21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொடமுடியாத உயரங்களைத் தொட்டுவிட்டான் ஆனால் பூமியையும் அங்குள்ள இயற்கையைப் பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை. இயற்கையின் வரமாகப் பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக மனிதன் சுவாசிக்க தேவையான ஒட்சிசனை பூமிக்கு வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற்கையான சூழல் தொகுதியே காடுகளாகும். காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால்தான் திருவள்ளுவர்,
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
எனக் கூறியுள்ளார். இக்காடுகள் மனித தலையீடுகளின்றி பூமியில் தோன்றிய வரப்பிரசதமாகும் இவை தான் சூழலை குளிர்விக்கின்றன. மழையை பொழிவிக்கின்றன. தரைக்கீழ் நீரைப் பிடித்து வைக்கின்றன. அருவிகளை ஆறுகளை உருவாக்கி விவசாயத்தைப் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு நிழலையும் தந்து பல்லாயிர கணக்கான விலங்குகள் பூச்சிகள் பறவைகள் மீன்களுக்கும் வாழ்விடமாக விளங்குகின்றன. அந்தளவுக்கு பசும் போர்வையாக இக்காடுகளே எம்மை இரட்சிக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரச் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி ஆனால், அதுஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம். ஆனால் மனிதர்களில் சிலர் இதை புரிந்து கொள்ளாது காடுகளை அழித்த வண்ணமே உள்ளனர். இந்தக் கட்டுரையில் காடுகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
காடுகளின் முக்கியத்துவம் காட்டு வளமே நாட்டுவளம். காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு பூமியின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். காடுகள் வெறுமனே இடபரம்பலை மாத்திரம் கொண்டு காணப்படும் ஒரு வளம் அல்லாமல் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வாய்ப்புகளை வழங்கும் அதி உன்னத பசுமை நிறைந்த இயற்கை வளம் என்றால் அது மிகையாகாது.
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும். பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.
காடுகளின் பரம்பல்
உலகினுடைய காடுகளின் பரம்பலானது புவியியல் அமைவிட ரீதியாக அயனமழைக்காடுகள், ஊசியிலைகாடுகள், சவன்னாக்களும் புல்வெளிகளும் என வகைப்படுத்தபடுகிறது. இவற்றில் அயன மழைக்காடுகள் மத்தியகோட்டை அண்டி காணப்படும் காடுகளாகும். இவை என்றும் பசுமையான அதிக உயிர் பல்வகைமையை கொண்ட காடுகளாகும். இங்குள்ள தாவரங்கள் பெறுமதி மிக்கனவாக உள்ளதால் அதிகம் மனிதனால் அழிக்கப்பட்டும் வருகின்றன.
உதாரணமாக அமேசன் மழைக்காடுகள் கொங்கோ மழைக்காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள் தென்கிழக்காசியாவின் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் லாவோஸ் போன்றவற்றில் அயன மழைக்காடுகளை காணமுடியும்.மேலும் இடைவெப்பவலய நாடுகளான ஐரோப்பாவடஅமரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஊசியிலை ஆப்பிரிக்கா ஆர்ஜென்ரினா ஆஸ்ரேலியா போன்றநாடுகளில்சவன்னா புல்வெளிகளும் பரம்பியுள்ளன.இக்காடுகள் வெவ்வேறான சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றன.
மரங்களின் பயன்கள்
🎤 சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது.
🎤 பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது.
🎤 மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.
🎤 மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.
🎤 சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது.
🎤 மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும்.
🎤 மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
காடுகளின் எண்ணற்ற பயன்களை பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் வழங்கி ஒருகவசமாக தொழிற்படுகிறது காடுகளை பூமியின் நுரையீரல் என்று சிறப்பித்து கூறுவார்கள். நாம் சுவாசிக்க சுத்தமான காற்றையும் நாம் குடிக்க சுத்தமான நீரையும் நாம் உண்ண காய்கறிகள் தளபாடங்களையும் மருந்து மூலிகைகளையும் மனதை மகிழ்விக்கும் கிழங்குகள் உணவையும் நாம் வாழ தேவையான வீடுகளை உருவாக்க அழகான சூழலையும் இக்காடுகளே தருகின்றன.
காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள்அழிக்கப்பட்டுவருகின்றன. நிலக்கரிஉள்ளிட்டகனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப்பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமானநிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப்பாதைகள் அமைத்தல், அணைகள்-பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று காடுகள் வேகமாக குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன அபிவிருத்தி நகராக்கம் எனும் போர்வையில் மனிதன் காடுகளை அழித்து வருவதானது யானைதன் தலையில் மண்ணை அள்ளி போடுவதற்கு ஒப்பானதாகும்.
காடுகளை அழிப்பதனால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் காடழிப்பதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் இதனால் வளிமண்டல வெப்பநிலை உயர்வடையும். இதனால் நாம் வாழும் புவியின் வெப்பநிலை உயர்வடைவதனால் பூமியில் காலநிலை மாற்றம் பாலைவனமாதல் கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் தோன்றி வருகின்றமையால் மனித வாழ்க்கை சவால் மிக்கதாக அண்மைக்காலங்களில் மாறிவருவதைகண்கூடுகாணமுடிகிறது.
முடிவுரை
காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்கப்பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்று பல்வேறு நாடுகள் சூழல் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் காடுகளை பாதுகாக்க முன்வருகின்றன. காடுகளை பாதுகாக்கும் முகமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 உலகளவில் ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆகவே காடுகள் பாதுகாக்க படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து காடுகளைப் பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு வளங்களைக் காத்து வளமான வாழ்க்கை வாழ காடுகளை வாழ வைப்போம்.
மனிதனுக்கு நம்பிக்கையை உண்டாக்கிய கடவுளை வழிபாடுகள் நடத்தி வேண்டிக்கொண்டார்கள். அவை வழிபாடுகள், பூசைகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்தமான முறையில் இறைவனுக்கு வழிபாடுகளை நடத்தினான். மனிதர்கள் நடத்திய வழிபாடுகள் இரண்டு விதமான வேற்றுமைகள் உள்ளடக்கியிருந்து வந்தன.
(1) இன்னவை வேண்டுமென இறைவனுக்கு வழிபாடுகள் நடத்துதல்
(2) இறைவனால் இன்னவையெல்லாம் கிடைத்தது என மகிழ்ச்சி பொங்க வழிபாடுகள் நடத்துதல்
ஆகிய இரண்டு வகைகளில் பெரும்பாலும் மனிதர்கள் தனக்கு என்ன வேண்டும் என வலியுறுத்தும் வழிபாடுகளே அதிகம் நடந்தேறியுள்ளன. கிடைக்கும்வரை இறைவனைப் பக்தி பரவசம் பொங்க பாடுகின்றவர்கள்; கேட்டவைகள் கிடைத்தவுடன் இறைவனை மறந்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதிலேயே மிகுந்த அக்கறைகாட்டத் தொடங்குகின்றனர். அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டின் முறைமைகளைக் கூற விழைகிறது இவ்வாய்வுக்கட்டுரை.
வழிபாட்டின் நோக்கம்
பிரிந்து பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடவும், தனக்குள் ஏற்பட்ட நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தவும், உறவுகளோடு சேர்ந்து இறைவனை வணங்குதல் வழிபாட்டின் நோக்கமாகக் பார்க்கப்படுகிறது. எப்படிப்பட்ட மனிதனையும் கண்களை மூடி இறைவனைக் கையெடுத்து வணங்கப்படும்போது அவனின் ஆழ்மனது தீய எண்ணங்கள் விலகி நல்லெண்ணங்கள் தோன்ற வழி வகை செய்கிறது. வழிபாட்டின்போது பின்பற்றப்படும் கற்பூரதீ, மேளச்சத்தம், நறுமணம் ஆகியவை ஆழ்மனதை மேய்ந்து கொண்டிருக்கின்ற எண்ண அலைகளை ஒருநிலைப்படுத்தி நிற்கும்.
வழிபாட்டின் தோற்றமும் பின்னணியும்
இயற்கையை வழிபட்ட மனிதர்கள் முதலில் இயற்கையையே வழிபாடு செய்து வந்தனர். இயற்கை மூலமாக பெறப்பட்ட பயன்களை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தனர். பின்னாளில் உருவ வழிபாடு வந்த பிறகு வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாற்றங்களையும் தமிழக மக்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொண்டனர்.
எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும். இறைவனிடம் வேண்டுதலும் வழிபாடுகள் நடத்துவதும் தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வந்துள்ளன. மனிதனுக்கு இறைவனிடமிருந்து எளிமையாகக் கிடைத்திருக்கும் வரை வழிபாடுகள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்காது. மனிதர்களிடத்தில் ஆசைகள் அதிகமானதால் மற்றவனைவிட எனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்பதிலேயே வழிபாடுகள் தோன்றியிருக்கக் கூடும்.
திராவிடர்கள் ஆரியர்கள் என வழிபாடுகளைத் தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதிலும் திராவிடர்கள் கடுமையான முறையில் வழிபாடுகள் நடத்தி வந்திருக்கக் கூடும் என இலக்கியங்களும் (கண்ணப்ப நாயனார் புராணம், சிறுத்தொண்டர் நாயனார் புராணம்) வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைப் பார்க்க முடியும்.
வழிபாடுகள் நிகழ்த்த காரணம்
(i) வானம் பொய்த்து போதல்
(ii) உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்க இருத்தல்
(iii) இறைவனை மகிழ்வித்தல்
(i) கூத்து கலைகள்
(ii) வேடிக்கைகள்
(iii) இறைவன் திருவீதி உலா
(iv) பக்தி பரவச நிலை
(iv) பிரச்சனைகளில் இருந்து விடுபட
(V) குடமுழுக்கு
(vi) பயத்தின் காரணமாக
மேற்கூறிய காரணங்களால் வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன. வானம் பார்த்து ஏமாந்து போன விவசாயிகள் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்கின்றனர். உறவுகள் ஒன்று கூடி குலசாமி விழா எடுத்து வழிபடுகின்றனர். இறைவனை மகிழ்வித்து நாடும் நகரும் மக்களும் விலங்குகளும் பிற உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் இருக்கவும் நம்முடைய தமிழகக் கலைகளை வளர்க்கவும் செய்கின்றனர். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கோயில் கட்டி குடமுழுக்கு நேரங்களிலும் இறைவனுக்காக வழிபாடு நடத்துகின்றனர். வழிபாடுகள் நன்றாக முடிந்தவுடன் தம்முடைய ஊரானது சீரும் சிறப்புமாக இருக்கின்றது என அக்கால மக்கள் நம்பினர். தோற்றத்தில் சக்தி மிகுந்த தெய்வங்களுக்கு (காளி) பயத்தின் காரணமாகவும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.
வழிபாட்டு முறைகள்
தமிழக மக்களிடையே பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என இரண்டு வகையாகக் பிரித்துப் பார்க்கலாம். பெருந்தெய்வ வழிபாடுகளில் சூடம் ஏற்றுதல் தேவார திருவாசக பஜனை பாடுதல், இறைவனை வாய்விட்டு அழைத்தல், பூச்சூடல், அலங்கரித்தல் போன்ற முறைகளில் பின்பற்றப்படுகிறது. அந்தணர்கள் இக்கோயில்களில் வழிபாடு நடத்துகிறார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். வாயில் துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்யப்படுகின்றது. கிராம தெய்வங்களுக்கு பூச்சூடல், படையல், அலங்கரித்தல், மணியோசை, ரத்த காவு போன்ற முறைகளில் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. மொட்டை அடித்தல், பலியிடல், காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல் (காது குத்துதல்), அங்கப்பிரதட்சணம் செய்தல் (கோவிலைச் சுற்றி உருண்டு வருதல்), மண் சாப்பாடு, தொட்டில் கட்டுதல், காப்பு கட்டுதல், விரதம் போன்றவைகள் நேர்த்திக்கடன்களாக தமிழக மக்கள் பின்பற்றுகின்றனர். வழிபாட்டு முறைகளில் பால்குறி வழிபாடு இருந்ததாக, “ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்து வந்தனர். இவ்வழிபாட்டை பால்குறி வழிபாட்டு வடிவமாகக் கொள்கின்றனர்”1 என்று கே.கே.பிள்ளை கூறுகிறார்.
சங்க இலக்கியத்திலும் வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளன. அம்மக்கள் அதிகம் இயற்கை வழிபாட்டையே முன்னிறுத்தி வணங்கி வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால வழிபாடுகளை பற்றி ஆராய்வோம்.
உழவர்கள் வழிபாடு
உழவர்கள் நடத்தும் வழிபாடுகள் ஊர்கள் தோறும் வேலனால் கூட்டியும் மெழுகியும் அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். அவ்விடமானது செந்நெல்லின் வெள்ளியப் பொரியைச் சிதறினார் போன்று காட்சியளிக்கும். இத்தகைய வளம் பொருந்திய பழமையான ஊரில் இறைவனுக்கு வழிபாடு நடத்தினார்கள். குறுந்தொகையில்,
“தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணுங்குக” (குறுந்.164 3-4)
அறிவு மிகுந்தவர்களும் உழவினைத் தொழிலாகக் கொண்டவர்களும் உறவுகளில் குறைகள் காணாதவர்கள் ஆகிய முதிர்ந்த வேளிர் குளத்திற்கு உரியவர்கள். இறைவனை பூக்களைத் தூவி வழிபட்டார்கள் என்கிறது குறுந்தொகை பாடல். உழவர்கள் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை முதலில் இறைவனுக்குப் படைத்த பின்புதான் எடுத்துக் கொண்டார்கள். குறிஞ்சி நிலத்துக்குரிய தலைவன் தன்னுடைய தோட்டத்தில் தினை விதித்துள்ளான். அத்தினையும் நன்றாகக் குறுத்து தோன்ற விளைந்து நின்றது. சுற்றத்தாருடன் வயலுக்குச் சென்று தினைக்கதிரை அறுத்து இறைவனுக்கு பலியிட வேண்டும் என்று நினைத்தான்.
“கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்சை, ஆடுமகள்” (குறுந்.105 2-3)
ஆனால், தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் முற்றிய பாலுடன் சேர்த்த செழுமையைக் கண்ட மயிலானது இத்தினை இறைவனுக்கானது என்று அறியாமல் கொத்தித் தின்றதாம். குறிஞ்சி நிலத்தலைவனும் முருகப்பெருமானே உண்டதாக மகிழ்ந்து போனான் என்கிறார் நக்கீரர். மலைகளை வேலியாக உடைய அழகிய கிராமம். திருமண நாளை அறிவிப்பது போன்ற வேங்கை மரங்கள் வீடுகள் தோறும் பூத்து நின்றன. ஒவ்வொரு பொன் நிறப்பூக்கள் உதிர்ந்து விழுந்து பரவி அழகிய முற்றத்தினை அழகு செய்யும். தம்முடைய இல்லத்தை காவல் காத்தும் தீங்கு நேராவண்ணம் பாதுகாத்தும் இருக்கின்ற கடவுளுக்கு எம் அன்னையானவள் நாள்தோறும் செய்யும் பூசைகள் பூக்கள் பலவுடன் சேர்த்து வழிபாடு நடத்துகிறார்கள்.
குளிர்ச்சி பொருந்திய துறையில் உள்ள தெய்வத்தை தலைவி தன் தோழிகளுடன் சேர்ந்து தொழுது வழிபட்டாள் என்கிறது அகநானூறு. சங்க காலத்தில் பூக்களை வைத்து வழிபாடுகள் நிகழ்த்தி வந்துள்ளதை அறிய முடிகிறது. கயல்மீன் போன்ற அழகிய மையுண்ட கண்களை உடையவர்கள். தங்களுடைய காதுகளில் கனத்த குழை அணிந்தவர்களும் ஆகிய பெண்கள் மாலைப் பொழுதில் இறைவனை வழிபட தயாராகின்றனர். தங்களுடைய வீட்டில் இருக்கும் வழிபாடு பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். குறுந்தொகையில்,
இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வணங்குகின்ற ஒளிப் பொருளாகிய தெய்வத்திற்கு நல்ல பசுவின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யினால் விளக்கு ஏற்றப்படும். அப்படிப்பட்ட இனிய மாலைப் பொழுதாக விளங்குகிறது என்கிறார் குறுந்தொகை ஆசிரியர் பெருங்கடுங்கோ,
“அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு” (நற்.9 1-2)
இவ்வுலகத்தில் மனிதனாகத் தோன்றிய அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார். நீண்ட காலம் வாழ வேண்டுமானால் மனிதன் நோய் நொடியின்றி வாழ வேண்டும். அவ்வாறாக மனிதனுடைய மனதில் ஏற்படும் தீய குணங்களாகப் பொய், கோபம், காமம், குரோதம் போன்றவற்றை அறவே ஒழித்து வாழ முற்படவேண்டும். அப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திடம் நீண்ட ஆயுளை தந்து அருளுக என வேண்டிக் கொள்வார்களாம் என்கிறார்.
உழவர்களின் வழிபாட்டு மரபுகள்
உழவர்கள் தங்களுக்கென்று வழிபாட்டு முறையினை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தனர். அவை நம் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் பொருந்தி நிற்பனவே ஆகும். குறுந்தொகையில்,
ஆற்றின் இளம் குட்டி அறுத்து இரத்தத்தை எடுப்பார்கள். தினைச்சோற்றோடு சூட்டோடு இருக்கும் இரத்தத்தைச் சேர்த்து இறைவனுக்கு பலியாகக் கொடுப்பார்கள். வழிபாடு முடிந்தவுடன் அந்த இரத்தச்சோற்றைக் குழந்தைப்பேறு இல்லாதவர்களிடம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. வழிபாட்டின் வழியாகக் கொடுக்கப்படும் இரத்தச்சோற்றை உண்ணும் பெண்களுக்கு விரைவாக குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் நம் மக்களிடையே இருந்து வருகின்றது. மேலும், வழிபாட்டின்போது இசைக்கருவிகள் முழங்கியும் விண்ணை பிளக்குமாறும் வாசிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வழிபாடு ஊருக்குப் புறத்தே நிகழும் என்கிறது பண்டைய இலக்கியங்கள். ஊருக்கு வெளியே உழவு வேலை செய்த காட்டின் ஒரு பகுதியிலேயே பெரும்பாலும் நடக்கின்றது. இதனாலேயே இன்றளவும் குறிப்பிட்ட வயல்வெளிகளில் ஏதாவது ஒரு கோயில் இருப்பதைக் காண முடியும்.
மழை வழிபாடு
‘நீரின்றி அமையாது உலகு‘ என்பார் வள்ளுவர். வானம் பொய்த்து விட்டால் நிலம் வறண்டு போகும். உழவர்கள் அழிந்து போவார்கள். மக்கள் பசி பட்டினி என்று செத்து மடிவார்கள். மழைநீர் உயிர் நீர். அக்காலகட்டத்தில் மக்கள் மழையை வணங்கியுள்ளனர். மழை கடவுளான வருண பகவானுக்கு விளக்கேற்றி மலர்களைத் தூவி போற்றியுள்ளனர்.
“அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேன்மார்” (நற்.165 3-4)
எனக் குறிஞ்சிநிலத்துக் கானவன் கூறுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளது. தலைவிக்கும் தனக்கும் திருமணம் விரைவில் நடக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். எங்களுடைய மலையானது தற்போது மழை இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. ஆனால் எங்களுடைய மலை தெய்வத்தின் அருளால் சூழ்ந்தது. அதனால் அத்தெய்வத்தின் கோபம் தணியுமாறு எங்கள் சுற்றத்தோடு விரும்பி வந்து இம்மலை தெய்வத்தை வணங்கினோம் என்றால் மழையானது கொட்டும். அவ்வாறாக மழை வருமானால் எங்களுடைய மலையானது குளிர்ச்சிப் பொருந்திய வளம் உடையதாக மாறும் என்கிறான். மழைக்காக வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
“மலை வான் கொள்க! என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று, மழை மேற்கு உயர்க! எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,” (புறம்.143 1-3)
தெய்வத்தை அன்றாடம் வணங்கும் குறமக்கள். அவர்கள் மழையற்றுக் காலத்து மழையைப் பெய்ய வேண்டி தங்களின் மலைகளில் மிகுந்த பலியைத் தூவி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இங்கு பலி என்பது மஞ்சளுடன் பூக்களை அரிசியுடன் சேர்த்து வணங்குதல். இவ்வழிபாட்டில் முடிவாகக் குறவர்கள் வாழும் மலை முழுவதும் கடும் மழை பெய்ததாம். அளவுக்கு அதிகமாக மழை பெய்து அதனால் மழை வேண்டாம் என்று மீண்டும் தெய்வத்திற்கு வழிபாடு செய்கின்றனர். அதன் பொருட்டு மழையானது அவ்விடத்தில் நின்று வேறு இடத்தில் மழை பெய்தது என்கிறார் ஆசிரியர்.
இதன் மூலம் மழைக்காக மக்கள் வேண்டி நின்றலும் மழை அதிகம் பெய்து விட்டால் மழை நிற்கும் படியும் மக்கள் தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளனர் என்பது புலனாகிறது.
“மாரி வாய்க்க! வளம் நனிசிறக்க!
என வேட்டோளே, யாயே யாமே” (ஐங்.10 2-3)
ஒவ்வொரு காலமும் மழை நீரானது பொய்க்காமல் பெய்ய வேண்டும். இந்த உலகத்தின் நன்மை ஒன்றையே கருதியும் உலக வாழ்வுக்கு இன்றியமையாத மழை வளத்தையும் அதன்மூலம் உண்டாகும் செல்வச் சிறப்பையும் எப்போதும் மக்கள் விரும்பி நிற்பார்கள். மலைகளின் மீது விதைத்து வளர்ந்த துணை பயிருக்கு மழை வேண்டி குறமாந்தர்கள் ஆரவாரம் செய்தனர் ஆராவாரம் செய்தால் மேகம் மழை பொழியும் என்பது பழங்கால நம்பிக்கையாகும்.
நெல் வழிபாடு
அந்தக் காலத்தில் மக்கள் உணவாக உட்கொள்ளும் அரிசி நெல்லினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். யாருக்கேனும் தானம் தருவதிலும் நெல்லினியே முதலிடம் பெற்றது எனலாம். இறைவன் வழிபாட்டின் போது நெல்லினை தூவி வழிபாடு நிகழ்வினை நிகழ்த்தியுள்ளனர். நெல் வயல்களில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற பழக்கமும் இருந்து வந்துள்ளது. ஏனெனில் உண்ணும் நெல்லினைக் கடவுளுக்குச் சமமாக வைத்து வணங்கி வந்துள்ளனர் சங்ககால மக்கள்.
“அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்த்திரி கொளிஇ,
நெல்லும் மலரும் தூஉம் கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர” (நெடுநல் 41 – 44)
மகளிர் வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்த முன் கையை உடையவர் ஆவார். முத்துப்போன்ற பல்லினை உடையவர். மடமை குணத்தைக் கொண்டவர்கள். இம்மகளிர்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் மலர்களை அழகிய பூந்தட்டுகளில் நிரப்பி வைத்திருப்பர். அப்பூக்கள் மலர்ந்து வாசம் வருவதைக் கண்டு மாலைநேரம் வந்திருப்பதை உணர்வர். சாயங்கால நேரத்தில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில் எண்ணெய் தோய்த்த திரியை கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவி கைக்கூப்பி வீட்டு தெய்வத்தை வழிபட்டார்கள் என்கிறார் நக்கீரர்.
“நல்நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரோடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின்” (நற்.288 5-7)
தலைவன் பொருள்மேல் சென்றுள்ளான். தலைவிக்குப் பசலை நோய்ப் படர்ந்திருந்தது. அப்போது அந்தப் பக்கத்தில் ஒரு முதுமை மிக்க கட்டுவிச்சி என்கிற குறி சொல்பவள் செல்கிறாள். தலைவியானவள் அவளை அழைத்து தலைவனின் வரவை பற்றி குறிக்கேட்கிறாள். தன் வீட்டிற்கு முன்னால் அப்பொழுதுதான் களத்தில் இருந்து அறுத்து வரப்பட்ட நெல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தெய்வமாக மதிக்கும் நெல் கட்டுக்கு முன்னால் வைத்து தலைவி குறிக் கேட்கிறாள். இவ்விடத்தில் நெல்லினைக் கடவுளாக வைத்து தலைவி பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.80 6-7)
அஞ்சத்தக்க குகையும் குரலெடுத்து அலறும் இரவுப்பொழுது. தலைவன் இல்லாமல் வருந்தும் தலைவி மாறுகண் துயிலாமல் தலைவனை நினைத்து வருந்துகிறாள். அப்பொழுது தலைவனின் வரவைக் காண நெல்லும் நீரும் தூவி விருச்சி கேட்கும் முதுநிலை பெண்டிர்கள் இன்சொற்களானது தலைவியின் துயரத்தைப் போக்கும் என்கிறது புறநானூறு.
“நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்.335 12)
தம்மோடு பொருந்தாத பகைவரைப் போர்முனையில் எதிர்நின்று தடுத்து நிறுத்தி அவர்களுடைய ஒளியுடைய ஏந்திய கொம்புகள் உடைய யானைகளைக் கொன்று இறந்து பட்டவனுக்கு வைக்கப்பட்டுள்ள நடுகல்லில் தெய்வமாய் நின்றவனை நெல்லை தூவி வணங்கி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இவ்விரண்டைத் தவிர வேற கடவுள்கள் இவ்வூரில் இல்லை என்கிறார்கள். நெல்லினைத் தூவி வழிபடும் நெல்லினை தானம் கொடுத்தும் நெல்லினை முன்னிறுத்தி கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தை வழிபாடு
உழவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாதம் தை மாதம் ஆகும். அப்பொழுதுதான் நெல்லினை அறுவடை செய்வார்கள். இந்த வருடத்தில் எம்மண்ணில் நிறைய அறுவடையைக் கொடுத்ததாகக் கடவுளுக்குப் பூஜை செய்து வணங்குவார்கள்.
“தைத் திங்கள் தண் தயம் படியும்” (நற்.80 7)
தகுந்த நாணம் கொண்டவளான தலைவி தைத்திங்களில் குளிர்ந்த நீரிலாடி நோன்பு மேற்கொண்டாள். நோன்பின் பயனாகத் தலைவன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாள். மேலும் சூளோடு வாடிய நெற்பயிருக்கு நடு இரவில் மழை பெய்தது. அதனால் தை நோன்பு இருந்தவனுக்குப் பின்பு உண்ணுதலை போல் இருந்தது இம்மழை என்கிறார் புறநானூற்று ஆசிரியர்.
“தையல் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?” (கலி.59 13)
இப்பாடலில் தலைவியின் அரிய பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. நின்னை ஒத்த மகளிர் சூழ வகைவகையாக அணி புனைந்து தைத்திங்களில் நீராடிய தவத்தின் பயனெல்லாம் தலைவி பெறுகின்றாள் என்கிறார் ஆசிரியர். “தை நீராடுதல் இளம் பெண்களால் நிகழ்த்தப் பெறும். சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறும் நிகழ்வு. பண்டையத் தமிழர் தம் பண்பாட்டு தொடர்புடையது. மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கி தை முழுமதி நாள்வரை நாட்காலையில் நீராடி நோன்பிருந்து வழிபடுவர். திருப்பாவை, திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைநீராடல் அடிப்படையாக அமைந்தது எனலாம். தைநீராடும் மகளிர் பிறர்மனைக்கு சென்று பாடி ஐயம் ஏற்று கிடைத்தவற்றைப் பிறருக்கு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது சிறந்ததொன்றாகக் கருதப்பட்டது. ‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி’ என்னும் ஆண்டாள் பாசுரச் செயலுக்கு முன்னோடி கலித்தொகை தலைவியின் இச்செயல்”2 என்கிறார் முனைவர் ஆ விசுவநாதன் அவர்கள். இவ்வாறாக நோன்பு சங்க காலத்திலிருந்து இன்றுவரை நம் பெண்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகிறது.
வழிபாட்டு முறையில் பலியீடு
சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளைப் பலி கொடுத்துக் கடவுளை வணங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பூக்கள், நெல் போன்றவையே இறைவனுக்கு பலியிடப்படும் உணவாக அமைந்தது. பிற்காலத்தில் சமூக மக்களிடம் ஏற்பட்ட மாறுதல்களில் விலங்குகளைப் பலி கொடுப்பது வழிபாட்டு மரபுகளில் வைத்துக் கொண்டனர்.
இந்த வழக்கமானது சிறு தொழில்கள் செய்து வருபவர்களிடமிருந்தும் சிறுதெய்வங்களை வணங்கி வருபவர்களிடமிருந்தும் வந்துள்ளன என்பதாகக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி கிணற்றை வெட்டும் போது ஏதோ ஒரு விபத்தின் காரணமாக இரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதைப்போல கருவிகள் மூலம் செய்யப்படும் அனைத்து வாழ்வாதார தொழில்களுக்கும் பொருந்தும். இத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே விலங்குகளை கொற்றவை ஆகிய சிறு தெய்வத்திற்கு இரத்த பலி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய இழப்பு ஒன்றும் வராது என நம்பிக்கை வைத்திருந்தனர். இதன் பொருட்டே கடவுள்களுக்கு வழிபாட்டின்போது பலிகொடுப்பது வந்திருக்கலாம் என அறிய முடிகிறது.
காக்கைக்குப் பலி உணவு
காக்கைகள் நம்முடைய இறந்த முன்னோர்கள் என்று இன்றளவும் நம் மக்களால் நம்பப்படுகிறது. அம்மாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு பலியாக இடப்படும் உணவை வைத்து காக்கை உண்டவுடன் நாம் சாப்பிடும் பழக்கமும் இன்றளவும் நம்மிடையே உள்ளது.
நள்ளி என்பவனுடைய தொண்டி என்னும் நகரில் வாழும் தலைவிக்கு விருந்தினர் வரவைக் காக்கையானது கரைந்து சொல்லியது. அதனால் விண்ணில் அரிசியால் ஆக்கிய சோறானது வேறு களங்களில் நிரம்பி இருந்தாலும் விருந்தினர் வரவை சொல்லிய காக்கைக்கு இடும் பலி உணவானது சிறிய அளவிலேயே உடையது ஆகும் என்கிறார் ஆசிரியர்.
மறுஇல் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபின் நின் இளையோடு ஆரப்” (ஐங்.391 1-2)
வேற்று நிறக்கலப்பு சிறிதும் இல்லாத தூய கருநிற சிறகுகள் கொண்ட காக்கை. உறவினர்கள் வருகையைக் கரைந்து உணர்த்தியது. தலைவி அக்காக்கைக்கு பலி உணவாக நல்ல நிணமும் ஊனும் கலந்து உயர்ந்த உணவை பொற்கலத்தில் வைத்துக் கொடத்தாளாம் என்கிறது ஐங்குறுநூறு.
“மாசு இல் மரத்த பலி உண் காக்கை” (நற்.281 1)
குற்றமில்லாத மரத்தில் இருந்து கொண்டு மக்கள் கொடுக்கின்ற பலி உணவுக்காக காத்திருந்தது காக்கை என்கிறார்.
“செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவு முனையின்” (பொருந.183 – 184)
மருதநில மரச்சோலைகள் நிரம்பியிருக்கும் ஊரில் வாழும் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி உணவினை வழங்குவார்களாம். அதுவும் உரத்தோடு சேர்ந்த சிவந்த சோற்றுப் பலியைக் காக்கைக்குப் படைப்பார்கள் என்கிறது பொருநராற்றுப்படை. நெடிய விழுதுகள் இறங்கிய கடவுள் உறையும் ஆலமரம். அங்கு கடவுளுக்கு படைத்து வைத்த பலி உணவை காக்கைகள் உண்ணுமாம் என்கிறது நற்றிணை (343:4 – 5) பாடல்.
பலியிடுதல்
பல பிளவுகளையும் குகைகளையும் உடைய மழை பக்கத்திலுள்ள வெற்றி பொருந்திய கொற்றவைத் தெய்வத்திற்கு மக்கள் பலி கடன் செய்ய நேர்ந்து கொள்கிறார்கள். இதனால் நோன்பின் காரணமாகக் காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் போன்றவைகள் செய்கின்றனர்.
கரிய கண்ணையுடைய கருணைக்கிழங்கின் பொரியலோடு செந்நெல்லாற் சமைத்த வெண்மையான சோற்றுப் பலியைக் தெய்வத்திற்கு இடுவார்கள். அவ்வாறு இடும் இல்லங்கள் பல உள்ள பழமைமிக்க ஊர் என நற்றிணை (367:3-4) கூறுகிறது. பலியிடும் வழக்கம் ஆரம்பத்தில் சோற்றைத்தான் பலியாகக் கொண்டனர். பிற்பாடுதான் விலங்குகளைப் பலியாகக் கொடுக்கும் பழக்கம் வந்திருக்கக்கூடும்.
“மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை” (நற்.73 2- 4)
கோடைக்காலத்தில் வலிய வாயை உடைய வளமை மிக்க பழமையான ஊரிடத்தே தெய்வத்திற்கு வழிபாட்டோடு இடப்படும் ஊன் மிக்க பலிச் சோற்றினை உண்பதற்காகத் தான்வாழும் பாழான மன்றத்தை இடித்துக் கொண்டு எழும் என்கிறார் ஆசிரியர்.
“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்” ( அகம்.309 4-5)
பால் தரும் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்த வெட்சி மறவர்கள் தம்மோடு போரிட்ட கரந்தை மறவர்களைக் கொன்றனர். வலிய காட்டு வழியில் நெடுந்தொலைவு விரட்டி வந்தனர். அவ்வூரில் தெய்வம் வாழும் பருத்த அடி மரத்தை கொண்ட வேப்பமரத்தை கண்டனர். கவர்ந்து வரப்பட்ட நல்ல பசுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொன்று அதன் குருதியைத் தெய்வம் உறையும் மரத்தின் மேல் தெளித்து வழிபட்டனர். பலியிட்டுக் கொடுத்த புலாலைச் சமைத்து உண்டார்கள். தனக்கு எவ்விதமும் தீங்கு வரக்கூடாது என்று பலியிட்டு வேண்டிக் கொள்கின்றனர். பலிக்காகத் தாயின் முலைப்பால் கிடைக்கப் பெறாது மெல்லிய தளிராகிய தளை உணவை உண்ணக் கூடிய மிக்க இளமையுடைய ஆட்டுக்குட்டியைக் கடவுளுக்குப் பலியிட்டு வந்துள்ளனர் என அகநானூறு (292: 3 – 4) கூறுகின்றது.
தெய்வ வழிபாட்டின்போது விலங்குகளைப் பலி கொடுப்பது மட்டுமின்றி கள்ளினையும் உணவாகப் பலி கொடுத்துள்ளனர். நாட்பட்டு முதிர்ந்த கடிய வேகங்கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய அந்தக் கள்ளினை முதலில் ஓங்கி உயர்ந்த உச்சியை உடைய தெய்வம் வாழும் மலைக்கு படைத்துவிட்டுப் பிறகு அம்மக்கள் அருந்தினார்களாம் என்று அகநானூறு (348:3 – 8) கூறுகிறது. சுவரில் ஓவியமாக வரையப்பட்ட அழகிய கடவுள் அவ்விடம் விட்டு நீங்கி சென்றதால் இடமானது பொலிவிழந்து காணப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு இடைவிடாது நடத்தப்பெறும் பலியும் மறக்கப்பட்டது. வருடந்தோறும் இறைவனுக்கு கொடுக்கும் பலியானது மக்களின் வறுமையால் நிறுத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
நீர் நிரம்பியுள்ள குளத்தின் மேல் உறைந்திருக்கும் கடவுளுக்குக் கள்ளையும் மாலையும் சாத்தப்படுகிறது. பலியாக நிமிர்ந்து நேர்க்கொண்ட கொம்பினையும் தொங்கும் காதுகளையுடைய வெள்ளாட்டுக் கிடாயினையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட செய்யுளில் கையுறை என்பது கடவுளிடம் தான்வேண்டியது நடந்தேறினால் அம்மக்கள் கடவுளுக்குக் காணிக்கையாக எதைக்கொடுக்க நினைத்தார்களோ அவற்றை கொடுத்துத் தன்னுடைய கணக்கைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வகையான பழக்கவழக்கங்கள் இன்றளவும் நம் சமூக மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடியும்.
முருகன் வழிபாடு
குறிஞ்சிக்கடவுள் முருகன். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். தமிழகத்தில் குறவர் இனத்தில் வள்ளியை காதல் திருமணம் செய்ததால் முருகக்கடவுள் மருமகன் ஆனார். முருகன் என்றால் அழகு, இளமை என்று பலவாறு பொருள் கொள்ளலாம். குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாங்கள் நுகர்ந்த இன்பத்தை இறைவனாக எண்ணி வழிப்பட்டார்கள். அவ்வாறு வழிப்பட்ட இறைவனை முருகு என்று அழைத்து வந்தார்கள். குறுந்தொகையில்,
பலவாய செய்த பொருட்களில் தினை அரிசி சோற்றுப்பலியுடன் ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று அதனுடைய இரத்தத்தைத் தலைவனுடைய நெற்றியில் பூசியும் முருக கடவுளான உனக்கு வழிபாடு செய்கின்றோம். இப்பலியினை ஏற்றுக்கொள்க என்கிறார் ஆசிரியர். சங்க காலத்தில் பெண்களுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் காலத்தில் இவ்வகையான வழிபாடுகள் நிகழ்த்தப்படுவது உண்டு. அதிலும் முருகப்பெருமானை முன்னிறுத்தியே இவ்வகையான வழிபாடுகள் நடந்தேறியுள்ளன. குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவன் தன்னுடைய குடி தெய்வமாகிய முருகனை வழிபட்டு வழங்குகின்றான் என்ற செய்தியை ஐங்குறுநூறு (257) பாடல் கூறுகிறது. மேலும் சிறுகுடி என்ற சிற்றூரில் முருகவேளுடன் கூடிச் சென்ற வள்ளி நாயகியும் சேர்ந்து காட்சியளிக்கும் செய்தியை நற்றிணை (82) கூறுகிறது.
“அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே” (நற்.322 10-12)
தலைவிக்குப் பசலை நோய் படர்ந்து விட்டது. இந்நோய்க்கான காரணம் முருகவேள்தான் என்று நினைக்கிறாள் தாய். அதனால் துடி முதலிய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க பாடியும் நறுமணமுள்ள பூக்களைத் தூவி துதித்தும் இந்த ஆட்டுப் பலியை ஏற்றுக்கொள்க எனத் தலைவியின் தாய் வழிபாடு நிகழ்த்துகிறாள். வீட்டின் முன்னால் அழகிய கண்களை உடைய மணலைப் பரப்பியும், இல்லத்தைச் செம்மண்ணால் பூசியும், பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்துள்ளனர் (கலி.114:13 – 15).
வழிபாடுகள் ஒவ்வாரு மனிதனையும் நம்பிக்கை சார்ந்த வாழ்வினை வாழ வைத்ததோடு தம்முடைய முன்னொர்களின் வரலாறுகளையும் குடிப்பெருமைகளையும் காக்க உதவியிருக்கிறது.
சான்றெண் விளக்கம்
1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.171
2.முனைவர் அ.விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், NCBH, ப.250
அலுவலகத்தில் எனக்கான கண்ணாடித் தடுப்பறையில் எனக்கெதிரே மூன்று இருக்கைகள் மட்டுமே உண்டு. ஒரு சமயத்தில் ஒருவரோ அல்லது இருவரோதான் வருவார்கள். அந்த சனிக்கிழமை மாலை வருகையாளர்கள் ஐந்து பேர். கையில்லாத நாற்காலிகள் இரண்டை என் உதவியாளன் விமல் போட்டுவிட்டுப் போனான். முன் வரிசையில் என்றும், அமர்ந்த ஒருவர் தன் பெயர் மதிவாணன் இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். அவருடைய சொந்த ஊர் செங்கம் என்பது தெரிந்தது.
ஒசூரிலிருந்து மத்திகிரி செல்லும் வழியில் நவதி உள்ளது. அங்கே அறுபத்தி இரண்டு மனைகளோடு வள்ளல் ஓரி நகர் வளர்ந்து வருவதாக அவர்கள் மூலம் அறிந்தேன். நாற்பத்தி மூன்று மனைகள் விற்கப்பட்டு, அவற்றுள் முப்பத்தோரு மனைகளில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதாகவும் தெரி வித்தனர். நகராட்சியை அணுக, சங்கம் ஒன்றைப் பதிவு செய்து தரவேண்டுமென்பதே அவர்களின் வேண்டுகோள். சாலை வசதி, குடிநீர் இணைப்பு போன்ற பல அடிப்படைத் தேவைகளுக்கும் பதிவு பெற்ற சங்கம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும். எங்கள் அலுவலகம் மூலமாக ஏராளமான பதிவுகள் நடந்திருக்கின்றன. வருமான வரி தொடர்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்தாலும், இது போன்ற பதிவு வேலைகளையும் தவிர்க்க முடியாது. கிருஷ்ணகிரியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் இயங்குவதால், பயணங்களையும் தவிர்க்க முடியாது.
அவர்களிடம் ஒரு பட்டியல் இருந்தது. பெயர், வீட்டு மனை எண் மட்டுமே அதிலிருந்தன. பதிவுக்கான ஆவணங்கள் என்னென்ன தேவையென நான் ஒரு பட்டியலைத் தந்தேன். (வாயால் சொல்லி மாளவில்லை, அச்சிட்ட தாள்தான் சுலபம்) முன் வரிசையிலிருந்த மூவரும் அதைப் படித்துவிட்டு மௌனம் காத்தனர். மதிவாணன் லேசாக செருமியபடி,
“நாளக்கி சண்டே… மேக்சிமம் கலெக்ட் பண்றோம்… கொஞ்சம் பேரு ஊருக்கும் போயிருக்காங்க.. அவங்ககிட்ட அடுத்த வாரந்தான் வாங்க முடியும் சார்… புதன் அல்லது வியாழன் கொண்டு வந்து தந்தர்றோம்..” என்றார்.
நான் ஆமோதித்தேன். மொத்தம் எவ்வளவு செலவாகுமென ஒருவர் கேட்க தொகையைச் சொன்னேன். உடனே ஆட்சேபித்தார். மிக அதிகமென்றும், அதில் பாதி செலவில் தனக்குத் தெரிந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பு ஒரு சங்கத்தைப் பதிவு செய்ததாகவும் வேகமாகச் சொன்னார். நானும் பதில் தந்தேன்.
“ரெண்டு வருஷத்துக்கு முந்தி அவ்வளவுதான். ஃபீஸ் ஐநூத்தி ஐம்பத்தஞ்சு ரூபாதான் பத்து வருஷத்துக்கு முந்தி… அப்புறம் அது ரெண்டாயிரத்து ஐநூத்து ஐம்பதாகி, இப் ஐயாயிரத்து நூறு ரூபா ஆயிடுச்சுங்க… அதனாலதான் நாங்களும் அதிகம் வாங்க வேண்டியிருக்கு…”
அவர்களுக்குள்ளாக சளசளவென உரையாடி கொண்டிருந்தனர். நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோதே எதிரே இருந்தவர்கள் விவாதித்து முடித்திருந்தனர். செயலாளர் பதவிக்கு தொகையை எல்லோரும் ஒப்புக் கொள்வதாகவும், அடுத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சம்பத், நான் சொன்ன கட்டணத் வாரம் ஆவணங்களோடு வருவதாகவும் சொல்லி எழ, மீதி நால்வரும் எழுந்து கொண்டனர். அனைவரும் அகன்றதும், சோர்வாய் உணர்ந்தேன். தேநீர் மூலம் புத்துணர்வு பெற வெளியே வந்தேன்.
அடுத்த புதனன்று மதிவாணனும், தனசேகரும் வந்தனர். சேகரித்திருந்த ஆதார் அட்டை நகல்களையும், கேட்டிருந்த விபரங்களையும் சமர்ப்பித்தனர். நிர்வாகிகள் பட்டியலை மீண்டும் சரிபார்த்துத் தரச்சொன்னேன். ஒரு மாற்றமுமில்லை என்றார்கள். உபவிதிகளையும், படிவங்களையும் அடுத்த நாள் தயாரித்துத் தருவதாகச் சொல்லி அனுப்பி வைத்தேன். வெள்ளியன்று காலை மதிவாணன் மட்டும் வந்தார். பழைய உற்சாகம் தென்படவில்லை அவரிடம்,
“ரொம்ப அலைய வெக்றாங்க சார்… பொருளாளர்னு ஒருத்தனுக்குப் பொறுப்பு குடுத்துருக்கோம்… பணம் தராதவங்ககிட்ட போய் வசூல் பண்ணனுமில்ல… செய்ய மாட்டேங்கிறான் சார்… ஷிப்ட்டுக்குப் போகணும்.. போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கணும்… வீட்ல வேல இருக்கு… இப்படி ஏதாவது ஒரு காரணம்… அட நானும் வர்றேன்… ரெண்டு பேரும் போலான்னாலும் வர மாட்டேங்கறான் சார்… மீறி கேட்டா… நீங்கதான் தலைவர்… நீங்கதான் பாத்துக்கணும்கறான்…” நேத்து மட்டும் நானே போய் பதினாலு வீட்ல பணம் வசூல் பண்ணேன். எங்க வீட்ல திட்டறாங்க… ரிட்டையரானதக்கப்புறம் ரொம்ப அலையறீங்கன்னு ஒரே புகாரு… கஷ்டமா இருக்கு…”
புலம்பி முடித்ததும் அவருக்கு அருந்த நீர் கொடுத்தேன். கொஞ்சம் அமைதியானார். இதுபோனற் ஆதங்கப் பதில்கள் எனக்குப் புதிதல்ல. பல சங்கங்களில் இதே நிலைதான். முன்னின்று வேலைகளைச் செய்ய சிலரே இருப்பார்கள். கேள்வி கேட்கவும் குறை சொல்லவும் ஆட்களுக்குப் பஞ்சமே இருக்காது.
கணினியிலிருந்து அச்சிடும் கருவிக்கு ஆணை கொடுத்தேன். பதினாறு பக்கங்களை அது வெப்பத்தோடு வெளியேற்றியது. அவற்றைத் தொகுத்து அவரிடம் தந்தேன்.
“இதுல ஏதாவது மாத்தனம்னா சொல்லுங்க… மாடல்தான் இது… அப்பறம்… ரொம்ப… ஃபீல் பண்ணாதிங்க… எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க.. நானும் சம்பத்கிட்ட பேசறேன் சார்…”
சற்றே சமாதானமாகிப் புறப்பட்டார். அன்று மாலையே சம்பத்திடம் பேசினேன். அவனும் ஆமோதித்தான் எல்லா வேலைகளையும் ஒருவர் மீதே சுமத்துவது நியாயமாகுமா என்ற கேள்வியோடு நிறுத்தினேன்.
திங்களன்று தனசேகர் வந்தார். உபதலைவர் பதவி அவருக்கு. அச்சிட்ட தாள் தொகுப்பிலிந்து இரண்டை மட்டும் வெளியே எடுத்தார்.
உடனேயே பூர்ணிமாவை அழைத்து, மாற்றங்களைச் சுட்டினேன். கணினியில் சரி செய்து சேமித்தாள். இளம்பச்சை நிறத்தாள்களில் அச்சிட்டு, நிர்வாகிகள் கையெழுத்திட வேண்டிய இடங்களைக் குறித்துத் தந்தேன். கட்டணத் தொகையோடு தானோ வேறு யாராவதோ வருவதாகச் சொல்லிச் சென்றார்.
செவ்வாய் காலை பதினோரு மணியளவில் என் கைபேசி ஒலித்தது. பெயரற்ற புதிய எண் ஒளிர்ந்தது.
“ஹலோ யாருங்க…?”
“ஆடிட்டர்தான பேசறது?”
“ஆமாங்க… நீங்க யாருன்ன சொல்லலியே…”
“சார்… எம் பேரு மார்டின்… ஓரி நகர் அசோசியேசன் ஜாயிண்ட் செக்ரட்ரி”
“ஓ..ஓகே… சொல்லுங்க..”
“சார்… டாக்குமெண்ட்ல ஒரு சேஞ்ச் பண்ணனும்…”
”அப்படியா… ஏதாவது சேத்தணுமா…?”
”இல்ல… சம்பத் செக்ரட்ரி போஸ்ட் வேண்டாம்னு சொல்றாரு சார்… அவருக்கு பதிலா கமிட்டி மெம்பரா இருக்க சின்னசாமியை செக்ரட்டரியா போடனும் சார்…”
“ஏன்? போன வெள்ளிக்கிழமை அவரோட பேசறப்ப கூட ஒண்ணும் சொல்லலியே…”
“சரிங்க சார்… இன்னும் கால் மணி நேரத்துல வர்றேன்… ஆபீஸ்லயே இருங்க…”
கைப்பேசியைக் கிடத்திவிட்டு, தேநீர்க் கடையை நாடினேன். துவக்க நிலையிலேயே ஏன் தடுமாற்றங்கள் என்ற நினைப்பு எனக்குள் ஒடியது.
மார்டின் கொண்டு வந்திருந்த தாள்கள் கசங்கியிருந்தன. மாற்றம் செய்ய வேண்டிய மூன்று பக்கங்களைப் பிரித்தெடுத்து, முதலில் பேனாவால் அடித்து எழுதினேன். பூர்ணிமாவை அழைத்து, வேறு தாள்களில் அச்சிட்டு தரச் சொன்னேன்.
“கையெழுத்து போட வேண்டிய பேபர்ஸ் மட்டும் தர்றேன், மறக்காம சாட்சி கையெழுத்து ரெண்டு பேர்கிட்ட வாங்கிடுங்க… அவங்களோட ஆதார் காப்பியும் வேணும்…”
‘அதுல அவங்க கையெழுத்து வேணுமா சார்?”
“கண்டிப்பா வேணும். இதெல்லாம் கொண்டு வர்றப்ப மதி சார வரச் சொல்லுங்க. அவரு எல்லாப் பக்கத்துலயும் கையெழுத்து போடணும்…
”அடுத்த நாள் மதிவாணன் வந்தார். என்னிடமிருந்த தாள்களிலும் அவரிடம் கையெழுத்து பெற்று, ஒருமுறை சரி பார்த்தேன். விமலை அழைத்து எல்லாத் தாள்களையும் கொடுத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“என்ன சார்… சம்பத் திடீர்னு ஜகா வாங்கிட்டாரு…”
“அவரு என்ன சார் பண்ணுவாரு… மிஸஸ் வேலைக்கு போறாங்க… இவரு சாயந்தரத்துல வீட்டோட இருக்கனும்னு எதிர்பார்க்கறாங்க… என்னமோ தெனமும் அசோசியேஷன் வேல இருக்கற மாதிரி…”
அவர் ஆமோதித்து விடை பெற்றார். அன்றே கிருஷ்ணகிரி அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு வாரம் சென்ற பின் தினமும் ஒருவராவது கைப்பேசியில் அழைத்து பதிவுச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்று கேட்கத் துவங்கினார்கள். பதிவு அலுவலகத்தை அவ்வப்போது தொடர்பு கொண்டு கேம்டடபோது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். வேலை மட்டும் நடக்கவில்லை.
இடையில் ஒரு நாள் மதிவாணன் வந்து, பதிவுக்குப் பின் என்னென்ன நடைமுறைகள், எப்படிக் கணக்குகளைப் பராமரிப்பது போன்ற விவரங்களைப் பூர்ணிமாவிடம் கேட்டு எழுதிக் கொண்டு போனார். ஒரு வழியாக அம்மாத இறுதியில் சான்றிதழை ஒப்படைத்தேன். பிறகு, மற்ற வேலைகளில் மூழ்கி, என் கவனத்திலிருந்து அந்த சங்கம் மறைந்து போனது.
நாலைந்து மாதங்களுக்குப் பின்னால் திடீரென ஒரு நாள் மதிவாணன் அலுவலகத்திற்கு வந்தார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு,
“சார்… தலைவர் பதவியிலிருந்து வெலகச் சொல்றாங்க சார்”… என்றார் வருத்தம் மிகுந்த குரலில். நான் அதிர்ந்தேன்… என்னால் நம்ப முடியவில்லை. “என்ன சார் சொல்றீங்க? உங்கள எதுக்கு ரிசைன் பண்ண சொல்றாங்க… மொதல்ல இருந்து நீங்கதான ஆக்டிவா இருக்கீங்க… அப்புறம் எதுக்கு?”
“ப்ச்… என்னென்னவோ நடந்து போச்சுங்க சார்” என்று தொடங்கி ஒவ்வொன்றாய் சொன்னார். பதிவுக்கு பின் நகராட்சி ஆணையாளரைப் பலமுறை சந்தித்து, சாலை, தெருவிளக்கு, குப்பை சேகரிப்பு, வரி விதிப்பு போன்ற பல அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். பெரும்பாலும் தனியாகவே செயலாற்றியிருக்கிறார். சில சமயம் மார்டின் உடன் சென்றிருக்கிறார். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பதினாறு பேர் சங்கத்தில் இருந்திருக்கிறார்கள். சுதந்திர தின விழாவிற்கு, சட்டமன்ற உறுப்பினரை அழைத்து மிகச் சிறப்பாக எல்லா நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார். வள்ளல் ஓரி நகர் பல விதங்களில் முன்மாதிரியாக விளங்குவதாக சட்டமன்ற உறுப்பினரும் பாராட்டியிருக்கிறார். குடியிருப்போர் மத்தியிலும் செல்வாக்கு இவருக்கு உயர்ந்ததும், அந்த நிறுவன ஊழியர்களுக்குப் பொறுக்கவில்லை. இவர் செங்கத்திற்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, தலைவரை மாற்ற வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள். தானாக முன்வந்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டால் மரியாதை என்று எச்சரித்திருக்கிறார்கள். பதிவாளர் அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும், கட்டணம் எவ்வளவு என விசாரித்த அவரை நான் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
முன்னுரை தமிழ்மொழியில் அமைந்த சிற்றிலக்கிய வகைகளைப் பிரபந்தங்கள் என்று அழைப்பர். இவற்றை வகைப்படுத்தித் ‘தொண்ணுற்றாறு பிரபந்தங்கள் என தமிழ் மொழியில் குறிப்பிடும் வழக்காறு உள்ளது. பிரபந்தம் என்பது நன்கு கட்டப்படுகின்ற பொருளைத் தருவதாய் அமைகின்றது. மேலும் பிரபந்தம் என்ற சொல்லாட்சி சிற்றிலக்கியத்தை மட்டும் குறிப்பிட்டு உணர்த்தாமல் சிற்றிலக்கிய வகைகளையும் குறிப்பிட்டு உணர்த்துவதால் சிறுபிரபந்தம் அல்லது சில்லறைப் பிரபந்தம் என்ற சொல் அமைப்பை பயன்படுத்தத் தொடங்கினர். இச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். தமிழ்விடுதூதுவில் பெண்கள் உளவியல் என்ற நோக்கில் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். தூது ஒருவர் மற்றொருவரிடத்து ஓர் அஃறிணைப் பொருள் அல்லது ணர்வுகளை அல்லது ஓர் உயர்திணையோர் வழியாகத் தம் உள்ள உ செய்திகளைக்கூறி, அனுப்பும் பொருள்மையைக் கொண்டு இயற்றப்படும் இலக்கியவகையே தூது இலக்கியம் ஆகும். சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையைக் கொண்டதாகவும் கலிவெண்பாவால் பாடப்படும் இலக்கிய வகையாகவும் தூது இலக்கியம் திகழ்கின்றது. இவற்றில் தமிழ்விடு தூது என்பது மதுரை சோமகந்தர இறைவன் மேல் காதல்கொண்டதலைவிதன்காதல்வேட்கையை வெளிப்படுத்தத் தமிழைத் தூதாக அனுப்புவதற்கு இயற்றப்பெற்ற இலக்கியம் ஆகும். இத்தூது இலக்கியத்திற்கு இலக்கணமாக பாட்டியல் நூல்கள்,
“இரு திணையுடன் மையலை யுரைத்துத்
தூது செலவிடுவது தூது இவை கலிவெண்
பாவினால் விரித்துப் பகிர்வது மரபே” (பி.ம. 15)
“பயிறருங் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்நூறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” (இ.வி. 874)
என்ற இலக்கணம் கூறுகின்றன.
உளவியல்
முன்பு நடந்த ஒரு செயலை நினைவிற்கு கொண்டு வரும் உருவகமே உளவியல்.மனிதனின் உள்ளம் அல்லது மனதின் செயல்களை விளக்கும் இயல் உளவியல் எனச் சில அறிஞர்கள் கருத்து தருகின்றனர். ‘உள்ளம்’ உளவியலை”நனவுநிலை’பற்றிய இயல் என விளக்குகின்றனர்.”உளவியல் என்பது மனிதனின் நடத்தை,நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் என்பது ‘ஆன்மா’ என்பதைப் போன்றே தெளிவற்றதென நினைத்து, ஆகியவற்றைப்பற்றிப்படிப்பதாகும்” என்று வில்லியம் மக்டூகல் கூறுகிறார். பற்றிப் படிப்பதாகும்” என்று லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ ‘உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவுமுறைகளைப் எடுத்து இயம்புகிறார். மனிதனது நடத்தை பற்றிய சில அடிப்படைக் கருத்துக்கள் இன்று பொதுவாக எல்லா உளவியலறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. “உடலுக்குள்ளிருந்து எழும் வேட்கைகள் வெளியுலகச் சூழலிலிருந்து எழும் தூண்டல்கள், மனிதர்களின் சமூக உறவினின்றும் எழும் துன்பங்கள் போன்ற பல வகைப்பட்ட தூண்டல்களினால் மனிதனது நடத்தை தோற்றுவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகிறது.” (சு. சாவித்திரி வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444)படைப்பாற்றல் மிக்க மனம், உயர்திணைப்பொருள்களாகிய மனிதனுக்கு மட்டும் உரியது. மனம்தான் மனித சமுதாயத்திற்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் படைத்துத் தந்ததாகும். இயற்கையாகவே ஏனென்றால் மனிதன் பரிணாமத்தின் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளான். ஐம்பொறிகளின் தலைமைப் பீடமாகிய மூளை தலையினுள் அமைந்துள்ளது. வாய், கண், மூக்கு, செவி என்னும் நாற்பொறிகளும் தலையில் அமைய ‘மெய்’உடம்பு முழுவதையும் இணைத்துத் தொடு உணர்ச்சியை மூளைக்குக் கொண்டு செல்கிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் ஐம்பொறிகளைப் பற்றி வள்ளுவர்,
“கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள” (திருக்குறள் 1101)
என்று கூறுகிறார். சமூக உளவியல் சார்ந்த கருத்துக்களைத்திருக்குறள் பொருட்பாலில்
“மன நலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்புடைத்து” (திருக்குறள் 459)
என மனிதன் ஒருவன் கொண்டுள்ள மனநலத்தினால் அவன் மறைந்த பின்னரும் புகழ் உண்டு என்பதைக் கூறகின்றார்.
தமிழ்விடு தூதில் பெண் உளவியல்
உடல்மெலிந்து இருக்கின்றேன். காதல் கொண்ட தலைவியின் உள்ளத்தைத் தமிழ்விடுதூது காலக் கண்ணாடியாக படம்பிடித்துக் காட்டுகின்றது. மதுரையில் வீற்றிறுக்கும் சோமசுந்தர கடவுள் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் மன வருத்தத்தினால் தமிழ் மொழியைப் பார்த்து, காதல் நோயால் வருத்தமுற்று அறியவேண்டிய உன்னிடத்தில் உன்னுடைய சீரிய பெருமைகளையேநான் என்னுடைய நிலையைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழே! என்னுடைய காதல் வேட்கையை, அறிந்துகொள்ள ‘மாட்டேன் என்கிறாயே! என் உள்ளத்தின் நிலையைத்
“என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதியல்லால்
உன் செய்தி நானோ உரை செய்வேன்” (தமிழ்விடுதூது-96)
என்று தலைவி கூறுகிறாள். தன் தலைவன் மீது கொண்டுள்ள காதல் வேட்கையின் உணர்வு எத்தகையது என்பதைத் தன் மனம் நொந்து கூறுவதைக் காணமுடிகிறது.
தலைவன் இல்லாமல் வாழ முடியாது தலைவனிடத்து அன்பு கொண்ட தலைவி, தலைவன் இல்லாமல் உயிரோடு இருக்கமுடியாது என்கிறாள். அதன் பொருட்டு மனம் இரக்கம் கொண்டு காதலனான சோமசுந்தர கடவுளிடத்து தூது சென்று வரும்படி கூறுகின்றாள். சுந்தர மூர்த்தி நாயனார் தன் காதலுக்காக ஓர் அடிக்கு ஓராயிரம் பொன் கொடுத்தார். அவரின் காதலின் பொருட்டு பரவை நாச்சியாரிடம் தூதாக சென்ற தமிழே என் மன நிலையை அறிய மாட்டாய நானும் பெண்தானே என் மன வேட்க்கையை நீக்குவாயாக என்று தலைவியானவலின் மன வேட்க்கையையும் வேட்கையால் உண்டான மனவேதனையும் நீக்குகின்ற பொறுப்பு தமிழிடம் இருக்கின்றதாகதலைவி கூறுகின்றாள். இதனை
“மாண்பாய் ஓர் தூது சொல்லி வர என்பேன் என் வருத்தம்
காண்பாய் என் பெண்மதி நீ காணாதே” (தமிழ்விடுதூது -101)
என்று தமிழ்விடு தூது கூறுகின்றது. தலைவியின் உள்ளத்தை வாட்டி வருத்துகின்ற புண்களை மாற்றுவாயாக! என்று தமிழைப் பார்த்துக் காமம் மிக்க கழிபடர் கிளவியாக உரைக்கின்றாள். சங்க இலக்கியமான நற்றிணையில் தலைவி மீது காதல் கொண்ட தலைவன் தோழியிடம்,
“உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே” (நற்.75)
என்று கூறுகிறான். தன்னுடை துன்பத்தை அறிந்தும், தன்னிடம் இரக்கங்கொண்டு தன்னுடைய மனம் அறியாமையைத் தலைவியிடம் சொல்லி சிரிக்கச் செய்யாமல் என் நெஞ்சம் விரும்புமாறு தன்னுடைய காதலைத் தலைவியிடம் எடுத்துக் கூறும்படி கூறுகிறான். தோழியிடம் தன் மனவேட்கையைப் பலவாறு எடுத்துரைக்கின்றான் தலைவன். காதல் வேட்கை கொண்ட ஒரு தலைவனின் மனப்பாங்கை இங்குக் காணமுடிகிறது.
பிற அஃறிணைப் உயிர்களைத் தூதாக அனுப்புதல் மதுரையம் பதியில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது காதல் கொண்ட தலைவி, தலைவனிடம் மனவேட்கையைப் புலப்படுத்தப் பல அஃறிணைப்பொருட்களைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். பின் அதன் செயல்பாடுகளை நினைத்து ஒவ்வொன்றாகத் தவிர்க்கின்றாள்.
அன்னப்பறவையை தூது அனுப்புதல்
முதலில் அன்னத்தைத் தேர்ந்தெடுக்கின்றாள். ஒளி பொருந்திய தாமரை மலரை விரும்பி அதன் மேல் அமர்ந்திருக்கும் அன்னத்தைத் தூதுவிடலாம் என்று நினைத்தால், முன்பு ஒருநாள் சிவபெருமானிடம் அடி முடியைக் காண பிரம்மன் அன்னப் பறவை வேடங்கொண்டு சென்று அவருடைய அடிமுடியைக் காணாமல் வந்தது போன்று என்தலைவரையும் காணாமல் வந்துவிடுமோ என்று தலைவி தன் மனத்திற்குள் எண்ணுகிறாள். இதை,
“அன்னந்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டு அறியாது என்பரே” (தமிழ்விடுதூது -107)
தலைவனுக்குத்தூதுவிட அன்னத்தின் செயல்களைக் கூறி, அதனுடன் புராணக் கருத்துக்களையும் எடுத்துக் கூறுகின்றாள். இப்புராணச் செய்தி அன்னம் விடு தூதில்,
மூளையால் நான்
முகன் நின்றனை நன்கறிந் தேறினான்” (அன்ன. 8-9)
கூறப்படுகின்றது. அன்னம் பற்றிய புராணக் கருத்தும் அதன் பெருமைகளும் விளக்கப்பட்டுள்ளன. அன்னத்தின் இயல்பை நினைத்த எனக் தலைவி வண்டைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். ஆனால், அது தலைவன் “காமம் செப்பாதே’ என்று கூறினால் உடனே திகைத்து ஒன்றுவிடும் என்கிறாள். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பிகாமம் செப்பாது கண்டதுமொழியுமோ” (குறுந். 2) என்ற குறுந்தொகைப்பாடலில் வண்டின் இயல்பு கூறப்பட்டுள்ளதைக் தேனையுண்டு போதையில் தலைவனிடம் செல்லும் பொழுது, இயற்கையில் காமத்தைச் செப்பாதே என்று கூற, இவ்வண்டு தலைவியான என்னுடைய காமத்தைப் பற்றிக் கூறாதே என்று அவர் கூறியதாக எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்ளும் என்கிறாள்.
மானைத் தூதாக அனுப்புதல் மானைத் தூதாக அனுப்பத் தலைவி நினைத்தபோது, சிவபெருமான் அணிந்திருக்கும் புலித்தோல் ஆடையைப் பார்த்து பயந்து நின்றுவிடும் என்று நினைக்கின்றாள். இது,
“மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப்பூத்
தானைப் பரமர்பால் சாராதே” (தமிழ்விடுதூது-109)
என்ற வரிகள் மூலம் தலைவன்பால் காதல் கொண்ட தலைவியின் நிலை அறியப்படுகிறது.
குயிலைத்துதாக அனுப்புதல் தூதுவிடுவதற்கு சிறந்ததொரு வழி, எது என்று தீர்வு காணமுடியாமல் தலைவி வருந்தினாள். பின் குயிலைத் தேர்ந்தெடுத்துத் தூதுவிட நினைத்தாள். அனால் குயிலோ காக்கை இனத்தைச் சோந்தது என்றும், காக்கைக்கும், வலியானுக்கும் பகை என்றும் எண்ணுகிறாள். ஆனால் வலியான் சோமசுந்தரக் கடவுளை வழிப்பட்டு ‘வலியான்’ என்னும் பெயரையும், காக்கையை வெல்லும் வலிமையும் பெற்றுள்ளது. இதனால் தூது செல்லும் குயில் வலியானைக் கண்டதும் பயந்து என் தலைவனிடம் என்னுடைய குறையையும் என்நிலையையும் எடுத்துக்கூறாம வந்துவிடுமோ ! என்று தலைவி குயிலின் இயல்பை நினைந்து வருந்துகிறாள். இதை,
“கோகிலத்தை நான்விடுப்பேன்
கோகிலமும் காக்கை இனம்
ஆகிய வலியானுக்கு அஞ்சுமே” (தமிழ்விடுதூது-110)
கண்ணியில் தலைவி, புராணக்கதையுடன் ஒப்பிட்டுக் என்று கூறுகின்றாள். தலைவி தலைவனிடம் தூதாக விடுவதற்கு நினைத்த அஃறிணைப் பொருள்களின் அனைத்து இயல்புகளையும் எடுத்துரைத்து அவைகளை ஒதுக்கிவிட்டுத் தன் மனத்தையே தூதாகவிட நினைக்கின்றாள். ஆனால் தலைவனான அவர் மனதிற்கு எட்டாதவர்.ஆகையால் மனமும் அவரிடம் நெருங்க முடியாது என்று தலைவி கூறுகின்றாள். இவ்வாறு தலைவி ஒரு பொருளும் தன் மனநிலையை தலைவனிடம் உரைப்பதற்குத்தகுதியுடையதாகத் தோன்றியமையால் என்ன செய்வேன். என்ன செய்வேன் என்று தன் மனம் ஓங்கி நிற்கிறது என்று தன் மன வருத்தத்தைத் தமிழிடம் எடுத்துரைக்கின்றாள்.
என்ற கண்ணியில் தலைவி, தன் கவலைகளையெல்லாம் ‘மூவாத்தமிழ்’ எனவும்‘கன்னி’ எனவும் சிறப்பிக்கின்ற தமிழான உன்னிடம் கூறுகிறேன். மதுரையில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் எனக்காகச் சென்று ‘என்னுடைய காதலை அவர் ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக ஒருமாலை வாங்கி வா என்று தலைவி தமிழிடம் தன் காதல் வேட்கையால் ஏற்பட்ட மனவருத்தத்தைக் எடுத்துக் கூறுகின்றாள்.
முடிவுரை மனிதர்களின் இயல்பான மனநிலையை தமிழ்விடு தூதில் அறிய முடிகின்றது. தலைவி ஒவ்வொரு பொருளையும் தான் ஏன் தூதாக அனுப்பவில்லை என்பதற்குரிய காரணத்தைக் கூறுகின்றாள். குயிலையும் அன்னத்தையும் கூறுகின்றபொழுது சிவபெருமானோடு தொடர்புபடுத்திப் புராணச் செய்திகளைக் கூறுகின்றபொழுது தலைவியின் உள்ளப்பாங்கு தெளிவாகத் தெரிகின்றது. தன்னுடைய ஆறாக் காதலைத் தலைவனிடம் சொல்லவேண்டுமே என்ற தவிப்பு தலைவியிடம் காணப்படுகிறது. இது தூதுவிடும் தலைவி ஒவ்வொருவர்க்கும் இருக்கக்கூடிய மனநிலையே, இன்றைய உலகிலும் தூதாகச் செல்லுபவரைப் புகழ்தல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தமிழ்விடுதூதில் தலைவியின் மனநிலை உளவியல் ரீதியில் சிறப்பாக வெளிப்படுத்தப்படக் காணலாம்.
சான்றெண் விளக்கம்
1.சு.சாவித்திரி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444.
2.திருக்குறள் 1101
3.மேலது 459
4. பேராசிரியர் முனைவர் அ.மீனாட்சிசுந்தரம் கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல், காவியமாலா பப்ளிசர்ஸ், சின்னாலபட்டி, திண்டுக்கல் 624 302
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கி.நாகேந்திரன்,
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை,
ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி),
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும்.
எழுவாய்
ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும்.
பயனிலை
ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது.
செயப்படு பொருள்
ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற கேள்விகளுள் ஒன்றைச் சேர்த்து கேள்வியாக அமைத்துக் கேட்கக் கிடைக்கும் விடையே செயப்படுபொருள் ஆகும்.
(உம்) ஆசிரியர் மாணவனை அடித்தார்
இந்த சொற்றொடரில் அடித்தார் என்பது வினைச்சொல் ஆகும். அடித்தார் என்னும் சொல்லுக்கு முன் யாரை? என்ற சொல்லைச் சேர்த்து யாரை அடித்தார்? என்று கேள்வி கேட்க மாணவனை என்ற விடை கிடைக்கிறது எனவே மாணவனை என்பதே செயப்படுபொருள் ஆகும்.
எழுவாய் – இளங்கோவடிகள்
செயப்படுபொருள் – சிலப்பதிகாரத்தை
பயனிலை – இயற்றினார்.
கீழ்க்கண்ட வாக்கியங்களை வரிசையாகப் பார்க்கலாம்
தன்வினை வாக்கியம் – பிறவினை வாக்கியம்
1. தன்வினை
கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியம் ஆகும். (எழுவாய் தானே ஒரு செயலை செய்தல்)
(உம்) கோதை பாடம் கற்றாள்
கண்ணன் பொம்மை செய்தான்
2. பிறவினை
கருத்தா பிறரைக் கொண்டு தொழில் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் ஆகும். (எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வித்தல்)
(உம்) கோதை பாடம் கற்பித்தாள்
கண்ணன் பொம்மை செய்வித்தான்
தன்வினையைப் பிறவினையாக்கும்போது செய்ய வேண்டியவை :
1. தன்வினைப் பகுதியில் உள்ள மெல்லின மெய்யை வல்லின மெய்யாக மாற்றவேண்டும். எ.கா. திருந்தினான் – திருத்தினான்
2. தன்வினைப் பகுதியில் உள்ள வல்லின மெய் எழுத்தை இரட்டிக்க வேண்டும்.
எ.கா. பழகினாள் – பழக்கினாள்
3. தன்வினை பகுதியுடன் வி.பி.கு,கூடுது,பு,று என்னும் விகுதிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
வ.எண்
தன்வினை
பிறவினை
1
திருந்தினான்
திருத்தினான்
2
உருண்டான்
உருட்டினான்
3
உண்டாள்
உண்பித்தாள்
4
ஆடினார்
ஆட்டுவித்தார்
5
கண்டான்
காண்பித்தான்
6
உழுதார்
உழுவித்தார்
7
செய்தான்
செய்வித்தான்
8
படித்தான்
படிப்பித்தான்
9
கற்றான்
கற்பித்தான்
10
எழுது
எழுதுவி
11
படி
படிப்பி
12
இறங்கு
இறக்கு
13
உருள்
உருட்டு
14
நட
நடத்து
15
எழு
எழும்பு
16
மருள்
மருட்டு
17
பயின்றான்
பயிற்றுவித்தான்
18
வந்தான்
வருவித்தான்
19
ஓடினான்
ஓட்டினான்
20
வளைத்தான்
வளைவித்தான்
உதாரணங்கள்
1. மாதவி நடனம் பழகினாள் (தன்வினை)
மாதவி நடனம் பழக்கினாள் ( பிறவினை)
2.கண்ணன் கடிதம் எழுதினான் (தன்வினை)
கண்ணன் கடிதம் எழுதுவித்தான் ( பிறவினை)
3.இராமன் வில்லை வளைத்தார் (தன்வினை)
இராமன் வில்லை வளைவித்தார் ( பிறவினை)
4. மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வந்தான் (தன்வினை)
மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வருவித்தான் ( பிறவினை)
5.சிற்பி கோவில் கட்டினார் (தன்வினை)
சிற்பி கோவில் கட்டுவித்தார் ( பிறவினை)
6.திருக்குறள் கற்றேன் (தன்வினை)
திருக்குறள் கற்பித்தேன் ( பிறவினை)
7.நண்பருடன் விருந்து உண்டேன் (தன்வினை)
நண்பரை விருந்து உண்பித்தேன் ( பிறவினை)
செய்வினை வாக்கியம் – செயப்பாட்டு வினை வாக்கியம்
3. செய்வினை
எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினை வாக்கியம். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (ஐ – உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும் )
(உம்) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
4.செயப்பாட்டுவினை
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு படு, பட்டது எனும் சொற்களைச் சேர்த்து ( படு துணை வினை) அமைத்தல் செயப்பாட்ட வினை வாக்கியம் எனப்படும்.
ஒருவர் கூறியதை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கூறுவது நேர்க்கூற்று ஆகும். மேற்கோள் குறியீடு இடம் பெறும். தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம் பெறும்.
(உம்) “நான், நாளை உன் இல்லத்திற்கு வருவேன்” என்று இமயவரம்பன் கபிலனிடம் கூறினான்.
நான் நாளை உன் இல்லத்திற்கு வருவேன் என்ற செய்தியை இமயவரம்பன், கபிலனிடம் நேரில் கூறினான். எனவே, இது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
6.அயற்கூற்று
ஒருவர் முன்னிலையாய் நேரில் கூறியதைப் படர்க்கை இடத்திற்கு ஏற்றாற்போலச் சொற்களை மாற்றிப் பொருள் மாறாதவாறு அயலார் கூறுவது போல் சொல்லவது அயற்கூற்று எனப்படும். மேற்கோள் குறியீடு இடம்பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்.
(உம்) தாய்மொழியைப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.
தாய்மொழியை உயிராகப் போற்றுங்கள் என்பது மாணவர்களை முன்னிலைப்படுத்திக் ஆசிரியர் கூறியது. இச்செய்தியை அயலாருக்குக் கூறுவதுபோல் பொருள் மாறாதவாறு இவ்வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது அயற்கூற்று வாக்கியம் எனப்படும்.
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது வேறுபடும் சொற்கள் :
வ.எண்
நேர்க்கூற்று
அயற்கூற்று
1
இது, இவை
அது, அவை
2
இன்று
அன்று
3
இப்பொழுது
அப்பொழுது
4
இதனால்
அதனால்
5
நாளை
மறுநாள்
6
நேற்று
முன்னாள்
7
நான், நாம், நாங்கள்
தான், தாம், தாங்கள்
8
நீ
அவன், அவள்
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுவதற்கு
“புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அரசன் கூறினான். – நேர்க்கூற்று வாக்கியம்
1. முன்னிலை விளிப்பெயரைப் படர்க்கைப் பெயராக சேர்க்க வேண்டும். (புலவரே) – புலவர்
2. அப்பெயருடன் தக்கவாறு வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (புலவர்+இடம்) – புலவரிடம்
3. ஏவல் வினையை எச்ச வினையாக மாற்ற வேண்டும். (பெற்றுக் கொள்ளுங்கள்)- பெற்றுக்கொள்ளுமாறு அரசன் கூறினான்.
4. பின்னர் கூறியவர் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புலவரிடம் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசன் கூறினான் – அயற்கூற்று வாக்கியம்
அயற்கூற்றை நேர்க்கூற்றாக மாற்றுவதற்கு
கீரை வாங்கி வருமாறு தாய் மகனிடம் கூறினார். அயற்கூற்று வாக்கியம்
1.படர்க்கையில் வேற்றுமை உருபு பெற்றிருக்கும் பெயரை (மகனிடம் = மகன் + இடம்) ‘மகன்’ என விளிக்கும் சொல்லாக (அழைக்கும் பொருளில்) மாற்ற வேண்டும்.
2. வருமாறு என்னும் வினையெச்சத்தை ‘வா’ என முன்னிலை ஏவல் வினையாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றியமைத்தால் “மகனே! கீரை வாங்கிவா” என நேர்க்கூற்றாக அமையும்.
3. இதனுடன் கூறியவர் பெயரையும் ‘என்று’ என்னும் சொல்லையும் சேர்த்தல் வேண்டும்.
“மகனே! கீரை வாங்கி வா” என்று தாயார் கூறினார் – நேர்க்கூற்று வாக்கியம்.
உதாரணங்கள்
1.”நாளை நான் மதுரை செல்வேன்” என்று நன்மாறன் கூறினான். (நேர்க்கூற்று )
மறுநாள் தான் மதுரை செல்வதாக நன்மாறன் கூறினான். (அயற்கூற்று )
2.”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று செல்வி தோழியிடம் கூறினாள். ( நேர்க்கூற்று )
செல்வி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள். (அயற்கூற்று )
3. இசையாசிரியர், ”மாணவர்களே நீங்கள் நாள்தோறும் பாடிப் பழக வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
இசையாசிரியர் மாணவர்களிடம் நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார். (அயற்கூற்று )
4. அமைச்சர், ”அரசே! நீங்கள் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
அமைச்சர் அரசனிடம் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும் என்றார். அயற்கூற்று )
5.”நான் நாளை மதுரை செல்வேன்” என்று மாறன் கூறினான்.
மறுநாள் தான் மதுரை செல்வதாக மாறன் கூறினான்.
உடன்பாட்டு வாக்கியம் – எதிர்மறை வாக்கியம்
7. உடன்பாட்டு வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழ்வதைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் மாடுகள் மேய்ந்தன.
8. எதிர்மறை வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில,
உதாரணங்கள்
1.தமிழ்ச்செல்வி புதுவைக்குச் சென்றாள்
தமிழ்ச்செல்வி புதுவைக்கு சென்றிலள்.
2.இனியன் உணவு உண்டான்
இனியன் உணவு உண்டிலன்.
3.கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர்
கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் எவரும் இலர்
4.குடும்பத்தலைவிக்குப் பொறுப்பு உள்ளது
பொறுப்பில்லாத குடும்பத்தலைவி இலள்
5.திருவள்ளுவரைப் போற்றாதவர் இலர்
திருவள்ளுவரை போற்றுவர் அனைவரும்
6. ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு.
ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு இல்லாமல் இல்லை
7. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்
போட்டியில் எல்லோராலும் வெற்றி பெற முடியாது.
9. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்.
குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்தார்.
இளமையில் கற்க வேண்டும்
வள்ளுவர் கோட்டம் மிக அழகாக அமைந்திருக்கிறது
10.உணர்ச்சி வாக்கியம் (அ) வியப்பு வாக்கியம்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.
(உம்) ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
ஐயோ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே!
என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு !
11. கட்டளை வாக்கியம் (அ) ஏவல் வாக்கியம்
விழைவு. வேண்டுகோல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக.
அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.
இளமையில் கல்
12.வினா வாக்கியம்
வினாப் பொருள் தரும் வாக்கியங்களை வினா வாக்கியம் என்று அழைப்பர்.
(உம்) குழந்தைக்கு என்ன தெரியும்?
உண்மைக்கு அழிவில்லை அல்லவா?
13. தனிவாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும். அதனை தனி வாக்கியங்கள் என்று அழைப்பர்.
(உம்) திரு.வி.க பெண்களைப் போற்றினார்.
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையை போற்றினர்.
14.தொடர்வாக்கியம்
தனிவாக்கியங்கள் பல தொடந்து வரும். ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வருவது தொடர் வாக்கியம் எனப்படும்.
(உம்) அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றான்; பரிசு வழங்கினான்.
15.கலவை வாக்கியம்
ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட துணை வாக்கியங்களுடன் சேர்ந்தும் வரும்.
(உம்) யார் கல்விச்செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம்பெறுவர்.
16.விழைவு வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் எனப்படும்.
(உம்) தமிழ்ப்பாடத்தை முறையாகப் படி (கட்டளை )
நல்ல கருத்துகளை நாளும் கேட்க (வேண்டுகோள்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க (வாழ்தல்)
தியவை ஒழிக (வைதல்)
பயிற்சிகள்
1. மக்களால் மழைநீர் சேமிக்கப்பட்டது – செய்வினை வாக்கியமாக மாற்றுக
2. கனிமொழி கட்டுரை எழுதினாள் – செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக
3. காமராசரை அறியாதவர் எவரும் இலர் – உடன்பாட்டு வாக்கியமாக மாற்றுக
4.நற்செயல்களை அனைவரும் போற்றுவர் – எதிர்மறை வாக்கியமாக மாற்றுக
5. மாதவி நடனம் கற்பித்தாள் – தன்வினை வாக்கியமாக மாற்றுக
காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப்பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
தமிழரின் வீர விளையாட்டுக்கள்
1) சிலம்பம்
2) வழுக்கு மரம்
3) சல்லிக் கட்டு
4) கபடி விளையாட்டு
5)வில்வித்தை ஆகியனவாகும்.
சிலம்பம்
சிலம்பம் என்பது ஒருதடியடி தமிழர் தற்காப்புக்கலைமற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இதுதடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப்பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடுபுள்ளி) போன்றன அடிப்படையாகக்கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
வரலாறு மக்கள் தம்மைபுலி போன்ற விலங்குகளிடம் இருந்துகா ஈத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி,வேல், வாள், கம்பு போன்ற பலவிதமானஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் (சிலம்பு ) ஆகும்.
சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
1) துடுக்காண்டம்
2) குறவஞ்சி
3) மறக்காணம்
4) அலங்காரச் சிலம்பம்
5) போர்ச் சிலம்பம்
6) பனையேறி மல்லு
7) நாகதாளி
8) நாகசீறல்
9)கள்ளன்கம்பு ஆகியனவாகும்.
தொன்மை
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மை யானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாகக் கருதப்படுகிறது.
பெயர்க்காரணம் சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, சிலம்பம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், சிலம்பன் என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு சிலம்பம் என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்” என்ற பெயரும் வழக்கில் உள்ளது. உள்ள மலைப் பகுதிகளில்
இலக்கியத்தில் சிலம்பம் சிலம்பம் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாகசிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியததில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு கத்த் போன்றவை ஒருகடையில்விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிகஆர்வமுடன் வாங்கிச்செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளின் “கோல்” என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில்,
”வீசுதண்டிடை கூர்மழு ஒக்குமே”
என்ற வரிகள் மூலம், “தண்டு) என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்பு விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவாம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
ஆயுதப்பிரிவு
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம். எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், வல்லவர்களாக விளங்கினர். இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக பட்டயப்படிப்பாகநடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் ஏசிலமாவரலாறும் அடிமுறைகளும் என்ற நூலை வெளியிட்டுள்ளது.
தற்காப்பு கலை பயிற்சி பயன்கள் – உடற்பயிற்சி நன்மைகள்
தற்காப்பு கலை பயிற்ச் பெறுபவருக்கு உடல், மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீகஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும். தற்காப்புகலைகளில் முறையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு போன்றவற்றை மேம்படுத்தப்படலாம். வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு. இயக்கம் ஒருங்கிணைப்பு முதலியவற்றை மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு, முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுகிறது. மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்காக தற்காப்பு கலை பயிற்சி உதவுகிறது. பல தற்காப்பு கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்துகின்றன.
தற்காப்பு கலையின் பயன்கள்
நம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. நம் உடலில் ஓடும் இரத்தத்தின் அளவை சீராக்குகிறது. நம் மூளையின் செல்களை வலுப்படுத்தி சுறுசுறுப்பான ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. உறுதியான உடல் அமைப்பைக் கொடுக்கிறது. உடலும், மனதும் கட்டுப்பாடுடன் செயல்பட வைக்கிறது. இறுதியாக எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நல்லஉடற்பயிற்சியாக இருக்கும்
சுருள் பட்டை
சுருள் பட்டை என்பது நீண்ட வாள். இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதேசமயம் சதையை வெட்டகூடிய அளவுக்கு கூர்மையானது. இது ஒரு இன்ச் அகலமும் 3 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம். பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.
முடிவுரை தமிழர்களின் வீரவிளையாட்டானா சிலம்பம் நெடுகாலமாக வழக்கத்தில் இருந்துள்ளது.சிலம்பட்டத்தின் வளர்ச்சி சில காலம் குறைந்து இருப்பினும் தற்பொழுது சிலம்பத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருப்பதால் சிலம்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது. சிலம்பத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசும் ஈடுபாடு காட்டி வருகிறது. அதேப்போல்சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளுக்கும், ஆசாங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை இனியது இனியது தமிழ்மொழி உயிரினும் இனியது, உன்னதமானது, பண்பை வளர்ப்பது,பண்பாட்டை காப்பது. தொண்மைசான்ற இவ்வின்பத் தமிழ்மொழிமுன்னைப்பழைமைக்கும் பழமையாய்,பின்னைப்புதுமைக்கும் புதுமையாய் புத்துணர்வுடன் திகழ்வது. பண்டைத் தமிழ் மக்களின் கலாச்சார பழக்கவழக்க பண்பாட்டுப்பாரம்பரியத்தை எடுத்தியம்புவன நம் இன்தமிழ் இலக்கியங்களே! இயற்கையோடு இயைந்து இன்பமயமான வாழ்வுதனை வாழ்ந்தோர் நம்தம் பழங்குடி தமிழ்மக்களே ஆவர் என்று அழகுற நயம்பட எடுத்தியம்புவன, தமிழ் இலக்கியச் செல்வங்களேயாம். ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் அமைந்தவை அறிவியல் அறிவியல் என்பது மனித வாழ்வை மகத்துவமடையச் செய்வது, அறிவியல் என்பது அறிவிற்கும் அப்பாற்பட்ட தன்மையது. அத்தகு அறிவியல் சார்ந்த அறிவு நம் பண்டைக்கால மக்களின் பகுத்தறிவுடன் பின்னிப்பிணைந்து பிரதிபலிக்கிறது என்பதனை அவர்தம் படைப்புகள் புலப்படுத்தும். நம் இலக்கியப்பாடல்களை நுண்ணிதின் ஆராயப்படின் புலமை சான்ற புலவர்களின் அறிவியல் அறிவை நாமும் அறியலாம்.
இலக்கியத்தில் அறிவியல் தகவல்கள் ‘இலக்கியப்பாடல்’ என்பது இன்றைய மக்களின் சிந்தனைக் கருவூலம், அன்றைய மக்களின் அறிவுப் பெட்டகம் அத்தகைய அறிவுப்பெட்டகத்தை ஆழ்ந்து அகன்று ஆராய்ச்சி நோக்கில் நுணுகி ஆராயுமிடத்து எத்தனை, எத்தனையோ அறிவியல் தகவல்கள் ஆழப்புதைந்துண்டு கிடப்பதனை நாமும் அறியலாம். அறிவியல் சார்ந்த அறிவென்பது அன்றைய பழந்தமிழ் மக்களாகிய நம் முன்னோர்களுக்குள்ளேயும் இருந்துள்ளன.
இலக்கியத்தில் புரையோடிக்கிடக்கும் அறிவியல் சார்ந்த அறிவுச்செல்வங்கள் அறிவியல் என்பது வாழ்க்கையை வளப்படுத்துவது, தொலைவில் உள்ளதனை கொண்டுவரவைப்பது, ஆழ்ந்த அகன்ற அறிவின் பனுவலில் அறிவியல்சார்ந்த அறிவாகபுலபடுவது,மருத்துவம் தொடர்பான அருகாமைக்குக் அடிப்படையில் எழுதுவது அறிவியல். இலக்கியப் வீண் சார்ந்த அறிவு கனிமம் தொடர்பான அறிவு எந்திரம் தொடர்பான அறிவு நீர் தொடர்பான அறிவு அணு தொடர்பான அறிவு மண் சார்ந்த அறிவு அறிவு இதேபோன்று பல தரப்பட்ட அறிவியல் சார்ந்த அறிவு தொடர்பான கருத்துக்கள் நம்தம் புலமை சான்ற புலவர்களின் கைவண்ணத்தில் எழுந்த தமிழ் இலக்கியத்தில் புதைந்துண்டு கிடக்கின்றன. மருத்துவம் தொடர்பான அறிவு வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்பான் அத்தகு பாரதிதாசன். புகழாரத்திற்கு உரித்தான பாவேந்தர் 1330 அருங்குறளை 133 அதிகாரத்துள் வள்ளுவப்பெருமகனார் அமைந்துள்ளான். இந்த 133 அதிகாரத்துள் ‘மருந்து’ எனும் தலைப்பில் ஓர் அதிகாரத்தை அழகுற நயம்பட நவின்றுள்ளான்வள்ளுவப் பெருமான். இதில் நோய்மிகக்காரணம் என்ன என்பதனைப் பாங்குற படைத்துள்ளான் வான்புகழ் கொண்ட வள்ளுவன. இயற்கை ஈனும் காய்கறிகள் நமது உடலில்தோன்றும் நோய்களைச் சமப்படுத்தும் என்பதனை,
‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’
என்ற குறளின் வரி, நமக்கு மருத்துவத்தின் தொன்மைதனை நன்கு புலப்படுத்தும்.மருந்தில்லா மருத்துவத்தை நமக்கு அளித்துச்சென்றுள்ளனர் நம் பதினெட்டுச் சித்தர்கள். அச்சித்தர்கள் அவர்தம் நூற்களில் உடல்பிணியைப்பற்றியதகவல்களை ஏராளமாகஅளித்துச்சென்றுள்ளனர். பக்க விளைவுகள் அற்றது நம் சித்த மருத்துவமே ஆகும். இத்தகு இயற்கை சார்ந்த மருத்துவமுறையினை அன்றே கண்டறிந்துள்ளனர் நம் பழந்தமிழ் மக்கள். இத்தகைய மருத்துவத்தைக் குறிப்பிட வரும் தெய்வபுலவனவாம் வள்ளுவர்,
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றுது போற்றி உணின்” (குறள்-942)
என்ற குறள் வழி அழகுற எடுத்தியம்பியுள்ளான். இதேபோன்று கூடுவிட்டு கூடு பாயும் தன்மையுடைய மூலன் எனப்படும் திருமூலர், முக்கியதுவத்தை பற்றி உடலைப்பாதுகாக்க வேண்டியதன் புலப்படுத்ததியுள்ளார். தமது படைப்பில் இது போன்று மருத்துவம் தொடர்பான பலதகவல்கள் இலக்கியப்பனுவல்களில் காணக்கிடக்கிறது.
நீர் தொடர்பான அறிவு
நீரின் சுழற்சி குறித்து வள்ளுவப்பெருமகனார் அழகுற வான்சிறப்பு எனும் அதிகாரத்துள் எடுத்தியம்பியுள்ளார். தனது இரண்டடிகுறட்பாவில் நீரின் சுழற்சி இயக்கமே உலகத்தை வளப்படுத்தும் தன்மையது, அத்தகு நீரின் சுழற்சி இல்லை எனில் மழை வளம் குன்றும், ஒழுக்கநிலை மாறும், வெப்பநிலை மிகுந்து காணப்படும், புவியில் தட்பவெப்ப நிலையே மாறி அமையும். இந்நீர் சுழற்ச்சியே உயிரிகள் வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலை மாறின் கடலில் உள்ள நீர்கூட வற்றும் நிலைக்கு உள்ளாகும் என்பதனை,
என்ற இக்குறள் வழி நயம்பட நவின்றுள்ளார் திருவள்ளுவர். மேலும் இம்மழைநீரை அமிழ்தம் என்றும் வர்ணனை செய்துள்ளார். இது வள்ளுவரின் அறிவியல் அறிவன்றோ!
அணு தொடர்பான அறிவு
சங்க புலவரான ஒளவையாரும், கவிச்சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கம்பனும் அணுசேர்ப்பும், பிரிப்பும் பற்றி அன்றே தனது பாடலில் படைத்துள்ளனர் என்பதனை,
“ஓர் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி”
எனவரும் பாடல்வரியில் ஒளவைப்பெருமாட்டி அணு சோப்பு குறித்தும்,
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்”
என்ற வரியில் கம்பர் அணுப்பிரிப்பு பற்றியும் அக்காலத்தே எடுத்தியம்பியுள்ளதை இவ்வரி நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.
மண் தொடர்பான அறிவு
நிலத்தின் தன்மைக்கு ஏற்றார்போல நிலத்தை ஐவகை நிலமாக பாகுபடுத்தியுள்ளனர் நம் தமிழர். மேலும் நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலமாகவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலமாகவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலமாகவும் பாகுபடுத்தியுள்ளனர். இது அவர்களின் மண்ணியல் தொடர்பான அறிவுக்கு சான்றாக அமைகிறது.
கனிமம் தொடர்பான அறிவு
பலதரப்பட்ட மணிகள் குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ள ஊர்காண் காதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவகை மணிகளும் ஒளிரும் தன்மையில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன என்பதனை,
“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்கு கதிர் விடுஉம் நலங்கெழு மணிகளும்”
எனும் இவ்வரிகள் மூலம் அறியலாம்.
எந்திரம் தொடர்பான அறிவு இன்றைய மக்களின் வாழ்வில் பெரும்பங்குவகிப்பது பொறியியல், பலதரப்பட்ட எந்திரமும் பொறியியல் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இத்தகு எந்திரம் தொடர்பான அறிவு அன்றைய மக்களிடம் இருந்ததை பதிற்றுப்பத்துப்பாடலில்
‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’
எனும் பாடலில் அன்றே எந்திரம் தொடர்பான அறிவியல் அறிவு இருந்ததனை அறியலாம்.
வானியல் தொடர்பான அறிவு
திருவாசகத்தில் வானியல் தொடர்பான அறிவு பேசப்படுகிறது. உலகம் சுற்றும் தன்மையது, தொங்கிக்கொண்டு இருப்பது என்பதையும், வானுலகத்தில் காற்றில்லா பகுதி உண்டு என்பதையும் பண்டைகாலப் புலவர்கள் தங்கள் பாடல்களில் அருமையாகப் புலப்படுத்தியுள்ளனர்.
முடிவுரை
நம் பண்டைத்தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் பார்வையுடையவர்கள். மண் சார்ந்த, விண் சார்ந்த, மருத்துவம் சார்ந்த, நீரியல் சார்ந்த, உயிரியல் சார்ந்த, எந்திரவியல் தொடர்பான அறிவுடையவர்கள் என்பதை நம் பழம்பாடல்கள் உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. அறிவியல் சார்ந்த அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் இலக்கியப் பெட்டகத்தை ஆராயப்படின் பலதரப்பட்ட மறைந்துகிடக்கும் பல அறிவியல் தகவல்களை அறிய இயலும். இதன் வாயிலாக அன்றைய மக்களின் ஆழ்ந்து அகன்ற அறிவியல் அறிவை நம்மால் பெறமுடியும்.
கடிதம் இல்லா உலகம் வெறுமையானது. மனிதனுடைய உண்மையான மனநிலையை எடுத்துக்காட்டுவது கடிதம் ஆகும். நேரிலே சொல்ல முடியாதவற்றை எல்லாம் எழுத்தின் மூலமாகக் காகிதத்தின் வழியாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கலாம். ஒவ்வொருவரும் கடிதம் எழுவது பற்றி அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு இடத்திலும் கடிதம் மூலம் நாம் கேட்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்குமே மதிப்பு உண்டு.
ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடி, துணிகளில் மையிட்டு எழுதி ஒற்றர்கள் (குதிரைகள்) மூலமாகவோ அல்லது புறாக்களில் கால்களில் கட்டியோ கடிதங்கள் அனுப்பட்டன. பின்னாளில் அதற்குத் தனியாக அஞ்சல் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. எந்தவொரு கிராமத்திற்கும் கடிதம் கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இலக்கியங்களில் கடிதங்களை நிறைய பார்க்க முடியும். அக்காலங்களில் மனிதர்களையே தூது என்ற வாக்கில் சொல்லி அனுப்பப்பட்டார்கள். ஆனால் இவ்வகையான முறைகளில் நாம் சொல்லும் அனைத்தும் சரியாகப் போய்ச்சேருமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் நாம் அனுப்பும் ஆள் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியும். ஆதலால் கடிதம் மூலம் எழுதி அனுப்பும் முறைதான் சரியாக இருக்கும்.
கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, தூது இலக்கியங்கள், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், ஞாபக கடிதங்கள் எனக் காணமுடியும். கடித வகைகளை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,
அழைப்பிதழ் கடிதம் மிக முக்கியமான ஒன்றாகும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே இவ்வகையான கடிதத்தினைப் பயன்படுத்துவார்கள். வீட்டிற்கு வந்தவர்களை அழைத்து மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. நம் வீட்டிலே விஷேசம் என்றால் அவர்கள் வீடு தேடிச்சென்று அழைத்து மகிழ்வார்கள். அழைப்பிதழ் கொடுத்து அழைக்கும் முறையிலேயே உறவுநிலை எப்படி இருக்கின்றது என்பது தெரிந்து விடும்.
அழைப்பிதழ் கடிதங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாகப் பாகுப்படுத்தலாம்.
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
இவ்வகையான கடிதங்கள் பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது வந்திருந்தவர்களை வரவேற்கும் பொருட்டும் அவர்கள் பெறும் சிறப்பகள் குறித்தும் அமையும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.
1.கல்லூரி விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கடிதம் வரைக.
2.தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கடிதம் ஒன்றை தயார் செய்க.
3.நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.
4.இலவச உதவித்தொகை வழங்கும் விழாவை வைத்து அழைப்பிதழ் கடிதம் வரைக.
5.புதிய நூலகம் திறப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.
6.புத்தக வெளியீட்டு விழாவினை முன்வைத்து அழைப்பிதழ் கடிதம் தயார் செய்க.
7. பணி நிறைவு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் எழுதுக.
2. உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
இவ்வகையான கடிதங்கள் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மங்கள நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள இதர நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.
1.திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.
2.காது குத்தும் விழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.
3.புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.
4. இறந்தவர்க்கு கிரியைப் பத்திரிக்கை அமைக்க.
5.கோவில் கும்பாபிஷேகம் பத்திரிக்கை அமைத்துத் தருக.
6. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பத்திரிக்கை அமைத்துத் தருக.
இவ்வாறான இரண்டு வகையான கடிதங்களும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இரண்டிலும் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உதாரணமாகப் பார்ப்போம்.
இந்த நிகழ்ச்சியினை (நூலகம் அமைய) யார் முன்னின்று வேலை செய்தார்களோ அவர்கள் வரவேற்புரை சொல்ல வேண்டும். மேலும் இவ்விழாவிற்குத் தகுதியானவர்கள் அழைத்தால் அனைவரும் வருவார்கள்.
4.முன்னிலை
இந்நூலகம் அமைய காரணகர்த்தாவாக இருக்கின்றவர் முன்னிலையாக இருக்கலாம். மேலும் இவர்கள் பெரும்பாலும் வயதானவராக இருப்பர்.
5. தலைமையுரை
இந்த விழாவினைத் தலைமையேற்று நடத்தக்கூடியவரும் மற்றவர்களுக்கு முன்மொழிபவராகவும் இருப்பார். இவர்களும் பெரும்பாலும் வயதானவராக இருபார்கள்.
6. சிறப்புரை
இவ்விழாவினைப் பெரியதாகவும், சிறப்பாக நடத்தவும், விழாவானது நல்லதொரு முறையில் நடைபெறவும் தகுதியான ஒருவரை நியமித்தலே ஆகும். சிறப்புரை வழங்குபவர் அந்நிகழ்வினை சிறப்புப்படுத்தி நடத்திக்கொடுப்பவர்.
7. வாழ்த்துரை
இந்நிகழ்வினை வாழ்த்திப் பேசுதல். வாழ்த்துரையைப் பொறுத்தவரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பேசலாம். வரையறை கிடையாது. ஆனாலும் நேரத்தைப் பொறுத்து குறைவானால் நன்று.
8.நன்றியுரை
இந்நிகழ்வின் ஒரு மனிதராய் நின்று கடைசி வரை இருந்து அனைவரையும் கவனித்து கொள்பவரே நன்றியுரை வழங்கலாம்.
9.நாட்டுப்பண்
இறுதியில் நாட்டுப்பண் பாடி நிகழ்வினை முடித்தல் என்பது சிறப்பானதாகும்.
குறிப்புகள்
1.வரவேற்புரை ஒருத்தர்தான் சொல்ல வேண்டும்.
2.தலைமையும் ஒருவர்தான்.
3.சிறப்புரை அதிகமாக இருவர் இருக்கலாம். ஆனாலும் ஒருவர் இருந்தால் நலம்.
4.வாழ்த்துரையில் நேரத்தைப் பொறுத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.
2 வது அழைப்பிதழ் கடிதம்திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.
♦ தற்போது உள்ள திருமணப்பத்திரிக்கை நகல்கள்
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி அழைப்பிதழ் கடிதங்களை எழுதுங்கள்.
என்று ஆல் இந்தியா ரேடியோவில் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் சிறுவன் குமரன் லயித்துபோயிருந்தான். அங்கிருக்கும் வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் ரேடியோக்கள் இருக்கின்றன. அதிலும் ரேடியோக்களில் இருந்து ஒலிக்கின்ற பாடல் அந்தப்பக்கம் போவோரை நின்று கேட்டுவிட்டுதான் போகத்தோன்றும். “சத்தத்தைக் கொஞ்சம் ஜாஸ்தியா வையுங்களேன்” என்று ஒருசிலர் வாய்விட்டே கேட்பார்கள். அந்தக்காலத்தில் ரேடியோக்களில் பாட்டுக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான். ரேடியோ வைத்திருந்தாலே அவர்கள் வீடு பெரிய வீடுதான். எத்தனை எருமை மாடுகள் உள்ளன. எத்தனை பசு மாடுகள் உள்ளன. எத்தனை ஆட்டுக்குட்டிகள் உள்ளன என்பது போய் இப்போது ரேடியோ இருக்கிறதா… அப்போ அவன்தான் பணக்காரன். ரேடியோ வைத்திருப்பவர்களும் தங்களைக் கொஞ்சம் பிகுபண்ணி அதிகமாகவே காட்டியும் கொள்வார்கள்.
அன்றைய நாளில் ஒரு வீட்டின் முன்வாசல் ஓரமாய் விளையாடுவது போல சிறுவர்கள் குமரன், ஆனந்த், பாபு, சங்கர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் ரம்மியமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மண்ணில் குழியைத் தோண்டி தேங்காய் ஓட்டை மூடியபடி மணல்வீடு கட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும் பாடல்கள் கேட்பதில்தான் அச்சிறுவர்கள் உன்னிப்பாக இருந்தார்கள். இப்போதும் கூட யாரோ உள்ளிருந்துதான் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அச்சிறுவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுகூட அவர்களுக்கு அந்த ஊருக்கு வந்த நாடோடி ஒருவன் சொல்லிவிட்டுப் போனதுதான். சின்ன பெட்டிக்குள்ள எப்படி ஒரு ஆள் உள்ள போயி பாட முடியும் என்று நிறைய நாட்கள் ரேடியோவைப் பற்றி அச்சிறுவர்கள் பேசியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பாடலை ரசித்துக் கொண்டிருந்தபோதுதான் வேகவேகமாய் ஓடி வந்தான் செல்வம். தலையைக் குனிந்து கொண்டு உவ்வே..உவ்வே.. எச்சிலைத் துப்பினான். ஓடி வந்ததில் செல்வத்திற்குத் தொண்டை அடைத்துப் போனது. இன்னமும் மூச்சி வாங்கிக்கொண்டே இருந்தான். இடையிடையே பேசவும் வாயெடுத்தான்.
“கொஞ்சம் மூச்சி வாங்கிக்கோடா… எதுக்கு இப்படி ஓடீயாந்த.. என்ன வச்சிருக்க.. ” குமரன்தான் கேட்டான்.
“கட்டமா சின்னதா பெட்டி மாதிரி இருக்குடா… அதுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து பாட்டுப் பாடிகிட்டே டேன்ஸ் ஆடுறாங்கடா” மூச்சிறைக்க சொன்னான் செல்வம்.
“கனவு ஏதாவது கண்டியாடா” என்றான் சங்கர்.
“இல்ல நிஜமாலுந்தான் சொல்றன். நான் பாத்தேன். இதுவரை பாட்ட நாம ரேடியோக்கள்ளதான கேட்டுட்டு இருந்தோம். அங்க பாட்டோட ஆளுங்களும் தெரியறாங்க” கண்ணை விரித்து மனசு பறந்து கைகள் ஆட்டி சொன்னான் செல்வம்.
“எங்கடா.. யார் வீட்டுல பாத்த..” பரபரப்புடன் கேட்டான் ஆனந்த்
. “நம்ம கிராமத்துல கடைசி வீட்டுக்கு ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்ல்ல..”
“ஆமா வந்திருக்கிறாரு.. அவரு வந்து பதினைஞ்சு நாளுக்கு மேல ஆகுது. அவருக்கென்ன?” பாபுதான் அவசரப்பட்டான்.
“அவருக்கெல்லாம் ஒன்னுமில்ல. அவரோட வீட்டுக்கு இன்னிக்குதான் வீட்டு பாத்திரமெல்லாம் வண்டியில வந்து இறங்கினிச்சு. பொருளையெல்லாம் இறக்கிறதுக்கு எங்க அப்பா கூட நானும் அவுங்க வீட்டுக்குப் போயிருந்தேன். வண்டி நிறைய சாமான்கள்தான். எதுஎது எதுக்கின்னே தெரியல. அப்பதான் அங்கிருந்த பொட்டிய பாத்தேன். அது என்னன்னு கூட எனக்கு தெரியல. கொஞ்ச நேரத்துல அந்தப் பொட்டிய கரண்ட்ல சொருவுனாங்க. அப்பதான் அதை பாத்தன். பொட்டி முழுக்க வெள்ளையா இருந்தது. உன்னிப்பா கவனிச்சுப் பார்த்த போதுதான் ஆம்பளையும் பொம்பளையும் டேன்ஸ் ஆடிக்கிட்டே பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க. நான் பிரமிச்சுப் போயிட்டேன். அந்த வீட்டுல இருந்து வரதுக்கு மனசே வரல” சோகத்துடன் சொன்னான் செல்வம்.
செல்வம் சொல்ல சொல்ல குமரனுக்கு எப்படியாவது அந்தப் பொட்டிய பாத்துப்புடனுமுன்னு நினைச்சான். கிராமத்தில் கிழக்குப் பக்கமா இருக்குற அந்த வீட்டுக்கு ஓடினான். அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னாடி பலமுறை வந்திருக்கிறான். ஆனால் அப்பொழுதெல்லாம் அது தேங்காய் குடோனோவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று கூட்டி மொழுகி அழகாய் வீடு போல்தான் தோன்றியது. வாசலில் பெரியதாய் கோலம் போடப்பட்டிருந்தது. கண்டிப்பாக நம்மூர்க்கார பெண்கள்தான் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். கேட்டைத் தாண்டி தயங்கியபடியே உள்ளே நுழைந்தான். ஓட்டு வீடு என்றாலும் இன்றைக்கு என்னமோ புதுவீடு போல இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் குமரன். வீட்டினுள்ளே டாக்டர் சேரில் உட்காந்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த குமரனைப் பார்த்து,
“என்னப்பா… யார் நீ? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.
குமரனின் கண்கள் அந்த அறை முழுவதும் தேடின. ஆம்! பார்த்து விட்டன கண்கள்! ஆச்சர்யம்! ஆனந்தம்! வியப்பு! எல்லாம் ஓரெங்கே குமரனின் முகத்தில். புன்னகைத்தான். சிரித்தான். அந்தப் பெட்டியப் பார்த்து, “அது என்ன? அதுக்கு பேரு என்ன?” என்றான் குமரன்.
”டிவி..“ என்று அமைதியாய் பதில் சொன்னார் டாக்டர்.
“டிவி..டிவி… ஆ…” வாயைப் பிளந்தான் குமரன்.
“இது என்ன பண்ணும்? மனுஷங்க உருவமெல்லாம் தெரியுதே! எப்படி தெரியுது? இவங்கெல்லாம் யாரு? இதுக்குள்ள எப்படி உள்ள போனாங்க? அவுங்க மட்டும் ஏன் குள்ளமா இருக்கிறாங்க? அந்த டிவியில பூவெல்லம் தெரியுதே! டிவியில பூ பூக்குமா?” மனத்திற்கு என்னவெல்லாம் தோன்றியதோ அவன்பாட்டுக்கும் வரிசையா கேட்டுக்கொண்டே இருந்தான் குமரன்.
“என்னப்பா கேள்வி இப்படி கேட்குற.. நான் எதுக்கு பதில் சொல்லட்டும்“ என்றார் டாக்டர்
தலையைச் சாய்த்துக் கொண்டே “எல்லாத்துக்கும் சொல்லுங்க அண்ணா” என்றான்.
“நீ திரைப்படமெல்லாம் பார்த்து இருக்கியா?“
“அப்படின்னா என்னா அண்ணா?”
“நம்மள மாதிரி மனுஷங்க நடிச்சத கேமிராவுல புடிச்சி பெரிய திரையில காட்டுவாங்க… ஆடுவாங்க.. பாடுவாங்க.. பேசுவாங்க… இயற்கையையெல்லாம் காண்பிப்பாங்க”
“நான் மட்டும் இல்ல இந்தக் கிராமத்துக்காரங்க யாரும் அப்படி பார்த்தது இல்ல. ஆனா ரேடியோவுல மட்டும் பாட்டுக் கேட்டுருக்கோம். ஆனா அதுவே சின்ன டப்பா மாதிரி இருக்கு. அது எப்படி பாடுதுன்னே தெரியல?”
டாக்டர் வாய்விட்டே சிரித்தார். குமரன் பேசுவது அழகாய் இருந்தது. நகரத்தில் வாழும் மக்களிடையே இப்பொழுதுதான் கொஞ்சகொஞ்சமாய் டிவி என்கிற ஒன்று பரவி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தக் கிராமத்தில் எப்படி சாத்தியமாகும்? குமரனுக்கு டிவி செயல்படும் விதம் பற்றி புரிய வைத்தார். ஆனால் குமரனுக்கு ஏதோ புரிஞ்ச மாதிரிதான் இருந்தது. வெளியே வந்து கேட்டிற்கு முன் நின்று அந்த வீட்டை ஒருமுறை கண்கள் அசையாமல் அப்படியே பார்த்தான். அப்பொழுதுதான் கவனித்தான் வீட்டின் மேற்கூறையில் சிலுவைப் போன்று நீளமான கம்பிகளால் குறுக்கும் நெடுக்குமாய் போடப்பட்டிருந்தன. டாக்டர் அந்தக் கம்பிகளைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
இருட்டுகிற சமயம் வீட்டுக்கு வேகமாக ஓடினான் குமரன். மனசு முழுவதும் டிவி பற்றிய யோசனையாகவே இருந்தது. சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரானான். வீட்டு முன் களத்தில் வக்கில் போர் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் கட்டில் போட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ஆளுக்கொரு கட்டிலில் படுத்துக்கொண்டனர். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முற்பட்டான். ஆனால் மனசு மீண்டும் டிவியின் பக்கம் வந்தது. களைப்பில் தூங்கிய பிறகும் கூட டிவியில் படம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கனவில் தொல்லை தந்தது. டிவி… டிவி… என்று பினாத்திக்கொண்டே இருந்தான். குமரனின் அம்மா வெண்ணிலா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள்.
“குமரா.. குமரா… என்னாச்சுப்பா…“ என்று பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த குமரனின் தலையைத் தொட்டுப்பார்த்தாள். இப்பொழுது குமரனின் பினாத்தல் நின்று விட்டிருந்தது.
“ஏதோ பினாத்துறான். ஆனா என்னன்னுதான் புரியல! காட்டுப்பக்கம் தனியா போவாதன்னு சொன்னா கேட்கிறானா இந்தப் பைய… சொல்ல சொல்ல பசங்க கூட சேர்ந்துகிட்டு ஊர சுத்துதுங்க. இப்ப என்னாடான்னா யாம நேரத்துல பினாத்திக்கிட்டு இருக்கு. காலையில எழுந்திரிச்ச உடனே புள்ளைக்குச் சுத்தி போடனும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் வெண்ணிலா.
விடியற்காலையில் மேகம் இருண்டது. மழை வர ஆயுத்தமானது. தூரல் சின்ன சின்னதாய் விழ ஆரமித்தன. வெண்ணிலா டக்கென எழுந்து கொண்டாள்.
“என்னங்க.. என்னங்க… மழை வருது. நான் பையன தூக்கிட்டு உள்ள போற. நீங்க கட்டிலைத் தூக்கி தாவாரத்துல போட்டுட்டு உள்ள வந்துருங்க” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமலே பையன தூக்கிட்டு வீட்டிற்குள்ளே ஓடினாள் வெண்ணிலா.
மழை கொஞ்சம் வேகமாகவே வந்தது. அதற்குள் கட்டிலைத் தூக்கி தாவாரத்திலே போட்டுவிட்டிருந்தார் குமரனின் அப்பா விநாயகம். ஈரமான கைக்கால்களைத் துவட்டிக்கொண்டே பையனின் கால்மேட்டில் உட்காந்து கொண்டார். பொழுது விடிந்து நேரமாகிவிட்டது. மழை இன்னும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. வீட்டை விட்டு யாராலும் வெளியே வர முடியாத நிலை. எப்போதும் நண்பர்களுடன் ஊர் சுற்றும் குமரனுக்கு இப்பொழுது அம்மா அப்பாவுடனே இருந்தான்.
“அப்பா, நீ திரைப்படமெல்லாம் பார்த்திருக்கியாப்பா?“ மெல்ல பேச்சை ஆரமித்தான் குமரன்.
“கேள்விபட்டுருக்கேன்டா.. ஆனா இதுவரையிலும் ஒரு திரைப்படம் கூட பார்க்கல..” உதட்டைப்பிதுக்கியபடியே விநாயகம் சொன்னார்.
“ஏன்பா பாக்குல?”
“நம்மூர்லயும் சரி இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கேயும் சரி சினிமா கொட்டா இல்ல. அதனால் பாக்கவும் வாய்ப்பு கிடைக்கல. ஏதோ வெளியூருக்கு வேலைக்குப் போன பயலுவதான் சம்பாரிச்ச பணத்துல ரேடியோவ வாங்கி வச்சிருக்கானுவ.. அத அப்பப்ப பாட்டு கேட்கிறதோட சரி “ ஆசையோடு விரக்தியில்தான் பேசினார் விநாயகம்.
“அம்மாவும் பாக்கலையாப்பா..”
“என்னாலையே பாக்க முடியல. பாவம் உங்கம்மா! இந்த ஊரத்தவிர எங்கேயும் போனதில்ல”
குமரன் சொல்வதைக் கேட்ட விநாயகமும் வெண்ணிலாவிற்கும் கூட அந்த டிவியைப் பாக்க வேணடும் போல தோன்றியது.
“அந்தப் பொட்டிய பாக்குற நிலைமை நமக்கெல்லாம் எங்கே கிடைக்க போகிறது? ஏதோ இருக்கிறத தின்னுபுட்டு ஓடுற மட்டும் வாழ்க்கையை ஓட்டிட்டு கிழக்கமா போயிட வேண்டியதுதான்” என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாள் வெண்ணிலா.
கொஞ்ச நேரம் மூவரிடையே அமைதி நிலவியது. வெளியே மட்டும் இன்னமும் மழை சில்லென்று தூரலாய் பெய்து கொண்டிருந்தது.
“அப்பா.. நம்ம வீட்டிலேயும் அந்த மாதிரி ஒரு டிவி வாங்கலாமாப்பா” ஏக்கத்துடன் கெட்டான் குமரன்.
“இல்லடா… அது என்னன்னே எனக்கு தெரியாது. சுத்தமா புரியவேயில்ல.. நானும் அத முன்ன பின்ன பாத்தது கூட இல்ல. எப்படி வாங்கனும்? வாங்கிட்டு என்ன பன்னனும்? அத எப்படி பயன்படுத்தனுமுன்னு தெரியாது?“
“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீங்க எனக்கு டிவி வாங்கி தர்றீங்க..
” எப்படியோ ஏதேதோ சொல்லி குமரனைச் சமாதானப்படுத்தினார்கள் வெண்ணிலாவும் விநாயகமும். ஆனாலும் அவனுடைய மனதில் டிவி ஆழமாகவே பதிந்து போனது.
அடுத்த நாளிலிருந்து சிறுவர்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்ப்பதற்காகப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் பொகிற நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் டாக்டர் வீட்டைச் சுற்றியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிவி பார்ப்பதற்கு வீட்டினுள்ளே சென்று விடுவார்கள். டாக்டரின் மனைவி, அவரின் வயதான அம்மா மட்டுமே தங்கியிருந்தனர். டாக்டரின் இரண்டு பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து தங்குவது என்பது நடக்காத ஒன்று. டாக்டரின் அம்மாவுக்கு இந்தப் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து டிவி பார்ப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதுவும் கைக்கால்கள் கூட கழுவாமல் ஒரு மாதிரியாக வந்து ஷோபாவிலே உட்காந்து கொள்வார்கள். ஷோபாவிலே உட்காருவது மட்டுமில்லாமல் கால்கள் இரண்டையும் தூக்கி ஷோபாவிலே வைத்துக்கொள்வார்கள். காலில் ஒட்டியிருந்த அழுக்கு அப்படியே ஷோபா துணி மேல் படிந்து போகும். தினம்தினம் இதுபோலவே நடக்கும்போது டாக்டரின் அம்மா கோபத்தின் உச்சிற்கே சென்றாள். ஒருநாள் பசங்களை எல்லாம் திட்டி தொரத்தியும் விட்டுவிட்டாள்.
அன்று மாலை டாக்டர்தான் அம்மாவைச் சமாதானம் செய்து வைத்தார். மனைவியிடம்,
“அம்மாதான் வயசானவங்க… நீயாவது பேசி அம்மாகிட்ட புரிய வைத்திருக்கலாமே! சின்ன பசங்க. ஏதோ ஆசையில டிவி பார்க்க வரானுங்க. அவுங்கள ஏன் தொரத்தனும். பாத்துட்டுப் போகட்டுமே!” என்றார் டாக்டர்.
டாக்டர் மனைவிக்கு முகம் கோணலாகிப்போனது.
“அம்மாவுக்கு மட்டும் இல்ல உனக்கும் இந்த பசங்க நம்ம வீட்டுக்கு வரது பிடிக்கலன்னு நினைக்கிறன்” என்றார் டாக்டர்.
ஆமாம்! என்பது போல கண்களும் சுழன்றன. அப்படித்தான் பார்வையும் இருந்தது.
“பசங்கள டிவி பார்க்க விடுங்க” என்று சொல்லிவிட்டு நேராக பாத்ரூம் நோக்கி நடந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பசங்கள வீட்டிற்குள் விடப்பட்டார்கள். குமரனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ரொம்பவே சந்தோசம். ஆனால் இப்பொழுது அந்த வீட்டில் டிவியின் முன்னால் தரையில் அமர்ந்து பார்க்கிறார்கள். காலையில் டிவி போட்டுவிட்டால் அணைப்பதற்கு இரவு பதினொன்று மணிக்கு மேல் ஆகிவிடும். பகல் முழுவதும் டிவியில் ஏதோ ஒன்று ஓடிக்கிட்டே இருக்கும். டிவியில் ஓடும் படக்காட்சிகள் தெரியும். ஆனால் தமிழ்மொழி அல்லாது வேற்றுமொழியில் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் சாயுங்காலம் ஐந்து மணிக்கு மேலதான் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வார்கள். பகலில் செய்திகளுக்கு மட்டும் அவ்வவ்போது தமிழில் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் எட்டு மணிக்கே தமிழ் மொழிக்கு மாற்றி விடுவார்கள். டிவியின் அலாதியான பிரியத்தின் காரணமாக வேற்றுமொழி என்றாலும் கூட குமரனும் அவனுடைய நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு டிவியின் முன்னாடி போய் தலையைத் தூக்கிக்கொண்டு உட்காந்துவிடுவார்கள்.
மற்றவர்களைக் காட்டிலும் குமரன் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் துடுக்காகவே இருந்தான். இதனால் டாக்டரின் மனைவியும் அம்மாவும் அந்தக் கிராமத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சின்னச்சின்ன வேலைகளுக்கு அவனை உபயோகித்துக் கொண்டார்கள். குமரன் டிவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்போதுதான் டாக்டரின் மனைவி,
“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.
குமரனுக்குக் கடுப்பாக இருக்கும். வேறுவழியின்றி காசை வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடுவான். போன சுருக்குத் தெரியாது. உடனே பொருட்களை வாங்கி வந்து விடுவான். மீண்டும் டிவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பான். இப்பொழுது டாக்டரின் அம்மா,
“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.
மீண்டும் கடைக்கு ஓடுவான். டிவி பாக்குற அவசரத்தில் வேகமாகவே வாங்கி வந்து விடுவான். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது. இவன் கடைக்குப் போன நேரத்தில் டிவியில் என்ன ஓடியது என்று தன்னுடைய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். எப்பொழுது பார்த்தாலும் அந்தக் கிராமத்தில் டாக்டர் வீட்டு டிவி பற்றிய பேச்சுத்தான் அதிகமாகவே இருந்தது. நாளாக நாளாக டிவி பார்க்கின்ற ஆர்வத்தில் ஆண்களும் பெண்களுமாய் பெரியவர்களும் டாக்டர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதுவும் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஏழு மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஒலியும் ஒளியும் பாட்டுக்குப் பெரும் கூட்டமே கூடிடும். இங்கு குமரனின் வேண்டுதலுக்காக விநாயகமும் வெண்ணிலாவும் கூட இரண்டொரு நாட்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க வந்திருந்தனர். அவ்வளவுதான். அதற்குமேல் வருவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. திருவிழா கூட்டம் போல இருந்ததனால் வெட்கப்பட்டு வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.
கிராமத்து மக்கள் சாயுங்காலம் வந்து டிவி பார்க்க உட்காந்து விட்டால் இரவு பதினோரு மணி ஆகிவிட்டாலும் ஒருவர் கூட எழுந்து வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். வீட்டில் பலகாரமோ கறியோ காரமோ இப்படி எதுவுமே செய்ய முடியாது. வீடும் சிறியதாக இருந்ததால் அவர்கள் சென்ற பின்பே சாப்பிடவும் உறங்கவும் முடியும். நல்லது கெட்டதை வீட்டில் பகிர்ந்து கொள்ள முடியாது. டாக்டரும், யாரையும் டிவி பார்க்க வர வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டார். ஆனால் டிவி பார்க்கின்ற இடம் ஒரு பொது சினிமா கொட்டகையாகவே மாறிவிட்டிருந்தது. படத்தில் சிரிக்கும்போது எல்லோரும் ஓ..வென்று சத்தத்துடன் சிரிப்பார்கள். படத்தில் அழும்போது உண்மையாகவே இவர்களும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கி விடுவார்கள்.
டாக்டரின் மனைவிக்கு இது பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியாய் ஒருநாள் இருக்க வேண்டம் என்று அவள் விரும்பினாள். கணவனுடன் அன்பாக சில நிமிடமாவது பேச வேண்டும் என்று மனதார ஏங்கினாள். டாக்டரும் மருத்துவமனைக்குச் சென்று இரவு நேரத்தில்தான் வருவார். அந்த மக்களுடன் சேர்ந்து டிவி பார்ப்பார். அவர்கள் சென்றவுடன் சாப்பிட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டே தூங்கி விடுவார். கொஞ்ச நாளாகவே இதுவே டாக்டர் வீட்டின் தொடர் நிலைமையாகிப் போனது.
டாக்டர் வீட்டில் டிவி பார்ப்பதனால் நடக்கும் பிரச்சனை விநாயகத்தின் காதிற்கும் எட்டியது. மகன் குமரனை அழைத்து, “இனிமேல் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்கச் செல்ல வேண்டாம்“ என்று கண்டித்தார். ஆனாலும் குமரன் டிவி பார்க்கும் ஆசையினால் தொடர்ந்து டாக்டர் வீட்டுக்குச் செல்ல ஆரமித்தான். அதனால் படிப்பிலும் பின்தங்கியே இருந்தான். ஆனாலும் மகனின் மனதில் தோன்றிய ஆசையை களைத்துவிட்டால் வேறேதும் விபரீதம் நடந்து விடக்கூடும். அதனால் கொஞ்ச கொஞ்சமாயத்தான் டிவி பார்ப்பதிலிருந்து வெளியே கொணடு வர வேண்டும் என்று நினைத்தார். இனிமேலும் குமரனை அடக்கி வைக்காமல் இருந்தால் பையனின் வாழ்க்கை கெட்டு விடும் என்று அஞ்சினார் விநாயகம்.
“குமரா நீ டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க போ… நானும் அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டோம். ஆனா, இரவு எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும். அப்படி வரலைன்ன கதவ பூட்டு போட்டுருவோம்” என்றார் விநாயகம்.
அப்பா சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டவனாக தெரியவில்லை. அன்றே டிவி பார்த்து விட்டு பதினொரு மணிக்கு மேலதான் வீட்டுக்கே வந்தான் குமரன். இருட்டு ரொம்பவும் அதிகப்படியாக இருந்தது. வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டினான். கதவு திறக்கப்படவில்லை. மௌனமாகவே இருந்தார்கள்.
“கதவ தொறமா… கதவ தொறமா… பசிக்குது ”
உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. அணைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரியாமலே இருந்தது. மீண்டும் மீண்டும் அழைத்தான் குமரன். கதவு திறக்கபடவேயில்லை. பணியும் பயமும் அவனை நிலைகுழைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் குமரன் சோர்ந்து போனான். வீட்டினுள்ளே இருவரும் பாசத்தை அடக்கிக்கொண்டு மகனின் குரல் ஒலியைக் கேட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வெண்ணிலா மகனின் குரல் அடங்கியவுடன் அவளுடைய ஈரக்குழையே அருந்து விழுந்தது போல ஆயிற்று.
கொஞ்ச நேரம் போகட்டும்” விநாயகம் கொஞ்ச நேரம் கழித்து இருவரும் கதவை திறந்து வெளியே வந்து குமரனைப் பார்த்தார்கள். குமரன் பசியோடு தூங்கிவிட்டிருந்தான். குமரனை அள்ளி தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள் வெண்ணிலா. உடம்பு ரொம்பவும் சூடாகக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. குமரன் கண் விழித்துப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று.
டாக்டர் தன்னுடைய வீட்டிலிருந்த டிவியை அதனுடைய பெட்டியில் போட்டு நான்றாக மூடி பழைய சாமான்கள் இருக்கும் அறையில் வைத்துவிட்டு வந்தார். டாக்டரின் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஆவி பறக்க டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள்.
தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி? இதை மூன்றறிவு உள்ள எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. ஒரு உயிரியல் நிபுணர் எறும்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார். அவர் எறும்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு எறும்பு அதனுடைய வாயில் நீளமான ஒர் உணவைத் தூக்கிக்கொண்டு ஊர்ந்து சென்றது. தரை வழியாகச் சென்று கொண்டு இருந்த அந்த எறும்பு வழியில் ஒரு வெடிப்பை இருப்பதைப் பார்த்துவிட்டு திடீரென்று அங்கேயே நின்றது. தொடர்ந்து அந்த வழியில் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த எறும்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அது தான் வாயில் சுமந்து வந்த இரையை அந்த வெடிப்பின் மேல் வைத்துப் பாலமாக மாற்றியமைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. அந்த வெடிப்பின் மீது வைத்திருந்த அந்த உணவைத் தன் வாயால் மீண்டும் கவ்வி எடுத்துச் சென்றது எறும்பு. இந்த மாதிரி செயலைப் பார்க்கும்போது தனக்கு மிகுந்த வியப்பு அளிப்பதாக இருக்கிறது என எழுதினார் அந்த நிபுணர்.
அதேபோல் நமக்கு துன்பம் வரும் போது கவலை பட வேண்டாம். அத்துன்பத்தையே பாலமாக (Bridge) வைத்து முன்னேற வேண்டும். இதை நாம் மூன்றறிவு உள்ள எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறிய எறும்பின் தன்னம்பிக்கை இருந்தால் கூடப்போதும் எந்தத் தடையையும் நம்மால் வெல்ல முடியும். எறும்புகள் எப்பொழுதும் சாரை சாரையாகச் செல்லும். அந்த அடர்ந்த காட்டில் படர்ந்தச் செடி கொடிகளுக்கும் அடியில் எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு புற்று (Ant House ) ஒன்று கட்டி இருந்தது. அந்த எறும்பு புற்றில் எறும்புகள் அனைத்தும் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் ஒரு நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இரை தேடிச் செல்கின்றபோது அந்த இரண்டு எறும்புகளும் ஒன்றாகவே சேர்ந்து செல்லும். அதில் கட்டெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் செவ்வெறும்பு தன் சேகரித்த உணவைக் கட்டெறும்புக்கு கொடுத்து உதவும். அது போலவே கட்டெறும்பும் செவ்வெறும்புக்கு உணவை கொடுத்து உதவும்.
ஒரு நாள் இந்த இரண்டு எறும்புகளும் இரைத் தேடி ஒர் இடத்தில் அலைந்து கொண்டிருந்தன. நிறைய இடங்களைத் தேடிப்பார்த்தும் உணவே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு குளத்தின் கரையில் இருக்கும் மாமரத்தை பார்த்தது. அந்த மரத்தில் நிறைய மாம்பழங்கள் பழுத்து வாசனைக் காற்றில் வீசிக் கொண்டு இருந்தன. அந்த இரண்டு எறும்புகளும் ரொம்ப பசியாக இருந்ததால் அந்த மாமரத்தில் ஏறி தொங்கி கொண்டிருந்த ஒரு பழுத்த மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. உடனடியாக ஒரு பயங்கரமான காற்று வீச ஆரம்பித்தது. அந்த எறும்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாம்பழம் அறுந்து குளத்தில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு எறும்புகளும் குளத்துத் தண்ணீரில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தன.
நண்பா, இப்படி வந்து குளத்துத் தண்ணீரில் விழுந்து விட்டமே. ‘இப்பொழுது நாம் என்ன செய்வது?’ என்றது செவ்வெறும்பு. நிச்சயம் நமக்கு எதாவது ஒரு உதவி கிடைக்கும். அதுவரை குளத்தில் நீந்திக் கொண்டே இருப்போம் என்று கூறியது கட்டெறும்பு. நீண்ட நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எறும்புகளும் ரொம்ப நேரமாகக் குளத்துத் தண்ணீரில் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா, இவ்வளவு நேரமாகத் தண்ணீரில் நீந்திக் கொண்டே இருந்த காரணத்தால் என்னுடைய கால், கை எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்தவே முடியாது. எப்படியும் தண்ணீரில் மூழ்கி செத்துதான் போகிறேன் என்று சொன்னது செவ்வெறும்பு. இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்சம் நேரம் குளத்தில் நீந்தி போராடு. நிச்சயம் நாம் உயிர் பிழைப்பதற்கு எதாவது ஒரு வழி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனியும் நமக்கு எந்த உதவியும் கிடைக்க போவது இல்லை. நாம் இறந்துதான் போகின்றோம் என்று கூறிய படி குளத்துத் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது அந்த செவ்வெறும்பு.
அந்த கட்டெறும்பு எப்படியாவது உயிர் பிழைத்துவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது. கட்டெறும்பு நீண்ட நேரம் தண்ணீரில் நீந்திக் கொண்டி இருந்ததால் கை, கால்கள் சோர்ந்து பயங்கரமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இனி நம்மாலும் முடியாது போல் இருக்கிறது. இனி நாமும் இறந்து போய் விடுவோமோ? என்று கட்டெறும்பு மனதில் தோன்றியது. இப்படி செத்து மடிவதற்காக பிறந்தோம். வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் நிறைந்ததுதான். அதற்கு பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது. அதனால் துணிச்சலோடு போராட வேண்டும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டது. ஆகையால் கட்டெறும்பானது துணிச்சலோடு போராட தொடங்கியது. சிலமணி நேரம் சென்ற பிறகு ஒரு பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. அப்போது அந்த மாமரத்திலிருந்து ஒரு மாவிலை அந்த கட்டெறும்பு பக்கதில் வந்து விழுந்தது. சட்டென்று கட்டெறும்பு அந்த மாவிலையைப் பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்து அதை ஒரு படகாகப் பயன்படுத்தி கரையேறியது.
இந்த அனைத்து நிகழ்வுகளையும் குளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனானது கட்டெறும்பை பார்த்துச் சொன்னது. நீ துணிச்சலோடு விடாமல் போராடிக் கொண்டே இருந்தாய். அதனால்தான் உன்னால் கரை ஏற முடிந்தது. வாழ்த்துக்கள் நண்பா என்றது அந்த மீன். நண்பர்களே, எந்த விஷயத்திற்கும் பயந்துக் கொண்டே வாழாமல் போராடு. எதற்கும் துணிச்சலோடு போராடினால் எதையும் வென்றிடலாம்!
உறவுக் கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
1.உறவுநிலை சார்ந்த கடிதங்கள் ஆரமிக்கும் முன்பே வலப்பக்கத்தில் தேதியைக் குறிப்பிடவேண்டும். ஏனெனில் கடிதத்தைப் பிரிக்கும்போதே இக்கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது என்பதை தெரியப்படுத்த வசதியாக இருக்கும்.
2.அடுத்ததாக யாருக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும். அன்புள்ள | பாசமுள்ள | பிரிமுள்ள | மனைவிக்கு | அம்மாவுக்கு என்று எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். கட்டாயமில்லை.
3.பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.
4. வணக்கமும் நன்றியும் கடிதத்தில் போட்டே ஆக வேண்டும் என்ன கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி. அதேபோல் தாழ்ந்த என்பது போடவேண்டாம். யாருக்கும் யாரும் தாழ்ந்தவர்கள் கிடையாது. ஆனால் பணிவு என்பது நல்லது.
5. இவ்வகையான கடிதத்தைப் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, என்றும் அன்புடன், என்றும் நட்புடன், என்றும் பிரியமுடன் என எது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இறுதியில் காற்புள்ளி ( , ) வைத்தல் அவசியம். அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும்.
6. இறுதியில் அனுப்புநர் முகவரியும் அதற்கு நேராக பெறுநர் முகவரியும் இடம் பெறுதல் அவசியம். ஆனாலும் அனுப்புநர் முகவரியை ஒரு பக்கத்திலும் பெறுநர் முகவரி மறுபக்கத்திலும் கூட இடம் பெறலாம்.
7.இவ்வகையான கடிதங்கள் தபால் துறையின் மூலம் செல்லுவதால் தபால் முத்திரையை ஒட்டுவது அவசியமாகும். அரசுத்துறை அஞ்சலில் அனுப்பினால் பணம் கிடையாது (இலவச கடிதங்கள் மட்டும்). கூரியரில் அனுப்பும் போது பணம் கட்ட வேண்டும்.
8. ஒருகாலத்தில் மின்னலாய் இருந்த அஞ்சல் துறையானது இன்று இணைய வரவால் கொஞ்சம் வலுவிழந்து தற்போது அஞ்சலக சிறுசேமிப்பு, வங்கி முறைகள் என முன்னேறி வருகின்றது எனலாம். ஆனாலும் எதுவாயினும் கடிதத்தில் எழுதி அனுப்புகின்ற அமைதி வேறெங்கும் இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.
9. இறுதியாக உறவுநிலை சார்ந்த கடிதங்களைப் பொறுத்தவரை இக்கடிதம் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது.
10.மேலே சொல்லப்பட்டது கூட இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றே சொல்லப்படுகின்றன.
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி உறவுக் கடிதத்தினை எழுதுங்கள்.
1.பாராட்டுக் கடிதங்கள் அல்லது வாழ்த்துக் கடிதங்கள்
ஒருவரைப் பாராட்டிக் கடிதம் எழுதுவது பாராட்டுக்கடிதம் எனப்படும். இதனை வாழ்த்துக்கடிதம் என்றும் சொல்லலாம். பாராட்டுதல் என்பது அனைவருக்கும் வராது. ஆனால் மற்றவரை பாராட்டிப் பாருங்கள். மனம் மகிழ்ச்சியாகும். துன்பம் நம்மை விட்டு விலகும். முகம் மலரும். நேரடியாக ஒருவரைப் பாராட்டும்போது இயல்பாக நம்மிடையே இருக்கும் கூச்ச சுபாவம் நம்மை பேசவிடாமல் தடுக்கும். அதனால் மனதில் உள்ளதை கடிதத்தின் வாயிலாகச் சொல்லமுடியும். நேரில் வெளிப்படையாகப் பேச முடியாததைக் கூட கடிதம் வாயிலாக பேசமுடியும். அதுவும் பாராட்டுக் கடிதத்தைப் பொறுத்தவரை உணர்ச்சி, அன்பு, கருணை, வர்ணனை என எதுவேண்டுமானாலும் அமைத்து எழுதலாம்.
இக்கடிதங்கள் நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், முன்பின் தெரியாதவர்களுக்குகூட பாராட்டி கடிதம் எழுதலாம். பாராட்டுதானே யார் வேண்டுமானாலும் யார்க்கிட்டேயும் சொல்லலாம். சாலையில் ஒருவர் நன்றாகப் பாடிக்கொண்டிருப்பார். நமக்கு அப்பாடலும் அப்பாடலை பாடியவரையும் பிடித்துப்போகும். உடனே சென்று வாழ்த்துகள் சொல்லுகின்றோம். அதுபோலத்தான்.
இன்றைய இணைய உலாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மகம் தெரியாத ஒருவர் பதிவு போடுகின்றார். அப்பதிவானது நமக்கு பிடித்துப்போக, உடனே விரும்புதல் (லைக்) செய்கின்றோம். பிறரை பாராட்டாவிட்டாலும் பராவாயில்லை. உங்களுடன் இருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களையாவது பாராட்டுங்கள். பாராட்டுவதும் வாழ்த்துவதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.
கீழ்க்கண்டவாறு பாராட்டுக் கடிதங்கள் அமையலாம்
1. ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.
2.பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.
3. மேனேஜர் பதவி கிடைத்த தந்தையைப் பாராட்டிக் கடிதம் வரைக.
4. பிறந்தநாள் விழா கொண்டாடும் அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.
5.வேலை கிடைத்த அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.
6.அக்காவின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.
7.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலை ஆகியனவை பாராட்டியும் வாழ்த்துச் சொல்லியும் கடிதம் எழுதலாம். இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம்.
உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.
ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.
நாள் : 08.03.2024
அன்புடைய நண்பனுக்கு,
நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. இப்பொழுதுதான் செய்தித்தாளில் நீ ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்ததைப் பற்றி பார்த்தேன். மிகவும் சந்தோசம். நீ சிறு வயதுள்ளபோதே நன்றாக ஓடுவாய். நான் அறிவேன். உன்னுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் இன்று உன்னை வெற்றியடை வைத்திருக்கிறது. இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். மேலும் நம் நாட்டிற்காகவும், ஒலிபிக்கிலும் நீ கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும். இறைவன் எப்பொழுதும் உன்னுடனே இருக்க வாழ்த்துகிறேன்.
நன்றி நண்பா
என்றும் நட்புடன்,
(சரவணன்)
அனுப்பநர் பெறுநர்
க.சரவணன், த.முருகவேல்
விவேகானந்தர் தெரு, ராம் நகர், அடையார்,
ஆத்தூர். சென்னை.
2.சுற்றுலாக் கடிதங்கள்
உலகம் மிகப்பெரிது. நாம் பார்க்காத காட்சிகள் இவ்வுலத்தில் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் இயற்கையும் செயற்கையுமாய் கலந்து விரிந்து நிற்கின்றன. சிலவற்றை நாம் நேரில் பார்த்து ரசித்திருப்போம். சிலவற்றை தொலைகாட்சியிலோ அல்லது புகைபடத்திலோ பார்த்திருக்கலாம். அவ்வாறு நேரிலே பார்க்காத சில காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமும் உண்டாகிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்து ரசிப்பதும் உண்டு.
நாம் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள் உலகத்தில் நிறையவே இருக்கின்றன. அவ்விடத்திற்கு எல்லாம் தனி மனிதனாய் சென்றால் அவனுக்கே போரடித்துவிடும். கூட்டமாக உறவுகளுடன் நண்பர்களுடன் சென்று பாருங்கள். அதனுடைய சுவாரிசயத்தைப் புரிந்த கொள்ளலாம். அவ்வாறு செல்லும் இடங்களைச் சுற்றுலா தளங்கள் என்கிறோம்.
இவ்வுலகத்தில் எங்கும் இல்லாதுபோல் தனித்து அமைந்த பொருட்கள், இயற்கை காட்சிகள், செயற்கை உருவாக்கங்கள், பழைய இடங்கள், கோவில்கள், கடல், ஆறு, மலை, வயல், மனிதன் என அனைத்துமே சிறப்புடையதுதான். அவற்றை எல்லாம் பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து போவார்கள். மக்கள் சுற்றிப் பார்க்க ஏதுவாக இருப்பதால் சுற்றுலா எனப் பெயர் வந்திருக்கலாம். அந்த இடங்களைச் சுற்றுலா இடங்களாகக் கருதப்படுகின்றன.
இன்று சுற்றுலா தளங்களுக்கென்று அரசாங்கமே ஏற்பாடு செய்கிறது. பெரியபெரிய தொழில் நிறுவனங்களும் சுற்றுலா தளங்களை விரும்பி வந்து பார்க்கின்றனர். இதனால் குடும்ப ஒற்றுமை வலப்படும், மனம் இலேசாக உணர ஆரமிப்பீர்கள், நட்பு வளரும், பகிர்ந்துண்ணும் பழக்கம் ஏற்படும். குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் வெளியுலகத்தை அறிந்து கொள்ளலாம்.
நமது ஊரில் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இரந்தாலும் அசலூரில் நாம் வேற்று ஆள்தான். அப்போதுதான் நம்மை நாமே உணர முடியும். அப்படிப்பட்ட சுற்றுலாவைப் பற்றி கடிதங்கள் எவ்வாறு எழுதுவது என்பதை பார்க்கலாம்.
சுற்றுலாக் கடிதத்தைப் பொறுத்தவரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1.சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.
2. இனி செல்லுகின்ற சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.
கீழ்க்கண்டவாறு சுற்றுலாக் கடிதங்கள் அமையலாம்
1. கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.
2.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு உன்னோடு வருமாறு நண்பனை அழைத்துக் கடிதம் எழுதுக.
3. குடும்பத்துடன் சிம்லா செல்ல உறவுகளை அழைத்துக் கடிதம் எழுதுக.
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சுற்றுலா கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.
கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.
நாள் : 10.03.2024
அன்புடைய நண்பனுக்கு,
நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நான் தற்போதான் கொடைக்கானல் சென்று வந்தேன். மிக அருமையான இடம். இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். கொடைக்கானல் முழுமையும் கண்டு களித்தேன். மனம் முழுவதும் நிம்மதி. குளிர்மையான பிரதேசம். மிக்க சந்தோசம் அடைந்தேன். ஆனால் ஒருகுறை இருந்ததுபோல் இருந்தது. அது என்னவென்றால், நண்பா! நீயும் என்னுடன் வந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அந்த அழகான தருணத்தை உன்னுடன் பகிர்ந்திருப்பேன். அடுத்தமுறை மீண்டும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக வரவேண்டும். உனக்காகக் காத்திருக்கிறேன்!
நன்றி நண்பா
என்றும் தோழமையுடன்,
(கதிரவன்)
அனுப்பநர் பெறுநர்
ச.கதிரவன், த.முருகவேல்
விவேகானந்தர் தெரு, ராம் நகர், அடையார்,
ஆத்தூர். சென்னை.
3.உறவுக் கடிதங்கள்
ஒரு காலத்தில், செய்தியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பாலமாகக் கடிதங்கள் இருந்து வந்துள்ளன. கடிதங்கள் ஞாபகங்களைக் கொடுக்கும். நேரிடையாகச் சொல்ல முடியாத வார்த்தைகளைக் கூட எழுத்தின் மூலமாகச் சொல்லி தெரிவிக்கமுடியும். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சொந்தங்களை நண்பர்களைக் கடிதத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம். கடிதத்தின் முக்கியக் கருப்பொருளாக விளங்குவது உறவுகளுக்குள் எழுதுகின்ற கடிதங்கள்தான்.
அன்பின் வெளிப்பாடாகவும் உணர்ச்சிகளின் தூண்டுதலாகவும் கடிதங்கள் அமைந்திருக்கின்றன. வெளியூரில் இருக்கும் கணவனிடமோ அல்லது மகனிடமோ மாதத்திற்கு ஒருமுறையோ இல்லை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ கடிதம் வந்து விட்டது எனில் அந்தக் குடும்பப் பெண்களின் கண்களைப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு கடிதங்கள் உள்ளங்களை நிறைவித்து வாழ்ந்தன.
அதுவும், காதல் கடிதங்களைப் பொறுத்தவரை இன்னும் ஒருபடிமேலே சொல்லலாம். பிடித்தமானவர்களிடம் இருந்து வருகின்ற கடிதங்களை பெட்டியிலோ அல்லது மறவிடத்திலோ வைத்து அவ்வவ்போது மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொள்வது காதலின் கவிதைதான்.
உறவுக்கடிதங்களை மக்கள் விரும்பினார்கள். கடிதங்களை யாருக்கும் தெரியாமல் ஒட்டி அனுப்புவது (இன்லேண்ட் லெட்டர்), வெளிப்படையான கடிதங்கள் (போஸ்ட் கார்டு), வெள்ளைத்தாளில் எழுதி அதற்குண்டான கவரில் (ஆபிஸ் கவர்) போட்டு அனுப்புவது என அவர்அவர்களுக்கென தரம் இருந்தன. அப்படிப்பட்ட உறவுக்கடிதங்களை இங்கு பார்க்கலாம்.
கீழ்க்கண்டவாறு உறவுக் கடிதங்கள் அமையலாம்
1. வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.
2.விடுதியில் தங்கியிருக்கும் மகன் தன் குடும்பத்திற்கு எழுதும் கடிதம்.
3. பள்ளிப் பருவ நண்பனுக்கு கடிதம் எழுதுதல்.
4.காதல் சம்பந்தப்பட்ட கடிதங்கள்.
5. பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்கள்.
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உறவுக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.
இன்று கடிதங்கள் குறைந்து வாட்ஸ் அப், பேஸ்புக் என பல்வேறு இணைய தொடர்புகள் வந்தவிட்டன. ஆனாலும் கடிதங்களுக்கென மன மகிழ்வு இன்றும் உள்ளன.
வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.
நாள் : 12.03.2022
அன்புள்ள மனைவி மற்றும் குழந்தைகளுக்கு,
நான் நலம்! உன் நலம் அறிய ஆவல்! ஊரில் மழை பெய்ததா! உன்னையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்று மனம் பாடாய்படுத்துகிறது. பெரியவன் எப்படி இருக்கின்றான். சின்னவன் அடம்பிடிக்கின்றானா? நம் இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு வாங்கி கொடு. என்கூட தங்கியிருக்கும் இராமசாமி அண்ணா இன்னும் பத்து நாளில் இந்தியா வருகிறார். அவரிடம் பணமும் குழந்தைகளுக்கான பொட்களும் வாங்கி கொடுத்து அனுப்புகிறேன். என்னை பற்றி கவலைப்படாதே. நீ உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள். இன்னும் இரண்டு வருடங்கள்தான் வேலை இருக்கிறது. முடிந்தவுடன் ஊருக்கு வந்து விடுகிறேன்.