Saturday, April 4, 2026
Home Blog Page 30

கனவு காணுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

       உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கனவுகள் உண்டு. சிலர் அந்தக் கனவுகளைப் பகல்கனவாகவே வைத்திருப்பர். ஆனால் சிலர் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்வர். அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். அவர் கூறியது இளைஞர்களின் இலட்சியக்கனவு. “உறங்கும்போது வருவது கனவல்ல. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார்.  விவேகானந்தர் கூறினார் “நீ மீண்டும் மீண்டும் எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார். இலக்கின் நன்மையைக் கனவு காணுங்கள். வெற்றி அடைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியை உணர்ந்து பாருங்கள்.

           ஒருவரின் ஆழ்மனதில் இலட்சிய விதை விழுந்து விட்டால், அது வளர்ந்து மரமாகி பலன் தருவதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. மாற்ற முடியாது. உங்களின் வெற்றியைக் கனவு காணுங்கள். மகிழுங்கள். அது நாளடைவில் உங்களின் உறுப்புகள் அதை நனவாக்கும்.

கனவின் பலன்

             பழங்காலத்தில் ஆடைகள் தைப்பது என்றால் ஊசியை எடுத்து அதை நூலில் கோர்த்து ஆடையின் ஒருபுறம் ஒருவர் பிடித்துக்கொள்ள மறுபுறம் ஒருவர் துணியைத் தைப்பார் ஊசி முழுமையாக உள்ளே சென்று மறுபக்கம் வெளியே வரும். அதன் அடிப்பகுதியில் துவாரம் ஒன்று இருக்கும். இவ்வாறுதான் பழங்கால ஆடை தைப்பது நடைபெற்றது. சிலகாலம் சென்றது. ஒருவர் தன்மனைவிக்கு தையல் இயந்திரம் ஒன்றை தயார் செய்தார். ஆனால் அதற்கு ஊசியைக் கண்டறியவில்லை. பல மாதங்களாக அதைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார். ஊசி முழுமையாக உள்ளே செல்லாமல் எப்படி தைப்பது? அவருக்கு உறக்கமே வரவில்லை. ஊசி எவ்வாறு அமைப்பது என்று விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் அதே யோசனையாக இருந்தார். இரவெல்லாம் கண்விழித்திருந்த அவர் அதிகாலையில் உறங்கி விட்டார். அப்போது அவருக்கு கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் ஒரு தேவதை ஈட்டி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு “என்ன உறங்கிக் கொண்டு இருக்கிறாய். இன்னும் ஊசியைக் கண்டு பிடிக்காமல் என்ன செய்கிராய். கண்டு பிடிக்கவில்லை என்றால் இந்த ஈட்டியால் உன்னை குத்தி கொன்று விடுவேன்” என்று நெஞ்சை பிளக்க வந்தது. அப்போது அந்த ஈட்டியின் குத்தும் முனையில் ஒரு துவாரம் இருந்தது. இதைப்பார்த்த அவர் பயந்து உறக்கம் களைந்து எழுந்து விட்டார். எழுந்த அவர் அந்தப் பயம் சென்றதும் நிதானமாக அந்த கனவை நினைவுக்கு கொண்டு வந்தார். அவ்வேளையில் அவரின் மூளையில் ஒன்று தோன்றியது. தையல் இயந்திர ஊசியைக் கண்டுபிடித்து விட்டார். எவ்வாறு இது சாத்தியம். அவர் கனவில் கண்ட அந்தத் தேவதையின் கையில் இருந்த ஈட்டியின் முனைப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரம் ஊசியின் முனையில் அமைக்கப்பட்டது. அதனாலே இயந்திர ஊசி கிடைத்து விட்டது.

     கவனியுங்கள்! அவருடைய யோசனை சிந்தனை கனவு மூலமாக ஒரு வெற்றியை தந்தது. அவரின் இலக்கை அடையும் வெற்றி கனவாகவே வந்து விட்டது.

 கட்டிட நிபுணர்களைப் போன்று செயல்படுங்கள்

     கட்டிட நிபுணர்களைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு அரண்மனை அந்தப்புரம் அரசவை என்றாலும் ஒரு பெரிய வீடு பங்களா எதுவாக இருந்தாலும் முதலில் திட்டமிட்டு அவற்றை தெர்மாகோல் போன்றவற்றால் அமைத்து கண்முன்னே வைத்துவிடுவார்கள். மற்றவர்கள் கனவு காணுவார்கள். ஆனால் இவர்கள் அதனையும் கண்முன்னே வைப்பார்கள். அவற்றைச் சுற்றிப் பூங்காக்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதனுள்ளே தண்ணீர்க்குழாய்கள் செல்லும் வழி மின்சாரம் செல்லும் வழி கழிவுநீர் மழை நீர் எனச் செல்லும் வழி இவ்வாறு எத்தனை அறைகள்? தரை எந்தக் கற்களால் அமைக்க வேண்டும்.  எந்த இடத்தில் சோபா வைப்பது? சுவர்களுக்கு என்ன வண்ணம் பூச வேண்டும் போன்ற அனைத்தையும் செய்து முடித்து கண்முன்னே வைத்திருப்பார்கள். இவ்வாறு வெற்றியடையப் போகும் நீங்களும் உங்களின் எதிர்கால வாழ்வை  வசந்தமான சமூகத்தை அகக்கண்களில் காணுங்கள். கற்பனையாக உருவத்தை செய்து கொள்ளுங்கள். உங்களின் இலக்கை அடைய நீங்கள்தான் செயல்பட வேண்டும். உழைக்க வேண்டும். உங்களின் உழைப்பு மட்டுமே உங்கள் கனவை நனவாக்க முடியும். எளிமையாக எந்த வெற்றியும் கிட்டாது. அவ்வாறு கிட்டும் என்று நீங்கள் நம்பினால் அது அழிவையே கொடுக்கும்.

இலவசம் – எளிமையாகக் கிடைப்பவை ஆபத்தானவை

             இலவசமாக கிடைக்கிறது என்று எவற்றையும் பெறவேண்டாம். படித்த கதை ஒன்று, ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தனது நிலத்தை உழுது பயிர் செய்து தன்குடும்பத்தை காத்து வந்தார். அறுவடை முடிந்து விட்டது. சிலமாதங்கள் ஆகும் மீண்டும் பயிர் செய்வதற்கு. அந்த இடைப்பட்ட காலத்தில் நிலம் உழுது போட்டிருக்கும். அந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள மண்புழுக்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு சந்தையில் விற்பதற்காக சென்றார். செல்லும் ஒரு காட்டு வழியில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது இந்த உழவரிடம் கேட்டது “எங்கு செல்கிறாய்? கூடையில் என்ன? என்றுது. அவர் “கூடையில் மண்புழுக்கள் உள்ளன. அவற்றை விற்பதற்காகச் சந்தைக்குச் செல்கிறேன்” என்றார். அந்தப் பறவை “எனக்கு மண்புழுக்களைத் தருகிறாயா? அதற்குப் பதிலாக என் மென்மையான இறகுகளைத் தருகிறேன்” என்று கூறியது. அந்த உழவரும் சரி என்று புழுக்களைக் கொடுத்து விட்டு இறகுகளைப் பெற்றுக்கொண்டு சந்தையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இதேபோன்று ஒவ்வொரு வாரமும் அந்தப் பறவை உழவனிடம் புழுக்களைப் பெற்றுக்கொண்டதால்  வேறு எங்கும் பறந்து செல்லவில்லை. மரத்தின் கூட்டிலேயே இருந்தது. ஏனென்றால் விவசாயி புழுக்களைக் கொடுத்ததால் உழைக்க வேண்டிய தேவை இல்லை.

    விலங்கினம் என்றால் நடக்க வேண்டும். பறவை என்றால் பறக்க வேண்டும். மனிதன் என்றால் உழைக்க வேண்டும் இவையே அவற்றின் ஆரோக்கியம். இது மனிதனுக்கும் விளங்கவில்லை. இதை அறியாத அந்த பறவை மிகவும் சந்தோஷப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு அதன் உடலும் பறக்க மறுத்தது. அந்தப் பறவை ஒவ்வொரு முறையும் அதன் இறகுகளை பிடுங்கி கொடுத்துக்கொண்டே இருந்தது. நாளடைவில் அதன் உடலில் பறப்பதற்கு இறக்கைகளில் இறகுகளே இல்லை. உழவருக்கு புழுக்களுக்குg பதிலாக கொடுப்பதற்கும் இறகுகள் இல்லை. இனி பறக்கவும் முடியாது, பறவைக்கு இனி உணவும் கிடைக்காது. எளிமையாக கிடைக்கிறது என்று எண்ணி செய்த இந்தச்செயல் அந்த பறவையின் உயிரையும் இழக்கச் செய்தது.

           பறந்து சென்று தானே இரையைத் தேடிச்சென்று உண்டு நீர்நிலையைக் கண்டறிந்து நீரை பருகிவிட்டு சுதந்திரமாக வானத்தில் பறந்து தென்றல் காற்றை நுகர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்த பறவையானது  எளிமை இலவசம் என்று நம்பி உழைப்பைக் கைவிட்டதால் உயிர் விட்டது. எனவே எளிமையும் வேண்டாம் இலவசமும் வேண்டாம் உழைப்பே நிரந்தரமானது. உன்னதமானது. மற்றவையெல்லாம் எப்படி வந்ததோ அப்படியே சென்று விடும். நீங்கள் இதனை உணர்ந்து செயல் படுங்கள்.

மாறுபட்ட கருத்துக்களையும் பரிசீலனை செய்யலாம்

        உங்களுக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறதா? ஒன்றும் தவறில்லை. நீங்கள் அவருடன் இன்னும் நெருங்கிப் பழகுங்கள். உங்கள் மீது அல்லது உங்களின் செயல்மீது நம்பிக்கை கொண்டவரால் மட்டுமே உங்களிடம் மாறுபட்ட கருத்துக்களைக் கூற முடியும். அவர்கள் கூறும் கருத்துக்களைச் செவிமடுத்து எந்த காரணத்தால் அவ்வாறு கூறினார்கள் என்பதை அவரின் கண்ணோட்டத்திலிருந்தே கவனியுங்கள். அப்போதுதான் கருத்தின் உண்மைநிலை விளங்கும். யாரிடமும் எதிர்மறையான கருத்துக்களையோ சொற்களையோ முன்வைக்காதீர்கள். அது வாதத்தில் கொண்டு விட்டுவிடும். பொதுவான ஒன்றைப்பற்றி கருத்துக்களைக் கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. எனவே அனைவரின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து கொள்ளுங்கள். எத்தனை பேர் எவ்வளவு முக்கியமான நபர்கள் கருத்துக்களைக் கூறியிருந்தாலும் உங்களின் மூளை எவ்வாறு கூறுகிறதோ அதுவே தீர்க்கமான முடிவு என்பதை உணருங்கள். ஆதலால் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

பலவீனம், வெளிக்காட்டலாகாது

          ஒருவர் உங்களிடம் ஒரு கருத்தைக் கூற முன்வருகிறார் என்றால் முதலில் நீங்கள் பேசாதீர்கள். அவருக்கு வாய்ப்பளியுங்கள். அவர் முழுவதுமாகப் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்து கவனியுங்கள். அவரின் கண்களையே கவனித்தீர்கள் என்றால் அவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரா? என்பதை உங்களால் கணிக்க இயலும். சிலர் உங்களிடம் அவரின் காரியங்களை நடத்திக்கொள்ள நடிப்பாகப் பேசலாம். எப்பொழுதும் உங்களின் பலவீனத்தை வெளிக்காட்டலாகாது. மற்றவர்க்கு அது தெரிந்தால் உங்களை செல்லாக்காசாக மாற்றிவிடுவார்கள். பலவீனத்தைக் கொண்டே வீழ்த்தி விடுவார்கள்.

பலவீனத்தால் மாண்ட நந்திவர்மன்

        நந்திவர்மபல்லவ அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் மாபெரும் ஆற்றல் மிக்கவர். அவருடன் யார் போர் செய்தாலும் தோற்றுவிடுவர். இவர் எந்த நாட்டிற்கு போர்தொடுத்துச் சென்றாலும் வாகை சூடிக்கொள்வார். போர்முனையில் நேருக்கு நேராக நின்று இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அந்த அளவிற்கு ஆட்சி செய்து மக்களைக் காக்கும் மன்னர் இவர்.

      இந்த மாமன்னருக்கு அறம் பற்றிய பாடல்களைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம். இந்த நந்திவர்ம பல்லவனை வீழ்த்தவே முடியவில்லையே! வேறுவழியில் இவனை தோற்கடிக்க நினைத்தனர். மன்னனின் உறவின சகோதரர்கள். எனவே நந்திவர்மனின் பலத்தை தெரிந்து கொண்ட அவர்கள் அவனுடைய பலவீனம் என்ன? என்பதை ஆராய்ந்தனர். மன்னன் அறம் பற்றிய பாடல்களைக் கேட்கும் ஆர்வத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் அறம் பற்றிய நூறு பாடல்களைப் புலவர்களைக் கொண்டு எழுதச் செய்தனர். பின்னர் அதனை வாசித்துக்காட்ட ஒரு புலவனை அனுப்பி வைத்தனர். அப்புலவன் நந்திவர்மனை வணங்கி தான் அறப்பாடல்களை எழுதியுள்ளதாகக் கூறினான். நந்திவர்மனும் அவற்றை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், புலவனை வாசிக்குமாறு கேட்டார். அதற்கு அப்புலவன் ஒரு நிபந்தனை விதித்தான் “நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் இந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும். அடுத்த பாடலுக்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்” என்றான். அதற்கும் நந்திவர்மன் ஒத்துக்கொண்டான். முதலாவது பந்தல் அரண்மனை வாயிலில் அமைக்கப்பட்டு நூறாவது பந்தல் மயானத்தில் முடிக்கப்பட்டிருந்தது. புலவரும் பாடல்களை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினான். மன்னனும் ஒவ்வொரு பந்தலின் கீழும் அமர்ந்து அந்தப் பாடல்களைக் கேட்டான், அவர் இறங்கிச்சென்றதும் பந்தலானது தீப்பற்றி எரிந்தது. இவ்வாறே அனைத்துப் பந்தல்களும் எரிந்தன. மன்னர் நூறாவது பாடலைக் கேட்க, நூறாவதாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழாக அமர்ந்து பாடலை கேட்டார். பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே பந்தல் தீப்பற்றி எரிந்தது. அதில் மன்னனும் எரிந்து இறந்துவிட்டான் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கவனியுங்கள் நந்திவர்மனைப் பலத்தால் வெல்ல முடியாத அவர்கள் அவரின் பலவீனத்தை அறிந்து கொண்டு அதன்மூலம் வீழ்த்தி விட்டனர். எனவே உங்கள் பலத்தை வெளியே காட்டுங்கள். பலவீனத்தை அல்ல. கனவு காணுங்கள். கனவு மெய்ப்பட உழையுங்கள். வெற்றி நிச்சயம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

14.உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

கற்பனை என்பது என்ன? கற்பனையின் வகைகள் யாவை?

கற்பனை


            கலையுலகில் விளக்குவதற்கு மிகவும் அரியதாய் உள்ள மொழிகள் பகுதிகளில் ஒன்று கற்பனை என்பது. உலக மொழிகள்  பலவற்றையும் சார்ந்து பிறந்த பல்வேறு இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் பல்வேறு அறிஞர் ‘கற்பனை’ என்பதனை வரையறை செய்ய முயன்றுள்ளனர். ஆயின் எந்த ஒரு வரையறையும் குறிப்பிட்ட கவிஞர் சிலர்க்கோ அல்லது சில வகை இலக்கியங்களுக்கோ பொருந்துவதாய் உள்ளதேயன்றிக் கற்பனையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் முழுமையும் செம்மையும் நிறைந்ததாய் அமையவில்லை. ஆயினும் கற்பனை பற்றிய பல்வேறு வரையறைகளும், ஏதேனும் ஒரு வகையில் அல்லது பல வகையில், கற்பனையின் வண்ணத்தையும் கற்பனை ஊற்றெடுத்துப் பொங்குதற்குரிய தன்மையையும் வெளிப்படுத்துவதாய் நிலைக்களத்தின் விளங்குகின்றன. கற்பனை பற்றிய ஒரு முழு வரையறை திறனாய்வு உலகில் இன்னும் எழவில்லையாயினும் இது வரையும் எழுந்துள்ள வரையறைகள் பலவும் கூடி, கற்பனை பற்றி நமக்கு ஒரு பெரிய சிந்தனையை எழுப்புவனவாய் உள்ளன.


            இனி கற்பனையாவது யாது என்பது பற்றி ஒருவாறு காண்போம். கவிஞன் கண்ட காட்சி அல்லது உணர்ந்த உணர்வு அல்லது ஆழத் தோய்ந்த அழகின் கோலம் அவனது படைப்பின் வாயிலாக வெளிப்பட்டு விளங்குகின்றது. உருவாக்கப்பட்ட பாட்டைப் பயிலும்போது அழகுடையது என்றும், ஆற்றல் மிக்கது என்றும், அருமையாக அமைந்தது என்றும், அற்புதமாக உள்ளது என்றும் நாம் பாராட்டி மகிழுகின்றோம். கவிஞன் தன் படைப்புக் கலையில் வெற்றி பெறும்போது இவ்வாறு நாம் பாராட்ட முடிகின்றது. கவிஞன் வெற்றி பெறவில்லையெனில் பாட்டு நன்றாக இல்லை என்றும் சுவை குறைந்துவிட்டது என்றும் வெறுங்கற்பனை என்றும் குறை கூறி ஒதுக்கிவிடுகின்றோம். ஆகவே, பாட்டு அழகாக உள்ளது என்றோ நன்றாக அமையவில்லை என்றோ ஏதோ ஒரு வகையில் நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. கவிஞன் படைத்த பாட்டு நம் உள்ளத்தைத் தொட்டு உணர்வுக்கு விருந்தாக சொல்லடுக்கு வித்தையாகக் கழிவதையும் நோக்கிக் கவிஞனின் அமைவதையும் மாறாக உள்ளத்தைத் தொடாது வெறுஞ் வெற்றி தோல்விகளை நம்மாற் கணிக்க முடிகின்றது. எனவே கவிஞன் ஒருவனின் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் இவ்வெற்றி தோல்விகளே கலையுலகக் கட்டளைக் கற்களாக அமைகின்றன. வெற்றியைப் பற்றிய சிந்தனையே இப்போது நமக்கு வேண்டுவது. பாட்டுக் கலையில் கவிஞன் எதன் துணை கொண்டு வெற்றி பெறுகின்றான்? சொல்லாலா? பாட்டின் பொருளாலா? ஓவியத்தாலா? உணர்ச்சிப் பெருக்காலா? உவமை, உருவகம் போன்ற அணிகளாலா? தான் கண்டதைப் பிறருக்குக் காட்ட வல்ல ஆற்றலாலா?


            சொல்லும் பொருளும் ஒலிநயமும் பாட்டின் அடிப்படைக் கூறுபாடுகள்; உடலுக்கு உயிர் அமைந்தது போலப் பாட்டுக்கு உயிராக உள்ளவை. இவையும் கவிஞனின் வெற்றிக்கு இன்றியமையாக் கருவிகளே; ஆயினும் படைப்போன், பயில்வோன் ஆகிய இருவர் தம் கூட்டு முயற்சியாக இயங்கும் கலையுலகில் கவிஞன் வாகை சூடுவதற்கு இவை மட்டும் போதா, இவற்றுக்கு அப்பாலும் ஒன்று வேண்டும். அதுதான் கற்பனை, கற்பனையாவது கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சியையோ பெற்ற அழகின்ப அனுபவத்தையோ அல்லது கண்ட காட்சியையோ நாமும் முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்தோ அனுபவித்தோ கண்டோ அமைத்துக்காட்டும் அரிய கலைத்திறனாகும். இவ்வுண்மை இன்புறுமாறு கவிதையல்லாத ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்தும்.

கற்பனையும் பயனும்

            கவிஞன் அழகை வியந்து நோக்கிப் புதுப்புது இன்ப அனுபவம் பெறுவதில் குழந்தை போன்றவன். அழகு. இயற்கை உலகிலும் உண்டு; மனிதர்கள் நடமாடும் செயற்கை உலகிலும் உண்டு; இயற்கையை மனிதன் அனுபவிக்கும் அனுபவத்திலும் உண்டு. இம் மூவகை அழகிலும் ஈடுபட்டுத் தன்னை மறந்து இன்ப அனுபவ உலகில் வாழவல்ல பேராற்றல் அல்லது கலையியல்பு கவிஞனுக்கு இயல்பாக வளர்ந்திருக்கிறது. அம்மறந்த நிலையினின்றும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்தவுடன் அந்த அழகையும் அனுபவத்தையும் ஒருமுகப் படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் தன் உள்ளம் விரும்பியவாறு. கூட்டியோ குறைத்தோ சீராக்கி, சொல்லோவியங்களாகத் தீட்டிக் காட்டும்போது, அவனிடம் இயல்பாக அமைந்த இயல்பூக்கக் கலையுணர்வு புதிய ஒளியும் மெருகுங் கொண்டு கற்பனைத் திறனாய் இயங்கிப் பயன் விளைவிக்கின்றது எனலாம்.

            கவிஞன் தன் கற்பனையின் துணைகொண்டு நம்மைப் புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்லுகின்றான். இதுகாறும் நாம் காணாத அழகையெல்லாம் முழுமையாக நமக்குக் காட்டி இன்புறுத்துகின்றான்; தெளிவாகக் காணாத பொருள்களைத் தெளிவாகக் காணச் செய்கின்றான்; எங்கெங்கோ பிரிந்து கிடந்த இயற்கைக் கூறுபாடுகளை நம் மனக் கண்முன் கொணர்ந்து ஒன்றுபட நிறுத்தி நம்மை உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கச் செய்கின்றான்; மண்ணிலே நின்று விண்ணை அளக்கின்றான்; விண்ணிலே பறந்து மண்ணுக்கு வருகின்றான்; அருவப் பொருள்களை உருவப் பொருள்களாக மாற்றுகின்றான்; உருவப் பொருள்களை அருவப் பொருள்களோடு இணைக்கின்றான்; பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் உற்று நோக்கி அவற்றின் உண்மைத் தன்மைகளை ஒளியுடன் படைத்துக் காட்டுகின்றான்; முரண்படுவது போலத் தோன்றுகின்ற இருவேறு காட்சி களுக்கிடையே ஓர் ஒற்றுமையைக் காட்டி நம் உள்ளத்தை நெகிழச் செய்கின்றான்; உருவிலும் வடிவிலும் சிறியதாயிருக்கும் பொருள்களைப் பெரிய தாக்குகின்றான்; பெரியதாயிருக்கும் பொருள்களைச் சிறிதாக்கிக் காட்டுகின்றான்; அனைத்துக்கும் மேலாக எல்லையற விரித்து பரந்து கிடக்கும் இயற்கைப் படைப்புக்குள் அமிழ்ந்துள்ள அமரத் தன்மையை உணர்த்தி நம் உள்ளம் உருக வைக்கிறான்.


கற்பனை வகைகள்

            வின்சென்டர் என்னுந் திறனாய்வாளர் கற்பனையை மூவகையாகப் பிரிக்கின்றார். படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்பன அவை ”தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டுந் திறனே படைப்புக் கற்பனையாகும். உணர்ச்சி கருத்து வகையிலோ காட்சி வகையிலோ வகையிலோ ஒரு நிகராகத் தான் கண்டவற்றை இணைத்துக் காட்டுவது இயைபுக் கற்பனை எனலாம் ஆன்மிகத் தன்மை அல்லது ஆன்மிகச் சிறப்பை உணர்ந்ததால், பொருள்களைச் சித்திரித்துக் காட்டும்போது அவ்வியல்பு பொருந்தியுள்ள பகுதிகளையோ அவ்வியல்புகளையோ புலப்படுத்தும் வகையில் கற்பனை செய்வது கருத்து விளக்கக் கற்பனையாகும்.

            இனி, படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்ற மூன்றுக்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.


படைப்புக் கற்பனை

            நாம் ஒரு பொருளைக் காணும்போது மேற்போக்காகக் கண்டு மகிழும் அளவிலே நின்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அதே பொருளைக் காணும்போது அழகை முழுமையாகவும் தெளிவாகவும் காணுகின்றனர்.  அதன் கற்பனையின் துணைகொண்டு காட்டவும் வல்லவராகின்றனர். பெற்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அந்த அழகை மறவாது. போற்றி வேறோர் இடத்தே மற்றொரு பொருளின் அழகைக் காணும்போது இருவகை அழகுணர்ச்சியையும் ஒன்றாக்கிப் புதியதோர் அழகின்ப உலகத்தைப் படைத்துக் காட்டுகின்றனர். கண்முன்னே நாம் காணும் பொருள்களைக் கொண்டே கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பைக் கண்டு மகிழ்ந்து அத்துடன் அமைதி வல்லவராகின்றனர். சான்றாக,


பாலாழி மீதுபடர்ந்த வெண்ணெய் – ஒரு

பந்தா யுருண்டு திரண்டதுவோ

மேலா யுலகில் ஒளிசெயவே-ஈசன்

விண்ணகமிட்ட விளக்கிதுவோ?

                                                        (மலரும் மாலையும்-312)


பொன் மரம் காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள் ஆடும் கழங்கிதுவோ?

கன்மன முங்களி கொள்ளக் – கவினொளி

காட்டி விளங்கும் மதியிதுவோ?

                                                                      (மலரும் மாலையும் 314)

என்னும் கவிமணியின் பாடலில் படைப்புக் கற்பனை அமைந்துள்ளதனை அறியலாம்.


            கவிமணி நிலத்திலே நிற்கின்றார்; மேல் நோக்கி வானத்தை அண்ணாந்து பார்க்கின்றார்; தம் கற்பனைச் சிறகு கொண்டு மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே சிறிது நேரம் பறந்து பார்க்கின்றார். இயற்கையில் நிகழும் விந்தையை முழுமையாகக் காண முயல்கின்றார் பிண்ணையும் படைத்தான் என அவர் நெஞ்சம் நினைக்கின்றது. மண்மகள் என்று அழைத்து மகிழ்கின்றோம். மண்ணைப் படைத்தவன் தானே மண்ணை விண்ணிலே தெரிவதோ வட்ட நிலா. சிறிது நேரத்திற்கு முன் ஒரு பந்தாகத் தெரிந்தது. இப்போதோ மண்ணிலி விண்ணுக்குச் சென்ற கழங்கு அதுபோலத் தெரிகின்ற யார்? அப்படியென்றால் விண்ணிலே கழங்கை விட்டெறிந்தவர் இத்துணை அருமையும் பெருமையும் வெண்மையும் குளுமையுங் கொண்ட ஒரு கழங்கை மண்மகள் அன்றி வேறு எவர்தாம் விடடெறிய முடியும்! ஆகவே இந்தப் பூமகள் கழங்கிதுவோ” எனக் கவிமணி பாடி இன்புறுகின்றார்.


            எங்கெங்கோ பரவிக் கிடக்கும் அழகெல்லாம் ஒன்றுகூடிப் பெருவனப்பாக நம் மனக் கண்முன் காட்சியளிப்பது போல நாமும் உணருகின்றோம். கவிஞனின் கூரிய கண்கள் மண்ணிலிருந்து விண்ணையும் விண்ணிலிருந்து மண்ணையும் விரைந்து நோக்க வல்லன.” என்னும் சேக்ஸ்பியரின் கருத்தையும் நினைந்து மகிழுகின்றோம்.


            எனவே இதுகாறும் கூறியவற்றால், தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டும் திறனே படைப்புக் கற்பனையாகும் என்பதனை உணரலாம்.


இயைபுக் கற்பனை

            காட்சி, உணர்ச்சி, கருத்து முதலியவற்றால் ஏதோ ஒரு வகையில் ஒன்று போலத் தெரிவனவாய்த் தன் மனத்திற்குப் பட்டவற்றை ஒன்றோடு ஒன்று இயைய வைத்து அழகுறச் காட்டுவது இயைபுக் கற்பனையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,

வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல் கோடியவனிழல்

உலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்


                                                       (கலித்தொகை, பாவைக்கலி, பா-10, வரி 1-7)

என்னும் பாடலைக் குறிக்கலாம்.


            பெருங்கடுங்கோ என்னும் புலவர் என்றோ ஒருநாள் வறியவன் ஒருவனின் இளமையானது வலுவின்றிப் பொலிவிழந்து வாடியிருந்ததைக் கண்டிருத்தல் வேண்டும். தன்பால் செல்வம் சேர்ந்தும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்றும் ஈயாது இரக்கம் கொள்ளாது ஒரு பயனும் இன்றிக் கீழ் மகன் ஒருவன் வாழ்நாள் கழித்தலைக் கண்டிருத்தல் வேண்டும். தீயவன் ஒருவன் எவருக்கும் அடங்காது. ஒழுக்கம் பற்றிக் கவலை கொள்ளாது, தீவினைகளைச் செய்து, புகழ் கெட்டுப் போனதைப் பார்த்திருத்தல் வேண்டும். கொலைத் தொழிலுக்கும் அஞ்சாது, குடிமக்களின் குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காது, தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு நெறியின்றி வரிவாங்கிக் கொண்டு செங்கோல் வளையப் பெற்ற மன்னவன் ஒருவனைக் கண்டிருத்தல் வேண்டும். இக் காட்சிகள் அனைத்தும் புலவரின் உள்ளத்தே விரைந்து சென்று ஆழ ஊன்றி நின்று உணர்வினை எழுப்பியிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஊன்றப்பட்ட உணர்வுகளுக்கே இடனாகிவிட்ட புலவர், பாலை வழியில் வேறொருநாள் வாடிய கொம்புகளையும், நிழலின்றி நிற்கும் மரங்களையும், மரங்கள் வெம்பி நிற்கும் நிலையினையும், நீரற்றுப் போய் முற்றும் உலர்ந்துவிட்ட கொடிய நிலத்தையும் கண்டுள்ளார். கண்ட இக்காட்சி. முன்னே இவர் பெற்ற உணர்வுகளோடு இயையத் தொடங்குகின்றது. இதன் விளைவே இயைபுக் கற்பனையாக வெளிப்பட்டுள்ள மேற்கூறிய பாடலாகும்.

கருத்து விளக்கக் கற்பனை

            இயற்கையாக நடக்கும் ஒன்றினிடத்துப் புலவர் தாம் நினைத்த கருத்து ஒன்றை ஏற்றி வைத்துக் கற்பனை செய்து பாடுவது கருத்து விளக்கக் கற்பனை ஆகும்.

            மனித வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் வளர்ச்சியும் கேடும் வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த திங்களைப் பார்த்த போது மாறிமாறி வருவதனைப் புலவர் ஒருவர் நன்கு உணர்ந்தார். பார்த்தார். பின், வானத்தில் இயல்பாகத் திரியும் அந்நிலவை, தம் அதற்கும் வளர்ச்சியும் தேய்வும் இருப்பதை நீடு நினைந்து கருத்திற்கு ஏற்ப, வளர்தல் தேய்தலாகிய வாழ்க்கை நிலையினை உலகத்தவர்க்கு உணர்த்துவதற்காகவே இங்கும் அங்கும் திரிவதாகக் கற்பனை செய்கின்றார்.


“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும்”  (புறநானூறு, 27, வரி: 11 – 14)

கற்பனையும் வெறுங் கற்பனையும்

            ஆழமான பொருத்தம் நிறைந்த சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றிற்கு வற்றாத கலை விருந்தாய் அமையும் கற்பனை போலவே, ஆழமற்ற, பொருத்தக் கூறுகள் குறைந்த, சிந்தனை உணர்ச்சி ஆகியவற்றிற்குச் சுவையான கலை விருந்தை அளிக்காததாய், வேடிக்கைப் போக்கும், விளையாட்டும் நிறைந்த கற்பனையும் உண்டு. இத்தகைய கற்பனை வெறுங்கற்பனை எனப்படும்.

            புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமையும்போது, ஆழ்ந்த பண்புகளற்ற, நிலையற்ற வெறும் கற்பனைகள் தோன்றும். புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும், உயர்வுடையதாகவும் அமையும்போது நிலைபெற்ற விழுப்பமுடைய கற்பனைகள் தோன்றும்’17 என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இதனால், ஆற்றல் மிக்க கற்பனையை ஒருவகையாகவும், ஆற்றல் குறைந்த கற்பனையை ஒருவகையாகவும் கொள்ள முடிகிறது. ஆற்றல் குறைந்த கற்பனை சுவை உள்ளதாக அமையலாம்; கற்பனைக்கு முரண்படாததாகவும் இருக்கலாம். ஆயின் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பத்தை ஊட்டுவதாய் அமரத்தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளதாய் இருக்க இடமில்லை.


            நல்ல கற்பனைக்கும் வெறுங்கற்பனைக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் கோல்ரிட்ஜ் என்னும் திறனாய்வாளர் எடுத்துரைத்துள்ளார். ‘கற்பனையை நான் இரண்டு வகையாகப் பாகுபடுத்துகிறேன். ஒன்றை முதன்மையானது என்றும். மற்றொன்றை இரண்டாம் நிலையானது அல்லது ‘சார்புக்’ கற்பனை என்றும் கூறலாம். மனிதனுடைய புலனுகர்ச்சிகள் அனைத்திலும், முதன்மையானதாகவும் உயிர்த்துடிப்பு மிக்க ஆற்றலாகவும் விளங்குவது முதனிலைக் கற்பனையேயாகும். வரம்பற்ற “நானிலிருந்தும் படைப்பெனும் வரம்பிலாச் செயலிலிருந்தும் வரம்புடைய மனத்திற்கு என்றுமுள படைப்பாற்றலைத் திரும்பக் கொண்டு வருவதே முதனிலைக் கற்பனையாகும்.


            இரண்டாம் நிலைக் கற்பனை, முதனிலைக் கற்பனையின் எதிரொலியாகும். தன்னுணர்வுமிக்க உள்ள உறுதியோடு அது எனினும், இயங்கும் நிலையில் முதனிலைக் உடனுறைகிறது. கற்பனையோடு ஒப்புமையுடையதாகவே அது தோன்றுகிறது; இயங்கும் முறையின் அளவிலும் அது சிறிது வேறுபடுகிறது. அது வெறுங் கற்பனை என்பது இதற்கு எதிர் நிலையில் உள்ள எத்தகைய பொருளையும் உணர்த்துவது அன்று. ஆனால், நிலைபேறான இயல்புகளையும் தெளிவான எல்லைகளையும் வெறுங்கற்பனை என்பது உடையது. உண்மையில் நினைவாற்றலின் ஒரு செயல் வகையே அன்றி வேறில்லை. அச்செயல்வகை, காலத்தையும் இடத்தையும் வென்றதாக அமைகிறது. உள்ளவுறுதியின் அனுபவத்தால் அறியப்படுகின்ற இயற்காட்சியால் அது மாற்றமுறுகிறது.


            ஆயின் கோல்ரிட்ஜின் கருத்து வெளிப்படுவதற்கு முன்னர் வெறுங்கற்பனை (Fancy) பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இக்கருத்துகளை ஒட்டியே, வெறுங்கற்பனை என்பதனை விளையாட்டுப் போக்கோடும், வேடிக்கையோடும் கூடிய கற்பனையாகக் கொள்கின்றோம்.


தொல்காப்பிய உவமை இயலும் கற்பனையும்


            தொல்காப்பியர் உவமை இயலில் கற்பனையோடு தொடர்புடைய சில செய்திகளையும் கூறியுள்ளார். ஒரு பொருளைப் பற்றிக் கவிஞர் பாடும்போது அதனை வேறு ஒன்றோடு ஒப்ப வைத்துச் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விருந்தாக அமையுமாறு செய்வதும், கற்பனை ஆற்றலின் வண்ணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். உபமானம், உபமேயம் இரண்டையும் இணைக்கும்போது அவ்விரண்டுக்கும் பொதுத்தன்மைகள் அமையக்கூடும். அப்பொதுத் தன்மைகள் தொழில், பயன், வடிவம், நிறம் என்னும் நான்கின் அடிப்படையில் அமையலாம் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.


‘வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம்” (உவமையியல்-1)

            உவமையானது இந்த நான்கின் அடிப்படையில் அமையும்போதே கவிஞரின் கற்பனைக்கு இடமுண்டு என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்


“புலி போலப் பாய்ந்தான்” வினையாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“மாரியன்ன வண்கை’ பயனாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


‘”துடிபோலும் இடை” – வடிவாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“தளிர்போலும் மேனி-நிறமாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


தொல்காப்பியர் கருத்துப்படி, மேற் கூறிய நான்கும் கட்புலன் ஆகும். (கண்ணுக்குத் தெரிவன).


            இனி, கண்ணுக்குப் புலனாகா வண்ணம், ஆனால், செவிக்கும், நாவிற்கும், மூக்கிற்கும், தொடுபொறிக்கும் (மெய்க்கும்) மனத்துக்கும் புலனாகும் உவமைகளும் உண்டு.


செவிப்புலனாவது ஓசை -“குயில் போன்ற மொழி’ என்பது போல்வன.


நாவிற்குப் புலனாவது கைப்பு, காய்ப்பு முதலிய சுவை – “வேம்பு போலக் கைக்கும்’ என்பது போல்வன.

மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின-“தீப்போலச் சுடும்” என்பது போல்வன


மூக்கால் அறியப்படுவன நறு நாற்றம் தீ நாற்றம்-“ஆம்பல்  நாறுந்துவர் வாய்” (குறுந்தொகை 300) என்பது போல்வன.

மனத்தால் அறியப்படுவன  இன்பம், துன்பம் முதலியன

 “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள் : 1107)


            ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் கற்பனை என்ற சொல்லுக்கு வழங்கி வரும் பொருள்களைக் குறைந்தது ஆறு ஆகப் பிரிக்கலாம் ‘உருவகத்தையும் என்கிறார். அவ்வாறு பிரிக்கும்போது. உவமையையும் பயன்படுத்துவோர். குறிப்பாக மிக அற்புதமான முறையில் பயன்படுத்துவோர் கற்பனை கருதப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

            ரிச்சர்ட்ஸின் இக்கருத்துகள் தொல்காப்பியரின் உவமை இயல் கருத்துகளோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்கனவாகும். ஒரு பொருளையும் அதற்கு உவமையாகக் கவிஞர் காணும் ஒன்றையும் நாம் நன்கு அறிந்து மகிழுமாறு அமைக்கும் அணிவகை உவமை எனலாம். பொருளையும் உவமையையும் வேறுபடுத்தி அறியாது இரண்டையும் ஒன்று போலவே காணும் கலைப்பார்வையிலிருந்து பிறப்பது உருவகம் எனலாம்.


            ‘மதிபோலும் முகம்’ என வரும் போது முகம் என்னும் பொருளும், மதி என்னும் உவமப் பொருளும், வேறுவேறாய் நிற்க, போலும் என்னும் ஓர் உவம உருபினால் உவமைத்தன்மை உருவாகின்றது. இதனையே முகமதி என்னும்போது போலும் என்னும் உவம உருபு – மதிக்கும் முகத்திற்கும் இடையே வேற்றுமையைக் காட்டுகின்ற உவம உருபு – மறைந்துவிடுகின்றது. முகத்தையும் மதியையும் ஒன்றென்றே காணுகின்ற ஒரு வகைக் காட்சி அமைந்துவிடுகின்றது. எனவே உருவகம் என்பது செறிவுற வைக்கப்பட்ட உவமையாகும் என விளங்குகின்றது. எனவே கற்பனை முறையில் பயன்படுத்தப்படும் உவமைக்கும் உருவகத்திற்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உண்டென்று அறியலாம். உருவக இயல் என்ற ஒன்றைத் தனியே அமைக்காது 3 இயல் ஒன்றையே அமைத்து உருவக முறையிலும் வரும் உவமையியலிலேயே தொல்காப்பியர் சில செய்திகளை கூறியுள்ளது ஈண்டு எண்ணத்தக்கது.


            உவமை இயலில் உவமை அணியின் அமைப்புப் பற்றித் தொல்காப்பியர் சொல்லும் சில செய்திகளும் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையோடு தொடர்புடையனவாகும். இனி, அவற்றைக் காண்போம். வினை, பயன், மெய், உரு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றால் மட்டுமே உவமை அமைய வேண்டும் என்பது இல்லை; ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றாலும் அமையலாம். சான்றாக;


“இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகநானூறு, கடவுள் வாழ்த்து வரி 9)

என்னும் உவமையில், வடிவு நிறம் ஆகிய இரண்டு பற்றியும் உவமை அமைந்துள்ளது.
            உவமை அணியே ஐவகை விகற்பம் கொண்டு வரும் என்று தொல்காப்பியர் கூறுவது கற்பனை வகையில் அணிக்குள்ள சிறப்பிடத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இனி நூற்பா வருமாறு:


“உவமைப் போலி ஐந்தென மொழிப.’ (உவமையியல் 24)


இளம்பூரணர் இதற்கு உரை கூறும் போது,


‘அவையாவன இதற்கு உவமையில்லை எனவும், இதற்கிதுதானே உவமை எனவும் பல பொருளிலும்உள்ளதாகிய உறுப்புகளைத் தேர்ந்தெடுத்துக் இதற்குவமையாம் எனவும் பல கொண்டு சேர்த்தின் பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப் பொருளோடு உவமித்து வருவனவும் என விரித்துரைக்கின்றார்.

            மேற்கூறிய விளக்கத்தின் வண்ணம் அமைந்த உவமை அணியின் அமைப்புகளைப் புறநானூறு போன்ற இலக்கியங் களிலும் தண்டி அலங்காரம் போன்ற இலக்கணங்களிலும் முடிகிறது. சான்றுகளை இனிக் காண்போம்;


“நின்னோரன்னோர் பிறரிவணின்மையின்.

மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும.”  (புறநானூறு, 373, வரி: 33,34)


என்னும் பகுதியில் இதற்கு உவமை இல்லை” என்பதாகிய உவமையின் விகற்பத்தைக் காண்கின்றோம்.


“திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்

விரைமலர்க்கு மேலாந்தகையால் கருநெடுங்கண்

மானே யிருளளகஞ் சூழ்ந்த நின்வாண் முகம்

தானே யுவமை தனக்கு.’

 (தண்டியலங்காரம், பொருளணியியல், பொது நீங்குவமை)


என்னும் பாட்டில் ‘இதற்கு இது தானேயுவமை’ என்னும் உவமை விகற்பம் காணப்படுகின்றது.


“நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள், நாங்கள்

எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற்

சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால்

பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்தமானாள்.”

            என்னும் பகுதியில் பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சோத்தின் இதற்கு உவமையாம் என்னும் முறைமை உள்ளது.


“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்

வில்லேர் புருவத்து வேனெடுங்கண் – நல்லீர்!

முகம் போலுமென்ன முறுவலித்தார் வாழும்

அகம் போலு மெங்களகம்.”

(தண்டியலங்காரம், பொருளணியியல், அபூதவுவமை.) என்னும் பகுதியில், பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் என்னும் உவமை விகற்பத்தைக் காணுகின்றோம்.

“வாரா தமைவானோ வாரா தமைவானோ

வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன்

ஈரத்துளின்னவை தோன்றின் நிழற்கயத்து

நீருட்குவளை வெந்தற்று” (கலித்தொகை: 41)


என்னும் பாட்டில் கூடாப் பொருளோடு உவமித்துப் பாடும் முறைமை உள்ளது.’ ஒரு பொருளைப் பாடும்போது அஃது இன்னது என வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகத் தெரியுமாறு பாடுவதும் உண்டு. அங்ஙனம் பாடும்போது உபமேயப் பொருளுக்கு ஒத்த உபமானப் பொருளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உபமேயப் பொருளை நாம் உய்த்து உணருமாறு செய்வர். உவமையில் அமையும் இவ்வுத்தி கற்பனைக்கு விருந்தாக அமையும். தொல்காப்பியர்,


“உவமப் பொருளின் உற்ற துணருந்

தெளிமருங் குளவே திறத்தியலான. (உவமையியல்-20)


எனக் கூறும் போது, உவமப் பொருளால் உற்றதை உணருதல் ஆகிய உவமையைச் சுட்டுகின்றார். இளம் பூரணர் இதற்குத் தரும்
சான்றுகள் வருமாறு:


“ஐதேய்ந் தன்று பிறையுமன்று

மைதீர்ந் தன்று மதியு மன்று

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன்றன்று சுனையு மன்று

மெல்ல வியலும் மயிலு மன்று

சொல்லத் தளருங் கிளியு மன்று” (கலித்தொகை 55)


“கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்

செயலெழுதித் தீர்ந்த முகந்திங்களோ காணீர்

                                                (சிலப்பதிகாரம், கானல் வரி 11)


            இவ்வாறெல்லாம் உவமையைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ளுமாறு தொல்காப்பியர் உவமையியலை’ அமைத்ததன் காரணம் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையில் உவமைக்குரிய சிறப்பிடம் பற்றியேயாகும். எனவே, உவமையியல் வாயிலாகத் தொல்காப்பியர் கற்பனைத் திறன்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன்

டிம்மி | சிறுகதை

டிம்மி முனைவர் க.லெனின்

      இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி. இனிமேல் குடும்பத்த ஓட்டிடலாம். பெங்களூருக்கு வேலை தேடி வந்தன். ஐடி கம்பெனியில வேல கிடைச்சிடுச்சு. ஒரு வருஷமாவது ஒரே கம்பெனியில வேல பாக்கனும். ஏதாவது காரணத்தனால வேலைய விட வேண்டிய சூழ்நிலை வந்துடுது. இதுல என் மனைவிக்குதான் அதிக கோபம். நிரந்தரமா ஒரு வேலையில இருக்க மாட்டிங்களான்னு அடிக்கடி கேட்பா.. என்ன பன்றது. எல்லாம் என் தலைவிதி. மனசு நிறைவாத்தான் இருந்தது. இன்டர்வியூக்கு வந்துததுல காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. வயிறு வேற கிள்ளியது. வயிற்றுக்கு ஏதாவது டீயையோ அல்லது காப்பியையோ இறக்கினால் நல்லா இருக்குமுன்னு தோணுச்சி. எனக்கு நேரே இருக்கும் காப்பி ஷாப்பிற்குள் நுழைந்தேன்.  அந்த நேரத்தில் அனைத்து நாற்காலிகளிலும் ஆட்கள் உட்காந்திருந்தனர். யாரேனும் எழுந்திருந்தால் உடனே போய் உட்காந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராசு. அப்போது ஒரு நாற்காலியிலிருந்து ஒருவர் எழுந்து போகவே, ராசு உடனடியாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

       அது இரண்டு நாற்காலிகள் கொண்ட டேபிள். ராசுக்கு எதிரே இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் வெயிட்டர் ராசுவிடம்,

“சார் என்ன சாப்பிடுறீங்க…” என்றான்

“காபி மட்டும். ம்ம்.. அப்புறம் ஒரு கிளாஸ் சுடுதண்ணி” என்றான் ராசு.

தொலைபேசியில் வந்த அழைப்புக்கு பதில் கொடுக்க தயாரானான் ராசு. வெயிட்டரும் ராசுவுக்கு நேரெதிரே உட்காந்திருக்கும் இளைஞனிடம்,

“சார் உங்களுக்கு வேற எதாவது வேண்டுமா?” என்றான். அவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டே,

“ஒரு கப் காபி” என்றான்.

        கொஞ்ச நேரத்தில் வெயிட்டர், இருவருக்கும் காபியை மேஜையின் மீது அவரவருக்கு எதிரே வைத்தான். இரண்டு காபி கப்பிலிருந்தும் ஆவி பறந்தது. காபியின் மனம் மூக்கை சுண்டியிழுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் காபி டம்ளரை பிடித்தனர். மூக்கிற்கு கொண்டு வந்து முகர்ந்து பார்த்தனர். கொஞ்சம் கீழே இறக்கி வாயில் வைத்து சிறியதாய் உறிஞ்சினார்கள். மீண்டும் டம்ளர் மேஜையின் மீது ஒரே நேரத்தில் வைத்தனர். மீண்டும் இருவரின் நினைவுகளும் வேறுவேறு பக்கம். மீண்டும் காபியை ஒரே நேரத்தில் உறிஞ்சுகிறார்கள். இருவரின் செய்கைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தது. அவசர காலத்தில் இவைகளையெல்லாம் யார் பார்த்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கடையில் வருவதும் போவதுமாய்  வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது.

     ராசு அப்பொழுதுதான் கவனித்தான். தன்னெதிரே அமர்ந்திருப்பவனும் தன்னை போலவே காபியை உறிஞ்சுவதும் வைப்பதுமாகவே இருக்கிறானே..

       அவனும் இதையேத்தான் நினைத்திருந்தான். இருவரும் ஒரே சமயத்தில் நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டனர். இரண்டு பேர் முகத்திலும் எந்தவொரு சலனமும் இல்லாமல் பொம்மை மாதிரி பார்த்துக்கொண்டனர். அந்த இரண்டு பார்வைகளுக்கும் அர்த்தங்கள் நிறையவே இருப்பதாகத் தோன்றியது.

    ராசுவின் மனதில் பெரும் போராட்டமே நடந்தது. சின்னதா புன்னகைப்பதா… அல்லது சிரிப்பதா… இல்லன்னா ஹாய்.. ன்னு சொல்லலாமா? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்போது எதிரில் உட்காந்து இருப்பவனே முதலில் புன்னகைத்தான். ராசுவும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

“ஹாய்… ராசு! எப்படி இருக்க?” எதிரில் அமர்ந்திருப்பவன் கேட்டவுடன் ராசுவுக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. பதில் சொல்ல நா எழவில்லை. திக்கி தினறிப்போனான். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.  எப்படியோ,

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றான் ராசு.

“ம்.. நானும் நல்லா இருக்கேன். நீ எங்க இங்க? என்றான் அவன்.

“இன்டர்வியூக்கு வந்தேன்”

“என்னாச்சு”

“வேலை கிடைச்சிடுச்சி. வர்ற மண்டேயிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க..”

“எங்க தங்கியிருக்க”

“இனிமேலுதான் வீடு பாக்கனும்”

“சரிடா வீட்டுக்கு வா.. ரெண்ட்டுக்கு வீடும் பாத்துத் தரன்”

“இல்ல.. ஊருக்கு போகலாமுன்னு இருக்கன். நாளை மறுநாள்தான் பெங்களூர்க்கு வருவேன்”

“சரி.. அப்ப வரும்போது எங்க வீட்டுக்கு வா” என்று தன்னுடைய மேல் பாக்கெட்டில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து ராசுவின் கையின் கொடுத்தான்.

“சரி ராசு, அப்ப நான் கிளம்புறேன். பாக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியேறினான் அவன்.

அவன் என்னவோ நார்மலாத்தான் பேசினான். ஆனால் ராசுதான் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து அளந்து பேசினான். இன்று நடந்தது அவனுக்குக் கனவு போல் இருந்தது. உண்மையாலுமே ராசு பூரித்துப்போனான்.

     பேருந்து பயணத்தின் போது ஜன்னல் ஓரம் சீட்டைப் பிடித்துக்கொண்டான். காற்று சுகமாய் மனதை வருடியது. காபி ஷாப்பில் என் எதிரே அமர்ந்திருந்தவன் என்னுடைய சின்ன வயசு நண்பன்தான். பேரு பாலமுருகன். நாங்களெல்லாம் அவனை பாலுன்னுதான் கூப்பிடுவோம். ரொம்ப நல்லவன். பழையதை அசைப்போட்டுக்கொண்டான்.  இப்போது பழச நினைச்சு பார்க்கிறதுல ஒரு சுகம் இருந்தது ராசுவுக்கு. நினைச்சு பாக்கனுமுன்னும் தோனிச்சு அவனுடைய மனசு.

     அப்ப நாங்க ஐஞ்சாவது படிச்சிட்டு இருந்தோம்.  எங்க கிளாஸ்ல பசங்க இருபது பேரு. பொண்ணுங்க பதினைஞ்சு பேரு. மொத்தம் முப்பத்தி ஐஞ்சு. நான் எல்லாத்துக்கிட்டேயும் பேசுவன். ஆனா எனக்கு உயிர் நண்பன்னா.. அது பாலமுருகன்தான். அவனை எனக்கு அவ்வளவு புடிக்கும். அவனுக்கும் அப்படித்தான். எப்பவுமே நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் சுத்துவோம். வாத்தியாரு கூட எஙகள இரட்டையர்கள்ன்னு சொல்லுவாரு. நான் மத்த பசங்க கூட பேசறது பாலுவுக்குச் சுத்தமா புடிக்காது. ஏன்னு கேட்டா, நீ என்னோட உயிர் நண்பன்டா… என்பான். அவனும் மத்த பசங்க கூட அவ்வளவா வச்சிக்க மாட்டான். எங்களோட நட்பு யாரு கண்ண உறுத்துச்சின்னு தெரியல.

      அன்னிக்கும் வழக்கம் போல நானும் பாலுவும் வகுப்புல உட்காந்து வாத்தியாரு நடத்தின கணக்க போர்டுல பாத்து எழுதிட்டு இருந்தோம். வாத்தியாரும் வெளியில நின்னு யாரு கூடயோ பேசிட்டு இருந்தாரு. நான் எழுதிய கணக்கு தப்பாயிடுச்சு. அதை அழிக்கனுமுன்னு என்னுடைய பையில கைய விட்டு இரப்பரை தேடினேன். இரப்பர் என்கிட்ட இல்ல. பாலுகிட்ட கேட்டேன். அவனும் அவனுடைய பையிலிருந்து தேடி ஒரு இரப்பரை என்னிடம் கொடுத்தான்.  பாலுவிடமிருந்து வாங்கிய இரப்பரை உற்றுப்பார்த்தேன். அது என்னோட இரப்பர். போன வாரம் நான் தொலைத்தது. இரப்பருக்குப் பின்னால் R என்ற என்னோட பெயரின் முதல் எழுத்துப்  போடப்பட்டிருந்தது. போன வாரம் தொலைந்து போன இரப்பரை வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பாலுதான் எடுத்து வைத்திருக்கிறான்.

“டே பாலு, இது என்னோட இரப்பர்டா.. நீ தான் திருடி வைச்சிருந்தியாடா”

“அப்படியா! இது உன்னோட இரப்பரா… நான் திருடலடா. இந்த இரப்பர் என்னோட பைக்குள்ள எப்படி வந்ததுன்னே தெரியல”

“அது எப்படி உன்னோட பைக்குள்ள உனக்கு தெரியாம இரப்பர் வந்திருக்கும். ஒருவேளை இரப்பருக்குக் கால் முளைச்சி உன் பைக்குள்ள போயிருக்குமா?”

“தெரியலடா ராசு.. எப்படி வந்ததுன்னு… கண்டிப்பா நான் எடுக்கல. நான் உன்னோட பிரண்டுடா. நான் எப்படி எடுப்பேன்”

“திருடி வைச்சிட்டு… மாட்டிகிட்டவுடனே பொய் பேசுறியாடா.. நீதான்டா திருடன்.. திருடன்…” என்று ராசு கத்தினான். அந்தச் சத்தம் அறை முழுவதும் கேட்டது. மத்த பசங்களோட சத்தத்துல ஆசிரியருக்கு இவுங்க பேசிக்கிறது கேட்க வாய்ப்பில்லைதான். பசங்க மத்தியில ராசு பாலுவை திருடன்னு சொன்னது, பாலுவுக்கு பெரிய அவமானமாய் போய்விட்டது.

“ஏன்டா என்னையா திருடன்னு சொல்லுற, நீதான்டா திருடன். உங்கப்பா ஜோப்புல இருந்து நீதான்டா காச திருடிகிட்டு வருவ. எனக்கு தெரியாதா” என்றான். தனக்கும் பாலுவுக்குமே தெரிந்த இரகசியம். இன்றைக்கு அனைவருக்கும் முன்னால் இப்படி போட்டு உடைத்துவிட்டானே என்ற ஆத்திரம் ராசுவுக்கு.

“டே உங்க அம்மா டிம்மிடா”  பாலுவின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி மீண்டும் மீண்டும் உங்க அம்மா டிம்மிடா.. டிம்மிடா.. என்றான்.

பாலுவுக்கு கோபம் தலைக்கேறியது. ராசுவை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். வகுப்பு அமைதியானது. அவர்களும்தான். பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

அடுத்தநாள் ராசு கொஞ்சம் தாமதமாகவே பள்ளிக்கு வந்தான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைவரும் அவனையே பார்த்தனர். நேராகத் தன்னுடைய இடத்தில் போய் உட்காந்து கொண்டான். அப்போதுதான் தன்னுடைய நண்பன் பாலுவின் ஞாபகம் வந்தது. கண்களைச் சுழற்றி வகுப்பறை முழுவதும் பாலுவைத் தேடினான். பாலு இன்னிக்குப் பள்ளிக்கூடத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை.

“ஏன் பாலு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் ராசு. இன்னமும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ராசுவையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். ராசுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏங்கடா… எல்லோரும் என்னையே பார்த்திட்டு இருங்கீங்க”

கொஞ்சநேரம் அமைதிக்கு பின், அந்த வகுப்பின் பெண் பிள்ளை ஒருத்திதான் போட்டு உடைத்தாள்.

