Wednesday, June 3, 2026
Home Blog Page 31

மலையதிகாரம் |கவிதை |ச. குமரேசன்

மலையதிகாரம்

மலையதிகாரம்

 

வைகறையில்

வியாழன் உறங்கி

வெள்ளி உதிக்கும்..

எங்கள் மலை மன்னருக்கு

அது சியமந்தகமணி…! 

 

கிழக்கு வெளுக்கும்,

பின் சிவக்கும்

மலை முகடுகளுக்கிடையே

வெய்யோன் வெட்டொளி வீசும்..

தங்க கிரீடத்தை

தலையில் கவிழ்த்தவாறு

தகதகக்கும்…

மகாராசராய்

மரகத வண்ண மலை வீற்றிருக்கும்…! 

 

தொலைவிலிருந்தால்

நீலவான நீட்சியாய்

நீலநிறமாகும்…

பக்கத்திலிருந்தால்

பச்சை நிறத்தில் பளபளக்கும்…! 

 

அது மலையல்ல

மன்னர்களின் கருவூலம்.. 

அழகு கொஞ்சும்

அட்சய பாத்திரம்.. 

கர்ணனின் கருணை கைகள்.. 

கடையெழு வள்ளல்களின்

கரும்பச்சை பிம்பம்…! 

 

உயிர்களின் உன்னத உறைவிடம்.. 

ஊராரின் ஒட்டுமொத்த தேவை.. 

சிற்றோடைகளில்

சிலுசிலுத்து ஓயாமல் ஓடிவரும்

 ஊற்றுகளின் உற்பத்தி கூடம்…! 

 

தந்தை மேய்த்த ஆடுகள்.. 

மந்தை மந்தையாய் மாடுகள்.. 

குதித்தோடும் குரங்குகள்… 

மருண்டு நோக்கும் மான்கள்.. 

பள்ளம் தோண்டும் பன்றிகள்.. 

கடகடக்கும் காட்டெருமைகள்.. 

முந்தியோடும் முயலினங்கள்.. 

முள் தெறிக்கும் முள்ளம்பன்றிகள்.. 

சிலுசிலுக்கும் சில்வண்டுகள்… 

பளபளக்கும் பொன்வண்டுகள்.. 

அனைத்துக்கும்

அருள் சுரந்து உணவூட்டும்

இது என் அமுத சுரபி…! 

 

விக்க வைக்கும் விளாங்காய்கள்.. 

திகட்டச்செய்யும் தெரட்டிப்பழங்கள்..

எச்சிலூறும் இலந்தைப் பழங்கள்.. 

கருப்பு திராட்சையாய் கலாப்பழங்கள்..

புத்துணர்வளிக்கும் புளியம்பழங்கள்.. 

அருமையான அன்னம் பழங்கள்.. 

ஆகாரமாகும் ஆனாப்பழங்கள்.. 

சட்டையில் முள்ளேறும் சப்பாத்தி பழங்கள்.. 

சத்தான சர்க்கரை பழங்கள்.. 

பல்லுயிர்க்கும் பகிர்ந்தளிக்கும்

இது என் பழமுதிர்சோலை…!

 

முடையும் கூடைக்கும்

மோட்டு வளைக்கும் மூங்கில்கள்.. 

நெடுங்கால்களுக்கு நெக்கினி.. 

பூட்டுக்கைக்கு புரசு.. 

பக்கவளைக்கு பரம்பை.. 

கட்டைக்காலுக்கு கருங்காலி.. 

வளைச்சு குச்சிக்கு தெரணி.. 

வளைத்துக்கட்ட கட்டுக்கொடி.. 

கூரைவேய கிணாங்கு புல்.. 

கம்பங் கொள்ளைக்கு உண்டி வில்.. 

வரைமுறையின்றி வாரி வழங்கும்

வீடுகட்ட வித்திடும்

இது என் விஸ்வகர்மா…! 

 

பாறைக்குழியில் இருந்தால் பாழி.. 

ஓடையில் ஊறி வந்தால் ஊற்று..

குடிக்குமளவு தேங்கினால் குட்டை.. 

ஒவ்வொரு உயிரும் இளைப்பாறும்

நீரும் அதன் பேரும்

இடம் தோறும் மாறும்…

தேவர்களும் பருக

எண்ணும் இது என் தேவாமிர்தம்…! 

 

மழைக்கால மண்புழுக்கள்.. 

மலையட்டைகள்.. 

மரப்பள்ளிகள்.. 

மலைப்பாம்புகள்.. 

கல் ஆமைகள்.. 

கருந்தேள்கள்.. 

உடும்புகள்.. 

ஊர்ந்து வரும்

இவை யாவும்

வாழ்வில் ஊர்ந்து வர

கற்றுக் கொடுத்த

எனது தட்சணை இல்லா

 தாராள குருக்கள்…! 

 

காடைகள்..கவுதாரிகள்..

காட்டுக்கோழிகள்… 

காக்கைகள்.. கழுகுகள்.. 

கரிச்சான் குருவிகள்… 

மயில்கள்.. மைனாக்கள்..

மணிப்புறாக்கள்…

பருந்துகள்.. பச்சைக்கிளிகள்.. 

சிட்டுக்குருவிகள்..

செம்போத்துகள்..

கூகைகள்.. குயிலினங்கள்.. 

ஆந்தைகள்.. ஆட்காட்டி குருவிகள்… 

ஆயிரமாயிரம் பறவைகள்

ஆசையாய் பறந்து வரும்

இது என் வேடந்தாங்கல்…!

 

கண்ணைப் பறிக்கும் செங்காந்தள்.. 

கமகமக்கும் காட்டுமல்லி.. 

கார்காலத்து காரிண்டம்பூ.. 

கொத்துக் கொத்தாய் கொரக்கம்பூ.. 

கற்களுக்கிடையே கள்ளிப்பூ..

இது பூவின் புதையலை

புறம் வைக்க புறப்படும்..

இசைபாடும் தேனீக்களின்

இன்பமான இருப்பிடம்…!

 

உச்சி மரக்கிளையில்

ஒய்யாரமாய் கொம்புத்தேன்..

உயர்ந்த பாறைகளில்

ஒட்டியிருக்கும் மலைத்தேன்.. 

கல்லிடுக்கில் கட்டிவைக்கும்..

மரப்பொந்தில் மறைத்து வைக்கும்..

புற்றுகளில் புதைந்திருக்கும்..

அடுக்கடுக்காய் அள்ளித்தரும்

அடுக்குத் தேன்.. 

அது அவ்வளவும்

அசுவினி குமாரர்களின் ஒளடதம்…! 

 

ஊறுகாய்க்கு உன்னதம்

மகத்துவமான

மாவிலியங் கிழங்கு.. 

அரவம் அடக்கி அருமருந்தாகும்

ஆகாச கருடன் கிழங்கு.. 

இன்னல் இருளகற்றி

இன்பம் தரும் இருளங்கிழங்கு.. 

நிலை மாற்ற நீண்டிருக்கும்

நிலப்பனைங் கிழங்கு.. 

மண்ணுக்குள்ளே மறைந்திருக்கும்

இது என் புனித புதையல்கள்…! 

 

இவை

என் எண்ணத்துள் எழுந்தவை அல்ல.. 

என்னில் இரண்டறக் கலந்து

உணர்வோடு ஊறியவை.. 

மலையை மலைத்து பார்ப்பேன்.. 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் எண்ணங்கள் உதிக்கும்..

அதில் ஒரு சில ஓடிவந்து

இப்படி உட்கார்ந்து கொள்ளும்..! 

 

மாமலைப் போற்றுதும்.. 

மாமலைப் போற்றுதும்.. 

இது என் மலையதிகாரம்…!

 

கவிதையின் ஆசிரியர்

கவிஞர் பேரா ச. குமரேசன். 

தமிழ் உதவிப் பேராசிரியர், 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம். 

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

மணம் வீசும் மனம்|கவிதை|ச. குமரேசன்

மணம் வீசும் மனம்

மணம் வீசும் மனம்

தனிமை என்னை வாட்டியதில்லை… 

தாய் தவறிய பின் 

நான் தள்ளாடியபோதும்… 

தகப்பன் சாமியோடு

தந்தை சேர்ந்த நாளில்

தத்தளித்தபோதும்..!

 

துக்கம் தொண்டையை

கவ்விய வேளையில் – அதை

துச்சமாக தூக்கியெறி

இல்லையேல் – நீ

தூக்கியெறியப்படுவாய்..  

துவண்டு விடாமல்

தூணாகிவிடு என்றது அது… 

துடைத்தேன் கண்ணீரை

துள்ளியெழுந்தேன்..! 

 

எண்ணங்களை ஏணியிலேற்று!

ஏகாந்தத்தில் இலயித்துவிடு!

படைப்பின் இரகசியமறி!

பத்தரைமாத்து தங்கமாகு! 

ஆத்மாவின் ஆனந்தம் உணர்! 

ஆழ்மனதுள் ஊடுருவு! என்றது அது…. 

அழுகையை அப்புறப்படுத்தி

அழுக்கை அழகாக்கினேன்..! 

 

ஏன் நொறுங்கி போகிறாய்?

இது ஆப்கன் இல்லை

அதிர்ந்து விட.. 

ஈழம் இல்லை

இழந்து வாட..

சோமாலியா இல்லை

சோர்ந்து போக.. 

இரும்பாய் இரு –  நீ

இந்தியன் என்றது அது… 

இன்னல்களை விட்டெறிந்து

இனிமையானேன்..! 

 

நொடிப்பொழுதும்

நொடிந்துவிடாமல் – என்னை

பாதுகாக்கும் அது…. 

அது எது? 

 

அது

மட்டற்ற மணம் வீசும் என் மனம்…! 

மல்லிகையாய் மலரும் அது தினம்…!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன், தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

களத்துமேடு|கவிதை|ச.குமரேசன்

களத்துமேடு - குமரேசன்

களத்துமேடு

கள்ளம் கபடமும்

மேடு பள்ளமும் இல்லா

குட்டி மைதானம்..!

 

குழந்தை பருவத்தில் – அது

இரு கைகளைப்

பின்னோக்கி இழுத்துப்

புருவங்களை உயர்த்துமளவு பெரியது..!

 

அதிர்கட்டை கொண்டு

தனது வலிமை முழுவதும்

களத்தில் இறக்கி

காரையாக்கி

வைத்திருப்பார் அப்பா..!

 

தானியங்களோடு

கல், மண் சேர்ந்து

கலப்படம் ஆகுமென்று

மாட்டுச்சாணத்தால் மெழுகி

பளிங்காய் மாற்றியிருப்பார் அம்மா..!

 

கோடை முடிந்தால்

கடலையும், எள்ளும்

களம் புகும்..!

 

கார் முடிந்தால்

நெற்கட்டுகள்

ஆளுயர அடுக்கி நிற்கும்..!

 

பக்கத்து தோட்டத்துக்

காளைகளோடு தாத்தா – தன்

காளைகளையும்

கிருஷ்ணன் தேரோட்டும் 

குதிரைகள் கணக்காய் 

பிணைத்து களம் புகுவார்..!

 

நெற்கட்டுகளைப் பரப்பி 

எப்பிடி புனையோட்றம் பாரு?

பில்லுல ஒரு  நெல்லிருக்காது என்பார் !

 நெல்லடித்த வைக்கோல்

தாம்பு ஒரு

வட்டப்பாய்  வடிவம் பெறும்..!

 

களம் புகுந்த தாத்தா

இப்போது  போரிடத் துவங்குவார்.

 உயரத்தில் நின்று

 வைக்கோல் கொண்டு

களத்தின் ஓரமாய்..!

 

நாங்கள் குண்டுகளை

எறிந்து கொண்டிருப்போம் – களத்தில்

அம்மாவின் சத்தம் கேட்கும்

கோலிகுண்டு விளையாடாதடா

படிப்பு வராது..!

 

மூங்கில் முறத்தில்

நெல்லை அள்ளி

 காற்றுள்ளபோதே

தூற்றிக் கொண்டிருப்பார் அப்பா..!

 

 பதர் நீங்கிய நெல்லனைத்தும்

போரிட்ட தாத்தா மேல்

சமாதிகட்டியது போல் காட்சி தரும்..!

 

பகலில் பத்து மூட்டை

நெல்லானுலும் ஒரு சேர காயும்..!

 

இரவில் ராந்தல் வெளிச்சத்தில்

தாத்தாவோடு நானும் பாயும்..!

 

என்னைத் துணையாகக் கொண்டு

விண்வெளி ஆராய்ச்சி

செய்வார் தாத்தா !

 முடிவில் நட்சத்திரங்களுக்குப்

பெயர் சூட்டப்படும்…

 

இதமான தென்றல் வீசும்

தாத்தாவின் குறட்டை ஒலியோடு..!

நிலவின் ஒளவையை

மேகம் மூடியதும்

என் போர்வை என்னை மூடும்..!

 

மூட்டைகள் வீடு புகும்

களத்தில் ஆடுகள் கட்டப்படும்

கொடாப்பை விட்டு குட்டிகள் குதித்தோடும்..!

 

மாடுகள் தன் சாடியைத் தேடும்

பசுங்கன்றுகள் பாய்ந்தோடும்

தைத்திருநாள் பூசையும்

நீண்ட நாள் வைத்திருந்த ஆசையும்

களத்தில் நிறைவேறும்..!

 

ஆம்!  எங்கள் களமும்

போரும் பூசலும் நிறைந்ததுதான்..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

உதவிப்பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

 

மாட்டு வண்டி| கவிதை | ச.குமரேசன்

மாட்டுவண்டி

மாட்டு வண்டி

 

கண்களுக்கு

கையை குடையாய் கொடுத்து

எட்டிப்பார்ப்பார் தாத்தா

காளைகளின் சலங்கையோசை

காதில் விழும்..!

 

வண்டிக்காரன் வருவான்

அவனோட பள்ளிக்கூடம் போ..

என் பல்லெல்லாம் பகலாய் மாறும்.

கால்கள் இரண்டும் காற்றில் மிதக்கும்..!

 

புத்தகப்பையை

கோதாணியில் தூக்கிப்போட்டு

சக்கர சட்டங்களில்

சரசரத்து ஏறி

முளைக்குச்சியை

இறுகப் பற்றி – உச்சியில்

 உட்கார்ந்து கொள்வேன்..!

 

கம்பு மூட்டைகளும்,

கடலை மூட்டைகளும்

எனது சிம்மாசனம்.

காளைகள்

கடந்து செல்கையில்

பாதையோர மரங்கள்

பின்னோக்கி ஓடும்..!

 

மேலிருந்து – நான்

ஊரைச் சுற்றி பார்ப்பேன்.

ஊரே என்னைப் பார்ப்பதாய் உணர்வேன்..!

 

வண்டிக்காரர்

கயிற்றை இழுத்து

பள்ளிக்கூடம் வந்துவிட்டதென்பார்.

கூட்டாளிகள் கூட்டம் கூடி விடுவர்..!

 

நான் இறங்குவேன்

என் அரியணையிலிருந்து..

அருகில் வந்து கேட்பான் – நண்பன்

என்னையும் ஒருநாள் ஏத்திக்கடா..!

 

வாழ்வில் பல

போர்கள் புரிந்து

பேரரசுகளை கைப்பற்றி

இன்று திரும்பி பார்க்கிறேன்

என் அரியணை அரவமற்று போயிற்று

நான் யாருடன் போரிடுவேன்?

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி- குமரேசன்

களவாணி

கதிரொளி வீசும்

 கதிரவன் அழகு..!

 குளிரொளி கொடுக்கும்

திங்களும் அழகு..!

 

வெம்மையின் கதகதப்பு

இதமான உணர்வோடு..!

குளிரின் தன்மை

குதூகல உணர்வோடு..!

அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்

தன்மையையும் உணர்ந்து

அனுபவிக்கிறேன்..!

 

அவற்றோடு – நான்

தனிமையில் உரையாடுகிறேன் !

அவை  தொட முடியாத 

தொலைவில் அல்லவா உள்ளன !

அதனால் பல வண்ணங்களிட்டு

தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !

அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

 

இங்கும் ஒருத்தி – அப்படித்தான்

பார்வையாலே சுட்டெரிப்பாள் !

 

சிலசமயங்களில்

குதூகல குளிர்ச்சியாய்

வெட்கப் புன்னகை பூப்பாள் !

 

இவள் தொட முடியா

தூரம் ஒன்றும் இல்லை

அருகேதான் இருப்பாள்

அழகாய் அகத்தை

ஊடுருவி  – என்

உள்ளேயும் இருப்பாள் !

 

இவளோடு உரையாட

முடிவதில்லை..!

தனிமையின் தவிப்பிலும்,

தள்ளி நிற்கும் வேலையிலும்..!

 

இணைப்பு கம்பிகளால்

இணைத்தது போல 

அவளோடு இருக்கும் என் மனம்..!

 

எதிரே நின்றால்

யாரோ யாருடனோ

பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

 

யாரவள் திங்களா? தினகரனா?

கற்பனையிலும், கனவிலும் மட்டுமே

என்னோடு சிலாகிக்கும்

களவாணி..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

சாலம் பாய் கறிக்கடை |ப பிரபாகரன்|சிறுகதை

சாலம் பாய் கறிக்கடை

     சூரியன் உதிப்பதற்காகவே, சூரிய உதயத்திற்கு முன்பே, குறைந்தது ஒரு ஆட்டையும் ஒரு கோழியையுமாவது காவு கொடுத்து விடிவார். சிலேட்டிலும், கரும்பலகையிலும் சுண்ணாம்புக் கட்டிக்கொண்டு எழுதப்பட்டும், தாளில் அச்சிடப்பட்டும் கடையின் முன்னே தொங்கவிடப்படும் விலைக்கு ஒருபோதும் ஒருவரும் மறுப்பு தெரிவித்ததே கிடையாது; அப்படியே எழுதபட்ட தொகையைக் கொடுத்துவிட்டுக் கறியை வாங்கிச் செல்வார்கள். அந்த கறிக்கடையின் உரிமையாளர் பெயர் சாலம் உசைன் அப்துல்லா. எல்லோரும் சாலம் பாய் என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நினைத்து நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்த இவருக்கு என்று ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

            சாலையின் ஒருபுறம் விநாயகர் கோவில்; அந்த கோவிலுக்கு மணிக்கு குறைந்தது ஐந்து நபர்கள் வருவார்கள்; பயபக்தியோடு தோப்புக்கரணம் போட்டு ஏதேனும் வேண்டி விரும்பி முணுமுணுத்து பிறகுதான் போக வேண்டிய இடத்திற்கு போவார்கள்; இந்த விநாயகர் கோவிலுக்கு வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையைவிட, இதற்கு அடுத்தடுத்து உள்ள ஐந்துக் கறிக்கடைகளுக்கும் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். அதிலும் அங்கு உள்ள மூன்றாவது கறிக்கடைக்கு, வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! அதுதான் சாலம் பாய் கறிக்கடை.

            அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்போது நேரம் சரியாக காலை 10.30 மணி இருக்கும். வழக்கம்போல், அப்பாவும் மகன் பிபுவும் இறைச்சி வாங்க சாலம்பாய் கறிக்கடைக்குப் போயிருந்தார்கள். இவர்களுக்கு முன்னதாகவே மூன்று நபர்கள் (இரண்டு கிலோ எலும்புக்கறி, ஒன்றரை கிலோ கறி மற்றும் மூன்று கிலோ சிக்கன் என்ற வீதத்தில்) ஆர்டர் கொடுத்துவிட்டு அமைதியாக வரிசையில் காத்திருந்தனர்.

பிபுவின் அப்பா “வணக்கம் பாய், எப்படி இருக்கீங்க? பசங்கலாம் நல்லா படிக்கிறாங்களா?” என்று கேட்டார்.

“வாங்க சார். வணக்கம். அல்லா கருணையால் அல்லாரும் நலம். எங்க சார் ரொம்ப நாளா அளே காணோம்!” என்று சாலம்பாய் பதிலோடு கேள்வியும் கேட்டார்.

“என்ன பாய் மறந்துட்டிங்களா? போன வாரம் ஞாயிற்றுக் கிழமை கூட ஒரு கிலோ மட்டன், அரை கிலோ சிக்கன் வாங்கிக் கிட்டு போனேனே!” இன்னிக்கு ஒரு கிலோ மட்டன் மட்டும் போதும்பாய், அதை வாங்கதான் வந்துருக்கேன்” என்றார் பிபுவின் அப்பா.

சாலம் பாய், “அடடே… ஆமா, ஆமாம். சாரி சார். கொஞ்சம் ஞாபக மறதி. வயசாகுதுல. ஓகே சார். கொஞ்ச வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்” என்றார். ஒரு வழியாக ஆர்டரை கொடுத்துவிட்டு அவர்களும் அந்த வரிசையில் நான்காவதாக காத்திருக்க தொடங்கினார்கள்.

      அப்போது கறிக்கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம், சக்கரம் முறிந்து உடைந்துபோய் பயன்பாட்டிலே இல்லாத ஒரு தள்ளுவண்டி இருந்தது. அந்த தள்ளுவண்டிக்கு அடியில் பொழுது விடிந்தது கூட தெரியாமல் ஒரு நாய், “கண்களை மூடித் தூங்கி கொண்டுயிருப்பதனால், இந்த உலகம் முழுவதும் இன்னும் பொழுது விடியல, இப்படி இருட்டாகத்தான் இருக்கும்” என்று நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கி கொண்டிருந்ததை அப்பாவும் மகனும் நோட்டமிட்டுக் கொண்டு நின்றனர்.

      திடீரென அங்கு ஒருவர் பைக்கில் வந்து நின்றார். அவர் பைக்கை நிறுத்தவுமில்லை; வண்டியை விட்டு கீழே இறங்கவுமில்லை. பைக்கில் அமர்ந்து கொண்டே, பாய் “லேட்டாகும் போல, நமக்கு இரண்டு கிலோ போட்டு வச்சிருங்க; நான் கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போயிட்டு வருகிறேன்; மறக்காம நல்லா தொடைக்கறியா போடுங்க, அதோடு கொழுப்பும், ஈரலும் சும்மா கொஞ்மாக மருந்துக்கு வையுங்க” என்று கூறிக்கொண்டே கிளம்பிவிட்டார்.

“போட்டு வச்சிருக்கேன், போயிட்டு வாங்க சார்!” அப்படினு பாய் கூறிய பதில் பைக்கில் வந்துச் சென்ற நபருக்கு காதில் விழுந்து இருக்க வாய்ப்பெ இல்லை. காரணம் அவர் வந்தார்; சொன்னார்; சென்றார்.

     பிறகு அந்த கடைக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்த நபர் கீழே இறங்கி வேகவேகமாகவே கறிக்கடைக்கு வந்து பிபுவுக்கு பின்னே நின்றார். “பாய் ஒரு குடல் இருக்கா?” என்று வேகமாக பக்கத்தில் இருந்த கடைகளுக்கெல்லாம் கேட்கும்படியாக கத்தினார். கத்தி கேட்டவர் அப்படியே விட்டு விடவில்லை. காத்திருந்த எல்லோரையும் கடந்து, கறி வெட்டிக் கொண்டிருந்த சாலம்பாய்க்கு அருகில் உள்ளேச் சென்று அவர் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்.

     சாலம் பாய், கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு, மேசையின் மீது இருந்த அந்த ஒரே ஒரு குடலையும் எடுத்துக் கொடுத்தார். அப்படி என்னதான் சொன்னரோ? தெரியவில்லை. மேலும் அந்த பாய் அவரிடம் குடலுக்கான தொகையையும் வாங்கவில்லை.

      ஒருவருரின் காலிலே கொதிக்கும் எண்ணெயோ அல்லது கொதிக்கும் தண்ணீரோ பட்டுவிட்டால் எப்படி குதிப்பார்? என்று யோசித்துப் பாருங்கள். அப்படியே அச்சு அசல், அது போலவே அந்த குடல் வாங்க வந்த நபரின் செயல் நடந்து முடிந்தது. இப்படி அங்கு காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் அநேகர் வந்தும், சம்பவங்கள் பலபல நிகழ்ந்து கொண்டும் இருந்தது.

       ஒருவர் முதன் முதலாக இரண்டு கிலோ எலும்புக்கறி கேட்டு காத்து இருந்தார் அல்லவா! அவர் கேட்டது போலவே சூப் எலும்பு அல்லது நல்லி எலும்பு, நல்ல கறித்துண்டு, கொழுப்பு மற்றும் நெஞ்சு எலும்பு இப்படி எல்லத்தையும் எடுத்து தராசில் வைத்து அளந்தார். தராசில் சரியாக 2.025 கிகி என்று இருந்தது. அந்த எடையில் இலவசமாக சேர்த்த கொழுப்பு தான் இந்த 25 கிராம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். முதலில் சூப் எலும்புத்துண்டை எடுத்து கறி வெட்டும் கட்டையில் வைத்தார். பல ரது இடையூறுகள் அடிக்கடி வந்ததையும், சிலர் கண்ணெதிரே காத்திருப்பதையும் சாலம் பாயின் கண்கள் உணர்ந்தது. கைகள் தானாகவே எப்போதும் வெட்டும் வேகத்தை விட சற்று அதிக வேகத்தோடு கறியை வெட்டியது. அங்கு இருந்தவர்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை. வெட்டப்பட்ட எலும்புத்துண்டின் ஒரு பகுதி மேசையின் மீதும், மறுபகுதி நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகில் தரையிலும் வந்தும் விழுந்தது.

      எலும்புத்துண்டு விழுந்த சத்தம் கூட எங்களுக்குச் சரியாக கேட்டிருக்காது. அடுத்த கணமே சாலம் பாய், இந்தடீ… இந்தடீ. என்று அதிவேகமாக கணத்தக் குரலில் கத்தி அதட்டினார். என்னவென்று பார்த்தால், விழுந்த இடத்தில் எலும்புத்துண்டைக் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கல் மட்டும் உடல் முழுவதையும் பூமிக்குள்ளே மறைத்துக்கொண்டு, ஊசி போன்ற தலையை மட்டும் பூமிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் எலும்புத்துண்டை ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடுவதை சாலம் பாயுடன் சேர்ந்து எல்லோருமாக விரட்டுவதைக் கண்டனர். ஒரு நாய் கடைக்கு எதிரே தூங்கிக் கொண்டிருந்ததே அந்த நாய் தான் அது.

     நாய் தூங்கிக் கொண்டு தான் இருந்தது என்று பார்த்தால் நல்ல சூப் எலும்புத் துண்டு வெட்டும் சத்தத்தைக் கேட்டோ அல்லது வெட்டப்பட்ட எலும்புத்துண்டு கீழே விழுந்த சத்தத்தை கேட்டொ வேகமாக எழுந்து மின்னல் வேகத்தில் வந்து, அந்த எலும்புத்துண்டை கவ்விக் கொண்டுச் சென்றது; அங்கு இருந்தவர்களில் பிபுவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.  ஏனெனில் சிலவினாடிக்கு முன்பு தான் அவர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் நாயைப் பார்த்தனர் அல்லவா!

     கையில் கற்களை வைத்துக் கொண்டு அந்த நாயைத் துரத்திச் சென்றவர்கள், கல்லால் ஒரு அடி கூட அடிக்க முடியவில்லையே என்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அவர்களுடன் திரும்பி வந்த சாலம்பாய், “சரி விடுங்க போய் தொலயட்டும்!” என்று கூறி திரும்பினர்.

     அப்போது முன்பு எலும்புத்துண்டு விழுந்த இடத்தில் ஒரு சிறிய கல் இருந்தது தானே, அந்த கல் எதிர்பாராத விதமாக சாலம் பாயின் கட்டைவிரலை பதம் பார்த்தது. கட்டைவிரலின் மேல்பகுதியில் இருந்து இரத்தம் பீறிட்டு கசிந்ததை பார்த்ததும் ஏ! அல்லா! என்று கத்தி தன்னையறியாமல் கண்கள் கலங்கினார்.

       தினமும் விலங்குகளின் இரத்தத்தில் குளிக்கும் சாலம்பாய்க்கு அவருடைய இரத்தத்தைப் பார்த்ததும் அன்று எப்படி இருந்ததோ, பாவம்! வலியை சொல்லவும் முடியாமல் வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்கு ஆடிவிட்டார். ‘வெளியில சொன்னால் வெட்கக்கேடு’ என்று நினைத்து உள்ளுக்குள்ளே போட்டு புதைத்து விட்டார். அங்கு கறி வாங்க காத்திருப்பவர்களைக் கண்டதும் அவருடைய வலியானது “பாலைவனத்திலே விழுந்த மழைத்துளி போல” காணாமல் போனது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.ப பிரபாகரன்

இலால்குடி, திருச்சி

மேலும் பார்க்க..

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

பிபுகேர் ஏஜென்ஸி |சிறுகதை| ப.பிரபாகரன்

பிபு கேர் ஏஜென்ஸி

“ஐயயோ! இன்னிக்கும் லேட் ஆச்சு. எட்டு மணியாவ இன்னும் அஞ்சு நிமிடம் தான் இருக்கு. “எத்தன மணிக்கு எழுந்து வேலைய ஆரம்பிச்சாலும் இப்படித்தான் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்ப வேண்டியதாதான் இருக்குது”.

“இந்த காலை நேரம் மட்டும் எப்படித்தான் இவ்வளவு வேகமாக போகுதோ புரியல” இன்னிக்கு பஸ்ஸை பிடிப்பேனோ இல்ல விட்டுடுவேனோ? தெரியலயே” என்று நினைத்துக்கொண்டு சார்ஜ் போட்டிருந்த போனை எடுத்து பார்த்தாள் டனுஜா.

அந்தோ கொடுமை! போனை சார்ஜரில் செருகுவதற்கு முன்பு இருந்த அதே பத்து சதவீதம் தான் இப்போதும் இருக்கிறது. போனில் சார்ஜ் ஏறவேயில்லை. தலை நிமிர்ந்து பார்க்க, போனை செருகிய ச்விட்ச் ஆன் செய்யாது இருப்பதைக் கண்டு கடுப்பானாள்.

“ கால் வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, மேல்வயிற்றை காலியாகவே வச்சுகிட்டு, ‘இதெல்லாம் ஒரு பொலப்பு’ என்று புலம்பிக்கொண்டு வீட்டை விட்டு அலுவலகத்திற்கு அவசர அவசரமாக டனுஜா கிளம்பினாள். மேசையின் மீது இருந்த ஹேண்டுபேக்கை எடுத்து தோள்பட்டையில் தொங்கவிட்டு, கையில வாட்ச் கட்ட நேரம் இல்லாது வாட்சை எடுத்து ஹேண்ட்பாக்ல போட்டுக்கிட்டு “பஸ்ல போய் கையில் கட்டிகலாம்” என்றே நினைத்து வீட்டுக்கு வெளியில் வந்தாள்.

ஜன்னலில் எட்டிப்பார்த்த அவளுடைய இரு பிள்ளைகளுக்கும் பை பை என்று சொல்லி, பறக்கும் முத்தங்கள் இரண்டை கொடுத்து “சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்” என்றே நினைத்து செப்பல் ஸ்டாண்டில் செப்பலை குனிந்து எடுத்தாள்.

ஐயோ! நேத்துதான் ஆபிஸ்ல இருந்து வரும் வழியில் இந்த செப்பல் பிய்ந்து போனதே! வாங்கி மூணு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ளே இப்படி கிளிஞ்சு பிய்ந்து போச்சே! என்ன செய்வது? நல்ல வேளை அந்த பழைய செப்பல் இருக்கு, அதை போட்டுகிட்டு போய் இன்னிக்கு ஒரு நாள் ஒப்பேத்திடலாம் என்று எண்ணி, பழைய செருப்பை எடுத்து போட்டுக்கிட்டு பேருந்து நிற்கும் இடம் கண்ணில் தென்படும் தூரத்திற்கு விரைந்து வந்தாள்.
தினமும் அவளுடன் அலுவலகத்திற்கு வரும் இரண்டு நபர்கள், அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதைக் கண்டு, “அப்பாடா! நல்ல வேளை, பஸ் இன்னும் போகல” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பேருந்து நிறுத்தம் வந்து, நின்றிருந்த இருவருக்கும் ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு வாங்கிய பெருமூச்சை, சிறுமூச்சாக மாற்ற முயற்சித்தாள்.

ஹெண்ட்பேக்கை திறந்து வாட்சை எடுத்து கையில் கட்டினாள். மணி எத்தனை என்று கட்டிய வாட்சில் பார்த்தாள். இப்போதும் நேரம், எட்டு ஆக அஞ்சு நிமிடம் இருந்தது. நன்கு உற்று நோக்கினாள். வாட்சியின் நொடியை காட்டும் முள் முன்னும் பின்னும் ஆடி ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. ஒரு முறை வாட்சை தட்டியும் பார்த்தாள். எந்த பயனுமில்லை. ச்ச… இந்த ‘வாட்சியிலையும் பேட்டரி போச்சு’ போல என்று வாட்சியிடம் கோபித்தாள்.
அருகில் இருந்தவரிடம், சார் டைம் என்ன? என்று கேட்க, அவரோ “மேம், இன்னிக்கு பஸ்ஸு ஃப்வைவ் மினிட்ஸ் லேட். இப்போ சரியா நேரம் எட்டு மணி ஐந்து நிமிடம்” என்றார்.

சில விநாடிகளில் அலுவலக பேருந்து அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. கடைசியாக வந்தாலும் ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்’ என்பதால் ‘நான் தான் முதலில் ஏறுவேன்’ என்று அடம்பிடித்து முதலில் ஏறி ஜன்னலின் ஓரம் இடமும் பிடித்தாள். இப்போதுதான் அவளுடைய மூச்சுக்காற்று சீரான வேகத்தில் உள்ளும் புறமும் சென்று வந்தும் போயும் இருந்தது.
ஜன்னலின் வெளியே நல்ல மூச்சுக்காற்று வாங்க, கண்ணாடி கதவை மெல்ல மேலே தூக்கினாள். இதமாக வீசிய இளந்தென்றல் காற்று அவளுக்குள் ஏற்பட்டு இருந்த பதற்றத்தை பறக்கடித்தது. அவ்விடத்தை விட்டு பேருந்தும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

ஜன்னலின் வழியே எதிர்புறம் இருந்த டீ கடையில் டீ மாஸ்டர் டீ போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். சற்றே திடுக்கிட்டாள். மறுகணமே, அச்சச்சோ! மறந்தே போயிட்டேனே!

ம்ஹும்… இன்னிக்கும் அடுப்பில வச்ச பால மறந்துட்டேனே! எப்படி மறந்து போனேனே தெரியலயே. ஆம். டனுஜா, வேலைக்கு வந்த அவசரத்தில், அடுப்பை சிம்மில் வைத்து பாலை கொதிக்க வைத்தவள் மறந்து போய் அடுப்பை நிறுத்தாமல் வந்து விட்டாள்.

“பால் போறது கூட பரவாயில்லை. கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சு கேஸ் சிலிண்டர் முழுதும் தீர்ந்து போயிடுமே! இப்படி மாதத்தில் மூனு முறை ஒரு நாளுக்கு ஒரு சிலிண்டர் என்று செலவிட்டால் என்னிக்கு நாம் பொருளாதாரத்தில் முன்னேறுவது? இந்த நேரத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், ஐயோ! கடவுளே நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே!”

இப்படியெல்லாம் டனுஜா கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சுகிட்டு இருப்பதை புலம்பி தவித்து இருப்பாள் என்று பார்த்தால், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

இப்பதான் எல்லாம் அறிவியல் மயமாகி போனதே! இப்படி வீட்டில் மறந்து எரியவிட்ட சிலிண்டரை வெளியில் வேறு எங்காவது இருந்துகொண்டே ஆப் செய்வதற்கு இருக்கவே இருக்கு “பிபு கேர் ஏஜென்ஸி”. டனுஜா, கஸ்டமர் கேர் நம்பருக்கு ‘XXXX’ போன் செய்து அவளுடைய இணைப்பு நம்பரை கூறினாள். ட்ரிங் ட்ரிங் என்று ஒலித்து ஒரு மெஸேஜ் வந்தது. அதில் உங்கள் கேஸ் இணைப்பு எண் “YYYYY” பேராபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது. எங்கள் சேவையானது என்றும் எங்கும் எப்போதும் உங்களுக்கு தேவையானது” என்று பதிவிட்டு இருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன், திருச்சி



ஃபியூசிபெலஸ்| சிறுகதை | ப.பிரபாகரன்

ஃபியூசிபெலஸ்

என்னை கொஞ்சம் கிள்ளி விடுங்க. எனக்கு இது கனவா இல்ல வெறும் நினைவா அல்லது இரண்டும் இல்லாது நிஜமான்னு பெரிய சந்தேகமாக இருக்குது’ இப்படி பிபு பெருத்த சந்தேகத்தோடு அம்மாவிடம் கேட்டான். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் அம்மா விழிக்க, “அம்மா, எனக்கு ஃபியூசிபெலஸை எப்படி ஓட்டுவதுன்னு தெரிஞ்சுடுச்சு. யாருடைய தயவும் இல்லாமல் என்னால் தனியே ஃபியூசிபெலஸை ஓட்ட முடியுது” என்று பேரானந்தத்தோடு கூறினான்.

‘இது களைந்து போகும் கனவொன்றுமில்லை; நீடித்து நிலைத்து இருக்கும் நிஜம் தான்’ என்று அம்மா கூறுவதை கேட்டவுடன், பிபு தலைகால் புரியாது குதித்து மகிழ்ந்தான். வீட்டிலிருந்த பாட்டி, சித்தி, சித்தப்பா என்று எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தான். இறுதியாக தாத்தாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.  அப்போது தாத்தா பிபுவிடம் “ஃபியூசிபெலஸ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

ஐயோ! தாத்தா, உங்களுக்கு ஃபியூசிபெலஸ்னா என்னன்னு தெரியாதா? தாத்தா, இந்த உலகமே தனது வீரத்திற்கு ஈடாகாது என்று சொன்ன கிரேக்க நாட்டை சேர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரையோட பெயர்தான் ஃபியூசிபெலஸ். அந்த மாவீரனின் பன்னிரெண்டு வயதில் இருந்து இறுதி காலம் வரை நீடித்ததொரு புனிதமான உறவின் பெயர்தான் ஃபியூசிபெலஸ். அன்று அந்த மாவீரனுக்கு அவனுடைய தந்தை மாசிடோனியாவின் மன்னன் ஃபிலிப்ஸ், ஃபியூசிபெலஸை பரிசாக வழங்கியபோது அவருக்கு வயது பன்னிரெண்டு. எனது அப்பா, எனது பிறந்த நாள் பரிசாக அளித்தபோதும் எனக்கு வயது ஏழு. அதனால் தான் அலெக்சாண்டரின் குதிரையின் பெயரான ‘ஃபியூசிபெலஸ்’ என்பதையே என்னுடைய சைக்கிளுக்கும் பெயராக வைத்திருக்கிறேன்”என்று கூறிவிட்டு தரையில் கால் படாமல் தாவி குதித்து ஓடினான்.

பிபு எப்படியெல்லாம் சைக்கிளை ஓட்ட கற்று கொண்டோம் என்று யோசித்தும் நினைத்தும் உள்ளத்தில் பெருமிதம் அடைந்தான். முதன் முதலாக கற்றுக் கொண்டபோது அப்பாவிடம், “சைக்கிளை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். கைகளை எடுத்து என்னை தனியே விட்டு விடாதீர்கள்”. என்று பயத்தோடு கூறியதையும், இப்போது எதிரில் ஏதேனும் வாகனம் வருவதைக் கண்டவுடன் அப்பா பிபுவின் பாதுகாப்பு கருதி சைக்கிளை பிடிக்க வந்தால் கூட, உடனே பிபு ‘அப்பா, பிடிக்க வேண்டாம், கையை எடுங்கள், தனியே விடுங்கள்; நான்தான் கற்று கொண்டு விட்டேனே!’ என்று கூறி அப்பாவை விரட்டுவதையும் நினைத்துப் பார்த்தான்.

தினமும் தனது வீட்டில் இருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் உள்ள பெரிய ஏரிக்கரை வரை அப்பாவுடன் சைக்கிளைக் கற்று கொள்ள சென்று வருவான். ஆனால் இப்போது பிபு தன்னந்தனியே யாரும் பிடிக்காமல் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொண்டதன் பொருட்டு, தனியாக ஏரிக்கரை வரை சென்றுவர புறப்பட்டான். அந்த சாலையில் ஓரமாக தனது பிஞ்சு பாதங்களால் சைக்கிளை மகிழ்ச்சியுடன் அழுத்திக் கொண்டு சென்றான்.

இப்படி தனியே செல்லும் வேளையில், பிபுவின் கண்களின் இமைகள் இறகுகளை மூடி திறக்கும் ஒவ்வொரு முறையும், அப்பா கற்றுக் கொடுக்கும் போது சொல்லித்தந்த வழிமுறைகளையும், அப்போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் அசைப்போட்டுக் கொண்டு செல்லலானான்.

முதன் முதலாக பிபு சைக்கிளில் தனியே ஏறி ஓட்ட முயற்சி செய்த போது கீழே விழுந்தான். அப்போது நல்லவேளை எவ்வித அடியும் விழவில்லை. ஒரு வேளை அப்படி விழுந்த போது கொஞ்சம் அடி விழுந்து இருந்தால் கூட, நான் இப்படி சைக்கிள் முழுவதும் ஓட்ட கற்று இருப்பேனோ? தெரியவில்லை.

ச்ச, ச்ச… எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது? அப்படியே கால் தரையில் ஊன்றாமல் பறப்பது போலவே தோன்றுகிறது. வாவ், இப்போ டர்னிங் வருது உடனே பெல் அடிக்க மறக்கக் கூடாது; ட்ரிங், ட்ர்ங், ட்ரிங் … பெல் அடித்துவிட்டு சாலையின் இடது ஓரமாக பெருமிதத்தோடு சைக்கிளை ஓட்டிச் சென்றான்.

ஹா ஹா… இந்த இடத்திலேதான் அப்பா சைக்கிளை பிடித்து கொள்வதற்கு முன்பாகவே ஏறுகிறேன் என்று ஏறி, சைக்கிளில் ஏறியதும் இடமும் வலமுமாக சைக்கிளை ஆட்டி கீழே சாய்ந்து விழுந்தோம். அப்போது வலது முழங்காலில் கொஞ்சம் சிராய்ப்பும் ஏற்பட்டதே. “ப்பா, ப்பா…. என்ன எரிச்சல், இரண்டு நாளா வலியோடே நடந்தோம். எரிச்சல் வேறு. நல்ல வேளை அப்படி ஏற்பட்ட சிராய்ப்பு இப்போ தழும்பாக மாறியே போச்சு” என்று நினைத்துக்கொண்டு அந்த தழும்பு இருந்த இடத்தை ஒற்றை கையில் தடவி பார்த்தான்.

புதிதாக கற்றுக்கொண்டதால் பிபு சைக்கிளை ஓட்டும் போது நடு சாலையிலே ஓட்டிச் சென்றான். அப்படி செய்யக்கூடாது என்று பலமுறை அப்பா எச்சரிக்கையும் செய்திருந்தார். ஆனால் அது அவனுக்கு சைக்கிள் ஓட்டும் உற்சாக மிகுதியால் மறந்து திரும்ப திரும்ப சாலையின் நடுவே ஓட்டிகொண்டிருந்தான். அப்படி அந்த இடம் வந்ததும் பிபுவை ஒரு மௌனம் சூழ்ந்தது. 

ஒரு நாள் கற்றுக் கொண்டிருந்த போது பின்புறமாக ஏதோ இரு சக்கர வாகனம் வருகிற சத்தம் கேட்க, பிபு சைக்கிளை இடது ஓரமாக ஓட்ட ஆரம்பித்தான். பின்னர் அந்த வாகனம் அவனை கடந்து முந்தி முன்னேச் செல்வதை கண்டு, மீண்டும் சைக்கிளை நடு சாலைக்கு திருப்பினான். அப்போது இரண்டாவதாக பின்னே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் சர்ட், கிரீச்…என்று பிரேக் அழுத்தி டயர் தேய்ந்த சத்தம் கேட்டது. ஜெஸ்ட் மிஸ். இரண்டு வண்டிகள் ஒன்றன் பின்னாக ஒன்றாக வரும் போது சத்தம் ஒன்றாக மட்டுமே கேட்கும் போல என்பதை உணர்ந்தான். அந்த நபர் வேறு அப்பாவை திட்டிவிட்டு சென்றார். ச்ச, ச்ச அன்றில் இருந்துதான் சைக்கிளை மிகவும் கவனமாக ஓட்ட ஆரம்பித்தோம்ல. 

இவ்வாறாக அப்பா சொல்லிக் கொடுத்த எல்லா மந்திரங்களையும் தந்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வந்த வண்ணமாகவே பிபுவின் பயணம் பெரிய ஏரிக்கரை வரை தொடர்ந்தது. வீட்டிற்கு திரும்ப நினைத்து சைக்கிளை வட்டமிட்டுத் திருப்பினான்.

எதிபாராத விதமாக திடீரென்று பட்டென்று ஒரு சத்தம் காதுகளில் ஒலித்தது. பாதங்கள் அழுத்தும் பெடல்கள் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது. என்னடா இந்த சோதனை? பிபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா சொல்லிக்கொடுக்காத ஏதோ ஒன்று நடந்ததை எண்ணி அச்சமுற்றான். தனியாக வந்த அவனுக்கு சற்று திகிலாக இருந்தது.

பிபு சிறிதும் யோசிக்காமல் மறுகணமே சைக்கிளில் இருந்து குதித்து விட்டான். சைக்கிளின் கீழே சக்கரத்தை பார்க்க எப்போதும் செயினின் இருமுனைகளும் இணைந்து இருப்பதை பார்த்திருந்த பிபுவுக்கு இன்று ஒரு புதிய அனுபவம். சைக்கிளில் செயின் கட் ஆகி ஒரு முனை தரையை தொட்டும் மறுமுனை சைக்கிளில் சிக்கியும் இருக்கக் கண்டான். எப்படியாவது ‘தள்ளிக்கொண்டே வீடு வரை சென்று விடலாம்’ என்று ஆயத்தமானான். சைக்கிளின் செயின் அறுந்து விட்டதை உணர்த்த கட கட கட என்று சைக்கிளும் அழுது கொண்டே வீடு திரும்பியது. புதிதாக முளைத்த புதிருக்கு விடைத்தெரியாது பிபுவும் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் சென்றான்.

பிபு அழுது தேம்பும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா, பிபு என்ன ஆச்சு, என்ன ஆச்சுப்பா! என்று படுக்கையறையில் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பிபுவை தட்டி அதட்டி எழுப்ப முயற்சித்தார். பிபுவின் தூக்கம் தெளிந்து, கனவு களைந்து போனது; எல்லாம் வெறும் கனவா! அல்லது கனவிலும் கனவா! இன்று அவன் தனியாக சைக்கிள் ஓட்டியதாக கண்ட அந்த கனவு பலிக்குமா அல்லது பலிக்காதா என்ற கேள்வியோடு படுக்கையை விட்டு எழுந்து ‘அப்பா, ஃபியூசிபெலஸை ஓட்ட போலாமா’ என்றான்.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன் , திருச்சி

தூவானம் | சிறுகதை | கோ.ஆனந்த்

தூவானம் - கோ.ஆனந்த்

          தூறல் நின்றபாடில்லை.அலுவலக வாசல் ஒட்டிய சாலையோர மின்விளக்கின் இளமஞ்சள் ஒளியினால் தங்கத் துகள்களாய் சிதறிய தூறலின் அடர்த்தி குறையக் காத்துக்கொண்டிருந்தேன்.சிரமம் பார்க்காமல் குடையை பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் இப்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் கூட கூடுதல் சுமையாகத் தெரிகிறது.வயதாகி விட்டால் உடல் கூட சுமை தான்.அலுவலகத்திலிருந்து பஸ் நிறுத்தம் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். நனைந்தபடியே ஓடி விடலாம்.ஆனால் நாளை வரும் தும்மலையும் ஜலதோஷத்தையும் யார் தாங்குவது?. சாலையில் வடியாமல் குளம் போல நிற்கும் தண்ணீர் வேறு பயமுறுத்தியது.இங்கேயே இப்படி இருந்தால் வீட்டருகே எப்படியிருக்கும்?அதுவும் ஏற்கனவே கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்? நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது.தூறல் சற்றே குறைந்த நேரத்தில் கைப்பையையே குடையாக்கி விரைந்து சென்று பஸ்ஸைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

          நினைத்தவாறே வீட்டின் வாசலில் கழிவு நீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கியிருந்தது.சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல செங்கற்கள் போட்டு மேடாக்கி வைக்கப் பட்டிருந்தது. அநேகமாக எங்கள் ஹவுஸ் ஓனர் நாராயணன் தான் அப்படி செய்திருக்க வேண்டும்.கொட்டும் மழையில் கம்பி மேல் நடக்கும் தெருக்கூத்தாடி போல் செங்கல் வழுக்கிவிடாமல் இருக்க பேலன்ஸ் செய்தவாறே நடந்து வாசலைக் கடந்து சென்றேன்.மழை இப்போதைக்கு விடுவதாய் தெரியவில்லை.கீழ் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.நாராயணன் குடும்பத்தார் உறங்கியிருக்க வேண்டும்.குடும்பத்தார் என்ன குடும்பத்தார்?தம்பதியர் இருவர் மட்டுமே அவர்கள் குடும்பத்தில்.

          நாராயணன் சாருக்கு ஒற்றை நாடி. அதென்னவோ சொல்லி வைத்தாற்போல் அவருடைய மனைவி சூடாமணிக்கு இரட்டை நாடி. இவர்களின் ஒரே மகன் திருமணமாகி ‘யுஎஸ்ஏ’ வில் செட்டிலாகி விட்டிருக்க,இருவரும் தங்கள் ஒரே சொத்தான இந்த வீட்டின் மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு,பிழைப்பையும்,காலத்தையும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

         இந்த கழிவுநீர் பிரச்சனையால் நேற்று சாயந்திரத்திலிருந்தே நாராயணன் சாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே?வாசல் பக்கம் போகவே முடியவில்லை. மூக்கைத் துளைத்து உள்ளிறங்கியது கழிவுநீர் நாற்றம்.நாங்கள் மாடியில் குடியிருப்பதால் தப்பித்தோம்.

       குடித்தனக்காரர்களான எங்களுக்கு போக வர வீட்டின் இடதுபுற சுற்றுச் சுவரையொட்டி படிக்கட்டும், காம்பவுண்ட் கேட்டும்.சொந்தக்காரர் நாராயணனுக்கு கீழே விஸ்தாரமான ஹால் மத்தியில் வாசல் கதவும்,நேர் எதிரே காம்பவுண்ட் கேட்டும்.வீட்டின் வலதுபுறம் இருவீட்டாரின் கழிவுநீர்க் குழாய்கள் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்று மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையில் இணைகின்றன.அங்கு தான் சிக்கல். இரண்டு நாட்களாக எங்கோ அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீட்டிலிருநது வெளியேறும் இடத்தில் போடப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பின் மூடி வழியாக வழிந்து கொண்டிருந்தது.

      நாராயணன் அவரால் முடிந்தவரை குளியலறை மற்றும் கழிவறைகளில்  நிறைய நீர் வேகமாக ஊற்றிப் பார்த்தார்.எங்களையும் அவ்வாறே செய்யச் சொன்னார்.எல்லாம் சேர்ந்து இன்னும் அதிகமாக கழிவு நீர் வழிந்ததே தவிர அடைப்பு நீங்கியபாடில்லை.நல்ல வேளையாக எங்களுக்கு இடது புற வாசல் என்பதால் சிரமம் குறைவாக இருந்தது.எனினும் நாற்றத்திற்கு பயந்து எங்களுடைய படுக்கையறை சன்னல்களைத் திறக்க முடியாமல் உள்ளே வெந்து கொண்டிருந்தோம்.

          காலையில் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் “கார்ப்பரேஷனில் சொல்லி வைத்தால் வந்து சரி செய்வார்களே” என்றதற்கு.”வருவான்,ஆனா பிடுங்கிடுவானே” என்று முகம் கோணினார்.”வேற வழியில்லையே அடைப்பை சரி செஞ்சாகனுமே” என்றேன்.”அது எனக்குத் தெரியாதா” என்பது போல் லேசாக முறைத்துப்பார்த்தபடி ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே “கோவிந்தன் இருக்கானான்னு பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட அடைப்பையும் எடுத்துடுவான்’என்று சொல்லிவிட்டு செல்போனைத் தேடி உள்ளே போனார்.நானும் கிளம்பி வந்து விட்டேன்.கோவிந்தன் கிடைத்தாரோ இல்லையோ தெரியவில்லை.அலுவலக வேலையில் இதைச் சுத்தமாய் மறந்திருந்தேன்.

       நான் காம்பவுண்ட் கிரில் கேட் திறந்த சத்தம் கேட்டு வெளியே வந்த நாராயணன், “மழையில மாட்டிக்கிட்டீங்களா.குடை கொண்டு போயிருக்கலாமே” என்றவர்,என் பதிலுக்கு காத்திராமல்.நல்லவேளை சார் கோவிந்தனைப் பிடிச்சிட்டேன். நாளைக்கு ஊருக்குப் போறதா இருந்தானாம். நம்ம வீடுன்றதால காலம்பற வர்றேன்னு ஒத்துகிட்டான்”  என்றார் வாயெல்லாம் பல்லாக.அவருடைய சந்தோஷத்தில் பங்கேற்கும் விதமாக நானும் ஒரு அசட்டுப் புன்னகை புரிந்துவிட்டு வந்தேன்.

       எப்படியோ பிரச்சனை சரியானால் நாளையாவது ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கலாம் என்றெண்ணி மாடிப்படி ஏறி மேலே போனேன். “என்னவாங்க?” என்ற மனைவியிடம், ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டாராம்.நாளைக்கு அடைப்பு சரியாகிடும்னு நினைக்கிறேன்.ஆனா அந்த ஆள நினைச்சாத் தான் பாவமா இருக்கு.இவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போறார்.வேலையும் நல்லா வாங்குவார். காசும் தர மாட்டார்” என்று பெருமூச்செறிந்தவாறே சாப்பிட அமர்ந்தேன்.

     “சூடாமணி, கோவிந்தன் வந்தாச்சு”.நாராயணனின் குரல் ஞாயிற்றுக்கிழமை காலை காபியை ருசித்துக் கொண்டிருந்தவன்  காதில் விழுந்தது. வாசல் வந்து பார்த்தபோது வானம் தெளிவாய் தெரிந்தது. மழை சுத்தமாக விட்டிருந்தது.பரவாயில்லை வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் இருக்கும்.

        டிஃபன் முடித்து கீழிறங்கிச் சென்றேன். “அந்த பைப்ப கொண்டா சார்” என்றவாறே கழிவு நீர் பாதையில் திறந்து பார்க்கப் பொருத்தப்பட்ட மூடிகளைத் திறந்து அடைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். நான் மூக்கைப் பொத்தியவாறே அருகில் சென்றேன். “வா சார்,புதுசா குடி வந்துகீறீங்களா?” என்று வெற்றிலை வாயோடு சிரித்தவாறே கேட்டார். “ஆமாம்” என்று தலையசைத்தவாறே,நாற்றம் தாங்காமல் நழுவ முயன்றவனை,”பாலா சார் ஒரு நிமிஷம்”என்ற நாராயணன் குரல் தடுத்தது.”இந்தா கோவிந்தா பைப்” என்று அடைப்பு நீக்க உதவ ஒரு நீள பைப்பை கொடுத்து விட்டு என்னிடம் வந்தார்.

      “சார் கொஞ்சம் இப்படி வாங்கோ” என்று சற்று தள்ளி அழைத்துச் சென்று, “விடியற்காலைல ஒரு துக்க செய்தி. கண்டிப்பா போயாகனும்.நல்ல வேளயா மழை விட்டிருக்கு. போயிட்டு தலைய காட்டிட்டு வந்துட வேண்டியது தான்.இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. உங்களுக்கு லீவு தானே? கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கங்க.எவ்வளவு நேரமானாலும் முடிக்கிற வரை விடாதீங்க.முடிச்சவுடன் ஐநூறு கொடுங்க.நான் 250, நீங்க 250.(ஐயோ இது என் லிஸ்ட்லேயே இல்லியே) மேல கேப்பான்.அவ்ளோ தான்னு கறாரா சொல்லிடுங்க” என்று சொல்லிக் கையில் தயாராக வைத்திருந்த 250 ரூபாயைக் கொடுத்தார்.பின் கோவிந்தனிடம் சென்று விஷயம் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

     வேறுவழியின்றி மேலே சென்று மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, அவள் முறைத்ததைக் கண்டும் காணாதது போல கடந்து வந்தேன்.

       இதனிடையே தன்  ஆராய்ச்சியெல்லாம் முடித்திருந்த கோவிந்தன் “சார் மேல,கீழ எல்லாம் சரியா இருக்குது.இந்த பக்கத்திலிருந்து தொட்டிக்குப் போற பைப்பிலயும் அடைப்பில்லை. தொட்டியிலிருந்து கார்ப்பொரேஷன் பைப்புக்கு போற வழியில தான் அடைச்சிகிட்டிருக்கு” என்று தன் முதல் கட்டத் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

     பிறகு அந்த தொட்டியிலிருந்து வெளியே செல்லும் குழாய் முனையை அடைப்பு நீக்கும் பைப்பை வைத்துத் துழாவிக் கண்டுபிடிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த தொட்டி முழுவதுமாக கழிவு நீர் தேங்கியிருக்க குழாய் முனையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஒரு பக்கெட் குடு சார்” என்று கேட்டு வாங்கி, தேங்கியிருந்த நீரை எடுத்து தோட்டம் பக்கம் ஊற்றினார்.”வேற வழியில்ல சார்.வெளிய ஊத்தினா அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க சண்டை போடுவாங்க.நீங்க தான் கொஞ்சம் பொறுத்துக்கனும்.நான் போறப்போ பினாயில் ஊத்திட்டுப் போறேன்” என்றார்.

        வேலையினூடே “சாருக்கு எத்தனை பசங்க?என்று கேட்டார்.நான் “ரெண்டு.பையன் ஒண்ணு.பொண்ணு ஒண்ணு” என்றேன்.”நமக்கு ஒரே ஒரு புள்ளைங்க.பன்னென்டாவது படிக்கிறான்”என்றார்.

       அவர் வெறுங்கையுடன் பக்கெட்டால் கழிவு நீரை இறைத்து ஊற்ற ஊற்ற ,மேலும் நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது.ஒரு கட்டத்தில் கையால் எட்ட முடியாத அளவு நீர் இறங்கி விட, சட்டென்று அந்த சிறு தொட்டியில் இறங்கி பக்கெட்டை நிரப்பி மேலே வைத்துவிட்டு ஏறி அந்த நீரைத் தோட்டத்தில் ஊற்றினர்.இதே போல நாலைந்து முறை செய்தபின் நீர் சற்று வடிந்து தரை தெரிந்தது.அதற்குள் அவர் உடலெங்கும் கழிவுநீர் அபிஷேகம்.

‘குடிக்க கொஞ்சம் தண்ணி குடு சார்”

       உபயோகமற்ற பழைய தண்ணீர் பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்து அதில் நீர் பிடித்து வந்து, அவர் கையை நீட்டி வாங்க முற்படுமுன் தரையில் வைத்து எடுத்து கொள்ளச் சொன்னேன்.

        தண்ணீர் குடித்து முடித்ததும், அடைப்பு நீக்கும் பைப்பைக் குழாயினுள் நுழைக்க முயன்றார்.வளைவாக இருந்த பைப் செங்குத்தான தொட்டியில் இறங்கி வெளியே செல்லும் குழாயினுள் நுழைய அடம் பிடித்தது.வளைவை நீக்கினால், குழாயிலிருந்து வெளியே வந்தது. குழாயினுள் நுழைத்தால் வளைவாக சுருண்டு கொண்டு மேலே நுழைய மறுத்தது.பாவம் இப்படி ஒருத்தராக கஷ்டப்படுவதற்கு,அவர் பையனையும் கூட்டி வந்திருந்தா கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

      ஒருவழியாக வளைத்து, நெளித்து குழாயினுள் நுழைத்து குத்த ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து, களைப்பாய் “எங்கயோ இடிக்குது சார்.மேல போக மாட்டேங்குது.மணி என்னா சார்? என்று கேட்டார்.

” இரண்டு” என்றேன்.

      ‘சரி சார்.சாப்பிட்டு வந்து பாக்கிறேன்.ஒரு நூறு ரூபா தாங்க” என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்பக்கம் சென்றார்.

    “ஐயோ இந்த நூறு எந்த கணக்கில சேரும்?நாராயணன் இதப் பத்தி சொல்லவே இல்லையே’என்று மனதிற்குள் புலம்பியவாறே நூறு ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன்.

       நான் மறுபடி கீழிறிங்கி வந்த பார்த்தபோது,பார்சல் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தும்.பீடியை அவசரமாக எறிந்து விட்டு வேலையை ஆரம்பித்தார்.

         சாப்பிட்ட தெம்பில் நான்கைந்து முறை வேகமாக குத்தியதில் பைப் அடைப்பை நீக்கி சரசரவென வேகமாக உள்ளே நுழைந்தது.”சார் தொறந்துகிச்சி.நீங்க போய் நிறைய தண்ணி ஊத்திப் பாருங்க” என்றார்.நானும் அவ்வாறே ஊற்றி விட்டுப் பார்க்க தண்ணீர் எங்கும் நிற்காமல் வேகமாக வெளியேறி நிம்மதியளித்தது.

    கோவிந்தன் தான் உபயோகப்படுத்திய பொருட்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு, திறந்த தொட்டிகளையெல்லாம் மூடினார்.பின் தரையைக் கழுவி, பினாயில் தெளித்து விட்டு குளித்து முடித்துக் கிளம்பினார்.

       அவரிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன்.”என்னா சார் எவ்ளோ வேல வாங்கிச்சி பாத்த இல்ல?” போட்டு குடு சார் என்றார்.’இன்னுமா ? சாப்பாட்டுக்கான  காசையே நாராயணனிடம் எப்படி பேசி வாங்கறதுன்னு தெரியல’ என்று எண்ணியவாறே “அவ்வளவு தாம்பா அவர் குடுக்க சொன்னாரு.வேணுன்னா அவர் வந்தப்பறமா வந்து கேட்டுப் பாரு”என்றேன்.உடனே பேச்சை மாற்ற வேண்டி “ஊருக்கு போறதா இருந்தீங்களாம்?” என்றேன்.

“ஆமா சார்.புள்ளயப் பாக்க போலாம்னு இருந்தேன்.சார் கூப்பிடவே வந்தேன்.புள்ளய நான் நாளைக்கு கூட போய் பாத்துக்கலாம்.பாவம் இந்த நாத்தத்தில நீங்க எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்றார் கரிசனத்துடன்.

“புள்ள உங்க கூட இல்லையா?படிக்கிறான்னு சொன்னீங்க’

         “ஆமா சார்.ஊர்ல படிக்கிறான்.இங்க இருந்தா,என்ன வேலைக்கு கூப்பிடறவங்க புள்ளையையும் கூட்னு வாயேன் ஒத்தாசைக்குங்கிறாங்க. ஒவ்வொரு நாள் எனக்கு உடம்பு முடியல வேற ஆள் வச்சி பாத்துக்குங்கன்னு சொன்னா ஏன் உம் புள்ள செய்ய மாட்டான்? அவன அனுப்பேன்றாங்க சார். எதுக்கு சார் அந்த புள்ளைக்கு இந்த நாத்த பொழப்பு?இது நம்மோடேயே போவட்டும்னு தான் என் மாமியார் ஊட்டுக்கு அனுப்பி நிம்மதியா படிக்கட்டும்னு விட்டுட்டேன்.காலேஜ் போய் படிக்கனும்றான்.படிடானு சொல்லியிருக்கேன்.நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். வரட்டா சார்”.

      யாரோ என்னைப் பளாரென அறைந்தார் போலிருக்க அவருக்கு “சரி’ என்பதாக தலையைக் கூட அசைக்க முடியாமல்   கூனிக்குறுகி உறைந்து போயிருந்தேன் நான்.

“சொட்,சொட்’ என்று மறுபடியும் தூறல் போட ஆரம்பித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

கோ.ஆனந்த்

கனவு காணுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

       உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கனவுகள் உண்டு. சிலர் அந்தக் கனவுகளைப் பகல்கனவாகவே வைத்திருப்பர். ஆனால் சிலர் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்வர். அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். அவர் கூறியது இளைஞர்களின் இலட்சியக்கனவு. “உறங்கும்போது வருவது கனவல்ல. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார்.  விவேகானந்தர் கூறினார் “நீ மீண்டும் மீண்டும் எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார். இலக்கின் நன்மையைக் கனவு காணுங்கள். வெற்றி அடைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியை உணர்ந்து பாருங்கள்.

           ஒருவரின் ஆழ்மனதில் இலட்சிய விதை விழுந்து விட்டால், அது வளர்ந்து மரமாகி பலன் தருவதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. மாற்ற முடியாது. உங்களின் வெற்றியைக் கனவு காணுங்கள். மகிழுங்கள். அது நாளடைவில் உங்களின் உறுப்புகள் அதை நனவாக்கும்.

கனவின் பலன்

             பழங்காலத்தில் ஆடைகள் தைப்பது என்றால் ஊசியை எடுத்து அதை நூலில் கோர்த்து ஆடையின் ஒருபுறம் ஒருவர் பிடித்துக்கொள்ள மறுபுறம் ஒருவர் துணியைத் தைப்பார் ஊசி முழுமையாக உள்ளே சென்று மறுபக்கம் வெளியே வரும். அதன் அடிப்பகுதியில் துவாரம் ஒன்று இருக்கும். இவ்வாறுதான் பழங்கால ஆடை தைப்பது நடைபெற்றது. சிலகாலம் சென்றது. ஒருவர் தன்மனைவிக்கு தையல் இயந்திரம் ஒன்றை தயார் செய்தார். ஆனால் அதற்கு ஊசியைக் கண்டறியவில்லை. பல மாதங்களாக அதைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார். ஊசி முழுமையாக உள்ளே செல்லாமல் எப்படி தைப்பது? அவருக்கு உறக்கமே வரவில்லை. ஊசி எவ்வாறு அமைப்பது என்று விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் அதே யோசனையாக இருந்தார். இரவெல்லாம் கண்விழித்திருந்த அவர் அதிகாலையில் உறங்கி விட்டார். அப்போது அவருக்கு கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் ஒரு தேவதை ஈட்டி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு “என்ன உறங்கிக் கொண்டு இருக்கிறாய். இன்னும் ஊசியைக் கண்டு பிடிக்காமல் என்ன செய்கிராய். கண்டு பிடிக்கவில்லை என்றால் இந்த ஈட்டியால் உன்னை குத்தி கொன்று விடுவேன்” என்று நெஞ்சை பிளக்க வந்தது. அப்போது அந்த ஈட்டியின் குத்தும் முனையில் ஒரு துவாரம் இருந்தது. இதைப்பார்த்த அவர் பயந்து உறக்கம் களைந்து எழுந்து விட்டார். எழுந்த அவர் அந்தப் பயம் சென்றதும் நிதானமாக அந்த கனவை நினைவுக்கு கொண்டு வந்தார். அவ்வேளையில் அவரின் மூளையில் ஒன்று தோன்றியது. தையல் இயந்திர ஊசியைக் கண்டுபிடித்து விட்டார். எவ்வாறு இது சாத்தியம். அவர் கனவில் கண்ட அந்தத் தேவதையின் கையில் இருந்த ஈட்டியின் முனைப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரம் ஊசியின் முனையில் அமைக்கப்பட்டது. அதனாலே இயந்திர ஊசி கிடைத்து விட்டது.

     கவனியுங்கள்! அவருடைய யோசனை சிந்தனை கனவு மூலமாக ஒரு வெற்றியை தந்தது. அவரின் இலக்கை அடையும் வெற்றி கனவாகவே வந்து விட்டது.

 கட்டிட நிபுணர்களைப் போன்று செயல்படுங்கள்

     கட்டிட நிபுணர்களைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு அரண்மனை அந்தப்புரம் அரசவை என்றாலும் ஒரு பெரிய வீடு பங்களா எதுவாக இருந்தாலும் முதலில் திட்டமிட்டு அவற்றை தெர்மாகோல் போன்றவற்றால் அமைத்து கண்முன்னே வைத்துவிடுவார்கள். மற்றவர்கள் கனவு காணுவார்கள். ஆனால் இவர்கள் அதனையும் கண்முன்னே வைப்பார்கள். அவற்றைச் சுற்றிப் பூங்காக்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதனுள்ளே தண்ணீர்க்குழாய்கள் செல்லும் வழி மின்சாரம் செல்லும் வழி கழிவுநீர் மழை நீர் எனச் செல்லும் வழி இவ்வாறு எத்தனை அறைகள்? தரை எந்தக் கற்களால் அமைக்க வேண்டும்.  எந்த இடத்தில் சோபா வைப்பது? சுவர்களுக்கு என்ன வண்ணம் பூச வேண்டும் போன்ற அனைத்தையும் செய்து முடித்து கண்முன்னே வைத்திருப்பார்கள். இவ்வாறு வெற்றியடையப் போகும் நீங்களும் உங்களின் எதிர்கால வாழ்வை  வசந்தமான சமூகத்தை அகக்கண்களில் காணுங்கள். கற்பனையாக உருவத்தை செய்து கொள்ளுங்கள். உங்களின் இலக்கை அடைய நீங்கள்தான் செயல்பட வேண்டும். உழைக்க வேண்டும். உங்களின் உழைப்பு மட்டுமே உங்கள் கனவை நனவாக்க முடியும். எளிமையாக எந்த வெற்றியும் கிட்டாது. அவ்வாறு கிட்டும் என்று நீங்கள் நம்பினால் அது அழிவையே கொடுக்கும்.

இலவசம் – எளிமையாகக் கிடைப்பவை ஆபத்தானவை

             இலவசமாக கிடைக்கிறது என்று எவற்றையும் பெறவேண்டாம். படித்த கதை ஒன்று, ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தனது நிலத்தை உழுது பயிர் செய்து தன்குடும்பத்தை காத்து வந்தார். அறுவடை முடிந்து விட்டது. சிலமாதங்கள் ஆகும் மீண்டும் பயிர் செய்வதற்கு. அந்த இடைப்பட்ட காலத்தில் நிலம் உழுது போட்டிருக்கும். அந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள மண்புழுக்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு சந்தையில் விற்பதற்காக சென்றார். செல்லும் ஒரு காட்டு வழியில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது இந்த உழவரிடம் கேட்டது “எங்கு செல்கிறாய்? கூடையில் என்ன? என்றுது. அவர் “கூடையில் மண்புழுக்கள் உள்ளன. அவற்றை விற்பதற்காகச் சந்தைக்குச் செல்கிறேன்” என்றார். அந்தப் பறவை “எனக்கு மண்புழுக்களைத் தருகிறாயா? அதற்குப் பதிலாக என் மென்மையான இறகுகளைத் தருகிறேன்” என்று கூறியது. அந்த உழவரும் சரி என்று புழுக்களைக் கொடுத்து விட்டு இறகுகளைப் பெற்றுக்கொண்டு சந்தையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இதேபோன்று ஒவ்வொரு வாரமும் அந்தப் பறவை உழவனிடம் புழுக்களைப் பெற்றுக்கொண்டதால்  வேறு எங்கும் பறந்து செல்லவில்லை. மரத்தின் கூட்டிலேயே இருந்தது. ஏனென்றால் விவசாயி புழுக்களைக் கொடுத்ததால் உழைக்க வேண்டிய தேவை இல்லை.

    விலங்கினம் என்றால் நடக்க வேண்டும். பறவை என்றால் பறக்க வேண்டும். மனிதன் என்றால் உழைக்க வேண்டும் இவையே அவற்றின் ஆரோக்கியம். இது மனிதனுக்கும் விளங்கவில்லை. இதை அறியாத அந்த பறவை மிகவும் சந்தோஷப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு அதன் உடலும் பறக்க மறுத்தது. அந்தப் பறவை ஒவ்வொரு முறையும் அதன் இறகுகளை பிடுங்கி கொடுத்துக்கொண்டே இருந்தது. நாளடைவில் அதன் உடலில் பறப்பதற்கு இறக்கைகளில் இறகுகளே இல்லை. உழவருக்கு புழுக்களுக்குg பதிலாக கொடுப்பதற்கும் இறகுகள் இல்லை. இனி பறக்கவும் முடியாது, பறவைக்கு இனி உணவும் கிடைக்காது. எளிமையாக கிடைக்கிறது என்று எண்ணி செய்த இந்தச்செயல் அந்த பறவையின் உயிரையும் இழக்கச் செய்தது.

           பறந்து சென்று தானே இரையைத் தேடிச்சென்று உண்டு நீர்நிலையைக் கண்டறிந்து நீரை பருகிவிட்டு சுதந்திரமாக வானத்தில் பறந்து தென்றல் காற்றை நுகர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்த பறவையானது  எளிமை இலவசம் என்று நம்பி உழைப்பைக் கைவிட்டதால் உயிர் விட்டது. எனவே எளிமையும் வேண்டாம் இலவசமும் வேண்டாம் உழைப்பே நிரந்தரமானது. உன்னதமானது. மற்றவையெல்லாம் எப்படி வந்ததோ அப்படியே சென்று விடும். நீங்கள் இதனை உணர்ந்து செயல் படுங்கள்.

மாறுபட்ட கருத்துக்களையும் பரிசீலனை செய்யலாம்

        உங்களுக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறதா? ஒன்றும் தவறில்லை. நீங்கள் அவருடன் இன்னும் நெருங்கிப் பழகுங்கள். உங்கள் மீது அல்லது உங்களின் செயல்மீது நம்பிக்கை கொண்டவரால் மட்டுமே உங்களிடம் மாறுபட்ட கருத்துக்களைக் கூற முடியும். அவர்கள் கூறும் கருத்துக்களைச் செவிமடுத்து எந்த காரணத்தால் அவ்வாறு கூறினார்கள் என்பதை அவரின் கண்ணோட்டத்திலிருந்தே கவனியுங்கள். அப்போதுதான் கருத்தின் உண்மைநிலை விளங்கும். யாரிடமும் எதிர்மறையான கருத்துக்களையோ சொற்களையோ முன்வைக்காதீர்கள். அது வாதத்தில் கொண்டு விட்டுவிடும். பொதுவான ஒன்றைப்பற்றி கருத்துக்களைக் கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. எனவே அனைவரின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து கொள்ளுங்கள். எத்தனை பேர் எவ்வளவு முக்கியமான நபர்கள் கருத்துக்களைக் கூறியிருந்தாலும் உங்களின் மூளை எவ்வாறு கூறுகிறதோ அதுவே தீர்க்கமான முடிவு என்பதை உணருங்கள். ஆதலால் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

பலவீனம், வெளிக்காட்டலாகாது

          ஒருவர் உங்களிடம் ஒரு கருத்தைக் கூற முன்வருகிறார் என்றால் முதலில் நீங்கள் பேசாதீர்கள். அவருக்கு வாய்ப்பளியுங்கள். அவர் முழுவதுமாகப் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்து கவனியுங்கள். அவரின் கண்களையே கவனித்தீர்கள் என்றால் அவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரா? என்பதை உங்களால் கணிக்க இயலும். சிலர் உங்களிடம் அவரின் காரியங்களை நடத்திக்கொள்ள நடிப்பாகப் பேசலாம். எப்பொழுதும் உங்களின் பலவீனத்தை வெளிக்காட்டலாகாது. மற்றவர்க்கு அது தெரிந்தால் உங்களை செல்லாக்காசாக மாற்றிவிடுவார்கள். பலவீனத்தைக் கொண்டே வீழ்த்தி விடுவார்கள்.

பலவீனத்தால் மாண்ட நந்திவர்மன்

        நந்திவர்மபல்லவ அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் மாபெரும் ஆற்றல் மிக்கவர். அவருடன் யார் போர் செய்தாலும் தோற்றுவிடுவர். இவர் எந்த நாட்டிற்கு போர்தொடுத்துச் சென்றாலும் வாகை சூடிக்கொள்வார். போர்முனையில் நேருக்கு நேராக நின்று இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அந்த அளவிற்கு ஆட்சி செய்து மக்களைக் காக்கும் மன்னர் இவர்.

      இந்த மாமன்னருக்கு அறம் பற்றிய பாடல்களைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம். இந்த நந்திவர்ம பல்லவனை வீழ்த்தவே முடியவில்லையே! வேறுவழியில் இவனை தோற்கடிக்க நினைத்தனர். மன்னனின் உறவின சகோதரர்கள். எனவே நந்திவர்மனின் பலத்தை தெரிந்து கொண்ட அவர்கள் அவனுடைய பலவீனம் என்ன? என்பதை ஆராய்ந்தனர். மன்னன் அறம் பற்றிய பாடல்களைக் கேட்கும் ஆர்வத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் அறம் பற்றிய நூறு பாடல்களைப் புலவர்களைக் கொண்டு எழுதச் செய்தனர். பின்னர் அதனை வாசித்துக்காட்ட ஒரு புலவனை அனுப்பி வைத்தனர். அப்புலவன் நந்திவர்மனை வணங்கி தான் அறப்பாடல்களை எழுதியுள்ளதாகக் கூறினான். நந்திவர்மனும் அவற்றை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், புலவனை வாசிக்குமாறு கேட்டார். அதற்கு அப்புலவன் ஒரு நிபந்தனை விதித்தான் “நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் இந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும். அடுத்த பாடலுக்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்” என்றான். அதற்கும் நந்திவர்மன் ஒத்துக்கொண்டான். முதலாவது பந்தல் அரண்மனை வாயிலில் அமைக்கப்பட்டு நூறாவது பந்தல் மயானத்தில் முடிக்கப்பட்டிருந்தது. புலவரும் பாடல்களை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினான். மன்னனும் ஒவ்வொரு பந்தலின் கீழும் அமர்ந்து அந்தப் பாடல்களைக் கேட்டான், அவர் இறங்கிச்சென்றதும் பந்தலானது தீப்பற்றி எரிந்தது. இவ்வாறே அனைத்துப் பந்தல்களும் எரிந்தன. மன்னர் நூறாவது பாடலைக் கேட்க, நூறாவதாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழாக அமர்ந்து பாடலை கேட்டார். பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே பந்தல் தீப்பற்றி எரிந்தது. அதில் மன்னனும் எரிந்து இறந்துவிட்டான் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கவனியுங்கள் நந்திவர்மனைப் பலத்தால் வெல்ல முடியாத அவர்கள் அவரின் பலவீனத்தை அறிந்து கொண்டு அதன்மூலம் வீழ்த்தி விட்டனர். எனவே உங்கள் பலத்தை வெளியே காட்டுங்கள். பலவீனத்தை அல்ல. கனவு காணுங்கள். கனவு மெய்ப்பட உழையுங்கள். வெற்றி நிச்சயம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

14.உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

கற்பனை என்பது என்ன? கற்பனையின் வகைகள் யாவை?

கற்பனை


            கலையுலகில் விளக்குவதற்கு மிகவும் அரியதாய் உள்ள மொழிகள் பகுதிகளில் ஒன்று கற்பனை என்பது. உலக மொழிகள்  பலவற்றையும் சார்ந்து பிறந்த பல்வேறு இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் பல்வேறு அறிஞர் ‘கற்பனை’ என்பதனை வரையறை செய்ய முயன்றுள்ளனர். ஆயின் எந்த ஒரு வரையறையும் குறிப்பிட்ட கவிஞர் சிலர்க்கோ அல்லது சில வகை இலக்கியங்களுக்கோ பொருந்துவதாய் உள்ளதேயன்றிக் கற்பனையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் முழுமையும் செம்மையும் நிறைந்ததாய் அமையவில்லை. ஆயினும் கற்பனை பற்றிய பல்வேறு வரையறைகளும், ஏதேனும் ஒரு வகையில் அல்லது பல வகையில், கற்பனையின் வண்ணத்தையும் கற்பனை ஊற்றெடுத்துப் பொங்குதற்குரிய தன்மையையும் வெளிப்படுத்துவதாய் நிலைக்களத்தின் விளங்குகின்றன. கற்பனை பற்றிய ஒரு முழு வரையறை திறனாய்வு உலகில் இன்னும் எழவில்லையாயினும் இது வரையும் எழுந்துள்ள வரையறைகள் பலவும் கூடி, கற்பனை பற்றி நமக்கு ஒரு பெரிய சிந்தனையை எழுப்புவனவாய் உள்ளன.


            இனி கற்பனையாவது யாது என்பது பற்றி ஒருவாறு காண்போம். கவிஞன் கண்ட காட்சி அல்லது உணர்ந்த உணர்வு அல்லது ஆழத் தோய்ந்த அழகின் கோலம் அவனது படைப்பின் வாயிலாக வெளிப்பட்டு விளங்குகின்றது. உருவாக்கப்பட்ட பாட்டைப் பயிலும்போது அழகுடையது என்றும், ஆற்றல் மிக்கது என்றும், அருமையாக அமைந்தது என்றும், அற்புதமாக உள்ளது என்றும் நாம் பாராட்டி மகிழுகின்றோம். கவிஞன் தன் படைப்புக் கலையில் வெற்றி பெறும்போது இவ்வாறு நாம் பாராட்ட முடிகின்றது. கவிஞன் வெற்றி பெறவில்லையெனில் பாட்டு நன்றாக இல்லை என்றும் சுவை குறைந்துவிட்டது என்றும் வெறுங்கற்பனை என்றும் குறை கூறி ஒதுக்கிவிடுகின்றோம். ஆகவே, பாட்டு அழகாக உள்ளது என்றோ நன்றாக அமையவில்லை என்றோ ஏதோ ஒரு வகையில் நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. கவிஞன் படைத்த பாட்டு நம் உள்ளத்தைத் தொட்டு உணர்வுக்கு விருந்தாக சொல்லடுக்கு வித்தையாகக் கழிவதையும் நோக்கிக் கவிஞனின் அமைவதையும் மாறாக உள்ளத்தைத் தொடாது வெறுஞ் வெற்றி தோல்விகளை நம்மாற் கணிக்க முடிகின்றது. எனவே கவிஞன் ஒருவனின் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் இவ்வெற்றி தோல்விகளே கலையுலகக் கட்டளைக் கற்களாக அமைகின்றன. வெற்றியைப் பற்றிய சிந்தனையே இப்போது நமக்கு வேண்டுவது. பாட்டுக் கலையில் கவிஞன் எதன் துணை கொண்டு வெற்றி பெறுகின்றான்? சொல்லாலா? பாட்டின் பொருளாலா? ஓவியத்தாலா? உணர்ச்சிப் பெருக்காலா? உவமை, உருவகம் போன்ற அணிகளாலா? தான் கண்டதைப் பிறருக்குக் காட்ட வல்ல ஆற்றலாலா?


            சொல்லும் பொருளும் ஒலிநயமும் பாட்டின் அடிப்படைக் கூறுபாடுகள்; உடலுக்கு உயிர் அமைந்தது போலப் பாட்டுக்கு உயிராக உள்ளவை. இவையும் கவிஞனின் வெற்றிக்கு இன்றியமையாக் கருவிகளே; ஆயினும் படைப்போன், பயில்வோன் ஆகிய இருவர் தம் கூட்டு முயற்சியாக இயங்கும் கலையுலகில் கவிஞன் வாகை சூடுவதற்கு இவை மட்டும் போதா, இவற்றுக்கு அப்பாலும் ஒன்று வேண்டும். அதுதான் கற்பனை, கற்பனையாவது கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சியையோ பெற்ற அழகின்ப அனுபவத்தையோ அல்லது கண்ட காட்சியையோ நாமும் முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்தோ அனுபவித்தோ கண்டோ அமைத்துக்காட்டும் அரிய கலைத்திறனாகும். இவ்வுண்மை இன்புறுமாறு கவிதையல்லாத ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்தும்.

கற்பனையும் பயனும்

            கவிஞன் அழகை வியந்து நோக்கிப் புதுப்புது இன்ப அனுபவம் பெறுவதில் குழந்தை போன்றவன். அழகு. இயற்கை உலகிலும் உண்டு; மனிதர்கள் நடமாடும் செயற்கை உலகிலும் உண்டு; இயற்கையை மனிதன் அனுபவிக்கும் அனுபவத்திலும் உண்டு. இம் மூவகை அழகிலும் ஈடுபட்டுத் தன்னை மறந்து இன்ப அனுபவ உலகில் வாழவல்ல பேராற்றல் அல்லது கலையியல்பு கவிஞனுக்கு இயல்பாக வளர்ந்திருக்கிறது. அம்மறந்த நிலையினின்றும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்தவுடன் அந்த அழகையும் அனுபவத்தையும் ஒருமுகப் படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் தன் உள்ளம் விரும்பியவாறு. கூட்டியோ குறைத்தோ சீராக்கி, சொல்லோவியங்களாகத் தீட்டிக் காட்டும்போது, அவனிடம் இயல்பாக அமைந்த இயல்பூக்கக் கலையுணர்வு புதிய ஒளியும் மெருகுங் கொண்டு கற்பனைத் திறனாய் இயங்கிப் பயன் விளைவிக்கின்றது எனலாம்.

            கவிஞன் தன் கற்பனையின் துணைகொண்டு நம்மைப் புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்லுகின்றான். இதுகாறும் நாம் காணாத அழகையெல்லாம் முழுமையாக நமக்குக் காட்டி இன்புறுத்துகின்றான்; தெளிவாகக் காணாத பொருள்களைத் தெளிவாகக் காணச் செய்கின்றான்; எங்கெங்கோ பிரிந்து கிடந்த இயற்கைக் கூறுபாடுகளை நம் மனக் கண்முன் கொணர்ந்து ஒன்றுபட நிறுத்தி நம்மை உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கச் செய்கின்றான்; மண்ணிலே நின்று விண்ணை அளக்கின்றான்; விண்ணிலே பறந்து மண்ணுக்கு வருகின்றான்; அருவப் பொருள்களை உருவப் பொருள்களாக மாற்றுகின்றான்; உருவப் பொருள்களை அருவப் பொருள்களோடு இணைக்கின்றான்; பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் உற்று நோக்கி அவற்றின் உண்மைத் தன்மைகளை ஒளியுடன் படைத்துக் காட்டுகின்றான்; முரண்படுவது போலத் தோன்றுகின்ற இருவேறு காட்சி களுக்கிடையே ஓர் ஒற்றுமையைக் காட்டி நம் உள்ளத்தை நெகிழச் செய்கின்றான்; உருவிலும் வடிவிலும் சிறியதாயிருக்கும் பொருள்களைப் பெரிய தாக்குகின்றான்; பெரியதாயிருக்கும் பொருள்களைச் சிறிதாக்கிக் காட்டுகின்றான்; அனைத்துக்கும் மேலாக எல்லையற விரித்து பரந்து கிடக்கும் இயற்கைப் படைப்புக்குள் அமிழ்ந்துள்ள அமரத் தன்மையை உணர்த்தி நம் உள்ளம் உருக வைக்கிறான்.


கற்பனை வகைகள்

            வின்சென்டர் என்னுந் திறனாய்வாளர் கற்பனையை மூவகையாகப் பிரிக்கின்றார். படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்பன அவை ”தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டுந் திறனே படைப்புக் கற்பனையாகும். உணர்ச்சி கருத்து வகையிலோ காட்சி வகையிலோ வகையிலோ ஒரு நிகராகத் தான் கண்டவற்றை இணைத்துக் காட்டுவது இயைபுக் கற்பனை எனலாம் ஆன்மிகத் தன்மை அல்லது ஆன்மிகச் சிறப்பை உணர்ந்ததால், பொருள்களைச் சித்திரித்துக் காட்டும்போது அவ்வியல்பு பொருந்தியுள்ள பகுதிகளையோ அவ்வியல்புகளையோ புலப்படுத்தும் வகையில் கற்பனை செய்வது கருத்து விளக்கக் கற்பனையாகும்.

            இனி, படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்ற மூன்றுக்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.


படைப்புக் கற்பனை

            நாம் ஒரு பொருளைக் காணும்போது மேற்போக்காகக் கண்டு மகிழும் அளவிலே நின்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அதே பொருளைக் காணும்போது அழகை முழுமையாகவும் தெளிவாகவும் காணுகின்றனர்.  அதன் கற்பனையின் துணைகொண்டு காட்டவும் வல்லவராகின்றனர். பெற்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அந்த அழகை மறவாது. போற்றி வேறோர் இடத்தே மற்றொரு பொருளின் அழகைக் காணும்போது இருவகை அழகுணர்ச்சியையும் ஒன்றாக்கிப் புதியதோர் அழகின்ப உலகத்தைப் படைத்துக் காட்டுகின்றனர். கண்முன்னே நாம் காணும் பொருள்களைக் கொண்டே கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பைக் கண்டு மகிழ்ந்து அத்துடன் அமைதி வல்லவராகின்றனர். சான்றாக,


பாலாழி மீதுபடர்ந்த வெண்ணெய் – ஒரு

பந்தா யுருண்டு திரண்டதுவோ

மேலா யுலகில் ஒளிசெயவே-ஈசன்

விண்ணகமிட்ட விளக்கிதுவோ?

                                                        (மலரும் மாலையும்-312)


பொன் மரம் காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள் ஆடும் கழங்கிதுவோ?

கன்மன முங்களி கொள்ளக் – கவினொளி

காட்டி விளங்கும் மதியிதுவோ?

                                                                      (மலரும் மாலையும் 314)

என்னும் கவிமணியின் பாடலில் படைப்புக் கற்பனை அமைந்துள்ளதனை அறியலாம்.


            கவிமணி நிலத்திலே நிற்கின்றார்; மேல் நோக்கி வானத்தை அண்ணாந்து பார்க்கின்றார்; தம் கற்பனைச் சிறகு கொண்டு மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே சிறிது நேரம் பறந்து பார்க்கின்றார். இயற்கையில் நிகழும் விந்தையை முழுமையாகக் காண முயல்கின்றார் பிண்ணையும் படைத்தான் என அவர் நெஞ்சம் நினைக்கின்றது. மண்மகள் என்று அழைத்து மகிழ்கின்றோம். மண்ணைப் படைத்தவன் தானே மண்ணை விண்ணிலே தெரிவதோ வட்ட நிலா. சிறிது நேரத்திற்கு முன் ஒரு பந்தாகத் தெரிந்தது. இப்போதோ மண்ணிலி விண்ணுக்குச் சென்ற கழங்கு அதுபோலத் தெரிகின்ற யார்? அப்படியென்றால் விண்ணிலே கழங்கை விட்டெறிந்தவர் இத்துணை அருமையும் பெருமையும் வெண்மையும் குளுமையுங் கொண்ட ஒரு கழங்கை மண்மகள் அன்றி வேறு எவர்தாம் விடடெறிய முடியும்! ஆகவே இந்தப் பூமகள் கழங்கிதுவோ” எனக் கவிமணி பாடி இன்புறுகின்றார்.


            எங்கெங்கோ பரவிக் கிடக்கும் அழகெல்லாம் ஒன்றுகூடிப் பெருவனப்பாக நம் மனக் கண்முன் காட்சியளிப்பது போல நாமும் உணருகின்றோம். கவிஞனின் கூரிய கண்கள் மண்ணிலிருந்து விண்ணையும் விண்ணிலிருந்து மண்ணையும் விரைந்து நோக்க வல்லன.” என்னும் சேக்ஸ்பியரின் கருத்தையும் நினைந்து மகிழுகின்றோம்.


            எனவே இதுகாறும் கூறியவற்றால், தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டும் திறனே படைப்புக் கற்பனையாகும் என்பதனை உணரலாம்.


இயைபுக் கற்பனை

            காட்சி, உணர்ச்சி, கருத்து முதலியவற்றால் ஏதோ ஒரு வகையில் ஒன்று போலத் தெரிவனவாய்த் தன் மனத்திற்குப் பட்டவற்றை ஒன்றோடு ஒன்று இயைய வைத்து அழகுறச் காட்டுவது இயைபுக் கற்பனையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,

வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல் கோடியவனிழல்

உலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்


                                                       (கலித்தொகை, பாவைக்கலி, பா-10, வரி 1-7)

என்னும் பாடலைக் குறிக்கலாம்.


            பெருங்கடுங்கோ என்னும் புலவர் என்றோ ஒருநாள் வறியவன் ஒருவனின் இளமையானது வலுவின்றிப் பொலிவிழந்து வாடியிருந்ததைக் கண்டிருத்தல் வேண்டும். தன்பால் செல்வம் சேர்ந்தும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்றும் ஈயாது இரக்கம் கொள்ளாது ஒரு பயனும் இன்றிக் கீழ் மகன் ஒருவன் வாழ்நாள் கழித்தலைக் கண்டிருத்தல் வேண்டும். தீயவன் ஒருவன் எவருக்கும் அடங்காது. ஒழுக்கம் பற்றிக் கவலை கொள்ளாது, தீவினைகளைச் செய்து, புகழ் கெட்டுப் போனதைப் பார்த்திருத்தல் வேண்டும். கொலைத் தொழிலுக்கும் அஞ்சாது, குடிமக்களின் குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காது, தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு நெறியின்றி வரிவாங்கிக் கொண்டு செங்கோல் வளையப் பெற்ற மன்னவன் ஒருவனைக் கண்டிருத்தல் வேண்டும். இக் காட்சிகள் அனைத்தும் புலவரின் உள்ளத்தே விரைந்து சென்று ஆழ ஊன்றி நின்று உணர்வினை எழுப்பியிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஊன்றப்பட்ட உணர்வுகளுக்கே இடனாகிவிட்ட புலவர், பாலை வழியில் வேறொருநாள் வாடிய கொம்புகளையும், நிழலின்றி நிற்கும் மரங்களையும், மரங்கள் வெம்பி நிற்கும் நிலையினையும், நீரற்றுப் போய் முற்றும் உலர்ந்துவிட்ட கொடிய நிலத்தையும் கண்டுள்ளார். கண்ட இக்காட்சி. முன்னே இவர் பெற்ற உணர்வுகளோடு இயையத் தொடங்குகின்றது. இதன் விளைவே இயைபுக் கற்பனையாக வெளிப்பட்டுள்ள மேற்கூறிய பாடலாகும்.

கருத்து விளக்கக் கற்பனை

            இயற்கையாக நடக்கும் ஒன்றினிடத்துப் புலவர் தாம் நினைத்த கருத்து ஒன்றை ஏற்றி வைத்துக் கற்பனை செய்து பாடுவது கருத்து விளக்கக் கற்பனை ஆகும்.

            மனித வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் வளர்ச்சியும் கேடும் வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த திங்களைப் பார்த்த போது மாறிமாறி வருவதனைப் புலவர் ஒருவர் நன்கு உணர்ந்தார். பார்த்தார். பின், வானத்தில் இயல்பாகத் திரியும் அந்நிலவை, தம் அதற்கும் வளர்ச்சியும் தேய்வும் இருப்பதை நீடு நினைந்து கருத்திற்கு ஏற்ப, வளர்தல் தேய்தலாகிய வாழ்க்கை நிலையினை உலகத்தவர்க்கு உணர்த்துவதற்காகவே இங்கும் அங்கும் திரிவதாகக் கற்பனை செய்கின்றார்.


“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும்”  (புறநானூறு, 27, வரி: 11 – 14)

கற்பனையும் வெறுங் கற்பனையும்

            ஆழமான பொருத்தம் நிறைந்த சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றிற்கு வற்றாத கலை விருந்தாய் அமையும் கற்பனை போலவே, ஆழமற்ற, பொருத்தக் கூறுகள் குறைந்த, சிந்தனை உணர்ச்சி ஆகியவற்றிற்குச் சுவையான கலை விருந்தை அளிக்காததாய், வேடிக்கைப் போக்கும், விளையாட்டும் நிறைந்த கற்பனையும் உண்டு. இத்தகைய கற்பனை வெறுங்கற்பனை எனப்படும்.

            புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமையும்போது, ஆழ்ந்த பண்புகளற்ற, நிலையற்ற வெறும் கற்பனைகள் தோன்றும். புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும், உயர்வுடையதாகவும் அமையும்போது நிலைபெற்ற விழுப்பமுடைய கற்பனைகள் தோன்றும்’17 என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இதனால், ஆற்றல் மிக்க கற்பனையை ஒருவகையாகவும், ஆற்றல் குறைந்த கற்பனையை ஒருவகையாகவும் கொள்ள முடிகிறது. ஆற்றல் குறைந்த கற்பனை சுவை உள்ளதாக அமையலாம்; கற்பனைக்கு முரண்படாததாகவும் இருக்கலாம். ஆயின் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பத்தை ஊட்டுவதாய் அமரத்தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளதாய் இருக்க இடமில்லை.


            நல்ல கற்பனைக்கும் வெறுங்கற்பனைக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் கோல்ரிட்ஜ் என்னும் திறனாய்வாளர் எடுத்துரைத்துள்ளார். ‘கற்பனையை நான் இரண்டு வகையாகப் பாகுபடுத்துகிறேன். ஒன்றை முதன்மையானது என்றும். மற்றொன்றை இரண்டாம் நிலையானது அல்லது ‘சார்புக்’ கற்பனை என்றும் கூறலாம். மனிதனுடைய புலனுகர்ச்சிகள் அனைத்திலும், முதன்மையானதாகவும் உயிர்த்துடிப்பு மிக்க ஆற்றலாகவும் விளங்குவது முதனிலைக் கற்பனையேயாகும். வரம்பற்ற “நானிலிருந்தும் படைப்பெனும் வரம்பிலாச் செயலிலிருந்தும் வரம்புடைய மனத்திற்கு என்றுமுள படைப்பாற்றலைத் திரும்பக் கொண்டு வருவதே முதனிலைக் கற்பனையாகும்.


            இரண்டாம் நிலைக் கற்பனை, முதனிலைக் கற்பனையின் எதிரொலியாகும். தன்னுணர்வுமிக்க உள்ள உறுதியோடு அது எனினும், இயங்கும் நிலையில் முதனிலைக் உடனுறைகிறது. கற்பனையோடு ஒப்புமையுடையதாகவே அது தோன்றுகிறது; இயங்கும் முறையின் அளவிலும் அது சிறிது வேறுபடுகிறது. அது வெறுங் கற்பனை என்பது இதற்கு எதிர் நிலையில் உள்ள எத்தகைய பொருளையும் உணர்த்துவது அன்று. ஆனால், நிலைபேறான இயல்புகளையும் தெளிவான எல்லைகளையும் வெறுங்கற்பனை என்பது உடையது. உண்மையில் நினைவாற்றலின் ஒரு செயல் வகையே அன்றி வேறில்லை. அச்செயல்வகை, காலத்தையும் இடத்தையும் வென்றதாக அமைகிறது. உள்ளவுறுதியின் அனுபவத்தால் அறியப்படுகின்ற இயற்காட்சியால் அது மாற்றமுறுகிறது.


            ஆயின் கோல்ரிட்ஜின் கருத்து வெளிப்படுவதற்கு முன்னர் வெறுங்கற்பனை (Fancy) பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இக்கருத்துகளை ஒட்டியே, வெறுங்கற்பனை என்பதனை விளையாட்டுப் போக்கோடும், வேடிக்கையோடும் கூடிய கற்பனையாகக் கொள்கின்றோம்.


தொல்காப்பிய உவமை இயலும் கற்பனையும்


            தொல்காப்பியர் உவமை இயலில் கற்பனையோடு தொடர்புடைய சில செய்திகளையும் கூறியுள்ளார். ஒரு பொருளைப் பற்றிக் கவிஞர் பாடும்போது அதனை வேறு ஒன்றோடு ஒப்ப வைத்துச் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விருந்தாக அமையுமாறு செய்வதும், கற்பனை ஆற்றலின் வண்ணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். உபமானம், உபமேயம் இரண்டையும் இணைக்கும்போது அவ்விரண்டுக்கும் பொதுத்தன்மைகள் அமையக்கூடும். அப்பொதுத் தன்மைகள் தொழில், பயன், வடிவம், நிறம் என்னும் நான்கின் அடிப்படையில் அமையலாம் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.


‘வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம்” (உவமையியல்-1)

            உவமையானது இந்த நான்கின் அடிப்படையில் அமையும்போதே கவிஞரின் கற்பனைக்கு இடமுண்டு என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்


“புலி போலப் பாய்ந்தான்” வினையாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“மாரியன்ன வண்கை’ பயனாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


‘”துடிபோலும் இடை” – வடிவாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“தளிர்போலும் மேனி-நிறமாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


தொல்காப்பியர் கருத்துப்படி, மேற் கூறிய நான்கும் கட்புலன் ஆகும். (கண்ணுக்குத் தெரிவன).


            இனி, கண்ணுக்குப் புலனாகா வண்ணம், ஆனால், செவிக்கும், நாவிற்கும், மூக்கிற்கும், தொடுபொறிக்கும் (மெய்க்கும்) மனத்துக்கும் புலனாகும் உவமைகளும் உண்டு.


செவிப்புலனாவது ஓசை -“குயில் போன்ற மொழி’ என்பது போல்வன.


நாவிற்குப் புலனாவது கைப்பு, காய்ப்பு முதலிய சுவை – “வேம்பு போலக் கைக்கும்’ என்பது போல்வன.

மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின-“தீப்போலச் சுடும்” என்பது போல்வன


மூக்கால் அறியப்படுவன நறு நாற்றம் தீ நாற்றம்-“ஆம்பல்  நாறுந்துவர் வாய்” (குறுந்தொகை 300) என்பது போல்வன.

மனத்தால் அறியப்படுவன  இன்பம், துன்பம் முதலியன

 “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள் : 1107)


            ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் கற்பனை என்ற சொல்லுக்கு வழங்கி வரும் பொருள்களைக் குறைந்தது ஆறு ஆகப் பிரிக்கலாம் ‘உருவகத்தையும் என்கிறார். அவ்வாறு பிரிக்கும்போது. உவமையையும் பயன்படுத்துவோர். குறிப்பாக மிக அற்புதமான முறையில் பயன்படுத்துவோர் கற்பனை கருதப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

            ரிச்சர்ட்ஸின் இக்கருத்துகள் தொல்காப்பியரின் உவமை இயல் கருத்துகளோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்கனவாகும். ஒரு பொருளையும் அதற்கு உவமையாகக் கவிஞர் காணும் ஒன்றையும் நாம் நன்கு அறிந்து மகிழுமாறு அமைக்கும் அணிவகை உவமை எனலாம். பொருளையும் உவமையையும் வேறுபடுத்தி அறியாது இரண்டையும் ஒன்று போலவே காணும் கலைப்பார்வையிலிருந்து பிறப்பது உருவகம் எனலாம்.


            ‘மதிபோலும் முகம்’ என வரும் போது முகம் என்னும் பொருளும், மதி என்னும் உவமப் பொருளும், வேறுவேறாய் நிற்க, போலும் என்னும் ஓர் உவம உருபினால் உவமைத்தன்மை உருவாகின்றது. இதனையே முகமதி என்னும்போது போலும் என்னும் உவம உருபு – மதிக்கும் முகத்திற்கும் இடையே வேற்றுமையைக் காட்டுகின்ற உவம உருபு – மறைந்துவிடுகின்றது. முகத்தையும் மதியையும் ஒன்றென்றே காணுகின்ற ஒரு வகைக் காட்சி அமைந்துவிடுகின்றது. எனவே உருவகம் என்பது செறிவுற வைக்கப்பட்ட உவமையாகும் என விளங்குகின்றது. எனவே கற்பனை முறையில் பயன்படுத்தப்படும் உவமைக்கும் உருவகத்திற்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உண்டென்று அறியலாம். உருவக இயல் என்ற ஒன்றைத் தனியே அமைக்காது 3 இயல் ஒன்றையே அமைத்து உருவக முறையிலும் வரும் உவமையியலிலேயே தொல்காப்பியர் சில செய்திகளை கூறியுள்ளது ஈண்டு எண்ணத்தக்கது.


            உவமை இயலில் உவமை அணியின் அமைப்புப் பற்றித் தொல்காப்பியர் சொல்லும் சில செய்திகளும் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையோடு தொடர்புடையனவாகும். இனி, அவற்றைக் காண்போம். வினை, பயன், மெய், உரு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றால் மட்டுமே உவமை அமைய வேண்டும் என்பது இல்லை; ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றாலும் அமையலாம். சான்றாக;


“இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகநானூறு, கடவுள் வாழ்த்து வரி 9)

என்னும் உவமையில், வடிவு நிறம் ஆகிய இரண்டு பற்றியும் உவமை அமைந்துள்ளது.
            உவமை அணியே ஐவகை விகற்பம் கொண்டு வரும் என்று தொல்காப்பியர் கூறுவது கற்பனை வகையில் அணிக்குள்ள சிறப்பிடத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இனி நூற்பா வருமாறு:


“உவமைப் போலி ஐந்தென மொழிப.’ (உவமையியல் 24)


இளம்பூரணர் இதற்கு உரை கூறும் போது,


‘அவையாவன இதற்கு உவமையில்லை எனவும், இதற்கிதுதானே உவமை எனவும் பல பொருளிலும்உள்ளதாகிய உறுப்புகளைத் தேர்ந்தெடுத்துக் இதற்குவமையாம் எனவும் பல கொண்டு சேர்த்தின் பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப் பொருளோடு உவமித்து வருவனவும் என விரித்துரைக்கின்றார்.

            மேற்கூறிய விளக்கத்தின் வண்ணம் அமைந்த உவமை அணியின் அமைப்புகளைப் புறநானூறு போன்ற இலக்கியங் களிலும் தண்டி அலங்காரம் போன்ற இலக்கணங்களிலும் முடிகிறது. சான்றுகளை இனிக் காண்போம்;


“நின்னோரன்னோர் பிறரிவணின்மையின்.

மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும.”  (புறநானூறு, 373, வரி: 33,34)


என்னும் பகுதியில் இதற்கு உவமை இல்லை” என்பதாகிய உவமையின் விகற்பத்தைக் காண்கின்றோம்.


“திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்

விரைமலர்க்கு மேலாந்தகையால் கருநெடுங்கண்

மானே யிருளளகஞ் சூழ்ந்த நின்வாண் முகம்

தானே யுவமை தனக்கு.’

 (தண்டியலங்காரம், பொருளணியியல், பொது நீங்குவமை)


என்னும் பாட்டில் ‘இதற்கு இது தானேயுவமை’ என்னும் உவமை விகற்பம் காணப்படுகின்றது.


“நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள், நாங்கள்

எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற்

சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால்

பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்தமானாள்.”

            என்னும் பகுதியில் பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சோத்தின் இதற்கு உவமையாம் என்னும் முறைமை உள்ளது.


“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்

வில்லேர் புருவத்து வேனெடுங்கண் – நல்லீர்!

முகம் போலுமென்ன முறுவலித்தார் வாழும்

அகம் போலு மெங்களகம்.”

(தண்டியலங்காரம், பொருளணியியல், அபூதவுவமை.) என்னும் பகுதியில், பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் என்னும் உவமை விகற்பத்தைக் காணுகின்றோம்.

“வாரா தமைவானோ வாரா தமைவானோ

வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன்

ஈரத்துளின்னவை தோன்றின் நிழற்கயத்து

நீருட்குவளை வெந்தற்று” (கலித்தொகை: 41)


என்னும் பாட்டில் கூடாப் பொருளோடு உவமித்துப் பாடும் முறைமை உள்ளது.’ ஒரு பொருளைப் பாடும்போது அஃது இன்னது என வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகத் தெரியுமாறு பாடுவதும் உண்டு. அங்ஙனம் பாடும்போது உபமேயப் பொருளுக்கு ஒத்த உபமானப் பொருளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உபமேயப் பொருளை நாம் உய்த்து உணருமாறு செய்வர். உவமையில் அமையும் இவ்வுத்தி கற்பனைக்கு விருந்தாக அமையும். தொல்காப்பியர்,


“உவமப் பொருளின் உற்ற துணருந்

தெளிமருங் குளவே திறத்தியலான. (உவமையியல்-20)


எனக் கூறும் போது, உவமப் பொருளால் உற்றதை உணருதல் ஆகிய உவமையைச் சுட்டுகின்றார். இளம் பூரணர் இதற்குத் தரும்
சான்றுகள் வருமாறு:


“ஐதேய்ந் தன்று பிறையுமன்று

மைதீர்ந் தன்று மதியு மன்று

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன்றன்று சுனையு மன்று

மெல்ல வியலும் மயிலு மன்று

சொல்லத் தளருங் கிளியு மன்று” (கலித்தொகை 55)


“கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்

செயலெழுதித் தீர்ந்த முகந்திங்களோ காணீர்

                                                (சிலப்பதிகாரம், கானல் வரி 11)


            இவ்வாறெல்லாம் உவமையைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ளுமாறு தொல்காப்பியர் உவமையியலை’ அமைத்ததன் காரணம் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையில் உவமைக்குரிய சிறப்பிடம் பற்றியேயாகும். எனவே, உவமையியல் வாயிலாகத் தொல்காப்பியர் கற்பனைத் திறன்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன்

டிம்மி | சிறுகதை

டிம்மி முனைவர் க.லெனின்

      இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி. இனிமேல் குடும்பத்த ஓட்டிடலாம். பெங்களூருக்கு வேலை தேடி வந்தன். ஐடி கம்பெனியில வேல கிடைச்சிடுச்சு. ஒரு வருஷமாவது ஒரே கம்பெனியில வேல பாக்கனும். ஏதாவது காரணத்தனால வேலைய விட வேண்டிய சூழ்நிலை வந்துடுது. இதுல என் மனைவிக்குதான் அதிக கோபம். நிரந்தரமா ஒரு வேலையில இருக்க மாட்டிங்களான்னு அடிக்கடி கேட்பா.. என்ன பன்றது. எல்லாம் என் தலைவிதி. மனசு நிறைவாத்தான் இருந்தது. இன்டர்வியூக்கு வந்துததுல காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. வயிறு வேற கிள்ளியது. வயிற்றுக்கு ஏதாவது டீயையோ அல்லது காப்பியையோ இறக்கினால் நல்லா இருக்குமுன்னு தோணுச்சி. எனக்கு நேரே இருக்கும் காப்பி ஷாப்பிற்குள் நுழைந்தேன்.  அந்த நேரத்தில் அனைத்து நாற்காலிகளிலும் ஆட்கள் உட்காந்திருந்தனர். யாரேனும் எழுந்திருந்தால் உடனே போய் உட்காந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராசு. அப்போது ஒரு நாற்காலியிலிருந்து ஒருவர் எழுந்து போகவே, ராசு உடனடியாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

       அது இரண்டு நாற்காலிகள் கொண்ட டேபிள். ராசுக்கு எதிரே இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் வெயிட்டர் ராசுவிடம்,

“சார் என்ன சாப்பிடுறீங்க…” என்றான்

“காபி மட்டும். ம்ம்.. அப்புறம் ஒரு கிளாஸ் சுடுதண்ணி” என்றான் ராசு.

தொலைபேசியில் வந்த அழைப்புக்கு பதில் கொடுக்க தயாரானான் ராசு. வெயிட்டரும் ராசுவுக்கு நேரெதிரே உட்காந்திருக்கும் இளைஞனிடம்,

“சார் உங்களுக்கு வேற எதாவது வேண்டுமா?” என்றான். அவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டே,

“ஒரு கப் காபி” என்றான்.

        கொஞ்ச நேரத்தில் வெயிட்டர், இருவருக்கும் காபியை மேஜையின் மீது அவரவருக்கு எதிரே வைத்தான். இரண்டு காபி கப்பிலிருந்தும் ஆவி பறந்தது. காபியின் மனம் மூக்கை சுண்டியிழுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் காபி டம்ளரை பிடித்தனர். மூக்கிற்கு கொண்டு வந்து முகர்ந்து பார்த்தனர். கொஞ்சம் கீழே இறக்கி வாயில் வைத்து சிறியதாய் உறிஞ்சினார்கள். மீண்டும் டம்ளர் மேஜையின் மீது ஒரே நேரத்தில் வைத்தனர். மீண்டும் இருவரின் நினைவுகளும் வேறுவேறு பக்கம். மீண்டும் காபியை ஒரே நேரத்தில் உறிஞ்சுகிறார்கள். இருவரின் செய்கைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தது. அவசர காலத்தில் இவைகளையெல்லாம் யார் பார்த்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கடையில் வருவதும் போவதுமாய்  வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது.

     ராசு அப்பொழுதுதான் கவனித்தான். தன்னெதிரே அமர்ந்திருப்பவனும் தன்னை போலவே காபியை உறிஞ்சுவதும் வைப்பதுமாகவே இருக்கிறானே..

       அவனும் இதையேத்தான் நினைத்திருந்தான். இருவரும் ஒரே சமயத்தில் நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டனர். இரண்டு பேர் முகத்திலும் எந்தவொரு சலனமும் இல்லாமல் பொம்மை மாதிரி பார்த்துக்கொண்டனர். அந்த இரண்டு பார்வைகளுக்கும் அர்த்தங்கள் நிறையவே இருப்பதாகத் தோன்றியது.

    ராசுவின் மனதில் பெரும் போராட்டமே நடந்தது. சின்னதா புன்னகைப்பதா… அல்லது சிரிப்பதா… இல்லன்னா ஹாய்.. ன்னு சொல்லலாமா? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்போது எதிரில் உட்காந்து இருப்பவனே முதலில் புன்னகைத்தான். ராசுவும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

“ஹாய்… ராசு! எப்படி இருக்க?” எதிரில் அமர்ந்திருப்பவன் கேட்டவுடன் ராசுவுக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. பதில் சொல்ல நா எழவில்லை. திக்கி தினறிப்போனான். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.  எப்படியோ,

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றான் ராசு.

“ம்.. நானும் நல்லா இருக்கேன். நீ எங்க இங்க? என்றான் அவன்.

“இன்டர்வியூக்கு வந்தேன்”

“என்னாச்சு”

“வேலை கிடைச்சிடுச்சி. வர்ற மண்டேயிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க..”

“எங்க தங்கியிருக்க”

“இனிமேலுதான் வீடு பாக்கனும்”

“சரிடா வீட்டுக்கு வா.. ரெண்ட்டுக்கு வீடும் பாத்துத் தரன்”

“இல்ல.. ஊருக்கு போகலாமுன்னு இருக்கன். நாளை மறுநாள்தான் பெங்களூர்க்கு வருவேன்”

“சரி.. அப்ப வரும்போது எங்க வீட்டுக்கு வா” என்று தன்னுடைய மேல் பாக்கெட்டில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து ராசுவின் கையின் கொடுத்தான்.

“சரி ராசு, அப்ப நான் கிளம்புறேன். பாக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியேறினான் அவன்.

அவன் என்னவோ நார்மலாத்தான் பேசினான். ஆனால் ராசுதான் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து அளந்து பேசினான். இன்று நடந்தது அவனுக்குக் கனவு போல் இருந்தது. உண்மையாலுமே ராசு பூரித்துப்போனான்.

     பேருந்து பயணத்தின் போது ஜன்னல் ஓரம் சீட்டைப் பிடித்துக்கொண்டான். காற்று சுகமாய் மனதை வருடியது. காபி ஷாப்பில் என் எதிரே அமர்ந்திருந்தவன் என்னுடைய சின்ன வயசு நண்பன்தான். பேரு பாலமுருகன். நாங்களெல்லாம் அவனை பாலுன்னுதான் கூப்பிடுவோம். ரொம்ப நல்லவன். பழையதை அசைப்போட்டுக்கொண்டான்.  இப்போது பழச நினைச்சு பார்க்கிறதுல ஒரு சுகம் இருந்தது ராசுவுக்கு. நினைச்சு பாக்கனுமுன்னும் தோனிச்சு அவனுடைய மனசு.

     அப்ப நாங்க ஐஞ்சாவது படிச்சிட்டு இருந்தோம்.  எங்க கிளாஸ்ல பசங்க இருபது பேரு. பொண்ணுங்க பதினைஞ்சு பேரு. மொத்தம் முப்பத்தி ஐஞ்சு. நான் எல்லாத்துக்கிட்டேயும் பேசுவன். ஆனா எனக்கு உயிர் நண்பன்னா.. அது பாலமுருகன்தான். அவனை எனக்கு அவ்வளவு புடிக்கும். அவனுக்கும் அப்படித்தான். எப்பவுமே நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் சுத்துவோம். வாத்தியாரு கூட எஙகள இரட்டையர்கள்ன்னு சொல்லுவாரு. நான் மத்த பசங்க கூட பேசறது பாலுவுக்குச் சுத்தமா புடிக்காது. ஏன்னு கேட்டா, நீ என்னோட உயிர் நண்பன்டா… என்பான். அவனும் மத்த பசங்க கூட அவ்வளவா வச்சிக்க மாட்டான். எங்களோட நட்பு யாரு கண்ண உறுத்துச்சின்னு தெரியல.

      அன்னிக்கும் வழக்கம் போல நானும் பாலுவும் வகுப்புல உட்காந்து வாத்தியாரு நடத்தின கணக்க போர்டுல பாத்து எழுதிட்டு இருந்தோம். வாத்தியாரும் வெளியில நின்னு யாரு கூடயோ பேசிட்டு இருந்தாரு. நான் எழுதிய கணக்கு தப்பாயிடுச்சு. அதை அழிக்கனுமுன்னு என்னுடைய பையில கைய விட்டு இரப்பரை தேடினேன். இரப்பர் என்கிட்ட இல்ல. பாலுகிட்ட கேட்டேன். அவனும் அவனுடைய பையிலிருந்து தேடி ஒரு இரப்பரை என்னிடம் கொடுத்தான்.  பாலுவிடமிருந்து வாங்கிய இரப்பரை உற்றுப்பார்த்தேன். அது என்னோட இரப்பர். போன வாரம் நான் தொலைத்தது. இரப்பருக்குப் பின்னால் R என்ற என்னோட பெயரின் முதல் எழுத்துப்  போடப்பட்டிருந்தது. போன வாரம் தொலைந்து போன இரப்பரை வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பாலுதான் எடுத்து வைத்திருக்கிறான்.

“டே பாலு, இது என்னோட இரப்பர்டா.. நீ தான் திருடி வைச்சிருந்தியாடா”

“அப்படியா! இது உன்னோட இரப்பரா… நான் திருடலடா. இந்த இரப்பர் என்னோட பைக்குள்ள எப்படி வந்ததுன்னே தெரியல”

“அது எப்படி உன்னோட பைக்குள்ள உனக்கு தெரியாம இரப்பர் வந்திருக்கும். ஒருவேளை இரப்பருக்குக் கால் முளைச்சி உன் பைக்குள்ள போயிருக்குமா?”

“தெரியலடா ராசு.. எப்படி வந்ததுன்னு… கண்டிப்பா நான் எடுக்கல. நான் உன்னோட பிரண்டுடா. நான் எப்படி எடுப்பேன்”

“திருடி வைச்சிட்டு… மாட்டிகிட்டவுடனே பொய் பேசுறியாடா.. நீதான்டா திருடன்.. திருடன்…” என்று ராசு கத்தினான். அந்தச் சத்தம் அறை முழுவதும் கேட்டது. மத்த பசங்களோட சத்தத்துல ஆசிரியருக்கு இவுங்க பேசிக்கிறது கேட்க வாய்ப்பில்லைதான். பசங்க மத்தியில ராசு பாலுவை திருடன்னு சொன்னது, பாலுவுக்கு பெரிய அவமானமாய் போய்விட்டது.

“ஏன்டா என்னையா திருடன்னு சொல்லுற, நீதான்டா திருடன். உங்கப்பா ஜோப்புல இருந்து நீதான்டா காச திருடிகிட்டு வருவ. எனக்கு தெரியாதா” என்றான். தனக்கும் பாலுவுக்குமே தெரிந்த இரகசியம். இன்றைக்கு அனைவருக்கும் முன்னால் இப்படி போட்டு உடைத்துவிட்டானே என்ற ஆத்திரம் ராசுவுக்கு.

“டே உங்க அம்மா டிம்மிடா”  பாலுவின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி மீண்டும் மீண்டும் உங்க அம்மா டிம்மிடா.. டிம்மிடா.. என்றான்.

பாலுவுக்கு கோபம் தலைக்கேறியது. ராசுவை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். வகுப்பு அமைதியானது. அவர்களும்தான். பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

அடுத்தநாள் ராசு கொஞ்சம் தாமதமாகவே பள்ளிக்கு வந்தான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைவரும் அவனையே பார்த்தனர். நேராகத் தன்னுடைய இடத்தில் போய் உட்காந்து கொண்டான். அப்போதுதான் தன்னுடைய நண்பன் பாலுவின் ஞாபகம் வந்தது. கண்களைச் சுழற்றி வகுப்பறை முழுவதும் பாலுவைத் தேடினான். பாலு இன்னிக்குப் பள்ளிக்கூடத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை.

“ஏன் பாலு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் ராசு. இன்னமும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ராசுவையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். ராசுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏங்கடா… எல்லோரும் என்னையே பார்த்திட்டு இருங்கீங்க”

கொஞ்சநேரம் அமைதிக்கு பின், அந்த வகுப்பின் பெண் பிள்ளை ஒருத்திதான் போட்டு உடைத்தாள்.

“டே ராசு… நீ எந்த வாயில பாலுவோட அம்மா டிம்ம்மின்னு சொன்னியோ… தெரியல, உண்மையாலுமே அவுங்க அம்மா நேத்துச் சாயந்திரமே செத்துப்போச்சுடா” என்றாள்.

       ராசுவுக்கு உடம்பு நடுங்கிப்போனது. நெஞ்சிலிருந்து இதயம் வெளியே தள்ளுகின்ற மாதிரி ஒரு வலியை அனுபவித்தான்.

       “உன் வாயி நாரவாயிடா…”

       “இந்த வாயி ஊத்தவாயி…”

       “இது கருநாக்கு வாயிடா…”

       “ஆளையும் மூஞ்சையும் பாரு.. ஒத்த சொல்லால ஒர் உசிரையே வாங்கிட்டு நிக்கிறத…”

       “இனிமே எங்ககூட நீ பேசக்கூடாது. எங்களுக்கும் அதுமாதிரி ஏதாவது சொல்லிட்டன்னா, நாங்களும் அம்மா இல்லாம இருக்கிறதா… அப்பா… எங்களால அம்மா இல்லாம இருக்க முடியாதுடா”

       மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் வாயிக்கு வந்தபடிக்குப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அனைத்து வசவுகளையும் ராசு ஏற்றுக்கொண்டான்.

       டிம்மி என்றால் என்ன? டிம்மின்னா என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம் எனக்கு தெரியுமா? கூட படிக்கிற பசங்க கோபம் வரும்போது மத்த பசங்கள,

              “உங்க ஆயா டிம்மி”

              “உங்க அப்பா டிம்மி”

              “உங்க அம்மா டிம்மி” ன்னு சொல்லுவாங்க. கண்டிப்பா அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாதே! நானும் கோவத்துல சாதாரணமாத்தானே பாலுவ சொன்னேன். உண்மையாலுமே பாலுவோட அம்மா செத்துப்போச்சா… அவுங்க அம்மா செத்ததுக்கு நான்தான் காரணமா? தலையைப் பிய்த்துக்கொண்டான் ராசு.  பையைத் தூக்கிப்போட்டு விட்டு பாலுவின் வீட்டிற்கு ஓடினான்.

       பாலுவின் வீட்டின் சந்தில் நுழையும்போதே மோளம் சத்தம் கேட்டது. கிட்ட போகப்போக பெண்களின் ஒப்பாரி சத்தம் ராசுவுக்கு என்னவோ செய்தது.

      வீட்டு வாசலில் மொட்டை அடித்துக்கொண்டு கழுத்தில் பூமாலையுடன் கண்கள் சிவந்து நின்றிருந்தான் பாலு. ராசு தூரத்தில் இருந்து பாலுவையே பார்த்துக்கொண்டு கிட்டே வந்து நின்றான். பாலு இப்படி நிற்பதற்கு முழுக்காரணம் தான்தான் என்று நினைத்தான் ராசு.

       ராசுவைக் கண்டவுடன் பாலு கோபத்தின் உச்சிற்கே சென்றான்.  தனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ராசுவை, ஓடிச்சென்று நெஞ்சிலே ஒரு உதை விட்டான். பாலுவின் உதையில் மல்லாந்து கீழே விழுந்தான் ராசு. கீழே விழுந்த ராசுவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஐந்து விரல்களையும் மடக்கி பிடித்தபடி மூஞ்சிலேயே குத்துக்குத்தென்று குத்தினான்.

“நீதான்டா எங்க அம்மாவை கொன்ன… நீ டிம்மின்னு சொன்னதனாலதான் எங்க அம்மா செத்துப்போனாங்க. உன்னாலதான் நான் இப்ப மொட்ட அடிச்சிட்டு அம்மா இல்லாத அநாதயா நிக்கிறன். நீ எனக்கு பிரண்டே இல்ல. என்னோட முத எதிரி நீதான்டா… உன்ன கொல்லாம விட மாட்டேன்” என்று ராசுவை தன் பலவந்த மட்டும் அடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது பக்கத்தில் இருந்த பெரியோர்கள் உடனே ஓடி வந்து பாலுவை இழுத்தார்கள்.

“என்ன விடுங்க.. அவன நான் கொல்லாம விடமாட்டேன். அவந்தான் எங்கம்மாவ கொன்னான். அவந்தான் எங்கம்மா டிம்மின்னு சொன்னான். என்ன விடுங்க.. என்ன விடுங்க…” என்று கத்தினான் பாலு.

முகம் வீங்கி வாயிலிருந்து இரத்தம் ஒழுக கிழிந்த சட்டையுடன் தேம்பி தேமபி அழுத கண்களுடன் நின்றான் ராசு. அங்கிருந்தவர்கள் அனைவரும் ராசுவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

     பேருந்து முன்பை விட இன்னும் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காலமும் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது. காலத்திற்கு எதனையும் மாற்றும் சக்தி உள்ளதோ? இந்த இருபத்தைந்து வருடங்களில் என் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிகழ்வு. அது இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறேன். என்மீது இன்னமும் கோபத்தில் இருப்பான் என்றே நினைத்திருந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அழகாய் சிரித்தான். வீட்டிற்கு வா என்றான். எனக்காக வீடு பார்த்துத் தருகிறேன் என்றான். அவனுடைய விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறான். தன்னுடைய கையில் இருந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை முன்னாலையும் பின்னாலையும் திருப்பி பார்த்தான்.

      ராசு, கார்டின் பின்பக்கத்தைப் பார்த்து பிரமித்துப்போனான். எந்தக் கம்பெனிக்கு இன்டர்வியூ போனானோ, அதே கம்பெனியின் தலைமை அதிகாரிதான் பாலு என்கிற பாலமுருகன். வாய்விட்டே சிரித்தான் ராசு. அவன் என்னுடைய உயிர் நண்பன். அவன் சந்தோசமா நல்லா இருக்கனும் என்று மனதார இறைவனை வேண்டினான்.  பேருந்துக்கு வெளியில் மழைத் தூரல் கொஞ்சகொஞ்சமாய் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

iniyavaikatral@gmail.com

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »