Thursday, July 16, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Land, Memory, and Ritual: A Study on Decolonial Playwriting Strategies in the...

Land, Memory, and Ritual: A Study on Decolonial Playwriting Strategies in the Modern Theatre of Eastern Sri Lanka

நிலம், நினைவு மற்றும் சடங்கு: கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க
நாடக எழுத்துருவாக்க உத்திகள் பற்றிய ஆய்வு
ஆய்வுச் சுருக்கம்
         
     இவ்வாய்வு கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்க உத்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. குறிப்பாக, நிலம் சார்ந்த பிணைப்பு, பண்பாட்டு நினைவுகள் மற்றும் மரபுவழிச் சடங்குகள் எவ்வாறு காலனிய மேலாதிக்கச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, ஒரு தன்னாட்சிமிக்க கலை வெளிப்பாட்டை உருவாக்குகின்றன என்பதை இது பகுப்பாய்வு செய்கிறது. கிழக்கிலங்கையின் தனித்துவமான கூத்து மரபுகள் மற்றும் சடங்கியல் கூறுகள் நவீன நாடகப் பிரதிகளில் எவ்வாறு மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன என்பது குறித்து இவ்வாய்வு விரிவாக விளக்குகிறது.

1. தோற்றுவாய்
         
    காலனிய ஆதிக்கம் என்பது நிலப்பரப்பைக் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாமல், ஒரு இனத்தின் சிந்தனை முறை, மொழி மற்றும் கலை வடிவங்களையும் சிதைக்கிறது. ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில், குறிப்பாகக் கிழக்கிலங்கையில், காலனியக் கல்வியும் மேலைநாட்டு நாடக மரபுகளும் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்தன. இருப்பினும், கடந்த சில பத்தாண்டுகளாக, மண்ணின் மணமும் மரபுச் செழுமையும் கொண்ட காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2. நிலம்: வாழ்விடமும் போராட்டக் களமும்
         
      நாடக எழுத்துருவாக்கத்தில் நிலம் என்பது வெறும் பின்புலம் மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு அடையாளம். கிழக்கிலங்கை நாடகங்களில் நிலம் பின்வரும் நிலைகளில் கையாளப்படுகிறது:

மண்ணின் மணம்: நாடக உரையாடல்களில் கிழக்கிலங்கைத் தமிழ் வட்டார வழக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் காலனிய மொழி மேலாதிக்கம் தகர்க்கப்படுகிறது.

நில மீட்பு: போரினாலும் இடப்பெயர்வினாலும் பறிபோன நிலங்கள் குறித்த நினைவுகள் நாடகப் பிரதிகளில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

3. நினைவு: வரலாற்றை மீட்டெடுத்தல்
     காலனிய வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்களின் வரலாறாகவே இருக்கிறது. காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கம் நினைவு என்பதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.

வாய்மொழி வரலாறு: மக்களிடையே புழங்கும் கதைகள், பாடல்கள் மற்றும் மூத்தோர் வழியான நினைவுகள் நாடகப் பிரதிகளின் உள்ளடக்கமாகின்றன.
மறக்கப்பட்ட மாந்தர்கள்: அதிகாரபூர்வ வரலாற்றில் இடம்பெறாத விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை நாடக எழுத்துக்கள் மையப்படுத்துகின்றன.

முக்கியச் சொற்கள்: காலனிய நீக்கம், நவீன அரங்கு, கிழக்கிலங்கை, நாடக எழுத்துருவாக்கம், சடங்கு, பண்பாட்டு நினைவு.

ஆய்வு அறிமுகம்

காலனிய நீக்க எழுத்துருவாக்கம்: வரைவிலக்கணமும் வரலாற்றுப் பின்னணியும்
காலனிய நீக்கக் கோட்பாடு: ஆழமான கருத்தியல் விரிவு

1. நவீனத்துவமும் காலனியத் தன்மையும்
         
காலனிய நீக்கம் என்பது வெறும் காலனிய எதிர்ப்பு அல்ல. காலனிய எதிர்ப்பு என்பது பெரும்பாலும் ஒரு நாட்டின் எல்லைகளிலிருந்து ஆதிக்க சக்திகளை வெளியேற்றுவதோடு நின்றுவிடுகிறது. ஆனால், அனிபல் கிஜானோ (Quijano, 2000) விளக்குவது போல, காலனிய ஆட்சி முடிந்த பின்னரும் எஞ்சியிருக்கும் அதிகாரப் படிநிலைகளே காலனியத் தன்மை என அழைக்கப்படுகின்றன. வால்டர் மிக்னோலோ (Mignolo, 2011) தனது ஆய்வுகளில், நவீனத்துவம் என்பது காலனியத் தன்மையிலிருந்து பிரிக்க முடியாதது என்று வாதிடுகிறார். மேலைநாடுகள் தங்களை நாகரிகமடைந்தவர்கள் என்றும், மற்றவர்களை பின்தங்கியவர்கள் என்றும் தரம் பிரித்ததே இந்த நவீனத்துவத்தின் இருண்ட பக்கமாகும். அரங்கக் கலையில், மேலைநாட்டு யதார்த்தவாதம்  மட்டுமே உயர்ந்தது என்ற பிம்பம் இதன் மூலமே கட்டமைக்கப்பட்டது. இதனைத் தகர்ப்பதே காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

2.அகஸ்டோ போயல்: ஒடுக்கப்பட்டோரின் அரங்கு 
         
     காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கத்திற்குத் தத்துவார்த்த ரீதியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர் பிரேஸில் நாட்டு அறிஞரான அகஸ்டோ போல். அவர் தனது ஒடுக்கப்பட்டோரின் அரங்கு (1979) எனும் நூலில், மேலைநாட்டு அரிஸ்டாட்டிலிய நாடக முறையை விமர்சிக்கிறார்.

அதிகார நீக்கம்: அரிஸ்டாட்டிலின் நாடக முறை பார்வையாளர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை வெறும் ஏற்பாளர்களாக மாற்றுகிறது. இது ஒரு வகையான சிந்தனை காலனியாக்கம் என்று போயல் கருதுகிறார்.
பார்வையாளரே நடிகர்: போயல் நாடக எழுத்துருவாக்கத்தில் பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக மாற்றுகிறார். இது மேலைநாட்டு நான்காவது சுவர் என்ற கோட்பாட்டைத் தகர்த்து, கலையை மக்களுக்கான அதிகாரமளிக்கும் கருவியாக மாற்றியது (Boal, 1979).

3. நுகுகி வா தியாங்கோ: மொழி மற்றும் பண்பாட்டு மீட்பு
         
       ஆப்பிரிக்க அறிஞரான நுகுகி வா தியாங்கோ (Thiong’o, 1986), காலனிய நீக்கம் என்பது மனதிலிருந்து தொடங்க வேண்டும் என்கிறார். அவரது ‘Decolonising the Mind’ நூல் முன்வைக்கும் முக்கியமான வாதங்கள்:

மொழியின் அரசியல்: ஒரு சமூகம் தனது தாய்மொழியில் கலை உருவாக்கம் செய்யும்போது, அது தனது வரலாற்றையும் உலகக் கண்ணோட்டத்தையும் பாதுகாக்கிறது. ஆங்கிலம் அல்லது ஐரோப்பிய மொழிகளில் நாடகங்களை எழுதுவது என்பது, காலனியவாதிகளின் கண்களால் உலகைப் பார்ப்பதாகும்.
மண்ணின் அழகியல்: தியாங்கோ மேலைநாட்டு நாடக அரங்குகளைத் தவிர்த்து, திறந்தவெளிகளில், மக்களின் சடங்குகளையும் கூத்துக்களையும் மையப்படுத்தி நாடகங்களை உருவாக்கினார். இது கிழக்கிலங்கை போன்ற செழுமையான கூத்து மரபுகளைக் கொண்ட சூழலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கோட்பாடாகும்.

4. நேர்க்கோட்டு கதைசொல்லலுக்கு மாற்றான வடிவங்கள்
      காலனிய நீக்க நாடக எழுத்துருவாக்கம் மேலைநாட்டு ‘தொடக்க நடு முடிவு’ என்ற நேர்க்கோட்டு அமைப்பை மறுக்கிறது.

வட்ட வடிவக் கதைசொல்லல்: கிழக்கின் சடங்குகளிலும் கூத்துக்களிலும் காலம் என்பது நேர்க்கோடாக அமையாமல், ஒரு சுழற்சி முறையாக அல்லது வட்ட வடிவாக அமைகிறது.

பன்முகக் குரல்கள்: மேலைநாட்டு நாடகங்கள் ஒரு நாயகன் அல்லது தனிமனிதனை மையப்படுத்துகின்றன. ஆனால் காலனிய நீக்கப் பிரதிகள் சமூகத்தையே மையப்படுத்துகின்றன. இதில் குழுசார் எழுத்துருவாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

5. அறிதலியல் கீழ்ப்படியாமை 
         
       காலனிய நீக்க எழுத்துருவாக்கம் என்பது ஒரு அறிதலியல் கீழ்ப்படியாமை ஆகும் (Mignolo, 2009). அதாவது, மேலைநாட்டு அழகியல் விதிகளை அப்படியே ஏற்க மறுப்பதாகும். கிழக்கிலங்கை அரங்கைப் பொறுத்தவரை, கூத்துக்களில் காணப்படும் கோமாளி பாத்திரம் அல்லது அண்ணாவியார் பாத்திரம் என்பது வெறும் கலைப் பாத்திரங்கள் அல்ல, அவை அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும், சமூகத்தோடு உரையாடும் காலனிய நீக்கக் கூறுகள். இந்த உத்திகளை நவீன நாடக எழுத்தில் கொண்டு வரும்போது, அது உலகளாவிய அளவில் ஈழத்து அரங்கிற்கு ஒரு தனித்துவமான தத்துவ அடையாளத்தை வழங்குகிறது.

நிலம், நினைவு மற்றும் சடங்கு: கருத்தியல் விளக்கம்
         
       இவ்வாய்வின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் நிலம், நினைவு மற்றும் சடங்கு ஆகியவற்றை காலனிய நீக்க நோக்கில் பின்வருமாறு வரையறுக்கலாம்:

நிலம்: காலனியச் சிந்தனையில் நிலம் என்பது சுரண்டுவதற்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், காலனிய நீக்கப் பார்வையில் நிலம் என்பது வாழ்விட அரசியலோடு தொடர்புடையது. பிரான்ட்ஸ் ஃபேன்ன் (Fanon, 1961) தனது ‘The Wretched of the Earth’ நூலில் குறிப்பிடுவது போல, காலனிய நீக்கம் என்பது நிலத்தை மீட்டெடுப்பதிலிருந்து தொடங்குகிறது. நாடகப் பிரதிகளில் நிலம் ஒரு கதாபாத்திரமாகவே உருப்பெற்று, சமூகத்தின் அடையாளம் மற்றும் உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாறுகிறது.

நினைவு: ஆதிக்க சக்திகள் ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தழிக்கும் போது, ‘நினைவு கூர்தல்’ என்பது ஒரு கலகமாக மாறுகிறது. இது அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்றாக, மக்களின் வாய்மொழி கதைகள் மற்றும் கூட்டு நினைவுகளை நாடக எழுத்தின் ஊடாக ஆவணப்படுத்துவதாகும். எட்வர்ட் சையத் (Said, 1978) தனது ‘Orientalism’  நூலில் விளக்குவது போல, காலனியவாதிகள் கட்டமைத்த கீழ்த்திசை குறித்த போலிப் பிம்பங்களை உடைக்கத் துல்லியமான பண்பாட்டு நினைவுகள் அவசியமாகின்றன.

சடங்கு: மேலைநாட்டு நாடகம் என்பது பெரும்பாலும் அறிவுச் சார்ந்த விவாதமாக இருக்கும்போது, சடங்கு என்பது உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பங்கேற்பாகும். சடங்குகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் லிமினாலிட்டி எனும் இடைநிலைப் பண்பைக் கொண்டவை (Turner, 1969). கிழக்கிலங்கையின் கூத்து மற்றும் வழிபாட்டுச் சடங்குகள் வெறும் மதச் சடங்குகள் அல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டு உணர்வைத் தாங்கி நிற்கும் கலை ஊடகங்கள். நாடக எழுத்தில் இவற்றை இணைப்பது மேலைநாட்டு நாடக விதிகளுக்கு விடப்படும் சவாலாகும்.

கிழக்கிலங்கை நவீன அரங்கின் அறிவுப்புலப் பின்னணி: மரபு மீட்டுருவாக்கத்திலிருந்து மீளுருவாக்கம் நோக்கி
         
      கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்கச் சிந்தனைகள் முகிழ்வதற்கு, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இரண்டு விதமான கருத்தியல் நகர்வுகள் அடிப்படையாக அமைகின்றன. ஒன்று மரபைப் பல்கலைக்கழகத் தளத்தில் நிலைநிறுத்திய ‘மீட்டுருவாக்கம்’, மற்றையது மரபிற்குள்ளேயே சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ‘மீளுருவாக்கம்’.

1.மரபு மீட்டுருவாக்கம்: வித்தியானந்தன், சிவத்தம்பி மற்றும் மௌனகுரு
         
       முதற்கட்டமாக, பேராசிரியர் சு. வித்தியானந்தன் (1962) அவர்கள் கூத்து மரபிற்குப் பல்கலைக்கழக மட்டத்தில் அறிவுசார் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கா. சிவத்தம்பி (1981) அரங்கவியலைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்து, தமிழ் அரங்கு ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நிறுவினார். பேராசிரியர் சி. மௌனகுரு (1998) அவர்கள் கூத்தின் உடல் மொழியை நவீன மேடைக்கு ஏற்றவாறு செழுமைப்படுத்தினார். இவர்கள் ‘காலனிய நீக்கம்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தாவிட்டாலும், மேலைநாட்டு அழகியல் மேலாதிக்கத்திற்கு மாற்றாக மண்ணின் கலை வடிவங்களை முன்னிறுத்தி, ஓர் அறிவுத் தன்னாட்சிக்கு அடித்தளமிட்டனர்.

2.பேராசிரியர் சி. ஜெயசங்கர்: கூத்து மீளுருவாக்கம் 
         
       ஈழத்து அரங்கியல் சூழலில் ‘மீளுருவாக்கம்’ என்ற சொல்லாடலை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அதனை ஒரு செயல்வாதமாக முன்னெடுத்தவர் பேராசிரியர் சி. ஜெயசங்கர் ஆவார். இவரது அணுகுமுறை என்பது மரபைப் பாதுகாப்பதுடன் நின்றுவிடாமல், மரபு வழிப்பட்ட கலைகளுக்குள் உறைந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களை அகற்றி, அவற்றைக் காலத்திற்கேற்ப மக்கள் மயப்படுத்துவதாகும்.  பிரதி மாற்றமும் சமூக விடுதலையும்: ஜெயசங்கர் அவர்கள் பாரம்பரியக் கூத்துக்களின் மாறாத இயல்புகளைப் (வடிவம், இசை, ஆடல்) பேணிக்கொண்டே, அதன் பிரதிகளில் காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த சாதிய இழிவுகள் மற்றும் பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளை நீக்கிப் புதிய எழுத்துருக்களை உருவாக்கினார்.

கலைஞர்களின் தன்னாட்சி: கூத்தை வெறும் மேடை அலங்காரமாகப் பார்க்காமல், கூத்துச் சமூகத்தவர்களையே (கூத்தர்) கொண்டு இம்மாற்றங்களை நிகழ்த்தினார். இது காலனிய நீக்கக் கோட்பாடு வலியுறுத்தும் ‘சுய-பிரதிநிதித்துவம்’ என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.

பிற்போக்குத்தனங்களைச் சாடுதல்: கூத்து மீளுருவாக்கம் என்பது மரபை வழிபடுவதல்ல, மாறாக மரபில் உள்ள சனநாயகப் பண்புகளைக் கண்டறிந்து, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்குக் கலையை ஒரு விடுதலைக் கருவியாக மாற்றுவதாகும் (ஜெயசங்கர், 2005).

கிழக்கிலங்கை அரங்கில் காலனிய நீக்கக் கட்டமைப்பு
      கிழக்கிலங்கை நவீன அரங்கில் காலனிய நீக்க எழுத்துருவாக்கம் என்பது வெறும் மேலைநாட்டு நாடகங்களின் மொழிபெயர்ப்பு அல்ல, அது மண்ணின் அழகியலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு தன்னாட்சிப் பயில்முறையாகும். இதனைப் பின்வரும் மூன்று முதன்மை வழிமுறைகள் ஊடாக விளக்கலாம்:

1.வட்டார மொழி மீட்பு 
காலனியக் கல்வி முறையானது ஒரு தரப்படுத்தப்பட்ட மொழியையே அறிவுத்தளத்திற்கு உரியதாகக் கட்டமைத்தது. இது ஈழத்துச் சூழலில் பேச்சுத் தமிழை விடுத்து, எழுத்துத் தமிழை அல்லது மேலைநாட்டுத் தழுவல் மொழியை நாடக மேடைகளில் திணித்தது. காலனிய நீக்க எழுத்துருவாக்கம் இந்த மொழி மேலாதிக்கத்தைத் தகர்க்கிறது.
பேச்சு மொழியின் அரசியல்: கிழக்கிலங்கையின் (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) தனித்துவமான வட்டாரப் பேச்சு வழக்குகள் நாடகப் பிரதிகளில் முதன்மை பெறுகின்றன. இது மேலைநாட்டு மொழித் தூய்மைவாதத்தை உடைப்பதுடன், அந்தந்த நிலப்பரப்பின் ஆன்மாவை மேடையில் கொண்டு வருகிறது.

அதிகார நீக்கம்: செந்தமிழ் பேசும் கதாபாத்திரம் அறிவாளியாகவும், வட்டார வழக்கு பேசும் கதாபாத்திரம் கோமாளியாகவும் காட்டப்பட்ட காலனியச் சித்தரிப்புகளை மாற்றி, வட்டார மொழியை அதிகாரத்தின் மொழியாகவும், அறிவுத் தளத்தின் மொழியாகவும் இவ்வெழுத்துருக்கள் முன்னிறுத்துகின்றன.

2.கூத்து உத்திகளின் நவீனமாக்கம்
        வடமோடி, தென்மோடி மற்றும் வசந்தன் கூத்துக்களின் ஆடல், பாடல் மற்றும் இசை வடிவங்கள் காலனிய நீக்க அரங்கின் முதுகெலும்பாக அமைகின்றன. இவை வெறும் மரபுச் சின்னங்களாகப் பார்க்கப்படாமல், நவீன காலப் பிரச்சினைகளைப் பேசும் வீரியமிக்க அரங்க மொழியாக மாற்றப்படுகின்றன. வசன ஆதிக்கத்தைத் தகர்த்தல்: மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை நம்பியிருக்கும் வேளையில், கிழக்கிலங்கை காலனிய நீக்கப் பிரதிகள் கூத்தின் ஆடல் மற்றும் பாடல்  வழியாகக் கதை சொல்கின்றன. இது ஐரோப்பிய யதார்த்தவாத சட்டகத்தை உடைக்கிறது.

சமகாலப் பிரச்சினைகள்: மரபுவழி இசைக் கருவிகளான மத்தளம், சல்லாரி போன்றவற்றைப் பயன்படுத்தி, போருக்குப் பிந்தைய வாழ்வியல், நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் பெண்ணியச் சிந்தனைகள் கூத்து வடிவத்திலேயே நவீனப் பிரதிகளாக உருவாக்கப்படுகின்றன (சிவத்தம்பி, 2005). இது பழமைக்கும் நவீனத்திற்கும் இடையிலான ஒரு காலனிய நீக்கப் பாலமாகும்.

ஆய்வுச் சிக்கல்
         
      ஈழத்து நவீன அரங்கியல் வரலாற்றில், மேலைநாட்டு நாடகப் பயில்முறைகள் ஒரு கட்டமைப்பு ரீதியான செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளன. குறிப்பாக, அரிஸ்டாட்டிலின் நாடகக் கோட்பாடுகள் மற்றும் ஐரோப்பிய மேடை அமைப்பு முறைகள் நவீனத்துவம் என்ற பெயரில் திணிக்கப்பட்டன. இது கிழக்கிலங்கையின் செழுமையான கூத்து மரபுகளை பழமையானவை அல்லது நாட்டார் கலைகள் எனச் சிறுமைப்படுத்தும் போக்கினை உருவாக்கியது.
மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை மற்றும் தனிமனித மையவாதத்தை நம்பியிருக்கும் வேளையில், கிழக்கிலங்கை மரபு வடிவங்கள் ஆடல், பாடல் மற்றும் கூட்டுப் பங்கேற்பை வலியுறுத்துகின்றன. இந்த வசன ஆதிக்க மற்றும் யதார்த்தவாத மேலைநாட்டு முறைகளுக்கும், கிழக்கிலங்கையின் முழுமையான அரங்கு எனும் பண்பிற்கும் இடையில் பெரும் முரண்பாடு நிலவுகிறது. மேலைநாட்டு உத்திகளை அப்படியே பின்பற்றுவது, ஒரு கலைஞனைத் தனது சொந்த பண்பாட்டு வேர்களிலிருந்து துண்டித்து, அவனை ஒரு அறிவுசார் காலனித்துவ நிலைக்குத் தள்ளுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதும், மண்ணின் மரபுகளைக் காலனிய நீக்க ஆயுதமாக எவ்வாறு கையாள்வது என்பதுமே இங்குள்ள முதன்மையான ஆய்வுச் சிக்கலாகும்.

ஆய்வின் நோக்கம்
         
         இவ்வாய்வு, கிழக்கிலங்கையின் நவீன நாடக எழுத்துருவாக்கத்தில் நிலம், நினைவு, சடங்கு ஆகிய மூன்றையும் வெறும் அழகியல் கூறுகளாகப் பார்க்காமல், அவற்றை மேலாதிக்கத்தை எதிர்க்கும் அரசியல் கருவிகளாக அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலம்: காலனியச் சிந்தனையில் நிலம் என்பது சுரண்டுவதற்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், காலனிய நீக்கப் பார்வையில் நிலம் என்பது வாழ்விட அரசியலோடு தொடர்புடையது (Fanon, 1961). நாடகப் பிரதிகளில் நிலம் ஒரு கதாபாத்திரமாகவே உருப்பெற்று, சமூகத்தின் அடையாளம் மற்றும் உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாறுவதைக் கண்டறிதல் இவ்வாய்வின் நோக்கமாகும்.

நினைவு: ஆதிக்க சக்திகள் ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தழிக்கும் போது, நினைவு கூர்தல் என்பது ஒரு கலகமாக மாறுகிறது. அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்றாக, மக்களின் வாய்மொழி கதைகள் மற்றும் கூட்டு நினைவுகளை நாடக எழுத்தின் ஊடாக ஆவணப்படுத்துவதை இவ்வாய்வு ஆராய்கிறது.

சடங்கு: சடங்குகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் லிமினாலிட்டி எனும் இடைநிலைப் பண்பைக் கொண்டவை (Turner, 1969). கிழக்கிலங்கையின் கூத்து மற்றும் வழிபாட்டுச் சடங்குகள் வெறும் மத நிகழ்வுகள் அல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டு உணர்வைத் தாங்கி நிற்கும் கலை ஊடகங்கள். நாடக எழுத்தில் இவற்றை இணைப்பதன் மூலம் மேலைநாட்டு நாடக விதிகளுக்கு விடப்படும் சவாலை இவ்வாய்வு பகுப்பாய்வு செய்கிறது.

ஆய்வு முறைமையியல் 
         
      இவ்வாய்வானது கிழக்கிலங்கை நவீன நாடகங்களில் நிலவும் காலனிய நீக்கக் கூறுகளைக் கண்டறிவதற்காக முறையான சமூக-அழகியல் ஆய்வு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

1.ஆய்வு அணுகுமுறை: பண்புசார் ஆய்வு முறை 
         
    இவ்வாய்வு முழுமையாகப் பண்புசார் ஆய்வு முறையை அடிப்படையாகக் கொண்டது. காலனிய நீக்கம் என்பது மனித உணர்வுகள், பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் அரசியல் புரிதல்கள் சார்ந்தது என்பதால், புள்ளிவிபரங்களை விடவும் ஆழமான விளக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விளக்கமுறை ஆய்வு: நாடகப் பிரதிகளில் நிலம், நினைவு மற்றும் சடங்கு எவ்வாறு குறியீடுகளாகவும் உத்திகளாகவும் கையாளப்பட்டுள்ளன என்பதை விவரிக்க இவ்வணுகுமுறை பயன்படுகிறது.

பகுப்பாய்வு முறை: காலனிய நீக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடகப் பிரதிகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் உட்பொருளைக் கண்டறிய இவ்வணுகுமுறை உதவுகிறது.

ஆய்வு எல்லை
      ஆய்வின் ஆழத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பின்வரும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன:

கால எல்லை: இவ்வாய்வு 2000 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலப்பகுதியை மையப்படுத்துகிறது. ஈழத்துச் சூழலில் 2000ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலப்பகுதியே போர்க்கால மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்வியலை நாடகங்கள் வழி ஆவணப்படுத்திய மிக முக்கியமான காலகட்டமாகும்.

புவியியல் எல்லை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தை (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) மையமாகக் கொண்ட நாடகச் செயல்பாடுகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

நாடக வகைமை: வணிக நோக்கம் கொண்ட நாடகங்களைத் தவிர்த்து, அழகியல் மற்றும் சமூக அரசியலை முதன்மைப்படுத்தும் ‘நவீன நாடகங்கள்’ மற்றும் ‘மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்கள்’ மட்டுமே ஆய்வின் எல்லைக்குள் வருகின்றன.

தரவுப் பகுப்பாய்வு முறை 
         
     சேகரிக்கப்பட்ட தரவுகள் ‘உள்ளடக்கப் பகுப்பாய்வு’ முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. நாடகப் பிரதிகளில் உள்ள வசனங்கள், பாத்திரப் படைப்புகள் மற்றும் குறியீடுகள் எவ்வாறு மேலைநாட்டு நவீனத்துவத்தை மறுதலித்து, மண் சார்ந்த அழகியலை முன்னிறுத்துகின்றன என்பது கோட்பாட்டு ரீதியாக ஒப்பிடப்பட்டு முடிவுகள் எட்டப்படுகின்றன.

நிலம்: புவிசார் அரசியலும் நாடக வெளியும்
         
காலனிய நீக்க ஆய்வுகளில் நிலம் என்பது வெறும் மண் சார்ந்த பரப்பு மட்டுமல்ல, அது அதிகாரத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு வெளிப்பாடு.

நாடக மேடையில் நிலம் குறியீடாகப் பயன்படுத்தப்படும் விதம்: மேலைநாட்டு நாடகங்களில் நிலம் என்பது பெரும்பாலும் ஒரு காட்சிப் பின்புலமாக மட்டுமே அமையும். ஆனால் கிழக்கிலங்கை நவீன நாடகங்களில் நிலம் ஓர் ‘ஆளுமையாக’ மாற்றப்படுகிறது. மேடையில் பயன்படுத்தப்படும் மண், பனை ஓலைகள், மற்றும் திறந்தவெளிச் சூழல் போன்றவை நிலத்தின் மீதான மக்களின் உரிமையை நிலைநிறுத்தும் குறியீடுகளாகின்றன. இது நிலத்தைச் சுரண்டும் பொருளாகப் பார்த்த காலனியப் பார்வைக்கு மாற்றாக, நிலத்தை ஒரு தாயாகவும், வாழ்வாதாரமாகவும் காட்டும் மண்ணின் அழகியலை முன்வைக்கிறது.

நில இழப்பு மற்றும் மீளுருவாக்கம்: ஈழப் போருக்குப் பிந்தைய சூழலில் நில அபகரிப்பு, இடம்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கல் போன்றவை மக்களின் வாழ்வியலைச் சிதைத்துள்ளன. நவீன நாடக எழுத்துருவாக்கம் இந்த நில இழப்பை வெறும் துயரமாகப் பதிவு செய்யாமல், நிலத்தை மீட்பதற்கான ஒரு அரசியல் ஆவணமாக மாறுகிறது. இழந்த நிலங்கள் குறித்த ஏக்கமும், மீண்டும் அந்த நிலத்தில் வேரூன்றுவதற்கான வேட்கையும் நாடகப் பிரதிகளின் உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்துகின்றன.

வட்டார மொழிப் பயன்பாடு: மொழிவழி நில அடையாளம்: நிலம் என்பது மொழியோடு பிணைக்கப்பட்டது. காலனிய மேலாதிக்கம் ஒரு தரப்படுத்தப்பட்ட மொழியைத் திணித்தபோது, கிழக்கிலங்கை நாடகங்கள் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கே உரிய தனித்துவமான வட்டார வழக்குகளைப் பயன்படுத்துகின்றன. இது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் மொழி அடையாளத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதுடன், அந்த நிலத்தின் ஆன்மாவை மேடைக்குக் கொண்டு வரும் காலனிய நீக்க உத்தியாகும்.

நினைவு: ஆவணப்படுத்தலும் மீளுருவாக்கமும்
         
     காலனியம் என்பது ஆதிக்கம் செலுத்தியவர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்கிறது. அதனைத் தகர்ப்பதற்கான கருவியாக நினைவு பயன்படுத்தப்படுகிறது. நாட்டுப்புறக் கதைகளும் காலனிய வரலாற்று எதிர்ப்பும்: ஆதிக்கச் சக்திகளால் மூடநம்பிக்கைகள் என ஒதுக்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகளையும் புராணங்களையும் நவீன நாடகங்களாக மாற்றுவதன் மூலம், அதிகாரபூர்வமான மேலைநாட்டு வரலாற்றிற்கு மாற்று வரலாறு எழுதப்படுகிறது. மக்கள் மத்தியில் புழங்கும் வாய்மொழி மரபுகள் நாடகப் பிரதிகளாக மாறும் போது, அது மக்களின் சுய-மதிப்பை மீட்கிறது.

கூட்டு நினைவு: ஒரு சமூகத்தின் வலிகள், போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் தனிமனித நினைவுகளாக இல்லாமல், ஒரு கூட்டு நினைவாக நாடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. போர்க்கால அனுபவங்களை நாடகமாக்குவது என்பது ஒரு கூட்டுச் சமூகத்தின் காயங்களுக்குக் கலை வழி சிகிச்சை அளிப்பதாகும். இது சமூகத்தின் வரலாற்றைத் தொலைக்காமல் பாதுகாக்கும் ஆவணப்படுத்தல் பணியாகும். வரலாற்றுப் புனைவுகளை மறுவாசிப்பு செய்தல்: ஏற்கனவே உள்ள இதிகாசங்கள் அல்லது வரலாற்று நிகழ்வுகளை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து ‘மறுவாசிப்பு’ செய்வது காலனிய நீக்க உத்தியாகும். எடுத்துக்காட்டாக, இராவணன் அல்லது ஏகலைவன் போன்ற பாத்திரங்களை மையப்படுத்தி, அவர்களின் தரப்பு நியாயங்களைப் பேசுவது மேலாதிக்க வரலாற்றுப் பிம்பங்களை உடைப்பதாக அமைகிறது.

சடங்கு: மரபுவழி நுட்பங்களின் நவீனப் பயன்பாடு
         
       சடங்கு என்பது பழமையானதல்ல, அது நிகழ்காலத்தின் ஆற்றல்மிக்க போராட்ட வடிவம் என்பதை நவீன அரங்கு நிரூபிக்கிறது.
சடங்கியல் கூறுகளை நவீன மேடைக்குக் கடத்துதல்: வடமோடி, தென்மோடி கூத்துக்களில் காணப்படும் சந்தித் தாளங்கள், கலாலயம் மற்றும் வசந்தன் கூத்துக்களின் வட்ட வடிவ ஆடல் முறைகள் நவீன நாடகப் பிரதிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. இது மேலைநாட்டு நான்காவது சுவர் எனும் தடையை உடைத்து, பார்வையாளர்களைச் சடங்கின் ஒரு பகுதியாக மாற்றுகிறது.

ஆடல் மற்றும் பாடல் மூலம் வசன ஆதிக்கத்தைத் தகர்த்தல்: மேலைநாட்டு நாடகங்கள் வசனங்களை முதன்மைப்படுத்தி, அறிவுக்கு வேலை தருகின்றன. ஆனால் கிழக்கிலங்கை அரங்கு ஆடல் மற்றும் பாடல் மூலம் உணர்வுகளோடும் ஆன்மாவோடும் உரையாடுகிறது. இது காலனிய அறிவுசார் மேலாதிக்கத்தை உடல் மொழி வழியாக எதிர்கொள்ளும் முறையாகும்.

யதார்த்தவாதத்திற்கு மாற்றான சடங்கு சார் அரங்கியல்: யதார்த்தவாதம் என்பது உலகை அப்படியே பிரதிபலிப்பதாகக் கூறிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மேலைநாட்டுப் பார்வையைத் திணிக்கிறது. இதற்கு மாற்றாக, சடங்கு சார் அரங்கு என்பது நிதர்சனத்தையும் குறியீடுகளையும் இணைத்து ஒரு அதி-யதார்த்த அனுபவத்தை வழங்குகிறது. மேடையைச் சடங்கு வெளியாக்க மாற்றுவதன் மூலம், கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு சமூகத்தின் இருப்புக்கான அடையாளம் என்பது நிலைநிறுத்தப்படுகிறது.

கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு
1.தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களின் எழுத்துருவாக்க உத்திகளை ஒப்பிடுதல்
       கிழக்கிலங்கையின் நவீன நாடகப் பிரதிகளைப் பகுப்பாய்வு செய்யும்போது, அவை மேலைநாட்டு நாடகங்களின் கட்டமைப்பை முற்றாக நிராகரித்து, ‘மண் சார்ந்த அழகியலை’ எவ்வாறு கையாளுகின்றன என்பதை அறிய முடிகிறது.

பிரதிசார் ஒப்பீடு: உதாரணமாக, பேராசிரியர் சி. ஜெயசங்கரின் ‘கூத்து மீளுருவாக்க’ அடிப்படையிலான நாடகங்களையும், பிற நவீன நாடகங்களையும் ஒப்பிடும்போது, நிலம் மற்றும் நினைவு என்பன பொதுவான இழையாக ஓடுகின்றன. மேலைநாட்டு நாடகங்களில் காணப்படும் ‘சிக்கல்-உச்சம்-தீர்வு’ என்ற அமைப்பு முறைக்கு மாற்றாக, இங்கு ‘சடங்கு-ஆற்றுகை-கூட்டுணர்வு’ எனும் வட்டவடிவ அமைப்பு முறை கையாளப்படுகிறது.

மேற்கோள்களின் வழி பகுப்பாய்வு: நாடகப் பிரதிகளில் இடம்பெறும் ‘இந்த நிலம் எமது மூதாதையரின் மூச்சுக் காற்றைத் சுமந்து நிற்கிறது’ அல்லது ‘கூத்து என்பது வெறும் ஆட்டம் அல்ல, அது எமது இருப்புக்கான போர்’ போன்ற வசனங்கள், நிலத்தையும் சடங்கையும் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றுவதை உறுதிப்படுத்துகின்றன. இவை வெறும் வசனங்கள் அல்ல, காலனிய நீக்க அரசியலின் ‘உரிமைக் குரல்கள்’ ஆகும்.

2.காலனிய நீக்கச் சிந்தனையும் கலைஞனின் படைப்பாற்றல் விடுதலையும்
         
   காலனிய நீக்கம் என்பது ஒரு கலைஞனைத் தளைப்படுத்தியிருந்த ‘அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து’ விடுவிக்கிறது.

அழகியல் விடுதலை: ஒரு கலைப் படைப்பு என்பது மேலைநாட்டாரால் அங்கீகரிக்கப்பட்ட யதார்த்தவாத முறையில் இருந்தால் மட்டுமே அது உயர்தரக் கலை என்ற போலி பிம்பத்தை காலனிய நீக்கச் சிந்தனை உடைக்கிறது. இது கலைஞனைத் தனது சொந்தப் பண்பாட்டு மூலதனமான கூத்து, வசந்தன் பாடல் மற்றும் நாட்டுப்புறக் கலைகளைத் தயக்கமின்றிப் பயன்படுத்தத் தூண்டுகிறது.

சுய- பிரதிநிதித்துவம்: ஒரு கலைஞன் தனது கதையைத் தனது சொந்த மொழியில், தனது நிலத்தின் குறியீடுகளைக் கொண்டு சொல்லும்போது அவனது படைப்பாற்றல் உச்சம் பெறுகிறது. நுகுகி வா தியாங்கோ (1986) குறிப்பிடுவது போல, மனதைக் காலனிய நீக்கம் செய்வது ஒரு கலைஞனுக்குத் தன்னாட்சியையும், தற்சார்பையும் வழங்குகிறது. இதுவே கிழக்கிலங்கை கலைஞர்களை உலகளாவிய அரங்கிற்கு மாற்றான ஒரு புதிய அழகியலை உருவாக்கத் தூண்டியுள்ளது.

3.சமூக மாற்றத்தில் இத்தகைய நாடகங்களின் தாக்கம்
   காலனிய நீக்க நாடகங்கள் வெறும் கலை வெளிப்பாடுகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாகவும் செயல்படுகின்றன.

அடையாள மீட்பு: போரினாலும் இடப்பெயர்வினாலும் சிதைந்த ஒரு சமூகத்திற்கு, அவர்களின் சடங்குகளையும் நிலத்தையும் நாடகங்கள் வழி மீளக் காட்டுவது, அவர்களின் தொலைந்துபோன கூட்டு அடையாளத்தை மீட்க உதவுகிறது. இது சமூகத்தின் உளவியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

அதிகாரப் படிநிலைகளைத் தகர்த்தல்: குறிப்பாக ‘கூத்து மீளுருவாக்கம்’ போன்ற முயற்சிகள், கூத்துச் சமூகத்திற்குள் இருந்த சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கின. மரபு மாறாமல் பிற்போக்குத்தனங்கள் மாற்றப்பட்டபோது, அது சமூகத்தில் உள்ள விளிம்புநிலை மக்களுக்குக் கலை வழி அதிகாரமளிப்பதாக அமைந்தது.

மாற்று வரலாறு: அதிகாரபூர்வமான ஆவணங்களில் இடம்பெறாத சாமானிய மக்களின் வரலாற்றை நாடகங்கள் பதிவு செய்யும்போது, அது எதிர்காலத் தலைமுறைக்கான ஒரு ‘மாற்று வரலாற்று ஆவணமாக’ மாறுகிறது. இது மேலாதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்பட்ட பொய் வரலாறுகளைச் சமூகத் தளத்தில் முறியடிக்கிறது.

முடிவுரை
1.ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு
இவ்வாய்வானது கிழக்கிலங்கை நவீன நாடகச் சூழலில் ‘நிலம், நினைவு மற்றும் சடங்கு’ ஆகியவை வெறும் அழகியல் கூறுகளாக அன்றி, ஆழமான காலனிய நீக்க அரசியல் கருவிகளாகச் செயல்படுவதைக் கண்டறிந்துள்ளது. ஆய்வின் ஊடாக எட்டப்பட்ட முதன்மையான கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

அழகியல் தன்னாட்சி: கிழக்கிலங்கை அரங்கு மேலைநாட்டு யதார்த்தவாத மற்றும் நேர்க்கோட்டு கதைசொல்லல் முறைகளைத் தகர்த்து, கூத்து மற்றும் சடங்கு சார் அரங்கியல் மொழியை வெற்றிகரமாக முன்னிறுத்தியுள்ளது.

அறிதலியல் விடுதலை: ‘நிலம்’ என்பது வாழ்வாதாரமாகவும், ‘நினைவு’ என்பது மாற்று வரலாறாகவும், ‘சடங்கு’ என்பது கூட்டு மனசாட்சியைத் தூண்டும் கருவியாகவும் நாடக எழுத்துருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேலைநாட்டு நவீனத்துவத்தின் ‘அறிவுசார் மேலாதிக்கத்தை’ எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க உத்தியாக மாறியுள்ளது.

உள்-காலனிய நீக்கம்: காலனிய நீக்கம் என்பது புறச் சக்திகளை எதிர்ப்பதுடன் நின்றுவிடாமல், நமக்குள்ளே உறைந்து கிடக்கும் சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளைச் ‘சடங்கு மீளுருவாக்கம்’ ஊடாகக் களைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.வருங்கால ஆய்வாளர்களுக்கான பரிந்துரைகள்
      கிழக்கிலங்கை அரங்கச் சூழலில் காலனிய நீக்க ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. எதிர்கால ஆய்வாளர்கள் பின்வரும் திசைகளில் தங்கள் ஆய்வுகளை விரிவுபடுத்தலாம்:

ஒப்பீட்டு ஆய்வுகள்: கிழக்கிலங்கை அரங்குக்கும், பிற தென்னக (இந்தியா) அல்லது இலத்தீன் அமெரிக்க நாடுகளின் காலனிய நீக்க அரங்கச் செயல்பாடுகளுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

தொழில்நுட்பம் மற்றும் மரபு: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன மேடைத் தளவாடங்கள் எவ்வாறு மரபுவழிச் சடங்குச் சிதைவுகள் ஏற்படாமல் காலனிய நீக்க அரங்கிற்குப் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த ஆய்வு.

உடல் மொழிப் பகுப்பாய்வு: கூத்தின் ஆடல் முறைகள் மற்றும் சடங்குசார் உடல் அசைவுகள் காலனிய நீக்க அரசியலில் எவ்வாறு மொழியைக் கடந்த ஒரு கருத்தாடலை உருவாக்குகின்றன என்பதை ஆழமாக ஆராய்தல்.

உசாத்துணை
1.சிவத்தம்பி, கா. (1981). பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.

2.சிவத்தம்பி, கா. (2005). ஈழத்தில் தமிழ் நாடகம். கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம்.

3.ஜெயசங்கர், சி. (2005). மக்களும் அரங்கும். மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, மட்டக்களப்பு.

4.மௌனகுரு, சி. (1998). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு.

5.வித்தியானந்தன், சு. (1971). தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை.

6.Boal, A. (1979). Theatre of the Oppressed. London: Pluto Press.

7.Fanon, F. (1961). The Wretched of the Earth. New York: Grove Press.

8.Mignolo, W. D. (2009). Epistemic Disobedience, Independent Thought and Decolonial Freedom. Theory, Culture & Society.

9.Quijano, A. (2000). Coloniality of Power, Eurocentrism, and Latin America. International Sociology.

10.Said, E. W. (1978). Orientalism. New York: Pantheon Books.

11.Thiong’o, N. W. (1986). Decolonising the Mind: The Politics of Language in African Literature. London: James Currey.

12.Turner, V. (1969). The Ritual Process: Structure and Anti-Structure. Chicago: Aldine Publishing.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
கலாநிதி அழகையா விமலராஜ்,
முதுநிலை விரிவுரையாளர்,
நடன நாடகத்துறை,
சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »