Saturday, April 4, 2026
Home Blog Page 28

கிருகபதி – கிருகிணி |கவிதை|பிரபுவ

கிருகபதி - கிருகிணி

கிருகபதி – கிருகிணி

இரவெல்லாம் ஜொலித்த

விண்மீன்களை மறைத்து

காரிருளை விளக்கிட

கீழ்திசையில் சுடர்மிகும்

பொலிவுடன் ஒளிர்ந்தே

புதுப்பிறவி எடுத்து

பிறந்தது ஆதவன்!

 

எங்கோ பிறந்து

எங்கோ வளர்ந்து

நிலையில்லா உலகிலே

நிலையில்லாத ஒன்றைத்தேடி

நித்தம் நித்தம்

நிலையில்லாது அலைந்து

அநாதையாய் இறுதியில்

ஆதரவில்லாது  இறந்திட்டார்

அங்கே ஒருவர்.

 

இழவுவீட்டில் ஒலித்ததே!

தாரை தப்பட்டைகளின் சத்தம்

மெல்லிய கீதமாக இசைத்ததே

எங்கோ தூரத்திலிருந்து.

 

பத்துவீடுகள் தள்ளியிருக்கும்

பெரியதொரு மழைமரத்தின்

கிளையிலே குடியிருந்த

உயிரினங்கள் யாவுமே

பொழுது விடிந்தது;

பொழப்பை பாருங்களென்றே

ஆர்பரித்து கூச்சலிட்டது.

 

பக்கத்து வீட்டு நீர்க்குழாயில்

வைத்த குடம் தண்ணிர்

வழிந்து ஜோவென்று

அழுது கொண்டிருக்க,

 

வீட்டின் உள்ளே உள்ள

மின்விசிறியானது

இளந்தென்றல் காற்றை

நுழையவிடாது

ட்டட, ட்டட என்றே

தடைபோட்டே தாளமிட்டது.

 

கடந்துசெல்லும் நேரத்தை

காணமுடியாது போயினும்

காதுகளால் உணர்த்திடவே

டிக், டிக், டிக் என்று

கடிகார முள் ஓசை

செவிகளை செவிடாக்காமல்

ஓசை எழுப்பியது.

 

சமையலறையில் மிக்சி

ஒருபுறம் உய்ய்ய்ய்ய்…

என்று எரிச்சலூட்டிட

குக்கர் மறுபுறம்

உச்ஷ்ஷ்ஷ்…

என்று கடுப்பேத்தியது.

 

இப்படி அனைத்தையும்

கேட்டு கொண்டே

படுக்கையிலே இருந்து

பாதி துயில் தெளிந்து

மீதி துயில் தெளியாது

கிரக்கத்தில் இருந்தார்

கிருகபதி என்னும்

மாண்புமிகு தலைவன்!

 

அப்போது கிருகிணி என்னும்

மானமிகு தலைவி

பக்கம்வந்து பக்குவமாய்

படுக்கையிலே அமர்ந்து

இதமாக உரசினாள்!

இனிதே காலை

ஸ்பரிசத்தை அனுபவித்திட.

 

பட்டென்று கோபம்

பத்திக்கொண்டு வந்திடவே!

எழு, தூரம் சொல்!

தூக்கம் கலைக்காதே!

தொலைந்துபோ, சனியனே!

என்று அப்போது

சிடுசிடுத்தான் கிருகபதி.

 

என்னது? எங்க? கொஞ்சம்

இன்னொருமுறை

சொல்லுங்க? பார்க்கலாம். 

உம்பல்லை உடைத்து

உம்கையில் கொடுத்திடுவேன்!

 

மாலைநேர மயக்கத்துக்கு

மதுவாகிய நான்!

காலைநேரம் வந்ததும்

சனியனாகி விட்டனோ!

 

மாலைமாயமாய் போனதும்

காலை பொழுதில்

காரியமொன்றும் இல்லாதுபோமோ!

காரியம் ஆகும் வரை

கண்ணே! கண்மணியே!

கலைமகளே! கட்டிக்கரும்பே!

என்றே என்னை வர்ணித்து

புகழ்பாடி கால்களை

பிடித்து அமுக்கி

காரியம் சாதித்திட்டீர்!

 

காரியம் முடிந்ததும்

ஏனோ இப்போது

கண்ணால் பார்க்கவும்

கதியில்லாத கலையிழந்த

மகளாகி போனேனோ!

 

நீர்! நல்லா ஞாபகம்

வைத்துக் கொள்ளும்!

மாலைநேரம் மீண்டுவரும் – உமக்கு

மதி மயங்கும் மயக்கமும் வரும்

எனக்கு நல்ல தூக்கமும் வரும்.

 

அப்போது உம்மைப்

பார்த்துக் கொள்கிறேன்.

எட்டியுதைக்கும் கழுதையா மாறியே

எட்டி எட்டி உம்மை உதைக்கிறேன்.

வாருங்கள் பார்க்கலாம் என்றே

மணம்புரிந்த மணவாளனிடம்

மல்லுக்கு நிற்கபோவதில்லை.

 

மனதில் தோன்றியதை

மனதோடு புதைத்துச்

சொன்னாள்.

 

ஆசையாய் அருகில் வந்தால்

ஆசையை காட்டும். அல்லவே!

அமைதியாய் இருந்திடும்.

 

வன்சொல் தவிர்த்து

இன்சொல் பேசிடுவீர்!

இன்சொல்லே மீண்டும்

உம்மை தேடி வரும்.

 

காரண காரியம் ஏதுமின்றியே

வாழ்வதாகவே உறுதிக்க்கொண்டு

கரம்பிடித்தீர்; கண்அவனாக.

பிரபஞ்சம் முழுவதுமுள்ள

இன்சொல் யாவும்

இனிதே வந்து சேரும் உம்மையே!

என்றாள் கிருகிணி!

 

 குறிப்பு

கிருகபதி – இல்லறத்தான்; குடும்பத்தலைவன்

கிருகிணி – இல்லாள்;

குடும்பத்தலைவி

மழைமரம் – தூங்கமுஞ்சி மரம்

ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

 

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

 

சந்திரப்பூவா | திருமதி நித்யா லெனின்| சிறுகதை

சந்திரப்பூவா - நித்யா லெனின்

  சந்திரப்பூவா

       கிழக்குப் பாத்த வாசப்படி. காலையில வெயில் அடிச்சுதுன்னா நேரா வீட்டுக்குள்ளே சுள்ளுன்னு அடிக்கும். தென்னங்கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீடுதான் சந்திரப்பூவாவின் வீடு. வீட்டுக்கு முன்னால் சின்னதாய் களம். இடதுப்பக்கம் தண்ணீர் தொட்டியும் குளிக்க சின்னதாய் மறைவு இடமும் உண்டு. அந்தத் தண்ணீர் வீணாவதைத் தடுக்க வாழை மரங்கள்,  செம்பருத்தி செடி, மருதாணி செடிகளின் வேர்களில் பாய்ந்து செல்லும். வலதுபக்கம் கூடாரகூடாரமாய் சாணங்கள் கொட்டிக்கிடக்கும்.  இடப்பக்கம் வீட்டின் வாசற்படி குறுகியபடிதான் இருக்கும். வாசற்படியை அடுத்து வலதுபக்க சுவர் முழுவதும் சாணத்தால் தட்டிய வரட்டி குண்டாலம் குண்டாலமாக வட்டமாய் பதிந்து இருக்கும். அந்த வீட்டின் சுவரானது எப்போதும் வரட்டியைச் சுமந்த அமாவாசையாகவே காட்சி அளிக்கும்.
     இப்போது கூட சந்தரப்பூவா சாணியைத்தான் தட்டிக்கொண்டிருக்கிறாள். சின்ன கூடையில் ஒரு அளவாகச் சாணத்தை எடுத்துக் கொள்வாள். லேசான தண்ணீர் தெளித்துக் கோதுமை மாவு பிசைவதுபோல் நன்றாகப் பிசைந்து கொள்ளுவாள். பிறகு சமநிலையாக ஒவ்வொரு உருண்டையாகப் பிடித்துக் கொள்வாள். ஒரு கூடையில் சுமார் இருபதிலிருந்து இருப்பத்தைந்து வரையிலான உருண்டைகள் வரும் அளவிற்கு பிடித்துக்கொள்கிறாள்.
      பிடித்து வைத்திருந்த உருண்டைகளைச் சுவற்றின் ஒரு ஓரத்திலிருந்து தட்டிக்கொண்டே வர வேண்டும். சந்திரப்பூவாவும் உருண்டை சாணத்தை எடுத்து செவுத்திலே அறைந்து நன்றாகத் தட்டி சாணத்தை விரித்துக் கொள்வாள். அதன்பிறகு தட்டிய சாணத்தை எடுத்து வரிசையாகச் செவுத்திலே காயவைத்து விடுவாள். இன்றைக்கு என்னவோ தெரியவில்லை சந்திரப்பூவாவின் எண்ண ஓட்டங்கள் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்க கைகள் மட்டும் தானாக வரட்டி தட்டிக்கொண்டிருந்தது.
“சந்திரப்பூவா என்ன பன்ற” பக்கத்து வீட்டுக் கிழவி ஆராயிதான் நலம் விசாரித்தாள். ஆராயி ரெண்டு மூனு கூப்பாடுக்குப் பிறகே நினைவு திரும்பியவளாய்,
“ஏய் கிழவி! நான் என்ன பன்றன்னு உனக்கு தெரியல” என்றாள்.
“தெரியுது.. தெரியுது… ஆனா உடம்பு இங்கிட்டுதான் இருக்கு. மனசுதான் எங்க இருக்குன்னு தெரியல. உருண்ட புடிக்கிற கை நோவப்போவுது பாத்துப் பதுமானமா புடி புள்ள” ஆராயி கிளவியின் பேச்சில் விஷமம் இருந்தது.
“கிழவி.. அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ ஏதோ அதுஇதுன்னு சொல்லியிட்டு திரியாத..”
“உங்க அம்மாவுக்கு பிரசவம் பாத்ததே நான்தான். எனக்கு தெரியாதா உன்னபத்தி. நீ பொறந்ததுல இருந்தே நான் உன்ன பாக்குறன்.  உனக்கு என்ன புடிக்கும். புடிக்காதுன்னு.. உன் மூஞ்ச பாத்தாலே தெரியும். என்னான்னு சொல்லு புள்ள?” என்றாள் ஆராயி கிழவி.
“நான் என்ன நினைக்கப் போறான். எல்லாம் என்னோட பையன் செல்வத்தப் பத்திதான். அவன நல்லா படிக்க வைக்கனும். நல்லா வளக்கனும். அதான் நினைச்சன். மனசெல்லாம் இருக்கமா ஆயிடுச்சி. எப்படின்னுதான் தெரியில” சந்திரப்பூவாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கரைய பேசினாள்.
“கவல படாத சந்திரப்பூவா… உனக்கும் உம்பிள்ளைக்கும் ஒரு குறையும் வராது. கடவுள் இருக்கிறாரு..”
“ஆமா! பொல்லாத கடவுள். என்னப்பாரு இருபத்தாறுலேயே தாலிய அறுத்திட்டு ஒத்தையில நிக்குற..”
சந்திரப்பூவா கருப்பும் செவப்பும் கலந்த மாநிறம். நல்ல அழகான தோற்றம். யாரையும் தன் பக்கம் இழுக்கும் பார்வை. நல்ல மனசுக்காரி. சந்திரப்பூவா அம்மா தன்னுடைய தம்பிக்குத்தான் கல்யாணம் பண்ணி வச்சா. அவனும் அவளும் நல்லாதான் வாழ்ந்தாங்க. கல்யாணம் ஆகி ஆறு மாசத்துல ஒரு சொந்தகாரங்க கல்யாணத்துக்குப் போயிட்டு வரப்ப அம்மாவும் புருசனும் விபத்துல இறந்துட்டாங்க. சந்தரப்பூவா மட்டும் ஒத்தையா தனியா இருந்தா. அப்ப அவளுக்குத் தெரியாது வயித்துல குழந்தை வளந்திட்டு வருதுன்னு.. சின்ன வயசுக்காரி.  குழந்தைய பெத்து எடுத்தா.. குழந்தைதா எல்லாமுமேன்னு நினைச்சா..
பலதடவை நான் சொல்லிட்டேன். நீ வேறவொரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்பெல்லாம் இது சகஜம்ன்னு. ஆனா புடிவாதமா மறுத்துட்டா சந்திரப்பூவா… தன்னுடைய குழந்தைய நல்லா வளக்கனுமுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா.. நானும் சந்திரப்பூவாவை அப்பப்ப அவளுடைய வயச ஞாபகப்படுத்திற மாதிரி ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டேதான் இருப்பேன். ஆனா அவ பிடிக்கொடுத்துப் பேசுற மாதிரி தெரியில…  சந்திரப்பூவாவுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சி. ஒரு முப்பதுதான் இருக்கும். இந்தக்காலத்துல இன்னும் முப்பது வயசாகியும் கல்யாணமே பண்ணிக்காத எத்தனையோ பொண்ணுங்க இருக்கத்தானே செய்யுறாங்க.. இவுளுக்கு மட்டும் என்னவாம்! ஒரு மாதிரியாய் சந்திரப்பூவாவைப் பார்த்துக் கொண்டு அனுதாப்பட்டாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி! என்ன பாத்து ரசிச்சது போதும். உனக்கு என்ன வேணுமுன்னு சொல்லு. அதுக்குதான என்ன தேடி வருவ” என்றாள் சந்திரப்பூவா
”அடியே அமுக்கு கள்ளி! ஏதோ பேத்திக்கிட்ட ரசம் கொஞ்சம் வாங்கிட்டு போகலாமேன்னு வந்தேன். நீ என்னான்னா ரொம்பத்தா பீத்தீக்கிற.. போடி இவளே..” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு போகத்தயாரானாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி நில்லு. ரொம்பத்தான் பன்ற. நான் உன்ன திட்டாம வேற யாரு திட்டுவா. நீ செத்தா நான்தான் உன்ன தூக்கிப்போடனும். தெரிச்சிக்கோ.. உம் பசங்களா வரப்போறாங்க.. சரி.. சரி… கத்திரிக்காயைச் சின்ன வெங்காயம் போட்டுக் குழம்பு வச்சிருக்கேன். எடுத்துட்டுப் போ… என்றாள் சந்திரப்பூவா.
ஆராயி கிழவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் அப்பதான் மகனைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். செல்வம்… செல்வம்… என்று கத்தினாள். சாணிக்கூடையில் உட்காந்து கொண்டு சாணத்தை மேலும் கீழும் தன்னுடைய உடம்பிலே அப்பியபடி அம்மாவைப் போன்று தானும் பிஞ்சுக் கைகளினால் சாணத்தை உருண்டைப் பிடித்துக் கொண்டிருந்தான் மூன்று வயதே ஆன செல்வம்.
சந்திரப்பூவாவுக்கு மகனைப் பார்த்தமாத்திரத்தில் கோவம் ஒன்றும் வரவில்லை. ஆனால் அவனை எப்படி குளிப்பாட்டி சாணத்தின் வாசனையைப் போக்குவது என்பது பெரும்பாடாய் இருந்தது. அன்னபேஷன் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அதன் உள்ளே செல்வத்தை ஒரு அமுக்கு அமுக்கினாள். செல்வத்தின் உடம்பில் ஒட்டியிருந்த  சாணம் முழுவதும் தண்ணீரோடு கலந்தது. மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு மீண்டும் தண்ணீர் தொட்டியிலிருந்து அன்னபேஷன் நிறைய தண்ணீர் எடுத்து வந்து மகனை அதனுள் உட்கார வைத்தாள். செல்வம் தண்ணீரை அடித்துக் கொண்டு விளையாடினான்.
சந்திரப்பூவா இப்பல்லாம் தனிமையா இருக்குறதா கொஞ்சம் கூட நினைக்கிறதே இல்ல. ஏன்னா அவக்கூட செல்வம் எப்பவும் ம்மா.. ம்மா… ன்னு உடம்போட ஒட்டிக்கிட்டே இருப்பான். கணவனும் அம்மாவும் செத்துப் போனப்ப உலகமே இருண்டதா நினைச்சவ. தனக்கு யாரும் இல்லன்னு அநாதையா உணர்ந்தவளுக்குத் தன் வயித்துல குழந்த இருக்கிறத தெரிஞ்சவுடனே ஒரு புதுதெம்பு வந்து வாழனுமுன்னு ஆசையும் வந்துடுச்சி.  அந்த ஊருல கிடைச்ச வேலைக்குப் போவா.. கொடுக்கிற காச வாங்கிட்டு வந்து பொங்கி திம்பா… அவ்வளுவுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்கை.
சந்திரப்பூவாவின் வீட்டு முன்னால இருக்குற சாலையில் ஆடு மாடுகள்ன்னு வந்து போகும். அதுங்க போடுற சாணத்த எடுத்துட்டு வந்து வரட்டியா தட்டி காய வைப்பா. அப்படி காயவச்ச வரட்டிய அடுப்புக்கு விறகா பயன்படுத்திக்குவா.. அடுப்புக்கான விறகுக்கு எங்கு போவா சந்தரப்பூவா.. அதான் இப்படி கிடைக்கிறத வச்சி வாழ பழகிட்டா.
சந்திரப்பூவாவைப் பார்த்த மற்ற பெண்களும் சாணத்தில வரட்டி தட்டி காய வச்சாங்க. அத அடுப்புக்கும் பயன் படுத்திக்கிட்டாங்க.. ஆனா இது எது வரையில்? கொஞ்ச நாளைக்கு மட்டும்தான். ஏன்னா சாணம் நாத்தம்.. அழுக்கு.. தொடும்போது ஒருவகையான முகசுளிப்பு. இதனால வரட்டி தட்டுன ஒவ்வொரு பெண்களும் அத நிறுத்த ஆரமிச்சாங்க. ஆனா சந்தரப்பூவாவுக்கு அப்படியில்ல. இதுதான் வாழ்க்கை. சாணத்த அழுக்கா நினைக்கல. நாத்தமா நினைக்கல.. முகம் சுளிக்கல.. தனக்கு கிடைச்ச தொழிலா பாத்தா சந்திரப்பூவா…
ஒவ்வொரு ஆடு, மாடுகள் இருக்கிற வீடா சென்று சாணத்த காசுக்கு வாங்கின. வாங்கிய சாணத்த தவிட்டுடன் சேர்த்து வரட்டி தட்டுனா… நல்லா காய்ஞ்சு போன வரட்டியை ஐஞ்சு ரூபாய்க்கு ஒன்னுன்னு வித்தா.. கிராமத்துல கொஞ்சம் கம்மியாப் போனாலும், நகரத்திற்குக் கூடையில் கொண்டு வந்து வித்திட்டுப் போனா சந்திரப்பூவா. ஒருநாளும் வரட்டிய விக்காம மட்டும் வரமாட்டா. சந்தரப்பூவா கெட்டிக்காரி. நல்லா சத்தம் போட்டுக் கூவிகூவி விப்பா. நகரத்துக்காரங்க அடுப்பெரிக்க விறகுக்கு எங்க போவாங்க.. பால் காய்ச்சனுமின்னா ஒரு வரட்டி இருந்தா போதும். பால் காய்ச்சிடலாம். சோறு பொங்க மூணு, குழம்பு வைக்க மூணுன்னு கணக்குப் பண்ணிடலாம். அதனால சாண வரட்டியும் மலிவு விலையில விக்கிறதுனால பெரும்பாலும் மக்கள் வாங்க ஆரமிச்சாங்க. இந்த வரட்டி அவங்களுக்கு ரொம்ப உதவிக்கரமா இருந்துச்சு. அப்பெல்லாம் ஆராயி கிழவிதான் செல்வத்தப் பாத்துப்பா..
அடுப்பெரிக்க மட்டுமில்லாது செடி கொடிகளுக்கு உரமாகப் போடுவதற்கும் இந்த வகையான வரட்டிகள் மக்களிடத்தில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. அதிலையும் சந்திரப்பூவாவினுடைய வரட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. சாணத்தைத் தவிட்டிலே உருட்டி வரட்டியாக உருப்பெறும்போது நெருப்பிலே போட்டால் இன்னும் வேகமாக எரியும். அந்த வரட்டி தட்டுன தொழில்ல கொஞ்சகொஞ்சமாய் காசு சேர ஆரமிச்சது சந்திரப்பூவாவுக்கு. மகனை பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்க வச்சா. தன்னோட வாழ்க்கை இப்படியே நல்லா போகனுமுன்னு கடவுள வேண்டிக்கிட்டா. மனுஷ வாழ்க்கையிங்கிறது இன்பமும் துன்பமும் நிறைந்ததுதானே.. அவளோட வாழ்க்கையும் அப்படித்தான் ஆச்சு.
காலச்சக்கரம் சுழல ஆரமிச்சது. கொஞ்ச நாள்ளயே மக்களிடத்திலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் அடுப்புக்குப் பதிலா கேஸ்ஸிற்குப் போக ஆரமித்தார்கள். பெண்கள் அடுப்பின் முன்னால் உட்கார தேவையில்லை. விறகையோ சாணத்திலான வரட்டியையோ அடுப்பிலிட்டு ஊதுகுழலினால் ஊத வேண்டியதில்லை. கண்களில் புகை அடித்து யாரும் அழ வேண்டியதில்லை. புகை சேராமல் இருமலுக்கு மாத்திரைகள் வாங்க வேண்டியதில்லை. சிவப்பு நிறத்திலான உருண்டை வடிவிலான குழலினைக் கண்ணைக் கவரும் சில்வரில் உள்ள இரண்டு அடுப்புள்ளதோடு இணைத்துவிட்டால் போதும். சிலிண்டரின் மேல் இருக்கக்கூடிய திருகியை மேலே தூக்கிவிட்டால் அடுப்பு எரியும். கீழே இறக்கி விட்டால் அடுப்பு அணைந்து போகும். சிலிண்டர் வந்த நேரங்களில் மக்களிடத்தில் எங்கே சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்று கொஞ்சம் பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் காலப்போக்கில் எல்லாம் மறைந்து அனைவரும் சிலிண்டர் அடுப்பையே விரும்பி சமையலுக்குப் பயன்படுத்த ஆரமித்தனர்.
சந்திரப்பூவாவின் தொழில் முன்னே மாதிரி இப்போது இல்லை. அன்னபேஷனில் வரட்டியை எடுத்துக் கொண்டு எங்கும் விற்பனை செய்வதில்லை. ஆங்காங்கு யாரோ சிலர் மட்டும் சந்திரப்பூவாவிடம் வந்து வரட்டியை வாங்கி செல்கிறார்கள். அதுவும், வீட்டிற்கு முன்னால் குளிப்பதற்கென வைத்திருந்த அடுப்பில் வரட்டியைப் போட்டு எரிப்பார்கள். கரும்பு ஆலைகளிலும் வரட்டியைப் பயன்படுத்தி வந்தனர். சந்திரப்பூவா கையில் இருந்த காசும் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரமித்தது. கிராமத்தில் கிடைத்த வேலைக்குச் செல்ல ஆரமித்தாள். பயிர் நடுவாள், களை பறிப்பாள், மண்ணு சுமப்பாள், எருவு அள்ளுவாள், வாய்க்காலுக்குத் தண்ணீர் கட்டுவாள். இந்த வேலைக்குத்தான் போகனுமின்னு இல்ல. எல்லா வேலைக்கும் சந்திரப்பூவா போனாள். ஏன்னா அவளும் அவளுடைய மகனும் சாப்பிடனும்மில்ல. சரி வேலையும் தினமும் இருக்குமா என்ன? வேலைக்குப் போனாலும் கூலிய உடனேவா கொடுத்திருவாங்க.. இப்படி அப்படின்னுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்க ஓடிச்சி.
“அம்மா பென்சில் வாங்கனும்” – என்றான் மகன் செல்வம்
“அதான் போனவாரம் வாங்கிக்கொடுத்தேனே” சந்திரப்பூவா
“நீ வாங்கி கொடுத்த பென்சில் கூறு உடைஞ்சி உடைஞ்சி போயுடுது. அதான் சீக்கிரம் தீர்ந்திடுச்சி. இதோ பாரு“ என்று கையில் இருந்த குட்டீயூண்டு பென்சிலை அம்மாவின் முன்பு நீட்டினான் செல்வம்.
“அதெப்படிடா உடையும் நீ கூறு சீவிசீவி உடைச்சிருப்ப.. மூஞ்சப்பாரு.. வாங்கி தரவளுக்குத்தான கஷ்டம் தெரியும். உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்?” கோவத்தோடு செல்வத்தைப் பார்த்துக் கண்களை உருட்டி கத்தினாள்.
உண்மையாலுமே பையன் கொஞ்சம் பயந்துட்டான். செல்வத்தின் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் துளிகள் நிரம்ப ஆரமித்தது. அப்போதுதான் ஆராயி கிழவி வீட்டினுள்ளே நுழைந்தாள்.
“ஏண்டி சந்திரப்பூவா ஒத்த மகன வச்சிகிட்டு அவன் அழுவுற மாதிரி திட்டிக்கிட்டு இருக்கிற. அவன் படிக்கிறதுக்குத்தான கேட்குறான். மத்த புள்ளையங்க மாதிரி எனக்கு இது வேணும். அது வேணும்முன்னா கேட்குறான். நீ கொடுக்கிறத சாப்பிட்டுக்கிட்டு உன்ன கட்டுப்புடிச்சிக்கிட்டே தூங்கிடுறான். அவன போயி திட்டுறியே.. உனக்கு அறிவு இருக்கா புள்ள” என்றாள் ஆராயி கிழவி.
சந்திரப்பூவா தன்னுடைய சேலை தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரமித்தாள். “கிழவி நான் என்ன பண்ணுவேன் சொல்லு. இருந்தாதானே அவனுக்கு வாங்கித்தர முடியும். இந்த வேள சோத்துக்கு வீட்டுல தண்ணிய தவிர வேற ஒன்னுமில்ல. வயித்துப் பசியில வயிறு கிள்ளுது. நானும் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க கிட்டலாம் கடனா வாங்கிட்டேன். இனிமேலும் அவுங்க கிட்ட என்னான்னு கேட்குறது. அவனோட அப்பனும் பாட்டியாளும் எனக்கு இந்த வீட்ட தவற என்ன சொத்துச் சேர்த்து வச்சிட்டு போனாங்க.. நீயே சொல்லு கிழவி…” பொறுமினாள்.. ஆதங்கப்பட்டாள்.. வேதனைப்பட்டாள் சந்திரப்பூவா.
செல்வத்தைத் தன்னுடைய மடிமீது வைத்துக் கொண்டிருந்த ஆராயி கிழவியால் அழ முடியுமே தவிர வேறென்ன பண்ண முடியும் சந்திரப்பூவாவுக்கு. தலையை மட்டும் ஆட்டினாள். கிழவிக்குத் தெரியாதா சந்திரப்பூவாவின் வாழ்க்கைய பத்தி.
“இந்தாக் கிழவி என்னுடைய கையப் பாறேன். நீ எத்தன தடவ என்னுடைய கைகளுக்கு மருதாணி வச்சி விட்டுருப்ப.. இப்படியா இருந்தது. இந்தச் சாணிய அள்ளி அள்ளி பிசைந்து பிசைந்து என்னோட கை எப்படி ஆயிடுச்சிப் பாரு” என்று ஆராயி கிழவி முன்பு தன்னுடையக் கைகளை நீட்டினாள்.
சிவந்து பஞ்சு போன்ற கைகள் இப்போது தடித்து ஆங்காங்கு வெடித்துக் கை நகங்கள் செத்துக் கோணலும் மாணலுமாய் இருந்தது.  ஆராயி கிழவி அப்படியே சந்திரப்பூவாவின் முகத்தையும் ஒருமுறை பார்த்தாள். எப்படியிருந்த முகம். இப்போது இப்படி வாடிப்போய் இருக்கிறதே. புருஷன புடிக்குதோ புடிக்கலயோ சும்மாவாவது வீட்டுல இருக்கட்டுமேன்னு ஒரு ஆண்துணை வேண்டும். அப்பவாவது பூவும் பொட்டும் வச்சிட்டு நல்லா இருப்பாள்ள.. இப்ப பாரு எப்படி இருக்குன்னு மூஞ்சு… என்று ஆராயி கிழவி சந்திரப்பூவாவைப் பற்றி மனதிலே எண்ண ஓட்டங்களை ஓடவிட்டாள்.
“என்ன கிழவி என்னுடைய கைகளைப் பாத்து எதுவும் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்குற”
“ஆமா! உன்ன என்ன பொண்ணு பாக்க வராங்களாக்கும். சும்மா கிடப்பியா.. இதுக்கு மேல கைய பாத்த என்ன புரோஜனம் சொல்லு. ஆமாம்! நான் வந்த விஷியத்தையே மறந்துட்டேன். நம்ம ஊருல வடக்குக் காட்டுல இருக்குற நடேசன் செத்துப் போயிட்டாரு.. உனக்கு தெரியுமா சந்திரப்பூவா”
“ஆமாம் கேள்விபட்டன். வெளிநாட்டுக்குப் போயிட்டு இப்பதான வந்தாரு. எப்படி செத்துப் போனாரு..”
“ஏதோ உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க. அதில்லாம அந்த எலவுக்கு அழுவுறதுக்குக் கூப்பிடுறாங்க.. நீயும் வரியா சந்திரப்பூவா… போகலாம். போயிட்டு வந்தோம்மின்னா ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும்”
கூலிக்கு மாரடிக்க கூப்பிடுறியா கிழவி”
“ஆமாம்! இல்லாததுக்கு என்ன பன்றது. நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மூக்க தொடச்சியே… அதையே அங்கேயும் வந்து பண்ணு. அதுபோதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்குறன்”
“ சரி நானும் வரேன். யாருயாரு போறோம்”
“நீ, நான், நடுபாத்தி பாஞ்சாலை மூணு பேரும் போறோம். அவ்வளவுதான்”
“செல்வத்த என்ன பன்றது கிழவி”
“பக்கத்து வீட்டுக் கோமதிக்கிட்ட உட்டுட்டு வா… நானும் அவகிட்ட சொல்லுறன். சாயந்திரம் மூணு மணிக்குள்ள பொணத்த தூக்கிருவாங்க. நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்”
சந்திரப்பூவாவிற்கு வேறு வழியில்லை. மாரடிக்க போனால் ஐநூறு ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்த வச்சி ஒரு மாசமாவது ஓட்டிடலாம். மனதிற்குள் சரி என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டாள்.
 சாவு மேளச்சத்தத்துடன் அழுகை சத்தமும் கொஞ்சம் தூரம் இருந்து வருகையிலேயே கேட்டது. நெருங்கிய உறவினர்கள் கதறி துடித்து விழுந்தடித்துப் போனார்கள். தூரத்து உறவினர்கள் மாலையோடு வந்து பிணத்தைத் தொட்டு வணங்கினார்கள். பெண்கள் அனைவரும் மாராப்பு சேலை நழுவ கட்டிப்பித்து அழுவினார்கள். ஒருபக்கம் கூட்டமாய் வட்டமாய் சுழன்று ஒப்பாரி வைத்தார்கள். ஆண்கள் அழக்கூடாதென நினைத்து நெஞ்சை இறுக்கிக் கொண்டு மூக்கிலே அழுகையைக் கொண்டு வந்தார்கள்.
நடேசனின் மனைவிதான் பாவம் அழுதுஅழுது கண்கள் சோர்ந்து சுவற்றில் ஒட்டிய பல்லியாய் ஏதோ வாயில் முணுமுணுத்தபடியே சொல்லிக் கொண்டிருந்தாள். நடேசனின் பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் அழுது கொண்டிருந்தனர். நடேசனின் மச்சினன்தான் அனைத்துச் செலவுகளையும் கவனித்து வந்தான். எங்க மாமா எப்படி பொறந்தாரோ… அப்படியே சுடுகாட்டுக்கும் போகனும். மாலை மரியாதையோட பட்டாசு சத்தம் காதை பிளக்க மேளச்சத்தம் இடிபோல வீழ பெண்களின் ஒப்பாரி என் மாமனை வாழ்த்த சங்கொலியோடு பூந்தேரில் செல்ல வேண்டும் என்று எண்ணினான்.
சாவு வீட்டில் நடப்பது சந்திரப்பூவாவுக்குப் புதியதாகவே இருந்தது. பணக்காரர்கள் இறப்பில் என்னவெல்லாம் புதுமை கொண்டிருக்கிறதோ தெரியவில்லை என்று எண்ணினாள். ஆராயி கிழவி, பாஞ்சாலையுடன் தானும் சென்று பெண்களோடு பெண்களாக அழுத கண்ணீரோடு ஒட்டிக்கொண்டாள். சாவு வீட்டில் அழும் பெண்களில் எத்தனை பேர் அங்கு இறந்து போயிருக்கும் நபருக்காக அழுகிறார்கள். இல்லைவே இல்லை. அவரவர் இரத்தச் சொந்த பந்தகளை நினைத்துதான் பெரும்பாலும் அழுகிறார்கள். இல்லையென்றால், அங்கே அழும் பிறரைப் பார்த்து இவர்களும் அழத் தொடங்குகிறார்கள். அப்படித்தான் சந்திரப்பூவாவுக்கும் முதலில் கண்களில் இருந்து கண்ணிர் வர மறுத்தது. பிறப் பெண்களைப் பார்த்தவுடனே அழ ஆரமித்து விட்டாள். மேலும், தன்னுடைய கணவனையும் தாயையும் வேறு நினைத்துக் கொண்டாள். சொல்லவே வேண்டாம். கண்ணீர் மல்க பூத்துத் பூத்தென்று அழத்தொடங்கினாள் சந்திரப்பூவா.
சடங்குகள் ஒவ்வொன்றாய் நடந்தேறின. ஒப்பாரி சத்தம் மைக்கில் ஊரையெல்லாம் கூட்டியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிணத்தினை வைத்தார்கள். தேரின் முன்பு பூக்களைத் தூவினார்கள். அழும் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு வேகமாக அழ ஆரமித்தார்கள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும் இரண்டு கைகளையும் தன்னுடைய நெஞ்சிலே அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். சந்திரப்பூவா இப்போது நீண்டு அழ தொடங்கினாள். கத்தினாள். ஓலமிட்டாள். ஆட்டமும் ஆட தொடங்கினாள்.
கருநிறமுள்ள தன்னுடைய நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டாள். கூந்தல் இடுப்புவரை வந்து வீழ்ந்தது. சேலை முந்தானையை இடுப்பிலே சுற்றி அவிழாதபடி கட்டிக்கொண்டாள். இடுப்பில் கட்டியிருந்த கொசவ மடிப்பை கொஞ்சம் ஏற்றிக்கொண்டாள். அப்போதுதான் சேலை காலில் மாட்டாமல் இருக்கும்.
நின்ற இடத்திலிருந்து எகிறினாள். எகிறியபோதே தலை குனிந்தாள். தலை குனிந்ததால் பின்னால் உள்ள கூந்தல் முன்னால் வந்து விழுந்தது. குனிந்து நிமிரும்போது தன்னுடைய இரண்டு கைகளினாலும் நெஞ்சிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள். பட்தட்.. பட்தட்… என்று சத்தம் கேட்டது. மேல் மூச்சி வாங்கியது. வாயிலிருந்து ஒவ்வொரு முறையும் ராசா… அப்பனே.. தெய்வமே.. நடராசா… அப்பனே.. தெய்வமே.. என்று வந்து கொண்டே இருந்தது. சந்திரப்பூவாவினுடைய ஒப்பாரி ஆட்டம் அங்கிருந்தவர்களை எல்லாம் ஒருநொடி திகைக்க வைத்தது. எகிறி குதித்துத் குதித்து ஆடினாள். ஆட்டத்திற்கேற்ப ஒப்பாரியும் உஸ்ஸ்ஸ்… உஸ்ஸ்ஸ்… என்ற மூச்சுக்காற்றும் ஓருங்கே வந்து விழுந்தது.  சாவு வீட்டிற்கு வந்தவர்கள் பலர் சந்திரப்பூவாவின் ஒப்பாரி ஆட்டத்தினைத்தான் பார்த்தார்கள். அந்தளவிற்கு மாங்குமாங்கென்று ஆடினாள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும்கூட சந்திரப்பூவாவின் ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டார்கள்.
தேர் கொஞ்ச கொஞ்சமாய் நகர்த்தப்பட்டுச் சுடுகாட்டை நோக்கிச் சென்றது. ஆண்கள் தலை குனிந்தபடியே மெதுவாக தேருக்குப் பின்னால் நடந்து சென்றனர்.  வீதியின் முடிவிலே பெண்கள் அனைவரும் நிறுத்தப்பட்டார்கள். ஒப்பாரி ஓய்ந்து போனது. சந்திரப்பூவா மெதுவாக மண்ணிலே சாய்ந்தாள். ஆராயி கிழிவிதான் ஓடி வந்து சந்திரப்பூவாவைத் தூக்கி உட்காரவைத்துப் பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சம் குடிக்க தண்ணீர் வாங்கி குடிக்க வைத்தாள்.
சாவு வீடு சுத்தமானது. நெருங்கிய உறவுகளைத் தவிர அங்கு யாருமில்லை. தண்ணீர் தெளித்து வாசல் சுத்தம் செய்யப்பட்டது. வாசலின் ஒரு ஓரத்தில் சுடுகாட்டுக்குச் சென்று வருகின்ற ஆண்கள் கால் அலசுவதற்காக அன்னபேஷனில் தண்ணீர் வைக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஆராயி கிழவி, சந்திரப்பூவா, பாஞ்சாலை ஆகிய மூவரும் குத்துக்காலிட்டு வரிசையாய் அமர்ந்திருந்தனர்.
சுடுகாட்டிற்குச் சென்று வந்த ஆண்கள் ஒவ்வொருவராய் காலில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர்,
“யாரும்மா நீங்க… இங்க உட்காந்திருக்கீங்க.. என்ன வேணும்” என்றார்.
“அண்ணே! நாங்க கூலிக்கு மாரடிக்க வந்தோம்மண்ணே. கூலிய கொடுத்தீங்கின்னா போயிடுவோம்” என்றாள் பாஞ்சாலை.
அப்பத்தான் அவரு சந்திரப்பூவாவ பாக்குறாரு. சந்திரப்பூவா ஆடிய ஆட்டத்தையும் ஒப்பாரியையும் நினைவுக்கு வந்தவராய் வீட்டினுள்ளே செல்கிறார். வெளியே வரும்போது மூவருக்கும் சேர்த்து மூன்று ஐநூறு ரூபாய்களைச் சந்திரப்பூவாவிடம் கொடுக்கின்றார்.
இரண்டு ஐநூறு ரூபாய்களை ஆராயி கிழவியிடமும், பாஞ்சாலையிடமும் கொடுத்துவிட்டு வேகவேகமாக நடக்க ஆரம்மிக்கிறாள் சந்திரப்பூவா.
“எங்கடி எங்கள விட்டுட்டு நீ மட்டும் போற… இருடி நாங்களும் வந்திடுறோம்” என்றாள் ஆராயி கிழவி.
“நீங்க பொறுமையா வாங்க… நான் எம்புள்ளைய பாக்க போகனும். அவன் காலையிலயிருந்து எதுவும் சாப்பிடல. எப்படி இருக்கானோ? என்ன நினைச்சி மனசு வலிச்சுதோ தெரியல… இப்பவரை பசியை எப்படி பொறுத்துக்கிட்டு இருக்கான்… எனக்கு ஒன்னும் இல்ல.. பையனுக்குப் பசியே தெரியாத மாதிரி இனிவே வேண்டியதை கொடுக்கனும். அதுக்கு அந்த மாரியாத்தாதான் துணை நிக்கனும்” என்றபடி வேகவேகமாய் இன்னும் நடையைக் கூட்டினாள்.
சந்திரப்பூவா வாங்கின ஐநூறு ரூபாய்க்கும் அரிசி பருப்பு காய்கறிகள் என வாங்கிக் கொண்டாள். போன உடனே சமைத்துச் செல்வத்திற்குச் சுடசுட கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

திருமதி நித்யா லெனின்,

ஓசூர் – 635 130.

மொழிப்போர் தியாகிகள்|பேரா. ச. குமரேசன்|கவிதை

மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள்

 

1. தமிழினி..!

கைகளில் பதாகை ஏந்தி…

கடுமையான குரலொலிகள்..

வேற்று மொழி திணிப்பை எதிர்த்து..

வேகமான போராட்டம்..

பதாகை மேல் பதற்றமான வாசகம்..

“இந்தி  ஒ லி க! “

 

2. அறிவான மொழி

வெளி நாட்டுக்காரரோடு

வெளுத்து வாங்கும் ஆங்கிலம்..

மூன்றாம் வகுப்பு தாண்டாத

முத்துசாமியண்ணன்..

அவரின் முகவரியை

ஆங்கிலத்தில் எழுதி கேட்டேன்..

எனக்கு தெரியாது தம்பி

 “ஏ பி சி டி”

 

3. தியாகி

மத்திய அரசின் போட்டித் தேர்வு..

மொழியெதிர்ப்பு போராட்டத்தில்

முந்தி நின்ற முகேசோடு..

அரசுப் பள்ளியில் பயின்ற

அறிவொளியும் போனாள்

அரைகுறை ஆங்கிலத்தோடு…

தேர்வு முடிவில் தோல்வியுற்ற

அறிவொளி..

முன்னே சென்ற

முகேசிடம் கேட்டாள்..

“நீ எப்படி பாஸான? “

முகம் பார்க்காமல் சொன்னான்

முனகியவாறு..

“இந்தியில் எழுதினேன்”

 

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மாணவனின் சபதம்! |ஜெ.புவனேஸ்வரி| கவிதை

மாணவனின் சபதம்! - கவிதை

மாணவனின் சபதம்!

அச்ச்சோ!
நான் படித்த கொஞ்சத்தில்
மிச்சமும் இல்லாமல்
மொத்தமும் மறந்து போச்சே!
 
பத்துமுறை படித்தும் பார்த்தேன்
படித்ததை பக்குவமா எழுதியும் பார்த்தேன்
பரிச்சை என்று வந்ததும், ஏனோ!
படித்ததில் பாதிக்குமேல்
ஞாபகம் வரவில்லை.
 
ஒவ்வொரு தேர்விலும்
முதல் மதிப்பெண் பெற்று
மூக்குமேல் விரல் வைத்து பார்க்க
வைக்க வேண்டும் மற்றவரை என்று
எண்ணியே படித்து வந்தேன் பரிச்சைக்கு!
 
பாவம்! படிப்பது யாவும் நினைவில்
இருந்து விட்டால் பாமரனான நான்
பைத்தியமாகிடுவேன் என்றோ!
 
விடைத்தாள் கையில் வாங்கியதும்
விடைகொடுங்கள்,பாசானால்
போதுமென்றே பதுங்க செய்கிறது
இந்த பாழா போன மனம்.
 
இரவு முழுதும் படித்தோம் என்பது
ஞாபகம் இருக்கிறது!
ஆயின் என்ன படித்தோம்!
எதற்கு படித்தோம்? என்பது மட்டும்
நினைவுக்குவரலையே!
 
மூணு பேரும் முப்பொழுதும்
ஒண்ணாதான் ஒத்துமையாக
எல்லா இடங்களுக்கும்
அலைந்து திரிந்தோம்.
 
படிக்கும் வகுப்பு ஒன்றுதான்!  பாடமும்
ஒன்றுதான்! வினாத்தாளும் ஒன்றுதான்
அவனும் படித்தான்; நானும் படித்தேன்
என்னால் ஏன் எழுதமுடியல?என்று
கேட்க வேண்டிய கேள்விக்கு பதிலாக!
இறைவனிடம்,
அவன் படித்தது நினைவில் வந்து
அவனால் மட்டும் எப்படி படித்ததை
எழுத முடிகிறதோ? கடவுளே!
என்றே கேட்டு தவித்தான் அவன்.
தன்னம்பிக்கையில்லாதவன்.
 
அங்கே ஒரு அசரிரீ!
“எத்தனை முறை சொல்கிறேன்
மனப்பாடம் செய்யாதே!
மனனம் செய்யாதே!
மனப்படம் செய்து படி என்று.
அன்று நடத்தியதை அன்றே படி,
அதுவும் நன்றே விளங்க படி”
என்றே கூறி ஒலித்து மறைந்தது.
 
ஆகாசத்தை பார்த்திருந்த அவனருகில்
ஆசிரியர் வந்து நிற்கிறார்.
அவனுடைய விடைத்தாளை
வாங்கி புரட்டி பார்க்கிறார்;
 
பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
அவனோ பாதி பக்கம் கூட
எழுதி முடிக்கவில்லை.
 
ஆசிரியர் சொல்கிறார்
“பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
பாதி பக்கம் கூட எழுதவில்லை.
பின் எதற்குதான் பரிச்சைக்கு
வந்தீயோ! இந்த வயசுல
படிப்பதைக்காட்டிலும்
என்னடா வேலை உனக்கு?
பக்கத்தில் இருப்பவரை
பார்த்து எழிதியாவது தொள!”
என்று பாவபட்டு ஆசிரியர்
சொல்வாரென்று பரிதாபமாக
நோக்கினான்.
 
“ஓங்கி விட்டால் அப்படியே
ஒரு காது செவிடாகி போய்விடும்.
ஒழுங்காய் படிக்கிற நேரத்தில்
படி என்றால் படிக்காமல் இருந்துட்டு
இப்போ விட்டத்தைப் பார்த்து
கொட்டாவி விடத் துடிக்கிறாயோ!
ஒழுங்காக தெரிந்ததை எழுதி
கொடுத்திட்டு சென்றிடு!
இன்றில் இருந்தாவது ஒருநாளும்
தவறாமல் படி! படி! படி!”
என்று ஆசிரியர் கூறினார்.
 
“படிக்கச் சொன்னீரே படித்தேன் பாவம்!
பக்கத்தில் கூட இந்த படிப்பு வந்து
அமர்ந்திடவில்லை. என்கிரகம்
உங்ககிட்டபேச்சு கேட்க வேண்டியே
உள்ள அந்த விதியை ஒருபோதும்
இனி எவரும் மாற்ற இயலுமோ
பட்டது பட்டது தான்
கெட்டது கெட்டது தான்
கோட்டை விட்டது விட்டது தான்!
 
அடுத்த முறை தேர்வு எழுதிவிட்டு
பேசிகொள்வோம் இவரை,
என்றெண்ணி மவுனாமாகவே
இருந்துவிட்டான்.
எல்லா தேர்விலும் செய்யும் சபதம் போலவே!
இதுவும் ஒரு பொய்யான
சபதமோ? இல்லை! இல்லை!
 
ஆயிரங்கோடி ஆண்டுகளாயினும்
ஆதவன் அவன் தொழில்
மறப்பதில்லை. அதுபோல் என்றும்
மாண்புமிகு மாணாக்கரே, நீவிர்!
உந்தன் தொழிலை மறந்திடாதீர்! இந்த
உண்மையை உணர்ந்து உறக்கம்
தவிர்த்து என்றும் படி! படி! படி
 
ஆசிரியர்
கவிஞர் ஜெ. புவனேஸ்வரி
இயற்பியல் துறை

திருமந்திரத்தில் ஞானம்

திருமந்திரத்தில் ஞானம்

முன்னுரை

            எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!!! தன்னுள் விளையும் எல்லா கேள்விகளுக்கும் தானே பதிலாகி நின்ற நிலை யாரொருவர் அடைகிறாரோ அவரே ஞானவான். அதுவே திருவடி அடைந்த நிலை, முக்தி, பிறவா நிலை, மரணமில்லா பெருவாழ்வு என பலராலும் பலவாறாக பேசப்படுகின்ற ஞானத்தன்மையாகும்.  திருமூலர் அடைந்த நிலையினை இவ்வுலகியல் மக்கள் பெறவேண்டி எழுதப்பெற்றதே திருமந்திரமாகும். அவ்வாறு, இறைவனை அடையும் தன்மையினை திருமூலர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். அவற்றுள் பெறுவதற்கு அறிய வழி ஞானமாகும். அவ்வாறு திருமந்திரம்வழி திருமூலர் கூறும் ஞானத்தன்மை, ஞானத்தின் பண்பு நலன்கள், ஞானவேடதாரிகள் நிலை ஆகியவற்றை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஞானம் – விளக்கம்

            அறிவின் முதிர்ந்த நிலை ஞானமாகும். ஏனென்றால், பெருவெடிப்பு கொள்கையின் படி இவ்வுலகில் எல்லாப் பொருளும் ஒற்றை பொருளில் இருந்து வந்தவையே. என்பது அறிவியலாளர்கள் கருத்துப்படி எல்லாப் பொருளுள்ளும் தன்னையும், தன்னுள் எல்லா பொருட்களையும் பார்த்து, எந்த பொருளிடத்தும் அன்னியம் இல்லாமல் நின்ற நிலையினை உணரும் தன்மை ஞானத்தன்மையாகும். ஞானம் அடைபவர் தன்னடக்கம் உள்ளவராகவும், மனத்தினை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், உண்மையானது – உண்மையற்றது எது என்று பொருள்களை பிரித்தறியும் திறத்திக் கொண்டவர்களேத் தன்னிலை உணர்வதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். 

            இந்த உலகில் பிறந்து ஞானத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து பந்த பாசம், இன்பங்கள், துன்பங்கள், தன்னுடைய மனதின் ஆசைகள் அனைத்தையும் அனுபவித்து அவற்றில் நிலையாமைத் தன்மையினை உணர்ந்து நிலைத்தன்மையுடையப் பேரறிவாளனாகிய இறைவன் மீது பற்றுக்கொண்டு, அவற்றின் பால் ஒன்றுதலே இறைத்தன்மை பெறுதலாகும். ஞானம் என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவதன்று. இது  குருவின் ஞான மொழிவழி பயணமாகும். மன இருளினை வென்று ஆன்மாவில் பேரமைதியினைக் காணும் நிலையாகும். உபநிஷதங்கள் இரண்டு வகையான ஞானத்தினை நமக்கு கூறுகின்றது. அவை, அபரஞானம், பரஞானம் என இருவகையாகும்.

            அபரஞானம் என்பது கீழ்நிலை ஞானமாகும். இவை ஒருவன் புறக்கருவிகளாகிய ஞான இந்திரியங்கள், கன்ம இயந்திரங்களின் வாயிலாக உணரப்படுவது அபராஞானமாகும். படித்தலின் மூலமாகவும், மற்றும் உலகியல் பொருள்களின் மூலம் அனுபவிக்கும் உணர்வுகள் இவையாவும் நிலையற்ற தன்மைக் கொண்டது என்று உணரும் உணர்வு கீழ்நிலை ஞானம் என ஞானியர்கள் கூறுகின்றனர்.

            பரஞானம் உயர்ந்த நிலை ஞானமாகும். இரு ஞானியர்களுக்கும் இறைவனின் அருள் பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற ஞான நிலையாகும். குருவின் அருளினால் இறைவனின் திருவடிப் பேற்றினைப் பெற்ற மனிதர்கள் அதைப் பற்றி சிந்தித்து அவற்றையே தியானித்து அவற்றுடனே ஒன்றி இருக்கின்ற நிலை பரஞானமாகும். ஞானத்தின் முழுமையான  நோக்கம் என்பது தன்னிலை உணர்ந்து இறைநிலைச் சார்ந்து என்றும் பிறவா பெருநிலையினை அடைதலேயாகும்.

ஞானமும் – குருவும்

            உயிர்களைப் படைத்து அருளிய இறைவன் அவ்வுயிர்களுக்கு இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கி அருளும் பொருட்டு மாயையினையும், கன்மத்தினையும் சேர்த்து பக்குவத்திற்காக உலகத்தில் பிறப்பெடுக்க வைத்துள்ளார். உயிரானது இறைவனாகிய குருவின் திருவருளால் திருவடிகாட்டப்பெற்று இன்ப – துன்ப நிலையினைக் கடந்து தன்னுடைய மாயைத் தன்மையினையும், போகப்பொருள்கள் மீதான தாகம் விட்டொழிந்து பிறவா யாக்கையானாகிய இறைவனின் திருவடியினை பெறத்துடிக்கும் ஆன்ம மனிதர்களுக்கு குருவே வழிகாட்டுவார். இதுவே கலியுக தர்மமாகும்.

            குருவானவர் சீடனின் உயிர் பக்குவத்திற்குத் தகுந்தார் போல மாயைச் சூழ்நிலையினைக் கொடுத்து அவற்றின் மூலம் உயிருக்கும் மெய்பொருளை அறிவித்து பொய்யான மாயைத்தன்மைக் கொண்ட பொருட்களை அறிவித்து இறைத்தன்மையை அறியச் செய்பவர் குருவேயாகும். உண்மையான ஞானத்தினை அடைந்த குருவால் மட்டுமே அவ்வழியில் வரும் சாதகனுக்கு வழியினைக் காட்டி அருளிட முடியும். அதுவன்றி இவ்வுலக வாழ்வில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தோன்றியுள்ள குருமார்களின் பொய்மொழி சிந்தித்தால் ஞானம் வராது மீண்டும் பிறப்பதற்கான நிலையினையே மேலும் ஏற்படுத்திக் கொள்ளுபடியாகிவிடும். பொய் குருவினை நாடிச்செல்லும் ஆன்ம சாதகனுக்கு திருமூலர்,

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும்  குழிவீழுமாறே”  திருமந்திரம் (பாடல்.1680)

மாயைத் தன்மையினை நீக்கியருளும் குருவினைக் கொள்ள வேண்டும் என்றும், அறியாமையினை நீக்கா குருவினைக் கொள்வாரேயானால் பொய் குருவுடன் அவரும் குழி வீழ்வார் என்று திருமூலர் தம்மந்திர பாடலில்; சிறந்த குருவினுக்கான இலக்கணத்தையும், குரு இல்லா தன்மை கொண்டவர் அடையும் நிலையினையும் எடுத்துரைக்கின்றார். ஒரு சிறந்த குருவானவர் ஆன்ம சாதகனுக்கு ஏற்படும் அறியாமை என்னும் மாயையினை நீக்கி நிலைத்தன்மைக் கொண்ட அறிவதற்கான இறைவனின் திருவடியினைக் காட்டுவார்.

            இறைவன் மீது பக்தி கொண்டெழுகச் செய்து, இறைவனுடைய திருவடியினைக் காட்டி, பிரணவ மந்திரத்தின் உபதேசம் செய்து உயிர்களின் மனமாயையாகிய அழுக்கினைப் போக்கி, பசு, பாதி, பாசம் என்னும் முப்பொருளின் இயல்புகளை அறிவித்து, ஆன்மாவை ஆட்கொள்ள உள்ளத்துள்ளே எழுந்தருளி இருப்பவரே உண்மையான ஞான குரு ஆவார். தூயவனான பரம்பொருள் சிவபெருமானே ஆவார். ஞானமே குரு வடிவாக வந்து மன அழுக்கினை நீக்கி, பரிசுத்தம் செய்து தன்னுடைய ஞானத் தன்மையினை இறைவனே அவருடைய அளப்பெருங் கருணையினால் உயிர்களுக்கு தருகின்றார். அவற்றை அறியாமலே இவ்வுயிர்கள் மாயையில் கட்டுண்டு கிடக்கின்றன.        சிவப் பரம் பொருள்தான் ஞான குருநாதன் என்பதை,

“குருவே சிவம்எனக் கூறினான் நந்தி

குருவே சிவம்என்பது குறித்து ஓரார்

குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்

குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே” திருமந்திரம் (பாடல்.1581)

எனும் பாடல், இறைவனே குருவடிவாகி வந்துள்ளதை தமக்கு நந்தியாகிய குரு சொன்னதாகத் தம் குருவின் மொழியினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளிடத்துப் பொருளிடத்து பக்தி செலுத்திப் பிறவிப் பயன் அடைய வேண்டும் என்கின்ற திடமான மனம் கொண்டு முயலுபவருக்கு ஞானமாகிய பேரின்ப வாழ்வு அருட்சக்தியின் திருவாருளால் எளிதில் கிட்டும்.

ஞான வேடம்

            ஞானத்தன்மை பெற்ற இறையடியார்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று திருமூலர்,

“ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவர்

தான்உற்ற வேடமும் தற்சிவ யோகமே

ஆன அவ்வேடம் அருள்ஞான நாதனம்

ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாதவனுக்கே”

எனும் திருமந்திர பாடல், சிவப் பரம்பொருளுக்கு அடிமைப்பட்டு, அவனருள் பெற்றவர்களே அடியவர் ஆவார்கள். மற்றவர்கள் ருத்ராச்சம் அணிந்து, திருநீறு  பூசியும், காவி உடை உடுத்தியும், தண்டம், சடாமுடி வைத்திருந்தாலும் இறைவனின் அருள் பெறாதவர்கள் அடியார் அல்ல என்றும், இறைவனின் அருள் பெற்றவர்கள் சிவவேடத்தில் இல்லாத போதிலும் அவரே உண்மையான அடியாகளாவார்கள்.

            தவத்தால் உயர்ந்த பற்றற்ற ஞானியர்களுக்கு காதனி குண்டலம் தான் ஏற்றிருக்கும் தவக்கோலம், தன்னைச்சிவனோடு பொருந்தச் செய்யும். தவவேடமே இறைவன் அருளைப் பெற்றுத்தர செய்யும் சாதனமாகும். சிவஞானம் பெற்றிராதவருக்கு இந்த வேடம் வெறும் சுமையேயாகும் என ஞானிகளின் வேட நிலையினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார்.

தனிமனித வாழ்வியலில் ஞானம்

            இறைவனை அடைவதற்கு சைவ சான்றோர்கள் அமைத்துள்ள மார்கங்கள்  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்காகும். அவற்றையே திருமூலர் தம் பாடல்களிலும் விளக்கியருளியுள்ளார்.

அவையே,

சரியை                     –           இறைவனுக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு புரிதல்.

கிரியை                   –           பக்தி நிலையில் நின்று இறைவனுக்கு பூசை செய்தல்.

யோகம்                   –           ஆசனங்கள் செய்து மனம், உடல் தகுதி படுத்துதல்.

ஞானம்                    –           தியானத்திலே இறைவனை சிந்தித்திருத்தல்.

என்னும் நான்கு நிலையாகும்.

            இவற்றின் முறையே இந்நான்கினையும் அவரவர் பக்குவ நிலைக்கேற்ற வகையில் நான்கு நிலைகளும் முறையே; ஒன்றுடன் ஒன்று கூடி நின்று பதினாறு நிலையில் பிரிந்து வருகின்றன. அவை, சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரிiயியில் ஞானம்            என சரியையினை மூலமாகவும் மற்றவற்றைத் துணைக்கொண்டுத் தொண்டு நிலையில் இருந்தும் ஞானத்தை பெறுதல் சைவத்தில் சாத்தியமாகும். திருநாவுக்கரசர் கொண்ட மார்கம் சரியையாகும்.

            மேலும், திருஞானசம்பந்தர் கொண்ட கிரியையினை மூலமாகவும் மற்ற மார்கத்தினை துணையாகக் கொண்டு செயல்படுவது கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என மேற்சொன்ன மார்க்கத்தினைக் கொண்டும் இறைவனை அடையலாம். மேலும், யோகத்தை மூலமாகவும் மற்றவற்றை துணையாகவும் கொண்டு யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் கொண்டும் இறைவனை அடையலாம். அவ்வாறு சுந்தரர் கொண்ட மார்க்கம் சரியையாகும்.

            மேலும், ஞான வழியாகிய இறைநிலையை குருவின் உபதேசமொழிவழி நின்று அவற்றை சிந்தித்து, தியானித்து பயிற்சியால் மேற்கொண்டு வருபவர்களும், பக்தி நிலையிலும், ஆசனங்கள், தொண்டு போன்றவற்றை செய்வது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு நிலையாகும். இங்கு கூறப்பட்ட மார்க்கத்திலேயே ஞான நிலையில் வரும் மார்கங்களே மிகவும் உயர்ந்த மார்கங்களாகும். மாணிக்கவாசர் மேற்கொண்ட மார்க்கம் ஞானமார்கமாகும். இங்கு ஞானத்தில் ஞானம் அடைபவர்கள் வெகு சிலரேயாவார்கள். பிறர் யோக மார்க்கத்திலும், பக்தி மார்க்கத்திலும், நின்று இறைநிலையினை வேண்டி நிற்கின்றனர்.

            இவ்வாறாக,  இறைத்தன்மையினை உணர்ந்த மெய்ஞானிகள் சைவ சமயத்தின் வழி நின்று சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகையான மார்க்கத்தில் உண்மையினை உணர்ந்த ஞானிகள் பயன்படுத்திய அவ்வழியினையே இங்கு அருளியுள்ளார்கள். மேலும், திருமூலர் சொல்லும் ஞான மார்க்கத்தினை விளக்கமாக காண்போம்.

திருமந்திரத்தில் – ஞானம்

            உலகப் பிறவியில் பிறந்த பிறவியிலேயே மிகவும் உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும். ஏனென்றால், தன்னிலை உணர்ந்து இறைநிலையினை சாரும் பாக்கியம் மனிதனுக்கன்றி வேறு பிறவிகளுக்கு இல்லை. தேவாதி தேவர்களும் வேண்டும் பிறவியாக இருக்கின்றது இந்த மானுட பிறவியேயாகும். உண்மைப் பொருளை அறியும் மெய்ஞானத்தை அறிவதை விட மேலான அறம் இந்த உலகத்தில் வேறு இல்லை. ஞான மார்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த மார்கம் வேறில்லை.

            நாதமும், நாதவடிவான மனமும், மனம் பெற்ற உணர்வும், உணர்வு உணர்த்துகின்ற ஆணவமும் ஆகிய மூன்றையும் செயல்படுத்தி, சிந்தனை செயல் செய்து மனதை வென்று அடக்கித் தன் வசப்படுத்தியவர்களே உயர்ந்த தவஞானியர்களாவார்கள். என்பதை,

            “சத்தமும் சத்த மனனும் தகுமனம்

            உய்ந்த உயர்வும் அகந்தையும்

            சித்தஎன்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்

            சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்கமே” திருமந்திரம் (பாடல்.1468)

என்னும், திருமந்திரப்பாடல் இறைநிலைப் பெற்ற ஞானியர்கள் பற்றி கூறுகின்றது. அவ்வாறு ஞானமடைந்தவர்கள் ஏற்படுத்திய மார்க்கமே சன்மார்க்கம் அதாவது ஞான மார்கமாகும். சிவஞானம் என்பது உயிர்கள் தம்மிடமே நினைப்பால் உண்டாக்கிக் கொண்டிருக்கின்ற உலகங்களைத் தன்னைச் சுற்றியுள்ள இன்னும் பல உலகங்களை எல்லாம் நமக்கு சிவனருளால் அருளப்பெற்றவை இந்த சிவ நல்லறிவே பின்னர் சிவனருள் என்ற மேலான பெரும் பேற்றை பெற்றுத் தரும். சிவன் அருள் அறிபவனும், அறியும் பொருளும் என்று இரண்டாக இல்லாமல் அறிபவனே அறியப்படும் பொருளாக ஒன்றிக் கலந்துவிடுவதே சிவலோகமாகும்.

            இவ்வாறான இறைத்தன்மை கொண்ட ஞானம் நமக்கு ஆசாரம் எல்லாம் தருவனவாக அமைகின்றது. அதாவது, அசைவதும், அசைவற்றிருப்பதுமாகிய பல்வேறு நிலைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகம் மேன்மையான பல நல்ல உயர்வுகளைப் பெறச் செய்யும். பேரறிவு நிறைந்து பெருகும் இடம் சிந்தையாகும். அதாவது சிந்தை ஞானத்தின் விளைநிலமாகும். யோகம் முதலான சாதனங்களின் வழியாக மூலாதாரத்தில் இருந்து மேலே சென்று உயிர் ஆற்றலானது ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும். அமுத நீரை அருந்தி உயிருக்குக் கேடு விளைவிப்பதான பந்த பாச மலங்களை வேரறுத்துச் சிவப்பரஞ்சுடரோடுக் கூடுவதே ஞானமாகும். இதுவே, உயர்ந்த ஞான நிலையாகும். இது குருவின் துணையின்றி நிகழாது. இங்கு உலகியல் உணவில் இருந்து தற்சார்ப்பு உணவாகிய ஞான அமுதத்தினை சுவைத்து உயிர் வாழலாம்.

            உண்மையில் சைவம் என்பது காய்கறி உணவு வகை சார்ந்தது கிடையாது. அசையாத தன்மையில் இருந்து பெறப்படும் உணவே சைவமாகும். அதுவே ஞான அமிர்தமாகும். அந்த ஞானமிர்தமே உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் கொடுக்கவல்லது. அசைவம்; என்பது அசையாத தன்மைக்கு எதிர் தன்மையில் அசைத்து பிற உயிர் தன்மையினை எதிர்பார்த்து பிறச்சார்ப்பு உணவு முறையினைக் கைக்கொள்வது அசைவமாகும். சைவத்தில் ஞானத்தையே உணவாக உட்கொள்வதால் இங்கு பாவ புண்ணியம் கணக்கு இருப்பதில்லை. ஞானம் விசேடம் என்பது நாடும் பரம்பொருளைக் கண்டறிவதாகும். ஞான நிர்வாணம் என்பது மெய்ப்பொருளை அறிந்துணரும் அருள் வயமாதலாகும்.  ஞான ஆபிடேகம் என்பது ஞான குருவின் பாதம் பணியும் சிவயோக சித்தியாகும்.  ஞான சமயம் என்பது ஆத்ம தரிசனம், சிவதரிசனம், சிவபோகம், சிவயோகம் என்னும் நான்கு நிலையாகும். அவ்வாறு, ஒவ்வொரு ஞானிகளுக்கும் மேற்சொன்ன நான்கு உயர்குணங்களை பெற்றிருக்க வேண்டும்  என்கிறார் திருமூலர்.

“ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்கும்

மோனிக்கு இலைஒன்றும் கூடாமுன் மோகித்து

மேல்நிற்றலாம் சக்திவித்தை விளைந்திடும்

தான் குலத்தோர் சரியை கிரியையே” திருமந்திரம் (1473)

என்னும் திருமந்திரப் பாடலில், ஞானநிலையில் இருக்கும் தவ யோகிகள் மாயையின் சூழ்ச்சியில் சிக்கி மீண்டும் கீழ்நிலைக்கு  வரக்கூடும். எனவே,  ஞான நிலையில் இருப்பவரும் மௌன சமாதியில் இருக்கும்போது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் (மறைஞானம்) என்னும் நான்கு மார்க்கத்தினை எண்ணங்களினால் செய்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இது சுத்த ஞானிகளுக்கு தேவையில்லை. எனவே, ஆதார நிலையில் இருந்து யோகம் செய்வோருக்கு ஏற்றது சரியையும் கிரியையேயாகும்.

            ஞானத்தில் சரியையாகிய அருள் தொண்டும், ஞானத்தில் கிரியையாகிய அகமார்ந்த பக்தியும், ஞானத்தில் யோகமாவது நாதாந்த முடிவில் பர ஒளியைக் கண்டு மகிழ்ந்திருத்தலாகும். மேலும், ஞானிகள் அடைகின்ற ஞானத்தில் ஞானம் என்பது ‘நான்’, ‘எனது’ எண்ணும் அகப்பற்றும், புறப்பற்றும் இல்லாதிருப்பதாகும். இவ்வாறு, நான்கு மார்க்கத்தின் நிலையில் நின்று ஞானத்தினை பெற்றவர்களுக்கு புண்ணிய பலன்களான நன்மையும், பாவப் பயனாகிய தீமையும் இறைவனின் கருணைக்கு உட்பட்டவர்களுக்கு நெருங்காது.  ஞான மார்க்கமாகிய சமய நெறி என்பது தன்னை அறிவதும், தன்னுள் பரப்பொருளைத் தரிசித்து செயலற்று நிற்பதே பரிபுரண ஞானமாகும்.

முடிவுரை

            இந்த உலகில் பிறந்த அனைத்து உயிருமே இறைவனிடத்து இருந்து வெளிப்பட்டவையேயாகும். அவற்றில் மறைந்து கிடக்கும் மலங்கலாகிய ஆணவம் நீங்கும் பொருட்டு உயிர்களுக்கு கன்மத்தினையும், மாயைப் பொருட்களையும் கூட்டுவித்து ஆணவ மலத்தினை இறைவன் நீக்குகின்றான். அவ்வாறாக, பலப்பிறவிகள் எடுத்து பெறுவதற்கரிய மனிதப் பிறப்பினை  நாம் இங்கு எடுத்திருக்கின்றோம். வேறு எந்த பிறவி எடுத்தாலும் இறைவனை சிந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மனிதனோ இன்னும் இறைநிலையினைப் பற்றி சிந்திக்காமல் மாயை என்னும் அறியாமையில் இருக்கின்றார்கள். நிலையாமையினை உணர்ந்து நிலையான தன்மை கொண்ட இறைவனின் திருவடியினை வேண்டி அவன் அடிப்பணியவே இப்பிறவியினை நாம் அனைவரும்; பெற்று இருக்கின்றோம் என அiனைவரும் உணர வேண்டும்.

            இவ்வாறாக, உயர் நிலையாகிய இறைவனின் திருவடிப்பேற்;ற பெற்றுள்ள அருளாளர்களின் வழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நிலையினை திருமூலர் தம்முடைய மந்திர பாடல்கள் வழி நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார். ஞான மார்க்கத்தில் நின்று ஞானத்தனை அடைந்தவர்களுள் திருமூலரும் ஒருவராவார். ஆனால், அவையாவும் குருவின்றி செயல்படாது. எனவே, திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு மார்க்கத்தில் உயர்ந்த வழியாக ஞானத்தை குருவின் அருள் வேண்டி ஞானத்தை அடைவோம்! அதற்கான மார்கத்தினை பின்பற்றுவோம்! பிறப்பில்லா பெருவாழ்வினை அனைவரும் அடைவோம்! என்னும் கருத்தை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கின்றோம்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

1.          ஞா. மாணிக்கவாசகன்                           –           திருமூலர் – திருமந்திரம்,

                                                                                                மூலமும் – விளக்க உரையும்,

                                                                                                மண்ணடி, சென்னை – 600 001,

                                                                                                உமா பதிப்பகம்,

                                                                                                பத்தாம் பதிப்பு – சனவரி – 2016.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

இ-மெயில்: omarivruom.999@gmail.com

கற்பதை கசடற கற்க |முனைவர் ஈ.யுவராணி |வாழ்வியல் கட்டுரை

கற்பதை கசடற கற்க_யுவராணி

கற்பதை கசடற கற்க

             பல வருடங்களுக்கு முன்னர், கடற்கரை ஓரமாக ஒரு நாடு இருந்தது. அதன் பெயர் ”அகத்தி நாடு” வளமிகுந்த அந்நாட்டில் ஒரு பெரிய சிற்பக்கூடமும் இருந்தது. அங்கு படித்து வந்த ஒரு மாணவனுடைய பெயர் “நந்தன்”.
    இந்த நந்தனுக்கு சிற்பக்கலையின் மீது ஓரளவு ஆர்வம் இருந்தாலும், சதா காலமும் சிற்பக் கூடத்திலேயே நேரம் செலவாவதை நினைத்து, ஒரே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஆனால், அவனுடைய தந்தையோ, ஏதாவது ஒரு கலையிலாவது அவன் தேற வேண்டுமென்று விளைந்து, அவனை அந்த சிற்பக்கூடத்தில் சேர்த்து விட்டிருந்தார். அதனால், வேறு வழியேதும் இல்லாமல், ஒருவிதமான சலிப்புடனேயே சிற்பக்கலையைப் பயின்று வந்தான் நந்தன். இப்படியிருக்கும்போது ஒருநாள், அவன் கடற்கரைக்குச் சென்ற வேளையில், கடற்கரை ஓரமாக ஒரு பெரிய கப்பல் நிற்பதைப் பார்த்தான். இதுவரையும் அவன் எத்தனையோ முறை அந்தக் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். ஆனால், அம்மாதிரி வித்தியாசமான ஒரு கப்பலை அவன் பார்த்ததேயில்லை. அதனால், அந்தக் கப்பலுக்குள் சென்று அதை வேடிக்கை பார்த்தான்.  அந்தக் கப்பலின் உள்ள அமைப்பும் கூட, மிகவும் வித்தியாசமாக இருந்தது.  உள்ளே, இரகசியமான சில அறைகளும் கூட இருந்தன. இப்படி எல்லா தளங்களையும் பார்த்துவிட்டு, அவன் வெளியேற முனைந்த போது, நங்கூரம் எடுக்கப்பட்டுத் தனது பயணத்திற்குத் தயாராகியிருந்தது அந்தக் கப்பல்.
“அய்யயோ!…  வெளிநபர் நான் ஒருவன் இங்கே இருக்கிறேனே! கப்பலை நிறுத்துங்களேன்”, என்று பதறினான் நந்தன். அந்த சத்தத்தைக் கேட்டு அவன் முன்னால் வந்து நின்றான் ஆஜானுபாகுவான ஒருத்தன்.
     இப்போது தான் நந்தனுக்குப் புரிந்தது. அது ஒரு சாதாரண கப்பல் கிடையாது; கடற்கொள்ளையர்களுடைய  கப்பல் என்று. அவனுக்குத் தூக்கி வாரி போட்டது. “என்னை மன்னித்து விடுங்கள்…….. நான் தெரியாமல் இந்தக் கப்பலுக்குள் வந்து விட்டேன்.  உங்களைப் பற்றி யாரிடமும் கூற மாட்டேன்…. என்னை இறக்கி விடுங்கள்!!” என்று அந்தக் கடற்கொள்ளையனிடம் கெஞ்சினான். ஆனால், அவனும் அவனது ஆட்களும் நந்தனை விடுவதாக இல்லை. அவனைத் தங்களுடைய பிணையக் கைதியாக எடுத்துக்கொள்ள, கப்பல் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.
    இப்படியாக, நந்தனும் அந்தக் கடற்கொள்ளையர்களுமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்த கப்பல், திடிரென்று ஒரு பெரிய சுழலில் சிக்கியது. அலைக்கழிக்கப்பட்டுத் தடுமாறி, கடைசியாக வேறு ஒரு நாட்டின் எல்லையில் சென்று நின்றது. அப்படி அது எல்லையில் சென்று நின்றதுதான் தாமதம்! அந்நாட்டின் காவலர்கள் அனைவரும் வேகவேகமாகக் கப்பலுக்குள் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட கடற்கொள்ளையர்கள், அவர்களோடு பயணித்த நந்தன் என்று அனைவரையும் கைது செய்து, அரசன் முன்பாகக் கொண்டு சென்றனர்.
     இந்தக் கடற்கொள்ளையர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. அதனாலேயே, அந்தக் காலத்தில் இவர்களெல்லாம் பிடிபட்டால் மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பார்கள். அந்த அரசனும் கூட அவர்களுக்கெல்லாம் மரண தண்டனையையே வழங்கினான். அவர்களுள் ஒருவனாகக் கருதப்பட்ட நந்தனுக்கும் சேர்த்துதான்.  அதனால், நந்தன் பயங்கரமாக அழ ஆரம்பித்தான். நான் ஒரு கொள்ளையனல்ல சிற்பம் பயில்பவனென்று அரசனிடம் மன்றாடினான். ஆனால், அவனருகே நின்ற கொள்ளையர்கள் அதனை முற்றிலுமாக மறுத்தனர். “அரசே அரசே! அவனை நம்பாதீர்கள் ! இவனும் எங்களுள் ஒருவன்தான்” என்றனர். “நான் உங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் அனைவருடைய  தலையும் துண்டிக்கப்படும். அதுவரை நீங்களனைவரும் சென்று சிறைச் சாலையில் இருங்கள்”, என்று சொல்லி  கடுமையான காவல் கொண்ட ஒரு சிறைச்சாலைக்கு இவர்களை அனுப்பி வைத்தான்.
       நந்தனுக்கு வேதனை அதிகரித்தது. சிறைச்சாலை அறையில் உட்கார்ந்து ஒவ்வொரு நாளும் அழுதான். இந்த நிலையில்தான் சிறைச்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு காவலருக்கு நந்தன் மீது இரக்கம் பிறந்தது. 
“ஏன் தம்பி! அரசரிடம் உன்னை நிரூபித்துக்கொள்வதற்கு உன்னிடம் ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லையா ?” என்று கேட்டார்.  “ஐயா, நான் என்ன செய்வது? நான் ஒரு சிற்பி. அதை நிரூபிப்பதற்காகக் கையிலேயே உளியையும் கல்லையும் தூக்கிக்கொண்டேயா வர முடியும்” என்று விரக்தியில் பதிலளித்தான் நந்தன்.
     அந்த காவலாளி யோசித்துப் பார்த்துவிட்டு, “சரி தம்பி…  நானே உனக்கு ஒரு உளியைக் கொண்டு வந்து தருகிறேன். நீ ஒரு சிற்பத்தைச் செதுக்கு. ஒருவேளை, உண்மையாகவே உனக்கு சிற்பம் செதுக்கத் தெரிந்தால், அரசரிடம் உன்னை நிரூபித்துக் கொள்ளலாம் அல்லவா!” என்று கூற, அவனுக்கும் அது ஒரு நல்ல யோசனையாகப்பட்டது. கூடிய விரைவில், அந்தக் காவலாளி மூலமாக ஒரு உளியை வாங்கிக்கொண்டான்.  அந்தக் காலத்துச் சிறைகளில் படுப்பதற்கு வசதியாக ஒரு திண்டு போட்டிருப்பார்களல்லவா! அந்தத் திண்டிலேயே தன்னுடைய சிற்பத்தைச் செதுக்க முடிவெடுத்தான். கல்வி கற்கும் காலத்தே முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ளாதலால், சிற்பம் செதுக்குவது கடினமாக இருந்தது. ஆயினும், தனது  தலைமைச் சிற்பி கூறிய அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகப்படுத்திப் பார்த்து, இரவு பகல் பாராமல், இமைப்பொழுதும் தூங்காமல், ஒரு நல்ல சிற்பத்தை செதுக்க முயற்சித்தான் அவன். இப்படியே நாட்கள் நகர, அவனுடைய தண்டனைக்கான நாளும் வந்தது. பொதுவாக, மரணதண்டனைக்  கைதிகளிடம் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, “உனது கடைசி ஆசை என்ன ?” என்று கேட்பார்களே! அதுபோல நந்தனிடமும் கேட்டார்கள்.  “எனக்கு ஒரே ஒரு ஆசைதான். நான் இத்தனை நாள் வாழ்ந்த இந்தச் சிறைச்சாலையில் அரசருக்கென்று ஒரு பரிசைத் தயாராக்கி வைத்துள்ளேன். அந்தப் பரிசை என்னால் எடுத்துத் தரவியலாது என்பதால், அதை பார்வையிட அரசர் பெருமானார் இங்கு வரவேண்டும். அது போதும்” என்றான் நந்தன்.  ‘மரண தண்டனைக் கைதி’ என்பதால், அரசரும் ஒத்துக்கொண்டார். அவனது அறையைப் பார்வையிடுவதற்காகச் சிறைச்சாலைக்கு வந்தார். அரசருக்கு எதிர்புறமாகச்  சிற்பம் செதுக்கப் பெற்றிருந்த திண்டை மறைத்துக்கொண்டு நின்றான் நந்தன்.  “எனக்கு ஏதோ பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னாயே! என்ன பரிசு அது ?” என்று அரசர் கேட்க, அவன் நின்ற இடத்திலிருந்து சற்று விலகி அந்த சிற்பத்தைக் காட்டினான் நந்தன்.   அந்த சிற்பத்தில் ராஜ மாதாவின் திருமுகம் ! அரசருக்கு அப்படியே புல்லரித்து விட்டது. “அப்படியெனில், நீ கடற்கொள்ளையன் இல்லையா ? அன்று நீ சொன்னது போல, சிற்பிதானா?”, என்று வியந்து அவனை விடுவித்தார். அத்தோடு, எந்தத் தவறுமே செய்யாமல் சிறைவாசம் பெற்றதற்கு இழப்பீடாக ஒரு தொகையையும் கொடுத்து அவனை அவனுடைய நாட்டுக்கும் அனுப்பி வைத்தார்.
     இன்று இந்தக் கதையில் பார்த்தது போலத்தான் நண்பர்களே! ஆபத்தில் நமக்கு யார் உதவுகிறார்களோ, இல்லையோ, நாம் கற்ற “கல்வி” கைகொடுக்கும்.  கல்வி என்றால் பாடப்புத்தகங்களில் படிக்கும் பாடங்களும், நாம் வாங்கி வைத்திருக்கும் பட்டங்களும் மட்டுமல்ல.  நாம் கற்றுக் கொள்கிற எல்லா தொழில்களும், எல்லா கலைகளும் கல்வியில்தான் அடங்கும். நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு நாம் கற்றுக் கொள்கின்ற அந்தக் கல்வியே, ஆபத்துக் காலங்களில் நம்மைக் காப்பாற்றும்.  இதை நீங்கள் இன்று அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு கதையை எழுதிக்கொண்டு வருகிறேன். அதுவரை நன்றி.

ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்.

ஈரோடு மாவட்டம் – 638 476.

மலையதிகாரம் (பகுதி – 2) | கவிதை

மலையதிகாரம் பகுதி 2

மலையதிகாரம் (பகுதி 2)

 

கோடை வந்ததுன்னா
கொண்டாட்டம் ஓடி வரும்…!
 
உள்ள பசங்க எல்லாம்
ஊருக்கு போகையில..
உள்ளம் ஏங்காம
உற்சாகம் கொண்டிருக்கும்…!
 
நானென்ன செஞ்சிடுவேன்?
என் மலையை கொஞ்சிடுவேன்..!
 
முப்பது ஆடிருக்கும்
முந்தியோட நாயிருக்கும்..
சொரக்கா குடுவையில
சொகமான சோறிருக்கும்…!
 
எடுத்து போகையில
எட்டி எட்டி பாத்துக்கிட்டு..
எளவட்டம் நாலு வந்து 
 என்னோட சேந்திருக்கும்…!
 
கூட்டம் சேந்ததுன்னா
கும்மாளம் கூடி வரும்..
ஆட்டமும் பாட்டமுந்தான்
 ஆடோட்டி போகையில…!
 
பாதி மலையேறி
பாறையில நிக்கையில..
அசைக்கும் கையிரண்டும்..
ஆகாச பறவபோல..
அசைச்சி முடிக்கிறப்போ
அடிவாரம் கீழிருக்கும்..
ஆகாசம் மேலிருக்கும்…!
 
கல்லெடுத்து உருட்டிவிட்டா
கடகடன்னு உருண்டோடும் 
பாறையடி பள்ளத்துல
பயங்கரமா  போயி விழும்…!
 
ஆட்டுக்குட்டியெல்லாம்
ஆனந்தமா ஓடி வரும்..
பாறை ஓரத்துல
பாஞ்சி வந்து நின்னுருக்கும்..
பயத்துல ஓட்டி விட்டா
பள்ளத்துல உழுந்திடாம..
சட்டுன்னு ஓடி வந்து
சறுக்கலுல சறுக்கி வரும்…!
 
பெரண்ட ஒடிச்சி வந்து
பெசகாம ஓட்டையிட்டு..
குச்சியொன்னு கொண்டு வந்து
ஓட்டையில குத்திவிட்டு..
பொண்வண்டு புடிச்சு வந்து
பெரண்டயோரம் ஒட்ட வச்சு..
காரமுள்ளு ஒடிச்சி வந்து
காலோரம் குத்திவிட்டா..
பொன்வண்டு பறக்குறப்போ
காத்தாடி  காட்சியாவும்…!
கண்ணெல்லாம் குளிர்ச்சியாவும்…!
 
புளியமரத்த கண்டுபுட்டா..
புள்ளிமானா காலோடும்..
கல்லு கொண்டு எறிஞ்சமுன்னா..
கை மேல பழமிருக்கும்..
ஒரு பக்க ஓடொடச்சி
ஓட்ட ஒன்னு போட்டு வச்சி..
குட்டி போட்ட ஆடொன்ன 
கொண்டு வந்து பால்கறந்து..
புளிக்குள்ள பாலூத்தி
உள்ள வர ஊறவச்சி
பழத்த திங்கையில
பல்லெல்லாம் எச்சூறும்..
பாதி வயிறு பத்தலங்கும்..
மீதி வயிறு பசியாறும்…!
 
கூரான நாலு கல்ல
கூட்டமா சேத்து வச்சி..
ஓடத்தண்ணி கொண்டு வந்து
ஒவ்வொன்னா கழுவி விட்டு..
செம்மண்ணு கொண்டு வந்து
செவ செவன்னு பொட்டு வச்சி..
ஈஞ்சி மர எலயெடுத்து
எடமெல்லாம் சுத்தம் பண்ணி..
சொரக்குடுவ தண்ணிக்குள்ள 
சொகமா சோறெடுத்து..
புங்க எலமேல
புசுபுசுன்னு போட்டு வச்சி..
சாமி கும்பிட்டுட்டு
சாரியா குந்திகிட்டு
சாப்பிட்டு முடிக்கையில..
நூறு வருச மரத்துக்கு
நோகாம பேரு வெப்போம்..
சாமி வெச்சாச்சி
இதுக்கு பேரு சாமிபுளியாமரம்…!
 
பாறையோட பாழியில
பக்குவமா கைவிட்டு..
கொடம்போல குடுவைக்குள்ள
தளம்பாம  தண்ணி மொண்டு..
பூச்சாங்கொட்ட நாலு
பொறுப்பா பொறுக்கி வந்து..
குடுவைக்குள்ள போட்டு வச்சி..
குலுக்கி விட்டு பாக்கையில..
கொரகொரன்னு நொரயிருக்கும்..
குடுவை  நெறஞ்சிருக்கும்..
நெறஞ்ச குடுவைக்குள்ள
ஒடஞ்ச குச்சி வச்சி..
ஒசக்க புடிச்ச பின்னே
ஓதி விட்டாக்கா..
ஒன்னில்ல ரெண்டில்ல
ஒரு நூறு முட்ட வரும்..
ஒவ்வொரு முட்டயிலும் வானவில்லு
வண்ணம் வரும்…!
 
சின்ன சின்ன நெனவெல்லாம்
சிந்தனைக்கு வந்துடுது..
வண்ண வண்ண எண்ணமெல்லாம்
வரிசகட்டி வந்துடுது..
ஆட்சி அதிகாரமெல்லாம்
நாடு நகரத்தோட..
மலைக்குள்ள வந்த பின்னே..
மனுசனுக்கு ஒன்னுமில்ல..
மகத்தான பரிகாரம்..
மலையோட அதிகாரம்…!
 

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச.குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மேலும் பார்க்க…

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

5.மலையதிகாரம்

6.உழவே தலை

மொபைல் ரூல்ஸ்|ப.பிரபாகரன்| சிறுகதை

மொபைல் ரூல்ஸ்

 ‘மொபைல் ரூல்ஸ்’

           “இப்போ, அப்பா குளிச்சுக்கிட்டு இருக்கிற நேரமாச்சே! என்ன செய்றது? வேறு வழியில்லையே. போன் பண்ணிதான் பார்ப்போம். ஒருவேளை அவர் குளிச்சு முடிச்சுட்டு வந்திருக்கலாம்!” என்று நினைத்து ஹேண்ட்பேக்கில் இருந்து போனை எடுத்து டனுஜா அப்பாவுக்கு போன் செய்தாள்.

           அப்பாவின் போனில் காலர்ட்யூனாக கண்ணதாசனின் வரிகள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…’ என்று பாடி இரண்டு முறை ஒலித்து முடித்தது. அவர் போனை எடுக்கவில்லை. டனுஜாவுக்கு அப்பாவின் மீது கோபம் எல்லைமீறியது; ‘இரண்டு மூன்று முறை முழு ரிங்கும் போய் கூட இன்னும் போனை எடுக்கவில்லையே’ என்று புலம்பினாள்.

           குளியலறையில் முகத்திற்கு சோப்பு போட்டுவிட்டு ஸவரில் குளித்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு, டனுஜா முதலில் அழைத்த போனின் ஒலி செவிக்கு எட்டவில்லை. ஆனாலும் அவள் போனை வைக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். சில நிமிடங்களில் அவர் குளித்து முடித்துவிட்டு துண்டை எடுத்து துவட்ட ஆரம்பித்தார்.

           அப்போதுதான் அவருடைய போனில் ஒலித்த சத்தம் கேட்டு துவட்டிக்கொண்டிருந்த துண்டை எடுத்து இடுப்பினில் கட்டிக்கொண்டு குளியலறையில் இருந்து வேகமாக ஓடிவந்தார். பிறகு வீட்டினுள் சரியாக சிக்னல் கிடைக்காது என்பதால் அவசர அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து அட்டண்ட் பண்ணினார்.

           “ஹலோ, ஹலோ சொல்லு பாப்பா! என்னம்மா, கேக்குதா! இப்பதான் குளிச்சுட்டு வர்றேன்”. என்றார். ஆனால் போனின் மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அட்டண்ட் பண்ணின உடனே போன் ஏனோ கட் ஆகி போயிருந்தது. அது தெரியாது மூச்சு விடாமல் போனில் தனியே பேசிக் கொண்டிருந்தார். சில நொடிகளில் போன் கட் ஆகி போனதை அறிந்து காதில் இருந்த போனை கையில் எடுத்து உற்று பார்த்தார்.

           “அட, போன் கட் ஆகி போச்சே! என்ன ஆச்சு? எதுக்கு போன் பண்ணினான்னு தெரியலயே?” என்று நினைத்து, எதற்காக போன் செய்தாள்? என்ன மறந்து போனாளோ தெரியலயே? என்று நினைத்துக்கொண்டு டனுஜாவுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

மறுபுறம் “இந்த நேரத்துலதான் நெட்வொர்க் கூட நம்மை பழி வாங்கும்” நம்ம அவசரத்திற்கும் ஆத்திரத்திற்கும் இந்த நெட்வொர்க்க குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்? என்று டனுஜா கட் ஆனா போனில் இருந்து மீண்டும் அப்பாவுக்கு முயற்சித்தார்.

           இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி போன் செய்து கொண்டிருந்ததால் ‘நெட்வொர்க் பிஸி, பிஸி’ என்று காண்பித்து இருவருக்கும் போன் கட் ஆகி போனது. அவள் கட்டுக்கடங்காத கோபத்திற்கு ஆளானாள். ஓங்கி போனை உடைத்து விடலாம் என்று கையை உயர்த்த டனுஜாவின் போனில் இருந்து ‘கிளிங், கிளிங்’ என்று பேட்டரி லோ ஆனதை உணர்த்தும் எச்சரிக்கை ஒலி ஒலித்தது. சார்ஜ் வேறே கம்மியா இருக்குதே! ஆபிஸ் வேற வரப்போகுது. அங்கு உள்ளே போனதும் போனை ‘வாங்கி சுவிட்ச் ஆப் பண்ணீ’ வச்சுக்குவாங்களே. எப்படி சொல்றதோ தெரியலயே!” எப்படியாவது அவள் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

           அதே சமயம், அப்பாவும் நான்கைந்து முறை முயற்சி செய்து, போன் போகவே மாட்டேங்கிறது? என்று கடுப்பாகி என்ன ஆச்சு? என்று தெரியாமல், “ஒரு வேளை போனை சுவிட்ச் ஆப் செய்து பார்த்தால், போன் போகுமோ?” என்று நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.

           என்ன இது? ஒரு அவசரத்திற்கு போன் பண்ணுனா, இப்படி பண்ணுறாரே? போன் வேற போக மாட்டேங்கிறது? இப்ப போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்குன்னு வருதே. இருவருக்கும் ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் கொஞ்ச நேரத்தில் பலமடங்காக அதிகரித்து போனது.

           சில விநாடிகளில் காலர் டோன், ரிங் டோன் என்று இருவரின் செவிகளிலும்  கண்ணதாசனின் கீதம் மீண்டும் இசைக்க ஆரம்பித்தது. ஆனால் தொடக்கத்திலேயே இருவரும் அதை துண்டித்து ‘ஹலோ, ஹலோ’ என்று பேச ஆரம்பித்தனர்.

           “அப்பா! எவ்வளவு நேரமாக உங்களுக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கிறேன்! என்ன ஆச்சு உங்க போனுக்கு?” என்றாள்.

            “இல்ல பாப்பா, நானும் அத்துனை முறை உனக்கு போன் பண்ணிக்கிட்டே தான் இருந்தேன். போன் போகவேயில்ல. என்னன்னு புரியல. நெட்வொர்க் பிரச்சனையான்னு தெரியல. அதனால தான் போனை சுவிட்ச் ஆப் செய்து ஆன் பண்ணினேன். அதனால தான் இப்போ நம்மால பேச முடிஞ்சது” என்றார்.

எத்தனை முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன் “இரண்டு பேரும் ஒரே நேரத்தில் போன் பண்ணினால் இரண்டு பேருக்குமே கடைசிவரைக்கும் லைன் கிடைக்காதுங்கிற உண்மைய புரிஞ்சுக்கங்க, அதே போல யாராவது உங்களுக்கு போன் பண்ணி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, இல்ல அட்டண்ட் பண்ணின அப்பறம் போன் கட் ஆனாலோ அல்லது பாதி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, அவரே திரும்ப போன் பண்ணும்வரை கொஞ்சம் பொறுமையா இருங்க! அது போதும்! அப்போதுதான் இதுபோல தேவையே இல்லாத டென்சனை தவிர்க்க முடியும்” என்று டனுஜா அப்பாவிடம் சொன்னாள்.

            “ஒரு வேளை பேலன்ஸ் இல்லாமல் கட் ஆகி போனால் என்ன செய்றதாம்? சரிம்மா. காலையிலே வேண்டாம். நீ சொல்றதை ஒத்துக்கிறேன். இனிமேலு அதை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு போன் வந்தா பேச முயற்சிக்கிறேன். சரி விடு. நீ எதுக்கு இப்ப போன் பண்ணின? அதை முதல்ல சொல்லு.” என்று கிண்டலாக மெல்ல முணுமுணுத்தார்.

           “இப்படி கிண்டல் கேலிக்கு மட்டும் குறைச்சலில்லை போங்க! ஒரு வேளை போன் பண்ணுபவரின் பேலன்ஸ் இல்லாமல் பாதியில் போன் கட் ஆகி போகும் நிலை இருந்தால் போன் பண்ணியதும் ஹலோ சொல்றதுபோல, பேலன்ஸ் கம்மியாக இருக்கு நீங்களே பண்ணுங்க, இல்ல போன் கட் ஆனா நீங்கள் பண்ணுங்க” என்று சொல்லிட வேண்டியது தானே.

           இதைக் கேட்ட அப்பாவும் கடுப்பாகி, அம்மா டனுஜா! எல்லாம் சரிதான். நீயும் ஒன்னு புரிஞ்சுக்கோ!

           “ஒருத்தருக்கு ஒரு முறை போன் செஞ்சு எடுக்கலன்னா! மாத்துகட்டுல திருப்பி திருப்பி போன் பண்ணிக்கிட்டே இருக்காத. ஒரு வேளை போனுக்கு அருகில் இல்லாமல் இருக்கலாம். இல்லை வேறு ஏதேனும் மிகவும் முக்கியமான வேலையில் இருக்கலாம். ஓரிரு முறை போன் செய்தும் எடுக்கவில்லை என்றால் விட்டுவிட்டால் உனக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அதையும் மீறினால் உனக்குத்தான் டென்சன் மேல் டென்சன் அதிகமாகும்” என்றார் அப்பா.

           “ஐயோ! அப்பா, உங்ககிட்ட பேசிகிட்டே நான் சொல்ல வந்ததையே மறந்து போயிட்டேனே!  பஸ்ஸில இருந்து இறங்குற இடம் வந்திடுச்சு. இன்னிக்கு முக்கியமான கேஸ் விசயமா வெளியில போகணும். அதனால ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சு வர லேட் ஆகும். தம்பியை பள்ளிக் கூடத்தில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திடுங்க. மறந்திடாதிங்க! நான் வச்சுடுறேன்” என்று கூறி கைபேசி வச்சிருபோருக்கெல்லாம் கச்சிதமாக பல ரூல்களை சொல்லினார்.

           பிறகு டனுஜா பேருந்தில் இருந்து இறங்கி சிட்டியிலே பிரபலமான வக்கீலிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். ஈவினிங் அந்த கேஸ் விசயமா போக வேண்டி இருந்த ப்ளான் இப்ப காலையிலேயே போகணும் என்று மாறி போனதை தொடர்ந்து ஆபிஸின் வாசலிலே டனுஜாவுக்காக கூட பணிபுரியும் பிரபா காத்திருந்தாள்.

           டனுஜாவை கண்டவுடன் கடுகடுத்த குரலில் ‘டனுஜா, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? காலையிலே செம்ம கடுப்பான சாரு, கண்ணா பின்னான்னு திட்டிட்டு போயிருக்கார். கிளையண்ட் வீட்டுக்கு உன்னை வர வேண்டான்னு சொல்லிட்டு மாலாவை மட்டும் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டார். அவ்ளோ நேரமா உனக்கு மாத்தி மாத்தி போன் பண்ணிக்கிட்டே இருந்தார். நீ எங்க வர்றன்னு தெரியாம இவ்ளோ நேரமாக காத்திருந்து இப்பதான் கிளம்பி போனார்.

           “என்னடி சொல்ற. ஐயயோ! நான் அப்பாகிட்டதான் போன் பேசிக்கிட்டே வந்தேன். அதுவும் ஈவினிங் மீட்டிங் விசயமாதான், பையனை ஸ்கூலில இருந்து கூட்டிக்கிட்டு வரச் சொல்ல அவ்ளோ நேரமா ஆச்சு. எல்லாம் இந்த நெட்வெர்க் பிரச்சனைதான்” என்று சொன்னாள்.

           “ஏண்டி டனுஜா, உங்கிட்ட எத்தன டைம் சொல்லியிருக்கே! ஒழுங்கு மரியாதயா உன்னோட போன்ல ‘கால் வெயிட்ங்க ஆன்’ பண்ணி வையின்னு. அப்பதான் நீ, வேற யார்கிட்டயாவது பேசிக்கிட்டு இருந்தாலும் உனக்கு தெரியவரும். யாரு போன் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கிட்டு உடனே அட்டண்ட் பண்ணி பதில் சொல்ல முடியும். இல்லைன்னாலும் அவங்ககிட்ட பேசிட்டு அப்பறமாவது திருப்பி பேசலாம்ல. கால் வெயிட்டிங் ஆன் பண்ணலன்னா கடைசிவரையும் உனக்கு எதுவும் தெரியாமலே போயிடும். ஏதாவது எமர்ஜென்ஸினாலும் உனக்கு தெரியபடுத்த முடியும்” என்று சொன்னாள் பிரபா.

           “இன்னிக்கு அந்த கேஸ் விசயமா, போக விருப்பம் இல்லாம தானே நானே லேட்டா வந்தேன். அதே மாதிரி ஆபிஸ் டென்சன தவிர்க்கதான் இதுவரைக்கும் கால் வெயிட்டிங்க ஆன் பண்ணாமலே இருக்கிறேன்” என்று மனதிற்குள் டனுஜா நினைத்துக்கொண்டு, பதில் ஒன்றும் சொல்லாமல் விழித்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் ப.பிரபாகரன் அவர்களுடைய சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

 

விநாஷாய சதுஷ்க்ருதாம் |ஆனந்த்.கோ |நூல் விமர்சனம்

விநாஷாய ச துஷ்க்ருதாம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர் 

“தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” ( மொழி: பிரன்ச்)

ஆசிரியர் பெயர் :  அலெக்சாண்டர் தூமா

முன்னுரை

            கட்டுரை ஒன்று எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன்,நான் எப்பொழுதோ வாசித்த இந்த நாவல் நினைவில் வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இதை எப்படி இவ்வளவு நாள் மறந்திருந்தேன் என்பதுதான் ஆச்சரியமூட்டியது. சிறுவயதிலிருந்தே பல சிறுகதைகள், நாவல்கள் என நிறைய வாசித்திருந்தாலும், நான் முதன்முதலில் படித்த பிற மொழி நாவல் இதுதான். அம்புலிமாமா, கோகுலம் இதழ்களுடன் சுஜாதா, தமிழ்வாணன்,  லக்ஷ்மி, சிவசங்கரி போன்றோரை வாசிக்கத் துவங்கிய காலம் அது. இந்த ஆங்கில நாவலை வாசித்த போது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம். அந்த வயதில் ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாதிருப்பினும் தமிழ் நாவலைப் படிப்பதற்கு நிகராக ஒரே மூச்சாக (அகராதியின் உதவியுடன்) படித்து முடித்ததாக ஞாபகம். அந்த நாவல் பிரெஞ்சு கதாசிரியர் ‘அலெக்சாண்டர் தூமா” எழுதிய “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” (மூலம்: ஃபிரெஞ்ச்) என்ற நாவலின் ஆங்கில பதிப்பு. அதுவரை ஆங்கில நாவல்களே படித்திராத என்னை, என் சகோதரிக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ துணைப்பாடமாக வந்து, எதேச்சையாகப் படிக்க வைத்து வசீகரித்துக் கொண்டது.

எழுதும் ஆர்வம்

            எத்தனையோ மனம் கவர்ந்த தமிழ் கதைகள் இருக்கையில் உள்ளன. இதை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஒரு கேள்விக்குறிதான். யோசித்து பார்த்ததில் காரணம் புலப்பட்டது. அந்த இளம் வயதில் நாவல் படித்து முடித்தவுடன், அதன் கதையோட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அது ஆங்கில நாவல் என்பதால் யாரும் படிக்கத் தவறிவிடக் கூடாது என்ற ஒரு பேராசையில்(?!!) அதை மொழி பெயர்க்கவே ஆரம்பித்து விட்டேன்!. ஆனால் அனுபவமின்மை மற்றும் பள்ளிப் படிப்பின் காரணமாக இரண்டு அத்தியாயங்களுடன் மலைத்து ஓய்ந்துவிட்டேன். அந்த வயதில் சொந்தமாகப் பள்ளிக் கட்டுரைகள் கூட எழுதியிருப்பேனா என்பதே சந்தேகம்தான். ஆகையால் என்னை முதன்முதலாக எழுதத் தூண்டிய அந்த புத்தகத்தைப் பற்றிப் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்சாண்டர் தூமா 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியராக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்து வறுமையில் உழன்று, பின் பாரீசிற்கு வந்து நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார். த்ரீ மஸ்கிடீர்ஸ் இவரது மற்றொரு புகழ்பெற்ற படைப்பாகும். “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” தூமா வால் 1844-46 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

     அலெக்சாண்டர் தூமாவின்  தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ இதைப்பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தபின் குறிப்புகளுக்காக இணையத்தில் பயணித்தபோதுதான் இந்நாவலைப்பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவற்றின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது. 1840 களில் எழுதப்பட்ட நாவல்  பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணிலடங்கா வடிவங்களில் சுருக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. 1920 – களில் பேசாமொழி படங்களில் தொடங்கி 2002 வரை பலமுறைத் திரைப்படவடிவில் எடுக்கப்பட்டுள்ளது. நான் படித்ததும் கதை சுருக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் தான் என்பதையும் அறிந்து கொண்டேன். (மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டுள்ளது)

            “உனக்கு எதிரிகளே இருப்பதாகத் தெரியவில்லையா? கொஞ்சம் சிரித்து சந்தோஷமாக இருந்து பார். பிறகு தெரியும்” – சமீபத்தில் எங்கோ இதைப் படிக்க நேர்ந்தது. ஆம் இதுதான் தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோவின் அடிநாதமும். தனக்கானத் துணையை கைத்தலம் பற்றவிருந்த ஒரு கள்ளங்கபடமில்லா அப்பாவி இளைஞனின் கனவைப் பொறாமையும் வஞ்சகமும் சிதைத்தெறிந்ததை சோகம் சொட்ட விவரித்து அந்த இளைஞனின் தோளைப்பற்ற வைத்து கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் கதாசிரியர்.

திறனாய்வு நோக்குப் பார்வை

            எட்மண்ட் டான்டேஸ் தான் அந்த அப்பாவி இளைஞன். கப்பல் மாலுமியான அவன் தன் திறமையால் முதலாளியின் நன்மதிப்பைப் பெற்று கேப்டன் பதவியையும் அடைகிறான். மேலும் தன் காதலி மெர்சிடீஸையும் சில நாட்களில் மணம் புரியவிருக்கிறான். வாழ்வில் நண்பர்களாய், சக பணியாளனாய், அண்டைவீட்டுக்காரனாய், முகம் தெரியா மனிதனாய்ப் பயணிக்கும் சில தீயசக்திகளுக்கு இவனின் இந்த மகிழ்ச்சியானத் தருணங்கள் மட்டுமே சதிவலையில் வீழ்த்தி சிறையில் தள்ளப் போதுமானதாக இருந்தது.

            ஒருவனுக்கு எதிர்பாராத தீமைகள் நிகழ்வது, சக மனிதரில் சிலர் தீயவர் என்பதனால் மட்டும் அல்ல.தன் எதிரிகள் யார் என்ற அறியாமையில் அவன் இருப்பதால்தான். அத்தகைய அறியாமைக்கு முடிவுரை எழுத முடிந்தவனே தீமையைக் கையாளத் தெரிந்தவனாகிறான். “வசந்த விழா! வசந்தத் திருவிழா! என்று டான்டேஸ் மனம் மகிழ்ந்த மணநாளில் திருமணம் முடியும் முன்னரே தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு கோட்டைத் தீவுச்சிறையிலடைக்கப்படுகிறான். ஏனிந்த தண்டனை என்பது புரியாமலேயே பல வருடங்கள் காலங்கழித்த நிலையில் இருண்ட குகையின் விரிசல் வெளிச்சமாய் சுரங்கம் அமைத்து இவனை வந்தடைகிறார் சகக் கைதி அபே ஃபாரியா.

            நாவலாசிரியர் இந்த நிகழ்வை விவரிக்கும் தருணம் அலாதியானது. மொழி தெரியா நாட்டில் “நீங்க தமிழா?” என்று செவிகளில் ஒலித்தால் எவ்வளவு ஆனந்தப்படுவீர்களோ அதற்கு நிகரான மகிழ்ச்சியைக் கதை மாந்தர்கள் அனுபவிப்பதை நீங்களும் உணர்வீர்கள். கடினமான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்க்கப் பெறும் போதுதான் ஒருவனால் தன்னுள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் வெளிக்கொணர முடிகிறது.கைதிகள் இருவரும் சிறிய ஆயுதங்களை உருவாக்குவது, தப்பித்துச் செல்ல சுரங்கம் தோண்டுவது மற்றும் இவற்றுக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் அபே ஃபாரியாவின் அபார மூளைத்திறன் ஆகியவற்றை விவரிக்கும் விதக்தில் நம்மை வாய் பிளக்கச் செய்கிறார் தூமா. திரைப்படங்களிலும் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் நம்மை நெகிழ வைக்கின்றன.

            ஒன்றுமறியா டான்டேஸிற்கு என்ன நடந்திருக்குமென்பதை யூகித்துப் புரிய வைத்து,இறக்கும் தறுவாயில் புதையல் இரகசியம் சொல்லி ,தன் உயிரற்ற உடலாலும் டான்டேஸிற்கு உதவி புரியும் அபேவின் கதாபாத்திரம் இந்த கதையின் உயிர்நாடி என்றால் அது மிகையல்ல. அபே கூறிய புதையலை சில கடத்தல்காரர்கள் உதவிடன் கண்டுபிடித்து டான்டேஸ் “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” வாக உருவெடுக்கையில் கதைக்களம் சூடுபிடிக்கிறது. அதன்பின் இராமனின் வனவாசமாய் பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வைத்த  வஞ்சகர்களை டான்டேஸ் பழிவாங்கும் படலம் துவங்குகிறது.ஒவ்வொரு எதிரிக்கும் ஒவ்வொரு விதமான தீர்ப்பு என பழிவாங்கல் படலத்தை அமைத்திருக்கும் விதம் மிக அருமை. அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அதே வேளையில் அவர்களுடைய கள்ளங்கபடமில்லா நல்ல வாரிசுகள் சிலருக்கும்,தன் முன்னாள் கப்பல் முதலாளிக்கும் நிதியுதவிகள் செய்தும்,வாழ்க்கை அமைத்துக் கொடுத்தும் நன்மைகள் பல செய்து தான் ஒரு நல்லவனே, வஞ்சத்தால் வீழ்த்தியதாலேயே பழிவாங்க வேண்டியிருக்கிறது என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார் கதாநாயகன். இத்தகைய சதித்திட்டங்கள் அல்லது கதைக்கான கருவினை தன் நண்பர் ஒருவர் உதவியுடன் தூமா அமைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.எது எப்படியோ அவை வாசகருக்கு மிகுந்த விறுவிறுப்பைத் தருகின்றன.

முடிவுரை

            “வரலாற்று சாகச நாவல்” என வகைப்படுத்தப்பட்டு அநீதிக்கு பழிவாங்குதலை கதைக்களமாக கொண்டிருந்தாலும், கதை மனிதநேயம்,காதல்,கருணை,நட்பு, நீதிநேர்மை,சமுதாயம்,மன்னிப்பு என எக்காலத்திற்கும் பொருந்தும் பன்முகத்தன்மை காட்டிப் படிப்போரைப் பரவசப்படுத்துகிறது “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ”. மூலவடிவம் கிட்டத்தட்ட 1700 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் இது அதிகம் எனப் பேசப்பட்டாலும், அவ்வளவு நீளத்தையும் இரசிக்கத்தக்க வகையிலும், கதையில் தொய்வு ஏற்படாத வகையிலும் கொடுத்திருப்பதாலோ என்னவோ  இலக்கிய உலகில் இக்கதை இன்னும் முடிசூடா மன்னனாகவேத் திகழ்கிறது.

நூல் விமர்சகர்

ஆனந்த்.கோ

கிழக்கு தாம்பரம்,

சென்னை – 600 059

மேலும் பார்க்க,

1. தூவானம் (சிறுகதை)

2.கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!

 

 

பூவே பிழைத்துக்கொள் |க.கலைவாணன்| கவிதை

பூவே பிழைத்துக்கொள்

பூவே பிழைத்துக்கொள்!!

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கூந்தல் !
என் பெயரைச் சொல்லி
உன்னை வாடச் செய்கிறதா..
பூவே சொல் !

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கழுத்து !
என் தலை சாயச்சொல்லி
உன்னை கொலை செய்கிறதா ..
பூவே சொல் !

 

பூவே !
இந்தா எடுத்துக்கொள்
என்னவளின் தேகத்தால்
உன் மோகம் பெருகும் !
கருமேகம் இருளும்!
காடும் காதலால் மலரும்!

 

பூவே !
விட்டுச்செல்
என்னவளின் இதயத்தை..
உன் மகரந்தம் பிழைக்கும் !
உன் அழகிய
மென் இதயம் மணக்கும் !

 

பூவே !
பிழைத்துக்கொள் நீயே !
நானும் என்னவளும்
இணைகையில் – நீ
அனலாய் எரிந்து விடுவாய் !

 

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

 

உழவே தலை|ச. குமரேசன்|கவிதை

உழவே தலை

உழவே தலை

♣ சேவல் கூவிடும்

செங்கமலம் பூத்திடும்

தோள் மேல் கலப்பை ஏறும்..

கயிறுகள் கைக்குள் நுழையும்..

காளைகளோடு

கம்பீரமாய் நடப்பார் தாத்தா…!

 

♣ வைகறை நிலவின்

வெளிச்சம் கொண்டு

வயலில் நுழைவார்..!

 

♣ நொகத்தடியை

நோகாமல் எடுத்து வைப்பார்..

ஏர்க்கால் தடியை

அதன் மேல் ஏற்றி வைப்பார்..

காளைகள் கொண்டு

கச்சிதமாய் பூட்டிடுவார்..

காலுக்கு முன்புறம்

கலப்பையை தூக்கி வைப்பார்..

மோலி மேல் ஒரு கையும்..

வால் மேல் மறு கையுமாய்..

அடியேதும் கொடுக்காமல்

அன்பாய் ஓட்டிடுவார்….!

 

♣ அந்த ஒற்றை கொலு முனையில்

ஓராயிரம் உயிர்கள் பசியாறும்…!

 

♣ அளவு கோலே இல்லாத

அழகான கோடு அது..

ஐந்து கால் முடியும்

ஆறாம் கால் படைசால்..

வகிடெடுத்து வாரியது போல்..

பட்டையாய் ஓட்டிடுவார்…!

 

♣ செம்மண் நிலமெல்லாம்

சேவல் கொண்டையாய்

சிவந்திருக்கும்..

உழுத நிலத்தில்

ஊன்றிய காலடி

ஒரு சாண் ஆழத்தில்

உறைந்திருக்கும்…!

 

♣ கால் பொழுது வரும்போது

காட்டையே உழுதிருப்பார்…!

 

♣ ஆடியில் தேடி

ஆரியமும் கம்பும் சோழமும் வரகும்

அழகாய் விதைத்திருப்பார்..!

 

♣ பித்தளை தூக்கு போனி

வெத்தலை பாக்கோடு

வெள்ளனே வந்திருக்கும்..

சின்னதாய் சிவந்த வெங்காயம்..

பக்குவமாய் பச்சை மிளகாய்..

பழைய சோறும் கூடவே வரும்..

சொர்க்கம் போல் எண்ணி சோற்றைச்

சாப்பிடுவார்…!

 

♣ உலக உயிர்களின்

உணவுக்காக..

‘உழவே தலை’ – என்ற

ஒற்றை மந்திரத்தோடு.. .!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மேலும் பார்க்க,

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

5.மலையதிகாரம்

 

24 காரட் தங்கம்|ப.பிரபாகரன்| சிறுகதை

24 காரட் தங்கம்

            பிபு, தினமும் அதிகாலையில் எழுந்து சுமார் 2.5 கி மீ சுற்றளவுள்ள ஏரிக்கரையை சுற்றி நடைபயிற்சி செய்வது வழக்கம். அப்படி அவன் நடைபயிற்சி செய்து முடித்த பின் அந்தநாள் முழுவதும் அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் எல்லையே கிடையாது.

            இனிமையான காலையில் வீசிய இளந்தென்றல் காதோரம் “பொழுது விடியப் போகுது, எழுந்து வா! பிபு, வாக்கிங் போகலாம்” என்று மெல்ல பேசி அவனை தட்டி எழுப்பிவிட்டது. அவன் வழக்கம் போல் எழுந்து பெரிய ஏரிக்கரைக்கு வாக்கிங் போனபோது பொழுது முழுவதும் விடியவில்லை.

இயற்கையின் இசையைக் கேட்டு நடந்தபோது, இனிதே பொழுதும் விடிந்தது; சுமார் 1 கி மீ தூரம் வரை சாலையின் இடது புறமாகச் சென்று கொண்டிருந்தான். பின்னர் சாலையில் குறுக்கே ஒரு சிறிய பள்ளம் கண்களில் தென்பட்டது.  மேலும் அந்தப் பள்ளத்தில் நேற்று பெய்த மழை நீரும் சிறிதளவு தேங்கி இருந்தது.

பிபு, அந்த சிறிய பள்ளத்தைத் தாண்ட மறுத்துச், சாலையின் வலது ஓரமாக நடக்கலானான். அங்கிருந்து பத்து அடிகள்தான் எடுத்து வைத்து இருப்பான், அங்கே அழகான மொபைல் போன் ஒன்று, தன்னந்தனியே தனது உரிமையாளர் இல்லாது நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். வியர்வை வடிந்த அவன் முகத்தில் இருந்த இரு கண்களின் விழியில் ஒருவரும் தென்படவில்லை. அந்த மொபைல் போன் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று புதிதாக இருந்தது.

ஒரு வேளை எவரேனும் வேண்டுமென்றே இங்கே வைத்துவிட்டு, யார்? இந்த கிராமத்தில் நல்லவர். யார்? பிறர் பொருளின் மீது ஆசைப்படாதவர், என்று எவரேனும் இந்த அதிகாலையில் லைவ் ஷோ பண்ணுகிறார்களோ! என்னவோ? என்று நினைத்து, அதை அவன் எடுக்காமல் சற்று தயங்கி யோசித்துக் கொண்டு நின்றான். நிற்க,

(முன்பு ஒரு நாள் இது போலவே சிறப்பானதொரு சம்பவம் நடந்திருந்தது. ஒரு முறை அவன் மளிகை கடைக்கு நடந்து செல்லும் வழியில் ரூபாய் 20, ஒரு ஓரத்தில் கிடப்பதைக் கண்டான். அப்போது கடையில் வாங்கப் போகும் பொருட்களின் சிந்தனையில் சென்று கொண்டிருந்ததால், அந்தப் பணத்தை எடுக்க மறந்து கடையை நோக்கி சற்று முன்னோக்கி சென்றேன். அவனைத் தொடர்ந்து வந்த ஒரு நபர், எங்கே பிபு திரும்பி பார்த்து எடுத்து விடுவானோ! என்று நினைத்து வேக வேகமாக ஓடி வந்து அதை எடுத்து விட்டார். திடீரென்று அந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சிறுவர்கள், ஹே ஹேய், ஹேய்…… என்று கத்தி கூப்பாடு போட்டனர். என்ன நடந்தது? என்று திரும்பி அவர்களை பார்த்தபோது தான் எல்லாமே விளங்கியது.

சிறுவர்கள் கையில் கேமரா வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் சிறுவர்கள் அனைவரும் அந்த நபரை சுற்றி கூட்டமாக மொய்த்தனர். உண்மையில் அந்த நபர் செய்வதறியாது வெட்கித் தலைகுனிந்தார். “டேய்! உங்களுக்கு விளையாட விளையாட்டே இல்லையா! இது எல்லாம் ஒரு விளையாட்டா? என்று கடுகடுத்த குரலில் கூறி, கையில் எடுத்த 20 ரூபாயையும் கொடுத்து விட்டு அவ்விடம் இருந்து கிளம்பினார்.

ஜஸ்ட் மிஸ்… என்று முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு பிபு கிளம்பினான்.)

அன்று நடந்தது போல எந்த ஒரு சம்பவமும் நடக்காது என்று நம்பி, அந்த போனை எடுக்கலாம் என்று மனதிற்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வரவழைத்து அந்த போனை எடுத்துப் பார்த்தான்.

உண்மையில் அது விலையுயர்ந்த மொபைல் போன் தான்!  அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கூட இன்னும் நீக்கம் பெறவில்லை. அநேகமாக வாங்கி ஒரிரு மாதம்தான் இருக்கும் போல் தோன்றியது.

அடடா! யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லையே! என்று யோசித்துப் பின்புறம் போட்டிருந்த கவரைக் கழட்டிப் பார்த்தான். அதில் ரெட்மி என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கவரில் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. அந்த போட்டாவை நன்றாக உற்றுப் பார்த்து அந்த நபரை எங்காவது பார்த்து இருக்கிறோமா? என்று சிந்தித்தான்.

பிறகு போனின் முன்புறம் திருப்பிப் பார்க்க, ஐயோ! டிரா அன்லாக் பேட்டன் என்ற வாக்கியமும், அதைத் தொடர்ந்து 9 புள்ளிகள் 3X3 என்ற வரிசையில் இருந்தது. அதற்கும் கீழே, சற்று உற்று நோக்க, எமர்ஜென்சி கால் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து, அப்பா! முடியல, ஏன் தான் இப்படி லாக் போட்டு வச்சிருக்காங்கலோ, என்ன செய்வது? என்று தெரியாது திகைத்தான்.

அப்போதுதான் அதில் ஒரு மிஸ்டு கால் இருப்பதைக் கண்டான். அந்த நம்பருக்கு பிபு அவனுடைய போனில் இருந்து அழைத்தான். அவனது போனில் ட்ரு காலர் வசதி உள்ளதால் அந்த நபருக்கு போன் செய்தவுடன் ‘ஹரி ஹரி’ என்று காண்பித்தது.

ஹலோ! ஹரியா? தம்பி! நான் பெரிய ஏரிக்கரையில் இருந்து பேசுகிறேன். “உன்னுடைய பிரண்ட்ஸ் யாராவது போனை தொலைச்சுட்டாங்களானு, கொஞ்சம் கேட்டு சொல்லு. ஒரு போன் ஏரிக்கரையில் அந்த குமுளிக்கு பக்கத்திலே கிடந்தது. உன்னுடைய நம்பரில் இருந்துதான் கடைசியாக மிஸ்டு கால் வந்திருக்கிறது. உனது போனையும் கொஞ்சம் செக் பண்ணு. இந்த போன் போட்டோவும், அதில் இருந்த ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும், போட்டா எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பி வச்சிருக்கிறேன். பார்த்துவிட்டு கூப்பிடு” என்றான் பிபு

ஆமாம். சொல்லுங்கண்ணா. அப்படியா! (பேசிகொண்டே வாட்ஸ் அப்ல பார்த்து விட்டு) அண்ணா! இது எங்க மாமாவோட போன் தான். எப்படி மிஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. நேற்று எங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்தார். திருவிழா முடிந்து இரவு முழுவதும் தங்கியிருந்து, அதிகாலையில் ஊருக்குத் திரும்பி சென்றார். எப்படி விழுந்தது என்று தெரியவில்லை. ரொம்ப நன்றிங்கணா! இப்ப எங்க இருக்கீங்க!”என்றான் ஹரி.

பிபு பெரிய ஏரிக்கரையில் ரோட்டு மேலே வெயிட் பண்ணுவதாகவும், அடையாளமாக அவன் தலையில் அணிந்திருந்த கருப்பு தொப்பியையும் கூறியதைக் கேட்டு ஹரி அண்ணே! இன்னும் 2 நிமிடத்தில் அங்கு இருப்பேன். தான்க்ஸ் ணா… என்றான்

அப்போதுதான் பிபுவுக்கு என்ன நடந்து இருக்கும்? என்று புரிந்தது. அவன் முன்பு இடப்புறமாக வாக்கிங் வந்தபோது இடையில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது அல்லவா! அதில் ஹரியின் மாமா வண்டியை விட்டு இருப்பார். அப்பொழுது அவரின் போன் தவறி விழுந்து இருக்க வேண்டும். மேலும் மழை பொழிந்து மண் தரை, பஞ்சு மெத்தை போல இருந்ததால், போன் விழுந்த சத்தம் கூட பாவம் அவருக்கு கேட்டு இருக்காது என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

இப்படி சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, மிகவும் வேகமாக வந்து சடெர்ர்ர்… என்று ப்ரேக் அடித்து ஒரு பைக் வந்து அவன் அருகே நின்றது. அந்த பைக்கில் வந்திருந்த பையனுக்கு சுமார் 12 வயது இருக்கும். தலை குளித்த ஈரம் கூட அந்த சிறுவனின் தலையில் காயவில்லை. தலைமுடி ஈரத்தாலும் வியர்வையாலும் சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் பூசிய திருநீறு லேசாக அழிந்து இருந்தது. மாமா தொலைத்துவிட்ட போனை எண்ணி சற்று பதற்றமாகவுமே இருந்தான்.

அண்ணே! “அது எங்க மாமாவோட போன் தான்! என்று ஹரி சொல்ல, அதற்கு பிபு நீ ஹரியா? தம்பி! என்றான்.

ஆமாம். “அண்ணே! வேணும்னா அந்த போன்ல இருக்கிற நம்பருக்கு இப்ப நான் போன் பண்ணுறேன்” என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் தம்பி சரியானவங்ககிட்ட கொடுக்கணும் இல்லயா! அதனாலதான் சும்மா கேட்டேன். இந்தா! போனை பிடி” என்று நீட்டினான் பிபு.

ஹரி போனை வாங்காமல் அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அண்ணே! இத பிடிங்கண்ணே! என்றான்

தம்பி! “என்னப்பா இது, இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாம அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க, இப்படி எல்லாரும் வந்து போகிற ரோட்டுல, எதையாவது யாராவது தொலைச்சுட்டால் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும் இல்லயா! அந்த ஒரு நல்ல எண்ணத்திலே தான் இதை செய்தேன்” என்றான் பிபு

ம்ம்… என்று தலையாட்டிவிட்டு எல்லாம் சரி தான் அண்ணே…ப்ளீஸ் இத வாங்கிக்கங்க! மத்தவங்க பொருளை திருடி வாழ்க்கை வாழ்வோர் இங்கு பலர் இருக்கின்றனர். கீழே தவறவிட்ட மத்தவங்க போனை திருப்பிக் கொடுக்கணும் என்று நினைக்க ஒரு பெரிய மனசு வேணும் அண்ணா! உங்களுக்கு நல்ல மனசு; நீங்க சுத்த தங்கம். ரொம்ப நன்றி அண்ணா!

18,000 ரூபாய் போன், நான் மாமாவுக்கு போன வாரம் தான் அமேஷான்-ல ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தேன். என்ன சொல்வது? என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்க நல்ல மனசுக்கு என்ன செய்றதுன்னு புரியல. இதைப் பிடிங்க ப்ளீஸ் என்றான்.

‘வேண்டவே வேண்டாம்’ என்று பிபு மறுத்து விட, ஹரி காணாமல் போய் கிடைத்த போனை வாங்கிக்கொண்டு முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் செல்லவில்லை. கைம்மாறாகக் கொடுத்த அந்த 100 ரூபாயை வாங்காததால் அரை மனதோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். ஒரு வழியாக பிபுவின் கண்களின் பார்வையில் இருந்தும் ஹரி மறைந்து போனான்.

பிபுவும் அடையாளத்திற்கு அணிந்திருந்த தொப்பியைக் கழட்டிவிட்டு ஏதோ பெரிய சாதனை செய்தது போல பெருமகிழ்ச்சியோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். அப்போது அவனது பாதத்தில் அந்த நூறு ரூபாய் தாள் லேசாக உரசி, ‘நான் உனக்குத்தான்’ என்று உணர்த்தியது. அய்யய்யா, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பணத்தை கீழே போட்டுட்டு போயிட்டான். இப்படி பண்ணினால் நாம எடுத்துக்கிட்டு போயிடுவோம் என்று நினைத்து விட்டான் போல முட்டாள் என்று முணுமுணுத்துக்கொண்டு ஹரிக்கு போன் பண்ணினான். ‘தாங்கள் டயல் செய்த எண் இப்போது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்றது. அடக்கடவுளே! இப்ப என்ன செய்றது? என்று யோசித்துக்கொண்டே ஹரி சென்ற பாதையை நோக்கினான் பிபு.

ஹரி மறைந்த அந்த பாதையில் இருந்து மீண்டும் ஒரு பைக் வருவதைக் கண்டான். ஒரு வேளை திரும்பி வருகிறானோ என்று நினைத்து உற்று நோக்கினான். ஆனால் அதில் வந்தவன் அந்த பையன் இல்லை. பதினைந்து வயது மதிக்கத்தக்க வேறொரு சிறுவன், பைக்கின் பிரேக்கை வேகமாக அழுத்தி அவன் பிபுவுக்கு முன்னே அருகில் வந்து நின்றான்.

அவன் வண்டியில் இருந்து இறங்கி, “அண்ணா!, நீங்க தானே இப்போ, கொஞ்ச முன்னாடி எனக்கு போன் பண்ணி, எங்க மாமா போன் கீழே கிடப்பதை எடுத்து, பத்திரமாக வச்சு இருக்கிறதா இன்ஃபார்ம் பண்ணுனீங்க!”என்றான்.

ஐயோ! ஆமாம்ன்னு சொன்னா, போன் எங்கன்னு கேட்டு நம்மல பிடிச்சுக்குவானே! அது நான் இல்லன்னு சொன்னா, நம்ம மனசாட்சி நம்மல படுத்துமே என்று யோசித்துக் கொண்டு, நாம ஒருத்தருக்கு போன் பண்ணினா இன்னொருத்த வந்து வாங்கிட்டு போயிட்டானே! அது எப்படி சாத்தியமாகும்? இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? ஐயோ! முடியலடா சாமி. சுத்த தங்கமா இருந்தா ஒன்னுக்கும் உதவாதோ? நல்லதுக்கே காலம் இல்லடா. என்று நினைத்து ஒரு கணம் விழி பிதுங்க விழித்தான்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »