Saturday, April 4, 2026
Home Blog Page 17

அழிந்து வரும் உலகம்| க.பாக்கியராஜ்

அழிந்து வரும் உலகம்- க.பாக்கியராஜ்

💧 நெகிழிப் பையில்

தேனீரும் குலம்பியும்


நேற்றுச் சுட்ட

எண்ணையில் – பொறித்த


மசால்வடையும்

நாகரிகமாய் போனதடா…

 

💧 நாளை நம்
,

ஆயுளுக்குத் தீமையடா

அன்புடன் கேட்டுக்கோட
 

அழகுமர மென்றுசொல்லி

ஆலமரம் சின்னதாச்சு
…

 

💧 விசமுள்ள கருவமரம்

விளைநிலத்தில்

வளர்ந்து 
பெரிதாச்சு

வெப்பங்களும் அதிகமாச்சு…

 

💧 இயற்கையின்


பருவநிலை மாறிப்போச்சு

விளைச்சலும்

வெறுமையாச்சு
…

 

💧 கதராடை கனிந்திருக்க

பாலிஸ்டராடை பளபளக்குதுப்


பாரினில் பார்த்துகோடா…

 

💧 பிணிகளை உண்டாக்கும்


மஞ்சப்பை போயாச்சு

நெகிழிப்பையும் நெருக்கமாச்சு…


 

💧 கண்ணில்பட்ட இடங்களெங்கும் 

மக்காத குப்பையாச்சு
 

குளிர்ந்தக் காற்றுடனும்

குளிர்சாதனப் பெட்டியுடனும்


குதுகுலமாக நாமிருக்க,

கார்பன் வெளியாச்சு


காற்றுமாசு அதிகமாச்சு…

 

💧 ஓசோனுக்குள் ஓட்டையடா


கதிரவ னொளியால்

உயிர்களுக்கது தீமையடா…


 

💧 மரங்களும் அழிந்துப்போச்சு  

ஆற்றுமணலும் காணப்போச்சு


மழைநீரும் ஓடிப்போச்சு

குடிநீரும் பாட்டிலாச்சு


மண்ணின் வளமும் கெட்டுப் போச்சு


மண்ணுக்கது தீமையாடா

மறக்காம தெரிச்சுகோடா
… 

 

💧 ஆளுக்கொரு அலைப்பேசி

அதில்மயங்கும் மனசாட்சி


மனநிலையும் மாறிப்போச்சு

மனிதநேயம் தூரப்போச்சு


பழையசோறு மறந்துப்போச்சு

பாஸ்புட் அதிகமாச்சு


ஆயுள்காலம் குறைவதற்கு

அத்துனையும் காரணமாச்சு..
.

 

கவிதையின் ஆசிரியர்

க.பாக்கியராஜ்
தமிழ்த்துறை,
உதவிப்பேராசிரியர்,
ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
செளடாம்பிகா குழு நிறுவனம்,
அம்மாப்பேட்டை,
திருச்சிராப்பள்ளி-620009.

 

கனவும்! நனவும்!!|கவிஞர் ச.நவநீதனா

கனவும்! நனவும்!-கவிஞர் ச.நவநீதனா

📍 திங்களொடு பிறந்தவளாய்,


தில்லையொடு நிலைத்தவளாய்..!


 

📍 செங்காந்தள் செம்பிராட்டி,


சீமையிலுமே அழகாய்ச்

சிரிக்கின்றாள்..!


 

📍 செந்தாமரைச் சிறுவாயினாலே,


ஒருகோடிக் கற்பனையாய்,


சிந்தாமணிகள் பாடுகின்றாள்!


சிந்துவெளி சொல்லிக் கொடுப்பவள்..

 

📍 அவளிடமே எங்கனவை,


எழிலுடனே கூறிடவே..

கண்சிமிட்டாச் சிலையாக,

தாரகையாள் பார்வையொன்று

பார்த்திட்டாள்..!

 

📍 ஒய்யார வெட்கங்கொண்டே

நோக்கினாளை,


என்னவென்று நாவுரைக்கும்?

எப்படித்தான் மனமுரைக்கும்?

 

📍 பெரும் பொருண்மைக்காகவே,

சிறுபொருளெனவே


உயிரிருக்க..!

 

📍 கனவுகளாய் நனவுகளாய்…

அவளேதான் நகைத்திடுவாள்!!

கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச
இளங்கலை இரண்டாம் ஆண்டு 
வணிகவியல் துறை
கே.பி.ஆர்.கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை.

என் அலமாறியில் |கவிதை |முனைவர் ஆ.சாஜிதாபேகம்

என் அலமாறியில் கவிதை முனைவர் ஆ.சாஜிதாபேகம்
📜 என் அலமாறியில்

அடுக்கி வைக்கப்பட்ட – புத்தகங்கள்

ஆயிரம் கதை சொல்கிறது….!


📜 சில புத்தகங்கள் படிப்பதற்கு…!
சில புத்தகங்கள் பார்வைக்கு…!
சில புத்தகங்கள் என்னைப் புரட்டும்…!
சிலவற்றை நான்புரட்டுகிறேன்.!

 

📜 வாங்கி வைத்த பிறகுதான் தெரிகிறது
வேண்டுவதும் வேண்டாததும்….!!!

ஆகாத புத்தகங்கள்

கழிக்கப்பட வேண்டியவை அல்லவா….

 
📜 இருந்தாலும் அவ்வப்போது கைகட்டி

அலமாரி முன் நிற்கிறேன்….
இருந்து விட்டுப் போகட்டும்

அவைகளும் புத்தகம்தானே என்று
விலக முடியாமல் கலைத்துப் போடுகிறேன்..!
நான் கலைந்து விடாமல்…..!!!
 
கவிதையின் ஆசிரியர்,
முனைவர் ஆ.சாஜிதாபேகம்,

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

காங்கேயம் வணிகவியல் கல்லூரி,

EBET அறிவிப்புப் பூங்கா,
நத்தக்காடையூர்,காங்கேயம் 
,
திருப்பூர் மாவட்டம்.

 

இறந்தேன் வாளால் வெட்டுண்டே!| கவிஞர் அர. செல்வமணி

இறந்தேன் வாளால் வெட்டுண்டே! அர. செல்வமணி
📜 நீண்டு வளர்ந்த நெடும்பனைநான்
               
நிலையாய் நின்றேன் ஓரிடத்தில்

கண்டேன் என்றன் நிழல்தனிலே
               
கானில் வாழும் புள்பலவே

கொண்டேன் மகிழ்வே அதனாலே
               
கொடுத்தேன் இடமும் அவைகட்கே

உண்டே என்றன் பெயருடனே
               
உலவும் வண்ணப் புள்ளிரண்டே

 
📜 பண்டை மாந்தர் வாழ்வினிலே
               
பலவும் எழுதச் சுவடிதந்தேன்

கண்டார் தமிழர் மாநிலத்தின்
               
கனிந்த மரமாய் எனைக்கொண்டார்

உண்டார் என்றன் கள்தன்னை
               
ஊக்கம் மிகவும் பெற்றிடவே

கண்ட தில்லை கேடதனால்
               
கருத்தாய்த் தற்சார் பளித்தேனே

 
📜 பனையென் நுங்கை விஞ்சிடுமோ
               
பகட்டாய் இனிக்கும் பனிக்குழைவே

பனையென் வெல்லம், கற்கண்டைப்
               
பாரில் கரும்பும் வென்றிடுமோ

பனையென் கிழங்கும் பழங்களுமே
               
பசிக்கு விருந்தாய்க் கிடைத்திடுமே

பனையென் நுங்கை உண்டபின்னே
               
பலவும் மிஞ்சும் கால்நடைக்கே

 
📜 பனையென் நாரால் பலபொருள்கள்
               
படைத்தார் எளியோர் பட்டறிவால்

பனையென் தும்பும் பயனாகும்
               
பலவும் சொன்னால் மிகவிரியும்

பனைநான் சூழல் கெடுக்காமல்
               
பாழும் நெகிழிப் பயன்குறைப்பேன்

பனைநான் நீரைச் சுரண்டாமல்
               
பல்லாண் டுயிர்ப்பேன் வான்மழைக்கே
 
📜 வனைவார் என்றன் ஓலைகளை
               
வாழக் கூரை வேய்வதற்கே

வேனில் வெம்மை தணிப்பதற்கே
               
விரும்பும் நுங்கும் பதநீரும்

இன்னும் பலநான் கொடுத்தாலும்
               
ஏனோ மாந்தர் எனைமதியார்

இன்றோ அவர்கள் கையாலே
               
இறந்தேன் வாளால் வெட்டுண்டே!

 
இரண்டு பறவைகள்: பனங்காடை, பனை உழவாரன்.

பனிக் குழைவு: ice cream.
கவிதையின் ஆசிரியர்
அர. செல்வமணி
அஞ்சற்பெட்டி எண் : 21,
பாசக்குட்டைப் புதூர்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்: 638401.

 

திருத்தமாய்ப் பேசுங்கள்! | திருத்துறைக்கிழார்

திருத்தமாய்ப் பேசுங்கள்!_திருத்துறைக்கிழார்
    தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. 
               
       தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர்.  அல்லாமலும், தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர்.  அதனால், தமிழ் தன் செம்மை, சீர்மை கெட்டு நின்றது.
பிறமொழிக் கலப்பு 
               
அயலார் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அவர்தம் மொழிகளையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.  அப்பொழுது அம்மொழிச் சொற்கள் தமிழில் கலக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஏன்? இன்று ஆங்கிலம் கலக்காமல் பேசுகிற அல்லது எழுதுகிற தமிழரைக் காண்பது அரிதாகி விட்டதை நாம் அறிவோம்.  எனவே, எந்தெந்த மொழிக்காரர் தமிழ்நாட்டை  ஆண்டார்களோ,  அந்தந்த  மொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்கத் தலைப்பட்டன.  சொல்வளம், பொருள்வளம்   மிக்க  தமிழுந்  தன்  கன்னிமை  கெடாது நிலைத்திருப்பதற்குக் காரணம் அதன் தனித்தியங்கும் தன்மையேயாகும்.
 
தேவையற்ற சொற்கள் 
               
இன்றைய தமிழ் மக்கள் பேசும்போது, இடையிடையே தேவையில்லாத,  பொருளற்ற சொற்களையும் சேர்த்துப் பேசும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காண்போம்.
 
1.நான் என்ன சொல்றேன்னா, நீ வந்து இப்படிச் செய்வது வந்து சரியில்லை, நீ வந்துட்டு, என்ன நான் சொல்றது?, வந்து புரியுதா?

2.அவர் வந்தாப்லே, தம்பி சொன்னாப்லே, நாலு மணியைப் போல வந்து கேட்டாப்ல.
இப்படிப் பயனில்லாத சொற்களை இடையில் இணைத்துப் பேசுவோர் இன்று மிகுதியாகி வருகின்றனர்.
இத்தகையோரை மனத்தில் கொண்டுதான் திருவள்ளுவர்,
          
“பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல்          
மக்கட் பதடி எனல்” (எண் : 196)
                                        
என்ற குறளை யாத்தாரோ?

இழிபொருளும் இன்பொருளும் 
               
ஒரு காலத்தில் இழிந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் இன்று  நல்ல  பொருளிலும்,  நல்ல  பொருளில்  வழங்கிய சொற்கள் இழிந்த பொருளிலும் வழங்குவதைக் காண்கின்றோம். களிப்பு என்னும் சொல் முன் கள்ளுண்டு மகிழ்வதைக் குறிக்கப் பயன்பட்டது.  ஆனால், இன்று மகிழ்ச்சியென்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. 
          
‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்’   (புறப்பொருள்வெண்பாமாலை)  
               
என்ற அடி இதனை விளக்குகின்றது.  நாற்றம் என்னும் சொற்கு மணம் என்பது பொருள்.  இப்பொழுது நாற்றம் என்றால் எல்லோரும் மூக்கைப் பிடிப்பர்.  கெட்ட மணம் என்று பொருள் கொள்கின்றனர்.
         
“ முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை          
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு” (எண் :1274)
               
என்ற குறளிலும், நாற்றமுரைக்கும் மலருண்மை என்று நானமணிக்கடிகையிலும், நாற்றம் என்ற சொல் நறுமணம் என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.  முன்பு, உரியவன், உடையவன் எனப் பொருள்பட்ட கிழவன் என்ற சொல் இன்று முதியவன் எனும் பொருளில் வழங்குகிறது.
 “கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்           
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்ற தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பாவிலும்,
          
“செல்லான் கிழவன் இருப்பின் நி
லம்புலந்து          
இல்லாளின் ஊடி விடும்” (எண் :1039)
என்ற திருக்குறளிலும் கிழவன் என்னும் சொல் உரியவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதறிக.

பிழையான பலுக்கல் 
               
சில தமிழ் எழுத்துகளையும், சொற்களையும் சிலர்க்குச் சரியாக பலுக்கக் கூடத் (உச்சரிக்கத்) தெரியவில்லை.  சிலர் ழகரத்தை லகரகமாகவும், யகரமாகவும்; லகரத்தை ளகரமாகவும், ளகரத்தை லகரமாகவும்; பலுக்குகின்றனர்.  பழக்கவழக்கம் என்பதைப் ‘பளக்க வளக்க’ மென்று சிலர் பலுக்குவதையும், கோழியைக் ‘கோளி’யென்றும், பள்ளத்தைப் ‘பல்லம்’ என்றும் உச்சரிப்பதையும் கேட்கின்றோம்.  சிலர் சொன்னேன் என்று சொல்வதற்குச் ‘சென்னேன்’ என்றும், கோழியை ‘கோயி’ என்றும் சொல்லுகின்றனர்.  இவற்றிற்குக் காரணம் என்ன? பொருள் உணர்ந்து  பேசாமையும், பலுக்கத் தெரியாமையுமேயாம்.

பிழையாக வழங்கும் சொற்கள்
பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் பல தமிழ்ச்சொற்களைப் பொருளறியாமல் பிழையாகப் பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்.  அத்தகைய சொற்கள் நூற்றுக்குமேல் உள்ளன.  முதலில் ஏழ்மை என்ற சொல்லைப் பார்ப்போம்.  ஏழ்மை என்றால்  ஏழு  என்றே  பொருள்.  ஏழ்  தெங்க  நாடு;  ஏழ் முன்பாலை நாடு என்னும் வழக்குகளைக் காண்க.  ஏழ் என்பதனொடு மை என்னும் பண்புப் பெயர் விகுதி சேர்த்து ஏழ்மை என்றாகிறது.  இச்சொல்லைத் தமிழறிஞர்களும், மேடைப்  பேச்சாளர்களும்    வறுமையென்னும்   பொருளில் பயன்படுத்துவது   மிகவும்   வியப்பாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது.  ஏழை என்ற சொற்கு வறியவன்.  அறிவிலான் எனப் பொருளாம். ‘ஏழை’ என்பதனுடன் ‘மை’ யைச் சேர்த்தால் ஏழைமை என்றாகும். இதன் பொருள் வறுமை, அறியாமை என்பனவாகும்.  ‘ஏழ்’ என்றாலும் ஏழ்மை என்றாலும் ஏழு என்றே பொருளாகும். 
               
அடுத்துக் கண்ட்ராவியைக் காண்போம்.  இதைக் ‘கண்ட் + ராவி’ எனப்பிரிக்கலாம்.  பார்த்து ராவுதல் எனப் பொருள்படும்.  ஆனால் அத் தொடரை எப்பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? கண்ணை அராவுவது போன்ற துன்பம் தருவது என்ற பொருளிலன்றோ?  எனவே, அதன் சரியான வடிவம் கண்ணராவி என்பதாகும்.  ‘கண் + அராவி’ எனப் பிரித்தல் வேண்டும்.  இது எப்படி கண்ட்ராவி ஆயிற்று?  நல்ல பொருள் தர கண்ணராவி எனப் பயன்படுத்தலாம்?
               
காக்கைப்  பிடித்தலைக் காண்போம்.  காக்கைப் பிடித்தல் என்பதன் பொருள் வெளிப்படை.  ஆனால், எப்பொருளில் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள்?  நயமாகப் பேசி ஒருவரைத் தன்வயமாக்கிக் காரியஞ்சாதித்தல் எனப் பொருள்பட வழங்குகின்றீர்கள்.  காக்கையைப் பிடிப்பதற்கும், இதற்கும் என்ன தொடர்பு? ஆகையால், அத்தொடர்பு கால் கைப்  பிடித்தல்  என்றே  இருத்தல்  வேண்டும்.   இதனைப் பலுக்கத் தெரியாமலோ என்னவோ காக்கைப் பிடித்தலாக்கிவிட்டீர்கள்?  ‘எப்பொருள் யார் யார் வாய்க்; கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ (எண்:423) என்ற வள்ளுவன் வாய்மொழியின் பொருளுக்கேற்ப நடந்தால், பொருள் புரிந்திருக்கும்.
               
காலைப் பிடித்தாவது, கையைப் பிடித்துக் கெஞ்சியாவது தன்  காரியத்தை  நிறைவு  செய்து  கொள்ள முயல்வதையே கால்கைப் பிடித்தல் என்கிறோம்.  இப்பொழுது சொல்லுங்கள்.  சரியான வடிவம் காக்கைப் பிடித்தலா?  கால் கைப் பிடித்தலா?
               
அடுத்து அருகாமைக்கு வருவோம்.  அருகாமையைப் பகுத்தால் அருகு+ஆ+மை எனவரும் .  அருகு முதனிலை. மை இறுதி நிலை. ஆ எதிர்மறை இடைநிலைப் பொருள். அருகில் இல்லாதது.  அதாவது சேய்மையிலுள்ளது என்பதாம்.  ஆனால், நீங்கள் அருகில், அண்மையில் என்ற பொருளில் பயன்படுத்தும் அருகாமை என்ற சொல், அப்பொருளுக்கு எதிரான பொருளைத் தருகின்றது. ஆகையால் அருகமை, அருகில் என்றே பயன்படுத்துவீர்களாக. 
               
அடுத்து இருப்பது மானாவாரி. மானா என்ற சொல்லுக்கு, அகர முதலி தரும் பொருள் பாட்டன் என்பது.  வாரி என்பதற்கு நீர், வருவாய், கடல் எனப்பொருள்.  எனவே மானாவாரி யின் திரண்ட பொருள் பாட்டன் நீர் என்பதும், பிறவுமாம்.  ஆனால், நீங்கள் மானாவாரியை வறண்ட நிலம், நீர்ப்பாய்ச்சல் இல்லாத நிலம் என்னும் பொருளில் பயன்படுத்துகின்றீர்கள்.  பொருந்துமா? அதன் உண்மையான உருவம் வானவாரி என்பதே வானம் – மழை, வாரி- நீர்,  இதன் திரள் பொருளாவது  மழை நீரால்  விளையும் பொருள்,  நீர்ப்பாய்ச்சலில்லாத நிலப்பகுதி என்பதாம்.  ஆகவே. மானாவாரிக்கு மாற்றாக இனிமேல் வானவாரியைக் கையாளுவீர்!
இறுதியாக இருப்பவர் வாத்தியார்.  இச்சொல் தமிழில் ஆசிரியரைக்   குறிப்பதாகும்.   ஆனால்,  அது  தமிழுமன்று. வடமொழியுமன்று.  வடமொழியில் உபாத்தியாயர் என்று ஒரு சொல்லுளது.  அது வாத்தியார் என மருவியிருக்கலாம்.
               
வாத்தியாரைப் பிரித்தெழுதினால் வாய்-தீ-ஆர் என்றாகும்.  தமிழில் வாயில் தீயுடையவர் என்றே பொருள்படும்.  ஆனால், ஆசிரியர் என்றோ, கற்றுச் சொல்லி என்றோ பொருள் தராது.  எனவே, கணக்காயர், ஆசான், ஆசிரியர் என்னும் இனிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பொருத்தமில்லாத வாத்தியார் ஏன்? ஆதலின், வாத்தியாரை விரட்டி ஆசிரியரை அழைப்பீர்களாக.
                இங்ஙனம் பல நல்ல தமிழ்ச்சொற்களை இழிபொருள் தருஞ்சொற்களாக்கித் தமிழில் இழிந்த கொச்சை வழக்கை உருவாக்காமல், பொருளறிந்து யாவரும் பயன்படுத்தச் செய்வதில் தமிழறிஞர் அனைவரும் கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டியது  கடமையும், உரிமையுமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
புனைபெயர் : திருத்துறைக்கிழார்.
முதனிலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு).
திருத்துறைப்பூண்டி

தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)

தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)
    தொல்லியல் என்பது பழங்காலப் பொருட்களைப் பற்றி படிக்கின்ற இயலாகும். இது பண்டைய மக்களின் கருவிகள், கலைப் பொருட்கள், மட்பாண்டங்கள் போன்ற பொருட்களின் மூலம் அம்மக்களின் வரலாற்றை  எடுத்துக்கூறுகிறது.


          தொல்லியலின் பரப்பும் எல்லையும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. தொல்லியல் வரலாற்றுக்கு முந்தைய காலமான தொல்பழங்காலத்தின் பல லட்சம் ஆண்டுகளைப் பற்றி விளக்குகின்றது. தொல்லியல் என்பது பல்வேறு கால மக்கள், பல்வேறு புவியியல் அமைப்பில் வாழ்ந்த மக்கள், பல்வேறு கருவிகளைக் கையாண்ட மக்கள் இப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்கின்ற இயலாகும். இப்படி பரந்து விரிந்துள்ள தொல்லியலின் ஆய்வுகளைக் குறிப்பிட்ட ஒர் அறிஞர் செய்திட முடியாது. எனவே தொல்லியலை வகைப்படுத்துவது அவசியமாயிற்று.

தொல்லியல் வகைகள் 
               
தொல்லியலைப் பகுதியின்  அடிப்படையிலும்,  காலத்தின் அடிப்படையிலும் பொருள் மற்றும் முறைகள் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

1. பகுதித் தொல்லியல் (Regional Archaeology)

2. காலத்தொல்லியல் (Periodical Archaeology)

3. பொருள் மற்றும் முறைகள் சார்ந்த தொல்லியல் (Subjects and Methods Archaeology)
               
மேற்கண்ட தொல்லியலின் பிரிவுகளைத் தொல்லியல் அறிஞர்கள் கீழ்க்கண்டபடி விளக்குகின்றனர்.


1. பகுதித் தொல்லியல் 
               
தொல்லியல் அறிஞர்கள் புவியியல் பகுதி மற்றும் மண்டல அடிப்படையில் தொல்லியலைக் கீழ்க்கண்டவாறு  வகைப்படுத்துகின்றனர். அவையாவன;

அ. மத்திய தரைக்கடல் தொல்லியல் (Mediteranean Archaeology)
 
ஆ. கிரேக்கத் தொல்லியல் (Greek Archaeology)

இ.ரோமானியத் தொல்லியல் (Roman Archaeology)

ஈ.எகிப்து தொல்லியல் (Egypt Archaeology)

உ. அமெரிக்க தொல்லியல் (American Archaeology)

ஊ. இந்தியத் தொல்லியல் (Indian Archaeology)
               
இவ்வாறாகத் தொல்லியல் நிலப்பகுதியின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. மத்திய தரைக்கடல் தொல்லியல் என்பது அப்பகுதியில் அகழாய்வு செய்து அதன்மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்திகளை விளக்குவதாகும். கிரேக்கத் தொல்லியல் கிரேக்க நாட்டின் தொல்லியலையும், ரோமானியத் தொல்லியல் ரோமானிய நாட்டின் தொல்லியலையும் விளக்குகின்றன. வரலாற்றைப் புவியியல் அடிப்படையில் ‘பிரிப்பதுபோல்தான் தொல்லியலும் நாடு. மண்டல புவிப்பிரிவின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது.

2.கால அடிப்படையில் தொல்லியல்

காலத்தின் அடிப்படையில் தொல்லியலைப்   பின்வருமாறு பிரிக்கலாம்.

அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்

ஆ. உலோகக் காலத் தொல்லியல்
இ. வரலாற்றுக் காலத் தொல்லியல்

அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்
               
வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல் என்பது பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், கலைப்பொருட்கள், தாழிகள் ஆகியவற்றை ஆராய்ந்து அக்கால மக்களின் வரலாற்றை அறிய உதவும் தொல்லியலாகும். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு (Art of writing) பெற்றிருக்கவில்லை. எனவே, இலக்கியச் சான்றுகள் அறவே இல்லாத மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்கால மக்களின் வரலாற்றை அறியத் தொல்லியல் மூலங்கள் மட்டுமே உதவுகின்றன. உதாரணமாக இந்தியாவில் சர் இராபர்ட் புரூஸ் பூட் ஆதிச்ச நல்லூர், பல்லாவரம், கடப்பா, கர்நூல் போன்ற இடங்களில் நடத்திய ஆய்வுகள் இவ்வகைத் தொல்லியலை விளக்குவதாகும். இந்தியாவில் பல்லாவரத்தில் ஆய்வு செய்த சர் இராபர்ட் புரூஸ் பூட் ‘சென்னைக் கைக்கோடரி’ (Madras Hand Axe) என்ற கற்கால மக்களின் முதல் கல் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். இவரின் பல ஆய்வுகள் தென்னிந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விவரிக்கின்றன. எனவே தான் இவர் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியத் தொல்லியலின் தந்தை (Father of Pre-historic Archaeology of India) என்று அழைக்கப்படுகிறார்.

ஆ.உலோகக் காலத் தொல்லியல்
               
“Proto-historic Period’ என்று அழைக்கப்படும் உலோகக் காலத்தொல்லியல், செம்பு கற்காலம், வெண்கல காலம், இரும்புக் காலம் ஆகியவற்றைக் குறிக்கும். இக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு எழுத்தறிவு (Art of Writing) தெரியும். ஆனால், அவர்கள் பயன்படுத்திய அவ்வெழுத்து முறையின் பொருளை நம்மால் அறியமுடியவில்லை. எனவே இலக்கிய மூலங்கள் இக்காலத்திற்கு கிடையாது. அக்கால மனிதர்கள் விட்டுச்சென்ற பொருள்கள், கருவிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய தொல்லியலார் மட்டுமே தகுதி பெறுகின்றனர். அவ்வியல் அறிஞர்களின் ஆய்வு முயற்சியால் இக்கால தொல்லியல் (Archacology) பேரா. முனைவர் நா. மாரிசாமி வரலாற்றை அறிகிறோம். இதனை விளக்குவதே உலோகக் (எ.கா.) ஹரப்பா காலத் தொல்லியல் ஆகும்.  மொகஞ்சதாரோ ஆய்வுகள். இதன் மூலமே சிந்து சமவெளி நாகரிகம் வெளிக்கொணரப்பட்டது.

இ. வரலாற்றுக்காலத் தொல்லியல் 
               
வரலாற்றுக்காலம் என்பது இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ள காலத்தைக் குறிக்கும். இக்கால வரலாற்றை நிரப்ப இலக்கிய மூலங்கள் மட்டுமின்றித் தொல்லியல் மூலங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன எடுத்துக்காட்டாக, பாடலிபுத்திரம், சாஞ்சி, சாரநாத் பராபர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள், மௌரியர் கால வரலாற்றை அறிய உதவுகின்றன. கல்வெட்டுகள் மௌரிய ஆட்சிமுறையை அன்றன. ஆகவே வரலாற்றுக்கால வரலாற்றை அறிய  உதவும் தொல்லியலை வரலாற்றுக் காலத் தொல்லியல் என்று அழைக்கின்றனர்.
   மேற்கண்டவை  மட்டுமின்றி தொல்லியலைக் காலத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகைகளாகவும் பிரிக்கலாம். அவை,


அ. பண்டைய காலத் தொல்லியல் (Ancient) Archaeology)

ஆ. இடைக்காலத் தொல்லியல் (Medieval Archaeology)

இ தற்காலத் தொல்லியல் (Modern Archaeology)
               
இவ்வாறு வகைப்படுத்துவதால் தொல்லியல் அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களின் கவனத்தைச் செலுத்தி ஆய்வு செய்யமுடியும்.


3. பொருள் மற்றும் முறைகள் தொல்லியல்
               
தொல்லியலைப் பொருள் அல்லது முறைகள் அடிப்படையில் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. அரசியல் தொல்லியல் (Political Archaeology)

ஆ. சமூகத் தொல்லியல் (Social Archaeology)

இ.பொருளாதாரத் தொல்லியல் (Economic Archaeology)

ஈ. சமயத் தொல்லியல் (Religious Archaeology)

உ. இனத் தொல்லியல் (Ethno Archaeology)


மேற்கண்ட தொல்லியல்கள் பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.


அ. அரசியல் தொல்லியல்
இவ்வகைத் தொல்லியலில் அரசு, அரசியல் தொடர்பான பொருள்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அரண்மனைகள், போர்க்கருவிகள், கோட்டைகள், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அரசியல் செய்திகளையும், ஆட்சி முறைகளையும் அறிவது அரசியல் தொல்லியலாகும்.


ஆ. சமூகத் தொல்லியல்
சமூகத்தின் அடிப்படை அங்கமான தனிமனிதனின் மட்பாண்டங்கள், தேவைகளுக்குப் பயன்பட்ட அணிகலன்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து சமூக நிலைகளை அறிவது சமூகத் தொல்லியல் ஆகும். 

இ.பொருளாதாரத் தொல்லியல்
               
பண்டைக் கால மனித சமுதாயத்தின் பொருளாதார நிலைகளை ஆய்வதே பொருளாதாரத் தொல்லியல் ஆகும். மக்களின் இத்துறை வரலாற்றுக்கு முற்பட்ட கால பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வதில் ஈடுபடுகின்றது. பொருட்களின் உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பயன்பாடு, வணிகம், பரிமாற்றம், இயற்கைச் செல்வங்களின் பராமரிப்பு, மக்கட்தொகை, வேளாண்மை, நீர்ப்பாசனம், பொருளாதார வளர்ச்சி முதலான கால்நடை வளர்ப்பு,   பயிர் செய்த தானியங்கள் அவற்றைச் சேமித்தல் பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளில் அடங்கும் இயற்கையின் தாக்கத்திற்கேற்பத் தொல்பழங்கால மனிதன் எவ்வாறு பயிர்த்தொழில் மேற்கொண்டான் மற்றும் எவ்வாறு இடம் பெயர்ந்து வேட்டையாடும் தொழிலிருந்து போன்றவற்றில் எவ்வாறு ஈடுபட்டான் என்பதை விளக்குவது பொருளாதாரத் தொல்லியல். பொருளாதாரத் தொல்லியல் குறித்து ராபின் டேனியல், ஆண்ட்ரூ ஷெரட் (Andrea Sherrat) மற்றும் பலர் ஆய்ந்துள்ளனர். பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளால் தொல் பழங்காலத்தில் ஏற்பட்ட படிப்படியான வேளாண்மை வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி, தானிய சேமிப்பு முதலான செய்திகள் அறியப்படுகின்றன.

ஈ. சமயத் தொல்லியல்           
சமயத் தொல்லியலைச் சமயங்களின் அடிப்படையில் இந்து சமயத் தொல்லியல், புத்த சமயத் தொல்லியல், சமண சமயத் தொல்லியல், கோயில் தொல்லியல் என்றெல்லாம் பிரிக்கலாம். பண்டைய கால மக்களின் வழிபாட்டு முறைகள், சிலைகள், உருவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து விளக்குவது சமயத் தொல்லியல் ஆகும். இதன் மூலம் கடந்த கால மக்களின் கலை, கட்டிடக்கலை, சமய நம்பிக்கை போன்றவற்றை அறியலாம்.
 
உ. இனத் தொல்லியல்
       
         சமூக-மானிடவியல் (Social Anthropology) தொடர்பான செய்திகளையும் தொல்லியலார் சேகரித்து, ஆய்ந்து கணித்துள்ளார்கள். இதில் பண்டைய மக்களின் சமூகப் பண்பாட்டு நிலைகளை பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் தொல் பொருட்கள் மூலம் ஆய்வு செய்து அறிய முடிகிறது. எஸ்கிமோக்களைப் பற்றி லெவிஸ் பென்போர்ட் அவர்களது ஆய்வு இன மரபுத் தொல்லியல் ஆய்வுகளில் ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றது. H.D. சங்காலியா முதலான தொல்லியல் அறிஞர்கள் இந்தியத் தொல்பழங்கால மற்றும் வரலாற்றிற்கு முந்தய கால மக்களின் வாழ்விடங்கள் சிலவற்றை ஆய்வு செய்துள்ளனர். இத்தகைய இனத்தொல்லியல், பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை எவ்வகையில் அடையாளம் காண்பது என்பதையும் விளக்குகிறது. வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை ஆய்ந்து குறிப்பாகச் சுமேரியர்கள், ஆரியர்கள், திராவிடர்கள் போன்ற இனங்களின் தொன்மையை விளக்குவது இவ்வியல் ஆகும். எனவே மனித இனங்களைப் பற்றி ஆய்வதே இனத் தொல்லியல் ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. முனைவர் நா. மாரிசாமி

நூல் – தொல்லியல் (Archaeology)

வாங்க தேடலாம்|கவிதை| அர. செல்வமணி

வாங்க தேடலாம்கவிதை அர. செல்வமணி

📜 எங்கே எங்கே எங்கே காடுகள்


வாங்க தேடலாம் வந்து சேருங்க


காடுக ளில்லெ மரங்களு மில்லெ


வாடுது உலகம் வைரசு னாலே


மூச்சுக் காத்தும் மோச மானதே


பொசுக்குது நல்லா பூமியில் சூடே


கடலுல ஆறுல கழிவுக கூடி


வாட்டுது மக்கள நோவு களாலே


 

📜 வளங்களை யெல்லாம் எடுத்தது யாரு


வம்புல மக்கள விட்டது யாரு


பருவந் தவறுது பயிர்கள் போகுது


வறட்சியும் வெள்ளமும் வாட்டுது பாரு


ஏழைகள் மேலும் ஏழை களாக


எடுப்பதி லெல்லாம் கொழுப்பது யாரு


கொரோனா வந்து கொன்னது ஏழையெ


கோடி கோடியாக் குவிச்சது சிலரே


 

📜 சாதி மதத்துல மக்களத் தள்ளி


குடியில கூத்துல கொடுமய மறச்சி


பட்டினி போட்டுப் பலரையும் அழிச்சுப்


படிப்பைக் கெடுக்கப் பலதும் பண்ணி


இயற்கய அழிச்சி எல்லாஞ் சுரண்டி


எடுக்கற முதலால் எல்லாம் போகுதே


முதலே முதலே முதலே எங்கும்


மோதி அழித்து மூட்டுது போரே


 

📜 தேடுக தேடுக தேடுக படிப்பை


தெரியும் அதனால் தெளிவாய்ப் பலவும்


சூழலை மொழியை இனத்தை அழித்து


ஏழையை வாட்டுவ தெதுவெனத் தேடுக


ஒருசிலர் வாழ மிகப்பலர் வாடி


உருகிச் சாவது ஏனெனத் தேடுக


தேடுக தேடுக தேடுக வளம்பெறத்


தீர்வு கிடைக்கத் தேடுக நன்றே!


கவிதையின் ஆசிரியர்

அர. செல்வமணி,


அஞ்சற்பெட்டி எண்- 21,


பாசக்குட்டைப் புதூர்,


சத்தியமங்கலம்,


ஈரோடு மாவட்டம் – 638401.

 

பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்| மூ.செல்வம்

பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்
ரலாற்றுக்கு உட்படும் காலத்தின் ஆண்டுகளை விடப் பலமடங்கு அதிகமான ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் உள்ளன.  பொதுவாக பழங்கால மக்கள் சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்து ஆய்வுலகில் முன்வைக்கப்படுகின்றன.  ஆதிமனிதர்கள் தொடக்க காலத்தில் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களிடமிருந்தும், கொடுமையான காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இயற்கையான குகைகள், பாறையின் தாழ்வான இடங்கள் போன்றவற்றை தங்களின் வாழ்விடங்களாக தேர்வு செய்து வாழ்ந்துள்ளனர். 
               
தொல்மனிதர்கள் தங்களின் உணவுத் தேவைக்காக நடத்திய வேட்டையின் போது விலங்கினைக் கொன்ற தங்களின் வீரதீரச் செயல்களையும்,   எதிர் இனக்குழுவினருடன் நடத்திய சண்டைகளையும் நினைவு படுத்தும் விதமாக, தாங்கள் வாழ்ந்த வாழ்விடங்களில் ஓவியங்களாக வரைந்து ஆவணப்படுத்தினர்.  இத்தகைய ஓவியங்களே குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள் என அழைக்கப்படுகின்றன.
     
பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்          
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசத்தலம் சிறுமலை. இம்மலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைய பெற்றிருக்கிறது மூலிகைகள் நீண்டு உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளுடன் ரம்யமாக காட்சி தரும் சிறுமலை மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து விழுந்த சிறு துண்டு தான் என்று ராமாயண கதையோடு தொடர்பு உடையது.
               
சிறுமலையில் விளையும் வாழைப்பழங்கள் அதிக மருத்துவ குணம் கொண்டிருப்பதால் தென் தமிழகப் பகுதியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிறுமலையில் பழையூர் புதூர் அகஸ்தியர் புறம் பசிலிக்காடு தென்மலை உட்பட பத்திர்க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தென்மலை கன்றுக்குட்டி பாறை பகுதியில் மீன் முட்டிப்பாறை அருவி அருகில் உள்ள பொம்மை பாறை என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் பாறை ஒதுக்கில் பல காலகட்டங்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் வரைந்த ஓவியங்கள் பல தொகுதிகளாக காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்கள் குழுவாக சேர்ந்து குழு தலைவனின் கீழ் அமைப்பாக செயல்பட்ட காட்சிகள் வியக்கும் வண்ணம் பல இடங்களில் வரையப்பட்டுள்ளன.
   
பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள் 1            
முதலில் மிக பழங்காலத்ததாக கருதப்படும் கருஞ்சவப்பு வண்ணத்தில்ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் தொகுப்பாக இருப்பதால் சரியாக அடையாளம் காண முடியாதவாறு உள்ளது.இதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.அந்த வெள்ளை ஓவியங்களுக்கு மேல் மெல்லிய தூரிகையால் சிவப்பு நிறத்தில் வெளி கோடுகள் அலங்காரத்திற்காக போடப்பட்டுள்ளன.
               
மனித உருவங்கள் விலங்கின உருவங்கள் விலங்கின் மீது பயணம் செய்யும் மனிதர்கள் சண்டை காட்சிகள் வேட்டை காட்சிகள் சடங்கு நிகழ்வுகள் என பாறை ஓவியங்களின் அனைத்து கூறுகளையும் ஒருங்கி இங்கு காண முடிகிறது. மனிதர்களின் தலைக்கு மேல் தலைப்பாகை அணிந்திருப்பதை சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. விலங்குகளில் யானைகளின் உருவம் பெரிதாகவும் நேர்த்தியாகவும் வரையப்பட்டுள்ளன. கைகளை தூக்கியவாரும் கைகளில் ஆயுதம் ஏந்தியும் நிற்கும் மனிதர்கள் காட்டப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்கு இருபுறமும் இரு நாய்கள் நிற்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இது வேட்டைக்கு நாய்களை தயார்படுத்தும் காட்சியாக இருக்கலாம்.
               
கையில் ஆயுதம் ஒன்றை வைத்திருக்கும் மனித உருவத்திற்கு கீழ் கோழியும் அருகில் ஆடும் காட்டப்பட்டுள்ளன இவை பலி கொடுக்கும் சடங்கு நிகழ்வை குறிப்பதாகும். இருவர் சண்டையிட்டு அதில் ஒருவர் கீழே விழுந்து கிடக்கும் காட்சியும் அருகில் நால்வர் வேடிக்கை பார்ப்பது போன்று வரையப்பட்டிருக்கிறது. உடற் சேர்க்கை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.இப்பாறையில் உள்ள ஓவியங்கள் யாவும் இங்கு வாழ்ந்தவர்களின் செயல்பாடுகளையும் சடங்கு முறைகளையும் காட்டுவதாக உள்ளன. குதிரையின் மீது ஏறிச் செல்வது, கோழி, ஆடு போன்றவற்றை பலியிடுவது போன்ற காட்சிகள் தற்போதும் இப்பகுதியில் காண முடிகிறது.
               
அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பரவலாக கண்டுபிடிக்கப்படும் பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் சான்றுகளாக அமைகின்றன தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு சமூக வாழ்க்கை போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக ஓவியங்கள் உள்ளன. கால வெள்ளத்தில் இவைகள் சிதைந்து விடாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதுஅனைவரின் விருப்பமாக உள்ளது.
கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப்பள்ளி
கடமலைக்குண்டு, தேனி மாவட்டம்.

 

கண்ணீர்|கவிதை|திருமதி. பா. அக்தர்

கண்ணீர் - திருமதி. பா. அக்தர்
💎 நாம் பிறந்ததும்

நம் முதல் உணர்வு !

மழலைகள் பசிக்குப்

பேசும் மொழி !

 
💎 சிறுபிள்ளைகள்

சிறுவாடு கேட்க தேவை

விடலைகள் காதலைச் சொல்ல

துணைக்கு அழைப்பது!

 
💎 திருமணம் முடிந்ததும்

தாய்வீடு பிரியும் தருணம்

காதல் இல்லா கணவன்

கடுஞ்சொல் கேட்டதும்

கேட்காமலே வருவது !

 
💎 கடவுள் திருவடி சேரும்போது
 
மற்றவருக்கு மறக்காமல்

கொடுத்துச் செல்வது

ஆரம்பம் முதல் முடிவு வரை

முடிவிலா தொடர்கதை

கண்ணீர்! கண்ணீர்!

 
💎 தொடுவானம் தொடும் தூரம்

தொடுவானம் தொடும்

தூரம் வியப்பில்லை..

வானம் என்றுமே

பறவைக்கு இலக்கில்லை…

 
💎 வாழ்க்கையின் இலக்குகள்
 
யாருக்கும் சமமில்லை…

அவரவர் தேடல்களில்

அவரவர் வானங்கள்

 
💎 தூரங்கள் எதுவும் தொய்வில்லை

துன்பங்கள் எவருக்கும் நிலைப்பதில்லை

அச்சமின்றி அனுதினமும் ஆசைப் படு

அகிலமனைத்தும் உன் தொடுவானம்

தூரங்களைத் தொலைத்துவிட்டுத்

தொட்டு விடு வானத்தை…!

 

பனிவிழும் ரோஜா

💎 மங்கையர் கூந்தலில் மகுடமாய்.!

காளையர் வர்ணனையில் கவிதையாய்.!

மழலையின் பாத வர்ணமாய்!

காதலர்களின் சின்னமாய்!

கவிஞர்களின் எண்ணமாய்!

கடவுள் சிலையில் தெய்வீகமாய்!

கல்லறை தோட்டத்தில் கௌரவமாய்!

காண்போர் நெஞ்சில் குதூகலமாய்!

பூந்தோட்டத்தில் புது மலராய்!

புன்னகைப்பூக்கும்

இளவரசியே!  பனிவிழும் ரோஜாவே..!!

 
கவிதையின் ஆசிரியர்,

திருமதி. பா. அக்தர்

தமிழ் ஆர்வலர்,

இராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம்.

 

வருதுயர் மறந்தேன் நானே!|கவிதை|கவிஞர் அர. செல்வமணி

வருதுயர் மறந்தேன் நானே!-செல்வமணி
📜 வானுலவும் நிலவின் ஒளியில்
மனமகிழ்ந் தாடும் களியில்
கானுலவும் புள்ளின் இசையில்
கனிந்துளம் ஆழும் விசையில்
தேனுறையும் மலரின் விரிப்பே
சிந்திடும் அழகின் சிரிப்பே
வானுறையும் முகிலின் துளியே
வையமிதைக் காக்கும் அளியே


📜 தண்டமிழின் இனிமை தன்னில்
தணிந்திடும் வெம்மை என்னில்
ஒண்டமிழின் ஊற்றை மேவில்
உளமிக ஒன்றும் பாவில்
பண்டமிழின் பாக்கள் வெற்பே
பணைமிகக் கூட்டும் பொற்பே
வண்டமிழின் துணையால் தானே
வருதுயர் மறந்தேன் நானே!

அருஞ்சொற்பொருள்
அளி = அருள்

தண்டமிழ் = தண்மையான தமிழ்

ஒண்டமிழ் = ஒளிமிகு தமிழ்

மேவில் = விரும்பில்

பண்டமிழ் = பண்ணிசைத் தமிழ்

வெற்பே = மலையே

பணை = பெருமை

பொற்பே = அழகே

வண்டமிழ் = வளமிகு தமிழ்

கவிதையின் ஆசிரியர்
கவிஞர் அர. செல்வமணி,

அஞ்சற்பெட்டி எண்: 21,

பாசக்குட்டைப் புதூர்,

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் – 638401.

 

விடை வனைய வருவீரோ? |கவிதை|கவிஞர் ச.நவநீதனா

விடை வனைய வருவீரோ - கவிஞர் ச.நவநீதனா

📜 நின் தமிழ்ப் பற்றிற்குச்


சரணங்கள் ஈடாமோ?!

உண்ணும் உணவிலுமே,


உட்புகுங் காற்றிலுமே,


பருகும் நீரிலுமே,


உள்ளொளியாய்,


அழகுத் தெய்வமாமே!


 

📜 வெகுளிகள் அதிகந்தான்,


வெளிச்சமாகச் சிலவனவே!


முடிச்சிட்ட முண்டாசினுள்,


அதென்ன? – முத்தமிழ் !


 

📜 அரசிக்கு மட்டுமே,


வித்தாரமாய்ப் பெருங்கோட்டை!


ஆயிரந்தான் கற்றாலும்,


உம் செங்கவிகட்கு ஈடாமோ?


 

📜 ஏனிந்தப் பெருங்காதலோ?

இமைக்கின்ற விழிகளிலே,


பார்வையொன்று சுடராக,

வேள்வியே நடத்தும்


விதிகள்தாம் எதற்கு?


 

📜 எம் கேள்விகட்குப் பஞ்சமில்லை!


செஞ்சொற்களுக்குத்


தானிங்கு, பெரும்பஞ்சம்…


ஓரிரு சொற்கள்


கொடுக்கவுமே மனமில்லையோ?


செம்பொற்சுடரே!


 

 

📜 ஓடுங்குருதியிலே


ஒருத்தி மட்டும் ஒய்யாரமாய்


உறைந்து கிடப்பது,


என்னவித மாயங்களோ?


 

📜 உறைந்திருக்குந்தான்!


துளித் திமிரும் தான்!!!


அவள் வாழுஞ் சிறையுளே,


மிடுக்காய் ஒரு திமிர்!


இல்லையெனில்,

வனப்பிற்குத்தான் ஈடாமோ?


 

📜 கருவிற்குமோர்

பெரும்கவியே!

உயிரிருக்குந்தான்,

கருவாக ஒன்றும்,

அதனுயிராக அரசியுமாய்,

ஓர் கவிதான் இயம்பித்தாருமே!


வெகுளி தீர்த்து


வெளிச்சமாகிப் போகிறேன்…

செகத்தீரே!


 

📜 ஊன் வளர்க்க,


பசிக்குமாமே!


ஏனோ, இங்கே!!


உயிர் வளர்க்க,

பசித்ததாமே! இங்கே!!


உயிர் வளர்க்க, பசித்ததாமே!

பார்அதியின் மாயங்கள்தாம் பாரும்!


 

கவிஞர் ச.நவநீதனா


இளங்கலை இரண்டாம் ஆண்டு,


வணிகவியல் துறை 


கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

மாணவர்கள் மனதில் வளர்க்கலாம்|கவிதை| கவிஞர் ச.குமார்

மாணவர்கள் மனதில் வளர்க்கலாம்-கவிஞர் ச.குமார்

அப்துல்கலாம் வாழ்க்கை பாடத்தைப் படிக்கலாம்!

அறிவை மேம்படுத்தி புதியவை படைக்கலாம்!

ஏவுகணை நாயகன் பத்துக்கட்டளை ஏற்கலாம்!

அக்னிச்சிறகாய் உயர்ந்த எண்ணத்தில் பறக்கலாம்!



2020 போன்றே 2030யைச் சிறப்பிக்கலாம்!

மரம்தனை அனைவரும் நட்டு  வளர்க்கலாம்!

கற்றலை ஊக்கப்படுத்தி கற்பித்தலைச் சேர்க்கலாம்!

நோக்கம் நிறைவேற தொடர்ந்து  உழைக்கலாம்!




தடைகளைத் தகர்த்து வழிகளை உருவாக்கலாம்!

வேற்றுமை களைந்து ஒற்றுமையைப் புதுப்பிக்கலாம்!

சோதனை கடந்து சாதனை படைக்கலாம்!

நேர்மையை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகலாம்!



ஆசிரியப் பணியை அறமெனக் கடைப்பிடிக்கலாம்!

மானுடம் சிறக்க சிந்தனை நிலைக்கலாம்!

காலம் கலாம்தனை உன்னில் உருவாக் *கலாம்*!

கவிஞர் ச.குமார் 

தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர்

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »