Wednesday, June 3, 2026
Home Blog Page 26

மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு|அ.செல்வராசு

மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு - அ.செல்வராசு
      தமிழ் இலக்கண மரபு, ஐந்திலக்கண மரபாகும். தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐந்திலக்கணம் பேசியுள்ளது. பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணம் பேசும் இலக்கண நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தனித்தனி இலக்கணம் பேசும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்களின் பெயர்கள் மட்டும் அறியப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட நூல்கள் கிடைக்கப் பெற்றிருப்பினும் பயிலப்படும் இலக்கண நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. தொல்காப்பியம், நன்னூல், இறையனாரகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை என்பன இன்று பயிலப்படும் இலக்கண நூல்களாகும்.
          
          தமிழ் இலக்கண நூல்களின் பதிப்பு வரலாறு 1820லிருந்து தொடங்குகிறது. தாண்டவராய முதலியார் ‘இலக்கண வினா விடை’ என்ற நூலை முதலில் பதிப்பித்துள்ளார். 1824இல் ‘சதுரகராதி’யைத் தாண்டவராய முதலியாரும், இராமச்சந்திர கவிராயரும் பதிப்பித்துள்ளனர். 1828இல் ‘இலக்கண வினாவிடை’யைத் தாண்டவராய முதலியார் பதிப்பித்துள்ளார். இவற்றைத் தவிர்த்து இவரே நன்னூல், அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய மூன்று நூல்களையும் முதன்முதலாக 1835இல் பதிப்பித்துள்ளார். ‘இலக்கண பஞ்சகம்’ என அழைக்கப்பெற்றவற்றுள் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கணம் பேசும் மூன்று நூல்களும் ஒன்றாக தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஐந்திலக்கணத்தையும் சேர்த்துப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, முதலில் இம்மூன்று இலக்கணமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை, நூலின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு எடுத்துரைப்பதாய் உள்ளது. ‘இது தொடங்கிக் கால நீட்டித்தமையான் முற்றுப்பெற்ற துணையுமிப்போது வெளிப்படுத்தலாயிற்று மற்றையிலக்கணமும் பின்னரச்சுப் பதிப்பித்து வெளிப்படுத்தப்படும்’ என்பது அக்குறிப்பாகும்.
           
       இன்று வெளியிடப்பெறும் நூல்களில் இரண்டாம் பக்கத்தில் இடம்பெறும் தகவல்கள், தொடக்ககாலப் பதிப்புகளில் முகப்புப் பக்கத்திலேயே கொடுத்து விடுவது வழக்கமாகும். அதனடிப்படையில் இந்நூலின் முகப்புப்பக்கத்தில் ‘சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப்புலமை தாண்டவராய முதலியாரால் பழுதறவாராயப்பட்டு, இவராலும் மாநேசர் அ. முத்துச்சாமிப் பிள்ளை என்பவராலும் அச்சில் பதிப்பிக்கப்பட்டன’ என்ற குறிப்புக் கொடுக்கப்பெற்றுள்ளது. எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது என்ற தகவல் தரப்பெறவில்லை. பதிப்பு ஆண்டாக கிறிஸ்து ஆண்டும் சாலிவாகன சக வருடமும் தமிழ் ஆண்டின் பெயராக ஜய வருடமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ் எண்களிலேயே கொடுக்கப்பெற்றுள்ளன. இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருட்கிலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை முதற்பக்கத்தில் பார்க்க முடிகிறது. எழுத்தும் சொல்லும் அடங்கியதாக நன்னூல் உள்ளது. அகப்பொருளும் புறப்பொருளும் அடங்கியதாக முறையே, அகப்பொருளும் வெண்பாமாலையும் உள்ளன.

     நன்னூலின் சிறப்புப் பாயிரம் 15 அடிகளைக் கொண்ட ஒரே பத்தி அமைப்பில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. பொதுப்பாயிரம் உள்ளிட்ட பிற நூற்பாக்கள், நூற்பா வடிவிலின்றி உரைநடை வடிவில் கொடுக்கப் பெற்றுள்ளன. என்றாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு வலது பக்கத்தில் நூற்பாக்களுக்கு என்று எண்கள் கொடுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொடர் எண்களுக்கும் மேற்கோள் குறியாக நட்சத்திரக் குறியீடுகள் கொடுக்கப் பெற்றுள்ளன (க). எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஒவ்வோர் இயலுக்கும் தனித்தனியாக வரிசை எண்கள் இடப்பெற்றுள்ளன.
      
    இரண்டாவதாக, அகப்பொருள் விளக்கம் வைக்கப்பெற்று, பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்நூலின் ‘சிறப்புப்பாயிரம் பிற்காலத்தது’ என்ற அடிக்குறிப்பு இடப்பெற்றுள்ளது. நன்னூல் அமைப்பு முறையிலேயே ஒவ்வோர் இயல்களுக்கும் தனித்தனி வரிசை எண்கள் தரப்பெற்றுள்ளன.
           
      புறப்பொருள் வெண்பாமாலையின் தொடக்கத்தில் சிறப்புப்பாயிரம் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ‘வெட்சி’ என்பதற்கு ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பனிப்பின்றியும், சென்று தன்முனை யாதந்தன்று’ என இலக்கணம் கூறப்பெற்று, அடிக்குறிப்பில் ‘வென்றி வேந்தன் பணிப்பவென்பது மன்னுறு தொழில். பணிப்பின்றி யென்பது தன்னுறு தொழில்…’ எனக் கொடுக்கப்பெற்றுள்ளது. இவ்விடத்தைத் தவிர வேறு எங்கும் அடிக்குறிப்புகள் தரப்படவில்லை. இந்நூலில் இறுதியில் ‘ஐயனாரிதனார் பாடின வெண்பாமாலை முற்றிற்று முற்றும்’ எனச் சுட்டப் பெற்றுள்ளது. நூலாசிரியர் பெயராக’ஐயனாரிதனார்’ என்றும் நூலின் பெயராக ‘வெண்பாமாலை’ என்றும் கொடுக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1895இல் உ.வே.சா. பதிப்பித்துள்ள நூலில் நூலாசிரியர் பெயரும் நூலின் பெயரும் ‘சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச் செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்’ எனக் கொடுக்கப் பெற்றிருப்பதும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும். வெண்பாமாலையில் ‘வருமாறு’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘வ-று’ என்றும் ‘என்பது’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘எ-து’ என்றும் கையாளப் பெற்றுள்ளது. 
          
           முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் குறில் எகர ஒகரங்கள் புள்ளி பெறும் எனச் சுட்டியுள்ளது. அதற்கேற்ப இந்நூல் முழுவதிலும் எகர ஒகரங்கள் குறிலாக வரும் இடங்கள் அனைத்திடத்தும் மேற்புள்ளியிட்டே (எ், ஒ்) பதிப்பிக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வெழுத்துக்கள் நெடிலாக அமையும் இடங்களில் புள்ளியிடப் பெறவில்லை.
           
    தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு என்பது ஓலைச்சுவடியிலிருந்து தாளுக்கு மாறிய வரலாறு மட்டுமில்லை. அச்சுக்கலை வளர்ந்த முறை, பதிப்பு அழகியல், நூல் பெயர்களின் மாற்றம், எழுத்துகளின் வளர்ச்சிநிலை எனப் பல கூறுகளை உள்ளடக்கிய வரலாறாக அது உள்ளது. அது குறித்து அடையாளப்படுத்த வேண்டியதும் இன்றைய தேவையாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,

மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

 

ஆற்றுப்படை இலக்கியத்தில் திணைசார் உணவுகள்| மோ. விஜயசோபா

ஆற்றுப்படை இலக்கியத்தில் திணைசார் உணவு - மோ. விஜயசோபா
முன்னுரை
           
பண்டைய தமிழர்கள் வாழ்க்கை திணை சார்ந்த வாழ்க்கையாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாக இருந்துள்ளதை நாம் இலக்கியங்கள் வழி உணர்ந்து கொள்ளலாம். ஆற்றுப்படை இலக்கியத்தில் உணவு தேடி அலையும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், ஒவ்வொரு திணைகளில் வாழ்ந்த மக்களின் உணவு தேடிய வாழ்வு குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது.

பொது நிலையில் உணவு குறித்த பார்வை
           
          மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பொருள் உணவாகும். பண்டைய மக்களின் முதல் தேடலே உணவு தேடலாக இருந்தது. பழந்தமிழர்கள் இயற்கையாக கிடைத்த காய், கனிகளையும், விதைகளையும். கிழங்குகளையும் உண்டனர். பின்னர் பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடி தனக்குரிய உணவாக மாற்றிக் கொண்டான்.
   மலைப்பகுதிகளில் தேன், கிழங்;கு போன்றவைகள் மிகுதியாக கிடைக்கும். நெய்தல் நில பகுதிகளில் மீன் கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர், மோர், நெய் போன்றவை மிகுதியாக கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும், நெல் சோறும் காய்கறிகளும் மிகுதியாக கிடைக்கும். பண்டமாற்று முறை பண்டைய தமிழர்களிடையே காணப்பட்டதையும் நாம் பார்க்கலாம். குறிஞ்சி நில மக்கள் நெய்தல் நில மக்களுக்கு தேனை கொடுத்து மீனை பெற்று கொண்டார்கள். ஆற்றுப்படை இலக்கியம் பயணம் சார்ந்த இலக்கியமாகவும் இருப்பதால் பரிசில் வேண்டி பயணிக்கும் இரவலர்களுக்கு வழியில் பல நிலத்தவர்களும் அளித்த உணவுகள், இரவலர்களை வரவேற்று அவர்களுக்கு மன்னர்கள் அளித்த விருந்துகள் குறித்த குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவரவர் தகுதிக்கேற்பவும் வாழ்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பவும் அவர்களின் உணவு முறை இருந்துள்ளது.

குறிஞ்சி நில மக்களின் உணவு
           
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் உணவுக்காக இயற்கையை சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பரப்பில் தினையினை விதைத்து வேளாண்மை செய்துள்ளனர். நன்னன் என்றும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் வாழ்;ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச் சோறு உண்டதனை
 
           “பரூவக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு           
              குரூஉக்கன் இறடிப் பொம்மல் பெறுகுவீர்”1
           
குறிஞ்சி நில மக்கள் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உணவாக உட்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. நெல்லால் சமைத்த (வடிக்கப்பெற்ற) கள்ளையும் தேனால் செய்த மூங்கில் குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளி, நீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பினையும் உண்டனர்.
           
“வேய் பெயல் விளையுள் தேக்கம் தேறல்           
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து வைகறை
            ………………………………………………..           
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி”2
என்ற அடிகளால் குறமகள் சமைத்த உணவினை நாம் அறிந்து கொள்ளலாம்.
            அதுபோல் காட்டில் வாழுகின்ற கானவர்கள் எய்த அம்புகள் பட்டு மார்பில் புண் பெற்று நிலத்தை குத்தியதால் கொம்பில் மண்பட்டு வழி அறியாமல் விழுந்து கிடக்கின்ற இருள் துண்டுபட்டு கிடப்பது போன்ற பன்றியை கண்டால் மூங்கில்களில் பற்றிய தீயினால் மயிர் நிங்குமாறு சுட்டு தூய்மைப்படுத்தி தின்று தெளிவான சுனை நீரை குடித்து மீதம் உள்ள பனறனி தசையை எடுத்து செல்லுங்கள் என பதிவு வருகிறது.
 
 ………………………………………………           
நிறப்புண் கூர்ந்த நிலத்தின் மருப்பின்           
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்           
இருள் துணிந் தனை ஏனங் காணின்           
முளிகழை இழைந்த காடுபடு தீயின்           
………………………………….. “3
இதனை இந்த வரிகளில் காட்டுவழி பயணத்தை பற்றி அறிய முடிகிறது.

முல்லை மக்களின் உணவும் வாழ்வும்
           
பசுமையான இலை தழைகளைக் கொண்ட காடும் காடு சார்ந்த பகுதி முல்லை நிலமாகும். முல்லை நில மக்கள் உணவு தேவைக்காக பெரும்பான்மை கால்நடைகளையே சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பகுதியில் வரகு, அவரை போன்ற காய்கறிகளையும் பயிர் செய்துள்ளனர். நன்னது மலைநாட்டு முல்லை நில மக்கள் சிவந்த அவரை விதைகளையும், மூங்கில் அரிசியையும், நெல் அரிசியையும், புளிக்கரைக்கப்பட்ட உலையில் போட்டு புளியங் கூழாக்கி உட்கொண்டார்கள்.
   
 “தொய்யா வெறுங்கையோடு துலின்நுபு குழீஇ           
செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து           
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்”4
என்ற அடிகளாலும், முல்லை நில மக்கள் பாலையும் தினை அரிசிச் சோற்றையும் உண்டனர். முல்லை நில சிற்றூர்கள் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” என்ற உணவினை உண்டதை,
           
“நெடுங்குரல் பூளைப்பூலின் அன்ன           
குறுந்தாள் வரகின் குறள் அவிழச் சொன்றி           
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன           
அவரை வான்புழுக்கு சுட்டி பயில்வுற்று           
இன்சுவை மூரல் பெறுகுவீர்”5
என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. முல்லை நில மக்களின் உணவில் பால், புளி, மூங்கிலரிசி, நெல்லரிசி, வரகரிசி, அவரை போன்றவை இடம் பெற்றிருந்தது என்பதை அறியமுடிகிறது.

மருத நிலத்து மக்களின் உணவும் வாழ்வும்
           
நீர் வளமும், நில வளமும் நிறைந்த வயல் சார்ந்த பகுதி என்பதால் வேளாண்மை மூலம் கிடைக்கும் பொருட்கள் மருத நில மக்கள் உணவில் பெரும்பங்கு வகித்தது. பண்டைய தமிழர் அரிசிச் சோற்றையே தன் சிறப்பு உணவாக உண்டனர். உழவர் குலப்பெண்கள் வைரம் பாய்ந்த உலக்கையின் இரும்பு பூணால் குற்றியெடுத்த வெண்மையான சோற்றுடன், நண்டும், பீர்க்கங்காயும் கலந்து சமைத்த கறிக்கலவையினை விருந்தினருக்கு அளித்ததை
           
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த           
அவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு           
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்”6
என்னும் அடிகள் கைகுத்தல் அரிசியால் சோறாக்குலார்கள் என்பதையும் நண்டையும், பீர்க்கங்காயையும் சேர்த்து சமைப்பார்கள் என்பதையும் அறியமுடிகிறது. அதுபோல தொண்டைநாட்டு மருத நிலத்து சிறுவர்கள் காலை நேரத்தில் பழைய சோற்றை உண்டதை,
           
“கருங்கை வினைஞர் காதல் அம்சிறாசுர்           
பழஞ்சோற்று அமலை முனைஇ”7
என்ற அடிகளால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
 தொண்டை நாட்டு கடற்கரைப்பட்டினத்திலிருந்து காட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த தோப்பில் வாழ்ந்த உழவர்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு முதலியவற்றை உணவாக கொண்டதை,
          
  தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்           
வீழ் இல் தாழைக் குழலித் தீம்நீர்           
…………………………………           
ஆறுசெல் வம்பலர் காய் பசி தீரச்           
சோறு அடு குழிசி இளக, விழுஉம்”8
என்னும் அடிகள் காட்டுகின்றன. மருதநிலம் வளம்மிக்க பகுதி என்பதால் சோற்றுடன் பல வகையான காய்கள் பழங்கள், கிழங்குகள், இறைச்சி போன்றவை மருத நில மக்கள் உணவில் ஒரு பகுதியாக இருந்துள்ளதை நாம் உணரலாம்.

நெய்தல் நில மக்களின் உணவும் வாழ்வும்
           
கடலும் கடல் சார்ந்த பகுதி என்பதால், கடல் உணவுகள், கள் போன்றவை நெய்தல் நில மக்களின் உணவில் இருந்தன. பண்டைய தமிழகத்தில் கள்ளுண்ணும் வழக்கம் காணப்பட்டது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் என அனைவரும் கள்ளினை உண்டு களித்தனர். நெய்தல் நகரமான எயிற்பட்டணத்தில் வலைஞர் குலப் பெண்கள் (நுளைமகள்) காய்ச்சிய பழைய கள்ளையும், குழல் மீன் ஒட்டினையும் உணவாக தருவார்கள் என்ற பதிவினை பார்க்க முடிகிறது.
           
நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த           
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப           
…………………………………..           
விறல்குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்”9
இதற்கு இந்த பாடல் அடிகள் வலு சேர்க்கிறது. நெய்தல நிலத்தில் வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள். அவ்வகையில் தமது இல்லத்திற்கு வந்த விருந்தினருக்கு குழல் மீனினை அளித்த நிகழ்வினைக் காணலாகிறது.

பாலை நில உணவும் வாழ்வும்
           
பாலை நிலம் வறட்சியான பகுதி என்பதால் பிற நிலங்களில் விளையும் உணவுப் பொருட்களையும் வழிப்பறி மற்றும் வேட்டையாடுதல் மூலம் கிடைக்கும் உணவுகளை உண்டனர். தொண்டை நாட்டுப் பாலை நில மக்கள் புல்லரிசியைச் சேகரித்து உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கி சமைத்து உப்புக்கண்டத்தோடு உண்டார்கள். மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டதை,
  
“களர்வளர் ஈந்தின் காழ் கண்டன்ன           
சுவல்விளை நெல்லின் செல் அவிழ்ச் சொன்றி         
 ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்           
வறைகால் யாத்தது வயின் தொறும் பெறுகுவீர்”10
என்ற அடிகளால் அறியலாம்.
ஓய்மா நாட்டுப் பாலை நில மக்களான வேடர் குலப்பெண்கள் புளியிட்டுச் சமைத்த சோற்றையும், வேட்டையாடிக் கொண்டு வந்த மானின் ஒட்டிறைச்சியையும் சமைத்தனர். பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் பழந்தமிழரின் வழக்கத்தையும் சிறுபாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது.
 சுவை மிகுந்த உணவினை புசித்து நோயற்ற வாழ்வும், மாசற்ற சூழ்நிலையும் உருவாக்கி திணைசார் மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தற்கால வாழ்வு முறையை ஒப்பிடும் போது சங்ககால மக்களின் வாழ்வு மிகவும் போற்றுதலுக்குரிய நிலையில் உள்ளது. ஆற்றுப்படை இலக்கியங்களில் இயற்கை வேளாண்மை, தன்னிறைவு பெறுதல், விட்டு கொடுக்கும் பண்பு, தன்னம்பிக்கையோடு பாணர்கள் ஒவ்வொரு நிலத்திலும் பயணித்த முறை சற்றே திகைப்பிற்குரிய நிலையில் உள்ளது. ஆனாலும் அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர் என்பதை திணைசார் உணவு முறை வெளிப்படுத்தும்.

முடிவுரை
           
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களின் உணவுமுறை, வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, பண்டமாற்று முறை மூலம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வினை வாழந்து வந்தனர் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்களில் திணைசார் உணவு முறை வெளிப்படுத்துக்கின்றன என்பதில் ஐயமில்லை.
சான்றெண் விளக்கம்
1.மலைபடுகடாம், பாடல் வரிகள் (168-169)

2.மலைபடுகடாம், பாடல் வரிகள் (171-183)

3.மலைபடுகடாம், பாடல் வரிகள் (245-248)

4.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (434-436)

5.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (192-195)

6.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (193-195)

7.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (223-224)

8.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (356-366)

9.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (158-163)

10.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (130-133)

துணை நூற்பட்டியல் 
1.சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் முதற்பதிப்பு, 21 சூன் 2010.
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மோ. விஜயசோபா
முனைவர் பட்ட ஆய்வாளர்

பதிவு எண். 20213094022021

தமிழ்த்துறை ஆய்வகம்,

முஸ்லீம் கலைக்கல்லூரி,

திருவிதாங்கோடு.

மின்னஞ்சல் : 24msobha@gmail.com
நெறியாளர்
முனைவர். ஐ.லாலி ஏதேஸ்,
தமிழ்த்துறை ஆய்வகம்,

முஸ்லீம் கலைக்கல்லூரி,

திருவிதாங்கோடு.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி.

நீயும் என் தாயே! |கவிதை|முனைவர் சசிரேகா ராஜா

நீயும் என் தாயே - சசிரேகா ராஜா

கரையும் காலம் |கவிதை|கவிஞர் ச. குமரேசன்

கரையும் காலம் - ச. குமரேசன் - கவிதை

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

மின்மினி கவிதைகள் | க.சாதனா

மின்மினி கவிதைகள் - சாதனா

பொருள்கோள் வகைகள்

பொருள்கோள் வகைகள்
ஒரு செய்யுளில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் நேராகவும், மாற்றியும் பொருள்கொள்ளும் முறைமையைப் பொருள்கோள் என்று வழங்குவர்.

பொருள்கோள் எட்டு வகைப்படும். அவையாவன

1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
3.நிரல்நிறைப் பொருள்கோள்
4.பூட்டுவிற் பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

ஒரு செய்யுளில், பொருளானது ஓடுகின்ற ஆற்று நீரோட்டம் போல சொற்கள் முன்பின்னாக மாறாமல், நேராகப் பொருள் கொள்ளும் வகையில் அமைவது ஆற்றுநீர்ப்பொருள்கோள் எனப்படும்.

(எ.கா)
           
சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த
நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”  ( சீவகசிந்தாமணி )
நெற்பயிர் கருவுற்ற, பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, கீழ்மக்கள் செல்வம் சேர்ந்தவுடன் பணிவின்றி தலைநிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

‘சொல்’ என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்று காய்த்தவே என்னும் பயனிலையைக் கொண்டு முடியும்வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆகும்.

நூற்பா,
மற்றையது நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று ஒழுஇமஃது யாற்றுப் புனலே“  (நன்னூல்.412)
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் அமைந்துள்ள சொற்களை ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“சுரையாழ அம்மி மிதப்ப – வரையனைய
யானைக்கு நீந்து முயற்சி நிலையென்ப
கானக நாடன் சுனை ”
கானக நாடன் சுனையில் சுரை ஆழும், அம்மி மிதக்கும், யானை நீந்தும், முயல் நிலையாக நிற்கும் எனச் சொற்கள் நகைப்பிற்கு இடமான பொருளைத் தருகின்றன. எனவே செய்யுளில் உள்ள சொற்களை
சுரை மிதப்ப அம்மி அழ
யானைக்கு நிலை முயற்சி நீத்து“
என ஓரடிக்குள் இடம் மாற்றி வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.
 இவ்வாறு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ற வகையில் ஓரடிக்குள் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு ‘மொழிமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயராகும்.

நூற்பா,
“ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை         
மாற்றியோர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே“   (நன்னூல்.413)
3.நிரல்நிறைப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது“   (திருக்குறள்)
கணவனும் மனைவியுமாக இணைந்து அன்பு செய்வதே இல்வாழ்க்கையின் பண்பாகும். இருவரும் செய்யும் அறமே இல்வாழ்க்கையின் பயனாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து. இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாவது, அன்பும் அறனும் உடையதாய் இருப்பதே ஆகும் என இரு அடிகளிலும் சொற்கள் நிரல்நிறையாக வந்துள்ளதால் இது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும். நிரல்நிறைப் பொருள்கோள் இரு வகைப்படும்.

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(அ)  முறை நிரல்நிறைப் பொருள்கோள்
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)  “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி,”
இவ்வடியில் கொடி, குவளை, கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலைகளாக நுகப்பு, கண், மேனி என்று வரிசைப்படுத்தி கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.

இச்செய்யுளில் முறை பிறழாமல் வரிசை முறையில் சொற்கள் அமைந்து வருவது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
(ஆ)  எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்  
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்“ (திருக்குறள்)
இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, பயனிலைகளாக கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர். அதைக் சுற்றார் மக்கள் என்றும் கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகச் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

நூற்பா,

“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறுநிரல் நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும், பொருள்கோள் நிரனிறை நெறியே“  (நன்னூல்.414)
4. பூட்டுவிற் பொருள்கோள்
வில்லின் இருமுனைகளையும் நாணால் இணைத்தல் போல ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் ‘பூட்டுவிற் பொருள்கோள் ஆகும். இதனை “விற்பூட்டுப் பொருள்கோள்’ என்றும் வழங்குவர்.

(எ.கா)
“திறந்திடுமுன் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர் கோன்
தண்ணார மார்பன் தமிழர் பெருமானைச்
கண்ணாரக் காணக் கதவு“
இச்செய்யுளில் ‘கதவு’ என்ற இறுதிச் சொல்லைத் ‘திறந்திடுமின்’ என்ற முதல் சொல்லோடு இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும். இவ்வாறு வில்லில் நாண் பூட்டுவது போலச்செய்யுளின் இறுதிச்சொல்லை முதல் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் விற்பூட்டுப் பொருள்கோள் அல்லது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.

நூற்பா,

“எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக் குடையது பூட்டுவில் ஆகும்“        (நன்னூல்.415)
5. தாப்பிசைப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் நடுவில் நின்ற ஒரு சொல் ஊஞ்சல் கயிறு போன்று முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளும் முறையில் அமைவது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும். (தாம்பு இசை – ஊஞ்சற்கயிறு)

(எ.கா)

“ உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு“ (திருக்குறள்)
ஊன் உண்ணாமையால் உயிர்க்கு இறுதியான நன்னிலை உண்டாகும். ஊன் உண்பானாகின் நரகம் அவனை வெளியே விட வாய் திறவாது. இக்குறட்பாவில் நடுவில் உள்ள ‘ஊன்’ என்ற சொல் முன்னால் சென்று ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றும் ‘ஊன் உண்ண அண்ணாதல் செய்யாது அளறு’ என்று பின்னால் சென்றும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது தாப்பிசைப் பொருள்கோள்’ ஆயிற்று.

நூற்பா,
“இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை “  (நன்னூல்.416)
6. அனைமறிபாப்புப் பொருள்கோள்
பாம்பு புற்றில் நுழையும்போது, தானே மடங்கி தலை மேலாகவும், வால் கீழாகவும் நிலை மாறுவது போல செய்யுளில் இறுதிச்சொல் அல்லது இறுதியடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ எனப்படும்.
அனை – புற்று, மறி – மடங்குதல், பாப்பு – பாம்பு:

(எ.கா)
 
“காண்பார் கண்ணாரக் கடவுளை எப்போதும்
பூண்பார் புனிதத் தவம்“
இப்பாடலில் இறுதியிலுள்ள புனிதத் தவம் என்ற சொல் கீழ்மேலாக புனிதத் தவம் பூண்பார் எப்போதும் கடவுளைக் கண்ணாரக் காண்பார் என இயைந்து பொருள் கொள்ள வரும். இதற்கு ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ என்று பெயர்.

நூற்பா,

செய்யுள் இறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே  (நன்னூல்.417)
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா)
“தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங் கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்”
இச்செய்யுள் அமைந்த நிலையிலேயே பொருள் கொண்டால் தேங்காய் போன்ற பைங்கூந்தல் என்றும் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி என்றும் அஞ்சனத் தன்ன பசலை என்றும் அமைந்து பொருள் மாறுபடும்.

எனவே இச்செய்யுளை வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் உடையவரின் மாமேனி மேல் தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண்மையான கோழிமுட்டை உடைத்தன்ன பசலை தணிவாமே’ எனச் சொற்களைத் தக்கவாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எனவே இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

நூற்பா,
 
“யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே“   (நன்னூல்.418)
குறிப்பு:
மொழிமாற்றுப் பொருள்கோளில் ஓரடிக்குள்ளேயே சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ப மாற்றிப் பொருள் கொள்ளலாம்.
8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்
இது இருவகைப்படும்.

(அ).ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று

(ஆ).பொருளிசை மாறா அடிமறிமாற்று
(அ) ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று
ஒரு செய்யுளின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டிப் பொருள் காண்பது ‘ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்“
இச்செய்யுள் அடிகள் அமைந்துள்ள முறையில் பொருள் கொண்டால் பொருத்தமின்றி பொருட்சிதைவு ஏற்படும். எனவே,

“கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
விடுக்கும் வினையுலந்தக் கால்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் உடையார்”
எனப் பொருளுக்கேற்றவாறு எடுத்துப் பொருள் கூட்டினால் பொருள் விளங்கும். செல்வம் பிறருக்குக் கொடுத்துத் தாமும் துய்த்தாலும் வளருங்காலத்தே வளரும். நல்வினை முடிந்துவிட்டால் நம்மை விட்டு நீங்கும். வலிந்து பற்றினாலும் நிற்காது போய்விடும். இவ்வியல்புகளை அறியாதவர் நடுக்கம் கொண்டு தம்மைச்  சார்ந்தவரின் துன்பத்தைப் போக்காதவராய் இருக்கின்றார்கள்.
(ஆ) பொருளிசை மாறா அடிமறி மாற்று

ஒரு செய்யுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது பொருளிசை மாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)

“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே”
இப்பாடலின் எந்த அடியை எங்கு மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருள் உணர்வு குன்றாது.  ஓசையும் நயமும் சிதையாது. இவ்வாறு ஒரு பாடலின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் வேறுபடாமல் இருப்பதை அடிமறிமாற்றுப் பொருள்கோள் என்பர்.

நூற்பா,
 
“ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பீ றிடைமுதல் ஆக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா அடியவும் அடிமறி “ (நன்னூல்.419)

 

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

அந்த ஓர் அதிகாலை|கவிதை|க.கலைவாணன்

அந்த ஓர் அதிகாலை - கலைவாணன்

ஆசிரியரின் பிற கவிதைகளைப் படிக்க – You searched for க.கலைவாணன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

அப்பாசாமி|கவிதை|த.பிரகாஷ் ராஜ்

அப்பாசாமி - த.பிரகாஷ் ராஜ்

த. பிரகாஷ் ராஜ் அவர்களின் கவிதைகளை வாசிக்க..

சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் – பாறை ஓவிய நாகரிகமும் | பா.செல்வகுமரன்

சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும் -பா.செல்வகுமரன்

தமிழகத்தில் முதன்முதலாக 1980-இல் மல்லப்பாடியில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கையில் எறிவேல் ஒன்றை ஏந்தி எதிரே உள்ளவனைக் குறி வைப்பது போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை வேட்டைக்காட்சி என்றும் போர்க்காட்சி என்றும் கூறுவர். இப்பாறை ஓவியங்களுக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் புதிய கற்காலக் கருவிகள் (Neolithic Stones)  கிடைத்துள்ளன. எனவே இத்தகைய ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.


ஓவியன்                       

வண்ணங்களின் துணை கொண்டு எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவன் ஓவியன் என்றழைக்கப்படுகின்றான். இவனே கண்ணுள் வினைஞர், வித்தகர், சித்திரக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவிய நூலில் புலமை பெற்றவன் “ஓவியப் புலவனென்றும்’, அக்கலைஞர் குழாம் ‘ஓவியமாக்கள்’ என்றும் சங்க இலக்கியங்களில் கூறக் காண்கிறோம். இத்தகைய கண்ணுள் வினைஞரை “நோக்கினார் கண்ணிடத்தேதம் தொழிலை நிறுத்துவோர்’ என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.


ஓவியம்
                       

பல வண்ணக் கலவையால் துகிலிகைக் கொண்டு படைக்கப்பட்ட கண்கவர் காட்சி, ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், பாடாம், வட்டிகைச் செய்தி என்றும் அழைக்கப்பட்டன.
                       

ஓவியத்தின் வாயிலாக சங்ககால மாந்தர்கள் கருத்துக்களைப் புலப்படுத்தினர். காலப் போக்கில் இவ்வோவியங்களே வரி வடிவானமையை வரலாறு காட்டும். இவற்றை ஓவிய எழுத்துகள் என்பர். இவ்வகையில் எழுத்து என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓவியம் என்ற பொருளில் வழக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.
                       

ஓவியங்கள் மாடத்திலும், கூடத்திலும் மணடபத்திலும், அம்பலத்திலும் தீட்டப் பெற்றிருந்தன என்பதைச் ‘சித்திரக் கூடம்’ , ‘சித்திரமாடம்’, ‘எழுத்துநிலை மண்டபம்’, எழுதெழில் அம்பலம் என்ற சொற்களால் அறிகிறோம். கலையுள்ளங் கொண்ட பாண்டிய மன்னனொருவன் சித்திர மாடத்தில் இறந்துபட்டான் என்பதைச் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூறு குறிக்கிறது. அது போன்று அரசர் தம் அரண்மனை அந்தப் புரங்களிலும் பலவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதை நெடுநல்வாடை வரிகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோயில் சுவர்களில் பலவகைச் சித்திரங்கள் வரையபெற்றிருங்கின்றன என்பதை,


இருசுடர்நேமி

ஒன்றிய சுடர்நிலையுள் படுவோரும்

இரதிகாமன் இவனிவன் எனா அ

விரகியர் வினவ வினாவிறுப் போரும்

இந்திரன் பூசை இளவகலிகை யிவன்

சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு

ஒன்றிய படியிதென்றுரை செய்வோரும்

இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்

                    என்ற பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும் மணிமேகலையில்,

சுடுமண் ணோங்கிய நெடுநிலை மனைதொறும்

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய

கண்கவ ரோவியங் கண்டு நிற்கு நரும்
 

என்று செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும், மாடங்கள் மீதும் வானவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம். சுடுமண் சுவர்கள் மீது வெண்சுதை பூசினர். வெண்சுதை மீது செஞ்சாந்து கொண்டு பூசினர். இதன் மேல் அழகிய பூங்கொடிகளை ஓவியமாகத் தீட்டினர் இத்தகைய சுவர்கள் செம்பைப் போன்று உறுதி படைத்தும், கழையழகு கொண்டதுமாக அமைந்திருந்ததை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.
 

சுவர்களில் மட்டுமல்லாது திரைச் சீலைகளிலும் கிழிகளிலும் கவின் மிகுக் காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. நாடக அரங்குகளில் திரைச் சீலைகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதனை ‘ஓவிய எழினி’ என்று இலக்கியம் கூறும். மணிமேகலை ஆசிரியர்


செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்

எரிமல ரிலவனும் விரிமலர் பரப்பி

வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்    (மணி. மலர் வனம் : 165-69)

என்கிறார்.           

ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும்
குகை ஓவியங்கள்

               

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலைப் பகுதியில் பல ஓவியங்கள வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களில் வேட்டையாடுதல், விலங்குகளின் சண்டை, மனிதர்களின் சமய சடங்குகளில் ஈடுபட்டிருத்தல், காட்டுப் பூனை ஒன்றைப் பலியிடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள மானின் உருவ அமைப்பு பிற குகை ஓவிய அமைப்பினை ஒத்துள்ளது.  இக்கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிடாரிப்பட்டி, அழகர் மலை, திருமலை, கருங்காலக்குடி, திருவாதவூர், நாகமலை, திருமயம் கோட்டை போன்ற பகுதிகளில் குகை ஓவியங்களும், பாறை ஓவியங்களும், குகைத்தள ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறிய செய்தியாகும்.

புனையா ஓவியம்
                       

வண்ணங் கலவாமல் வடிவம் மட்டும் கரித்துண்டுகளால் கோடுகளாகக் காட்டப்படுதலைப் புனையா ஓவியம் என்பர். கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட இம்முறை (கரித்துண்டு ஓவியம்) இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் ‘மென் கோட்டு ஓவியம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருத்தல் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஓவியன் தான் எண்ணிய படத்தை வண்ணம் புனைந்து தீட்டுவதற்கு முன் கற்பனை ஓவியத்தைப் புனையா ஓவியமாகத் தீட்டுதல் பண்டைய வழக்கமாக இருந்தது. இத்தகைய புனையா ஓவியத்தைப் ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’  என நக்கீரரும், புனையா ஓவியம் போல நிற்றலும்’ எனச் சாத்தனாரும் கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
                       

சங்ககால மக்கள் வீட்டையும் ஓவியங் கொண்டு அலங்கரித்தனர். ‘ஓவத்து அன்ன வினைபுனை நல் இல்’ (அகம் 98:11) என்று செல்வர் தம் இல்லம் என்று சிறப்பிக்கப்பட்டிப்பதைக் காணலாம். ‘ஓவத்தன்ன இடனுடைவரைப்பிற் புறம்’ என்று புறநானூறும் புகழ்ந்து கூறும். மேலும் சங்ககால ஓவியர்கள் இயற்கைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை என்றிவற்றை மட்டுமின்றி, சோதிட, வான சாஸ்த்திர நூல் மற்றும் புராண இதிகாசங்களையும் கற்றறிந்து அழகுறத் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும், விண் மீன்களையும் வரைந்ததை,


புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பி னாடு தலையாக

விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பின் செலவனோடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா

என்று நெடுநெல்வாடை கூறுகிறது.
  சங்க காலச் சாதாரண நிலையில் இருந்த மகளிரும், பெருங்குடிப் பெண்டிரும், ஆடல் அணங்குகளும் ஓவியம் தீட்டினர். நாட்டிய மகள் மாதவி ஓவியக் கலையை நன்கு அறிந்திருந்தாள் எனச் சிலம்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.


முடிவுரை
 

சங்க காலத்தில் தொல் மாந்தர்கள் தங்களது பண்பாட்டு வரலாற்றை இத்தகைய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டுப் பாதையில் அடியெடுத்துவைத்த நம் முன்னோர் ஓவியத்தின் வழியேதான் முதன் முதலில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதும் அதன் வெளிப்பாடே பண்டைய மாந்தர்களையும் அவர்களின் நாகரிகப் பின்புலத்தையும் அறிந்துகொள்ள சிறந்ததோர் சான்றாக அமைந்துள்ளது என்பது சிறப்பிற்குரியது.

துணை நின்ற நூல்கள்

1.சாமி.சிதம்பரனார் (2011) : தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014


2.முனைவர் அ. பாண்டுரங்கன் (2016) : சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-டீ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098


3.முனைவர். அ.தட்சிணாமூர்த்தி (2019) : தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மேற்கு அண்ணாநகர், சென்னை – 600 040


4.இரா.பவுந்துரை : தமிழகப் பாறை ஓவியங்கள் பக் – 79.


5.நா.சுலைமான் : பாண்டி மண்டலத்தில் குகை ஓவியங்கள் – நுண் கலை, மலர் 7 – இதழ் 2 பக் 26,32.


 

                          ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

           

தையும் வழியும்|கவிதை|சு.தமிழ்ச்செல்வன்

தையும் வழியும்-சு.தமிழ்ச்செல்வன்

கவிதையின் ஆசிரியர்

மேலும் பார்க்க..

சு.தமிழ்ச்செல்வன் கவிதைகள்

மரங்கள் பேசினால்|கவிதை|த.பிரகாஷ் ராஜ்

மரங்கள் பேசினால் - த.பிரகாஷ் ராஜ்

‌         

இலக்கணக்குறிப்பு அறிதல்|இலக்கணக் குறிப்பு வகைகள்

இலக்கணக் குறிப்புகள்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »