மாற்றி யோசியுங்கள்

மாற்றி-யோசியுங்கள்

    தன்னம்பிக்கை கட்டுரை – 10    

         உங்களின் மனதை அழகான பூந்தோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான சிந்தனைகளை மட்டும் உள்ளே விடுங்கள். மனதில் எந்தவித இறுக்கமும் இருக்கக்கூடாது. பாறையின் உள்ளே நீர் நுழையாது. மன இறுக்கத்தில் மேலோங்கிய சிந்தனைகள் நுழைவதில்லை.

          உங்களின் மனநிலையை பொறுத்தே பேச்சுகள் செயல்பாடுகள் வெளிப்படும். நீங்கள் முன்னேற நினைத்தால், உங்கள் மனம் பெருந்தன்மையால் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். மற்றவரின் நற்சிந்தனைகளையும் ஏற்க கூடியதாக இருக்க வேண்டும். சில வெறுப்புகள் கோபங்கள் மற்றவரால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டு உங்களுக்கு நீங்களே மனக்கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டால் உங்களால் எதையும் சாதிக்க இயலாது. அந்த கட்டுப்பாடுகள் வெளியே செல்ல விடாது.

மனம் குப்பைத்தொட்டி அல்ல

     மனதில் தேவையற்ற கீழான எண்ணங்கள் மற்றவரின் விமர்சனம் என்ற குப்பைகள் எல்லாவற்றையும் மனதில் நிரப்ப வேண்டாம். ஆரோக்கியமாக வைத்திருங்கள். குப்பைத் தொட்டியாக மாற்றிவிடாதீர்கள். மனதில் என்ன தேவையோ அவை மட்டுமே இருக்க வேண்டும். வேண்டாதவற்றை வைத்திருக்கக் கூடாது. வேண்டாதவை மனதில் இருந்தால், தேவையானவை தொலையக்கூடும். சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை மனதை ஒரே மாதிரியாக வைத்திருக்க வேண்டாம். மாற்றங்களே மாறாதவை.

        உலகின் மாற்றங்களை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதேநேரத்தில் சிந்தனையிலும் மன எண்ணங்களிலும், மாற்றம் நடைபெற வேண்டும். ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் வேறானவை. உலகில் பலஆயிரம் கோடிபேர் வாழ்ந்திருப்பார்கள், இப்போதும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருடைய கைரேகையும் வேறாகவே உள்ளது. எனவே அவர் இவ்வாறு நடக்கக்கூடாது. இவர் அப்படி பேசக்கூடாது என்றெல்லாம் ஒரு அரணை எழுப்ப வேண்டாம். சிறிது சிந்தனையை மாற்றுங்கள்.

தடைக்கல்லே படிக்கல்

          நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது தொடக்கத்திலேயே தடை வந்துவிட்டால் உங்களுக்கு பயம் வந்துவிடும். உதாரணமாக, ஒரு கல்லூரியில் சேர விண்ணப்பம் பூர்த்தி செய்ய அமர்ந்து கொண்டு பேனாவை திறக்கிறீர்கள் அதிலிருந்து அதிகப்படியான மை விண்ணப்பத்தில் ஊற்றி விடுகிறது. உடனே என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று அச்சம் கொள்வீர்கள். சிலர் விண்ணப்பிக்காமல் விட்டு விடுவார். சிலர் விண்ணப்பித்தாலும் படிக்கும் காலத்தில் ஏதேனும் சிறிய விபத்து ஏற்பட்டாலும் இதற்குதான் ஆரம்பத்தில் மை கொட்டியது என்று எதற்கு எதையோ காரணம் கூறிக்கொண்டு சதா எதிர் மறையான எண்ணங்களை மனம் முழுவதும் நிரப்பி வைத்துக்கொள்வர். அந்தப் படிப்பு முடியும்வரை எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு அச்சத்துடனே நடமாடிக்கொண்டு இருப்பார்கள்.

சிந்தனைகளை மாற்றுங்கள்

       எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர். அவருக்கு எதைத் தொடங்கினாலும் பச்சை கொடி தெரியவே தெரியாது. தடைகள்தான் வரும். ஒரு ஊருக்கு புறப்பட்டு சென்றால் பேருந்து வராது. ஒரு செயலைச் செய்ய ஒருவரை நாடிச்சென்றால் அந்தநபர் முன்னரே வெளியில் சென்றிருப்பார். வருவதற்கு சிலநாட்கள் ஆகும் என்பார்கள். படிக்க வேண்டி தகவலை திரட்ட போன் செய்தால் “சுவிச் ஆஃப் என்று வரும். ஒரு வண்டி வாங்க கம்பெனிக்கு சென்று கையெழுத்து இடும் போது “லைட் ஆஃப்” ஆகிவிடும். ஒரு நேர்காணலுக்குப் பள்ளிக்கு புறப்படும் போது வண்டி ஸ்டார்ட் ஆகாது. இவ்வாறெல்லாம் நடந்தாலும் அவர் சலைக்கமாட்டார் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார். “அந்த வேலை எனக்குத்தான் என்பது முடிவாகி விட்டது. நான் முயற்சிப்பதே மீதம் உள்ளது” என்பார். அவர் கூறியவாறே நடக்கும். ஒரு நாள் அவரிடமே கேட்டேன்” இவ்வாறு எதற்கெடுத்தாலும் உங்களுக்கு தடங்கள் வருகிறதே! உங்கள் மனம் பின்வாங்க வில்லையா? மனதிற்கு சோர்வு வரவில்லையா? என்று. அதற்கு அவர் சிரித்துவிட்டு கூறினார். “செயலைச் செய்யத்தொடங்கும் போது எவற்றுக்கெல்லாம் தடங்கல்கள் வருகிறதோ அவையெல்லாம் எனக்கானவை என்பதை நான் உணரும்வரை அச்சமாகவே இருந்தது. அதன் பின்னர் அந்தத் தடங்கல்கள்தான் எனக்கு கிடைக்கும் வெற்றியை முன்னரே அறிவிக்கின்றன என்ற உண்மையை நான் தெரிந்து கொண்டேன். கிடைக்கும் தடைகளே எனது படிக்கல் என்று புரிந்தவுடன் மகிழ்ந்தேன்.ஆ னால் தடையில்லாமல் ஒரு செயலை முடித்துவிட்டேன் என்றால் அது என்னிடம் நிலைக்காது. இது என் அனுபவம்” என்றார். கவனியுங்கள் தடைகள் வந்தால் செயல்களை நிறுத்திவிட அவர் நினைக்கவில்லை. மாறாக எனக்கு தடைகள் வரவேண்டும். அவற்றை மீறி வெற்றியடைய வேண்டும் என்று மாற்றி யோசித்தார்.

எதார்த்தம் ஏற்கலாம்

         வண்டியில் செல்கிறீர்கள் விழுந்து விட்டால் எப்படி என்று நினைப்பதைவிட விழுந்தால் என்ன ஆகும்? காயம் படும். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சரிசெய்து கொள்ளலாம். அதிக பட்சமாக உயிர் போகும். உயிர் என்பது எப்போது செல்லவேண்டுமோ அது அப்போது தான் செல்லும். இதனை மாற்ற யாராலும் முடியாது. இந்த எதார்த்தத்தை மனத்தில் ஏற்றுக்கொண்டால் அச்சப்பட வேண்டியதில்லை. மனிதபிறவி மீண்டும் கிடைக்குமோ! இல்லையோ தெரியாது. இப்போது உள்ள இந்த வாழ்க்கையைத் தைரியமாக பெருந்தன்மையாக உயர்ந்த செயல்களால் மற்றவர்க்கு நன்மை செய்து வாழலாம். அதை அச்சப்பட்டு துயரப்பட்டு மற்றவரை ஏமாற்றி கீழே தள்ளி உரிமைகளைப் பறித்து ஏன் இந்த குறுகிய வாழ்க்கை. எனவே மாற்றி யோசியுங்கள். நடைமுறையில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சிந்தனையை மாற்றுங்கள்.

முடியும் வரை முயலுங்கள்

     நாட்டையே தன் இராகத்தால் குரல் வளத்தால் கட்டிப்போடும் பாடகர் இசைஞானி இளையராஜாவை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் முதன்முதலில் ஒரு பாடலை பாடுவதற்காக வந்துநின்று தொடங்கும் போது மின்சாரம் நின்று போனது. மீண்டும் அவர் விடாமல் பாடியே ஆகவேண்டும் என்று பாடி முடித்து பதிவு செய்த்தைப் போட்டுப் பார்க்கலாம் என்று டேப்ரெக்கார்டரில் போட்டு ஆன் செய்தால் அதில் பாடல் கேட்கவே இல்லை. பாடல் பதிவாகவில்லை. சினிமாத்துறை என்பது மிகவும் பரந்தது. அதில் வாய்ப்பு கிடைத்தது குதிரைக் கொம்பு. அவ்வாறு வாய்ப்பு கிடைத்து பாடல் பதிவாகவில்லை என்றால் மனம் எவ்வாறு இருக்கும்? யோசியுங்கள். ஆனால் அவர் தன்மனதில் எந்தவிதமான எதிர் மறையான எண்ணத்தையும் நினைக்காமல் மீண்டும் பாடினார் இசையமைத்தார். இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அறியும்படி உயர்ந்துள்ளார். இதன் காரணம் அவரின் செயலை முடியும்வரை முயன்றார்.

மற்றவரை மாற்ற நீங்கள் மாறுங்கள்

      சிலர் எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்கள். அது அவர்களுடைய இயல்பு. குறை காண்பது ஒரு மனநோய் என்று மனவியலாளர் கூறுகின்றனர். குறை காண்பவரையும் எந்த மனநிலையில் கூறுகிறார்கள. அவர்களின் தேவை என்ன? என்று மெய்யான பொருளைக் கண்டறியுங்கள். உங்களின் மனதை இதமாக மாற்றிக்கொண்டு அவர்களைப் பற்றி சிந்தனை செய்வது நல்லது. மனம் என்பது எல்லா திசைகளிலும் பறக்கும் குதிரை போன்றது. அதனை கட்டுக்குள் வைத்து வசந்தகாலத்தின் பசுமை போன்று சீராக்கிக் கொண்டு அதன்பின்னர் மற்றவர்க்கு நற்சிந்தனைகளை அளியுங்கள். மற்றவர்கள் நீங்கள் நினைப்பது போல் மாற வேண்டும் என்று எண்ணுவதைவிட நாமே நம்மை மாற்ற முடியவில்லை. அவ்வாறு இருக்க மற்றவர்கள் எவ்வாறு மாறுவார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

       மாற்றம் வேண்டுமென்றால் உங்களிடம் மாற்றத்தை நிகழ்த்துங்கள். தீய எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு பிடிவாதமாக விடாமல் இருந்தால் உங்களுக்குள்ளே எந்த மாற்றமும் நிகழாது. ஆதலால் முதலில் நீங்கள் மாறுங்கள்.

பகையை மாற்றுங்கள்

      இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் இங்குள்ள உணவைப் பெறும் உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் உரிமை.

       யாரிடமும் பகைபாராட்ட வேண்டாம். மற்றவர் மீது உங்களுக்கு பகை உணர்வு இருந்தால் மனதில் பழிவாங்கும் எண்ணங்களே உருவாகும். வெளியிடப்படாத கோபம் வஞ்சமாக மாறும். ஆதனால் மற்றவரைப் பகைவராக என்ன வேண்டாம். ஒருவர்க்கு நண்பர் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். நட்பால் ஒருவரின் குணத்தை கணிக்கலாம். பகை என்பது சமமான நபரிடம் மட்டுமே உருவாகும். “உன் பகைவன் யாரென்று கூறு, உன் தரம் என்ன என்று கூறுகிறேன்” என்ற வாக்கியம் ஒன்று உள்ளது.

       பலர் வாழ்வின் சிறு வயதில் அண்ணன் தம்பிகளாகப் பாசத்துடன் வளர்வார்கள். அண்ணனை யாரேனும் அடித்தால் தம்பி ஓடிச்சென்று அடித்தவனை உதைப்பான். தம்பியை மற்றவர் வம்புக்கு இழுத்தால் அண்ணன் சென்று சட்டையைப் பிடிப்பான் “யாரடா என் தம்பியை வம்புக்கு இழுப்பது” என்று சத்தமிடுவான். இவ்வாறு இருக்கும் சகோதரர்கள், திருமணம் ஆகி குழந்தைகளைப் பெற்றதும் சொத்துக்குச் சண்டை செய்கிறார்கள். ஒரு வரப்பிற்காக அவ்வயலையே விற்று வக்கீல்களுக்கு பீஸ் கட்டிய அண்ணன் தம்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

          பகையுணர்வு மனதை ஆட்கொண்டு விட்டால் அது ஆரோக்கியம் பாசம் உறவு சொந்தம் சகோதரத்துவம் என்று எதையும் பார்க்காது. பகை பழி தீர்ப்பதை மட்டுமே பார்த்திருக்கும். எனவே பகை எண்ணங்களை மனதில் நுழைய விடாதீர்கள்.

           மனிதர்களின் மனதில் நல்லெண்ணங்கள் புகுவதைவிட தீயவை விரைவாக நுழைந்துவிடும். மனதில் நல்ல பழக்கங்களைப் பதிய வைப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் தீய எண்ணங்களுக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். அவை தானாகவே மனதின் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளும். இது இயல்பான ஒன்று.

மாற்றமே லாபம்

       மனதில் மாற்றம் ஏற்படால் அதுவே மிகப்பெரிய லாபம். படித்த கதையொன்று, ஒருவர் வாழைப்பழக்கடை வைத்திருந்தார். அந்த கடையில் ஒரு இளைஞனும் வேலை செய்தான். ஒருமுறை முதலாளி நிறைய வாழைத்தார்களை வாங்கி குடோனில் வைத்தார். பழங்களும் பழுத்து விட்டன. சந்தைக்குக் கொண்டு சென்றும் என்ன காரணமோ தெரியவில்லை பழங்கள் விற்பனை ஆகவில்லை. அடுத்தநாள் அவை மேலும் கனிந்து நிறம் மாறத்தொடங்கின. சிறு புள்ளிகளும் ஏற்பட்டன. இதனால் முதலாளிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் மிகவும் கவலை அடைந்தார். அழுகிய பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வேலை செய்யும் இளைஞனை அழைத்து அவற்றை பள்ளத்தில் கொட்டுமாறு பணித்தார். அதற்கு அவன் பழங்களை தான் எடுத்துக்கொள்வதாக கூறினான். முதலாளியும் சரி என்று தலையசைத்தார். இந்த வேலை செய்யும் இளைஞன் பழங்களை அள்ளி எடுத்துக்கொண்டு தெருக்களின் சந்திப்பில் வைத்தான் “ஐயா இவை புள்ளி விழுந்த புளிப்பான விட்டமின்கள் நிறைந்தவை. வெளிநாட்டு வாழைப்பழஙகள். இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அம்மா வாருங்கள் இந்தப் பழங்கள் விற்று தீர்ந்தால் இனி கிடைக்காது” என்று கூவினான். சுமார் இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் பழங்கள் விற்று தீர்ந்தன. இளைஞன் மாற்றி யோசித்தான். லாபம் அடைந்தான். முதலாளி முடியாமல் விட்டதை இவன் முடித்துக்காட்டினான்.    

உங்கள் ஆக்கங்களை ஏற்றுக்கொள்ள இந்தச் சமுதாயம் கைநீட்டி அழைக்கிறது.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here