Sunday, April 5, 2026
Home Blog Page 31

விருட்சத்தின் விதை – வெற்றி

விருச்சத்தின்-விதை-வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

            மனித  வாழ்வில் நடக்கும் அனைத்து வகையான செயல்களுக்கும் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களில் பலர் சமுதாயத்தில் புலம்புவதைப் பார்க்கலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் மட்டுமே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றேன் என்று வேதனைபடுவார்கள். ஆனால் அந்த இடர்பாடுகளில் இருந்து, தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.

         இன்னல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர எதிர்நீச்சல் போட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றி என்ற மரத்தின் விதை என்பது அவரவர் வாழ்வில் பட்ட அவமானங்களும் தோல்விகளும் துன்பங்களும் ஆகும். தீக்குச்சி பெட்டிக்குள் இருக்கும் வரை அமைதியாக இருக்கும். அதை வெளியே எடுத்து உரசிவிட்டோம் என்றால் அதன் சக்தியை அது காட்டி விடும்.

துன்பத்திலிருந்து மீட்டெடுங்கள்

     சமுதாயத்தில் அவமானப்பட்ட இழப்பாக இருக்கலாம். கொடுக்கப்பட்ட அநீதிகள் செய்யப்பட்ட அக்கிரமங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்று பலவற்றை உரமாக்கி வெற்றியின் விருட்சம் வளர்கிறது.

        நான் அறிந்த பெண் ஒருவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அங்கு கணவன் வீட்டில் தனக்கு அன்புதான் கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அடிமைத்தனத்தைப் பரிசாக்கினார்கள். மணம் செய்து கொண்ட கணவனே நீயா? நானா? என்று போட்டிக்கு நிற்பது. மட்டம் தட்டி பேசுவது இவ்வாறு பல இன்னல்கள். அந்தச் சிறுவயதில் தான் படித்தே ஆகவேண்டும் என்று படித்தாள் அப்பெண். இதற்கிடையில் கருவுற்றிருந்தாள் அவள். இருப்பினும் வெறி கொண்டு படித்தாள்.  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வது சரியாகும் என்று தெளிவாக முடிவெடுத்தாள். மாதங்கள் சென்றன பல அரசாங்க தேர்வுகளை எழுதுவாள். குழந்தை பிறக்கும் மாதமும் பிறந்தது. ஆனாலும் இப்பெண் ஓய்வெடுக்கவில்லை. அவள் எதிர்பார்த்த தேர்வும் வந்தது. அத்தேர்வுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது குழந்தை பிறந்துவிட்டது. எனினும் அப்பெண் தேர்வு எழுத சென்று வெற்றியும் பெற்றார். அரசு அதிகாரியாகப் பணியில் அமர்த்தப்பட்டார். இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது. அப்பெண்பட்ட அவமானங்கள்தான் அவளின் மனதில் உள்ள வேகத்தையும் புத்தியில் உள்ள ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவ்வாறில்லாமல் அவரின் கணவர் வீட்டில் நன்றாகக் கவனித்திருந்தால் அவர் அந்தச் சுகத்திலேயே சுகம் கொண்ட வாசனையில் மயங்கும் வண்டு போல இருந்திருப்பாரோ என்னவோ! அவரின் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்திருக்காது. அதனால் துன்பத்தில் இருக்கீறீர்கள் என்றால் அதிலிருந்து எழுந்துவர முயற்சிக்க வேண்டும் இதுதான் விதியென்று இருக்கலாகாது.

உங்கள் உரிமை உங்கள் கையில்

           சமூகத்தில் எத்தனையோ முதலாளிகள் மக்கள் பலரை தம்நிலத்தில் வேலை செய்பவரை ஆயுள் முடியும்வரை அடிமைகளாகவே வைத்திருப்பர். அவரிடம் அதிகமான உழைப்பைப் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பது. அவர்களுக்குப் போதவில்லை என்றால் வட்டிக்கு கடன் கொடுப்பது. அந்தக் கடனை கட்டுவதற்குள் புதிதாகக் கடனை பெற்று விடுவார்கள். எனவே இறுதிவரை கடனை அடைக்கவே முடியாமல் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்துவிடுவர். இம்மாதிரியான மக்களுக்காகப் பாரதிதாசன் குரல் கொடுக்கிறார் “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” என்று அடிமைத்தனத்திலிருந்து வருவதற்கு யோசனை கூறுகிறார். ஓடப்பர் என்பவர் உழைக்கும் மக்கள். அந்த உழைப்புக்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எனவே அவர்களின் உரிமையை எதிர்த்து கேட்டால் உயரப்பராய் இருக்கும் முதலாளிகளுக்கு வேறுவழியே இல்லை. சமாதானத்திற்கு ஏழை மக்கள் கூறும் நிபந்தனைகளுக்கு வந்தே ஆகவேண்டும். எனவே தமக்கு சேரவேண்டிய ஊதியத்தைக்கூட  கேட்டுப்பெறவில்லை என்றால் யார்வந்து முன்நிற்பது? ஆதலால் அவரவர் உரிமை அவரவர் கையில் உள்ளது.

உழைத்தால்தான் மனிதன்

            மனிதர்களில் சிலர் மற்றவரின் உழைப்பை உறிஞ்சி உண்டு தன்உடலை பெருக்கிக்கொள்வார்கள். இவர்கள் மனித உருவில் பிறந்த அஃறிணை என்றே கூறலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள்தான் ஈட்ட வேண்டும். அதைவிடுத்து மற்றவர் உழைத்துச் சம்பாதித்த பொருளை தனதென்று சொந்தம் கொண்டாடி வாழ்வது என்ன வாழ்க்கை. இதில் என்பாட்டன் எனக்கு சம்பாதித்து வைத்துள்ளார் நான் உழைக்க வேண்டியதில்லை என்பார்கள். மனிதனாகப் பிறந்தவன் தனக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் என்று எல்லாவற்றையும் உழைப்பால் பெருக்கிக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று கூறுகிறது. அதாவது தலைவியானவள் தோழியிடம் கூறுகிறாள் பொருள் ஈட்ட சென்றுள்ள தலைவன் கூறுவதாக, “உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்” என்று கூறிச் சென்றுள்ளார் எனத் தலைவனை பெருமைப் படுத்துகிறாள் தலைவி. அதாவது முன்னோர்கள் சேர்த்து வைத்துச்சென்ற ஆஸ்தியை அழித்து உண்பவன் உயிருள்ள மனிதனாக்க் கருதப்படமாட்டான் என்று பொருள்படும். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவர் சேர்த்து வைத்த ஆஸ்தியை உழைக்காமலேயே இருந்து கொண்டு விற்று உண்பவன் பிணமாவான் என்று தெளிவாகச் சங்கப்பாடல் கூறுகிறது. உடலானது என்றாவது ஒருநாள் நெருப்புக்கு இறையாகிவிடும் இது உண்மை. அவ்வாறான உடலைக் கொண்டு உழைத்தால் என்ன? இவர்கள் நரகத்தில் இருக்க வேண்டியவர்கள் தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

இன்பமடைய துன்பப்படுங்கள்

        ஒரு கோவிலில் வயதான மூதாட்டி ஒருவர் தூய்மை செய்யும் பணியை ஏற்று அதை ஒரு சேவையாக செய்தாள். அவளுடன் அவர் பேத்தியும் இருந்தாள். பேத்தியும் தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள்.

இருவரும் கோவிலில் கொடுக்கும் அன்னதானத்தை உண்டு அங்கேயே வாசம் செய்தனர். இவ்வாறு சில வருடங்கள் சென்றன. அந்த மூதாட்டி படுக்கையில் இருந்து சில மாதங்களில் காலமானார். அந்த இருபது வயதான குமரிக்குத் திருமணம் நடந்தது. அவளுடைய கணவன் “நீ குப்பை பொறுக்கியவள்தானே” என்று சதா இழிவாகப் பேசி வந்தார். வருடங்கள் சில கடந்தன. இவளும் பொறுத்துப் பார்த்து இவனுடன் வாழ்வதற்குக் கோவிலில் குப்பை பொறுக்குவதே மேல் என்று புறப்பட்டுக் கோவிலுக்கு வந்துவிட்டாள். வந்தவள் கோவில் பொறுப்பாளரைப் பார்த்து உண்மையைக் கூறி தனக்கு வேலை கொடுக்குமாறு கேட்டாள். அவரும் அவளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வேலையும் கொடுத்தார். சில வருடங்கள் சென்றன. அந்தக் கோவில் நிர்வாகப் பொறுப்பு வேறு ஒருவர் கைக்கு மாறியது. அவர் பொறுப்பேற்றதும் சில நிபந்தனைகளை வைத்தார். கோவிலில் வேலை செய்பவர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேரியிருக்க வேண்டும். அவர் வைத்த நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. இதை கேட்டதும் அந்தப்பெண்ணிற்கு தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில நாட்களில் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டாள். வெளியே வந்தவள் சிறிது தூரம் நடந்தாள். வயிறு பசித்தது. இன்னும் சிறிதுதூரம் நடந்தாள் கண்கள் கலங்கி, அங்கு எட்டும் தூரத்திற்கு எந்த உணவகமும் இல்லை. என்ன செய்வது என்று ஒரு மரநிழலில் அமர்ந்து கொண்டாள். பின்னர் எழுந்து சிறிது தூரம் நடந்தாள் முடியவில்லை. அங்கு ஒரு பாறை தென்படவே அதன் மீது ஏறி சுற்றிலும் பார்வையிட்டாள் எங்கும் ஓட்டல் என்பது கிடையாது. இந்தக் கோவிலுக்குக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்தால் பசித்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தாள். அவளுக்கு அந்தப் பசியிலும் மனதில் ஒரு பொறி தட்டியது. நாம் இந்த இடத்தில் ஒரு தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்தால் என்ன? என்று சிந்தித்தாள். பணம் வேண்டுமே யாரிடம் கேட்பது. அப்போது பழைய கோவில் நிர்வாகி நினைவுக்கு வரவே அவரிடம் சென்று உதவி கேட்டாள். அவர் பாராட்டி உதவி செய்தார். ஒரே வாரத்தில் அங்கு ஒரு இட்லி கடை உருவாகிவிட்டது. ஒரே வருடத்தில் அது ஓட்டலாக மாறியது. அந்த உணவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அயராத உழைப்பால் அருகில் இருக்கும் ஊரிலும் இதன்கிளை ஒன்றும் துவக்கப்பட்டது. அம்மன் இட்லி கடை என்று துவக்கப்பட்டு அதுசில வருடங்களில் இரண்டு நான்கானது, நான்கு பத்தானது. ஓட்டல் முதலாளி ஆகிவிட்டாள் அந்த பெண்மணி.

         அந்த அளவிற்கு உயர்ந்ததுள்ள அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நீங்கள் இத்தனை ஓட்டல்களுக்கு முதலாளியாக உயர்ந்துள்ளீர். இன்னும் அதிகமாகப் படித்திருந்தால்? எங்கு சென்றீருப்பீர்கள்,  “அதிகமாகப் படித்திருந்தால் நான் கோவிலில் குப்பை பொறுக்கும் வேலையை சுத்தமாகச் செய்துகொண்டு இருந்திருப்பேன்” என்றார்.

      வரும் அவமானங்களும் துன்பங்களுமே வெற்றி விருட்சத்திற்கான விதை என்பதை உணருங்கள். ஒருவரின் வாழ்வில் நேரும் இடர்பாடுகளும் அவமானங்களும்தான் அவரை வெற்றிநிலைக்கு உந்தி தள்ளுகின்றன.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

இதயம் பேசுகிறது | சிறுகதை

இதயம்-பேசுகிறது

மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு நூலால் கட்டி கழுத்தில் மாட்டியிருந்தாள். கிழவியின் வெள்ளையாகிப்போன உதடுகள் இன்று தடித்தும் வறண்டுபோயும் இருந்தன. உடம்பெல்லாம் வியர்வால் நனைந்திருந்தது. மனசு படபடத்தது. சோர்வால் கால்கள் தழுதழுத்தன. சுருண்டு கீழே விழுந்தாள் ரெங்கநாயகி கிழவி. இதயம் பேசுகிறது | சிறுகதை

மக்கள் கூட்டமாய்க் கூடினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து டீ வாங்கிக்கொடுத்தார் ஒருவர். ஆவிப்பறக்க டீயை வாயில் வைத்து உறிஞ்சினாள். டீயின் சுவையை உணர்ந்தாலும் மனம் மட்டும் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“பாட்டிம்மா… எங்க போகனும்” என்றார் டீ வாங்கிக்கொடுத்தவர்.

தஞ்சாவூர்” என்று மெதுவாகக் கூறினாள்.

“இந்த நேரத்திற்குத் தஞ்சாவூர்க்கு நேரடியாகப் பேருந்து இல்லை. அதனால் பெரம்பலூர் சென்று அதன்பிறகு தஞ்சாவூர் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவரே பெரம்பலூர் பேருந்தில் ஏற்றியும் விடுகிறார். பேருந்து வேகமாய் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. ஜன்னல் சீட்டில் உட்காந்திருக்கும் ரெங்கநாயகி கிளவிக்கு மரங்களெல்லாம் பின்னால் செல்வது என்னவோபோல் இருந்தது.

“ஞா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணேன். ஒத்த பொம்பள குழந்தைய பெத்துப் போட்டுட்டு ஒரேடியா போயிட்டா. அதுக்கப்புறம் மருமவனும், குழந்தைய என்கிட்ட விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணமும் பண்ணிகிட்டான். ஜானகின்னு பெரு வச்சு நான்தான் வளத்தேன். நாலு மாட்ட வச்சிகிட்டு பேத்தியையும் படிக்க வச்சேன். அப்பப்ப மருமவனும் பாத்துட்டுப் போவும். அந்தக் குட்டிய வளர்க்கிறதுக்கு நான் பெரும்பாடு பட்டேன். அவ வயசுக்கு வந்தப்ப அப்படியே அவுங்க அம்மாவ உரிச்சு வைச்ச மாதிரி நின்னா. நான் அவள பாத்துட்டு அழுதிட்டேன். என்னோட பொண்ண உசிரோட பார்க்கிற மாதிரி இருந்தது”

பன்னிரண்டாவது படிச்சிட்டு இருந்தா. மத்த புள்ளைங்க மாதிரி அவளுக்கு பள்ளிக்கூடம் போறதுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். ஒருநாள் போனு வேணுமுன்னு கேட்டு அழுதா. அந்தக் குட்டியின் அழுகைய பார்க்க முடியாம காசு கொடுத்துப் போனு வாங்கிக்கச் சொன்னேன். அப்புறம் எப்ப பார்த்தாலும் போனையே நோண்டிகிட்டு இருப்பா. நானும் அந்த டப்பாவை தூக்கி போடும்பேன். நான் அவளோட நடவடிக்கைய பார்த்துப் பயப்பட்டேன்.  படிப்பு முடிஞ்சவுடனே, அவுங்க அப்பன்கிட்ட சொல்லி ஒரு கல்யாணத்த முடிச்சுப்புடனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசி பரீட்சை எழுத போன புள்ள, சாயுங்காலம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்ல. நானும் இப்ப வந்துருவா அப்ப வந்திருவான்னு நினைச்சிட்டு, மாட்ட அவுத்து தண்ணீயெல்லாம் காட்டிட்டு இருந்தேன். மனசுக்குள் ஏதோ குத்தி தொளைக்கிற மாதிரி இருந்தது. இருட்டு ஆகிடுச்சு. ரெண்டு நாளாகியும் ஜானகிய கண்டுபிடிக்க முடியல. அப்பத்தான் மளிகைக்கடைக்கார கோபாலு,

“உங்க பேத்தியும் படிக்க வந்த தஞ்சாவூர்க்கார பையனும் ஒன்னா சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னுமோ அவன்தான் உங்க பேத்திய தஞ்சாவூர்க்கு கூட்டிட்டு ஓடியிருக்கனும்” என்றான்.

ரெங்கநாயகி கிழவியின் முகம் வேர்த்துக் கொட்டியது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. பித்துப் பிடித்தது போன்று நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தாள்.

“பாட்டிம்மா டிக்கெட் எடுங்க… எங்க போவுனும்…” கண்டக்கர் கேட்டார்.

       கிழவி தன்னுடைய இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் தேடினாள். கைகள் மட்டும் இடுப்பைத் தடவியதே தவிர சுருக்குப் பையைக் காணவில்லை. கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்துத் தேடினாள். சுருக்குப் பை ஆத்தூரில் மயங்கி விழும்போதே விழுந்து விட்டதே. இப்போது எப்படி கிடைக்கும். கிழவி விழிப்பதைப் பார்த்த கண்டக்டர்,

       “காசு இருக்கா இல்லையா…”

“இல்லை” என்று கிழவி தலையாட்டியவுடன்,

“ஏ.. கிழவி காசு இல்லாம எதுக்கு வண்டியில ஏர்ற.. இது என்ன உங்கொப்ப வீட்டு பஸ்ஸா..? டிரைவர் வண்டிய நிறுத்துப்பா… கிழவி நீ கீழ இறங்கிக்கோ…”

 கிழவி கீழே இறங்க எழுந்திருக்கப்போனாள். பக்கத்தில் உட்காந்திருந்த பெண் ஒருத்தி, “கண்டக்டர்,  பாட்டிக்குப் பெரம்பலூர் டிக்கெட் ஒன்னு கொடு” என்றாள். கிழவியும் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்தவாறே உட்காந்தாள். மீண்டும் ஜன்னல் வெளியே மரங்கள் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தன.

பேருந்து பெரம்பலூர் வந்து விட்டது. ரெங்கநாயகி கிழவி வண்டியிலிருந்து கீழே இறங்கினாள். கையில் நையா பைசா கூட இல்லை. எப்படி தஞ்சாவூர் போறது. வயித்த வேறு கிள்ளுது. சோத்தவிட பேத்தி ஜானகிதான் முக்கியம். தஞ்சாவூர் போயே ஆகனும். சோர்ந்து உட்காந்துவிட்டாள். காசு இல்ல. உடம்பும் வயிறும் ஒத்துழைக்கணும் இல்லையா? எப்படியெல்லாம் வாழ்ந்தவள் ரெங்கநாயகி. இன்று வேறுவழியில்லாமல் பிச்சையெடுக்க ஆரமித்து விட்டாள். சிலர் முறைத்தார்கள், ஏளனமாய் சிரித்தார்கள், இல்லை போ என்றார்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் ஏராளம். பாவமாய் பார்த்து இரக்கப்பட்டுச் சிலர் காசு போட்டார்கள். வடித்து வடித்துக் கொட்டியவள். வாடிவதங்கி பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள். வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.

இரண்டு மூன்று நாளுக்குள்ளாகக் கையில் இருந்த காச வைத்துக்கொண்டு தஞ்சாவூர்க்குப் பேருந்தைப் பிடித்து விட்டாள். ஜானகியின் முகம் மட்டும் கிழவியின் உள்ளத்தில் ஆணி அடித்தார் போன்று பதிந்திருந்தது. எப்பாடுபட்டாவது ஜானகியை மீட்டு மருமவனின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள்.

“இந்தக் குட்டி ஏ இப்படி செஞ்சா.. நா அவளுக்கு என்ன குற வைச்சன். ஞா பொண்ணு மாதிரி நல்லதான பாத்துக்கிட்டன். அவுங்க அப்பங்காரன், எங்கடி ஞா பொண்ணுன்னு கேட்டா நான் எப்படி திருப்பி கொடுப்பேன். ஐயோ கடவுளே! என்ன சோதிக்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? ஞா குட்டிய என்கிட்ட திருப்பி கொடுத்துரு” பேருந்தில் அமர்ந்து கொண்டு மனதில் நினைப்பவையெல்லாம் வாய்விட்டு அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்குப் பேசிக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் கிழவியை ஒருமாதிரியாகவே பார்த்தார்கள்.

தஞ்சாவூர் பேருந்து நிலையம். எப்படியும் ஜானகிய கண்டுபிடிச்சே ஆகனும். கிழவியின் மனதில் வேறொன்றும் இருக்கவில்லை. தன்னோட குலதெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள். தஞ்சாவூர் நகரத்தெருக்களில் வெற்றுக்கால்களோடு நடக்க ஆரமித்தாள். ஒரு சந்தையும் விட்டுவிடவில்லை. யாராவது ஜானகி மாதிரி சின்னபொண்ணா போனாங்கன்னா, உடனே வேகமாய்ச் சென்று பின்னால் தொட்டு மூஞ்சைப் பார்ப்பாள். இதுபோல போவோரும் வருவோரையும் நிறையமுறை பார்த்து விட்டாள். ஜானகி மட்டும் அவள் கண்களில் தென்படவில்லை. கிழவிக்கு மனதில் உறுதி இருந்தது. ஜானகியை அவுங்க அப்பாவிடம் சேர்த்து விட முடியும் என்று நம்பினாள்.

“ஐயா… பன்னிரண்டாவது படிக்கிற சின்ன பொண்ணு. ஒல்லியா செவப்பா இருப்பா. வலதுபக்கம் உதட்டுக்கு மேல சின்னதா ஒரு மச்சம் இருக்கும். நேர்வாக்கு எடுத்து தலவாரியிருப்பா.. ஞா பேத்தி ஐயா.. தஞ்சாவூர்க்கார பையனோட ஓடி வந்துட்டாளாம். நீங்க பாத்திங்களா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” சாலையில் நின்றுகொண்டு கிட்டதட்ட பைத்தியக்காரி போல ஒவ்வொருத்தராய் நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏதாவது போட்டா இருக்குமா பாட்டி?” சாலையில் ஒருத்தர்.

“போட்டா… இருந்ததுப்பா.. ஆனா.. சுருக்குப் பை தொலைஞ்சிருச்சி” என்றாள் கிழவி. ஒவ்வொரு வார்த்தையும் யோசனை பண்ணி பண்ணி சொன்னாள்.

“போன் நம்பர் ஏதாவது தெரியுமா?”

“அந்தக் குட்டிக்கிட்ட போனு இருக்கு. ஆனா நம்பர் தெரியாதே!”

நின்று கொண்டிருந்தவர் கிளம்ப தயாரானார். கிழவியும் அவரின் பின்னாலயே சென்றாள். தன்னிடம் விசாரித்ததால் நம்பிக்கை கொண்டாள் கிழவி. ஆனார் அவர் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி சென்று விடுகிறார். கிழவிக்கு ஆதரவாகப் பேசியவர். அந்தத் தம்பியைப் பிடித்தால் ஜானகியைக் கண்டுபிடிக்க உதவி செய்வார் என்று நினைத்தாள். அதனால் பேருந்து பின்னாலயே ஓடினாள். வேகமாக ஓடியதால் மூச்சு இரைத்தது. அப்படியே நின்று விட்டாள்.

“ஏ ஜானகி குட்டி எங்கடி இருக்க. நான் உன்ன எங்கடி தேடுவ.. எங்கிட்ட வாடி.. நான் பெத்த மொவளுக்கு மொவளே!  என்ன இப்படி பொலம்ப விட்டுட்டியேடி.. சிறுக்கி மொவளே! அடியே குட்டி…” சாலையில் நின்றுகொண்டு அழ ஆரம்மித்தாள்.

ரொம்ப தூரம் நடந்து வந்தததால் ரெங்கநாயகி கிழவிக்குத் தான் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்றுகூட தெரியவில்லை. அந்தச் சாலையில் கிழக்கும் மேற்குமாய் இருபுறங்களிலும் பேருந்துகளும் லாரிகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும் சைக்கிளில் செல்வோரும் கடந்துக்கொண்டிருந்தன. நடந்து செல்வோர் இங்கிட்டும் அங்கிட்டுமாய் போய்க்கொண்டிருந்தார்கள். 

“எல்லோரும் போறாங்க வராங்க இந்தக் கூட்டத்துல ஞா பேத்தி எங்க இருக்கான்னு தெரியலையே? அடியே குட்டி… எங்கடி இருக்க நீ” வேகமாகவே கத்தினாள் கிழவி.

இப்போது கிழவியின் கண்களுக்குத் தூரத்தில் ஜானகி மாதிரி ஒரு பெண் தெரிந்தாள். உடனடியாகச் சாலையைக் கடக்க முயன்றாள். அந்நேரத்தில் வேகமாகவும் நேராகவும் வந்த ஒரு வண்டி கிழவியின் மெல் மோதியது. தலை தரையில் விழுந்தது. தார்ச்சாலையில் இரத்தம் வழிந்தோடியது. கிழவியின் கண்கள் மட்டும் விழித்திருந்தது. கிழவியைச் சுற்றிக் கூட்டம் கூடினார்கள். விபத்து நேர்ந்த வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ஜானகி. கூட்டத்தினுள் நுழைந்து அடிபட்டது யாருக்கு என்று பார்த்தாள். ஜானகிக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.

“பாட்டி நீயா… இங்க எப்படி வந்த…” கத்தினாள் ஜானகி. ரெங்கநாயகி கிழவியின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். கிழவியின் கண்கள் ஜானகியை உற்று நோக்கின. அவளின் கண்களைப் பார்த்தப்படியே மெல்ல மூடினாள் கிழவி. ஜானகியின் மடியெல்லாம் இரத்தம். சத்தம் போட்டுக் கத்தினாள்.

“உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னுதானே ஓடியாந்தன். பெத்துப்போட்டுட்டு எங்க அம்மாக்காரியும் போயிட்டா… எங்கப்பங்காரனும் இன்னொருத்திய தேடிட்டு போயிட்டான். வயசாயியும் நீதான என்ன கண்ணும் கருத்துமா வளத்த.. கொஞ்சநாள்ள உன்ன ஞா கூட கூட்டிட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேனே… ஐயோ கிழவி ஞா ஊர்லய வந்து செத்தப்போவ… இந்தப் பழிய நா காலம் பூரா சுமந்துட்டு திரியனுமா… குருட்டு கிழவி… எழுந்திருடி…” என்று கிழவியின் கன்னத்தில் ரெண்டு அறை விட்டாள். உடலை குழுக்கினாள்.

“என்ன பெத்த கிழவி… எழுந்திருச்சி வாடி… ” கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் மல்க வானத்தை நோக்கி இரு கைகளையும் நீட்டி ஒப்பாரி வைத்தாள் ஜானகி. அங்கு கூடியிருந்தவர்களின் அனைத்து கண்களும் குளமாயின.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

 

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

           இக்காலத் திறனாய்வாளர் இலக்கியத்திற்குரிய உணர்ச்சிகளைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து வருகின்றனர். அச்சம், அவலம், நடுக்கம், இரக்கம், காதல், வீரம் எனப் பலவாறாக இலக்கிய உணர்ச்சிகளைப் பிரித்து அறிகின்றனர். தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் மிகப் பழங்காலத்திலேயே தொல்காப்பியர் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உணர்ச்சிகளை எண் வகையாகக் கண்டறிந்து அவை புறத்தே புலனாகும் வண்ணங்களை விளக்கி உள்ளார். உணர்ச்சிகள் பற்றி அவர் கூறுவன இடம் பற்றியும், காலம் பற்றியும் எழும் பல்வேறு வகையான இலக்கியங்களுக்கும் பொருந்தி வருவனவாக உள்ளன. அவர் கூறும் எண்வகை உணர்ச்சிகளுள் மனிதனின் உணர்ச்சிகள் அனைத்தும் அடங்கும் எனலாம். தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்.


            உணர்ச்சியினைத் தொல்காப்பியர் மெய்ப்பாடு என்று குறிக்கின்றார். மெய்ப்பாடாவது மற்றவர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் (உடம்பின் கண்) வெளிப்படுவதாகும். இளம்பூரணர், ‘மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடு ஆயிற்று என்பார். ‘ அஃதாவது அச்சம், வெகுளி போன்ற உணர்வுகள் உள்ளத்தின்கண் முதற்கண் தோன்றிப் பின் காண்போர்க்குத் தெரியும் வண்ணம் மெய்யின்கண் படுதலாகும். செய்யுள் செய்யும்போது சுவைபடச் செய்வதற்கு இம்மெய்ப்பாடுகள் இன்றியமையாதன என்பது முன்னையோர் கருத்தாகும்.

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

            இனி, தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காண்போம்.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

(மெய்ப்பாட்டியல்.3)

அஃதாவது நகை, அழுகை, இழிப்பு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு என் வகைப்படும். செயிற்றியனார் என்பார்,


“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே”


என்று கூறியிருப்பதும் ஈண்டு உணரத்தக்கது.

எட்டு வகையான உணர்ச்சிகள்

            எண்வகை உணர்ச்சிகளை எடுத்துக்காட்டிய தொல்காப்பியர் ஒவ்வொரு மெய்ப்பாடும் இன்னின்ன காரணங்களால் எழுவன என்பதையும் விளக்கிச் சொல்லியுள்ளார். இன்றைய திறனாய்வுத் துறையில் நுழைவோர் தொல்காப்பியரின் செய்திகளை அறிந்து கொள்வது பயன் மிக்கதாகும்.
தொல்காப்பியர் கருத்துப்படி,

♣ நகை என்பது எள்ளல், இளமை பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழும்

♣ அழுகை என்பது பிறர் தன்னை எளியன் ஆக்கு தலாகிய இழிவு, இழவு, தளர்ச்சியாகிய அசைவு, வறுமை ஆகியவை ஏதுவாகப்பிறக்கும்.

♣ இளிவரல் என்பது மூப்பு, பிணி, வருத்தம், நல்குரவாகிய மென்மை ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣மருட்கை என்பது புதுமை பெருமை (பெருத்தல்), சிறுமை (மிகவும் நுண்ணியவாம்தன்மை). ஒன்றன் பரிணாமமாகிய ஆக்கம் ஆகியவை காரணமாகப் பிறக்கும்

♣ அச்சமாகிய மெய்ப்பாடு, அணங்கு (தெய்வம்), விலங்கு, கள்வர், இறை (ஆசான், தந்தை) ஏதுவாகப் பிறக்கும்.

♣ பெருமிதமாகிய மெய்ப்பாடு, கல்வி, தறுகண்மை (வீரம்) புகழ், கொடை ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

♣வெகுளி என்பது உறுப்பறை (அங்கமாயினவற்றை அறுத்தல்), குடிகோள் (கீழ்வாழ்வாரை நலிதல்), அலை (அலைத்தல் வைதலும் புடைத்தலும்), கொலை புலன் (ஐம்புல நுகர்ச்சி) மகளிரொடு புணர்தல், விளையாட்டு ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣ உவகையாவது. செல்வம், ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

மேற்கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளோடு வேறு வகையான பல மெய்ப்பாடுகளையும் தொல்காப்பியர் குறித்துக் காட்டுகின்றார்.

அவையாவன:

உடைமை: ஒரு பொருளுக்கு உடைமை கொண்டதால் நிகழும் மன நிகழ்ச்சி.

இன்புறல்: நண்பராகிப் பிரிந்து மீண்டும் வந்தோரைக் கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

நடு நிலைமை: சமன்செய்து சீர்தூக்கும் கோல் போலமைவது.

அருள்: எல்லா உயிரிடத்தும் அன்பு செய்தல்.

தன்மை: சாதி இயல்பு.

அடக்கம்: மனமொழி மெய்களால் அடங்குதல்.

வரைவு: செய்யத் தக்கனவும், நீக்கத் தக்கனவும் அறிந்து ஒழுகும் ஒழுக்கம்.

அன்பு: பழகுவாரிடம் செல்லும் ஒருவகைப் பற்று.

கைம்மிகல் :  குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல்

நலிதல்: பிறரை நெருக்குதல்.

சூழ்ச்சி: எண்ணங் காரணமாக நிகழும் நிகழ்ச்சி.

வாழ்த்தல் :  பிறரை வாழ்த்துதல்

நாணல்: தமக்குப் பழியாய் வருவனவற்றைச் செய்யாமை

துஞ்சல்: உறக்கம்

அரற்று :  உறக்கத்தின் கண் வரும் வாய்ச்சோர்வு.

கனவு :  நனவு போல ஒன்றைக் காண்பது.

முனிதல் :  வெறுத்தல்

நினைத்தல்: கழிந்ததனை நினைத்தல்.

வெரூஉதல்: அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது திடீரென்று தோன்றி மறைவதோர் குறிப்பு. இதனைத் ‘துணுக்கு” என்பர்.

மடி: சோம்புதல்.

கருதல்: மனத்தால் ஒன்றைக் குறித்தல்.

ஆராய்ச்சி :  ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மையது என ஆராய்தல்.

விரைவு: ஒன்றைச் செய்ய நினைத்து அது நிறைவேறக் காலத்தாழ்வு நேரின் அதன் பயனை எய்யா நிலையில் விரைந்து முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.

உயிர்ப்பு: முன்புவிடும் அளவு இன்றி மூச்சினை நீளவிடுதல்.

கையாறு: காதலர் பிரிந்தால் வரும் துன்பம் போல்வது.

இடுக்கண்: துன்பமுறுதல்.

பொச்சாப்பு: மறத்தல்

பொறாமை: பிறர்க்கு ஆக்கம் முதலாயின உண்டாகும்போது அதனைப் பொறுக்காமையினால் நடக்கும் மன  நிகழ்ச்சி.

வியர்த்தல்: தன் மனத்தில் சினம் தோன்றும் போது பிறப்பதோர் புழுக்கம்

ஐயம்: ஒரு பொருளைக் கண்டபோது இன்னது எனத் துணியாத நிலைமை.

மிகை: ஒருவனை நல்ல வண்ணம் மதிக்காமை.

நடுக்கம்: ஏதேனும் ஒரு பொருளை இழக்கின்றோம் என எண்ணுவதால் நடக்கும் மன நிகழ்ச்சி

            மேற்கூறிய மெய்ப்பாடுகள் பலவும் மாந்தரின் உண்மை வாழ்க்கையில் பெரும்பாலும் நிகழ்வனவாகும். மனித வாழ்க்கை பற்றி வரும் இலக்கியத்திலும் அம் மனிதரின் உணர்வுகள் இடம் பெறக்கூடும். ஆதலின், தொல்காப்பியர் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளாகவே கொள்ளலாம். இன்றைய இலக்கியத் திறனாய்வில் இன்னமும் விளக்கப்படாமல் இருக்கும் சில உணர்ச்சிகளும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியலில் உள்ளனவாதலின் இம் மெய்ப்பாட்டியல் திறனாய்வுத் துறையில் மேன் மேலும் ஆராய வேண்டிய ஒன்றாகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் வாயிலாக உணர்த்தும் உணர்ச்சிகள் அனைத்தும் இலக்கிய உணர்ச்சிகளே.

இலக்கிய உணர்ச்சிகளை மதிப்பிடுதல்

            ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறக் கூடும் உணர்ச்சிகளுக்கு முதற்காரணமாக விளங்குபவர் அவ்வகை இலக்கியப் படைப்பாளரே ஆவர். படைப் பாளரின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்து வெளிப்படும் அளவில் படைப்பாளர் முதற்காரணமாக விளங்குகின்றார். படைப்பாளரின் உணர்ச்சியானது கலை வடிவம் பெற்ற பிறகு அவ்வுணர்ச்சிக்கு மீண்டும் ஆளாவது பயில்வோரின் மனமே ஆகும்.

            படைப்பவரின் மனம் உணர்ந்து வெளியிட்டது போலவே பயில்வோரின் மனமும் உணர்ந்து பயன்பெறுமாயின் இலக்கிய வகை வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். எனவே, படைப்பவருக்கும் பயில்பவர்க்கும் இடையே உள்ள கலைஉலக ஓர் இலக்கிய வகையில் இடம் பெறும் உணர்ச்சிகளானவை வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு கருவி எனலாம். கலை வடிவாக விளங்கும் உணர்ச்சியானது பயில்வோரை எந்த அளவுக்கு ஈர்த்து இசைவித்து இயக்குகின்றதோ அந்த அளவுக்கு இலக்கியப் படைப்பில் உணர்ந்து உணர்த்தும் உணர்ச்சிகளைப் பொதுவாக சில நெறிமுறைகளைக் கொண்டு ஆற்றலுடன் விளங்குவதாகக் கொள்ளலாம். படைப்பாளர் தம் மதிப்பிட முடியும்.

            இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சியாவது, படைப்பாளரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து எழுத்தாய் வழிந்தோடிக் கலைவடிவம் பெற்றவுடன் அழகுருவம் பெற்றுப் பயில்வோரின் உள்ளத்தே பற்றிப் படர்ந்து மீண்டும் செயற்படும் ஒன்று எனலாம். கலை உருவம் மலர்வதற்கு எந்த உணர்ச்சி காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியே பயில்வோரின் கலை அனுபவத்திற்கும் காரணமாகின்றது. உணர்ச்சியின் இயல்பும் தரமும் கூடக்கூட அஃது இடம்பெறும் இலக்கியத்தின் சிறப்பும் கூடுகின்றது. அவ்வாறாயின் இலக்கியத்தில் வரும் உணர்ச்சிகளுக்கென்று அமைந்த இயல்பும் தரமும் யாவை என அறிதல் வேண்டும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட ஒரு முறையில் உருவாகித் தோன்றும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியானது அக்குறிப்பிட்ட சூழ்நிலையோடு அக்குறிப்பிட்ட முறையில் மிகப் பொருத்தமாகவும் மிக இயற்கையாகவும் இலக்கியப் படைப்பில் வெளிப்படுவதே அவ்வுணர்ச்சியின் இயல்புக்கு உரிய அளவுகோல் எனலாம்.

            மனித உள்ளங்கள் அனைத்துக்கும் பொதுவாய் இருப்பதும்; இடவேறுபாடு. காலவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து மனித உள்ளத்தை இளகச் செய்து இயக்க வல்லதாய் இருப்பதும் இலக்கிய உணர்ச்சியின் தரத்திற்குரிய அளவுகோல் எனலாம். உணர்ச்சி நன்றாக உள்ளது என்பதற்கு அடையாளம் பயில்வோரின் கவனத்தை ஆழமாக ஈர்ப்பதே ஆகும். ஆழமாக ஈர்ப்பதோடு முருகியல் சுவையோடும் கலந்து வருமாயின் மிக்க பயன் விளைகின்றது. உணர்வைப் பெருக்கி உள்ளத்தை ஈர்ப்பதோடு பண்பால் உயர்த்தவும் செய்யுமாயின் அவ்வுணர்ச்சி தலையாய உணர்ச்சி எனலாம். இந்நிலையில் கலைப்படைப்பில் ஈடுபடும் நாம் உணர்வால் நெகிழ்ந்து உள்ளத்தால் உயருகின்றோம்.

            கவிதையாயினும் நாடகமாயினும் காவியமாயினும் புதினமாயினும் மேற்கூறிய தலையாய உணர்ச்சிகளோடு விளங்கும்போது மனித சமுதாயம் கலையால் பண்பட்டு உயருகின்றது. இப்பண்பாட்டை உருவாக்கவல்ல உணர்ச்சிகளை நல்ல தரமான உணர்ச்சிகள் எனலாம். இலக்கியத்தில் இடம் பெறும் நல்ல உணர்ச்சி என்பது படைப்பாளரின் கலையாக்கத் திறனுக்கு ஒரு முத்திரையாய், ஒரு நல்ல அடையாளமாய் விளங்குகின்றது. எனவே, உணர்ச்சிப் பகுதிகள் மிகுதியாக வரும் இலக்கியமானது வெற்றி பெறுவது அதன் ஆசிரியர் அவ்வுணர்ச்சிகளின் இயல்பையும் தரத்தையும் நன்கு அறிந்து கலையாக வடித்தெடுக்கும் ஆற்றலைப் பொருத்ததாகும்.

            வின்செஸ்டர் என்பார் பின்வரும் ஐவகை உணர்ச்சிகளை உடைய இலக்கியம் நெடிது வாழும் எனக் குறிக்கின்றார்:

1. நியாயமான, தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.

2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.

3.தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி; பொருந்தாததும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி கொண்டு வரப்படாமல் இயல்பாக அமைவது

4 வாழ்க்கையின் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் அமைதல்,

5, மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்

            இலக்கியத்தில் பலப்பல வகையான உணர்ச்சிகள் இடம் பெறலாம்; எனினும் அவற்றுள் சிலவே படைப்பாளர் பலராலும் விரும்பிக்காட்டப் படுவனவாகவும் பயில்வோரால் விரும்பிப் பயிலப்படுவனவாகவும் உள்ளன. அச்சம், நடுக்கம், காதல், இரக்கம் ஆகிய உணர்ச்சிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகள் குறித்து டாக்டர் மு.வரதராசனார் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

            ‘இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம் பெறுகின்றன. எனினும், மகிழ்ச்சி. வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது. சேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விடத் துன்பியல் நாடகங்கள் மிகப் போற்றப்படுகின்றன. நாடக மேடையில் இன்பக் காட்சிகளைவிடத் துன்பக் காட்சிகளைக் காணும்போது, மக்கள் உள்ளம் ஒன்றியவராய் உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின் உள்ளம், அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அவர்கள் படைக்கும் கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையனவாக அமைகின்றன. ஆகவே, கலையை நுகரும் மக்களும் அவற்றில் ஆழ்ந்து ஒன்றிவிடுகின்றனர்.

            உணர்ச்சிகளுள் எந்த ஓர் உணர்ச்சியைக் கலைஞர் தம் படைப்பில் அமைத்துக் காட்டினாலும் அவ்வுணர்ச்சியின் இயல்பும் தரமும் நன்கு அமைந்து பயில்வோரின் உணர்வுக்கு நல்ல கலைவிருந்தாய் அமைவது இன்றியமையாதது இங்ஙனம் அமைவதற்கு அடிப்படையாக, படைப்பாளர் முதற்கண் அதன்கண்ட ஆழத்தோய்ந்து நீடுநினைந்து கலைக்குரிய கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்துதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தூண்டுதலால் எழுத்தாளரின் உணர்ச்சி தட்டி எழுப்பப்படினும் அவர் அவ்வுணர்ச்சிக்கு ஆளாவது போலவே நல்ல வடிவத்தோடு அதனை வெளிப்படுத்தக் கூடிய மன நிலையோடு கட்டுப் படுத்தவும் வேண்டும்.

            அப்போதுதான் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி தம் உள்ளத்தே ஆழப்பதிந்து தாக்கும்போது அத்தாக்குதலால் தான் சிதறுண்டு போகாமல் ஒருமுகப்பட்டு நின்று நல்ல வடிவம் தந்து படைத்துக்காட்ட முடியும். இந்தக் கலை வித்தகம் எழுத்தாளனிடம் அமைந்திருப்பதால்தான், பாட்டிற்கு ஓர் ஒலி நயமும் காவியத்திற்கு ஓர் இயைபும் நாடகத்திற்கு நல்ல ஒருமைப்பாடும் புதினத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கமும் சிறுகதைக்கு ஒருமுக இயல்பும் அமைய முடிகின்றது. இல்லையேல் இவற்றில் அமையக்கூடும் அறிவுக் கூறும் உணர்ச்சிக் கூறும் ஒன்றோடொன்று முட்டி மோதி முரண்பட்டு நின்று கலையின் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடும். வோர்ஸ் வொர்த்து என்பார் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இயற்கையாக எழுந்து கரை புரண்டோடும் ஆற்றல்சால் உணர்வுகளை அமைதி நிலையில் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வெளிப்படுத்துவதே கவிதை” என்று கூறியது ஈண்டுச் சிந்தனைக்கு உரியதாகும்.

            கவிதை, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகள் பலவற்றுள் வரும் உணர்ச்சிகளைப் பொதுவாக இரண்டாகப் பகுக்கலாம். ஒருவகை: இலக்கியக் கலைஞன் தான் உணர்ந்த உணர்ச்சிகளாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றொரு இலக்கியக் கலைஞன் தான் படைத்துக்காட்டும் கதை வகை மாந்தரின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள். இவை இரண்டுக்கும் படைப்பாளனின் கலைமனமே ஊற்றுக்களம் எனினும் அவன் எடுத்துக் கொள்ளும் இலக்கிய வகையின் அமைப்பிற்கேற்ப, தான் கலந்தும் கலவாதும் இருக்கின்றான். ஆதலின் உணர்ச்சிகளை மேற்கூறிய வண்ணம் இரண்டு விதமாகப் பிரிக்க முடிகின்றது. இனி இரண்டு சான்றுகளைக் காணலாம்.

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறியபோதெல்லாம் பயந்தேன்

ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்.

வீணுறு கொடியர் கையினில் வாளை விதிர்த்தல் கண்(டு) என்என  வெருண்டேன்.

(ஆறாந்திருமுறை, பிள்ளைப் பெரு விண்ணப்பம்-60)


            இப்பாட்டு அருட் பிரகாச வள்ளலார் உயிர்கள் படுந்துன்பத்தைக் கண்டு இரங்கி வருந்திய நிலையில் தம் உணர்ச்சிகளாகவே பாடிய பாட்டாகும்.


நின்மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலமெல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன்

என் மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும்

நன்மகன் இந்தநாடு இறவாமை நய என்றான்.

(அயோத்தியா காண்டம், கைகேயிசூழ்வினைப் படலம்-36)


            பரதன் நாடாள இராமன் காடாள வேண்டும் என்று கைகேயி வரங் கேட்டவுடன் துணுக்கமுற்று வேதனையால் வெய்துயிர்த்துத் தன் மகன் நாடு கடந்து செல்லாதிருக்கவாவது உதவுமாறு அவளைக் கெஞ்சிக் கேட்கும் தயரதனின் உணர்ச்சிகளாகக் கம்பர் பாடியுள்ள பாட்டாகும் இது.

            மேற்கூறிய இரண்டு வகையில் அல்லாது மூன்றாவது முறையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறும் உணர்ச்சிப் பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றோ அல்லது ஒருவரோ அங்ஙனம் உட்பட்ட பிறகு அடையும் மெய்ப்பாடுகளை வருணனை முறையில் விரித்தோ விளக்கியோ இலக்கியக் கலைஞர் காட்டலாம். இவ்வாறு காட்டும் போதும் மாந்தரின் அல்லது மற்றவற்றின் உணர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க்கண் மிசை ஒற்றினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ(டு)

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே

சுந்தர காண்டம், உருக்காட்டு படலம், 66


            கணையாழியை அனுமன் இராகவன் கொடுத்தனுப்பிய சீதையிடத்தில் கொடுத்தவுடன் அவள் பெற்ற உள்ளத்து உவகையினைக் கம்பர் ஈண்டுச் சித்திரித்துக் காட்டுகின்றார். உணர்ச்சியால் நிகழும் செயல் முறை பற்றிய இத்தகைய ஓவியங்கள் வாயிலாகவும் நாம் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளைக் கண்டுகொள்ள முடிகிறது. சிறப்பாக, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகளில் கதை மாந்தரின் நடிப்பு அல்லது செயல் முறைகளை இலக்கியக் கலைஞர் தாமே விரித்துக் காட்டுவதின் வாயிலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

            எல்லா வகை இலக்கியங்களிலும் உணர்ச்சிகள் இடம் பெறலாம். எனினும் காவியம் நாடகம் போன்றவற்றில், அவை இன்றியமையாதனவாகும் வயலுக்கு உரம்போலவும் பாட்டுக்குப் பண் போலவும், இலக்கியக் கலைஞனின் கருத்துக்கு வளமூட்டி வலிவும் பொலிவும் ஊட்டுவது உணர்ச்சியேயாகும். புதினம், நாடகம் போன்றவற்றில் கருத்துக்கும் இடம் உண்டு; உணர்ச்சிக்கும் நிறைய இடம் உண்டு. காரணம் அவற்றில் பெரும்பாலும் ஒருவரோ, இருவரோ இடம் பெறுவதில்லை; பல்வகைமாந்தரும் இடம் பெறுகின்றனர்.

            அதனால் பல்வகை நிகழ்ச்சிக்கும் செயல்களுக்கும் நிரம்ப வாய்ப்பு ஏற்படுகின்றது இந்நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கலை ஒருமைப்பாடு அமையுமாறு நடத்திச் செல்வதற்குக் காவியக் கலைஞர் அல்லது புதின எழுத்தாளர்க்கு நல்ல வளமான கற்பனை வேண்டும். எனவே பலவற்றையும் ஒன்றோடொன்று இயைபுற அமைத்துக் கலையின் கட்டுக்கோப்பு சிறிதும் சிதையாவண்ணம் படைத்துக் காட்டுவதாகிய கற்பனைக்கு மிகுதியான இடம் காவியம், புதினம் போன்றவற்றில் இருப்பதால் இவற்றைக் கற்பனை இலக்கியம் என்றும் சொல்லலாம். இக்கற்பனை இலக்கியங்களில் கதை மாந்தர் தத்தமக்கே உரிய வண்ணம் பலப்பல வகையாக அமைந்த வெவ்வேறு உள் நோக்கங்களாலும் உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டுச் செயல்படுகின்றனர்.

            அச்செயற்பாடுகளுக்கு ஏற்ற வண்ணம் நிகழ்ச்சிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. சுருங்கக் கூறின், செயல் முறைகளுக்கு அடிப்படையாக அமையும் கதை மாந்தரின் உணர்ச்சிச் சிக்கல்கள்; கற்பனை இலக்கிய வகைகட்கு இன்றியமையாதனவாகும். படைக்கும் இலக்கியக் கலைஞர் தாம் படைத்துக் காட்டும் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அவரவர்க்கு உண்டாக வல்ல உணர்ச்சியின் தன்மையை நன்கு அறிந்து நல்ல தரத்தோடு கலை வடிவமாக வடித்தெடுத்துக் காட்ட வேண்டும்.

நன்றி

ஆசிரியர் : இலக்கியத்திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

அமைதியான அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

         உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும்.

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர்

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

 

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம்

            சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேற் பெருமா னின் சிறப்பான உறைவிடங்கள் ஆறு இந்த ஆறு உறைவிடங்களில் முதலாவது உறைவிடம் திருப்பரங் குன்றம்: இதுவே முதற்படைவீடு. மதுரைக்கு மேற்கே சுமார் ஐந்து மைல் தூரத்தில் திருப்பரங் குன்றம் இருக்கின்றது. இந்நகரத்தின் மத்தியில் உள்ள மலை சிவலிங்க வடிவிலமைந்து விளங்குகின்றது. இதனால் இம்மலை “பரங்குன்று” என அழைக்கப்படுகின்றது. இதையே “மாடமலி மறுகில் கூடற்குடவயின்” குன்று என திருமுருகாற்றுப்படையும் கூறுகின்றது?

            இக்குன்றிலிருந்து தவமியற்றிய குன்றக்குமரனுக்கு பார்வதி சமேதராகப் பரமசிவன் காட்சியளித்தார் என் றும், காட்சியளித்த திருநாளே தைப்பூசத் திருநாள் என்றும், இந்நாளில் பரமசிவனையும் முருகப்பெருமா னையும் மெய்யன்போடு வணங்குபவர்கள் இகபர சுகங்களைப் பெறுவர் என்றும் புராணவரலாறு கூறுகின்றது.

            சிவபெருமான், உமாதேவியார், பிரமா, விஷ்ணு முதலான தேவர்கள் கண்டுகளிக்கவும். உலகம் உவப் பவும் குமரக்கடவுள் இந்திரன் மகளாம் தேவகுஞ் சரியை இக்குன்றில் திருமணம் புரிந்தார்; இவையும் இவைபோன்ற திருவருட் செயல்களும் இத்திருத் தலத்தின் மகிமையை அறியத்தருவன.

            இக்குன்றின் வடபால் மலையைக் குடைந்து அமைந் துள்ள கோயிலில் மூல மூர்த்தியாகிய குமரக்கடவுள் ஞானஒளிகாலும் வேலைத் தமது கையில் தாங்கி தேவ சேனா தேவியுடன் எழுந்தருளி அடியார்க்கருள்புரியும் காட்சியும்; கீழ்த்திசையில் தொட்டதும் பாவங்களைப் போக்கும் சரவணப்பொய்கையும்; தென்பால் உமை யாண்டார் கோயிலும்; மேல்திசையில் பஞ்சபாண்ட வர் குகையும் மலை உச்சிக்குச் செல்லும் வழியும்; மலை உச்சியில் காசி விசுவநாதர் ஆலயமும், காசி நீர்ச் சுனைத் தீர்த்தமும் இத்தலத்திற் சிறப்பாகத் தரிசிக்கவுள்ளன.

            சரவணப்பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாட்சரப் பாறையிலிருந்து நக்கீரர் சிவபூசை செய்து தவமியற்றினார் என்பதை நினைவூட்டுமுகமாக இவ்விடத்தில் அமைந்துள்ள நக்கீரர் கோயிலையும், நக்கீரர் தவவலி மையை உலகறியச் செய்யுமுகமாக சுப்பிரமணியப் பெருமான் தம் கைவேலால் தென்பரங்குன்று மலைப் பாறை பிளந்த சுவட்டையும் இன்றுங் காணலாம்.

            சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், அருணகிரிநாதர் முதலான மெய்யடியார்கள் பாடிய திருவருட்பாடல் களும், திருப்பரங்கிரிப் புராணமும் இத்தலமகிமையை என்றும் விளங்கச் செய்கின்றன.

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

திருச்செந்தூர்
           திருச்செந்தூர்


           திருநெல்வேலிக்குக் கிழக்கே சுமார் நாற்பது மைல் தூரத்தில் “திருச்சீரலைவாய்” இருக்கின்றது. இத்தலத்தைத் தமிழ் ஈழக்குடாக்கடல் அலைகள் ஓயாது தழுவிக் கொண்டிருக்கின்றன. இதுவே திருச்செந்தூர். இரண் டாம்படை வீடு.

            அலைகள் தழுவும் இப்பதியை நக்கீரர், திருமுரு காற்றுப் படையில் “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அலைவாய்” என விதந்து கூறியுள்ளார்.

            ”பருமணி வயிரமுத்தம் பலவளம் பிறவும் ஆழித்

             திரைஎறி அலைவாய் ஆகும் செந்திமா நகரம்”

என, கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளும் சிறப்பித்துச் சொல்லியுள்ளார்.

            தேவர்களைத் துன்பக்கடலிலாழ்த்திய சூரபத்மனுடன் பாலசுப்பிரமணியப்பெருமான் போருக்கு எழுந்தருளிவரும் போதுவழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும்கிரௌஞ்ச மலையையும் அழித்துத்திருச்செந்தூரையடைந்து இங்கு விஸ்வகர்மாவினால் வகுக்கப்பட்ட ஆலயத்தில் எழுந்தரு ளினார். இங்கு தேவகுருவாகிய வியாழபகவான் சுப்பிர மணியப்பெருமானுக்குப்பூசைசெய்து பூசித்தார். திருச்செந்தூரில் சுப்பிரமணியப் பெருமான் தங்கியிருந்து அசுரர்களின் வரலாறுகளையெல்லாம் கேட்டறிந்து, சூரனை யுந் துணைவரையும் நல்வழிப்படுத்தி ஆட்கொள விரும் பினார். இதற்காக வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூதனுப்பி அறிவுரைகளை வழங்கச்செய்தார். அறிவுரை களின் ஆற்றலை அறியாத சூரபத்மன் ஆணவ முனைப்பின் வழியே சென்று கொண்டிருந்தான். இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமையைச் செய்யக்குமாரக் கடவுள் திருச்செந்தூரிலிருந்து போருக்குப் புறப்பட்டு வெற்றி ஈட்டி மீண்டும் திருச்செந்தூர் வந்து தங்கினார் என்பது புராணவரலாறு.

            போரில் மாமரமாய் நின்ற சூரபத்மன் பிளவுபட்ட டம் மாப்பாடு இது திருச்செந்தூரிலிருந்து ஆறுமைல் தூரத்தில் கடற்கரையோரமாகவுள்ளது. இந்த இடத் தில் இன்றும் மாமரங்கள் வளர்வதில்லை எனக் கூறுகின்றர்கள்.

            சூரசங்காரம் முடிந்ததும் சுப்பிரமணியப் பெருமான் இப்பதியில் எழுந்தருளி சிவபூசை செய்தார். சிவபூசைக் கான தீர்த்தத்தை தமது கைவேலினால் தோற் தார். இதுவே ஸ்கந்தபுஷ்கரணி தீர்த்தம். பொழுது நாழிக்கிணறு என்னும் பெயருடன் விளங்கு கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள மூல மூர்த்தியாகிய பாலசுப்பிரமணியர் அபயம், வரதம், உருத்திராக்கம். புஷ்பம் விளங்கும் திருக்கரங்களுடன், சிவபூசை செய்யும் தியானத் திருக்கோலத்தி லெழுந்தருளியிருந்து அடியார் களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோலம் இத் தலத்திற்கே உரித்தான தனித்திருக்கோலமாக விளங்குகின்றது.

            அடியார்க்கெளியவராகிய சுப்பிரமணியப் பெருமான் ஆறுமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் கெந் திலில் எழுந்தருளியுள்ள புதுமையை – மெய்ம்மையை அறிந்து அனுபவித்த நக்கீரர் ஆறுமுகங்களிலும் பொலிந்துள்ள முருகனது அருட்கருணையை இப்படிச்சொல்லி எம்மையும் முருகனிடத்து அழைத்துச் செல்கின்றார்.

மா ருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்துனிது ஒழுகிக்

காதலின் உவந்த வரம்கொடுத்தன்றே, ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ அ

ந்தணர் வேள்விஓர்க் கும்மே ஒருமுகம்

எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்

திங்கள் போலத் திசைவிளக்கும்மே, ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே, (ஒருமுகம் )

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே”

-திருமுருகாற்றுப்படை

 

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

பழனி
             பழனி


            திருமகள், காமதேனு. ரியன், பூமாதேவி, அக்கினிதேவன் முதலானோர் முருகப்பெருமானை நினைத்து தவஞ்செய்த இடம் (திரு இனன்குடி) திருவாவினன்குடி. இது பழநி முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு.

            பழநிமலை அடிவாரத்தில் திருவாவினன்குடி ஆலய மும் இதன் வடகீழ்ப் பகுதியில் சரவணப் பொய்கை யும் இருக்கின்றன. சிவகிரியான பழநிமலை உச்சியில் ஞான தண்டாயுதபாணி எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிகின்றார். சுமார் நானூற்றைம்பது அடி உயர மான சிவகிரியென்னும் பழநிமலை உச்சியில் தண்டா யுதபாணியாக முருகப்பெருமான் எழுந்தருளிக் காட்சி தருகின்றார். தண்டாயுதபாணியாகவிருந்தருள் புரி யும் முருகன் திருக்கோலத்தைப் பழநிப் புராணத்தி லுள்ள கீழ்க்காணும் பாடலால் அறிந்து சிந்தை செய்வோம்.


“ஆரநூபுர வடியு முடிமிசை யொண்மீக் குடுமியழகுந்தண்டு

சேரவோர் கரனுமொக்கல் சேர்த்தியதோர் கரனுமெழில் – சிறக்க மென்றார்ப்

பாரணாதிபர் விபுதர் பரவு சிவகிரிவருபச் சிமத்துவாரச்

சேரர்கோ னாலயத்தினின்றிலகு பரஞ்சுடரைச் சிந்தை – செய்வாம்.’

            பழநிமலையைச் சுற்றிப் பிரகாரம் அமைந்துள்ளது. முருகனை வேண்டி இங்கு வரும் அடியார்கள் கிரிப்பிர தக்ஷிணம் செய்வதிலும் தவறார்.

            ஆண்டிக் கோலத்தில் எழுந்தருளிக் காட்சி தரும் முருகப்பெருமானைத் தரிசனம்செய்ய அடியார்கள் மலை உச்சிக்கு நடந்தும் மின்சார இழுவை வண்டியிலும் செல்வார்கள். திருத்தொண்டு செய்யும் யானை செல் லும் ஒருவழிப் பாதையும் ம்மலையில் உண்டு. நடந்து செல்லுமடியார்கள் தங்கிச் செல்ல மடமும் தாகசாந்தி செய்யத் தண்ணீர்ச்சாலைப் பந்தர்களும் உண்டு.

            மலைமீது ஏறிச் செல்பவர்கள் முதலில் இடும்பன் சந்நிதியைத் தரிசித்தே மேல் செல்வார்கள். இந்த இடும்பனே முதலில் காவடி கட்டி வந்து முருகப்பெரு மானின் திருவருள் பெற்றதாகவும், அன்று முதலே அடியார்கள் முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்டு அருள் பெருக்கும் வழக்கம் ஏற்பட்டதாக வும் நம்பிக்கை நிலவி வருகின்றது.

            மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெரிய கோயில் திருவாவினன்குடி எனப்படும் படைவீடு. பழநிக்குச் செல்லும் அடியார்கள் அடிவாரத்தில் காட்சிதரும் கந்தனையும் மலைமேல் காட்சி கொடுக்கும் பழநியாண் டவரையும் தரிசித்து நல்லருள் பெறுவார்கள்.

 

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

சுவாமி-மலை
            சுவாமி-மலை


           முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்கா வது படைவீடு சுவாமிமலை. இதுவே திருவேரகம், அருணகிரிநாத சுவாமிகள் தாம் அருளிய திருப்புகழில்

“ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ

ராஜத லக்ஷண லக்ஷமி பெற்றருள் பெருமாளே”    

            எனக்கூறி, அற்புதமிக்க திருவேரகமே சுவாமிமலை என் பதைத் தெளிவு பெறச் செய்துள்ளார்கள். இத்திருப்பதி கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கின்றது.

            முருகப்பெருமான் கயிலையங்கிரியில் நவவீரர் முத லானவர்களுடன் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந் தார். அப்பொழுது அங்கு வந்த தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் சென்றனர். பிரமா முருகப் பெரு மானை இளையோன் என எண்ணி வணங்காது சென்றார். பிரமாவின் செருக்கை அடக்கத் திருவுளங்கெண்ட முரு கப் பெருமான், வீரவாகு தேவர் மூலம் பிரமாவை அழைத்து வேதம் ஓதும்படி பிரமாவைப் பணித்தார்: பிரமாவும் “ஓம்” எனக்கூறிவேதத்தை ஓதத்தொடங்கி னார். முருகப்பெருமான் பிரமா வேதம் ஒது தலை நிறுத்தி முதற்கூறிய “ஓம்” என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்படி கட்டளையிட்டார். பிரணவமந்திர சொரூபி யாகிய சுந்தவேளே பொருளைக் கேட்டார் என்பதை எண்ணித் திகைத்து நின்றார் பிரமா. படைப்புத் தொழி லைச் செய்யும் பிரமா “ஓம்” என்பதன் பொருளை அறி யாதிருத்தல் தவறெனக் கூறி, நான்கு தலைகளிலும் குட் டிச் சிறையிலிட்டார். பின்னர் தேவர்கள் படைப்புத் தொழில் செய்ய பிரமாவை அனுமதிக்குமாறு சிவபெரு மானை வேண்டினர். சிவபெருமான் பிரமாவை சிறை நீக்கஞ் செய்ய எண்ணினார். இதை அறிந்த முருகப் பெருமானும் பிரமாவைச் சிறையிலிருந்து விட்டார்.

            பிரமா அறியமுடியாத பிரணவத்தின் பொருளை கந்தவேள் அறிந்துள்ளதால் இதனைத் தனக்கு உபதேசிக் கும்படி சிவபெருமான் முருகனை வேண்டினார். முருகப் பெருமான் குருமூர்த்தியாகத் தந்தையின் மடி மீதெ ழுந்தருளி, சிவபெருமான் திருச்செவியில் பிரணவப் பொருளை உபதேசித்துக் குருநாதன், சுவாமிநாதன் என் னும் திருநாமங்களைப் பெற்றார்.

            சிவபெருமானுக்குக் குருமூர்த்தியாக இருந்து பிரண வப் பொருள் உபதேசித்த இடம் காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள சுவாமிமலையாகிய திருவேரகம் என்னும் இத்திருப்பதியே. தை அருணகிரிநாதர்

குருவா யரற்கு மூபதேசம் வைத்த

குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து

குடகா விரிக்கு – வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமக்கொர்

சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருநா வரக்கர்

சிரமே துணித்த – பெருமாளே

            என விதந்து கூறி மகிழ்கின்றார். சுவாமி மலைமேல் எழுந்தருளிய முருகனை வழிபடச் செல்லும் அடியார்கள் அறுபது படிகளில் ஏறிச் சுவாமி சந்நிதானத்தை அடைவர். படி ஏறத் தொடங்கும் போது முதற்படியில் தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபாடாற்றிய பின்னர் ஏனைய படிகள் வழி ஏறிச் செல்வர். இது பண்டைநாள் வழக்கு. கந்த புராண நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பல சித்திரங்களை இங்கு சுவர்களில் காணலாம். தினமும் இப்பதிக்குப் பெருந்திரளான அடியார்கள் வந்து சுவாமிநாதப் பெரு மானான முருகனை வணங்கி நல்லருள் பெறுகின்றார்கள்.


ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

திருத்தணி
         திருத்தணி


            மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலப்பகுதி: வளம் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியை முருகப் பெருமான் விரும்பியுறையும் ஐந்தாம்படை வீடாகக் கொண்டருளினார். ஆறுமுகப் பெருமான் குன்றுகள் தோறும் சென்று விளையாடுவதற்கான உட்பொருள் ஆன்மாக்களின் உய்யுநெறிக்கு வழிகாட்டலேயாகும். உலக அமைப்பையும் தோற்றத்தையும் ஆழ நோக்குவார்க்குக் “கல்தோன்றி மண் தோன்றாக் காலம்” என்ற முதுமொழி உலகில் மலையே முதலில் தோன்றியதாக நினைவுறுத்தும். முதற் பொருளான முருகப் பெருமானும் உலகில் முதற் தோற்றுவித்த மலைகளில் சென்று விளையாடி ஆன்மாக்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்கவாசகரும் மலைமேல் இறை வனை நினைந்து ‘ஆராத இன்பம் அருளுமலை போற்றி” என உள்ளம் உருகிப் பாடுகின்றார்.

            குன்றுதோறாடலில் மலை, ஆற்றங்கரை, சோலை, காடு, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, மரத்தடி முதலான எல்லா இடங்களிலும் அமைந்துள்ள முருகப் பெருமான் திருக்கோயில்கள் யாவும் இடம்பெறும் என்பர். குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் அருண கிரிநாதர் திருப்புகழில் பல திருப்பதிகளைப் பாடியுள் ளார்; இவற்றுள் தமிழ் நாட்டிலுள்ள திருத்தணி, வயலூர், சுருளிமலை, இளஞ்சி, குன்றக்குடி, விராலி மலை. ஈழநாட்டிலுள்ள கதிர்காமம் முதலான திருப் பதிகள் விசேடமானவை,

            இலங்கையின் தென்கீழ்த் திசையில் கதிர்காமத் திருப்பதி உளது. ஈழநாட்டிலுள்ள காலத்தால் முற் பட்ட முருகனாலயங்களுள் இதுவும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டளவில் இராசசிங்கன் என்னும் அரசன் இத் தலம் கட்டுவதற்கு உதவியாயிருந்தான் எனச் சரித் திரக்காரர் கூறுகின்றார்கள்.

            கந்தகழி என்னும் திருநாமத்தைப் பெற்ற முருகன் பெயருக்கேற்ற தன்மையில் கதிர்காமத்தில் விக்கிரக மில்லாமலும், வேறு உருவமில்லாமலும், வேறெவ் வித சின்னமாக இல்லாமல் அருவாய் நிற்கும் நிலையில் வணங்கப்படுகின்றான். இதனாலேயே இலங்கை, இந் தியா யா ஆகிய இடங்களிலுள்ள முருகன் ஆலயங்களுள் கதிர்காமம்
தனித்தன்மை பெற்று விளங்குகின்றது.

 அதிருங் கழல்ப ணிந்து – னடியேனுன்

அபயம் புகுவ தென்று – நிலைகாண

இதயந் தனிலி ருந்து – க்கிருபையாகி

இடர்சங் கைகள்க லங்க – அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி – நடமாடும்

பதியெங் கிலுமி ருந்து – லுமைபாலா

இறைவன் தனது பங்கி – விளையாடிப்

பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே


            இவ்வாறு பல குன்றுகளிலுமமர்ந்த குமரப் பெரு மானின் திருவருளால் நாமும் குன்றத பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவோம் என்பதை வலியுறுத்தி அருணகிரிநாத சுவாமிகளும் பாடித் துதிக்கின்றார்.


ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

பழமுதிர்ச்சோலை
         பழமுதிர்ச்சோலை


           முதிர்ந்த பழங்களை எந்நாளும் உடமையாகக் கொண்டுள்ளது பழமுதிர்சோலை. பல அறிஞர்கள் திருமாவிருஞ்சோலை எனப்படும் அழகர்கோயில்தான் பழமுதிர்சோலை என்று கூறுகின்றனர். இங்குள்ள மலை அழகர்மலை. இம்மலையில் ஊற்றெடுத்து வருகின்ற ஆறு. சிலம்பாறு. இத்திருத்தலம் மதுரைக்கு வடக்கே பன் னிரண்டு மைல் தூரத்தில் இருக்கின்றது. ஆறாவது படை வீடாகிய பழமுதிர்சோலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகப்பெருமானை நக்கீரர் ” பழமுதிர்சோலை மலை கிழவோனே” என வாழ்த்தி வளம் பெற்றார்.


            ஒளவையார் ஒருமுறை மதுரை செல்லும்போது பழமுதிர்சோலை வழியாகச் சென்றார் என்றும். தமிழ்க் கடவுளரான முருகப்பெருமான் தமிழ்த் தாயா ரான ஓவைப் பிராட்டியார் மூலம் உலகு உய்ய உயர் வான நெறியைப் போதிக்க விரும்பி, மாட்டுக்காரச் சிறுவன் வேடந்தாங்கி ஔவையார் செல்லும் வழியி லுள்ள நாவல் மரத்திலிருந்து பழங்களை உதிர்த்தபோது, ஒளவையார் பொறுக்கி எடுத்து மண் ஊதி உண்ண முயன்றார். அப்பொழுது சிறுவன் ஒளவையாரைப் பார்த்து பாட்டி பழம் சுடும் நன்றாக ஊதி ஆறியபின் உண்ணுங்கள் என்றான். ஔவையார் சிறுவன் மதிநுட் பத்தை விதந்து, தனது அறிவுக் குறைவை எண்ணி வருந்தினார். வருந்திய ஔவையார் முன் சிறுவனான முருகக்கடவுள் காட்சி கொடுத்து, ஒளவையாரிடம் இவ்வுலகத்தில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? என்னும் வினாக்களை வினாவி, தம் அருள் வழி ஒளவையார் விடை கூறவைத்தார் என்பது வரலாறு

தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

தொல்காப்பியத்தின்-நூன்-மரபின்-இடமும்-சிறப்பும்

தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

மூவகைக் கருத்துகள்

            தொல் காப்பிய எழுத்ததிகார முதல் இயலாகிய நூன்மரபின் பெயர்க்காரணம், தொல் காப்பியத்தில் அதன் இடம். சிறப்பு ஆகியவை பற்றிப் பழைய உரையாசிரி யர்களிடையேயும் இன்றைய ஆய்வாளர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

            இவ்வேறுபட்ட கருத்துகளை மூன்று வகைப்படுத்தலாம். அவை,

1.எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் என்னும் நூல் முழுமைக்கும் பொதுவான இலக்கணம் கூறுவது. அதனால் நூன்மரபு எனப்பட்டது.

2.எழுத்ததிகாரத்திற்கு மட்டும் உரிய இலக்கணத்தினைத் தொகுத்து உணர்த்துவது.

3. நூலினது மரபுபற்றிய பெயர்களைக் கூறுவதனால் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது.   என்பன.

நச்சினார்க்கினியர் கருத்து

            மேற்கூறிய மூன்றனுள் முதற்கருத்தினை நச்சினார்க்கினியர் ஒருவர் மட்டுமே கொண்டுள்ளார். அவர் உரைப்பகுதி பின்வருமாறு:

 ‘இத்தொல்காப்பியம் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தின மையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

            ஆயின் நூல் என்றது ஈண்டு மூன் றதிகாரத்தையும் அன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவாறென்னை யெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றினைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகை கோடலின் தொகை வேறாம்.  அளவு, செய்யுளியற்கும் இவ்வதி காரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும். கூறிய மாத்திரை இரண்டற்கும் ஒத்த அளவு. ஆண்டுக்கூறும் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன்தராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அள பிறந்துயிர்த்தலும்’ (67.33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியு மாற்றான் உணர்க. இன்னும் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ் வதிகாரத்திற்கே உரியவாகக் கூறியன. ‘அம் மூவாறும்’ (67.22) என்னும் சூத்திர முதலியவற்றான் எழுத்துகள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதி காரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினா ராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணம் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று. நூல் என்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை” (எ.1.நச்சி.உரை).

            நச்சினார்க்கினியர் கருத்தைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாம்: நூன்மரபு மூன்றதிகாரங்களாய் அமைந்த காப்பியம் என்னும் பிண்டவகை தொல் நூல் முழுமைக்கும் மரபை அல்லது இலக்கண மாயவற்றைத் தொகுத்து உணர்த்துகிறது. அது பின்வருமாறு:

(அ)எழுத்துக்களது பெயர், முறை ஆகி யன செய்யுளியற்கும் எழுத்ததி காரத்திற்கும் பொதுவாகக் கூறியது.

(ஆ) அளபில் குறிற்கும், நெடிற்கும் கூறி யது பொது. அளபெடை செய்யு ளியலை எதிர்நோக்கியே கூறப் பட்டது.

(இ)குறில், நெடில், வல்லெழுத்து, மெல் லெழுத்து, இடையெழுத்து, ஆய்தம் ஆகியவை செய்யுளியலில் வண்ணத் திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் பொது.

(ஈ) எழுத்துக்களின் மாத்திரைக் குறைவைப்பற்றிய செய்திகள்
எழுத்து, பொருள் இரண்டதிகாரத்திற்கும் பொது.

(உ) எழுத்துக்களின் கூட்டம் (உயிரும் மெய்யும் கூடுதல்), பிரிவு போன்ற செய்திகள் எழுத்ததிகாரத்திற்கே உரியவை.

(ஊ) மயக்கம் எழுத்துக்கள் கூடிச் சொல் லாவதைக் கூறுவதால், எழுத்ததி காரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் பொது.

இளம்பூரணர், வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்து

            இரண்டாவது கருத்தினை இளம்பூரணரும் வேங்கட ராஜுலு ரெட்டியாரும் கொண்டுள்ளனர். இளம்பூரணர், “இவ்வதிகாரத்திற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்துதலின் நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனி நின்ற எழுத்திற்கென உணர்க” (எ.1.இளம்.) என்றுகூறுகிறார்.
            வேங்கடராஜுலு ரெட்டியாரும் முதற்கண் தனி (1944), “இவ்வதிகாரத்தின் இவ்வியலில் பெரும்பாலும் யெழுத்துக்களின் மரபினையுணர்த்துதலின் இவ்வியல் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது” என்று கூறி, மேலும் சிவஞான முனிவர் கருத்தை மறுத்தபின், தொடர்ந்து “எழுத்துக்களின் இயல்பே இவ்வியல் முழுவதும் கூறப்பட்டதனால் இஃது எழுத்து மரபு என்றவாறாயிற்று என்றல் அமைவுடையது, மொழியின் இயல் புணர்த்திய இயல் மொழி மரபு எனப் பட்டவாறுபோல” என்று கூறுகிறார். பின்னர், இவ்வியல் தனி எழுத்துக்களின் இயல்பினையே உணர்த்தியது என்பதனை, இவ்வியல் செய்தி முழுவதையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி விளக்குகிறார். ஆயினும், அவரே “மேற்கூறியவாறு இவ்வியல் முழுவதும். எழுத்தின் இலக்கணமே கூறப்பட்டதாயின், இவ் வியலுக்கு எழுத்து மரபு எனப் பெயரிடாது நூன் மரபு எனப் பெயரிட்டது என்னையெனின், நூல் என்றது ஈண்டு எழுத்தினையே குறித்தது என்று கோடல் அமைவுடையதாகும். இப் பொருட்குத் தக்க மேற்கோள் இப்போழ்து அறியப் பட்டிலதாகலின் இன்னும் ஆராய வேண்டுவதாயுளது” (சிவலிங்கனார் பதிப்பு 1980:28-30) எனக் கூறி முடிக்கிறார்.

சிவஞானமுனிவர் கருத்து 

            மூன்றாவது கருத்து சிவஞான முனிவரால் கூறப்பட்டு சுப்பிரமணிய சாஸ்திரியாரால் தழுவப்பட்டது. சிவஞான முனிவர் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியில் (ஆறுமுக நாவலர் பதி. 1956:26,27), ‘அஃதாவது, நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல். எனவே, இதுவும் இவ் வோத்துட் கூறும் சூத்திரங்களுக்கெல்லாம் அதிகாரம் என்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற்றொடக்கத்து உலக மரபு பற்றிய பெயர் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் யென்றற்றொடக் கத்துப் பெயர்கள் நூலின்கணாளுதற் பொருட்டு முதனூலாசிரியனாற் செய்து கொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபு பற்றிய பெயராயின வென வறிக. ஏனையோத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபு பற்றி வரும் பெயராதல் உய்த்துணர்ந்து கோடற்கு முன்வைக்கப்பட்டது.

            “இப்பெற்றியறியாத உரையா சிரியர்முதலியோர். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத் தினை ‘ஒராற்றான் தொகுத்துணர்த்துதலின் நூன் என்னும் பெயராயிற்று என் மரபு பாரும், இவ்வோத்துட் கூறப்படும் விதிகள் மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகலின் நூன் மரபென்னும் பெயராயிற்று என்பாரும் ஆயினார். இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தைத் தொகுத் துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகார மரபெனப்படுவதன்றி நூன் மரபெனப் படாமையானும், இவ்வோத் துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துட் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதி காரத்திற்கும் பொதுவாகாமையானும் அவை போலியுரையாதலறிக” என்கிறார். இவரைத் தழுவியே சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1937:3) ‘நூற்கு இன்றியமையாத மரபுபற்றிய குறிகளை விதிக்கும் இவ்வியலுக்கு “நூன்மரபு” எனப் பெயரிட்டது மிகப் பொருத்தம்’ என்று கூறுகிறார்.


            சிவஞான முனிவர் இளம்பூரணர் கருத்தைப் பெயர்ப் பொருத்தமின்மை என்ற அடிப்படையில் மறுக்கிறார். நச்சினார்க்கினியரின் ‘நூல் முழுமைக்கும் இலக்கணம் கூறுவது’ என்ற கருத்தை முற்றப்பொருந்தாமை என்ற அடிப் படையில் மறுக்கிறார். எழுத்ததிகாரப் புணர்ச்சி பற்றிப் பேசும் இயல்களுக்கும், பொருளதிகாரத்தில் செய்யுளியலுக்குமே யன்றி மற்ற தொல்காப்பியப் பகுதிகளுக்கு நூன்மரபு பொதுவன்று என்பது சிவஞான முனிவர் கருத்து. ஆனால், சிவஞான முனிவரது ‘நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது என்ற கருத்தை வேங்கடராஜுலு ரெட்டியார் மறுக்கி றார். ஆயின், சிவஞான முனிவர் கூறியவாறு நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதலின் நூன்மரபு எனப்பட்டது” என்று கொள்ளுதல் அமையும் எனின், அவ்வாறு கோடல் ஓராற்றான் அமையுமாயினும், அவர் கூறியவாறு (எழுத்தின் பெயர்க ளேயன்றி) நூன்மரபு பற்றிவரும் பெயர் அனைத்தும் ஈண்டுக் கூறப்படாமை குன்றக் கூறலாம் ஆதலானும், இவ்வியலுட் கூறுவது தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணமேயாகலானும், அதுவும் உண்மைப் பொருளாதல் இன்று” (சிவலிங்கனார் பதி. 1980:29). இதன் கருத்து, எழுத்திலக்கணம், பற்றிய மரபுப் பெயர்கள் மட்டுமே இங்குக் கூறப்பட்டனவேயன்றிச் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் பற்றிய மரபுப் பெயர்கள் இங்குக் கூறப்படாமையின் நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது இவ்வியல் என்று கொள்வது பொருந்தாது என்பதாகும்.

ஒப்பீடு

            மேலே கூறப்பட்ட மூவகைக்கருத்துக்களில், இளம்பூரணர் கருத்தைப் (1.2) பெயர்ப் பொருத்த மின்மை அடிப்படையில் சிவஞான முனிவர் மறுத்தார் (1.3). இளம் பூரணரைத் தழுவும் வேங்கடராஜுலு ரெட்டியாரும் இப்பெயர்ப் பொருத்த மின்மையை உணர்ந்து, இங்கு நூல் என்பது எழுத்தினையே குறித்தது எனக் கொள்ள வேண்டும் என அமைதி கூறுகிறார். இருப்பினும் அப்பொருளில் ஆளப்பட்ட மேற்கோள் இல்லை என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். இது அவர் கருத்தில் வன்மை இல்லை என்பதைக் காட்டி விடுகிறது.

            பெயர்ப் பொருத்தமின்மை மாத்திரமன்றி, “எழுத்திலக்கணத்தை தொகுத்துணர்த்துதல்” ஓராற்றால் (எ.1.இளம்) என்ற கருத்தும் பொருத்த மில்லாததே. எழுத்ததிகாரப் பிறப்பியல் செய்திகள் இங்குப் பேசப்படவில்லை. புணர்ச்சிபற்றிப் பேசும் இயல்களுக்கு இங்குக் கூறப்பட்ட செய்திகள் கருவியாவ தன்றி அவற்றின் செய்திகள் இங்குத் தொகுத்துணர்த்தப் படவில்லை. எனவே இவ்வகையிலும் இளம்பூரணர் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை.


            “நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்” என்ற சிவஞான முனிவர் கருத்து வடமொழி இலக்கண மரபினை உட்கொண்டு கூறப்பட்டது. சம்ஜ்ஞைகள் எனப்படும் இலக்கணக் கலைச்சொற்களை முதற்கண் விளக்குவது பாணினீய மரபு. அம்மரபில் நல்ல பயிற்சியுடைய சிவஞான முனிவர் தொல்காப்பிய முதல் இயலிலும் அம்மரபே பின்பற்றப் பட்டிருப்பதாகக் கருதுகிறார். அதே போன்ற பின்னணி யுடைய சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1939:3) இக்கருத்தைத் தழுவி உரை செய்தார். இக்கருத்து பொருத்தமற்றது என்பதை வேங்கடராஜுலு ரெட்டியார் மற்ற அதிகாரங்களுக்குரிய மரபுப் பெயர்கள் கூறப்படாமையைக் காட்டி மறுக்கிறார் (1.3). மற்ற அதிகாரங் களுக்குரிய மரபுபற்றிய பெயர்களே யன்றி எழுத்ததிகாரத்திற்குரிய ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர் மொழி (எ.45), புணர்ச்சி (GT.142). நிறுத்த சொல், (6.108). திரிபு. இயல்பு (67.109).. மெய்பிறிதாதல், மிகுதல், குறித்துவருகிளவி குன்றல் (எ.110), வேற்றுமை, அல்வழி, சாரியை (எ.113) போன்ற பல மரபு பற்றிய குறியீடுகளும் நூன்மரபில் கூறப் படவில்லை எனவே நூல் முழுமைக்கும் உரிய மரபுப் பெயர்கள் மட்டுமன்றி எழுத்ததிகாரமுழுவதற்கும் உரிய மரபு பற்றிய பெயர்கள் கூட முற்றிலுமாகப் பேசப்படவில்லை என்ற அடிப்படையில் சிவஞான முனிவர் கருத்து பொருந்தாதாகின்றது.

            நூன்மரபு தொல்காப்பியம் தொகுத்துணர்த்துவது என்னும் நூல் முழுமைக்கும் இலக்கண மாயவற்றைத் என்று கூறும் நச்சினார்க்கினியரே, மூவகை உரையாசிரியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் காட்டுகிறார். அவை எவ்வாறு பிற அதிகாரங்களுடன் தொடர்புடையன என்பதையும் பொருத் திக் காட்டுகிறார் (1.1). பெயர்ப் பொருத்தத்தை. தொலகாப்பியம் எவ்வகை நூலுள் அடங்கும் என்பதைக் கூறியதன் மூலம் குறிப்பாக உணர்த்துகிறார். ஆனால், சிவஞான முனிவர், அக்கருத்தை, இவ்வியலில் கூறப்பட்டவை செய்கை யோத்துக்களுக்கும் (புணர்ச்சி பேசும் இயல்கள்) செய்யுளியலுக்கும் மட்டும் கருவியாவதன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாது எனக் கூறி மறுக்கிறார். எனினும் இம்மறுப்பு சொல்லதிகாரத் திற்கும் நூன் மரபிற்கும் நச்சினார்க்கினியர் காட்டிய தொடர்பை உட்கொள்ளவில்லை.

தொல்காப்பிய ஆய்வின் அடிப்படை

            மாறுபட்ட இக் கருத்துக் களில் முற்றிலும் பொருத்தமானது எது? அல்லது இம்மூன்றும் அல்லாத வேறொரு பொருத்தமான விளக்கம் கூற இயலுமா? என்று முடிவு செய்யுமுன் தொல்காப்பிய ஆய்வின் சில அடிப்படைக் கூறுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

            தொல்காப்பியம் எழுதப்பெற்றுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பிய உரைகள் எழுதப்பெற்றன. இவ்வுரைகளின் துணையின்றித் தொல்காப்பியத்தை நாம் புரிந்துகொள்ள இயலாது எனினும், உரையாசிரியர் கருத்தையே தொல் காப்பியர் கருத்தாகக் கொள்வது. முடிந்த முடிபாகக் கொள்வதும் அவர் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாய் அமையும். தொல்காப்பியத்தைத் தொல் காப்பியத்தின் மூலமே-அதாவது முன்னும் பின்னும் அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முயலுவதும் அதற்குத் துணையாக மாத்திரம் உரைகளைக் கொள்வதுமே தொல்காப்பிய ஆய்வை அறிவியல் அடிப்படையில் கொண்டு செல்வதுடன் தொல்காப்பியர் கருத்தை உணரவும் துணைபுரியும். இவ்வடிப்படை யில், நூன்மரபு பற்றிய உரையாசிரியர் கொள்கைகளை மதிப்பீடுசெய்ய நூல் பற்றிய தொல்காப்பியர் கொள்கை யையும், ‘மரபு’ என்ற பெயரைத் தொல் காப்பியர் பயன்படுத்து மாற்றையும், நூன்மரபில் கூறப்பட்ட செய்திகளுக்கும் தொல்காப்பியத்தின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பையும் ஆராய்தல் அவசி யமாகிறது. இவ்வாய்வின் பயனாய்க் கிடைக்கும் முடிபுகள் நூல் மரபின் பெயர்ப்பொருத்தம், தொல்காப்பியத்தில் அதன் இடம், உரையாசிரியர் கருத்துகளின் பொருத்தம் ஆகியவற்றை இயல்பாக விளக்கிவிடும்.

தொல்காப்பியரின் நூல் அடிப் பற்றிய கொள்கை

            தொல்காப்பியர் நூல் பற்றிய செய்திகளைப் பொருளதி காரச் செய்யுளியல், மரபியல் ஆகிய இரு இயல்களில் பேசுகிறார்.செய்யுளியலானது நூல்களை, உள்ளமைப்பின் படையில் வகைப்படுத்துகிறது (பொ. 468-474). மரபியலானது, நூல்களைப் பிற நூல்களின் சார்பின்மை, சார்புடைமை என்ற அடிப்படையில் முதனூல், வழிநூல் என வகைப்படுத்தி, பின்னர், நூலின் உள்ளமைப்பினை விரிவாகக் கூறுகிறது (பொ.639-656). இவ்விரண்டு இயல்களிலும் கூறப்பட்ட செய்திகளில் செய்யு ளியலில் கூறப்பட்ட செய்திகளே இங்குத் தொடர்புடையன.

            நூலின் பொது இயல்பு பின்வரு மாறு: “நூல் என்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பெரருளோடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமல் கருதிய பொருளைத் தொகையானும் வகையானும் காட்டி. அதனகத்து நின்றும் விரிந்த உரையோடு பொருத்தமுடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு (பொ.468:இளம்). அந்நூல் நான்கு வகையை உடையது (பொ.469). அவை யாவன, ஒரு பொருளைக் குறித்துக் கூறும் சூத்திரத்தான் நூலாவன; இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஒத்தினால் நூலாவன; இனங்கள் பலவற்றையும் கூறும் படலத்தான் இயல்வன; சூத்திரம், ஒத்து, படலம் என்ற மூன்றுறுப்புகளையும் கொண்டு பிண்டமாவன என நான்கு வகைப்படும் (பொ.470). இவ்வாறு நூல் களை வகைப்படுத்தி இவ்வகைகளுக்கு அடிப்படையான சூத்திரம், ஓத்து, படலம் ஆகியவற்றின் இயல்புகளை விளக்குகிறார் தொல்காப்பியர் (பொ.471-473). இம்மூன்று உறுப்புகளையும்
தன்மையை உடைய நூல் அடக்கிய பிண்டம் எனப்படும் (பொ.474) எனவும் விளக்குகிறார்.


            சூத்திரத்தான் நூலாகியதற்கு இறையனார் களவியலும், ஒத்தினால் நூலாவதற்குப் பன்னிருபடலம், புறப் பொருள் வெண்பாமாலை போன்றவை படலத்தால் நூலாவதற்குத்களும், தண்டியலங்காரம், போன்றவையும் மூன்றுறுப்புகளையும் யாப்பருங்கலம் எடுத்துக்காட்டாய் அமையும். சூத்திரம், ஒத்து, படலம் என்ற அடக்கிய பிண்ட வகை நூலிற்கு எடுத்துக்காட்டாய் அமைவது தொல்காப்பியம்.’

            எனவே பிண்டவகையாய் அமைந்த தொல்காப்பியம் என்னும் நூலின் முதல் ஓத்தின் பெயராகிய ‘நூன்மரபில்’ உள்ள ‘நூல்’ என்னும் சொல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று படலங்களையும், இருபத்தேழு ஓத்துக்களையும், ஆயிரத்து அறுநூற்றுப் பத்து சூத்திரங்களையும் கொண்ட நூல் முழுவதையும் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். அவ்வாறன்றி ஓர் அதிகாரத்தை மட்டும் குறிப்பிடுவதாகக் கொள்வது தொல்காப்பியர் கொள்கையுடன் மாறு பட்டு அவர் நூலின் உறுப்பாகிய ஒரு பகுதிக்கே செல்லும். நச்சினார்க்கினியர் இதை உணர்ந்தே ‘நூல் என்றது தொல் காப்பியம் என்ற பிண்டத்தை” (எ.1.நச்சி, எனக் குறிப்பிடுகிறார்.

            ஆகையால், தொல்காப்பியரது நூல்பற்றிய கொள்கையின் அடிப்படையில் நூன்மரபு தொல்காப்பிய இலக்கணம் மூன்றதிகாரங்களுக்கும் கூறுவது என்று கொள்வதே பொருத்த முடையதாகும்.

‘மரபு’ என்னும் பெயர்

            ‘மரபு என்னும் பெயர் நூன்மரபு, மொழி மரபு, தொகை மரபு, விளி மரபு என்ற நான்கு யல்களின் தலைப்பில் வருகிறது. நான்கனுள், முதல் மூன்றும் எழுத்ததிகாரப் இந்பகுதிகள். விளிமரபு மட்டும் சொல்லதி காரப்பகுதி. மரபு என்ற சொல்லை நூலினுள் பல இடங்களில் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இச்சொல்லின் பல பொருள்களுள் ‘இலக்கணம்’, ‘தன்மை’ அல்லது ‘இயல்பு’ என்பதும் ஒன்று. உரையாசிரியர்களும் இப்பொருள் கூறு கின்றனர். ”சார்ந்துவரல் மரபின் மூன்று” (எ.1.4) என்ற தொடருக்கு, ‘சார்ந்து வருத லாகிய இலக்கணத்தினையுடைய மூன்று’ கூறுகின்றார். இளம்பூரணர் உரை நச்சினார்க்கினியரும் இலக்கணம் என்றே பொருள் கொள்கின்றார். “அம்மரபு ஒழு கும் மொழிவயினான” (எ.418.3) என்ற இடத்தில், “அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து” என இளம்பூரணர் நச்சி னார்க்கினியர் இருவரும் பொருள்கொள் கின்றனர். ‘மயங்கல் கூடாதம் மரபின” (சொ.11.3), “ஏனைப்பெயரே தத்தம் மரபின’ (சொ.172.5) முதலாய பல இடங்களிலும் ‘மரபு’ என்ற பெயர் ‘இலக்கணம்’ என்ற பொருளில் வழங்கப் பட்டுள்ளது. இயல் தலைப்புகளுக்குப் பொருள் கூறுமிடத்தும் விளிமரபு என்ப தற்கு ‘விளிவேற்றுமையின் இலக்கணம் உணர்த்துவது’ என்ற பொருளை இளம் பூரணர், தெய்வச்சிலையார் இருவரும் கூறுகின்றனர். எனவே, ‘மரபு’ என்ற பெயருக்கு ‘இலக்கணம்’ எனப் பொருள் கொள்வது பொருத்தமானதாகும். இவ் வடிப்படையில், ‘நூன்மரபு’ என்பது ‘நூலினது இலக்கணம்’ அல்லது ‘நூலிற் ரிய இலக்கணம்’ எனப் பொருள்படும்.

நூன்மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளும் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும்

            இனி, நூன் மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் அதன்பெயர்ப் பொருத் தத்தையும் இடத்தையும் ஆராய்தல் வேண்டும்.

செய்திகள்
            நூன்மரபு, எழுத்துக்கள் சார்ந்துவரல் மரபின் மூன்றும் அல்லாத இடத்து முப்பது; சார்ந்து வரல் மரபின குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று என எழுத்துக்களின் தொகை பற்றிப் பேசுகிறது (எ.1,2.). குற்றெழுத்தும் நெட்டெழுத்து மாய் அமைந்த பன்னிரண்டு உயிர்கள் (எ.3,4,8). வல்லெழுத்தும், மெல்லெழுத் தும், இடையெழுத்துமாய் அமைந்த பதினெட்டு மெய்கள் (எ.9,19-21) என எழுத்துக்களின் வகை பற்றிப் பேசுகிறது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளபின (எ.3); நெட்டழுத்துகள் இரண்டுமாத்திரை அளபின (எ.4). ஓர் எழுத்து மூன்று மாத்திரை பெறாது (எ.5). அவ்வாறு மூன்று மாத்திரையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின் அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி ஒலிக்கவேண்டும் (எ.6). மாத்திரை என்பது ‘கண்ணிமைப் பொழுது’, ‘கைந்நொடிக்கும் ஒலி’ ஆகியவற்றை அளவாகக் கொண்டது (எ.7). மெய்களும் சார்ந்து வரும் மூன்றும் அரைமாத்திரை ஒலிப்பன (Gr.11,12). மகரமெய் சில இடங்களில் அரையள பினும் குறுகி ஒலிக்கும் (எ.13). இவ் வெழுத்துக்களின் அளவு மொழிக்கு உரியது; இவ்வெழுத்துக்கள் இசையில் பயன்படும்பொழுது இவ்வள பைக் கடந்து ஒலித்தல் உண்டு. அது இசை நூலின்பாற்பட்டது (61.33). இவ்வாறு அளபு பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பின், வடிவு பற்றிப் பேசும்பொழுது, மகரம் உட்பெறு புள்ளியுடன் (எ.14), எல்லா மெய்களும் புள்ளிபெறும் (எ.15). எகர ஒகரக் குறில்களும் அவ்வாறு புள்ளிபெற்றுவரும் (எ.16); உயிர்மெய்கள் புள்ளி இல்லாமல் அகரத்துடனும், வடிவு வேறுபட்டு மற்ற உயிர்களுடனும் வழங்கும் (எ.17); அவை, மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலிக்கப்படும் என்று கூறுகிறது. பின், பதினெட்டு மெய்களும் தம்மொடு பிறவும், தம்மொடு தாமும் மயங்கு முறை விளக்கப்படுகிறது (எ.22-30). இறுதியாக, சுட்டாகவும், வினாவாகவும் வரும் எழுத்துக்கள் கூறப்படுகின்றன (எ.31.32). இவ்வாறு, எழுத்துக்களின் தொகை, வகை, அளவு, வடிவு, மயக்கம் முதலியன பற்றியும்; அவற்றுட் சில சுட்டும் வினாவுமாய் வருவது பற்றியும் நூன்மரபு பேசுகிறது.

            மேலே கூறப்பட்ட செய்திகளுள் பெரும்பாலானவை எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் என்ற அடிப்படையில் எழுத்த திகாரத்திற்கு உரியவை. எனினும் மற்ற இரு அதிகாரங்களுக்கும் உரியவையும், அடிப்படையான பல தொடர்புடையவையும், வகையில் பயன்படுபவையும் ஆகும். இச் செய்திகளுக்கும் மற்ற அதிகாரங்களுக்கும் உள்ள தொடர்பை மூவகைப்படுத்தலாம்.

(1)மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையானவை.

(2)பிற அதிகாரங்களை எதிர் நோக்கிக் கூறப்பட்ட எழுத்து பற்றிய செய்திகள்.

(3)பிற அதிகாரங்களில் மாட்டெறியப்பட்டோ மாட்டேறு இன்றியோ பயன்படுத்தப்படுபவை.


மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையான செய்திகள்

எழுத்துக்களே, வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழிக்கு, மேல்நிலை அலகுகளைவாக்கும்(Basic Units)உரு அடிப்படை
அலகுகள் எழுத்துக்கள் தனித்தோ தொடர்ந்தோ சொல்லாகும்.  இக்கருத்தினை, நன்னூலார்,

‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம்” . . .(நன்.128).

என வெளிப்படையாகக் கூறுகிறார். தொல்காப்பியர் இவ்வாறு வெளிப்படையாகக் கூறாவிடினும், இவ்வுண்மையை நன்குணர்ந்தவர் என்று காட்டும் வகையில் எழுத்தையும் சொல்லையும் தொடர்புபடுத்தி நூல் செய்கிறார்.
            சொல்லதிகாரத்தில் ‘எழுத்து’ என்ற சொல்லை ‘விகுதிகளைக்’ குறிக்கப் பயன் படுத்துகிறார். இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய

ஈற்று நின்றிசைக்கும் பதினோ

தோற்றம் தாமே வினையொடு வருமே -சொ.10

            தம் வினைக்கியலும் எழுத்தலங் கடையே-(சொ.62.4) எழுத்து, சொல்
நிலையில் பயன்படுவது இங்கு உட் கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,

மொழிப்பொருட் காரணம் விழிப்  பத்தோன்றா—சொ.388

எழுத்துப் பிரிந்திசைத்தல் வணியல் பின்றே-சொ.389

வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே-சொ.395

            இந்நூற்பாக்கள் எழுத்தாலாவது சொல் என்ற கருத்தை உட்கொண்டு தொல்காப்பிய ரால் இயற்றப்பட்டுள்ளமை வெளிப்படை.

            செய்யுட்கும் அடிப்படை அலகு எழுத்தே என்பது எழுத்தினைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூறியிருப்பதி லிருந்தும் (பொ.310), அவ்வெழுத்துக்கள் தனித்தும் இணைந்தும் அடுத்தநிலை அலகாகிய அசையை உருவாக்குவதிலிருந்தும் (பொ.312-318) புலனாகும். எழுத்துக்களால் ஆகிய அசைகள் சீராகின்றன. சீர்களால் ஆகும் அடியும் தொல்காப்பியரால் எழுத்தின் அடிப்படையிலேயே வரையறுத்து வகைப்படுத்தப்படுகிறது (பொ.344-351).

            எனவே, எழுத்துக்களின் தொகை, வகை, அளபு, மயக்கம் போன்ற செய்திகள் மூன்றதிகாரத்திற்கும் அடிப்படையானவை என்பது தெளிவாகும்.

சொல், பொருள் அதிகாரங்களை எதிர்நோக்கிக் கூறப்பட்ட செய்திகள்

            நூன்மரபில் கூறப்பட்ட பெரும்பாலான செய்திகள் மூன்றதிகாரங்களுக்கும் பொது வானவை. ஆனால் சில செய்திகள் பிற அதிகாரங்களில் கூறப்படும் இலக்கணத்தை எதிர்நோக்கியே கூறப்பட்டவை.

            அளபெடை சொல்லதிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் மனத்தில் கொண்டே நூன்மரபில் விளக்கப்பட்டது. சொல்லதி காரத்தில் விளிமரபில் அளபெடை பயன்படுகிறது (சொல்.122,132,138,146). தொல்காப்பியர் அளபெடைப் பெயர்கள் விளிக்கும்பொழுது எவ்வாறு வழங்கும் என்று கூறுவதுடன்,

உளவெனப்பட்ட எல்லாப்பெயரும்

அளபிறந்தனவே விளிக்குங்காலைச்

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான் (சொ.149).

            என்று அளபெடைப் பெயரல்லாத மற்றப் பெயர்களும் சேய்மை விளியில் அளபெடையாய் வழங்குவதைக் குறிப்பிடுகிறார். பின்னர், இடையியலிலும் (சொ.276) ஒளகாரம் அளபெடுத்தும் அளபெடையின்றியும் பொருள் வேறுபாடு காட்டிக் குறிப்பிடைச் சொல்லாய் வருவதைப் பற்றிப் பேசுகிறார்.’

அடுத்து, பொருளதிகாரம், செய் யுளியலில் ‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே” (பொ.325) என்று அளபெடை அசைநிலை பெற்று அலகு பெற்று வருவதைக் கூறுகிறார். பின்னர் அளபெடையின் அடிப்படையில் அள பெடைத்தொடை என்ற தொடையையும் (பொ.394, 402), அளபெடை வண்ணம் என்ற வண்ணம் ஒன்றினையும் (பொ.514, 520) வகுக்கிறார். இவை, தெளிவாக, அளபெடை நூன்மரபில் வகுக்கப்பெற்றது சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத் திலும் பயன்படுத்துவதற்காகவே என்பதைக் காட்டும். எழுத்ததிகாரத்தில், மொழி மரபில்,

குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்

நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே (எ.41),

என ஓசை குன்றுமிடத்து அளபெடை வரும் எனக் கூறுவதும் பின் பொருளதிகாரத்தில் அளபெடை அசையாய் அலகு பெறுவதை மனத்திற்கொண்டே யாகும். இங்கு, நச்சி னார்க்கினியர் “இஃது எதிரதுபோற்றல் பற்றிச் என்னும் உத்தி செய்யுளியலை நோக்கி “நீட்டம் வேண்டின்” (எ.6) என முற்கூறிய அளபெடை யாமாறு கூறுகின்றது என்று விளக்குகிறார். இவ்விரு இடங்கள் தவிர எழுத்ததிகாரத்தில் அளபெடையைப் பற்றி வேறெங்கும் பேசாமையும் அது மற்ற அதிகாரங்களை எதிர்நோக்கியது என்பதனை வலியுறுத்துகின்றது.


சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப்பெறும் நூன்மரபுச் செய்திகள்

முன் கூறியதுபோல, நூன்மரபுச் செய்திகள் மாட்டெறியப் பட்டோ மாட்டேறு இன்றியோ சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப் பெறுகின்றன.

சொல்லதிகாரத்தில்

            எழுத்தே வழக்கிற்கும் செய்யுளிற்கும் அடிப்படை அலகு என்றும், அதைத் தொல்காப்பியர் உணர்ந்திருந்தார்) என்றும் மேலே (4.2) கண்டோம். அவ்வுண்மை யைக் காட்டுவது போல, எழுத்து என்ற குறியீட்டையும் அவற்றின் வகைகளையும் சொல்லிலக்கணம் கூறும்பொழுது பெரிதும் பயன்படுத்து கின்றார். மேல் (4.2) காட்டப்பெற்ற சில இடங்களுடன் (சொ.10,62) பின் வரும் நூற்பாவிலும் எழுத்து என்ற சொல்லை விகுதி என்ற பொருளில் சொல்லதிகாரத்தில் பயன் படுத்துகிறார்.

இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி

பலர்க்குரி எழுத்தின் வினையொடு வருமே (சொ.268)

“பலர்க்குரி எழுத்து” என்ற தொடர்பலர்பால்
விகுதியாகிய சொல்லைக் குறிக்கிறது. சொல்லதிகார விளிமரபில், நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள், பெயர்கள் பலவும் பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன. பின்வரும் நூற்பாக்கள் அதனைக் காட்டும்.

அவைதாம்
உ ஐ ஒ என்னும் இறுதி

அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்

மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே (தொ.117).

உகரந்தானே குற்றியலுகரம் (சொ.120)

ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (சொ.121)

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப (சொ.122)

னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளியிறுதி விளிகொள் பெயரே
(சொ.125)

            இங்கு இ,உ,ஐ,ஒ,ன,ர,ல,ள போன்ற எழுத்துக்களையும் உயிர், புள்ளி, பெடை, குற்றியலுகரம் போன்ற எழுத்து வகைகளின் பெயர்களையும் பயன்படுத்து கின்றார். விளியின் இலக்கணம் சொற் களின் ஈற்றெழுத்துக்களையும் அடையும் மாற்றங்களையும் பேசாமல் கூற இயலாது.

அவை பற்றியும்

இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் (சொ.118)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் (சொ.119)

நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும் (சொ.141.2)

            போன்ற நூற்பாககள் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன.
விளிமரபு மட்டுமன்றி, சொல்லதி காரத்தின் மற்ற இயல்களிலும் எழுத்து மாற்றங்கள் பேசப்படும்பொழுது நூன் மரபுச் செய்திகள் பயன்படுகின்றன.

அவற்றுள்

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு

மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்

அவ்விடன் அறிதல் என்மனார் புலவர் (சொ.233)

 கு ஐ ஆன் என வரூஉம் இறுதி

அவ்வொடும் சிவணும் செய்யுளுள்ளே (சொ.104)

அந்நாற் சொல்லும் தொடுக்குங்காலை

வலிக்கும் வழிவலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்

விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்

நாட்டல்வலிய என்மனார் புலவர் (சொ.397)

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்

அன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (சொ.445)

            இவை அனைத்தும் நூன்மரபில் கூறப்பட்ட எழுத்துக்கள், அவை பற்றிய செய்திகள், குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் சொல்லிலக்கணம். மேலே கூறப்பட்ட (4.1) காட்டப்பட்டதுபோல் நூன்மரபில் சுட்டு, வினா பற்றிய சொல்லிலக்கணச் செய்தியையும் கூறுகிறார். இவை இடைச் சொற்கள். அவற்றில், சுட்டுக்களும் ஆகாரவினாவும் அறிமுகப்படுத்தப்பட்டு நூன்மரபிலேயே விட்டதால், சொல்லதிகாரஇடையியலில் மீண்டும் பேசப்படவில்லை. ஆனால் ஏகார 252). ஓகாரங்களாகியஇடைச் சொற்கள் வினாப் பொருள் தவிர வேறு பொருளிலும் வருவதால், மீண்டும் இடையியலில் பேசப்படுகின்றன (சொ.251, சுட்டின் இலக்கணம் கூறப்படாவிடினும், பல இடங்களில் சொல்லதிகாரத்தில் சுட்டடியாகப் பிறந்த சொற்களைக் குறிக்கச் ‘சுட்டு’ என்னும் பெயர் பயன் படுத்தப்படுகிறது.

பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும் (சொ.37)

சுட்டு முதலாகிய காரணக் கிளவி

சுட்டுப் பெயரியற்கையிற் செறியத்  தோன்றும் (சொ.40)

தான்என பெயரும் சுட்டு முதற் பெயரும் (சொ.134)

இது தெளிவாக,செய்திகளைநூன்மரபிற் கூறிய மனத்திற்கொண்டே
சொல்லதிகாரத்தில் இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர் என்பதைக் காட்டுகிறது.

பொருளதிகாரத்தில்

            செய்யுள் அமைப்பிற்கு எழுத்தும் அளவும் இன்றி யமையாதவை. அதனாலேயே தொல் காப்பியர் முப்பத்திரண்டு செய்யுள் உறுப்புகளில் முதல் இரண்டாக மாத்திரை யையும் எழுத்தையும் சேர்த்துள்ளார் (பொ.310). ஆனால், மற்றச் செய்யுள் உறுப்புகளை ஒவ்வொன்றாக விளக்கும் தொல்காப்பியர்
மாத்திரையையும் எழுத்தினையும் அவ்வாறு விளக்காது. அடுத்த நூற்பாவில்
அவற்றுள்

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்

மேற்கிளந்தனவே என்மனார் புலவர் (பொ.311)

            என மாட்டெறிந்து கூறுகிறார். இம் மாட்டேறு தெளிவாக நூன் மரபிற்கே யாம். ஏனெனில், மாத்திரை, எழுத்து பற்றிய செய்திகள் பொருளதிகாரத்தில் வேறெங்கும் கூறப்படவில்லை. மற்றச் செய்யுள் உறுப்புகளாகிய அசைவகை, அடி, தொடை ஆகியவை மேலே (4.2) குறிப்பிட்டதுபோல இவ்வாறு மாட்டெறிந்து கொள்ளப்பட்ட எழுத்து, அளவு இவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. இவற்றை விளக்க நூன்மரபில் வரையறுக்கப்பட்ட குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), மெய் (ஒற்று), குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலியவை பயன்படு கின்றன. குறில், நெடில் ஆகியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நேர சை எனவும், குறிலிணை, குறில், நெடில் ஆ கியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நிரையசை எனவும் பெயர்பெறும் (QUT.312). இவ்விருவகை அசைகள் இருவகை உகரத்தோடு இயைந்துவரின் நேர்பு, நிரைபு எனப் பொருள்பெறும். ஆனால் குறிலிணை உகரம் இங்கு வராது (பொ.313). தனிக்குறில் முதலசையாக மொழி சிதைத்து வராது (பொ.315) குற்றியலிகரம் ஒற்றெழுத்துப் போல அலகு பெறாது (பொ.316). குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றோடு வந்து அசையாக நிற்கவும் பெறும் (பொ.318).

            அடிகள் எழுத்துக்களின் எண்ணிக் கை அடிப்படையில் வகுக்கப்படுகின்றன (பொ.343-351). நான்கெழுத்து முதல் ஆறெழுத்துவரை உள்ளது குறளடியாகும் (பொ.344). ஏழெழுத்து சிந்தடிக்கு அளவு. ஒன்பதெழுத்து
அதன்மேல் எல்லை (பொ.345). பத்து முதல் பதினான் கெழுத்து நேரடியில் அளவு (பொ.346). நெடிலடி பதினைந்திலிருந்து பதினேழு எழுத்து உடையது (பொ.347). எழுத்தின் அடிப்படையில் அடிவரையறை செய்யும் பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்துக்கள் (பொ.351). இவ்வாறு, எழுத்தே அடிவரையறைக்கும் அடிப்படையாகிறது. எண்ணப்படமாட்டா தொடையின் வரையறையிலும் எழுத்தியைபு பயன்படுகிறது (பொ.393- 406). அடிகள் தோறும் முதல் எழுத்து ஒன்றிவரின் மோனையாம் (பொ.397). இரண்டாம் எழுத்து ஒன்றினால் எதுகையாம் (பொ.398). இவ்விரு தொடைகளுக்கும் எடுத்த எழுத்தேயன்றி இனவெழுத்து ஒன்றிவருதலும் உரியதாகும் (பொ.399). அளவுதோறும் ஈற்றெழுத்து ஒன்றிவரின் அது இயைபுத்தொடை எனப்படும் (பொ.401). அடிதோறும் அளபெடைவரின் அளபெடைத்தொடை (QUTT.402). மற்ற பொழிப்பு, ஒரூஉ போன்ற தொடைகளும் எழுத்தொன்றுதல் அடிப்படையில் (பொ.403,404). வகுக்கப்படுகின்றன

            மற்றொரு செய்யுள் உறுப்பாகிய வண்ணத்தின் வரையறையிலும் நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள் பின்வருமாறு பயன்படுகின்றன. வல்லெழுத்து மிக்கு வருவது வல்லிசை வண்ணம் (பொ.517). மெல்லெழுத்து மிக்கு வருவது மெல்லிசை வண்ணம் (பொ.518). இயைபு வண்ணம் இடை யெழுத்து மிக்கு வரும் (பொ519). அளபெடை பயின்றுவரின் அது அள பெடை வண்ணமாகும் (பொ.520). நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்தும், குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்தும் பயின்று வரும் (பொ.521.522). நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்பக் கலந்துவரின் அது சித்திர வண்ணத்தின்பாற்படும் (பொ.523). ஆய்தம் பயின்று வந்தால் அது நலிபு வண்ணம் எனப்படும் (பொ. இவ்வாறு வல்லெழுத்து, லெழுத்து, இடையெழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து. 524). அளபெடை மெல் ஆகிய எழுத்து வகைகள் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு செய்யுளியல் நூன்மரபுச் செய்திகளைப் பெரிதும் பயன்படுத்துகிறது.

முடிவுரை

            நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகள் தொல்காப்பியம் முழுவதற்கும்
இன்றியமையாதவை என்பதையும். எழுத்ததிகாரம் அல்லாத பிற இரண்டு அதிகாரங்களிலும் தொல்காப்பியரால் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் மேற்கூறிய செய்திகள் தெளிவுறக் காட்டு கின்றன. இவ்வடிப்படையில் நூன்மரபு நூல் முழுவதற்கும் இலக்கணம் கூறுவது; உரிய செய்திகளைத் தொகுத்துக் கூறுவது என்ற நச்சினார்க்கினியர் கருத்து வலியுறு கின்றது. எனினும் சிவஞான முனிவர் நூன்மரபுச் செய்திகள் பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்கு மாத்திரமே கருவியாகின்றன என்பதை கினியரை மறுப்பதற்குச் நச்சினார்க் சான்றாகக்,

குறிப்புகள்

1.ஒ.நோ.பொ.474 இளம்பூரணர் உரை. இளம்பூரணர், இங்கு, ”மூன்றுறுப் படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஓத்தும் படலமும் இன்றாகிவரினும், ஓத்துப் பலவுண்டாகி படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும் பிண்டமென்று பெயராம் என்றவாறு. இவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிரு படலம். அதி காரத்தாற் பிண்டமாயிற்று இந்நூல்காட்டுகிறார் (1.3). நூன் மரபுச் செய்திகள் பொருளதிகார பேசப்படாமைக்குக் இயல்கள் பிறவற்றில் காரணம்
பின் வருமாறு: தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்லதிகாரங்களும் பொருளதிகாரத்தில் செய்யுளியலும் வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழியின் (Formal Structure) பற்றிய வடிவமைப்பு செய்திகளை ஆராய்பவை. பொருளதிகாரத்தின் பிற யல்கள் மொழியின் உள்ளடக்கம் (Content) அல்லது மொழி கூறும் பொருண்மையின் அமைப்பு, பாகுபாடு பற்றி ஆராய்பவை. அங்கே வடிவமைப்பு பற்றிய செய்திகள் இயல்பே.
பயன்படாதது வடி ஆனால், மொழியின் வமைப்பு விதிகளைப் பயன்படுத்தி உருவாகும் தொடர்புகளும், செய்யுளுமே மொழியின் உள்ளடக்கத்தை அல்லது பொருண்மையைத் தெரிவிக்கப் பயன்படுவதால் நூன்மரபில் கூறப்பட்ட வடிவமைப்பு பற்றிய செய்திகள்பொருளதிகாரத்தின் பிற இயல்களுக்கு மறைமுகமாகப்  பயன்படுவனவே.


            எனவே, நூல் என்ற சொல்லிற்குத் தொல்காப்பியரை ஒட்டிக் வேண்டிய பொருளின் அடிப்படையிலும் நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையிலும் இவ்வியல் நூன் முழுவதற்கும் உரியதும், அடிப்படையாய் அமைந்து பயன்படும் இன்றியமையாச் சிறப்புடையதும் ஆகும்.என்றுகொள்க’, கூறுகிறார். என்று இவ்வாறு பொருள் கொள்வது தொல் காப்பியச் சூத்திர வரிசை முறைக்குப் பொருத்தமாக இல்லை. நூலின் இயல்பை விளக்கி (468) அது நால்வகைப்படும். (469) என்று கூறி அந்நூல்வகைகள் சூத்திரத்தான், ‘ஓத்தினான், ம்மூன்று உறுப்படக்கிய பிண்டத்தான் யல்வன (470) என்று கூறுகிறார். எனவே இம் மூன்றுறுப்புக்களுள் உறுப்போ இரண்டு உறுப்போ மாத்திரம் படலத்தான் ஓர் கொண்டநூல்களையும் பிண்டம் என்று வழங்குவது தொல்காப்பிய நூற்பாவின் நேர் பொருளோடு மாறுபடுகிறது.


2.’மரபு’ என முடியும் நான்கு இயல் தலைப்புக்களுள், நூன்மரபு, நூலினது இலக்கணம்’, மொழி மரபு ‘மொழியினது இலக்கணம்’, விளிமரபு ‘விளியினது இலக்கணம்’என வேற்றுமைத் தொகையாய்ப் பொருத்தமாய் அமை
கின்றன. ஆனால், தொகைமரபு ‘தொகையினது இலக்கணம்’ எனப் பொருள்படாது. அது ‘தொகையாகிய இலக்கணம்’ என விரித்துப் பண்புத் தொகையாய்க் கொள்ளின் அதுவும் பொருத்தமாக அமைகிறது.

3. இளம்பூரணர், சேனாவரையர்,

சுருக்கக் குறியீடுகள்

இளம் – இளம்பூரணர் உரை

எ – எழுத்ததிகாரம்

சொ – சொல்லதிகாரம்

மேற்கோள் நூல்கள்

1.ஆறுமுகநாவலர், (1956) பதி. சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சென்னை.

2.சிவலிங்கனார், ஆ. (1980) பதி. தொல் காப்பியம்-நூன்மரபு உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3.சுப்பிரமணியசாஸ்திரி, (1937) தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-குறிப்புரை, திருச்சிராப்பள்ளி.

4.தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,இளம்பூரணர் உரை (1955), சைவசித்தாந்த
நூற்பதிப்புக்கழகம், சென்னை.

5.தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க் கினியர் உரை (1972). சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

6.தொல்காப்பியம், சொல்லதிகாரம், பூரணர் உரை
இளம் (1963)சைவசித்தாந்த நூற் நச்சினார்க்கினியர் ஆகியோர்,


ஈரளபிசைக்கும் இறுதியில் உயிரே

ஆயியல் நிலையும் காலத்தானும்

அளபெடை யின்றித்தான் வரு காலையும்

உளவென மொழிப பொருள் வேறுபடுதல்

குறிப்பின் இசையின் நெறிப்படத் தோன்றும் (சொ.276).

            என்ற நூற்பா ஔகாரத்தைக் குறிப்பதாகக் கொள்ளத் தெய்வச்சிலை யார் இதனை ஔ ஒழிந்த மற்ற நெடில் அளபெடுத்தும் அளபெடாதும் குறிப் பிடைச் சொல்லாய் வருவதைக் குறிப்பிடுகிறார்.
அவ்வாறுபொருள்கொள்ளினும் அளபெடை இங்கு பயன் பெற்றிருப்பதில் மாற்றம் இல்லை.

நச்சி.  – நச்சினார்க்கினியர் உரை

பதி.    – பதிப்பாசிரியர்

பொ. –            பொருளதிகாரம்.

பதிப்புக் கழகம், சென்னை.

7.தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை (1938). பதி. சி.கணேசையர், சுன்னாகம்.

8.தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச் சிலையர் உரை (1929) கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை.

9.தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை (1962) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

10.தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை (1953) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

11.வேங்கடராஜுலு ரெட்டியார், வே.(1944), தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி.
சென்னை (ஆ.சிவலிங்கனார் (பதி.) 1980 – இல் எடுத்தாளப்பட்டது).

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

க.பாலசுப்பிரமணியன்

வெளிவந்த இதழ் மற்றும் ஆண்டு :  தமிழ்க்கலை, தமிழ் 2, கலை 2 : 3, 1984

புறநானூற்றில் பார்ப்பன வாகை

புறநானூற்றில்-பார்ப்பன-வாகை

முன்னுரை

            சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கை இயல்பினை இரு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கின்றனர். ஒன்று அகம்; மற்றுது புறம் அகம் காதலையும் புறம் வீரத்தையும் குறிக்கும் எனப்பொதுவாகக் கூறப்படுகிறது. அகம், காதலைக் குறித்தாலும் புறம், வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரம் என்பது முதன்மையான ஒன்றாகக் கருதப்பட்டு பிற ஒழுகலாறுகள் குறித்த செய்திகளும் புறத்தில் அடங்குகின்றன. அகமும் புறமும் சில கூறுகளில் ஒப்பு நோக்கிக் கூறப்படுகின்றன. அகத்திணைகளான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி ஆகியவற்றோடு ஒப்புமையாக்கப்பட்டு உணரப்படுகின்றன. ஏழாக உரைக்கப்பட்ட புறத்திணைகள் தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு பன்னிரண்டாக விரித்துரைக்கப்படுகின்றன. பாடாண், காஞ்சி தவிர புறத்தின் மற்ற திணைகள் போர் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன போரில் வெற்றி பெற்ற நிகழ்வினை உரைக்கின்ற வாகைத்திணையில் அமைந்துள்ள பார்ப்பன வாகை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. புறநானூற்றில் பார்ப்பன வாகை

சாதிப்பிரிவுகள்

            சங்ககாலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப்பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை, குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது” (தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் – வாழ்வியல் – ப.5) குடிகள் நில அடிப்படையில் தத்தம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். ஐம்பெருங்குழுவில் இடம்பெறும் புரோகிதர் பார்ப்பனராக இருக்கலாம். சங்ககாலத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வேற்றுமைகள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை.

சங்க காலப் பார்ப்பனர்கள்

            பார்ப்பனர்கள், அந்தணர், ஐயர் என்று அழைக்கப்படுகின்றனர். நால்வகை வருணத்தில் பிராமணர் எனச் சுட்டப்படும் சொல் வழக்கு சங்க இலக்கிய நூல்களில் எங்கும் இடம்பெறவில்லை. அந்தணர் என்றும் பார்ப்பார் என்றும் சுட்டப்படுவதை சங்க இலக்கியங்களில் காணலாம். அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை மட்டும் குறிக்கவில்லை என்பதற்கு

                                    அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

                                    செந்தண்மை பூண்டொழுக லான்                         (குறள். 30)

என்ற வள்ளுரின் வாய்மொழி சான்றாக அமைகிறது. பார்ப்பனர் அல்லாதவர்ககளும் சிறப்பான குணநலன்களால் அந்தணர் என்று அழைக்கப்படலாம் என்ற கருத்திணை இக்குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐயர் என்ற சொல் தலைவர், உயர்ந்தோர், சான்றோர், என்பதைக் குறிக்கின்றன. பார்ப்பனர் என்ற சொல்லே பிராமணரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

பார்ப்பார்க்குரிய செயல்களும் இருப்பியல் நிலையும்

            முப்புரிநூல், கரகம், முக்கோல் மணை ஆகியவற்றை உடையவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா மரபியல் : 71 எடுத்துரைக்கின்றது. சங்க கால அகவாழ்வில் கற்பின்கண் தலைவன், தலைவியரிடையே நிகழும் ஊடலில், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களுள் ஒருவராகப் பார்ப்பார் குறிப்பிடப்படுகிறார். இதனைத் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா (191) சுட்டிக் காட்டுகின்றது.

            பார்ப்பார்க்குரிய செயல்கள் ஆறென மொழிவதை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகின்றது. தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுந்த உரையிலும் இதனைக் காணலாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்

                                                ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்

                                                முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி

                                                ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்

                                                அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க

என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கட்டுரை காதை 67-70) அந்தணர்க்குரிய அதாவது பார்ப்பார்க்குரிய செயல்களை அறியமுடிகிறது.

            பார்ப்பனருள் பெரியவரைக் கொண்டு வேள்விகள் நடத்தப்பெற்றிருக்கின்றன, வேள்வியின் இறுதியில் பார்ப்பனப்புலவன் தம் மனைவியுடன் துறக்கம் அடைந்ததாகவும் நம்பப்படுகிறது. இச்செய்தியை பதிற்றுப்பத்து உரைக்கின்றது. (பதிகம்-3) பார்ப்பனச் சிறுவர்கள் குடுமியுடன் இருந்ததை ஐங்குறுநூறு வழி (202:2-3) அறிய முடிகிறது. அரசனுக்காகப் பார்ப்பனர்கள் தூது சென்றிருக்கிறார்கள். இதனை அகநானூறு தெரிவிக்கின்றது. போரினைத் தடுக்கும் முறையிலும் செயல்பட்டிருக்கின்றார்கள். அரசர்களுக்கு நிலையாமையை எடுத்துரைத்து அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள், கபிலர், பரணர், நக்கீரர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலான புலவர்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றனர். அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பணிவுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள் அரசர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றனர். போர் ஏற்படும் சூழலில் பாதுகாப்பான பகுதியில் சென்று தங்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கொடிய பாவமாகக் கருதப்பட்டிருக்கின்றது.

                                                பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

                                                வழுவாய் மருங்கிய கழுவாயும் உள

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (34:3-4) மேற்கண்ட கருத்தினை அறிவிக்கின்றது. அரசர்களுடைய அரண்மனையில் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் சென்று வர உரிமை இருந்திருந்தது. எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனை,

                                                “அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

                                                கடவுள் மால் வரை கண்விடுத் தன்ன

                                                அடையா வாயில்…..

            என்ற சிறுபாணாற்றுப்படையின் (204-206) பாடலடிகள் குறிப்பிடுகின்றன. தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொருட்டு தங்கள் இருப்பிடத்தில் வேள்வித் தூண் நடுதலை

                                                கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த

                                                வேள்வித் தூணத் தசைஇ

என்று பெரும்பாணாற்றுப்படை (315-316) குறிப்பிடுகின்றது.

            அரசரை விடவும் அந்தணர்கள் – பார்ப்பனர்கள் உயர்ந்தவராகப் கருதப் பட்டிருக்கின்றார்கள். இதனை,

                                                சிறந்த வேதம் விளங்கப் பாடி

                                                விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

                                                நிலமமர் வையத் தொருதா மாகி

                                                உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்

                                                அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்

                                                பெரியோர்……..

என்று மதுரைக்காஞ்சி (468-473) எடுத்துரைக்கின்றது. இத்தகைய தன்மையுடைய அந்தணரை – பார்ப்பனரை அரசன் துணையாகக் கொண்டு வாழ்ந்தால் பெரும்புகழ் அடையலாம் என்ற கருத்தினை,

                                                அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி

                                                ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று

                                                நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

                                                திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ

            என்ற பதிற்றுப்பந்து (மூன்றாம் பத்து 4: 8-1) பாடலடிகள் மூலம் அறியலாம். சங்க காலப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நடப்பவர்களுக்குப் புகழ் கிட்டும் என்ற கருத்தியல் தளத்தினடிப்படையிலும், பார்ப்பனர்கள் மேல் நிலையில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

வாகைத்திணையும் பார்ப்பன வாகையும்

            சங்க காலத் தமிழரின் போர் நெறிமுறைகள் குறிப்பிடத்தக்க முறையில் அமைந்தனவாகும். போர் திடீரென ஏற்படாமல் ஒரு சில முன்னறிவிப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆநிரை கவர்தல் மூலம் போருக்கான சூழல் உருவாகத்தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற்று போர்ச்சூழல் உருவாக்கப்படுகிறது. இருதிறப் படைகளும் போரில் ஈடுபட, வாகை சூடுவது ஒருவர் மட்டுமே. அவரது இயல்பை எடுத்துரைக்கும் புறத்திணையாக வாகைத்திணை அமைகிறது.

வாகைத் திணையின் இலக்கணத்தை.,

                                                தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

                                                பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப

என்று தொல்காப்பியம் (தொல்,பொருள் புறத்திணையியல்-15) வரையறுக்கின்றது. இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர். “அது கேடில்லாத கோட்பாட்டினை யுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல்” என்று (தொல்.பொருள்.புறத்திணையியல் ப.27) கூறுகிறார். “வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தாரும், அறிவரும், தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர்” என்று நச்சினார்க்கினியர் உரை (தொல் பொருள். புறத்திணையியல் ப.347) கூறுகின்றார். இவற்றினின்று வாகை என்பதற்கு மற்றவர்களிடமிருந்து தன்னுடைய மேம்பட்ட தன்மையின் மிகுதிப்பாட்டைக் கூறுவதை இலக்கமணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய மிகுதிப்பாட்டை மேம்படுத்திக் கூறுபவர்களாக பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என எழுவரை அடக்கியதே வாகைத்திணையாகும். இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

                                                அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                                ஐவகை மரபின் அரசர் பக்கமும்

                                                இருமுன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                                மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                                நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

                                                நாலிருவழக்கின் தாபதப் பக்கமும்

                                                பாலறி மரபின் பொருநர் கண்ணும்

                                                அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையின்

                                                தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

என்று (தொல்.பொருள்.புறத். 16) கூறுகிறார். எழுவரின் மிகுதித் தன்மையே வாகை எனப்படுகிறது. இந்நூற்பா வாகைத் திணையின் பாகுபாடாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற அறுதொழிலின் மிகுதியைக் குறிப்பதாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனக் பக்கம் என்று வாகையின் பாகுபாடாகத் தொல்காப்பியர் கூற, பிற்காலத்து எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை, பார்ப்பன முல்லை என்று இரு துறைகளை எடுத்துரைக்கின்றது. இவை இரண்டும் வாகைத் திணையின் துறைகளாக அமைகின்றன. ஒன்று வேள்வியினால் சிறப்புடையவனையும் மற்றொன்று போர் தடுக்கச்சென்றவனின் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது.

            பார்ப்பன வாகையின் இலக்கணத்தினை புறப்பொருள் வெண்பாமாலை

கேள்வியாற் சிறப்பெய்தி யானை

வேள்வியான் விறன் மிகுத்தன்று

என்று (வாகைப்படலம்.9) வரையறுக்கின்றது. “கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது” என்று நூலாசிரியர் உரை (பு.வெ.மா.106) வகுக்கின்றார். யாகம் செய்த சிறப்பு வெற்றியாகிறது; வாகையாக அமைகிறது. பார்ப்பனன் செய்த யாகத்தின் சிறப்பு பார்ப்பன வாகையாகிறது. புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியார் யாகம் செய்தலின் சிறப்பைக் குறிக்கும் வகையில்

                                                ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்

                                                வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும் – ஏதம்

                                                சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த

                                                விடுசுடர் வேள்வி யகத்து

என்ற பாடலைச் சான்று காட்டி விளக்குகிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்தில் கூறப்பட்ட வேட்டல் (வேள்வி செய்தல்) என்பதற்கு புறநானூற்றில் அமைந்த ஆவூர் மூலங்கிழார் பாடலை (168) இளம்பூரணர் மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார். புறநானூற்றில் இரண்டு பாடல்கள் மட்டுமே பார்ப்பன வாகைத் துறையில் அமைந்த பாடல்கள் (166-305) ஆகும். ஆவூர் மூலங்கிழார் சோணாட்டுப் பூஞ்சாற்றுப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடுகிறார். தன்மனைவியருடன் சிறப்பாகப் பெரு வேள்வி செய்த கௌணியன் விண்ணந்தாயனின் மிகுதிப்பாட்டை – வேள்வி செய்த திறத்தைப்பாராட்டி,

                                                                           நன்றாய்ந்த நீணிமிர்சடை

                                                                         முது முதல்வன் வாய்போகா

                                                                        தொன்றுபுரிந்த வீரிரண்டின்

                                                                        ஆறுணர்ந்த வொருமுதுநூல்

                                                                        இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையுமுட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக

வினைக்கு வேண்டி நீபூண்ட

புலப்புல்வாய் கலைப்பச்சை

சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய

மறங்கடிந்த வருங்கற்பின்

அறம் புகழ்ந்த வலை சூடிச்

சிறு நுதற்பே ரகலல் குற்

சில சொல்லிற் பல் கூந்தலின்

நலைக்கொத்த நின் றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில் கேட்பக்

காடென்றா நாடென்றாங்

கீரேழி னீடமுட்டாது

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் றிருந்தேந்து நிலை

என்றுங் காண்கதில் லம்ம யாமே குடாஅது

பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்

உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்

செல்வ லத்தை யானே செல்லாது

மழைய ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவள ரிமயம் போல

நிலீ இய ரத்தை நீ நிலமிசை யானே

என்று நெடிய வாழ்த்துப்பா (புறம் 166) பாடுகிறார். அறம் ஒன்றை மேவி நான்கு கூறுகளை உடைய, ஆறு அங்கத்தை உடைய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோரை புறச்சமயத்தாருடைய மிகுதியைச் சாய்க்க இருபத்தொரு வேள்வித்துறையை எத்தவிதக்குறையும் இன்றி தம் ஏவல் கேட்டுச் செயல்படும் துணைவியருடன் நீரைப்போல நெய்யை ஊற்றி பல வேள்விகளைச் செய்து விருந்தினைப் போற்றிய உன்னுடைய மிகுதியான சிறப்பு மே;படுவதாகுக. இமயமலை போல் வாழ்க என்று ஆவூர் மூலங்கிழார், வேட்டலின் மிகுதியை – கௌணியன் விண்ணந்தாயனின் வேள்விச் சிறப்பை பார்ப்பன வாகைத் துறையில் பாடுகின்றார். பார்ப்பனனின் மேம்பட்ட வேள்விச் சிறப்பு அவனுடைய வெற்றியாக அமைகிறது.

பார்ப்பன வாகையும் பார்ப்பன முல்லையும்

            மதுரை வேளாசான் பாடிய புறநானூற்றுப்பாடல் (305) பார்ப்பன வாகைத்துறையில் அமைந்த மற்றொரு பாடலாகும். இப்பாடல் போர் எழுந்த சூழலில் போரைத் தவிர்க்கும் பொருட்டு தூதுச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் உரைக்கப்பட்ட பார்ப்பன வாகைத்துறையின் இலக்கணம் இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை. வாகைத்திணையில் பார்ப்பன முல்லை என்பது,

                                    கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கும்

                                    நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத் தன்று

என்று புறப்பொருள் வெண்பாமாலை (வாகைத்திணை-18) இலக்கணம் உரைக்கின்றது. இரு அரசர்களிடையே எழுந்த மாறுபாட்டை வேதம் அறிந்த பார்ப்பனன் தன்சொல் முறையால் மாற்றுகிற தன்மையைச் சொல்லுவது என்பதே பார்ப்பன முல்லைத்துறையாகும்.

மதுரை வேளாசான் பாடிய,

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே

ஏணியுஞ் சீப்பு மாற்றி

மாண்வினை யானையு மணிகளைந் தனவே

என்ற புறநானுற்றுப்பாடல் பார்ப்பனவாகைத் துறையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றுப்பாடலுக்கு உரை வகுத்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் துறை விளக்கம் தருகையில்,

            இது பார்ப்பன வாகையெனத்துறை வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பன வாகையாவது கேள்வியாற் சிறப்பெய்தி யானை வேள்வியான் விறன் மிகுத்தன்று (பு.வெ.மா.8-9) எனப்படுகிறது. இது பார்ப்பன முல்லை யென்றிருப்பின் சீரிதாம்…இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும் போரொழிந் ததென்றும் கூறுவது இது பார்ப்பன முல்லை யாதலை வற்புறுத்துகின்றது (புறம்.தொகுதி.பக் 209-210) என்று கூறுகிறார். பிள்ளை அவர்களின் விளக்கம் சரியானதுதான் என்றாலும் புறநானூற்றுப்பாடலில் கூறப்பட்ட துறை பார்ப்பன வாகையாக இருக்கின்றது. இப்பாடலில் பார்ப்பனனின் மிகுதி உரைக்கப் பட்டிருகின்றது. அதாவது சொல்வன்மை உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

                                    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

                                    இகல்வெல்லல் யாருக்கும் அரிது (குறள்.647)

என்பது வள்ளுவம். சொல்வன்மை படைத்தவரை யாராலும் வெல்லமுடியாது. யாராலும் வெல்ல முடியாத சொல்வன்மை படைத்த பார்ப்பனன் என்ன கூறினான் என்பது உரைக்கப்படவில்லை. அவன் பேசியது சில சொற்களே. அதனால் உடனடியாகப் போர் விலக்கப்பட்டிருக்கின்றது. எதிர் நாட்டரசன் தன் நாட்டிற்குள் வராது இருக்க ஆணிகள் நிறைந்த சீப்பு வடிவத்திலான கருவி கோட்டை வாசலில் வைக்கப்படும். எதிரியைத் தாக்குவதற்கு நூல் போன்ற கருவிகளை எடுத்துச்செல்வர். போர்க்கோலம் பூண்ட யானை முதலான படைகள் அணிவகுக்கும். இந்நிலையில் பார்ப்பனன் வந்து பேசிய சொற்கள் சில மட்டுமே. அதன் பின்னர் உடனடியாக ஏணியும் சீப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. போர்க்கோலம் பூண்ட யானைகளின் மணிகள் முதலானவை களையப்பட்டுவிட்டன. பார்ப்பானின் சொல்வன்மை பார்ப்பன வாகையா? பார்ப்பன முல்லையா? என்ற வினா எழுகிறது. பாடல் பார்ப்பன வாகைத்துறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பன முல்லையின் இலக்கணம் தான் பொருந்துகிறதே தவிர பார்ப்பன வாகையின் இலக்கணம் பொருந்தவில்லை. வேள்வியின் சிறப்பு எதுவும் இப்பாடலில் கூறப்படவில்லை. சொல்வன்மையின் சிறப்பு உரைக்கப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் தான் பார்ப்பனவாகை, பார்ப்பன முல்லை ஆகிய துறைகள் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்பதோடு மட்டும் அமைகிறது. அறுவகையில் ஒன்றான வேள்விசெய்தல் பார்ப்பன வாகையாகிறது. ஆனால் பார்ப்பன முல்லையை ஆறுவகையில் ஓதுவித்தலுடன் தொடர்பு படுத்தலாம்.

ஓதலும் ஓதுவித்தலும் கல்வியறிவா? நான்மறை அறிவா? என்பது வினாவிற்கு உரியது. கல்வியறிவு என எடுத்துக்கொண்டாலும் தான் கற்ற கல்வி மூலமாக பிறருக்கு வாழ்வதற்கு ஏற்ற எந்தத் தீங்கும் இல்லாத அறிவுரையாகச் சொல்லத்தெரிந்த அறிவாக இருந்தால் அவ் அறிவு போற்றப்படவேண்டிய ஒன்று. வேத அறிவு என்பது வேதங்களைப் பற்றிய அறிவா? வேதங்கள் மூலம் தான் பெற்ற அறிவா? என்பது வினா. மதுரை வேளாசான் பாடல், புறப்பொருள் வெண்பா மாலையின் பார்ப்பன முல்லைத் துறைக்கும் பொருத்தமானது என்று கூறப்பட்டாலும் பார்ப்பனவாகை என்ற துறையில் பாடல் வகுக்கப்பட்டது ஏன்? புறப்பொருள் வெண்பா மாலையில் வகுக்கப்பட்ட துறை, சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் கவனத்தில் கொள்ளவில்லையா? என்ற வினாவையும் எழுப்புகிறது. இருப்பினும் பார்ப்பன வாகைத்துறை என வகுக்கப்பட்டிருப்பது சரியென்று கூறவும் இடம் இருக்கின்றது.

ஆளுமை என்பதற்கு சொல்லப்படும் விளக்கம், எந்த ஒரு சூழலையும் தன்னுடையதாக்கிக் கொள்வதே ஆளுமை என்றாகிறது. இத்தகைய ஆளுமைப்பண்பு உயரியதாகக் கொள்ளப்படுகிறது. ஆளுமைப்பண்பிற்காகக் கூறப்படும் வரையறைகளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுகிற பண்பைப் பார்ப்பனர் பெற்றிருக்கலாம். எந்த சூழலையும் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிற தனித்தன்மையுடைய பார்ப்பனன் சொல்லிய சொற்கள் சில. சொற்கள் சிலவாக இருந்தாலும் கேட்பவரை அதன்படி கேட்டு நடத்தக்கூடிய வகையில் இருப்பது வாகையாக அமைகிறது.

“குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினின்றும் வேறுபடமிகுத்து மேம்படுதல் வாகைத் திணையின் ஒழுகலாறாம்”. என்ற (முனைவர் கோ.சிவகுருநாதன், வாகைத்திணை, ப.17) வாகைத்திணையின் இலக்கணத்திற்கு வெள்ளை வாரணனார் கூறுகிற உரைவிளக்கம் இங்குக் குறிப்பிடத்தக்கது. தத்தமக்குரிய அறிவு என்பதன் அடிப்படையில் கேட்டாரைப் பிணிக்கும் தகையவாய் பார்ப்பனன் சொல் அமைந்து பார்ப்பன வாகையான மதுரை வேளாசான் பாடல் அமைவதை ஏற்கலாம்.

தொகுப்புரை

            சங்க காலச் சமூகத்தில் சாதிகள் இருந்திருக்கினறன. ஆனால் சாதி வேற்றுமைகள் பாராட்டப்படவில்லை. அரசர்களுக்கு அடுத்த நிலையில் பார்ப்பனர்கள் இருந்திருக்கின்றனர். பார்ப்பார் அந்தணர் என்று குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் மேல்நிலையில் இருந்திருக்கின்றனர். அகவாழ்வில் வாயில்களாகவும் புறவாழ்வில் அறிவுரை கூறுபவர்களாகவும், வேள்வி செய்விப்பவர்களாகவும் விளங்கினர். புறத்திணைகளுள் ஒன்றான வாகைத்துறை வாகைத்திணையில் பார்ப்பன வாகைத்துறை, பார்ப்பன முல்லைத் துறை என இரு துறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், புறநானூற்றில் இரண்டு பாடல்கள் பார்ப்பனவாகைத் துறையில் அமைந்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிற பார்ப்பன வாகை இலக்கணத்தின்படி ஒரு பாடலும், பார்ப்பன முல்லைதுறை இலக்கணத்தின்படி ஒரு பாடலும் அமைந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பன முல்லை என துறை ஒன்றின் பெயர் இடம் பெறவில்லை. வள்ளுவர் கூறிய வாய்மொழியின் படியும் வெள்ளை வாரணனார் வாகைத் திணைக்கு உரைத்த உரையின் படியும் பார்ப்பன வாகைத்துறையிலேயே அப்பாடலை வகுத்துக்கூறலாம். பார்ப்பன வாகை எந்தச் சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் பார்ப்பனனின் வெற்றியாக அமைகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

தமிழ் இணைப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

அரசு கலைக்கல்லூரி

உடுமலைப்பேட்டை

மேலும் பார்க்க,

புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார்

 காரைக்கால் அம்மையார்


காரைக்காலில் வணிகர் குலத்தில் பிறந்தவர் புனிதவதியார் ஆவார். இவர் குழந்தைப் பருவத்திலேயே சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் அரும்பக்தி கொண்டிருந்தார்.

புனிதவதியைப் பெற்றோர் நாகப்பட்டினத்திலே இருந்த பரமதத்தன் என்பவருக்கு மணம் செய்து வைத்தனர். தன் அருமை மகளைப் பிரிய மனம் இல்லாத புனிதவதியின் தந்தை இருவரும் காரைக்காலியே இல்லறம் நடத்தும்படிக் கூறினார். இருவரும் மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஒருநாள் பரமதத்தன், நண்பர் தந்ததாகக் கூறி இரண்டு மாம்பழங்களை வீட்டிற்குக் கொண்டு வந்தான். மதிய உணவிற்கு அவற்றைப் பரிமாறும்படிக் கூறிவிட்டு சென்றான்.

அடியவர் வேடம் 

ற்று நேரத்தில் புனிதவதியின் வீட்டு வாசலில் ஒரு அடியவர் வந்து நின்றார். அடியவருக்கு உணவு அளிக்க சமையல் முடிந்தபாடில்லை. எனவே, புனிதவதியார் கணவன் தந்த இரண்டு மாம்பழங்களிலே ஒன்றை அடியவருக்குத் தந்தார்.மதிய உணவு உண்ண வந்த பரமதத்தன் மாம்பழத்தைக் கேட்டான். புனிதவதியார் ஒரு மாம்பழத்தை அரிந்து தந்தார். அதை உண்ட பரமதத்தன், மாம்பழத்தின் சுவையில் மகிழ்ந்து மற்றொரு மாம்பழத்தையும் கொண்டு வரும்படிக் கேட்டான். புனிதவதியார் நெஞ்சம் பதைத்தார். கணவருக்கு என்ன பதில் சொல்வேன் என்று நடுங்கினார். தான் அன்றாடம் வணங்கும் இறைவனின் முன் சென்று, அழுது தொழுதார். அக்கணமே சிவனருளால் அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதை அரிந்து தன் கணவருக்குத் தந்தார் புனிதவதியார்.

மாம்பழம்

அதை உண்ட பரமதத்தன், “முதலில் உண்ட மாம்பழத்தில் இத்தனை சுவையில்லை. சுவை மிகுந்த இப்பழம் யார் தந்தது?” என்று கேட்டான். புனிதவதியாரும் வேறு வழியின்றி நடந்த உண்மைகளைக் கூறினார். இரண்டாவதாகக் கணவர் உண்டது சிவனருளால் பெற்ற மாம்பழம் என்றார்.

சைவநெறியில் அத்துணை பக்தியில்லாத பரமதத்தன் அதனை நம்பவில்லை. அவன் புனிதவதியாரிடம், “நீ அத்துணை பக்தி நிரம்பியவள் என்றால் சிவபெருமானிடம் இன்னுமொரு மாம்பழம் பெற்றுக் காட்டு!” என்று கூறினான்.புனிதவதியாரும் இறைவனிடம் வேண்டினார். இன்னொரு மாம்பழம் வந்தது. பரமதத்தன் பேரதிர்ச்சி அடைந்தான்.

தெய்வீக சக்தி கொண்ட புனிதவதியாரோடு இனிதான் இல்லறம் நடத்த முடியாது என்று கருதினான். அதை வெளியில் கூறாமல் புனிதவதியாரைத் தொடாமலேயே வாழ்ந்தான். சிறிதுநாள் கழித்து, வாணிபம் செய்யும் பொருட்டு பாண்டி நாடு சென்ற பரமதத்தன், அங்கு வேறொரு பெண்ணை மணம் செய்து கொண்டான். இதைப் புனிதவதியார் அறியவில்லை.

பேய் உருவம்

ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு புனிதவதியாரின் சுற்றத்தார் இதை அறிந்து, புனிதவதியாரை பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்தனர். பரமதத்தனிடம் சேர்ப்பித்தனர். ஆனால் பரமதத்தனோ, “இவள் தெய்வசக்தி கொண்டவள். இவளோடு என்னால் குடும்பம் நடத்த முடியாது!” என்று கூறினான். அதைக்கேட்டு மனம் வருந்திய புனிதவதியார் சிவபெருமானிடம், “என் கணவர் விரும்பாத இந்த உடல் பேய் வடிவமாக மாற அருள வேண்டும்!” என்று வேண்டினார். மறுகணமே புனிதவதியார் பேய் உருவை அடைந்தார். அவ்வுருவிலேயே சிவனைத் தொழுதார். பதிகங்கள் பாடினார்.

இவ்வாறிருக்கையில் புனிதவதியாருக்கு திருக் கயிலையைக் காணும் ஆசை உண்டானது. அவர் தலையாலேயே நடந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றார். அவ்வாறு செல்கையில் வழியிலேயே சிவபெருமான் உமையன்னையுடன் புனிதவதியாருக்கு திருக்காட்சி தந்தார். புனிதவதியார் தலையால் நடந்து வரும் காரணத்தை இறைவன் கேட்டார். திருக்கயிலையிலே தனக்கு இடம் தரவேண்டும் என்று பதிலுரைத்தார் புனிதவதியார்.

திருக்கயிலை அடைதல்

சிவபெருமானும், ‘அம்மையே! யாம் ஊர்த்துவ தாண்டவம் புரிகின்ற திருவலங்காட்டில் வீற்றிருந்து பதிகங்கள் பாடிக் களிப்பாயாக. உற்ற நேரத்தில் கயிலை வந்தடைவாய்!” என்று அருளினார். புனிதவதியாரும் தலையால் நடந்து சென்றே திருவாலங்காட்டை அடைந்தார். அங்கே இறைவனின் அருகில் அமர்ந்தார். பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். இறுதியில் சிவலோகம் சென்றடைந்தார். காரைக்கால் அம்மையார் என்ற பெயருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இணைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

பத்திரிக்கைச் சட்டங்கள்

பத்திரிகைச் சட்டங்கள் | PRESS LAWS

            மக்களாட்சி சரியாகச் செயல்பட வேண்டுமானால் இதழ்கள் வேண்டும். ஆனால் பத்திரிகைகள் செயல்படாவிட்டால், அளவற்ற ஆற்றல் சுதந்திரமாகச் செயல்பட பொறுப்புணர்ச்சியோடு கொண்ட இதழ்களால் சில கேடுகளும் விளையும்.

            பொதுவாக, சாதாரண மக்கள், பத்திரிகைகளில் அச்சிடுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிடுகின்றனர். இதனால் சிலர் கையில் பத்திரிகைகள் இருக்கின்றபொழுது, அவர்கள் தங்களது விருப்பம்போல் செய்திகளை வெளியிட்டு, மக்களைத் திசை திருப்ப வாய்ப்பு இருக்கின்றது. வாணிப நோக்கோடு செயல்படும் இதழ்கள் ஆதாயம் கருதி, மக்களின் விலங்குணர்ச்சிகளைத் தூண்டவோ, சிலரை அச்சுறுத்தவோ, சிலரைப்பற்றித் தரக்குறைவாக எழுதவோ, பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையில் படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு இளம் உள்ளங்களைக் கெடுக்கவோ, மக்களுக்கிடையில் கலகங்களைத் தூண்டி சமுதாய அமைதியைக் கெடுக்கவோ முடிகின்றது. ஆதலால் இதழ்களைத் தேவையான அளவில் கட்டுப்படுத்துவதும் வேண்டியதாகின்றது.

            “பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஒரு தேவையான தீமையாகும். ஒரு பக்கமிருக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் மறு பக்கமிருக்கும் அது தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாக பயன் படுத்துவதைத் தடுக்கும் சரியான கட்டுப்பாடுகளுக்குமிடையில் சமன்பாட்டைக் காண வேண்டும்.” என்று ஆர்.சி.எஸ். சர்க்கார் (R.C.S. Sarkar, ‘The Press in India’, S. Chand & Co, 1984 PP. 68-69.) கூறுகின்றார்.

            நமது நாட்டில் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 19(2) விதியின்படி. அரசு, பத்திரிகையின் சுதந்திரத்தைக் கட்டுபடுத்த சட்டங்கள் கொண்டுவர அதிகாரம் பெற்றிருக்கின்றது. இது தவிர, பத்திரிகைகளை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன. அவற்றைப் பற்றி இதழியலாளர்கள் தெரிந்து கொள்வது தேவையாகும். அவற்றில் குறிப்பிடத்தக்க சட்டங்கள் மட்டும் இங்கு விளக்கலாம்.

பத்திரிகைச் சட்டங்கள் | PRESS LAWS

I.அவமதிப்புச் சட்டம் (Law of Defamation)

II. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்

III.நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்

IV. அலுவலக இரகசியங்கள் சட்டம்

V. பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867

VI. ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம்

VII. பதிப்புரிமை சட்டம் (The Copyright Act)

VIII. இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டம்

IX. அஞ்சல், தந்திச் சட்டங்கள்

X. பணிசெய் இதழியலாளர் சட்டம்

XI . வேறு சில இதழ்களின் சட்டங்கள்

I.அவமதிப்புச் சட்டம் (Law of Defamation)

            இதழியலாளர்களும், செய்தித்தாட்களை வெளியிடுபவர்களும் அவமதிப்புச் சட்டம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரின் மான இழப்புக்குக் காரணமாகின்றவரின் மீது குற்றவியல் சட்டத்தின்படியும் (Criminal Law) சமுதாயவியல் சட்டத்தின் படியும் (civil Law) நடவடிக்கை எடுக்கலாம்.

            விளக்கம்: ஒருவரை வாய்மொழியாக இழிவுபடுத்துவதை ‘அவதூறு’ (scandal) என்றும், எழுத்தின் மூலம் அவமதிப்பதை * சட்ட வழக்கிற்குட்பட்டது’ (Libe1) என்றும் கூறலாம். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (I.P.D. ) 499 ஆம் பிரிவு அவமதிப்பு எதுவென்று விளக்குகின்றது; 500 ஆம் பிரிவு தண்டனையைக் குறிப்பிடுகின்றது.
            ஒருவரைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதோ, மற்றவர்கள் படிக்கும் வகையில் எழுதுவதோ, சைகைகள் மூலம் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரவேண்டுமானால் அதில் மூன்று குறிப்பிடத்தக்க உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். அவை: யாராவது ஒரு மனிதரைப் பற்றிய அவமதிப்பாக இருக்க வேண்டும். (2) அப்படிப்பட்ட அவமதிப்பு பேசிய அல்லது மற்றவர்கள் படிக்க வேண்டுமென்று எழுதிய சொற்களாலோ, சைகைகளாலோ, தெரியக் கூடிய வெளியீட்டு முறைகளாலோ இருக்க வேண்டும். (3) அத்தகைய அவமதிப்பு, ஒருவரின் புகழைப் பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடோ, அல்லது புகழ் பாதிக்கப்படுமென்று அறிந்தோ செய்திருக்க வேண்டும். அவமதிப்புத் தொடர்பானவற்றை,

(1) மக்களின் வெறுப்பை, கிண்டலை, கேலியைத் தூண்டக் கூடியவை;

(2) மக்கள் வெறுத்தோ, புறக்கணித்தோ, ஒதுக்கக் கூடியவை;

(3) ஒருவரின் பணியையோ, தொழிலையோ பாதிக்கக் கூடியவை;

(4) வாணிபத்தைப் பாதிக்கக் கூடியவை என்று நான்கு வகையாகப் பகுக்கலாம்.

விதி விலக்குகள்: ஒருவரை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் பத்து குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தண்டிக்க முடியாதென்று 499 ஆம் பிரிவு விதிவிலக்கு அளித்திருக்கின்றது. இதன்படி பொது நலன் கருதி உண்மையை வெளியிடாமலிருத்தல்; பொது நலன் கருதி சிலவற்றை வெளியிடல்; அரசு ஊழியர்களைப் பற்றி நியாயமாகக் கருத்துக் கூறல்; பொது நலனுக்குத் தேவையானவற்றிற்காக வாதிடல்; நல்ல எண்ணத்தோடு நீதிமன்ற நடவடிக்கைகளை வெளியிடல்; நீதிமன்றத் தீர்ப்புப் பற்றியோ சான்று பற்றியோ நல்ல எண்ணத்தோடு கருத்துக் கூறல், பொது நடவடிக்கைகள் பற்றி பொதுநல நோக்கில் விமர்சனம் செய்தல், சட்டப்படி அதிகாரம் உடையவர்கள் சட்ட வரம்புக்குகள் கருத்துக் கூறல், நல்ல எண்ணத்தோடு அதிகாரத்தில் உள்ளவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டல், பொது நலனையோ தனிமனிதர்களையோ காப்பதற்காகத் சிலரைக் குறை கூறுதல், பொது நலன் கருதி ஒருவரை எச்சரித்தல் ஆகியவை அவமதிப்புக் குற்றமாகாது.

வழக்கு: 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் வழக்குத் தொடர்விதிப்படி 199 (1), யார் அவமதிப்புக்கு உள்ளானார்களோ அவர்கள் தான் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடியும். ஆனால் இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியவர்கள் அவமதிப்புக்கு ஆளானதாகக் கருதினால், அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கைத் தொடரலாம்.

            அவமதிப்பு வழக்கு, அவமதிப்புச் செய்தவர் மேல் மட்டுமல்ல; அதனை வெளியிட்ட நாளிதழின் பதிப்பாளர், அச்சிட்டவர், ஆசிரியர் ஆகியவர் மீதும் தொடரலாம். சட்டப்படி அவமதிப்பு உறுதிசெய்யப்பட்டால், பொறுப்பானவர்கள் அனைவரும் தண்டனைக்குள்ளாவார்கள்.

தண்டனை : அவமதிப்புச் செய்தவர்களுக்கு, இந்தியக் குற்றவியல் சட்டம் 500ஆம் பிரிவின்படி இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ இரண்டுமோ கொடுக்கலாம். சட்டக்குழு (The Law Commission) இதோடு கூட, தீர்ப்பினைச் செய்தித்தாட்களில் வெளியிடவேண்டுமென்றும், குற்றம் உறுதி செய்யப்பட்டவர் வெளியீட்டுச் செலவினை ஏற்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

            பொதுச் சட்டத்தின்படி மான இழப்பு வழக்குத் தொடர்பவர் இழப்பீடு பெற முடியும். குற்றவியல் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தால் அவமதித்தவர் தண்டனை பெறுவார்.


II. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்

            நாடாளுமன்றத்திலும் பொதுமக்களுக்குத் சட்டமன்றங்களிலும் நடப்பவற்றைப் தெரிவிப்பது மக்களாட்சியில் இதழ்களின்
பொறுப்பாகின்றது. ஆனால் இந்தப் பொறுப்பினை இதழ்கள் கவனமாக நிறைவேற்ற வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு வெளியிட வேண்டும். இதில் கவனமாக இல்லையேல், சட்டமன்ற, நாடாளுமன்ற 
உறுப்பினர்களின் உரிமை மீறல் குற்றமோ, சட்டமன்ற நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றமோ ஏற்பட்டு விடும்.

வரையறைகள்: பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற
நடவடிக்கைகளை வெளியிடும்பொழுது, உறுப்பினர்களின் மதிப்பைக் குறைக்கும் வகையிலோ, அவர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையிலோ, கேலி செய்யும் வகையிலோ, நாடாளுமன்றங்களை அவமதிக்கும் முறையிலோ செய்திகளை வெளியிடக் கூடாது.

            இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால்தான் உரிமை மீறல் என்று திட்டவட்டமாகக் கூறும் சட்டம் எதுவும் இல்லை.  ஆனால் இதுவரை,

(1) தவறாக சபைகளின் நடவடிக்கைகளை வெளியிட்டதற்காகவும்;

(2) சிதைத்த, முறையற்ற முறையில் நடவடிக்கைகளைப் பற்றி வேண்டுமென்றே எழுதியதற்காகவும்

(3) அவைத்தலைவர்கள் மன்றக் குறிப்பிலிருந்து விலக்கியவற்றை வெளியிட்டதற்காகவும் நமது நாட்டில் உரிமை மீறல் வழக்குகள் இதழ்களின் மீது தொடரப்பட்டுள்ளன. பல நாளிதழ்களின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.

            உரிமை மீறியவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சட்ட மன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கும் இருக்கின்றன. 1987இல் ‘ஆனந்த விகடனில் வெளியான ஒரு கேலிச்சித்திரம் சட்டமன்ற உறுப்பினர்களை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி, அதன் ஆசிரியருக்கு சட்டமன்றம் சிறைத்தண்டனை விதித்ததைச் சுட்டிக்காட்டலாம்.


சட்டப் பாதுகாப்பு: 1956ம் ஆண்டின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் (வெளியீட்டிற்குப் பாதுகாப்புச்) சட்டம் (The Parliamentary Proceedings (Protection’ of Publication Act 1956) நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுவதில் பத்திரிகைகளுக்குப் பாதுகாப்பளிக்கின்றது. பிரோஷா காந்தி (Feroz Gandhi) யின் முயற்சியால் இச்சட்டம் வந்ததால் இதனைப் ‘பிரோஷா காந்திச் சட்டம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தீய நோக்கத்தோடு தவறாக வெளியிட்டதாக உறுதி செய்யப்பட்டால் மட்டும் தான் தண்டனை வழங்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவதூறுகளாக இருந்தாலும் உண்மைகளாக இருந்தாலும், அவற்றை வெளியிடுவது உரிமை மீறலாகாதென இச்சட்டம் கூறுகின்றது.

            இச்சட்டத்தை நெருக்கடிக் காலத்தில் நீக்கியிருந்தனர். நெருக்கடிக்காலத்திற்குப்பின் இச்சட்டம் மறுபடியும் செயல் முறைக்கு
வந்துவிட்டது.

III.நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்

            செய்திகளின் மூலங்களில் ஒன்றாக நீதிமன்றம் விளங்குகின்றது. நீதிமன்றங்களில் நடைபெறும் சுவையான, சிக்கலான, பொதுநலனோடு தொடர்புடைய வழக்குகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதில் மக்களும் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். அவற்றை வெளியிடுவதன் மூலம் இதழ்கள் நீதியை எடுத்துரைக்கும் பணியைச் செய்கின்றன.


            நீதிமன்றங்கள், வழக்கு நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை அவமதித்த (contempt of Court) குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.


குற்றங்கள்: நீதிமன்றத்தையோ சட்டத்தையோ நீதிபதிகளின் இழிவுபடுத்தும் வகையில் அதிகாரத்தையோ வேண்டுமென்றே செய்திகளை குற்றமாகும். வெளியிடுவது தண்டனைக்குரிய எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்குபற்றிய தவறான செய்தியை வெளியிடுவதோ, வழக்கின் தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று இட்டுக்கட்டிக் கூறுவதோ, நீதிபதியைப் எண்ணம் பற்றியோ, சான்றுரைப்பவர்களைப் பற்றியோ தவறான ஏற்படும்படி எழுதுவதோ ‘நீதிமன்ற நிந்தனை’ க் குற்றமாகும்.


            காவல் நிலையங்களில் பதிவு செய்யும் குற்றங்கள் பற்றி அறியும் வாய்ப்பு செய்தியாளர்களுக்கு இருக்கின்றது. அவற்றைப் பற்றி அவர்கள் எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, திருட்டு வழக்கில் இராமன் என்பவன் கைது செய்யப்பட்டிருக்கலாம். “திருடன் இராமன் செய்யப்பட்டான்’, என்று செய்தி வெளியிடக்கூடாது. ராமனைக் கைது செய்தனர். அவன் மீது திருட்டுக்குற்றம் சாட்டப்படுகின்றது”, என்பது போன்று தான் செய்தியை வெளியிட வேண்டும்.


சட்டம்: 1952ஆம் ஆண்டின் ‘நீதி மன்ற அவமதிப்புச் சட்டம் எண் XXXII (The Contempt of Court Act XXXII) நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ, ரூ. 2,000 தண்டமோ (அபராதமோ) அல்லது இரண்டுமோ விதிக்கலாமென்று கூறுகின்றது.


            1971ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பெற்ற நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் நீதிமன்ற நிந்தனைகளை இருவகைகளாகப் பிரிக்கின்றது. முதலாவதாக, நீதிமன்றங்களின் ஆணைகளுக்கோ, தீர்ப்புக்களுக்கோ கட்டுப்பட மறுப்பது சமூகக் (civil) குற்றமாகும். இரண்டாவதாக, பத்திரிகைகளை செய்யும் நிந்தனைகள் குற்றவியல் (criminal) அடிப்படையில் குற்றங்களாகும்.


IV. அலுவலக இரகசியங்கள் சட்டம்

            மக்களாட்சியில் மக்கள் நாட்டில் நடப்புக்களை எல்லாம் தெரிந்து கொள்வது தேவையாகின்றது. அரசு எல்லா விவரங்களையும் சேகரித்து வைக்கின்றது. நிர்வாகத்தினர் பலவற்றை முடிவு செய்து செயல்படுத்துகின்றனர். இவற்றைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து மக்களுக்குத் தெரிவிப்பது இதழ்களின் பணியாகின்றது. ஆனால் நிர்வாகத்தின் திறமை கருதி, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டின் தொடர்புகள், குற்றப் புலனாய்வுகள், அமைச்சரவை முடிவுகள், சில தனிப்பட்ட மனிதர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை தொடர்பான சிலவற்றை அரசு ரகசியங்களாகக் கட்டிக் காப்பது தேவையாகின்றது. இப்படிப்பட்ட அலுவலக ரகசியங்களை இதழ்கள் அறிந்து வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.


சட்டம்: 1923ஆம் ஆண்டின் ‘அலுவலக இரகசியங்கள் சட்டம்’ (Official Secrets Act) (1) ஒற்றறிதல் (2) இரகசிய விவரங்களை மற்றவர்களுக்குத் தருதல் ஆகிய குற்றங்களைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது.


            இந்தச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு, யாராவது நாட்டின் பாதுகாப்பிற்குப் பாதகமான முறையில் (1) தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லுதல், அங்குள்ள இரகசிய விவரங்களைச் சேகரித்து மற்றவர்களுக்கு வழங்குதல்; (2) பகைவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படும் வகையில் வரைபடங்கள் தீட்டியோ, திட்டம் வகுத்தோ, மாதிரிகளை உருவாக்கியோ தருதல்; (3) பகைவர்களுக்குப் பயன்படக்கூடிய விவரங்களைப் பெற்றோ, சேகரித்தோ, பதிவு செய்தோ, வெளியிட்டோ வழங்குதல் குற்றங்களாகுமென்று தெளிவு படுத்துகின்றது.


1962ஆம் ஆண்டின் ‘ அணுசக்தி சட்டம்’ (Atomic Energy Act) இருக்கின்ற, அல்லது அமைக்கப் போகின்ற அணு உற்பத்தி நிலையங்கள் பற்றி அதிகாரம் பெற்றவர்கள் தவிர மற்றவர்களுக்குச் செய்திகளைத் தருவதைக் குற்றமாக்குகின்றது. இதைப்போல வேறு சில சட்டங்களும் இருக்கின்றன.


நடைமுறை : ஒன்றை இரகசியமானதா இல்லையாவெனத்
தீர்மானிப்பது சிக்கலானதாகும். சில வேளைகளில் அலுவலர்களும் அரசியல் தலைவர்களும் தங்களது தவறுகள் வெளியில் தெரியாமலிருக்க பலவற்றை இரகசியங்கள் என்று மூடி மறைக்கலாம். மக்களின் நலன் கருதி இதழ்கள் அவற்றை வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இந்திய அரசு வெளிநாட்டில் இராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகளை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ (Indian Express) வெளிப்படுத்திய பொழுது, அரசின் சில ஆவணங்களைப் பதிப்பித்தது. இதனை இச்சட்டத்தின் கீழ் குற்றமென அரசு கருதியது இதனைப் போன்று பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.


V. பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867

            நடைமுறையிலிருக்கின்ற மிகப் பழைய பத்திரிகைச் சட்டங்களில் ஒன்று 1867இல் கொண்டுவரப் பெற்ற ‘ பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம்’ (The Press and Registration of Books Act). இந்தச் சட்டத்தில் 1940, 1956 ஆம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் சட்டம் பத்திரிகைகளை கொண்டு வந்தனர். இந்தச் முறைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்ததுதானே தவிர, பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கமல்ல.. இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் புத்தகங்களையும் பாதுகாக்க இந்தச் சட்டம் துணை செய்கின்றது.


இதழ்கள் : இந்தச் சட்டத்தின்படி தில்லியிலிருக்கும் இந்திய அரசுத் தலைமைப் பதிவாளரிடம் பத்திரிகை தொடர்பான எல்லா விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.


            பத்திரிகைகளை வெளியிடுகின்றவர், உரிமையாளர், ஆசிரியர் ஆகியோர் மாவட்ட நீதிபதியிடமோ, பெருநகர நீதிபதியிடமோ வாக்குறுதி வழங்கி, பெயர் பதிவு செய்தபின் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். இந்தச் சட்டம் ஒரிதழை எப்படிப் பதிவு செய்து நடத்த வேண்டுமென்ற முறையை விளக்குகின்றது.


            ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிட்டவர், வெளியிட்டவர், ஆசிரியர், உரிமையாளர் ஆகியோரின் பெயர்கள், அச்சிட்ட இடம், வெளியிட்ட தேதி ஆகியவை தெளிவாக அச்சிட்டிருக்க வேண்டும். பத்திரிகையை வெளியிடுபவர்கள் செய்தித்தாட்கள் பதிவாளர் (Registrar of Newspapers) கேட்கின்ற எல்லா விவரங்களையும் கொண்ட ஆண்டு அறிக்கைகளை வழங்க வேண்டும்.

            இந்தச் சட்டத்தின்படி, ஆங்கிலம், இந்தி, உருதுமொழிகளில் வெளிவரும் ஒவ்வொரு இதழும் ஒரு படியை புது தில்லியிலுள்ள பத்திரிகைகள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மற்றைய மொழி இதழ்கள் குறிப்பிடப்பட்ட வட்டார வெளியீட்டு, செய்தி நிறுவனங்களுக்கு (PIB) ஒரு படியை அனுப்ப வேண்டும்.

VI. ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம்

            பத்திரிகைகளுக்கு  எதனை வேண்டுமானாலும் வெளியிடச்
சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் மக்களின் மனத்தையும், சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் கெடுக்கக்கூடிய ஆபாசமான, கீழான செய்திகளை, கட்டுரைகளை, படங்களை வெளியிடுவதைத் தடை செய்ய ‘ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம் (obscene Prohibition Act) செயல்படுகின்றது.


விளக்கம்: இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (I P C) 292,293, 294
பிரிவுகள், எவற்றை ஆபாசமாகக் கருதலாம் என்பதை விளக்குகின்றன. இவற்றின்படி நாகரிகமற்ற செய்திகள், தாழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் எழுத்துக்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் விளம்பரங்கள் ஆகியவை ஆபாசமானவைகளாகும்.


ஒன்றை ஆபாசமானதாக வெளியிடுபவரின் நோக்கமும் வெளியிடும் முறையும் கருதச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஆண்-பெண் உறவு பற்றித் திருமணமானவர்களுக்கு வழிகாட்டும் முறையில் அறிவியல் அடிப்படையில் வெளியிடுவதை ஆபாசமென்று கொள்வதில்லை. ஆனால் வாணிப நோக்கில் இதழ்களின் விற்பனையைக் கூட்ட, பாலுணர்வு பற்றித் தரக்குறைவான முறையில் வெளியிடுவது ஆபாசமாகும்.


தண்டனை : இச்சட்டப்படி ஆபாசமான வெளியீடுகளைப் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை இருக்கின்றது. மேலும் ஆபாசமானவற்றை எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கலாம். ஆபாசமான வெளியீடுகளை இறக்குமதி செய்வதை அரசு தடுக்கவும் தனிச்சட்டம் இருக்கின்றது.


VII. பதிப்புரிமை சட்டம் (The Copyright Act)

            ஒருவரின் அறிவுசான்ற படைப்புரிமையைக் கட்டிக்காக்க உருவாக்கப் பெற்றது பதிப்புரிமைச் சட்டம். ஒருவரின் உழைப்பாலோ, அறிவாலோ, திறமையாலோ படைத்த எதுவும் ஒருவரின் சொத்தாகின்றது. அதே போல ஒருவரின் சொந்த இலக்கியம், படைப்பு, நாடகம், இசை, கலை எதுவாக இருந்தாலும் அது ஆக்கியவரின் உடமையாகின்றது. இந்த உரிமையைப் பாதுகாக்கச் சட்டம் துணை செய்கின்றது.


சட்டவிளக்கம்: 1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப் பெற்றது, இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய 1957இல் நிறைவேற்றிய முறையில் இந்திய நாடாளுமன்றம் பதிப்புரிமைச் சட்டம்’
ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, பாடப் பொருளுக்கோ கருப்பொருளுக்கோ, வரலாற்று நிகழ்ச்சிகளுக்கோ ஒருவரும் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவத்தில் ஒன்றை வெளியிடும் பொழுதுதான் அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.


இந்தச் சட்டத்தின் 45ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.


            இலக்கியப் படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றிற்குப் பதிப்புரிமை படைத்தவரின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு ஐம்பதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்களுக்குப் பதிப்புரிமை ஐம்பதாண்டுகளுக்கு அவற்றை எடுத்தவருக்கு உண்டு. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.


விதி விலக்குகள் : இச்சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப் பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள் காட்டவோ, சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் வாய்ப்பளிக்கின்றது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் பொழுது மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.


செய்தித்தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. இதழ்கள் பொது நலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும் இசையையும் வெளியிடலாம். இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால் ஒரிதழில் வெளியான கட்டுரையை அப்படியே சொல் மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதி பெற வேண்டும். இதழ்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் நின்று செயல்படுவது தேவையாகும்.


VIII. இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டம்


            இளைஞர்களின் உள்ளங்களைக் கெடுக்கக் கூடியவற்றை வெளியிடுவதைத் தடை செய்யும் நோக்கத்தில் 1956-இல் ‘இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டத்தை (The Young Persons நிறைவேற்றியது. Harmful Publications Act) அரசு இந்த சட்டத்தின்படி (1) குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்ற; (2) வன்முறையில், கொடூரமான செயல்களில் ஈடுபடச் செய்கின்ற; (3) அச்சத்தை, பயங்கரத்தைத் தூண்டுகின்ற கதைகளையும், படங்களையும் கொண்ட புத்தகத்தையோ, இதழையோ, கையேட்டையோ, கைப்பிரதியையோ, செய்தித் தாளையோ, இவை போன்றவற்றையோ இளம் உள்ளங்களைக் கெடுக்கும் வகையில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை வெளியிடுவது மட்டுமின்றி இவற்றை விளம்பரப்படுத்துவதும், விற்பனை செய்வது, விநியோகிப்பதும், வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.


இளைஞர்களைக் கெடுக்கக் கூடியவை என்று நீதிமன்றம் தீர்மானித்தவற்றை முழுக்க அழித்துவிட நீதிமன்றம் கட்டளை இடலாம். இத்தகைய வெளியீடுகளை மாநில அரசுகள் பறிமுதல் செய்யலாம். இப்படிப்பட்ட வெளியீடுகளைக் கைப்பற்றவும் அழிக்கவும் காவல் துறை அதிகாரிகள் அதிகாரம் பெற்றுள்ளனர்.


IX. அஞ்சல், தந்திச் சட்டங்கள்

            1885ஆம் ஆண்டின் ‘ இந்தியத் தந்திச் சட்டம்’ படி (Indian Telegraph Act) அரசோ, அல்லது அதிகாரம் பெற்ற அலுவலரோ தந்திச் செய்தியைத் தடுக்கவோ, காலம்தாழ்த்தவோ, நிறுத்தவோ செய்யலாம். ஆனால் பொது நெருக்கடி நிலையை அரசு அறிவித்திருக்கும் பொழுதோ, நாட்டின் பாதுகாப்பு, பொது நலன் ஆகியவற்றைக் கருதித்தான் அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.


1898 ஆம் ஆண்டின் ‘இந்திய அஞ்சலகச் சட்டம்’ (Indian Post office Act) நெருக்கடிக் காலத்திலும், நாட்டின் பாதுகாப்பு, அமைதி கருதியும் அரசோ அல்லது அதிகாரம் பெற்ற அலுவலரோ அஞ்சல் வழி அனுப்பப் பெற்றதைச் சோதிக்கவோ, வழங்காமல் நிறுத்து வைக்கவோ நடவடிக்கை எடுக்கவோ அதிகாரம் வழங்குகின்றது.


            இந்தச் சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தவோ இதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதிக்கவோ வாய்ப்பு இருக்கின்றது. .ஆனால் கட்டுப்பாடுகள் நாட்டின் பாதுகாப்பு, அமைதி நோக்கில் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்பெறுகின்றன.


X. பணிசெய் இதழியலாளர் சட்டம்


             1956ஆம் ஆண்டு நிறைவேற்றப் பெற்ற பணி செய்
இதழியலாளர் சட்டம்’ (The working Journalist Act) பத்திரிகைகளில் பணி செய்கின்றவர்கள் தொடர்பான ஊதியம், வைப்பு நிதி, பணிக்காலம், விடுமுறை ஆகியவற்றை வரையறுத்துக் கூறுகின்றது. இதழியலாளர்கள் யார் என்பதையும் விளக்குகின்றது.


குறிப்பிடத்தக்கவை: பணிசெய் இதழியலாளர் சட்டத்திலுள்ளவற்றில் சில குறிப்பிடத்தக்கவற்றைச் சுட்டிக்காட்டலாம். செய்தித் தாட்களில் பணிசெய்கின்ற ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் வாரத்தில் ஆறுநாட்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.


இச்சட்டம் வேலைக்காலத்தை ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமென்றும், வாரத்திற்கு 36 மணி நேரமென்றும், ஒரு திங்களுக்கு 144 மணி நேரமென்றும் வரையறுத்துக் கூறுகின்றது.


செய்தியாளர்கள் (Reporters) ஒரு நாளில் ஒரு பணி (Assignment) செய்தால் போதும். அவர்கள் ஒரு நாளில் இரு பணிகளை மேற்கொள்ள நேரிட்டால் மறுநாள் அவர்கள் பணி செய்ய வேண்டியதில்லை.


ஊதியக் குழு : இச்சட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பத்திரிகையாளர்களின் ஊதியங்களை நிர்ணயிப்பதற்காக ‘ ஊதியக் குழு’ நியமிக்க வழிவகுக்கின்றது. இதன்படி, மாறுகின்ற சூழ்நிலைக்கேற்ப இதழியலாளர்கள் உயர்ந்த ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.

XI . வேறு சில இதழ்களின் சட்டங்கள்

            மேலே விளக்கிய பத்திரிகைச் சட்டங்கள் தவிர, இதழியலாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான சட்டங்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.


(i) புத்தகங்கள், செய்தித்தாட்கள் அனுப்புதல் சட்டம்:

            1954இல் ‘புத்தகங்கள், செய்தித்தாட்கள் (பொது நூலகங்களுக்கு) அனுப்புதல்  சட்டத்தை (Delivery of Books and Newspapers) (Public Library Act) அரசு நிறைவேற்றியது. இதன்படி, வெளியிடுகின்ற புத்தகங்கள் செய்தித்தாட்களின் படிகளை இலவசமாக கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகம், (2) சென்னையிலிருக்கும் கன்னிமாரா பொது நூலகம், (3) தில்லியிலிருக்கும் தேசிய மைய நூலகம், (4) பம்பாயிலுள்ள மைய நூலகம் ஆகிய நான்கு தேசிய நூலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.



(ii) மருந்துகள், தந்திர நிவாரணங்கள் சட்டம்:

1954 இல் நிவாரணங்கள் அரசு மருந்துகள், தந்திர (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டத்தை (The Drugs and Magic Remedies) [objectionable Advertisement) Act) கொண்டு வந்தது. மந்திர, தந்திர ஆற்றல்களோடு நிவாரணம் கிடைப்பதாக விளம்பரங்கள் அளித்து, மக்களை ஏமாற்றி மருந்துகள், மந்திர தாயத்துக்கள், மோதிரம் போன்றவற்றை விற்பனை செய்வதைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.


(iii) குற்றவியல் சட்டங்கள்:

            1860இல் நிறைவேற்ற பெற்ற (Indian Penal code) இ பி கோ. சில தடுக்கப்பட வேண்டியவற்றை அச்சிடுவதும், வெளியிடுவதும், புழக்கத்தில் விடுவதும் குற்றமெனக் கூறுகின்றது. 124A பிரிவு நாட்டின் மீது வெறுப்பை வளர்ப்பதைத் தேசத் துரோக (Sedition) குற்றமாக்குகின்றது. 153A பிரிவின் படி மதம், இனம், பிறப்பிடம், வாழுமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடம் வெறுப்பை வளர்ப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமெனக் கூறுகின்றது. 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் வழக்குமுறையின் (Criminal Procedure code) 95 ஆம் பிரிவுப்படி குற்றவியல் சட்டப்படி செய்தித்தாளோ, நூலோ தடுக்கப்பட வேண்டிய உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக மாநில அரசு கருதினால், அவற்றைப் பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கின்றது.


(iv) பரிசுப் போட்டி சட்டம்:

            1955ஆம் ஆண்டின் பரிசுப் போட்டிச் சட்டம் (The Prize competition Act) சட்டத்திற்குப் புறம்பான முறையில் நடைபெறும் பரிசுப் போட்டி பற்றி விளம்பரப் படுத்துவதைத் தடை செய்கின்றது.

நன்றி – இதழியல் கலை, டாக்டர் மா.பா.குருசாமி

வீழ்வேனென்று நினைத்தாயோ! – சிறுகதை

வீழ்வேனென்று நினைத்தாயோ - சிறுகதை

“வீழ்வேனென்று நினைத்தாயோ!”

           அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாத பேண்டும் சட்டையும் தொளதொளவென்று அணிந்திருந்தான். தலையில் தேங்கண்ணெய் நிறையவே தடவி அழகாய் முடியை சீவி விட்டிருந்தான். தன்னுடைய கண்ணாடியை அவ்வவ்போது மூக்குக்கு மேலே தூக்கி விட்டுக்கொண்டான். அவனைப் போலவே இன்னும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நேர்காணலுக்கு ஆண்களும் பெண்களுமாய் வந்திருந்தனர். ஆனால் கருப்பசாமியை விட மற்றவர்கள் தங்களின் உடையிலேயே வேலையை வாங்கி விடுவார்கள் போல் இருந்தார்கள். மிடுக்காக வந்திருந்தார்கள்.

         வெளிநாட்டு உயர்தர கம்ப்யூட்டர் நிறுவனம். கை நிறைய சம்பளம். வீடு வாங்கலாம். கார் வாங்கலாம். நல்ல பொண்ணு கிடைப்பா. இப்படி யாருக்குத்தான் ஆசை வராது. கருப்பசாமிக்கும் ஆசை வந்தது. பி.இ இன்ஜினியரிங் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளான். வீட்டில் அம்மாவுக்காகவாவது கண்டிப்பாக வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். படிப்பு முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு. இன்னும் வேலை கிடைக்கல. அப்பாவும் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கார். எந்த கம்பெனிக்கு போனாலும் போன வேகத்திலேயே சுவற்றில் அடிச்ச பந்து மாதிரி திரும்ப வந்திடுறேன். ஞா வேலை கிடைக்கலன்னு சத்தியமா எனக்கு புரியல. கம்பெனிக்காரங்க எதிர்ப்பார்க்கிற திறமை என்கிட்ட இல்லையா? இல்லை.. என் திறமையை அவங்ககிட்ட காட்ட என்னால முடியலயா? தெரியலையே… கேட்கிற கேள்விக்கு சரியா விடைய சொன்னாலும் போங்க கூப்பிட்டு அனுப்புறோம்ன்னு சொல்லிடுறாங்களே… எனக்குன்னு ஒரு தடம் எப்ப அமையும்மின்னு தெரியலயே! மனதில் நிறைய குழப்பங்களோடு உட்காந்திருந்தான் கருப்பசாமி.

“அடுத்தது கருப்பசாமி… உள்ள போங்க…” என்றாள். அந்தப்பெண் மிகவும் ஒய்யாரமாய் சிரித்து அழகாய் பேசினாள்.

        அவள் சொன்னதும் கருப்பசாமிக்கு உடம்பு வேர்த்தது. எழுந்து நேராக அந்த அறைக்குள் சென்றான். ஏசி காற்று ஜில்லென்று வீசியது. உடம்பு குளிந்தது. ஆனால் கைகள் மட்டும் வியர்த்து கொட்டின. உள்ளே மிகவும் கம்பீரத்துடனும் குகைக்குள் கர்ஜிக்கும் சிங்கத்தைப்போலவும் கோர்ட் அணிந்து டை கட்டி நால்வர் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமியை உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்களின் கண்களாலயே அளவெடுத்துக் கொண்டார்கள். கருப்பசாமி கொடுத்த பைலை திறந்து பார்க்காமலே ஏதோ இரண்டு மூன்று கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனைக் கேட்டால் கூடச்சொல்லி விடுவான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்றார்கள்.

       இந்த இரண்டு நிமிடத்தில் நான் எவ்வாறு என்னை நிருபித்திருக்க முடியும். இல்லை… அவர்களும் என்னை எவ்வகையில் மதிப்பிட முடியும். போ… என்றால் என்ன அர்த்தம். வேலை கிடைக்கும் போ என்றா…. வேலை கிடைக்காது போ என்றா…. தெரியவில்லை. கருப்பசாமி என்னன்வோ நினைத்துக் கொண்டிருந்தான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்று மீண்டும் கூறினார்கள்.

“எனக்கு வேலை இருக்கா.. இல்லையா சார்..” நேரடியாகவே கேட்டுவிட்டான் கருப்பசாமி. உட்கார்ந்திருந்த நான்கு பேரும் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வேல இல்ல போ…” என்றார்கள்

“ஏன் வேல இல்ல… என்னோட பைலை கூட பார்க்காம போ.. ன்ன.. என்ன அர்த்தம்?”

         “இனிமேல் பார்க்க என்ன இருக்கிறது. உன்னோட டிரஸ் சரியில்ல.. பேச்சு சரியில்ல.. கண்ணாடி போட்டுறுக்க… ஆளும் ஒல்லியா இருக்க… மொத்தத்தில உன்னோட மூஞ்சே சரியில்ல… நீயெல்லாம் கம்ப்யூட்டர் வேலைக்கு லாயக்கே இல்லாதவன். முதல்ல இடத்த காலி பண்ணு” நால்வரில் ஒருவர் மிகவும் கடுமையாகவே பேசினார். எழுந்து நின்றான் கருப்பசாமி. உட்காந்திருந்த சேரை தூக்கி ஒரே வீசாக வீசி அவர்கள் மேல் அடித்து விடலாம் என்று கூட எண்ணினான். என்ன செய்வது தனிமரம் தோப்பாகதே… அவர்களைப் பார்த்துச் சின்னதாய் ஒரு புன்னகை செய்தான். இந்தப் புன்னகையைக் கருப்பசாமியிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தங்களைப் பார்த்து நகைத்த மாதிரி அவர்கள் உணர்ந்தார்கள்.

    தன்னுடைய எந்த துக்கமானாலும் சரி அஞ்சல் தாத்தாவிடம் சென்று முறையிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தான் கருப்பசாமி. அன்றும் நேர்காணலில் நடந்ததை அப்படியே சொன்னான். அவனின் முகம் வாடிப்போயிருந்தது.

       “அதெல்லாம் ஒன்னுமில்ல கருப்பு… உன்னோட திறமைய பத்தி அவனுங்களுக்கு என்ன தெரியும்? நீ யாருன்னு எனக்குத்தானே தெரியும். நீ நடந்ததை நினைச்சி வருத்தப்படாத. உனக்குன்னு ஒரு நேரம் வரும்பாரு அப்ப எதிர்த்து அடி. அதுவரை பொருமையா இருய்யா…” என்றார் அஞ்சல் தாத்தா.

        அந்தக் கிராமத்துல அப்பவே பத்தாவது படிச்சவரு. அவரு வீடுதான் நூலகம், அஞ்சல் பெட்டி எல்லாமுமே.. கல்யாணம் பண்ணிக்கல. ஒண்டிக்கட்டையாவே வாழ்ந்துட்டாரு. எதையாவது கேட்கனுமின்னா அவருகிட்டதான் ஓடி வருவாங்க அந்த ஊரு மக்கள். இந்தக் கிராமத்துப் பயலுவள நல்லா படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனுமுன்னு நினைப்பாரு. அவுங்கள்ள கருப்பசாமின்னா அவருக்கு உசுரு. கருப்புசாமிகிட்ட ஏதோ ஒன்னு இருக்குன்னு நினைச்சாரு.

       அந்த நேரம் பார்த்துக் கருப்பசாமியின் தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்று வந்தது. வங்கியிலிருந்து எஸ்எம்எஸ்-காக பதினெட்டு ரூபாய் பிடிக்கப்பட்டது. “காசு இல்லாத நேரத்துல இது ஒன்னா?” என்று மனதில் திட்டிக்கொண்டே தொலைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அஞ்சல் தாத்தாவும் கருப்பசாமியும் நிறைய பேசினார்கள். அவ்வவ்போது கருப்பசாமியின் தொலைபேசியில் மெசேஜ் வந்த வண்ணமே இருந்தன.

“என்னப்பா மெசேஜ் வந்துகிட்டே இருக்கு. யாருப்பா அத? பதில்தான் அனுப்பி வைச்சிடேன்” என்றார் அஞ்சல் தாத்தா.

“இல்ல தாத்தா… பேங்கல இருந்து எஸ்.எம்.எஸ் சார்ஜ், மெயின்டனஸ் சார்ஜ், லோ பேலன்ஸ் சார்ஜின்னு டெபிட் பண்ணிட்டே இருக்காங்க”

அஞ்சல் தாத்தா கருப்பசாமியைப் பார்த்து சிரித்தார்.

“என்ன பாத்தா சிரிப்பா வருதா தாத்தா…”

ம்… என்று தலையை மட்டும் ஆட்டுவித்தார். “கருப்பு நீ என்ன பேங்கல அக்கௌண்ட் வச்சிருக்க”

“மக்கள் மணி பேங்க் – சுருக்கமா எம்.எம்.பி னு சொல்லுவாங்க..”

“இந்தப் பேங்குல இந்தியா முழுவதும் ஒரு பத்து இலட்சம் பேரு அக்கௌண்ட் வைச்சிருப்பாங்களா”

“அதுக்கு மேலேயும் இருக்கும். ஏன் தாத்தா கேட்குரீங்க”

           “எல்லா பேங்குலேயும் நீ சொல்ற மாதிரி ஒவ்வொரு மாசமும் பணம் எடுத்துட்டுத்தான் இருக்காங்க. இது மட்டும் இல்லாம சின்னதா ஒரு கணக்கு சொல்றன் கேளு… உதாரணமா நீ எனக்கு ஒரு ஆயிரம் ரூபா நெட் பேங்கிங் மூலமா அனுப்புறன் வச்சுக்கு. ஏதோ காரணத்தனால பெயில்டுன்னு வந்திருச்சுன்னா… சில நேரங்களில்ல பணம் உனக்கு டெபிட் ஆயிடும். எனக்கு பணம் வராது. உனக்கு டெபிட் ஆன ஆயிரம் ரூபா கண்டிப்பா மீண்டும் உன்னோட அக்கௌண்ட்க்கே வந்திரும். உடனேவும் வரும். சில மணி நேரங்களிலும் வரும். ஒரு நாள் ரெண்டு நாள்… ஏன் ஒரு வாரம் கூட ஆயிடும். உனக்கு என்னுமோ வெறும் ஆயிரம் ரூபாதான். அந்தப் பணம் ரெண்டு நாள் கழிச்சு வந்தா கூட உனக்கு பெரிய அளவு பாதிப்பு கிடையாது. வங்கிகளில் இருக்கும் தவிற்க முடியாத காரணங்கள் எவ்வளவுதான் இருப்பினும் முடிந்தவரை இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாகவே பணம் திரும்ப வந்து விட வேண்டும். ஆனால் ஒரு வாரமோ அல்லது பதினைந்து நாளோ ஆவது எவ்வாறு?

       இன்னும் சொல்லப்போனால் ஒருசில நேரங்களில் நேரடியாகப் பேங்கிற்கே சென்று விவராமாகக் கடிதம் கொடுத்தால்தான் பணம் திரும்ப கிடைக்கும். இப்படி ஒருவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை சுமார் ஒரு இலட்சம் பேரிடம் இதுபோல் பிடித்தம் செய்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அக்கௌண்டில் போடப்பட்டால், அவ்வளவு பணம் ஒரு வாரம் முழுக்க எங்கேயிருக்கும்? நம்முடைய அக்கௌண்டிலும் இருக்காது. பிடித்தம் செய்த அவ்வளவு பணத்தை ஒரு வாரம் மட்டும் வட்டிக்குக் கொடுத்தால் எவ்வளவு வரும். ஆனால் நமக்கு பிடித்தம் செய்த ஆயிரம் ரூபாய் மட்டும் ஒரு வாரத்தில் வந்து சேரும். எந்தவித நன்மையும் இல்லாமல்”

           “இதுவெல்லாம் நீங்க நினைக்கிறபடி நடக்குமா தாத்தா? அதெப்படி ஒரே சமயத்துல இப்படி பணம் புடிப்பாங்க… அந்தப் பணம் எங்கேயும் போகாம அப்படியே மறைஞ்சுதான இருக்கும். நாம் டெபிட் செஞ்சது சரிதான்னு தெரிஞ்சவுடனே அமோண்ட்டும் கிரிடிட் ஆகிடுது இல்லையா…” இது கருப்பசாமியின் வாதம்.

           “நீ சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் சரிதான். மற்ற வாடிக்கையாளர்க்கிட்ட  பணம் புடிக்கிறது உனக்கு எப்படி தெரியும். நீ சொல்ற மாதிரி யாரும் நம்மோட பணத்த எடுக்காம இருந்தா சரி.. ஒருவேளை எடுத்தா… ” அஞ்சல் தாத்தா கண்களை உருட்டி கருப்பசாமியைப் பாரத்தார்.

         “அப்படி எடுத்தாங்கன்னா… சாதாரணமாவே பத்துக்கோடி வருமே. அவ்ளோ பணமா..” கருப்பசாமி மனதில் கை வைத்துக்கொண்டான்.

         “இன்னொன்னு சொல்ற கேளு… நீ உன்னோட தொலைபேசிக்கு ரீசார்ஜ் நூறுக்குப் பன்ற. ரீஜார்ஜ் ஆகல. பணம் மட்டும் டெபிட் ஆகிடுது. பேங்குல கடிதம் குடுங்க செக் பன்றோம்முன்னு சொல்லுவாங்க. தொலைபேசி வாடிக்கையாளர் இன்னும் உங்க நெம்பருக்கு ரீஜார்ஜ் ஆகலம்பார். நீ என்ன பன்னலாம்முன்னு முழிச்சிட்டு நிப்ப” என்று கருப்பசாமியை நேருக்கு நேராய் பார்த்தார் அஞ்சல்காரர்.

          இன்ஜினியரிங் படிக்கும் போது ஒரு புரோஜெக்ட்டோடு அஞ்சல் தாத்தாவைப் பார்க்க வந்திருந்தான் கருப்பசாமி. கருப்பசாமி புரோஜெக்ட் பற்றி சொல்லசொல்ல வாயடைத்துப் போனார்.  இந்தப் பையன்கிட்ட இவ்வளவு திறமையா என்று வியந்து போனார். அவனுடைய புரோஜெக்ட் பேங் ஹேக்கிக் பற்றியது.  இந்தப் புரோஜெக்ட் வெளியே வந்தால் என்னன்ன நடக்குமோ என்று பயந்தார். ஒருவேளை தீயவர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். நம் நாடே பிச்சைக்கார நாடாக மாறிவிடும்.  அஞ்சல் தாத்தா அவனை கண்டித்து வைத்தார். இந்தப் புரோஜெக்ட் இனி இவ்வுலகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக அன்றே முழுவதுமாக அழித்து விட்டார். ஆனால் இன்று மீண்டும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினார் போல் பற்ற வைத்துள்ளார்.  அழித்து விட்டால் எல்லாம் போய்விடுமோ? கருப்பசாமி என்னும் ஹேக்கர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார். உண்மையாலுமே அஞ்சல்காரர் கில்லாடிதான்.

      கருப்பசாமி அஞ்சல் தாத்தாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அஞ்சல் தாத்தா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆராய முற்பட்டிருந்தான். இரண்டு மனமும் ஒன்றாய் பயணித்தன.

    “வாய்ப்பு கிடைக்கும்போது உச்சியில் ஏறி அடித்து விடு கருப்பு. இது உனக்கான நேரம். நீ யாரென்று இவ்வுலகத்திற்கு நிரூபித்துக் காட்டு” அஞ்சல் தாத்தாவின் நம்பிக்கையான வார்த்தைகள் கருப்பசாமிக்கு என்னவோ செய்தன.

    இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கே சென்றான். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருட்டாயிருந்தது.அம்மாதான் வந்து கதவை திறந்தாள்.

“இன்டர்வியூக்கு போனியே என்னாட ஆச்சு.. வேலை கிடைச்சுதா இல்லையா”

     எதுவும் பேசாமல் அம்மாவைத் தாண்டி உள்ளே சென்றான். நேராய் சமையற்கட்டிற்குச் சென்று காய்ந்த ரெண்டு தோசையைத் தட்டில் போட்டுச் சாப்பிட ஆரமித்தான்.

       “ஏன்டா நான் கேட்டுட்டே இருக்க. நீ சாப்பிட்டு இருக்க. பதில் சொல்றா.. உங்க அப்பா வேற ரொம்ப கோவத்துல இருக்குறாரு. சாயங்காலம் வந்ததிலிருந்தே உன்னை கேட்டுட்டே இருந்தார். உனக்கு வேல கிடைச்சுதா இல்லையான்னு… இதுல எனக்கு வேற திட்டு. புள்ளைய ஒழுங்க வளக்கலன்னு…”

       “உன்னைய ஞா திட்டுறாரு.. இன்ஜினியரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா நான்தானே வேலைக்குப் போகமா சும்மா தின்னுட்டு இருக்கேன். ஞா விதி. இன்னைக்கும் வேல கிடைக்கல..” கொஞ்ச நேர அமைதி. இருவரும் எதுவும் பேசவில்லை. கருப்பசாமியே பேச ஆரமித்தான்.

       “அப்பா சொல்ற மாதிரி நான் தண்டச்சோறு… உதாவாக்கரை… உருப்படாதவன்… நைட்டுல எல்லாம் இந்த லேப்டாப்ப நோண்டிக்கிட்டே இருக்கிறனல்ல அதனால நான் சாமக்கோழிதான்… எதிர்த்த வீட்டுப் பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். பக்கத்து வீட்டு பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். நீ மட்டும் திங்கற… தூங்குற… அவ்வளவுதான். திட்டுங்க.. திட்டுங்க… நல்லா திட்டுங்க… எனக்குன்னு ஒரு காலம் வராமலா போயிடும். அப்பெல்லாம் நான் உங்கள திட்ட மாட்டேன். என்னோட உள்ளங்கையில வைச்சு தாங்குவ பாருங்க…”

       “இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இப்படி டிரஸ் போட்டுட்டுபே போன யாரு வேல தருவா.. நல்லா டிப்டாப்பா டிரஸ் போட்டாதானே வேல தருவாங்க” என்றால் அம்மா.

       “வேல எனக்கா! இல்ல டிரஸ்க்கா..” சொல்லிக்கொண்டே படுக்கைக்குச் சென்றான்.

        விடிகின்ற காலை கருப்பசாமியை எப்படியெல்லாம் அலைகழிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் போலத்தான் அன்றும் கொஞ்சம் தாமதமாகவே எழுந்தான். உடம்பில் சுறுசுறுப்பு இல்லை. மந்தமாகவே காணப்பட்டான். தங்கை வந்து வம்பிலுத்து விட்டு சென்றாள். அம்மா வந்து வசை பாடிவிட்டு சென்றாள். அப்பாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. எப்போதும் அவர்தான் திட்டுவார். இன்று இவர்கள் எல்லாம் என்னை காலையிலே வறுத்துதெடுக்கிறார்கள். சோம்பலுடனே வெளியே வந்தான். மேசையின் மீது அப்பாவின் ஏடிஎம் இருந்தது. அதை பார்த்தும் பாக்காமலும் இருந்தான்.

“டே கருப்பு… சீட்டுக்குப் பணம் கட்டணுமிண்டா. ஐஞ்சாயிரம் பணம் ஏடிஎம் ல போயி எடுத்துட்டு வாடா..” அம்மா

“சும்மா இருக்கன்னு எனக்கு வேல வைக்கிரிங்களா?”

         “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. நாம நைட்டு பேசிட்டு இருந்தத உங்கப்பாவும் கேட்டுட்டுத்தான் இருந்திருக்காரு. மத்த பசங்கள வச்சு உன்ன திட்டிட்டோம்முன்னு ரொம்ப வருத்தப்பட்டாருடா…” சமையல் கட்டிலிருந்தே பேசினாள் அம்மா.

“நான் போயி பணம் எடுத்துட்டு வரன். அதுக்காக ரொம்ப பில்டப்பெல்லாம் பண்ண வேண்டாம்”

         பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம் சென்டருக்கு சென்று பின்னை அழுத்தி ஐஞ்சாயிரத்தை எண்ணால் பதிவு செய்தான் கருப்பசாமி. மிஷின் சுற்றியது. திரையில் பணம் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. சீட்டு மட்டும் வெளியே வந்தது. பணம் வர வில்லை. டெக்லைன் என்று சீட்டில் போடப்பட்டிருந்தது. திரையும் பழைய படிக்கு வந்திருந்தது. இப்போது அப்பா போன் செய்து பணம் டெபிட் ஆகிவிட்டது எனக் கூறினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரடியாகவே பேங்கிற்கே சென்றேன்.

      எம்எம்பி பேங். இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டதும் எப்போதும் கூட்டமாகவே இருக்கும் வங்கி. நான் போகும்போது கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு கௌவுண்ட்டரிலும் யாரோ ஒருவர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி மட்டும் கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யாரும் இல்லை. நேராக அப்பெண்மணியிடம் சென்றென்.

      “எக்ஸ்கீயூஸ் மீ மேம்… மேம்… மேம்…” அவர்கள் நிமிர்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்த வண்ணமாய் இருந்தான். அப்பெண்மணி கைகளில் இருந்த பணத்தை அவ்வளவு மெதுவாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். எண்ணிய பணத்தை டிராயரில் வைத்து விட்டு மீண்டும் எடுத்து எண்ணினார்கள். கருப்பசாமிக்குத் தாங்க முடியவில்லை. மீண்டும் அழைத்தான்.

“என்னப்பா.. என்ன வேணும்” கோபமாய் முறைத்துக் கேட்டாள்.

“ஏடிஎம் ல பணம் ஐஞ்சாயிரம் எடுத்தேன். பணம் வரல. டெக்லைன்னு ரெசிப்ட் மட்டும் வந்தது. ஆனா பேங்குல இருந்து பணம் டெபிட் ஆயிடுச்சு மேம்”

“நீங்க எங்க ஏடிஎம் ல பணம் எடுத்திங்களா?”

“இல்ல. வேற பேங் ஏடிஎம் ல மேம்”

“நீங்க கண்ட கண்ட ஏடிஎம் ல பணம் எடுப்பிங்க. அப்புறம் பணம் வரல. அது வரலன்னு இங்க வந்து புலம்ப வேண்டியது” காட்டமாகவே பேசினார் அந்தப்பெண் ஊழியர்.

“நாங்க வாடிக்கையாளர். இப்படி ஏதாவது பிரச்சனைன்னு வந்தா பேங்குக்கு வராம, வேற எங்க போறது”

       “எங்கையாச்சும் போ.. நானா உன்ன இங்க வரசொன்னேன். ஞா உயிர வாங்குறதுக்கே எங்கிருந்துதான் வருங்கீளோ தெரியல. போ.. போ…” அப்பெண்ணின் கையை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்ட சொன்னாள். வாய் ஒரு பக்கமாய் போனது.

“மேம் மரியாதையா பேசுங்க.. இப்படியெல்லாம் பேசாதீங்க.. எனக்கு பணம் டெபிட் ஆயிடுச்சு.. என்ன பண்ணனுமுன்னு சொல்லுங்க”

“மரியாதையா பேசனுமா… எப்படி பேசனும்… நீ வந்து சொல்லி கொடு. வா.. வா..” என்று அழைத்தாள்.

       எழுந்து நின்று கைக்கட்டி வாய்பொத்தி நின்றாள். “இப்படி மரியாதை சாருக்குக் கொடுத்தா போதுமா?” நக்கலாகச் சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை முற்றிப்போனது. வங்கியில் உள்ள அனைவரும் அவர்களின் வாய்ச்சண்டையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அப்பெண்ணிற்குத் துணையாக வங்கியில் உள்ளவர்களும் சேர்ந்து கொண்டார்கள். கருப்பசாமியும் அவர்களுக்கு ஈடு கொடுத்து திருப்பி கொடுத்துக்கொண்டிருந்தான். சத்தம் கேட்டு மேனேஜரும் வெளியே வந்தார்.

        “என்ன சத்தம். இது பேங்கா இல்ல சந்த கடையா.. யாருய்யா நீ முதல்ல வெளிய போ..” என்று எந்தவொரு விசாரணையும் இல்லாம கருப்பசாமியை வெளியே போகச்சொன்னார்.

        “சார் அது வந்து….” என்று சொல்லுவதற்கு முன்னாலே பியூன் வந்து கருப்பசாமியை கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து வாசலிலே கீழே தள்ளினான். வாசல் மண்ணில் முதுகுபட விழுந்தான். அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தான்.  அங்கிருந்தவர்கள் அச்சம்பவத்தைப் பார்த்து நகைத்தார்கள். வேடிக்கைப்பார்த்தார்கள். பரிதாப்பட்டார்கள். வங்கி ஊழியர்கள் கருப்பசாமியை ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. கீழே விழுந்த கருப்பசாமிக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. முகம் வேர்த்த்து. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

       “ஏ… ஞா பணத்த கேட்க வந்த என்னை கீழ தள்ளி அவமானப்படுத்திட்டிங்கள்ள…” சின்னதாய் சிரித்து, “நான் இதுலதாண்டா பெஷலிஸ்டே.. உங்கள எல்லாரையும் இன்னும் இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாக என் வீட்டு வாசலில் நிக்க வைக்கிறேன் பாருங்க….”

“போ..போ… முதல்ல அத செய்யி…” என்று கிண்டலடித்தாள் அந்த வங்கி ஊழியப்பெண்.

    தண்ணீரைத் தலையில் மொண்டு மொண்டு ஊற்றிக்கொண்டான். தன்னுடைய புரோஜக்ட்டைப் பற்றி நினைத்துப்பார்த்தான். பேங்கில் நாம் அக்கௌண்ட் வைத்திருந்தாலே போதும். அதன் மூலமாகவே அந்த பேங்கின் மொத்த கணினியையும் நம்முடைய கண்ட்ரோல்க்கு கொண்டு வரமுடியும். மேனேஜரின் கணினி நம் கைக்கு வந்து விட்டால் அதன்மூலம் தலைமை அலுவலகத்தின் கணினி என இந்தியாவின் ஒட்டு மொத்த நெட்வெர்க்கையும் ஹேக் செய்து விடலாம்.  ஒரு உணவு சங்கிலியைப் போல.  தலையைத் துவட்டிக்கொண்டே கணினியை ஆன் செய்தான். தன் திட்டத்தை மிக சாதாரணமாகச் செய்தான். கொஞ்சகொஞ்சமாய் எம்எம்பி வங்கியின் அனைத்து சர்வர்களும் கருப்பசாமியின் கணினியில் வந்து கொண்டேயிருந்தன. இப்பொழுது ஒவ்வாரு அக்கௌண்டாகப் பணம் முழுமையாக காலியாகிக்கொண்டிருந்தது.  எம்எம்பியில் அக்கௌண்ட் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் மட்டுமே காட்டியது. மொத்த பணமும் கருப்பசாமியின் கைகளில்.

       அனைத்து எம்எம்பி பேங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” என ஒவ்வொருவராய் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இப்போது எம்எம்பியின் தலைமை அக்கௌண்டிலும் ஜீரோ பேலன்ஸ் வந்த்து. ஆக எம்எம்பியின் மொத்த அக்கௌண்டும் ஜீரோதான். கிட்டதட்ட எம்எம்பி பேங் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது முதலில் ஒரு குறிப்பிட்ட பேங்கில் இருந்துதான் அனைத்துப் பணமும் டெபிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்தவொரு ஹேக்கராலும் கருப்பசாமியை நெருங்ககூட முடியவில்லை. சம்பந்தப்பட்ட வங்கியின் மேனேஜருக்கு விசாரணைக்கான பேக்ஸ் அனுப்பப்பட்டது. வங்கியில் உள்ளிருந்த பொதுமக்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். வங்கி ஊழியர்கள் மட்டும் சிபிஐ வருவதற்காக காவல் துறையினரால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். தாங்கள் கூண்டில் சிக்கிய எலியாய் ஆகிவிட்டதை உணர்ந்திருந்தார்கள். அப்பொழுதுதான் காலையில் நடந்த கருப்பசாமியின் சம்பவம் நினைவுக்கு வந்தது அந்தப்பெண் ஊழியருக்கு. காவல் துறை உதவியுடன் அடுத்த பத்து நிமிடத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.

        போலிஸ் மறைந்திருக்க வங்கி ஊழியர்கள் மட்டும் வீட்டினுள்ளே சென்றார்கள். கருப்பசாமியின் அப்பா மகனின் அறையைக் காட்டினார். சேரில் நன்றாகச் சாய்ந்து உட்காந்திருந்தான். அவனின் முன்னால் அனைவரும் யு வடிவில் நின்றார்கள்.

கருப்பசாமி சிரித்தான். “நீங்களெல்லாம் வருவீங்கன்னு தெரியும். ஏன்னா உங்க குடுமி என்னோட கைல”

“நீதான் பணத்தை எடுத்தியா” மேனேஜர்.

“ஆமா! நான்தான் எடுத்தேன். மொத்த பணத்தையும் ஹேக்கிங் பண்ணி சுட்டுட்டேன்”

“ஏ இப்படி பண்ண? உனக்கு என்ன வேணும்” மேனேஜர்

“எனக்கு என்னோட பிடித்தம் செய்யப்பட்ட ஐஞ்சாயிரம். ஒருநாலுக்கான வட்டி நாற்பதைந்து ரூபாய். மொத்தம் ஐஞ்சாயிரத்து நாற்பதைந்து ரூபாய் கொடுங்க. உங்க பிரச்சனைய முடிச்சு வைச்சுடுறேன்”

“சார்…. இவனை புடிச்சு போலிஸ்கிட்ட கொடுத்து, அடிக்கிற அடியில பணம் எப்படி வருதுன்னு பாருங்க. உடனே வெளிய நிக்கிற போலிஸ உள்ள வரச்சொல்லுங்க சார்” என்றார் அந்த வம்புக்கார பெண்.

      பலமாகச் சிரித்தான். விழுந்து விழுந்து சிரித்தான் கருப்பசாமி. “ஏங்க சார் கொஞ்சம் கூட யோசனையே பண்ண மாட்டிங்களா? போலிஸ கூட்டிட்டு வந்திருக்கிங்களா! எப்படி இப்படி முட்டாள இருக்கிங்க..” மீண்டும் சிரித்தான்.

       கருப்பசாமி சிரிக்கும்போதே சிபிஐ  வீட்டிற்குள் வந்து விட்டார்கள். பேங்க் மேனேஜர் கருப்பசாமியைக் கை நீட்டினார். சிபிஐ அதிகாரி கருப்பசாமியை உற்றுப்பார்த்தார். இவனா பல கோடிகளைத் திருடியது. மனதில் குழப்பங்களோடு மேனேஜரைப் பார்த்தார். இப்போது மேனேஜரின் தொலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்ததற்கான சத்தம் கேட்டது. மேனேஜர் எடுத்துப் பார்த்து வாயடைத்துப் போனார். அவரது அக்கௌண்டில் சில கோடி ரூபாய்கள் கிரிடெட் ஆகியிருந்தது. அடுத்தடுத்த மற்ற வங்கி ஊழியர்களின் தொலைபேசியிலும் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. வங்கி ஊழியர்களின் அனைவரின் அக்கௌண்டிலும் சில பல கோடிகள் என மொத்த பணமும் அவர்களிடத்தில் கிரிடெட் ஆகியிருந்தன. சிபிஐ அதிகாரிகள் இப்பொழுது வங்கி ஊழியர்களைக் கோபக்கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

        மேல்நாட்டுக் கல்வி பயின்று, முற்போக்கு எண்ணங்கள் கொண்ட இந்திய இளைஞர்களும், சமூக, மத சீர்திருத்தவாதிகளும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களை நிறுவிப் பாடுபடலாயினர். இவர்கள் இந்திய மதம், கலாச்சாரம், இவற்றின் பழம் பெருமை, தற்கால இந்திய சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்புகளின் நன்மை, தீமை இவைகளைப் பகுத்தறிந்து ஆராய்ந்து, இந்தியப் பண்பாட்டின் நற்பண்புகளை வலியுறுத்திக் கடைப்பிடிக்கவும், தீய பண்புகளைக் களையவும் முற்பட்டனர்.

            இந்நிலை ஏற்படச் சில காரணங்களும் இருந்தன 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களும், கிருத்துவ மதத்தினரும் இந்திய மக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொண்டிருந்தனர். தாம் பழகும் மக்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்வாறான விவரங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. இவ்வாறு அவர்களுக்குத் தெரியவந்த செய்திகள், அதிலும் அச்சமூகம் பெண்களை நடத்திய விதம், அவர்களுக்கு இந்திய மக்களைப் பற்றித் தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்தியது.

            இந்திய மக்கள் காட்டு மிராண்டித்தனமான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என அவர்கள் எள்ளி நகையாடினர் இந்திய முற்போக்குவாதிகளுக்கு இது பெருத்த அவமானத்தை அளித்தது. இக்கால கட்டத்தில் இந்திய மதமும், கலாச்சாரமும், அதன் மதிப்பீடுகளும், மக்களின் வாழ்க்கை முறைகளும் பெருமைக்குரியவை; ஏௗனத்திற்குரியவை அல்ல என்பதனை இந்திய முற்போக்குவாதிகள் நிலை நாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது இதற்காக இவர்கள் தங்களது சமூகம், மதம் முதலியவற்றின் நற்பண்புகளை எடுத்துக்காட்டி, அவற்றிற்கு மறுமலர்ச்சியளிக்க விழைந்தனர் அதே சமயம் இந்திய சமூகத்தில் காணப்படும் தீமைகளை, எடுத்துக்காட்டி அவைகளைக் களையவும் முற்பட்டனர்.

            இவ்வாறு இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சமூகக்கலாச்சார, மத அடிப்படையில் சில நிறுவனங்கள் தோன்றின. இவை பிரம்மசமாஜம், ஆரியசமாஜம், தியசாபிகல் நிறுவனம், இராமகிருஷ்ண மடம் முதலியவை ஆகும் இவை இந்திய சமூகத்தின் தீமைகளைப் போக்க முற்படும்பொழுது அச்சமூகம் பெண்களுக்கு இழைக்கும் தீமைகளைப் போக்குவதும் அவற்றின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாயிற்று. இவ்வாறு பெண்களின் முன்னேற்றமென்பது இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.


            இந்நிறுவனங்களின் அடிப்படைக் கொள்கை சமூக மறுமலர்ச்சியாகும்: இவற்றின் ஆணிவேர் இந்து மதத்தின் கருத்தாக்கங்களாகும். அதன்படி. கடவுள் ஒருவர் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் அக்கடவுளின் பகுதியினர். அதனால் அவர்கள் அனைவரும் சமம் என்ற சமதர்மக் கருத்து பெறப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சமம் எனும்பொழுது, மனிதர்களுக்குள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் மத அடிப்படையிலான சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவை என்பது தெளிவாகின்றது.

            அதனால் மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீக்கப்படுதல் வேண்டும்; மனிதர்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைக் கேவலப்படுத்துவது கொடுமைப்படுத்துவது என்பன போன்ற தீங்குகள் களைந்தெறியப்படுதல் வேண்டும் என்ற கருத்துக்கள் வலிமை கடைப்பிடிக்கப்பட்டு பெறுகின்றன.

            இந்நிலையில் இந்திய சமூகத்தில் கடை வந்த பல்வேறு தீமைகள் இவர்களின் கவனத்திற்கு வந்தன அவற்றில் முக்கியமானது பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற தீமைகள் ஆகும் மேலும், இந்நிறுவனங்கள் அனைத்தும் வேதகாலத்து இந்திய சமூகம் தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் கொடுமைகளான சாதிவேறுபாடு, பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்துதல் போன்ற கொடுமைகள் எதுவும் இன்றி, சமதர்ம அடிப்படையில் அமைந்திருந்தது என்ற கருத்தை உடையன இத்தீமைகள் அனைத்தும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களால் சமூகத்தில் புகுந்தன என்பது இவர்கள் கருத்து இதனால் இந்திய சமூகத்தின் பழமையான கலாசாரப் பண்புகளையும், மதிப்புகளையும், புத்துருவாக்குவதன்மூலம் இந்திய சமூகம் மறுமலர்ச்சியடையும் என்பது இவர்களுடைய கோட்பாடாகும். இந்நிலையில் இந்தியக் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளைக் களைவது இவ்வியக்கங்களின் பணியாயிற்று.

பிரம்ம சமாஜம்

            இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கடவுளர்களை வணங்கிப் பிளவுண்டு கிடப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டி கடவுள் ஒருவரே என எடுத்துக்கூறி, அவரை இந்து மதத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு வழிபட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் பிரம்மசமாஜம் 1828-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார்.

            சமூக மறுமலர்ச்சித் திட்டங்களுள் ஒன்றான பிரம்ம சமாஜம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டது. இராஜாராம் மோஹன்ராயின் முயற்சியாலும், ஆங்கில அரசாங்கத்தின் உதவியாலும் 1829-ஆம் ஆண்டு பெண்கள் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1827- இல் கொண்டுவந்த பிரம்மசமாஜச் சட்டம், குழந்தைகள் மணத்தைத் தடைசெய்தது. மேலும், இந்நிறுவனம் விதவைகள் மறுமணம் புரிந்துகொள்ள சமூகம் அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரியது. இது இளவயதுத் திருமணங்களை எதிர்த்தது. பலதார மணம் தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியது பெண்களை வீட்டில் அடைத்துப் பூட்டிவைக்கும் பழக்கம் மாறி, அவர்கள் வெளி உலக வாழ்க்கையிலும் பங்குபெற வேண்டுமென வற்புறுத்தியது.

            இக்கருத்துக்களைப் பரப்பிப் பல்வேறு இடங்களில் கூட்டங்களைக் கூட்டி, மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முற்பட்டது இக்கூட்டங்களில் அதிக அளவில் பங்குபெற பெண்கள் வேண்டுமெனத் தூண்டியது இது சுதந்திரம், சமுத்துவம் என்ற கொள்கைகளைக் குடும்பம், சமூகம் ஆகிய எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியது.

ஆரிய சமாஜம்

            ஆரியசமாஜம் சுவாமி தயானந்த சரசுவதியால் 1875-ஆம் ஆண்டு பம்பாயில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் வேதத்தின் மேன்மையை நிலைநிறுத்தவும், இடைக்காலத்தில் ஏற்பட்ட அந்தணர்களால் புகுத்தப்பட்ட தேவையற்ற சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும், உருவ வழிபாட்டையும், அந்தணர்களின் ஆதிக்கத்தையும் எதிர்க்கவும் பாடுபட்டது இதன் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்று ஆண் பெண்  இருபாலர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநிறுத்துவதாகும்.

            இந்நிறுவனம் வேதகால வாழ்வின் மறுமலர்ச்சிக்காக நிறுவப்பட்டதால் வேதகாலத்தில் இருந்ததைப் போன்று ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் குருகுல முறையில் கல்விப் பயிற்சி அளிக்கக் கல்விக் கூடங்களை நிறுவியது. இங்கு வேதமுறைப்படி கல்வியளிக்கப்பட்டது மேலும், அக்கால வாழ்விற்கேற்றவாறு இவ்வியக்கம் எதிர்த்தது. இவ்வியக்கம் சக்தி வழிபாட்டை உயர்வாக ஆங்கிலக் கல்வியையும் அளித்தது. இளவயதுத் திருமணங்களை மதித்தது அதனால் சமூகத்திலும் பெண்களின் உயர்வைப் போற்றியது. திருமணச் சடங்குகள் எளிய முறையில் அமைய வேண்டுமென வலியுறுத்தியது. விதவையர் மறுவாழ்விற்காகப் விதமான பயிற்சிகளை அளித்து, அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வழிகளை வகுத்தது.

            பெண்களைத் தனிமைப்படுத்தும் பல பெண்களுக்கு பழக்கத்திற்கு எதிராகவும் செயற்பட்டது. இந்நிறுவனம் மதத்தொடர்பான காரியங்களிலும் பயிற்சி அளித்து, அவர்களை ஆண்களுக்கிணையாக மதக் காரியங்களிலும், நிர்வாகப் பொறுப்புக்களிலும் ஈடுபட வைத்தது. இவ்வாறாக இது பல வழிகளில் ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்டது.

தியசாபிகல் நிறுவனம்

            தியசாபிகல் நிறுவனம் ப்ளவட்ஸ்கி அம்மையாராலும் , கர்னல் ஒல்காட்  என்பவராலும் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1879-இல் சென்னை அடையாற்றில் அதன் கிளை நிறுவப்பட்டது. இதன் அடிப்படைக் கொள்கை உலகில் உள்ள மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதாகும். உலகிலுள்ள அனைத்து மதங்கள், தத்துவங்கள், விஞ்ஞானம் இவைகளை அலசி ஆராய்வது இதன் நோக்கமாகும்.

            இதன் மூலம் இயற்கையின் உள்ளடங்கிய விதிகளையும், மனிதனிடம் அடங்கிக் கிடக்கும் சக்திகளையும் கண்டுகொள்ள முடியுமென்பது இதன் நம்பிக்கை, இவ்வியக்கத்தின் முக்கிய தலைவியாகிய அன்னிபெசண்ட் அம்மையார். பின்பு உலகத்து மதங்கள் அனைத்தையும்விடச் சிறந்த மதம் இந்து மதமே எனப் பறைசாற்றினார். இந்து மதத்தின் அடிப்படை நியதிகளான பக்தி, பிறருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் மனப்பான்மை, தாய்மை உணர்வு இவை சிறப்பான கூறுகள் எனப் பாராட்டிக் கூறினார்.

            அன்னிபெசண்ட் அம்மையாரும், ஆண் பெண் இருபாலருக்கிடையே சமத்துவ உறவு நிகழ வேண்டுமெனச் செயற்பட்டார். இவர் பெண் கல்வியை ஆதரித்தார். இளவயதுத் இழைக்கப்படும் கொடுமைகள் இவைகளை நீக்கப் பாடுபட்டார். திருமணம், பெண்களைத் தனிமைப்படுத்துதல், விதவைகளுக்கு இந்நிறுவனம் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தியது மேலும், பெண்களின் கல்விக்காகப் பள்ளிகளை நிறுவிற்று அன்னிபெசண்ட் அம்மையார் வயதான விதவைகள் மறுமணம் புரிந்து கொள்வதை ஆதரிக்கவில்லை. ஆயின், இளம் வயது விதவைகள் மறுமணம்
புரிவதை ஆதரித்தார்.

இராமகிருஷ்ண மடம்

            இராமகிருஷ்ண மடம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகிய சுவாமி விவேகானந்தரால் 1897-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வேதாந்தத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொதுவான தத்துவங்களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டது விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய சொற்பொழிவின் மூலம் இந்தியாவையும் அதன் பெருமையையும் உலகிற்கு உணர்த்தினார் இந்நிறுவனம் ஏழ்மை, கல்வி, அறிவின்மை இவற்றை நீக்கப் பாடுபட்டது. அதிக அளவில் மருத்துவமனைகளைத் திறந்து மருத்துவ வசதி செய்துகொடுத்தது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் சக்தியின் அம்சத்தைக் கண்டார். பெண்மையின் அம்சங்கள் அவருக்கு உயர்வாகத் தெரிந்தன. இந்நிறுவனம் பெண்களின் கல்விக்காகக் கல்விக் கூடங்களை நிறுவிற்று.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கம்

            வியக்கத்தக்க வகையில் இதழியல் விரைந்து வளர்ந்து வருகின்றது. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இதழ்கள் செய்தித்தாட்கள் – அளவாலும், இயல்பாலும், பரப்பாலும், வகைகளாலும் நமது அரசியல், பொருளாதார சமுதாய வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன.


            “காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள்” என்பது இன்று பலரின் பழக்கமாகிவிட்டது. இதழ்களின் தாக்கத்திற்குட்படாத, எந்தத் துறையும் இல்லை. பத்திரிகைகளின் செல்வாக்கு எழுத்தில் அடங்காது. ‘ஆக்கல், அழித்தல்’ என்று ‘ எல்லாம் வல்லதாக’ இதழியல் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்றிருப்பதால் அதனைப் பற்றி அறிந்து கொள்ளுதல் இக்காலத் தேவையாகி விட்டது.

            ‘பத்திரிகை’ யின் பேராற்றலை மக்கள் உணரும் வகையில் பைந்தமிழ்ப் பாவேந்தர் பாரதிதாசன்,


” காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே” என்று வாழ்த்தி வரவேற்கின்றார்.

இதழியல் விளக்கமும் இலக்கணமும்


சொல் விளக்கம்

‘ ஜெர்னலிசம்’ (Journalism) 67607 ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ‘ இதழியல்’ . இந்தச் சொல்லின் மூலம் டையர்னல் (Diurna1) என்ற பழைய இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. ‘சர்னல்’ டையர்னல்’ என்றால், ‘ அன்று’ (அன்றாடம்) என்று பொருள். ‘சர்னல்’ என்றால், ‘ அன்றாடம் நடந்ததை எழுதி-வைக்கும் ஏடு’ என்று பொருள்படும். வாசு கோடகாமாவின் பயண நூல் ‘ எ சர்னல் ஆப் தி பஸ்டு வாயேஜ் ஆப் வாஸ்கோடகாமா’, என்று பெயர் பெற்றது. ஆனால் இப்பொழுது ‘சர்னல்’ ‘ இதழ்’ களையே என்பது குறிக்கிறது’ என்று எழுத்தாளர் அ.மா.சாமி விளக்குகின்றார்.

            இதழ் என்பதை ‘பத்திரிகை’, செய்தித்தாள்’ ‘தாளிகை’ என்றும்  குறிப்பிடுகின்றனர்.

இலக்கணம்

            மனிதன் அறிவு வளர்ச்சி பெற்ற காலத்திலிருந்து மற்றவர்களைப் பற்றியும், அவர்களது செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக இருந்திருக்கின்றான். முதலில் செய்கையின் மூலமாகவும், மொழி வளர்ந்தபின் பேச்சின் துணையோடும் செய்திகளை அறிந்தும் பரப்பியும் வந்திருக்கின்றான். எழுதக் கற்றுக் கொண்டவன், அச்சுப்பொறியைக் கண்டுபிடித்ததும், செய்திகளின் பரப்பளவு மிகுந்தது. போக்குவரத்து வளர்ச்சி, அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம் இவற்றின் விளைவாக மின்னணுக் கருவிகளின் துணையோடு இலக்கண வரம்புக்குள்ளடங்காத அளவிற்கு இதழியல் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்கள் தொடர்பும் (Mass communication) இதழியலின் உட்பிரிவாகுமளவிற்கு இத்துறை விரிவடைந்துள்ளது.


            இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாட்களுக்கும் தொழிலைத்தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. எழுதும் இப்பொழுது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும், கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் நிறுவனமாகமாறியும், சமுதாய விழிப்புணர்ச்சியின் ஒர் உறுப்பாக அதுவே தொடர்பு உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைகளுக்கு அற அடிப்படையிலும் சட்ட நோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது” என்று ஆர். இராமச்சந்திர ஐயர் விளக்குகின்றார்.

            வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில் (Webster’s Third International Dictionary), “வெளியிடுவதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ. நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்” என்று விளக்கம் உள்ளது.

            சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (chamber’s Twentieth Century Dictionary) “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்,” என்று கூறுகின்றது.

            ஹரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற ஒரு புகழ் பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான்’ இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது.” என்று குறிப்பிடுகின்றார்.

            ஜி.எப்.மோட் (G.F. Mott) என்பவர் விரிவான விளக்கமாக, “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும் பொது பொழுது போக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்.” என்று இயம்புகின்றார்.

            லார்டு கிரே (Lord Gray), “பத்திரிகை தான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி“, என்று கருதுகின்றார்.

            மேத்யூ அர்னால்டு (Mathew Arnold)இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்று புகழ்கின்றார்.


            இதழியலின் சிறப்பினை அறிவுறுத்தும் வகையில், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது,” என்று பிராங் மோரஸ் (Frank Moraes) கூறுகின்றார்.

            தாமஸ் ஜெபர்சனிடம் (Thomas Jefferson) ஒருமுறை, “நீங்கள் செய்தித்தாட்களே இல்லாத அரசை விரும்புவீர்களா? அல்லது அரசே இல்லாத செய்தித்தாட்களை விரும்புவீர்களா?” என்று கேட்டதற்கு, அவர், “அரசே இல்லாத செய்தித்தாட்களையே விரும்புவேன்,” என்று பதிலளித்தார். இதிலிருந்து இதழ்களுக்கு அவர் தந்த சிறப்பிடத்தைப் புரிந்து
கொள்ளலாம்.

            இதழியல் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்கவோ, அழிக்கவோ வல்லதாக இருக்கின்றது. இதழ்கள் வாய்மை வழியில் சென்று, பொறுப்புணர்ச்சியோடு செயல்படாவிட்டால் அதனால் ஏற்படும் கேடுகள் அளவிட முடியாதனவாக இருக்கும். ஆதலால்தான் தோரோ (Thoreau), “செய்தித்தாட்களை எப்பொழுதுமே படிக்காதவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் அவர்கள் இயற்கையையும் அதன் மூலம் இறைவனையும் காண்பார்கள்,” என்று கூறுகின்றார். இதழியலாளர்கள் மிகுந்த அற உணர்வோடும், சமுதாயப் பொறுப்போடும் செயல்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகின்றது.

இதழியல் – அறிவியல்; கலையியல்

            இதழியல்-ஓர் அறிவியல்: தொடக்க காலத்தில் இதழியலில் யார் வேண்டுமானாலும் எப்படியும் ஈடுபடலாம் என்ற நிலை இருந்தது. இப்பொழுது தக்க பயிற்சி இன்றி இதழியலில் ஈடுபட இயலாதென்ற அளவிற்கு இதழியல் ஒர் அறிவியலாக (Science) வளர்ந்துள்ளது.

            அறிவியல் என்னும் சொல் காரண காரியம் ஆகியவற்றிற்குரிய தொடர்பைப் பற்றிய ஒழுங்கு படுத்தப் பெற்ற அறிவின் தொகுதியைக் குறிக்கின்றது. உண்மைகளை மொத்தமாகத் தொகுப்பது மட்டும் அறிவியலாகாது. அவற்றை முறைப்படி தொகுத்து, வகைப்படுத்தி, பகுத்தாய்ந்து கூறுவதே அறிவியலாகும். இந்த விளக்கத்தின்படி இதழியலும் ஒர் அறிவியலே.

            ஓர் இதழ் உருவாகும் நிலையைத் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவியல் நோக்கில் முறைப்படுத்தியுள்ளனர். செய்திகளைச் சேகரிப்பது, எழுதுவது, செப்பனிடுவது, அச்சிடுவது, வெளியிடுவது ஆகிய அனைத்தும் ஆய்வு முறையிலேயே அமைகின்றது. ஆதலால் தான் இன்று இதழியல் சமுதாய அறிவியல்களில் (Social Sciences) ஒன்றாகச் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.


இதழியல் – ஒரு கலையியல்

            அறிவியலாக விளங்கும் இதழியல் ஓர் அற்புதக் கலையியலாகவும் (Art) திகழ்கின்றது. கலையியல் என்பது உள்ளத்து உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும், மகிழ்ச்சியை வழங்குவதாகவும், ஓர் உயரிய குறிக்கோளை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும். இதழியலில் இத்தகைய இயல்புகள் அனைத்தும் ஒளிர்கின்றன.

சிறந்த இதழ் காண்பவர் கண்ணைக் கவர்ந்திழுந்து, படிக்கத்தூண்டி, படிக்கும் பொழுது கூறுகின்ற கருத்துக்களாலும் முறையாலும் வாசகரை ஈர்த்து, அவரிடம் தெளிவை ஏற்படுத்தி உள்ளம் கொண்டவர்களால் செயல்படத் தூண்டுகின்றது. நல்ல கலை தான் கலை மணம் பரப்பும் இதழ்களை உருவாக்க முடியும்.

இதழியலின் சிறப்பிடம்

            இதழ்கள் படிப்படியாக வளர்ந்து, இப்பொழுது எல்லாத் துறைகளையும் ஊடுருவி, மிகவும் ஆற்றலுடைய சமுதாய  சக்தியாக உருவெடுத்திருக்கின்றன. பத்திரிகைகளைப் புறக்கணித்து விட்டு இன்றுயாரும் அமைதியாக வாழமுடியாது.

            எத்தகைய ஆட்சி அமைப்பாக இருந்தாலும் மக்களோடு தொடர்பு கொள்வதும், மக்களுக்குக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கூறுவதும், அவர்கள் எண்ணப் போக்கினைப் புரிந்துகொள்வதும் இன்றியமையாத் தேவையாகின்றது. இதற்குச் செய்தித்தாட்கள்தான் துணை செய்கின்றன.

            அரசியலில் இதழியலுக்குரிய சிறப்பான பங்கினைச்செ நூற்றாண்டிலேயே அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். 1828 இல் ‘அரசியல் நிர்ணய வரலாறு’ (constitutional History) பற்றி ஒரு கட்டுரை எழுதிய புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் மெக்காலே (Macaulay) முதன் முதலில் இதழியலாளர்களை “அரசின் நான்காம் தூண் (Fourth Estate) என்று வர்ணித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு விளக்கமாக எட்மண்ட் பர்க் (Edmund Burke), “நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள்சபை (சமயத் தலைவர்கள், செல்வந்தர்கள் கொண்ட சபை) (House of Lords) பொதுமக்கள் சபை (House of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால் அங்கே செய்தியாளர்கள் (Reporters) அமருமிடத்தில் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமான நான்காவது தூண் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

            நமது நாட்டிலும் நாடாளுமன்றம் (Parliament), நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்று அரசின் துறைகளோடு, பத்திரிகைத் துறையை (Press) நான்காவது பிரிவாகக் கருதலாம். இந்த நான்காம் துறை சுதந்திரமாக, நேர்மையாக, பொறுப்போடு செயல்படுகின்றவரை மக்களின் நலம் பாதுகாக்கப்படுமென்று கருதலாம்.


குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »