Saturday, April 4, 2026
Home Blog Page 7

Ilakkiyangalil Panaimarathin Payangal|Dr.S.Ilavarasi

Ilakkiyangalil Panaimarathin Payangal -Dr.S.Ilavarasi
Abstract
       In literature, the palm tree is considered especially significant to the Tamils. Among useful trees, the palm is unique in that every part of it, from tip to root, serves a purpose. It has the ability to survive even in dry lands. It is also the state tree of Tamil Nadu. All its parts provide a wide range of benefits, such as food, shelter, decorative items, and tools. Its leaves, fruit, flowers, wood, and seeds are all useful to people as sources of food and medicine. From the Sangam age to the present day, the palm tree has played an important role in human life. Its distinctiveness compared to other trees can be seen in the usefulness of each of its parts. Whether it is planted or cut down, it always transforms into something beneficial for people.


 

“இலக்கியங்களில் பனைமரத்தின் பயன்கள்”

ஆய்வுச்சுருக்கம்
        இலக்கியத்தில்பனை மரத்தின் பயன்கள் தமிழர்களுக்கு சிறப்பு வாய்ந்தவனாக அமைந்துள்ளது. நுனி முதல் அடி வரை அனைத்து பாகங்களும் பயனுள்ள மரங்களில் பனை மரமும் ஒன்று. வறண்ட நிலத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இவை அனைத்து பாகங்களும் உணவு, உறைவிடம், அழகிய பொருட்கள் மற்றும் கருவிகள் என பல்வேறு பயன்கள் தரக்கூடியவையாக அமைந்துள்ளது. இதன் இலை, காய், பூ, மரம், விதை போன்ற அனைத்து பொருள்களும் மக்களுக்கு உணவு பொருட்களாகவும், மருந்து பொருட்களாகவும் பயனளிக்கின்றது. சங்க காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களின் பயன்பாட்டில் பனைமரம் ஒரு முக்கியப் பங்கினை வைக்கின்றது. மற்ற மரங்களின் இல்லாத சிறப்பு பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் உணரலாம். அதை விதைத்தால் அதை அழித்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளப் பொருளாகமாறிவிடும் தன்மையுடையது

முன்னுரை
     இயற்கை படைப்பில் தனித்துவம் வாய்ந்த மரமாகப் பனைமரம் கருதப்படுகிறது தமிழர்களுக்கு மிகுந்த பயன்களைத் தரக்கூடியவை பனை மரத்தின் இருக்கக்கூடிய பொருள்கள் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்ற உணவு சார்ந்த பொருட்களும் ஓலைச்சுவடி,வீட்டு உபயோகப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் மற்றும் இசைக்கருவிகள் ஆகிய பயன்பாடுகளில் பனை மரங்கள் தங்களுடைய பயன்களை தருகின்றது. தமிழர்களின் கலாச்சார அடையாளம் மற்றும் கற்பகத்தரு என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த மரமாகும்.

விதைப்பு முறைகள்
       வறட்சியானப் பகுதியான தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நன்கு காய்ந்த பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று வளரும். ஒன்பது முதல் பத்து ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். நீர்ப்பாசன வசதி இருந்தால் விரைவில் வளர்ந்து விடும் 120 ஆண்டுகள் அடையாளம் காண முடியும்.

ஆண், பெண்பனை
    பனை மரங்களில் ஆண் பனையை அழகுபணை என்றும் பெண் பனையைப் பருவப்பனை என்றும் குறிப்பிடுவர்.பாளை மட்டும் வெளியே நீட்டி கொண்டிருக்கும் பனை ஆண் பனை இதில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பதநீர் அதிகம் கிடைக்கும். ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு புது ஓலைகள் வளரும். 6 முதல் 12 பாளைகள் தள்ளும் 100 முதல் 120 பனம்பழங்கள் காய்க்கும் 4 பழைய ஓலைகள் கீழே விழும்.இதனைநாலடியார்பாடலில்
       
“நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க       
படுபனை யென்னர் பலர்நச்ச வாழ்வார்;       
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்       
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.ஒறுப்பின்யான்ஒறுப்பது”1
     பனை மரத்தை விரும்பி வளர்த்துள்ளனர்.பெண் பனையே பெரிதும் போற்றி வளர்த்தனர். ஆண் பனையும் மக்கள் புழக்கம் இல்லாத இடங்களில் மட்டுமே இருக்கும். பெண் பணியானது இருக்கும் இடத்தில் அதைச் சுற்றிலும் திண்ணை போன்ற கட்டைய கட்டி வைப்பார்கள்.

மடலேறும் முறை
          சங்ககாலத்தில் காதலில் தோல்வியுற்ற தலைவன் பனைமடலால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி ஊர்வலம் வரும் முறையே மடல் ஏறும் முறையாகும். சங்க இலக்கியத்தின் வழக்கமாக மடலேறும் முறை இருந்தது.இவை தொல்காப்பியத்தில் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பார்ப்பதும் பெருந்துணையில் அடக்குவர் எனவும்,
       
“ஏறியமடல்திறம்இளமை தீர்த்திறம்       
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்       
மிக்க காமத்து மிடலொடு தொகை இச்       
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”2
       பொருப்பாவில் பெருந்துணை காமத்தின் நிலையே விளக்குகின்றது. பனை மட்டையை விலங்கு போல் செய்து அதனை குதிரை போல் செய்து தலைவனை அதில் மேல் ஏறி வருதலால் மடல் ஏறுதல் என பெயர் பெற்றது. குதிரை செய்வதற்காக பனை மரத்தை பயன்படுத்தினர்.

பனையின் பயன்கள்
      சங்க இலக்கியத்தில் போந்தை என்ற சொல் பயன்படுத்தின சேர மன்னர்களின் குல சின்னம்ஆகும் சேர மன்னன் பனைப்பூ மாலையை அணிந்திருந்தான். தமிழரின் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கின. பனை, பெண்ணை,போந்தை, மடலை, வேனில் போன்ற பெயர்களில் பனைமரம்இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனை மரத்தின் ஒவ்வொரு பகுதிகளும் நமக்கு பயனுள்ளவை. அவற்றில் பனை ஓலை,பதநீர், நுங்கு,பனம் பூ,கள், பனம்பழம்,பனங்கிழங்கு, மரத்தின் பகுதிகள் வீட்டு உபயோகப்பொருள் செய்வதற்கு, அலங்காரப் பொருட்கள், கூரை மேல் பனை வீடுகளாகவும் அடுக்கடுக்காகத்தன்னுடையப் பயன்களை மக்களுக்கு கொடுக்கும் ஒரு காவல் தெய்வமாக பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதன்பயனை வள்ளுவர்
       
“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்       
கொள்வர் பயன் தெரிவார். “3
         திணை அளவு உதவி செய்தாலும் அதனை பனைமரம் போல்பெறியதாக எண்ணம் வேண்டும் என்பதே உணர்த்தி உள்ளார்.
சங்ககாலத்தில் ஓலைச்சுவடிகளின் பயன்பாடுகள் மிகுந்தளவில் இருந்து உள்ளது.ஓலைகளைப்பதப்படுத்தி அதில் எழுத்துக்களை பொறித்து தொகுக்கப்படும் பழங்கால கையெழுத்துப் பிரதியாகும். இவ் ஓலைச்சுவடிகளில் எழுத்து ஆணிகள் தகவல்கள், இலக்கியங்களின் பயன்கள்‌, ஆவணங்கள் ஆகியவற்றை ஓலைகளே எழுதி வந்தனர்.

பதநீர்         
       இலக்கியத்தில் பதநீர் பயன்பாடு குறிப்பிடப்படவில்லை என்றாலும்,கிராமப்புற இலக்கியங்களின் பதநீர் பற்றியச் செய்திகள் இடம் பெற்று இருக்கிறது.இவை உடல் வெப்பத்தை தணிக்கும் ஒரு பானகமாகத் திகழ்கிறது. பதநீர் என்பது தென்னை, பனை கீத்துல முதலியவற்றில் பூப்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் பதநீராகும். கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று நெடுமலன் என்பவன் சமண முனிவர்களுக்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்த நிகழ்வைபாணிதவணிகன்நெடுமலன்இவை அழகர் மலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆகும். பாணிதம் என்பது பனைகளிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி உருக்குவதால் கிடைக்கும் இனிப்பான பாகையைக் குறிக்கும். பதநீர் ஒரு மருத்துவம் குணம் கொண்டவையாகும். உடல் சூடு, வயிற்றுப்புண், மூலசூடு, சிறுநீரகம் நோய்கள், ரத்தசோகை, கல்லீரல், மண்ணீரல் பாதிப்புகள் இவற்றையெல்லாம் போக்கக்கூடிய அருமருந்தாக பயன்படுகிறது. மேலும் பாஸ்பரஸ், மேக்னீசியம், புரதச்சத்து, துத்தநாகம், கால்சியம், வைட்டமின் சி, பி, தையாமின், நிக்கோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் பதநீரில் உள்ளன.

பனைமரத்தின் தமிழரின்மரபு
      பனை மரங்கள் தமிழர்களின் மண்ணை ஆட்சி செய்த மன்னர்களின் பொருளாதாரச் சிறப்பினை மேம்படுத்துவதாகும். சோழர் ஆட்சி காலத்தில் பனையும் தென்னையும் வளர்ப்பதற்கான உரிமை வழங்கினார்கள். சோழர்கள் ஆட்சி காலத்தில்  வருவாய் பெருக்குவதற்கும் பனைத் தொழில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. சேர மன்னர்கள் பனைமரத்தைத்தங்களின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றிய தகைச்சால்மன்னர்களானச் சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல், இளம் பொறை, அதியமான் முதலியார் பனம் பூ என்ற போந்தை மாலையை அணிந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது. சிறப்பு வாய்ந்த பயனே அளிக்கும் பனை மரத்தை வள்ளுவர்,
       
“பயன்மரம்உள்ளுர்பழுத்தற்றால்செல்வம்       
நயனுடையான்கட்படின்”4
       என்ற குறளில் பனைமரம் என்ற இடத்தில் பயன் மரம் என்ற சொல்லை கையாண்டு பனைமரத்தின் சிறப்புகளைகூறியுள்ளார். பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தபயன்களை தருகின்றது.

தமிழரின்கள் பானம்
       மதுபானங்களில்ஒன்று கள் உண்ணுதல். பதநீரை புளிக்க வைத்து அதில் சுண்ணாம்பு சேர்த்து கள்பானத்தை தயாரிக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் கல்லை தீம்பிழி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன. தமிழர்களின் வழிபாட்டில் நடுக்கல் வழிபாடு ஒரு முக்கிய வழிபாடாகக்கருதப்படுகின்றது. நடுகல் வழிபாட்டில் கள்ளை வைத்து வழிபாடும் வழக்கம் இருப்பதை அறியலாம். வழிபாட்டில் மட்டுமின்றி இறப்புச் சடங்குகளிலும் கல்லை படைத்துள்ள செய்தி புறநானூற்றுப் பாடலில் கூறுகின்றனர்.
அவை
       
“இல்லாகியரேகாலைமாலை       
அல்லாகியர்யான் வாழும்நாளே       
நடுகல்பீலிசூட்டிநார்அரி       
சிறுகலத்துவகுப்பவும்       
கொள்வான்…”………. 5
         
        அதியமான் இறந்தபோது அவருக்கு நடு கல் வைத்து  கள்ளும் படைத்து வழிபட்டதை இப்பாடல் விளக்குகின்றது. என்றும் பல கிராமங்களில் கள் உண்ணும் பழக்கம் இருப்பதை நாம் உணரலாம்.

முடிவுரை
           பனை மரத்தின் பயன்கள் நுனி முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்துள்ள ஒரு அரிய வகை மரமாகும்.உணவுப் பொருளாகவும்,கலைப் பொருளாகவும் பயன்படுகின்றது. பனை ஓலைகள், நுங்கு, பனங்கிழங்கு, பதநீர்,கள், ஓலைச்சுவடி, வீட்டு அலங்கார பொருள்கள், ஆகிய பொருட்களை மக்கள் பயன்படுத்துகின்றன.மன்னர்கள் போற்றக்கூடிய அரிய வகை மரமாகும். இயற்கை படைப்பில் பனைமரம் ஓர் அரிய மரமாகும். பனை மரத்தின் பயன்களினால் வேளாண்மை துறையிலும் வாணிபத் துறையிலும் பெரும் பங்கினை வைக்கிறது. வெளிநாட்டு வாணிப வளர்ச்சிக்கு பனைமரம் பெருந்துணையாய் இருக்கின்றது. அத்தகைய சிறப்புமிக்க பனை மரத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.

சான்றெண் விளக்கம்
1. நாலடியார் பாடல் எண் –96

2. தொல்காப்பியம் பொருட்பால் –54 நூற்பா

3. திருக்குறள் குறள் எண் -104

4. திருக்குறள் குறள் எண் -216

5. புறநானூறு பாடல் எண் -23

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். சு. இளவரசி
உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

ஜமால்முகமதுகல்லூரி, திருச்சி.

 

Purananutril Arasa Vagai Seithigal|A.Srikamatchi

Abstract

         Vagai refers to a concept in Tamil literature, distinct from other tinai like Vetchi which are associated with war. Vagai signifies the quality of excelling and standing superior in a field compared to others due to one’s prowess. It involves comparing with many and proclaiming someone as superior to all, often tied to victory in battle, hence categorized as Vagai tinai. Later texts differentiate between natural victory (Mullai) and comparative victory (Vagai). Vagai isn’t bound to a specific geographical landscape; it occurs across lands and lineages tied to time, akin to Palai which pertains to separation driven by fame. Among those undertaking actions, distinguishing based on capability and creating a state of renown is Vagai. Ilampooranar notes Vagai is external (puram) relative to Palai.
               
         In ancient times, monarchies prevailed; kings engaged in wars to showcase valor. Beyond demonstrating strength via battles, they sought to bring neighboring lands under control driven by ambition and to manifest their heroic prowess, as evident through literature. Singing the fame of victorious kings is what constitutes Vagai. Literature often focuses on kings’ heroic excellence. This article discusses royal Vagai (Arasa Vagai), drawing upon accounts in Purananuru regarding kings’ battles revealing not just bravery but generosity, humanity, and culture. It explores how people behaved under kings and how a nation’s pride turned into history through royal deeds – such insights are discussed in this article.


புறநானூற்றில்  அரச வாகைச்  செய்திகள்

ஆய்வுச் சுருக்கம்
      தமிழின்  புகழ் மகுடம் புறநானூறு. தமிழர் வாழ்வின் வரலாறு வீரத்திறன் பற்றி விளக்கும் இலக்கியம். வீரமும்  கொடையும்  இரண்டு கண்களாக வாழ்ந்து வந்த  ஈர மனமுடைய தமிழா்களின் இறவாப் புகழ்  பேசும் எழுத்து ஓவியம் புறநானூறு ஆகும்.  புறநானூறு நானூறுப் பாடல்களைக் கொண்டது. பண்டைய இலக்கியத்தில் அமைந்துள்ள சங்க இலக்கிய நுல்களான, எட்டுததொகை பத்துப்பாட்டு என்பனவற்றில் எட்டுத்தொகை நூலில் அமைந்துள்ள, புறநானூற்றில் பயின்றுவரும் வாகைத் திணைப் பற்றியச்  செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.

முன்னுரை
          பழந்தமிழர் கூறும் வாழ்வியல்  ஒரு நாணயத்தின் இருப் பக்கத்தைப் போல அகம், புறம் என்பதாகும். அகம் என்பது பிறருக்கு விளக்க முடியாததுமாய் தாமே உணர்ந்து கொள்ளும் வகையில் உள்ளவை. புறம் என்பது பிறருக்கு எடுத்துக் கூற முடிந்த உலக நெறியாகும் தனி மனிதம் மற்றும் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் வீரம், கல்வி, கொடை ஆகியவற்றை உணர்த்துகிறது இந்த மூன்றும் முக்கோணம் போன்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக பண்டைய தமிழரின் வாழ்வியலாக இருந்துள்ளது. அவற்றை சங்க நூல்கள் கூறுவது சான்றாகும்
மன்னனின் வெற்றி, முரசின் வெற்றி பார்ப்பனர் வணிகர் உழவர் என சூழலில் வாகை நிலை ஏற்படுகின்றன. வீரத்தில் சிறந்த அரசன் கல்வி அறிவு பெற்றவனாகவும், கொடை வழங்குபவனாகவும் இருந்துள்ளான். இவற்றின் பயனாக அவன் புகழ் என்பதை  அடைகிறான் . வீரத்தின்  விளைபொருள் வெற்றி. வெற்றி என்றாலே வாகை . வெற்றியின் அடையாளச்  சின்னமாகவும் தும்பை போரின் மறவர்கள் பெரும் வெற்றி அரசனின் ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் துறையாகவும் வாகைத்திணை உள்ளது. அந்த வகையில் அரச வாகைப்  பற்றி புறநானூறு  வழிக் காண்போம்.

வாகை : சொல் விளக்கம்       
       வாகைத்  திணை பாலை எனும் அகத்திணைக்குப் புறனாகும்.  ஒரு செயலில் ஈடுப்பட்டவா்களில் ஒருவா் மற்றொருவரை விட சிறந்தவராக இருந்தால்  அவா்களைப்  பாடுவது வாகையாகும். இவ்வகையில்  போர் வெற்றியும் அடங்கும்.  வாகை  என்ற சொல் மரம் என்றப் பொருளையும் தரும். போர்க்களத்தில் தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு வெற்றிப் பெற்றோரின் சிறப்பைப் புகழ்வது  வாகைத் திணை ஆகும். திணையும் துறையுமாக இவை முப்பதாக விரித்துரைக்கும் தொல்காப்பியர்,

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை
பாகுபட மிகுதிபடுத்த லென்ப (புறத்திணையியல் 9)
என இலக்கணம்கூறுகிறார்.

புறப்பொருள் வெண்பா மாலை சுட்டும் வாகை மரபுகள்
          வாகைத்திணை 33 பகுதிகளை உடையது அவற்றுள் முதல்  திணைவிளக்கமாகும். எஞ்சியவை துறைகளை விளக்குவன வாகைத் திணையும் அதன் துறைகளும் (1+32 =33) சீர்சால் வாகை வாகை அரவம்! அரச வாகை’ முரச வாகை’ மறக்கள வழியொடு களவேள் விய்யே முன்தேர்க் குரவை” பின்தேர்க் குரலை’ பார்ப்பன வாகை” வாணிக வாகை வேளாண் வாகை பொருந வாகை” அறிவன் வாகைதாபத வாகை கூதிர்ப் பாசறை” வாடைப் பாசறை அரச முல்லை பார்ப்பன முல்லை” அவைய முல்லை” கணிவன் முல்லை மூதின்முல்லை ஏறாண் முல்லை” வல்லாண் முல்லை காவல் முல்லை பேராண் முல்லை” மறமுல் லையே குடைமுல் லையொடு கண்படை நிலையே அனிப்பலி என்றா சால்பு முல்லை கிணைநிலை” ஏனைப் பொருளொடு புகறல் அருளொடு நீங்கள் உளப்படத் தொகைஇ மூன்று தலையிட்ட மூஈர் ஐந்தும் வான்தோய் வாகைத் திணையது வகையே. எனப் புறப்பொருள் வெண்பா மாலை  (சூத்திரம் 154) வாகைத்திணைகளின் துறைகளைக் கூறுகிறது.

புறநானூற்றில் வாகை  
         
       புறநானூற்றில்  அரசவாகை  பாடல்கள் 19, 20, 21, 22, 23, 25, 26, 31, 37, 42, 43, 44, 51, 52, 53, 54, 61, 66, 76, 77, 78, 79, 81, 82, 93, 94, 98, 99, 100, 104, 125, 167, 168, 174. (35 பாக்கள்)  இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் கருதி  14 பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.

அரசவாகை
           
        அரசனது  இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும். ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல்,  குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய” (புறம் 19 ) 
      இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை.  பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைப்பெற்றப் போரில் பகைவா்களை வெற்றிக் கொண்ட  வேலையுடைய செழியனே!  போர்க் களத்தில் பகை அரசா்களின் வீரா்களைக்  கொல்லும் கூற்றுவன் நீ ஒருவனே? என்பதிலிருந்தும் பாண்டியன் தலையாலங்கானத்துச்  செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் புலப்படுகிறது.

”இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
கவையளந் தறியினு மளத்தற் கரியை” (புறம் 20 )
 
         பெரிய கடலின் ஆழத்தையும் , அகலமான இவ்வுலகத்துப் பரப்பையும், வானத்தில் காற்று செல்லும் திசை மற்றும் வடிவமில்லா நிலைபெற்ற ஆகாயம் என்று சொல்லப்படுபவற்றை அளந்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும், உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும், பரந்துபட்ட உனது கண்ணோட்டமும் இவ்வளவுதான் என்று வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் நீ!  ஆதலால் உனது ஆட்சிக் குடையின் நிழலில் வாழ்வோர் சோறு சமைக்கும் நெருப்பின் வெம்மையும், செஞ்ஞாயிற்றின் வெம்மையும்  அல்லாது வேறு வெப்பத்தை அறியவில்லை. அழகிய வானவில்லையன்றி பகைவரது  கொலை வில்லை அறியார். கலப்பையை அன்றி வேறு படைக்கலமும் அறியார்.  போர்த்திறன் அறிந்த வீரர்களோடு சென்று பகைவர் அழிய, அந்த பகைவர் தேசத்து மண்ணை எடுத்துக் கொள்ளும் பெருமையுடைய தலைவனே!
இத்தகைய குணம்  உடையவனாதலால், உன் நாட்டில் நிலைபெற்ற மக்களெல்லாம் அவர்கள் உன் மேல் கொண்ட அன்பினால்  உனக்கு ஏதும் தீங்கு வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள் என்று சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வீரத்தை,  குறுங்கோழியூர்கிழார் எனும் புலவர் பாடியுள்ளார்.

”புலவரை இறந்த புகழ்சால் தோன்றல் 
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய” (புறம் 21)
     என்றப் பாடலில் உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை உடைய கானப்பேரை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி வீரத்தை  ஐயூர் மூலங்கிழார்  எனும் புலவா் பாடியுள்ளார்.

”தூங்குகையா னோங்குநடைய
தேன் சிதைந்த வரைபோல….” (புறம் 22)
     இப்பாடலில் ஆரவாரிக்கும் கடல் போன்ற  பகைவா் அஞ்சுகின்ற மிகுந்த படையை உடையவனே! உன்னிடத்துத் தோற்றுப் போன அரசா்கள் தந்த நிறைப் பொருட்களை  உனதுச் சுற்றத்தாருக்குக் கொடுத்த வெற்றித் தலைவனே! யானையினது பார்வைக் கொண்டவனே நீ வாழ்க! உன்னைப் புகழ்ந்துப் பாடும் புலவா்களுக்கு அளவில்லாது கொடுக்கும் வள்ளல் தன்மைக் கொண்டவனே! எங்கள் அரசர் மாந்தரஞ் சேரலிரும் பொறையின் நாடு தேவலோகத்தைப் போன்றது என்றும் பிறர் சொல்லக் கேட்டு வந்து இனிமையாக கண்குளிர உன்னைக் கண்டேன் பெருமானே!  உனது நாட்டின் வளம் குறையாதபடி  நீ ஆட்சி செய்வாயாக!  என்று குறுங்கோழியூர் கிழார், சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வீரத்தைப் புகழ்ந்து அவனது  நாடு செழிப்புடன் விளங்க வேண்டும்  என்கிறார்.

”வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்….” (புறம் 23)
இப்பாடலில் கல்லாடனார்  பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனது,வயிரம் பாய்ந்த கட்டுக் கம்பத்தையுடைய கூடத்தில் நிற்பதை வெறுத்த யானைகள்  பகைவா்களது நீர்நிலைகளை கலங்கச் செய்யும். மணம் வீசும் கடம்ப மாலையை அணிந்த உனது மறவர்களும்,  அழிக்கப்பட்ட நிலங்களையும்,  ஒவ்வொரு ஊர்களிலும் காவல் மரங்கள் வெட்டி காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும். இல்லங்களில் விருந்தோம்பல் செய்யும் சோறிடும் தீயை அணைத்துக் கெடுத்தும், பெரும்படையுடன் தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமை உடையவனும் ஆகிய பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே! உன்னைப் பார்க்க, வேளைச் செடியின் வெண்மையான பூக்களைத் தின்கின்ற ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாலைநிலக் காட்டு வழியே உன் செயல்களைக் கண்டவனாக வருகின்றேன்.

”மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
———————————
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,….” (புறம் 25)
   இப்பாடலில் கல்லாடனார் நெடுஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தலையாலங்கானப் போர்க்களத்தில்  திங்களும் ஞாயிறும் மறைவது போல, சோழன், சேரன் ஆகிய  இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது  அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில்  மார்பில் அடித்துக் கொள்ளாவண்ணமும்,  கூந்தல் களையாவண்ணமும்  பார்த்துக்கொள்க.  பகைவர்களைக் கொல்ல வேண்டாம் போர் வேண்டாம் என்று வலியுறுத்தி இருப்பதைக்  காண முடிகின்றது.

”நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய வெஃகேந்தி…..”(புறம் 26)
         மாங்குடி மருதனார்,. உன்னை எதிர்த்த பகை அரசா்களைின்  முரசுகளைக் கைப்பற்றினாய். அவா்களது  கிரீடம் அணிந்த தலையை அடுப்பாகவும், குருதியை அடுப்பை எரிக்கும் உலையில் பெய்து, தோள்களைத் துடுப்பாக்கி சமைக்கப்பட்ட உணவால் போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போர் புரியும் செழியனே! தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினையுடைய வேந்தே! அவர்கள் உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும், அவர்களும் சொர்கத்தில் வாழ்பவர்கள் ஆவார்கள் என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் ஆட்சி சிறப்பைப் புகழ்ந்துப் பாடுகின்றார்.

”சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
—————————-
பாசறை அல்லது நீ ஒல்லாயே…“ (பறம் 31)
        சோழன் நலங்கிள்ளியின் படைவீரா்கள்  வடக்கு திசையில் வந்துவிடுவார்களோ என்று எண்ணி வடபுலத்து அரசர்கள் தூங்காமல் கிடந்தனர்  என்கிறார் புலவர் கோவூர் கிழார்.அறத்தைப் பின்தொடர்ந்து  பொருளும் இன்பமும் வருவது போல,  உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய்.  பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன்  போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர்  தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ  தென்கடல் பாண்டியனையும்  மேலைக்கடல் சேரனையும்  அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள்  நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர் என்று  சோழன் நலங்கிள்ளியினது வீரத்தை  கோவூர்கிழார் பாடுகிறார்.

”நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
———————————
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!…”(புறம் 37)
    மாறோக்கத்து நப்பசலையார் என்ற  பெண்பாற் புலவா் கிள்ளிவளவனின் வீரத்தைப் பாடுகின்றரா். புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த சிபிச் சக்கரவா்த்தியின் வழியில் தோன்றியவனே!, சினமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், அந்த  மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், ஆழமான அகழியில் உள்ள முதலைகள்  ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும். அந்த அகழிக்கு அருகே மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் உள்ள யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன். அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது  கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

”ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
———————————
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே….”“(புறம் 42)
      சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை   இடைக்காடனார். இடைவிடாத கொடையும், போருமாகவே இருக்கும் தலைவனே! உன் யானையோ  மலை போல் உள்ளது. உன் படையோ  கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ  மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம்  நடுங்குகின்றனர்.இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப்  பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக!. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக!. புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது) போர் தொடுக்க வேண்டாம். உன் நாடு  வளமான நாடு. இதன் மடைநீரில் அரித்து நீ கொள்ளும் வாளை, உழும்போது புரளும் ஆமை, கரும்பில் தொடுத்திருக்கும் தேன், துறையில் மகளிர் பறித்த குவளை  ஆகியவற்றைப் புன்செய் நில மக்களுக்கு விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள்.  அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய்.மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின்  மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றுப் போர்த் தொழிலை விடுமாறுக் கேட்கின்றார்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
————————வரையா ஈகை உரவோன் மருக!”  (புறம் 51 )
        சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான், புலவரும் மாவளத்தானும் வட்டு ஆடினர். புலவர் வட்டுக்காயை மறைத்து வைத்துப் பிழை செய்தார். வெகுண்ட மாவளத்தான் வட்டுக்காயால் புலவரை அடித்தான். புலவர் பார்ப்பனர். “உன் முன்னோர் பார்ப்பனர் நோகும்படிச் செய்யமாட்டார்கள்.  நோகச் செய்த நீ சோழன் மகன் இல்லை” என்றார். இச் சொல்லைக் கேட்ட மாவளத்தான் தன் செயலுக்காக நாணினான்.  புலவர் “நானே பிழை செய்தேன்” என்று உண்மையைக் கூறி மாவளத்தானை வாழ்த்தினார். சோழர் குடியின் பெருமையைக் கூறும்  புலவர் சிபி மன்னன் வரலாற்றைக் குறிப்பிடுகிறார். அவிர்சடை முனிவர்கள்  நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத்  தவம் செய்வார்கள்.. வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு  தவம் செய்வார்கள்.. இந்த முனிவர்களும் மருளும்படி  புள்ளினங்களும் வாழும்படி  சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட  பருந்தின்  பிடியிலிருந்து தப்பித்  தன்னிடம் வந்த புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தானே தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்த மன்னன் சிபி.அவன் வழியில் வந்தவர் சோழர். பகைவரின்  முரண்பாட்டை நீக்கிய தேர்வண் கிள்ளி (தேர்க்கொடையாளி நலங்கிள்ளி) தம்பி நீ.
வார்கோல் கொடுமர மறவர் (அம்பு வில் வீரர்) படையின் தலைவனே! குதிரை வீரனே! உன் பிறப்பில் ஐயம் உடையேன். ஆத்திமாலை அணிந்த உன் முன்னோர்  பார்ப்பார் நோகும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.  இது (என்னை வட்டுக் காயால் அடித்தது) சரியா?  என்று வெறுக்கும்படி கூறினேன்.  அதனைக் கேட்ட நீ உனக்கு நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல்,  நீ பிழை செய்தது போலப் பெரிதும் நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு  இந்தச் சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டியுள்ளாய். அதனால் காவிரியாறு குவித்துள்ள மேட்டுமணலின்  எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்வாயாக என்று மாவளத்தானின்  வழித் தோன்றல்களின் வீரத்தைப் புகழ்ந்து  காமப்பல கண்ணனார் பாடியுள்ளார்.

”இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
அலமரல் யானை உரும் என முழங்கவும், ”(புறம் 52)
         
        நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது.  உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம்  வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து  பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது.  குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை  முடிந்துகொள்கின்றனர். குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல்  இல்லங்களில் மக்கள் அழும் ஒலி கேட்கிறது. இப்படி  இருக்கும்போது கோட்டைக்குள் நீ பாதுகாப்பாக இருத்தல் மிக மிகக் கொடுமை. நீ நெருங்க  முடியாத அரிமா போன்று வலிமை மிக்கவன். நீ அறநெறியை விரும்பினால்  கோட்டை உன்னுடையது என்று திறந்து விட்டுவிடுக. மற நெறியை விரும்பினால் போரிடுவதற்காகத் திறந்துவிடுக. இரண்டும் இல்லாமல்  மதிலுக்குள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடத்தல்  நாணத் தக்க செயல் என்று நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியப் பாடலாகும்..

முடிவுரை
         
     புறநானூற்றில் பொதுவாக பாடுப்பொருளாக பேசப்படுபவை அரசா்களின் கொடை, வீரம், மனிதநேயம்  ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாகைத் திணையின் துறைகளான முப்பத்து மூன்றில் அரச வாகை மட்டும் இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. அதன்மூலம் பண்டைய அரசா்களின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும் அறிந்துக்கொள்ள முடிகின்றது.

துணை நூல்கள்
1.குறுந்தொகை மூலமும் உரையும் – முனைவா் வீ.நாகராசன், நியுசெஞ்சரி புக்ஹவுஸ், சென்னை.

2.புறநானூறு – ஔவை துரைசாமிப் பிள்ளை, கௌராப் பதிப்பகம்

3.தொல்காப்பியம் – பொருளதிகாரம், முனைவா் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு.

4.புறப்பொருள் வெண்பா மாலை, முனைவா் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
. ஸ்ரீகாமாட்சி

ஆய்வு மாணவர்

முதுகலை இரண்டாமாண்டுத் தமிழ்,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.

ஆய்வு நெறியாளர்
முனைவர் கோ.மலர்விழி

தமிழ்த்துறைத் தலைவர்

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.

 

பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு பாறை ஓவிங்கள்!|மூ.செல்வம்

வருசநாடு பாறை ஓவிங்கள்
       வைகை நதிக் கரையில் மனித குலத்தின் பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு  பாறை ஓவியம்! பாறை ஓவியங்கள் என்பது மனித குலத்தின் தொன்மையான கலை வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பூர்வீக மனிதர்கள் தங்கள் வாழ்வியல் சடங்கு, நம்பிக்கை மற்றும் இயற்கை அனுபவங்களை பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் வழியே வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய துணை கண்டத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில் பாறை ஓவியங்கள் தொல்லியல் ஆராய்ச்சிகளில் மிக முக்கிய இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் மனிதவியல், வரலாறு, கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான சான்றுகளை விளங்குகின்றன.
         
          வருசநாடு பாறை ஓவிங்கள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் வருசநாடு கிராமத்தின் அருகே உள்ள மொட்டைப் பாறை மலை “கல்புடவு” அத்தகைய தொன்மையான பாறை ஓவிய தளங்களில் ஒன்றாகும். இத்தளத்தில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் பல அடுக்குகளில் வரையப்பட்டிருப்பதோடு மனிதர்கள் தலைமுறையாக தொடர்ந்து இத்தலத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளாக திகழ்கின்றன.
 மூல வைகை ஆற்றின் வலக்கரையில் அமைந்துள்ள மொட்டைப் பாறை மலையின் தெற்கு சரிவில் சேகர் என்பவரின் நிலத்திற்கு அருகில் கல்புடவு என்ற சிறிய குகைப் பகுதி உள்ளது. இக்கல் புடவின் கிழக்குப் பக்க பாறை சுவரில், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் இருப்பதை கட்டுரை ஆசிரியர் முதன்முதலாக கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

சிவப்பு வண்ண ஓவியங்கள்
         
        வருசநாடு பாறை ஓவிங்கள் பாறைச்சுவர் முழுக்க சிவப்பு நிற ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. புல்வெளிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மலைமுகடுகளைக் குறிக்கும் கோடுகள், செங்குத்தாக வரையப்பட்ட நீளமான கோடுகள், நீள் வட்ட வடிவில் இரண்டு வட்டங்கள்  வட்டத்தின் உள்பகுதிகள் அலை அலையான கோடுகளால் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கின்றன பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று காட்சி தருகிறது.
ஓவியங்கள் பழங்கால மக்கள்         
       இந்த குகை தளத்தை புனித இடமாகவும் சடங்குகள் செய்யும் இடமாகும் பயன்படுத்தி இருக்கலாம். இங்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் வரலாற்று பதிவாகும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாகவும் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

வெள்ளை வண்ண ஓவியங்கள்
         
        சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் பெருங்கற் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல அடுக்குகளாக வெள்ளை நிறத்தில் ஓவியங்களை வரைந்து உள்ளனர். கை கால்களை விரித்தபடி நிற்கும் மனித உருவங்கள், கோட்டுருவங்களாக வரையப்பட்டிருக்கின்றன. மின்னல் உருவாக்குறியீடு, இனக்குழுக் தலைவனின் உருவம், விலங்குகள், பெரிய மீன், சூரியன், சந்திரன் அடையாளம் தெரியாத இன்னும் பிற உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
   
வருசநாடு பாறை ஓவிங்கள் மேற்கண்ட ஓவியங்கள் வேட்டைச் சமூகம் என்பதையும் குழுவாக வாழ்ந்தனர் என்பதையும் தெரிவிக்கும்படியாக உள்ளது.  சூரியன், சந்திரன் போன்ற வடிவங்களை வரைந்து இருப்பது அவர்கள் இயற்கையை கடவுளாக கருதி வணங்கினர் என்பதற்கு சான்றாக கூறலாம்.  மீன் உருவம் அவர்களின் உணவில் மீன் முக்கிய பங்காற்றியிருப்பதையும் ஆற்றங்கரை வாழ்வை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும் குறிக்கிறது. குழுத் தலைவன் உருவம் தலைமை பங்கினை காட்டுகிறது.
          மொட்டைப்பாறை மலை கல்புடவு பாறை ஓவியங்கள் பழங்கால முதல் வரலாற்று காலம் வரை மனிதர்கள் வாழ்ந்த சமூக பண்பாட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கிய தொல்லியல் சான்றாகும். இவை பழங்குடிகளின் கலை வெளிப்பாடு,  இயற்கை வழிபாடு மற்றும் சமூக ஒற்றுமையை அறிய உதவுகின்றன. தென்னிந்திய பாறை ஓவிய வரிசையில் புதிதாக கண்டறியப்பட்ட வருசநாடு மொட்டைப்பாறை ஓவியங்களும் தனிச்சிறப்புடன் இடம்பெறும் என்பது உண்மை.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு, தேனி.

 

Complexities of Relationship in New Poetry|Dr.N.Paramasivam

புதுக்கவிதைகளில் உறவுச்சிக்கல்கள்- முனைவர் நா.பரமசிவம்
ABSTRACT
               
         Literature is created for the purpose of enabling human beings to live a wholesome and meaningful life. Yet, when the question “Do they truly live?” is put forward, it often remains unanswered. This is because the ultimate aim of literature is to strengthen human relationships and thereby enrich the family, the society, the village, and the nation. When we speak of relationships, do people really live in unity of thought and action? In fact, each one defines their own needs, morals, and principles, and stands firm in their own direction. How then can such minds, divided and conflicting, be brought together? What words would persuade them to listen? At such moments, it is literature that comes to our great aid. Literature is the supreme remedy, possessing the power to transform the human mind. Therefore, this essay aims to explore human relationships and the challenges within them through one of the branches of literature—poetry.


புதுக்கவிதைகளில் உறவுச்சிக்கல்கள்

முன்னுரை
         
        சிந்தையோடு கூடிய எழுத்துக்களை உருவாக்கத் தொடங்கிய பின்னர் அறிவு வளர்ச்சி பெருவேகம் கொண்டது. ஊர்ந்து பின்னர் நடந்து சென்ற மனிதன் ஓர் இடத்தில் நின்று நிதானித்துச் சிந்தித்ததன் விளைவே இலக்கியம். தான் மேற்கொண்ட பயணத்திலும் அனுபவித்து வாழ்ந்த இயற்கை மற்றும் காதல் வாழ்வினையும் பிறர் அறியும்படி எழுதத்தொடங்கிய பின்னரே இலக்கியம் புதுவேகம் தொட்டது. அதை இன்னும் சீர்படுத்தி மொழியைச் செழுமைப்படுத்தி இன்பத்தை அறத்தோடு இணைத்த பின்னர் இன்று செவ்வியல் இலக்கியம் எனப் போற்றப்படுகிறது. போற்றப்பட்ட, போற்றப்படுகின்ற இலக்கியங்கள் காலந்தோறும் பாடப்படுகின்ற பாடுபொருள்தான் என்ன? எவற்றை முன்னிருத்தி இன்னும் பாடப்படுகின்றன? காய்ந்த மரத்தினில் பற்றி எரிகின்ற நெருப்பு பெருநெருப்பாக மாறுவதுபோல எழுத்தையும் மொழியையும் பற்றிய இலக்கியங்கள் எப்பொருளை, எக்கருத்தைப் பற்றிக்கொண்டு பெருநெருப்பாக,பேரிலக்கியமாக இலக்கியவானத்துள் வளர்கின்றன? எனும் கேள்விகள் காலந்தோறும் கேட்கப்படுகின்றன.
         
         உலகத்துள் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உண்டு உயிர்த்து முடிவில் இறப்பில் முடிக்கின்றன. இது மனிதனுக்கும் பொருந்தும். எனினும் ஒரு சிறுவேறுபாடு யாதெனில் உண்டு உயிர்த்து வாழ்கின்ற மனிதன் மடிவதற்கு முன்பு தன்பகுத்தறிவால் உலகை உணர்ந்து உறவுகளை வலுப்படுத்தப் பலவகையான இலக்கியங்களைப் படைத்திட்டான். அவற்றுள் கவிதையே அன்றுமுதல் இன்றுவரை தலையாய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இலக்கியவடிவங்கள் பற்பல இருப்பினும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற அடிப்படையில் தான்கூறவரும் கருத்துக்களைத் தெற்றெனச் சொல்வது கவிதையே. இதன் பாடுபொருள் பல இருப்பினும் உறவுகள் குறித்தான கவிதையே இன்று பேசுபொருளாகப் பெரும்பாலும் உள்ளது. அவற்றுள் உறவுகள்,உறவுச்சிக்கல்கள் குறித்தான செய்திகளைக் கூறுவதாக இக்கட்டுரையின் மையம்  அமைகின்றது.

கலர்வீடியோ
         
         இறப்பென்பது இயல்பானது என்றும் மாறாதது. இதைச் சொல்லுதல் என்பது எளிது. ஆனால் ஒரு இறப்பொன்று நம் இல்லத்தில் நிகழ்ந்துவிடின் தாங்கொணாத் துயரம் அடைவோம். இத்துயரத்தினூடே இழவு வீட்டில் தனக்கு மரியாதையில்லை என்று சண்டையிட்டு மேலும் இழவாக்குவர் சிலர். இச்சண்டைக்குப் பின்புலமாகத் ‘தான்’ என்ற உணர்வுநிலை மட்டுமல்லாது செய்யக்கூடிய இறப்புச் சடங்குமுறைகளில் தனக்கு முன்னுரிமை கொடு;க்கப்படாததன் காரணமே சண்டைக்கு முக்கியக் காரணியாக இருக்கும். அதனால் தன்முனைப்புப் பெருகிய இன்றைய காலத்தில் பணத்தையும் பதவியையும் தேடி புலம்பெயர்தல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணிநிமித்தம், நேரில் வர இயலாமைக்கான பயணதூரம் ஆகிய காரணங்களால் சிற்சில நேரங்களில் தனையீன்ற தாய்தந்தையின் இறப்பிற்குக்கூட வரஇயலாமல் போவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதனை காலத்தின் வளர்ச்சி மற்றும் மாறுபாடு எனச் சொல்லிச் சமாதானமும் அடைகிறோம். அத்துடன் இன்று வராமையை ஏற்றுக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டு மனப்பக்குவமும் அடைந்துள்ளது. முன்னர் சொன்ன காலத்தின் வளர்ச்சியின் உச்சமாக இறப்பின் நிகழ்வை நேரலையாகவே காணும் வாய்ப்பையும் இன்றைய வளர்ச்சி கொடுத்துள்ளது. இக்கால மாற்றத்தின் நிகழ்வைக் கவிஞர் தன்கவித் துளியில்,

“விடுமுறை இல்லை
வீடியோ அனுப்புங்கள்
வாரக்கடைசியில் பார்த்து வருத்தப்பட!
வீடியோ கலரில் இருப்பது உத்தமம்
ஏனெனில்
மலையாள மரணம் பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள் யாரும்” (1)
        
        என்று முடிக்கின்றார். கலாச்சார பண்பாட்டு மாறுபாடுகள் ஒவ்வொரு இடத்திற்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் அவரவர்கள் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப மாறுபடும். எனவே அப்பண்பாடுகளை அறிந்து கொள்வதில் பிறருக்கு ஆர்வம் இருப்பது இயல்பானதே. ஆனால் சகமனிதர் ஒருவரின் மரணத்தைக்கூட இயல்பாய்; ஏற்றுக்கொள்ளுதலும் இழப்புகள் குறித்தான துயரமின்மையும் இன்றி வண்ணங்களற்ற கருப்பு வெள்ளையாய் இருக்கும் இறப்பின் வீட்டில் மரணநிகழ்வுச் சடங்கு கலராய் இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளில் மனிதர்கள் தங்களது மனதைத் தொலைத்துக் கண்களை மட்டும் வண்ணங்களால் நிரப்ப விரும்புவது வாழ்வி;ன் எதார்த்தை வேரறுப்பதாய் உள்ளது.

கதவின் மொழி         
         அன்னையர் தினமும் நதிகளி;ன் பெயரும் அன்னை பூமியும் என எல்லாவற்றையும் பெண்ணாகவே பார்ப்பினும் ஆண்களால் ஆளப்படும் இவ்வுலகில் பெண் இரண்டாம் நிலையிலேயே இருக்கின்றாள். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இவ்வுலகில் ஒருபெண் சுதந்திரத்துடனோ தனித்துச்செயல்படும் திறனோ பெற்றிருப்பின் ஆண்களின் அடக்குமுறை உடனே பாய்ந்து அவளை நிலைகுலையச் செய்யும். இதனால் பெண்ணானவள் தன்குழந்தை, குடும்பம், பெரியோர், சமுதாயம் ஆகியவற்றுக்குக் கட்டுண்டு அமைதியாகிறாள். இந்த அமைதியே அவளின் அடிமைநிலைக்கு முதல்படியாகிறது. இதனால் தன்சொல், செயல் ஆகியன இழந்து மொத்தத்தில் தன்சுயம் என்பதை இழந்து நிற்கின்றதை ‘தூh’; எனும் கவிதை பின்வருமாறு உணர்த்துகின்றது,

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விசேசமாக நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்கமுங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்குச்சி கோலி கரண்டி
துருப்பிடித்த கட்டையோடு உள்விழுந்த
ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளிடம்ளர்
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறு’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படைவென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச்சொட்ட
அப்பா மேலே வருவார்
இன்றுவரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க! (2)
         
      என்ற நா.முத்துக்குமார் கவிதையில் கிணற்றுச் சேறெடுத்தவர் தன் மனதில் உள்ள பெண்ணடிமைச் சேறெடுக்க மறந்தே போனார் என்று கூறியுள்ளார். பெண் என்பவள் பொதுவெளியில் மட்டுமல்ல வீட்டிலும் அவள்குரலை, கருத்தை ஓங்கிஒலிக்கக்கூடாது. அவள் பிறருடைய கருத்தை மட்டுமே முன்மொழிபவளாக விளங்குகிறாள். அவ்வாறு கூறினாலும் குரல்காட்டி முகம் மறைப்பவளாகவே இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் எழுதப்படாத நீதியாகிறது. காரணம் திருமணம் முடித்தவுடன் பெண் என்பவள் கட்டியவனுக்கும் அவனின் உறவுகளுக்கும் உரிமையாகிறாள் என்ற எண்ணம் பெண்ணைப் பெற்றவர்களுக்கே ஆழமாகப் பதிந்திருக்கும் பொழுது புகுந்த வீட்டில் அவள் அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கப்படாதவளாகவே இருக்கின்றாள். ஆணுக்கு உறவுகள் உண்டு.பெண்ணுக்கும் உறவுகள் உண்டு. ஆணுக்கு உறவுகள் பிரச்சினைகள் ஆவதில்லை. அவனைச் சிறுமைப்படுத்துவதில்லை. அவன் மதிப்பு,மரியாதைகளை அது நிலைநிறுத்துகின்றன. பெண்ணுக்கோ அவளால் சுமக்க முடியாத பாரமாக எல்லா உறவுகளும் அவளைக் காலகாலமாக அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப்படுத்துவதில்லை. அவளைப் பிணைத்திருக்கும் சங்கிலியாய் உறவுகள் இருக்கின்றன.அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது விதி. அவ்வுறவு கணவனாகவும் இருக்கலாம்(3)

பாகப்பிரிவினையும் பாசப்பிரிவினையும்
         
         உலகம் தோன்றிய நாள்முதல் மண்ணையும் பெண்ணையும் பெறுவதற்கு இடையறாத போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்விரண்டு வளத்தையும் பெறுவதற்கு முதலில் இல்லத்தில் இருந்துதான் தொடங்;குகிறது. குறிப்பாக மண் எனும் நிலத்தைப் பெறுவதற்கு அண்ணன் தம்பியாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாய் இருந்தவர்கள் பங்காளிகளாக மாறி இவ்விருவரோடு இணைந்த குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாதபடி பெரும்பிரிவினை ஏற்படுகிறது. இச்சொத்துக்களையும் அதனால் வரக்கூடிய பிரச்சினைகளையும் வைத்தே “ஐந்துவயதில் அண்ணன் தம்பி பத்துவயதில் பங்காளி” என்ற சொலவடையே உருவாகியுள்ளது. ஒருதாய் வயிற்றில் பிறந்து ஒன்றாகவே உண்டு உறங்கியவர்கள் பாகப்பிரிவினையின்போது முன்னர் வாழ்ந்த ஒற்றுமையினை மறந்து வாழ்வின் இறுதிவரை சொத்திற்காகப் பேசாது முரண்பட்டு மடிகின்றனர். இந்த உறவுச்சிக்கலை ‘கறுப்புவெள்ளைக் கல்வெட்டு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை பின்வருமாறு பாடுகிறது

கதர்வேட்டி
காமராசர் சட்டையில் தாத்தா
காஞ்சிப்பட்டு
கல்பதித்த அட்டிகையோடு பாட்டி
பூப்போட்ட சேலை
புளியம்பூ இரவிக்கையில்
பெரிய அத்தை
ரெட்டைசடை தாவணி
வாத்துச் சங்கிலியோடு
சின்ன அத்தை
எம்ஜிஆர் மீசை
வலதுகையில் கடிகாரமென
பெரியப்பா
சிவாஜி கர்லிங்
சில்க்சட்டை
பெல்பாட்டம் பேண்ட் சகிதம்
சித்தப்பா
காரைவீட்டில் கல்வெட்டாய் மிளிர்ந்த
கருப்புவெள்ளைப் புகைப்படம்
இப்போதும் இருக்கலாம்
பாகப்பிரிவினையோடு
பந்தப்பிரிவினையும் நிகழ்த்திப்போன
ரத்தத்தின் ரத்தங்களின்
எவர்வீட்டுப் பரணிலாவது (4)
         
          என்ற கவிதையில் தான்வாழ்ந்த நினைவின் சுவடுகள் வெறும் புகைப்படத்தில் சாட்சி சொல்கிறது. நியாபகங்கள் அனைத்தும் தின்றுதீர்த்த நினைவின் மிச்சங்களாய் பரணில் பாய்கொண்டுள்ளது உறவுகள். ஆக சொத்துக்களே சொந்தங்களைப் பிரிக்கச் செய்யும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. எனவே உறவுச்சிக்கல்கள் நிரந்தனமானவை. விட்டுக்கொடுத்தல், கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடுதல் இன்றி உறவுகள் நீடிக்காது (5)

விளிம்பில் சுடரும் உறவுகள்
         
        நம்முடைய நெருங்கிய இரத்தசொந்தங்களை விட அவ்வப்பொழுது நம்இல்லத்திற்கு வரும் உறவினர்களை சற்றுக்கூடுதலாக கவனித்துக்கொள்வோம். உபசரிப்பும் மரியாதையும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். நெருங்கிய இரத்தசொந்தங்கள் இந்த உறவினர்களுக்குக் காட்டும் கூடுதல் மரியாதையைக் கண்டு, ஏதாவது ஒருநாள் தானே இவர்கள் வருகின்றனர். ஆகையால் இதிலொன்றும் தவறில்லை என நினைப்பின் நலம். அவ்வாறின்றி இன்று வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர். நமக்கு அவ்வாறு கொடுக்கவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பின் இரத்தசொந்தங்களின் பிணைப்பு கேள்விக்குறியாக மாறிவிடும்.
         
        இவ்வாறு மனம் மாறுபாட்டுக்கான சூழல் எது என்ற கேள்விக்கு வித்தான காரணத்தைக் கேட்பின், என்றாவது ஒருநாள் வரும் விருந்தின் உறவுகளை நாம் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மனம்மாறுபடுவர். அந்த வருத்தமும் கோபமும் நம்மை அடிக்கடி பார்க்காமையால் நெடுநாள் நீடித்து ஒருநாள் உறவே முறிந்து போவதற்கான காரணியாகிவிடும். இரத்தஉறவுகளின் கோபம் அப்படியல்ல. அவர்களை அடிக்கடி பார்ப்பதனால் கோபதாபங்களைப் பேசித்தீர்த்து இணைந்துகொள்ளலாம். அதிகத்தொடர்பில்லாமல் இருக்கும் உறவுகளிடம் அதிக கவனம் செலுத்தித் தக்கவைப்பதே பெரும்போராட்டம் என்ற அடிப்படையில் அமைந்த கவிதையாகப் பின்வரும் கவிதை அமைந்துள்ளது,

வீட்டிற்கு உள்ளே ஏற்றும்
விளக்குகளைவிட
வெளியே வைக்கும்
விளக்குகள் மீதுதான்
கவனம் அதிகமாக இருக்கிறது.
அறைக்குள்
நிதானமாக எரியும் விளக்குகள் பற்றி
கவலையே இல்லை
வாசலில்காற்றுக்கும் தூறலுக்கும்
சலனமடையும் தீபத்தை
கரம்குவித்துப் பாதுகாப்பதிலேயே
மனம் அழுந்தித் தவிக்கிறது
மனதிற்குள் ஒட்டாமல்
விளிம்பில் சுடர்கின்ற உறவுகளையும்
இப்படித்தான்
போராடித்தக்கவைத்துக்கொள்ள
வேண்டியதாய் இருக்கின்றது
வாழ்வில்! (6)
         
        என்ற கவிதையில் காற்றுக்குச் சலனமடையும் தீபத்தை விளிம்பில் சுடர்கின்ற உறவுகளோடு பொருத்தியுள்ளார் கவிஞர். நாம்செய்யும் செயல்களில் குற்றத்தைக் கண்டுபிடித்து அதன்மூலம் பிரச்சினை செய்து பிரியும் உறவுகளை எவ்வகையிலேனும் தம்மோடு இணைத்துக்கொள்ளத் துடிக்கும் மனம் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது வெள்ளிடைமலை. அவ்வாறு ஏன் போராடி உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்? தக்கவைத்துக் கொள்வதற்கான காரணங்கள் என்ன? என ஆராயும்பொழுது நம்இல்லத்தின் சுகதுக்கங்களில் பெரும்பங்கு எடுத்துக்கொள்வதுடன் சில,பல நாட்கள் தங்கியிருந்து நமக்கு பக்கபலமாக இருப்பர். “நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கின்றது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறைப் பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.”(7).அதனால்தான் நமக்குக் கேடுகள் நினைக்கும் உறவினர்கள் இருப்பினும் இறுக்கிப்பிடித்துத் தக்கவைத்துக் கொள்ள மனம்விழைகிறது.

அம்மாவின் உலகம்         
          எல்லோருக்கும் அம்மாதான் உலகம். பல துன்பங்களுக்கு இடையில் நமை ஈன்றெடுத்தவள் தாயல்லவா? அவள் இயல்பான கருணையும் அர்ப்பணிப்பும் கொண்டவள். அதனாலேயே அனைவராலும் விரும்பப்படுகிறாள், மதிக்கப்படுகிறாள். இல்லத்தினுடைய ஒப்பற்ற செல்வமாகவும் கருதப்படுவள் தாயே! அதனால்தான் தாயிறந்த இல்லம் ஒளியில்லா இல்லமாகிறது. தந்தையின்றி இருந்தாலும் ஒருகுழந்தை மனரீதியாக நன்றாக வாழ்கிறது. ஆனால் தாயில்லாக் குழந்தை மன,உடல் ரீதியல் நலிவுற்று உணவுக்கும் உணர்வுக்கும் போதாமையான பற்றாக்குறையில் வாழ்கின்றது. எனவேதான் மக்கள் வழக்காறுகளில்கூட ‘தாயில்லாப்பிள்ளை போல’ அமைதியாக இருக்கின்றது என்கின்றனர். ஒரு தாயானவள் இல்லத்தில் இருப்பின் அவளால்தான் அனைத்தும் இயங்குகிறது என நினைப்பாள். இது ஒருவகையில் தன்னைக்குறித்தான உயர்வுமனப்பான்மையின் காரணமாகும். இச்சிந்தனை வயப்பட்ட பெண்கள் இல்லத்தில் உள்ளோர்க்கு, குறிப்பாகத் தன்கணவனிடம் தான், தன்சுயம், சுதந்திரம் என அனைத்தையும் தொலைத்தது தெரியாமல் பெருமை பேசிக்கொண்டிருப்பர். இதை,

அவளே உலகம் என்று
வாழ்ந்துவிட்டார் அப்பா
என்ற பெருமை
அம்மாவுக்கு
அம்மாவின் உலகத்தையும்
அபகரித்துக் கொண்ட
அப்பாவின் லாவகம்
ஒருபோதும் புரியப்போவதில்லை
அவளுக்கு! (8)
         
           என்ற கவிதையில் தான் அடிமைப்பட்டது தெரியாமல் எப்பொழுதும் தன்னைச்சார்ந்தே வாழ்வதாய் நினைத்து தன்வாழ்வின்  சுதந்திரத்தைத் தொலைத்த பேதை கூறுவதாய் இக்கவிதை அமைந்துள்ளது. உணவுகள் பரிமாறுவதற்கும் துணிகள் துவைத்து உலர்;த்தி மடித்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பதற்கும் குற்றேவல் செய்வதற்கும் தன்னை வேலைக்காரியாய் நினைத்து வேலைவாங்கியது தெரியாமல் எல்லாவற்றுக்கும் ‘நான்தான் வேண்டும’; என்று அறியாமைப் பெருமையும் அடிமைப் பெருமையும் பேசும் பெண்கள் இவ்வுலகில் உண்டென்பதை இக்கவிதை உணர்த்தியுள்ளது.
         
            எனவே, இங்கு ஆண்பெண் திருமணம் என்பது இருவரும் இணைந்து சமமாக வாழ்வதற்கே. ஆனால் இங்கு வாழ்தல் என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகின்றது. திருமணம் என்பது ஆணுக்குப் பணிவிடை செய்வதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்வதும் என்றாகிறது. திருமணத்திற்கு முன்புவரை தனக்கான உலகம் என்று சுதந்திரமாக வாழ்ந்தவள், திருமண நிகழ்வு முடிந்தவுடன் பிறர்நலம் பேணுதலிலும் எல்லோருக்கும் பணிவிடை செயதலிலுமே தன் விருப்பத்தைத் தொலைத்தவளாக இருக்கிறாள் தன்னை அறியாமலே. இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கின்றது. மனங்கள் ஒத்துவாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு வேண்டாத குணங்களாக, ”நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடைமையை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்” (தொல்.1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார் (9).

முடிவுரை         
             இங்கு உறவுச்சிக்கல்கள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. மனிதத்தன்மைக்கு ஆறறிவு தேவையில்லை. மனதில் கருணையும் உதவக்கூடிய எண்ணமும் இருந்தால் போதுமானது. இதையே பலசமயங்களில் மனிதனைத்தாண்டி விலங்குகள்கூட ஒன்றையொன்று காப்பாற்ற முனைவதில் அறியமுடிகின்றது. ஆனால் உறவுச்சிக்கல் என்பது ஆறறிவுக்கே உரிய நுண்ணிய விரிசல்களையும் மனவேறுபாடுகளையும் கொண்டு விளங்குவது. இது அவரவர்களின் வாழ்ந்த சூழல்களும் கற்ற அனுபவங்களும் ஒவ்வொருவருக்கும் தனித்த கருத்துவேறுபாடுகளை உண்டாக்குகின்றன. இதனால்தான் ஓயாத சண்டைகளும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்படுகின்றன. இங்கே உறவுகளுக்கான சிக்கல்கள் எனும்பொழுது ஏமாற்றப்படுவதும் பண்பாட்டின் காரணமாக ஏமாறுவதும் பெண்களே. ஓர்இடத்தில் சொல்லற்றவர்களாக, மற்றொரு இடத்தில் இறப்பின் சடங்குகளே காட்சிப்பொருளாக, வேறொரு இடத்தில் பணமே பாசத்தைத் தீர்மானிப்பனவாக, சிற்சில இடங்களில் உறவுகளைத் தக்கவைக்க மேற்கொள்ளும் போராட்டமாக, பலஇடங்களில் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தன்னுடைய வாழ்வைத் தொலைக்கும் இடமாக என எல்லா இடங்களிலும் அவரவர் செய்வது அவரவர் நியாயமே ‘தான்’ எனும் சிந்தனையே மனிதத்தை நிலைநிறுத்தும் மையப்புள்ளி எது எனத்தெரியாது ஒவ்வொரு இடமாக அது நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இனியும் நடந்துகொண்டே இருக்கும். காரணம் ‘தான்’ இல்லையெனில் உலகம் நகர்வதற்கும் இலக்கியம் உருவாவதற்கும் காரணி இல்லாது போய்விடும்.

மேற்கோள்
1.அய்யப்ப பணிக்கர் கவிதைகள்.

2.நா.முத்துக்குமார் – கணையாழி.

3.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.

4.கறுப்பு வெள்ளைக் கல்வெட்டு, ஆனந்தவிகடன், சொல்வனம். ப.20

5.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.

6.தி.கலையரசி,ஆனந்தவிகடன், சொல்வனம்.ப.26

7.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.6.

8.அ.சீனிவாசன் ஆனந்தவிகடன் சொல்வனம் 23.10.2024.

9.சங்கஇலக்கியத்தில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத்திறனும்,  thamizhiyal.com. 1.8.2020, முனைவர் ஆ.மணவழகன், உதவிப்பேராசிரியர், சமூகவியல்,   கலை(ம)பண்பாட்டுப்புலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ்இணைப்பேராசிரியர்

விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி

திண்டல், ஈரோடு – 638 012.

 

வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்

வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்

E-ISSN : 3048 – 5495

(International Faculty Development Program )

நாள் : 06.10.2025 முதல் 12.10.2025 வரை (7 நாள்கள்),  
நேரம் : இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, 
வழி : Google Meet
அன்புடையீர் வணக்கம்,
     தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த முக்கிய அடித்தளமாகச் செவ்வியல் இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க காலத்திலிருந்து ஆரம்பித்து, பிற்காலத் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் போன்ற நூல்கள் வரை பரவி நிற்கும் இவ்விலக்கியங்கள் தமிழர் பண்பாடு, சிந்தனை, வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், காதல், அறம், பொருள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்திக் காட்டுகின்றன. இவை தமிழின் பழமையான இலக்கியச் செல்வங்களாக மட்டுமன்றி, மனித வாழ்வின் நெறிமுறைகளைப் போதிக்கும் ஒளிக்கோபுரங்களாகவும் திகழ்கின்றன. சங்கப் பாடல்கள் இயற்கை, மனித இயல், கலை, சமூக வாழ்வு ஆகியவற்றை நேர்த்தியாகச் சித்தரிக்கின்றன. திருக்குறள் போன்ற நூல்கள் உலகமயமான வாழ்வியலைப் பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளன. எனவே, செவ்வியல் இலக்கியங்கள் தமிழ் நாகரிக வரலாற்றின் சான்றுகள் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் மனிதர்களின் சிந்தனைக்கும் நெறியுரைக்கும் மரபுக் கல்விக்கோப்புகளாகப் போற்றப்படுகின்றன.
செவ்வியல் இலக்கியங்களின் தன்மை
1.பழமையானவை : கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை தோன்றிய சங்கப் பாடல்கள் தொன்மையான இலக்கியச் சான்றுகளாகும்.
2.பண்பாட்டு பிரதிபலிப்பு : தமிழரின் இயற்கை, காதல், வீரம், அறம், பொருள் ஆகியவை இயல்பாகக் கூறப்படுகின்றன.
3.வாழ்வியல் ஆவணம் : வேளாண்மை, வாணிபம், அரசியல், போரியல், தத்துவம் ஆகிய அனைத்தும் வெளிப்படுகின்றன.
4.மொழிச்செல்வம் : செவ்வியல் இலக்கியங்கள் தமிழின் இலக்கண அழகையும், சொற்களின் செறிவையும் வெளிப்படுத்துகின்றன.
செவ்வியல் இலக்கியங்களின் சமூகக் கண்ணோட்டம்
செவ்வியல் இலக்கியங்கள் தமிழரின் சமூகச் சூழலை வெளிக்கொணர்கின்றன:
🎯 அரசியல் : சிற்றரசர்கள், பேரரசர்கள், வீரசேனை, போர்முறை ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
🎯 பொருளாதாரம் : வாணிபம், கடல் வாணிகம், உழவர் வாழ்க்கை, கைத்தொழில் ஆகியன வெளிப்படுகின்றன.
🎯  வழிபாடு :ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு, பிற்காலத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற சமய மரபுகள் வளர்ச்சி.
🎯 கலை : பாடல், இசை, நடனம் ஆகிய கலைகள் சங்கப்பாடல்களால் சான்றுகளுடன் அறியப்படுகின்றன.
சிறப்புகள்
1.இயற்கைச் சித்திரம் – மலை, காடு, கடல், பாலை நிலம் ஆகியன உயிர்ப்புடன் வர்ணிக்கப்படுகின்றன.
2.மனித இயல்பு – காதல், துக்கம், வீரியம், கருணை போன்ற உணர்ச்சிகள் அழகிய உவமைகளால் வெளிப்படுகின்றன.
3.நெறி, அறம் – நன்னூல்கள் மனித வாழ்வின் உயரிய பண்புகளைச் சொல்கின்றன.
4.பன்னாட்டு அளவில் – திருக்குறள் போன்ற நூல்கள் உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
         “செவ்வியல் இலக்கியங்கள்” என்ற பெரும் செல்வத்தைப் பலவற்றையும் அறியும் வகையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ உள்ளது. இந்தச் சிந்தனையூட்டும் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

முதல் நாள் : 06.10.2025  (திங்கள் கிழமை)

தலைப்பு : “திருமுருகாற்றுப்படையில் சில புதிய வெளிச்சங்கள்”

நெறியாளர் : முனைவர் வாணி அறிவாளன்

உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

இரண்டாம் நாள் : 07.10.2025  (செவ்வாய்க்கிழமை)

தலைப்பு : “அழகியல் நோக்கில் பொருநராற்றுப்படை”
நெறியாளர் : முனைவர் ஜெ.முத்துச்செல்வன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,  மீனம்பாக்கம்,  சென்னை – 600061.

மூன்றாம் நாள் : 08.10.2025  (புதன்கிழமை)

தலைப்பு : “சிறுபாணன் சென்ற பெருவழி”
நெறியாளர் : முனைவர் சி.சிதம்பரம்
இணைப்பேராசிரியர், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்.

நான்காம் நாள் : 09.10.2025  (வியாழக்கிழமை)

தலைப்பு : “காலமும் கலைகளும் – நெடுநல்வாடை”
நெறியாளர் : முனைவர் ஈ.யுவராணி
உதவிப்பேராசிரியர், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

ஐந்தாம் நாள் : 10.10.2025  (வெள்ளிக்கிழமை)

தலைப்பு : “கண்ணனாரும் கவின்மிகு பட்டினமும்”
நெறியாளர் : முனைவர் சு.லட்சுமி
இணைப்பேராசிரியர், ஸ்ரீமதி தேவ் குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை.

ஆறாம் நாள் : 11.10.2025  (சனிக்கிழமை)

தலைப்பு : “மதுரைக்காஞ்சியும் காஞ்சித்திணையும்”
நெறியாளர் : முனைவர் மா.வசந்தகுமாரி
தமிழ்த்துறைத் தலைவர், அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல்.

ஏழாம் நாள் : 12.10.2025  (ஞாயிற்றுக்கிழமை)

தலைப்பு : “பழந்தமிழர் மரபும் மணம் கமழும் குறிஞ்சிப்பாட்டும்”
நெறியாளர் : முனைவர் அ.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர், மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல்.

தொடர்பிற்கு,வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்
1.முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல், 70102 70575
2.முனைவர் அ.ஜெயக்குமார், இயக்குநர், இனியவை கற்றல், 99945 07627
3.முனைவர் கை.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர், இனியவை கற்றல், 99949 16977.
 
 
 

 

புதுக்குறள்:ஆசிரியர் மாட்சி|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

ஆசிரியர் மாட்சி - புதுக்குறள் - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
1.கற்பித்த பொழுதிற் பெரிதுவக்கும் தன்மாணாக்கனைச்   
சிறந்தோன் எனக்கேட்ட ஆசான்.         
       ஒரு ஆசிரியர் தனது மாணவன் தான் கற்றுக்கொடுத்த கல்வியில் சிறந்து விளங்கி, பலராலும் பாராட்டப்படுவதைக் கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார். இது ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனநிறைவு.

2.ஆசான் மாணாக்கனுக்கு ஆற்றும்உதவி கல்வியில்    
முந்தி யிருப்பச் செயல்
         
        ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யக்கூடிய மிக உயர்ந்த உதவி, அவர்களைக் கல்வியில் சிறந்து விளங்கச் செய்வதுதான். இதுவே ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யும் உண்மையான உதவி.

3. மாணாக்கன் ஆசானுக்கு ஆற்றும்நன்றி இவன்ஆசான்   
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.
         
          ஒரு மாணவன் தன் ஆசிரியர் மீது மக்கள் பெருமை கொள்ளும்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அந்த மாணவனின் திறமையைக் கண்டவர்கள், “இவனைப் போன்ற ஒரு மாணவனை உருவாக்க அந்த ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ?” என்று கேட்கும் அளவுக்கு மாணவன் சிறந்து விளங்க வேண்டும். அதுவே ஒரு மாணவன் தன் ஆசிரியருக்குச் செய்யக்கூடிய நன்றிக்கடன் ஆகும்..

4.எவ்வறிவுரை ஆசான்வாய்க் கேட்பினும் அவ்வறிவுரை   
கேட்டதும் நடத்தல் பணிவு.         
          ஆசிரியர் சொல்லும் எந்த அறிவுரையையும் முழு மனதுடன் ஏற்று, அதன்படி நடப்பதே மாணவனுக்கு அழகு. ஆசிரியரின் அறிவுரை எதுவாக இருந்தாலும், அதைக் கேட்டு நடப்பதே மாணவனின் சிறந்த பண்பு.

5.எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை    
தம்ஆசான் மறந்த மாணாக்கர்க்கு
         
          ஒருவர் எந்த நன்மையை மறந்தாலும் அதிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால், தனக்குக் கல்வி அளித்த ஆசிரியரின் நன்றியை மறந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற மாட்டார்கள். ஆசிரியரின் உதவியை மறப்பது மிகவும் பெரிய தவறு.

6. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை   
மாணாக்கர் இகழ்தல் பொறுத்தல் தலை
         
         தன்னைத் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும் நிலத்தைப் போல, சில சமயங்களில் தன்னை இகழும் மாணவர்களையும் ஆசிரியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையே ஓர் ஆசிரியருக்கு அழகு.

7. கற்றலும் கற்பித்தலும் கேட்டலும் கேட்டற்கு   
விடையளித்தலும் ஆசானுக் கழகு.
         
       ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள்: எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்பிப்பது, மாணவர்களின் கேள்விகளைக் கவனமாகக் கேட்பது, அந்தக் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பது ஆகியவையே.

8. பேச்சில் இனியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்    
மீக்கூறும் ஆசான் உலகு.         
       இனிய சொற்களைப் பேசி, யாரையும் கடுஞ்சொற்களால் காயப்படுத்தாத ஆசிரியர் உலகத்தால் பெரிதும் போற்றப்படுவார். சிறந்த பேச்சும் மென்மையான அணுகுமுறையும் ஓர் ஆசிரியரின் மாண்பை உயர்த்தும்.

9. அன்பு அறிவாற்றல் பொறை இந்நான்கும்  
உடையான் ஆசானுள் தலை 
         
          அன்பு, அறிவு, ஆற்றல், பொறுமை ஆகிய நான்கு பண்புகளும் ஒருசேரப் பெற்றவரே சிறந்த ஆசிரியர். இந்த நான்கு பண்புகளும் ஒருவரை முழுமையான ஆசானாக உருவாக்குகின்றன.

10. குறைகளைந்து கற்பிக்கும் ஆசான் மாணவர்க்கு      
இறையென்று போற்றப் படும்.         
         மாணவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, சரியான பாதையில் சென்று கல்வி கற்க வழிகாட்டும் ஆசிரியர், மாணவர்களால் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுவார்.

குறள் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை – சென்னை 44.

 

மிட்டாயும் கசந்துப் போனது|கவிதை|மெ.அபிரக்ஷா

மிட்டாயும் கசந்துப் போனது - மெ. அபிரக்ஷா

🍬எனது பிள்ளை பிராயத்தில்


என் அம்மா என்னை அடிக்கடி


மளிகைக் கடைக்கு அனுப்பி 


மளிகை பொருட்களை


வாங்கி வரச் சொல்லுவாள்..!


 

🍬எப்போதாவது எனக்கு 


அதிஷ்டம் இருந்தால்


“சில்லறை இல்ல பாபா “


என்று சொல்லியபடி மிட்டாயை


என்னிடம் நீட்டுவார் கடைக்காரர்..!

🍬இப்போது நான் வளர்ந்து விட்டேன்,


என் பாலிய பருவத்தையும்


கடந்து விட்டேன்,


ஒரு ரூபாய் மிட்டாயும் கூட


இரண்டு ரூபாய் என்றானது,


ஏன், இப்போது –  நான்


வேலைக்கும் கூடச் செல்கிறேன்..!


 

🍬இப்போது எனக்குச் சில்லறைக்குப்


பதில் கடைக்காரர்


மிட்டாயைக் குடுக்கையில்


என் மனம் அந்த சில்லறைக்


காசை பெறுவதற்கே துடிக்கிறது..!

🍬வெறும் மிட்டாய்களுக்கான 


ஆசை சுமந்த நானோ இன்று


குடும்ப பாரத்தைச் சுமக்கின்றேன்..!


 

🍬மிட்டாய் கரைந்த பின்பு 


என் நாக்கில் – அன்று 


குடிகொண்ட வெறுமையே 


இன்று எனது வாழ்க்கையாய்


உருமாறிப் போனது,


மிட்டாயின் சுவையும் கூட


எனக்கு கசப்பாகிப் போனது..!


கவிதையின் ஆசிரியர்


மெ அபிரக்ஷா


II-B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி


திண்டல், ஈரோடு.

 

நகரத்தின் நடுவே அகதியாய்|கவிதை|முனைவர் கு. நாகம்மாள்

நகரத்தின் நடுவே அகதியாய்-கவிதை-முனைவர் கு. நாகம்மாள்

🍁 பூமித்தாயின் மடியில் உறங்கி


விடியலில் எழுந்து


விழிகளை விரித்தால்


பசுமைகள் கவிபாடி


பூக்கள் கையசைத்து


வானம் குடை பிடித்து


பாதைகள் பாய் விரித்து
 

என்னை அழைக்கும்


பின் அணைக்கும்..!


 

🍁 பஞ்சம் ஒன்றுமில்லை
 

மிஞ்சும் உறவுகள் கெஞ்சும்


நெஞ்சம் நிறைய கொஞ்சும்


அஞ்சும் அறுவதும் ஒன்றும்..!


 

🍁 பசியில் வயிற்றைத் தடவ


பானையில் சோறு கொதிக்க


கொஞ்சம் பொறுவென


கொத்தமல்லி இரசத்தோடு


அத்தை வந்து நிற்பாள்..!


 

🍁 கதறும் சத்தம் கேட்டு


அலறும் அக்கம் பக்கத்து உறவுகள்


ஆறுதலாய்ச் சில வார்த்தை


ஏற்றிவிடும் தோணியாய்


எப்பொழுதும் உண்டு..!


 

🍁 ஒன்றிருக்க


ஒன்றில்லாப் பொழுதில்


ஒத்த காசுமில்லாது


ஓடிவந்து தந்திடும்


உன்னத கரங்கள்


உன்னன்பு போதாதா என்றுரைக்கும்..!


 

🍁 குளிக்க ஆறு கிணறு


உல்லாச ஊஞ்சல்


தள்ளப்படாத தனிமை


கொல்லப்படாத அறங்கள்
 

கோயில் கொண்டிருக்கும்..!


 

🍁 வாய்ப்புகள் தேடி வரும்


வஞ்சங்கள் ஓடி மறையும்


குறையில்லா வாழ்க்கை


கூடிவரும் இறையும்


நாடி அருளைத்தரும்..!


 

🍁 ஏறாத மரங்கள் இல்லை


நடவாத பாதைகள் இல்லை


உறங்காத இரவுகள் இல்லை


உறவற்ற உயிர்கள் இல்லை


உடனிருந்தது எல்லாம்


என் கிராமத்துப் பொன்னேட்டில்..!


 

🍁 அத்தனையும் தொலைத்து


அலறலில் விழித்து


அழுகையை மறைத்து


ஆனந்தத்தை ஒழித்து..!


 

🍁 அவசரப் பயணமும்
 

அன்றாடப் பிழைப்பும்‌


ஆதியான உழைப்பும்


அடுத்தடுத்து துரத்த


தொலைந்தே போனேன்


நகரத்தின் நடுவே அகதியாய்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் கு. நாகம்மாள்,


உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,


எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,


இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

The Poverty of the Ever-Flowing Vaigai|Dr.D.Sangeetha

வற்றாத வைகையின் வறுமை - முனைவர் த சங்கீதா
Abstract              
        Among the Sangam literature’s celebrated rivers, the Vaigai (Vaiyai) is the lifeline of Madurai. The Kaveri nourished the prosperity of the Chola kingdom, the Tamiraparani enriched the Pandya country, the Palar flowed in the northern direction, the Ponniyar was a branch of the Kaveri, and the Peraru is often mentioned in Sangam works. The Chengan River is also found in many distinguished Sangam verses. The river Aru is also seen in several ancient references
              
          The most frequently mentioned rivers in Sangam literature are the Vaigai, Kaveri, Tamiraparani, Ganga, Yamuna, Palar, Ponniyar, and Peraru. Rivers may originate from springs, lakes, melting snow streams, rainfall, or various other sources. Usually, other rivers join them, and these are called tributaries. The volume of water in a river is the sum of surface flow and the underground water flow unseen to the eye.
              
         From Sangam age poetry to modern times, hardly any poet has failed to sing of rivers. Our forefathers described rivers with the same beauty as they did women, highlighting their charm and significance. Yet today, due to human exploitation and pollution, their condition has become pitiable. The Vaigai, which once gave life to Madurai, enriched it, and brought glory to its name, played a major role in the prosperity of the Pandya land. Like a radiant maiden, she was celebrated for her fertility, expansiveness, and eternal fame. But now, that glory is fading away. Though people have eyes, they turn a blind eye; though they have ears, they refuse to listen. Indifferent, they continue on their way.
              
         The misery of the Vaigai, the sorrow of our rivers, and the future of our coming generations — these are matters we must reflect upon.


“வற்றாத வைகையின் வறுமை”

ஆய்வுச் சுருக்கம்
         
        சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சிறப்பான ஆறு வைகை (வையை) – மதுரையின் உயிர் நதி.காவிரி – சோழநாட்டின் செழிப்பை அளித்த நதி.தாமிரபரணி – பாண்டிய நாட்டின் வளநதி. பாலாறு – வடக்கு பக்கம் பாய்ந்தது பொன்னியாறு – காவிரி கிளைநதி.பேராறு – சங்கத்தில் பல இடங்களில் வரும்.செங்கண் ஆறு – சிறப்பு வாய்ந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.அறவாறு – பண்டைய குறிப்புகளில் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படும் ஆறுகள்:வைகை, காவிரி, தாமிரபரணி, கங்கை, யமுனை, பாலாறு, பொன்னியாறு, பேராறு ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும்.. சங்க கால பாடல்கள் முதல் இக்காலம் வரை ஆறுகளைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. பெண்ணைப் போல ஆற்றையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறி உள்ளனர் நமது முன்னோர்கள் ஆனால், அதன் இன்றைய நிலை மனிதர்களால் மாசுபட்டும் அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது.  வைகை நீர் வாழ்வில் மதுரையை செழிக்க வைத்து புகழ் பாட வைத்த சிறப்புகளில் மிகுந்த பங்கு வைகை நதிக்கும் உண்டு. பாண்டி நாட்டு சிறப்பைச்  சொல்லும் பைங்கிளி அவள். அதன் பரப்பும், செழிப்பும் ,வளமையும், மங்காத புகழும் மங்கிக் கொண்டிருக்கும் காலம்  வைகைக்கு வந்துவிட்டது.கண்கள் இருந்தும், பாராமுகமாய், செவிகள் இருந்தும், கேட்கும் மனமின்றி மக்கள் அவரவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். வைகையின் அவலமும், நதிகளின் துயரமும், நாளைய எதிர்காலமும் சிந்திப்போம்.

முன்னுரை       
    நதிகளும் ஏரிகளும் குளங்களும் இயற்கை வளங்களுமே மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்தி மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் எதிர்கால மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது ஆனால் இன்று ஒவ்வொரு நதிகளும் விதவிதமான கழிவுகளோடும் வண்ணச் சாயங்களோடும் தன் நிலை பிறழ்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மனிதன் ஆக்கிரமிப்பாலும் அசத்தப்படுத்துவதாலும் அக்கறையின்மையாலும் அந்நியனாக மாறி நதிகளுக்கு கண்ணீரைப் பரிசாகத தந்து கொண்டிருக்கிறான். நதிகளில் நீராடி. அள்ளிக்  குடித்து அமுதுண்டு வாழ்ந்த காலம் போய் நதிகளில் கால் வைத்தால் நச்சுத்தன்மை நம்மைத்  தாக்கி விடும் என்ற பயத்தில் மனிதன் வாழும் நிலையை உருவாக்கி விட்டான். சங்க காலப் புலவர்கள் காதல, மரம் ,வீரம் ,கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, ஒழுக்கம் ,பண்பாடு மட்டும் பேசவில்லை எத்தனையோ சான்றோர்களும் கவி பெரும் மக்களும் நதிகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து தெய்வமாகவும் புண்ணிய நதியாகவும் ,பாவங்களைப் போக்கும் ஆறாகவும் சங்க
 கால முதல் இக்காலம் வரை பாடி வந்துள்ளார்கள். மனிதனால் இன்று கண்ணீரோடு ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை தூய்மையானது காவிரி அசுத்தமானது. வைகை வலுவிழுந்தது. வாழ்க்கையில் குடி  தண்ணீருக்கும் விலையானது. சங்ககாலத்தில் நதிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை வைகை நதி பெற்ற சிறப்பையும் இவ்வாய்வு பகுதியில் அழிந்து வரும் இக்காலங்களில் மக்கள் நதிகளைக் காக்க வேண்டும்.நதிதான் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தில் ஓடும் சில ஆறுகள்        
         தமிழகத்தில் பல சிறிய, பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில முக்கிய உயிர்நதிகள் ஆகும். காவிரி நதி தமிழகத்தின் மிகப்பெரிய பாசனநதியாக விளங்குகிறது. இது கர்நாடகத்தில் தோன்றி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளைச் செழிப்பாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகை நதி மதுரை மாவட்டத்திற்கு உயிர்நதியாகும்; இது மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மதுரையை ஊடறுத்து பாய்கிறது. தாமிரபரணி நதி திருநெல்வேலியும் தூத்துக்குடிப் பகுதிகளுக்கு வளம் தருகிறது.மேலும் பாலாறு வடமாநிலங்களிலிருந்து வந்து வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பாசன வளம் வழங்குகிறது. பென்னாறு வட ஆந்திரா மாநில எல்லையிலிருந்து வந்து வடதமிழகத்தில் பாய்கிறது. வெள்ளாறு, மன்னாறு, பரமனாறு போன்ற ஆறுகள் கிழக்குக் கடலில் கலக்கின்றன. சரபணா ஆறு, சித்தாறு, குந்தாறு போன்ற பல சிறிய ஆறுகளும் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர், பாசனம் வழங்குகின்றன.இதற்குப் பிறகு நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு, நந்தி, வத்தாறு, பச்சை ஆறு, சிருவாணி போன்ற பல துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவ்வாறு, தமிழகத்தில் பாயும் ஆறுகள் விவசாயம், குடிநீர், மின்சாரம் உற்பத்தி, நீர்த்தேக்கம் போன்றவற்றில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன.
மணிமேகலையில் வைகை          
        முதல் காண்டம் (காஞ்சி காண்டம்) – காஞ்சிப் புறத்தில் வாழ்ந்த மணிமேகலை தன் தாயார் மாதவியுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு வைகை ஆற்றின் கரையில் மக்களின் செல்வச் செழிப்பு, வியாபாரம், மன்னன் செல்வம் முதலியவை வர்ணிக்கப்படுகின்றன.

மதுரை நகர வர்ணனை       
         மதுரையைச் சுற்றி ஓடும் வைகை ஆறு குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.வைகை கரையில் செழித்து வளர்ந்த வியாபார நகரம்.ஆற்றின் கரையில் வணிகர்களின் அலைச்சல், மக்கள் கூடி வியாபாரம் செய்வது.
மூன்றாம் காண்டம் (அருகாண் காண்டம்) – மதுரையில் மணிமேகலை பிச்சை எடுக்கும் நிகழ்வில் வைகை ஆற்றங்கரையோரக் காட்சிகள் வருகிறது.
அமுதசுரபி நிகழ்வு          
       பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க,மணிமேகலை பெற்ற அமுதசுரபி (மந்திரக் கிண்ணம்) முதலில் மதுரையில், வைகை கரையோரத்தில் பிச்சை எடுத்து அனைவருக்கும் உணவளிக்கிறது..

மதுரைக் காஞ்சியில் வைகையின் சிறப்பு
“வைகை விரிந்த பெருநீர் வீழ்ந்து
கடற்கரை கலந்தன போன்றன;
நெய்தல் நுண்ணறிவினோடும்,
மருதம் மகிழ்ந்தன போலவும்,
பசும்புல் கொழித்தன பசும்பொன் சேர்த்தன,
மதுரை நகர் வைகைத் தண் நீரே.” (பா. 153–160) அடிக் (1) மது.காஞ்
       
வைகை பெருநீர் பாய்ந்து கடலில் கலக்கிறது. அதன் நீர் நெய்தலையும் மருதநிலத்தையும் வளமாக்குகிறது. பசும்புல் செழித்து பொன்னின் வளம் போன்றதாக விளங்குகிறது. அக்காலத்தில் பறந்து விரிந்த மக்களுக்குப் பசி இல்லா வாழ்வை வைகை தந்துள்ளதை அறிய முடிகிறது.

“வைகை அணையோடு வயல் மலர்ந்து,
பசும்பொன் துளித்தன பசும்பயிரே;
பாசறை பாடி வண்டுகள் சூழ்ந்து,
மணமிகு மலர்கள் மலர்ந்தனவே. (பா. 221–228) அடிக்(2) மது.காஞ்சி      
      வைகை அணைக்கு அருகே வயல்கள் மலர்ந்தன. பசும் நெற்பயிர் பொன்னின் துளி போலத் திகழ்கிறது. மணமிகு மலர்களில் வண்டுகள் இசை பாடுகின்றன. மலர் போல உள்ள வயல்கள் வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டுள்ளது பொன்னிறமான நெற்பயிர்த் துளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சோலை வளமான மதுரையின் வைகை நதிப் பகுதிகள் இன்று கட்டிடங்களால் உயர்ந்து நிற்கிறது.

“வைகையோடு விரிந்த மருதநிலத்து
உழவர் தொழுது பாடி உழுதனரே;
தண் நீர் பெருகி வற்றாத செழுமையால்
பசுந்தழை விரிந்து பரப்பினவே.” (பா. 301–310) அடிக் (3) மது.காஞ்சி         
      வைகை ஆற்றங்கரையின் மருதநிலத்தில் நீர் செல்லும் பொழுது வைகை கொண்டு வரும் மலர்களும் தாவர இலைகளும் போட்டு உழவர்கள் பாடலோடு உழுதனர். வைகைத் தண்ணீர் எப்போதும் பெருகி குறையாததால் பசுந்தழைகள் பரந்து விரிந்தன. வயல்வெளிகளிலும் செழித்து வளர்ந்தன. மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தனர். அன்றைய காலத்தில். ஆனால் இன்றோ அனைத்தும் பொய்த்துப் போய் வறண்ட நிலமாக நோய்வாய்ப்பட்டு புரையோடிக் காணப்படுகிறது  மதுரை மண்.

“வைகை வடியும் தண் நீர் சூழ்ந்து,
மதுரை மணிமாடம் விளங்கிய நகர்;
வளம் பெருகிய வளந்தோன்றல் போல
எல்லாம் இணைந்து எழிலுற்றதே.” (பா. 511–518) அடிக்(4) மது.காஞ்         
       வைகை தண்ணீர் சூழ, மணிமாடங்களால் விளங்கியது . ஆனால் இன்று வைகை நதி எல்லாம் மாடுகளும் ஆடுகளும் மனித கழிவுகளும் குப்பைக் கூலங்களும் நிறைந்து வைகையினுடைய பரப்பளவு குறைந்து வறுமையாய் போனால் வைகை அன்னை. மதுரை நகரம் எழிலுறத் திகழ்ந்தது. அது செழித்து வளம் தரும் வளந்தோன்றல் போல இருந்தது  வைகை ஆறு மதுரையின் உயிர்நாடியாகப் படைக்கப்பட்டுள்ளது.உழவுக்கும் வளத்துக்கும் ஆதாரமாக இருந்தது.மதுரை நகர அழகையும் வளத்தையும் வைகை பெருமிதமாக்கியது. மதுரை நகரத்தையும், அதனுடன் இணைந்த வைகை நதியையும் அழகாகப் புகழ்கிறது, மதுரைக்காஞ்சி. ஏடுகளில் மட்டுமே ரசிக்கக் கூடிய நிலையை இன்றைய மனித சமுதாயம் உருவாக்கி விட்டது நதிகளும், குளங்களுக்கும் ,நல்ல நீர் நிலைகளும்  அழிவின் விளிம்பில் உள்ளது.நல்ல நீர் என்பதும் நாம் பருகக்கூடிய தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“ஆற்றினும் பெரிது மதுரை;

அங்கே வையை பாய்கின்றது;”
         
          அதனால் உழவர் வளம் பெருகி, வணிகரும் செழித்தனர். வைகை பாய்ந்து வந்ததால், மதுரை நிலங்கள் செழித்து, உழவர், வணிகர் அனைவரும் வளம் பெற்றனர் என்கிறது.மதுரைக் காஞ்சி (சிறப்புரை) மதுரைக்கு வைகை நதி உயிராக இருந்தது.நகரின் புறங்களில் வைகை வழியாக மண் வளம் பெற்றதால், அரிசி, பண்டங்கள் மிகுந்தன.வைகையைக் கடந்து வந்த வணிகர்கள் மதுரையைப் புகழ்ந்தனர்.

பதிற்றுப்பத்து
         
        பாண்டியர்களின் தலைநகராக இருந்த மதுரைக்கு வைகை முக்கியம் சில பாடல்களில் வைகை கரையில் பாண்டிய மன்னர்கள் யானை, குதிரைப் படையுடன் விளங்குவர் என வர்ணிக்கிறது.வைகையை அடிப்படையாகக் கொண்டு பாண்டியர் வளம் பெருகுவதாகக் கூறுகிறது.

அகநானூறு & புறநானூறு
         
       பல இடங்களில் “வையை” கரையில் நடந்த போர்கள், விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகநானூறு பாடல்களில் காதல் பின்னணியில் வைகை கரையைச் சுட்டி, காதலர்கள் சந்திக்கும் இடமாகக் கூறப்பட்டுள்ளது.
புறநானூற்றில், வைகையைத் தாண்டி வந்த போர்த் தளங்கள், பாண்டியர் வெற்றி விழாக்கள் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரம்    
      சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் வைகை நதி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வைகையின் அழகும், நீரின் பெருக்குமும், மதுரையின் வளமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் வைகை பற்றிய பாடல் வரிகள்,

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் (வைகை நதி வர்ணனை)
“வைகையொடு புனல்படர் பாண்டிமதுரை
பூக்கள் தொடுத்து நிறைந்த புலி நகர் எய்தி
நீரில் உலாவிய நெடுங்குழல் யாழ் இசை
காணும் இடமெலாம் இனிதாகும்” சிலம்பு அடிக்(4)
வைகை வழியொடு வரும்பெருங் கணங்கள்
மதுரை மணிமாடம் சூழ்ந்து விரிந்தன
பெருகிய புனலினில் பெண்மணி கூத்தாட
கரையொடு கரையெனக் களிப்புற நின்றன
வைகைத் துறைமுகம் வாழ்விடம் பெற்றனர்
ஆயர்தம் குழுவினர் ஆட்டமாடினர்
மணியொலி முழங்கிய மதுரைத் துறைமுகம்
அணியொடு விளங்கிய அற்புத நகர்”
      வைகை நதியின் பெருக்கால் மதுரை வளமுடன் காட்சியளிக்கிறது. வைகையில் நீராடும் பெண்கள் பாடல் பாடி விளையாடுகின்றனர். நதிக்கரையில் யாழிசை, நடனங்கள், மக்களின் ஆனந்தம் நிறைந்து காணப்படுகிறது. வைகையால் மதுரை “மணிமாட நகரம்” எனப் பெருமைப்படுகிறது. கண்ணகி மதுரையைச் சுட்ட அத்தியாயத்தில், வைகையின் அருகிலுள்ள மதுரை நகரமே எரிந்து சிதைகிறது. வைகை நகரின் அடையாளமாகக் காணப்படுகிறது. தொல்காப்பியம் (செய்யுள் இலக்கணம்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணையில் மருத நிலம் குறித்துப் பேசும்போது, வைகை நதியின் பாசன வளம், உழவர் வாழ்க்கை முதலியவை எடுத்துரைக்கப்படுகிறது. தவிர வைகை இடம் பெற்றுள்ளன.

மருதநிலத்தின் சிறப்பு ஆறுகள்
        
        ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வறண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையும்முன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது. ஆறுகளுக்கு மலைகளுக்கும் இடையில் அன்று அணைகளை கட்டினார்கள் நம் முன்னோர்கள். மக்கள் பயன்படுத்தும் வாழ்வாதாரமாக நதிகள் இருந்தது. மனிதனின் ஆசைகளால் குளங்களும் ஆறுகளும் வறுமையாகி நிற்கிறது.

சங்க புலவனின் சிறப்பு        
           குறுநிலமன்னர்களையும், அரசர்களையும், புகழ்ந்து வந்தால் பொன் பொருள் கிடைக்கின்ற அக்காலத்தில் அதையும் தாண்டி நற்புலவர்கள் பல நமது நாட்டில் ஓடுகின்ற நதிகளையும், கடல்களையும், இயற்கையையும் பாடல்களில் பதிவு செய்தனர். நதிகளால் ஏற்பட்ட வளமை வாழ்க்கை, பொருளாதார நிலை, சமுதாய மேம்பாடுகள் வாழ்க்கைத்தரம் வாழ்வியல் சூழல் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமைந்திருந்தது.

வைகையின் வறுமையின் கொடுமை 
 
“வைகை பெருகப் பொழில்கொள் மதுரை”சிலம்பு அடிக்.குறி (5)
(மதுரையின் செழிப்பு வைகையின் நீரால் வளர்ந்தது எனக் கூறுகிறது)
வளமான சந்தை பற்றிய வரிகள்

“வைகைத் துறை வணிகம் வளர்ந்து”
(வைகைத் துறையில் வணிகம் மிகுந்தது)
வளம் குறையாத மதுரை வற்றாத வைகை வளம் குன்றா மதுரை”
(வைகை வற்றாததால் மதுரையின் வளமும் குறையவில்லை)

“வைகையருகின் மகிழ்ந்தோர்தம் விளையாட்டு”
       (வைகை கரையில் மக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்)
 சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில், “வைகை” (அதாவது வைகை ஆறு) பற்றிய தொடர்ச்சி மற்றும் உள்தர்ம உணர்ச்சிகளை எழுத்தாளர்கள் அழகாகக் கேள்விப்பட்டுள்ளனர். குறிப்பாக, புலவர்கள் வர்ணிக்கும் விதத்தில்: கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது.” இதில்:   “பூக்கள் நிறைந்த உயர்ந்த அணை ஊற்று… தன் நீரைக் கரந்து செல்கிறது” — என்று சீரிய அழகுடன் செல்கிறது.,
“கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை” என்று, மனிதன் (கண்ணகி) மற்றும் இயற்கை (வைகை ஆறு) ஒருங்கிணையும் உணர்ச்சியாக வெளிப்படுகிறது.அதன் நீர் “கண்ணிரை” (இரக்கத்தாலும் அன்பாலும்) மறைத்து செல்கிறது என்று எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார் — இது வைகையின் வறுமைக் காட்சியாகும்.இவ்வாறு, மனவியல் முகத்திலிருந்து விவசாய அல்லது இயல்பியலில் அமைந்த “வறுமை” அல்ல;இது உணர்ச்சி சார்ந்த உருவகம், வறுமையும் துயரமும் காட்டும் அழகிய மொழி வடிவமென பொருள் கொள்ளலாம் அன்றைய காலகட்டத்தில் இது பொருந்தும்.ஆனால் இன்றோ இதன் நிலை முற்றிலும் மாறுபட்ட அமைந்துள்ளது..
“கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது. ”சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (புனைவியல் வர்ணனை ஆகும். இலக்கியத் தரம்  சங்க இலக்கியத்தின் அழகிய வடிவமான உணர்ச்சி எடுக்கும் உலக கோணத்தை நிறைவேற்று உள்ளது.

பரிபாடலில் வைகை நதி
      
     பரிபாடலில் வைகை நதியைப் புகழ்ந்து பாடியுள்ள பாடல்கள் சில உள்ளன. வைகையின் அழகையும், அதன் கரையோர வாழ்வையும், செழிப்பையும், சஞ்சாரிகளின் மகிழ்வையும் விவரிக்கின்றன.

“வைகை நீர் பரப்பின்

நளிர்நிறைத் தண் புனல்,

மைகொள் கமழ் தும்பை

மலரொடு படர்ந்தன,

அம்புயம் புனைசேர்

அன்னம் தம் குடியென

தும்பையொடு புணர்ந்து

சூழ்ந்தன கொக்குகள்.” அடிக்குறி.(6)பரி
         
    வைகை நதியின் நீரில் மிகுந்த குளிர்ச்சியுடனும் இனிமையுடனும் ஓடும் தன்மை சொல்லப்படுகிறது.அதன் கரையில் தும்பை மலர்கள் மலர்ந்து மணம்கொடுக்கின்றன.தாமரை மலர்கள் (அம்புயம்) மலர்ந்து நிற்க, அதனுடன் சேர்ந்து அன்னப்பறவைகள் குடியிருந்து விளையாடுகின்றன.தும்பை மலர்களோடு கூடியவாறு, கொக்கு பறவைகளும் அங்கங்கு சூழ்ந்து காணப்படுகின்றன.இதன் மூலம் வைகை நதி ஒரு சாதாரண நதி அல்லாமல், இயற்கையின் அழகை நிரப்பிய செழிப்பின் அடையாளமாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும், மணமிகு மலர்களின் பூங்காவாகவும் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட வைகை நதி இன்று வளமை குன்றி ,தன்னிலை பிறழ்ந்து, அளவில் சுருங்கி, அழகை இழந்து, அவலத்தைச் சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

முடிவுரை
         
         வைகை நதி சங்க காலத்தில் உயிரோடு பாய்ந்து மதுரைக்கு செழிப்பையும் வளத்தையும் அளித்தது. புலவர்கள் பாடல்களில் வைகை இயற்கையின் அழகு, விவசாய வளம், வணிகச் செழிப்பு, மக்களின் ஆனந்தம் எனப் பல்வேறு பரிமாணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் வைகை “மதுரையின் உயிர்நாடி” எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில், மனிதனின் அக்கறையின்மை, மாசுபடுத்தல், ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் வைகையின் நீர்ப்பெருக்கு குறைந்து, அதன் இயற்கை வளமும், பழம்பெருமையும் சிதைந்து வருகிறது.ஆகவே, நதிகள் என்பது வெறும் நீரோட்டம் அல்ல; அவை மனித வாழ்வின் அடித்தளம், பண்பாட்டு அடையாளம், பசுமையின் மூலாதாரம். வைகை உள்ளிட்ட நதிகளைப் பாதுகாப்பது நம் வருங்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் கடமையாகும். சங்க காலத்தில் புலவர்கள் வைகையைப் புகழ்ந்தது போல, இன்றைய காலத்தில் நாம் அதை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். “வைகை வற்றாதால் மதுரை வளம் வற்றாது” என்ற பழமொழி போல, நதிகளின் வளம் தான் நம் வாழ்வின் வளம் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டியது நம் கடமை. எனவே, வைகையும், தமிழகத்தின் பிற நதிகளும் காக்கப்பட்டால் மட்டுமே நமது பண்பாட்டும், சமூக வளர்ச்சியும், எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரமும் உறுதி பெறும்.

துணை நூற்பட்டியல்
1.மதுரைக் காஞ்சி, இளங்குமரன், இரா., பதிப்பாளர், புரட்சிக் கவிஞர் மன்றம் : மதுரை, பதிப்பு ஆண்டு, 2014

2.முனைவர் ரா. சீனிவாசன், சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம் 3, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை.

3.முனைவர் இரா. சாரங்கபாணி, பரிபாடல், முல்லை பதிப்பகம் .

4. புலியூர்க் கேசிகன், பரிபாடல், திருமகள் நிலையம், கௌரா பதிப்பகம்.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.சங்கீதா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர் உயர்கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் ஆவடி, சென்னை.

 

The Sound of the Twisted Bow by Rama and the Distance it Reached|Dr.G.Mangaiyarkkarasi

இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும் - முனைவர் க.மங்கையர்க்கரசி
Synopsis
        Rama, an incarnation of Thirumal, was born for Raavana’s demise only. Lord Rama will hold the Godandum (Bow) in his hand. He married Sita by twisting Lord Shiva’s Triyambaka bow, which was imposed as a precondition by King Janaka for the marriage of his lovely daughter Sita. The sound of twisting and breaking of that Divine bow was heard even in the heaven. It was heard even in Ayodhya, where Dasharatha ruled, and even in Mahendra Hill, where Parashurama lived, and even in Sri Lanka, where Ravana ruled. Kambar says that as  Sita  was in the palace of Mithila, she could not hear that sound and she came to know  that Rama had twisted and has broken  that  bow only after it was conveyed by her own  close associate  Neela Malai and the same has been elegantly expressed out in Ramayana by the legendary poet Kambar. Here it is imagined that   Sita did not hear that voice because of her ecstacy of love towards Rama her Life Partner.

Key words: Ram, Seetha, Breaking Sound o the Bow, Enthusiasm of the Divine Beings.


இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும்

ஆய்வுச் சுருக்கம்
           திருமாலின் அவதாரமான இராமன் பிறப்பெடுத்ததே இராவண வதத்திற்காக தான். இராமன் கையில் எப்போதும் கோதண்டம் இருக்கும். திருமண நிபந்தனையாக ஜனகன் விதித்த சிவனின் திரியம்பகம் வில்லை வளைத்தே சீதையை மணம் புரிந்தார். அவன் வளைத்த வில்லின் ஓசை விண்ணுலகம் வரை கேட்டது. தசரதன் ஆட்சிபுரிந்த அயோத்தி வரை,பரசுராமர் வாழ்ந்து வந்த மகேந்திர மலை வரை, இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கை வரை கேட்டது என்றும், மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்குக் கேட்கவில்லை, தோழி நீலமாலை வந்து சொன்ன பிறகுதான், இராமன் வில்லை வளைத்ததையே சீதை அறிந்து கொண்டாள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் சுவையாகக் கூறி சென்றுள்ளார். தலைவனைப் பற்றிய காதல் நினைவிலேயே இருந்ததால் அவளுக்கு அவ் ஓசை கேட்கவில்லை போலும்.

திறவுச் சொற்கள்: இராமன், சீதை, வில், ஒடித்த போது கேட்ட ஓசை,   தேவர்களின் மகிழ்ச்சி.

முன்னுரை
        இராமன் கையில் வில் (கோதண்டம்) எப்பொழுதும் நீங்கா இடம் பெற்றிருக்கும். வில்லேந்திய இராமனையை நாம் கம்பராமாயணம் முழுவதும் காண்கிறோம். தாடகை வதத்தில் ஆரம்பித்து இராவணவதம் முடிய நாம் கோதண்டராமனையேப் பார்க்கிறோம். ஒரு சொல், ஒரு வில், இரு இல் என்றே வாழ்ந்தவன் நம் கதாநாயகன் இராமன். நூல் முழுவதும் இராமபிரானின் அளவிடமுடியாத வில்லாற்றலை நம் கண்முன் காட்டுகிறார் கம்பர். கிடைத்தற்கரிய, சீதையைப் பெறவேண்டுமானால் சிவதனுசை வளைத்து நாணேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின்படி, வில்லை வளைத்து நாணேற்றி, திருமகளாம் சீதையை மணந்தான். வில்லின் பெருமையையும்,அதன் வரலாற்றையும், அதைச் சுமந்து வந்த வீரர்களின் எண்ணிக்கையையும், வில்லின் ஒலி எவ்வளவு தொலைவிற்குக் கேட்டது என்பது குறித்தும் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ள கருத்துக்களைக் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

வில்லின் வரலாறு
      வில்லின் வரலாற்றை சதானந்த முனிவர் கூற ஆரம்பித்தார். சிவன், உமாதேவியைத் தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொறுமை சிறிதுமற்று பொங்கிய சினத்தோடு இந்த வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, தக்கன் வேள்வி செய்யும் இடத்துக்குச் சிவன்,  சென்றான். வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் சிலருடைய பற்களும், கைகளும் சிதறின. அதுவரை அவர்கள் புகுந்திடாத மறைவிடங்களில் எல்லாம் தேவர்கள் ஓடிப் புகுந்தனர். தக்கனது வேள்வி குண்டத்தில் இருந்த அக்னியும் அழிந்தது. பின்பே சிவன் சினம் தணிந்தான். அவர் கையில் இருந்த வில்லைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். அவர்கள் இன்னும் வாழ வேண்டிய வாழ்நாளைப் பெற்றவர்கள். அதனால் வலிமை பொருந்திய அடிதண்டையும் கட்டமைப்பையும் பெற்ற தனது வில்லை  ஜனகனது குலத்திலே தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராஜன் என்னும் அரசனிடம் கொடுத்துவிட்டான். இத்தன்மை பெற்ற இவ்வில்லின் வலிமையை நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ என்று சதானந்தர் கூறினார்.(கார்முகப்படலம் 628)

வில்லை வளைத்தவனுக்கே சீதை
 
            அழகுமிக்க சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். சிவபெருமான் கைக்கொண்டு போரிட்ட வில்லை வளைத்தவனே சீதையை மணப்பதற்கு உரிமை உடையவன் என்று நாங்கள் உறுதியாக உரைத்தோம் என்ற சதானந்தர் கூறினார். வில்லை 60,000 வீரர்கள் சுமந்து வந்து நில மகளின் முதுகு நெளிந்து போகும் படி கீழே வைத்தனர். இந்த வில்லை எடுத்து வளைக்கப் போகின்றவர் யாரோ என்று கூறி கை நடுக்கம் அடைந்தார். (கார்முகப்படலம் 624) பெண்ணைப் பெற்ற ஜனகர் தன் மகள் சீதைக்குத் திருமணம் செய்ய விரும்பினார். வில்லை வளைத்தவர்க்கே பெண் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். யாராலும் அந்த வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. திருமணமும் தள்ளிப்போனது.
பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் தாமதமானால் அவள் தந்தையின் மனநிலை மிகவும் வருத்தமடையும். சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவர் அவையோர்க்கு சொல்லத் தொடங்குகிறார். இம்முறையாவது சிவதனுசை யாராவது முறித்தால் சீதைக்குத் திருமணம் நடைபெறும். நடைபெற வேண்டுமே என்ற கவலையோடு அந்த சிவதனுசை ஜனகர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனித்த சதானந்த முனிவர், கூறத்தொடங்கினார்.

“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ் 
வேதனை தருகின்ற வில்லை நோக்கித் தன் 
மாதினை நோக்குவான் மணத்தினை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேவினான்” (கார்முகப்படலம் 625)
இராமன் வில்லை வளைத்தல்
       விசுவாமித்திரரின் குறிப்பை உணர்ந்த இராமன் வில்லைப் பார்த்து அதை நோக்கி நடந்தான். சீதை என்பவளுக்குச் சூட்டும் பொருட்டு நீட்டுகின்ற இதழ் விரிந்த மாலை என்று எண்ணும் படி மிக எளிதாக அந்த வில்லை இராமன் கையில் எடுத்தான். அக்காட்சியைக் கண்டவர் தம் இமைகள் அசைவதைத் தடுத்து இமைக்காத விழிகளோடு மேலே நடக்கப் போவதைக் காண காத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் இராமன் அந்த வில்லின் ஒரு முனையைத் தன் காலின் கீழ் இருக்குமாறு மிதித்துக்கொண்டு, அதன் மற்றொரு முனையை வளைத்ததையும் அதில் நாணினைப் பூட்டியதையும் அச்செயல்கள் நிகழ்ந்த வேகத்தால் காணாதவரானார்கள். அவை நிகழ்ந்த தன்மையை மனதாலும் அவர்கள் அறியவில்லை. முதலில் இராமன் அந்த வில்லை எடுத்ததைக் கண்டார்கள். உடனே அந்த வில் இற்றதை முறிந்ததைக் கேட்டார்கள். அவ்வளவுதான்.

“தடுத்தது இமையாமல் இருந்தவர் தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”  (கார்முகப்படலம் 648)
வில்லோசை கேட்ட தேவர்கள்
      வில் ஒடிந்த பேரோசையால் மூவுலகத்துக்கும் தோன்றிய அச்சம் வில்முறிந்த வல்லோசையைக் கேட்டதை இவர்கள் பிரம்மன் படைத்த பெருமை மிகுந்த அண்ட கோளம் பிளந்துவிட்டது என்று கருதி கவலை அடைந்து, இப்போது நாம் யாரிடம் அடைக்கலம் கேட்டு போவோம் என்று எண்ணி வருந்தினர். தேவர்களின் நிலை இவ்வாறானால் உலகத்து மக்கள் அடைந்த நிலையை வீணாக ஏன் சொல்ல வேண்டும். இந்த பூமியைத் தாங்கிக்கொண்டு, பூமி என்னும் மரத்தின் வேர் போல விளங்கும் ஆதிசேஷன் இடி தன்மையில் விழுந்துவிட்டது என்று நினைத்து பயந்தான். (கார்முகப்படலம் 649)
பகைவருக்கு அச்சமளித்து தனக்கு வெற்றியை அளிக்கும் வேலை உடைய ஜனகன் செய்த புண்ணியம் இன்று பயனளித்து விட்டது என்று எண்ணிய தேவர்கள் பூமழை சொறிந்தார்கள். (கார்முகப்படலம் 650)

வில்லோசை கேட்ட மிதிலை மக்கள்
       மேகங்கள் பொன் மழையைப் பொழிந்தன. உலகைச் சுற்றி பறந்துள்ள கடல்கள் பலவகையான சிறந்த ரத்தினங்களை அள்ளி வீசி ஆரவாரம் செய்தன. சிறந்த முனிவர்களில் குழுக்கள் எல்லாம் நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். மிதிலை நகரில் ஆரவாரம் மிகுந்திருந்தது. (கார்முகப்படலம் 650, 651)
 விரும்பி அருந்தத் தக்க கள்ளைப் பருகியவர்கள் போல சிவந்து காணப்படும் கரிய மைப்பூசிய கண்களை உடைய மகளிர் தம் மனதிற்கு புண்ணைத் தந்த ஊடல் நீங்கியதால் தன் கணவரைத் தழுவிக்கொண்டனர். வீசும் அலைகளால் பரப்பளவை மேலும் விரியச் செய்யும் கடலிலே வெண்மேகங்கள் தண்ணீரைப் பருகுவது போல வறுமையுடையவர்கள் இவ்வுலகில் குவிந்திருக்கும் ஜனகனது பெருஞ்செல்வதை அவரது ஆணையின்படி வாரி சென்றார்கள்.

மிதிலை நகரத்தார் கூறிய உவகை மொழிகள்
         மிதிலை நகரத்து மக்களில் சிலர் இவன் தசரதன் புதல்வன் என்று கூறுவர். சிலர் செந்தாமரைக் கண்ணனான பெருமாளே இவன் என்று சொல்லுவர். சிலர் இவனது திருமேனி ஒரு கருமேகமே என்று உரைப்பர். சிலர் அத்திருமேனி காயாம்பூ வண்ணத்தையும் ஒத்தது என்று புகழ்வர். சிலர் இவன் மனிதன் அல்லன் என்று உறுதி செய்வர். சிலர் கயல் மீன்கள் வாழும் பாற்கடலில் வாழும் பெருமாளே இவன் என்று ஐயம் இன்றி அறைவர். சிலர் இவனை மானுடன் என்று கூறும் உலகத்தினர் அறியாமை பெற்றவர் என்று கூறுவர். (கார்முகப்படலம் 656)
இராமனின் அழகைக் காண்பதற்கு சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையை ஒவ்வொரு முறைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். அந்த அழகர்களை பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பவர். சிலர் இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பார் சிலர். (கார்முகப்படலம் 657)
இவைஎல்லாம் இராமன் வில்லில் நாணேற்றிய ஒலியைக் கேட்டவுடன் மிதிலை மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

அயோத்தியில் கேட்ட வில்லின் ஒலி
        ஜனகனின் தூதர்கள் திருமண ஓலையை எடுத்துக் கொண்டு சக்கரவர்த்தி தசரதனின் அரண்மனையை அடைந்து ஓலையை வணங்கி வழங்கினர். அதைப் படித்து செய்தியை அறிந்த மன்னன், வெற்றி பெற்ற வேலை உடைய தசரதன் தொகுதியான நீண்ட ஜடை முடியை உடைய சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்த போது, ஏழு உலகங்களையும் வெற்றி கொண்ட வலிமையான அந்த வில்லை இராமன் முறித்த போது உண்டான பேரொளி தானா? அன்று இங்கே இடிஒலியாகக் கேட்டது என்று கூறினான்.               

“வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில் 
கற்றை வாறு சடை முடிக் கணிச்சி வானவன் 
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது ஈங்கு என்றான்” (எழுச்சிப் படலம் 685)       
        மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது அயோத்தியில் கேட்டது என்று தசரதன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

மகேந்திர மலையில் கேட்ட ஒலி
        பரசுராமர் படலத்தில் திருமணம் முடித்து அயோத்தி செல்லும் வழியில் தசரதனையும், அவருடன் வந்தவர்களின் எதிரில் வந்த பரசுராமர் மறித்தார். நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்கு தானமாகத் தந்துவிட்டேன். வெளிப்பகைகளை அடக்கி வென்ற நான், உட்பகைகளை வெல்வதற்காக மகேந்திர மலையில் தங்கி அளவில்லாத பெரிய தவங்களைச் செய்து வந்தேன். நீ சிவன் வில்லை முறித்த ஓசை, அங்கிருந்த என் செவியில் பட, சினம் கொண்டு இங்கு வந்தேன். உனக்கு வலிமை இருக்குமானால், உன்னுடன் நான் போரிடுவேன். முதலில் இந்த திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றான் பரசுராமன்.

“உலகமெல்லாம் முனிவதற்கு ஏந்தேன். ஒரு பகை ஒடுங்கிப் போந்தேன் 
அலகு இல் மாதவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறி வந்தேன் 
மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”(பரசுராமப் படலம் 1242)
         
       மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது மகேந்திர மலையில் கேட்டது என்று பரசுராமன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் கேட்ட ஒலி
        நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் கயிலை மலையை நீ எடுத்த போது கால் விரலால் அழுத்தி உன்னை வென்ற சிவபெருமான், திரிபுரங்கள் தீ பற்றி எரியும் பொருட்டு ஒப்பற்ற ஒரு அம்பை செலுத்துவதற்கு வில்லாக இருந்தது மேருமலை. அந்த மேரு மலையாகிய சிவனது வில் என் கணவனின் வலிமையைத் தாங்கும் வல்லமை அற்றதாய் முறிந்து வீழ்ந்த போது எழுந்த பேரொளியினை நீ கேட்கவில்லை போலும். அது என்ன அதிசயம் என்று கேட்கிறாள்.

“குன்று நீ எடுத்த நாள் தன் சேவடிக்கொழுந்தால் உன்னை 
வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்த மேரு 
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த 
அன்று எழுந்த உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா”  (நிந்தனைப் படலம் 450)
         
        படைக்காட்சிப் படலத்தில் மூலப்பல சேனைகள் இலங்கை வந்து சேர்ந்தன. அவர்களை வரவேற்று நலம் விசாரித்தான் இராவணன். இராம லக்ஷ்மணர்கள் குறித்து  புஷ்கர தீவின் மன்னன் வன்னி வினவிய போது பகைவரின் வலிமையை மாலியவான் எடுத்துக் கூறுகிறான். நீங்கள் இராம லக்ஷ்மணரின் வலிமையினைப் பற்றி இங்கு வந்து கேட்பது ஏன்? இராமனின் அக்னி ஆஸ்திரத்தால் அலை வீசுகின்ற கடல் அங்கு வேகவில்லையா அது இராமனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் சிறிதும் அறியவில்லையோ, கங்கையில் தலையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை சீதையின் பொருட்டு அக்காலத்தில் முறித்ததினால் உண்டான பேரொலி உங்களது செவியில் புகவில்லையோ என்று கேட்டான்.

“இங்கு வந்து நீர் வினாயது? என் எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ,
கங்கை சூடி தன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம்
உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்கு ஓதை”(படைக்காட்சிப் படலம் 3,227)
         
    மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது இலங்கையில் கேட்டது என்று  மாலியவான் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வில் ஒடித்த செய்தியை நீலமாலை சீதைக்குத் தெரிவித்தல்
         சீதையின் தோழி நீலமாலை மலையை ஒத்த சிவனது வில் முறிந்த செயலை நேரில் கண்டாள். அதை சீதையிடம் சொல்வதற்காக விரைவாக ஓடி வந்தாள் அந்த நீலமாலை. வந்த உடனே வழக்கம் போல சீதையின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆரவாரம் செய்தாள். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாக ஆடினாள். பாடினாள். அதைக் கண்ட சீதை அழகு மிக்க தோழியே, உன் மனமகிழ்ச்சியையும், அந்த மகிழ்ச்சி தோன்றியதற்கான காரணமான செய்தியையும் சொல்லுக என்று கேட்டாள். உடனே நீலமாலை செய்தியை வணங்கிச் சொல்ல தொடங்கினாள். யானை, தேர், குதிரை ஆகிய படை கடல்களைப் படைத்தவனும், கல்விக் கடலை உடையவனும் மாரி போல வாரி வழங்கும் நீண்ட கைகளை உடையவராகிய தசரதன் என்னும் பெயரை உடையவன். இந்த உலகம் முழுவதையும் ஒப்பற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறான். அவனுடைய புதல்வன் மலர் அம்புகளைக் கொண்டு காதல் மயக்கம் உண்டாகும் மன்மதனை விட, சிறந்த அழகைப் பெற்றவன். இவை மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும் போற்றுதலுக்குரிய விசுவாமித்திரோடும் நம் நகருக்கு வந்துள்ளான்.  வலிமை மிகுந்தவனான அந்த இராமன், புனிதராகிய சிவபெருமான் எழுத வில்லை காணும் பொருட்டு வந்துள்ளார் என்று விசுவாமித்திரர் உரைத்தான். உடனே ஜனக மன்னனின் கட்டளையின்படி வில் வந்தது. வில்லை வளைத்து மிக எளிதாக நாண் ஏற்றினான். அதைக் கண்டு விண்ணுலகம் நடுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வில்லின் ஒரு முனையைக் காலின் கீழ் மிதித்து முன்பு தனக்கு பழக்கமான படை கருவி இது என்று கண்டோர் கூறும் படி தன் தோள் வலிமையால் அதை வளைத்துவிட்டான். உடனே தேவர்கள் இராமனைப் புகழ்ந்து பூ மழை சொறிந்தார்கள். அவர்கள் அரசவை நடுக்கம் அடைய அந்த வில் முறிந்து விழுந்தது என்று நீலமாலைக் கூறி முடித்தாள். விசுவாமித்திர முனிவருடன் வந்த மேகம் போன்றவன் என்று கூறிய பிறகு அவன் செந்தாமரை கண்ணனான திருமாலைப் போன்றவன் என்றும், நீலமாலை கூறியதால், நான் காதல் கொண்ட அந்த நம்பியே அவன் என்று துணிந்து அவன் தானோ என்று முதலில் பிறந்த ஐயத்தை அகற்றிக் கொண்டாள். தாமரையை விட்டு தரணிக்கு வந்த திருமகளாகிய சிறப்பு மிக்க சீதை,

“மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில்
சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ மழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (கார்முகப்படலம் 675)         
     மிதிலையில் இராமன் வில்லை ஒடித்து போது எழுந்த ஓசை, அதே மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்கு கேட்கவில்லையாம். இராமன் மேல் அவள் கொண்ட காதல் மயக்கத்தில் இருந்ததால் வில் ஓடித்தபோது எழுந்த ஓசை சீதைக்குக் கேட்கவில்லை போலும். தோழி நீலமாலை வந்து சொன்ன பின்புதான் தெரிந்தது என்று கம்பர் நாடகநயம் போலும் குறிப்பிடுகிறார். (காதல் மயக்கத்தில் அவன் நினைவிலேயே இருந்ததால் கேட்காதோ என்னவோ)

முடிவுரை 
         ஜனகனின் அரண்மனை மண்டபத்தில் இருந்த சிவபெருமான் வைத்திருந்த திரியம்பகம் என்ற வில்லை இராமன் எடுத்து வளைத்தான். வில்லும் முறிந்தது. அந்தப் பேரொலியைக் கேட்ட வானத்து தேவர்களும் நடுங்கினர் என்று கூறுகிறார் கம்பர். அப்படியானால் அந்த பேரொலி விண்ணுலகம் வரை கேட்டது என்று ஆகிறது. தூதர் கொண்டு வந்த ஓலையைப் படித்து விவரம் அறிந்த மன்னன் தசரதன் அன்று கேட்ட ஒலி இதுதானோ என்ற போது மிதிலையில் ஒடித்த வில்லோசை அயோத்தி வரை கேட்டது என்பது புலப்படுகிறது. பரசுராமன் மகேந்திரமலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது வில்லோசை கேட்டதால் தான் நான் இங்கு வந்தேன் என்ற போது, மிதிலையில் ஒடித்த ஓசை மகேந்திரமலை வரை கேட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அசோகவனத்தில் இருந்த சீதை இராவணனிடம் இராமன் வளைத்த வில்லோசை உனக்கு அன்று கேட்கவில்லையோ (காட்டிற்கு இராமருடன் சீதை வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. அத்தனை வருடங்களுக்கு முன் கேட்கப்பட்ட ஓசை உனக்கு  கேட்கவில்லையோ என்கிறாள்). படைக்காட்சிப் படலத்தில் இராவணனின் பாட்டனார் புஷ்பகர தீவின் மன்னன் வன்னியிடம் சீதையை மணக்கும் பொருட்டாக அன்று இராமன் சிவபெருமானின் வில்லை வளைத்த ஓசை உங்களுக்கு கேட்கவில்லையோ என்று கேட்கிறான். இதிலிருந்து இராமன் வளைத்த வில்லின் ஓசை இலங்கை வரை கேட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே மிதிலையின் அரண்மனையில் இருந்த சீதைக்கு, இராமன் வில்லை வளைத்த போது எழுந்த பேரொலி குறித்த செய்தியை தோழி நீலமாலை  அவளுக்கு கூறினாள் என்றும், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.     

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை,2016.

4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)

மீனம்பாக்கம்,
சென்னை 600061.

 

ஆசிரியர்|முனைவர் இரா.செல்வராணி

ஆசிரியர் - முனைவர் இரா.செல்வராணி

✒️ அன்னையிடம் 


விடைபெற்று காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக..!


 

✒️உன் முகம் காணும்


ஆவலில் – நீ


வகுப்பில் நுழைந்ததும்


மனம் துள்ளி விளையாடுதே..!


 

✒️அகம் மகிழ்ந்துதான் போவேன்


உன் புடவை நிறத்தாலும்


அழகாலும்


என்னை கவரச் செய்வாய்..!

✒️பேச்சால் சொக்கித்தான் போவேன்


பாடங்களால்,


பண்பாளன் ஆக்குவாய்..!


 

✒️நானும் பக்குவமாகக்


கற்றுக் கொள்வேன்


சிரித்த வார்த்தைகளால்


சிந்திக்க வைத்து விடுவீர்கள்..!


 

✒️மாலையில் நீ கிளம்ப


நான் கலங்குவேன்


இன்னும் சற்று நேரம்


உன்னுடன் இருக்கலாமென்று..!


 

✒️மறுநாள் காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக


அன்பால் என்னைப்


படியத்தான் வைத்து விடுகிறீர்..!


 

✒️படிப்பிலும் பண்பிலும்


உயர்த்தி மகிழ்வாய்!


உனக்கும் எனக்கும் இருக்கும்


அன்பு விலை மதிப்பற்றது..!


 

✒️உன் தாய்மை உணர்வு


என்னை தலை நிமிர


வைத்து விடுகிறது..!


 

✒️கற்பித்த உன்னால்


பெற்றவளின்


மனம் குளிர்ந்துதான் போகிறது..!

✒️எனக்கோ பெருமை


பல வந்து சேருகிறது..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வராணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி

சென்னை -60

 

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும்|ரா. ஷர்மிளா

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும் - ரா. ஷர்மிளா
       “டம் டம் டமார்” காலை ஐந்து மணிக்கு ஒரே சத்தம். அம்புஜம் மாமி சமையல் வாசனை தெரு முழுக்க வரும். ஆனால் கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி. கையும் வாயும் சும்மா இருக்காது. பாத்திரம் எடுத்தா கீழே போடாம வேலை நடக்காது. சுறுசுறுப்பும், ரசனையும் மாமிக்கு ரொம்ப ஜாஸ்தி.
       
       நாராயண சாமி தூங்கி எழுந்தவுடன் மாமி பேச்சு ஒரு கும்மி பாட்டு மாதிரி இருக்கும். ராத்திரி தாலாட்டு பாட்டு கேட்பதும் காலைல கும்மி பாட்டு கேட்பதும் நாராயண ஸ்வாமிக்கு பழக்கமான ஒன்று.
       
      பெருமாளுக்கு காலைல சுப்ரபாதம், இரவு லலிதா சஹஸ்ரநாமம் மாதிரி. நாராயண ஸ்வாமி வீட்டுல காலைல கும்மி இரவு ரம்யமான தாலாட்டு. அந்த இட்லி, கொட்சு, தோசை, குருமா, சப்பாத்தி, பருப்பு எல்லாம் நினைத்தாலே தூக்கம் வரும். அது ருசியா மயக்கமானு யாருக்கும் தெரியாது. தரமான சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் தானே வரும். இது அனுபவத்தில் உண்மை. அம்புஜம் மாமி குரல் கேட்டது.
       
     “வந்துட்டியா எனக்கும் உனக்கும் என்ன ஒரு பொருத்தம். நீயும் நானும் இல்லேன்னா சமையல் இல்லை. நான் எத்தனை நேரம் கஷ்டப்படணும் உன்னோட. நான் மனசுல நினைச்ச உடனே வந்துடரியே. காலைல உன் கலர் எவ்வளவு பிரெஷ் சா இருக்கு. உன் பெயர் கேட்டால் எனக்கு என் காலை வேலைகள் நியாபகம் வருது. பிள்ளையார் மாதிரி நீ தான் என் முதல் வேலை. நீ ஏன் இவ்வளவு வேலை குடுக்கறே? சில பேர் வீட்டுல வேலை கம்மி எங்க வீட்டுல உன்னால தான் வேலை ஜாஸ்தி”.
       
        நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. தினமும் இப்படி மகன் ரமேஷ்சை வசை பாடி எழுப்புவது தப்பு. அவன் காலை நேரம் இனிமையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வந்தால் அவளிடம் சொல்லணும்னு நினைத்தார்.  அம்புஜம் மாமி, நாராயண ஸ்வாமிக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பெயர் ரமேஷ். இரண்டாம் மகன் பெயர் கிரிஷ். ரெண்டு பெரும் ஸ்கூல் படிக்கறாங்க. நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் தனி ரூம் ல படுப்பார். ராத்திரி லேட்டா டா படுப்பார். ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும்.
       
      குழந்தைகள் தனி ரூம்ல படுப்பாங்க. அம்புஜம் மாமி அந்த ஏரியால பேமஸ். அவங்க ஊறுகாய், கருவேப்பிலை போடி, முருங்கை கீரை போடி, பருப்பு போடி செய்து சேல்ஸ் பண்ணுவாங்க. கை மணம் அதிகம்.
நாராயண ஸ்வாமி கிண்டல் அடிப்பார் “நீ பெரிய பிசினஸ் வுமன். உன் பிசினஸ் மைண்ட் சும்மா இருக்காது”.
       
அம்புஜம்: நான் டீச்சர் ட்ரைனிங் எடுத்து டீச்சர் ஆகணும் ன்னு நினைச்சேன். என்ன பண்றது! கடமை வீட்டிலேயே என்னை கட்டி போட்டு விட்டது. சமையல் பிசினஸ் பண்ண எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க.
       
நாராயண ஸ்வாமி: இந்த கம்ப்யூட்டர் காலத்துலே வேலை பண்றத விட பிசினஸ் பண்றது தான் பெஸ்ட், அம்புஜம். ஊறுகா போட்டு குழந்தைகளை டாக்டர் படிக்க வச்ச பெண் இன்னிக்கு நியூஸ்பேப்பர் ஹெட்லைன்ஸ் ல பார்த்தேன்.
  
அம்புஜம்: பெண்கள் சுயமாக இருப்பது பெரிய விஷயம்.
       
நாராயண ஸ்வாமி: பெண்கள் அறிவால் சாதிப்பது அழகு தான். வள்ளுவர் சொல்லி இருக்கார்: “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
  பெண்ணே பெருமை உடைத்து”. இதற்கு அர்த்தம், ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
       
அம்புஜம்: உண்மை தான். ஒரு ஆண் தன் குழந்தைகளை கண்டிப்பாக வளர்ப்பான். பெண் மானமுள்ளவர்களாக வளர்ப்பாள். தாய், தந்தை இருவரும் ஒரு குழந்தைக்கு முக்கியம்.
சரி, சரி நேரம் ஆச்சு நான் குளிக்க போறேன். எனக்கு வேலை இருக்கு.
நாராயண ஸ்வாமி அலுவலக வேலைகளில் மூழ்கி போனார்.
அம்புஜம் சமையல் மற்றும் குழந்தைகள் வேலையில் கவனம் செலுத்தினாள்.
 ரமேஷ், கிரிஷ் இருவரின் ஸ்கூல் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தார்கள். ரூம்ல ஒரே சத்தம். லேப்டாப் வச்சிட்டு ஹாட்ஸ்டார்ல ஏதோ பார்த்துட்டு இருந்தார்கள்.

ரமேஷ்: கிரிக்கெட் ல ஆல் ரவுண்டர் தான் பெரிய விஷயம்.
கிரிஷ்: எனக்கு பேட்டிங் தான் புடிக்கும்.

ரமேஷ்: எனக்கு ரவீந்திர ஜடேஜா தான் புடிக்கும். அவரு மேட்ச் சூப்பர் ரா இருக்கும்.
கிரிஷ்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் எப்படி ஆடினார் இல்ல. அவரு ஒரு சூப்பர் பிளேயர் டா.

கிரிஷ்: இந்தியன் பிளேயர் ரோஹித் ஷர்மாவும் சூப்பர் தான். அவரு மேட்ச் பார்க்க செமயா இருக்கும். எல்லாரும் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.
  நாராயண ஸ்வாமி ஆபீஸ் வேலை ஒரு புறமும் மகன்கள் பேசுவது ஒரு புறமும் கேட்டு கொண்டு இருந்தார். அடுத்த நாள் ஞாயிறு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு. லீவு அன்னிக்கு வெங்காயம் போட்டு சாம்பார், கருவேப்பிலை சட்னி, கீரை கூட்டு, அவியல், பருப்பு உசிலி, உருளை கரி ன்னு நிறைய மெனு இருக்கும். பார்ப்பனர்கள் குடும்பத்தில் சாம்பார், சட்னி, உருளை கரி தான் ஸ்பெஷல் மீல்ஸ்.
நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் வெளி ஊருக்கு போவார். ஹோட்டலில் சாப்பிடுவார். வீட்டு சாப்பாடு அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஹோட்டல் சாப்பாடு வேற வழி இல்லாம சாப்பிடுவார். கஷாயம், லேகியம், சாலட், பழம்ன்னு ஹெல்த்தியா சாப்பிடுவார். ஹோட்டல் சாப்பாடு ஜீரணம் ஆகாது. சத்தும் கம்மியா இருக்கும். வீட்டு சாப்பாடு ருசி அதிகம், சத்தும் அதிகம். சாம்பார், பொரியல், கூட்டு, துவையல் ன்னு நல்லா சாப்பிடுவார்.
       
ரமேஷ், கிரிஷ் காலைல லேட்டா எழுந்துப்பாங்க. எழுந்த உடனே அப்பா வோட கிரிக்கெட் விளையாட்டு, அப்புறம் சாப்பாடு, அம்மா வோட கதை நேரம், பிரண்ட்ஸ் வீடு, பிரண்ட்ஸ் கூட அரட்டைனு ஓடி போய்டும். ஞாயிறு காலை ஐந்து மணி
       
அம்புஜம் மாமி சவுண்ட் குடுக்க ஆரம்பிசுட்டாங்க. கும்மி பாட்டு ஆரம்பிச்சாச்சு. “என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு. நான் என்ன வேலைக்காரி ‘யா? உன் ஒருத்தனால மத்த வேலை செய்ய முடியல. இப்படி என்ன ஏன் கஷ்டப்படுத்தறே?”
நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. சும்மா குழந்தைகளை கறிச்சு கொட்டறா. அம்மா அப்படினா வேலைக்காரி தான். இதுல என்ன குறைஞ்சி போரா இவ. சும்மா ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசரா. இன்னைக்கு சொல்லணும். இப்படி பேசாதேன்னு. மனதில் ஒத்திகை பார்த்து விட்டு ரூம் வெளியில் வந்தார் நாராயண ஸ்வாமி.
நாராயண ஸ்வாமி: ஏண்டி அம்புஜம், ஏன் இப்படி சத்தம் போடறே? காலை வேலைல தூங்க விட மாட்டியா?

அம்புஜம்: நீங்க ஏன் என் பேச்சை கேட்கறீங்க. ஏதாவது பா ட்டு போட்டு கேளுங்க.
நாராயண ஸ்வாமி: உன் பாட்டு கேட்டா தான் சுறுசுறுப்பா இருக்கு.

அம்புஜம்: சரி அப்போ கேளுங்க.
நாராயண ஸ்வாமி: நீ ஏன் குழந்தைகளை காலை நேரத்தில் திட்டுறே? காலைல நல்ல வார்த்தை பேசணும்னு உனக்கு உங்க வீட்டுல சொல்லி தரலையா?
அம்புஜம்: அது சரி, நான் என் சொந்த கதை சோக கதை சொன்னா, நீங்க குழந்தைகளை திட்டறேன்னு நினைச்சுட்டீங்களா. நான் இந்த முருங்கை கீரையோட பேசினேன்.

நாராயண ஸ்வாமி: என்ன? கீரையோட பேசினாயா?
அம்புஜம்: ஆமாம் நான் கீரை கூட, பாத்திரம் கூட பேசுவேன். என் வேலை அவங்களோட தானே.

நாராயண ஸ்வாமி: சரி, ஆனால் ஏன் அழகா பிரெஷ் சா இருக்கேனு சொன்னே? ன்னு கேட்டுட்டு சிரித்தார்.

அம்புஜம்: ஆமாம், முருங்கை கீரை பிரெஷ் சா இருந்தா காலைல வாங்கி கூட்டு பண்ணுவேன். இரும்பு சத்து இருக்கு. ரொம்ப நல்லது. கீரை அழகா இருக்கு. ஆனால் வேலை அதிகம் ஆகிடுது. அதான் சொன்னேன்.

நாராயண ஸ்வாமி: ஆமாம், நீ சொல்றதும் சரி தான்.  நாம வேஜிடெரியன் சாப்பாடு சப்படறோம். கீரை சாப்பிட்டா நல்லது.

அம்புஜம்: சுதந்திரம், பாதுகாப்பு இரண்டுல ஏதாவது ஒன்னு தான் வாழ்க்கைல இருக்கும்ன்னு நான் ஒரு நீதி கதை படிச்சேன். அது தான் எனக்கு ஞாபகம் வருது. வேலை செய்யாம சுதந்திரமா இருந்தால் சோம்பேறித்தனமா இருக்கு. வேலை செஞ்சா அலுப்பா இருக்கு. நான் சுதந்திரமா இருக்கறத விட அங்கீகாரத்துடன் இருப்பது தான் பெரிசுன்னு நினைக்கறேன்.

நாராயண ஸ்வாமி: நீ குழந்தைகளை தான் திட்டறேன்னு  நினைச்சு நான் வருத்தப்பட்டேன். உன் அன்பான கண்டிப்பு “மழை சாரல்” மாதிரி. அது கஷ்டமான சுகம் என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட ரமேஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து ரூம் வெளியில் வந்தான். அப்பா, அம்மா திட்டினால் சிரிப்பு தான் வரும். கோவம் வராது என்றான்.

நாராயண ஸ்வாமி: உண்மை தான். அவள் திட்டும் பொழுது “வஞ்சப்புகழ்ச்சி அணி” உபயோகிப்பாள். சொல்ல வந்ததை அழகும், அன்பும் கலந்து சொல்வாள்.

ரமேஷ்: கரெக்ட்டா சொன்னீங்கப்பா. அம்மா திட்டினால் கோவம் வராது. அப்பா திட்டினால் தான் கோவம் வரும்.

அம்புஜம்: அம்மாவின் கண்டிப்பு ஆர்வத்தையும், அப்பாவின் கண்டிப்பு வேகத்தையம் தரும். அது தான் கடவுளின் படைப்பின் ரகசியம் என்றாள்.

ரமேஷ்: உண்மை தான், அம்மா, என்றான். அம்மாவை கட்டி அணைத்து முத்தம் இட்டான்.

அம்புஜம்: இந்த முருங்கை கீரை ஒரு உண்மை கதையை உருவாக்கிவிட்டது என்றாள் சிரித்துக்கொண்டே.
நாராயண ஸ்வாமி: ஆமாம், “முருங்கை கீரை கதை” நல்ல கதை என்றார். சொந்தக் காரங்க வீட்டுக்கு வந்தா சொல்ல இன்டெரெஸ்ட்டிங்கா ஏதாவது வேணுமே. சும்மா இருந்த வாய்க்கு அவல் நான் குடுத்துட்டேனா? சிரித்து கொண்டே குளிக்க சென்றார் நாராயண ஸ்வாமி.
அம்புஜம் மாமிக்கு சமையல் வேலையும், குடும்ப பேச்சும் தான் சந்தோஷம். அவள் உலகம் அது தான். ஆனால் தன் உலகத்தை அழகாகவும், சுறுசுறுப்பாகவும் அவள் வைத்து கொண்டு இருந்தாள். அதனால் தான் அனைவரும் அவளை விரும்பினார்கள்.

சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »