திறனாய்வுக் கொள்கைகள்

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் ஏற்பக் காலந்தோறும் புதிய இலக்கியக் கோட்பாடுகள் இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. உலக. இலக்கியப் போக்கினைத் தழுவி அவற்றினை ஆராய்ந்த ‘ஏபிரம்’ என்ற அறிஞர் நான்கு விதமான இலக்கியக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுகிறார். அவையாவன.

1. அநுகரணக் கொள்கை

2. பயன்வழிக் கொள்கை

3. வெளிப்பாட்டுக் கொள்கை.

4. புறநிலைக் கொள்கை

இக்கோட்பாடுகளில் ஒன்று மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்தது. என்பது பொருளல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று மட்டுமே தலைமை பெற்றிருந்தது என்பர் ஜி. ஜான்சாமுவேல்

1.அநுகரணக் கொள்கை (MIMETIC THEORY)

அநுகரணம் என்பது ‘போலச் செய்தல்’ எனப்படும். எனவே இக்கொள்கையை, ‘போலச் செய்தல்’ என்னும் கொள்கை என்றும் அழைக்கின்றனர். இக் கொள்கையின்படி கலை, இலக்கியம் என்பன மனிதனால் நகல்களாகச் செய்யப்படுவன என்பதாம். உலகத்தின் அல்லது இயற்கையின் அல்லது மனித வாழ்வின் பிரதிபலிப்பு என்று கருதுகின்ற இலக்கியக் கோட்பாடுகளை இப்பிரிவில் அடக்கலாம். இக்கொள்கையைப் பின்பற்றியே அரிஸ்டாடில் ‘ஒரு நிகழ்வைப் பின்பற்றி அதுபோல அமைக்கப்பட்டதே நாடகம்’ என்கிறார். ஆனால் போலச் செய்வது என்பது புறஉலகக் காட்சிகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதன்று படைப்பாளன் தம் உள்ளத்தன்மைக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் புறப் பொருள்களையும் காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டுஅவை போன்ற ஒன்றைப் புதிதாகப் படைப்பதே ‘போலச் செய்தல்’ என்று திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர். இவ்வடிப்படையிலேயே டாக்டர் கைலாசபதி, ‘அரிஸ்டாடில்’ போன்றோர். அநுகரணம் என்பது கேவலம் வெறும் பிரதி செய்யும் முயற்சி எனக் கருதியவரல்லர், பிரபஞ்சத்தில் காண்பவற்றிலிருந்து வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு இன்றியமையாத உருவத்தை இலக்கியக் கர்த்தா அளிக்கின்றான் என்பதே அவர்கள் கருத்தாகும் எனச் சுட்டுகிறார். அது மேலோட்டமாகப் பார்க்கும் நிலையில் இலக்கியப் படைப்புத் தொடர்பான கொள்கையாகத் தோன்றலாம். ஆனால் நுணுகி நோக்கினால் இது இலக்கியத்தை மதிப்பீடு செய்யும் வரைவிலக்கணம் என்பது புலனாகும்.

திறனாய்வுக் கொள்கைகளில் அநுகரணக் கொள்கையே முதன்மையானது. தொடக்க நிலைப் படைப்புகளில் இத்திறனாய்வுக் கோட்பாடே தலைமை இடம் பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கவிதையைக் காட்டிலும் நாடகம், சிறுகதை, புதினம் ஆகியவற்றில் நாம் அறிந்தோ அறியாமலோ இக்கொள்கையைக் கொண்டே பாத்திரங்கள். நிகழ்ச்சிகள் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறோம்.

2.பயன்வழிக் கொள்கை (PRIGMATIC THEORY)

இக்கொள்கை ‘போலச் செய்தல்’ என்ற கொள்கையைத் தொடர்ந்து எழுந்தது. அறிவியற் கொள்கையுடன் பெரிதும் ஒப்புமை உடையது. இலக்கியத்தைப் படிக்கும் சுவைஞருக்கு ஏற்படும் பயன்பாட்டினை அளவுகோலாகக் கொண்டு அதன் இயல்புகளையும், பண்புகளையும் ஆராய்வதே இக்கொள்கையின் நோக்கமாகும். படைப்பிற்கும் கலைஞனுக்கும் இடையிலான உறவு அதிகமாக வலியுறுத்தப்பட்ட காலத்தில் இக்கொள்கை பிற கொள்கைகளைவிட ஆதிக்கம் பெற்றிருந்தது.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியரே இக்கொள்கையை வலியுறுத்தியுள்ளார் எனக் கருதலாம். நூற்படைப்புக் குறித்து, ‘இருமென மொழியால் விழுமியது நுவலல்’ என்கிறார். ஒரு நூல் சுவைஞனைக் கவரும் வகையில் இசையோடு இணைந்த மொழி நடையும். விழுமிய பொருளும் அமையும் வகையில் படைக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் மரபியலில் நூற்பாவினைக் கேட்போனுக்கு விளங்கும் வகையில் தெளிவாக அமைக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியருக்குப் பின் வந்த நன்னூலார் இலக்கியப் படைப்பு சுவைஞனை அடைய வேண்டியதன் இன்றியமையாமையின மிகவும் விளக்கமாகக் கூறுகிறார். ‘கருங்கச் சொல்லல்’ என்ற நூற்பாவில் சுவைஞனைக் கவரும் பத்து அழகுகளை விளக்கமாக விளக்கிக் காட்டுகிறார்.

மேலும் சுவைஞனை மயங்க வைக்கக் கூடாது; பயனற்றவற்றை விரித்துப் பேசக்கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை நலகுவது நூலின் பயன் என்ற பயன்வழிக் கொள்கை தண்டியலங்கார ஆசிரியராலும் பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.

எனவே இலக்கியத்தின் பயன் சுவைஞனது உள்ளத்தில் மகிழ்வுணர்வை ஊட்டுவதோடு அறிவுரை நல்கி, மனித சமுதாயத்தை நலவழிப்படுத்துவதே என்னும் அறநெறி சார்ந்த கோட்பாடும் இக்கால கட்டங்களில் வலுப்பெறுகின்றது எனக் குறிப்பிடுகிறார் ஜி. ஜான் சாமுவேல்.

3.வெளிப்பாட்டுக் கொள்கை : [EXPRESSIVE THEORY)

இக்கொள்கை உணர்ச்சிக் கொள்கை. அழகியற் கொள்கை என்பனவற்றோடு மிகுந்த உறவுடையது. படைப்பாளனின் கற்பனை, மனநிலை, ஆளுமை முதலியனவெல்லாம் தெளிவாக வெளிப்படுவதே இலக்கியத்தின் சிறப்பியல்பு என்பது இக்கொள்கையின் கருத்தாகும். பொருளைப் பாடி எடுத்துக் காட்டுவதே கவிதை என்னும் கொள்கைக்கு மாறாக கவிஞனின் அக உணர்ச்சிகளையும் அவன் மனத்தில் இடம்பெறும் உள்ளக்காட்சிகளையும் வெளிப்படுத்துவதே கவிதை என்கின்ற கோட்பாட்டை வெளிப்பாட்டுக் கொள்கையாளர் வலியுறுத்துகின்றனர்.

இக்கொள்கை 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆங்கில, இந்திய இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்ற போதிலும் தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலேயே இக்கொள்கை தோற்றம் பெற்றுவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியங்களில் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளையும், பக்தி உணர்வினையும், ஆற்றொழுக்காகப் படைப்பு நுட்பம் சிறக்கப் படைத்துக் காட்டியுள்ளதனை அவ்விலக்கிய வகையினைப் படிப்போர் பெரிதும் உணர்வர்.

4.புறநிலைக் கொள்கை : [OBJECTIVE THEORY)

இக்கொள்கை வெளிப்பாட்டுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுதலானதாகும். இக்கொள்கையானது எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி மட்டுமே அறிந்து தெளிய வேண்டும் என்ற குறிக்கோளினை உடையது. இங்குப் பொருள் என்று சொல்லும் பொழுது புலனால் அறியும் பொருள், நூல் நுதலிய பொருள் என்பவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் டாக்டர். க. கைலாசபதி.

இக்கொள்கையின்படி ‘கலைப்படைப்பைக் கலைஞன், சுவைஞன், உலகம் ஆகியவற்றோடு இணைத்துக் காணாமல் அதை தனித்த ஒன்றாகச் சில விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு புறச்சார்பின்றிக் கவிதையை ஆய்வதை உயிர்நாடியாகக் கொண்டது’ என்று கூறுகிறார் ஜி. ஜான் சாமுவேல். இக்கொள்கை 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மேனாடுகளில் அதிக அழுத்தம் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் இக்கொள்கை தற்காலத்தில் படிப்படியாக வலுப்பெற்று வருகின்றது. இவ்வாறு இத்துறையில் அமைந்த பல்வேறு கொள்கையினாலேயே இலக்கியத் திறனாய்வு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்பதனை நாம் உணர்ந்து தெளிதல் வேண்டும்.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையன..

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

6.இலக்கியத்திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here