👑 மாநகர் மண்டபத்தின்
மாமணி வடிவுடையாய்!
👑 மயிலினங்கள் இடையூடே,
ஆழித்தேர் ஒப்புடையாய்!
👑 வர்ணத்துப் புவியூடே,
வளை மெலிந்த சுடரழகே!
👑 வானத்துவெளி உறைந்த,
பூதத்து மிகையுணர்வே!!…
👑 நாட்டியத்துச் சபை நளிந்த,
இடையழகே! கேளாயோ?!!
👑 வேலுடையான் விரலமர்ந்த,
குளிர்நிலவே! இன்னுயிரே!
👑 கிளியினங்கள் கொஞ்சுகின்ற,
மீனவளின் கடைக்கண்ணாய்!
👑 சடையேற்ற அண்ணானின்,
உடலேற்ற வெளிர்நீறாய்!
👑 நாணத்து மாடத்திலே,
நகைப்போங்கும் பொன்முகிலே!!…
👑 கன்னத்தின் குழியழகு, அது
சீனத்து இலக்கணமோ?!
👑 பாசுரப் பெண்ணவளே,
அவள் சிரமாடும் முத்துடையாய்!
👑 மார்கழிக் குளிரிடையே,
மையலுற்ற இசையழகே!
👑 வெப்பத்தின் சீற்றத்தூடே,
மைவிழியே! வனப்புற்றாய்!!…
👑 மசையுற்றாள் கருவுடைய,
மாசற்ற ஒளியுடையாய்!
👑 அம்பலத்தில் ஆடிடுவான்,
மரகதமே! முகமணிந்தாய்!!…
👑 பெயரிலே பூட்டி வைத்தாய்!
அடீ! இரத்தினச் சுருக்கமடீ!!
👑 புவியுடையார் உரைக்கையிலே!
பூங்குயிலே!! மேனியுமே சிலிர்க்குதடீ!
👑 விண்ணுடையார் இசைக்கையிலே!
சிற்றிதழே! குருதியுமே உருகுதடீ!!
👑 விழியளித்த நீரினிதாம்!
தாயளித்த பிறப்பினிதாம்!
👑 நின்றன் பெயராலே, அ
வை அமிழ்தன்றோ?!
நனிச்சுவையன்றோ?!…
👑 அழிழ்துடையாய்!
நீ இரத்தினச் சுருக்கமன்றோ?!
என்றன் உயிருடையாய், கேளாயோ?!…
கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச
கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.