Saturday, July 18, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார்‌

        தில்லையில்‌ குயவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ திருநீலகண்ட நாயனார்‌ ஆவார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அரும்‌ பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்களுக்கு திருவோடு செய்து கொடுப்பதைப்‌ பெரும்‌பேறாகக்‌ கருதினார்‌ இவர்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌.

        ஒருமுறை திருநீலகண்டர்‌ பரத்தையிடம்‌ சென்று வந்தார்‌. அதையறிந்த அவரது மனைவியார்‌ நாயனாரிடம்‌ பேசுவதை நிறுத்திக்‌ கொண்டார்‌. இல்லறத்தரசிக்குரிய பணிகளைச்‌ செய்தார்‌. எனினும்‌ நீலகண்டரைத்‌ தீண்டாது இருந்தார்‌. ஒருமுறை நாயனார்‌, தன்‌ மனைவியைத்‌ தீண்ட முற்பட்டபோது, அவர்‌ மனைவியார்‌, “நீர்‌ என்னைத்‌ தீண்டுவீராயின்‌ நான்‌ உயிர்‌ தரிக்க மாட்டேன்‌. இது நீலகண்டத்தின்‌ மீது ஆணை என்று சிவபெருமான்‌ மீது ஆணையிட்டார்‌. அன்றிலிருந்து இருவரும்‌ ஒரு வீட்டில்‌ இருந்தும்‌ உடல்‌ தொடர்பின்றி இருந்தனர்‌. அடியவர்க்கு தொண்டு புரிந்தும்‌ வந்தனர்‌. ஆண்டுகள்‌ பல ஓடின. நீலகண்டரும்‌ மனைவியாரும்‌ முதுமை அடைந்தனர்‌.

      நீலகண்டரையும்‌ அவரது மனைவியாரையும்‌ மீண்டும்‌ இணைத்திட சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணம்‌ ஒரு அடியவர்போல உருவம்‌ கொண்டு, நீலகண்டரின்‌ வீட்டை அடைந்தார்‌.

          நீலகண்டரிடம்‌ ஒரு திருவோட்டைத்‌ தந்து, “அன்பரே! இத்திருவோட்டை பாதுகாத்து வைப்பீராக. இத்திருவோடு தன்னுள்‌ வந்த பொருட்களை எல்லாம்‌ புனிதம்‌ அடையச்‌ செய்யும்‌ சக்தி பெற்றது. இதை நான்‌ வந்து கேட்கும்போது தருவீராக!” என்று கூறினார்‌. நீலகண்டரும்‌ மிக்க மகிழ்ச்சியோடு அதைப்‌ பெற்று வீட்டில்‌ வைத்தார்‌. அடியவர்‌ பெருமானும்‌ சென்றுவிட்டார்‌.

      நாட்கள்‌ பல கடந்தன. சிவபெருமானது திருவருளால்‌ திருவோடு காணாமல்‌ போயிற்று. சிலநாளில்‌ அடியவர்‌ மீண்டும்‌ நீலகண்டரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. தன்‌ திருவோட்டைத்‌ தருமாறு கேட்டார்‌. நீலகண்டரோ திருவோட்டை எங்கும்‌ தேடினார்‌. கிடைக்கவில்லை. மனம்‌ பதைத்தார்‌. அடியவரிடம்‌ சென்று வணங்கி, திருவோடு காணாமல்‌ போனதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ மிக்க கோபம்‌ கொண்டார்‌.

       அதைக்‌ கண்டு நடுங்கிய நீலகண்டர்‌, தான்‌ பழைய திருவோட்டிற்குப்‌ பதிலாக புதிதாக வேறு திருவோடு செய்து தருவதாகக்‌ கூறினார்‌. அடியவரோ பெருமை மிக்க தன்‌ பழைய திருவோடே வேண்டும்‌ என்று கூறினார்‌. நீலகண்டர்‌ அது காணாமல்‌ போய்விட்டதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ அதை நம்பவில்லை.

        “என்‌ பெருமை மிக்க திருவோட்டை நீர்‌ ஒழித்து வைத்துக்‌ கொண்டு, என்னை ஏமாற்றப்‌ பார்க்கிறாயோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டு, நீலகண்டர்‌, “ஐயா! என்‌மேல்‌ ஆணையாக நான்‌ அதைத்‌ திருடவில்லை!” என்று கூறினார்‌. இருப்பினும்‌ அடியவர்‌ அதை நம்பவில்லை.

      அவர்‌, “உன்‌ மேல்‌ ஆணைசெய்ய வேண்டாம்‌. உனக்கு மகன்‌ இருந்தால்‌ அவன்‌ கையைப்‌ பற்றிக்‌ கொண்டு, குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறினார்‌. அதற்கு நாயனாரோ, தனக்குக்‌ குழந்தைகள்‌ இல்லை என்று கூறினார்‌. உடனே அடியவர்‌, “அப்படியானால்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌!” என்று கூறினார்‌.

    அதற்கு நாயனாரோ, தான்‌ மனைவியோடு நெடுங்‌காலம்‌ ஊடல்‌ கொண்டிருப்பதாகக்‌ கூறினார்‌. உடனே அடியவர்‌, “என்னுடைய திருவோட்டைக்‌ களவாடியது உண்மைதான்‌. அதனால்தான்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய மறுக்கிறீர்‌. நான்‌ இவ்வழக்கை அந்தணர்கலிடம்‌ எடுத்துச்‌ செல்லப்‌போகிறேன்‌. அவர்கள்‌ வழக்கை விசாரிக்கட்டும்‌!” என்று கூறிச்‌ சென்றார்‌. அந்தணர்களிடமும்‌ வழக்கைக்‌ கூறினார்‌.

     அந்தணர்கள்‌ நீலகண்டரை அழைத்தனர்‌. வழக்கை விசாரித்தனர்‌. அவர்கள்‌ நீலகண்டரிடம்‌, “அடியவரது திருவோட்டை நீர்‌ களவாடவில்லை என்றால்‌ உம்‌ மனைவியாரின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்க வேண்டும்‌!” என்று உத்தரவிட்டனர்‌. என்ன செய்வதென்று புரியாது தவித்த நீலகண்டர்‌, ஒரு நீண்ட கோலை எடுத்து, அதன்‌ ஒரு முனையைத் தான்‌பற்றிக்‌ கொண்டு, மறுமுனையை தன்‌ மனைவியாரிடம்‌ பற்றிக்‌கொள்ளச்‌ செய்து இருவரும்‌ குளத்தில்‌ மூழ்கி எழுந்தனர்‌.

     அதைக்கண்ட அடியவர்‌, “கோலைப்‌ பற்றியபடி இருவரும்‌ மூழ்கினால்‌ நான்‌ நம்பமாட்டேன்‌. இருவரும்‌ கைகளைப்‌ பற்றிக்கொண்டு குளத்தில்‌ மூழ்கினால்தான்‌ நம்புவேன்‌!” என்று கூறினார்‌. யாதொரு வழியும்‌ தெரியாது தவித்த நீலகண்டர்‌, மனைவியாரிடம்‌ தன்மீது ஊடல்‌ கொண்ட காரணத்தை எல்லாம்‌ மானத்தை விட்டுக்‌ கூறினார்‌. மனைவியோடு குளத்தில்‌ மீண்டும்‌ மூழ்கி எழுந்தார்‌.

       மறுகணமே நீலகண்டருக்கும்‌ அவரது மனைவியாருக்கும்‌ முதுமை நீங்கியது. இருவரது உடல்களும்‌ இளமைத்‌ தோற்றம்‌ கொண்டன. அருகில்‌ நின்ற அடியவரும்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌.

     அவ்வேளையில்‌ சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனத்தில்‌ திருக்காட்சி அருளினார்‌. நீலகண்ட நாயனாரும்‌ அவரது மனைவியாரும்‌ பெருமானையும்‌ அன்னையையும்‌ பணிந்து தொழுதனர்‌.

       சிவபெருமானும்‌ அவ்விருவரிடம்‌, “இவ்வாலிபத்‌ தோற்றத்துடனே எம்‌ அருகில்‌ எப்போதும்‌ இருப்பீர்களாக!” என்று இருவரையும்‌ சிவலோகம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »