Saturday, April 4, 2026
Home Blog Page 19

மாறிவரும் கொல்லிமலை |ஆய்வுக்கட்டுரை| முனைவர் க.கணியன்பூங்குன்றனார்

மாறிவரும் கொல்லிமலை - கணியன்பூங்குன்றனார்
ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும் அழகன் தான் என்பதை யாவரும் அறிந்த ஒன்றாகும். இத்தகு அழகு மிகுந்த தமிழக மலைகளில் ஒன்று கொல்லிமலை ஆகும். அக்கொல்லிமலை மனித சமுதாயத்திற்குப் பல வளங்களையும், நலன்களையும் கொடையாக இன்றளவும் கொடுத்துக்கொண்டு வருகிறது. சங்கால புலவர்களால் புகழப்பட்ட வல்வில் ஓரியின் கொல்லிமலையின் தனிதன்மைகளை  எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லிமலை
தமிழகத்தின் அரணாக மலைகள் விளங்குகின்றன. மேற்குதொடர்ச்சி மலைகள், கிழக்குத்தொடர்ச்சி மலைகள் எனப் பகுக்கப்படுகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வரிசையில் கொல்லிமலை, பச்சைமலை மற்றும் போதமலை போன்ற மலைகள் இடம்பெறுகின்றன. மேலும், சங்க காலத்தில் கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் எல்லையாக இருந்தது கொல்லிமலையாகும். இம்மலையின் சிறப்புப் பற்றி,

“தரை மீ என்னதெலா வளஞ்சொறிக்கொல்லி” 1 
“எனவும், அறப்பள்ளீசுவர சதகத்தில் சதுரகிரி” 2
எனவும் ,கூறப்பட்டுள்ளது. இதனால் கொங்கு நாட்டில் பல மலைகள் இருந்தாலும், அதிக வளம் மிக்க மலை கொல்லிமலையாகும் என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
               
கொல்லிமலையின் இயற்கை அழகு, ரசிக்கின்ற மன எண்ணம் கொண்டவர்களுக்கு விருந்தாகும். இவ்வகையில் கொல்லிமலை ஏறத்தாழ நான்காயிரம் அடி உயரமுடையது. இந்த மலை நாட்டிற்கு 1961-62 -ஆம் ஆண்டிலேயே சுமார் 29 லட்சம் ரூபாய் செலவில், 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் நீளம் 22.4 கிலோ மீட்டர் ஆகும். இம்மலையின் இயற்கை அழகினை காண, இந்தக் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் பயணிக்க தொடங்கும் முன், கொல்லியை ஆட்சி செய்த வல்வில் ஓரியின் வீரத்தை பற்றி

“வில்லோர் வாழ்க்கை விழித்தொடை மறவர்”3
               
என்று அம்மூவனார் பாடியுள்ள திறத்தால் அறிய முடிகிறது. சிமெண்ட்டில் அவருக்காக வைக்கப்பட்டுள்ள சிலையின் அழகு காட்சியையும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அன்றைய மனிதனின் மன எண்ணங்களையும், எண்ணிப் பார்த்துக் கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போது உண்டாகும் மன உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், மலைவாழ் விலங்கினங்களான யானை, புலி, கரடி, பன்றி, உடும்பு மற்றும் குரங்கு இனங்கள் வாழ்ந்த அழகு காட்சிகளைச் சங்கப் புலவர்களின் பாடல்கள் வழியே காண முடிகிறது.  அந்த அழகினை,

” அந்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமடமாற்கு வல்சியாகும்”
“களிறு சோர்வு மிருஞ்சென்னியமைந்து மலிந்த மழகளிறு”
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் ப கழி”6
உருவக் குருவின் நாள் மேல் ஆரும்மாரி எண்களின் மலைச்சுர நீள் இடை”7

என்ற வரிகளோடு நினைவில் நிற்க, இன்றைய சூழ்நிலையில் குரங்கினங்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் உலாவுகின்ற சூழல் உருவாகி உள்ளதைக் காணமுடிகிறது.

விலை பொருட்கள்
கொல்லிமலையின் விலை பொருட்களாக இருந்த பலா, தேன், மலை வாழை, அன்னாசி, கொய்யா முதலிய பல வகைகளும், கிழங்கு வகைகளும் இருந்தன. ஆனால் தற்போது, இவை மட்டுமின்றி மிளகு, சோம்பு, கடுகு, காபி மற்றும் நெல் வகைகளும் விளைவிக்கப்படுகின்றன. இவை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மை தருவனவாகும். ஆனால் சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புகளில் கொல்லிமலையின் பலாப்பழம் பற்றி, 

“சாரல் பலாவின் கொழுந்துனர் நறும்பும் 
இருங்கல் விட ரனை வீழ்ந்தெனை வெற்பில்
பொருந்தேன் இறாஅல் கீறும் நாடன்”8
               
என்ற கபிலரின் பாடல் வழியே உணரலாம். இச்சிறப்பினைப் பெற்ற பலா, அன்னாசி போன்ற பழம் பெருமை பெற்ற பொருட்களெல்லாம், தற்போது மலைவாழ் மக்களின் மன மாற்றம் காரணமாக, பணப்பயிர்களின் மோகம் அதிகரித்து, கொல்லிமலையின் பழம் சிறப்பானது மாறிவரும் சூழல் உருவாகி இருப்பதை அறியலாம்.

சோலைகளில் அழகு
கொல்லிமலைச் சாரலானது குறிஞ்சி நிலத்திற்குரிய முழு அழகையும் பெற்றிருந்தது என்பதனை,

“குருதி வேட்கை உருகிழு வயமான்
மரம் பயில் சோலை மலியப் பூழியர்”9
 
எனும் நற்றிணை பாடல் சிறப்பிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பணப்பயிர்களுக்காக சோலைகள் உருமாற்றம் பெற்று, மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நிலத்தின் வடிவத்தையே மாற்றியிருப்பதைக் காணமுடிகிறது.

மலர்களின் அழகும் நறுமணங்களும்
இனிய மணம் கமழுகின்ற 99- வகையான மலர்களைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பட்டியலிட்டு உள்ளமை நாம் அறிந்ததே.  அவ்வகையில் கொல்லிமலையில் நடந்து செல்லும் இடமெல்லாம் வகை வகையான பூக்களும், திசை தோறும் திரும்புகையில் பல்வகை நறுமணங்களும் வீசுவதை அவ்விடம் சென்றவரே உணர்வர் .இம்மலையின் மலர் வளம் பற்றி, 
“உரைசால் உயர்வ ரைக்கொல்லிக் குடவயின
அகல்இலைக் காந்தள் அலங்குலைப்பாய்ந்து ” 10
“பைஞ்சுனைக் குவளைத் தன் தழை”11
———————— வந்தே ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக் 
கார் மலர் கடுப்ப நாறும் “12
               
எனும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளமையால் இன்றளவும் அறிய முடிகிறது மலைவாழ் மக்களின் இன்றைய வளர் நிலையில் இயற்கையாக மலரும் மலர்கள் மட்டுமல்லாது, பல் வகை உயிரினங்களும், மலர்களும் வாசனை இல்லாத அழகு மலர்களும் காட்சிக்காக இடம் பெற்றுள்ளன, என்பதையும் அறியலாம்.

மூங்கில் அழகு
கொல்லிமலைச் சாரலில் கூட்டம் கூட்டமாக மூங்கில் செழுமையுடன் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சி அழகு நிறைந்ததாகும். அதனுடைய இன்றியமையா பயன்பாட்டைக் கொண்டே மலை மக்களின் வாழ்க்கை முறையும் செழுமையுற்று இருந்தது. வீடுகளுக்கானக் கட்டுமான பொருட்களுக்கும், மாட்டுத் தொழுவம், ஆட்டுப்பட்டி ஆகிய இடங்களில் புழங்கு பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் சிமெண்ட் மற்றும் கம்பிகளால் ஆன கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் புழங்கு பொருட்களுக்கு நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்த மூங்கில்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் நிரம்ப கிடைக்கின்றன என்பதை,
“கழை விரிந் தெழுந்தெரு மழை தவழ்  நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய “13
என்று பாடல் குறிப்பிடுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் இறங்கி வரும் நேரத்தில் இயற்கை அழகோடு மூங்கில் மரங்களின் காட்சியும், கண்ணிற்கு இனிய விருந்தாக அமைகிறது. இக்காட்சிகளை சங்ககாலப் புலவர் பெருமக்கள் தம் பாடல்களில் உவமை கொண்டு ஒப்புவித்த பாங்கு வியக்க வைக்கிறது.

மூலிகை வளம்
கொல்லிமலை மூலிகைகள் நிரம்பி இருக்கும் மலையாகும். சித்தர்கள் வாழும் மலை. பலவகையான நோய்களை நீக்கும் மலை. எல்லா வளமும் நிரம்பி இருக்கும் வரை இம்மலையை நாடிவரும் இரவலர்களும், இம்மலையிலேயே வசிப்பவர்களும் இங்கே நிறைந்திருக்கும் செவேர் பலாவின் தீஞ்சுளைகளைத் தேனில் தொட்டு உண்பர். வள்ளல் வல்வில் ஓரியின் உள்ளம் போல் இயற்கை அழகுடன் மூலிகை வளமும் உடல் நலமும் காக்கின்ற குளிர்ந்த சோலைகளும், நீர் வளமும், நில வளமும் மிக்கதாகவே இம்மலை உள்ளது. இச்சிறப்பினைப் பற்றி,

“கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா நீ 
முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்”14 
               
எனும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வரிகளால் நினைவு கூற முடிகிறது. அந்த அளவிற்கு மூலிகையின் சிறப்பைக் கொல்லிமலை  இன்றளவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றதை அறிந்துகொள்ள முடிகின்றது.

இயற்கைப்பாவை, கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன்
                கொல்லிமலையின் இயற்கை அழகு எவ்வகையில் வியக்கத்தக்கதோ, அதுபோல் அங்கே அமைந்திருக்கின்ற தெய்வங்களில் ஒன்றான கொல்லிப் பாவை பற்றிய செய்திகளும், அறிஞர்கள் இடையே பல கருத்து வேறுபாடுகளுடன் நிலவுகிறது.
 
1.இயற்கையாகவே கொல்லிமலையில்அமைந்திருக்கிறது.
2. தெய்வத்தால் உண்டாக்கப்பட்டது.
3.கொல்லிப்பாவை இயங்கும் தன்மை உடையது. 
4. கொல்லிப்பாவையைப் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.
5. சமகால மக்கள் கொல்லிமலையில் இருக்கின்ற காளி சிலையாகிய எட்டுக்கை அம்மனை கொல்லிப்பாவை என்கின்றனர். 
6. அருவிக்கு அருகில் கொல்லிப் பாவை இருக்கலாம்.
               
இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பொது மக்களிடையேயும் நிலவி வருகின்றன. இன்றைய சூழலில் எட்டுக்கை அம்மனே கொல்லிப்பாவை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இருப்பினும் குறுந்தொகையில் கபிலர்,
 
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 
பாவையின் மடவந்தனளே”15
               
என்ற அடிகள் இடம் பெற்று இருப்பதாலும், சங்க இலக்கியப் புலவர் பலரின் பாடல்களில் பாவை பற்றிய செய்திகள் இருப்பதாலும், அவை உண்மையானவை என்பதாலும், சங்க இலக்கியப் பாடல்கள் பொய் கலவாதன எனும் கூற்றாலும்  இச்செய்தியை நம்ப முடிகிறது.
 
கொல்லிமலையை பற்றி பல செய்திகள், பல தலைப்புகளால் ஆராயப்பட்டாலும் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அக்கால சூழலையும், இயற்கை அழகினையும் உணர முடிகிறது. அதுபோலவே இன்றைய சூழலில் கொல்லிமலைக்கு நேரில் சென்றால் அங்குச் சுட்டிக்காட்டப்பட்ட விலங்கினங்களில் குரங்கினங்கள் மட்டுமே பெரிதும் உள்ளன. அவை மகிழ்ந்தும் காண்போரை மகிழ்வித்தும் அழகியகாட்சியுடன் இயற்கை அழகை மெருகேற்றுகின்றன. கொல்லிமலையானது வரலாறு போற்றும் பெருமையுடனும், இயற்கை வளத்துடனும், உடல் நலம் காக்கும் மூலிகைகளுடனும், இயற்கைச் சூழலோடு அறிவியலும் இணைந்து முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு அங்கு வாழும் மக்கள் வளம் குறையாமலும், நாகரீகத்துடன் வளர்கின்ற சூழலும், மாறிவரும் மாற்றங்களும் மாண்புடையதாக காணப்படுகிறது. இம்மலையானது வள்ளல் வல்வில் ஓரியின் கொடை கொடுத்தல் பண்பு போலவே இன்றளவும் செல்வோருக்கெல்லாம் கொடையாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்
1. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் – எஸ்.என் பி.குருக்கள்

2. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர்-.இ.செல்வராசு .மா.ஆ.
 
3. அகம்-பா.35 ‌-அம்மூவனார் 

4. நற்றிணை –பா.6- பரணர்

5. புறம்-பா.22- குறுங் கோழியூர்க்கிழார்

6. புறம் –பா. 152 வன்பரணர்

7. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

8. ஐங்குறுநூறு –பா.214- கபிலர்.

9. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

10. நற்றிணை –பா.185- பெயர் தெரியவில்லை.

11. குறுந்தொகை –பா.342- சுந்தரத்தனார்.

12. அகநானூறு –பா.208- பரணர்.

13. பதிற்றுப்பத்து –பா.73- அரிசில் கிழார் .

14. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் வே.குருசாமி

15. குறுந்தொகை –பா.100- கபிலர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.கணியன்பூங்குன்றனார்
தமிழ்த்துறைத்தலைவர்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

இராசிபுரம்.

 

அம்மா மரம்|கவிதை|ச. குமரேசன்

அம்மா மரம் கவிதை ச. குமரேசன்
🎯 நாட்டு நடப்புகள்
 
நல்லவை கெட்டவை

அன்றாட அழுத்தங்கள்
 
அரைகுறை தூக்கம்
 
அனைத்தையும் பகிர்ந்திட
 
அன்பை அள்ளித்தர
 
அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!

 
🎯 அம்மாவின் குரல் கேட்டால்

அழுத்தமான மனது

அரை சதமாய் குறையுமென்ற
 
ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை

அறிய முடிந்தது..!

 
🎯 அரக்கப் பறக்க ஓடி

அலுவலகப் பணிகள்

அயராது செய்து முடிப்போம்..!
 
 
🎯 வாரத்தில் ஒரு நாள்

வாகாய் ஓய்வெடுக்க
 
வந்தமரும் இடம் எது?
 
 
🎯 அம்மாவுக்காக மனது

அழுது ஏங்கும்!
 
அப்போது
 
அவர் நட்ட செடி ஒன்று
 
ஆகாயமளவு மரமாய் வளர்ந்து

மனதை ஆற்றும்..!

 
🎯 அதில்,

பகலெல்லாம்

பறவை இனங்கள்

பல பல வந்து

இன்னிசை பாடி

இதமாய் இளைப்பாறும்..!
 
 
🎯 அம்மாவின்

ஒரு குரல் கேட்க

ஏங்கிய எனக்கு

அவர் பல குரலால்

பாடல் இசைத்துப்

பாரத்தைப் பாதியாய்

குறைக்கிறார் இன்றளவும்..!

கவிதையின் ஆசிரியர்
ச. குமரேசன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

இராசிபுரம்.

 

கடவுளின் தேசம்!  கல்லறையின் வசம்! |கவிதை|ப.பிரபாகரன்

கடவுளின் தேசம்! கல்லறையின் வசம்! கவிதை ப பிரபாகரன்
🎯 பொழுது விடியும் முன்னே

விழித்தெழுவோம் என்றே

உறங்கினோம் !

 
🎯 விடிந்தும் எழவில்லை

விழித்தெழும் நிலையிலும்

நாங்கள் இல்லை!

 
🎯 நிலச்சரிவே!

நும்பசிக்கு உணவாகாது

தப்பினோம் பலமுறை!

 
🎯 காட்டாற்று வெள்ளமே!

கருணையில்லையோ நுமக்கு!

அபாயம் அறியும் முன்னே

ஏப்பமிட்டுச் சென்றாயே!

 
🎯இறந்தபின் புதைக்கும் வழக்கம்

எங்குமுண்டே! இதுபோல்..

உயிரோடு புதைக்கப்படுவோமென

ஒருபோதும் நினைத்ததில்லையே!
 
🎯நேற்று நாங்கள் உறங்கியது

எங்கள் வீட்டு மெத்தையில்தான்!

இன்று புதைந்து கிடந்ததோ

பன்னிரண்டு கிலோமீட்டருக்கு

அப்பால்!

 
🎯அட கடவுளின் தேசமே

இனி கல்லறையின் வசமா?
 
🎯நாயைக் கொண்டு கண்டுபிடித்தீர்

இறுதிக்கடன் செய்ய உதவினீர்
நன்றிகள் நாயகர்களே!!

 
ப.பிரபாகரன்

த/பெ பி.பன்னீர் செல்வம்,

எண்: 3-92, தெற்குத் தெரு,
பல்லபுரம்,
 இலால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

அஞ்சலக எண்  – 621712;

கைபேசி – 9843912987

email: karpraba@gmail.com

 

தமிழ்  இலக்கியத்தில் மருத நில மக்களின் வாழ்வியல் |முனைவர் சி.ராஜலெட்சுமி

மருதநில மக்களின் வாழ்வியல் சி.ராஜலெட்சுமி
         சங்ககாலத்தில்    வாழ்ந்த   மக்கள்   நிலத்தினை     ஐந்தாகப்     பிரித்து      மலையும்  மலை  சார்ந்த  பகுதியை     குறிஞ்சி   எனவும், காடும்   காடு  சார்ந்த  பகுதியை   முல்லை  எனவும் ,வயலும் வயல் சார்ந்த பகுதியை    மருதம்  எனவும் ,கடலும்  கடல் சார்ந்த பகுதியை  நெய்தல்  எனவும் , பருவ காலங்களில் மழை பெய்யாமல்    வறட்சி  ஏற்பட்டு  நிலம்  பசுமை  இல்லாமல்  வறண்டு  போகும் பகுதியை  பாலை  எனவும்  பகுத்து  அம்மக்கள்  நிலத்தின்  தன்மைக்கேற்ப வாழ்வியலை  அமைத்து  மகிழ்ச்சியோடு  வாழ்ந்துள்ளனர்.
          
மருத   நில    மக்கள்    பிற    திணை      மக்களை    விட       நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக  இருந்தமை காண முடிகிறது . பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள்   எல்லாவற்றிலும்  சிறப்புற்றிருந்தனர்.    மன்னரின்     வெற்றியையும் ,   உழவரின் கலப்பையையும் நம்பியிருந்ததை

பொருபடை  தரூஉம்  கொற்றமும்  உழுபடை
ஊன்று  சால்  மருங்கின்  ஈன்றதன் பயனே;    (புறம். 35: 25-26)
என்ற புறநானூற்று வரிகளால் அறியலாம்.

மருத நில மக்களின் ஒழுக்கம்             
மருதத்தினை  மக்களின்  ஒழுக்கங்களான  பரத்தமை  ஒழுக்கம் ,வாயில் மறுத்தல்,  புதுப்புனல் ஆடல்,   ஊடல்   தணித்தல்,    பிள்ளை   தாலி   அணிதல்    ஆகியவற்றை  பற்றியும்    மருதத்தினை   பாடல்களில் காணப்படும்   இலக்கிய   நயங்களான    கற்பனை   சொல்லாட்சி   உவமை   உள்ளுறை   பற்றியும்   சங்க இலக்கியங்களில்  அறியலாம்.

மருத நிலத்தின் பொழுதுகள்           
கார்,   கூதிர்,  முன்பனி,   பின்பனி,  இளவேனில்,   முதுவேனில்   என்னும்  பெரும்   பொழுதுகளும் வைகறை,  விடியல்   என்னும்    சிறுபொழுதுகளும்     மருத    நிலத்திற்குரிய     பொழுதுகள்     ஆகும்.

மருத நில மக்கள்
               
மருத   நிலத்தின்    தலைவன்    பெயர்    மகிழ்நன்,   ஊரன்    எனவும்,தலைவியின் பெயர் மனைவி எனவும்,  அந்நில    மக்களின்    பெயர்    களமர்,   உழவர்,   கடையர், கடைச்சியர்,  உழத்தியர் எனவும்  இலக்கியங்களில்  வழங்குகின்றனர்.     
   இவர்களுக்குத்   தெய்வம்    இந்திரன்   வேந்தன்  மேய  தீம்புனல்    உலகம் என்பர் தொல்காப்பியர். (கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்.143 ) 
மருத நிலத்தின் கருப்பொருள்கள்
               
மருத நிலத்தின் தெய்வமாக இந்திரன், வேந்தன் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் வழி  அறிய முடிகிறது.      மருத      நிலத்தில்    வாழக்கூடிய   மக்கள் மள்ளர்,   மள்ளத்தியர்,   உழவர்,    உழத்தியர் கடையர்,  கடைசியர்    என்ற பெயரால்  அழைக்கப்பட்டுள்ளனர்.  அந்நிலத்தின் பறவைகளாக நாரை, குருகு,  அன்றில்,  கொக்கு,   வாத்து,போன்றவையும் விலங்குகளாக எருமை, நீர்நாய்,பசு,காளை, ஆடும் மலர்களாக   தாமரை,  கழுநீர்,  குவளை,  அல்லியும்  காணப்படுகின்றன.
                
மருத நிலத்தில் காணக்கூடிய    மரங்கள்  காஞ்சியும்   மருதமும் உணவாக செந்நெல், அரிசியும் உள்ளன.  அக்கால மக்களின்  பண்  மருத பண்ணாகவும்  யாழ் மருத  யாழாகவும்   பறை  நெல்லரியாகவும்  இருந்துள்ளன. மருத நில   மக்களின் தொழில்    களைகட்டுதல்,   களைபரித்தல்,   நெல்லறிதல்,    நாற்று நடுதல், கடாவிடல்,    ஏறுதழுவுதல்,   நெல்லரிதல்  போன்றவை  அவர்களின்     தொழில்கள்.  அம்மக்கள் பயன்படுத்திய  நீர்நிலை, பொய்கை, ஆறு, ஏரி, குளம் போன்றவைகள்.
மருதத்திணை உரிப்பொருள்
               
மருதத்திணையின்     உரிப்பொருள்    ஊடலும்     ஊடல்     தொடர்பான நிகழ்வுகளும்   ஆகும்.  பரத்தையை    நாடி   தலைவன்   செல்வதே   தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது.

மருதத் திணையைப் பாடிய புலவர்கள்
               
மருத  நிலத்தினை  பற்றி  பல  புலவர்கள்   பாடியுள்ளனர்.  நற்றிணை, குறுந்தொகை,  அகநானூறு, ஐங்குறுநூறு,கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் மருத நிலம் பற்றி பாடப்பெற்றுள்ளன. மருதம் இளநாகனார்,  ஓரம் போகியார்,  ஆகிய  இரு  புலவர்களும்  மருதம்  பாடுவதில்  வல்லவர்கள். ஐங்குறுநூற்றில்   நூறுபாடல்கள்,  கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத் திணையைப் பற்றிய பாடல்களாகும்.

மருத நிலத்தில் கேட்ட ஓசைகள்
                 
மருத நிலத்தில்       பலவிதமான  ஓசைகள்  மக்கள் கேட்டது    கரும்பின் வெள்ளைக்கட்டியை  ஏற்றிச் சென்று  சேற்றில்   மாட்டிக்கொண்ட    வண்டி சக்கரத்தை  தூக்கி விட்டுக்கொண்டு    உழவர்  காளைகளை   அதட்டி    ஓட்டும் ஓசை   கேட்டது. மாலைக்குப்    பயன்படும் பகன்றை    வயல்வெளியில் தழைத்திருந்தது     அதனை     தொழிலாளர்    அரிக்கும்    போது    முழக்கும்    பறையின்   ஒலி    கேட்டது.   
         
மழை பொழியும்   மகிழ்ச்சியால்    மக்கள்     செய்த     ஆரவார    ஒலி    கேட்டது பகன்றை    மாலை  சூடிக்கொண்டு  மக்கள் கைகோர்த்து   ஆடும்   குரவை   தோல் தழுவியாடும்   துணங்கை ஆகியவற்றின்  பாட்டோசை  கேட்டது. இந்த   ஓசைகள்  வானளாவ      முழங்கியதால்      எங்கும்      இனிய   ஓசையை  எதிரொலித்தது.   மீன் தேடும்     குருகுகள்     நீர்     பரப்புகளுக்குச்    செல்லாமல்    மீன்   சீவும்   வீட்டு முற்றத்தில்   இருந்து   மரத்தில்  அமர்ந்து இரை தேட ஆரம்பித்தது  என்றுமதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

அள்ளல் தங்கிய பகடுஉரு விழுமம்கள் ஆர்
களமர் பெயர்க்கும் ஆர்ப்பே,
ஒலிந்த பகன்றை  விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை, இன்குரல்
தளிமழை பொழியும் தண் பரங்குன்றில
கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்
தழைந்த கோதை  தாரொடு  பொலியப் 
புணர்ந்து உடன் ஆடும் இசையே:அனைத்தும்,
அகல் இரு வானத்து இமிழ்ந்து  இனிது இசைப்ப
குருகு நரல ,மனை மரத்தான் 
மீன் சீவும் பாண்சேரியொடு
மருதம் சான்ற தன்பணை சுற்றி ,ஒருசார்   (மதுரைக். 259-270 )                    
மருத நிலத்தின் சிறப்பு           
பெண்ணை   வேண்டி   வரும்   வேந்தன்   செந்நெல்லை   உண்ட   மயில்   மகளிர் ஓட்டுதலால்    பறந்து    சென்று     நீர்த்துறையின்   அருகில்   இருக்கும்   மருத மரத்தில்  வீற்றிருக்கும்  வளம்  பொருந்திய  ஊரோடு  நிறைந்த      பொருளைத் தருவான்.    அவ்வாறு   தர   வில்லையெனில்     அப்பெண்ணின்    தந்தையால் வெகுண்டு   போர்   தொடுக்கப்பட்டு     தன்     நாடு      ஏரியில்     மூழ்க  ஆண்மையை   இழக்க   நேரும் இவ்விரண்டினுள்    ஒன்று   உறுதியாக  நடக்கும் என கண்டோர் உரைப்பதாக புறநானூறு குறிப்பிடுகிறது.
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறைநணி   மருதத்து   இறுக்கும்   ஊரோடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
இரண்டினுள்  ஒன்று ஆகாமையோ அரிதே, 
காஞ்சிப்   பனிமுறி    ஆரங்கண்ணி …
கணி    மேவந்தவள் அல்குல் அவ்வரியே.    (புறம் :344)
மருத நிலத்தின் வளம்
                 
மருத நிலத்தில்   வாழ்ந்த மக்கள்  ஆறுகளில்  உண்டான  வெள்ள   நீர் பெருக்கையும் மழைக்காலங்களில்   கிடைக்கும்   நீர்   பெருக்கினையும்    கண்டு    முதலில்    துன்புற்றனர்   பின்னர்  ஆறுகளில்   பெருகி  வந்த  வெள்ள நீரைக் கட்டுப்படுத்தியும் பள்ளமான இடங்களில் ஏரி  குளங்களை  அமைத்து  நீரை பாதுகாத்தும்  கிணறுகளை  அமைத்து   நிலத்தடி     நீரைப்   பயன்படுத்தியும் உழவுத்தொழிலை மேற்கொண்டு தங்கள் முயற்சியினாலும்      உழைப்பினாலும் உயர்வு   பெற்றனர்.   நீர்வளம்    நிறைந்த     இடங்கள்     சதுப்பு  நிலங்களாகவும் காடுகளாகவும்   இருந்தன.  இவற்றின் நன்னிலங்களாக   மாற்றுவதற்கு  காடு கொன்று   நாடாக்கியும் ,   குளந்தொட்டு    வளம்    பெருக்கியும்    மருத    நில நாகரீகத்தை   வளர்த்தனர்.   காடும்    மேடுமாய்  செடியும்   புதருமாய்    இருந்த பகுதியை வயலாக்கி   இங்கு   வாழ்ந்த    மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.   பசுமை நிறைந்த   வயல்வெளிகளைக்  கொண்ட    பகுதி   மருத நிலம்    ஆகும்.
               
நீர்  வற்றாது  வரும்  வையையின்  மிகுந்த  மணல்  பொருந்திய  அகன்ற துறையைச் சார்ந்த அழகிய மருதமரம்  ஓங்கிய  சோலை,    கடற்கரையினைக்    கரைத்திடும்    காவிரியாறு     தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய   நீர் மிகுந்த வயல்   ஆழ்ந்த  நீரை   உடைய   பொய்கையில்   ஆண்  சங்கானது   பெண் சங்கினொடு மணம்புணரும்  நீர்  நிறைந்த  அகன்ற  வயல் ,  அழகிய    உள் துளைகளையுடைய உடைய வள்ளைக்கொடி வண்டுகள்   உள்ளிருந்து    ஊதும்  தாமரையின்   குளிர்ந்த மலர்  பளிங்கு   மணியினைக்  கண்டாற்  போலும் தெளிந்த  குளம்  வயல்வெளியெங்கும்   பூத்துக்குலுங்கும்  ஆம்பல்,  குவளை மலர்கள் என மருத நிலம் வளம்  நிறைந்ததாய் உள்ளது.

வரு புனல் வையை வார்மணல் அகன் துறை,
திரு மருது ஓங்கிய விரி மலர்க்  காவில்,   (அகம்.36 :9-10)
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல்வார் நெடுங்கயத்துன் அருநிலை கலங்க, ( அகம்.126:5-6)
நாயுடை முதுநீர்க்  கழித்த   தாமரைத்
தாதின்    அல்லி    இதழ்    புரையும்  (அகம்.16:1-2)             
வயல்களில் நன்கு முற்றிய  செந்நெல் கதிர்களைத் தின்ற வயிற்றினையுடைய  எருமையின் முதல்கன்று நெற்கூடுகளின்  நிழலில் படுத்து உறங்கும்.கரும்பு,தென்னை ,வாழை, பாக்கு மரங்கள், மஞ்சள், மாமரங்கள், பனைமரங்கள். இஞ்சி ஆகியவற்றின் விளையுள் நீங்காத வயல்களைக் காணலாம் என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
 
கோல்  தெங்கின் ,குலை  வாழை, 
காய்க்  கமுகின்  கமழ்   மஞ்சள்,
இனமாவின்,   இணர்ப்    பெண்ணை,
முதற்   சேம்பின்,   முளை    இஞ்சி
அகல்  நகர்  வியன்  முற்றத்து, ( பட்டினப்.15-20) 
மருத   நிலத்தின்  அழகு
         
மருத நிலம்   இயற்கையோடு   கூடிய   அழகு    உடையது.   பசுமையான   புதர்களுக்கு    இடையே  ஓங்கி வளர்ந்த  வேழத்தின்   வெண்மலர்கள்  காற்றால் அசைந்து  வானவெளியில் பறக்கும் கொக்கு போல தோற்றமளிக்கும்   என்பதனை   ஐங்குறுநூறு   குறிப்பிடுகிறது.
 
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ       
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்   (ஐங்.17:1-2)
  
 பெண்யானையின்   காது   போல்   விரிந்து    இருக்கும் பச்சை   நிற   இலைகளையும் குளத்தில்  கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்கு  போல்  கூம்பி  நிற்கும் மொட்டுகளையும்  பருத்த காம்புகளையும்  கொண்டிருக்கும்  ஆம்பல்    மலர்    அமிழ்தம் போல்    மணம்    வீசிக்கொண்டு இருக்கும் குளிர்ந்த மலர்    கிழக்கில் தோன்றும் வெள்ளியை      போல    இருள் கெட்டு விடியும் வேளையில்  விரிவதும், கயல்மீன்கள்   பிறழ்வதுமான  பொய்கையை   உடையது     மருத நிலம் .   இதனை

 முயப்  பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை 
கணைக் கால் ,ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, 
குணக்குத் தோன்றும் வெள்ளியின் ,இருள் கெட விரியும்  
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!   (நற்றிணை.230:1-5)

நற்றிணை    மூலமும்    அறிய முடிகிறது.
          நீலமணி   போன்ற   நீரினையும், மலர்களையும் உடைய பொய்கையில் சேவலோடு விளையாடும் அன்னப்பெடை  தனது  அழகுமிக்க சேவலன்னத்தை   அகன்ற  தாமரை இலை மறைத்ததாக அதனைக் காணாது  விரையக்   கலங்கியது  அறியாமையுடைய  அப்பெடை முழுமதியின்   நிழலை நீருட் கண்டது அதனை  சேவல்  என்று  கருதி  உவந்து  ஓடிச் சென்றது. அந்நிலையில்  தன்னைச்  சேருவதற்கு எதிரே வருகின்ற சேவலைக்கண்டு  மிகவும்  நாணி பல  மலர்கள்  சேர்ந்து  இருக்கும்  இடத்தில் போய் ஒளிந்து கொண்டது. இத்தகைய  அழகு  உடையது  மருத  நிலம்  என்று கலித்தொகையில்  காண முடிகிறது.
 
மணி நிற மலர்ப்பொய்கை , மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் 
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென   
கதுமென  காணாது  கலங்கி, அம்மடப் பெடை 
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி,  
துன்னத்  தன்  எதிர்  வரூவும்  துணை  கண்டு  மிக  நாணி 
 பல் மலரிடை புகூஉம்   பழனம்   சேர்   ஊர!   கேள்: ( கலி.70:1-6)           
அரக்கினைப்  போல சிவந்த  நிறமுடைய செங்குமுத மலர்களும், தாமரை மலர்களும் செங்கழுநீர் மலர்களும், அல்லி மலர்களும் இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கூடி இணைந்து குத்திக்கொள்ளும்  தன்மையுடைய வளமான வயல்கள் சூழ்ந்த  அழகிய  மருத நிலம் என்று  பின்வருமாறு  கைந்நிலை குறிப்பிடுகிறது.

 அரக்கு    ஆம்பல், தாமரை,   அம்   செங்கழுநீர் 
ஒருக்கு   ஆர்ந்த  வல்லி, ஒலித்து ஆரக் குத்தும் 
செருக்கு   ஆர்  வள   வயல்  ஊரன்   பொய்  பாண!  ( கைந்நிலை 47:1-3)
மருத நில பாகுபாடு
         
சங்ககால     புலவர்கள்    மருத நிலத்தை    ஆறு வகையாக    பிரித்து  காட்டுவர்.  பண்படுத்தப்பட்ட விளைநிலமாக    அமையும்    கழனி     வயல்    என்றும்,   வயல் புலத்தை     அடுத்தமையும்    நீர்    தேங்கிய பழனம்    என்றும்,    ஓடும்    புனலைக் காட்டும்  யாறு  என்றும், புனல் தங்கும் பொய்கை என்றினைய நீர் நிலைகள் என்றும் , மரம் ,  செடி,  கொடிகள்   அடர்ந்த   பொழில்   என்றும் ,   மக்கள் உறைத்தற்குரிதாகப்   பொருந்தும்  ஊர்  என்பன.  இவற்றுடன் நெடுங்கொடி நுடங்கும்  கடிநகர்,  பரத்தை  உறையும்  சேரி என்ற பிரிவுகளையும்    சேர்த்துக்    காண  வேண்டி  உள்ளது.   மருத நிலத்திற்கே    முதன்மையாய்     அமைவது வயல்    இதனையே  கழனி  என்பர்.

மருதநில மக்களின் உணவு
     
மருத  நிலத்தில்  செந்நெல்லும், வெண்ணில்லும்   மிகுதியாக  விளைந்தன.  அவற்றால் ஆன சோற்றை மிதவை என்றும் அழைத்தனர்.  உளுந்து, அவரை  முதலிய   பருப்பு   வகைகளுடன்   நெய்யையும்  கலந்து  விருந்து  படைக்கும்  முறைமையை   மருத  நிலப்  பாடல்கள்  வழி  அறிகிறோம் .  புலி  சோற்றில் பசுவின்  வெண்ணெயை    உருக்கி    இட்டு    உண்டனர்       என்பதையும்     அறிகிறோம்.

உழுந்து தலைப்பெய்த கொழுங்  களி மிதவை 
பெருஞ்  சோற்று அமலை  நிற்ப, நிரை கால்  (அகம்.86:1-2) 
ஆம்பல்    அகல்இலை,   அமலை  வெண்சோறு 
தீம்புளிப் பரம்பின் திறள்கனி  பெய்து, 
விடியல்    வைகறை   இடூஉம் ஊர!   (அகம்.196 :5-7)
               
என   வரும்   தொடர்களால்    பண்டைய   தமிழரின்   உணவுப் பழக்கத்தை அறிய முடிகிறது.
மருத நில விழாக்கள்           
மருத    நில     மக்கள்     மழையை   நம்பி வாழ்க்கையை    நடத்துபவர்கள்    மலைவளம்     வேண்டி   வானோர்  தலைவனான    இந்திரனுக்குரிய     விழாவை    நடத்தினர்   இச்செய்தியை

இந்திர விழாவிற் பூவின் அன்ன         ( ஐங்.62:1)
பரத்தையர் ஆடும் துணங்கை விழா பற்றி  குறுந்தொகை குறிப்பிடுகிறது.
வணங்குஇறைப்    பணைத்தோள்    எல்வளை    மகளிர்
துணங்கை    நாளும்    வந்தன:   அல்வரைக்   ( குறுந்.364:5-6)  
மருத நிலத்தின் விளையாட்டுகள்
               
ஆறுகளில்    பெருக்கெடுத்து   ஓடும்     புதுப்புனலில்     பாய்ந்து     நீந்தி     விளையாடுவதைப்   புனல்    விளையாட்டு    என்பர்.  
                        
கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்                        
அந்திப் பராஅய புதுப்புனல் ,நெருநை   (அகம். 266 :1-2)  
               
நிலங்களைப்     பாகுபடுத்திய    கழனி,    பழனம்,     ஆறு ,    பொய்கை,       பொழில் என்று     வளம் மிக்கதான    மருத நிலத்தில்       ஊர் , நகர், சேரி   முதலிய  வாழிடங்களை  அமைத்துக் கொண்டு  களமர் ,  உழவர் , கடையர் , கடைசியர் , உழத்தியர்   முதலான   குல   மக்களும்  ஊரன் ,நாடன், மகிழ்நன் முதலான தலைமக்களும்  தனது வாழ்வை மேற்கொண்டிருந்தனர்.   மருதநில   மக்கள்  செந்நெல்,      வெண்ணல்    அரிசியிலான      சோற்றையும் ,    உழுந்து ,    அவரை ,  பருப்பு     வகைகள்  ஆகியவற்றால் செய்யப்பட்ட     உணவினையும்     உணவாகக் உட்கொண்டனர்  . விழாக்கள்   மற்றும்   விளையாட்டுகள்     மூலமாகவும்    மகிழ்ச்சியான    வாழ்வினை      வாழ்ந்துள்ளனர்.  இயற்கையோடு    கூடிய     அழகோடும்,  பசுமை   வளம்    கொண்ட     நிலமாகவும்  இருந்துள்ளது என்பதையும்  தமிழ் இலக்கியங்கள்வழி   காணமுடிகிறது.  

துணைநின்ற நூல்கள்
1.அகநானூறு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

2.ஐங்குறுநூறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

3. கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்-143

4. பத்துப்பாட்டு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

5.புறநானூறு மூலமும் உரையும்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

6.கலித்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2017

7.குறுந்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2014

8.தமிழ் இலக்கிய வரலாறு பேரா. மது.ச.விமலானந்தம் ,முல்லை நிலையம்,பாரதி நகர்
         சென்னை-600017.

9.நற்றிணை- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

10.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும்  தெளிவுரையும் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர்   பதிப்பகம், சென்னை 600108, பதிப்பு-2017

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.ராஜலெட்சுமி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),
பெரம்பலூர்.
  

புரிதல்|சிறுகதை|கு.ஜெயா பிரின்ஸி

புரிதல் - கு.ஜெயா பிரின்ஸி
      இருளின் கரம் முழுவதும் விலகாத அதிகாலை வேளை அது. மெல்லிய குளிர்ந்த காற்று அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கவிதா போர்வையை உடம்பு முழுவதும் இழுத்து மூடி கொண்டாள். தூக்கம் வரவில்லை நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவள் சோர்ந்து போயிருந்தாள்.தலை வீக்கம் போட்டிருந்தது.

ம்……ம்…..என்ற முனங்கல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என்னாச்சும்மா கவிதா ?கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா ?என அன்போடு அவளின் தலையை நீவினான் கணவன் முத்து. 

முத்து வண்ணம் பூசுவதில் கெட்டிக்காரன். கலை இழந்து போன கட்டிடத்தின் சுவரும் முத்துவின் கைவிரல் பட்டால் ஒளி வீசத் தொடங்கிவிடும் . அதை விட மன வைராக்கியம் கொண்டவன். கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் தவறு யார் பெயரில் இருந்தாலும் மனைவியே தன்னிடம் வந்து சமாதானமாக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவன்.

சில சமயங்களில் பேசி நாட்கணக்குப்போய் வாரக்கணக்காகும் அளவிற்கு அதன் வீரியம் அதிகம்.

அன்று இரவு நெடுநேரமாகியும்  கவிதா வீட்டிற்கு வரவில்லை .அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி ட்ரிங்…..டிரிங்…… என ஒலி எழுப்பவே கவிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவாறே போனை எடுத்துப் பார்த்தான். 
               
எத்தனை தடவை இவளிடம் சொல்ல வேண்டும் நம்முடைய சொல்பேச்சைக் கேட்கவே கூடாது என்று மனதில் தீர்மானமே எடுத்துவிட்டாள் போல. தான் எம்.ஏ பட்டம் பெற்றவள் என்ற திமிர் அவளுக்கு இன்றைக்கு போடுற போடுல இந்த பழக்கத்தையே அவள் மறக்க வேண்டும் என நினைத்தவாறே, பச்சைப்பொத்தானை அழுத்தி ஹலோ என்றான்.  மறுமுனையில் பதில் ஒன்றும் இல்லை. போனை எடுத்தாலும் பேச மாட்டாயா என மறுபடியும் சிடுசிடுத்த ‌படி ஹலோ என்றான் .மறுமுனையில் கவிதா ஓ….. என்று அலறினாள். அதனை சற்றும் எதிர்பாராத முத்துவும்‌ ஒரு கணம் பயந்து தான் போனான். மறுகணம் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு அழாதே விவரத்தைச் சொல்லு என்றான். அவள் என் அண்ணன் வீட்டிற்கு வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டாள்.
               
கவிதா எம்.ஏ பட்டதாரி.மாநிற இளம்பெண் .குடும்பத் தலைவி தேனீக்களை விடவும் சுறுசுறுப்பாக இயங்குபவள்.தன்னால் முடிந்த அளவிற்கு 
எல்லாரிடமும் உண்மையாக பழகுபவள். தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது உயர்ந்த சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என கனவு காண்பவள். ஏன் அதற்காக தான் உயிரை கையில் பிடித்தவாறு  ஓடிக் கொண்டிருப்பவள். மற்றபடி கணவனிடம் அவ்வளவாக பிடிப்பு இல்லை. 
         
அவளின் உடைந்து போன குரலை கேட்டவுடன் ஒரு நிமிடம் நடுக்கமே வந்துவிட்டது முத்துவிற்கு; ஏன் அவளுக்கு என்ன ஆச்சு ? ஏன் போனை கட் செய்தாள் என பல்வேறு கேள்விகள் மனதை குடைய மோட்டார் சைக்கிளை  எடுத்துக்கொண்டு விருட்டன்று கிளம்பினான்.

நிலா தன்னுடைய  வட்ட முகத்தை அழகாக காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்த மென்மையான பால் நிற ஒளியில் மோட்டார் சைக்கிள் காற்றைத் கிழித்தவாறே பறந்தது. இப்போது அதன் மஞ்சள் நிற ஒளியில் அவளின் முகத்தை நன்றாகவே பார்க்க முடிந்தது. ஏங்கி அழுது சிவந்து கண்களோடும் ,வீங்கிய கன்னங்களோடும் கவிதா நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் என்னங்க…… என்று  சத்தமிட்டு கூப்பிட்டாள்  மற்றபடி இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மோட்டார் சைக்கிளை எடுக்க அவள் பின்புறம் ஏறிக்கொண்டாள். முகத்தில் விழுந்த  கூந்தலையும் சரி செய்யதிணறியவளாய் மரம்போல உட்கார்ந்திருந்தாள். பிறகு மெதுவாக கூறினாள் மனிதர்கள் ஏங்க இப்படி மாறிட்டாங்க?

ம்..க்கும்…எனத் தொண்டையைச் செருமியவாறே  நீ எந்த மனிதர்களைப் பற்றிக் கேட்கிறாய் ?உன் அண்ணன் வீட்டிற்கு போகக்கூடாது என்று நான் எத்தனை தடவை சொன்னேன். படிச்ச திமிரு உனக்கு.நான் தான் நகையை கொடுக்கும் போதே சொன்னேன்ல.. இனி நகையை திருப்பி தர மாட்டேன்னு  சொல்லிட்டானா? சரி எதுக்கு இப்படி அழுது வடிந்து நிற்கிற. ஒண்ணா  ரெண்டா அஞ்சு பவுன் இந்த விலை போற போக்கில் இனி நினைச்சு பார்க்க முடியுமா? பதில சொல்லு என்ன கத்தினான்.

இருட்டில் ஓரிருவர் வேகமாக அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு பின் சென்றனர் . அவள் சிலையென பதில் ஏதும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

மணி இரவு ஏழரை இருக்கும். தமையன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை .போன் செய்தால் போனும் எடுக்கவில்லை ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு அவன் வந்ததும் அதுவரை சும்மா இருந்த தமையனின் மனைவி நாடகம் போட ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் நீதான் உன் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டாய் . நீ உன் தங்கச்சியோடு இரு நான் சாகப் போறேன் என்றவரே அடுக்களையிலிருந்து ஒரு வெட்டருவாளை எடுத்து வந்தாள்.
               
நீ சாகப் போறேன்னா போ.முதலில் என்னோட நகையை எடுத்து வைத்துவிட்டு போ என்றவாறு வெட்டருவாளை பிடித்து இழுத்தாள் கவிதா. அப்போது தமையனின் மனைவி கையில் சிறு காயம் ஏற்படவே கோபத்தின் உச்சிக்கே போனான்.

அவளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து; கல்யாணம் ஆனவள் அடுத்தவனின் மனைவி என்றும் பாராமல் பளார் பளார் என்று அறைந்தான். போதாத குறைக்கு அண்ணனின் மனைவி ஒரு கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அடிக்க பாய்ந்தாள். அடித்தும் விட்டாள்.இது எங்கேயாவது நடக்குமா?

வெளியே சொன்னால் அவமானம் . அவள் உருண்டு திரண்டு இருக்கிறாள். அவள் அடிப்பதை என்னால் தடுக்க கூட முடியவில்லை. பாவி விளங்குவாளா? என மனதிற்குள் விம்மினாள்.

அன்றிரவே காய்ச்சல் கண்டது கவிதாளுக்கு. குறை ஒன்றும் சொல்ல முடியாது தான் நினைத்தபடி இல்லை . மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று நன்றாகவே கவனித்துக் கொண்டான் முத்து. நடந்ததை சொன்னால் மிருகமாகி விடுவான் என மனதிற்குள் எல்லாவற்றையும்  புதைத்துக் கொண்டாள்.

செல்வம், செல்வோம் செல்வோம் என்று சென்று விடும். காலம் தானே எல்லாவற்றிற்கும் மருந்து .காலத்தை வென்றவர் யார்? இனி ஒருபோதும் என்னவனிடம் சண்டை போடக்கூடாது. நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். அவரின் மனதைப்படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே அது போதும் எனப் பெருமூச்செறிந்தாள் . உடல் வலிமை குன்றி இருந்தாலும் மன வலிமையால்  மெல்ல மெல்ல எழுந்து கோலமிட தயாரானாள். கதிரவன் உதித்தது. அவளின் வாழ்க்கையும் தான்.

சிறுகதையின் ஆசிரியர்
கு.ஜெயா பிரின்ஸி

பதிவு எண்:23213154022018,

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்க்கலை ஆய்வகம்,

தெ.தி இந்துக் கல்லூரி,
நாகர்கோவில்.

திருக்குறளில் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை | ச.குமார்

திருக்குறளில் வாழ்வியல் ஆய்வுக்கட்டுரை ச.குமார்
 முன்னுரை
                 
திருக்குறள் என்பது வாழ்வியல் நூலாகும் அந்நூலுள் மனிதன் நல்வாழ்வு வாழ தேவையான அறிவுரைகள் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பெற்றுள்ளது .திருக்குறளில் வாழ்க்கை பற்றி பல கோணங்கள் விவரிக்கப்பெற்றிருந்தாலும் திருவள்ளுவர்  கூறும் வாழ்வியல் நெறிகளை திருக்குறள் வாயிலாக .உற்றுநோக்குவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

திருக்குறளில் வாழ்க்கை
               
மாந்தர் தாம் வாழும் முறையை வாழ்க்கை என்றனர். வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன்வழி வாழ்க்கையை வாழவேண்டியதற்கான நெறிமுறைகளை திருவள்ளுவர் அழகாக வகுத்துக் காட்டியுள்ளார்.  வள்ளுவர் காட்டும் வாழ்க்கை  நல் வாழ்க்கை, தீயவாழ்க்கை என்று இருவகைகளாக காணமுடிகின்றது. நல் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கையாகும். தீய வாழ்க்கை என்பது மறம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு அறமே குறிக்கோள். மறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பது அறத்தின் மறுதலையானது ஆகும். அறத்தோடு முரண்பாடு உடையது ஆகும். அறத்து முரணான தீய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வள்ளுவர் பல்வேறு வழிகளை நமக்கு காட்டுகிறார். வாழ்க்கை என்ற சொல்லைத் தன் குறள்களில் நேரடியாகப் பயன்படுத்தி அக்குறள்வழி வாழ்க்கையின் அடிப்படைகளை உணர்த்த திருவள்ளுவர் முயல்கிறார்.

நல்வாழ்க்கை
               
நல்வாழ்க்கைஎன்பது அறத்தின் வழியில் வாழ்ந்து, பொருளை ஈட்டி, அப்பொருளை தனக்கும்  மற்றவர்களுக்கும் வழங்கி வாழும் சிறந்தவாழ்க்கையே நல்வாழ்க்கை ஆம்.. இந்த ஒரு நற்பண்பினைப் நாம்பெற்றுவி;ட்டால் நலம்பயக்கும் மாந்தர் நல்ல மாந்தராக வாழ்ந்துவிடலாம் .. நன்னெறியை தவறிய மனிதர்கள் எக்காலத்தும் நல்ல மனிதர்களாக ஒருபோதும் வாழ்ந்திட இயலாது.
 
“பழிஅஞ்சிப் பாத்து ஊணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள்-44)
 
திருவள்ளுவர். பழிக்கு அஞ்சி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். பிறர் பழிக்கா வண்ணம் தன்னுடைய வாழ்க்கை அறம் சார்ந்து பொருள் ஈட்டும் வாழ்க்கையாக அமைந்தால் அதுவே சிறந்த வாழ்க்கையாகும். ஒருவன் தாம் சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு பகுத்து உண்ணும் அளவிற்கு அளித்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்பவன் வழி உலகம் நிற்கும் என்கிறார்
                பழியோடு வரும் செல்வம் என்றுமே நிலைக்காது. அவ்வாறு அச்செல்வம் சேர்த்தாலும் அதனை பகுத்து உண்ணா நிலையில் அது பயன்படாமல் சென்றுவிடும். இவ்வாறு வாழ்தல் எந்நாளும் சிறந்த வாழ்க்கையாகாது. ஆகவே மனித வாழ்வில் அறம் சார்ந்து வாழ்வது பிறருக்கு தன்செல்வத்தை, உணவைப் பகிர்ந்தளிப்பது  சிறந்த வாழ்க்கை முறையாகும். இவ்வாழ்க்கை வாழ்பவரை உலகம் வழிகாட்டியாக கொண்டுப் பின்பற்றி செயல்படும்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (குறள்-83)
               
என்ற குறட்பா உணர்த்துவது யாதெனில் நாள்தோறும் விருந்தோடு உண்ணும் உணவு முறையானது, செல்வத்தை; மிகுவிக்கும் சிறந்த வாழ்க்கை முறையுமாகும்.

தீய வாழ்க்கை
               
நாணயம் போன்று இருகூறு உடையது. நல்ல வழியை ஒரு சாரார் பின்பற்றியது போன்றே தீய வழியை சிலரும் பின்பற்றி வந்துள்ளனர்.
 வள்ளுவர் தீய வழியில் செல்வோரை தடுக்க  திருக்குறளை எழுதி இருக்கவேண்டும்.  
உயிருடன் உடம்பு நீக்கியார் என்ப செயிர்
உடம்பின்செல்லாத் தீவாழ்க்கை யவர். (குறள்-330)
               
எவ்வுயிர்களையும் கொல்லாமல் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும். இவ்வகையில் உயிர்க்கொலை தவிர்ந்த வாழ்க்கை உடையவர்கள் உலகில் சிறந்த வாழ்வைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். உலக மாந்தர் அனைவரும் தனக்கு எதனால் கேடு ஏற்படும் என்று தெரிந்தே வாழ்கின்றனர்.  தீமை வரும் என்று தெரிந்த நிலையில்  தன்னிடம் தீமை வந்து சேராமல் காத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்ளும் வாழ்க்கை இனிதாக அமைகிறது.. அவ்வாறு எதிர் வருவதை அறியாமல் வாழ்பவனின் வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த எரி பொருளை ஒத்ததாக அமையும். இதனை திருவள்ளுவர்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள்-435)

என்று எடுத்துரைக்கிறார் . தம் வாழ்வின் எல்லை அறிந்து இவ்வளவே தன் எல்லை என அறிந்து அதற்கேற்ப  வாழும் வாழ்க்கை உடையவன் சிறந்த வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை
உளபோலஇல்லாகி.தோன்றக் கெடும் (குறள்-479)
என்ற குறட்பா இதனை .வலியுறுத்தும். வாழ்க்கை என்பது இனிதானது. இனிதானவர்களுடன் பழகி இனிதே செய்வதே வாழ்வின் இனிமையாகும். ஆனால் சிலர் மாறுபட்டு வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்துவருகிறார்கள்.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து (குறள்-856)
இக்குறள் காட்டும் வழி சமுதாயத்துடன் இணங்கி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதைச் சுட்டுகிறது.
தன்னோடு உடன்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். முரண்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கையானது கொடுமையானது ஆகும்.
பாம்புடன் ஒரே குடிலுள் ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை போன்றது உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கையிலும் இதே நிலைதான். பொதுவாழ்க்கையிலும் இதே நிலைதான்..
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (குறள்-890)
              
  என்ற குறள் காட்டும் வாழ்க்கை நெறியானது உலக வாழ்க்கையின் தன்மையை அழகாக விவரிக்கிறது
மானம் காப்பது
ஒருவன் மானத்துடன் வாழும்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். மானத்தை விடுத்து வெறும் உடம்பை வளர்த்து வாழும் வாழ்க்கை . வாழ்க்கையாகாது. ஒருவனுடைய பெருந்தன்மையால் அவனுக்கு வந்த புகழ் அழியும்நிலையில் வெறும் உடம்பை மட்டுமே பேணி வாழும் வாழ்க்கையில் ஒருபோதும் பயன் இருக்காது. மானம் காத்து வாழும் வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து ஆகும்
.
மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை
பெருந்தகைமைபீடழிய வந்தவிடத்து (குறள்-968)
               
என்ற குறளில் வள்ளவர் யாதெனில் மானத்துடன் வாழும் பெருந்தன்மை வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து என்று குறிப்பிடுகிறது.
 
இல்வாழ்க்கை
               
வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன். தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி. பிள்ளைகள் பெற்றோர். சுற்றத்தார். வறியவர்கள். மூதாதையர். என சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன்.
 இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.இதனை வள்ளுவர்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை”          (குறள்41)
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை”     (குறள்42)
 
மேலும். இல்லறத்தாரின் கடமையாவது குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும்.

முடிவுரை           
திருக்குறளில் வாழ்க்கைக்கு  தேவையான அனைத்து வாழ்வியல் நெறிகளும் பரவலாக காணக் கிடைக்கிறது.திருவள்ளுவர் அறத்தின் வழியே பொருளை சம்பாதித்து நற்செயல்களில் ஈடுபாடு கொண்டு இன்பம் துய்த்தலையே முப்பாலின் வழி நிறுவுகிறார். உலகப் பொதுமறையான வள்ளுவம் காட்டிய வழி நல்வழி.தீய வழி. இல்லற வழி. துறவற வழி என பலவாறு வாழ்வியல் நன்னெறிகளை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறட்பாக்களை படைத்து வழிகாட்டி சென்றிருக்கிறார். நாமும் திருக்குறள் காட்டும் வாழ்வியல் மறைகளை பின்பற்றி நடப்போமாக!. வள்ளுவம் வாழ்வாங்கு வாழட்டும்..

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச.குமார்

தமிழ்த்துறை

உதவிப்பேராசிரியர்
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

இராஜபாளையம்

 

விடுதலையில் வீரமங்கை|கவிதை|ச. குமரேசன்

விடுதலையில் வீரமங்கை - ச. குமரேசன்

✒️ பாரதத்தின் பண்பாடு


தமிழினத்தின் தழல் வீரம்


சுட்டெரிக்கும் சுடர்விழி


வெள்ளையர்களை


வேர் அறுத்த வீரமங்கை..!


 

✒️ சிலு சிலுக்கும் காற்றோடும்
       

சேறு நிறைந்த வயலோடும்
 

சிவந்த பூமியாம்


சிவகங்கைச் சீமையிலே


சீறியெழுந்த சிங்கப்பெண்..!


 

✒️ முரட்டுக்காளையாய்


முந்தியுள்ள வீரமும்


முண்டாசுடன்


முறுக்கி நிற்கும் தீரமும்
 

பகை நடுங்கும் பகலவனுமான


முத்து வடுகநாதரின்


முத்தான மனைவி..!


 

✒️ மக்கள் நலனையே


மனதில் நிறுத்தி
               

குதித்தெழும் குதிரையைக்


குறிப்பாய் செலுத்தி


வாளெடுத்து போர் தொடுத்து
               

வாழ வைக்க வந்த மங்கை..!


 

✒️ கணவனை இழந்தும்
               

கலங்காத நெஞ்சோடு
 

கனன்றெழும் வீரத்தோடு
               

கணை பல தொடுத்து


கர்சித்த காக்கும் தெய்வம்..!


 

✒️ வெள்ளையர்களை வேலெடுத்து


வெளுத்து வாங்கிய


வெம்புலியான வேலுநாச்சி..!


 

✒️ இந்திய திருநாட்டின்
 

சுதந்திர நன்னாளில்
 

வீர மங்கையின் தீரம் போற்றுவோம்..!
                               

 

✒️ வந்தே மாதரம்!


 

கவிதையின் ஆசிரியர்

ச. குமரேசன்,
 

உதவிப் பேராசிரியர்
 

தமிழ்த்துறை,
 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


இராசிபுரம்.

 

நூல் மதிப்புரை| வீரயுக நாயகன் வேள்பாரி |சு.வெங்கடேசன்

நூல் மதிப்புரை - வேள்பாரி - சு.வெங்கடேசன்

நூலின் பெயர் :வேள்பாரி வீரயுக நாயகன் வேள்பாரி


ஆசிரியர்           : திரு சு.வெங்கடேசன்


சிறப்பு                 : 6000 பிரதிகளைத் தாணடி விற்பனையில் உள்ளது.


பதிப்பகம்         : விகடன் பிரசுரம்


 
முன்னுரை
               
     வீரயுக நாயகன் வேள்பாரி நூலானது  வரலாற்றுச் சிறப்பு மிக்க நாவல் ஆகும். தமிழர்கள் மட்டுதமில்லாது அனைத்து மொழியினரும் ஒருமுறையாவது இந்த நாவலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஒரு தமிழன் இந்நூலினை வாசித்தால் தன்இனத்தின் பழமையையும் இயற்கையோடு இயைந்து எவ்வாறு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வான். பிற மொழிக்காரர்கள் படித்தால் தமிழினம் எவ்வளவு பண்புநலன், கலாச்சார ஒருங்கிணைப்போடு தங்களுடைய வாழ்வினை கொண்டிருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள். திரு. சு.வெங்கடேசன் அவர்களால் விகடன் இதழில் தொடர் கதையாக எழுதப்பட்டு, பின்னர் அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இத்தனை சிறப்புடைய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நூலின் மதிப்புரையை இங்கு காணலாம்.

கதையின் ஓட்டம்
                               
su venkatesan
 
         திரு சு.வெங்கடேசன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறுகையில், “இன்றைய சூழலில் ஒரு இளைஞனைப் பத்து வரிகளுக்குமேல் அமர வைப்பது கடினம். அதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நூலினுள்ள வரிகள் அனைத்தும் விறுவிறுப்பாக மையக்கதையை நோக்கி செல்ல வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வாசகர்களுக்குத் தெரியாத புதுமையான விஷயத்தைக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.   அதனை அப்படியே தன்னுடைய நாவலான வீரயுக நாயகன் வேள்பாரியில் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை கையாண்டுள்ளார் என்பது இந்நாவலை படித்தவர்களுக்குப் புரியும்.
 
 
வார்த்தை விளையாட்டு           
      ஏழிலைப் பாலை, காக்கா விரிச்சி, பால் கொறண்டி, தனைமயக்கி மூலிகை, இராவெரி மரம், பறக்கும் சிறகு நாவற்பழம், தேவவாக்கு விலங்கு, சுண்டாப் பூனை, ஆட்கொள்ளி மரம் போன்ற இதுவரை தமிழ்மக்கள் அறிந்திராத பல விஷயங்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை ஆச்சர்யம் பொங்கும் வகையில் தமது வார்த்தைகளிலே வடித்து தந்திருப்பார் ஆசிரியர்.
                நாவலின் வரிகள் எந்தச் சூழலை விளக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் -அந்தக்கணம் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்குக் கதைக்குள்ளே முற்றிலும் மூழ்கிப்போயிருப்போம் நாம்.
               
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்கள் நம்மை பறம்பு மலையிலேயே இருக்கச் செய்து விடுகிறது. இந்த நாவலின் வாசகர் ஒவ்வொருவரும் பறம்பு மலையில் நாம் பிறந்திருக்க கூடாதா? ஒருமுறையேனும் பறம்பு மலையைப் பாரத்து விடமாட்டோமோ? என்று ஏங்கச் செய்துவிடுகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரியின் கதைக்களம்           
           இந்நாவலின்கதாநாயக் வேள்பாரி. அவனுடைய குலம் – வாழ்ந்த பகுதி பறம்பு மலை – மலைப்பகுதி ஆதலால் குறிஞ்சி நிலத்தின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டது இக்கதைக்களம்.
 “முல்லைக்குத் தேர்க்கொடுத்தான் பாரி” இதை  தவிர பாரியைப் பற்றி பெரும்பாலோனோருக்கு பெரியதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த வாசகமானது எவ்வளவு வலிமை மிக்கது என்பது நாவல் படித்தோர்க்குப் புரியும்.
               
     தமிழ்க்கடவுள் முருகனை வீரப்போர் புரிந்து அசுரர்களை வென்ற நாயகனாக நமக்குத் தெரியும். ஆனால், நாம் யாரும் கண்டிராத காதல் நாயகனாக மீண்டும் நம் உள்ளங்களில் நிறைய வைக்கின்றார் ஆசிரியர் திரு வெங்கடேசன் அவர்கள்.  முருகன் வள்ளியின் காதல் வசனங்களும் அதற்குரிய காட்சிப்படுத்தலும் நம்மை புல்லரிக்கச் செய்து விடுகிறது.
               
       பாரி – ஆதினியின் உன்னதமான காதல், நீலன் – மயிலா காதல் காட்சிகள் மட்டுமில்லாது தங்களின் காதல் இணையர்க்குக் கொடுக்கும் ஆச்சர்ய பரிசுகள் எல்லாம் நம்மை வியப்பின் ஆழத்திற்கு கொண்டு செல்வது மட்டுமில்லாமல் நம்மையும் காதல் செய்யத் தூண்டும் ஒரு காவியப்படைப்பாக வீரயுக நாயகன் வேள்பாரி  என்னும் நாவல் விளங்குகிறது.
               
         குறுநில மன்னனாகிய வேள்பாரியின் கதை ஒருபுறம் இருக்க, பறம்புமலையை அடைய துடிக்கும்  மூவேந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் காட்சிகளும் போர்க்காட்சிகளும் நம்மை மறக்கச் செய்து மனமானது நூலில் உள்ளேயே பறம்பு மலைக்குச் சென்று நேரடியாகப் பார்ப்பது போன்று புல்லரிக்கச் செய்து விடுகிறது. பாரியின் பொறுமையும் புத்தி சாதுர்யமும் நம்மை பாரி ஒரு சிறந்த தலைவன் என்று ஒப்புக்கொள்ள வைத்துவிடுகிறது.
               
         இந்த நாவலில் வரும்  தேக்கன், பழையன், நீலன், உதிரன், திசைவேழர், வாரிக்கையன், கபிலர், பொற்சுவை போன்ற அனைத்துக் கதாப்பாத்திரங்களும் நம் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் சொல் வளமைக்குச் சில சான்றுகள்
“காதல் தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவடையும்”su venkatesan 1
“பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும்
மயக்கங்களைத்தான் உருவாக்கும்,
காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினை வைச் செழிக்கச் செய்யும்”
பொற்சுவை என்ற கதாபாத்திரத்தின் அழகை அவளது கண்களில் கொண்டு வந்து நிறுத்தி நம்மை மயங்கச் செய்திருப்பார் ஆசிரியர், இங்கே அப்பெண்ணைப் பற்றி…

“அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும்
இமையோரத்து மயிர்க்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும்
யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன” என்கின்றார் ஆசிரியர்.

உண்மையையும் மனதையும் இணைத்து ஒரு உளவியல் செய்தியைக் கீழ்க்கண்டவாறு  போகிற போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

“மனம் உண்மையோடு கரைகிறபோது
சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது”
“நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை.
அதுவே முழு உண்மையாகிவிடாது.
எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை..
எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை”
       இவ்வாறு நாவல் முழுக்க உளவியல் கருத்துகளை ஆழ விதைத்துள்ளார் ஆசிரியர். மூவேந்தர்களிடமிருந்து பல்வேறு குடிகளைத் தன் குடிகள்போல் ஆதரித்துக் காத்துவரும் வேள்பாரி பறம்புமலையை எவ்வாறு காப்பாற்றினான் என்பதே கதை.

முடிவுரை           
           இவ்வளவு  அதிஅற்புதமான பிரமாண்ட காவியத்தை நாம் வாசிப்பதற்கு விருந்தளித்த  ஆசிரியர் வேள்பாரியின் இறுதி அத்தியாயத்தை எழுதாமல் விட்டுச்சென்றுள்ளார். மூவேந்தர்களின் சூழ்ச்சி தெரிந்தும் பறம்பு மலையைவிட்டுக் கொடுத்த வள்ளல் வேள்பாரியின் மரணம், தன் மகள்களின் கண்முன்னே நடந்தேறிய கொடூர நிகழ்வைப் பதியாமல் முடித்து விட்டார் ஆசிரியர். ஒரு வரலாற்றுக் கதாப்பாத்திரத்தின் தொடக்கத்தைக் கூறியவர் முடிவையும் கூறியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. காதலையும் வீரத்தையும் மிகப்பிரம்மாண்டமாக வரலாற்றோடு இணைத்துக் காட்சிப்படுத்தி ஒரு பெரும் தமிழ்விருந்து படைத்த ஆசிரியர் திரு சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் சிரம் பணிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!!

ஆசிரியர்
ம.தமிழரசு
ஓசூர்-635 109.

 

திரிகடுகம் கூறும் இல்லறம்|ஆய்வுக்கட்டுரை| க.சதீஷ்குமார்

திரிகடுகம் கூறும் இல்லறம் - க.சதீஷ்குமார்
முன்னுரை
          
இல்+வாழ்க்கை – இல்வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் இல்லாலோடு கூடி வாழ்தலே சிறப்புடையதாகும். இல்லால் இல்லாத வாழ்க்கை இலையற்ற மரம், வாசனையில்லா பூ போன்றதாகும். அவ்வகையில் கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை என்றும் கெட்டுப்போவதில்லை. அவ்வகையில் இல்வாழ்க்கை பயனில் மனையாளின் பங்கு மிக முக்கியமாகும். அத்தகைய இல்வாழ்க்கையைப் பற்றி பதினெண்கீழ்க்கணக்கு நூலான திரிகடுகத்தில் நல்லாதனார் கூறும் விதத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

இல்லறம் – இனிய அறம்
               
‘அறம்’ என்பது ஒழுக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதாகும். அவ்வகையில் மனைவி என்பாள் அருந்ததி (ஏழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி) போன்று கற்புடையவராக  இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் இம்மை மட்டுமின்றி மறுமையிலும் துன்பங்களைத் தீர்த்து இன்பத்துடன் வாழ்வாள் என்பதை,
            
“அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய             
தொல்கொடியின் மாண்டார் தொடர்ச்சியும்”              ( திரிகடுகம்.பாடல் எண். 1)
               
என்னும்  பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது. இதன்மூலம் கணவன் என்பான் மனைவியை ஐயப்படாமலும், மனைவி என்பாள் கணவனை  ஐயப்படாமலுல்  வாழவேண்டும் என்பதை அறிய முடிகிறது.

விருந்தோம்பலின் அறம்              
               
பிறருக்கு விருந்து வைப்பவனுக்கு அவன் பொருள் குறையாது, பொருள் மேன்மேலும் பெருகும். கடன்பட்டாவது செய்வதைச் செய்தே ஆக வேண்டும் என்பது விருந்தோம்பல் பண்புகளில் ஒன்றாகும். இதனை திருவள்ளுவர்,
            
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை             
பருவந்து பாழ்படுதல் இன்று”    (திருக்குறள். விருந்தோம்பல் கூறல்; குறள். எண் -83 )

எனக் குறிப்பிட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அந்த வகையில் வீட்டுக்கு வந்த உறவினரை வரவேற்று, உபசரித்து அனுப்புதலே தமிழரின் தலையாய செய்கையாகும். வறுமையால் வருந்துவோருக்கு ஈதலும், வறுமையற்ற இடத்து தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வானவற்றைச் செய்யாமலிருத்தலும் சிறந்த இல்வாழ்க்கைக்கான அறமாக கருதப்படுகிறது. இதனை,

 “அலர்ந்தார்கொன்  றீந்த புகழும் துளங்கினுந்            
 தன்குடிமை குன்றாத் தகைமையும் … ”        (திரிகடுகம்.பாடல் எண்.41)

என்ற செய்யுள் அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. மேலும், விருந்தோம்பல் பண்பு இல்லாத மனைவி, நற்குணமில்லாதவரின் வீட்டின் அருகே குடியிருப்பது போன்றதாகும். கணவனுக்கும், மனைவிக்கும் ஊடல் வரும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து  வாழ்தல் வேண்டும். விருந்தினர்கள் வீடு வரும்போது, தங்களின் ஊடலை மறந்து அவர்களுக்கு விருந்து உபசரிப்பதே சிறந்த விருந்தோம்பல் அறமென்பதை ஆசிரியர் உணர்த்துகின்றார். 

இம்மையில் அறம்
               
மனிதன் என்பவன்; பிறருக்கு உதவி செய்யவேண்டும். செய்யாதவர்கள் இப்பிறவியில் மட்டுமன்றி அடுத்த பிறவியிலும் அறத்துடன் வாழப்பயனற்றவர்கள் என்பதனை,
            
“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது             
வைதள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தள்ளி             
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்             
இம்மைக்கு உறுதி இல்லார்”       (திரிகடுகம்.பாடல் எண்.49)
               
என்ற பாடல் அடிகள் சுட்டுகின்றன. அதாவது பெற்றோர் சொல்லை கேளாத பிள்ளையும், குடும்பததை பாதுகாக்காத தலைவனும், தேவையற்ற பொய்களைப்பேசி குடும்பத்தை நடத்தும் பெண்ணும் ஆகிய மூவரும் இம்மையில் அறமற்றவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டுகின்றார்.
பிள்ளைகள் பெற்றோர் சொல்கேட்டு வாழவேண்டும், கணவன் மனைவி இடையே மறைவுத்தன்மை இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதை அறியமுடிகின்றது.

கெட்டுபோகும் செல்வம்
               
செல்வம் மிகுதிப் படின் அது நம்மை அழிக்கும். பிறரிடம் நாம் கொடுக்கும் செல்வம் அதிகப்படின் அது நம்மைக் காக்கும்.
            
“அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்             
புல்லார் புரள விடல்”       (திரிகடுகம்.பொருள் செயல்வகை.குறள்; எண் – 5)

தன்னுடைய உறவினர்களைக் காக்காத செல்வம், விளையும் காலத்தில்  காக்காத பயிர் போன்றது. உறவினர் எனும் நற்பயிருக்கு செல்வம் எனும் உரமூட்டுதலே நல் இல்லறத்திற்கு எடுத்துகாட்;டாகும். இது, உயிரோடு இருக்கும்போது ஒருவர்க்கு நீர் கொடுக்காமல் விட்டு, அவர் இறக்கும் போது பால் ஊற்றுவதற்கு சமமாகும்.
           
“கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்            
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாயக்;” (திரிகடுகம்.பாடல் எண். 59)

மேலும். செல்வம் என்பது இறைக்க இறைக்க ஊறும் கிணற்று நீர் போன்றது. நீர் இறைத்தால் பயிர் பயன் பெறும். செல்வம் அளித்தால் பிறர் வாழ்க்கை மேம்படும் என்பதைக் காணலாகிறது.

தவறாது பெய்யும் மழை
               
 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண இயலாது என்பதனை,
        
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே         
பசும்புல்  தலைகாண்பு அரிது”   (திருக்குறள்.வான்சிறப்பு  குறள் எண் – 6)
               
மழையானது விளைநிலம், களர்நிலம் எனப் பாராது அனைத்து இடங்களிலும் பெய்கிறது. அதுபோல் நாம் செய்யும் உதவியானது உறவினர், நண்பர் என்றிலாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை அறிய வேண்டும்.
குறிப்பறிந்து நடக்கும் மனையாள், நோன்புகளை முறைதவறாது நடத்தும் தவசி, குடிமக்களுக்கு தீமையை விளக்கி நன்மைகளையே செய்கின்ற அரசன் அம்மூவரும் ஒரு நாட்டின் கண் அமைந்தால் அந்நாட்டின்கண் மாதம் மும்மாரி மழையானது தவறாது பொழியும் என நல்லாதனார் குறிப்பிடுகிறார்.
           
“கொண்டான் குறிப்பறிவாள்  பெண்டாட்டி கொண்டன           
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ”        (திரிகடுகம்.பாடல் எண்.96)

முடிவுரை
               
இல்லறமாவது நல்லறமாகும். இல்லற வாழ்க்கை என்பது ஒரே வண்டியில் பூட்டிய  இருமாடுகள் போன்றது. மாடுகள் ஒன்றாக சென்றால் பயணம் சிறக்கும். இல்லற வாழ்வைப் பற்றி சங்க இலக்கியங்கள் கூறியிருந்தாலும், உடல் நோயைத் தீர்க்கும் மும்மருந்துப் போல நல்லாதனார் கூறும் ஒவ்வொரு வெண்பாவின் மூன்று கருத்துக்களும் மிகுபயனுடைவையாகும். மேற்கண்ட இக்கருத்துக்களை எடுத்தாளும் ஒவ்வொரு கணவனும், மனைவியும் இல்லறம் சிறக்க பயனுடையவராவர் என்பதே நிதர்சனமாகும்.

பார்வை நூல்கள்
1.திரிகடுகம்,
ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஆசிரியர்),
இரண்டாம் பதிப்பு (சனவரி – 2019),
பாரி நிலையம்,
சென்னை – 600001.

2.திருக்குறள்
பரிமேலழகர் உரை,
சாரதா பதிப்பகம்,
ராயப்பேட்டை,
சென்னை – 600014,
 ISBN – 978-93-80217-37-6.

3.நீதிக்களஞ்சியம் (மூலமும், உரையும்)
டாக்டர் கதிர் முருகு,
முதல்  பதிப்பு ( ஜீன் 2007),
சீதைப் பதிப்பகம் ,
10 /14 தோப்பு வெங்கடாசலம்,
திருவல்லிகேணி, சென்னை – 5.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
க.சதீஷ்குமார்
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

இராசிபுரம் (வ), நாமக்கல் (மா) 637408.

 

அவள் எனும் பெரும் பொருண்மை|கவிதை| ச.நவநீதனா

அவள் எனும் பெரும் பொருண்மை- ச.நவநீதனா
🎯 அவள் எனும் பெரும் பொருண்மையில்
செங்கோல் ஆட்சி நடத்தும் மகாராணி!
🎯 தித்திக்கும் இடமெலாம்..

இவள் வாசம் முத்திரை!

 
🎯 திகட்டும் இடமெலாம்…
பொருட்போர் தலைமை ஏற்கும்

பட்டத்து ராணி!

 
🎯 எண்ணும் பொழுதெலாம்

எனைத் தொலைக்க வித்திட்ட

கள்வ நெஞ்சக்காரி!

 
🎯 பேசும் பொழுதெலாம்

பக்கம் பக்கமாய்

சொற்களை அடுக்கும் பேரகராதி!

 
🎯 ஆனால்!
அவளுக்கென எழுத முற்படும்போது…

சொற்கள் தராத கல்நெஞ்சக்காரி!
 
🎯 மனதினைச் சாலக் கவர்ந்திடும்
கவர்ச்சிப் பொருளல்ல இவள்!
நம்மைக் கவரும்

பொருளுக்கே பொருளூட்டும்

மாய வித்தைக்காரி அவள்!

 
🎯 இப்படி அவளைப்பற்றிப் பல..

எண்ணிலே அடங்காதவை…

எண்ணும் நோக்கம்
அவள் கொடுத்த வரம்..

 
🎯 வீழும் நோக்கம்!
அவளுக்கு அவளிட்ட சாபம்..!

ஏன்?
முதுமையும் கூட

முதிர்ந்து விடும்!
முடி சூடிய மகாராணி

போர்க்களம் புகுந்துவிட்டால்!

 
🎯 இப்படி…
போர்புரியும் பேரரசி!
எனக்கு மட்டும்

ஏனோ பணம் கேட்கா மருத்துவச்சி

ஆகிவிட்டாள் அனுதினமும்!

🎯 ஆனால்!
உலகமே அவள் வசம் எனினும்,
அவளுக்கு ஒன்றுமட்டும் தெரியாது

என் நோய்க்கு, முதற்காரணம் அவளென்று!

 
🎯 அவள் எனும் பொருண்மையிலே

அனுதினமும் எமைத் தாலாட்டும்

என்னவள் – தமிழே!

என்னவள் – தாய்த்தமிழே!!
 
கவிதையின் ஆசிரியர்


கவிஞர் ச.நவநீதனா

இளங்கலை இரண்டாம் ஆண்டு,

வணிகவியல் துறை, 

கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
 ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.

 

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|கு.பூர்ணிமா

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல் - கு.பூர்ணிமா
முன்னுரை

தமிழகத்தின் பெரும்பாலான பழங்குடிகள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இவர்கள் தற்கள் வாழ்வாதாரத்தைப் பண்டைய காலந்தொட்டு அமைத்துக் கொண்டுள்ளனர். மலைகள் மட்டுமல்லாது சமவெளியிலும் சில பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் வேட்டையாடு;தலையும், வனத்தில் உள்ளபொருட்களைச் சேகரித்து உண்ணுதலையும் செய்து வந்தவர்கள், தற்பொழுது அரசாங்கத்தின் வனக் கட்டுப்பாட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களால் வேட்டையாடுதலை கைவிட்டு விவசாயத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். சோளகப் பழங்குடிகள் பூர்வீகமாகவே வனப்பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள். மற்ற பழங்குடிகளோடு ஏற்ற தாழ்வின்றி பழகும் தன்மை கொண்டோராய் விளங்குகின்றனர்.

சோளகர் பெயர்காரணம்
சோளா என்றால் காடு. காட்டில் வாழ்வதால் சோளர்களுக்கு இப்பெயர். சோளகர் என்றால் சோலைகளை ஆள்பவர் என்று பொருள். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியினரில் சோளகரும் அடங்குவர். இவர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் அதன் அருகில் உள்ள கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும் நிறைந்து வாழ்கின்றனர். சோளகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் பழங்குடி மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே ஆகும். இவர்களின் சமூக – வாழ்வியலில் வனத்திற்கு முக்கிய இடமுண்டு, வனம் என்பது அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் பகுதியாகும்.

சோளகர்களின் வேறுபெயர்கள்
🎯 சோளகர்

🎯 கஷாலகர்

🎯 சோளகா
🎯 சோளக நாயக்கன்
என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

வாழ்விடங்கள்
சோளகர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் தென் கர்நாடகத்தின் பிலிகிரிரங்க மலைப்பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர். சத்தியமங்கலம், பர்கூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். திம்பம் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், தாளவாடி, கெத்தேசால், கானக்கரை, கேர்மலா, ஒரத்தி,மாவளம், தெங்குமராடா, கோட்டமலா, பெடுகுழி, பெஜலட்டி, புழிஞ்சூர், கோட்டடம், பார்டு, பாடர் தொட்டீ, புத்திபவுகா, நோக்கநல்லி மற்றும் மனுக்காய் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
மொழி

இவர்களது பேச்சு மொழி தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளின் கலவையாக உள்ளது. இதனைச் சோளகர் வழக்காறு என்றே சொல்லலாம். கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகின்றனர். பள்ளிக் கல்வி பெற்றவர்கள் மட்டும் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.

வழிபடும் கடவுள்கள்

                          மாதேஷ்வரன்

🎯 சிவன் (கோத்திரம்)

🎯 பால் (வம்சம்)

🎯 ஏழு (குலம்)

                    சித்தேஷ்வரன்

🎯 விஷ்ணு (கோத்திரம்)
🎯 பொங்கர் (வம்சம்)
🎯 ஐந்து (குலம்)

சோளகருக்குப் பொதுக்கடவுளாக சிவனை வழிபடுகின்றனர், ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே குல தெய்வங்களும் உண்டு. வாரம் தோறும் தங்கள் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பூசை வைக்கின்றனர்.

குலம்
சோளகர்கள் தங்களை ஐந்து குலங்களாகப் பிரித்துள்ளனர்,

🎯 செளிகர்

🎯 பெள்ளீர்

🎯 சூருள்
🎯 தென்னீர்

🎯 ஆலர்

சோளகர்களின் தோற்றக்கதை

(சோளகர்தொட்டி மற்றும் இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு நூலில் உள்ளது)

ஒரு காலத்தில் கெத்தேசால் மலையில் காரையன், பில்லையன் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் தெய்வ சக்தி மிக்கவர்கள். அதில் காரையன் மூத்தவன். பில்லையன் இளையவன். அவனை மாதேஸ்வரன் என்றும் கூப்பிட்டார்கள். அப்போது சாவண்ணா என்ற மிகப்பெரிய அரக்கன் மலையைப் போன்றவன் இந்த வனம் முழுவதையும் தனது பிடியில் வைத்திருந்தான். அவனது மந்திர சக்தியால் தேவர்களையெல்லாம் அடிமையாக்கினான். கடவுளர்கள் கூட அவனிடம் அடிமை வேலை செய்ய வேண்டிய நிலை வந்தது. காரையனும், பில்லையனான மாதேஸ்வரனும் அவனிடம் அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். மூத்தவன் காரையன் அரக்கன் சாவண்ணாவின் சக்தியை அறிந்து சற்றுப் பொறுத்துத் தான் அவனிடம் மோத வேண்டுமென்று முடிவு செய்து அவனுக்குப் பணிவது போல நடந்து கொண்டான். சாவண்ணா, காரையனை மலையின் தென் பக்கம் வேலை செய்ய அனுப்பி விட்டான். ஆனால், இளையவன் மாதேஸ்வரன் அரக்கனிடம் அலட்சியமாகவே நடந்து கொண்டான்.

அரக்கன் இட்ட கட்டளைகளை மெதுவாக, தூங்குபவனைப் போலச் செய்து வந்தான். அதனால், கோபம் கொண்ட அரக்கன் சாவண்ணா, மாதேஸ்வரனைத் தூரத்திலிருந்து கூப்பிட்டு, கோபமுடன் உன் பெயரென்னடா? என்றான். “மாதேஸ்வரன்” என்று பதிலுரைத்தான். அது “மாதாரி” என அரக்கன் காதில் விழுந்தது. அரக்கன் மாதேஸ்வரன் செருப்புத் தைக்கும் தொழில் புரிபவன் என முடிவு செய்து, “என் கால்கள் வெப்பத்தில் வாடுகிறது. ஒரு ஜோடி செருப்புகளை எனக்குத் தைத்துக் குடுடா” என்றான். மாதேஸ்வரன் தயங்கவே, தனது கட்டளையை நிறைவேற்றத் தயங்குவதாகக் கருதிக் கோபமுற்றான் சாவண்ணா. உடனே, மாதேஸ்வரன் சமாளித்து, “தங்களைப் போன்ற மகா ராஜாக்களுக்கு நேர்த்தியாக செருப்பு செய்ய காலமும்,உழைப்பும் தேவை. எனவே, தற்காலிகமாக என்னை அடிமையிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டான். உன் செருப்பு சிறப்பானதாக இருந்தால், தற்காலிகமென்ன, நிரந்தரமாகவே விடுதலை தருகிறேன். ஆனால், சரியில்லாததாகக் காலைக் கடித்தால், உன் தலையைச் சீவி விடுவேன்” என்று அவனை செருப்பைச் செய்ய வேண்டி விடுவித்தான். மாதேஸ்வரனுக்கு செருப்பை எப்படி செய்வது என்று தெரியவில்லை.

அதே சமயம் கடவுள்களையே அடிமைப்படுத்திய சாவண்ணாவை அழிக்கவும் எண்ணினான். அப்போது அடிமைகளுடன் சக அடிமையாயிருந்த கிருஷ்ணனிடம் தனக்கு உதவுமாறு கேட்டான். சக அடிமைகளைக் கொண்டு அழகிய மெழுகினால் செய்த ஒரு ஜோடி செருப்பைச் செய்து மாதேஸ்வரனிடம் கொடுத்து, சாவண்ணாவை கெத்தேசால் மலைக்கு வடக்கேயுள்ள பெரிய வழுக்குப்பாறை மலைக்கு கூட்டி வரும்படியும், மற்றதைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினான் கிருஷ்ணன். அதே போல், மாதேஸ்வரன் ஒரு ஜோடி மெழுகிலான அழகிய பெரிய செருப்பை மாட்டு வண்டியில் வைத்து சாவண்ணா முன் கொண்டு வந்து நிறுத்தினான். சாவண்ணா வேலைப்பாடு மிக்க செருப்பில் மனதைப் பறிகொடுத்தான். அதனைப் போட்டுக் கொள்ளப் பிரியமானான். ஆனால், தனது செருப்பை அணிந்து கெத்தேசால் மலையின் வடக்கேயுள்ள வழுக்குப் பாறை மலையில் சாவண்ணா நடப்பதைப் பார்க்க வேண்டும் என்று பணிந்து வேண்டினான். சாவண்ணாவும், அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டான். அப்போது கிருஷ்ணன் மற்ற தேவர்களின் உதவியுடன் வழுக்குப் பாறை மலை முழுவதையும் இலை, தழைகளை நிரப்பித் தீயிட்டு நன்றாகச் சூடேற்றி அதனை அனல் பிழம்பாக மாற்றி வைத்திருந்தான்.

இதனை அறியாத சாவண்ணா மெழுகுச் செருப்பை அணிந்து தீச் சுவாலை மிக்க பாறையில் நடந்தபோது மெழுகுச் செருப்பு உருகி சாவண்ணா மலையிலிருந்து கீழே உருண்டான். அப்போது மறைந்திருந்த தெய்வங்கள் கற்களை சாவண்ணாவின் மீது உருட்டித்தள்ளி அவனைக் கொன்று சமாதியாக்கினார்கள். சாவண்ணாவைக் கொன்று தெய்வங்களை விடுவித்ததால், தெய்வங்கள் அனைத்தும் மாதேஸ்வரனுக்கு அருளாசி கூறியதால், மாதேஸ்வரனை மக்களும் வழிபடத் தொடங்கினார்கள். மாதேஸ்வரன் கத்திரி மலைப் பக்கம் போய்த் தங்கிக் கொண்டான். காரையன் கெத்தேசால் மலைக்குத் திரும்பி வந்தபோது, அவன் தம்பி மாதேஸ்வரனை மக்கள் தெய்வமாக வழிபடுவதையும், அவன் சாவண்ணாவைக் கொன்றதையும் கேட்டு ஆனந்தமடையாமல் இளையவனான மாதேஸ்வரன் இந்தச் செயல்களைப் புரிவதற்கு முன்பு, தன்னிடம் ஆலோசனையும், உதவியையும் பெற்றிருக்க வேண்டுமல்லவா? தனித்துப் புகழடைய சகோதரனான என்னையே நம்பாமல் அனைத்தையும் மறைத்து விட்டானே துரோகி. அவனை உயிருடன் விடமாட்டேன் என்று மிகப் பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு கத்திரிமலை நோக்கிக் கோபமாகப் பயணமானான் காரையன். காரையன் பெரிய கத்தியுடன் மாதேஸ்வரனைக் கொல்ல வரும் செய்தி மாதேஸ்வரனுக்கு கத்திரி மலையில் எட்டியதும், அவன் கிருஷ்ணனிடம் மீண்டும் அபயம் தேடினான்.
 
அப்போது சூறாவளியைப் போல காரையன் கத்தரி மலையினை நெருங்கிவிட்டிருந்தான். உடனடியாகக் கிருஷ்ணன் மாதேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஒரே தாவில் கத்திரிமலையிலிருந்து உருகமலைக்குத் தாவினான். கிருஷ்ணனின் கால் வேகமாகப் பதிந்ததில் உருகமலை உருகிப் போனது. எனவே, கிருஷ்ணன், மாதேஸ்வரனை அடுத்த நொடியிலேயே தூக்கிக் கொண்டு ஏக்ரா மலைக்குத் தாவினான். காரையன் கத்தியைச் சுழட்டிக் கொண்டு அங்கும் பாய்ந்து வந்தான். எனவே, கிருஷ்ணன் மீண்டும் மாதேஸ்வரனை வனத்திற்குத் தூக்கிப் போய் அங்கிருந்த ஒரு பாறைக் குகையில் ஒளித்து வைத்தான். ஆனால், காரையன் அந்தப் பாறையையே கத்தியால் இரண் டாகப் பிளந்தான். மாதேஸ்வரன் அங்கிருந்து வேறு வழியின்றி ஒரு எலிப் பொந்தில் புகுந்து ஒளிந்து கொண்டான். காரையன் அங்கிருந்த மேய்ப்பர்களைக் கூப்பிட்டு கால்நடைகளால் எல்லா எலிப் பொந்துகளையும் அடைக்குமாறு உத்தரவிட்டான். அதனால், எலிப் பொந்தில் காற்றோட்டமின்றி வெப்பம் அதிகமாகவே, மாதேஸ்வரன் வெளியே வந்து காரையனிடம் அவனுக்கு மதிப்புத் தராமல், ஆலோசனை பெறாமல் நடந்ததற் காக மன்னிப்புக் கோரினான். காரையன் ஒரு நிபந்தனை விதித்தான். மாதேஸ்வரனுக்கு வழிபாடு செய்வதற்கு முன்பு மூத்தவனான தன்னை வணங்க மாதேஸ்வரன் மக்களுக்குக் கட்டளையிட வேண்டுமென்றான். மாதேஸ்வரனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதன் பின்பே. வந்தவன் சாந்தமடைந்தான். மாதேஸ்வரனின் வம்சத்தில் சோளர்கள் இலிங்காயத்துக்கள், காரையனின் வம்சத்தவர்கள் காரையன் வம்சத்தில் வந்த சோளகன் ஒருவன் கறி சாப்பிடப் பிரியப்பட்டுத் தன் கழுத்திலிருந்த லிங்கத்தைக் கழற்றி ஒரு இலிங்காயத்திடம் கொடுத்தான். பின்னர், அதை வாங்கி அணிய மறந்தே போய்விட்டான். எனவேதான், இலிங்காயத்துக்கள் லிங்கம் அணிகிறார்கள், சோளகர்கள் அணிவதில்லை.

தொழில் மற்றும் பொருளாதாரம்

சோளகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வேட்டையாடுதலையே முதன்மைத் தொழிலாக கொண்டிருந்தனர். வேட்டையாடிய விலங்கின் தோலையும், எலும்பையும் மண்ணில் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். கறிக்கூறு போடும் போது முதலில் விதவை பெண்ணுக்கு ஒதுக்குவர். பிறகு வேட்டையாடியவர்களுக்கு அதிக பங்கும் தொட்டியினருக்கு மீதமும் பிரித்துக் கொடுக்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேட்டை மற்றும் உணவு சேகரிப்பில் இருந்து பயிரிடுதல் முறைக்கு மாறியுள்ளனர். வனத்தில் வனக்காவல் துறையின் கட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்கப் பழங்குடிகளின் காட்டின் மீதான உரிமை குறைந்துகொண்டே போகிறது. வேட்டையாடிய காலத்தில் கிடைத்த பொருள் தொட்டியில் உள்ள அனைவருக்கும் பொதுவாகப் பகிரப்படுகிறது, வேட்டையாடிய நபருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது.

உணவு
               
கேழ்வரகு இவர்களின் பிரதான உணவாக உள்ளது. அத்துடன் ஏதேனும் காய்கறி வகையினைச் சேர்த்துக் கொள்கின்றனர். சமீப காலமாக அரிசி இவர்களின் உணவின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் முதலியவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். கேழ்வரகுக் களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியன இவர்களின் தின உணவாக உள்ளன. 

வேளாண்மை
                 
வேட்டையாடுதலைக் கைவிட்டுப் பயிரிடுதலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போதைய பயிரிடுதல் முறையினைக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றிவருகின்றனர். சோளகர் தற்போது வேளாண் குழுவாக முழுமையாக மாறிவிட்டனர். வேளாண் சார்ந்த உற்பத்தியே சோளகரின் பிரதான வருவாயாக உள்ளது. ஆடிப்பட்டத்தில் ராகியினை விதைக்கின்றனர். ராகி விதைப்பின் போது இவர்கள் கூறும் பழமொழியான,
காத்தவர் தின்னது போக
கண்டவர் தின்னது போக           
கள்ளர் தின்னது போக           
விளையணும் விளையணும் சாமி…
தற்போது ராகிப்பயிர் பயிரிடுவது மட்டுமின்றி  கேழ்வரகு, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் மற்றும் கேரட் முதலானவற்றை வெவ்வேறு காலங்களில் பயிரிடுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை கேழ்வரகையும் ஆண்டிற்கு இரண்டு முறை பீன்ஸ் அல்லது அவரையையும்  விளைவிக்கின்றனர். மழை பொழியும் போதே கேழ்வரகு விதைக்கின்றனர். பயிரிடுதலைச் சுழற்சி முறையில் கேழ்வரகையும் பிற காய்கறி வகைகளையும் அடுத்தடுத்து விளைவிக்கின்றனர்.

தேன் சேகரிப்பில் இவர்களின் பங்கு
 
தேன்சேகரித்தல் இவர்களின் பிரதான பருவம் சார்ந்த வருவாயாக உள்ளது. தேன் எடுத்தலுக்குரிய காலமாக மழைக்காலம் முடிந்த பின்பு வனத்தில் வேங்கை பூக்களும் மற்ற மலர்களும் பூத்துக் கிடப்பதால் தேனீக்கள் தேன் சேகரித்து அதன் கூடுகளை கனமாக்கி வைத்திருக்கும். எனவே இம்மக்கள் அமாவாசைக்குள் தேன் எடுக்கின்றனர்.
சோளகர் சேகரிக்கும் தேன் வகைகள் நான்கு,
🎯 பெருந்தேன்

🎯 அடுக்குத்தேன்

🎯 கொம்புத்தேன்

🎯 கொசுத்தேன்

என்பவைகளாகும் ஆகும். தேன் எடுக்க செல்லும் போது தகர டின்னும், கயிறும் எடுத்துச்  செல்கின்றனர். தேனினை எடுத்தப் பின்பு சிறிது பிய்த்து (பிரித்து) அதனை மண் தரையில் வைத்து சாமிக்கு நன்றி சொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

முடிவுரை
இந்தியா பல்வேறு இனத்தவர்கள் வாழும் ஒரு மதச்சார்பற்ற நாடாகும். இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் பழங்குடிகள் பற்றியும், அவர்களது பண்பாடுகள் பற்றியும் அறியாமல் உள்ளனர். அதனை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தும் விதமாக இவ்வாய்வு அமைக்கப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை நாகரிக வாழ்க்கையில் ரசிக்க மறந்த நம் மக்களுக்கு, தமிழகப் பழங்குடிகள், அவர்களின் இன்றைய நிலை, வனப் பாதுகாப்பில் பழங்குடிகளின் பங்கு, பண்பாடுகளின் வெளிப்பாடாய் திகழும் சோளக மக்களின் வாழ்க்கையை அறிய இவ்வாய்வேடு பயனுடையதாக அமையும்.

பார்வை நூல்கள்
1.சு. சக்திவேல், நாட்டுப்புறவியல்.

2.பெ. கோவிந்தசாமி, இலிங்காயத்துகள் இனவரைவியல்.

3.அ. பகத்சிங், சோளகர் வாழ்வும் பண்பாடும்.

4.ச. பாலமுருகன், சோளகர் தொட்டி.

5.பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள்.

6.பக்தவச்சல பாரதி, தமிழக நாடோடிகள் (சங்க காலம் முதல் சமகாலம் வரை)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
                                                                                                                                                                    ஆய்வாளர்
                                            
                                                                                                                                                                                 திருமதி கு.பூர்ணிமா                 
 பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
 
                                                                                                                                                                                                   தமிழ்த்துறை                       
பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி
 
                                                                                                                                                                     கோபிச்செட்டிபாளையம்
                                                                                                   

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை|ஆய்வுக்கட்டுரை|சு.கீதா

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை - சு.கீதா
முன்னுரை
               
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறு பட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்கை கருதி மிகுந்த சிந்தனையுடன் நம் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு வகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பெரிய கோவிலுக்கு செல்வதைப் பற்றியும், அங்கு சாமியை வணங்கிவிட்டு காளையின் முன்பு அமர்ந்து அது அசைவு போடுவதன் மூலம் நம்மளிடம் பேசுவதைப் போலவும் அதனால் விஸ்வம் அண்ணாச்சி தன் வாழ்க்கையை முன்நோக்கி யோசித்து கொள்வதன் மூலம் அன்று தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடுவதை இக்கட்டுரை மூலம் உணர்த்துகின்றனர்.

விஸ்வம் அண்ணாச்சி கோயிலுக்கு செல்லும் செய்தி
               
விஸ்வம் அண்ணாச்சி அதிகாலையிலேயே எழுந்து தேனீர் குடித்து விட்டு பெரிய கோவிலுக்கு சென்று விடுவார். வழக்கமாக எப்பொழுதும் போல் பொற்றாமரைக் குளத்தில் கால் கழுவிட்டு கோயிலின் பக்கத்தில் உள்ள கொடிமரத்தருகே எட்டு முறை தரையில் விழுந்து, விழுந்து கும்பிட்டு வழிபாட்டு முறைகள் ஒன்றினைக் கூட குறை இல்லாமல் தன் வழிபாட்டை செய்துக் கொண்டிருந்தார். காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாட்டு ஒன்றையோ மற்றும் அபிராமி அந்தாதி ஒன்றிரண்டோ வாசித்தபடி அம்மையைக் வணங்கிடுவார். அன்று அம்மன் சன்னதியில் பிள்ளைத்தமிழ் பாடலை அந்நாளைப் பொறுத்து வேகமாகவும், சாவகாசத்தைப் பொறுத்து நன்றாக அனுபவித்தும் வாசிப்பார்.
               
“பிரியமுடன் (ஒக்கலையில்) வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன், செய்யக் கனிவாய் முத்தமிடேன், திகழும் மணிக்கட்டிலில் ஏற்றி திருக்கண் வளரச் சீராட்டேன், தாரார் இமவான் தடமார்பில் தவழுங்குந்தாய் வருகவே, சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே”1 என்று ‘ஒக்கலையில் வைத்து’ என்ற வார்த்தையை அனுபவித்துச் சொல்வார்.

மாக்காளையிடம் பேசுவது போல் நினைவு
               
அம்மையைக் வணங்கி முடித்த பிறகு சாமி கோயிலுக்கு வருவார். சாமி தரிசனமெல்லாம் முடிந்த பிறகு நந்தி மண்டபத்தில் உள்ள சுதைச் சிலையான பெரிய மாக்காளை முன்னாடி இடது புறமாக அமர்ந்து ஏதோ ஒன்றை பேசிக் கொண்டேயிருப்பார் விஸ்வம் அண்ணாச்சி. அம்மாக்காளை, அண்ணாச்சியின் மூக்கை தடவுவது போல் உணர்வார். அக்காளையின் கண்கள் இரண்டும் அழகாக இருக்கும். அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பது என்றும் கோயில் கூரையை தொடும் போது உலகமே அழிஞ்சி போய்விடும் என்ற ஒரு கதை உண்டு. விஸ்வ அண்ணாச்சி சிறு வயதாக இருக்கும் போது மாக்காளை வளர்ந்திருக்குமா என்று பார்ப்பதற்கு தன் நண்பர்களோடு கோயிலுக்கு தினமும் வந்து கொண்டே இருப்பார். “ஆமாலே, கொஞ்சம் வளர்ந்திருக்கும்”2 ம்ப்பான் ஒருத்தன். “எங்கலே அதெல்லாம் டூப்புலே”3 ம்பான் இன்னொருவர்.

மாக்காளை கோயில் கட்டும் முறை
               
கோயிலுக்குள் நுழைந்ததும் மிக பெரிய நந்தியை தனி மண்டபமாக கட்டி உண்டாக்கி வைப்பது அந்த கால நாயக்க மன்னர்களோட ஆட்சியில் தான் நடைபெறும். தஞ்சாவு+ரில் உள்ள நந்தியை பார்த்து இங்கு உள்ள நாயக்கர் ஒருத்தர் நந்தி செய்து அதற்கு வழுவழுவென்று சுண்ணாம்புப் பாலை தடவி பூசி, மாவு போலத் தேய்த்து மாக்காளையை செய்து வைத்திருந்தார். இன்றைக்கு அந்த காளை முன்னால் அமர்ந்து பழைய நினைவுகளை சொல்வதற்கு எப்பவும் போல எனக்கு அவகாசம் இல்லை. வேகமாக அவ்வேளையை முடித்து விட்டு நந்தியைப் பார்த்தபடி இரண்டு நிமிடம் அமரலாம் என்று நினைத்தார். நின்ற காலோட கோயிலைவிட்டு போக கூடாதுன்னு அமர்ந்தார். விஸ்வம் அண்ணாச்சி காளையின் முன்னால் அமர்ந்ததால் அது அசை போட, போட மனசை சும்மா இரு என்று சொல்ல முடியுமா. மறுபடியும் அது ஓட ஆரம்பித்துவிட்டது.

அண்ணாச்சியின்  தீபாவளி குளியல்
               
இன்னைக்கு ஏதோ வென்னீர் போட்டுக் குடுத்தாள் புண்ணியவாதி வேம்பு என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு “வீட்டுக்குள்ள இருக்கற குடத்துத் தண்ணி வெது வெதுன்னுதான் இருக்கு. ரெண்டு குடம் ஊத்திட்டுப் போங்க. எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு. இதுல ஓலையைப் போட்டுக் கொளுத்தி வென்னீர் வைக்கவா நேரமிருக்கு”4 என்று கத்துவாள்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
               
இன்று தீபாவளி பண்டிகை தலைக்கு மேல் வேலைகள் இருக்கிறது. வேம்பு தனக்கும் வென்னீர் போட்டு விட்டு விஸ்வ அண்ணாச்சிக்கும் வென்னீர் போட்டு வைத்திருக்கிறாள். அவர் குளிக்கறதுக்கு கோவணத்தோட குளியலறையில் நின்று கொண்டிருக்கும் போது வேம்பு ஓடிவந்து “இந்தாங்க இங்கு வாங்க. இம்புட்டு நல்லெண்னை தலையில வச்சுக்கிடுங்க”5 என்று வீட்டு வாசலில் நின்று ஒரு பாத்திரத்தில் கை நீட்டினார்.
              
  “ஏளா என்னத்த அங்கன வந்து எண்ணெய் வைக்க ஒரு செம்புத் தண்ணிய தோளுக்கு விட்டாச்சே”6 என்று அண்ணாச்சி சலிப்புடன் இருக்கும் போது வேம்பு அவன் பக்கத்தில் வந்து ஒரு கை எண்ணெயைத் தலையில் தேய்த்துவிட்டு எதையோ நினைத்து தானே சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்ததுக்கு காரணம் கோவணம் துணி சற்று விலிகியிருந்தது அதை பார்த்துக் கொண்டு தான் வேம்பு சிரித்தாள். “ஆமா இப்ப என்ன நீதானே நிக்கற வேற யாருமா இருக்காங்க”7
               
“உங்களுக்கு வெக்கமே கிடையாதா? புள்ளை வள்ளி எந்திரிச்சுரவா, சீக்கிரம் குளியுங்க.”8 என்று வேம்பு விளையாட்டாக கோவிச்சிக்கிட்டாள். விஸ்வா அண்ணாச்சியின் தலையில் வேம்பு எண்ணெயை தேய்கும் போது அவள் கையில் ஊறின கடலைப் பருப்போட வாசம் மூக்கை நுளைத்தது. அண்ணாச்சி வேம்புவிடம் குளிச்சதும் கோயிலுக்குச் சென்று வரலாம் என்றார். தீபாவளி பண்டிகை போது எட்டு மணிக்கு முதல் காட்சின்னு சொன்னாள், ஏழு மணிக்கலாம் போய் நிக்கணும்பாரு மேனேஜரு.

சினிமா பற்றிய செய்திகள்
               
ஒரு நாளும் இல்லாத திருநாளா, இந்த தீபாவளிக்கு அஞ்சு ஷோவுக்கு அனுமதி வாங்கிட்டாக முதலாளி. நேற்று தீபாவளி கடைசிவாரம் ஆகும். மாலைநேரத்தில் இருந்தே ரத வீதியில் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. என்னப்பா இந்த நடுஇரவு நேரத்திலும் கூட மக்கள் கூட்டம் ரத வீதியில் இருக்கும். அதுவும் சரிதான். நம்மள போல ஆட்களுக்கு இப்பத்தான் நல்ல நாள் வரும் என்று நினைத்துக் கொண்டார்.
               
இன்று தீபாவளி தினத்தன்று திரைப்படம் வெளியாக இருகின்றது. அந்த பட் நேந்து பப்படமா ஒரு பாடாவதிப் படம்தான் போட்டியிருந்தார்கள். அந்த படத்துக்கு நூறு பேர் வந்திருந்தார்கள். தியேட்டரில் ஐந்து ரூபாய்க்கு பீடி விற்று, பத்து ரூபாய்க்கு முறுக்கு விற்று, இந்த வியாபாரத்துக்கு மூணு மணி நேரம் நின்று கால் புண்ணுதான் ஆனது மிச்சம். அந்த புண்ணு ஒரு பரு மாதிரியாகத் தான் இருந்தது. இப்பொழுது பெரிய காயமாக ஆயிற்று. கால் வீக்கம் குறையும் என்று சொன்னார்கள் ஆனால் வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாச்சி. இரண்டாவது ஷோவே முடிஞ்சிடுச்சி. மாப்பிள்ளை முதலாளி வந்து ஒரு வேட்டியும் துண்டையும் ஐம்பது ரூபாயும் தந்தார் படம் ஓடும்போது எவனோ ஐந்து ரூபாய் குடுத்துவிட்டு இரண்டு முறுக்கு வாங்கி இருக்கான்.

                “என்னப்பா பத்து பைசாவுக்கு அஞ்சு ரூவா குடுக்கே சரி, படம் விட்டுப் போகும்போது வாங்கிக்க”9 என்று சொல்லி மீதி ரூபாயை எடுத்து வைத்திருந்தான். படம் முடிந்து விட்டும் லைட் எல்லாமே அனைத்த பிறகும் கூட ஆள் வரவே இல்லை. அது ஐந்து ரூபாய் இருக்கும். அதை எடுத்து கொண்டு கடைத்தெருவிற்கு வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரிய கடையில் கூட கூட்டம் அதிகமாக தான் இருந்தன. ஆனால் வேலைக்கு போகும் மக்கள் தான் பாவம் கை, கால் எல்லாம் அயர்ந்து போகும் வரையில் நின்று கொண்டிருப்பார்கள்.

முடிவுரை
               
தீபாவளிப் பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் எண்ணெய் குளியில் என்ற பழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் மக்கள். கோவிலுக்கு செல்லுதல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளம், இனிப்பு வகைகளும், புத்தாடைகளும் நினைவுக்கு வருகின்றது. அதோடு சத்தம் அதிகமாக இருக்கும் வண்ண வெடிகள் வெடித்து மகிழ்வதும் ஒருபுறம் நடக்கிறது. இவ்வாறு கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சியின் குடும்பம் தீபாவளி திருநாளை நம் உறவினர்களோடும், நண்பர்களோடும், அனைத்து மக்களோடும் மற்றும் பெரிய கோயிலில் உள்ள மாக்காளை அசை போடுவதன் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பின்னோக்கி நடக்கும் நிகழ்வுகளையும் இக்கட்டுரையின் மூலம் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்
1. மாக்காளை – கலாப்ரியா., ப.21.

2. மேலது., ப.22.

3. மேலது., ப.22.

4. மேலது., ப.22.

5. மேலது., ப.22.

6. மேலது., ப.22.

7. மேலது., ப.23.

8. மேலது., ப.23.

9. மேலது., ப.23.

10. மேலது., ப.24.

11. மேலது., ப.24.

12. மேலது., ப.24.

13. மேலது., ப.24.

14. மேலது., ப.25.

துணைநூற் பட்டியல்
மாக்காளை – கலாப்ரியா 
சந்தியா பதிப்பகம்
 
புதிய எண் 77, 53 வது தெரு,
 
9-வது அவன்யூ,
அசோக் நகர்
  சென்னை 600083.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »