Wednesday, June 3, 2026
Home Blog Page 40

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

பாராட்டுமுறைத் திறனாய்வு

         குறையொன்றையும் காணாமல் நிறையினை மட்டுமே கண்டு விதந்து பேசும் நிலையை பாராட்டு என்கிறோம். தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உரைகள் மூல நூலாசிரியனின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கருத்தினை கூறியுள்ளார் என்று பாராட்டிப் பேசியுள்ளனர். பாராட்டு முறைத் திறனாய்வுக்கு (Appreciative Criticism) பண்டைய கால உரைகளே அடித்தளமாக அமைந்துள்ளன.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     இன்றைய காலகட்டத்தில் பாராட்டுமுறைத் திறனாய்வானது பரவலாக அமைந்துள்ளது. பாராட்டு முறையின் மூலமாக ஒருவரின் சிறப்புப் பண்புகளை மிகையாக எடுத்துக் கூறுகின்றனர்.

1. இலக்கியச் சொற்பொழிவாளர்கள்

2. கல்வியாளர்கள்

     இவர்களிடம் பாராட்டு முறையானது சில வகையான மேடை உத்தியாகவும், விருப்பத்தின் காரணமாக நிகழக்கூடிய ஒருபக்கச் சார்பாகவும், இப்பாராட்டு முறை நிறையவே இடம்பெறுகிறது. கம்பனை காலமுள்ளவரை பாராட்டக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஜெகவீரபாண்டின், டி.கே.சி. ஏ.சி. பால்நாடார். கம்பனடிப்பொடி. சா. கணேசன், ப. ஜுவானந்தம், எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், மு.மு. இஸ்மாயில், தெ. ஞானசுந்தரம் போன்றோரும், இன்னும் பலர் கம்பனைப் பாராட்டிக்கொண்டே உள்ளனர்.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     பாராட்டு முறைத் திறனாய்வில் பாராட்டுரைகளை ஒரு குறிப்பிட்ட அளவாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, திறனாய்வில் வெற்றுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ‘எதுவும் சற்று அளவு கடக்குமானால் கரிக்கும்’ என்பதுபோல பாராட்டுகளும் ஒரு அளவோடு எடுத்துக் கொள்ளப்பட்டால் அது சிறப்புடைய திறனாய்வாக அமையும். திறனாய்வுக்கு உண்மை மட்டுமே அவசியமான ஒன்றாகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு

      இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை நிறுத்தி, அதனின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆய்ந்துப் பார்ப்பது மனிதனின் இயல்பாகும். அத்தகைய வழிநின்று தோன்றியதே ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஒரேக் கூறாக அமைந்தப் பொருட்களை ஒப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. நேர்முரணாக உள்ளப் பொருட்களையும் ஒப்பீடு செய்வது வழக்கமில்லை. ஒப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இருபொருள்களின் ஒத்த தன்மைகள் மட்டுமே போதுமானதாக உள்ளது.

1. ஒத்த சமுதாய – வரலாற்றுச் சூழல்களில் பிறக்கும் இலக்கியங்கள், ஒத்த தன்மை உடையதாக இருத்தல்.

2. ஏற்புத்திறனை அதிகளவில் கொண்டு, ஓர் இலக்கியம், இன்னோர் இலக்கியத்தை தனது செல்வாக்கில் உட்படுத்துதல்

3. மொழி, இனம், நாடு, கடந்து, பலதரப்பட்ட புவியியல் கூறுகளை மீறி, இலக்கியங்கள் தன்னகத்தே ஒன்றுபட்ட பண்பகளைக் கொண்டிருத்தல்

4. குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும், கூறுகளும், தெளிவான நிலையில் விளக்கமாக காணக்கூடிய கருத்து நிலை ஒப்பீடு ஒப்பீட்டுத் திறனாய்வில் கருதுகோளாக அமைந்துள்ளது.

     ஒன்றனை ஒன்று ஒப்பீடு செய்வது உயர்ந்தப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே ஒழிய, என்னுடைய இலக்கியம்தான் உயர்ந்தது என்று செம்மாப்புக் கொள்வதற்கு அல்ல. சில உலக இலக்கியங்கள் ஒப்பீட்டு முறையில் திறனாய்வு செய்யப்பட்டதன் காரணமாக, அதனின் பொதுமைப் பண்புகள் கண்டறியப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனின் பின்னணி இயங்கியல் முறையில் சரியாக இனம் காணப்படுகிறது. ஏனைய திறனாய்வு வகைகளைப் போன்று சிறந்த முறையில் அமைந்திருந்தாலும், இது பரந்த தளத்தை உடையதாக உள்ளது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

      ஒப்பீட்டுத் திறனாய்வானது, இன்று வளர்ச்சிப் பெற்று “ஒப்பிலக்கியம்” (Comparative Literature) என்று தனி அறிவுத்துறையாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சி நிலைக்கு வித்திட்டப் பெருமை ஃபிரான்சு நாட்டினைச் சாகும். பிறகு சில மாற்றங்களுடன் அமெரிக்காவில் வளர்ச்சியடையத் தொடங்கியது. அமெரிக்கா – இந்தியானா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெச். ஹெச். ரீமாக் (H.H.Remarce) கூறிய வரையறையே ஒப்பிலக்கியத் துறையில் பெரிதும் பின்பற்றப்படுகிறது. ஒரு நாட்டின இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுகையில்

1. அவற்றிற்கிடையேயான உறவு நிலை

2) சமுதாயவியல் கொள்கை

3) தத்துவம்

4). இசை, ஓவியம், கூத்து போன்ற கலைநிலை வடிவங்கள்,

     எனப் பலதரப்பட்ட நிர்ணயக் கூறுகளை உடைய இலக்கியங்களின் மேன்மையை வெளிப்படுத்தி மனித உள்ளத்தில் ஒரு ஒற்றுமை உணர்வினை வளர்க்கச் செய்கிறது என்கிறார்.

1. ஹேரி லெவின்

2. ரெனே வெல்லக்

3. ரெனே எதேம்பிள்

4.பால் வான்தீகம்

5. உல்ரிச் வெய்ஸ்டீன்

போன்ற பலர் ஒப்பீட்டு திறனாய்வுத் துறையில் பல விளக்கங்களை அளித்துள்ளனர். பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கையானது. பிற கருத்து நிலைகளையோ, கலைக் கொள்கையையோ ஏற்றுக்கொள்வதில்லை. ஒப்பிலக்கியத் துறையானதுதிறனாய்வுத் துறையோடு இணைந்தே வளர்கிறது.

தமிழில் ஒப்பீட்டுத் துறை

         இலக்கியத்தையும், படைப்பாளியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நம்நாட்டில் தொன்றுதொட்டு பழங்காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. தமிழ் உரையாசிரியர்கள் தாம் உரைகூறும் நூற்களுக்கும், பாடல் வரிகளுக்கும் பிற-இணையான இலக்கண-இலக்கிய மேற்கோள்களை ஒப்பீட்டு முறையில் எடுத்துக் காட்டுகின்ற போக்கு, பாராட்டத் தகுந்த அளவிலே இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இத்தகைய சிறப்புவாய்ந்த ஒப்பியல் நோக்கு தமிழகத்தில் பரவலாகவே வளர்ச்சியடைந்து விரைந்து வளர்ந்தும் வருகிறது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

     1885ஆம் ஆண்டில் ஜி.யூ.போப் அவர்கள் தமிழிலக்கியத்தைப் பார்த்து “பழைய தமிழ்க்காப்பியங்களைப் பார்க்கிற பொழுது, அவற்றிற்கும், அவற்றிற்குச் சமமான கிரேக்க இலக்கியத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைப் புலனாகிறது என்கிறார்.”

1. உருவம்

2. உள்ளடக்கம்

3. சமுதாய நிலை

       என்ற மூன்றும் பெருமளவில் ஒத்துப்போகின்றது. அதேபோல் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகையில்  “தமிழின் புறப்பாடல்கள் ஹோமரின் காவியத்திற்கு அடிநிலையான இசைப்பாடல்களோடு ஒத்து முடிகின்றன.’ என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை தனது காவிய காலம் (1952) நூலில் குறிப்பிடுகையில் இதனின் கருத்துக்கள் ‘Heroic Age’ எனப்படும் கிரேக்க கருத்து நிலையோடு ஒத்து முடிகின்றன என்கிறார். இத்தகைய கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் ‘Tamil Heroic Poetry’ என்னும் தலைப்பில் பிரிட்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவ்வாராய்ச்சிக்கு அடிநிலையாக இருந்தது ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும்.

          தமிழில் ஒப்பீட்டு முறைத் திறனாய்வின் வளர்ச்சியினை வ.வே.சு அய்யரின் “Kamba Ramayana – A Study” எனும் நூல் கம்பனை, வால்மீகி, மில்டனுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது ஒப்பீட்டு திறனாய்வுக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism)

கேள்வியும் பதிலும் - சமுதாயவியல் திறனாய்வ

   இலக்கியம் என்பது சமுதாயத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை வெளிப்பாட்டினைக் வெளிக்கொணருவதாகும். அதனில் மனிதனின் வாழ்க்கைத் தன்மையானது சமுதாயத்தோடு, இணைந்தும். முரண்பட்டும் வாழ்ந்த நிலையினை உணர்வுப்பூர்வமாக வெளிக்காட்டுகிறது. அவ்விலக்கியத்தில் அதனின் தோற்றம், பொருள், பயன்பாடு, ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனுக்கு உள்ள தொடர்பினை விளக்குவது சமுதாயவியல் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

          சமுதாய வரலாற்று மரபில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றுகின்ற இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும், படைப்பாற்றலுக்கு ஏற்ற நோக்கு மற்றும் கருத்தின் தன்மையையும், பெற்றதாக அமைகிறது.

        இலக்கியம், சமுதாயம் இரண்டிற்குமுள்ளத் தொடர்பானது புலனறிவு (Sensory Perception) போல மிகவும் இயல்பான, எளிமையான ஒன்றாக உள்ளது.         தே பொனால்ட் (De Bonald) எனும் பிரான்சு நாட்டு அறிஞர். இலக்கியத்தை சமுதாயத்தின் புலப்பாடு (Literature is the expression of society) என்கிறார். ரெனி வெல்லக் (Rene Wellak) அவர்கள். தன்னுடைய ‘இலக்கியக் கொள்கை” என்னும் நூலில், ‘இலக்கியம் என்பது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமாகவும் தோன்றப்பட்டது’ என்று சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கு முள்ள உறவுநிலையை விளக்கியுள்ளார். சமுதாய மதிப்புகளானது காலம் செல்ல, செல்ல சூழ்நிலைக்கு ஏற்ப மாறிய வண்ணமாக உள்ளன.

      மார்க்சிய வாதிகளின் சிந்தனைகளானது சமுதாயத்திற்கும். இலக்கியத்திற்கும் உள்ள உறவுநிலைப் பற்றி ஆழமாகவும், அதிகமாகவும் சிந்திக்கக் கூடிய தன்மைப் பெற்றதாக அமைந்துள்ளது. மார்க்சிய கொள்கைகளில், சமுதாயச் சிந்தனையானது,

1. அடிப்படையான பொருளியல் (Material)

2. வாழ்க்கைக்கான ‘சமுதாய இருப்பு’ (Social Being)

3. கருத்து நிலையால் ஏற்படும் சமுதாய உணர்வுகள் (Social consciousness)

      இவற்றைப் பற்றிதான் இலக்கியம் பேசுகின்றது என்கின்றனர். இவ்வுலகின் தன்மையை வெளிக்கொணருவதற்குச் சமுதாயவியல் திறனாய்வு சிறப்புடையதாக அமைகிறது.

சமுதாயவியல் திறனாய்விற்கு அடிப்படை

         ஓர் இலக்கியம் இயற்றப்படும்போது, அவ்விலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் நெரு தொடர்புண்டு என்பதைக் கருத்தில் கொண்டு, படைக்க முயல்வோர், சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். திறனாய்வாளர், சமுதாய நிலை இலக்கியமாகக் காணப்படும் இதனுள்,

1. இலக்கியம் புலப்படுத்தும் உண்மைகளைக் காரண, காரியங்களோடு (Cultural Factors) கண்டு விளக்குதல்

2. சமுதாய நிகழ்வுகளை (Social Determinants) வெளிக்கொணருதல்

3. இலக்கியத்தின் அமைப்புமுறைப் பற்றி பேசுதல்

4 அதனின் இடம்பெற்றுள்ள பொருளமைவுகள் பற்றி கூறுதல்.

     இவற்றைக் கருதுகோளாக வைத்து சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது அமைகிறது. இலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் உள்ள உறவுநிலையைக் கீழ்க்கண்ட பரிணாமங்களின் துணைக்கொண்டு திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர்.

(1) சமுதாயப் பின்னணி (Social Context)

¤ படைப்பிற்குரிய காலப் பின்னணி

¤ படைப்பாளனுடைய காலப் பின்னணி

(2) எதிர்கோள் (Reader’s Response)

¤ சூழலை எதிர்கொள்ளுதல்

¤ சூழலைப் போற்றுதல்

(3) சமுதாயத்தைக் காட்டும் விதம் (Social Content)

1. குடும்ப அமைப்பு

2. உறவு நிலை

3 நிறுவனங்கள்

4. அரசாட்சிமுறை

5. சமுதாய நிலைப்பாடு

         1. கிராம மக்களின் வாழ்வு

         2. நகர்ப்புற மக்களின் வாழ்வு

         3. சாதி நிலை

        4. சீரழிவான நிகழ்வுகள்

        5. சிக்கல்களைக் கொண்ட சமுதாயச் செயல்கள்

        6. பிரச்சனையை தீர்க்கும் வழிகள்

        7. கருத்துநிலை மாற்றங்கள்

     என்ற தன்மைகளில், முரண்பட்ட சமுதாயச் சூழலைத் திறனாய்வு செய்து தீர்வினைக் காண்கின்றனர். சமுதாயத்தில் நிகழக்கூடிய இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் முன்னோக்கியே  நடைபெற்றுள்ளதாகும்.

        படைப்பாளன் – படைப்பு – சமுதாயம் இம்மூன்றும் ஒன்றை ஒன்றுத் தழுவி நெருக்கமுற பிணைப்புக் கொண்டதாக சமுதாயவியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இலக்கியத்தின் கலையுருவாக்க தன்மைகளுக்கு ஏற்பவும், சமுதாயத்தின் நெறிமுறைகளுக்கு தகுந்த முறையிலும் அதனின் மதிப்பீடுகள் அமைகிறது. அதனடிப்படையில் அப்பரின் உழவாரத் தொண்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. முடிவாக, அப்பர் வைத்திருந்த உழவாரப்படை வேளாள எழுச்சியின் ஆயுதமாகவோ வெறும் அடையாளப் படுத்திக் கொள்ளும் குறியீடாகவோ. எண்ணாமல், அன்றைய காலக்கட்டத்தின் சமுதாயச் சூழ்நிலைகளைப் புரிந்துக் கொள்வதற்கான கருவியாக எண்ணுதல் வேண்டும் என்கின்றனர்.

எதிர்கொள்ளும் தன்மை

       ஒரு குறிப்பிட்ட படைப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்றும் அதனின் தரம், பயிற்சி, முதலிய தகைமைகள் நிர்ணயம் செய்யப்படும் தன்மை ஆகியவைப் பற்றி சமுதாயவியல் திறனாய்வாளர்கள் பேசுகின்றனர். மேலும், குறிப்பிட்ட படைப்பினை வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் அவர்களின் மனநிலை மாறுதல்கள் என்ன என்பது பற்றியும் பிரெஞ்சு இலக்கிய அறிஞர் ஹென்னக்யுன் (E.Hennequin) மற்றும் ருசிய அறிஞர்கள் பொதப்னியா (A. Potebnya) முதலியவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

      ஆங்கிலத் திறனாய்வாளர்களான 1) க்யூ டி. லீவிஸ் – விரிவாக்க முயற்சியில் சமுதாயவியல் (Fiction and the Reading – Public) கொள்கையை, ஒப்பிலக்கியம் ‘ஏற்றல் கொள்கை’ (Reception Theory) மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கொள்வின் இன்றியமையாமை:

1. வாசகரின் நேரடிப் பேட்டிகள்

2. விற்பனை பற்றிய குறிப்பு

3. தொடர்ச்சியாக வெளிவரக்கூடிய பதிப்பு

4. மதிப்புரை மற்றும் விமர்சனங்கள்

5. மேற்கோள்கள்

6.பிறரால் மொழிபெயர்க்கப்பட்டது

7. பிறரால் எடுத்தாளப் பெற்ற வரிகள்

    முதலியவை குறிப்பிட்டகலை இலக்கியப் படைப்பின் எதிர்கொள்வாக திறனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சமுதாய சூழலின் சித்தரிப்பில் இடம்பெறுகின்றதாக

(1) சாதிகள்

(2) குலங்கள்

(3) மொழி அடிப்படையில் அமைந்த சமுதாயப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் (Social Ethnic Groups) பற்றிய விரிவான ஆய்வுத் தன்மையும், வட்டாரம், மொழி. அடிப்படையில் பகுக்கப்பட்ட

              (1) தேசியம்,

             (2) துணைதேசியம் இனங்கள்

            (3) வர்க்கப் பிரிவினைகள்,

            (4) பழக்க வழக்கங்கள் (Social Habits)

            (5) நம்பிக்கைகள்

           (6) சடபங்குகள்

           (7) சமுதாயத்தின் தேக்கச் சீரழிவுகள்

           (8) வறுமை

           (9) வேலையின்மை

         (10) குடும்பச் சிதைவின் வழி வரும் சமுதாயச் சீர்க்கேடுகள்

         (11) சமுதாய மாற்றங்கள்

     என்று சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது விசாலமானப் பார்வைக் கொண்டதாக பரந்துபட்டுச் செல்கிறது.

    சமுதாயவியல் திறனாய்வானது கலைப் படைப்பில், நுணுகி ஆராயும் தன்மைக் கொண்ட விஞ்ஞானியின் பார்வையைப் போன்று ஆழ்ந்து நோக்கும் தன்மையினைக் கொண்டதாகவும், உலகக் கண்ணோட்டத்தினை (World outlook) உடையதாகவும் அமைந்துள்ளது. ஏனைய திறனாய்வினை விட மிகச் சிறப்பிற்குரிய திறனாய்வாக இதனை அடையாளம் காட்டுகிறது.

வரலாற்று முறைத் திறனாய்வு |Biographical Criticism

இனியவை கற்றல்

       இலக்கியப் படைப்பாளரின் படைப்பிலிருந்து, அவரின் வாழ்க்கை வரலாற்று முறையினை ஆய்வது வரலாற்று முறைத் திறனாய்வு ஆகும்.

     பாரதியாரின் படைப்புகளைக் கொண்டு அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆராய்ந்தது இவ்வகையானத் திறனாய்வு முறையாகும். இத்தகைய திறனாய்வு முறை இரண்டு விதமானக் கூறுகளில் நடைபெறுகிறது.

1. அகவயமுறை (Subjective)

அகவயமுறை என்பது ஆசிரியரின் படைப்பினைக் கொண்டு திறனாய்வு செய்வது.

2. புறவயமுறை (Objective)

புறவயமுறை என்பது ஆசிரியர் பற்றி செய்தியினை, பிறத் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்வது ஆகும்.

     வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் சிறப்புடையதாக அகவயமுறையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கம்பனின் படைப்பில் வரும் தசரதன் – இராமனின் பிரிவு நிலையைப் படித்தோர். அதனை கம்பர் – அம்பிகாபதியின் பிரிவு என்றே கருதினர். அதே போன்று பாரதியாரின் விடுதலை உணர்வுப் பாடல்களை நோக்கும்போது – பாரதியின் விடுதலை வேட்கை நிலையையும், தேசியத்திற்காக தன்னை அர்ப்பணித்த தன்மையையும் காண முடிகிறது. வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் ஒருவரைப் பற்றி அறிய அவருடைய படைப்புகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், புறச்சான்றுகளும் இன்றியமையாதது ஆகிறது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism)

2. விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

3.உளவியல் முறைத் திறனாய்வு

உளவியல் முறைத் திறனாய்வு (Psychological Approach)

இனியவை கற்றல்

          உளவியல் முறைத் திறனாய்வானது ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பின் வழி அவனுடைய உள்ளக் கருத்தை ஆராய்வது ஆகும். இதனை “Phychological Approach’ என்று கூறுவர். படைப்பாளியின் மனநிலையை அப்படைப்பில் வரும் பாத்திரங்களின் மனநிலையைக் கொண்டு அறியமுடியும்.

        ‘தாய்’ நாவலில் வரும் ‘பாவெல்’ என்னும் பாத்திரத்தின் மனநிலையும், சிந்தனையும் படைப்பாளரின் மார்க்சிய சிந்தனையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று ஆராய்ந்துள்ள ‘ஃபிராய்டு’ போன்ற உளவியலாளரின் கொள்கை அந்நூலினது சரியானத் தினாய்வு முடிவினைக் காட்டுகிறது.

       உளவியல் அணுகுமுறையில் ஃபிராய்டு அவர்கள் மகள் தந்தையிடமும், மகன் தாயிடமும் நெருங்கி இருப்பது பாலியல் அடிப்படை என்றும், பெற்றோரை விட்டு விலகி இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற குழந்தைகளைத் ‘தெரிந்த உணர்வு’ என்றும் பகுத்துள்ளார்.

    மேற்கண்ட உளவியல் கொள்கைகளை ஒரு சாரமாகக் கொண்டு அதனை இலக்கியத்தில் உட்புகுத்தி முடிபுகளைக் கூறுவதாக உளவியல் திறனாய்வு முறை அமைந்துள்ளது. மேலும்,

1. குழந்தை உளவியல் (Children’s Psychology)

2. மிகை உளவியல் (Abnormal Psychology)

3. தொழிற்சாலை உளவியல் (Industrial Psychology)

4. மூன்றும் சேர்ந்த மனித உளவியல் (Human Psychology)

         என்பதனுள் அடங்கும். இக்கொள்கைகளைப் (Theories) பயன்படுத்தி (applied) முடிவினைக் கூறுவது சிறந்த உளவியல் முறைத் திறனாய்வுக்குச் சான்றாகும்.

உளவியல் திறனாய்வின் பயன்கள்

1.இலக்கியம் படைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிதல்

2. படைப்பாளியின் உள்ள நிலையை அறிதல்

3. பாத்திரங்களின் தன்மையை அறிதல்

4. கதைமாந்தர்களின் உணர்வினை அறிதல்

5. படைப்புக்கும், வாசகத்திற்கும் உள்ள உணர்வு நிலையை அறிதல்

6.படைப்பாளரின் முழுவரலாற்றை ஆய்தல்

7. கனவு நிலையைக் காண்டல்

8. நிறைவேறாத எண்ணத்தை எடுத்தியம்பல்

9. உண்மைத் தன்மைக் கொண்ட உணர்வினை ஆய்தல்

போன்ற உளவியல் திறனாய்வின் பயன்களாக அமைகின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

iniyavaikatral.in

          முடிபுமுறைத் திறனாய்வினை ஒத்ததாகக் காணப்படுவது விதிமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறை என்பது ஒரு குறிப்பிட்ட சில அளவை முறைகளைக் கொண்டு ஓர் இலக்கியத்திற்கு முடிவினை வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது (Prescriptive Criticism) வரையறை மற்றும் அளவுகோல்களை இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது ஆகும். இத்திறனாய்வின் வழி தீர்வினை அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. சிலவகையான. வரையறைகளைக் கொண்டுள்ள இலக்கியத்தை விளக்குதற்கு விதிமுறைத் திறனாய்வு பயன்படுகிறது.

      ‘நெடுநல்வாடை’ – என்னும் நூல் அகமா, புறமா என்று சர்சைக்குள்ளான காலக்கட்டத்தின் பின்பு பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த நச்சினார்க்கினியர் நெடுநல்வாடை புறத்தைச் சார்ந்த நூல் என்ற முடிவினைத் தந்தார். ‘நெடுநல்வாடை – புறநூல்’ – என்பதை நிருபிக்க அவர் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்.

1. நெடுநல்வாடையில் அதிக அளவில் பேசப்படுகின்ற செய்தியானது புறத்தைப் பற்றியது என்றும்.

 2. இறுதி நிலையில் மட்டும்தான் அகம் பற்றி பேசப்படுகின்றது. அதனால் தொல்காப்பியரின் விதிப்படி இது அகம் ஆகாது என்று வரையறை செய்துள்ளார்.

3. அன்பின் ஐந்திணையில் தலைவனோ, தலைவியோ “சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப்பெறாஅர்” – என்ற தொல்காப்பியரின் கூற்று நெடுநல்வாடையில் இடம்பெறவில்லை. அதனில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ – என பாண்டிய மன்னனின் அடையாள மாலை பற்றிக் கூறப்படுவதால் இது புறமாயிற்று. இதனின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மரபு ரீதியான முறையில் பின்பற்றப்பட்ட செய்திகளை மாற்றி, சில விதிமுறைகள் கொண்டு வலிந்து பொருள் கொள்ளச் செய்வது விதிமுறைத் திறனாய்வு ஆகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) என்றால் என்ன?

iniyavaikatral.in

        விளக்கமுறைத் திறனாய்வானது ‘Descriptive Criticism’ என்று வழங்கப்படுகிறது. ஆய்வு செய்யப்படும் இலக்கியமானது பல்வேறு கூறுகளை உடையதாகவும், தனித்தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ள நிலையில் அவற்றின் ஒட்டுமொத்தக் கூறினையும் ஒரேடியாக விளக்காமல், ஒவ்வொரு பகுதியாக விளக்குவது விளக்கமுறைத் திறனாய்வு ஆகும்.  

             இலக்கியத்தை ஆய்வு செய்யும் திறனாய்வாளர் விளக்கமுறைத் திறனாய்வை பின்பற்றுவோரானால். அவர் அதிக நுகர்வுத் திறனை உடையவராக இருத்தல் வேண்டும். நுகர்வுத் திறனானது இரண்டு நிலைகளில் இடம்பெற்றுள்ளது. திறனாய்வாளர் ஆய்வு செய்த இலக்கியத்தில் நுகர்ந்து உணர்ந்தது என்ற ஒன்றும், வாசகருக்கு உணர்த்துவது என்ற இரண்டாவது நிலையையும் கொண்டதாகும்.

                 விளக்கமுறைத் திறனாய்வின் போது ஆய்வு செய்யப்பட்ட இலக்கியத்திலிருந்து,

1) உவமைகள்

2) அணிகள்

3) உருவக முறைகள்

4) உணர்ச்சிப்பாடு

5) கருத்து வெளியிடப்பட்டுள்ள முறை

6) இலக்கிய நயம்

7) இலக்கிய உத்தி

8) சொல்லாட்சித் திறன்

9) வர்ணனை

10) அதனின் பின்னணி

         என்ற பலவகையான இலக்கியக் கூறுகளும் விளக்கமுறையில் திறனாய்வு செய்யப்பட்டு விளக்கப்படுகின்றன.

             புதிய சூழல் அமைப்பிற்கேற்ப ஒரு இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும்போது பொருளைச் சரியாகப் புரிந்துக் கொள்ள கூடுதலான சொற்கள் தேவைப்படுகிறது. பொருளைப் பிறருக்கு புரிய வைக்கும்போது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட சொற்கள் மீட்சித் தன்மை பெறுகின்றன. அச்சொற்கள் மீளப்பெறும் முறையை Re-phrasing என்கின்றனர். இதுவே விளக்கமுறை (Interpretation) ஆகும். இதனைப் புலப்பாட்டு முறைத் திறனாய்வு (Heurmanatics) என்று கூறுவதுமுண்டு. விளக்கமுறைத் திறனாய்வில் திறனாய்வு செய்பவனுக்கு,

1. மொழிப்புலமை

2. நுணுகிப் பார்த்து ஆராயும் நுண்ணறிவுத் திறன்

3. அறிவாற்றல்

       என்ற மூன்று தன்மையும் பல்கிப் பெருகக் கூடிய நிலையினை அடைவர். இவ்வகையானத் திறனாய்வு தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டிரைடன் (Dryden) விளக்கமுறைத் திறனாய்வின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

விளக்கவியல் என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி அவர்கள் கூறுவதாவது “ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கவியல் எனப்படுகிறது.

“செருக்குஞ்சினமும் சிறுமையு மில்லார்

  பெருக்கம் பெருமித நீர்த்து”

            என்னும் திருக்குறளில் குற்றங்களைத் தவிர்த்தவர்களின் செல்வம் பற்றிய நிலையைப் பேசுகிறது. இக்குறளின் வாசகம் சரியான நிலையில் மக்களைச் சென்று சேரவில்லை எனக்கருதிய பரிமேலழகர் அதற்கு இணையாக வேறொரு பனுவலைத் தனது மொழியமைப்பில் தந்துள்ளார். அதாவது, ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாக அதனைச் சார்ந்த மற்றொரு பனுவல் (Alternative Text) வருவது விளக்கமுறை ஆகும்.

         பொதுவாக விளக்கமுறைத் திறனாய்வானது ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதுசமயம், அவை வளர்நிலைக் கொண்டது என்பதையும் மறந்துவிடுதல் கூடாது.

1. படைப்பின் பண்புகள்

2. விளக்கம் கூற முயல்கின்றவரின் நோக்கம்

3.பயிற்சி

4. அவரின் மொழிவளம்

5. விளக்கம் யாருக்காக எனும் பார்வை

      முதலிய காரணங்களால் திறனாய்வாளருக்குத் திறனாய்வாளர் சற்று பார்வை வேறுபடுமேயொழிய, சொல்லப்படுகின்ற விளக்கம் ஏற்புடையதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய உரைகளானது மேற்கூறியத் தன்மைகளை உடையதாகவே உள்ளன.

           விளக்கமுறைத் திறனாய்வானது உளவியல் பகுப்பாய்வில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதாக சிக்மண்டு ஃபிராய்டு அவர்கள் கூறியுள்ளார். மனதின் ஆழ்நிலையில் உள்ள நிழலாடுகின்ற தோற்றங்களின் உண்மைகளை ஆராய்வதிலும், புதிர், இருட்குகை. என்று வர்ணிக்கப்படுகின்றதைப் பற்றி ஆய்வதிலும் விளக்கமுறை முக்கியமான பங்கு வகிக்கிறது.

         மனதின் படிநிலைகளையும், அதனில் ஏற்படும் எண்ணத்தின் எழுச்சிகளையும், மனித நடத்தைகளையும் உளவியல் ரீதியாக ஆராய்வதற்கு விளக்கமுறை ஃபிராய்டுக்கு அடிப்படையாக இருந்தது. அதனடிப்படையில் மனித உளவியல் பகுப்பாய்வில் அவர் வெற்றியும் கண்டார். அவர் ஆராய்ந்த ‘கனவுகள்’ பற்றிய நிலை நேரடியாக கூறப்படாமல், பல்வேறு வடிவங்களின் படிமங்களாகவும், குறியீடுகளாகவும் வெளிப்பட்டுள்ளன என்றும், மேலும் தனிமனித நடத்தையோடு தொடர்புக் கொண்டிருக்கிற தன்மைகளையும், உண்மைகளையும் தேடுவதற்கு விளக்கவியல் துணை செய்கிறது.

உருவகமும் – விளக்கமுறையும்

      கலைஞன், சுவைஞன் இருவருக்குமிடையில் உள்ள உறவுநிலையை வெளிப்படுத்த காரணமாக அமையும் தகவலியல் தொடர்பாக இலக்கியம் அமைகின்றது. கலைஞன் இலக்கியத்தைக் குறியீடாக, படிமமாக உருவகமாக வெளிப்படுத்தும் நிலையில், அதனைச் சுவைஞன் வாசிப்பு முறையால் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறான். அத்தகைய நிலையில்தான் திறனாய்வாளனுக்கு வேலை அமைகிறது. இலக்கியத்தில்,

1. நேரடித் தெரிநிலைப் பண்பு

2. உருவகம்

3. படிமம்

4. குறியீடு

5. குறியீடு காட்டும் குறிப்புநிலைப் பண்பு

      இவையெல்லாம் நேரடிக் கூறுகளாக இடம்பெறுகின்றன. ஆனால் திறனாய்வில் தலைகீழ் விகிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. உருவகம் என்பது பொருளைப் பொதிந்து வைத்திருப்பது. விளக்கமுறைத் திறனாய்வு என்பது பொதிந்து கிடப்பதை வெளிப்படுத்துவது ஆகும். (Interpretation is metaphar in the reverse orders) உருவகமும் விளக்கவியலும் ஒரே தகவலியல் முறையின் இருவேறு சொற்கள் என்கிறார் பால் செஷான் (Edward Balcerzan) அவர்கள். விளக்கமுறை, இலக்கியத்தின் பல்வேறுபட்ட பண்புகளை தெளிவுப்படுத்துவதற்கும், புதியவற்றைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்ததாகவும், வார்ப்பு முறையின் தன்மையை சிறப்பிற்குரியதாகும். வெளிக்காட்டுவதாகவும் விளக்கமுறைத் திறனாய்வு அமைந்துள்ளது

இக்கட்டுரை கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை :

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

கோபல்ல கிராம நாவலில் குடும்ப உறவுகள்

இனியவை கற்றல்

            மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இஃது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிலவி வரும் சிறந்த அமைப்பாகும். மனிதன் பல நிறுவனங்களோடு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை  இணைத்துக் கொண்டாலும் குடும்பமே அவனது தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடும்பமே சமுதாயம் உருவாக அடிப்படையாக அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். மனிதனை விலங்கு நிலையிலிருந்து பிரித்துக் காட்டுவது குடும்பமே ஆகும்.

      “குடும்பமே சமுதாயத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாகயுள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை பாசம் போன்ற உன்னத அபலாசைகளும் தேவைகளும் முழுமையாகத் திருப்தி பெறுகிறது.”5 என்ற கருத்து குடும்பத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

            ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். குழந்தைகள் பெறும் போது குடும்பம் என்ற அமைப்பு முழுமை பெறுகிறது. குடும்பம் என்பது தந்தை, தாய், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்டது. அத்தகைய உறவுகளுடைய குடும்பம் தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்ற இரு வகைகளில் சமுதாயத்தில் நிலவி வருகின்றது. தனிக்குடும்பம் என்பது சிலரையும் கூட்டுக்குடும்பம் என்பது பல நபர்களையும் கொண்டு விளங்குகின்றது. குடும்பங்களில் சிக்கல் எழுவது இயற்கை. அதனைக் களைத்து வாழ்ந்தால்தான் இன்பமும் அமைதியும் நிலைபெறும். குடும்பத்தின் இத்தகைய தன்மைகளைக் குறித்துக் கோபல்ல கிராமம் நாவல் வெளிப்படுத்தியுள்ள விதத்தை இப்பகுதி ஆராய்கின்றது.

கணவன் – மனைவி உறவு

            திருமணமான பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உறவு முறையே கணவன் – மனைவி உறவு ஆகும். ஒரு குடும்பத்திலுள்ள அன்புறவுகளில் கணவன் மனைவி உறவே சிறந்த உறவாகக் கருதப்படுகிறது. குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சமமாகவும் மதிப்புக் கொடுப்பவராகவும் விளங்க வேண்டும். விட்டுக் கொடுத்து அன்புகொண்டு, சந்தேகப்படாமல் இணைந்து வாழும் வாழ்க்கையே வெற்றி பெற்ற கணவன் – மனைவி வாழ்வாக அமையும். தான் என்ற எண்ணம் இன்றி இருவரும் செயல்பட வேண்டும். இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். உணர்வுகளுக்கு ஒருவருக்கொருவர் மதிப்பளித்து வாழ வேண்டும்.

        “குடும்பம் சமூக நிறுவனங்களில் இன்றியமையாதது, முதலில் தோன்றியது எனலாம். இக்குடும்பம் அமைய ஆணி வேராக இருப்பது திருமணம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாக இல்வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். உலகில் முதன் முதலில் தோன்றிய உறவு கணவன் – மனைவி உறவாகும். குழந்தைப்பேறு கணவன் – மனைவி உறவை அடையாளப்படுத்துகின்றது.”6  என்ற கருத்து கணவன் – மனைவி உறவின் சிறப்பை பதிவு செய்துள்ளது.

            நாவலில் வரும் சொக்கலிங்கம் என்பவர் ஆசாரித் தொழில் செய்பவர். அவரது மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஊடல் காரணமாக, அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு அவர் மனைவி வெளியேறுகிறாள். ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள் நீண்ட நேரம் நடந்த களைப்புத் தீர, நீர் வேட்கைக்காக நீர்நிலையைத் தேடுகிறாள். நீர்நிலையைக் கண்ட அவள் நீரைப் பருகி தாகம் தணிகிறாள். அப்போது அங்கு வந்த கள்வன் ஒருவன், அவள் நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை புரிகிறான். மனைவியைக் காணாது அவளைத் தேடி வந்த ஆசாரி அதே இடத்திற்கு வருகிறார். அங்குத் தன் மனைவி இறந்து கிடப்படதைப் பார்த்து மிகுந்தத் துயர் அடைகிறார். தன் மனைவியின் இறப்பை ஏற்காது கதறும் கணவனின் நிலையை,

             “அட பாதகத்தி உனக்கு இப்படி ஒரு சாவு வரும்ண்னு நாநினைக்கலையே ஆத்தா… ஐயோ ஐயோ… என் உயிரு போகமாட்டேங்குதே; என் உயிரு போகமாட்டேங்குதே… அவர் தனது முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு அவள் மீது விழுந்து புழுவாய்த் துடித்தார்.”7 என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி, மனைவி இறப்பு எண்ணி தனக்கு இறப்பு வேண்டும் என்று எண்ணும் கணவனின் அன்பை அறிய முடிகிறது.

            கணவன் – மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படக் காரணமாக இருப்பதில் சந்தேக உணவர்வும் ஒன்று. மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவனோ, கணவனின் ஒழுக்கத்தின் மீது மனைவியோ சந்தேகம் கொள்ளும் போது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. ஆசாரி மீது அவர் மனைவி கொண்ட சந்தேகமே பிரிவுக்கும் இறப்புக்கும் காரணமாயிற்று எனலாம். ஆசாரி தன் அத்தை வீட்டுப்பெண் பூப்புக்கு நகை செய்து எடுத்துச் செல்வதை அவர் மனைவி விரும்பவில்லை. மீறி கணவன் (ஆசாரி) சென்றதையும் அதனால் அவருக்கும் அப்பெண்ணுக்கும் தவறான உறவு என்று எண்ணியும் ஆசாரியின் மனைவி ஊடல் கொண்டு பிரிகிறாள். இதனை,

             “என் அப்பா கூடப்பிறந்த அத்தவீடு மஞ்சனங்கிணறுதல இருக்கு. எனக்கு அங்கனே ஒரு முறைப் பொண்ணு உண்டும். அது பூத்து மூணுமாசமாச்சி. அது ஒரு நகை, செஞ்சி கொண்டு போனேன். இவளுக்கு அது பிடிக்கலை. பிடிக்கலைண்ணு வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தாக் கூட நா செஞ்சிருக்கமாட்டேன். நா ஒண்ணும் ஊராருக்குச் செய்யலையே; செய்ய வேண்டியவுகளுக்குச் செய்யணுமில்லயா? நாளைப் பின்னே அவுகளும் வேண்டாமா? ஆனால், இவ என்னை அப்படி நினைக்கல, ஒருமாதிரி நினைச்சிட்டா வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரே மோடி.”8  என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி சந்தேகம் கணவன் – மனைவியிடையே பிரிவுக்குக் காரணமாவதை அறிய முடிகிறது.

            இறந்த ஆசாரியின் மனைவியைப் புதைக்கின்றனர். புதைக்கும் போது ஆசாரி மண் தள்ளுகிறார். மண்ணைத்தள்ளிய ஆசாரி, தன் மனைவி அன்பைக் கொடுத்தான், நான் அவளுக்கு மண்ணைத் தள்ளுகிறேனே! என்று வருத்தம் கொள்கிறார். இதனை,

“குழிக்குகுள் சடலத்தை இறக்கினார்கள் மண்ணைத் தள்ளி மூடுவதற்கு முன் ஆசாரியார் இரண்டு கைகளாலும் மூன்று தடவை மண் அள்ளிப்போட்டார். தாயீ, உன் கையிலே எனக்கு சோறு போட்டே; நா உனக்கு மண் அள்ளிப் போடுதேன் என்றார்.”9   என்ற கருத்தின் வழி ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெற்றோர் – பிள்ளைகள் உறவு

            கணவன் – மனைவி உறவு மூலம் மனைவி குழந்தை பெறும் போது அக்குழந்தை ஆணாக இருப்பின் மகன் என்றும், பெண்ணாக இருப்பின் மகள் என்றும் உறவு நிலைச் சுட்டப்படுகிறது. ஒரு சிறந்த சமுதாயத்தையும் எதிர் காலத்தையும் உருவாக்குவதில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகள் இடையே இணக்கமான உறவு இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தைப் பெற்றோர்கள் நல்க வேண்டும். அதுபோலக் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடாமல் காக்க வேண்டும்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.”10  

என்ற குறளும்,

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்”11

         என்ற குறளும் தந்தை மகனுக்குச் செய்யும் கடமையையும் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையையும் பதிவு செய்துள்ளது.

            ஆந்திர தேசத்திலிருந்து குடிபெயர்ந்து கம்மவர்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணம் முஸ்லீம்களின் கொடுமையே ஆகும். அத்தலைமுறையில் அவ்வினக்குழுவின் தலைமை வீட்டில் இருந்த சென்னா என்ற பெண்ணின் அழகில் மயங்கிய முஸ்லீம் ராஜா அவளைத் திருமணம் செய்து கொள்ள எண்ணியதே இடப்பெயர்வுக்குக் காரணம் ஆயிற்று. முஸ்லீம் ராஜா பெண் கேட்க வேறு வழியின்றி அவர்கள் சம்மதிக்கின்றனர். அப்போது சென்னாவின் தாய் மகளின் வாழ்வை எண்ணி வருந்தும் அன்பை,

        “தனது மகள் இவ்வளவு அழகாய் இருக்காளே என்று பெருமைப் பட்ட சென்னாவின் தாய், ஐயோ இவள் ஏன் இவ்வளவு அழகோடு பிறந்தாள் என்று கண்ணீர் விட்டாள்.”12 என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, மகளின் அழகு அவளுக்கு ஆபத்தாய் முடிந்ததை எண்ணியும், அவளின் வாழ்க்கைத் துன்பத்தில் சிக்குவதை எண்ணியும் வருத்தம் கொள்ளும் தாயின் சிறப்பை அறிய முடிகிறது.

            கோபல்ல கிராமத்திற்குப் பக்கத்து கிராமத்து இளைஞன் ஒருவன் சிறு வயது முதலே தீய வழியில் சென்றான். மேலே குறிப்பிட்ட ஆசாரியின் மனைவியை நகைக்கு ஆசைப்பட்டுக் கொன்றவன் இவனே. அவனின் தாய், இவன் தீய வழியில் செல்வதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டாள். வீட்டில் அவன் தாய் உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைத் திருடிச் செல்வான். தடுக்கும் தாயை அடிப்பான். மகனின் இத்தகைய அவலப் போக்கை எண்ணி வருந்தும் தாயின் நிலையை,

“பாவீ, உனக்கு இரக்கம் இல்லையாடா?

என் எலும்பை சந்தனமாய் அறைச்சி அரும்பாடு பட்டு

உன்னை வளர்த்தனேடா; பெத்த தாயைக் கை நீட்டி

அடிக்கெயடா பாவி என்று கதறுவாள்.”13

என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, தீய வழிக்குச் செல்லும் மகனைத் தடுக்கும் தாயை மகன் அடித்துத் துன்புறுத்தும் அவலத்தை அறிய முடிகிறது.

பாட்டி – பேத்தி உறவு

            திருமணத்தின் மூலம் கணவன் – மனைவி உறவு பெறும் இருவர்களுக்குப் பிறக்கும் மகன், மகள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு தான் தாத்தா – பாட்டி, பேரன் – பேத்தி உறவு முறையாகும். அதாவது, ஒரு தலைமுறை இடைவெளி விட்ட நபர்களுக்குள் ஏற்படும் உறவு ஆகும். தந்தை – தாய்க்கும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு முறைதான் பேரன் – பேத்தி உறவு முறையாகும். திருமணமானப் பெண்ணின் தாய் தந்தைக்கும் இஃது பொருந்தும்.

            ஆந்திர தேசத்திலிருது முஸ்லீம்களின் கொடுமையால் இடம் பெயர்ந்த கம்மாளர்கள் தமிழ்நாட்டில் கோபல்ல கிராமத்தை உருவாக்கினர். அவர்கள் குடிபெயரக் காரணம் அவர்களின் இனக்குழுத் தலைமைக் குடும்பத்தில் இருந்த சென்னா என்ற அழகுப் பெண்மணிதான். வியாபாரிகளைப் போல வந்த முஸ்லீம்கள் அவள் அழகை வியந்து ராஜாவிடம் கூற, படையுடன் வந்து அவளைக் கட்டாயத் திருமணம் செய்ய முயல்கிறான். அம்மக்களும் சம்மதம் தெரிவிப்பது போல் தெரிவித்து இரவில் ஒவ்வொருவராகத் தப்பித்து ஊரை விட்டு வெளியேறுகின்றனர். ராஜாவின் படைகள் அவர்களைப் பின் தொடர அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகின்றனர். நீண்ட தூரம் நடந்த களைப்பால் சென்னாவின் பாட்டியால் நடக்க முடியவில்லை. சென்னாவின் தந்தை பக்கத்தில் ஊர் இருந்தால் பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம் என்று கூற, சென்னாவோ பாட்டியைப் பிரிய விரும்பாது யாரும் பிரியக்கூடாது. பாட்டியை விட்டுப் போகலாகாது என்று கூறும் பாசத்தை, “அப்பா, இந்தக் கணத்தில் நாம் பிரியவே கூடாது; நமக்கு சாவு வந்தாலும் சரி, வாழ்வு வந்தாலும் சரி; நமக்கு எல்லாம் அவனே துணை.”14  என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது.

கூட்டுக்குடும்ப அழிவு

            ஒரு குடும்பத்தில் உறவுடைய நபர் பலர் சேர்ந்து வாழ்வது கூட்டுக்குடும்பம் ஆகும். ஆலமரம் போன்றது கூட்டுக் குடும்பம் ஆகும். ஒரே இரத்தப் பந்தம் உடையவர்கள் ஒன்றாக வாழ்வது இவ்வமைப்பு முறையாகும். இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணத் தம்பதியர்கள் வாழ்வர். இதுவே காலத்தால் முற்பட்ட குடும்ப அமைப்பு முறையாகும். அதாவது, பெற்றோர்கள் அவர்களது மகன்கள், மகள்கள், மகன்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள் என்று அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அமைப்பு முறையே கூட்டுக்குடும்பம் ஆகும். இங்குதான் மரபும், பண்பாடும் காக்கப்படுகின்றன.

“ஒரே மரபு வழி சார்ந்த இரத்த உறவுடைய இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே வீட்டில் ஒரே தலைமையின் கீழ் தங்களின் மனைவியர்களுடனும் குழந்தைகளுடனும் கூடி வாழ்தலையே கூட்டுக் குடும்பம் என்பர்.”15 என்ற கருத்துக் கூட்டுக் குடும்பத் தன்மையைப் பதிவு செய்துள்ளது.

            தொழில் மயமாதலின் விளைவாலும், தான் தனது என்ற நிலையாலும், ஒருவர் உழைப்பில் பலர் வாழும் நிலையாலும் போன்ற பல காரணங்களினால் கூட்டுக் குடும்பம் சிதைவிற்கு உள்ளாகிறது.

                 “கூட்டுமனித சக்தியின் உழைப்பை நம்பி இருந்த காலத்தில் கூட்டுக் குடும்பமே பிரதானமாக இருந்தது. வரவர கூட்டுக்குடும்பங்கள் உடைந்துபோக ஆரம்பித்தன. தாயாதிகள் பாகப் பிரிவினை செய்து கொள்ள ஆரம்பித்தார்கள்.”16 என்ற கருத்துக் கூட்டுக் குடும்ப அழிவிற்குப் பாகப் பிரிவினையும் ஒரு காரணமாக அமைவதைக் குறிப்பிட்டுள்ளது.

தொகுப்புரை

குடும்பமே சமுதாய அமைப்புகளில் மிகச்சிறந்த பண்பாட்டின் கருவூலமாக விளங்கும் அமைப்பாக உள்ளது.

கணவன் – மனைவி உறவுக்குள் சந்தேகம் தோன்றக் கூடாது. தோன்றினால் இருவரும் பேசி அதனைத் தீர்த்துக் கொள்வதுதான் நலம்.

 தாய்மையே உறவுகளில் தலையாய உறவாகும். தன் பிள்ளைகள் ஒழுக்கம் தவறும் போது, தீயநெறியைச் சேரும் போது, நல்ல வாழ்க்கை அமையாத போதும் வருந்துவதோடு திருத்தவும் முயற்சிக்கும் சிறந்த உறவு.

பாட்டிக்காகத் தன் உயிரையும் துச்சமாக எண்ணும் பேத்தி உறவைப் பற்றியும், சொத்துப் பிரச்சனை கூட்டுக் குடும்ப அழிவிற்கு அடிப்படையாக அமைவதையும் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கங்கள் அனைத்தும் கோபல்ல கிராமம் புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திரு.பொ.சிவலிங்கம்

ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

iniyavaikatral.in

            நல்ல குறுந்தொகை எனப் போற்றப்பெறும் குறுந்தொகையைப் பலர் பதிப்பித்துள்ளனர். பலர் உரையெழுதி உள்ளனர். குறுந்தொகையின் பதிப்பு வரலாற்றையும் பதிப்பு நுட்பங்களையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

            எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை நீங்கிய ஏழு நூல்களுக்கும் பழைய உரைகள் உண்டு என்றும் அவற்றுள் குறுந்தொகை உரை கிட்டவில்லை என்று முனைவர் அரவிந்தன் கூறுகிறார். (உரையாசிரியர்கள்)

            பேராசிரியர் குறுந்தொகையின் 380 பாடல்களுக்கு உரை வரைந்தார் என்றும் அவர் உரையெழுதாதுவிட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதினார் என்றும் நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புப்பாயிரம் குறிப்பிடுவதாக குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான தி.சௌரிப்பொருமாள் அரங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையினை உ.வே.சா வையாபுரிப்பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார். மு.அருணாசலம், மு.சண்முகம்பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.

குறுந்தொகைப் பதிப்புகளை குறுந்தொகைப் பதிப்பு வரலாறு என்னும் நூல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

            அ. பதிப்புகள்

            ஆ. வெளியீடுகள்

அ. பதிப்புகள்

            1. முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1915                 – தி. சௌரிப்பெருமாளரங்கன்

1930/2002       – கே.இராமரத்நம் ஐயர்

1937                 – உ.வே.சாமிநாதையர்

1985                 – மு.சண்முகம்பிள்ளை

          2. பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

                                    1934                 – இரா.சிவ.சாம்பசிவ சர்மா

 3. முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

                                    1933                 – சோ.அருணாசல தேசிகர்

                                    1957                 – எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

வெளியீடுகள்

1.          முழு அளவில் உரை மட்டுமாக அமைதல்

1941     – சு.அ. இராமசாமி

2.          முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1947, 1993                    – ரா.இராகவையங்கார்

1955                             – பொ.வே.சோமசுந்தரனார்

1958 ஃ 1983                 – சாமி சிதம்பரனார்

1965                             – புலியூர்க் கேசிகன்

1986                             – மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு

1999                             – இரா.பிரேமா

2000                             – மு.கோவிந்தசாமி

2002                             – தமிழண்ணல்

2004                             – வி.நாகராசன்

2005                             – துரை.இராசாராம்

2007                             – சக்தி

2009                             – ச.வே.சுப்பிரமணியன்

3.          பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1956                             – மு.வ

1988                             – ம.ந.இராசமாணிக்கம்

2007                             – தி.குலோத்துங்கன்

4.          முழு அளவில் கவிதை நடையில் அமைதல்

2003                             – எம்.கு.பிரபாகர பாபு

2006                             – சுஜாதா

2006                             – இரா.சரவணமுத்து

5.          பகுதி அளவில் கவிதை நடையில் அமைதல்

1985                             – மு.ரா.பெருமாள் முதலியார்

2003                             – கருமலைத் தமிழாழன்

2009                             – திருவேந்தி

6.          முழு அளவில் மூலமும் உரையும் கட்டுடைத்துக் கோத்த நிலையினது

2007                             – கு.மா.பாலசுப்பிரமணியம்

7.          முழு அளவிலான மொழிபெயர்ப்பு

1997                             – மு.சண்முகம் பிள்ளை ரூ டேவிட் கிலேடன்

8.          திறனாய்வு நூலில் உரை வரைந்து அளித்தல்

2000                             – மனோன்மணி சண்முகதாஸ்

           இவை அனைத்துமே பதிப்பு நூல்கள் என்று பொதுநிலையில் சுட்டப்படுகின்றன. இவற்றுள் ஓலைச்சுவடி, காகிதச்சுவடி அடிப்படையில் மூலபாடக் கவனத்துடன் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் மட்டுமே பதிப்பு நூல்களாக அமைகின்றன. சௌரிப்பெருமாள் அரங்கன் இராமரத்நம் ஐயர், உ.வே.சா மு.சண்முகம்பிள்ளை, இரா.சிவ.சாம்பசிவசர்மா (பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்) சோ.அருணாசல தேசிகர், எஸ்.ராஜம் (முழு அளவில் மூலம் மட்டும்) ஆகிய நூல்களின் பதிப்பு வரலாறு இங்கு உணர்த்தப்படுகிறது.

            1915 இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் “குறுந்தொகை மூலமும் புத்துரையும்” என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும்.

            சௌரிப்பெருமாள் அரங்கன் வேலூர் இந்து தேவஸ்தான உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பொறுப்பேற்றார். பின்னர் வாணியம்பாடி மதரஸே இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். முத்துரத்ன முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி குறுந்தொகையைப் படியெடுக்கச் சென்னை அரசு நூல்நிலையம் சென்றார். அந்நூலகச்சுவடியில் காணப்பெற்ற பிழைகளும் குறுந்.316 ஆம் பாடல் விடுபட்டுப்போயிருந்ததும் அவர் குறுந்தொகைக்கு உரையெழுதக்காரணங்கள் ஆயின. ஓப்பீட்டிற்கு உதவியாக முத்துரத்ன முதலியார் குறுந்தொகையின் மற்றொரு சுவடியை வரவழைத்துக்கொடுத்தார். அவ்விரு சுவடிகளோடு மதுரைத் தமிழ்ச்சங்க சுவடி ஆகிய மூன்றையும் ஒப்புநோக்கிக் குறுந்தொகைக்கு உரையெழுதினார் அரங்கனார்.

இவருடைய குறுந்தொகைப்பதிப்பு

1.          தலைப்புப்பக்கம் முதலாகப் பாடினோர் பெயர் உரையில் அமைந்த முதற்பகுதி

2.          குறுந்தொகை மூலமும் உரையும்

3.          அரும்பத அகராதி முதலாக விளம்பரம்வரை அமைந்த பிற்பகுதி

என 368 பக்கங்களைக் கொண்டது.

1.          முதற்பகுதி

      தலைப்புப்பக்கத்தில் எட்டுத்தொகையில் இடம்பெறும் இரண்டாவது நூல் குறுந்தொகை என்பதும் அதன் புத்துரையை இயற்றியவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன் என்பதும், அந்நூலும் உரையும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புரிமையாக்கப்பட்டன என்பதும் 1 முதல் 228 பக்கங்கள் வேலூர் வித்யரத்னாகர அச்சுக்கூடத்திலும் பதிப்பிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகம்.

            பொருளடக்கம் என்ற பகுதியில் சிறப்புப்பாயிரம் உதவியுரைத்தல், முகவுரை, மூலமும் உரையும், அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி, விளம்பரம் ஆகியவை இடம் பெற்றுள்ள பக்கங்கள் சுட்டப்பட்டுள்ளன. அடுத்துச் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளின் நிழற்படமும் உரையாசிரியர் எழுதிய உரிமையுரையும் இடம் பெற்றுள்ளன. அதனையடுத்து வேலூர்க் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் சீனிவாசாச்சாரியார் இயற்றிய சிறப்புப்பாயிரம் அமைந்துள்ளது. அப்பாயிரம் குறுந்தொகையின் சிறப்பையும் அரங்கனாரின் உரைச்சிறப்பையும் விளக்குகின்றது.

            சிறப்புப் பாயிரத்தைத் தொடர்ந்து மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இருந்த முத்துரத்னமுதலியார் எழுதிய முகவுரை அமைந்துள்ளது.

            முகவுரையைத் தொடர்ந்து உதவியுரைத்தல் என்ற பகுதியல் தம்மை வளர்த்துத் தமிழ்க்கல்வி தந்த பெருமக்களை நினைவு கூர்ந்துள்ளார். குறுந்தொகைச் சுவடி தந்த முத்துரத்ன முதலியாருக்கு நன்றி பாராட்டியுள்ளார். அதனையடுத்து குறுந்தொகையைப் பதிப்பிக்கப் பொருளுதவி செய்தவர்களைப்பற்றியும் கூறியுள்ளார். குறுந்தொகைக் குறுந்துணையாக அருந்தொகையுதவிய பெருந்தகைச்செல்வர்கள் பெயரும் உதவிய தொகையும் என்னும் தலைப்பில் நன்றி பாராட்டியுள்ளார்.

            இதனையடுத்து தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் செய்த உரை, இறையனார் அகப்பொருள் உரை, பரிமேலழகரின் திருக்குறளுரை, புறநானூற்றுப் பழையவுரை ஆகியவற்றுள் குறுந்தொகைப பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள இடங்கள் மேற்கோளாட்சி விளக்கம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன.

            இதனையடுத்து அருங்குறிப்புகளும் பிறவும் என்ற பகுதி அமைந்துள்ளது இது குறுந்தொகைப்பாடல்களின் பிழிவாக அமைந்துள்ளது. பழங்கால மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றை இப்பகுதி கொண்டுள்ளது. இப்பகுதி அகர வரிசையில் பாட்டு எண்களோடு அமைந்துள்ளது.

     எஞ்சியவைகளும் பிறவும் என்ற தலைப்பிலமைந்த பகுதியில் பதிப்பில் தாம் செய்த மாற்றங்களைத் தொகுத்தளித்துள்ளார். அவை விடுபட்டுப்போய்ப் பின்னர்க்கிடைத்த குறுந்தொகை 12ஆம் பாடலின் உரைமேற்கோள்கள், இடக்கர்ச் சொல்லாகிய அல்குல் வந்துள்ள 9 இடங்களில் தாம் கொண்ட புதிய பாடம் ஆகியவையாகும். அவ்வாறு திருத்தப்பெற்ற பாடல் எண்கள் 27, 101, 125, 159, 180, 216, 274, 294, 344.

            பாடல்களைப்பாடிய புலவர் பெயர்களை அகரவரிசையில் அமைத்துப் பாட்டெண்களையும் தந்துள்ளார். புலவர் பெயர் காணப்பெறாதன என்று 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 395 ஆகிய பத்துப் பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் பின் வந்த அனைத்துப் பதிப்புக்களிலும் அப்பாடல்கள் புலவர் பெயரில்லாத பாடல்களாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

2. குறுந்தொகை மூலமும் உரையும்

இவ்விரண்டாம் பகுதி பொழிப்புரையோடு 307 பக்கங்களைக் கொண்டது. முதல் 150 பாடல்களைப் பதிப்பிக்க 18 மாதங்கள் ஆகிவிட்ட படியாலும் விரைந்து நூலை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலும் பிற்பகுதியை சுருக்கமாகப் பதிப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சகத்தாரைக் கண்டாலே தமக்கு அச்சம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.

3. பிற்பகுதி

         பதிப்பின் பிற்பகுதி அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பகராதி, பிழைதிருத்தம், விளம்பரம் ஆகியவற்றைக் கொண்டது.

       அரும்பத அகராதியில் அருஞ்சொற்களுக்கு 2 பக்க அளவில் பொருள் தந்துள்ளார் செய்யுள் முதற்குறிப்பகராதியில் குறுந்தொகைப்பாடல்களை அகரவரிசையில் பாட்டு எண்களோடு தந்துள்ளார். பிழைதிருத்தம் பகுதியில் தாம் கண்ட பிழைகளை அட்டவணைப்படுத்திப் படிப்பதற்கு முன்னரே பிழைகளைத் திருத்திக்கொள்க எனக்குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தில் குறுந்தொகைப் பதிப்பின் விற்பனையாளர்கள், நூலின் விலை, நாலடி நானூறு மூலமும் அரும்பத உரைக்குறிப்பும் என்ற நூலின் விளம்பரம் முதலியன இடம்பெற்றுள்ளன.

அரங்கனாரின் குறுந்தொகையுரை பின்வரும் உரைக்கூறுகளைக் கொண்டுள்ளது.

1.          திணை வகுத்துக் கூறுதல்

2.          துறை

3.          துறைவிளக்கம்

4.          புலவர்பெயர்

5.          குறுந்தொகை மூலம்

6.          பொழிப்புரை

7.          விளக்கவுரை

எ    ட்டுத்தொகை நூல்களுள் பழக்காலத்திலேயே திணை வகுக்கப்பெற்ற நூல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை ஆகும். திணை வகுக்கப்பெறாதிருந்த குறுந்தொகைக்கு முதன்முதலாகத் திணை வகுத்த பெருமைக்குரியவர் அரங்கனார். இவர் பாடலின் திணையைப் பாடலின் தலைப்பாகத் தந்துள்ளார்.

  பாடல்களின் கீழ் இன்னார் கூற்று, இன்ன சூழலில் சொல்லப்படுகிறது என்ற விளக்கக்குறிப்புகள் காணப்படுகின்றன. இது பாடலாசிரியரால் எழுதப்பெற்றது அல்ல.

  பாடல்துறைகளையும் பாடற்பொருளையம் இணைத்துச் சுருக்கமாகத் துறைவிளக்கம் தந்துள்ளார். பாடலைப்பாடிய புலவர் பெயரை இன்னார் பாடியது எனத் தடித்த எழுத்துக்களில் தந்துள்ளார். குறுந்தொகை மூலத்தை தான் பொருத்தமானது எனக்கொண்ட பாடல்களைப் புணர்ச்சி நிலையிலேயே சீர் பிரிக்காது தந்துள்ளார். இதனையடுத்து பொழிப்புரை அமைந்துள்ளது. பொழிப்புரையை அடுத்துள்ள பகுதியில் இலக்கணச்செய்திகள், இலக்கியச்செய்திகள், வரலாற்றுச்செய்திகள், மரபுகள், பாடவேறுபாடு சுட்டுதல் போன்ற பலவும் விளக்கப்பட்டுள்ளது. உள்ளுறை, இறைச்சி ஆகிய இரண்டையும் தனித் தலைப்பிட்டு விளக்கியுள்ளார் இது குறிக்கத்தந்த ஒன்றாகும்.

தி.சௌ.அரங்கனார் நுட்பங்கள்

            அரங்கனாரின் உரை நுட்பங்கள் சில இங்கு உணர்த்தப்படுகிறது. குறுந்தொகைக்கு முதன்முதலில் திணை வகுத்தவர் இவரே பாடலின் துறையைக் கருத்துரை என்கிறார். திணைத்தலைப்பை அடுத்து துறையை அமைத்துள்ளார். கடவுள் வாழ்த்திலிருந்து முதல் 150 பாடல்களுக்கு துறை விளக்கம் உள்ளது.

            துறை விளக்கத்தினையடுத்து பாடலைப்பாடிய புலவர் பெயரைத் தந்துள்ளார்.

         பாடல்களைச் சீர் பரிக்காமல் தருதல், சிதைந்துள்ளவாறே அடிக்குறிப்பில் தருதல், மிகவும் சிதைந்துள்ளவற்றைத் தாமே ஒருவாறு திருத்தியமைத்தல் ஆகிய நிலைகளில் பதிப்பித்துள்ளார்.

            அல்குல் என்பதனை இடக்கரடக்கல் எனக்குறித்து அச்சொல் நூலுள் ஒன்பது இடங்களில் இடம்பெறுவதாகச் சொல்லி, அதனைத் திருத்தி வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

            தழையணி அல்குல் ………. தழையணி மருங்குல் (125)

தான் அவ்வாறு மாற்றங்கள் செய்ததற்கு சி.வை.தாமோதரன்பிள்ளை பதிப்பித்த கலித்தொகை முன் மாதிரியாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார்.

            பாடற்சொல் கிடந்தவாறே பொழிப்புத்தருதல் இவரது உரைநெறியாகும்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் கூறும் முறை இவரிடம் குறைவாகக் காணப்பட்டாலும் சிலவற்றிற்கு அகராதிப்பொருளைத் தந்துள்ளார்.

            செயலை – அசோகு (218)

            குருகு – நாரை (228)

இலக்கணத்துடன் பொருத்திப்பொருள் கூறுதல்

            கடுவன் – ஆண்குரங்கு – குரங்கினேற்றினைக் கடுவனென்றலும் என விதந்தோதினார் ஆசிரியர் தொல்காப்பியனரும்.

இரு பொருள் தருதல்

            ஒரு சொல்லுக்கு இருபொருள் தரும் நிலையைக் காணமுடிகிறது.

பனிபடுநாள் – பனிமிக்க பருவம்

            பனி நாடொறும் குறைந்து அப்பருவத்தோடு முற்றுமழிதல் கருதிப் பனி அழியும் நாள் எனலுமாம். (104)

பல்துறை அறிவு

            பைங்காய் – இளந்தன்மை மாறிப் பழந்தன்மை பற்றாத கடுங்காய் (196)

இலக்கணக்குறிப்பு

            இலக்கணச்செய்திகள் மிகுந்துள்ளன

            விழவு – ஆகுபெயர் (31)

உள்ளுறை, இறைச்சியைச் சுட்டுதல்

            வரலாற்றுச் செய்திகள் தருதல்

            எவ்வி (19) சுருக்கமானவை.

பழமொழிகளைச் சுட்டுதல்

            முடவன் கொம்புத்தேனை அவாவினாற் போல (60) என்னும் பழமொழியைப் புலப்படுத்தல் உணர்க.

பாட்டு வரலாறு கூறுதல்

            இப்பாட்டு இறையனார் தருமிக்கு இயற்றித்தந்தது. இறையனார் ஆலவாயடிகள் என்று கூறி அடிக்குறிப்பில் திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம் ஆகியவற்றில் கண்ட செய்திகளையும் தொகுத்துரைத்துள்ளார்.

சுவடி நிலை உரைத்தல்

            பொருள் விளங்காமையை எடுத்துரைத்தல் (330)

துறை மாறுபாடு சுட்டல்

            சுவடிகளில் துறை மாறியிருத்தலைச் சுட்டல்.

1930 இராமரத்நம் ஐயர்.கே

        சென்னையில் இருந்து கலாநிலயம் என்னும் வாரஇதழ் வியாழன் தோறும் வெளிவந்துள்ளது. உள்நாடு ரூ.7, புறநாடு ரூ.9 என இவ்விதழின் சந்தாத்தொகை வரையறுக்கப்பெற்றுள்ளது. 1930 ஏப்ரல் 3 அன்று இவ்விதழில் குறுந்தொகை உரை வெளிவரத் தொடங்கியது. இதில் குறுந்தொகை (பாட்டு – 1-11) மு.இராமரத்நம் ஐயர் டீ.யு என்று அமைந்துள்ளது குறுந்தொகைக்கு உரைவிளக்கம் அளித்த கே.இராமரத்ரம் ஐயர் தொடர்பான வாழ்வியலை அறியும் வகையில் எவ்வகைப்பதிவுகளும் இடம்பெறவில்லை.

      இவ்வாறு வெளியான இவருடைய உரை குறுந்தொகை மூலமும் உரையும் என்ற பெயரில் 2022 மார்ச்சில் வெளியாகி 475 பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பதிப்பில் உதவி நா.சந்திரசேகர் என்று உள்ளது.

            பாடல்களுக்கு வரிசை எண் இட்டு அந்த எண்ணிக்கையின் வலப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலுக்குரிய திணையும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலாசிரியர் பெயரும் குறிக்கப்பெற்றுத் தொடர்ந்து கூற்று அளிக்கப்பெற்றுள்ளது. பின்னர் பாடலும் தொடர்ந்து உரை என்னும் குறிப்புடன் பாடலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளன. இந்தப்பொது இயல்புக்கு அப்பால் அருஞ்சொல் பொருள் அளித்தல், இலக்கணக்குறிப்பு அளித்தல், சிறுவிளக்கம் அளித்தல் என்பன ஒருசில பாடல்களுக்கான உரைப்பகுதியாக உள்ளன.

        குறுந்தொகைப் பாக்கள் சிலவற்றுக்கு இருவகைக் கூற்றுகள் குறிக்கப்பெறுகின்றன ஆனால் இப்பதிப்பில் பாடலுக்கு முன்பு ஒரு கூற்றும் உரைப்பகுதியின் இறுதியில் மற்றொருவகைக் கூற்றும் அளிக்கப்பெற்றுள்ளன.

      உரையாக்கத்தில் பெரும்பாலும் பாடலடிகள் எப்படி அமைந்துள்ளனவோ அது போன்றே அதே வரிசை முறையிலேயே உரை சொல்லும்முறை பின்பற்றப்பெற்றுள்ளது.

        எளிய மொழிநடையில் பாடலுக்குப் பொழிப்புரை தந்துள்ளார். குக்கூ வென்றது கோழி (குறுந்.157) என்ற பாடலடிக்குக் கொக்கரக்கோ என்று சேவற்கோழி கத்தியது என எளிய மொழிநடையில் உரைதந்துள்ளார்.

      பொழிப்புரையைத் தொடர்ந்து சொற்பொருள் விளக்கம் தருதல், இலக்கணக்குறிப்புத்தருதல், இடப்பொருள் கூறல், இலக்கிய இலக்கணச் சான்றுகளை ஆளுதல், உவமைகளை விளக்குதல், பாட வேறுபாடுகள் சுட்டல், பொருத்தமுடைய பாடம், பொருந்தாத பாடங்கள் ஆகியவற்றை விளக்குதல் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.

       சொற்களுக்குப் பொருள் கூறும்போது உரைகாரர்கள் தம் பன்மொழித்திறத்தால் வடமொழிச் சொற்களாலும் பொருள் கூறுவதுண்டு ஆனால் ஆங்கிலச்சொற்களால் பொருள் விளக்கம் தருதலை இவருடைய உரையிலேயே காணமுடிகிறது.

      இறை – வீட்டின் இறப்பு (The caves of house) அரமகளிர் – தெய்வப்பெண்கள் (nlmphs) இவர் 22 பாடல்களில் உள்ளுறையும், 31 பாடல்களில் இறைச்சியும் இடம்பெற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.

      சுவடிகளில் பாடல் அமைந்துள்ள நிலையைச் சுட்டும் வழக்கம் இவரிடம் உள்ளது. பொருள் விளங்காத இடங்களைக் கீழே கண்ட பொருள் அத்துணை திருப்திகரமாக இல்லை என்று குறித்துள்ளதன் மூலம் இவருடைய நேர்மைத்திறத்தையும் பண்பாட்டுள்ளத்தையும் உணரமுடிகின்றது.

1937 – உ.வே.சாமிநாதையர்

            உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனாரான சாமிநாதையர் சீவகசிந்தாமணி பற்றிய பதிப்புப்பணியில் இருந்தபோது குறுந்தொகை பற்றிய தகவல்கள் கிடைத்தன. சில ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் குறுந்தொகையைப் பதிப்பிக்கக்கருதிய நேரத்தில் தி.சௌ.அரங்கனாரின் குறுந்தொகைப்பதிப்பு வெளிவந்தது. தி.சௌ.அரங்கனாரின் பதிப்பு பின்னர்க்கிடைப்பது அரிதாகியதால் உ.வே.சா மீண்டும் குறுந்தொகையை ஆராய்ந்து 1937-இல் வெளியிட்டார்.

            குறுந்தொகையில் உள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர்பெற்ற புலவர்கள் அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவது போல அந்நூல்களில் உள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை. இதனாலும் முதலில் குறுந்தொகை தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும் என்று கூறுகிறார்.

            காக்கைப்பாடினியார் நச்சௌ்ளையார், கயமனார் ஒரேருழவனார் போன்ற பாடலால் பெயர் பெற்ற புலவர்களையம் அவர் குறிப்பிடுகிறார்.

            குறுந்தொகையில் 307, 391 ஆகிய பாடல்கள் ஒன்பதடியை உடையவை. 391 ஆம் செய்யுள் சில ஏடுகளில் எட்டடியை உடையதாக உள்ளது. ஆகவே 307 ஆம் பாடலை விலக்கினால் குறுந்தொகை நானூறு பாடல்களை உடையதாக இருக்கும் என்பது இவருடைய எண்ணம்.

            குறுந்தொகைப்பாடல்களை தம் உரையில் கையாண்ட உரையாசிரியர்களை அகர நிரலில் கொடுக்கும் உ.வே.சா அவர்கள் குறுந்தொகையில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார். பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறுந்தொகைக்கு உரையெழுதிய நிகழ்வையும் இவர் குறிப்பிடுகிறார்.

            இதனையடுத்து இவர் பரிசோதித்த ஒன்பது ஏட்டுச்சுவடிகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. சென்னை ஸர்வகலாகலையார் (சென்னைப் பல்கலைக்கழகம்) ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பொருளதவி செய்ததைப் பேருதவியாகக் குறிப்பிட்டுள்ளார். குறுந்தொகைப் பதிப்பில் மேற்கொண்ட முறைகளைப்பற்றி கீழ்க்கண்டவாறு அவர் குறிக்கிறார்.

1.          கூற்று

ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். தொல்காப்பியத்தில் கூற்று வகையாகச் சூத்திரங்கள் வகுக்கப்பட்டிருத்தலும் இங்ஙனம் அமைக்கும் கருத்தை உண்டாக்கியது.

2.          கூற்று விளக்கம்

இது பழைய கருத்தையும் செய்யுட் பொருளையும் இணைத்துச் சுருக்கமாக வரையப்பட்டது. இரண்டு கருத்துள்ள இடங்களில் முதற்கருத்துக்கே இவ்விளக்கம் எழுதப்பட்டது.

3.          மூலம்

ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பொருட்சிறப்புடைய பாடங்களையே கொடுத்திருக்கிறேன்.

4.          பிரதிபேதம்

ஏட்டுச்சுவடிகளாலும், உரையாசிரியர்கள் உரைகளில் காட்டிய மேற்கோள் பகுதிகளாலும் தெரிந்த பாடல்களுள் முக்கியமானவை அடிக்குறிப்பில் காட்டப்பெற்றன.

5.          பழைய கருத்து

கருத்தில் பொருத்தம் இல்லாத சொற்கள் நகவளைவுக்குள் அமைக்கப்பட்டன.

6.          ஆசிரியர் பெயர்கள்

சுவடிகளில் இருந்தவாறே இப்பெயர்கள் அமைக்கப்பெற்றன.

7.          பதவுரை

பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிவு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை

8.          முடிபு

வினைமுடிபு இத்தலைப்பிற் காட்டப்பட்டது.

9.          கருத்து

செய்யுளின் கருத்துச் சுருக்கமாக எழுதப்பட்டது.

10.        விசேட உரை

  பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும் பொருள் விளக்கங்களும் வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி என்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன.

11.        மேற்கோளாட்சி

       இலக்கண இலக்கியங்களின் உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூற் செய்யுட்களையும் செய்யுட்பகுதிகளையும் காட்டிய இடங்கள் அடிவரிசைப்படி வகுத்துக்காட்டப்பட்டுள்ளன.

12.        ஒப்புமைப்பகுதி

       இந்நூற் செய்யுட்களின் சொற்பொருளோடு ஒப்புமையை உடைய பிறநூற் செய்யுட்களும் செய்யுட்பகுதிகளும் ஒப்புமைப் பகுதியென்னும் தலைப்பில் காட்டப்பட்டன.

      இவ்வொப்புமைப் பகுதி சங்க நூற்பொருள்களை ஆராய்வாருக்குப் பெரிதும் பயன்படும். நூலின் மூலமும் உரையும் அடங்கிய பகுதிகள் மேலே கண்ட முறையில் வகைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டன நூலிற்கு அங்கமாகச் செய்யுள் முதற்குறிப்பகராதியும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் நூலின் பின்னே சேர்க்கப்பட்டன.

   இம்முகவுரையின் பின்னே நூல் ஆராய்ச்சியும், ஆசிரியர் பெயர் அகராதியும், பாட பேதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாராய்ச்சியில் இந்நூலால் அறிந்த பலவகைச் செய்திகளையும் பண்டைக் காலத்துத் தமிழ் மரபுகளையும் வேறு பலவற்றையும் காணலாம்.

    இதனையடுத்து உதவிய அன்பர்கள் என்ற தலைப்பில் இந்நூல் பதிப்பித்தலின்போது உதவியர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளர் (அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கி.வா.ஜகந்நாத ஐயர்)

       தமிழ் அன்னையின் திருவடித்துணைகளில் இப்பதிப்பும் ஒரு மணமற்ற சிறு மலராகவேனும் கிடந்து நிலவும் என்பது எனது கருத்து.

      எனக்குள்ள பல வகையான குறைகளால் இப்பதிப்பில் பல பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றை அன்பர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.

       உ.வே.சா அவர்களின் புலமைத்திறத்தை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது நூலாராய்ச்சி என்னும் அரிய பகுதியாகும். இதில் முதல், கரு, உரிப்பொருள்களைப் பற்றிய அறிமுகம் முதலில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐவகை நிலச்செய்திகள், பொழுதுகள், மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், (தலைவன், தலைவியின்) அன்பு வாழ்க்கை உபகாரிகள், இடங்கள் (மலைகள், ஆறுகள், ஊர்கள்) பண்டைக்காலத்து மக்கள் வாழ்க்கை நிலை (அரசியல்- ஊரமைப்பு – சாதிகள் போன்றன) இலக்கணச் செய்திகள் புலவர்கள் (சிறப்புப்பெயர்கள் – ஊர்கள் – சாதி – தொழில்) போன்றவை அமைந்துள்ளன. குறுந்தொகை நூலின் பிழிவாக இப்பகுதி அமைந்துள்ளது எனலாம்.

       இதனையடுத்து பாடினோர் வரலாறு பகுதியில் புலவர்களுடைய பெயர் அவர்களைப் பற்றிய குறிப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதனைத்தொடர்ந்து குறுந்தொகை மூலமும் உரையும் அமைந்துள்ளது. இதன் பின்னர் செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, இப்பதிப்பில் எடுத்தாண்ட நூல்கள், நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி போன்றவை அமைகின்றன.

            குறுந்தொகைக்குச் செய்யப்பட்ட உரைகளுள் மிக விரிவானது உ.வே.சா வின் உரை ஆகும். அவருடைய தனித்தன்மைக்கும் ஆழ்ந்த புலமைத்திறனையும் நினைவாற்றலையும் அனைவரும் அறியும் வகையில் குறுந்தொகை உரை அமைந்துள்ளது எனலாம்.

            கடவுள் வாழத்து நீங்கலான அனைத்துப் பாடல்களுக்கும் கூற்றினைத் தலைப்பாகத்தந்துள்ளார் உ.வே.சா. திணையைத் தலைப்பாகத் தருவதால் பாடல் மரபினை உணர முடியுமே தவிர கிளவி மாந்தரின் உணர்வை உணர இயலாது என்ற அவருடைய கருத்தினடிப்படையில் கூற்று விளக்கம் இடம்பெற்றுள்ளது.

            குறுந்தொகைப்பாடல்கள் புணர்ச்சியில் மிகும் ஒற்றுக்கள் உடம்படுமெய்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.

உ.வே.சாவின் நுட்பங்கள்

இடம் நோக்கிப் பொருள் தருதல்

            பாடல்துறையில் இடம் பெற்றுள்ள சொல்லுக்குப் பாடல் பொருளோடு பொருத்திப் பொருள் தருவது இவ்வாறு கூறப்படுகிறது. 24-ஆம் பாடலின் பழைய கருத்து (துறை) பருவங்கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது என்பதாகும். இதன் விளக்கம் பருவம் – தலைவன் வருவேனென்று கூறிச்சென்ற காலம். ஈண்டு இளவேனில் என்பதாகும். அது இடம் நோக்கிய பொருளாக அமைகின்றது. வேம்பு இளவேனிற் காலத்தில் மலரும் செய்தியும் இடம் நோக்கி அமைகின்றது.

இலக்கண, இலக்கியச் செய்திகளை இணைத்துத் தருதல்

            தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது என்ற துறைக்கு தலைவன் பிரிவின் கண் கனவிற் தலைவியைக் காண்டல். தொல்.பொருளியல், ஐங்-324 என்று இலக்கண, இலக்கியச் செய்திகளை தொடர்புபடுத்திக் கூறுகிறார்.

பழஞ்சொல் வடிவச்சிந்தனை

            66 ஆம் பாடலின் துறையில் இடம்பெற்றுள்ள வற்புறீஇயது என்ற சொல்லுக்கு வற்புறுத்தியது என இந்நாளைய வடிவத்தைத் தந்து பொருள் விளக்குகின்றார்.

குறிப்புத்தருதல்

            30-ஆம் பாடலைப் பாடியவர் கச்சிப்பேட்டு நன்னாகையார். இப்புலவர் பெயரையடுத்து பிறைக்குறியீட்டினுள் பேட்டு – இது பட்டு என வழங்குகின்றது.

பாட வேறுபாடுகள்

            பாட வேறுபாடுகளைப் பிரதிபேதம் என உ.வே.சா குறித்துள்ளார்.

விசேடவுரை

            தம்முடைய இலக்கியப்புலமையினையும், பல்துறை அறிவினையும் நினைவாற்றலையும் ஒருங்கே காட்டுவது போன்று இவ்விசேடவுரை அமைந்துள்ளது. இதிலுள்ள சில நுட்பங்களை மட்டும் இங்குக்காணலாம்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் தரும் முறையை விசேடவுரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.  தாது – பலவகைப்பொடி             (48)

            புனவன் – புனத்தையுடைய குறவன் (105)

இலக்கணத்துடன் பொருத்திப் பொருள் கூறுதல்

            மாரிப் பீரத்து (98) என்ற அடியில் இடம்பெறும் பீரத்து என்னும் சொல்லுக்கு

பீர் என்னும் சொல் அத்துச்சாரியை பெற்று வந்தது (தொல்.புள்ளிமயங்கு 68)

இரு பொருள் தருதல்

            ஏழில் – ஒருமலை, இது நன்னன் என்பானுக்குரியது. ஏழிலைப் பாலையென்னும் மரமும் ஆம் (138)

மரபுவழிப் பொருள் தருதல்

            கண்களுக்கு உவமையாகத் தாமரை மலரையும் குவளை மலரையும் கூறுதல் சங்க இலக்கிய மரபு.

            பூ ஒத்து அலமரும் தகைய (72) என்ற பாடலில் இடம்பெறும் பூ என்ற சொல்லுக்கு

            பூ – தாமரைப்பூ, குவளையுமாம்.

உரைகள் வழி நின்று பொருளை விலக்குதல்

            பல உரைகளின் வழி நின்று பொருளை விளக்கியுள்ளார். வள்ளை – உரற்பாட்டு (தொல்.புறத்திணை 8,3)  (89)

பல்துறையறிவைப் புலப்படுத்தல்

            நிலந்தொட்டுப்புகுதல் முதலிய மூன்று அற்புதச் சித்திகளும் சித்து வகைகள். இவற்றை இருத்தியென்பர். சைனர்கள் இத்தகைய சித்திகளைப்பெற்ற சாரணரெண்மரென்பர். பௌத்தர்களும் இத்தகைய சித்திகளைப் பற்றிப் பாராட்டுவர் தம் தந்தையாகிய சுத்தோதனுக்கு ஞானம் உண்டாக்குதற் பொருட்டு இத்தகைய அற்புதங்களைப் புத்தர் காட்டினாரரென்று அசுவகோஷ போதிசத்துவரென்பவரால் இயற்றப்பெற்ற புத்த சரிதத்தின் 19 ஆம் வர்க்கம் தெரிவிக்கின்றது. (130)

நுண்ணறிவு தோன்றப் பொருள் தருதல்

            பதனழிந் துருகல் – உள்ளீடு அழுகிவிடுதல்

            ஒன்றும் இல்லையாதல் (261)

புதுமை தோன்றப் பொருள் தருதல்

            திண்டேர் – போர்க்களத்தில் மேடும் பள்ளமுமாய இடங்களில் ஓடினும் சிதைவின்றித் திண்ணியதாகும் தேர். (210)

இலக்கணக் குறிப்புத்தருதல்

            பெருந்தோள் – அன்மொழித்தொகை (210)

பயிரியல் செய்திகள்

            பித்திகம் – பிச்சி. இது மழைக்காலத்து அரும்பி மலரு மென்பது மாரிப்பித்திகத்து நீர்வார் கொழுமுகை (குறுந்-168:1, 222:5) என்பதனால் விளங்கும் (94)

            பாவை – மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின் தாள். இங்ஙனமே அறுகின் தண்டையும் கூறுதல் மரபென்று தெரிகிறது (220).

விலங்கியல் செய்திகள்

            புதுக்கோள் யானை – புதியதாகக் காட்டிலிருந்த பிடிபட்ட யானை (129)

பிறர் கருத்து கூறல்

            சின்மொழி – சிலவாகியமொழி

            மென்மொழி (பழ.226 உரை) என்றும் மெத்தென்ற மொழி (புறநா.166:16) என்றும் கூறுவர் உளர் (14)

பொருள்கோள் நெறி கூறுதல்

            புன்கண் மாலையும் புலம்பும்

            இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே (46)

            என்ற பாடலடிகளை

            மாலையும் இன்று கொல், புலம்பும் இன்று கொல்லெனத் தனித்தனியே கூட்டுக என்று எழுதுகிறாள்.

வரலாறு கூறுதல்

            2, 130 ஆகிய இரு பாடல்களின் உரையில் வரலாறு இடம் பெற்றுள்ளது. 2 – பாட்டு வரலாறு 130 – புலவர் வரலாறு.

பழமொழிகளைக் காட்டுதல்

            ஒரேருழவன் : ஓரேர்க்காரன் உழுது கெட்டான் அஞ்சேர்க்காரன் அமர்த்திக்கெட்டான் (ஒரு பழமொழி) 131

            ஒப்புமையில் பெரும்பாலும் குறுந்தொகைப் பாடல்களை முதலில் காட்டுகின்றார். சங்க நூல்கள் இலக்கண நூல்கள், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாசிரியர்களின் உரைகள், மறைந்து போன தமிழ் நூல்கள் (பரிபாடல் திரட்டு, சிற்றெட்டகம்) போன்ற 95 வகையான நூல்களிலிருந்து ஒப்புமை காட்டிய திறம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

1985 – மு.சண்முகம்பிள்ளை

            மு.சண்முகம்பிள்ளை அவர்கள் பல ஒலைசுசவடிகளைப் பார்த்து குறுந்தொகையை 1985-ல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாகப் பதிப்பித்தார். இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச்சுவடி, ரா.ராகவையங்காரால் பெயர்த்து எழுதப்பெற்ற சுவடி, அடிகளாசிரியர் காகிதச்சுவடி, பூண்டியப்புலவர் ஏடு போன்றவை இதில் குறிக்கத்தக்கன.

            இந்நூலில் முதலில் உ.வே.சா பதிப்பு, வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப்பதிப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிப்பு போன்றவற்றில் உள்ள பாட வேறுபாடுகள் சுட்டப்பெறுகின்றன. பாடலின் தலைப்பில் குறிஞ்சி – தோழி கூற்று, குறிஞ்சி – தலைவன் கூற்று என்று திணை, கூற்று இரண்டும் சுட்டப்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து சீர் பிரிக்கப்பெற்று பாடல் அமைந்துள்ளது. பாடலைத் தொடர்ந்து புலவர் பெயரும் அதனைத் தொடர்ந்து துறைக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன. அடுத்து பாடலின் பொருள் விளக்கம் உள்ளது. அதனைத் தொடந்து பாட வேறுபாடும் அதனைத் தொடர்ந்து உள்ளுறையும் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் தொல்காப்பிய நூற்பா போன்றவை பாடலுக்குப் பொருத்தமான இடங்களில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

            இதனைத் தொடர்ந்து பாட்டு முதற்குறிப்பு அகராதி இடம்பெறுகிறது. அடுத்து பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை இடம் பெறுகிறது. இது வேறு குறுந்தொகைப்பதிப்புகளில் இல்லாதது. தமிழிப்பல்கலைக்கழகம், இலண்டன் ஏடு, இராகவையங்கார் ஏடு, பூண்டியப் புலவர் ஏடு, அடிகளாசிரியர் ஏடு, சௌரிப்பெருமாள் அரங்கன், இராமரத்தன ஐயர், அருணாசலம் உ.வே.சா. சங்க இலக்கியப்பதிப்பு (வையாபுரிப்பிள்ளை) போன்றோரின் குறுந்தொகைப் பாட வேறுபாடுகள் 401 பாடல்களுக்கும் சுட்டப்பெறுகின்றன. இப்பணி மிகவும் போற்றத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாடினோரும் பாடற்குறிப்பும் என்ற பகுதியும், அடுத்து பாடலில் சுட்டப்பெற்ற வள்ளல் போன்றோரும் குறிக்கப்பெறுகின்றனர்.

            இதனையடுத்து திணை அமைப்பு முறையிலும், கூற்று வகையிலும் பாடலின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து தொடரடைவு இடம்பெறுகிறது. குறுந்தொகையின் வேறு எந்த நூலிலும் இல்லாத ஒரு முயற்சி இவ்வாசிரியரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுந்தொகையில் உள்ள சொற்கள், கருத்துக்கள், பாடலடிகள் போன்றவை மீண்டும் மீண்டும் எடுத்தாளப்பெற்றதை இத்தொடரடைவு மூலம் அறியமுடிகிறது. சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்கு இத்தொடரடைவு பெரிதும் பயன்படும்.

            இதனையடுத்து சொல்லடைவு இடம்பெற்றுள்ளது. பாடவேறுபாடுகளுக்கு ஆசிரியர் கூறும் காரணங்கள் குறிக்கத்தக்கன. பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணையும், தொடரடைவு போன்றவை இந்நூலில் மிகவும் போற்றத்தக்கன.

பகுதி அளவில் மூலமும் உரையும்

1934 – இரா.சிவ.சாம்பசிவசர்மா

            இலந்தையடிகள் வித்துவான் இரா.சிவ.சாம்பசிவன் என்ற பெயருடைய அறிஞர் செந்தமிழ்ச்செல்வி இதழில் குறுந்தொகையின் 50 பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார். 1940 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் நிகழ்த்திய குறுந்தொகை மாநாட்டில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிய அறிஞர் ஐவருள் ஒருவராக சர்மாவும் திகழ்கின்றார்.

            உரை கூறுவாரும் உண்டு, வரைவாருமுண்டு என்று குறித்துள்ளதன் மூலம் அவர்காலத்தில் குறுந்தொகை உரை வழக்குப்பெற்று இருந்த நிலையை உணரமுடிகின்றது (குறுந்தொகை பதிப்பு வரலாறு)

முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

1933 – சோ.அருணாசல தேசிகர்

            எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை மூலம் எனும் பெயரில் வித்வான் சோ.அருணாசல தேசிகர் குறுந்தொகைப் பாக்களைப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பில் பாக்கள் பாடல் எண், திணை, பாடல், கூற்று, புலவர்பெயர் எனும் முறையில் அளிக்கப்பெற்றுள்ளன. பாட வேறுபாடுகள் பிரதி பேதம் என்று குறிக்கப்பெற்றுள்ளன. நூல் இறுதியில் பாடினோர் பெயரட்டவனை செய்யுள் முதற்குறிப்பு அகராதி, சொல் அகராதியும் அளிக்கப்பெற்றுள்ளன.

1957 எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

            அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான ஒரு சிலரின் அரிய முயற்சியால் பாட வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு பொருத்தமான பாடல் தெரிவுடன் சங்க இலக்கியப்பாக்கள் உரையின்றி அச்சிடப்பெற்றன. குறுந்தொகை பாடல் எண், திணை, சந்தி பிரிக்கப்பெற்ற பாடல், கூற்று, புலவர் பெயர் முறையில் என்ற வரிசை அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பாடினோரும் பாடல்களும், பாடப்பட்டோர், சிறப்புப்பெயர், பாடல் முதற்குறிப்பு அகராதி ஆகியவை உரிய முறையில் இடம்பெற்றுள்ளன. சொற்பிரிப்பு நெறிமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப் பெற்றன என்று இன்னொரு நூலில் பதிப்பாசிரியர் குழு விளக்கியுள்ளது.

மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் தனித்தன்மைகள் பொதிந்துள்ளன. இருப்பினும் ஆய்விற்கு உதவும் வகையில் உ.வே.சாவின் குறுந்தொகையே முதலில் எண்ணத்தக்கது. அவருடைய நுட்பமான அறித்திறன் ஆய்வாளர்களால் என்றும் போற்றப்பெறுகின்றது.

             துணை நூல்கள்

            குறுந்தொகை                                –           அருணாசல தேசிகர்,

                                                                                 சாமிநாதையர் உ.வே.

                                                                                 இராமரத்னம் ஐயர்.கே

                                                                                 சண்முகம்பிள்ளை மு.

                                                                                 சௌரிப்பெருமாள் ஆரங்கன் தி

                                                                                  ராஜம் எஸ்

            குறுந்தொகை உரைகள்             –           மணி.ஆ

                                                                               தமிழன்னை ஆய்வகம்

                                                                               புதுவை

            குறுந்தொகைப்பதிப்பு வரலாறு         – அறவேந்தன்

                                                                              காவியா பதிப்பகம்

                                                                              சென்னை

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர்,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

காளிப்பட்டி. நாமக்கல் மாவட்டம் – 637501

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

3.தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – சிறுகதை

இனியவை கற்றல்

     கிராமத்துச் சிறுகதைகள்

       அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும்  வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன.

        போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி, டாபர்மேன், ராட்வீலர், லாப்ரடோர் போன்ற நாய்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

       ராஜபாளையம் நாய்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தது.  முக்கியமாக வரவேண்டிய நாய் இனங்கள் அனைத்தும் வந்து விட்டனவா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பேச ஆரமித்தது,

”நாம இங்கு எதற்கு கூடி இருக்கின்றோம் தெரியுமா? ”

”தலைவரே, நீங்களே சொல்லி விடுங்கள்” என்றது மலையேறி

       “இந்த உலகத்துல ஆட்டுக்குச் சந்தை இருக்கு. மாட்டுக்குச் சந்தை இருக்கு. அதைபோல நமக்கும் இந்த மக்கள் சந்தைகள் வைக்கனும். அப்பதான் நம்முடைய மதிப்பு இந்த மனுச பயலுக்கெல்லாம் தெரியும்”

       ”நீங்க சொல்றது சரிதான் தலைவரே! ஒரு பயலும் எங்கள மதிக்க மாட்டங்குறான். கேவலமா வேற பாக்குறான். அதனால நமக்கும் சந்தை வச்சி பணத்தால மதிப்பிடறபோதுதான் எங்களுக்கும் கௌரவம் அதிகமாகும் இல்ல” என்றது தெருநாய்களெல்லாம் கூட்டாக..

      இதற்கெல்லாம் என்ன செய்யலாம் என்று நாய்களெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தன. இறுதியாக நம்மை படைத்த சிவனிடம் சென்று முறையிடலாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு நல்ல நாளில் கைலாயத்திற்கு நாய்கள் எல்லாம்  சென்றன.

    நாய்கள் எல்லாம் கூட்டாக வந்ததைப் பார்த்தவுடன் கைலாயித்தில் இருக்கும் சிவபெருமான் ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டார். ஏதோ பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள் என்று மட்டும் அவர் மனதில் தோன்றியது.

      “எங்களுக்கென்று சந்தை ஒன்று வேண்டும். நாங்களெல்லாம் கூட்டாக இருக்க வேணடும். எங்களையும் மதித்து பணம் கொடுத்து இந்த மக்கள் வாங்க வேண்டும். இந்த உலகத்தில் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இருக்க வேண்டும்” என்று சிவபெருமானிடத்தில் நாய்களெல்லாம் கோரிக்கை வைத்தன.

    ”வந்திருந்த நாய்களைப் பார்த்துச் சிவபெருமான் சிரித்தார். அவரவர் நிலைகளுக்கு ஏற்பதான் ஒவ்வொரு உயிரும் படைக்கப்பட்டுள்ளன. அதனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். வீட்டை காவல் காக்கவும் காவல் துறைக்கும்  உங்களுடைய  செயல்பாடுகள் மகிழ்ச்சி தருவனதாகவே இருக்கிறது. மக்கள் அனைவரும் உங்களை நண்பனாகவே பார்க்கிறார்கள். அதனால் போய் வாருங்கள்” என்றார் கடவுள்.

       நாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் முகத்தைப் பார்த்துக் கொண்டன.  சில மணித்துளிகள் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டன. அவ்விடத்தை விட்டு யாரும் நகரப் போவதாக இல்லை.

”என்னவாயிற்று” என்று சிவபெருமான் கேட்டார்

      ”எங்களுக்கு சந்தை வைக்க அருள் புரிய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து போகமாட்டோம்” என்றன கூட்டாக..

      கடவுள் யோசனை செய்தார். நாய்களை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தார். முதலில் மாட்டுச் சந்தைக்குக் கூட்டிச்சென்றார். சந்தையில் மாடுகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.  வாங்கிய மாடுகளைக் கூட்டாகப் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இரவு முழுவதும் அதுஅது பாட்டுக்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கோலை உண்ணுவதும் அசைப்போடுவதுமாய் இருந்தன.

      அடுத்து ஆட்டுச் சந்தைக்குக் கடவுள் கூட்டி வந்தார். அங்கும் அமைதியாகவே சந்தை நடந்தது. சரியென்று பறவைகளிடத்தில் கூட்டிச்சென்றார்.  மரத்தில்  காக்கை ஒன்று உட்காந்திருந்தது. கடவுள் காக்கைக்கு உணவு இட்டார். காகம் மரத்தை விட்டு பறந்து ஓடியது. காகம் பறந்து ஓடியதைப் பார்த்த நாய்கள் சிரித்தன. கொஞ்ச நேரத்தில் சென்ற காக்கை மீண்டும் தன் கூட்டத்தோடு திரும்பி வந்தன. அனைத்து காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்த அந்த உணவினைச் சாப்பிட்டன.

     அடுத்துக் கறிக்கடைக்காரர் இடத்திற்குக் கடவுள் வந்தார். தேவையில்லாத எலும்பு துண்டுகளைக் கீழே கொட்டினார். கடவுள் கூட வந்திருக்கும் நாய்கள் அனைத்திற்கும் நாவில் எச்சில் ஊறின. அனைத்து நாய்களும் எலும்பு துண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்தன. கடவுள்  நாய்களிடத்தில் திரும்பி ஏதோ சொல்ல வாயெடுத்தார்.  அதற்குள்…

     எலும்பு துண்டுகளைச் சாப்பிட கூட்டாக வந்த நாய்கள் ஒவ்வொன்றும் குலைத்துக்கொண்டன. அடித்துக்கொண்டன. முறைத்துக் கொண்டன. பற்கள் தெரிய கத்திக்கொண்டன. கடவுள் எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி செய்தும் ஒன்றும பலனளிக்கவில்லை.  வந்த வழியே கடவுள் மீண்டும் கயிலாயத்திற்கே சென்றார்.

குறிப்பு : சேலம் மாவட்ட கிராமத்துச் சிறுகதைகள்

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இரட்டைக் காப்பியங்களில் சமூக நிறுவனங்களும் சமூக மதிப்புகளும்

iniyavaikatral.in

குடும்பம்

            தொல்பழஞ் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாக இருந்து பின்னர் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது சமூகவியலார் கருத்து. சிலப்பதிகாரத்தில் தாய்வழிச் சமூக எச்சங்களைக் காணமுடிகிறது. மங்கல வாழ்த்துப் பாடலில் தலைமைப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இளங்கோவடிகள்.

            “போகநீன் புகழ்மன்னும் புகார் நகரதுதன்னில்

            மாக வாணிகர் வண்கை மாநாய்க்கன் குலக்கொம்பர்             (சிலம்பு.1:22,23)

                என முதலில் கண்ணகியை அறிமுகப்படுத்துகின்றார். இதற்கு உரை கூறும் அடியார்க்கு நல்லார் “சுவர்க்கம் பவணமென்னும் இவற்றிற்குள்ள புகழும் போகமும் நிலை பெற்ற அப்புகார் என்னும் நகரின்கண் மழைப்போல் வழங்கும் கையையுடைய மாநாய்க்கனுடைய குலத்தில் தோன்றிய கொம்பும் கொடியும் போல்வாள்” என்பார். எனவே இவள் கொழு கொம்பில் படர வந்த கொடி அல்லள் கொம்பும் கொடியும் இவளே என்பது இதன் பொருள். கொலைக்களக் காதையில் கோப்பெரும் தேவியைக் குறிப்பிடுமிடத்தும் ‘குலமுதல் தேவி’ என்றே குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. இருப்பினும் இவை வெறும் எச்சங்களாகவே எஞ்சி நிற்கின்றன.

            சிலம்பு மேகலை ஆகிய இருகாப்பியங்களில் இடம்பெறும் கண்ணகி, ஆதிரை ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒரே நிலையினவாகக் காட்சி அளிக்கின்றன. திருமணமாகி யாண்டு சிலவே கழிந்த நிலையில் மாதவிபால் சென்ற கோவலனை எண்ணி அவன் வரவுக்குக் காத்திருந்த கண்ணகி நிலையை,

            அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய

            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

            மங்கல அணியிற் பிரிதணி மகிழாள்

            கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பக்

            பவள வாணுதல் திலகம் இழப்ப

            மையிடுங் கூந்தல் நெய்யணி மறப்பக்

            கையறு நெஞ்சத்துக் கண்ணகியன்றியும் (சிலம்பு 4:47-57) என்று கூறுவார் என்று பாடுகின்றார். மங்கல அணியைத் தவிர பிறவற்றை எல்லாம் கண்ணகி இழப்ப தவள வாள் நகையை மட்டும் கோவலன் இழப்ப ஊதுலை குருகின் உயிர்த்து ஒடுங்கினள் என்கின்றார். சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி குலம் தரும் வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தகும் என்று கோவலன் தன் மீதே கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.

            ஆதிரையை

            ‘ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று

            வான்தரு கற்பின் மனையுறை மகளிரின்

            தான் தனி ஓங்கிய தகைமைய ளன்றோ

            ஆதிரை நல்லாள்”                                                                         (மணி. 16:76-79)

என்று அறிமுகப்படுத்துகின்றார். ஆதிரையின் கணவன் சாதுவனை,

            ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

            சாதுவன் என்போன் தகவிலன் ஆகி

            அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

            கணிகை ஒருத்தி கைதூண் நல்க

            வட்டினும் சூதினும் வரன் பொருள் வழங்கி

என்று குறிப்பிடுகின்றார்.

            தன் செல்வத்தையெல்லாம் மாதவிக்கு ஈந்தவன் கோவலன் பரத்தையர் தொடர்பு மட்டும் அல்லாது வட்டினும் சூதினும் வான்பொருள் இழந்தவன் சாதுவன். இத்தகு கணவன்மாரையும் தெய்வங்களாகக் கருதி வாழும் குடும்ப அமைப்பைத்தான் சிலம்பும் மேகலையும் காட்டுகின்றன.

திருமணம்

            களவும் கற்பும் பழந்தமிழரின் மணமுறைகளாகக் காணப்பட்டன. “கற்பாவது நல்வாழ்வு என்றும் களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் கொள்க” என்பர். “கற்பெனப்படுவது களவின் வழிந்தே” என்கிறது இறையனார் களவியல் உரை (ஐ.15) எனவே களவும் கற்பும் பழந்தமிழரின் இல்லறாவாழ்வின் இரு முக்கிய கூறுகள் என்பது புலனாகும் இதைதான் தொல்காப்பியம்

            “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

            கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

            கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது (தொல்.கற்பு.140) என்றும்

            கொடுப்போர் இன்றியும் கரண முண்டே

            புணர்ந்துடன் போகிய காளையான”            (தொல்.பொருள்.கற்பு.141) என்றும் கூறுவர்.

      தலைவன் தலைவியின் களவு கற்பாக மாற இருவழிகள் வழக்கில் இருந்தன. ஒன்று கொடுப்பக் கொள்வது – அதாவது தலைவியின் பெற்றோர் தம் மகளைத் தலைவனுக்குக் கொடுக்கக் கொள்வது. இரண்டாவது கொடுப்போர் இன்றி உடன்போக்கை மேற்கொண்டு கொள்வது.

வ.சுப.மாணிக்கனார், பெற்றோர் கூட்டுவிக்கும் இயல்பு மணம் வழக்கில் இருந்தது எனக் கூறுகின்றார். அதற்குச் சான்றாக.

“கழியக் காதலராயினும் சான்றோர்

பழியொடு வரும் இன்பம் வெஃகார்

வரையின் எவனோ வான்தோய் வெற்ப

கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின்

மணப்பருங் காமம் புணர்ந்தனம யறியார்

தொன்றியல் மரபின் மன்றல் அயர (அகம்.112)

என்னும் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

            ‘தொன்றியல் மரபின் மன்றல்’ என இயல்பு மணத்தைப் பெற்றோர் கூட்டுவிக்கும் மணத்தைத் தோழி சுட்டுதலை நினைக.

            மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலில் நிகழ்த்தியக் காமக் களவினைத் தலைவியின் பெற்றோர் அறியாத நிலையில் வைத்தே மரபு மன்றல் செய்து விடவேண்டும் என்று தோழி ஆசைப்படுகிறாள். காதலனுக்குள் எவ்வளவு அன்பிருந்தாலும் நீடித்தக் களவின்பம் பழிதருவது என்று தலைவனை இடித்துரைக்கிறாள். களவுக்கு அஞ்சுகின்றனர் என்பதுதானே இதன் உட்கிடை. (தமிழ்க்காதல்-ப.110) என்பார்.

            இங்கு நீடித்த களவின்பம் பழி தருவது என்று அவரே குறிப்பிட்டுள்ளமையும் எண்ணத்தக்கது. எனவே அவன் கூறுவதுபோல களவு பழி தருவது அன்று நீடித்த களவே பழிதருவது எனத் தலைவி கூறுவது இங்கு எண்ணத்தக்கது. எனவே இறையனார் களவியல் உரை கூறுவதுபோல் “கற்பெனப்படுவது களவின் வழித்தே” (இறையனார் களவியல். 15) என்பதும் களவொழுக்கமின்றி தனிக் கற்புமுறை முன்பு வழங்கியதில்லை. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. பு.12) என்னும் கருத்துமே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

            பழந்தமிழர் மரபு திருவள்ளுவர் தொடங்கி பின்வந்த கம்பர் வரை தொடருகின்றது. சுயம்வரத் திருமணத்தில் அதுவும் போட்டியை மையமாகக் கொண்ட சுயம்வரத்தில் களவுக்கான வாய்ப்பே இல்லை என்றாலும் இப்பழுந்தமிழர் மரபைப் புகுத்தி கம்பர் காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

            ஆனால் பெற்றோர் நிச்சயித்த மணத்தை அதாவது களவற்ற மணத்தை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்துகின்றார்.

            அவரை

            இருபெரு குரவரு மொருபெரு நாளான்

            மணவணி காண மகிழ்ந்தனர் என்றும்                   

(மங்கல வாழ்த்துப் பாடல். 40-43)

            சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

            மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித்

            தீவலஞ் செய்வது காண்பார் ணோன்பென்னை”

                                                                        (மங்கல வாழ்த்து.51-3) என்று கூறுகின்றார்.

            இதற்கு உ.வே.சா. அவர்கள் “மதியம் சகடணைந்த நாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்குகாட்ட இவன் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவந்திற் செய்த தவம் யாதுகாண் ணெண்பாராயும்.” என்று விளக்கம் தருவார் அடியார்க்கு நல்வார். (ப.41)

            இரண்டுவிதமான மரபு மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. ஒன்று இங்கு தமிழருக்கு உரியதாக இருந்த பொதுவான மணச் சடங்குகள் சாதிவாரியான சடங்குகளாக மாற்றம் பெற்றமையை அறியமுடிகிறது. கிடைநிலை திணைமுறை வாழ்க்கை செங்குத்து அமைப்பிலான சாதிய அமைப்பு வாழ்க்கை முறையாக மாற்றம் பெற்றதையும் இது காட்டுகிறது.

இனக்குழு / சாதி

            சங்க இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை முறைக்கு மாறான சாதிய அமைப்பு முறை பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டாலும் இனக்குழு வாழ்க்கைமுறையே வழக்கில் இருந்துள்ளது. சங்க காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள் என்றாலும் அவருடைய பண்பாடு பழக்கவழக்கங்கள் பழந்தமிழருடைய வாழ்க்கை முறையில் எந்த அளவிலும் பாதிக்கவில்லை என்ற சீனிவாச ஐயங்காருடைய கூற்றும் இதனை அரண் செய்யும்.

            சங்கம் மருவிய காலத்திலேதான் ஆரிய பண்பாட்டுக்கூறுகள் குறிப்பாக, சாதிய அமைப்பு முறைகள் கால்கொள்ளத் தொடங்கின. எனவேதான் கிடையின் நிலை சமுதாய அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையும் செங்குத்துநிலை சமுதாய அமைப்பான சாதிய அமைப்புமுறையும் இரட்டைக் காப்பியங்களில் பதிவாகியுள்ளன.

            மரக்குடி தாயத்து வழிவளம் சுரவாது

            அறக்கொடிபோல் அவிந்து அடங்கினர் எயினர்

மரக்குடி மக்கள் தம் கடமையான ஆநிரை கவர்தலை மறந்து அறக்குடி மக்களாக மாறிவிட்டனர்.

            பொற்றொடிமாதர் பிறந்த குடிப்பிறந்த

            விற்றொழில் வேடர்குலனே குலனும்

            பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த

            எய்வில் எயினர் குலனே குலனும்

            ஆய்தொடி நல்வாள் பிறந்த குடிப்பிறந்த

            வெய்வில் எயினர் குலனே குலனும்                           (சிலம்பு 12:5,6,7)

            இந்தப் பாடல் வரிகளைப் பாடும்போது இளங்கோவடிகள் எயினர் குலத்தவராகவே மாறி பெருமிதம் கொள்வதைக் காணமுடிகிறது. ஒரு பார்வையாளனாக இருந்து எழுதாமல் பங்காளனாகவே மாறிவிடுகிறார்.

            ஆய்ச்சியர் பாடுகின்ற ஆய்ச்சியர் குரவையிலும்

            மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய

            சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

            திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே           (சிலம்பு 17:35)

என்று பாடுகின்றார்.

            மனம், மெய், மொழி ஆகியவற்றால் வழிபடுவதை முக்கரணவழிபாடு என்பர். இளங்கோவடிகள் மாற்றான முக்கரண வழிபாட்டுமுறையை அறிமுகப்படுத்துகின்றார். இப்பாடல் வரிகள் ஊணோடும் உயிரோடும் கலந்து இளங்கோவடிகளைத் திருமால் பக்தனாகவே காட்டுகின்றன. குன்றக்குரவையிலும் இதே நிலை காணப்படுகிறது.

            சிலப்பதிகாரம் சாதிய அமைப்பு முறையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது. மங்கல வாழ்த்துப்பாடல் இயற்கை வாழ்த்தாகக் காணப்படினும் உண்மையில் அது அரச வாழ்த்தே எனலாம். சோழனின் அருள்மிகுந்த வெண்கொற்றக்குடை போல் தண்ணொளி பரப்பியதால் திங்களையும் சோழனின் ஆணைச்சக்கரம்போல் மேருவை வலம் வருதலால் ஞாயிற்றையும் அவன் அருள்போல் மேநின்று சொரிதலால் மாமழையையும் போற்றுவோம் என்கிறார். மூவேந்தருடைய தலைநகரங்கள் ஆட்சிக் சிறப்பு போன்றவையும் சிறப்பாகவே பேசப்படுகின்றன.

            அந்தணர் சிறப்பு அவர்களது அறுந்தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவையும் சிறப்பித்தது பேசப்படுகின்றன. சேரனிடம் பரிசு பெற்று வந்த பராசகன் தக்கிணன் என்ற சிறுவன் வேதம் ஓதியதைக் கேட்டு பரிசு பொருள்கள் தந்து அவன் வழிச் சென்றான். காவலர் அப்பொருள் கண்டு படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என சிறைக்கோட்டத்தே இட்டனர். வார்த்திகன் மனைவி விட்ட கண்ணீரைக் கண்டு ஐயைக் கோயில் கதவும் அடைத்தது அறிந்த அரசன் என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும் கடனென திருத்தங்கால் வயலூரை இறையிலி நிலமாகக் தந்து கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்கு திருமார்பினை அளித்து அவளது தணியா வேட்கையைச் சிறிது தணித்தார் என்பார்.

            ஆக ஒரு காவலன் செய்த குற்றத்திற்கு அரசனை மார்பு நிலத்தில் படும்படி வணங்கவைத்து அரசரும் வணங்கும் உயர்ந்தோர் அந்தணர் என்பதைக் காட்டவே இக்கதையைப் படைத்துள்ளார் எனலாம்.

            நால்வகை வருணத்து நலங்கே மொழியுவும் (சிலம்பு: 182) என்னும் தொடருக்கு உரைகூறும் அடியார்க்கு நல்லார் நால்வகை வருணத்து ஒளியாவன அந்தணன் – வெள்ளை, அரசன் – சிவப்பு, வசியன் – பச்சை, சூத்திரன் அந்தமில் கருமை என்பர். கொலைக்களக் காதையில் உணவு உண்ணும் கோவலனை

            அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்

            உரியவல்லாம் ஒருமுறை கழித்து (சிலம்பு:16:44,45)

என்று பாடுகின்றார். இவற்றை நோக்கும்போது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வரிசை முறை சிலப்பதிகார காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

            எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனக்குழு அமைப்பு முறைக்கு மாற்றான சாதி அமைப்பு முறையும் கிடைநிலை அமைப்புக்கு மாறான செங்குத்து அமைப்பு முறையும் உறுதிபட்டுவிட்டதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

கற்பு

            சமூக மதிப்புகளில் கற்புக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூகத்தின் சீரான இயக்கத்திற்குக் கற்பு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தும் தொல்காப்பியர் பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து கற்பை முதல் தகுதியாகக் குறிப்பிடுகின்றார். உயிரினும் சிறந்தது நாண். நாணினும் சிறந்தது கற்பு என்று கூறுகின்றார். இந்நூற்பாவுக்கு ‘கற்பித்தபடி ஒழுகுவது’ அதாவது கணவன் கற்பித்தபடி ஒழுகுவது என்று உரை வகுக்கின்றனர். வள்ளுவர் உள்ளத் திண்மையைக் கற்பு என்று கூறுகின்றார். திண்மை என்பதற்கு ‘உள்ள உறுதி’ எனப் பொருள் கொண்டால் மன உறுதியே கற்பு எனலாம். பிற்கால ஒளவையார் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்கிறார். இதற்கு உரை எழுதும் ஈ.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோர் சொன்ன சொல்லில் இருந்து வழுவாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு ஆகும் என்று கூறியுள்ளனர். ஆக கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளப்பட்டமை புலனாகிறது.

            பிற ஆடவர் நெஞ்சில் இடம்பெறாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு என்பது சாத்தனார் தரும் விளக்கம்.

            மண்டிணி ஞாலத்து மழைவளம் தரூஉம்

            பெண்டீராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்                                                (மணிமேகலை 22:45, 46)

ஒரு பெண்ணை பார்க்கும் ஆண் அவளைத் தன் உள்ளத்தில் இருத்திவிட்டால் அந்தப் பெண்ணின் கற்புக்கு பங்கம் நேர்ந்து விட்டதாகவே கொள்வர்.

            ககந்தன் என்னும் மன்னனுடைய மகன் காவிரியாடி விட்டு வந்த மாருதி என்ற பெண்ணைப் பார்த்து ‘நீ வா’ என்று அழைத்து விட்டான். எனவே முத்தீப் பேணும் முறையை யான் இழந்தேன் என்று சதுக்க பூதத்திடம் முறையிட்டனள்.

மேலும்,

            “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

            பெய்யென பெய்யும் பெருமழை யென்றவப்

            பொய்யில் புலவன் பொருளுறை கேளாய்                          (மணிமேகலை 22: 59-61)

என்ற வள்ளுவர் வாக்கை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். கொண்டவனையே முதல் தெய்வமாய் வழிபடும் பெண் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றாள் என்ற வள்ளுவரின் கருத்து, சாத்தனாருக்கும் உடன்பாடே எனலாம். எனவேதான் அத்தகு பெண்ணை ‘வான்தரும் கற்பினள்’ என்று கூறுகின்றார்.

            துறவியான கவுந்தியடிகள் கற்பில் சிறந்த கண்ணகியைத் தன் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளுகின்றார்.

            கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது

            பொற்டிடை தெய்வம் யாம் கண்டிலமால்                           (சிலம்பு.2:143,144)

என்று கூறி மேலும் இத்தகு பெண்டிர் உள்ள நாட்டில் வானம் பொய்யாது, வளம் குன்றாது வேந்தர் கொற்றம் சிதையாது என்று கூறுகின்றார். ஊரலருரைத்த காதையில் மணிமேகலை இந்திரவிழாவில் ஆடவேண்டும் என்றதற்கு

            கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்

            மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்

            கண்ணீராடிய கதிரிள வனமுலை

            திண்ணிதிற் திருகித் தீயில் பொத்திக்

            காவலன் பேரூர் களையெரி யூட்டிய

            மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை                              (மணி 2: 50-55)

என்கிறாள்.

            எனவே மணிமேகலையைத் தன்னுடைய மகள் என்பதைக் காட்டிலும் மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றாள்.

அறம்

            அறம் என்ற சொல் நுட்பமான பொருளுடையது. இச்சொல் காலத்துக்கும் இடத்திற்கும் ஏற்பப் பல்வேறு பொருள்களைத் தந்து செறிவுடையச் சொல்லாகச் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது. அறம் இறைவனின் ஆணை என்றும் அறத்திற்கு மாறான, செயல்களைச் செய்தல் இறைவனையே மீறுதல் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ‘தக்கன சொல்லி நிற்றல்’ அறம் என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆக மனத்தையும் வாக்கையும் செயலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் எனலாம்.

            அறத்துக்கு, சாத்தனார் புது விளக்கத்தைத் தருகின்றார். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி’

            பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும்

            சிறந்த தம் கல்வியும் மாயும்                                                                (நாலடி.285)

என்கிறது நாலடியார். இப்பசிப்பிணியால் ஏற்படும் இழிவை சாத்தனார்

            குடிப்பிறப்பு அழிக்கம் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்வி பெரும்புணை விடூஉம்

            நாண் அணி களையும் மாண் எழில் நீக்கும்

            பூண்மூலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

            பசிப்பிணி என்னும் பாவி                                                                       (மணி.11:76-80)

உயர்குடி பிற்பை அழக்கும், கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணமாகிய ஆபரணத்தை நீக்கும். மனை மக்களோடு புறங்கடை நிறுத்தும். எனவே உலகில் பல துன்பங்களுக்கு நிலைகளனாயுள்ள இப்பசிப்பிணியைப் போக்குதலே தலையாய அறம் என்று கூறுகின்றார் சாத்தனார்.

            யாருக்கு அறம் செய்ய வேண்டும் என்பதையும் சாத்தனார் வரையறுக்கின்றார்.

            ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வார்

            ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

            மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

            மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

            உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே                                 (மணி.11:93-96)

        என்கிறார் கைமாறு எதிர்ப்பார்த்துச் செய்யப்படும் அறம் ஒரு வியாபாரம். எனவேதான் அத்தகையோரை அறவிலை வணிகன் என்று கூறுகின்றார்.

            மறுமை கருதிச் செய்யப்படும் அறமும்கூட ஒருவகையில் வாணிகம் தான் இம்மைச் செய்தது மறுகைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் என்று பாடுகின்றார் முடமோசியார். (புறம்.134)

            எனவே எவ்வகையிலும் கைமாறு செய்ய இயலாத நிலையில் உள்ள காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுதல் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக இசைந்து உடன் ஊட்டிட வேண்டும் (மணி 13:111-113) என்கிறார்.

            ஒருவனுடைய மறுமை இம்மை ஆகிய இரண்டையும் கெடுப்பதான இப்பசிப்பிணியைப் போக்குவதுதான் உலகின் மிகச் சிறந்த அறம். இதை அருளறம், அன்புகொள்ளறம், தாங்கா நல்லறம், பெருமைசால் நல்லறம், மலையாவறம், மிக்கவறம் முன்னவன் போதியின் நல்லறம் என்றெல்லாம் வழங்கி அறத்தின் இன்றியமையாமையைக் காட்டுகின்றார்.

            “அறம் எனப்பட்டது யாதென கேட்பின்

            மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்

            மேன்மக்களுக்குரியதாக இலக்கியம் வலம் வந்த காலத்திலேயே சாமான்ய மக்களைப் பற்றி சிந்தித்த முதல் சமுதாயச் சிந்தனையாளர் சாத்தனார். ஒரு நாட்டின் குடிமகன்கள் அனைவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசு வழங்கவேண்டும் என்று கூறுகின்றார். இதை அவர் செயலாக்கம் செய்த விதம் வேண்டுமானால் குறைபாடுடையதாக இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டம் ஃ சிந்தனை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தக் கூடியதே. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

முடிவுரை

            தாய்வழிச் சமூக அமைப்பு சிதைவுற்று, தந்தை வழிச் சமூக அமைப்பு தோற்றம் கொண்டமையையும் தாய்வழிக் குடும்ப அமைப்பு தந்தைவழிக் குடும்ப அமைப்பாக மாற்றம் எய்தியமையையும் சிலம்பும் மேகலையும் தெளிவுபடுத்துகின்றன.

            கணவன் பரத்தையர் ஒழுக்கமுடையவனாக வட்டு, சூது போன்ற தீய பழக்கவழக்கங்களால் வான், பொருள் இழந்தவனாக இருப்பினும் மனைவி மட்டும் ஒழுக்கமுடையவளாகவும் கணவன் நலத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்று இரு நூல்களும் வலியுறுத்துகின்றன.

            சமத்துவமாகக் கிடைநிலையில் இருந்த இனக்குழு சமுதாய அமைப்பு சிதைந்து உயர்வு தாழ்வு கொண்ட செங்குத்து அமைப்பான சாதிய சமுதாய அமைப்பு உருப்பெற்றுவிட்டமையை இரட்டைக் காப்பியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்,

தமிழ்த்துறை,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம்.

குதிரை குட்டியின் வழக்கு – கிராமத்துச் சிறுகதை

iniyavaikatral.in

The case of the pony

ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

வழியிலே ஒரு இட்லிக் கடையைக் கண்டான் அவன். சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது. பிடித்திருந்த குதிரையைப் பக்கத்தில் உள்ள  எண்ணெய் ஆட்டுகின்ற செக்கில் கட்டினான். கையோடு கொண்டு வந்திருந்த கொல்லை கரைத்து குதிரைக்கு வைத்தான்.

சுடச்சுட இட்லியை புட்டு வாயிலே போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கைகழுவினான். செக்கில் வந்து குதிரையைப் பார்த்த போது குதிரை குட்டி போட்டிருந்தது. குதிரையையும் குட்டியையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அப்போது அங்கு வந்த செக்கன்,

“நீ குதிரையை மட்டும்தான் செக்கில் கட்டிவிட்டுச் சென்றாய். குட்டியை நீ கொண்டு வரவே இல்லை. இந்தக் குட்டியை என்னுடைய எண்ணெய் செக்குதான் குட்டியாகப் போட்டது. அதனால் உனக்கு நான் குட்டியைத் தரமாட்டேன்” என்று சொன்னான்.

குதிரைக்காரன் எவ்வளவு பேசியும் குட்டியைச் செக்கனிடமிருந்து வாங்க முடியவில்லை. வழக்கு ஊர் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஊர்க்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் கேட்பதாக தெரிவில்லை. வழக்கும் முடிந்தபாடில்லை.

சரியென்று வழக்கானது ஏழூர்க்காரர்கள் சேர்ந்து செய்யும் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஏழூர் பஞ்சாயத்துக்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் பிடிவாதமாய் குதிரைக்குட்டி எனக்குத்தான் சொந்தம் என்று வாதாடினான்.

இது என்னாடா வம்பா போச்சு! வழக்கு இழுத்துக்கொண்டே போகுதேன்னு ஊர்மக்கள் நினைச்சாங்க. சரின்னு ஏழூர் பஞ்சாயத்துக்காரங்களும் வடக்குல  இருக்குற குள்ள நரிக்கிட்ட இந்த வழக்க கொண்டு போனாங்க.

வழக்குக்குண்டான  செய்தியை குள்ள நரிக்கிட்ட சொன்னாங்க. குள்ளநரியும் கேட்டுச்சு..

“சரி… வர்ற ஞாயிற்றுக்கிழமைதான் அனைவருக்கும் லீவு. அதனால  அன்னிக்கே பஞ்சாயத்த வச்சிப்புடுவோம். ஆறு மணிக்கெல்லாம் ஏழூர் மக்களையும் பஞ்சாயத்து ஆட்களையும் வரச்சொல்லிடுங்க. நானு ஏழு மணிக்காட்டம் வந்திடுறேன்” ன்னு நரி சொல்லிடுச்சி.

அன்னிக்கு ஊர்மக்கள் எல்லோரும் காலையிலேயே ஆறு மணிக்கெல்லாம் பஞ்சாயத்துல கூடிட்டாங்க. நரி வருவதற்கு இந்தா இப்ப வரும். இந்தா அப்ப வருமுன்னு பாத்துப் பாத்துக் கண்ணு பூத்துப் போச்சு.

சாயுங்காலம் ஆறு மணிக்கு வந்துச்சாம் குள்ளநரி.  எல்லோரும் நரிக்கிட்ட போயி,

“என்ன நரியண்ணே… காலையில ஆறு மணிக்குப் பஞ்சாயத்துன்னா… நீங்க சாயுங்காலம் ஆறு மணிக்கு வாரீங்களே… ” அப்படின்னாங்களாம்.

“பஞ்சாயத்துக்கு புறப்பட்டுக்கிட்டு இருந்தேனா…. அந்த நேரம் பார்த்து பிரம்மன்கிட்ட இருந்து ஒரு அழைப்பு… என்னான்னா… தெக்க வங்காளவிரிகுடா கடலு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருந்திச்சி. நெருப்ப அணைக்க வரகு வக்கீல மேல போட்டு மூடி அணைச்சிட்டு வருவதற்று நேரமாயிடுச்சி” அப்படின்னுதாம்.

வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாத செக்கன்,

“அதெப்படி வங்காளவிரிகுடா கடலு பத்திகிட்டு எரியும்” அப்படின்னானாம்.

            குள்ளநரி, செக்கானை பக்கத்தில் கூப்பிட்டதாம், செக்கானின்  கன்னத்தில் ஓங்கி ரெண்டு அறைவிட்டு, “ஏண்டா செக்கு குதிரைக்குட்டிப் போடும்போது – வங்காளவிரிகுடா கடலு நெருப்புல பத்திகாதாடா” என்று கேட்டதாம்.

            செக்கன் தலைதெரிக்க அவ்விடத்தை விட்டு ஓடினானாம். வழிப்போக்கனும் குதிரையையும் குட்டியை அழைத்துக்கொண்டுச் சென்றானாம்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »