மறையாத வடு | சிறுகதை

மறையாத-வடு

விடிந்தால் சுதந்திர தின விழா அதனால், ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல இடங்களில் கொடி ஏற்ற நாடு முழுவதும் தட புட வேலைகள் விடிய விடிய நடந்து கொண்டிருந்தது.

அரசு வேலையில் இருப்பவர்கள் இந்த முறை சுதந்திர தின விழா ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டது. மற்ற நாளில் வந்திருந்தால் ஒரு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் என நினைத்து வருத்தப்பட்டார்கள்

அவள் கோழி கூவுவதற்கு முன்பு எழுந்து வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலமிட்டு, முகம் கழுவி, தலைவாரி எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் நாங்களும் நல்லாஇருக்க வேண்டும் விடியிறது நல்ல பொழுதா இருக்க வேண்டும் சாமி என்று வேண்டி திருநீற்றை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைத்து கொண்டே காலையில் மார்க்கெட்டுக்குப்  போனால்தான் நல்ல காய்கறி கிடைக்கும், இல்லை என்றால் சொத்தல், பொத்தல்தான் கிடைக்கும் என்று கூறி தன் மகனை எழுப்பினாள். அவனும் எழுந்துமுகத்தைக் கழுவிக்கொண்டு ‘என்னம்மா’ காய்கள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்  உனக்குத் தான் தெரியுமே என்ன என்ன காய்கள் வாங்கி வருவது என்று கூறினாள்.

அவன் எப்போதுமே வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையில்தான் காய்களை வாங்கி வருவான்.

என்றுமே சோகம்  தெரியாத இன் முகத்தோடு இருப்பவன். அவன் மிதிவண்டியை எடுத்து புறப்படுவதற்கு முன்பு அவள் என் நெஞ்சு லேசாக வலிக்கிற மாதிரி இருக்கிறது என்றாள்.

அதற்கு அவன் நீ இரவெல்லாம் ஒரே பக்கமாய் படுத்திருப்பாய் அதனால், வலிக்கும் என்று கூறி புறப்பட்டான்.

அவன் போன பிறகு அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திர உலையில் பாதி பருப்பு வெந்திருக்கும் ஆனால், அவளால் வேலை செய்ய முடியாமல் நெஞ்சி வலித்ததனால், மகன் வரமாட்டானா என்று எதிர் பார்த்திருந்தாள்.

மகன் வந்து  பார்த்தான், அடுப்பு நனைந்து அவளும் மழையில் நனைந்தவள் போல் முழுமையாக வியர்வையால் நனைந்து படுத்திருந்தாள். அவன் மனம் படப்படத்தது, என்னாச்சோ, ஏதாச்சோ என்று தன் தாயை தூக்கி தன் மார்பில் சார்த்தினான். அவள் மூன்று முறை வானத்தை நோக்கியவளாய் வாயைத் திறந்து மூடி நான்காவது முறை தன் மகனின் மடியில் படுத்துக்கொண்டு கண்களை மூடி விட்டாள்.

    அவன் அம்மா, அம்மா எழும்மா எழும்மா என்று எழுப்பினான் அவள் உயிர் உடலை விட்டுச் சென்றதை அறிந்த அவன் அம்மா என்று கதறின கதறல் எமலோகத்தைத் திரும்பிப்பார்க்கச் செய்தது மட்டும் அல்லாமல் ஊரில் உள்ள காக்கை, குருவி, காடை, கௌதாரி என்ற எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படியானது. அவள் இறப்பு எல்லோருக்கும் கைபேசி மூலம் காட்டுத் தீயைபோல் பரவியது.

அவனுடைய உலகம் இருண்டு நின்றுபோனது, பூமியும் பிளந்து வானமும் இடிந்து வீழ்ந்தது, நிழல் தந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்தது, பூ மரமெல்லாம் பட்டுப் போனது, ரசித்த இயற்கையெல்லாம் வெந்து கருகிப் போனது.

இறப்பின் செய்தி அறிந்த மக்கள் அவரவர்கள் வயதிற்கேற்ப வந்து சேர்ந்தார்கள். வந்த பெண்கள் அவனைப் பிடித்துக்கொண்டு உன்னை அனாதையாக விட்டு விட்டுப் போய்யிட்டாளே….  என்று சிலபேர் உண்மையாகவும், கடமைக்காகவும் அழுதார்கள்.அவனுடைய மூன்று அக்காவும் ஒரு தங்கையும் சொகுசுந்திலும் தூரத்திற்கு தகுந்தார்போல் நடந்தும் வந்து தம்பி நம்ம அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாளே என்று அவனைப் பிடித்து உழுக்கினார்கள். பிறகு மூக்கை சிந்தி போட்டுவிட்டு அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தார்கள். நேரம் ஆக ஆக அவங்க நான்கு பேரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவன் மட்டும் அம்மா சாகுவது தெரிந்திருந்தால் என்னிடம் என்ன பேசியிருப்பளோ என்று அழுது கொண்டிருந்தான்.

ஊரில் உள்ள பெரியவர் ஒருவர் நல்ல நேரத்தில் பிணத்தை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு அவன் எங்க அம்மாவை பிணம் என்று சொல்லாதே! என்று துக்கம் தாங்காமல் கத்தினான். நேற்று இந்த நேரத்தில் எங்க அம்மா உயிரோடு இருந்தாங்க இப்போ இல்லையே என்று தேம்பி தேம்பி அழுதான்.இன்னொருவர் நல்ல நேரம் நான்கு மணி முடிவதற்குள்ள பாடியை எடுக்க வேண்டும்என்றதனால் எல்லாம் வேலையும் நடந்தது. எங்க அம்மா உயிர் பெற்று வந்திட கூடாதா, நடந்ததெல்லாம் பொய்யென்று இருந்திடக் கூடாது என்று ஏங்கினான். ஒருவருக்கு எதிர்பாராததுநடந்து விட்டால் அது பொய்யாகக் கூடாதா என்று நினைப்பார்கள் அதைத்தான் அவனும் நினைத்தான்.

ஒருவர் கேட்டார் உன் அம்மா மூத்தவங்க அவங்களை எரிப்பதா? புதைப்பதா? என்றுஅதற்கு அவன் எங்க அம்மா எரிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால், புதைத்து விடுங்க என்று சொல்லக் கூட தைரியமில்லாமல் கூறினான்.

பிணத்தை எடுங்க என்று சொல்லி பாடையில் வைத்து, எடுத்துக்கொண்டுபோய்  குழிக்கிட்ட வைத்துச் சடங்குகளெல்லாம் செய்தபோது இன்றோடு அம்மா மண்ணுக்குள்ளே போறாங்களே, அம்மா என்ற வார்த்தை இன்று முதல் மறையப் போகுதே என்னை அனாதையாக விட்டுட்டு போறாயே என்று கத்திக் கதறி யார் அடக்கினாலும் அடங்காமல் கீழே விழுந்து புரண்டு, புரண்டு அழுதான். அவன் அழுவதைப் பார்த்த காக்கா, குருவி கண்களிலும், இதுவரைக்கும் அழாத கல்நெஞ்சம் உடைவர்கள் கண்களிலிருந்தும் அழாமலேகண்ணீர் வந்தன. மேலும் புல்லும், பூவும் பனித்துளியாகவும். செடியும், மரமும் இலைகளாகவும் கண்ணீர் உதிர்த்தன. தென்றல் வாயை மூடி அழுதது. அந்த வழியே போகுகின்ற எமன் அவனிடமிருந்து அவன் தாயைப் பிரித்து விட்டோம் என்று நினைத்து இதற்கு பரிகாரமாக நானும் என் தாயை இழந்து கண்ணீர் விடவேண்டும் என்று உண்மையாகவே கண்ணீர் விட்டான். மேகமும் சொல்ல முடியாத துக்கத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது.

பிணத்தை குழிக்குள்ளே இறக்கினார்கள் பிணத்தை மண் போட்டு மூடுவதற்குள் நகைகளை கழட்டுங்கள் என்ற வார்த்தை கேட்பதற்குள் அக்கா, தங்கை நான்கு பேரும் குழியைச் சுற்றி வந்து நின்றார்கள். காதிலும், மூக்கிலும் கழற்றினால் ஒரு பவுன் நகை தேறும். இந்த ஒரு பவுன் நகைக்கு நான்கு பேரும் என்கிட்ட கொடு, உன்கிட்ட கொடு என்று அம்மா நகை எனக்குத்தான் சொந்தம், உனக்குதான் சொந்தம் என்று சண்டை போட்டுஆளுக்கொரு நகையைப் பிடிங்கிக்கொண்டு தாய்க்குக் குழியில் ஒரு பிடி மண் போட்டார்களோ இல்லையோ எனக்கு வேலையிருக்கு, உனக்கு வேலை இருக்கு என்று வந்த வேகத்தை விட போகும் வேகத்தில் ஆர்வம் காட்டினார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் சிலபேர் பிணத்தை எடுப்பதற்கு முன்பும், மீதி இருந்தவர்கள் எடுத்த பின்பும் சென்று விட்டார்கள். அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடியது. நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவன் மட்டும் என்ன பாவம் செய்தானோ, ஏன் இப்படி அவல நிலை ஏற்பட்டது.

அவன் தாய் உயிர் விட்ட நேரம் என்னும் எட்டு மணியையும், நாள் என்னும் ஞாயிற்றுக் கிழமையும், விழா என்னும் சுதந்திர தின விழாவையும் வெறுத்து ஒதுக்கியவனாய் தாயைப் புதைத்த இடத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.

இருட்டிய பிறகும் அங்கே அவன் இருந்ததைப் பார்த்த அந்த வழியே வந்த ஒரு பெரியவர் அவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு புறப்பட்டார். அவனுக்கு வீட்டிற்கு வரும் தூரம் அதிமாய் தெரிந்தது. அவன் தோப்பிலே இருக்கும் தனிமரம் போல் ஆகிவிட்டான்.

அவன் அந்த ஓட்டை படிந்த கூரை வீட்டில், அம்மா ஆறு மணிக்கே லேசாக நெஞ்சுவலி என்று சொன்ன உடனே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ என்று நினைத்து, நினைத்து உண்ணாமல் உறங்காமல் தாய் படுத்த இடத்தைத் தடவி, தடவி பார்த்து அந்த இரவு முழுவதும் அழுவதற்குக் கூட முடியாமல் தொண்டை வரண்டு போய் வார்த்தை வெளி வர முடியாமல் அழுதது யாருக்கும்கேட்க வில்லை.

அவன் உயிர் சென்றிடுமோ இல்லை அழப்போவானோ, அப்படி இல்லையென்றால் தாயை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகாத எண்ணம் ஷமறையாத வடு|வாக இருந்து காலம் முழுவதும் ஈட்டியைப் போல் குத்தித் துன்புறத்துமோ.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here