Saturday, May 31, 2025
Home Blog Page 8

சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்|ப.தனேஸ்வரி

சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்-ப.தனேஸ்வரி
ஆய்வுச்சுருக்கம்
               
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம் குடிமக்களைக் காப்பியத் தலைமையாகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலம்பில் ஐந்திணைகளின் அமைப்பு முறை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஆய்வுக்களமாக ஐந்திணை மக்களின் வாழ்வு எடுத்து ஆராயப்பட்டுள்ளது.
               
சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் குறிஞ்சி நில மக்களே. குறிஞ்சி நில மக்கள் முருகனைத் தெய்வாக வழிபட்டனர். அவர்கள் மலையில் கிடைக்கும் தானியங்கள், தேன் ஆகியவற்றை உண்டு வாழ்ந்ததையும் விலங்குகளை வேட்டையாடினர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. பிற மக்களைக் காட்டிலும் முல்லை மற்றும் மருத நில மக்கள் மேம்பட்ட வாழ்வு வாழ்ந்தனர் என்பதையும் நகரங்களில் அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்வு வாழ்ந்ததையும் மாதரி, ஐயை பாத்திரங்கள் மூலம் அறியப்படுகிறது. மக்கள் மன்னர் மீது கொண்டிருந்த அன்பும் மரியாதையும் மலைவாழ் குறவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
               
சங்ககாலத்தில் தோன்றிய திணைநில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலை அறியப்படுகிறது. குறவர்கள் அருவிகள், சுனைகள் நிறைந்த பகுதியில் வளமையான வாழ்வு வாழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்களை அரசனுக்கு இணையானவராகக் கருதிக் கொண்டனர். நகரத்தில் வசதியான வாழ்வு வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது. இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாக கால்நடைகள் இருந்துள்ளதும் அறியப்பட்டது.
               
முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல் சிறப்பாக நடைபெற்றது. ஏழு தழுவிய ஆடவனையே மகளிர் விரும்பியதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துவது வழக்கமாக இருந்துள்ளது. ஐந்திணை மக்களும் மன்னரிடத்தில் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்விற்காகப் பெண்களும் பணி செய்துள்ளனர். களை பறித்தல், நாற்று நடுதல், மீன் உலர வைத்தல், திணைப்புனம் காத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தமை ஆராயப்பட்டுள்ளது. பெண்கள் கள் விற்றனர் என்பதும் கள் அருந்தினர் என்பதும் கண்டறிப்பட்டுள்ளது. கணிகையர், பரத்தையர் பற்றிக் கூறும் போது பரத்தமையொழுக்கம் பெரும் குற்றமாகக் கருதப்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒழுக்கம் தவறிய ஆண் மகனை பரத்தர் என்ற சொல்லால் இளங்கோ குறித்துள்ளது ஆண் பெண் சமநிலையைக் குறிக்கிறது. ஐந்திணைகளையும் இலக்கண முறைமை பிறழாமல் இளங்கோ சிலம்பில் கையாண்டுள்ளார்.

முன்னுரை
               
தமிழர்கள் தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பகுத்துக் கொண்டனர். குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுவதும், முல்லை நிலத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதும், மருத நிலத்தில் வேளாண்மை செய்தும் நெய்தல் நிலத்தில் கடல் சார்ந்த மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்தும் வாழ்வது மக்களின் வாழ்வியல் முறைகளாகும்.
               
ஐந்திணை மக்களுள் முல்லை மற்றும் மருத நில மக்கள் அறிவாற்றலாலும் நாகரீக மேம்பாட்டாலும் மற்ற திணை மக்களிடமிருந்து மாறுபட்டு மதுரைப் புறஞ்சேரிப் பகுதியில் வாழ்ந்தனர். இது ‘பதியெழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” (15:15-6) என்பதால் அறியப்படுகிறது.  குன்றக்குறவை குறிஞ்சி நில மக்களின் வாழ்வியலையும் ‘ஆய்ச்சியர் குறவை” முல்லை நில மக்களின் வாழ்வியலையும், இந்திர விழாவூரெடுத்த காதை” மருத நில மக்களின் பண்பு நலனையும் ‘கானல் வரி” நெய்தல் நில மக்களையும் ‘வேட்டுவ வரி” பாலை நில மக்களின் இயல்புகளையும் விவரித்துள்ளன.

குறிஞ்சி நில மக்கள்
               
குறிஞ்சி நில மக்களின் வழிபடு தெய்வம் முருகன். இவர்கள் மலையில் கிடைக்கும் தேன், மூங்கிலரிசி, கிழங்குகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி ‘சிறுகுடி” என்பதை ‘மழை விளையாடுங் குன்று சேர் சிறுகுடி” (108) எனக் குறுந்தொகை காட்டும்.

குறிஞ்சி நிலத்தலைவன்
               
‘வெற்பன்” (24:12:2) ‘சிலம்பன்” (24:11:2) ‘குறவன்” (25:27) எனச் சிலப்பதிகாரத்தில் குறிஞ்சித் திணைத் தலைவனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் வழங்கப்பட்ட திணை நில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலையை அறிய முடிகிறது.

தொழில்
               
குறவர்களின் பொதுவான தொழில் தேனெடுத்தலும், வேட்டையாடுதலுமாகும். கொடிச்சியர் தினைப்புனம் காத்தனர்.

‘குருவி ஓம்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும்” (24:1:1-2)
குறிஞ்சி நில மக்கள் பொழுது போக்கியதை சிலம்பு குறிப்பிடுகிறது.
 குறவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை ‘குல மலை உறைதரு குறவர்” (24:17:2) என்ற அடிகளில் சிலம்பு குறித்துள்ளது. அருவியும் சோலையும் சூழ்ந்த மலைப்பகுதியில் குறவர்கள் வாழ்ந்தனர். அதனால் குறவர்கள் வாழ்வு வளமிக்கதாக இருந்தமை அறியப்படுகிறது.

குரவைக் கூத்து
               
கூத்து வகைகளில் ஒன்று குரவைக் கூத்து இது ஏழு முதல் ஒன்பது மகளிர் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவது குரவைக் கூத்து குன்றக் குறவை, ஆய்ச்சியர் குறவை என இரு வகைப்படும். குறிஞ்சிப் பெண்கள் முருகனுக்காக ஆடுவது குன்றக் குறவை ஆகும். குறவர்கள் குறிஞ்சிப் பண் பாடவும், இசைக் கருவிகளை இசைக்கவும் குரவைக் கூத்தாடவும் (24:7) வெறியாட்டு நிகழ்த்தவும் (14.11) அறிந்திருந்தனர். குறவைக் கூத்தின் ஒலியும், குறிஞ்சிப் பண்ணின் ஒலியும், திணைக் குற்றும் மங்கையரின் வள்ளைப் பாட்டின் ஒலியும் மலை வளம் காண வந்த செங்குட்டுவனை வரவேற்றதாக சிலம்பு குறிப்பிடுகிறது. இதனால் குறவர்களின் கலையுணர்வு புலனாகிறது.

                அரசனைக் காண வந்த குறவர்கள் ‘ஏழ்பிறப்பு அடியேம்” (25:56) என்று கூறுவதன் மூலம் தன் மன்னனிடம் கொண்ட அன்பும் பற்றும் வெளிப்படுகின்றன.
‘பல்நூறு ஆயிரத்தாண்டு வாழி” (25:63) எனவும், ‘ஊழி ஊழி வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்” (25:91:92) எனவும் வாழ்த்தியமை மலை மக்களின் வாழ்த்தும் பண்பைக் காட்டுகிறது.

முல்லை நில மக்கள்
               
சங்க காலத்தில் ஆயர்கள் தம்மை அரசனுக்கு இனையானவராகக் கருதிக் கொண்டனர்.
               
‘நட்ட குடியொடு தோன்றிய           
நல்லினத்து ஆயர்”
               
கலித்தொகைப் பாடல் இதற்குச் சான்றாகும். இவர்கள் ஆயர், கோவலர், இடையர் என்றும் வழங்கப்பட்டனர். இவர்கள் பிற்காலத்தில் இடம் பெயர்ந்து நகரங்களில் வாழ்ந்தனர் என்பதை மாதரி, ஐயை போன்ற ஆயர்களின் வாழ்வு மூலம் அறியப்படுகிறது. முல்லை நில மக்களின் வழிபடு தெய்வம் திருமால் வரகு, சாமை, முதிரை போன்றவை இவர்களின் உணவாகும். கால்நடைகளை மேய்த்து வாழும் இடையர்களுள் ஆடு மேய்ப்பவர் ‘புல்லினத்தார்” என்றும் மாடு மேய்ப்பவர் கோவினத்தார் என்றும் வழங்கப்பட்டனர். இவ்விரு ஆயரும் ‘ஏறு தழுவல்” போட்டியில் வென்று ஒரு குல மகளிரை மணம் புரிதற்குரியர் என்பதை முல்லைக் கலி தெளிவுறுத்தும்.

‘ஆ காத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை” (15:120-121)
               
என்ற வரிகள் ஆயரின் சிறப்பை உணர்த்தும் இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாகக் கால்நடைகள் இருந்தன. பெண்கள் மோர் விற்றுப் பொருள் சேர்த்துள்ளனர். ‘அளை விலை உணவின் ஆய்ச்சியர்” (16:3)  என்ற வரிகள் மூலம் ஆண் பெண் இருவரும் இணைந்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தியமை புலனாகிறது.

ஏறு தழுவுதல்              
சங்க காலத்தில் இருந்து வந்த ஏறு தழுவுதல் சிலம்பிலும் தொடர்ந்தது ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது. ஏறு தழுவிய வீரனையே ஆயர் மகள் மணந்துள்ளாள். பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் ஒரு காளையை வளர்ப்பாள். அக்காளையை அடக்கிய இளைஞனையே அப்பெண் மணம் புரிவாள் என்பதை சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை விளக்கும். (17:6-13) காரி எருத்தின் சினத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து சென்று அடக்கியவனை ஆயமகள் விரும்புவாள் என்பதை,
  
‘காரிகதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்           
வேரி மலர்க் கோதையாள்”  (17:6)
என்ற கொளு விளக்கும். காளைகளைப் பெண்கள் தொழுவில் வளர்த்தமையினை,
               
‘தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்           
எழுவர் இளங்கோதை யார்” (17:13:2-3)
               
என்ற வரிகள் சுட்டுகின்றன.

குரவைக் கூத்து
               
இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துதல் மக்களின் மரபாக இருந்துள்ளது. திருமாலுக்காக ஆடும் கூத்து ஆய்ச்சியர் குரவை எனப்படும். இது இசையும் கூத்தும் இணைந்து ஆடப்படும். கண்ணகியின் துயர் நீங்க ஆயமகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தினர்.

‘வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடாடிய
குரவையாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே”  (17:5:10-12)
என்ற வரிகளில் கண்ணகிக்குத் துன்பம் நேரப் போவதைக் கன்றுக்கு ஏற்படும் துயரென குறிப்பாக உணர்த்தி, அத்துயர் நீங்க குரவைக் கூத்தை நிகழ்த்தியது ஆய்ச்சியரின் உளப்பாங்கினை உணர்த்துகிறது.
ஆயரால் அடக்குவதற்குரிய ஏறுகள் காரி, வெள்ளை, சேய், குரால் என நிறத்தால் பெயர் பெற்றிருந்தன. காரியும் வெள்ளையும் மாயவன,; பலதேவன் ஆகிய கடவுள்களை ஒத்தமையால் ஆய்ச்சியர் குரவையுள் அவை இடம் பெற்றுள்ளன. ஆயர்கள் காடுகளில் ஆக்களை மேய்ப்பவர் அவர்கள் கோடாலி, சூட்டுக்கோல், கறவைக் கலங்கள், புல்லாங்குழல் ஆகியவைகளை உறியில் தொங்கவிட்டு உடன் வைத்திருந்தனர்.
               
‘குழல் வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு           
மழலைத் தும்பி வாய்வைத் தூத”
               
என்று சிலப்பதிகாரம் வண்டுடன் ஆயரை இணைத்துக் கூறுகிறது. ஆயர் குல தெய்வமாகிய மாயோனும் குழலிசை வல்லோன். அவன் குழலில் எழும் முல்லைப் பண்ணின் இசையை ஆய மகளிர் கேட்க விரும்பி யதனை,

‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன           
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்           
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழி”
               
என்னும் வரிகளில் அறியலாம். ஆயர்களிடையே இசையும் கூத்தும் ஆகிய கலைகள் சிறப்புற்றமைக்கு சிலம்பு சான்றாகும். குரவைக் கூத்து முடிவில் மன்னனையும் அவன் வெற்றி முரசையும் வாழ்த்தியதை அறிய முடிகிறது. இறைவனை ஆடிப் பாடி வணங்கும் முறைமை நாயன்மார் ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களில் நிலைத்த இடத்தைப் பெற்றது. இம்மரபு பழந்தமிழகத்திலேயே உண்டு என்பதற்கு ஆய்ச்சியர் குறவை சான்றாகும்.

மருத நில மக்கள்
               
நதிகளில் ஓடி வரும் நீரை வாய்க்கால்களின் வழியாக ஏரி, குளங்களில் நிரப்பி கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை பயிர் செய்யும் நீர் வளம் மிக்க  நிலம் மருதம் எனப்பட்டது. அங்கு வாழும் மக்கள் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்களின் வாழிடம் ஊர், பேரூர் எனப்பட்டது. அரிசி, பால் கரும்பு போன்ற உணவுகளை உண்டனர். ஏனைய மக்களை விட மருத நில மக்கள் நாகரீகத்தில் மேம்பட்டவர்கள். சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில்  சிறந்திருந்தது. மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்ததனை
               
‘பொருபடை தரூஉம் கொற்றம் உழவர்           
ஊன்று சால் மருங்கின், இன்றதன் பயனே”  (புறம் 35)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் வெளிப்படுத்தும் திருவள்ளுவர் உழவுக்குத் தனி அதிகாரம் அமைத்துள்ளார். உழுதொழிலால் உணவும் பிறவும் நிறையப் பெற்று ஓய்வும் வாய்க்கப் பெற்றவர் மருத நில மக்கள் இவர்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்ததைக் காண முடிகிறது.

ஆடவர் தொழில்
               
உழவர்கள் செந்நெற்கதிர் அறுகு, குவளை போன்ற மலர்களைக் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டி உழுதனர். நெற்பயிரை அறுத்துப் போரடிக்கும் போதும் கடா விடும் போதும் பாடல்களைப் பாடினர் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடல் பாடித் தொழில் செய்வது, தமிழகக் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளது. உழத்தியர் நெல் நாற்றுக்களைப் பிரித்து நடும் போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்பட்டது.

ஏர்மங்கலப்பாடல்
               
கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தியடிகள் ஆகிய மூவரும் புகார் நகரத்திலிருந்து மதுரையை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்கள் வழியில் கண்ட உழவர்களின் செயல்களை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியுள்ளார். அருகம்புல்லையும், குவளை மலர்களையும், நெற்கதிர்களையும் கலந்து கட்டிய மாலையை அணிந்து ஏரொடு நின்ற உழவர்கள் ஏர் மங்கலப் பாடலைப் பாடியுள்ளனர். (10:132-135) வயல்களில் வேலை செய்யும் உழவர்கள் பாடல்கள் பாடி உழைப்பின் கடுமையை எளிதாக்கிக் கொள்கின்றனர். கதிரை அரிந்து குவிக்கும் போதும், கடா விடும் போதும், நெல்லை முகந்து கொடுக்கும் போதும் முகவைப் பாட்டுப் பாடினர் (10:136-137)

பெண்களின் தொழில்
               
நாற்று நடுதல், களையெடுத்தல், விளை நிலங்களைக் காவல் செய்தல் போன்றன மருத நிலப் பெண்களின் தொழில்களாகும். தினைப் புனங்களில் பரண் கட்டித் தட்டை என்னும் கருவியால் ஒலியெழுப்பிக் கிளியை விரட்டினர் எனக் குறிஞ்சிப்பாட்டு (43-44 வரிகள்) குறிப்பிடுகிறது. நடவு நடும் பெண்கள் கள்ளுண்டு களித்துப் பாடிய குறிப்பு சிலம்பில் இடம் பெற்றுள்ளது (10:130-131) சங்க காலத்தில் பெண்கள் கள்ளுண்ட நிலை பிற்காலத்திலும் தொடர்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.

கணிகையர்
               
சங்க இலக்கியங்களில் கணிகை பற்றிய செய்தியோ சொல்லோ இடம் பெறவில்லை. பரிபாடல் ‘மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை” (16) என்று கூறுகிறது. ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய பெண் கணிகை எனப்பட்டாள் சிலப்பதிகாரத்தில் ‘கணிகையர்” (5:50) ‘காவற்கணிகையர் (5:50) ஆடற்கூத்தியர் (5:50) ஆடல் மகள் (8:109) பூவிலை மடந்தையர் (5:51) மங்கலத்தாசியர் (6:125) வம்பப்பரத்தை (10:219) கடைகழி மகளிர் (14:71) நாடக மடந்தையர் (22:142) பண் இயல் மடந்தையர் (22:139) என்று கணிகையர் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதில் எவ்விடத்திலும் மாதவியைப் பரத்தை என்ற பொருளில் இளங்கோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                பரத்தையர் இருந்த வீதி இருபெரு வீதி (14:167) எனப்பட்டது. தவம் செய்பவராயினும், காமவயப்பட்ட காமுகராயினும் கணிகையர் வீதியைக் கண்ணுற்றால் அங்கு தங்கிச் செல்லத் தூண்டும் வன்மையுடையவர் பரத்தையர் (14:160:165) பரத்தையர் பிறரைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையவர் என்பது புலனாகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஆடவர்கள் கணிகையரை நாடிச் சென்றதற்குக் காரணம் அவர்களின் அழகும் ஆடல் பாடல் போன்ற கலைகளுமே ஆகும். கோவலன் மாதவியை நாடிச் சென்றமைக்கு முதற் காரணம் கலையே என்பது மு.வ.வின் கருத்து (டாக்டர் மு.வரதராஜன் மாதவி ப.26)

பரத்தர்
               
குடும்ப அமைப்பு முறையில் ஓர் ஆணைக் கணவனாக மணந்து வாழ்நாள் முழுவதும் அவனை மட்டும் சார்ந்து வாழ்வது கற்புடை மகளிரின் நெறி. அவ்வாறன்றிப் பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டுள்ள பெண்களைக் குறிக்கப் ‘பரத்தை” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரத்தமைக் குற்றமிழைத்த ஆடவனை வம்பப் பரத்தர் (16:63) என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

நெய்தல் திணை மக்கள்
               
ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு அந்நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியன அமையும். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலம். எனவே நெய்தல் நிலத்தில் கடல் வணிகம் சிறப்புற்றிருந்தது. சேரி, பட்டினம், பாக்கம் ஆகியன நெய்தல் நில மக்களின் இருப்பிடங்களாகும். குடிசைப் பகுதிகள் நிறைந்த குடியிருப்புகள் பாக்கம் எனப்பட்டன. மாட மாளிகைகள் நிறைந்த குடியிருப்புப் பகுதி பட்டினம் எனப்பட்டன. மக்கள் கூடி வாழும் இடம் குடிகள் எனப்பட்டது.
               
கடலுக்குப் பரவை என்ற பெயருமுண்டு. எனவே கடல்வாழ் மக்கள் பரதவர் என்றழைக்கப்பட்டனர். இவர்களை பரதர், பரத்தியர், நுழையர், நுழைச்சியர் சேர்ப்பன் என்றும் வழங்குவர். ‘நுழைமகள்” என்னும் சொல் சிறுபாணாற்றுப் படையில் இடம் பெற்றுள்ளது. (சிறுபாண் 158) மழைக் கடவுளைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் வலை வீசி கடலில் மீன் பிடித்த செய்தியை,
               
‘வள்ளை நீக்கி வயமின் முகந்து           
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்”        (மதுரைக் காஞ்சி (255-56)

என்ற மதுரைக்காஞ்சி அடிகளால் அறியப்படுகிறது.

தொழில்
               
மீன் விலைப் பரதவர் என்றும் வெள்ளுப்புப் பகருநர் என்றும் சிலப்பதிகாரம் மொழியும் இவர்கள் தினம் தோறும் கடல் அலைகளுடன் போராடி வாழ்க்கை நடத்துபவர். அரசருக்கு இணையான செல்வத்தையுடைய வணிகரைப் பரதர்; எனக் குறிப்பிட்டுள்ளனர். (2:1-2) இவர்கள் அரசர் தெருவை அடுத்துப் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்தனர். கடல் தரும் பொருள்களால் பெரு வணிகம் செய்த செல்வந்தர் வணிகர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து சீரிய வாழ்க்கை வாழ்ந்தனர்.
                மீன் பிடித்தலுடன் வலை பின்னல், படகு கட்டுதல் போன்றவையும் பரதவரின் துணைத் தொழில்களாகும். நெய்தல் நில மக்களில் ஆடவரே தலைமைப் பொறுப்பேற்றனர். இவர்கள் மீன்களைக் கொல்லும் தொழிலினர் என்பதைக் ‘கொடுங்கண் வலையால் உயிர் கொள்வான் நுந்தை” (7.18)’ஓடும்  திமில் கொண்டு உயிர் கொல்வான் நின் ஐயர்” (7:19) என்ற பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளார் இளங்கோ

பெண்டிர் தொழில்
               
ஆடவர் பிடித்து வந்த மீன்களை உலர்த்தி விற்கும் வேலையைப் பெண்கள் செய்தனர். பவள உலக்கையால் முத்துக்களை அரியாகப் போட்டுக் குத்தியமை (7:20:1-2) பரதவரின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. மகளிர் கடற்கரையில் கட்டிய வீட்டை அழிக்கும் சங்குகள் மீது நெருப்தல் நில மகளிர் பொய்க்கோபம் கொண்டு குவளை மலரினை எறிந்து பொழுது போக்கினர்.

கலங்கள்
               
தமிழர்கள் கடலில் செல்வதற்கும் வெளிநாட்டு வணிகத்திற்கும் பெரிய நாவாய்களை பயன்படுத்தினர். உள்நாட்டு ஓடம் பறி எனப்பட்டது. குதிரை முக அம்பி, யானை முக அம்பி, சிங்க முக அம்பி என்பன சிலப்பதிகாரக் காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. (13:176-178) சிறிய அளவிலான மரக்கலங்கள் தோணி அம்பி என்றும் பெற்றன. மரத்தோணிகள், நாவாய்கள் மற்றும் ஓடங்களும் நீர்த்துறைகளைக் கடக்கப் பயன்பட்டன. கடல் வணிகத்திலும் உள்நாட்டு வணிகத்திலும் மிகுந்த பொருள் ஈட்டி பரதவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்ததை,
               
‘கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட           
குலத்தில் குன்றாக கொழுங்குடிச் செல்வர்”      (2:7-8)

என்ற  வரிகள் உணர்த்தும்
.
பாலை நில மக்கள்
               
தொல்காப்பியத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலமே குறிக்கப் பெற்றுள்ளது. தமிழகத்தில் பாலை என்ற நிலம் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் தட்ப வெப்ப வேறுபாடுகளால் வேறுபட்டு பாலை நிலமாக மாறியது.
               
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து           
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்து           
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்”
               
எனச் சிலப்பதிகாரம் பாலை நிலத்திற்கான இலக்கணத்தைச் சுட்டியுள்ளது. ‘கடுங்கதிர் வேனில”; (13:3) ‘கடுங்கதிர் திருகலின்” (12:1) என வேனிலின் வெம்மையும் கொடுமையும் சிலப்பதிகாரத்தில் வருணிக்கப் பெற்றுள்ளன. பாலைத் திணைக்குரிய மக்கள் எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், மீளி, விடலை, காளை எனவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

தொழில்
               
பாலை நிலம் கொடுமையான வெம்மையை உடையது அங்கு வாழும் எயினர் வழிச் செல்வோரை வருத்தும் உழவைச் செய்து பொருள் ஈட்டுவர். ஆதலால் இவர்கள் வில்லேருழவர் (11:2:10) எனப்பட்டனர். இவர்கள் நாகரிகமில்லாதவராக வில் ஏந்தித் திரிந்த செய்தியை சிலம்பு இயம்பும். ஆனால் பகைநாட்டு வெற்றிக்கு துணையாக இருந்துள்ளனர் என்பதை
‘வேற்றுப்புலம் போகி, நல்வெற்றம் கொடுத்துக்
கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்”
என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.

கலைச் சிறப்பு
               
இவர்கள் துடி போன்ற இசைக் கருவிகளை இசைக்கவும் அறிந்திருந்தனர். வேடுவர்கள் வழிப்போக்கர்களிடம் பொருளைக் கவர வரும் போது பறையைக் கொட்டினர். கொற்றவையை வணங்கும் போது இசைக் கருவிகளை இசைத்தனர்.

பெண்கள் தொழில்
               
பாலை நிலத்தில் பெண்களுக்கெனத் தனியாக தொழில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. வேட்டுவவரியில்  ‘கள் விளையாட்டி” (12:16) என்ற சொல் மூலம் பெண்கள் கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டமையை அறிய முடிகிறது.

வாழிடம்
               
எயினர்களின் வாழிடம் ஊர் மன்றத்தில் இருந்தது. எயினர்கள் கூடி வாழும் இயல்பை உடையவர்கள் அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை முள்வேலியிட்டுப் பாதுகாத்தமையை
               
‘இடுமுள் வேலி எயினர்” (12:10)
என்ற தொடர் மூலம் அறியலாம். ஐ வகை நிலங்களில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் தாம் நிலத் தன்மைக்கேற்ப தொழில் புரிந்ததையும் கூடி வாழ்ந்ததையும் சிலம்பு விரிவாகக் காட்டியுள்ளது.

முடிவுரை
               
பழந்தமிழர் நிலப் பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து அதற்கு இலக்கணங்களையும் வகுத்தனர். அவ்விலக்கண முறை மாறாமல் முதல், கரு, உரிப்பொருள்களை இளங்கோ காப்பியக்; கதையோடு இணைத்து இலக்கியச்சுவை குன்றாமல் இப்பெருங்காப்பியத்தைப் படைத்துள்ளது நினைத்து இன்புறத்தக்கது.

தொகுப்புரை
🌻 ஐவகை நில மக்களுள் குறிஞ்சி நில மக்களே கண்ணகியை தெய்வமாகப் போற்றுவதற்கு காரணமாய் இருந்தனர்.

🌻 முல்லை நிலத்தில் ஆயர்கள் ‘ஏறு தழுவுதல்” சிலப்பதிகாரக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது.

🌻 இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்தி மகிழ்ந்துள்ளனர்
.
🌻 மருத நில உழவர்கள் வேலைப் பளு தெரியாமல் இருக்க முகவைப் பாட்டைப் பாடி மகிழ்ச்சியுடன் தொழில் செய்துள்ளனர்.

