மறக்க முடியுமா (சிறுகதை)

 

நீண்ட நாளுக்குப் பிறகு அவன் வெளியூர் வேலையிலிருந்து தன் ஊருக்கு வந்து மகிழுந்தை எடுத்து மண் சாலையில் புழுதி பறக்க ஓட்டிக்கொண்டு போகும்போது ஆடுகள் தன் எதிரே வந்துக்கொண்டு இருந்தது பக்கமாய் வந்ததும் ஆடுகள் தன்னை கடந்துபோகட்டும் என்று மகிழுந்தை நிறுத்தி சாளரத்தைப் பாதியாக திறந்து வெளியே பார்த்தான். ஆடு மேய்ப்பவளின் ஒரு கையில் குச்சி ஒன்றும், இடுப்பில் இரண்டு வயது குழந்தையை அணைத்தபடி மற்றொரு கையில் தூக்குச் சட்டியும் இருந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை அழுக்காகவும், காதிலும் மூக்கிலும் ஒன்றுமில்லாமலும், நெற்றியில் பொட்டு இல்லாமலும், தலைமுடியில் பூவும் இல்லாமலும் முடியெல்லாம் முகத்தில் விழுந்திந்த முடியைக் குச்சி வைத்திருக்கும் கையாலே சரி செய்துக்கொண்டு அவனைப் பார்த்து விட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு போனாள்.

                பெயர் தான் முல்லைக்கொடி. ஆனால், இலையையும் பூவையும் உதிர்த்துவிட்ட முல்லைக்கொடி போல் அவள் காட்சியளித்தாள்.

                பெயர்தான் மகிழன். ஆனால், முல்லைக்கொடி அவனைக் கடந்துசென்ற பிறகு அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை

                மகிழன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டு போகையில் அவன் மனதில் பல எண்ணங்கள் திரைபோட்டன பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றின. அவை

                அவன் வெளியூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்து தன் மூன்றக்கு மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு தொலை தூரக் கருவி தன் ஊரைப் பார்த்தான். ஒரு பக்கம் தென்னந்தோப்பும் நெல் வயல்களும், மறுபக்கம் வாழைத் தோட்டமும் கரும்பு வயல்களும் எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளித்தன அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கையில் மண் சாலை வழியாகத் தன் ஊருக்கு கிழக்குப் பக்கமாக இருக்கின்ற மேட்டு நிலத்தில் ஆடு மேய்ப்பதற்காக இரண்டு பெண்கள் ஆட்டை ஓட்டி வந்தார்கள் அதை தொலைதூரக்கருவியில் பார்த்த பெண்களில் ஒருத்தி அழகென்றால் அவ்வளவு அழகு. ஒரு அழகு இன்னொரு அழகை சுமந்து கொண்டு போவதுபோல் ஆட்டின் பின்னால் வந்தாள். அந்த அழகைப் பார்க்க அவன் மொட்டை மாடியிலிருந்து இறங்கி அவசர அவசரமாக ஓடி வந்து முல்லைக் கொடியைப் பார்ப்பதற்குள் அவள் கடந்துபோய்விட்டாள். ஆனால், மகழனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதயம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது போல் அவனுக்குத் தோன்றியது.

                கல்லூரியில் படித்த பெண்களில் இவ்வளவு அழகான பெண்களை நான் பார்த்ததே கிடையாதே. இவள் யாராக இருக்கும் ஆடு மேய்க்கும் குடும்பத்திலா பிறந்திருப்பாள் ச்சே! ச்சே! இருக்காது. அந்த ஊருக்கு விருந்தாளியாக வந்திருப்பாள். அவள் உறவினர்களுடன் ஆடு மேய்ப்பதற்காக வந்திருக்கலாம் என்று தனக்குள் நினைத்தான்.

                அவள் எந்த ஊராக இருக்கும்? எங்கு படிப்பாள்? கம்பன் இராமனின் உடல் அழகை வருணித்ததைவிட, புகழேந்தி தமயந்தியின் அழகை வருணித்ததைவிட இவள் இவ்வளவு அழகாக இருக்கிறாளே! இவள் அழகுக்கு யாரும் நிகரில்லை என்று நினைத்துவிட்டு அவள் மீண்டும் எப்பொழுது வருவாள்? அவளை எப்போது பார்ப்பது? அவள் என் உயிரை குடித்துவிட்டாள் என்று நினைத்து நனைத்து ஓர் இரவு கழிவதற்குள் அவன் பட்ட பாடு எத்தனை எத்தனையோ! மறுநாள் காலையில் முல்லைக்கொடியும், நெய்தலியும் வரும் வழியில் காத்திருந்தான். அவர்கள் ஆடுகளை ஓட்டிவருவதைப் பார்;த்ததும். மகிழன் மனது திருவிழா வைத்ததுபோல இருந்தது.

                அவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள் அவனுடைய மனம் அவர்களைத் தொடர்ந்து செல்லலாமே! என்றது இருந்தாலும் சிறிது நேரம் கழித்துச் சென்றான். அவர்களிடம் எப்படி பேசுவது என்று தயங்கினான். அவர்களே! என்ன சாமி வேண்டும்என்றார்கள்.

                ஆட்டுப்பால் குடித்தால் உடல் பலம் பெருகும் என்று கூறி எனக்கு ஆட்டுப்பால் வேண்டும் என்றான்.

                சாமி உங்களைப் பார்த்தால் உயர்ந்த குடியில் பிறந்தவர் போல் தெரிகிறதுஎன்றார்கள்.

                பரவாயில்லை உங்களுடைய சோற்றுச் சட்டியின் மூடியில் பால் கறந்து கொடுங்கள்என்றான்.

                ஏ! முல்லைகொடி ஆட்டின் காலை பிடித்தக்கொள். நான் பால் கறக்கிறேன்என்று தோழி நெய்தலி கூறி பாலை கறந்து பூப்போன்ற முல்லைகொடி கையில் கொடுத்தாள்.

                அவனும் வாங்கி பாலைப் பருகினானோ இல்லையோ கண்ணால் அவள் அழகைப் பருகினான்.

                மீண்டும் வருகிறேன்என்று கூறி விட்டு விட்டு வீட்டிற்கு வரும்போது இந்த கிறுக்கின் அழகு என்னைக் கிரக வைக்கிறது. திக்கு முக்காட செய்கிறது. தரைமீது நடக்க முடியாமல் செய்கிறது. தன்னுடைய மனசு கட்டுக்கு அடங்காமல் அவளிடமே ஓடச் செய்கிறது. தினர வைக்கிறது பதரவைக்கிறது. குளிர், காய்ச்சல் வர வைக்கிறது என்று நினைக்கின்றபோதே வீடுவந்து சேர்ந்தான். தன் படுக்கையின் மேல் போர்வையை எடுத்து போர்த்தி படுத்துக்கொண்டான். ஆனால் கண் மூடினாலும் மனசின் கதவு மூடவில்லை.¬

                அவள் மனசுக்குள் இறக்கி அவனுடைய உயிரை குடைகிறாள்!

                அவனுடைய இரவுக்கு வெளிச்சமாக நிலவாய் வந்து  நிற்கிறாள்.

                அவன்  இதயத்தை கூறுபோட்டு விற்கிறாள்.

                பக்கத்தில் அழைத்து பேசாமல் துரத்துகிறாள். அவள் அழகை பயன்படுத்தி அவனை அடிமை யாக்குகிறாள்.

                இப்படிப்பட்ட பெண்னை அவன் நினைகையில் காமன் கெஞ்சிய பிறகும் கண்டுக்கொள்ளாமல் போகின்ற அழகை கொண்டவள் பாரதி கனவில் குயில் பாட்டில் தோன்றிய பெண்ணைவிட இவள் அழகானவள்  என்று நினைத்து மறுநாள் அவளைப் பார்த்ததும் கேட்டுவிட வேண்டும் என்று இரவு முழுக்க உறக்கம் கொள்ளாமல் விழித்திருந்தான் கோழி கூவியதும் மகிழனுக்கு உயிர் வந்ததுபோல் இருந்தது.

                பொழுது விடிந்ததும், அவள் வழக்கம்போல் வரும் வழியில் சென்று அமர்ந்து கொண்டான். ஆனால், அவள் வரவில்லை. அதற்கு பதிலாக அவளுடைய தந்தையார் ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தார்.

                முல்லைகொடிக்கு என்னாச்சோ? ஏதாச்சோ என்று அவன் மனம் படபடத்தது.

                அவன் மகிழுந்தை எடுத்தக்கொண்டு நகரத்திற்கு செல்லலாம் என்று நினைத்து புறப்பட்டான்.

                ஊரை கடப்பதற்கு முன்னாலே அவள் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். மகிழுந்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகே சென்றான். அவ்வழகின் அருகே நிற்கமுடியாமல் தவித்தான் அவளே என்ன சாமிஎன்று கேட்டாள்.

                மகிழன் தயங்கி, தயங்கி பேச ஆரம்பித்து நான் உன்மீது அன்பு செலுத்தகிறேன். உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்என்று கூறினான்.

                சரி நீங்கள் கேட்டதில் தவறேதும் கிடையாது ஆனால், நாங்கள் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் நீங்களோ! உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். நாங்கள் ஆடு மாடு மேய்க்கின்றவர்கள். எங்கள் மீது சாணம் கோமியம் போன்ற நாற்றமும் நாங்கள் இருக்கும் இடத்திலும் எப்போதும் வீசுமே! அதுமட்டுமல்லாமல்  ஆடுகள் இறந்து விட்டால் அதை வெட்டி உறவினர்க்குக் கொடுத்துப் போக மீதியை உப்புக்கண்டம் போட்டு பாறை மீது காய வைப்போம் அதை காகம், பருந்து  வந்து  எடுத்தக்கொண்டு  போகாமலிருக்க பறவைகளை ஓட்டுவோம். அதைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன், என்மீது புலால் நாற்றம் வீசுகிறது. ஆகவே உங்களுக்கும், எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதுஎன்று கூறி மறுத்து விடுகிறான்.

                மேலும் உங்கள் உயர் குடியிலே பிறந்த உங்கள் தந்தையார் கைக்காட்டுகின்ற பெண் ஒருத்தியை மணந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை நல்லாயிருக்கும், நானும் எங்கள் குடியிலேயே பிறந்த ஆடவன் ஒருவனை மணந்து கொள்கிறேன், நீங்கள் வந்த வழியாக போகலாம் என்றாள்.

               முடியாது நீ சம்மதம் சொல் நாம் இரண்டு பேரும் எங்கோ சென்று திருமணம் செய்து கொண்டு ஏதாவது ஒரு வேலை செய்து நிம்மதியாக வாழலாம்என்றான் மகிழன்.

                நாம்  இரண்டு பேரும் நிம்மதியாக வாழலாம். ஆனால், இவ்வூரில் இருக்கின்றவர்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள்என்றாள்.

                அதற்கு மகிழன் ஏன் என்றான்.

                நீங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர் நான் தாழ்ந்த குடியில் பிறந்தவள் நான் உங்களை மயக்கி அழைத்துச் சென்றுவிட்டேன் என்று கூறி  உங்கள் ஆள்முன் எங்கள் ஊரில் இருப்பவர்களை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் கூரையைப் பிரித்தப் போட்டு தீயிடுவர்கள் காதலர்கள் எங்கே? என்று கேட்டு மேலும் கொடுமை செய்வார்கள். நம்மை தேடி வந்து கண்டு பிடித்து உங்கள் தந்தையார், என் மானத்தையே வாங்கி விட்டாயேஎன்று கூறி நம்மை வெட்டி ஆற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ போட்டு விடுவார்கள். அப்படி இல்லையென்றால் உன்னை மட்டும் அழைத்துக்கொண்டு, என்னைக் கொன்று தொடர் வண்டி பாதையில் வீசிவிட்டுச் செல்வார்கள். இதெல்லாம் நமக்குத் தேவையா?

                நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையைரை வேதனையில் தவிக்கவிட்டு விட்டு ஏன் நாம் இன்பத்தைத் தேடிப் போக வேண்டும். ஏதோ எங்கள் ஊரில் உள்ளவர்கள் உங்கள் ஊரின் மேட்டு நிலத்தில் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு போய் மேய்க்கின்றார்கள். உங்கள் ஊரில் உள்ளவர்களும் எங்கள்  ஊரைக் கடந்துதான் போக வேண்டும். நம்முடைய செயலால் இரண்டு ஊர்களுக்கும் சண்டை ஏற்பட்டு காலம் முழுவதும்  தீராத பகையாக இருந்துவிடும். ஆகவே நம் காதல் பொருந்தாதுஎன்று கூறிவிடுகிறாள்.

                அதற்கு மகிழன் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே!என்றான்.

                அதற்கு முல்லைக்கொடி காதலுக்கு உயர்வு தாழ்வு இருக்கிறது நீங்கள் படிச்சவங்க அதனால், புரிந்துகொண்டு புறப்படுங்கள் என்றாள்.

                அவன் நகரத்திற்குப் புறப்படாமல் கனத்த இதயத்தோடு வீட்டிற்கு திரும்பி விட்டான்.

                அவனுடைய காதல் செடி ஒரே நாளில் பூத்துத் குளுங்கி, காய்ந்து கனிக்காமலே காய்ந்து கருகி பட்டுப் போய்விட்டது.

                உலகத்தில் தீயைப் போல் மக்களை அழித்து கொரோனா காய்ச்சல் போல் அவனுடைய காதலை உயர்வு, தாழ்வு என்ற நோய் அழித்தது.

          அவன் இதயத்திலிருந்து அவள் ஏணி இல்லாமலே இறங்கிவிட்டாள்.

                கூட்டுக்குள் இருந்த குஞ்சு இறக்கை முற்றியதும் அந்த கூட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் பறந்து சென்றதை போல் அவனுடைய நெஞ்சங்குழியிலிருந்து முல்லை கொடி பறந்துவிட்டாள்.

                முல்லை கொடி பேசிய ஒவ்வொரு  வார்த்தையும்  அவனை சாட்டையில்லாமல் அடிப்பதுபோல் இருந்தது.

                அவனுடைய வெளிச்சத்திற்கு கருப்பு பூசிவிட்டாள். அவனுடைய வண்ண நிறமாக வானவில் ஒரே நிறமாக மாறிவிட்டது.அங்கு அவ்விருவரும் பேசியது யாருக்கும் தெரியாது. இந்த நினைவுகள் எல்லாம் ஒரு நொடியில் வந்து மறைந்தது. அவனுக்கும் திருமணமாகி இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.அவளுக்கும் திருமணம் நடந்த முதலாண்டே கணவன் நோய்வாய் பட்டு இறந்துவிட்டான்.  அவளுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தால் அவள் கணவன் இல்லாதவள், ஊர் தவறுதலாக பேசும் என்று மகிழன் நினைத்தான்.

   என்னத்தான் காலங்கள் மாறினாலும், அவளை மறக்க முடியுமா? அதனால், ஒவ்வொரு முறையும் அவளை கடக்கும்போதெல்லாம் அவன் இதயத்தின் ஓரத்தில் ஏதோ ஒன்று குத்துவதுபோலே வலிக்கிறது.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here