💧மழையாக!
நிலத்தில் விழுந்து,
பல காடு மேடுகளைக் கடந்து,
பள்ளங்களைக் கடந்து
வேகமாக உருண்டோடும்
என்னில் – பல அழுக்குகளையும்
சேர்த்துக் கொண்டே செல்கிறேன்..!
💧நான் போகும் வழியோ,
என்னை முள்ளாகத்
தாக்கி கிழிக்கிறது!
அனைத்தையும்
பொறுத்துக் கொண்டு
ஓடிக்கொண்டே இருக்கிறேன்..!
💧நான் போய்
சேருமிடமோ சமுத்திரம்
பல காடு மேடுகளைக்
கடந்து வந்த எனக்கு
சமுத்திரத்தின்
ஆழத்தைக் கண்டு பயம்..!
💧ஏனென்றால்
நான் கொண்டு வந்த
அழுக்குகளை விட
சமுத்திரத்தின் ஆழத்தில்
எண்ணிலடங்கா
அழுக்குகள் உள்ளதைக் கண்டு,
மழையாக
இந்த பூமிக்கு வந்தபோது
என் சுவையோ வேறு!
💧ஆனால்
தற்போது நான்
சேர்ந்த இடமோ
என்னையும்
அதன் சுவைக்கு ஏற்றவாறு
மாற்றிவிட்டது.
💧இப்படி
மேடு பள்ளங்களையும்
ஏற்ற இறக்கங்களையும்
பல குப்பைகளையும்
என்னோடு
பயணித்துக் கொண்டு
அடித்து வந்த என்னையும்,
சமுத்திரம்
அதன் சுவைக்கு ஏற்றவாறு
மாற்றிவிட்டது..!
💧இவ்வுலகத்தில்
பயணிக்கும்
மக்கள் அனைவரும்
வெவ்வேறு குணங்களோடு
வருகிறார்கள்..!
💧 இறுதியாக
அவர்கள் தேர்ந்தெடுக்கும்
தொழிலோ!
கல்வியோ!
இப்படி ஏதோ,
ஒரு துறையில்
பயணிக்கும் போது
தன் நிலையில் இருந்து மாறி
அவர்களுக்கு
ஏற்றார் போல் மாறி விடுகின்றனர்,
என்பதை விட மாற்றி விடுகிறார்கள்
என்பது நிதர்சனமான உண்மை
இப்படிக்கு மழை..!
கவிதையின் ஆசிரியர்
சி. தெய்வானை சிவகுமார்,
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பர்கூர்,
கிருஷ்ணகிரி.