவனையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளான் என்பதை அறியமுடிகிறது.

கூத்துக்கலைகள்

நாள் முழுவதும் வேலை என்று இருந்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வில் மனமகிழ்ச்சியை எதிர்ப்பார்த்தான். அதனால் இசையொடு ஆடியும் பாடியும் தன்னை மகிழ்ச்சியாக்கிக் கொண்டான். பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்த செல்லும் போது பற்பல இசைக்கருவிகளை முழங்கியும் ஆராவாரித்தும் செல்லுவார்களாம். அவ்வாறு இசைக்கப்பட்ட இசைக்கருவிகளில் முதன்மையாக வைக்கப்பட்டது துடி என்னும் கருவியாகும். போருக்குச் செல்லும் படையினருக்கு ஊக்கம் தருவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

         ‘‘தொடுகழல் மறவர் தொல்குடி மரபில்

          படுகண் இமிழ்துடிப் பண்புஉரைத் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:17)

என்று துடிநிலை என்னும் துறை விளக்குகிறது. அடுத்ததாக கிணை என்னும் தோற்கருவியைக் குறிப்பிடுகிறார்கள். கிணை – தடாரிப்பறை. வேளாண் புகழை எடுத்துரைப்பது. கிணை என்னும் இசைக்கருவியை இசைத்ததற்காக மன்னனிடமிருந்து கைநிறையப் பொருட்களைப் பெற்றுக்கொண்டான் என்கிறது கிணைநிலை என்னும் துறையாகும்.

              ‘‘வால்இழையோர் வினைமுடிய

          வேலனொடு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:19)

வெண்மையான அழகிய அணிகலன்களை அணிந்தவர்கள் மறக்குடி மகளிர்கள். அப்பெண்கள் தம் கணவர்கள் மேற்கொண்ட தொழில் நன்றாக முடிய வேண்டும் என எண்ணினார்கள். அதற்காகக் வேலனோடு கூடி வள்ளி என்கிற கூத்தினை ஆடினார்கள். இவ்வாட்டத்தினை வெறியாட்டு என்பர். ஒரு வீரமறவன் போர்க்களத்தில் இறந்துபட்டான். அவனைச் சூழ்ந்து வலிமை பொருந்திய தோளினை உடைய தும்பை மறவர்கள் மகிழ்ச்சி களிப்புடன் வாளேந்தி ஆடியதை ஒள்வாள் அமலை கூறுகிறது. மறவர்கள் சூழ வெற்றிப் பெற்றவனைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். அரசனின் தேர்க்கு முன்பும் பின்பும் வெற்றியை நுகர்ந்து குரவைக் கூத்தினை ஆடி மகிந்தனர். அதேபோல் பேய் மகளிரும் தேருக்கு முன்பும் பின்பும் ஆடுகின்றார்களாம்.

          ‘‘பூண்முலையார் மனம்உருக

          வேல்முருகற்கு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:37)

மகளிர்கள் முருகனுக்காக வள்ளிக்கூத்தினை ஆடி மகிழ்நதனர். வள்ளிக்கூத்து என்பதற்கு வெறிக்கூத்து என்று அழைப்பர். இறைவன்பால் விருப்பம் கொண்டு ஆடுகின்ற ஆட்டம் சிறந்த பயனைக் கொடுக்கும். அதனால் மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்ட வர இவ்வாறான ஆட்டங்கும் கூத்துகளும் மனிதனுக்கு தேவைப்பட்டது எனலாம்.

நற்சொல் கேட்டல்

நல்ல சொற்கள் ஒரு மனிதனை வாழவைக்கும். மனதை நிறைவடையச் செய்யும். நம்முடைய பயணம் விஷேச நாட்களின் போதும் நல்ல சொற்களும் வார்த்தைகளும் மனம் மகிழ்ந்து இன்னும் உத்தியோகமாக வேலை செய்ய தூண்டும். விரிச்சி என்கிற துறையில்,

         ‘‘வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு

          ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:2)

தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை அறியும் பொருட்டுச் சொல்லை ஆராய்தலே ஆகும். வெட்சி மறவர்கள் ஒன்று கூடி ஓரிடத்தில் கூடினார்கள். தாம் விரும்பிய அச்செயலானது இனிதாக நிறைவேறவேண்டும் என்று எண்ணினார்கள். அதற்காக இருள் வருகின்ற மாலைப் பொழுதில் நற்சொல்லினைக் கேட்டு ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். அதன் பிறகுதான் செல்லும் இடத்திற்குச் செல்வார்கள். ஒருசில நேரங்களில் தீய நிமித்தங்களும் நடைபெறுவதுண்டு. ஆனாலும் மறவர்கள் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம். அம்மறவர்கள் மனவலிமையைக் கொண்டு வெற்றியும் அடைந்துள்ளார்கள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

ஒற்று அறிதல்

     ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதனால் பகையரசனின் பலம் அறிந்து கொள்ளாமல் போருக்குச் சென்றால் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும். அதனால் பகை நாட்டின் சூழலை நன்கு அறிந்து கொள்ளும் தன்மை நன்மை பயன்தக்கது. அதனால் அக்காலத்தில் சூழலை அறிந்து வருவதற்கென்றே வீரர்களை நியமித்திருந்தனர். இவர்களை ஒற்றர்கள் என்று அழைப்பார்கள்.

           ‘‘பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து

          ஒற்றுஆ ராய்ந்த வகைஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:4)

ஒற்றர்கள் பகை நாட்டின் அவர்கள் அறியாதவாறு அம்மக்களுக்குள்ளே சென்று தங்குவர். அம்மக்கள் அறியா வண்ணம் ஆநிரைகள் இருக்கின்ற இடம், ஆநிரைகளின் எண்ணிக்கை, அவற்றினைக் காக்கின்ற வில் மறவர்களின் அளவு ஆகியவற்றை ஆராய்ந்து வருவார்கள் என்கிறது வேய் என்னும் துறையாகும். இதுமட்டுமன்று மன்னர்களின் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து வருதலும் உண்டு. பரிசுகள் ஒற்றர்களுக்கு பிற மறவரைக் காட்டிலும் மிகுதியாகக் கொடுக்கப்பட்டது. இது ஒற்றர்களுக்குச் சிறப்பு செய்வதினால் இது புலனெறி சிறப்பு என்றாயிற்று. ஒற்றர்களின் பணி மிகவும் கடுமையானது. பகையரசனிடம் மாட்டிக்கொண்டால் ஒற்றரை துன்புறுத்தி கொன்று விடுவார்கள். ஆனாலும் தம் நாட்டை காப்பாற்றுவதற்காக மறவர்கள் ஒற்றர் வேலையை செய்து வந்துள்ளனர்.

அன்பு

     போர் சண்டை என இருந்து வந்த காலக்கட்டத்தில் அன்பும் இருந்திருக்கிறது. மறவன் ஒருவன் தம்மால் கவர்ந்து வரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் காட்டு வழியே ஓட்டிச் சென்றான்.

            ‘‘அருஞ்சுரத்தும் அகன்கானத்தும்

              வருந்தாமல் நிரைஉய்த்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:9)

காட்டு வழிகளில் செல்லும் போது நிழழும் தண்ணீரும் உணவும் கிடைக்கபெறும். இந்நிகழ்வினை சுரத்துய்த்தல் என்னும் துறை உரைக்கிறது.

போர்க்கருவி

    போர்களில் சண்டையிடுவதற்காக நிறையப் போர்க்கருவிகளை மறவர்கள் வைத்திருந்தனர். மறவர்களின் இடையில் எப்பொழுதும் ஆயுதம் இருக்கப்பெற்றிருக்கும்.

           ‘‘வென்றி யோடு புகழ்விளைக் கும்எனத்

          தொன்று வந்த தோல் மிகுத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.6:11)

     உழிஞையரசன் தனது கிடுகுப்படையைப் பாராட்டியது. இதனை தோல் உழிஞை என்னும் துறையைாகும். தோல் என்பது கிடுகு என்னும் ஒருவகைப் போர்கருவியாகும். வட்டவடிவில் அமைந்து கண்ணாடி நிரைத்ததால் ஒளிரும் தன்மை கொண்டது கிடுகுப்படை. அதன் துணைக்கொண்ட தன்னிடம் பணியாத அரணினைக் கைப்பற்றுவது எளிது என்பதும் அதன் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்பதுதான்.

உழவர்கள்

உழவர்கள் வாழ வேண்டும். விவசாயம் பெருக வேண்டும். நம் நாட்டின் வளத்தை பெருக்கி மூன்று வேளையும் வயிறு நிரம்ப உண்ண வேண்டும். கிணைநிலை என்னும் துறையில்,

           ‘‘தண்பணை வயல்உழவனைத்

          தெண்கிணைவன் திருந்துபுகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:30)

 குளிர்ச்சி பொருந்திய தன்மை கொன்டது நன்செய் நிலம். நிலத்தை உழுது மக்களுக்கு பயன் விளைப்போர் உழவர்கள் ஆவார்கள். அவர்கள் இவ்வுலகத்தில் மேலான புகழினை உடையவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட உழவர்களை வாழ்கவென்று கிணைப்பறையை அடித்து வாழ்த்தி வறுமை நீங்க வேண்டுமென உரக்கக் கூறுதல். நெல் அறுவடை முடிந்ததும் உழவர்கள் தம் குடிகளுக்கு தக்கவாறு நெல்லினைக் கொடுப்பார்கள். அது அவர்களின் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சமின்றி வாழ வழிவகைச் செய்யும்.

கண்டார்க்கு அச்சத்தைத் தருவதாய் விளங்குவது படை. அதனை வரப்பாகக் கொண்டு விளங்குவது போர் செய்வதற்குரிய களம். அக்களமே நெடிய வயல். சிவந்த நிறத்தால் ஒளிர்கின்ற வேலே கோலாகும். பசிய நிறமுடைய கண்களையும் பெருத்த கால்களையும் உடைய யானை எருதாகும். அவ்வயலின் வெம்மையாகிய சினவே விதையாகும். புகழே பயன் மிகுந்த விளபொருளாகும். பகை வென்ற அரசனே உழவன் ஆவான். போர்க்களத்தை விவசாய நிலமாக்கி உழவனை அரசனுக்கு உருகவம் செய்துள்ளார் ஐயனாரிதனார். மேலோர் சொல்வழி நின்று உலகத்தார் பயன் கொள்ளும் வகையில் உணவு கொடுக்கும் உழவனை மிகுத்துக் கூறுவதாக வேளாண்வாகை என்னும் துறை கூறுகிறது. அரணை அழித்து கழுதை பூட்டி வரகை விதைப்பது பற்றி உழுது வித்திடுதல் கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுகிறது பகட்டு முல்லை என்னும் துறை.

          ‘‘செறுதொழிலின் சேண்நீங்கியான்

          அறுதொழிலும் எடுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:9)

அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர்கள் தம் மேம்பாட்டைக் கூறுவது வாணிக வாகை ஆகும்.

அறுவகைத் தொழில்கள்

நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைப்பொருட்களைக் கைக்கொள்ளுதல்

ஆராவாரிக்கின்ற ஆநிரைகளைப் பாதுகாத்தல்

குற்றமற்ற பொருட்களை விற்றல்

கற்பதற்கு உரியவற்றை முற்றும் கற்றல்

முத்தீயைப் போற்றி வணங்குதல்

தம்பொருளை சீர்தூக்கிப் பாராமல் பிறருக்கு வழங்குதல்

என இவ்வாறு தன்மைகளை உடையவர்கள் வணிகர்கள் என்கின்றார் ஐயனாரிதனார்.                

பெண்மறுத்தல்

     வலிமை மிக்க மன்னன் பகை மன்னன் பெற்ற பெண்ணை திருமணம் செய்ய கருதி பெண் கேட்பான்.   பெண் கொடுக்காவிட்டால் அம்மன்னன் மீது படை எடுத்துச் சென்று தாக்குதலும், பெண் தரும் வரை காத்திருத்தலும் அக்காலத்தில் நடைபெறுவதொன்று. மன்னனின் மகவை சான்றோர்களும் ஊர் மக்களும் மிக்க புகழ்துரைக்கின்றனர்.

          ‘‘வெம்முரணான் மகள்வேண்ட

          அம்மதிலோன் மறுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.5:8)

     கொடிய பகையினை உடையவன் உழிஞை அரசன். அவன் நொச்சி வேந்தனின் மகளைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் நொச்சி அரசனோ தன் மகளை தர மறுக்கிறான். இதனால் இது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாகும். பகை மன்னனுக்கு பெண் கொடுக்காமல் போர்ச்செய்தலை விரும்பியதால் மகட்பாற் காஞ்சி எனும் துறையாம். மற்றொரு மன்னன் மாற்றரசனின் மகளைத் திருமணம் செய்தே தீருவேன் என்று மதில் புறத்திலே தங்கியிருந்தானாம். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் புறச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அறம் செய்வித்தல்

இருக்கின்றவன் இல்லாதவனுக்கு உதவ வேண்டும். கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க எவ்வாறு தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்குமோ அதுபோல செல்வமும் கொடுக்க கொடுக்க நிறைந்து கொண்டே செல்லும்.

        ‘‘புகழோடு பெருமை நோக்கி யாரையும்

          இகழ்தல் ஓம்புஎன எடுத்துரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:11)

ஒருவர்க்குப் புகழும் பெருமையும் உண்டாகும். அவ்வொருவர் தன்னுடைய புகழையும் பெருமையையும்  பிறரோடு ஒப்பிடுவர். அதன் காரணமாகப் பிறர் யாரும் தனக்கு நிகரில்லை என எண்ணி மகிழ்ந்து பிறரை எள்ளி நகையாடவும் செய்வர். அவ்வாறு எவரையும் இகழ்தலை தவிர்க்க வேணடும் என பொருந வாகை கூறுகிறது. துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது தாபத வாகை ஆகும். அரசர்களுக்குள் மாறுபாடு தோன்றும் போது அம்மாறுபாட்டினைத் தவிர்த்து நன்மை செய்வதற்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் சந்துசெய்வித்தலைச் செய்வார்கள் என்று பார்ப்பண முல்லை கூறுகிறது. விண்ணை தீண்டுமாறு உயர்ந்து நிற்பது மலை. நல்லியல்பால் உயர்ந்து நிற்பவர் சான்றோர்கள். அறம் பயிற்றுவிக்கின்ற அச்சான்றோர்களின் மேன்மையைக் கூறுவது சால்பு முல்லை என்னும் துறையாகும்.

         ‘‘வையகத்து விழைவுஅறுத்து

          மெய்யாய பொருள் நயந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:31)

உலகின்கண் பல பொருட்கள் உள்ளன. அவற்றின் பொய்யான பொருள் மீது பற்றுக் கொள்ளுதலை விட வேண்டும். மெய்யான பொருளாகிய இறைவன் மீது பற்று வைக்க வேண்டும் என பொருளோடு புகறல் துறை கூறுகிறது. மீண்டும் பிறவிச் சுழற்சியில் உழலாமல் உலகப் பற்றை விட்டு அருளாகிய நன்னெறியினைப் பற்றுதலை அருளோடு நீங்கல் துறை விளக்கம் தருகிறது.

அறம், பொருள், இன்பத்தை உறுதிப்பொருளாக முன்னோர்கள் மொழியப்பட்ட அறத்தை கூறுதல் – முதுமொழிக்காஞ்சி

கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் எனக் கூறுவது – பெருங்காஞ்சி

மெய்ப்பொருளினை உணர்த்துவது – பொருள்மொழிக்காஞ்சி

வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது – புலவர் ஏத்தும் புத்தேள் நாடு

உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது – முதுகாஞ்சி

பழமையான நூல்கள் கூறுகின்ற நெறியினை அடிப்படையாக வைத்து பிற உயிர்களிடத்து அருளுடைமையே அறம் என்று கூறப்படுகிறது.

ஆற்றுப்படுத்துதல்

     ஓர் அரசனிடம் பரிசினைப் பெற்றான் ஒரு பாணன். தான் பெற்ற பரிசினை தன்னைப் போல் உள்ள மற்றொரு பாணனிடம் இன்ன மன்னனிடம் சென்று இன்னப் பரிசினைப் பெற்றுக்கொள்க எனக் கூறுவது. ஆற்றுப்படுத்துவது – வழிப்படுத்துவது.

             ‘‘சேண்ஓங்கிய வரைஅதரில்

          பாணனை ஆற்றுப்படுத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:24)

     இந்நிகழ்வானது வறுமையை புலப்படுத்தியிருப்பினும் தனக்கு கிடைத்தது மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நற்பண்பு அக்கால மக்களிடம் இருந்து வந்துள்ளது. இதேபோல் புலவர், கூத்தர், விறலி, பொருநர் ஆகியோரையும் ஆற்றுப்படுத்தப்படுகிறது.

கணியன்

     காலம்தொட்டு வருகின்ற அறிவால் சிறந்து நிற்பவன் கணிவன். அவர்கள் உலக நடப்புகளைத் துணிந்து கூறும் தன்மை கொண்டவர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர்.

         ‘‘துணிபுஉணரும் தொல்கேள்விக்

          கணிவனது புகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:19)

     காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பித்துக் கூறுவது கணிவன் முல்லை. அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். வாழ்வின் பின்னால் நடப்பவையை முன்கூட்டியே சொல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

அறிவுரைக்கூறல் (ஓம்புடை)

     அறத்தினை ஆராய்ந்து ஆட்சி புரிபவன் செங்கோல் அரசன். அவனுக்கு மறமும் பிறழ்ச்சியும் இல்லாத நல்லுரைகளை உணரும்படியாகச் சான்றோர்கள் கூறுவர்.

         ‘‘மறந்திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி

          அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:29)

     ஓர் அரசனுக்கு அறிவுரை கூறுவது செவியறிவுறூஉ என்னும் துறையாகும். உலகை ஆளும் அரசனே தவறு செய்து இருப்பினும் அவர்களுக்கு சான்றோர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். சான்றோர்கள் வழங்கிய அறிவுரைகளையும் அரசர்கள் கேட்டிருக்கிருக்கிறார்கள்.

பூ மரம்

     புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலில் பூக்களும் மரங்களும் சுட்டப்பட்டுள்ளன. போர் மறவர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய பூக்களைச் சூடி போருக்குச் சென்றிருக்கிறார்கள்.

காயாம் பூவினைப் புகழ்ந்து கூறுவது – பூவைநிலை (தற்காலத்தில் காசாம்பூ வழங்கப்படுகிறது)

சிவன் சூடிய உழிஞை பூவினைப் புகழ்ந்து கூறுவது – முற்றுழிஞை

முருகன் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது –  காந்தள்

சேரர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – போந்தை

சோழர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – ஆர்

பாண்டியர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – வேம்பு

உன்னம் என்னும் மரத்தின் நிலையினைக் கூறுவது – உன்னநிலை

போர்க்களத்தில் தன்னுடைய நாட்டுக்காகப் போரிடுகின்ற மறவர்கள் பூவைச் சூடுதலும் தோல்வியினால் வாடுதலும் உண்டு.

விலங்குகள்

     புறப்பொருளில் ஒருசில விலங்குகளின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலங்களில் யானைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது யானை கைகோள் என்கிறது.

          ‘‘எறிபடையான் இகல்அமருள்

          செறிபடைமான் திறம்கிளந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.7:3)

     தும்பை அரசனுடைய இளம் களிறு மிகுந்த வீரத்தைக் கொண்டது. அந்த யானையானது சினந்து வந்தது பற்றி கூறியது யானைமறம் என்பதாம். வீரமறவன்  ஒருவன் யானையின் மீது வேலினை எரிகின்றான். யானையை வீழ்த்திய அவனின் வீரத்தை இவ்வுலகம் கண்டு வியக்கிறது.

     கழுதையைப் பூட்டி ஏர் உழுது வரகை விதைத்துள்ளார்கள். தும்பை அரசனடைய கதிரைகளின் திறத்தை மிகுத்துச் சொல்லுவது குதிரைமறம் என்னும் துறையாகும். எங்கள் அரசன் நாங்கள் மகிழும் பொருட்டு எங்களுடைய வீட்டின் முன் ஆட்டின் மீது ஏறி விளையாடுதலை ஏழக நிலை கூறுகிறது.  உழவனை எருதோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறது பகட்டு முல்லை எனும் துறையாகும். விலங்குகள் மக்களின் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உதவியாகவும் பிரிக்க முடியாதவையாகவும் இருந்து வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

புறப்பொருளில் இடங்கள்

     மக்கள் வாழும் இடங்கள், புழங்குகின்ற இடங்கள், போர் நடைபெறும் இடங்கள் என ஒருசில இடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

காவற்காடு, அகழி – உழிஞை மறவர்கள் நொச்சியாரின் காவற்காட்டைக் கடந்து அகழியை அடைகின்றனர்.

மதில் – செங்கற்களால் கட்டப்பட்டதும் நொச்சியாரின் நீண்ட மதிலாகும். உழிஞை மறவர்கள் மதிலை விட்டு அகலாமல் நின்றனர்.

பாசறை – பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருந்து போர் செய்தல்.

விழல் (குடிசை) – பசும்புல் தொகுதியால் வேயப்பட்ட குடிசை.

நடுகல்

இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லினைத் தேர்ந்தெடுத்தல் – கற்காண்டல்

தேர்ந்தெடுத்த கல்லை பல சடங்குகள் செய்வது – கற்கோள் நிலை

நடுகல்லை நீரில் போட்டு வைத்தல், நடுதற்குரிய இடத்தில் சேர்த்தல் – கல்நீர்ப்படுத்தல்

வீரமறவரின் நினைவாகக் கல்லை நடுதல் – கல் நடுதல்

நட்ட கல்லினை வாழ்த்துவது – கல்முறை பழிச்சல்

கோயிலை எழுப்பி நடுகல்லை எடுத்துச் செல்வது – இற்கொண்டு புகுதல்

இவ்வாறாக அக்கால மக்கள் தங்களின் பழக்கவழக்கத்தினை சிறப்புறச் செய்து வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

     பண்டைய கால மக்கள் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தமை, வீடுகளில் பயன்படுத்தி வந்தமையும் குறிக்கப்பட்டுள்ளன.

ஏணி – மதிலை தாண்டிச்செல்ல ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

முரசு – மாற்றரசனின் முரசொலியைக் கேட்டு மிகுந்த சினம் கொண்டான் மன்னன். வெற்றிக்காகவும் முரசினை ஒலித்து ஆராவாரம் செய்துள்ளார்கள்.

வாள் – வேந்தனின் வாளை புனித நீராட்டுவது. வாளினைப் போர்க்களத்திற்கு எடுத்துச் செல்லுதல். அரசனின் வெற்றி வேளினைச் சிறப்பித்துக் கூறுவது.

கழல் –  போர்மேற் செல்லுவோர் வீரக்கழல் அணிந்து செல்வார்கள். அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.

செங்கொல் – வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது. செங்கொல் மன்னனை உழவனாக உருவகம் செய்தல்.

குடை – காஞ்சியரசன் தன் குடையைப் போர்க்களத்திற்குச் செல்ல விடுவது. அரசனின் வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.

தேர் – தும்பை அரசனின் தேர் வலிமையைக் கூறுவது.

விளக்கு – அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுதல்.

அரியணை – அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.

மேற்கண்ட பொருட்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதை புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலின் வாயிலாக அறியலாம்.

கையறுநிலை

     போர்களில் அரசன் முதற்கொண்டு மறவர்கள், யானைகள், குதிரைகள் என இறந்து போகின்றனர். இவர்களுடைய உறவினர்கள் இறந்து போனவர்களின் துக்கத்தைத் தாளாமல் மனம் வருந்தி நிற்பர். அத்தகையச் சூழலைத்தான் கையறுநிலை விளக்குகிறது.

              ‘‘வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு

          கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.2:9)

தன்னுடைய தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து கையறுநிலையாய் நிற்கின்றானாம். அதேபோல் பகை நாட்டிற்காக இறந்து போன மறவர்களை நினைத்தும் வருந்தும் உன்னத போக்கு நம்மக்களிடையே இருந்து வந்துள்ளது. இறந்துபட்டவர்களுக்காக இறுதிக்கடன்களைச் செய்தலும் சொல்லப்பட்டுள்ளது. போரில் அரசன் கொல்லப்பட்டவுடன் அதை மனம் தாங்காது மறவன் ஒருவன் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொள்ளும் பேரன்பு அக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது.

          ‘‘காதற் கணவனொடு கனைஎரி மூழ்கும்

          மாதர் மெல்லியல் மலிபுஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:19)

கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுகிறாள். அதனால் போரில் இறந்துபட்ட கணவனுடன், கணவனை அழித்த கருவியால் தானும் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதன் தொடக்கமே பின்னால் உருவாகி பெண்களுக்கு அச்சுருத்தலாக இருந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். போர்க்களத்தில் இறந்துபட்ட கணவனை விண்ணுலகப் பெண்கள் தழுவும் முன்னர் அவனுடைய மனைவி தழுவி நிற்கின்றாள் என்பதை சிருங்காரம் என்னும் துறை விளக்குகிறது. விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்ட அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறாள். தன்னுடைய கணவன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமை படுகின்றாள்.

முதுபாலை –  பாலை நிலத்தில் தன்னுடன் வந்த கணவன் இறந்ததால் தலைவி வருந்ததல்.

சுரநடை – காட்டில் மனைவியை இழந்த கணவன் வருந்தவது.

தபுதார நிலை – மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.

தாபத நிலை – கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.

தலைப்பெயல் நிலை – குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்ததைக் கூறுவது.

பூசல் மயக்கு – போரில் இறந்த சிறுவயது மறவனின் சுற்றந்தார் அழுது ஆராவாராம் செய்வது. மன்னன் இறந்ததற்கு வருந்துதலும் ஆகும்.

மாலை நிலை – கணவனை இழந்ததால் உயிர்விடக் கருதிய மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.

மூதானந்தம் – இறந்த கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட தலைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது. ( உடன்கட்டை இதனால்தான் உண்டாகியிருக்கும்)

ஆனந்த பையுள் – போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மிகவும் வருந்துவது. இறந்தோரது புகழினை அன்பின் காரமாக எடுத்துரைப்பது.

வருத்தமடைதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஒருவரின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாகவே கையறுநிலை உண்டாகிறது. அதனால் கணவன் இறந்தவுடன் மனைவி அன்பின் காரணமாகவே உயிர் விடுகிறாள். ஆனால் அதற்கு பின்னால் வந்த மக்கள் உயிர்விட விரும்பாத பெண்களையும் இவ்வாறாகச் செய்ய சொல்லி வற்புறுத்தி இருப்பார்கள். இதன் காரணமாகவே உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்திருக்கலாம்.

பேய்கள்

           ‘‘செருவேலோன் திறம்நோக்கிப்

          பிரிவின்றிப் பேய்ஓம்பின்று’’ (பு.வெ.மாலை.கொளு.4:13)

புண்பட்டு இறந்த மறவனை பேய்கள் காவல் காத்து நின்றனவாம். புண்பட்ட மறவனை சுற்றி நின்று பேய்கள் அச்சுருத்தலையும், வீர மறவனின் புண்ணை பேய் தீண்டி மகிழ்ச்சி அடைவதும், சில பேய்கள் விழுப்புண்ணை தீண்ட ஆஞ்சுவதுமாய் இருப்பதும் சுட்டப்பட்டுள்ளன.

முடிவுரை

     பண்டையகால மக்களின் புறச்செய்திகளைப் புறப்பொருள் வெண்மாலை இலக்கண நூலில் இருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. போர்ச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூலாக இருப்பினும் அன்றைய மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். போரின் காரணமாக மறவர்களும் விலங்கினங்களும் உயிர் விட்டுள்ளனர்.  அதனால் மறவர்களின் மனைவிமார்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஆண்கள் அதிகம் இறந்துபட்டதால் அக்காலத்தில் பெண்கள் அதிகம் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் ஆண்கள் குறைவு என்ற போதில் ஒரு ஆணுக்குப் பல மனைவிமார்கள் என்ற கட்டமைப்பு வந்துள்ளதை பார்க்க முடியும். இதற்கு முழுக் காரணமாக மன்னர்களின் பேராசையே காரணமாக இருக்க முடியும். சங்க இலக்கியத்தில் புறச்செய்திகளைக் குறைவாகத் தந்ததிலிருந்து அவ்வவ்போதுதான் போர் நடந்திருக்கக்கூடும். அவ்வாறு நடந்திருக்கும் போர்களில் உண்மைத்தன்மையும் நியதியையும் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

iniyavaikatral@gmail.com

மாக்கிழவன் கோவில்

மாக்கிழவன்-கோவில்

சிறுகதை : மாக்கிழவன் கோவில்

          உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்கு முன்னரே நடந்து இன்று கோடிமலை வந்து சேர்ந்தனர். மாக்கிழவன் கோயில் அறுபது ஏக்கரில் பரந்து இருந்தது. ஒன்பது நாள் திருவிழா. கோயிலுக்குச் சொந்தமான ஒன்பது பட்டத்தார்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னே நின்று பூஜையினை நடத்துவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பட்டத்தார் வீதம் ஒன்பது நாட்களிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இவர்களைத் தவிர இருபத்துநான்கு உப பட்டத்தார்களும் உண்டு. கோவில் நிர்வகிப்பதில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ஒன்பது பட்டத்தார்களில் அம்மாசி கிழவன் தலைமை பொறுப்பில் இருந்தார். மாக்கிழவன் என்ற மனிதன் இருந்ததாகவும் அவர்தான் கோடிமலைக்கிராமங்களை உருவாக்கி காவல் காத்ததாகக் கதை ஒன்று உண்டு. அவர் கொல்லிவாய்ப் பிசாசுடன் சண்டையிட்டு இறந்தாகவும் மீண்டும் மனிதராகப் பிறந்து அப்பேயைக் கொல்வார் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடம் இருந்து வருகிறது.  மாக்கிழவன் இறந்த பிறகு அம்மலைவாழ் மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் கிழவன் என்று சேர்த்துக்கொண்டார்கள்.

       ஒன்பது நாட்களும் இரவு மாக்கிழவன் நாடகம் நடத்தப்படும். அதுவும் கடைசி ஒன்பதாவது நாளிரவு மாக்கிழவன் அந்த கொல்லிவாய்ப் பிசாசை கொல்லுகின்ற காட்சி பார்ப்பவர்களை அப்படியே அசர வைக்கும். அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காகவே மக்கள் திரண்டு வருவர்.  ஒவ்வொரு பட்டத்தார்களின் நாளுக்கு ஏற்ப அவர்களின் வகையறாக்கள் பலிகிடா வெட்டியும் கோழி அறுப்பும் செய்வர். அதனால் தினமும் அன்னதானம் நடைபெறும். வேண்டிக்கொண்டவர்கள் ஒருபுறம் எதையாவது சாப்பிட கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பாட்டும் இசையும் ஆடலும் எங்கு பார்த்தாலும் நின்று பார்க்கத் தூண்டும். ஐஸ் விற்பவர்கள் முதல் பொறிகடலை பஜ்ஜி கடை வரை அந்த ஒன்பது நாட்களும் வியாபாரம் சூடு பறக்கும். ரங்க ராட்டினமும் குதிரை ராட்டினமும் எப்போதும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கும். சேலையுடன் நெற்றி உச்சியில் குங்கும பெண்கள், தாவணிப் போட்ட அழகு பதுமைகள், வேட்டி சட்டை காளைகள் என எங்கும் மாக்கிழவன் கோவில் களைக்கட்டும்.

    அவரவரும் மாடுகளை ஒரு ஓரமாகக் கட்டி வைக்கோல் போட்டனர். தங்களுடைய மாட்டு வண்டியோடு கூடாரம் அமைத்துக் கொண்டனர்.  அப்பெண்கள் மூன்று கற்களைச் சரியாக வைத்து, பொறுக்கி வந்த சுள்ளிகளை இட்டு பொங்கலிட்டனர். முதல் நாளைய இரவு நாடகத்தில் மாக்கிழவன் பிறப்பைக் காட்சிப்படுத்தினார்கள்.

      “சரவணா… நீ அம்மா பொறந்த ஊருக்குப் போ.. ரொம்ப நல்லாயிருக்கும்” என்றார் அப்பா.

      “எனக்கு போகனுமுன்னு தோணல. எல்லாம் இந்த அம்மாவுக்காகத்தான்” என்றான் சரவணன்.

      “எனக்காக எல்லாம் நீ வர வேண்டாம். இந்த இருபத்தி அஞ்சு வருசமா உன்னை உங்க தாத்தா பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போகாம இருந்திட்டன். ஏதோ நான் செஞ்ச பாவம். எங்க மலை கிராமத்துக்கு பாரஸ்ட் ஆபிசரா வந்த உங்க அப்பாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அப்ப ஓடி வந்தவதான். இன்னும் நான் அங்க போகவே இல்ல. எல்லாம் மறந்து இப்பத்தான் மாக்கிழவன் விழாவுக்கு நம்மளை அழைச்சிருக்காங்க. நீ வரலன்னா கூட பரவாயில்ல நான் கண்டிப்பா போகத்தான் போறேன்” என்றாள் அன்னம்.

      “அம்மா கோவிச்சுக்காத.. நான் கண்டிப்பா வறேன். அப்பாவும் நம்மோடவே வரட்டுமே” என்றான் சரவணன்.

      “நீயும் அம்மாவும் முன்னால போங்க. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் அத முடிச்சிட்டு கடைசி நாளுக்கு வந்துடுறேன்” என்றார் அப்பா கணேசன்.

      நான்காம் நாளுக்கு அன்னமும் சரவணனும் மலைகிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். தாத்தா அம்மாசி கிழவனும் பாட்டி பூவாயியும் மகளையும் பேரனையும் உச்சி முகர்ந்தார்கள். அம்மாசி கிழவனுக்கு தலைகால் புரியவில்லை. மகளும்  பேரனும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். ஒற்றை மகளை இழந்து நிற்கிறோமே என்ற தவிப்பில் நிறைய நாள் அழுததுண்டு அம்மாசி கிழவன்.  பேரனை தன்னுடனே வைத்துக்கொண்டார்.  தனக்கு பிறகு இவன்தான் அம்மாசி கிழவனின் வாரிசு என்று ஊருக்குள் சொல்லிக்கொண்டார். நான்காம் நாள் இரவு நாடகத்தில் மாக்கிழவனின் பராக்கிரமக் காட்சியினையும் ஊர்க்காவல் காக்கும் திறனையும் தத்ருபமாக நடித்துக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் சரவணன் நாடகத்தை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான்.  கொஞ்ச நேரத்தில் வயிறு முட்டவே,

      “அம்மா… எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் போல இருக்கு… கூட வறீயா” என்றான் சரவணன். மகனுக்குத் துணையா அம்மா எழுந்தாள். கோவிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிய படி கோவிலைச் சார்ந்த ஆலமரம். அடுத்தபடியே நெல் வயல் ஒன்று இருந்தது.

      “சரவணா… மரத்துக்குப் பின்னால வயலு ஓரமா போயி இருந்துட்டு வாடா” என்றாள் அம்மா

      அந்தக் கும்மிருட்டில் ஏதோ ஒரு தடவலுடன் மரத்துக்குப் பின்னால் சென்றான். வயிற்றில் இருப்பதை கொஞ்சகொஞ்சமாய் இறக்கி வைத்தான். அப்பொழுதுதான் தனக்கு முன்னால் இருக்கும் வயல்வெளியை உற்றுக் கவனித்தான். சின்னசின்ன விட்டில் பூச்சிகளின் சத்தத்துடன் நீண்டதாய் கறுப்பாய் இருட்டாய் ஒரே மாதிரியாய் தெரிந்தது. அந்நேரத்தில் கறுத்த உருவத்தில் வாயில் கொல்லியை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு உருவம் புகைத்துக் கொண்டிருந்தது.       சரவணனின் மனம் திடும் என்று பதைத்தது. கண்ணை இறுக்கி மூடி மீண்டும் அதே திசையை நோக்கிப் பார்த்தான். அங்கு முன்பு பார்த்தது போலவே எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அம்மாவிடம் ஒரே ஓட்டமாய் ஓடினான். எதுவும் பேசாமல் நாடகத்தைப் பார்த்தான். இத்தனை வயசாயிடுச்சி பயந்ததை போயி அம்மாவிடம் சொன்னால் அவர்கள் எண்ண நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான்.

      கட்டிலில் படுத்தவுடன் தூங்கிப்போய் விட்டான் சரவணன். கொஞ்ச நேரத்தில் அவனுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று பலம் கொண்ட மட்டும் கத்தினான். அவன் கத்துவது யார் காதுக்கும் கேட்கவில்லை. யாரோ அவன் கழுத்திலே கயிறு கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள். யாருமில்லாத இடம். சத்தமில்லாத பகுதி. கும்மிருட்டு. நடு யாமத்தைத் தாண்டிய சூழல். தான் எங்கே இருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியாமல் தவித்தான் சரவணன். மண்ணில் நுழைந்து வேரில் புகுந்து பல குறுத்தைக் கடந்து சென்றான். அவ்விடம் குறுகிய பாதையாய் நீளமாய் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இருட்டாகவே தென்பட்டது. மூக்கின் நுனி பலவண்ண வாசனையை நுகர்ந்தது. நன்கு நீண்டு வளர்ந்து இருக்கக்கூடிய மூங்கிலின் நடுவே உள்ள ஓட்டையினுள்ளே தான் இருக்கின்றோம் என உணர்ந்தான்.

      “என்ன மாக்கிழவோரே… எப்படி இருக்கீர்?” – குரல் மட்டும் கேட்டது.

      “யாரது? உனக்கு என்ன வேண்டும்? என்னை எதற்கு இங்கு தூக்கிக்கொண்டு வந்தாய்? திக்கிதிக்கி பேசினான்  சரவணன்.

      “உனக்கும் எனக்கும் பழையக்கணக்கு ஒன்று உள்ளது. அதை தீர்த்துவிட்டு போகலாமென்று வந்தேன்” – மீண்டும் அதே குரல்.

      “எனக்கு பயமா இருக்கு! என்ன விட்டுறு!” என்று தலையைத் திருப்பி கண்கள் சுழற்றியபடியே பார்த்தான். திடிரென்று நெருப்பு குழம்பாய் கோரப்பற்கள் தொங்க அவ்வாயில் இருந்த ஒழுகிய எச்சிலுடன் அவன் கண்ணுக்குள் வந்து சென்றது அந்தக் கொல்லிவாய்ப் பிசாசு.

      “அம்மா… என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தான் சரவணன். பக்கத்தில் படுந்திருந்தவர்கள் அனைவரும் என்னுமோ ஏதோவென்று பதறிப்போனார்கள். சரவணனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது.

      “என்னப்பா கெட்ட கெனவா? என்றார் அம்மாசி கிழவன்

      “ஆமாம் தாத்தா!” என்றான். மகனின் முகத்தை நன்றாகத் துடைத்து விட்டாள் அம்மா அன்னம். பாட்டி கொடுத்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் உறங்கச்சென்றான்.  அனைவருக்கும் நல்ல தூக்கம். எப்படி புரண்டு படுத்தாலும் அந்தக் கொல்லிவாய்ப்பிசாசின் உருவம் அவனின் கண்முன் அடிக்கடி வந்து போனது. எதைஎதையோ நினைத்து மறக்க முயற்சி செய்தான். ஆனால் அந்தக் கோரப்பற்களுடைய நெருப்பை விழுங்கிய பிசாசின் நினைப்பு அடிக்கடி கண் முன்னெ வந்து சென்றது.  இரவில் தான் கண்ட கனவைப்பற்றி அம்மாவிடம் கூறினான். குறிப்பாக அந்தப் பேய் தன்னை மாக்கிழவன் என்று அழைத்ததைப் பற்றிக் கூறினான்.

      “ஒன்னுமில்லப்பா… இன்னிக்கு பூரா கோவிலை சுத்துனது. மாக்கிழவன் சாமியின் நாடகம் பார்த்தது. இதெல்லாம் நெனச்சிட்டுப் படுத்திருப்ப அதான்! என்றாள்.

      சரவணனின் மனசுக்கு அம்மாவின் பதில் ஏதோ தன்னை சமாதானப்படுத்துவதாகவே இருந்தது. தாத்தாவிடம் கேட்க எண்ணினான். தாத்தாவை தேடினான். அவர்கள் வீட்டுக் களத்துமேட்டு ஓரத்தில் செங்குத்தான கல் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. அந்தக்கல்லில் தன்னுடைய உச்சந்தலை வைத்து அழுது கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

      “தாத்தா இங்க என்ன பன்றீங்க… உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கனும்” என்றான் சரவணன். பேரனின் குரலைக் கேட்டவுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு,

      “என்னப்பா கேட்கனும். கேளு?” என்றார்.

      “மாக்கிழவோன் கோவில பத்தி தெரிஞ்சுக்கனும்” என்றான். அம்மாசி கிழவன் கொஞ்சம் நடுங்கிப் போனார். இக்கோடிமலையில் மாக்கிழவோன் என்ற உண்மைப்பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அனைவரும் மருவிய பெயராய் மாக்கிழவன் என்றே அழைத்து வந்தனர். பேரனுக்கு மாக்கிழவோன்  என்று எப்படி தெரிந்தது. மனம் குழம்பினார். அவரின் உதடுகள் வரலாற்றைச் சொல்ல தொடங்கியது.

      “ஒரு காலத்துல இந்த மலைகள் எல்லாம் ரொம்ப வளமா இருந்துச்சி. அங்கொன்னு இங்கொன்னுமா குடிசைகள் இருந்தன. கொஞ்ச நாளைக்கு அப்புறம் புலி சிங்கம் கரடி போன்ற விலங்குகள் பயத்துனால ஒரே இடத்துல குடிசைகள் அமைச்சி வாழ ஆரமிச்சாங்க. அவுங்க அவுங்களுக்கும் தனியா இடம் காடு மாடுகள் ஆடுகள் என வைச்சிருந்தாங்க. ஒரு வீடு தவறாம நாயும் எப்பவும் அவுங்க கூடயே இருக்கும். எங்காளுங்க எங்க போனாலும் கூடவே வரும் போவும். எங்களுக்கு ஒரு பாதுகாப்புன்னா அது வேட்டை நாய்தான். நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க தாத்தா என்கிட்ட சொல்லுவாரு” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த மாமர கிளையில் கையை ஊன்றியபடி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

      “என்ன தாத்தா? அப்புறம் என்னாச்சி? உங்க தாத்தா இன்னும் என்னவெல்லாம் சொன்னாரு? சொல்லுங்க” என்றான் சரவணன்.

      “காலமாற்றம். சூழ்நிலை மாற்றம். மனிதர்களும் மாறித்தான ஆகவேண்டும். அப்படித்தான் எங்க மனிதர்களும் மாறிப்போனார்கள்.  அந்தச் சமயத்துல மழையே இல்லாம போச்சு. எங்கும்  பசி பட்டினி பஞ்சம். பசிக்காகச் சண்டை போட்டி பொறாமை ஏற்பட்டுச்சி. ஒருத்தர் ஒருத்தர் அடிச்சிக்கிட்டு செத்தும் போனாங்க. மலையில இருக்குற மரமெல்லாம் எரிஞ்சு சாம்பலாச்சு. அப்பத்தான் இந்த மலைக்கு எங்கிருந்தோ கடவுள் மாதிரி ஒருத்தர் வந்தார். அவரு யாருன்னு யாருக்கும் தெரியாது! பெத்தபுள்ளயே அப்பன வெட்ட அருவாவ எடுத்துட்டு ஓடுனான். எதிர்ல வந்த அந்தக் கட்டுடம்பு பெரியவர் அவனுக்கு முன்னால போயி நின்னு அப்பிடியே பார்த்தார்”

      “நல்லதை செய்! நன்மையே நடக்கும்!!” என்றார் அந்த பெரியவர்.

      அவன் என்ன நினைச்சானோ தெரியவில்லை. கையில் இருந்த அருவாவைப் போட்டுவிட்டு பின்னால் நகர ஆரமித்தான். அந்நேரம் அவனின் உச்சந்தலையில் பெரியதாய் உருண்டையாய் மழைக்கட்டி விழுந்து தெறித்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் அன்னாந்து வானத்தையே பார்த்தனர். பகை மன்னனை அழிக்க வரும் குதிரைப்படைகளைப் போல கூட்டாகச் சொட்டென்று பூமியில் வந்து விழுந்தது மழைத்துளி. பயங்கர மழை. கிட்டதட்ட நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஆனால் யாருமே அங்கிருந்து நகரவேயில்லை. வெளியில் இருந்து வந்தவரும் அப்படியே நின்றிருந்தார். அம்மனிதர்களின் தண்ணீர்ப் பார்க்காத அவ்வுடம்பில் இன்னும் கொஞ்ச நேரம் நனைய விட்டிருந்தாலும் நனைந்து இருப்பார்கள். அவ்வளவு தாகம் இருந்தது.

      அவர் வந்த பிறகு தேங்கிப்போன வளங்கள் மீண்டும் எங்களுக்குக் கிடைத்தது. இக்கோடிமலை வாழ்மக்களுக்கு ஏதாவது பிரச்சனையின்னா உடனே சரியான தீர்ப்பு வழங்கிடுவார். நல்ல பச்சிலை மருத்துவர். அதிகம் பேசாதவர். இனிமையாகச் சொல்ல வேண்டியதை மட்டும் பேசுவார். அவரின் பெயர் எங்க யாருக்குமே தெரியாது. அவரின் வயசு முதிர்ச்சி பார்வையின்னு உசத்தியா காமிச்சது. நாங்க எல்லோரும் அவரை கிழவோன் (தலைவன்) என்று அழைக்க ஆரமித்தோம்.

ஒருமுறை எங்கள் மலையைச் சுற்றிலும் புலிகள் ஆக்கிரமித்துக் கொண்டது. போவோர் வருவோர்களை அடித்துக் கொன்றது. விடியற்காலை நேரங்களில் பசுக்களையும் ஆடுகளையும் கொன்று தின்றது அந்தக் கொடூர புலி. எங்கள் முன்னோர்கள் எல்லாம் பயந்து போய் கதவை அடைத்து விட்டுக்குள்ளே இருந்தனர்.  அன்று காலை ஊரின் நடுவே அனைத்துப் புலிகளும் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுருண்டு கிடந்தது. பக்கத்தில் இளவட்டக்கல். அக்கல்லின் மேல் அமர்ந்திருந்தார் கிழவோன். இடுப்புக்குக் கீழே வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். வேட்டியை இரண்டு கால்களுக்கு இடையே நன்கு சுற்றி இறுகக்கட்டியிருந்தார். கறுத்த மீசை. மேலாடை இல்லாமல் தலையில் தலைப்பாகை போன்று துண்டால் கட்டியிருந்தார். நுனாக்கட்டையைப் போன்ற வழுவழுப்பான உடம்பு. வயிரம் பாய்ந்தது போல் முறுக்கேறியிருந்தது. ஆதிகால மனிதனின் முகம். ஈரம் கொண்ட கண்கள். பசையாய் ஒட்டிக்கொள்கிற தேகம். ஏதும் அறியாதவர் போல் கற்களைக் கொண்டு மூங்கில் குச்சியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். கால்கள் கட்டப்பட்டிருந்த புலிக்கூட்டத்தை சிலர் நடு காட்டுக்குள் உள்ளே போய் விட்டார்கள். அக்கிழவோரைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். அவர் கிழவோன் இல்லை மாக்கிழவோன் என்றனர்.

      அன்றிலிருந்து மாக்கிழவோன்தான் கோடிமலை கிராமங்களுக்குப் பாதுகாவலர் ஆனார். எப்போதும் கூர்மையான மூங்கில் குச்சியைக் கையிலே வைத்திருப்பார்.  நடந்துகொண்டே இருப்பார். ஒரு களவாணிப் பைய கூட எங்க மலை பக்கத்துல நெருங்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. அன்றைய தினம் என்னுடைய பாட்டனார்,  தூக்குச் சட்டி நிறைய ஆட்டுக்கறிக்குழம்பு மாக்கிழவோனுக்காகக் கொடுத்தனுப்பினார். காட்டுக்குள்ளே கிணறு. கிணறு நிறைய தண்ணீர். நீர்க்கிணறு பக்கத்தில் பனையோலை குடிசை. குடிசையின் ஓரத்தில் அலைமாறி, கீழே நீண்டதொரு அழகாய் கயிற்றுக்கட்டில்.  அலைமாறி வாரையில் தூக்குச் சட்டியை மாட்டியிருந்தார் கிழவோன். சுடச்சுட அப்போதே சாப்பிட்டுவிட வேண்டும் என எண்ணினார். ஆனால் காவல் காத்தலை முடித்து யாமத்தில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். கையில் மூங்கில் குச்சியை எடுத்தபடியே மலைகிராமங்களுக்குள் நுள்ளே நுழைந்தார்.

      மலை கிராமங்களுக்குள் வேகமாக நடையைக் கூட்டினார். முடிந்தவரை சீக்கிரம் குடிசைக்குப் போக வேண்டும். ஆட்டுக்கறியின் ருசி அவரை வேகமாக நடக்க வைத்தது. ஆனாலும் யாமத்தைத் தாண்டிதான் கிழவோனால் வர முடிந்தது. குடிசைக்குள் உள்ளே வந்தவர் நேராகத் தூக்குச்சட்டியை எடுத்துக் கறித்துண்டை வாயிலே போட்டார்.  உப்புசப்பு இன்றி சுவையே இல்லாமல் இருந்தது. நன்றாகக் கலக்கி மீண்டும் சாப்பிட்டுப் பார்த்தார். அப்போதும் கொஞ்சம் கூட சுவையே அற்று இருந்தது. தூக்குச்சட்டியில் இருக்கும் கறியை வெளியே கொட்டிவிட்டு தண்ணீர் ஊற்றி வைத்தார். ஒருசில மாதங்களுக்குப் பிறகு அமாவாசைக்கு முதல் ராத்திரி. எங்கும் ஒரே இருட்டு தோற்றம். அதே மாதிரி இன்னொரு வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் கறிக்குழம்பு வந்தது. தூக்குச்சட்டியை அலமாரியில் மாட்டிவிட்டு காவலுக்காக நடக்க ஆரமித்தார். மாக்கிழவோனின் மனம் அன்றைய சம்பவத்தை நினைவுப் படுத்தியது. அவருடைய கால்கள் பின்னோக்கி இழுத்தன. வேகமாக மீண்டும் தன் குடிசை பக்கம் ஓடினார். குடிசையின் வாசலில் கால்கள் இரண்டையும் நீட்டிப்போட்டுக்கொண்டு மடியில் வைத்திருந்த தூக்குச்சட்டியில் நாக்கை உள்ளே விட்டு நக்கி சுவைத்துக் கொண்டிருந்தது கொல்லிவாய்பிசாசு.

      “ஏ… பிசாசே! ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை உரு தெரியாமல் அழித்து விடுவேன்” – மாக்கிழவோன்

      பலமாகச் சிரித்துவிட்டு, ”என்னை என்ன காட்டில் வாழும் புலி என்று நினைத்துக் கொண்டாயோ?” ஏளனச் சிரிப்பு அந்தப் பிசாசுக்கு. மாக்கிழவோனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கையிலிருந்த மூங்கிலை கொல்லிவாய் பிசாசு மீது வேகமாக எறிந்தார். தலையில் அடிப்பட்டு சுருண்டு விழுந்தது. பிசாசு கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. வேகமாக ஓடிய மாக்கிழவோன் மீண்டும் மூங்கில் குச்சியை எடுத்து தலையில் பலம் வந்த மட்டும் அடிக்கத் தொடங்கினார். அவர் அடித்த அடியில் நிலைகுழைந்து போனது கொல்லிவாய் பிசாசு. இருட்டில் அங்கே இங்கே ஓடி மாக்கிழவோனை கொஞ்சம் அலைக்கழித்தது. யாமம் தாண்டிய நிலையிலும் சண்டை தொடர்ந்தது. இருவருக்குமே உடம்பில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டன. காட்டுத்தனமான சண்டை. பிசாசுக்கு வெற்றியைக் கிடைக்கவிடாமல் விடியும்வரை போராடினார் மாக்கிழவோன். பொழுது விடிந்தது.

      “மாக்கிழவோரே… அடுத்த இரவுக்காகக் காத்திருக்கிறேன். உன்னை கொல்லாம விட மாட்டேன். நான் திரும்பி வருவேன்” – என்றது கொல்லிவாய்ப்பிசாசு.

      “உனக்காக நான் எப்போதும் இங்கேயே காத்திருப்பேன். வா… உன்னால் முடிந்தால் வந்து கொல்லு.. உன்னை அழிச்சு இரத்தத்தை இந்தப் பூமியில தெளிச்சி காடடுறேன் பாரு” என்றார் மாக்கிழவோன்.

      பொழுது விடிந்தது. எம் பாட்டனார் வீட்டின் முன்புற களத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். எம் பாட்டியோ வாசலில் சாணியை கரைத்துத் தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது எம் பாட்டிதான் முதலில் மாக்கிழவோரை கண்டார். உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் இரத்த வெள்ளமாய் எங்கள் களம் நோக்கி வந்து கொண்டிருந்தாராம்.

      “என்னங்க… என்னங்க… சீக்கிரம் எழுந்திருங்க. மாக்கிழவோன் ஐயா பாருங்க துணியில்லாம இரத்தத்தோட வராரு” ன்னு பாட்டனாரை பாட்டி எழுப்பியிருக்கா. அவரும் தடாபுடான்னு எழுந்திருச்சி, ஓடிப்போயி தான் போத்தியிருந்த போர்வையை மாக்கிழவோன் உடம்புல போட்டு மறைச்சிருக்காரு. பாட்டனார் மடியிலயே சாய்ஞ்சி படுத்திட்டார். எதுவும் பேசல. தன்னை இழந்து காணப்பட்டார். அதற்குள் பாட்டி சொம்புல தண்ணீர் எடுத்து வந்து மாக்கிழவோன் வாயில ஊத்தினாங்க. இரண்டு முழங்கு கூட இறங்கியிருக்காது, “நான் மீண்டும் பிறப்பேன். கொல்லிவாய்ப்பிசாசைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டே என் பாட்டியின் கண்களைப் பார்த்தவாறே உயிரை விட்டுள்ளார்.

      அம்மாசி கிழவனின் கண்கள் கலங்கியிருந்தது. பேரன் சரவணின் கையை இறுகப்பிடித்துக்கொண்டார். மாக்கிழவோன் மீண்டும் பிறக்க வேண்டும் என்று உரக்கக்கத்தினார். அப்போது சரவணனின் தோள்கள் தெனவெடுத்து நின்றன.

மாக்கிழவன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழா களைக்கட்டியது. அடுத்த நாள் பூரண அமாவாசை. அங்கே மாக்கிழவர் சிலை நன்றாக அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படுகிறார். விடியற்காலைதான் சாமி கோயிலுக்குள் வரும். அதற்குள் இரவு நாடகம் முடிக்கப்பட வேண்டும். கொல்லிவாய்பிசாசும் கொல்லப்பட வேண்டும். அதன்பிறகு மாக்கிழவர் சாமிக்கு உற்சவ பூஜை நடைபெறும்.  அதன்பிறகு மழை வரும். விழாவும் நிறைவுபெறும். 

      தன் வீட்டின் முன் பூஜைக்காக நிறுத்தப்பட்ட, நன்றாய் அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும் மாக்கிழவரின் சிலையை அம்மாசி கிழவன் உற்று நோக்கினார். சிலையின் முகம் சரவணன் வேடமிட்டு சிலையாய் அமர்ந்திருப்பது போன்று இருந்தது. அது சிலையல்ல. என் பேரன் சரவணனும் இல்ல. எம் கோடிமலை கடவுள் மாக்கிழவோன்தான் என்று புரிந்து கொண்டார். கூடியிருந்த மக்கள் மா… கிழவரே… என்று உரக்கக்கத்தினர். அன்று விடியற்காலையிலேயே மழை பொழந்து கட்டியது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

iniyavaikatral@gmail.com

சிலம்பில் தொல் சமூக மரபும் மாற்றங்களும்

சிலம்பில்-தொல்-சமூக-மரபும்-மாற்றங்களும்

முன்னுரை

            ஒவ்வொரு இனத்திற்கும் தனித்த அடையாளங்களும் தமக்கான பண்பாட்டு விழுமியங்களும் உண்டு. பழந்தமிழரும் அத்தகு தனித்த அடையாளங்களோடும் பண்பாட்டு விழுமியங்களோடும் வாழ்ந்தனர். இடையில் நிகழ்ந்த பண்பாட்டு தாக்குதல்கள் அவ்வடையாளங்களையும் விழுமியங்களையும் சிதைத்தும் மாற்றியும் போட்டன. தொல் தமிழரின் பண்பாட்டு மரபுகளையும் அவை மாற்றம் பெற்ற விதத்தையும் காட்டுவதாக இவ்வுரை அமைகிறது.

இறைவனும் அடையாளங்களும்

            பழந்தமிழ்ச் சமுதாயம் பல்கடவுள் சமயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்கடவுள் சமயத்தில் அடையாளம் மிக முக்கியக் காரணியாகத் திகழ்கின்றது. அடையாளத்திலும் குறிப்பாக நிறம், உடை, மாலை ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. திணைக்குரிய கடவுளரில் முல்லைக்கு மாயோனும் குறிஞ்சிக்கு முருகனும் கடவுள். இதனை

            “மாயோன் மேய காடுறை உலகமும்

            சேயோன் மேய மைவரை உலகமும்” என்பார் தொல்காப்பியர்

                                                                                                (தொல்காப்பியர் அகம்.5)

முருகனுடைய நிறம் சென்னிறம். எனவே அவன் சேயோன் எனப்பட்டான். அவனுடைய அடையாளப்பூ செங்காந்தள். இது ஒண்செங்காந்தள் கல்மிசை கவியும் நாடன் (குறு.185.6,7) ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் (குறு.284,3) என குறிஞ்சிக்குரிய கருப்பொருளாகப் பேசப்படுகிறது. குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருளான இம்மலர் முருகனின் அடையாள மலராகவும் கொள்ளப்பட்டுள்ளது.

                                    “செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

                                    செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

                                    கழல்தொடிச் சேஎய் குன்றும்

                                    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

                                                                                                (குறு.1) என்று பாடுகின்றார்.

வெற்ப! போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்கள் சாயுமாறு கொன்று வீழ்த்தி, அந்த அசுரர்களைத் தரையோடு தரையாய்த் தேய்த்து இல்லையாம்படி செய்த சிவந்த நேரான அம்பினையும் பகைவனைக் குத்தியமையால் செந்நிறம் படிந்த கொம்புகளையுடைய யானையையும், கழல இடம்பட்ட வீரவளையினையும் உடைய முருகப் பெருமானுக்குரிய இந்த மலை உதிரநிறம் வாய்ந்த பூக்களைக் கொண்ட செங்காந்தளின் பூக்களை உடையது.

            இப்பாடல் ‘தோழி கையுறை மறுத்தது’ என்ற துறை விளக்கத்தில் மட்டுமே அகப்பொருள் தன்மையையும் பெறுகிறது. எனவே திணையின் கருப்பொருள் திணைக்குரிய கடவுளுக்கு அடையாளப் பொருளாகியுள்ளது எனலாம்.

            முல்லைக்குரிய கருப்பொருள்களில் குறிப்பிடத்தக்கது கொன்றை மலர். அழகும் சிறப்பும் அதனை பலப் புலவர்களின் பாடல் பதிவைப் பெற வைத்துள்ளது.

            ‘பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப்பூங்கொன்றை’ (குறு.21:3,4) ‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை (குறு.66.1) காசின் அன்ன போதுஈன் கொன்றை’ (குறு.148.3) போன்றவை தக்க சான்று.

            முல்லை நிலத்திற்குரிய இம்மலர் அத்திணைக் கடவுளான திருமாலுக்கு ஆகாமல் பாலைத் திணைக்குரிய கடவுளான கொற்றைக்குரியதாகச் சிலப்பதிகாரம் பேசுகின்றது. இதனை,

                                    கொன்றையும் துவளமும் குழுமத் தொடுத்த

                                    துன்று மலர்ப்பிணையல் தோள் மேலிட்டாங்கு

                                    அசுரர் வாட அமரர்க் கடிய

                                    குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே. (சிலம்பு.12.11)

என்னும் அடிகள் தெளிவுபடுத்தும்.

                                    திருமாலின் படைகளாகச் சங்கு சக்கரமும் முன்வைக்கப்படுகின்றன.

                                   ‘வள்உருள் நேமியான் வாய்வைத்தவளை போல’ (கலி.105.9)

                                    இகல் மிகு நேமியான் நிறம் போல (கலி.119:3)

                                    செருமிகு நேமியான் தார் போல (கலி.127:4)

            சங்கத்தமிழ் மரபில் நேமியை உடையவனாதலின் நேமியோன் என்றே அழைக்கப்படுகின்றான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

            சிலம்பில் கொற்றவைப் பரவலில் சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாகக் காட்டப்படுகின்றன.

            “சங்கமும் சக்கரமுத் தாமரைக் கையேந்தி“ என்கிறது சிலம்பு (சிலம்பு.12:10) எனவே குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளான காந்தள் மலரும் செந்நிறமும் முருகனின் அடையாளங்களாக்கப்பட்டன. ஆனால் முல்லைக்குரிய கருப்பொருளான கொன்றை மலர் அந்நிலக் கடவுளான திருமாலுக்குரிய அடையாளப் பொருளாகாமல் கொற்றவைக்கு உரிய அடையாளாமாகவும் திருமாலின் படைக்கருவிகளான சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாவும் ஆக்கப்பட்டுள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

கற்பும் பெருங்கற்பும்

            எதனாலும் எவராலும் குலைக்க முடியாத உள்ள உறுதிப்பாடே கற்பு. இதைதான் வள்ளுவர் ‘கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்று கூறுகின்றார். கற்பை உயிரைவிட சிறந்ததாகத் தொல்தமிழர் மதித்தனர்.

                                   உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்

                                    செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று            (தொல்.1058)

என்பர் தொல்காப்பியர். இதற்கு விளக்கம் கூறும் வ.சுப.மாணிக்கனார் “நாணைக்காட்டிலும் கற்புச் சிறந்தது என்று நெறி தெளிந்த பெண்கள், கற்புக் காவலின் பொருட்டு நாண் வேலியைக் கடந்து செல்வார்கள். அதுவும் அகப்பொருளேயாம் எனத் தொல்காப்பியம் விதந்து மொழிகுவர் என்பார் (தமிழ்க்காதல். ப.212)

            பெண்ணுக்கு உயிரினும் மேலானதாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கற்பு ஆடவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. பரத்தைமை என்பது சங்ககாலத்து ஒரு ஒழுக்கமாகக் கருதப்பட்டதே இதற்குக் காரணம் எனலாம். பின்னர் வந்த வள்ளுவரும் இதனை அடியொற்றியே பிறன்மனை நோக்காமையைப் பேராண்மையாகப் போற்றினார். பிறன்மனை நோக்குதல் மட்டுமே ஆடவர்க்குக் குற்றமாகக் கருதப்பட்டது. எனினும் தலைவியருக்கு ஊடல் ஒரளவுக்குத் துணைநின்றது. தான் கற்புள்ளவளாக இருப்பதுபோல தன் கணவனும் கற்புள்ளவனாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் உரிமையை ஊடல் தலைவிக்கு ஒரளவு தந்தது.

            இந்த நிர்ப்பந்தத்திலிருந்து தலைவனை விடுவித்து அவனுக்குப் பூரண விடுதலையைத் தருவதற்காக் கொண்டு வரப்பட்டதுதான் பெருங்கற்பு. பெருங்கற்பு என்பது தலைவனைத் தெய்வ நிலைக்கு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வது. இதைத்தான் வள்ளுவர் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று கூறுகின்றார்.

            இளங்கோவடிகள் கானல் வரிப் பாடலில்

            திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சிக்

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி

            மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி என்பார்.

                                                                                                                                                    –           (கானல் 7:2,3)

            காவிரிப் பெண்ணே உன் தலைவனான காவிரி நாடன் உன்னை விட்டு கங்கை என்னும் பெண்ணை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். உன் தலைவன் உன்னை விட்டு கன்னியை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். இது உன் பெருங்கற்பைக் காட்டுகிறது. எனவே தலைவனைக் கட்டுப்படுத்த தலைவியிடமிருந்த ஒரே அத்திரமான ஊடலையும் பறித்துத் தலைவனுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதே பெருங்கற்பு எனலாம்.

            இந்தப் பெருங் கற்பின் அடுத்தநிலை பிற நெஞ்சுப் புகாமை, அதாவது அவள் குற்றமற்றவளாக இருப்பினும் குற்ற நோக்கோடு ஒருவன் அவளைக் கண்டால் அது அவள் கற்புக்கு பங்கம் விளைவிக்கும்.

            கற்புடை மகளிர் எழுவரைக் குறிப்பிடும் இளங்கோவடிகள், கணவனைப் பிரிந்திருந்த தலைவி அவன் வருமளவும் தன்னைக் கல்லுருவாக மாற்றிக்கொண்டு அவன் திரும்பி வந்தபிறகு கல்லுரு நீங்கினாள் என்றும் ‘கணவனைப் பிரிந்த தலைவி அவன் திரும்பி வருமளவும் தன் அழகிய உருவைக் குரங்கு உருவாக மாற்றிக்கொண்டு அவன் வந்தபிறகு பழைய உருவைப் பெற்றாள்” என்றும் கூறுவர். தன் இயற்கை அழகு பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதே இம்மாற்றத்துக்குக் காரணம் எனலாம்.

                        கொலைக்களக் காதையில் கோவலன் செய்கைக்கு வருத்தம் கொண்ட கண்ணகி

                        “அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்

                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                         விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை“ (சிலம்பு.16.71-74)

என்று கூறுவார். கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் அறவோர், அந்தணர் துறவோர்க்கு அளித்தலும் விருந்து எதிர்க்கோடலுமாகிய இல்லறக் கடமைகளைச் செய்யவும் இச்சமூகம் அனுமதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. படிதாண்டா நிலையையே இது காட்டுகிறது.

எனவே பெண்ணுக்கு மிக மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆண்களுக்கு எல்லையில்லா சுதந்திரத்தை வழங்க புகுத்தப்பட்டதுதான் இப்பெருங்கற்பு என்றால் மிகையாகாது.

பண்டமாற்றும் வணிக மரபுகளும்

            சங்ககாலத்தில் பண்டமாற்று முறைதான் வழக்கிலிருந்து. தங்கள் விளைபொருளில் மிகுதியாக உள்ளவற்றைப் பக்கத்துத் திணைகளில் கொண்டு கொடுத்து அதற்கு ஈடாக அந்நில மக்களிடம் உள்ள பொருள்களை வாங்கி வந்தனர். பொருளுக்குப் பொருள் என்ற நிலையில்தான் இந்த பண்டமாற்று நிகழ்ந்துள்ளதே தவிர பொருளுக்கான மதிப்பு இங்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை. ‘பாலோடு வந்து கூழோடு பெயரும் யாடுடை இடையனை குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. வேடன் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக்கொண்டதைக் கோவூர்கிழார் பாடுகின்றார்.

                                    “நெல்லின் நேரே வெண்கல் உப்பென்றும்”

                                    “நெல்லும் உப்பும் நேரே ஊரீரே என்றும்”

            உமணர் கூறி விற்றுப் பண்டமாற்றாகப் பெற்றதைச் சிறு படகுகளில் கொண்டு சென்றதை அகநானூறு காட்டுகிறது. இங்ஙனம் பண்டமாற்றுப் பெருவழக்காக இருந்தாலும் செம்பு, வெள்ளி, பொற்காசுகள் பற்றிய குறிப்புகளையும் காணமுடிகிறது.

            சிலம்பில் கோவலன் தந்தை மாசாத்துவானையும் கண்ணகி தந்தை மாநாய்க்கனையும்

                                     “மாகவாண் நிகர் வண்கை மாநாய்கன்“ என்றும்

                                   ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்

                                    வருந்தி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான்’

என்றும் அறிமுகப்படுத்துகின்றார்.

            அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கூட்டமாகச் சென்றதோடு அவர்களோடு வில் வீரர்களையும் அழைத்துச் சென்றனர். இந்தச் சாத்துக்களின் தலைவன் மாசாத்துவான் என்று அழைக்கப்பட்டான். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்றார்கள். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர்கள் நாவிகர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் எனப் பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்க்கர் என்று வழங்கப்பட்டது என்பர்.

            உற்பத்தியின் மிகையைப் பண்டமாற்று செய்த பழந்தமிழர் மரபு மாறி உற்பத்தியோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு கூட்டம் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, பெரும்பொருள் ஈட்டிச் செல்வந்தர்களாகத் திகழ்ந்தமையைச் சிலம்பு காட்டுகின்றது. உற்பத்தியில் ஈடுபட்ட பழந்தமிழரில் ஒரு சிலர் உற்பத்தியை விட்டு இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வணிகர் என்ற பெயரைப் பெற்றார்களா? அல்லது புதிய கூட்டம் தமிழகத்தில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டதா? என்பது மேலும் ஆய்வுக்குரியது.

ஊழ்வினை

            சங்க காலத்தில் ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்தது. காரணமறிய முடியாத சில நிகழ்வுகளுக்கு ஊழ்வினையைக் காரணமாக்கினர். தலைவனும் தலைவியும் சந்திக்க முதல் சந்திப்பே காதலாக மாறுவதற்கு ஏதோ ஓர் உந்து சக்தி இருக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்கு ஊழ் என்று பெயரிட்டனர்.

            சிலம்பில் ஊழ்வினை மிக வலிமை வாய்ந்ததாக இம்மையை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகக் காட்டப்பட்டுள்ளது.

            கானல்வரியில்தான் ஊழ் தன் பணியைத் தொடங்குகிறது. விடுதல் அறியா விடுப்பினாக மாதவி மனையில் கிடந்த கோவலனை வெளியேற்றும் முதல் பணியை அது செய்கிறது. 

            கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து

            மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினான் என

            யாழிசைமேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்”

                                                                                                (சிலம்பு 7.53-57) என்கிறார்.

            மாதவியைப் பிரிந்து வந்த கோவலனை மதுரைக்குக் கொண்டு செலுத்தியதும் ஊழ் இதனை ‘ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப’ தீவினை வந்து உறுத்தியதன் பயனாக, உள்ளம் தன்னைச் செலுத்தக் கோவலனும் கண்ணகியோடு வெளியேறத் துணிந்தான்.

            கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குச் செலுத்திய பின் ஊழ்வினை தன் பணியைச் செம்மையாக முடித்துக் கொண்டது.

                        வினைவிளை காலம் ஆதலின், யாவதும்

                        சினை அலர் வேம்பன் தேரான் ஆகி

                        ஊர்க் காப்பாளரைக் கூவி ஈங்கு என்

                        தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு

                        கன்றிய களவன் கையதாகில்

                        கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைகளம் 16:148-153)

எனக் கட்டளையிடுகிறான்.

            மாதவியிடம் மகிழ்வுற்றிருந்த கோவலனை அவளிடமிருந்து பிரித்து, கண்ணகியிடம் சேர்த்து இருவரையும் மதுரைக்குத் துரத்தி நீநிநெறி தவறா பாண்டியனை நீதி தவற வைத்து கோவலனைக் கொன்று தன் பணியைச் செம்மையாக முடித்துக்கொண்டதாக இளங்கோ குறிப்பிடுகின்றார்.

குடும்ப அமைப்பு

            சங்ககால குடும்ப அமைப்பு தாய்வழிச் சமூக எச்சங்களாகவே காட்சி அளிக்கின்றன. அகப்பாடல்களில் தலைவி செவிலித்தாய், நற்றாய், தலைவியின் தந்தை, தலைவியின் சகோதரர்கள் மட்டுமே இடம்பெறுகின்றார்கள். தலைவனின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இடம்பெறவில்லை.

            மூதின் முல்லை பாடல்களில் தலைவி போருக்கு அனுப்பும் குடும்ப உறுப்பினர்களின் வரிசையைப் பார்க்கும்போதும் முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்புகின்றாள். அடுத்தநாள் போருக்குக் கணவனை அனுப்புகின்றாள். இறுதியாகத் தன் மகனைப் போருக்கு அனுப்புகின்றாள். எனவே தலைவன் திருமணத்திற்குப் பின்பு தலைவியின் இல்லத்தில் வாழ்ந்ததையே இப்பகுதிகள் நமக்கும் தெளிவுபடுத்துகின்றன.

            சிலம்பு அதற்கு மாற்றான ஒரு பதிவை நமக்குக் காட்டுகிறது. மாசாத்துவான் இல்லத்திலே கோவலன் கண்ணகியின் மண வாழ்க்கைத் தொடங்குகிறது.

                                    கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும்

                                    மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை

                                    நெடுநிலை மாடத்து, இடைநிலத்து இருந்துழி

                                                                                                                              (சிலம்பு.2:11-13)

என்பார். இப்பகுதிக்கு விளக்கம் கூறும் உ.வே.சா அவர்கள் “கோவலன் கண்ணகிபால் மிகவும் அன்பு வைத்து நலம் பாராட்டி இன்புற்றுத் தருக்கி மகிழ்ந்து நடக்கும் நாட்களில் ஒரு நாள். அக்கோவலன் தாயாகிய பெருமனைக் கிழத்தி யென்பவள், கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்திக் கைத்தேர்ந்து உயர்ச்சிப் பெற்று விளங்குதலைக் காணவேண்டி வேறோரு மாளிகையில் இல்லறம் நடத்த வேண்டும் பொருளைக் கொடுத்துக் குடிவைத்தாள்” என்பார்.

            ஆக தாய்வழி சமூக அமைப்பு தந்தை வழிச் சமூக அமைப்பாக மாற்றம் பெற்றதையும், கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் அமைப்பாக மாற்றம் பெற்றதையும் இப்பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

முடிவுரை

            திணைக்குரிய கருப்பொருள்களே அத்திணைக்குரிய மக்களுக்கும் கடவுளுக்கும் அடையாளப் பொருளாக இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு அத்திணைக்குரிய செங்காந்தள் அடையாளப் பூவாக இருந்துள்ளது. ஆனால் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்கு அந்நில மலரான கொன்றை அடையாளமாகக் கொள்ளப்படவில்லை. மாறாக கொற்றவைக்குரிய அடையள மலராக இதனைச் சிலம்பு குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

            சங்க இலக்கியங்களில் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்குரியவையாக பேசப்பட்ட படைக்கருவிகளான சங்கும், சக்கரமும் சிலம்பி;ல் பாலைநிலக் கடவுளான கொற்றவைக்குரியவையாகப் பேசப்படுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

            ஊடல்வழி கணவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாக செயல்பட்ட பெண்ணை கணவனை, தெய்வ நிலையிலும் கேள்விக்கு அப்பாற்பட்ட நிலையிலும் வைத்துப் பார்க்கும் பெருங்கற்புக்கு உரியவளாக்கி கணவனின்றி பிச்சையிடவும் உரிமையற்ற நிலையில் அவளை நிறுத்தி படிதாண்டா பத்தினியாக்கி பெண்ணின் இயக்கத்தை முற்றிலும் முடக்கிவிட்ட நிலையைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

            பண்டமாற்றாக இருந்த சங்ககால வாணிபம் உற்பத்தியில் பங்குபெறாத இடைத்தரகர்களின் கைக்குமாறி உற்பத்தியாளர்கள் அதே நிலையில் இருக்க இடைத்தரகர்களான இவ்வணிகர்கள் பெருஞ்செல்வம் பெற்று அரசர்களுக்கு இணையாகத் திகழ்ந்த நிலையைச் சிலம்பு காட்டுகிறது.

            காரணம் அறியாச் சில நிகழ்வுகளுக்கு உழ்வினையைக் காரணம் காட்டிய தமிழர் இம்மையை நிர்ணயிருப்பதும் இயக்குவதும் ஊழ்வினைதான் என்ற நிலைக்கு மாறிவிட்டதைக் சிலம்பு காட்டுகிறது.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்

தமிழ்த்துறை

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

காந்திகிராமம்.

மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

45.மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

விளிம்புநிலை மக்கள் என்பதற்குச், சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், பாலியல்நிலை, சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூகக் கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.(2002:50), மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மக்கள், மகளிர் எனக் குறிப்பிடலாம். மேட்டிமைக் குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, குறைந்த அளவு உடை, குறைந்த அளவு கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக இவர்கள் உள்ளனர் எனலாம்.

விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் மணிமேகலையை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும். மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் புதிய பொருண்மைத் தளத்தில் மணிமேகலையை அறிந்து கொள்ளத் துணைபுரியும். மணிமேகலையில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்க்கண்ட உட்தலைப்புகளில் காணலாம்.

கணிகையர் / பரத்தையர்:

            மணிமேகலை துறவு என்று பதிகத்தில் அழைக்கப்படும் சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் பல விளிம்புநிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது.

            பெண்களும் மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகியோர் கணிகையர் குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சமூக பழிப்புக்கு உள்ளானவர்கள்; மாதவி கோவலன் இறந்தவுடன் துறவு கொள்கிறாள்; மணிமேகலையும் கணிகையர் குலத்தொழிலைத் தொடரத் தம்மால் முடிந்தவரை போராடினாள்.

            மணிமேகலை, பிக்குணிக் கோலம் பூண்டு, பிச்சை ஏற்றதனைக் கேட்டுச் சித்திராபதி சீற்றம் கொண்டாள். கூத்தியர் மடந்தையாகிய நாடகக் கணிகையர்களிடம் வஞ்சினம் கூறும்போது,

“கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி,

மாதவி மாதவர் பள்ளியள் அடைந்தது,

நகுதக்கன்றே!” (7-9)

என்று கூறிக் காதலன் இறப்புக்கு பத்தினிப் பெண்கள் தீ புகுந்து மாள்வர்; ஆனால், மாதவியின் துறவுக்கோலம் அனைவரின் நகைப்பிற்க உரியது என்கிறாள். கணிகையர் குலத்துப் பெண்கள் பத்தினிப் பெண்கள் அல்லர்; பலரின் கைப்பொருளைப் பெற்று வாழும் வாழ்வுடையவர்கள் என்பதை,

“பத்தினிப் பெண்டிர் அல்லேம்;

பலர்தம் கைத்துண் வாழ்க்கை கடவியமன்றே!” (14-15)

என்கிறாள். மேலும், கணிகையர் தம் குலவொழுக்கம் குறித்து,

“பாண்மகண் பட்டுழிப் படூஉம் பான்மையில்

யாழினம் போலும் இயல்பினம்; அன்றியும்,

நறுந் தாதுண்டு நயனில் காலை

வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்;

வினையொழி காலைத்திருவின்செல்வி

அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்;

தாபதக் கோலம் தாங்கினம் என்பது

யாவரும் நகூஉம் இயல்பினதற்றே?” (16-24)

என்று கூறுகிறாள். பாண் மகன் இறந்து போனவிடத்துத், தான் பிறனொருவன் கைப்படும் யாழினத்தைப் போன்ற இயல்புடையவர்கள்; மணமுள்ள பூந்தாதினை உண்டு, வறிதான் மலரினைக் கைவிடும் வண்டினம் போன்றவர்கள் கணிகையர்கள் என்கிறாள். உதயகுமரனுக்காக, மணிமேகலையைக் கைப்பற்றிக் கொண்டு வருவேன் என்றும் அவள் தம் கையிலே இருக்கும் பிச்சைப் பாத்திரத்தினைப் (அமுதசுரபி) பிச்சை எடுத்துண்ணும் பிற மக்களின் கையில் தந்துவிட்டு மணிமேகலையைப் பொற்தேரில் அழைத்து வருவேன்; அவ்வாறு செய்யாது போனால், தலையிலே சுட்ட செங்கற்களைச் சுமந்து நாடக அரங்கினைச் சுற்றிவருவேன்; அதுதவிர, பழி சுமக்கும் குலமரபு கெட்டவள் ஆவேன்; அரங்கக் கூத்தியரின் வீட்டினுள் நுழையவே மாட்டேன் என்று வஞ்சினம் கூறினாள். (31-35) மேலும், மணிமேகலை குலமகள் அல்லள் என்பதைச் சித்திராபதி உதயகுமரனிடம் வற்புறுத்துகிறாள். இதனை,

“கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்

பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லாள்;” (100-101) என வருகிறது.

            பரத்தையரின் இயல்புகள் இவை இவை என்பதைச் சித்திராபதியின் கூற்றில் வரும் அடிகள்:

“நாடவர் காண, நல்லரங்கு ஏறி,

ஆடலும், பாடலும் அழகும் காட்டிச்

கருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணைதூவச்

செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்

கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்

பண்டோர் மொழியிற் பயன்பல வாங்கி

வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்

பன்மயிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல்

கோன்முறை யன்றோ குமரற்கு?” (103-110)

என்பதிலிருந்து பூவில் தேன் உண்ணும் வண்டினம் போன்றவர்கள் பரத்தையர்கள் என்பதைப் பெறலாம்.

            இங்கு கணிகையர் குலத்திலிருந்து மீளும் மேனிலையாக்க முயற்சியில் மாதவியும் மணிமேகலையும் ஈடுபடுகின்றனர். ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவள் சித்திராபதி; இவளும் கணிகையர் குலப் பெண்தான் என்பது முரண்.

            இவ்வாறு, குலப் பெண்களாக மதிக்கப்படாத விளிம்புநிலைக் கணிகையர் குலப்பெண்களின் சமூக மதிப்பினை மணிமேகலை, உதயகுமரன் அம்பலம் புக்க காதையில் பதிவு செய்துள்ளது.

            “கற்புத்தானிலன்; நற்றவை உணர்விலள்;

             வருணக்காப்பிலள்; பொருள் விலையாட்டி என்று”

மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை (86-87)யில் உதயகுமரன் மணிமேகலையை இழிவாகப் பேசுகிறான். அதாவது, சுதமதியிடம், மணிமேகலை கற்பு என்பதும் இல்லாதவள்; நல்ல தவவுணர்வும் இல்லாதவள்; சாதிமுறையை ஒட்டிய பாதுகாப்பு (வருணக்காப்பு) இல்லாதவள்; பொருளுக்குத் தன் இன்பத்தை விலைப்படுத்துபவள் என்று இகழ்கிறான். குறிப்பாக, அந்தணர், அரசர், வணிகர், வெளாளர் எனும் நால் வருணப்பிரிவில் கணிகையர் குலம் வருவதில்லை. எனவே, அக்குலத்தில் பிறந்த மணிமேகலைக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்பதை அறியலாம்.

உதயகுமரனின் கூற்றிலிருந்து கணிகையர்குலம் அக்காலத்தில் சமூகத்தின் விளிம்புநிலையிலும் பாதுகாப்பு அற்றதாகவும் விளங்கியுள்ளதை மணிமேகலை பதிவு செய்துள்ளது.

கல்லா இளைஞன்

            கல்லா இளைஞன் குறித்த செய்தி சிறைவிடு காதையில் (43-57) இடம் பெற்றுள்ளது. காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலையை அறிந்த உதயகுமரன் நள்ளிரவில் ஊரம்பலத்திற்கு வருகிறான். ஆனால் அவ்விடத்தில் மறைந்து காத்திருந்த விஞ்சையன் காஞ்சனன், ‘ஈங்கிவன் வந்தனன் இவள்பால்’ என்று கருதி வாளால் வெட்டி வீழ்த்துகிறான். தன் மகனின் இறப்புக்கு மணிமேகலைதான் காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்ட இராசமாதேவி (உதயகுமரனின் தாய்) அவளைப் பழிவாங்கத் துடிக்கிறாள். பித்த மருந்து கொடுத்தும் அவளைப் பட்டியினிட்டும் பொய்ந்நோய் காட்டியும் புழுக்கறையில் அடைக்கிறாள். ஆனால், இவற்றையெல்லாம் தன்னுடைய மந்திர சக்தியால் முறியடித்து விடுகிறாள் மணிமேகலை.

            ஆனால், அரசி, கல்லாத ஒருவனை அனுப்பி மணிமேகலையைப் பாலியல் வன்கொடுமை நிகழ்த்த அனுப்புகிறாள். இதுகுறித்த பதிவுகள் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

“கல்லா இளைஞன் ஒருவனைக்கூஉய்

வல்லாங்குச்செய்து மணிமேகலைதன்

இணைவளர் இளமுலை ஏந்தெழிலாகத்துப்

புணர்குறிசெய்து, பொருந்தினள் என்னும்

பான்மைக் கட்டுரையலர்க்குரை என்றே

காணம் பலவும் கைந்நிறை கொடுப்ப-

ஆங்கவன் சென்றவ் வாயிழையிருந்த

பாங்கில் ஒருசிறைப்பாடு சென்றணைதலும்;

தேவிவஞ்சம் இது வெனத்தெளிந்து

நாவியல் மந்திரம் நடுங்காதோதி

ஆண்மைக்கோலத் தாயிழையிருப்பக்

காணம் பெற்றோன் கடுந்துயரெய்தி

அரசருரிமையில் ஆடவர் அணுகார்

நிரயக் கொடுமைகள் நினைப்பறியேன் என்று

அகநகர் கைவிட்டு, ஆங்கவன்போயபின்-” என்று வருகிறது.

            கல்வியற்ற இளைஞன் ஒருவனுக்குப் பொற்காசுகள் பலவற்றை அவன் கைநிறையும் அளவிற்குக் கொடுத்து, மணிமேகலையை வல்லாங்கு செய்யுமாறு அனுப்புகிறாள் இராசமாதேவி. பாலியல் வன்கொடுமையை செய்தமைக்கான குறிகளை உண்டாக்கி ‘அவள் என்னோடு கூடியிருந்தாள்’ என்ற மொழியை அனைவரிடமும் அலர் உரைக்க வேண்டுமென அவனிடம் ஏவுகிறாள். அவ்வாறே, கல்விகற்காத அவனும் அதற்கிசைந்து மணிமேகலை இருந்த பக்கத்தில் செல்கிறான். இதனை நன்குணர்ந்த மணிமேகலை மந்திரத்தின் உதவியால் ஆணுருக் கொண்டாள். அவ்விடம் பொன் பெற்று வந்த கல்லா இளைஞன் பெண் இல்லாது ஆடவன் இருப்பதைக் கண்டு கடுந்துயர் அடைந்தான். அரசனின் உரிமை மகளிர் இருக்கும் அந்தப்புறத்தில் ஆடவர் எவரும் நெருங்க மாட்டார்களே? நரகத்தைப் போன்ற கொடுந்தன்மையிலான அரசியின் நினைப்பினை, யான் அறிந்திலேனே? என்று கலங்கினான். பின்பு, அந்த அகநகரை விட்டு வெளியேறி எங்கோ ஓடிப்போய் விட்டான். எனும் இப்பதிவில் கல்வி கற்காத இளைஞன் ஒருவன் பொன்னுக்காக எச்செயலையும் செய்வான் எனும் கருத்தினை உணர்த்துகிறது.

            பெரும்பாலும் உழைக்கும் விளிம்பு நிலை மக்கள்தாம் கல்வி கற்காத மக்களாக, சமூகத்தில் இருந்துள்ளனர். நால் வருணப் பாகுபாட்டில் இடம் பெறாத இம்மக்கள் கல்வியறிவினைப் பெறவில்லை. இம்மக்களின் பிரதிநிதியாகக் கல்லா இளைஞனைக் கருதலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசி, பொருள் கொடுத்து இத்தகைய கொடுஞ்செயலைச் செய்யப் பணிக்கப்படுவதையும் அதற்கு அடிபணியும் விளிம்பு நிலை கல்லா மாந்தரையும் மணிமேகலை பதிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

            சமூகத்தில் உடல் ஊனமுற்றோருக்கு அனுதாபம் உண்டு. ஆனால், சமூக மதிப்பு என்பது முழுவதும் கிட்டுவதில்லை. இம்மக்களை விளிம்பு நிலையினராகக் கொள்ளலாம். இம்மக்கள் குறித்த பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது.

“கூனும், குறளும், ஊமும், செவிடும்,

மாவும், மருளும், மன்னுயிர்பெறாஅ;”

என்று அறவணர்த் தொழுத காதை (96-97)யில் வருகிறது. இங்கு, புத்தரின் அருள் அறத்தினைக் கேட்டவர்கள் பழுதுள்ள பிறவிகளை ஒருபோதும் அடைய மாட்டார்கள் என்று அறவண அடிகளின் கூற்றாக வருகிறது.

            மேலும், தென் மதுரையில் ஆபுத்திரன் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வீடுகள்தோறும் எடுத்த பிச்சை உணவினைக் “கண்ணற்றவரே! கால்முடம்பட்டவரே! ஆதரிப்பார் இல்லாதவரே! நோயால் துன்புற்றவரே! யாவரும் வாருங்கள்!” என்று கூவியழைத்து, அவர்களுக்கு முதலில் ஊட்டுவான். எஞ்சியிருக்கும் உணவினைத் தான் உண்பான். என்று வரும் பாடல் அடிகள்:

“ஐயக் கடிஞை கையின்ஏந்தி

மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்

காணார், கேளார், கான்முடப்பட்டோர்

பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்;

யாவரும் வருக”  என்று இசைத்துடன் ஊட்டி,

உண்டொழிமிச்சிலுண்டு, ஓடதலை மடுத்தக்

கண்படை கொள்ளும் காவலன்தானென்

(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை: 109-115)

இங்கு ஆபுத்திரனால் பாதுகாக்கப்படும் இம்மக்கள் எளிமையானவர்கள்; உணவின்றித் தவிப்பவர்கள்; சமூகத்தில் கவனிப்பாரற்று வறுமையில் உழல்பவர்கள்; இத்தகைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வு குறித்த தன்மையினை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

            கச்சி மாநகர் புக்க காதையில் மணிமேகலை பசிப்பிணி மருந்தாகிய அமுதசுரபி கொண்டு, எல்லா உயிரும் வருக! என அழைத்துப் பசிப்பிணியைப் போக்குகிறாள்.

“காணார், கேளார், கால்முடமானோர்

பேணா மாக்கள், பேசார், பிணித்தோர்;

படிவ நோன்பியர், பசிநோயுற்றோர்,

மடி நல் கூர்ந்த மாக்கள் யாவரும்” (222-225)

பசிப்பிணி நீங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, வறுமை மக்களின் பதிவாக மணிமேகலை விளங்குகிறது.

பேடிகள்:

            பாலியல் அடிப்படையில் சமூகத்தின் ஓரத்தில் இருப்பவர்கள் அலிகள், பேடிகள் ஆவர். மணிமேகலையில் பேடி குறித்த இரு பதிவுகள் உள்ளன.

1. மணிமேகலை சுதமதியுடன் மலர் கொய்ய உவ வனம் செல்லும் வழியில் வாணன் என்னும் அசுரனது ‘சோ’ என்னும் நகரில் நின்று, உலகை அளந்த திருமாலின் மகனாகிய காமன் என்பவன் முன்னர் ஆடிய பேடிக் கோலத்தினைக் கொண்டு விளங்குகின்ற பேடு என்னும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. அதனைக் கண்டு தெருவில் உள்ள மக்கள் இன்புற்றனர்.

            இப்பேடிக் கோலம் குறித்த வருணனை மலர் வனம் புக்க காதையில் (116-122) காணப்படுகிறது. அழகிய கூந்தல், பவளவாய், செவ்வரி பரந்த கண்கள், கருங்கொடி புரவம், பிறைநுதல், காந்தள் செங்கை, இளங்கொங்கைகள், நுண்ணிடை, வட்டுடை, தொய்யில் வரிக்கோலம் எனச் சித்தரிக்கிறது.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி,

நீணிலம் அளந்தான் மகன் முன் ஆடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்” (123-125)

என மன்மதன் ஆடிய பேடிக்கூத்து பற்றி வருகிறது.

2. உவ வனத்திற்குச் செல்லும் வழியில் தெருவில் உள்ள மக்கள் மணிமேகலையைச் சூழ்ந்து கொள்கின்றனர். இக்காட்சி, விராடநகரத்தே ‘பிருகந்நளை’ என்னும் பெயருடன் பேடியாயிருந்த அருச்சுணனைக் காண்பதற்காகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் போல் மணிமேகலையைக் காண்கின்றனர்.

“விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்

மணிமேகலைதனை வந்துபுறஞ் சுற்றி” (146-147)

இங்கு உவமையாக பேடிமக்கள் இடம் பெற்றுள்ளனர்.

களிமகன்

            கள்ளுண்ட களிமகன் குறித்த பதிவு இங்கு குறிப்பிடத்தக்கது.

            பிச்சைப் பாத்திர உறியினை நுழைகோல் பிரம்பால் சுமந்தும், நாணமும், உடையும் இன்றிக் காணாத நுண்ணுயிக்கு வருந்தியும், குளிக்காத யானையைப் போன்று தெருவில் வந்து கொண்டிருந்த சமணத்துறவியிடம், “எம்முடைய அடிகளாரே! என் பேச்சினைக் கேளுங்கள்: அழுக்கு உடையதான இவ்வுடலில் புகுந்திருக்கும் உயிர் புழுக்கமான அறையில் அடைபட்டிருப்பதைப் போல் உள்ளம் வருந்தாதா? இம்மை, மறுமை, முக்தி தருபவனான பெருமான் உரைத்தது என்ன? தென்னையின் பாளையில் விளைகின்ற தேறலில் (கள்) கொலை என்பதும் உண்டா? உண்மைத் தவம் உடையவரே! அக்கள்ளினை உண்டு தெளிவடைந்து, இந்த யோகநெறியில் அடைகின்ற பயனை அறிந்தால் எம்மையும் கையசைத்து ஏற்றுக்கொள்வீராக!” என்று சூளுரைத்து, இக்கள்ளினை ‘உண்பீராக!’ என்றான் அக்களிமகன்.

            இதனை உணர்த்தும் பாடல் அடிகள் இவை:

“வந்தீர் அடிகள்! நும் மலரடி தொழுதேன்;

எந்தம் அடிகள்! எம்முரை கேண்மோ;

அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர்

புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது,

இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும்

தன்வயின் தரூஉம்; என் தலைமகன் உரைத்தது?

கொலையும் உண்டோ, கொழுமடற்றெங்கின்

விளைபூந் தேறலின்? மெய்த்தவத் தீரே!

உண்டு, தெளிந்திவ் யோகத்து உறுபயன்

கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்ம என

உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று,

உண்மென இரக்குமோர் களிமகன்” (மலர்வனம் புக்க காதை: 92-103)

            இக்களிமன் சமணத் துறவியைக் கிண்டல் செய்து பகடி செய்யும் போக்கில் கலகம் உடையது எனலாம். இவ்விளிம்பு நிலை மாந்தரின் கேள்விகள் யதார்த்தமானவை; சமணசமயத்தினைக் கிண்டல் செய்பவை; இத்தொனியில் கேலி மிளிர்கிறது.

பித்தன்:

            பொதுவாக, இன்றைய சூழலில், மனநிலை பிறழ்ந்தவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் அனுதாபத்துடன் அணுகுவதில்லை. அவ்வாறு, அணுகும் போக்கு மிகவும் குறைவு எனலாம். அம்மக்களைப் பெரும்பான்மைச் சமூகம் இழிவாகத்தான் பார்க்கிறது. பேடிகள், களிமகன் ஆகியோர் இருக்கும் புகார் நகரத் தெருவில் பித்தன் ஒருவன் உள்ளதையும் மணிமேகலை காப்பியம் எடுத்தியம்புகிறது.

            இப்பித்தன் குறித்த மணிமேகலையின் சித்தரிப்பு குறிப்பிடத்தகுந்தது. செவ்வலரி மாலை சூடிய கொண்டை, கழுத்தில் எருக்கம் பூமாலை, கந்தல் துணியும் சுள்ளியும் சேர்த்துக் கட்டிய ஆடை, வெண் பலிசாந்து பூசிய உடல் என்று பித்தனின் உருவத்தினைக் குறிப்பிடுகிறது. அத்துடன், தம் எதிரில் உள்ள பலரோடும் பண்பற்ற மொழிகளைத் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கூறுகின்றான்; அவ்விடத்தில் திடீரென்று அழுகின்றான்; பின் சுற்றிச் சுழல்கின்றான்; கீழே விழுகின்றான்; எழுந்து பிதற்றுகின்றான்; உரக்கக் கூவுகின்றான்; தொழுகின்றான்; எழுகின்றான்; அதன்பின் ஓடுகின்றான்; பின்னர், அமைதியுற்று ஒருபக்கம் ஒதுங்கி நெடுநேரம் நிற்கின்றான்; உடனே, தன் நிழலிடம் பகைத்துக் கொள்கின்றான் என்று பித்தனின் செயல்களை மணிமேகலை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

            இதனை,

“கணவிர மாலையில் கட்டிய திரணையன்,

குவிமுகிழ் எருக்கிற் கோத்த மாலையன்

சிதவற் றுணியோடு, சேணோங்கு நெடுஞ்சினைத்

தகர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்

வெண்பலி சாந்தம் மெய்ம்முழு துறீஇப்

பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு

அழூஉம், விழூஉம், அரற்றும், கூஉம்

தொழூஉம், எழூஉம் சுழலலும் சுழலும்

ஓடலும் ஓடும், ஒருசிறை ஒதுங்கி,

நீடலும் நீடும் நிழலொடும் மறலும்,

மையலுற்ற மகன்பின்; வருந்திக்

கையறு துன்பம் கண்டுநிற் குநரும்” (மலர்வனம் புக்ககாதை:104-115)

            இங்கு மனம் பிறழ்ந்த ஒருவனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தும் சாத்தனாரின் திறன் நுட்பமானது. மிகுதியான துன்பத்தில் உழலும் அப்பித்தனைக் கண்ட புகார் நகர மக்கள் வருத்தம் கொள்கின்றனர் என்பதாக வரும் சாத்தனாரின் சித்தரிப்பிலிருந்து மணிமேகலை காலசமூகத்தில் மனிதாபிமானம், இரக்கம் முதலான நற்குணங்கள் இருந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

            இவ்வாறு, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் எளிய இம்மக்களின் பதிவுகள் விளிம்புநிலை ஆய்வுக்கு வலுசேர்க்கிறது எனலாம்.

சூதாடிகள்:

            காமுகர்கள், பரத்தர்கள், வீட்டிலிருந்து வெளியேறித்திரியும் நாடோடிகள், சூதாடிகள், வம்பு பேசும் மக்கள், தாயம் ஆடுபவர்கள், வழிப் போக்கர்கள் ஆகியோர்களைச் சமூகம் சற்றுப் புறம் தள்ளியே விளிம்புநிலையில் வைத்திருக்கிறது. இம்மக்கள் குறித்து, பாத்திர மரபு கூறிய காதையில் மணிமேகலை பேசுகிறது. தென்மதுரையில் அம்பலப்பீடிகையில் இருந்த ஆபுத்திரன் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அதன்மூலம், பசிப்பிணி போக்கும் அறச்செயலைச் செய்து வருகிறான். அதனைப் பாராட்டி வரம் தர வந்த இந்திரன், ஆபுத்திரனின் மறுப்புரையால் சினம் கொண்டு பாண்டிய நாட்டின் பன்னிரண்டு ஆண்டுகால பஞ்சத்தினைப் பெருமழை பெய்விக்கச் செய்து போக்குகிறான். இதனால், அந்நாட்டில் பசிப்பிணி தீர்ந்தது. அம்பலப்பீடிகையில் உணவு கொள்வோர் எவருமின்றி வெறிச்சோடியது. அப்பீடிகையில் பசித்திருப்போர் எவருமில்லை. அதனால், சமூக இழிவுக்கு உள்ளாகும் ஓரத்துமக்கள் வசிக்கும் இடமாக அப்பீடிகை மாறுகிறது.

            இதனை,

“பசிப்புயிர் அறியாப் பன்மைத் தாகலின்,

ஆரூயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

ஊணொலி அரவம் ஒடுங்கியதாகி;

விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்

நடவை மாக்களும் நகையொடு வைகி;

வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்

முட்டா வாழ்க்கை முறைமையதாக” (58-64)

என்று மணிமேகலை பதிவு செய்துள்ளது.

செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவுகள்

            செய்தொழில் அடிப்படையில் வாழ்ந்திருந்த விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினை கச்சி மாநகர் புக்க காதை வெளிப்படுத்துகிறது. வஞ்சிநகரில் தன்பாட்டன் மாசாத்துவானைக் காணச் சென்ற மணிமேகலை, பலதொழில் செய்யும் மக்கள் வாழும் தெருக்களைக் கடந்து செல்வதாகக் காட்டப்படுகிறது.

“பன்மீன் விலைஞர், வெள்ளுப்பு பகருநர்,

கண்ணொடை யாட்டியர், காழியர், கூவியர்,

மைந்நிண விலைஞர், பாசவர், வாசவர்,

என்னுநர் மறுகும்; இருங்கோ வேட்களும்,

செம்பு செய்ஞ்ஞரும்; கஞ்ச காரரும்

பைம்பொன் செய்ஞ்ஞரும், பொன்செய் கொல்லரும்,

மரங்கொல் தச்சரும், மண்ணீட் டாளரும்,

வரந்தர வெழுதிய ஓவிய மாக்களும்

தோலின் துன்னரும், துன்னவினைஞரும்,

மாலைக் காரரும், காலக் கணிதரும்,

நலந்தரு பண்ணனும் திறனும் வாய்ப்ப;

நிலங்கலங் கண்டம் நிகழக் காட்டும்

பரணர் என்றிவர் பல்வகை மறுகும்;

விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு

இலங்குமணி வினைஞர் இரீஇய பறுகும்;

வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின்

கூத்தியல்பு அறிந்த கூத்தியர் மறுகும்;” (31-47)

என்று தொழில் அடிப்படையில் மக்கள் இடம் பெற்றுளளனர்.

            அதாவது, மீன் விற்கும் பரதவர், உப்பு விற்போர், கள் விற்கும் வலைச்சியர், பிட்டு விற்போர், அப்பம் விற்போர், ஆட்டிறைச்சி விற்போர், குயவர், தட்டார், கொல்லர், தச்சர், தோல் வேலை செய்யும் செம்மார், பாணர், ஆடல் மகளிரான கணிகையர் ஆகியோர் வசிக்கும் இடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. காலப்போக்கில் இத்தொழிற் பிரிவுகள் சாதியப் பிரிவுகளாக மாற்றம் பெற்றன. உடல் உழைப்பு, கல்வியறிவின்மை காரணமாக இவர்கள் சமூகப் படிநிலையில் விளிம்பில் இருந்துள்ளனர், என்பதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது எனலாம். நால் வருணப்பாகுபாடு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளதை ‘வருணக்காப்பிலள்’ என்று உதயகுமரன் கூற்றாக வருவதை முன்னர் கண்டோம்.

            மேலும், சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் இவ் வருணப்பாகுபாடு இடம் பெற்றுள்ளது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டச் சுடுகாடுகள் / கோட்டங்கள் புகார் நகரில் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன. அவை, அவரவர் சமூக தகுதிக்கேற்ப சிறிதும் பெரிதுமாக சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்ட அச்சமாதிக் கோயில்கள் குன்றுகள் போல் இருந்தன எனும் பதிவில் இறப்பிலும் கூட வருணம் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ள தன்மையினை மணிமேகலை தவறாமல் பதிவு செய்துள்ளது.

இப்பதிவு பின்வருமாறு

“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும்,

ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்,

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி,

இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த

குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்;” (53-59)

இதில், அவரவர்க்கு உரிய நால் வேறு வகைப்பட்ட வருண பேதங்களைப் பகுத்துக் காட்டிய வண்ணம் இறந்தோரைச் சார்ந்த அன்புடையவர்களால் கட்டிய சமாதிகள் என்பதிலிருந்து மணிமேகலை காலத்தில் வருணாசிரம நெறி தவறாது இருந்திருப்பதை அறியலாம். அக்காலத்தில் சுடுகாட்டுப் பெருந்தெய்வமாக துர்க்கை விளங்கியிருப்பதையும் உணர்த்துகிறது.

வேட்டுவன்

            கொலைக்கு அஞ்சக்கூடியவர்களாகக் காட்டில் வாழும் வேடர்கள் இருந்துள்ளனர் என்பதை மணிமேகலை கூறுகிறது.

            சூல் முதிர்ந்த மானை வேட்டையாடிய வேட்டுவனின் அம்பு அம்மானின் வயிற்றில் இருந்த இளையமானின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு சென்றது. வீழ்த்த அப்பெண்மானின் அழுகுரலைக் கண்டு மனமயக்கம் அடைந்த அவ்வேடன், அதுபடும் துயரம் பொறாது அவ்விடத்திலேயே தன் இன்னுயிரைத் துறந்தான். இச்செய்தி,

“சூல்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்

கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப,

மான்மாறி விழுந்தது கண்டு மனமயங்கிப்

பயிர்க்குரல் கேட்டதன் பான்மையனாகி;

உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்க்கண்டு,

ஓட்டி யெய்தோன் ஓரூயிர் துறந்ததும்; (113-118)

எனச் சிறைவிடு காதையில் இடம் பெற்றுள்ளது. வேடர்கள் விளிம்புநிலையினர். இம்மக்கள் கொலைக்கு அஞ்சுபவர்களாகக் காட்டியிருப்பது நோக்கத்தக்கது. கள், பொய், களவு, காமம், கொலை ஆகிய பஞசசீலக் கொள்கைகளை விளக்கும் நோக்கில் மணிமேகலை இவ்வாறு கூறுவது போல் அமைந்திருந்தாலும் பழிக்கு அஞ்சும் நன்னிலை மாந்தராகப் படைத்திருப்பது சிறப்பானது.

ஆபுத்திரன்:

            மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் கதை மாந்தரை விளிம்பு நிலைப் பாத்திரமாகக் கருத இடமாண்டு. பிறப்பின் அடிப்படையில், இவன் தீண்டத்த காதவன் என்பதாக “புல்லோம் பன்மின், புலைமகன் இவனென” ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில் (91) வரும் பாடல் அடிகள் கூறுகிறது. இவன் இழிமகன்; அதனால் அவனைத் தீண்டாது போவீராக! என்று கூறும் ஓர் அந்தணனின் கூற்றில் இவ்வாறு இடம் பெறுகிறது.

            சாலி எனும் பார்ப்பனத்தி (அவள் கணவன் அபஞ்சிகன் எனும் பெயர் கொண்ட காசி அந்தணருக்குத் தெரியாமல்) அந்தணர் அல்லாத இன்னொருவருடன் ஏற்பட்ட தவறான ஒழுக்கத்தினால் கருவுறுகிறாள். அக்காலச் சமூக நியதியான வருணாசிரம் நெறிக்கு மாறாக பிறப்பவன் ஆபுத்திரன். கணவனை இழந்து, வன்முறைக்குப் பயந்து, தன் பாவம் போக்கக் காசியிலிருந்து குமரிக்கு வந்தவள் சாலி. வரும் வழியில் பாண்டிய நாட்டில் கொற்கை நகர் அருகில் ஆயர்களின் இருப்பிடத்தில் குழந்தை பெற்றெடுக்கிறாள்; சமூகத்திற்குப் பயந்து ஒரு தோட்டத்தில் விட்டுச் செல்கிறாள்; பசு ஒன்று, அச்சிசுவினை ஏழு நாட்கள் பால் ஊட்டி பாதுகாத்தது. இளம்பூதி எனும் அந்தணன் இக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.

            ஆனால், வேள்விச் சாலையில் பலி கொடுக்க வைத்திருந்த பசுவினைக் காப்பாற்றும் நோக்கில் கடத்திச் செல்கிறான். வழிமறித்த அந்தணர்கள் அச்சிறுவனை,

“ஆகொண்டு இந்த ஆரிடைகட கழிய,

நீசமகன் அல்லாய்; நிகழ்ந்ததை உரையாய்;

புலைச்சிறு மகனே; போக்கப்படுதி” யென்று;

அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப”, (42-45)

என்று கூறி கோலால் அடிக்கின்றனர். அச் சிறுவனால் காப்பாற்றப்பட்ட அப்பசு, அடித்த அந்தணனின் குடல் சரியுமாறு வயிற்றில் குத்தி தாக்கி விட்டுக் காட்டிற்குச் சென்று விடுகிறது.

            பழமையான மறைகளை ஓதும் அந்தணர்களே! பசுவின் மீது நுமக்கு ஏனிந்த பகைமை? என்று கேட்டான் ஆபுத்திரன். அதற்கு, திருமால் மகனான பிரம்மன் படைத்த நான்மறைகளை ஓதியறியாத நீ ஆ மகனே; எம் பார்ப்பனன் மகன் ஆக மாட்டாய்? என்று அச்சிறுவனை இகழ்ந்தனர். மேலும், வளர்ப்புத் தந்தையான இளம்பூதி, அச்சிறுவனைச் சாதிப் பிரதிஸ்டம் செய்கிறான். அவன் இழிபிறப்பு குறித்து அந்தணர்கள் இகழ்ந்தனர்;; பிச்சைப் பாத்திரத்தில் கல்லிட்டும் யாகப் பசுவினைக் கவர்ந்த கள்வன் எனவும் அவ் அந்தணக் கிராமத்தை விட்டு அச்சிறுவனை வெளியேற்றினர். ஆனால், ஆபுத்திரன் அதைப்பற்றிக் கவலை கொள்ளாது, நீங்கள் அருமறை முதல்வர் என போற்றுகின்ற அகத்தியரும் வசிட்டரும் (அந்தணர்கள்) தேவதாசியான திலோத்தமையின் மைந்தர்கள். இது பொய்யுரை ஆகுமா? என்று சிரித்த வண்ணம் எதிர்க்கேள்வி கேட்கிறான். இங்கு, ஆபத்திரனின் வாதத்திறம் குறிப்பிடத்தக்கது.

            தென்மதுரையில் தான் பிச்சை எடுத்துப் பிறர் பசிப்பிணி போக்கும் பண்பாளளானாக விளங்குகிறான் ஆபுத்திரன். இதனால் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அப்பாத்திரம் கொண்டு பசிப்பிணி இல்லாது செய்கிறான்; அதனால், பழுமரத்து ஈண்டிய பறவைக்கூட்டம் போன்று அம்பலப் பீடிகை இருந்தது. வரம் தர வந்த இந்திரனிடம்,

“வெள்ளை மகன்போல் விலாவெற நக்கீங்கு,

எள்ளினன், போமென் றெடுத்துரை செய்வோன்;”

(பாத்திர மரபு கூறிய காதை: 36-37)

என விலா வெடிக்கும்படி சிரித்து ‘உம் வரம் தேவையில்லை’ என்கிறான். மேலும்,

“வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

திருந்துமுகம் காட்டுமென் தெய்வக்கடிஞை,

உண்டி கொல்லோ, பேணுநர் கொல்லோ,

யாவையீங் களிப்பன்; தேவர்கோன்? என்றலும் (44-48)

       என உணவு, உடை, பெண்கள், பாதுகாவலர் ஆகிய இவற்றையாத் தாங்கள் எனக்குத் தருவது என்று இந்திரனை ஏளனம் செய்கிறான் ஆபுத்திரன்.

            அமுதசுரபியின் பயன்பாடு அனைவருக்கும் இல்லாத நிலை ஏற்படும்பொழுது மணிபல்லவத் தீவில் தன் உயிர் துறக்கிறான். நல்லோரிடம் அது சேர்க எனக் கூறி கோமுகிப் பொய்கையில் இடுகிறான். தன்னலம் கருதாது பொதுநலம் கருதியவனாக ஆபுத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் அவன் மறு பிறவியில் புண்ணியரசனாகப் (அரசனாக) பிறக்கிறான்.

            இவ்வாறு, ஆபுத்திரன் எனும் விளிம்புநிலைப் பாத்திரம் வருணாசிரம நெறியை எதிர்க்கும் பாத்திரமாக மணிமேகலை படைத்துள்ளது.

நாகர் / மலைவாழ் மக்கள்:

            ஆதிரை பிச்சையிட்ட காதையில் கூறப்படும் நாகர் மலையில் வாழும் நக்க சாரணர்கள் மலை வாழ் விளிம்பு மக்களாகக் கொள்ளலாம்.

            இம்மக்கள் அச்சம் தரும் தோற்றத்தை உடையவர்கள்; நர ஊண் உண்பவர்கள் என்பதை,

“பரிபுலம் பின்னிவன்;

தானே தமியன் வந்தனன்; அளியன்;

ஊனுடை இவ்வுடம்புண” (57-59) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

            இனக்குழு மக்கள் தலைவனான குருமகனின் வசிப்பிடம் இவ்வாறு சுட்டப்படுகிறது,

“கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்,

வெள்ளென் புணங்கலும், விரவிய இருக்கையில்

எண்குதன் பிணவோடி ருந்தது போலப்

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்” (66-69)

அதாவது கள்பானைகளும் மிகுதியான முடை நாற்றமும் காய்ந்த எலும்புத் துண்டுகளும் கலந்து விளங்கிய இடமாக அவ் வசிப்பிடம் இருந்தது. அதுவும் கரடி தன் மனைவியுடன் இருந்ததைப் போன்று குருமகன் தன் மனைவியுடன் இருந்தான் என்று வருகிறது. இவர்கள், கள், புலால் உண்பவர்கள் என்பதை,

“பெண்டிரும் உண்டியும் இன்றெனின், மாக்கட்கு

உண்டோ ஞாலத் துறுபயன்?” (80-81)

எனக் குருமகன் சாதுவனிடம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

“அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி,

மூத்துவிளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிக!” (115-117)

என்ற சாதுவனின் அறக் கருத்துக்களை நாகர் மக்கள் கேட்டு அதனைப் பின்பற்றுவதாகவும் கூறினர்.

            அத்துடன், அகில், சந்தன மரங்கள், மரக்கலம் கவிழ்வதால் பெற்ற மெல்லிய ஆடைகள், பொருட்குவியல் ஆகியவற்றைப் பரிசாக சாதுவனுக்குத் தருகின்றனர் என்பதிலிருந்து இம்மக்கள் விருந்து போற்றுபவர்கள் எனலாம்.

            இவ்வாறு, மணிமேகலை பல்வேறு விதமான விளிம்பு நிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது. மேற்சொன்னவர்களுள் கலகத்தன்மை கொண்ட ஆபுத்திரனும் உண்டி கொடுக்கும் மணிமேகலையும் பாராட்டத்தகுந்தவர்கள் எனலாம்.

பயன்பட்ட நூல்கள்:

1.          சிவசுப்ரமணியன், ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 2002.

2.          புலியூர்க் கேசிகன், மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2011.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் மா.வெங்கடேசன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)

கிருட்டினகிரி – 635001.

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் : ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் : ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

       சங்க அக இலக்கிய மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, பரத்தை, செவிலி போன்ற பாத்திரங்களும் அன்னோர் நிகழ்த்தும் கூற்றுகளும் படைப்பாக்க உளவியலைக் கண்டறிய உதவும் இன்றியமையாத தடயங்களாகும். சங்க அகப்பாடல்களில் படைப்பாளி முற்றிலுமாக மறைந்த நிலையில் பாத்திரங்கள் தங்களது அக வாழ்வின் இன்ப துன்பங்களைத் தத்தமது கூற்றுகளின்வழி வெளிப்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில் இவ்விலக்கியப் பாத்திரங்களை உண்மையான மனிதர்களாகவும் அவரது கூற்றுகள் அன்னோர்தம் அகவாழ்வியல் அனுபவங்கள் என்பதாகவும் எண்ணி அவ்வாறே நெடுங்காலமாக அவற்றைப் படித்து மகிழ்ந்து வருகிறோம்1. ஆனால், சங்க அக இலக்கியப் பாத்திரங்கள் என்பவை உண்மையான மாந்தர்களா? என்னும் கேள்வியை எழுப்பும்போது அன்னோர் முற்றிலும் கற்பனை மாந்தர்களே என்னும் விடை தெளிவாகக் கிடைக்கிறது. எவ்வாறெனில், எந்த ஒரு சங்க அகஇலக்கிய மாந்தர்களுக்கும் ஊரோ, பெயரோ கிடையாது. சங்க அக இலக்கியம் காட்டும் மாந்தர்கள் உண்மையாக வாழ்ந்த மக்கள் என்பதற்கான வரலாறு சார்ந்த சான்று ஏதும் இல்லை. சங்க அகஇலக்கியத் தோழி பாத்திரத்திற்கான களவு வாழ்வோ கற்பு வாழ்வோ ஏன் இல்லை என்ற கேள்விக்குச் சரியான விடையில்லை. இதுபோன்ற இன்ன பலவாறான காரணங்களால் சங்க அகஇலக்கியப் பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்களே என்னும் முடிவிற்கு வருகிறோம். அப்படியாயின் இந்தப் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்களின் கூற்றுகளின்வழி வெளிப்படும் இன்ப துன்பங்களுக்கும் பொறுப்பேற்பது யார்? என்னும் கேள்வியை எழுப்பும்போது, அப்படைப்பைப் படைத்த படைப்பாளியே என்பதுதான் விடையாக அமைய முடியும். இந்நிலையில் பாத்திரம் மற்றும் அதன் கூற்று என்பன படைப்பாளி மற்றும் அவன் குரல் எனத் துணிவதில் பிழையில்லை.

            எந்தவொரு படைப்பு மனமும் தன் வாழ்க்கை அனுபவத்தைத்தான் அல்லது தனது விருப்பு வெறுப்புகளைத்தான் சமூகப் பண்பாட்டுக் கலை இலக்கிய மரபுகட்கு உட்பட்டுக் கூட்டியோ அல்லது குறைத்தோ வெளிப்படுத்துகின்றது எனத் தொடர்ந்து இலக்கியத் திறனாய்வு உலகில் கருதப்பட்டு வருகிறது. இக்கருத்து உளப்பகுப்பாய்வு நோக்கில் இலக்கியத்தை ஆராய்வதற்கு உதவுகின்ற ஒரு முக்கியமான கருத்தாகும். தொன்றுதொட்டு வரும் படைப்பாக்கங்களில் (தொன்மங்கள், கலை இலக்கியங்கள் மற்றும் இன்னபிற) இடம்பெற்று வரும் பாத்திரங்களின் வாழ்வியல் இன்ப, துன்ப வெளிப்பாடுகளுக்கு உள்ளே மறைந்திருப்பது படைப்பாளியின் மனமே2. உளப்பகுப்பாய்வு அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் படைப்பாளியின் மனம் தனது இன்ப, துன்ப உணர்வுகளை வெளிப்படுத்தவும், அதே வேளையில் அவற்றிற்கும் தனக்கும் தொடர்பு ஏதும் இல்லை எனச் சொல்லி விலகிக் கொள்ளவும் கண்டுபிடித்த படைப்பாக்க உத்திகளுள் ஒன்றே பாத்திரம் என்னும் உத்தி (ஊhயசயஉவநசளைவiஉ வநஉhnஙைரந) எனில் தவறாகாது. படைப்பாளன் ஏன் தனக்கும் பாத்திரத்திற்கும் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்கிறான் எனில் பாத்திரங்களின் இன்ப, துன்ப உணர்வுகள் என்பவை படைப்பாளன் தனது உண்மை வாழ்வில் நிறைவேற்றிக் கொள்ள இயலா ஆசைகளேயாம். நிறைவேற்றிக் கொள்ள வழியில்லா இந்த ஆசைகளைப் படைப்பாளியின் ஆசைகள் எனக் காட்டினால் படைப்பாளியின் ஆசை யதார்த்தத்திற்குப் புறம்பானது என்னும் பழிப்புக்குள்ளாகும். எனவேதான் படைப்பு மனம் தனது நிறைவேறா ஆசையைப் பாத்திரத்தின் ஆசையாக மாற்றிப் படைப்பின்வழி நிறைவேற்றுகிறது (படைப்பாளி தானே நேரடியாக படைப்பில் வெளிப்படும்போது படைப்பு முழுவதற்கும் அவனே பொறுப்பேற்கிறான். சான்று: பக்தி இலக்கியம்).

            உண்மையில் ஒரு மனிதனின் முதல் நிறைவேறா ஆசை என்பது அவனது குழந்தைப் பருவத் தாய்க்காம ஆசையும், தந்தைப் பகை உணர்வும் என மனித மனத்தை ஆராய்ந்து ஃபிராய்ட் விளக்குகிறார். இந்தத் தாய்க்காம மற்றும் தந்தைப் பகை உணர்வுகள் பண்பாட்டால் ஒடுக்கப்படும்போது இரகசியமாக மனத்துள் அமுக்கப்பட்டுக் காலப்போக்கில் நனவிலியாகின்றன. மனித மன வளர்ச்சிப் பருவக் கட்டத்தில் எந்த நிலையிலும் இந்த நனவிலி ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதனுக்கு இடமில்லாமல் போவதால் பண்பாட்டுக்கு ஒவ்வாத இந்த ஆசைகளைப் பண்பாட்டுக்கு ஒத்த வடிவில் அல்லது நனவிலிப் பண்பில் வெளிப்படுத்தி நிறைவடைகிறது மனித மனம். ஒவ்வொரு மனித மனத்துள்ளும் இருக்கும் இந்த ஆசைகளைப் பற்றி அவனுக்கே தெரியாது. இந்த ஆசை மனத்தைத்தான் ஃபிராய்ட் நனவிலி மனம் எனக் கண்டறிந்தார். இந்த ஆசை மன உணர்வை ஃபிராய்ட் இடிப்பஸ் உணர்வு என்னும் பெயரில் விளக்கினார்3. இந்த நனவிலி மனத்தின் விளைச்சல்களில் ஒன்றுதான் இலக்கியம். இலக்கியத்திற்குள் நனவிலி தனது இரகசிய ஆசைகளைப் பண்பாட்டிற்கு இசைந்த வடிவில் வெளிப்படுத்தி வருகின்றது. இதை உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு முறை கண்டறிந்து விளக்குகிறது.

            சங்க இலக்கியங்களைப் படைத்தளித்த சங்கப் படைப்பு மன நனவிலி, கூற்று மாந்தர்களைக் கற்பனை செய்து கூற்று மாந்தர்களின் வழித் தனது நனவிலி ஆசைகளைப் பண்பாட்டுக்கேற்ற வடிவில் வெளிப்படுத்தி நிறைவடைந்துள்ளது. இந்த உளவியல் உண்மையைச் சங்ககால ஆண்புலவர்கள் படைத்துள்ள சில அகப்பாடல்களின்வழி ஆராய்ந்து உறுதி செய்யலாம்.

            இந்தக் கட்டுரைக்குத் தலைவன் கூற்று, தலைவி கூற்று ஆகிய இரண்டு வகைக் கூற்றுப்பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் கூற்றிற்கும் தலா ஒரு பாடல் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பாடலின் நனவிலிப் பொருள் கண்டறியப்படுகிறது. ஆண்பாற் புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்ட்டுள்ளதால் ஆண்மன நனவிலி இக்கட்டுரையின் தேடுபொருளாகிறது. இக்கட்டுரை சங்க அக இலக்கியப் பாத்திரப் படைப்புகளை ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு அடிப்படையில் ஆராய்வதற்கான முன்மாதிரிக் கட்டுரையாகும்.

            முதலில் தலைவன் கூற்றில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அப்பாடலாவது:

                        “யாயும் ஞாயும் யாரா கியரோ

                         எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்

                         யானு நீயு மெவ்வழி யறிதும்

                         செம்புலப் பெயனீர் போல

                         அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” (குறுந். 40)

            இப்பாடலின் பொருளாவது: என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர். இப்போது பிரிவின்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன (குறுந். பு. 118).

            மேற்கண்ட பாடலுக்குரிய துறைக்குறிப்பாவது: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் பிரிவாரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது.

            தலைவன் கூற்றில் அமைந்த இப்பாடலைப் பாடிய புலவர் செம்புலப் பெயனீரார் ஆவார் (இது உவமையால் பெற்ற பெயர்). இனி இப்பாடலின் உளவியல் பொருளைக் காண்போம்.

            தலைவியோடு ஏற்பட்டுவிட்ட உறவின் வலிமையை விளக்கத் தலைவன் தனது பெற்றோர்க்கும் தலைவியின் பெற்றோருக்குமிடையே யாதொரு உறவும் இல்லாத சூழலையும் தனக்கும் தலைவிக்கும் முந்தைய காலங்களில் எவ்வழியிலும் உறவு இல்லாத சூழலையும் இங்கு எடுத்துக்காட்டி இத்தகைய நிலையில் திடீரென அன்னோரிடையே ஏற்பட்டுவிட்ட காதல் உறவை வியப்போடு வெளிப்படுத்துகிறான். இப்பாடலில் தலைவன் தனக்குத் தலைவியோடு உள்ள உறவின் மிகுதியைச் சுட்டிக்காட்டத் தத்தமது பெற்றோர்களுக்கும் தமக்கும் முந்தைய காலங்களில் யாதொரு உறவும் இல்லையெனப் பேச வேண்டிய தேவை என்ன?

            சங்க அக இலக்கியங்கள் தலைவன், தலைவி உறவு என்பது ஏழு பிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவு (பயிலியது கெழீஇய நட்பு-குறுந்.2) என்றும் இவ்வுலகத்தில் பிறவிதோறும் பிரிதலின்றித் தலைவனும் தலைவியுமாகவே பிறவி எடுத்து வரும் உறவு (இருவேமாகிய உலகத்து ஒருவே மாகிய புன்மைநா முயற்கே-குறுந்.57) என்றும் பல இடங்களில் பேசிச் செல்கின்றன. மேலே குறிப்பிட்ட குறுந்தொகை 57-ஆம் பாடல் குறிப்பிடும் ‘இருவேமாகிய உலகம்’ என்பதற்கு உ.வே.சா. பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

            இருவேமாகிய உலகம் என்றது பல பிறப்பின்கண்ணும் தொடர்ந்து வந்த நட்பைக் குறிக்கொண்டது. நெஞ்சம் உயிரும் ஒன்றுபட்டனவேனும் நம் கடமையறிந்து ஒழுகுவதற்காக இரண்டு மெய்யுடையோமாயினோம் என்பது தலைவியின் கருத்து (குறுந். பு. 161).

            மேற்கண்ட உ.வே.சா.வின் உரை விளக்கமும் முன்னர்க் குறிப்பிட்ட குறுந்தொகைப் பாடல்களின் வரிகளும் தலைவன், தலைவி உறவு பிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவு என்பதை உறுதிப்படுத்திகின்றன. மேலும், தொல்காப்பியமும் இயற்கைப் புணர்ச்சி ஊழ்வயத்தால் நடைபெறுவது (தொல். பொரு. நூ. 90) என்று கூறித் தலைவன் தலைவி உறவு அன்னோரின் முற்கால உறவின் தொடர்ச்சி என்பதாக விளக்குகிறது. ஆனால் நாம் மேலே ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செம்புலப் பெயனீரார் பாடல் தலைவன், தலைவி ஆகியோருக்கு இடையே பண்டைய தொடர்பு ஏதும் இல்லை எனக் கூறுவது நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

            ஒவ்வொரு மனிதனின் அறிவுக்கு எட்டாத குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய தாய்க்காமம் பண்பாட்டால் ஒடுக்கப்படும்போது அக்காமம் குற்ற உணர்விற்கு ஆளாகிறது. குற்ற உணர்வினால் நிறைவேற்றமின்றித் தவிக்கும் இந்தத் தாய்க்காமம் பண்பாட்டிற்கேற்ற ஆண், பெண் காமமாக மாறி வெளிப்படுகிறது. சேயின் தாய்க்காமத்தைப் பண்பாட்டு ஆண், பெண் காமத்திற்குள் நேரடியாக இணைக்க விரும்புகிறது படைப்புமனம்; ஆனால் குற்ற உணர்வு தடுக்கிறது. இடிப்பஸ் விழைவை ஏதேனும் ஒரு வகையிலாவது பண்பாட்டு ஆண், பெண் காமத்தோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்தினால்தான் இடிப்பஸ் நனவிலியின் எண்ணம் நிறைவடையும். எனவே நனவிலி தன்னை எதிர்மறை வடிவில் வெளிப்படுத்தி, (உண்மையை மறைப்பதற்காக) உடன்பட்டு இலக்கை எய்துகிறது. எனவேதான் தலைவன், தலைவி என்ற ஆண், பெண் காம உறவிற்கு முந்தையத் தொடர்பு ஏதும் இல்லை என்பதைச் சொல்லி முந்தைய இடிப்பஸ் காம நனவிலி உறவிற்கும் இன்றையத் தலைவன் தலைவி காம உறவிற்கும் யாதொரு தொடர்பு இல்லையென இரண்டிற்கும் இடையேயான உறவை அறுத்துவிடுகிறது. இதனால் படைப்பு மனம் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கிறது. எனவேதான் தலைவனைத் தனக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள உறவு முன்பின் தொடர்பற்றது எனக் கூற வைக்கிறது. இலக்கியங்கள் குற்ற உணர்வினின்றே பிறக்கின்றன என்னும் ஃபிராய்டின் கருத்து இங்கு நினைக்கத்தக்கது4.

            வெளிப்பட முந்தும் இடிப்பஸ் காமத்தை மறைக்க வேண்டுமென்று பதறுகின்ற மனம் ஒருபுறம் இழுக்க அதை வெளித்தள்ளி நிறைவடைய விழைகின்ற மனம் மறுபுறம் இழுக்க இந்த இழுபறிக்கிடையில் பாடல் நிலைக்கிறது.

            இப்பாடலின் பிந்தைய அடிகளில் இடம்பெற்றுள்ள ‘செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே’ என்னும் அடிகளில் இடிப்பஸ் காமப் புணர்ச்சி விழைவு குறியீட்டுப் பண்பில் வெளிப்படுகிறது. ‘செம்புலம்’ என்பது தாயையும் செம்புலத்தில் பெய்கின்ற ‘பெயல்நீர்’ என்பது மகனையும் நனவிலி நிலையில் குறியீட்டாக்கம் செய்கின்றன. பொதுவாக நிலம் அல்லது புலம் (டுயனௌஉயிந) தாயின் குறியீடாகவே நனவு நிலையிலேயே கூடக் கருதப்படுவது நாம் அறிந்ததே. ‘பூமித்தாய்’, ‘பூமிமாதா’, ‘அன்னைபூமி’, ‘அன்னைவயல்’, ‘தாய்மண்’ போன்ற தொடர்கள் மனிதன் நிலத்தைத் தாயாகவே உருவகித்த மனப்பான்மையை உணர்த்துகின்றன. சூல்கொண்ட மேகம் ஈன்ற குழந்தை பெயல்நீர். எனவே பெயல்நீர் என்பது மகனைக் குறியீட்டாக்கம் செய்கின்றது. மழை செம்மண் நிலத்தில் பெய்தல் என்பது மகனின் தாய்;ப்புணர்ச்சி விழைவிற்குக் குறியீடாகிறது. ‘செம்புலம்’ என்ற தொடரில் உள்ள செம் என்ற சொல் சிவப்பு நிறத்தைக் குறிக்கும்பொழுது இந்தச் சிவப்பு நிறம் காமத்திற்கான நிறக்குறியீடாகவும் ஆகிறது. விபச்சாரம் நடைபெறும் பகுதிக்குச் சிவப்பு விளக்குப் பகுதி என நிறக்குறியீட்டு அடிப்படையில் சுட்டப்படுவது இங்கு இணைத்து எண்ணத்தக்கது5.

            இப்பாடலில் இடம்பெற்றுள்ள செம்புலப் பெயல்நீர் போல என்னும் உவமத் தொடராட்சியின் நனவிலிப் பொருளை அடைய முடியாதபோதுதான் இப்பாடல் உடல்சார் காமத்தைப் பேசவில்லை மாறாக அன்புடை நெஞ்சங்கள் கலந்த மனம்சார் காமத்தைத்தான் பேசுகிறது எனக் கருதப்படுகிறது6. எல்லா இலக்கியங்களும் உடல்சார் காமத்தைத்தான் வெளிப்படையாகவோ அல்லது குறியீட்டுப் பான்மையிலோ (கருப்பொருள் காட்சி வழி) வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இப்பாடலிலும் பண்பாட்டால் வெளிப்படையாக பேசுவதற்குத் தடை செய்யப்பட்ட உடல்சார் காமம் நனவிலிக் குறியீட்டுப் பண்பிலும் (செம்புலப் பெயனீர்) பண்பாட்டால் அனுமதிக்கப்பட்டுள்ள மனம்சார் காமம் (அன்புடை நெஞ்சம் கலந்தமை) வெளிப்படையாகவும் இடம்பெற்றுள்ளன என உணரமுடிகிறது. இந்தப் பாடல் உடல்சார் காமத்தைத்தான் பேசுகிறது என்பதை வலுப்படுத்த உரையாசிரியர் உ.வே.சா. தந்துள்ள “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் பிரிவாரெனக் கருதியஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது” என்னும் உரைக்குறிப்பும் நமக்கு உதவுகிறது.

            தலைவன் கூற்றில் அமைந்துள்ள இப்பாடலின் கூற்று மொழியைப் படைப்பாளனின் குரலே எனக் கருதிப் படைப்பாளனையும் பாத்திரத்தையும் இணைப்பதில் இங்குப் பால்சார் தடையேதும் இல்லை. ஆண் படைப்பு மனத்தின் நனவிலி மனக் குரல் தலைவன் பாத்திரத்தின் நனவுமனக் குரலாக மாறி வெளிப்படுகிறது. ஆண் படைப்புமன நனவிலி நனவுநிலையில் தன்னைத் தலைவனாகவும், தனது நனவிலிக் காமப் பொருளான தாயை நனவுநிலைத் தலைவியாகவும், தனது இடிப்பஸ் காம நனவிலியை நனவுநிலைப் பண்பாட்டுக் காமமாகவும் மடைமாற்றி எல்லோருக்கும் இசைந்த வடிவில் இப்பாடலைப் படைத்துள்ளது.

            இங்கு வாசகர்கட்கு ஒரு கேள்வி எழலாம். கூற்று நிகழ்த்தும் தலைவனை மகன் என்றும், தலைவியைத் தாய் என்றும் கொள்ள பாடலில் வெளிப்படையான சான்றுகள் இல்லை. எனவே தலைவன், தலைவி என்போரைப் படைப்பு மன இடிப்பஸ் மாந்தர்களோடு பொருத்துவது வலிந்து செய்யும் முயற்சி எனலாம். ஆனால் இது வலிந்து சொல்லும் முயற்சி அன்று. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோர் தாய், சேய் உறவினர்களாகவே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் படைப்பாளர்களால் பொருத்திக் காட்டப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன7.

            அடுத்து தலைவி கூற்றில் அமைத்துப் பாடலை வெளிப்படுத்தும் போது ஆண் படைப்பாளியின் நனவிலி எவ்வாறு இடம்பெயர்ந்து (னுiளிடயஉநன) உறைந்து (ஊழனெநளெநன) குறியீட்டாக்கம் (ளுலஅடிழடணையவழைn) பெறுகிறது என்பதைக் கீழ்வரும் பாடல்வழிக் காண்போம்.

                        “யாரு மில்லைத் தானே கள்வன்

                         தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

                        தினைத்தா ளன்ன சிறுபசுங் கால

                        ஒழுகுநீ ராரல் பார்க்கும்

                       குருகு முண்டுதான் மணந்த ஞான்றே” (குறுந். 25)

            மேற்கண்ட பாடலைப் பாடியவர் கபிலர். இப்பாடலின் துறையாவது: வரைவு நீட்டித்தவிடத்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்பதாம் (குறுந். ப. 77).

            இப்பாடலின் பொருளாவது: “தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர்;; தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தான். அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுரையினின்றும் தப்பினால் நான் யாது செய்ய வல்லேன். ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் அங்கு இருந்தது” (குறுந். ப. 77).

            தலைவன் தலைவியோடு கொண்டுள்ள காம உறவைப் பொய்ப்பானாயின் உண்மையை உணர்த்தத் தலைவிக்கு யாதொரு சான்றும் இல்லை என்பது பாடலின் நனவுநிலைப் பொருள். இந்த நனவுநிலைப் பொருளுக்கு இணையான படைப்பு மன நனவிலிப் பொருளாவது தனக்கும் தாய்க்கும் உள்ள காம உறவைத் தாய் மறுப்பாளாயின் அவ்வுறவை உறுதிசெய்ய மகனுக்கு யாதொரு சாட்சியும் இல்லை என்பதுதான்.

            தலைவனுக்கும் தனக்கும் உள்ள காம உறவு நிலைக்காமல் போய்விடுமோ! தலைவன் ஏமாற்றிவிடுவானோ! எனும் பதற்றம் (ழுடிளநளளழைn) தலைவியின் குரலில் வெளிப்படுகிறது. இது இடிப்பஸ் பருவத்தில் காயடிப்புச் சிக்கல் உணர்வில் வாழும் மகன் இனித் தனக்குத் தாய்க்காமம் கிட்டாதோ எனப் பதறிய மனப் பதற்றத்தின் இடப்பெயர்வு எனலாம். வாசகர்களுக்கு இங்கு ஒரு கேள்வி எழலாம். எந்தத் தாய் தனது மகன்மீது தான் வைத்துள்ள உறவை மறுப்பாள்! எனவே தாய் தன்மீதான உறவைக் கைவிட்டுவிடுவாளோ என மகன் பதற்றம் கொள்ள யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆகவே பாடலில் வெளிப்பட்டுள்ள தலைவியின் நனவுநிலைக் காமப் பதற்றத்திற்கும் படைப்பு மன நனவிலியில் உறையும் இடிப்பஸ் காமப் பதற்றத்திற்கும் தொடர்பிருக்க முடியாது என வாசகர்கள் விவாதிக்கலாம். மேலோட்டமான பார்வையில் இது சரிதான். ஏனெனில் தாய் மகன்மீது கொள்ளும் பண்பாட்டு உறவு எப்பொழுதும் நழுவிப்போவதில்லைதான். ஆனால் மகன் தாய்மீது கொள்ளும் இடிப்பஸ் காம உறவைத் தாய் மறுக்கும் நிலை பண்பாட்டில் இருப்பது வெளிப்படை. இவ்வுண்மை பண்பாட்டைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் மகனுக்கு விளங்குகிறது. இதனால்தான் தனது இடிப்பஸ் காம உறவு கைநழுவிவிடுமோ என்னும் பதற்றம் இடிப்பஸ் மகனுக்கு ஏற்படுகிறது. இந்தப் பதற்றம் காலப்போக்கில் நனவிலியாகப் படைப்;பு மனத்திலிருந்து எழும்போது தான் கற்பனையாகப் படைத்த தலைவியின் காம உறவுப் பதற்றமாக இடம்பெயர்ந்து வெளிப்படுகிறது. எனவே பாடலின் நனவுநிலைப் பொருளான தலைவியின் காமப் பதற்றம் என்பது உண்மையில் படைப்பாளனின் நனவிலி மனத்தில் உறையும் இடிப்பஸ் காமப் பதற்றத்தின் இடப்பெயர்வுதான்.

            இப்பாடலில் இடம்பெற்றுள்ள தலைவி என்பவள் படைப்பு மன நனவிலியில் உறையும் மகனின் பதிலிப் பாத்திரம் எனலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது பாடலில் இடம்பெற்றுள்ள தலைவன் என்பவன் படைப்பு மன நனவிலியுள் உறையும் தாயின் பதிலியாகிறான்.

            இனி இப்பாடலின் கருப்பொருள் காட்சியில் இடம்பெற்றுள்ள நனவிலிப் பொருள் இன்னதென்பதைக் காண்போம். தலைவன், தலைவி ஆகியோரின் காம உறவிற்குச் சாட்சியாக முடியாத ஒரு காட்சியைத் தலைவி இப்பாடலில் காட்டுகிறாள். அதாவது தலைவன் தன்னோடு களவு வாழ்வு வாழ்ந்தபோது ஓடிக்கொண்டிருக்கும் நீரில் ஆரல்மீன் வருமா என்று ஆரல் மீனைப் பார்த்துக் காத்திருந்த குருகு இருந்தது எனத் தலைவி கூறுகிறாள். தலைவியின் இந்தக் கூற்றின்வழி அவளது காதலுக்குக் குருகு சாட்சியாகா என்பது நமக்குத் தெற்றென விளங்குகிறது. அதே வேளையில் பின் ஏன் தலைவி இந்தக் காட்சியைக் கூறுகிறாள் என்னும் கேள்வியும் உடன் எழுகிறது. கருப்பொருட் காட்சியை உளப்பகுப்பாய்வு வெளிச்சத்தில் நோக்கும்பொழுது படைப்பு மன ரகசியங்கள் வெளிப்படுகின்றன. நீரோடு வாழும் ஆரல் மீனைச் சமயம் பார்த்துக் கொத்திச் செல்லக் குருகு காத்திருக்கும் காட்சியில் மூன்று கருப்பொருட்கள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படை. அவை: 1. ஒழுகுநீர், 2. ஆரல் மீன், 3. குருகு.

            நீரோடு பிறந்து நீரோடு சேர்ந்து வாழ்வது மீன். நீரினின்று மீன் பிரியாது; பிரித்தால் அது உயிர் வாழாது. மீனுக்கு நீரோடு உள்ள உறவு அத்தகையது. ஆனால் குருகின் நிலை வேறு. குருகுக்கும் மேற்சொன்ன நீர் மற்றும் மீன் ஆகியவற்றிற்கும் பிறவித்தொடர்பு ஏதும் இல்லை. இந்த நிலையில் நீரோடு வாழ்ந்து வரும் மீனை நீரினின்றுப் பிரிக்க குருகு காத்திருக்கிறது. இந்த கருப்பொருட் காட்சியை ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு ஒளியில் நோக்கும்பொழுது அது இடிப்பஸ் நனவிலிச் செய்திக்கான படிம வெளிப்பாடாகவே தோன்றுகிறது. தாயுடன் பிறப்பிலிருந்து தொடர்ந்துவரும் மகனின் பதிலியாகப் பிறப்பிலிருந்து நீரோடு சேர்ந்து வாழும் ஆரல் மீன் வெளிப்பட்டுள்ளது. பிரிக்க முடியாத தாய், சேய் உறவைப் பிரித்து வதைக்கும் தந்தையின் பதிலியாகக் குருகு வெளிப்பட்டுள்ளது. ஆகக் கருப்பொருளில் வெளிப்பட்டுள்ள குருகு தந்தையையும், நீர் தாயையும், நீரில் வாழும் சிறு ஆரல்மீன் மகனையும் நனவிலிக் குறியீட்டாக்கம் செய்கின்றன எனில் அது தவறாகாது.

            தாய்க்காம நினைவில் வாழும் தன்னை எந்த நேரத்திலும் தந்தை தாயினின்று பிரித்துவிடலாம் என அஞ்சும் நனவிலி மகனின் பதற்றம் எந்த நேரத்திலும் நீரோடு வாழும் மீனை நீரினின்று பிரித்துக் கொத்திச் செல்லக் காத்திருக்கும் கொக்குப் படிமத்தின்வழி மடைமாற்றம் பெற்று வெளிவந்துள்ளது எனலாம்.

            கொலைப் பண்புடைய கொக்குப்படிமம் நனவிலித் தந்தையின் பதிலியாக வெளிப்பட்டுள்ளது. நமது இக்கருத்தை வலுப்படுத்துவதுபோல் அமைகிறது இப்பாடலில் இடம்பெற்றுள்ள கொக்குப் படிமத்திற்கு நச்சினார்க்கினியர் தந்துள்ள விளக்கம். அவ்விளக்கமாவது:

                        “இரை தேடும் மனக்குறிப்புடைமையிற் கேளாது,

                           சிறிது கேட்டதாயினும்

                         கொலை சூழ் குருகாதலின் கூறுவதுஞ் செய்யாது” (குறுந். ப.79)

மேற்கண்ட விளக்கம் நமது உளப்பகுப்பாய்வு விளக்கமான குருகு ஸ்ரீ கொலைகாரத் தந்தை என்னும் படைப்பு மனம் கருத்திற்கு அண்மையில் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்கத் தனது நனவிலி மனத்துறையும் கொலைகாரத் தந்தையை வாசகன் நிலையிலிருந்து நச்சினார்க்கினியர் இனங்காட்டுகிறார் என்பதும் நாம் இங்குக் கருதத்தக்கது. குருகு பற்றிய இந்த உளவியல் புரிதலுக்குப் பின் பாடலின் கிடந்த பொருளான தலைவனோடு தலைவி கொண்ட காம வாழ்விற்குச் சார்பான வகையில் சாட்சி சொல்லும் நிலையில் குருகு இல்லை என்னும் பாடல் செய்தி இடிப்பஸ் தளத்தில் பொருந்துகிறது. அதாவது மகனின் இடிப்பஸ் காம வாழ்விற்குச் சார்பாக குருகு இல்லை என்னும் நனவு நிலைச் செய்தியாக மடைமாற்றம் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. தலைவியின் காதலுக்குச் சாட்சியாகாத குருகை ஏன் தலைவி தனது கூற்றுக்குள் கொண்டு வந்தாள் என்னும் வினாவிற்கு மேற்கண்ட உளவியல் விளக்கம் மட்டுமே இயைபுடையதாக இருக்க முடியும்.

            மேலே நாம் ஓடும் நீரைப் பெண்பதிலி எனக் குறியீட்டு அடிப்படையில் விளக்கியது கொண்டு வாசகர் பின்வரும் கேள்வியை எழுப்பலாம். அதாவது ஓடும் நீரை ஆண் பதிலியாகத்தானே உளப்பகுப்பாய்வு அடிப்படையில் நோக்க முடியும். மாறாக, ஒழுகு நீர் எவ்வாறு பெண்பதிலியாக அல்லது தாய்ப்பதிலியாக ஆக முடியும்? இந்தக் கேள்விக்கு நாம் பின்வருமாறு விடைதரலாம். இங்கு ஒழுகுநீர் பெண்படிமமாக ஆக முடியும்.

            தந்தை தன்னைத் தாயிடமிருந்து பிரித்துவிடுவாரோ என அஞ்சிய நனவிலி மகனின் பதற்றம் பாடலில் முதலிரண்டு அடிகளுள் மறைந்துள்ள பான்மையை முன்னர் விளக்கினோம். இந்தப் பயத்திற்கு அடிப்படைக் காரணியாக இருக்கும் காயடிப்பு அச்சம் குறியீட்டுப் பான்மையில் கருப்பொருட் காட்சியின்வழி வெளிப்பட்டுள்ளது என்பதைப் பின்னர் விளக்கினோம்.

            இதுவரை கண்ட விளக்கத்தின் அடிப்படையில் கூற்று நிகழ்த்தும் தலைவி என்பவள் படைப்பாளன் அல்லது அவனது நனவிலியில் உறையும் மகனின் பதிலி என்றும், தலைவியின் மனத்தைத் திருடிய கள்வனாகிய தலைவன் என்பவன் படைப்பு மன நனவிலியில் உறையும் தாய் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது

                        தலைவி ஸ்ரீ படைப்பு மன நனவிலிமகன்

                        தலைவன் ஸ்ரீ படைப்பு மன நனவிலித்தாய்

என்றாகிறது.

            பொதுவாகப் படைப்பாளனின் நனவிலி தலைவி கூற்றாக மாறி வெளிப்படும்போது பாத்திர அடிப்படையிலும் உரிப்பொருள் அடிப்படையிலும் மேற்கொண்ட வகைகளில் இடம்பெயர்ந்து உறைந்து குறியீட்டாக்கம் பெற்று வெளிப்படுகின்றன எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். தலைவி என்ற பெண் பாத்திரத்தைப் படைப்பாளன் என்ற ஆணோடும், தலைவன் என்ற பாத்திரத்தைப் படைப்பாளனின் தாய் என்னும் பெண்ணோடும் சமப்படுத்தும்போது அடிப்படையில் பால் பொருத்தம் அடிப்படுகிறதே எனலாம். இத்தகைய பாலின முரண்பாட்டுப் பொருத்தத்தைப் பயன்படுத்தி நிறைய அகப்பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்ப்பறவை, தாய்ப்பசு, தாய்க்குரங்கு என்னும் பெண் அஃறிணை உயிர்கள் தலைவன் என்னும் உயர்திணை ஆணுக்கும், சேய்ப்பறவை, சேய்க்குரங்கு, சேய்க்கன்று என்னும் பால்பகா அஃறிணை உயிர்கள் தலைவி என்னும் உயர்திணைப் பெண்ணுக்கும் உவமையாகப் பொருத்திப் பாடப்பட்ட சங்க அகப்பாடல்கள் ஏராளமாக உள்ளமை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் நனவிலி நிலையில் வெளிப்பட்டுள்ள தலைவி, தலைவன் முறையே ஆண் படைப்பாளிக்கும், அவனது தாய்க்கும் பாலின மாற்று அடையாளத்தோடு பொருத்தி விளக்குவதில் பிழையில்லை. முந்தையது நனவு நிலைப் பாலின முரண்பாட்டுப் பொருத்தம். பிந்தையது நனவிலி நிலைப் பாலின முரண்பாட்டுப் பொருத்தம் எனலாம்8.

சான்றெண் விளக்கம்

1.          சங்க அகஇலக்கிய ஆய்வுகளில் ஒன்று வ.சு.ப. மாணிக்கனாரின் முனைவர் பட்ட ஆய்வாகிய ‘தமிழ்க்காதல்’ எனும் ஆய்வாகும். இவ்வாய்வில் வ.சு.ப. மாணிக்கனார் சங்க அகஇலக்கிய மாந்தர்களாகிய தலைவன், தலைவி, தோழி முதலான பாத்திரங்களையெல்லாம் சங்க காலத்தில் வாழ்ந்த உண்மை மாந்தர்களாக எண்ணிப் பல கருதுகோள்களைத் தனது ஆய்வு நெடுக வழங்கிச் செல்கின்றார். சங்க அகக்கவிதைகள் சங்க கால ஆண், பெண் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன எனும் முடிவை ஏற்கும்போது புலவனுக்கும் கவிதைக்கும் உள்ள உறவு முற்றிலும் முறிந்துபோகிறது. இதனால் புலவனின் விருப்பு, வெறுப்புகட்கும் அவனது கவிதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றாகிறது. இது எந்த அளவிற்கு ஏற்புடைய கருத்தாகும்?

நாடக பாணியான சங்க அகஇலக்கியங்களாயினும் சரி, தன்னுணர்வுப் பாடல்களான புறஇலக்கியங்களாயினும் சரி, பிற்காலத்தில், தமிழில் எழுந்த ஆழ்வார், நாயன்மார்களின் நேரடி அனுபவ வெளிப்பாடுகளான பக்தி இலக்கியங்களாயினும் சரி, அவையெல்லாம் படைப்பாளியின் மன அனுபவங்களிலிருந்து தானே தோன்றியிருக்க முடியும். இன்னும் சொல்லவேண்டுமென்றால் நேரடியாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்னுணர்வுப் படைப்புகளை விடப் பாத்திரங்களைப் படைத்து வெளிப்படுத்தும் படைப்புகளில் தாம் படைப்பாளன் தன்னைக் கூடுதலாகத் தொடர்பு படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பாத்திரங்களின் மீது தனது விருப்பு வெறுப்புகளைப் படைப்பு மனம் துணிந்து ஏற்றலாம். இதனால் படைப்பாளனுக்கு எந்தக் குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. குற்றமுடைய பாத்திரப் படைப்புகளாயின் அவற்றைக் கற்பனைப் படைப்புகள் என்று கூறித் தப்பித்துக் கொள்ளவும் படைப்பாளனுக்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு படைப்பாளர்களின் கற்பனைப் படைப்பில் ஆசிரியனது நனவிலி மன உணர்வுகளைத் தேடுவதில் மிகுந்த நாட்டம் காட்டுகிறது.

சங்க அகப்பாடல்கள் தலைவன், தலைவி மற்றும் இன்னபிற பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனப் பார்ப்பதற்கும் முன்னதாகப் படைப்பாளனின் மன உணர்வை வெளிப்படுத்துகின்றன எனப் பார்ப்பது கூடுதல் இயல்புடையதாக இருக்கும். அப்படியாயின் இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கவில்லையா? எனும் கேள்வி சிலருக்கு எழக் கூடும். படைப்புமன நனவிலி உணர்வுகள் புற உலக யதார்த்தப் போர்வையில் இலக்கியத்தில் இனம் காட்டுகின்றன என்பதுதான் மேற்கண்ட வினாவிற்குரிய உளவியல்சார் விடையாகும்.

2.          தமிழில் புனை கதை எழுத்தாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தன் தான் கேட்டது, கண்டது, கனவுகண்டது, காணவிருப்பது, காணவிரும்பியது, காணவிரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் தனது கதைகள் என்று கூறுகிறார் (புதுமைப்பித்தன் நூல் முன்னுரைகள், பக். 777-782). இக்கூற்றிலிருந்து புதுமைப்பித்தனின் உணர்வுகள்தாம் பாத்திரங்களின் உணர்வுகளாக விளங்குகின்றன என்பது வெளிப்படை.

நாவலாசிரியர் ஜெயகாந்தன் தனது படைப்புகளுக்கு முன்னுரை வழங்கும்போது தான்தான் தனது நாவல்களின் பாத்திரமாக உருமாறுகிறேன் எனப் பல இடங்களில் கூறிச்செல்வது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அவரது கூற்றகளில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“கல்யாணி (ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற நாவலின் கதைத் தலைவி) என் மனைவி அல்ல; என் காதலியும் அல்ல; நான்தான் ஏன் என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களுமே-ஒன்றைக் கவனியுங்கள்; என் பாத்திரங்களில் யாருமே முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை – நான்தான் – நான் போட்டுக் கொள்கின்ற – வாழ்க்கையில் நான் சந்தித்த பிறர் மாதிரியான வேஷங்களே அவை”. (ஜெயகாந்தனின் முன்னுரைகள், ப. 153).

இதே ஜெயகாந்தன் தனது இன்னொரு நாவலான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் நாவலின் கதைத் தலைவியான ‘கங்கா’ பாத்திரப் படைப்பின் முடிவு குறித்து வாசகர்களின் கண்டனக் கடிதத்திற்குப் பதில் எழுதும்போது தனக்கும் அப்பாத்திரத்திற்கும் தொடர்பில்லை. அப்பாத்திரம் தன்னைத் தானே ஆக்கிக்கொண்டது எனக் கூறித் தப்பித்துக் கொள்கிறார். (ஜெயகாந்தனின் முன்னுரைகள், பக். 146-147).

ஒரு படைப்பாளன் சார்பான சூழலில் தன்னைத் தனது படைப்போடு அல்லது பாத்திரத்தோடு இணைத்து இனங்காட்டிக் கொள்வதற்கும் எதிரான சூழலில் படைப்பு மற்றும் பாத்திரம் ஆகியவற்றிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறித் தப்பித்துக் கொள்வதற்கும் ஏற்ற களம் பாத்திரப் படைப்பாக்கம் எனில் தவறாகாது. படைப்பாளர்களின் இத்தகைய கூற்றுகளிலிருந்து இலக்கிய மாந்தர்களின் உணர்வுகளைச் சமுதாய மாந்தர்களின் உணர்வுகள் என்று பார்ப்பதை விடப் படைப்பாளனின் உணர்வுகள் என்று பார்ப்பதே சாலச் சிறந்ததாகும் என்பதை உணரமுடிகிறது.

3.          காண்க: Freud ‘The Dissolution of the Oedipus Complex’  pp. 395-401, The Essentials of psycho Analysis.

4.          நனவிலியில் கலந்து கிடக்கும் குற்ற உணர்வு மனிதனின் பண்பாட்டு நடத்தைகளுக்குத் தூண்டு கோலாக விளங்குகிறது என்பதைப் பரவலாகப் பேசும் ஃபிராய்ட், இலக்கிய 11-ஆம் பக்கம் ஆக்கட்கும் தூண்டு கோலாக இருப்பது இக்குற்ற உணர்வே என்பதை இரஷ்ய நாவலாசிரியர் ‘டாஸ் டோவஸ்கி’யின் இலக்கியப் படைப்புகளை ஆராயுமிடத்தில் விரிவாக விளக்கிச் செல்கிறார் காண்க Freud Dostoevsky and Parricide, Art and Literature, Vol. 14, pp. 441-460.

5.          சிவப்பு நிறம் காமப் பொருளுக்கான நிறக் குறியீடு என்பதை வகுப்பறையில் நான் விளக்கிக் கொண்டிருக்கும் போது மாணவரொருவர் எழுந்து இந்த கருத்தை எல்லா இடத்திற்கும் பொதுமைப்படுத்த முடியுமா? எனும் கேள்வியை எழுப்பினார். மேலும் பொதுவுடைமைக் கட்சியின் நிறம் சிவப்பு. இந்தக் கட்சி நிறத்திற்கு எவ்வாறு காமப்பொருள் கற்பிக்க முடியும்? எனவும் வினவினார். அவருடைய கேள்விக்கு இக்கட்டுரையாசிரியர் வகுப்பறையில் வழங்கிய விளக்கத்தின் சுருக்கம் கீழே இடம்பெற்றுளளது.

பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படைத் தத்துவம் பொருளாதாரச் சமத்துவம். பொருள் என்பது பெண்ணிற்கான குறியீடு எனும் கருத்தில் பெரும்பாலான உலக சமுதாயங்கள் ஒத்துப் போகின்றன. நம் பண்பாட்டில் பெண் கடவுள் திருமகளை (லஷ்மி) பொருளின் குறியீடாகவே கருதுகிறோம். பொருளாதாரச் சமத்துவம் பற்றிய போராட்டத்திற்கான மனிதமன அடிப்படை அவனது நனவிலியுள் உறையும் தாயுடைமை பற்றிய இடிப்பஸ் மன உந்துதலே எனலாம். முதன்மை நிலையில் தந்தையின் தனியுடைமையாக இருக்கும் தாயைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது இடிப்பஸ் மனம். இதற்குப் பண்பாடு இடந்தராது. ஆகையால் இதை எந்த வடிவிலாவது நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது இடிப்பஸ் மனம். பண்பாட்டுக்கொவ்வாத இந்த நனவிலி ஆசை மடைமாறி வெளிப்படும்போது பொதுவுடைமைத் தத்துவமாக மலர்ந்துள்ளது எனலாம். இரஷ்யாவில் ஜார் மனனர்கட்கு எதிராகக் கொதித்தெழுந்த இரஷ்ய இனக்குழு மக்களின் போராட்டத்தின் அடிப்படை இடிப்பஸ் போராட்ட உணர்வே. இங்கு ஜார் மன்னர் ஸ்ரீ தந்தை, மக்கள் ஸ்ரீ பிள்ளை, பொருள் ஸ்ரீ தாய் எனப் புரிந்து கொள்வதில் தவறிருக்காது. இத்தகு அடிப்படையில் இக்கட்சியின் நிறம் சிவப்பு என்பதைத் தொடர்புடைய நனவிலி தீர்மானம் செய்கிறது. இந்த வகையில் பொதுவுடைமைக் கட்சியின் சிவப்பு நிறம் காமப் பொருள் தொடர்புடையது எனப் புரிந்து கொள்ள முடியும். இது பற்றி மேலும் விரிவாக விளக்க இது இடமில்லை.

6.          பெரும்பாலான தமிழறிஞர்கள் சங்க அகஇலக்கியங்கள் மனம் சார் காதலைத்தான் பேசுகின்றன. உடல் சார் காமத்தைப் பேசவில்லை என இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். ஆனால் சங்க இலக்கிய அறிஞர் வ.சு.ப. மாணிக்கம் சங்க அகப்பாடல்களின் பாடுபொருள் ‘காதற் காமம்’ எனத் தெளிவுபடுத்துவது (காண்க: வ.சு.ப. மாணிக்கம், தமிழ்க்காதல், பக். 490-506) ஃபிராய்டின் கருத்திற்கு மிக அண்மையில் உள்ளது.

சங்க அகப்பாடல்கள் தலைவன், தலைவி உறவு உடற்காமச் சார்புடையது என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகின்றன. சான்றுக்குக் கீழே இடம்பெற்றுள்ள பாடலைக் காட்டலாம்.

            “குக்கூ வென்றது கோழி யதனெதிர்

             துட்கென் றன்றென் றூய நெஞ்சம்

             தோடோய் காதலர்ப் பிரிக்கும்

             வாள்போல வைகறை வந்தன்றா லெனவே.” (குறுந். 157)

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘தோள் தோய் காதலர்’ எனும் வரி தலைவன் தலைவி ஆகியோர் உடல்கள் பின்னிக் கிடந்தமையை வெளிப்படையாகவே உணர்த்துகின்றது. திருமணம் நிகழ்ந்த முதல் நாளிரவில் உடைவிலக்கப்பட்ட தலைவியின் உடல் உறையினின்று வெளிப்பட்ட வாளைப்போல ஒளிர்வதாக அகநானூற்றுத் தலைவன் ஒருவன் கூறுகின்றான். இதுபோன்று உடற்காமத்தை வெளிப்படையாகப் பேசுகின்ற பல சங்கப் பாடல்கள் கிடைக்கின்றன.

ஏராளமான அகப்பாடல்கள் உடல் சார்காமத்தைக் குறியீட்டு வடிவிலேயே வெளிப்படுத்தியுள்ளன என்பது அறியத்தக்கது. ‘காமக் குறியீட்டாக்கம்’ (ளுநஒரயட ளுலஅடிழடளைஅ) பற்றிய கல்வியை நாம் ஏற்க மறுப்பதால் சங்க அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள கருப்பொருட் குறியீட்டாக்கங்கட்குரிய காமப் பொருளை நாம் எட்ட முடியாதவர்களாக உள்ளோம். இதனால் தான் சங்க அகப்பாடல்கள் உடல் சார் காமத்தைப் பேசவில்லை. மாறாக, மனம் சார் காதலைத்தான் பேசுகின்றது எனக் கூறப்பட்டு வருகிறது. மனம் ஒத்த காதலின் முடிவு உடல்சார் காமத்திற்கே எனில் பிழையாகாது. ஏனெனில் தடையற்ற எல்லாக் காதலும் இறுதியில் காமக் கூட்டத்தில் தான் முடிவுறும். இதை நமது பண்பாட்டில் விளைந்த சங்க இலக்கியம் மிக அழகியல் உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளது.

7.          இது பற்றிய விரிவான விளக்கத்திற்கு “உளப்பகுப்பாய்வு நோக்கில் சங்க அகப்பாடல்கள்” என்ற எனது கட்டுரையைக் காண்க. (புலமை தொகுதி 27, பகுதி-2, டிசம்பர். 2001).

8.          இக்கட்டுரை பக்கவரையறைக் கட்டுப்பாட்டினால் தற்காலிகமாக இத்துடன் நிறுத்தப்படுகிறது.

பயன்பட்ட நூல்கள்

1.          சாமிநாத ஐயர், உ.வே. (ப.ர்.),                  குறுந்தொகை,

                                                                                 கேஸரி அச்சுக்கூடம்,

                                                                                 சென்னை, 1937.

2.          மாணிக்கம், வ.சு.ப.,                                  தமிழ்க்காதல்,

                                                                                  பாரிநிலையம்,

                                                                                 சென்னை, 1962.

3.    வேங்கடாசலபதி, ஆ.இரா.(ப.ர்.),                  புதுமைப்பித்தன் கதைகள்,

                                                                                 முழுத்தொகுப்பு,

                                                                                 காலச்சுவடு பதிப்பகம்,

                                                                                 நாகர்கோவில், 2000.

4.  வையாபுரிப்பிள்ளை, எஸ்(ப.ர்.),                     சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்),

                                                                                பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு,

                                                                                 சென்னை, 1967

5.     ஜெயகாந்தன்,                                               ஜெயகாந்தனின் முன்னுரைகள்,

                                                                                மீனாட்சி புத்தக நிலையம்,

                                                                                 மதுரை, 1972.

1.Carvalho – Neto Paulo de,                        Folklore  and Psycho Analysis,

University of Miami Press,

Florida, 1972.

2.Freud, Sigmund,                                  The Essentials of Psycho Analysis,

The Hograth Press and the Institute of
Psycho Analysis, London, 1986.

3.Freud, Sigmund,                              Art and Literature – Vol. 14,

Penguin Books,

London, 1985.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா அரங்க.நலங்கிள்ளி

புல முதன்மையர்,

புதுவை பல்கலைக்கழகம்.

கழிவறையின் கதவு

கழிவறையின் கதவு

வகை : சிறுகதை

    “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் அம்மா ரஞ்சிதம். அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தான் கதிர். அவனின் கையில் இருந்த ஈரம் அம்மா ரஞ்சிதத்தின் உள்ளங்கையை நனைத்தது. மகனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள். அவன் தலைமுடிக்குள் தனது ஐந்து விரல்களையும் சீப்பு போல செலுத்தி கோதினாள். “உனக்கு என்னடா பயம். நான் அப்பா எல்லோரும் இருக்கோமல்ல” என்றாள்.

“நான் சென்னைக்கு இன்டர்வியூக்குப் போய்த்தான் ஆகனுமா? இங்கயே.. உங்க கூடயே ஏதாவது வேல பாத்திட்டு இருந்திர்ரனே”

“இப்பத்தான் முதல்ல இன்டர்வியூக்குப் போற.. நீ பாஸ் பண்ணனும். வேலைக்குப் போகணும். அப்பறம் பாத்துக்கலாம். இப்படி ஒவ்வொரு இன்டர்வியூக்கா போயி பழக்கப்பட்டாதான் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இந்த உலகம் ரொம்ப பெருசுடா. நீ நாலு இடத்துக்குப் போனாதான் நாலு மக்கள பாக்க முடியும்”

போதும்மா.. என்று கையெடுத்துக் கும்பிட்டான். அவனின் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி “ஒழுங்கா இன்டர்வியூக்குப் போயி வேலைக்கு போற வழியப் பாரு” என்று சொல்லிவிட்டு சமயலறைக்குள் புகுந்தாள் ரஞ்சிதம்.  ரெங்கநாதன் ரஞ்சிதாவிற்கு ஒரே மகன் கதிர். இன்ஜினியரிங் முடித்து விட்டான். பிறந்ததிலிருந்து அம்மா அப்பாவை பிரிந்தது இல்லை. அதிலும் படிப்புக்கூட காலை சென்று மாலை வீடு திரும்பும்படியாக உள்ள கல்லூரிலேயே சேர்த்துப் படிக்கவைத்தார்கள். அம்மா அப்பாவுக்கு ரொம்ப செல்லம். மகனை நாலு சுவத்துக்குள்ளே அடைத்து வைத்திருப்பது ரெங்கநாதனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளையை எப்படியாவது வெளியுலகத்திற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்று நினைத்தார். எப்படியாவது அவனை சென்னைக்கு வேலைக்கு அனுப்பி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மகனின் சர்ட்டிபிகேட் அனைத்தும் பையில் எடுத்து வைத்து விட்டார். மூஞ்சை தொங்கப்போட்டு உட்காந்திருக்கும் மகனின் பக்கத்தில் வந்து உட்காந்தார். அன்போடு அவனின் தோளில் கையைப் போட்டார்.

“என்ன கதிர் ஒரு மாதிரியா இருக்க?” என்றார் ரெங்கநாதன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டான் கதிர். ஆனாலும் மகனை ரெங்கநாதன் விடுவதாக இல்லை. அவன் கேட்காமலே இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

“பஸ்சுல ஏறினவுடனே முன்னால பின்னால பக்கத்துல ஒருமுறை சுத்திப்பாரு. யாராவது திருடனுங்க மாதிரி இருக்காங்களான்னு. அப்படி உனக்கு டவுட்டா இருந்துச்சுன்னா டிரைவர் சீட்டுக்குப் நேர்ரெதிர் சீட்டுல போய் உட்காந்துக்கு. அதான் உனக்கு சேப். பஸ்சுக்குத் தேவையான பணத்தை மட்டும் சட்டை மேல் சோப்பில் எடுத்து வைச்சுக்கோ. அடிக்கடி பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ்ஸ எடுத்து எடுத்துப் பாக்காதே. பேக்கை மடிமீது வச்சு உன்னோட கையை பேக்குல இருக்குற தோள்ல மாட்டுற நாடாவுக்குள் உள்ளவிட்டு பிடிச்சுக்கோ. பஸ்சு கொஞ்ச தூரம் போன பின்னாடி உனக்கு சேப்புன்னு தெரிஞ்ச பிறகு தூங்கு. நீ தூங்கனாலும் உன்னோட உடம்பை யாராவது தொட்டாலோ, சத்தமிட்டாலோ உடனே எழுந்திருச்சிக்கோ. விடியற்காலை மூணு முப்பதுகெல்லாம் தாம்பரம் போயிடும். வாட்ச்ல மூணு மணிக்கு அலாரம் வச்சிட்டு சரியா எழுந்திக்கோ. அப்பவே ராஜன் மாமாவுக்கும் போன் செஞ்சு பஸ்ஸ்டாண்ட்க்கு வரச்சொல்லிரு. வீட்டுக்குப் போனவுடனே கொஞ்சநெரம் நல்லா தூங்கு. காலையில எழுந்திருச்சி தலைக்கு குளி.  சாண்டல் கலர் பேண்ட் எடுத்து வச்சிருக்கன். அத போட்டுக்கு.. அதுக்கு மேட்சா டார்க் புல்லெண்ட் சர்ட் எடுத்து அயன் பண்ணி வச்சிருக்கேன். அத டக்இன் பண்ணிக்கு”

“என்னங்க..என்னங்க..” சமையறையிலிருந்து ரெங்கநாதனை ரஞ்சிதம் அழைத்தாள். மனைவியின் பதிலுக்கு எழுந்து போனவன் என்ன நினைத்தானோ! மீண்டும் கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“சொல்ல மறந்துட்டன். குளிக்கிறதுக்கு முன்னாடி தலைக்கு கொஞ்சம் வௌக்கெண்ணெய வச்சுக்கோ. அளவா சாப்பிட்டுக்கோ. கொஞ்சமா தண்ணீர் குடி. தண்ணீர் அதிகமா குடிச்சின்னா ரெஸ்ட்ரூம் அடிக்கடி போய்ட்டே இருப்ப. அதுமட்டுமல்லாம பயத்துல கைக்கால் எல்லாம் வியர்க்கும்” என்று சொல்லிக்கொண்டே போனார் ரெங்கநாதன். அதற்குள் சமையல்கட்டிலிருந்த வெளியே வந்திருந்தாள் ரஞ்சிதம்.

“என்னங்க.. நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. போதுங்க அவனை தனியா விடுங்க. அவனே ரொம்ப பயந்துபோய் இருக்கான். இதுல நீங்க வேற.” என்றாள். நிறைய அறிவுறுத்தலுக்குப் பின் கதிர் தயாராக இருந்தான்.

சேலம் பஸ் ஸ்டாண்டில்  கதிரை சென்னை பேருந்தில் டிரைவருக்கு எதிர் சீட்டில் உட்கார வைத்தார் ரெங்கநாதன். பஸ் எடுக்கும்வரை ஜன்னல் வழியாக மகனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். கதிரின் பக்கத்தில் வயதான முதியவர் ஒருவர் வந்து உட்காந்தார். வெள்ளை வேட்டி சட்டையும் நரைத்த முடியும் கண்ணாடியும் அவர் அணிந்திருந்தார். இருவரும் பரஸ்பரம் சிரித்துக்கொண்டார்கள். ஒருவழியாக பஸ் சேலத்தை தாண்டியது. கண்டக்டர் அனைத்து சீட்டுகளையும் கொடுத்து லைட்டை அணைத்து அவரது சீட்டில் போய் உட்காந்தார். பஸ் ஆத்தூரை தாண்டியதும் கதிர் கண்ணயர்ந்தான். பஸ்ஸில் மெல்லியதாக பழைய பாடல்கள் இசைத்துக்கொண்டிருந்தது. கதிரின் தூக்கத்தில் கூட நாளைய இண்டர்வியூ பற்றிய கனவே வந்தது. அவ்வவ்போது முழித்து ஜன்னலை திறந்து எந்த ஊர்? என்று பார்த்துக்கொண்டான். மீண்டும் உறங்க தயாரானான். இப்போது பஸ் கள்ளக்குறிச்சியைத் தாண்டியிருந்தது. அடிவயிறு ஏதோ வலிக்கின்ற மாதிரி உணர்வு. காலையில் சாப்பிட்ட சிக்கனும் மட்டன் வறுவலும் வேலையைக் காட்ட ஆரமித்திருந்தது.  சாப்பிட்ட அனைத்தும் கரைந்து வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வீட்டில் செய்த சிக்கனையும் மட்டனையும் ஒருபிடி பிடித்தான். கதிருக்கு அப்போது தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமென்று. முடிந்தவரை தன்னை அடக்கிக்கொண்டான். ஜன்னலை திறந்து காற்றை முகத்தில் வாங்கிக்கொண்டான். ஏதோ இப்போது கொஞ்சம் வயிறு லேசானதாய் போன்று இருந்தது.

“தம்பி.. காத்து ரொம்ப அடிக்குது. ஜன்னலை கொஞ்சம் மூடுறியா” என்றார் பக்கத்தில் இருந்த பெரியவர்.  கதிருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் கதவை மூடினான். மீண்டும் வயிறு ராகம் பாட ஆரமித்தது. எப்போது வேண்டுமானாலும் வயிற்றில் உள்ள கழிவு வெளியேற முண்டியடித்துக்கொண்டிருந்தது. அவ்வவ்போது ஜன்னல் வழியாக அடுத்த பஸ்ஸ்டாப் எப்போது வருமென்று பார்த்துக்கொண்டான்.  பேருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸ்டாண்ட்டினுள் போகாமல் வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது. “இங்க நிறுத்தியிருந்தா டிரைவர்கிட்ட சொல்லிட்டு பாத்ரூம் போய்ட்டு வந்திருக்கலாம். இப்படி ஆச்சே! கடவுளே என்ன காப்பாத்துப்பா! பஸ்சுல ஏதாவது ஆச்சுன்னா நாத்தம் அடிச்சு எல்லாரும் என்னயே பாப்பாங்களே! ரொம்ப அவமானமா போயிடுமே! ஐயோ இந்த வயிறு வேற கேட்க மாட்டங்குதே…” அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு மனதிற்குள்ளே ஏதோதோ நினைத்துக்கொண்டான்.

“தம்பி என்னாச்சுப்பா ஒருமாதிரியா இருக்க?” என்றார் அந்தப் பெரியவர்.

“ஒன்னுமில்ல” என்ற ஒற்றைப் பதிலோடு நிறுத்திக்கொண்டான் கதிர்.

“சென்னைக்கு எதுக்குப் போற? சொந்தகாரங்க வீட்டுக்கா இல்லை வேலைக்குப் போறியா?” என்றார்

“இன்டர்வியூக்குப் போறேன்”

“என்ன கம்பெனி? உள்நாட்டு கம்பெனியா வெளிநாட்டு கம்பெனியா? சம்பளம் எவ்வளவு தருவாங்க?”

“இன்டர்வியூக்குப் போனாதான் தெரியும். கம்பெனி பத்தி அவ்வளவா எனக்கு தெரியல”

“என்னாப்பா நீ! வேலைக்குப் போற கம்பெனி பத்தி முழுசும் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்பதான அவுங்க கேட்குற கேள்விக்குச் சரியா பதில் சொல்ல முடியும்”

பெரியவரின் கேள்விக்கு எந்தவொரு பதிலையும் தராமால் முகத்தை மட்டும் அவருக்கு காட்டினான். அவன் இருந்த அச்சமயத்தில் அம்முகம் சிரிப்பைக் காட்டியதோ இல்லை கோபத்தைக் காட்டியதோ தெரியவில்லை. ஆனால் பெரியவரே ஏதோ புரிந்தவர் போல கதிரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“தம்பி வாந்தி வரமாதிரி இருக்கா. என்கிட்ட ஒரு பிளாஸ்டிக் பை இருக்கு. உனக்கு தரேன். நீ வாந்தி எடுத்துட்டு வெளிய தூக்கிப் போட்டுடு” என்றார். அவனுக்குத்தானே தெரியும் என்ன பிரச்சனையென்று. எப்படி சொல்வது? என்று திருதிருவென்று முழித்தான் கதிர். அவனால் இப்பொழுது ஒன்றுமே செய்ய முடியவில்லை.  பின்பக்க இரண்டு தொடைகளையும் இறுக்கி மூச்சை இழுத்து கீழ் வயிற்றை மேல்வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான். கதிரால் அதிகநேரம் தம்கட்ட முடியவில்லை. முகமெல்லாம் வேர்த்து வியர்த்தது. வயிற்றில் உள்ள குடலே வெளியே வந்துவிடும் போலிருந்தது. நினைக்ககூடாததை எல்லாம்நினைத்தான். மூச்சை இழுத்து இழுத்து வயிற்றை தம்கட்டி மயக்கமே வருவதுபோல் ஆனது. இதற்குமேல் பொறுக்கமாட்டாதவனாய் என்ன ஆனாலும் பரவாயில்லை டிரைவரிடம் சொல்லி வண்டியை ஓரங்கட்டச் சொல்ல வேண்டியதுதான் என்று பெரியவரைத் தள்ளிக்கொண்டு டிரைவர் பக்கத்தில் போய் நின்றான் கதிர். இப்பொழுது பஸ் விழுப்புரம் பஸ்ஸாண்டிற்குள் சென்றது. கதிருக்கு அப்பாடா என்றிருந்தது. பெரியவரிடம், “ஐயா.. நான் வந்திடுறேன். கொஞ்சம் பாத்துக்குங்கோ” என்று சொல்லிவிட்டு பஸ் நின்றவுடன் அவசர அவசரமாக பாத்ரூமிற்குள் ஓடினான்.

அந்த பாத்ரூமில் அனைத்து கதவுகளும் மூடியிருக்க. கடைசில இருக்குற ஒரு ரூம் கதவு மட்டும் தொறந்திருந்தது. மூடியிருந்த கதவுக்கு நேரே ஒருஒரு ஆளாய் நின்றிருந்தார்கள். திறந்திறந்த கதவுக்கு நேராய் யாருமில்லை. வேர்த்து விருவிருத்துப் போன அவசரத்தில் நேராகப் போய் கடைசிக்கதவைத் திறந்தான் கதிர். உள்ளே ஒர் ஆள் உட்காந்திருந்தார்.

“கதவை மூடிட்டு போப்பா..” என்றார் உள்ளே இருந்தவர். கதவைச்சாத்தி விட்டு வெளியே காத்திருந்தான். ரொம்ப நேரம் வயிற்றுக்கழிவை அடக்கி வச்சிருந்ததனால அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. தலை சுற்றியது. நெஞ்சு படபடத்தது. அப்போது உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். டக்கென்று உள்ளே ஓடி கதவின் லாக்கைப் போட்டுவிட்டு காலை விரித்து அமர்ந்தான். வயிற்றில் உள்ள அனைத்தும் கீழே தள்ளியது. கொஞ்சகொஞ்சமாய் வந்து கொண்டே இருந்தது. உடபெல்லாம் வியர்வை. பனியன் சட்டையெல்லாம் நனைந்து போயிருந்தது. உடம்பு வளைந்து தலைகுனிந்து போயிருந்ததனால் லேசான மயக்கமும் மூச்சும் வாங்கியது. கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். வயிற்றில் இருந்து முழுச்சுமையையும் இறக்கி வைத்தார்போன்று இருந்தது கதிருக்கு. சரியாக பேண்ட் ஜிப்பை மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முயன்றான். அப்பொழுதுதான் கதவின் லாக்கை கவனித்தான். கதவில் இருக்கக்கூடிய லாக்கில் கைப்பிடி உடைந்திருந்தது. கதிர், உள்ளே போன அவசரத்தில் வெளியே நீட்டிக்கொண்டிருந்த லாக்கை உள்ளே தள்ளியவுடன் அருக்காலில் உள்ள லாக்கில் புகுந்து கொண்டது. இப்போது அருக்காலில் உள்ள லாக் வெளியே வந்தால்தான் கதவை திறக்க முடியும். ஆனால் லாக்கில் உள்ள கைப்பிடி உடைந்து போயிருப்பதனால் அருக்காலில் உள்ள பிடியை வெளியே தள்ள முடியவில்லை.

அதுவரை ஏதோ கழிவறையில் இருக்கின்றோம் என்றுதான் நினைத்திருந்தவன் கதவு திறக்க முடியாமல் போனாதால் மனம் பதறியது. குப்பென்று முகமெல்லாம் வியர்த்தது.  சின்ன பெட்டிக்குள் அடைபட்டு கிடந்த பிணம்போல் ஆனான். மூன்றடி அளவே உள்ள அந்த அறையில் கைக்கால் நீட்டுவதற்கே ரொம்ப கஷ்டமாயிருந்தது. தூண்டில் மாட்டிய மீனாய் அகப்பட்டுக்கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. லாக்கை வெளியே தள்ள முயற்சியில் தோற்றுப்போனான்.  கதவை எட்டி உதைத்தான். கோபம் தலைக்கு ஏறியது. நிதானத்தை இழந்தான். கதவுக்குப் பின்னால் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

“அண்ணா நான் உள்ள மாட்டிக்கிட்டேன். கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா… அண்ணா..” பலம் வந்த மட்டும் கத்தினான். மூச்சை அடக்கி வயிற்றுக்கழிவை தேக்கி வைத்திருந்ததாலும் கதவு அடைப்பட்டு கிடக்கின்ற பயத்தினாலும் அப்படியே கழிவறையில் மயங்கி விழுந்தான். அதற்குள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் கதிரை தேடியபடி உள்ளே நுழைந்திருந்தார். கதிரின் சத்தம் கேட்டு அந்த கடைசி கழிவறையின் கதவுப்பக்கம் சென்றார்.

“தம்பி.. தம்பி.. என்னாச்சு வெளிய வா..” என்றார் பெரியவர். உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

“கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா…ன்னு உள்ளயிருந்து சத்தம் மட்டும் கேட்டுச்சு ஐயா” என்று பகத்தில் இருந்த ஒருவன் சொன்னான். பெரியவருக்கு ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய ஆரமித்திருந்தது. மேலும் அவர் காலம் தாமதிக்கவில்லை. “தம்பி என்ன பண்ற.. கதவ தொற… தம்பி” கதவை வேகமாகத் தட்டிக்கொண்டே இருந்தார்.

“ஹலோ.. என்ன உங்கப்பன் வூட்டு கதவா.. இப்படி தட்டிக்கிட்டே இருக்க. ஒடஞ்ச நீயா காசு தருவ. நீ மாட்டுக்கும் எனக்கென்னான்னு போயிடுவ. நான்தான தண்டம் கட்டணும்” என்று சொல்லிக்கொண்டே வெளியே உட்காந்திருந்த கழிவறையின் காண்டிராக்டர் உள்ளே நுழைந்தார்.

“உள்ள ஒரு பையன் மாட்டிக்கிட்டான். கதவு லாக்காகிடுச்சு” என்று பதற்றத்துடனே சொன்னார் பெரியவர்.

“அதுக்கு நா என்ன பன்றது. அவனெல்லாம் செத்துரல்லாம் மாட்டான்” என்று எகத்தாளமாய் பதில் சொன்னார்.

“அந்த பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா கொலை கேசுல உள்ள போயிடுவ பாத்துக்க” என்றது அங்கிருந்த ஒரு குரல். அவ்வாறு கேட்டதும் கண்டிப்பாகக் காண்டிராக்டர் ஆடித்தான் போய்விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓராமாய் போய் நின்று கொண்டார்.

“கதவ ஒடைச்சிடலாம். உள்ள இருக்கிற பையன் எந்த நிலமையில இருக்கான்னு தெரியல” என்றது இன்னொரு குரல். பேச்சு சத்தமும் கதவை தட்டுகிற சத்தமும் லேசாய் காதில் விழுந்தது அவனுக்கு கேட்டது. கண்ணை முழித்து எழுந்திருக்க முயற்சி செய்கிறான். ஆனால் அவனால் கொஞ்சம் கூட அசையக்கூட முடியவில்லை. அவனுடைய முயற்சி மேலும்மேலும் தோல்வியே சந்தித்தான்.

அம்மாவை நினைத்தான். கொஞ்ச நேரம் மௌனமாய் எதையும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தினான். கொஞ்சகொஞ்சமாய் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டான். டக்கென்று ஒரே மூச்சாய் எழுந்தான். வாளியில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்துக்கொண்டான்.

“தம்பி.. தம்பி… என்னாச்சு கதவ தொறப்பா” என்று வெளியே கூப்பிடும் சத்தம் கேட்டது கதிருக்கு.

கதவின் லாக்கையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தனது பாக்கெட்டில் இருந்த பேனாவின் மூடியை கழட்டி விட்டு அருக்காலில் உள்ள லாக் ஓட்டையின் வழியாக பேனாவின் முனையை அழுத்தினான். லாக்கானது அருக்காலை விட்டு கதவுக்குச் சென்றது. கழிவறையின் கதவும் திறந்தது. கதவுக்கு முன்னால் பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே ஒரு கூட்டமே நின்றது. பெரியவரும் கதிரும் வேகமாக பஸ்சுக்கு ஓடினார்கள். கதிர் போகும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டான். பஸ் ஸ்டார்ட் செய்து தயாராக இருந்தது. கண்டக்டர் வெளியே இருந்தபடி எங்களை முறைத்துக் கொண்டே விசிலை வேகமாக ஊதினார். பஸ் நகர்ந்தது. ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டேன். பெரியவர் என்னைப் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. தண்ணீரை தொண்டைக் குழியில் இறக்கினேன். அந்தத் தண்ணீர் என் அடிவயிற்றை நிரப்பியது. குளிர்ந்த காற்று. ஜில்லென்ற தண்ணீர். ஏதோ செத்துப்பிழைத்து வந்தது போல் இருந்தது கதிருக்கு. பஸ் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்

mail : iniyavaikatral@gmail.com 

மதுரைக்காஞ்சியில் நகரம்

மதுரைக்காஞ்சியில் நகரம்

புற இலக்கியம் கொடை, வீரம், கையறுநிலை, சுட்டி ஒருவர் பெயர் சொன்ன காதல், இனக்குழுத்தலைவர், குறுநில மன்னர், வேந்தர் உள்ளிட்ட பலவற்றையும் செல்கிறது. சீறூர்த் தலைவர், குறுநில மன்னர் அழிவின் மேல் வேந்தர்களின் எழுச்சியும் நகரங்களும் எழுகின்றன. மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் நகரங்களை முன்னிறுத்துபவை.

நகரம்

            வேந்தர்களின் அரண்மனைகள் நகரங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. நகரம் பல்வேறுபட்ட அமைச்சுகள், அறங்கூறவையம், படைகள், சமயக் குழுக்களால் அதிகாரமுடையதாக்கப்படுகிறது. தொழில் வினைஞர், வணிகர், கலைவினைஞர், பாடுதொழில் புரிவோர், புலவர் இரண்டாம் நிலையில் அமைகின்றனர். இனக்குழுக்கள், குறுநில மன்னர்கள் நானில எளியோரின் உழைப்பையும் உணவையும் செழும் நகரம் உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறான நகரத்தையும் அதிகாரக் கட்டமைப்பையும், மதுரைக்காஞ்சி காட்டுகிறது.

சீறூர்த் தலைவனது முற்றமும் வேந்தனது அரண்மனையும்

            சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் பெருமை மட்டும் சங்க இலக்கியத்தில் விளக்கப்படவில்லை. எளிய குடிகள், இனக்குழுக்கள், சீறூர்த்தலைவர்களின் வாழ்வும் சித்திரிக்கப்பட்டுள்ளது. “சீறூர்த் தலைவனது முற்றம் கூளம் நிறைந்து துடைக்காதது. முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கொடியும் பம்பி வளர்ந்தது. நிழல் தருவதால் பந்தல் போடாமலேயே பலரும் தூங்கக்கூடியது. வேந்தனது முற்றம் காவல் நிறைந்த பெரிய அரண்மனை. மலைக் கூட்டத்தைக் போன்ற மாடமுடைய வீடு. சோழனது அரண்மனை பிறைச்சந்திரன் போல் சுண்ணாம்பால் செய்யப்பட்ட மாடம். விண்ணைத் தொடும் சுட்ட செங்கல்லால் ஓங்கி வளர்ந்த நீண்ட பெரிய அரண்மனை ஆகும்”. (கா.சுப்பிரமணியன்,1982,58-59).

அரண்மனை உருவாக்கம்

            பேரரசுகள் சிற்றரசுகளை அழித்து மேலெழுவன. பண்ட உற்பத்தியையும் வாணிபத்தையும் பேணுபவை. எளிய குடிகளின் உபரிகளை விரும்புபவை. அதிகாரத்தின் பொருட்டு மேல் கீழ்ப் பிரிவினையை மேற்கொள்பவை. பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பொருத்துபவை. வேந்தன் அரண்மனை என்ற பெருவெளியை உருவாக்குவதற்கான செல்வத்தைக் குடிகளிடமிருந்து பெறுகிறான். கொள்ளையிடப்பட்ட செல்வமும் உதவும்.

அரண்மனை அமைப்பு

            பேரரசைக் கொண்டு அதிகாரம் செலுத்தும் மன்னன் தன் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்கிறான். கோட்டை நெடுஞ்சுவர் முன் அகழி அமைகிறது. வளமுடைய நாட்டினை இழந்து பழம்பகையோடு போர் செய்ய வந்த மன்னர்கள் அகழிக்கே ஆற்றாது தோற்றோடுகின்றனர். ஆழ்ந்த நீர்நிலையைக் கொண்ட அகழியினை அரண்மனை கொண்டுள்ளது. மண்ணுற வாழ்ந்த மணிநீர்க்கிடங்கு (மதுரைக்காஞ்சி-351) அது. அவ்வரண்மனை வானுற ஓங்கிய பல கற்படைகளையும் மதிலையும் பழையதாகிய வலிநிலை பெற்ற தெய்வத்தையுடைய நெடிய நிலையினையும் நெய்யொழுகிக் கருகிய திண்ணிய கதவினையும் முகில் உலாவும் மலை போன்றுயர்ந்த மாடங்களையும் உடையது. வையை யாறு போன்று இடையறாது மக்களும் மாவும் வழங்காநின்ற வாயிலை உடையது. (மதுரைக்.352-356).

            புதுவருவாயும், கொழுவிய தசையும், உண்டமையாத சோறும், பருகி அமையாத கள்ளும், தின்று தின்று அமையாத தின்பண்டங்களும், நிலம் பொறுக்கவியலாப் பொருட்குவையும், இன்பந்தரும், அழகிய அவ்வரண்மனையிடத்தே ஆடல் மகளிர் இருந்தனர் (210-219).

புறநகர்ப்பகுதி

            பொருளாதாரத்தாலும் சமயத்தாலும் மேம்பட்ட குடிகள் அரசனை அண்டி வாழ்ந்தனர். மீன்சீவும் பாண்சேரி, முல்லையம்புறவு, இலைவேய் குடிசைகள், நனந்தலைத் தேயப்புரவிகளுடைய துறைமுகம், துணங்கையும் குரவையும் ஆடும் மகளிருடைய மணங்கமழ்சேரி, பெரும்பாணர் குடியிருப்புகள் போன்றவை வெண்மணல் திரள், கா, பொழில்சூழ் வையையாற்றை ஒட்டி அமைகின்றன. இலங்குவளை இருசேரிக் கட்குடி கொண்ட குடிப்பாக்கமும் உள்ளது (136-137) அதன் பின்னரே அகழி தொடங்குகிறது.

நகரக் குடியிருப்புகள்

            மதுரைக்காஞ்சியில் காட்டப்படும் நகரம் எளிய மக்கள் வாழும் ஊரிலிருந்து வேறுபட்டது. திருத்தமான ஒழுங்கில் அமைவது. யாறு கிடந்தாற்போன்ற அகல்நெடுந் தெருக்களில் பல்வேறு குழாத்து மக்கள் பேசு மொழிகளின் ஆரவாரம் கேட்கிறது. ஓவு கண்டன்ன இருபெரு அங்காடித் தொருக்களில் கொடிகள் பறக்கின்றன. கட்டுத்தறியைப் பெயர்க்கும் யானை, பறக்கும் புரவிகள், கள்ளுண்மறவர் படைகள் நிலை கொண்டுள்ளன. குளிர் மாட நிழலில் தீம் உணவு, சுண்ணம் – பசும்பாக்கு – வெற்றிலை விற்போர் உளர்.

            உயர்ந்த சிறகுகளை உடைய சீரிய தெருவில் இருக்கும் பொய்யறியா வாய்மொழியால் புகழ்நிறைந்த மாந்தர்கள் மதுரையில் (18-19) வாழ்கின்றனர். சிறகு என்பதற்குத் தெருவில் இருபுறத்துமுள்ள வீடுகளின் வரிசை என்று நச்சினார்க்கினியர் பொருள் உரைக்கிறார்.

            நகர மக்கள் பலவின்சுளை, தேமாவின் கனிகள், இலைக்கறிகள், கற்கண்டு, பெரிய இறைச்சி கலந்த சோறு, நிலத்தின் கீழ் வீழ் கிழங்கு, பாற்சோறு உண்கின்றனர். (527-535). வளப்பம் பொருந்திய பண்டங்களோடு தேவருலகம் போலப் பெரும் பெயர் பெற்ற மதுரை பொலிவுறுகிறது (687-699).          

பெருஞ்செல்வர் இல்லம்

            ஊண் கவலையற்ற செல்வப் பெருங்குடியினர் நகரில் வாழ்கின்றனர். தொய்யில் எழுதப்பட்ட சுணங்கு பிதிர்ந்த இளமுலைப் பெண்டிர் தம்மைக் கோலஞ் செய்து கொண்டு மெத்தென நடந்து தங்காதற் கொழுநரைக் கைதட்டி அழைத்துக் காமநுகர்தலையன்றி வேறொன்றையும் கல்லாத அவ்விளைஞரோடு மகிழ்ந்து புணரும்படி பல்வேறு செப்புகளில் தின்பண்டங்களையும் மலர்களையும் மனைகள் தோறும் ஏந்தி நிற்கின்றனர் (395-406). பெருநிதிக் கிழவரின் பெண்டிர் பூந்தொழில் செய் வளையணிந்து தெருவெல்லாம் மணம் கமழ ஒழுங்குபட்ட மாடத்தே நிலாமுற்றத்தின்கண் நின்றனர்.

அறங்கூறவையத்தாரும் பிறரும்

            குடிகளைக் காக்கும் இறைவன் வேந்தன். வேந்தனின் அதிகாரத்தைக் குலைக்கும் செயல்கள் அறமற்றவை. அறமற்றவை தண்டிக்கப்பட வேண்டும். துலாக்கோலை ஒத்த நடுவுநிலை உடைய அறங்கூறவையத்தார் ஒரு தெருவில் வாழ்கின்றனர். காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள் வாழும் தெரு, அறம் பிறழா வணிகர் உறையும் தெரு, ஒழுக்கத்தால் மேலாகிய நாற்பெருங்குழு வாழும் தெருக்கள் உள்ளன. ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு மக்கள் திண்ட நால்வேறு தெருக்கள் உள்ளன என்ற குறிப்புகளைக் காண இயலுகிறது. சத்திரியர், வணிகர், சூத்திரர் என்ற வருணப் பிரிவினையை நினைவூட்டும் ‘நால்வேறு தெரு’ என்ற தொடர் அமைகிறது. ஆயின் தீண்டாமை இல்லை. காலொடு கால் பொருந்துமாறு மக்கள் திரண்டுள்ளனர்.

சமயம்சார் குடிகள்

            வேந்தன் தன் அதிகாரத்தை மேம்படுத்த சமய மேலோரை அரவணைக்கிறான். மதுரைக்காஞ்சியின் இறுதியில் ‘வளப்பமுடைய மதுரையிடத்தே பல யாகங்களைச் செய்த உன் முன்னோராகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று வேள்வி செய்வாயாக’ (758-765) என்று பாடப்படுகிறான். வைதீகச் சார்புடைய வேள்வியை மேற்கொள்ள உரிமையுடன் புலவர் கேட்கிறார். மழுவான் நெடியோனை முதல்வனாக மாயோன் முருகன் போன்றோரைக் கொண்ட கோயில், புறங்காக்கும் பௌத்தப்பள்ளி, வேதம் பாடும் குன்று குயின்றன்ன அந்தணர்பள்ளி, செம்பாற் செய்தாலொத்த சுவர்களையுடைய அமண் பள்ளி ஆகியவை உள்ளன.

வரைவின் மகளிர் மனை

            நிலவுடைமையின் தோற்றத்தோடு பரத்தமையும் தோன்றுகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண்மையப் பாலியல் உணர்வுக்குரியவர்களாக வரைவின் மகளிர் அமைகின்றனர். பாதிப்புறும் அம்மகளிரே குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர். ‘வெண்மலர் கொண்டையிற் முடித்துத் தொடிகள் விளங்கும்படி கைகளை வீசி நடந்து தெருவெல்லாம் மணம் கமழ மிகுநலம் எய்துகின்றனர்’. வரைவின் மகளிர் தம்மைக் கண்டோரை வருத்தி அவர் பொருளைக் கவர்கின்ற தன்மையுடையோர் யாழுடன் பொருந்திய மத்தள இசையில் மகிழ்ந்து கூத்தாடி – குவிந்த மணலில் ஆடி மணம் நாறுகின்ற தம்மில்லங்களில் விளையாடுகின்றனர். மதுரைக்காஞ்சியில் நானிலப்பகுதியில் பரத்தையர்களைக் காண இயலுவதில்லை. கொழுங்குடிச் செல்வர் வாழும் நகரத்தில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.

கண்படை கொண்ட கடிநகர் மதுரை

            நகரத்தில் இரவுகள் தூங்காது விழித்திருக்கின்றன. வணிகம் அல்லும் பகலும் நிகழ்கிறது. ‘வளிதரு வங்கத்தில் வந்த மரக்கலங்களிற் கொணர்ந்த பல்வேறு பண்டங்கள் இறங்குகின்ற பட்டினத்தில் ஒல்லென்ற ஓசை முழங்குகிறது (536-544). நெடிய கடையை அடைத்து மாதர் துயில்கின்றனர். பாகும் பருப்பும் கலந்த மாவினை விற்கும் வணிகர் தூங்கி விழுகின்றனர். கடல் போன்ற பாயலில் துயில் கொள்ளும் ஏனைய மாந்தர் இனிதே உறங்க நள்ளிரவில் துயிலாக் கண்ணையுடைய வலிய புலியைப்போல அஞ்சாத கோட்பாடுடைய ஊர்க்காப்பாளர் களவு நூலறிந்தோரால் புகழும் ஆண்மையுடையோராய் மழை நீரோடும் நள்ளிருளில் தெருக்களில் உலவுகின்றனர். தெய்வங்கள் செயலற்ற இருட்போதிலும் அஞ்சுதல் இன்றிச் செல்கின்றனர் மறவர்.

நகரில் குவியும் உபரிச் செல்வம்

            செழும் நகர அரண்மனையில் வாழும் மன்னனுக்கு அணுக்கமாக அறங்கூறும் அவையத்தார், காவிதி மாக்களாகிய அமைச்சர், பெருங்குடிச் செல்வர், படையணியினர், வணிகர் உறைகின்றனர். வேளாண் உற்பத்தியிலோ தொழிலிலோ ஈடுபடா இவர்கள் வறுமை வாய்ப்படவில்லை. புல்லும் வளரா இவ்வீதிகளுக்கு ஐவகை நிலங்களிலிருந்து கூலமும் நெல்லும் பிறவும் வந்தடைகின்றன.

            யானைகளையும் மறைக்கும் ஓங்கிய கதிர்களையுடைய கழனிகளில் (247) முற்றிய நெல்லை அறுக்கும் ஓசை மருத நிலத்தில் கேட்கிறது. கற்றரையில் வரகின் கரிய கதிர்கள், தோரை நெல், நெடுங்கால் ஐயவி, இஞ்சி, மஞ்சள், மிளகு குவிக்கப்பட்டுள்ளன (286-290), நெய்தல் நில ஒளியுடைய முத்துக்கள், தீம்புளி, வெள்ளுப்பு, உணங்கல் பிறர் நுகர்வுக்காகக் காத்திருக்கின்றன. உழைப்பினால் செல்வம் சேர்வதில்லை. உழைப்பவர் உயிர்வாழ மட்டுமே இயலும். உழைப்பவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் செழுங்குடி வசம் வருகின்றன. போரினாலும் கொள்ளையினாலும் அச்சுறுத்தலினாலும் அரண்மனை செல்வத்தைப் பெறும்.

            மதுரைக்காஞ்சியில் பாண்டியனின் போர்த்திறம் உற்சாகத்துடன் பாடப்படுகிறது. பகைவர் நிலத்தில் காவலுடைய பொழில்களை வெட்டி அழித்து வளங்குன்றா மருதநில வயல்களை நெருப்புண்ணச் செய்து நாடெல்லாம் காடாகவும் பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்கவும் ஊரெல்லாம் பாழாகவும் சான்றோர் அம்பலங்களில் பேய் மகளிர் குடியேறும்படியாகவும் வேந்தர் செயல்புரிகின்றனர். மாளிகைக் குதிர்கள், பகைவர் நாடு கெட்டுப் பாழாகின. பாண்டியனின் நன்னெறியைக் கேளாக் குடிகளின் (152-176) வாழ்வு அழிக்கப்பட்ட கொடுஞ்சித்திரத்தை மதுரைக்காஞ்சி தருகிறது.

மன்னர்களின் அழிவு

            குட்ட நாட்டு மன்னன், முதுவெள்ளிமலை வாழும் மன்னன் ஆகியோரைப் பாண்டிய நெடுஞ்செழியன் வெல்கிறான். தலையாலங்கானத்துப் போரில் இருபெருவேந்தரோடு வேளிர் சாய்கின்றனர். அழும்பில், மோகூர், சாலியூர் போன்ற இடங்களில் போர்த்தொழில் செய்கிறான் பாண்டியன்.

            கொழுவிய இறைச்சியையுடைய கொழுப்புடைய சோற்றினை உண்பாரும், புலால் கமழும் விற்படையுடையாரும் ஆரவாரத்தையுடைய சேரிகளையுடையாரும், தென்றிசைக் குறுநில மன்னருமாகிய பரதவர் என்ற யானைகளை அச்சுறுத்தி அடிமைப்படுத்துகிறான் (139-144). அவன் உழவு, வாணிகம் செய்யும் குடிகளும் நான்கு நிலங்களில் வாழ்வோரும் பழைமை கூறி ஏவலைக் கேட்கும்படி செய்பவன் (119-124). கள்ளுண்போர் உறையும் கொற்கையைக் கைக்கொள்ளுகிறான்.

துறைமுகப்பட்டினத்தை வெல்லுதல்

            பொருட்கள் வரவும் போகவும் துறைமுக வாணிபத்தை மேம்படுத்துகிறான். பொன்மலி விழுப்பண்டம் ஏற்றிக் கொணர்ந்து நன்றாக இறக்குதலைச் செய்யும் முகில் சூழ்ந்த மலைபோல் தோன்றும் பெரிய மரக்கலங்கள் நிற்கும் துறைமுகத்தோடு ஆழ்ந்த கடலாகிய அகழியினையும் கொண்ட நெல்லூரை வெல்கிறான் (75-88). கடலற்ற மதுரை மன்னனின் எல்லை கடற்கரைப்பட்டினம் வரை விரிகிறது.

            தலைநகரம் கொண்ட பேரரசுகள் செல்வத்தில் திளைப்பதற்கான வழிகளும் மாற்றாரை அச்சுறுத்தும் முறைகளும் மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளன. எளிய குடிகளின் குருதிப் பிசுபிசுப்பில் நகரம் பொலிகிறது. அத்தகைய முட்டாச் சிறப்பின் பட்டினத்தைப் புலவர் போற்றியுரைக்கின்றனர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.காசிமாரியப்பன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 023.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »