Saturday, April 4, 2026
Home Blog Page 14

பிரியமானதோழி|சிறுகதை|முனைவர் ஆ.கௌசல்யா

பிரியமான தோழி -முனைவர் ஆ.கௌசல்யா
     மூங்கில் தாங்கல் என்ற கிராமத்தில் சிறுவயது முதல் கவிதா காவியா இருவரும் தோழிகள். கவிதா அறிவுநுட்பம் நிறைந்தவள்  காவியா கொஞ்சம் வெகுளியானவள்.  கவிதா என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கேட்டு நடப்பவள்.
           
காவியா பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினாள் கவிதாவோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தாள். காவியா அன்றாட நிகழ்வுகளைக்  கவிதாவிடம் கூறி அவள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடியவள். ஒரு நாள் பள்ளியில் காவியா வகுப்பு முடித்து விட்டு வந்தாள் அவளை அழைத்த தலைமை ஆசிரியர் எந்த காரணமும் இல்லாமல் கடுமையாகத் திட்டுகிறார் காவியாவுக்கு ஒன்றும் புரியவில்லை வருத்தத்துடன் வீடு திரும்பியவள் கவிதாவிடம் பள்ளியில் நடந்ததைக் கூறி மிகவும் வருந்துகிறாள். அதற்கு கவிதா வருந்தாதே உன் தலைமை ஆசிரியருக்கு உன்னைப் பிடிக்காத காரணத்தால் அப்படி நடந்து கொள்கிறார். அதனால் நீ அவர் வியக்கும் வண்ணம் ஏதாவது செய் இதனை நினைத்து சோர்வடையாதே எஎன் காவியாவுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறாள் கவிதா. காவியாவும் தோழியின் அறிவுரை படி நடக்க ஆரம்பிக்கிறாள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் சொந்தக் கவிதையை வாசித்து பெரும் பாராட்டு வாங்குகிறாள் இதனைக் கேள்வியுற்ற தலைமை ஆசிரியர் காவியாவிடம் உனக்குள் இவ்வளவு திறமை இருக்கா என வியந்து பாராட்டினார் காவியாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்ததும் கவிதாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறாள் . கவிதா ஏன் இவ்வளவு சந்தோசம் எனக் கேட்க பள்ளியில் தலைமையாசிரியர் தன்னைப் பாராட்டியதைக் கூறுகிறாள். கவிதா நான் தான் சொன்னேன் அல்லவா நீ ஏதாவது சாதித்துக் காட்டு அப்போது தான் உனக்குள் இருக்கும் திறமை வெளியில் தெரியும் இன்று திட்டுபவர் ஒரு நாள் பாராட்டி பேசுவார் என்று அதுதான் நடந்துள்ளது. கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு வயதான அம்மா பசியால் வாடி வருவோர் போவோரிடம் சாப்பாடு கேட்கிறாள் அதனைக் கண்ட காவியா அந்த அம்மாவிற்கு கையிலிருந்த முப்பது ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு இருவரும் வந்தனர். இதுபோலவே கவிதாவின் அறிவுரைகளைக் கேட்டு நல்ல வழியில் பல வெற்றிகளை அடைகிறாள். இவ்வாறே காலங்கள் கடந்தன.
ஒருநாள் காவியா பள்ளிக்குச் சென்று விட்டாள் அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை கவிதா உடல்நலம் சரியில்லாமல் கம்பெனிக்குச் செல்லவில்லை தூங்கிக் கொண்டிருந்தாள் காவியா வீட்டிலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது கவிதா மெதுவாக எழுந்து சென்று பார்த்தாள் காவியாவின் அம்மா மயங்கிய நிலையில் கிடக்க உடனே கவிதா ஒரு ஆட்டோவில் அம்மாவை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றாள் அங்கிருந்த மருத்துவர்கள் சோதித்துப் பார்த்து விட்டு அம்மா ரொம்ப வீக்கா இருக்காங்க உடனே ஏ பாசிட்டிவ் இரத்தம் ஏத்த வேண்டும் என்கிறார்கள் கவிதா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதைப் பொருட்படுத்தாமல் தனது இரத்தமும் அதே வகை இரத்தம் தான் என இரத்தம் கொடுத்து காவியாவின் அம்மாவை காப்பாற்றி விடுகிறாள் மாலை வீட்டிற்கு வந்ததும் காவியா மருத்துவமனை சென்று தன் அம்மாவைப் பார்க்க 
           
அம்மாவும் நடந்ததைக் கூற காவியா கவிதாவை வியப்போடு பார்த்து உன்னைப் போல் ஒரு தோழி எனக்கு கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் என மகிழ்கிறாள்.பிறகு இருவரும் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். என்றுமே இணைபிரியாமல் இருந்தனர்.

சிறுகதையின் ஆசிரியர்,

முனைவர் ஆ.கௌசல்யா 

உதவிப் பேராசிரியர்   
 
தமிழ்த் துறை   

   ஜெ.எச்.ஏ.அகர்சன் கல்லூரி 
சென்னை -60

 

இயற்கை சாரல்|ஹைக்கூ|ச. கார்த்திக்

இயற்கை சாரல் - ஹைக்கூ-கார்த்திக்

🌳எந்தவொரு பறவையும்


தன்னுடைய இருப்பிடத்தைத்


தேடி தேடிச் செல்கிறது!


 

🌳நான் எங்குச் சென்றாலும்


எனக்கு முன்


நிழல் செல்கிறது!


 

🌳மழை வந்தால்


ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

🌳பறவையின் கண்களுக்கு


மனிதன் எல்லாம்


சிறு எறும்பு போல்!


 

🌳புதைத்த பின்னர்


முளைக்கவில்லை


என் வீடு ஜீவன்!


 

🌳 தாயின் முகத்தில் அழுகை


காந்தியின் முகத்தில் சிரிப்பு


இந்த மருத்துவமனை!

 


🌳 மரத்தின் இலைகள்


பூமிக்குச் செல்லும் முன்


காற்றில் நடனமாடுகிறது!


 

🌳மரத்தைச் சுற்றி விழுந்த


இலைகள் காண்போம்


அதை மரத்தின்


துளிர்(கள்) காண்பதில்லை!

 


🌳கடலின் அலைகள்


என் கால் பாதத்தில்

முத்தம் மிட்டு செல்கிறது!


 

🌳கடலில் துள்ளிக்கொண்டிருக்கும்


மீன்கள்


என் வீட்டின் சமையலறையில்


வெந்துக்கொண்டு இருக்கிறது!


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

திருப்பத்தூர்.

கனவு|சிறுகதை|ம.அநிஷா நிலோஃபர்

கனவு-சிறுகதை-அநிஷா நிலோஃபர்
      நிலாக்குட்டி என்பது நிலாவின் அப்பா, நிலாவை அழைக்கும் செல்லப்பெயர். நிலா என்ற பெயருக்கு ஏற்றார் போல் வட்ட வடிவ முகம். அழகு, அறிவு என அனைத்தும் நிறைந்தவள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பிலும் படு சுட்டி. பள்ளிக்கூடத்தில் எல்லா பாடங்களிலும்  முதல்  மதிப்பெண் எடுப்பாள். பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசும் பெற்றுவிடுவாள். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்தமைக்கான பரிசளிப்பு விழாவில் பரிசளிக்க கல்லூரி பேராசிரியரான அவளது தந்தையை சிறப்பு விருந்தினராக பள்ளியில் இருந்து அழைப்பர்.
               
முதல் மதிப்பெண் எடுத்தமைக்காக பரிசு பெறுபவர் நிலா. அப்பரிசினை வழங்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் அவளது தந்தை. தந்தையின் கையினால் பரிசு பெறுவது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
               
அவள் நன்றாகப் படிப்பதை நினைத்து அவளது அப்பாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தன் கையினால் தம் மகளுக்கு பரிசளிப்பதை எண்ணி பெருமைபடுவார். தன் மகளான நிலாவை( நிலாக்குட்டியை ) மருத்துவர் ஆக ஆக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. தன் உடன் பணிபுரியும் அனைத்து நண்பர்களிடமும் என் மகள் டாக்டர் ஆகிவிடுவாள் என்றே கூறுவார். அவள் வீட்டிற்கு வரும் அவளது அப்பாவின் நண்பர்களும்  டாக்டர் அம்மா… என்றே அழைப்பார்கள்.

                நிலாவுக்கும் அவள் அப்பாவின் கனவே அவளது விருப்பமாகவும் இருந்தது. அதற்காக அவளும் மிகக்கடுமையாக உழைத்தாள். அவள் அப்பாவின் கனவை நிறைவேற்ற எப்போதும் படித்துக்கொண்டே இருப்பாள்.
               
அவள் எப்போது தூங்கச் செல்கிறாள் எப்போது எழுகிறாள் என்று வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. ஏனென்றால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்ற பின்பும் படித்துக் கொண்ருப்பாள். வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பே எழுந்து படித்துக் கொண்டிருப்பாள்.
               
அவளுக்கு படிப்பதைத் தவிர வேறு எதிலும் கவனம் கிடையாது. வீட்டில் உள்ள அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் தொலைக்காட்சி பக்கம் திரும்பக் கூட மாட்டாள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழு மூச்சாகப் படித்துக் கொண்டிருந்தாள்.
               
ஒரு முறை ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்து விட்டது. வீட்டில் அப்பா  திட்டுவார்களே என்று பயந்துக் கொண்டே சென்றாள். ஆனால் வீட்டில் நடந்ததோ வேறு.  அப்பாவிடம் மதிப்பெண்களைக் காட்டினாள். அவள் அப்பாவோ அவளை எதுவுமே திட்டவில்லை. மாறாக உன் அப்பா கல்லூரிப் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் உனக்கு பெருமையாக இருக்கிறதல்லவா… அதைப் போலத் தான் எனக்கும் என் மகள் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவாள் டாக்டர் ஆகிவிடுவாள் என்று சொல்வதில் தான் பெருமை இருக்கிறது  என்று சொன்னார்.

                இவ்வார்த்தைகளை கேட்டவுடன் நிலாவுக்கு கன்னத்தில் சுளீர் என்று அறைந்தது போல் இருந்தது . கன்னத்தில் அறைந்திருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது போலும்… அந்த வார்த்தைகள் அவ்வளவு வலித்தது அவளுக்கு … இன்னும் முனைப்பாக படிக்கத் தொடங்கினாள்.
               
மருத்துவம் படிக்க எந்த கல்லூரியில் சேர்க்கலாம் .. எவ்வாறு போய் வருவாள்.. வண்டி வாங்கிக் கொடுக்கலாமா.. என்றும் எதேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் கூட அங்கு பணிபுரியும் டாக்டர்கள் வருவதையும் போவதையும் பார்த்து இன்னும் 5 வருடங்களில் நம் மகளும் இது போல் டாக்டர் ஆகிவிடுவாள். இதே போல் வெள்ளை கோட்டு போட்டு வருவாள்… என நிலாவினை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது பற்றியே நிலாவின் அம்மாவிடம் அவளது அப்பா பேசிக் கொண்டு இருப்பார்.
               
பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு ஆரம்பம் ஆனது. அப்பாவின் கனவை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டது  என்று நிலாவும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதச் சென்றாள். தேர்வு எழுதச் செல்வதற்கும் அவள் அப்பாவே அழைத்துக் கொண்டு செல்வார். அங்கேயே தேர்வு முடியும் வரை காத்திருந்து பின்பு வீட்டிற்கு அழைத்து வருவார். தோழிகளுடன் சேர்ந்து  நானே வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று நிலா கூறினாலும் கேட்காமல் அவரே அழைத்துக் கொண்டு வருவார்.
               
தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் நிறைவடைந்தன. அடுத்தத் தேர்வு வேதியியல். வேதியியல் தேர்விற்காக முழுவீச்சில் படித்துக் கொண்டிருந்தாள் நிலா. அவள் வீட்டு தொலைபேசி மணி அடித்தது. தொலைப் பேசியை எடுத்துப் பேச உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலாவின் அப்பா மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் இப்பொழுது வீட்டிற்கு கொண்டு வருகிறோம் என்று எதிர் முனையில் வந்த செய்தி , நிலாவின் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. நிலா கதறி துடித்தாள். அப்பா என்னை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தாரே… இப்பொது நான் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லையே… என்று புலம்பினாள். நாளை வேதியியல் தேர்வு. இன்று அப்பா உயிரற்ற நிலையில் வீட்டில்…
               
நாளை வேதியியல் பரீட்சை ஆச்சே… உன் அப்பாவின் கனவே நீ மருத்துவர் ஆக வேண்டும் என்பதாச்சே… இப்போது என்ன செய்யப் போகிறாய்… எப்படி பரீட்சைக்கு செல்லப் போகிறாய்… என்று தலையில் அடித்துக் கொண்டு அழுது புலம்புகிறார் நிலாவின் அம்மா. வீட்டிற்கு வந்த உறவினர்களோ இந்த நேரத்தில் எப்படி பரீட்சை எல்லாம் எழுதப் போவாள்… அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றனர். குடும்பமே நிலை குலைந்து விட்டது. அப்பாவின் ஆசை, அப்பாவின் கனவு, என்னுடைய இலட்சியம் எல்லாம் என்ன ஆவது… செய்வதறியாது திகைத்து நின்றாள் நிலா… சுனாமி வந்தது போல் நிலாவின்  வாழ்க்கையை புரட்டி போட்டது. நிலாவின் அப்பா கண்ட மருத்துவக் கனவு அவளது அப்பாவோடு காற்றில் கரைந்தது… நிலாவின் இலட்சியம் அவளது அப்பாவோடு மண்ணில் புதைந்தது…

                                                                                                                               
சிறுகதையின் ஆசிரியர்
             ம.அநிஷா நிலோஃபர்
 
   கண்காணிப்பாளர்
    
இராணி மேரி கல்லூரி
  
சென்னை 4

 

KARRIKKAL AMMAIVARIN  BHAKTI NILAI|S. KANIMOLI

காரைக்கால் அம்மையாரின் பக்தி நிலை - ச. கனிமொழி
Abstract          
       He walked with his hands on the Kailaimalai and was called the mother. Sivanadiyar, who lived in the form of a ghost, incarnated. Andhathi, who introduced Tamil to a new literary genre. When we feel the inheritance of love as a father and daughter, let us think of the slightest history of the piety of the soul.

காரைக்கால் அம்மையாரின் பக்தி நிலை

ஆய்வுச் சுருக்கம்
               

கயிலைமலையின் மீது கைகளால் நடந்து சென்று சிவபொருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். காரைக்கால் பெற்ற பெரும் பேறு புனிதவதியார் அவதரித்தது பேய் உருவில் வாழ்ந்த சிவனடியார். அந்தாதி என்ற புதிய இலக்கிய வகையை தமிழுக்கு அறிமுகம் செய்த அருளடியார். தந்தையும் மகளுமாய் அன்பின் கலந்த நிற்கும் பரம்பொருளை உணர்கின்ற வேளை ஆன்மாவின் புனிதநிலை இப்புண்ணியவதியின் பக்தி வரலாற்றின் சிறிதளவை  நாமும் சிந்தனை செய்வோமாக.

பிறப்பு
                     
சோழநாட்டில் சிறந்த நகரமான  காரைக்காலில் வணிகத் தொழிலில் புகழ்பெற்று விளங்கிய தனத்ததனின் மகளாகப் பிறந்தவர்  புனிதவதியா. சிறுவயது முதலே சிவபக்தியில் சிறந்து விளங்கியவர். நாகப்பட்டினம் நீதிபதியின் மகன் மதத்தன் என்பாரைப்  பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்தனர். அன்புடன் போற்றி வளர்க்கப்பட்ட இப்புனிதவதியா சிறந்த சிவபக்த தையாகவும் நமச்சிவாய, நமசிவய  மந்திரத்தை இடையறாது சொல்லுபவர் அம்மையார்.

அடியார் சேவை
                
அடியார்களைக்   கண்டால்  வழிபாடுசெய்யும் பக்குவம் உடையவர். செல்வச் செழிப்புடன்  வாழ்ந்தவர். காரைக்காலில்  குறை இன்றி இல்லறம் நடத்தி வந்தார். ஒரு நாள் இல்லத்தில் கணவரின் கைகளால் இரண்டு மாங்கனிகள் அம்மையாரிடம் வழங்கப்படுகிறது. அப்பொழுது அன்பு கொண்ட அடியார் ஒருவரின் பசியினை போக்குவதற்காகக் கனியினை  திரு அமுதாகப் படைத்தார். இந்நிலையில் கணவருக்குச் சிறந்த கறி உணவினைப்  படைக்கின்றார். அச்சமயத்தில் தான்  தந்த கனியினையும் அவர் தருமாறு கேட்கின்றார். அக்கனியினை உண்டு மகிழ்கின்ற அவருடைய கணவனார் மிகுந்த சுவை உடையதாக இருப்பதால் மற்றொரு கனியும் தருக என்று கேட்கின்றார்.
               
சிவபக்தையான அம்மையாரோ இறைவனிடம்  விரும்பி கேட்க இறைவனும் அதனை கொடுத்து மகிழ்கின்றார் முந்தைய கனியை காட்டிலும் இக்கனி மிகுந்த சுவையுடையதாக  இருப்பதால் அவரின் கணவர் அதற்குண்டான விளக்கத்தைக் கேட்க அப்பொழுது நடந்த கதையினை அம்மையார் கணவனிடம் விவரிக்கின்றார். இதனைக் கேட்ட அவருடைய கணவனான பிரம்மதத்தனும் இவர் தெய்வப் பெண் என்று அவரை வணங்கி வழிபட்டு நிற்கின்றார் பிறகு அவரோடு வாழ்வதையும் தவிர்த்து, அவர் வணிகம் செய்ய பாண்டிய நாடு செல்கின்றார். அங்கே வேறொரு மணக்கின்றார் பின்னர் மனைவியுடன் மக்களுடன் வந்து அவரது பாதங்களில் விழுந்து வணங்குகின்றார்.

பேய் உருவம் வேண்டுதல்
               
இதனை கண்டு வருத்த  முற்று சிவபெருமானிடம் தன் வனப்பு நீங்கி பேய் உருவம் வேண்டி அதனை அடைகிறார். தேவர்கள் இதனை கண்டு பூமழை பொழிகின்றனர். இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக அற்புதத் திருவந்தாதி எனும் திருப்பதிகங்களையும் திருவிரட்டை  மணிமாலையையும் அவர் எழுதுகின்றார். இப்பாடல்களில் இறைவன் காண இவர் தலையினால் நடந்து செல்கின்றார் இதனை கண்ட  பார்வதி தேவியோ இவ்வாறு நடந்து வரும் இப்பெண்மணி யாரோ? என்று இறைவனிடம் கேட்க இறைவனும் அவரின் கதையை கூறுவதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அப்பா என்று இறைவனோ அம்மை  என்று அழைக்கின்றார்.  இறைவனின் பாதம் பணிகின்றார் மீண்டும் பிறவா வரம் கேட்டு திருவாலங்காட்டில்  திருநடனம்  புரியும்  சிவன் இடத்தில் பாடி பரவி இறைவனிடம் வேண்டி நிற்கின்றார். இவரின் பாடல்கள் முழுவதும் தந்தையும் மகளும் ஆக  நின்று  இறைவனிடம்  தன்னுடைய வரத்தை கேட்டு அருளுவதாகவும் அற்புதமான அந்தாதியாகவும் இவை படைக்கப்பட்டுள்ளது ஜோதி வடிவாக காட்சி தருகிறார்.

அற்புத திருவந்தாதி
              
திருவந்தாதி அன்பு, அருள்திறம், வீரச்செயல்கள், சரணாகதி நிலை, சிவனே முழுமுதற் கடவுள் என தன்னை ஆட்கொண்டு அருளிய அனைத்தையும் தனது கருத்த கண்டனிடம் அருமையாக படைக்கின்றார். படைப்பினால் ஆணவம் கொண்ட  பிரம்மனையும்  அவ்வாணவத்தை   அழிக்க நினைக்கின்ற தற்பெருமை கொண்ட திருமாலும் இருவருக்கும் இடையே நடக்கக்கூடிய வாக்குவாதத்தில் அவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்பதை காண்பிப்பதற்காக சிவபெருமானிடம் வருகின்றனர். சிவனோ தன்னுடைய அடியையும் முடியையும் காண்பார் யாரோ அவரே  ஜோதி  வடிவாக   
சரணாகதி
   இறைவனும் ஜோதி  வடிவாக   நிற்க  பிரம்மாவும்  திருமாலும் அடியும், முடியும் காணத் தேடுகின்றனர் பின்னர் திருமால் தான் தோல்வியுற்றதற்காக இறைவனிடம் வந்து மன்னிப்பும் கேட்கின்றார் ஆனால் ஆணவம் கொண்ட பிரம்மனோ தாழம்பூவினை தனக்கு சான்றாக அழைத்துக் கொண்டு வருகின்றார் தான் உச்சி கண்டதாகவும் அதற்குச் சான்று தாழம்பூ என்றும் குறிப்பிடுகின்றார். இறைவன் இதற்காக பிரம்மனுக்கு தண்டனையும் வழங்கி அவருடைய ஒரு தலையணை கொய்தும் எறிகின்றார், இதனை எல்லாம் மிக அற்புதமாக அம்மையார் அவர்கள் தன்னுடைய பாடல்களில்  வடித்திருக்கின்றார்.

முரண்பட்ட நிலை
                 
இது மட்டுமல்ல திருநீறு பூசிக் கொண்டு மயானத்தில் நடனமிடும் இறைவா என்று அவர் இறைவனிடம் தன்னுடைய முரண்பட்ட நியாயத்தைக் கேட்கின்றார் கபாலம் ஏந்தி பிச்சை என்று கேட்கிறாயே என்றும் மனம் வருந்திக் கூறுகின்றார். இறைவனையே நினைப்பவர்  நெஞ்சம் மீண்டும் பிறப்பதில்லை என்றும் விளக்குகின்றார் ஏன் இன்னும் அருளைத் தராமல் என்னை இவ்வாறு செய்திருக்கிறாய் என்று வினாவவும் துடிக்கின்றார் உன்னுடைய வடிவம் யாது உன் வடிவம் தெரியாமலே நான் உன்னிடம் அடிமையாகி விட்டேன் என்றும் தன்னுடைய புலம்பலைத் தெரிவிக்கின்றார். அடியும் முடியும் தேடும்பொழுது நீ எங்கே  ஒளிந்து  இருந்தீர்  என்றும்  வினவுகின்றார்.

அச்ச நிலை
                
சுடுகாட்டில் அக்கனியில் நடனமாடும் இறைவா அவ்வாறு ஆடுகையில் நீ பார்வதி தேவியை உடன் அழைத்து செல்ல வேண்டாம் என்றும் அவளோ பயப்படுவாள் என்றும் இவர் அச்சப்படுகின்றார். சிவனின் தலைமுடியில் வீற்றிற்கும் வெண்மையான நிறம் உடைய கங்கையை மேகம் போலத் தோன்றுகிறது  என்றும்  ஆனந்தமயமாகக்  குறிப்பிடுகின்றார்.

அன்பின் நிலை
                
நிலவில் தோன்றும் கருமை இறைவனிடம் உள்ள கண்டச்சுவாலையைக் குறிப்பிடுகின்றது என்றும் யானையின் தோலை ஆடையாக அணிந்து பொன்மாலை போன்ற அழகிய எழிலைத் தரும் இறைவா உம்மை வணங்குவதில் தவறு ஏது என்றும் குறிப்பிடுகின்றார். ஆகாய நட்சத்திரங்களை இறைவன் ஜட முடியைப் போன்று விளங்குகின்றது  என்றும் குறிப்பிடுகின்றார். ஆகாய நட்சத்திரங்களைப்  போன்ற இறைவனின் ஜட முடியை வர்ணிக்கின்றார் அதில்  தோன்றுகின்ற சந்திரனையும் பாம்புகளையும் நட்சத்திரங்களாகப் ஒளிர்வதாகக் காட்டுகின்றார். இறைவனின் சோதி  வடிவம் அடியார்க்குப் பொன் போலவும் அல்லாதவருக்கு நெருப்பு கனலாகவும் தோன்றுவதாக அம்மையார் தன் மனதில் இணைந்திருக்கும் இறைவனின் உருவத்தை மேலும் கற்பனை செய்து அணிகலன்கள் உடல் உறுப்புகள் மீதும் ஏற்றிக் கூறி தனது கற்பனை வளத்தையும் அன்பு கொண்ட நிலை என்னும் ஆழமான பக்தி பெருக்கினையும் சான்றாக அமைக்கின்றார்.
 
திருவிரட்டை மணிமாலை
                   
இறைவனை வணங்கிச் சேரும் முறையினை விரிவாகப் பேசுகிறார். சிவனைத் தவிர வேறு தெய்வம் ஏதுமில்லை என்று கூறுவது அவரின் நம்பிக்கையைக் காட்டுகிறது பிறை சந்திரனையும் எருக்கம் மலர் மாலைகளையும் சூடிய சிவனை வழிபட்டால் பிறவி தனை ஒழித்து வீடு வேறு அடையலாம் என்கிறார் அடியார். அன்பு கொண்டு செய்கின்ற எவ்விதப் பூசனையேனும் ஏற்றுக் கொள்பவன் என்கிறார் சான்றாகக் கண்ணப்பரையும், சாக்கியரையும், கணம் புல்லர் நமி நந்தி ஆகியோரைச் சுட்டுகின்றார். இறைவனிடம் அடியார்கள் உம்மை வணங்கும் நேரத்தில் அச்சம் தரும் பாம்பினைச் சூட வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார். அடியார்களைக் கண்டவுடன் வணங்குபவர்களின் தீவினைகள் முற்பிறப்பின் ஊழ்வினையின் தீமைகள் யாவும் விலகி ஓடும் என்றும் கூறுகின்றார். உலக பற்றினை அறுத்திட விளைந்திடும் அடியாரை வணங்குதலே சிறந்தது என்றும் உன்னுடைய ஞானப்பார்வையை அருள்வாய் என்றும் குறிப்பிடுகின்றார். இவரின் பாடல்கள் நகைச்சுவை கொண்டதாகவும் எளிமை மிக்கதாகவும் விளங்குகின்றது சான்றாகக் கங்கையைத் தலையில் சூடியுள்ளது பார்வதி தேவி  காண நேர்ந்தால் யார் எனக்  கேட்க மாட்டார்களா? என்றும் கேள்வியினை எழுப்புகிறார்.
              
அற்புதத் திருவந்தாதியில் இறைச் சிந்தனையையும் இலக்கியச் சுவையையும் சம அளவில் கலந்து கொடுத்திருக்கிறார். அம்மையாரின் பண்பட்ட நிலையை அறியத் திரு இரட்டை மணிமாலை உதவுகிறது இறைவன் எனது பிறவிப் பிணியை நீக்கவில்லை, என்றாலும் இரக்கம் கொள்ளாவிட்டாலும், வழிபாடு செய்ய வழிகாட்ட இல்லை ஆயினும் அவனை வணங்குவதனை நான் நிறுத்தேன் என்றும், சிறு தெய்வங்களுக்கு அடிமையாக மாட்டோம் என்றும் குறிப்பிடுகின்றார் எங்களின் துன்பங்களுக்குச் செவிசாய்க்காமல் இருப்பது ஏன் என்றும் வினாக்களைத் தொடுக்கின்ற அவர் என் மனத்தில் உள்ளான் அவனை வணங்குவதால் என் மனம் தூய்மை அடைந்தது மழு ஆயுதத்தை கையில் ஏந்தியவன் இறக்கம் கொண்டவன் இனிமையானவன் அவனை வணங்கும்போது என்னுடைய எண்ணம் மகிழ்கின்றது.  குளிர்ச்சி விரும்பிய இறைவனை எதனுடனும் ஒப்புமை கூற இயலாது என்றும் குறிப்பிடுகிறார். இறைவன் கழுத்தில் அணிந்திருக்கும் பாம்பினைப் பாதாள உலகத்திற்குச் சென்றுவிடச் செய்யும்படியாக சொல்ல இயலாதா? என்றும் கேட்கின்றார். காரணம்  யாகம்  செய்பவர்  மனத்தில்  வாழும்  வணங்குபவர்களுக்கு  எல்லாம் சோதியாய் தோன்றி அருள் செய்யும் இறைவனை கைலாய மலையினைப் பெயர்த் தெடுத்த ராவணனை தன் கால் விரலால் நசுக்கிய என் தலைவனை எவ்வாறு அழைப்பது என்றெல்லாம் அவர் பக்தியோடு புலம்புகின்றார்.

இலக்கியச்சுவை
                  
எப்பொழுதும் தூய்மை பொருந்தியவன் 21 உலகங்கள் நிறைந்திருப்பவன் என உள்ளம் உருக உணர்கின்ற அறிவு எளிதாக எனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது, அனைத்து உயிர்களின் மனதிலும் நிறைந்திருப்பவன் உயிரோடு உயிராக இணைந்து உயிர்களை ஆள்பவன் அறிவின் வடிவாகத் தோன்றுபவன் இருளை ஒத்த கழுத்தினை உடையவன் சூடிய பிறை  அணிந்திருக்கும் பாம்பு விழுங்க வருவது போல் உள்ளது பாரும் என்றும் குறிப்பிடுகின்றார். என் தந்தையாக இருப்பவரின் மனம் என் மீது இரக்கம் கொள்ளவில்லை என்றாலும் நான் வருந்தி இறைவனிடமே சரணாகதி அடைவேன் என்றும் குறிப்பிடுகின்றார் சோதி வடிவேல் இடைவிடாமல் தோன்றி மனதில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
                  
இறைவனின் நீண்ட சுருண்ட சடை முடி பொன்னால் செய்யப்பட்ட மூங்கிலைப் போல மின்னுகிறது என்றும் பொன் அணிகலன்கள் மட்டுமே அணியலாமே எதற்காக இந்த பாம்பும் இந்த பிறைகளும் என்றும் குறிப்பிடுகிறார். உடம்பில் நீறு பூசி எழும்பு மாலையை அணிந்து பேய் வடிவம் கொண்டு இருந்தாலும் சிவபெருமானை உணர்ந்த பிற சமயத்தாரும் தலைவணங்கி பணிவர் எவ்வகையில் இறைவனை வணங்குகிறார்கள் என்று நினைத்த திருவுருவிலேயே தோன்றி அருள் செய்வான். கொன்றை மாலையையும்,  கங்கையும் சூடி இருக்கும் இறைவனே நீங்கள் எப்பொழுதும் பாம்பினை அணிந்து கொள்ளாமல் விளக்கவும் உம்மை வணங்க வரும் அடியார்கள் அச்சப்படுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். திருவிரட்டை மணிமாலை இறைவனைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களை அம்மையார் பதிவு செய்துள்ள பாங்கு அவர் இறைவன் மீது கொண்ட அன்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இறைவனை முழுமையான பொருள் என்று உணர்ந்த அம்மையார் சிவன் மீதான தன்னுடைய அன்பை பதிவு செய்கின்றார் அற்புத திருவந்தாதிகள் இறை சிந்தனைகளையும் இலக்கிய சுவைகளையும் சம அளவில் தந்திருக்கிறார் அச்சுவைகள் ஒருவாராக அம்மையாருக்கு இறைவன் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டினை நமக்கு சிறப்புரை காட்டுகின்றது அடியார்கள் வணங்குகின்ற சிறப்பினையும் அவ்வாறு வணங்குவதால் ஏற்படுகின்ற வீடு பேற்றிணையும் அருள் கிடைக்காமல் வாடுகின்ற நிலை என்னும் தன்னுடைய பாடல்களில் அவர் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி இருக்கின்றார் அம்மையாரின் பண்பட்ட மனநிலையனை அறிந்து கொள்ள உதவுகிறது.

வீடு பேறு 
                
பிறவித் துன்பத்தினை நீக்குபவன் அடியார்கள் பிற சமயங்களில் ஆண்டு விடாமல் காப்பவன் அடியவர்களை துன்புறுத்துபவர்களை தான் தண்டிப்பவன் உலக உயிர்களுக்கு இன்பத்தை கொடுப்பவன் வேதப்பொருளானவன் திருவுருங்களை எதிர்த்தவன் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவன் என்று அம்மையாருடைய கருத்து நிலைகள் இறைவனின் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டினை மெய்ப்பிக்கின்றன. தங்கத்தின் நிறத்தை போன்றவனே உன்னுடைய காளை வாகனம் நடந்து சென்றால் உலகம் அச்சம் கொள்ளும் கண்களால் பார்த்தால் திசைகள் எரிந்து போகும் உரசி கொண்டு சென்றால் உலக வருத்தங்களும் அதோடு அல்லாமல் மலையோடு போர் செய்யும் சிங்கமோ மேகத்தில் தோன்றும் இடியோ கோபமுடைய ஆண் புலியோ நீ எனக்கு பொருத்தமான ஒன்றை சொல்லி அருள வேண்டும் அப்பா என்றும் தன்னுடைய வருத்தத்தையும் குறிப்பிடுகின்றார்.
                
மனதை விட்டு நீங்காத ஆசையினாலும் நெகிழ்வினாலும் காரைக்காலில் தோன்றிய இப்புனிதவதி ஆகிய மெய்யினால் சொல்லப்பட்ட பெருமை பொருந்திய வெண்பாவால் இயன்ற அற்புத திருவாதியே முறைப்படியாக பாடுகின்றவர்கள் எப்போதும் அன்போடு இறைவனோடு சிவன் பதம் சிவனை அடைவார்கள் என்றும் பிறவி துன்பம் நீக்கும்படியாக வேண்டிக் கொள்வார்கள் என்றும் இவர் தன்னுடைய திருவருளை முடித்திருக்கின்றார்.வண்டுகள் முயற்சி சிதைக்கின்ற கொன்றை மலர்கள் நிறைந்த சோலையில் தங்கி இருந்துவோம். என்னும் மந்திரத்தால் ரீங்காரம் செய்து கொண்டு தான் வீட்டிற்கும் கொன்றை மலரையும் நாகம் தங்கி இருந்த மூச்சுவிடும் செம்மை நிறம் பொருந்திய பொன் போன்ற சடையினையும் நீண்ட சடை முடிகளையும் உடைய இறைவன் உலக பொருள்களுக்கு எல்லாம் தலைவன் என்று தன்னை வணங்கி பணிபவர்களின் துன்பங்களை கண்டு பொறுமையோடு இருக்க மாட்டான் என்றும் கூறுகின்றபடி எல்லா மனங்களும் இறைவனாக விளங்குபவன் சிவன் என்று அறிந்து கொள்வீரர்களாக என்றும் குறிப்பிடுகின்றார்.
              
இறைவா நீயே எனக்கு எல்லாம் என்று அடிமையானவர்களை பிற சமயங்கள் என்னும் மீ இயலாத படுகுழியில் விழுந்து விடாமல் முன்தோன்றி காத்தருளும் வலிமை உடையவனே சிறப்படைய பொன்னால் ஆகிய அனைவரும் பொன்னால் ஆகிய அணிகலன்களை அணிந்தவனோ அருள் புரிவாயாக பஞ்ச பூதங்களின் வடிவாக இறைவனைக் காணும் இவ்வம்மையாரின் பாடல்கள் பதினோராம் திருமுறையில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானைப் பாடியவர். அந்தாதி என்னும் இலக்கண முறையை அறிமுகப்படுத்தியவர். அம்மையின் அடியொற்றி வாழ்வோமாக.

துணை நூற்பட்டியல்

காரைக்காலம்மையார் படைப்புகள்
 மூலமும் உரையும்

முனைவர்.கதிர் முருகு
கு.சுபாஷினி.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,
ச. கனிமொழி,

உதவிப் போராசிரியர்,

தமிழ்த் துறை,

கோபி கலை அறிவியல்  கல்லூரி,

கோபிசெட்டிபாளையம்.
 

Naladiyaril Palluyiriyam|S.Malathi

நாலடியாரில் பல்லுயிரியம் - ச. மாலதி

Naladiyaril Palluyiriyam

Abstract           

        One of the world’s 17 most biodiverse nations is India. There are between 12 million and 100 million species in the nation, according to scientific studies. These species are impacted by climate change, resulting in diminished biodiversity and affecting people. Thus, it is critical to understand that maintaining and balancing the natural environment depends on the diversity of plants and animals. In the words of Sangam literature, the ancient Tamils acknowledged this and adopted a style of living that preserved biodiversity and permitted them to live in harmony with the natural world. Research is crucial to understanding the plant and animal species that existed in ancient periods as well as how the Tamils managed and balanced biodiversity in a world where humanity has deviated from living in peace with nature. The article contains three main sections: The diversity of biodiversity, the uses of biodiversity, and the management of biodiversity. The diversity of biodiversity section explores diversity in genetics, species diversity, and ecosystem diversity. The uses of the biodiversity section highlight species provision, increased agricultural yields, and ecological regulation. Lastly, the management of the Biodiversity section covers the propagation of plant, animal, and microbial biodiversity.

நாலடியாரில் பல்லுயிரியம்

ஆய்வுச் சுருக்கம்
அதிக அளவில் பல்லுயிர்களைக் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் 12 முதல் 100 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. கால நிலை மாற்றங்கள் உண்டாகும்போது உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதனால் பல்லுயிர் சமநிலை இழப்பு உண்டாகி மக்களைப் பாதிக்கிறது. இந்நிலையில், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் சமன் செய்யவும் தாவர மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை இருப்பது மிகவும் முக்கியமானது என்பதை அறிந்திருந்த பழந்தமிழர்கள், பல்லுயிர்களையும் காத்து அவற்றோடு இணைந்து வாழும் முறையைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சங்க இலக்கியப் பதிவுகளின் மூலம் அறியமுடிகிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதிலிருந்து, மனித இனம் விலகி வாழ்ந்துவரும் இக்காலச் சூழலில்,  அக்காலத்தில் காணப்பட்ட தாவரம் மற்றும்  விலங்கினங்களை அறிந்துகொள்ளவும், தமிழர்  பல்லுயிர்களை  எவ்வாறு பாதுகாத்துச்  சமன்செய்தனர் என்பதையும் அறிந்து கொள்வதற்கும்  ஆய்வு இன்றியமையாததாகிறது. கட்டுரையானது, பல்லுயிரியத்தின் பன்முகத் தன்மை, பல்லுயிரியத்தின் பயன்கள், பல்லுயிரியத்தின் மேலாண்மை என்ற முதன்மைப் பகுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல்லுயிரியத்தின் பன்முகத் தன்மை என்பது மரபியல் பல்வகைமை, இனப் பல்வகைமை, சூழ்நிலை மண்டலப் பல்வகைமை என்ற விரிவுகளைக் கொண்டதாகவும், பல்லுயிரியத்தின் பயன்கள் என்ற பகுப்பு இனங்கள் வழங்குதல், விளைச்சல் அதிகரித்தல், சூழலியல் ஒழுங்குபடுத்தல் என்ற விரிவுகளைக் கொண்டதாகவும், பல்லுயிரியத்தின் பராமரிப்பு என்ற பகுப்பு தாவரப் பல்லுயிர்ப் பெருக்கம், விலங்குகள் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நுண்ணுயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் என்ற விரிவுகளைக் கொண்டதாவகும் அமைக்கப்படுகிறது. 
முன்னுரை
   உயிரினச் சூழலை தன்னுள் கொண்டிருக்கும் இப்பூமியில் நீரிலும் நிலத்திலும் வாழும் எண்ணற்ற உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு பல்லுயிரியம் என்று அழைக்கப்படுகிறது. காலநிலை மாற்றங்கள் உண்டாகும் போது உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதனால் ‘பல்லுயிர் சமநிலை இழப்பு’ உண்டாகி நேரடியாகவம் மறைமுகமாகவும் அது மனித இனத்தையும் பாதிக்கிறது. இந்நிலையில், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் சமன் செய்யவும் தாவர மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது. தன்னுடைய அறிவாற்றலால் உயிரினச் சுற்றுச்சூழல் சமநிலையின் பயன்களை முழுவதுமாக அனுபவிக்கும் மனித இனத்திற்குப்  பல்லுயிர்  சமநிலையைப்  பாதுகாக்கும் கடமை முதன்மையானதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 140 வகை உயிரினங்கள் அழிந்துவிடக்கூடும் என்ற நிலையில்,  பழந்தமிழர் பல்லுயிர்களையும் ஓம்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்வியல் முறைகளை ஆய்ந்து தெளிவுபடுத்துவது தேவையாகிறது.  இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதிலிருந்து, மனித இனம் விலகி வாழ்ந்துவரும் இக்காலச் சூழலில்,  அக்காலத்தில் காணப்பட்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை அறிந்து கொள்ளவும் தமிழர் பல்லுயிர்களோடு இணைந்து வாழ்ந்து எவ்வாறு சூழலைச் சமன்செய்தனர் என்பதை உணர்ந்து கொள்வதற்கும்  ‘நாலடியாரில் பல்லுயிரியம்’ எனும் இவ்வாய்வு இன்றியமையாததாகிறது.
கருதுகோளும் நோக்கமும்
பழந்தமிழர் இயற்கையின் பயன்பாட்டினை நுகர்வதற்கு, தன்னைச் சுற்றி வாழும் பல்லுயிர்களை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் வழித் தடத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். அத்தகைய இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையால், பல்லுயிர் சமநிலை காக்கப்பட்டது என்பதை இக்கட்டுரைக் கருதுகோளாகக் கொண்டுள்ளது. 
அவ்வகையில், மனித இனம் இயற்கைப் பயன்பாட்டை நுகர்வதற்குப் பல்லுயிரியம்  எவ்வாறு வழிவகுத்தது என்பதை அறிவதையும், இன்றைய சூழலில் இயற்கையோடு இயைந்த தமிழரின் வாழ்வியல் விழுமியத் தேவையை உணர்த்துவதையும் நோக்கமாகக்  கொண்டு இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின்  ஆய்வுக்களமாக பதினெண்கீழ்க்கணக்கில் சமண முனிவர்களால்  எழுதப்பட்ட நாலடியார் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சூழலியல்சார்ந்த ஆய்வுகளும் நூல்களும் துணைமைச்சான்றுகளாய் அமைகின்றன.
பல்லுயிரியம் விளக்கம்
  இப்புவியில் நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர்ப்புப் பண்புடையவை அனைத்தும் உயிரினங்கள் என்று அறிவியலார் கூறியிருக்கையில்,   ‘பரமாய சத்தியுள் பஞ்சமா பூதம் தரமாறித் தோன்றும் பிறப்புஎன்று தமிழ் மூதாட்டி ஔவை ஐம்பூதங்கள் சேர்ந்து வேதி வினையால் உயிர்கள் தோன்றுகின்றன என்று உயிரின் தோற்றத்தை விவரித்திருக்கிறார். அவ்வாறு, பூமியில் நீரிலும் நிலத்திலும் தோன்றி வாழும் எண்ணற்ற உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு அதாவது, பூமி உயிர் மண்டலத்தில்  வடிவம், அளவு, இயல்பு, வாழ்க்கை முறை, இனப்பெருக்கம் போன்ற எல்லாத் தன்மைகளிலும் வேறுபட்டுள்ள அனைத்து உயிரினங்களின் இனவகைகள் ‘பல்லுயிரியம்’ அல்லது ‘உயிரினப்பன்மயம்’ என்று அழைக்கப்படுகிறது. 
பூமிக்கோளத்தில் தோன்றிய உயிர்களில் 8.7 மில்லியன் வகைகள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றில் 1.2 மில்லியன் இனங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன எனத் தேசிய புவியியல் நிறுவனம் 2022 ஆண்டு பதிவிட்டுள்ளது. ஆனால், பலநூறு ஆண்டுகளுக்கு முன் பரிமேலழகர் திருக்குறள் உரையில் (ப.35) கொடுத்துள்ள தனிப்பாடல் ஒன்றில் எழுபிறப்பு பற்றிய விளக்கத்தில், உயிரினங்களின் வகைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதிலிருந்து மனித வாழ்க்கையில் பிற உயிரினங்களின் பங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது. 
ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.
என்ற இப்பாடலானது,  உயிரினங்களில் ஊர்வன இனத்தில் பதினோரு லட்ச வகைகள், மனித இனத்தில் ஒன்பது லட்ச வகைகள், நீரில் வாழக்கூடிய பத்து லட்ச வகைகள், பறவைகள் பத்து லட்ச வகைகள், நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் பத்து லட்ச வகைகள், தேவர்கள் பதினான்கு லட்ச வகைகள் மற்றும் தாவரங்கள் இருபது லட்ச வகைகள் என 84  லட்ச  உயிரின வகைகள்  உள்ளதாகக் குறிப்பிடுகிறது.  உயிரினங்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றைக்  கணக்கிட்ட அன்றைய தமிழரின் ஆராய்ச்சியறிவு,  தற்காலத்தில் நடத்தப்பெறும் உயிரியல் ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
பல்லுயிரியத்தின் இன்றியமையாமை
பூமிக்கோளத்தில் வாழும், கண்களால் காணமுடியாத நுண்ணுயிரியிலிருந்து பெரிய உருவத்தினை உடைய விலங்குகள் வரை அனைத்துயிர்களும் நாம் வாழும் பூமியை வளமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக இருப்பது உண்ணும் உணவு. மனிதன் உண்ணும் உணவினில் 80 விழுக்காடு இப்பூமியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுகின்றது.  மேலும், அடுத்த நிலையில் உள்ள அடிப்படைத் தேவைகளான ஆடை மற்றும் உறைவிடத்திற்கும் இவற்றின் பங்கு இன்றியமையாததாக இருப்பதை மனித இனம் உணரவேண்டும்.
இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் வளம் அதன் பொருளாதாரத்தினைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் பழங்காலத்தில் நாட்டின் வளத்திற்கு இயற்கை வளங்களையே முதன்மையானதாகக் கருதினர். தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட (நாலடி.290:3) , கணமலை நன்னாட (நாலடி.353:1) கிளி கடியும் கானக நாட (நாலடி.283:3) தேம்படு  நல்வரை நாட! (நாலடி.239:2-3) போன்ற நாலடியார் அடிகள், இயற்கை வளத்தினை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டினைத் தமிழர் அடையாளப்படுத்தினர் என்பதை உணர்த்துகின்றன.
உயிரினங்கள் ஒன்றுக்கொன்று மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவிசெய்து வாழ்கின்றன. அவற்றின் சில செயல்பாடுகள் மனிதர்கள் செய்யமுடியாதவை என்பதோடு,  அவை பிற உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பயன்படுவதைச் சிறுபஞ்சமூலத்தில் காரியாசன்,
வான்குருவிக்கூடு அரக்குவால் உலண்டு கோல்தருதல்
தேன்புரிந்து யார்க்கும் செயலாகா     (சிறுபஞ்.27:1-2)
என்று சுட்டுகிறார். இதில், தூக்கணாங்குருவி கட்டும் கூடு, அரக்கு, பட்டுநூல், கோற்கூடு மற்றும் தேன்பொதி போன்றவை மனிதனால் செய்யமுடியாதவை என்று பாடியுள்ளார். சுரைக்காய் வடிவில் தர்ப்பை நார்களைக் கொண்டு உட்புறத்தில் தளங்களையும் வெளிப்புறத்தில் களிமண்ணைப் பூசி அதில் மின்மினிப்பூச்சிகளையும் ஒட்டி அழகாகத் தொங்கும் கூடுகளைத் தூக்கணாங்குருவிகள் கட்டும்.  மரங்களின் சாற்றைக் குடித்த பின் பேரெறும்புகள் மரக்கொப்புகளில் பாய்ச்சிய திரவம் காற்றோடு சேர்ந்து  செம்மெழுகு எனும் அரக்காக பரிணமிக்கும். பட்டுப்புழு இடும் முட்டையிலிருந்து வெளிவரும் பட்டுப்பூச்சி, பட்டுநூல் உண்டாக்கும். ஒரு குறிப்பிட்ட வகையான அந்துகள் மரக்குச்சிகளை அடுக்கிவைக்துக்  கோற்கூடு கட்டி, அதில்  கூட்டுப்புழுக்களாக வாழும். மேலும், இவற்றோடு தேனியால் திரட்டப்பட்டு அமைக்கப்படும் தேன்பொதி போன்றவை மனிதரால் செய்ய முடியாதவையே என்றாலும் அவர்களுக்குப் பயன்படும் பொருட்களையே இதுபோன்ற சிற்றுயிர்கள் உருவாக்குகின்றன. இவ்வாறு, ஒரு உயிரினத்தின் வாழ்க்கை முறை  பிற உயிர்களுக்கு உதவி செய்வதால்  இயற்கைச் சூழல்சமன் இயற்கையாலேயே காக்கப்படுகிறது என்பது  பல்லுயிர்களின்  இன்றியமையாமையை உணர்த்துகிறது. இதுபோன்று, தாவர உயிரினங்களும் இப்பேருதவி செய்வதை, பின்வரும் நாலடியார் பாடல் அடிகளில் மூலம் அறியமுடிகிறது.
———கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!           (நாலடி.97:2-3)
இவற்றில், அலைகள் மோதுகின்ற கடல் ஓரத்தில் வளர்ந்துள்ள புன்னை மலர்களிலிருந்து வீசும் மணம், மீன்களின் மாமிச நாற்றத்தை நீக்கும் என்று  குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் காற்றுச் சூழலில் ஏற்படும் நாற்றத்தை அப்பகுதியிலிருக்கும் புன்னை தாவரங்களில் இருந்து வெளிவரும் மணம் இயற்கையாகவே சமன்செய்வதை விளங்கிக்கொள்ள முடிகிறது. புவியில் வாழும் பல்லுயிர்கள்தான் இப்புவியின் இயற்கைச் சூழலைச் சமன் செய்கின்றன. மனித இனம் இயற்கைச் சூழலில் சிக்கலின்றி வாழ்வதற்கும் பூமியின் சூழல் வளம் குறையாமல் காப்பதற்கும் நீர், நிலம் மற்றும் காற்றின் வளத்தைக் காக்கவும் பல்லுயிர்களின் பங்கு முதன்மையானது. இதனையே, இப்புவியின் இயற்கைச் சூழலை அழித்து வசதியாக வாழ்ந்து வரும் மனித இனத்திற்கு இன்றைய சூழலியலாளர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
நாலடியாரில் பல்லுயிரியத்தின் பல்வகைமை
உயிரினபல்வகைமை என்ற சொல்லை இ.ஓ. வில்சன் என்பவர் 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் அறிவு நிலையை அடிப்படையாகக் கொண்டு உயிரினத்தைப் பிரித்துள்ளது நாம் அறிந்ததே.
 புல்லு மரனு மோரறி வினவே
 நந்து முரளு மீரறி வினவே
சிதலு மெறும்பு மூவறி வினவே
 நண்டுந் தும்பியு நான்கறி வினவே
 மாவு மாக்களு மைறி வினவே
 மக்கள் தாமே யாறறி வுயிரே                       (தொல்காப்பியம், மரபியல், 28)
                தொடுவுணர்வு மட்டும் கொண்ட சிறிய புல் முதல் பெரிய மரவகைத் தாவரங்கள் அனைத்தும் ஓரறிவுயிர்கள் என்றும், நத்தை, சங்கு, சிப்பி ஆகியனவற்றுக்குத் தொடுவுணர்வோடு உணவை நாவினால் சுவைத்து உண்ணும் அறிவு இருப்பதால் அத்தகைய புழுவகைகள் ஈரறிவுயிர்கள் என்றும், சிதல் மற்றும் எறும்புகளுக்கு நாவின் சுவையறிவோடு மூக்கினால் மணம் உணரும் அறிவும் இருப்பதால் அவை போன்ற பூச்சிகள் மூவறிவுயிர்கள் என்றும், நண்டும் தும்பியும் மூன்று அறிவோடு சுற்றியுள்ளவற்றைக் கண்ணால் காணுகின்ற அறிவும் பெற்றுள்ளதால் இவை நாலறிவுயிர் என்றும், விலங்குகளும் பறவைகளும் இந்த நான்கு அறிவோடு ஓசைகளைக் காதால் கேட்கிற அறிவும் பெற்றுள்ளதால் இவை ஐந்தறிவுயிர் என்றும், இவற்றோடு மனிதனுக்குப் பகுத்தறிகின்ற அறிவும் இருப்பதால் அவனை ஆறறிவுயிர் என்றும் வகைப்படுத்தியுள்ளார். தொல்காப்பியரின் உயிரின வகைப்பாடு முழுமையாக அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நிலையில், சூழலியலாளர்களும் உயிரியலாளர்களும் உயிரினங்களை அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவு வகை, உணவூட்டல் முறை என்பவற்றில் உள்ள வேறுபட்ட தன்மைகளின் அடிப்படையில் பல்வகைமைப் படுத்துகின்றனர்.
                         —————காக்கையும் பையரவும்
                        என்ஈன்ற யாயும் பிழைத்த தென் – பொன்னீன்ற
                        கோங்கரும் பன்ன                                                     (நாலடி.400:1-3)
என்ற பாடலில் காக்கை, பாம்பு, பெண் மற்றும் பொன்னிறமுள்ள கோங்கை மலர்(செடி) எனப் பல்வேறு உயிரினங்களைச் சமண முனிவர்கள் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதோடு நிலம் மற்றும் நீரியற் சூழல்களில்  வாழும் உயிரினங்களின் வேறுபாடுகளோடு மனிதரிடையேயும் வேறுபாடுகள் உண்டு என்பதையும் பின்வரும் நாலடியார் பாடலில் காணமுடிகிறது.
கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல் தண்சேர்ப்ப!          (நாலடி.245.1-4)                
இது, உவர்ப்பு நீருடைய கடல் அருகில் இனிய நீரும் மலை அருகில் உப்பு நீரும் உண்டாவது போல மக்கள் தாம் சார்ந்த இனத்திலும் ஒத்தவராக இல்லாமல் இருப்பர் என அன்றே பிரபஞ்சத்தின் சூழல் வேறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளவை இன்றைய சூழலியலாளர்கள் உயிரினப்பல்வகைமையை வரையறுத்துள்ள கூற்றை ஒத்திருப்பதை உணரமுடிகிறது. நிலம், கடல், மற்ற நீரியற் சூழல்கள், உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் உயிரினப்பல்வகைமை ஆகும். இது உயிர் வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள வகைமைகளையும் குறிக்கும் என, பல்வகைமைக்கான வரையறையை, 1992 -இல் ஐக்கிய நாடுகள்  ’சூழலியல் மற்றும் வளர்ச்சி’ (Environment and Development)  என்ற பொருண்மையில் நடத்திய கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டது. இதனடிப்படையில்,
            (அ) மரபியல் பல்வமைமை,
            (ஆ) இனப்பல்வகைமை
            (இ) சூழல் பல்வகைமை
என்ற நிலைகளில் உள்ள பல்வகையான உயிரினங்களை நாலடியாரின் வழி காண்போம்.
(அ)  நாலடியாரில் மரபியல் பல்வகைமை                  
ஒரே இனத்திற்குள் உள்ள பல்வேறு மரபுவழி பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் மரபியல் பல்வகைமை எனப்படும்.  ஓர் இனம் அதன் சூழலில் சிறப்பாக வாழ்வதற்காக மரபியல் வகைமை பயன்படுவதோடு பல்வேறு புதிய இனங்கள் தோன்றவும்  காரணமாகின்றது. இலக்கியங்களில் ஓர் இனத்தைச் சுட்டும் போது அதில் உள்ள வகைகளையும் சுட்டியிருப்பதைக் காணும் போது பழந்தமிழரின் நுண்மான் திறன் வியக்கவைக்கக் கூடியதாக இருக்கிறது.
1.கொள்ளு 
                தாவரவியல் பெயர்: (மேக்ரோடைலோமா  யுனிஃபுளோரம்  (Macrotyloma uniflorum))
கொள்ளு செடிகள் மிகக் குறுகிய காலத்தில் அடர்த்தியாக வளர்ந்துவிடுவதால் மண்ணரிப்பைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதோடு விலங்கினங்களுக்குத் தீவினமாகவும் மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டு உயிரினச் சூழலைச் சமன் செய்கிறது. இத்தகைய தன்மைகளைக் கொண்ட கொள்ளின்  பயன்பாட்டைப் பழந்தமிழர்கள் அறிந்து  அதனை விளைவித்து  வாணிபமும் செய்தனர் என்பதை அறியமுடிகிறது. நாலடியார் பாடலொன்றில் கொள்ளின் இரு மரபினவகைப் பற்றிய குறிப்பினையும் காணமுடிகிறது. 
                        கருங் கொள்ளும், செங் கொள்ளும், தூணி பதக்கு என்று   
                        ஒருங்கு ஒப்பக் கொண்டானாம், ஊரன்                                (நாலடி. 387:1-2)
எனும் பாடலடிகள், ஓர் ஊரைச் சேர்ந்தவன் கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் இரண்டு மரக்கால் மூன்று மரக்கால் அளவு விலை வேறுபாடின்றிப் பெற்றுக்கொண்டான் என்பதிலிருந்து கொள்ளு ஒரே பயிரினமாக இருந்தாலும் அதில் கருங்கொள்ளு செங்கொள்ளு என  நிறத்தில்  இரு வேறுபட்ட கொள்ளு இனங்கள்   உண்டு என்பதும் அவை  பழந்தமிழர்களால்  விளைவிக்கப்பட்டு  மண்வளம் இயல்பாக காக்கப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
2.ஆம்பல்  – (தாவரவியல் பெயர்: நியாம்பியா (Nymphaea)
ஆம்பல் ஒரு வகை நீர்த் தாவரமாகும். இது ஆற்றிலும் குளத்திலும் வளர்கிறது. இது நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, சூரிய ஒளியைத் தடுத்து நீரைக் குளிர்வித்து  நன்னீரில் பாசிகள் உண்டாகாமல் தடுக்கிறது. அது போல், வண்டுகள் மகரந்தச் சேர்க்கை செய்வதில் ஆம்பல் பெரும் பங்கு வகித்து உயிரினச் சமன்பாட்டிற்கு உதவுகிறது. பழந்தமிழரின் வாழ்வியல் செயல்பாடுகளில் பெரும் பங்கு வகித்த ஆம்பல் மலர் நாலடியாரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  அரக்காம்பல் நாறும்வாய்                                          (நாலடி. 396:1) 
செவ்வாம்பல் போன்ற இதழ்களையுடையவள் என்று ஆம்பலின் வகை பதியப்பட்டுள்ளது.  வெள்ளை, சிவப்பு மற்றும் கருநீல நிற ஆம்பல் வகைகள்   தற்போதும் தமிழகத்தில் காணக் கிடைக்கின்றன.
3.யானை – (அறிவியல் பெயர்: எலிபண்டைடா (Elephantidae))
இலக்கியங்களில் ஆண்யானை களிறு என்றும் பெண்யானை பிடி என்றும் அழைக்கப்படுகிறது. யானைகள் பல்லுயிரினத் தோற்றத்தில் பெரும் உதவிபுரிகின்றன. யானைகள் வெளியிடும் சாணத்தில் பல விதைகள் கலந்திருக்கும். அவற்றிலிருந்து பல தாவரங்களும் புழு பூச்சிகளும் உருவாகி உயிரினச் சூழலைக் காக்கின்றன.  இன்றைய நிலையில் யானைகளில் மூன்று வகைகளே எஞ்சியிருக்கின்றன. ஆனால் இவற்றைப் பற்றிய பல்வேறு செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
                        —————————-யானை
                        வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
                        அரிமா மதுகை அவர்.                                     (நாலடி.198: 2-4)                                                                  
என்ற நாலடியார் பாடல், வெண் புள்ளிகளை உடைய யானையின் முகத்தை தன் கூரிய நகங்களைக் கொண்டு பெருமுயற்சி செய்து சிங்கம் வெல்லும் என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மரபணு காரணமாக தோன்றும் வெண்புள்ளிகளை உடைய யானைகள் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் பழந்தமிழர்கள் ஒவ்வொரு உயிரினத்தையும் கூர்ந்து நோக்கி அதன் தோற்றத்தை அறிந்து வைத்திருந்ததோடு,  அவற்றின் இயல்புகளையும் புரிந்து கொண்டிருந்த அறிவு திறனை அறியமுடிகிறது.
4.வண்டு (அறிவியல் பெயர்: கோலியாப்டெரா (Coleoptera)
                பூச்சி இனத்தைச் சேர்ந்த வண்டு 3,50,000 இனவகைகளைக் கொண்டதாக உள்ளன.  மகரந்த சேர்க்கைக்குப் பயன்படும் இவ்வண்டுகள், இறந்த விலங்குகளையும் உதிர்ந்த இலைகளையும் உண்பதால் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளை மீண்டும் மண்ணிற்கு மறுசுழற்சி செய்கின்றன.  
  ———————– வண்டாய்த்
 திருதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்                       (நாலடி.284:2-3)
 ——————–காந்தள் மலரக்கால்
 செல்லாவாம் செம்பொறி வண்டினம்                         (நாலடி.283:1-2)
ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்                       (நாலடி.290:1)      
 என்ற பாடலடிகளில் வண்டுகளைப் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளதோடு, காந்தள் மலர்கள் மலராத போது சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கு செல்லாது என விளக்கப்பட்டுள்ளதிலிருந்து, வண்டினங்களில் சிவந்த புள்ளிகளையுடைய வண்டினத்தைப் பற்றி அறிந்துகொள்ளமுடிகிறது.
5.பாம்பு – (அறிவியல் பெயர்: சர்பெண்ட்ஸ் – Serpentes)
                பாம்புகள் தவளை, எலி போன்ற சிற்றுயிர்களைக் கொன்று உணவுச் சங்கிலி தொடர உதவுகிறது. இவற்றில் ஆண் நாகப்பாம்பு பெண் கட்டுவிரியன் பாம்பின் வகைகளை நாலடியார் பதிவுசெய்துள்ளது.
                                                ————————-நாகம்
                                     விரி பெடையோடு ஆடிவிட் டற்று                              (நாலடி.240:3-4)
என்ற அடிகளில், நாகப்பாம்பு விரி பெடையோடு புணர்ந்து நீங்கும் என்பதில், பாம்பு இனத்தில் உள்ள கிட்டத்தட்ட 3600 வகைகளில் நாகம் மற்றும் விரி பெடை இனத்தின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
6.மான் (புல்வாய்)
இந்திய நாட்டில் காணக்கிடைக்கும் மான் வகைகளில் புல்வாய் மானும் ஒருவகை. இதில் ஆண்மான் இரலை என்றும் பெண்மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. புல்வாய் மானுக்குத் திருகுமான், வெளிமான், முருகுமான் என்று வேறு பெயர்களும் உள்ளன. புல்வாய் வகை மான் அக்காலத்தில் இருந்ததைப் பின்வரும் நாலடியார் அடிகள் தெரிவிக்கின்றன.   புல்வாய பருமம் பொறுப்பினும் இவ்வாறு நாலடியாரில் உயிரினங்களின் மரபியல் வகைகளைக் குறிப்பிடும் போது அவற்றினுடைய தோற்றம் நிறம்  போன்ற சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டியிருப்பது இன்றைய மரபியல் வல்லுநர்களுக்குப் பழந்தமிழர்கள் வழிகாட்டிகள் என்பது உறுதிப்படுகிறது.
(ஆ) நாலடியாரில் இனப் பல்வகைமை
ஓர் இடத்திலுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தொடர்புடைய வளம் இனப் பல்வகைமை எனப்படும். இது ஓர் உயிரினத்தின் எல்லா வகை மற்றும் எல்லா உயிரினங்களையும் குறிக்கும்.
 இனப் பல்வகைமை –  குறிஞ்சி (மலையும் மலைசார்ந்த இடமும்)
சூழலியலில் மலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மலை வளம் என்பது குன்று, அருவி, பள்ளத்தாக்கு போன்ற தோற்றப்பொருட்களின் இயற்கை அழகோடு அங்கு வாழும் தாவரம் முதல் பல்வேறு உயிரினங்களையும் சேர்த்தது. அத்தகைய மலை வளத்தினைத் தமிழ்ப்புலவர்கள் பாடியுள்ளமை பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகின்றன. சமண முனிவர்களும்  மலையின் உயிர்ச்சூழலைப் பல பாடல்களில் மிக அழகுற பதிவு செய்திருக்கிறார்கள்.
                கறங்கருவி கன்மேற் கழூஉம் கணமலை     (நாலடி.285:2-3)                             எனும் பாடலடியில், ஒலிக்கும் அருவிகள் கல் மேல் வீழ்ந்து மாசு போகக் கழுவும் பெரிய மலை என மலைவளத்தினைப் பாடியுள்ள சமண முனிவர்கள் அதில் வாழும் பல்வேறு உயிரினங்களைப் பற்றிய செய்திகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
♣ கோங்கு
தாவரவியல் பெயர்:  பாமக்ஸ் சிபியா (Bombax ceiba)
மருத்துவப் பயன்களை உடைய மலைஇலவம் எனும் கோங்கு மலைப்பகுதியில் தானே வளரும் இயல்புடையவை. இவற்றின் இருப்பை பின்வரும் நாலடியார் அடிகள், நமக்கு காட்டுகின்றன. நிறக்கோங்கு உருவவண்டார்க்கு முயர்வரை நாட (நாலடி.223:2-3) இவ்வடிகள் நல்ல நிறமுடைய (பொதுவாக இவை பொன்னிறமானவை) கோங்கு மலர்களில் வண்டுகள் அமர்ந்து பாடும் நாடு என்று கோங்கின் சிறப்பைப் கூறியிருப்பதிலிருந்து பழந்தமிழர் கோங்கின் பயன்பாட்டினை அறிந்திருந்தனர் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
தேனீ (அறிவியல் பெயர்: ஏப்ஸ், (Apis))
பல்லுரியத்தின் உயிரினச் சமன் செய்தலில் பெரும் பங்கு வகிப்பது தேனீக்கள். ஒரு பகுதியில் உள்ள தேன்கூடுகளின் அளவையும் எண்ணிக்கையும் கொண்டு அப்பகுதியின் வளத்தினை நாம் அறிந்துகொள்ளலாம். இவை மலைப்பகுதியில் நிறைந்திருக்கும். தேனீக்களும் தேன் கூடுகளும் நிறைந்த வளமான மலைப் பகுதியை  தேம்படு  நல்வரை நாட!   (நாலடி.239:2-3) என்று நாலடியார் குறிப்பிடுகிறது.
பறவைகள் (அறிவியல் பெயர் : ஏவ்ஸ் (Aves)
                பொற்கேழ் புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!   (நாலடி.212:2-3) எனும் பாடல் அடிகளில், பொன்னிறமுள்ள அருவிகள் விழும் ஓசையால், பறவைகள் பயந்து, பறந்து திரிகின்ற மலைகள் சூழ்ந்த நாட்டினை உடையவனே என்று பாடியிருப்பதில் பலவகையான பறவைகள் மலையில் காணப்படும் என்ற செய்தியை நாலடியார் உறுதிசெய்கிறது.
காட்டுப்பசு (அறிவியல் பெயர் : பைசன் (Bison))
            குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாடு என்று கூறும் இப்பாடல் அடிகள், காட்டுப் பசுக்களின் இருப்பை,
                                    —  ———— —– பழிப்பில்
                                    நிரை ஆமா  சேர்க்கும் நெடுகுன்ற நாட                    (நாலடி.319:2-3)
எனும் பாடலடிகளில் பதிவுசெய்துள்ளதைக் காணமுடிகிறது.
இனப்பல்வகைமை –   முல்லை  (காடும் காடு சார்ந்த இடமும்)
                காடுகள் பல்லுயிர்கள் அதிகமாகக் காணப்படும் இடமாகும். புல் முதல் பெரிய மரவகைகளோடு சிறு பூச்சி முதல் பெரிய விலங்குகள் மற்றும் மனித இனமும் வாழும்  பகுதியாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும் காடுகள் உள்ளன.
சந்தனமரம் மற்றும் வேங்கை மரம்
                (சந்தன மரம் : தாவரவியல் பெயர் சாண்டலும் (Santalum),
                வேங்கை மரம்: தாவரவியல் பெயர் பெட்ரோகார்பச் மார்சுபியம்(Pterocarpus marsupium))
சந்தன மரங்கள் காற்றைத் தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. இவை குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுவதால், சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும். மலைவாழ் பழங்குடிகள் தேன் சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.  மேலும்,    வேங்கை மரம் உள்ள பகுதியில் மின்னல், இடி தாக்காது.1  இவ்விரு மரங்களும் பண்டைய காலத்தில்  நிலவளத்தினையும் நீர்வளத்தினையும் காப்பதில் பெரும்பங்கு வகித்தன. அன்றைய காலத்தில் இவை மிகுதியாக இருந்த செய்தியைப் பல இலக்கியங்கள் பதிவிட்டிருப்பது போலவே நாலடியாரும் பதிவு செய்திருக்கிறது.
   ———————–புனத்து
     வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
     எறிபுனந் தீப்பட்டக் கால்                                        (நாலடி. 180:2- 4)
என்ற பாடல் அடிகள், காட்டில் தீ பரவினால் அக்காட்டினில் உள்ள நறுமணம் மிக்க சந்தனமும் வேங்கை மரமும் எரிந்து போகும் என்று அவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தவதிலிருந்து, அன்றைய காலகட்டத்தில்  சந்தன மரமும் வேங்கை மரமும் காட்டுச் சூழலில் அதிகம் வளர்ந்திருந்ததால் மண்வளமும்  மழைபொழிவும் சிறப்பாக இருந்தன என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
காடை மற்றும் கவுதாரி
                (காடை : அறிவியல் பெயர் – கோடுர்நிக்ஸ் (Coturnix)
                கவுதாரி: அறிவியல்பெயர்-ப்ரான்கொலினஸ் பாண்டிசெரினஸ்(Francolinus ondicerianus)
கவுதாரி, விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் இந்தப் பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2 ஆனால், அன்றைய காலத்தில், ரீங்காரமிடும் வண்டுகள், காடை (சிவல்) மற்றும் கவுதாரி (குரும்பூழ்) போன்றவை வாழும் பகுதியாகக் காடு காட்சிப் படுத்தப்பட்டுள்ளதைப் பின்வரும் நாலடியார் பாடலில்   காணமுடிகிறது.
                                                 ————————- சுரும்பார்க்கும்
                                     காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
                                     கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.                 (நாலடி. 122:2-4)   
புலி
                                புலி : அறிவியல் பெயர்- பாந்திரா டைகிரிஸ் ( Panthera tigris)
                            கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
                             இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும்                            (நாலடி. 300:1-2)
என்ற பாடல் அடிகளில், காட்டில் இருக்கும் புலியானது தான் கொன்ற காட்டுவிலங்கு இடது பக்கம் விழுந்ததென்றால், அதனை உண்ணாமல் பட்டினி கிடந்து இறக்கும் என  குறிப்பிட்டிருப்பதிலிருந்து அக்காலத்தில் காட்டில்  புலியின்  இருப்பையும் அதன் இயல்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
கிளி
 கிளி: அறிவியல் பெயர் – ப்ச்டிசிஃப்ர்ம்ஸ் (Psittaciformes)
         கல்லெறிந்து கிளிகளை ஓட்டுவதற்கிடமான  காட்டினில் என்ற பொருளில்  அமைந்திருக்கும்  கலாஅற் கிளிகடியுங் கானக நாட (283:3) என்ற பாடலடி கிளிகள் காட்டில் கூட்டமாக இருந்தமையை அறிவுறுத்துகிறது.
இனப் பல்வகைமை  –  மருதம்    (வயலும் வயல் சார்ந்த  இடமும்)
            மருதம் காட்டை அடுத்துள்ள, சமவெளியும் ஆற்றங்கரைக்கு அருகிலும் உள்ள  வளமான பகுதியை மருதம் என்று பழந்தமிழர் வழங்கினார்கள். மக்களின் அடிப்படைத் தேவையான உணவின் உற்பத்தி மருத நிலப்பகுதியில் வேளாண்மை செய்யப்படுவதால் பல உயிர்கள் வாழும் சூழல்  அமைந்து விடுகிறது.
நெல்
                                தாவரவியல் பெயர்: ஒரைசா சட்டைவா(Oryza sativa)
                                                விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்      (நாலடி. 133:2)
                தமிழகத்தில் அதிகமாக விளையும் பயிர்களில் நெல் முதன்மையானதாகும்.  நாலடியாரின் இவ்வடி நெல் விளைச்சளில் பழந்தமிழர் ஈடுபட்டதைக் காட்டுகிறது.
புல்
                                தாவரவியல் பெயர்: சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogon citrates)
                கொல்லையில் மரத்தின் அடிப்பகுதியை ஒட்டி புற்கள் வளரும்  என்பதைப் பின்வரும் நாலடியார் அடிகள் சுட்டுகின்றன.
 கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு                   (நாலடி. 178:1-2)
கோரைப்புல்
                                தாவரவியல் பெயர் : சைப்பிரஸ் ரொடண்டஸ் (Cyperus rotundus)
 சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது (நாலடி. 389:1)
என்ற அடி கோரைப்புல்லை நீக்கியதால் வயலில் தன்ணீர் மிகுதியாகத் தங்கியுள்ள ஊர் என்று காட்சிப்படுத்தியுள்ளதிலிருந்து வயலில் கோரைப் புற்களும் வளரும் என்பது சுட்டப்பட்டுள்ளது.
இனப் பல்வகைமை  –  நெய்தல்   (கடலும் காடல் சார்ந்த  இடமும்)
            தாவரங்கள், திமிங்கலம் போன்ற பெரிய நீர்வாழ் விலங்குகள், பவளப் பாறைகள் மற்றும் நுண்ணுயிர்கள்  என  பல்லுர்களைக் தன்னுள்கொண்டு சூழல் வளமைக்குக் கடல் இன்றியமையாத பங்கைச் செய்துவருகிறது.
நெய்தல் பூ
            தாவரவியல் பெயர் : நிம்ப்யா நொச்சலி(Nymphaea nouchali)
            திரைசூழ் வையம் என  இந்தப் பூமிக்கோளம் அலைகளையுடைய கடலினால் சூழப்பட்டுள்ளது என்பதைப் பதிவிட்டிருக்கும் நாலடியார், கடலில் மலரும் நெய்தல் பூ பற்றிய குறிப்பினையும் வழங்கியிருக்கிறது.
              கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப       (நாலடி. 349:3)
தேனை வழியும் நெய்தற் பூக்களையுடைய ஒலிக்கின்ற கடல் என்ற இவ்வடியில், கடல் நீரின் குளிர்மையக் காத்திட துணைபுரியும் நெய்தல் மலர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆம்பல் மலரின் வகைமையான நீலாம்பல் மலர் நெய்தல் மலர் என்று  அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பால் கடலும் கடலைச் சார்ந்த இடத்திற்கும் நெய்தல் எனப் பெயரிட்டு அழைத்தனர் தமிழர். உவர்நீர் மலரான நெய்தல் கொடி கடல் தன்மையைக் காக்கிறது என சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
தாழை
            தாவரவியல் பெயர் – பாண்டனஸ் ப்பசிகுலரிஸ் (Pandanus fascicularis)
            நீர் நிலைகளின் கரைகளில் செழித்து வளரும் தன்மையுடைய தாழைச்செடிகள் கடலிலிருந்து வரும் பேரலையைத் தாக்குப்பிடித்து நிலநடுக்கம் இல்லாமல் காக்கும் தன்மை கொண்டது. இத்தகைய செடிகளை உடைய கடற்கரை என்று தாழைச்செடியைப் பற்றிய குறிப்பு நாலடியாரில் பதியப்பட்டுள்ளது. கண்டல் திரையலைக்குங்  காணலந் தண்சேர்ப்ப! (நாலடி. 194:3) என்ற அடி தாழஞ் செடிகளை (முள்ளிச்செடி) அலைகள் அலையச் செய்கின்ற உப்பளமுள்ள குளிர்ச்சியான கடற்கரை என சித்தரித்துள்ளதிலிருந்து, கடலை ஒட்டிய இடத்தில் உப்பளத்தின் மூலம் தமிழர்கள் உப்பு உருவாக்கிய செய்தியையும் அறிந்துகொள்ள முடிகிறது.
புன்னை மரம்
                தாவரவியல் பெயர் – கலோஃபைலம் இனோஃபைலம் (calophyllum inophyllum)
                                   —- ————-புன்னை
விற்றபூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப                  (நாலடி. 117:2-3)
 நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!                    (நாலடி. 336: 3)
என்ற அடியில், நல்ல தளிர்களோடு கூடிய புன்னை மரங்கள் கடற்கரையில் வளர்ந்திருக்கும் காட்சியை  நாலடியாரில் காணமுடிகிறது.
முத்து சிப்பி
            அறிவியல் பெயர்: ப்யர்ல் ஓய்ஸ்டர் (Pearl Oyster)
இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த நீர்வாழ் மெல்லுடலிகளான முத்துச்சிப்பி உயிரினங்களிலிருந்து முத்து பெறப்படுகின்றது. அவற்றைக் கடல்லைகள் கரையில் ஒதுக்கும் என்பதைப் பின்வரும் நாலடியார் அடிகள் சித்தரிக்கின்றன.
                                  மாடிகதிர் தந்திட்ட வான்கதிர் முத்தம்
                         சுடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224:1-2)
மீன்கொத்தி பறவை
            அறிவியல் பெயர்: அல்செடினிடே ரஃபினெஸ்க்யூ (Alcedinidae Rafinesque)
            நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப்படும் சிறு பறவை மீன் கொத்தி. நீர் நிலையின் அருகில் வாழும் மீன்கொத்தி பறவை நன்னீர் நிலைகளை நமக்கு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது. அதனைச் சிரல் என பதிவு செய்திருக்கிறது நாலடியார். காதலியின் கண்ணை  நீரில் வாழும் மீன் எனக் கருதி  அவள் கண்ணைக் கொத்த பின்சென்றது என்ற கற்பனைக் காட்சியில் மீன் கொத்தியின் குறிப்பு நமக்குக் கிடைக்கிறது.  கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் (நாலடி. 395:1-2)
வண்டு (அறிவியல் பெயர்: கோலியாப்டெரா (Coleoptera))
                                     மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப
                                    ஆவ தறிவார்ப் பெறின்                (நாலடி. 73:3-4)
என்ற நாலடியார் அடிகள் அழகிய வண்டுகள் இசைபாடிச் சூழ்ந்திருக்கும் பூக்கள் நிறைந்த கடற்கரை என கடற்கரைப் பகுதிகளில் வண்டுகளின் உயிர்பைப் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.
அடப்பங்கொடி & அன்னம்
            அடப்பங்கொடி: தாவரப்பெயர் – ஐபோமியா பைலொபா (Ipomoea biloba)
            அன்னம் : அறிவியல் பெயர் – சிக்னஸ் ஓலர் (Cygnus olor)
            கடலாரை மூலிகைக்கொடி எனச் சொல்லப்படும் அடப்பங்கொடிகளைக் கிழித்து விளையாடும் அன்னங்கள் கொண்ட குளிர்ந்த கடற்கரையை,
                                            —————————அடம்பப்பூ
அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப (நாலடி.107:2-3)
என்று நாலடியார் பதிவுசெய்துள்ளதிலிருந்து, நிலத்தின் உப்புத்தன்மையைச் சமன்செய்து சூழலைக் காக்கும் அடபங்கொடி கடலோரத்தில் வளர்ந்திருப்பதையும் அங்கு அன்னங்களும் வாழும் என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
நாலடியாரில் சூழ்நிலை மண்டல பெருக்கம்                 
           ஒரு பகுதியில் சூழ்நிலையைப் பொருத்து அப்பகுதியில் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் சூழ்நிலை மண்டல பெருக்கம் எனப்படும்.
வெப்ப மண்டல உயிர்கள்
சந்தன மரம்
                தாவரவியல் பெயர் –  சாண்டலம் (Santalum)
          கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டரிலிருந்து 4000 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதிகளில்  வளரக்கூடிய சந்தன மரம், 190 C முதல் 28.50 C வரையுள்ள வெப்பநிலையும்  உள்ள பகுதிகளில் செழிப்பாக வளர்கின்றன. எனவே  இவை மலைச் சாரல் பகுதியில்  அதிகமாக வளர்கின்றன. நாலடியார், மலைச்சாரல் பகுதிகளில் சந்தனத்  தோப்பாக வளர்ந்திருக்கின்றன என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளது.  சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட (நாலடி. 234:3).
மிதமான வெப்ப மண்டல உயிர்கள்
அல்லி & குவளை  
                                 அல்லி: தாவரவியல் பெயர் – நிம்பெயசியே (Nymphaeaceae)
                                 குவளை: தாவரவியல் பெயர் –  நிம்பெய அடொரட்டா (Nymphea odorata)
         நீர்நிலைகளின் தன்மைக்கேற்ப அதில் வெவ்வேறு உயிரினங்கள் தோன்றி வாழும் என்பதை  ஒரே குளமாக இருந்தாலும் அந்நீரின் தன்மைக்கேற்ப  பல்வேறு உயிரினங்கள் அதில் வாழும் என்பதில் அறியமுடிகிறது. அவற்றில் வேறுபாடுகள் உண்டு. மிதமான வெப்பமும் மெதுவாக நகரும் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் அல்லி, குவளை போன்ற மலர்கள் மலரும். ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா (நாலடி. 236:1-2) என்ற நாலடியார் பாடல் அடிகள், ஒரே குளத்தில் குவளையும் அல்லியும் வாழும் என்பதைக் காணமுடிகிறது.
நெட்டி
                தாவரவியல் பெயர் – அசெனோமெனி அஸ்பெரா (Aeschynomene Aspera)
குளம் ஏரிகளில் வளரும் நெட்டியின் நடுபெபாகம் தாமரைத் தண்டு போன்று நீளமாகவும் மேல்பகுதி சிறு சிறு கிளையாகவும் இருக்கும். நெட்டிச் செடியை உலர்த்தி  கைவினைப் பொருட்கள் செய்வார்கள். நெட்டி மாலையினைச் மாடுகளுக்குப்  அணிவிக்கும் பயன்பாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழர்களின் கலை மற்றும் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு  உள்ளதால்  நெட்டி கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.3  இத்தகைய நெட்டி (கிடை) நீரில் தோன்றிப் பசுமை நிறத்துடன் இருப்பினும் நெட்டியின் உள்  நீர் இருக்காது என்ற குறிப்பினை நாலடியாரின் பின்வரும் பாடல் அடிகளில் காணமுடிகிறது. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும் (நாலடி.360:1-2).
பயிர்கள்
            நிலத்தடி நீர் சூழல் காரணமாகக் குளம் அல்லது ஏரிக்கரையின் அருகில் பயிர்கள் விளைவது இயற்கை. இதனை, கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் (191:1) என்ற நாலடியாரின் பாடலடியில் குறிப்பிட்டிருப்பதை காணமுடிகிறது.
தவளை
                  அறிவியல் பெயர் – அனூரா (Anura)
                தவளைகள் நன்னீர் வாழ்விடங்களில் வாழும். இவை உயிர்வாழ்வதற்காக தங்கள் தோலை ஈரப்பதமாக வைத்திருக்க குளங்கள், ஏரிகள், ஓடைகள், ஆறுகள் அல்லது சிற்றோடைகளில் வாழ்கின்றன. பூச்சிகளை உண்டு உயிர்களின் உணவுச் சங்கலி சிறப்பாகத் தொடர தவளைகளின் பங்கு முதன்மையானது. குளத்தில் வாழ்ந்தாலும் தன் உடம்பில் இருக்கும் வழுவழுப்பான அழுக்கை அந்நீர்க் கொண்டு தூய்மை செய்து கொள்வதில்லை என்று கூறுவதிலிருந்து, நிலநீர்வாழியான தவளை தன் தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் என்பதைப் செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாம் தேரை (நாலடி. 352:1-2)  எனும் பாடல் அடிகள்  சுட்டுகின்றன.
நாலடியாரில் பல்லுயிரியத்தின் பயன்கள்
பல்லுயிரியத்தின் பயனாகத்தான் இன்று மனித இனம் இப்புவிக்கோளத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இதன் தேவையை இனங்கள் வழங்குதல், விளைச்சல் அதிகரித்தல், சூழலியல் ஒழுங்குபடுத்தல் என்ற வகையில் சூழலியலாளர்கள் வகுத்துள்ளார்கள். அக்கருத்துக்களை அடிப்படையாக நாலடியார் பாடல்களில் ஒப்புநோக்கி இப்பகுதியில் பார்க்கப்படுகிறது.
இனங்கள் வழங்குதல்
            ஒரு குறிப்பிட்ட தாவர இனம்  பல்வேறு பயிர்களை வழங்க உதவும். மகரந்தச் சேர்க்கை காரணமாக தேனிக்களும் வண்டுகளும் புதிய இனங்கள் உருவாகக் காரணமாக அமைந்து சூழல் வளத்தினை  இயற்கையாகவே வளப்படுத்துகின்றன. சமண முனிவர்கள் இயற்கையின் இந்த இனம் வழங்கல் நிகழ்வை நாட்டின் வளமைக்கு உதாரணங்களாக காட்சிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
                                                                ——————நிறக் கோங்கு
                                                உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!      (நாலடி. 223:2-3)
எனும் பாடலடிகள், பொன்னிறமான கோங்க மலரில் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசன் என்ற பொருள் கொண்ட நாலடியாரின் இவ்வடிகள், மலர்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் வண்டுகள் தேனெடுக்கும் போது மலரின் மகரந்தத் தூள் வண்டின் கால்களில் ஒட்டி மற்ற மலருக்கு வண்டு செல்லும் போது இதனோடு கலந்து புது இனத் தாவரங்கள் உருவாகும் என்பதை உணர்த்துகின்றன.  இது போன்றே, கடற்கரைப் பகுதிகளிலும் காற்று வீசுவதின் காரணமாக விதைகள் மற்றும் மகரந்தத்தூள்கள் காற்றில் பரவி வெவ்வேறு தாவரங்கள் வளர்வதற்கு துணைப்புரிகின்றன. இக்காட்சி  நாலடியாரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் பின்வரும் பாடல் அடிகளிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
                                                ————————- வளியோடி
                                     நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப          (நாலடி. 108:2-3)
பல மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரித்து வைக்கும் தேன், மனிதர்களுக்கு உணவாக இருப்பதோடு இன்றைய நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரவும் தேனிக்கள் இன்றியமையாததாக உள்ளன. உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம்  அதிகமாகும் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன.  இதனை, உய்த்தீட்டும் தேனீக் கரி (நாலடி.10:4) என்ற பாடல் வழி தேனிக்கள் தேன் சேகரித்து  இனங்கள் பெருகுவதற்கு உதவுவதை  அறிந்து கொள்ள முடிகிறது.
விளைச்சல் அதிகரித்தல்
            மண் வளம்  சிறப்பாக இருக்கின்றபோது பயிர்கள் செழிப்புடன் வளரும்  என்று இயற்கை அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் வலியுறுத்தும் கருத்தை  நாலடியாரில்  சுட்டப்பட்டுள்ளதைப் பின்வரும் பாடல் அடிகளில் உணரலாம்.
                நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் (179:1)
நிலவளத்தோடு நீர் வளமும் விளைச்சல் அதிகரிக்கத் தேவை என்பதை அறிந்து நீர்நிலை வயலிலிருந்து வாய்க்கால் வழி நீரைக்கொணர்ந்து பழந்தமிழர்கள் விளைச்சலை அதிகரிக்கும் முறையைப் பின்பற்றியதைப் பின்வரும் நாலடியார் அடிகள்  உணர்த்துகிறது.
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு                                 (நாலடி. 218.3-4)
              நல்ல தரமான விதைகள் அதிக விளைச்சலைக்கொடுக்கும். நல்ல விதைகளின் பயனை விளக்கியிருக்கும் நம் முன்னோர்கள், வீரியமிக்க விதைகளை உருவாக்கும் இன்றைய வேளாண் ஆய்வாளர்களுக்கு, முன்னோடிகள் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல்  உறுதிப்படுத்துகிறது.
                                     செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றும் அச்
                                     செந்நெல்லே யாகி விளைதலால்- அந்நெல்
                                    வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர (நாலடி. 367:1-7)
நல்ல நெற்களால் விளைந்த நல்ல விதைகள் நல்ல நெல்லாகவே விளைந்து நல்ல நெற்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் நிறைந்த ஊர் என்ற செய்தி விளைச்சல் அதிகரிப்பிற்கு நல்ல விதைநெல்லின் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. பூச்சிகளின் அரிப்பு காரணமாக பயிர்கள் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அழிந்துவிடும் அல்லது விளைச்சல் குறைவாகும். சில நேரங்களில் மரத்தையே அழிக்கும்  ஆற்றல் பூச்சிகளுக்கு உண்டு என்பதற்கான உதாரணத்தை நாலடியாரில்,
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
                                    மதலையாய் மற்றதன் வீழுன்றிக்  யாங்குக்              (நாலடி.197:1-2)
என்ற பாடலில் காணமுடிகிறது. அவ்வாறு ஓர் உயிரால்  ஏற்படுகின்ற பயிர்களின் அழிவை மற்ற உயிரினங்கள், அவற்றை உணவாக உண்டு பயிர்களைக் காக்க உதவி புரிவது  உணவுச் சங்கலி (பயிர்களைப் பூச்சிகள் உண்பதும் பூச்சிகளை எலிகள் உணவாகக் கொள்வதும் எலிகளைப் பாம்பு உட்கொள்வதும் இயற்கையில் நடக்கும் உணவுச் சங்கலியாகும்.) அறுபடாமல் தொடரவும் காரணமாகிறது. சர்பெண்டஸ் என்று அறிவியலில் அழைக்கப்படும் பாம்புகள் நிலத்தின் பொந்துகளில் வாழ்ந்து வரும் என்பதை, விரிநிற நாகம்  விடருள தேனும் (164:1) என்ற பாடல் அடி  மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.   
 சூழலியல் ஒழுங்குபடுத்தல்
            நிலம் நீர் காற்று மாசுபடாமல் இருப்பது சூழல் சமனைக்  காக்கும். இந்தச் சூழல் ஒழுங்கு தோற்றப்பொருட்களில் மட்டுமின்றி பல்லுயிரினங்களின் வாழ்வியலுக்கும் முதன்மைத் தேவையாகிறது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உயிர்காற்றை (ஆக்ஸிஜனை) உற்பத்தி செய்கின்றன. மனிதர்கள் அதனைச் சுவாசிக்கிறார்கள் மற்றும்  கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) வெளியிடுகிறார்கள். இது மரங்களால் உறிஞ்சப்படுகிறது. இந்தச் சுவாசச் சங்கிலி சுற்றுச்சூழலில் அனைத்து உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனவோ அதேபோல்தான் உயிரினங்களின் உணவுச் சங்கிலியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றுச்சூழல் அமைப்பை ஆரோக்கியமானதாகப் பராமரிக்கப் பல்லுயிர்களின் இருப்பு தேவையானதாகிறது.    
 உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்             (நாலடி. 193:1-2)
என்ற பாடல் அடிகள் இரையின்றி வாடும் புலி தேரையை உண்ணும் என்று விலங்குகளின் உணவைச் சுட்டும் நாலடியார், தாவரங்கள் மனிதவாழ்க்கையில் உணவாகவும் அவர்கள் பயன்படுத்தும் பொருளாகவும் அமைந்திருந்த சூழலைக் காட்டியுள்ளது.
                                      கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
                                      அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
                                      உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
                                      துப்புரவு சென்றுலந்தக் கால்                         ( நாலடி.289:1-4)
என்ற நாலடியார் பாடல் தம் கைகளால் செடியை (கீரையை) வளைத்துப் பறித்துக்கொண்டுபோய் வேகவைத்து, பனை ஓலைகளால் செய்யப்பட்ட பாத்திரத்தில்  உப்பில்லாது வெந்த கீரையை உண்டு வாழ்ந்தனர் என்ற இக்காட்சி தாவரங்களின் பயன்பாடும் பழந்தமிழர் சூழலோடு பொருந்தி வாழ்ந்த வாழ்வியலும் பதிவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
பல்லுயிரியத்தின் மேலாண்மை
பல்லுயிரியத்தின் மேலாண்மை என்பதின் முதன்மை நோக்கம் பல்லுயிர் பெருக்கமாகும். பல்லுயிர்கள் தான் இப்புவி மண்டலத்தினை வளமாக வைக்கிறது.  இயற்கை தானே விதைப்பரவல், மகரந்தச் சேர்க்கை போன்ற செயல்பாடுகளால் தாவரங்கள் மட்டுமல்லாது புழு பூச்சி போன்ற பல்வேறு உயிரினங்கள் தோன்றுகின்றன. என்றாலும், இப்புவியின் பெரும் பங்கு வளத்தினை அனுபவித்து வாழும் மனிதனுக்கு பல்லுரிகளைக் காப்பதில் பெரும் பங்கு உள்ளன. இன்றையச் சூழலியலாளர்கள் பல்லுயிர் மேலாண்மைகளாகத் தாவரப் பல்லுயிர்ப்பெருக்கம், விலங்குகள் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் நுண்ணுயிரிப் பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றைச் செயல்படுத்தி வருகின்றனர்.   தாவரங்களை வளர்க்கும் முறைகள் நாலடியாரில்  கொடுக்கப்பட்டுள்ளன. குறவன் மலைவளத்தை நினைத்தும் உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைத்து உள்ளம் உவப்பான்  என்பதை,
                     மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
                  விளைநிலம் உள்ளும் உழவன்                                        (நாலடி. 366:1-2)
 என்ற பாடல் அடிகள் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக தான் வாழும் சூழலைக் காக்கும் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன் மீது  (நாலடி.387:1) என்ற அடியில், வயலில் நெற்பயிரோடு வளரும் கோரைபுற்களை நீக்கிவிட்டால் வயலில் நீர் அதிகமாக நின்று வயல்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற வேளாண் மேலாண்மையைக் அறியமுடிகிறது.  நாள்தோறும் நீர் பாய்ச்சி பாக்கு மரத்தையும், விட்டு விட்டு நீர் பாய்ச்சி தென்னை மரத்தையும் வளர்க்க வேண்டும். ஆனால் விதையிட்ட நாளன்று  நீர் விட்டால் போதும் பராமரிப்பு இல்லாமலே பனை மரம் வளரும் என்று பல்வேறு வகையான மரங்களை வளர்க்கும் முறைகளை நாலடியார் பின்வரும் பாடலில் விளக்கியுள்ளது.
கடையாயர் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயர் தெங்கின் அனையர் – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு                                (நாலடி. 216:1-4)
  தாவரங்களை மட்டுமல்லாது பிற உயிரினங்களோடு பழகி பயன்கொண்டு அவற்றையும் காத்தனர்.
                                    ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
                                      போகா தெறும்பு புறஞ்சுற்றும்                                       (நாலடி.337:1-2)
என்ற அடிகள், பசுவின் பாலிலிருந்து உண்டாக்கும் நெய்யை விட்டு எறும்பு அகலாது என்பதிலிருந்து பசுவை குடும்ப உறுப்பினராக காத்து வளர்ப்பதும், அதனைச் சார்ந்து பிற உயிரினங்களும் ஒத்தும் உதவியுமாக வாழ்வது பழந்தமிழரின் வாழ்வியலாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சூழலியலாளர்கள் சூழல் வளம் நிறைந்த பகுதிகளை அடையாளப்படுத்தும் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இந்த உலகம் இயற்கை வளம் நிறைந்தது என்பதை மல்லன்மா ஞாலத்து (நாலடி. 296:1) என நாலடியார் கூறியிருப்பது அக்காலம் சூழல் வளம் நிறைந்ததாக இருந்ததை அறிவுறுத்துகிறது.
“1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்பட்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மூத்த சூழலியலாளர்கள் சுந்தர்லால் பகுகுணா, சத்தீஸ் சந்திர நாயர், கலானந்த் மணி, பாண்டுரங்க ஹெக்டே, பி.ஜே.கிருஷ்ணன், டாக்டர் ஜீவனாந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை எழுப்பியதன் விளைவாக  மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக அறிவித்துள்ளது.”4
      மேலும், இன்றைய அரசு தமிழ்நாட்டின் அரிக்காபட்டி கிராமத்தை பல்லுயிர் மண்டலமாக அறிவித்து  அதனைக் காக்கும் முயற்சிகளை எடுத்துவருவது  போன்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் அன்றைய மக்கள் இதைப்போன்ற அரசின் திட்டமின்றியே தங்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளில் பல்லுயிர்களைக் காத்து வளர்த்தனர் என்பதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
நிலம் மற்றும் நீரியற் சூழல்களில் அமைந்திருக்கும் வேறுபாடுகள் காரணமாக பல்வேறு உயிரின வகைகள்  உள்ளன என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
கொள்ளு, ஆம்பல்,  யானை, வண்டு, பாம்பு மற்றும் மான்  போன்றவற்றின் மரபு வகைமைகள் சுட்டப்பட்டுள்ளன.
இனப் பல்வகைமைகளில் மலையும் மலைச் சார்ந்த இடங்களில் கோங்கு, தேனீ, பறவைகள் காட்டுப்பசு போன்றவைகளும் காடும் காடு சார்ந்த இடங்களில் சந்தனமரம், வேங்கை மரம், காடை, கவுதாரி, புலி,  மற்றும் கிளி போன்றவைகளும்  வயலும் வயல் சார்ந்த பகுதிகளில் நெல், புல் மற்றும் கோரைப் புல் போன்றவைகளும் கடலும் கடல் சார்ந்த  இடங்களில் நெய்தல் பூ, தாழஞ்செடி, புன்னை மரம், மீன்கொத்தி பறவை, வண்டு, அடபங்கொடி மற்றும் அன்னம் போன்றவைகளும் அவற்றின் இயல்புகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சூழ்நிலை மண்டல வகைமையில்  வெப்பமண்டல உயிரினமான சந்தன மரத்தையும், நெட்டி, அல்லி, குவளை, பயிர்கள் மற்றும் தவளை போன்ற  மித வெப்ப மண்டல உயிரினங்களையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பல்லுயிரியத்தின் மிக இன்றியமையாத பயன்களான இனம் வழங்குதல் விளைச்சல் அதிகரித்தல் மற்றும் சூழலியல் ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில்   மகரந்த சேர்க்கை விதை பரவுதல், உணவுச் சங்கிலி சமன்செய்தல்  போன்றவைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
மேற்கண்ட சான்றுகளிலிருந்து, பழந்தமிழர்கள்  தன்னைச் சுற்றி வாழும் பல்லுயிர்களை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் வழித்தடத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். அத்தகைய இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையால், பல்லுயிர் சமநிலை காக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வதோடு  இன்றைய நிலையில் இச்சமநிலை காக்கப்படாமல் இருப்பதற்கு மனிதர்களின் மாறிவிட்ட  வாழ்க்கைமுறை காரணம் என்பதையும் உணரமுடிகிறது.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் பெருக்கம் குறித்த செய்திகள் நாலடியாரில் கிடைத்தாலும் இன்றைய அறிவியல் கூறும் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
எனவே, அதற்கான உரிய முயற்சிகளை எடுப்பது இன்றைய இன்றியமையாத தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேலும், சூழலியல் சமன்பாட்டிற்கு   இக்கட்டுரையில் சுட்டப்பட்டுள்ள உயிரினங்கள் உதவுவதை ஆய்ந்தறிந்தது போல நாலடியாரில் உள்ள பல்வேறு தாவரங்களின் மருத்துவப் பயன்களையும் ஆய்ந்தறிவதற்கான தரவுகள் காணமுடிகிறது என்பதை  முன்வைத்து இக்கட்டுரை மேலாயுவுக்களத்திற்கும் வழிகாட்டுகிறது. 
அடிக்குறிப்பு
1.ஜமுனா. “வேங்கை மரம் பொதுப் பண்புகள்” DAYOFMEDIA. பதிவு நாள் 11 ஏப்ரல் 2021. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2022. https://www.daysofmedia.com/2021/04/blog-post_36.html
2.ஆண்டனி செல்வராஜ். ஒய். “அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை”. இந்து தமிழ் திசை. பதிவு நாள்:9 நவம்பர் 2016. பார்த்த நாள்: 9 டிசம்பர் 2022. https://www.hindutamil.in/news/tamilnadu/86883–1.html.
3.கார்த்திக். எஸ். “புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் நெட்டி கலைப் பொருளின் சிறப்புகள் என்ன?”. News 18 தமிழ்.  பதிவு நாள்:12 ஜூலை 2022. பார்த்த நாள்: 9 டிசம்பர் 2022.   https://tamil.news18.com/thanjavur/thanjavur-netti-works-specialities-sau-770667.html
4.சஞ்சீவி குமார் டி.எல். “சூழலியல் முக்கியத்துவம் பெறும் மேற்குத் தொடர்ச்சி மலை” இந்து தமிழ் திசை. பதிவு நாள்:18 அக்டோபர் 2013. பார்த்த நாள்: 23 டிசம்பர்2022.
மேற்கோள் சான்றுகள்
1.அறவாணன் க.ப. உரையாசிரியர். நாலடியார். மு.ப. தமிழ்க்கோட்டம்,14 ஏப்ரல் 2010.
2.கெளமாரீஸ்வரி எஸ். தொகுப்பாசிரியர். பதினெண்கீழ்கணக்கு நூல்கள் மூலமும் உரையும். முதற்பதிப்பு, சாரதா பதிப்பகம், மார்சு 2009.
3.சாமி.  பி.எல். சங்க நூல்களில் மரங்கள். முதல் பதிப்பு, திருக்குறள் பதிப்பகம், 1902.
4.சாமி. பி.எல். சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்.  மறு பதிப்பு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,1982.
5.சீநிவாசன். இ. சங்க இலக்கியத் தாவரங்கள்.  முதல் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம், சூன் 1987.
6.நெடுஞ்செழியன். வே. தமிழர் கண்ட தாவரவியல்.   முதல் பதிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2005.
7.பாலசுந்தரம் பிள்ளை தி.சு. உரையாசிரியர்.  நாலடியார். கழக வெளியீடு, 2007.
8.புலியூர்க் கேசிகன். பதிப்பாசிரியர். திருக்குறள் பரிமேலழகர் உரை. எட்டாம் பதிப்பு,  பூம்புகார்பதிப்பகம், பிப்ரவரி 2001. 
9.மணவழகன் ஆ. பதினெண்கீழ்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும். மறுமதிப்பு, ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், 2020.
10.மாதையன்  பெ. பதிப்பாசிரியர். பாலசுந்தரம் ச. உரையாசிரியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை செய்யுளியல் – மரபியல். முதல் பதிப்பு, தொகுதி -3, பகுதி-3, பெரியார் பல்கலைக் கழகம், பிப்ரவரி 2012.
11.வசந்தகுமார். இரா. அறிவியல் கண்ணோட்டத்தில் சங்க இலக்கிய விலங்குகள். இரண்டாம் தொகுப்பு, வசந்தா பதிப்பகம், 2006.
12.ஸ்ரீசந்திரன் ஜெ. உரையாசிரியர். நாலடியார். வர்த்தமானன்  பதிப்பகம், 2000.
13.“தேனீக்கள் இல்லையென்றால் மனித வாழ்வும் முடிந்து விடும்”. தினகரன் இணைய நாளிதழ், பதிவு நாள்: 20 மே 2019. பார்த்த நாள்: 18 நவம்பர் 2022. https://www.thinakaran.lk/comment/1747.
14.பகத்சிங் “நிலத்தின் உப்புத் தன்மையை நீக்கும் கடலாரை” நக்கீரன் சிறப்பு செய்திகள் பதிவு நாள்: 24 செப்டெம்பர் 2020. பார்வை நாள்: 30 சனவரி 2023. https://www.nakkheeran.in/special-articles/special-article/kadalarai-plant-removes-salinity-land.
15.Amy Quinton. “Cows and climate change Making cattle more sustainable” UCDAVIS, பதிவு நாள் 27 ஜூன் 2019. பார்த்த நாள்: 18 நவம்பர் 2022 https://www.ucdavis.edu/food/news/making-cattle-more-sustainable.
16.Hawksworth.D.L. “Biodiversity: measurement and estimation.” Springer. பதிப்பாண்டு 1996. பக். பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 978-0-412-75220-9. பார்த்த நாள்: 11 நவம்பர் 2022.
17.National Geographic Society . “Biodiversity”. education national geographic, பதிவு நாள்:  20 மே 2020. பார்த்த நாள்: 24 நவம்பர் 2022. https://education.nationalgeographic.org/bresource/biodiversity
18.“Water Lilies”. The Pond Digger, Muffin group. https://theponddigger.com/water-lilies/  பார்த்த நாள்: 18 நவம்பர் 2022.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச. மாலதி,
முனைவர் பட்ட ஆய்வாளர்
பதிவு எண்  2819,
நெறியாளார்
முனைவர் ஆ. மணவழகன்,
இணைப் பேராசிரியர்,
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,

 

   

இயற்கையைப் பாதுகாப்போம்! | முனைவர் சீனு. தண்டபாணி

இயற்கையைப் பாதுகாப்போம்! முனைவர் சீனு. தண்டபாணி

🌳 பன்னெடுங் காலமாய்


தழைத்திட்ட இயற்கை,


 

🌳பண்ணிய பாவமென்ன?


பாரை விட்டுப் போவதென்ன?

 

🌳இறுமார்ந்த இயற்கை


உருமாறத் தொடங்கியதேன்?


 

🌳வருமானம் வரவேண்டி,


அவமானம் கருதாமல்,


 

🌳வளமையைக் குழிதோண்டிப்


புதைப்பது தகுமோ?


 

🌳செருக்கின்றிச் செழித்திட்ட


விளைநிலங்கள் எல்லாமே,


 

🌳அறுப்பின்றிப் போனதற்குப்


பொறுப்பேற்பார் எவருண்டு?


 

🌳அடர்ந்திட்ட வனமெலாம்


தொடர்ந்திட்ட இரணத்தாலே,


 

🌳படர்ந்திட்டக் கொடியறுத்துப்


பாரைவிட்டுப் போனதெங்கே?

 

🌳நாற்புறமும் பசுமையொடு


நடனமிட்ட இயற்கை,


 

🌳நான்குவழிச் சாலைக்குள்

முடங்கியது எவர்குற்றம் ?


 

🌳விசுவாசத் துரோகிகளின்


விஷப்பேச்சின் வீரியத்தால்,


 

🌳செயற்கை சிரிக்கிறது;


இயற்கை சிதைகிறது!


 

🌳நிலையில்லா வாழ்வை


நிலையென்று நினைத்து,


 

🌳விலையில்லா உயிரை


இழப்பதுதான் விதியோ ?


 

🌳எதிர்காலத் தலைமுறை


சுவாசிக்க வேண்டுமெனில்,


 

🌳இருக்கும் இயற்கையை


நேசித்துக் காத்திடுவோம்!


 

கவிதையின் ஆசிரியர்,

முனைவர் சீனு. தண்டபாணி,


தமிழ்த்துறைப் பேராசிரியர்,


சாரதா கங்காதரன்  கல்லூரி, 

புதுச்சேரி
.

 

கி.ரா.வின் கதைகளில் திருமணச் சடங்குகள் | முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்

கி.ரா.வின் கதைகளில் திருமணச்சடங்குகள் முனைவர் அ. ஜனார்த்தலி
ஆய்வுச் சுருக்கம்
               
திருமணச் சடங்கு முறைகள் ஒவ்வொரு காலத்திற்கேற்ப மாறுபட்டு வருகின்றன. ஒரு சமூகம் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய வழியில் சடங்கு முறைகளை மேற்கொண்டு திருமணம் செய்வர். சங்க காலத் திருமணம் வேறு தற்காலத் திருமண முறை வேறாகக் காணப்படுகின்றன. கி.ராவின் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணச் சடங்கு முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை
               
நம் முன்னோர்கள் மக்களை ஒரு வழிமுறைப்படுத்தவும், அவர்கள் தவறுகள் செய்தால் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறி மக்களை நல்வழிப்படுத்தவே சடங்கு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கினா். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் புதுப்புது சடங்குமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். அந்தச் சடங்கு முறைகளில் ஒன்றுதான் திருமணம். பருவ வயதை அடைந்த ஆணும், பெண்ணும் தங்களது உள்ளக் குறிப்பினை அறிவிப்பதற்கு முன்பாகப் பெரியோர்களால் பெண் பார்க்கும் நிகழ்வு நிகழ்த்தப்பட்டு பத்து வகையான பொருத்தங்களும் சரியான முறையில் பொருந்திய நிலையில் சீர்வரிசை பேசி அதற்கு உடன்பட்ட பின் ஒரு நன்னாளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு அச்சடங்கு நிகழும். கி.ரா.வின் கதைகளில் திருமணச் சடங்குகள் பற்றிப் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி ஆராய்ந்து அறிவதே இக்கட்டுரையாகும்.

சடங்குகள்
               
மனிதச் சமுதாயத்தில் நிலவி வருகின்ற பலவகை நம்பிக்கைகள் அதனோடு தொடர்புடைய சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ‘சடங்கென்பது நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும். இது மனிதனின் சுயமான ஆக்கமாகவோ பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச் சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. நம்பிக்கைகளையும், இலட்சியங்களையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று சடங்குகள் ஆகும்” (முனைவர் அ. ஜனார்த்தலி பேகம், குறுந்தொகையில் தமிழர் வாழ்வியல், ப.288) என்று ஜனார்த்தலி பேகம் குறிப்பிடுகிறார்.
இதனையே,
 ‘ஒருவர் தமக்கு வந்த துன்பத்தை நீக்கிக் கொள்ள மேற்கொண்ட செயலைப் போலவே மற்றவரும் அத்துன்பத்தை நீக்க அதே செயலை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செயல்கள் அனைத்தும் நன்மை தருவன என்பது காலப்போக்கில் சமூகக் கோட்பாடானது. எனவே பின்னால் வந்தவர்களும் காரணம் கேட்காமலேயே வழிவழியாக அச்செயல்களைச் செய்யத் தலைப்பட்டனர். அவ்வாறு செய்யப்படும் செயல்களே சடங்குகள் எனப்பட்டன” (அ.இராஜேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், ப.554)  என்ற அ. இராஜேந்திரனின் கூற்றும் மேற்கூறிய கூற்றிற்கு வழு சேர்க்கிறது.

திருமணச் சடங்குகள்
               
திருமணச்சடங்கு குறித்து, “சடங்கு யாவற்றுள்ளும் மனித வாழ்வைப் பெரிதும் பாதிப்பது திருமணச் சடங்கேயாதலால் சடங்கு என்னும் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் திருமணத்தையே குறிக்கும். சடங்கு சுற்றி இருப்பவர்களை இணைக்கும் பந்தம் என்றும் இப்பந்தம் இல்லாவிடின் இணைப்பு அறுந்து போய் விடும் என்றும் சமூகவியல் வல்லுநர் கூறுவர்.” (உ)
                என்று திருமணம் குறித்து கார்த்திகேய சிவத்தம்பி விளக்கமளிக்கிறார். குடும்ப வாழ்வின் அடிப்படை நாதமாகத் திகழ்வது ‘திருமணம்’ ஆகும். இத்தகையைத் திருமணத்தின் போது அதிகமான சடங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
 திருமணச் சடங்குமுறைகளை, “திருமணப் பந்தலில் தீ வேட்பதுண்டு. அந்தணர்கள் திருமணச் சடங்குகளை நடத்தி வைத்தனர். மணமகன் மணமகளின் இடக்கையை பற்றிக் கொண்டு தீயை வலம் வந்து மணை மேல் அமர்வான். மணமக்களுக்குக் காப்புக் கட்டுவதுண்டு. பெண்ணின் பெற்றோர் மணமகனுக்குத் தம் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பர்.            ஓமத்தில் நெய்பொரியிடுதல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல் ஆகிய சடங்குகள் நடைபெறும். மணமகளின் மலரடிகளை மணமகன் பாலால் கழுவ வேண்டும். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் முதலாம் இராசராசன் காலத்திற்றான் தோன்றியிருக்க வேண்டும்.” (மோகன் ராஜ், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியம், ப. 183) என்று மதிப்பிடுவார் மோகன்ராஜ்.
               
மக்கள் எல்லோரிடமும் திருமணச் சடங்குமுறைகள் இருக்கின்றன. இம்முறையானது மக்கள் சார்ந்துள்ள சாதியின் அடிப்படையில் வேறுபடுவதாகும். எல்லாச் சமூக மக்களிடமும் திருமணத்தின் போது, பெரும்பாலும் ஒரே விதமான சடங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இச்சடங்குமுறைகள் திருமணத்தில் இணையும் தம்பதியின் ஒற்றுமை மேம்பட உதவுகின்றது. அவர்களுக்கிடையே விட்டுக்கொடுக்கும் பண்பை உருவாக்கின்றது. மனித உறவுகளை இணைக்கும் பாலமாகச் சடங்குமுறைகள் அமைகின்றது.
 திருமணச் சடங்குமுறைகளால் தான் அனைத்துச் சடங்குகளும் தோன்றின. எல்லா உறவுகளும் திருமணம் என்ற ஒன்றினால் உருவாக்கப் பெறுகின்றன. மனித நேயப் பண்பு திருமணத்தினால் மேம்படப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பு நல்ல படியாக அமையும் போது தான் நல்ல சமூகம் உருவாகின்றது. சமூகத்தில் மனிதனைப் பண்புடையவனாக மாற்றுவது திருமணமாகும். பண்பு மேம்பட்ட மனிதனால் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கும் வல்லமை கிடைக்கும். ஆகவே, திருமணச் சடங்குமுறைகளால் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது. திருமணச் சடங்குமுறைகளாக,

1.பெண் பார்த்தல்

2.பூ வைத்தல்

3.பரிசம் போடுதல்

4.மாப்பிள்ளை விருந்து

5. சாந்தி முகூர்த்தம்

6. ஆடிமாதத்தில் புதுமணத்தம்பதியினரைப் பிரித்து வைத்தல்

7. மாறுபட்ட திருமணச்சடங்கு
               
போன்றவை முக்கியவை ஆகும். இவை யாவும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

பெண் பார்த்தல்
               
மனித வாழ்க்கையில் திருமணம் என்றால் முதலில் மாப்பிள்ளை வீட்டாரே பெண் பார்க்கச் செல்வார்கள். பிறகுதான் பெண் வீட்டார் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தல் நடைபெறும். இரு வீட்டாரும் சந்தித்துப் பேசி கொடுக்கல் வாங்கல் எல்லாம்  சரி என்ற பிறகு தான் திருமணம் நடைபெறும்.
                கரிசல் பூமியில் ஏதேனும் வீட்டில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறதெனில் அது அக்கிராமம் முழுவதும் தெரிந்துவிடும். இதை ‘கொத்தைப் பருத்தி’ என்ற சிறுகதையில்,“சம்பாஷணை தொயரத் தொயர உடனுக்குடன் தகவல் வீட்டுக்குள்ளே போய்க் கொண்டே இருந்தது. அந்த வீட்டின் கதவிடுக்கு, ஜன்னல்கள் முதலியவைகளுக்கெல்லாம் ‘காதுகள்’ உண்டு. நடுத்தெருவில் மணல்மீது ஒரு ஊசி தவறி விழுந்தாலும் அந்த வீட்டின் காதுகளுக்குக் கேட்டிடும் போது, வீட்டின் தலைவாசலில் வைத்துப் பேசும் பேச்சு கேட்காமல் போகுமா?” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.302) என்னும் வரிகள் வழியாக அறிய முடிகின்றது.
               
ஆகவே, கிராமத்தில் ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்வானது, அக்கிராம மக்கள் எல்லோரும் அறிந்து இருப்பதை உணர முடிகின்றது. ஒரு வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெறுகின்றது எனில் அக்கிராமத்திற்குத் தெரிந்துவிடும். கரிசல் கிராம மக்கள் அரசு வேலையில் இருப்பவர்களுக்குப் பெண் தர மறுத்துள்ளனர். இக்கூற்றை,
   “நிலம் ஒரு ஏக்கர் கூடக் கிடையாது என்று தெரிந்ததுடன், பையன் கலெக்டராக இருந்தாலென்ன, கவர்னராகத் தான் இருந்தாலென்ன; கிடையாது பொண்ணு என்று கராராகச் சொல்லி விட்டார்கள். ‘என்னய்யா பையன் ஜில்லாக் கலெக்டராகப் போறான்; பொண்ணு கிடையாதுன்னு சொல்றீங்களே’ என்று மலைத்துப் போய்க் கேட்டார் வந்தவர். ‘கலெக்டரா இருந்தால் அது அவன் மட்டுக்கும். நாளைக்குப் பையனுக்கு ஏதாவது ஒண்ணு ஆகிவிட்டால் என் பொண்ணுல்ல தெருவில் நிப்பா. பையனுக்கு நாலேக்கர் நிலமிருந்தா அவள் அதிலே கிண்டிக் கிளறித் தன் பாட்டையாவது கழிச்சிடுவா. ஒண்ணுமில்லாதவனுக்கு உத்தியோகத்தை நம்பி யாரு கொடுப்பா பொண்ணு?’ என்று ஓங்கிக் கேட்டார் கோனாரி.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.304) என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
இதில் கலெக்டர், கவர்னராக இருந்தாலும் பெண் தர மறுத்துள்ளதை அறிய முடிகின்றது. மாப்பிள்ளை நிலம் வைத்திருக்க வேண்டும். அவர், உழுது விவசாயம் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால், நாகரிகம் வளர வளர இத்தகைய நிலை மாறியுள்ளது.

பூ வைத்தல்
               
திருமணச் சடங்கு முறைகளுள் பூ வைத்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. திருமணம் என்றால் எல்லா வீடும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வீட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஒவ்வொரு மக்கள், தங்களின் வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். இக்கருத்தினைச் சித்திரிக்கும் வகையில் ‘பூவை’ என்ற சிறுகதையில்.
“கல்யாணம் நடக்கிற வீடு, ஒரு பட்டகசாலையும் ஒரு அரங்கு வீடும் கொண்டது. முன் பக்கம் சமையல்கட்டும் மாட்டுத் தொழுவமும். அரங்கு வீட்டுக்குள்தான் கல்யாணப் பெண் இருந்தாள். சிங்காரித்து முடிந்தது. முகூர்த்த நேரமும் நெருங்கி விட்டது. மணவறையில் வந்து மாப்பிள்ளை உட்கார்ந்து விட்டான்.            பட்டகசாலையில் தான் மணவறை. நாங்கள் பட்டகசாலைக்கும் சமையலறைக்கும் மத்தியிலுள்ள முத்தவெளியில் உட்கார்ந்திருப்போம். நாங்கள் அங்கே ஐமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போடுகிறோம் என்கிற பேரில், வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளியெறிந்தும் வெற்றிலையின் நரம்புகளைக் கிள்ளியெறிந்தும் ஐமுக்காளத்தைக் குப்பையாக்கியும் வெற்றிலைச் சக்கையையும் எச்சிலையும் துப்பித் துப்பித் தரையை அசுத்தப் படுத்திக் கொண்டு வாயையும் கறையாக்கிக் கொண்டும் அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சில் ‘கரீபிஹடாவ்’ பலமாக அடிபட்டது. கல்யாணம் எங்களுக்கு ரெண்டாம் பட்சமாகிவிட்டது. ஒரு வகையில் உண்மையும் அது தான்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., பக்.227-228) 
என்றும் வரிகள் வழியாக அறியப்பெற முடிகின்றது. கல்யாண வீடானது, எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும். அங்கு மக்கள், தங்கள் தொடர்பான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் கல்யாண வீட்டிற்கு வருகின்றனர்.
               
கரிசல் மக்கள், தங்கள் வீடுகளும் பல்வேறு திருமணங்கள் நடத்தப்பட்ட வீடாக இருக்க வேண்டுமென நம்புகின்றனர். அங்கு வாழும் மக்கள் இதனைச் சிறப்பு மிக்கதாகக் கருதுகின்றனர். இதனை, ‘நூறு கல்யாணம் கண்ட வீடு சிறப்பானது’ என்று ஒரு நம்பிக்கை. இதில் பூ வைக்கும் சடங்கு முறை அடங்கும். மணப் பெண்ணுக்குத் திருமணத்தின் போது பூ வைத்து அலங்கரிக்கின்றனர். இதனால், பெண்கள் தலையில் பூ வைத்து ஒப்பனை செய்து கொள்கின்றனர். பெண் தன் வாழ்வில் பூவைத் தலையில் வைக்காத நிலை இருக்கின்றது. இக்கருத்தை,
 “என்னவென்று விசாரித்து அறிய நான் எழுந்தேன். அதற்குள் பாட்டியே வெளியே வந்து எல்லோரிடமும் சொன்னாள். ‘கழுதை! ஒரு நாளாவது தலையில் பூ வைத்திருந்தாளல்லவோ; இண்ணைக்குச் சிங்காரிக்கும் போது பூ வாசம் தாங்காமல் மயக்கம் போட்டுட்டது!’ பாட்டி சொன்னதைக் கேட்ட எல்லோருடைய முகங்களிலும் ஆச்சரியம் விரிந்து, பிறகு அது சிரிப்பாக வழிந்தது.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.230)
                என்று பதிவிடுவதல் மூலம் பெண்கள் எல்லா விதமான ஒப்பனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்தில் பூ வைக்கும் சடங்குமுறைகள் இருக்கின்றன. பெண்கள் குழந்தைப் பருவத்திலிருந்து பூ வைக்கப் பழக்கி தனது உடலைப் பக்குவப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும்.

பரிசம் போடுதல்
               
கரிசல் மக்களிடம் திருமணத்திற்கு முன்னர் பரிசம் போடுதல் என்ற திருமண ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தம்பதியினர் இரு குடும்பமும் திருமணத்தை உறுதி செய்து கொள்ள பரிசம் போடுதல் நடைபெறுகின்றது. இச்சிந்தனை அடியொற்றி ‘மகாலட்சுமி’ என்ற சிறுகதையைப் படைக்கப் பட்டுள்ளது. இதில் பரிசம் போடும் நிகழ்வு நடைபெறுகின்றது. இதனை,
 “அவர்களில் பெண்ணுக்குப் பரிசம் போடுகிற வழக்கம்; நிச்சய தாம்பூலத்து அன்று பெண்ணை மாப்பிள்ளைக்குப் பேசி முடிவு செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்வார்கள். பின்னொரு நல்ல நாளில் இரவு நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் சுற்றத்தாரும் பெண்ணின் வீட்டுக்குப் போய் முடிப்புடன் வாசலில் வந்து நிற்பார்கள். பெண் வீட்டார் அவர்களை ஆரத்தி எடுத்து அவர்களுக்கு இருபுறமும் தரையில் சென்னீர் கொட்டி இந்தச் சென்னீர் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தது; அதில் பருத்திக் கொட்டையும் கிள்ளிப் போட்ட வெற்றிலைத் துணுக்குகளும் மிதக்கும். பின்பு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டு செல்வார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வருகிற பரிச முடிப்பில் அவர்களவர்கள் சக்திக்கு ஏற்ப பொருட்கள் இருக்கும். மோகிக்கு மாப்பிள்ளை வீட்டார் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பத்துப்பவுனில் நகையும் வெற்றிலை, தேங்காய், பூ, பழம், சந்தனம் முதலிய மங்கல வஸ்துக்களோடு பெண்ணுக்கு அவர்கள் தரும் பட்டாடைகளும் அடங்கிய முடிப்பைக் கொடுத்தார்கள். முடிப்பை ஏற்றுக் கொண்ட மோகியின் பெற்றோர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குப் பருப்புச்சோற்று விருந்து அளித்தார்கள்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.222-223) என்னும் வரிகள் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் பருப்புச் சோற்று விருந்து என்பது சாதத்தில் பருப்பும் நெய்யும் விட்டுப் பரிமாறப்பட வேண்டும். காரம், புளிப்பு இட்ட எந்த உணவும் இடம் பெறக் கூடாது. இவ்வாறு மோகியின் திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை விருந்து
               
கரிசல் மக்களிடம் மாப்பிள்ளை விருந்து என்ற ஒன்று காணப்படுகின்றது. மாப்பிள்ளை விருந்து என்பது மாப்பிள்ளைக்கு மூன்று மாதம் மாமனார் வீட்டில் விருந்து அளிக்கப் பெறும். இவையெல்லாம் மாப்பிள்ளை, தன் மனைவி மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறுகின்றன. பெண்ணின் கர்ப்பக்காலங்களில் கணவன் செலுத்துகின்ற அன்பை அளவிட முடியாது. மோகியின் கணவன் அன்பு செலுத்தினான். மேலும், அவள் குடும்பத்திலுள்ள அனைவரின் இரக்கத்தைப் பெற்றதை, “மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் மூணுமாச விருந்தும் தலை தீபாவளியும் முடிந்தது.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.223) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.

சாந்தி முகூர்த்தம்
               
கிராமங்கள் திருமணத்தில் இணையும் தம்பதிகளுக்குப் பெரியோர்கள், சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதில்லை. அவர்கள், தாங்களாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இது கணவன், மனைவி உறவுநிலைக்குள் போராட்டத்தை ஏற்படுத்தும் என்பதை,
 “ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்கள் நிலவி வருகிறது. இவர்களுடைய சமூக முறைப்படி கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் பார்த்து முதல் இரவு என்ற ஏற்பாட்டைப் பெரியவர்கள் செய்விப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டால், ‘சை! அது என்னங்ஙெ அசிங்கம்; பசு மாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி காளையை அவுத்துவிடுகிற மாதரி நாம்பள்ளாம் மனுசனில்லையா’ என்று கேட்பார்கள்! கனிந்தவுடன் மணமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான்!            ஆனால் இப்படி உண்டாக அவர்களவர்கள் மனப்பக்குவத்தின் படி வாரக்கணக்கு மாசக்கணக்கு என்று நாட்களாகி விடும். அதோடு, சீக்கிரம் இணங்கிவிடுகிற பெண்ணுக்கு சமூகத்தில் மதிப்பில்லை. பெண்ணுக்கு ஆணும் இளைத்தவளில்லை தானே? இந்த விளையாட்டைக் குடும்பத்தின் ‘நடுவர்கள்’ பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள்.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.210) என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
               
இதனால், கரிசல் சமூக மக்கள் ஆணாதிக்கத்தின் காரணமாக ஆண், பெண் இணையும் முதல் இரவு கூட பாதிக்கப்படுகின்றது. இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒருவர், மற்றொருவரை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இன்பம் நிலைக்கும்.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல்
               
சமூகம் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்க எண்ணிக் கொண்டிருக்கும். அதற்கான காரணங்களும் அதிகமாக உள்ளன. கரிசல் நில மக்கள் ஆடி மாதத்தில் மாப்பிள்ளை, பெண்ணைப் பிரித்து வைக்கின்றனர். இதனை,
 “ஆனாலும் மல்லம்மாவையும் கொண்டையாவையும் பிரித்து வைப்பதற்குக் காரணங்களா கிடைக்காது இந்த உலகத்துக்கு, சில்லுண்டிக் காரணங்கள் போக, ஆடிமாசம் குறுக்கிட்டது. மலை போல் இளம் தம்பதிகளுக்கு இது ஒரு கொடுமையான மாசம். என்ன காரணத்துக்காக ஆணும் பெண்ணும் இந்த மாசத்தில் மட்டும் பிரிந்திருக்க வேணும் என்று அவளுக்குத் தெரியவில்லை. பாவம், அவர்கள் இதைக் கேட்டதும் ரொம்பவும் சோர்ந்து போனார்கள். ஆடிமாதம் தனது இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கு ஊடே புகுத்தி அகலப்படுத்தி அவளை அந்தப் பக்கமும் அவனை இந்தப் பக்கமும் தள்ளிவிட்டது. அந்தச் சிறிசுகள் திரும்பவும் நாட்களை எண்ண ஆரம்பித்தார்கள். ஆண்டு பாதி ஆடி பாதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.” (கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.214) என்னும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

                திருமணம் முடிந்த பின் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிரிவுகள் அதிகரிக்கக் கூடாது. ஆனால், சமூகத்தில் கணவன், மனைவி இருவருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அதிகமாக உள்ளன. அதனையறிந்து கணவன், மனைவி விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும். இது கணவன், மனைவி இருவரின் மகிழ்வை அதிகரிக்கும்.

மாறுபட்ட திருமணச்சடங்கு
               
கரிசல் மக்களிடம் திருமணத்தின் போது நடக்கும் சில மாற்றங்களையும் கி.ரா., பதிவு செய்துள்ளார். பொதுவாகப் பெண்கள் திருமணத்தின் போது மிகவும் பொலிவுடன் திகழ்வார்கள். ஆனால் கரிசல் நில மக்களிடம் இது மாறாக உள்ளது. அப்பெண் பிறந்த வீட்டில் மூன்று தினம் அழுகின்ற சூழ்நிலை உள்ளது. இது ஒரு சடங்குமுறையாகக் கருதப்படுகின்றது. இதனை, “எல்லாப் பெண்களையும் போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒரு நாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக் காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்று வரைக்கும் நான் யாரிடமும் காரணம் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.
 ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணு நாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள். வழக்கம் போல் மூன்று நாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் பொண்ணுக்கு இருந்த அழகைச் சொல்லி முடியாது. கல்யாணம் முடிந்த நாலாம் நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக் கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின் ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்.
               
‘மாயம்ம லஷ்மி போயிராவே            (எங்கள் தாயே லகூஷ்மி தேவியே போய் வருவாய்)
அந்தக்காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது.”
(கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.105)
என்னும் வரிகளில் கி.ரா., உணர்த்துகிறார்.
 கரிசல் மக்கள் வாழ்வில் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. பிறந்த வீட்டில் செய்யும் சடங்குமுறைகள் பெண்ணின் புகழைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
                இவ்வாறு கரிசல் நில மக்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் திருமண நிகழ்வில் பல்வேறு சடங்கு முறைகளைப் பின்பற்றுவதை கி.ரா. அவர்கள் தங்களது படைப்புகளில் விளக்கமாகப் பதிவு செய்துள்ளமையைக் காண முடிகிறது.

முடிவுரை
               
கரிசல் நில மக்கள் திருமணத்திற்கு அதிகமான சடங்குமுறைகளைப் பின்பற்றுகின்றனர். மனிதனுக்கு உறவுமுறைகளை ஏற்படுத்தி, குடும்ப அமைப்பிற்குக் கொண்டு செல்லக் கூடியதாகத் திருமணம் அமைகின்றது. இதனால் தான் எல்லாச் சமூக மக்களும் தங்களது வாழ்வில் திருமணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஏனெனில் உலகில் வாழுகின்ற நாட்கள் முழுவதும் கணவன், மனைவி உறவுடன் மனிதன் வாழ்கின்றான். மனித வாழ்வு திருமணத்தினால் தான் முழுமை அடைகின்றது. ஆகவே திருமணம் தொடர்பான சடங்குகள் மக்களால் ஆராயந்து பின்பற்றப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்
1. அ.இராஜேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், ப.554

2. மோகன் ராஜ், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியம், ப. 183

3. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.302

4. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.304

5. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., பக்.227-228

6. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.230

7. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.222-223

8. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.223

9. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.210

10.கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.214

11. கி.ரா., கி.ராவின் கதைகள் தொகுப்பு., ப.105

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ஜனார்த்தலி பேகம் 
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620020.

 

எட்டுத்தொகை இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்|திருமதி ந.கார்த்திகா

எட்டுத்தொகை இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
முன்னுரை           
சங்கப்பாடல்கள் பொதுவாக அகத்திணை, புறத்திணை என இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றை  விரித்துக்கூறும் போக்கில் காதல், வீரம் பண்பாடு மட்டுமின்றிப் பல்வகை வாழ்வியல் கூறுகளும் அறவியல் சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. தன்மானம், ஊக்கம், கடமையுணர்வு, இறையுணர்வு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மனிதநேயம், செய்நன்றியறிதல் போன்ற அக்கருத்துக்கள், சங்கப்பாடல்களின் வழியே ஆராயப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் காலப் பழமை உடையவை எனினும் அதில் அறவியல் சிந்தனைகள் பழையனது என்று விட்டுவிடுவதற்கு இடமின்றி என்றும் நின்று நிலவுகின்ற சிறப்பினை உடையது. இவ்விலக்கியங்கள் அமைந்ததாலேயே “செவ்வியல் இலக்கியங்கள்” என போற்றப்படுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்
           
பதிணென் மேற்கணக்கு நூல்களில் முதற்கண் தொகுக்கப் பெற்றது எட்டுத்தொகை நூல்களாகும். அதை,           
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குநூறு
           
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
           
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
           
இத்திறந்த எட்டுத்தொகை”

என்று பழம்பாடல் படம் பிடிக்கிறது.
எட்டுத்தொகை நூல்களைப் பாடியோர் பல புலவர்கள் ஆவார்கள். அவர்கள் பல்வேறு ஊரினைச் சேர்ந்தவர்கள். பல்வேறு தொழில் புரிபவர்கள் பல்வேறு காலத்தவர்கள், அவர்களில் அரசவைப்புலவர்களாக சிலர் இருந்துள்ளனர். பெண்பாற் புலவர்களும் இடம்பெற்;றுள்ளனர். சங்கப் பாடல்கள் அகம், புறமெனும் இருதிணைகளில் அமைந்து ஒரே காலச் சூழலில் பொருள் பொதிந்து பாடியுள்ளதை காணமுடிகிறது. ஒரே வகை மரபு, இலக்கியப் போக்கு, நாகரிகம், பண்பாடு போன்றவை தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய தன்மையை இப்பாடல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. பரிபாடலும், கலித்தொகையும் போக எஞ்சிய ஆறு நூல்களும் ஆசிரியப் பாவிலும், அவற்றுள் சில வஞ்சியடிகள் கலந்தும் வருகின்றன என்பதை அறியமுடிகிறது. அனைத்துப்பாடல்களிலும் வாழ்வியல் சிந்தனைகள் மிகுந்திருக்கின்றன.

நற்றிணையில் வாழ்வியல் சிந்தனைகள்           
செல்வம் எதுவென்பதை நற்றிணையிலுள்ள பாடல்களால் காணலாம். பிறர் நம்மைச் சிறப்பித்துக் கூறும் புகழுரைகளோ, விரைந்து செல்லும் சிறப்புமிக்க ஊர்திகளோ செல்வம் ஆகாது. அவரவர் செய்த நல்வினையின் பயனே செல்வம் ஆகும். சான்றோர் செல்வமெனக் கூறுவது தன்னைச் சார்ந்தோர் மனதைப் புண்படுத்தாததும், அவர்கள் துன்பம் கண்டு நெஞ்சுருகும் தன்மையுமே ஆகும். 
           
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
           
செல்வம் அன்று; தன் செய்வினைப்பயனே
           
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
           
புன்கண் அஞ்சும் பண்பின்
           
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே”1 (நற்.201)
செல்வத்தின் விளக்கத்தை இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது. தலைவியின் தன்னிகரற்ற அன்பு, கற்பனை வளத்துடனும் கவி நயத்துடனும் கையாளப்பட்டிருக்கும் பாடல்களின் சிறப்பை காணமுடிகிறது.
           
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
           
பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின
           
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே”2 (நற்.397)
என்று அஞ்சும் தலைவியின் நிலையை இப்பாடலடிகள் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளது. கற்புடைய பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் எவ்வளவுதான் வறுமையால் வாடினாலும் ஏற்றமுடைய வளமிக்க வீட்டில் பிறந்தநிலையை என்றும் ஒரு போதும் நினைத்தில்லை இதனை,           
“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென்க
           
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்”

என்னும் வரிகளால் தெளிவாகக் காட்டுகிறது.
  தலைவன் தன் தேர்க்கால்களில் நண்டுகள் அகப்பட்டு நசுங்கா வண்ணம் தேரைச் செலுத்திய அருள் உணர்வினை,           
“ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வரவன் வன்பாய்கர்”

என்ற பாடலடிகளால் காணமுடிகிறது.

குறுந்தொகையில் வாழ்வியல் சிந்தனைகள்           
குறுகிய அடிகளால் ஆன பாடல்களின் தொகுப்பாதலின் இப்பெயர் பெற்றது. இது நல்ல என்ற அடைமொழியும், உரையாசிரியர்களால் மிகவும் மேற்கோள் காட்டிய சிறப்பும், தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்ற பெருமையும் உடையது. அஃறிணை உயிர்களைக் கொண்டு ஆறறிவு மனிதர்கள் தம் அகநிலையினைப் படம் பிடித்துக்காட்டும் இணையற்ற நூல். இறையனார் தருமிக்கு எழுதி கொடுத்ததாகக் கூறப்படும் “கொங்குத்தேர் வாழ்க்கை” எனும் பாடல் இந்நூலில் தான் அமைந்துள்ளது.

 ஆதிமந்தியார் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்களும் பிற பெண்பாற்புலவர்களும் பாடிய பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அணிலாடு முன்றிலார், காக்கைப் பாடினியார், குப்பைக்கோழியார், விட்டகுதிரையர், மீனெரி தூண்டிலார் எனப் பாட்டின் சிறப்புமிக்க தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் இந்நூலில் உள்ளனர். 
           
குறுந்தொகைப் பாடல்கள் அனைத்தும் இன்பத்தைதரக் கூடியனவாக இருக்கின்றன. இரு நெஞ்சங்கள் எக்காரணமும் இல்லாமல் இணைந்து ஒன்றுபடும் இயல்பினை

“யாயும் ஞாயும் யாராகியறோ”3
எனத்தொடங்கும் பாடல் வரிகள் காட்டுகின்றன. திருமணமான புதுப்பெண் தீம்புளிப்பால் குழம்பு வைத்துத் தலைவனிடம் பாராட்டுப் பெறும் பாங்கினை, 
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” (குறுந்.107)
என்ற பாடலடிகள் படம்பிடித்துக்காட்டுகின்றன.
           
“உத்தியோகம் புருஷலட்சணம்”4
என்று வழங்கப்படும் கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது என்பதை

“வினையே ஆடவர்க்கு உயிரே”5 (குறுந்.135)

என்ற வரிகளில் காணமுடிகிறது.  அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எளிமையும் இனிமையும் கலந்த சொற்களால் அனுபவ உணர்வோடு எடுத்துக் கூறி நம் உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் இயல்புடைய பாடல்கள் இருப்பதையும், குடும்ப சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பெண்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் காணமுடிகிறது.

ஐங்குறுநூறு காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
ஐந்து திணைக்கும் தனித்தனியே நூறு நூறு பாடல்கள் கொண்டு குறைந்த அடிகளை உடைய பாடல்களால் இயற்றப்பட்டமையால் இத்தொகுப்பு இப்பெயர் பெற்றது. இது மூன்று முதல் ஆறு அடிவரையறையுடையது. ஒவ்வொரு நூறும் பத்துப் பத்தாக பிரிக்கப்பட்டு அதன் பொருள் பயின்று வரும் சொல்லால் பெயரிடப்பட்டுள்ளது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் சிவன் பற்றிய கடவுள் வாழ்த்தைப் பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தர்ஞ்சேரல் இரும்பொறை ஆவான். ஐந்து திணைகளும் தனித்தனிப் புலவர்களால் பாடப்பெற்றுள்ளன. 
           
பறவை, விலங்கினங்களைக் கொண்டு ஐந்திணை ஒழுக்க உணர்வுகளை அருமையாக விளக்கும் அழகும் இயற்கை எழிலையும் உலகப் பொருள்களின் இயல்பையும் எடுத்துரைக்கும் திறமும் இவற்றை தமிழ்ச்சுவையோடு கூறும் பாங்கும் கொண்டு விளங்கும் சிறந்த நூலாக அமைந்துள்ளது.
           
இந்நூலில் விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரங்குபத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து எனப் பாக்களுக்குப் பெயரமைத்து அகப்பொருட் கருத்துக்களாக இடம் பெற்றுள்ளது.
  தலைவியை உடன் அழைத்துச் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்கின்றான் தலைவன். தலைவியின் பெற்றோர் இருவரையும் தம் ஊருக்கு அழைக்கின்றனர். அவர்கள் இருவரும் வந்தனர். இதுவரை தலைவியை பிரிந்த தோழி அவளைத் தழுவி அவளது புது வாழ்வினைப் பற்றி அறிய ஆவல் மிகக் கொண்டு, “ஆமாம் தலைவி! உன் தலைவன் இருக்கின்ற நாட்டில் குடிப்பதற்கு நீர் கூட இல்லையாமே? உன்னால் எப்படி வாழ முடிந்தது?” என்றாள். தலைவியும் ஆம் தோழியே நீ கூறியது உண்மையே அங்கு வகையான நீர்நிலை கூட இல்லை! இருப்பவை கூட இழை தழை விழந்தமையால் அழுகியும், மான் போன்ற விலங்குகள் குடிப்பதால்  கலங்கியும் இருக்கின்றன. இருந்தாலும் அந்த அருவருக்கத்தக்க எச்சில் நீரும் எவ்வளவு இனிமையாக இருக்கின்றது தெரியுமா? நம் தோட்டத்துத் தேனினைத் தீம்பாலுடன் கலந்து உண்டால் எப்படி இருக்குமோ. அப்படி இனித்தது என்றாள். காதல், அன்பு இருக்குமிடத்தில் எல்லாமே இருக்கும் என்று இதயம் அன்பை வெளிப்படுத்திய பாடல்,           
“அன்னாய் வாழிவே ண்டன்னை நதட படப்பைத்
           
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
           
உவகைக் கூவற் கீழல்
           
மானுண் டெஞ்சிய கலுழி நீரே”6 (ஐங்குறு.203)

என்னும் பாடலடிகள் மானிட வாழ்க்கையை அறிய உதவுகின்றது.

அகநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்           
அகம்” எனவும், “அகப்பாட்டு” எனவும் இந்நூல் அழைக்கப்படுகின்றது. இதில் நீண்ட அடிகளால் அமைந்ததால் நெடுந்தொகை எனவும் பெயர் உண்டு. 13 அடி முதல் 31 அடிகளை உடையது. அகநானூற்றைத் தொகுத்தோர் மதுரை உப்பூரிக் குடிகிழார் மகன் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, அகநானூற்றை 145 புலவர்கள் பாடியுள்ளனர்.  அகநானுற்றுத் தலைவியின் அன்புள்ளத்தை,           
“செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
           
இன்றுவரல் உரைமோ சென்றிசி னோர்திறந்து என
           
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
           
முழலை இன்சொல் பயிற்றும்
           
நாணுடை அரிவை…….”7 (அகம்.31)
என்னும் பாடல் வரிகள் உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளது.

“பூத்த பொங்கர்த் துணையோடு பதிந்த
           
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
           
மணிநா ஆர்த்த மாண்வினைத்தேரன்”8 (அகம் 4)

என்னும் பாடல் வரிகள் தேனருந்தும் வண்டுகள் அஞ்சி ஓடிவிடுமென்று தன் தேரில் அசைந்தாடும் மணியின் நாவினைக் கட்டிவிட்டு தேரில் விரைந்து வரும் தலைவனின் உளவியல் கருத்துக்களையும், உயிர் இரக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.

கலித்தொகையில் வாழ்வியல் கூறுகள்           
எட்டுத்தொகையின் மேற்குறித்த அகப்பொருள் நூல்கள் நான்கும் அகவற்பாவில் அமைய கலித்தொகை முழுவதும் கலிப்பாவால் அமைந்தது. தரவு, தாழிசை, கரிதகம், தனிச்சொல் என்னும் அமைப்பினைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது. 150 பாடல்கள் கொண்டது, கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் பாட ஏற்ற யாப்பு வடிவங்கள் ஆகும்.
           
ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், ஏவலர், அடிமைகள் பற்றிய உறவுகள் புராணக் கூறுகள் கொண்டுள்ள பாடல்கள் இதில் காணப்படுகின்றன. பாலைக்கலியில் 35 பாடல்கள் உள்ளன. தலைவன் பிரிவைத் தடுப்பதாக உள்ளது.

“உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர்
          
 பெறா அத் தடுமாற்றந்துயரம் கண்ணீர் நிலைக்கும் கருமைக்கும்”

என்னும் பாடலடிகள் பாலையின் கொடுமையை எடுத்துக்காட்டுகிறது. கடன் வாங்கும்போது மகிழ்ச்சியும் அதனைத் திருப்பிக் கொடுக்கும்போது துயரமும் தோன்றும் இதனை பின்வரும் பாடலில்,           
“உண்கடன் வழிமொழிந்திரங்குங்கால் முகணம்தாங்
           
கொண்டது கொடுங்கால் முகணம் வேறாகுதல்
           
பண்டுமில் வுலகத்து இயற்கை அதின்றும்
           
புதுவ தன்றே புலனுடைய மாந்தர்” (கலி.22)
       
என்பது சிந்திப்பதற்குரிய கருத்துக்களையும், பிரிவினால் ஏற்படும் சிரமத்தையும், வழியில் உள்ள இடர்பாடுகளை அறிவியல் அடிப்படையில் கூறவதையும் காணலாம். இது இருபத்தொன்பது பாக்கள் கொண்டது. குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியை திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வற்புறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும். அது நாடகப் பாங்கோடு நகைச்சுவையும் பொருந்த அமைந்திருக்கும் பாங்கு அழுத்தத்தைக் காட்டுவதோடு அதிலிருந்து விடுபடுவதற்குரிய வழியையும் சுட்டுகிறது. மாலைப் பொழுது அழகுற வருணிக்கப்பட்டுள்ளது. நற்பண்புகள் பற்றிய அறகருத்துக்கள் சிந்தை கொள்ளும் இயல்புகளை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.

புறநானூறு காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
பழந்தமிழ் புறப்பொருள் பற்றிப் பாடும் நூல்களில் ஒன்று புறநானூறு. புறநானூறு தமிழகத்தில் இருந்த பெருவேந்தர்கள். குறுநில மன்னர்கள், கொடைவள்ளல்கள், அரசமகளிர் வரலாறுகளை அறிவதற்குப் பயன்படும் அறிய கருவூலப் பெட்டகமாக உள்ளது.  இப்பாடல்கள் நான்கடிச் சிறுமையும் நாற்படிதடிப் பெருமையும் உடையன. புறநானூறு பண்டைய தமிழகத்தின் வரலாற்றினை அறியவும் மேலும் இது உழவுத்தொழில் பண்பாட்டுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது. இதன்கண் தமிழத்தின் பெருநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. சங்ககாலத்துத் தமிழகத்தின் அரசியல், பொருளாதரம், சமுதாயநிலை, பழக்கவழக்கங்கள், நாகரிகம், கல்வி, கலைவளர்ச்சி முதலானவற்றை  அறிந்துகொள்வதற்கு புறநானூறு பெருந்துணை புரிகின்றது. மன்னர்களின் பழமையான மரபுகலையும் அவர்தம் புகழையும் வெளிப்படுத்தும் கதைக்கூறுகளும் தெய்வங்கள் தொடர்பான புராணச் செய்திகளும், வழிபாட்டு முறைகளும் பூமியின் ஏற்பாடு மாற்றங்களை சங்கப்பாடல்களால் கண்டறியப்படுகின்றது.
           
புறநானூற்றில் மகளிர் பற்றிய செய்திகள், மறக்குடிப் பண்பு, கையறுநிலை போன்ற பல்சுவைப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற விதத்தில் பொதுவான சிந்தனைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பெட்டகமாகப் புறநானூறு விளங்குகிறது. புறநானூற்றில் இயற்கை பற்றிய செய்திகளும் ஏறத்தாழ நாற்பது வகை மலர்களைப் பற்றியும் ஆங்காங்கே குறித்துச் செல்கின்றது.
 சான்றோர்கள் சமுதாயச் சிறப்புக்குரிய பொதுமை ஒழுக்கத்தைக் கடைபிடித்து இருப்பதால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் தான் மட்டும் சமநிலையாக நின்று சமுதாய நோக்கில் மக்களைப் பாதுகாத்ததைத் தெளிவாகக் காணலாம்.
           
“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே
          
  சான்றோ னாக்குதல் தந்தையின் கடனே”

இப்பாடலில் பெற்றோரின் கடமையும், ஒழுக்கமும் தன்னிலை நிறைவு செய்யும் கருவிகளாக இருந்தனர் என்பதைக் கண்டறியலாம்.

புலவரின் செயல்கள்           
பாரி மகளிரை அழைத்துச் சென்று மணம் வேண்டி கபிலர் தம்மை இளங்கோவேள் இகழ்ந்தமையால், “அரசே உனது ஆட்சி பீடம் அழிந்ததற்குன் காரணம் உன் முன்னோர்களில் ஒருவன் கழா அத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்துரைத்ததே” புறநானூறு எடுத்துரைக்கிறது. (புறம் 202). இப்பாடலில் சொல்வன்மை மிக்கவரிடம் பகைத்துக் கொள்ளுதல் அறிவின்மை ஆகுமென்ற கருத்தும் புலவர்கள் சொல்லாற்றலால் தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ளவர்கள் என்னும் கருத்தும் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது.
           
சங்ககாலப் பெண்கள் வீரத்தில் சிறந்து விளங்கினர் என்பதைப் பல்வேறு புறநானூற்றுப் பாடல்கள் பறைசாற்றுகின்றன. தந்தையும், கணவனும் போரில் இறந்த பின் தனது ஒரே மகனைப் போர்க் கோலத்துடன் களம் இறக்கும் துணிவுடைய பெண்ணை ஒக்கூர் மாசாத்தியார் (புறம்.279) பாடலில் படைத்துக் காட்டியுள்ளார்.  போர்க் களத்தில் உடல் வெட்டப்பட்டுக் கிடந்த மகனின் மறப்பண்பைக் கண்ட தாயின் உள்ளத்தை ஒளவையார்,           
“சிறப்புடைய யாளன் மாண்புகண் டருளி
           
வாடுமுலை ஊறிச் சுரந்தன
           
ஓடாப்புட்கை விடலைத் தாய்க்கே”9
எனத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
 போர்க்களத்தில் தன் மகனின் நிலையைக் காவற்பெண்டு,           
புலி சேர்ந்து போகிய கல் அளைபோல
           
ஈன்ற வயிறோ இதுவே
           
தோன்றவன் மாதோ, போர்கட களைத்தானே”10
என்ற உவமையோடு இளைஞரின் வீரச் செயல்களை தெளிவுபடுத்தியுள்ளார். மனித வாழ்க்கையில் பெண்களும் மறப்பண்புடையவராக இருத்தல் என்பது தேவை என இவை காட்டும். மக்களிடத்தில் பொருள் தேடலும், இன்பம் அலைவித்தலும் அறவழியில் நடைபெறல் வேண்டுமென்ற குறிக்கோள் இருந்தது. இதனை, 
செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
           
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
           
நீர்சூழ் நிலவரை உயரநின்
           
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகப் பலவே”11
என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம்.
 விருந்தோம்பல் என்பது பண்டைக்காலம் முதல் இன்று வரை மகளிரின் பண்பாகவும் இல்லறத்தின் அறவாழ்வாகவும் போற்றப்படுகிறது. பெண்கள் மென்மையான தன்மையால் விருந்தோம்பல் பண்பிலும் நன்கு படம் பிடித்துக் காட்டுகிறார்.
           
“அமிழ்து அட்டு ஆனாக் கமழ்உய் அடிசில்
           
வருநர்க்கு வரையாக வசையில் வாழ்க்கை”12
என்ற பாடலடிகள் வழியாக விருந்தோம்பலின் பண்பினைக் காணலாம்.
 பொருள் அதிகமாக இருந்தாலும் அறத்தோடு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதப் பிறவியி;ன் பயனாகும். “அறம் தவறி நடந்தால் குறையுடைய மனிதப் பிறவியிலிருந்து நினைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவனாய் ஆவாய்” என்பதை,            “ஆடுகளங் கடுக்கும் அகநாட் டைவே
            அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
            ஆற்றும் பெரும நின் செல்வம்
            ஆற்றாமை நின் போற்றா மையே”13
என்ற பாடலில் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.

பதிற்றுப்பத்து காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
இந்நூலில் தமிழர்களின் மரபும் பண்பாடும் விரவிய ஓர் பண்பாட்டுக் கருவூலமாகவும் செவ்வியலோடு அறிவியல் சிந்தனைகளையும் காண முடிகிறது. குறிஞ்சிக்கபிலன் என்னும் பெயர் பெற்ற இப்புலவர் செல்வக் கடங்கோ வாழியாதனை இப்பகுதியில் பாடியுள்ளார். பறம்பு நாட்டு மன்னன் வேள்பாரிக்கு உற்ற துணைவர் இவர். பாரியின் இறப்புக்குப் பின் அவன் மகளிரைத் தன் மகளிராகக் கொண்டு திருக்கோவில் மலையமான் மக்களுக்கு மணம் முடித்துக் கொடுத்த பெருமை கபிலருக்குண்டு.
உணர்ச்சியினைக் கூட இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கு இரண்டாம் பத்தில் காணப்படுகிறது இப்பாடலில் இயற்கை நிலையில் காட்சிகள் துல்லியமாக காட்டப்படுகின்றன.

“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நபும்

ஏறு பொருத செறுவுழாது வித்துநவும்”14
           
இப்பாடலடிகளில் ஆனிரைகள் மேயும் கொள்ளைப்புறம். ஆரல் மீன்கள் பிறந்துழாவும் கிண்டி புழுதியாக்கிய இடம் ஏர் கொண்டு உழவு செய்யாமல் காலால் உழவு செய்து விதைத்த விரை, வயல்கள் கரும்பு நிற்கும் பாத்திகளில் பூத்து மலர்ந்த நெய்தல் மலர்கள் என அந்நாட்டு இயற்கை வளக் காட்சிகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காண முடிகிறது

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு பரிந்தொழுகும்

அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி

ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று 

நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

திருந்திய வியன் மொழித் திருந்திழை”15
      
முறை ஓதுதல், வேள்வி வேட்டல் இவையிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியவர்க்கு ஒன்றை ஈதல், தமக்கு ஒருவர் கொடுத்ததை ஏற்றல் என ஆறு தொழிலையும் செய்து வாழும் அறநூல்களின் பயனை விரும்பும் அந்தணர்கள் வழிபாடொழுகி இருக்க, அதனாலயே உலகத்தவரும் உன்னை வழிபடுகின்றனர். நீயே தேடிச் செல்லாது உன்னிடம் தேடி வருகின்ற நல்லிசை பண்பு என்றும் இயல்பு மாறாத நற்பேச்சு என  அனைத்தையும் கொண்ட எனது கணவனே” என மனித வாழ்வின் இயல்பு நிலைகள் மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. மழையே ஒரு காற் பொய்த்தாலும் சேரலாதன் எக்காலமும் கொடை பொயப்பதில்லை என்பதனை 
 
“மாரி பொய்க்குவ தாயினும்

சேர லாதன் பொய்யலன் நசையே”16
என்னும் பாடலடிகளில் சேரலாதனின் கொடைச் சிறப்பைக் காணலாம் ஆற்றினை கடக்க உதவும் வேலக்கரும்பை விட வறுமை ஆற்றைக் கடக்க உதவும் சேரன் சிறந்தவன் என்பதனை அறவியலோடு,
“ஒய்யு நீர்வழிக் கரும்பினும்

பல்வேற் பொறையன் வல்லனால் அணியே”17
இப்பாடலில் சேரர் கொடை சிறப்பினை அறியமுடிகிறது.

பரிபாடல் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
           
மார்கழி நீராட்டு விழாவைப் பற்றியும் ஆற்றில் புது வெள்ளம் பொங்கி வரும் பொழுது நிகழும் செயல்களைப் பற்றியும் இந்நூல் புலப்படுத்திக் காட்டுகிறது. பொருட் சிறப்பாலும் நுண்மாண் நுழைபலச் செம்மையாலும் “ஓங்கு பரிபாடல்” என்று இந்நூல் சிறப்பாக கூறப்பட்டது. தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களும் அறம், பொருள், இன்பம், வீடு முதலிய உறுதிப் பொருட்களும் இயற்கைக் காட்சியின் இயல் நலன்களும், காதறசிறப்பும்வீரர் மேம்பாடும், அன்பும், பண்பும், ஆடலும் பாடலும் பிறவும் நெஞ்சை அள்ளும் வகையில் புலமைச் சான்றோர்களால் பொருள்; பொதிந்துள்ளதை பரிபாடல் படம் பிடித்து காட்டுகிறது. 
           
எட்டுத்தொகை நூல்களில் கடவுளைப் பற்றிய குறிப்புகளும் வழிபாடு பற்றிய குறிப்புகளும் பரிபாடலில் உள்ள சிறப்பை போன்று பிற பாடல்களில் அமையவில்லை. சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறந்து பொருள்களின் இயற்கை அழகு கலை நன்கு தெரிவிப்பது மதுரை வைகை ஆறு, திருமருதத்துறை, திருப்பரங்குன்றம், திருமால் இருஞ்சோலை மலை என்பனவற்றின் பண்டைக் கால நிலைகளையும் அக்கால நாகரீக முறையையும் வைதீக ஒழுக்கங்களையும் தெய்வ வழிபாட்டு முறையையும் பிற பழக்கங்களையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் செவ்வனே தெரிந்து கொள்வதற்கு இந்நூல் கருவியாக அமைந்துள்ளது. இந்நூலுக்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிபாடலின் பல பாடல்களில் திருமாலும், செவ்வேறுமே பாடல் பொருளாகக் காட்சி தருகின்றனர் சமய சார்பான பூசல்களில் அதிகக் கவனம் செலுத்தாமல் எந்த பெயரால் எவ்வுருவத்தை வழிபட்டாலும் அந்த பெயரும் அவ்வுருவமும் வழிபாடும் ஒருவனாக கலந்து உலகந்து நிற்கின்ற ஒருவனையே சாரும் என்பதும் புராணக் கதைகளும் வேதங்களின் கருத்துக்களும் இந்நூலில் நிறைய காணப்படுகின்றன. பண்ணொடு பாடுவதோடு பக்தி நெறியை பரப்புவதிலும் பக்தி இலக்கியமான தேவார, திருவாசக திவ்ய பிரபந்தங்களுக்குப் பரிபாடல் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வீடுபேறு அடையத் திருமாலின் அருள் தேவை என் தேவையென்றும், இல்லையெனில் வீடுபேறு பெற இயலாது என்னும் கருத்தை இளம்பெருவழுதி,
“நாறிணர்த் தூழாயோன் நல்கின் அல்லரத

ஏறுதல் எளிதோ வீடு பேறு துறக்கம்”18           
எனப் பாடுகிறார். முருகனிடம் வரம் வேண்டியது போல அன்பர்கள் திருமாலிடமும் வேண்டுகின்றனர் தமக்கும் சுற்றத்தாருக்கும் மெய்யுணர்வு வேண்டும் எனக் கூட்டு வழிபாடு செய்யும் முறையை 

கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்

கொடும்பாடு அறியற்க எம்மறிவு எனவே”19
என்னும் பாடலடிகளால் படம்பிடித்துக்காட்டுகிறார்.

தொகுப்புரை           
எட்டுத்தொகை நூல்கள் சிறந்த செவ்வியல் இலக்கியத் தன்மை கொண்டு வேறெந்த மொழியிலும் இல்லாத தனித்தன்மையுடன் அமைந்துள்ள இலக்கியங்கள் ஆகும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதும் அக்காலத்திலேயே அகம், புறம் எனப் பகுத்தும் காணப்படுகின்ற தன்மைகொண்டு உள்ளதையும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் எக்காலத்திற்கும் பயன்படும் மொழி பயன்பாடும் கொண்டு அமைந்துள்ளன. இவை இலக்கணச் செழுமை, இலக்கிய வளம், பொருள் ஆகியவை அருமையான உயிர்ப்புடன் இருப்பதையும் அறிவியல் நெறிகளையும் தெளிவாக கண்டறிய முடிகிறது. எட்டுத்தொகை நூல்களை தொகுத்தவர், தொகுப்பித்தோர் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வளம் பொருள் அருமையான உயிர்ப்புடன் இருப்பதையும் மானிடவியல் நெறிகளையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதைக் கண்டறிய முடிகிறது. எட்டுத்தொகை இலக்கியங்களில் சில பண்புகள் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி ஆராயப்பட்டுள்ளன. அன்றைய உழவும் இயற்கைச் சூழலும் இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டு காட்டும் அளவிற்கு இருப்பதை காண முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1. நற்றிணை பாடல் 210 வரி.அ-1
2. நற்றிணை பாடல் 397 வரிகள் 2,3,4
3. நற்றிணை பாடல் 397 வரிகள் 10-11
4. குறுந்தொகை பாடல் 107 வரி..5
5. குறுந்தொகை பாடல் 135 வரி.7
6. ஐங்குறுநூறு பாடல் 203 வரி.8
7. அகநானூறு பாடல் 33 வரி.9
8. அகநானூறு பாடல் 4 வரி.10
9. புறநானூறு பாடல் 295  வரிகள்.1-5
10. புறநானூறு பாடல் 86 வரிகள். 3-5
11. மேலது பாடல் 160 வரிகள்.23-26, 18
12. மேலது பாடல் 10 வரிகள்.7-8
13. மேலது பாடல் 28 வரிகள்.14-17
14. பதிற்றுப்பத்து வரிகள்.1-3, 21
15. மேலது மூன்றாம்பத்து 6, வரிகள். 1-6
16. மேலது ஏழாம் பத்து 7, வரிகள். 5-7
17. மேலது ஏழாம் பத்து வரிகள். 4-5
18. மேலது பாடல் 15 வரிகள். 15-16
19. மேலது பாடல் 2 வரிகள். 75-76
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ஆய்வாளர்

 திருமதி ந.கார்த்திகா

பகுதிநேரமுனைவர் பட்டஆய்வாளர்

தமிழ்த்துறை

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி

கோபிச்செட்டிபாளையம் – 638 476

நெறியாளர்

முனைவர் ஈ.யுவராணி

உதவிப்பேராசிரியர்

வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சென்னை-62

 

அதுதான் முதுமை | சுஹைப் அக்தர்

அது தான் முதுமை சுஹைப் அக்தர்

🍂 வயது முதிர்ந்து 


முதுகெழும்பு வளைந்து 


கூனி குருகி நிற்கும் நிலை


அது தான் முதுமை


 

🍂 நேரம் பல இருந்தும்


பரிமாற துணையில்லா


துக்கத்துடன்


தூக்கம் அதிகரித்தால்


அது தான் முதுமை


 

🍂 எழுந்து நிற்க,


எகிறி குதிக்க


திராணி இல்லாமல்


திக்குமுக்காடும் 


அது தான் முதுமை


 

🍂 வாச்சதும் போய் 


வந்ததும் காணாமல் போய்


வறுமையில் வயிறு வாடும் 


அது தான் முதுமை


 

🍂 நீக்கமற நினைவுகள்


நீர்ததும்ப வலிகள்


விழியோ துணை தேடும் 


அதுதான் முதுமை


 

🍂 உண்ண உணவும் 


உடுத்த உடையும்

இவையும் தனிமையும்

இருந்தால் 


அது தான் முதுமை


 

🍂 சாப்பிட வாயும் 


ருசிக்க சுவை புலனிருந்தும் 


நோய் அதனை தடுத்தால் 


அது தான் முதுமை


 

🍂 இன்னும் எத்தனை


இன்னல் கண்டு


இதயம் நோகுமோ


என்றிருந்தால்


அது தான் முதுமை

 

கவிதையின் ஆசிரியர்


சுஹைப் அக்தர் 


இணையாசியர் நாகூர்ப் புராணம் மின்னிதழ்.

 

பசுமை கொண்ட வானம்!|கவிதை|நவநீதனா ச

பசுமை கொண்ட வானம்! - நவநீதனா ச

 ⛅ உவமை கூற இயல்வதுண்டோ?


அன்னை அவள் எழிலைக் கண்டு..!

 

 ⛅ வளியென்னும் வானவன்,


நிலமென்னும் மங்கைக்கோ,


கூந்தலாகிப் பறக்கின்றான்..!

 

 ⛅ நெருப்பினது துணையாலே,


ஒளியான கற்பகமே!


ஆகாயத்தில்,


நிலவைத்தேடி அலைகின்றாயோ?..!


 ⛅ மார்கழியின் இதழ்களிலே,


பன்னீர் தெளிக்கும் பனிப்புகையே,

விழிகளிலே வனப்பாக வசிக்கின்றாய்..!


 ⛅ நீல வண்ணமாய்க் கடலலையே,


உம் தோள் போர்த்திய விந்தை
 

என்னவோ?!
புது விளையாட்டோ?..!


 ⛅ மையலுற வைக்கும் உம்மை,


பூதத்தில் ஒன்றென


யாமழைத்தால்,


சீற்றமதைக் கொடுப்பாயோ?


பசுமை சுமக்கும் தாரகையே..!


 ⛅ ஏனோ விடை


வனைய மறுக்கின்றாய்?!!


குயிலிசைகள் கேட்டிடவே,


மங்கையெனும் மழையினிலே,


காதலுற்றாயோ கவிநயமே..!


கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,


கோவை.

 

மீன்தொட்டி கவிதைகள்|முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்

மீன்தொட்டி கவிதைகள் - முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

🐟 கண்ணாடிச் சிறை


முட்டி மோதாத வாழ்க்கை


மீன்களின் பாடம்..!


 

🐟வண்ணக் கற்கள்


பாரங்களை அழகாகக் காட்டும்


மீன் தொட்டி…!


 

🐟செயற்கைச் சுவாசம்


கண்ணாடி அறையில் வாசம்


நிறைவான வாழ்க்கை..!


 

🐟கண்ணாடித் தொட்டி


முகம் பார்க்கும் அழகு


மீன்களின் வாழ்க்கை…!


 

🐟பிடித்திருக்கிறது மீனைத் தொட்டி


பிடித்திருக்கிறது மீனுக்குத் தொட்டி


பிடித்திருக்கிறது மீன் தொட்டி..!


 

🐟சுற்றிலும் பீங்கான் சுவர்கள்


தப்பிக்கத் தோன்றாத கைதிகள்


மீன் தொட்டி..!


 

🐟வலையை சுருட்டிவைத்து


ரசிக்கின்றான் மீன்களை


எதிரில் மீன் தொட்டி..!


 

🐟குரோட்டன்சுகளோடு பேச்சு


இயற்கை மீது ஆவல்


தொட்டியில் மீன்கள்..!


 

🐟தரையில் விழுந்த மீன்


துள்ளித் துள்ளி அழுகிறது


தொட்டியின் மரணம்..!


 

🐟துள்ளி விழுகிறது மீன்


துடிதுடிக்கிறது என்கிறான் மனிதன்


தப்பித்தலின் உத்தி..!


 

🐟துள்ளித் துள்ளி விழுகிறது.


அழுகை மறந்து சிரிக்கிறது குழந்தை


தவறி விழுந்த மீன்..!


 

🐟கூடுவிட்டு கூடு மாறினோம்


தொட்டி வைக்க இடமில்லை


டலுக்கு சென்றன மீன்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்


உதவிப் பேராசிரியர் 
 

தமிழ்த்துறை 


அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ( தன்னாட்சி)


சிவகாசி

 

பாட்டியல்  உரைகளின் கலைச்சொல் விளக்கம் | முனைவர் ஞா.விஜயகுமாரி

பாட்டியல் உரைகளின் கலைச்சொல் விளக்கம் முனைவர் ஞா.விஜயகுமாரி
முன்னுரை
பாட்டியல் நூல்களுக்கு எடுத்த பழைய உரைகளின் அமைப்பு மட்டுமே இங்கு நோக்கப் பெறுகின்றன. பண்டைய பாட்டியல் உரைகள் பிற இலக்கண உரைகள் போலவே அமைந்துள்ளன. எனினும் பிற இலக்கண உரைகள் போல விரிந்த நிலையிலோ மிகுதியாக மேற்கோள் காட்டும் போக்கையோ நடைநல சிறப்புகளையோ பெரிதும் கொள்ள வில்லை என்று கூறலாம்.
 பாட்டியல் உரைகள் பெரிதும் சுருக்கமாகவே அமைந்துள்ளன. இலக்கிய வகைப் பற்றிக் கூறும் இடங்களில் முழுமையாக இலக்கியங்களை எடுத்துக்காட்டல் என்பது சாத்தியமற்றது ஆகையால் உதாரணங்கள் இந்த உரைகளில் மிகுதியும் இடம்பெறவில்லை.
 பாட்டியல் இலக்கண செய்திகளுள் வடமொழி இலக்கண செய்திகளும் இடம்பெற்றுள்ளதால் வடமொழி சார்ந்த சொற்கள், ஆட்சிகள் ஓரளவு காணப்படுகின்றன. பாட்டியல் இலக்கண உரைகள் தமது அமைப்புகள் இலக்கண நூற்பாக்களை மேற்கோள்களாக கொண்டுள்ளன. சில இடங்களில் இலக்கிய இலக்கணங்களில் இருந்து மேற்கோள்களாக கொண்டுள்ளன.

உரைகளில் கலைச்சொல் விளக்கம்
பாட்டியல் இலக்கண உரைகள், பாட்டியல் கலைச்சொற் களுக்குச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளன. ஒரே கலைச்சொல்லுக்கு ஒவ்வொரு உரையும் தந்துள்ள விளக்கத்தைப் பின்வரும் பகுதியில் நோக்கலாம்.
வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் இவற்றால் உரைகளின் கலைச்சொல் விளக்கம் கூறும் போக்கினை அறியலாம்.

மங்கலச்சொல்
வெண்பாப் பாட்டியல்
சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார், பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை,மா, மங்கை, தீபம் இவை மங்கலச்சொல்.

நவநீதப்பாட்டியல்

திரு, மணி, பூ, திங்கள், ஆரணம், சொல், சீர், எழுத்து, பொன், தேர், புனல், கார், புயம், நிலம், கங்கை, மாலை, உலகம், பரி, கடல், ஆனை, பருதி, அமுதம், புகழ் ஆக இருபத்து மூன்று மங்கலச்சொல்

சிதம்பரப்பாட்டியல்
மா. மணி, தேர், புகழ், அமுதம், எழுத்து, கங்கை, மதி, பரிதி, களிறு, பரி, உலகம், நீர், நாள், பூ. மலை, கார், திரு, கடல், தீர், பழமை, பார் சொல், பொன், திகிரி இவை இருபத்தைந்தும்.

இலக்கண விளக்கம்

சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை, யானை, கடல், நிலம், மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ், நிலம், ஆரணம், கடவுள், திகிரி முதலிய முதற் சீர்கண் அமைவது மங்கலச்சொல்.

முத்து வீரியம்
கார், புயல், மா, மணி, கடல், ஆரணம், உலகு, பூ, அமுதம், தேர்,வயல்,திங்கள், பொன், எழுத்து, சூரியன், யானை, குதிரை, கங்கை, நிலம், திரு, இவை முதலிய மங்கலச்சொல்.

தொன்னூல் விளக்கம்
கங்கை, மாலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ், எழுத்து, அவர், திங்கள், தினகரன், தேர் வயல் அழுத்தம், திரு, உலகு, ஆரணம், நீர் என்று சொல்லப்பட்ட இருபத்தினான்கு சொல்லு மித்தொடக்கத்தான் மங்கலச்சொல்.
காலத்தால் முந்தையது வெண்பாப் பாட்டியல் தொடக்கி தொன்னூல் விளக்கம் வரை மங்கலச்சொல் மாற்றம் பற்றி கலைச் சொல்லுக்கு விளக்கம் அமையுமாறு அமைந்துள்ளது.
 மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்று பத்து பொருத்தங்களில் மூன்றுக்கு மட்டும் கலைச்சொல் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை காண்கிறோம். முதன்மொழிக்கு அடுத்து இயலில் சிற்றிலக்கியத்திற்கு கலைச்சொல் கூறப்படுகிறது.

வெண்பாப் பாட்டியல்
கோவை
கட்டளைக் கலித்துறை நானூறு அகப்பொருள் மேல் வருவன கோவை.
நவநீதப்பாட்டியல்
பொருளதிகாரத்துப் பிரமம், பிராஜா பத்தியம், ஆரிடம், தெய்வம். காந்திருவம், அசுரம், இராக்கதம் பைசாசம் என்று சொல்லப்பட்ட எட்டு வகை மணத்தினுள் காத்திருவ மணத்தில் நானூறு கலித்துறைப் பாடுவது கோவை.

சிதம்பரப் பாட்டியல்
அகப்பொருள்மேற் கலித்துறை நானூறு பாடுவது கோவையாம்.

இலக்கண விளக்கம்
கட்டளைக்கலித்துறை நானூறாகத் திணை முதலாக துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவையாகும்.
தொன்னூல் விளக்கம்
பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைகளேழும் விளக்கிக் கலித்துறை நானூறாகப் பாடித் தொகுத்த செய்யுள் கோவை.

முத்து வீரியம்
இருவகையாகிய முதற்பொருளும் பதினான்கு வகையாகும். கருப்பொருள் பத்துவகையாகிய உரிப்பொருளும் பெற்றுக் கைக்கிளை முதலுற்ற அமையும் காமப்பகுதியவாம் களவொழுக்கமுற் கற்பொழுக்கமும் கூறவே யெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டாகப் பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப்பாடுவது அகப்பொருள் கோவை.
ஆறு பாட்டியல் உரைகளில் கோவை கலைச்சொல்லுக்கு விளக்கம் கூறுகிறது.

நவநீதப்பாட்டியல்
இருவர் வேந்தர் யானை பொருத வெற்றி ஒருவன் செய்கிற புறநடைசேர் குரவைமேல் நேரடி முதலான சீர்களின் இவ்விரண்டடியாகத் தாழிசையான் வருவது பரணி.

இலக்கண விளக்கம்
போரிடை ஆயிரம் களிற்றியானை படைவென்ற வீரத் தன்மை உடையோனுக்குப் பாடப்படுவது பரணி.

தொன்னூல் விளக்கம்
பரணி யாமாறுணர்த்தும் போர்முகத் தாயிரம் யானையைக் கொன்ற வீரனே பாட்டு நாயகனாகக் கொண்டு பரணிக் குறுப்பெனக் கடவுள் வாழ்த்துங் கடைதிறப்பும். பாலை நிலமுங் காளிகோயிலும் பேய்களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்ல, சொல்லக் கருதிய நாயகன் கீர்த்தி விளங்கறு மவன் வழியாகப் புறப்பொருள் போன்ற வெம்போர் வழங்க விரும்பறு மென்றிவை யெல்லா மிருசீர் முச்சீரடி யொழிந்தோழிந்த மற்றடியாக வீரடி பஃநொழிசையாய்ப் பாடிய செய்யுளே பரணி.

முத்துவீரியம்
போர், முகத்து ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை நிறம், காளிகோயில், பேய்களோடு காளி, காளியோடு பேய்கள் கூறத் தான் சொல்லக்கருதிய தலைவன் கீர்த்தி விளங்க அவன் வழியாகப் புறப்பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பல். இவையெல்லாம் இருசீரடி, முச்சீரடி, யொழித்து, ஒழிந்த மற்றடி யாக ஈரடிப் பலதாழிசையாற் பாடுவது பரணி.
வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் இவை இரண்டு நூல்களில் பரணி இலக்கணம் கொடுத்துள்ளன. ஆனால் உரையில் கலைச்சொல் விளக்கம் கொடுக்கவில்லை.

உரைகளில் மேற்கோள் நூற்பாக்கள்
உரைகளில் நவநீதப்பாட்டியலில் பல மேற்கோள் பாடல்கள் கையாண்டுள்ளார் உரையாசிரியர்.
📜
”இந்திர கணமே பெருக்கஞ் செய்யும் சந்திர கணமே வாணாற் தரூஉம் சீர்த்த நீர்கணம் பூக்கணஞ் செழுந்திரு ஆங்கு மென்றாய் கறையப் படுமே”
என்பது மாமூலம்,

📜 “நேரசை யாகவும் நிரையசை யாகவும் சீர்பெற வெடுத்தல் சிலவிடத் துளவே”
என்பது இந்திர காளியம்,

📜“அந்தர கணமே வாழ்நாட் குன்றும் சூரிய கணமே வீரிய மகற்றும் வாயுகணமே செல்வ மழிக்கும் தீயின் கணமே நோயை விளக்கு”
என்று ஒப்புமையாக தொன்னூல் விளக்கம் கூறுகிறது என்ற கருத்து பாட்டியலே ஒப்புமையாக கூறியுள்ளதை காட்டுகிறது.
📜கலம்பகத்தின் செய்யுட் தொகை பற்றி பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புமை மற்ற இலக்கணங்கள் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டியுள்ளார் உரையாசிரியர்.
📜“அமராக்கு நூறந் தணருக் கிழிவைத் தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட முடிபுடையா மன்னர்க் கெண்பது வணிநர்க் கெழுபது மற்றை யோர்க்குத் துணியி லறுபத் தஞ்சு சொல்லும்”
இது முள்ளியார் கலித்தொகை.
📜
”அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத் தொண்ணூ றென்ப தெழுப தறுபது விண்ணோர் தமக்கு நூறெனவிளம்பினர்”
என்பது கல்லாடம்.
📜“அமர்ரர்க்கு நூறந் தணருக் கிழிவைத் தரசக்குத் தொண்ணூ நன்றி முடிபுடையாய் புதல்வாக கெண்பது புகலுங் காலை.”
”தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே”

முடிவுரை
இவ்வியலில் பாட்டியல் இலக்கண உரைகளின் இயல்புகள் அமைப்புகள், நோக்கப்பெற்றன. பாட்டியல் இலக்கண உரைகள் ஓரளவு சுருக்கமாகவே அமைந்துள்ளன. வடமொழி செய்திகளை ஒப்பிட்டு காட்டு கின்றன. வடமொழி கலைச்சொற்களை இணைத்து சுட்டுகின்றன. முந்தைய, பிற பாட்டியல் இலக்கண நூல்களின் நூற்பாக்கள் பலவற்றை மேற்கோள்காக காட்டுகின்றன. ஆங்காங்கு நடைநயம், தொடர்களைக் கொண்டுள்ளன. தொடர்புடைய பிற பாட்டியல் நூலாரின் கருத்துக்களை ஒப்பிட்டுக் கூறுகின்றன.
 வடமொழி இலக்கண கலைச்சொல், விளக்கம் தருதல், இலக்கிய மேற்கோள்காட்டல் பிற பாட்டியல் நூலாரின் கோட்பாட்டை ஒப்பிட்டு ஒத்தோ உறந்தோ கூறுதல், நடைநலம் வாய்ந்த தொடர்களை கொண்டிருத்தல் ஆகியக் கூறுகளை உரையின் சிறப்பியல்புகளாக கருதமுடிகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,

முனைவர் ஞா.விஜயகுமாரி,

                                                                                                                                   உதவிப் பேராசிரியர்,

                                                                                                                 அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,

                                                                                                                          மீனம்பாக்கம், சென்னை-61.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »