Saturday, July 18, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு பாறை ஓவிங்கள்!|மூ.செல்வம்

பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு பாறை ஓவிங்கள்!|மூ.செல்வம்

வருசநாடு பாறை ஓவிங்கள்
       வைகை நதிக் கரையில் மனித குலத்தின் பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு  பாறை ஓவியம்! பாறை ஓவியங்கள் என்பது மனித குலத்தின் தொன்மையான கலை வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பூர்வீக மனிதர்கள் தங்கள் வாழ்வியல் சடங்கு, நம்பிக்கை மற்றும் இயற்கை அனுபவங்களை பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் வழியே வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய துணை கண்டத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில் பாறை ஓவியங்கள் தொல்லியல் ஆராய்ச்சிகளில் மிக முக்கிய இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் மனிதவியல், வரலாறு, கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான சான்றுகளை விளங்குகின்றன.
         
          வருசநாடு பாறை ஓவிங்கள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் வருசநாடு கிராமத்தின் அருகே உள்ள மொட்டைப் பாறை மலை “கல்புடவு” அத்தகைய தொன்மையான பாறை ஓவிய தளங்களில் ஒன்றாகும். இத்தளத்தில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் பல அடுக்குகளில் வரையப்பட்டிருப்பதோடு மனிதர்கள் தலைமுறையாக தொடர்ந்து இத்தலத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளாக திகழ்கின்றன.
 மூல வைகை ஆற்றின் வலக்கரையில் அமைந்துள்ள மொட்டைப் பாறை மலையின் தெற்கு சரிவில் சேகர் என்பவரின் நிலத்திற்கு அருகில் கல்புடவு என்ற சிறிய குகைப் பகுதி உள்ளது. இக்கல் புடவின் கிழக்குப் பக்க பாறை சுவரில், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் இருப்பதை கட்டுரை ஆசிரியர் முதன்முதலாக கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

சிவப்பு வண்ண ஓவியங்கள்
         
        வருசநாடு பாறை ஓவிங்கள் பாறைச்சுவர் முழுக்க சிவப்பு நிற ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. புல்வெளிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மலைமுகடுகளைக் குறிக்கும் கோடுகள், செங்குத்தாக வரையப்பட்ட நீளமான கோடுகள், நீள் வட்ட வடிவில் இரண்டு வட்டங்கள்  வட்டத்தின் உள்பகுதிகள் அலை அலையான கோடுகளால் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கின்றன பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று காட்சி தருகிறது.
ஓவியங்கள் பழங்கால மக்கள்         
       இந்த குகை தளத்தை புனித இடமாகவும் சடங்குகள் செய்யும் இடமாகும் பயன்படுத்தி இருக்கலாம். இங்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் வரலாற்று பதிவாகும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாகவும் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

வெள்ளை வண்ண ஓவியங்கள்
         
        சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் பெருங்கற் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல அடுக்குகளாக வெள்ளை நிறத்தில் ஓவியங்களை வரைந்து உள்ளனர். கை கால்களை விரித்தபடி நிற்கும் மனித உருவங்கள், கோட்டுருவங்களாக வரையப்பட்டிருக்கின்றன. மின்னல் உருவாக்குறியீடு, இனக்குழுக் தலைவனின் உருவம், விலங்குகள், பெரிய மீன், சூரியன், சந்திரன் அடையாளம் தெரியாத இன்னும் பிற உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
   
வருசநாடு பாறை ஓவிங்கள் மேற்கண்ட ஓவியங்கள் வேட்டைச் சமூகம் என்பதையும் குழுவாக வாழ்ந்தனர் என்பதையும் தெரிவிக்கும்படியாக உள்ளது.  சூரியன், சந்திரன் போன்ற வடிவங்களை வரைந்து இருப்பது அவர்கள் இயற்கையை கடவுளாக கருதி வணங்கினர் என்பதற்கு சான்றாக கூறலாம்.  மீன் உருவம் அவர்களின் உணவில் மீன் முக்கிய பங்காற்றியிருப்பதையும் ஆற்றங்கரை வாழ்வை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும் குறிக்கிறது. குழுத் தலைவன் உருவம் தலைமை பங்கினை காட்டுகிறது.
          மொட்டைப்பாறை மலை கல்புடவு பாறை ஓவியங்கள் பழங்கால முதல் வரலாற்று காலம் வரை மனிதர்கள் வாழ்ந்த சமூக பண்பாட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கிய தொல்லியல் சான்றாகும். இவை பழங்குடிகளின் கலை வெளிப்பாடு,  இயற்கை வழிபாடு மற்றும் சமூக ஒற்றுமையை அறிய உதவுகின்றன. தென்னிந்திய பாறை ஓவிய வரிசையில் புதிதாக கண்டறியப்பட்ட வருசநாடு மொட்டைப்பாறை ஓவியங்களும் தனிச்சிறப்புடன் இடம்பெறும் என்பது உண்மை.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு, தேனி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »