Wednesday, June 3, 2026
Home Blog Page 23

நறும்புனல் | சிறுகதை | பழ.பாலசுந்தரம்

நறும்புனல் சிறுகதை பழ.பாலசுந்தரம்
       அனேகமாக, காளிமுத்துவிடம் கடன் வாங்காதவர்கள் யாரும் பாறைப்புதூரில் இல்லை என்றே நம்புகிறேன். ஏதாவது அவசரத் தேவை என்றால் உடனே அவர் வீட்டுக்குத்தான் போவார்கள். எப்போதும் பணப்புழக்கம் உள்ள வெற்றிகரமான விவசாயி அவர். “மாமா” என்றுதான் அவரை அழைப்பேன். முப்போகம் விளையும் அற்புத பூமி அவருடையது. வாழைத்தோப்பும், மாந்தோப்பும் நிறைய தென்னைகளுமாக அவர் தோட்டம் திகழும். அவர் வயலில் விளையும் கிச்சடி சம்பா நெல், பல மாவட்டங்களில் பிரசித்தம். குறிப்பாக சின்ன சேலம் பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் முன்பணம் கொடுத்து உறுதி செய்துவிட்டுப் போவார்கள். அறுவடைக்கு ஒருநாள் முன்பே நாமக்கல்லில் தங்கி, நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டுதான் ஊர் செல்வார்கள். அந்த அரிசிக்கு அதிக விலை கிடைத்ததால் தவறவிடமாட்டார்கள்.
               
     எங்கள் வீட்டிலும் அந்த அரிசியில்தான் சாப்பாடு. வெறும் சோற்றையே கொஞ்சம் உண்பேன். அத்தனை கவையாயிருக்கும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோதுதான் அவருக்குத் திருமணமாயிற்று. தோட்டத்தை ஒட்டிய சாளை வீடுதான் அவர்களுடையது. கூட்டுக் குடும்பம். காலி நிலத்தில் பெரிய பந்தல் போட்டு அங்கேயே விருந்து, தரையில் விரிக்கப்பட்ட பாய்களின் மேல், வேட்டிகளைப் அப்போது பரவிய மணத்தை அனுபவித்து ரசித்தது இன்னும் பரப்பி, வெந்த சாதத்தை வடித்துக் கொட்ட கொட்ட என் நினைவில்.
               
        நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவரிடம் வாங்கிய கடனில்தான், எங்கள் வீட்டில் எல்லா காரியங்களும் நடந்தன. அக்காவின் திருமணத்திற்கு, எழுபத்தேழாம் வருடமே இருபதாயிரம் கடன் வாங்கினார் அப்பா. எங்களுக்கிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த காய்களும் கனிகளுமே கடனை அடைத்தன. என் படிப்புச் செலவுக்கும் கடன்தான் வழி செய்தது.

         காளிமுத்து மாமா ஒரு கொள்கை வைத்திருந்தார். நூறு, இருநூறு என அவரிடம் வாங்கும் சில்லறைக் கைமாத்துகளுக்கு வட்டி வாங்க மாட்டார். ஆயிரமோ அதற்கு அதிகமோ கடன் தந்தால் நூற்றுக்கு ஒரு ரூபாய் வட்டி கணக்கிட்டு வசூல் செய்துவிடுவார். வசதி குறைந்த சாமானியர்களுக்கு சிறு சலுகையும் தருவார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கம் கணக்கு எழுதி வைப்பதுதான். கெட்டி அட்டை போட்ட பேரேடு வைத்திருப்பார். தேதி வாரியாக, ஆள்வாரியாக வரவு செலவு எழுதி வைத்துக் கொள்வார். வட்டி கணக்கில் ஒரு ரூபாய் கூட வித்தியாசம் காண முடியாது. ஆறடி உயரமும், அதற்கேற்ற உருவமும், அடர்ந்த மீசையும், தெளிந்த பார்வையும் அவர் மேல் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தின.
               
      ஊரில் வேறு சிலரும் அவர் பாணியில் லேவாதேவியில் இறங்கினர். ஆனால், தொழில் தொடர்ச்சி பெரும் கேள்விக்குறியானது. கெடுபிடி செய்யவும் முடியாமல், தணிந்து போகவும் மனமில்லாமல் பணம் கடன் கொடுப்பதை நிறுத்தனர். மாமாவிற்கு விவசாய வருமானம் அபரிமிதமாக வந்ததால்தான் தொடர்ந்து வட்டித் தொழிலை லாபகரமாக நடத்த முடிந்தது. விவசாயம் செழிக்க அவர் நிலத்திலிருந்த கிணறு மிக முக்கியக்காரணம்.
               
      எங்கள் ஊரில் கிணறுகள் அளவில் பெரியவை. வெளியூர்வாசிகள் அதைப் பார்த்து மிரண்டு நிற்பார்கள். அறுபதடிக்கு முப்பதடி என்பது சாதாரண அளவு அதைவிட பெரிய கிணறுகளும் சில இருந்தன. ஊர் சிறுவர்கள் நீச்சல் பழகவும், தேர்ந்த பின்னர் விளையாடித் திளைக்கவும் அவையே நீர்க்களங்கள்.
 
              காளிமுத்து மாமாவின் கிணற்றில் இறங்க யாருக்கும் அனுமதியில்லை. படிக்கட்டுகள் துவங்கும் இடத்தில் முள்படல் ஒன்று கட்டப்பட்டிருக்கும். எளிதாக நகர்த்திவிடலாம். ஆனால் அது இரும்புக் கதவை விட வலிமையாயக் கருதப்பட்டது. குடிநீர் தரும் கிணற்றில் இறங்க, குளிக்க எப்படி அனுமதிப்பார்கள்? அந்தக் கிணற்று நீரின் சுவை, இன்று வரை வேறெங்கும் நான் அனுபவித்தறியாதது. அதுவும் கோடையில், பானையில் குளிர்ந்து கிடக்கும் அந்நீரைப் பருகினால், பழரசத்திற்கு இணையான இனிப்பை உணரலாம். அப்பா சொல்வார் “தேனூத்துடா அது… அப்பிடி அமையறது சாதாரணமில்ல. ரொம்ப அபூர்வம். மண்ணுவாகு, நீரோட்டம், ஆழம் இப்படி பலது ஒண்ணா சேரணும். அம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்தக் கெணத்த வெட்டுனவங்களோட நல்ல மனசும் ஒரு காரணம்.”
               
          எங்கள் ஊருக்கு ஒரே குடிநீர் ஆதாரம், அவர் தோட்டத்து நீர்த்தொட்டிதான். சுமார் பத்தடி உயரத்திற்கு இருந்த அது மேலே மூடப்பட்டிருக்கும். பதிக்கப்பட்டிருக்கும் குழாய் வழியே நீர் உள்ளே விழுவது வெளியே தெரியாது. சத்தம் மட்டும் கேட்கும். தரையிலிருந்து சுமார் இரண்டடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று குழாய்கள் நீரை வெளியே பீச்சிக்கொண்டே இருக்க, பித்தளை மற்றும் தகரக் குடங்கள் வரிசை கட்டி நின்று நிரம்பும். எல்லா வீடுகளிலிருந்தும் காலை, மாலை நேரங்களில் ஆண்களும் பெண்களுமாக அங்கு நீர் பிடித்துச் செல்ல வருவதால் அது ஒரு சந்திப்பு மையமாகவும் உருக்கொண்டது. அலசப்படாத செய்திகளே இல்லை என்னுமளவுக்கு அங்கு வருபவர்கள் அனைத்தையும் பேசித் தீர்ப்பர். நானும் என் பத்தாவது வயதிலிருந்து, கல்லூரியில் இரண்டாமாண்டு முடிக்கும் வரை நீர் எடுத்து வர தினசரி செல்வேன். தேர்வு காலங்களில் மாலை நேரங்களில் போவேன் ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் நீர் பிடித்துச் செல்ல வருவதால் எப்போதும் பெண்கள் முன்னுரிமை பெறுவர். “அக்கா பாவம் விடுங்கடா பித்தள அண்டாவத் தூக்கிட்டு எவ்ளோ தூரம் போவுணும் மொதல்ல அதப் புடிக்க விடுங்கடா” என்ற கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிந்தே தீரவேண்டும்.
               
        சில திருமணங்களுக்கும் அவ்விடம் புரிந்திருக்கிறது. முத்துசாமியும், சரோஜாவும் அங்குதான் தங்கள் விழைவுகளைப் பகிர்ந்து கொண்டு தத்தமது வீடுகளில் சம்மதம் பெற்று தம்பதியானார்கள். எல்லா காலகட்டங்களிலும் இணைப்பறவைகள் உலவும் தலமாக அவ்விடம் விளங்கியிருக்கிறது.

          நான் மூன்றாமாண்டு பட்டப்படிப்பில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோகனூரிலிருந்து ஊருக்கு பெரிய குழாய்கள் மூலம் காவேரி நீர் வரத்தொடங்கியது. நாமக்கல் மலையில் இடுப்பில் கட்டப்பட்டிருந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து பல ஊர்களுக்கும் நீர் பகிரப்பட்டது. ஊரில் மூன்று முக்கிய இடங்களில் பொதுக் குழாய்கள் நிறுவப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் தரப்படவே பெரும்பாலான வீடுகளில் காவேரி பாயத் தொடங்கினாள். அப்போதும்கூட கிணற்று நீரின் சுவைக்குப் பழகிய பலரும் தொட்டிக்கு வந்தே குடிநீர் எடுத்துச் சென்றனர். எங்கள் வீட்டிற்கும் குழாய் இணைப்பு கிடைத்தது. நான் தொட்டிக்குச் சென்று வருவதைக் குறைத்துவிட்டேன்.
               
      படிப்பு முடிந்து இரண்டே மாதங்களில், அப்பாவின் நண்பர் உதவியால் சென்னையில் வேலை கிடைத்தது. கிராமத்தைப் பிரிந்து, மாநகரப் பரபரப்பில் தத்தளிக்கத் துவங்கியிருந்தேன். மாதம் ஒரு முறை ஊர் வருவதே சிரமமாயிற்று. தனியார் நிறுவனம் என்பதால் சனிக்கிழமை அலுவலகம் இயங்கியது. சில சமயம் ஞாயிறுகளில் கூட அரை நாள் சென்று பணியாற்றித் திரும்புவேன்.

                ஆற்றுநீர் எங்கள் ஊருக்கு வர ஆரம்பித்ததும், புதிதாக மக்கள் குடி வர ஆரம்பித்தார்கள். வீடு கட்டி வாடகைக்கு  விடுவது பெருமளவில் நடக்க ஆரம்பித்தது. கல்லூரியில் என்னுடன் படித்த தென்னரசு பக்கத்து வீதியில் உள்ள ஒரு புது வீட்டிற்கு குடிவந்தான் அவன் பெற்றோர் இருவருமே அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள், அவன் தேடிக் கொண்டிருந்தான்.

                சென்னையில் நான்காண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தபோது, என் ஊருக்கும் எனக்குமான பிணைப்பில் ஓர் இடைவெளியை உணர்ந்தேன். மாரியம்மன் பண்டிகையும், பொங்கல் விளையாட்டுப் போட்டிகளும் நானின்றியே நடைபெற்றன. இளைஞர் மன்றத்தினர் என்னை மெதுவாக மறக்கத் தொடங்கியிருந்தனர். எப்போதாவது ஊர் வரும்போது பழைய நண்பர்களுள் ஓரிருவரை சந்திப்பதோடு சரி. அவர்களும்  என்னை “மெட்ராஸ்காரன்” என குறிப்பிடத் துவங்கினர். அறிமுகமில்லாத புதிய இளைஞர்கள் நிறைய காணக் கிடைத்தனர். பள்ளியில் என்னோடு படித்த சிலருக்குத் திருமணம் ஆனது. சேகர் திருமணத்திற்கு மட்டும் வந்து சென்றேன். அது நடந்தது ஞாயிற்றுகிழமை என்பதால்,
               
         ஏப்ரல் மாதம், தமிழ் வருடப்பிறப்போடு வங்கி விடுமுறை நாளொன்றும் சேர்ந்து கொண்டதால் ஞாயிறோடு திங்கள் செவ்வாயும் விடுமுறை கிடைத்தது. சனி இரவே புறப்பட்டு பாறைப்புதூர் வந்தேன். காலையில் தாமதமாய் எழுந்து தயாரானேன். ஊரை ஒருமுறை வலம் வரும் ஆவல் எழுந்தது. நிதானமாய் நடக்க ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்குப் பின் கட்டியிருந்த வேட்டி அவ்வப்போது தடுக்கியது. பல புதிய வீடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. கண்ணாடிக் கதவுகளோடு, அபாயகரமான சிவப்பு நிறத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் தென்பட்டன. கருந்திரவம் நிரப்பப்பட்ட புட்டிகள் உள்ளே தெரிந்தன. தெருக்களின் நீளம் அதிகமாயிருந்தது. முதிர்ந்த மரங்கள் பலவற்றைக் காண முடியவில்லை. மழுப்பப்பட்ட கண்ணாடிச் சுவரோடு நகரின் முகம், மெல்ல மெல்ல எங்கள் ஊருக்கு வந்து தீப்தி அழகு நிலையம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
               
          தெரு முனையில் திடீரெனத் தெரிந்த தென்னரசு வேகமாக என்னை நெருங்கினான். மகிழ்வோடு கை நீட்டினேன். “எப்பிடி இருக்க அரசு…?” “நல்லாயிருக்கேன் மணி… இப்பதான் உங்க வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன். உங்கம்மாதான் நீ வெளீல போ யிருக்கறதா சொன்னாங்க.. ரெண்டு தெரு சுத்தி உன்னப் பாத்திருக்கேன் இப்ப” மூச்சு வாங்கியது அவனுக்கு. “அப்பிடியா…நா வந்திருக்கறது, உனக்கெப்படித் தெரியும்?” “எல்லாம் தெரியும்… மணி எனக்கொரு ஹெல்ப் பண்ணுடா”

                “என்ன ஹெல்ப்டா? சொல்லு” என் கேள்விக்கு பதில் சொல்ல முனைகையிலேயே தென்னரசுவின் கண்கள் லேசாகக் கலங்கின. கடையின் நிழலுக்கு அவனை வரச் செய்தேன்.

                “என்னாச்சு அரசு? ஏன் பதட்டமா இருக்க?”
               
      “அப்பாவுக்கு வயித்துல கொஞ்சம் பிரச்சினடா… போன வாரம் கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தோம். கண்டிப்பா ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க… செவ்வாக்கிழம அட்மிட் பண்ணனும். ஓரளவு பணம் ரெடி பண்ணீட்டோம். இருந்தாலும் இன்னொரு இருபதா யிரம் தேத்தீட்டா தைரியமா நாலு நாளு அங்கேயே தங்கி பாத்துட்டு வந்தர்லாம்…”

                “புரியுதுடா… நா போன வாரந்தான் எப்டியில பணம் போட்டேன். இப்ப எடுக்க முடியாதே…?

              “பரவாய்லடா…நீ தருவேன்னு நா கேக்குலடா…உனக்கு காளிமுத்து நல்ல பழக்கந்தான? அவருகிட்ட கேட்டு வாங்கித் தாடா…அப்பா மறுபடி ஆபீஸ் போக ஆரம்பிச்ச உடனே வட்டியோட திருப்பிக் குடுத்தர்லாம்… பிளீஸ்”
                “சரி சரி வா…” அவன் கையைப் பற்றிக் கொண்டேன். அமைதியின்மையை அவன் உடல் சொல்லிற்று.
               
        காளிமுத்து, இரண்டாண்டுகளுக்கு முன் புதிய வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டதை ஏற்கனவே அறிந்திருந்தேன். ட்டிலிருந்த அழைப்பிதழ் மூலம் அது தெரிந்தது. எங்கள் வீட்டுப் புதுமனை புகுவிழாவிற்கு அப்பா சென்று வந்ததாய் சொன்னார். புது வீடு, அடுத்த தெருவின் கடைசியில், அசத்தும் விதமாக அமைந்திருந்தது. கோடம்பாக்கத்தில் ஒரு பிரபலரின் பங்களா என் நினைவுக்கு வந்தது. நாங்கள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன் முற்றத்தில் போடப்பட்டிருந்த சொகுசு இருக்கை என்னை இதமாக உள்வாங்கிக் கொண்டது. தரையின் வழுக்கலும், குளிர்ச்சியும் எங்கள் ஊருக்குப் புதிது. சுவரில் பொருத்தியிருந்த நவீன பாணி படங்களை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காளிமுத்து உள்ளிருந்து வந்தார். எழப்போன என்னைக் கையமர்த்தி்”வாங்க தம்பி சௌக்கியமா?” என்றார். தென்னரசுக்கு ஒரு புன்னகையும் தலையசைப்பும் வரவேற்பாய்க் கிடைத்தது.
               
         “ம்… நல்லாருக்கேன் மாமா… நீங்க எப்படி இருக்கீங்க?”
”நல்லாருக்கம்ப்பா..மெட்ராஸ்லருந்து எப்ப வந்த? அடிக்கடி பார்க்க முடியறதில்லியே… வருஷக் கணக்காவுது”

           “ஆமாங்… மாமா… லீவு கெடைக்கறதில்ல… விடியக்காலந்தான் வந்தேன்…” தொண்டையை செருமிக் கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தால் பரவாயில்லை என்று நினைத்தபோதே ஒரு சிறுமி இரு குவளைகளில் நீரோடு வந்தாள். “குடிங்க தம்பி” என்ற காளிமுத்துவின் குரலில் உற்சாகம் வடிந்திருந்தது. ஆவலோடு, மழை நீரில் தேன் கலந்த சுவையை எதிர்பார்த்து நீரை வாங்கி உள்ளே சரித்தபோது ருசியில் வித்தியாசம் உணர்ந்தேன். “நம்ப கெணத்து தண்ணி மாதிரி தெரியலியே” என்று இழுத்தேன். அடப் போங்க தம்பி… அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முந்தி… கெணத்து தண்ணி உப்பா ஆயிருச்சு… வாயில  வெக்க முடியாது இப்ப… நாங்களே கேன் தண்ணிதான் வாங்கறோம்”
 அவர் குரலில் சொட்டிய சலிப்பும், வருத்தமும் என்னை அதிர வைத்தது.
“ஏங்க மாமா… என்னாச்சு?” என்றேன். கம்மிய குரலில் ஒரு பெருமூச்சு வெளிவந்தது அவரிடமிருந்து.

    “பக்கத்து தோட்டத்துல ரெண்டு எடத்துல போர் வெல் போட்டாங்க. அதுலருந்தே எல்லாம் மாறிப்போச்சு.. நம்ப கெணத்துல தண்ணி கீழ போயிருச்சு… மோட்டரையும் எறக்கி வெச்சாச்சு… ஏதோ வெவசாயம் ஓடிக்கிட்டு இருக்குது… எல்லாம் போதும்னு விட்டுட்டேன் தம்பி…”

சில நிமிடங்களுக்கு நிசப்தம் கனத்தது. அவரே சுதாரித்துக் கொண்டு உடைத்தார்.

“ஆமா.. என்ன விஷயமா வந்திருக்கீங்க?” “இந்தத் தம்பி வேற வந்திருக்காப்ல…”

‘ஆமாங் மாமா… இவனுக்காகத்தான் வந்தேன். கொஞ்சம் பணம் வேனும்னு சொன்னான். ஒரு இருபதாயிரம்…’

       நான் இகழ்ச்சியான சிரிப்பு வெளிப்பட்டது அவரிடமிருந்து. நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். தவிப்போடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தென்னரசுவின் கையில் காலிக்குவளை ஆடிக் கொண்டிருந்தது தெரிந்தது. “பணமா… எங்கிட்ட ஏதுப்பா? எல்லாம் வறண்டு போச்சு… அந்த காலத்துல சம்பாதித்த வெச்சி இந்த வீட்ட கட்டி முடித்தேன்… இல்லேன்னா இதுக்கும் வழியில்லாமப் போயிருக்கும். குடுக்கல் வாங்கல் எல்லாம் நின்னு போயி ஒரு வருஷம் ஆச்சு. கொஞ்சம் வெளிய பாக்கி நிக்கறத வசூல் பண்ணிட்டன்னா போதும்”
               
       “அப்படியா…ஒரு அவசரம்.. இவங்கப்பாவுக்கு ரெண்டு நாள்ல ஆப்பரேஷன்… கோயமுத்தூர் போவணும்… அதாங் மாமா தயங்கி நிறுத்தினேன். மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது அவருக்கு நேராக என் கண்களைப் பார்த்தார். “உண்மையை சொல்லட்டுமா, நானே காஞ்சு போயி கெடக்கறேன் தம்பி. நீங்க வேறெங்கியாவது முயற்சி பண்ணுங்க…” மேலே பேச எனக்கு இடமிருப்பதாகத் தோன்றவில்லை. மெதுவாக எழுந்து கொண்டேன்.
          
      “நல்லதுங் மாமா… நா கௌம்பறேன்” என்று சொல்லிவிட்டு தென்னரசு பக்கம் திரும்பினேன். தலைகுனிந்தபடி வேட்டியை சரி செய்து கொண்டிருந்தான். இருவரும் வெளியே வந்தோம். தெருவில் இறங்கி சிறிது தூரம் நடக்கும் வரை எனக்கு பேச்சு வரவில்லை. ஏதோ அடைத்துக் கொண்டது போல் உணர்வு தென்னரசு மெல்லத் தேறியவனாய்ச் சொன்னான். “அம்மாவுது தாலிக்கொடி இருக்குடா… அத அடகு வெச்சு பணம் ஏற்பாடு பண்ண வேண்டியதுதான். வேற வழியில்ல… அதுல கை வைக்க வேண்டாம்னு பாத்தேன்.. ப்ச என்ன பண்றது? இவருதான் இல்லேன்னுட்டாரே”
               
          “ஆமாடா… இருந்தா கண்டிப்பா குடுத்துருப்பாரு… வருத்தப்படாத… எல்லாம் நல்லா நடக்கும்.” மீண்டும் மௌனமே தொடர அசௌகர்யமாய் உணர்ந்தேன். கிணறு பற்றிய நினைவுகள் மனதில் ஊற்றாய்ப் பொங்கின. இருபது வயது வரை என்னை வளர்த்ததில் இரண்டாவது தாயாக விளங்கிய அது, கரிப்பு நீரை சுரப்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. தாய்ப்பால் அருந்தி உப்பை உணரும் குழந்தை முகம் சுளிப்பது போன்ற அவல நிலை எனக்கு. நாக்கில் கசப்பு படர்ந்தது. கண்களில் தேங்கிய நீரை சுண்டிவிட்டேன். காளிமுத்து மாமாவின் தோட்டம் இருந்த திசை நோக்கித் தலை திருப்பினேன். பாதை தெளிவற்று கலங்கித் தெரிந்தது; பார்வையிலிருந்து மறைந்தது.

சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர் – 635 109
பழ.பாலசுந்தரம் படைப்புகளைக் காண…

 

 

இருளின் வெளிச்சம்|முனைவர் நா.சாரதாமணி| நூல் வெளியீட்டு விழா

இருளின் வெளிச்சம்-நா.சாரதாமணி-நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு விழா

irulin velicham - invitation

நூல் தலைப்பு

இருளின் வெளிச்சம்

நாள்
23.05.2024. வியாழக்கிழமை
ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி

உதவிப் பேராசிரியர் & எழுத்தாளர்

தமிழ்த்துறை

எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை

நூல் வெளியிடுவோர்
முனைவர் கோ.பாக்கியலட்சுமி
பொறுப்பு முதல்வர்
கணிதவியல் துறை

 
நூலைப் பெற்றுக் கொள்பவர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பே. ஜாய்சுகன்யா அவர்கள் அருகில் நூல் ஆசிரியர்: முனைவர் நா. சாரதா மணி அவர்களும் உள்ளனர்

நூல் பெற்றுக் கொள்பவர்கள்
முனைவர் பே. ஜாய்சுகன்யா

துணை முதல்வர்

வணிகவியல் துறை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பேரூர், கோவை

முனைவர் வே. சசிக்குமார்
தமிழ்த்துறைத்தலைவர்
மற்றும்
துறைத் தலைவர்கள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பேரூர், கோவை

பதிப்பகம்

மின் கவி

கோபிசெட்டிபாளையம்

ஈரோடு மாவட்டம் – 638 452
ISBN : 978 – 93 – 94743 – 00 – 7
Rs.190.00
First Edition: June – 2022
Second Edition: May – 2024

அணிந்துரை

அன்பர்களுக்கு வணக்கம்.
               
இந்நூலை உருவாக்கியவர் முனைவர் நா.சாரதாமணி ஆவார்.  நான் கிங் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோது என்னுடன் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் வகுப்பின் கடைசி மணித்துளிவரை கற்பிக்கும் கடமை தவறாதவர். “இருளின் வெளிச்சம்” என்ற இந்நூல் ஒரு கருத்துப்பெட்டகம்.  விலைமதிப்பற்றதும் அனைவரும் அறியவேண்டிய அரியக்கருத்துகள் நிறைந்ததும் ஆகும்.
               
அப்பெட்டகத்திலிருந்து சில வைரங்களை, வைடூரியங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மனிதன் என்பவன் தவறு செய்பவன். ஆனால் அந்தத் தவறை திருத்திக் கொள்பவனே மாமனிதன். வாழ்வின் நிலைமை உயர உயர தலைகனம் கூடாது. பணிவு வேண்டும் என்ற உயரிய பண்பு, ஒரு கசப்பு மருந்து என்றாலும் நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. நம்மைவிட எளிய நிலையில் உள்ளவரை எள்ளி நகையாடுதல் என்ற உணர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இன்றுவரை நடந்ததெல்லாம் நாளை மாறலாம். இன்றைய போட்டி நிறைந்த சமூகத்தில் வலியின்றி எதையும் பெற இயலாது. எனவே தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாக்க வேண்டும். ஏமாற்றவும் கூடாது, ஏமாறவும் கூடாது போன்ற வாழ்வியல்  தத்துவம் அனைத்து வயதினரும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு சீரிய அறிவுரை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதுதான் நாம் வாழ்வதற்கு அர்த்தம் (பொருள்) என்ற எண்ணம் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
               
அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்ற ஆணித்தரமான கருத்து நம்மனதில் பதியப்பட வேண்டிய ஒன்று. 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை எளிதில் புரியவைத்தமைக்கு ஆசிரியர்க்கு என் பாராட்டுகளும் நன்றிகளும் சமர்ப்பிக்கப்படுகிறது. உங்களது புதுமைப் பயணம் நீண்டகாலம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.
P.S.முத்து  (Rtd),

முதல்வர்,

அரசினர்  ஆண்கள் கலைக் கல்லூரி,
நாமக்கல்.


வாழ்த்துரை

“இனிய உளவாக இன்னாது கூறல்
              கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
               
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க நல்லவையை மட்டும் எடுத்துக்கொள்வோம். தீயவையைத் தீயிலிட்டுக் கொளுத்துவோம். நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் என்பது விசித்திரமானது. எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். அதனை செயலாற்றவும் செய்யலாம். இன்றைய காலக்கட்டத்தில் குதிரைபோல் காலத்தை புறந்தள்ளிக் கொண்டு ஓடும் மக்களைப் பார்த்து வியந்து போகிறது இவ்வுலகம். அவர்களுக்காகவே கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி ஒரு நிமிடம் என்னை படித்துவிட்டுப் போ என்று சொல்லுகின்ற மாதிரி தேவாமிர்தமாய் உள்ளது இந்நூலாகிய இருளின் வெளிச்சம்.

🎯 “யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன”

🎯 “அன்பு கூட அளவுடன் இருந்தால் மட்டுமே அதற்கு  மதிப்பு”

🎯 “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன”

🎯 “கஷ்டங்கள் மனதையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகின்றன”

🎯 “ஏழைகள் வறுமையில் இருந்து மீளவில்லை”

🎯 “ஏமாற்றுவதை விட தோல்வி அடைவது மிகமிக கௌரவமானது”
   

             போன்ற வாசகங்கள் வாழ்வை வெறுத்து ஒதுக்கும் மனிதனையும் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டுவனதாக உள்ளன. இந்நூலில், ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கும் தலைப்புகளும் அவற்றின்கீழ் கொடுக்கும் உட்தலைப்புகளுமே தோற்றவனுக்கு தோள் கொடுத்த மாதிரி ஆசிரியர் அழகாய் வடித்துள்ளார்.  ஒவ்வொரு தலைப்புகளிலும் ஆங்காங்கு நிறைய கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் மூலம் மனிதர்களின் நன்னடத்தையினைச் சுட்டிக்காட்ட தவறவில்லை ஆசிரியர்.  இந்நூல் முழுக்க முழுக்க அறத்தைப் பற்றி வலியுறுத்துவதால் ஒரு பக்கம் சோர்வாகச் சென்றாலும் உடனே அடுத்தப்பக்கம் அதனை தூக்கிச் சாாப்பிடும் அளவிற்கு ஏதாவது ஒரு புதிய நிகழ்வினை அறிமுகப்படுத்தி வாசகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். திருக்குறள், நாலடியார் போன்று ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.  இந்நூலாசிரியராகிய முனைவர் நா.சாரதாமணி அவர்களுக்கு பாராட்டுகள் நிறைந்த வாழ்த்துகள்.

முனைவர் க.லெனின்
முதன்மை ஆசிரியர்,
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.
முனைவர் நா. சாரதாமணி எழுத்தாளர் அவர்கள் தமது நூலின் தோற்றம் பற்றி முன்னுரையில் பேசினார்

முன்னுரை
               

இந்த நூலின் தோற்றத்திற்குக் காரணம் இப்புவியில் குழந்தைகளாகப் பிறக்கும் மனிதர்கள் தம் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். குற்றங்களின் வழியில் செல்லாமல் நல்வழியில் சென்று சாதனைகள் புரிய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மற்றவருடன் ஒப்பிட முடியாத ஒரு தோற்றம்தான். எனவே அவர்களின் உன்னதமான தோற்றத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
       மனிதர்கள் இடர்பாடுகளை மேற்கொண்டுதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. செல்வம் படைத்த சில இளைஞர்கள் அதிகார தோரணையில் தம் பலத்தைக் காட்ட பல ஆபத்துகளை மேற்கொண்டு அவதிப்படுகின்றனர். நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு பல தீயப் பழக்கங்களை மேற்கொண்டு அழகாக மாற்ற வேண்டிய வாழ்க்கையை அறுவறுப்பாக்கி தன்னை வெறுத்து  ஒதுக்கும் அளவிற்குச் சென்று விடுகின்றனர்.
              
நல்ல செயல்களுக்காகத் தன் கம்பீரமான வாழ்க்கைக்காகத் துணிந்து செயல்படலாம். அது எல்லோருக்கும் நன்மைகளை மட்டுமே உண்டாக்கும். தீயவற்றை செய்வதில் இருக்கும் ஆபத்துகளைவிட நேர்மையானவற்றை செய்வதற்கு உண்டாகும் இடர்பாடுகள் குறைவுதான்.
               
“இருளின் வெளிச்சம்” என்ற இந்த நூலில் பல தலைப்புகளும் அவற்றுக்கான உள்தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கான கல்வி,நேர்மை, மௌனம் சாதிக்க கற்றுக் கொள்ளுங்கள், உன் தேசத்தை மாற்றுவது எப்போது?, ஆளுமை தன்மை, உலகை மாற்றிய சிந்தனைகள், ஒருங்கிணைந்த மனத்தின் ஆற்றல், முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை, தலைமைப் பண்பு, நிறைவான மனம் கலங்குவதில்லை, தன்னிடம் உள்ளவற்றை உணர வேண்டும், ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு உள்ளவர்களே சுதந்திரமானவர்கள் போன்ற தலைப்புகளில் இளைஞர்களுக்கான பல அரிய அனுபவங்கள், கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் செய்வதற்கு உறுதுணையாக இருந்த நண்பர் திரு சிவா, கணிதத்துறை, உதவிப் பேராசிரியர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
                 
பல மனிதர்களால் ஏற்படும் இடர்பாடுகளை தூசியைத் தட்டிவிட்டு செல்லும் காற்றைப்போல கடந்துசெல்ல என்னை தயார் செய்த என் கணவருக்கும் நல்ல சிந்தனைகளோடு விளங்கும் என் மகன் நித்திஷ் அவருக்கும் எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் எனது தாயாருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
 
              இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் திரு பி.எஸ் முத்து ஐயா அவர்களுக்கும் வாழ்த்துரை தந்த இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழின் முதன்மை ஆசிரியர் முனைவர் க. லெனின் அவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்த எனது நெறியாளர் முனைவர்.இரா. கலைச்செல்வி அம்மையார் அவர்களுக்கும் என் கரங்கள் கூப்பும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எனது இளங்கலையில் கற்றுக்கொடுத்த தேன்மொழி அம்மையார் அவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன் .
               
மேலும், இந்நூலை நன்முறையில் ஆக்கித் தந்த மின் கவி பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முனைவர் நா.சாரதாமணி

பொருளடக்கம் 

1. இளைஞர்களுக்கு கல்வி தரும் இயல்பு                    
 
தற்போதைய கல்வி – கல்வி பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகள் – இயந்திரமான கல்வி – மாற்றப்பட வேண்டியவை.

2. நேர்மை                                                                                         

நொடிகளை வென்ற காளமேகம் நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள் – பிள்ளைகளின் நேர்மை – உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் சரிவும்.

3. உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் இழப்பும்         
சூழ்ச்சி செய்யும் உறவினர்கள் – கூனியின் பேச்சு – சதா பாராட்டுபவர் அருகில் வேண்டாம் – வாழ்க்கையின் இன்னொரு பெயர் போராட்டம் – மனித வாழ்க்கை சுகமானது அல்ல

4. மௌனம் சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்                  
பணிவு உயர்வானது – பிடிவாதமான மௌனத்தால் மாறியே அரசியல் சட்டம் – மௌனம் என்பது பலம் – மௌனமாய் இருக்கும் நேரம் – உன் தேசத்தை மாற்றுவது எப்போது

5. உன் தேசத்தை மாற்றுவது எப்போது?                       
தியாகம் செய்யுங்கள் – தலைவனின் கடமை தியாகம் செய்வதே – குருதியை உறிஞ்சும்  மரஅட்டைகள் – குடிசை அல்ல இது தேசம்

6. உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள்            

நல்லதோர் வீணை  – தன் உயிரை தானமாக வேண்டுதல் வைத்த இளைஞர் – தந்தையை தெருவில் விட்டு அவலம் – குழந்தைகளின் ஏழ்மை நிலை – ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே – சுயநலம் சாதிப்பது என்ன

7. எல்லாவற்றையும் தாங்கு                                                    
கோவிலின் கோபுரம் அதிகமாக வணங்கப்படும் – பொறுமையும் களிமண்ணும் – மற்றவரிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் – வசைபாடும் நபர்களுக்ககே அவர்களின் சொற்களும் சொந்தம்

8. வேண்டாத குணங்களின் ஆதிக்கம்                             
 
செருக்கு – கோபம்  – நான் படித்த ராமாயண நிகழ்வு – மோகம் – தேவையற்றவை

9.நமக்கென்ன என்ற மெத்தனம்                                         

மத்திஸ்ய நியாயம் – சுந்தோப சுந்த நியாயம் – அன்பு ஒரு மகத்தானது- பரிவு என்பது அடிப்படை

10. ஆளுமைத் தன்மை                                                               

திறமையும் வெற்றியும் – நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடு –  உலகத்திடம் ஒரு வேண்டுகோள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள்  இந்த விழாவில் கலந்து கொண்டனர்
11. சவாலும் சந்தோசமும்                                        
நேர்மையான பூதம் – வீரம் என்பது யாவருக்கும் உரித்தானது –  தியாகம் செய்பவர்கள் வீரம் மிக்கவர்கள் – மாற்ற வேண்டிய நிலை

12. உலகை மாற்றிய சிந்தனைகள்                                       
வாழ்வில் ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம் – திட்டமிடல் என்பது விதியை மாற்றும் – மாற்றி சிந்தனை செய்யுங்கள்

13. ஒருங்கிணைந்த மனமும் ஆற்றலும்                           
வரலாற்றை மாற்றிய சிந்தனைகள் – சாதனை படைக்கும் செயல்முறைகள் – நம்புங்கள் – பெறுங்கள்

14. முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை         

தடைகளைத் தாண்டுவதற்காகவே வாழ்க்கை  – தன் புத்தி கூர்மையால் தாயை மீட்ட மகன் – யாராலும் எதையும் செய்யமுடியும் முழு ஈடுபாடு இருந்தால்

15. இயங்கிக்கொண்டே இருப்பது தான் இளமை     

தன் மனதை உற்சாகப்படுத்தி இயங்குபவனே மனிதன் – படித்தால் அறிவு வராது – ஆசிரியரை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் – கண்டிக்க தெரியாதவனுக்கு கருணை காட்டும் தெரியாது

16. குற்றங்களை சுமக்காதீர்கள்                                            

போராட தயாராகும் மனம் – பயன் கருதி பரிசுக்காக செய்யாதீர் – எதையும் நேர்மையாக சிந்தனை செய்யுங்கள்

17. தலைமைப்பண்பு                                                                  
அடங்கிய மனத்தின்   வல்லமை – விஸ்வரூபம்  எடுங்கள் – பேச்சு திறமை என்பது சிலருக்கு மட்டுமே உரித்தானது – உழைப்பு உயர்ந்தது
18. நிறைவான மனம் கலங்குவதில்லை                           
கஷ்டங்களும் சுகமானவையே – எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா – இருளான எண்ணங்களால் வாழ்க்கையை தொலைக்காதீர் – ஒரு அடி ஒரு நொடி உங்கள் வாழ்க்கையை மாற்றலாம் – சவால்கள் இல்லாத சாதனைகள் இல்லை

19. தன்னிடமுள்ளவற்றை உணர வேண்டும்                

வெற்றி கிடைப்பது எளிது அல்ல – வெற்றிபெற்ற மனிதர்களிடம் அடிப்படையான பண்புகள் உள்ளன – உங்கள் முன்னேற்றத்திற்கு உங்களை சுற்றியுள்ளவர்களும் ஒரு காரணமே – மனதில் மனிதர்களாக விளங்குபவர் உயர்வானவர்கள்

20. ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு  உள்ளவர்களே சுதந்திரமானவர்கள்                                               
ஒரு மனிதனை செயல்படத் தூண்டும் விடயங்கள் – நீதியற்ற ஒப்புமைகள் செய்யாதீர்கள் – மகிழ்ச்சி தரும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்

 

முனைவர் நா.சாரதாமணி » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

நேர்காணல் என்றால் என்ன?|நேர்காணல்-விளக்கம்|நேர்காணலின் வகைகள்

நேர்காணல் என்றால் என்ன - நேர்காணலின் வகைகள்
‘கற்றலின் கேட்டலே நன்று’! ஒரு புத்தகத்தைப் படிப்பதை விடவும் ஓர் அரைமணிநேர நேர்காணல் பலநூறு செய்திகளை நம் மனதில் பதிய வைத்துவிடும். இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களில் நேர்காணல் என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. பேட்டி ஒரு கலை. அதற்கு அறிவும் அனுபவமும் வேண்டும்’ என்று ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகின்றார். நேர்காணும் கலையாக விளங்குகின்ற பேட்டி என்பது ஒரு நெகிழ்வான முறையாகும்.

நேர்காணல்-விளக்கமும்
ஒருவரோடு தொடர்பு கொண்டு நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம் வாயிலாகவோ விவரங்களைக் கேட்டு அறிவதைப் பேட்டி அல்லது நேர்காணல் என்கிறோம். இருவரோ சிலரோ பலரோ கூடி உரையாடுவது பேட்டியாகாது. பேட்டியில் கேட்கப் பெறுகின்ற, கேள்விகள் தகவல்களைப் பெறுவதற்காகக் கேட்கப் பெறுபவை, இத்தகைய நேர்காணல் இயல்பாக, இறுக்கமற்ற சூழலில் அமைய வேண்டும். கட்டுப்பாடோ, நெருக்கடியோ அச்சுறுத்தலோ நேர்காணலில் இருக்கக் கூடாது.
நோக்கம்

ஒவ்வொரு நேர்காணலும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு நடத்தப் பெறுகின்றது. பொதுவாக நேர்காணல் அடிப்படையாகக் கொண்டு அமையலாம். பின்வரும் நோக்கங்களை
1.நடப்பு நிகழ்ச்சிகளை அறிய
2.நிகழ்ச்சியின் விவரங்களை வெளிக்கொணர
3. பிறரது கருத்தை, கண்ணோட்டத்தை வெளிப்படுத்த
என நேர்காணல் அமையும்.

நேர்காணலின் வகைகள்
நேர்காணல் என்பது அதனை நடத்துகின்றவரின் திறமையையும் அணுகுமுறையையும் ஒட்டிப் பலவகைகளாக அமைகின்றன.

1.பேட்டி காண்பவர் கூச்சம், அச்சம் கொள்ளக் கூடாது.

2.முன்பாகவே பேட்டி தருபவரிடம் இடம், நேரம் ஆகியனவற்றை உறுதி செய்து கொண்டபின் பேட்டிக்குச் செல்ல வேண்டும்.

3.கேட்கப்பட வேண்டிய வினாக்களை முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டும்.

பேட்டி பலவகைப்படும். அவற்றுள் முக்கியமானவை:
1.ஆளுமை விளக்கப் பேட்டி
வியத்தகு சாதனைகள் செய்தவரையோ புகழ்பெற்ற ஒருவரையோ அவரது ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் பேட்டி காண்பது இவ்வகையாகும். முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றவர்களின் பேட்டி இவ்வகையைச் சார்ந்ததாகும்.

2. செய்திப் பேட்டி
செய்தியைப் பெறும் நோக்கில், செய்தி தரும் ஒருவரைப் பேட்டி காண்பது செய்திப் பேட்டியாகும். இதில் செய்தியினைப் பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும். அதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகள் பேட்டியில் கேட்கப்படும்.

3.தொலைபேசிப் பேட்டி
இன்று ஊடகங்களில் பெருகி வரும் பேட்டியாக இம்முறை பிரபலமடைந்து வருகிறது எனலாம். செய்திகளை விரைந்து சேகரிக்க இம்முறை பயன்படுகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் நேரடிப் பேட்டியில் பேட்டியளிப்பவரின் முகபாவங்களையும் கண்களையும் பார்த்து அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் அறிந்து கொள்ள இயலும், தொலைபேசியில் இந்த வாய்ப்பு இல்லை.

4.பேட்டி நடத்துதல் பேட்டி

நடத்துகின்றவர் சிறப்புத் திறமைகள் பெற்றிருக்க வேண்டும். பேட்டி என்பவர் பேட்டியாளரின் மனத்தில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இனிமையாகவும் பொறுமையாகவும் பழகும் முறையின்மூலம் வேண்டிய தகவல்களைப் பேட்டியாளரிடமிருந்து பெறலாம்.

பேட்டி எடுப்பவர் கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
1.முன் கூட்டியே திட்டமிடுதல்

2.கேள்விகளை முன்னரே தயாரித்தல்.

3. பேட்டிக்குரிய இடத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே தீர்மானித்தல், (சோலை (பார்க்), தனிமைப்படுத்தப்பட்ட யாருமில்லாத மரங்கள் செடிகொடிகள் நிறைந்த இடமாக இருந்தால் சிறப்பு. மேலும்,  மாலை நேரமாக இருத்தல் நலம். ஏனெனில்  சூரியன் இறங்கும் பொழுதாயின் பேட்டி கொடுப்பவர் மனதிலிருந்து நிறைய கருத்துகள் வெளிவரும். காலை – மதியம் நேரத்தில் நாம் நினைக்கின்ற அளவுக்குப் பேட்டியை அவ்வளவாகச் சிறப்பாக முடிக்க இயலாது.

4.பேட்டியாளரிடம் எதைப்பற்றிய பேட்டி என்பதைத் தெரிவித்துத் தயார்ப்படுத்துதல்

செய்ய வேண்டியவைகள்
1. பேட்டி எடுப்பவர் கேட்க வேண்டிய கேள்விகளை வரிசைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

2. பேட்டியாளரைப் பற்றியும், பேட்டிப் பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

3. ஆர்வமும் பொறுமையும் கவனமும் பேட்டியின்போது அவசியம்.

4. பேட்டியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்

1. பேட்டி தருபவரை விடத் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.

2.இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது.

3. கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக்கூடாது.

4.பேட்டியானது முடிந்தவரை பேட்டி எடுக்கும் அவரின் வீட்டில் இருக்கவே கூடாது. ஏனெனில் அவர்களது உறவினர்கள் அவ்வவ்போது இடையிடையே குறுக்கீடு செய்து கொண்டிருப்பார்கள். அதனால் பேட்டியை சரியான நேரத்திற்கோ அல்லது தெளிவான கருத்துக்கோ அங்கே இடம் இருக்காது.

இவை நேர்காணலின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். பொதுவாக பேட்டியை எழுத்து வடிவமாகத் தர முற்படும்போது பேட்டி பற்றிய ஒரு சிறிய முன்னுரையைக் கொடுத்துவிட்டு, பேட்டி நடந்தது நடந்தபடியே கேள்விகளாகவும் பதில்களாகவும் சொற்களைக்கூட மாற்றாமல் அப்படியே எழுதுவது ஒரு முறையாகும்.

பேட்டியை எழுத்து வடிவில் தரும்போது பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.
1.அறிமுக உரை :பேட்டியைப் படிப்போர், எந்தச் சூழ்நிலையில் எப்படிப் பேட்டி நடந்ததென்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு தொடக்க உரை அமைதல் வேண்டும்.

2.பேட்டியின் சாரம் :
பேட்டியின் நோக்கத்தையும் பேட்டியின். சாரத்தையும் முதலிலேயே சுருக்கமாகச் சொல்வது பேட்டியை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும்.

3.விடைகளே முக்கியம் :
பேட்டியாளர் அளித்த விடைகள்தான் முதன்மையான இடத்தைப் பெற வேண்டும். கேள்விகள் துணை இடத்தைத்தான் பிடிக்க வேண்டும். கேள்விகள் பெரிதாக அமைதல் கூடாது.

4.தொடர்ச்சி :
கேள்விகளும் பதில்களும் ஒன்றற்கொன்று தொடர்ச்சியுடன் திகழ்தல் சிறந்தது. பேட்டியாளரின் பதிலிலிருந்தும் கேள்விகள் அமையலாம்.

5. பேட்டியாளர் பற்றிய விவரங்கள் :
பேட்டியின் மூலமாக பேட்டியாளர் பற்றிய விவரங்களும் அவரது சிந்தனைகளும் அவர் வழியாகவே வெளிப்படும்படி பேட்டியை அமைத்தல் வேண்டும். தற்காலத்தில் எளிதாகத் தகவல் பெறும் தன்மையால் பேட்டி முறையை ஊடகவியலாளர்கள் விரிவாகப் பயன்படுத்துகின்றனர்.

கருத்துக்களை உள்வாங்கி செய்திகளை உருவாக்க இது ஒரு சிறந்த முறையாகத் திகழ்கின்றது. நேர்காணல் நிகழ்ச்சி நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது, பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

1. நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

2.நேர்காணப்படுபவர் குறைவாகப் பேசுதல் வேண்டும். அதாவது சுருக்கமான முறையில் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

3. நேர்காணப்படுபவரை நிறைய பேசவைக்கும் முறையில் கேள்விகள் அமைதல் வேண்டும்.

4. நேர்காணலுக்குரியவர் பேசிக் கொண்டிருக்கும்போது நேர்காண்பவர் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசக் கூடாது.

5. நிகழ்ச்சி தொடங்கும்போது வணக்கம் என்றும் முடியும்போது நன்றி. வணக்கம் என்றும் கூறுவதோடு, மகிழ்ச்சியையும் நிறைவையும் தெரிவித்துக் கொள்ளுதல் போற்றத்தக்கதாகும்.

6. புதுமையான முறையில் நேர்காணப்படுபவரை வரவேற்றும் நன்றி. தெரிவித்து நிகழ்ச்சியை மெருகேற்றலாம்.

7. தலைவர்கள், விடுதலை இயக்க வீரர்கள், கலைஞர்கள் இவர்களை நேர் காணும்போது புகைப்படங்கள், அவர்களின் சாதனைகள் ஆகியவற்றை இணைப்பு மொழியோடு கூறி அவர்களுடைய சிறப்பு நிலைகளைப் பார்வையாளருக்கு உணர்த்தலாம்.

8.நேர்காணப்படுபவருடைய கோபத்தைத் தூண்டுகிற முறையிலோ. குற்றஞ்சாட்டும் முறையிலோ கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

9. நம் நாட்டை இழிவுபடுத்துகிற முறையிலான பதில்களை வரவழைக்கக் கூடிய வினாக்களை அறவே தவிர்க்க வேண்டும்.

10. நேர்காண்பவர் நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன், நேர்காணப்படுபவர் மக்களுக்கு ஆற்றிவரும் தொண்டினையும், நாட்டுக்கு அவரால் ஏற்பட்டுள்ள புகழையும் நன்மையையும் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுதல் நிகழ்ச்சிக்குப் பொலிவையும், நிகழ்ச்சியைக் கேட்போர். காண்போருக்கு நிறைவையும் பயனையும் உருவாக்கித்தரும்.

வினாக்கள் அமைதல்
நேர்காணப்படுகின்றவரின், அதாவது விடுதலை வீரர், எழுத்தாளர், சமூகத் தொண்டர், அறிவியல் வல்லுநர்,தொழில் வல்லுநர், கலை வல்லுநர், விளையாட்டு வீரர், தொழில் அதிபர், ஆன்மீகவாதி, அரசியல்வாதி, சிறுதொழில் செய்வோர் ஆகியோரின் ஆளுமைப் பண்பு வெளிப்படும் வண்ணம் மொழிநடை குன்றாமல் நல்ல தமிழ்நடையில் வினாக்ககள் அமைதல் வேண்டும், நேர்காணல் நிகழ்ச்சியில், விருந்தினரைப் பற்றி அறிவதில் வளர்ந்த-வளர்க்கப்பட்ட முறை கல்வித்தகுதிகள் – செய்யும் தொழில் – அதன்கண் கைக்கொண்ட முறைகள் மற்றவருடன் பழகும் முறை ஒத்துழைக்கும் பண்பு – சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு – விடுக்கும் செய்திகள் வாயிலாக முழு ஆளுமையையும் வெளிக்கொணரும் விதமாக வினாக்கள் அமைதல் நலம்.

கீழ்க்கண்டவைகள் போன்று மாதிரி நேர்காணல்கள் அமையலாம்
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
3. புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரை நேர்காணல் செய்க. (கிரிக்கெட், வாலிபால், கூடை பந்து, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, போன்றன…)
4. தம் ஆன்மீகச் சொற்பொழிவுகளால் பக்தி உணர்வினைப் பரப்பி வரும் ஆன்மீகவாதி ஒருவரை நேர்காணல்.
5.எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்க.
6. ஜனாதிபதி ஒருவரோடு நேர்காணல் செய்க.
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் :  (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! பாரதத்தாயின் அடிமைத்தளையை அறுத்தெரிந்து எங்களுக்கெல்லாம் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற உரிமைகளை வாங்கித்தந்த தியாகச் செம்மல்களுள் ஒருவராக விளங்கும் தங்களைத் தொலைக்காட்சியின் / வானொலியின் சார்பாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறோம். தங்களின் அனுபவங்களை நேயர்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறோம்.

1. தாங்கள் எத்தனையாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வினை உருவாக்கிய நிகழ்ச்சியைச் சற்று விளக்குங்களேன்?

3. தங்களின் பள்ளிப்பருவ வாழ்க்கையைக் கூறுங்கள்.

4. உங்கள் பெற்றோர் இப்போராட்டத்தில் ஈடுபட அனுமதித்தார்களா? உங்கள் குடும்பத்தில் உங்களைத் தவிர வேறு யாரேனும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்களா?

5.நீங்கள் காந்தி அடிகளின் அறவழிப் போராட்ட முறையை ஆதரித்தீர்களா? அல்லது திலகர், நேதாஜி போன்றவர்களின் தீவிரவாத முறையைப் பின்பற்றினீர்களா?

6. திலகரின் வழிமுறைகளிலிருந்து மாறி எப்படி காந்தியடிகளைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டீர்கள்?

7. தாங்கள் எந்தெந்தப் போராட்டங்களில் பங்கு கொண்டீர்கள்? சிறைப்படுத்தப்பட்டீர்களா? எங்கே, எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள்?

8. தாங்கள் சிறையிலிருந்தபோது நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியைக் கூறுங்கள்.

9. காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்தபோது உங்கள் மனநிலை எங்ஙனம் இருந்தது? அவர் இறந்தபோது தங்களுடைய மனநிலை எங்ஙனம் இருந்தது?

10. இந்தியா விடுதலை அடைந்தபோது தங்களுடைய தியாகத்திற்கு நல்ல பலன் கிடைத்ததாகக் கருதினீர்களா?

11. இன்றைய இளையதலைமுறைக்குத் தாங்கள் எத்தகைய அறிவுரையை வழங்குகிறீர்கள்?

முடிவுரை
தங்களது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியதன் மூலம் கடந்த 75 ஆண்டு கால இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எங்களுக்குக் கூறியதோடு, எங்களுடைய கடமைகளையும் உரிமைகளையும், ஆற்ற வேண்டிய பணிகளையும் உணர்த்திய தங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் : (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! கடந்த 50 ஆண்டுகளாகச் சமூக மேம்பாட்டிற்காகத் தன் இல்லற வாழ்க்கையையும் துறந்து தன்னலமற்ற தொண்டாற்றி வரும் நல்லவர் ஒருவரைத் தொலைக்காட்சி வானொலி மூலமாக அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

1.சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் சிறுவயதிலிருந்தே தோன்றிவிட்டதா? அத்தகைய நோக்கம் எப்படி ஏற்பட்டது?

2. ஏழ்மை மிக்க குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் போனதால், தனக்கு ஏற்பட்ட நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகச் சமுதாயப் பணியில் ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படியானால் ஏழைகளுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுப்பட்டுள்ளீர்களா? வேறு பணிகள் உண்டா?

3. உதவி தேவைப்படுபவர்களைத் தேடிச் சென்று நீங்களே உதவுகிறீர்களா? அல்லது அவர்கள் உங்கள் உதவிவேண்டி வருகிறார்களா?

4. உங்களுடைய இத்தொண்டிற்கு மக்களிடையே எத்தகைய வரவேற்பு உள்ளது?
 
5. அரசாங்கத்தின் ஆதரவு ஏதேனும் உங்களுக்குக் கிடைத்துள்ளதா?

6. சமூக சேவையில் முழுமையாக ஈடுபடுவதற்காகவே நீங்கள் இல்வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவில்லையா?

7. பல பணிகளுக்கிடையே பள்ளியையும் அனாதை இல்லத்தையும் நடத்துவதற்குத் தங்களுக்குத் துணையாக வேறு யாரேனும் உள்ளனரா?

8. நீங்கள் நடத்தும் ஆதரவற்றோர் பணியில் எத்தகைய பயிற்சிகளை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறீர்கள்?

9. இக்கால இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தாங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க இயலுமா?
நன்றி, வணக்கம்

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம்

அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம் - சே.சீனிவாசன்
முன்னுரை
               
சமுதாயத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலும் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருவது குடும்பமே ஆகும். குடும்பம் தான் சமுதாயத்தின் அடையாளமாக விளங்குகிறது. குடும்பமே சமுதாயம் உருவாக காரணமாக இருந்து வருகிறது. மனிதர்கள் தங்கள் நிலையிலிருந்து தாளாமலும் அன்பு, பரிவு, பாசம், ஒற்றுமை போன்ற நிலையில் இருந்து தவறாமலும் மிருகத்தன்மையை ஒழித்தும் சரியான பாதையில் வாழச் செய்வது குடும்ப அமைப்பே ஆகும். குடும்ப அமைப்பின் மூலம் மனிதர்கள் தங்களுடைய தேவைகளைச் சரியான வழியில் பெற முடிகிறது.

குடும்பச் சமூகம்
               
குடும்பமானது தனி குடும்பம், கூட்டுக் குடும்பம் என்ற இரு நிலையில் சமுதாயத்தில் செயல்பட்டு வருகிறது. தந்தை, தாய்,மகன் என்று குறைந்த நபர்களைக் கொண்டு விளங்குவது தனி குடும்பம் ஆகும். ஒரு மரத்தில் பல கிளைகள் இருப்பது போல், ஒரு குடும்பத்தில் உறவுகளுடைய பல நபர்கள் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பம் ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் கடல் அலைகள் வந்து வந்து செல்வதைப் போன்று நன்மை, தீமைகள், இன்ப துன்பங்கள் வந்து வந்து செல்லும். இதனைச் சரி செய்து சீராக நடத்திச் செல்வது அந்தந்தக் குடும்பங்களின் தலைவரையே சாரும்.
               
“குடும்பமே சமூகத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாக உள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை, பாசம் போன்ற உன்னத  ஆசைகளும், தேவைகளும் முழுமையாக திருப்தி பெறுகிறது”1 என்று கூறுகிறார் குமாரசாமி.
     
“குடும்ப ஒற்றுமைக்குத் தலைமை பண்பும், நிர்வாக திறமையும் அவசியம் இருத்தல் வேண்டும்”2 என்று கூறுகிறார் ரவிச்சந்திரன்
               
குடும்ப அமைப்பு நிலைக்க அன்பு உணர்வும், பிணைப்பும் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாது தான் சென்ற உணர்வு மேலிட்டால் குடும்பஅமைப்பு சிதையும். இம்முனைப்பு இல்லாத அன்பார்ந்த செயல்பட்டால் குடும்பம் தழைக்கும். அது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் நன்மதிப்பைப் மபெறும்.

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு”3
என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  குடும்பத்தில் சிக்கல்கள் என்பது இயற்கையானதே. நிலவில் களங்கம் இருப்பது போன்று குடும்பத்தில் சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனைப் பெரிய சுமையாக கருதாமல் சாதாரணமாக எண்ணி செயல்பட வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் அமைதியை நிலைநிறுத்த இயலும். அதுமட்டுமல்லாமல் குடும்பம் கட்டுக்கோப்பாக இயங்கும் நிலையில் சிக்கல் ஏற்படுவதற்கு இடமில்லை.
 “குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் விரும்பத்தக்கது தான். ஆனால் அமைதி ஒன்றே அதற்கு இறுதியான லட்சியமாகி விட முடியாது. மண வாழ்வின் நிலை என்பது கட்டுப்பாடான நிலை என்று நான் கருதுகின்றேன்”4
என்று கூறுகிறார் மகாத்மா காந்தி. மேலும் குடும்பங்கள் வழி வழியாக எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதையும் பாசம் உறவுகள் இல்லறம் வறுமை வேதனை ஆகியன எவ்வாறு குடும்பத்தில் இருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தம் கதைகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் இவ்வாய்வின் வழி ஆராயப்படுகிறது.

தந்தையின் பாசம்
               
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று ஒளவைக் கூற்றின்; மூலம் தந்தையின் சிறப்பினை அறியலாம். ஒரு குடும்பத்தினைச் சீரான அமைப்போடு நல்ல நிலையில் நடத்திச் செல்வது தந்தையின் கடமையாகும். குடும்பத்தைத் தாங்கும் தூணாக அவர் திகழ்கின்றார். அவர் இல்லை என்றால் குடும்பமானது பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் அடையும். தந்தை குழந்தைகளை நல்ல நெறியில் வளர்ப்பவர். குடும்பத்திற்கு உண்டான தேவைகளை அறிந்து செய்வதும் தந்தையின் கடமையாகும்.
                “அரிதொரு வகையான் அறிவின் தாய் அன்பில் நனைந்து உரிய வழி வகுத்தவன்: வித்தினை மகிழ்ந்து விதைத்தவன் எரிகின்ற மெழுகு போல் இரு என்று வாழும் நெறி காட்டியவன் பரிவையுள் வைத்து என்னை அடித்து வளர்த்தவன் என் தந்தை”5 என்று கூறுகிறார் நாகராஜன். இதன் மூலம் தந்தையின் கடைமையும், பொறுப்பையும் அறிந்து கொள்ளலாம்.
               
‘அவள் வளர்த்த கடாரி’ என்ற கதையில் வீரப்பன் தன் மகள் வள்ளியாத்தாளுக்குத் திருமணம் செய்வதற்காக ஒரு கடாரி வளர்த்து வந்தான். அதனை விற்பதற்காக சந்தைக்கு ஓட்டிச் செல்லும் வழியில் மிரண்டு காட்டுக்குள் ஓடியது. அங்கு புலியால் அடித்து கொல்லப்பட்டு கிடந்தது. அதனை கண்டு வருந்தி,  “அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை விரைவில் செய்ய முடியாமல் போய்விட்டதே”6 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் திருமணம் தடைபட்டு விட்டது என்பதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசத்தினை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
               
“சீர்” என்ற கதையில் சொங்கப்ப கவுண்டர் தான் அனைத்தையும் இழந்து வறுமையில் இருந்தபோது அவர் மகள் குழந்தை பேற்றிற்காக வருகிறாள். குழந்தை பிறந்து செல்லும்போது சீராக கொடுப்பதற்கு ஒரு கடாரியை வளர்க்கிறார். ஆனால் அவளுக்கு கொடுக்கும் நாள் அன்று கடாரி இறந்து விடுகிறது.அதனை நினைத்து வருந்தி, “வள்ளியாத்தா என் ஆசை எல்லாம் வீணாய் போச்சு”7 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையானது தடைபட்டதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசநிலையை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
               
“சீதனம்” என்ற கதையில் வள்ளியாத்தாவின் கணவன் கந்தப்பன். அவன் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசில் மாட்டிக் கொள்கிறான். வெளியில் கொண்டு வருவதற்குப் பணம் தேவைப்பட வள்ளியாத்தா தந்தையை நாடிச் செல்கிறாள். அப்போது அவள் தந்தை,
“வள்ளியாத்தா நான் உனக்கு பணம் கொடுக்கிறேன். நீ இப்பவே உங்கள் ஊருக்குப் போய் அவருக்கு ஆறுதல் சொல்லு”8 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் துன்பத்தைப் போக்கும் தந்தையின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

தாயின் பாசம்
               
உலகமானது எவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்று முன்னேற்றம் அடைந்தாலும், அதைக் காட்டிலும் சிறந்தது தாய்மையை ஆகும். தாயில்லாமல் உலகத்தில் எந்த மனிதனும் சிறப்பாக வாழ முடியாது. குழந்தைகளின் மனநிலை அறிந்து அவர்களின் துன்பத்தினைப் போக்க வல்லவள் தாயே. தாய் தன் பிள்ளைகளிடம் செலுத்தும் அன்பினை அளவிட முடியாது. சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் இடம் கிடைப்பது தாய்மையால்தான். தாய் தெய்வத்திற்குச் சமமாவாள். “குழந்தைகளிடம் தந்தையாரை விட தாய்மார்கள்தான் அதிக வாஞ்சையுடன் இருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளைப் பெறுகின்ற கஷ்டம் தாய்மார்களுக்குத் தெரியும், தவிர குழந்தைகள் தங்களுடையது தான் என்று தாய்மார்களுக்கு அதிக நிச்சியமாகத் தெரியும்”9 என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
               
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் அனாதையான சொங்கப்பன் ராமாத்தாளுக்கு ஆப்பக்கூடையை ஓர்நாள் சுமக்கிறான். அன்று முதல் தினமும் சுமக்கிறான். ராமாத்தாளுக்கு மகன் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது. திடீரென்று அவள் நோய்வாய்ப்பட சொங்கப்பனை அழைத்து தான் சேர்த்து வைத்த பணத்தை அவனிடம் கொடுத்து, “சொங்கப்பா, நீ இந்த பணத்தை வைத்துக்கொள். நாற்பது வருஷமா ஆப்பம் சுட்டு சம்பாதிச்ச மிச்சம் எல்லாம் உனக்குத்தான். அதை வைத்து ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சுகமா பிள்ளை குட்டிகளோடு வாழ வேண்டும்”10 என்று கூறுகிறாள். இதன்மூலம் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு சிறு வயது முதல் உழைத்த அனைத்து பணத்தையும் கொடுக்கும் தாய்மை நிலையை ஆசிரியர் வெளிக்காட்டி உள்ளார்.
           
“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு மகளான வள்ளியாத்தாளுக்கு சிறுவயதில் நோய் ஏற்பட, அது தீருவதற்காக முத்தம்மாள் மாரியாத்தாளுக்கு மாவிளக்கு எடுப்பதாக வேண்டி, அன்று முதல் வருடா வருடம் மாவிளக்கு எடுக்கிறாள். கண் தெரியாத வயதான நிலையிலும் அதை நிறைவேற்றுகிறாள். அதை அறிந்து வள்ளியாத்தாள், இந்த நிலையிலும் எப்படி நிறைவேற்றினாய் அம்மா என்று கேட்க அதற்கு முத்தம்மாள், “வயலிலே நெல் அறுவடை காலத்தில் எத்தனையோ பேர் வேலை செய்ய முடியாத கிழவிகள் வந்து அங்கே நிலத்தில் உதிர்ந்து விழுந்து கிடக்கிற நெல்லை எடுத்துப் போவார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன் அந்த விசை நானும் அப்படி பண்ணினேன்”11 என்று கூறுகிறாள். இதன்மூலம் மகளின் நலனுக்காக தன்னுடைய குறையையும் பொருட்படுத்தாமல் வேண்டுதலை நிறைவேற்றும் தாயின் பாச உணர்வை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளைகளின் பாசம்
               
பெற்றோர்களின் மானத்திற்கு என்றும் ஒரு அவமானமும் ஏற்படுத்தி விடாமல் அவர்களுக்கு நற்பெயரைச் சேர்ப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். முதியவர்கள் ஆனபோது பெற்றோர்களை நீக்கி விடாமல் அவர்களுக்குத் துணையாய் நின்று தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குறிப்பிடுவதன் மூலம் பெற்றோர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை அறியலாம். “தாயையும் தந்தையும் ஆதரித்தல் அமைதியானதொரு வாழ்க்கை நடத்துதல் இதுதான் மாபெரும் நற்பாக்கியம்”12 என்று கூறுகிறார் புத்தர்.

“அவள் வளர்த்த கடாரி” என்ற கதையில் வீரப்பன், மகள் வள்ளியாத்தா கல்யாணத்திற்காக ஒரு கடாரியை வளர்க்கிறான். அதை விற்க சந்தைக்கு அழைத்துச்  செல்கிறான். தந்தையைப் பிரிய விரும்பவில்லாத வள்ளியாத்தா அதை விற்க வேண்டாம் என்கிறாள். அவள் வார்த்தையை மீறி விற்கச் செல்லும் போது அந்தக் கடாரி புலியால் கொல்லப்படுகிறது. வீரப்பன் அதை தன் மகளிடம் கூற, அவள் மகிழ்ந்து, “ஐயா கடாரி போனால் போகிறது. அதற்காக மனதிலே உங்களுக்கு கவலை வேண்டாம். அது போனால் இன்னொன்று வாங்கி வளர்த்தால் போகிறது”13 என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தையைத் தனிமையில் விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செல்ல விருப்பமில்லாத மகளின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
           
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் சொங்கப்பன் தனக்கு கிடைத்த வளர்ப்புத் தாய் இறக்கும் தருவாயில் தன்னிடம் கொடுத்த பணத்தைக் கொண்டு தன் தாய்க்கு மோட்சம் கிடைப்பதற்காக பல வழிகளைத் தேடுகிறான். அச்சமயம் கோயில் திருப்பணி நடக்கிறது. அப்பணத்தை அதற்கு கொடுத்துவிட்டு, “மோட்சம் எல்லாத்தையும் அம்மாளுக்கே சாமி கொடுக்கட்டும்”14 என்று கூறுகிறான். இதன் மூலம் இறந்த தாய்க்கு நல்லதொரு வகையான வீடு பேறு கிடைப்பதற்கான வழியினை அறிந்து நிறைவேற்றும் மகனின் பாசத்தை ஆசிரியர் புலப்படுத்தி உள்ளார்.
           
“பழிக்குப் பழி” என்ற கதையில் முத்துசாமி என்பவன் வேலுச்சாமி கவுண்டர் என்பவரின்  சதியின் காரணமாக சிறைக்குச் செல்கிறான். அவன் விடுதலையாகி வந்து கவுண்டரைக் கொல்வதற்காக காத்திருக்கிறான். அப்போது தன் தந்தையை நினைத்து, “நான் ஜெயிலுக்குப் போயிராவிட்டால் அவரும் இவனைப் போல் தான் தளர்ச்சியில்லாமல் இருந்திருப்பார். என் வீட்டில் அரிசி கொட்டி கிடக்காவிட்டாலும் வேலை செய்து சம்பாதித்து அவரை நான் நன்றாக வைத்திருப்பேன். இப்போ எப்படி இருக்கிறாரோ?”15 என்று வருந்தி கூறுகிறான். இதன் மூலம் தான் இல்லாத காலத்தில் தந்தை எவ்வாறெல்லாம் துன்பங்கள் அடைந்து இருப்பார் என்று என்னும் மகனின் வருத்தத்தை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு தாய் முத்தம்மா கண் தெரியாத நிலையிலும் தன் நலனுக்காக மாவிளக்கு எடுத்ததை அறிந்து வள்ளியாத்தாள் கண்ணீர் விட்டு
“தாயில்லா குழந்தையான எனக்கு மாரியாத்தாள் தான் இந்த தாயை அனுப்பினாள்”16 என்று கூறுகிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளின் நலனே சிறந்தது என்று கருதும் தாய் கிடைத்ததை எண்ணி பெருமைப்படும் மகளின் பாசஉணர்வை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
           
“சீர்” என்ற கதையில் சுங்கப்ப கவுண்டர் மகள் வள்ளியாத்தாளுக்குச் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கிறார் மகள் கற்பவதி ஆகிறாள். தாயில்லா அவளை அழைப்பதற்காக அவர் செல்ல அப்போது தந்தையின் மீது கொண்ட பாசத்தினால் அவள்  “எதற்கப்பா உங்களுக்கு வீண் தொந்தரவு. அம்மா உயிரோடு இருந்தால் வர வேண்டியதுதான் உங்களுக்குக் கஷ்டம் இருக்காது”17  என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தை எந்தவிதச் சிறு துன்பத்தையும் அடையக் கூடாது என்று எண்ணும்; மகளின் உயரிய பாசநிலையை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

கணவன் மனைவி பாச உறவுகள்
               
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது நலமாகும். விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது சிறப்படையது ஆகும். மனம் விட்டு பேசி எதையும் மறைக்காமல் வாழ்ந்தால் குடும்பம் சிறப்புடையதாக அமையும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீது அன்பு செலுத்தி வாழ வேண்டும். “கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்பு, பாசம், பற்று, நட்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் ஆகிய இசைவு, பண்பு, குடும்பப் பணிகளைப் பகிர்ந்து செய்தல், குடும்ப நலன் அழிக்கும் செயல்களை நீக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுவது இன்றியமையாதது”18 என்று கூறுகிறார் குமாரசாமி.
           
“சீதனம்” என்ற கதையில் கிழவனும் கிழவியும் அன்பானது ஒரு வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் கிழவன் இரவில் நெடுநேரம் இருமி கொண்டிருந்தான். கிழவி தூக்கம் கலைந்து எழுந்து கிழவனிடம் அன்புடன், “ரெண்டு மிளகு கொண்டு வரட்டுமா அதை வாயில் போட்டு மெல்லுங்கோ இருமல் நின்று போகும்”19 என்று கூறுகிறாள். இதன்மூலம் கணவனுக்கு மனைவி துன்பகாலத்தில் துணை நிற்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுப்புரை
📍குடும்பத்தின் தூணாக தந்தை திகழ்வதையும், குழந்தைகளைக் காத்து அவர்களின் தேவையை நிறைவேற்றி பிள்ளைகளின் ஆசைக்களுக்காகவே வாழும் ஒப்புயர்வற்ற ஒருவாராக தந்தை வாழ்வதையும்; இயல்வழி அறியமுடிகிறது.

📍குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களைக் காப்பவளாகவும், குழந்தையின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக செய்பவளாகவும், குழந்தைகளை அரவணைத்து அன்பு காட்டுபவளாகவும் தாய் திகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.

📍பிள்ளைகள் பெற்றோர்களின் இன்னல்களைத் தீர்த்து வைப்பதையும், அவர்களுக்கு ஏற்படும் அவமானங்களைப் போக்குபவர்களாகவும், தன் பெற்றோர்களுக்கு ஊறு விளைவித்தவரைத் தண்டிக்கும் தன்மை உடையவர்களாகவும் படைத்துக் காட்டப்பட்டுள்ளனர்.

📍கணவன் மனைவி விட்டுக் கொடுத்து வாழும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், துன்பகாலத்தில் துணையாக இருக்க வேண்டும் என்பதையும் இயல் வெளிப்படுத்தியுள்ளது.

சான்றெண் விளக்கம்
1.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.192.

2.எ.இரா.ரவிச்சந்திரன்(ப.ஆ), தற்கால நாவல்களில் காணலாகும் சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும் ப.160.

3.குறள்.75.

4.அரு.ராமநாதன்(ப.ஆ), மகாத்மா காந்தி பொன்மொழிகள், ப.16.

5. நாகராசன், இதயமே எழுக, ப.70,

6.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

7.மேலது, ப.68.

8.மேலது, ப.92.

9.அரு.ராமநாதன் (ப.ஆ), சிந்தனையாளர் அரிஸ்டாட்டில், ப.162.

10.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.42.

11.மேலது, ப.61.

12.அரு.ராமநாதன்(ப.ஆ), புத்தரின் பொன்மொழிகள், ப.33.

13.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

14. மேலது, ப.44.

15.மேலது, ப.53.

16.மேலது, ப.61.

17.மேலது, ப.66.

18.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.197,

19.பெ.துரன், அன்னை தந்த ஒளி, ப.91,

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சே.சீனிவாசன்,

முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல்.

 

குறுந்தொகையில் பாலைநிலம்

குறுந்தொகையில் பாலைநிலம் - ம. அபிஷேக்

நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்பெறும் குறுந்தொகை சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது என்று குறுந்தொகை உரையாசிரியர்கள் கருதுகின்றனர். இந்நூலில் முதல், கரு, உரிப்பொருள்கள் அகநானூற்றைப்போல விரிவாகக் காணப்படவும் இல்லை. திருக்குறளைப்போல அறவே நீக்கப்படவும் இல்லை. விரிவும் சுருக்கமும் இன்றி அகன் ஐந்திணை ஒழுக்கங்களையும், இயற்கைச் சூழல்களையும் பண்டைக்காலச் சிறப்புகளையும் வேறு பல அரிய பொருள்களையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இக்குறுந்தொகை உணர்த்துகிறது.
               

இந்நூலுக்கு 1915இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் குறுந்தொகை மூலமும் புத்துரையும் என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும்.
குறுந்தொகைக்குப் பல உரைகள் வந்துள்ளன. அவற்றில் சில.


1.தி.சௌ. அரங்கனாரின் குறுந்தொகை மூலமும் புத்துரையும்              -1915


2.இராமரத்தினத்தின் குறுந்தொகை உரை                                                    -1930


3.உ.வே.சா அவர்களின் குறுந்தொகை உரை                                                -1937


4.இரா.இராகவையங்காரின் குறுந்தொகை உரை                                          -1947


5.பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரை                                      -1955


6.சாமி. சிதம்பரனாரின் குறுந்தொகைப் பெருஞ்செல்வம்                              -1983


7.மு. சண்முகம்பிள்ளையின் குறுந்தொகை மூலமும் உரையும்                     -1985
 

               மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகள் சிறப்புப் பெற்றவை. இவற்றுள் உ.வே.சாவின் குறுந்தொகை உரை அறிஞர்கள் பலரால் போற்றப்பெறுகிறது. பழுத்த அனுபவத்தின் பயனாக உ.வே.சா தம் 82ஆம் அகவையில் குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பித்தார்.                
                தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடியியல் துறைத்தலைவராக இருந்த  மு.சண்முகம்பிள்ளையின்  குறுந்தொகையுரை அப்பல்கலைக்கழகத்தால் 1985இல் வெளியிடப்பெற்றது. பாடலின் தலைப்பில் திணையையும் கூற்றையும் சுட்டும் முறையில் இது அமைந்துள்ளது. இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள சொல்லடைவும் பொருளடைவும் சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்குப் பயன்படும் என்று இவர் தெரிவிக்கிறார்.


இவருடைய கருத்துப்படி திணை தோறும் பாடல்கள்


1.குறிஞ்சித்திணைப் பாடல்கள்                                 -146


2.முல்லைத்திணைப்பாடல்கள்                                 – 44


3.மருதத்திணைப்பாடல்கள்                                      – 50


4.நெய்தல்திணைப்பாடல்கள்                                   – 71


5.பாலைத்திணைப்பாடல்கள்                                   – 90
                                                                                                                                                                                                      ————
                                                                                             

                                                                                            401                                                                                           
               

மேற்கண்ட குறுந்தொகைப் பதிப்புகள் அறிஞர்களால் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு சிறப்புடன் அமைந்தாலும் உ.வே.சா வின் பதிப்பு முதன்மையானதாகக் கருதப்படுகிறது.


பாலைத்திணை


பாலைத்திணையைப்பற்றி பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம்

“அவற்றுள்

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

படுதிரை வையம் பாத்தியப் பண்பே”1
               

என்று கூறுகிறது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்,என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்கிறார் தொல்காப்பியர். பாலை நிலம் என்று தனியாக ஒரு நிலம் இல்லாததால் அதனை நீக்கினார் என்று உணரமுடிகிறது. மேலும்


“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”2
               

என்ற அடிகளில் பாலை நிலத்தின் சிறுபொழுது நண்பகல், பெரும்பொழுது இளவேனில், முதுவேனில் என்று அறியமுடிகிறது. பின்பனிக்காலமும் பாலை நிலத்தின் பெரும்பொழுது என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.இதனை,

“பின்பனி தானும் உரித்தென மொழிப என்ப”3
               

என்ற அடி உணர்த்துகிறது. பாலை என்னும் அகத்திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணையைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.இதனை

“வாகை தானே பாலையது புறனே”4
                

 என்ற நூற்பா உணர்த்துகிறது. பாலைநிலம் பற்றி தொல்காப்பியர் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி இருந்தாலும் இளங்கோவடிகளே பாலை நில இலக்கணத்தைத் தெளிவாக உணர்த்துகிறார்.
               

குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் நல்ல தன்மைகளை இழந்து, பாலை நிலமாக மாறும் என்று பாலைநிலத்தின் இயல்பை சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையால் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”5


என்ற அடிகள் விளக்குகின்றன. குறுந்தொகையில் 90 பாடல்கள் பாலைத்திணைப் பாடல்களாகும். அவை.


7,11,12,15,16,20,22,27,28,30,


37,39,41,43,44,48,56,59,63,67,


71,77,79,84,104,124,130,131,135,137,


140,144,147,149,151,154,168,174,180,189,


192,207,209,211,213,215,216,218,224,229,


232,235,237,250,253,254,255,256,260,


262,266,267,273,274,277,278,281,282,283,


285,307,329,331,338,343,347,348,350,352,


356,363,369,378,380,383,388.390,395.396,398
               

பாலை நிலத்தில் வெம்மை மிகுதியினால் நீர்நிலைகள் வற்றி உலர்ந்தும், மரம் முதலியன தீய்ந்தும் உலர்ந்தும் பொலிவிழந்து காணப்படும். நிழலும் நீருமின்றி வெம்மையும் தனிமையும் உடையதாய் இருத்தலின் பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும்.இதனை

“இன்னா வைப்பிற் சுரன்”6


என்று குறுந்தொகை உணர்த்துகிறது. நீரில்லாத வழியும், உலர்ந்த சுனையும், அறுசுனையும் பாலை நிலத்தின் நிலையைப் புலப்படுத்துகின்றன. நிழல் அடங்கி அற்றுப்போன சிறிதும் நீரில்லாத கடத்தற்கரிய பாலைநிலம் என்பதை


“நிழல் ஆன்று அவிந்த நீரில் ஆரிடை”7
               

என்று அறியமுடிகிறது. இத்தகைய பாலை நிலத்தும் மிக அருமையாகச் சில இடங்களில் மட்டும் சிறிதளவு நீர் சிறுபள்ளங்களில் தங்கியிருக்கும். அந்நீரும் மிகவும் கலங்கியும் மிக்க வெம்மையுற்றும் இருக்கும். இதனை

“அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்தவெவ்வெங் கலுழி”8
               

என்ற குறுந்தொகை அடிகள் உணர்த்துகின்றன.பள்ளத்தின் அருகிலுள்ள செடியின் மலர்கள் விழுந்து அழுகிப்போன சிறிதளவு நீரை


“குளவி மொய்த்த அழுகல் சின்னீர்”9
               

என்றும் அறிய முடிகிறது. இத்தகைய கொடிய பாலைநிலத்தில் வழிப்போவாரது பசியை நீக்க  அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தின் அழகிய பசிய காய்கள் உதிர்ந்து கிடப்பதை,


“சுரந்தலைப் பட்ட நெல்லிஅம் பசுங்காய்”10
               

என்று குறுந்தொகை உணர்த்துகிது. பாலைநிலத்தில் வாழ்ந்தவர் எயினர் எனப்பட்டனர். அவர் தம் தொழில் ஆறலைத்து உண்ணலாகும். இவர்கள் வாழ்ந்த ஊர்கள் பறந்தலை, குறும்பு எனப்பெயர் பெற்றன. இவர்களுடைய தொழில் வழிப்பறி செய்வதும், பகைவருடைய கால்நடைகளைக் கவர்வதும் ஊர்களுக்குச் சென்று கொள்ளையடித்து வருவதுமாகும்.


                இவர்தம் பறை சூறைகோட்பறையும், நிரைகோட் பறையுமாகும். இந்நிலத்துக்குரிய யாழ் பாலையாழ் ஆகும். பண் பஞ்சுரம் என்பதாகும். மரா, குரா, பாதிரி மலர்கள் இங்குச் சிறந்தவை.  இருப்பை, ஓமை, உழிஞை, நெமை, பாலை, யா என்னும் மரங்கள் இங்குச் சிறந்தவை. இம்மக்கள் கொற்றவையை வழிபட்டனர்.
               

பாலை நிலத்தில் ஈந்தின் இலையால் வேய்ந்த குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையில் முடங்கிக் கிடந்தாள். எயிற்றியர் உளி போன்ற வாயினையுடைய கடப்பாரைகளால் கரம்பை நிலத்தைக் கிளறிப் புல்லரிசியைச் சேகரித்தனர். அவர்தம் குடிசைகளின் முன்புறத்தில் விளா மரங்கள் இருந்தன. அங்கு நிலத்தில் உரல் தோண்டப்பட்டிருந்தது. எயிற்றியர் அந்நிலவுரலில் தாம் சேர்த்துக்கொண்டு வந்த புல்லரிசியைச் சொரிந்து, குறிய உலக்கையால் குற்றினர்.


                சிறிய அளவு நீரைக்கொண்ட கிணற்றிலிருந்து உவர்நீரை முகந்து உலை வைத்தனர். புல்லரிசிச் சோற்றைச் சமைத்தனர். அச்சோற்றை உப்புக்கண்டத்தோடு உண்டனர். தம்மை நாடி வந்த விருந்தினருக்குத் தேக்கிலையில் அவற்றைப் படைத்தனர்.இதனை,

“…………………………… நெடுங்கிணற்று

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை

முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி

வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்

………………….

தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்

பைதீர் கரும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”11

என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை உணர்த்துகிறது.
               

எயினரின் வறுமை தெளிவாகக் கூறப்படுகின்றது. எந்தத் தானியமும் இல்லாதநிலையில் புல்லரிசி எடுக்கப்பெறுகிறது. தண்ணீர் மிகக் குறைந்துள்ள கிணற்றில் உவரிநீர் எடுக்கப்பட்டு விளிம்பு உடைந்த பானையே பயன்படுத்தப்பெறுகிறது. இவ்வளவு வறுமையில் இருந்தாலும் விருந்தினருக்குத் தேக்கிலையில் வைத்து உணவைத்தருவர் என்பது அவர்களின் சிறந்த விருந்தோம்பலை உணர்த்துகிறது.
               

பாலை நிலத்தில் ஆறலைக்கள்வர் மறைந்து நின்று வழிப்போக்கரைத் துன்புறுத்தலும், கொலை புரிதலும், கொலை கண்டு மகிழ்தலும் வழக்கம். இதனால் தமிழ் மன்னர் எயினருள் தக்கவரைப் போர்வீரராக்கி நாடு காவல் பணியில் அமர்த்தினர். பாலை நில வழிகளில் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் பார்ப்பதே அவரின் தலையாய கடமை. பாண்டி நாட்டுப் பாலை வழிகளில் காவல் செய்தவர் இளைஞர். வில்லேந்திய கையினர். குழையால் வேய்ந்த குடில்களில் வாழ்ந்தனர். தழை விரவின கண்ணியினை அணிந்தனர். கடிய சொற்களை உடையவர். வலிமை மிகுந்தவர் என்று மதுரைக்காஞ்சி உணர்த்துகிறது.இதனை,

“இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்

சிலையுடைக் கையர் கவலை காப்ப”12
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. ஆறலை கள்வர் பாலை நிலவழியே செல்லும் பாணரையோ கூத்தரையோ தாக்க முனைதலும் வழக்கம். அப்பொழுது அவர்கள் பாலை யாழை இசைத்து உருக்கமாகப் பாடுவார்கள். யாழோசையும் மிடற்றோசையும் வன்னெஞ்சராகிய ஆறலைக் கள்வர் மனத்தையும் கவரும். அவர்கள் தங்கள் கொலைக்கருவிகளையும் நெகிழ விட்டுத் தங்களை மறந்து நிற்பார்கள் என்று பொருநராற்றுப்படை உணர்த்துகிறது.இதனை,

“ஆறலை கள்வர் படைவிட வருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை”13

என்ற அடிகள் உணர்த்துகின்றன.


பாலை நிலம்
               

வறண்ட முல்லை, குறிஞ்சி நிலங்களே பாலை நிலம் என உணர்த்தப்பட்டது. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. இது போன்ற மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. அவ்வொலி ஆரியக்கூத்து ஆடும்போது ஏற்படும் ஒலிபோல உள்ளது என்று குறுந்தொகை உணர்த்துவதை,

“ஆரியர் கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி

வாகை வெண்ணெற்று ஒலிக்கும்

வேய்பயில் அழுவம்”14
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாகை மரத்தின் கிளையில் விளைந்த நெற்றின் குலை ஆடும் கூத்தியர் அடிக்க ஒலியுண்டாக்கும் பறை போல கேட்பார் வியக்கும் வண்ணம் ஒலியுண்டாக்கும். இதனை,

“……………………….  குறுங்கால் உழிஞ்சில்

தாறுசினை விளைந்த  நெற்றம் ஆடுமகள்

அரிக்கோற் பறையின் ஐயென ஒலிக்கும்”15

என்ற அடிகள் உணர்த்துகின்றன. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிப்பதை,


“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்”16
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்ட பாடல்களில் இருந்து பாலை நிலத்தில் வாகை மரத்தின் நெற்றுக்கள் ஒலிப்பதைக் கண்டு வழியில் செல்வோர் அச்சமடைவர் என்றும், உழிஞ்சில் என்று வாகை மரம் அழைக்கப்பட்டதையும் உணர முடிகிறது.
               

பாலை நிலச்சூழல் மேற்கண்ட பாடலின் மூலம் உணரப்படுகிறது. வெப்பமான நிலம், நீரற்ற சுனை மூங்கில் நெல்லும் பொரியுமளவுக்கு வெப்பமான பாறை வழிச்செல்வோர் யாரும் இல்லததால் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கள்வர்களும் இறந்தனர் என்பதால் அங்கிருந்த வெப்பத்தின் மிகுதி புலப்படுகிறது.
               

பாலை நில வெம்மை மட்டும் கொடுமையானது அல்ல. வழியும் துன்பத்தைத் தரக்கூடியது. ஞாயிறு சுடும். பக்க மலைகளிலுள்ள கல்லொழுங்கு பட்ட பாதைகளில் பதித்து வைத்தது போன்ற கூர்மையான நுனியுடைய பருக்கைக்கற்கள் தீட்டப்பட்டது  போன்று கூர்முனையைத் தோற்றுவித்து வழிச்செல்வாரின் விரல் நுனிகளைச் சிதைக்கும் தன்மையுடையவை. இதனை

“………………..கதிர்தெறு கவாஅன்

மாய்த்த போல மழுகுநுனை தோற்றி

பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்

விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர

பரல்முரம்பு ஆகிய பயமில் கானம்”17
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இது போன்ற மலை வழிகளில் புலியானது தனக்குரிய உணவைத் திணித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கல் முழைஞ்சுகளில் வழிச்செல்லும் மக்கள் தங்குவர். அங்கு மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.இதனை,

“ஒலிகழை நிவந்த ஓங்கு மலைச்சாரல்

புலிபுகா உறுத்த புலவுநாறு கல்லளை

ஆறுசெல் மாக்கள் சேக்கும்

கோடுயர் பிறங்கல் மலை”18
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இவ்வழிகளில் விலங்குகள் உண்ண உணவில்லாமல் வருந்தும். மரங்களின் பட்டை உலர்ந்து இருக்கும். அப்பட்டையை யானை போன்ற விலங்குகள் உண்ணும். பாலை நிலத்தில் வளர்ந்துள்ள யா மரங்களின் முழு அடிமரத்தின் பொரிந்த அரைப்பட்டை உருவும்படித் தம் கொம்பினால் குத்தி வலிமை பொருந்திய பெரிய கைகளால் யானை அதனை வளைக்கும்.
               

இரைதேடி வாடிய நடையையும் சிறிய கைகளையும் உடைய தன்னுடைய பெரிய சுற்றத்தின் மிகுந்த பசியை ஆண்யானை நீக்கும். இதனை,

“பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்

பொரிஅரை முழுமுதல் உருவக் குத்தி

மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்

சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்

தடமருப்பு யானை”19
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. யானைகளுக்கு உண்ண பசுமையான புற்கள் இல்லாததால் யா மரத்தின் பொரிந்த பட்டையை யானைகள் உண்ணும் வறண்ட பகுதியை இப்பாடல் உணர்த்துகிறது. யா என்பது பாலை நிலத்தில் உள்ள மர வகைகளில் ஒன்று. இம்மரத்தை,

“யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும்

ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே”20
               

என்கிறார் தொல்காப்பியர். யா, பிடா, தளா என்ற என்ற மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிகுந்து வரும். யானைகளே நீரில்லாமல் வருந்தும்போது அங்குள்ள மக்கள் எவ்வாறு நீர் வேட்கையைத் தீர்த்துக்கொள்வர் என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை நீக்குகிறார் உருத்திரன் என்னும் குறுந்தொகைப்புலவர். பாலைநில மக்கள் உகாய் மரங்களின் மீது அமர்ந்து, அம்புகளை வில்லுடன் பிடித்திருப்பர். அவர்களுக்கு நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று அவ்வேட்கையைத் தணித்துக்கொள்வர்.இதனை,


“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாத்து

………………………………………………………

விடுகணை வில்லொடு பற்றி கோடிவர்பு

வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்

நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்”21

என்ற அடிகள் உணர்த்துகின்றன. உகாய் மரத்தின் பட்டைக்கு நீர் வேட்கையைத் தணிக்கும் ஆற்றல் உண்டு என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இம்மரத்தை


“புல் அரை உகாஅய்” 22

என்று குறுந்தொகை உணர்த்துகிறது. இதைப் போன்று வழிச்செல்வோருக்காகக் காத்திருக்கும் மறவர் அவர்களைக் கொல்வர். இறந்து பட்ட உடல்கள் நாற்றமடிக்கும். அவற்றை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இதனை,

“கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்

ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த

படுமுடைப் பருந்து பார்த்திருக்கும்”23
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இறந்து போன உடல்கள் ஆங்காங்கே குவியல் குவியலாகத் தோன்றும். அக்குவியலின் நிழலில் யானைகள் தங்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.
               

இறந்து பட்டோரின் குவியல் (பதுக்கை)நிழலில் யானை தங்கும் என்பது குவியலின் பரப்பை உணர்த்துகிறது. அவ்வழியில் செல்வோரை கள்வர்கள் கொன்று குவிப்பர் என்று அறியலாம்.
               

வணிகர்கள் கோடைக்காலத்தில் வணிகத்திற்காகச் செல்லும்போது இது போன்ற துன்பங்களைச் சந்தித்தனர் என அறியமுடிகிறது. காட்டுத்தீயால் விலங்குகள் வருந்துவதையும் அறியமுடிகிறது.
               

நிலமானது நீரின்றி வற்றிப் போனது. நெடிய சுனைகளும் வற்றிப்போயின. குன்றில் இருந்த மரக்கிளைகள் பற்றி எரிந்தன. கோடை நீடிய அகன்ற காட்டிடத்து ஞாயிற்றின் வெம்மை மிக்க கதிர்கள் சுடுதலால் மூங்கில்கள் வெப்பம் பொறுக்காது வெடித்துச் சிதறின. இதனை,


“நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்ப

குன்றுகோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்

என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை”24
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்டவற்றிலிருந்து பாலை நிலத்தின் தன்மையும், அங்குள்ள வெப்பமும் புலப்படுத்தப்பெறுகின்றது. ஞாயிற்றின் வெப்பம் பொறுக்காமல் வெடித்துச் சிதறின என்பதால் தீ எரிக்கும் அளவிற்கு ஞாயிற்றின் வெப்பம் இருந்தது என்பதை உணரலாம்.


தொகுப்புரை
               

சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது குறுந்தொகை. இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன. இந்நூலில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை.  

இந்நூலை முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைக் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர். ஆண்டு 1915. இராமரத்தினம் ,உ.வே.சா, ரா.இராகவையங்கார், பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை போன்றோரின் குறுந்தொகைப் பதிப்புகள் போற்றத்தக்கன.
               

உ.வே.சா குறுந்தொகை உரை என்ற பெயரில் 1937இல் இதனைப் பதிப்பித்தார். இதில் நூலாராய்ச்சி என்னும் பகுதி குறிக்கத்தக்கது. மு.சண்முகம்பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்பில் தொடரடைவும், சொல்லடைவும் ஆய்வாளர்களுக்குப் பயன் தரக்கூடியவை. குறுந்தொகையில் பாலைத்திணைப் பாடல்கள் 90 உள்ளன.
               

பாலைத்திணையை ஐந்திணைகளுள் நடுவில் வைத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும். பாலை நில இலக்கணத்தை சிலம்பு கூறுகிறது.
பாலை நிலத்தில் சிறிதளவு நீர் மட்டுமே இருக்கும்.சிறிதளவு நீரை மக்கள் முறையாகப் பகுத்து உண்டனர். பாலை நிலத்தில் செல்வோர் நீர் வேட்கையால் நெல்லிக்காய்களை உண்பர். தலைவன் விடலை, காளை என்றும், தலைவி எயிற்றி என்றும் ஊர் பறந்தலை, குறும்பு என்றும் பெயர் பெற்றன. தெய்வம் கொற்றவை ஆகும். பாலை, இருப்பை, ஓமை முதலியவை மரங்கள். தொழில் ஆறலைத்தல்.
               

எறும்புப்புற்றில் இருந்து புல்லரிசியை எடுத்து உணவு சமைத்து தேக்கிலையில் வைத்து வழிச்செல்வோருக்கு அளிக்கும் கொடை உள்ளம் கொண்டவர்கள். தயிருடன் கூட்டிய கூழ், உடும்பின் இறைச்சி போன்றவையும் இவர்களால் விருந்தினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எயின வீரர்கள் நாடுகாக்கும் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வீரர்கள் தழை விரவிய கண்ணியினை அணிந்தவர். வலிமை உடையவர். ஆறலைக்கள்வர் இரங்கும்படி யாழை, இசைத்துப் பாடலைப் பாடுவர் பாணர், பொருநர் போன்றோர்.
               

பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஏற்படுத்தும் ஒலி வழிச்செல்வோரை அஞ்ச வைக்கும். உழிஞ்சில் என்றும் வாகை மரம் அழைக்கப்பட்டது. ஞாயிறு சுடும் மலைகளின் பாதைகளில் உள்ள பருக்கைக்கற்களும் கால்களுக்குத் துன்பத்தைத் தரும்.மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ஒலி கேட்போரை அச்சமடையச் செய்யும். விலங்குகள் புற்கள் இல்லாததால் மரங்களின் பட்டையை உரித்து உண்ணும்.
               

ஆறலைக் கள்வர்கள் நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று நீர்வேட்கையைத் தணித்துக் கொள்வர். கள்வர்கள் கொன்ற வழிப்போக்கர்களின் உடல்கள் நாற்றமடித்துக் கிடக்கும். அவ்வுடல்களை உண்பதற்காக பருந்துகள் காத்திருக்கும். அக்குவியல்களின் நிழலில் யானை தங்கும்.
               

மூங்கில் மரங்களால் ஏற்பட்ட தீயைக்கண்டு அஞ்சிய வணிகர்கள் வழியைத் தவறவிட்டு அலறுவர். தீயைக்கண்டு விலங்குகளும் அஞ்சி ஓடும். எனவே பாலை நிலம் வாழ்வதற்கும், வழிச்செல்வதற்கும் கடுமையான நிலம் என்பதை உணர முடிகிறது.


சான்றாதாரங்கள்

1.தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா – 3


2. மேலது அகத்திணையியல் நூற்பா- 9


3. மேலது அகத்திணையியல் நூற்பா- 10


4. மேலது புறத்திணையியல் நூற்பா- 18


5. சிலப்பதிகாரம் காதை 11 அடி – 64


6. குறுந்தொகை பா- 314


7. மேலது பா – 356


8.மேலது பா- 356


9.மேலது பா- 57


10. மேலது பா- 209


11. பெரும்பாணாற்றுப்படை- 93


12.மதுரைக்காஞ்சி- 310


13.பொருநராற்றுப்படை- 21 


14.குறுந்தொகை பா- 7


15.அகநானூறு பா- 151


16.குறுந்தொகை பா – 39


17. அகநானூறு பா- 5


18. குறுந்தொகை பா- 253


19.மேலது  பா- 255


20.தொல் எழுத்து நூ – 229


21.குறுந்தொகை பா- 274


22.மேலது  பா- 363


23.மேலது  பா- 283


24. அகநானூறு பா- 295


ம. அபிஷேக்

(22MTA1001)


முதுகலை இரண்டாம் ஆண்டு

தமிழ்இலக்கியம்
 

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)


காளிப்பட்டி, நாமக்கல் 637 501

 

இது இலக்கல்ல தனல் (நெருப்பு)|தன்னம்பிக்கை கட்டுரை|முனைவர் நா.சாரதாமணி

இது இலக்கல்ல தனல் (நெருப்பு) - முனைவர் நா.சாரதாமணி
          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்
        
         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.
        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது
     
      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.
துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.
உங்களை வித்தியாசப்படுத்துங்கள்
     
         உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.
நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும்.
            மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.
யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

 

மயில் ஓவியம்|சிறுகதை|முனைவர் க.லெனின்

மயில் ஓவியம் - முனைவர் க.லெனின்

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள்  ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல் ரொம்பவும் பரப்பரப்பாகக் காணப்பட்டது.  அவ்வவ்போது தலைமையாசிரியரின் அறைக்குள்ளே யார்யாரோ சென்று வந்து கொண்டிருந்தார்கள். ரகுவின் தலைக்கு மேலே காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் அவனுக்குக் கைக்கால்கள் வியர்த்துக் கொட்டின. உடம்பெல்லாம் சுடுகின்ற மாதிரி தோன்றிற்று. தன்னுடைய வலதுகையை எடுத்துக் கழுத்திலும் நெற்றியிலும் வைத்துப்பார்த்தான். கொஞ்சமாய்ச் சுடுவதுபோல்தான் தெரிந்தது அவனுக்கு.


ஊரிலே சின்னதாய் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தான். ஆறாம் வகுப்புக்குப்  பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வருகிறான். புதுத்துணி, புது நண்பர்கள், புது இடம், குறிப்பா சைக்கிளில் பள்ளிக்கூடம் போகலாம். இதெல்லாம் ரகுவை வானில் மிதக்க செய்தது. ஐஞ்சாவது படிக்கும்போதே ரகுவின் அப்பா அவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். ரகுவும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வான். பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்தபோது காலையில் சாப்பிடகூட இல்லை. ஆசையாய் அப்பாவுடன் ஒட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான். சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த வரிசையான நாற்காலியில்தான் சிறுவன் ரகு அமர்ந்திருந்தான்.  அந்த இடத்தில் இருக்கும் கோப்புகளும் வானுயர விட்டங்களும் அந்த விட்டங்களின்மேல் உள்ள விள்ளைகூரைகளும் மிடுக்கான மனிதர்களின் நடமாட்டமும் ரகுவை என்னவோ செய்ததுபோல் இருந்தன. மூஞ்சை உம்மென்று வைத்திருந்தான். காற்றாடி சுற்றிய போதிலும் வியர்வைத்துளிகள்  அங்கும் இங்கும் அவனின் உடம்பில் பரவியிருந்தன. கொஞ்சநேரத்திற்குப் பிறகு வயிற்றை முட்டிக்கொண்டு ஒன்னுக்கு வந்தது. பக்கத்தில் இருந்த அப்பாவை நைசாக ஆட்காட்டி விரலைக்கொண்டு சுரண்டினான். அவர் என்ன என்பது போல் பார்த்தார். ஆட்காட்டி விரலை நேராகத் தூக்கிக்காண்பித்தான். அப்பாவும் புரிந்து கொண்டு கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.


ரகுவிற்கு அப்பாடா என்றிருந்தது. ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்தாகிவிட்டது. அப்பா வேண்டுமானால் அலுவலகத்திற்குச் செல்லட்டும். கொஞ்சநேரம் இங்கையே இருந்துவிட்டு போக வேண்டியதுதான் என்று நினைத்தான். தன்னுடைய பேண்ட் ஜிப்பை அவிழ்த்துக்கொண்டே கழிவறையின் உள்ளே நுழைந்தான்.  உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வரிசையாகத் தன்னைப்போலவே சேர்க்கைக்கு வந்த மாணவர்கள் ஒவ்வொரு கழிவறை கூண்டிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.   


“அடப்பாவிகளா! நான்தான் பயந்துக்கிட்டு இங்க வந்தன்னா.. அத்தனைபேருமே இங்க வந்து என்னடா பன்னிட்டு இருக்கீங்க…” என்று மனதால் நினைத்துக்கொண்டு இன்னும் உள்ளே சென்றான்.


ஒரு பையலும் கூண்டைவிட்டு வெளியே வருதற்கு இல்லை. எல்லோருமே நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருந்தார்கள். ரகுவிற்கு முட்டிக்கொண்டு வந்தது.


“டே அவசரம் டா… யாராவது கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா” என்றான் ரகு.


எவனும் திரும்பி பார்க்காமலே நின்று கொண்டிருந்தார்கள். மீண்டும் சத்தமாய், ”ஹெட்மாஸ்டர் வர்ராருடா…” என்றான் ரகு.


இப்போது அனைத்துப் பயலுகளும் ரகுவைத் திரும்பிப்பார்த்தார்கள்.


”முதல்ல ஜிப்ப போடுங்க“ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் ஏறி ஒன்னுக்குப் போனான்.


“எங்கடா ஹெட்மாஸ்டரு” என்றான் மூர்த்தி
”

அட்மிஷன் போட உங்க அப்பா உங்களளெல்லம் கூப்பிட்டுகிட்டு இருக்கிறாரு. நீங்களெல்லாம் இங்க என்ன பண்ணீட்டு இருங்கீங்க” என்றான் ரகு.


அனைத்து மாணவர்களும் கழிவறையை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். மூர்த்தி மட்டும்  ரகுவின் மூஞ்சை நின்னுப் பாத்திட்டுப் போனான்.


அந்த வருடம் ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களின் சேர்க்கை சென்ற வருடத்தைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ரகுவும் மூர்த்தியும் ஒரே வகுப்பில்தான் போடப்பட்டிருந்தார்கள். இவர்களோடுக் கண்ணனும் மணியும் சங்கரும் சேர்ந்து கொண்டார்கள். ஐவரும் பஞ்சபாண்டவர்கள்ன்னு கூட சொல்லலாம். எப்போதும் ஒன்றாய்த்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு பி பிரிவுன்னாவே வாலு பசங்கதான். எப்பவுமே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பீரியட் முடிஞ்சாலும் கத்துவானுங்க.. ஆரமிச்சாலும் கத்துவானுங்க.. பாடம் நடத்தும்போது நடுநடுவே கேள்விகளும் அடிக்கடி கேட்டுட்டே இருப்பானுங்க.. எப்பவும் பேச்சும் சத்தமும் சிரிப்பும் கும்மாளுமாய்த்தான் இருக்கும். இதனால் வகுப்பு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்க்கிட்ட புகார் சொல்ல ஆரமிச்சாங்க.

 
“பசங்களா அவனுங்க… எல்லாம் குரங்குங்க… வாலு பசங்க… அடக்கவே முடியல சார்” என்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தார் ஆசிரியர் ஒருவர்.


“சின்னப்பசங்க.. குழந்தைங்க.. இளங்கன்று பயம் அறியாது.. அப்படித்தான் இருப்பார்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு  தலைமை ஆசிரியர் அந்த வகுப்புக்கு மட்டும் கண்டிப்பான ஆசிரியராகப் பார்த்துப் போட்டார்.


ஆறாம் வகுப்பு பி பிரிவுல ரகுதான் லீடர். அந்த வகுப்பே அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வகுப்பு மாணவர்களை அந்தளவிற்குத் தன்னுடைய சொல்பேச்சுக்குக்கீழ் வைத்திருந்தான். லீடர் பதவிக்குச் ஒருசில மாணவர்கள் முன்வந்தார்கள். அனைவரையும் பின்னுக்குத் தள்ளி போட்டியிட்டவர்களையும் சேர்த்து கைத்தூக்கவைத்து இவனே லீடரும் ஆயிட்டான். இதற்கு காரணம் இவன் வைத்திருந்த விளையாட்டுத்தான்.


ஒரு வெள்ளைத்தாளில் சின்னசின்னதாய்க் கோடுகள் வரிசையாய்ப் போடவேண்டும். அதேபோல மூன்றுமுறை போடவேண்டும். இப்பொழுது இரண்டிரண்டாய்க் கோடுகளை அடித்துக்கொள்ள வேண்டும். மீதி கோடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒன்றோ அல்லது பூஜ்ஜியமாகவோ வரும். இதேபோல் மற்ற இரண்டு வரிசைகளிலும் அடித்து மீதத்தைக் குறிக்க வேண்டும். உதாரணமாக பூஜ்ஜியம் ஒன்று ஒன்று என வருவதாக வைத்துக் கொள்ளலாம். ரகுவிடம் சார்ட் பேப்பர் ஒன்று இருந்தது. அவற்றில் பூஜ்ஜியம் ஒன்று ஒன்றுக்கு என்ன என்று பார்த்தால் புத்திசாலி, விளையாட்டு வீரன், டாக்டர், வக்கில் என்பது போன்ற ஏதாவது ஒன்று இருக்கும். இதை பார்த்த சிறுவர்களும் ‘ஹை’ என்று குதிப்பார்கள். இதை வைத்துத்தான் ரகு எல்லோரையும் மடக்கினான். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ரகுவோடு சமரசம் பேசி மற்ற மாணவர்களும் ஒத்தும் போனார்கள்.


பள்ளி ஆரமித்து இரண்டு மாதங்களுக்குப்பின் ஆறாம் வகுப்பு பி பிரிவுக்குப் புதியதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். பியூன் ஆறுமுகம்தான் அழைத்துக்கொண்டு வந்தார்.  அப்போது தமிழ் வகுப்பில் திருக்குறள் மனப்பாடமாகச் சொல்லவில்லை என்று ஆசிரியர் மாணவர்களை குச்சியால் அடித்துக்கொண்டிருந்தார். வந்த மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.  குண்டான உடம்பு. சிரித்த முகம். வெண்மையான தோற்றம். மொத்தத்தில் அமுல்பேபி போல் இருந்தான். சரவணன் என்று தன்னுடைய பெயரை வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டான்.


அடுத்த நாளிலிருந்து மாணவர்கள் ஒவ்வொருவராய் சரவணன் பக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். சரவணன் எல்லோரிடமும் சிரித்துச்சிரித்துப் பேசினான்.  எதற்கும் மனம் கலங்கி அழாதவனாய் இருந்தான். தான் வைத்திருந்த காசில் நண்பர்களுக்கு இடைவேளையின் போது நிறைய திண்பண்டங்களை வாங்கி கொடுத்தான். தன்னுடைய மதிய உணவை பிற மாணவர்களுக்கும் கொடுத்து ஆறாம் வகுப்பு பி பிரிவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துக்கொண்டான் சரவணன்.


ரகுவிற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சுத்தமாகச் சரவணனின் போக்குப் பிடிக்கவில்லை. ரகுவின் நண்பர்கள் வகுப்பு மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் பேசக்கூடாது என்று கட்டளை போட்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்பதாக இல்லை.


அன்று கணிதப்பாடம் நடந்து கொண்டிருந்தது. பெண் ஆசிரியை ஒருவர் பின்னம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பாடம் நடத்தும் வேளையில் சரவணன் ஏதோ சிரித்துக்கொண்டிருப்பதை ஆசிரியர் பார்த்துவிட்டார்.


“டே சரவணா… என்னாடா அங்க சிரிப்பு. இங்க வா…” என்றுக் குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆசிரியர். அரைக்கால் டவுசரோடு பயந்தபடியே கரும்பலகைக்கு முன்னால் வந்து நின்றான் சரவணன்.


“சிரிச்சிட்டு இருந்தல்ல… இந்தா சாக்பீஸ்… போர்டுல இருக்குற பின்ன கணக்கை போடு” என்றார்.  சாக்பீஸ கையில் வாங்கிட்டு அப்படியே நின்னிட்டு இருந்தான். சரவணனுக்கு போர்டுல இருக்குற பின்ன கணக்கைப் பார்த்தவுடனே தலைச்சுற்றுவது போல் இருந்தது.


கொஞ்சநேரத்தில் சரவணனின் முட்டிக்கால்களுக்குக் கீழ் குச்சியால் அடி விழுந்து கொண்டிருந்தது. குனிந்து கைகளால் எவ்வளவோ தடுத்துப் பார்த்தான். ஆனால் அடி மட்டும் விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியரும் மாற்றிமாற்றி அடித்துக்கொண்டேயிருந்தார். இப்போது சரவணன் வகுப்பிலேயே ஓட ஆரமித்தான். போர்டுக்கு எதிர்புறம் உள்ள மூலையில் நின்று கொண்டான்.  ஆசிரியரும் அவனை அடிப்பதற்காகக் குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினார்.  சரவணன் அதற்குள் வலது பக்கமாய் ஓடிவந்து மீண்டும் போர்டுகிட்ட வந்து நின்னான். இப்போது ஆசிரியரும் இவனும் எதிர்புறமுமாய் நின்றார்கள்.


“டே நில்லுடா.. என்ன ஓட வைக்காதடா..” என்றார் ஆசிரியர்.


“டீச்சர் முடிஞ்சா என்ன புடிங்க” இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடியாடினான் சரவணன். ரகுவிற்குச் சரவணனைப் பிடித்துக்கொடுத்து டீச்சரிடம் அடிவாங்கி வைக்க வேண்டுமென்று பிடிக்க ஓடிவந்தான்.  சரவணனோ யாரிடமும் மாட்டாமல் சுற்றிச்சுற்றி வந்தான். சிறிது நேரத்திற்கு மேலாக அவனால் ஓட முடியவில்லை. சோர்ந்து போயிவிட்டான். வகுப்பு மாணவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான் சரவணன். பெல்லும் அடித்தது. பீரியடும் முடிந்தது.


ஒரு ஆங்கில வகுப்பின்போது மாணவர்கள் போர்டில் இருப்பதைப் பார்த்து எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்துக்கொண்டு வந்தார். சரவணனின் நோட்டையும் பார்த்தார். நோட்டை கையில் வாங்கிக்கொண்டார். கோழிக்கால் கிறுக்கினார் போன்று இருந்தது. அவனுடைய கையெழுத்தை அவனாலயே திருப்பி படிக்க முடியாது. அந்தளவிற்குக்  கையெழுத்துப் படுமோசமாக இருந்தது. சரவணனிடம் நோட்டை காண்பித்து,


“தம்பி இது என்ன கையெழுத்து” என்றார்.


“இங்கிலிஸ் எழுதறன் சார்” என்றான்.


பக்கத்தில் இருந்த ரகுவின் நோட்டை காண்பித்து, ”அப்போ இதற்கு பேர் என்ன? என்று கேட்டார்” ஆசிரியர்.


கையில் வாங்கி பார்த்தான். ரகுவின் கையெழுத்து அழகாய் முத்துக்கள் பதித்தது போன்று இருந்தது. சரவணன் வழிந்தான். ஆசிரியர் கோபமானார். சரவணனைப் பிடித்து முதுகை வளைத்து ஓங்கி ஒரு அடி போட்டார். ப்ளார் என்று சத்தம் வந்தது. சரவணனின் கையில் வைத்திருந்த ரகுவின் நோட்டு ஒருப்பக்கமாய்ப் போய் விழுந்தது. அடிவாங்கி நிமிர்ந்த சரவணன்,


“வலிக்கலையே… வலிக்கலையே எனக்கு” சிரித்துக் கொண்டே சொன்னான்.


“அடிச்ச எனக்கே கை வலிக்குது. இவன் வலிக்கலன்னு சொல்றானே!“ என்று சொல்லிவிட்டு அவரும் சிரித்து விட்டார்.


அன்று மதிய சாப்பாட்டு வேளையில்,  ”டே.. சரவண குண்டா… இங்க வாடா..” என்றான் ரகு. “சொல்லுடா லீடரு” என்று புருவத்தை மேலே தூக்கிக்கேட்டான் சரவணன்.


“வாத்தியாரு அந்த அடி அடிக்கிறாரு. உனக்கு வலிக்கவே இல்லையாடா..” என்றான் மணி.


“என்னது வலியா.. இதுக்கு முன்னால நான் படிச்ச ஸ்கூல்ல நான் நல்லா எழுதலன்னு என்னை மரத்துல கட்டி தலைகீழா தொங்க விட்டுடாங்க.. அதையே தாங்கிட்டேன். இதெல்லாம் ஒரு விஷியமா” என்று சர்வசாதாரணமாய்ச் சொன்னான் சரவணன்.


“என்னது தலைகீழா தொங்கவிட்டாங்களா” என்றான் கண்ணன்


“ஆமாம்! அதுவும் டிரஸ்ஸே இல்லாம” என்று சொல்லிவிட்டு சரவணன் தன்குண்டு உடம்பு குழுங்க தலையை ஆட்டிக்கொண்டு ஒருகையில் டிபன் பாக்ஸ்சும் இன்னொரு கையில் ரொட்டித்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே சென்றான். ரகுவும் அவனது நண்பர்களும் வாயைப்பிளந்தார்கள்.
 

வருடாவருடம் போலவே நவம்பர் பதினான்காம் தேதி ‘குழந்தைகள் தினம்’ கொண்டாட தலைமை ஆசிரியர் முடிவு செய்திருந்தார். அதன்படி போட்டிகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. வெற்றிப்பெற்றவர்கள் ‘குழந்தைகள் தினத்தன்று’ கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆறாம் வகுப்பு பி பிரிவிலும் மாணவர்கள் தங்களது பெயரினை ஒவ்வொரு போட்டியிலும் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டியிலும்  கவிதைப்போட்டியிலும் ரகு தன்னுடைய பெயரைப் பதிவு செய்தான். ஓவியப்போட்டியில் யாருமே பெயர்க்கொடுக்க முன்வராதபோது சரவணன் மட்டும் தன்னுடைய பெயரைக் கொடுத்தான். ஓவிய ஆசிரியர் சரவணனை ஒருமாதிரியாகப் பார்த்தார். அவனால் ஓவியம் சரியாக வரைய முடியுமா எனச் சந்தேகித்தார்.


“டே சரவணா! உனக்கு கயெழுத்தே சரியா வராது.  அப்புறம் எப்படி ஓவியம் சரியா வரைவ?” என்றான் சங்கர்.


“அதெல்லாம் எங்க அப்பா இருக்கிறாருடா.. அவரு பாத்துப்பாரு” என்றான் சரவணன்.


அன்றைய ஓவியப்பீரியடில் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். ”போட்டிக்கு எல்லோரும் தயாராகிட்டீங்களா? உங்க திறமைக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கு என்ன வருமோ அதை சிறப்பா செய்யுங்க. உங்க மேலயே நீங்க முதல்ல நம்பிக்கை வையுங்க. நீங்களெல்லாம் இந்தப் பள்ளிக்குப் புதுசு. அதனால ‘குழந்தைகள் தினம்’ நிகழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. விழா ரொம்பமும் பிரமாதமாக நடக்கும். வெற்றிப்பெற்ற மாணவர்களை மேடையில் பேச சொல்லுவாங்க. பரிசும் பதக்கமும் உங்க பெற்றோர்களைக்கொண்டு கொடுக்கச்சொல்லி அசத்துவாங்க. அப்புறம், ஓவியக்கண்காட்சியும் நடக்கும். நீங்க வரைகின்ற ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்கப்படும். அந்த ஓவியம் பக்கத்தில் நீங்களும் நின்று பார்வையாளராகிய மாணவர்களுக்கும் பெற்றொர்களுக்கும் விளக்கம் தரலாம். கடைசியா உங்க அனைவருக்கும் சாப்பாடு போடுவாங்க” என்றார்.


ஓவியப்போட்டி நடைபெறும் நாளும் வந்தது. எல்லோரும் சார்ட்டும் பென்சிலும் இரப்பருமாக அறையினுள்ளே நுழைந்தார்கள்.  சரவணனும் ஓவியப்போட்டிக்குச் சென்றிருந்தான். போட்டியும் முடிந்தது.


அப்போது ஓவிய ஆசிரியர் சரவணனின் வகுப்பிற்கு வந்திருந்தார். சரவணனை அழைத்து,


“டே தம்பி இந்த ஓவியத்தை நீயா வரைஞ்ச?” என்றார் ஓவிய ஆசிரியர்.


“ஆமாம் சார்! நான்தான் வரைஞன்” என்றான் சரவணன்.


ஆசிரியரால் நம்ப முடியவில்லை. ஆனாலும் உன்னுடைய ஓவியம்தான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். சரவணன் எப்போதும் போலவே வழிந்துகொண்டிருந்தான்.


சரவணனின் ஓவியத்தை மாணவர்களிடம் காட்டினார். ஒரு வெள்ளை சார்ட்டில் மயிலை ஓவியமாக வரைந்திருந்தான். துள்ளி ஆடும் மயிலானது ஓவியமாய் இல்லாமல் நிஜத்தில் பார்ப்பது போன்று தோகைவிரித்து ஆடுவது போல் இருந்தது. அனைவரும் ரசித்துத் சரவணனைப் பாராட்டினார்கள். ரகுவிற்கும்கூட மயில் ஓவியத்தைப் பார்த்து அசந்துதான் போனான். ஆனாலும் ரகுவிற்குச் சரவணன் வரைந்த ஓவியம் அழகாய் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஓவியத்தை அவனுடைய அப்பாதான் வரைந்து கொடுத்திருக்க வேணடும். அதைத்தான் எப்படியோ மாற்றி கொடுத்திருக்கிறான் என்று நினைத்தான். சரவணனை மற்ற மாணவர்கள் பாராட்ட பாராட்ட ரகுவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எப்படியாவது சரவணனின் மயில் ஓவியத்தை ஓவியக்கண்காட்சியில் வைக்கவிடக் கூடாது என்று எண்ணினான்.


ஓவியக்கண்காட்சியில் முதல் நாளன்று மாணவர்கள் அனைவரும் தங்களது ஓவியத்தை அறையில் சரியான இடமாய்ப் பார்த்து வைத்துக்கொண்டிருந்தார்கள். சரவணனுக்கு உதவ ரகுவும் அவனின் நண்பர்களும் உடனிருந்தனர். அப்போது சரவணனின் மயில் ஓவிய சார்ட்டுக்குப் பக்கத்தில் பாட்டிலில் தண்ணீர் குடிக்கின்ற மாதிரியும் கைத்தவறி ஓவியத்தில் விழுகின்ற மாதிரியும் ரகு பார்த்துக்கொண்டான். ரகு நினைத்த மாதிரியே தண்ணீர் முழுவதுமாய் சார்ட்டில் ஊற்றியது. சார்ட் நனைந்து ஓவியம் அழிந்து கொஞ்ச நேரத்திலே நைந்தும் போனது. நடந்தது விபத்துப் போலவே அமைந்தும்விட்டது.  சரவணன் கண்கள் சிவக்க தேம்பிதேம்பி அழுதான்.


சரவணன் அழுவதை அன்றுதான் ரகுவும் மற்ற மாணவர்களும் பார்த்தார்கள். ரகுவிற்கு தான் தப்பு செய்துவிட்டோமோ என்று மனதார வருந்தினான். ஓவிய ஆசிரியர்தான் சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.


“அழுவாத… நீதான வரைஞ்ச.. இன்னும் நமக்கு காலைவரை நேரம் இருக்கு. அதுக்குள்ள அதேமாதிரி இன்னொன்னு வரைஞ்சிடு” என்றார் ஓவிய ஆசிரியர். சார்ட்டும் பென்சிலும் சரவணனிடம் கொடுக்கப்பட்டது. வெறும் சார்ட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். தேம்பல் இன்னும் நிக்கவில்லை. கண்கள் நிறைய கண்ணீருடன் முகமெல்லாம் வியர்த்துக் காணப்பட்டான்.


ரகுவின் நண்பர்கள் அனைவரும், “சரவணா… உன்னால முடியும்! முடியும்! வரைடா… நாங்கெல்லாம் இருக்கோம் என்று உற்சாகப்படுத்தினார்கள். ரகு மட்டும் மனஅழுத்தத்துடன் சரவணனையே பார்த்துக்கொண்டிருந்தான்.  சரவணன் பென்சிலால் கோடிட்டான் வரைந்தான் மேலும்கீழும் இழுத்தான் வட்டமிட்டான். கொஞ்சநேரத்தில் மீண்டும் முன்னைப்போலவே அழகான மயில் ஓவியம் வந்துவிட்டது. சின்ன வயதில் இப்படியொரு திறமையா என்று ஆச்சரியப்பட்டார் ஓவிய ஆசிரியர். ரகு ஓடிச்சென்று சரவணனை இறுகக்கட்டிக்கொண்டான்.


”நண்பா… நீ நல்லவண்டா… திறமையானவண்டா.. உன்னை போல ஒருத்தன் எங்களுக்கு நண்பனா கிடைச்சது சந்தோசம்டா.. என்னை மன்னிச்சிருடா.. நான் வேணுமின்னுதான் ஓவியத்து மேல தண்ணீர் ஊற்றினேன். என்னை மன்னிசிருடா நண்பா..” என்று ரகு சரவணனின் காலில் விழுந்தான்.


”டே ரகு நீ என்னோட பிரண்டுடா… நீ போயி என் கால்ல விழுற..“ என்று ரகுவைத் தூக்கி கட்டிப்பிடித்துக்கொண்டான் சரவணன். மாணவர்களும் ஒன்றாய்க் கூடி கூச்சலிட்டனர். ஓவிய ஆசிரியர் இந்தச் சின்னப் பசங்களின் அன்பைப் பார்த்து வியந்துபோனார்.


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130.

முனைவர் க.லெனின் அவர்களின் படைப்புகளைக் காண்க…

சங்ககால தச்சுக்கலையும் மட்பாண்டக் கலையும்

சங்ககால தச்சுக்கலையும் மட்பாண்டக் கலையும் - முனைவர் க. இராஜா
           மனிதன் நாகரிக வளர்ச்சிஅடைய புதிய புதிய உத்திமுறைகளை கண்டுபிடித்து அவற்றை உலகிற்கு கொடையாக வழங்கியுள்ளான். அவ்வகையில் தான் வாழும் வாழ்விடத்திற்குதகுந்ததுபோல இயற்கை தந்த கொடைகளைக் கொண்டு கலைநயம் மிக்க சூழலை உருவாக்கி அதனுடன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் இணைத்துப் பழமையில் புதுமையை உருவாக்கத் தலைப்பட்டான். அங்கனம் கலைநயத்தோடு செய்யப்பட்ட தச்சுக்கலை குறித்தும் மட்பாண்டக் கலை குறித்தும் விவாதிக்கிறது இக்கட்டுரை.
               
     சங்க காலத்தில் பல கலைஞர்கள் இருந்தனர் மரத்தால் வாழ்க்கைக்கு தேவையான பலப்பொருள்களை செய்பவர்கள் தச்சர்கள் எனப்பட்டனர். மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் வண்டிகள் கடல் வாணிபத்திற்கு தேவையான படகுகள் வீட்டிற்குரிய அழகிய தூண்கள், வேலைப்பாடுடைய கதவுகள், அரசருக்கு தேவையான தேர்கள் போன்வெற்றை செய்துக் கொடுப்பவர்கள் தச்சர்கள் நால்வகைப் படைகளில் சிறந்தப்படை தேர்படை. தேர்செய்து கொடுப்பது தச்சரின் தலையான கடமையாக இருந்திருக்கிறது. தச்சர்கள் மன்னர்களுக்கு வலிமையான தேர்களை செய்துக் கொடுப்பதை தங்களது கடமைகளாகக் கருதினர்.
               
“வைகல் எண்டேர் செய்யும் தச்சன்
               
திங்கள் வலிந்த காலன் னோனே” புறம்.87
               
இதனால் தச்சர்கள் மரத்தால் பலப்பொருள்களை செய்துக் கொடுத்தனர் என்பது தெளிவாகிறது. உறுதியான தேர்களையும் செய்துக் கொடுத்தனர் என்பதை உணர முடிகிறது. மேலும் மக்களுக்குத் தேவையான தச்சுக் கருவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். சங்க காலம் முதல் இன்று வரை தச்சர்களின் செயல் மிகுந்து காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னர்களுக்கும் தேவையான அழகிய தூண்களும் வேலைப்பாடுடைய அழகிய கதவுகளும் அவர்களுக்குத் தேவையான தேர்களையும் அவற்றை உறுதியுடன் செய்துக் கொடுப்பது. தச்சர்களின் கடமையாக இருந்தது. தொழில்களில் சிறந்த தொழிலாக தச்சுத் தொழில் போற்றப்படுகிறன்றது.

தச்சுவேலையில் கலைநயம்
               
சங்ககால மக்களில் தலைமை வாய்ந்த மன்னர்களின் சமூகம் எதிரிகளின் தாக்குதலில் இருந்துத் தன்னைகாத்துக் கொள்ளமிகவும் வலிமையானபோர் கதவுகளை தனது கோபுரவாயிலில் அமைத்திருந்தான். அத்தகைய கோபுரவாயிலின் கதவுகள் பற்றி நெடுநல்வாடையில் ஆணிகள், பட்டங்கள் யாவும் பருத்த இரும்புகளால் பிணிக்கப் பெற்றவை. அதில் தாழ்ப்பாள்கள் மிகவும் வலிமையானதாக விளங்கினஎனச் சுட்டப்படுகின்றது. இவையாவும் “கைவல் கம்மியன்” என்று கூறப்படும் தச்சுவேலையில் நேர்த்தி உடையவர்களால் செய்யப்பட்டது.
          
“ஒருங்கு உடன் வளைஇ ஓங்குகலை வரைப்பின்
          
பருஇரும்பு பிணித்து செல்வரக்கு உரீஇ
          
துணைமான் கதவம் பொருத்தி இணைமாண்டு” (நெடுநல்:78-80)

என்ற வரிகளில் சங்ககால மக்களின் கைத்திறனுடன் சேர்ந்த கலை நயத்தை அரண்மனைக்கு பொருத்தப்பட்;ட கதவுகள் உணர்த்துகின்றன. மேலும் இன்று பெரும்பாலான வீடுகளின் நிலைக்களுக்கு மேலே காணலாகும் ‘கஜலெட்சுமி’ வடிவம் இழைத்த உத்தரம் நெடுநல்வாடையிலே இடம் பெற்றுவிட்டது. உத்திரத்தின் மேலே அதாவது நிலைக்கு மேலே கற்பலகையில் குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளால் ஏந்திய பிடிகளின் உருவங்களும் அதன் நடுவில் திருமகள் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தொழில் நுட்பங்கள் யாவும் சங்ககாலமக்கள் வழங்கிய கொடை எனில் அது மிகையாககாது. நெடுநல்வாடைக்கு உரை வகுத்த நச்சினார்கினியர் கஜலெட்சுமி உருவம் பொறித்த கற்பலகைக்கு விளக்கம் தரும் போது, “நடுவில் திருமகளும், இருபுறத்தும் இரண்டு செழுங்கழுநீர்ப் பூவும், இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் கற்கலி” என்று அழகுபட உரைக்கின்றார். இத்தகைய காட்சி கலித்தொகையிலும் காணமுடிகின்றது.
          
“வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்
          
புரிநெகிழ் தாமரைமலரங்கண் வீறுஎய்தித்
          
திருநயந்து இருந்தன்ன”       (கலி:44)

என்று கூறப்பட்டுள்ளது. பழங்கால கலைகளுள் நிலைத்த தன்மை உடையன என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும்.

கட்டிலின் தொழில்நுட்ப கூறுகள்
               
பாண்டிமாதேவி உறங்குவதற்காகச் செய்யப்பட்ட கட்டிலின் கலை வேலைப்பாடுகள் நெடுநல்வாடையில் சுட்டப்பட்டுள்ளதை நோக்கும் போது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளில் எத்தகைய அருமையான கலைக் கொடை இன்றைய கலை விரும்பிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கிடைத்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. பாண்டில் என்றுசொல்லப்படும் கட்டில் எப்படி செய்யப்பட்டது என்பதை நெடுநல்வாடை விளக்கும்போது நாற்பது வயது நிரம்பிய முரசு போன்ற கால்களை உடைய போரில் இறந்த யானையின் தானே விழுந்த தந்தங்களால் செய்யப்பட்டது. தச்சன் தனது கூர்மையான சிறிய உளியால் நுட்பாகச் செதுக்கிவட்டக் கட்டிலை உருவாக்கினான். மேலும் அதன் இடையில் இலைவடிவங்கள் விளங்குமாறு செய்யப்பட்டது என்று கூறும் போது நுண்ணிய வேலைப்பாடு உடைய கட்டில் (அ) பாண்டில் செய்ய சிற்றுளி பயன்பாடு மாறவில்லை. காலங்கள் மாறினாலும், கலையும், தொழிலும் மாறாது என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும். கட்டிலின் மேல் சிங்கம் வேட்டையாடுவது போன்ற காட்சி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தூரிகை கொண்டு வண்ணங்களால் சித்திரம் தீட்டுவதைக் காட்டிலும் தகடுகளில் உருவங்கள் பொறிப்பது என்பது கடினமானதாக்கும் என்றும் கலை தன்மை கொண்ட கலைஞர்களுக்கு அது எளிதாகிப் போகின்றது.
 
 “தசநான்குஎய்தியபணைமருள் நோன்தாள்
          
இகல் மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதல்
          
பொழுதுஒழி,நாகம் ஒழிஎயிறுஅருகுஎறிந்து
          
சீரும் செம்மையும் ஒப்பவல்லோன்
          
கூர் உளிக் குயின்றஈர் இலை இடை இடுபு”        (நெடுநல்:115-119)

என்ற செய்யுள் வரிகளில் கட்டிலை தச்சன் செய்தமுறையைக் கூறியுள்ளது. மேலும் பாண்டில் பற்றி மலைப்படுகடாமில் “நுண் உருக்குற்றவிளங்கு அடர்ப் பாண்டில்” என்று கூறப்பட்டுள்ளது.

மட்பாண்டத் தொழில்
               
பண்டை நாளில் பெரும்பான்மையான மக்கள் மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர். மட்கலம் செய்யும் மக்கள் குயவர்கள் எனப்படுகின்றனர். பச்சை மண்ணால் செய்த கலத்தைச் சூளையில் இட்டு எரித்து புனைவது மட்கலம் எனப்பட்டது.
               
மண்பாண்டங்கள் மக்களுக்குப் பல வகையில் பயன்பட்டது. இதற்கு பலப்பெயர்கள் உள்ளன. உணவு சமைத்தற்குரிய கலம், அடுகலம் என்றும் நீர் நிறைத்து வைப்பதற்குரிய கலம் மட்கலம் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் உடலை பெரிய மட்கலத்தில் வைத்துப் புதைப்பர் இதனை தாழிகள் என்று அழைத்தனர். மண்பாண்டம் செய்ய கருவிகள் தேவைப்பட்டன.
               
“அச்சுடைக் சாகாட்டு ஆரம்”              (புறம்:256)

என்ற வரிகள் மூலம் மண்பாண்டம் செய்ய சக்கரம் என்ற கருவி பயன்பட்டன என்பது தெளிவாகிறது. மண்பானையை சுடாமல் அப்படியே பயன்படுத்தினால் அது பயனற்று போகும். அதனால் அதனைச் சுட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை,
               
“இருள் திணித்தன்ன குரூஉத்திரன் பரூஉப்புகை
               
அகலிக விசும்பின் உளன்றும் சூளை”

என்பது தெளிவாகிறது. சங்க காலத்தில் மக்கள் இறந்த பிறகு அவ்வுடலைத் தாழியைக் கொண்டு புதைத்தனர். இதனை,
               
“கவி செந்தாழிக் குவிபுறத் திருந்த
               
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர்”             (புறம்.238)

என்பதால் மக்கள் தாழிகளைப் பயனப்டுத்தினர் என்றும் அத்தாழி செந்நிறமாக உள்ளது என்றும் தெளிவாகிறது. மண்பாண்டங்களை மக்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள். இத்தொழில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது என்பது புறநானூற்றின் மூலம் அறிய  முடிகிறது.
               
சங்க காலத்தில் மட்பாண்டத் தொழில் பரவலாக்கம் பெற்று இருந்தது. மட்பாண்டங்களைச் செய்வோர் அதனைத் தனித்த தொழிலாகச் செய்துள்ளனர். எனவே அவர்களைக் கலம்செய்கோ, எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். இதனை, “கலம் செய் கோவே! கலம் செய் கோவே!”(புறம்: 228) என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. மேலும் அவர்கள் வேட்கோ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், சிறுவயது முதலே இத்தொழிலை மேற்கொள்கின்றனர் எனவும்,
               
“வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
               
பசுமண் குரு உத்திரன் போல”              (புறம். 32)

புறப்பாடல் குறிக்கின்றது. இதை நோக்க மட்பாண்டத் தொழில் குடும்பத்தொழிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. மட்பாண்டங்கள் பெரும்பாலும் கொள்கலனாகவே காட்டப்படுகின்றன. பானை, நீர்க்கன்னல், இறந்தோரைப் புதைக்க பயன்படுத்திய தாழிகள் முதலியவை சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றன.
               
பானைகள் பானை, குழிசி, தசும்பு, மண்டை, உறி, கரகம் எனப்பல பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
               
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)

என்னும் பாடலடி பானை எனக் குறிக்கப்பட்டமையையும்,
               
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி” (பெரும்: 96)

என்னும் பாடலடி குழிசி எனச் சுட்டப்பட்டமையையும்,
               
“தயிர் கொடு வந்த தசும்பு” (புறம்: 33)

என்பது தசும்பு எனக் குறித்ததையும்,
               
“பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” (குறு: 169)

என்னும் அடி மண்டை என அழைக்கப்பட்டதையும்,
               
“உறித் தாழ்ந்த கரகம்” (கலி: 9)

என்னும் பாடல்வரி கரகம் என்றதையும் குறிக்கின்றன. இவ்வாறு வேறு வேறு பெயர்களால் அழைக்கப் பெற அவற்றின் வடிவம் அல்லது அளவு மாறுபாடு காரணமாக இருக்கலாம் எனினும் அவற்றை உறுதி செய்ய சங்கப் பாடல்களில் இடமில்லை.
               
பானைகளில் ஓவியங்கள் வரையப்பட்டமையோடு பானைகளில் பெயர் எழுதும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது.
               
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
               
கண்ணெழுத்துப் படுத்த என்னும்
               
பல்பொதிக் கடைமுக வாயில்.”       (சிலம்பு. இந்திர.111-113)

என்னும் அடிகள் பானையில் பெயர் பொறித்தமையைக் காட்டுகின்றது.
  மட்பாண்டங்கள் செய்த முறையினையும் சங்கப்பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. மட்பாண்டங்கள் செய்ய ஈர மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். ஈரமான பதப்படுத்திய மண்ணை சக்கரத்தில் இட்டு பானை செய்துள்ளனர்.
  
“வனை கலதிகிரியின் குழிசி சுழலும்
               
துணை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்” (மலை:475)

என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகின்றது. இவ்வாறு சக்கரத்தைச் சுழலவிட்டு கைகளால் செய்யப்பட்ட பானைகள் பின்னர் நெருப்பில் இட்டு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பானை தனித்தனியாக சுடப்படாமல் மொத்தமாக சுடப்பட்டிருக்க வேண்டும். இப்படி பானைகளைச் சுடுவதால் ஏற்படும் புகை மலையையே மறைப்பதாக,
               
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ
               
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்: 308)

என்னும் அகநானூற்றுப் பாடல்வரிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சுடப்படாத பானைகள் ஈரத்தைத் தாங்காதவையாக, பயனற்றவையாக இருந்தன. இந்த பயனற்ற கலத்தை பசுங்கலம் என்று குறிக்கப்பட்டமையை,
               
“பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
               
ஊள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி” (குறு: 29)
             
“ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
               
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு” (நற்: 308)

முதலான பாடல் வரிகள் குறிக்கின்றன. சுடப்படாத பானைகள் பயனற்று கரையும் நிலையில் இருக்க, சுடப்பட்ட பயனுள்ள பானைகள் உணவுசார் தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன.
               
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
               
வாராது அட்ட வாடுஊண் புழக்கல்” (பெரும்: 96)
               
“சோறு அடு குழிசி இளக
               
மான்தடி புழக்கிய புலவுநாறு குழிசி
               
நகைமுதிர் சாடி நறுவின் வாழ்த்தி” (பேரும்:40)

போன்ற பாடல் வரிகள் பானைகள் உணவு சமைக்க பயன்பட்டமையைப் புலப்படுத்துகின்றன. மேலும்,
               
“பாணர் பசுமீண் சொரிந்த மண்டை”         (குறுந்.169)

என்னும் பாடலடி மீனைச் சேகரிக்க மண்பானையைப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. மேலும், மண்பானைகள் தயிரை வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
               
“தயிர் கொடு வந்த தசும்பு” ((புறம்: 33)

எனும் புறநானூற்றுப் பாடலடி இதனைப் புலப்படுத்துகின்றது.
              
  “உறி தாழ்ந்த கரகம்” (பெரும்: 56)
              
  “இமிழ் இசை மண்டை உறியொடு” (கலி: 106)
               
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)

போன்ற பாடல் பானைகளை வீட்டில் தொங்கவிட உறிகளைப் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றது
.
முடிவுகள்
📍 சங்க காலத்தில் வேளாண்மைத் தொழிலைத் தவிர பிற தொழில்களும் சிறந்தவையாக இருந்துள்ளன.

📍 சங்ககால மக்கள் எத்தொழிலைச் செய்யினும் அவற்றைக் கலைநயத்தோடும், தொழில்நுட்பத்தோடும் செய்தனர்
.
📍பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட முறைகள் இன்று பின்பற்றப்படும்போது தொழில்நுட்பங்கள் மாறவில்லை.  தொழில்நுட்பக் கருவிகளே மாறி உள்ளன.
📍சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுவது போன்று சாமானியரின் புழங்கு பொருளாக பலவகைப் பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சங்கப் பாடல் குறிப்பது போல தங்கள் பானைகளில் பெயர் எழுதி பயன்படுத்தியுள்ளனர்.
உலோகங்கள் பயன்படுத்தப்பட்ட காலமாயினும் சங்க காலத்தில் மட்பாண்டங்களே சாமானியர் பயன்பாட்டில் பெரும் இடம் பிடிக்கின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க. இராஜா
இணைப்பேராசிரியர், 
தமிழ்த்துறைஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி
பொள்ளாச்சி – 642107
Email: rajavmctamil@gmail.com

 

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு - ஜெயலட்சுமி

       தேனி மாவட்டம், வருஷநாடு அருகே தங்கமாள்புரத்தில் 306 ஆண்டு பழமையான திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தொல்லியல் ஆய்வாளர் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவரும் தொல்லியல் ஆய்வாளரும் தமிழ் ஆசிரியருமான ஜெயலட்சுமி, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
  
          தொல்லியல் கள ஆய்வு செய்து தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தி வருகிறேன். என் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்ததில் அச்சுவடி திருக்குறள் சுவடி என்பது தெரிய வந்தது. இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில் உரைநடையுடன் கூடியதாக இருந்தது.
           
        பல்வேறு திருக்குறள் உரையாசிரியர்களின் உரையுடன் ஒப்பிட்டுபார்த்ததில் இச்சுவடியில் உள்ள உரை புதிதாக உள்ளது. மேலும் இச்சுவடி எழுதப் பட்ட காலம் விளம்பி ஆண்டு மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இதன் காலம் 1718ம் ஆண்டு ஜூலை 31 ஆகும்.


            தற்போதைய நிலையில் 306 ஆண்டு பழமையாக உள்ளது. எழுத்துக்கள் இடைவெளி இல்லாமலும், நெடில் எழுத்துக்கள், புள்ளிகள் இல்லாமலும் உள்ளதால் இச்சுவடியானது வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்த காலத்திற்கு முந்தையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவடியின் ஒரு இதழில் ஆறு முதல் பத்து வரிகள் எழுதப்பட்டுள்ளன.  ஒவ்வொரு இதழிலும் அதன் பக்கத்தை குறிக்கும் வகையில் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு திருக்குறள் முடிந்ததும் அதன் உரையானது இடைவெளி இன்றி தொடர்ச்சி யாக எழுதப்பட்டுள்ளது. அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிசை மாற்றப்பட்டுள்ளது.


     அதிகார தலைப்புகளைத் தற்போதைய தலைப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று மாறுபட்டிருப்பது வியப்பாக உள்ளது. இச்சுவடியை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு உள்ளேன். விரைவில் நூலாக்கம் உரையுடன் செய்யப்பட உள்ளது. அவ்வாறு வெளிவருமாயின் தமிழ் உலகிற்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறேன்.

ஆய்வாளர்
திருமதி ம.ஜெயலட்சுமி
தொல்லியல் ஆய்வாளர்
ஓசூர் – 635 130

இலக்கியத்தில் கூற்றுகள் ?

இலக்கியத்தில் கூற்றுகள்
1.ஆசையே துன்பத்திற்குக் காரணம்   – புத்தர்

2.கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே –  திருநாவுக்கரசர்

3.என் கடன் பணி செய்து கிடப்பதே  – திருநாவுக்கரசர்

4.நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
 ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோம்
அல்லோம் –  திருநாவுக்கரசர்

5. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்  – திருநாவுக்கரசர்

6. அடியவர்க்கும், அடியவர்க்கும், அடியவர்க்கும் அடியேன் யான்  – நம்மாழ்வார்

7. வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் : மெய் கூறுவல்  – மருதனில் நாகனார்

8. செல்வத்துப்பயனே ஈதல் – நக்கீரர்

9. ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
  ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று 
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று  – கழைதின் யானையார் (புறநானூறு)

10.கோல்நோக்கி வாழும் குடிபோல் இருந்தேன்- குலசேகர ஆழ்வார்

11.செல்வத்துப் பயனே ஈதல்  – நக்கீரர்

12.நூல் பல கல்  – ஒளவையார்

13.இளமையில் கல்  – ஒளவையார்

14.நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு  – ஒளவையார்

15.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்  – ஒளவையார்

16.அணுவைத் துளைத்தேழ் கடலையும் குறுகத் தறித்தக் குறள்  – ஒளவையார்

17.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு  – ஒளவையார்

18.மீதூண் விரும்பேல்  – ஒளவையார்

19.இயல்வது கரவேல்  – ஒளவையார்

20.நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ  
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே  – 
ஒளவையார்

21.ஈவது விலக்கேல்  – – ஒளவையார்

22.எறும்பும் தன் கையால் எண்சாண்   – – ஒளவையார்

23.கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு  – – ஒளவையார்

24.காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
கட்டி அரிசி அவள் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்  – ஆண்டாள்

25.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்  – திருவள்ளுவர்

26.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்  – திருவள்ளுவர்

27.அன்பின் வழியது உயிர்நிலை  – திருவள்ளுவர்

28.அறிவற்றங் காக்கும் கருவி  – திருவள்ளுவர்

29.எண்ணித் துணிக கருமம்  – திருவள்ளுவர்

30.நீரின்றி அமையாது உலகு  – திருவள்ளுவர்

31.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  – திருவள்ளுவர்

32.நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்  – திருமூலர்
33.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்  – திருமூலர்

34.உடம்பார் அழியின் உயிரார் அழிவர்  – திருமூலர்

35.ஒன்றே குலம் ஒருவனே தேவன்  – திருமூலர்

36.உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்  – திருமூலர்

37.என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு   – திருமூலர்

38.வைதோரைக் கூட வையாதே – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளிச்சித்தர்

39.முப்பால் அறிந்த முதற்பா விலர் ஒப்பார் எப்பா பலரினும் இல் – நல்லந்துவனார்

40. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – அதிவீரராம பாண்டியன்

41. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

42.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோனா றரசும் செல்லும் என்று பாடியவர் – பாண்டியன் நெடுஞ்செழியன்

43.பரணிக்கோர் ஜெயங்கொண்டான் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

44.தென்றமிழ் தெய்வப் பரணி – ஒட்டக்கூத்தர்

45. தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றனார்

46. பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலைப் பயந்த காமருமணியும் – கண்ணகனார் (புறநானூறு)

47. பசித்திரு, தனித்திரு, விழித்திரு – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)

48.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை  – வள்ளலார்

49.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  – வள்ளலார்

50.கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வேண்டும் – வள்ளலார்

51.ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகி
உலகியல் நடத்தல் வேண்டும்  – வள்ளலார்

52.உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்  – வள்ளலார்

53. சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்
இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு வள்ளலார்

54.எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே  – வள்ளலார்

55.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்  – வள்ளலார்

56.பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் எண்ணுற வகுத்த
அருட்பெருஞ்சோதி  – வள்ளலார்

57.கலையுணர்ந்த கற்பனையே நிலையெனக்
வழக்கமெல்லாம் மண்மூடிப் போக  – வள்ளலார்

58.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்  – வள்ளலார்

59.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன் றறியேன் பராபரமே  –
தாயுமானவர்

60.அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே  – தாயுமானவர்

61.ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன்  – கம்பர்

62.உடம்பிடைத் தோன்றிற் றொன்றை அறிந்ததுன்
உதிரமூற்றி
அடல்உறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்  – கம்பர்

63.கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் – ராமகிருஷ்ண பரமஹம்சர்

64.திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்
செம்மொழியாம்  – பரிதிமாற்
கலைஞர்

65.வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே ? நாலு
காலெங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே?  -கவிகாளமேகப்புலவர்

66.நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்  – பாரதியார்

67.காக்கை குருவி எங்கள் ஜாதி  – பாரதியார்

68.காக்கைச் சிறகினிலே நந்தலாலா  – பாரதியார்

69.சாதிகள் இல்லையடி பாப்பா  – பாரதியார்

70.பெண் விடுதலை வேண்டும்  – பாரதியார்

71.என்று தணியும் இந்த சுதந்திர தாகம்  – பாரதியார்

72.எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாரதியார்

73.அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே  – பாரதியார்

74.ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா  – பாரதியார்

75.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்  – பாரதியார்
76.ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் – பாரதியார்

77.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
நனிசிறந்தனவே-  பாரதியார்

78.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  – பாரதியார்

79.நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்  – பாரதியார்

80.தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் – பாரதியார்

81.செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்- பாரதியார்
82.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்  – பாரதியார்
83.பாரத நாடு பழம் பெரும் நாடு நீர்
அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்  – பாரதியார்

84.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்  – பாரதியார்

85.சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  – பாரதியார்

86.காவிரி தென்பெண்ணை பாலாறு
கண்டதோர் வையை பொருநை நதி  – பாரதியார்

87.கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு  – பாரதியார்

88.நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு  – பாரதியார்

89.யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவன்போல் இளங்கோவனைப்போல்
பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை  – பாரதியார்

90.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  – பாரதியார்

91.தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதியார்

92.கம்ப நாடன் கவிதையிற் போல்
கற்றோர்க்கு இதயம் களியாதே – பாரதியார்

93.ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர்
வந்து புகலென்ன நீதி – பாரதியார்

94.பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்  – பாரதியார்

95.காசிநகர்ப் புலவன் பாடும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்  – பாரதியார்

96.வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்  – பாரதியார்

97.ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று  – பாரதியார்

98.வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!  – பாரதியார்

99.செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்துபாயுது காதினிலே  – பாரதியார்

100.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  – பாரதியார்

101.இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்  – பாரதியார்

102.பாலைப் பொழிந்து தரும் பாப்பா- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!  – பாரதியார்

103.வயலில் உழுது வரும் மாடு – அதனை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! – பாரதியார்

104.வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் –
பாரதியார்

105.முப்பது கோடி முகமுடையாள்
நிகரென்று கொட்டு முரசே இந்த
நீணிலம் வாழ்ப வரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே
பொய்ம்மைச் சாதிவகுப்பினை எல்லாம் – பாரதியார்

106.மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்  – பாரதியார்

107.வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு – பாரதியார்

108.இதந்தரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்
சுதந்திர தேவி, நின்னை தொழுதிடல் மறக்கி லேனே – பாரதியார்

109.இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ- பாரதியார்

110.தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – பாரதியார்

111.அறம் பெருகும் தமிழ் படித்தால்,
அகத்தில் ஒளி பெருகும் திறம் பெருகும் உரம்
பெருகும் தீமைக் கெதிர் நிற்கும் – பெருஞ்சித்திரனார்

112.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? –
இராமச்சந்திரக் கவிராயர்

113.தமிழுக்கும் அமுதென்று பேர்  – பாரதிதாசன்

114.புதியதோர் உலகம் செய்வோம் – பாரதிதாசன்

115.எங்கெங்கு காணினும் சக்தியடா  – பாரதிதாசன்

116.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையமே- பாரதிதாசன்

117.கொலை வாளினை எடுடா
வெகு கொடியோர் செயல் அறவே – பாரதிதாசன்

118.இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே – பாரதிதாசன்

119.கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள்  – பாரதிதாசன்

120.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே – பாரதிதாசன்

121.திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்  
விண்ணோடும் உடுக்களோடும் மங்குன்கடல்  
இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – பாரதிதாசன்

122.வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே  – பாரதிதாசன்

123. அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய்
நிகரிலாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய் – பாரதிதாசன்

124.மழையே மழையே வா வா – நல்ல
வானில் புனலே வா வா – இவ்
வையத் தமுதே வா வா – பாரதிதாசன்

125.தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – பாரதிதாசன்

126.’காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று பாரதியாரைப் பாடியவர் – பாரதிதாசன்

127.தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும் – பெரியார் பற்றி பாரதிதாசன்

128.செத்தும் கொடுத்த சீதக்காதி – படிக்காசுப் புலவர்

129.உள்ளத்துள்ளது கவிதை
இன்பம் உருவெடுப்பது கவிதை – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

130.வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுதென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு – – கவிமணி

131.மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டு மம்மா – கவிமணி

132.தோட்டத்தில் மேயுது”வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

133.தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் – கவிமணி

134.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்
சாலைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

135.கல்லைப் பிசைந்து கனியாக்கும்
செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ – கவிமணி

136.காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே –  கவிமணி

137.நாடக சாலையொத்த நற்கலாசாலை ஒன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

138.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை

139.தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – நாமக்கல் கவிஞர்

140.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது  – நாமக்கல் கவிஞர்

141.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் – நாமக்கல் கவிஞர்

142.அமிழ்தம் அவளுடைய மொழியாகும் அன்பே அவளுடைய வழியாகும்
மானம் பெரிதென உயிர் விடுவார்  – நாமக்கல் கவிஞர்

143.தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர்

144.பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்
 பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் – நாமக்கல் கவிஞர்

145.சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதா னது – பம்மல் சம்மந்தனார்
146.எதையும் தாங்கும் இதயம் வேண்டும் – அறிஞர் அண்ணா

147.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு  – அறிஞர் அண்ணா

148.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு  – அறிஞர் அண்ணா

149.உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமையில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது –
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்

150.செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம் – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்

151.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

152.செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச்
சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன் – கண்ணதாசன்

153.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் – கண்ணதாசன்

154.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்

155.போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் – கண்ணதாசன்

156.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி!  – முடியரசன்

157.நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் – திரு.வி.கலியாணசுந்தரனார்

158.பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு.
வயல் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

159.ஏர்முனைக்கு நிகரிங்கே எதுவுமில்லை – மருதகாசி

160.வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன  செய்வாய்? – அப்துல் ரகுமான் (பால் வீதி கவிதைத் தொகுப்பு)

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

காடு நமது வாழ்வியல்|முனைவர் ம.கார்த்திகா

காடு நமது வாழ்வியல்_முனைவர்.ம.கார்த்திகா
முன்னுரை
           
21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொடமுடியாத உயரங்களைத் தொட்டுவிட்டான் ஆனால் பூமியையும் அங்குள்ள இயற்கையைப்  பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை. இயற்கையின் வரமாகப் பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக மனிதன் சுவாசிக்க தேவையான ஒட்சிசனை பூமிக்கு வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற்கையான சூழல் தொகுதியே காடுகளாகும்.
            காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால்தான் திருவள்ளுவர்,

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
எனக் கூறியுள்ளார். இக்காடுகள் மனித தலையீடுகளின்றி பூமியில் தோன்றிய வரப்பிரசதமாகும் இவை தான் சூழலை குளிர்விக்கின்றன. மழையை பொழிவிக்கின்றன. தரைக்கீழ் நீரைப் பிடித்து வைக்கின்றன. அருவிகளை ஆறுகளை உருவாக்கி விவசாயத்தைப் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு நிழலையும் தந்து பல்லாயிர கணக்கான விலங்குகள் பூச்சிகள் பறவைகள் மீன்களுக்கும் வாழ்விடமாக விளங்குகின்றன. அந்தளவுக்கு பசும் போர்வையாக இக்காடுகளே எம்மை இரட்சிக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.

காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரச் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி ஆனால், அதுஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம். ஆனால் மனிதர்களில் சிலர் இதை புரிந்து கொள்ளாது காடுகளை அழித்த வண்ணமே உள்ளனர். இந்தக் கட்டுரையில் காடுகளின்
பயன்கள் பற்றி பார்க்கலாம்.

காடுகளின் முக்கியத்துவம்
            காட்டு வளமே நாட்டுவளம். காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு பூமியின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். காடுகள் வெறுமனே இடபரம்பலை மாத்திரம் கொண்டு காணப்படும் ஒரு வளம் அல்லாமல் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வாய்ப்புகளை வழங்கும் அதி உன்னத பசுமை நிறைந்த இயற்கை வளம் என்றால் அது மிகையாகாது.
           
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும். பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.

காடுகளின் பரம்பல்
உலகினுடைய  காடுகளின் பரம்பலானது புவியியல் அமைவிட ரீதியாக அயனமழைக்காடுகள், ஊசியிலைகாடுகள், சவன்னாக்களும் புல்வெளிகளும் என வகைப்படுத்தபடுகிறது. இவற்றில் அயன மழைக்காடுகள் மத்தியகோட்டை அண்டி காணப்படும் காடுகளாகும். இவை என்றும் பசுமையான அதிக உயிர் பல்வகைமையை கொண்ட காடுகளாகும். இங்குள்ள தாவரங்கள் பெறுமதி மிக்கனவாக உள்ளதால் அதிகம் மனிதனால் அழிக்கப்பட்டும் வருகின்றன.

உதாரணமாக அமேசன் மழைக்காடுகள் கொங்கோ மழைக்காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள் தென்கிழக்காசியாவின் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் லாவோஸ் போன்றவற்றில் அயன மழைக்காடுகளை காணமுடியும்.மேலும் இடைவெப்பவலய நாடுகளான ஐரோப்பாவடஅமரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஊசியிலை ஆப்பிரிக்கா ஆர்ஜென்ரினா ஆஸ்ரேலியா போன்றநாடுகளில்சவன்னா புல்வெளிகளும் பரம்பியுள்ளன.இக்காடுகள் வெவ்வேறான சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றன.

மரங்களின் பயன்கள்
🎤 சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது.

🎤 பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது.

🎤 மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.

🎤 மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.

🎤 சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது.

🎤 மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும்.

🎤 மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
காடுகளின் எண்ணற்ற பயன்களை பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் வழங்கி ஒருகவசமாக தொழிற்படுகிறது காடுகளை பூமியின் நுரையீரல் என்று சிறப்பித்து கூறுவார்கள். நாம் சுவாசிக்க சுத்தமான காற்றையும் நாம் குடிக்க சுத்தமான நீரையும் நாம் உண்ண காய்கறிகள் தளபாடங்களையும் மருந்து மூலிகைகளையும் மனதை மகிழ்விக்கும் கிழங்குகள் உணவையும் நாம் வாழ தேவையான வீடுகளை உருவாக்க அழகான சூழலையும் இக்காடுகளே தருகின்றன.

காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள்அழிக்கப்பட்டுவருகின்றன. நிலக்கரிஉள்ளிட்டகனிம வளங்கள்  வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப்பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமானநிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப்பாதைகள் அமைத்தல், அணைகள்-பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள்  வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று காடுகள் வேகமாக குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன அபிவிருத்தி நகராக்கம் எனும் போர்வையில் மனிதன் காடுகளை அழித்து வருவதானது யானைதன் தலையில் மண்ணை அள்ளி
போடுவதற்கு ஒப்பானதாகும்.

காடுகளை அழிப்பதனால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் காடழிப்பதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் இதனால் வளிமண்டல வெப்பநிலை உயர்வடையும். இதனால் நாம் வாழும் புவியின் வெப்பநிலை உயர்வடைவதனால் பூமியில் காலநிலை மாற்றம் பாலைவனமாதல் கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் தோன்றி வருகின்றமையால் மனித வாழ்க்கை சவால் மிக்கதாக அண்மைக்காலங்களில் மாறிவருவதைகண்கூடுகாணமுடிகிறது.

முடிவுரை
காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்கப்பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்று பல்வேறு நாடுகள் சூழல் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் காடுகளை பாதுகாக்க முன்வருகின்றன. காடுகளை பாதுகாக்கும் முகமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 உலகளவில் ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆகவே காடுகள் பாதுகாக்க படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து காடுகளைப் பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு வளங்களைக் காத்து வளமான வாழ்க்கை வாழ காடுகளை வாழ வைப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்.ம.கார்த்திகா
உதவிப்பேராசிரியர்
தகவல் தொழில் நுட்பவியல் துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பசுமலை, மதுரை

 

சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாடுகள்|முனைவர் க.லெனின்

பண்டைய இலக்கியங்களில் தெய்வ வழிபாடுகள் - முனைவர் க.லெனின்
ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
மனிதனுக்கு நம்பிக்கையை உண்டாக்கிய கடவுளை வழிபாடுகள் நடத்தி வேண்டிக்கொண்டார்கள். அவை வழிபாடுகள், பூசைகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்தமான முறையில் இறைவனுக்கு வழிபாடுகளை நடத்தினான். மனிதர்கள் நடத்திய வழிபாடுகள் இரண்டு விதமான வேற்றுமைகள் உள்ளடக்கியிருந்து வந்தன.

(1) இன்னவை வேண்டுமென இறைவனுக்கு வழிபாடுகள்  நடத்துதல்

(2) இறைவனால் இன்னவையெல்லாம் கிடைத்தது என மகிழ்ச்சி பொங்க வழிபாடுகள் நடத்துதல்
ஆகிய இரண்டு வகைகளில் பெரும்பாலும் மனிதர்கள் தனக்கு என்ன வேண்டும் என வலியுறுத்தும் வழிபாடுகளே அதிகம் நடந்தேறியுள்ளன. கிடைக்கும்வரை இறைவனைப் பக்தி பரவசம் பொங்க பாடுகின்றவர்கள்; கேட்டவைகள் கிடைத்தவுடன் இறைவனை மறந்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதிலேயே மிகுந்த அக்கறைகாட்டத் தொடங்குகின்றனர். அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டின் முறைமைகளைக் கூற விழைகிறது இவ்வாய்வுக்கட்டுரை.

வழிபாட்டின் நோக்கம்
பிரிந்து பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடவும், தனக்குள் ஏற்பட்ட நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தவும், உறவுகளோடு சேர்ந்து இறைவனை வணங்குதல் வழிபாட்டின் நோக்கமாகக் பார்க்கப்படுகிறது. எப்படிப்பட்ட மனிதனையும் கண்களை மூடி இறைவனைக் கையெடுத்து வணங்கப்படும்போது அவனின் ஆழ்மனது தீய எண்ணங்கள் விலகி நல்லெண்ணங்கள் தோன்ற வழி வகை செய்கிறது. வழிபாட்டின்போது பின்பற்றப்படும் கற்பூரதீ, மேளச்சத்தம், நறுமணம் ஆகியவை ஆழ்மனதை மேய்ந்து கொண்டிருக்கின்ற எண்ண அலைகளை ஒருநிலைப்படுத்தி நிற்கும்.

வழிபாட்டின் தோற்றமும் பின்னணியும்
இயற்கையை வழிபட்ட மனிதர்கள் முதலில் இயற்கையையே வழிபாடு செய்து வந்தனர். இயற்கை மூலமாக பெறப்பட்ட பயன்களை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தனர். பின்னாளில் உருவ வழிபாடு வந்த பிறகு வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாற்றங்களையும் தமிழக மக்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும்.  இறைவனிடம் வேண்டுதலும் வழிபாடுகள் நடத்துவதும் தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வந்துள்ளன. மனிதனுக்கு இறைவனிடமிருந்து எளிமையாகக் கிடைத்திருக்கும் வரை வழிபாடுகள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்காது. மனிதர்களிடத்தில் ஆசைகள் அதிகமானதால் மற்றவனைவிட எனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்பதிலேயே வழிபாடுகள் தோன்றியிருக்கக் கூடும்.

திராவிடர்கள் ஆரியர்கள் என வழிபாடுகளைத் தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதிலும் திராவிடர்கள் கடுமையான முறையில் வழிபாடுகள் நடத்தி வந்திருக்கக் கூடும் என இலக்கியங்களும் (கண்ணப்ப நாயனார் புராணம், சிறுத்தொண்டர் நாயனார் புராணம்) வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைப் பார்க்க முடியும்.

வழிபாடுகள் நிகழ்த்த காரணம்
(i) வானம் பொய்த்து போதல்

(ii) உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்க இருத்தல்

(iii) இறைவனை மகிழ்வித்தல்

         (i) கூத்து கலைகள்

         (ii) வேடிக்கைகள்

         (iii) இறைவன் திருவீதி உலா

(iv) பக்தி பரவச நிலை

(iv) பிரச்சனைகளில் இருந்து விடுபட

(V) குடமுழுக்கு

(vi) பயத்தின் காரணமாக

மேற்கூறிய காரணங்களால் வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன. வானம் பார்த்து ஏமாந்து போன விவசாயிகள் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்கின்றனர்.  உறவுகள் ஒன்று கூடி குலசாமி விழா எடுத்து வழிபடுகின்றனர். இறைவனை மகிழ்வித்து நாடும் நகரும் மக்களும் விலங்குகளும் பிற உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் இருக்கவும் நம்முடைய தமிழகக் கலைகளை வளர்க்கவும் செய்கின்றனர். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கோயில் கட்டி குடமுழுக்கு நேரங்களிலும் இறைவனுக்காக வழிபாடு நடத்துகின்றனர். வழிபாடுகள் நன்றாக முடிந்தவுடன் தம்முடைய ஊரானது சீரும் சிறப்புமாக இருக்கின்றது என அக்கால மக்கள் நம்பினர். தோற்றத்தில் சக்தி மிகுந்த தெய்வங்களுக்கு (காளி) பயத்தின் காரணமாகவும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.

வழிபாட்டு முறைகள்
தமிழக மக்களிடையே பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என இரண்டு வகையாகக் பிரித்துப் பார்க்கலாம். பெருந்தெய்வ வழிபாடுகளில் சூடம் ஏற்றுதல் தேவார திருவாசக பஜனை பாடுதல், இறைவனை வாய்விட்டு அழைத்தல், பூச்சூடல், அலங்கரித்தல் போன்ற முறைகளில் பின்பற்றப்படுகிறது. அந்தணர்கள் இக்கோயில்களில் வழிபாடு நடத்துகிறார்கள்.
சிறு தெய்வ வழிபாடுகளில் பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். வாயில் துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்யப்படுகின்றது. கிராம தெய்வங்களுக்கு பூச்சூடல், படையல், அலங்கரித்தல், மணியோசை, ரத்த காவு போன்ற முறைகளில் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. மொட்டை அடித்தல், பலியிடல், காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல் (காது குத்துதல்), அங்கப்பிரதட்சணம் செய்தல் (கோவிலைச் சுற்றி உருண்டு வருதல்), மண் சாப்பாடு, தொட்டில் கட்டுதல், காப்பு கட்டுதல், விரதம் போன்றவைகள் நேர்த்திக்கடன்களாக தமிழக மக்கள் பின்பற்றுகின்றனர். வழிபாட்டு முறைகளில் பால்குறி வழிபாடு இருந்ததாக,  “ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்து வந்தனர். இவ்வழிபாட்டை பால்குறி வழிபாட்டு வடிவமாகக் கொள்கின்றனர்”1 என்று கே.கே.பிள்ளை கூறுகிறார்.

சங்க இலக்கியத்திலும் வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளன. அம்மக்கள் அதிகம் இயற்கை வழிபாட்டையே முன்னிறுத்தி வணங்கி வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால வழிபாடுகளை பற்றி ஆராய்வோம்.

உழவர்கள் வழிபாடு
உழவர்கள் நடத்தும் வழிபாடுகள் ஊர்கள் தோறும் வேலனால் கூட்டியும் மெழுகியும் அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். அவ்விடமானது செந்நெல்லின் வெள்ளியப் பொரியைச் சிதறினார் போன்று காட்சியளிக்கும். இத்தகைய வளம் பொருந்திய பழமையான ஊரில் இறைவனுக்கு வழிபாடு நடத்தினார்கள். குறுந்தொகையில்,
           
“தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது         
தண்பெரும் பௌவம் அணுங்குக” (குறுந்.164 3-4)
அறிவு மிகுந்தவர்களும் உழவினைத் தொழிலாகக் கொண்டவர்களும் உறவுகளில் குறைகள் காணாதவர்கள் ஆகிய முதிர்ந்த வேளிர் குளத்திற்கு உரியவர்கள். இறைவனை பூக்களைத் தூவி வழிபட்டார்கள் என்கிறது குறுந்தொகை பாடல். உழவர்கள் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை முதலில் இறைவனுக்குப் படைத்த பின்புதான் எடுத்துக் கொண்டார்கள். குறிஞ்சி நிலத்துக்குரிய தலைவன் தன்னுடைய தோட்டத்தில் தினை விதித்துள்ளான்.  அத்தினையும் நன்றாகக் குறுத்து தோன்ற விளைந்து நின்றது. சுற்றத்தாருடன் வயலுக்குச் சென்று தினைக்கதிரை அறுத்து இறைவனுக்கு பலியிட வேண்டும் என்று நினைத்தான்.

 “கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்         
அறியாது உண்ட மஞ்சை, ஆடுமகள்” (குறுந்.105 2-3)
ஆனால், தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் முற்றிய பாலுடன் சேர்த்த செழுமையைக் கண்ட மயிலானது இத்தினை இறைவனுக்கானது என்று அறியாமல் கொத்தித் தின்றதாம்.  குறிஞ்சி நிலத்தலைவனும் முருகப்பெருமானே உண்டதாக மகிழ்ந்து போனான் என்கிறார் நக்கீரர்.
மலைகளை வேலியாக உடைய அழகிய கிராமம். திருமண நாளை அறிவிப்பது போன்ற வேங்கை மரங்கள் வீடுகள் தோறும் பூத்து நின்றன. ஒவ்வொரு பொன் நிறப்பூக்கள் உதிர்ந்து விழுந்து பரவி அழகிய முற்றத்தினை அழகு செய்யும். தம்முடைய இல்லத்தை காவல் காத்தும் தீங்கு நேராவண்ணம் பாதுகாத்தும் இருக்கின்ற கடவுளுக்கு எம் அன்னையானவள் நாள்தோறும் செய்யும் பூசைகள் பூக்கள் பலவுடன் சேர்த்து வழிபாடு நடத்துகிறார்கள்.
 
“ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை” (அகம்.232 11-12)
குளிர்ச்சி பொருந்திய துறையில் உள்ள தெய்வத்தை தலைவி தன் தோழிகளுடன் சேர்ந்து தொழுது வழிபட்டாள் என்கிறது அகநானூறு. சங்க காலத்தில் பூக்களை வைத்து வழிபாடுகள் நிகழ்த்தி வந்துள்ளதை அறிய முடிகிறது.
கயல்மீன் போன்ற அழகிய மையுண்ட கண்களை உடையவர்கள். தங்களுடைய காதுகளில் கனத்த குழை அணிந்தவர்களும் ஆகிய பெண்கள் மாலைப் பொழுதில் இறைவனை வழிபட தயாராகின்றனர். தங்களுடைய வீட்டில் இருக்கும் வழிபாடு பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். குறுந்தொகையில்,
 
“கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர்                      
  கையுறை ஆக நெய்பெய்து மாட்டிய                       
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை” (குறுந்.398 3-5)
இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வணங்குகின்ற ஒளிப் பொருளாகிய தெய்வத்திற்கு நல்ல பசுவின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யினால் விளக்கு ஏற்றப்படும். அப்படிப்பட்ட இனிய மாலைப் பொழுதாக விளங்குகிறது என்கிறார் குறுந்தொகை ஆசிரியர் பெருங்கடுங்கோ,
 
“அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்         
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு” (நற்.9 1-2)

இவ்வுலகத்தில் மனிதனாகத் தோன்றிய அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார். நீண்ட காலம் வாழ வேண்டுமானால் மனிதன் நோய் நொடியின்றி வாழ வேண்டும். அவ்வாறாக மனிதனுடைய மனதில் ஏற்படும் தீய குணங்களாகப் பொய், கோபம், காமம், குரோதம் போன்றவற்றை அறவே ஒழித்து வாழ முற்படவேண்டும். அப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திடம் நீண்ட ஆயுளை தந்து அருளுக என வேண்டிக் கொள்வார்களாம் என்கிறார்.

உழவர்களின் வழிபாட்டு மரபுகள்
உழவர்கள் தங்களுக்கென்று வழிபாட்டு முறையினை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தனர். அவை நம் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் பொருந்தி நிற்பனவே ஆகும். குறுந்தொகையில்,
 
“மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,           
செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்க,           
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா           
வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி.” (குறுந்.263 1-4)
ஆற்றின் இளம் குட்டி அறுத்து இரத்தத்தை எடுப்பார்கள். தினைச்சோற்றோடு சூட்டோடு இருக்கும் இரத்தத்தைச் சேர்த்து இறைவனுக்கு பலியாகக் கொடுப்பார்கள். வழிபாடு முடிந்தவுடன் அந்த இரத்தச்சோற்றைக் குழந்தைப்பேறு இல்லாதவர்களிடம்  கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. வழிபாட்டின் வழியாகக் கொடுக்கப்படும் இரத்தச்சோற்றை உண்ணும் பெண்களுக்கு விரைவாக குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் நம் மக்களிடையே இருந்து வருகின்றது. மேலும், வழிபாட்டின்போது இசைக்கருவிகள் முழங்கியும் விண்ணை பிளக்குமாறும் வாசிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வழிபாடு ஊருக்குப் புறத்தே நிகழும் என்கிறது பண்டைய இலக்கியங்கள். ஊருக்கு வெளியே உழவு வேலை செய்த காட்டின் ஒரு பகுதியிலேயே பெரும்பாலும் நடக்கின்றது. இதனாலேயே இன்றளவும் குறிப்பிட்ட வயல்வெளிகளில் ஏதாவது ஒரு கோயில் இருப்பதைக் காண முடியும்.

மழை வழிபாடு
‘நீரின்றி அமையாது உலகு‘ என்பார் வள்ளுவர். வானம் பொய்த்து விட்டால் நிலம் வறண்டு போகும். உழவர்கள் அழிந்து போவார்கள். மக்கள் பசி பட்டினி என்று செத்து மடிவார்கள். மழைநீர் உயிர் நீர். அக்காலகட்டத்தில் மக்கள் மழையை வணங்கியுள்ளனர். மழை கடவுளான வருண பகவானுக்கு விளக்கேற்றி மலர்களைத் தூவி போற்றியுள்ளனர்.
 
“அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்                   
கடவுள் ஓங்கு வரை பேன்மார்” (நற்.165 3-4)
எனக் குறிஞ்சிநிலத்துக் கானவன் கூறுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளது. தலைவிக்கும் தனக்கும் திருமணம் விரைவில் நடக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். எங்களுடைய மலையானது தற்போது மழை இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. ஆனால் எங்களுடைய மலை தெய்வத்தின் அருளால் சூழ்ந்தது. அதனால் அத்தெய்வத்தின் கோபம் தணியுமாறு எங்கள் சுற்றத்தோடு விரும்பி வந்து இம்மலை தெய்வத்தை வணங்கினோம் என்றால் மழையானது கொட்டும். அவ்வாறாக மழை வருமானால் எங்களுடைய மலையானது குளிர்ச்சிப் பொருந்திய வளம் உடையதாக மாறும் என்கிறான். மழைக்காக வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
 
“மலை வான் கொள்க! என உயர் பலி தூஉய்         
மாரி ஆன்று, மழை மேற்கு உயர்க! எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,” (புறம்.143 1-3)

தெய்வத்தை அன்றாடம் வணங்கும் குறமக்கள். அவர்கள் மழையற்றுக் காலத்து மழையைப் பெய்ய வேண்டி தங்களின் மலைகளில் மிகுந்த பலியைத் தூவி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இங்கு பலி என்பது மஞ்சளுடன் பூக்களை அரிசியுடன் சேர்த்து வணங்குதல். இவ்வழிபாட்டில் முடிவாகக் குறவர்கள் வாழும் மலை முழுவதும் கடும் மழை பெய்ததாம். அளவுக்கு அதிகமாக மழை பெய்து அதனால் மழை வேண்டாம் என்று மீண்டும் தெய்வத்திற்கு வழிபாடு செய்கின்றனர். அதன் பொருட்டு மழையானது அவ்விடத்தில் நின்று வேறு இடத்தில் மழை பெய்தது என்கிறார் ஆசிரியர்.

இதன் மூலம் மழைக்காக மக்கள் வேண்டி நின்றலும் மழை அதிகம் பெய்து விட்டால் மழை நிற்கும் படியும் மக்கள் தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளனர் என்பது புலனாகிறது.
 
“மாரி வாய்க்க! வளம் நனிசிறக்க!         
என வேட்டோளே, யாயே யாமே” (ஐங்.10 2-3)
ஒவ்வொரு காலமும் மழை நீரானது பொய்க்காமல்
பெய்ய வேண்டும். இந்த உலகத்தின் நன்மை ஒன்றையே கருதியும் உலக வாழ்வுக்கு இன்றியமையாத மழை வளத்தையும் அதன்மூலம் உண்டாகும் செல்வச் சிறப்பையும் எப்போதும் மக்கள் விரும்பி நிற்பார்கள். மலைகளின் மீது விதைத்து வளர்ந்த துணை பயிருக்கு மழை வேண்டி குறமாந்தர்கள் ஆரவாரம் செய்தனர் ஆராவாரம் செய்தால் மேகம் மழை பொழியும் என்பது பழங்கால நம்பிக்கையாகும்.

நெல் வழிபாடு
அந்தக் காலத்தில் மக்கள் உணவாக உட்கொள்ளும் அரிசி நெல்லினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். யாருக்கேனும் தானம் தருவதிலும் நெல்லினியே முதலிடம் பெற்றது எனலாம். இறைவன் வழிபாட்டின் போது நெல்லினை தூவி வழிபாடு நிகழ்வினை நிகழ்த்தியுள்ளனர். நெல் வயல்களில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற பழக்கமும் இருந்து வந்துள்ளது. ஏனெனில் உண்ணும் நெல்லினைக் கடவுளுக்குச் சமமாக வைத்து வணங்கி வந்துள்ளனர் சங்ககால மக்கள்.
 
“அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து         
இரும்பு செய் விளக்கின் ஈர்த்திரி கொளிஇ,         
நெல்லும் மலரும் தூஉம் கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர” (நெடுநல் 41 – 44)
மகளிர் வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்த முன் கையை உடையவர் ஆவார். முத்துப்போன்ற பல்லினை உடையவர். மடமை குணத்தைக் கொண்டவர்கள். இம்மகளிர்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் மலர்களை அழகிய பூந்தட்டுகளில் நிரப்பி வைத்திருப்பர். அப்பூக்கள் மலர்ந்து வாசம் வருவதைக் கண்டு மாலைநேரம் வந்திருப்பதை உணர்வர். சாயங்கால நேரத்தில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில் எண்ணெய் தோய்த்த திரியை கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவி கைக்கூப்பி வீட்டு தெய்வத்தை வழிபட்டார்கள் என்கிறார் நக்கீரர்.
 “நல்நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை      
 செம் முது பெண்டிரோடு  நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின்” (நற்.288 5-7)
தலைவன் பொருள்மேல் சென்றுள்ளான். தலைவிக்குப் பசலை நோய்ப் படர்ந்திருந்தது. அப்போது அந்தப் பக்கத்தில் ஒரு முதுமை மிக்க கட்டுவிச்சி என்கிற குறி சொல்பவள் செல்கிறாள். தலைவியானவள் அவளை அழைத்து தலைவனின் வரவை பற்றி குறிக்கேட்கிறாள். தன் வீட்டிற்கு முன்னால் அப்பொழுதுதான் களத்தில் இருந்து அறுத்து வரப்பட்ட நெல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தெய்வமாக மதிக்கும் நெல் கட்டுக்கு முன்னால் வைத்து தலைவி குறிக் கேட்கிறாள்.  இவ்விடத்தில் நெல்லினைக் கடவுளாக வைத்து தலைவி பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
“நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்         
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.80 6-7)
அஞ்சத்தக்க குகையும் குரலெடுத்து அலறும் இரவுப்பொழுது. தலைவன் இல்லாமல் வருந்தும் தலைவி மாறுகண் துயிலாமல் தலைவனை நினைத்து வருந்துகிறாள். அப்பொழுது தலைவனின் வரவைக் காண நெல்லும் நீரும் தூவி விருச்சி கேட்கும் முதுநிலை பெண்டிர்கள் இன்சொற்களானது தலைவியின் துயரத்தைப் போக்கும் என்கிறது புறநானூறு.
 
“நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்.335 12)
தம்மோடு பொருந்தாத பகைவரைப் போர்முனையில் எதிர்நின்று தடுத்து நிறுத்தி அவர்களுடைய ஒளியுடைய ஏந்திய கொம்புகள் உடைய யானைகளைக் கொன்று இறந்து பட்டவனுக்கு வைக்கப்பட்டுள்ள நடுகல்லில் தெய்வமாய் நின்றவனை நெல்லை தூவி வணங்கி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இவ்விரண்டைத் தவிர வேற கடவுள்கள் இவ்வூரில் இல்லை என்கிறார்கள்.  நெல்லினைத் தூவி வழிபடும் நெல்லினை தானம் கொடுத்தும் நெல்லினை முன்னிறுத்தி கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தை வழிபாடு

உழவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாதம் தை மாதம் ஆகும். அப்பொழுதுதான் நெல்லினை அறுவடை செய்வார்கள். இந்த வருடத்தில் எம்மண்ணில் நிறைய அறுவடையைக் கொடுத்ததாகக் கடவுளுக்குப் பூஜை செய்து வணங்குவார்கள்.
 
“தைத் திங்கள் தண் தயம் படியும்” (நற்.80 7)
தகுந்த நாணம் கொண்டவளான தலைவி தைத்திங்களில் குளிர்ந்த நீரிலாடி நோன்பு மேற்கொண்டாள். நோன்பின் பயனாகத் தலைவன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாள். மேலும் சூளோடு வாடிய நெற்பயிருக்கு நடு இரவில் மழை பெய்தது. அதனால் தை நோன்பு இருந்தவனுக்குப் பின்பு உண்ணுதலை போல் இருந்தது இம்மழை என்கிறார் புறநானூற்று ஆசிரியர்.

 “தையல் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?” (கலி.59 13)
இப்பாடலில் தலைவியின் அரிய பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. நின்னை ஒத்த மகளிர் சூழ வகைவகையாக அணி புனைந்து தைத்திங்களில் நீராடிய தவத்தின் பயனெல்லாம் தலைவி பெறுகின்றாள் என்கிறார் ஆசிரியர்.  “தை நீராடுதல் இளம் பெண்களால் நிகழ்த்தப் பெறும். சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறும் நிகழ்வு. பண்டையத் தமிழர் தம் பண்பாட்டு தொடர்புடையது. மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கி தை முழுமதி நாள்வரை நாட்காலையில் நீராடி நோன்பிருந்து வழிபடுவர். திருப்பாவை, திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைநீராடல் அடிப்படையாக அமைந்தது எனலாம். தைநீராடும் மகளிர் பிறர்மனைக்கு சென்று பாடி ஐயம் ஏற்று கிடைத்தவற்றைப் பிறருக்கு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது சிறந்ததொன்றாகக் கருதப்பட்டது. ‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி’ என்னும் ஆண்டாள் பாசுரச் செயலுக்கு முன்னோடி கலித்தொகை தலைவியின் இச்செயல்”2 என்கிறார் முனைவர் ஆ விசுவநாதன் அவர்கள்.  இவ்வாறாக நோன்பு சங்க காலத்திலிருந்து இன்றுவரை நம் பெண்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகிறது.

வழிபாட்டு முறையில் பலியீடு

சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளைப் பலி கொடுத்துக் கடவுளை வணங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பூக்கள், நெல் போன்றவையே இறைவனுக்கு பலியிடப்படும் உணவாக அமைந்தது. பிற்காலத்தில் சமூக மக்களிடம் ஏற்பட்ட மாறுதல்களில் விலங்குகளைப் பலி கொடுப்பது வழிபாட்டு மரபுகளில் வைத்துக் கொண்டனர்.

இந்த வழக்கமானது சிறு தொழில்கள் செய்து வருபவர்களிடமிருந்தும் சிறுதெய்வங்களை வணங்கி வருபவர்களிடமிருந்தும் வந்துள்ளன என்பதாகக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி கிணற்றை வெட்டும் போது ஏதோ ஒரு விபத்தின் காரணமாக இரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதைப்போல கருவிகள் மூலம் செய்யப்படும் அனைத்து வாழ்வாதார தொழில்களுக்கும் பொருந்தும். இத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே விலங்குகளை கொற்றவை ஆகிய சிறு தெய்வத்திற்கு இரத்த பலி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய இழப்பு ஒன்றும் வராது என நம்பிக்கை வைத்திருந்தனர். இதன் பொருட்டே கடவுள்களுக்கு வழிபாட்டின்போது பலிகொடுப்பது வந்திருக்கலாம் என அறிய முடிகிறது.

காக்கைக்குப் பலி உணவு
காக்கைகள் நம்முடைய இறந்த முன்னோர்கள் என்று இன்றளவும் நம் மக்களால் நம்பப்படுகிறது. அம்மாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு பலியாக இடப்படும் உணவை வைத்து காக்கை உண்டவுடன் நாம் சாப்பிடும் பழக்கமும் இன்றளவும் நம்மிடையே உள்ளது.
 
“விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.210 6)
நள்ளி என்பவனுடைய தொண்டி என்னும் நகரில் வாழும் தலைவிக்கு விருந்தினர் வரவைக் காக்கையானது கரைந்து சொல்லியது. அதனால் விண்ணில் அரிசியால் ஆக்கிய சோறானது வேறு களங்களில் நிரம்பி இருந்தாலும் விருந்தினர் வரவை சொல்லிய காக்கைக்கு இடும் பலி உணவானது சிறிய அளவிலேயே உடையது ஆகும் என்கிறார் ஆசிரியர்.

மறுஇல் தூவிச்  சிறு கருங் காக்கை        
அன்புடை மரபின் நின் இளையோடு ஆரப்” (ஐங்.391 1-2)
வேற்று நிறக்கலப்பு சிறிதும் இல்லாத தூய கருநிற சிறகுகள் கொண்ட காக்கை.  உறவினர்கள் வருகையைக் கரைந்து உணர்த்தியது. தலைவி அக்காக்கைக்கு பலி உணவாக நல்ல நிணமும் ஊனும் கலந்து உயர்ந்த உணவை பொற்கலத்தில் வைத்துக் கொடத்தாளாம் என்கிறது ஐங்குறுநூறு.
“மாசு இல் மரத்த பலி உண் காக்கை” (நற்.281 1)

குற்றமில்லாத மரத்தில் இருந்து கொண்டு மக்கள் கொடுக்கின்ற பலி உணவுக்காக காத்திருந்தது காக்கை என்கிறார்.
“செஞ்சோற்ற பலி மாந்திய         
கருங்காக்கை கவவு முனையின்” (பொருந.183 – 184)
மருதநில மரச்சோலைகள் நிரம்பியிருக்கும் ஊரில் வாழும் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி உணவினை வழங்குவார்களாம். அதுவும் உரத்தோடு சேர்ந்த சிவந்த சோற்றுப் பலியைக் காக்கைக்குப் படைப்பார்கள் என்கிறது பொருநராற்றுப்படை.
நெடிய விழுதுகள் இறங்கிய கடவுள் உறையும் ஆலமரம். அங்கு கடவுளுக்கு படைத்து வைத்த பலி உணவை காக்கைகள் உண்ணுமாம் என்கிறது நற்றிணை (343:4 – 5) பாடல்.

பலியிடுதல்

பல பிளவுகளையும் குகைகளையும் உடைய மழை பக்கத்திலுள்ள வெற்றி பொருந்திய கொற்றவைத் தெய்வத்திற்கு மக்கள் பலி கடன் செய்ய நேர்ந்து கொள்கிறார்கள். இதனால் நோன்பின் காரணமாகக் காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் போன்றவைகள் செய்கின்றனர்.

கரிய கண்ணையுடைய கருணைக்கிழங்கின் பொரியலோடு செந்நெல்லாற் சமைத்த வெண்மையான சோற்றுப் பலியைக் தெய்வத்திற்கு இடுவார்கள். அவ்வாறு இடும் இல்லங்கள் பல உள்ள பழமைமிக்க ஊர் என நற்றிணை (367:3-4) கூறுகிறது. பலியிடும் வழக்கம் ஆரம்பத்தில் சோற்றைத்தான் பலியாகக் கொண்டனர். பிற்பாடுதான் விலங்குகளைப் பலியாகக் கொடுக்கும் பழக்கம் வந்திருக்கக்கூடும்.

“மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல்  மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை” (நற்.73 2- 4)
கோடைக்காலத்தில் வலிய வாயை உடைய வளமை மிக்க பழமையான ஊரிடத்தே தெய்வத்திற்கு வழிபாட்டோடு இடப்படும் ஊன் மிக்க பலிச் சோற்றினை உண்பதற்காகத் தான்வாழும் பாழான மன்றத்தை இடித்துக் கொண்டு எழும் என்கிறார் ஆசிரியர்.

“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்         
கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்” ( அகம்.309 4-5)
பால் தரும் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்த வெட்சி மறவர்கள் தம்மோடு போரிட்ட கரந்தை மறவர்களைக் கொன்றனர். வலிய காட்டு வழியில் நெடுந்தொலைவு விரட்டி வந்தனர். அவ்வூரில் தெய்வம் வாழும் பருத்த அடி மரத்தை கொண்ட வேப்பமரத்தை கண்டனர். கவர்ந்து வரப்பட்ட நல்ல பசுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொன்று அதன் குருதியைத் தெய்வம் உறையும் மரத்தின் மேல் தெளித்து வழிபட்டனர். பலியிட்டுக் கொடுத்த புலாலைச் சமைத்து உண்டார்கள். தனக்கு எவ்விதமும் தீங்கு வரக்கூடாது என்று பலியிட்டு வேண்டிக் கொள்கின்றனர். பலிக்காகத் தாயின் முலைப்பால் கிடைக்கப் பெறாது மெல்லிய தளிராகிய தளை உணவை உண்ணக் கூடிய மிக்க இளமையுடைய ஆட்டுக்குட்டியைக் கடவுளுக்குப் பலியிட்டு வந்துள்ளனர் என அகநானூறு  (292: 3 – 4) கூறுகின்றது.

தெய்வ வழிபாட்டின்போது விலங்குகளைப் பலி கொடுப்பது மட்டுமின்றி கள்ளினையும் உணவாகப் பலி கொடுத்துள்ளனர். நாட்பட்டு முதிர்ந்த கடிய வேகங்கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய அந்தக் கள்ளினை முதலில் ஓங்கி உயர்ந்த உச்சியை உடைய தெய்வம் வாழும் மலைக்கு படைத்துவிட்டுப் பிறகு அம்மக்கள் அருந்தினார்களாம் என்று அகநானூறு (348:3 – 8) கூறுகிறது. சுவரில் ஓவியமாக வரையப்பட்ட அழகிய கடவுள் அவ்விடம் விட்டு நீங்கி சென்றதால் இடமானது பொலிவிழந்து காணப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு இடைவிடாது நடத்தப்பெறும் பலியும் மறக்கப்பட்டது. வருடந்தோறும் இறைவனுக்கு கொடுக்கும் பலியானது மக்களின் வறுமையால் நிறுத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
 
“கள்ளும் கண்ணியும் கையுறை யாக           
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்           
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,” (அகம்.156 13 – 15)

நீர் நிரம்பியுள்ள குளத்தின் மேல் உறைந்திருக்கும் கடவுளுக்குக் கள்ளையும் மாலையும் சாத்தப்படுகிறது. பலியாக நிமிர்ந்து நேர்க்கொண்ட கொம்பினையும் தொங்கும் காதுகளையுடைய வெள்ளாட்டுக் கிடாயினையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட செய்யுளில் கையுறை என்பது கடவுளிடம் தான்வேண்டியது நடந்தேறினால் அம்மக்கள் கடவுளுக்குக் காணிக்கையாக எதைக்கொடுக்க நினைத்தார்களோ அவற்றை கொடுத்துத் தன்னுடைய கணக்கைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வகையான பழக்கவழக்கங்கள் இன்றளவும் நம் சமூக மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடியும்.

முருகன் வழிபாடு

குறிஞ்சிக்கடவுள் முருகன். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். தமிழகத்தில் குறவர் இனத்தில் வள்ளியை காதல் திருமணம் செய்ததால் முருகக்கடவுள் மருமகன் ஆனார். முருகன் என்றால் அழகு, இளமை என்று பலவாறு பொருள் கொள்ளலாம். குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாங்கள் நுகர்ந்த இன்பத்தை இறைவனாக எண்ணி வழிப்பட்டார்கள். அவ்வாறு வழிப்பட்ட இறைவனை முருகு என்று அழைத்து வந்தார்கள். குறுந்தொகையில்,
 
“சிறு மறி கொன்று, இவள் நறுநுதல் நீவி           
வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய” (குறும்.362 4-5)
பலவாய செய்த பொருட்களில் தினை அரிசி சோற்றுப்பலியுடன் ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று அதனுடைய இரத்தத்தைத் தலைவனுடைய நெற்றியில் பூசியும் முருக கடவுளான உனக்கு வழிபாடு செய்கின்றோம். இப்பலியினை ஏற்றுக்கொள்க என்கிறார் ஆசிரியர். சங்க காலத்தில் பெண்களுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் காலத்தில் இவ்வகையான வழிபாடுகள் நிகழ்த்தப்படுவது உண்டு. அதிலும் முருகப்பெருமானை முன்னிறுத்தியே இவ்வகையான வழிபாடுகள் நடந்தேறியுள்ளன.
குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவன் தன்னுடைய குடி தெய்வமாகிய முருகனை வழிபட்டு வழங்குகின்றான் என்ற செய்தியை ஐங்குறுநூறு (257) பாடல் கூறுகிறது. மேலும் சிறுகுடி என்ற சிற்றூரில் முருகவேளுடன் கூடிச் சென்ற வள்ளி நாயகியும் சேர்ந்து காட்சியளிக்கும் செய்தியை நற்றிணை (82)  கூறுகிறது.
 
“அணங்கு என உணரக் கூறி, வேலன் 
இன் இயம் கறங்கப் பாடி,         
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே” (நற்.322 10-12)
தலைவிக்குப் பசலை நோய் படர்ந்து விட்டது. இந்நோய்க்கான காரணம் முருகவேள்தான் என்று நினைக்கிறாள் தாய். அதனால் துடி முதலிய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க பாடியும் நறுமணமுள்ள பூக்களைத் தூவி துதித்தும் இந்த ஆட்டுப் பலியை ஏற்றுக்கொள்க எனத் தலைவியின் தாய் வழிபாடு நிகழ்த்துகிறாள். வீட்டின் முன்னால் அழகிய கண்களை உடைய மணலைப் பரப்பியும், இல்லத்தைச் செம்மண்ணால் பூசியும், பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்துள்ளனர் (கலி.114:13 – 15).

வழிபாடுகள் ஒவ்வாரு மனிதனையும் நம்பிக்கை சார்ந்த வாழ்வினை வாழ வைத்ததோடு தம்முடைய முன்னொர்களின் வரலாறுகளையும் குடிப்பெருமைகளையும் காக்க உதவியிருக்கிறது.

சான்றெண் விளக்கம்
1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.171

2.முனைவர் அ.விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், NCBH, ப.250

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »