Uzhaiyar kutrum Unarchi Velipadukalum|Sathish S

உழையர் கூற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளும்
Abstract
          Tamil literary tradition has a long historical background spanning over twenty centuries. In this tradition, the majority of literature is internal, which expresses the feelings of the human heart such as love, separation, expectation, morality, and family relationships with artistic flair. Internal literature not only talks about the love of the hero and heroine, but also talks about social problems, family events, and changes in mood through internal and external means. The statement is considered a very important element in the internal literary tradition. Tholkappiyar and Narkavirasa Nambi have formulated a clear grammatical tradition regarding who is speaking? On whose behalf are they speaking? In what emotional stage are they speaking? Among the statements, this article presents the Uzhaiyar statement as a unique research site. This study focuses on the Uzhaiyar statements in the Akananuru two songs of the Sangam female poet Okkur Masathiyar, and examines the emotion sexually symbolic messages, psychological moods, and internal and external structures revealed through them.


“உழையர் கூற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளும்
”

முன்னுரை
      தமிழ் இலக்கிய மரபு இருபது நூற்றாண்டுகளைக் கடந்த நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும். இம்மரபில் அக இலக்கியம் பெரும்பான்மை இலக்கியமாக இருந்து, மனித உள்ளத்தின் உணர்வுகளான காதல், பிரிவு, எதிர்பார்ப்பு, ஒழுக்கம், குடும்ப உறவுகள் ஆகியவற்றை கலை நயத்துடன் வெளிப்படுத்துகிறது. தலைவன், தலைவியின் காதலை மட்டுமன்றி, உள்ளுறை மற்றும் இறைச்சி வழியாக சமூகச் சிக்கல்கள், குடும்ப நிகழ்வுகள், மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் பேசுகிறது. அக இலக்கிய மரபில் கூற்று மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யார் பேசுகிறார்கள்? யார் சார்பாக பேசுகிறார்கள்? எந்த உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள்? என்பதைக் குறித்தத் தெளிவான இலக்கண மரபைத் தொல்காப்பியரும், நாற்கவிராச நம்பியும் வகுத்துள்ளனர். கூற்றுகளில் உழையர் கூற்று என்பது தனித்த ஆய்வுத் தளமாக இக்கட்டுரை முன்வைக்கிறது.  இந்த ஆய்வு, சங்க பெண்பால் புலவரான ஒக்கூர் மாசாத்தியாரின் அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெறும் 2 உழையர் கூற்றுப் பாடல்களை மையமாகக் கொண்டு, அவற்றின் வழி வெளிப்படும் உணர்ச்சிகள் மற்றும் பாலியல் குறியீட்டுச் செய்திகள், உளவியல் மனநிலைகள் மற்றும் உள்ளுறை, இறைச்சி அமைப்புகளை ஆராய்கிறது.

ஒக்கூர் மாசாத்தியார்
       இயற்பெயர் சாத்தியார். பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூருக்கு அருகிலுள்ள ஒக்கூரில் பிறந்தவர். மறவர் குடியைச் சேர்ந்த பெண்பாற் புலவராவார். இவரது பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றில் இரண்டும் (324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275), புறநானூற்றில் ஒன்றும் (279) இடம்பெற்றுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களை பாடி இருந்தாலும், அவற்றின் வழி ஆழமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

உழையர் – பொருளும் இலக்கிய இடமும்
         ‘உழையர்’ என்ற சொல் உடன் இருப்பவர், அருகில் இருப்பவர் என்ற பொருளைக் குறிக்கிறது. அக இலக்கிய மரபில் இந்த இடத்தைப் பெரும்பாலும் தோழி வகிக்கிறாள். எனவே, உழையர் கூற்று என்பது தோழிக்கு அடுத்த நிலையில் உள்ள பணிப்பெண் என இலக்கிய மரபில் திண்மமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உழையர், தலைவியின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், சமூக ஒழுக்கத்திற்கும் தனிப்பட்ட ஆசைக்கும் இடையிலான பாலமாகவும் செயல்படுகிறார்.

விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! (அகம். பா.324)
      வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. அழகிய ஆபரணங்கள் அணிந்த, மென்மையான தோள்களையுடைய, இனிய மொழி பேசும் தலைவி. அவள் தளிர்போன்ற இளம் கிளியை அன்புடன் எடுத்துத் தாயைப் போல பேணுகிறாள். மழைபெய்து செழித்த பசுமையான பயிர்கள் நிறைந்த நிலத்தில், பறை போன்ற வட்டமான சுனைகளில் நீர்த்துளிகள் விழ, மொட்டுகள் குதித்து மலரும். மலர்களின் மணம் காற்றில் பரவி, வண்டுகள் தேனுண்டு மயங்கிச் சுழலும் இவ்வாறு வளம் செழிக்கும் நாடு தலைவனுடையது.  குளிர்ந்த நிலத்தின் ஓரமாகச் செதுக்கப்பட்ட பாதையில், நீரின் வேகத்தைப் போல விரைந்து செல்லும் பாம்பைப் போன்ற வேகத்துடன், நெடிய பெருமை உடைய தலைவனின் தேரு முல்லை மாலை நேரத்தில் ஊருக்குள் புகுகிறது.

இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் …..
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. (அகம். பா.384)
      வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. அமைதியாக இருந்த வேந்தன் போரைத் தொடங்கி முடித்துக்கொண்டான். காதல் வேட்கையோடு நான் தேரில் ஏறினேன். இதுதான் எனக்குத் தெரியும். வழியில் நிகழ்ந்தது எதுவும் எனக்குத் தெரியாது. என் இல்லத்துக்கு வந்துவிட்டேன். இங்கே முயல் குட்டிகள் விளையாடுகின்றன. ஊரின் முல்லை நில வயலில் வரகு விளைந்திருக்கிறது. என் மனைவி இருக்கும் வீட்டின் முன் நிறுத்தி “இறங்கு” என்கிறாய். வியக்கிறேன். காற்றையே குதிரையாக்கித் தேரில் பூட்டித் தேரை ஓட்டிவந்தாயா? உருவம் இல்லாத உன் மனத்தையே குதிரைகப் பூட்டித் தேரை ஓட்டி வந்தாயா? வலவ! (தேரோட்டியே) நீதான் சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் தேரோட்டியின் மார்பைத் தழுவிக்கொண்டான். தலைவிக்கு இனி விருந்துதான் எனும் கருத்து தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்துகிறது.

உழையரின் உணர்ச்சி குறியீடுகள்
     உழையர் என்பவர் தலைவியுடன் எப்போதும் உடனிருந்து அவர்களின் மனநிலையை அறிந்திருப்பவர். தலைவன் பிரிந்தபோது தலைவியின் புலம்பல், வருத்தம், காதல், ஏக்கம் ஆகியவற்றைக் கேட்டு ஆறுதல் கூறுபவர். தலைவி, தலைவனிடம் நேரடியாகச் சொல்ல முடியாத உணர்வுகளை உழையர் மறைமுகமாக எடுத்துரைப்பார். தலைவன், தலைவி இருவருக்கும் இடையிலான உணர்ச்சித் தொடர்பை பாதுகாப்பவர். இவர் தலைவன் தலைவியின் கற்பு வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறார். அக இலக்கியங்களில் பெண்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்கிறது தொல்காப்பியம். இதனை,

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை” (தொல்காப்பியம் – பொருள் – களவியல் 116)
     எனும் நூற்பாவின் மூலம் உணர்வுப்பூர்வமான ஆசைகளை நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ சொல்லப்படாது. உவமை, உருவகம், இயற்கைச் சின்னங்கள், உடல் மாற்றங்கள் போன்ற குறியீடுகள் மூலம் வெளிப்படுத்தலாம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், அகத்திணையில் ஒருவரின் பெயர் நேரடியாக இடம் பெறுவதில்லை என்பதனை,
“மக்கள் நுதலிய அகனைந்திணையும்,
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்” (தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா 57)
     
        எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல் மெலிவு, நிறமாற்றம் (பசலை), கண்ணீர், தூக்கமின்மை, அலங்காரம் கைவிடுதல் போன்றவை உடல்சேர்க்கை மீதான ஆவலின் குறியீடுகளாகத் தலைவியினிடத்தில் அமைகிறது என்பதனை மெய்பாட்டியலில்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப”. (தொல்காப்பியம் மெய்பாட்டியல் நூற்பா.3)         
         எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், மழை, மலர் மலர்தல், தேனீ – மலர் தொடர்பு, காற்றின் தீவிரம், இரவின் நீளம் போன்றவை இணைவு, கரைபுரிதல், உடன்படுதல் போன்ற உணர்வுகளைத் தலைவன் தலைவி பிரிந்துள்ள கார்கால நிலை சுட்டுகிறது. “இரவு நீள்கிறது” என்பது தலைவி தனிமையில் உள்ளாள். தலைவியின் தோழியர் இரவு முழுவதும் உடன் இருந்தலும் தனிமையினை உணர்கிறாள். அவ்வாறு உணரும் போது தலைவிக்கு மனதில் நிறைய சிந்தனைகள் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றி பயம் தோன்ற தொடங்குகிறது. ஏனெனில், தலைவனின் வருகை பற்றிய கவலை மற்றும் இருவரும் களவு காலத்தில் இருந்த காதல் நினைவுகளை அசைப்போடுகிறாள். “பனிமூட்டம் சூழ்கிறது” என்பது தலைவியின் மனநிலை தெளிவில்லமால் இருப்பதை உணர்த்துகிறது. மேலும், மனதில் தெளிவு இல்லாமல் குழப்பம், மனஅழுத்தம் அல்லது சிந்தனை மந்தம் ஏற்படும் நிலையைக் குறிப்பதாக உள்ளது.  தலைவி அரிவைப் பருவத்தவள், திருமணத்திற்கு ஏற்ற வயதை உடையவள். களவு வாழ்வை மேற்கொண்டுள்ளாள். இவளது தோள்கள் முங்கில் போல் உள்ளன. அவ்வாறான தலைவி பூக்களின் வாசம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவள். இவை தலைவியின் கூடல் உணர்வினை வெளிப்படுத்தும் செயலாக விளங்குகிறது. நறுமணப் பொருட்கள் நேரடி உடலுறவுக்கு உதவும் உணர்வுகளைத் தூண்டுவதோடு, ஒட்டுமொத்த உடலியல் ஆரோக்கியத்தையும், பாலியல் செயல்பாட்டையும் மேம்படுத்தும் என்பது பழங்காலம் தொட்டு கூறும் வழக்கு உள்ளது.  
         
        மொட்டு சற்று விரிந்த நிலையிலும், மலர் முழுமையான வளர்ச்சியினையும் கொண்டது. இதனை புலவர் தலைவிக்கு உவமையாக கூறுகிறார். தலைவி தலைவனைக்காணத வரை மொட்டாகவும், தலைவனை காணும்போது மலராகவும் மாறுகின்றாள். அதனால் தலைவன் தேரில் தனது ஊருக்குள் வரவேண்டும் என்று தலைவி விரும்புகின்றாள். தலைவன் தன் “இல்லம் புகுதல்” புகுதல் வேண்டும் என்று விரும்புகின்றாள். “இல்லம் புகுதல்” என்பது ஒருவரின் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய விரும்பும் மனநிலை அல்லது திருமணம் வாழ்வை மேம்படுத்தி குடும்பத்தை அமைத்துக்கொள்ளும் உளவியல் மனோபாவம் என்பதாகும். இதற்குப் பின்புலமாகச் சில முக்கிய உளவியல் காரணிகள் உள்ளன. பாதுகாப்பு தேவை என்பது இங்கு வாழும் அனைத்து மனிதர்களும் எண்ணக்கூடியது. அவ்வகையில் தனிமையை விடவும் நிலைத்த, நிலையான பாதுகாப்பான வாழ்வினை நாடும் மனநிலைக்குத் தலைவி உட்பட்டுள்ளாள். அதோடு இன்றி அன்பும் பாசமும் ஒருவரிடம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதும் அன்பைப் பகிர்ந்து பெற வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பமும் தலைவியின் உணர்வு நிலையில் மட்டும் இன்றி உழையரின் உணர்வாகவும் விளங்குகிறது. எனவே, தலைவிக்குப் பாலியல் இன்பத்தைப் பூர்த்தி செய்ய வல்லவன் தலைவன். அவன் பாலியல் ரீதியாக மட்டுமின்றி தலைவிக்குப் பாதுகாப்பினை நல்குபவனகாவும் தலைவன் இருப்பான் என்று தலைவியின் மன எண்ணத்தை இலைமறைக்காய் போல் உழையர் தலைவின் பாலியல் உணர்ச்சியையும் கூறுகின்றார்.  
சமூக அங்கீகாரம் மற்றும் குடும்பம் அளிக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பொறுப்பு உணர்வுகள் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குவதை இங்கு அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டும் என்பதனை மன முதிர்ச்சி கொடுக்கிறது. இதனை எரிக்சன் (Erikson) கூறும் உளவியல் மன வளர்ச்சி Intimacy vs Isolation நிலையுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. நெருக்கமான உறவுகளை உருவாக்கும் ஆவலில் தலைவி மேற்கண்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றாள். கபிலரின் குறுந்தொகை 18-ஆம் பாடல் உரைப்பதுப்போல,

“சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!” (குறுந்தொகை 18)
          ஒருவேளை தலைவன் தலைவியின் உணர்வுகளை ஏற்காது காலம் தாழ்துதல் என்ற செயலினை செய்தல் தலைவி தனிமை உணர்வின் மிதான வெறுப்பில் பசலைப்படர்ந்து மரணம் நெருங்கும் என்றுரைக்கிறார். பாம்பு நீரில் நிந்துவதுபோல், தலைவன் தன்னுடன் கலவியில் ஈடுபட விருப்பும் மனநிலையில் தலைவி உள்ளாள் என்பதை உணர்த்துகிறது. இந்த உவமை, தலைவனின் விருப்பம் இயல்பாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருப்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. மேலும், தலைவியின் இந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில், குளிர்ச்சியும் செழிப்பும் நிறைந்த தனது இளமை அழகையும், உணர்வுகளைத் தூண்டும் செழுமையான தேக அழகையும் தலைவி தானே எடுத்துரைக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறாள். இது தலைவியின் உளவியல் மாற்றத்தையும், கலவியின்மீது அவள் மனம் முழுமையாகச் சாய்ந்த நிலையையும் காட்டுகிறது. பறை போன்ற வட்டவடிவச் சுனையும் அதிலிருந்து வடியும் நீரும், தலைவி, தலைவன்மீது கொண்ட அளவுகடந்த காதலைச் சுட்டிக்காட்டுகின்றது. தலைவியினுடைய காதல் பொங்கி வழியும் சுனை நீரைப் போல் வெளிப்படுகிறது. ஆனால் தலைவனோ, வறண்ட காலத்தில் தாகம் மிகுந்த ஒருவருக்கு கிடைக்கும் சிறிய துளி நீர் தாகத்தைத் தீர்க்க முடியாதது போல, தனது ஆசையை அடக்கிக் கொண்டவனாக விளங்குகிறான். இவ்வாறு தலைவி – தலைவன் காதல் நிலைகளின் வேறுபாட்டை உழையர் தம் கூற்றின் மூலம் முன்னிலைப் படுத்துகிறார் என்பதை அறியமுடிகிறது.
கம்பராமாயணத்தில் ராமன் வில்லை எடுக்கும்போது, வில் முறிந்த சத்தம் மட்டுமே அனைவரின் காதில் விழுகிறது. ஆனால் வில்லை உயர்த்திய காட்சி யாருக்கும் தெரியவில்லை என சீதை கூறுகிறாள். இதுபோலவே, இங்குத் தலைவனுக்குத் தேரில் ஏறியது மற்றும் ‘இறங்கு’ என்ற சொல் மட்டும் நினைவில் உள்ளது. இடைப்பட்ட உணர்ச்சிப் பயணம் மறைந்துவிடுகிறது. வெளிப்படையான நிகழ்வு மட்டும் சமூக நினைவில் நிலைத்து, உள் உணர்வுகள் மறைவதைக் உழையர் கூற்று சுட்டிக்காட்டுகிறது.

முடிவுரை
      ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இடம்பெறும் உழையர் கூற்று, அக இலக்கிய மரபின் உள்ளுறை, இறைச்சி அமைப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றுகளாக விளங்குகின்றது. உழையர் கூற்று தலைவி, தலைவன் உணர்வுகளின் வேறுபாடு, பாலியல் குறியீட்டு வெளிப்பாடு, உளவியல் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. எனவே, அக இலக்கியத்தில் கூற்று என்பது வெறும் உரையாடல் அல்ல. அது சமூக உளவியல், இலக்கியக் கட்டமைப்புகளை இணைக்கும் முக்கியமான தளமாகும்.

துணைநின்றவை
1.இளம்பூரணர் – தொல்காப்பியம் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1985.

2. நாற்கவிராச நம்பி – அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், 2017

3.சாமிநாத ஐயர், உ.வே. (பதிப்பு). அகநானூறு, 1920

4.வையாபுரிப்பிள்ளை எஸ். கம்பராமாயணம் மூலமும் உரையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு 1957.

5.முருகேச‌பாண்டிய‌ன் ந. ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் பாலிய‌ல்: ஆண் – பெண் உற‌வு நிலை, சன் லாக்ஸ் இதழ், தொகுதி 8 – 2024.

6.Erikson, E. H. (1968). Identity: Youth and Crisis. New York: Norton. Intimacy vs Isolation.

7.Sigmund Freud, The Interpretation of Dreams (1900)
8.Sigmund Freud, Three Essays on the Theory of Sexuality (1905)

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சதிஷ் சி,
உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம். ஜி. ஆர். கல்லூரி,
ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here