“டே ராசு… நீ எந்த வாயில பாலுவோட அம்மா டிம்ம்மின்னு சொன்னியோ… தெரியல, உண்மையாலுமே அவுங்க அம்மா நேத்துச் சாயந்திரமே செத்துப்போச்சுடா” என்றாள்.

       ராசுவுக்கு உடம்பு நடுங்கிப்போனது. நெஞ்சிலிருந்து இதயம் வெளியே தள்ளுகின்ற மாதிரி ஒரு வலியை அனுபவித்தான்.

       “உன் வாயி நாரவாயிடா…”

       “இந்த வாயி ஊத்தவாயி…”

       “இது கருநாக்கு வாயிடா…”

       “ஆளையும் மூஞ்சையும் பாரு.. ஒத்த சொல்லால ஒர் உசிரையே வாங்கிட்டு நிக்கிறத…”

       “இனிமே எங்ககூட நீ பேசக்கூடாது. எங்களுக்கும் அதுமாதிரி ஏதாவது சொல்லிட்டன்னா, நாங்களும் அம்மா இல்லாம இருக்கிறதா… அப்பா… எங்களால அம்மா இல்லாம இருக்க முடியாதுடா”

       மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் வாயிக்கு வந்தபடிக்குப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அனைத்து வசவுகளையும் ராசு ஏற்றுக்கொண்டான்.

       டிம்மி என்றால் என்ன? டிம்மின்னா என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம் எனக்கு தெரியுமா? கூட படிக்கிற பசங்க கோபம் வரும்போது மத்த பசங்கள,

              “உங்க ஆயா டிம்மி”

              “உங்க அப்பா டிம்மி”

              “உங்க அம்மா டிம்மி” ன்னு சொல்லுவாங்க. கண்டிப்பா அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாதே! நானும் கோவத்துல சாதாரணமாத்தானே பாலுவ சொன்னேன். உண்மையாலுமே பாலுவோட அம்மா செத்துப்போச்சா… அவுங்க அம்மா செத்ததுக்கு நான்தான் காரணமா? தலையைப் பிய்த்துக்கொண்டான் ராசு.  பையைத் தூக்கிப்போட்டு விட்டு பாலுவின் வீட்டிற்கு ஓடினான்.

       பாலுவின் வீட்டின் சந்தில் நுழையும்போதே மோளம் சத்தம் கேட்டது. கிட்ட போகப்போக பெண்களின் ஒப்பாரி சத்தம் ராசுவுக்கு என்னவோ செய்தது.

      வீட்டு வாசலில் மொட்டை அடித்துக்கொண்டு கழுத்தில் பூமாலையுடன் கண்கள் சிவந்து நின்றிருந்தான் பாலு. ராசு தூரத்தில் இருந்து பாலுவையே பார்த்துக்கொண்டு கிட்டே வந்து நின்றான். பாலு இப்படி நிற்பதற்கு முழுக்காரணம் தான்தான் என்று நினைத்தான் ராசு.

       ராசுவைக் கண்டவுடன் பாலு கோபத்தின் உச்சிற்கே சென்றான்.  தனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ராசுவை, ஓடிச்சென்று நெஞ்சிலே ஒரு உதை விட்டான். பாலுவின் உதையில் மல்லாந்து கீழே விழுந்தான் ராசு. கீழே விழுந்த ராசுவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஐந்து விரல்களையும் மடக்கி பிடித்தபடி மூஞ்சிலேயே குத்துக்குத்தென்று குத்தினான்.

“நீதான்டா எங்க அம்மாவை கொன்ன… நீ டிம்மின்னு சொன்னதனாலதான் எங்க அம்மா செத்துப்போனாங்க. உன்னாலதான் நான் இப்ப மொட்ட அடிச்சிட்டு அம்மா இல்லாத அநாதயா நிக்கிறன். நீ எனக்கு பிரண்டே இல்ல. என்னோட முத எதிரி நீதான்டா… உன்ன கொல்லாம விட மாட்டேன்” என்று ராசுவை தன் பலவந்த மட்டும் அடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது பக்கத்தில் இருந்த பெரியோர்கள் உடனே ஓடி வந்து பாலுவை இழுத்தார்கள்.

“என்ன விடுங்க.. அவன நான் கொல்லாம விடமாட்டேன். அவந்தான் எங்கம்மாவ கொன்னான். அவந்தான் எங்கம்மா டிம்மின்னு சொன்னான். என்ன விடுங்க.. என்ன விடுங்க…” என்று கத்தினான் பாலு.

முகம் வீங்கி வாயிலிருந்து இரத்தம் ஒழுக கிழிந்த சட்டையுடன் தேம்பி தேமபி அழுத கண்களுடன் நின்றான் ராசு. அங்கிருந்தவர்கள் அனைவரும் ராசுவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

     பேருந்து முன்பை விட இன்னும் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காலமும் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது. காலத்திற்கு எதனையும் மாற்றும் சக்தி உள்ளதோ? இந்த இருபத்தைந்து வருடங்களில் என் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிகழ்வு. அது இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறேன். என்மீது இன்னமும் கோபத்தில் இருப்பான் என்றே நினைத்திருந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அழகாய் சிரித்தான். வீட்டிற்கு வா என்றான். எனக்காக வீடு பார்த்துத் தருகிறேன் என்றான். அவனுடைய விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறான். தன்னுடைய கையில் இருந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை முன்னாலையும் பின்னாலையும் திருப்பி பார்த்தான்.

      ராசு, கார்டின் பின்பக்கத்தைப் பார்த்து பிரமித்துப்போனான். எந்தக் கம்பெனிக்கு இன்டர்வியூ போனானோ, அதே கம்பெனியின் தலைமை அதிகாரிதான் பாலு என்கிற பாலமுருகன். வாய்விட்டே சிரித்தான் ராசு. அவன் என்னுடைய உயிர் நண்பன். அவன் சந்தோசமா நல்லா இருக்கனும் என்று மனதார இறைவனை வேண்டினான்.  பேருந்துக்கு வெளியில் மழைத் தூரல் கொஞ்சகொஞ்சமாய் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

iniyavaikatral@gmail.com

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் | பகுதி – 2

நாட்டு நலப்பணித்திட்டம்

நாட்டுநலப்பணித்திட்டத்தின்கீழுள்செயல்திட்டங்களாவன

 அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

தேர்ந்தெடுத்து கொண்ட பகுதிகளில் பணிகள்:

            நாட்டுநலப்பணி திட்ட வழிகாட்டி குறிக்கோளின்படி இத்திட்டத்தின் அலகுகள் ஒவ்வொன்றும் தாங்கள் நலப்பணித்திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்நடைமுறையில் அவை ஒரு கிராமம் அல்லது ஒரு குடிசை பகுதி அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை தேர்ந்தெடுத்துத் கொள்கின்றன. சம்பந்தப்பட்ட பகுதிகள் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்ற அதிகார பூர்வமான அல்லது மரபு ரீதியான தலைவர்கள் கலந்து ஆலோசனை செய்து பணிக்காலத்தை தீர்மானித்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களின் ஆதரவு, நல்லிணக்கம், இடத்தின் அருகாமை முதலி கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் பணிக்காலம் தெர்ந்தெடுக்கப்படும்.

            அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் பால்வாடி எனப்படும் குழந்தை காப்பகங்கள் தொடங்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் துணைகொண்டு நடத்தப்படும். நோய் தடுப்பு மருத்துவ பிரசார பணிகள், பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல், சுற்று சூழல் சுகாதாரம், விவசாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல் மருத்துவ நலன் மற்றும் சுகாதாரம் குறித்து நிகழ்ச்சி திட்டங்கள். போர்கால நடவடிக்கைகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நூலகங்கள்/புத்தக வங்கிகள் முதலியவற்றை உருவாக்குதல். மாநில மண்டல்களை துவக்குதல், இளைஞர் சங்கங்கள், பால் சேகரிக்கும் மையங்கள் தொடங்குதல் முதலியவை நாட்டு நலப்பணித்திட்டதின் கீழ் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகள்.

            கிராம மக்களுக்கு வங்கி கடன் கிடைக்க வழி செய்தல், மக்களுக்கு போய்வர மிக அத்தியாவசியமான சாலைகள் அமைத்தல், பராமரித்தல், முதலிய பணிகள் பல்வேறு கல்லூரிகளிலும் கிராமங்களிலும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட பிரிவுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு பூங்காக்களை வளர்த்தல், பராமரித்தல், இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டப் பணிகளில் ஈடுபாடு / கிராமங்களில் இறைவிழாக்களை நடத்துதல், காய்கறி தோட்டம் வளர்த்தல், மருத்துவ நலத் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு, பண்டிகைக்கால கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், ரயிலில் பயண சீட்டு வாங்காமல் போய் வருபவர்களை திடீர் என சோதனை செய்து கண்டுபிடித்தல் / கைதிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், முதலமைச்சர் சத்துணவு கூடங்களுக்கு விஜயம் செய்தல் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து சமாதான பேரொளி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல், பார்தினியச் செடிகளை அழித்தல், இவை பிற நாட்டு நலப்பணித்திட்டம் செய்து வரும் பணிகள்.


பொது மக்களுக்கு எழுத்தறிவுத் திட்டம்

            உலக அளவில் நமது நாட்டில் ஜனத்தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் முன்னேற்ற பாதையில் முக்கிய தடைக்கல்லாகி இருப்பது மக்களின் எழுத்தறிவற்ற நிலையே என்று கருதப்படுகிறது. உலகின் 69 எண்ணிக்கை நாடுகளோடு உடன் நோக்கில் நமது நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுஎன்பது நம் எல்லோருக்கும் கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. உலகிலிலுள்ள 85.7 கோடி படிப்பறிவற்ற மக்களில் நம் நாட்டில் இருப்பவர்கள் 44 கோடியாகும். 1981ஆம் வருட புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 36.23 சதவீதம்தான். நம் நாட்டிலுள்ள 220.89 மில்லியன் படித்தவர்களில் 3.5 மில்லியன் பேர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள்.


            இந்தியாவில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களின் எண்ணிக்கை 15 லட்சம். தமிழ்நாட்டில் 1.7 லட்சம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளனர். நாட்டு நலப்பணித் திட்டத்தால் செயலாக்கப்பட்ட 2 லட்சம் அங்கத்தினர்களை எழுத்தறிவு திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துறை செய்துள்ளது. ஒரு தொண்டர் ஒருவருக்கு எழுத்தறிவு புகட்டவேண்டும் என்ற முறையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இயங்குகிறார்கள். முதியோர் கல்விக்கான மாநில பள்ளிசாரா கருவாலயத்திலிருந்து நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களுக்கு தேவையான கற்பிக்கும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் எழுத்தறிவு பணிக்கு கையேடு என்றழைக்கப்டும். இந்த எழுத்தறிவு பைகளில், கீழ் கண்டவை உள்ளன.


1. அட்டைகள் அல்லது அடிப்படை எழுத்தறிவு பயிற்சி பொருந்திய ஒரு தொகுதி.

2.எழுத்தறிவு பயிற்சி பெறுவதில் வாழ்க்கையோடு சம்பந்தமுடைய விஷயங்களை அடங்கிய ஒரு சிறு புத்தகம், பாடப்புத்தகங்களோடு சேர்த்து அதிகப்படி வாசிப்பிற்காகவும் அறிவு விளக்கத்திற்காகவும் தரப்படுகிறது.

3. மதிப்பாய்வு தாள்….

4. ஆசிரியர் வழிகாட்டி நூல்.

5. கற்பவர் குறித்து தனிப்பட்ட விவரங்களும் கற்பிக்கப்படும் விஷயமும்.

6. நான்கு அஞ்சலட்டைகள், இரண்டு ஆரம்ப உபயோகத்திற்காக. இரண்டு கல்வி காலகட்டத்தின் இறுதி உபயோகத்திற்காக.

            சமுக நலப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பாமர மக்களின் எழுத்தறிவு பெறும் முயற்சிகளில் முழு முனைப்போடு பங்கெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இரண்டு, மூன்று நபருக்கு மேலாக கூட கற்றுத்தருகிறார்கள், அப்படி எழுத்தறிவு பெற்றவர்கள் தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள் பேருந்துகளிலுள்ள பெயர் பலகைகளை படிக்கிறார்கள். செய்தித்தாள்களை படிக்க முயற்சி செய்கிறார்கள். கிராமங்களில் ஐந்தாம், நான்காம் வகுப்பு படித்தவர்கள் கூட எழுத தெரியாமல் இருப்பதை காணமுடிகிறது. அத்தைகைய குழந்தைகளும் நாட்டு நலப்பணித்திட்டதில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

            தரநிலைச் சான்றிதழ்கள் (எத்தனை பேர்களை எழுத்தறிவுக் கொண்டவர்களாக்கினார்கள் என்ற எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டு) மாவட்ட முதியோர் கல்வி அதிகாரி, செயல் திட்ட அதிகாரி அல்லது கல்லூரித் தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆயருடன் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சான்றிதழ்களின் தரநிலை பின்வருமாறு 1. மூன்று அல்லது மூன்று பேருக்கு மேல் எழுத்தறிவூட்டியவர்களுக்கு முதற்நிலைச் சான்றிதழ்கள். 2. இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் எழுத்திறிவூட்டியவர்களுக்கு இரண்டாம் நிலை அல்லது (பி கிரேடு) நிலை சான்றிதழ்கள். 3 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எழுத்திறிவூட்டியவர்களுக்கு மூன்றாம் நிலை அல்லது (சி கிரேடு) சான்றிதழ்கள்.


எல்லோருக்கும் மருத்துவ உதவி

            கிராம மக்கள் அனைவருக்குமான உடல் நல மருத்துவ பரிசோதனைக்கு நாட்டு நலப்பணி திட்ட அமைப்புகள் அரசாங்க மருத்துவ மனைகளிலிருந்து மருத்துவர்களின் உதவி பெற்று முகாம்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

பின்வரும் மருத்துவ நல செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

 1. எல்லா குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பூசிகள், மருந்துகள்.

2.கிராம மக்கள் அனைவருக்கும் அம்மை தடுப்பூசிகள் மற்றும்  தொற்றுநோய் தடுப்பூசிகள், மருந்துகளும் கிடைக்கச்செய்தல்

3. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தகுந்த தம்பதிகளை தேர்ந்தெடுத்தல்,

4.எல்லோருக்கும் நோய்குறி சோதனையும் அதன் தொடர்ச்சியாக நோய்க்காரணிகளான நுண்ணுயிர்களை தகுந்த மருந்துகளின் மூலம் அழித்தல்

5.தொழுநோய்/காசநோய்/சர்க்கரை வியாதிகள் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கிறதா என்று கண்டறியும் மருத்து பரிசோதனைகள் அனைத்தும் கிராமத்து மக்களுக்கும் கிடைக்க செய்தல். பரிசோதனைக்கு பின் தொடர்
நடவடிக்கை ஏற்பாடு செய்தல்.


சத்துணவு திட்டம்

            கிராமத்து மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் கிடைக்கும் பல்வேறு வகையிலான உணவு பொருட்களிலிருந்த பெறக்கூடிய ஊட்டச்சத்துப் பற்றி அறிவூட்டுதல்.  தாய்பாலின் தேவையையும் பயன்பாட்டையும் எடுத்துரைத்தல் / குழந்தை வளர்ப்பு பற்றி அறிவூட்டுதல். இந்தப் பணியில் சுகாதார ஊழியர்களின் உதவியையும் தேவையெனில் பெற்றுக்கொள்ளலாம்.
 

            எலுமிச்சை மரம், பப்பாளி மரம், முருங்கை மரம், வாழை மரம், கீரை வனக மற்றும் பல இலைகள் கூடிய காய்கறி, செடிகளடங்கிய காய்கறித் தோட்டம் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டியதை மேற்படி சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அம்சமாக கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

            குறைந்த செலவிலான பாராபள்ளி / நச்சுதடை மலக்குழியை தங்கள் வீட்டில் அமைத்துகொள்ளும்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயலூக்கம் தர வேண்டும். சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பராமரித்துப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் உரக் குழிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.

மாற்று சக்தி வன ஆதார வழிகளைப் பயன்படுத்துதல் (Alternative Energy Sources)

            இயற்கை எரிவாயு முதலான மாற்று சக்திவள ஆதாரங்களைக் கைக்கொள்ளுதல், புகைவராத அடுப்புகளை யோகித்தல், சூரிய வெப்பத்தில் இயங்கும் சூரிய அடுப்பை கிராம மக்களிடையே பிரபலமாக்குதல் முதலிய வேலைகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்..

குடும்ப வரவு செலவு திட்டமிடுதலும், சிறு சேமிப்பும்

            கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்தின் வரவு, செலவுக் கணக்கை திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியம் பற்றி நாட்டு தல பணித்திட்ட தொண்டர்கள் அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள். தவிர சிறு சேமிப்புப் திட்டத்தில் சேர்ந்து பணம் | சேமிப்பதிலுள்ள பயன்களையும் சேமிப்பின் அவசியம் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்து சேமிக்க வேண்டுமென்ற செயலூக்கமளித்து வருவதையும் தங்கள் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.


சாலை செப்பனிடுதல்

            கிராம மக்களின் உதவியோடு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் தங்கள் வழக்கமாக முகாம்கள் சமயம் அல்லது சிறப்பு முகாம்கள் சமயம் பொருவாரியான மக்களின் பங்கேற்போடு கிராமத்தின் இணைப்புச் சாலை மற்றும் செல்வழிச் சாலைகளைச் செப்பனிடுவார்கள். இந்த சாலைகள் போக்குவரத்திற்கும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கும், பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும் பிற பல வேலைகளுக்கும் உதவும்.


வீடுஇல்லாதவர்களுக்குவீடு

     நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஏழை எளியவர்களுக்கு வீடுகள் கட்டிதரும் பொருட்டு மாவட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார்கள். இவர்களுடைய முயற்சிக்கு ஒரு உதாரணம் பின்வருமாறு : ஆழ்வார் குறிஞ்சியிலுள்ள பரமகல்யாணி கல்லூரியிலும் நாட்டு நலப்பணி திட்டத்தினர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் (நாகர்மூலம் கோவில்) தங்களுடைய சிறப்பு முகாம் திட்டத்தின் சமலம் கட்டுவதற்கான கச்சாபொருட்களை வேறு வழிகளின் திரட்டி அதன்வழி ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு இல்லம் கட்டினார்கள். இதுபோன்று வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை கட்டி தருகின்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

            கிராமங்களில் அங்குள்ள நாட்டுநலப் பணித்திட்டம் கிளைகளினால் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். உள்ளூரிலுள்ள கலையார்வம் மிக்கவர்களைக் கொண்டு கலைநிகழச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கிராமத்து மக்களுக்கும் செயலூக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் முதலியன பல்வேறு முக்கிய தினங்கள் கிராமத்து மக்களின் ஒத்துழைப்போடும். பங்கேற்போடும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் கொண்டாடப்படவேண்டும். வருடா வருடம் வரும் பல்வேறு பண்டிகை தொடர்பான விழாக்கள், கொண்டாட்டங்களில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஊர் மக்களோடு ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும்.


மரம் நடுதல்

            நமது நாட்டின் தட்ப வெப்ப சீர்குலையாமலிருக்கவும், பஞ்சம் பட்டினியிலிருந்து நம்மைக் நிலைகள் காத்துக் கொள்ளவும், மண் வளத்தையும், பாதுகாத்துக் கொள்ளவும், மரம் நடுதல் முக்கியமே. தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றவும், மரங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு வருடமும் மரம் நடும் செயல் திட்டம் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி வளாகத்திலும் பல்கலைக்கழகங்களிலும் கிராமங்களிலும் பணி செய்யத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பகுதிகளிலும் இந்த தொண்டர்கள் வனத்துறையின் ஒத்துழைப்போடு பல மரங்களை நட்டு வருகிறார்கள், இளைய சமுதாயத்தினரின் திறமையும் ஆற்றலும், ஆர்வமும் இந்தியாவை பசுமையாக்குகின்றன.


நிவாரணப்பணிகள்

            இயற்கையன்னை தனது சீற்றத்தை அள்ளிக் கொட்டியதில் புயலும் சூறாவளியுமாய் மக்களுக்கு சொல்லொனத் துன்பங்கள் ஏற்பட்டது. இயற்கை தந்த சவுக்கடியின் வலி அளப்பறியது. அதன்வினையால் மனிதர்கள் வீடிழந்து நிற்கின்றனர். எப்பொழுதெல்லாம் வேதனையும், துயரமும்ஆதரவற்ற நிலைமையும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாட்டு நல பணித்திட்டத்தினர் உதவி செய்கின்றார். அவ்விதமே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து பழைய துணிமணிகள் நன்கொடைகள் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படி சேகரிக்கப்பட்ட துணிமணிகள் பிற பல பொருட்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. குடிசைகளில் வாழும் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை சரியான முறையில் தரப்படவும், குடிசைகள் கட்டுதல் மற்றும் சேதத்திற்குள்ளானவைகளை பழுது பார்த்தல் முதலிய பணிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுதல், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உதவி செய்ய முன் வந்தது கிராம மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

            1977 நவம்பர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பாபட்லா தாலுக்காவிலும் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சீராளா தாலுக்காவிலும் 10,000 பேருக்கும் மேலாக இறந்தது மட்டுமல்லாமல் மக்களின் உடமைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டப்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300 நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் நிவாரணப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இவர்கள் 300 கோணிப்பைகளில் ஏறத்தாழ 1,50,000 ரூபாய் பெறுமானமுள்ள புதுத் துணிகள், 70 சாக்கு மூட்டைகளில் அரிசி, 24 கோணி மூட்டைகளில் புதிய பாத்திர பண்டங்கள், மருந்துகள் முதலியவற்றை குறிப்பிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிப் பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளால் தரப்பட்ட அளவுக்கு மேலாக சேகரித்து வழங்கினார்கள். காவலி பகுதியிலுள்ள தொண்டர்கள் நாகாலந்தா பகுதியிலிருந்து 20 சடலங்களை ஜவஹர் பாரதியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட அகற்றினார்கள். அதே கிராமத்தில் இருந்த வேறு 60 நாட்டு நலப் பணித்திட்ட அங்கத்தினர்கள் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சினி சீமாவிலிருந்த கடற்கரையை ஒட்டிய ஒரு மீனவ கிராமமான கங்கமேஸ்வரத்திற்கு நாகாலந்தாவிலிருந்து செல்லும் சாலையை சீர்படுத்தித்தந்தார்கள். இதுபோல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் திண்டுக்கல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தனர். இதே மாதிரியான நெருக்கடி கால நிவாரணப் பணிகள் நாடெங்கும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

தகவல்

            அரசாங்கம் தாமதமாக தொகையை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செலுத்தும் காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் முடங்கி கிடக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அக்காலங்களில் சில கல்லூரி/பள்ளி நிறுவனங்கள் முன்பணம் கொடுத்து திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்பட உதவி செய்கின்றன. இது தவிர சில நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வேறு சில நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்று சமுதாய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

நிர்வாக அமைப்பு முறை
                                                               NSS நிர்வாக அமைப்பு முறை

பயிற்சி மையங்கள்


            ஒரு தொழிலை நன்கு செய்ய, பயிற்சி இன்றியமையாதத காணப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்தி அரசாங்கம் பல பயிற்சி நிறுவனங்களை நாடு முழுவதும் நிறு அதற்கு தேவையான பண உதவியையும் செய்து வருகிறது.

நாட்டு நலப்பணித்திட்டத்தில் பயிற்சிகள் கீழ் கண்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்றன


திட்ட ஒருங்கிணைப்பனப்பாளர் பயிற்சி


1. துணை திட்ட ஆலோசகர், உதவி திட்ட அலுவலர், இளைஞர் அலுவலர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில தொடர்பு அலுவலர்.

2.கல்லூரி முதல்வர்கள், மேல்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியைகள்

3. நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள்

4. மாணவத் தொண்டர்கள்


நாட்டு நல பணித்திட்டத்தில் புதிய திட்டங்கள் – மாற்றங்கள் ஏற்படும் பொழுது புத்துணர்வுப் பயிற்சி திட்ட மேலாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. கல்லூரி முதல்வர்களுக்கும், மேல்நிலை பள்ளி தலமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நாட்டு நல பணித்திட்ட கொள்கைகள், பண ஒதுக்கீடு கையாளும் முறை ஆகியவற்றை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெவ்வெறு துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சமுதாய பணியை குறித்து அனுபவம் இருக்காது. இதை மனதில் கொண்டு அவர்களுக்கு இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு10நாள் முதல் நிலை பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புத்துணர்வு பயிற்சிக்காக (5 நாட்கள்) அனுப்பப்படுகிறார்கள்.


கீழ்கண்ட மையங்கள் நாட்டு நலப் பணித்திட்டதிற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது.


பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

மாநில நிர்வாக அமைப்பு முறை
                                                           மாநில நிர்வாக அமைப்பு முறை


இம்மையங்கள் மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தவிர பல விதமான காலத்திற்கு ஏற்ற ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. பொதுவாககல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், மேல் பள்ளிகளிலும் நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மதிப்பீடு செய்கின்றன. கீழ்க்கண்ட மையங்கள் பயிற்சி மற்ற மத்திய ஆராய்ச்சிமையங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. சமுதாயப் பணித்துறை, டில்லி பல்கலைக்கழகம்

 2. டாடா விஞ்ஞான பயிலகம் மும்பை

3. சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8

4.ராமகிருஷ்ணா தொண்டு நிறுவனம், கொல்கத்தா

            இம்மையங்கள் பி.எச்.டி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்து வருகின்றது. அதை தவிர நாட்டி நலப்பணித்திட்டத்தை சார்ந்த பலபுத்தகங்களை வெளியிடுகின்றன. இம்மையங்கள் பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கு மேல்நிலை பள்ளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்து வருகின்றன.

முதல் நிலைப் பயிற்சியில் கீழ் கண்ட தலைப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

1. நாட்டு நலப் பணித்திட்டத்தின் வரலாறு, தத்துவம், வளர்ச்சி

2. தொடர்பணிகள் செயலாற்று முறை

 3. சிறப்பு முகாம்கள் நடத்தும் முறை ஆளுமை வளர்ச்சி

4.சமூக காடுகள்

5.முதலுதவி

6.சமுதாயபணி

7.தாய்சேய நலபராமரிப்பு

8.சாலைபாதுகாப்புபணி

9. பண ஒதுக்கீடு கையாளும் முறை

10.கிராமம்,குடிசைபகுதிகளைத் தத்து எடுக்கும் முறை

11.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

12. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி போன்ற பலவிதமான பாடங்கள்.

13.சமுதாயஆராய்ச்சி

14.ஊனமுற்றோருக்குமறுவாழ்வு

15.ஊரகவளர்ச்சி

16.நகரவளர்ச்சி

            சமுதாயப் பணியை தகுதியான முறையில் செய்வதற்கு கலந்துரையாடல் மூலமாக கொடுக்கப்படுகிறது. நாட்டு நல வகுப்பில் பயிற்றுவிக்கும் பயிற்சியும் களப்பணி பயிற்சியும் பணித்திட்ட அலுவலர்கள் களப்பணிக்காக எஸ்.ஓ.எஸ். குழந்தைகள்கிராமம் தாம்பரம், ஜெர்மன் தொழுநோய் மருத்துவமனை -ஷெனாய் நகர், பொது சுகாதார நிறுவனம் – பூந்தமல்லி போன்ற இடங்களுக்கு செல்லுகிறார்கள்.

புத்துணர்ச்சி பயிற்சிக்காக வரும் நாட்டு நலப்பணித்திட்ட  கொண்டு 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

1.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

2. சுற்று சூழல் விழிப்புணர்ச்சி

3. நீர்பிடிப்பு பகுதி, மற்றும் நீர்வளம்

4. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி

5. உடல் ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு

6. இளம் குற்றவாளிகளுக்கு சீர்திருத்த முறை

7. ஆலோசனை கொடுக்கும் முறை

8. மனித உரிமைகள்

9. இளைஞர்கள் நலம்


நிதி

            இந்திய அரசு பல்கலைக்கழகங்களின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பல்வேறு அர்த்தமுள்ள பயன் வாய்ந்த, ஆக்கபூர்வாமான செயல் திட்டப் பணிகளில் பங்கெடுக்க உதவியாய் நாட்டு நலப் பணி திட்டங்களை நடைமுறைபடுத்தவும், தொடர் பணிகளுக்கும் சிறப்பு முகாமிற்கும் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.


            இந்த திட்டமானது மத்திய மாநில அரசின் நிதியுதவியோடு நடத்தப்படுகின்றது. அதில் மத்திய அரசு பன்னிரெண்டு பங்கில் 7 பங்கையும், மீதி ஐந்து பங்கினை மாநில அரசும் கொடுக்கின்றது. தற்போது 1,70,000 தொண்டர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், உள்ளனர். மத்திய அரசு தங்களது பங்கையும் சேர்த்து மாநிலதிட்ட  தங்களது பங்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றது. இந்த தொகையில் மாநில அரசு 5/12 கொடுக்கின்றது. மீதி பங்கை மத்திய அரசு தருகின்றது. தற்போது தொடர் பணிகளுக்காக ரூ 160/ ம் சிறப்பு முகாம்களுக்கு ரூ. 300/- செலவழிக்கப்படுகிறது. பள்ளி இயக்குனருக்கும் அளிக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் இத்தொகையை மாநில அரசு கல்லூரிகளில் இயக்குனருக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்.

            பல்கலைக்கழகங்கள் பயிற்சி பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கும் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் முகாம்களுக்குான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் அளவில் நடத்துகின்றன. திட்ட அலுவலர்களுக்கு மத்திய அரசால் ஊக்கத்தொகையை கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ. 400/- மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரூ.200/- வழங்கப்படுகின்றது. இந்த தொகையைானது அவர்கள் நிர்வாக செயல்கள் மற்றும் பணிபுரிபவர்களை நடத்தி செல்வதற்காக வழங்கப்படுகிறது. அத்தொகையானது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு எடுக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப | பயிலகங்களில் ஒரு அணிக்கு 100 மாணவ மாணவிகள் சேர்க்கப் படுகிறார்கள். பள்ளிகளில் 50 மாணவ, மாணவியர் ஒரு அணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஒரு அணிக்கு அமர்த்தப்படுகிறார். அரசாங்கத்தினரால் கொடுக்கப்படும் தொகையானது மாணவர்களுடைய களப்பணி, போக்குவரத்து செலவிற்காகவும் மேலும் திட்டப்பணிகளுக்கும் பயண்படுத்தப்படுகின்றன.


பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு தங்கள் தொகையை தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் அனுப்புகின்றன. ஆனால் சில மாநிலங்கள், மிக தாமதமாகவே பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றன. நமது மாநிலத்தில் இம்மாதிரியான தாமதங்கள் ஏற்படுவதில்லை.

 

மேலும் பார்க்க..

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் – பகுதி – 1

 

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

           ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சார்ந்திருக்கிறது. இந்த குறியிலக்கு, இளைஞர்களை வளர்த்தெடுப்பதற்கான செயல்திட்டங்கள் அமைப்புத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் முதலியவற்றின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக்தி குவிந்த, ஆற்றல் வாய்ந்த இந்த முன்னேற்றத்திற்குரிய உந்துசக்திகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் தங்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்தக்கால்களில் நிற்கவும் கல்வியை நாட வேண்டியது அத்தியாவசியம் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்குப் பல வசதிகளை செய்து தருவதோடு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தந்து விடுகிறார்கள். எனவே குடும்ப நிர்வாகம் என்பதில் இளைய தலைமுறையின் பொறுப்பு அதிகமிருப்பதில்லை. தவிர சமூக விஷயங்களிலும் அவர்கள் பங்கேற்றல் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. நகர மயமாக்கப்பட்ட சமூகத்தின் ஒரு உள்ளார்ந்த தன்மை இது. இந்த கணிப்பொறி யுகத்தில் தவிர்க்க முடியாத நிலை இது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால் இளைய தலைமுறையினரின் ஆளுமையை சமுதாயப் பணிகளின் மூலம் வளர்க்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களைச் சார்ந்ததாகிறது. சமுதாயப் பணிகள் இளம் வயதிலேயே வாழ்வுண்மைகளை மனப்பக்குவத்தை உடையவர்களாக இளைய தலைமுறையினரை அறிந்துணரும் மேம்படுத்துகிறது என்று சொன்னால் மிகையாகாது.

‘நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோல….”

            என்ற சேக்கிழார் வரிகளுக்கேற்ப பல பெற்றோர்கள் சமுதாயத்து தொண்டின் மதிப்பை உணர்ந்து தங்கள் ஆருயிர் செல்வங்களை பொதுத் தொண்டு மற்றும், நாட்டு நலப்பணித் திட்டத்திலும் ஈடுபடுத்துகின்றனர். ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்டத்தைப் பயில்வோரின் எண்ணிக்கையை வருடத்திற்கு 10% என்ற அளவில் இந்த செயல்திட்டத்தின் தரம், நிர்வாகம் முதலியனவற்றின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தி, விரிவாக்கத்தோடு கூட வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகம் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் உள்ளடக்கியதல்ல; பாரதியாரின் வரிகள்,

அனைத்து கெள் உன்னை சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு போல, அஃது

ஒரு சமுத்திரம் அம்மானிட சமுத்திரத்தில் புதிய 20 அம்ச கல்வி திட்டம் சங்கமம் ஆகும் போது மேன்மேலும் சமுதாயபணி வளர வழி வகுக்கிறது.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

தோன்றிற் புகழோடுத் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

-திருவள்ளுவர்


ஆம் சமுதாயப்பணி திட்டங்கள் விநாடிப் பொழுதில் மறையும் நீர் குமிழி போல அல்லாமல் அதன் தொண்டு தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேய கல்வி முறை ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து நடக்கும்படியாக அதிகாரிகளை உருவாக்கித தருவதான குறுகிய நோக்கங்கள், அடங்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. நமது நாடு சுதந்திரமடைந்த பின்னரும் இந்த கல்வி முறை தொடர்ந்தது. இந்த கல்விமுறை தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிவாளிகள், பொது ஜனங்கள் ஆகிய பிரிவினர்களுக்கிடையேநிலவும் பெரிய இடைவெளிக்கு காரணம். எனவே ஏட்டுக் கல்வியோடு தனிமனிதன் என்ற அளவிலும், சமூக அங்கத்தினர் என்ற வகையிலும் முழுமை உடையவனாக்கும் பயிற்சியும் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டியது அவசியம் என்று சுதந்திரத்திற்குப் பின்னர் சிந்தனையெழுந்தது.

தவிர அரசாங்கம் மற்றும் கல்வியாளர் ஆகிய இருதரப்பினருமே மேற்குறிப்பிட்ட சிந்தனையெழுச்சியின் விளைவாக, கல்வியின் எல்லா நிலைகளிலும், இன்றியமையாத ஒரு பிரிவாக சமூக மற்றும் தேசியப் பணிகள் சில பலவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதினார்க்ள் நற்பண்புகள், கட்டுப்பாடு, உடலுழைப்பின் உயர்வில் நம்பிக்கை முதலியவற்றை மாணவர்கள் மனதில் உருவாக்கவும் மேம்படுத்தவும் இளைய சமுதாயத்தினரிடம் தங்கள் சமூகப் பொறுப்பு குறித்த நினைப்பை வளர்த்தெடுக்கவும் சமூக நலத்திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்த கல்விப்பயிற்சி முக்கிய கருவியாக உபயோகப்படும் என்று நம்பப்பட்டது.

நமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே சமுதாய நலப்பணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற கருத்து நாட்டின்முன்பு பரிசீலனைக்கென வைக்கப்பட்டது. இளைஞர்களால் சமூதாயப்பணி மேற்கொள்ளப்படுவது என்ற ஆலோசனையை இராதாகிருஷ்ணன் ஆலோசனைக் குழுதான் முதலில் முன்வைத்தது என்றாலும் அது சோதனைத்திட்ட முயற்சியின் அடிப்படையில் ஒரு தன்னார்வ அணுகுமுறையை உருவாக்கி தந்தது. இந்த பரிந்துரையின் பலனாய் உழைப்பாற்றல் மற்றும் சமூக நலப்பணி முகாம்கள் அமைக்கப்பட்டன.


            1955-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு மாணவர்களால் சமுதாயப்பணி மேற்கொள்ளப்படுதல் என்ற கருத்தை முதல் மந்திரிகளின் முன் வைத்து 19 வயதிலிருந்து 22 வயதான எல்லா இளைஞர்களும் மங்கையரும் தேசத்திற்கான சமுதாயப்பணிகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதற்குக் தேவைப்பட்ட மிக அதிகசெலவுகளையும் நிர்வாக இயந்திரங்களையும் கருதி நேழு அவர்கள் இந்த திட்டம் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு மட்டும் இருக்கட்டும் என்றும், அந்த மாணவ மாணவியர் பட்டப் படிப்பை முடிக்கும் வரை குறிப்பிட்ட சில துறைகளில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சமுதாயப் பணியாற்ற வேண்டுவதை மேற்குறிப்பிட்ட திட்டம் மூலம் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்..டாக்டர். சி .டி. தேஷ்முக் தலைமையில் ஒரு குழு நாட்டு நலப்பணித் திட்டங்குறித்து பரிசீலிக்கவும் அதன் பேரில் நிலையான சில பரிந்துரைகள் முன் வைக்கவுமாய் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை படித்து கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ சேரும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுமே 9 முதல் 12 மாதங்களுக்கு சமூகப் பணி செய்ய வேண்டியது அத்தியாவசியமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.மேற்படி சமூக நலப்பணித்திட்டத்தில் கொஞ்சம் ராணுவப் பயிற்சி, சமூக நலப்பணி, உடலுழைப்பு மற்றும் பொதுக்கல்வி முதலியவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பல நிலைகளில் இந்த திட்டம் பரீசீலிக்கப்பட்டது என்றாலும் இறுதியில் அதன் செலவினம் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் முதலியவற்றை எண்ணி திட்டம் கைவிடப்பட்டது. தவிர இந்தத் திட்டம் சமூக நலப்பணியை கட்டாயமாக்கியதும் கல்வி கற்பதற்காகும் வருடங்கள் இந்த திட்டத்தினால் ஒரு வருடம் அதிகமாகக் கூடிப்போனதும் பொது மக்களிடையே ஆதரவைப்பெற முடியாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணமாகிறது.


            1960ஆம் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் கே. ஜி. சாயிதேன் ஆண்டில் இந்திய அரசின் யுகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாகியா, ஜெர்மெனி, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டு நலப்பணிகள் நடந்தேறும் விதங்களைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வலசல்கள் இை பள்ளிப்படிப்பை முடித்து வேலைக்கோ அல்லது மேற்படிப்புக் இளைய தலைமுறையினர் காகப் பல்கலைகழகத்திற்கோ செல்லும் முன்னர் ஒரு வருட காலம் நாட்டு நலப்பணிகளை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதால், நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தேஷ்முக் ஆலோசனை குழுவின் பரிந்துரை வரவேற்கப்படவில்லை. கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஒரு இறுக்கமற்ற அமைப்புத் திட்டம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமான பாடத்திட்டங்களுக்கு இணையாகத் தரப்படும் நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி என்ற கல்வி முறை பரிந்துரை செய்யப்பட்டது. மேல் ஆரம்பநிலைக் கல்விக் கட்டத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழகப் படிப்பிலும் தொடர்வதாய் இந்த நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி அமைய வேண்டும் என்றும் அப்படியிருந்தால் தான் இளம் பருவத்திலிருந்தே தகுந்த கண்ணோட்டங்களும், கருத் தோட்டங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு எல்லா இளைய தலைமுறையினரையும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் கருதப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றம்

            தேசிய கல்வி குழுமம் (1964–66) பள்ளிக்கும், சமூகத்திற்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரவேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. மாணவர்கள் அவர் தம் கல்விகாலகட்டத்தின் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு சமூகப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது இந்த குழுமத்தின் பரிந்துரையில் ஒன்று. 1967 ஏப்ரல் மாதம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த பரிந்துரை கவனத்தில் கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் ஏற்கனவே தன்னார்வத்தின் அடிப்படையில் இயங்கிவரும் தேசிய மாணவர் படைப்பிரிவில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் இந்த பிரிவிற்கு ஒரு மாற்றாக நாட்டுநலப்பணித்திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய செயல்திட்டத்தை மாணவ சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தலாம் எனவும் இந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் பரிந்துரை செய்தார்கள். 1967ல் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாடு இந்தப்பரிந்துரையை வரவேற்றது. 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள், காந்திஜியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டச் சமயம் அப்பொழுது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ் எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கி 39 பல்கலைக்கழகங்களில் 40,000 மாணவர்களை அங்கத்தினராகச் சேர்த்துக்கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை துவக்கி வைத்தார்.

            சமூகத்தின் நடப்புண்மைகளை மாணவ சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகுப்பதன் மூலம் கல்வி என்பது சமூகத்தினின்று பிரித்து நிற்பது என்ற கண்ணோட்டத்தையும், நடப்புநிலையையும், சீர்ப்படுத்துவதே இந்த பயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கம். நேரடி அனுபவத்தின் மூலம் சமுதாய பிரச்சினைகளை பற்றி அறியவும், ஆராய்ந்து அலசவும் அதிக அளவில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதன் மூலம் அந்த வாய்ப்புகளின் வழி அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை பற்றியும் புரிதலை மாணவர்களிடையே உருவாக்க வாய்ப்பளிப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளில் மாணவு சமுதாயம் முனைப்போடு இறங்கி பணியாற்ற உத்வேகமளிப்பதன் மூலமும் மேற்குறிப்பிட்ட இடைவெளியை சரிப்படுத்தப் புகுந்தது, இந்த திட்டம். சேவை வழி கல்வி என்ற கூடுதல் பரிமாணத்தை நமது கல்வி திட்டத்திற்கு நாட்டுநலப்பணித்திட்டம் வழங்குகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட நோக்கங்கள்

            நோக்கமில்லா செயல் ஏக்கம் தரும் ஆகவே நாட்டுநலப்பணித்திட்டம் கீழ்காணும் நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.


1. மாணவர்களின் சமூகப்பிரச்சினையைத் தட்டியெழுப்புதல் பொது மக்களோடு, பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை மாணவ சமுதாயத்தினருக்கு வழங்குதல்.

2. மாணவர்களை, வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான சமூகத்தைச்சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுத்துதல்

3. மாணவர்கள் அவர்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்த சமுதாயத்தினை பற்றியும், சமூக அரசியல்சார் மற்றும் பொருளாதார நடப்புண்மைகளை எதிர்கொள்வதன் மூலம் அறிவுவிளக்கம் பெறச் செய்தல்.

4. அவர்களுடைய அறிவாற்றலை அவ்வப்பொழுது உருவாகும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உபயோகப் படுத்தும்படிச் செய்தல்.

5.ஜனநாயகமேற்கொள்வதற்கானரீதியான தலைமைப் பொறுப்புகளை திறமைகளை மாணவசமுதாயத்தினரிடம் வளர்த்தெடுத்தல்,

            பொதுவாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள்களும், இலக்குகளும் கல்வி மற்றும் சேனை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணித்திட் ஈடுபடுவதன் வாயிலாக மாணவர்களின் கண்ணோட்டமும் சமூகத்தின் எதார்த்த நிலை அல்லது நடப்புண்மைகளை பற்றி அவர்களின் திறன் தெளிவா வாக மதிப்பிடுதலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பது முக்கிய குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகிறது. இப்படி செய்வதின் பலனாய் கல்வியை சமூகத்தோடு இணைத்து மாணவர்களின் சமூகச்சாரி செய்யும். தன்னை பற்றி தான் சார்ந்த சமுதாயத்தை பற்றி அறிதல் வாழ்க்கைக்கு அவன் கற்கும் கல்வியை சம்பந்தமுடையதாக மூலம் ஏற்படுத்துவதும் அப்படி பெறப்பட்ட கருத்தில் அறிவுக்கான செயலாக்க தளத்தைத் தருவதும், இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தின் இரண்டாவது குறிக்கோள் அதனுடைய நலப்பணியை ஒரு முகப்படுத்தலோடு தொடர்புடையது.சமூகங்களை வெறுமே கல்வி கற்க தேவையான தீவனமாக மட்டும் பார்த்து அவற்றின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உதவ அக்கறை காட்டாமல் பயன்படுத்திக்கொள்வது. மனிதநேயம் அற்ற போக்கு, இந்த – கண்ணோட்டத்தின் விளைவாய் மாணவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வது, புறக்கணிக்கப்படமுடியாதது. அதற்கும் மேலாய் இந்த பணி மாணவரின் கடமையாய் கருதப்படவும், செய்தேஆகவேண்டிய, தவிர்த்துவிடலாம் என்றுநினைக்ககூடாத தலையாய கடமையாய் கொள்ளப்படவேண்டியது அவசியம்.

நாட்டு நலப்பணித்திட்ட பொதுக்கொள்கைகள்

பூவினைசூடாவிட்டால்
பூவைக்கு பொலிவே இல்லை


            திட்டங்களில் கொள்கைகள் இல்லாவிட்டால் திட்டத்திற்கு மதிப்பே இல்லை. எனவே இத்திட்டம் பல பொதுக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நாட்டு நலப்பணித்திட்டம் என்பது அடிப்படையில் ஒரு கல்வி திட்டமாகும். மாணவ மாணவியர். ஆசிரியர்கள் ஆகிய இரு சாராரும் வாழ்வுண்மைகளைக் கண்டறிய எதிர் கொள்ள வைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் கிராமங்களிலும், நகர்ப்புற பகுதி களிலும் நிலவும் ஆழமைவுகளை ஆய்ந்தறியவும், புரிந்துகொள்ளவும், கொள்வதோடு மனித அளவிலும், பொருளளவில லுமா வளர்ச்சிக்குத் தகுந்த தேவை அடிப்படையிலான திட்டங்களைத் தீட்டவும் வேண்டும்.

அவர்கள் தேவையான சில பல விஷயங்களை அறிந்து கொண்டவர்களாக்கிக் கொள்ள வேண்டும். தேவையா திறன்களைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதோடு, திட்டம் தீட்டுதல் மற்றும் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் முதலியவற்றையும் கற்றுத் தர வேண்டும். இந்த திட்டத்தின் முழுப்பயன் என்ற விதத்தில் மாணவு’ மற்றும் ஆசிரிய விருப்பார்வத் தொண்டர்கள் ஒரு தேசியத் ” கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதோடு நாளைய குடிமகன்கள் என்ற அளவில் தங்கள் ஆளுமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டுவருடகால தொடர்ச்சியான செயல் திட்டங்கள், அவற்றிற்கிடையே ஒரு சிறப்பு முகாம் திட்டம் முதலியவைதனக்குத் திருப்தியளிக்கும் படியான நலப்பணி ஈடுபாட்டிற்குரிய ஒரு ஒருங்கிணைந்த வழிமுறை அல்லது அணுகுமுறையாக உபயோகப்படுத்தப்படண்ேடும்.


நாட்டு நலப்பணித் திட்டத்தின்உள்ளடக்கம்

  நாட்டு நலப்பணித்திட்டத்தின் பொதுக்கருத்துக்கு ஏற்ற விதத்தில் ஒரு கல்வி நிறுவனம் நேரிய வலுவான ஒரு செயல் திட்டத்தை வளர்த்தெடுக்க கீழே தரப்பட்டுள்ள படிநிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. “எண்ணிதுணிகக்கருமம்” என்ற வள்ளுவரின் கூற்றுங்கிணங்க தனக்குத்தானே குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு அதன் வழியே செல்ல வழி வகுக்கிறது. கல்லூரிக்கு அருகாமையிலேயே கிராமம் அல்லது’குடிசைவாரிய பகுதிகளை தேர்ந்தெடுத்து சேவை செய்யவேண்டும்.

சமூக மற்றும் பொருளாதாரக் ‘ கண க்கெடுப்புகளைத் (SURVEY) தாங்கள் தத்தெடுத்த கிராமங்களிலாவது அல்லது குடிசை வாரிய பகுதிகளிலாவது மேற்கொள்ளுதல். மேற்கொண்ட கணக்கெடுப்பு/அல்லது ஆராய்ச்சிகளின் மூலம் சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து ஆவண ‘ செய்யமுயற்ச்சித்தல்.

‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும், மக்களிடமும் அரசாங்க நிறுவனங்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களின் ‘செயல்பாடு திட்டங்களின் முன்னுரிமைகளைக் கண்டறிதல். மக்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தகுந்த திட்டம் தீட்டுதல்

அந்த செயல் திட்டங்களை ஆக்க பூர்வமான வழியில் நடை முறைப் படுத்துவதற்கென மூன்றிலிருந்து ஐந்து வருட காலகட்டத்திற்குரிய ஒரு அமைப்புத் திட்டத்தினை வரைந்து கொள்ளவும் அவ்வப்பொழுது அதன் விளைவு அல்லது தாக்கம் பற்றி மதிப்பாய்வு நடத்த திட்டம் தீட்டிக் கொள்ளவும். எந்த ஒரு திட்டத்தையும் எழுத்துருவில் வடித்து, மனித மற்றும் பொருட்கள் அளவிலான தேவையான வள ஆதாரங்களையும் வழிவகைகளையும் கைக்கொண்ட பிறகு ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கான செயல் திட்டம். அப்படி தீட்டப்படும் திட்டம் செயலாக்கம் பெற்றதாக, இரண்டு அல்லது மூன்று – மாதங்களுக்கு முன்னதாகவே அத்தகையதொரு திட்டத்தைத் – தீட்டுவதும், அதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதும் அவசியமாகியது.

            பணி செய்யும் இடங்களைப் படிப்படியாக அதிகரித்து பலருக்கு பயன்படுமாறு திட்டங்களை அமைத்தல்* நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தொண்டர்களையும் சுழல்முறை அடிப்படையிலோ அல்லது செயல்திட்ட அடிப்படையிலோ அணிகளாக இயங்கச் செய்யபோதுமான எண்ணிக்கையில் வேறு செயல்திட்டங்களும்
இருக்கலாம்.


நாட்டுநலப்பணித்திட்டத்தின் கீழுள்ள செயல் திட்டங்களாவன

 
அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

அ.தொடர்பணிகள்

            மாணவ தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வு நேரங்களில் சமூக நலப்பணி நடவடிக்கைகளி பங்கெடுக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பிற்காகும் காலகட்டத்தின் ஒரு வருடத்தி என்று குறைந்த பட்சம் 120 மணிநேரமாவது சமூக நலப்பணிக் திட்டங்களில்உழைப்புஎதிர்பார்க்கப்படுகிறார்கள்.வேண்டும் நல்க சமூக சேவைத் திட்டங்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்யும் நோக்கங்களாவன உள்ளு கொள்வதும், (1) தாங்கள் வாழும் சமூக சூழலைப் பற்றிய தங்கள் அறிதலை மாணவர்கள் ஆழமாக்கி பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதும் செயல் திட்டங்களைத் தீட்டுவதில் ஆற்றல் பெற்றவர்களாகவும் மக்கள் பிரச்சினைகளில் சிலவற்றைத் தீர்க்கவும் குறைக்கவும் ஜனத்தொகையில் பலதரப்பட்ட பிரிவுகளோடு இணக்கமாய் செயலாற்றவும். ஒத்துழைக்கவும் கற்றுக்கொள்வது முதலியனவாகும். நாட்டு நல பணித்திட்டத்தில்
நிலைத்த முழு முதற் செயல்பாடுகள் :


1.நிறுவனம்சார்ந்தசேவைகள்

2.மருத்துவநலப்பணிகள்

3. தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் பணிகள் (தத்தெடுத்த)

4.சமூகசுற்றாய்வு

5. விபத்து அல்லது திடீர் இடர் நிர்வாகம்.. (Disaster Relief)


(1) நிறுவனம் சார்ந்த சேவைகள்

            நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் பள்ளிகள், அனாதை இல்லங்கள், இளங்குற்றவாளிகள் கல்வி நிலையம்,  ஊனமுற்றோருக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள், சீர்திருத்தப்பள்ளிகள், பிற்பாதுகாப்பு இல்லங்கள், முதலிய நிறுவனங்களுக்குச் சென்று சமுதாயப்பணி/செய்து வருகிறார்கள்.


(2)பள்ளிகள்

            சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த ‘ பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் சேவை செய்கிறார்கள். தவிர, மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்பனையையும், படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க இயலாதவர்களாய்இருப்பின்அவர்களுக்கு மாணவர்கள் நலப்பணிசெய்யப்போகிறார்கள்.


பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆற்றி வரும் பலதரப்பட்ட சேவைகள் கீழே தரப்பட்டுள்ளன


1. குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருதல்.

2. பள்ளியிலிருந்து பாதியில் நின்று விடுபவர்களைப் (school dropout) பற்றி ஆய்ந்தலசி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்தல்.

3. மாணவர்களுக்குப் புதிர்ப் போட்டிகள் ஏற்பாடு செய்தல்.

4. விளையாட்டுகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி பரிசுகளும் வழங்குதல்.

5. குழந்தைகளுக்காக விடுமுறை முகாம்கள் ஏற்பாடு செய்தல்

6. ஏழை, எளிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் ஆலோசனை கூறல், உதவிகள் கிடைக்கும் வழி வகைகளை எடுத்துக் கூற, – பரிந்துரைத்தல், பொருளாதார உதவி கிடைப்பதற்கான உத்திரவாதம் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு உதவி செய்ய முயலுதல்.

7 மருத்துவ நலப் பணி மருத்துவப் பயிற்டு போ வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

8. தேவைப்பட்டால் குழந்தைகள் குறித்த கணக்கெடுத்தல்

பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும், பிரிவினருக்காக உள்ள நிறுவனங்கள்!


            மேல் குறிப்பிட்ட நிறுவனங்கள் தாய், தந்தையர அனாதை குழந்தைகளுக்கு, அல்லது ஆதரவற்றோருக்கு இளங்குற்றவாளிகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கு முதியோர்களுக்கு என்று தொடரும் பல நலிந்த பிரிவினருக்குரியதாக இருக்கலாம். இந்த குழுக்கள் அல்லது பிரிவினர், சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து மாறுபட்டணாக அந்த விதத்தில் அவர்களுக்கு நிறுவனத்தை சார்ந்த பராமரி பாதுகாப்பும் தேவைப்படுகிறது. நாட்டுநலப் பணிதிட்ட தொண்டர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்டிருப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்

 1. உடை உணவு, மருத்துவ உதவி முதலியவற்றை பெறுவதற்காக உள்ளுர் வள ஆதாரங்களைத் திரட்டுதல்,

 2. ஓய்வு, நேரத்தை மகிழ்ச்சியாகப் கழிக்க மனமகிழ் திட்டங்களும், பாட்டுப் போட்டிகளும் நடத்துதல்,

3. கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல்.


உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், ஊனமுற்றோர்களுக்கான சேவை

            வாய் பேச முடியாத, காதுகேளாதோருக்கான, சேவை நிறுவனங்கள், பார்வை இழந்தோருக்கான இல்லங்கள், மனநோயாளிகளுக்கான மையங்கள், மற்றும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கான அமைப்புகள் போன்ற நிறுவனங்களில் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மேற்கொள்ளும் பணிகள் பின்வருமாறு.

1. பார்வையற்றவர்களுக்குப் படித்துக்காட்டுதல் / எழுதித்தருதல்  

2. ப்ரெயில் மொழியில் பார்வையற்றவர்களுக்கும் பாடங்களை தயாரித்தல்.

3. உதட்டசைவு, வாசிப்பு மற்றும் சமிக்ஞைகள் வாசிப்பு முதலியவற்றைப் பயின்று அதன்மூலம் காது கேளாதோருடன் உரையாடுதல்.

4.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தடை

5. ஊனமுற்றோருக்கு கடிதம் எழுதித்தருதல்,

6.இந்த பிரிவினரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும்
உறவினர்களைத் தொடர்பு கொள்ளுதல்,

7. மேற்குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளுக்கு நிதித்திரட்டும்
பணிகளில் உதவி புரிதல்,


மருத்துவப்பணிகள்

            நகரிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளிலுள்ள நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மருத்துவமனைகளிலும் சேவை செய்து வருகிறார்கள். அரசாங்க மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும், மருந்துகளுக்கு மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்களும் இல்லை. எனவே இங்கு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின்
பணிகள்மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் தேவைப்படும் பணிகளாகும்.:

மருத்துவமனைக்கு உள்ளே

1. நோயாளிக்கு வழிகாட்டிகளாக பணிபுரிவது, நோயாளிகள் பெயர், முதலான விவரங்களைப் பதிவு செய்வதில் உதவி, மருந்துகள் வழங்குவதில் உதவி, தவிர மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் உதவி புரிபவர்களாக இயங்குவது.

2. வார்டுகளைப் பராமரிக்கும் பணி, நோயாளிகளுக்கு உணவு ஊட்டுவதில் உதவி செய்வது, அவர்களுக்கு கடிதங்கள், எழுதிக் தந்து உதவுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்.

3. அங்க ஊனத்துறை : கைவினைத் தொழில்கள் கற்றுத்தருதல், பொம்மைவங்கிகள், நூலகங்கள், முதலியவற்றை நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

4. அயன் மருத்துவம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார மருத்துவம் : உடற்பயிற்சிகளை செய்வதில் நோயாளிகளுக்கு உதவுதல்.

5. இரத்த வங்கி : நோயாளிகளின் உறவினர்களிட இரத்ததானம் கொடுக்க ஊக்கப்படுத்துதல், X இரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக வேலை


மருத்துவமனைக்கு வெளியேயான பணிகள்

1. குழந்தைகள் நல மருத்துவக் காப்பகங்களில் உதவி.

2. நோய்தடுப்பு பிரசாரப் பணிகள்.

3. கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் சுகாதார நலக் கல்ல
நிகழ்ச்சிகள்.
4. சுற்றுச் சூழல் சுகாதார செயல் ஊக்கப் பணிகள்.

5. கண் மருத்துவ முகாம்கள், பல் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு. செய்தல், தொழுநோய் பற்றிய பிரசாரப் பணிகள் செயலாக்க
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

6.குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்த  இதழில்….

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

     பத்திரிகைகள் சுதந்திரத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அமைந்த முதல் பத்திரிகைக் குழு (Press commission) நாட்டிலுள்ள பத்திரிகைகளின் நிலையையும் தரத்தையும் பற்றி ஆராய்ந்தது. சில நன்கு அமைந்த செய்தித்தாட்கள் உயர்ந்த தரத்தோடு வி செயல்பட்டாலும், பெரும்பாலான பத்திரிகைகள் தங்களது விற்பனையைக் கூட்டும் வாணிபநோக்கில் ‘தரக்குறைவாகவும்’ பண்பற்ற முறையிலும் தனிமனிதர்களைத் தாக்கும் வகையிலும் மஞ்சள் இதழியல் ‘போக்கிலும்’ எழுதுவதாகச் சுட்டிக்காட்டியது. பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

            பத்திரிகைக் குழு “பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டிக் காக்கவும், இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சியையும் தொண்டு மனப்பான்மையையும் வளர்க்கவும்” ஒரு பத்திரிகை மன்றத்தை (Press council) அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஸ்வீடனில் 1916இல் முதல் தடவையாக பத்திரிகை மன்றத்தை அமைத்தனர். இதனைப் பின்பற்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் பத்திரிகை மன்றங்களை அமைத்திருக்கின்றனர். இப்பொழுது 40 நாடுகளில் பத்திரிகை மன்றங்கள் உள்ளன.

சட்டப்பின்புலம்

            நமது நாட்டில் முதல் பத்திரிகைக் குழுவின் (Lok ) பரிந்துரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் sabha) பத்திரிகை மன்ற மசோதாவை’க் (Press Council Bill) கொண்டு வந்தனர். ஆனால் பொதுத் தேர்தலுக்காக 1957 ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப் பெற்றதால் மசோதா சட்டமாகாமல் செயலற்றுப் போனது.

            எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மன்றம் (National Integration Council), பத்திரிகை மன்றம் அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இதன்படி 1965-இல் ‘பத்திரிகை மன்றச் சட்டத்தை’ (The Press Council Act) நிறைவேற்றியது. இந்திய பத்திரிகை மன்றத்தை 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் அமைத்தனர். இதன் தலைவராக நீதிபதி ஜே.ஆர். மதோல்கார் (J.R. Madhoíkar) பொறுப்பேற்றார். பத்திரிகை மன்றத்தின் அமைப்பினில் சிறிது மாற்றம் செய்து, அதன் காலத்தை நீட்டிக் கொண்டிருந்தனர். 1975இல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தபொழுது குடியரசுத் தலைவர் 1975 டிசம்பர் 8-இல் ஓர் ஆணை பிறப்பித்து,1976 ஜனவரி 10 முதல் பத்திரிகை மன்றத்தை நீக்கினார். பத்திரிகை மன்றம் திறமையாகச் செயல்படவில்லை என்று காரணம் கூறி ‘ பத்திரிகை மன்றம் (நீக்குதல்) சட்டத்தை’ (The Press Council Repeat Act) 1976இல் நிறைவேற்றினர்.


            நெருக்கடி நிலை நீங்கிய பிறகு. 1978-இல் பத்திரிகை மன்றச்சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்தனர். இந்தச் சட்டம் 1979 மார்ச்சு ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இப்பொழுது பத்திரிகை மன்றத் தலைவராக நீதிபதி ஏ.என்.சென் (Justice A N sen) இருக்கின்றார்.


அமைப்பு முறை

             பத்திரிகை மன்றத்தில் ஒரு தலைவரும் 28 உறுப்பினர்களும் இருப்பார்கள். உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகையாளர்களாகவும்  5 பேர் நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களாகவும், 3 பேர் கல்வி, அறிவியல், சட்டம், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

            பத்திரிகை மன்றத்தின் தலைவரை, நாடாளுமன்ற மேலவைத் தலைவர், மக்களவைத் தலைவர், பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழு தீர்மானிக்கும். பத்திரிகை மன்றம் சில நீதிமன்றப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயர்மட்ட நீதிமன்ற (Supreme court) நீதிபதிகளையே பொதுவாக பத்திரிகை மன்றத் தலைவராக நியமிக்கின்றனர்.


மன்றத்தின் பணிகள்

            பத்திரிகையின் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதும், செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்களின் தரத்தைக் காத்து மேம்படுத்துவதும் பத்திரிகை மன்றத்தின் தலையாய் நோக்கமாதலால், அதனை நிறைவேற்றும் வகையில் மன்றம் பணிகளை மேற்கொள்கின்றது.

            மன்றம், செய்தித்தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய நெறி முறைக் கோட்பாடுகளை உருவாக்கித் தர வேண்டும். செய்தித்தாட்களும் செய்தி நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட உதவுவதும் மன்றத்தின் பணியாகும். செய்தித் தாட்களும் செய்தி நிறுவனங்களும் இதழியலாளர்களும் பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும் உரிமை உணர்வோடும் பணி செய்யத் துணை செய்ய வேண்டும். இதழ்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் உருவாக்க முயல வேண்டும்.

            மன்றம், பத்திரிகைகளின் அமைப்புமுறை, செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் உடைமை குவிதல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்திரமாகச் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகளைப் பெறும் செயல்பட வேண்டிய மதிப்பிட்டுக் கூறும் பணியும் இந்த மன்றத்தினுடையதாகும்.


செயல்பாடு

    பத்திரிகை மன்றம் அதனிடம் வரும் குற்றச்சாட்டுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கின்றது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966 1981 வரை இம்மன்றம் 800 குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளது. இவற்றில் 214 குற்றச்சாட்டுகள் பத்திரிகை சுதந்திரம் தொடர்பானவைகளும் மத்திய மாநில அரசுகளின் மீது பத்திரிகைகள் கொண்டு வந்தவைகளுமாகும். 566 குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளின் மீது தனிமனிதர்களும், நிறுவனங்களும், மத்திய, மாநில முடிவுகளை அரசுகளும் கொண்டு வந்தவை.  மன்றத்தின் முடிவுகளை பல செய்தித்தாட்களில் வெளியிடுகின்றனர்.


    பத்திரிகை மன்றம் இதழியலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்துக் கூறவில்லை. காலப்போக்கில் வருகின்ற வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறையினை உருவாக்க இயலுமென்று கருதுகின்றது. பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பத்திரிகை மன்றம் ஒரு பாலமாக விளங்குகின்றது.


மதிப்பீடு

            பத்திரிகை மன்றத்திற்கு இதழ்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க போதுமான அளவு அதிகாரம் வழங்கப்பெறவில்லை. ஆதலால் அவை திறமையாகப் பணிபுரிய இயலவில்லை என்று கருதுகின்றனர். பத்திரிகை மன்றத்தை, “இது ரப்பர் பற்களைக் கொண்ட காகிதப் புலி’ ; ” தெளிவற்ற அதிகாரமற்ற ஓர் அமைப்பு” என்றெல்லாம் தொடக்க காலத்தில் வர்ணித்தனர். ஆனால் பத்திரிகை மன்றம் இப்பொழுது ஆற்றல் பெற்று வளர்ந்து வருகின்றது. இதன் தேவையை எல்லாத்தரப்பினரும் உணர்ந்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தையும் தரத்தையும் காக்கக் கூடிய நிறுவனமாக பத்திரிகை மன்றம் இருப்பதால், இதனை வலுவானதாக்கி, திறமையாகச் செயல்படத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தருவது இந்தியப் பத்திரிக்கை வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

பத்திரிகை மன்றம் (Press council)

            நமது நாட்டில் பத்திரிகை மன்றத்தை அமைத்த பொழுது, அது, “செய்தித்தாட்களும, செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய ‘நடத்தைக் கோட்பாட்டை’ (Code of Conduct) உருவாக்கித் தர வேண்டும்,” என்று எதிர்பார்த்தனர். ஆனால் பத்திரிகை மன்றமோ, “காலப்போக்கில்தான அறக்கோட்பாட்டை உருவாக்க இயலும்,” என்று கருதியது

            1966 இல் பத்திரிகை மன்றம் செய்தித்தாட்கள் பின்பற்றத் தக்க சில வழிமுறைகளைத் தொகுத்து, 10,000 செய்தித்தாட்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்பியது. அந்த தொகுப்பில், சமுதாயத்தின் உண்மையான, சட்டத்திற்குட்பட்ட தேவைகளையும் குறைகளையும் எடுத்துரைக்கும் இதழ்களுக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டு ஆனால் கீழ்க்கண்டவற்றை விலக்க வேண்டும் என்று தொகுத்துக் கூறுகின்றது

சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல சரி பார்க்காத வதந்திகளையோ ஐயப்பாடுாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்; அவற்றைப் பற்றி விமாசித்தல்.

இலக்கிய நயத்தோடு அமைய வேண்டுமென்றோ  எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ செய்திகளையோ, கருத்துக்களையோ வெளியிடும் பொழுது,பண்படாத, கட்டற்ற மொழிநடையைப் பயன்படுத்துதல்;


உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக, ஆத்திரப்படும் சூழ்நிலையில் கூட வன்முறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்.


ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது சாதியின் உறுப்பினர்கள் என்பதற்காக, அதுவும் குறிப்பாக அவர்களது நடத்தைப்பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது, தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ குதர்க்கமாகவோ, பொய்யாகவோ தாக்கி எழுதுதல்;

பல்வேறு சமுதாயங்களின் உறுப்பினர்கள் தற்செயலாக ஈடுபட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாக சாதி வண்ணம் பூசுதல்;

சாதிகளுக்கிடையில் வெறுப்பையோ,கெட்டஎண்ணங்களையோ,அவ நம்பிக்கை உணர்வையோஏற்படுத்தக் கூடியவற்றிற்கு அழுத்தம் கொடுத்தல்;

உண்மைக்குப் புறம்பானவற்றை அச்சப்படுத்தும் வகையில் வெளியிடுதல்; சாதிகள், வட்டாரங்கள், மொழிப் பிரிவினருக்கிடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துக்கள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்;

சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளுக்கு, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக நடந்தவற்றை மிகைப் படுத்தியோ, பெரிய செய்தித் தலைப்புகளோடோ வேறுபட்ட எழுத்துக்களில் அச்சிட்டோ வெளியிடுதல்;


பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.

நிறைவுரை

            இதழ்கள் தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சில அறவிதிகளை ஏற்றுச் செயல்படுதல் தேவையாகும். அறவழி நிற்கும் இதழ்கள் தான் மக்களின் மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுச் சிறக்கும்.


நன்றி

இதழியல் கலை – டாக்டர் மா.பா.குருசாமி

நோக்கு என்றால் என்ன?

நோக்கு-என்றால்-என்ன

            ‘நோக்கு’     என்னும் சிந்தனை செய்யுள் பற்றியது. செய்யுளியலின் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புக்கள் பற்றிக் கூறும் தொல்காப்பியர் ‘நோக்கு’ என்பதைப் பத்தாம் உறுப்பாக வைத்துள்ளார். நோக்கு வடிவம் சார்ந்த உறுப்புக்களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. நோக்கு என்பது ஒரு கருத்தைச் சொல்லுங்கால் வரிசையாக இயையுமாறு தொடர்ந்து செல்வது எனக் கூறப்படுகிறது. இடையில் முறிவு இன்றி ஒரு போக்காகக் கருத்துச் செல்லுமாறு ‘நோக்கு’ ஆகும். யாதானும் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காமல் அதனையே நோக்கி நின்ற நிலை நோக்கு’ என்பது இளம்பூரணர் கருத்து.” இது செய்யுளின் ஓரடியிலும் அல்லது பா முழுதும் அமையலாம். இந்நோக்கு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி என்ற ஐவகைக் கூறுகளும் இணைந்துருவாகும் ஓர் இலக்கியச் சிறப்பு என்று ச.வே.சுப்பிரமணியன் ‘இலக்கிய வகையும் வடிவும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.


‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கு எனப்படுமே‘       

            என்று நோக்கு என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்குகின்றார். இதன்கண் ‘அடிநிலை காறும்` என்றதனான் ஓர் அடிக்கண்ணும் பல அடிக்கண்ணும் இந்நோக்கு அமையும் என்பது இளம்பூரணர் கருத்து. இது ஒரு நோக்காக ஓடுதலும், பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு ஓடுதலும் என மூவகைப்படும்.

            ஒரு செய்யுள் முழுவதும் ஆற்றொழுக்காகப் பொருள் அமைந்து நிற்றல் என்பது ஒரு நோக்காக ஓடுதலாகும். பல நோக்காக ஓடுதல் என்பது செய்யுள் ஆங்காங்கு நின்று பொருள் முடிவதாகும். இடையீட்டு நோக்குதல் என்பது செய்யுளில் ஓரிடத்து நின்ற சொல் பிறிதோரிடத்துச் சென்று இயைந்த பொருள் தருதலாகும். செய்யுளில் எத்தனை அடிகள் இருப்பினும் அவற்றில் அமைந்துள்ள மாத்திரையும் எழுத்தும், அசையும் சீரும் ஆகிய எல்லாம் மீண்டும் நோக்கி நோக்கிப் பயன் கொள்ளும் வகையில் வற்றாத அறிவின் ஊற்றாய்ப் புதியபுதிய கருத்துக்களைத் தருவனவாய் இருத்தல் வேண்டும். அதுவே நோக்கு என்னும் உறுப்பாகும்.

            மாத்திரை முதல் அடிநிலை வரை சொல்லப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் இந்நோக்கு நிலைக்கு உதவுவனவாய் அமைதல் வேண்டும். ‘படைப்போன் படைப்பு வன்மையால் நோக்கு அமையப் படைப்பானெனினும், அது துலங்குவது, வெளிப்படுவது, பாராட்டப்படுவது, நிறைகுறை அறியப்படுவது நோக்குவோன் இடத்திலேயாம். எனவே இக்கோட்பாட்டிற்கு ‘நோக்கு’ எனப் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார்.” நோக்கு என்ற சொல் தமிழ் பெயரிட்டது. இன்று நோக்கினும் புதுமையாக உள்ளது’ என்று பல இலக்கியத்தில் பயிற்சியுடைய சொல்லாகும். திருக்குறளில் இடங்களில் வந்துள்ளது. காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதலை ‘நோக்கு’ என்னும் சொல்லால் அவர் குறிக்கிறார்.


முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மான்பினைத் தேரன்
உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறஞ்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அகன்ற காந்தள்
போதவிழ் அலரின் நாணும்
ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே”
           

           என்ற செயயுள் ஒரு நோக்காக ஓடிப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது ஒரு நோக்காக அமைந்த நோக்குச் செய்யுளாகும். இச்செய்யுளில் முல்லை என்ற சொல் தொடங்கிப் ‘படர்ந்தே’ என்னும் சொல் முடிய ஒரே வரிசையாக நின்று பொருள் இயைவதைக் காண முடிகிறது.

            முல்லை வைந்நுனை தோன்ற; மென்பிணி அவிழ; இரலை தெறிப்ப; புலம்பு புறக் கொடுப்பக் கழுதறை சிதறிக் கானம் கார் செய்தன்று; காந்தள் நாறும் அரிவை; நின் நலம் படர்ந்து வள்பரிய, வதிந்த பறவை பேதுறல் அஞ்சி, ஆர்த்ததேரனாய் நாடன் தோன்றும்! இதுவே இதன் வாக்கிய முடிபு. மேலும் இச்செய்யுளின்கண் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடரும் சிறந்த கருத்துக்களையும் குறிப்பால் உணர்த்துவதையும் நோக்க முடிகிறது. அதனாலும் இஃது நோக்கு என்பதன் பாற்படும்.

நன்றி

இலக்கியத்திறனாய்வு இசங்கள் – கொள்கைகள் – அரங்க.சுப்பையா

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும் | Duties and Responsibilities of a Journalist

பத்திரிக்கையாளரின்-பணிகளும்-பொறுப்பகளும்

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும்

       செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும். மக்களாட்சியில், நாட்டின் அன்றாட நடப்புக்களை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியை செய்தியாளர் மேற்கொள்கின்றார்.

கடினமானபணி

            செய்தியாளரின் பணிமிகவும் கடினமானதாகும். இருபத்தி நான்கு மணிநேரமும் அவர் விழிப்போடு செய்திகளைத் தேடி அலைய வேண்டும். எங்கிருந்து செய்தி, எப்படி வெடித்துச் சிதறுமென்று கூறமுடியாது. நாளிதழில் ஒவ்வொருசெய்தியாளர்*செல்ல இடத்தையும் (Beat)’ என்ன ‘பணி (Assignment) வேண்டுமென்பதையும் தலைமைச் செய்தியாளர் ஒதுக்குவார். பணியைச் செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டும், ‘தூங்காடை கல்வி, துணிவுடைமை” உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாய் உழைத்தால் சிறப்பாகச் செய்திகளைத் தேடிக் கண்டு திரட்டித் தந்து புகழ் பெற முடியும்.

ஆபத்தான பணி

            செய்தியாளர் நடக்கும் பாதையில் மலர்கல் தூவப்பட்டிருப்பதில்லை, நெருஞ்சி முள் காட்டிற்குள் பயில்பவர்களைப் போன்றே செய்தியாளர்கள் பணிபுரியவேண்டியுள்ளது. உண்மைகளை வெளிக்கொணரும் பணியைச் செய்வதால், அதனால். பாதிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் செய்தியாளர்களுக்குப் பாதகங்கள் செய்யத் தயங்கமாட்டார்கள். செய்தியாளர்கள் அடிதடிக்கும், அவமானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். செய்தியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.செய்தியாளர்களைத் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகளும் கூட நடைபெற்றிருக்கின்றன.

             செய்தியாளரின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் கூறலாம். 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நமது நாட்டின் தலைமையமைச்சர் ஒய்வெடுக்க இலட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரோடு சென்றவர்கள் பற்றிய சில விவரங்களை அரசு வெளியிடவில்லை. 7.1.88 வியாழக்கிழமை இலட்சத்தீவிலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் வந்து புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கொச்சி விமானதளத்தில் இறங்கினார். இதனை புகைப்படம் எடுத்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ Indian Express’ புகைப்படக்காரர் ஜீவன் ஜோஸ் (Jeevan Jose) அமிதாப்பச்சன் தடுத்திருக்கின்றார். அதற்கு மேலும் புகைப்படம் எடுக்கவே, தாக்கி, விலை உயர்ந்த புகைப்படக்கருவியைப் பறிக்க முயன்றிருக்கின்றார். நடிகரோடு ஒரு வெளிநாட்டுக்காரரும் உடன் இருந்து இருக்கின்றார். 8.1.88 வெள்ளிக்கிழமை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் புகைப்படங்களோடு இச்செய்தி வெளியாகியுள்ளது. இதிலுள்ள இடர்ப்பாட்டின் கடுமையைச் சொற்களால் விளக்க இயலாது.

செய்தித் திரட்டும் பணி

            எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து, அந்த செய்தி உண்மையானதா என்பதை அறிந்து, செய்தி மூலத்தை அணுகி, செய்தியைத் திரட்டி தருவது தான் செய்தியாளர் பணி. காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகின்றார்.

    செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன

      முதலாவதாக செய்தியாளர் செய்திக்குத் தன்னை வெளிப்படுத்திக் (Exposure கொள்ள வேண்டும். அதாவது செய்தியின் மூலத்தோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தால் செய்திக்குரிய நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து, நேரடியாக செய்தியைப் பெற வேண்டும். அல்லது செய்தி மூலமாக இருப்பவரை அணுகி செய்தியை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

       இரண்டாவதாக, நடந்தவற்றை பார்க்க (Perception) கவனித்து நோக்க வேண்டும். உண்மையை அறிந்து எழுத இப்படி வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் பார்வையிடுதல் துணை செய்கின்றது. அறிக்கைகளாகவோ, புள்ளி விவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரிந்து படித்து, அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவான முறையில் வழங்குவது செய்தியாளர் பணி.

       மூன்றாவதாக, பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் (Retention) வேண்டும். செய்தியாளருக்கு பதித்துக் கொள்ள நினைவாற்றல் என்பது கைவந்த கலையாக மாற வேண்டும். முதலில் குறிப்புகள் எடுத்துக் கொண்டு பின்பு விரித்து எழுத நினைவாற்றல் துணை செய்கின்றது. பதிவு செய்யும் கருவிகளை (Tape Recorder)பயன்படுத்தலாம்.

      நான்காவதாக, கிடைக்கின்ற விவரங்களில் எவை சரியானவை என்பதைத் தீர்மானித்து தெரிந்தெடுக்க (Selective Judgement) வேண்டும். எந்த நிலையிலும் செய்தியில் பொய்மை கலந்து விடக் கூடாது. “ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்” (when in Doubt,Leaveit out) என்பது செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஒன்று.

      ஐந்தாவதாக, எதனைப் பெரிது படுத்தித் (Amplify) தரவேண்டும் என்பதை அறிந்து, அதனையே செய்தியாக, சரியான கோணத்தில் எழுதித் தர வேண்டும். நிறைய விபரங்களை சேகரித்து இருக்கலாம்.எல்லாவற்றையும் செய்தியாக்கவேண்டியதில்லை.முக்கியமானவற்றையும்,குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்து, பின்னிப் பிணைத்து சுவையான, பயனுள்ள செய்திகளை படைத்து தருதல் செய்தியாளர் பணியாகின்றது.

பொறுப்புக்கள்

            செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாட்களில் வெளிவருவனவற்றை “அச்சிட்டது நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். உண்மையாகவே”, இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.

       சிலசெயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம், அதற்கான தக்கு ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியேவெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுமானால்,அவற்றை வெளியிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல. சாதி, சமயப் பூசலைத் தூண்டி சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.

      கூடியவரை தங்களது செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்கள் கடமையாகும். சான்றுகளை வெளியிடாமல் வைத்துக்கொள்ள சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது. சில வேளைகளில் செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை. வெளிக்காட்டிக்
கொள்ள விரும்புவதில்லை.

      நேர்காணல் பேட்டி (Interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும்பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்றக் குறிப்போடு விளக்கத்திற்காகச் சிலவற்றைக் கூறலாம். அவை சுவையானதாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக் கூடாது.

       செய்தியாளர் தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும். தான் சேகரிக்கும் செய்திகளை தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க..

1.பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

2.இதழியல் விளக்கமும் இலக்கணமும்

சிறுகதை என்றால் என்ன?

சிறுகதை

சிறுகதை என்றால் என்ன?

            சிறுகதை மிகப் பழமை சான்ற ஓர் இலக்கிய வகையாகும். இதன் வளர்ச்சிக்கு உரிய மூல ஊற்று. மாந்தரின் கதை கேட்கும் ஆர்வத்திலேயே முதலே கதை கேட்கும் இயல்பு இருந்திருக்கின்றது எனத் உள்ளது. மனித வரலாறு தொடங்கிய கால தெரிகின்றது. மனிதன் ஏன் கதையை விரும்பிக் கேட்கின்றான் என்பதும் ஒரு நல்ல வினா. இதற்குச் ‘சாமர் செட் மாம்’ என்பவர் விடை கூறுகின்றார். “உடைமை பற்றிய உணர்வு மனிதனிடத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பது போலவே கதை கேட்கும் ஆர்வமும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே, ஒருவர் கதை சொல்வதைக் கேட்பதற்காகவே பலரும் நெருப்பைச் சுற்றிக் கூட்டமாக உட்காரும் பழக்கமோ அல்லது பொது இடத்தில் ஒன்றாக அமரும் பழக்கமோ, இருந்திருக்கின்றது. சிறுகதை என்றால் என்ன?

            வரலாற்றின்பழைமையோடுதொடர்புடையஇச் சிறுகதை ஒரு நல்ல கலையாக மிகுதியாக வளர்ந்தது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஆகும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் 1800 ம் ஆண்டுக்குப் பிறகு படித்தவர் கூட்டம் பெருகவே அவர்களின் தேவைக்கேற்பப் பருவந்தோறும் வெளியிடப் பெற்ற எல்லா வகை இலக்கியங்களின் தேவையும் பெருகிற்று’என்பர் அறிஞர். நம் தமிழகத்திலும் இந் நூற்றாண்டின் தொடக்க முதல் இலட்சக் கணக்கான மக்கள் சிறுகதையை விரும்பிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது எனலாம்.


இக்கால இலக்கியங்களில் சிறுகதை பெறுமிடம்  

            இன்றைய இலக்கிய உலகில் சிறுகதைக்கென்றே ஒரு சிறப்பிடம் உள்ளது. நாகரிகம் முற்றிப் போக்குவரத்துக் கருவிகள் பெருகி மக்கள் மிக விரைந்து செயற்படும் இந்நாளில் பலருக்கும் படிப்பதற்கு வசதியாக உள்ள துறை சிறுகதையே ஆகும். இச் சிறுகதை எண்ணிக்கையிலும் வகையிலும் பலபடியாக வெளிவரும் இதழ்கள் பெரிதும் காரணமாக அமைகின்றன. ஒரு விரிந்து வளர்ந்து செல்வதற்கு நாடோறும் வாரந்தோறும் குறிப்பிட்ட இதழில் வெளியிடப் பெறும் சிறுகதையை அந்த இதழை எடுத்த மாத்திரத்திலேயே ஒரேவேகத்தில் படித்து .முடித்துவிடலாம்.

மற்றொன்று:


           
கருத்தாழம், நடைச்செறிவு முதலியன நிறைந்த விழுமிய பேரிலக்கியங்களை ஆழ ஊன்றி அமைதியாகப் படிப்பதற்குரிய பொறுமை பெரும்பாலோர்க்கு இன்று இல்லாமையும் சிறு கதையின் செல்வாக்குக்குக் காரணமாகின்றது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற பண்பட்ட உயரிய இலக்கியங்களைக் கற்பதற்குரிய நேரமும் ஓய்வும் வசதியும் கல்வியும் இல்லாத இலட்சக்கணக்கான மக்கள் சிறுகதையைச் சிறிது நேரத்தில் படித்து முடித்துச் சிறியதொரு கலைப்பயனை விரைந்து பெற முடிகின்றது. எனவே, உயர்ந்த இறவாத பேரிலக்கியங் களையும், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் இலக்கியப் பகுதிகளையும் கற்று மகிழ முடியாத இலட்சக்கணக்கான மக்கள் இன்று சிறுகதைகளைக் கற்று இன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் புதினம் போலவே சிறுகதையும் மக்கள் இலக்கியமாக மலர்ந்துள்ளது.

சிறுகதையின் விளக்கம்

            சிறுகதைஎன்றால்என்ன?சிறிய அளவில் அமைந்த கதையே சிறுகதையாகும்.

        இப்படி ஒரு வரையறையைச் சிறு கதைக்குச் சொல்ல ‘முடிந்தாலும் ‘அளவு’ என்பதிலே ஆசிரியர்களிடையே றுபாடு இருக்கின்றது. ஒரு பக்கம் அல்லது இருபக்க அளவில் அமைந்த சிறுகதையும் உண்டு: மிகப் பெரிய சிறுகதையும் உண்டு.  வெவ்வேறு ஆசிரியர் எழுதும் சிறுகதையின் அளவு வேறுபடினும் சிறுகதைக்கென்றே அமைந்த சில தன்மைகளும் கட்டுக் கோப்புகளும்தோன்றிவிட்டன. ஹெச்.ஜி. வெல்ஸ் என்பார் சிறுகதையைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.

            ஒரு சிறுகதை என்பது எளிமை சான்ற ஒரு படைப்பாக இருக்கின்றது; அல்லது இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவானபயனை மட்டும் விளைவிக்க அது முயலுகின்றது. எடுத்த எடுப்பிலேயே பயில்வோரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும்வரை வாசகரின் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் ஆழமாக ஊன்றச் செய்ய வேண்டும். எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் மனிதனின் திறமை நீண்டநேரம் நீடிக்க முடியாது. சிறுகதைப் பயிற்சியிலும் இவ்வுண்மை பொருந்துவதாகும். ஆகவே, இடையீடோ சோர்வோ நேருவதற்கு முன்பாகவே சிறுகதை நன்கு வெடித்து முற்றுப் பெறுதல் வேண்டும்

     ஹெ ச்.இ. பேட்ஸ் என்பவர், “எழுதும் ஆசிரியர் எண்ணித் துணியும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம்’ என்கின்றார் எனவே மேற்கூறிய கூற்றுகள் வாயிலாகச் சிறுகதை . என்பது அளவில் சிறியதாக அமையவேண்டும் என்பதும், தொடக்க முதல் முடிவுவரை நம் கவனத்தைச் சிக்கெனப் பிடித்து ஒருமுகப்படுத்திக் கலைப் பயனை விளைவிக்க வேண்டும் என்பதும், சிறுகதை சிறிய கதையாகவே அமைவது நல்லது என்பதும் நமக்கு நன்கு விளங்கும்.

புதினத்திற்கும் சிறுகதைக்கும் உரிய வேற்றுமை

            புதினம், சிறுகதை ஆகிய இரண்டிலும் உரையாடல் வருணனை, நிகழ்ச்சிக்குரிய பின்னணி முதலியவற்றால் ஒற்றுமைகள் உண்டு. வேறு வகையிற் சில வேற்றுமைகளும் உண்டு. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.

1. புதினத்திற்குரிய கருப்பொருள், மனிதப் பண்பின் செயலின், வாழ்க்கையின் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாய் பண்பையோ செயலையோ வாழ்க்கையின் ஏதாவது ஒரு அமையலாம். சிறுகதைக்குரிய கருப்பொருளோ குறிப்பிட்டஒருகூற்றையோ மையமாகக் கொண்டு அமையும்.
2.வெவ்வேறு கதை மாந்தரின் பண்புகளுக்கும் செயல்களுக்கும் இடையே எழும் பல சிக்கல்களையும் விரித்துச் சென்று அச்சிக்கல்கள் படிப்படியாய் நீங்கி ஒரு முடிவு ஏற்படுவதனை நாவல் காட்டும். சிறுகதையோ, ஏதாவது ஒரு சூழ்நிலை அல்லது சிக்கலைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து சென்று, நாம் எதிர்பாரா நிலையில் ஓர் அதிர்ச்சியைத் தந்து கூடத் திடீரென்று முடியலாம்.
3.புதினம், நிகழ்ச்சியின் பெருக்காலும் கதை மாந்தரின் பண்பாலும் வாசகர்க்குப் பல்வகையான சிந்தனையையும் உணர்வையும் உண்டாக்க வல்லது; சிறு கதையோ, ஏதாவது ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சுற்றி அல்லது பண்பைச் சுற்றி வாசகரின் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தி அது சம்பந்தமாக ஓர் ஆழமான சிந்தனையை அல்லது உணர்வை எழுப்புவதாகும்.
4.புதினம் எழுப்பும் கலையார்வம் நீண்டநேரம் நீடித்து நிற்க வல்லது; அளவிலும் பெரியது. சிறுகதை எழுப்பும் கலையார்வமோ விரைந்து பெருகி விரைந்து நிறைவேறும் இயல்புடையது.
5.புதினத்தில், கதை மாந்தரின் பண்புகள், மன நிலைகள் படிப்படியாக வளர்ந்து செல்லுவதைக் காட்டுவதற்கு இடமுண்டு; சிறுகதையில் அவ்வாய்ப்பு இல்லை.
6.புதினம் வாழ்க்கையை அதன் பல்வேறு வடிவத்தோடும் சிக்கலோடும் படம்பிடித்துக் காட்ட வல்லது. சிறுகதையோ அவ்வகையில் அந்த அளவுக்கு வாய்ப்பு அற்றதாகும். காரணம், சிறுகதைக்குரிய களம் சிறியதாகும்.
7. நடைமுறை வாழ்வில் நாம் மனிதர் பலரையும் சந்திப்பது போலவே புதினத்திலும் சந்திக்க முடிகின்றது. அம்மனிதர் பல்வேறு உறவு முறைகளோடும் விருப்பு வெறுப்புகளோடும் அவ்வச்சூழ்நிலைக்கேற்ப ஒருவரோடு ஒருவர் பழகுகின்றனர்; பேசுகின்றனர்; செயற்படுகின்றனர். எனவே, இவர்களைப் பற்றி விரிவாக ஆழமாக நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இறுதியில் இவர்களின் குறை நிறைகளைப்பற்றிச் சரியாகக் கவனிக்க முடிகின்றது. ஆயின் சிறு கதையில் இடம் பெறும் பாத்திரங்களைச் சிறிது நேரமே நம்மாற் காணமுடிகிறது. அவர்கள். நடமாடும் உலகமும் சூழ்நிலைகளும் சிறிது நேரமே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதனால் யாரோ ஒருவரின் குறிப்பிட்ட பண்பு அல்லது செயலைப் பற்றி ஆழமான, ஆற்றல் மிக்க ஓர் உணர்வு நம் உள்ளத்தில் எழுகின்றது என்பது உண்மையே. ஆயினும் புதினத்தில் நடமாடும் மாந்தரைப் பற்றி நமக்குத் தோன்றும் ஒரு பெரிய விரிவான தெளிவான உணர்வோடு அதனை ஒப்பிட முடியாது.
8. மொத்தத்தில், புதினத்தின் அமைப்பு வேறு; சிறுகதையின் அமைப்புவேறு.
            பல பறவைகளும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது புதினம். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல்வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஒரு பெரிய ஓவியம் போன்றது புதினம்; ஒன்றிரண்டு வண்ணங்களையே கொண்டு வரைந்த ஒரு சிறிய ஓவியம் போன்றது சிறுகதை,

       ஆடற்கலையில் வல்ல அழகு நங்கையர் பலர் கலையரங்கின் மீது கண்ணன் கதை முழுவதையும் நடித்துக் காட்டுவது போன்றதும் புதினம். கண்ணன் இன்னிசைக் குழல் எடுத்து ஊத எழும் இன்ப கீதத்தில் தன்னை மறந்து மயங்கித் தவிக்கும் ஏந்திழை ஒருத்தியின் நிலையை அரங்கின் மீது ஒருவர் நடித்துக் காட்டுவது போன்றதுசிறுகதை. பலவகை மரமும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது புதினம்; தனி மரம் போன்றது சிறுகதை.

சிறுகதைக்குரியபொருள்

       இன்ன பொருளைத்தான் சிறு கதையில் அமைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. மனிதனின் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பிக் கலைவிருந்து அளிக்க வல்ல எதுவும் சிறு கதைப் பொருளாக அமையலாம். ஆயின், இப் பொருள் அனைத்தும் தோன்றுவதற்குரிய நிலைக்களங்கள் மனித வாழ்க்கையும் விலங்கு பறவை முதலானவற்றின் வாழ்க்கையும் மரஞ்செடி கொடி முதலானவற்றின் இயற்கை வாழ்கையுமாகும். இந்நிலைக் களங்களில் எங்கோ என்றோ யாரிடமோ அல்லது எதனிடத்தோ அல்லது எச் சூழலிலோ, ஏதோ ஒரு கூற்றைக் கூர்ந்து பார்க்கும் எழுத்தாளன் ஒருவனிடமிருந்து சிறு கதை அரும்புகின்றது

      பரபரப்பு ஊட்டவல்ல ஒரு சிறிய நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை, உள்ளங் கவரும் ஓர் அரிய காட்சி, ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் கோவை, ஒரு பாத்திரத்தின் ஏதாவது ஒரு கூறு. ஏதாவது ஒரு சிறிய வாழ்வின் ஏதாவது ஒரு சிறிய கூறு, அறம் பற்றி எழும் ஒரு சிக்கல் அமையலாம். இவை போலப் பிற இருப்பின் அவையும் சிறுகதைக்குரிய பொருளாகும்*


சிறுகதைக்குரிய கால எல்லை

        ஒரு சிறு கதையானது. அரை மணி நேர முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக் கூடியதாய் அமைய வேண்டும் என்கின்றார் உலகப் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் எட்கர் ஆலன்போ ‘ சிறு கதையைப் படித்துப் பார்க்கலாம் என்று அமருகின்றோம். அப்படி அமர்ந்தவுடன் முடியும் வரை படித்து முடித்துவிட்டுப் பின் எழக்கூடிய வண்ணம் சிறுகதை அமைய வேண்டும். சிறு கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிக்குரிய கால எல்லை இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் நடந்துமுடியும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். சில ஆண்டுகளாகிய பெரிய கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். கதையாசிரியர் தம் சிறுகதைக் கட்டுக்கோப்புக் கலைத்திறத்தால், சிறு கதையில் இடம் பெறும் கால எல்லை, அக்கதையால் விளையக் கூடிய மொத்தப் பயனுக்குச் சிறிதும் இடர்ப்பாடு விளைவிக்கா வண்ணம் கதையை நடத்திச் செல்ல முடியும்.


சிறுகதைக்குரிய ஒருமைப்பாடு

     கதை அமைப்பின் தலையாய இயல்பு ‘ஒருமைப்பாடு’ ஆகும். ஒரு சிறுகதையின் ஒவ்வொரு பகுதியும் பொருத்தமாக அமைய வேண்டும். அக் கதையால் விளையும் உணர்ச்சி விளைவும் ஒருமுகப்பட்டதாக இருத்தல் வேண்டும். கதையின் ஒவ்வொரு பகுதியும் வளர்ந்து செல்லும் போது அப்பகுதியை அமைத்த ஆசிரியரின் உள்நோக்கம் அவரின் முழு நோக்கத்தை நோக்கி இயங்குவதாக அமைய வேண்டும். கதை மாந்தரின் செயல் முறைகள் முற்றுப் பெறும்போது இயற்கையான போக்கில் முற்றுப் பெறுவது போல நாம் உணர வேண்டும். அவ்வாறு முற்றுப் பெறுமாயின் கதையை ஆசிரியர், அமைத்தநோக்கும் நிறைவேறுகின்றது எனலாம். சிறு கதை என்னுங் இயற்கைச் சாயலோடு ஆசிரியர் அவிழ்க்கவும் வேண்டும்.சிறு கயிற்றில் முதலில் போட்ட முடிச்சை எளிமையாக, இனிமையாக இருத்தல் போலவே, அக்கதை நிகழ்ச்சிகளின் போக்கும் கதையை ஆசிரியர் படைத்ததின் நோக்கம் ஒருமுகப்பட்டதாய் ஒருமுகப்பட்டதாய், நம் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும் சிதற அடிக்காமல், ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும்.

       சிறுகதை ஏதாவது ஒரு மையக் கருத்தை மட்டுமே விளக்குவதாய் இருத்தல் வேண்டும். அந்த ஒன்றும் காரண காரிய முறைப்படி வளர்ந்து முற்றுப் பெறுதல் வேண்டும். முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். ஒரு சிறு கதை மிக்க சுவையுடையதாக அமைய வேண்டுமாயின் இவ்வொருமுகவியல்பு மிக மிக இன்றியமையாததாகும். கதையின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் குறிப்பிட்ட ஓர் உணர்வே மிகுதியாக ஆட்சி செய்ய வேண்டும். கதையின் பின்னணி, கதை நிகழ்ச்சி முதலியன அனைத்தும் அந்த ஓர் உணர்வின் போக்கிலேயே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். இதனை ‘உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு’ (Unity of Impression) எனலாம்

சிறுகதையின் அமைப்பு

           சிறு கதைக்குரிய பொருளானது குறிப்பிட்ட எல்லைக்குள் வேண்டுமளவுக்கு ஆற்றலோடு வளர்க்கப்படும் ஒன்றாக அமைய வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? சிறுகதையைப் படித்தவர் மன நிறைவு பெற்றதையும் பெறாததையும் கொண்டு அறியலாம். சிறு கதையின் பொருளும்

            நோக்கமும் எவையாக இருப்பினும் அதன் இயல்பு மட்டும் ஒரு வகையில் உறுதியாக அமைய வேண்டும். அஃதாவது இந்தக் ததையை வளர்த்திருந்தாலும் எந்த விதப்பயனும் இருக்கப் போவதில்லை என்று வாசகர் உறுதியாக எண்ணும் அளவுக்குச் சிறு கதை முற்றுப் பெற்றிருத்தல் வேண்டும். ‘இதைப் பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்லாமற் போனதால் கதையின் சுவை குறைந்து விட்டது” என்று பயில்வோர் நினைக்குமாறு சிறுகதை அமையக்கூடாது. சிறுகதையின் பொருளும் வளர்ச்சியும் சுருக்கமாக. ஆனால், நிறைவு அளிக்கும் வகையில் அமைய வேண்டும். கதையின் பல பகுதிகளும்ஒன்றோடொன்றுபொருத்தமுற இயைபு பட்டுச் செல்லுதல் வேண்டும். அப்பகுதிகளுள் ஒவ்வொன்றும் கதையின் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கு இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். தேவைக்கு அதிகம் என்று எண்ண முடியாதபடிஇருத்தல்வேண்டும்.

சிறுகதையில் உரையாடலும் வருணனையும்

       சிறுகதையில் உரையாடல் நீளமாக இருத்தல் கூடாது; செறிவும் தெளிவும் பெற்று நெகிழ்ச்சியின்றி அமைய வேண்டும். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் கதையின் மையக் கருத்திற்கும் நோக்கத்திற்கும் இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். விறு விறுப்பான கதை வளர்ச்சியைத் தடை செய்யும்படியாகவோ, வாசகருக்குச் சலிப்பூட்டும் படியாகவோ, எந்த ஒரு பகுதியும் உரையாடலில் இடம் பெற்று விடலாகாது; மின்னலின் வீச்சைப் போலக் கதையின் உயிர்ப் பொருளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அழகான சில சொற்கள் அமைவது சிறப்புடையது. வாசகர்களின் சுவையுணர்வைக் கெடுக்கக்கூடிய, அல்லது, அவர்களின் கவனத்தைக் கதையின் போக்கிலிருந்து வேறுதிசைக்குத் திருப்பக்கூடிய எந்த ஒரு சொல்லும் உரையாடலில் இடம் பெறலாகாது.

            சிறுகதையில் வருணனை அடிக்கடி இடம் பெறுதலாகாது, ஒன்றிரண்டு இடங்களில் இடம் பெறலாம். அந்த வருணனையும் கதையால் உருவாக இருக்கும் முழுப் பயனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதாய் இருக்க வேண்டும். கதை மாந்தரின் பண்பினை அல்லது செயலினை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் முறையிலோ அல்லது அப்பண்பையும் செயலையும் குறித்துக் கட்டியங் கூறும் முறையிலோ அமையலாம். சிறு கதைக்குச் செறிவும் ஒருமுகப் போக்கும் இன்றியமையாதவையாதலின், வருணனையும் இவற்றைச்  சிறிதும் கெடுக்கா வண்ணம் இடம்பெறுதல் வேண்டும்.

            வருணனை, அளவாற் பெருகிவிடாது, சிறியதாய் இருத்தல் வேண்டும். கதையில் நடமாடும் மாந்தரை அவரவர்க்கே உரிய இடம், சூழல் முதலியவற்றோடு தொடர்புபடுத்திக் காட்டும் முறையிலும் வருணனை அமையலாம். எப்படிப் பார்க்கினும் கதையாசிரியர் தாம் திட்டமிட்டு எடுத்துக் கொண்ட கருத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் முறையிலேயே வருணனையும்அமையவேண்டும்.

சிறுகதைக்குரிய குறிக்கோள்


            சிறு கதைக்குக் குறிக்கோள் உண்டா? ஆம், உண்டு. என்ன குறிக்கோள்? சிறிது நேரத்திற்கேனும் வாசகரின் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து அவர்க்குக் கலைச் சுவையை வழங்குவது தான். இயற்கை வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் அல்லது குறிக்கோள் எனலாம். அறப் பண்பு, நீதிபோதனை, தத்துவ விளக்கம், சிந்தனைப் புரட்சி, சமுதாயச் சீர்திருத்தம் முதலியனவும் சிறு கதைக்குரிய குறிக்கோளாக அமையலாம். ஆயின் அவையும் சிறு கதைக் கலைத்திறன்களோடு வெளிப்பட

வேண்டும்.

ஸ்டீவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகள்

        சிறு கதையை எழுதுவதற்குரிய வழிகளை மூன்றாகச் சொல்லுவார் ஸ்டீவன்சன் கருப்பொருளை முதலில் நினைத்து வைத்துக் கொண்டு அக்கருப் (Stevenson). கதைக்குரிய சிறுகதைக்குள் சேர்க்கலாம். இரண்டாவது வழி; ஒரு குறிப்பிட்ட குணச் சித்திரத்தை மனத்திற் கொண்டு அதை விளக்கிக் காட்டுவதற்குரிய நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் அமைக்கலாம். மூன்றாவது வழி ஆசிரியர் தம் உள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டே சிறு கதையை அமைக்கலாம்; அச் சூழலும் உணர்வும் கதையில் நன்கு வெளிப்படுவதற்கு ஏற்ற வண்ணம் மனிதரையும் செயல்களையும் படைத்துக் கொள்ளலாம் இவ்வகையில் நோக்கும்போது சிறு கதையை மூன்றாகப் பிரிக்கலாம்.

            முதல் வகையைக் கருவால் வந்த கதை (The Story of plot)என்றும், இரண்டாம் வகையைக் குணச் சித்திரத்தால் வந்த கதை (The Story of Character) என்றும் மூன்றாம் வகையை உணர்ச்சிப் பதிவால் வந்த கதை (The Story of Impression) என்றும்சொல்லலாம் என்பர்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?

நாவல்-என்றால்-என்ன

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?


            பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வளரத் தொடங்கி இந்நூற்றாண்டில் மிகப் பரவலான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்திருப்பது நாவலாகும். முறையாகக் கற்று அறிவு பெற்றோரும் சாதாரண அறிவு நாவலுக்கும் சிறுகதைக்குமே உண்டு. கலைத் துறையில் சிறிது படைத்தோரும் இலட்சக்கணக்கில் எடுத்துப் படிக்கும் சிறப்பானது நேரம் பொழுது போக்க விரும்புவோர்க்குச் சிறுகதையும் நீண்ட நேரம் பொழுதுபோக்க பயன்படுகின்றன. போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாகி, வேகமாக இயங்கி வரும் இன்றைய மக்கள், கவிதை வடிவத்தில் அமைந்த காவியத்தைப் படிப்பதற்குரிய நேரமும் பொறுமையும் போன்று செயற்படுவதாய் உரைநடையில் உள்ள நாவலை ஒன்றிப் பார்க்க வல்ல உணர்வும் இல்லாத காரணத்தால், காவியம் விரைந்து எடுத்து விரும்பிப் படித்து முடிக்கின்றனர்; கதை, கதை மாந்தரின் உணர்ச்சிப் போராட்டங்கள், செயல் முறைகள் முதலியன நிறைந்த காவியத்தால் அடையும் பயனை நாவலால் அடைந்துவிடுகின்றனர். நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது? 

            ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும்போதோ, பேசத் துணைக்கு யாரும் இல்லாத போதோ, வேலையின்றிச் சும்மா இருக்கும் நிலையில் தம் உள்ளத்தைக் கலை உலகில் செலுத்த விரும்பும் போதோ, நாவல் இன்றைய மக்களுக்கு எளிதில் கைகொடுத்து உதவுகின்றது. இன்று பொதுவாக, அதிகமாக விற்பனையாகும் இலக்கிய வகைகளுள் சிறு கதையும் நாவலும் அடங்கும் எனலாம். பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றோரும், நாவல்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆராய்வதிலும் ஆழமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டிலும் அமெரிக்க நாட்டிலும் நம் இந்திய  நாட்டிலும் நாவல் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் நாவல் பொது மக்களிடையே ஆற்றல் மிகுந்த ஒரு கலைக் கருவியாகப் பயன்பட்டுள்ளது. ஆங்கில துறையானது இங்கிலாந்து நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப வேகமாக வளர்ந்தது. அந்நாட்டு மக்களும் அதனை விரும்பிப் போற்றினர். நாள்தோறும் இயங்கும் மனித வாழ்வின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டும் சிறப்பு இதற்கு உண்டு என்று கருதப்பட்டது.

            இன்றைய நம் தமிழகத்திலும் நாவல் துறையானது. நன்கு வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வின் பலவகைக் கோலங்களையும் சமுதாயத்தின் பல்வகைச் சித்திரங்களையும் உளவியல் முறையில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டங்களையும் அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளின் மாற்றத்தையும் பிறவற்றையும் நமக்குக் காட்டும் வண்ணம் இன்றைய தமிழ் நாவல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில் நாவலுக்குரிய ஒரு பொற்காலம் தோன்றுவதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இன்று எழும் தமிழ் நாவல்கள் அனைத்துமே தரம் உடையன என்று ஏற்றுக் கொள்வதற்குத் தடை ஏற்படினும் பெரும்பாலானவை நல்ல நாவல்களாக விளங்குகின்றன எனலாம். இறவாத பேரிலக்கியங்களைக் கற்று மகிழும் ஒரு சாரார் போலவே நாவல்களைப் படித்து மகிழும் ஒரு சாராரும் இன்று ஒரு கட்சி போல வளர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் ஆட்சி செய்கின்றது.


நாவல் என்றால் என்ன?

          சிறு கதையிலிருந்து வேறுபட்டு. பல நிகழ்ச்சிகளையும், செயல்களையும் தன்னகத்தே கொண்டு கதை மாந்தரின் பண்புகளுக்கு ஏற்ப ஒரு கதையை வளர்த்துச் சென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் உரைநடை இலக்கிய வகையே நாவலாகும். இவ்வாறு நாவலை ஓரளவு வரையறை செய்ய முடிகின்றதே அன்றி முழுமையாகவும் நாவலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ள ஒரு வரையறை தருவது கடினம். சிறு கதையிலும், கதையும், கதை மாந்தரும் உண்டு என்றாலும் மாந்தர் பலரின் பண்பையும் தனி மனித சமுதாய வாழ்வின் நிகழ்ச்சிகளையும் நாவலில் அமைத்துக் காட்டுகின்ற அளவுக்குச் சிறு கதையில் அமைத்துக்காட்ட இயலாது. சிறுகதை அளவால் சிறியது. மிகப் பெரிய சிறுகதை உண்டு என்றாலும் நாவலைப் போல ஒரு பெரிய களத்தைக் கொண்டு இயங்குவது சிறு கதைக்கு இயலாதது.

            சிறுகதையானது, நாவலை நோக்க, கதை மாந்தர் மிகச் சிலரையே உடையது; நாவல் பலரை உடையது. சிறுகதை குறுகிய காலத்தில் படித்து முடிக்கத்தக்கது; நாவல் படிப்பதற்குச் சிறுகதையை விட அதிக நேரம் வேண்டும். சிறுகதையில் சிக்கல் குறைவு; நாவலில் சிக்கல் மிகுதி. சிறுகதை நம் கவனத்தைச் சிறிய எல்லையிலேயே நிறுத்திச் சுவை பயந்து முடிவது; நாவலோ நம் கவனத்தை ஒரு பரந்த எல்லைக்குள் வளர்த்துச் சென்று பல்வகை உணர்வுக்கும் இடனாகி முடிவது. சிறுகதை ஒரு கல் என்றால், நாவலை ஒரு மலை என்று சொல்லலாம். சிறுகதை ஒரு வீணையின் ஒரு நரம்பில் எழும் நாதம் போன்றது; நாவல் பண் கலந்த ஓர் இசைப் பாட்டுப் போன்றது. சிறுகதை சிறிய ஓவியம் போன்றது. நாவல் ஒரு பெரிய ஓவியம் போன்றது. சிறுகதை ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு அல்லது இரண்டு மூன்று ஊருக்கு அப்பால் உள்ள ஓர் ஊருக்குப் போவது போன்றது. நாவல் முந்நூறு, நானூறு மைல்கள் பயணம் செய்வது போன்றது. சிறு கதைக்கும் நாவலுக்கும் பொதுவான சில கூறுகள் உண்டு. எனினும் அமைப்பிலும் கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் முறையிலும் இரண்டுக்குமிடையே வேறுபாடு உண்டு. மா. இராமலிங்கம் என்பார், சிறுகதைக்கும் நாவலுக்குமிடையே யுள்ள வேறுபாட்டைக் குறித்து, சிறுகதையைப் படிப்பது வீட்டுக்குள் அமர்ந்த வண்ணம் ஜன்னல் வழியே வெளியுலகை எட்டிப் பார்ப்பது போன்றது. நாவலைப் படிக்கும் அனுபவம் . வேறானது. ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவைச் சுற்றிக் காண்பது போல, நாவலில் பல்வேறு எனக் குறிப்பிடுவது அனுபவங்களையும் உணர்கிறோம்,” ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

        நாவலில் பல சிறுகதைகள் இருக்கலாம், இதனால் சிறுகதை பல சேர்ந்தால் நாவலாகும் என எண்ணலாகாது. நாவல் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. ஒரு பெரிய அனுபவ ஊற்றாக அல்லது வாழ்க்கையின் வெளிப்பாடாகக் கலைஞரால் படைக்கப்படுவது; சுருங்கக் கூறின், நாவல் ஒரு பெரிய கதையையும், கதை மாந்தர் பலரையும் கொண்டது; தனி மனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்குக் கதையே நாவலுக்குக் களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும் நடனக் கலைக்கு அரங்கு போலவும் நாவலுக்குக் களமாக அமைவது கதையேயாகும்.


நாவலுக்குரிய கதையும் கதைக்கோப்பும் (Plot)

        பொதுவாக நோக்கும்போது நாவல் என்பது கதையே. இக்கதை சுவையாகவும் நாவல் படிப்போரின் உணர்வுக்கு வளமான விருந்தாகவும் அமையவேண்டும். கதையின் தொடக்கமும் நடுவும் வாசகரின் ஆர்வத்தைக் கதையின் முடிவு. வரை நீட்டிக்க வல்லதாய் இருத்தல் வேண்டும். நாவலின் கதைப் பகுதி ஒவ்வொன்றும் அடுத்துவரும் கதைப் பகுதியைப் படிப்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நாவலின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து மற்றொரு நிகழ்ச்சி வளர்ந்து செல்லும்போது கதைக்குரிய இன்றியமையா இயல்புகள் இவை. இயைந்து செல்வதாகவும் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கானது கதை என்றால் அந்நிகழ்ச்சிகள் காரண காரியப்படி நிகழ்வதைக் கதைக்கோப்பு (plot) எனலாம்.

        ஈ.எம். ஃபாஸ்ட்டர் என்பார் கதைக்கும் கதைக் கோப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். கதை என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அது அது நடந்த கால எல்லைக்கு ஏற்ப விளக்குவதாகும். கதைக்கோப்பு என்பதும் நிகழ்ச்சியைக் குறிப்பதே! ஆயின் காரண காரியப்படி நிகழ்ச்சி அமைவது முக்கியமாகும். ‘அரசன் இறந்தான் பின் அரசியும்  இறந்தாள்-இது ஒரு கதை. “அரசன் இறந்தான். அவ்வேதனை தாங்க முடியாமல் அரசியும் இறந்தாள்.”—இது ஒரு கதைக் கோப்பு. இதிலும் கால எல்லை காட்டப்படுகின்றது. அதே நேரத்தில் காரண காரியம் பற்றிய உணர்வு மேலோங்கி நிற்கிறது ‘ கதையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியைப் படிக்கும்போதும் அதற்குப் பிறகு என்ன நடந்தது? என்ன நடந்தது? என்ற அறிய ஓர் ஆவல் பிறக்கின்றது. இந்த ஆவலைத் தீர்த்துச் செல்லும் முறையில் அமைவதே கதையாகும். ஆயின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏன் நடந்தது?. ஏன் நடந்தது? என்று அறிய விரும்பும் ஆவலை நிறைவேற்றும் வண்ணம் அமைவது கதைக் கோப்பாகும். வேறுவகையில் கூறின், நிகழ்ச்சியின் வளர்ச்சி கதையாகவும், அவ்வளர்ச்சிக்குரிய காரண காரிய முறைமை கதைக் கோப்பாகவும் அமைகின்றது. ஒரு நாவல் ஆசிரியர் கதையை அமைப்பது எளியது. ஆயின் கதைக் கோப்பை வெற்றிகரமாக அமைப்பது அரியது. நாவலாசிரியர் முன்னதை அமைப்பதற்கு ஓரளவு அறிவு பெற்றிருந்தால் போதும். பின்னதை அமைப்பதற்கு நல்ல அறிவுக் கூர்மையும் நினைவாற்றலும் வேண்டும்.


கதைக்குரிய பொருள்

       நாவலுக்குரிய கதைப் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. நாவலாசிரியர் தம் உள்ளம் விரும்பிய எதை வேண்டுமாயினும் கதைக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, சிக்கல் நிறைந்த ஒருவரின் வாழ்க்கைப் பகுதி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், ஒரு நாட்டில் நீண்ட காலம் வழங்கி வந்த புராணச் செய்தி, அன்றாடப் பொது வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் முதலியன நாவலுக்குரிய கதைப் பொருளாக அமையலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஓரளவு தகுதி படைத்த பல்வகை இலக்கியங்களின் கருப்பொருள்களை ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தார். முப்பத்தாறு வகை கதைக் கோப்பே உண்டு. என்று கண்டுபிடித்தார்.

         டேவிட் டெய்ச்சஸ் என்பவர், நாவலைக் குறித்துப் பேசும்போது ‘இன்றைய நாவலாசிரியருக்கு இரண்டு வகையான முக்கிய சிக்கல்கள் உண்டு’ என்கின்றார். ஒன்று, வாழ்க்கை நடப்பின் போக்கைப் பற்றியது. மற்றொன்று, உளவியல் பற்றியது. முன்னையது அனுபவத்தின் தரத்தோடு தொடர்புடையது; அனுபவத்தில் சிறப்பாக உள்ளதைச் சித்திரித்துக் காட்டுவது. பின்னையதாகிய உளவியல் சிக்கல் மனிதனின் உள்ளப் பாங்கினைப் பற்றியது. காலத்தோடு அதற்குரிய தொடர்புபற்றியது. இன்றைய நாவலாசிரியர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயல்பைத் தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிட அவ்வியல்பினைத் தோற்று வித்தற்குக் காரணமாக அமைந்த பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் சித்தரித்துக் எவ்வாறாயினும் இன்றைய வாழ்க்கையின் போக்கு, பொருள்களையும் இன்றைய நாவலாசிரியர் தம் கதைப் உளவியல் ஆகிய இரண்டைச் சுற்றியும் அமையும் அத்தனைப் பொருளாகக் கொள்ள முடியும்.

 கதை மாந்தர்கள்

            ஒரு நாவலில் பல நிகழ்ச்சிகளும் பல செயல்களும் நடந்த செயலோடும் தொடர்புடையவர் யார் என்பது முக்கியமாகும். வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியோடும், ஒவ்வொரு குறிப்பிட்ட ஒரு செயல் அல்லது, நிகழ்ச்சி வளர்ந்து செல்லுவதற்குக் கதை மாந்தர் எவ்வெவ்வாறு துணை புரிகின்றனர் என்பதும் நாவலில் நன்கு விளங்க வேண்டும். இக்கதை மாந்தர் உண்மை உலகில் நடமாடுவது போலவே நாவலிலும் நடந்து கொள்கின்றனர். உண்மை உலகில் நாவலாசிரியர் தாம் கண்ட மனிதர்களின் இயல்புகளையும் பண்புகளையும் தாம் எழுதப் புகுந்த நாவலின் அமைப்பிற்கும் போக்கிற்கும் ஏற்றபடி ஓரளவு மாற்றியும் வளர்த்தும் படைத்துக் காட்டுகின்றார்; நாவலை எடுத்துப் படிப்போர் உண்மை உலக மனிதரைக் காண்பது போலவே நாவலில வரும் கதைமாந்தரையும் காணச் செய்கின்றார்.

            நாவலுக்குக் கதை மாந்தராக வருவோர் முழுக்க முழுக்க உயர்ந்த ஒரு பண்புக்கு இடமாக அமையலாம்; அல்லது குறைவும், நிறைவுமாக அமைந்த மனித இயல்புகளோடு விளங்கலாம். நாவலாசிரியர், கதையில் எத்தகைய பண்புடைய மனிதரைக் காட்ட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அந்தக் குறிப்பிட்ட பண்பு நிலைக்கு ஏற்பக் கதை மாந்தரின் இயல்புகளைச் சித்திரித்துக் காட்டுகின்றார். நாவலாசிரியர் தம் நாவலில் தாம் விரும்பிய . அளவுக்குக் கதை மாந்தரைப் படைத்துக் காட்டலாம். ஆயின் கதை மாந்தர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மையோடும் செயற கதை மாந்தரின் புறத்தோற்றங்களை மட்டும் அன்றி அவர்களின் முறையோடும் இயங்குவது இன்றியமையாதது. நாவலாசிரியர் குறிப்பிட்ட கதை மாந்தர் தொடக்கம் முதல் முடிவு வரை கதைக்கோப்பை வளர்த்தலுக்குரிய குறிப்பிட்ட சில பண்புகளோடு, அக இயல்புகளையும் வெளிப்படுத்த முயல்வது சிறப்புடையது இயல்புகளோடு இயங்குவது அவசியம் ஆகும்.

            ஓர் உண்மை உலகில் நடமாடும் மனிதர்களை நாவலில் நடமாட விடும்போது அவர்களின் பண்புச் சித்திரங்களில் தெளிந்த அமைப்பும் மெருகும் இருத்தல் வேண்டும். நாவலில் வரும் கதை மாந்தரின் செயல்கள் அவர்களின் பண்புகளுக்கேற்ற செயல்களே நம்புமாறு செய்வது நாவலாசிரியரின் என்று நாம் முக்கியபணியாகும். சாமர் செட்மாம் என்பவர், நாவலாசிரியர் கதை மாந்தரைப் படைத்துக் காட்டும் முறையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். எழுத்தாளர்கள் எப்பொழுதுமே மூலத்தைப் பிரதி செய்வதில்லை. தான் ஒன்றைக் காண்கிறபோது, தன்னுடைய கவனத்தைக் கவர்ந்த சிலவற்றையும், கற்பனையில் மின்னலிட்ட சிலவற்றையும் ஒன்றாகச் சேர்த்தே பாத்திரத்தை உருவாக்குகிறார்கள். தன்னுடைய படைப்பு முழுக்க முழுக்க மூலத்தைப் போலவே இருக்க வேண்டும் என்று அதிகமாகக் கவலைப்படுவதில்லை.’

            நாவலாசிரியர் உண்மை உலகில் தாம் காணும் எவரேனும் ஒருவரின் பண்புகளை மட்டுமே நாவலில் வரும் மனிதர் ஒருவரிடம் அமைக்க வேண்டும் என்பதில்லை. தாம் பார்த்த மனிதர் பலரின் பண்புகள் பலவும் கூட்டிக் கதை மாந்தர் ஒருவரை உருவாக்கலாம். வேறுவகையில் கூறின், குறிப்பிட்ட கதை  மாந்தரின் முன் மாதிரியாக ஒருவர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பலராகக் கூட இருக்கலாம். நாவலாசிரியர் தம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைக் காட்டுவதும் உண்டு. இம்முறையில் அமையும் கதை மாந்தர், கொண்டு அவற்றின் பிரதிபலிப்பாகக் கதை மாந்தரைப் படைத்துக் 6 நாவல் படிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுத் திகழ்வர். நாவலாசிரியர் எப்படிப்பட்ட கதைப் பாத்திரத்தைப் கலந்து தானே அதுவாய், அதுவே தானாய் அமைந்து முழு ஈடுபாட்டுடன் படைக்க முயலவேண்டும். நாவலில் வரும் படைத்துக் காட்டினும் அப்பாத்திரத்தின் நிலையோடு இரண்டறக் பாத்திரங்கள் குறித்து, “எனது நாவல்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவை ஓரிடத்திலே தலை காட்டிவிட்டு மறைவதாயினும் சரி, அல்லது கதையின் அடிமுடிவரையிலும் நடமாடுபவை சரி அவையெல்லாம்—பரிவாரம் என்னுடனேயேயிருக்கும். நான் எங்குச் சென்றாலும் என் கூடவே அவைகளும் வரும்.’ என்று ஒருவர் கூறுவது ஈண்டு நம் சிந்தனைக்குரியது.

            நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களும் சில பொதுவான இயல்பினைக் கொண்டிருப்பினும் மொத்தத்தில் ஒவ்வொன்றும் ஏனைய பாத்திரங்களினின்றும் நன்கு வேறுபட்டுத் தனித்து நின்று விளங்கவேண்டும். ஒருவரைப் பற்றிய பண்பு ஓவியம் ஏனைய கதை மாந்தரின் பண்பு ஓவியங்களிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் நன்கு வேறுபட்டிருத்தல் வேண்டும். இல்லையேல் கதை மாந்தர் படைப்பால் வரும் சுவை கெட்டுவிடும். கதை மாந்தரை இப்படித்தான் படைத்துக் காட்ட வேண்டும் என்று முடிந்த முடிவாக எதுவும் சொல்ல இயலாது. நாவலாசிரியர் பலராக, அவர்களின் மனநிலையும் நோக்கமும் பல படியாக அமைகின்றன. ஆதலின் அன்னோரால் படைக்கப் பெறும் கதை மாந்தரும் பலபடியாக இருக்கலாம். கதை மாந்தர் உண்மை உலகில் காண்பது போலவே இருப்பினும் நாவலுக்குரிய நோக்கத்தையும் போக்கையும் வளர்த்துச் செல்வதற்குரிய பண்பிலே நன்கு ஊன்றி நின்று அப்பண்பு நாவலின் முடிவு வரைக்கும் சிதையாவாறு விளங்கவேண்டும். இதனை நோக்கும்போது நாவலில் வரும் கதை மாந்தர் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதரைப் போல இருப்பினும் அந்நிலைக்கு ஓரளவு அப்பாற்பட்டும் நிற்கின்றனர்
எனலாம்.

இருவகைக் கதை மாந்தர்

            நாவலில் இடம் பெறும் கதை மாந்தரை ஈ.எம். ஃபாஸ்ட்டர் (Round Characters) இருவகைப்படுத்துகின்றார். ஒருவகையினரை முழுநிலை மாந்தர் என்றும் மற்றொரு வகையினரை ஒரு நிலை மாந்தர் (Flat Characters) என்றும் குறிப்பிடுகின்றார்.

            முழு நிலை மாந்தர் என்போர், நாவலின் தொடக்கம் முதல் முடிவுவரை வருபவராகவும், பண்பு வகையில் முழுப்பரிணாம வளர்ச்சியுடையவராகவும், ஆழமான குறிக்கோள் கொண்டவராகவும் அமைவர்; நாவலைப் படித்து முடிக்கும்போது, அக்கதை மாந்தரைப் பற்றிய முழுமையான ஒரு பண்பு ஓவியம் நமக்குக் கிடைக்கின்றது; எந்தச் சில பண்புகள் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரிடத்து ஆசிரியரால் அமைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தச் சில பண்புகளுக்கேற்பச் செயற்பட்டு நல்ல குணச்சித்திரங்களாக விளங்குவர். திரு.மா. இராமலிங்கம் முழு நிலை மாந்தர் குறித்துக் கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “முப்பரிமாணக் காட்சி தருவார்கள் இவர்கள். உருவத்தாலும், கருத்தாலும் மெல்ல மெல்ல மாறி வளர்ந்து முழு நிலை மாற்றம் கொள்வர். இவர்களது தோற்றம் மட்டும் அல்லாமல் உள்ளம், உணர்ச்சி, தாபம், கொள்கை, கோட்பாடு எல்லாமே முறையான வளர்ச்சியைப் பெற்று மிளிரும், ‘இதய நாதம் கிருஷ்ண பாகவதர் ‘அகல் விளக்கு’ சந்திரன், ‘சித்திரப் பாவை’ ‘ஜீவகீதம்’ நச்சி, ‘வளைக்கரம்’ சுஜாதை முதலான பாத்திரங்களை ஆனந்தி, ‘பொன் விலங்கு’ பாரதி, ‘செம்பருத்தி, சட்டநாதன்,
உதாரணமாகக் காட்டலாம்.

            முழு நிலை மாந்தர் நாவலில் இடம் பெறும்போது, அவர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும், மன வளர்ச்சியையும் பண்பு நலன்கள் மேன்மேலும் வளர்ந்து சென்று நிலையை அவர்கள் அடையும்போது, வாசகர், அவ்வுச்ச நிலை ஓர் உச்ச நிலையை அடைவதையும் காணலாம். இவ்வுச்ச மிக இயல்பாக அமைந்த ஒன்று எனவும், குறிப்பிட்ட கதை மாந்தரைப் பொறுத்த அளவில் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் உணர வைப்பது நாவலாசிரியரின் முக்கிய கடமையாகும். அவ்வாறு உணரவைக்க முடியவில்லை எனில் முழுநிலை மாந்தர் ஒரு நிலை மாந்தராகப் போய்விடுவர். கூற்றுப்படி, ஈ.எம். ஃபாஸ்டர் அடையாளம் முழுநிலை மாந்தர்க்குரிய அம்மாந்தரைப் பற்றிய ஓவியம் அறிவார்ந்த முறையில் படிப்போர்க்கு வியப்பூட்டுவதே ஆகும். வியப்பூட்டவே இல்லையெனில், ஒரு நிலை மாந்தர் என்று அவரைக் கொள்ள வேண்டியதுதான். அறிவார்ந்த முறையில் நம்மைத் தெளிவுறுத்த முடியவில்லையெனில் ஒரு நிலைமாந்தராக இருந்தும் முழுநிலை மாந்தர் போலக் காட்டிக் கொள்வதாக நாம் கொள்ள வேண்டியதுதான். முழுநிலை மாந்தர், நாவலைப் பொறுத்த அளவில் ஒரு முழுமையான வாழ்வை உடையவர் ஆவர்.’

            ஒரு நிலை மாந்தர், மேற்கூறிய முழுமையான மாந்தரினின்றும் வேறுபட்டோர் ஆவர். இவர்கள் நாவலில் ஆழமான பண்பின் பிரதிபலிப்பு ஆகாமல் ஏதேனும் ஒரு வேடிக்கையான இயல்பினைவராய் இடை இடையே
 வந்து போவர். நகைச் சுவையாக ஏதாவது ஒன்றைப் பேசுவது, வேடிக்கையாக ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டுப் போவது. மனிதரிடத்துப் பரவலாக வேரூன்றியிருக்கும் ஒரு தீய இயல்பின் விபரீதமாக ஏதாவது ஒரு கேட்டைச் செய்துவிட்டு நகருவது வடிவமாக வந்து செயல்படுவது போன்ற தன்மைகளை ஒரு நிலை மாந்தரிடத்துக் காணலாம். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கம் கதை மாந்தர் ஒருவரிடத்தே அமைந்து அவர் வரும்போதெல்லாம் அப்பழக்க வழக்கமும் கூடவே வருவதுண்டு. எப்போதோ சில சமயங்களில் இத்தகையோர் நாவலில் தோன்றினும் குறிப்பிட்ட அந்தப் பழக்க வழக்கம் அவருடன் சேர்ந்தே இடம் பெறுவதால் அவரை எண்ணும் போதெல்லாம் எண்ணி அப்பழக்க வழக்கத்தோடு சேர்த்தே நாமும் மகிழுகின்றோம். இவரிடத்தில் அமைந்த சில தனிப்போக்குகள் மட்டும் சுவையாக அமைந்து வாசகரை இன்புறுத்தும். ஈ. எம். ஃபாஸ்ட்டர் என்பார், ஒரு நிலை மாந்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார், “பதினேழாம் நூற்றாண்டில் ஒரு நிலை மாந்தர் வேடிக்கை மனிதர் என அழைக்கப்பட்டனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட வகையாகக் கொள்ளலாம். அல்லது வேடிக்கை மனிதர் அழைக்கலாம். நாவலாசிரியர் இம் மனிதரைப் படைக்கும்பொழுது ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது இயல்போடு மட்டுமே படைத்துக்காட்டுகின்றனர். இவரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மைகள் இருக்கத் தொடங்குமாயின் இவர்கள் முழு நிலை மாந்தர் ஆவதற்குரிய தகுதியைப் பெறத் தொடங்கி விடுவர்.

நாவலாசிரியர் கதை மாந்தரின் பண்புகளையும் செயல்களையும் வெளிப்படுத்துவதற்குப் பின் வரும் முறைகளைக் கையாளலாம்.

1.ஆசிரியர் கதை மாந்தரைச் சார்புடன், அல்லது சார்பின்றிப் பார்க்கின்றவர் என்ற முறையில் கதைப் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டுத் தனித்து நின்று கதை மாந்தரைக் குறித்து விரித்து விளக்கிச் சொல்லலாம்.

2.ஆசிரியர் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று, ஆனால் வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளுரயிருந்து கதை மாந்தரைச் சித்திரிக்கலாம்.

3.கதை மாந்தரில் ஒருவராக ஆசிரியர் தம்மையே
மாற்றிக் கொண்டு, மற்றவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி ஓர் ஆவல் எழும் வண்ணம் கதை மாந்தரைக் காட்ட முயலலாம்.

 4.இவையல்லாத, ஆயின், இவற்றுக்கு இடைப்பட்ட வேறு சில நிலைகளும் உண்டு.

கதை மாந்தரைப் படைப்பதில் சில பொதுவான முறைகள்

            நாவலாசிரியர் தம் நாவலுக்குரிய கதை மாந்தரைப் படைப்பதில் மிக்க சுய உரிமை கொள்ள முடிகின்றது. பாட்டு வடிவிலுள்ள காவியம், நாடகம் ஆகியவற்றில் கதை மாந்தரைப் படைப்பதற்குரிய அத்துணை அருமைப்பாடு நாவலில் படைக்கும் போது இல்லையெனலாம். ஆசிரியர் தாம் நினைத்தபடி சிலரைத் தம் கற்பனை உலகில் படைக்கலாம்; ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பியபடி ஒரு பெயரைத் தரலாம்; ஒவ்வொருவரையும் இன்ன இன்ன பால் வகையைச் சார்ந்தவர் என வரையறுக்கலாம்; ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட தோற்றங்களையும், நடை உடை பாவனைகளையும் வழங்கலாம்; தக்க குறியீடுகளைப் பயன்படுத்திக் கதை மாந்தரைப் பேச வைக்கலாம்; அவர்களுள் சிலரை நிலையான பண்பு உடையோராக நிறுத்தலாம். கதை மாந்தருடைய மனத்தின் அடித் தளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் காணும் கனவுகள், அவர்கள் பெறும் இன்ப துன்பங்கள், கதை மாந்தரிடத்து வெளிப்படையாகச் சொல்ல முடியாதபடி அமைந்திருக்கும் மிக இரகசியமான சில மனோபாவங்கள் இவ்வண்ணம் மனித இயற்கையை வெளிப்படுத்துவது நாவலின் ஆகியவற்றை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்த முயல வேண்டும். தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

            நாவலில் வரும் கதை மாந்தர் உள்ளும் புறமுமாக இன்னின்னவாறு உள்ளனர் என்பது நமக்கு நன்கு விளங்குவதால் வரலாற்றில் வரும் மாந்தரைவிடத் தெளிவாகக் காணப்படுகின்றனர்; நம் நெருங்கிய நண்பர்களையும் விட நெருக்கமாகத் தெரிகின்றனர்; அவர்களைப் பற்றிச் சொல்ல முடிவதெல்லாம் சொல்லப்பட்டு விடுகின்றன; அவர்கள் குறைவுடையவர்களாக இருந்தாலும் சரி, உண்மை இல்லாதவர்களாய் இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றிய இரகசியம் எதுவும் இல்லை. உண்மை உலகில் நம் நண்பர்கள் கூடச் சில இரகசியங்களை வைத்திருப்பார்கள்; வைத்திருத்தல் வேண்டும். காரணம் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளில் இரகசியமும் ஒன்றாகும். நாவலில் இந்த நிலை இல்லை.

உரையாடல்

            நாவலில் இடம் பெறும் உரையாடல்கள், கதை மாந்தரின் இயல்புகளையும் பண்புகளையும் நன்கு வெளிப்படுத்து வனவாகவும் விறு விறுப்பு உடையனவாகவும் இருத்தல் வேண்டும். உரையாடலின் எந்த ஒரு பகுதியும் கதையின் விளக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ துணை செய்வதாய் இருத்தல் வேண்டும். நாவலைப் படிப்போர்க்குச் சலிப்பு ஊட்டக் கூடிய எதுவும் உரையாடலில் இடம் பெறலாகாது. நாடகத்தில் அமைவது போலவே நாவலிலும் உரையாடல் சுவையாக அமைய வேண்டும்; கதை மாந்தரின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாங்கிலும் அமையலாம்;

            கதை மாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அன்னோர் வாழும் செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.

சூழலமைப்பு (Settings)

            நாவல்கள் பலவகைப்படும். நிகழ்ச்சிகள் மிக்க நாவல் (novel of action), பண்பு நலன் விளக்கும் நாவல் (novel of character) விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel) நாடகப் போக்கினதாகிய நாவல் (dramatic novel) என நாவல் நால்வகைப்படுமென்பர் திறனாய்வாளர். 13 இவற்றுள் எந்த வகை நாவலை ஆசிரியர் எழுதுகின்றாரோ அந்த வகைக்கு ஏற்றபடி பொருத்தமாகச் சூழலமைப்பும் அதன் விளக்கமும் இடம்பெற வேண்டும். வரலாற்று நாவலைப் பொறுத்த அளவில் அந்த நாவலால் குறிக்கப்படும் காலச் சூழ்நிலைக்கேற்ற பின்னணியே அமைதல் வேண்டும். அக்கால மக்களின் நடை உடை பழக்க வழக்கங்களையே கதையின் பின்னணியில் நாவலாசிரியர் அமைத்தல் வேண்டும்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

காளமேகப் புலவரின் வரலாறு

காளமேகப்-புலவரின்-வரலாறு

      தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள், ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. ‘சுவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்’ என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். புலவர் வரலாறுகளைப் பற்றியவரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை.

            திருக்குடந்தைப் பகுயிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர். நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் ‘திருமோகூர்’ என்னும் தலம் அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் ‘காளமேகப் பெருமாள்’ என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும், அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.

            இவர்களுடைய கருத்துப்படி ‘காளமேகம்’ என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசு கவிகாள மேகமே – பூசுரா

வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்

மண்தின்ற பாணமென்ற வாய்”

என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய்யங்கார் அவர்கள். இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில் அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.

பரிசாரகர் வரதன்

            வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரிளின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது. கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும் கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் திம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டடிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.


மோகனாங்கியின் தொடர்பு

            திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில். சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார். சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில், இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகளாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி; நடனத்திலும் வல்லவன்,


            அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே அழகியான மோகனாங்கிக்கு. இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது. அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆளால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்துவிட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.


கேலியும் ஊடலும்


            ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள். ‘எம்கொங்கை நின் அன்பர்அல்லார் தோள் சேரற்க’, என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவன் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள். இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் கட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?’ என்ற அவர் களின் ஏளனமான கேள்வி மோகளாங்கியை வாட்டி வதைத்தது. மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாள மீட்டனர்; கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று. தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.

 மூடிய கதவம்

         “வாயிற் கதவைச் சார்த்திவிடு; வரதர் இன்றிரவு வந்தால் உள்ளே நுழைவதற்கு இடம் தரவேண்டாம். சிவன் கோயில் தாசியாகிய நான், வைணவரான அவருடன் திருவரங்கத்துக் கோயில் பரிசாரகரான அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த உறவு அனைத்தும் இன்றோடு முடிந்தது” என்று தன் வேலைக்காரியிடம் கூறிவிட்டுப் படுக்கையில் படுத்தும் உறக்கங் கொள்ளாமல் தான் செய்த சிவ அபசாரச் செயலை நினைத்து வருந்தியவளாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் மோகனாங்கி. வழக்கம்போல் வரதன் வந்தார். “மோகனா” என அன்புடன் அழைத்தவாறே கதவைத் தட்டினார். கதவு மெல்லத் திறந்தது. வேலைக்காரி எதிரே நின்றாள். தன் தலைவியின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லி விளக்கினாள். வரதன் நிலைகலங்கினார். தம்முடைய உறவுக்கு இடையூறாகத் தம் மதக்கொள்கை இருப்பதை நினைத்தார். ஒரு முடிவுடன் விரைந்து சென்றார். அந்த முடிவுக்கு வந்ததுமே அவர் முகம் தானாக மலர்ந்தது. அவரிடம் புதியதொரு மிடுக்கும் எழுந்தது. அவர் நடையிலே என்றுமில்லாத ஒரு விரைவும் காணப்பட்டது.

 அன்பின் ஆற்றல்

            மறுநாள் பொழுது விடிந்ததும் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தாம் சிவசமயத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு விரும்புவதாகக் கூறினார். அவருடைய முடிவைக் கேட்டு அங்கிருந்தோர் அதிசயித்தனர். ஆனாலும், வைணவர் ஒருவர், தாமே வலிய வந்து சிவநெறியை ஏற்க விரும்புவதை மகிழ்வுடன் வரவேற்றனர். அவருக்குச் சிவதீட்சை செய்துவைத்துச் சிவசமயத்திற் சேர்த்துக் கொள்வதற்கான சடங்குகளையும் உடனே செய்து வைத்தனர். வரதன் சைவசமயி ஆயினார். அவரைச் சம்புகேசுவரர் கோயிற் பரிசாரகராகவும் அவர்கள் நியமித்தனர்.  சிவ சின்னங்கள் உடல் முழுவதும் பொலிவுடன் விளங்கத் தம் அன்புடையாளைக் காணச் சென்றார் வரதன். அவள் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அகமும் முகமும் மலர் அவரை வரவேற்று உபசரித்தாள். தளக்காக அவர் சைவராக மாறின செயல், அவள் உள்ளத்தே நிரம்பி நின்றது. அவரை ஆர்வத்துடன் தழுவி, அவரது காதலன்பின் பெருமைக்கு அடிமையாகிப் போற்றி இன்புற்றாள். வரதனும் கவலை தீர்ந்தவராகிக் களிப்பிலே திளைத்திருந்தார்.


தேவி உபாசகன்

            தேவி உபாசகன் ஒருவன் தனக்கு நிறைந்த புலமையைத் தந்தருளுமாறு ஒரு சமயம் தேவியை வேண்டுவானாயினான். திருவாளைக் காவிலே. சம்புகேசுவரரின் தேவியாகக் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் திருமுன்னே, இரவு பகலாகநோன்பு இயற்றியும் வந்தான். அவனுடைய கடுமையான உபாசனை, தேவியின் திருவுளத்தேயும் அவனுக்கு அருளவேண்டும் என்னும் கருணையினை உண்டாக்கிற்று. தேவி, ஒரு சிறு பெண்ணாக வடிவு எடுத்தாள். இரவின் நடுச்சாம வேளையிலும் கண்ணுறங்காதவனாகத் தியானத்திலே இருந்த அந்த உபாசகனின் முன்னே சென்று நின்றாள். அவள் திருவாயிலே தாம்பூலம் நிறைய இருந்தது. அதனை அவள் மென்றுகொண்டும் இருந்தாள். “அன்பளே! நின் வாயைத் திற, இதனை நின் வாயில் உமிழ்கின்றேன். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்” என்றாள் தேவி, அவன் கண்விழித்தான். எதிரே நின்ற சிறுபெண்ணின் வடிவைக் கண்டான். அவள் வாய் நிறையத் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருந்த நிலையையும் கண்டான். ‘தன் தவத்தைக் கலைக்கவந்த பெண்’ என்று தவறாகக் கருதி மயங்கினான். அவளைக்கடிந்து வெருட்டவும் முற்பட்டான். ‘ஏடீ, சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து, என்னைக் கெடுக்கவோ நினைத்தனை. உடனே இங்கிருந்து அகன்று போய்விடு, இன்றேல், நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது’ என்று கூச்சலிட்டான்,

            நிறைவான அறிவு பெறுவதற்கு உரிய நற்காலம் அவனுக்கு வரவில்லை என்பதைத் தேவி அறிந்தாள். தான்கொண்ட அந்த வடிவுடனேயே திரும்புவாளானாள், வழியிலே ஒரு மண்டபத்தே உறங்கியிருந்த வரதனைக் கண்டாள். அவனுடைய நல்லூழ் அவள் நினைவிற்பட்டது. அவன் அருகே சென்று, அவனைத் தட்டி எழுப்பினாள். அருள் பெற்றான் ‘இன்று எனக்குக் குடவரிசைப் பணி உளது. இரவில் வீடு திரும்புவதற்கு நெடுநேரமாகும். தங்கள் பணி முடிந்த பின், அம்மன் கோயில் மண்டபத்தே எனக்காகக் காத்திருங்கள். நானும் அங்கே வருகிறேன். இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குப் போய்விடலாம்’ இப்படிச் சொல்லியிருந்தாள், அன்று மாலை மோகனாங்கி. அவன் விருப்பப்படியே, தம் பணி முடிந்ததும், மண்டபத்தே சென்று வரதர் அவளுடைய வருகையை எதிர் பார்த்தபடி காத்திருந்தார். அங்கேயே படுத்து அயர்ந்து உறங்குபவரும் ஆயினார்.

            மோகனாங்கி தான் சொன்னபடியே மண்டபத்திற்கு வந்தாள். அவர் உறங்கிக் கிடப்பார் என்று நினையாத அவள். அவரைக் காணாமையால், அவர் வீட்டிற்கே போயிருப்பார் எனக் கருதித் தானும் சென்றுவிட்டாள். கோயிலாரும், குடவரிசை முடிந்தபின், கோயிற் பெருங் சுதவை மூடித் தாளிட்டு விட்டனர். அந்த நிலையிலேதான், தேவி அவரிடத்தே சென்றனள். வரதரை எழுப்பி, ‘வாயைத் திற’ என்றதும், அவர் வாய் தானாகவே எவ்வித மறுப்புமின்றித் திறந்து கொண்டது. தேவியும் தன் வாயின் தாம்பூலச்சாற்றை அவர் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். அந்தக் கணமே, வரதராகிய பரிசாரகரின் உள்ளத்தில் பெரியதொரு உத்வேகம் எழுந்தது. கடல் மடை திறந்தாற் போன்று அவர் கவிமழை பொழியலானார்; அவருடைய அந்தப் புதிய சக்தியை நினைந்ததும், அவருக்கே வியப்பாக இருந்தது. தேவியின் கருணைப் பெருக்கை எண்ணி அவளைப் பாமாலையால் போற்றினார்.


காளமேகம் ஆயினார்


            பொழுது விடிந்ததும், பழைய பரிசாரகராக வரதர் இல்லை. முத்தமிழ் தவழ்த்துவரும் செஞ்சொற் கவிஞராக அவர் விளங்கினார். தம் அன்புக் காதலியிடம் சென்று தம்முடைய கவித்திறனைக் காட்டினார். தேவியின் திருவருளையும் விளக்கமாக உரைத்தார். அவளும் அதனைக் கேட்டதும், தேவியின் திருவருளைப் போற்றிப் பேரின்ப வயத்தினளாயினாள். அன்று முதல், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பொழியும் காளமேகமாக ஆயினார் வரதன். தமக்கு அருள்பாலித்த தேவியின் கருணைக்கு நன்றியாகத் ‘திருவானைக்கா உலா’ என்னும் அரியதொரு பிரபந்தத்தைச் சொற்கவையும் பொருட் சுவையும் மிளிரும்படியாக இயற்றினார். உலாவின் இனிமை அறிவுடையோரை ஆட்கொள்ள, அன்று முதல் அனைவரும் கவி காளமேகம் என்றே அழைக்கலாயினர்,”

தல யாத்திரை

            திருவானைக்காவிலே தம் அன்பிற்கு உரியவளான மோகனாங்கியுடன் சில காலம் இன்புற்று இருந்த பின்னர் தமிழகம் முழுவதும் சென்று தம் கவிதை வெள்ளத்தைப் பரப்பிவர வேண்டுமென்னும் பேரவா இவருக்கு எழலாயிற்று. அதனால், அவனிடத்தே பிரியாவிடை பெற்றுத் தமிழ் நாடெங்கணும் காளமேகம் செல்வாராயினார். செல்லும் இடங்களில் எல்லாம் கவிமழை பொழிந்து, தமிழகம் முற்றும் தம்மைப் போற்றப் புகழ்க்கொடியும் நாட்டினார். பின்னர், மீண்டும் திருவானைக்காவிற்கே வந்து மோனாங்கியுடன் இன்பமாக வாழ்ந்திருந்தார்.

திருமலைராயன்

            தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையோரத்தே, நாகைக்குச் சில கல் தொலைவிலே விளங்கும் திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரினைத் தலைநகராகக்கொண்டு, அந் நாளையிலே ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் திருமலைராயன். விஜயநகர மன்னர்கட்கு உட்பட்ட தலைவனாக அவன் அந்தப் பகுதியை ஆண்டுவந்தான் (கி.பி.1455-1468). அவன் தெலுங்கு மொழியிளன். எனினும் அவன்பால் தமிழார்வமும் நிரம்ப இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து அவன் உபசரித்து வந்தான். அவனுடைய தமிழன்பின் சிறப்பையும், வள்ளன்மை யினையும் கேட்டறிந்தார் காளமேகம். தாமும் சென்று அவனைச் காணவும், அவனைப் பாடி பரிசில்பெற்று வரவும் விரும்பினார். அந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதற்கான தக்க நேரத்தையும் எதிர்பார்த்திருந்தார்!.

தண்டிகைப் புலவர்கள்

            மேற்சொன்ன திருமவைராயன் அவையிலே, அறுபத்து நான்கு புலவர்கள் ‘தண்டிகைப் புலவர்கள்’ என்ற சிறப்புடன் திகழ்ந்தனர்.அரசனால் அளிக்கப்பெற்ற விருதான பல்லக்குகளிலே அமர்ந்து அவர்கள் செல்வார்கள். அதனால் தண்டிகைப் புலவர்கள் ஆயினர். அந்தச் சிறப்பும் செழுமையும் அவர்க ளிடத்தே புலமையைக் காட்டினும் செருக்கினையே பெருக்கிக் கொண்டிருந்தன. தம் அரசனின் உதவியை நாடிவரும் பிறபுலவர் சுளை எல்லாம் வஞ்சகமாக மடக்கிக் தலைகவிழச் செய்து, அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

            வறுமையிலே வாடி. அரசனின் உதவியை எதிர்பார்த்தவர்க ளாகவும், புலமையால் அரசனிடத்தே பரிசுபெறுவதை விரும்பியவ ராகவும் வந்த புலவர்களுட் பலர், இந்தத் தண்டிகைக் கூட்டத்தினரின் செயலினால் மனங்குன்றி, யாதும் பெறாதே வருத்தமுடன் திரும்பிச் செல்வாராயினர். இந்த கும்பலின் கொடுஞ்செயல் பற்றிய செய்தி தமிழகத்தின் எப்புறத்தும் பரவி இருந்தது. ‘இவர்கள் செருக்கினை அடக்கி இவர்களுக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும்’ எனக் காளமேகம் நினைத்தார். அதிமதுரக் கவி இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தவர் அதிமதுரக் கவிராயர் என்பவர். மிகவும் இனிதான கவிதைகள் இயற்றலிலே வல்லவர் அவர். அதனால் அரசன் அவருக்கு மனமுவந்து அளித்த விருதே ‘அதிமதுரக் கவிராயர்’ என்பது. அந்தப் பெயருக்கு ஏற்றவாறே புலமைச் செறிவு உடையவராகவும் அதிமதுரம் விளங்கினார். இவருடைய சொந்த ஊர் ‘திருக்கோயிலூர்’ என்பர். இதற்குச் சான்றாகக் ‘கோவன் மதுரா’ எனஒரு செய்யுளில் வருவதனையும் காட்டுவர். திருக்கோயிலூர் மலையமான்களுக்கு உரியதாகப் புகழுடன் விளங்கியதோர் ஊராகும். இந்நாளில், தென்னாற்காட்டு மாவட்டத்தே உள்ளது. இவ்வூரவரான இப்புலவர், தம்முடைய கவிவன்மையினாலே, திருமலை ராயளின்பாற் சென்று, அவன் அன்பைப்பெற்று, அவன் அவைப் புலவர் தலைவராகவும் விளங்கிவந்தனர்.

            புலமைச் செறிவுடையவர் எனினும், ஒருவர் அகந்தைப் பெருநோய்க்கு இடங்கொடுத்தால் அவர் புகழடைதல் கூடுமோ! அந்த நிலைக்கு அதிமதுரமும் உள்ளாயிருந்தனர். அரசன் அளித்த தகுதியும், செல்வ சம்பத்துகளும் இவரை அகந்தையுடையோராக ஆக்கியே அலைக்கழித்தன. இவருடைய செருக்கை அடக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் காளமேகத்திற்கு எழுந்தது. அது நிறைவேறத் தொடங்கும் காலமும், திருமலைராயன் பட்டினத்து முத்துக் குளித்தலின் தொடக்கத்துடன் வரலாயிற்று,

முத்து வேண்டும்

            நாட்டின் பல பகுதிகளிலும், திருமலைராயன் பட்டினத்து முத்துக்குளித்தலைப் பற்றிய செய்தி பரவலாயிற்று, அங்கு தன்முத்துக்கள் பல கிடைத்தும் வந்தன. அவற்றை வாங்கும் பொருட்டுப் பல திசையினரும் அங்குச் செல்வாராயினர். அப்படிச் சென்று வந்தவர்களுள் ஒருவர் மோகனாங்கியிடம் சென்று, தாம் கொண்ட சிறந்த முத்துக்களைக் காட்டினர். அவற்றைக் கண்டதும், அவளுடைய உள்ளத்தே ஆசைப்புயல் கால்கொள்ளலாயிற்று. அவள் பெண் அல்லவா! திருமலைராயனைக் கண்டு, அவனால் அளிக்கப் பெறும் பரிசினைப் பெற்றுவர வேண்டும் என்ற ஆர்வமும், அவன் அவைத் தலைவரான அதிமதுரத்தை வென்று செருக்கொழித்து வரவேண்டும் என்ற தினைவும் கொண்டிருந்த காளமேகத்திடத்தே, மோகனாங்கி, ஒருநாள் தன் முத்து விருப்பத்தையும் பக்குவமாகச் சொன்னாள். ”சுவாமி! திருமலைராயன் பட்டினத்திற்குப் போய் ஒரு முத்துமாலைக்குத் தேவையான அளவு முத்துக்கள் பெற்று வாருங்களேன்” என்றாள் அவள். அவரும் அதற்கிசைத்தவராக அன்றே தம் பயணத்தைத் தொடங்கினார்.

கண்ட சாட்சி

            பல நாட்கள் நடந்து, பல ஊர்களையும் கடந்து, ஒரு நாள் காலை வேளையிலே திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். அந்த ஊரின் வளமையைப் பறைசாற்றுவன போல மாடிவீடுகள் இருபுறமும் வானத்தைச் சென்று முத்தமிட முயல்வனபோலத் திகழ்ந்த ஒரு தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய ஊர்வலம் அப்போது எதிரே வந்துகொண்டிருந்தது.

            மங்கல பேரிகைகள் ஜாம் ஜாமென்று முழங்க, சுற்றிலும் மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்திப்போற்ற, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பெற்ற பல்லக்கு ஒன்றிலே அமர்ந்தபடி, அதிமதுரக் கவிராயர் அந்த ஊர்வலத்தின் நடுநாயகமாக வந்து கொண் டிருந்தார். அவரைத் தொடந்து அறுபத்து மூன்று பல்லக்கு களிலும் புலவர்கள் அமர்ந்து வந்தனர். கட்டியக்காரன், ‘அதிமதுரக் கவிராய சிங்கம் பராக்’ என்று கூறிவர, அத்த முழக்கம் அனைவராலும் தொடர்ந்து முழக்கப்பெற்ற முழக்கொலி வானதிர எழுந்து கொண்டிருந்தது. தமிழ்வாணர்கள் செல்லும் தகவுடைய அந்தப் பெருமிதத்தைக் கண்ட கவிஞரின் உள்ளம் பூரிப்படைந்தது. திருமலைராயனின் தமிழார்வத்தை உள்ளத்தாற் போற்றினார். ‘தமிழறிந்தாரின் நல்வாழ்வே தமிழின் தமிழரின் நல்வாழ்வாகும்’ என்பதனை உணர்ந்து, செயலிலேயும் அதை நிறைவேற்றி வந்த திருமலைராயனின் செயல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டது, நடுத்தெருவில் தம்மை மறந்தவராக மெய்மறந்து நின்று கொண்டிருந்தார்  காளமேகம்.

எதிர்பாராத சம்பவம்


            கட்டியக்காரர்களுன் ஒருவன், தமிழ் மயக்கத்தால் மெய் மறந்து நின்ற காளமேகத்தைக் கண்டான். அனைவரும் முழக்கும் அதிமதுரக் கவிராய சிங்கத்தின் புகழ் வாசசுத்தை அவர் கூறாது நிற்பதறிந்து வெகுண்டான். அவரருகே சென்று, தன் கைத்தடியினாலே தட்டி அவர் மயக்கத்தைக் கலைத்து, “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைப் பிறருடன் முழக்குவாயாக” என்றான். காளமேகம் வெகுண்டார். எனினும் நோவவேண்டியது அவனையன்று என்பதனை அறிந்த அவர், அதிமதுர மென்றே அகிலம் அறியத்துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக் கூட்டுச் சரக்கதளைக் கூறு- என்ற செய்யுளை உடனே சொன்னார். ‘அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு: அதை எதற்காக இப்படிப் போற்றி முழக்க வேண்டும்?” என்ற ஏளனம் செய்யுளில் எதிரொலித்தது. கட்டியக்காரன் அவரைப் புலவர் என்று அறிந்து கொண்டான். அந்தச் செய்யுளையும் நடந்த சம்பவத்தையும் அதிமதுரத்திடம் சென்று சொன்னான். அவர் அதனைக் கேட்டதும், ஏளனம் செய்தவரைத் தலைகுனிய வைக்க எண்ணினார். அவர் யாவரென அறிந்து வருமாறு அந்த ஏவலனைப் பணித்துவிட்டு, ராஜசபையை நோக்கிச் சென்றார். சூழ்ச்சிக்கு முனைதல் அரசவையினை அடைந்த அதிமதுரம், வழியிடையே தாம் கண்ட புதிய கவிராயரையும், அவர் சொன்ன செருக்கான அந்தச் செய்யுளையும் தண்டிகைப் புலவர்கட்கும் அரசனுக்கும் மிக வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். அவரை எப்படியும் அவமானப்படுத்தி அனுப்பவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

        காளமேகத்தைப்பற்றி அறியச் சென்ற கட்டியக்காரன் அவைக்கு வந்தான், கவிராயரே தந்த ஒரு சீட்டுக்கவியினை அதிமதுரத்திடம் தந்து நின்றான். அதனைப் படித்ததும் அதிமதுரம் மேலும் சினம் கொண்டார், அதனைப் படித்த அரசனும் அறிந்த பிறரும் அவ்வாறே ஆயினர். அவையில் வந்தனர். ‘அந்தப் புலவரை உடனே இங்கு கொண்டு வருக. நம் அவைப்புலவர் பெருமானைப் பழித்த அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கட்டி இழுத்தாயினும் கொணர்க’ என்று ஆணையிட்டுத் தன் ஏவலரைப் போக்கினாள் திருமலைராயன். அவர்களும் காளமேகத்தை அணுகி அரசனின் ஆணையைக் கூற அவரும் நிகழ்ந்திருக்கும் குமுறலை எண்ணியவாறே அவர்களைத் தொடர்த்தார். அரசவையிலே நுழைந்தார் காளமேகம், மன்னனை வாழ்த்தினார். தாம் கொண்டு வந்திருந்த எலுமிச்சம் பழத்தை அவளிடம் அளித்தார். அதனை வாங்கிய அவன், அவருக்கு இருக்கை அளித்து உபசரியாமல் வாளாயிருந்தான். காளமேகம் அதனைக் கண்டு சிரித்தார். அதிமதுரத்தின் சூழ்ச்சி வலையிலே அரசனும் சிக்கியிருந்த உண்மையைக் கண்டார். தமக்கு உதவும் தேவி அகிலாண்டவல்லி கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கிக் கரங்குவித்து தியானித்தார். அதன்பின் தமக்கொரு இருக்கை அருளுமாறு கலைமகளை வேண்டிப் பாடினார்.

            அப்போது திருமலைராயன் வீற்றிருந்த சிம்மாசனமே ஒருபுறமாக வளர்ந்து பெருகிற்று. பெருகி வளர்ந்த அந்தப் புறத்தே சென்று கம்பீரமாக அமர்ந்துகொண்ட காளமேகம், தமக்குத் துணை செய்த கலைவாணியை மீண்டும் போற்றினார். கண்டோர் அனைவரும், அவருடைய தெய்வீக சக்தியைக் கண்டு, எதுவும் சொல்லுவதற்கு வாயெழாமல் திகைப்புற்றிருந்தனர். காளமேகமோ அங்கிருந்த புலவர்களைச் சுட்டி, ‘நீவிர் யாவரோ?’ என்று மிகவும் கனிவாகக் கேட்டனர். அவர்கள் ‘யாம் சுவிராயர்கள்’ என்றனர். ‘கவிராயர்’ என்ற பதத்தினைக் ‘குரங்குகள்’ என்று பொருள்கொண்டு காளமேகம் கேலியாக உரையாடப் புலவர்கள் பெரிதும் சீற்றங்கொண்டனர். ‘நீவிர் யாவரோ?’ என்று அவர்கள் கேட்க, இவர் ‘யாமே காளமேகம்’ என, அதனைக் ‘கார்மேகம்’ எனப்பொருள் கொண்டு அவர்களும் ஏளனம் செய்தனர். அதனைக் கேட்டதும் கவிபாடுதலில் தாம் காளமேகம் என்று ஒரு செய்யுனைக் கவிஞர் சொல்லினர்.

            அதிமதுரக் கவிராயர், ‘எம்போல் நீவிர் விரைவாகக் கவிபாட வல்லீரோ? என்னும் பொருள்பட, ‘மூச்சு விடு முன்னே’ என்ற செய்யுளைச் சொல்வக் காளமேகம் ‘அதனினும் விரைவாகப் பாடுவோம்’ என்று பொருள்படும் ‘அம்மென்னும் முன்னே’ என்ற செய்யுளைச் சொல்லினர். அரிகண்டம் காளமேகத்தின் செயலினால் சினம் மிகுதியாகப் பற்றித் தம்மை எரிக்க, அதிமதுரம், ‘நீர் அரிகண்டம் பாடி எம்மை வெற்றிபெற இசைகின்றீரா?’ என்றனர்.  ‘அரிகண்டமோ? அதன் முறைமை எப்படியோ? சொன்னால், யாம் அதன்பின் எம் இசைவைச் சொல்வோம்’ என்றனர் காளமேகம். “கழுத்திலே சுத்தியைக் கட்டிக்கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும்; சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். பிழைபட்டால் கழுத்து வெட்டப்படும்; வென்றால் பாராட்டப் பெறுவார்கள்’ என்று விளக்கினார் அதிமதுரம். அதனைக் கேட்டுக் காளமேகம் கதிகலங்கிப் போவார் என்று எதிர்பார்த்த அதிமதுரம் திடுக்கிட, ‘அரிகண்டம் ஒரு பெரிதோ? ‘யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வோம்’ என்று காளமேகம் முழங்கினார். ‘எமகண்டமோ’ என்ற திகைப்புடன் அதிமதுரம் வினவ, காளமேகம் அதனை விளக்கினார்.


எம கண்டம்

            பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழம் உடையதாகப் பூமியிலே ஒரு பெரிய குழியினை முதலிலே வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாற்றப் பெறும். அவற்றின் மேலாக, நாற்புறமும் சட்டமிட்டு, அச் சட்டங்களின் நடுப்பகுதியிலே இரு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். அந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலேயிருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலிகளால் தாழவிடப்பெற்ற உரியொன்று தொங்கும். குழியினைப் பருத்த புளியங்கட்டைகளால் நிரப்பி, அதன் நடுவிடத்தே ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரையை வைத்து, அதனுள் அரக்கு, மெழுகு, குங்குலியம் போன்றவைகளை இடவேண்டும். கட்டைக்கு நெருப்பிட்டு, அந்த எண்ணெய்க் கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கும் பருவத்திலே, போட்டி விடுபவர் அந்த உரியிற் சென்று அமர்ந்து கொள்வார். நயமான எஃகினாலே அடித்ததும், கூர்மையாகச் சமைத்ததும், பளபளவென்று தீட்டப்பெற்றதுமான எட்டுக் கத்திகளைச் சங்கிலியிற் கோர்த்து, அப்படி உரியிலிருப்பவர் தம் கழுத்தில் நான்கும், இடையில் நான்குமாகக் கட்டிக் கொள்வார்.

            குழியின் நான்கு முனைகளிலும் நாற்றியிருக்கிற தூண்களருகே நான்கு யானைகளை நிறுத்தி, அந்தக் கத்திகளிற் கோர்த்த சங்கிலிகளை அவற்றின் துதிக்கைகளினாற் பற்றியிருக்கும் படியும் செய்யவேண்டும். இந்த நிலையிலே, உரியிலிருப்பவர், கொடுக்கப்பெறும் குறிப்புகளின்படி எல்லாம் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களைச் சொல்லி வருவார். அச் செய்யுட்கள் பிழைபட்டாலோ, அன்றி அவர் செய்யுளே கூறத் தவறினாலோ, யானைகள் பற்றியிருக்கும் சங்கிலிகளை இழுக்க கழுத்தும் இடையும் துண்டிக்கப்பட்டு, அவர் உடல் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையுள் வீழ்த்தப்படும். இதுவே எமகண்டம் பாடுவது என்பது. இதனை நீர் செய்வதற்கு வல்லீரோ?” என்றனர் காளமேகம்.


வென்ற கவிஞர்

            அதிமதுரத்திற்கு அதனைக் கேட்டதும் நடுக்கம் எடுத்தது. அத்தகைய போட்டியை நினைக்கவே அச்சம் எழுந்தது. காளமேகத்தையே அதனிடத்து ஈடுபடுத்திவிட நினைத்தார். “எம்மைப் பாடுவீரா? எனக் கேட்கும் நீர்தாம் அங்ஙனம் பாட வல்லீரோ?” என்றார். காளமேகம் அதற்கு இசையவே, திருமலைராயன் போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லாம் விரைவாகச் செய்தான். போட்டி பற்றிய செய்தி நாற்றிசையும் பரவிற்று.

திருமலைராயன் பட்டினத்தே நிகழும் அந்த வைபவத்தைக் கண்டு களிப்பதற்கெனப் பெரியதொரு புலவர் கூட்டமும் வந்து திரண்டது. போட்டியும் தொடங்கிற்று. அதிமதுரமும் அவரைச் சேர்ந்த தண்டிகைப் புலவர்கள் அறுபத்து நால்வரும் பற்பல குறிப்புகளைக் கொடுத்தனர். அவற்றுக்கு எல்லாம் ஏற்ற செய்யுட்களைச் சொல்லியபடி கம்பீரமாக வீற்றிருந்தார் காளமேகம், போட்டியில் அவர் வெற்றிபெற்றார் என்றும் அறிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற பின்னரும், அவரைப் போற்றி உபசரியாது அலட்சியப்படுத்தினான் திருமலைராயன். தன் அவைப் புலவர்களை அவர் அவமானப் படுத்திவிட்டார் என்ற நினைவே அவன்பால் நிரம்பி நின்றது. காளமேசும் அரசனின் செயலைக்கண்டு மனங்குமுறினார், இவர் கவிதையுள்ளம் கனலும் உள்ளமாயிற்று. அவ்வூர் அப்படியே அழியுமாறு வசை பாடினார். தாம் விரும்பிவந்த முத்துக்களையும் மறந்து வெளியேறினார். பல இடங்கட்கும் சென்று மீண்டும் திருவாரூர் வந்து தியாகராசப் பெருமானை வழிபடுபவராகச் சில நாட்கள் அவ்விடத்தே தங்கியிருந்தார்.

மண்தின்ற பாணம்

            அப்படித் தங்கியிருந்த நாளிலே, அதிமதுரக் கவிராயரும் திருவாரூர்ப் பெருமாளைத் தரிசிக்க வந்திருந்தார். பெருமானைப் போற்றிச் செய்யுள் செய்ய நினைத்த அவர் ‘நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்,’ என்று தொடங்கி, மேலே முடிக்கும் வகையறியாதவராய் மதிற்சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருந்தார். பிற்றைநாள் வந்தவர், தம் செய்யுள் முடிக்கப் பெற்றிருந்ததைக் கண்டதும் வியந்து நின்றார். நானொன்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தாள் மண்தின்ற பாணமே-தாணுவே சீராரூர் மேவும் சிவனேநீ யெப்படியோ
 நேரார் புரமெரித்த நேர் என்ற அந்தச் செய்யுளின், ‘மண் தின்ற பாணம்’ என்ற வாசகம் அவரை அப்படியே மெய்ம்மறக்கச் செய்தது. அதனை எழுதியவர் காளமேகமே என்று அறிந்த அவர், அவர் புலமைச் செறிவை வியந்து உளமாறப் பாராட்டி உவந்தார். தாமும் பிற புலவர்களும் சேர்ந்து அவரை எதிர்த்து வாதிட்டதெல்லாம் அவர் நினைவில் அலையலையாக எழுந்தன, கவிராயரின் சாபத்தினாலே மண் மாரியுற்று அழிந்த திருமலைராயன் பட்டினத்தையும் நினைத்துக் கொண்டார். தம்முடைய தவறான போக்கே அதற்கெல்லாம் காரணமாயிற்று என நினைத்து வருந்தினார்.

            அவர் உள்ளத்தே காளமேகத்தின்பாற் கொண்டிருந்த பகைமையும் மறையலாயிற்று, புதியதொரு அன்பும் மதிப்பும் ஊற்றெடுக்க வாயிற்று. அவரைக் காண விரும்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால், அதற்குள் காளமேகம் புறப்பட்டு வேற்றூர் சென்று. விட்டதறித்தார், வருத்தமுடன் திரும்ப வேண்டியதாயிற்று. காலமும் சூழ்நிலையும் மனத்து எழுகின்ற ஆணவ நினைவுகளை எப்படியோ மாற்றிவிடுகின்றன. அந்த அதிசய சக்திகள், அதிமதுரத்தையும் காளமேகத்தைப் பாராட்டும் உயரிய நிலைக்குக்கொண்டு செலுத்தின.


மறைவும் துயரமும் பல


            திருவாரூரிலிருந்து புறப்பட்டார் காளமேகம். ஊர்களுக்கும் சென்று வழிபட்டவராகத் திருவாளைக்காவிளை முடிவிற்சென்று சேர்ந்தனர். அங்கே மோகனாங்கியிடம் நடந்ததைக் கூறினார். அவளும் முத்தினை மறந்து அவருடைய செயலைப் போற்றிப் புகழ்ந்தாள். இருவருடைய வாழ்வும் இப்படியே சிலகாலம் இன்பமுடன் நடந்து கொண்டிருந்தது. காளமேசுத்திற்கு வயதுமுதிர்ச்சியின் தளர்வும், சோர்வும் தொத்திக்கொள்ளத் தொடங்கின. சுவிமழை பொழிந்த காளமேகம், கவிச்சுவையால் கல்விவல்வோரையும் தலை வணங்கிப் போற்றச்செய்த புலவர்பெருமான், ‘வசை பாட காளமேகம்’என்ற இசையோடு வாழ்ந்த தமிழ் வீறு உடையார், ஒரு நாள் உடற்கூட்டைவிட்டு நீங்கினர். மோகனாங்கி மட்டும் அன்று கதறிக் கண்ணீர் சொறியவில்லை, அவருடைய மோகனக் கவி இனிமையிலே தினைத்த தமிழகம், தமிழ்ப் புலவர் உலகம். முழுவதுமே சுதறிக் கண்ணீர் பெருக்கியது.


அதிமதுரப் பாடல்

            அதிமதுரக் கவியின்காதுகளிலும் இந்தத் துயரச் செய்தி சென்று விழுந்தது. வேதனைக் கடலிலே சிக்கி அவர் மனம் மீளாத்துயருற்றது. அப்போது அவர் பாடிய கவிதை மிகவும் உருக்கமானது.

வாச வயல் நந்தி வரதா திசையனைத்தும்

பூசு கவிகாள மேகமே-பூசுரனே விண்தின்ற

வெவ்வழலில் வேகுதே பாவியேன் மண்தின்ற

பாணமென்ற வாய்.

            என்பது அந்தச் செய்யுள். ‘மண் தின்ற பாண மென்ற வாய்’ என்று சொல்லித் துயருற்றுப் புலம்பினார் அவர். இப்படித் தமிழ் நாவலர் சரிதையிலே விளங்குகிறது இந்தத் திருவாரூர் நிகழ்ச்சி. இது இரட்டையர்கட்கும் இவர்க்கும் நடைபெற்றதாகவும் சிலர் கூறுவர். 

 நன்றி –        புலியூர்க் கேசிகன்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்

         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.

        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது

      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.

துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

      உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.

நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும். மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.

இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.

யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »