பெரியபுராணம் நாயன்மார்களின் புற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். திருக்குறள் மனிதர்களின் அற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். இரு நூல்களும் அதனதன் தன்மையில் தனித்துவம் மிக்கனவாகத் திகழ்கின்றன. பெரியபுராணத்திற்கு அடுத்து நாயன்மார் வாழ்க்கையைப் பேசும் பெரிய நூல்கள் எதுவும் தோன்றவில்லை. திருக்குறளுக்கு அடுத்து குறள்வெண்பாவில் நூல்கள் எழுதப்பெற்றிருப்பினும் திருக்குறள் அளவிற்கு அந்நூல்கள் சிறப்புப் பெறவில்லை. திருக்குறளுக்குச் சான்று கூறும் நூல்களாக இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, சினேந்திர வெண்பா, திருமலை வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருப்புல்லாணி மாலை, திருத்தொண்டர் மாலை, வள்ளுவர் நேரிசை, முருகேச முதுநெறி வெண்பா, திருக்குறட் குமரேச வெண்பா முதலான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ‘பெரியபுராணச் சரித்திர வெண்பாமாலை’ எனும் நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
63 நாயன்மார்களின் வாழ்க்கையைத் திருக்குறளோடு பொருத்திக் காட்டும் நூலாக, பெரியபுராணச் சரித்திர வெண்பாமாலை அமைந்துள்ளது. வெண்பாவின் முன்னடிகள் இரண்டும் நாயன்மார் வரலாற்றைக் கூறுகின்றன. பின்னடிகள் இரண்டும் திருக்குறளடிகளாக உள்ளன. திருவலஞ்சுழி மிராசு T.V.கலியாண சுந்தரம்பிள்ளை என்பவரால் பார்வையிடப்பட்டு மேலத் திருப்பூந்துருத்தி கிராம முன்சீப் ஆறுமுக முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, உறையூர் சொ.சோமசுந்தர முதலியாரால் கும்பகோணம் லெட்சுமி விலாஸ் பிரஸில் 1916ஆம் ஆண்டு இந்நூல் அச்சாக்கப் பெற்றுள்ளது. யாரால் பார்வையிடப்பட்டு, யார் வேண்டுகோளின்படி, எங்கு, எந்த ஆண்டு வெளியிடப்பெற்றது என்பன உள்ளிட்ட தகவல்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. யாரால் இந்நூல் எழுதப்பெற்றது என்ற தகவல் இரண்டாம் பக்கத்து ‘காப்பு வெண்பா’வில்தான் இடம்பெற்றுள்ளது.
“பன்னு கலைக்குமர பாரதியா மாமுனிவன்
சொன்ன தமிழ்மாலை துதிப்பதற்கு – மின்னுதலை
யாயிரநா வாயிரத் தோனன்றி யெவர்கொலோ
மாயிரு ஞாலத்தின் மகிழ்ந்து”
என்பது ஆசிரியர் பெயர் சுட்டும் வெண்பாவாகும். காப்பு வெண்பாவிற்கு முன்பாக திருக்குறள் விபரம் தரப்பெற்றுள்ளது. “திருக்குறள் அதிகாரம் (133-ல்) காமத்துப்பால் அதிகாரம் (25) நீக்கி மற்றய அதிகாரம் (108-லும்) ஒவ்வொரு குறளும் அதன் கருத்துரையும் நாயன்மார்களின் சரித்திரத்தில் அடங்கியது போக மற்றய குறளும் அதன் கருத்துரையும் வல்லம் சு.பொன்னுசாமி பிள்ளையவர்கள் விரும்பியவாறு இப்புத்தகத்திற் கண்டுகொள்க. நாயன்மார்கள் சரித்திர வெண்பாவில் காமத்துப்பாலிலுள்ள சில குறள்களும் கலந்திருக்கின்றன” என்ற தகவல் தரப்பெற்றுள்ளது.
கோயிலில் நந்தா விளக்கு ஏற்றுவதற்கு நிலம் உள்ளிட்டவற்றைத் தானமாக வழங்குவது மன்னர்காலத்து வழக்கு. 20ஆம் நூற்றாண்டிலும் அதுபோன்ற வழக்கிருந்ததை இந்நூலில் கொடுக்கப்பெற்றுள்ள குறிப்பொன்று எடுத்துரைக்கின்றது. “இந்தப் புத்தகத்தின் ஊதியம் தஞ்சை வடக்குவீதி இரத்தினகிரீசுவரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதியின் தீபத்திற்கு உபயோகிக்கப்படும்” என்பது அந்தக் குறிப்பாகும்.
இந்நூலில் பாயிரம் நீங்கலாக 100 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. வெண்பாவிற்கு முன்பாக அந்த வெண்பாவில் எந்த நாயன்மார் வரலாறு கூறப்பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரது பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளது. தில்லைவாழந்தணர், திருநீலகண்ட நாயனார், இயற்பகை நாயனார் எனத் தொடர்ந்து பெயா்கள் கொடுக்கப் பெற்றுள்ளன. வெண்பாவை அடுத்து அடைப்புக்குறிக்குள் எடுத்தாளப்பெற்றுள்ள திருக்குறள் அதிகார எண் மற்றும் அதிகாரத்தின் பெயர் ஆகியன இடப்பெற்றுள்ளன. அதற்கடுத்து ‘கருத்துரை’ என்ற தலைப்பில் வெண்பாவின் இறுதி இரண்டடிகளிலுள்ள திருக்குறளின் கருத்தானது கூறப்பெற்றுள்ளது.
“உய்வித்தவ னடியார்க் கோரிருளிற் போய்மாறன்
செய்வித்தும் வாாியனஞ் செய்தானே – மெய்வருந்தி
வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்”
என்ற வெண்பா இளையான்குடி மாற நாயனார் பற்றியதாகும். இதில் ஆளப்பெற்றுள்ள குறளின் கருத்தாக “விருந்தினரைக் காப்பவன் விளைநிலம் தானே விளையும்” என்பது குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வாறே ஒவ்வொரு வெண்பாவிற்குக் கீழும் கருத்துரை இடம்பெற்றுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள வெண்பா எண்களான 36, 37, 38, 39, 40 ஆகியவற்றில் ஞானசம்பந்தர் வரலாறும் 24, 25, 26, 27, 28 ஆகியவற்றில் திருநாவுக்கரசர் வரலாறும் 8, 16, 23, 35, 46, 54, 63, 69, 75, 83, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகியவற்றில் சுந்தரா் வரலாறும் 50, 51 ஆகிய எண் கொண்ட வெண்பாக்களில் சேரமான் பெருமாள் நாயனாா் வரலாறும் கூறப்பெற்று, உரிய திருக்குறள்களும் பொருத்திக்காட்டப் பெற்றுள்ளன. பிற நாயன்மார்களுக்கு ஒவ்வொரு வெண்பாவே கொடுக்கப் பெற்றுள்ளது.
நூலின் இறுதிவெண்பாவாக ‘ஆதி உலாவின் சிறப்பு’ எனத் தலைப்பிடப்பெற்று,
“சொல்வைத்த சேரனுலாச் சொல்லக் கயிலையரன்
செல்வத்திருச் செவியிற் சேர்ந்ததே – மல்வைத்த
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை”
என்பது கொடுக்கப்பெற்றுள்ளது.
நூலின் இறுதியில் ‘அரும்பத விளக்கம்’ கொடுக்கப் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெண்பாவிலுள்ள முதலிரண்டு அடிகளில் காணப்பெறும் ஓரிரு சொற்களுக்கான விளக்கம் தரப்பெற்றுள்ளன. மேலும், “இப்புத்தகம் வேண்டியவர்கள் தஞ்சாவூர் சவுளிச் செட்டி தெரு சுப்பு செட்டியார் வீட்டில் விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தரப்பெற்று, “இப்படிக்கு அ.நாராயண சரணர்” எனப் பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது.
இந்நூலை இருவகையான நோக்குநிலைக்குப் பயன்படுத்தலாம். ஒன்று – அடியார் வரலாற்றை விளக்க, திருக்குறளைச் சான்றாகக் காட்டலாம். மற்றொன்று – திருக்குறளை விளக்க நாயன்மார் வரலாற்றைச் சான்றாகக் காட்டலாம். பெரியபுராணத்தையும் திருக்குறளையும் பரவச் செய்யும் முயற்சியாகவும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளதாகக் கொள்வதற்கும் இடம் உண்டு.
முடிகெழுவேந்தர் மூவர் ஆண்ட முத்தமிழ்நாட்டில் சோழ மன்னரின் பேராட்சிப் பெருதலைநகராய் விளங்கியது உறந்தை. உறந்தை என்பது உறையூரின் தொன்மை பெயர். பேராசிரியர் என்னும் உரையாசிரியர் உறையூர் என்பதனை பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி (புறம்.69) எனவும் மேலையார் திரித்த வகையானே இக்காலத்துந் திரித்துக் கொள்ளப்படுவன் உள எனத் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். அவர் கருத்துப்படி உறையூர் என்பது உறந்தை என்று திரிக்கப்பட்டது என்பது உணரப்படும். உறையூர் என்பது பழைய வழக்கு; மக்கள் வழக்கு. ஆனால் சங்கப் பாடல்களின் உறையூர் என்ற ஆட்சி இல்லை. மக்கள் வழக்கில் உறையூர் என்பது இருந்திருக்கவேண்டும். சங்க இலக்கியம் முழுமையும் உறந்தை என்ற வழக்கே பயின்று வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மட்டும் உறையூர் என இளங்கோவடிகள் ஆண்டிருப்பதும் இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள் அனைவர் பெயர்களும் உறையூர் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவைகளினால் பேச்சு வழக்கில் உறையூர் என்றும், இலக்கிய வழக்கில் உறந்தை என்றும், உறந்தை என்ற இலக்கிய வழக்கு பிற்கால வழக்கு என்பது புலனாகும் உறைப்பு என்ற சொல் செரிவு என்று பொருளைத் தொல்காப்பிய நூற்பா தருகிறது. எனவே மக்கள் நிறைந்து வாழ்ந்த இடமாக இவ்வூர் அமைந்திருக்கவேண்டும் என்பது புலனாகும். உறையூரில் வாழ்ந்த புலவர்கள் எண்ணிக்கை ஒன்பது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் ஒருவர். இவர் பாடிய பாடல்களின் பொருண்மையையும், புலப்பாட்டு நெறிகளையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இப்பெரும் புலவர் உறுப்புக் குறையுடைமை பற்றி முடமோசியார் என்றும், உறையூரின் ஒரு பகுதியான ஏணிச்சேரி என்ற பகுதியில் வாழ்ந்தவராதலின் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்றும் வழங்கப்பட்டார். உறையூர் ஏணிச்சேரி என்ற அடை இவர் அங்குத் தொடர்புடையவர் என்பதைப் புலப்படுத்துகிறது. “இவர் பெயர் மோசியார் எனவும் மோசி எனவும் குறைத்தும் வழங்கப்பெறும். உறையூர் ஏணிச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு மோசியார் என்பதை இவரது இயற்பெயரென்னலாமோ? எனின் மோசி கொற்றனார், மோசி சாத்தனார், மோசி கீரனார், மோசி கண்ணனார் என்ற பல புலவர் பெயர்கள் வழக்கில் இப்பெயர் இயற்பெயரின் வேறாகக் கொண்டு வழங்கப்பெறுதலால், இதனை இயற்பெயரென்னாது இடப்பெயரென்பதே பொருந்துவதாகும் ” 1 என்பார் கார்மேகம். மேலும் “மோசி என்பது மோசிகுடி என்ற பெயரின் சுருக்கம் ஆகும். “மோசியின் பெயரால் தமிழ்நாட்டில் பலவூர்களுண்டு. தொண்டை நாட்டில் மோசிப் பாக்கம் என்றும், நடுநாட்டில் மோசி குளத்தூரென்றும் பாண்டிய நாட்டில் மோசி குடி என்றும் காணப்படுகிறது”2 என்பார் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை. மோசி குடி என்னும் ஊரில் பிறந்து உறையூரின் ஏணிச்சேரியில் தங்கியிருந்தமையால் உறையூர் ஏணிச்சேரி மோசியார் எனப் பெயர் பெற்றார் என்பது முடிவு. “யவனர் என்ற சொல் நாளடைவில் ஏணிச்சேரி எனத் திரிந்து அமைந்திருக்கலாம். தலைநகரமாகிய உறையூரையடுத்து யவனர்கள் தங்கியிருந்த பகுதியாகக் கருதலாம்” 3 என்பர் ஆர். ஆளவந்தார். யவனர் என்ற சொல் ஏணி என்று மருவியது என்ற கருத்துப் பொருத்தமற்றது. மதிற்போருக்கு மிக இன்றியமையாத கருவி ஏணி. இந்த ஏணி மதிலை அடைத்திருக்கும் போது மதிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்திக் கோட்டையைத் தாக்கவும், காக்கவும் பயன்படும். இதற்குப் பெரிதும் வேண்டற்பாலன ஏணிகள். பதிற்றுப்பத்தில் ‘ஏறாஏணி’ என்று நாற்காலிகள் குறிக்கப்படுவதும் இங்கு ஒப்பு நோக்கற்பாலது. போருக்குரிய ஏணிகளை வைத்துப் பேணிக் காத்து வந்த பகுதி ‘ஏணிச்சேரி’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். சங்க காலத்தில் கோட்டைப் போருக்கு இவை இன்றியமையாதவை. இத்தகைய போர்கள் பல உறந்தையில் நிகழ்ந்ததைச் சங்கப்பாக்களால் அறியமுடிகிறது. போர்க்காலங்களிலும் போரல்லாத காலங்களிலும் மதிற்போருக்குரிய ஏணிகளைப் பேணியும் காத்தும் இருந்த இடம் ஏணிச்சேரி. இவர் அந்தணர் என்பதை தொல்காப்பிய உரையில் பேராசிரியர் ”உறையூர் ஏணிச்சேரி முடமோசி ……… அந்தணர்க்குரியன்” 4 எனக்குறிப்பிடுவதால் அறியமுடிகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையால் ஆதரிக்கப்பெற்றவர். இவர் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியையும், ஆயையும், பாடியவர். பெருஞ்சித்திரனார், ‘திருந்துமொழி மோசி பாடிய ஆயும்’ (புறம். 158; 12-13) என்று இப்பெரும் புலவரைப் போற்றுவர். எனவே இவரைப் பெருஞ்சித்திரனாருக்கு முற்பட்டவர் என்பது பொருந்தும். இவர் பாடிய சங்கப்பாடல்கள் பதின்மூன்று. இவை அனைத்தும் புறப்பாடல்களே (புறம். 13,127,128,129, 130, 131, 132, 133, 134,135,241,374,375). ஆனால் “இவர் இயற்றிய புறநானூற்றுச் செய்யுட்கள் – 14″ 5 என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பர். இக்குறிப்பு தவறானது.
பாடுதிறன்
படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்குவதில் புலமைத்திறனையும் சிந்தனைத் திறனையும் பயன்படுத்தி உருவாக்குகின்றனர். ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் அவரது படைப்புத்திறன் செய்யுள்களில் பாடுதிறனாக வெளிப்படுகிறது. தாம் எண்ணுகிறவற்றை, எவ்வெவ்வாறு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர் என்று காணலே பாடுதிறனாகும். புலவர்களின் பாடுதிறனில் உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற பல வெளிப்பாட்டுக் கூறுகளைக் கண்டு, தொல்காப்பியர் வகுத்திருக்கிறார். உள்ளுறையும் இறைச்சியும் அகப்பொருள் பாடுதிறனுக்கு உரியன. உவமை இருபாற்பொருளுக்கும் உரியது.
பாடுதிறனை உருவாக்கிய சூழல்
சங்க காலத்தில் உறையூரில் விளங்கிய சோழர் குடும்பத்திற்கிடையேயான அரசு, போர் அரசாகவும், ஆட்சி விரும்பிகளின் அரசாகவும் திகழ்ந்தது. அமைதியான சூழ்நிலை இல்லை. உறையூர் தொடர்பான பாடல்கள் போர் நிகழ்ச்சிச் சூழலையே பெரிதும் வெளிப்படுத்துகின்றன. ஒரு சோழன் கோட்டையை அடைத்துக் கொள்ள மற்றொரு சோழன் கோட்டைக் கதவைத் திறக்கப் போரிடுகிறான் சோழ மன்னன் யானை மீது ஏறியிருக்க யானை பாகற்குக் கட்டுப்படாது பகைப்புலத்தே மதங்கொண்டு நுழைகிறது (புறம்.13). இளஞ்சிறாரை யானைக் காலில் இடச் சோழமன்னன் ஆணை பிறப்பிக்கக் கோவூர்க்கிழார் குழந்தைகளைக் காக்கிறார் தந்தையும், தனயனும் முரண்பட்டிருக்கவும், பின் தந்தை வடக்கிருந்து உயிர் துறக்கவும் சோழ மன்னர்களின் நிலை சீர்கெட்டு அமைந்தே காணப்படுகிறது. இவையெல்லாம் அந்நாட்டில் மக்களின் வாழ்க்கைச் சூழல் அமைதியற்றுப் பரபரப்பாக இருந்தமையைக் காட்டுகின்றன. ஆதலால் தான் உறையூர், கோவூர், காவிரிப்பூம்பட்டினம் போன்ற ஊரில் வாழ்ந்த அக்காலச் சோழ நாட்டுப் புலவர்கள் புறப்பாடலைப் பாடிச் சோழ வேந்தருக்கு அறமுணர்த்தினர். போர்ச் சூழல் மிக்க அம்மண்ணில் போர் வெறி மிக்கிருந்ததால் காதற்காமமாகிய அக உணர்வுப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றில. ஆதலால் தான் உறையூர்ப் புலவர்கள் பாடல்களில் அகத்தினும் புறப்பாடல்கள் மிகுதியாகத் தோன்றின. காலம், இடம், சூழல் இந்தப் பாடுதிறனை உருவாக்கியிருக்கின்றது.
புலப்பாட்டு நறி
கருத்தை வெளிப்படுத்த அறிவுடையார் வெவ்வேறு வகையான நெறிகளைப் பின்பற்றுவர். ஒருவர் வினாக் கேட்குமாறும் அதற்கு விடை கூறுமாறும் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகப் பழைய புலப்பாட்டு நெறியாகும். இதனை வினாவிடை நெறி என்பது சாலும். உரையாசிரியர்கள் தங்கள் உரையில் தாங்களே வினாவை எழுப்பித் தாங்களே அதற்கு விடையளிப்பதைக் காண முடிகிறது. பிளாட்டோ, சாக்ரடிசு போன்றவர்கள் தங்களுடைய நூல்களை வினா விடையாகவும் உரையாடலாகவும் அமைத்தது கருத்தை வெளிப்படுத்தும் ஓர் இலக்கியக் கொள்கையாகும். அந்த நெறியைப் போன்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், சேரன் வினாவுவது போலவும் அதற்கு இவர் விடையளிப்பது போலவும் ஒரு புறப்படலை (புறம்.13) வெளிப்படுத்தியுருப்பது நோக்கத்தக்கது.
தாழ்வு மனப்பான்மை
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ‘ஆய் அண்டிரனை முதற்கண் நினைக்க வேண்டியவனைப் பின்னே நினைத்தேன்; அதனால் என் உள்ளம் அழிந்து போகட்டும்! முதலாவதாகப் பாடவேண்டியவனைப் பின்னால் பாடியதால் என் நா பிளந்து போகட்டும்; அவனையன்றிப் பிறர் புகழைக் கேட்ட என் காது, பழைய ஊரின்கண்னே உள்ள கிணறுபோலத் தூர்ந்து போகட்டும்; வடதிசையின்கண்ணே உள்ள வானளாவிய இமயமலையின் அருகில் குளிர்ந்த நிழல் தரும் தெளிந்த நீரோடைகளும், சுனைகளும் உண்டு. அங்கு ‘நரந்தம்’ என்னும் மணற்புல்லை மேய்ந்து சுனை நீரைக்குடித்துவிட்டுத் தன் பிணைமானுடன் தங்கும் சிறப்புடைய இமயமலைக்கு ஈடாகத் தென்திசையில் ஆய்குடி அமைந்துள்ளது. ஆய்குடி இல்லையென்றால் இந்த நிலவுலகம் தலைகீழாய்க் கவிழ்ந்துவிடும்’ என ஆயைப் புவிச்சமன்பாட்டுக் கொள்கையுடன் எடுத்துக்காட்டுகிறார். இப்பாடலில் தம் உறுப்பு குறையுடைமை குறித்து தனது ஆழ்மனதில் உள்ள தாழ்வுமனப்பான்மையை முன்னிலைப்படுத்தியே இப்பாடலை (புறம்.132) புலபபடுத்தியிருப்பது நோக்கற்பாலது.
உவமைத் திறன்
உவமை என்பது பொருளை விளக்குவதற்குப் படைப்பாளிகள் பயன்படுத்தும் பொருள் விளக்கக் கருவியாகும். கருத்துகளை அடுக்கிக் கொண்டு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை உருவாக்கும் போது அந்தக் கருத்துகளைப் புலப்படுத்த உவமைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆதலின் உவமை என்பது புலப்பாட்டு நெறியில் முதன்மையானதும் தலைமையானதும் குறிப்பிடத்தக்கதுமாகும். “ஒரு பொருளை வேறொன்றினொடு ஒரு வகையில் ஒப்பிட்டுக் கூறுவதுதான் உவமை”6 என விளக்கம் தருகிறார். எஸ். வையாபுரிப்பிள்ளை . “உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது அவன் காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்தி வைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வை அளந்து அறிவிக்கின்றது“7 என்பார் அ. சீனிவாசன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பை பலவாறு உவமைகள் வழி வெளிப்படுத்துகிறார்.
வரலாற்றுச் செய்தி
அறியப்படாத செய்தியை அறிவிக்கும் மனங்கொண்டு சொல்ல நினைத்ததை எளிதாகச் சொல்லி வரலாற்று நிகழ்ச்சியினை உவமையாகக் காட்டுதலைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனது கொடைச் சிறப்பைக் கூறுமிடத்து, கொங்கர்களோடு ஆய் அண்டிரன் போர் புரிந்த போது கொங்கர்கள் மீது பட்ட வேலின் எண்ணிக்கையைவிட ஆயின் யானைக் கொடை மிகுதியானது. இதனை,
’இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே’ (புறம்.130;4-7)
என்ற பாடலடிகள் மெய்ப்பிக்கும். ஆய் அண்டிரன் முன்பு கொங்கருடன் போர் புரிந்த வரலாற்றுச் செய்தியை உவமையும் வாயிலாக அறியமுடிகிறது
நிறைவாக…
சங்க காலத்தில் சோழ நாட்டில் சோழ வேந்தர் குடும்பத்திடையே குடும்பப்போர் கடுமையாக இருந்தது என்பதைப் புறநானூறு காட்டுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே போர், அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே போர் போன்ற நிகழ்ச்சிகள் இந்த உண்மையை உணர்த்துகின்றன. சங்க இலக்கியத்திற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் இதனைச் சுட்டுகிறது. இதனால் சோழ நாடு அமைதியின்றி இருந்தது என்பது விளங்கும். இச்சூழலில் தமிழ் வளர்ந்தது. புலவர்கள் மன்னர்க்கு அறிவுறுத்தி நெறிப்படுத்திப் புலவர்களையும் கலைஞர்களையும் புரக்கத் தம் பாடல்களில் எடுத்துரைக்கின்றனர்.. உறையூர்ப் புலவர்கள் முடிகெழு வேந்தர்களுள் ஒருவராகய சாலச்சிறந்த சோழ வேந்தர்தம் தலைநகர்ச் சார்புடைய புலவர்களாக விளங்குகின்றனர். எனினும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் ஏணிச்சேரி முடமோசியார் ஒருவரே பதின்மூன்று பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த புலவராகவும், படைப்பாளியாகவும் திகழும் இவர் தம் திறம் காட்ட இன்னும் பல படைப்புகளைப் படைத்திருக்கவேண்டும். பறம்பு மலையில் வாழ்ந்து பாரியைப் பாடியவர் கபிலர். இவர் குறுநிலத் தலைவனிடத்திலே இருந்தவர். இப்பெரும்புலவர் மிகுதியான பாடல்களைப் (235) பாடியிருக்கிறார். இயற்கை வளமும், சூழ்நிலையும், புரவலனும் அவர்க்கு நற்றுணையாய் விளங்கினமையான் தமிழுக்கு மிகுதியான பாடல்களைக் கபிலர் தந்திருக்கிறார். முடமோசியாரையும் கபிலரையும் மேலோட்டமாக ஒப்பிட்டு நோக்கின் கபிலர் அகத்தையும் புறத்தையும் பாடியிருக்கிறார். ஆனால் முடமோசியார் புறத்தை மட்டுமே பாடியிருக்கிறார். படைப்பாளியின் வாழ்க்கைச் சூழலே படைப்புகளின் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் அடிப்படையானது. கபிலருக்கு இருந்த நல்வாழ்க்கை, வாழ்க்கை அனுபவங்கள் மோசியாருக்கு இல்லை. மோசியார் வாழ்க்கைச் சூழல் பரபரப்புடையதாய் இருந்தமையும் அவர் முடமோசியாராக இருந்தமையும் அவர் படைப்புகளை உருவாக்குவதற்குத் தடைக்கல்லாக விளங்கியிருக்கின்றன. என்பதை அவர்தம் பாடல்கள் வழி அறியமுடிகிறது.
சான்றெண்விளக்கம்
1. A. Karmegam Kone, Ansient Famous Tamil Poet’s, Part -1, Pp.51-52.
2. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, இரண்டாம் பகுதி, ப. 91
3. ஆர். ஆளவந்தார், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி -1, பக். 87-88
4. …………………………………….. தொல்காப்பியம் – பொருளதிகாரம், பேராசிரியர் உரை, ப.467.
5. உ.வே. சாமிநாதையர் (உ.ஆ) புறநானூறு மூலமும் உரையும், ப. 27.
6. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனை, ப.85.
தமிழ் இலக்கண மரபு, ஐந்திலக்கண மரபாகும். தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐந்திலக்கணம் பேசியுள்ளது. பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணம் பேசும் இலக்கண நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தனித்தனி இலக்கணம் பேசும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்களின் பெயர்கள் மட்டும் அறியப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட நூல்கள் கிடைக்கப் பெற்றிருப்பினும் பயிலப்படும் இலக்கண நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. தொல்காப்பியம், நன்னூல், இறையனாரகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை என்பன இன்று பயிலப்படும் இலக்கண நூல்களாகும்.
தமிழ் இலக்கண நூல்களின் பதிப்பு வரலாறு 1820லிருந்து தொடங்குகிறது. தாண்டவராய முதலியார் ‘இலக்கண வினா விடை’ என்ற நூலை முதலில் பதிப்பித்துள்ளார். 1824இல் ‘சதுரகராதி’யைத் தாண்டவராய முதலியாரும், இராமச்சந்திர கவிராயரும் பதிப்பித்துள்ளனர். 1828இல் ‘இலக்கண வினாவிடை’யைத் தாண்டவராய முதலியார் பதிப்பித்துள்ளார். இவற்றைத் தவிர்த்து இவரே நன்னூல், அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய மூன்று நூல்களையும் முதன்முதலாக 1835இல் பதிப்பித்துள்ளார். ‘இலக்கண பஞ்சகம்’ என அழைக்கப்பெற்றவற்றுள் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கணம் பேசும் மூன்று நூல்களும் ஒன்றாக தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஐந்திலக்கணத்தையும் சேர்த்துப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, முதலில் இம்மூன்று இலக்கணமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை, நூலின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு எடுத்துரைப்பதாய் உள்ளது. ‘இது தொடங்கிக் கால நீட்டித்தமையான் முற்றுப்பெற்ற துணையுமிப்போது வெளிப்படுத்தலாயிற்று மற்றையிலக்கணமும் பின்னரச்சுப் பதிப்பித்து வெளிப்படுத்தப்படும்’ என்பது அக்குறிப்பாகும்.
இன்று வெளியிடப்பெறும் நூல்களில் இரண்டாம் பக்கத்தில் இடம்பெறும் தகவல்கள், தொடக்ககாலப் பதிப்புகளில் முகப்புப் பக்கத்திலேயே கொடுத்து விடுவது வழக்கமாகும். அதனடிப்படையில் இந்நூலின் முகப்புப்பக்கத்தில் ‘சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப்புலமை தாண்டவராய முதலியாரால் பழுதறவாராயப்பட்டு, இவராலும் மாநேசர் அ. முத்துச்சாமிப் பிள்ளை என்பவராலும் அச்சில் பதிப்பிக்கப்பட்டன’ என்ற குறிப்புக் கொடுக்கப்பெற்றுள்ளது. எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது என்ற தகவல் தரப்பெறவில்லை. பதிப்பு ஆண்டாக கிறிஸ்து ஆண்டும் சாலிவாகன சக வருடமும் தமிழ் ஆண்டின் பெயராக ஜய வருடமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ் எண்களிலேயே கொடுக்கப்பெற்றுள்ளன. இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருட்கிலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை முதற்பக்கத்தில் பார்க்க முடிகிறது. எழுத்தும் சொல்லும் அடங்கியதாக நன்னூல் உள்ளது. அகப்பொருளும் புறப்பொருளும் அடங்கியதாக முறையே, அகப்பொருளும் வெண்பாமாலையும் உள்ளன.
நன்னூலின் சிறப்புப் பாயிரம் 15 அடிகளைக் கொண்ட ஒரே பத்தி அமைப்பில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. பொதுப்பாயிரம் உள்ளிட்ட பிற நூற்பாக்கள், நூற்பா வடிவிலின்றி உரைநடை வடிவில் கொடுக்கப் பெற்றுள்ளன. என்றாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு வலது பக்கத்தில் நூற்பாக்களுக்கு என்று எண்கள் கொடுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொடர் எண்களுக்கும் மேற்கோள் குறியாக நட்சத்திரக் குறியீடுகள் கொடுக்கப் பெற்றுள்ளன (க). எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஒவ்வோர் இயலுக்கும் தனித்தனியாக வரிசை எண்கள் இடப்பெற்றுள்ளன.
இரண்டாவதாக, அகப்பொருள் விளக்கம் வைக்கப்பெற்று, பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்நூலின் ‘சிறப்புப்பாயிரம் பிற்காலத்தது’ என்ற அடிக்குறிப்பு இடப்பெற்றுள்ளது. நன்னூல் அமைப்பு முறையிலேயே ஒவ்வோர் இயல்களுக்கும் தனித்தனி வரிசை எண்கள் தரப்பெற்றுள்ளன.
புறப்பொருள் வெண்பாமாலையின் தொடக்கத்தில் சிறப்புப்பாயிரம் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ‘வெட்சி’ என்பதற்கு ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பனிப்பின்றியும், சென்று தன்முனை யாதந்தன்று’ என இலக்கணம் கூறப்பெற்று, அடிக்குறிப்பில் ‘வென்றி வேந்தன் பணிப்பவென்பது மன்னுறு தொழில். பணிப்பின்றி யென்பது தன்னுறு தொழில்…’ எனக் கொடுக்கப்பெற்றுள்ளது. இவ்விடத்தைத் தவிர வேறு எங்கும் அடிக்குறிப்புகள் தரப்படவில்லை. இந்நூலில் இறுதியில் ‘ஐயனாரிதனார் பாடின வெண்பாமாலை முற்றிற்று முற்றும்’ எனச் சுட்டப் பெற்றுள்ளது. நூலாசிரியர் பெயராக’ஐயனாரிதனார்’ என்றும் நூலின் பெயராக ‘வெண்பாமாலை’ என்றும் கொடுக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1895இல் உ.வே.சா. பதிப்பித்துள்ள நூலில் நூலாசிரியர் பெயரும் நூலின் பெயரும் ‘சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச் செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்’ எனக் கொடுக்கப் பெற்றிருப்பதும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும். வெண்பாமாலையில் ‘வருமாறு’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘வ-று’ என்றும் ‘என்பது’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘எ-து’ என்றும் கையாளப் பெற்றுள்ளது.
முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் குறில் எகர ஒகரங்கள் புள்ளி பெறும் எனச் சுட்டியுள்ளது. அதற்கேற்ப இந்நூல் முழுவதிலும் எகர ஒகரங்கள் குறிலாக வரும் இடங்கள் அனைத்திடத்தும் மேற்புள்ளியிட்டே (எ், ஒ்) பதிப்பிக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வெழுத்துக்கள் நெடிலாக அமையும் இடங்களில் புள்ளியிடப் பெறவில்லை.
தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு என்பது ஓலைச்சுவடியிலிருந்து தாளுக்கு மாறிய வரலாறு மட்டுமில்லை. அச்சுக்கலை வளர்ந்த முறை, பதிப்பு அழகியல், நூல் பெயர்களின் மாற்றம், எழுத்துகளின் வளர்ச்சிநிலை எனப் பல கூறுகளை உள்ளடக்கிய வரலாறாக அது உள்ளது. அது குறித்து அடையாளப்படுத்த வேண்டியதும் இன்றைய தேவையாகும்.
பண்டைய தமிழர்கள் வாழ்க்கை திணை சார்ந்த வாழ்க்கையாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாக இருந்துள்ளதை நாம் இலக்கியங்கள் வழி உணர்ந்து கொள்ளலாம். ஆற்றுப்படை இலக்கியத்தில் உணவு தேடி அலையும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், ஒவ்வொரு திணைகளில் வாழ்ந்த மக்களின் உணவு தேடிய வாழ்வு குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது.
பொது நிலையில் உணவு குறித்த பார்வை
மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பொருள் உணவாகும். பண்டைய மக்களின் முதல் தேடலே உணவு தேடலாக இருந்தது. பழந்தமிழர்கள் இயற்கையாக கிடைத்த காய், கனிகளையும், விதைகளையும். கிழங்குகளையும் உண்டனர். பின்னர் பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடி தனக்குரிய உணவாக மாற்றிக் கொண்டான். மலைப்பகுதிகளில் தேன், கிழங்;கு போன்றவைகள் மிகுதியாக கிடைக்கும். நெய்தல் நில பகுதிகளில் மீன் கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர், மோர், நெய் போன்றவை மிகுதியாக கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும், நெல் சோறும் காய்கறிகளும் மிகுதியாக கிடைக்கும். பண்டமாற்று முறை பண்டைய தமிழர்களிடையே காணப்பட்டதையும் நாம் பார்க்கலாம். குறிஞ்சி நில மக்கள் நெய்தல் நில மக்களுக்கு தேனை கொடுத்து மீனை பெற்று கொண்டார்கள். ஆற்றுப்படை இலக்கியம் பயணம் சார்ந்த இலக்கியமாகவும் இருப்பதால் பரிசில் வேண்டி பயணிக்கும் இரவலர்களுக்கு வழியில் பல நிலத்தவர்களும் அளித்த உணவுகள், இரவலர்களை வரவேற்று அவர்களுக்கு மன்னர்கள் அளித்த விருந்துகள் குறித்த குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவரவர் தகுதிக்கேற்பவும் வாழ்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பவும் அவர்களின் உணவு முறை இருந்துள்ளது.
குறிஞ்சி நில மக்களின் உணவு
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் உணவுக்காக இயற்கையை சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பரப்பில் தினையினை விதைத்து வேளாண்மை செய்துள்ளனர். நன்னன் என்றும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் வாழ்;ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச் சோறு உண்டதனை
“பரூவக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
குரூஉக்கன் இறடிப் பொம்மல் பெறுகுவீர்”1
குறிஞ்சி நில மக்கள் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உணவாக உட்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. நெல்லால் சமைத்த (வடிக்கப்பெற்ற) கள்ளையும் தேனால் செய்த மூங்கில் குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளி, நீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பினையும் உண்டனர்.
“வேய் பெயல் விளையுள் தேக்கம் தேறல்
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து வைகறை
………………………………………………..
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி”2
என்ற அடிகளால் குறமகள் சமைத்த உணவினை நாம் அறிந்து கொள்ளலாம். அதுபோல் காட்டில் வாழுகின்ற கானவர்கள் எய்த அம்புகள் பட்டு மார்பில் புண் பெற்று நிலத்தை குத்தியதால் கொம்பில் மண்பட்டு வழி அறியாமல் விழுந்து கிடக்கின்ற இருள் துண்டுபட்டு கிடப்பது போன்ற பன்றியை கண்டால் மூங்கில்களில் பற்றிய தீயினால் மயிர் நிங்குமாறு சுட்டு தூய்மைப்படுத்தி தின்று தெளிவான சுனை நீரை குடித்து மீதம் உள்ள பனறனி தசையை எடுத்து செல்லுங்கள் என பதிவு வருகிறது.
“………………………………………………
நிறப்புண் கூர்ந்த நிலத்தின் மருப்பின்
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந் தனை ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
………………………………….. “3
இதனை இந்த வரிகளில் காட்டுவழி பயணத்தை பற்றி அறிய முடிகிறது.
முல்லை மக்களின் உணவும் வாழ்வும்
பசுமையான இலை தழைகளைக் கொண்ட காடும் காடு சார்ந்த பகுதி முல்லை நிலமாகும். முல்லை நில மக்கள் உணவு தேவைக்காக பெரும்பான்மை கால்நடைகளையே சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பகுதியில் வரகு, அவரை போன்ற காய்கறிகளையும் பயிர் செய்துள்ளனர். நன்னது மலைநாட்டு முல்லை நில மக்கள் சிவந்த அவரை விதைகளையும், மூங்கில் அரிசியையும், நெல் அரிசியையும், புளிக்கரைக்கப்பட்ட உலையில் போட்டு புளியங் கூழாக்கி உட்கொண்டார்கள்.
“தொய்யா வெறுங்கையோடு துலின்நுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்”4
என்ற அடிகளாலும், முல்லை நில மக்கள் பாலையும் தினை அரிசிச் சோற்றையும் உண்டனர். முல்லை நில சிற்றூர்கள் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” என்ற உணவினை உண்டதை,
“நெடுங்குரல் பூளைப்பூலின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழச் சொன்றி
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக்கு சுட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்”5
என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. முல்லை நில மக்களின் உணவில் பால், புளி, மூங்கிலரிசி, நெல்லரிசி, வரகரிசி, அவரை போன்றவை இடம் பெற்றிருந்தது என்பதை அறியமுடிகிறது.
மருத நிலத்து மக்களின் உணவும் வாழ்வும்
நீர் வளமும், நில வளமும் நிறைந்த வயல் சார்ந்த பகுதி என்பதால் வேளாண்மை மூலம் கிடைக்கும் பொருட்கள் மருத நில மக்கள் உணவில் பெரும்பங்கு வகித்தது. பண்டைய தமிழர் அரிசிச் சோற்றையே தன் சிறப்பு உணவாக உண்டனர். உழவர் குலப்பெண்கள் வைரம் பாய்ந்த உலக்கையின் இரும்பு பூணால் குற்றியெடுத்த வெண்மையான சோற்றுடன், நண்டும், பீர்க்கங்காயும் கலந்து சமைத்த கறிக்கலவையினை விருந்தினருக்கு அளித்ததை
“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்”6
என்னும் அடிகள் கைகுத்தல் அரிசியால் சோறாக்குலார்கள் என்பதையும் நண்டையும், பீர்க்கங்காயையும் சேர்த்து சமைப்பார்கள் என்பதையும் அறியமுடிகிறது. அதுபோல தொண்டைநாட்டு மருத நிலத்து சிறுவர்கள் காலை நேரத்தில் பழைய சோற்றை உண்டதை,
“கருங்கை வினைஞர் காதல் அம்சிறாசுர்
பழஞ்சோற்று அமலை முனைஇ”7
என்ற அடிகளால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தொண்டை நாட்டு கடற்கரைப்பட்டினத்திலிருந்து காட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த தோப்பில் வாழ்ந்த உழவர்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு முதலியவற்றை உணவாக கொண்டதை,
“தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழ் இல் தாழைக் குழலித் தீம்நீர்
…………………………………
ஆறுசெல் வம்பலர் காய் பசி தீரச்
சோறு அடு குழிசி இளக, விழுஉம்”8
என்னும் அடிகள் காட்டுகின்றன. மருதநிலம் வளம்மிக்க பகுதி என்பதால் சோற்றுடன் பல வகையான காய்கள் பழங்கள், கிழங்குகள், இறைச்சி போன்றவை மருத நில மக்கள் உணவில் ஒரு பகுதியாக இருந்துள்ளதை நாம் உணரலாம்.
நெய்தல் நில மக்களின் உணவும் வாழ்வும்
கடலும் கடல் சார்ந்த பகுதி என்பதால், கடல் உணவுகள், கள் போன்றவை நெய்தல் நில மக்களின் உணவில் இருந்தன. பண்டைய தமிழகத்தில் கள்ளுண்ணும் வழக்கம் காணப்பட்டது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் என அனைவரும் கள்ளினை உண்டு களித்தனர். நெய்தல் நகரமான எயிற்பட்டணத்தில் வலைஞர் குலப் பெண்கள் (நுளைமகள்) காய்ச்சிய பழைய கள்ளையும், குழல் மீன் ஒட்டினையும் உணவாக தருவார்கள் என்ற பதிவினை பார்க்க முடிகிறது.
“நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
…………………………………..
விறல்குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்”9
இதற்கு இந்த பாடல் அடிகள் வலு சேர்க்கிறது. நெய்தல நிலத்தில் வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள். அவ்வகையில் தமது இல்லத்திற்கு வந்த விருந்தினருக்கு குழல் மீனினை அளித்த நிகழ்வினைக் காணலாகிறது.
பாலை நில உணவும் வாழ்வும்
பாலை நிலம் வறட்சியான பகுதி என்பதால் பிற நிலங்களில் விளையும் உணவுப் பொருட்களையும் வழிப்பறி மற்றும் வேட்டையாடுதல் மூலம் கிடைக்கும் உணவுகளை உண்டனர். தொண்டை நாட்டுப் பாலை நில மக்கள் புல்லரிசியைச் சேகரித்து உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கி சமைத்து உப்புக்கண்டத்தோடு உண்டார்கள். மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டதை,
“களர்வளர் ஈந்தின் காழ் கண்டன்ன
சுவல்விளை நெல்லின் செல் அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின் தொறும் பெறுகுவீர்”10
என்ற அடிகளால் அறியலாம். ஓய்மா நாட்டுப் பாலை நில மக்களான வேடர் குலப்பெண்கள் புளியிட்டுச் சமைத்த சோற்றையும், வேட்டையாடிக் கொண்டு வந்த மானின் ஒட்டிறைச்சியையும் சமைத்தனர். பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் பழந்தமிழரின் வழக்கத்தையும் சிறுபாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது. சுவை மிகுந்த உணவினை புசித்து நோயற்ற வாழ்வும், மாசற்ற சூழ்நிலையும் உருவாக்கி திணைசார் மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தற்கால வாழ்வு முறையை ஒப்பிடும் போது சங்ககால மக்களின் வாழ்வு மிகவும் போற்றுதலுக்குரிய நிலையில் உள்ளது. ஆற்றுப்படை இலக்கியங்களில் இயற்கை வேளாண்மை, தன்னிறைவு பெறுதல், விட்டு கொடுக்கும் பண்பு, தன்னம்பிக்கையோடு பாணர்கள் ஒவ்வொரு நிலத்திலும் பயணித்த முறை சற்றே திகைப்பிற்குரிய நிலையில் உள்ளது. ஆனாலும் அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர் என்பதை திணைசார் உணவு முறை வெளிப்படுத்தும்.
முடிவுரை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களின் உணவுமுறை, வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, பண்டமாற்று முறை மூலம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வினை வாழந்து வந்தனர் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்களில் திணைசார் உணவு முறை வெளிப்படுத்துக்கின்றன என்பதில் ஐயமில்லை.
சான்றெண் விளக்கம்
1.மலைபடுகடாம், பாடல் வரிகள் (168-169)
2.மலைபடுகடாம், பாடல் வரிகள் (171-183)
3.மலைபடுகடாம், பாடல் வரிகள் (245-248)
4.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (434-436)
5.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (192-195)
6.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (193-195)
7.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (223-224)
8.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (356-366)
9.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (158-163)
10.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (130-133)
துணை நூற்பட்டியல்
1.சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் முதற்பதிப்பு, 21 சூன் 2010.
ஒரு செய்யுளில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் நேராகவும், மாற்றியும் பொருள்கொள்ளும் முறைமையைப் பொருள்கோள் என்று வழங்குவர்.
பொருள்கோள் எட்டு வகைப்படும். அவையாவன
1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
3.நிரல்நிறைப் பொருள்கோள்
4.பூட்டுவிற் பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
ஒரு செய்யுளில், பொருளானது ஓடுகின்ற ஆற்று நீரோட்டம் போல சொற்கள் முன்பின்னாக மாறாமல், நேராகப் பொருள் கொள்ளும் வகையில் அமைவது ஆற்றுநீர்ப்பொருள்கோள் எனப்படும்.
(எ.கா)
“சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த
நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” ( சீவகசிந்தாமணி )
நெற்பயிர் கருவுற்ற, பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, கீழ்மக்கள் செல்வம் சேர்ந்தவுடன் பணிவின்றி தலைநிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.
‘சொல்’ என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்று காய்த்தவே என்னும் பயனிலையைக் கொண்டு முடியும்வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆகும்.
நூற்பா,
“மற்றையது நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று ஒழுஇமஃது யாற்றுப் புனலே“ (நன்னூல்.412)
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் அமைந்துள்ள சொற்களை ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.
(எ.கா)
“சுரையாழ அம்மி மிதப்ப – வரையனைய
யானைக்கு நீந்து முயற்சி நிலையென்ப
கானக நாடன் சுனை ”
கானக நாடன் சுனையில் சுரை ஆழும், அம்மி மிதக்கும், யானை நீந்தும், முயல் நிலையாக நிற்கும் எனச் சொற்கள் நகைப்பிற்கு இடமான பொருளைத் தருகின்றன. எனவே செய்யுளில் உள்ள சொற்களை
“சுரை மிதப்ப அம்மி அழ
யானைக்கு நிலை முயற்சி நீத்து“
என ஓரடிக்குள் இடம் மாற்றி வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ற வகையில் ஓரடிக்குள் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு ‘மொழிமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயராகும்.
நூற்பா,
“ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றியோர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே“ (நன்னூல்.413)
3.நிரல்நிறைப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
(எ.கா)
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது“ (திருக்குறள்)
கணவனும் மனைவியுமாக இணைந்து அன்பு செய்வதே இல்வாழ்க்கையின் பண்பாகும். இருவரும் செய்யும் அறமே இல்வாழ்க்கையின் பயனாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து. இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாவது, அன்பும் அறனும் உடையதாய் இருப்பதே ஆகும் என இரு அடிகளிலும் சொற்கள் நிரல்நிறையாக வந்துள்ளதால் இது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும். நிரல்நிறைப் பொருள்கோள் இரு வகைப்படும்.
(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
(எ.கா) “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி,”
இவ்வடியில் கொடி, குவளை, கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலைகளாக நுகப்பு, கண், மேனி என்று வரிசைப்படுத்தி கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.
இச்செய்யுளில் முறை பிறழாமல் வரிசை முறையில் சொற்கள் அமைந்து வருவது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
(எ.கா)
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்“ (திருக்குறள்)
இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, பயனிலைகளாக கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர். அதைக் சுற்றார் மக்கள் என்றும் கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகச் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
நூற்பா,
“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறுநிரல் நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும், பொருள்கோள் நிரனிறை நெறியே“ (நன்னூல்.414)
4. பூட்டுவிற் பொருள்கோள்
வில்லின் இருமுனைகளையும் நாணால் இணைத்தல் போல ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் ‘பூட்டுவிற் பொருள்கோள் ஆகும். இதனை “விற்பூட்டுப் பொருள்கோள்’ என்றும் வழங்குவர்.
(எ.கா)
“திறந்திடுமுன் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர் கோன்
தண்ணார மார்பன் தமிழர் பெருமானைச்
கண்ணாரக் காணக் கதவு“
இச்செய்யுளில் ‘கதவு’ என்ற இறுதிச் சொல்லைத் ‘திறந்திடுமின்’ என்ற முதல் சொல்லோடு இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும். இவ்வாறு வில்லில் நாண் பூட்டுவது போலச்செய்யுளின் இறுதிச்சொல்லை முதல் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் விற்பூட்டுப் பொருள்கோள் அல்லது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.
ஒரு செய்யுளில் நடுவில் நின்ற ஒரு சொல் ஊஞ்சல் கயிறு போன்று முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளும் முறையில் அமைவது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும். (தாம்பு இசை – ஊஞ்சற்கயிறு)
(எ.கா)
“ உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு“ (திருக்குறள்)
ஊன் உண்ணாமையால் உயிர்க்கு இறுதியான நன்னிலை உண்டாகும். ஊன் உண்பானாகின் நரகம் அவனை வெளியே விட வாய் திறவாது. இக்குறட்பாவில் நடுவில் உள்ள ‘ஊன்’ என்ற சொல் முன்னால் சென்று ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றும் ‘ஊன் உண்ண அண்ணாதல் செய்யாது அளறு’ என்று பின்னால் சென்றும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது தாப்பிசைப் பொருள்கோள்’ ஆயிற்று.
நூற்பா, “இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை “ (நன்னூல்.416)
6. அனைமறிபாப்புப் பொருள்கோள்
பாம்பு புற்றில் நுழையும்போது, தானே மடங்கி தலை மேலாகவும், வால் கீழாகவும் நிலை மாறுவது போல செய்யுளில் இறுதிச்சொல் அல்லது இறுதியடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ எனப்படும். அனை – புற்று, மறி – மடங்குதல், பாப்பு – பாம்பு:
(எ.கா)
“காண்பார் கண்ணாரக் கடவுளை எப்போதும்
பூண்பார் புனிதத் தவம்“
இப்பாடலில் இறுதியிலுள்ள புனிதத் தவம் என்ற சொல் கீழ்மேலாக புனிதத் தவம் பூண்பார் எப்போதும் கடவுளைக் கண்ணாரக் காண்பார் என இயைந்து பொருள் கொள்ள வரும். இதற்கு ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ என்று பெயர்.
நூற்பா,
செய்யுள் இறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே (நன்னூல்.417)
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.
(எ.கா)
“தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங் கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்”
இச்செய்யுள் அமைந்த நிலையிலேயே பொருள் கொண்டால் தேங்காய் போன்ற பைங்கூந்தல் என்றும் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி என்றும் அஞ்சனத் தன்ன பசலை என்றும் அமைந்து பொருள் மாறுபடும்.
எனவே இச்செய்யுளை வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் உடையவரின் மாமேனி மேல் தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண்மையான கோழிமுட்டை உடைத்தன்ன பசலை தணிவாமே’ எனச் சொற்களைத் தக்கவாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எனவே இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.
நூற்பா,
“யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே“ (நன்னூல்.418)
குறிப்பு:
மொழிமாற்றுப் பொருள்கோளில் ஓரடிக்குள்ளேயே சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ப மாற்றிப் பொருள் கொள்ளலாம்.
8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்
இது இருவகைப்படும்.
(அ).ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று
(ஆ).பொருளிசை மாறா அடிமறிமாற்று
(அ) ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று
ஒரு செய்யுளின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டிப் பொருள் காண்பது ‘ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.
(எ.கா)
“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்“
இச்செய்யுள் அடிகள் அமைந்துள்ள முறையில் பொருள் கொண்டால் பொருத்தமின்றி பொருட்சிதைவு ஏற்படும். எனவே,
“கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
விடுக்கும் வினையுலந்தக் கால்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் உடையார்”
எனப் பொருளுக்கேற்றவாறு எடுத்துப் பொருள் கூட்டினால் பொருள் விளங்கும். செல்வம் பிறருக்குக் கொடுத்துத் தாமும் துய்த்தாலும் வளருங்காலத்தே வளரும். நல்வினை முடிந்துவிட்டால் நம்மை விட்டு நீங்கும். வலிந்து பற்றினாலும் நிற்காது போய்விடும். இவ்வியல்புகளை அறியாதவர் நடுக்கம் கொண்டு தம்மைச் சார்ந்தவரின் துன்பத்தைப் போக்காதவராய் இருக்கின்றார்கள்.
(ஆ) பொருளிசை மாறா அடிமறி மாற்று
ஒரு செய்யுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது பொருளிசை மாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள் ஆகும்.
(எ.கா)
“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே”
இப்பாடலின் எந்த அடியை எங்கு மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருள் உணர்வு குன்றாது. ஓசையும் நயமும் சிதையாது. இவ்வாறு ஒரு பாடலின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் வேறுபடாமல் இருப்பதை அடிமறிமாற்றுப் பொருள்கோள் என்பர்.
பண்டைய மனிதன் தன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இயற்கை எழிலையும், காடு, மலை, விலங்கு, பறவை போன்றவற்றையும் நேரில்கண்டு, உணர்வால் உந்தப்பட்டு பெருமலைகளிலும், சிறு குன்றுகளிலும், இயற்கைக் குகைகளிலும் உருவாக்கிய வண்ணக் கோடுகளே உன்னத ஓவியங்களாயின. இவையே ஓவியக் கலையின் தொடக்கச் சான்றுகளாக அமைந்துள்ளன. இந்நிகழ்வு மனித இனம் நாகரிகத்தின் தொடக்க நிலையில் இருந்த நாளிலிருந்து நடைபெற்று வந்துள்ளது. பழங்கால மாந்தர் வாழ்ந்த இயற்கைக் குகைகளில் வேட்டைக் காட்சிகளும் பிறவும் காணப்படுகின்றன. பழைய கற்காலம் தொட்டு மனிதன் தம்முடைய தொழில் திறன், சிந்தனைத் திறன், பேச்சுத் திறன் ஆகியவற்றில் படிப்படியாக முன்னேறி கி.மு. 500 அளவில் மிகச்சிறந்த நாகரிக நிலையை எட்டியிருக்கிறான். தொல் பொருளாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மேல் பல எழுத்துருவங்களும் பிற உருவங்களும் காணப்படுகின்றன. ஒலி வடிவ எழுத்துக்களுக்கு முன்னர் படவெழுத்துக்கள் (pictograph) வழக்கிலிருந்தன. அவன் அவ்வாறு நாகரிக நிலையில் முதிர்ச்சி அடைந்ததின் அடையாளமே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்ற சங்க இலக்கியங்கள் ஆகும்.
சங்க இலக்கியங்கள், ஓவியக் கலையின் சீர்சான்ற மரபினை நமக்கு எடுத்தியம்புகின்றன. ஓவியம், ஓவம், ஓவு என்பன ஒரு பொருட் கிளவியாகும். ஓவியம் என்னும் சொல்லை மிகுந்த அழகு என்னும் பொருள் கொண்டதாக அன்றைய சான்றோர் வழங்கினர். அவை தொடர்பான செய்திகள் இலக்கியங்களில் நிரம்பக் காணப்படுகின்றன.
திறவுச் சொற்கள் : சங்க இலக்கியங்கள், ஓவியம், நாகரிகம்
முன்னுரை
கடந்த கால் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவை விழுப்புரம், வட ஆர்க்காடு, திண்டுக்கல், மதுரை, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன. மல்லப்பாடி, கீழ்வாலை, செத்தவரை, பாடியேந்தல், கொல்லூர், ஆலம்பாடி, நாயனூர், சிறுமலை, திருமலை, கிடாரிப்பட்டி அழகர்மலை, வேட்டைக்காரன் மலை, தாளப்பள்ளி, சையது பாஷா மலை, மல்ல சமுத்திரம், மகாராஜ கடை, கொணவக் கரை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி சீகூர், சந்திரபுரம், இரத்தினகிரி, சென்னராயன் பள்ளி, நெகனூர் பட்டி ஆகிய ஊர்களில் குகை மற்றும் பாறைகளில் வரிக்கோடுகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகைப் பாறை ஓவியங்கள் அனைத்தும் பண்டைய மக்களின் அளவிட முடியாத ஓவிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கான அடிப்படைச் சான்றாக அமைந்துள்ளன. அவர்கள் தேர்ந்தெடுத்த, வெள்ளை, செங்காவி, மஞ்சள் காவி போன்ற வண்ணங்களும், சித்தரிக்கப்பட்டுள்ள மனிதன், விலங்கு, பறவை முதலியவற்றின் இயக்கங்களும், அவ்வோவியங்களில் ததும்பும் உயிர்த் துடிப்பும் நம்மை வியப்பிலாழ்த்துவையாக அமைகின்றன. இவ்வகை ஓவியங்கள் சங்க கால மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைகின்றது.
முதன் முதலாக கண்டறிந்த பாறை ஓவியங்கள்
இந்தியாவில் எ. கார்லைல், ஜெ. காக்பர்ன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதன்முதலாக கற்கால மனிதர்களின் ஓவியங்களைக் கண்டறிந்தனர். தொன்மையான குகை ஓவியம் ‘பிம்பெட்கா’ என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதன்முதலாக 1980-இல் மல்லப்பாடியில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கையில் எறிவேல் ஒன்றை ஏந்தி எதிரே உள்ளவனைக் குறி வைப்பது போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை வேட்டைக்காட்சி என்றும் போர்க்காட்சி என்றும் கூறுவர். இப்பாறை ஓவியங்களுக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் புதிய கற்காலக் கருவிகள் (Neolithic Stones) கிடைத்துள்ளன. எனவே இத்தகைய ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஓவியன்
வண்ணங்களின் துணை கொண்டு எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவன் ஓவியன் என்றழைக்கப்படுகின்றான். இவனே கண்ணுள் வினைஞர், வித்தகர், சித்திரக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவிய நூலில் புலமை பெற்றவன் “ஓவியப் புலவனென்றும்’, அக்கலைஞர் குழாம் ‘ஓவியமாக்கள்’ என்றும் சங்க இலக்கியங்களில் கூறக் காண்கிறோம். இத்தகைய கண்ணுள் வினைஞரை “நோக்கினார் கண்ணிடத்தேதம் தொழிலை நிறுத்துவோர்’ என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.
ஓவியம்
பல வண்ணக் கலவையால் துகிலிகைக் கொண்டு படைக்கப்பட்ட கண்கவர் காட்சி, ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், பாடாம், வட்டிகைச் செய்தி என்றும் அழைக்கப்பட்டன.
ஓவியத்தின் வாயிலாக சங்ககால மாந்தர்கள் கருத்துக்களைப் புலப்படுத்தினர். காலப் போக்கில் இவ்வோவியங்களே வரி வடிவானமையை வரலாறு காட்டும். இவற்றை ஓவிய எழுத்துகள் என்பர். இவ்வகையில் எழுத்து என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓவியம் என்ற பொருளில் வழக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.
ஓவியங்கள் மாடத்திலும், கூடத்திலும் மணடபத்திலும், அம்பலத்திலும் தீட்டப் பெற்றிருந்தன என்பதைச் ‘சித்திரக் கூடம்’ , ‘சித்திரமாடம்’, ‘எழுத்துநிலை மண்டபம்’, எழுதெழில் அம்பலம் என்ற சொற்களால் அறிகிறோம். கலையுள்ளங் கொண்ட பாண்டிய மன்னனொருவன் சித்திர மாடத்தில் இறந்துபட்டான் என்பதைச் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூறு குறிக்கிறது. அது போன்று அரசர் தம் அரண்மனை அந்தப் புரங்களிலும் பலவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதை நெடுநல்வாடை வரிகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோயில் சுவர்களில் பலவகைச் சித்திரங்கள் வரையபெற்றிருங்கின்றன என்பதை,
இருசுடர்நேமி
ஒன்றிய சுடர்நிலையுள் படுவோரும்
இரதிகாமன் இவனிவன் எனா அ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இளவகலிகை யிவன்
சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென்றுரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
என்ற பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும் மணிமேகலையில்,
சுடுமண் ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
கண்கவ ரோவியங் கண்டு நிற்கு நரும்
என்று செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும், மாடங்கள் மீதும் வானவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம். சுடுமண் சுவர்கள் மீது வெண்சுதை பூசினர். வெண்சுதை மீது செஞ்சாந்து கொண்டு பூசினர். இதன் மேல் அழகிய பூங்கொடிகளை ஓவியமாகத் தீட்டினர் இத்தகைய சுவர்கள் செம்பைப் போன்று உறுதி படைத்தும், கழையழகு கொண்டதுமாக அமைந்திருந்ததை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.
சுவர்களில் மட்டுமல்லாது திரைச் சீலைகளிலும் கிழிகளிலும் கவின் மிகுக் காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. நாடக அரங்குகளில் திரைச் சீலைகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதனை ‘ஓவிய எழினி’ என்று இலக்கியம் கூறும். மணிமேகலை ஆசிரியர்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரிமல ரிலவனும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் (மணி. மலர் வனம் : 165-69)
என்கிறார்.
குகை ஓவியங்கள்
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலைப் பகுதியில் பல ஓவியங்கள வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களில் வேட்டையாடுதல், விலங்குகளின் சண்டை, மனிதர்களின் சமய சடங்குகளில் ஈடுபட்டிருத்தல், காட்டுப் பூனை ஒன்றைப் பலியிடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள மானின் உருவ அமைப்பு பிற குகை ஓவிய அமைப்பினை ஒத்துள்ளது. இக்கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிடாரிப்பட்டி, அழகர் மலை, திருமலை, கருங்காலக்குடி, திருவாதவூர், நாகமலை, திருமயம் கோட்டை போன்ற பகுதிகளில் குகை ஓவியங்களும், பாறை ஓவியங்களும், குகைத்தள ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறிய செய்தியாகும்.
புனையா ஓவியம்
வண்ணங் கலவாமல் வடிவம் மட்டும் கரித்துண்டுகளால் கோடுகளாகக் காட்டப்படுதலைப் புனையா ஓவியம் என்பர். கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட இம்முறை (கரித்துண்டு ஓவியம்) இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் ‘மென் கோட்டு ஓவியம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருத்தல் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஓவியன் தான் எண்ணிய படத்தை வண்ணம் புனைந்து தீட்டுவதற்கு முன் கற்பனை ஓவியத்தைப் புனையா ஓவியமாகத் தீட்டுதல் பண்டைய வழக்கமாக இருந்தது. இத்தகைய புனையா ஓவியத்தைப் ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’ என நக்கீரரும், புனையா ஓவியம் போல நிற்றலும்’ எனச் சாத்தனாரும் கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
சங்ககால மக்கள் வீட்டையும் ஓவியங் கொண்டு அலங்கரித்தனர். ‘ஓவத்து அன்ன வினைபுனை நல் இல்’ (அகம் 98:11) என்று செல்வர் தம் இல்லம் என்று சிறப்பிக்கப்பட்டிப்பதைக் காணலாம். ‘ஓவத்தன்ன இடனுடைவரைப்பிற் புறம்’ என்று புறநானூறும் புகழ்ந்து கூறும். மேலும் சங்ககால ஓவியர்கள் இயற்கைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை என்றிவற்றை மட்டுமின்றி, சோதிட, வான சாஸ்த்திர நூல் மற்றும் புராண இதிகாசங்களையும் கற்றறிந்து அழகுறத் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும், விண் மீன்களையும் வரைந்ததை,
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செலவனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா
என்று நெடுநெல்வாடை கூறுகிறது.சங்க காலச் சாதாரண நிலையில் இருந்த மகளிரும், பெருங்குடிப் பெண்டிரும், ஆடல் அணங்குகளும் ஓவியம் தீட்டினர். நாட்டிய மகள் மாதவி ஓவியக் கலையை நன்கு அறிந்திருந்தாள் எனச் சிலம்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
சங்க காலத்தில் தொல் மாந்தர்கள் தங்களது பண்பாட்டு வரலாற்றை இத்தகைய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டுப் பாதையில் அடியெடுத்துவைத்த நம் முன்னோர் ஓவியத்தின் வழியேதான் முதன் முதலில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதும் அதன் வெளிப்பாடே பண்டைய மாந்தர்களையும் அவர்களின் நாகரிகப் பின்புலத்தையும் அறிந்துகொள்ள சிறந்ததோர் சான்றாக அமைந்துள்ளது என்பது சிறப்பிற்குரியது.
துணை நின்ற நூல்கள்
1.சாமி.சிதம்பரனார் (2011) : தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014
2.முனைவர் அ. பாண்டுரங்கன் (2016) : சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-டீ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098
3.முனைவர். அ.தட்சிணாமூர்த்தி (2019) : தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மேற்கு அண்ணாநகர், சென்னை – 600 040
4.இரா.பவுந்துரை : தமிழகப் பாறை ஓவியங்கள் பக் – 79.
5.நா.சுலைமான் : பாண்டி மண்டலத்தில் குகை ஓவியங்கள் – நுண் கலை, மலர் 7 – இதழ் 2 பக் 26,32.