Saturday, July 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் ஆழ் மனப் பயணம்|முனைவர் நா.சாரதாமணி

ஆழ் மனப் பயணம்|முனைவர் நா.சாரதாமணி

ஆழ் மனப் பயணம் - முனைவர் நா.சாரதாமணி
        நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விருப்பத்துடன் செய்யுங்கள். எந்தச் செயலையும் சிறிதென்று எண்ண வேண்டாம். வீடு கட்டுவதற்கு ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் முக்கியமானவை. இலக்கியத்தில் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், ” பகை சிறிது என்று எண்ண வேண்டாம். பாம்பானது மிகச்சிறிதாக இருந்தாலும் குன்றுபோல் உள்ள பெரிய யானையையும் வீழ்த்தும் சக்தி வாய்ந்தது. பகையை அழித்துவிடுவதே சிறந்தது” என்று கூறியுள்ளனர். மனதில் நினைக்கும் எண்ணம் சிறிதாக இருந்தாலும் அது தீயஎண்ணமாக இருந்தால் மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிடும் வல்லமை கொண்டது. எனவே மனதிற்கு உள்ளே அனுப்பப்படும் எண்ணங்களைக் கவனமாக அனுப்புங்கள். அறியாமலும் பாதகமான எண்ணங்களை மனதின் உள்ளே அனுமதிக்க வேண்டாம்.

செயல்படுத்தும் சிந்தனைகள்
         
        மனதை தெளிவாகத் தெளிந்த ஓடைநீர் போல வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்களின் மனதில் இலட்சியத்திற்கான எண்ணங்களை உள்ளே விடுங்கள். அந்த எண்ணங்கள் சரியானவையா? அந்த இலக்கு நன்மையை பயக்குமா? எதாவது பாதகம் விளைத்துவிடுமா? என்று மனதை அசைபோட வையுங்கள். அந்த எண்ணம் சரியானது  அல்லது தவறானது என்று ஒரு முடிவிற்கு வர சில வாரங்கள் ஆகலாம். பல மாதங்களையும் எடுத்துக்கொள்ளட்டும். அடுத்து அந்த நல்ல எண்ணத்தை செயல்படுத்துவதற்கு என்ன தேவை? எவ்வளவு பொருள் தேவை? யாருடைய உதவி தேவை? எல்லாம் சரியாக நடக்குமா? நடக்கவில்லையென்றால், வேறுவழியில் எவ்வாறு செயல் படுத்துவது? தடுப்பதற்கென்றே சில மனிதர்கள் கிளம்பிவிடுவார்கள். அவர்களை எவ்வாறு சமாளிப்பது? சிலர் இவன் நம்மை விட பெரிய ஆளாக வந்துவிடுவானோ என்று தேவையான பொருட்களை தர மறுத்து விடுவார்கள். இன்று நாளை என்று காலத்தை நீட்டித்து இறுதியில் இல்லை என்று கூறிவிடுவார்கள். இம்மாதிரியான சூழலில் எவ்வாறு அணுக வேண்டும் போன்ற அனைத்தையும் சிந்தனை செய்ய வேண்டும். அவற்றுக்கான பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான மார்கத்தையும் கண்டறிய வேண்டும். அந்த மார்க்கம் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச்செல்வதாக இருக்க வேண்டும்.
         மனத்திற்குள்ளாக இத்தனை செயல்பாடுகளும் ஆண்டுகள் கணக்காகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மனதில் இத்தனை செயல்களும் நடந்தபின்னரே வெளிப்புறத்தில் தொடங்க வேண்டும், அப்போதுதான் எதைப்பார்த்தும் பின்வாங்காமல் “பார்த்து விடலாம் ஒரு கை ” என்று செயலை சவாலாகச் செய்ய முடியும்.

உங்கள் பலம் அறியுங்கள்
           
      மனிதன் தன் மூளையைக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம். அபாரமான சக்தியைக் கொண்டவனே மனிதன்.  அவனுடைய பலம் அவனுக்கு தெரிவதில்லை. பள்ளி பருவத்தில் மற்றவனை இவன் முதல்மதிப்பெண் பெற்று விடுவான் என்று நம்பும் மாணவன்  தன்னை நம்புவதில்லை. அவனை முதலாவதாக நினைத்திருந்தால் அவன் கைகள் புத்தகத்தை எடுக்கும். கண்கள் பாடங்களைப் படிக்கும். விரல்கள் தேர்வை எழுதும். முதல் மதிப்பெண்களைப் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். முதலில் அம்மாணவன் தமது மனதில் தேர்வை எழுதி முதல் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் வகுப்புத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிடுவான். மனதால் வெற்றிகொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பது என்றால் அவ்வளவு எளிதல்ல. பல இன்னல்களுக்கு இடையிலேயே போராடிச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

உங்கள் இலக்கு மனதிற்குள் பயணிக்கட்டும்
           
      ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் தன் தோட்டத்தில் பல தானியங்களைப் பயிர் செய்வான். அது விளைகின்ற பொழுது காட்டில் உள்ள மான்கள் போன்றவை வந்து மேய்ந்து விடும். அந்த உழவன் இதை தடுக்க யோசித்தான். பறந்த இந்த நிலத்தைச் சுற்றி மூங்கிலை வளர்த்து விட்டால் அது வேலியாகவும் இருக்கும். கூரைவீடும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற தேவைகளுக்கும் பயன்படும் என்று மூங்கில் விதைகளை வாங்கி நிலத்தை தோண்டி விதைத்து மணலை மூடி வைத்தான். ஒவ்வொரு நாளும் சென்று அதற்கு நீரை ஊற்றி வந்தான். ஒருவாரம் சென்றது. அதன் தளிர் இன்னும் மேலே வரவில்லை. உழவன் எருவிட்டு நீர் ஊற்றினான். ஒருமாதம் சென்றது அவ்விடத்தில் எந்தவித சலனமும் இல்லை. மூங்கில் முளைப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை. அந்த உழவன் மனம் தளரவில்லை. ஒவ்வொரு நாளும் நீரை ஊற்றிக்கொண்டே இருந்தான். ஓராண்டைக் கடந்தது ஆனாலும் முளை விடவில்லை. அந்த உழவனும் விடுவதாக இல்லை. நீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். அதற்கு தேவையானவற்றைச் சலைக்காமல் செய்தார். இரண்டு  மூன்று என்று ஆண்டுகள் கடந்து  சுமார் ஐந்தாவது ஆண்டில்தான் சிறிதாகத் தளிரானது. இளம்பசுமையாகப் பூமியை பிளந்துகொண்டு வெளியே எட்டிப்பார்த்தது. உழவனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆமாம்! இந்த மூங்கில் விதை ஐந்து ஆண்டுகளாக முளைக்காமல் மண்ணுக்குள் என்ன செய்தது? அந்த மூங்கில் எந்த உயரத்திற்கு வளருமோ அதன் பாதியளவுவரை வேரானது பூமியின் உள்ளே வளர்ந்து சென்றுள்ளது. அதற்கு தேவையான தண்ணீரை உறிஞ்சி மேலும்மேலும் தன்னை உறுதிப்படுத்தி கொண்டு பூமியின் மேல் உயரமாக வளரும்போது சாய்ந்துவிடாமல் தாங்குவதற்கு வேர் தன்னை திடமாகச் செய்து கொண்டது. பூமிக்கு மேலே வளரும் மூங்கிலுக்குத் தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை தருவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டுகள் மூங்கிலின் பயணம் வெளியே தெரியவில்லை. ஆனால் பூமிக்கு உள்ளே அது தன் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அது ஐந்தாண்டுகளை எடுத்துக்கொள்கிறது. அதன்பின்னர் பூமியின் வெளியே ஐந்து வாரங்களில் தொன்னூறு அடிவரை வளரக்கூடிய மூங்கில். ஓராண்டு முடியும்வரை அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அடுத்த ஆண்டுகளில் மிக வேகமாக அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெற்றது.
          கவனியுங்கள் மூங்கில் ஐந்தாண்டுகளாகப் பூமிக்குள் சென்று தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. இவ்வாறு உங்கள் இலக்கின் பயணத்தைப் பொறுமையாக மனதிற்குள் நிகழ்த்தி கவனமாகச் செயல்பட தயாராக உள்ளீர்களா? ஆம்! என்றால் உங்களின் பயணம் வெற்றியை அடையும் என்பது தின்னமே.

இன்னல்களை எதிர் கொள்ளுங்கள்
        
       சிறுகாப்பியங்களில் ஒன்று சூளாமணி. அதில் ஒரு பாடலில் கூறுவார்கள். காட்டிற்கு ஒருவன் வேட்டையாட சென்றான். அப்போது காட்டு யானை ஒன்று இவனை துரத்திக்கொண்டு வந்தது. வெகு தொலைவுக்கு ஓடி வந்தான். ஆனாலும் அந்த யானை அவனை விடுவதாக இல்லை. இதனிடமிருந்து  எவ்வாறு தப்புவது என்று அவன் வழியைத் தேடிக்கொண்டு ஓடினான். சிறிது தூரத்தில் கிணறு போன்று பள்ளம் தென்பட்டது. உடனே வேகமாக ஓடிச்சென்று அதனுள்ளே குதித்தான். குதித்தவன் மேல் நோக்கியே பார்த்தான். சில நொடிகளில் அந்த காட்டுயானை அங்கு வந்து எட்டிப்பார்த்தது. அங்கேயே நின்று கொண்டது. அதன்பிறகு அவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். பாம்பு ஒன்று படமெடுத்துத் தீண்டுவதற்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டது. இதை அப்போதே கவனித்த அவன் அருகில் தொங்கும் ஒரு வேரைப் பற்றிக்கொண்டு சரசர வென்று மேலே பாதிதூரம் வரை ஏறி  மேலேயும் செல்ல முடியாமல் கீழே இருக்க முடியாமல் பாதியில் தொங்கிக்கொண்டு இருந்தான். பின்னர் அவனுக்கு அருகே கைக்கு எட்டும் தொலைவில் தேனிக்கள் இல்லாமல் தேன் கூடு ஒன்று இருந்தது. அதை ஒரு கையால் அவிழ்த்து எடுத்து தின்று அதன் சுவையில் லயித்தான். கவனியுங்கள்! அவனுக்கு மேலேயும் கீழேயும்  அவனை வீழ்த்துவதற்கு இரண்டு சக்திகள் காத்திருக்கின்றன. ஆனாலும் அவற்றிலிருந்து தன்னை தவிர்த்துக் கொண்டு தேனின் இனிமையில் இன்பம் கண்டான். நீங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யும் போதும் இவ்வகையான இடர்பாடுகள் இழப்புகள் என்று வருவது இயல்பானதே. அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, சாதனை புரியும் மனப்பக்குவம் உங்களிடம் இருந்தால் வரலாறு படைப்பவர் நீங்கள்தான்.

சுய கணிப்புச் செய்யுங்கள்
          
        உங்களை நீங்களே கணிப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயலில் நிறை என்ன? குறை என்ன? நன்மை தீமை என்ன? என்று மற்றவர்கள் உங்களைப்பற்றி தவறுகள்  குறைகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நீங்களே கண்டறியுங்கள். இந்த வழிமுறையைப் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகள் செய்வதைக் காணலாம்.
    ஒரு பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி, உதாரணமாகக் காப்பித்தூள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று. தம்பொருளை மக்கள் வாங்குவதற்காக விளம்பரம் செய்தது. “ஆகா என்ன சுறுசுறுப்பு, என்ன சுவை என்னே மணம், காப்பினா இதுதான் காப்பி” என்று விளம்பரம் செய்து விட்டது. அதில் வேலை செய்யும் பணியாளர்கள் அந்தப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக வீடு வீடாக சென்று, பணம் பெற்றுக்கொள்ளுமலே காப்பித்தூளைக் கொடுத்து விட்டு “இதை நீங்கள் உபயோகித்து பாருங்கள் நன்றாக இருந்தால் பணம் கொடுங்கள். நன்றாக இல்லை என்றால் பணமே வேண்டாம்” என்றுக் கூறி அவர்களின் பொருளை வாங்கச்செய்து விடுவார்கள். பின்னர் சில வாரங்கள் கழித்து மீண்டும் வந்து  அது நன்றாக உள்ளதா? இல்லை என்றால் என்ன குறை உள்ளது? இன்னும் மக்கள் எதை எதிர் பார்க்கிறார்கள் போன்ற நிறை குறைகளை அறிந்து கொண்டு அவற்றை போக்குவதற்கான செயல்பாடுகளில் இறங்குவார்கள். மக்களிடம் அப்பொருள் அதிக அளவு விற்பனையாகும் வரை  விடமாட்டார்கள். அவர்களின் குறைகளை அவர்களே களைவார்கள்.

உங்கள் தேவையைக் கண்டறியுங்கள்
         
         உங்கள் செயல்களின் குறைகளை நீங்களே கண்டு தெளிந்து அவற்றையெல்லாம் நீக்கி விட்டு அதன்பின்னர் செயல்புரிவதில் தீவிரம் காட்டுங்கள். உங்களைப்பற்றி பெற்ற தாய்க்குக்கூட தெரியாது. உங்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் செய்யும் செயலில் ஆற்றலை செலுத்தி அதில் வெற்றி பெறுவதும் அது வேண்டாமென்று பாதியில் விட்டுவிடுவதும் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு இலக்கை வையுங்கள், அதனை அடைவதற்கு மனதில் பல சிந்தனைகளைச் செய்து பல ஆண்டுகளுக்குப்பின் எண்ணம் சரிதான் என்று தோன்றியவுடன் செயலைத் தொடங்குங்கள். அதற்காகச் செல்லும் போது எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவற்றை உடைத்தெறியுங்கள். மனத்தின்மையுடன் போராடுங்கள். மற்றவர்க்காக நீங்கள் செய்யும் செயல் என்று இந்தப் பிரபஞ்சத்திற்குப் புரியும்வரை போராடுங்கள்.  புரிந்து விட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »