“ஐயா…!”
அந்தக் குரல் எங்கிருந்தோ கேட்டது. சதாசிவம் கண்களைத் திறந்தார்.
சுற்றிலும் ஒரு வித்தியாசமான அமைதி. பூமியில் அவர் பார்த்திராத ஓர் அழகிய உலகம். பசுமையான தோட்டங்கள். தெளிந்த நீரோடைகள். எங்கும் மலர்களின் மணம். மனதை வருடும் மெல்லிய காற்று.
“நான் எங்கே இருக்கிறேன்?” என்று சதாசிவம் சுற்றிப் பார்த்தார். அப்போது தொலைவில் ஒரு பழைய சைக்கிள் தெரிந்தது. அந்தச் சைக்கிளை மிதித்துக்கொண்டு ஒருவர் அவரை நோக்கி வந்தார். சதாசிவத்தின் கண்கள் விரிந்தன.
“ஐயா…!”
அவர் ஓடினார்.
சைக்கிளை நிறுத்திய அந்த மனிதர் புன்னகையுடன் நின்றார்.
ரத்தினசாமி ஆசிரியர்!
பல ஆண்டுகளாக புகைப்படத்தில் மட்டுமே பார்த்த முகம். ஆனால் இன்று— அவருக்கு முன்னால் உயிரோடு நின்றுகொண்டிருந்தார். சதாசிவம் ஆசிரியரின் காலில் விழுந்தார்.
“ஐயா… என்னை விட்டுவிட்டு இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தீர்கள்?”
ஆசிரியர் அவரை ஆரத்தழுவிக்கொண்டார்.
“நான் எங்கே போவேன் சதாசிவம்? நீ என்னை நினைத்த ஒவ்வொரு நாளும் நான் உன்னோடுதான் இருந்தேன்.” சதாசிவத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஐயா… நான் உங்களை தினமும் நினைத்தேன். எங்கள் வீட்டுப் பூஜையறையில் உங்கள் புகைப்படத்தை வைத்திருந்தேன். கடவுளுக்கு மலர் வைக்கும் முன் உங்கள் புகைப்படத்திற்கும் மலர் வைத்தேன்.”
ஆசிரியர் சிரித்தார்.
“அது எனக்குத் தெரியும்.”
சதாசிவம் ஆச்சரியப்பட்டார்.
“உங்களுக்குத் தெரியுமா?”
“மாணவனின் நன்றியுணர்வை ஆசிரியர் எப்படி மறந்துவிட முடியும்?”
சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர்.
பின்னர் ஆசிரியர் சொன்னார்:
“சதாசிவம்… கலியபெருமாள் இங்கே தான் இருக்கிறான்?”
“ஆம் ஐயா.”
“அவன் எப்போதும் உன்னைப் போலவே என்னைப் பற்றிப் பேசுவானே!”
“ஐயா… நாங்கள் இருவரும் உங்களைப் பற்றிப் பேசாத நாளே இல்லை.”
ஆசிரியர் மெதுவாகச் சிரித்தார்.
“ நீங்கள் இருவரும் எனக்கு மிகவும் பிடித்த மாணவர்கள்.”
சதாசிவத்தின் மனதில் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின.
அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு… அப்போது சதாசிவம் ஒரு சாதாரண இளைஞன். கையில் படிப்பு இருந்தது. ஆனால் வேலை இல்லை.வாழ்க்கை எப்படிப் போகும் என்ற கவலை. அப்போது ரத்தினசாமி ஆசிரியர் அவரிடம் கூறியிருந்தார்:
“சதாசிவம், கவலைப்படாதே. உனக்கு நான் ஒரு வழி பார்த்துத் தருகிறேன்.”
அந்த வார்த்தை மட்டும் போதுமானதாக இருந்தது. மறுநாள் அதிகாலையில் ஆசிரியர் தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டார். சதாசிவத்திற்காக வேலை தேடி ஊர் ஊராகச் சென்றார். ஒரு அலுவலகம். இன்னொரு அலுவலகம். மீண்டும் மற்றொரு அலுவலகம். வெயில். மண் பாதை. நீண்ட பயணம். எதுவும் அவரைத் தடுக்கவில்லை. இறுதியில் சதாசிவத்திற்கு ஓர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை கிடைத்தது.
“ஐயா… உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?”
என்று சதாசிவம் கேட்டபோது ஆசிரியர் சொன்னார்..
“நீ முன்னேறி, இன்னொரு மாணவனுக்கு உதவி செய். அதுவே எனக்குச் செய்யும் கைம்மாறு.”
அந்த வார்த்தை சதாசிவத்தின் வாழ்க்கை முழுவதும் அவருக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அலுவலக உதவியாளராகத் தொடங்கிய அவர், உழைத்து உழைத்து உயர்ந்தார். ஒருநாள் அவர் அலுவலக ஆய்வாளராக உயர்ந்தார். அந்த நாளில் சதாசிவம் முதலில் நினைத்த்து— ரத்தினசாமி ஆசிரியரைத்தான்.
“ஐயா…”
சதாசிவத்தின் குரல் மீண்டும் கேட்டது.
“என்ன?”
“நீங்கள் அன்று சைக்கிளில் எனக்காக அலைந்ததை நான் ஒருபோதும் மறக்கவில்லை.”
ஆசிரியர் சிரித்தார்.
“அதற்காகத்தான் நான் ஆசிரியராக இருந்தேன்.”
“ஐயா ஆசிரியர் என்றால் பாடம் சொல்லித் தருபவர் என்று நான் நினைத்ததில்லை ஐயா.”
“பின்னே?”
“வாழ்க்கையைத் தூக்கி நிறுத்துபவர்.”
ஆசிரியரின் கண்களில் கண்ணீர்.
“அப்படிச் சொல்வதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது.”
சதாசிவம் திடீரெனத் தன் மார்பைத் தொட்டுக்கொண்டார்.
“ஐயா…”
“என்ன சதாசிவம்?”
“நான் இறந்த நாள்… ஆசிரியர் தினம்.”
ஆசிரியர் அமைதியாக அவரைப் பார்த்தார்.
“எனக்குத் தெரியும்.”
“அந்த நாளில் உங்கள் புகைப்படத்திற்கு மலர் வைத்துவிட்டு நான் கண்களை மூடினேன்.”
ஆசிரியர் மெதுவாகச் சொன்னார்:
“அதனால்தான் உன்னை இங்கே வரவேற்க நான் காத்திருந்தேன்.”
சதாசிவம் அழுதார்.
“ஐயா… இனிமேல் நான் உங்களோடு இருக்கலாமா?”
ஆசிரியர் அவரது தோளில் கை வைத்தார்.
“நீ பூமியில் இருந்தபோதும் என்னோடுதான் இருந்தாய். இப்போதும் என்னோடுதான் இருக்கிறாய்.”
அந்த நேரத்தில் தொலைவில் இன்னொரு குரல் கேட்டது.
“ஐயா!”
சதாசிவம் திரும்பிப் பார்த்தார்.
கலியபெருமாள்!
அவர் ஓடி வந்து இருவரையும் அணைத்துக்கொண்டார். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியரும், அவருடைய இரு மாணவர்களும் மீண்டும் ஒன்றாக நின்றனர். ரத்தினசாமி ஆசிரியர் தன் பழைய சைக்கிளைப் பார்த்தார்.
“சதாசிவம், கலியபெருமாள்… இந்தச் சைக்கிளைத் தெரிகிறதா?”
இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்:
“எப்படி மறப்போம் ஐயா?”
ஆசிரியர் சிரித்தார்.
“இந்தச் சைக்கிளில்தான் உங்களுடைய வாழ்க்கையைத் தேடி நான் அலைந்தேன்.”
கலியமூர்த்தி ஆசிரியரின் கையைப் பற்றிக்கொண்டார்.
“ஐயா, நீங்கள் எங்களுக்கு வேலை தேடித் தந்தீர்கள்.”
சதாசிவம் தொடர்ந்தார்:
“வாழ்க்கைத் தேடித் தந்தீர்கள்.”
ஆசிரியர் மெதுவாகச் சொன்னார்:
“நான் உங்களுக்கு வழியைக் காட்டினேன். நீங்கள் அந்த வழியில் நீங்கள் நடந்தீர்கள். அதுதான் என் வெற்றி.”
அந்த சொர்க்கத்தின் அமைதியில் மூவரும் நடக்கத் தொடங்கினர். முன்னால் ரத்தினசாமி ஆசிரியர். அவருக்குப் பின்னால் சதாசிவமும் கலியபெருமாள். பூமியில் மாணவர்களாக நடந்தவர்கள்… இப்போது சொர்க்கத்தில் மீண்டும் மாணவர்களாகவே நடந்து கொண்டிருந்தனர். அன்று ஆசிரியர் தினம். பூமியில் சதாசிவம் இல்லாமல் போயிருந்தார். ஆனால்—
அடுத்த ஆசிரியர் தினத்தில்… சதாசிவத்தின் வீட்டுப் பூஜையறையில் மீண்டும் இரண்டு விளக்குகள் எரிந்தன. ரத்தினசாமி ஆசிரியரின் புகைப்படத்திற்கு முன் ஒன்று. அவருடைய அன்பு மாணவன் சதாசிவத்தின் புகைப்படத்திற்கு முன் ஒன்று. ஒரு நல்ல ஆசிரியர் மறைவதில்லை.
சிறுகதையின் ஆசிரியர்
முதுமுனைவர் ப. இராதா
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை – 600044.




