அந்தச் சிவப்பு பழம் |சிறுகதை|முனைவர் ந.அரவிந்த்குமார்

சிறுகதை-அந்தச் சிவப்பு பழம் - முனைவர் ந.அரவிந்த்குமார்
         அன்று விடுமுறை என்றதனால் குமரனையும் தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் மீனாட்சி. குமரா இங்கேயே உட்காரு எதையும் தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டு தன் பணியைத் தொடங்கினாள். அப்போதுதான் அந்தக் காட்சி குமரன் கண்ணில்பட்டது. போதும் போதும் என்கிற பிள்ளைக்குப் பழங்களை அள்ளி ஊட்டிக் கொண்டிருந்தாள் பார்வதி. அதைக் கண்ணுற்றுப் பார்த்த குமரனுக்குத் தானும் பழங்களை உண்ண வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மாலையில் வீடு திரும்பியதும் அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினான். மீனாட்சியும் சரி இரு என்று வீட்டிலிருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தாள். அது குமரனின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இது இல்லம்மா! இன்னைக்கு முதலாளி அம்மா பையன் ராஜு சாப்பிட்டுட்டு இருந்த அந்தச் சிவப்பு கலர் பழம் வேண்டும்  என்று கேட்டான். அதுக்கெல்லாம் நூறுரூபா ஆகும் நம்மால வாங்க முடியாது என்ற மீனாட்சி சம்பளம் வந்தா வாங்கித்தரேன் என்று நகர்ந்தாள். ஆம், ஏழைகளின் வாழ்வில் பல ஆசைகள் நாட்களைக் கடத்திப்போட்டு மறக்கடிக்கப்பட்டவை தான். ஆனாலும் பாழாய்ப்போன ஆசை யாரைவிட்டது.
        குமரன் எப்படியும் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டுமென நினைத்து தான் சேர்த்து வைத்திருந்த சில்லரைக் காசை உண்டியலை உடைத்து எடுத்துக்கொண்டு, பள்ளி முடிந்து வரும் போது நேரே பழக்கடைக்குள் நுழைந்தான். ஏயேய்.. நில்லு எங்கப் போற என்று வாயிலிலேயே தடுத்தது அந்தக் கருத்தவுருவம். பழம் வாங்கப் போறேன் அண்ணா. பழம் வாங்கப்போற ஆளப்பாரு. சரி எவ்வளவு காசு வச்சிருக்க. முகத்தில் ஒரு வெளிச்சம் பத்து ரூவா இருக்கு அண்ணே. களிர் சிரிப்புடன் அந்த உருவம் சொன்னது போடா போய் ஸ்கூல் முன்னாடி ஒரு பாட்டி இருக்குல்ல அதுகிட்ட போய் மிட்டாய் வாங்கிச் சாப்டு ஓடு. இங்கெல்லாம் வரக்கூடாது. பெருசா பத்து ரூவா வச்சிருக்கானாம். வந்திட்டான். இல்ல அண்ணே அந்தச் சிவப்பு நிறப்பழம் எனக்கு வேணும். சரிடா! அது நூறு ரூவா. அம்மா சொன்ன பதிலே இங்கயும் கிடைத்தது. உன்கிட்ட நூறு ரூவா இருக்கா சொல்லு என்ற அந்த உருவத்திடம் இல்ல அண்ணே என்ற பதிலுடன் புறப்பட்டான் குமரன். ஆனாலும்  மனதினுள் தீர்மானம் வலுத்தது. நாள்தோறும் தனக்கு கிடைக்கும் காசைச் சேர்க்கத் தொடங்கிய அந்தப் பிஞ்சு மூன்று மாதத்திற்குப் பிறகு தன் எண்ணம் நாளையீடேறும் என இரவெல்லாம் மனக்கோட்டைக் கட்டியது.
       மறுநாள் காலை பள்ளிக்குக் குறித்த நேரத்திற்கு முன்னமே குமரன் கிளம்பினான். கால்கள் விரைந்தன, இதயம் வேகமுடன் துடித்தது, முகம் மலர்ச்சியில் மிளிர்ந்தன, தனக்குள் தோன்றிய சொல்லொணாக் கர்வத்துடன் பழக்கடைக்குச் சென்றான். பழக்கடை வாயிலில் அதே கருத்தவுருவம். மறுபடியும் எங்க இந்தப்பக்கம் என்ற கேள்விக்குப் பெருமிதம் பொங்க குமரன் சொன்னான். அந்தச் சிவப்பு பழம் வாங்க வந்தேன். மீண்டும் அந்த உருவம் சிரித்துக் கொண்டே சொன்னது அது சீசன் பழம் தம்பி. ஒன்றும் புரியாதவனாய் அப்படினா என்ன? என்ற குமரனிடம் குறிப்பிட்ட சில மாசத்துல தா அந்தப் பழம் கிடைக்கும். இப்போ எல்லாம் அது கிடைக்காது. இனி அடுத்த வருஷம் தா அந்தப் பழம் வரும் எனும் போதே குமரனின் மனக்கோட்டை மண்கோட்டையானது. ஆனாலும் உறுதியுண்டு. அடுத்த வருஷம் இந்த நூறு ரூவாயை வச்சு அந்தப் பழத்தை நிச்சயம் வாங்குவேன் எனச் சொல்லிப் புறப்பட்ட குமரன் பள்ளியை அடைந்ததும் வாயிற்கடை பாட்டியிடம், ரெண்டு ரூவாயிக்கு நெல்லிக்கா குடு என வாங்கிக் கொண்டு நடந்தான்.

ஆக்கம்,

முனைவர் ந.அரவிந்த்குமார்

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
அரசூர், கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here