🌻 பரத்தமை ஒழுக்கமுடைய ஆணைக் குறிக்க பரத்தர் என்ற சொல்லை இளங்கோ கையாண்டுள்ளார்.

🌻 நெய்தல் நில மக்கள் கடற்பகுதியை நம்பியே வாழ்ந்துள்ளனர்
.
பாலை நில மக்கள் துடியும் யாழும் இசைப்பதில் திறம் பெற்றிருந்தனர். ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப.தனேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோபி, தமிழ்நாடு, இந்தியா.

 

மயிலாடும்பாறை அருகே 12,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்காலம் மற்றும் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிப்பு

புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிப்பு
       தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12000 ஆண்டுகள் தொடர் வரலாற்று சிறப்பு கொண்ட இப்பகுதியை அகழாய்வு செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
               
           மயிலாடும்பாறை அருகே கிளியன் சட்டி மலை அடிவாரத்தில் மலைச்சாமி விஜயன் என்பவரின் காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலைச்சாமி என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் தலைமையில்  பள்ளி மாணவர்கள் பாரதிராஜா, தமிழ் ராஜன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த சர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டிகள், அறுப்பான்கள், கூர்முனை கருவிகள், துளைப்பான்கள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்க கோடளிகள், கலாயுதங்கள் தீட்டுக் கற்கள், அரவை கற்கள், கவண் கற்கள், குறியீடு உள்ள பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள், மண் பாத்திரங்கள் வைப்பதற்குரிய பானை தாங்கிகள், முதுமக்கள் தாலியின் உடைந்த பகுதிகள் போன்றவைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

                இதுகுறித்து ஆய்வாளர் செல்வம் குறுகையில் தமிழகத்தில் கடைய கற்காலமே நுண்கற் கருவி காலமாக கருதப்படுகிறது. பெரிய கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்த்து, சிறிய சிறிய கற்க கருவிகளையும் கற்சில்களையும் கருவிகளாக பயன்படுத்தி வேட்டையாடிய காலம் நுண்கற்காலமாகும். நுண்கற்கால மக்கள் பெரும்பாலும் மலை அடிவாரங்களிலும் திறந்தவெளி பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர். நுண்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 3000 வரையிலானது. நுண்கற்கால கருவிகள் அளவில் மிக சிறியவை பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும்போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்பு முனைகள், சிறு கத்திகள், சுரண்டிகளாக பயன்படுத்தியுள்ளனர்.
               
      இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கற்கருவிகள் கருங்கல்லால் ஆனது நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளனர். புதிய கற்காலம் கி.மு.3,000 முதல் கி.மு. 1,000 வரையிலானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கருவிகள், கையாலும் சக்கரத்தாளும் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். மூல வைகைப் பகுதியில் புதிய கற்கால கருவிகள் கிடைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நுண்கற்காலம், புதிய கற்கால கருவிகளோடு பெருங்கற்கால முதுமக்கள் தாலியும், ரோமானிய ரெளலட் மண்பாண்ட வகைகளும் இங்கு கிடைப்பதால் நுண்கற்கால முதல் வரலாற்று காலம் வரை பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்த வளமான பகுதியாக இப்பகுதி உள்ளது.
               
           நுண்கற்கால கருவிகளும், புதிய கற்கால கருவிகளும், அரவை கற்களும், பல்வகை மண் ஓடுகளும் இப்பகுதியில் பரவி கிடப்பதால், மக்களின் வசிப்பிடமாகவும் கல் ஆயுதங்கள் மண் சட்டிகள் செய்யும் தொழில் கூடங்களும்  இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கு கிடைக்கும் மண்ணோடு ஒன்றின் உட்புறத்தில் புள்ளிகளிடப்பட்ட முக்கோண முத்திரை இடப்பட்டு உள்ளது. பானையை உற்பத்தி செய்பவரின் அடையாளமாக இக் குறியீடு இருக்கலாம்.
               
         மேலும் இவ்விடத்திலிருந்து கிழக்கு ஒரு மைல் தொலைவில் கரடி புடவு என்ற தொல் மனித வாழ்விடம் உள்ளது. அங்கிருக்கும் பிரம்மாண்ட கல் ஒதுக்கில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு மேற்கு புறம் உள்ள வடக்கு கூட்டம் மலைப் பகுதியில் பெருங்கற்கால மக்கள் நினைவுச் சின்னங்களான கல்வட்டம் மற்றும் நெடுங்கல் இருக்கின்றன.
   
             கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் வாழ்ந்து வரும் மூல வைகை ஆற்றங்கரையான இப்பகுதியில் அகழாய்வு செய்தால் பழைய கற்கால கருவிகளும் கிடைத்திட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தொல்லியல் துறையும் இப்பகுதியில் ஆய்வு செய்து மூலவகையாற்றுப் பகுதியின் பலமையை வெளிக்கொணர வேண்டுமாய் கோரிக்கை வைக்கின்றோம் என கூறினார்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
வருசநாடு, ஆண்டிபட்டி (வ),
தேனி (மாவட்டம்) –  625579.

 

சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டுப் பொருட்கள்

சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டு பொருட்கள்
முன்னுரை
       இயற்கையைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது சங்க இலக்கியம் ஆகும். நிலம், நீர், காற்று, தட்பவெட்பநிலை என இயற்கை சார்ந்த  கூறுகளைப் பின்னணியாக வைத்து சங்க இலக்கிய பாடல்கள் அமைய பெற்றுள்ளன. இதன் மூலம் அக்கால மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. சங்ககால மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் நிலப்பகுதியில் சூழ்ந்திருந்த மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன ஆகியவற்றை மையம் இட்டு தங்களது வாழ்க்கையை வாழ்ந்தனர். என்பதைத் தொல்காப்பியர் தம் இலக்கணத்தில் கருப்பொருள்கள் என்று வரையறை செய்கிறார். சங்ககால மக்கள் வேட்டைக்கு அடுத்தநிலையில் விளையாட்டுக்கு அதிக இடம் கொடுத்துள்ளனர். தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாடி உள்ளனர். அவ்வகையில் அவர்கள் பயன்படுத்திய சூழலியல் சார் விளையாட்டுப் பொருள்களை இனங்கண்டு வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
சூழலியல் விளக்கம் 
       சூழலியல் என்பதை ஆங்கிலத்தில் (Ecology) எக்காலஜி என்ற சொல்லினால் குறித்தனர். சங்க இலக்கியப் பாடல்களில் சூழலியல் பதிவுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினையும்  மற்றும் இவை சூழ்நிலையோடு கொண்டுள்ள உறவுகளையும்  விளக்கும் அறிவியலின் கிளை தொழில் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றை உணர்த்தும் வகையில் சங்க இலக்கியச்  செய்யுள்கள் அமைந்துள்ளன .
சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்கள்
சங்ககால மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். விளையாட்டு என்பது உலகினைப் புரிந்து கொள்ளச் செய்தல், சிந்திக்கப் பயிற்சி அளித்தல், நற்பண்புகளைக் கற்றுத் தருதல் போன்ற கருதுகோள்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன  அவ்விளையாட்டால் நிகழும் நன்மைகள் என டபிள்யூ டி லால் விளையாட்டினால் ஏற்படும் நன்மைகளுக்கு  விளக்கம் தருகிறார்.
விளையாட்டு என்பதற்கு “பொழுது போக்கிற்காகவும் வேடிக்கைக்காகவும் விளையாடுவதே”  என கலைக்களஞ்சியம் விளையாட்டிற்கு விளக்கம் தருகிறது. அவ்வகையில் சங்க கால மக்கள் தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் விளையாடி உள்ளனர். பருவப் பெண்கள் தினைப்புனம் காவல் காக்கச் சென்ற இடம், புனலாடச் சென்ற  இடம் சோலைகள் கடற்கரைகள் எனப் பல இடங்களில் கவண்  , சுழற்சிக்காய், மண், நண்டு எனத் தங்கள் சூழல் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். ஆண்கள் ஏறுதழுவுதல், சடுகுடு, கவண்   விடுதல் போன்ற விளையாட்டுகளையும் சிறுவர்கள் பனைக்குறும்பு ஓட்டுதல், யானைத் தேர், மண் வீடு கட்டுதல் போன்றவைகளை மரங்கள், மண் போன்ற பொருட்களைக் கொண்டு   விளையாடி உள்ளனர். இதன் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் விளையாட்டுப் பொருட்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம்.
             அ)   மகளிர் விளையாட்டுப் பொருட்கள் 
            ஆ)  ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
            இ)   சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
அ) மகளிர் விளையாட்டுப் பொருட்கள்
             மகளிர் தங்கள் பொழுது போக்கிற்காகப் பலவகை விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். இல்லத்தில் உள்ளேயும், வீட்டின் முற்றத்திலும் தினைப்புனம் காவல் செல்லும் போதும், கடற்கரைக்குச் செல்லும் போதும் எனப் பல்வேறு சூழல்களில் பொழுதுபோக்கிற்காக மகளிர் விளையாடிய செய்திகளைச் சங்க அகநூல்கள் எடுத்துரைக்கின்றன. சங்ககால மகளிர் விளையாடிய சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்களாகப் புன்னைக்காய், கழற்சிக்காய், கவண்  போன்ற பொருட்கள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தினையை விதைப்பர். தினை வளரும் பொழுது அதனைக் காவல் காக்க வீட்டில் இருக்கும் மகளிர் செல்வது  வழக்கமாக இருந்துள்ளது.  பருவப் பெண்கள் தினைப்புனத்திற்குக் காவலுக்குச் செல்லும் போது கிளிகளை விரட்ட மரக்கம்பால் செய்யப் பெற்ற கவணை எடுத்துச் செல்வதனை நற்றிணைப் பாடல் புலப்படுத்துகிறது.
                    துய்த்தலைப்  புனிற்றுக்குரல் பால் வார்பு இறைஞ்சி
                    தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
                     துருக்கல் மிசைக்  குறுவன குழீஇச்
                     செவ்வாய் பாசினம் கவருமின்ற வாய்
                     தட்டையும் புடைத்தனை கவிணையுந்  தொடுக்கென” (நற்றிணை.206)
மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று கழங்காடல் ஆகும். இவ்விளையாட்டினைப் பெண்கள் மலைப்பகுதியின் கீழே கூட்டமாக அமர்ந்து, இயற்கையாக மரங்களில் இருந்து கிடைக்கும் காய்களைக் கொண்டு விளையாடி உள்ளனர் என்ற செய்தியினைப் பின்வரும் பாடல்களில் பதிவு செய்கின்றன.
                        கூரை தன் பனைக் குறுந்தொடி மகளிர்
                        மணல் ஆடு கழங்கின் அறை இசைத் தா அம்” (நற்றிணை.79)
                        “காதல் தந்த மை அறியாத உணர்ந்த
                        அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்” (நற்றிணை பாடல்.282)
கழற்சிக்காய்களைக் கொண்டு காய்மறை விளையாட்டினை விளையாடி உள்ளனர்.  இச்செய்தியை நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது. தலைவி, தோழியுடன் மணலில் விளையாடும் போது புன்னைமரக் காயை மணலில் புதைத்ததனை மறந்து இல்லம் திரும்புகின்றாள்.   தலைவியின் செயலால்  அந்தக் காயானது பிற்காலத்தில் புன்னை மரமாக வளர்ந்து விட்டது. இம்மரத்தினை தம் தமக்கையாகக் கருதுகின்றாள் தலைவி என்ற செய்தியை பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகிறன.
                       “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
                        மறந்தனம் துறந்த கால் முளை அகைய
                       அம்ம நாணுதும் நும்மோடு நகையே” (நற்றிணை.172)
ஆ) ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
          ஆடவர்களின் விளையாட்டுக்கள் பெரிதும் வீரமிக்கதாகவே இருந்துள்ளன. உடல் திறனை வெளிப்படுத்தும் ஏறுதழுவுதல், சடுகுடு போன்ற விளையாட்டுகளை விளையாடி உள்ளனர். மகளிரை விட ஆடவர்கள்  குறைவான விளையாட்டையே விளையாடியுள்ளனர். இவர்களும் தினைப்புனம் காக்கச் செல்லும் போதும் புனலாடச் செல்லும் போதும் கவண், தூம்பு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு விளையாடிய செய்திகள் சங்க அகநூல்களில் இடம்பெற்றள்ளன.  ஆடவர்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று தூம்பாகும்.  இது உயிர்த்தூம்பு என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. மரத்தால் ஆன கம்புகளில் சிறிய துளைகளைப் போட்டுப் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதையே  தூம்பு என்று நற்றிணை மற்றும் அகநானூற்றுப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.
                           நீர்வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் (நற்றிணை.6)
                           அம் தூம்பு வள்ளை ஆய்க்கொடி மயக்கி (அகம்.6)
ஆண்கள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களில் மற்றொன்று கவண்  ஆடவர்கள் தினைப்புனம் காவல் காக்க செல்லும் போது அங்கு வரும் யானைகளை விரட்ட இந்தக் கவணைப் பயன்படுத்தி உள்ளனர். அதே கவணால் கனிகளை அடித்துச் சென்ற செய்தி  அகப்பாடலில் குறிப்பிடத்தக்கது.
                        இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
                        புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும் (கலித்தொகை.23)
இ) சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
                 சங்ககாலச் சிறுவர்கள் சூழ்நிலைகள் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி விளையாடி உள்ளனர். வட்டுப்பனை, பனங்குறும்பை ஓட்டுதல், மரப்பொம்மை ஆகிய விளையாட்டுகளை இயற்கைப் பொருள்கள் மூலம் விளையாடிய செய்தியை சங்ககால நூல்கள் எடுத்துரைக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் ஒன்று வட்டாகும். அரக்கினால் செய்யப்பட்ட வட்டினை வைத்து குவித்து இருக்கும் நெல்லிக்காய்களை அடித்து விளையாடியுள்ளனர் இதனை
                                     “முளிந்த வோமை முதையலங் காட்டுப்
                                      பளிங்கத் தன்னப் பல்காய் நெல்லி
                                     மோட்டிரும் பாறை யீட்டு வட்டய்யே”       (அகம்.5)
என்று அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனங் குரும்புகளை கோல்களால்  வண்டி செய்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர் ஒரு கோளின் இருபுருமும் பனங் குறும்புகளை சக்கரம் போலப் பொருத்தி, அதனை ஒரு கோலின் மூலம் தள்ளி விளையாடிய செய்தியை கலித்தொகைப் பாடல்கள் பதிவு  செய்கின்றன.       
                       “பெருமடற் பெண்ணைப்  பிணர்த் தோட்டுப்  பைங்குருமைக்
                        குடவாய்க்  கொடிப்  பின்னல் வாங்கி தளமும்
                        பெருமணித் தேர்க் குறுமக்கள் நாப்பண்” (கலித்தொகை.83)
 செல்வந்தர்கள் வீட்டுச் சிறுவர்கள் முத்துக்கள் பதிக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட யானையைக்  கையிற்றினால் கட்டி மெல்ல மெல்ல இழுத்து விளையாடினர் என்பதைக் கலித்தொகை எடுத்து இயம்புகிறது.
                                 திகழ் ஒளிமுத்து அங்கு அரும்பாகத் தைய்ப் 
                                  பவழம் புனைந்து பருதி சுமப்ப
                                  கவளம் அறியா நின்கை பனைவேழம்
                                  புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி” (கலித்தொகை.80)
முடிவுரை
சங்கப் பாடல்களின் மூலம் சங்ககால மகளிர் விளையாட்டுப் பொருள்களாகக் கவண் கழற்சிக்காய், புன்னை மரக்காய் போன்ற சூழல் சார்ந்தப் பொருட்கள் இருந்துள்ளன.        ஆடவர்களின் விளையாட்டுப் பொருள்களாக தூம்பு, கவண் போன்றவையும் சிறுவர் விளையாட்டுப் பொருள்களாக வட்டு  பனங்குறும்பை மரத்தால் செய்யப்பட்டப் பொம்மைகள் போன்றவைகள் இருந்துள்ளன.
இதன் மூலம் சூழல் சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்கிக் கொண்டமையை அறிய முடிகின்றது.
சங்ககால மக்கள்  சூழல் சார்ந்த சிந்தனை உடையவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பது கட்டுரை வழி அறியலாகிறது.
சூழலியல் சார்ந்து  விழிப்புணர்வைச் சங்கப் பாடல்கள் வழி உணர முடிகிறது.
 
 அடிக் குறிப்புகள்
 கா. பஞ்சாங்கம், இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகள்- பக்கம் 32 
தனலட்சுமி,  குழந்தைப் பாடல்களில்  பாடு பொருள்களும் பாடு நெறியும் – பக்கம் 12
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 
முனைவர்.இரா.செங்கோட்டுவேல்,
உதவிப்பேராசிரியர்,

முதுகலைத்தமிழ் மற்றும் உயராய்வுத்துறை,

கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,

செட்டியார்பாளையம், முத்தூர் 638 105,
திருப்பூர் மாவட்டம்.

 

என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் | நா.மோகனசெல்வி

என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் நா.மோகனசெல்வி
ஆய்வுச்சுருக்கம்
                 
     தமிழரின் வாழ்வியலோடு ஒட்டிய நிகழ்வுகளை கொங்கு நாட்டின் பழக்க வழக்கங்கள் என்ற தன்னுடைய பார்வையில் பட்டதை உயிரோட்டமாக மண்மனம் மாறாமல் எடுத்து எழுத்துக்களில் படைத்தவர் நம் எழுத்தாளர். மனிதனின் வாழ்நாளை முழுமைப்படுத்திய இறப்பின் சடங்குகளை விருப்பு வெறுப்பு இன்றி உரத்த தொனியில் கூறுகின்றார். சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கையை ‘பீடி’ என்ற சிறுகதை வாயிலாக இறந்தவர்களின் உடலுக்கு செய்யும் மரியாதையையும், அவர்களின் நிறைவேறாத ஆசைகள் அவர்கள் வாழ்நாளில் விரும்பிய பொருட்களை அவர்களின் இறப்பு சடங்குகளில் வைத்து நிறைவேற்றப்படுகின்றது.
               
         அது போலவே ‘சிதைக்கோழி’ என்ற சிறுகதையில் ஒருவர் இறந்ததாக நினைத்து செய்யப்பட்ட இறப்பு சடங்குகளின் போது உயிர் பெற்று விட்டால் அவர்களின் வாழ்நாள் நீடிக்கப் பெற்று விட்ட காரணத்தினால் இறப்பு சடங்கை தவிர்க்க முடியாத நிலையில் ஒரு மனித உயிரின் மகத்துவத்திற்காக பாடையில் கோழியை கட்டி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் இருப்பதையும் தம் கதையில் நம்பிக்கையின் நிகழ்வாக காட்டியுள்ளார்
               
மரணம் பற்றிய நம்பிக்கைகள் என்ற கருத்தில் ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் அந்த வீட்டில் ஒருநல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அதை மெய்பிக்கும் விதமாக ‘தாமரை நாச்சியார்’ என்ற கதையில் அந்த பெண் இறந்து விடுகிறாள்.அது வரை அவர்கள் பட்ட கஷ்டங்களும் இன்னல்களும் குறைந்ததாக தாமரை நாச்சியாரின் இறப்பிற்க்கு பின்னர் வீட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் கைகூடி வருவதாகவும் அமைந்துள்ள இக்கதை ஒரு விதமான நம்பிக்கையை மெய்ப்பிப்பதாகவே அமைகின்றது.  
முன்னுரை
        
      சடங்குகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வியலோடு ஒட்டிய முக்கிய நிகழ்வாகவே அமைகின்றது. காலங்காலமாக முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களே பின்னாளில் சடங்குகளாக உருப்பெற்றது. இன்றைய காலகட்டத்தில் இளம்தலைமுறையினர் சம்பிரதாயம் என்ற ஒரு நிகழ்வை செய்து வருவதைக் காணலாம். பெரும்பாலும் சடங்குகள் முன்னோர்களின் வழித்தோன்றலாகவே அமைகின்றது.
                  
      தமிழரின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் முறைகள் பழக்க வழக்கங்கள் சமயங்கள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள்,விளையாட்டுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது. சடங்கு முறைகள் ஏற்பட்டுவிட்ட காலத்தில் இருந்தே மக்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக அமைவது அவர்களது நம்பிக்கை. அது இறை நம்பிக்கை,மறுபிறவி நம்பிக்கை, சொர்க்கம், நரகம் என்ற அடிப்படையில் சடங்குகள் பின்பற்றப்பட, சிறுகதைகளில் சடங்குகளுக்கு கொடு;க்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

சொர்க்கம் நரகம் பற்றி நம்பிக்கைகள்
                
      மனிதர்கள் இறப்பிற்கு பிறகு மறுபிறவி உண்டென்றும் அவைபல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.பீடி என்ற சிறுகதையில் இளங்கோ என்பவனின் சித்தி இறந்துவிடுகின்றாள், அடக்கம் செய்யும் நிகழ்வு குறித்து ஆசிரியர் சிறப்பாக தன் எழுத்துக்களின் கோர்ப்பில், சித்தப்பாவுக்கு குரல் தழுதழுத்தது விம்மி விம்மிஅழுதார.; இவன் முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு நடந்தபடி இருந்தான்.கொட்டுச்சத்தம் கேட்கத்தொடங்கியது.

     பெரியவெட்டியான் பங்காளிகளின் உதவியுடன் பிணத்தை குழியில் இறக்குகின்றார்.
    “மண்ணுதள்ளர எசமாங்கஆரு மளார்ன்னு வாங்க” அழைக்க, சித்தப்பாவை குழிமேட்டிற்கு கூட்டிப் போகின்றனர்.  மீண்டும் பெரியவெட்டியான்,
      
“சாமீ எசமாங்க மேலோகம் போராங்க நிராசையா போகக்கூடாதுங்க அவுங்களுக்கு புடுச்சது ஏதாச்சும் இருந்தா குழியில போடறது சாங்கீதமுங்க” என கூறுகின்றான். இதிலிருந்து ஒருவர் இறந்தால் அவர்களின் ஆசைகள் மதிக்கப்படுவதும் இறந்த பின் சடங்குகள் என்ற பெயரில் அவை நிறைவேற்றப்படுவதையும் அறிய முடிகின்றது.
               
இதை மனிதர்கள் இறப்பிற்குப் பிறகு உண்டென்றும் அவை பல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.
 
“ எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்  
பண்புடை மக்கட் பெறின்” -1 – குறள் (62)
என்ற குறளில் ஏழு பிறவிகளிலும் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை எடுத்துக்கூறுகின்றார்.
      
சித்திக்குப் பிடித்ததை எல்லாம் ஒரு சிறிய மஞ்சள் பையில் போட்டுக்கட்டி எடுத்து வந்து குழியில் போடுகின்றனர்.பெரியவெட்டியான் மீண்டும் சத்தமிடுகின்றார்,
 
“ வேற ஏதாச்சும் இருக்கா சாமீ…ஒன்னும் உட்டுப்போகலையே… ஏன்னா மேல போற உசிரு அதுக்கு ஆசைப் பட்டு இங்க அலைபாயக்கூடாது பாருங்க” என்று கூறிவிட்டு,
 “சாமீ…. மூணு கை மண்ணு அள்ளி உள்ள போடுங்க” என்கின்றார்.
          
இவ்வாறாக இறப்பின் போதுபின்பற்றப்படும் சடங்குகளில்இறந்தவர்களின் ஆசைகளை நிறைவேற்ற செய்யப்படும் செயல்கள் இறந்தவர்களின் ஆன்மாவிற்க்கு செய்யும் ஒரு மானசீகமான நிகழ்வாக அமைவதைப் பார்க்க முடிகின்றது.

இறப்பு சடங்குகள்
           
       தமிழர்களிடையே சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் ஏராளம் இவற்றில் சில அர்த்தமற்றதாக இருந்தாலும் முன்னோர் செய்து வந்த சடங்குகள் என்று பாரம்பரியத்தை விட்டுவிடாமல் செய்து வரப்படுகின்றன. சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் மறைந்துள்ள உண்மைகளைத் தேடிக்கொண்டு நாம் பயணிக்கின்றோம்.
          
       பிணம் தழுவியவன் என்ற கதையில், ஒருபெண் இறந்துவிடுகிறாள் அவள் மணமாகாமல் இறந்துவிடும் நிலையில் அவளுக்கு செய்யும் சடங்குகள் நம்பிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதை அறிய முடிகின்றது.

         அந்தக்காலத்தில் சாமி,பேய் பிசாசு,ஆவிகள் மேலே நிஜமான நம்பிக்கையிருந்தது. ஓர் உயிர் உடலைவிட்டுப் பிரியும் போது நிராசையோடு பிரிந்ததென்றால் அது ஆவி ரூபத்தில் ஊரையே சுற்றி அட்டூழியங்கள் செய்யும் என்பது நம்பிக்கை,அப்படி ஓர் உயிர் இறந்தால் அதன் நிராசையெல்லாம் தீர்த்துவைத்த பின்பு தான் அதன் உடலைத் தகனமோ,அடக்கமோ செய்வார்கள்.
       
      ஒருவன் நல்ல சாப்பாட்டின் மேல் ஆசைகொண்டு அவனுக்கு அது கிடைக்காமலேயே இறந்துவிட்டால் அவனை அடக்கம் செய்யும்பொழுது நல்ல சாப்பாட்டு வகைகளைப் படையல் வைத்துப் பூஜை செய்து பிணத்திற்கு ஊட்டிவிட்ட பின்புதான் அடக்கம் செய்வார்கள். இல்லையென்றால் அவன் அதிகம் ஆசைப்பட்ட பொருளை குழியில் போடுவார்கள் அப்படிச் செய்தால் நிராசையெல்லாம் நிறைவேறிவிட்டதாக அர்த்தமாகிறது.
       
   அது போல் ஒரு கன்னிப்பெண் இறந்துவிட்டால் அப்பெண்ணை கன்னி கழிக்காமல் அடக்கம் செய்யமாட்டார்கள். கன்னிப்பேய்க்கு விசை அதிகமாம் ஊரையே பிடித்து ஆட்டிவிடுமாம். சுடுகாட்டில் அது மாதிரி கன்னிப் பிணங்களைத் தழுவுவதற்கென்றே ஒரு கூட்டம் முறைமை வாங்கி எல்லா ஊர்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
                
     அதே மாதிரி கல்யாணமாகாத ஆண்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஆண்களின் ஒழுக்கத்தின் மேல் அப்போதைய மக்களுக்கு நம்பிக்கையில்லை போலும் அவர்களை யாரும் தழுவுவதில்லை என்ற ஒரு கருத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
               
    இறப்பு, இழப்பு போன்றவை நிகழும்போது மேற்கொள்ளப்படும் சடங்குகள் இறப்பு சடங்காகும் இதைத்தான் திருவள்ளுவர்,

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு”   ( குறள்.339)
               
      இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது, பிறப்பு என்பது உறங்கியவன் மீண்டும் விழிப்பது போன்றதே எனவே இறப்பு உண்டென்றால் பிறப்பு உண்டு என நம்பி இறந்தபிறகு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துக்க நிகழ்வுகளில் சடங்குகள்
                
      மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய சாவும் இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்றது. அவை இயற்கையான மரணம், தற்கொலை மரணம் இவற்றைத் தனது சில கதைகளில் ஆசிரியர் படைத்துள்ளார்.
  
               இதை ‘சிதைக்கோழி’ என்ற கதையில் இறந்த கிழவிக்கு செய்யப்படும் சடங்குகள் பற்றி தனது கதையில் கிராமத்தின் பின்னனியில் அமைந்த சில சடங்குகளை செய்வது குறித்து எதார்த்தமாக பல சம்பிரதாயங்களை படைத்துள்ளார்.
                 
“அம்பட்டையான் பாடைக்கோல் கொண்டு வந்துட்டான் சட்டுன்னு எடுக்குற காரியத்தை பாருங்க”
               
அதன் பின்பு செயல்கள் துரிதமாகவே நடந்தன. மகள் ஊருக்கு சொன்னதும் அன்று மதியம் தான் மகள் வந்து சேர்ந்தாள். மஞ்சள் கொட்டிப் போட்டதும் இவன் வெளியே வந்து சப்தமிட்டான்.
               
 “எடுக்கற பங்காளி எசமாங்க எல்லாம் வாங்க சாமியோவ்”
பங்காளிகள் என்று கூடயாரும் இல்லை மாமன் மைத்துனன் என கலந்தே நாலுபேர் வந்தார்கள்.தண்ணீர் சுற்றிபோட்டதும் சவத்தை தூக்கிக் கொண்டுவந்து பாடையில் கிடத்தினார்கள்.
               
      இவன் கால்கட்டு கட்டும்போது கிழவியின் கால்கள் சூடாக இருப்பதை உணர்ந்தான். இவன் சட்டென முகத்தைப் பார்த்தான். கிழவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் கழுத்து ஆரத்தை சரிசெய்வது போல நெஞ்சுக்கூட்டைத் தொட்டுப்பார்த்தான்;. நெஞ்சுக்கூடு ஏறி அமிழ்ந்து கொண்டிருந்தது. அவனுக்குப் புரிந்துவிட்டது கிழவிக்கு இன்னும் உயிர்இருக்கிறது. அவன் அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தைச் சொல்கிறான்.
               
     ஊர் எல்லை வரை ஒப்பாரிவைத்து சடலத்தை வழியனுப்ப இருந்த பெண்கள் கூட்டம் கிழவியை சுற்றிக்கொண்டனர். கிழவியை வீட்டில் கொண்டு போய் கோரைப்பாயில் கிடத்தினர். இதுவரை இந்தப்பகுதியில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்ததேயில்லை.  வாசலில் நின்றிருந்த பெரியவர்,
 “ஏம்பா கெழவி பொழச்சுகிச்சு வெறும்பாடையைக் கொண்டு போய் எங்க போடறது”,பாடையையாவது தூக்கி கடாசிறலா, சிதைக்கு அடுக்;கிறதுக்கு சுடுகாட்டுக்கு போனவெறக என்ன செய்யறது? 
               
     ஊரில் சில பெரியவர்கள் ஆதீஸ்வரர் கோயில் பெரிய குருக்களிடம் கேட்டுவருவதாகக் கிளம்பிப் போனார்கள். விஜயரங்கன்வலசு அருமைக்கார அய்யனிடம் பார்த்து வருவதாக சென்றனர்.அந்த அய்யனுக்கு இது மாதிரி ஐதீகங்கள் அத்துப்படியாக தெரியும்.
                  
       பெரிய குருக்களைப் பார்க்கப் போனவர்கள் வந்தனர். பெரிய குருக்களுக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியலை. அருமைக்கார அய்யன் சொன்னாரு ரெண்டு தலைக்கட்டுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காம். அப்போ… கோழியைக் கொண்டுபோய் சீர் செய்து அடக்கம் பண்ணினாங்களாம். ஆதனால நாமளும் அப்படியே செஞ்சுருவோம். நீ போயி ஒரு சேவலை வெலைக்கு வாங்கிட்டு வா. “சட்டுன்னு காரியம் ஆவட்டும் கிளம்பு என கூறுகின்றனர்.
               
     பின்னர் சேவலின் கால்களை சரட்டினால் பாடையில் சேர்த்து கட்டுகின்றனர்.
தோட்டிகள் விறகு அடிக்கி வைக்கப்பட்டிருந்த சிதையில் சேவலை வைத்து மூடி தீ மூட்டினர். இவ்வாறு இறப்புகளுக்கு ஒரு விதமான சடங்குகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

மரணம் பற்றிய நம்பிக்கை
                   
வீட்டினுள் மூத்த குழந்தை இறந்தால் வீட்டினுள் புதைக்கின்ற வழக்கம் இன்றைய காலங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றன. மரண வீட்டிற்குச் செல்பவர்கள் குளித்த பின்பு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் இருந்து வருகின்றது.
               
 மரண வீட்டில் நாள் முழுவதும் விளக்கு எரிய வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருந்து வருகின்றது. இறந்தவர்களுக்கு பறை கொட்டும் பழக்கமும் காணப்பட்டது. இதனை,
                 
“இறந்தவர் வீட்டில் சாவுமேளம் கொட்டும் முன்பு இறந்தவர்களை ஒரு நாள் இறக்கப் போகிறவர்கள் துணியால் மூடித் தோளில் ஏந்திக் கிளம்புவர்” (நாலடி.24)   என்றும்
               
“முற்பகலில் திருமணம் நடந்த வீட்டில் பிற்பகலில் சாவு தப்பட்டை ஒலிக்கவும் கூடும்”  ( நாலடி -23 )
                 
அது போலவே இறப்புக்கு செய்யப்படும் சடங்குகள் வழிவழியாக சமுதாயத்தில் வேறூன்றியே காணப்படுகின்றது. அது சங்ககால முதல் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றது.
                  
      சங்ககாலத்தில் நடுகல்கள் குறித்த சான்றுகள் பல கிடைக்கப்பெற்றுகின்றன. இறந்தவரது உடல்களின் மீது பதுக்கைச் சேர்த்துக் கல் எழுப்புதலும் உண்டு. நிரைமீட்டு மடிந்த வீரர்களுக்கு இவ்வாறு கல் எழுப்பும் வழக்கம் காணப்படுகின்றது. வீரன் இறந்த இடத்திலேயே கல் எழுப்பும் நிலை இருந்தமையை இது காட்டுகிறது.    புறநானூற்றில் நடுகல் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன.
         
“உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே         
மடஞ்சால் மஞ்ஞை துணிமயிர் சூட்டி         
படஞ்செய் பந்தர்க் கல்மிசையதுவே” (புறநானூறு)
முடிவுரை
               
நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மனித சமுதாயத்திலிருந்து எளிதாக பிரிக்க முடியாத ஒரு நிகழ்வே. சமுதாயத்தின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லாத மனிதனைக் காண்பது அரிதாகும். மேலும் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் நம்பிக்கைகளும் அதை ஒட்டிய சடங்குகளும் தனக்கென உள்ள தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

தொகுப்புரை
           
🌴 சொர்க்கம் நரகம் பற்றிய நம்பிக்கையில் மறுபிறவி உண்டென்று ஆராயப்படுகின்றது.            
🌴 பிணம்தழுவியவன் கதையில் தமிழர்களுக்கு இடுகாட்டு பழக்கங்கள் பின்னப்படுவதை ஆராயலாம்.
             
🌴 துக்கநிகழ்வுகள் நடந்த வீட்டில் செய்யப்படும் சம்பிரதாயங்கள் குறித்து விளக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒருவர் இறப்பின் போது பாடை கட்டுதல் மஞ்சள் கொட்டிப் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை அறியலாம்.
🌴மரணம் நடந்த வீட்டில் நல்ல விஷேசங்கள் அடுத்ததாக நடைபெறும் என்பதை தாமரை நாச்சி என்ற கதையின் மூலம் அறியப்படுகின்றது.

    ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்                   
நா.மோகனசெல்வி
    
முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,
     
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
               
கோபி, தமிழ்நாடு, இந்தியா

 

 

மலை மண்மக்கள் பளியர் |கவிதை |ம.ஆன்றிஷா

மலை மண்மக்கள் பளியர் - கவிதை - ம.ஆன்றிஷா

🍄 மலைமுகடுகளில்


தஞ்சம் புகுந்து


இயற்கையின் மடியில் தவழ்ந்த


இயற்கை காவலர்கள்..!


 

🍄பசித்த வயிறு


படிப்பில்லா வாழ்க்கை


அரிசி உணவிற்கு ஏங்கும்


விழிகள் கொண்ட


வறுமையின் குழந்தைகள்..!


 

🍄விரல் விட்டு உடைகளை


எண்ணும் உலகில்


கந்தல் கசக்கி கட்டிய


ஆதிக்குடிகள்..!
.


 

🍄குறுங்குறிஞ்சி பூக்கள் நடுவில்


மனம் போல் வாழாமல்


மனம் மரத்து வாழும்


இராஜபாளையம் மேற்கு


மலைத்தொடர் பழையர்குடி


அதுதான் பளியர்குடி..!


                                                                                                                

            கவிதையின் ஆசிரியர்                      

ம.ஆன்றிஷா

பதிவுஎண்-22113154022011

முனைவர் பட்ட ஆய்வாளர்

தெ.தி.இந்துக்கல்லூரி

நாகர்கோவில் -02.

 

 

மெய்வருத்தக் கூலி தரும் | முனைவர் ஈ.யுவராணி

மெய்வருத்தக் கூலி தரும் முனைவர் ஈ.யுவராணி
       அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு “இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது வானம் பொய்த்துவிடும்”.  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
 
     மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் (பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான். 
               
       அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர். நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று,  அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் “50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.
               
      அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான். இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது, மழை பெய்ய ஆரம்பித்தது, நம்பிக்கை ஜெயித்து விட்டது.
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”.
வெற்றி நிச்சயம்!
    
கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி

உதவிப்பேராசிரியர்

வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 

சென்னை.

 

இளந்தளிர்களின் வெற்றி| கவிதை|சு. ராஜஶ்ரீ

இளந்தளிர்களின் வெற்றி - சு. ராஜஶ்ரீ

📍 காலையில் உதித்த சூரியன்


சுட்டெரிக்கும் பகல் பொழுதில்


சிந்திக்க இயலாத நிமிடங்களில்


எத்தனை இனம்புரியாத உறவுகள்


 

📍 அத்தனை உறவையும் தாண்டி


தனக்கென கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள்


பம்பரமாய் சுழன் றோடினாள்


தன் கனவுகளைப் புதைத்துக் கொண்டு


 

📍 வாழ்க்கை மிகவும் சுகமானது!


அதுவே மீண்டும் சுமையானது!


சுமையும், சுகமும் சேர்ந்து வளமானது!


சுமையை சுகம் போல சிந்தித்தாள்!


 

📍 சக்கரங்களைக் காலில் சுழல விட்டாள்!


சக்கரத்தின் வேகம் அவளைச் சிந்திக்கச் செய்தது!

இன்னும் எத்தனை நாள் ஓடிக் கொண்டிருப்பேன்!


என் ஓட்டத்திற்கான விடுதலை தான் எந்நாளோ?

 

📍 இத்தனை ஓட்டமும், நடையும் தேவைதானோ?


என்று எண்ணியவாறே,  சென்றுக் கொண்டிருந்தாள்!


அவள் செல்ல வேண்டிய இடமும் வந்தது!


அவள் வந்து சேர்ந்த இடம் பள்ளிக்கூடம்…!


 


📍 சின்னஞ்சிறு இளந்தளிர்கள், வணக்கம் என்றுரைக்க!


வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு புன்னகையைத் தூவினாள்!


தன் மனகனவுகளைப்  புதைத்துக் கொண்டாள்!


அவ் இளந்தளிர்களின் வாழ்வை எண்ணியவாறே…!


 

 

📍 தனக்கு வந்த சோதனைகளைச் சாதனையாக்கினாள்!


அத்தளிர்களின் வெற்றிக்கு வழி வகுத்தாள்!


அவ் வெற்றியைத் தன் வெற்றியாக கொண்டாடினாள்!


தானும் வென்றதாக உணர்ந்தாள்…! வாழ்வும் மலர்ந்தது…!


 

கவிதையின் ஆசிரியர்

சு. ராஜஶ்ரீ, 

முழு நேர முனைவர் பட்ட  ஆய்வாளர்,

பதிவு எண்: 23113154022011,

தெ. தி. இந்துக் கல்லூரி,

நாகர்கோவில்.

 

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி | மு. ஆயிஷாம்மா

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி - மு. ஆயிஷாம்மா
குடும்பத்தில் புரட்சி
                   
ஈ. வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது.  அப்பெண் அம்மாய் அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.  மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு.  இத்திருமணம் 1909 ஆம் ஆண்டு நடைபெற்றது.  திருமணமான முப்பதாம் நாள், மாப்பிள்ளையைக் காலரா நோய் தாக்கிற்று.  அதனால் அவர் மாண்டார்.  ஒன்பது வயதுப் பெண் விதவையானாள்.
  அவ்விதவைக் குழந்தை அலறி அழுதது.
       
மாமா, நான் திருமணம் வேண்டுமென்று கேட்டேனா? என்னை ஏன் இக்கதிக்குத் தள்ளிவிட்டீர்கள் என்று புலம்பியது.  ஈ. வே. ராமசாமியின் நெஞ்சை நெகிழ்வித்தது. புரட்சி எண்ணம் மின்னிற்று. வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தார்.

        அந்த விதவைக் குழந்தை, பூப்படைந்தது.  அப்பெண்ணைத் திருமணஞ் செய்துகொள்ள, ஓர் இளைஞனை ஏற்பாடு செய்தார்.  யாருக்கும் தெரியாமல், தன் மைத்துனர், அப்பெண், நம்பிக்கையுள்ள ஓர் அம்மையார் ஆகிய மூவரையும் சிதம்பரத்திற்கு அனுப்பிவைத்தார்.  திருமணஞ் செய்துகொள்ள இசைந்த இளைஞனை அச்சகத்திற்குப் பொருள்கள் வாங்கும் சாக்கில், சென்னைக்கு அனுப்பி வைத்தார்.  அவர் சென்னையிலிருந்து சிதம்பரம் போய்ச் சேரவேண்டுமென்பது ஏற்பாடு.  ஈ. வே. ராமசாமியோ, அப்போது, ஈரோட்டிலேயே தங்கிவிட்டார்.  எனவே, யாரும் எவ்வித அய்யமும் கொள்ளவில்லை.
 
       முன்னேற்பாட்டின்படி, சிதம்பரத்தில் இருந்த, ஈ. வே. ராமசாமியின் நண்பர் இல்லத்தில் திருமணம் நடந்தது.  அந்த நண்பர், அங்கு, காவல் துறை ஆய்வாளராக இருந்தார்.  எனவே, பல பெரிய மனிதர்கள், அத்திருமணத்திற்கு வந்தார்கள்.
  மணமக்கள், ஈரோட்டுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்க ஈ. வே. ராமசாமி, புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார்.  ஊரில் இச்செய்தி, காட்டுத் தீப்போல் பரவிற்று.
       
ஈ. வே. ராமசாமியின் தந்தை, ‘பெரிய அவமானம்’ வந்துவிட்டதாக எண்ணி, தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.  ஈ. வே. ராவின் தாயார், சின்னத்தாய் அம்மாளோ, தூக்கில் தொங்கவே போய்விட்டார்கள்.  இந்நிலையில் உறவினர்கள் கூடினார்கள். மூன்று வீட்டாரையும், ஆறு ஆண்டுகளுக்குச் சாதியிலிருந்து தள்ளி வைப்பதாக ஒருமனதாக முடிவு எடுத்தார்கள்.  உறவினர்கள் ஈ. வே. ராமசாமியின் குடும்பத்தோடு தொடர்பினை விலக்கிக் கொண்டார்கள்.
       
தொடர்பு மீண்டும் வந்ததா? வந்தது.  எப்போது? ஈ. வே. ராமசாமி, ஈரோடு நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பேர்தல் முடிவு தெரிந்ததும் பல்வேறு சாதியாரும் ஈ. வே. ராமசாமியார் வீட்டிற்குச் சீர்வரிசைகளோடு வந்து பாராட்டினர்.
       
ஈ. வே. ராமசாமியின் உறவினர் இரண்டொருவர், ‘நம்ம சாதிக்காரர் நகராட்சித் தலைவராக உள்ளார்.  யார் யாரோ பாராட்டி விட்டு வரும்போது, நாம் மட்டும் சும்மாவிருக்கலாமா? ‘என்று எண்ணி, ஈ. வே. ராமசாமியைப் பாராட்ட வந்தார்கள்.  அவர்களுக்கு, ஈ.வே.ரா. வீட்டில் காப்பி கொடுத்தார்கள்.  அதை மறுக்காமல், உறவினர்கள் அருந்தினார்கள்.  அடுத்துப் பல உறவினர்களும் வந்து பாராட்டிவிட்டு, காப்பி அருந்திச் சென்றார்கள்.  இப்படித்தான் உறவினர் விலக்கம் ஒழிந்தது.
 
       பழமைப் பாறையாகிவிட்ட நம் சமுதாயத்தில், இச்சிறு மாற்றத்திற்காக எத்தனை தொல்லைகளைத் தாங்க வேண்டியிருந்தது பாருங்கள்.  அத்தகைய தியாகத்திற்குத் துணியாவிட்டால் சமுதாய மாற்றம் பெயரளவோடு நிற்குமென்பதை இளைஞர்களுக்கு நினைவூட்டல் என் கடமையாகிறது.
 
       விதவைகள் படும் துயரத்தைத் துடைக்கப் பாடுபட்ட பெரியார், தன் உறவினராகிய விதவைப் பெண்ணுக்குத் திருமணஞ்செய்து வைத்ததை மேலே கண்டோம்.  குழந்தை மணத்தை எதிர்த்து, பெரியாரின் தன்மான இயக்கம், தொடக்க காலம் முதல் குரல் எழுப்பியது, குழந்தை மணம் சட்த்தின் மூலம் தடை செய்யப்படும்வரை ஒவ்வொரு மாநாட்டிலும் குழந்தை மணத்தை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.

பெண்ணுரிமைக் கோரிக்கை
       
எடுத்துக்காட்டாக, செங்கற்பட்டு, முதல் சுயமரியாதை மாநாட்டில், ‘16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கே மணம் செய்விக்கப்பட வேண்டுமென்றும் பெண் விதவைகளுக்கு மறுமண உரிமை தேவையென்றும், பெண்களுக்கு மணவிலக்கு உரிமை வேண்டுமென்றும்’ செய்யப்பட்ட முடிவு அக் காலகட்டத்தில் புரட்சிகரமானது ஆகும்.
       
பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக, சொத்துரிமைகளும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும், பெண்களும் ஆண்களைப்போலவே, எந்தத் தொழிலையும் நடத்திவருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும் வாய்ப்பும் கொடுக்கப்படவேண்டுமென்றும், ‘பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக தொடக்கக் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும்’ முடிவு செய்யப்பட்டது.
   
    10-5-1930 இல் ஈரோடு சுயமரியாதைப் பொது மாநாட்டில் ஆண்களைப் போன்று, பெண்களுக்கும் சொத்து உரிமை, வாரிசு உரிமை ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக அவர்களை அதிகமாக நியமிக்கவேண்டும்மென்றும் முடிவு செய்யப்பட்டது.
  
       பொது மாநாட்டை ஒட்டி நடந்த மாதர் மாநாட்டிலும், சொத்தில் உரிமைப் பாத்தியம், குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம், தத்து எடுத்துக்கொள்ளல், இவைகளில் ஆண் பெண் இரு பாலாருக்கும் முழுச் சம உரிமை இருக்கவேண்டுமென்றும் முடிவு எடுத்தார்கள்.
       
ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு. எம். ஆர். ஜெயக்கர் திரு. ஈ. வே. ராமசாமியார் சட்டசபைகளைப்பற்றியோ அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளாதவர்.  அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தம் பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர். அவர் உங்கள் (சுயமரியாதை) இயக்கத்தில் இருக்கின்றார்.
       
‘உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களும், முகமதியர்களும் சேர்ந்திருப்பது சிறப்பாகும், மதத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்.
       விருதுநகர் மாநாட்டிலும் இதே சம உரிமை கோரி, பொது மாநாடு முடிவுசெய்தது.  விருதுநகரிலும் பெண்கள் சுயமரியாதை மாநாடு நடந்தது.  மாதர்களும் பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
      
இம்மாதர் மாநாட்டில், ‘வர்ணம் அல்லது சாதி ஆஸ்டல்கள் இருந்து வரும் வழக்கத்தை ஆட்சேபிப்பதுடன் அத்தகையவைகள் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கிராண்டு முதலானவைகள் கொடுப்பதை மறுக்க வேண்டுமென்று கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளுகிறது’ என்று முடிவு செய்ததை நினைவில் கொள்வோமாக.
       ‘ஆண்களும், பெண்களும் சாதி பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி கணவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அதற்கேற்றவாறு திருமணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டுமென்றும், திருமணச் சடங்குகள் சொற்பப் பணச் செலவில் நடத்தப் பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டன.’

தேவதாசி முறை
       
இவற்றோடு நின்றதா பெண்களுக்கு இழைத்த அநீதி? இல்லை.  விலைமாதர், சமதர்ம நாடுகளுக்கு அப்பால் காணும் கொடுமை| நெடுங்காலமாக இருந்து வரும் கொடுமை.  எந்த நாட்டிலும் இக்கொடுமை சமயத்தோடு தொடர்புபடுத்தப் படவில்லை.  எந்த நாட்டுக் கடவுள்களும் தங்களுக்குப் பணிபுரிய என்று, பெண்கள் அணியைத் தேடவில்லை.  இந்தியாவிலும் பிற சமயங்களில் இல்லாத அநீதி, கேவலம், அநாகரீகம், இந்து சமயத்தின்பேரால், இந்து வாழ்க்கை முளையின் இன்றியமையாத பகுதியாக.  இருந்து வந்தது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஒழுக்கத்தில் நாட்டமுடையவர்கள் காறி உமிழ்ந்து, போராடி ஒழித்திருக்க வேண்டிய இந்து ‘பேடன்ட்’ முறைக்குப் பெயர், பொட்டுக் கட்டுதல்.  அப்படியென்றால்?
       
புத்தி தெரியாப் பருவத்தே, சிறுமி ஒருத்தியை உள்;ர் அல்லது பக்கத்து ஊர்க் கோயிலுக்கு அடியாளாகப், பொட்டுக் கட்டி விடுவது.  சாமிக்குப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட அவள், பின்னர் யாரையும் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது.  கோயில் பணிவிடைகளில் ஈடுபடவேண்டும்.  இசை, நாட்டியம் முதலியவைகளைக் கற்று, கோயில் திருவிழாக் காலங்களில் பாடியும் ஆடியும் ஆண்டவன் தொண்டைச் செய்யவேண்டும்.  அதனால் சாமி மகிழ்ந்ததாக, மானுடன் எவனுக்கும் தகவல் இல்லை.
       
ஆனால் ஆசாமிகள் மகிழ்ந்ததாகக் கேள்வி.  பாடியவள் வீட்டுக்கு, ஆடியவள் வீட்டுக்குப் போவதில், பெரும் பண்ணையாருக்கும் சின்னப் பண்ணையாருக்கும் போட்டி மூண்டது தெரியும்.  துணிக் கடைக்காரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும் போட்டி பெருகியதை அறிவோம்.  இப்போட்டிகள், அவர்களுக்குள் தீராத பகையானதோடு நிற்காமல், உள்ளாட்சி அரசியல் சண்டைகளுக்கும் குழப்பங்களுக்கும் கவிழ்ப்புகளுக்கும் காரணமாயிருந்தது ஏராளம்.
      
தேவர்க்கு அடியார்களாகப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட பரிதாபத்திற்குரியவரிகள் யார்? ஆயிரம் சாதிகள் கொண்ட நம் சமுதாயத்தில், சாதிக்கு ஐந்து பேர்களையோ பத்துக் கன்னிகளையோ, இப்படிக் காணிக்கை ஆக்கிவிட்டார்களா? இல்லை.  இந்த அவமானத்திற்கு, இழிவிற்கு, கொடுமைக்கு, உட்பட வேண்டிய சாதி, தனியாக ஒன்று இருந்தது.  நாட்டிலுள்ள கயவர்களுக்கெல்லாம் போக்கிடமாக வேண்டிய மாதர்கள், தனிச்சாதியைச் சேர்ந்தவர்கள்.  இம்முறைப்படி, ஒவ்வோர் கோயிலுக்கும் சில பல பொட்டுக் கட்டிய, அதாவது, பொது மகளிர் இருந்தார்கள்.  இந்த இழிவைப்பற்றி எந்த ஒழுக்கசீலனும் பொங்கி எழவில்லை.  எந்த மகானும் ‘வேண்டுதல் வேண்டாமை இலாத நிர்மலனோடு இந்த அசிங்கத்தை இணைக்காதே’ என்று அருளுரை வழங்கவில்ல.  போராட்டம் நடத்தவில்லை.  ஏன்? நம் ஆண்கள் யோக்கியதை அவ்வளவு கெட்டுக்கிடந்தது போலும்! இப்போதைக்கில்லாவிட்டால், எப்போதைக்காகிலும் பயன்படாதா என்று எண்ணினார்களோ என்னவோ? சமய முத்திரையோடு புனிதத் தன்மைஎன்னும் வெண்குடையின்கீழ், பட்டிமாட்டு ஆண்களின் கொழுப்பிற்காக நாடு தழுவிய தேவதாசி முறை கொடிகட்டிப் பறந்தது.
       
மேற்கூறிய தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் செய்ய வேண்டுமென்ளு, திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு மசோதா ஒன்றை அனுப்பி வைத்தார்.  அம் மசோதாபற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு மாகாண அரசு பலரைக் கேட்டது.  ஈ. வே. ராமசாமியையும் கேட்டது.
       
ஈ. வே. ரா. விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.  அதில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு 1868 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.  1906, 1907 ஆம் ஆண்டுகளில் பல மாகாண அரசுகளும் இக்கொடுமையை ஒழிக்க முடிவெடுத்துக் காட்டியதைக் கோடிட்டுக் காட்டினார்.  1912 ஆம் ஆண்டு இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மாணிக்ஜி தாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியோர் இத்தகைய மசோதாவைக் கொண்டுவந்ததை நினைவுபடுத்தினார்.  இதைப் பொதுமக்கள் ஆதரித்ததால், இந்திய அரசே 1913 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசோதா கொண்டுவந்ததைக் குறிப்பிட்டுக் காட்டிய ஈ.வே.ரா. அதற்குப் பொதுவாக ஆதரவு இருந்தபோதிலும் சில சில்லறை விஷயங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளால் தடைப்பட்டது என்று நினைவூட்டினார்.  மீண்டும் 1922 ஆம் ஆண்டு டாக்டர் கோர் கொண்டு வந்த மசோதா 1924 ஆம் ஆண்டு சட்டமாக்கப் பட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார்.
       
தேவதாசி ஒழிப்பு முயற்சியின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டிவிட்டு, ‘இந்த நாள்பட்டகொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபமோ எதிர் அபிப்பிராயமோ இருக்க முடியாது.  தேவதாசி என்ற ஒரு வகுப்பு இருப்பது இந்து சமூகத்திற்கே இழிவானதும் அல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியாகும்.  ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண்ணுலகத்திற்கே ஏற்பட்டதாகுமாகையால், இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கவுரவத்ததையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாய் இருக்கின்றது.  அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ சமூகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்.  சிறு குழந்தைகளில் இருந்து துராச்சார வழிகளில் பயிற்றுவிப்பது ஜன சமூக விதிகளையே மீறியதாகம்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைத் தெரிவித்து, பொட்டுக் கட்டுவதைத் தடுக்கம் சட்டத்திற்கு நாடறிய ஆதரவு கொடுத்தார்கள்.
       
மேலும், கோயில்களில் கடவுள்கள் பெயரால், பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும் சமய சமூக முக்கிய ஸ்தாபனங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம், நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வருகின்றது.  அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது.  ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, குடிமக்களின் ஒழுக்கத்தையோ நலத்தையோ கோரின அரசாங்கமாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒரு கணநேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காது என்றே சொல்வோம்’ என்று சாடினார்.
       
திருமதி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் கொண்டுவந்த மசோதா, வைதிகர்களின் சலசலப்பைப் பொருட்படுத்தாது, சட்டமாக்கப்பட்டது.  அது செயல் முறைக்கும் வந்தது.  அதன் விளைவாக, இந்த அவமானம் ஒழிந்ததோடு, அநீதிக்கு ஆளான அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,இழிவிலிருந்து விடுபட்டு, கல்வி கற்று, மற்ற சமூகங்களைப்போன்ற நிலைக்கும் மதிப்பிற்கும் வளர்ந்து வந்துவிட்டார்கள்.

ஆண் பெண் ஏற்றத்தாழ்வு
       
சாதி ஏற்றத்தாழ்வை விட ஆழமாகவும் அகலமாகவும் பரவியிருப்பது ஆண் பெண் ஏற்றத்தாழ்வாகும்.  இருவகை ஏற்றத்தாழ்வும் விரைந்து ஒழிக்கப்படவேண்டும்.  சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பது காட்டாற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோலாகும்.  ஆண் பெண் சமத்துவத்தை அடைவது, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பாகும்.  எனவே, இதுபற்றிப் பெரியாரின் கருத்துகளைப் படிப்போம், சிந்திப்போம், கற்றபடி நிற்போமாக.
       
பெரியார், பெண்ணின் பெருமைபற்றி ‘பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கைகொண்டவர்கள்.  இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல், மற்றப்படி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன்.  அவர்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பயன் என்ன? எங்கே கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைவது.  அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் பெண் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெயருக்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.  ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள்?’ என்று கேட்டு, நமது சிந்தனையைத் தூண்டிவிட்டார்.
       
‘கற்பு என்பதைச் சுகாதாரத்தையும் சரீரத்தையும் பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன்.  என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை.  கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை’ என்பதிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.
        ‘பெண்களுக்குத்தான் கற்பு, ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கிற தத்துவமே தனியுடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது’ என்று சுட்டிக் காட்டினார்.

பெண் விடுதலை
       
பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலை. ஆதலால், ‘ஒரு பிறவிக்கு ஒரு நீதி’ என்கிற கற்புமுறை ஒழிக்கப்படவேண்டும்.  ஆண்கள் திருந்த வேண்டின் இத்தகைய அதிர்ச்சி மருத்துவம் தேவை.
        பெண்கள் விடுதலைபற்றிப் பெரியார் ஒளிவு மறைவின்றிப் பேசியும் எழுதியும் வந்தார்.  ‘பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவம் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.  எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத வர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால், இதன் உண்மை விளங்கும்.  அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது, என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’ என்று பெரியார் முழங்கினார்.  இது கசப்பாயிருப்பினும் உண்மைதானே.  உரிமை, பரிசுப் பொருள் அல்லவே!
       
ஆண்கள் பெண்களை நடத்தும் முறைபற்றி ‘பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.  ஆண்கள் பெண்களைப் பிறவிமுதல் சாகும்வரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள்’ என்று பெரியார் படம் பிடித்துக்காட்டி ‘தனி உரிமை உலகில், பெண்கள் உரிமை வேண்டுமென்பவர்கள், பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்கவைக்க வேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
        மேலும் அவர் கூறுவதாவது: ‘இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றப்படி மிருகம், பட்சி, பூச்சி முதலியவைகளில் வேறு எந்த உயிராவது, “ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்” என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா?
       
இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.  ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும் நகையாலும் தானே!
       
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை.  நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் ஆனவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களின் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளைப் பற்றியுமே சொல்லுகிறேன்.
        திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நகைக் கடைகள், துணிக்கடைகள், ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கம் அழகிய பொம்மைகள் உருவங்கள் போலல்லாமல் – நாட்டு மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால் –  மற்றப் பாமர மக்கள், தங்கப்பெட்டியின் உள்ளே, வெல்வெட் மெத்தைபோட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்!
       
‘நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை தமக்கையர் பிறந்தார்கள்.  இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள்.  அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகம்? இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு, சமூகத்திற்கு நட்டமா இல்லையா?
  ‘நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டுக் குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆளைவைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையை ஆட்கள் மூலம் வளர்க்க வேண்டும்.  சமையல் ஆட்கள் மூலம் செய்விக்க வேண்டும்.  பெண்கள் ஆண்களைப் போல் உயர்வேலை பார்க்க வேண்டும்.  பொம்மைகளாக நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகக் கூடாது என்கிறேன்.
        ‘ஆண்கள் பார்க்கம் எல்லா வேலைகளையும் தொண்டுகளையும் பெண்கள் பார்த்துச் செய்யமுடியம் என்பேன் ஆனால் நகைப்பித்து, துணி அலங்காரப் பித்து, அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பித்து ஒழியவேண்டும்.’ இப்படிப் பெரியார் பெண்கள் விடுதலைக்கு வழி காட்டினார்.
       
ஒருவருக்கோ ஒரு கூட்டத்துக்கோ விடுதலை கொடுக்கிறோம் என்றால் அவரையோ அக்கூட்டத்தையோ அதற்குத் தகுதியாக்குதல் முதற்கடமையாகிறது.  பாரதிதாசன் கேட்டது போல், ‘கண் திறக்காத போது, விடுதலை வாழ்வின் கதவு திறந்தால் பயன் ஏது?’
        களைய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டிய பெரியார், வளர்க்கவேண்டியவற்றைக் கோடிட்டுக்காட்டத் தவறவில்லை.  இதோ பெரியார் உரை:
        
‘ஒன்று, இரண்டு, மூன்று கூட எண்ணத் தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப் பாருங்கள்’

முடிவுரை
      
தனி உரிமை உலகில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்கவேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழல் கற்றுக்கொடுக்கவேண்டும் தாய் தகப்பன்மார்கள் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக்கொடுப்பது என்று இல்லாமல் அதுவாகவே பெண்ணாகவே பார்த்து, தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு – ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும்.  சுருக்கமாகச் சொன்னால், கன்னிதானம், கலியாணம் – தாரா முகூர்த்தம் என்கிற வார்த்தைகளே மறைந்து அகராதியில் கூட இல்லாமல் ஒழியவேண்டும்.  அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க இலாயக்குள்ளவர்கள் ஆவார்கள்.’ இப்படிப் பெரியார் கூறும்போது பலருக்குக் குமட்டும்| முகம் சுழிக்கும்.  இருப்பினும் சிந்தித்துப் பாருங்கள்.  இவ்வாறு பெரியார் உண்மை தத்துவத்தை சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சான்றெண் விளக்கம்

1.பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள், ப.சு.கௌதமன் பாரதி புத்தகாலயம்.

2.பெண் விடுதலை,   பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.

3.தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

4.திராவிடர் கழக வரலாறு, கி. வீரமணி, பெரியார் சுய மரியாதை பிரச்சால நிறுவன வெளியீடு

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு. ஆயிஷாம்மா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை
மு.சா.ச. வக்பு வாரியக் கல்லூரி 
மதுரை-20
மின்னஞ்சல்:  maaisamma@gmail.com
 

இரும்புப் பெண்|கவிதை| து. அனிதா

இரும்புப் பெண் - கவிதை - து. அனிதா

தாயின் கருவறையில் வந்துதித்து


மெல்ல தளிர் நடையிட்டு 


பூவுலகை பார்க்க எண்ணி


கல்வி எனும் பூஞ்சோலைக்குள் -புகுந்து


கண்களில் கனவை சுமந்து – கனவை


நனவாக்கி வெற்றி நடைபோடும் நீ


அறிவாயா ! நாளைய தலைமுறை


உன் வழிகாட்டலின் படி என்று !


புது சமூகத்தையே மாற்றும்


வல்லமைபடைத்த நீ   வலிமை கொண்ட       

இரும்புப்பெண்ணே !  


கவிதையின் ஆசிரியர்

து. அனிதா,


பதிவு எண் :23213154022022,


முழு நேரமுனைவர் பட்ட ஆய்வாளர்,


தமிழ் கலை ஆய்வகம்,


தெ.தி இந்து கல்லூரி,


நாகர்கோவில் -2

 

 

மாறிவரும் கொல்லிமலை |ஆய்வுக்கட்டுரை| முனைவர் க.கணியன்பூங்குன்றனார்

மாறிவரும் கொல்லிமலை - கணியன்பூங்குன்றனார்
ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும் அழகன் தான் என்பதை யாவரும் அறிந்த ஒன்றாகும். இத்தகு அழகு மிகுந்த தமிழக மலைகளில் ஒன்று கொல்லிமலை ஆகும். அக்கொல்லிமலை மனித சமுதாயத்திற்குப் பல வளங்களையும், நலன்களையும் கொடையாக இன்றளவும் கொடுத்துக்கொண்டு வருகிறது. சங்கால புலவர்களால் புகழப்பட்ட வல்வில் ஓரியின் கொல்லிமலையின் தனிதன்மைகளை  எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லிமலை
தமிழகத்தின் அரணாக மலைகள் விளங்குகின்றன. மேற்குதொடர்ச்சி மலைகள், கிழக்குத்தொடர்ச்சி மலைகள் எனப் பகுக்கப்படுகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வரிசையில் கொல்லிமலை, பச்சைமலை மற்றும் போதமலை போன்ற மலைகள் இடம்பெறுகின்றன. மேலும், சங்க காலத்தில் கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் எல்லையாக இருந்தது கொல்லிமலையாகும். இம்மலையின் சிறப்புப் பற்றி,

“தரை மீ என்னதெலா வளஞ்சொறிக்கொல்லி” 1 
“எனவும், அறப்பள்ளீசுவர சதகத்தில் சதுரகிரி” 2
எனவும் ,கூறப்பட்டுள்ளது. இதனால் கொங்கு நாட்டில் பல மலைகள் இருந்தாலும், அதிக வளம் மிக்க மலை கொல்லிமலையாகும் என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
               
கொல்லிமலையின் இயற்கை அழகு, ரசிக்கின்ற மன எண்ணம் கொண்டவர்களுக்கு விருந்தாகும். இவ்வகையில் கொல்லிமலை ஏறத்தாழ நான்காயிரம் அடி உயரமுடையது. இந்த மலை நாட்டிற்கு 1961-62 -ஆம் ஆண்டிலேயே சுமார் 29 லட்சம் ரூபாய் செலவில், 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் நீளம் 22.4 கிலோ மீட்டர் ஆகும். இம்மலையின் இயற்கை அழகினை காண, இந்தக் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் பயணிக்க தொடங்கும் முன், கொல்லியை ஆட்சி செய்த வல்வில் ஓரியின் வீரத்தை பற்றி

“வில்லோர் வாழ்க்கை விழித்தொடை மறவர்”3
               
என்று அம்மூவனார் பாடியுள்ள திறத்தால் அறிய முடிகிறது. சிமெண்ட்டில் அவருக்காக வைக்கப்பட்டுள்ள சிலையின் அழகு காட்சியையும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அன்றைய மனிதனின் மன எண்ணங்களையும், எண்ணிப் பார்த்துக் கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போது உண்டாகும் மன உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், மலைவாழ் விலங்கினங்களான யானை, புலி, கரடி, பன்றி, உடும்பு மற்றும் குரங்கு இனங்கள் வாழ்ந்த அழகு காட்சிகளைச் சங்கப் புலவர்களின் பாடல்கள் வழியே காண முடிகிறது.  அந்த அழகினை,

” அந்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமடமாற்கு வல்சியாகும்”
“களிறு சோர்வு மிருஞ்சென்னியமைந்து மலிந்த மழகளிறு”
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் ப கழி”6
உருவக் குருவின் நாள் மேல் ஆரும்மாரி எண்களின் மலைச்சுர நீள் இடை”7

என்ற வரிகளோடு நினைவில் நிற்க, இன்றைய சூழ்நிலையில் குரங்கினங்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் உலாவுகின்ற சூழல் உருவாகி உள்ளதைக் காணமுடிகிறது.

விலை பொருட்கள்
கொல்லிமலையின் விலை பொருட்களாக இருந்த பலா, தேன், மலை வாழை, அன்னாசி, கொய்யா முதலிய பல வகைகளும், கிழங்கு வகைகளும் இருந்தன. ஆனால் தற்போது, இவை மட்டுமின்றி மிளகு, சோம்பு, கடுகு, காபி மற்றும் நெல் வகைகளும் விளைவிக்கப்படுகின்றன. இவை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மை தருவனவாகும். ஆனால் சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புகளில் கொல்லிமலையின் பலாப்பழம் பற்றி, 

“சாரல் பலாவின் கொழுந்துனர் நறும்பும் 
இருங்கல் விட ரனை வீழ்ந்தெனை வெற்பில்
பொருந்தேன் இறாஅல் கீறும் நாடன்”8
               
என்ற கபிலரின் பாடல் வழியே உணரலாம். இச்சிறப்பினைப் பெற்ற பலா, அன்னாசி போன்ற பழம் பெருமை பெற்ற பொருட்களெல்லாம், தற்போது மலைவாழ் மக்களின் மன மாற்றம் காரணமாக, பணப்பயிர்களின் மோகம் அதிகரித்து, கொல்லிமலையின் பழம் சிறப்பானது மாறிவரும் சூழல் உருவாகி இருப்பதை அறியலாம்.

சோலைகளில் அழகு
கொல்லிமலைச் சாரலானது குறிஞ்சி நிலத்திற்குரிய முழு அழகையும் பெற்றிருந்தது என்பதனை,

“குருதி வேட்கை உருகிழு வயமான்
மரம் பயில் சோலை மலியப் பூழியர்”9
 
எனும் நற்றிணை பாடல் சிறப்பிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பணப்பயிர்களுக்காக சோலைகள் உருமாற்றம் பெற்று, மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நிலத்தின் வடிவத்தையே மாற்றியிருப்பதைக் காணமுடிகிறது.

மலர்களின் அழகும் நறுமணங்களும்
இனிய மணம் கமழுகின்ற 99- வகையான மலர்களைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பட்டியலிட்டு உள்ளமை நாம் அறிந்ததே.  அவ்வகையில் கொல்லிமலையில் நடந்து செல்லும் இடமெல்லாம் வகை வகையான பூக்களும், திசை தோறும் திரும்புகையில் பல்வகை நறுமணங்களும் வீசுவதை அவ்விடம் சென்றவரே உணர்வர் .இம்மலையின் மலர் வளம் பற்றி, 
“உரைசால் உயர்வ ரைக்கொல்லிக் குடவயின
அகல்இலைக் காந்தள் அலங்குலைப்பாய்ந்து ” 10
“பைஞ்சுனைக் குவளைத் தன் தழை”11
———————— வந்தே ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக் 
கார் மலர் கடுப்ப நாறும் “12
               
எனும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளமையால் இன்றளவும் அறிய முடிகிறது மலைவாழ் மக்களின் இன்றைய வளர் நிலையில் இயற்கையாக மலரும் மலர்கள் மட்டுமல்லாது, பல் வகை உயிரினங்களும், மலர்களும் வாசனை இல்லாத அழகு மலர்களும் காட்சிக்காக இடம் பெற்றுள்ளன, என்பதையும் அறியலாம்.

மூங்கில் அழகு
கொல்லிமலைச் சாரலில் கூட்டம் கூட்டமாக மூங்கில் செழுமையுடன் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சி அழகு நிறைந்ததாகும். அதனுடைய இன்றியமையா பயன்பாட்டைக் கொண்டே மலை மக்களின் வாழ்க்கை முறையும் செழுமையுற்று இருந்தது. வீடுகளுக்கானக் கட்டுமான பொருட்களுக்கும், மாட்டுத் தொழுவம், ஆட்டுப்பட்டி ஆகிய இடங்களில் புழங்கு பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் சிமெண்ட் மற்றும் கம்பிகளால் ஆன கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் புழங்கு பொருட்களுக்கு நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்த மூங்கில்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் நிரம்ப கிடைக்கின்றன என்பதை,
“கழை விரிந் தெழுந்தெரு மழை தவழ்  நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய “13
என்று பாடல் குறிப்பிடுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் இறங்கி வரும் நேரத்தில் இயற்கை அழகோடு மூங்கில் மரங்களின் காட்சியும், கண்ணிற்கு இனிய விருந்தாக அமைகிறது. இக்காட்சிகளை சங்ககாலப் புலவர் பெருமக்கள் தம் பாடல்களில் உவமை கொண்டு ஒப்புவித்த பாங்கு வியக்க வைக்கிறது.

மூலிகை வளம்
கொல்லிமலை மூலிகைகள் நிரம்பி இருக்கும் மலையாகும். சித்தர்கள் வாழும் மலை. பலவகையான நோய்களை நீக்கும் மலை. எல்லா வளமும் நிரம்பி இருக்கும் வரை இம்மலையை நாடிவரும் இரவலர்களும், இம்மலையிலேயே வசிப்பவர்களும் இங்கே நிறைந்திருக்கும் செவேர் பலாவின் தீஞ்சுளைகளைத் தேனில் தொட்டு உண்பர். வள்ளல் வல்வில் ஓரியின் உள்ளம் போல் இயற்கை அழகுடன் மூலிகை வளமும் உடல் நலமும் காக்கின்ற குளிர்ந்த சோலைகளும், நீர் வளமும், நில வளமும் மிக்கதாகவே இம்மலை உள்ளது. இச்சிறப்பினைப் பற்றி,

“கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா நீ 
முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்”14 
               
எனும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வரிகளால் நினைவு கூற முடிகிறது. அந்த அளவிற்கு மூலிகையின் சிறப்பைக் கொல்லிமலை  இன்றளவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றதை அறிந்துகொள்ள முடிகின்றது.

இயற்கைப்பாவை, கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன்
                கொல்லிமலையின் இயற்கை அழகு எவ்வகையில் வியக்கத்தக்கதோ, அதுபோல் அங்கே அமைந்திருக்கின்ற தெய்வங்களில் ஒன்றான கொல்லிப் பாவை பற்றிய செய்திகளும், அறிஞர்கள் இடையே பல கருத்து வேறுபாடுகளுடன் நிலவுகிறது.
 
1.இயற்கையாகவே கொல்லிமலையில்அமைந்திருக்கிறது.
2. தெய்வத்தால் உண்டாக்கப்பட்டது.
3.கொல்லிப்பாவை இயங்கும் தன்மை உடையது. 
4. கொல்லிப்பாவையைப் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.
5. சமகால மக்கள் கொல்லிமலையில் இருக்கின்ற காளி சிலையாகிய எட்டுக்கை அம்மனை கொல்லிப்பாவை என்கின்றனர். 
6. அருவிக்கு அருகில் கொல்லிப் பாவை இருக்கலாம்.
               
இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பொது மக்களிடையேயும் நிலவி வருகின்றன. இன்றைய சூழலில் எட்டுக்கை அம்மனே கொல்லிப்பாவை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இருப்பினும் குறுந்தொகையில் கபிலர்,
 
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 
பாவையின் மடவந்தனளே”15
               
என்ற அடிகள் இடம் பெற்று இருப்பதாலும், சங்க இலக்கியப் புலவர் பலரின் பாடல்களில் பாவை பற்றிய செய்திகள் இருப்பதாலும், அவை உண்மையானவை என்பதாலும், சங்க இலக்கியப் பாடல்கள் பொய் கலவாதன எனும் கூற்றாலும்  இச்செய்தியை நம்ப முடிகிறது.
 
கொல்லிமலையை பற்றி பல செய்திகள், பல தலைப்புகளால் ஆராயப்பட்டாலும் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அக்கால சூழலையும், இயற்கை அழகினையும் உணர முடிகிறது. அதுபோலவே இன்றைய சூழலில் கொல்லிமலைக்கு நேரில் சென்றால் அங்குச் சுட்டிக்காட்டப்பட்ட விலங்கினங்களில் குரங்கினங்கள் மட்டுமே பெரிதும் உள்ளன. அவை மகிழ்ந்தும் காண்போரை மகிழ்வித்தும் அழகியகாட்சியுடன் இயற்கை அழகை மெருகேற்றுகின்றன. கொல்லிமலையானது வரலாறு போற்றும் பெருமையுடனும், இயற்கை வளத்துடனும், உடல் நலம் காக்கும் மூலிகைகளுடனும், இயற்கைச் சூழலோடு அறிவியலும் இணைந்து முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு அங்கு வாழும் மக்கள் வளம் குறையாமலும், நாகரீகத்துடன் வளர்கின்ற சூழலும், மாறிவரும் மாற்றங்களும் மாண்புடையதாக காணப்படுகிறது. இம்மலையானது வள்ளல் வல்வில் ஓரியின் கொடை கொடுத்தல் பண்பு போலவே இன்றளவும் செல்வோருக்கெல்லாம் கொடையாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்
1. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் – எஸ்.என் பி.குருக்கள்

2. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர்-.இ.செல்வராசு .மா.ஆ.
 
3. அகம்-பா.35 ‌-அம்மூவனார் 

4. நற்றிணை –பா.6- பரணர்

5. புறம்-பா.22- குறுங் கோழியூர்க்கிழார்

6. புறம் –பா. 152 வன்பரணர்

7. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

8. ஐங்குறுநூறு –பா.214- கபிலர்.

9. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

10. நற்றிணை –பா.185- பெயர் தெரியவில்லை.

11. குறுந்தொகை –பா.342- சுந்தரத்தனார்.

12. அகநானூறு –பா.208- பரணர்.

13. பதிற்றுப்பத்து –பா.73- அரிசில் கிழார் .

14. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் வே.குருசாமி

15. குறுந்தொகை –பா.100- கபிலர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.கணியன்பூங்குன்றனார்
தமிழ்த்துறைத்தலைவர்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

இராசிபுரம்.

 

அம்மா மரம்|கவிதை|ச. குமரேசன்

அம்மா மரம் கவிதை ச. குமரேசன்
🎯 நாட்டு நடப்புகள்
 
நல்லவை கெட்டவை

அன்றாட அழுத்தங்கள்
 
அரைகுறை தூக்கம்
 
அனைத்தையும் பகிர்ந்திட
 
அன்பை அள்ளித்தர
 
அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!

 
🎯 அம்மாவின் குரல் கேட்டால்

அழுத்தமான மனது

அரை சதமாய் குறையுமென்ற
 
ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை

அறிய முடிந்தது..!

 
🎯 அரக்கப் பறக்க ஓடி

அலுவலகப் பணிகள்

அயராது செய்து முடிப்போம்..!
 
 
🎯 வாரத்தில் ஒரு நாள்

வாகாய் ஓய்வெடுக்க
 
வந்தமரும் இடம் எது?
 
 
🎯 அம்மாவுக்காக மனது

அழுது ஏங்கும்!
 
அப்போது
 
அவர் நட்ட செடி ஒன்று
 
ஆகாயமளவு மரமாய் வளர்ந்து

மனதை ஆற்றும்..!

 
🎯 அதில்,

பகலெல்லாம்

பறவை இனங்கள்

பல பல வந்து

இன்னிசை பாடி

இதமாய் இளைப்பாறும்..!
 
 
🎯 அம்மாவின்

ஒரு குரல் கேட்க

ஏங்கிய எனக்கு

அவர் பல குரலால்

பாடல் இசைத்துப்

பாரத்தைப் பாதியாய்

குறைக்கிறார் இன்றளவும்..!

கவிதையின் ஆசிரியர்
ச. குமரேசன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

இராசிபுரம்.

 

கடவுளின் தேசம்!  கல்லறையின் வசம்! |கவிதை|ப.பிரபாகரன்

கடவுளின் தேசம்! கல்லறையின் வசம்! கவிதை ப பிரபாகரன்
🎯 பொழுது விடியும் முன்னே

விழித்தெழுவோம் என்றே

உறங்கினோம் !

 
🎯 விடிந்தும் எழவில்லை

விழித்தெழும் நிலையிலும்

நாங்கள் இல்லை!

 
🎯 நிலச்சரிவே!

நும்பசிக்கு உணவாகாது

தப்பினோம் பலமுறை!

 
🎯 காட்டாற்று வெள்ளமே!

கருணையில்லையோ நுமக்கு!

அபாயம் அறியும் முன்னே

ஏப்பமிட்டுச் சென்றாயே!

 
🎯இறந்தபின் புதைக்கும் வழக்கம்

எங்குமுண்டே! இதுபோல்..

உயிரோடு புதைக்கப்படுவோமென

ஒருபோதும் நினைத்ததில்லையே!
 
🎯நேற்று நாங்கள் உறங்கியது

எங்கள் வீட்டு மெத்தையில்தான்!

இன்று புதைந்து கிடந்ததோ

பன்னிரண்டு கிலோமீட்டருக்கு

அப்பால்!

 
🎯அட கடவுளின் தேசமே

இனி கல்லறையின் வசமா?
 
🎯நாயைக் கொண்டு கண்டுபிடித்தீர்

இறுதிக்கடன் செய்ய உதவினீர்
நன்றிகள் நாயகர்களே!!

 
ப.பிரபாகரன்

த/பெ பி.பன்னீர் செல்வம்,

எண்: 3-92, தெற்குத் தெரு,
பல்லபுரம்,
 இலால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

அஞ்சலக எண்  – 621712;

கைபேசி – 9843912987

email: karpraba@gmail.com

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »