V. O. Chidambaranar’s Commentary on the Tirukkural: A Textual Perspective|Dr. E. Kothandaraman

Abstract

          V. O. Chidambaram Pillai (V.O.C.) was a distinguished scholar who possessed proficiency in both Tamil and English. He was a multifaceted personality, serving as a lawyer, writer, orator, trade union leader, and freedom fighter. His political career was marked by integrity, discipline, and determination. Deeply interested in Tamil literature, he studied classical works and contributed significantly through his essays and poems. He also translated several English works into Tamil, thereby enriching Tamil literary culture. In 1892, inspired by the powerful and patriotic writings of Bal Gangadhar Tilak, V.O.C. became one of his devoted followers. Besides actively participating in India’s freedom struggle, he motivated and encouraged others to join the movement. This study highlights the literary contributions, political ideals, nationalist activities, and enduring legacy of V. O. Chidambaram Pillai in the history of India and Tamil society.
Keywords : V. O. Chidambaram Pillai, Freedom Struggle, Tamil Literature, Nationalism, Bal Gangadhar Tilak, Trade Union Movement.

“உரையியல் நோக்கில் வ. உ. சியின் திருக்குறள் உரை”

ஆய்வுச்சுருக்கம்
      வ.உ.சி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றிக் கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார். மேலும் சில ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துமுள்ளார். வ.உ.சி. 1892 ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார். இவர், தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார்.
கருச்சொற்கள்
      திருக்குறள் உரை – வ.உ.சி. யின் உரைத்திறன் -பொருள் மாறுபாடு – கூற்று வேறுபாடு – பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல் – நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல் – இலக்கணக் குறிப்புடனான உரை – எளிய விளக்கம், சிறப்பு விளக்கம்.
முன்னுரை
     கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமையில் இருந்து இறக்கும் வரை வ. உ. சி. யின் சிந்தனையில் திருக்குறள் நிறைந்திருந்தது. அதன் விளைவாகத் திருக்குறளுக்கு உரையும் இயற்றினார். மேலும் இன்னிலை, சிவஞான போதம் போன்ற நூல்களுக்கு உரையும் பல்வேறு படைப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார்.  அவற்றுள் இக்கட்டுரை அவரது உரைத்திறத்தை வெளிப்படுத்தும் முகமாக விளங்கும் திருக்குறளை முன்வைத்து “உரையியல் நோக்கில் வ. உ. சி யின் திருக்குறள் உரை” என்ற தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
திருக்குறள் உரை
    திருக்குறளுக்கு உரை கண்டவர் பலர். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற உரையாசிரியர்களேயன்றி இருபதாம் நூற்றாண்டிலும் அறிஞர் பலர் திருக்குறளுக்கு உரை எழுதினர். வ.உ.சி. திருக்குறள் முழுமைக்கும் உரை கண்டவர். ஆனால், அவரால் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்து வெளியிட முடிந்தது இது பற்றி வ உ.சி. தம் நூலின் முன்னுரையில் கூறுகிறார்.
   “எல்லாம் வல்ல இறைவன் அருளால் திருவள்ளுவ நாயனார் திருக்குறளுக்குயான் இயற்றியுள்ள உரையில், அறப்பாலுரை மூலத்துடன் அச்சாகி முற்றுப்பெற்றது. அதனை அச்சிடத் தொடங்கிய காலையில் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். அறப்பால் மூலமும் உரையும் முந்நூறு பக்கங்கள் ஆகின்றன. பொருட்பால் மூலத்திற்கும் உரைக்கும் முந்நூறு பக்கங்களுக்கு மேலாகுமென்றும், இன்பப்பால் மூலத்திற்கும் உரைக்கும் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் ஆகுமென்றும் நினைக்கிறேன். அதுபற்றி, ஒவ்வொரு பாலையும் அதனதன் உரையையும் தனித்தனி ஒவ்வொரு புத்தகமாக வெளியிடத்துணிந்து, இப்பொழுது அறப்பாலையும் அதன் உரையையும் ஒரு புத்தகமாக்கி வெளியிடுகின்றேன்”1.
வ. உ.சி.யின் உரைத்திறன்
      வ. உ. சி. யின் உரைத்திறன் பற்றிக் கணிக்கும்போது அவர் திருக்குறளின் முப்பாலுக்கும் உரை விளக்கம் கண்ட சிறப்பினைக் கூறுதல் இன்றியமையாததாகும். வ.உ.சி. யின் அறத்துப்பால் விருத்தியுரை 1935 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. அடுத்த ஆண்டே வ. உ. சி காலமானதால் பிற இரு பகுதிகளுக்குரிய உரை வெளிவரவில்லை. பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றிற்கு வ.உ.சி. எழுதிய உரையின் கையெழுத்துப் படிகள் கிடைத்தன. அவற்றையும் சேர்த்து மூன்று பகுதிகளுக்குமான உரைகளின் மூலம் வ. உ. சியின் உரைத்திறன் இங்கே விளக்கப்பெறுகிறது. திருக்குறளுக்கு உரை எழுத நேர்ந்ததற்கான காரணத்தைத் தம் உரைப்பாயிரத்தில் பின்வருமாறு குறிக்கின்றார் வ. உ. சி.
     இவ்வுரைகளெல்லாம் கற்பதற்குப் பெரியனவாகவும், அறிதற்கு அரிய தமிழ்நடையில் எழுதப்பெற்றனவாகவும், பிழைபட்ட மூலபாடங்கள் சிலவற்றைக் கொண்டனவாகவும், சில குறள்களுக்கு நுண்ணிய அறிவுடையார் ஏற்றுக்கொள்ள இயையாத பொருள்களை உரைப்பனவாகவும் காணப்படுகின்றன. அவைபற்றி, திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இயற்றினேன்; இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றேன்”2.
      வ.உ.சி.யின் திருக்குறள் உரை பாடவேறுபாடு காணல், பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல், நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல் போன்ற பல்வேறு சிறப்பு நலன்களைப் பெற்றுத் திகழ்கின்றது.
அறத்துப்பால் பாடவேறுபாடு காணல்
“தகுதி யெனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின்”      (நடுவுநிலைமை, குறள்: 111)
          பிறர்க்குச் செய்யவேண்டிய கடமைகளை நடுவாக நின்று செய்யின், அந்நடுவுநிலைமை ஓர் அறமாம் என்னும் கருத்தமைந்த குறளில், ‘பகுதியால்’ என்னும் சொல்லைப் ‘பகுதியார்’ என்று வ.உ.சி. குறிப்பிடுகிறார். உற்றார், நண்பர், நொதுமலர், பகைவர் ஆகிய நான்கு பகுதியினர் என்னும் பொருளமைந்த அச்சொல், முந்திய உரையாசிரியர்களால் ‘பகுதியால்’ என்று குறிக்கப்பெறுகிறது. அதற்கு வ.உ.சி கூறும் பாடவேறுபாடு விளக்கம் படித்தற்குரியது. வேண்டுவதாய ஆர் விகுதியை விடுத்து, வேண்டாததாய் ஆல் உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்கமாட்டாராகலானும் பகுதியால் என்பது ஏடுபெயர்த்தெழுதியோனால் நேர்ந்த பிழையெனக் கொள்க”3.
“நத்தம்போல் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது” (புகழ், குறள்: 235)
          பிறர்க்கு ஈவோரும் பிறருக்காக உயிர் வழங்குவோரும் பெரியர் என்னும் கருத்தமைந்த இக்குறளில் ‘நத்தம்போல் கேடு’ என்பதை ‘நத்தம் போர் கேடு’ என்று வ.உ.சி. பாடம் கொள்ளுகிறார். முந்திய உரையாசிரியர்களால் ‘நத்தம்போல்’ என்று கொள்ளப்பெறுகிறது. அதற்கு வ.உ.சி., இக்குறளின் மூன்றாஞ்சீரின் முதற்சொல்லாகிய ‘உளது’ என்பது ‘ஆகும்’ என்னும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல்போல, இக்குறளின் முதற்சீரின் முதற்சொல்லாகிய ‘நத்தம்’ என்பதும் ‘ஆம்’ அல்லது ‘போர்’ என்பது போன்ற பொருள் தரும் சொல்லோடு சேர்ந்து நிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததாயிருக்க, அச்சொல்லை விடுத்துப் பொருள்கோளுக்கு வேண்டாத ‘போல்’ என்னும் ஓரசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகலின் ‘தத்தம்போல்’ என்பது ஏடுபெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையெனக் கொள்க”4 என்று கூறுகிறார். ‘நத்தம் போர் கேடு’ என்பதற்கு ‘ஆக்கத்தைப் போர்த்த கேடு’ என்று பொருள் கூறி அதுவே சரியான பாடம் என்று விளக்கம் கூறி நிறுவுவது அவருடைய உரைத்திறனை வெளிக்காட்டுகிறது
பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல்
“இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை” (இல்வாழ்க்கை, குறள்:41)
          என்னும் குறளில், மூவர் என்பதற்குப் பரிமேலழகர் பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்று பொருள் கூறுகிறார். ஆனால், வ.உசி. இயல்புடைய மூவர் என்பதற்குத் தாய், தந்தை, தாரம் ஆகிய மூவர் என்று புதிய உரை தரும் சிறப்பு படித்தற்குரியது.
நடைமுறை வாழ்க்கைக்கு இயையப் பொருள் காணல்
“கொடுப்ப தழுக்றுப்பான் சுற்ற முடுப்பதஉ
முண்பதஉ மின்றிக் கெடும்” (அழுக்காறாமை, குறள்: 166)
          என்னும் குறளுக்கு வ.உ.சி. பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தன் ஆக்கத்திற்கு ஆதாரமாகிய சுற்றத்தையும் தன் உடையையும் உணவையும் இழப்பான் என்று பொருள் கூறுகின்றார். இதன் மூலம் கொடுப்பது அழுக்கறுப்பானுடைய சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று பொருள் கூறும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வ.உ.சி வேறுபடுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் நினைக்கத்தக்கது. அவ்வாறு உரைத்தல், ஒவ்வொருவனும் செய்த வினைகளின் பயன்கள் அவனவனையே சேரும் என்ற வடமொழி தென்மொழி நூல் வழக்கிற்கு முரண்படும். அதனால் அவ்வுரை பொருந்தாது”5.
 “இயல்பி னானில் வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.   (இல்வாழ்க்கை, குறள்: 47)
       என்னும் குறளில், ‘முயல்வார்’ என்னும் சொல்லுக்குப் பொருளுரைப்பதில் உரையாசிரியர் பலரும் வேறுபடுகின்றனர் ‘முயல்வார்’ என்பதற்கு, ‘வீட்டுப்பேற்றை அடைய முயல்பவர் என்று வ.உ.சி. பொருள் கூறுகிறார். ‘முயல்வார்’ என்பதற்கு வீடுபேறெய்த முயலும் துறவோர் எனப் பொருள் கண்ட வ.உ.சி.யின் உரையே விழுமியது”6 என்று குறிப்பிடுவது அவருடைய உரைத்திறனைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும்,
“மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற”    (அறன் வலியுறுத்தல், குறள்: 34)
 என்னும் குறளுக்கு “உள்ளத்தின்கண் குற்றமில்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம். மனத்துக்கண் குற்றமுள்ளவனாய்ச் செய்யப்படுவன துன்பம் தருவனவாகிய மறங்களாம் என்று உரை கூறுகிறார் வ.உ.சி. அறத்திற்கு மாசின்மையாகிய பண்புமட்டும் போதாது, செயலும் வேண்டும். என்னும் கருத்தில் குற்றமில்லாதவனாய்ச் செய்யப்படுவது என்று கூறும் வ.உ.சி. உரை சிறப்புடையதாகும் என்பார்”7 இரா. சாரங்கபாணி.
பொருட்பால்
 பொருட்பாலிலும் பல குறட்பாக்களில் பாடவேறுபாடும் உரை வேறுபாடும் காண்கிறார் வ.உ.சி. சில இடங்களில் எளிமையான விளக்கங்களும் சில இடங்களில் சிறப்பான விளக்கங்களும் தருகிறார். சில இடங்களில் இயலின் பெயரை மாற்றுகிறார். சான்றாக ‘அங்கவியல்’ என்பதை ‘அமைச்சியல்’ என்று வ உ.சி. குறிப்பதைக் கொள்ளலாம்.
எளிய விளக்கம்
“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்க்கட் பட்ட திரு”  (கல்லாமை, குறள்:408)
    என்னும் குறளுக்கு, “கல்லாதவனிடத்து செல்வம் உண்டாயின், அச்செல்வச் செருக்கினால் அவன் பிறருக்குத் தீங்கிழைப்பானாகலான் அவனது செல்வம் அவ்வாறு தீங்கிழையாத கற்றாரது வறுமையினும் இன்னாது’ என்று மிக எளிமையான விளக்கத்தைத் தருகிறார்.
சிறப்பு விளக்கம்
“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.    (கேள்வி, குறள்: 411)
          என்னும் குறளுக்கு ‘அகலம்’ என்னும் பகுதியில் சிறப்பான விளக்கம் தருகிறார். ”செவியாற் பெறுஞ் செல்வமாவது கேள்வி, கேள்வி, செல்வத்துட் சிறந்த செல்வமும் ஆம் என்றவாறு சிறந்த செல்வம் தலையாய செல்வம் ஆகாதோவெனின், ஆகுதலுங் கூடும். சிறந்த செல்வம் சிறப்பொடு வந்த செல்வம். தலையாய செல்வம் தலையாய பயன்களையெல்லாம் அளிக்குஞ் செல்வம். அறநெறியால் வந்த ஒரு காசும் சிறந்த செல்வமாம். ஆனால் அது தலையாய பயன்களையெல்லாம் அளிக்கும் ஆற்றல் இல்லாதது. தலையாய பயன்களாக இம்மையின்பம், இம்மைப்புகழ், மறுமையின்பம், வீடு, கேள்வி, நெறியால் சிறந்த செல்வமும் பயனால் தலையாய செல்வமும் ஆனமையால் அஃது அவ்விரண்டுமாம்.” அறநெறியில் வந்த ஒரு காசும் சிறந்த செல்வம்; ஆனால் அது தலையாய பயன்களையெல்லாம் அளிக்கும் ஆற்றல் இல்லாதது என்று, ‘தலையாய’ என்பதற்கு நுட்பமாகப் பொருளுணர்த்தும் சிறப்பு படித்து மகிழத்தக்கது.
“தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்”       (பகைத்திறம் தெரிதல், குறள்:876)
என்னும் குறளுக்கு வ.உ.சி தரும் விளக்கம் சிறப்பானது.
பாட வேறுபாடு
“மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
இடுக்கண் இடப்பா டுடைத்து”   (இடுக்கண் அழியாமை, குறள்: 624)
          என்னும் குறளில் ‘வாயெல்லாம்’ என்ற சொல்லை வ.உ.சி. ‘வாய் செல்லும்’ என்று பாடம் கொள்கிறார். வாயெல்லாம் என்பது முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஈண்டு ‘எல்லாம்’ என்ற சொல் இன்றியமையாததன்று; ‘செல்லும்’ என்ற சொல் இன்றியமையாதது. ஆகலான் செல்லும் என்பதே ஆசிரியர் பாடம் எனப்பட்டது” என்று வ.உ.சி. பாட வேறுபாடு கூறுகிறார்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து”            (சொல்வன்மை, குறள்: 645)
       இக்குறட்பாவில் ‘வெல்லுஞ்சொல் இன்மை’ என்பதற்கு ‘வெல்லுதலின்மை’ என்று பாடம் கொள்கிறார் வ.உ.சி. பிற உரையாசிரியர்கள் ‘வெல்லுஞ்சொலின்மை’ என்று குறிப்பிடுகிறார்கள். வ.உ.சி. கூறும் இந்தப் பாட வேறுபாடானது, பிறிதோர் சொல் என்றமையால், வெல்லுஞ்சொல் என்று மீண்டும் சொல்லுதல் மிகையாம். அஃது ஏடு பெயர்த்து எழுதினோரால் நேர்ந்த பிழை எனவும் வெல்லுதலின்மை என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. பிறிதோர் சொல் என்றபின் வெல்லுஞ்சொல் என்று கூறுதல் மிகையேயாகும். அதனால் ‘வெல்லுஞ்சொலின்மை’ என்பது பிழைப்பட்ட பாடம், ‘வெல்லுதலின்மை’ என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க என்னும் வ.உ.சி.யின் விளக்கம் அறியத்தக்கது.
பொருள் வேறுபாடு
      வ.உ.சி. யின் உரை பல இடங்களில் பிற உரையாசிரியர்களோடு மாறுபடுகிறது.
“உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”          (கல்வி, குறள்: 395)
    என்னும் குறளில் ‘ஏக்கறுதல்’ என்பதற்கு ‘ஒரு சொல்’ என்று பரிமேலழகரும் ‘கர்வம் நீக்குதல்’, ‘தாழ்ந்து நிற்றல்’ என்று வ.உ.சி.யும் பொருள் கூறுகின்றனர்.
“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்”                (அறிவுடைமை, குறள்:421)
          என்னும் குறளில், அறிவு ‘அரசனுக்கு’ அழிவு வராமல் காக்கும் கருவி என்னும் பரிமேலழகரின் கருத்துக்கு மாறாக அறிவு ‘ஒருவனுக்கு’ அழிவு வராமல் காக்கும் கருவி என்று வேறுபாடு காட்டுகிறார்.
“அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு”          (பொச்சாவாமை, குறள்: 534)
          என்னும் குறளில் ‘நன்கு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், ‘செல்வம்’ என்று பொருள் கூறுகிறார். ஆனால் வ.உ.சி. நன்கு என்பதற்கு ‘நல்வினை’ என்று பொருள் கூறுவது குறிக்கத்தக்கது.
இலக்கணக் குறிப்பு மறுப்பு
வ.உ.சி. தம் பொருட்பால் உரையின் பல இடங்களில் பிற உரையாசிரியர்களின் இலக்கணக் குறிப்புகளை மறுத்துத் தம் கருத்தைக் கூறியுள்ளார்.
“ஆக்க மிழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்”            (ஊக்கமுடைமை, குறள்: 593)
        என்னும் குறளில், ‘அல்லாவார்’ என்னும் சொல்லுக்கு வ.உ.சி. ‘அல்லலுறா’ என்னும் சொல்லைப் பாடமாகக் கொள்கிறார். பிற உரையாசிரியர்கள் கொள்ளும் அல்லாவார் என்னும் பாடத்தை வ.உ.சி. மறுக்கிறார். அல்லாவார் என்பது துன்பமுறுதல் என்னும்பொருள் தரும். அல்லாத்தல் என்பதிலிருந்து வந்த பலர்பால் எதிர்மறை வினைமுற்று என்றும் அஃது இன்ன இலக்கணப்படி அவ்வாறு வந்ததென்றும் கற்பிக்க வேண்டி யிருத்தலான், அதனை ஆசிரியர் பாடம் எனக் கொள்ளாமல் ‘அல்லலுறார்’ என்பதே பாடம் எனக் கொள்ளப்பட்டது என்று வ.உ.சி. கூறும் விளக்கம் அவருடைய இலக்கண அறிவைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
“சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு”                (ஊக்கமுடைமை, குறள்: 597)
          இக்குறளில் ‘பட்டுப்பாடு’ என்னும் சொல்லுக்குப் ‘பட்டும் பாடு’ என்று பாடங்கொள்கிறார் வ.உ.சி. பிற உரையாசிரியர்கள் பட்டுப்பாடு என்று குறித்துள்ளனர். “உயர்வு சிறப்பும்மை ஈண்டு இன்றியமை யாததாகலான், அப்பாடம் பிழைப்பட்ட பாடம் என்றறிக; சிதைவிடத்தும் என்பது செய்யுள் விகாரத்தால் உம்மை கெட்டு நின்றது” என்னும் வ.உ.சி.யின் விளக்கம் மனங்கொளத் தக்கது. வ.உ.சி. தம் பொருட்பால் உரையில் காட்டியுள்ள பாட வேறுபாடு, இலக்கண வேறுபாடு முதலியவற்றைப் படிக்கும்போது அவருடைய தமிழ்ப் புலமையை உணர முடிகிறது.
இன்பத்துப்பால்
     இன்பத்துப்பாலில் வ.உ.சி.யின் உரை எளிய விளக்கம், சிறப்பு விளக்கம், பாட வேறுபாடு, பொருள் வேறுபாடு, கூற்று வேறுபாடு, இலக்கண வேறுபாடு போன்ற பல்வேறு நலஞ்செறிந்ததாய்த் திகழ்கின்றது.
எளிய விளக்கம்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து” (தகையணங்குறுத்தல், குறள்: 1085)
          என்னும் குறளுக்கு, “கூற்றமோ (என் உயிரை வருத்துகின்றமையால்), கண்ணோ (என்னைப் பார்த்தலால்) பிணையோ (அஞ்சுகின்றமையால்), இளம் பெண்ணின் பார்வை இம்மூன்று தன்மைகளையும் உடையது” என்று வ.உ.சி. கூறும் எளிய விளக்கம் மனங்கொளத்தக்கது.
“வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்த்த விரல்”     (அவர்வயின் விதும்பல், குறள்: 1261)
     என்னும் குறளுக்கு, “புல்லியவாதல் – நுண்ணிய பொருள்களைக் காணமாட்டாதனவாதல்; நாள்களை இழைத்தலாவது சுவரின் கண் சிவப்புநீர் முதலியவற்றால் ஒரு நாளுக்கு ஒரு கோடாக விரல்கொண்டு இழுத்தல் ஒரு நாளன்றிப் பலநாள் சுவரின்கண் கோடிழுத்தலும் வழிபார்த்தலும் செய்தலான் விதுப்பாயிற்று” என்னும் விளக்கம் கற்பவர் நெஞ்சில் தடையின்றிப் பதியும் வண்ணம் எளிமையாக அமைந்திருப்பது வ.உ.சி யின் உரையாற்றலைப் புலப்படுத்துகிறது.
சிறப்பு விளக்கம்
இன்பத்துப்பாலில் அமைந்த பல குறட்பாக்களுக்குச் சிறப்பான விளக்கங்கள் கூறியுள்ளார் வ.உ.சி.
“மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்”    (நலம் புனைந்துரைத்தல், குறள்: 1116)
          என்ற குறளுக்கு வ.உ.சி. தரும், வான்மீன்கள் தத்தம் இடங்களில் நிலையாக நில்லாது ஓடித் திரிதலைப் பார்த்த தலைமகன், மதிக்கும் தலைமகளது முகத்திற்கும் வேற்றுமை அறியாது அவை கலங்கித் திரிகின்றனவோ என்று ஐயமுற்றுக் கூறியவாறு என்னும் விளக்கம் குறிக்கத்தக்கது.
“காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி”  (நாணுத்துறவுரைத்தல், குறள்: 1131)
          என்னும் குறளுக்கு, வ.உ.சி. தரும் விளக்கம் அரியது. மடல் என்பது ஆகுபெயர், மடலூர்தலுக்கு ஆயினமையால், மடலூர்தலாவது, வேட்கையுற்ற தலைமகன் தாழை அல்லது பனையோலையால் குதிரை ஒன்று செய்து அதன்மீது ஏறித் தான் இன்னாள்மீது காமமுற்று வருந்துவதாகக் கூறிக்கொண்டு ஊரார் யாவரும் காணும்படியாக ஊர்சுற்றி வருதல். அவ்வாறு ஊர் சுற்றி வந்த தலைமகனுக்கு அவன் காதலித்த பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல் அரசனது கடமை. இது முற்காலத்தில் தமிழ் நாட்டில் நடந்துவந்த வழக்கம். இப்பொழுதும் இம் மடலூர்தல் தமிழ்நாட்டில் சிற்சில சாதியாருக்குள் நிகழ்ந்து வருகின்றது. அதனைப் ‘பொய்க்குதிரை ஏறுதல்’ என்று சொல்லுகின்றனர். அவ்வாறு மடலூர்தலால் தலைமகன் உடம்பில் ஓலை முதலியன கிழித்து உடம்பில் புண் உண்டாதலும் அதனின்று வெண்ணீர் வடிதலும் உண்மை என்று கூறுகின்றனர் என்னும் விளக்கம், வ. உசி.யின் உரைச்சிறப்பாகும்.
கூற்று வேறுபாடு
இன்பத்துப்பாலின் சில குறள்களில் தலைமகன், தலைமகள், தோழி ஆகியோரது கூற்றுகளிலும் பரிமேலழகரிடமிருந்து மாறுபடுகிறார் வ.உ.சி.
“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில”                 (குறிப்பறிதல், குறள்: 1100)
          இக்குறளை, வ.உ.சி. ‘தலைமகன் கூற்று’ என்று கூறுகிறார். ‘தோழி கூற்று’ என்பார் பரிமேலழகர்.
“நோத லெவன்மற்று நொந்தாரென்றஃ தறியுங்
காதல ரில்லா வழி”                (புலவி, குறள்:1308)
          வ.உசி, பாடம் – ‘தலைமகள் கூற்று; பரிமேலழகர் பாடம் ‘தலைமகன் கூற்று’.
“துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி”                (நெஞ்சொடு புலத்தல், குறள்; 1299)
          இதில், வ.உ.சி.பாடம் – ‘தலைமகள் கூற்று’, பரிமேலழகர் பாடம் ‘- தலைமகன் கூற்று’
பாட வேறுபாடு
அறத்துப்பால், பொருட்பாலைப் போலவே இன்பத்துப்பாலிலும் பல குறள்களில் பாட வேறுபாடுகளைக் காணமுடிகிறது. அவற்றுள் சில எடுத்துக்காட்டப் பெறுகின்றன.
“அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு” (தகையணங்குறுத்தல், குறள்: 1081)
          என்னும் குறளில், ‘கனங்குழை’ என்னும் சொல்லுக்குக் ‘கணங்குழை என்று வ.உ.சி பாடம் கொள்கிறார். இச்சொல்லைப் பரிமேலழகர் ‘கனங்குழை’ என்று எடுத்தாள்கிறார்.
“செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முறாஅர்போன் றுற்றார் குறிப்பு”         (குறிப்பறிதல், குறள்: 1097)
          இக்குறளில் வரும் ‘சிறுசொல்’ என்பதை ‘செறுசொல்’ என்று பாடம் கொள்கிறார் வ.உ.சி. பரிமேலழகர் ‘சிறுசொல்’ என்று குறிக்கிறார்.
“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்”   (புணர்ச்சி மகிழ்தல், குறள்: 1105)
          என்னும் குறளில், வ.உ.சி. பாடம் – ‘தோட்டாழ்’; பரிமேலழகர் பாடம் ‘தோட்டார்’. இம்மூன்று சான்றுகளிலும் பாடவேறுபாடுகாட்டி, பரிமேலழகரோடு மாறுபடுகின்ற வ.உ சி. மணக்குடவர் பாடத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்.
“தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை”        (குறிப்பறிவுறுத்தல், குறள்:1277)
          என்னும் குறளில் ‘வளைகள் தோளைவிட்டுக் கழன்றன’ என்பது பரிமேலழகர் உரை ‘வளைகள் கையை விட்டுக் கழன்றன’ என்பது வ.உ.சி. உரை.
இலக்கண விளக்கம்
இன்பத்துப்பாலின் குறட்பாக்கள் பலவற்றுக்கு இலக்கண விளக்கத்தோடு கூடிய உரை கூறியுள்ளார் வ.உ.சி.
“கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்” (படர்மெலிந்திரங்கல், குறள்: 1162)
          என்னும் குறளில், “தொழிற்பெயரெலாந் தொழிற் பெயரில என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படி ‘நாண்’ என்பது உகரமும் வல்லெழுத்தும் பெற்று நின்றது” என்னும்               வ. உ. சி. யின் விளக்கம் அவருடைய இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது.
முடிவுரை
       திருக்குறளுக்கு உரையாசிரியர்களிடையே பாட வேறுபாடு இருப்பினும் அவ்வேறுபாடுகளை அவர்கள் அடிக்குறிப்பில் தந்துள்ளனர். ஆனால் வ.உ.சி யோ மூலத்திலேயே வேறுபாடுகளைக் காட்டி, அவற்றைக் காரணத்தோடு விளக்கியுள்ளார். பரிமேலழகர் உரையினைச் சில இடங்களில் ஏற்றும் பல இடங்களில் மறுத்துமுள்ளார். வ.உ.சி. தாம் எழுதிய திருக்குறள் உரையில் இயல் பாகுபாடு, அதிகார வைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்துள்ளார் என்றாலும், குறட்பாக்களின் சில சொற்களுக்கு உரையாசிரியர்கள் குறிப்பிடாத புதுப்பொருள் வழங்கியமை, சில குறட்பாக்களுக்கு நேரடியான, எளிய விளக்கங்கள் தந்துள்ளமை, இன்றியமையாத இலக்கணக் குறிப்புகள் சேர்த்துள்ளமை போன்ற நயங்கள் காரணமாக வ.உ.சி.யின் உரை சிறப்பினைப் பெறுகிறது.
அடிக்குறிப்புகள்
1.திருக்குறள் அறப்பால் – விருத்தியுரை, கழகப் பதிப்பு, பக். 5-6
2.மேலது, பக்.13-14
3.மேலது, பக். 65-66
4.மேலது, ப.124)
5.மேலது, ப. 92)
6.திருக்குறள் உரை வேற்றுமை – அறத்துப்பால், ப.99
7.மேலது, ப. 66).
துணைநூற்பட்டியல்
1.மா. ரா. அரசு (தொ. ஆ), வ.உ.சி. கட்டுரைகள், பாரி நிலையம், சென்னை, 1989.
2.முனைவர் எஸ். கண்ணன், வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.
3.வ.உ.சி, திருவள்ளுவர் திருக்குறள்: அறத்துப்பால், இணைய வழி நூல்.
4.இரா. சாரங்கபாணி, திருக்குறள் உரை வேற்றுமை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1992.
5.செ. திவான், வ.உ.சியும் திருக்குறளும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, 2001.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஏ. கோதண்டராமன்,
இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் – II),
மீனம்பாக்கம், சென்னை – 600 061.

 

உரையியல் நோக்கில் வ. உ. சியின் திருக்குறள் உரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here