🎯 அவள் எனும் பெரும் பொருண்மையில்
செங்கோல் ஆட்சி நடத்தும் மகாராணி!
🎯 தித்திக்கும் இடமெலாம்..
இவள் வாசம் முத்திரை!
🎯 திகட்டும் இடமெலாம்…
பொருட்போர் தலைமை ஏற்கும்
பட்டத்து ராணி!
🎯 எண்ணும் பொழுதெலாம்
எனைத் தொலைக்க வித்திட்ட
கள்வ நெஞ்சக்காரி!
🎯 பேசும் பொழுதெலாம்
பக்கம் பக்கமாய்
சொற்களை அடுக்கும் பேரகராதி!
🎯 ஆனால்!
அவளுக்கென எழுத முற்படும்போது…
சொற்கள் தராத கல்நெஞ்சக்காரி!
🎯 மனதினைச் சாலக் கவர்ந்திடும்
கவர்ச்சிப் பொருளல்ல இவள்!
நம்மைக் கவரும்
பொருளுக்கே பொருளூட்டும்
மாய வித்தைக்காரி அவள்!
🎯 இப்படி அவளைப்பற்றிப் பல..
எண்ணிலே அடங்காதவை…
எண்ணும் நோக்கம்
அவள் கொடுத்த வரம்..
🎯 வீழும் நோக்கம்!
அவளுக்கு அவளிட்ட சாபம்..!
ஏன்? முதுமையும் கூட
முதிர்ந்து விடும்!
முடி சூடிய மகாராணி
போர்க்களம் புகுந்துவிட்டால்!
🎯 இப்படி…
போர்புரியும் பேரரசி!
எனக்கு மட்டும்
ஏனோ பணம் கேட்கா மருத்துவச்சி
ஆகிவிட்டாள் அனுதினமும்!
🎯 ஆனால்!
உலகமே அவள் வசம் எனினும்,
அவளுக்கு ஒன்றுமட்டும் தெரியாது
என் நோய்க்கு, முதற்காரணம் அவளென்று!
🎯 அவள் எனும் பொருண்மையிலே
அனுதினமும் எமைத் தாலாட்டும்
என்னவள் – தமிழே!
என்னவள் – தாய்த்தமிழே!!
கவிதையின் ஆசிரியர்
கவிஞர் ச.நவநீதனா
இளங்கலை இரண்டாம் ஆண்டு,
வணிகவியல் துறை,
கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.