Saturday, April 4, 2026
Home Blog Page 4

காற்றோடு காற்றாக|ச. கார்த்திக்

காற்றோடு காற்றாக - ச. கார்த்திக்
🌳குழந்தையின் உரையாடல்

எந்த புத்தகத்திலும்

அச்சடிக்கப்படவில்லை.

🌳காடுகள் எரிப்பதற்கே

ஒரு மரத்தினால்
ஆன,

தீக்குச்சி தான் தேவைப்படுகிறது.

🌳ஒரு முறையாவது

ரயிலில் பயணம் செல்வோம்

தந்தையின் ஒரு ஆசை.

🌳கொஞ்சம்

இருள் இருப்பதே

நட்சத்திரம் இரசிக்க தான்.

🌳கோவில் கோபுரத்தில்

உலவிக் கொண்டு வருகிறது

புறா.

🌳எத்தனை முறை எழுதினாலும்

அதனோடு,

எழுத்து பிழைகள் பிறக்கிறது.

🌳இழப்பதை நினைத்து

இருப்பதை,

இழந்து விடுகிறோம்.

🌳கூவுகின்ற சேவலுக்கு

தெரியதா ஒன்று

தன்னைப் பலியிடுவார்கள்
என்று!

தெரிந்து இருந்தால்
இன்று!

கூவியே இருக்காது.

🌳நானொரு

ஒற்றுப்பிழை

அவள்

என் கையில்

சேராமல் போனதால்.

🌳மழைக்காலத்தில்

என் அம்மாவின் போராட்டம்

சமையில் அறையின்

விறகுடன்.

🌳காலத்தால் மறைக்க

முடியாதது,

என் எழுத்து தான்.

🌳புத்தகம்  படிப்பவர்கள்

மனிதனிடம் சற்று

விலகியே தான் இருப்பார்கள்..

🌳எவ்வளவு

பெரிய வானம்
இருந்தாலும்,

அதனைப் பார்க்க

வைக்கம் ஒன்று நிலவு தான்.

🌳மழையில் கொஞ்சம்

நனையத்தான் ஆசை

இலைகள் எல்லாம் சேர்ந்து

மறைத்து விடுகின்றன

தவிக்கின்ற மரக்கிளைகளை.

🌳குளிரின் நடுக்கத்தோடு

எதிர் பார்த்துக்கொண்டு

இருக்கிறேன்,

ஒரு தேனீர் கோப்பையுடன்.

🌳பழமையை மறந்து விடுகிறோம்

இன்று,

புதுமைக்கு வந்தப் பிறகு.

🌳இத்தனைக்குப் பிறகு

மீண்டும்
ஏறத்தொடங்குகிறது

எறும்பு!

கோபித்துக் கொள்ளாத கிளை.

🌳என்றைக்கும் போல

வேலைக்குச் சென்று

குடித்துவிட்டு தான் வந்தார்.

🌳என்னை எப்போதும்

சோதித்து பார்த்துக் கொண்டே

இருக்கிறது புத்தகம்.

🌳நதிகள் எல்லாம்

நீதி கேட்பதில்லை

மனிதன் தான்

நதியை வைத்து
நீதிக் கேட்கிறான்.

🌳கடலை அழித்து

வீடு கட்டி

அதில்
வாஸ்து பார்த்து
மீன் வளர்கிறான்.

🌳மழை வராத

நாளை வா

இன்று நெல் காய்கிறது.

🌳மரத்தின் இலைகள்

உதிர்ந்த பிறகு

மற்றொரு துளிர்

தாங்கி பிடிக்கிறது.

🌳மூங்கி(ல்)லுக்கு உயிர் பெருகிறது

ஏதொவொரு பறவையின்

செயலில்.

🌳நிலவை அழகாக

பார்ப்பதற்கு

இருளின் பேரழகு.

🌳காகிதம் எல்லாம்

இந்த சிறுவன் மூலம்

கப்பலாக மாறுகிறது

மழைக்காலத்தில்.

🌳இன்றைய சாலை எல்லாம்

பூக்களும், மாலையாய் நிறைந்து

இருக்கிறது

ஏதோவொரு பிணத்தின் மூலம்.

🌳கை விரல் பட்டதும்

வெக்கம் கொள்கிறது(தே)

தொட்டாச் சிணுங்கி.

🌳பூமியை சுற்றியே

வருகிறது காதல்

கொண்ட நிலா.

🌳கொடிகளை

அலங்கரிக்கின்றன(து)

பூக்கள்.

🌳மழை முடிந்த

பொழுதில்

வீட்டுக் கூரையில்

சொட்டுகிறது நீர்.

🌳பயணம் என்பது ஊர்

பெயர் தெரியாத வரை

நன்றாகவே இருக்கும்.
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

Natrinaiyil Uvamaikal|Dr.C.Ramamirtham

Abstract 
        
       The oldest Tamil literature is Sangam literature. There are two major divisions in this Sangam literature, namely Ettuthokaya and Patuppattu.   Natrinai is a book based on content. Natrinai is a testament to the fact that man lived a life in harmony with nature. The hidden metaphors found in Natrinai can be seen here.

திறவுச்சொற்கள் : உள்ளுறை , பிரிவு துயரில் தலைவியின் நிலை, தோழியிடம் தலைவிச் சொல்லியது 

“நற்றிணையில் உவமைகள்”

முன்னுரை
                        
     தமிழ் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது சங்க இலக்கியம் ஆகும். இந்த சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. நற்றிணை அகப்பொருள் சார்ந்த நூலாகும். மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்கு நற்றிணை ஒரு சான்றாக அமைகின்றது. நற்றிணையில் காணப்படும் உள்ளுறை உவமைகளை இங்கு  காணலாம்.

உள்ளுறை 
              
     உள்ளுறை என்றால் ஆழமான பொருளைக் குறிக்கும். ஒன்றை விளக்குவதற்கு வேறு பொருள் ஒன்றை உள்ளடக்கமாக அமைப்பது உள்ளுறை எனப்படும். இதனை,

“உள்ளுறுத்து இதனோடு ஒத்து பொருள் முடிகென
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை “ (தொல். அகம்:46)
         
         என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். தான் கூற வந்ததைக் கூறாமல், வேறொன்றைக் கூறி அதன் வாயிலாகத் தான் கருதிய பொருளை பெற வைப்பது என்பது பொருள் ஆகும்.
 
பிரிவு துயரில் தலைவியின் நிலை
            
      கழற்றி யானையின் பிரிவுக்கு ஆற்றாத பிடி தன் கன்றைத் தழுவியப்படியே செயலற்று வாடி நிற்கும் நாட்டினை உடைய தலைவன், தான் பிரிந்ததால் தலைவிக்கு வரும் நோயைப் பற்றி அறியாதவனாய் நீண்ட நாட்கள் பிரிந்து வரைந்து கொள்ளாமல் அருளற்றவனாய் இருக்கின்றான். தலைவனின் பிரிவு கொடுமையால் நலன் இழந்த தலைவி, பிடியானை தன் கன்றைக் காத்துப் பேணும் பண்பாய் இருந்தது போல, தன் துயரைப் பிறர் அறியாதபடி காத்துப் பேணி நின்றாள்.  துயரைப் பேணி நின்ற செயலை பிடி யானையின் செயலோடு ஒப்பிட்டு சொல்லப்பட்ட செய்தி சிறப்பானதாக அமைகின்றது. இதனை,

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி 
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, இது என் யான் அது
அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து 
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே? “(நற்:47)
 
     நற்றிணை பாடல் மூலம் அறியலாம். சிறப்பான இவ்வுள்ளுறை உவமை வேறு வகையிலும் வெளிப்படும். அதாவது,
 
“பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி   
முன்னை மரபொடு கூறுங்காலைத் துணிவொடு வரூஉம்
துணிவினோர் கொளி னே“ (தொல். உவமை யியல்:23)
          
       உவமை வேறு. உவமிக்கப்படும் பொருள் வேறு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு இருத்தலே’ பிரிதொடு படாது ‘ எனப்படும். நுட்பமாக அறிந்தவரே உணர்ந்தவர் என்பதால் துணிவொடு என்றார். உதாரணமாக,

“ முறிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் 
புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல்  
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃதறிந்தனள் 
அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை 
வேறு பல் நாட்டிற் கால்தர வந்த 
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம் 
இளநலம் இற்கடை ஒழயச் 
சேறும் வாழியோ முதிர்கம் யாமே “(நற்:29)
               
         நுட்பமாக தலைவியின் நிலையைத் தோழி தலைவனுக்கு உரைக்கின்றாள். நீர் வளத்தோடு இருந்த பொழுது செழிப்பாக இருந்த வள்ளிக்கொடி, வறண்ட நேரத்தில் காய்ந்து போவது போல, தலைவனே நீ உடன் இருந்தபோது வளமான வள்ளிக் கொடியாக தலைவியும் நாங்களும் இருந்தோம். நீ பிரிந்த போது வாடிய வள்ளிக் கொடியாய் நானும் தலைவியும் ஆனோம். தலைவியை கள் சாடியாகவும், கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமையாக சொல்லப்பட்டுள்ளது. சாடி கண்டாரை இன்புறுத்துவது தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக்குறச் செய்து களிப்பது இச்செய்தி நுட்பமாக உணர்வோரே அறிய முடியும். உணர்வுடையோரை உணர வைத்த இவ்வுவமை நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத்து உடனுறையும் கருப்பொருளால் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சி என்பர் தொல்காப்பியர். தலைவனைப் பிரிந்து தலைவி இருக்கும்போது தலைவியின் உடலில் பசலைபரந்து, தலைவியின் தோள் மெலிந்து காணப்பட்டது.பசலையினால் தலைவியின் அழகு குறைந்துவிடும் என்ற உளப்பாங்கை,

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலைஉணீ  இயர் வேண்டும்
திதலை அல் குல் என் மமைக் கவினே”  (குறுந்:27)
 
என்ற பாடல் விளக்குகின்றது.

தோழியிடம் தலைவிச் சொல்லியது 
                
        பொய்கையிலே வாளைமீன் பிறழவும், அதனைப் பற்றி உண்பதில் மனம் செலுத்தாது நீர்நாய் உறங்குவது போல, பரத்தையருடனே தங்கி உள்ள தலைவனுக்கு நீர் நாய்க்கு வாலை மீன் பிடிக்காமல் போனது போல, தலைவனுக்கும் ஒரு நாள் பரதையரைப் பிடிக்காமல் போய் என்னை நாடி வருவான் என்ற தலைவியின் கூற்றால் நீர் நாயுடன் ( கருப்பொருள் ) தலைவனை ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் உவமை சிறப்பு ஆகும். இதனை,

“வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுமில் ஏற்கும்  
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த  
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித் தழை 
ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின், 
வரையா மையே அறிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்  
வரைவேய் பனையும் நற்றோள்
அளிய-தோழி- தொலையு ந பலவே “(நற்:390)
 
என்னும் நற்றிணை பாடல் மூலம் அறியலாம்.
 
முடிவுரை          
      நற்றிணை பாடல்களில் உள்ளுறை உவமைகள் அதிகமாக காணப்படுகின்றன. மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரமாக நற்றிணை பாடல்கள் அமைகின்றன.
பயன்பட்ட நூல்கள்
1.வேங்கடராமன்.எச்.(ப .ஆ ) – 1989 , நற்றிணை, உ.வே.சா.நூல் நிலையம், சென்னை .

2.இளம்பூரணனார் (உ . ஆ ) –  2005, தொல்காப்பியம் பொருளதிகாரம் ,சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.

3.சோமசுந்தரனார்,பொ.வே.(உ.ஆ) _ 1961 , குறுந்தொகை ,  கழக வெளியீடு, சென்னை .

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சி. இராமாமிர்தம்
தமிழ் உதவிப்பேராசிரியர்
மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம் – துறை
அறிவியல் மற்றும் மனிதநேயவியல் புலம்
 
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
 
இராமாபுரம், சென்னை – 89.



iniyavaikatral

Greatness of Raama Naamaa in Kamba Ramaayanaa|Dr.G.Mangaiyarkkarasi

Greatness of Raama Naamaa in Kamba RamaayanaaDr.G.Mangaiyarkkarasi
Abstract        
          We can worship God in any form as we desire. There is no hard and fast rule to worship the Almighty in a specific causeway. It is not only the simplest way of worship, but it also enables an act of repetition  of the holy name of God in our mind, no matter wherever we are. ‘Rama’ is the main sacred mantra. Kambar says that it is the root and source mantra for the entire Universe, since it is chanted by every living being in this World. He also says that whoever recites that mantra will experience the whole concept with a unique blessing that gives him the complete self.  All souls which are desirous of attaining the eternal and permanent wealth of salvation recite the holy name of Lord Rama. Recitation of the God’s name is nothing but a continuous chanting of Lord’s Divine name with our mind prevailing in itself.  It is quite simple. By chanting the two letter word Rama, that word Rama itself will always bestow all blessings and wealth in this very birth. And along with this name of Rama, immoral behavior and evil deeds will be destroyed and may disappear forever. Even our Birth and death will cease to exist. Those who recite the Rama story without forgetting the same will also reap the benefits from the delicious food, fertile land, and healthy cattle given on  Alms or Charity. Kambar has mentioned in his Ramayana that they will also benefit from other alms that are mentioned in the religious literary scriptures. Noble Saint Vashishtar quotes that if any one  keeps on rendering the name of Rama, he can visualize that very word Rama will eradicate the hazardous happenings in his life.  Hanuman, Sambhati, Lakshmana, Vali, Dasharatha, Sage Sarabangamunivar, Shabari, Jadayu, Sita, Swayamprabha, and Prahlada were freed from the miseries of their life and attained an enlightened happiness by chanting the Name of Rama only. Therefore, let us also chant the Divine Name of God in order to gain all prosperities  in our life.

Key words: Almighty the Lord, Appellation or Name, Hazards, Sage Sarabangamunivar, Shabari, Jadayu, Sita, Suyam Prabha


“கம்பராமாயணத்தில் ராம நாமத்தின் பெருமை”

ஆய்வுச்சுருக்கம்
     இறைவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். இப்படித்தான் வழிபடவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அவ்வாறு வழிபடுவதில் மிக எளிமையானது மட்டுமல்ல எந்த இடத்தில் இருந்த போதிலும் இறைவனின் திருப்பெயரை மனத்தில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வதே நாமசெபமாகும். ‘ராம’ என்பது தலைமையான மந்திரம். உலகத்தவர் அனைவராலும் செபிக்கப்படும் ஆதலால் உலகெல்லாம் மூலமந்திரம் என்கிறார் கம்பர். அம்மந்திரத்தைச் செபித்தவர் முழுவதையும் அனுபவிப்பர் என்பதை முற்றும் தம்மையேத் தமர்க்கு நல்கும் தனிப்பெரும்பதம் என்கிறார். என்றும் அழியாது நிலையான மோட்சமாகிய செல்வத்தையும் விரும்பும் ஆத்மாக்கள் யாவும் இராமபிரானுடைய திருநாமத்தை ஓதுகின்றன.  நாமஜெபம் என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ச்சியாகச் சொல்லுதலாகும். இது மிகவும் எளிமையானது.ராம என்னும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதனால், அந்த இராமன் இப் பிறவியிலேயே எப்போதும் எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் இராம என்பவர்களுக்குத் தீச்செயலும் தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும்.நிலைத்து நிற்கும் இராமகாதையை மறவாமல் பாராயணம் செய்பவர்கள் அன்னதானம்,சிறந்த பூதானம்,கோதானம் ஆகிய தானங்களின் பயனும், அறநூல்கள் கூறும் வேறுதானங்களின் பயனும் அடைவார்கள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் காப்பிலேயேக் கூறியுள்ளார். வசிட்டர் கூறுவதாவது இராமன் பெயரைச் சொன்னால் வாழ்வில் ஏற்படும் இடர்களைக்களையும் என்கிறார். அனுமன், சம்பாதி, இலட்சுமணன், வாலி, தசரதன், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, சுயம்பிரபை, பிரகலாதன் ஆகியோர் இராமநாமத்தைக் கூறியதால் வாழ்வின் துன்பங்களைக் களைந்து இன்பம் பெற்றனர். எனவே நாமும் இறைவனின் நாமத்தை சொல்லி வாழ்வில் ஈடேறுவோம்.

கருச்சொற்கள்:
இறைவன், நாமம், இடர் களையும், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, சுயம்பிரபை.

முன்னுரை
        இறைவனை விட இறைவனின் நாமத்திற்கு சிறப்பு அதிகம். இறைவன் பல்லாயிரம் பெயர்களைக் கொண்டவன். அந்த இறைவனின் நாமத்தைத் தொடர்ந்து எப்போதும் நாம் உச்சரிப்பதன் மூலம், ஆன்மீக முன்னேற்றம், மன அமைதி மட்டுமல்லாமல், இறைவனின் அருளையும் பெறலாம். நாமஜெபம் என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ச்சியாகச் சொல்லுதலாகும். இது மிகவும் எளிமையானது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடியவை ஆகும். நாரதர், சுகப்பிரமம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதி காலத்தில் இறைவனின்  நாமத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்தார்கள். ஆயிரம் நாமங்களால் துதிக்கப்படும் பரம்பொருளை அவரவர்க்கு விருப்பமான நாமத்தைச் சொல்லிஅழைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இராமநாமத்தின் பெருமைகளைப் பல இடங்களில் கம்பர் பேசுகிறார்.கம்பராமாயணத்தில் கம்பர் கூறும் இராமநாமத்தின் பெருமைகளை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

இராமநாமத்தின் பெருமைகள்
      கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் காப்பும் கம்பன் புகழும் என்ற தலைப்பில் ராம எனும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதானால், அந்த இராமன் இப்பிறவியிலேயே எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் ராம என்பவருக்கு தீச் செயலும், தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும்.     

“நன்மையும், செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுதினால்”  (காப்பும் கம்பன் புகழும் 13)
இறக்கும் காலத்தில் ராம என்று சொல்பவர்கள் யாராயிருந்தாலும் தேவலோகத்தை அடைவார்கள் என்பது உறுதி. எனவே குற்றமற்ற இராமாயணம் எனும் பெரும் கதையைக் கேட்பவர்கள் வைகுந்தம் அடைவார்கள் என்பதைத் தனியே எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ.

1.வசிட்டர்
        இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணியபோது வசிட்டர், இராமனது அருமை பெருமைகளைக் கூறுகிறார். இராம எனச் சொல்ல பேரிடர் யாவும் நீங்கும் என்கிறார்.

” வாரம் என் இனிப் பகர்வது? வைகலும் அனையான்
போரினால் வரும் உடையூறு பெயர்கின்ற பயத்தால்
வீர, நின்குல மைந்தனை, வேதியர் முதலோர்
யாரும், யாம் செய்த நல்அறப் பயன் என இருப்பார்”      (அயோத்தியாக்காண்டம்- மந்திரப்படலம் 38)
2.அனுமன்
     கடல் தாவு படலத்தில் சீதை இருக்கும் இடம் எது என்பதைத் தேடிச் சென்ற அனுமனுக்குக் கடலில் மைந்நாக மலை, சுரசை ஆகியோர்களால் இடர்பாடு ஏற்பட்டது. அங்காரதாரையால் ஏற்பட்ட கடுமையான துன்பங்கள் இடையே ஏற்படுகின்றன. கெடுதல் இல்லாத அறத்தை நினைக்காத தெளிவில்லாத அரக்கர்கள் செய்கின்ற தீமைகள் அனைத்தும் தீரவும், அவற்றைக் கடந்து உய்யவும் ஏற்ற வழி இங்கு உள்ளது இராமன் என்ற சொல்ல எல்லாத் துன்பங்களும் நீங்கும். அதைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைத்து அனுமன், இராம நாமத்தை உச்சரிப்பதையே உறுதியாகக் கொண்டான்.

“ஊறுகடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல்இல் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை எங்கு உள்ளது இராமா என எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான்”  (கடல் தாவு படலம் 88)
    இந்திரசித் பிரம்மாத்திரம் ஏவ, இலட்சுமணன் உள்ளிட்ட அனைத்து வானர வீரர்களும் உணர்வு இழந்தனர். உணர்விலர். அந்த நிலையிலும் அனுமன் உதட்டில் ராம நாமமே இருந்தது.

3.சம்பாதி
         இவர் கருடனின்  தம்பியான அருணனின் மகன். சடாயுவின் அண்ணன். சம்பாதியும், சடாயுவும் சிறு வயதில் தாம் பெற்ற அபாரசக்தியை அனுபவித்துக் கொண்டு ஒருநாள் ஆகாயத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சடாயுவைக் கொளுத்தி விடும் போலிருந்தது. சம்பாதி தனது சிறகுகளை விரித்து சடாயுவைக் காப்பாற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று .சம்பாதி பறக்கமுடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்கமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். சூரியனின் வெப்பத்தினால் கருகி தீய்ந்து போன சிறகுகள் சம்பாதியின் மேனியிலேயே மீண்டும் வளர, வானர வீரர்கள் ராம நாமத்தை ஓதுகின்றனர். சீதையைத் தேடி வந்த வானர வீரர்கள் ராம நாமத்தைப் பாடப் பாட சம்பாதியின் சிறகு கண் முன் வளர்ந்தது.

“எல்லீரும் அவ் ராம நாமமே
சொல்லீர் சொல்ல எனக்கோர் சோர் விலா
நல்லீரப் பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர்”  (சம்பாதிப்படலம் 986)
         
     தரையில் விழுந்த என்னைக் கண்ட சூரியன் மிக்க கருணை கொண்டு சனகனின் மகளான சீதை, இராமனை விட்டுப் பிரிவதால் அவளைத் தேடும் பொருட்டாக அங்கே வரும் வானர வீரர்கள் உன்னைக் கண்டு, இராமன் பெயரை மனதில் எண்ணி உச்சரிக்கும்போது, முன் போலவே சிறகுகளைப் பெற்று பறந்து செல்வாய் என்று உரைத்தான் என்பதை சம்பாதி வானர வீரர்களிடம் கூறினான்.

4.இலட்சுமணன்
       இந்திரசித் வதைப் படலத்தில் திவ்ய அஸ்திரங்களை நீ உபயோகிக்கக்கூடாது என்று இராமன் கூறியபடியினால் இலட்சுமணன், இந்திரசித்தின்மேல் அம்பைவிடும் போது, இராமன் என்னும் நல்லறமூர்த்தி வேதங்களால் மட்டுமே ஆராய்ந்து அறியத்தக்க வேதங்களைக் கற்றவர்களாலே வணங்கத்தக்க பரம்பொருள் என்பது உண்மையானால் பிறை போலும் வளைந்த பற்களையுடைய இவனைக் கொல்க எனச் சொல்லி, இலட்சுமணன் தன் வலிமை முழுவதும் காட்டி, லில்லின் நாணை இழுத்து வளைத்து ஒரு பிறைச்சந்திரன் போன்ற அம்பினைச் செலுத்தினான். அதனால் இந்திரசித் தலையை வெட்டி வீழ்த்தியது.
 
“மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற்பால
இறையவன் இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின்
பிறை எயிற்று இவனைக் கோறி என்று ஒரு பிறை வாய் வாளி
நிறைஉற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான்” (இந்திரசித் வதைப் படலம் 3107)
5.வாலி
        வாலி மேல் இராமன் செலுத்திய அம்பு தாக்கியது. யார் தன் மேல் அம்பினை இட்டது என்று தெரிந்து கொள்ள வாலி போராடினான். மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயும் இனி வரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, நான் தனியே தடுக்க வல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான இராம என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்.

“மும்பை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்”  (வாலிவதைப்படலம் 305)
6.விசுவாமித்திரர்
      குலமுறை கிளத்துப் படலத்தில்  விசுவாமித்திரர், இராமன் குறித்து ஜனகரிடம் கூறும் போது, உலகில் பரவிய பாவங்கள் செய்த கொடுமையான தீய செயல்களாலும், அரிதான எல்லையற்ற வேதங்கள் விளங்கும் தர்மங்கள் செய்த அறச்செயல்களாலும், சிவந்த கோவைப் பழம் போன்ற வாயை உடைய கௌசல்யா தேவி பெரிய தோள்வளைகளை அணிந்த கைகளையும் ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவத்தையும், கருங்கடல் போன்ற நிறத்தையும் உடைய இந்த இராமனை ஈன்றெடுத்தாள் என்று கூறுகிறார்.                          
 
“இருங்கடகக் கரதலத்து இவ் எழுத அரியதிருமேனிக்
கருங் கடலச் செங்கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்”  (குலமுறை கிளத்துப் படலம் 605)         
கார்முகப் படலத்தில் இராமன் வில்லை முறித்த செய்தியை சீதையினுடைய தோழி நீலமாலை கண்டு வந்து சீதையிடம் கூறுகிறாள். இவன் மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும், போற்றுதலுக்குரிய விசுவா மித்திரனோடும் நம் நகருக்கு வந்துள்ளான் என்று கூறினாள்.

7.தசரதன்         
        தைல மாட்டுப் படலத்தில் தசரதன் மீண்டும் தனது தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து இராமன் தூரத்தே இருக்கின்றானா? அண்மையில் இருக்கின்றானா? என்று கேட்டான். சுமந்திரன், இலட்சுமணனும் மிதிலைத் திருமகளான சீதையும் உடன் வர இராமன் மூங்கில்கள் ஓங்கிய காட்டுக்குள் சென்றான் என்று கூறினார். அவ்வாறு கூறிய போதே தசரதன் உயிர் நீத்தான்.   
 
“வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்” (தைலமாட்டுப் படலம் 583)
8.சரவங்க முனிவர்
          இவர் இராமனின் திருவருளால் மானிடப்பிறவி நீங்கி வீடுபேறு எய்தினார். ’சரபங்கன்’ என்ற பெயர் ’மன்மதன் எய்தும் காமபானங்களைத் தோல்வியுறச் செய்தவன்’ என்று பொருள் கொண்டது. மேலும் ’காமம்,வெகுளி, மயக்கம் ஆகியவற்றையும் ஒழித்தவன்’ என்றும் இதனால் உணர்த்தப்பெறும். இராமனின் பெயரை உணர்ந்து உள்ளத்தில் நினைப்பவர்கள் அடையும் பேறு மிகவும் உயர்ந்தது எனில், அப்பெயரை ஒலித்து உருஏற்றுபவர்கள் அடைகின்ற பேறு அதனினும் உயர்ந்தது. இராமனையே நேரில் கண்டு போற்றியவர்கள் அடையும் பேற்றைச் சொல்லுதல் எளிதோ. எல்லா அண்டங்களையும், அவற்றில் உள்ள நிலையியல்-இயக்கியல் ஆகிய பொருட்கள் அனைத்தையும், அறிவினால் அறிய முடியாத முறையில் உண்டு தனது வயிற்றில் அடக்கியவனான இராமனது ஆயிரம் திருநாமங்களில் ஒரு நாமத்தை அறிபவர் அடைகின்ற பேறு, அண்டத்திற்கும் எட்டாத அளவு பெரியது ஆகும். அவ்வாறானால், உடலைவிட்டு உயிர்ப் பிரியும் நேரத்தில் அந்தப் பரம்பொருளை நேரில் கண்டவர் அடையும் பதவி இவ்வளவு சிறப்புடையது என்று எண்ணிப் பார்ப்பதற்கு எளியதோ அன்று.
 
“அண்டமும் அகிலமும் அறிவுஅரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ”  (சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 115)

  இராமனைக் காண்பதற்காகவே காத்திருந்ததாகவும், கண்டதால் தாம் கடைத்தேரிவிட்டதாகவும் தன்இருவினைகளும் அழிந்து போனதால் இனி உலகில் செய்யத்தக்க செயல் எதுவும் தனக்கு இல்லை என்கிறார். இவர் இராமன் அனுமதியுடன், அவர் கண்முன்னே தன் மனைவியுடன் தீக்குளித்து மனிதப்பிறவி, கடந்து இறைவனின் திருவடியை அடைந்தார். இராமநாபத்தை செபித்துக் கொண்டே தன் இன்உயிர் நீத்தார் என்று கம்பராமாயணம் கூறுகிறது.

9.சபரி
        சபரி பிறப்பு நீங்கு படலத்தில் மதங்க முனிவரது சீடர் சபரி இறைவனை நினைத்து மேற்கொண்ட தவத்தால் அவளுக்கு நற்பயன் கிட்டியது. சீதையைத் தேடி வரும் வழியில் இராம இலட்சுமணர்கள் சபரியைக் கண்டனர். அப்போது சபரி, ’என் தந்தையே, சிவனும், பிரம்மனும் தேவர்கள் யாவரும் இந்திரனும் இங்கு வந்து, என்னை மகிழ்ச்சியுடன் பார்த்து உனது மாசற்ற தவத்துக்கு முடிவாக நீ சித்தி பெரும் காலம் நெருங்கிவிட்டது. இராமன் இங்கே வருவதை எதிர்பார்த்திருந்து, வரும்போது அவனுக்கு உரிய உபசாரங்களை விரும்பி செய்து, பிறகு என் உலகத்துக்கு வருக என்று கூறிச் சென்றார்கள்’. என் தந்தையே நீ இங்கு வரப்போகிறாய் எனும் செய்தி என் மனதில் பெருந்த மகிழ்ச்சியுடன் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால் இன்று தான் என் தவம் பலித்தது என்று சபரி கூறினாள்.  இராமன் அறிய தவத்துக்குரிய அவளை அன்போடு பார்த்து, தாயே வழிநடையால் உண்டான எங்களது வருத்தத்தை உன் உபசரிப்பால் தீர்த்து விட்டாய், நீ வாழ்வாயாக என்று கூறினார். சபரி மெய் வருத்தி செய்து பெற்ற தவத்தின் பயனாலே, தனது உடம்பை விட்டு நீங்கி, அந்த ஒப்பற்றதான மோட்ச உலகத்தை அடைந்தாள். அதைக் கண்ட இராம இலட்சுமணர் அளவிட்டு கூறமுடியாத வியப்படைந்து தன் அழகிய திருவடிகளில் கட்டிய வீர கழல்கள் ஒலிக்கும்படி சபரி கூறிய வழியில் சென்றனர்.

“பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அத் தனிமையின் வீடு சார்ந்தாள்” (சபரி பிறப்பு நீங்கு படலம் 1190)
      இராமனையே நினைத்து எப்போதும் அவன் பெயரையே மந்திரமாகச் சொல்லிக்கொண்டிருந்ததால் சபரிக்கு மோட்சம் கிடைத்தது (10). ஜடாயு உயிர் நீத்த படலத்தில் வேதங்களும் பார்ப்பதற்கு அரியனவாகி அவற்றுக்கு எட்டாமல் அப்பால் நின்றபடியே மறைந்து போகின்ற மாவீரனாகிய திருமாலின் அவதாரமான இராமனுடைய திருவடிகளை ஜடாயு தன் கண்களால் தரிசித்தான். தரிசித்தபடியே பெரிய வடிவங்களைக் கொண்ட ஐம்பெரும் பூதங்களும் அழிந்து போகின்ற ஊழியின் முடிவு காலத்திலும் அழியாமல் நிலைக்கும் உலகமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தான். சடாயு, இராமனைப் பார்த்தபடியே தன் உயிர்நீத்தான்.

11.சீதை
         காட்சிப் படலத்தில் சீதை பிறந்ததால் குடிப் பிறப்பு என்பதும், பெண்மை என்பதும் பிறர் தம்மை விரும்பும்படி தவம் செய்து உயர்ந்தன. இவற்றைப் போலவே நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து உயர்ந்தது. சீதை இங்கே தன் கணவனான இராமனையே நினைத்துத் தவம் செய்கின்ற முறைகளை எல்லாம் தன் செந்தாமரை கண்களால் பார்ப்பதற்கு இராமன் தவம் செய்யவில்லையே என்று அனுமன் மனதிற்குள் நினைத்தான்.

“பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம்
நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன் அவன் கமலக்கண்களே” (காட்சிப் படலம் 401)
        உரு காட்டுப் படலத்தில் இராவணன் மிரட்டியதால் வருந்திய சீதை தன்னுயிரை விட, குருக்கத்தி மரத்தில் தூக்கிட்டு உயிர்விட எத்தனித்த போது, அனுமன் தேவர்களின் தலைவனான இராமன் அனுப்பிய தூதன் நான் என்று கைதொழுதவாறு சீதையை வணங்கினான். அப்போது சீதை, வந்தவன் அரக்கனோ என்ற ஐயத்தில் அவன் அரக்கனானாலும் ஆகட்டும். தேவனானாலும் ஆகட்டும் அல்லது குரங்கினத்தின் தலைவன் ஆனாலும் ஆகட்டும். இவனால் ஏற்பட போவது கொடுமையானாலும் ஆகட்டும். நன்மையானாலும் ஆகட்டும். இங்கே என் எதிரில் வந்து, என் தலைவனான இராமனின் திருப்பெயரை உரைத்து உணர்வை உருகச் செய்து, பிரிய இருந்த என் உயிரை மீட்டுத் தந்தான் இதைவிட ஒருவன் செய்யத்தக்க உதவி உண்டோ என்று நினைத்தாள். (இராமன் கொடுத்தனுப்பிய கணையாழியை) அனுமன், சீதையிடம் தருக மீண்டும் பல வகையான அடையாளங்களை, வேறு சொற்களைச் சொல்ல வேண்டியதில்லை, என் பெயர் பொறித்ததும், சிறந்த வேலைபாடு உடையதுமான மோதிரத்தை நேரே அவளிடம் காட்டு என்று கூறி தன் மோதிரத்தை என்னிடம் கொடுத்தான் என்பதை சொன்ன அனுமன் தன் நீண்ட கைகளால் ஒரு ஒப்பற்ற மோதிரத்தை எடுத்து காட்டினான்.(இராமனின் பெயர் பொறித்த மோதிரம்)
திருவடி தொழுத படலத்தில் சீதை குறித்து அனுமன், இராமனிடம் கூறும்போது, சீதையின் கண்களிலும் நீ நீங்காமல் எப்போதும் இருக்கிறாய். அவளது கருத்தில் இருக்கின்றாய். இவளது வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லிலும் இருக்கின்றாய். அவளது இரண்டு கொங்கைகளின் சுவடுகள் மீது பெருமையும் கொடுமையும் பெற்ற மன்மதன் ஒழியாமல் எய்த மலர் அம்புகள் துளைத்ததால் ஏற்பட்ட ஆறாத புண்களிலும் நீ இருக்கின்றாய். எனவே சீதை நின்னைப் பிரிந்திருக்கிறாள் என்பது பொருந்துமா? பொருந்தாது என்று கூறினார்.
 
“கண்ணிலும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ? வாயின்       
எண்ணிலும் உளை நீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது       
அண்ணல் வெங்காமன் எய்த மலர் அம்பு தொளைத்த ஆறாப்                 
புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ“ (திருவடி தொழுத படலம் 1276)
         
          காட்சிப்படலம் அரக்கியர்களிடையே சீதையினுடைய துயரநிலை எவ்வாறு இருந்தது என்றால், சீதை, இராமனை நினைத்து அவன் இருக்கும் திசையை நோக்கித் தொழுதல், கீழே விழுதல், விழுந்த பின் எழுதல், வாய்விட்டு விம்மல், உடம்பு மிக்க வெப்பமுடையதால் அஞ்சுதல், ஏங்குதல், தளறுதல், நடுங்குதல், துன்பமுற்ற பெருமூச்சு விடுதல் கண்ணீர் சொரிதல் ஆகிய இவற்றை செய்வதைத் தவிர வேறு எதைச் செய்வதையும் அறியாதவளானாள்.

12.சுயம்பிரபை
       பிலம்புக்கு நீங்கு படலத்தில் சுயம்பிரபை, அனுமனிடம் பேசும்போது  இந்நகரிலேயே நீ தங்குக, நகரத்தைக் காக்கும் வேலை உன்னுடையதாகும் என்று இந்திரன் சாபம் விட்டதால், உடனே நான் அவனைத் தொழுது என் துன்பம் நீங்கும் நாள் எப்போது என்று வினவினேன். இங்ஙனம் நாம் வினவுமுன் இந்திரன் பெருவன்மை கொண்ட இராமனால் அனுப்ப பெறும் வானவர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும் என்று கூறி தன் நகரத்துக்குச் சென்றான். அன்றிலிருந்து இராமன் அனுப்பும் வானரவீரர்கள் எப்போது வருவர். என் சாபம் எப்போது தீரும் என்று எண்ணியபடியே இராமநாமத்தை உச்சரித்தபடியே இருந்தாள்.

13.பரதன் -இராம நாமம்
         பரத்வாஜர், இராமனிடம் பரதனது இயல்பினைக் கூறுகிறார். விழிகள் நீர் சொரிய, தென்திசை நோக்கியே இருக்கின்றான். நந்தியம்பதிலிருந்து இராம நாமம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்கிறார்.

“இந்தியங் களைந்து இருங்கனி  காய் நுகர்ந்து இவுளிப்
பந்தி வந்த புற்பாயலான் பழம் பதி புகாது
நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம்
அந்தியும் பகலும் அதனினும் மறப்பிலனாகி”  (மீட்சிப்படலம் 4065)
         
           என்று கூறுகிறார். மீட்சிப் படலத்தில் இராமன் கூறிச் சென்ற 14 ஆண்டுகள் கடந்தும் இராமன் வராததால், பரதன் தீக்குளித்து இறக்க முடிவு செய்தான். சத்ருக்கணனிடம் தீயை வளர்க்கக் கூறினான். அந்த நேரத்தில் தீயினை அணுகி தான் தீயில் விழுவதைக் குறித்துக் கூக்குரல் எழுப்பி மிக்குப் பொருந்திய பேரொலி செய்கின்ற மக்களோடு அந்தத் தீயின் எதிரில் நின்று கொண்டு அந்தத் தீயினை பூசை செய்கின்ற இராமனிடத்தில் பக்தியுள்ள பரதனிடம், அனுமன் வந்து சேர்ந்தான். அனுமன், பரதனைப் பார்த்து தலைவனான இராமன் வந்து விட்டான். மேலோன் வந்து விட்டான். மெய்மைக்கு உடல் போன்று ஆதாரமாகியுள்ள நின் உயிரைப் போக்கிக் கொள்வாயானால், அந்த இராமன் உயிர்த் தாங்கி வாழ்வானோ என்று கூறி அந்தப் பெருங்கூட்டத்தில் உள்ளே புகுந்து தன் கையால் அத்தீயைப் பிசைந்து கரியாய் ஆகுமாறு செய்தார்.

14.நமோ நாராயணாய என்ற மந்திரம்
            இரண்யன் வதைப் படலத்தில் பிரகலாதன் தன் தந்தையிடம், விரும்பியவற்றையெல்லாம் அளிப்பதும், விரும்பும் அப்பதவிகளைக் கடந்த பின்பு அழியாத பாதுகாப்புடைய வீடுப்பேற்றை அடைய செய்வதும் செம்மை நிறமுள்ள தீயிலே நெய் முதலியவற்றைச் சொறியும் ஓமத்தை உடைய வேள்வியால் சுவர்க்கம் முதலியவற்றில் செலுத்துவதும், ஒப்பும் உயர்வும் இல்லாத ஒருவனான இறைவனின் திருப்பெயரே ஆகும். அதை என்னது எனக் கூற கேட்பாயாக அது நமோ நாராயணாய என்பதாகும் என்று பிறகு அதன் தன் உரையின் சிறப்பினைக் கூறினான்.
 
“காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓமவேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய “ (இரணியன் வதைப்படலம் 171)
        பிரகலாதன் தன் தந்தையான இரணியகசிபுக்கு அறிவுரை கூறும் போது காமமும் சினமும்  முதலியனவாகக் கருதப்பட்ட தீய குணங்களையும் அவற்றின் வலிமையையும் தன்னை அடைக்கலம் அடைந்தவருக்கு விலக்கி அருளும் செயலை உடையவனான அந்தத் திருமாலின் திருப்பெயர்களின் மகிமையும், அவன் உயிர்களுக்கு வருத்தம் தராத பாதுகாத்தல் தொழிலும் எவராலும் சொல்லி முடிக்க வல்ல தன்மை உடையனவோ. ஒப்பில்லாத தன்மையுடையவனான நாராயணனை இகழ்ந்து நீ பெற்றுள்ள நல்ல, மிக்க செல்வங்களும், ஆயுளும் பெயருடன் அழிய, நிலை பெற்ற உயிரையும் இழக்கின்றாயே என்று மனம் இறங்கி அந்தப் பெருமானின் திருப்பெயரைத் துதித்து அவனை வாழ்த்தினேன் என்று விளக்கமாக இரணியனுக்கு கூறினான்.

முடிவுரை
        ராம எனும் இரண்டு எழுத்துக்களைச் சொல்வதானால், அந்த இராமன் இப்பிறவியிலேயே எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருள்வான். அத்துடன் ராம என்பவருக்கு தீச் செயலும், தீவினையும் அழிந்து மறையும். பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்துவிடும் இறக்கும் காலத்தில் ராம என்று சொல்பவர்கள் யாராயிருந்தாலும் தேவலோகத்தை அடைவார்கள் என்பது உறுதி. எனவே குற்றமற்ற இராமாயணம் எனும் பெரும் கதையைக் கேட்பவர்கள் வைகுந்தம் அடைவார்கள் என்பதைத் தனியே எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ. வசிட்டர் கூறுவதாவது இராமன் பெயரைச் சொன்னால் வாழ்வில் ஏற்படும் இடர்களைக்களையும் என்கிறார். அனுமன், சம்பாதி, இலட்சுமணன், வாலி, தசரதன், சரபங்கமுனிவர், சபரி, சடாயு,   சீதை, பரதன், சுயம்பிரபை, பிரகலாதன் ஆகியோர் இராமநாமத்தைக் கூறியதால் வாழ்வின் துன்பங்களைக் களைந்து இன்பம் பெற்றனர் என்பதைக் கம்பராமாயணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை,  
   2019.

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,    
   புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம்,   
   சென்னை,2016.

4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.

5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)
மீனம்பாக்கம், சென்னை 600061.

முனைவர் மு.வரதராசனாரின் மொழியியல் பற்று|முனைவர் இரா.செல்வஜோதி

முனைவர் மு.வரதராசனாரின் மொழியியல் பற்று| முனைவர் இரா.செல்வஜோதி
     ம்மில் பலர் முனைவர் மு.வரதராசனார் அவர்களை ஒரு படைப்பிலக்கியவாதியாக, திறனாய்வாளராக, விரிவுரைஞராகப் பார்த்து வருகிறோம். இவையனைத்துக்கும் அப்பால் அவர் ஓர் மொழியியலாளர் என்ற செய்தியைப் பலர் அறிந்திருப்பதில்லை. முனைவர் மு.வரதராசனார் அவர்கள் மொத்தம் பதிநான்கு மொழியியல் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். மொழிநூல், மொழியின் கதை, எழுத்தின் கதை, சொல்லின் கதை, மொழி வரலாறு, மொழியியற் கட்டுரைகள் ஆகிய மொழியியல் நூல்களும் மொழியியல் துறையைச் சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றையும் மேலும் தமிழ் இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார்.
         
       மேற்கண்ட அவர் படைப்புகளின்வழி மட்டும் அவர் ஒரு மொழியியலாளர் என்று கூறுவதைவிட அவர் படைப்புகளில் வெளிப்பட்டுள்ள மொழியியல் சிந்தனைகளும் அவர் ஓர் மொழியியலாளர் என்று நமக்குப் பறைச்சாற்றுக்கின்றது. மொழியியல் துறை பல பிரிவுகள் கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்றான சமுதாய மொழியியலை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் கூறவந்த சில கருத்துகளை இங்குப் பார்க்கலாம். சமுதாய மொழியில் என்பதை ஆங்கிலத்தில் sociolinguistics என்று கூறுவார்கள். இந்தச் சமுதாய மொழியியலில் உட்பிரிவுதான் இனமொழியியல் (ethnolinguistics). ஓர் இனக்குழுவின் மொழியைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும் தற்காக்காப்பதற்கும்  மொழித் திட்டமிடல் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தற்காப்பதற்கு அவர்கள் சார்ந்த சமுதாய நிலையில்  மொழித் திட்டமிடல் மிக அவசியம்.  எது எப்படி இருப்பினும் சொந்த நாட்டிலே தமிழ்மொழி ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் தொடர்புமொழியாகவும் இருக்கும் நிலையில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைத் தற்காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை மிகவும் தெளிவாக மு.வ அவர்கள் தம் படைப்பில் வெளிக்கொணர்ந்துள்ளார். இனமொழியிலின் நிலைத்தன்மை சார்ந்த கோட்பாட்டினை Giles  என்பவர் 1972இல் முதன் முதலாக நிறுவுகிறார். அதாவது ஒரு மொழி தொடர்ந்து நிலைபெற வேண்டுமாயின்,   மொழி அந்தஸ்து, நிறுவனங்களின் ஆதரவு, மக்கள் தொகை (பேசுவோர் எண்ணிக்கை) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று பிரிவுகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை Giles தனது கோட்பாட்டில் வழங்கியுள்ளார். இவர் வழங்கிய இந்தப் பரிந்துரைகளை 1953ஆம் ஆண்டிலேயே முனைவர் மு.வரதராசன் அவர்கள் தம்முடைய படைப்பில் பதிவுசெய்துள்ள திறமானது அவரின் எதிர்காலவியல் சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
         
            முனைவர் மு.வரதராசன் அவர்கள் பல இலக்கியப் படைப்புகளை வழங்கியிருந்தாலும் கடித இலக்கியம் சற்று மாறுபட்ட நடையைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய தம்பிக்கு என்ற கடித இலக்கியம் சாதாரண இலக்கியப் படைப்பாக மட்டும் அல்லாது பொருள்பொதிந்த ஒரு மொழியியல் ஆவணமாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தம்பிக்கு அவர் எழுதும் கடிதம் வாயிலாக அவர் தமிழ் மொழியின் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் தற்காப்பதற்கும் Giles  அவர்களால் அவருக்குப் பிந்தைய காலத்தில் முன்மொழியப்பட்ட கோட்பாட்டு கூறுகளோடு ஒப்புநோக்கத்தக்கதாக அமைகிறது.  இந்தக் கடிதத்தில் மு.வ அவர்கள் மொழியைத் தற்காப்பதற்கு இரண்டு நிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். முதலாவதாக பொது நிலை (macro) அடுத்து நுண்ணிய நிலை (micro). தமிழ் மொழி நிலைத்திருக்க வேண்டுமாயின் பொதுநிலையில் மூன்று செய்திகளைப் பரிந்துரைக்கிறார். முதலாவதாக, இன ஒற்றுமை மேலோங்க வேண்டும். அதாவது தமிழ்மொழி தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாகப் பார்க்கிறார். அதே வேளை தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது அவர்களின்  தாய்மொழி காக்கப்படும் என்று கூறுகிறார். இரண்டாவதாக தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் (தமிழகச் சூழலில்). அவர் கூறவருவதாவது, சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரை தமிழ்மொழி, பயன்பாட்டு மொழியாக  இருக்க வேண்டும் என்கிறார். இந்நிலையைதான் மொழியியல் அறிஞர்கள் ‘மொழி அந்தஸ்தாகப்’ பார்க்கின்றனர். மூன்றாவதாக தமிழ்மொழி கல்விமொழியாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது மொழிப் பாடங்கள் தவிர்த்து எல்லா பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இவ்வாறு கல்வி மொழியாகத் தமிழ் மொழி இருந்தால் பல தலைமுறைகள் கடந்து செல்லும் வாய்ப்பு அமைகிறது. இல்லையேல் ஒவ்வொரு தலைமுறையும் கடந்து செல்லும்போது  மொழி, கட்டம் கட்டமாக அழியும் நிலை ஏற்படும் என்பதனையும் மறைமுகமாக அறிவுறுத்துகின்றார்.
         
       அடுத்து நுண்மை நிலையில் பார்க்கும்போது மு.வ அவர்கள் மூன்று பரிந்துரைகளை முன்வைகின்றார். முதலாவதாக, வணிகத்தில் தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும். கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு ஆகியவற்றில் தமிழ்மொழியைப் பயன்படுத்தக் கோருகிறார். அவ்வாறு இருப்பின் வணிகத்தில் இருவழிதொடர்பு தமிழிலேயே அமையும். இதன்வழி விற்போர் வாங்குவோர் தமிழ்மொழியைப் பயன்படுத்துவர். தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்கும். அடுத்து, அன்றாட வாழ்வில் தொடர்பாடலுக்குத் தமிழ்மொழியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார். எப்போது ஒரு மொழி பயன்பாட்டு மொழியிலருந்து விலகி விடுகிறதோ அந்த மொழி மிக விரைவில் அழிவை எதிர்நோக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தமிழர்களிடத்தில் தமிழில் பேசுங்கள் தமிழ் அல்லாதவர்களிடம் பிற மொழியில் பேசுங்கள் என்று கூறவருவதிலிருந்து தமிழ் ழொயின் பயன்பாட்டை மீண்டும் மீண்டும் கூறி அதன் ஆணி வேரை ஆழப் பற்றிக்கொள்ளும் வழிமுறையை நமக்கு காட்டுகின்றார். மூன்றாவதாக, மொழிப்பற்று ஆகும். மொழியின் நிலைத்தன்மைக்கு மொழிப்பற்று (language loyalty) அவசியம்.  மொழிப்பற்றோடு வாழும் சமுதாயம் அவர்கள் தாய்மொழியைக் கட்டாயம் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வார்கள்; கொண்டுச் செல்ல இயலும்.
         
        இவையனைத்தையும் கடந்து முனைவர் மு.வ. அவர்கள் சிறந்த மொழியியல் அறிஞர் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்றா அமைவது பிறமொழிகளின் மீதான அவரின் பார்வை. அதாவது மொழியியலின் மிக முக்கியன  ஒரு கோட்பாடு யாதெனில் உலகில் பேசப்படும் எந்த மொழியாக இருந்தாலும், அதாவது வளர்ந்த மொழியாக இருக்கலாம், வளரும் மொழியாக இருக்கலாம், பேச்சு மொழியாக இருக்கலாம், வட்டார மொழியாக இருக்கலாம். இப்படி எந்த நிலையில் இருந்தாலும் அந்த மொழியை மதிக்க வேண்டும். இக்கருத்தினை தம்பிக்கு என்ற கடிதத்தில் “உன் மொழியைப் போற்றுவதற்காகப் பிறர் மொழியைத் தூற்றாதே” என்று கூறியிருப்பது சாலப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.          
         ஆக மொத்தத்தில், கடிதம் என்ற ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் மொழியியல் சார்ந்த மிக அரிய கருத்துகளைத் தனக்கே உரிய பாணியில் முனைவர் மு.வரதராசனார் எழுதிய தம்பிக்கு எனும் நூலானது அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் காலத்திற்கு ஒத்த நூலாக நமது கைகளில் தவழ்வது போற்றுதலுக்குரியது; தமிழுக்கு அவர் அளித்த கொடை பாராட்டுதற்குரியது. 

Iniyavaikatral_Article_Published

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வஜோதி

இணைப்பேராசிரியர், மொழியியல் துறை,

மலாயா பல்கலைக்கழகம், மலேசியா

இனியவை கற்றல்

Thamizh Ilakkiyangalil Palluyirgal|Dr.Geetha Ramanan

Abstract
        
        Many messages regarding biodiversity have been mentioned in Tamil literature. The excellence of the Tamils-who, even in ancient times, categorized life forms through direct observation, gathered information, and subtle intuition-is rarely found in other languages. We find numerous poems composed by poets who, while traversing forests and diverse landscapes, sang about what they encountered along the way. Just as indigenous forest dwellers gain intricate knowledge of animals, birds, and trees through experience, we must recognize that the poets of that era researched and documented these details with similar authenticity. Sangam poets illustrate in their verses which life forms are found in specific natural environments. Knowledge, education, and a deep sense of involvement with nature were essential for this. In this article, we shall explore some of those literary records.


“தமிழ் இலக்கியங்களில் பல்லுயிர்கள்”

ஆய்வுச்சுருக்கம்
         
        தமிழிலக்கியங்களில் பல்லுயிர்கள் குறித்த பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. பண்டைக்காலத்திலேயே கண்ணால் கண்டும் செய்திகளால் அறிந்தும் நுண்ணிய உணர்வினால் பாகுபடுத்திக் கூறிய தமிழர்களின் மேன்மையை வேற்று மொழிகளில் காண முடியாது. புலவர்கள் காடுகளையும் பல்வகை நிலங்களையும் கடந்து சென்றபோது, வழியில் கண்டவற்றைப் பாடிய பல பாடல்களைக் காண்கிறோம். காட்டில் வாழும் பழங்குடிகள் விலங்குகள், பறவைகள், மரங்கள் பற்றிய பல நுண்ணிய செய்திகளை அனுபவ வாயிலாக அறிந்திருப்பதைப் போன்றே அக்காலத்தில் இத்தகைய செய்திகளை மேலும் ஆராய்ந்து கண்டறிந்து புலவர்கள் கூறியதே உண்மையெனக் கொள்ள வேண்டும். இயற்கையில் எந்தெந்தச் சூழ்நிலையில் எந்த உயிர்கள் காணப்படுகின்றன என்பதை சங்கப் புலவர்கள் பாடல்களில் காட்டுகின்றனர். இதற்கு அறிவும் கல்வியும் இயற்கை ஈடுபாட்டு உணர்வும் இன்றியமையாதனவாகும். அத்தகைய இலக்கியத் தரவுகள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

திறவுச்சொற்கள்:  முதலை, அன்றில்,நாரை, மான் கொம்பு, யானை, குரங்கு, புலி

முன்னுரை
         
      மேற்போக்காக உயிரினங்களின் நடமாட்டத்தைக் கண்டு மகிழ்வதும், அவற்றால் ஆபத்து நேரிடக்கூடிய சூழல்களில் அஞ்சி ஒதுங்குவதும் மனித இயல்பு. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும், கொன்று தின்பதும் கூட மனிதர்கள் நெடுகிலும் செய்துவருவதே. அறிவு முதிர்ந்து முன்னேறிய நிலையில் மனிதன் இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அவற்றால் புதிய பொருள்களைப்படைத்து வாழ்வுத்தரத்தால் விலங்கினத்திலிருந்து விலகி உயர்ந்த இனமாக முன்னேறினான். தனதறிவைப் பகிரும் விதமாக மொழியறிவால் மேம்பட்டான். மொழியின் துணையால் காலத்தால் அழியாதவாறு தனதறிவை இலக்கியங்களாகத் தந்தான். அத்தகைய தரவுகளில் தன்னைச் சுற்றியுள்ள பல்லுயிர்கள் குறித்த தனது ஆய்வுகளை வெளிப்படுத்திய தமிழர் இலக்கியத்துளிகளுள் சிலவற்றைக் காணப்புகுவோம்.

முதலை
         
        பழந்தொகை நூல்களில் முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்” (ஐங்குறுநூறு 24)
         
தன் குட்டியைத் தானே தின்னும் முதலைகளும் உள்ளதை ஐங்குறுநூறு 24ஆம் பாடலில் உள்ள இவ்வரி கூறுகிறது. பலரும் அறியாத முதலையின் இத்தகைய செயல் இப்பாடல் வரியால்  புலனாகிறது.
மேலும்

தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை (புறநானூறு 104)
         
       முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்துமளவு இழுக்கும் ஆற்றலையுடைய முதலை (புறநானூறு 104, வரி 3-4);
என்று இவற்றின் பண்பு புலவரால் சங்க இலக்கியத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. முழங்காலளவு நீருள்ள நிலையில் நீர் பருக வரும் யானையின் காலை முதலை பற்றி  இழுப்பது காணுதற்கரிய காட்சி. இதை நேரில் கண்டோ, அல்லது கேள்விப்பட்டோ புலவர் நாமறியும்படி தமது படைப்பில் குறித்துள்ளார்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்                                   
நீங்கின் அதனைப் பிற          (குறள் 495)
         
        இது குறள் கூறும் இயற்கை உண்மை. திருவள்ளுவர் தொடாத துறைகள் இல்லையெனலாம். இயற்கையின் பல பரிமாணங்களைத் திருக்குறள் நெடுகிலும் காண்கிறோம். ஆழமற்ற நீரில் யானையையும் இழுக்கும் வலிமை பெற்ற முதலையைப் புறநானூறு காட்டியது. ஆனால் புனலில் மற்ற உயிர்களை வெல்லும் முதலை  நீரிலிருந்து விலகிக் கரைக்கு வந்தால் அந்த முதலையை மற்ற உயிர்கள் வென்றுவிடும். நிலத்தில் முதலை வலுவிழந்து வேட்டையாடும் தன்மை இழப்பதோடல்லாமல் தற்காத்துக்கொள்வதும் இயலாததாகிறது.

அன்றில் பறவை
         
      பனை மரங்களில் கூடு கட்டி வாழக்கூடிய அன்றில் பறவை நீர்ப்பறவைவகைகளில் ஒன்றாகும். கரு நிறத்தில் கொக்கு வடிவில் உடலும் வளைந்த அலகும் கொண்ட இப்பறவை பெரும்பாலும் கருநிறம் கொண்டதாம். இப்போது இப்பறவை இருக்கிறதா இல்லையா என்பதே நமக்குத்தெரியாது. காணவே முடியாததாகி விட்ட இப்பறவை குறித்தும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன                                            
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்                                               
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு                                                      
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்                                             
திருவேம் ஆகிய வுலகத்                                                                                
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.      (குறுந்தொகை 56)
         
        இப்பாடலில் தலைவி தன் தோழியிடம் “தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில் நானும் என் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம்.  நீரில் நீந்துகையிலும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகள், நீர் மலரான ஏதேனும் ஒரு பூ தம்மிடையில் வந்ததால் சிறிது நேரம் பிரிய நேரிடும் பொழுது, அந்தப்பிரிவும் ஓராண்டு காலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப் போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி, பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின் உயிரும் ஒருங்கே போகட்டும் என்பதே” என்று வருந்தி முறையிடுவதாகப் புலவர் அமைத்திருக்கிறார். 
         
         அன்றில் எனப் பொதுவாகக் கூறப்படும் பறவைகளுள் மகன்றிலும் ஒன்று. இப்பறவைகளுள், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழ்வனவாகக் கருதப்படுகின்றன. எப்பொழுதும் இணைந்தே இருப்பதால், அவை நீரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவை செல்லும் வழியில் ஒரு பூ குறுக்கே வந்தாலும் அந்தக் குறுகிய காலப் பிரிவைக்கூட இப்பறவைகள் தாங்க முடியாமல் வருந்தும் என்ற இயல்பை அறிந்து கூறும் நோக்கு எந்த அளவு தமிழ்ப்புலவர்கள் நுண்ணிய நெடு நோக்குடன் உயிரினங்களை ஆய்ந்து அவற்றின் சிறப்பியல்பைக் கண்டுள்ளனர் எனக் காட்டுகிறது.

நாரை
         
       இன்றளவும் கோடிக்கரை உள்ளிட்ட நம் தமிழ்நாட்டு நீர் நிலைகளுக்குச் செங்கால்கள் உடைய நாரைகள் வந்து செல்கின்றன. உலகில் நெடுந்தூரம் பறந்து இடம்பெயரும் பறவைகளுள் நாரையும் அடங்கும். பெரும்பாலும் பெரிய கூட்டங்களாகவே இவை இடப்பெயர்ச்சி செய்கின்றன. சத்திமுத்தம் என்ற சிற்றூர் சார்ந்த புலவர் ஒருவர் மதுரை சென்று பாண்டிய மன்னரிடம் பரிசு பெற்றுவர முயல்கிறார். மதுரையை அடைந்த அவர் தங்குவதற்கு ஏற்ற இடமின்றி வாடைக் காற்றில் சுருண்டு படுக்கும் துன்ப நிலை அடைகிறார். அப்போது வானில் தென் திசை நோக்கிச் செல்லும் நாரைகளைக் காண்கிறார். உடனே அவர் பாடிய பாடல் இது

நாராய்! நாராய்! செங்கால் நாராய்                                              
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன                                                     
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!                                                      
நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி                                                    
வடதிசைக் கேகுவீ ராயின்                                                                 
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி                                                    
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி                                                        
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு                                                 
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்                                                           
ஆடை யின்றி வாடையின் மெலிந்து                                                       
கையது கொண்டு மெய்யது பொத்திக்                                                         
காலது கொண்டு மேலது தழீஇப்                                                            
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்                                                          
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.
         
       இத் தனிப்பாடலில் சத்திமுத்தப் புலவர் ‘பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்!’ என்று விளித்து தன்னுடைய நிலையைத் தன் மனைவிக்கு உணர்த்துமாறு நாரையைத் தூது அனுப்புகிறார். பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று தனது இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் என்ற அறிவியலாளர் கருத்தை மிக எளிமையாகப் இப்பாடலில் உணர்த்தும் புலவர் நாரையை நோக்கி “நீவீர் தென்திசைக் குமரி ஆடி வடதிசை நோக்கிச் செல்லுகையில் எங்கள் சத்திமுத்த வாவியில் தங்கி அவ்வூரில் என் வரவுக்காகக் காத்திருக்கும் எனது மனைவியிடம் “பேழைக்குள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டேன்” என்று உரைப்பீர்களாக என்று தன் நிலையை மிக நயமாக எடுத்துரைக்கிறார் புலவர்.
 நாரை சென்று மீளும் திசைகளை உற்றாய்ந்து அதனைத் தூதாக அனுப்பிய விதம் வியப்பளிக்கிறது.

யானை       
     யானை மனிதர்களுடன் வாழக்கூடிய இயல்புடையது. எனினும் அது காடுகளில் தனது அடிப்படை இயற்கையில் வாழும்போது அதன் தனித்தன்மையான குணங்கள் வெளிப்படும்.
யானன தன் கொம்பால் புலியைக் கொன்றுவிட்டு தன் கொம்பையும் உடலையும் கழுவிக் கொள்வதைச் சங்ககாலப் புலவர்கள் கீழ்க்காணும் பாடல்களில் கூறியுள்ளனர்

“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்                                           
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்                                              
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு”     (அகம்.272)
         
       பெரிய கையை உடைய ஆண்யானை வலிமை மிக்க புலியைக் குத்தி அதனைக் கொன்றது. புலவு நாற்றம் அடிக்கும் தன் முகத்தைக் கழுவுவதற்காக, பெருமலைப் பிளவில் அணங்குப் பெண்கள் வாழும் அருவிக்கு வந்தது. புலவர்கள் உவமைகள் வாயிலாகவும், சொல்நய வாயிலாகவும் படம்பிடித்துக் காட்டியதை விலங்கியல் நூலாரும் யானனயின் செயலாகக் குறிப்பிடுகின்றனர்.

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்                                              
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்                                                      
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,             (அகம் 308)
         
     புலியோடு போராடி, தளர்வுற்று நடக்கும் யானையின் விழுப்புண்ணை, அதாவது புலியின் பற்களாலும் நகங்களாலும் கிழிபட்டிருக்கும் புண்ணைப் பனிக்கட்டியுடன் பொழியும் மழை நீரானது கழுவும் இரவு நிறைவுறும் வைகறை வேளை நிகழ்வாகக் காட்டுகிறார். இப்பாடலில் யானைக்கும் புலிக்கும் அரியதாக இரவின் இருளில் நடைபெறும் போர் குறித்து அறிகிறோம்.

மான்       
     சங்க இலக்கியங்களில் ஐந்து வகையான மான்கள் பற்றிய செய்திகள் கூறப் பட்டுள்ளன. அவை இரலி, நவ்வி, மரையான், உழை, கடமா என்பனவாம். அகநானூறு 151ஆம் பாடலில் கலைமானின் தலையில் முதன் முதலாகக் கவையுடன் கொம்பு முளைப்பதும், பிறகு கொம்பு முதிர வைகறை வேளையில் புதிய களைகள் கொம்பில் தோன்றிக் கவை கவையாக கிளைவிட்டுக் காணப்படும் என்றும் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த                                                     
கோடல் அம் கவற்ற குறுங்கால் உறிஞ்சில்          (அகம் 151)         
      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர்கள் இதை எழுதியிருப்பது விந்தையாக உள்ளது. முதிர்ந்த கொம்புகளைக் கலைமான் உதிர்த்து விடுகிறது என்பதைக் கீழ்க்காணும் பாடலும் உணர்த்துகிறது.

கள்ளிஅம் காட்ட புள்ளியம் பொறிக் கலை                                         
 
வறன்உறல் அம்கோடு உதிர வலங் கடந்து                                                 
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை             (அகம் 97)
         
       உதிர்ந்த முற்றிய கொம்பை ‘அறுககாட்டு முற்றல்’ என்று நற்றிணை அழைக்கிறது. கலைமானிற்கு அதனுடைய கொம்பே புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. வறண்ட கொம்பு உதிரவே கலைமானை எளிதில் வென்று புலி கொன்றதாக அகநானூறு கூறுகின்றது. கலைமானின் கொம்பு முளைப்பதும், கினள விடுவதும், வளர்வதும், உதிர்ப்பதும், திரும்ப முளைப்பதும் ஆகியவற்றைத்  தற்காலத்திலும் விலங்கியல் ஆய்வாளர்கள்  ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.

குரங்கு
         
       சங்க இலக்கியங்களில் செம்முகமந்தி, முசு, கணக்கலை, ஊகம் என நான்கு குரங்கு வகைகள் பற்றிய பதிவுகளைக் காணலாம். இதில் செம்முகமந்தி என்பது தமிழ்நாட்டில் எங்கும் காணக் கூடியது.

“நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                                     
மகாஅர் அன்ன மந்தி,”         (சிறுபாணாற்றுப்படை- வரி- 55-56)         
       என்று சிறுபாணாற்றுப்படை கூறுவதில் இருந்து மந்திகளை மக்கள் வளர்த்து வந்தது தெரிகின்றது. அழும் குழந்தைகளுக்குக் குரங்குக் குட்டிகள் கிளுகிளுப்பை ஆட்டிக் காட்டுவதாக சிறுபாணாற்றுப்படை கூறுவதில் இருந்து இக்குரங்குகள் மக்களிடம் நெருங்கிப் பழகிய குரங்கு வகை எனத் தெரிகிறது.
குரங்கு வகைகளில் மற்றொரு வகையான  முசுக்குரங்கின் முக்கிய எதிரி சிறுத்தை. சிறுத்தைப்புலி, வேங்கைப்புலி கண்டு குரங்குகள் மிகவும் அஞ்சும்.

புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,                                            
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,                                                   
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை                                              
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறி           (அகம் 205)
         
        மஞ்சள் நிறமான வேங்கைப் பூக்கள் கரிய பாறைகளில் உதிர்ந்து கிடப்பது வரி உடைய புலி என்று எண்ணி ஆண் முசுக் கூட்டம் கிளைகளில் ஏறி மற்ற குரங்குகளையும் கூப்பிட்டுத் தாவும் என்று அகநானூறு 205ஆம் பாடல் சொல்லியிருப்பது வேட்டையாளரும் விலங்கு நூலாளரும் கூறிய உண்மைச் செய்திகளை ஒத்து இருக்கின்றது.

புலி         
     புலியானது பூனை இனத்தை சேர்ந்தது. இந்த இன விலங்குகள் இரைக்காக வேட்டையாடும்போது பதுங்கி ஒதுங்கி தக்க சமயம் பார்த்து திடுமென பாய்ந்து தாக்கிக் கொல்லும். இதே கருத்தை

களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி                                           
னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல        (அகம் 22)
         
       சமயம் பார்த்துக் கொண்டே ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருக்கும் புலி போல என்று அகநானூறு கூறுவது அரிய விளக்கமாகும் புலி பதுங்கி இருந்து தாக்கும் போது பெரும்பாலும் இரையாகும் விலங்குகளை கழுத்தை முறித்துக் கீழே விழச் செய்யும் என்று விலங்கு நூலார் கூறுவர். கழுத்தின் அடிப்பாகமான தொண்டையை கவ்வும் போது எந்த விலங்கும் தப்பித்து ஓடுவது அரிது.

“கறுழ் பொருத செவ் வாயான்,                                                                
எருத்து வவ்விய புலி போன்றன”              (புறநானூறு 4)
       என்று புறநானூறு கூறுவது உற்று நோக்கத்தக்கது.
மேலும் புலி வேட்டையாடிய தனது இரையைக் கொன்ற இடத்தில் உண்ணாது இழுத்துச் சென்று பதுக்கி உண்ணும். இது புலியின் தனிக் குணமென விலங்கியலார் கூறுவர், புலி தான் உண்டது போக மிஞ்சிய உணவைத் தனது குகையிலோ முழையிலோ பதுக்கி வைத்து, கெட்ட நாற்றம் அடித்து புழுத்துப் போனாலும் மீண்டும் அதையே உண்ணும் என்று கூறுவர். புலியின் இக்குணங்களையும் சங்கப் புலவர்கள் கண்டு கூறியிருக்கின்றனர்.

“ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன்                                          
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய                                            
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை                                                           
நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த                                                                  
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்                                                                 
வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை                                                               
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி”         (அகம் 72)
“புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை”           (குறுந்தொகை 253)
        
        என்று அகநானூறு 72ஆம் பாடலிலும் குறுந்தொகை 253 ஆம் பாடலிலும் தெளிவாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து புலி தனது இரையை இழுத்துச் சென்று பதுக்குவதையும் கெடு நாற்றம் அடிக்க வைத்ததையும் நன்கு கண்டறிந்து பாடினர் என்பது புலனாகிறது.

முடிவுரை
         
       இன்று நாம் திரைகளில் விலங்குகளுடன் மிக நெருங்கி  வாழ்வதைப் போலவே அவற்றின் வாழ்வைக் கண்டு விவரங்களை அறிகிறோம். ஆயின் பண்டைக்காலத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத சூழலில் தம்மைச் சுற்றி நிறைந்த இயற்கையையும், உயிர்களையும் கண்டு அவற்றின் வாழ்வு முறைகளை ஏட்டில் பதித்துவைத்த நம் தமிழறிஞர்களின் புலமையும் திறனும் வியந்து போற்றவேண்டியதாகும் என்பதை மிகச்சில எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம். மேலும் பல செய்திகள் பல்லுயிர்களைக் குறித்து நம் இலக்கியங்களில் உள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகள் தருமளவில் அவை நிறை குவையாக உள்ளன.

துணைநூற் பட்டியல்
1. Jungle Lore, Jim Corbett, 1953 Oxford University Press, (UK/USA)

2. Every Creature Has a Story, Janaki Lenin, 2023 Harper Collins, India

3. சங்கஇலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி.எல்.சாமி, பி.எஸ்ஸி, ஆகஸ்ட் 1970, அப்பர் அச்சகம், மெட்ராஸ் – 600 001.

4.சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை, பி.எல்.சாமி, ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), டிசம்பர் 1991, அமுதன் அச்சகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 600 078

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கீதா ரமணன்
உதவிப்பேராசிரியர்,

அண்ணா ஆதர்ச மகளிர் கல்லூரி,
(தமிழ்த்துறை : சுழற்சி-2)
AI – 9 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்,சென்னை – 600 040

Ettuthogaiyil Neer Maelaanmai|Dr.T.Sangeetha

எட்டுத்தொகையில் நீர் மேலாண்மை- முனைவர் தி. சங்கீதா
Abstract
       
         This research article provides insight into the scientific knowledge that the Tamils ​​of the Sangam period had about water and its origin, and their understanding of the hydrological cycle. It also provides information about the rivers that existed in the Sangam period and how they were protected. This article provides insight into the importance of rivers in the lives of the Tamils ​​in Sangam literature, the agriculture of the Tamils, the prosperity of the natural environment, the abundance of rain, the experience of the Tamils ​​about the origin of rain, the relationship between water and land, the beauty of water bodies and the living creatures that depend on them, and the way in which the poets dealt with various matters in their works.

Keywords
 : Water, Sangam Tamils, Cycle, Water bodies, River, Prosperity, Nature


“எட்டுத்தொகையில் நீர் மேலாண்மை”

ஆய்வுச் சுருக்கம்
         
      சங்ககாலத் தமிழர்கள் நீரினைப் பற்றியும் அதன் தோற்றம் குறித்தும் அவர்கள் பெற்றிருந்த அறிவினையும், நீரியல் சுழற்சி குறித்து அவர்கள் அறிந்திருந்த தெளிவினையும் இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும் சங்ககாலத்தில் இருந்த ஆறுகள் பற்றிய குறிப்பினையும், அவ்வாறுகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பதனையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. சங்க இலக்கியத்தில் தமிழர்களின் வாழ்வில் ஆறுகள் பெற்றிருந்த முக்கியத்துவம், தமிழர்களின் வேளாண்மை, இயற்கைச் சூழலின் செழிப்பு, மழை வளம், மழையின் தோற்றம் குறித்து தமிழர்களின் அறிவு, நீர் நிலத் தொடர்பு, நீர் நிலைகள் அவைச் சார்ந்த உயிரினங்கள் போன்ற பல்வேறுச் செய்திகளையும் இயற்கையழகை புலவர்கள் தன் படைப்புகளில் கையாண்ட தன்மையினையும் இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகின்றது.

திறவுச்சொல் : நீர், சங்கத் தமிழர்கள், சுழற்சி, நீர்நிலைகள், ஆறு, செழிப்பு, இயற்கை

முன்னுரை
      சங்ககாலம் என்று சொல்லப்படுவது வரலாற்றில் மிகப்பெரிய கூறாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் நுண்மான் நுழைபுலத்தால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இருபெரும் இ்லக்கியத் தொகுதிகளை அளித்துச் சென்றிருக்கின்றனர். அவை சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், நாகரீகம் போன்றவற்றினையும், அவர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் நுட்பமாக அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் நாகரிகம் சமகாலத்தில் நிலவியிருந்த கிரேக்க, ரோம நாகரிகங்களுடன் ஒப்பிட்டுக் கருதப்படுகின்றது. எல்லா நாகரிகங்களும் நதிக்கரைகளின் ஓரமாகவே தோன்றின என்பது நிதர்சனமான உண்மையும் ஆகும். தமிழர்கள் நீரிணையும் மேலாண்மையில் அதனைப் பயன்படுத்தும் முறையினையும் சங்க இலக்கியமாகிய எட்டுத்தொகை நூல்களின் வழி இக்கட்டுரையில் காண்போம்.

நீா்வளம்
     நீா் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையானது. குறிப்பாகச் சுட்டினால் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாய் அமைந்து, உலக இயக்கத்திற்கு அடிப்படையாய் அமைவது நீராகும். நீா் மனிதவாழ்வில் பெறும், இந்த முதன்மை கருதியே இலக்கியங்களும் சமூக வழக்குகளும் நீரின் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றன. நீர் உயிரினங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. மனித உடலில் ஏறத்தாழ 65 சதவீதம் நீா் உள்ளது. சில தாவரங்களில் 95 சதவீதம் நீா் உள்ளது. 1781 ஆம் ஆண்டில் கேவெண்டிஷ் என்பார் நீா் ஒருசோ்மம் (Compound) என்பதைக் கண்டறிந்தார் லாவாச்சியா் என்னும் அறிவியலாளா் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இணைந்து நீா் உருவாகும் நிகழ்வை அறிவித்தார். நீா் மூலக்கூறில் இரண்டு ஹைட்ராஜன் அணுக்களும் ஓா் அக்ஸிஜன் அணுவும் உள்ளன.
         
      புவியிலிருந்து சில கி.மீ உயரம் வரை நீா் என்னும் காரணி, நீா்மமாகவோ (Liquid) திண்மமாகவோ (Solid) இருக்கும். நீா்கோளம் (Hydrosphere) என்பது ஏனைய கோள்களைவிட மாறுபட்டது. இதில் புவியிலுள்ள அனைத்து நீா்நிலைகளும் இடம்பெற்றுள்ளன. பெருங்கடல் (Ocean), கடல் (Sea), ஏரி (Lake), ஆறு (River),  குட்டை (Pond), நிலத்தடி நீா் (Underground water) ஆகிய கூறுகள் நீா் வகையில் அடங்கும். நீா் புவியமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆவியாதல் வழியாக வளிமண்டலத்துடன் நீா் அமைப்புத் தொடா்பு கொண்டுள்ளது என்பது அறிவியலாளரின் கருத்தாகும்.

தமிழரும் ஆறும்
        ஆறுகளைச் சிறப்புப் பெயரிட்டு வழங்கியவா்கள் தமிழ்நாட்டார் என்பது நோக்கத்தக்கதாகும். “தொண்டை நாட்டில் உள்ளது பாலாறு, பாண்டிய நாட்டில் உள்ளது தேனாறு, சேர நாட்டில் நெய்யாறு உண்டு. பாலாறு என்ற பெயா்பெற்ற ஆற்றிலே நீா் சுரக்கும், தேனாற்றிலே நீா் சொட்டும், நெய்யாற்றிலே நீா் துளிர்க்கும், பாலையும், தேனையும், நெய்யையும் அளவறிந்து ஊட்டிப் பிள்ளையைப் பேணி வளா்க்கும் தாய்போல் ஊற்றுப் பெருக்கால் நிலத்திற்கு நீரூட்டி நலம் பயக்கும்”1. என்பதனை (ரா.பி. சேதுப்பிள்ளை, ஆற்றங்கரையினிலே, ப.10) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். நம் தமிழா்கள் ஆறுகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளர் என்பதை ஆறுகளுக்கு அவர் இட்டு வழங்கி வந்த பெயா்களால் அறிய முடிகின்றது.

எட்டுத்தொகை நூல்களில் காவிரி
         
      சோழமண்டலத்தின் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மைத்திறம் பற்றி அறிய காவிரியின் சிறப்புக்க கூறுகளை ஆராய்வது முக்கியமானதாகும். காவிரியின் பெருமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்களில் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை விரிவாகப் பேசுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இ்லக்கியங்களில் பொன்னியாற்றால் தமிழகம் பெற்ற நீர்வளமும், நிலவளமும் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. மேற்றிசை குடகிலிருந்து பிறக்கும் காவிரி எம்முடைய சோழநாட்டினை வளப்படுத்துகின்றது என்று ஆற்றில் மூலங்கிழார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில்

குடா அது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர்  (புறநானூறு)
         
    என்று எடுத்துரைக்கின்றார். சோழநாட்டு ஆற்றில் பிறந்த மூலங்கிழாரின் இக்கூற்று சிந்திக்கத்தக்கதாகும். மலையில் தோன்றிக் கடலில் கலக்கும் காவிரியாறு எவ்வாறு செல்கின்றது என்பதனை
       
காவிரிக்கோடு தோய் மலிர்நிறைக் கழையழி நீத்தம்    (அகநானூறு)
         
      என்று அகநானூற்றுப்பாடல் குறிப்பிட்டுக் காட்டுவதுபோல பெரு வெள்ளமாகக் காவிரி ஓடியது. மேலும், தான் மோதும் இரு கரைகளையும் தகர்த்துச் செல்லுகின்ற பேராறாக அது சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகின்றது. ஞாயிறு நான்கு திசைகளிலும் தோன்றினாலும், வெள்ளி மீன் தெற்கே சென்றாலும், அழகும், குளிர்ச்சியும் கொண்ட காவிரி பல கால்வாய்களாய் ஓடிட கரும்பை விளைவிக்குமாறு அமைந்தது என்பதைச் சோழநாட்டுப் பெரும் புலவர் வெள்ளக்குடி நாகனார்,

அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம்போல  (புறநானூறு)
         
       என்ற புறநானூற்றுப் பாடலில் உரைக்கின்றார். வெள்ளியாகிய விண்மீன் வடதிசையிலிருந்து, தென்திசைக்குச் சென்றாலும், மழைத்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி புலரும்படி மழை பெய்தலைத் தவிர்த்து, மேகம் பொய்த்து வற்கடம் உண்டானாலும் தான் பொய்யாமல் காலந்தோறும் வருகின்ற குடகு மலையிடத்தே தலையினை உடைய, கடலினிடத்தே செல்லுகின்ற காவிரி நீர் பரந்து கரையிலே பொன்னைக் குவிக்கும் சோழநாடு என்றும், விளைதல் தொழில் மாறாத சிறப்பையுடைய வயல்வெளியில் பசிய கரும்பின்கமழும் பாகை அடுகின்ற கொட்டிலில் நெருப்பின் புகை சுடுகையினாலே அழகு கெட்டு நீரை உடைத்தாகிய செய்யின்கண் நின்ற நெய்தற்பூ நாடும் நிலத்தை உடையது சோழநாட்டுக் குறும்பல்லூர் என்று குறிப்பிடப்படுகிறது. சங்ககாலம் தொட்டு சோழர்கால இறுதிவரை தோன்றிய தமிழிலக்கியங்களை தொகுத்து நோக்கும்போழுது காவிரியின் பல்வேறு சிறப்புக்கள் அறியப்படுவதோடு, காவிரியின் கிளை ஆறுகளான கடுவாய், அரிசில், மண்ணி, கோட்டாறு, கொள்ளிடம் ஆகியவற்றின் சிறப்புக்கள் பற்றியும் அறிய முடிகின்றது.

நீரியல் சுழற்சி
         
      கடல்நீா் வெப்பத்தில் ஆவியாகி மேகமாகத்திரண்டு மழையாகப் பொழிகிறது. இப்படிப் பெய்யும் மழைநீா் ஆறுகளில் ஓடியும், நிலத்திற்குள் ஊடுருவியும் பலவழிகளில் மீண்டும் கடலை அடைகிறது. இது தொடர்ந்து நடக்கும் இயற்கை நிகழ்ச்சி இதுவே ’நீரியல் சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.
          தமிழ் இலக்கியங்களில் எழிலி, கார், குயின், கொண்டல், கொண்மூ, செல், புயல், மங்குல், மஞ்சு, மாரி, மழை, மால், முகில், மேகம், மை, விசும்பு, வான், விண், எனப் பல பெயா்களால் வழங்கப்படும் மழையானது, ஆவியாகிப் பொழியும் அறிவியல் உண்மையை இன்றைய நவீனக் கருவிகள் எதனையும் கண்டிராத பழந்தமிழா்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணா்ந்து இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

சங்கத்தமிழா்களின் நீரியல்சுழற்சி அறிவு
         
     தமிழன் மழை பற்றிச் சிந்தித்த சமகாலத்தில் வாழ்ந்த கிரேக்க, உரோமானிய அறிஞர்களின் கருத்துக்களை அறிந்தால்தான், தமிழர்களின் அறிவியல் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது என்பதை அறியமுடியும். அக்கணிதமேதை பிதாகோரசுக்கு ஆசிரியராக இருந்தவர் தேல்ஸ் ஆவார். இவர் கி.மு.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மழையில்லாத காலங்களில் ஆற்று நீர் தரும் ஊற்றுக்கு, நீர் கடலிலிருந்து, நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளில் உள்ள குகை வழிகள் மூலமாக மலைப்பகுதிவரை சென்று, மலையின் அழுத்தத்தால் மேலெழுந்து ஊற்று நீராக வருகிறது என்று விளக்கினார். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி, செனகா போன்ற உரோமானியத் தத்துவ அறிஞர்களும் கிட்டத்தடிட்ட கிரேக்க அறிஞர்களைப் போலவே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு  உறுதியான தெளிவுபிறக்க நீண்ட நாட்கள் ஆயின. ஆனால், இவ்வுண்மையைப் பழந்தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். நல்லந்துவனார் எனும் புலவர்,

நிறைகடல் முகந்து உராய் நிறைந்து நீர் தளும்பும்தம்
பொறை தவிப்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்     (புறநானூறு)       
        என்று மேகங்கள் நீர்நிறைந்த கடலில் இருக்கும் நீரினை முகந்துகொண்டு வானில் எங்கும் பரவி, நீர்நிறைதலால் தளும்பும் தம் பாரம் தீர்ந்து இளைப்பாறும் பொருட்டுப் பெய்வதைப் போல் மழை பொழிந்தது என்கிறார். இதே பரிபாடலில் மையோடக் கோவனார் என்னும் மற்றொரு புலவர்,

கரை உடை களமெனக் கழன்று வான் வயிறு அழிபு
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி  (பரிபாடல்)       
என்கிறார். இப்பாடலில் இவர் குளத்தின் கரை உடைந்தால் எவ்வாறு பெரு வெள்ளம் ஏற்படுமோ அதுபோலக் கடலில் நீரை மொண்டு ஆவியாகிய மேகம் குளக்கரை உடைவதுபோல் தன் வயிறு கிழிந்து மழையைக் கொட்டுகின்றது என்று நயம்படப் பாடியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் மேகத்திற்கு நீர் தரும் மூல ஊற்று கடல் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளமையால் பண்டைத் தமிழர்கள் நீர்வள இயலைத் தெளிவாக அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

மழை நீர்
     இயற்கையாகவே புவியிலுள்ள நீர், சூரிய வெப்பத்தினால் ஆவியாகி விண்ணில் மேகமாகத் தங்கிவிடுகிறது. மரங்களிலிருந்து வெளியாகும் காற்று மேகங்களில் பட்டவுடன், புவியில் மழை பொழிகிறது. இதனால் மழைநீரை மிகவும் தூய்மையான நீராக அறிவியலார் அறிவுறுத்தியுள்ளனர்.“இயற்கையில் கிடைக்கும் பலவகை நீரில் மழை நீரே மிகவும் தூய்மையானது. ஆனாலும் மழைநீரிலும் சில மிதக்கும் மாசுகளும், ஆக்ஸஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களும், நைட்ரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு போன்றவையும் கரைந்திருக்கலாம். இருப்பினும் சூரிய ஒளியால் சூடேற்றப்பட்டு ஆவியாகிப் பின்னர் குளிர்ச்சியடைந்து மழை பெய்வதால் மழைநீரை இயற்கையிலேயே காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் நீராகக் கருதலாம்” என்னும் களஞ்சியக் கருத்து கருதத்தக்கது. சங்க எட்டுத்தொகை பாடல்கள் மழை பற்றிப் பல்வேறு செய்திகளைத் தருகின்றன. வறண்ட நிலத்தில் மழையின் இன்றியமையாமை கருதி இலக்கியப் பாத்திரங்கள் பல அறிவியல் குறிப்புகளைத் தம் கூற்றுகளில் வழங்கியுள்ளன.

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்           (குறுந்தொகை-277)
உயர் நெடுங் குன்றம் படுமழை தலைஇ   (குறுந்தொகை -371)
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து (குறுந்தொகை -205)
         
      மழை வந்து வளம் கொழிக்க வேண்டுகோள் விடுக்கும் ஒரு செவிலித் தாய், தன் மகள் உடன்போக்கில் தலைவனுடன் சென்ற பாலைவழியின் வறுமையை நினைந்து புலம்புகிறாள். மழை பற்றி நற்றினை -157, 281, 378, 197, 264 பாடல்கள் உணர்த்துகின்றன. மழையின் அழகு, அது எழுப்பும் ஒலி, மழையால் பெறும் பயன் ஆகியவையும் சங்கப் புலவர்களால் அறிவியல் மரபில் அளிக்கப்பட்டுள்ளன.

கடல்
         
       அனைத்து வகையான பொருள்களையும் கடலில் கொட்டுவதைப் புனிதமாகப் பலர் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலில் கலக்கும் கழிவுகளைப் பட்டியலிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

திரை தபு கடலின் இனிது கண் படப்ப (நற்றினை -18)         
        கழிவுகளால் கடல் உயிரிகள் அழிவதை பல சான்றுகளுடன் இக்காலச் சூழலியலார் விவரித்து வருகின்றனர். கடல் பற்றி நெய்தல் திணைப் பாடல்கள் பெருமளவில் அறிவிக்கின்றன. பொறையன் என்பானின் படை வீரர்கள் அலை அடங்கிய கடல் போல இனிமையாகக் கண்களை மூடிப் போர் முடித்து உறங்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் மாசுபடாமல் காத்தல்         
      ஆறுகள் அனைத்தும் அக்காலம் முதல் இக்காலம் வரை போற்றத்தக்கவையாகக் கருதப்படுகின்றன. இன்றைய மக்கள் பெறுகின்ற பல நோய்களுக்கு ஆற்றுநீர் மாசு அடிப்படையாக விளங்குகிறது. ஆறுகளை வணங்கி மகிழ்ந்து நாளைத் தொடங்கிய மக்கள் ஆற்று மாசுகளால் அன்றாடம் அல்லலுறுவதை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் ஆறுகளைக் காப்பதற்கென்றே காவலர்களைப் பணியமர்த்தியிருந்த சிறப்பைச் சங்கப் பாடல்கள் அழகியலுடன் வருணித்துள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் நீர் நிலைகளில் எவரையும் நீராடவோ, மாசுஏற்படுத்தவோ விடாமல் காத்தனர். வரம்பையும் மீறி மாசு செய்வோருக்குத் தண்டணை அளித்துத் திருத்தினர். இப்பணியை மேற்பார்வை செய்யும் காவலர் பற்றிய் செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளமையைப் பின்வருமாறு அறியலாம்.

எறிதிரை திவலை தூஉம்சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் (அகநானூறு -252)
         
       இவ்வரிகளால் நதிநீர் மாசுபாட்டில் சங்கப் புலவர்களுக்கு இருந்த சமூக அக்கறை தெளிவாகிறது. சங்கப் பாடல்களில் காவிரி நீர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வீரக்கழல் அணிந்த பண்ணன் என்பானின் காவிரி ஆற்றுக்கு வடக்கில் உள்ள குளிர்ந்த குளத்தின் அருகில் வளரும் மா மரங்கள் பற்றிய செய்தி பாடல் வடிவம் பெற்றுள்ளது. அழகு மிகுந்த வண்டுகள் ஆரவாரம் செய்து இயற்கையைப் பெருமைப் படுத்தும் காட்சியை வையை ஆறு குறித்த ஓர் அகப்பாடலில் அறிய முடிகிறது.

நீர்நிலையும் உயிரினமும்       
       உயிரினங்களின் நடத்தை நெறிகளையும், தாவரங்களின் இயல்புகளையும் கூர்ந்து கண்ட உணர்ச்சிப் பெருக்கில் பாடும் கவிஞரை, மென்மையான இதயம் கொண்டவராகப் புகழ்ந்துரைப்பர். பல சங்கக் கவிதைகளில் அணில் போன்ற நிலம்வாழ் உயிரிகளும், சிட்டுக்குருவி போன்ற பறவை உயிரிகளும், மீன் போன்ற எளிய நீர்வாழ் உயிரிகளும் குறிக்கப்படுகின்றன. சங்கப் படைப்புகளில் 60% பகுதி, இயற்கை உயிரிகளைப் பற்றியே பேசுகின்றது. உறுதியான யானை முதல் மென்மையான மான் வரை மிகுதியான பாடல்கள் பல்வேறு திணைகளில் நீரை ஒட்டிக் குறிக்கப்பட்டுள்ளன. இக்கால முதுகெலும்பு பெற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் மீன்களே முன்னோடியாக விளங்கியுள்ளன. எனவே சங்க அகத்தொகை இலக்கியங்கள் விருந்தோம்பலில் மீனை முன்னிலைப்படுத்துகின்றன.

“முதுகெலும்புடைய  உயிரினங்களின்
முதற்படிமுன்னோடிகள் மீன்களே”       
        என்பர். சங்கத் தொகைப் பாடல்களில் இடம் பெறும் உயிரினங்கள் பல்வேறு வகையாக உள்ளன. அவற்றில் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் பரந்தும் விரிந்தும் பதிவாகியுள்ளன.

நீரின்மையால் நேரும் அவலங்கள்
         
        நீரின்மையால் நிலத்தின் தன்மை வாழ்வதற்கு அற்ற நிலை ஏற்படுவதனைக் கலித்தொகை,
                  
“உண்ணீர் வறப்பு புலர்வாடும் நாவிற்குத்               
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றுருந்துயரம்               
கண்ணீர் நனைக்கும் காடு”   – (கலி: 6)
         
என்று எடுத்துரைக்கின்றது இதே போன்று பாலைநிலத்தின் வெம்மையும், அதனால் வாடும் மனிதர்களின் நிலையும்,
                  
“மால்வெள் றோத்திரத்து மையில் வாலிணர்               
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்               
அவ்வரை….”  – (ஐங்: 301)
         
         என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலில் காட்சிப்படுத்தப்படுகின்றது. இதனால் சங்கப் புலவர்கள் இயற்கை வளத்திற்கு முதன்மை ஆதாரமான நீா்நிலையைக் காத்தலை முதன்மையான கடமையாக மன்னர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
 
நீரைக் காத்தல்
         
     வானின்று நிலத்தில் விழும் நீரே அனைத்திற்கும் அடிப்படையாய் அமைகின்றது. இதனை உணர்ந்த பண்டைத்தமிழர் நீரைத் தம் உயிçனும் மேலான ஒன்றாகக் கருதிப் போற்றியுள்ளனா். மழை நீரைச் சேமித்து வைத்து, சேமித்துவைத்த நீரைத் திறம்பட பயன்படுத்துவதன் மூலமாகவே வேளாண்மைச் செழிக்கச் செய்ய முடியும் என்று நம்பியுள்ளனா். இவ்வாறு நீçனைச் சேமிக்கும் முறைகளை இளங்கோவடிகள், சிறுபஞ்சமூலத்தில் குளம், கிணறு, ஏç முதலானவற்றை அமைத்து நீர்நிலைகளைக் காத்து வைப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்ற கருத்து அறமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திçகடுகத்தில் நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தி,
 
“வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்” – (பா: 83)
         
       என்று எடுத்துரைக்கப்படுகின்றது. தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவா்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல வாய் நன்கு  அமையாத குளமும் சிறப்பின்றி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பெருமளவில் பெருக்கெடுத்து வரும் வெள்ளநீரைத் தம்முள் அடக்கிக் கொள்ளும் ஏçகள் ஒருநாட்டில் நிறைந்திருப்பது அந்நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதனை, “யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்” என்று நாண்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது. இப்பாடலில் குறிக்கப்பெறும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீçன் சேமிப்பு முறையை வெளிப்படுத்துவதாகத் திகழ்கின்றது. பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகுநீரை வெளியேற்றக் கலிங்கு என்ற  அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில்நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் கல்வெட்டுச் சான்றுகளும் நமக்குக் கிடைத்துள்ளன.

முடிவுரை         
      உலகம் தோன்றி அதில் உயிர்கள் வாழத் தொடங்கியபோது புவி மிகவும் தூய்மை பெற்றிருந்தது. நிலம் தன் முழுப்பயனைத் தந்து செழித்து விளங்கியது. நீரும், காற்றும் மாசு படியாமல் இருந்தன. குறைந்த மக்கள் தொகை கொண்டதாக இவ்வுலகம் அமைந்தமையால் மக்கள், உலகின் பயனை இயன்ற அளவுக்குத் துய்த்து மகிழ்ந்தனர். அன்று தொழிற்சாலைகளே இல்லாத நிலை காணப்பட்டது. பருவமழை, முறை தவறாமல் பெய்தது புவி, தன் விளைச்சலைப் பெருமளவில் தந்து சிறப்படைந்தது. இதனால் மக்கள் மிக மகிழிச்சியுடன் அனைத்துத் தேவைகளும் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்தனர். மக்கள் தொகை பெருகியமையால் சிற்றூர்வாழ் மக்கள் மெல்ல நகரம் நோக்கிக் குடிபெயர்ந்தனர். வாழ வழியில்லாத அம்மக்கள் நகர்ப்புறங்களில் தொழில்தேடத் தொடங்கினர். இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அங்குக் குடிநீருக்கே துன்புற்ற மக்கள் காலப்போக்கில் மாசு கலந்த நீரிலும் வாழ முற்பட்டனர். நீர் நிலைகள் அனைத்தும் கழிவுநீர்க் குட்டைகளாக மாறின.  தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர், பொதுக்கழிப்பிட நீர் போன்றவை நீர் நிலைக்குச் செல்வதால் நீரில் மாசு ஏற்பட்டது. இதனால் அங்கு வாழும் உயிரினங்களும் இன்றளவும் அழிவை எதிர் நோக்கியுள்ளன. நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாப்பதும், பத்திரப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு தூய்மையாகக் கொண்டுசேர்ப்பதும் நமது கடமையாகும்.

துணைநூற்பட்டியல்
1.சங்க இலக்கியம் முழுவதும் (மூலமும் உரையும்) நியுசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை. மூன்றாம் அச்சு 2007.
2.சேதுப்பிள்ளை ரா.பி.ஆற்றங்கரையினிலே பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 1961

3.அகத்தியலிங்கம்.ச (பதிப்பு) ஆய்வுக் கோவை தொகுதி 1 – பதினேழாவது கருத்தரங்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம். அண்ணாமலை நகர், 1985.

4.சோமசந்தரனார் பொ.வே. – பத்துப்பாட்டு மூலமும் உரையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 2008.

5.நடராஜன், ப.மு., – நீா் மேலாண்மை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 2014.

6.மணிமாறன் – தமிழரின் நீா் மேலாண்மை கல்வி சமூக மேம்பாடு ஆய்வு மையம்-தஞ்சாவுா் – 2019.

7.குமாரசாமி,கி. (பதிப்பு) காலநிலையியல், கிரேஸ் பப்பிளிக்கேஷன்ஸ், கும்பகோணம். 2001.

8.சுப்பிரமணியம், ப. இந்தியாவின் சுற்றுச் சூழல், கிரியா வெளியீடு சென்னை. 1986.

9.வரதராசன்,மு. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, பாரிநிலையம், சென்னை. 1964.

10.ஜான் ஆசீர்வாதம் தமிழ் இலக்கியத்தில் அறிவியல், கிறித்தவ இலக்கியச் சங்கம் சென்னை. 1986.

11.சோழமுத்து,பி. சங்க இலக்கியத்தில் பருவகால நிலைகள், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்-2010.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் தி. சங்கீதா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்
மருதுபாண்டியர் கல்லூரி
தஞ்சாவூர் – 613 403

Tholkoppiya Akathinai Kotpadu Nookil Inthinai  Ezhubhadhu|T.Santhi

தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடு நோக்கில் ஐந்திணை எழுபது
Abstract
         The objective of this study is to elucidate the Akathinai (internal love) concepts mentioned in Tholkappiyam through the work Ainthinai Ezhupathu. Through the classification of the different landscapes (thinai), the Akathinai themes of each landscape are individually presented in this research paper.


“தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடு நோக்கில் ஐந்திணை எழுபது”

ஆய்வுச் சுருக்கம்       
      தொல்காப்பியம் குறிப்பிடும் அகத்திணைக் கோட்பாடுகளை ஐந்திணை எழுபது வழி வெளிப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். திணைகளின்வழி ஒவ்வொரு திணையும் தனித்தனியாக அகத்திணைச் செய்திகள் இந்த ஆய்வுக்கட்டுரையில் வெளிப்படுகிறது.
 
முன்னுரை
      அகத்திணை என்று பெயர் பெற்றது  தமிழ் மாந்தர்கள் சேர்ந்து வாழ்ந்த நிலப் பகுதியையும் பொழுதையும் முதற்பொருளாகக்கொண்டு தொழில்கள் உணவுகள் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை கருப்பொருளாகக்கொண்டு உள்ளத்து உணர்வுகளை வாழ்வியல் நோக்கில் உரிப்பொருளாகக்கொண்டு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம் ஆகும். பல்வேறு இலக்கிய வகைகளை ஆய்ந்தறிந்த பின்னர் எழுதப்பட்டதாகும். தமிழினத்தின் வாழ்வியல் நெறிகள் தன்னையே  அகத்திணைகள் என்றும் புறத்திணைகள் என்றும் மேலும் பகுத்தனர். அகத்திணை என்பது ஏழு வகையாகும். அன்பின் ஐந்திணை என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றை உள்ளடக்கியதாகும். கைக்கிளை, பெருந்திணை இரண்டும் அகத்திணையின் பாற்பட்டதாகும். இதனைத் தொல்காப்பியர் ‘கைக்கிளை முதலாப் பெருந்தினை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப’ என அகத்திணையியல் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை என்கிறது திருக்குறள். அன்பு அறம் இணைந்த வாழ்க்கையானது அன்பின் ஐந்திணை என்று தொல்காப்பியரால் சுட்டப்படுகின்றது என்பதை காணலாம். இன்பமும் பொருளும் அறனும் என்று தொல்காப்பியம் களவியல் நூற்பாகுறிப்பிடுகின்றது.
குறிஞ்சித்திணையின் சிறப்புகள்
           ஐந்திணை எழுபதில் குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பதினான்கு பாடல்களில் பதிமூன்று பாடல்கள் நாடன், நாட என்ற சொற்களைக் கொண்டு உள்ளது.தலைவியின் தோழியானவள் தலைவனை வரைவு கடாயது என்பதாகத்தான் பாடல்கள் அமைந்துள்ளதால் அகவொழுக்கக் கற்பொழுக்கப் பண்பாட்டு மரபு சிறப்பாக இருந்துள்ளதைக் காணமுடிகின்றது. தலைமகள் வரைவு வேண்டியும் தோழிக்கு சொல்லியது.அதனை தலைவனுக்கு வெறியாட்டத்தின் போது எடுத்துக்கூறிய தோழிக்கு தலைமைகள் அறத்துடன் நின்றது. தலைமகள் நிலையுணர்ந்த தோழி தலைமகனை வரைவு கடாயது. “அவரை பொருந்திய பைங்குரல் ஏனல், கவரி மடமா கதூஉம் படர்சாரல்,கானக நாட! மறவல் வயங்கிழைக்கு யானிடை நின்ற புணை. தோழியானவள் தலைமகனை கண்டு நீ என் தலைவி மகிழ்ந்திருக்க விரைந்து வந்து மணமுடிப்பாயாக. நான் உதவி செய்ததையும் மறவாமல் இருப்பாயாக என்று கூறுகிறார். இதில் இரண்டு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தோழி, தலைவியை விரைந்து மணமுடித்துக் கொள்க என்பது ஒன்று. நீங்கள் இருவரும் களவு வாழ்க்கையில் ஈடுபட்டதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன் என்பதையும் அவள் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. கார்காலம் வந்துவிட்டது. கார்காலப் பொழுதில் வருகிறேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை என்பதை உணர்ந்தவளாய்த் தலைவி வருத்தத்தோடு தன் தோழிக்கு சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.
“செங்கதிர்ச்செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ வண்டிமிரக்
காரோடு அலமரும் கார்வனம் காண்தொறும்
 நீரோடு அலமருங் கண்” (ஐந்திணை எழுபது15).
          தலைவியின் உள்ளக்கிடக்கை இன்பமோ துன்பமோ அது தோழியினிடமே சொல்லப்பட்டது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது “கார்காலம் தோன்றும் முன்னே வருவெனென,சார்பாய்ச் சொல்லிச் சென்ற தலைவ, நீர் கொண்ட மேகங்கள் விண்ணில் அலைந்தாட,நீர் கலங்கி ஏங்குதே மைதுட்டாக் கண்களே “இனிய தோழா பல்சுவைதிங்களிதழ் பாடலும் நோக்கத்தக்கது     
பாலைத்திணைக்கோட்பாடு
         
      பாலைத்திணையின் இடம், நிலம் ஆனது தனியாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. குறிஞ்சியும் முல்லையும் தன்னிலை திரிந்த மண்ணினது நீர் வற்றி வறண்ட நிலத்தின் தன்மை பாலை எனப்பட்டது. ஆயினும் இதற்கு தனியே  பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாக பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலைநிலத்தை சிலப்பதிகாரம் சுட்டும் முறையில் “முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல்பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை என்பதோர் படிவங் கொள்ளும் என்று சிலப்பதிகாரவரிகள் குறிப்பிடுகின்றது. இதனை 11 , 64-66வரி பொருளாதாரம் அகத்திணையியல் இதைக் குறிப்பிடுகின்றார், ஆ. சிவலிங்கனார். வெளியீடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.பிரித்தலும் பிரித்தல் காரணமாக நால்வகை நிலத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் உரியதாகும். பாலைக்கு தனி நிலம் இல்லையாயினும், பாலைக்குரிய உரிப்பொருளானது அனைவர்க்கும் அனைத்து நில மாந்தர்களுக்கும் உரிய ஒன்றாகவே அமைகின்றது. நடுநிலைத்திணையாக மருதத்தின் முன்னே நிறுத்தி அகத்திணயின்ஜஒன்பதாம் நூற்பா குறிப்பிடுகின்றது. பாலை என்பது நீரில்லா வறண்ட நிலத்தையும் நீரில்லா தன்மையையும் அங்கு மனிதர்களும் பிறவுயிரினமும் தண்ணீருக்கு கொண்டிருக்கும்போது  நரிகளும் ஓநாய்களும் பிற விலங்குகளும் பசியோடும் நீருக்காகவும் உணவுக்காகவும் அலைவதை அழகாக சித்தரிக்கின்றது நற்றிணை பாடல் உரைக்கின்றது. உறைதுறந் திருந்த புறவிற்றனாது செங்கதிர்ச்செல்வன் தெறுதலில் மண்பக உலகு மிகவருந்தி அவர்வுறுகாலை..என தொடரும் அந்தப் பாடல் பாலை நிலத்தை காட்சிப்படுத்துகிறது எனலாம். பொருள்வயின் பிரிந்து போய தலைமகனைக் காய்ந்து தலைமகள் தனக்குத்தானே கூறிக்கொண்டது பிரிவின் வலியை உணர்த்துகின்றதோடு பாலையில் நடக்கும் போது எதிர்ப்படும் துன்பங்கள் தன்னையும் எடுத்து காட்டுகின்றது.

பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்
பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்
சூழாப்பொருள் நசைக்கண் சென்றோர் அருள்நினைந்து
வாழ்தியோ மற்றோ உயிர் (ஐந்திணை எழுபது 31)
         
    பாலையின் கொடுமைதன்னைக்கொண்டதாக இந்த பாடல் அமைந்துள்ளது. யாரோ ஒருவர் பொறியில்சிக்கி புதரில் முட்பாதையில் நடந்ததைப் பார்க்கும் போது ஆறிடை சூழ சுடுமணலில் நடக்கும் தன்மையெல்லாம் பொருள் வேண்டி நசை கண் சென்றோர் அருள் வாழ்த்தியோ மீளுதல் என்பதாகும். தலைவன் உயிர் மற்றொரு உயிர் எனவெண்ணாதவள் தலைவியே ஆவாள்.
 
மருதத்திணைக்கோட்பாடு
        
     மருதத்திணையில் வயலும் வயல் சார்ந்த இடமும் நிலமாகும். இதன்சிறுபொழுது வைகறையாகும். மருதத்திணையின் உரிப்பொருளானது ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகும். மருத நிலம் என்பது வளம் நிறைந்த பகுதியை குறிக்கின்றது. இங்குதான் முறைப்படி விவசாயம் செய்து மக்கள் வாழ்ந்திருந்தனர். விவசாயத்தின் மேன்மையையும் உணர்ந்திருந்தனர் எனலாம். அரசும் ஆட்சியும் நற்சமூக அமைப்பும் இங்குதான் முதன்முதலாக தொடங்குகின்றது  எனலாம். சட்டங்கள் வகுக்கப்பட்டு மன்னர்கள் ஆட்சி செலுத்தியதும் மருத நிலப்பகுதியை மையமாகக் கொண்டுதான் இதில் ஆட்சி பகுதி அதாவது நிலப்பகுதி அதிகமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. ஐந்திணை எழுபதில் மருதத்திணைப்பாடல்கள் பரத்தையில் பிரிதல் பற்றி கூறுகின்றது.தலைவனை ஆற்றப்படுத்துதல் ஐந்திணை எழுபதில் மருதத்திணை பாடல்கள் மூலம் அறியப்படுகின்றன. பரத்தையிற் பிரிந்த தலைவனை ஆற்றப்படுத்துதல் வாயில மறுத்தல் ஊடல்தெளிவித்தல் தோழிதுணைபுரிதல் போன்ற வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. “ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூன்மேற்று சிறுதாய காய்வஞ்சி போற்றுருவிக், கட்டக முத்திற் புதல்வனை மார்பின் மேல, பட்டம் சிதைப்பவரும்”( ஐந்திணை எழுபது 43 ஆம் பாடல்,73 ஆம் பக்கம்) இதில் தலைவனானவன் தன்மகனை தோளில் அல்ல மார்பில் போட்டுக்கொண்டு கொஞ்சும் மகிழ்ச்சியைக் தோழியானவள் கண்டு தலைவியிடம் உரைக்கிறாள்.தலைவியிடம் தோழி பரத்தையிடம் செல்லும் உன் தலைவன் வீடு வரும்போது அவனை உன்னிடமே இருத்துக் கொள்ள முயற்சி செய் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாகும். அவனுக்கும் இன்பத்தை கொடுக்கும்படி நல்லாதாக நடந்து கொள் என்று தாய்மை பண்பொடு உரைக்கும் பாடல் மூவாதியார் பாடிஇருக்கின்றார்.

வளவயல் ஊரன் மருளுரைக்கும் மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி கொனை பிழையா
வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
ஒன்றிலன அனைத்தும் உளேன். ( ஐந்திணை எழுபது -56,மருதம்- 14)       
    வளமை பொருந்தி மீன்கள் துள்ளி விளையாடும் மயில்கள் ஆடுதுறை உடைய தலைவன்உன்னிடம் வரும்போது நீ அவனை நிறுத்திக் கொள்ள முயல்வாயாக என்று தோழி உரைப்பது தாய்மை பண்போடு காணப்படுகிறது என்பதை அறிய முடிகின்றது.
 
நெய்தல் திணையின் கோட்பாடுகள்
     நெய்தல் வாழ்வையும் சிறப்பையும் அருமையான பாடல்கள் மூலம் பாடியிருக்கின்றார். நெய்தல் திணையின் வாழ்விடமானது ஆழியும் ஆழி சார்ந்த இடமும் அதாவது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாக அமைகின்றது. இங்கு இருத்தல் இயற்கை மடியில் இருப்பது போலாகும். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இன் உரிப்பொருளாக அமைகின்றன. இரங்கல் என்பது மற்ற திணைகளில் சென்றவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அங்கு எப்போதோ ஒருமுறைதான் பொருள்வழிப்பிரிவு நடைபெறுகின்றது. அனைவருமே ஒவ்வொரு நாளும் கடற்கரையை, கடலலையை தன் வாழிடமாகக் கொண்டு பணி செய்வதால் அங்கு சென்றுவருவது  என்பது நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதைப்போல அமைகின்றது. அதனாலேயே நெய்தல் நிலமகளிர் எப்போதும் இரக்கத்தையே தன்னிடத்தில் கொண்டுள்ளனர். தன் தலைவனுக்காக வேண்டிக்கொண்டு இருப்பதே அவர்களின் பண்பாக அமைகிறது. நெய்தல் திணையிலும் வரைவு நிகழ்வதற்காக தோழிக்குரிய பாடல் அதிகமாகவே அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

” கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணந் துறைவனோ தன் இலன் ஆயிழாய்
வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப் 
பண்ணமைத் தேர்மேல் வரும் “(ஐந்திணை எழுபது -63)      
     இந்த பாடலில் தோழி தலைவனை இயற்பழித்துரைக்கிறாள். அணிகலன்களை அணிந்து கொண்டு இருக்கும் தலைவியே உன் தலைவனானவன் உன்னைக் கண்டு மகிழ்தலையே அதாவது உன்னை, உன் கைகளைத் தொட்டு மகிழ்வதையே பெரும் பெயராகக் கொண்டுள்ளான். பலரும் காணும் வண்ணம், மண்ணும் உலகோர் புகழும் வண்ணம் உன்னைத்தேரில் ஏற்றி மணந்து கொள்வது எந்த நாள் என்று கேலி செய்வதாக இந்த பாடல் அமைந்துள்ளது. நெய்தலில் செவிலி நற்றாய் மொழியும் பாடல்கள் அமைந்துள்ளன.
 
நிறைவுரை
தொல்காப்பியம் வழிவகுத்த அகப்பொருள் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் வழிவந்த நூல்களாக பல்வேறு அகத்திணை நூல்கள் எழுதப்பட்டு இருந்துள்ளன. நமக்கு கிடைத்தவை சிலவே எனலாம். ஐந்திணையெழுபது அகப்பொருள் நூலாகும். இதில் உரிப்பொருளை மையப்படுத்தி பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளதைக் காணமுடிகின்றது என்ற வகையில் தொல்காப்பியம் வரையறுத்த அகத்திணைக் கோட்பாட்டை இதுவும் மற்றவையும் பின்பற்றி வருகின்றன. ஆனால் முழுவதுமாக பின்பற்ற முடியவில்லை என்பதையும் உணர முடிகின்றது. இந்த வகையில் தொல்காப்பிய இலக்கணம் இலக்கியமாகவும் செயல்படுகின்றது. தொல்காப்பியம் இமயமலை என்றால் அதன் பிறகு தோன்றிய நூல்கள் எல்லாம் மடுவுக்கு சமமாக அமைகின்றன எனலாம்.ஆனால் அதிலும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் வைத்து புனைந்துள்ளனர் தமிழ்ப்புலவர்கள்.நயமிக்க உவமைகளும் சுவைகளும் காணப்படுகின்றன எனலாம். இதனால் தமிழர் பண்பாட்டின் வரலாறுகள் மீண்டும் மீண்டும் அக வாழ்வில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை இங்கே இந்த கட்டுரையின் கருத்தாக  முன்வைக்கப்படுகின்றது.
 
துணைநூற் பட்டியல்
 
1.தொல்காப்பியம் மூலம் பாட வேறுபாடுகள் ஆய்வுநோக்காய்வு பன்னாட்டு திராவிட மொழி இயக்கம் திருவனந்தபுரம் 1996

2.ஒப்பில் தொல்காப்பியம் ப. மருதநாயகம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னை தமிழ்நாடு

3.தொல்காப்பியம் தெளிவுரை ச.வே.சுப்ரமணியம்

4.தொல்காப்பியம் பொருள் அதிகாரம் இளம் பூரணர்  தொகுதி ஒன்று இலக்கணச்செம்மல் இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கம் இளவழகன் 2003

5.தொல்காப்பியம் பொருள் அதிகாரம் களவியல் மற்றும் கற்பியல் ஆ.சிவலிங்கனார் பதிப்பாசிரியர் உலகத் தமிழ ஆராய்ச்சி நிறுவனம் 1991
 
6.தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் 1986

7.திருக்குறள் மணிவாசகர் பதிப்பகம், இனிய தோழாபதிப்பகம் உரைகள்
சென்னை 1 மு. வ. உரை பாரிநிலையம்
 
8.வரலாற்று நோக்கில் தொல்காப்பியம், இராசாராம் வெளியீடு, முல்லை நிலையம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தி.சாந்தி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரப் பிரதேஷம்- 517 426.

Reflections on the Teachers in the Works of V.Iraianbu|Dr P. Vignesh kumar

ஆசிரியர் குறித்தான சிந்தனைகள்
Abstract
      Teacher Introduction The responsibility of transmitting a nation’s culture and heritage to the next generation rests fundamentally with education. Civilizational progress and education share an intrinsic connection, for education possesses the transformative power to reshape society. In keeping with the demands of changing times, both education and pedagogical methods have evolved. Yet, the significance of education has never diminished. In imparting this education, the role of the teacher remains paramount. A true teacher must serve as a model and guide for the students they instruct. In this regard, V. Irai Anbu is a distinguished contemporary thinker who, through his literary works, consistently articulates insightful reflections on education and the role of the teacher. This paper examines how he expresses his ideas concerning the teacher’s role in his writings.

Keywords: Teacher, Education, Pedagogy, Eloquence, Motivation, Society


“வெ.இறையன்பு படைப்புகளில் காணலாகும்ஆசிரியர் குறித்தான சிந்தனைகள்

ஆய்வுச் சுருக்கம்
     கல்வி ஒருமனிதனை மதிப்புமிக்க மனிதனாகப் பரிணமிக்கச் செய்யும். ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கல்விக்குரியது. நாகரீக வளர்ச்சிக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் ஒரு சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. காலத்தின் தேவைக்கு ஏற்ப கல்வியும், கற்பிக்கும் முறைகளும் மாற்றமடைந்துள்ளன. ஆனால் கல்வியின் முக்கியத்துவம் குறையவில்லை. அக்கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. அத்தகைய ஆசிரியர் தான் கற்றுக் கொடுக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டுபவராகவும் திகழவேண்டும். அவ்வகையில் சமகாலத்தில் கல்வி குறித்தும், ஆசிரியர் குறித்தும்  சிந்தனைமிக்க கருத்துகளைத் தன்னுடைய படைப்பின் வாயிலாக வெளிப்படுத்தி வருபவர். வெ.இறையன்பு அவர்கள். அவர் தன்னுடைய படைப்புகளில் ஆசிரியர் குறித்தான சிந்தனைகளை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குறிப்புச் சொற்கள்
        ஆசிரியர், கல்வி, கற்பிக்கும் முறை, சொல்வன்மை, ஆர்வம், சமுதாயம்

முன்னுரை
        சமுதாய மாற்றத்தில் கல்வி என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. சமுதாயம்  மாற்றம் பெற வேண்டுமெனில் தனிமனிதன் மாற்றம் பெற வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி.  அக்கல்வியைக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு மனிதர்களின் மனத்தில் உள்ள தீமையான எண்ணங்களை அகற்றி, நன்மை தருகின்ற செயல்களை மேற்கொள்ளச் செய்து, ஒரு சிறந்த மனிதனைப் உருவாக்கும் ஆற்றல்  உண்டு. அத்தகைய ஆற்றல் மிக்க  ஆசிரியர் குறித்தான சிந்தனைகளை வெ.இறையன்பு அவர்கள் எவ்வாறு தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

ஆசிரியர்
       மாணவர்களிடம் இருக்கும் குற்றங்களை நீக்கி. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்பவரே ஆசிரியர். இவ்வாசிரியரே சிறந்த மாணவர்களை உருவாக்கும் தன்மையுடையவர். அதனால் தான் நம் சான்றோர்கள் ஆசிரியப்பணியை அறப்பணி என்றனர். ஆசிரியர் என்பதை ஆசு + இரியர் என்பர். ஆசு – குற்றம், இரியர் – நீக்குவர் குற்றத்தை நீக்குபவர் என்பது பொருள். ஆசிரியருக்குரிய தகுதிகளை நாமக்கல் கவிஞர்,

“தாயென அன்பு செய்து  
தந்தை போற் பரிந்து சொந்தச் 
சேயென அனைத்துப் பேசிச் 
செவ்விய அறிவு கூறித் 
தூயநன் னடத்தை கற்கத் துணையென  
நடந்து காட்டும் 
ஆய நற்குணமுளோனே 
ஆசான் என்றழைக்க தக்கோன்.”      (நாமக்கல் கவிஞர்)
         
       என்னும் வரிகளில் அன்பு, பரிவு, அரவணைப்பு, அறிவுக் கூர்மை, நன்மை தரும் நடத்தை, கற்க உதவும் தன்மையுடையவர்களே ஆசிரியர்; என்கிறார். இப்பண்பு நலன்களைப் பெற்றவர்களையே அனைவரும் போற்றுவர். பாலையன் அவர்கள் ஆசிரியர் மாணவர் உறவுநிலை என்னும் நூலில் ஆசிரியர் “மாணவர்களோடு மாணவர்களாகத் தாமும் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அவர்கள் உற்சாகமாக வேலை செய்யத் தூண்டுகோலாய் இருத்தல் வேண்டும். இத்தகைய ஆசிரியப் பெருமக்கள் தாம் நாளைய நம் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஒளிவீசும் மாணிக்கங்களைத் தரக்கூடியவர்கள் ஆவர்.” (ஆசிரியர் மாணவர் உறவுநிலை, ப.67) என்கிறார். ஆசிரியர் மாணவர்களிடம் சாதி, மத வேறுபாடுகளும், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாது அனைவரையும் சமமாகக் கருதவேண்டும்.
ஒர் ஆசிரியரிடம் தொடர்ந்து அறிவைப் பெறுவதற்கான தேடுதல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவற்றுடன் தனது பாடத்துடன் சேர்ந்து பிற பாடங்களிலும் புலமை உடையவராக இருக்க வேண்டும். கொடுக்கக் கொடுக்க குறையாதது கல்வி என்பர். அதற்கேற்ப ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடத்துடன் சேர்த்துப் புதிய புதிய செய்திகளைக் கற்றுத்தர வேண்டும். அதனுடன் மாணவர்களிடம் தேடுதலை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்பதை சேவியர் வாத்தியார் என்னும் கதையில் இறையன்பு “புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு வந்து அவர் பாடம் எடுப்பவர் அல்ல. புதிதாக வரும் இதழ்கள், ஆய்வுக்குறிப்புகள் எல்லாவற்றையும் படித்து விட்டு அண்மை நிகழ்வுகள் வரை அலசி ஆராய்வார். மாணவர்களிடையே தேடுதலை உண்டு பண்ணுவதே தன்னுடைய பணி என்பதில் தெளிவாக இருந்தார்” (பூனாத்தி, சேவியர் வாத்தியார், ப.17) என்கிறார்.
         
‘அவருக்குப் பாடம் நடத்துவது தவம்.’
       அவரே அவர் நடத்துகிற பாடத்தில் முற்றிலுமாகக் கரைந்து போவார். அவருடைய விடுமுறை நாட்களில் வனவிலங்கு சரணாலயங்களுக்கும், தேசிய பூங்காக்களுக்கும் சென்று, பல விலங்குகளைப் பற்றி நேரடியாகத் தகவல்களைச் சேகரிப்பார். வந்து அவற்றைப் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் எழுதி அறிவியல் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவர் மான்களைப் பற்றிப் புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறார். “அவர் அடிக்கடி சொல்லும் வரி நான் இன்னும் மாணவன்தான். மாணவனாக எப்போதும் இருக்கச் சம்மதிப்பவர்கள் தான் நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியும்.” (சேவியர் வாத்தியார், ப.18) என்கிறார். ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும் முன்பு, தான் முதலில் அந்த பாடத்தைப் படித்து உணர்ந்து, அதனுடன் தொடர்புடைய பிற செய்திகளையும் கண்டறிந்து அச்செய்தி அன்றாட வாழ்க்கையில்  எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சேர்த்து பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆசிரியர் தன் துறையில் களஆய்வுகளை மேற்கொண்டு அதனை மாணவர்களுக்குச் சொல்லலாம் அல்லது அதனை ஒரு நூலாகவும் வெளியிடுதல் மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும். ஆசிரியர் பற்றி மரியா மாண்டிசோரி கூறுகையில் “அவ்வாசிரியர் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவர்களைத் தாங்களே இயங்க வைக்க வேண்டும். ஆசிரியர் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டுமே தவிர எவ்வித குறுக்கீட்டையோ, தடையையோ ஏற்படுத்தக் கூடாது. தேவைப்படும் கற்றல் கருவிகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதும், அவர்கள் செயல்படும் விதங்களைக் கவனிப்பதும் ஆசிரியரின் பங்காகும்” (கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி, பக்,51,52) என்கிறார்.
       அத்துடன்  ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைவரையும் சமமாக எண்ணுதல் வேண்டும். அவற்றுடன் சேர்த்து ஆசிரியர் கற்பித்தல் உத்திகளைக் கற்றுணர்ந்து. மாணவர்களின் மன நிலைக்கு ஏற்ப எளிமையிலிருந்து கடினமான பாடத்திற்கும் செல்வதுடன் மாணவர்களின் சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்றவாறு பாடம் நடத்துதல் அவசியம். 
ஒர் ஆசிரியருக்கு இன்றியமையாத பண்பு தொடர்ந்து கற்கும் பழக்கம். தொடர்ந்து கற்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியர்களாக விளங்க முடியும். ஏதோ ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் பாடப் புத்தகத்தில் உள்ளவாறு சொல்லும் ஆசிரியர்களை மாணவர்கள் விரும்புவதில்லை. மாறாகப் புதிய புதிய செய்திகளைச் சொல்பவர்களையே மாணவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு சொல்லாததால்தான் பாட வேளையானது அவர்களுக்குச் சோர்வைத் தருவதாகவும் கற்றலில் ஆர்வத்தைக் குறைப்பதாகவும் அமைகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தலின்போது புதிய புதிய செய்திகளைச் சொல்ல வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

 கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்
        ஆசிரியர் மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதம் பாடம் நடத்த வேண்டும். ஒரு சில மாணவர்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் புலமையைக் கண்டே வகுப்பிற்கு வருவார்கள். அத்தகைய ஆசிரியர்களையே மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை இறையன்பு, ‘இழப்பீடு’ என்னும் கதையில் வேத நாயகம் என்ற ஆசிரியரை பற்றிச் சொல்லும்போது “விலங்கியல் துறையில் பேராசிரியர் அத்துறையில் மிகவும் பிரபலம். இரண்டு கைகளிலும் சாக்பீசைப் பிடித்துக்கொண்டு கரும்பலகையில் படங்களை வரைபவர். அவர் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கும் அழகை பார்க்கும் பொருட்டே மாணவர்கள் அவர் வகுப்புக்கு வருவார்கள.;”  (நரிப்பல், இழப்பீடு, ப.97) என்கிறார். மாணவர்களுக்குப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்துவதாலேயே கல்வியை மாணவர்களிடம் கற்கண்டாக மாற்ற முடியும்.

மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்ப்பவர்
        ஆசிரியர் தன் பணியை மனம் உவந்து செய்ய வேண்டும். தான் பணியாற்றும் இடத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சரியாக வரவில்லை எனில் கல்வியின் பயனையும், அவசியத்தையும் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருபவராக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதை ‘சமர்ப்பணம்’ என்னும் கதையில் ஆசிரியரைப் பற்றி சொல்லும் போது “ஆசிரியர் பணி தான் கொஞ்சம் கொஞ்சமாக தலைமை ஆசிரியர் ஆனார். நகரப் பள்ளிகளில் வீட்டுக்குப் பக்கத்தில் வேலைக்காக அழுத்தம் கொடுப்பவர்கள் மத்தியில் மாவட்டத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு மாறுதல் கேட்டு வாங்கிக்கொண்டு போவார். அங்கு ஐந்து வருடங்கள் ஆழமாகப் பணியாற்றி விட்டு வருவார். வீடு வீடாகப் போய் பள்ளிக்கு வராத மாணவர்களை அனுப்பச் சொல்லி பெற்றோர்களிடம் நயமாக பேசிப் புரிய வைப்பார். பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு மற்ற பெற்றோர்களும் குழந்தைகளை அனுப்பி வைப்பார்கள். மாணவர்கள் அவரை அப்பாவாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்” (நரிப்பல், சமர்ப்பணம், ப.115) என்கிறார்.
ஆசிரியர்களுக்கு எந்தப் பள்ளியில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. தான் பணியாற்றும் பள்ளியை நன்கு வழி நடத்துகிறோமா என்பதே முக்கியம். மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், நற்பண்பு நலனைக் கற்றுத்தருபவராகவும். அனைவரும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துபவராக ஆசிரியர் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர்கள் குழந்தையின் இரண்டாம் பெற்றோர் என்று கருதப்படுவதால் இன்னும் கூடுதல் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். உலகில் புகழ் பெற்றவர்களாகத் திகழ்பவர்கள் அனைவரும் தான் ஒரு நல்ல ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

சொல்வன்மை
     கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்னும் சான்றோர் வாக்கிற்கு ஏற்ப, ஆசிரியர்களுக்குத் தான் கற்றதை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்வன்மை வேண்டும். பிறருக்குப் புரியும் விதம் எடுத்துரைக்கும் திறன் இல்லையெனில் கற்றும் எந்த ஒரு பயனுமில்லை. சொல்வன்மையே ஆசிரியர் பணியைச் செம்மையுறச் செய்யும்.

ஆசிரியர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பண்புகள்
        பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களே உலகமாகத் திகழ்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பைக் காட்டுகிறார்களோ அந்த அளவு குழந்தைகளும் ஆசிரியரிடம் அன்பாகப் பழகுகிறார்கள். “ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய முதல் அம்சம் நற்பண்புநலன்கள். அன்னையின் வளர்ப்பைப் போலவே ஆசிரியரின் அன்பும் குழந்தைகளின் பண்பைத் தீர்மானிக்கிறது. பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பெரியோருக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பதையும். தன்னோடு பழகும் பிள்ளைகளிடம் அன்பாக இருக்க வேண்டும். தன்னையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை, குழந்தைகளிடம் சொல்லி அதனைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும.;” (இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் பக்கம்,40) என்கிறார். ஆசிரியர்கள் அன்றாடப் பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும். அதனை அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதையும் கவனித்தாலே நலம் பயக்கும். மாணவர்களுக்கு பாரதியாரின்,

“கூடி விளையாடு பாப்பா  
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.”(பாரதியார் கவிதைகள்,ப.94)
ஒளவையாரின்
‘அறம் செய்ய விரும்பு’ (ஒளவையார், ஆத்திசூடி,1)
         
       என்பன போன்ற பண்புநலன்களைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதியும் விதம் கற்றுத்தர வேணடும். அவற்றை மாணவப் பருவம் முதலே பின்பற்றும் வண்ணம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் சொல்வதே சரியானது என்ற எண்ணம் உடையவர்களாகத் திகழ்கிறார்கள். ஏதேனும் ஒன்றைச் சொன்னாலும் அதனை ஆசிரியரிடம் சொல்லி அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செய்தி என்றாலும் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதனை அறிவதில் ஆர்வமாகச் செயல்பாடுவரெனில் அவர் நன்றாக கற்பிக்கும் ஆற்றல் உடையவராகத் திகழ்வார்.

ஆசிரியருக்கு உரிய தகுதிகள்
         சங்க காலம் தொட்டே தமிழ்ச் சமூகம் கற்பிப்பவர்களுக்கு உயர்ந்த மதிப்பு அளித்து வருகிறர்கள் என்பதை பல்வேறு இலக்கியங்களும் சான்று தருகின்றன. ஆசிரியரின் தகுதிகள் எவை என்பதை ஏலாதி,

“அறுவர் தந்நூலு மறிந்துணர்வு பற்றி  
மறு வரவு மாறாய நீக்கி மறு வரவின்  
மாசா ரியனா மறுதலைச் சொல் மாற்றுதலே 
 
ஆசா ரியன தமைவு.”           (ஏலாதி, பா.75)
         என்னும் வரிகள் அறுவகை சமய நூல்களையும் கற்று. குற்றமுடைய கருத்துகளையும், மாறுபட்ட கருத்துகளையும் நீக்கி, குற்றமில்லாத சிறந்த ஒழுக்கத்தன்மை உடையவனாய். மாறுபட்ட கருத்தை மறுத்து. நன்மை தரும் கருத்துகளை நிலைநிறுத்தும் தன்மையுடையவரே ஆசிரியர் என நவில்கிறது.
ஆசிரியர் பணியில் எண்ணிலடங்கா மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 12ஆம் நூற்றாண்டில் பவணந்தியார் எழுதிய ஆசிரியருக்குரிய இலக்கணம் தற்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது எனில் பண்டைய காலம்தொட்டு தமிழர்கள் கற்பதிலும் கற்றுத்தருவதிலும் எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது.

ஆசிரியப் பணியின் பெருமிதம்
         
      ஓர் ஆசிரியர் தனது பணியை உள்ளத் திருப்தியுடன் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்பவர்களே சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள். அதன் பொருட்டு தானும் மகிழ்கிறார்கள் என்பதை இறையன்பு,

“மாணவர்களைச் செதுக்கும் பணியிலேயே
திருப்தி சொல்லும் திருப்தி எனக்கு.
ஒவ்வோர் ஆண்டும் பத்து மாணவர்களையாவது
பக்குவமடையச் செய்யும் பணியில்
என்னைக் கரைத்துக் கொள்கிறேன்.”        (வைகை மீன்கள், ப.123)
          என்னும் வரிகளில் ஆசிரியர் தன் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஓர் ஆசிரியர் செம்மையுறப் பணியாற்றிப் பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதும் புலனாகிறது.
ஆசிரியர், தான் கற்றுத் தந்த மாணவர்கள் உயர்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை இறையன்பு,

“கற்றுக்தருகிற மாணவரெல்லாம்  
பெற்று உயர்வதை பார்த்து ரசிப்பார்  
ஏணியாய் இருப்பார், தோணியாய் இருப்பார்  
கேணியாய் இருந்து தாகம் தணிப்பார் 
அவர்கள் பேச்சைத் தவிர்த்துப்  
பெருமை மிகுந்த செயல்களைச் செய்வார்” (தரிசனம், ப.88)
         என்னும் வரிகளில் ஆசிரியர் மாணவர்களை ஏணியாய் இருந்து ஏற்றி விடுகிறார். நீர் மிகுதியாக உள்ள இடத்தைக் கடக்க தோணி தேவைப்படுவதைப் போல மாணவர்கள் கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருந்து கல்விக் கடலைக் கடக்கச் செய்பவர். கேணி தன்னிடம் உள்ள தண்ணீரால் மக்களின் தாகத்தைத் தீர்ப்பதுபோல ஆசிரியர் தன்னிடமுள்ள கல்வியால் மாணவர்களின் கல்வித்தாகத்தைத் தணிப்பவராகவும். மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தரும் செயல்களைச் செய்பவராகவும் திகழ வேண்டும். எனவே ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது வெளிப்படுகிறது.
ஆசிரியரைப் பற்றி, ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் கதையில் தியாகராஜர் என்பவர் நடனம் கற்றுத் தருபவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் நாடெங்கும் உள்ளார்கள் அவர்களை எண்ணி தியாகராஜர் மகிழ்ச்சி அடைவதாக ஆசிரியர் “இன்று என் மாணவர்கள் நாடெல்லாம் நர்த்தனம் ஆடுகிறார்கள். அவர்கள் பரம்பரையில் யாருக்கும் நடனம் தெரியாததாலேயே அவர்கள் நடனத்தில் என் முத்திரைகள் ஆழமாய் பதிந்து விடுகின்றன. அவர்கள் ஆடும் போதெல்லாம் நானே ஆடுவதாக துணிந்து கண்ணீர் மல்கி நிற்கிறேன்”; (அரிதாரம், ப.108) என்கிறார். தன்னிடம் பயின்ற மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் பெருமை கொள்ள வேண்டும் என்பதும், ஒரு கலை என்றால் அதனைக் கற்றுக் கொடுப்பவர் கற்பவரின் குடும்பத்தில் அந்தக் கலையைக் கற்று இருந்தால் மட்டும் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில்லை, கலை பயிலாத குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும். உரிய தகுதி இருப்பின் ஆசிரியர்கள் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.
        ஒரு சில பள்ளிகளில் பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே பள்ளியில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல், பெற்றோர் கல்வி பயின்றாலும் பயிலாவிட்டாலும் பெற்றோர்கள் விரும்பும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதே அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதற்கு உண்டான வழி.
தியாகராஜர் சொல்கிறார் “என் சொந்த மகனுக்கு நான் சொல்லித் தந்தால் என்னையும் அறியாமல் அதிக அக்கறையைச் செலுத்தத் தூண்டும். அது இதுகாறும் இருந்த தன்மையை நீர்த்துப் போகச் செய்து விடும். எல்லாரையும் விடவும் அவன் நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணம் எட்டிப்பார்த்து மற்றவர்களுக்குக் குறைத்துச் சொல்லித் தர வைத்து விடக்கூடும். எங்கு சென்றாலும் அவனுக்கு உண்மையான சிரத்தையிருந்தால் அவன் சிறந்த கலைஞனாக வந்துவிட்டுப் போகட்டும். நடனம் யாருக்கும் பரம்பரை தொழில் இல்லையே” என்றார். (அரிதாரம், ப.108) என்னும் வரிகளால் ஒர் ஆசிரியருக்கு முக்கியமான பண்பு அனைவரையும் சமமாக எண்ணுதல் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஓர் ஆசிரியர் பிற மாணவர்களுடன் சேர்த்து தன் குழந்தைக்கும் கற்பிக்கும்போது தன் குழந்தையிடம் அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ளதால். ஆசிரியர் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.  திறமையுள்ள மாணவன் எங்கு போனாலும்  கற்பதில் வெற்றி பெறுகிறார்கள். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பது வெளிப்படுகிறது.

ஆசிரியரும் சமுதாயமும்
      சமுதாய முன்னேற்றத்தில் ஆசிரியரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமுதாயம் முன்னேற்றமடைய சமுதாயத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். கல்வி கற்றுக் கொடுப்பதில் “ஒரு நல்ல ஆசிரியர் சமூகத்தை அன்புடன் நோக்குகிறார். ஒரு கர்வமான ஆசிரியர் துச்சமாகப் பார்க்கிறார். ஒரு உழைக்காத ஆசிரியர் குற்ற உணர்வோடு பார்க்கிறார். ஒரு திறமை குறைந்த ஆசிரியர் அச்ச உணர்வோடு பார்க்கிறார்.” (கற்றல் கற்பித்தல், ப.59) ஒரு சிறந்த ஆசிரியர் சமூகத்தை நேசிக்கிறார். அதன் பொருட்டு சமூகத்தில் வாழ்பவர்களுக்கு நன்மை தரும் செயல்களையே செய்கிறார். அவ்வாசிரியர் தன்னிடம் பயிலும் மாணவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றக்கூடிய பண்பு நலன்கள் உடையவர்களாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்துடன் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.

முடிவுரை
      ஒர் ஆசிரியரின்  இன்றியமையாத பண்பு நலன்களில் ஒன்று தொடர்ந்து கற்கும் பழக்கம். தொடர்ந்து கற்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியர்களாக விளங்க முடியும். அத்துடன் ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தல் என்பது மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஒழுக்கம், அறம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சிந்தனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்களுக்கு தான் கற்றதை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்வன்மை வேண்டும். திறமையுள்ள மாணவன் எங்கு போனாலும்  கற்பதில் வெற்றி பெறுகிறார்கள். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன் தரும் செயல்களைச் செய்பவர்களாகத் திகழ வேண்டும்.

துணைநின்ற நூல்கள்
1. வெ.இறையன்பு – அரிதாரம், நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600050. ஒன்பதாம் பதிப்பு, 2019.

2. வெ.இறையன்பு – தரிசனம் விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 641001. முதல் பதிப்பு 2018.

3. வெ.இறையன்பு – வைகை மீன்கள், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 641001. முதல் பதிப்பு 2020

4. வெ.இறையன்பு – பூனாத்தி, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் -641001. மூன்றாம் பதிப்பு 2017.

5. வெ.இறையன்பு – நரிப்பல் நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600050. ஏழாம் பதிப்பு 2019.

6. ஆசிரியர் பிரதிபா –   இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள், சாரதா பதிப்பகம,; சென்னை – 600014 எட்டாம் பதிப்பு 2012

7. ஏற்காடு இளங்கோ –   கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிச்சோரி,  சாரதா பதிப்பகம், நாலாம் பதிப்பு ஜூலை 2012

8. சரவணமுத்து. இரா.  –   கற்றல் கற்பித்தல், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014 ஆறாம் பதிப்பு 2014

9.  அடியார் மணிவாசகன் –   நன்னூல், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014 நான்காம் பதிப்பு 2016

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்  பா. விக்னேஷ்குமார்,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை-600 077.

Naattupura Nambikkaigal Kuriththa Paarvaigal|Dr.P.Santhi

நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள்
Abstract
        
      The Field of Folklore is one of the growing fields.The field has intertwined itself with Sociology,Anthropology,psychology,history and linguistics.It has been started as a separate department at TamilUniversity and is growing.Floklore includes people’s belief system and customs.We get to know the views on how belif system arose When human life was connected with nature. 


“நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள்”

ஆய்வுச் சுருக்கம்
    
      நாட்டுப்புறவியல்  துறையானது  வளர்ந்து வருகின்ற துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த துறையானது சமூகவியல்இ மானிடவியல்இ உளவியல் இதத்துவம்இ வரலாறு இமொழியியல் ஆகிய துறைகளுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்து வருகிறது  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனி ஒரு துறையாக தொடங்கப்பட்டு வளர்ந்து வருகிறது நாட்டுப்புறவியல் என்பது மக்களது நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனித வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்த போது நம்பிக்கைகள் உருவாகின இவ்வாறாக நம்பிக்கைகள் குறித்த பார்வைகளை காணலாம்.

முன்னுரை
    
         மக்களின்   மூலம் வளர்ந்து  வரும் துறைகளில் ஒன்றாக நாட்டுப்புறவியல் துறை வளர்ந்து வருகிறது. அதனுடைய வளர்ச்சிக்காக இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனி ஒரு துறையாக தொடங்கப்பட்டு வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இத்துறையானது மானிடவியல், சமூகவியல் ,உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வருகிறன. நாட்டுப்புறவியல் என்பது ஒரு நாட்டினுடைய மக்களின் நாகரீகத்தையும் பண்பாட்டினையும் பழக்க வழக்கத்தினையும் வரலாற்றினையும் நாட்டு நடப்பினையும் உண்மையான முறையில் எடுத்துச் சொல்வதாகும். நாட்டுப்புறத்தில் மக்களிடத்தில் காணப்படும் நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள் என்கின்ற தலைப்பில் வருகின்ற செய்தியினை காணலாம்.

நாட்டுப்புறவியல் என்பதன் பொருள்
       நாட்டுப்புறவியல் என்பது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றினால் பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மக்களினுடைய பண்பாடாகும். நாட்டுப்புறவியல் என்பது மக்களின்  நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நாட்டுப்புற நம்பிக்கை என்பது நாட்டுப்புறவியலின் அடிப்படை பொது கூறு என்பர்
’மானிடவியல் பேரறிஞரான டைலர்’ அவர்கள் மக்களின் அறிவு  மூலம் ஏற்படக்கூடிய நம்பிக்கை கலை, ஒழுக்கம், சட்டம்,  பழக்கவழக்கம் முதலியவைகள் தான் பண்பாடாக மலர்கின்றன என்கின்றார் ‘மாலினோவஸ்கி ‘ என்பார் வாழ்க்கை முறைகளின் கூட்டுச்சேர்க்கை பண்பாடு என்கிறார்.
         
          வாழ்க்கை  முறையாகப் பண்பாட்டை கருதினால் மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள் .பழக்க வழக்கங்கள் இதன் கண் அடங்கி விடுகின்றன. மனிதனின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவை தான் பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகும். அறிவுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையும் நம்பிக்கைகள் என்பர். பழைய   காலங்கள் தோன்றியது முதல் மனிதனானவன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ”மாற்றம் என்பதே மாறாதது” என்பது போல இயற்கையின் மாறுதலுக்கு ஏற்ப மனிதனின் மனமும் மாறுபடுகின்றன.
மனிதனின் வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்த போது நம்பிக்கைகள் உருவாகின. உலகில் வாழுகின்ற பழங்குடி சமுதாய வரலாற்றை நோக்கினால் உண்மையானது புலனாகின்றது. பண்டையத் தமிழர்களிடையே நிலவிய நம்பிக்கைகளையும் மக்கள் பின்பற்றிய சகுனங்களையும் பற்றி பார்க்கலாம்.
        
          பழங்கால இலக்கணமான தொல்காப்பியதிலேயே ‘நாளும் புள்ளும்’ பிறவற்றின் நிமித்தமும் (தொல்-பொருள் 91) என்று கூறப்பட்டுள்ளது. புள் எனக்குறிப்பிடுவது பழைய காலத்திலே பறவைகளையும் பிற்காலத்திலே சகுனங்களையும் பற்றியும் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளதை வாய்ப்புள் பறவாப்புள் என குறிப்பிடுவதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
கூகை (சாவுக் குருவி) அலறினால் துக்க செய்தி வரும் அதாவது இறப்பு வரும்என்று பண்டையத்தமிழ் மக்கள் இடையே நம்பிக்கை நிலவிவருவதை காண முடிகிறது. அதை இன்றளவும் நிலவி வருவதனையும் அறிய முடிகிறது .இதனை சங்க இலக்கியத்தில் காணப்படும். புறநானூற்றில் நமக்குச் “அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் “என்று கூறுவதன் மூலம் காணமுடிகிறது.
(புறம்-280) இதனைப் போன்று சீவக சிந்தாமணியிலும் சீவகன் சுடுகாட்டில் பிறந்தவுடன் விசயை அழுது புலம்புகின்ற காட்சி ஆனது தேவர்களின் உள்ளத்தை உருக்கி விடுகிறது. அந்த பாடல்வரியானது
         
          ” எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட என்ற பாடல்    வரிகளின் மூலம் காண முடிகின்றது. இதனைப் போன்றே இன்னும் பல நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது பழைய காலம் முதல் இக்காலம் வரை தமிழ் மக்களிடையே நிலவி வருகின்ற  நம்பிக்கைகளுள் ஒன்றாக பார்க்க முடிகின்றது.

இறைவன் நம்பிக்கை         
          பண்பாட்டு  வளர்ச்சியினுடைய  படிநிலைகளாக  விளங்குவன நம்பிக்கைகள் ஆகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நம்பிக்கையின் வழி நின்றே வாழ்கின்றான். இறைவனை  வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் எண்ணிய செயல்கள்  நிறைவேறும் என்று நம்புவதும் குழந்தை இல்லாத நிலையில் பெண்கள் கடவுளை வேண்டினால்  குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்புவதும் எல்லா சமூக மக்கள் இடையேயும் காணப்படுகின்ற வழக்கமாகவே உள்ளது.எண்ணற்ற நம்பிக்கைகள்பலவகையில் நம்பிக்கைகள் நாட்டுப்புற மக்களிடையே நிலவுகின்றன. அவைகளாவன,   
       
      குழந்தைப்பற்றிய நம்பிக்கைகள், பருவமடைதல் பற்றிய நம்பிக்கைகள், திருமணம் பற்றிய நம்பிக்கைகள், கர்ப்பிணிப் பெண்கள் நம்பிக்கைகள், வேளாண்மை பற்றிய நம்பிக்கைகள் மழை பற்றிய நம்பிக்கைகள் விலங்கு பறவைகள் பற்றிய நம்பிக்கைகள், விருந்தினர் பற்றிய நம்பிக்கைகள், எண் பற்றிய நம்பிக்கைகள், நட்சத்திரம் பற்றிய நம்பிக்கைகள், அங்க பலன் பற்றிய நம்பிக்கைகள், மச்சங்களின் பலன் பற்றிய நம்பிக்கைகள், கிழமை பற்றிய நம்பிக்கைகள், திசை பற்றிய நம்பிக்கைகள், கோலம் பற்றிய நம்பிக்கைகள் இமாரி அம்மனை பற்றிய நம்பிக்கைகள் ,வீடு பற்றிய நம்பிக்கைகள், உணவு உடை அணிகலன்கள் பற்றிய நம்பிக்கைகள் இவற்றினை போன்று இன்னும் பல நம்பிக்கைகள் உள்ளன.
         
        திருமணமான பெண்கள் தாய்மை அடைய எண்ணுதல் பிள்ளை பேற்றிற்காக பல விரதங்கள்( நோன்புகள்) இருப்பார்கள் திருமணமான பெண்கள் விரைவாக தாய்மை அடைந்து விட வேண்டும் என விரும்புவார்கள் பிள்ளை இல்லை என்றால் சமுதாயத்தினுடைய தூற்றுதலுக்கு ஆளாக வேண்டும் என்று எண்ணுவார்கள். குடும்பத்தினர் பெயர் சொல்ல வாரிசு வேண்டும் என விரும்புவார்கள் குழந்தைக்காக பெண்கள் அரசமரத்தை சுற்றி வருதலும் உண்டு அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றைப் பார்த்தாளாம் என்ற பழமொழியும் வழங்கி வருகிறது.
சங்கர் சென் குப்தா தமது நூலில் அரசமர வழிபாடானது மலட்டுத்தன்மையைப் போக்கக்கூடியது என்கின்றார் பிள்ளை பேற்றின் நோன்புக்காக வெள்ளிக்கிழமை விரதமும் பாம்பு புற்று புற்று வழிபாடும் நோன்புகளாக கருதப்படுகின்றது. குழந்தைகளுக்கு கண்ணேறு (திருஷ்டி) கழித்தல் பலரினுடைய கண்களில்  சிலருடைய கண்களுக்கு தீமையினை விளைவிக்கின்ற சக்தி உண்டு என்றும் அதனால் குழந்தைகளுக்கு கண்ணேறு( திருஷ்டி) கழிப்புச் செய்வதும் உண்டு. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவர் எனவே சில பேர்களின் கண் பட்டால் குழந்தைகளுக்கு நோய் நொடி வரும் என்று நம்புகின்றனர். கண்ணேறு பட்டதை கழிப்பதற்காகச் சுண்ணாம்பையும் மஞ்சளும் கொண்டு சுற்றி வீதியில் எரிவார்கள் இவ்வாறு செய்தால் கண்ணேறு கழிந்து விடும் என்று மக்கள் மத்தியில்  நம்பிக்கை நிலவுகின்றன.
         
        பூசணிக்காயில் மனிதனின் உருவம் இட்டு கரும்புள்ளி இட்டு வைக்கின்ற வழக்கம்மும் உள்ளது. இது எதற்காக எனில் புது வீடு கட்டுகின்ற போது பல மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்வர் இது மட்டும் இல்லாமல் விளைந்த நிலத்தில் வைக்கோல்இ துணி முதலியவற்றால் உருவம் செய்து கரும்புள்ளி இட்டு வைக்கின்ற வழக்கமும் உள்ளது.  இதனையும் கண்சிறு கழித்தல் என்ற நம்பிக்கையில் அடக்குவர்.  காது குத்தும் வழக்கத்தில் உள்ள நம்பிக்கைகள் குழந்தைகளுக்கு சிறு காயமானது ஏற்படாவிட்டால் எவனானவன் அந்த குழந்தையினை தூக்கி சென்று விடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாக காது குத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் .காது குத்துகின்ற வழக்கமானது தமிழ்நாடு மட்டுமின்றி ஆசியாஇ எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. காதினை குத்துகின்ற போது ஏதேனும் உலோகத்தினையும் அணிவிப்பர் தீமைகள்  தருகின்ற ஆவிகளானது தலைஇ வாய் இமூக்குஇ காது ஆகிய உறுப்புக்கள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு தீய ஆவிகளை விரட்டுகின்ற சக்தியாக காதில் ஏதேனும் ஒரு உலகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவி நுழைவதை தடுத்து விடலாம். என்ற நம்பிக்கையில் இந்த பழக்கமானது ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

திருமணம் பற்றிய நம்பிக்கைகள்
       திருமணத்திற்கு முன்னர் ஜாதக பொருத்தம் பார்ப்பது உண்டு. அவ்வாறு பார்க்கின்ற போது பொருத்தம் இருக்கிறது எனில் பெரும்பாலான ஜாதகங்களில் ஆணினுடைய இரத்த பிரிவும்(பிளஸ்ஸாக) இருந்தால் பெண்ணினுடைய ரத்த பிரிவும் பிளஸ்ஸாக இருக்கும். அதனைப் போன்றே ஆணினுடைய இரத்தப் பிரிவு மைனஸ் ஆக இருப்பின் பெண்ணினுடைய ரத்த பிரிவும் மைனஸாக இருக்கும் இவ்வாறாக ஜாதக பொருத்தம் பார்க்கின்றபோது திருமணத்திற்கு பிறகு குழந்தை பேற்றில் சிக்கல் வராமல் இருப்பதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரே வீட்டில் இரண்டு திருமணங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தினால் ஒரு குடும்பமானது சிறக்கும் மற்றொரு குடும்பமானது தாழ்ந்த நிலையினை அடையும் என்றொரு நம்பிக்கையும் உள்ளது. திருமணத்திற்குபின் அந்த பெண்ணை வெள்ளிக்கிழமை அன்று கணவன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்றும் திருமணம் பற்றிய கனவு நல்லது அல்ல என்றும் நம்ம படுகின்றது.கர்ப்பிணி பெண்கள் பற்றிய நம்பிக்கைகள் கர்ப்பமாக இருக்கின்ற பெண்கள் (நிலைப்படி) தலைவாசலில் உட்காரவும் கூடாது தலை வைத்து படுக்கவும் கூடாது என்று நம்பப்படுகிறது கர்ப்பிணிப் பெண்கள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுக்காவிட்டால் குழந்தையினுடைய காதில் சீல் வடியும் என்று நம்புகின்றனர் இது கர்ப்ப காலத்தில் இருக்கின்ற பெண்களுக்கு நம்பப்படுகின்ற நம்பிக்கைகளாக கருதப்படுகின்றது.

மழை பற்றிய நம்பிக்கைகள்
         
       மின்னலானது வடக்கேயும் தெற்கேயும் தோன்றினால் மழை வரும் என நம்புகின்றனர் அதனைப் போன்று தட்டான் தாழப் பறந்தாலும் கோழிகளானது தனது சிறகை விரித்து மண்ணில் பதுங்கினாலும் மழையானது வரும் என்று மழை கூறிய நம்பிக்கைகளாக எண்ணப்படுகிறது.

நட்சத்திரங்கள் பற்றிய நம்பிக்கைகள்
         
         பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணியையே ஆள்வான் என்றும் அவிட்ட நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் நம்பப்படுகின்றது.

அங்க பலன்கள் பற்றிய நம்பிக்கைகள்
         
       மாறுகண் அதிஷ்டம் என்றும் மாறுகண் மாறி மாறி யோகம் என்றும் கூறுவர் முன்பல் நீண்டிருந்தால் எதிர்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் சுருட்டை முடி சோறு போடும் என்றும் கோரை முடி கோத்திரத்துக்கு ஆகாது என்றும் கையில் ஆறு விரல் இருந்தால் யோகம் என்றும் நம்பப்படுகிறது.

முடிவுரை
         
       நம்பிக்கையில் தான் மனித வாழ்க்கையானது இருக்கிறது என்பார்கள் அந்த நம்பிக்கையில் இறை நம்பிக்கை திருமணம் பற்றிய நம்பிக்கை கர்ப்பிணிபெண்கள் பற்றிய நம்பிக்கை மழை பற்றிய நம்பிக்கைகள் நட்சத்திரம் பற்றிய நம்பிக்கைகள் அங்க பலன்கள் பற்றிய நம்பிக்கைகள் முதலியவற்றில் உள்ள நம்பிக்கைகளில் சிலவற்றினை கண்டு தெளிந்தோம்.

துணை நூற்பட்டியல்
1.நாட்டுப்புறவியல் ஓர் ஆய்வு, சு சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சிங்கார தெரு பாரிமுனை, சென்னை -600108.

2.தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணர், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை 1974

3.புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர் உ.வே, உ. வே. சா நூல் நிலையம், சென்னை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. சாந்தி
உதவி ப்பேராசிரியர்
இ எஃப் எல் தமிழ்
எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்    நிறுவனம்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் சென்னை-89

இனியவை கற்றல் மின்னிதழ் வாழ்த்துக் கவிதை| முனைவர் ஆசுகவி இனியா

இனியவை கற்றல் மின்னிதழ் வாழ்த்துக் கவிதை - முனைவர் ஆசுகவி இனியா
🔔 இனியவை எல்லாம் இங்கேதான்

இனிமையாக எங்கும் இருப்பதில்லை

இனிப்பை உண்டால் அதனாலே

இனிப்பின்றி எல்லாம் வந்திடுதே

 
🔔 இனியவை இங்கே கற்றாலே

இன்பம் இன்பம் இன்பமே

இனியவை இங்கே கற்பித்தாலோ

இன்பம் இன்பம் பேரின்பமே

 
🔔 இன்பமாய் ஆய்வுகள் எழுதிடவே

மின்னலாய் வந்ததே இனியவை கற்றல்

இன்பமாய் செம்மொழி கற்றிடுவீர்

இனியவை கற்றல் மின்னிதழில் பதிவிடுவீரே

 
🔔 இனிமை வகையில் எழுதிடலாம்
என்றும்
இன்பம் இன்பமே எய்திடலாம்

இனிதான் நன்றாய் வாழ்ந்திடவே

இனியவை கற்றல் மின்னிதழில் வாசிக்க

 
🔔 இன்சுவை இன்சுவை இன்பங்களே

இன்சுவை தமிழால் சேர்ந்திடுமே

இன்சுவை தமிழைக் கற்றுக் கொடுத்திட்டால்

யாவருக்கும் நன்மை பயத்திடுமே

 
🔔 உலகம் நன்மை பெற்றிடவே

கவிதை தந்தவன் தமிழன் அன்றோ

உன்னதம் என்பது எதில் என்றால்

பிறரை உயர்த்தி மகிழ்தல் தானன்றோ

 
🔔 இனியவை கற்றல் மின்னிதழிற்கே

இனிய வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

இனிய தோழா ஆசிரியர் செப்பியதே

 
கவிதையின் ஆசிரியர்

தமிழ்த்தாரகை முனைவர் ஆசுகவி இனியா,

உலகத்தமிழ்த்திருக்குறள் மன்றம், சென்னை – மைசூர்

 

Veerama Munivar’s Tamil work among foreign Tamil scholars|Dr.V.Kalaiyarasi

அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் வீரமாமுனிவரின் தமிழ்ப் பணி
Abstract
      Veeramamunivar left a unique mark among the Christian priests who visited Tamil Nadu. All his books are excellent. He made some changes in writing in Tamil. He used punctuation marks correctly. He reformed the spelling. He created dictionary systems. This article is about Veeramamunivar work in Tamil.


“அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி”

ஆய்வுச் சுருக்கம்
         
         தமிழகத்திற்கு வருகைதந்த கிறித்துவ பாதிரிமார்களில் வீரமாமுனிவர் தனித்த அடையாளம் பதித்தார். அவரது நூல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழில் எழுதுவதை ஒரு சில மாற்றம் செய்தார். நிறுத்தற் குறியீடுகளை சரியாக பயன்படுத்தியுள்ளார். எழுத்து சீர்த்திருத்தம் செய்தார். அகராதி முறைகளை உருவாக்கினார். வீரமாமுனிவரின் தமிழ்ப் பணி பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.

முன்னுரை
      உலகம் முழுவதும் தமிழின் பெருமை சுடர் ஒளிவிட்டுப் பரவும் உயர்வான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது எனில் மிகையாகாது. தமிழை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்களும் குடத்தினுள் இருந்த விளக்கை குன்றின்மேல் இட்ட விளக்காகச் செய்த பெருமை வெளிநாட்டு அறிஞர்களின் பங்கு உண்டு என்றேச் சொல்லலாம். கிறித்துவ சமயத்தைச் சார்ந்த வெளிநாட்டவர்கள் வரும்வரை அனைத்தும் செய்யுள் இருந்தன. தமிழ் தனிமொழி இல்லை. சமஸ்கிருத்தின் ஒரு பிள்ளை என கூறப்பட்டு வந்த காலத்தில் வடமொழி வேறு, தமிழ்மொழி வேறு, தமிழ்மொழி தனி இனத்தைச் சார்ந்தது என உலகறியப் பறைசாற்றினர்கள் ஐரேப்பியர். அந்த வகையில் அயல் நாட்டுத் தமிழ் அறிஞர்கள் வரிசையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த தொண்டு பெருமைக்குரியது. அதைப் பற்றி இக்கட்டுரையில் விவரிக்கிறது.

வீரமாமுனிவர் தோற்றம்
       1680 இல் நவம்பர் மாதம் 08 ஆம் நாள் பாதிக்கப்பட்டார். இவருடைய கூர்மையான நோக்கும் மொழிகளைக் கற்பதில் அவருக்கு இருந்த மிதமிஞ்சிய திறமையும் கத்தோலிக்க சமயக்குழுவிற்கு ஓர் அபூர்வச் செல்வமாய் இருந்தன. 1721-இல் நாடல் பாதிரியார் பாரீசுக்குக் கீழ்வருமாறு எழுதினார் என்ன வெனில் “பெஸ்கி பாதிரியார் தமிழை முழுமையாக அறிந்துள்ளார். அழகிய செய்யுள்களை அவர் எழுதுகிறார். வேறு எந்தச் சமயம் பணியாலும் இவ்வித்தையை இதுவரைக் காத்திருக்கவில்லை என்று குறிப்பட்டுள்ளார்.

பெஸ்கியின் தமிழ்ப்பணி
      மாணவர்களில் அறிவுக் கூர்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தமிழ் இலக்கணம், யாப்பு, அணி முதலியவற்றைக் கற்றுத் தந்தார். எழுப்பட்ட இலக்கண விதிகளின்படி மொழியின் ஒலிப்புத் தன்மையைக் கடினமாக இருப்பன அறிந்த இவர் ஓர் ஆசிரியனின் வாயால் கேட்டு அதை அப்படியே திரும்பத் திரும்ப ஒலித்துப் பழகினால் குறுகிய காலத்திலும் எளிமையாகவும் இருப்பதாக தம்முடைய கொடுந்தமிழ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாற்றல் என்பது ஒருமொழியின் ஒலிப்புத் தன்மையால் ஏற்படுகிறது என்பதை அவர் உணர்ந்திருத்தார். தமிழில் உள்ள நெடில் குறில் ஒலிகளில் வேறுபாடுகள் தனித்த இயல்புடையனவாக இருப்பதோடு அந்நியர் புரிந்து கொள்ளக் கடினமாகவும் உள்ளன என பெஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்நியர்களால் ஒலிக்கமுடியாதவை அவர்கள் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ள உயிர்மெய்எழுத்துக்கள் நான்கைக் குறிப்பிட்டுகின்றார். அவ்வெழுதுகள் ட, ண, ள, ழ என்பவையே. பாதிரியார்கள் தமக்குப்பின்னே வருகின்றவர்களின் உருதிக்காகவும், எளிதா வாய்விட்டு கூறும்நிலையை உருவாக்கவும் தமிழை எழுவதில் ஒருசில மாற்றத்தைக் கொண்டு வந்தனர். தமிழ் எழுத்துக்களில் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தி புதுமுனையைப் புகுத்தியவர்கள் இவர்களே. தமிழில் சொற்களைத் தனித்தனியாகப்பிரித்து படிக்கும்வழக்கத்தை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவர் அயல்நாட்டினர்தான். இம்மாற்றம் தமிழர்களிடையே பெரும்ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம் அம்முறையே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களைப்பிரித்து எழுதும் முறையை உரைநடைநூல்களில் மட்டும் கையாண்டனர். நல்லதமிழ்பற்றிய ஆய்வைப் பெஸ்கி வெற்றிகரமாகச் செய்து முடித்தார் என்பதை அவருடைய செந்தமிழ் என்ற நூலின் மூலம் அறிகிறோம்.

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்த்திருத்தம்
     இத்தாலியிலிருந்து சமயப் பணிக்காக வந்த இவரின் தேம்பாவணி என்ற காப்பியத்தின் மூலம் அழியாத புகழைப்பெற்றுள்ளார் எனலாம் பலவகையிலும் தமிழுக்குத் தொண்டு செய்துள்ளார். பழங்காலத்தில் சொற்களுக்குப் பொருள்தரும் நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவில் நிகண்டு என்னும் அமைப்பிலேயே இருந்தன. பலவகைப் பொருட்கள் தலைப்புகளின் கீழ் அவ்வப்பொருள் பற்றிய சொற்கள் தரப்பட்டன. ஐரோப்பிய அகரவரிசையில் சொற்கள் அனைத்தும் பொருள்தரும் முறையாகிய அகராதி முறையில் முதன் முதலில் தமிழில் நூலை உருவாக்கியவர் வீரமாமுனிவர். அந்த அகராதி தமிழ் எழுத்துக்களில் எகரத்துக்குப் புள்ளி இருந்தது. நெடில் ஏகாரத்திற்குக் கீழ் விளைவு தராமல் எழுதப்பட்டு வந்தது.
          அதே வகையால் குறில் ஒகாரத்திற்கும் புள்ளி இருந்தது நெடில் ஓகாரத்திற்குக் கீழ் வளைவு இல்லை. மற்ற உயிரெழுத்துக்களுக்கு ஒப்புமைப்படும் வகையில் குறிலுக்குப்புள்ளி இல்லாமல் நெடிலுக்கும் சிறிதுமாற்றம் செய்து அதாவது இன்றைய நடைமுறையில் உள்ளகுறில் நெடில் எழுத்துக்களை மாற்றி அமைத்தவர் இவரே இவர் செய்த இந்த எழுத்துச்சீர்திருத்தமே இன்றுவரை பயனுள்ளதாய் போற்றப்படுகிறது.

வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்
       இவர் படைத்த நூல்கள் ஏராளம். எனினும் தேம்பாவணியை என்ற காப்பியம் இவருக்கு புகழையும் பெருமையையும் தேடித் தந்தது. அது மட்டுமன்று திருக்காவலூர்க்கலம்பகம் கித்தேரியம்மாள் அம்மானை என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் இயற்றினார். குட்டித்தொல்காப்பியம் என போற்றப்படும் பெருமைக்குரியதாக அந்நூல் உள்ளது.

முடிவுரை
         
      தமிழ்மொழியில் வளர்ச்சியானது ஐரோப்பிய அறிஞர்களில் வரவால் மறுமலர்ச்சி அடைந்தது. அந்தவகையில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த பெஸ்கி வீரமாமுனிவர் உயரியமேலான இடத்தை தம்படைப்புகளில் மூலம் தமிழ் இலக்கியத்தில் பெற்றிருக்கிறார். இவர் கொண்டுவந்த எழுத்துச்சீர்திருத்தம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செய்யுளில் உள்ள செய்திகளை உரைநடையில் கொண்டுவந்தவர். தமிழ்கற்று தமிழாகவே வாழ்ந்த இவரது பணிகள் சொல்லில் அடங்காது. இவருக்கு நிகர் இவரே.

பார்வை நூல்கள்
1.நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர் -பூவண்ணன்

2.தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் – என்.வி. கலைமணி

3.வீரமாமுனிவரின் இலக்கிய ஆய்வரங்க மலர் – அருளாளர் அகத்தியன் அடிகள்

4.வீரமாமுனிவர் – ம.செ.இரபிசிங்.
 
Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வ. கலையரசி,

உதவிப் பேராசிரியர்,

பதிப்புத்துறை,

திராவிடப் பல்கலைக்கழகம்,

குப்பம். சித்தூர் மாவட்டம் 517 426.

 

 

தாண்டிக்குடி மலை பகுதியில் மறைந்திருந்த மாபெரும் பெருங்கற்காலப் பேரதிசயம்|மூ.செல்வம்

பெருங்கற்காலப் பேரதிசயம்
     மிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், எண்ணற்ற வரலாற்றுப் புதையல்களைத் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியான கொடைக்கானல் அருகே, தாண்டிக்குடி மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பெருங்கற்கால நினைவுச் சின்னம், அக்காலத் தமிழர்களின் வாழ்வியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக அமைப்பு குறித்த நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. 50 அடி விட்டமுள்ள வட்ட வடிவக் கல் கோட்டைக்குள், 13 பெரிய கல்திட்டைகள் (Dolmens) அடங்கிய இந்த அமைப்பு, இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்களிலேயே தனித்துவமானதும், மிக முக்கியமானதாகவும் விளங்குகிறது.
         
      இந்த நினைவுச் சின்னத்தின் கட்டுமானம், எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாத ஒரு காலத்தில், மனித உழைப்பையும் அறிவையும் மட்டுமே கொண்டு எப்படி சாத்தியமானது என்பது முதல் ஆச்சரியம். இதுகுறித்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான மூ.செல்வம் இது குறித்துக் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், தாண்டிக்குடி அருகே கவியக்காடு பேத்திரி மலைப் பகுதியில் பேராசிரியர் மாணிக்கராஜ், ஆசிரியர் கருப்பசாமி ஆகியோருடன் இணைந்து கலாய்வு செய்ததில், இந்தப் பிரம்மாண்டமான பெருங்கற்கால நினைவுச் சின்னத்தை கண்டறிய முடிந்தது.
           
      சுமார் 50 அடி விட்டத்தில், எட்டு அடி உயரத்திற்கு வட்ட வடிவில் கற்களைக் கொண்டு ஒரு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண கல் வட்டம் அல்ல; மாறாக, ஒன்றன் மீது ஒன்றாக கற்களை நேர்த்தியாக அடுக்கி உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை போன்ற அமைப்பு. சிமெண்ட் அல்லது காரை போன்ற பிணைப்புப் பொருட்கள் இல்லாமல், கற்களின் எடை மற்றும் ஒன்றோடொன்று பொருந்தும் தன்மையைக் கொண்டு மட்டுமே இந்த உயரமான சுவரைக் கட்டியுள்ளனர். இது அவர்களின் புவியீர்ப்பு மற்றும் கட்டமைப்பு பற்றிய ஆழமான அறிவைக் காட்டுகிறது.
         
        வட்டத்திற்குள் 13 கல்திட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கல்திட்டையும் சராசரியாக 12 அடி நீளம், 4 அடி அகலம், 5.5 அடி உயரம் கொண்டவை. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்பாறைகள் பல டன் எடை கொண்டவை. பல டன் எடை கொண்ட இந்தப் பாறைகளை மலை உச்சிக்குக் கொண்டு வர, மர உருளைகள், கயிறுகள் மற்றும் இதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் ஒருங்கிணைந்த உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.  இவையனைத்தும் திட்டமிடப்பட்ட, நுட்பமான பொறியியல் அறிவின் சான்றுகளாகும். சாதாரண புதைகுழிகளிலிருந்து இந்த அமைப்பு முற்றிலும் வேறுபடுகிறது. இதன் பிரம்மாண்டத்திற்குப் பின்னால் ஆழமான சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் உள்ளன.

      இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான ஒரு அமைப்பை உருவாக்க, ஒரு சமூகம் முழுவதையும் வழிநடத்தும் அதிகாரம் கொண்ட ஒரு தலைவன் இருந்திருக்க வேண்டும். இது ஒரு குலத்தின் தலைவனுக்கோ, அரசனுக்கோ அல்லது ஒரு முக்கிய வீரர்களின் கூட்டத்திற்கோ எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களின் தொகுப்பாக இருக்கலாம். மலை உச்சியில், தொலைவிலிருந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் அதிகாரத்தின் வெளிப்பாடு, அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை மற்ற குழுக்களுக்கு அறிவிக்கும் ஒரு ஆதிக்க அல்லது எல்லைக்குரிய அடையாளமாகவும் இருந்திருக்கலாம்.
         
          இத்தகைய பெரிய கட்டுமானப் பணியை மேற்கொள்வது, அந்த சமூகத்தின் மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் கூட்டு சக்தியையும், நம்பிக்கையையும், தலைவன் மீதான விசுவாசத்தையும் வலுப்படுத்த உதவியிருக்கும். மலை உச்சியில் அமைந்திருப்பதாலும், வட்ட வடிவத்தில் இருப்பதாலும், இதற்கு வானியல் முக்கியத்துவம் இருக்கலாம். குறிப்பிட்ட நட்சத்திரங்கள், சூரிய உதயம் அல்லது மறைவு போன்றவற்றைக் குறிக்கும் வகையில் இதன் வாசல்களோ அல்லது கல்திட்டைகளோ அமைக்கப்பட்டிருக்கலாம். இது நுணுக்கமான ஆய்வுக்குரியது.
         
        மறுபிறவி அல்லது மரணத்திற்குப் பின்னான வாழ்வில் நம்பிக்கை: இறந்தவர்களுக்காக இவ்வளவு பெரிய, நிரந்தரமான ‘கல் வீடுகளை’ அமைத்திருப்பது, அவர்கள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இறந்தவர்களின் ஆன்மா தொடர்ந்து வாழ்வதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் நம்பியிருக்கலாம்.
 இந்த 13 கல்திட்டைகளும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் அல்லது கோத்திரத்தின் பல தலைமுறையினருக்கானதாக இருக்கலாம். இது அவர்களின் மூதாதையர் வழிபாட்டு மரபின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த இடத்தை ஒரு புனிதமான இடமாகக் கருதி, குறிப்பிட்ட காலங்களில் சடங்குகள் செய்யவும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
  உணவு தேடுவதற்கே முழு நேரத்தையும் செலவிடும் ஒரு நாடோடி சமூகத்தால் இத்தகைய அமைப்பை உருவாக்க முடியாது. நிலையான வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றின் மூலம் போதுமான உணவு உற்பத்தியும், உபரி நேரமும், வளங்களும் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
         
      தமிழகத்தில் செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் மறையூர், கர்நாடகாவின் ஹிரே பெனக்கல் போன்ற இடங்களிலும் பெரிய பெருங்கற்கால தளங்கள் உள்ளன. இருப்பினும், தாண்டிக்குடி கவிக்காடு பேத்திரி மலையில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அமைப்பு பல காரணங்களால் தனித்துவமானது. தனித்தனியாக சிதறிக் கிடக்கும் கல்திட்டைகளைப் போலல்லாமல், ஒரு பெரிய வட்ட வடிவக் கோட்டைக்குள் 13 கல்திட்டைகள் ஒருங்கே அமைந்திருப்பது மிகவும் அபூர்வமானதாகும். 8 அடி உயர சுற்றுச்சுவருடன் கூடிய அமைப்பு இதுவரை முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. கல்திட்டைகளின் உள் அளவும் (12 அடி நீளம்) சராசரியை விடப் பெரியது.
         
         சமவெளிகளை விட, இவ்வளவு உயரமான மலை உச்சியில் இத்தகைய பிரம்மாண்டமான தளம் அமைந்திருப்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. இது, தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான பெருங்கற்காலத் தளங்களில் ஒன்றாக இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த தாண்டிக்குடி பெருங்கற்காலத் தளம், வெறும் கற்களின் குவியல் அல்ல. அது ஒரு நாகரிகத்தின் உச்சம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இந்த மண்ணில் வாழ்ந்த நம் மூதாதையரின் அறிவுக்கும், ஆற்றலுக்கும், நம்பிக்கைக்கும் கட்டப்பட்ட ஒரு காலப் பெட்டகம். இதன் முழுமையான மர்மங்களை அவிழ்ப்பது, தமிழகத்தின் தொன்மை வரலாற்றின் அறியப்படாத பல பக்கங்களைப் புரட்டிப் போடும்.
         
          இந்தக் கண்டுபிடிப்பைப் பாதுகாத்து, அதன் முழுமையான வரலாற்றை மீட்டெடுக்க  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை (ASI) ஆகியவை, இந்த இடத்தை, உடனடியாக கவனம் செலுத்தி, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலை ஆசிரியர்,

தொல்லியல் ஆய்வாளர்,

அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு, தேனி.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »