Kurunthogaiyil Mullai Malar|Dr.N.Anitha|A.Prabakaran 

குறுந்தொகையில் முல்லை மலர் -முனைவர் நா.அனிதா

Abstract

         The Tamil people’s relationship with nature has been both intimate and enduring, shaping their cultural, emotional, and literary sensibilities since ancient times. Rooted in an ecosystem that provided essential needs such as food, clothing, and shelter, this connection fostered a tradition of deep reverence for the natural world. Tamil classical literature, beginning with the Tolkappiyam, reflects this bond through its unique classification of landscapes in Agam and Puram poetry, often symbolized by specific flowers, which marks a distinctive feature of Tamil poetics. Among these, the Mullai flower holds particular significance in Akam poetry, where it represents the rainy season, fidelity, and romantic longing. The flower serves not merely as a decorative element but as a literary device that evokes emotions of love, separation, and the passage of time. Both the hero and the heroine perceive the blooming and fragrance of Mullai as metaphors for emotional states and seasonal transitions. This study examines the representation of the Mullai flower in Kurunthogai, illustrating how its natural attributes are closely integrated into the emotional and cultural life of the Tamil people, while emphasizing its lasting literary and symbolic importance.


Key words: Kurunthogai, Mullai malar, Season, Blooming, Emotional status


“குறுந்தொகையில் முல்லை மலர்

ஆய்வுச் சுருக்கம்

       பண்டைய காலத்திலிருந்து தமிழர் வாழ்வியல் இயற்கையோடு நெருங்கிப் பொருந்தியதாகும். மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவை இயற்கையோடு சார்ந்து அமைய, அதன் மீது அன்பும் மரியாதையும் செலுத்தியது தமிழரது வாழ்வியல் மரபாகும். தமிழில் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியமும் , அகத்திணை  மற்றும் புறத்திணை பெயர்களில் மலர்களின் பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பது  தமிழின் தனித்துவமான பண்பாகும். சங்க இலக்கியங்களிலும் மலர்கள் பற்றிய செய்திகள் விரவி காணப்படுகிறது. அவ்வகையில் அக இலக்கியமாக விளங்கும்  குறுந்தொகையில்  கார்காலத்துடனும் காதல் வாழ்வுடனும் பின்னிப் பிணைந்துள்ளது  முல்லை மலர்.
முல்லை மலர் கற்பின் அடையாளமாகவும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் உவமைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கார்காலம் வந்ததையும், காதல் துயரங்களையும், நினைவுகளையும் இம்மலர் பிரதிபலிக்கிறது. தலைவனும், தலைவியும் முல்லை மலரின் அரும்புதலையும், மணம்தூற்றலையும் உணர்ச்சிப் பரிமாற்றமாகவும், காலச் சுழற்சிக்கான அடையாளமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாய்வு, குறுந்தொகையில் முல்லை மலரின் இயற்கை பண்பும், அதன் வழியாக தமிழரது அக வாழ்வியலும் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்ந்து, அதன் இலக்கிய முக்கியத்துவத்தையும் வாழ்வியல் ஒத்திசைவையும் விளக்குகிறது.


திறவுச் சொற்கள் : குறுந்தொகை , முல்லை மலர் , காலமும் பொழுதும் , அரும்புதல் , மன உணர்வுகள்


முன்னுரை

     நூற்றாண்டுகள் பல கடந்தும், சுவடியிலிருந்து கணினி வரை வளர்ச்சியடைந்தும், கவிதையின் வடிவங்களில் மாற்றங்கள் இருப்பினும், பொருண்மைகளில் சில உவமைகள் இன்றும் மாறவில்லை. பெண்ணை வர்ணிக்கும் போதெல்லாம், மலர்களோடு உவமிப்பது இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அவ்வகையில் சங்க இலக்கிய குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. அவற்றில் ஒன்றான முல்லை மலர் இன்றும் பெண்கள் விரும்பி சூடும் மலராக உள்ளது. அம்முல்லை மலர் சங்ககால அக வாழ்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.
சங்க கால மக்கள் நிலங்களை ஐந்திணைகளாகப் பிரித்து வாழ்ந்து வந்தனர் காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லைத் திணையாகக் கூறப்பட்டது. முல்லைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுதைக் குறிப்பிடும் போது ‘காரும் மாலையும் முல்லை’ (தொல்காப்பியம்.பொருளதிகாரம்:6) என்கிறது தொல்காப்பியம். இது திணைக்கு வகுக்கப்பட்டதாயினும்   முல்லை மலர், மலரும் காலமும் பொழுதும் அவையே ஆகும்.  இதனை ‘கார்நயந்து எய்தும் முல்லை’  (ஐங்குறுநூறு: 454) என்பதிலிருந்து அறியலாம்.


       சங்கப்பாடல்களைப் படிக்கும் போது முல்லை மலர் கற்பு காலத்தில் தலைவன் உடன் இருக்கும் போது சூடும் மலராக இருப்பதைக் காணமுடிகிறது. கார்காலத்தைத் தலைவனுக்கு அறிவித்து தலைவியினை நினைவுப்படுத்தும் மலராகவும், தலைவிக்கு தலைவன் வருகையை எதிர்நோக்கச்  செய்யும் மலராகவும் உள்ளது. முல்லை மலர் பற்றி டாக்டர் சி. பாலசுப்ரமணியன் தம்நூலில்,


முல்லைப்பூ வெண்மை நிறமும், நறுமணமும் நிறைந்த பூவாகும். மேலை நாட்டு இலக்கியங்களில் ‘லில்லி’ (lily) மலர் பெறும் சிறப்பினும்  மேலாக ஒருபடி தமிழ் இலக்கியங்களில் முல்லை மலர் பெற்று விளங்குகின்றது. கற்பின் சிறப்பினை விளக்கி முல்லைப்பூ சிறந்து நிற்கின்றது.(டாக்டர் சி. பாலசுப்ரணியன், மலர் காட்டும் வாழ்க்கை, ப. 4)

       என்று கூறுகிறார்.
கற்பு வாழ்க்கை மேற்கொண்டு தலைனுடன் இருக்கும் பெண்களே முல்லை மலரைச் சூடியுள்ளனர் (குறுந்தொகை :19). தலைவனும் மணம்புரிந்த போது முல்லை மலர் சூடியிருந்தப் பதிவையும் காணமுடிகிறது (குறுந்தொகை :193). சங்க இலக்கிய குறுந்தொகையுள் முல்லை மலர் பற்றிய பதிவுகளை ஆராய்ந்து அகவாழ்வில் முல்லைமலரின் நிலைக்களனும் உவமை நலனும் பற்றி விளக்குவதே இவ்வாய்வு ஆகும்.


இலக்கியங்களில் முல்லை மலர்

       வெண்மை நிறம் கொண்ட முல்லை மலர் கொடிப்பூ வகையைச் சேர்ந்தது. அதன் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் பொருந்தி முருக்கி வைத்தாற் போன்றும், கூர்மையான முனை கொண்டு இருக்கும். இதனை ‘புரிநெகிழ்  முல்லை’ (கலித்தொகை:61) என்றும்  ‘முல்லை வைநுனை’ (அகநானூறு:4) என்றும் பாடப்பட்டுள்ளதால் அறிய முடிகிறது. சிறிய வடிவம் கொண்டு நறுமணம் மிக உடையது என்பது, ‘சிறுவீ முல்லை பெரிதுகமழ் அலரி’ (நற்றினை :361) என்ற வரிகளில் புலனாகும். நறுமணம் மிக்க முல்லை மலர் வழிபாட்டு மலராகவும் உள்ளது இதனை,


—– —- ——நெல்லொடு

நாழிகொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரிதூஉய்க்கை தொழுது’   (முல்லைப்பாட்டு 8- 10)

         என்ற பாடலடிகள் சித்தரிக்கும். மேலும் புறநானூற்று பாடல்களில் முல்லையின் பெயரில் பயின்று வரும் புறத்துறைகள் அகத்திணையிலுள்ள முல்லைப் பாடல்களுடன் நெருங்கிய ஒற்றுமையுடன் காணப்படுகிறது என்பதை,


அகப்பொருளில் முல்லை மணத்தில் முடிந்தது. கற்பின் குறியீடாகி  இல்லறம் போற்றப்பட்டது. வாழ்வு பெருமையுற்றது. அகவாழ்வின் பெருமைக்குக் காரணமான முல்லையின் பண்புகள் மக்கள் மனதில் ஆழவேரூன்ற அதன் காரணமாகப் புறத்திணையுள்ளும் முல்லைப் பெயரில் துறைகள் அமைக்கப்பட்டன என்று சொல்லுதலே பொருத்தமாகும்.   (வி.சி. சசிவல்லி, முல்லை, பக்: 30,31)

       மேற்கண்ட கூற்றின் வழி அறிய முடிகிறது. நிலத்தையும், ஒழுக்கத்தையும் குறிக்கும் முல்லை மலர்  குறுந்தொகையில் 14 இடங்களில் பல்வேறு வர்ணனைகள்,  உவமை நலம் ஏற்று கற்பு வாழ்வினை  நம் கண்முன் நிறுத்துகின்றது.

நகைக்கும் முல்லை
     

         கார்காலத்தில் பூக்கும் மலரான முல்லை, கொடியில் அரும்பு தோன்றும் காட்சி கார்காலத்தின் வரவை அறிவிப்பது மட்டுமல்லாமல், கார்காலமே முல்லை அரும்பாகிய பற்களைக் கொண்டு சிரிப்பது போன்று இருப்பதாக,


– –    – –    பூங்கொடி முல்லைத்

தொகு முகை இலங்கு எயிறு ஆக

நகுமே தோழி! நறுந்தண் காரே       (குறுந்தொகை:126)       

     என்று தலைவி தோழியிடம் தலைவன் காலம் நீட்டித்த நிலையில் கூறுகின்றாள். இதேப்போல் குறுந்தொகை 186-வது பாடலிலும் தலைவன் வாராமையால் தனித்திருக்கும் தலைவி தன்னை நோக்கி முல்லை நகுவதாகத் தோழியிடம் கூறுகின்றாள்.
கார்காலத்தில் முல்லை அரும்புதல் முல்லையின் முறுவலாய் தலைவனுக்குத் தோன்றுகிறது. தலைவன் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடலில்,


– –    – –    – –    – –    – –   

முல்லை! வாழியோ, முல்லை! – நீநின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை;

நகுவை போலக் காட்டல்

தகுமோ ,  மற்று – இது தமியோர் மாட்டே? (குறுந்தொகை :162)

      என்று தன்னைப் பேணும் மகளிர்க்குப் பற்றுக்கோடாக இல்லாதவரைப் பார்த்து முல்லை எள்ளி நகையாடுவதாகக் கூறுகின்றான்.
இப்பாடல்களில் தலைவனும் தலைவியும் இயற்கையாகக் கார்காலத்தில் முல்லை அரும்புவதைக் கண்டு, தங்களைப் பார்த்து நகைப்பதாக முல்லை மலரைக் கூறுவது  நம் ரசனைக்கு விருந்தாகிறது.
முல்லை மலர் கார்காலத்தில் பூக்கும் காட்சியைக் காட்டுப் பூனை தன் பற்களைக் காட்டிச் சிரிப்பதுப் போன்று இருப்பதாகக் குறுந்தொகையின் இரண்டு பாடல்களில் பாடப்பட்டுள்ளது. பல நாட்கள் பெய்த மழையினால் பூத்த மெல்லிய சிறிய அரும்புகள், காட்டுப் பூனை சிரித்தாற்போலக் காட்சியளிக்கும். (குறுந்தொகை: 220)


– –    – –    ஒளிவிடு  பல்மலர்

வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி (குறுந்தொகை:240)

      இப்பாடலில் முல்லைப்பூ வெருகுப்பூனையின் பற்களைப் போல் தோன்றி, சிரித்து அச்சுறுத்துவதாய் இருக்கின்றது என்கிறாள் தலைவி.


பருவம் உணர்த்தும் முல்லை

       கார்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மலரும் மலர் முல்லை. அவ்வாறு முல்லை அரும்புவதும், போதாய் மலர்வதும் என ஒவ்வொரு நிலையும் கார்காலத்தின் வருகையையும், முதிர்வையும் உணர்த்தும் அடையாளமாய் பாடல்களில் காணப்படுகிறது. அவ்வகையில்


– –    – –     – –   புறவில்

பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்

செல்வான் செவ்வி கொண்டன்று.

உய்யேன் போல்வல் தோழியானே         (குறுந்தொகை:108)
         

       இப்பாடலில் முல்லையின் வெண்ணிற மலர்கள் விண்மீன்களாகவும், செம்புலம், செக்கர் வானமாகவும் தோன்றி, எல்லாம் கார்ப்பருவத்தின் காட்சியாகவே தனக்குத் தெரிவதாகத் தலைவி நினைக்கின்றாள். இவ்வாறே சூடப்பெறாத முல்லை துன்பத்திற்கு ஏதுவாயிற்று என்றும், தலைவனைப் பிரிந்த தலைவிக்கு எல்லாப் பொழுதும் மாலைப் பொழுதாகவேத் தோன்றியது என்றும் புலவர் பாடுகின்றனர் (குறுந்தொகை:234) மேலும் கோவலர் அணிந்து வந்த கண்ணியில் (மாலையில்) உள்ள முல்லை மலர்கள் கார்கால வருகையை உணர்த்தி நிற்கின்றது (குறுந்தொகை:358)


மணம் வீசும் முல்லை
         

      முல்லை மலரின் நறுமணமானது நினைவூட்டும் இடங்களைப் பற்றி குறுந்தொகையில் நான்கு பாடல்களில் பேசப்படுகின்றன. தலைவி ஊடல் கொண்ட இடத்து தலைவன் தன் நெஞ்சிடம், வீட்டில் வளர்க்கப்படும் முல்லைக் கொடியானது மனையின் மரத்தின் மேல் மலர்ந்து நாற்றம் வீசும். ஆனால் பயனற்று இருக்கும். அதுபோல தலைவியின் கூந்தலும் முல்லை மலரின் நாற்றம் வீசும், அது தன்னால் நுகரப்படாமல் அழகு பயனற்றுப் போகிறது என்று தலைவன் கூறுவதாகப் பரணர் பாடலில் (குறுந்தொகை:19) உள்ளது. இதேப்போல் தலைவிக் கூற்றாக அமைந்த அரிசில் கிழார் பாடல்,


மணந்தனன்மன் எம்  தோளே;

இன்றும், முல்லை முகை நாறும்மே           (குறுந்தொகை:193)

       என்று தலைவன் சென்ற திங்களில் தலைவியை மணந்தானாயினும் அவன் சூடிவந்த முல்லையின் மணம் இன்றும் தன் தோள்களில் வீசுவதாகத் தலைவி கூறுதல், தலைவனின் அன்பு மாறாப் பண்பினை விளக்குவதாக உள்ளது.
மேலும் கார்காலத்தில் முல்லை மலர்ந்து மணம் பரப்பிய போது, வினைமுற்றி மீளும் தலைவனுக்கும் முல்லையின் மணம் வீசும் நுதலுடைய தலைவியின் நினைவும் (குறுந்தொகை: 323); தலைவிக்கு முல்லை மலர்ந்து மணம் வீச தலைவன் வாராமையால் இது கார்பருவம் தானா என்ற ஐயமும் எழுகின்றது (குறுந்தொகை: 382). இவ்வாறு தலைவிக்கும் தலைவனுக்கும் முல்லை மலர் மலர்ந்து மணம் வீசி ஓருவரை ஒருவர் நினைவூட்டுவதாகக் கூறப்பட்டுள்ளமைக் கற்பு வாழ்வில் முல்லை பெறும் இடத்தை எண்ணத்தோன்றுகிறது.


முல்லையில் மலர்ந்த உவமை

      தலைவியின் மேனி நலனும் மென்மை தன்மையும் மலர்களுடன் ஒப்பிடுவது மரபாய் நிற்கின்றது. அவ்வகையில் ‘எதிர்முகைப் பசுவீ முல்லை’ (குறுந்தொகை: 62) என்று தலைவயின் மேனி தளிரைக் காட்டிலும் மென்மையும், நிறமும் உடையது என்கிறான், மற்றமொரு பாடலில் தலைவன் தன் நெஞ்சிற்கு, செலவுக் குறிப்பு அறிந்து தலைவியின் வேறுபட்ட நலனைக் கூறும் போது,


புலம் தேர் யானைக் கொட்டிடை ஒழிந்த

சிறவீ முல்லைக் கொம்பின் தாஅய்,

இகழ் அழிந்து ஊறும் கண்பனி . . .          (குறுந்தொகை: 348)

        என்ற பாடலில் யானையின் கொம்புகளுக்கு இடையே அதனால் உண்ணப்பெற்று எஞ்சிய முல்லையின் கொடிகள் பின்னி, மலர்கள் உதிர்ந்து கிடத்தல், தலைவியின் அணிகள் அணிந்த மார்பில் கண்ணீர்த்துளிகள் உதிர்ந்து கிடந்தமைப் போன்றதாக உவமிக்கப்பட்டது. தலைவியின் அணிகலன் முல்லைக்கொடிக்கும், உதிர்ந்த மலர்கள் தலைவியின் மார்பில் உதிர்ந்த கண்ணீர்த் துளிகளுக்கும் உவமமாயின. இவ்வாறு முல்லை மலர் தலைவியின் மேனி நலனிற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.


முடிவுரை
         

      முல்லை மலர் கற்பின் அடையாளமாக உள்ளது. சூடும் மலையாக மட்டும் அல்லாமல் அக உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், அடையாளச் சின்னமாகவும் உள்ளது. கார்காலத்தின் வரவை அறிவித்து அரும்பும் முல்லை மலர்; தலைவனையும் தலைவியையும் பார்த்து சிரிக்கும் முல்லை மலர்; காட்டுப்பூனையின் பற்கள் போன்று காட்சியளிக்கும் முல்லை மலர்; தன் மணம் பரப்பி தலைவிக்கும் தலைவனுக்கும் துணையை நினைவூட்டும் முல்லை மலர்; தலைவியின் மேனி நலனுக்கு உவமையாக்கப்பட்ட முல்லை மலர், என இவ்வாறு குறுந்தொகையுள் முல்லை மலர் கற்பு வாழ்வியலோடு இணைந்து இருப்பதை அறிய முடிகிறது. தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டமைக்கு முல்லை மலர் பற்றிய பதிவுகளும் சான்றாக அமைகின்றது. முல்லை மலர் சூடும் பொருளாக அழகு நலனக்காக மட்டுமல்லாமல் அழகியலைத் தாண்டி வாழ்வியலோடு இணைந்துள்ளது.


துணைநூற் பட்டியல்

1.கணேசையர், சி.(பதிப்பாசிரியர்.), தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினாக்கினியர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு.,2007.


2.சசிவல்லி,வி.சி.,முல்லை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு.,1998.


3.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்., சென்னை, மூன்றாம் அச்சு.,2007.


4.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம்  அச்சு.,2007.


5.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு.,2007.


6.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்.,கு.வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்),
நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு,2007.


7.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்.,கு.வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்),
பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு ,2007.


8.பாலசுப்பிரமணியன்.,சி.,மலர் காட்டும் வாழ்க்கை, நறுமலர்ப்பதிப்பகம்., சென்னை, இரண்டாம் பதிப்பு .,1982.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்கள்

1.முனைவர் நா.அனிதா
 

உதவிப்பேராசிரியர் 

தமிழ்த்துறை
 

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
 

திருச்சி-621105


2.ஆ.பிரபாகரன்

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை


நேரு தொழில் நுட்பக் கல்லூரி


கோயம்புத்தூர் – 641105.

 

Leave a Reply