Saturday, April 4, 2026
Home Blog Page 29

24 காரட் தங்கம்|ப.பிரபாகரன்| சிறுகதை

24 காரட் தங்கம்

            பிபு, தினமும் அதிகாலையில் எழுந்து சுமார் 2.5 கி மீ சுற்றளவுள்ள ஏரிக்கரையை சுற்றி நடைபயிற்சி செய்வது வழக்கம். அப்படி அவன் நடைபயிற்சி செய்து முடித்த பின் அந்தநாள் முழுவதும் அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் எல்லையே கிடையாது.

            இனிமையான காலையில் வீசிய இளந்தென்றல் காதோரம் “பொழுது விடியப் போகுது, எழுந்து வா! பிபு, வாக்கிங் போகலாம்” என்று மெல்ல பேசி அவனை தட்டி எழுப்பிவிட்டது. அவன் வழக்கம் போல் எழுந்து பெரிய ஏரிக்கரைக்கு வாக்கிங் போனபோது பொழுது முழுவதும் விடியவில்லை.

இயற்கையின் இசையைக் கேட்டு நடந்தபோது, இனிதே பொழுதும் விடிந்தது; சுமார் 1 கி மீ தூரம் வரை சாலையின் இடது புறமாகச் சென்று கொண்டிருந்தான். பின்னர் சாலையில் குறுக்கே ஒரு சிறிய பள்ளம் கண்களில் தென்பட்டது.  மேலும் அந்தப் பள்ளத்தில் நேற்று பெய்த மழை நீரும் சிறிதளவு தேங்கி இருந்தது.

பிபு, அந்த சிறிய பள்ளத்தைத் தாண்ட மறுத்துச், சாலையின் வலது ஓரமாக நடக்கலானான். அங்கிருந்து பத்து அடிகள்தான் எடுத்து வைத்து இருப்பான், அங்கே அழகான மொபைல் போன் ஒன்று, தன்னந்தனியே தனது உரிமையாளர் இல்லாது நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். வியர்வை வடிந்த அவன் முகத்தில் இருந்த இரு கண்களின் விழியில் ஒருவரும் தென்படவில்லை. அந்த மொபைல் போன் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று புதிதாக இருந்தது.

ஒரு வேளை எவரேனும் வேண்டுமென்றே இங்கே வைத்துவிட்டு, யார்? இந்த கிராமத்தில் நல்லவர். யார்? பிறர் பொருளின் மீது ஆசைப்படாதவர், என்று எவரேனும் இந்த அதிகாலையில் லைவ் ஷோ பண்ணுகிறார்களோ! என்னவோ? என்று நினைத்து, அதை அவன் எடுக்காமல் சற்று தயங்கி யோசித்துக் கொண்டு நின்றான். நிற்க,

(முன்பு ஒரு நாள் இது போலவே சிறப்பானதொரு சம்பவம் நடந்திருந்தது. ஒரு முறை அவன் மளிகை கடைக்கு நடந்து செல்லும் வழியில் ரூபாய் 20, ஒரு ஓரத்தில் கிடப்பதைக் கண்டான். அப்போது கடையில் வாங்கப் போகும் பொருட்களின் சிந்தனையில் சென்று கொண்டிருந்ததால், அந்தப் பணத்தை எடுக்க மறந்து கடையை நோக்கி சற்று முன்னோக்கி சென்றேன். அவனைத் தொடர்ந்து வந்த ஒரு நபர், எங்கே பிபு திரும்பி பார்த்து எடுத்து விடுவானோ! என்று நினைத்து வேக வேகமாக ஓடி வந்து அதை எடுத்து விட்டார். திடீரென்று அந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சிறுவர்கள், ஹே ஹேய், ஹேய்…… என்று கத்தி கூப்பாடு போட்டனர். என்ன நடந்தது? என்று திரும்பி அவர்களை பார்த்தபோது தான் எல்லாமே விளங்கியது.

சிறுவர்கள் கையில் கேமரா வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் சிறுவர்கள் அனைவரும் அந்த நபரை சுற்றி கூட்டமாக மொய்த்தனர். உண்மையில் அந்த நபர் செய்வதறியாது வெட்கித் தலைகுனிந்தார். “டேய்! உங்களுக்கு விளையாட விளையாட்டே இல்லையா! இது எல்லாம் ஒரு விளையாட்டா? என்று கடுகடுத்த குரலில் கூறி, கையில் எடுத்த 20 ரூபாயையும் கொடுத்து விட்டு அவ்விடம் இருந்து கிளம்பினார்.

ஜஸ்ட் மிஸ்… என்று முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு பிபு கிளம்பினான்.)

அன்று நடந்தது போல எந்த ஒரு சம்பவமும் நடக்காது என்று நம்பி, அந்த போனை எடுக்கலாம் என்று மனதிற்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வரவழைத்து அந்த போனை எடுத்துப் பார்த்தான்.

உண்மையில் அது விலையுயர்ந்த மொபைல் போன் தான்!  அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கூட இன்னும் நீக்கம் பெறவில்லை. அநேகமாக வாங்கி ஒரிரு மாதம்தான் இருக்கும் போல் தோன்றியது.

அடடா! யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லையே! என்று யோசித்துப் பின்புறம் போட்டிருந்த கவரைக் கழட்டிப் பார்த்தான். அதில் ரெட்மி என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கவரில் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. அந்த போட்டாவை நன்றாக உற்றுப் பார்த்து அந்த நபரை எங்காவது பார்த்து இருக்கிறோமா? என்று சிந்தித்தான்.

பிறகு போனின் முன்புறம் திருப்பிப் பார்க்க, ஐயோ! டிரா அன்லாக் பேட்டன் என்ற வாக்கியமும், அதைத் தொடர்ந்து 9 புள்ளிகள் 3X3 என்ற வரிசையில் இருந்தது. அதற்கும் கீழே, சற்று உற்று நோக்க, எமர்ஜென்சி கால் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து, அப்பா! முடியல, ஏன் தான் இப்படி லாக் போட்டு வச்சிருக்காங்கலோ, என்ன செய்வது? என்று தெரியாது திகைத்தான்.

அப்போதுதான் அதில் ஒரு மிஸ்டு கால் இருப்பதைக் கண்டான். அந்த நம்பருக்கு பிபு அவனுடைய போனில் இருந்து அழைத்தான். அவனது போனில் ட்ரு காலர் வசதி உள்ளதால் அந்த நபருக்கு போன் செய்தவுடன் ‘ஹரி ஹரி’ என்று காண்பித்தது.

ஹலோ! ஹரியா? தம்பி! நான் பெரிய ஏரிக்கரையில் இருந்து பேசுகிறேன். “உன்னுடைய பிரண்ட்ஸ் யாராவது போனை தொலைச்சுட்டாங்களானு, கொஞ்சம் கேட்டு சொல்லு. ஒரு போன் ஏரிக்கரையில் அந்த குமுளிக்கு பக்கத்திலே கிடந்தது. உன்னுடைய நம்பரில் இருந்துதான் கடைசியாக மிஸ்டு கால் வந்திருக்கிறது. உனது போனையும் கொஞ்சம் செக் பண்ணு. இந்த போன் போட்டோவும், அதில் இருந்த ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும், போட்டா எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பி வச்சிருக்கிறேன். பார்த்துவிட்டு கூப்பிடு” என்றான் பிபு

ஆமாம். சொல்லுங்கண்ணா. அப்படியா! (பேசிகொண்டே வாட்ஸ் அப்ல பார்த்து விட்டு) அண்ணா! இது எங்க மாமாவோட போன் தான். எப்படி மிஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. நேற்று எங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்தார். திருவிழா முடிந்து இரவு முழுவதும் தங்கியிருந்து, அதிகாலையில் ஊருக்குத் திரும்பி சென்றார். எப்படி விழுந்தது என்று தெரியவில்லை. ரொம்ப நன்றிங்கணா! இப்ப எங்க இருக்கீங்க!”என்றான் ஹரி.

பிபு பெரிய ஏரிக்கரையில் ரோட்டு மேலே வெயிட் பண்ணுவதாகவும், அடையாளமாக அவன் தலையில் அணிந்திருந்த கருப்பு தொப்பியையும் கூறியதைக் கேட்டு ஹரி அண்ணே! இன்னும் 2 நிமிடத்தில் அங்கு இருப்பேன். தான்க்ஸ் ணா… என்றான்

அப்போதுதான் பிபுவுக்கு என்ன நடந்து இருக்கும்? என்று புரிந்தது. அவன் முன்பு இடப்புறமாக வாக்கிங் வந்தபோது இடையில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது அல்லவா! அதில் ஹரியின் மாமா வண்டியை விட்டு இருப்பார். அப்பொழுது அவரின் போன் தவறி விழுந்து இருக்க வேண்டும். மேலும் மழை பொழிந்து மண் தரை, பஞ்சு மெத்தை போல இருந்ததால், போன் விழுந்த சத்தம் கூட பாவம் அவருக்கு கேட்டு இருக்காது என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

இப்படி சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, மிகவும் வேகமாக வந்து சடெர்ர்ர்… என்று ப்ரேக் அடித்து ஒரு பைக் வந்து அவன் அருகே நின்றது. அந்த பைக்கில் வந்திருந்த பையனுக்கு சுமார் 12 வயது இருக்கும். தலை குளித்த ஈரம் கூட அந்த சிறுவனின் தலையில் காயவில்லை. தலைமுடி ஈரத்தாலும் வியர்வையாலும் சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் பூசிய திருநீறு லேசாக அழிந்து இருந்தது. மாமா தொலைத்துவிட்ட போனை எண்ணி சற்று பதற்றமாகவுமே இருந்தான்.

அண்ணே! “அது எங்க மாமாவோட போன் தான்! என்று ஹரி சொல்ல, அதற்கு பிபு நீ ஹரியா? தம்பி! என்றான்.

ஆமாம். “அண்ணே! வேணும்னா அந்த போன்ல இருக்கிற நம்பருக்கு இப்ப நான் போன் பண்ணுறேன்” என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் தம்பி சரியானவங்ககிட்ட கொடுக்கணும் இல்லயா! அதனாலதான் சும்மா கேட்டேன். இந்தா! போனை பிடி” என்று நீட்டினான் பிபு.

ஹரி போனை வாங்காமல் அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அண்ணே! இத பிடிங்கண்ணே! என்றான்

தம்பி! “என்னப்பா இது, இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாம அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க, இப்படி எல்லாரும் வந்து போகிற ரோட்டுல, எதையாவது யாராவது தொலைச்சுட்டால் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும் இல்லயா! அந்த ஒரு நல்ல எண்ணத்திலே தான் இதை செய்தேன்” என்றான் பிபு

ம்ம்… என்று தலையாட்டிவிட்டு எல்லாம் சரி தான் அண்ணே…ப்ளீஸ் இத வாங்கிக்கங்க! மத்தவங்க பொருளை திருடி வாழ்க்கை வாழ்வோர் இங்கு பலர் இருக்கின்றனர். கீழே தவறவிட்ட மத்தவங்க போனை திருப்பிக் கொடுக்கணும் என்று நினைக்க ஒரு பெரிய மனசு வேணும் அண்ணா! உங்களுக்கு நல்ல மனசு; நீங்க சுத்த தங்கம். ரொம்ப நன்றி அண்ணா!

18,000 ரூபாய் போன், நான் மாமாவுக்கு போன வாரம் தான் அமேஷான்-ல ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தேன். என்ன சொல்வது? என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்க நல்ல மனசுக்கு என்ன செய்றதுன்னு புரியல. இதைப் பிடிங்க ப்ளீஸ் என்றான்.

‘வேண்டவே வேண்டாம்’ என்று பிபு மறுத்து விட, ஹரி காணாமல் போய் கிடைத்த போனை வாங்கிக்கொண்டு முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் செல்லவில்லை. கைம்மாறாகக் கொடுத்த அந்த 100 ரூபாயை வாங்காததால் அரை மனதோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். ஒரு வழியாக பிபுவின் கண்களின் பார்வையில் இருந்தும் ஹரி மறைந்து போனான்.

பிபுவும் அடையாளத்திற்கு அணிந்திருந்த தொப்பியைக் கழட்டிவிட்டு ஏதோ பெரிய சாதனை செய்தது போல பெருமகிழ்ச்சியோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். அப்போது அவனது பாதத்தில் அந்த நூறு ரூபாய் தாள் லேசாக உரசி, ‘நான் உனக்குத்தான்’ என்று உணர்த்தியது. அய்யய்யா, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பணத்தை கீழே போட்டுட்டு போயிட்டான். இப்படி பண்ணினால் நாம எடுத்துக்கிட்டு போயிடுவோம் என்று நினைத்து விட்டான் போல முட்டாள் என்று முணுமுணுத்துக்கொண்டு ஹரிக்கு போன் பண்ணினான். ‘தாங்கள் டயல் செய்த எண் இப்போது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்றது. அடக்கடவுளே! இப்ப என்ன செய்றது? என்று யோசித்துக்கொண்டே ஹரி சென்ற பாதையை நோக்கினான் பிபு.

ஹரி மறைந்த அந்த பாதையில் இருந்து மீண்டும் ஒரு பைக் வருவதைக் கண்டான். ஒரு வேளை திரும்பி வருகிறானோ என்று நினைத்து உற்று நோக்கினான். ஆனால் அதில் வந்தவன் அந்த பையன் இல்லை. பதினைந்து வயது மதிக்கத்தக்க வேறொரு சிறுவன், பைக்கின் பிரேக்கை வேகமாக அழுத்தி அவன் பிபுவுக்கு முன்னே அருகில் வந்து நின்றான்.

அவன் வண்டியில் இருந்து இறங்கி, “அண்ணா!, நீங்க தானே இப்போ, கொஞ்ச முன்னாடி எனக்கு போன் பண்ணி, எங்க மாமா போன் கீழே கிடப்பதை எடுத்து, பத்திரமாக வச்சு இருக்கிறதா இன்ஃபார்ம் பண்ணுனீங்க!”என்றான்.

ஐயோ! ஆமாம்ன்னு சொன்னா, போன் எங்கன்னு கேட்டு நம்மல பிடிச்சுக்குவானே! அது நான் இல்லன்னு சொன்னா, நம்ம மனசாட்சி நம்மல படுத்துமே என்று யோசித்துக் கொண்டு, நாம ஒருத்தருக்கு போன் பண்ணினா இன்னொருத்த வந்து வாங்கிட்டு போயிட்டானே! அது எப்படி சாத்தியமாகும்? இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? ஐயோ! முடியலடா சாமி. சுத்த தங்கமா இருந்தா ஒன்னுக்கும் உதவாதோ? நல்லதுக்கே காலம் இல்லடா. என்று நினைத்து ஒரு கணம் விழி பிதுங்க விழித்தான்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!! |கோ.ஆனந்த்|சிறுகதை

கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!

வாழ்க்கை மிக எளிதானது.கணவன் மனைவி ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள்.அன்றாடத்திற்கு உணவு உடை உறைவிடம். இவற்றைப் பெற ஏதோ ஒரு நேர்மையான சம்பாத்தியம். இது மட்டும் போதும் என்று இருந்தால், வாழ்க்கை சுகமானது மகிழ்ச்சியானது. ஆரோக்கியத்துடன் நிம்மதியான உறக்கம் கைகூடும்.

“ஓ இது மட்டும் போதுமா?”

இப்படி கேட்க ஆரம்பிப்பதில் தான் எல்லோருக்கும் வாழ்க்கையின் கடின பக்கங்கள் புரட்டப்படுகின்றன. விமல்ராஜூக்கும் அப்படித்தான் புரட்டப்பட்டது.

“சும்மா இருக்கிற வேலையிலேயே உட்கார்ந்துகிட்டிருந்தா எப்படி? நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சாதானே ஒரு நல்ல வேல கிடைக்கும்.எல்லாத்துக்கும் எங்க வீட்டையே எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? நாளைக்கு பாப்பாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு கூட எங்க அப்பாவையே கேக்க முடியுமா?” மல்லிகா ஒருநாள் குழந்தையைத் தூளியில் ஆட்டிக்கொண்டே கேட்டாள்.

விமல்ராஜுக்கு சுருக்கென்று தைத்தது. தனிக்குடித்தனம் சந்தோஷமாகத் தான் இருந்தது குழந்தை பிறக்கும் வரை. குழந்தை பிறப்புக்கும் வளர்ப்புக்கும் மாமனார் வீட்டைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதுவரை இருவருக்கும் எதேஷ்டமாக இருந்த சம்பளம்,மாதக் கடைசியில் வேகவேகமாகக் கரைய ஆரம்பித்தது.

மாமனார் நல்லவர்.ஒரு பெண் ஒரு பையன்.பெண்ணுக்கு கல்யாணம் முடித்துப்  பிள்ளைப் பேற்றையும் பார்த்து விட்டார். பிள்ளை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் வேலைக்குப் போய் திருமணமாகும் வரை நிச்சயமாக எந்தக் குறையும் சொல்லாமல் பெண் குடும்பத்தையும் சேர்த்து தாங்குவார் தான். ஆனால் அதுவரையிலும் அவர் தலையிலேயே தங்கள் சுமையை இறக்கி வைத்திருக்க முடியுமா?.

அதுவரை யோசிக்கப்படாத மற்ற அத்தியாவசியத் தேவைகள் ஒவ்வொன்றாய் தலை தூக்க ஆரம்பித்தன.ஏதாவது தொழில் தொடங்கலாமென்றாலும் அதற்கும் மாமனார் தலையைத் தான் உருட்ட வேண்டியிருக்கும். விமல் ராஜின் பெற்றோர் ஊரில் விவசாயம் செய்து தங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவனை சல்லிக்காசு கேட்பதில்லை. அதற்கே அவன் சந்தோஷப்பட்டாக வேண்டும். அவர்களைப் போய் தொழில் தொடங்க பணம் கேட்பது எரிகிற வீட்டில் பிடுங்குவது போலத் தான்.

கிராமத்து வளர்ப்பு, மாமனாரிடம் போய் நிற்பது கேவலம் என்று இடித்துச் சொன்னது.மல்லிகாவும் பொறுமைசாலி தான்.ஆனால் பிற்காலத்தை நினைத்து இப்போதே கணவனைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டாள்.

ஆச்சு. ஆறுமாதமாகி விட்டது குழந்தை பிறந்து.இன்னும் ஆறு மாதம் மாமனார் பார்த்துக் கொள்வார்.அப்புறம்?கணவன் மனைவி இருவரும் தனித்து இயங்க வேண்டும்.இவன் அலுவலகம் செல்ல வேண்டும்.அவள் குழந்தையையும் பார்த்துக்கொண்டு அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுகூட சமாளித்து விடலாம்.துண்டு விழும் குடும்ப பட்ஜெட்டை எப்படி சரி செய்வது.?’

விமல்ராஜுக்கு நினைக்க நினைக்கத் தலை சுற்றிற்று.குடும்ப பாரம் என்பது புரிய ஆரம்பித்தது.அவனுக்கு அப்போது தெரிந்த ஒரே வழி சென்னையிலிருக்கும் நண்பன் ஜெயராஜைத் தொடர்பு கொள்வது தான்… கொண்டான்…

ஜெயராஜ் பால்ய சிநேகிதன். “பார்த்துக்கலாம் வா” என்று தைரியம் சொன்னான்.

மேகங்கள் சூழ்ந்த ஒரு மழை நாளில் விமல்ராஜும் சிங்காரச் சென்னையில் கால் பதித்திருந்தான்.சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணி சேவல் பண்ணை மேன்ஷன்களில் ஒன்றின் முன் வந்து இறங்கினான்.

இவன் வருகைக்காகவே வெளியில் கைகளைக் குறுக்காக கட்டியபடியே ஜெயராஜ் காத்துக்கொண்டிருந்தான்.

“வாடா விமலு, புள்ளகுட்டிக்காரனாயிட்ட. எல்லாம் எப்படியிருக்காங்க?”

“சௌக்கியன்டா ஜெயா.நீ என்ன இப்படித் துரும்பா கெடக்க?”

“என்னடா பண்றது.வேல அலச்சல்தான். வா மேல ரூமுக்கு போவோம்”.

“காஞ்சிப் பட்டுடுத்தி..கஸ்தூரி பொட்டும் வச்சு” …பக்கத்து அறையில் பாடல் மெல்லியதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

“விமல் அப்படியே குளிச்சு முடிச்சு வா.போய் சாப்பிட்டு வருவோம்.சீக்கிரமா போனாத்தான் மெஸ்ஸில சாப்பாடு கிடைக்கும்”

மெஸ்ஸில் சாப்பிட்டு முடித்து விட்டு, வீட்டை அழைத்து வந்து சேர்ந்த விவரம் தெரிவித்தான். மேன்ஷன் வந்து அமர்ந்தவுடன் விமல் ராஜ் ஆரம்பித்தான்.

“ஜெயா,உன்ன நம்பித்தான், இருக்கிற வேலய விட்டு கெளம்பி வந்துட்டன். ஏதாவது பாத்து சீக்கிரம் பண்ணுடா.”

“டேய் வந்த ஒடனே ஆரம்பிச்சிட்டியா. டிரெய்ன்ல சரியா தூங்கியிருக்க மாட்ட.உன் விவரம் எல்லாம் அவர் கிட்ட சொல்லியிருக்கேன்.நாளைக்கு எனக்கு லீவுதான்.பொறுமையா போய் பாத்து பேசவோம்.இப்பப் படுத்து ரெஸ்ட் எடு”

“சரிடா.ஆமா காலைலே கேக்கனும்னு இருந்தேன்.வரும்போதே குளுகுளுனு குளிர் காத்து.இப்ப என்னடான்னா ரூமுக்குள்ளாறயே இப்படி குளிருது.என்னடா ஆச்சு உங்க சென்னைக்கு?”

“அட ஆமாடா.இது எல்லாருக்குமே புதுசா இருக்கு. இது மழக்காலமா இருந்தாலும் எப்பவும் மார்கழில தான் குளிர் அதிகமா தெரிய ஆரம்பிக்கும்.இப்ப கார்த்திக தான் நடக்குது. அதுக்குள்ளாறயே குளிரடிக்குது. அதுவும் நடுப்பகல்லயே. ஏதோ அடமழ வரப்போவுதுன்றானுங்க. ஆனா ஒண்ணயும் காணோம்.குளிரு தான் அடிக்குது.இந்தா போர்வ.இத போத்திகிட்டு படுத்துக்க.நல்ல வேள.நீ வந்த நேரம் பக்கத்து பெட் அன்வர் பாய் ஊருக்குப் போய்ட்டாரு .இல்லன்னா உனக்கு வேற மேன்ஷன்ல தான் இடம் பாத்திருக்கனும்.”

ஜெயராஜ் கொடுத்த போர்வையைப் போர்த்தி சென்னைக் குளிரை(!!!) அனுபவித்தவாறே கண்ணை மூடித் தூங்க முயற்சி செய்தான்.

பக்கத்து அறையில் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…” என்று யேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார்.அப்படியே நினைவுகளிலாழ்ந்தான் விமல்.

இப்படியாகப்பட்ட ஒரு கார்காலம் தான் அவர்கள் பாப்பா உருவாகக் காரணமாயிருந்தது. கோயம்புத்தூர் பக்கமிருந்த மல்லிகாவுடைய அத்தை வீடு அது. மல்லிகாவின் சித்தப்பா மகள் திருமணத்திற்கு சென்றிருந்த அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இரவு அந்த அத்தை வீட்டில் உறங்கச் சென்றிருந்தனர்.

இருந்த ஒற்றைப் படுக்கையறையை புது மணத்தம்பதிகளான இவர்களுக்குக் கொடுத்துவிட்டு அத்தைக் குடும்பம் ஹாலில் படுத்துக் கொண்டது.

விமல்ராஜ் குளிரால் இழுத்துப் போர்த்து சுருண்டுக் கொண்டிருந்த மனைவியை சுரண்டினான்.

“சும்மா இருங்க.எங்க வந்து,..இப்ப யார் வீட்ல இருக்கோம்?”.

“யார் வீட்ல இருந்தா என்ன,ரூம்ல தான இருக்கோம்?”

“இருந்தாலும் அவங்க படுக்கை இது”

“இதுவும் படுக்கை தான”.

வாய்கள் தான் பேசிக் கொண்டிருந்தன சற்று நேரத்தில் பேச்சு அடங்கியது.

அடுத்த நாள் காலை மல்லிகா ரூம் கதவைத் திறக்க அதற்காகவே காத்திருந்த அத்தையின் கணவர்,அவசர அவசரமாய் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு “உங்க அத்த ரொம்ப நேரமா கதவத் தட்டிப் பாத்தாமா.நீங்க எழுந்துக்குற மாதிரி இல்ல.அதனால என்ன இருந்து சாவிய குடுத்துட்டு வரச் சொல்லிட்டு பசங்களும் அவளும் கிளம்பி மண்டபத்துக்குப் போய்ட்டாங்க.நானும் கிளம்பறேன்.நீங்களும் சீக்கிரம் கிளம்பி வாங்க.முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சி” என்றபடி அவசர அவசரமாய் வெளியே சென்றார்.

மல்லிகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.அவசரஅவசரமாகக் கணவனை எழுப்பி,இருவரும் கிளம்பி மண்டபத்துக்கு போய் சேரவும்,கெட்டி மேளம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.அங்கிருந்து திரும்பிய அடுத்த மாதமே மல்லிகா கருவுற்றிருப்பதாகப் பரிசோதித்த மருத்துவர் சொன்னார்.

அன்றிலிருந்து விமலுக்கு மனைவியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால்,” கோயம்புத்தூர் ஒருதரம் போய்வருவோமா?” என்று கண்ணடிப்பான். மல்லிகா வெகுண்டு கையில் கிடப்பதைத் தூக்கி அவன் மேல் எறிவாள்.

நன்றாகத் தூங்கி எழுந்து மறுநாள் நண்பர்கள் இருவரும் கிளம்பிப் போய் அரபு நாடுகளுக்கு ஆளனுப்பும் ஏஜன்ட் செல்வத்தை சந்தித்தனர்.

“வாப்பா ஜெயா.இவர்தான் நீ சொன்னவரா?”

“ஆமா செல்வம் அண்ணே.பாத்து சீக்கிரம் அனுப்பி வைங்க.”

“ஜெயா எல்லாம் சொன்னார் தம்பி. போனாக்கா ரெண்டு வருசமாவது இருந்தாவனும்.வேல கஷ்டமா இருக்கு.பொண்டாட்டி புள்ளயப் பாக்கனும்னு கிளம்பி வந்துடக் கூடாது.அதுக்கு சரின்னா அடுத்த வாரமே எல்லாம் ஏற்பாடு பண்ணிரலாம்”.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க.போயி கொஞ்சம் காசு தேத்திகிட்டு வந்தா போதும், அப்புறம் கடை கண்ணி வெச்சி பொழச்சிக்கலாம்னு பாக்கிறேன்.”

“எல்லாம் அப்படி சொல்லித்தான் போறாங்க.ஆரம்பம் தான் கஷ்டம்.ஒருதடவை இருந்துட்டு வந்துட்டா அப்புறம் இது புலி வால புடிச்ச கத தான்.மறுபடி எங்கிட்ட தான் வந்து நிப்பாங்க.சரி பாஸ்போர்ட், ஃபோட்டோ எல்லாம் குடுத்துட்டு ஊருக்கு போறதானா போய்ட்டு வாங்க.நான் எல்லாம் ரெடிபண்ணிட்டு ஜெயா கிட்ட சொல்லி அனுப்பறேன்”.

“இல்லண்ணே ஒரு வாரம் தானே.இங்கேயே இருந்துடறேன்.நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.”

“அப்ப சரி .போயிட்டு வாங்க”

ஜெயாவும் விமலும் மேன்ஷன் வந்து சேர்ந்தனர்.

“செல்வம் நல்லவருடா.எப்படியும் அடுத்த வாரம் உன்ன பிளேன்ல ஏத்தி விட்ருவாரு பாரு.அன்வர் பாயத் தான் கொஞ்சம் சமாளிக்கனும்”

“அன்வர் பாய எதுக்குடா சமாளிக்கனும்?”.

“அவரும் என்கிட்ட தான்டா வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தாரு. நானும் செல்வம் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். இந்த வருசம் இன்னும்  ஒரே ஒரு ஆள் தான் அனுப்பமுடியும். பாக்கலாம்னு சொல்லிகிட்டிருந்தார். அப்ப தான் நீ போன் பண்ணி புலம்பின.

அன்வரும் அவசரமா ஊருக்கு போகனும்னு புறப்பட்டு போய்ட்டாரா.. அதனால அந்த வேலய உனக்கு குடுக்கச் சொல்லி செல்வம் கிட்ட சொல்லிட்டேன். அன்வர் வந்தா அடுத்த வருசம் போயிடலாம்ணே ன்னு சொல்லி சமாளிக்கனும்.”

“ரொம்ப தாங்க்ஸ்டா நானும் இந்த வருசம் போய்ட்டு வந்தா தான் திரும்பி வந்து செட்டிலாக சரியா இருக்கும்.”

மறுநாள் செல்வம் எல்லா நடைமுறைகளும் அந்த வாரத்தில முடிந்து விடும் என்றும் அடுத்த திங்கள்கிழமை கிளம்ப வேண்டியிருக்கலாம் என்றும் சொன்னார்.விமல், மல்லிகாவிற்கு போன் பண்ணி சொல்ல அவளும் சந்தோஷமடைந்தாள்.குழந்தையைக் கூட்டிக்கொண்டு ஏர்போர்ட் வருவதாகச் சொன்னாள்.ஆனால் விமல் சென்னையின் சீதோஷ்ண நிலையைப் பற்றிச் சொல்லி வரவேண்டாமென சொல்லி விட்டான்.

“இந்த மழக்காலம் வீணாப்போச்சு மல்லிகா.இரண்டு வருஷம் கழிச்சு வந்தவுடனே கோயம்புத்தூர் அத்தையப் பாத்துட்டு வந்திடலாம்”. மறுமுனையில் மல்லிகா “உங்கள ..” என்று சிணுங்கினாள்.

விதியைப்பற்றி பலர் பலவிதமாய் கூறுவதுண்டு.எல்லாம் விதிப்படிதான் என்பார் சிலர்.விதியை மதியால் வெல்லலாம் என்பார் சிலர்.விதி வலிது ஆனால் மதியால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்பார் மற்றும் சிலர். ஆனால் யாரும் விதியைக் குறைத்து மதிப்பிட விரும்புவதில்லை.

அன்வர் பாய் மறுநாளே சென்னை வந்து சேர்ந்திருந்தார்!!!.ரூமுக்குள் நுழைந்து தன் கட்டிலில் அமர்ந்திருந்த விமலைக் கூட கவனிக்காமல்,ஜெயாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி” “ஜெயா செல்வம் சார் என்ன சொன்னார்?”என்பது தான்.

ஜெயா ஏதும் பதிலளிக்காமல்,”வாங்க பாய்.என்ன விஷயம்? வந்ததும் வராததுமா செல்வம் சாரப் பத்தி கேட்கிறீங்க” என்றான்.

உள்ளே வந்த அன்வர் விமலைப் பார்க்க,பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர்.

“ஜெயா நா இங்கிருந்து போனேன் இல்ல,அதுக்கு காரணமே என் தங்கச்சி ஆயிஷா தான். ரொம்ப நாளா அவளுக்குத் தள்ளி போயிட்டிருந்த கல்யாணம் முடியற மாதிரி இருக்கு.ஆனா மாப்பிள்ளை வீட்ல கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கு.எங்க வாப்பா அதெல்லாம் நம்ம சக்திக்கு அதிகம் வாணாம்னு சொல்லி வருத்தப்படறாரு. நான் தான் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க, எப்படியாவது நீங்க எதிர்பார்க்கிறத செஞ்சிடறோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். எப்படியும் இந்த தடவ செல்வம் அனுப்பிருவாரு இல்ல.அவரத்தான் மலபோல நம்பியிருக்கேன்.” என்று கலங்கினார்.

ஜெயாவும் விமலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஜெயா ஒன்றும் பேசாமல் மௌனம் காக்க, விமல் தான் அன்வருக்கு ஆறுதல் சொன்னான். “கவலப் படாதீங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.நாளைக்கே செல்வம் சாரப் பாத்துப் பேசிடலாம்.”

ஜெயா திடுக்கிட்டு விமலைப் பார்க்க, விமல் ஆமாம் என்பதாய் தலையசைத்து ஜெயாவின் கைகளை அழுத்தினான்.

பக்கத்து அறையில் யேசுதாஸ் மயங்கி(க்கி)க் கொண்டிருந்தார். “கார்காலக் குளிரும்

மார்கழிப் பனியும் ….

கண்ணே உன் கை சேரத் தணியும்…’

 

மேலும் பார்க்க,

1. தூவானம் (சிறுகதை)

 

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும் | சு.கலைச்செல்வன்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

            கவிதை என்பதை கதை, விதை என்று அழைக்கலாம். ஒரு பொருளின் விதையைக் கதையாக மக்களுக்கு எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது ஆகும். எவ்வளவு பெரிய கருத்துக்களையும் சுவையாக நறுக்கென சொல்லப்படுவது கவிதை. எல்லோரோலும் கவிதையை எழுத முடியாது. எவர் உள்ளத்தில் இயற்கையை நேசிக்கவும் ரசிக்க வைக்கின்ற எண்ணமும் உள்ளதோ அவர்களே கவிதை எழுத வல்லவர்கள் ஆகின்றார்கள். இவ்வுலகத்தில் எத்தனையோ கவிஞர்கள் இருப்பினும் கவிச்சக்கரவர்த்தி கம்பனைின் கவி நடையை இன்றளவும் எண்ணி வியந்து போவதுண்டு. அதேபோல் ஆங்கில கவிஞர் மில்டனின் கவிதையைில் ஓர் ஆழம் இருப்பதை உணர முடியும். கம்பனின் பஞ்சவாடி என்பதையும் மில்டனின் ஈடன் தோட்டத்தையும் பின்னணியாகக் கொண்டு இவ்வாய்வு ஒப்பாய்வாக நிகழ்த்தப்படுகிறது. கவிநயப்பார்வையில் கம்பனின் கவித்துவமும் மில்டனின் கவியழகும் இவ்வாய்வுக் கட்டுரையின் காண்போம்.

 கவிச்சக்கரவர்த்தி கம்பன்

     காப்பிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.  தமிழில் சிறந்த கவிஞர். கவிஞர்களின் சக்கரவர்த்தி என்று பாராட்டப் பெற்றவர்.  கம்பனைப் போல் பூமிதனில் எங்கேயும் பிறந்ததில்லை என்பார் பாரதி. கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவி பாடும், கல்வியில் பெரியவன், கல்வியில் சிறந்தவன்  கம்பன்,  பெருங்கவிஞர்  என்றெல்லாம் சிறப்பு பெற்றவர். கம்பராமாயணத்தின் ஆசிரியர். தன்னுடைய ஒவ்வொரு படலத்திலும் காட்சி அமைப்பு, காடடசியைச் செலுத்தும் முறைமை, பாத்திர படைப்பு மற்றும் பண்புகள் ஆகியன ஒருமித்ததாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.                    

மில்டன்

            ஆங்கில மொழியின் மிகச்சிறந்த கவிஞர்.  இழந்த சொர்க்கம் என்ற நூலை எழுதியுள்ளார்.  மதவாதிகளும், பழமைவாதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்தவர்கள். ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும் கல்வியாளர்களும் கூட மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர். அவர் பயின்ற  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்   முதல் இடத்தைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்ற உண்மையைக் கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் பறைசாற்றிய கவிஞர் மில்டன் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்றெல்லாம் மக்கள் ஆசைப்படார்கள்.

மில்டனின் ஈடன்  தோட்டம்

            தலைவன் ஆதாம் தலைவியே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இறைவடிவினர் ஆகிய இருவரும்  நிமிர்ந்த நன்னடையும் மேற்கொண்ட பார்வையும் உயர்ந்து ஓங்கிய வளர்ச்சியும் தோற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆடை ஏதும் அணியாத நிலையிலும் மாட்சிமை பெற்று வளர்கின்றனர். தூய்மை, வாய்மை, விவேகம் பெற்று ஒழுக்கத்தின் சிறந்த அழகான வடிவினராக இருக்கும் அவர்கள் உழைப்பால் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.  அவர்கள் ஈடன் தோட்டத்தில் பூஞ்செடியைச் பேணுவதுபோல எளிய பணிகளைச் செய்கின்றனர். தென்றலில் இனிமையும் ஓய்வு நிம்மதியும் கூடுதலாகத் துய்ப்பதற்கு அந்த உழைப்பும் உதவுகிறது. வேலை முடிந்தபின் தோப்பு நிழலில் அருவி அருகில் அமர்ந்து உள்ளவர்கள் அங்குள்ள பூக்கள் மீது சாய்ந்தவரே மரங்களில் உள்ள கனிகளை உண்பார்கள். பின்னர் தெளிந்த நீரோட நீரை பருகுவார்கள். இருவரும் இயற்கையின் வசம் உடலாடி பின்பு  இன்புறுகிறார்கள்.

வெள்ளாட்டுக் குட்டியுடன் கர்ஜனை செய்யும் சிங்கம், தும்பிக்கை வளைத்து விளையாடும் யானை, வளைந்த நெடிய விஷம் உள்ள பாம்புகளை கண்டு மகிழ்வார்கள்.  இவர்களின் இன்பமான வாழ்விற்கு வழிவகை செய்த இறைவனை உள்ளன்போடு  போற்றி புகழ்வார்கள்.  சிந்தனை அறிவுக்கு ஆதாமும்  மென்மை கவர்ச்சிக்கு ஏவாளும் இறைவன்  படைத்ததாக மில்டன் கூறுகிறார்

“உனக்கு விதி வகுப்புவன் இறைவன் எனக்கு விதி வகுப்புகள் நீயே”  — என்று ஆதாமும் ஏவாளும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவார்கள்

            மனிதகுலம் கருத்து ஒருமித்த காதலராகப் பலரை கண்டு இருக்கிறது. ஆனால்  ஆதாமையும் ஏவாளையும் போல்  ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்பார் கவிஞர். அதனை புலப்படுத்தும் ஏவாளின் பேச்சுகளும் உள்ளன. ஆதாம் ஏவாளை தன் வாழ்வின் உயர்நிலையாகக் கருதுகிறார். முழுமையான வளர்ச்சியைப் பெற்ற ஆளுமை உடையவள் ஏவாள். அவள்  சொல்லும் செயலும் அன்புக்குரிய  அறத்திற்கு  அறிவிக்கும் உச்சவரம்புக்கு எல்லை இல்லை என்று கூறுவான். அவனோடு  உரையாடும்போது மென்மைத்தன்மைய இழந்து  வெண்மையாகும் என்று ரஃபேரிடம் மெய்மறந்து பேசுவான்.

            சாத்தான் ஆதாமும் ஏவாளும் அனுபவிக்கும் இன்பத்தை கண்டு பொறாமையும் துக்கமும் அடைகின்றான்.  சாத்தான் சற்று ஆதாமும் ஏவாளின் பேடியின் தேடித் தன்மையும் அவர்கள் தூக்கி இன்பத்தையும் நிறைவடையும் நிறைவையும் புலப்படுத்தும். விண்ணுலகில் காற்றும் காற்றும்  கலப்பது போல இவர்கள் இருவரும் இரண்டல்ல முழுமையாக ஒன்றிணைந்து கலவி இன்பம் சுவைக்கும் இன்பத்தை இழந்து  நிறைவேறா ஆசையில்  துன்புற்றி தவிப்பதைக் காணமுடியும்.  ஆதாமும் ஏவாளும் மாறுபடுவதை கண்டு,

  ” பொறுமையான காட்சி! வேதனை தரும் ஆட்சி

   விளைந்து தழுவும் சுவர்க்க போக  மாட்சி

   தன்னையே விஞ்சும் இன்பத்துக்கு சாட்சி

   இன்று அழுக்காருடன் பேசுகிறான் ” (கம்ப.ஆரண்ய.அகத்திய.பா.57)

            வீழ்ச்சி வரும் வரை ஆதாமும் ஏவாளும் பாலுறவு உடைய  தம்பதியாக  வாழ்ந்தார் என்று மில்டன் காட்டுகிறார்.  இன்பத்தைப் பெருக்குமாறு  இறைவன்  அவர்களுக்கு  ஆணை  விட்டதாகப் பைபிள் கூறுகிறது.  அதனால் அவர்களிடம் இருந்து  குற்றமற்ற  அவர்களுடைய பால் இன்பத்தை  மில்டன்  ஊடல் ஆடி விட்டுள்ளான்.  சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததும் இருள் கடலை பாற்கடலாக மாற்றும் வெண்மதி தோன்றும். அப்போது  ஆதாமும் ஏவாளும் வானத்தின் கீழ் நின்று இறைவனை வணங்கி விட்டு பள்ளியறைக்குள் செல்வார்கள் என்று  மில்டன் கூறுகிறார்.  மனித குலத்தின் முதல்வர் இருவரது இல்லற வாழ்வின் விருப்பத்தையும் இன்பத்தையும் காமரசம் கனியைப் போற்றி பாடுகிறார். வீரன் தோட்டம்  மண்ணகத்து உறக்கம்  வாழ்வின்  வர்ணனைக்கு  மணிமகுடம் ஆகிறது

கம்பனின் பஞ்சவாடி

              இயற்கையோடு இணைந்த இன்பம் அந்த இன்பத்தோடு   இயைந்த  வாழ்வு என்னும் கொள்கையும் கற்பனையும் கவர்ந்தது. ஈடனும் பஞ்சவாடியும் குறிப்பிடத்தக்க ஒப்புமை உடையன.   பஞ்சவாடியில் இயற்கை காட்சிகள் வழங்கிய இன்பத்தில்  உச்சியில் சீதையும் ராமனும் நடத்திய வாழ்வின்  சொல்லோவியம்  ஈடனை நினைவுபடுத்தும். மில்டனின்  சோலை  சுவர்க்கம். ஒரு மலையின் அகன்ற முடிவில் அமைந்தது. மலைச்சிறுவில் நெடிதுயர்ந்த நிழல் தரும் மரங்களை விட ஈடன் சோலையில் எல்லை காப்பான மரங்கள் ஓங்கி உயர்ந்தவை அவற்றை மிஞ்சியவை  சோலை மரங்களின் உயரம். இந்த வர்ணனை ராமனுக்கும் அகத்திய முனிவர் வழங்கியது  பஞ்சவாடி சித்தரத்தை நினைவூட்டும் பஞ்சவடியைக் கம்பன் காட்டும் போது

                       “ஓங்கும் மான் ஓங்கிய மலை ஓங்கிய மலை ஓங்கிய

                        பூங்குளை குலவும் குளிர்  சேலை புடை விம்மி  

                        தூங்கு குதிரை  ஆறு  தவல்  சூழலாது ஓர் குன்றின் 

                        பங்கர் உளதால் உரையுள் பஞ்சவாடி “

      என்பார்.  உண்பதற்கு கனியும் அருந்துவதற்கு அமுதமும் ஈடன் சோலையை விட மிகுதியாக கிடைத்தன.  பஞ்சவாடியில் நீராட ஆறும் உணவுக்கு வாழையும் செந்நெல்லும் உள.  அங்கே சிங்கமும் யானையும் அவர்களை விளையாட்டுக்கு காட்டி மகிழ்வித்தன .  இங்கே சீதையுடன் விளையாட  நாரைகளும் அன்னமும்  உள்ளன. ஈடன் சோலை வடிவில் மில்டன் ஆதாம் ஏவாளின் குற்றமில்லாத பாலுணர்வை காட்ட,  இங்கே  கம்பன் ராமன் சீதையின் இடையே  அளவிலான   அன்பை சொல்லி செல்வதைப் பார்க்க முடியும்.

            தாமரை மலர்கள் தங்கிய சக்கர வியூக பறவைகளைக் கண்ட தலைவன் மங்கையின் கொங்கைகளை  நோக்குகிறான்.  அவன் பார்வையைக் கண்டு நாணிய சீதையின் பார்வை மணிகளை  நிறைந்த  மனக்கொன்றுகளின்  பதிகிறது.  அக்கொன்றுக்கு நிகரான ராமன் தோள்களைக்  கண்ணால் காண, அவன் அழகை  நினைத்து மகிழ்கிறாள்.  சீதையின் நடை தோற்றத்தை போல் ஒதுங்கி நடக்கும் அன்னத்தைக் கண்ட ராமன்  சீதையின் நடையழகை மீண்டும் நோக்கி குறுநகை புரிகிறான். அதைப் பார்த்த நீரூண்டு வந்த யானை இராமன் நடையழகை கண்டு விலகி  நடப்பதைக் கண்ட சீதை அதன் நடையிலும் செம்மார்ந்த ராம நடையினை நினைத்து புதியதோர் புன்முறுவல் செய்கிறாள்   நதிக்கரையில் மண்டிய கொடிகளைக் கண்ட நாயகன்  கொடியைப்போல்  வளையும் சீதையின்  இடையை காண்கிறான்.  அது  கன்னங்கரிய குவளை  மலர் கட்டுகளுக்கிடையே செந்தாமரை மலர்களைப்போல அவள் இடை சிவந்து காணப்படுகிறது.  இதைக் கண்ட சீதையும் நாண உணர்வை கடந்து கரியனும் கரிய கமலக்கண்ணனை நேரே நோக்குகிறாள்.

முடிவுரை

            மொழிகள் வேறாயினும் கவிஞர்கள் மனதளவில் ஒன்றுபட்டு இருப்பதைக் காணலாம். இயற்கையாய் இணைந்த காதலர்கள் வாழ்வில் இன்புற்று இருப்பதை கம்பரும் மில்டனும் ஒரே மாதிரியான கருத்துக்களோடு அழகுநயம்பட கூறியிருப்பது போற்றுதலுக்குரியது ஆகும். இவ்வாறு இயற்கையோடும் இசைந்த இன்ப வாழ்வை இரு பெரும் கவிஞர்களும் ஒத்த நிலையில் படைத்துள்ளனர்.  ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் அமைந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நிலைக்கவில்லை.  அது சாத்தான் சதியில் ஈடன் வாழ்வு அழுகிறது.  அதேபோல ராமன் சீதைக்கும் பஞ்சவாடி இன்பமாக இருக்கிறது.  அந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நீடிக்க வில்லை.  இங்கே சூர்ப்பனகையின்  சூழ்ச்சியால் சீதையின்  ராமனின் பஞ்சவாடி வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனாலும் இருவர்களுடைய வாழ்க்கையும் இன்பமுடையதாகவும் உலகம் உள்ளவரை மக்கள் இன்னும் அவர்களைப் பற்றி பேசுவதையும் கதைப்பதையும் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் காணலாம்.

பார்வை நூல்கள்

1.கம்பராமாயணம், ரா.சீனிவாசன், செல்லம்மாள் தெரு, சென்னை – 30, மூன்றாம் பதிப்பு – 2000

2.கிறுத்துவமரபு, ஜான் மில்டன், மொழிபெயர்ப்பு, சாமுவேல் சிமன்ஸ் வெளியீடு, 1667

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சு.கலைச்செல்வன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130

மின்னஞ்சல் : mskalai28590@gmail.com

மலையதிகாரம் |கவிதை |ச. குமரேசன்

மலையதிகாரம்

மலையதிகாரம்

 

வைகறையில்

வியாழன் உறங்கி

வெள்ளி உதிக்கும்..

எங்கள் மலை மன்னருக்கு

அது சியமந்தகமணி…! 

 

கிழக்கு வெளுக்கும்,

பின் சிவக்கும்

மலை முகடுகளுக்கிடையே

வெய்யோன் வெட்டொளி வீசும்..

தங்க கிரீடத்தை

தலையில் கவிழ்த்தவாறு

தகதகக்கும்…

மகாராசராய்

மரகத வண்ண மலை வீற்றிருக்கும்…! 

 

தொலைவிலிருந்தால்

நீலவான நீட்சியாய்

நீலநிறமாகும்…

பக்கத்திலிருந்தால்

பச்சை நிறத்தில் பளபளக்கும்…! 

 

அது மலையல்ல

மன்னர்களின் கருவூலம்.. 

அழகு கொஞ்சும்

அட்சய பாத்திரம்.. 

கர்ணனின் கருணை கைகள்.. 

கடையெழு வள்ளல்களின்

கரும்பச்சை பிம்பம்…! 

 

உயிர்களின் உன்னத உறைவிடம்.. 

ஊராரின் ஒட்டுமொத்த தேவை.. 

சிற்றோடைகளில்

சிலுசிலுத்து ஓயாமல் ஓடிவரும்

 ஊற்றுகளின் உற்பத்தி கூடம்…! 

 

தந்தை மேய்த்த ஆடுகள்.. 

மந்தை மந்தையாய் மாடுகள்.. 

குதித்தோடும் குரங்குகள்… 

மருண்டு நோக்கும் மான்கள்.. 

பள்ளம் தோண்டும் பன்றிகள்.. 

கடகடக்கும் காட்டெருமைகள்.. 

முந்தியோடும் முயலினங்கள்.. 

முள் தெறிக்கும் முள்ளம்பன்றிகள்.. 

சிலுசிலுக்கும் சில்வண்டுகள்… 

பளபளக்கும் பொன்வண்டுகள்.. 

அனைத்துக்கும்

அருள் சுரந்து உணவூட்டும்

இது என் அமுத சுரபி…! 

 

விக்க வைக்கும் விளாங்காய்கள்.. 

திகட்டச்செய்யும் தெரட்டிப்பழங்கள்..

எச்சிலூறும் இலந்தைப் பழங்கள்.. 

கருப்பு திராட்சையாய் கலாப்பழங்கள்..

புத்துணர்வளிக்கும் புளியம்பழங்கள்.. 

அருமையான அன்னம் பழங்கள்.. 

ஆகாரமாகும் ஆனாப்பழங்கள்.. 

சட்டையில் முள்ளேறும் சப்பாத்தி பழங்கள்.. 

சத்தான சர்க்கரை பழங்கள்.. 

பல்லுயிர்க்கும் பகிர்ந்தளிக்கும்

இது என் பழமுதிர்சோலை…!

 

முடையும் கூடைக்கும்

மோட்டு வளைக்கும் மூங்கில்கள்.. 

நெடுங்கால்களுக்கு நெக்கினி.. 

பூட்டுக்கைக்கு புரசு.. 

பக்கவளைக்கு பரம்பை.. 

கட்டைக்காலுக்கு கருங்காலி.. 

வளைச்சு குச்சிக்கு தெரணி.. 

வளைத்துக்கட்ட கட்டுக்கொடி.. 

கூரைவேய கிணாங்கு புல்.. 

கம்பங் கொள்ளைக்கு உண்டி வில்.. 

வரைமுறையின்றி வாரி வழங்கும்

வீடுகட்ட வித்திடும்

இது என் விஸ்வகர்மா…! 

 

பாறைக்குழியில் இருந்தால் பாழி.. 

ஓடையில் ஊறி வந்தால் ஊற்று..

குடிக்குமளவு தேங்கினால் குட்டை.. 

ஒவ்வொரு உயிரும் இளைப்பாறும்

நீரும் அதன் பேரும்

இடம் தோறும் மாறும்…

தேவர்களும் பருக

எண்ணும் இது என் தேவாமிர்தம்…! 

 

மழைக்கால மண்புழுக்கள்.. 

மலையட்டைகள்.. 

மரப்பள்ளிகள்.. 

மலைப்பாம்புகள்.. 

கல் ஆமைகள்.. 

கருந்தேள்கள்.. 

உடும்புகள்.. 

ஊர்ந்து வரும்

இவை யாவும்

வாழ்வில் ஊர்ந்து வர

கற்றுக் கொடுத்த

எனது தட்சணை இல்லா

 தாராள குருக்கள்…! 

 

காடைகள்..கவுதாரிகள்..

காட்டுக்கோழிகள்… 

காக்கைகள்.. கழுகுகள்.. 

கரிச்சான் குருவிகள்… 

மயில்கள்.. மைனாக்கள்..

மணிப்புறாக்கள்…

பருந்துகள்.. பச்சைக்கிளிகள்.. 

சிட்டுக்குருவிகள்..

செம்போத்துகள்..

கூகைகள்.. குயிலினங்கள்.. 

ஆந்தைகள்.. ஆட்காட்டி குருவிகள்… 

ஆயிரமாயிரம் பறவைகள்

ஆசையாய் பறந்து வரும்

இது என் வேடந்தாங்கல்…!

 

கண்ணைப் பறிக்கும் செங்காந்தள்.. 

கமகமக்கும் காட்டுமல்லி.. 

கார்காலத்து காரிண்டம்பூ.. 

கொத்துக் கொத்தாய் கொரக்கம்பூ.. 

கற்களுக்கிடையே கள்ளிப்பூ..

இது பூவின் புதையலை

புறம் வைக்க புறப்படும்..

இசைபாடும் தேனீக்களின்

இன்பமான இருப்பிடம்…!

 

உச்சி மரக்கிளையில்

ஒய்யாரமாய் கொம்புத்தேன்..

உயர்ந்த பாறைகளில்

ஒட்டியிருக்கும் மலைத்தேன்.. 

கல்லிடுக்கில் கட்டிவைக்கும்..

மரப்பொந்தில் மறைத்து வைக்கும்..

புற்றுகளில் புதைந்திருக்கும்..

அடுக்கடுக்காய் அள்ளித்தரும்

அடுக்குத் தேன்.. 

அது அவ்வளவும்

அசுவினி குமாரர்களின் ஒளடதம்…! 

 

ஊறுகாய்க்கு உன்னதம்

மகத்துவமான

மாவிலியங் கிழங்கு.. 

அரவம் அடக்கி அருமருந்தாகும்

ஆகாச கருடன் கிழங்கு.. 

இன்னல் இருளகற்றி

இன்பம் தரும் இருளங்கிழங்கு.. 

நிலை மாற்ற நீண்டிருக்கும்

நிலப்பனைங் கிழங்கு.. 

மண்ணுக்குள்ளே மறைந்திருக்கும்

இது என் புனித புதையல்கள்…! 

 

இவை

என் எண்ணத்துள் எழுந்தவை அல்ல.. 

என்னில் இரண்டறக் கலந்து

உணர்வோடு ஊறியவை.. 

மலையை மலைத்து பார்ப்பேன்.. 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் எண்ணங்கள் உதிக்கும்..

அதில் ஒரு சில ஓடிவந்து

இப்படி உட்கார்ந்து கொள்ளும்..! 

 

மாமலைப் போற்றுதும்.. 

மாமலைப் போற்றுதும்.. 

இது என் மலையதிகாரம்…!

 

கவிதையின் ஆசிரியர்

கவிஞர் பேரா ச. குமரேசன். 

தமிழ் உதவிப் பேராசிரியர், 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம். 

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

மணம் வீசும் மனம்|கவிதை|ச. குமரேசன்

மணம் வீசும் மனம்

மணம் வீசும் மனம்

தனிமை என்னை வாட்டியதில்லை… 

தாய் தவறிய பின் 

நான் தள்ளாடியபோதும்… 

தகப்பன் சாமியோடு

தந்தை சேர்ந்த நாளில்

தத்தளித்தபோதும்..!

 

துக்கம் தொண்டையை

கவ்விய வேளையில் – அதை

துச்சமாக தூக்கியெறி

இல்லையேல் – நீ

தூக்கியெறியப்படுவாய்..  

துவண்டு விடாமல்

தூணாகிவிடு என்றது அது… 

துடைத்தேன் கண்ணீரை

துள்ளியெழுந்தேன்..! 

 

எண்ணங்களை ஏணியிலேற்று!

ஏகாந்தத்தில் இலயித்துவிடு!

படைப்பின் இரகசியமறி!

பத்தரைமாத்து தங்கமாகு! 

ஆத்மாவின் ஆனந்தம் உணர்! 

ஆழ்மனதுள் ஊடுருவு! என்றது அது…. 

அழுகையை அப்புறப்படுத்தி

அழுக்கை அழகாக்கினேன்..! 

 

ஏன் நொறுங்கி போகிறாய்?

இது ஆப்கன் இல்லை

அதிர்ந்து விட.. 

ஈழம் இல்லை

இழந்து வாட..

சோமாலியா இல்லை

சோர்ந்து போக.. 

இரும்பாய் இரு –  நீ

இந்தியன் என்றது அது… 

இன்னல்களை விட்டெறிந்து

இனிமையானேன்..! 

 

நொடிப்பொழுதும்

நொடிந்துவிடாமல் – என்னை

பாதுகாக்கும் அது…. 

அது எது? 

 

அது

மட்டற்ற மணம் வீசும் என் மனம்…! 

மல்லிகையாய் மலரும் அது தினம்…!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன், தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

களத்துமேடு|கவிதை|ச.குமரேசன்

களத்துமேடு - குமரேசன்

களத்துமேடு

கள்ளம் கபடமும்

மேடு பள்ளமும் இல்லா

குட்டி மைதானம்..!

 

குழந்தை பருவத்தில் – அது

இரு கைகளைப்

பின்னோக்கி இழுத்துப்

புருவங்களை உயர்த்துமளவு பெரியது..!

 

அதிர்கட்டை கொண்டு

தனது வலிமை முழுவதும்

களத்தில் இறக்கி

காரையாக்கி

வைத்திருப்பார் அப்பா..!

 

தானியங்களோடு

கல், மண் சேர்ந்து

கலப்படம் ஆகுமென்று

மாட்டுச்சாணத்தால் மெழுகி

பளிங்காய் மாற்றியிருப்பார் அம்மா..!

 

கோடை முடிந்தால்

கடலையும், எள்ளும்

களம் புகும்..!

 

கார் முடிந்தால்

நெற்கட்டுகள்

ஆளுயர அடுக்கி நிற்கும்..!

 

பக்கத்து தோட்டத்துக்

காளைகளோடு தாத்தா – தன்

காளைகளையும்

கிருஷ்ணன் தேரோட்டும் 

குதிரைகள் கணக்காய் 

பிணைத்து களம் புகுவார்..!

 

நெற்கட்டுகளைப் பரப்பி 

எப்பிடி புனையோட்றம் பாரு?

பில்லுல ஒரு  நெல்லிருக்காது என்பார் !

 நெல்லடித்த வைக்கோல்

தாம்பு ஒரு

வட்டப்பாய்  வடிவம் பெறும்..!

 

களம் புகுந்த தாத்தா

இப்போது  போரிடத் துவங்குவார்.

 உயரத்தில் நின்று

 வைக்கோல் கொண்டு

களத்தின் ஓரமாய்..!

 

நாங்கள் குண்டுகளை

எறிந்து கொண்டிருப்போம் – களத்தில்

அம்மாவின் சத்தம் கேட்கும்

கோலிகுண்டு விளையாடாதடா

படிப்பு வராது..!

 

மூங்கில் முறத்தில்

நெல்லை அள்ளி

 காற்றுள்ளபோதே

தூற்றிக் கொண்டிருப்பார் அப்பா..!

 

 பதர் நீங்கிய நெல்லனைத்தும்

போரிட்ட தாத்தா மேல்

சமாதிகட்டியது போல் காட்சி தரும்..!

 

பகலில் பத்து மூட்டை

நெல்லானுலும் ஒரு சேர காயும்..!

 

இரவில் ராந்தல் வெளிச்சத்தில்

தாத்தாவோடு நானும் பாயும்..!

 

என்னைத் துணையாகக் கொண்டு

விண்வெளி ஆராய்ச்சி

செய்வார் தாத்தா !

 முடிவில் நட்சத்திரங்களுக்குப்

பெயர் சூட்டப்படும்…

 

இதமான தென்றல் வீசும்

தாத்தாவின் குறட்டை ஒலியோடு..!

நிலவின் ஒளவையை

மேகம் மூடியதும்

என் போர்வை என்னை மூடும்..!

 

மூட்டைகள் வீடு புகும்

களத்தில் ஆடுகள் கட்டப்படும்

கொடாப்பை விட்டு குட்டிகள் குதித்தோடும்..!

 

மாடுகள் தன் சாடியைத் தேடும்

பசுங்கன்றுகள் பாய்ந்தோடும்

தைத்திருநாள் பூசையும்

நீண்ட நாள் வைத்திருந்த ஆசையும்

களத்தில் நிறைவேறும்..!

 

ஆம்!  எங்கள் களமும்

போரும் பூசலும் நிறைந்ததுதான்..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

உதவிப்பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

 

மாட்டு வண்டி| கவிதை | ச.குமரேசன்

மாட்டுவண்டி

மாட்டு வண்டி

 

கண்களுக்கு

கையை குடையாய் கொடுத்து

எட்டிப்பார்ப்பார் தாத்தா

காளைகளின் சலங்கையோசை

காதில் விழும்..!

 

வண்டிக்காரன் வருவான்

அவனோட பள்ளிக்கூடம் போ..

என் பல்லெல்லாம் பகலாய் மாறும்.

கால்கள் இரண்டும் காற்றில் மிதக்கும்..!

 

புத்தகப்பையை

கோதாணியில் தூக்கிப்போட்டு

சக்கர சட்டங்களில்

சரசரத்து ஏறி

முளைக்குச்சியை

இறுகப் பற்றி – உச்சியில்

 உட்கார்ந்து கொள்வேன்..!

 

கம்பு மூட்டைகளும்,

கடலை மூட்டைகளும்

எனது சிம்மாசனம்.

காளைகள்

கடந்து செல்கையில்

பாதையோர மரங்கள்

பின்னோக்கி ஓடும்..!

 

மேலிருந்து – நான்

ஊரைச் சுற்றி பார்ப்பேன்.

ஊரே என்னைப் பார்ப்பதாய் உணர்வேன்..!

 

வண்டிக்காரர்

கயிற்றை இழுத்து

பள்ளிக்கூடம் வந்துவிட்டதென்பார்.

கூட்டாளிகள் கூட்டம் கூடி விடுவர்..!

 

நான் இறங்குவேன்

என் அரியணையிலிருந்து..

அருகில் வந்து கேட்பான் – நண்பன்

என்னையும் ஒருநாள் ஏத்திக்கடா..!

 

வாழ்வில் பல

போர்கள் புரிந்து

பேரரசுகளை கைப்பற்றி

இன்று திரும்பி பார்க்கிறேன்

என் அரியணை அரவமற்று போயிற்று

நான் யாருடன் போரிடுவேன்?

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி- குமரேசன்

களவாணி

கதிரொளி வீசும்

 கதிரவன் அழகு..!

 குளிரொளி கொடுக்கும்

திங்களும் அழகு..!

 

வெம்மையின் கதகதப்பு

இதமான உணர்வோடு..!

குளிரின் தன்மை

குதூகல உணர்வோடு..!

அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்

தன்மையையும் உணர்ந்து

அனுபவிக்கிறேன்..!

 

அவற்றோடு – நான்

தனிமையில் உரையாடுகிறேன் !

அவை  தொட முடியாத 

தொலைவில் அல்லவா உள்ளன !

அதனால் பல வண்ணங்களிட்டு

தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !

அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

 

இங்கும் ஒருத்தி – அப்படித்தான்

பார்வையாலே சுட்டெரிப்பாள் !

 

சிலசமயங்களில்

குதூகல குளிர்ச்சியாய்

வெட்கப் புன்னகை பூப்பாள் !

 

இவள் தொட முடியா

தூரம் ஒன்றும் இல்லை

அருகேதான் இருப்பாள்

அழகாய் அகத்தை

ஊடுருவி  – என்

உள்ளேயும் இருப்பாள் !

 

இவளோடு உரையாட

முடிவதில்லை..!

தனிமையின் தவிப்பிலும்,

தள்ளி நிற்கும் வேலையிலும்..!

 

இணைப்பு கம்பிகளால்

இணைத்தது போல 

அவளோடு இருக்கும் என் மனம்..!

 

எதிரே நின்றால்

யாரோ யாருடனோ

பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

 

யாரவள் திங்களா? தினகரனா?

கற்பனையிலும், கனவிலும் மட்டுமே

என்னோடு சிலாகிக்கும்

களவாணி..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

சாலம் பாய் கறிக்கடை |ப பிரபாகரன்|சிறுகதை

சாலம் பாய் கறிக்கடை

     சூரியன் உதிப்பதற்காகவே, சூரிய உதயத்திற்கு முன்பே, குறைந்தது ஒரு ஆட்டையும் ஒரு கோழியையுமாவது காவு கொடுத்து விடிவார். சிலேட்டிலும், கரும்பலகையிலும் சுண்ணாம்புக் கட்டிக்கொண்டு எழுதப்பட்டும், தாளில் அச்சிடப்பட்டும் கடையின் முன்னே தொங்கவிடப்படும் விலைக்கு ஒருபோதும் ஒருவரும் மறுப்பு தெரிவித்ததே கிடையாது; அப்படியே எழுதபட்ட தொகையைக் கொடுத்துவிட்டுக் கறியை வாங்கிச் செல்வார்கள். அந்த கறிக்கடையின் உரிமையாளர் பெயர் சாலம் உசைன் அப்துல்லா. எல்லோரும் சாலம் பாய் என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நினைத்து நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்த இவருக்கு என்று ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

            சாலையின் ஒருபுறம் விநாயகர் கோவில்; அந்த கோவிலுக்கு மணிக்கு குறைந்தது ஐந்து நபர்கள் வருவார்கள்; பயபக்தியோடு தோப்புக்கரணம் போட்டு ஏதேனும் வேண்டி விரும்பி முணுமுணுத்து பிறகுதான் போக வேண்டிய இடத்திற்கு போவார்கள்; இந்த விநாயகர் கோவிலுக்கு வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையைவிட, இதற்கு அடுத்தடுத்து உள்ள ஐந்துக் கறிக்கடைகளுக்கும் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். அதிலும் அங்கு உள்ள மூன்றாவது கறிக்கடைக்கு, வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! அதுதான் சாலம் பாய் கறிக்கடை.

            அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்போது நேரம் சரியாக காலை 10.30 மணி இருக்கும். வழக்கம்போல், அப்பாவும் மகன் பிபுவும் இறைச்சி வாங்க சாலம்பாய் கறிக்கடைக்குப் போயிருந்தார்கள். இவர்களுக்கு முன்னதாகவே மூன்று நபர்கள் (இரண்டு கிலோ எலும்புக்கறி, ஒன்றரை கிலோ கறி மற்றும் மூன்று கிலோ சிக்கன் என்ற வீதத்தில்) ஆர்டர் கொடுத்துவிட்டு அமைதியாக வரிசையில் காத்திருந்தனர்.

பிபுவின் அப்பா “வணக்கம் பாய், எப்படி இருக்கீங்க? பசங்கலாம் நல்லா படிக்கிறாங்களா?” என்று கேட்டார்.

“வாங்க சார். வணக்கம். அல்லா கருணையால் அல்லாரும் நலம். எங்க சார் ரொம்ப நாளா அளே காணோம்!” என்று சாலம்பாய் பதிலோடு கேள்வியும் கேட்டார்.

“என்ன பாய் மறந்துட்டிங்களா? போன வாரம் ஞாயிற்றுக் கிழமை கூட ஒரு கிலோ மட்டன், அரை கிலோ சிக்கன் வாங்கிக் கிட்டு போனேனே!” இன்னிக்கு ஒரு கிலோ மட்டன் மட்டும் போதும்பாய், அதை வாங்கதான் வந்துருக்கேன்” என்றார் பிபுவின் அப்பா.

சாலம் பாய், “அடடே… ஆமா, ஆமாம். சாரி சார். கொஞ்சம் ஞாபக மறதி. வயசாகுதுல. ஓகே சார். கொஞ்ச வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்” என்றார். ஒரு வழியாக ஆர்டரை கொடுத்துவிட்டு அவர்களும் அந்த வரிசையில் நான்காவதாக காத்திருக்க தொடங்கினார்கள்.

      அப்போது கறிக்கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம், சக்கரம் முறிந்து உடைந்துபோய் பயன்பாட்டிலே இல்லாத ஒரு தள்ளுவண்டி இருந்தது. அந்த தள்ளுவண்டிக்கு அடியில் பொழுது விடிந்தது கூட தெரியாமல் ஒரு நாய், “கண்களை மூடித் தூங்கி கொண்டுயிருப்பதனால், இந்த உலகம் முழுவதும் இன்னும் பொழுது விடியல, இப்படி இருட்டாகத்தான் இருக்கும்” என்று நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கி கொண்டிருந்ததை அப்பாவும் மகனும் நோட்டமிட்டுக் கொண்டு நின்றனர்.

      திடீரென அங்கு ஒருவர் பைக்கில் வந்து நின்றார். அவர் பைக்கை நிறுத்தவுமில்லை; வண்டியை விட்டு கீழே இறங்கவுமில்லை. பைக்கில் அமர்ந்து கொண்டே, பாய் “லேட்டாகும் போல, நமக்கு இரண்டு கிலோ போட்டு வச்சிருங்க; நான் கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போயிட்டு வருகிறேன்; மறக்காம நல்லா தொடைக்கறியா போடுங்க, அதோடு கொழுப்பும், ஈரலும் சும்மா கொஞ்மாக மருந்துக்கு வையுங்க” என்று கூறிக்கொண்டே கிளம்பிவிட்டார்.

“போட்டு வச்சிருக்கேன், போயிட்டு வாங்க சார்!” அப்படினு பாய் கூறிய பதில் பைக்கில் வந்துச் சென்ற நபருக்கு காதில் விழுந்து இருக்க வாய்ப்பெ இல்லை. காரணம் அவர் வந்தார்; சொன்னார்; சென்றார்.

     பிறகு அந்த கடைக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்த நபர் கீழே இறங்கி வேகவேகமாகவே கறிக்கடைக்கு வந்து பிபுவுக்கு பின்னே நின்றார். “பாய் ஒரு குடல் இருக்கா?” என்று வேகமாக பக்கத்தில் இருந்த கடைகளுக்கெல்லாம் கேட்கும்படியாக கத்தினார். கத்தி கேட்டவர் அப்படியே விட்டு விடவில்லை. காத்திருந்த எல்லோரையும் கடந்து, கறி வெட்டிக் கொண்டிருந்த சாலம்பாய்க்கு அருகில் உள்ளேச் சென்று அவர் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்.

     சாலம் பாய், கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு, மேசையின் மீது இருந்த அந்த ஒரே ஒரு குடலையும் எடுத்துக் கொடுத்தார். அப்படி என்னதான் சொன்னரோ? தெரியவில்லை. மேலும் அந்த பாய் அவரிடம் குடலுக்கான தொகையையும் வாங்கவில்லை.

      ஒருவருரின் காலிலே கொதிக்கும் எண்ணெயோ அல்லது கொதிக்கும் தண்ணீரோ பட்டுவிட்டால் எப்படி குதிப்பார்? என்று யோசித்துப் பாருங்கள். அப்படியே அச்சு அசல், அது போலவே அந்த குடல் வாங்க வந்த நபரின் செயல் நடந்து முடிந்தது. இப்படி அங்கு காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் அநேகர் வந்தும், சம்பவங்கள் பலபல நிகழ்ந்து கொண்டும் இருந்தது.

       ஒருவர் முதன் முதலாக இரண்டு கிலோ எலும்புக்கறி கேட்டு காத்து இருந்தார் அல்லவா! அவர் கேட்டது போலவே சூப் எலும்பு அல்லது நல்லி எலும்பு, நல்ல கறித்துண்டு, கொழுப்பு மற்றும் நெஞ்சு எலும்பு இப்படி எல்லத்தையும் எடுத்து தராசில் வைத்து அளந்தார். தராசில் சரியாக 2.025 கிகி என்று இருந்தது. அந்த எடையில் இலவசமாக சேர்த்த கொழுப்பு தான் இந்த 25 கிராம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். முதலில் சூப் எலும்புத்துண்டை எடுத்து கறி வெட்டும் கட்டையில் வைத்தார். பல ரது இடையூறுகள் அடிக்கடி வந்ததையும், சிலர் கண்ணெதிரே காத்திருப்பதையும் சாலம் பாயின் கண்கள் உணர்ந்தது. கைகள் தானாகவே எப்போதும் வெட்டும் வேகத்தை விட சற்று அதிக வேகத்தோடு கறியை வெட்டியது. அங்கு இருந்தவர்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை. வெட்டப்பட்ட எலும்புத்துண்டின் ஒரு பகுதி மேசையின் மீதும், மறுபகுதி நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகில் தரையிலும் வந்தும் விழுந்தது.

      எலும்புத்துண்டு விழுந்த சத்தம் கூட எங்களுக்குச் சரியாக கேட்டிருக்காது. அடுத்த கணமே சாலம் பாய், இந்தடீ… இந்தடீ. என்று அதிவேகமாக கணத்தக் குரலில் கத்தி அதட்டினார். என்னவென்று பார்த்தால், விழுந்த இடத்தில் எலும்புத்துண்டைக் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கல் மட்டும் உடல் முழுவதையும் பூமிக்குள்ளே மறைத்துக்கொண்டு, ஊசி போன்ற தலையை மட்டும் பூமிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் எலும்புத்துண்டை ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடுவதை சாலம் பாயுடன் சேர்ந்து எல்லோருமாக விரட்டுவதைக் கண்டனர். ஒரு நாய் கடைக்கு எதிரே தூங்கிக் கொண்டிருந்ததே அந்த நாய் தான் அது.

     நாய் தூங்கிக் கொண்டு தான் இருந்தது என்று பார்த்தால் நல்ல சூப் எலும்புத் துண்டு வெட்டும் சத்தத்தைக் கேட்டோ அல்லது வெட்டப்பட்ட எலும்புத்துண்டு கீழே விழுந்த சத்தத்தை கேட்டொ வேகமாக எழுந்து மின்னல் வேகத்தில் வந்து, அந்த எலும்புத்துண்டை கவ்விக் கொண்டுச் சென்றது; அங்கு இருந்தவர்களில் பிபுவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.  ஏனெனில் சிலவினாடிக்கு முன்பு தான் அவர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் நாயைப் பார்த்தனர் அல்லவா!

     கையில் கற்களை வைத்துக் கொண்டு அந்த நாயைத் துரத்திச் சென்றவர்கள், கல்லால் ஒரு அடி கூட அடிக்க முடியவில்லையே என்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அவர்களுடன் திரும்பி வந்த சாலம்பாய், “சரி விடுங்க போய் தொலயட்டும்!” என்று கூறி திரும்பினர்.

     அப்போது முன்பு எலும்புத்துண்டு விழுந்த இடத்தில் ஒரு சிறிய கல் இருந்தது தானே, அந்த கல் எதிர்பாராத விதமாக சாலம் பாயின் கட்டைவிரலை பதம் பார்த்தது. கட்டைவிரலின் மேல்பகுதியில் இருந்து இரத்தம் பீறிட்டு கசிந்ததை பார்த்ததும் ஏ! அல்லா! என்று கத்தி தன்னையறியாமல் கண்கள் கலங்கினார்.

       தினமும் விலங்குகளின் இரத்தத்தில் குளிக்கும் சாலம்பாய்க்கு அவருடைய இரத்தத்தைப் பார்த்ததும் அன்று எப்படி இருந்ததோ, பாவம்! வலியை சொல்லவும் முடியாமல் வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்கு ஆடிவிட்டார். ‘வெளியில சொன்னால் வெட்கக்கேடு’ என்று நினைத்து உள்ளுக்குள்ளே போட்டு புதைத்து விட்டார். அங்கு கறி வாங்க காத்திருப்பவர்களைக் கண்டதும் அவருடைய வலியானது “பாலைவனத்திலே விழுந்த மழைத்துளி போல” காணாமல் போனது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.ப பிரபாகரன்

இலால்குடி, திருச்சி

மேலும் பார்க்க..

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

பிபுகேர் ஏஜென்ஸி |சிறுகதை| ப.பிரபாகரன்

பிபு கேர் ஏஜென்ஸி

“ஐயயோ! இன்னிக்கும் லேட் ஆச்சு. எட்டு மணியாவ இன்னும் அஞ்சு நிமிடம் தான் இருக்கு. “எத்தன மணிக்கு எழுந்து வேலைய ஆரம்பிச்சாலும் இப்படித்தான் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்ப வேண்டியதாதான் இருக்குது”.

“இந்த காலை நேரம் மட்டும் எப்படித்தான் இவ்வளவு வேகமாக போகுதோ புரியல” இன்னிக்கு பஸ்ஸை பிடிப்பேனோ இல்ல விட்டுடுவேனோ? தெரியலயே” என்று நினைத்துக்கொண்டு சார்ஜ் போட்டிருந்த போனை எடுத்து பார்த்தாள் டனுஜா.

அந்தோ கொடுமை! போனை சார்ஜரில் செருகுவதற்கு முன்பு இருந்த அதே பத்து சதவீதம் தான் இப்போதும் இருக்கிறது. போனில் சார்ஜ் ஏறவேயில்லை. தலை நிமிர்ந்து பார்க்க, போனை செருகிய ச்விட்ச் ஆன் செய்யாது இருப்பதைக் கண்டு கடுப்பானாள்.

“ கால் வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, மேல்வயிற்றை காலியாகவே வச்சுகிட்டு, ‘இதெல்லாம் ஒரு பொலப்பு’ என்று புலம்பிக்கொண்டு வீட்டை விட்டு அலுவலகத்திற்கு அவசர அவசரமாக டனுஜா கிளம்பினாள். மேசையின் மீது இருந்த ஹேண்டுபேக்கை எடுத்து தோள்பட்டையில் தொங்கவிட்டு, கையில வாட்ச் கட்ட நேரம் இல்லாது வாட்சை எடுத்து ஹேண்ட்பாக்ல போட்டுக்கிட்டு “பஸ்ல போய் கையில் கட்டிகலாம்” என்றே நினைத்து வீட்டுக்கு வெளியில் வந்தாள்.

ஜன்னலில் எட்டிப்பார்த்த அவளுடைய இரு பிள்ளைகளுக்கும் பை பை என்று சொல்லி, பறக்கும் முத்தங்கள் இரண்டை கொடுத்து “சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்” என்றே நினைத்து செப்பல் ஸ்டாண்டில் செப்பலை குனிந்து எடுத்தாள்.

ஐயோ! நேத்துதான் ஆபிஸ்ல இருந்து வரும் வழியில் இந்த செப்பல் பிய்ந்து போனதே! வாங்கி மூணு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ளே இப்படி கிளிஞ்சு பிய்ந்து போச்சே! என்ன செய்வது? நல்ல வேளை அந்த பழைய செப்பல் இருக்கு, அதை போட்டுகிட்டு போய் இன்னிக்கு ஒரு நாள் ஒப்பேத்திடலாம் என்று எண்ணி, பழைய செருப்பை எடுத்து போட்டுக்கிட்டு பேருந்து நிற்கும் இடம் கண்ணில் தென்படும் தூரத்திற்கு விரைந்து வந்தாள்.
தினமும் அவளுடன் அலுவலகத்திற்கு வரும் இரண்டு நபர்கள், அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதைக் கண்டு, “அப்பாடா! நல்ல வேளை, பஸ் இன்னும் போகல” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பேருந்து நிறுத்தம் வந்து, நின்றிருந்த இருவருக்கும் ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு வாங்கிய பெருமூச்சை, சிறுமூச்சாக மாற்ற முயற்சித்தாள்.

ஹெண்ட்பேக்கை திறந்து வாட்சை எடுத்து கையில் கட்டினாள். மணி எத்தனை என்று கட்டிய வாட்சில் பார்த்தாள். இப்போதும் நேரம், எட்டு ஆக அஞ்சு நிமிடம் இருந்தது. நன்கு உற்று நோக்கினாள். வாட்சியின் நொடியை காட்டும் முள் முன்னும் பின்னும் ஆடி ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. ஒரு முறை வாட்சை தட்டியும் பார்த்தாள். எந்த பயனுமில்லை. ச்ச… இந்த ‘வாட்சியிலையும் பேட்டரி போச்சு’ போல என்று வாட்சியிடம் கோபித்தாள்.
அருகில் இருந்தவரிடம், சார் டைம் என்ன? என்று கேட்க, அவரோ “மேம், இன்னிக்கு பஸ்ஸு ஃப்வைவ் மினிட்ஸ் லேட். இப்போ சரியா நேரம் எட்டு மணி ஐந்து நிமிடம்” என்றார்.

சில விநாடிகளில் அலுவலக பேருந்து அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. கடைசியாக வந்தாலும் ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்’ என்பதால் ‘நான் தான் முதலில் ஏறுவேன்’ என்று அடம்பிடித்து முதலில் ஏறி ஜன்னலின் ஓரம் இடமும் பிடித்தாள். இப்போதுதான் அவளுடைய மூச்சுக்காற்று சீரான வேகத்தில் உள்ளும் புறமும் சென்று வந்தும் போயும் இருந்தது.
ஜன்னலின் வெளியே நல்ல மூச்சுக்காற்று வாங்க, கண்ணாடி கதவை மெல்ல மேலே தூக்கினாள். இதமாக வீசிய இளந்தென்றல் காற்று அவளுக்குள் ஏற்பட்டு இருந்த பதற்றத்தை பறக்கடித்தது. அவ்விடத்தை விட்டு பேருந்தும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

ஜன்னலின் வழியே எதிர்புறம் இருந்த டீ கடையில் டீ மாஸ்டர் டீ போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். சற்றே திடுக்கிட்டாள். மறுகணமே, அச்சச்சோ! மறந்தே போயிட்டேனே!

ம்ஹும்… இன்னிக்கும் அடுப்பில வச்ச பால மறந்துட்டேனே! எப்படி மறந்து போனேனே தெரியலயே. ஆம். டனுஜா, வேலைக்கு வந்த அவசரத்தில், அடுப்பை சிம்மில் வைத்து பாலை கொதிக்க வைத்தவள் மறந்து போய் அடுப்பை நிறுத்தாமல் வந்து விட்டாள்.

“பால் போறது கூட பரவாயில்லை. கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சு கேஸ் சிலிண்டர் முழுதும் தீர்ந்து போயிடுமே! இப்படி மாதத்தில் மூனு முறை ஒரு நாளுக்கு ஒரு சிலிண்டர் என்று செலவிட்டால் என்னிக்கு நாம் பொருளாதாரத்தில் முன்னேறுவது? இந்த நேரத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், ஐயோ! கடவுளே நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே!”

இப்படியெல்லாம் டனுஜா கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சுகிட்டு இருப்பதை புலம்பி தவித்து இருப்பாள் என்று பார்த்தால், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

இப்பதான் எல்லாம் அறிவியல் மயமாகி போனதே! இப்படி வீட்டில் மறந்து எரியவிட்ட சிலிண்டரை வெளியில் வேறு எங்காவது இருந்துகொண்டே ஆப் செய்வதற்கு இருக்கவே இருக்கு “பிபு கேர் ஏஜென்ஸி”. டனுஜா, கஸ்டமர் கேர் நம்பருக்கு ‘XXXX’ போன் செய்து அவளுடைய இணைப்பு நம்பரை கூறினாள். ட்ரிங் ட்ரிங் என்று ஒலித்து ஒரு மெஸேஜ் வந்தது. அதில் உங்கள் கேஸ் இணைப்பு எண் “YYYYY” பேராபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது. எங்கள் சேவையானது என்றும் எங்கும் எப்போதும் உங்களுக்கு தேவையானது” என்று பதிவிட்டு இருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன், திருச்சி



ஃபியூசிபெலஸ்| சிறுகதை | ப.பிரபாகரன்

ஃபியூசிபெலஸ்

என்னை கொஞ்சம் கிள்ளி விடுங்க. எனக்கு இது கனவா இல்ல வெறும் நினைவா அல்லது இரண்டும் இல்லாது நிஜமான்னு பெரிய சந்தேகமாக இருக்குது’ இப்படி பிபு பெருத்த சந்தேகத்தோடு அம்மாவிடம் கேட்டான். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் அம்மா விழிக்க, “அம்மா, எனக்கு ஃபியூசிபெலஸை எப்படி ஓட்டுவதுன்னு தெரிஞ்சுடுச்சு. யாருடைய தயவும் இல்லாமல் என்னால் தனியே ஃபியூசிபெலஸை ஓட்ட முடியுது” என்று பேரானந்தத்தோடு கூறினான்.

‘இது களைந்து போகும் கனவொன்றுமில்லை; நீடித்து நிலைத்து இருக்கும் நிஜம் தான்’ என்று அம்மா கூறுவதை கேட்டவுடன், பிபு தலைகால் புரியாது குதித்து மகிழ்ந்தான். வீட்டிலிருந்த பாட்டி, சித்தி, சித்தப்பா என்று எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தான். இறுதியாக தாத்தாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.  அப்போது தாத்தா பிபுவிடம் “ஃபியூசிபெலஸ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

ஐயோ! தாத்தா, உங்களுக்கு ஃபியூசிபெலஸ்னா என்னன்னு தெரியாதா? தாத்தா, இந்த உலகமே தனது வீரத்திற்கு ஈடாகாது என்று சொன்ன கிரேக்க நாட்டை சேர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரையோட பெயர்தான் ஃபியூசிபெலஸ். அந்த மாவீரனின் பன்னிரெண்டு வயதில் இருந்து இறுதி காலம் வரை நீடித்ததொரு புனிதமான உறவின் பெயர்தான் ஃபியூசிபெலஸ். அன்று அந்த மாவீரனுக்கு அவனுடைய தந்தை மாசிடோனியாவின் மன்னன் ஃபிலிப்ஸ், ஃபியூசிபெலஸை பரிசாக வழங்கியபோது அவருக்கு வயது பன்னிரெண்டு. எனது அப்பா, எனது பிறந்த நாள் பரிசாக அளித்தபோதும் எனக்கு வயது ஏழு. அதனால் தான் அலெக்சாண்டரின் குதிரையின் பெயரான ‘ஃபியூசிபெலஸ்’ என்பதையே என்னுடைய சைக்கிளுக்கும் பெயராக வைத்திருக்கிறேன்”என்று கூறிவிட்டு தரையில் கால் படாமல் தாவி குதித்து ஓடினான்.

பிபு எப்படியெல்லாம் சைக்கிளை ஓட்ட கற்று கொண்டோம் என்று யோசித்தும் நினைத்தும் உள்ளத்தில் பெருமிதம் அடைந்தான். முதன் முதலாக கற்றுக் கொண்டபோது அப்பாவிடம், “சைக்கிளை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். கைகளை எடுத்து என்னை தனியே விட்டு விடாதீர்கள்”. என்று பயத்தோடு கூறியதையும், இப்போது எதிரில் ஏதேனும் வாகனம் வருவதைக் கண்டவுடன் அப்பா பிபுவின் பாதுகாப்பு கருதி சைக்கிளை பிடிக்க வந்தால் கூட, உடனே பிபு ‘அப்பா, பிடிக்க வேண்டாம், கையை எடுங்கள், தனியே விடுங்கள்; நான்தான் கற்று கொண்டு விட்டேனே!’ என்று கூறி அப்பாவை விரட்டுவதையும் நினைத்துப் பார்த்தான்.

தினமும் தனது வீட்டில் இருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் உள்ள பெரிய ஏரிக்கரை வரை அப்பாவுடன் சைக்கிளைக் கற்று கொள்ள சென்று வருவான். ஆனால் இப்போது பிபு தன்னந்தனியே யாரும் பிடிக்காமல் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொண்டதன் பொருட்டு, தனியாக ஏரிக்கரை வரை சென்றுவர புறப்பட்டான். அந்த சாலையில் ஓரமாக தனது பிஞ்சு பாதங்களால் சைக்கிளை மகிழ்ச்சியுடன் அழுத்திக் கொண்டு சென்றான்.

இப்படி தனியே செல்லும் வேளையில், பிபுவின் கண்களின் இமைகள் இறகுகளை மூடி திறக்கும் ஒவ்வொரு முறையும், அப்பா கற்றுக் கொடுக்கும் போது சொல்லித்தந்த வழிமுறைகளையும், அப்போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் அசைப்போட்டுக் கொண்டு செல்லலானான்.

முதன் முதலாக பிபு சைக்கிளில் தனியே ஏறி ஓட்ட முயற்சி செய்த போது கீழே விழுந்தான். அப்போது நல்லவேளை எவ்வித அடியும் விழவில்லை. ஒரு வேளை அப்படி விழுந்த போது கொஞ்சம் அடி விழுந்து இருந்தால் கூட, நான் இப்படி சைக்கிள் முழுவதும் ஓட்ட கற்று இருப்பேனோ? தெரியவில்லை.

ச்ச, ச்ச… எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது? அப்படியே கால் தரையில் ஊன்றாமல் பறப்பது போலவே தோன்றுகிறது. வாவ், இப்போ டர்னிங் வருது உடனே பெல் அடிக்க மறக்கக் கூடாது; ட்ரிங், ட்ர்ங், ட்ரிங் … பெல் அடித்துவிட்டு சாலையின் இடது ஓரமாக பெருமிதத்தோடு சைக்கிளை ஓட்டிச் சென்றான்.

ஹா ஹா… இந்த இடத்திலேதான் அப்பா சைக்கிளை பிடித்து கொள்வதற்கு முன்பாகவே ஏறுகிறேன் என்று ஏறி, சைக்கிளில் ஏறியதும் இடமும் வலமுமாக சைக்கிளை ஆட்டி கீழே சாய்ந்து விழுந்தோம். அப்போது வலது முழங்காலில் கொஞ்சம் சிராய்ப்பும் ஏற்பட்டதே. “ப்பா, ப்பா…. என்ன எரிச்சல், இரண்டு நாளா வலியோடே நடந்தோம். எரிச்சல் வேறு. நல்ல வேளை அப்படி ஏற்பட்ட சிராய்ப்பு இப்போ தழும்பாக மாறியே போச்சு” என்று நினைத்துக்கொண்டு அந்த தழும்பு இருந்த இடத்தை ஒற்றை கையில் தடவி பார்த்தான்.

புதிதாக கற்றுக்கொண்டதால் பிபு சைக்கிளை ஓட்டும் போது நடு சாலையிலே ஓட்டிச் சென்றான். அப்படி செய்யக்கூடாது என்று பலமுறை அப்பா எச்சரிக்கையும் செய்திருந்தார். ஆனால் அது அவனுக்கு சைக்கிள் ஓட்டும் உற்சாக மிகுதியால் மறந்து திரும்ப திரும்ப சாலையின் நடுவே ஓட்டிகொண்டிருந்தான். அப்படி அந்த இடம் வந்ததும் பிபுவை ஒரு மௌனம் சூழ்ந்தது. 

ஒரு நாள் கற்றுக் கொண்டிருந்த போது பின்புறமாக ஏதோ இரு சக்கர வாகனம் வருகிற சத்தம் கேட்க, பிபு சைக்கிளை இடது ஓரமாக ஓட்ட ஆரம்பித்தான். பின்னர் அந்த வாகனம் அவனை கடந்து முந்தி முன்னேச் செல்வதை கண்டு, மீண்டும் சைக்கிளை நடு சாலைக்கு திருப்பினான். அப்போது இரண்டாவதாக பின்னே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் சர்ட், கிரீச்…என்று பிரேக் அழுத்தி டயர் தேய்ந்த சத்தம் கேட்டது. ஜெஸ்ட் மிஸ். இரண்டு வண்டிகள் ஒன்றன் பின்னாக ஒன்றாக வரும் போது சத்தம் ஒன்றாக மட்டுமே கேட்கும் போல என்பதை உணர்ந்தான். அந்த நபர் வேறு அப்பாவை திட்டிவிட்டு சென்றார். ச்ச, ச்ச அன்றில் இருந்துதான் சைக்கிளை மிகவும் கவனமாக ஓட்ட ஆரம்பித்தோம்ல. 

இவ்வாறாக அப்பா சொல்லிக் கொடுத்த எல்லா மந்திரங்களையும் தந்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வந்த வண்ணமாகவே பிபுவின் பயணம் பெரிய ஏரிக்கரை வரை தொடர்ந்தது. வீட்டிற்கு திரும்ப நினைத்து சைக்கிளை வட்டமிட்டுத் திருப்பினான்.

எதிபாராத விதமாக திடீரென்று பட்டென்று ஒரு சத்தம் காதுகளில் ஒலித்தது. பாதங்கள் அழுத்தும் பெடல்கள் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது. என்னடா இந்த சோதனை? பிபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா சொல்லிக்கொடுக்காத ஏதோ ஒன்று நடந்ததை எண்ணி அச்சமுற்றான். தனியாக வந்த அவனுக்கு சற்று திகிலாக இருந்தது.

பிபு சிறிதும் யோசிக்காமல் மறுகணமே சைக்கிளில் இருந்து குதித்து விட்டான். சைக்கிளின் கீழே சக்கரத்தை பார்க்க எப்போதும் செயினின் இருமுனைகளும் இணைந்து இருப்பதை பார்த்திருந்த பிபுவுக்கு இன்று ஒரு புதிய அனுபவம். சைக்கிளில் செயின் கட் ஆகி ஒரு முனை தரையை தொட்டும் மறுமுனை சைக்கிளில் சிக்கியும் இருக்கக் கண்டான். எப்படியாவது ‘தள்ளிக்கொண்டே வீடு வரை சென்று விடலாம்’ என்று ஆயத்தமானான். சைக்கிளின் செயின் அறுந்து விட்டதை உணர்த்த கட கட கட என்று சைக்கிளும் அழுது கொண்டே வீடு திரும்பியது. புதிதாக முளைத்த புதிருக்கு விடைத்தெரியாது பிபுவும் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் சென்றான்.

பிபு அழுது தேம்பும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா, பிபு என்ன ஆச்சு, என்ன ஆச்சுப்பா! என்று படுக்கையறையில் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பிபுவை தட்டி அதட்டி எழுப்ப முயற்சித்தார். பிபுவின் தூக்கம் தெளிந்து, கனவு களைந்து போனது; எல்லாம் வெறும் கனவா! அல்லது கனவிலும் கனவா! இன்று அவன் தனியாக சைக்கிள் ஓட்டியதாக கண்ட அந்த கனவு பலிக்குமா அல்லது பலிக்காதா என்ற கேள்வியோடு படுக்கையை விட்டு எழுந்து ‘அப்பா, ஃபியூசிபெலஸை ஓட்ட போலாமா’ என்றான்.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன் , திருச்சி

தூவானம் | சிறுகதை | கோ.ஆனந்த்

தூவானம் - கோ.ஆனந்த்

          தூறல் நின்றபாடில்லை.அலுவலக வாசல் ஒட்டிய சாலையோர மின்விளக்கின் இளமஞ்சள் ஒளியினால் தங்கத் துகள்களாய் சிதறிய தூறலின் அடர்த்தி குறையக் காத்துக்கொண்டிருந்தேன்.சிரமம் பார்க்காமல் குடையை பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் இப்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் கூட கூடுதல் சுமையாகத் தெரிகிறது.வயதாகி விட்டால் உடல் கூட சுமை தான்.அலுவலகத்திலிருந்து பஸ் நிறுத்தம் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். நனைந்தபடியே ஓடி விடலாம்.ஆனால் நாளை வரும் தும்மலையும் ஜலதோஷத்தையும் யார் தாங்குவது?. சாலையில் வடியாமல் குளம் போல நிற்கும் தண்ணீர் வேறு பயமுறுத்தியது.இங்கேயே இப்படி இருந்தால் வீட்டருகே எப்படியிருக்கும்?அதுவும் ஏற்கனவே கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்? நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது.தூறல் சற்றே குறைந்த நேரத்தில் கைப்பையையே குடையாக்கி விரைந்து சென்று பஸ்ஸைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

          நினைத்தவாறே வீட்டின் வாசலில் கழிவு நீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கியிருந்தது.சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல செங்கற்கள் போட்டு மேடாக்கி வைக்கப் பட்டிருந்தது. அநேகமாக எங்கள் ஹவுஸ் ஓனர் நாராயணன் தான் அப்படி செய்திருக்க வேண்டும்.கொட்டும் மழையில் கம்பி மேல் நடக்கும் தெருக்கூத்தாடி போல் செங்கல் வழுக்கிவிடாமல் இருக்க பேலன்ஸ் செய்தவாறே நடந்து வாசலைக் கடந்து சென்றேன்.மழை இப்போதைக்கு விடுவதாய் தெரியவில்லை.கீழ் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.நாராயணன் குடும்பத்தார் உறங்கியிருக்க வேண்டும்.குடும்பத்தார் என்ன குடும்பத்தார்?தம்பதியர் இருவர் மட்டுமே அவர்கள் குடும்பத்தில்.

          நாராயணன் சாருக்கு ஒற்றை நாடி. அதென்னவோ சொல்லி வைத்தாற்போல் அவருடைய மனைவி சூடாமணிக்கு இரட்டை நாடி. இவர்களின் ஒரே மகன் திருமணமாகி ‘யுஎஸ்ஏ’ வில் செட்டிலாகி விட்டிருக்க,இருவரும் தங்கள் ஒரே சொத்தான இந்த வீட்டின் மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு,பிழைப்பையும்,காலத்தையும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

         இந்த கழிவுநீர் பிரச்சனையால் நேற்று சாயந்திரத்திலிருந்தே நாராயணன் சாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே?வாசல் பக்கம் போகவே முடியவில்லை. மூக்கைத் துளைத்து உள்ளிறங்கியது கழிவுநீர் நாற்றம்.நாங்கள் மாடியில் குடியிருப்பதால் தப்பித்தோம்.

       குடித்தனக்காரர்களான எங்களுக்கு போக வர வீட்டின் இடதுபுற சுற்றுச் சுவரையொட்டி படிக்கட்டும், காம்பவுண்ட் கேட்டும்.சொந்தக்காரர் நாராயணனுக்கு கீழே விஸ்தாரமான ஹால் மத்தியில் வாசல் கதவும்,நேர் எதிரே காம்பவுண்ட் கேட்டும்.வீட்டின் வலதுபுறம் இருவீட்டாரின் கழிவுநீர்க் குழாய்கள் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்று மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையில் இணைகின்றன.அங்கு தான் சிக்கல். இரண்டு நாட்களாக எங்கோ அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீட்டிலிருநது வெளியேறும் இடத்தில் போடப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பின் மூடி வழியாக வழிந்து கொண்டிருந்தது.

      நாராயணன் அவரால் முடிந்தவரை குளியலறை மற்றும் கழிவறைகளில்  நிறைய நீர் வேகமாக ஊற்றிப் பார்த்தார்.எங்களையும் அவ்வாறே செய்யச் சொன்னார்.எல்லாம் சேர்ந்து இன்னும் அதிகமாக கழிவு நீர் வழிந்ததே தவிர அடைப்பு நீங்கியபாடில்லை.நல்ல வேளையாக எங்களுக்கு இடது புற வாசல் என்பதால் சிரமம் குறைவாக இருந்தது.எனினும் நாற்றத்திற்கு பயந்து எங்களுடைய படுக்கையறை சன்னல்களைத் திறக்க முடியாமல் உள்ளே வெந்து கொண்டிருந்தோம்.

          காலையில் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் “கார்ப்பரேஷனில் சொல்லி வைத்தால் வந்து சரி செய்வார்களே” என்றதற்கு.”வருவான்,ஆனா பிடுங்கிடுவானே” என்று முகம் கோணினார்.”வேற வழியில்லையே அடைப்பை சரி செஞ்சாகனுமே” என்றேன்.”அது எனக்குத் தெரியாதா” என்பது போல் லேசாக முறைத்துப்பார்த்தபடி ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே “கோவிந்தன் இருக்கானான்னு பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட அடைப்பையும் எடுத்துடுவான்’என்று சொல்லிவிட்டு செல்போனைத் தேடி உள்ளே போனார்.நானும் கிளம்பி வந்து விட்டேன்.கோவிந்தன் கிடைத்தாரோ இல்லையோ தெரியவில்லை.அலுவலக வேலையில் இதைச் சுத்தமாய் மறந்திருந்தேன்.

       நான் காம்பவுண்ட் கிரில் கேட் திறந்த சத்தம் கேட்டு வெளியே வந்த நாராயணன், “மழையில மாட்டிக்கிட்டீங்களா.குடை கொண்டு போயிருக்கலாமே” என்றவர்,என் பதிலுக்கு காத்திராமல்.நல்லவேளை சார் கோவிந்தனைப் பிடிச்சிட்டேன். நாளைக்கு ஊருக்குப் போறதா இருந்தானாம். நம்ம வீடுன்றதால காலம்பற வர்றேன்னு ஒத்துகிட்டான்”  என்றார் வாயெல்லாம் பல்லாக.அவருடைய சந்தோஷத்தில் பங்கேற்கும் விதமாக நானும் ஒரு அசட்டுப் புன்னகை புரிந்துவிட்டு வந்தேன்.

       எப்படியோ பிரச்சனை சரியானால் நாளையாவது ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கலாம் என்றெண்ணி மாடிப்படி ஏறி மேலே போனேன். “என்னவாங்க?” என்ற மனைவியிடம், ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டாராம்.நாளைக்கு அடைப்பு சரியாகிடும்னு நினைக்கிறேன்.ஆனா அந்த ஆள நினைச்சாத் தான் பாவமா இருக்கு.இவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போறார்.வேலையும் நல்லா வாங்குவார். காசும் தர மாட்டார்” என்று பெருமூச்செறிந்தவாறே சாப்பிட அமர்ந்தேன்.

     “சூடாமணி, கோவிந்தன் வந்தாச்சு”.நாராயணனின் குரல் ஞாயிற்றுக்கிழமை காலை காபியை ருசித்துக் கொண்டிருந்தவன்  காதில் விழுந்தது. வாசல் வந்து பார்த்தபோது வானம் தெளிவாய் தெரிந்தது. மழை சுத்தமாக விட்டிருந்தது.பரவாயில்லை வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் இருக்கும்.

        டிஃபன் முடித்து கீழிறங்கிச் சென்றேன். “அந்த பைப்ப கொண்டா சார்” என்றவாறே கழிவு நீர் பாதையில் திறந்து பார்க்கப் பொருத்தப்பட்ட மூடிகளைத் திறந்து அடைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். நான் மூக்கைப் பொத்தியவாறே அருகில் சென்றேன். “வா சார்,புதுசா குடி வந்துகீறீங்களா?” என்று வெற்றிலை வாயோடு சிரித்தவாறே கேட்டார். “ஆமாம்” என்று தலையசைத்தவாறே,நாற்றம் தாங்காமல் நழுவ முயன்றவனை,”பாலா சார் ஒரு நிமிஷம்”என்ற நாராயணன் குரல் தடுத்தது.”இந்தா கோவிந்தா பைப்” என்று அடைப்பு நீக்க உதவ ஒரு நீள பைப்பை கொடுத்து விட்டு என்னிடம் வந்தார்.

      “சார் கொஞ்சம் இப்படி வாங்கோ” என்று சற்று தள்ளி அழைத்துச் சென்று, “விடியற்காலைல ஒரு துக்க செய்தி. கண்டிப்பா போயாகனும்.நல்ல வேளயா மழை விட்டிருக்கு. போயிட்டு தலைய காட்டிட்டு வந்துட வேண்டியது தான்.இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. உங்களுக்கு லீவு தானே? கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கங்க.எவ்வளவு நேரமானாலும் முடிக்கிற வரை விடாதீங்க.முடிச்சவுடன் ஐநூறு கொடுங்க.நான் 250, நீங்க 250.(ஐயோ இது என் லிஸ்ட்லேயே இல்லியே) மேல கேப்பான்.அவ்ளோ தான்னு கறாரா சொல்லிடுங்க” என்று சொல்லிக் கையில் தயாராக வைத்திருந்த 250 ரூபாயைக் கொடுத்தார்.பின் கோவிந்தனிடம் சென்று விஷயம் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

     வேறுவழியின்றி மேலே சென்று மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, அவள் முறைத்ததைக் கண்டும் காணாதது போல கடந்து வந்தேன்.

       இதனிடையே தன்  ஆராய்ச்சியெல்லாம் முடித்திருந்த கோவிந்தன் “சார் மேல,கீழ எல்லாம் சரியா இருக்குது.இந்த பக்கத்திலிருந்து தொட்டிக்குப் போற பைப்பிலயும் அடைப்பில்லை. தொட்டியிலிருந்து கார்ப்பொரேஷன் பைப்புக்கு போற வழியில தான் அடைச்சிகிட்டிருக்கு” என்று தன் முதல் கட்டத் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

     பிறகு அந்த தொட்டியிலிருந்து வெளியே செல்லும் குழாய் முனையை அடைப்பு நீக்கும் பைப்பை வைத்துத் துழாவிக் கண்டுபிடிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த தொட்டி முழுவதுமாக கழிவு நீர் தேங்கியிருக்க குழாய் முனையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஒரு பக்கெட் குடு சார்” என்று கேட்டு வாங்கி, தேங்கியிருந்த நீரை எடுத்து தோட்டம் பக்கம் ஊற்றினார்.”வேற வழியில்ல சார்.வெளிய ஊத்தினா அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க சண்டை போடுவாங்க.நீங்க தான் கொஞ்சம் பொறுத்துக்கனும்.நான் போறப்போ பினாயில் ஊத்திட்டுப் போறேன்” என்றார்.

        வேலையினூடே “சாருக்கு எத்தனை பசங்க?என்று கேட்டார்.நான் “ரெண்டு.பையன் ஒண்ணு.பொண்ணு ஒண்ணு” என்றேன்.”நமக்கு ஒரே ஒரு புள்ளைங்க.பன்னென்டாவது படிக்கிறான்”என்றார்.

       அவர் வெறுங்கையுடன் பக்கெட்டால் கழிவு நீரை இறைத்து ஊற்ற ஊற்ற ,மேலும் நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது.ஒரு கட்டத்தில் கையால் எட்ட முடியாத அளவு நீர் இறங்கி விட, சட்டென்று அந்த சிறு தொட்டியில் இறங்கி பக்கெட்டை நிரப்பி மேலே வைத்துவிட்டு ஏறி அந்த நீரைத் தோட்டத்தில் ஊற்றினர்.இதே போல நாலைந்து முறை செய்தபின் நீர் சற்று வடிந்து தரை தெரிந்தது.அதற்குள் அவர் உடலெங்கும் கழிவுநீர் அபிஷேகம்.

‘குடிக்க கொஞ்சம் தண்ணி குடு சார்”

       உபயோகமற்ற பழைய தண்ணீர் பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்து அதில் நீர் பிடித்து வந்து, அவர் கையை நீட்டி வாங்க முற்படுமுன் தரையில் வைத்து எடுத்து கொள்ளச் சொன்னேன்.

        தண்ணீர் குடித்து முடித்ததும், அடைப்பு நீக்கும் பைப்பைக் குழாயினுள் நுழைக்க முயன்றார்.வளைவாக இருந்த பைப் செங்குத்தான தொட்டியில் இறங்கி வெளியே செல்லும் குழாயினுள் நுழைய அடம் பிடித்தது.வளைவை நீக்கினால், குழாயிலிருந்து வெளியே வந்தது. குழாயினுள் நுழைத்தால் வளைவாக சுருண்டு கொண்டு மேலே நுழைய மறுத்தது.பாவம் இப்படி ஒருத்தராக கஷ்டப்படுவதற்கு,அவர் பையனையும் கூட்டி வந்திருந்தா கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

      ஒருவழியாக வளைத்து, நெளித்து குழாயினுள் நுழைத்து குத்த ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து, களைப்பாய் “எங்கயோ இடிக்குது சார்.மேல போக மாட்டேங்குது.மணி என்னா சார்? என்று கேட்டார்.

” இரண்டு” என்றேன்.

      ‘சரி சார்.சாப்பிட்டு வந்து பாக்கிறேன்.ஒரு நூறு ரூபா தாங்க” என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்பக்கம் சென்றார்.

    “ஐயோ இந்த நூறு எந்த கணக்கில சேரும்?நாராயணன் இதப் பத்தி சொல்லவே இல்லையே’என்று மனதிற்குள் புலம்பியவாறே நூறு ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன்.

       நான் மறுபடி கீழிறிங்கி வந்த பார்த்தபோது,பார்சல் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தும்.பீடியை அவசரமாக எறிந்து விட்டு வேலையை ஆரம்பித்தார்.

         சாப்பிட்ட தெம்பில் நான்கைந்து முறை வேகமாக குத்தியதில் பைப் அடைப்பை நீக்கி சரசரவென வேகமாக உள்ளே நுழைந்தது.”சார் தொறந்துகிச்சி.நீங்க போய் நிறைய தண்ணி ஊத்திப் பாருங்க” என்றார்.நானும் அவ்வாறே ஊற்றி விட்டுப் பார்க்க தண்ணீர் எங்கும் நிற்காமல் வேகமாக வெளியேறி நிம்மதியளித்தது.

    கோவிந்தன் தான் உபயோகப்படுத்திய பொருட்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு, திறந்த தொட்டிகளையெல்லாம் மூடினார்.பின் தரையைக் கழுவி, பினாயில் தெளித்து விட்டு குளித்து முடித்துக் கிளம்பினார்.

       அவரிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன்.”என்னா சார் எவ்ளோ வேல வாங்கிச்சி பாத்த இல்ல?” போட்டு குடு சார் என்றார்.’இன்னுமா ? சாப்பாட்டுக்கான  காசையே நாராயணனிடம் எப்படி பேசி வாங்கறதுன்னு தெரியல’ என்று எண்ணியவாறே “அவ்வளவு தாம்பா அவர் குடுக்க சொன்னாரு.வேணுன்னா அவர் வந்தப்பறமா வந்து கேட்டுப் பாரு”என்றேன்.உடனே பேச்சை மாற்ற வேண்டி “ஊருக்கு போறதா இருந்தீங்களாம்?” என்றேன்.

“ஆமா சார்.புள்ளயப் பாக்க போலாம்னு இருந்தேன்.சார் கூப்பிடவே வந்தேன்.புள்ளய நான் நாளைக்கு கூட போய் பாத்துக்கலாம்.பாவம் இந்த நாத்தத்தில நீங்க எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்றார் கரிசனத்துடன்.

“புள்ள உங்க கூட இல்லையா?படிக்கிறான்னு சொன்னீங்க’

         “ஆமா சார்.ஊர்ல படிக்கிறான்.இங்க இருந்தா,என்ன வேலைக்கு கூப்பிடறவங்க புள்ளையையும் கூட்னு வாயேன் ஒத்தாசைக்குங்கிறாங்க. ஒவ்வொரு நாள் எனக்கு உடம்பு முடியல வேற ஆள் வச்சி பாத்துக்குங்கன்னு சொன்னா ஏன் உம் புள்ள செய்ய மாட்டான்? அவன அனுப்பேன்றாங்க சார். எதுக்கு சார் அந்த புள்ளைக்கு இந்த நாத்த பொழப்பு?இது நம்மோடேயே போவட்டும்னு தான் என் மாமியார் ஊட்டுக்கு அனுப்பி நிம்மதியா படிக்கட்டும்னு விட்டுட்டேன்.காலேஜ் போய் படிக்கனும்றான்.படிடானு சொல்லியிருக்கேன்.நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். வரட்டா சார்”.

      யாரோ என்னைப் பளாரென அறைந்தார் போலிருக்க அவருக்கு “சரி’ என்பதாக தலையைக் கூட அசைக்க முடியாமல்   கூனிக்குறுகி உறைந்து போயிருந்தேன் நான்.

“சொட்,சொட்’ என்று மறுபடியும் தூறல் போட ஆரம்பித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

கோ.ஆனந்த்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »