Saturday, April 4, 2026
Home Blog Page 23

அந்தச் சிவப்பு பழம் |சிறுகதை|முனைவர் ந.அரவிந்த்குமார்

சிறுகதை-அந்தச் சிவப்பு பழம் - முனைவர் ந.அரவிந்த்குமார்
         அன்று விடுமுறை என்றதனால் குமரனையும் தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் மீனாட்சி. குமரா இங்கேயே உட்காரு எதையும் தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டு தன் பணியைத் தொடங்கினாள். அப்போதுதான் அந்தக் காட்சி குமரன் கண்ணில்பட்டது. போதும் போதும் என்கிற பிள்ளைக்குப் பழங்களை அள்ளி ஊட்டிக் கொண்டிருந்தாள் பார்வதி. அதைக் கண்ணுற்றுப் பார்த்த குமரனுக்குத் தானும் பழங்களை உண்ண வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மாலையில் வீடு திரும்பியதும் அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினான். மீனாட்சியும் சரி இரு என்று வீட்டிலிருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தாள். அது குமரனின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இது இல்லம்மா! இன்னைக்கு முதலாளி அம்மா பையன் ராஜு சாப்பிட்டுட்டு இருந்த அந்தச் சிவப்பு கலர் பழம் வேண்டும்  என்று கேட்டான். அதுக்கெல்லாம் நூறுரூபா ஆகும் நம்மால வாங்க முடியாது என்ற மீனாட்சி சம்பளம் வந்தா வாங்கித்தரேன் என்று நகர்ந்தாள். ஆம், ஏழைகளின் வாழ்வில் பல ஆசைகள் நாட்களைக் கடத்திப்போட்டு மறக்கடிக்கப்பட்டவை தான். ஆனாலும் பாழாய்ப்போன ஆசை யாரைவிட்டது.
        குமரன் எப்படியும் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டுமென நினைத்து தான் சேர்த்து வைத்திருந்த சில்லரைக் காசை உண்டியலை உடைத்து எடுத்துக்கொண்டு, பள்ளி முடிந்து வரும் போது நேரே பழக்கடைக்குள் நுழைந்தான். ஏயேய்.. நில்லு எங்கப் போற என்று வாயிலிலேயே தடுத்தது அந்தக் கருத்தவுருவம். பழம் வாங்கப் போறேன் அண்ணா. பழம் வாங்கப்போற ஆளப்பாரு. சரி எவ்வளவு காசு வச்சிருக்க. முகத்தில் ஒரு வெளிச்சம் பத்து ரூவா இருக்கு அண்ணே. களிர் சிரிப்புடன் அந்த உருவம் சொன்னது போடா போய் ஸ்கூல் முன்னாடி ஒரு பாட்டி இருக்குல்ல அதுகிட்ட போய் மிட்டாய் வாங்கிச் சாப்டு ஓடு. இங்கெல்லாம் வரக்கூடாது. பெருசா பத்து ரூவா வச்சிருக்கானாம். வந்திட்டான். இல்ல அண்ணே அந்தச் சிவப்பு நிறப்பழம் எனக்கு வேணும். சரிடா! அது நூறு ரூவா. அம்மா சொன்ன பதிலே இங்கயும் கிடைத்தது. உன்கிட்ட நூறு ரூவா இருக்கா சொல்லு என்ற அந்த உருவத்திடம் இல்ல அண்ணே என்ற பதிலுடன் புறப்பட்டான் குமரன். ஆனாலும்  மனதினுள் தீர்மானம் வலுத்தது. நாள்தோறும் தனக்கு கிடைக்கும் காசைச் சேர்க்கத் தொடங்கிய அந்தப் பிஞ்சு மூன்று மாதத்திற்குப் பிறகு தன் எண்ணம் நாளையீடேறும் என இரவெல்லாம் மனக்கோட்டைக் கட்டியது.
       மறுநாள் காலை பள்ளிக்குக் குறித்த நேரத்திற்கு முன்னமே குமரன் கிளம்பினான். கால்கள் விரைந்தன, இதயம் வேகமுடன் துடித்தது, முகம் மலர்ச்சியில் மிளிர்ந்தன, தனக்குள் தோன்றிய சொல்லொணாக் கர்வத்துடன் பழக்கடைக்குச் சென்றான். பழக்கடை வாயிலில் அதே கருத்தவுருவம். மறுபடியும் எங்க இந்தப்பக்கம் என்ற கேள்விக்குப் பெருமிதம் பொங்க குமரன் சொன்னான். அந்தச் சிவப்பு பழம் வாங்க வந்தேன். மீண்டும் அந்த உருவம் சிரித்துக் கொண்டே சொன்னது அது சீசன் பழம் தம்பி. ஒன்றும் புரியாதவனாய் அப்படினா என்ன? என்ற குமரனிடம் குறிப்பிட்ட சில மாசத்துல தா அந்தப் பழம் கிடைக்கும். இப்போ எல்லாம் அது கிடைக்காது. இனி அடுத்த வருஷம் தா அந்தப் பழம் வரும் எனும் போதே குமரனின் மனக்கோட்டை மண்கோட்டையானது. ஆனாலும் உறுதியுண்டு. அடுத்த வருஷம் இந்த நூறு ரூவாயை வச்சு அந்தப் பழத்தை நிச்சயம் வாங்குவேன் எனச் சொல்லிப் புறப்பட்ட குமரன் பள்ளியை அடைந்ததும் வாயிற்கடை பாட்டியிடம், ரெண்டு ரூவாயிக்கு நெல்லிக்கா குடு என வாங்கிக் கொண்டு நடந்தான்.

ஆக்கம்,

முனைவர் ந.அரவிந்த்குமார்

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
அரசூர், கோவை.

 

ஆழ் மனப் பயணம்|முனைவர் நா.சாரதாமணி

ஆழ் மனப் பயணம் - முனைவர் நா.சாரதாமணி
        நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விருப்பத்துடன் செய்யுங்கள். எந்தச் செயலையும் சிறிதென்று எண்ண வேண்டாம். வீடு கட்டுவதற்கு ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் முக்கியமானவை. இலக்கியத்தில் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், ” பகை சிறிது என்று எண்ண வேண்டாம். பாம்பானது மிகச்சிறிதாக இருந்தாலும் குன்றுபோல் உள்ள பெரிய யானையையும் வீழ்த்தும் சக்தி வாய்ந்தது. பகையை அழித்துவிடுவதே சிறந்தது” என்று கூறியுள்ளனர். மனதில் நினைக்கும் எண்ணம் சிறிதாக இருந்தாலும் அது தீயஎண்ணமாக இருந்தால் மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிடும் வல்லமை கொண்டது. எனவே மனதிற்கு உள்ளே அனுப்பப்படும் எண்ணங்களைக் கவனமாக அனுப்புங்கள். அறியாமலும் பாதகமான எண்ணங்களை மனதின் உள்ளே அனுமதிக்க வேண்டாம்.

செயல்படுத்தும் சிந்தனைகள்
         
        மனதை தெளிவாகத் தெளிந்த ஓடைநீர் போல வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்களின் மனதில் இலட்சியத்திற்கான எண்ணங்களை உள்ளே விடுங்கள். அந்த எண்ணங்கள் சரியானவையா? அந்த இலக்கு நன்மையை பயக்குமா? எதாவது பாதகம் விளைத்துவிடுமா? என்று மனதை அசைபோட வையுங்கள். அந்த எண்ணம் சரியானது  அல்லது தவறானது என்று ஒரு முடிவிற்கு வர சில வாரங்கள் ஆகலாம். பல மாதங்களையும் எடுத்துக்கொள்ளட்டும். அடுத்து அந்த நல்ல எண்ணத்தை செயல்படுத்துவதற்கு என்ன தேவை? எவ்வளவு பொருள் தேவை? யாருடைய உதவி தேவை? எல்லாம் சரியாக நடக்குமா? நடக்கவில்லையென்றால், வேறுவழியில் எவ்வாறு செயல் படுத்துவது? தடுப்பதற்கென்றே சில மனிதர்கள் கிளம்பிவிடுவார்கள். அவர்களை எவ்வாறு சமாளிப்பது? சிலர் இவன் நம்மை விட பெரிய ஆளாக வந்துவிடுவானோ என்று தேவையான பொருட்களை தர மறுத்து விடுவார்கள். இன்று நாளை என்று காலத்தை நீட்டித்து இறுதியில் இல்லை என்று கூறிவிடுவார்கள். இம்மாதிரியான சூழலில் எவ்வாறு அணுக வேண்டும் போன்ற அனைத்தையும் சிந்தனை செய்ய வேண்டும். அவற்றுக்கான பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான மார்கத்தையும் கண்டறிய வேண்டும். அந்த மார்க்கம் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச்செல்வதாக இருக்க வேண்டும்.
         மனத்திற்குள்ளாக இத்தனை செயல்பாடுகளும் ஆண்டுகள் கணக்காகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மனதில் இத்தனை செயல்களும் நடந்தபின்னரே வெளிப்புறத்தில் தொடங்க வேண்டும், அப்போதுதான் எதைப்பார்த்தும் பின்வாங்காமல் “பார்த்து விடலாம் ஒரு கை ” என்று செயலை சவாலாகச் செய்ய முடியும்.

உங்கள் பலம் அறியுங்கள்
           
      மனிதன் தன் மூளையைக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம். அபாரமான சக்தியைக் கொண்டவனே மனிதன்.  அவனுடைய பலம் அவனுக்கு தெரிவதில்லை. பள்ளி பருவத்தில் மற்றவனை இவன் முதல்மதிப்பெண் பெற்று விடுவான் என்று நம்பும் மாணவன்  தன்னை நம்புவதில்லை. அவனை முதலாவதாக நினைத்திருந்தால் அவன் கைகள் புத்தகத்தை எடுக்கும். கண்கள் பாடங்களைப் படிக்கும். விரல்கள் தேர்வை எழுதும். முதல் மதிப்பெண்களைப் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். முதலில் அம்மாணவன் தமது மனதில் தேர்வை எழுதி முதல் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் வகுப்புத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிடுவான். மனதால் வெற்றிகொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பது என்றால் அவ்வளவு எளிதல்ல. பல இன்னல்களுக்கு இடையிலேயே போராடிச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

உங்கள் இலக்கு மனதிற்குள் பயணிக்கட்டும்
           
      ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் தன் தோட்டத்தில் பல தானியங்களைப் பயிர் செய்வான். அது விளைகின்ற பொழுது காட்டில் உள்ள மான்கள் போன்றவை வந்து மேய்ந்து விடும். அந்த உழவன் இதை தடுக்க யோசித்தான். பறந்த இந்த நிலத்தைச் சுற்றி மூங்கிலை வளர்த்து விட்டால் அது வேலியாகவும் இருக்கும். கூரைவீடும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற தேவைகளுக்கும் பயன்படும் என்று மூங்கில் விதைகளை வாங்கி நிலத்தை தோண்டி விதைத்து மணலை மூடி வைத்தான். ஒவ்வொரு நாளும் சென்று அதற்கு நீரை ஊற்றி வந்தான். ஒருவாரம் சென்றது. அதன் தளிர் இன்னும் மேலே வரவில்லை. உழவன் எருவிட்டு நீர் ஊற்றினான். ஒருமாதம் சென்றது அவ்விடத்தில் எந்தவித சலனமும் இல்லை. மூங்கில் முளைப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை. அந்த உழவன் மனம் தளரவில்லை. ஒவ்வொரு நாளும் நீரை ஊற்றிக்கொண்டே இருந்தான். ஓராண்டைக் கடந்தது ஆனாலும் முளை விடவில்லை. அந்த உழவனும் விடுவதாக இல்லை. நீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். அதற்கு தேவையானவற்றைச் சலைக்காமல் செய்தார். இரண்டு  மூன்று என்று ஆண்டுகள் கடந்து  சுமார் ஐந்தாவது ஆண்டில்தான் சிறிதாகத் தளிரானது. இளம்பசுமையாகப் பூமியை பிளந்துகொண்டு வெளியே எட்டிப்பார்த்தது. உழவனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆமாம்! இந்த மூங்கில் விதை ஐந்து ஆண்டுகளாக முளைக்காமல் மண்ணுக்குள் என்ன செய்தது? அந்த மூங்கில் எந்த உயரத்திற்கு வளருமோ அதன் பாதியளவுவரை வேரானது பூமியின் உள்ளே வளர்ந்து சென்றுள்ளது. அதற்கு தேவையான தண்ணீரை உறிஞ்சி மேலும்மேலும் தன்னை உறுதிப்படுத்தி கொண்டு பூமியின் மேல் உயரமாக வளரும்போது சாய்ந்துவிடாமல் தாங்குவதற்கு வேர் தன்னை திடமாகச் செய்து கொண்டது. பூமிக்கு மேலே வளரும் மூங்கிலுக்குத் தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை தருவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டுகள் மூங்கிலின் பயணம் வெளியே தெரியவில்லை. ஆனால் பூமிக்கு உள்ளே அது தன் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அது ஐந்தாண்டுகளை எடுத்துக்கொள்கிறது. அதன்பின்னர் பூமியின் வெளியே ஐந்து வாரங்களில் தொன்னூறு அடிவரை வளரக்கூடிய மூங்கில். ஓராண்டு முடியும்வரை அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அடுத்த ஆண்டுகளில் மிக வேகமாக அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெற்றது.
          கவனியுங்கள் மூங்கில் ஐந்தாண்டுகளாகப் பூமிக்குள் சென்று தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. இவ்வாறு உங்கள் இலக்கின் பயணத்தைப் பொறுமையாக மனதிற்குள் நிகழ்த்தி கவனமாகச் செயல்பட தயாராக உள்ளீர்களா? ஆம்! என்றால் உங்களின் பயணம் வெற்றியை அடையும் என்பது தின்னமே.

இன்னல்களை எதிர் கொள்ளுங்கள்
        
       சிறுகாப்பியங்களில் ஒன்று சூளாமணி. அதில் ஒரு பாடலில் கூறுவார்கள். காட்டிற்கு ஒருவன் வேட்டையாட சென்றான். அப்போது காட்டு யானை ஒன்று இவனை துரத்திக்கொண்டு வந்தது. வெகு தொலைவுக்கு ஓடி வந்தான். ஆனாலும் அந்த யானை அவனை விடுவதாக இல்லை. இதனிடமிருந்து  எவ்வாறு தப்புவது என்று அவன் வழியைத் தேடிக்கொண்டு ஓடினான். சிறிது தூரத்தில் கிணறு போன்று பள்ளம் தென்பட்டது. உடனே வேகமாக ஓடிச்சென்று அதனுள்ளே குதித்தான். குதித்தவன் மேல் நோக்கியே பார்த்தான். சில நொடிகளில் அந்த காட்டுயானை அங்கு வந்து எட்டிப்பார்த்தது. அங்கேயே நின்று கொண்டது. அதன்பிறகு அவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். பாம்பு ஒன்று படமெடுத்துத் தீண்டுவதற்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டது. இதை அப்போதே கவனித்த அவன் அருகில் தொங்கும் ஒரு வேரைப் பற்றிக்கொண்டு சரசர வென்று மேலே பாதிதூரம் வரை ஏறி  மேலேயும் செல்ல முடியாமல் கீழே இருக்க முடியாமல் பாதியில் தொங்கிக்கொண்டு இருந்தான். பின்னர் அவனுக்கு அருகே கைக்கு எட்டும் தொலைவில் தேனிக்கள் இல்லாமல் தேன் கூடு ஒன்று இருந்தது. அதை ஒரு கையால் அவிழ்த்து எடுத்து தின்று அதன் சுவையில் லயித்தான். கவனியுங்கள்! அவனுக்கு மேலேயும் கீழேயும்  அவனை வீழ்த்துவதற்கு இரண்டு சக்திகள் காத்திருக்கின்றன. ஆனாலும் அவற்றிலிருந்து தன்னை தவிர்த்துக் கொண்டு தேனின் இனிமையில் இன்பம் கண்டான். நீங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யும் போதும் இவ்வகையான இடர்பாடுகள் இழப்புகள் என்று வருவது இயல்பானதே. அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, சாதனை புரியும் மனப்பக்குவம் உங்களிடம் இருந்தால் வரலாறு படைப்பவர் நீங்கள்தான்.

சுய கணிப்புச் செய்யுங்கள்
          
        உங்களை நீங்களே கணிப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயலில் நிறை என்ன? குறை என்ன? நன்மை தீமை என்ன? என்று மற்றவர்கள் உங்களைப்பற்றி தவறுகள்  குறைகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நீங்களே கண்டறியுங்கள். இந்த வழிமுறையைப் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகள் செய்வதைக் காணலாம்.
    ஒரு பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி, உதாரணமாகக் காப்பித்தூள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று. தம்பொருளை மக்கள் வாங்குவதற்காக விளம்பரம் செய்தது. “ஆகா என்ன சுறுசுறுப்பு, என்ன சுவை என்னே மணம், காப்பினா இதுதான் காப்பி” என்று விளம்பரம் செய்து விட்டது. அதில் வேலை செய்யும் பணியாளர்கள் அந்தப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக வீடு வீடாக சென்று, பணம் பெற்றுக்கொள்ளுமலே காப்பித்தூளைக் கொடுத்து விட்டு “இதை நீங்கள் உபயோகித்து பாருங்கள் நன்றாக இருந்தால் பணம் கொடுங்கள். நன்றாக இல்லை என்றால் பணமே வேண்டாம்” என்றுக் கூறி அவர்களின் பொருளை வாங்கச்செய்து விடுவார்கள். பின்னர் சில வாரங்கள் கழித்து மீண்டும் வந்து  அது நன்றாக உள்ளதா? இல்லை என்றால் என்ன குறை உள்ளது? இன்னும் மக்கள் எதை எதிர் பார்க்கிறார்கள் போன்ற நிறை குறைகளை அறிந்து கொண்டு அவற்றை போக்குவதற்கான செயல்பாடுகளில் இறங்குவார்கள். மக்களிடம் அப்பொருள் அதிக அளவு விற்பனையாகும் வரை  விடமாட்டார்கள். அவர்களின் குறைகளை அவர்களே களைவார்கள்.

உங்கள் தேவையைக் கண்டறியுங்கள்
         
         உங்கள் செயல்களின் குறைகளை நீங்களே கண்டு தெளிந்து அவற்றையெல்லாம் நீக்கி விட்டு அதன்பின்னர் செயல்புரிவதில் தீவிரம் காட்டுங்கள். உங்களைப்பற்றி பெற்ற தாய்க்குக்கூட தெரியாது. உங்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் செய்யும் செயலில் ஆற்றலை செலுத்தி அதில் வெற்றி பெறுவதும் அது வேண்டாமென்று பாதியில் விட்டுவிடுவதும் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு இலக்கை வையுங்கள், அதனை அடைவதற்கு மனதில் பல சிந்தனைகளைச் செய்து பல ஆண்டுகளுக்குப்பின் எண்ணம் சரிதான் என்று தோன்றியவுடன் செயலைத் தொடங்குங்கள். அதற்காகச் செல்லும் போது எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவற்றை உடைத்தெறியுங்கள். மனத்தின்மையுடன் போராடுங்கள். மற்றவர்க்காக நீங்கள் செய்யும் செயல் என்று இந்தப் பிரபஞ்சத்திற்குப் புரியும்வரை போராடுங்கள்.  புரிந்து விட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

அலுவலகம் சார்ந்த கடிதங்கள்|இனியவை கற்றல் மின்னிதழ்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் கீழ்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.விண்ணப்பக்கடிதங்கள்
2.அலுவலகக் கடிதங்கள்
3.புகார்க்கடிதங்கள்
4.வணிகக்கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்


1.அனுப்புநர், பெறுநர் என்றே போட வேண்டும். அனுப்புதல் – பெறுதல் என்று போடக்கூடாது.

2.அதேபோல் அனுப்புநர், பெறுநர் என்பதற்குப் பக்கத்தில் முற்றுப்புள்ளி      ( . ), காற்புள்ளி ( , )  என எதுவும் போட வேண்டாம்.

3.அனுப்புநரில் பொதுவான கடிதம் எனில் ஊர்ப்பொதுமக்கள் என்றே போடலாம். இல்லையாயின் தனிநபர் எழுதுவது போன்றும் பெயரிட்டும் எழுதலாம். அது தவறில்லை. ஆனால் இறுதியில் தங்கள் உண்மையுள்ள என்ற இடத்தில் அனுப்புநரில் என்ன உள்ளதோ அதுதான் இங்கும் இடம்பெறுதல் வேண்டும்.

4. அனுப்புநர், பெறுநர்- இல் இடம்பெறும் முகவரி ஒவ்வொன்றின் இறுதியிலும் காற்புள்ளி இட்டு கடைசியில் மட்டும் முற்றுப்புள்ளி வைப்பது கட்டாயம் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

5.பெறுநர் என்னும் முகவரி பகுதியில் பெயர் இருந்தால் (திரு. அ. கந்தசாமி அவர்கள்) மட்டுமே திரு, அவர்கள் போட வேண்டும். பெயரில்லாமல் பதவி இருப்பின் திரு, உயர்திரு மற்றும் அவர்கள் என எதுவும் போடக்கூடாது.

6. ஐயா / அம்மையீர் எனும் பகுதியில் பெறுநரில் உள்ளவர் ஆண் / பெண் எனத் தெரியாமல் இருந்தால் மேற்கண்டவாறு இரண்டுமே போட்டுக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும் எனில் ஒன்றை மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்.

7. ஐயா / அம்மையீர் எனும் இடத்தில் காற்புள்ளி வைத்தல் அவசியம்.

8. பொருள் என்னும் இடத்தில் முக்காற்புள்ளி ( : ) வைத்தல் வேண்டும். மேலும், நாம் பெறுநரிடம் என்ன கேட்கின்றோமோ அவற்றை சுருக்கமாகச் சொல்லி – தொடர்பாக… என முடிக்க வேண்டும். 

9.தொடர்பாக… என்பது இதைப்பற்றி இன்னும் பேசப்போகின்றேன் எனப் புரிந்து கொள்ளலாம்.

10. பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.

11. பொருள் ஆரமிப்பதற்கு முன்னால் வணக்கம் என்று குறிப்பிடுவது சிறப்பு. ஏனெனில் உயர் பதவியில் உள்ளவர்கள் மற்றும் நாம் தனக்கு இதுஃஇவை வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றோம். அதனால் இம்முறை தவறில்லை. (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை)

12.வணக்கம் சொல்லிவிட்டால் முடிவில் நன்றி கட்டாயம் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

13.வணக்கமும் நன்றியும் அலுவலகம் சார்ந்த கடிதங்களில் போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி.

14. அலுவலகம் சார்ந்த கடிதங்களில் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, தங்கள் அன்புள்ள எனப் போடுதல் கூடாது. தங்கள் உண்மையுள்ள என்றே போட வேண்டும். இறுதியில் காற்புள்ளி ( , )  வைத்தல் அவசியம்.  அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும். (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் சுற்றறிக்கை அனுப்புவோர் நேரிடையாகப் பெயரிட்டு பெயருக்கு மேல் கையெழுத்திடுவர்)

15.இடப்பக்கத்தில் இடம், நாள் என்பவைகள் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

16. தங்கள் உண்மையுள்ள என்பதின்கீழ் கையெழுத்துப் போட வேண்டும். அதற்குகீழ் அனுப்புநரின் பெயரினைத் தெளிவான முறையில் எழுதுதல் அவசியம்.

17.இறுதியில் கட்டாயம் இணைப்பு இருக்க வேண்டும். இணைப்பில் நீங்கள் கேட்ட பொருளுக்கு ஏற்றவாறு சான்றுகள், புகைப்படங்கள், பொதுமக்கள் கையொப்பங்கள், அளவு வகைபாடுகள் என அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.

18.இறுதியில் நீங்கள் எழுதிய அலுவலகம் சார்ந்த கடிதத்தை ஒருமுறை நன்றாகப் படித்துச் சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் ஒரு மின்நகல் (Xerox) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுதிப் பழகிக்கொள்ளுங்கள்

1.விண்ணப்பக்கடிதங்கள்
 

          வேண்டல், கேட்டல், விரும்புதல், முடித்துத் தரச்சொல்லல், அமைத்துக் கொடுக்க கேட்டல் ஆகியன பொருளாகக் கொள்ளலாம்.
 
       நாம் ஒருவரிடம் தனக்கு இது அல்லது இவை வேண்டும் அல்லது செய்து கொடுக்கும்படி என்று கேட்பது விண்ணப்பம் ஆகும். அவை கீழ்க்கண்ட உதாரணம்படி இருக்கலாம். இன்று நாம் ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு விண்ணப்பம் என்பது அவசியமாகிறது.
           விண்ணப்பம்  (சுயவிபரம்) என்பது, ஒருவரின் பெயர், வயது, முகவரி, கொடுக்கப்படும் வேலையின் முன் அனுபவம், கல்விநிலை என்ற முழுமையான தகவல் இருக்கக்கூடியது.

விண்ணப்பக்கடிதம் சார்ந்த சில உதாரணங்கள்
1.தலைமை ஆசிரியருக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் வரைக.

2.உங்கள் ஊருக்குச் சாலை சீரமைத்துத் தரும்படி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

3.பழுதடைந்த தெருவிளக்கை சீரமைத்துத் தரும்படி மின்பொறியாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. உங்கள் ஊருக்கு நூலகம் அமைத்துத்தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

5.உதவிப்பேராசிரியர் பணி வேண்டி முதல்வருக்கு விண்ணப்பம் வரைக.

6. மூவாளூர் ராமாமிருதம் அம்மையாரின் திருமண உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

7. பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

8. வருமானச்சான்று சாதிச்சான்று இருப்பிடச்சான்று பெற வட்டாச்சியர் அவர்களுக்கு விண்ணப்பம் வரைக.

9. மாணவர்களைப் பள்ளிக்கூடம் சேர்க்க வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் வரைக.

10.குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு விண்ணப்பம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                     ஊர்ப்பொதுமக்கள்,
                       
                     விவேகானந்தர் தெரு,
                       
                     எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                       
                     சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    நகராட்சி ஆணையாளர்,
                       
                    நகராட்சி அலுவலகம்,

                    பெத்தநாயக்கன் பாளையம்,
                    சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : குடிநீர் வசதி செய்து தருதல் தொடர்பாக…
           
                  வணக்கம். எங்கள் கிராமத்தில் கிட்டதிட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீருக்காகப் பக்கத்தில் உள்ள கிணற்றிலிருந்து பயன்படுத்தி வருகின்றோம். அதுவும், நீண்டதொரு தூரத்திலிருந்து பெண்கள் தலையிலும் இடுப்பிலும் சுமந்து வருகின்றனர். ஆண்கள் மிதிவண்டியின் மூலமாகத் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்தத் தண்ணீரைத்தான் குடிநீருக்காகவும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், கோடைகாலத்தில் கிணற்றிலுள்ள தண்ணீர் வற்றிப்போவதால் குடிக்க ஒருவீட்டுக்கு ஒரு குடம்  தண்ணீர் கிடைப்பதே மிக அரிதாகிறது. அதனால் எங்கள் ஊர் வழியாகச் செல்லும் மேட்டூர் குடிநீர் இணைப்பை எங்களுக்கு வழங்கியும், நகராட்சியின் சார்பாகத் தெருவெங்கும் குடிநீர்த் தொட்டி அமைத்து கொடுத்து உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                   தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                             ஊர்ப்பொதுமக்கள்

இணைப்பு
1.ஊர்பொதுமக்களின் கையொப்பம்

குறிப்பு
1.பெறுநர் பகுதியில் யாருக்கு எழுத வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

 

2.அலுவலகக் கடிதங்கள்           

       அலுவலகங்கள் சார்ந்து எழுதப்படுகின்ற கடிதங்களை அலுவலக கடிதங்கள் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் சார்ந்தவைகளே அதிகம் இடம்பெறுகின்றன. தனியார்த் துறையில் குறைவானதாகவே காணப்படுகின்றன. ஏனெனில் அரசு சார்ந்த இடங்களில் பழைய கோப்புகளைப் பாதுகாத்து,  அதனை முன்வைத்து வரும்காலங்களில் பயன்படுத்தி வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் செயல்பாடுகள் குறித்துக் கடிதம் இடம்பெற்றிருப்பின் அதனை கோப்பில் பாதுகாத்தும் வருகின்றனர்.

        இக்கடிதங்கள் மேலதிகாரி தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அனுப்புவார். அவர் அவரின் கீழ் வேலை செய்யும் நபர்களுக்கு பரிந்துரை செய்வார். இப்படியே இறுதியாகப் பொதுமக்களிடம் சென்றடையும். 

   அலுவலக கடிதங்களைப் பொறுத்தவரை ஆணை பிறப்பிப்பதற்காகவும் செய்திகளைத் தெளிவுப்படுத்தவும் எழுதப்பப்படுகின்றன.
கீழ்க்கண்டவாறு அலுவலக கடிதங்கள் அமையலாம்
1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாச்சியர்களுக்கு கடிதம் எழுதுதல்.

2.வட்டாச்சியரிடமிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் கடிதம் வரைக.

3. ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அமைச்சர்களிடமிருந்து துறைதோறும் கடிதத்தை அனுப்புதல்.

4. கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார்க்குக் கடிதம் வரைதல்.

5. காவல்துறை ஆய்வாளர் தான்சார்ந்த காவல் நிலையங்களுக்கு ஆணையிட்டு கடிதம் அனுப்புதல்.

6. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.

7. பல்கலைக்கழகங்கள் தங்கள் கீழ்ச்செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்குச் செய்திகளை அனுப்ப கடிதம் எழுதுதல்.
8. சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்களுக்குப் பொதுநலம் கருதி கடிதம் எழுதுதல்.

9.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலைக்கு உண்டா ஆணை, அங்கீகாரம் ஆகியன இவையுள் அடங்கும்.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.
அனுப்புநர்
                       
                     முதலமைச்சர்,
                       
                     தமிழ்நாடு.

பெறுநர்
                     மாவட்ட ஆட்சியர்கள்

                     தமிழ்நாடு.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : கோவிட் – 19 பொது ஊரடங்கு செயல்படுத்துதல் தொடர்பாக…
           
             வணக்கம். நம் மாநிலத்தில் கோவிட் – 19 என்கிற பெரும் தொற்றுநோய் நமது மக்களிடையே அதிகளவில் தொற்றி வருகிறது. இதன்காரணமாகத் தினம்தினம் மக்கள் பலர் உயிர்நீத்து வருகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் – 19 க்கான புதிய மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் அனைத்துப் பொதுமக்களும் வீட்டினுள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவிதமான போக்குவரத்தும் இல்லாமல் ஊரடங்கு நாளை முதல் செயல்பட தொடங்குகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். மேலும், அனைவரும் முககவசம் அணிந்தும் ஒருவர்க்கு ஒருவர் இடைவெளிவிட்டும் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தியும் இருப்பது அவசியமாகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்தில் கொண்டு அனைத்துப் பொதுமக்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  சென்னை                                                                                                                                              முதலமைச்சர்
நாள் :                                                                                                                                                                           (தமிழ்நாடு)

இணைப்பு
1.செய்தித்துறை

2.மக்கள் தொடர்பு துறை

3.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

4.முதலமைச்சர் தனிப்பிரிவு

 

3.புகார்க்கடிதங்கள்


     புகார் என்பது பிறமொழிச்சொல்லாகும். தமிழில் புகார் என்பதற்கு முறையீடு என்று பெயர் கொள்ளலாம். புகார் அளிப்பது என்பதை தவிர்த்து முறையீடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டால் நலம். ஆனால் மக்கள் பேச்சு வழக்கில் முறையீடு கடிதம் என்பதைவிட புகார் கடிதம் என்பதே அதிகம் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகிறது. இங்கு புகார் என்பது பொதுச்சொல்லாக வைத்து கடிதம் எழுதப்படுகிறது.

       புகார், முறையீடு என்பதற்கு மீட்டுக்கொடுக்க வேண்டல், நீதி கேட்டல், சொந்தம் கொண்டாடல், உரிமை வேண்டல், என்னுடையது என்று முறையிடல் ஆகியனவும் இன்னும் பிறவும் பொருளாகக் கொள்ளலாம்.

      நீதி கேட்டோ அல்லது உரிமையைக் கேட்டோ அந்தந்த மேலதிகாரிக்கு தனக்குள்ள நிறையைத் தெரிவித்து எதிரானவரைப் பற்றி புகார் அளித்தல்.

           காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு புகார் கடிதம் எழுதுதல்.

        சண்டையிட்டும், வழக்கு சார்ந்தும், குடும்ப பிரச்சனைகளை முன்வைத்தும் காவல் நிலையங்களில் புகார் அளித்தல்
.
இம்மாதிரியான புகார் கடிதங்கள் அதிகமாகக் காவல் நிலையங்கள் சார்ந்தே இருக்கும். 
கீழ்க்கண்டவாறு புகார் கடிதங்கள் அமையலாம்

1.காணாமல் போன மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

2. காணாமல் போன நகையைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

3. காணாமல் போன மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

5. எங்கள் வீட்டில் திருட்டுப்போன பொருட்களைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

6. காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

7. காணாமல் போன கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

8. பாலியல் கொடுமையை எதிர்த்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

9. சமூக பிரச்சனைகளுக்காக அந்தந்த உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் வரைக.

10.குடும்ப பிரச்சனைகளை முன்வைத்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு புகார்க்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                      அமுதன்,
                       
                      காமராஜர் தெரு,
                       
                      எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                 
                      சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    காவல் ஆய்வாளர்,
                       
                    காவல் நிலையம்,
                       
                   ஏத்தாப்பூர்,

                   பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,

                   சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                   பொருள் : இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தருதல்  தொடர்பாக…
           
                       வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். தற்போது எனது தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு ஆத்தூருக்கு என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தேன். ஆத்தூரில் NM ஜுவல்லர்ஸ் – க்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள்ளே நகை வாங்க சென்றிருந்தேன். கிட்டதிட்ட இரண்டு மணி நேரங்களுக்குப்பின் நகை வாங்கிவிட்டு வெளியில் வந்து பார்க்கும்போது எனது வண்டியைக் காணவில்லை. அக்கம்பக்கத்திலும் சென்று பார்த்தேன். பக்கத்தில் உள்ளோரிடம் விசாரித்தும் பார்த்தேன். எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஆதலால், என்னுடைய இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                        தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                               ( அமுதன் )
இணைப்பு
1.TVS – WEGO, Blue color

2.வண்டி எண் – TN 27 A 2314

3.வண்டியின் RC  புத்தகம்

4.என்னுடைய ஓட்டுநர் உரிமம் நகல்

5.  NM ஜுவல்லர்ஸ் கடையின் நாங்கள் வாங்கின நகையின் அன்றைய ரசீது

 

4.வணிகக் கடிதங்கள்

         வணிகம், வாணிபம் என்று சொல்லலாம். இங்கு வணிகம் என்பது தொழில் சார்ந்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. அவ்வாறு தொழில் சார்ந்து நடக்கும் கடித போக்குவரத்துக்களை நாம் வணிகக் கடிதம் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் சிறுகுறு தொழில்களிலிருந்து பெருந்தொழில்கள் நடக்கும் அனைத்து வகையிலும் உண்டு எனலாம்.

          சிறுகுறு தொழிலகங்கள் பெரும் தொழிற்சாலைகளிடமிருந்து தனக்கு இந்தப் பொருட்கள் அல்லது கருவிகள் தனக்கு வேண்டும் என்று கடிதம் எழுதப்படுவது ஆகும்.
         
இவ்வகையான கடிதங்களைப் பொறுத்தவரை அந்தந்த தொழிற்சாலைகளின் தலைமை மற்றும் மேனேஜர் அவர்களுக்கு எழுதக்கூடியதாகும்.

கீழ்க்கண்டவாறு வணிகக் கடிதங்கள் அமையலாம்
1.புத்தகங்கள் வேண்டி பதிப்பகத்தார்க்கு கடிதம் வரைக.

2.சக்கரை வேண்டி சக்கரை தொழிற்சாலை மேனேஜருக்கு கடிதம் வரைக.

3. வாகனங்களின் உபரி கருவிகள் வேண்டி அவ்தொழிற்சாலைக்குக் கடிதம் வரைக.
3. அரிசி, பருப்பு, வெங்காயம் போன்றவைகள் பெற அந்தந்த மண்டிகளின் (மார்கெட்) தலைமை பொறுப்பாளருக்குக் கடிதம் வரைக.

4. எலெக்ட்ரானிக் சாதனங்கள் (TV, Phone, Watch, Computer, Fan Ex..) வேண்டி அவ்வவ் துறைகளுக்கு கடிதம் வரைக.

5. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ( Bulb, Switch Ex..)  வேண்டி கடிதம் வரைக.

6. வர்ணங்கள் (பெயிண்ட் ) வேண்டி அந்தந்த தொழிற்சாலைகளுக்கு (Asian Paints Ltd, Berger Paints India Ltd, Kansai Nerolac paints Ltd Ex..) கடிதம் வரைக.

7. துணிக்கடைக்கு புதிய ஆடைகள் வேண்டி கடிதம் வரைக.

8. பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.

9. மளிகைப் பொருட்கள் வேண்டி கடிதம் வரைக.

10.மருந்து கடைக்கு தேவையான மருந்துகள் வேண்டி கடிதம் வரைக.

       இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இங்கு ஒருசில கேள்விகளுக்கு இதற்கு கூடவா கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணலாம். ஆனால் வணிகக் கடிதம் என்று வரும்போது இவையெல்லாம் சேர்ந்துதான் வரும். மேலும், கடித வடிவில் இல்லாமல் நீங்கள் சாதாரணமாக கேட்கும் பொருட்களை அவர்களும் கொடுத்து விடுவதால் நமக்கு இதுவே போதும் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. பொருட்கள் தரக்கூடியவர்கள் இப்படித்தான் தனக்கு வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் கடித முறையைப் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு வணிகக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.
அனுப்புநர்
                       
                      கதிரவன்,
                       
                      கதிர் பர்னிச்சர்ஸ்,
                      
                      நேரு தெரு,
                       
                      சேலம் மாவட்டம்,
                       
பெறுநர்
                      மேனேஜர்,

                      ராயல் பர்னிச்சர்ஸ் & கோ

                      அண்ணா நகர்,
                       
                      சென்னை – 600 021.

ஐயா / அம்மையீர்,
           
                       பொருள் : பர்னிச்சர்ஸ் வாங்குதல்  தொடர்பாக…
           
                வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த இருப்பத்தைந்து வருடங்களாகப் பர்னிச்சர்ஸ் கடை நடத்தி வருகின்றேன். தற்போது எனது கடைக்குச் சில பொருட்கள் தேவைப்படுகின்றன. மரத்தாலான கட்டில்களும் ஷோபாக்களும் நல்லதொரு வடிவிலும் உறுதியான நிலையில்  அமைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  மேலும் நாற்காலிகள் சிறந்த தச்சர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அறிந்தேன். அதனால் எனக்கு கீழ்க்கண்ட பொருட்களை என்னுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். 
            நீங்கள் எங்களுக்கு அனுப்புகின்ற பொருட்களுக்கு ரசீது அனுப்பியவுடன் உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையை வங்கியில் செலுத்திவிடுகின்றோம்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                     தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                             ( கதிரவன் )

இணைப்பு
1. Wood Shoba Set  – 25 Nos

2.Chair (Rs.500) – 100  Nos

3. Small size Chair (Rs.350) – 100 Nos

4. Bed Smart Design – 75 Nos

5.  Dressing Table – 100 Nos

 

பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக

பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக
          “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி” என்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபெருமானின் அருளால் அகத்திய முனிவரால் பொதிகைமலை என்னும் தமிழ்நாட்டிற்குத் தமிழ்மொழி கொண்டு வரப்பட்டது. இலக்கணங்கள், இலக்கியங்கள், காப்பிங்கள், நிகண்டுகள், அகராதிகள், சிந்தாந்த நூல்கள் எனப் பலதரப்பட வகைமையுடைய நூல்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன. இருப்பினும் ஆங்கிலேயர்கள், வடநாட்டவர்கள், இஸ்லாமியர்கள் என அந்நியர்களின் படையெடுப்பால் மொழிக்கலப்பு ஏற்பட்டது.
மக்களின் இயலாமை, பிறமொழியின் மீதுள்ள ஈர்ப்பு, புதியமொழி என்கிற ஆசை, அம்மொழிகளைக் கற்றால் அறிவு பெருகும் என்கிற எண்ணம் போன்றவைகள் மக்களைத் தமிழ்மொழியோடு பிறமொழிகளையும் கலந்து பேச வைத்தது. இதன் காரணமாகப் பிறமொழிக்கலப்பு அதிகமானது. காலம் செல்லச்செல்ல இளம்தலைமுறையினருக்குப் பிறமொழிகள்கூட தமிழ்மொழிதான் என்கிற உணர்வும் எண்ணமும் உண்டாயிற்று. இப்படியே சென்றால் ஒருகாலக்கட்டத்தில் உண்மையான மொழி அழிந்து பிறமொழிகள் கலந்து பேசக்கூடிய கலப்பு மொழியே உண்மையாகிவிடும்.  இதன்காரணமாகப் பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றினைக் களைந்து தூயத்தமிழ்ச் சொற்களையே பேசுவோம்.
வ.எண்தெலுங்குச் சொற்கள்தமிழ்ச்சொற்கள்
1அப்பட்டம்வெளிப்படையாக
2ஆஸ்திசெல்வம்
3எக்கச்சக்கம்மிகுதி
4கச்சிதம்ஒழுங்கு
5கெட்டியாகஉறுதியாக
6கெலிப்பு  வெற்றி
7கேட்பைகேழ்வரகு
8சந்தடிஇரைச்சல்
9சாகுபடிபயிரிடுதல்
10சொச்சம்மிச்சம்
11சொந்தம்உறவு
12தாறுமாறுஒழுங்கின்மை
13தெம்புஊக்கம்
14தொந்தரவுதொல்லை
15நிம்மதிகவலையின்மை
16பண்டிகைபெருநாள்
17பந்தயம்பணயம்
18மச்சுமேல்தளம்
19மடங்குஅளவு
20வாடகைகுடிக்கூலி
21வாடிக்கைவழக்கம்
பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் / அ.செல்வராசு

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் - அ. செல்வராசு
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 246ஆம் பாடல் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடியதாகும். பூதப்பாண்டியன் இறந்து பட்டபோது இப்பாடல் அவன் மனைவியால் பாடப்பெற்றுள்ளது. கணவனை இழந்து தவித்த அவளிடம் சான்றோர்கள் அவளைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்துகின்றனர். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. கணவனை இழந்து விட்டால் பெண்கள் தம் நிலை குறித்து மூன்று வகையான முடிவெடுக்கலாம் என ஆண்தலைமைச் சமூகம் கற்பித்துள்ளது. ஒன்று – இறந்த கணவனின் உடல் மீது விழுந்து எரிந்து படுவது. இரண்டு – கணவரின் இறப்புக்குப் பிறகு 14 நாட்கள் கழித்து இறந்துபடுவது. மூன்று – கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாக வாழ்வது. இந்த மூன்று நிலைப்பாடுகளைக் கொண்டு அவளை முதல்தரக் கற்புடையவள், இரண்டாம்தரக் கற்புடையவள், மூன்றாம்தரக் கற்புடையவள் என ஆண்தலைமைச் சமூகம் நிரல் படுத்தியுள்ளது; வற்புறுத்தி உள்ளது.

     மேற்சுட்டிய புறப்பாடலில் சான்றோர்கள் பெருங்கோப்பெண்டைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்த, அவளோ பின்வருமாறு கூறி மறுத்துரைக்கிறாள்.

“பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்து இட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்பது பெருங்கோப்பெண்டின் குரலாகும்.
    
“நான் தீப்பாய்வதை விடுத்துக் கைம்பெண்ணாக வாழவேண்டும் எனக் கூறும் சான்றோரே நெய்யில்லாது சமைத்த, பானையின் அடியில் கிடக்கும் கைப்பிடியளவு மட்டுமான உணவை வெள் எள்ளின் துவையலுடன் புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு கல் படுக்கையில் உறங்கச் சொல்லும் வாழ்க்கையை ஏற்கும் பெண்ணல்ல நான் சுடுகாட்டு நெருப்பு உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகும். எனக்கு அது தாமரை பூத்திருக்கும் பொய்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்” என்பது அவளது குரலாகும்.
    
ஆண் தலைமைச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள் / தீர்மானிப்பவர்கள் ஆண்களேயாவர். கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏற வேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்களே. அதுதான் முதல்தரக் கற்பு என்றும் கற்பித்தனர். கைம்பெண்ணாக வாழவேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்கள்தான். ஆனாலும் அது மூன்றாம்தரக் கற்பு என்று கற்பித்திருந்தனர்.கற்பித்ததே ஒரு சூழ்ச்சி என்கிறபோது இதில் முதல்தரம் என்ன மூன்றாம் தரமென்ன? இந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டதால்தான் பெருங்கோப்பெண்டு அவர்களது கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கிறாள். உண்மையில் சான்றோர் உருவாக்கிய இந்தச் சூழ்ச்சியின்படி அவளை அவர்கள் தீப்பாயவே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைத் தவிர்க்கக் கூறுகின்றனர்.
    
பூதப்பாண்டியன் இறந்துபட்டதால் அரசுக் கட்டிலேறி ஆட்சிபுரியுமாறு வேண்டவே சான்றோர் அவ்வாறு கூறியதாக ஒளவை சு.துரைசாமி பிள்ளை கூறியுள்ளார். என்றாலும்கூடத் தீப்பாய்வதைவிடக் கைம்பெண்ணாக வாழ்வது கொடுமையானது என அவள் குறிப்பிடுகிறாள். வாழ்வா சாவா என முடிவெடுக்கவேண்டுமென்றால் அவள் வாழ்வையே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவளோ அதை விடுத்து இறப்பையே தேர்ந்தெடுத்திருக்கிறாள். பெண்களுக்கு மட்டுமே என்று உருவாக்கப்பட்ட இந்தக் கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீதான எதிர்ப்புக் குரலாகப் பெருங்கோப்பெண்டின் குரல் ஒலித்துள்ளது செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச்சூழ்ச்சிப் பல்சான் றீரே என கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீது சொற்களை வீசுகிறாள் ஆடவர்க்கென்றும் பெண்டிர்க்கென்றும் வேறுபட்ட ஒழுகலாறுகளை உருவாக்கியவர்கள் எப்படி சான்றோராக இருக்க முடியும்? அந்தச் சான்றாண்மையை அவள் சான்றாண்மை என்றே கருதவில்லை.
    
இந்தப் பாடலை அடுத்து பெருங்கோப்பெண்டு தீப்பாய நின்றதைப் பேராலவாயார் என்பவர் நேரில் கண்டு அதனைப் பதிவிட்ட பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. காட்டிடத்து அணங்குடையாள் கோயில் முன்பாக தீமூட்டப்பட்டு எரிந்து கொண்டுள்ளது. பெருங்கோப்பெண்டு நீராடிய கூந்தலோடு தீப்புக வந்து நிற்கிறாள். சிறிது நேரம் கூடத் தன் கணவனைப் பிரிந்திருக்க விரும்பாதவள் இவ்வாறு வந்து நிற்கும் காட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யானைத் தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெழுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் லிருபுறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவு கண் டுயிலாக் கடியுடை யனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
இன்னுயிர் நடுங்குந் தம்இளமை புறம் கொடுத்தே”
என்பது அப்பாடலாகும்.
கணவன் இறந்த பிறகு அவளை உயிரோடு (கைம்பெண்ணாக) இருக்கச் சொல்வதும் ஆடவர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டவளாகத் தீப்பாயும் முடிவை எடுத்துள்ளாள். எவ்வாறாயினும் ஆடவர்கள் பெண்களுக்கென்று உருவாக்கியிருக்கும் கற்பிதங்களின் மீது கல்லெறியும் முதல் வேலையைப் பெருங்கோப்பெண்டு செய்துள்ளாள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,

மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப் பங்களிப்பு

தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப்
முன்னுரை
          தமிழ்ப் பண்பாட்டில் முழுமை பெற்றக் கலை வடிவமாகத் தெருக்கூத்துக் கலை விளங்குகிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒரே இடத்தில் இணையும் ஆதி கலை. கூத்தாடுநர், களரி (கூத்தாடும் இடம்), எழுத்துப் பிரதி, பார்வையாளன் ஆகிய நான்கும் கூத்துக் கலைக்கு அடிப்படையானவை என்கிறார் கூத்தியல் ஆய்வாளர் முனைவர் கி.பார்த்திபராஜா. இம்மண்ணில் கலை உயிரொட்டமாக விளங்குகின்றது என்றால் அதற்கு அடித்தளமாக இருப்பவன் கலைஞன். கூத்துக் கலைப் பரப்பென்பது, தமிழ்க் கலைப் பரப்பில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் வாழ வைப்பது கலைகள். அக்கலைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வாழ்ந்தவர்கள் பலர். தொன்று தொட்டக் கலை மரபில் கூத்துக்கலைக்கென்றே தனியான தாகமும் வேகமும் உண்டு. தெருக்கூத்து இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வருவதற்குக் காரணம் கூத்துக்கலைஞர்கள். அக்கூத்துக் கலைஞர்களின் வழியில் வந்தவர் பண்டிதர் மு.மணியன். பன்னெடுங்காலமாய் தெருக்கூத்துக்கலை வாழ்க்கைகென்றே தன்னையும் தனது சந்ததியினரையும் அர்ப்பணித்துக்கொண்ட நிகழ்த்துக் கலைஞர் ஒருவரின் வாழ்கை வரலாற்றை இவ்வெழுத்துக்கள் திறம்பட விளக்குகின்றன. தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக் கலைப் பங்களிப்பு எனும் பொருண்மையிலமைந்த இக்கட்டுரை, பண்டிதர் மு.மணியனிடம் கண்ட நேர்காணல் மூலம் கிடைத்த தரவினடிப்படையில் அமைந்ததாகும்.

தெருக்கூத்துக் கலைஞர் மு.மணியனின் வாழ்வும் பணியும்
         கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பண்டிதர் மு.மணியன். இவர் வயதை அரிதியிட முடியவில்லை. அவரைக்கேட்கும் போது 85 வயதிற்கு மேல் இருக்கும் என்கிறார். இவர் ந.கோவிந்தனுக்குப் பங்காளி ஆவார். கோவிந்தன் எனக்கு நான்கு வயது சின்னவன் மணியன் என்கிறதை வைத்துப்பார்க்கும் போது, இவர் கி.பி.1937 இல் பிறந்திருத்தல் வேண்டும். மணியன் முடித்திருத்தும் தொழிலாளி. இவரின் வயதை 86 எனலாம். மணியனின் தந்தை கோ.முத்துசாமி பண்டிதர் (முத்தான்), தாய் மு.பெரியம்மாள் ஆவர். இவருக்கு இரண்டு மனைவியர் 1. ஆண்டாள், 2.கொளஞ்சி. இரண்டு குழந்தைகள் ஒரு ஆண், ஒரு பெண். மணியன் தனது அப்பா காலத்திலிருந்தே தெருக்கூத்து, மேடை நாடகம் (ட்ராமா) போன்றவற்றில் பெண் வேடமிட்டு ஆடுவாராம். இவர் காலத்தில் நடைபெற்ற பல கூத்துக்களைப் பட்டியலிட்டுத் தருகிறார். நாடகத்தில் பிரத்தேயமாக பெண் வேடமிட்டு ஆடுவேன் என்பதை பெருமையோடு சொல்கிறார். தமிழ்க் கூத்து மரபில் இதிகாசங்களான பாரதம், இராமாயணம் இல்லாமல் கூத்தே நடைபெற்றதில்லை எனலாம். குடியநல்லூரில் பல நாடகக் கலைஞர்கள் இருந்து தமிழ் கூத்து மரபிற்கு உரமிட்டுடிருக்கின்றனர். அதனை மணியன் மிகவும் நேர்த்தியாகக் கூறிகிறார்.  இவர் தனது 16 வயதிலேயே கூத்தாட வந்தவர். கூத்து ஆடுவது எனக்கு பிடித்த பழக்கங்களுள் ஒன்று என இவர் கூறுவதிலிருந்தே கூத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர்கள் மணியன் பரம்பரையினர் என்பது புரிகிறது.

     திருக்கோயிலூர் வட்டம், ரிஷிவந்தயம் காத்தமுத்து ஆசாரி என்பவர் மணியன் போன்றோர் பின்னாளில் கூத்து வாத்தியார்களாக மாற வழிவகுத்துள்ளார் என்பது தெரிகிறது. காத்தமுத்து ஆசாரியிடம்  கூத்துக் கற்றுக்கொண்ட மூத்த மாணவராக இருந்தவர் குடியநல்லூர் நாடகக் கலைஞர் மண்ணாங்கட்டி ஆசாரி ஆவார். இச்செய்தியை மணியன் கூறுகின்றார். மணியனின் கூத்துக் கலைப்பங்களிப்பு பாராட்டற்குறியது. இவர் சம்பூர்ண ராமாயணம் மேடை நாடகத்தில் சூர்ப்பனகை வேடமிட்டு நடித்துள்ளார். இந்நாடகத்தை ஒருங்கிணைத்துப் பயிற்றுவித்த கூத்து வாத்தியார் நாடக வித்துவான் காத்தமுத்து ஆசாரி ஆவார். சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு சேர்ந்து வேடமேற்று நடித்தவர்கள் 25 நபர்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. அவர்களைப் பட்டியலிடுகிறார் கலைஞர் மு.மணியன்.

சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு நடித்த கலைஞர்கள் : (15 பேர்)
1.மொச்சைக் கொட்ட உடையார் ( இராமர்)

2.சுப்பிரமணிய உடையார் (சீதை, கைகேயி)

3.செக்காமூட்டு சந்தரகாசு (இலஷ்மணன், பரதன்)

4.மண்ணாங்கட்டி ஆசாரி (சுப்பிரமணிய ஆசாரி) – (விபீஷ்ணன், சுக்ரீவன்)

5.இராஜகோபால் நாய்க்கர் (அனுமார்)

6.சந்தூட்டு பெரியதம்பி உடையார் (தாடகை, மரவுரி சீதை)

7.பரியேறி வீட்டு பாவடை (கலியாண சீதை)

8.உம உடையான் (வேலாயுதம்) – சுமித்திரை

9.தரவுகாரமூட்டு முருகேச உடையார் – தசரதன்

10.பூசாலிவூட்டு கண்ணன் (மோகினி)

11.சூரசங்கு உடையார் (மோகினிராஜா)

12.மடத்தொடையார் (இராவணன்)

13.மினியன்(முனியன்) – கும்பகர்ணன்

14.கொறவன்(பிச்சக்காரன்) – அய்யாமூகி, அசோமுகி

15.வண்ணாமூட்டு நடேசன் (இலஷ்மணன் பாலகாண்டத்தில்)

    இப்பதினைவரை மட்டும் சொல்லிவிட்டு பாதிபேரை மறந்து விட்டேன் என்கிறார் மணியன். இராமாயண ‘ட்ராமா’ தமிழகத்திலேயே யாரும் நிகழ்த்த முடியாத ஒரு பிரம்மாண்டம் என அவர் மனமுருகி சொல்லிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இராமாயணம் கூத்தாகவும் நிகழ்த்தப் பெற்றது என்பதையும் உரைக்கின்றார். இராமயணம் தெருக்கூத்தாக, சூர்ப்பணகை கர்வ பங்கம், வாலி மோட்சம் என்ற பெயர்களில் குடியநல்லூர் மட்டுமல்லாது எல்லா ஊர்களிலும் ஆடக்கூடிய சிறப்புக் கூத்துகளாகும் என்ற செய்தியை அவர் தரும் தகவல்களில் காணமுடிகிறது.

பண்டிதர் மு.மணியன் வேடமிட்டு நடித்த நாடகங்கள்
     மு.மணியன் இராமாயணத்தில் இராமரின் தாய் கோசலையாகவும், இராவணனின் தங்கை சூர்ப்பனகையாகவும், இராவணனின் மனைவி மண்டோதரியாகவும் இராமாயண காண்டக் காட்சிக்கேற்ப தனது வடிவத்தை மாற்றியமைத்து ஆடிய கலைஞன். மணியன் பார்ப்பதற்கு எளியவர். பழகுவத்றகு இனியவர் என்று குடியநல்லூர் சூடாமணி அம்மாள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. மணியன் இராமாயணம் மட்டுமல்லாது பாரதத்தையும் நன்குக் கற்றுத்தேர்ந்தவர். பாரதத்தில் பல நாடகங்களை ஆடியுள்ளதாகத் தெரிகிறது. அவர் ஆடிய பாரதக் கதைகளில் ஒன்று ‘போர்மன்னன் சண்டை’ ஆகும். இந்த நாடகத்தை இன்று போத்துராஜா சண்டை என்ற பெயரில் நிகழ்த்துகின்றனர். இப்போர்மன்னன் சண்டை பாரதக் கிளைக்கதைகளில் ஒன்று. போர்மன்னன் கூத்தில் நாடகக் கலைஞர் மணியன் பாஞ்சாலி (திரௌபதி) வேடமிட்டு நடித்துள்ளார். புராண இதிகாசப் பாடல்களை அவருக்கு உடல் நிலை முடியாத காலத்திலும் பாடியே ஆகவேண்டுமென்ற ஆர்வத்தோடு இன்றும் படிவருவது  போற்றுதலுக்குறியது.
           
    இன்னும் பல நாடகங்களை நடித்துக் காட்டியுள்ளார். சிறுதொண்ட நாயனார் சரித்திரக் கூத்தை தெருக்கூத்தாக நடித்துள்ளார். இந்நாடகத்தில் சிறுதொண்ட பக்தனுக்கு மனைவி வெங்காட்டு நங்கையாக வேடமிட்டு நடித்துள்ளார்.
சம்பூர்ண ராமாயணத்தில் சூர்ப்பனகையின் கதையமைப்பை விளக்க முனைகிறார் மணியன். இராமாயணத்திலேயே சூர்ப்பனகை தான் நல்லவள் என்று அவர் கூறுவதை நுணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. இராமாயணக்கதை இருவரால் இயங்கியது எனலாம். ஒருவர் கூனி மந்தரை, மற்றொருவர் சூர்ப்பனகை. இந்த இரண்டு கதாப்பாத்திரங்கள் இல்லையானால் இராமாயணக் கதைப்போக்கில்லை. சூர்ப்பனகை வருகின்ற விதத்தை அழகாக இலக்கிய நயத்தோடு பாடுவான் கம்பன். ஆனால் சம்பூர்ண ராமாயணம் சாரத்தை மட்டும் கூறுகிறது.

      ஆரண்ய காண்டத்தில் இராமர், சீதை, இலக்குவன் மூவரும் பஞ்சவடியில் இருப்பார்கள். பஞ்சவடியிருக்கும் தண்டகாருண்ய வனம் சூர்ப்பனகையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி. அன்றோர் நாள் சூர்ப்பனகை தண்டகாருண்யம் வருகிறாள். அப்போது இராமனைப் பார்க்கிறாள். ஆசை பெருக்குகிறாள். இராமனைக் கூடத்துடிக்கிறாள், இராமனோடு ஆசை மொழிபேசி வேசை காடுகிறாள். இராமன் அதற்கு மசியவில்லை உடனே தனது பெண்மையின் ஆண்மையை வெளிக்காட்டுவாள் அதனை மணியன் பாடலாகப் பாடுகிறார்.
ஏ வில்லேந்திய வீரா….
           
கண்ணால நீ மயங்காதே கன்னியைக் கண்டு         
கண்ணால நீ மயங்காதே !                               – (2)         
உன்னை நம்பி நானே உற வாடினேன் பூமானே         
பாவையவள் வதனம் பாரையா ஏ….இராகவா         
காம வீரியம் தீரையா         
காயாம்பூ மேனியனே கன்னிக்குகந்த நாதா         
தீராத ஆசைதீர்க்க்கவா கோதண்ட இராமா         
மாறாத மோகம் போக்க வா…         
கண்ணால நீ மயங்காதே கண்ணியைக் கண்டு
கண்ணால நீ மயங்காதே !                               – (2)    
     (சூர்பனகைப்பாட்டு, சம்பூர்ண ராமாயணம்)
என்ற பாடலைப் பாடி முகபாவனைக்காட்டினார் மணியன். பாடும் போதே ஒருவிதமான உணர்ச்சி தோன்றியது. இந்த பாடல் மோகன ராகத்தோடும் தாளத்தோடும் பாடக்கூடிய பாடலாகுமென்கிறார். பண்டிதர் மு.மணியனின் பணிகள் போற்றுதலுக்குறியது. மறைந்து போன கலைகளை அவரின் பெயரன் தலைமுறைவரை கொண்டு சென்றுள்ளார் என்பதை நினைக்கும் போது மகிழ்வைத் தூண்டுகிறது. மணியன் இந்த வயதிலும் கூட யாராவது இராமாயணம், மகாபாரதம், கூத்துக் கதைகளைக் கேட்டால் தயங்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த அளவு கூத்தில் பாண்டித்தியம் பெற்றவர்.

நிறைவாக
    கூத்தில்  ஆழங்கால் பட்ட நயத்தகு மனிதரில் இவரும் ஒருவர். மணியனின் கலைப்பயண அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம், அந்த அளவு குறிப்புகள் உள்ளன. சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்தாலும், கலையைக் காக்க வேண்டும் பண்பாட்டை மீட்க வேண்டுமென்ற அவாவினால் கூத்தைக் கற்றுக்கொண்டார். தெருக்கூத்தால் அவர் புகழடைந்தார் கூத்தும் குடியநல்லூரில் செழித்தோங்கியது. செம்மையான தமிழ் மரபில் கூத்து தனித்த அடையாளமாக உள்ளது என்றால் அதற்கு இது போன்ற கலைஞர்கள் தான் காரணம். அப்படிப்பட்டக் கலைஞர் மு.மணியனின் வாழ்வைக் கருத்தாழம் மிக்க ஆவணப் பதிவாக இக்கட்டுரை பதிவுசெய்கின்றது.

(நாடக்க கலைஞர் மு.மணியன் அவர்களை நேர்காணல் செய்து எழுதப்பட்ட ஆவணப் பதிவுக் கட்டுரை இது. நேர்காணல் கண்ட நாள் : 19.03.2023, கிழமை : ஞாயிற்றுக்கிழமை, நேரம் : பிற்பகல் 1.00 மணி)

உசாத்துணை
1.பார்த்திபராஜா.கி., நிகழ்த்துக்கலை மரபு, பரிதி பதிப்பகம் வெளியீடு, திருப்பத்தூர், மு.பதிப்பு : 2022.

2.சிவக்ஷண்முகம் பிள்ளை.ஏகை. மங்கைபுரி சமஸ்தான வித்துவான்., சம்பூர்ண ராமாயணம், பி.இரத்தன் நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீடு, சென்னை, மு.பதிப்பு : 1970.

3.தகவலாளர் : பண்டிதர் மு.மணியன், வயது (86), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
4.
தகவலாளர் : பண்டிதர் ந.கோவிந்தன், வயது (90), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

5.தகவலாளர் : சூடாமணி அம்மாள், வயது (63), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ச.வாசுதேவன்
முனைவர் பட்ட ஆய்வாளர்

இலக்கியத்துறை,
மொழிப்புலம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010

மின்னஞ்சல் : shankarvasu98@gmail

நெறியாளர் :
முனைவர் பெ.இளையாப்பிள்ளை

பேராசிரியர்,
இலக்கியத்துறை

கலைப்புல முதன்மையர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010
ச.வாசுதேவன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க…

 

ஆண் கட்டற்ற ஆளுமை|அ.செல்வராசு

ஆண் கட்டற்ற ஆளுமை - அ.செல்வராசு
மனித சமூகத்தை, சமூகவியலாளர் இருவகையாகப் பிரிப்பர். ஒன்று, பெண் தலைமைச் சமூகம். மற்றொன்று ஆண் தலைமைச் சமூகம். குடும்ப, சமூக அதிகாரம் யாரிடம் இருந்தன அல்லது யாரால் கட்டுப்படுத்தப் பெற்றன என்பதை வைத்து இவ்வகைப்பாடு செய்யப்பெற்றுள்ளது. இன்று ஆண் தலைமைச் சமூகம் நிலைபெற்றுள்ளது. எனினும் சமூக வரலாற்றின் தொடக்கத்தில் பெண் தலைமைச் சமூகமே இருந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வரலாற்றிலும் இலக்கியத்திலும் பெண் தலைமைச் சமூகம் இருந்ததற்கான எச்சங்கள் ஆங்காங்கே காணப்பெறுகின்றன.
    
குடும்பம், அரசு, சொத்து ஆகியவற்றைக் கைப்பற்றி கொண்ட ஆடவர்கள், தம் தலைமையிலான சமூகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆண் தலைமைச் சமூகம் உருக்கொண்ட பிறகு, பெண்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்களாலேயே தீர்மானிக்கப்பட்டன. அந்தத் தீர்மானத்தின் உச்சக்கட்டம் தான் ‘கற்பு’ என்பது. ஆண் என்ற பாசக்கயிறு பெண்களின் மீது எப்போதுமே பிணிக்கப்பட்டே இருந்துள்ளது; இருக்கிறது. அந்தப் பாசக்கயிற்றை எங்கே இறுக்குவது எங்கே இலகுவாக்குவது என்பதை ஆண்களே முடிவு செய்தனர்; செய்கின்றனர். ஆண்களுக்கு இணையான எல்லாத் திறன்களையும் பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. குடும்பம் என்ற கட்டமைப்பில் ஆடவர் கையிலிருந்த பாசக்கயிற்றாலேயே பெண்கள் கைப்பாவை ஆனார்கள். தந்தை, கணவன், அண்ணன், தலைவன் என்று அனைத்துப் பொறுப்பினராலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். அதேநேரத்தில் ஆண் என்ற பாசக்கயிறு இல்லாச் சூழலில் பெண்கள், தம் முழு ஆற்றலையும் வெளிக்காட்டுபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    
சிலப்பதிகாரத்தில், கண்ணகி பாத்திரம் முதன்மைப் பாத்திரமாகும். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே கண்ணகி இடம்பெற்றுள்ளாள். காப்பியத்துள், திருமண வயதுடைய பெண்ணாக அவள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளாள். திருமணம் முடிந்தவுடன் கோவலன் அவளை, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே, மலையிடைப் பிறவா மணியே…, அலையிடைப் பிறவா அமிழ்தே…, யாழிடைப் பிறவா இசையே…’ என்றெல்லாம் புகழ்கின்றான். இந்தப் புகழுரைக்குக் கண்ணகியிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை. அவன் புகழப்புகழ அவள் வெட்கப்பட்டதாகக்கூட இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. அறியாப் பருவத்துப் பெண் போல அவள் அமைதியாகவே இருந்தாள். பிறகு கோவலன் மாதவியோடு சென்றுவிட, பிரிந்த கணவன் மீண்டும் வந்து சேர்வதற்கு தேவந்தி வழி கூறியபோதும் ‘பீடன்று’ என ஒரே சொல்லில் முடித்துக் கொண்டாள் கண்ணகி.
     மாதவியை விட்டுக் கோவலன் கண்ணகியிடம் மீண்ட பொழுது ‘நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச், சிலம்பு உள கொண்ம்’ என்று சிலம்பைக் கொடுத்து விட்டாள். புகாரிலிருந்து மதுரைக்குச் செல்லும்வரை, ‘நீர் ஏன் இவ்வாறு செய்தீர்?’ என ஒரு வார்த்தைகூட அவனிடம் அவள் கேட்கவில்லை.
    
மதுரையின் புறச்சேரியில் சென்று தங்கி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மனைவி சமைத்த உணவைக் கோவலன் உண்கிறான். தன் மனைவி தன்னிடம் எதுவுமே கேட்காதது அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது. அவனே, ‘சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன், வழு எனும் பாரேன்’ என்று கூறி வருந்துகிறான். அப்போதும்கூடக் கண்ணகி ‘அறநெறியாளர்க்கு உணவு அளித்தல், அந்தணரைப் பேணுதல், துறவியரை உபசரித்தல், விருந்தினரை எதிர்கோடல் என்பனவற்றை நான் இழந்திருந்தேன். போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறாள்.
    
கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்கு அடங்கிய பெண்ணாகவே இங்கும் கண்ணகி இருந்திருக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்த’ கணவனை ஏற்றுக் கொள்கிறாள். ஆண் தலைமைச் சமூகம் கற்பித்த கற்பிதத்திலிருந்து கண்ணகி சற்றும் விலகி நிற்கவில்லை. கோவலன் கொல்லப்படும்வரை அவள் ‘அப்பாவி’ பெண்.
    
கோவலன் கொல்லப்பட்ட பிறகு வெளிப்படும் கண்ணகியின் ஆளுமை மேற்சுட்டியதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. கணவன் என்ற ‘கட்டு’ அறுபட்டவுடன் அவளது சுயம் முழுமையாக வெளிப்படுகின்றது. மன்னனிடம் நீதி கேட்கச் செல்லும் கண்ணகி, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாக, தான் வாழ்ந்த சோழநாட்டு அரசரையும் அவர்தம் ஆட்சி முறையையும் எடுத்துரைக்கிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, காட்சிப் பொருளான மாணிக்கப் பரல்கள் கொண்டு நிறுவுகிறாள். தானும் ஒரு பத்தினிப் பெண் என்பதை நிறுவ, தனக்கு முன்பிருந்த பத்தினிப் பெண்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறாள். வரலாறு, அரசியல், சமூகம் என அனைத்தையும் அறிந்திருந்தவளாகக் கண்ணகி இவ்விடத்தில் அடையாளப்படுகிறாள். புகாரை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, ‘மதுரை மூதூர் யாது?’ எனக் கேட்ட கண்ணகியா இவள்? என வியக்கும் வண்ணம் அவளது ஆளுமை மதுரையில் வெளிப்படுகின்றது.
    
இவ்வளவு திறன் படைத்த கண்ணகி, கணவன் என்ற ‘கட்டு’ இருக்கும்வரைத் தன் திறனை வெளிப்படுத்தவேயில்லை. வரலாறு, அரசியல், சமூகம் என்பவற்றை அறிந்திருந்த கண்ணகிக்கு, மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு தொடர்புகொண்டு அழிந்துபோன ஆடவர்கள் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை. தவறு செய்த ஆடவன் திரும்பி வந்தபோது அவனை வீட்டிற்குள் விடாமல் விரட்டிய பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
தவறு செய்த கணவனை விட்டுவிட்டுத் தனியாக வாழ்ந்த பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
     எல்லாம் தெரிந்தும் அவள் பேசாமல் இருந்ததற்கான காரணம் கணவன் (ஆடவன்) என்ற ‘பாசக்கயிறே’ ஆகும். அந்தக் கயிறு இல்லாதபொழுது பெண்கள் தம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாகக் கண்ணகியின் ஆளுமைப் பண்பு வெளிப்பட்டுள்ளது. ஆண் தலைமைச் சமூகத்தின் அடிப்படையே பெண்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான். அதனையும் மீறிப் பெண்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனையும் தமக்கானதாக மாற்றிக்கொள்ளும் வழிவகைகளையும் ஆண் தலைமைச் சமூகம் அறிந்து வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,


மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

தமிழ்மொழியின் விரிதரவு வளர்ச்சியில் எதிர்கால திட்டங்கள்: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் அதன் பயன்பாடுகளும்

தமிழ்மொழியின் விரிதரவு வளர்ச்சி - செல்வகுமார்
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் விரிதரவுகள், குறிப்புரை மற்றும் கட்டமைக்கப்பட்ட தமிழ் உரை தரவுகளின் தொகுப்புகள், இயந்திர மொழிபெயர்ப்பு, உணர்வு பகுப்பாய்வு மற்றும் உரை சுருக்கம் போன்ற இயற்கை மொழியாய்வு (NLP) பணிகளுக்கு இன்றியமையாத ஆதாரங்களாக மாறியுள்ளன. கல்வி, சுகாதாரம் மற்றும் அரசு உட்பட பல்வேறு களங்களில் NLP பயன்பாடுகளுக்கான பணி அதிகரித்து வரும் தேவையால் தமிழ் விரிதரவின் வளர்ச்சி உந்தப்படுகிறது. இந்த கட்டுரை தமிழ் விரிதரவின் வளர்ச்சியின் எதிர்கால திட்டங்களை ஆராய்கிறது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதன் மூலம் தமிழ் விரிதரவின் நோக்கம் மற்றும் தாக்கத்தை மேம்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விரிதரவு உருவாக்கம் மற்றும் இயந்திர வழிக்கற்றலுக்கான உந்துதல், விரிதரவுக்கான குறிப்புரை ஆகியவை தமிழ் விரிதரவு மேம்பாட்டு செயல் முறைகளை தானியங்குபடுத்தும்  திறனைக்   கொண்டுள்ளன, இது உயர்தர விரிதரவை உருவாக்கத் தேவையான நேரத்தையும் முயற்சியையும் கணிசமாகக் குறைக்கிறது. விரிவான மற்றும் நன்கு விவரிக்கப்பட்ட தமிழ் விரிதரவுகளின் இருப்பு உலக சவால்களை எதிர்கொள்ளும் புதுமையான NLP பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது. தமிழ் மொழி கற்றல், தமிழ் உரை சுருக்கம் மற்றும் தமிழ் உணர்வு பகுப்பாய்வு ஆகியவை தமிழ் விரிதரவுகளின் மூலம் வளர்ந்து வரும் பயன்பாடுகளில் அடங்கும்.

தமிழ் விரிதரவு மேம்பாட்டில் நம்பிக்கைக்குரிய பல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மொழி மாறுபாடு மற்றும் தரப்படுத்தல் மற்றும் தலைப்பு களங்கள் குறிப்பிட்ட விரிதரவுகளின் தேவைகள் போன்ற பல சவால்கள் உள்ளன. தமிழ் விரிதரவு மேம்பாட்டிற்கான எதிர்கால திசைகளில் பன்மொழி நிறுவனத்தை உருவாக்குதல், மல்டிமாடல் கார்போராவை ஆராய்தல் மற்றும் மூல கருவிகள், அதன் தளங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். தமிழ் விரிதரவு மேம்பாடு ஒரு முக்கிய கட்டத்தில் நிற்கிறது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது. சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், எதிர்கால திட்டங்களுக்கு தழுவிக்கொள்வதன் மூலமும், தமிழ் விரிதரவு  NLPஇல் புதுமைக்கான உந்து சக்தியாக தொடர்ந்து பணியாற்ற முடியும் மற்றும் தமிழ் மொழி தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.

திறவுச் சொற்கள்:
தமிழ், தமிழ் விரிதரவு, விரிதரவின் வளர்ச்சி, என்எல்பி, இயந்திர மொழிபெயர்ப்பு

முன்னுரை
தமிழ்மொழி விரிதரவு மேம்பாடுகள் சமீபத்திய நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, பல்வேறு இயற்கை மொழி செயலாக்க (NLP) பயன்பாடுகளுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பத்தின்   விரைவான பரிணாம வளர்ச்சியுடன்,   தமிழ் விரிதரவின் வளர்ச்சியில்   புதிய   வாய்ப்புகளும் சவால்களும் எழுகின்றன. இந்த கட்டுரை தமிழ் மொழி விரிதரவின் வளர்ச்சியின் எதிர்கால திட்டங்களை பற்றி ஆராய்கிறது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதன் மூலம் தமிழ் விரிதரவின் நோக்கம் மற்றும் அதன் தாக்கத்தை மேம்படுத்துகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் அரசு உட்பட பல்வேறு களங்களுக்கு NLPஇன் பயன்பாடுகளுக்கான தேவையால் தமிழ் விரிதரவின் வளர்ச்சி உந்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரவழி கற்றல் (ML) ஆகியவற்றின் சமீபத்திய முன்னேற்றங்கள் தமிழ் விரிதரவின் வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் அமைக்கபடுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் விரிதரவின் உருவாக்கம் மற்றும்குறிப்புரைசெயல்முறைகளைதானியங்குபடுத்துவதற்குபயன்படுத்தப்படலாம், இது உயர்தர விரிதரவின் உருவாக்க தேவையான நேரத்தையும் முயற்சியையும் கணிசமாகக் குறைக்கிறது.

விரிவான மற்றும் நன்கு விவரிக்கப்பட்ட தமிழ் விரிதரவின் இருப்பு இந்த உலகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் புதுமையான NLP பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது. தமிழ் விரிதரவு வளர்ந்து வரும் பயன்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
தமிழ் விரிதரவின் வளர்ச்சியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர வழி கற்றல் (ML) ஆகியவற்றின் வருகை இயற்கை மொழியாய்வில் (NLP) புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தமிழ் விரிதரவின் வளர்ச்சியில் அவற்றின் தாக்கம் விதிவிலக்கல்ல. இந்த தொழில்நுட்பங்கள் விரிதரவின் உருவாக்கம் மற்றும் குறிப்புரை ஆகியவற்றின் சவால்களுக்கு நம்பிக்கைக்குரிய தீர்வுகளை வழங்குகின்றன, மேலும் விரிவான மற்றும் உயர்தரமான தமிழ் விரிதரவின் வளர்ச்சியை செயல்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விரிதரவின் உருவாக்கம்:
இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் காப்பகங்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து தமிழ் உரைத் தரவைச் சேகரித்து செயலாக்கும் செயல்முறையை AI வழிமுறைகள் தானியங்குபடுத்தும். இது பெரிய அளவிலான விரிதரவை உருவாக்க தேவையான நேரத்தையும் முயற்சியையும் கணிசமாகக் குறைக்கும், எழுத்து முறையாக சேகரிக்கப்பட்ட விரிதரவின் வரம்புகளை மீறுகிறது, இது பெரும்பாலும் பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் குறுகிய அளவிலான எழுத்து வடிவங்களைக் குறிக்கிறது.

இயந்திர வழி கற்றலின் உந்துதல் விரிதரவின் குறிப்புரை:
தமிழ் விரிதரவின் குறிப்புரையின் தானியக்கமாக்குவதற்கு ML நுட்பங்களைப் பயன்படுத்தலாம், இது கையேடு குறிப்புரையை நம்புவதைக் குறைக்கிறது, இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் விலை உயர்ந்தது. ML மாதிரிகள் உரையின் பகுதி குறிச்சொற்கள், பெயரிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சொற்பொருள் உறவுகள் போன்ற மொழியியல் அம்சங்களைக் கண்டறிந்து குறிப்புரைகளின் எடுத்துக்காட்டுகளிலிருந்து   கற்றுக்கொள்ளலாம்.

பயன்பாடுகள்
AI மற்றும் ML மூலம் எளிதாக்கப்பட்ட விரிவான மற்றும் நன்கு விளக்கப்பட்ட தமிழ் விரிதரவுகள் கிடைப்பது, இந்த உலக சவால்களை எதிர்கொள்ளும் புதுமையான NLP பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது. இந்த பயன்பாடுகளில் பின்வருவன அடங்கும்:

தமிழ் மொழி கற்றல்:
தனிப்பட்ட கற்றல் பாணிகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட மொழி கற்றல் அமைப்புகளை உருவாக்க தமிழ் விரிதரவை பயன்படுத்தப்படலாம். இயந்திர கற்றல் வழிமுறைகள் கணினியுடன் மாணவர் தொடர்புகளை பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் பொருத்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் கருத்துக்களையும் வழங்க முடியும். இந்த அமைப்புகள் தமிழ் மொழியைக் கற்பவர்களுக்கும், குறிப்பாக தொலைதூரத்திலோ அல்லது மொழியை வேகமாக கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்க முடியும்.

எடுத்துக்காட்டு:
தனிப்பயனாக்கப்பட்ட சொல்லகராதி பயிற்சிகள், இலக்கணப் பாடங்கள் மற்றும் ஊடாடும் உரையாடல்களை வழங்க தமிழ் விரிதரவின் பயன்படுத்தும் மொழி கற்றல் பயன்பாடு.

Memrise:
இந்தப் பயன்பாடு ஃபிளாஷ் கார்டுகள், கேம்கள் மற்றும் குவிஸ் போன்ற பல்வேறு கற்றல் கருவிகளை வழங்குகிறது.


Duolingo:
இந்தப் பயன்பாடு சுருக்கமான, ஊடாடும் பாடங்களை வழங்குகிறது.

Babbel: இந்தப் பயன்பாடு உங்கள் பேச்சுத் திறன்களை மேம்படுத்த உரையாடல் பயிற்சிகளை வழங்குகிறது.


தமிழ் உரைச் சுருக்கம்:
தமிழ் நூல்களைத் தானாகச் சுருக்கி, செய்திக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சுருக்கமான மற்றும் தகவல் தரும் சுருக்கங்களை வழங்கும் இயந்திரக் கற்றல் மாதிரிகளைப் பயிற்றுவிக்க தமிழ் விரிதரவை பயன்படுத்தலாம். உரையின் முக்கியக் குறிப்புகளை விரைவாகப் புரிந்துகொள்ள வேண்டியது  ஒரு  வேலையாக இருக்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமூக ஊடக இடுகைகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற ஆன்லைன் உள்ளடக்கங்களின் சுருக்கங்களை உருவாக்கவும் இந்த சுருக்கக் கருவிகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

எடுத்துக்காட்டு:
தமிழில் முக்கிய செய்திக் கட்டுரைகளின் சுருக்கங்களை உருவாக்க, தமிழ் கார்போராவைப் பயன்படுத்தும் ஒரு செய்தி சேகரிப்பான் பயன்பாடு.

செயலிகளின் சில எடுத்துக்காட்டுகள்:
News in Tamil:
இந்தச் செயலி பல்வேறு செய்தி ஆதாரங்களிலிருந்து செய்திகளைச் சேகரித்து சுருக்கங்களை உருவாக்குகிறது.

Samayam Tamil News:
இந்தச் செயலி தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து சுருக்கங்களை உருவாக்குகிறது.

Daily Tamil News:
இந்தச் செயலி உலகெங்கிலும் உள்ள செய்திகளைச் சேகரித்து சுருக்கங்களை உருவாக்குகிறது.
தமிழ் செய்தித் தொகுப்பு செயலியைப் பயன்படுத்திப் பாருங்கள்!
 இந்த செயலிகளைப் பயன்படுத்திப் பார்ப்பதன் மூலம், தமிழ் செய்திகளில் சமீபத்திய நிலவரங்களைப் பெறலாம் மற்றும் முக்கியமான தகவல்களைத் தவறவிடாமல் இருக்கலாம். செயலிகள் இலவசமாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும், எனவே அவற்றை இன்றே முயற்சிக்கவும்!

தமிழ் உணர்வு பகுப்பாய்வு:
தமிழ் உரைத் தரவுகளிலிருந்து கருத்துகள் மற்றும் அணுகுமுறைகளைப் பிரித்தெடுக்கும் வகையில், உணர்வுப் பகுப்பாய்விற்கான கருவிகளை உருவாக்க தமிழ் விரிதரவை பயன்படுத்தலாம். பொதுமக்களின் உணர்வைப் புரிந்துகொள்வதற்கும், சமூக ஊடகப் போக்குகளை பகுப்பாய்வு செய்வதற்கும், வாடிக்கையாளர் கருத்துக்களை மதிப்பிடுவதற்கும் இது மதிப்புமிக்கதாக இருக்கும். வணிகங்கள் வாடிக்கையாளர் திருப்தியை அளவிட, சாத்தியமான சிக்கல்களை அடையாளம் காண மற்றும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த உணர்வு பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:
வாடிக்கையாளர் மதிப்புரைகளில் இருந்து உணர்வைப் பிரித்தெடுக்கவும் பகுப்பாய்வு செய்யவும் தமிழ் விரிதரவை பயன்படுத்தும் வாடிக்கையாளர் கருத்து பகுப்பாய்வுக் கருவி.
”நான் இந்த தயாரிப்பை பெரிதும் விரும்புகிறேன்! இது பயன்படுத்த மிக எளிதாகவும், சிறப்பாகவும் செயல்படுகிறது. நிச்சயமாக பிறருக்கு பரிந்துரைக்கிறேன்.” இந்த மதிப்புரையில், கருத்து பகுப்பாய்வு கருவி “விருப்பம்” உணர்வை அடையாளம் காணலாம்.

தமிழ் இயந்திர மொழிபெயர்ப்பு
தமிழை மற்ற மொழிகளுக்கும், பிற மொழிகளுக்கும் துல்லியமாக மொழிபெயர்க்கும் இயந்திர மொழிபெயர்ப்பு மாதிரிகளைப் பயிற்றுவிக்க தமிழ் விரிதரவை பயன்படுத்தலாம். இது தமிழ் பேசுபவர்களுக்கும் பிற மொழி பேசுபவர்களுக்கும் இடையேயான தொடர்பை எளிதாக்கும், மொழி தடைகளை உடைத்து, கலாச்சாரம் சார்ந்த புரிதலை வளர்க்கும். இணையதளங்கள், ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற தமிழ் உள்ளடக்கத்தை பிற மொழிகளில் மொழிபெயர்க்க இயந்திர மொழிபெயர்ப்பு கருவிகள் பயன்படுத்தப்படலாம், இது பரந்த பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும்.

உதாரணம்:
தமிழை ஆங்கிலத்தில் துல்லியமாக மொழிபெயர்க்கும் இயந்திர மொழிபெயர்ப்பு கருவி. பயனர் – தமிழ் வாக்கியத்தை உள்ளீடு செய்கிறார்:”நான் ஒரு கோப்பை காபி குடிக்க விரும்புகிறேன்”
 -மென்பொருள் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறது : “I would like a cup of coffee.”

தமிழ் அரட்டை இயலி மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள்
தமிழ் பேசுபவர்களுடன் இயற்கையான மற்றும் ஈடுபாட்டுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அரட்டை போட்கள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்களை உருவாக்க தமிழ் கார்போரா பயன்படுத்தப்படலாம். இந்த அரட்டை இயலிகள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் வாடிக்கையாளர் ஆதரவை வழங்கலாம், கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் மற்றும் பணிகளைச் செய்யலாம், இது தமிழ் பேசும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மதிப்புமிக்க கருவிகளை உருவாக்குகிறது.

எடுத்துக்காட்டு:
தமிழில் வாடிக்கையாளர் ஆதரவை வழங்கக்கூடிய சாபோட், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் ஆர்டர்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

SBI Virtual Assistant: இந்த சாட்போட் உங்கள் வங்கி கணக்குத் தகவலை சரிபார்க்கவும், பணத்தைமாற்றவும் மற்றும் பில்களை செலுத்தவும் உதவும்.


Airtel Chat Support: இந்த சாட்போட் உங்கள் மொபைல் திட்டத்தை மேம்படுத்தவும், உங்கள் இருப்பு நிலையைச் சரிபார்க்கவும் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவைப் பெறவும் உதவும்.

Flipkart Assistant: இந்த சாட்போட் உங்கள் ஆர்டர் நிலையைச் சரிபார்க்கவும், தயாரிப்புகள் பற்றிய தகவலைப் பெறவும் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவைப் பெறவும் உதவும்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்களைப் பெற இன்றே ஒரு தமிழ் சாட்போட்டைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்!

அரட்டை இயலியின் உரையாடலுக்கான எடுத்துக்காட்டுகள்:
வாடிக்கையாளர்: “நான் ஆர்டர் செய்த டி-ஷர்ட்டின் நிலை என்ன?”
சாட்போட்: “உங்கள் ஆர்டர் செயலாக்கத்தில் உள்ளது மற்றும் 3 நாட்களுக்குள் உங்களிடம் வந்து சேரும்.”
வாடிக்கையாளர்: “என் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எப்படி மாற்றுவது?”
சாட்போட்: “எங்கள் மொபைல் ஆப்ஸ் அல்லது வலைத்தளம் மூலம் பணத்தை மாற்றலாம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.”
வாடிக்கையாளர்: “என் மொபைல் திட்டத்தை எப்படி மேம்படுத்துவது?”
சாட்போட்: “எங்கள் மொபைல் ஆப்ஸ் அல்லது வலைத்தளம் மூலம் உங்கள் மொபைல் திட்டத்தை மேம்படுத்தலாம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.”

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நன்மைகள்:
தமிழ் கார்பஸ் மேம்பாட்டில் AI மற்றும் ML இன் ஒருங்கிணைப்பு பல நன்மைகளை வழங்குகிறது:அதிகரித்த செயல்திறன்:
விரிதரவின் உருவாக்கம் மற்றும் குறிப்புப்புரை போன்றவை நேரத்தைச் செலவழிக்கும் பணிகளை AI மற்றும் ML தானியங்குபடுத்துகிறது, இது விரைவான விரிதரவின் வளர்ச்சி சுழற்சிகளுக்கு வழிவகுக்கும்.

மேம்படுத்தப்பட்ட அளவிடுதல்: AI மற்றும் ML அதிக அளவிலான தரவைக் கையாள முடியும், மேலும் விரிவான மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனத்தை உருவாக்க உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட துல்லியம்: ML மாதிரிகள் பெரிய அளவிலான தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும், இது மொழியியல் அம்சங்களின் மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான சிறுகுறிப்புக்கு வழிவகுக்கும்.

எதிர்கொள்ளும் சவால்கள்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் விரிதரவின் வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இதில் பல சவால்கள் உள்ளன:

தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: தமிழ் உரைத் தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது, குறிப்பாக முக்கியமான தனிப்பட்ட அல்லது நிதித் தகவலைக் கையாளும் போது. AI மற்றும் ML மாதிரிகள் முக்கியமான தரவைப் பாதுகாக்க தனியுரிமை-பாதுகாப்பு நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும். இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முதன்மையான கவலைகள், குறிப்பாக முக்கியமான தனிப்பட்ட தகவல் அல்லது ரகசிய வணிகத் தரவைக் கையாளும் போது, தமிழ் உரைத் தரவுகளின் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் செயலாக்கம், பெரும்பாலும் தனிப்பட்ட விவரங்கள் அல்லது தனியுரிமையைக் கொண்டிருக்கும் தகவல், தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கும் கடுமையான தரவு தனியுரிமை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும்.

எடுத்துக்காட்டு: ஒரு தமிழ் சமூக ஊடக பகுப்பாய்வு தளமானது, பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு, பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் (PDPA) போன்ற தரவு தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்க பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு செயலாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

தரவு பாதுகாப்புக்கான எடுத்துக்காட்டுகள்:
பயனர்கள் தங்கள் தரவு சேகரிப்பு மற்றும் செயலாக்க விருப்பங்களை நிர்வகிக்க அனுமதித்தல்.
                       
பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அவர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற குறிப்பிட்ட தகவல்களை சேகரிக்க அனுமதிக்க விரும்புகிறார்களா, இல்லையா என்பதைத் தேர்வு செய்யலாம்.

தரவை பாதுகாப்பான சர்வர்களில் சேமித்தல்.தரவு பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும்
தரவை சேமிக்க பயன்படுத்தப்படும்சர்வர்கள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தரவு மீறல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தரவு மீறல்களைத் தடுக்க வலுவான பாஸ்வேர்ட் கொள்கைகளை செயல்படுத்துதல்.
கடவுச்சொல் (password) கொள்கைகள் பயனர்களின் தரவு பாதுகாப்பை மேம்படுத்த உதவும். இந்த கொள்கைகள் பயனர்களுக்கு வலுவான கடவுச்சொற்களை அமைக்க கட்டாயப்படுத்த வேண்டும், அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.

பயனர்களுக்கு தங்கள் தரவின் நகலைப் பெற அனுமதித்தல்.
பயனர்களுக்கு தங்கள் தரவின் நகலைப் பெற உரிமை உள்ளது. இது பயனர்களுக்கு தங்கள் தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.

பயனர்கள் தங்கள் தரவை நீக்க அனுமதித்தல்.
பயனர்கள் தங்கள் தரவை நீக்க உரிமை உள்ளது. இது பயனர்களுக்கு தங்கள் தனிப்பட்ட தரவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

மொழி மாறுபாடு மற்றும் தரப்படுத்தல்:
தமிழ் குறிப்பிடத்தக்க இயங்கியல் மற்றும் பிராந்திய மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. உள்ளடக்கிய  NLP பயன்பாடுகளுக்குதமிழின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் விரிதரவினை உருவாக்குவது அவசியம். AI மற்றும் ML படிமுறைத்தீர்வுகளின் மூலம் இந்த மாறுபாடுகளைக் கையாளவும் மற்றும் விரிதரவு முழு மொழியின் பிரதிநிதியாக இருப்பதை உறுதி செய்யவும் மாற்றியமைக்கப் படலாம். தமிழ் மொழி பேச்சுவழக்கு, பதிவு மற்றும்  பாணி ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது, விரிதரவின் மேம்பாடு மற்றும் NLP பயன்பாடுகளில் சவால்களை முன்வைக்கிறது.
பல்வேறு சமூகங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் சில பேச்சுவழக்குகள் அல்லது பதிவேடுகளை இதுல் தவிர்த்துவிடலாம் என்பதால், விரிதரவின் உருவாக்கத்திற்கான மொழியைத் தரப்படுத்துவது  கடினம்.

உதாரணம்:
ஒரு தமிழ் உரைச் சுருக்கம் மாதிரியானது, அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தப்படும் பேச்சுத் தமிழ் மற்றும் கல்வி எழுத்தில் பயன்படுத்தப்படும் முறையான தமிழ் போன்ற பல்வேறு பேச்சுவழக்குகள் அல்லது பதிவேடுகளில் எழுதப்பட்ட உரைகளைத் துல்லியமாகச் சுருக்கமாகச் சொல்லப் போராடலாம்.

வட்டார வழக்குகள்:
எடுத்துக்காட்டு 1:
மூல வாக்கியம்: “நேத்து சாயந்திரம் மழை ஊத்திபிரிச்சு ஊத்தி” ( மதுரை பேச்சு வழக்கு)

நிகரான தமிழ்ச் சொல்: “நேற்று மாலை பெரிய அளவில் மழை பெய்தது.”

எடுத்துக்காட்டு 2:
மூல வாக்கியம்: “நாளைக்கு வரேளா?” ( நாகர் கோவில் பேச்சு வழக்கு)
நிகரான தமிழ்ச் சொல்: “நாளைக்கு வருகிறீர்களா?”

எடுத்துக்காட்டு 3:
மூல வாக்கியம்: “என்னடா பண்ற?” (நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்)

நிகரான தமிழ்ச் சொல்: “நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து பேசுகின்றனர்.”

மொழிக் களங்களின் குறிப்பிட்ட விரிதரவு: ஒவ்வொரு களங்களின் (டொமைன்) தனித்துவமான மொழியியல் அம்சங்களையும் சொற்களையும் நிவர்த்தி செய்ய, சட்டம், மருத்துவம் மற்றும் நிதி போன்ற பல்வேறு களங்களுக்கு பிரத்யேக விரிதரவின் தேவை இருக்கிறது. AI மற்றும் ML நுட்பங்கள் டொமைன்-குறிப்பிட்ட சொற்கள் மற்றும் கருத்துகளைப் பிரித்தெடுக்க மற்றும் சிறுகுறிப்பு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. பல NLP பயன்பாடுகளுக்கு மருத்துவம், நிதி அல்லது சட்டம் போன்ற குறிப்பிட்ட டொமைன்களுக்கு ஏற்ற சிறப்பு விரிதரவு தேவைப்படுகிறது. இந்த டொமைன் குறிப்பிட்ட விரிதரவை உருவாக்குவது, எளிதில் கிடைக்கக்கூடிய தரவு இல்லாததாலும், தரவைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்க்டொமைன் நிபுணத்துவத்தின்  தேவையாலும் சவாலாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டு: மருத்துவ மதிப்புரைகளை பகுப்பாய்வு செய்வதற்கான தமிழ் உணர்வு பகுப்பாய்வுக் கருவியானது, நோயாளியின் மதிப்புரைகள், மருத்துவ இதழ்கள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட மருத்துவ நூல்களின் டொமைன்-குறிப்பிட்ட கார்பஸ் மதிப்பாய்வுகளின் உணர்வைத் துல்லியமாக மதிப்பிடுவதற்குத் தேவைப்படும்.

தமிழ் மருத்துவ உரைகளின்எடுத்துக்காட்டுகள்:
நோயாளியின் மதிப்புரை: “நான் இந்த மருத்துவரால் கவனிக்கப்பட்டேன். என் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார். அவர் எனக்கு நல்ல சிகிச்சையும் அளித்தார், இப்போது நான் மிகவும் நலமாக இருக்கிறேன்.”

மருத்துவ இதழின் கட்டுரை: “இந்த புதிய மருந்தானது, நோயாளிகளின் உடல் நலத்தையும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகிறது.”

மருத்துவ வழிகாட்டுதல்: “இந்த நிலையில் சிகிச்சையளிப்பதற்கான சிறந்த நடைமுறை பற்றி இந்த முறையான மருத்துவ வழிகாட்டுதல் விவரிக்கிறது.”

சவால்களை நிவர்த்தி செய்தல்
தமிழ் விரிதரவின் மேம்பாடு மற்றும் NLP பயன்பாடுகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு இந்த சவால்களை சமாளிப்பது மிகவும் முக்கியமானது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயன்ப்பாடு உருவாக்குபவர் (டெவலப்பர்கள்) இந்த சவால்களை எதிர்கொள்ள பல்வேறு அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

தரவு அநாமதேயப்படுத்தல் மற்றும் குறியாக்கம்: முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வலுவான தரவு அநாமதேய நுட்பங்கள் மற்றும் குறியாக்க முறைகளை செயல்படுத்துதல்.

பேச்சு வழக்கு முறை மற்றும் ஸ்டைலிஸ்டிக் மாறுபாடு பகுப்பாய்வு: தமிழ் மொழியின் பல்வேறு மொழியியல் மாறுபாடுகளைக் கையாளக்கூடிய NLP மாதிரிகளை உருவாக்குதல்.

டொமைன் நிபுணர்களுடனான ஒத்துழைப்பு: டொமைன் சார்ந்த தரவைத் துல்லியமாகச் சேகரித்து சிறுகுறிப்பு செய்ய, டொமைன் நிபுணர்களுடன் ஒத்துழைத்தல். இந்தச் சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொள்வதன் மூலமும், தமிழ் விரிதரவின் மேம்பாடு தொடர்ந்து செழித்து வளர முடியும், மேலும் சமூகத்திற்குப் பயனளிக்கும் புதுமையான NLP பயன்பாடுகளுக்கு வழி வகுக்கும்.

எதிர்காலத் திட்டங்கள்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் விரிதரவின் மேம்பாட்டிற்கான எதிர்கால திட்டங்கள் பின்வருமாறு:

பன்மொழி நிறுவனத்தை உருவாக்குதல்: பிற மொழிகளுடன் தமிழை இணைக்கும் நிறுவனத்தை உருவாக்குவது மூலம் NLPஇன் பணிகளை எளிதாக்கும் மற்றும் இயந்திர மொழிபெயர்ப்பு திறன்களை மேம்படுத்தும். பல மொழிகளில் இணை விரிதரவினை சீரமைக்கவும் குறிப்புரை செய்யவும் AI மற்றும் MLஐ பயன்படுத்தப்படலாம்.

பலதரப்பட்ட (மல்டிமாடல்) விரிதரவினை ஆராய்வது: ஒலி (ஆடியோ), ஒளி (வீடியோ) மற்றும் டெக்ஸ்ட் டேட்டாவை ஒருங்கிணைத்து, மனித தகவல்தொடர்புகளின் நுணுக்கங்களைப் படம்பிடித்து மேலும் விரிவான NLP பயன்பாடுகளை செயல்படுத்தும் மல்டிமாடல் விரிதரவினை உருவாக்க முடியும். AI மற்றும் ML ஆகியவை பல்வேறு மூலங்களிலிருந்து மல்டிமாடல் அம்சங்களைப் பிரித்தெடுக்கவும் பகுப்பாய்வு செய்யவும் பயன்படுத்தப்படலாம்.

திறந்த மூல கருவிகள் மற்றும் தளங்களை மேம்படுத்துதல்:
திறந்த மூல கருவிகள்(ஓப்பன் சோர்ஸ் டூல்ஸ்) கருவிகள் மற்றும் மொழித் தளங்களின் வளர்ச்சிகள் தமிழ் விரிதரவின் மேம்பாட்டை ஊக்குவிப்பதும் ஜனநாயகப்படுத்தவும் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், டெவலப்பர்களிடையே ஒத்துழைப்பையும் மேம்படுத்தலாம். ஓப்பன் சோர்ஸ் கருவிகள் கார்போரா மற்றும் குறிப்புரை வழிகாட்டுதல்களைப் பகிர்வதற்கும் மீண்டும் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.

முடிவுரை
தமிழ் விரிதரவின் வளர்ச்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் மூலம் நாம் தமிழ் விரிதரவின் உருவாக்கமும், குறிப்புரைகள் மற்றும் பயன்படுத்தும் விதத்தில் தொழில்நுட்பங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. AI மற்றும் ML ஏற்கனவே உருமாற்றும் நிலையை வகிக்கின்றன, விரிதரவின் உருவாக்கம் மற்றும் குறிப்புரை பணிகளை தானியங்குபடுத்துகின்றன, மேலும் விரிவான மற்றும் உயர்தர விரிதரவின் வளர்ச்சியை செயல்படுத்துகின்றன. இத்தொழில் நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், தமிழ் மொழியைப் புரிந்துகொள்வதற்கும், செயலாக்குவதற்கும், தொடர்புகொள்வதற்கும் நமது திறனை மேலும் மேம்படுத்தும்.  மேலும் புதுமையான பயன்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
பன்மொழி கார்போரா, மல்டிமாடல் கார்போரா, மற்றும் திறந்த மூல கருவிகள் மற்றும் மொழி தளங்கள், தமிழ் விரிதரவின் வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய எதிர்கால திசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த முன்னேற்றங்கள் ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகல்தன்மையை வளர்க்கும், உயர்தர தமிழ் நிறுவனத்தை உருவாக்கி பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு உதவுகிறது. இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் தமிழ் விரிதரவின் வளர்ச்சியின் எல்லைகளைத் தொடர்ந்து முன்னேறலாம் மற்றும் சமூகத்திற்கு பெரிய அளவில் பயனளிக்கும் அற்புதமான NLP பயன்பாடுகளுக்கு வழி வகுக்க முடியும். தமிழ் விரிதரவின் மேம்பாடு மொழியியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் நிற்கிறது, மேலும் பல ஆண்டுகளாக மனித தொடர்புகளுக்கும் மற்றும் கலாச்சாரம் பற்றிய நமது புரிதலை வளப்படுத்தவும்  தயாராக உள்ளது.

துணை நூற்பட்டியல்
கோர்டர், எஸ்.பி. (1967). கற்றவர்களின் பிழைகளின் முக்கியத்துவம். மொழி கற்பித்தலில் பயன்பாட்டு மொழியியல் பற்றிய சர்வதேச ஆய்வு, 5, 161-170.

சின்க்ளேர், ஜான் (1998) மொழி விளக்கத்தில் கார்பஸ் சான்றுகள், ஜெர்ரி நோல்ஸ், டோனி மெசெனரி, ஸ்டீபன் ஃபிளிகெல்ஸ்டோன், அன்னே விச்மேன், (பதிப்பு.) கற்பித்தல் மற்றும் மொழி கார்போரா. லாங்மேன்.

கா.உமாராஜ், பதினெண்கீழ்க்கண்ணு இலக்கியத்திற்கான மின்னணு அகராதி, இணைப் பேராசிரியர், மொழியியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.

ஃபெல் பாம் (1998), வேர்ட்நெட் : ஒரு எலக்ட்ரானிக் லெக்சிக்கல் டேட்டாபேஸ் கேம்பிரிட்ஜ், (மாசசூசிட்ஸ்) : எம்ஐடி பிரஸ்

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

வி.செல்வகுமார்
முனைவர்பட்ட ஆய்வாளர்

மொழியியல் துறை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை-21


பதம் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?

பதம் என்றால் என்ன வகைகள் யாவை
பதம் என்பதற்கு சொல் என்று பொருள். பதம் இருவகைப்படும்.
1.பகாப்பதம்
2.பகுபதம்

1.பகாப்பதம்

“பகுப்பாற் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற                          
பெயர்வினை இடையுரி நான்கும் பகாப்பதம்”  (நன்னூல்.131)

பகாப்பதம் நான்கு வகைப்படும்

1.பெயர்ப் பகாப்பதம் : (எ.கா) தமிழ், அன்னை, நீர்
2. வினைப் பகாப்பதம் : (எ.கா) வாழ், வளர், படி, எழுது

3. இடைப் பகாப்பதம் : (எ-கா) போல, மற்று, ஆல்

4. உரிப் பகாப்பதம் : (எ.கா) நனி, தவ, சால

குறிப்பு: இடைச் சொல்லும் உரிச்சொல்லும் எப்போதும் பகாப்பதங்களாகவே இருக்கும்.


2.பகுபதம்

பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான பதம் பகுபதம் எனப்படும்.

(எ.கா) தலைவர் = தலை + வ்+ அர்
செய்தாள் = செய் +த் + ஆள்
பகுபதம் இருவகைப்படும்.
1.பெயர்ப்பகுபதம்
2 வினைப்பகுபதம்
1.பெயர்ப்பகுபதம்
பகுபதம் பெயர்ச்சொல்லாக இருப்பின் அது பெயர்ப்பகுபதம் எனப்படும்.
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்.

1. பொருட்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) பொன்னன், செல்வன்

2. இடப்பெயர்ப் பகுபதம்            : (எ.கா) ஊரன், மதுரையான்

3 காலப்பெயர்ப் பகுபதம்           : (எ.கா) கார்த்திகையான்

4. சினைப்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) கண்ணன், தலையன்

5. பண்புப்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) கரியன், இனியன்

6. தொழிற்பெயர்ப் பகுபதம்     : (எ.கா) இயக்குநர், ஒட்டுநர்

2.வினைப்பகுபதம்
பகுபதம் வினைசிசொல்லாக இருப்பின் அது வினைப் பகுபதம் எனப்படும். வினைப்பருபதம் இரண்டு வகைப்படும்.

1 தெரிநிலை வினைப்பகுபதம்            : (எ.கா) படித்தான். ஓடிவான்

2. குறிப்பு விளைப்பகுபதம்                    :  (எ.கா) நல்லன்.

பகுபத உறுப்புகள்

“பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்”  (நன்னூல்.133)

பகுபத உறுப்புகள் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

1.பகுதி
2 விகுதி
3.இடைநிலை
4.சாரியை
5 சந்தி
6 விகாரம்

பகுபத உறுப்புகள்

ஒரு பகுபதத்தில் ஆறு உறுப்புகளும் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பகுதி, விகுதி என்னும் இரண்டும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

1.பகுதி

“தத்தம் பகாப்பதங்களே பகுதியாகும்”  (நன்னூல்.134 )
ஒரு பகுபதத்தில் முதலில் நிற்கும் உறுப்பு பகுதி ஆகும்.
பகுதி கட்டளைச் சொல்லாக இருக்கும்.
பகுதி பகாப்பதமாக இருக்கும்.
வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி தொழிலை உணர்த்தும்.
பகுதி, ‘முதனிலை’ என்ற பெயராலும் அறியப்படும்.
பெயர்ப் பகுபசுத்தில் உள்ள பகுதி பெயரை உணர்த்தும்.
(எ.கா)
கண்ணன் – இதன் பகுதி – கண்
நாடன்- இதன் பகுதி – நாடு
வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி, முன்னிலையில் உள்ள ஒருவனை நோக்கி ஏவுதற்குரிய சொல்லின் வடிவில் அமைந்திருக்கும்.

வினைப்பகுபதம்

2.விகுதி

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓமொடு உம் ஊர்
கடதற ஐ ஆய் இம்மின் இர்ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே (நன்னூல்.140)
ஒரு பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும்.
விகுதிக்கு வேறு பெயர் ‘இறுதிநிலை’ என்பதாகும்.
வினைமுற்றுப் பகுபதத்தில் வரும் விகுதி, திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள்             ஆகியவற்றை உணர்த்தும்.
♣  விகுதிகளாக வரும் சிலவற்றைக் கீழ்க்காணலாம்.
விகுதிகள்
       

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் அமைந்துள்ள விகுதிகள் இருதிணை, ஐம்பால், மூவிடம், ஈரெண், ஈரெச்சம், வியங்கோள் ஆகியவற்றை உணர்த்துவதையும் புரிந்து கொள்ளுங்கள்.

3.இடைநிலை

ஒரு பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
இடைநிலை இருவகைப்படும்.
1.பெயர் இடைநிலை
2.வினை இடைநிலை
1.பெயர் இடைநிலை
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை பெயர் இடைநிலை எனப்படும்.
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை காலம் காட்டாது.
(எ.கா)               தலைவர் = தலை + வ் + அர்
இச்சொல்லின் இடையிலுள்ள ‘வ்’ என்பது இடைநிலை. இது காலம் காட்டாது.
2.வினை இடைநிலை
வினைப்பகுபதத்தில் உள்ள இடைநிலை வினை இடைநிலை எனப்படும்.
வினை இடைநிலை காலம் காட்டும்.
அதன் அடிப்படையில் வினை இடைநிலையை மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
1.நிகழ்கால இடைநிலை   
2.இறந்தகால இடைநிலை
3.எதிர்கால இடைநிலை
“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனவே” (நன்னூல்.141)
1.நிகழ்கால இடைநிலைகள் :  (கிறு, கின்று, ஆநின்று)
“ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழு தறைவினை இடைநிலை”  (நன்னூல்.143)
(எ.கா)
ஓடுகிறான் = ஓடு + கிறு + ஆன்   (இடைநிலை – கிறு)
பேசுகின்றாள் = பேசு + கின்று + ஆள்  (இடைநிலை –கின்று)
பேசாநின்றாள் = பேசு + ஆநின்று + ஆன்  (இடைநிலைஆநின்று)
மேற்கண்ட வினைச் சொற்கள் ‘கிறு’ ‘கின்று’ ஆநின்று’ என்னும் இடைநிலைகளைப் பெற்று நிகழ்காலம் காட்டுகின்றன.
2.இறந்தகால இடைநிலைகள் : (த், ட்,ற், இன்)
“தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தருந்தொழில் இடைநிலை”  (நன்னூல்.142)
(எ.கா)
செய்தான் = செய் + த் + ஆன் (இடைநிலை – த்)
உண்டான்  =உண் + ட் + ஆன் (இடைநிலை – ட்)
தின்றான்  = தின் + ற் + ஆன்  (இடைநிலை – ற்)
உறங்கினான் = உறங்கி + இன் + ஆன் (இடைநிலை – இன்)
மேற்கண்ட வினைச் சொற்கள் த், ட், ற், இன் என்னும் இடைநிலைகளைப் பெற்று இறந்தகாலம் காட்டுகின்றன.
3.எதிர்கால இடைநிலைகள் : ( ப், வ்)
“பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை ஆமிவை சிலஇல” (நன்னூல்.144)
(எ.கா)
காண்பான் = காண் + ப் + ஆன் (இடைநிலை – ப்)
கூறுவாள் = கூறு + வ் + ஆள் (இடைநிலை – வ்)
மேற்கண்ட வினைச் சொற்களில் உள்ள ப், வ் என்னும் இடைநிலைகள் எதிர்காலம் உணர்த்துகின்றன.  இவை மூன்றும் அல்லாத எதிர்மறையை உணர்த்துகின்ற இடைநிலைகளும் உள்ளன.
எதிர் மறை இடைநிலைகள் : (இல், அல், அ)
கண்டிலன் = காண் + ட் + இல் + அன் (இடைநிலை – இல்)
செல்லன்மின் = செல் + அல் + மின்  (இடைநிலை – அல்)
கூறான் =  கூறு + ஆ + அவ்  ( இடைநிலை ஆ)
மேற்கண்ட சொற்கள் இல், அல், ஆ என்னும் இடைநிலைகளைப் பெற்று எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றன.

4.சாரியை

சாரியை என்பது பகுபதத்தில் பெரும்பாலும் இடைநிலை, விகுதி ஆகியவற்றிற்கு இடையிலும், சிறுபான்மை பிற இடங்களிலும் வரும் உறுப்பாகும்.
இது தனியாகப் பொருள் தராது.
பகுபதங்கள் எல்லாவற்றிலும் சாரியை வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
(எ.கா)
உண்டனன் =  உண் + ட் + அன் + அன்
இதில் ‘ட்’ என்னும் இடைநிலைக்கும், ஈற்றிலுள்ள ‘அன்’ என்னும் விகுதிக்கும் இடையில் வரும் ‘அன்’ என்பது சாரியையாகும்.
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அந்து, அம், தம், நம், நும், ஏ. அ,உ.ஐ.கு. ள என்பன சாரிவைகளாக வரும்.
(எ.கா)
அறிகுவாம் =அறி+ கு + வ் + ஆம்  (சாரியை – கு)
புளியங்காய் = புளி + அம் + காய் (சாரியை  – அம்)
மரத்தை = மரம் + அத்து + ஐ   (சாரியை – ஐ)

5.சந்தி

ஒரு பகுபதத்தில் அமைந்துள்ள பகுதியையும், இடைநிலை, விகுதி முதலியவற்றையும் இணைக்கும் உறுப்பு சந்தி ஆகும்.
சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும்.
சிறுபான்மை வேறு இடங்களிலும் வரலாம்.
பகுபதங்கள் எல்லாவற்றிலும் சந்தி வர வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை.
(எ.கா)
படித்தான் -படி+த்+த்+ தேன்
இச்சொல்லில் ‘படி’ என்னும் பகுதியை அடுத்து ‘த்’ என்னும் எழுத்து வந்துள்ளது. இது சந்தியாகும் இச்சந்தி அடுத்து வந்துள்ள உறுப்புகளை பகுதியோடு இணைத்து நிற்பதைக் கவனிக்கவும்.

6.விகாரம்

விகாரம் என்பது தனி உறுப்பு இல்லை.
பகுதி, சந்தி ஆகிய உறுப்புகளில் உண்டாகும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா)
கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்
காண் என்னும் பகுதி கண் என விகாரப்பட்டது. பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாக இருக்கும். மூன்று காலங்களுக்கும் ஒன்றே ஆகையால் ‘காண்’ என்பதே பகுதியாக இருக்க வேண்டும்.
நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்
இதில் ‘நட’ என்னும் பகுதியை அடுத்துள்ள சந்தி ‘த்’ ஆகும் இச்சந்தியைத் திரிக்காமல் எடுத்துக் கொண்டால் ‘நடத்தான்’ என்று கூற வேண்டும். ஆனால் நடந்தான் என்பது சொல்லாகையால் ‘த்’ என்னும் சந்தி ‘ந்’ எனத் திரிந்து வந்துள்ளது.
வந்தாள் = வா (வ) + த் (ந்) + த் + ஆள்
வா என்னும் பகுதி ‘வ’ என விகாரப்பட்டது. த் என்னும் சந்தி ‘ந்’ என விகாரப்பட்டது.

விகாரம் மூன்று வகைப்படும்

1.தோன்றல் விகாரம்
2.திரிதல் விகாரம்
3.கெடுதல் விகாரம்
1.தோன்றல் விகாரம் : எழுத்துக்களில் புதியதாக ஓர் எழுத்துத் தோன்றுதல்.
(எ.கா)             பூ+ கொடி = பூங்கொடி ( ங் – தோன்றல்)
2.திரிதல் விகாரம்  : எழுத்துக்களில் ஓரெழுத்து இன்னொரு எழுத்தாக மாற்றம் பெறுதல்
(எ.கா)           பல்+ பொடி = பற்பொடி ( ல் – ற் மாக திரிதல்)
3.கெடுதல் விகாரம்  : எழுத்துக்களில் உள்ளது ஒன்று கெட்டுப்போதல் ஆகும்.
(எ.கா)           மரம்+ வேர் = மரவேர் ( ம் – கெட்டுப்போதல்)

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

கால்நடை வளர்ப்பும் வாழ்த்தும் – கம்பளத்து நாயக்கர் வாழ்வியல்

கால்நடை வளர்ப்பும் வாழ்த்தும் - கம்பளத்து
கம்பளத்து நாயக்கர் என்போர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தார் ஆவர். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்து குடியமர்ந்துவிட்டனர். தமிழ்நாட்டில் இவர்களைக்  கம்பளத்தான் என்று  அழைப்பர். கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியான கம்பளம் என்ற பகுதியில் இருந்து வந்ததால் இவ்வாறு பெயர் பெற்றிருக்கக்கூடும் . இவர்கள் பேசும் மொழி தெலுங்கு மொழியாகும். ஆந்திராவில் இருந்து இவர்கள் தமிழகத்தில் குடியேறியதற்கான மூன்று காரணங்களை  ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை,
1.முகமதியர்களின் படையெடுப்பு

2. ஆந்திராவில் ஏற்பட்ட பஞ்சம்

3. அரசியல் நகர்வு      
       
என்பனவாகும் .                           

ஆந்திரத்தின் மீது முகமதியர்கள் படையெடுத்ததன் காரணமாக இவர்கள் தமிழகத்தை நோக்கி நகர்ந்தார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் முகமதிய சமூகத்தைச்  சார்ந்த மன்னன் ஒருவன் கம்பளத்துச் சமூகப்  பெண்ணொருத்தியை மணமுடித்துத் தரும்படிக்  கேட்டதாகவும் இதனை விரும்பாத கம்பள நாட்டை ஆண்டுவந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னன் முகமதியர்களிடமிருந்து  தம் குலப் பெண்களைக் காப்பாற்றிக்கொள்ள தெற்கு நோக்கிச் செல்ல ஆணையிட்டதாகவும் அந்த வருகை ஜக்கம்மா என்ற பெண்ணின் தலைமையில்  நிகழ்ந்ததாகவும் அப்படி வரும் வழியில் ஏற்பட்ட தடைகளை எல்லாம் அந்தப் பெண் வீரம்,  மாந்திரீகம் போன்றவற்றால் வெற்றி கொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக (ராஜ) கம்பளத்தைச் சார்ந்தவர்கள் அப்பெண்ணைக் குலதெய்வமாகக் கொண்டாடுகின்றனர். மேலும் அந்த ஜக்கம்மாளுக்கு 9 குழந்தைகள் பிறந்ததாகவும் அந்தப் பிள்ளைகளின் பிரிவு தான் இன்று கம்பளத்து மக்களிடம் காணப்படும் ஒன்பது வகையான பிரிவுகள் என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வாழும் கம்பளத்து மக்கள் மேற்சுட்டிய ஜக்கம்மா கதையைச் சிறுசிறு மாற்றங்களோடு சொல்லிவருகின்றனர்.    இவ் இனத்தாரிடம் காணப்பெறும் ஒன்பது பிரிவுகளை பெத்தவாரு,  கொல்லவாரு,  சில்லவாரு,  தோக்கலவாரு, காப்புவாரு, மல்லவாரு, நித்ரவாரு, பாலவாரு, சீலவரு  என ஒ. முத்தையா குறிப்பிட்டுள்ளார்(2003). 

நானூறு ஆண்டுகளுக்கு முன்னால்ஆந்திரப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட தற்கான பதிவு எதுவும் பெரிய அளவில் கிடைக்கப் பெறவில்லை. எனினும் அவர்களது இடப்பெயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.       

13ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மதுரையை ஆண்ட பாண்டியர்களிடம் ஏற்பட்ட அதிகாரப் பகிர்வுச்  சண்டை விஜயநகரப் பேரரசை தமிழகம் வர வைத்தது. அதன் காரணமாக நாயகர்கள் தமிழகத்திற்கு வர தொடங்கினர். முதலில் 14ஆம் நூற்றாண்டில் அரசப் பிரதிநிதிகளாக வந்தவர்கள் பிறகு பாளையக்காரர்களாக ஆகிவிட்டனர். பாண்டிய நாட்டுக் குழப்பத்தை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் கிருஷ்ண தேவராயரால் அனுப்பிவைக்கப்பட்டார் . பிறகு மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார் . அவரது வருகையிலிருந்து நாயக்க மக்களின் வருகையும் தொடங்கியது . இவ்வாறாக மூன்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூடக்  கம்பளத்து மக்களில் பெரும்பாலோர் முதல் காரணத்தையே குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.                             
 
கம்பளத்து நாயக்கருள்  ஒரு பிரிவினர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள ஆர்டி மலை ஊராட்சிக்கு உட்பட்ட வாலியம்பட்டி என்ற ஊரில் வசித்து வருகின்றனர் . இவர்கள் பெரும்பாலும் உழவுத்தொழில் செய்து வாழ்கின்றனர். எனினும் ஆடு மாடுகள் வளர்ப்பது அவர் தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். பொங்கல் திருநாளின் போது இவர்களிடம் காணப்படும் ஒரு வழக்காறு கால்நடைச் சமூக  எச்சத்தைக் கொண்டுள்ளது.

தைத் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்படும் முதல் நாளில் வாலியம்பட்டியைச் சார்ந்த கம்பளத்து நாயக்கர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடுகின்றனர். கூடி,  தாங்கள் வளர்த்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை 4 மணி அளவில் காமனாம்பட்டி  என்ற சிற்றூருக்கு முதன்முதலாக வருகின்றனர்.

இவர்களோடு கோமாளி வேட்டமிட்ட இரண்டு அல்லது மூன்று பேரும் வருகின்றனர்.  அவர்களோடு தப்படிப்போரும் உருமிமேளம் வாசிப்போரும்  உடன் வருகின்றனர். ஊரில் இருக்கும் கோயில் மைதானத்தில் கூடி இசைக்கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப கோமாளியும்  அவர்களோடு உடன் வரும் ஒரு சிலரும் நடனம் ஆடுகின்றனர்.

பிறகு எல்லோரும் சத்தமாக குரலெடுத்து கத்த மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலோர் தம் மாடுகளை விரட்டி கொண்டு வந்த வழியிலேயே சென்று விடுகின்றனர். பிறகு அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர்கள் மாட்டோடும் இசைக்கருவி வாசிப்பாரோடும் கோமாளிகளோடும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கின்றனர். இவர்களது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஊர் மக்கள் தங்கள் வீடுகளைத் தூய்மை செய்து வீட்டிற்கு முன்பாக கோலமிட்டு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் . கம்பளத்தார் ஒரு மாட்டை வீட்டு வாசலுக்கு முன்பாக நிறுத்தி மாட்டின் முன்னங்கால்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவதோடு மஞ்சள் நீரையும் ஊற்றுகின்றனர். பிறகு சூடம் சாம்பிராணி காட்டி மாட்டை வரவேற்கின்றனர்.  கூடியிருக்கும் எல்லோரும் சத்தம் எழுப்ப மாட்டை வீட்டின் உள்ளே இழுத்துச் செல்கின்றனர்.

வீட்டுக்குள் செல்லும் மாட்டிற்கு ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி வைத்து உண்ண வைக்கின்றனர்.   ஓரிருவாய் உண்ட பிறகு மாட்டை வெளியே இழுத்து வந்து நிற்க வைக்கின்றனர். வீட்டிற்குள் செல்லும் மாடு வீட்டிற்குள்ளேயே சிறுநீர் கழித்தால் அதனை வீட்டுக்காரர் பெருமைக்குரியதாகக்  கருதுகின்றனர். வெளியில் கொண்டு வரப்பட்ட மாட்டுக்கு முன்பாக வீட்டுக்காரர் வெற்றிலை பாக்கு வைத்து 50 ரூபாயோ 100 ரூபாயோ தங்கள் வசதிக்கு ஏற்ப அளிக்கின்றனர். அதைப் பெற்றுக்கொண்டு மாட்டுக்காரர் வீட்டரை வாழ்ந்துகின்றார். அவ்வாழ்த்து ‘  சாமி என்ன தருமோ ரூபா தருமோ  குறைய பணமோ எலுமிச்சம் கனியார் பட்டி பெருகி பால் பால் பொங்கி சேர் மேல் சேரும் ஆதாயம் (கூடியிருக்கும் சிறுவர்கள் ஓ …………. என இதற்கு முழங்குகின்றனர்) மலையூர் மண்ணுக்கலஞ்சாலும் கஞ்சிக் கள்குடிக்கும் யார்குடியார் தலைக்குடியார்
 மண்ணபுடிச்சா பொன்னா விளையும் மலைபோல் வந்தால் பனிபோல் நீங்கும். நித்த கண்ணாலமோ பச்ச தோரணமோ  பழிகாரர் கை கீழேயோ உன் கையை மேலேயோ சனி எல்லாம் போகட்டும்’ என்பதாக அந்த வாழ்த்து உள்ளது.

இவ்வாறு வாழ்த்திய பிறகு வீட்டிற்கு வரும் கோமாளி தன் கையில் ஓரடி அளவில் உள்ள தோல் வாரினால் வீட்டாரின் தலையில் வைத்து வாழத்திவிட்விட்டுப் போகிறார் .இந்த வாழ்தை வீட்டுக்காரர்கள் மிகப் பெருமை யோடு ஏற்றுக்கொள்கின்றனர். அத்தோடு கோமாளியையும் வீட்டிற்கு முன்பாக ஆடச் சொல்லி மகிழ்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு வீடாக செல்லும் கம்பளத்து நாயக்கர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டவர் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுகின்றனர். இந்நிகழ்வு பொங்கல் திருநாள் நடைபெறும் நான்கு நாட்களிலும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று நிகழ்த்தப்படுகிறது.       
 
மாடுகளை ஓட்டி வரும் கம்பளத்து நாயக்கர்கள் வெள்ளை வேட்டியும் தலைப்பாகையும் அணிந்துள்ளனர் . சிலர் ரோஜா நிற தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை புத்தாடையாக உள்ளது .கழுத்தில் பழுப்பு,  கருப்பு , வெள்ளை நிறத்திலான பாசி மாலை அணிந்துள்ளனர் . கையில் காப்புக்கயிறும் அணிந்துள்ளனர். மேலும் ஆடு மாடு  மேய்ப்பதற்குப்  பயன்படும் நான்கு அல்லது ஐந்து அடி உயரம் உடைய தடி ஒன்றையும் கையில் வைத்துள்ளனர் .மிக அரிதாக ஒரு சிலரைத் தவிர பிறர் யாரும் மேல்சட்டை அணியாமல் வருகின்றனர் .            
 
கோமாளி வேடமிட்டு வருபவர்கள் நாடகத்தில் வரும் கோமாளி போன்று ஆடை உடுத்தி உள்ளார் . தலையின் மீது இரண்டு அல்லது மூன்று அடி உயரமுள்ள அணி ஒன்றையும் அணிந்துள்ளார் . கண் மட்டும் தெரியும்  படியாக முகமூடி அணிந்து உள்ளார். முகமூடியின் வாய்ப் பகுதிக்கு நேராக பெரிய பெரிய பற்கள் இருப்பது போன்று வெள்ளை நிறத்திலான பற்கள் வரையப்பட்டுள்ளன.  வெண்மையான சோலியைக் கோத்தும் பற்கள் போன்று அமைத்துள்ளனர். காலில் சலங்கை அணிந்துள்ளார் . பொதுவாக கம்பளத்து நாயக்கரிடம் தேவராட்டம் , சேவையாட்டம், பலவேட ஆட்டம் என்பன ஆடும் வழக்கு உண்டு. எனினும் இங்குக்  கோமாளி ஆடுவது தேவராட்டம் ஆகும்.         

பொங்கல் திருநாள் நிகழ்ச்சிக்குப்  பிறகு ஜூலை மாதத்தில் வாலியம்பட்டி ஊரிலுள்ள கம்பளத்து நாயக்கர்களின் வழிபாட்டு தெய்வங்களான முத்தாலம்மா,  ஜக்கம்மா , பொம்மக்கா கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. அத்தோடு மாலை தாண்டும் விழா என்ற ஒன்று நிகழ்த்தப்படுகிறது . இந்த விழாவில் கரூர் , திருச்சி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நாயக்கர்கள் சாமி மாடு எனத் தாங்கள் வளர்த்த  மாடுகளைக் கொண்டு வந்து மாலைதாண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கின்றனர். அந்த மாடுகளை இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி விடுகின்றனர். ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாடுகளுக்கு எலுமிச்சம்பழமும் வெற்றிலையும் கொடுத்து சிறப்பு செய்ய படுகிறது.                                   
 
‘வாலியம்’என்ற சொல்லுக்கு ஆயர் குடியிருக்கும் இடம் என்பது பொருளாகும் .  பட்டி என்பது ஆடு மாடு அடைக்கும் இடமாகும்.  இப்பெயர்பொருத்தத்திற்கு ஏற்ப வாழ்ந்துவரும் கம்பளத்து நாயக்கர்களைப் பற்றிச்  சுற்றுவட்டாரத்தில்  சொல்லப்படும் மதிப்பீடுகள் வருமாறு :                

1.மதுஅருந்துவது கிடையாது.                          

2.பொய் பேசமாட்டார்கள்.

3.தம் வீட்டைத் தவிர பிற இடங்களில் நீரோ உணவோ உண்ண மாட்டார்கள். 
4.தம் சமூக ஒழுக்கங்களை மிகச்சரியாகக் கடைபிடிப்பார்கள்    

5.இவர்கள் சாபம் இட்டாலும் வாழ்த்தினாலும் அப்படியே பலிக்கும்.         

பொங்கல் திருநாள் என்பது கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் தமிழர்கள் செலுத்தும் வணக்கத்திற்குரிய விழா. உழவுக்கு துணை செய்யும் கால்நடைகள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளன என்பது  அனைவரும் அறிந்ததே. அவர்களைப் போன்றே திராவிட இனத்தினுள்  ஒருவரான தெலுங்கு கம்பளத்து நாயக்கர்களும் கால்நடைகளை வளர்த்து வருவதோடு மட்டுமின்றி அவற்றை வழிபடுவது மட்டுமின்றி அவற்றின் வழியாக பிறரையும் வாழ்த்தவும் செய்கின்றனர் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும்  அவர்களது வாழ்வியல் சார் நிகழ்வுகளிலும் தமிழர்களின் வழக்காறுகள் காணப்படுகின்றன என்பதும் இங்குக்  குறிப்பிடத்தக்கதாகும்.  கம்பளத்து நாயக்கர்கள் சொல்லும் சொல் பலிக்கும் என்ற நம்பிக்கையுள்ளதால் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதை அவ்வட்டார மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-620023,
மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

 

பத்தினி|சிறுகதை|முனைவர் ச.அரியநாச்சியம்மாள்

பத்தினி - சிறுகதை - முனைவர் ச.அரியநாச்சியம்மாள்
பெண்களின் பேறுகாலத்தை திருவிழாவாக கொண்டாடும் மருத்துவமனைகள். குழந்தைகளைக் கையில் ஏந்த மாதம்  பணம் செலுத்தும் EMI வசதி கொண்ட அதிநவீன மருத்துவமனை. பெயர் பலகையைக் கண்ணால் காணும் போதே எத்தனை செலவாகப் போகிறதோ? என முனகிகொண்டே நடக்கும் பார்வதி. பெயர்ப்பலகையில் பெரியதாகவும், கேட்டில் வாட்ச்மேன் நிற்க டாக்டர பாக்கணும் வாங்க வாங்க… உள்ளே நுழையும் போதே ஏராளமான தம்பதிகளின் எரிச்சல் மிகுந்த பதட்டமான அறை. குழந்தைக்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் கணவனின் கைப்பற்றி கொண்டு பார்வதி நடக்க முயல்கின்றாள்.
     
கையில் பற்றிய மருத்துவ அட்டைகளை வாங்கி பார்த்துவிட்டு டோக்கனை கையில் கொடுத்துக் கணவனுக்குத் தனி அறை எனக் கணவனை வேறு அறைக்கு அழைத்துச் சென்றாள் செவிலி. என்ன இது நம்மள தனியா விட்டு விட்டார்களே! எனப் பதட்டத்தில் அமர்ந்திருக்க ஆண்கள் கையில் புட்டியோடு அறைக்குச் செல்வதைப் பார்த்தேன். என் கணவனும் சிறுதுநேரம் கழித்துப் புட்டியோடு வந்தார், என்ன என்பது போல கண்ணால் கேட்டேன். ஒன்றுமில்லை! பயப்படாதே என்பது போல என்னை நோக்கிய விழிகள் பதிலளித்தன. காத்திருக்கும் அறைக்குள் சிறு பதட்டம் என் கணவன் என்னை அழைத்துக்கொண்டு செல்ல பின்னர் மனைவியர்கள் பலர் கணவர்களோடு நிற்பதைக் கண்டு பயந்து போனேன். என் கணவனின் அணுக்களைச் சேகரிக்க உதவி செய்ய என்னை அழைத்திருக்கிறார். வெளியே வரிசையாகத் தம்பதிகள் காத்திருக்கின்றனர். என் கணவருக்குச் செய்ய வந்த உதவியை மறந்தே போனேன் வெளியில் வந்து வராண்டாவில் நடக்க புட்டியோடு கணவர் விரைந்து செல்கின்ற ஆய்வகத்தை நோக்கிச் சென்று என்னை திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கப் போகிறதோ என நினைத்து நிலை குலைந்து போனேன். கணவர்களோடு வந்த என் வயதை ஒத்த பெண்கள் என் அம்மா வயதுள்ள பெண்கள் என்னைவிட இளம் வயது பெண்களே எல்லா தரப்பினரும் உள்ளே முழங்கிக் கொண்டே மறந்திருக்கிறார்கள்.

      ஆங்கிலத்தில் எதாவது பெயர்களைக் கூறிக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணி பேச எனக்கு வியப்பாக இருந்தது. எதற்காகக் காத்திருக்கின்றோம் கணவருடன் இதை வினவ பயமாய் இருக்க என்ன நடந்தால் என்ன இன்னும் சிறிது நேரம் உள்ளது. என்னுடைய டோக்கன் நம்பர் 44 காத்துக் கொண்டிருக்கிறேன். கணவருடன் என்ன பேசலாம் என்பதுபோல காத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுடைய மன ஆதங்கத்தினை ஒருவாராக போக்கிக்கொள்ள முயலாமல் முகத்தில் தவிக்கும் தவிப்பு ஒரு புறம், என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் நடுங்கும் நடுக்கம் கொண்டு தவிக்கும் மனநிலையில் நான் இருந்தேன். டாக்டர் என்னுடன் பேச வருமாறு அழைத்தார். அப்பொழுது நானும் என் கணவர் இருவரும் சென்று கேட்டுக் கொண்டு வருவோம் எனக் கிளம்பினோம்.
     
 டாக்டர் புன்முறுவலுடன் என்னை வரவேற்றுக் குழந்தை பற்றிய பல்வேறு செய்திகளை எனக்கு எடுத்துரைத்தார். கணவருக்கும் சில டெஸ்ட்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். எனக்கு ஒரே பயம். என்ன நடக்கப் போகிறதோ? என்று இருந்தாலும் பரவாயில்லை எதுவாக இருப்பினும் நாம் கடந்து செல்வோம் என்ற எண்ணத்தில் சரிங்க டாக்டர் என்று பதில் அளித்தேன். என் கணவர் நல்லதே நடக்கும் என்று நினைத்து பயப்படாதே என்று என்னை ஆறுதல் படுத்தினார்.
    
  என்னையும் அழைத்துக் கொண்டு பல்வேறு உபகரணங்கள் நிறைந்த அறைக்குள் என்னை உள்ளே அனுப்பினர். பல உபகரணங்கள் என் உள்ளுறுப்புகள் முதற்கொண்டு பல்வேறு உறுப்புகளை அது ஆய்வு செய்தது. எனக்கு வெளியே இப்படி எல்லாம் மருத்துவமனையில் நடக்குமா? என்று அப்போதுதான் தெரிந்தது. உடனே கணவரிடம் சென்று என்ன நடக்கிறது இங்கே என்னதான் பிரச்சனை என்றெல்லாம் விளக்க வேண்டும் என்பது போலத்தான் ஆசை. ஆனால் என்ன செய்வது கணவரிடம் இதை எல்லாம் கேட்டால் கணவர் என்ன சொல்வார் என்ற பயம் வேறு ஒருபுறம் இருந்தது. என்ன செய்ய என்று யோசித்த களத்தில் இரண்டு நாட்கள் கழித்து வந்தால் உங்களுடைய டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துவிடும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மருத்துவர் சொல்லி இருப்பதாகச் செவலி சொன்னார்.
     
 சரி என்று இருவரும் புறப்பட்டு வீட்டுக்குப் போனோம். இரண்டு நாட்கள் சரியாகத் தூக்கமே வரவில்லை என்னதான் நடக்கப் போகிறதோ என்னதான் வரப்போகிறதோ என்று மனதிற்கு ஏதோ ஒரு பயம் பதற்ற நிலையில் தொடங்க ஆரம்பித்தது. என்ன இரண்டு நாட்கள் கழிந்ததுடன் விரைவில் சென்று என்ன நடக்கப்போகிறது இன்னும் வரப்போகிறதோ என்று ஆதங்கத்தில் இருவரும் ஒன்றன் பின் ஒருவராகக் கடந்து போனோம். மருத்துவரைச் சந்தித்து பின் மருத்துவர் சில ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கினார். தங்களுடைய கணவர் இன்னும் பல டேஸ்ட்களை எடுக்க வேண்டும். அதற்காக எங்களுக்கு சிறிது ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே என் கணவருடைய முகம் சிறிது மாற ஆரம்பித்தது. பிறகு என்னுடைய டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் என்ன ஆச்சுங்க அப்படின்னு சொல்லிட்டு வெகுளியாக நான் கேட்கும்போது, உனக்கு எல்லாம் நல்லா இருக்கு, அப்படின்னு மருத்துவரின் பதில் என்னை பூரிப்படையை வைத்தது. இருப்பினும் என் கணவருடைய இன்னும் பல டேஸ்ட்களை எடுக்க வேண்டும் என்ற உரைத்தபோது என் கணவரின் முகம் மாற்றம் என்னை மிகவும் வருத்த நிலைக்கு உள்ளாகியது. என்னதான் நடக்கப் போகிறதோ என் கணவரை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயம் ஒருபுறம் ஒட்டிக்கொண்டது. பிறகு ஒரு வழியாகச் சரி ஏதோ ஒன்று செய்வோம் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் முடிவு செய்தேன்.
     
சரி மறுபடியும் டெஸ்டுகளை எடுப்போமா என்று என் கணவரிடம் வினவுவதுபோல திரும்பிப் பார்த்தேன். அவர் ஒரே பதிலாக நாங்கள் வருகிறோம் டாக்டர் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். வீட்டில் வந்து கணவரிடம் எப்படி கேட்பது என்பது தெரியாமல் கணவரிடம் தயங்கிதயங்கி கேட்டேன் என்ன பண்ணலாம் சொல்லுங்க அப்படின்னு கேட்கும்பொழுது கணவருடைய பதில் இதுவாகத்தான் இருந்தது. உனக்கு குழந்தை மீது ஆசையாக இருந்தால் என்னை விவாகரத்துப் பண்ணி விட்டு நீ குழந்தையைப் பெற்றுக்கொள். இல்லை எனக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அதற்கான முடிவை நீதான் எடுக்க வேண்டும் என்று உரை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன். இன்னும் இப்படி ஒரு வார்த்தை சொல்றாங்க கல்யாணம் ஆகி பத்து வருடம் கழித்து இந்த வார்த்தைகளைக் கேட்கும் பொழுது எனக்கு மனம் மிகவும் வருத்தமாக இருந்தது.
       
விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தை மீது அவ்வளவு ஆசையா எனக்கு என்று என்னே நானே கேட்டுக் கொண்டேன். பிறகு அவர் ஒன்றும் பேசவில்லை நாட்கள் இப்படியே கடக்க கணவரும் ஒன்றும் சொல்லவில்லை. குடும்பத்தில் பெரிய முன்னேற்றமும் இல்லை. எனக்குள் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. இருந்தாலும் மனதுக்குள் ஏதோ இந்தக் குழந்தையின் பொன் சிரிப்பையும், அந்தக் குழந்தையின் பொன்முறுவலையும், குழந்தையின் மேனியைத் தழுவும் அந்த நேரத்தையும் நோக்கி காத்துக் கொண்டுதான் இருந்தேன். கணவருடன் மறுபடியும் சரி பேசிப்பார்க்கலாம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு மறுபடியும் இதே விஷயத்தை கேட்க, முடியாது ஒன்றும் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. கணவர் முழுமையாக நான் எந்த டெஸ்ட்டுக்கும் வரமாட்டேன், கேட்க மாட்டேன், எந்த டாக்டரையும் பார்க்க மாட்டேன், 10 வருடம் கழித்து உன்னுடைய ஆறுதலுக்காக வந்தேன்.
     
ஏதோ அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் என்பதற்காக வந்தேன். உனக்கு குழந்தையின் மீது ஆசை இருந்தால் நீ வந்து என்னை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்து சந்தோஷமாக வாழ் என்று உரைத்தார். என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை. குழந்தைக்கு ஆசைப்பட்டால் கணவருடன் வாழ முடியாது. கணவருடன் வாழ்ந்தால் குழந்தையோட ஆசையை முழுமையாக விட்டுவிட வேண்டும். இந்தச் சமூகத்திற்காக வாழ்வதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கணவரிடம் எதை வினவுவது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. கணவர் உரைத்த ஒரே பதில் என்னை விட்டுவிட்டு குழந்தை வேண்டுமென்றால் பெற்றுக்கொள்.
     
 சாதாரணமாகக் சமூகம் பெண்ணிடம் மட்டுமே குறையைக் கேட்க விரும்பும். இந்தச் சமூகம் மலடி என்ற சொல்லை மட்டுமே வழங்குகிறது. மலடன் என்ற சொல்லை ஒருபோதும் வழங்குவதில்லை. காரணம் யாராக இருப்பினும் இறுதியில் தண்டனை என்பது பெண்ணுக்குதான் இருக்கிறது. அந்தப் பெண் என்ன செய்வது? யாரிடம் கேட்பது? ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.. குழந்தையே இல்லாத தம்பதிகளுக்கு அழகான குழந்தை பிறக்க இருவரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று. அந்த ஒரு சந்தோஷம் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. பல்வேறு புத்தகங்களைப் புரட்டிப் பார்த்ததில் ஒரு மூன்று விடையங்களை நான் கண்டுபிடித்தேன். முதலாவது கணவர் சொன்னபடியே கணவரை விட்டுவிட்டு வேற்றுத் திருமணம் செய்து கொள்வது. இல்லையே இரண்டாவதாகக் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டே ஒரு செயற்கை கருத்தரித்தல் மூலமாகக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். கணவர் இதற்கு சம்மதிப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. செயற்கை கருத்தரித்தல் என்ன பிரச்சனை இருக்கிறது பிரச்சனைகளை விவரித்து அதை செயல்படுத்த முயலும்போது ஏற்படும் சிக்கல்களை என்னால் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. என்ன நடப்பதே என்று தெரியாமல் மருத்துவமனை சென்ற பிறகு பல்வேறு புத்தகங்களையும் பல்வேறு விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட நான் எனக்கு எப்படி வந்து மூன்றாவது விடயத்தை சொல்லவே முடியவில்லை.
     
கணவனே இல்லாமல் தனியாக என்னால் ஒற்றை தாயாகக் குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற மூன்றாவது விடயத்தை நான் படிக்க நேர்ந்தபோது மனதில் மிகப்பெரிய சலனம் உண்டாயிற்று. நான் இந்த மூன்றில் எதை தேர்ந்தெடுப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்தச் சமூகத்தையே ஒற்றை நாடியாக கொண்டிருக்கும் பெண்ணின் மையம் இங்கு உடைபடுகிறது. நானும் சாதாரண பெண்தான் கணவனோடவே வாழலாம் என்று முடிவெடுத்தேன். ஒருமுறை யுத்தத்தை கையில் எடுத்தால் கணவருடன் வாழாமல் குழந்தைக்காகக் கணவனாகக் கணவனுக்காக குழந்தையா என்ற இந்தக் குழப்பநிலையை மறந்து நிச்சயம் ஒரு முடிவெடுத்து இருப்பேன். என்னால் ஒற்றை தாயாக இருந்திருக்க முடியும். ஆனால் நான் புரட்சி பெண்ணல்ல. பெண்ணின் மையத்தைச் சமூகம் நிர்ணயிக்கும் பொழுது, பெண்ணுக்கான இருப்பிடம் வெற்றிடம் ஆவதை உணர்ந்தேன். ஆனால் இந்த முடிவும் நிரந்தரமல்ல எனக்கு குழந்தை வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் நிச்சயம் இந்தச் சமூகம் பெண்ணுக்கு என்று கட்டப்பட்டிருக்கும் சிறையை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனக்கு பத்தினி அங்கீகாரம் தேவையில்லை. எனக்கான மையத்தை நானே உருவாக்குவேன்.
சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் ச.அரியநாச்சியம்மாள்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

பி. கே. ஆர் மகளிர் கலைக்கல்லூரி

கோபிசெட்டிபாளையம்.

ariyanacheyammal@gmail.com

சங்கப்பனுவல்களின் மறுவாசிப்பில் மலரும் புதிய மகரந்தங்கள் | முனைவர் சி.சிதம்பரம்

சங்கப்பனுவல்களின் மறுவாசிப்பில் மலரும் புதிய மகரந்தங்கள்-முனைவர் சி.சிதம்பரம்
இலக்கியம் என்ற சொல் முதன் முதலில் அது ஒரு கலைப்படைப்பு என்றும் அது வாசகனுக்கு இன்பம் பயப்பது என்ற பொருளில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தோளாமொழிப்புலவர் “காமநூலுக்கு இலக்கிம் காட்டிய வளத்தால்” என்று சூளாமணியில் (459) குறிப்பிடுகிறார். இந்த இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகள் இன்று வளர்ந்து வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கன: இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கொள்கைகள் என்பனவாகும்.  இந்த மூன்றிற்கும் அடிப்படையில் சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை அறியமுடிகிறது. இலக்கிய வரலாறு என்பது ஒரு இலக்கியம் தோன்றிய காலம், பாடுபொருள், அமைப்பு, படைப்பாளி குறித்த அடிப்படையான செய்திகளைக் கொண்டது. இலக்கியத் திறனாய்வு என்பது கவிஞன் தான் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது கவிஞன் குறிப்பாகச் சொல்லியதை வாசகன் தெளிவாக அறியும்படி விளக்கி உரைப்பது. இலக்கியத்தில் உள்ள தெளிவற்ற பகுதிகளை தெளிவுபடுத்துவது ஆகும். அந்த வகையில் தமிழ்த்திறனாய்வின் முன்னோடிகளாக விளங்கும் உரையாசிரியர்களின் மறுவாசிப்பு அணுகுமுறை பற்றியும் சங்கப்பாடல்களுக்கு திணை, துறை வகுப்பதில் உள்ள சிக்கல்களையும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

உரையாசிரியர்களின் ‘மறுவாசிப்பு’ அணுகுமுறை

உரையாசிரியர்கள் இலக்கியத்தினை விளக்கும் முறையில் அமைந்தாலும் கூட பல உரையாசிரியர்கள் நன்கு யாவரும் அறிந்த செய்திகளை அவர்கள் விளக்க முற்படுவதில்லை. சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பத உரைகாரர் அரிய சொற்களுக்கு மட்டுமே உரை எழுதிச் செல்லும் போக்கு இதனை உறுதிசெய்கிறது. மேலும் தொடக்க காலத்தில் அமைந்த திறனாய்வு முறைகள் மூலநூல் ஆசிரியரை பொன்போல் போற்றும் பாராட்டுமுறைத் திறனாய்வு முயற்சிகளையே உரையாசிரியர்கள் பெரும்பாலும் பின்பற்றினர். ஏனெனில் திறனாய்வு என்ற சொல் புழக்கத்தில் வருவதற்கு முன் “விமர்சனம்” என்ற சொல்லே கையாளப்பட்டுள்ளது.

’விமர்சனம்’ என்ற சொல்லை முதன்முதலில் ஆ. முத்துசிவன் என்ற பேராசிரியரே ’அசோகவனம்’ என்ற நூலில் பயன்படுத்தியுள்ளார். விமர்சை என்ற சொல்லில் இருந்தே விமர்சனம் என்ற சொல் பிறந்துள்ளது. விமர்சை என்ற வடசொல் பிரமாண்டமான என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இலக்கியத்தை சிறப்பான அளவில் பாராட்டுவதையே இச்சொல் குறிக்கிறது. தமிழில் தொடக்க காலத் திறனாய்வாளர்கள் மேலைநாட்டுத் திறனாய்வு முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அ. ச ஞானசம்பந்தன் உள்ளிட்டொர் ”திறனாய்வு” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஓர் இலக்கியத்தை விருப்பு, வெறுப்பு இன்றி அதன் இயல்பினை வெளிப்படுத்தும் போக்கில் அமைக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் நிலைபெறத் தொடங்கியது.

இலக்கியத் திறனாய்வுகளில் இருந்து பெறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களுக்குப் பிறகு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக மாறும் போது அது இலக்கியக் கொள்கையாக உருக்கொள்கிறது. இவ்விலக்கியக் கொள்கையானது ஒரு குறிப்பிட்ட இலக்கியத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு கொள்கைகள் தான் இருக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கியக்கொள்கைகள் மட்டுமே இருக்கமுடியும்.

திறனாய்வு முன்னோடிகளான உரையாசிரியர்கள் பலரும் மூலநூல் ஆசிரியரைப் பொன்போல் போற்றினாலும் பலரும் மூலநூல் ஆசிரியரின் கருத்துக்களை மறுப்பதையும் காணமுடிகிறது. சேனாவரையர் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் எல்லே இலக்கம் என்ற நூற்பாவிற்கு உரை செய்கையில் மூல நூலாசிரியரான தொல்காப்பியரையே மறுத்துரைக்கும் பகுதி ஈண்டு நோக்கத்தக்கது. மேலும் அன்றைய காலச் சூழலில் ஏட்டுப்பிரதியாக இருந்த மூலநூல்களில் உள்ள பாடபேதங்களை கையாளும் சூழலில் சில தவறுகளை உரையாசிரியர்கள் மேற்கொள்ளும் இடங்களும் உண்டு. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பேராசிரியர், வண்டிற்கு மூக்கு உண்டோ எனின் மூல நூலாசிரியர் கூறப்பெறாலான் அது பெற்றாம் என்றே உரைசெய்வதையும் காணமுடிகிறது. இதுபோன்ற பாடபேதங்களை ஏட்டுப்பிரதிகளை அச்சு வடிவில் உருவாக்க முயன்ற பதிப்பாசிரியர்களும் பல்வேறு பாடபேதங்களை ஒப்பிட்டு ஒரு முடிவிற்கு வந்துள்ள செய்திகளையும் பதிப்பு வரலாற்றில் காண முடிகிறது. இது ஒரு நூலுக்கு எழுதியுள்ள உரைகளில் உள்ள குறைகளை நீக்க பின்வந்தவர்கள் அவற்றை விலக்கி புதிய தடைவிடைகளைப் பெற முயற்சியும் மேற்கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் ஒரு நூலுக்கு எழுந்த உரையையே முற்றிலுமாக மறுத்து ஒரு உரை எழுதப்பட்டுள்ளது என்பது முக்கியமாக நோக்கத்தக்கது. சிவஞான முனிவர் இலக்கண விளக்கத்திற்கு எழுந்த உரையை முற்றிலுமாக மறுத்து இலக்கணவிளக்கச் சூறாவளி என்ற முழுமுதல் மறுபுரை நூலை வரைகிறார். இது தமிழில் தோன்றிய முழு மறுப்புரை நூலாகும். எனவே ஒரு இலக்கியத்தை / பனுவலை / பிரதியை மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது தான் பல புதிய பார்வைகள் எழுகின்றன. எனினும் இம்மறுவாசிப்பு சில வேளைகளில் கேலிக்கூத்தாகவும் மாறிவிடும் தன்மையையும் திறனாய்வு வரலாற்றில் காணமுடிகிறது. இதற்குத் தக்க சான்றாக “உச்சிமேற்புலவர்” என்று அழைக்கப்படும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் “முல்லைப்பாட்டு உரையில் ”பூப்போல் உன்கண் புலம்புநீர் முத்துரைப்ப” (முல்லை.பா.23) என்ற ஒரு பாடலடியை மட்டும் வைத்துக்கொண்டு நெய்தலுக்கு உரிய இரங்கல் பொருள் வருவதாகக் கூறி, மூலநூலின் உரிப்பொருளையே சிதைத்து உரை எழுதும் போக்கு பிற்காலத் திறனாய்வாளர்களின் எதிர்ப்பைப் பெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. (முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, மறைமலை அடிகள்). எனினும் நச்சினார்க்கினியர் உரைகளை மீண்டும் மீண்டும் படித்து மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் போதுதான் அவர் சீவக சிந்தாமணிக்கு இருமுறை எழுதிய வரலாற்றை அறியமுடிகிறது. இவர் இலக்கணம், இலக்கியம் என தமிழ் உரைவரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தபோதிலும் மூலப்பிரதியை அலைத்தும் கலைத்தும் பொருள்கொள்ளும் போக்கு (மாட்டு/பொருள்கோள்)  அவரின் பெருமதிப்பையே சிதைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சில செய்திகள் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போது அதுவே தவறாக மாறிவிடுகிறது. இதற்குத் தக்க சான்று, தமிழ் இலக்கிய வரலாற்றில்  மணநூல் என்று அழைக்கப்படும் நூல் சீவகசிந்தாமணி என்று ஒரு கருத்தாக்கம் இங்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இது தவறான கருத்தாகும். ஏனெனில் சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் சீவகன் எட்டுப்பெண்களை மணம் முடித்து இறுதியில் துறவறம் பூண்ட செய்தியை அறிவிக்கும் நிலையில் சீவகசிந்தாமணி எப்படி மணநூல் என்று கூறமுடியும் என்ற கேள்வியும் எழுவது இயல்பே.

சங்க இலக்கிய மறுவாசிப்பின் சிக்கல்கள்

மேலாய்வும் மீளாய்வும் கூடிமுயங்கப் பிறப்பது மறுவாசிப்பு என்ற கருத்தாக்கத்தினை மெய்ப்பிக்கும் வகையில் பல புதிய செய்திகள் சங்க இலக்கியங்களில் தோண்டத் தோண்டக் கிடைப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.  சங்க இலக்கியங்களை அணுகும் ஆய்வாளர் அடிப்படையில் மூன்று பேருண்மைகளை அறிந்திருப்பது முக்கியமாகிறது. அவையாவன:

1.சங்க இலக்கியங்கள் என்ற அடையாளப்படுத்தப்பெறும் பனுவல்கள் பல்வேறு காலகட்டங்களில் சேர, சோழ, பாண்டிய நாட்டில் பாடப்பட்ட தனித்தனி உதிரிப்பாடல்களாகும்.

2.பின்பு சில அரசர்கள் பல தமிழ் அறிஞர்களின் உதவியால் அவற்றை பொருண்மை, பாடலடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை வகை, தொகை செய்து செம்மை செய்தனர்.

3.வகைதொகை செய்யப்பட்ட பாடல்களுக்கு ஏற்ற பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட திணை, துறை வகுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இரண்டாவது படிநிலையில் தொகுத்தலும் தொகுப்பித்தலுமான நடவடிக்கையில் வர்க்கச் சார்பும் சமயச்சார்பும் பெரிய அளவில் தாக்கம் செலுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 

சங்கப்பாடல்களுக்கு திணை, துறை வகுத்தவர்கள் தொல்காப்பியம், பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட நிலையில் சில இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்காத காரணத்தால் எந்த இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்தனர் என்பதை அறிய இயலவில்லை. இந்த சிக்கலே சங்க இலக்கியத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் போது வெளிப்படுகிறது.

சான்றாக குறுந்தொகை 31வது பாடலுக்கு துறைவகுத்தவர்கள் “நொதுமலர் வரைவுழித் தோழிக்கு தலைவி அறத்தொடு நின்றது” என்ற துறையைக் குறித்துள்ளனர். அதாவது தலைவி ஒரு தலைவனோடு களவுமணம் புணர்ந்து, கற்புக்கூடம் பூண்டமையை அறியாது அயலார் அவளை மகட்பேசி வந்தவிடத்து அதுகாறும் தன் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, அதனைத் தோழிக்குக் கூறியது என்று உரையாசிரியர் (குறுந்தொகை உரை, பொ.வே. சோமசுந்தரனார் , கழக வெளியீடு, பக். 90) விளக்குவர். இந்தப்பாடலுக்கு துறை வகுத்தவர்கள் இந்த ஒரு பாடலை மட்டும் படித்துவிட்டு அதன் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு துறை வகுத்த காரணத்தால் தான் இதுபோன்ற தவறுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் படைப்பை படைப்பாளியைத் தவிர்த்து ஆராயும் போக்கில் ஏற்படுகின்ற பிழையே இதற்குக்காரணம். ஏனெனில் ஆதிமந்தியார் சேர இளவரசனான ஆட்டனத்தியை திருமணம் செய்து, பின்பு காவிரியில் ஏற்பட்ட புதுப்புனல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சூழலில் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்ததாகவே இருக்க, பாடலை மட்டும் கருத்தில் கொண்ட காரணத்தால் இந்நிகழ்வு களவுக்காலத்தில் நடப்பதாக எண்ணி அறத்தொடு நிற்கத் தலைவி தோழியிடம் கூறுவதாக பொருள்கொள்கிறார். இந்தப் பின்புலத்தை தொல்காப்பியர் துணைகொண்டு பொருத்திப் பார்க்குமிடத்து புதிய விளக்கம் கிடைக்கிறது.

தொல்காப்பியர் தலைவனிருக்கும் இடத்தைத் தேடிச்செல்லும் வழக்கு இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும், சங்க இலக்கியத்தில் ஆதிமந்தியார் பாடல் (குறுந்.31) மட்டும் தன் தலைவனை ஊர் ஊராகத் தேடி அலைந்து புலம்பிய அவல நிலையைப் பாடியுள்ளது என்பது ‘பெண் எழுத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதற்கான தேவை இன்று வரை நீடித்து வருகிறதென்றே புரிந்து கொள்ள வேண்டும். படைப்பிலக்கியம் புனைவதற்காக எழுதுகோளைப் பெண் ஏந்தத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஆணாதிக்கக் கருத்தியல்கள் சமூகத்தில் நிலைபட்டுப்போய் வேர்பிடித்துத் தழைத்துவிட்டன என்பதும் அவற்றின் தாக்கங்கள் குடும்பத்தளத்தில் மட்டுமின்றிக் கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனச் சமுதாயத்தின் பல தளங்களிலும் தமது சுவடுகளை அழுத்தமாகப் பதியத் தொடங்கிவிட்டன’ (எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு, பக். 68,69) என்று கூறுகின்ற கருத்தாக்கம் ஈண்டு பொருத்திப்பார்க்கத்தக்கது.

சங்க அகப்பாடல்களில் அவற்றின் திணை துறை கட்டமைப்பிற்கேற்பக் காதல்வயப்பட்ட பெண்ணின் மன ஆற்றாமைகளையும், உடல் சார்ந்த பசலைத் துன்பங்களையும் ஆண்பாற் புலவர்கள் போலவே பெண் கவிஞர்கள் காட்டியுள்ள போதிலும் ஒருசில பாடல்கள் பெண்ணுக்குரிய மரபுவழி மதிப்பீடுகளை விமர்சனம் செய்து அவற்றை எல்லையைத் தாண்டப் பெண்கள் துணிவதைச் சித்தரிப்பதாகவே உள்ளன. அவற்றுள் ‘யாண்டும் காணேன் மாண்தக் கோனை’ என்ற ஆதிமந்தியாரின் பாடலும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பிரிவால் உடம்பும் உயிரும் வாடிய போதும், இவை ஏன் இப்படியாயின என வருந்துவதல்லது, தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்வது தலைவிக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்துகிறார். தனித்து நெஞ்சோடு உசாவுங்காலத்து, தலைவனிருக்குமிடம் போவோமா? எனக் கூறுவதுண்டு. ஆனால் அவ்வாறு தலைவனை நாடிச் செல்லுதல் இல்லை (தொல்.பொரு.10) என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தலைவன் இருக்குமிடம் செல்வோமா? என்ற கூற்று மடற்கூற்றை ஒத்தது. தலைவன் ‘மடலேறுவேன்’ என்று கூறுவது அன்பின் ஐந்திணை. அதுபோலவே தலைவி, தலைவன் உள்வழிப்படுவதாகக் கூற்று நிகழ்த்துவாளே தவிர, அவ்வாறு ‘உள்வழிச் செல்லுதல்’ இல்லை. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரின் குறுந்தொகைத்தலைவி, தலைவனின் பிரிவால் வாடியவழி உழன்று,
“யாங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் ……………….’   (குறுந். 219; 4 – 5)
என்று பாடுகிறாள். தலைவனே தலைவியை நாடிச்செல்லும் இயல்பு வழக்கத்தில் உண்டு. இந்தத் தமிழ்ப்பண்பாடே இன்றும் திருக்கோயில் வழிபாட்டு நெறிமுறைகளின் ஒன்றாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் வழிபாட்டு நெறிமுறைகளில் இறுதி நிகழ்ச்சியாக, ஒவ்வொரு நாளின் முடிவிலும், இறைவன் இறைவி இருக்கும் இடத்திற்குச் சென்று பள்ளியறையில் துயிலும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தலைவன் தலைவியை நாடிச் செல்லலாமே தவிர, தலைவி தலைவனைத் தேடி செல்லும் மரபு இல்லை என்பது வெளிப்படை.

பண்டைக் காலத்தில் தலைவி பெரும்பாலும் இல்லம் சார்ந்த இடங்களிலேயே உலவி நின்றாள் எனத் தெரிகிறது. ‘மனைவி’, ‘இல்லாள்’, ‘மனையுறை மகளிர்’ போன்ற சொற்றொடர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தலைவி குறிகள் நிகழும் இடத்தைக்கூடத் தானே குறிக்கிறாள். இதனைத் தொல்காப்பியர்,

“இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
மனையோர் கிழவிகேட்கும் வழி அதுவே
மனையகம் புகாஅக் காலையான’  (தொல். கள. 40)
 
“பகற்புணர் களனே புறம்என மொழிப
அவள் அறிவுணர வருவழியான’  (தொல். கள. 41)
என்று புலப்படுத்துகிறார். எனவே, தலைவி தன் இல்லத்தின் புறத்தே, இல்லில் உள்ளோர் பேசுவது கேட்கும் தூரத்தில் மட்டுமே செல்லும் இயல்பினை உடையவளாக இருந்திருக்கிறாள். இறையனர் அகப்பொருள் உரையும்,
“இரவு மனை இகந்த குறியிடத்தல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை’  (இறை. அகப்பொருள். 21)
என்ற நூற்பாவில் தலைவி தலைவனைச் சேரும் எல்லையை வரையறை செய்கிறது. அகநானூற்றுத் தலைவியை, ‘தன் இல்லகத்தே விட்டுச் செல்லாதே; நீ பேதைப் பருவத்தினள் அல்லள் பெதும்பைப் பருவத்தினை அடைந்துவிட்டாய்!’ எனக் கடிந்து கொள்ளும் தாயைக் (அக.7; 5-7) கயமனார் காட்டுகிறார். ஆதிமந்தியார் தன் கணவனைக் காவிரியாற்றில் தொலைத்த நிலையில் அவனைத் தேடிச் செல்கிறாள்.

கரிகாற் சோழனின் மகளான ஆதிமந்தியார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர், தன் கணவனான ஆட்டனத்தியைத் தேடித் திரிந்ததாகப் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. ஆதிமந்தியின் கணவன் கிழார் நகரினை அடுத்த காவிரியில் புதுவெள்ளப்புனல் விழாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தன் கணவனைத் தேடி ஊர் ஊராகச் சென்று அலைந்து புலம்பிய அவல நிலையை, பரணர் தம் அகப்பாடல்களில் (அகம். 76,135,222,236) குறிப்பிடுகிறார் ஒளவையாரும்,
“நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவயர்ந் திசினால் யானே…..’      (அகநா. 147; 8 – 10)
என்று வெள்ளி வீதியார் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். பரணரும், ஒளவையாரும் முறையே ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகியோர் தம் காதலர்களைத் தேடி அலைந்த செய்தியை உவமையாகவே கையாண்டுள்ளனர் என்பது இவண் நோக்கத்தக்கது.
           
‘தன் கணவன் என்ன ஆனான்’ என்று தெரியாமல் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆதிமந்தியார் சென்ற செலவின் நோக்கம் வேறுபட்டது. தலைவி, ‘தலைவனைப் புணர்ச்சியின் நோக்கமாகத் தான் தேடிச் செல்லுதல் கூடாது’ என்று தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆதிமந்தியார் புணர்ச்சி நோக்கமின்றித் தன் முதல்வனைத் தொலைத்த நிலையில் தேடிச் செல்லுதல், தமிழ்ப்பண்பாட்டு மரபைச் சிதைப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தலைவி தன் முதல்வனையே (கணவனையே) தொலைத்த நிலையில் தலைவன் உள்ளவிடத்துத் தேடிச் செல்லலாம் என்ற புதிய விதி தொல்காப்பியத்துள் மறைந்து நிற்பதை ஆதிமந்தியாரின் பாடல்வழி அறியமுடிகிறது.

புறநானூற்றில் கடைநிலை
 கடைநிலைத் துறையில் பறநானூற்றில் அமைந்த பாடல்கள் பதினொன்று, இவற்றில் பறம் 127ஆவது பாடல் தவிர எனைய பாடல்கள், அனைத்தும் பறநானூற்றின் இறுதியில் பறம் 382, 383, 384, 391, 392, 393, 394, 395, 396, 398) தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    ஆய் அண்டிானது, அரண்மனையில் மங்கல அணி, கலிர வேறு ஏதும் அணியாக மகளிரும் களிறுகளின்றிக் காணப்படும் கட்டுக்கறிகளும் உள்ளன பொலிலிமந்த அரண்மனையாகக் காட்சியளிக்கிறது. என்று அண்டிானின் அரண்மனையை உறையூர், எணிச்சேரி முடமோசியார் சிறப்பிக்கிறார் (புறம்.127). இப்பாடலின், துறை, கடைநிலை, எனக் குறிக்கப்படுகிறது. எனிம்ை இப்பாடலில், ஆய் அண்டிானின் கொடைக்கன்மை மட்டுமே கட்டப்படுகிறது. இப்பாடலில் மோசியார் வாயில் காவலனிடம் கூறியகாகவோ வாயிலில் நின்றகாகவோ, குறிப்பு இல்லை. அவ்வாறு இருக்க இதற்குக் கடைநிலை, என்று கொண்டகன் பொருக்கம் பவனாகலில்லை. இப்பாடலில் அண்டிானின் அரண்மனைவாயில் இடம் பெறுவதால் கடைநிலை என்று குறிக்கனர் போலும்.
      சோழன், நலங்கிள்ளியின் மறம்பாடும் பொருநர் கூட்டக்கைச் சந்திக்க கோவூர்கிழார் கிணைப் பொருநன், கூற்றில் சோமன் நலங்கிள்ளியின் வண்மையைப், பகழ்ந்து பறம், 382) பாடுகிறார் நான் சந்தித்த பொருநர் உன்னைக் கலி, வேறு யாரையம் பாடமாட்டோம் என்று கூறி என்னை உன்னிடம் ஆற்றுப்படுக்கினர், நான் முன்பு பரிசு பெற்ற சிறாருடன் ஃனைக் காண வந்துள்ளேன் பாம்ப போலக், கொடர்ந்து, வரும் வறுமை நீக்கி, அருள்வாயாக என்று கோவூர்கிழார் வினவகிறார், பலவர் இவ்வாறு. மன்னனிடம், கான். வேண்டும் பரிசிலை வேண்டுவது, பரியில் துறையாகும் இப்பறப்பாடலில், ஆற்றுப்படையின் அமைப்பம் அமைந்து கிடக்கிறது. ஆனால் இப்பறப்பாட்டு, கடைநிலையில் கொகுக்கப்பட்டுள்ளது. இப்பாட்டைக் கொல்காட்பியர் கூறும் ‘கடைநிலை’ என்று, கொள்வகைவிடப் பரிசில் கடைஇய கடைக்கூட்டு, நிலை’ என்று, கொள்வகே பொருக்கமாக உள்ளது.
      கோவூர்கிழார் பாடல் பறவாயிலில் பலவன், நிற்பதாகக் கூறவில்லை. பாடலில் பயிலுகின்ற நின் பொருநர் விடுகி அக்கை நினவே என்று வருகின்ற சொற்கள் கோவூர்கிழார் சோமன் நலங்கிள்ளியை நேருக்கு நேர் பார்க்கட், பாடுவதாகவே பாடியிருக்கிறார் இப்பாடலில் பலவர் கன்ைைடய, வறுமை நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் ஆகலின் கடைநிலை, என்பது,பலவர், (அ) கலைஞர்களின் வறுமை நிலையை, வாழ்க்கையின் கடைநிலையைக் கூறுவதரகப், பொருள், செயின், இது கூமைக்கப் பொருக்கமாக அமையம் மற்றும் கற்ற கூரையாசிரியர்கள், இவ்வாறு, பொருள் கொண்டனர். இப்பாடலுக்கு உரையெழுதிய ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளை, கொல்காட்பியர் உரைக்க கடைநிலையையம் பரிசில் கடைஇயகடைக்கட்டு, நிலையம், ஒன்று, என்று, கொண்டு இங்கு விளக்கம் தந்தள்ளார், ஆனால், பரிசில் கடைக்கூட்டு நிலை, என்னும் இத்துறையை இரண்டாகக் கொண்டு, இது பரிசில் கேட்பதாகப் பாடலில் வருவகால் பரியில் கடைஇயநிலை.என்று, துறையாக வகுப்பதும் பொருக்கமாக உள்ளது. பாண்டிய நாட்டுப் பவவர், நப்பசலையார் அவியன் என்ற குறுநில மன்னனைப் பாடிய பாட்டு பறம் 283) கிணைப் பொருநன் கூற்றில், அமைந்துள்ளது.

“நுண்கோற் சிறு கிணை சிலம்பவெற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்க்கிக்
தன்புக ழேத்தினெ னாக. (புறம்.383;3-5)

     என்று அடிகளில், நெடுங்கடை நின்று என்று, வருவது, கடைநிலைக் துறைக்குப் பொருக்கமாக வருகிறது. இங்கும் பலவர் அவியனையன்றிப் பிறரைப் பாடமாட்டேன் என்று குறிப்பிடுகிறார். பல்வரின் வறுமைநிலை. பாடலில் பேசப்படவில்லை நன்னாகனார் பாடலும், கிணைப், பொருநன், கூற்றாக அமைந்துள்ளது. எக்காலக்கம், கம்மைப், பொருள், கொடுக்கப் பாப்பான்: என்று, பலவர் பாடுகிறார். வறுமைக் குறிப்பு இல்லையென்றாலும் வள்ளல், கங்களுக்குச் செய்வகைக் கூறிக் கன் பரிசில் வேட்கையைக் குறிப்பிடுகிறார்.
       கல்லாடனார், பாடலிலும், கன்னைக் கிணைப் பொருநனாகவே பாடுகிறார் வேங்கடப், பகுதியிலிருந்த வறட்சி காரணமாகச் சோழ நாட்டிற்கு வந்தகாகப் பாடுகிறார். கரும்பனார் ஜி.மானிடக்கே, கல்லாடனார், பரிசில் வேண்டி நிற்கிறாரே கவிர வேறுவொன்றும் வேண்டி, இல்லை அரண்மனை வாயிற்காவலனிடக்கே பாடிய குறிப்பும் இல்லை. பரிசில் வேண்டும் நிலையே இங்கு சுட்டப்படுகிறது.
    அதியமான் நெடுமான் அக்கியின் மகன், பொகப்டெமினியை ஊளவையார் கடைநிலைத்துறைபட (பறம் 392) ஒரு பறப்பாடலைட், பாடியள்ளார். இந்தப் பாடலும், கிணைப்பொருநன் கூற்றில் அமைந்துள்ளது. பொருநன் ஒருவன் எழினியின் பெருமையினை முற்றக்கில் விடியற்பொழுதில் நின்று. பறையறைந்தவாறு சிறப்பிக்கிறான் ஏம் மன்னவனிடம் பணிந்து, வரி செலுக்காக பகை மன்னர் அரண்களை அழிக்க. அவர்களைக்கொன்று, கமுகை எப்பூட்டி உழுக, என், கொள், வாக முதலியவற்றை, விகைக்கும், ஜீரமுடைய மன்னா, நீ வாழ்வாயாக என்று பகர்கிறான், இந்தப் பாடலில், கிணைப் பொருநன் பொகுட்டெழினியின், அரண்மனை முற்றத்தில் நின்று பாடுவதாகக் குறிப்பு உள்ளது. நெடுங்கடை நின்றியான் என்று குறிப்பினைக் கொண்டு இப்பாடலைக் கடைநிலைத்துறை என்பது பொருந்தும், இப்பாட்டில், இளவையார், ஒரு, பகுதியில் எழினியை, வாழ்த்துகிறார். மற்றொரு பகுதியில் அவன் கொடை, நலக்கைப் பாடுகிறார் கடைநிலைத் துறையில், வாழ்க்க எவ்வாறு பொருந்தும், என்பது. கெரியவில்லை. இப்பாடலுக்கு வாழ்க்கியல் என்றும் துறை வகுக்க இயலும் இங்கு கடைநிலைத் துறை, வாழ்க்கோடு கலந்து பதிய பொருண்மை பெறுகிறது. இப்பாடலில் கடைநிலை, என்ற சொல்லோ, வேறு குறிப்போ இல்லை பலவன், வாழ்க்கையின் கடைநிலையில் நிற்கிறான், அவைைடய, வறுமையம் உண்டியற்ற அவலமுமே பாடலில் புனையப்படுகின்றன.
      பல நாட்கள் உணவின்றி வறுமையில் வாடிய ஒருவன் கன்னைக் காக்க, ஒருவருமின்றி இறுகியில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நிணம் கலந்த சோறும் மலர் போன்ற மெல்லிய ஆடையம் கந்து, கம்மை ஆகரிக்கு, முகமாகக் கிணைப் பொருநன், கூற்றில் அமைந்த பாடலை பலம் 393) நல்லிறையனார் பாடியள்ளார். இந்தப் பாடலில் கன்னை யாரும், ஆதரிக்காத நிலையில் இறுதியாகச், சோமன் ஆகரிக்க, வேண்டும் என்று பாடுகிறார்.
          கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமானார் சோமிய வேனாகி இருக்கட்டுவனைப் பகழ்ந்து, பாடும் பாடல் (பறம், 394) இன்று, உள்ளது, இதில், வறுமையற்ற பலவரைக்கிருக்குட்டுவன் சில நாட்கள் ஆகரிக்கான் ஒரு நாள். பல்வன், விடைபெற வேண்டி மன்னனிடம் அனுமதி கேட்டான் மன்னனும் யானையடன் பொருளும், உடன்வாக் குமானார்க்குப் பரியில் நல்கினான், யானையினைக் கண்டு, அஞ்சிய பலவர் அதனைக் திருப்பி அனுப்பினார் ஏனெனில் அது, போரில் ஈடுபட்ட, மறக்களிறு. மன்னன் திரும்பி வந்த யானைப்பரிசில் சிறியது எனப் பலவர் எண்ணினாரோ என்று நாணி மற்றொரு, யானையையம், பரிசாக, அனுப்பி வைக்கான். அதனை, வியந்து, கிணைப் பொருநன், பாடுவதாகப் பலவர் பாடியிருக்கிறார், இப்பா.ஜிலும், மன்னனை அரண்மனையில் விடியற்காலையில் பகழ்ந்து, பாடுவதால் கடைநிலையாயிற்று.
      மதுரைநக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் கிழான். மகன் பெருஞ்சாக்கனின், அரண்மனை வாயிலில் நின்று கான், வந்த செய்கியை அறிவிக்ககின் பயனாக நீ என்னை அழைக்க உன், மனைவியிடம் காட்டி என்னைப்போல, இட்டலவரையம் பேணுது என்று அமைந்த பறப்பாடலொன்றைப் பறம் 395) பாடியள்ளார் இப்பாடஜில் பலவர், கம்மைக் கிணைப் பொருநனாக வைக்க, மன்னனின் வாயிலில் கன் வரவை அறிவித்த செய்கியை கன்கடைக் கோன்றி யன்யை விசைக்கலிற் பறம், 395:24) என்ற பாடலுடி சுட்டும், இந்தப் பாடலில், கடைநிலை, மிகக் கெளிவரகச் சுட்டப்படுகிறது. இப்பாடலில் கொல்காட்பியர் கட்டும் கேய்வால் வருக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இங்கு பலவர் பெருஞ்சாக்கன் மனைவியையம், கொடர்பபடுத்திப் பாடுவது. நக்கீரனின் பதுமை படைக்கும் கிறக்கைக் காட்டுகிறது; இப்பாட்டிலும் பாடல் முடியம் பொழுது வாழ்த்தாக முடிகிறது.
    கடைநிலை என்ற கருத்துக்குப் பொருத்தமாகச் சில பாடல்களில் பறம் 392, 393, 394, 395) வாயில் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. எல்லாவற்றிலும் பாடுவோரின், வறுமைக் குறிப்போ, அல்லது பிரிவில் பெற்ற குறிப்போ இடம் பெறுகிறது. கடைநிலைக் கறையில் அமைந்த பாடல்களில் பெரும்பாலானவற்றில் பரிசில் பெற்ற கலைஞன் பெறாதவனுக்கு தான் பெற்ற பெருவளத்தை விளக்கிக் கூறுவதாகவே அமைந்துள்து. இஃது ஆற்றுப்படையின் தன்மையது. எனவே, இப்பாடலின் வளர்ச்சியாகவே பொருநராற்றுப்படை அமைந்துள்ளது, எனவே ஆற்றுப்படைத் துறையிலிருந்து வளர்ந்த ஒரு கிளையாகவே இப்பாடல்கள் உள. இவற்றை அடக்கும் துறைகள் வேறின்மையின் இத்துறையுள் அடக்கிக்கூறினர் என்ற ந.வி. செயராமனின் கருத்து இவண் நோக்கத்தக்கது.
       இளம்பூரணர் உரையில் குறிப்பிடுவது போல எந்தப் பாட்டிலும் வாயிற்காவல் பற்றிய குறிப்பு இல்லை. கடைநிலை என்பதற்குப் பொருத்தமாக எல்லாப் பாடல்களிலும் கடைநிலை பற்றிய குறிப்பு இல்லை. இதனை நோக்கும்பொழுது தொல்காப்பியர் கூறிய கடைநிலைத் துறையின் கருத்து வளர்ச்சி பெற்ற நிலையையே புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. கடைநிலைத்துறை நயமும் சுவையும் மிக்க ஒரு துறையாகும்; புரவலனின் அன்பையும், பலவனின் பெருமிதத்தையும் விளக்கும் துறையாகும். ஆதலின் அதனைப் பல்வேறு வகையில் பனைதற்கு, வாய்ப்புள்ளது, ஆதலால் பன்னிரு பாட்டியல் கடைநிலையை ஒரு சிற்றிலக்கியமாகக் கொண்டு இலக்கணம் வகுத்து, ஓர் இலக்கிய வகையாக உருவாக்கிவிட்டது என்பதை உய்த்துணர இயலும்.

நிறைவாக…

உரையாசிரியர்கள் மூலப்பிரதியை அனுகும் போக்கில் பல புதிய கோணங்களை முன்வைக்கும் பாங்கு, மறுவாசிப்பு மூலம் சங்கப் பாடல்களில் திணை, துறை வகுப்பதில் உள்ள சிக்கல்களையும் இக்கட்டுரையில் விவாதிக்கிறது.
உரையாசிரியர்களின் உரை செய்யும் மரபில் ‘மறுவாசிப்பு’ என்ற அணுகுமுறை இருந்தாலும் கூட மூலப்பிரதியை அலைத்தும் கலைத்தும் பொருள்கொள்ளும் போக்கு இருந்ததையும் அறிய முடிகிறது.

சங்க இலக்கியப் பனுவல்கள் தொகுப்பு முறைமையின் போது வர்க்கச் சார்பும் சமயச் சார்பும் பெரிய அளவில் தாக்கம் செலுத்தியிருப்பதால் சங்கச் செய்யுள்கள் குழப்பங்களான பொருள்கோடல்கள் நிகழ்ந்திருப்பது சான்றுப் பாடல்களின் வழியே உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடைநிலை என்ற துறை எவ்வாறு வெவ்வேறு பொருள்கோடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை புறநானூற்றில் உள்ள கடைநிலைப் பாடல்களின் வழியே கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

துணை நின்ற நூல்கள்
1. அரவிந்தன். மு.வை. (2010). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.          

2. ஞானசம்பந்தன். அ.ச. (2007). இலக்கியக் கலை. சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.

3. சிதம்பரம். சி. (2004)  உறந்தைத் தமிழ் வளம். காரைக்குடி: முதல்வன் பதிப்பகம்

4. சுசிலா.எம்.ஏ. (2001). பெண் இலக்கிய வாசிப்பு. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

5. சுப்பிரமணியன். ச.வே. (2013). தொல்காப்பியத் தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.          

6. சோமசுந்தரனார். பொ.வே.(உ.ஆ). (2007). குறுந்தொகை. சென்னை: சைவசித்தாந்தக்கழகம்.

7. மறைமலை அடிகள். (2017). முல்லைப்பாட்டு ஆராய்ச்சி. சென்னை: கெளரா பதிப்பகம்.

8. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ). (2014). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.

9. தென்னவன் வெற்றிச்செல்வன் (க.ஆ). (2021). ”சங்கச்செவ்வியல் மறுவாசிப்பு – பெரியாரை துணைக்கோடல்”. திராவிடப்பொழில் இதழ். அக்டோபர்-திசம்பர் 2021, 45-65.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.சிதம்பரம்., M.A.,M.Phil., Ph.D.,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
,
இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் பள்ளி,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302.
திண்டுக்கல்மாவட்டம்.
முனைவர் சி.சிதம்பரம் அவர்களின் படைப்புகளைக் காண..

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »