Saturday, April 4, 2026
Home Blog Page 25

மரங்கள் பேசினால்|கவிதை|த.பிரகாஷ் ராஜ்

மரங்கள் பேசினால் - த.பிரகாஷ் ராஜ்

‌         

இலக்கணக்குறிப்பு அறிதல்|இலக்கணக் குறிப்பு வகைகள்

இலக்கணக் குறிப்புகள்

கல்லறை வாயில்|கவிதை|சு.தமிழ்ச்செல்வன்

கல்லறை வாயில்_ சு.தமிழ்ச்செல்வன்

மௌனமே சிறந்த பதிலடி|தன்னம்பிக்கை கட்டுரைகள்|முனைவர் ஈ.யுவராணி

மௌனமே சிறந்த பதிலடி
கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார்.  அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா.  இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.  “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான். “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.  “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?”

உனக்கு நீயே கேட்டுப்பார்
    
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த சாவியைத் தொலைத்த முல்லர்வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப் போன அந்த ஊர்க்காரர், வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம்மில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.
    
ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை. வேண்டுமானால், சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’. இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
     
ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மௌனப் பேச்சை ஆரம்பித்தார்.  அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ…’’  இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்…’’  அம்மா சொன்னார்… உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை.  இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா.’’
    
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே… யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா. எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.  ஞானி சொன்னார், இமயமலையில் நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா…’’
    
அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
   
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.
    
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.  என்னப்பா. ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’  அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார். என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன்.  ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ ஒருத்தரால கூடவா முடியலை?’’ ஆமா.’’  அந்த முதியவர் கேட்டார்! சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.
ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு – 638 476


 

ஆசிரியரின் படைப்புகளை மேலும் பார்க்க..
1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

3.நீதிக்கு அடிபணி

 

ஆகுபெயர் என்றால் என்ன? ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் வகைகள்
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா)  ஊர் சிரித்தது
எங்கும் ஊர் சிரிக்காது. ஊரிலுள்ள மக்கள்தான் சிரிப்பார்கள். நேரிடையாக மக்கள் சிரிப்பதைச் சொல்லாமல் மக்கள் வசிக்கின்ற (தொடர்புடைய) ஊரைச் சொல்லியது ஆகும்.

“பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே”   – நன்னூல்.290
என்பார் நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர்.


ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

1.பொருளாகு பெயர்
ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகுபெயர் எனவும் கூறுவர்.

(எ.கா) தமிழரசி மல்லிகை சூடினாள்
இத்தொடரில் உள்ள மல்லிகை என்னும் சொல் வேர், கொடி. இலை, பூ ஆகிய உறுப்புகள் அனைத்தும் சேர்ந்த முழுப்பொருளைக் குறிக்கிறது ஆனால் அடுத்துள்ள சூடினாள் என்னும் பயனிலையால் மல்லிகை என்னும் பெயர், முழுப்பொருளை உணர்த்தாது, அதன் ஓர் உறுப்பாகிய மலரை மட்டும் உணர்த்துகிறது. எனவே இது பொருளாகு பெயர்.
(எ.கா) பூசணிச்சாம்பார் சுவையாக இருந்தது.
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது ‘இடவாகு பெயர்’ எனப்படும்.

(எ.கா)    கிரிக்கெட்டில் இந்தியா வென்றது.
இந்தச் சொற்றொடரில் உள்ள இந்தியா என்னும் இடப்பெயர் அப்பெயரால் அமைந்த நாட்டைக் குறிக்காது அந்நாட்டிற்காக விளையாடிய வீரர்களைக் குறிக்கிறது. எனவே இது இடவாகு பெயர் ஆகும்.
(எ.கா) காஞ்சிபுரம் என்ன விலை?
3. காலவாகுபெயர்
காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்

(எ.கா) மார்கழி சூடினாள்
மார்கழி என்னும் சொல் தமிழ்த்திங்களைக் குறிக்கும் காலப் பெயராகும். ஆனால் சூடினாள் என்னும் குறிப்பால் மார்கழித் திங்களில் மலர்ந்த மலரை (டிசம்பர் பூ எனப்படும் நீலக்கனகாம்பரம்) உணர்த்துகிறது. எனவே இது காலவாகுபெயர் ஆகும்.
(எ.கா)  கோடை நன்றாக விளைந்துள்ளது. 
4.சினையாகு பெயர்

ஒரு சினையின் (உறுப்பு) பெயர், அதனோடு தொடர்புடைய முழுப்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) ஆசிரியர் தலைக்கு ஒரு வினாத்தாள் தந்தார்.

‘தலை’ என்பது நம்முடலின் ஓர் உறுப்பு இத்தொடரில் உள்ள ‘தலை’ என்னும் உறுப்பின் பெயர், ஆனால் அடுத்துள்ள குறிப்புச் சொற்களால் மாணவனைக் குறிக்கின்றது. எனவே இது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகு பெயர்
ஒரு பண்புப்பெயர், அப்பண்பைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது ‘குணவாகு பெயர்’ என்றும் வழங்கப் பெறுகிறது.

(எ.கா) இளங்கோ இனிப்பு வழங்கினான்

இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர், ‘வழங்கினான்’ என்னும் குறிப்பால் இனிப்புச் சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்
(எ.கா) செவலையை வண்டியில் பூட்டு
6. தொழிலாகுபெயர்

ஒரு தொழிற்பெயர், அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எகா) அழகன் அவியல் உண்டான்.

இத்தொடரில் அவியல் என்னும் சொல் காய்கறிகளை என்னும் பொருளைத் தருகிறது. எனவே இது தொழிலாகுபெயர் எனப்படும். அவித்தலாகிய தொழிலைக் குறிப்பதாகும். ஆனால் ‘உண்டான்’ என்னும் பயனிலையால் அவிக்கப்பட்ட காய்கறியினை உண்டான்.
(எ.கா) பொரியல் சுவையாக இருந்தது.
7. தானியாகுபெயர்
ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப்பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று (தானம் – குடம், தானிக் பால்

8. உவமையாகு பெயர்

உவமானப் பெயர், தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகுபெயர் எனப்படும்.

(எ.கா)  காளை வந்தான்
காளை மாட்டைக் குறிக்கும் பெயராகிய காளை என்பது காளை மாடு போன்ற வலிமையும் வீரமும் வாய்ந்த ஆண் மகனுக்கு ஆகி வந்தது. காளை போன்றவன் வந்தான். எனவே இது உவமையாகுபெயர் ஆயிற்று
(எ.கா) பாவை ஆடினாள்
9. கருவியாகுபெயர்
ஒரு கருவியின் பெயர், அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) குழல்கேட்டு மகிழ்ந்தான்.
குழல் என்னும் இசைக் கருவியின் பெயர், அதனால் உண்டான இசைக்கு ஆகிவந்து குழலோசை கேட்டு மகிழ்ந்தான் என்றானதால், இது கருவியாகுபெயர் ஆயிற்று

10. காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
(எ.கா)  களவியல் படித்தான்.
களவியல் என்றும் காரியத்தின் பெயர் அதனை  உணர்த்துவதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆகி வந்தது, களவியல் என்னும் அகத்திணை இலக்கணத்தைப் படித்தான் என்றானதால் இது காரியவாகு பெயர் ஆயிற்று.

11. கருத்தா ஆகுபெயர்
ஒரு கருத்தாவின் பெயர், அவரால் இயற்றப்பட்ட நூலிற்கு ஆகிவருவது கருத்தா ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருக்குறள் என்பதாகும். இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட காரியமாகிய திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாகுபெயர் ஆயிற்று.

12. சொல்லாகுபெயர்
ஒரு சொல்லின் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது சொல்லாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தம்பி என் சொல்லைக் கேட்டான்

’சொல்’ என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகுபெயர் ஆயிற்று.

(எ.கா) பாட்டுக்கு உரை எழுதுக.
13. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணைக் குறிக்கும் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்னும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன. இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது எண்ணலளவையாகுபெயர் எனப்படும்.
(எ.கா)  தலைக்கு ஒன்று கொடு
14. எடுத்தல் அளவை ஆகுபெயர்
எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர்.

(எகா) கிலோ என்ன விலை?
‘கிலோ’ என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர், தொடர்புடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு, சர்க்கரை ) ஆகி வந்ததால் இது எடுத்தலளவையாகு பெயர் எனப்படும்.

15. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) இரண்டு லிட்டர் கொடு
லிட்டர் என்னும் முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (பால், மண்ணெண்ணெய்) ஆகி வந்தது. எனவே இது முகத்தளலவையாகு பெயர் எனப்படும்.

16. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) சட்டைக்கு இரண்டு மீட்டர் வேண்டும்.
மீட்டர் என்னும் நீட்டல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (துணி) ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.

 

நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை |கவிஞர்.ச.குமார்

நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை கவிஞர்.ச.குமார்

முத்தகவிஞர்.ச.குமார்மிழில் பலரும் விரும்புவது  நாடகமே


நாட்டை அகத்துள் கொள்வாய் கலையாய்


நடிப்பில் உலகியல் பார்வை தெரியுமே


கூத்துக்கலை நடிகர்மக்களை ஈர்த்திடுவார்


உணர்வில் உரைவசனம் மெய்சிலிர்க்க செய்திடுமே


போலச்செய்தல் தனித்துவம் வாய்ந்தது அல்லவா?


தொன்மை இலக்கணம் மெய்ப்பாடு கூறுமே


சிலம்பிலே அரங்கேற்றம் நாடகம் பேசிடுமே


நாடகக்கலை வளர்த்த பரிதிமாற் புகழுக்குரியவரே


மதங்க சூளாமணிக்கு  விபுலானந்தர் பெருமையுற்றார்


சாகுந்தலத்திற்கு மறைமலையடிகள் சிறப்பு செய்தாரே


குறவஞ்சி நாடகம் தமிழின் சிறப்பல்லவோ..


மன்னன் வேத்தியல் மக்கள் பொதுவியல்


நாட்டின் கலையில் நடிப்புச் செல்வர்களே


பார்ப்பவன் பார்த்து பாராட்ட மறவாதே


நடப்பியல் தெரிய நாடகத்தை  காணச்செல்


கலைகள் உன்னால் வளர்ச்சி அடைந்திடுமே


படைப்பாக்கம்


கவிஞர்.ச.குமார்

உதவிப் பேராசிரியர்


இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

வல்லினம் மிகா இடங்கள் / ஒற்று மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்

1.வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்| ஒற்று மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்
           தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
           
      இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு.  அவற்றை மட்டும் பார்த்தால் இச்சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
 
           இதற்கு நாம் இரண்டு இடங்களை மட்டும் உற்று நோக்கினால் போதுமானது.

1.நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து

2.வரும்மொழியின் முதலெழுத்து க,ச,த,ப – ஆக இருக்க வேண்டும்.

       ( க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற 6 வல்லின எழுத்துகளில் க,ச,த,ப என்ற 4 எழுத்துகளும் வரும்மொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால்தான் இதற்கு வல்லினம் மிகும் எழுத்துகள் என்கிறோம். அந்த 4 எழுத்துகளின் ஒற்று க்,ச்,த்,ப் என்று வரும்)

இராமனை + கண்டேன் = இராமனைக் கண்டேன் (க் – என ஒற்று மிகுந்தது)

இங்கு,

இராமனை என்பது நிலைமொழி (நிலையாக நிற்கும் சொல்)

கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)

       இராமன் + ஐ என்பதில், நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு    ன் +ஐ = னை என்று வருகிறது.  வரும்மொழியின் முதலில் ”க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில்  ”க்”  என்ற ஒற்று வரும்.

     கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும்.  வரும்மொழியில் முதலெழுத்து – க,ச,த,ப என இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.  வல்லினம் மிகும் இடங்கள், ஒற்று மிகும் இடங்கள் என்றும் அழைப்பர்.

1.நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
 
நிலா + சோறு = நிலாச்சோறு

மழை + காலம் = மழைக்காலம்

பனி + துளி =பனித்துளி


 

2.அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

அ+ குடம்  = அக்குடம்

இ+ புத்தகம்  =இப்புத்தகம்

உ +  சிறுவன் =உச்சிறுவன்

எ + தொழில் =எத்தொழில்


 

3.அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

அந்த + கிணறு = அந்தக்கிணறு  

இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்

எந்த + செயல் = எந்தச்செயல்


 

4.அப்படி, இப்படி எப்படி என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்

இப்படி + சொன்னான் = இப்படிச்சொன்னான்

எப்படி + தந்தான் = எப்படித் தந்தான்


 

5.அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அங்கு +சென்றான் =அங்குச்சென்றான்

இங்கு +போனான்  = இங்குப்போனான் 

எங்கு + தேடினான் = எங்குத்தேடினான்


 

6.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.

தாமரை+ பூ = தாமரைப்பூ (தாமரையின் பூ)

குதிரை +கால் = குதிரைக்கால் (குதிரையினது கால்)

 

7. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

குடி +பிறந்தார் =  குடிப்பிறந்தார் (குடியின்கண் பிறந்தார்)

வழி +சென்றார் = வழிச்சென்றார் (வழியின்கண் சென்றார்)


 

8.இரண்டாம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்.

கடையை + கண்டேன் = கடையைக் கண்டேன்

பொருளை + தேடு = பொருளைத் தேடு

புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்

நூலை + படி = நூலைப் படி


 

9.நான்காம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்

பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச்சென்றான்

கடைக்கு + போனான் = கடைக்குப்போனான்

 

10.வன்றொடர்க் குற்றுயலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பாக்கு + தூள்  = பாக்குத தூள்

தச்சு  + தொழில் = தச்சுத்தொழில்

கேட்டு + சொல் = கேட்டுச்சொல்

எட்டு + தொகை = எட்டுத்தொகை

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு


 

11. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

மருந்து + கடை =  மருந்துக்கடை

பண்பு + தொகை = பண்புத்தொகை

கன்று + குட்டி  = கன்றுக்குட்டி


 

12.இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம்  மிகும்

சாரை + பாம்பு = சாரைப் பாம்பு

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்

மல்லி + பூ. =மல்லிப்பூ


 

13.பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சதுரம் + பலகை = சதுரப்பலகை

வட்டம் + பாறை = வட்டப்பாறை

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு

நீல + கடல் = நீலக்கடல்


 

14.அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

தேட + சொன்னான் = தேடச்சொன்னான்

என + கூறு = எனக்கூறு

நன்றாக + படிப்பான் = நன்றாகப் படிப்பான்

பாட +தெரியுமா?  = பாடத்தெரியுமா?


 

15.ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

பூ + பறித்தான் = பூப்பறித்தான்

கை + காசு = கைக்காசு

தை + திங்கள் = தைத்திங்கள்


 

16.ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.

நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்

போய் + தேடு = போய்த்தேடு


 

17.இனி, தனி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

இனி + காணலாம் = இனிக் காணலாம்

தனி + தமிழ்  = தனித்தமிழ்


 

18.என, ஆக என்னும் சொற்களுக்குப்பின் வரும் வல்லினம்

என + கூறினான் = எனக்கூறினான்

ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்

 

19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

சால +  சிறந்தது = சாலச்சிறந்தது

தவ + பெரிது = தவப்பெரிது

 


20.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

உண்ணா + சோறு = உண்ணாச்சோறு

ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

அழியா + புகழ் = அழியாப்புகழ்


 

21.தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

பலா சுளை  = பலாச்சுளை

இரா+ பகல் =  இராப்பகல்

கனா + காலம்  = கனாக்காலம்


 

22. இனி, தனி, மற்று, மற்ற, மற்றை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

இனி + போகலாம் = இனிப்போகலாம்

தனி + காடு = தனிக்காடு

மற்று + கண்டவை = மற்றுக்கண்டவை

மற்ற+பொருட்கள் = மற்றப்பொருட்கள்

மற்றை + கூறுகள் = மற்றைக்கூறுகள்


 

23.முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 
திரு + குறள் = திருக்குறள்

பொது + சொத்து = பொதுச் சொத்து


 

24.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம்மிகும்.

தண்ணீர்+ குடம் = தண்ணீர்க்குடம்

மலர் + கூடை = மலர்க்கூடை


 

25. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரம் + பெட்டி = மரப்பெட்டி

இரும்பு + சாவி = இரும்புச்சாவி

 

26.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சட்டை + துணி = சட்டைத்துணி

குடை + கம்பி = குடைக்கம்பி


 

27.ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

அடுப்பு + புகை =அடுப்புப்புகை

விழி + புனல் = விழிப்புனல்


 

28.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

பவளம் + செவ்வாய் = பவளச் செவ்வாய்

மலர் + கண் = மலர்க்கண்

 

29.நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்.

நாடு + பற்று = நாட்டுப் பற்று

வயிறு +போக்கு = வயிற்றுப்போக்கு

முரடு + காளை = முரட்டுக்காளை

காடு + தேன்   = காட்டுத்தேன்.


 

30. ய்,ர்,ழ் என வரும்போது ஒற்று இரட்டிக்கும்

வாய்ப்பு, வார்ப்பு, வாழ்க்கை

 

 

நெல்லுக்கு இறைத்த நீர் | சிறுகதை |பழ.பாலசுந்தரம்

நெல்லுக்கு இறைத்த நீர் - பாலசுந்தரம்
     அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் சம்பத்திற்கு  ஒரு உந்துதல் ஏற்படும். ‘வினோத விருப்பங்கள்’ என்ற தலைப்பில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. வாரந்தோறும் நடத்தும் நிகழ்ச்சி அது. நேயர்களின் வித்தியாசமான, நிறைவேறாத ஆசைகளை ஈடேற்றித் தருவதே அதன் நோக்கமாக இருந்தது. நேயர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. தன் ஆசையை, லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பத்திற்கு வேறு வழி தோன்றவில்லை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எழுதி ஒப்புதலும் வந்துவிட்டது. நகரின் பெரிய துணிக்கடை ஒன்று செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. அவன் மிகுந்த எதிர்பார்ப்போடு அக்டோபர் ஏழாம் தேதிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
           
        ராமநாதனுக்கு சம்பத் மட்டுமே வாரிசு. அவர் அரசு ஊழியத்திலிருந்தபோதே மகனுக்கு மணமுடித்து வைத்தார். பணியாற்றிக் கொண்டிருந்த வரை எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சங்களோடு ஓய்வு பெற்ற பிறகுதான் அவருக்கு மருமகளின் சுயரூபம் புரிய ஆரம்பித்தது. பணத்தை சம்பத் பெயரில் வங்கியில் இட்டு வைக்க வேண்டும் என்ற பரிணாமத்திற்கு வளர்த்துவிட்டாள். மனைவியின் என்பதை ஒரு வேண்டுகோளாக ஆரம்பித்து, கட்டளை செயல்கள் அனைத்தும் சரிதான் என்ற நிலைக்குப் போ யிருந்த சம்பத் தந்தையை வற்புறுத்த ஆரம்பித்தான். பணம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைக்குதான் தனக்குப் பாதுகாப்பு என்பது ராமநாதனின் அசைக்க முடியாத சித்தாந்தம். கடைசிவரை அவர் மசியாததால் மருமகள் அவரைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தாள். ஒரு தினம் கழிவதற்குள் அவர் பல ரூபங்களில் அவமதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
           
      பொறுக்க முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதென முடிவு செய்தார். நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த முதியோர் காப்பகம், சரணாலயம் அவருக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்தது. மாதா மாதம் வங்கி பிலிருந்து கிடைத்த வட்டியை காப்பக நிர்வாகத்திற்கு அளித்து வந்தார். வாழ்க்கை நிம்மதியாய் நகர்ந்து கொண்டிருந்தது. சம்பத் அதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் தன் வற்புறுத்தல்கள் தந்தையைப் பணியவைத்துவிடும் என்றிருந்தவனுக்கு அவரின் மாறுதலான முடிவு அதிர்ச்சிதான். அதுவும் சாகும்வரை அவன் கையால் ஒரு பருக்கை கூட உண்ணப் போவதில்லை என்றும், அவன் தனக்குக் கொள்ளி போடக் கூடாதெனவும் தெருவில் நின்று பிரகடனப்படுத்தி வெளியேறுவார் என்பது அவன் யூக எல்லைக்குள்ளேயே வராதது. ஒரு வேளையாவது அவருக்கு உணவிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக, வைராக்கியமாக மனதிற்குள் வளர்த்து வந்தவனுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாகிவிட்டது.

அன்று ஏழாம் தேதி, சரணாலயம் பரபரப்பாக இருந்தது.

“நம்ம நேரத்தப் பார்த்தியா.. ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிடப் போகிறோம். டீவில இன்னொரு நாள் அதப் பார்க்கப் போறோம்… நெனச்சிப் பாத்திருப்பமா?”

”ஏதோ ஒரு புண்ணியவான் மனசு வெச்சதால இது நடக்குது.. அவன் நல்லாயிருக்கட்டும்…”
           
        இரு முதியவர்கள் புறப்பட்டவாறே பேசிக் கொண்டிருந்தனர். நகரின் பிரபலமான நட்சத்திர உணவு விடுதியின் வாகனம், இருபத்தி இரண்டு முதியவர்களையும், காப்பக மேலாளர் நடேசனையும் சுமந்து கொண்டு
விரைந்தது.
           
      உணவு விடுதியில் நுழைந்த நொடியிலிருந்தே அவர்களால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே காணக் கிடைத்தவை, நேரில் அனுபவிக்கவும் கிடைத்த விந்தையை அவர்களால் நம்ப முடியவில்லை. அலங்காரமான உணவுக் கூடத்தில் விருந்து துவங்கியது. பெயர் தெரியாத பதார்த்தங்களையெல்லாம் ருசித்து முடித்தனர். அனைவருக்கும் சமமான விதத்தில் பண்டங்கள் பரிமாறப்பட்டன. யாருக்கும் கூடுதலோ, குறைவோ இன்றி சீரான முறையில் கவனிப்பு இருந்தது.
           
      ஒரு வழியாய் விருந்து முடிந்ததும், அவர்களுக்கு ஆவல் மேலிட்டது. தங்கள் பொருட்டு அத்தனை கருணை சிந்திய அந்த மனிதன் யாரென் அறிந்து கொள்ளத் துடித்தனர்.
           
          சம்பத் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபோது, ஆரவாரம் எழுந்தது. பலரும் அவனைப் பாராட்ட, மனம் குளிர்ந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு தந்தையை நோக்க, அவர் சலனமின்றி நின்று கொண்டிருந்தார். தொலைக்காட்சி நிறுவனத்தினர், துணிக்கடை அதிபரையும் அறிமுகப்படுத்த அவரும் பாராட்டு மழையில் நனைந்தார். உணவுக் கூடத்தின் மேலாளர், பளபளத்த புத்தக அட்டைக்குள் கட்டணச் சீட்டை வைத்து துணிக்கடை அதிபரிடம் நீட்டினார். முன்பே செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின்பேரில், மொத்த தொகை இருபத்து மூன்றால் வகுக்கப்பட்டது. ஒருவருக்கான கட்டணத்தை மட்டும் சம்பத் செலுத்த, மீதிக் கட்டணம் துணிக்கடை அதிபரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வினோதமான அந்த நடவடிக்கைப் பற்றி அனைவரும் வியப்போடு உரையாட ஆரம்பித்தனர். தன் லட்சியம் நிறைவேறியதாக சம்பத் சொன்னதை, புகைப்படக் கருவி நெருக்கத்தில் பதிவு செய்ய படப்பிடிப்பும் முடிந்தது. முதியவர்கள் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் வாகனத்தை நிரப்பினர்.

அடுத்த நாள் காப்பக மேலாளர் அறைக்கு வந்தார் ராமநாதன்.
          
           சார்… உங்க உதவிய எப்பவும் மறக்க முடியாது.. கடைசிவரைக்கும்… நம்ம பேசி வெச்சுகிட்ட மாதிரி நடந்து சம்பத்த நம்ப வெச்சிட்டிங்க.. தான் ஜெயிச்சட்டதா இன்னும் நெனச்சிக்கிட்டிருப்பான்… அவனப் பொறுத்தவரை நா தோத்தவனாகவே இருந்துட்டுப் போறேன்…”
        
    “அட நீங்க வேற… உங்களுக்குப் பரிமாறுன எல்லா அயிட்டத்தையும் நானும் பீட்டரும் சாப்பிட முடியாம சாப்பிட்டு வயிறு ஒரு வழியாயிடுச்சு… பீட்டர் இன்னும் எழுந்திருச்சே வராம படுக்கையிலேயே கெடக்கறாரு..”

       சாரி சார்… எனக்கு வேற வழி தெரியர… அவனோட குறுக்கு வழி திட்டத்த நீங்க முன்னாடியே தெரிஞ்சுகிட்டு எங்கிட்ட சொன்னதுக்கப்பறம்.. மொதல்ல ஹோட்டலுக்கே வராம அவாய்ட் பண்ணிடலாம்னுதான் நெனச்சேன் அப்படி செஞ்சிருந்தா அவன் ஏமாந்து போயிருப்பான்… ஆனா இப்ப… அவனோட எண்ணம் ஈடேறினதா ஒரு திருப்தி வந்திருக்கும்… அது போதும்… என்னோட வைராக்கியத்துக்கும் எந்த பங்கமும் ஏற்படாம காப்பாத்திட்டிங்க… ரொம்ப நன்றி…”
          
         “பரவால்ல சார்… ஆனா… எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு… என்னிக்காவது உங்க பையன் இங்க வந்து உங்கள கூட்டிக்கிட்டுப் போவான் பாருங்க…“

சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர்

பழ.பாலசுந்தரம் அவர்களின் சிறுகதைகளைப் படிக்க..

 

வேற்றுமை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை என்றால் என்ன?
           

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும்.

(உ.ம்)                         கபிலன் பாராட்டினார்.
                                     கபிலனைப் பாராட்டினர்.
          
        முதல் சொற்றொடரில் பாராட்டியவர் கபிலன் எனப் பொருள் தருகிறது. இரண்டாவது சொற்றொடரில் ‘ஐ’ எழுத்தைச் சேர்த்த பிறகு பாராட்டப்பட்டவன் கபிலன் எனும் பொருளில் முழுமையாக வேறுபடுகிறது.

இதையே வேற்றுமை என்கிறோம். ‘ஐ’ என்பது இங்கு ‘வேற்றுமை உருபு’ எனப்படுகிறது.

பெயர்ச் சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் இடைச் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன.

வேற்றுமை – வகை பிரித்தல் எனலாம்.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதன் அடிப்படையில் வேற்றுமையை எட்டு வகைப்படுத்துவர். அவை


1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)

2. இரண்டாம் வேற்றுமை

3. மூன்றாம் வேற்றுமை

4. நான்காம் வேற்றுமை

5. ஐந்தாம் வேற்றுமை

6. ஆறாம் வேற்றுமை

7. ஏழாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

1.முதல் வேற்றுமை
           

பெயர்ச்சொல் இயல்பாக வந்து எழுவாயாக நின்று, பயனிலையைக் கொண்டு முடிவது ‘முதல் வேற்றுமை` எனப்படும். இதனை ‘எழுவாய் வேற்றுமை’ எனவும் கூறுவர்.

(உம்) தமிழ்ச் செல்வன் பம்பரம் விளையாடினான்.
தமிழ்ச் செல்வன் தலைவர்.
தமிழ்ச் செல்வன் யார்?
மேற்கண்ட தொடர்களில் தமிழ்ச் செல்வன் என்பது இயல்பான பெயராய் நிற்கிறது பயனிலை கொண்டு முடிகிறது. எனவே இது முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை  எனப்படுகிறது.


முதல் வேற்றுமைக்கு வேற்றுமை உருபு கிடையாது


2. இரண்டாம் வேற்றுமை
           

ஒரு பெயர்ச் சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை ‘செயப்படுபொருள் வேற்றுமை’ என்றும் வழங்குவர்.

(உம்) மாடு பயிரை மேய்ந்தது.
         
   இத்தொடரிலுள்ள பயிர் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபை ஏற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுகின்றது. இவ்வாறு பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படுபொளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
           

ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு வகையினவாக இரண்டாம் வேற்றுமை அமையும்.

உதாரணம்
1.அழகன் சிலையைச் செய்தான் – ஆக்கல்
2.அதியன் பகைவரைக் கொன்றான் – அழித்தல்
3.தேன்மொழி ஊரை அடைந்தாள் – அடைதல்
4.கண்ணன் சினத்தை விடுத்தான் – நீத்தல்
5.எழிலன் காளையைப் போன்றவன் – ஒத்தல்
6.கார்மேகம் செல்வத்தை உடையவன் –  உடைமை.

3.மூன்றாம் வேற்றுமை

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

மரம் வாளால் அறுபட்டது.

ஆசிரியரொடு மாணவன் வந்தான்.

தாயோடு மகளும் வந்தாள்.

தந்தையுடன் மகனும் வந்தான்.
 

           இத்தொடர்களில் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகிய உருபுகள் வந்துள்ளன. இவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

‘உடன்’ என்பது பேச்சு வழக்கில் பயன்படும் சொல் உருபு ஆகும்.
 
           இவை பெயர்ச் சொல்லின் பொருளைக் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வேறுபடுத்துகின்றன.

கருவிப்பொருள்
           
தமிழால் வாழ்ந்தான்  – வாழ்வதற்குத் தமிழ் கருவியாக இருந்தது என்பதை விளக்குகிறது.           
அறத்தான் வருவதே இன்பம் – வருவதற்கு அறமே கருவி என்பதை இத்தொடர் உணர்த்துகிறது.
          
  ‘இச்செயலுக்கு இது கருவியாக இருந்தது’ என்பதை விளக்குவதற்காகப் பெயர்ச் சொற்களுடன் ஆல், ஆன் என்னும் உருபுகள் இணைந்துள்ளன. இதுவே கருவிப் பொருளில் அமைந்த மூன்றாம் வேற்றுமையாகும்.
கருத்தாப் பொருள்
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
           
கல்லணை கட்ட கரிகாலன் கருத்தாவாக இருந்தான் என்பதை கரிகாலன் என்னும் சொல்லோடு ‘ஆல்’ உருபு சேர்ந்து உணர்த்துகிறது. எனவே இது கருத்தாப் பொருள் ஆகும்.

கருத்தாப் பொருள் இருவகைப்படும்.
1. ஏவுதற் கருத்தா
2. இயற்றுதற் கருத்தா
1.ஏவுதற் கருத்தா
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
         
   கல்லணையைக் கரிகாலன் தாமே கட்டவில்லை. உரிய பணியாட்களை ஏவி கல்லணையைக் கட்டி முடித்தான் என்பது இதன் பொருள். எனவே கரிகாலன் என்பது ‘ஏவுதற் கருத்தாட் ஆவார்.

2. இயற்றுதற் கருத்தா
தச்சரால் கட்டில் செய்யப்பட்டது
           
தச்சர் தாமே முயன்று கருவிகளைக் கொண்டு கட்டிலைச் செய்து முடித்துள்ளது விளங்குகிறது எனவே ‘தச்சர்’ இயற்றுதல் கருத்தா ஆவார்.
உடனிகழ்ச்சிப் பொருள்
           
உருபுகள், பெயர்ச்சொல்லின் பொருளை, உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டினால் அது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.

கடிதத்தொடு பணமும் வந்தது.
           
இத்தொடரில் உள்ள ‘ஒடு’ என்னும் உருபு கடிதமும், பணமும் உடன் வந்ததை உணர்த்துகிறது.

தலைவரோடு தொண்டரும் வந்தனர்.
           
இத்தொடரில் உள்ள ‘ஓடு’ என்னும் உருபு இருவரும் இணைந்து வந்தனர் எனப் பொருள் தருகிறது. இவ்வாறு ஒடு, ஓடு என்னும் உருபுகள் பெயர்ச் சொல்லின் பொருளை உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டுவதால் ‘உடனிகழ்ச்சிப் பொருள்’ எனப்படும்.
 
சொல்லுருபு
           
வேற்றுமை உருபுகள் தவிர, சில சொற்களும் வேற்றுமைக்கு உருபுகளாக அமைவதுண்டு. அதுவே ‘சொல்லுருபு’ என அழைக்கப்படுகின்றது.

ஊசி கொண்டு தைத்தான்.
இடி மின்னலுடன் மழை பெய்தது.
           
இத்தொடர்களில் ‘கொண்டு’, ‘உடன்’ என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.


4.நான்காம் வேற்றுமை

தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்.
           
தாய் என்னும் பெயர்ச்சொல் ‘கு` என்னும் உருபையேற்று, பொருள் வேறுபாட்டை உணர்த்தி வருகிறது. இதுவே நான்காம் வேற்றுமையாகும்.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
           

இது கோடற் பொருளை உணர்த்துகிறது. (கொடுப்பதை ஏற்றுக் கொள்வது ‘கோடல்’ ஆகும்)
           
நான்காம் வேற்றுமை உணர்த்தும் கோடற் பொருளானது கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என ஏழு வகைப்படும்.

உதாரணம்
மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்  – கொடை

புகைத்தல் மனிதனுக்குப் பகை – பகை

பாரிக்கு நண்பர் கபிலர்  – நேர்ச்சி (நட்பு)

கண்ணனுக்கு அணிகலன் கண்ணோட்டம்  – தகுதி

தயிருக்குப் பால் வாங்கினான் – அதுவாதல்

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டனர்  – பொருட்டு

வளவனுக்குத் தங்கை வளர்மதி – முறை

சொல்லுருபுகள்
பணத்திற்காகத் தீயவை செய்யேல்
தலைவர் பொருட்டுச் செயலாளர் பேசினார்.
           
இவற்றில் ஆக. பொருட்டு என்பவை நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்.


5. ஐந்தாம் வேற்றுமை

பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
           
இத்தொடர்களில் பண்பாடு, ஒழுக்கம் என்னும் சொற்களின் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன. இது ஐந்தாம் வேற்றுமை ஆகும்.


ஐந்தாம் வேற்றுமை உருபுகள் – ‘இல்’, ‘இன்’


இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது (காரணம்) என்னும் நான்கு பொருளை உணர்த்தி வரும்.

தலையின் இழிந்த மயிர் – நீங்கல்
கடலின் விரிந்த புகழுடையர் ஒப்பு
பழனியின் கிழக்கு மதுரை – எல்லை
வீணை வாசிப்பதில் வல்லவன் – ஏது.
சொல்லுருபுகள்
அன்பு ஊரிலிருந்து வந்தான்
வெண்ணிலா மேகத்தினின்று வெளிப்பட்டது.
மன்னனைவிடக் கற்றோரே சிறப்புடையர்.
தமிழைக் காட்டிலும் இனிமையான மொழியுண்டோ!
 
           இத்தொடர்களிலுள்ள இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பவை ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்


6. ஆறாம் வேற்றுமை

மன்னது கை

எனாது கை        – அரிதாக வரும்

என கை

            இத்தொடர்களில் வரும் அது, ஆது, அ என்னும் உருபுகள் பெயர்ச்சொல்லைச் சேர்ந்து நின்று பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இது ஆறாம் வேற்றுமையாகும்.
          
  இது கிழமைப் பொருளில் வரும் – (கிழமை -உரிமை)


ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ


சொல்லுருபுகள்
நண்பருடைய இல்லம்.
ஆசிரியருடைய இருக்கை.
           
இத்தொடர்களிலுள்ள உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய செல்லுருபாகும்.


7. ஏழாம் வேற்றுமை

கிளையின்கண் அமர்ந்துள்ள பறவை.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
பிறரிடம் பகை கொள்ளாதே.
தலைமேலுள்ள சுமை.
வீட்டில் சோலை உள்ளது.
           
மேற்கண்ட தொடர்களில் கிளை, பெட்டி, மாணவர்கள், தலை வீடு போன்ற பெயர்ச்சொற்களுடன் கண், உள், இடம், மேல், இல் என்னும் உருபுகள் சேர்ந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. இதுவே ஏழாம் வேற்றுமை ஆகும்.
           

ஏழாம் வேற்றுமை உருபுகள்: இல், சண், இடம், உள், மேல் இந்த ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்தும்.
          

  ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ ஒப்புப் பொருளிலும் ஏதுப் பொருளிலும் வரும். ஏழாம் வேற்றுமையில் இடப் பொருளில் மட்டும் வரும். ‘இல்’ உருபை இட முடிவைக் கொண்டு வேற்றுமைப் பொருளை அறிய வேண்டும்.

(எ.கா.) பணம் பெட்டியில் இருக்கிறது – ஏழாம் வேற்றுமை.
  
          பணத்தைப் பெட்டியிலிருந்து எடுத்தான் – நீங்கல் பொருள் – ஐந்தாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை
          

  பெயர்ச்சொல் விளித்தல் பொருளில் வேறுபட்டு வருவது எட்டாம் வேற்றுமை ஆகும் இதனை ‘விளி வேற்றுமை’ என்றும் அழைப்பர்.(விளித்தல் – அழைத்தல்)
                                      கண்ணா வா!
           
இத்தொடரில் ‘கண்ணன்’ என்ற சொல்லின் இறுதி எழுத்து கெட்டு அயல் (முந்தைய) எழுத்து நீண்டு, அழைத்தல் பொருளைத் தருகிறது. எனவே இது எட்டாம் வேற்றுமை ஆகும்.

படர்க்கையில் உள்ள பொருளை முன்னிலைப் பொருளாக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது.


எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.

வேற்றுமை உருபுகளின் வகைகள்
   

                                                                  உருபுகள்                                      வேற்றுமை

குமரன் பாடினான்                    உருபு இல்லை              முதல் வேற்றுமை (எழுவாய்)

குமரனைக் கண்டேன்                             ஐ                        இரண்டாம் வேற்றுமை

குமரனால் முடியும்                                   ஆல்                  மூன்றாம் வேற்றுமை

குமரனுக்குக் கொடு                                கு                       நான்காம் வேற்றுமை

குமரனின் நல்லவன்                                இன்                 ஐந்தாம் வேற்றுமை

குமரனது புத்தகம்                                    அது                  ஆறாம் வேற்றுமை
குமரன்
கண் உள்ளது                                             கண்                   ஏழாம் வேற்றுமை

குமரா! வா!                                 தனி உருபு இல்லை    எட்டாம் வேற்றுமை

 

 

எனக்குள் ஒருவன்|சிறுகதை |முனைவர் க.லெனின்

எனக்குள் ஒருவன் - சிறுகதை
        யாருமில்லாத சாலையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கார். எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இரண்டு குட்டிக்கரணம் போட்டு தலைக்கீழாய் மல்லாந்து விழுந்தது. காருக்குள் இருந்த கணவனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் அவ்விடத்திலேயே உயிரை விட்டனர். லாரிக்காரன் பயம்கொண்டு வண்டியைத் திருப்பி எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென வேகமாக ஓட்டினான். அந்தப் பக்கமாய் அப்போது வேறொரு கார் வந்து கொண்டிருந்தது. விபத்து நடந்த காருக்குப் பக்கத்தில் போய் வந்து கொண்டிருந்த கார் நிறுத்தப்பட்டது. அமைதியான சூழ்நிலை. அழுகுரல் இல்லை. பேச்சுக்குரல் இல்லை. சாலையில் பிற போக்குவரத்தும் இல்லை. அப்போது விழுந்து கிடந்த காருக்குள் பின்சீட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய கணவனும் மனைவியும் அடிப்பட்ட காரில் இருந்து அந்த ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டனர். அந்தக் காரும் வேகமாய் வந்த திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

“என்னங்க… நமக்கு ரொம்ப வருசமா குழந்தை இல்ல. இந்தக் குழந்தைய நம்ம குழந்தையா நினைச்சி வளக்கலாங்க…” என்றாள் மனைவி.

”ஆமாம்! அந்தக் கார்ல வந்த கணவனும் மனைவியும் செத்துப்போயிட்டாங்க… சொந்தகாரங்க இருந்தாலும் இனிமேல் இவன் அநாதைதான். அவன நாம நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கிடலாம். அதுவும் ஆண் குழந்தை வேற” என்றான் கணவன். அதன்பிறகு அந்தக் கார் எந்தத் திசையில் சென்றது என்றே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது. போலிஸ்சும் வந்தார்கள். ஆம்புலன்சும் வந்திருந்தது. பணியாட்கள் காருக்குள் மாட்டிக்கொண்டிருந்த ஒவ்வொருவராய் வெளியே எடுத்துக்கொண்டிருந்தனர். கணவனையும் மனைவியையும் வெளியே எடுத்தார்கள். மனைவி அமர்ந்திருந்த சீட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு குழந்தை மௌனாமாய்க் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தது.  பணியாள் ஒருவன் டக்கென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.

“சார் இந்தக் குழந்தை மட்டும் உயிரோட இருக்கு!“ என்று போலிஸிடம் சொன்னான் அவன்.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அந்தக்குழந்தையை நோட்டமிட்டனர். குழந்தை ஸ்டேஷனுக்குத் தூக்கி வரப்பட்டது. இறந்தவர்களை எரித்தனர். உறவுகள் ஒவ்வொருவராய் பிரிந்து போயினர்.  பெண் குழந்தை அல்லவா! யார் கொண்டு போய் வயிற்றில் நெருப்பை சுமப்பது? என்றுகூட நினைத்திருக்கலாம். கடைசியில் கான்ஸ்டபில் கைக்கு வந்தது அந்தக் குழந்தை. அவர் நேராகக்  கிருஷ்த்துவ ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றார். அந்த ஆசிரமத்திலே குழந்தை தேவகி வளர்ந்தாள்! படித்தாள்! நல்லவையைக் கற்றுக் கொண்டாள்! இன்று பெரிய மனுசியாகவும் ஆகிவிட்டாள்.

தேவகி ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்தாள். சிறுவயது முதலே மனதில் பலவிதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றும். அப்பொழுதெல்லாம் கத்துவாள். அழுவாள். ஃபாதர்தான் ஆறுதல் சொல்லுவார். தாயையும் தந்தையையும் பறிக்கொடுத்தவள். அந்தவொரு பாதிப்புதான் குழந்தையாக இருந்தாலும் அவளுடைய மனதை ஆட்டுவிக்கிறது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அதுவே ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து இன்று பிரச்சனையாக வந்து நிற்கிறது.

இரவு நேரங்களில் கெட்ட கெட்ட கனவுகள் வேறு தூங்க விடாமல் தேவகியைத் துரத்தும். ஆண் நண்பர்களுடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் தோன்றும். அதுவும் அதுவரை பார்க்காத முகங்களும் அவர்கள் பேசிய உணர்ச்சி மிகு வார்த்தைகள்கூட காலையில் எழுந்தவுடன் தெவகிக்கு நன்றாக நினைவிருக்கும்.  ஏதோ தான்தான் அந்த நபரிடம் சென்று பேசிவிட்டு வந்திருப்பதை போல் உணர்வாள். எத்தனையோ முறை யோசித்து யோசித்துப் பார்ப்பாள்.  இந்த முகங்கள் எல்லாம் உண்மையாகவே இருக்கின்றனவா? எதற்காக எனக்கு இவ்வாறு தோன்றுகிறது? அவர்கள் பேசும் வார்த்தைகள் கூட உண்மையாலும் என்னிடமே பேசுவது போல்லல்வா உள்ளது. யார் இவர்கள்? என்னிடம் என்ன சொல்ல வருகிறார்கள்? பல நேரங்களில் குழம்பிப்போய் அப்படியே தூங்கியும் விடுவாள்.

தனக்குள்ள ஏற்பட்ட பிரச்சனையை ஃபாதரிடம் சென்று சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் தேவகி. அவளுடைய அப்பா, அம்மா, கடவுள் எல்லாமே ஃபாதர்தான். ஒருவேளை தனக்கு பைத்தியம் என்று மருத்துவமனையில் சேர்த்து விட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நிர்மூலமாகி விடுமே என்று பயந்தாள். அதனால் இந்த விஷியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள்.  இப்பொழுதெல்லாம் முடிந்தவரை இரவு நேரங்களில் கத்தாமல் தனக்குள்ளாகவே ஏற்படும் அந்த மிருகத்தை அடக்கி ஆள பழகிக்கொண்டாள்.

ஆனாலும் வயதுக்கு வந்த பிறகு இன்னும் சில உணர்ச்சிகளும் எண்ணங்களும் தேவகிக்கு ஏற்பட்டன. அறையில் தனியாக இருக்கும்போது விளையாட்டாக ஒருசில நேரங்களில் கண்ணாடியைப் பார்த்து ஆணைப் போல நெஞ்சை நிமிர்த்தி நடக்கவும் பேசவும் செய்வாள். பின்பு வாய்விட்டு சிரிப்பாள். ஏன் நாம் இவ்வாறு செய்கிறோம் என்று தன்னைத்தானே நொந்தும் கொள்வாள்? இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று மனதால் எண்ணினாள்.

கொஞ்ச நாளாகவே தன்னுடைய அறைத்தோழிகளுடன்கூட தொட்டுப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள் தேவகி. ஒரே அறையில் இருக்கும்பொழுது சக தோழி துணி மாற்றும்போதும் கண்களை இறுக மூடிக்கொள்வாள்.இப்பொழுதெல்லாம் தேவகிக்குப் பெண்கள் மேலும் அதித ஈர்ப்பு ஏற்படுவதை உணர முடிந்தது. பெண்களின் ஆடை விலகும்போது தன்னையும் அறியாமலும் தான் பெண்தான் என்று உணராமலும் கண்கள் அலைமோதியது.      பல நேரங்களில் தான் ஒருவேளை ஆணாக இருப்போமோ என்ற பயமும் கூட அவளுக்கு இருந்தது. தன்னுடைய மனம் சக தோழிகளுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மிகவும் பயந்தாள். இதனால் அவளை அவளே தனிமைப்படுத்திக் கொண்டாள்.

படித்த படிப்பிற்கு ஒரு நல்ல வேலையும் தேவகிக்குக்  கிடைத்து விட்டது. தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அப்படியே எடுத்து வந்து ஃபாதரிடம் கொடுத்தாள்.

“இது நீ செய்த வேலைக்கான ஊதியம். இந்தப் பணத்த நீ  உன் விருப்பம் போல் செலவு செய்” என்றார் ஃபாதர்

“இவ்வளவு பணத்த வச்சி நான் என்ன பன்றது. இந்த ஆசிரமத்துல என்னைப் போல அநாதை குழந்தைகளுக்கு உதவியா நினைச்சி வச்சிக்கோங்க ஃபாதர்” என்றாள் தேவகி.

“அது தப்புமா! நாங்க ஒரு குழந்தைய வளர்த்துப் படிக்க வச்சி ஆளாக்கி விடுறோம். அவ்வளவுதான் எங்க வேலை. அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி குடும்பத்துக்குப் போவ ஏதோ இந்த ஆசிரமத்துக்குக் கொடுத்தா போதும். அவனால முடிஞ்சது. அதுவும் கட்டாயம் இல்ல. இங்க வளர்ர குழந்தைங்க நல்ல நிலைமையில இருந்தா அதுபோதும்” என்றார் ஃபாதர்.

“எனகென்ன கல்யாணமா ஆயிடுச்சி! அதுவெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப இந்தப் பணத்த வச்சிக்கொங்க. முதன்முதலா என்னை வளர்த்த ஆசிரமத்துக்கு நான் செய்யுற உதவி. வேண்டாம் சொல்லி என்னை பிரிச்சிராதீங்க ஃபாதர்” என்றாள் தேவகி. வேறுவழியில்லாமல் பணத்தை வாங்கிக் கொண்டார் ஃபாதர். தேவகிக்கும் ரொம்ப சந்தோசம்தான்.

ஃபாதரைப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவள் ஒருகனம் திகைத்துப் போய் நின்று விட்டாள். தன்னுடைய அறைத்தோழி  ஒருத்தி அரை நிர்வானத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தியும் அந்தப் பெண்ணை ரசிக்காமல் தேவகிக்கு இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனமும் கண்களும் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கத் தூண்டியது. இதற்குமேல் இங்கே இருந்தால் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடும் என்று நினைத்து அறையை விட்டு வெளியேறுகிறாள் தேவகி.

மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி அழுத கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள் தேவகி. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரானது மழைத்துளிகளில் கலந்து வெறுமையாய் காரணமின்றி வழிந்தோடியது. அம்மாவின் தேவை இப்போதுதான் தேவகிக்கு புரிந்தது. இதுவரை  இப்படியொரு நினைப்பே இல்லாமல் இருந்தவளுக்கு அம்மா இருந்தால் கட்டிப்பிடித்து அழுவலாம் என்றிருந்தது.

அடுத்தநாள் காலையில் ஒரு சைக்காஸிஸ்ட் பெண் டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள் தேவகி. டாக்டரிடம் எதையும் மறைக்காமல் முழுமையாக நடந்த அனைத்தையும் சொன்னாள்.

டாக்டர் சிரித்துக்கொண்டே, “நீ ஆணாக இருக்க விரும்புகிறாயா? அல்லது பெண்ணாக இருக்க விரும்புகிறாயா?”  என்றார்.

பட்டென்று ”நான் பெண்ணாக இருக்கவே விரும்புகிறேன். இன்னமும் என்னை பெண்ணென்றே உணர்கிறேன். பெண்ணாகவே வாழவும் ஆசைப்படுகிறேன்” என்றாள் தேவகி.

டாக்டர் மீண்டும் சிரிக்கின்றார். தேவகியை நன்கு பரிசோதித்து விட்டு ”நீ முழுமையான பெண்தான். ஆனால் உன்னுடைய மனசில் ஏன் அவ்வாறு தோன்றுகிறது என்று மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை நீ திருநம்பியாகக் கூட இருக்கலாம்” என்றார்.

“நிச்சயமாக இல்லை டாக்டர். நான் திருநம்பியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னில் நான் முழுமையான பெண்மையை உணர்கிறேன். அதுமட்டும் இல்லாமல் அவ்வவ்போதுதான் ஆண்தன்மை என்னிடம் வெளிப்பட்டு நிற்கிறது” என்கிறாள் தேவகி.

கிட்டத்தட்ட மூன்று மணித்துளிகளுக்கும் மேலாகத் தேவகிக்குப் பரிசோதனை நடைபெற்றது. தேவகியின் ஜீன்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சில ஜீன்கள் தனித்து இருப்பதையும் கண்டறிகிறார் டாக்டர். தனித்து விடப்பட்ட ஜீன்களை வெளியேற்றினால்தான் அவளின் முழுமையான பெண்மையைக் கொண்டு வரமுடியும் என்கிறார்.  

டாக்டர் சொன்னது போல தன்னால் அப்படியொரு சிகிச்சையை செய்துகொள்ள முடியுமா? அதற்கு ஆகின்ற செலவினை எவ்வாறு சமாளிப்பது? ஃபாதரிடம் இதுபற்றி சொல்லலாமா? தேவகி மனக்குழப்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறாள்.  தனக்கு முன்னால் வந்த பேருந்தில் ஏறி ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கும் சீட்டில் உட்காருகிறாள்.  கொஞ்சதூர பயணம். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்துக் கொள்கிறார்கள். தேவகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

அடிக்கடி நினைவில் வந்த முகம். இந்தப் பெண்ணிடம் நிறைய பேசியதாகவும் பழகியதாகவும் தோன்றுகின்றது. இது எப்படி சாத்தியம்? ஓட்டுநர் போட்ட பிரேக்கில் இரண்டு தோள்களும் உரசிக்கொண்டன. ஏதோ பலநாள் பழகிய மாதிரி உணர்வு தேவகிக்கு. மீண்டும் தானாக உரசுகின்ற மாதிரி வேண்டுமென்றே அப்பெண்ணின் உடலைத் தொடுகிறாள். சத்தியமாக இந்த பெண்ணோடு நான் உறவாடியிருக்கிறேன். தேவகியின் மூளையின் வேகம் படுவேகமாய் சுற்றியது.
“என்னங்க… நீங்க யாரு? என்ன இதுக்கு முன்னால எங்கையாவது பாத்திருக்கீங்களா?” என்றாள் தேவகி.

“எதுக்கு கேட்குறீங்க… நான் உங்கள இப்பதான் முதல்முறையா பாக்குறன்” என்றாள் அப்பெண்.

”நல்லா யோசனை பண்ணி பாருங்க. உங்களுக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு” என்றாள் தேவகி.

உதட்டை சுழித்தவாறு ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டாள் அப்பெண்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ… ஒரு தாய் எப்படி குழந்தைய பாத்துப்பாங்களோ அதுபோல உன்னை கடைசிவரை பாத்துப்பேன். ஐ லவ் மை சுதா…” என்றாள் தேவகி.

ஜன்னல் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண், தேவகி சொன்னதைக் கேட்டு பதறித்தான் போனாள். ”என்னுடைய கணவன் என்னிடம் முதன்முதலாகக் காதலைச் சொன்னதை அப்படியே பெயரோடு சேர்த்துச் சொல்கிறாயே.. நீங்கள் யார்? என்றாள் சுதா.

“நான் சொன்னது சரியா? அப்படியானால் உன்னுடைய கணவனை நான் பார்க்க வேண்டும்” என்கிறாள் தேவகி.

இருவரும் வீட்டை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு மதுராவை பார்க்கிறாள். தன்னுடைய உடன்பிறந்த அண்ணன்தான் மதுரா என்று எண்ணுகிறாள். நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புகள். அதனால்தான் நீ செய்கின்ற பார்க்கின்ற பழகுகின்ற அத்தனை நபரையும் நானும் பார்த்தேன் என்கிறாள் தேவகி. தேவகி எவ்வாறு கஷ்டப்பட்டாலோ அதே போல மதுராவும் தன்னுள் பெண்மையை அவ்வவ்போது உணர்ந்துதான் இருந்தான்.
 
ஓடிச்சென்று அண்ணன் மதுராவை கட்டிக்கொண்டாள். தனக்கொரு சொந்தம் கிடைத்து விட்டதை எண்ணி தேம்பி தேம்பி அழுதாள். சுதா இருவரையும் பார்த்து மகிழ்ச்சிப் பொங்கினாள். அண்ணனைப் பார்த்த பிறகு தனக்கு இனி எந்தவொரு சிகிச்சையும் தேவையில்லை. என்னுடைய உடன்பிறந்தவனின் ஜீனை என்னுலிருந்து எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துக்கொண்டாள் தேவகி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

முதன்மை ஆசிரியர்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

அகப்பொருள் : முதல், உரி, கருப்பொருட்களின் விளக்கம்

அகப்பொருள் முதல், உரி கருப்பொருட்களின் விளக்கம்
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் இல்லறத்தின் வாயிலாக இணைப்பது அகத்திணை எனப்படும். நல்லொழுக்கங்களால் சிறந்த இவ்விருவரும் நன்மக்களைப் பெற்றும் மனையறம் காத்தும் உலக நலத்திற்கு உயர்த்துவதே அகத்திணை எனக் கொள்ளலாம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். கணவன் மனைவி என்போர் மக்களைப் பெற்று பேரின்பம் அடைபவரையே இறைவனின் பாதத்தை அடையமுடியும். அதுவே உலகியல் வாழ்வாகும். தொல்காப்பியர் முதற்கொண்டு பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் அன்பால் இணையப்பட்ட உறவையே சொல்லி செல்கின்றனர். இலக்கண நூலாசிரியர்கள் அகத்திணையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அவை,
ஒரு பெரும்பொழுது என்பது வருடத்தில் இரண்டு மாதங்களாகக் கொள்ளலாம்.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »