தன்னம்பிக்கை கட்டுரை – 1

     

தன்னம்பிக்கை கட்டுரை
முனைவர் நா.சாரதாமணி

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உலகில் அனைத்தும் வசப்படும் முயற்சி செய்யுங்கள். இந்த வாசகத்தை வாசிக்கும்போது ஒரு வினா எழுகிறது. அது எப்படி எல்லாம் வசப்படும்? அதாவது தூக்கனாங்குருவி அழகாக மாடிவீடு போல தன்கூட்டைக் கட்டும். ஆனால் ஆறறிவு மனிதனால் இயலாது. தேன்கூடு விந்தையான ஒன்று. அதுவும் அந்தத் தேன்ஈக்களால் கட்ட இயலும். இந்த மனிதனால் இயலாது. அதைப்போல, மனிதனால் ஒரு துறையில் சிறப்பாகத் தன்னை நிலைநிறுத்த முடியும். உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதனால் வசப்படுத்த முடியும். விடாமுயற்சி செய்யுங்கள்.

     நமது பூமியின் மொத்த பரப்பு என்ன? என்பதையும் அதன் அகலம், உயரம், துருவங்கள், உயர்அழுத்தம் பூகம்பம், எரிமலைகள் என்று எத்தனையோ அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நமது விஞ்ஞானிகள் கண்டு கூறியுள்ளனர்.  ஆனால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், மனதிற்கு உள்ள ஆற்றலையும் இன்னும் அளவிட்டு கூற இயலவில்லை. ஏனென்றால் அது அளவிடற்கு அப்பாற்பட்டது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சாதனைகள் செய்து மனித சமூகத்தை உயர்த்தப் பிறப்பெடுத்தவர்கள். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இந்த உலகம் வசப்படும் என்பதில் ஐயமில்லை.

சாதிப்பதில் தளராதீர்

     மனிதன் பிறப்பு முதல் இறப்பை நோக்கி செல்கிறான். இது அனைவரும் அறிந்ததே. என்றாவது ஒருநாள் பிறந்த குழந்தை வளர்ந்து இறந்தாக வேண்டும். எனவே அதற்கு முன்பே தனக்குப் பிடித்த ஆக்கபூர்வமான ஒன்றை சாதித்தே ஆகவேண்டும். மனிதனால் ஏதாவது ஒரு துறையில் கண்டிப்பாகச் சிறப்பாகச் சாதனை படைக்க முடியும். இது உண்மை. அவ்வாறு சாதிக்க என்ன செய்யலாம்? முதலில் ஒரு மனிதன் தனக்கு என்ன பிடிக்கும், எந்த துறையில் ஆர்வம் அதிகம், என்று தன்னைதானே தெளிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மற்றவர்களின் சம்பாசனைகளை அலசுவது என்றால் மிகவும் விருப்பம். ஆனால் அவ்வாறு மற்றவர்களை கவனித்தால் ஒருபோதும் தன்னைக் கவனிக்க இயலாது. எனவே மனிதன் தம்மை உணர வேண்டும். கவனிக்க வேண்டும். எது குறைவாக உள்ளது என்பதை தெளிய வேண்டும்.

மாற்றும் வழிகள்

     ஒரு மனிதன் முதலில் தன்னைதானே உயர்வாக நினைக்க வேண்டும். இந்நிலை மனதில் வருவதற்கு பல இன்னல்கள், கவலைகள், தடைகள் போன்றவற்றைக் கடந்து மனம் ஓரளவிற்கு பக்குவம் அடைந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சிலகுறைகள் இருப்பது இயற்கையானதே. எனவே மனிதர்களின் மனதிலும் குறைகள் இருப்பது இயல்பானது இவைதாழ்வுமனப்பான்மை, சட்டென்று கோபம் வருதல், மற்றவரின் முன்பாகப் பேசுவதற்கு தயக்கம்காட்டுதல், போன்றவை அவரவர் வாழ்க்கைச் சூழலின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். அதனை மாற்ற வேண்டும். உங்களை மாற்ற நீங்கள் முயற்சித்தால் மட்டுமே முடியும். உதாரணமாகத் தாவரவியல் வள்ளுநர்கள் தாவரங்களை நன்றாக உற்றுக்நோக்கி கவனிப்பார்கள். சில தாவரங்கள் நன்றாக வளரும் மலர்கள் பெரிதாக இருக்காது. நன்றாக மலரும் ஆனால் அழகான வண்ணத்தில் இருப்பதில்லை. இது குறையாகத் தெரியும்போது அதை நீக்க அழகான பெரிய மனம் கவரும் வண்ணங்களில் பூக்கும் தாவரங்களின் கிளைகளை எடுத்துக் கொண்டு குறையாக உள்ள தாவரத்தில் ஒருகிளையை எடுத்துவிட்டு அதன் இடத்தில் முன்பே எடுத்த வண்ணமலரின் கிளையை ஒட்டி கட்டிவிடுவார்கள். இந்தக் கிளைக்கும் குறை தாவரத்திலிருந்து நீர் உரம் எல்லாம் சேர்ந்து வளர்ந்து அந்தக் குறை நீங்கி நிறைவான வண்ண மலர்களை தரும். ஒரு தாவரத்தில் நிறைவைக் காணவேண்டும் என்று விரும்பும் மனித இனம்தம்மனதிலும் உள்ள குறைகளை நீக்கி நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.

எண்ணம் செயலாக மாறவேண்டும்

      மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை அவனது உடல் மாறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் உங்கள் எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் செயலாக மாறவேண்டும். சிலர் மற்றவரின் விமர்சனங்களால் அழுத்தப்பட்டு, மனம் குழம்பி தன்னுடைய இயல்பானக் குணத்தை அறியாமல் வேறு ஒன்றை தனதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் விதி என்று தன்னைத்தானே நொந்துகொண்டு காலத்தை முடித்துவிடுகின்றனர். தீயவழிகளில் சென்று சமுதாயத்திற்குக் கேடான பல செயல்களைப் புரிந்து தன்னையும் அழிவான பாதைக்கு இழுத்து சென்றுவிடுகின்றனர் இவ்வாறான கேடான எண்ணங்கள் தன்மனதில் இருந்தால் அவற்றை நீக்கிக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.

குறைகளை நீக்குங்கள்

     குறை என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. உணவில் சேர்க்கும் இஞ்சியின் புறம் நஞ்சு என்பார்கள். எனவே அதன் தோல் நீக்கப்பட வேண்டியது. மாம்பழத்தில் விதையை உண்ண முடியாது. பலாப்பழத்தில் தோல் நீக்கப்பட வேண்டியது. எனவே நீக்கப்பட வேண்டியவை ஆயிரக்கணக்கானவை உள்ளன. என்றாலும் உங்களிடம் பயன்மிக்க திறமைகள் உன்னத குணங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு உங்களின் குறைகளை நிறைகளாக மாற்றுங்கள். இயற்கை, இலையுதிர் காலங்களில் காய்ந்த ஆடையை நீக்கி வசந்தகாலங்களில் பசுமையாகத் துளிர்த்துக் கொள்வதுபோல உங்களை செம்மையாக மாற்றிக்கொள்ளுங்கள். நான் அறிந்த ஒரு சிறுவன், அவன் அம்மாவிடம் கூறுவான் “என்னை எது பயமுறுத்துகிறதோ அதை, அதன் அருகிலேயே சென்று பார்த்துவிட்டு வருவேன். அதன் பின்னர் எனக்கு அச்சம் வராது” என்பான். பயம் உங்களிடமிருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்று.

 மாறாத குறையை நிறையாக மாற்றுங்கள்

சிலநேரங்களில் குறைகளும் உயர்வையே தரும். ஒரு மலைபிரதேசம் அடிவாரத்தில் அழகான கிராமம். அங்கு இளைஞர்களிடையே பல போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் ஓட்டப்பந்தயமும் ஒன்று. ஒட்டப்பந்தயம் என்றால் அது சாதாரணமாக மைதானத்தில் ஓடுவது அல்ல. மலைப்பாதையில் ஓடுவது. அது சுமார் இருநூறு மீட்டர் ஓட்டம். அந்த ஓட்டத்தின் நடுவில் ஐம்பது மீட்டர் தூரம் ஒத்தையடி பாதையாகச் செல்லும். சிறிது தவறினால்கூட மலையிலிருந்து பாதாளத்தில்தான் விழவேண்டும். எழும்பும்கூட கிடைக்காது.

இவ்வாறான பாதையில் ஓடி வெற்றி பெறுபவர்களுக்குப் பலத்த பரிசுகள் காத்திருந்தன. பந்தயத்தின் துவக்கத்தில் ஐம்பதுபேர் ஓட ஆரம்பித்தனர். சிறிது தூரத்தில் இருப்பதுபேர் நின்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டு பயந்து இருபதுபேர் நீங்க, மற்ற ஒன்பது பேர், நண்பர்களால் தடுக்கப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தொடக்கம் முதல் இறுதிவரை ஓடிச்சென்று பரிசுகளைத் தட்டிச்சென்றார். எல்லோருக்கும் வியப்பு! பிறகுதான் தெரிந்தது அவர் காது கேளாதவர் என்று. மற்றவர்கள் பிறர் பேச்சைக்கேட்டு பயம் தொற்றிக்கொள்ள போட்டியைத் தவிர்த்தனர். ஆனால் இவர்மட்டும் காது கேளாததால் மற்றவரின் பேச்சு தன்னை ஒன்றும் செய்யாமல் இருந்ததால் இறுதி வரை ஓடி வென்றார். இங்கு அவரின் குறை பயனைத்தந்தது. அதுபோல மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களால் தாழ்மையான மனப்பான்மையில் இருப்பவர்கள் நம்நாட்டில் அதிகம். எனவே மற்றவர்கள் உங்களை பற்றி கூறுவது உண்மையான கணிப்பு அல்ல. உங்களை பற்றி நீங்கள் தீர்மானிப்பதே சரியான கணிப்பு என்பதை உணருங்கள். உங்களைப் பற்றிய எண்ணம் உங்களுக்கு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் மாற்றுங்கள். எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ, அவன் உலகத்தை அறிந்தவன் என்பர். விதிப்பதற்கு எதுவும் இல்லை. உலகில் மாற்றுவதற்கும், மாறுவதற்கும் நிறைய உள்ளன. எனவே உங்கள் தலைவிதி உங்கள் கையில்தான் உள்ளது. அதை நிறைவாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இறைவன் மனிதஉடலில் குறை உறுப்புகளின் திறனை மற்ற உறுப்பகளில் அமைத்துள்ளான். எனவே குறை உடலில் இல்லை. மனதில்தான் உள்ளது.

ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here