“பெருஞ்சித்திரனார் பாவியத்தில் ஐயையின் காதல்”

உலகத்தில் எல்லா உயிர்களும் காதலால் வாழ்கின்றன. காக்கை,குருவி போன்ற பறவையினங்களும், ஐந்தறிவுப் படைத்த விலங்கினங்களும் காதலிக்க தவறுவதில்லை. இந்த ஜீவராசிகளின் காதலுக்கு யாரும் எதிர்ப்பேர் கருப்புக்கொடியோ காட்டுவதில்லை. அவைகளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாயச்; சேர்ந்து வாழும். ஆனால், பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வரும் மனித இனம் காதலுக்கு எதிப்பையும், ஏமாற்றத்தையும் துன்பங்களையுமே தருகின்றது. மேற்கத்திய நாடுகளில் அவ்வளவாக எதிர்ப்புகள் இல்லை என்றாலும் இந்தியா, அரபு நாடுகளைப் போன்றப் பழமையையும் பண்பாட்டையும் மறக்காமல் வாழும் ஒரு சில நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

பெருஞ்சித்தனாரின் பாவியம்

            காதலிக்க இருமனங்கள் இருந்தால் போதும். வேறென்ன வேண்டும். நம் நாடானது சமூகங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. சுhதி,மதம் என்ற போர்வைக்குள் மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறாhகள். புழமைவாதம் அவர்களின் உயிர் மூச்சாக இருக்கின்றது. இவர்களை மீறி எப்படி இரு மனங்கள் காதலிக்க முடியும். அப்படியேக் காதலித்தாலும் ஆணாதிக்கம் பெண்மையைக் காலால் மிதித்து நசுக்கின்றதே. இவ்வுலகத்தில் மக்கள் இனத்தைத் தோற்றுவித்த மாதரை உள்ளத்தாலும், உடலாலும் துன்புறுத்தப்பட்டு அழிக்கச் செய்கின்றதே இந்த ஆணாதிக்கம். “ஆணின் பண்பாடு மனம் எவ்விதக் கட்டுகளாலும் இறுக்கமடையவில்லை. மாறாகப் பெண்ணைப் பண்பாடு இறுக்கி மனோநிலையைப் பாதிப்பது சமூகத்தில் கண்கூடாகத் தெரிகிறது” என முனைவர் அரங்க மல்லிகா கூறுகிறார். பெண்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களும், துயரங்களும் நீக்க முடியாதவனாக அமைகின்றது. அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் நடந்த காதல் சோகங்களை நம் கண் முன்னே நிறுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர் பெருஞ்சித்தரனார்.

ஐயையின் வாழ்க்கை:

            புதினிக்குன்றம். புலியூர் கிராமத்தில் தன் அத்தை முத்தம்மாளுடன் வாழ்கிறாள் ஐயை. பிறந்தவுடன் தாயையும், தந்தையையும் பறிக்கொடுத்தவள். யாரும் இல்லாத அநாதையாக இருந்த ஐயையை அவளின் அத்தை எடுத்து வளர்க்கின்றாள். கணவனை இழந்த முத்தம்மை தன் மகன் செம்மலை நகரிலேப் படிக்க வைக்கிறாள். படிப்புச் சரியாக வராததால் பாதியிலேயே நின்ற ஐயை ஆடு மேய்க்கப் புறப்படுகிறாள். தினமும் ஆட்டை ஓட்டி மலைப்பகுதிக்குச் சென்று மேய்த்து விட்டு மீண்டும் பட்டியில் அடைப்பதுதான் ஐயையின் வேலை.

                                                “காலை யிருந்து மாலை வரையிலும்

                                                நூலிடை வருத்த நுதல்நனி வெயர்ப்ப

                                                ஆடுகள் மேத்தல் ஐயை வழக்கம்? ” (ஐயை.45-47)

            ஐயையின் மீது அவளின் அத்தை உயிரையே வைத்திருந்தாள். பாசத்தைக் கொட்டினாள். தனக்கு மகள் இல்லையே என்று வேதனைப்பட்டுக் கொணடிருந்த முத்தம்மைக்கு நல்ல மகளாக ஐயை இருந்தாள். ஐயைக்கு எண்ணைத் தடவி தலை வாரி பூ முடிப்பாள், பொட்டு வைப்பாள். சுற்றிப் போடுவாள். தன் விழி அகலாமல் ஐயையைப்,

                                         “பேடையெகி னம் போல் நடக்கும் பெற்றியை

                                                விழியகற் றால் உவந்து வியப்பாள்!

                                                பழிமே வாமல் பாவையைக் காத்தாள்!” (ஐயை.96-98)

பார்த்து ரசிப்பாள். ஐயையை தன் மகன் செம்மலுக்குக் கட்டி வைத்து மருமகளாக்கி விட வேண்டும் என்ற ஆசையும் முத்தம்மைக்கு உண்டு.

ஐயையின் காதல்

            தன்னுடைய அத்தை மகனான செம்மல் மீது உயிர்க்கும் அதிகமான காதலைச் சேர்த்து வைத்திருந்தாள். எப்போழுதும் செம்மலின் நினைப்பாகவே இருந்தாள். ஆட்டை மேய்கும் போது கூட ஆடுகளை ஓட்டுவாள்;; பிறகு செம்மலின் நினைப்பு வர அப்படியே நின்றுடுவாள். அதற்குள் ஆடு பள்ளத்தில் இறங்கி ஓடும். நினைவு திரும்பி மீண்டும் ஆட்டை ஓட்ட கையிலேக் கொம்பைத் தூக்கிக்கொண்டு ஓடுவாள்.

                                                “ஆட்டுக் கூட்டமோ அவளுணர் வறியாது

                                                மேட்டில் ஏறும்: பள்ளத்திறங்கும்!

                                                ஓட்டி ஒருபுறம் சேர்ப்பாள் ஒருநொடி!

                                                மீண்டும் நெஞ்சில் அவனுரு மின்னும்!” (ஐயை.64-68)

            செம்மலின் வரவை எண்ணி ஒவ்வொருக் கற்களாக அடுக்குவாள். கற்கள்தான் குவிந்ததே தவிர செம்மல் ஒருநாளும் வரவே இல்லை. ஆனால் அவளின் அன்பான நினைவிலும் செம்மலின் நினைவே மிகுந்திருந்தது.

கனவிலும் காதல்:

            செம்மலிடம் இருந்து முத்தம்மைக்கு கடிதம் ஒன்று வருகின்றது. படிப்பு முடிந்து விட்டது இன்னும் முப்பது நாட்களில் வருவதாக கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஐயைக்கு, கடிதத்தில் தன்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட கேட்கவில்லையே என்று வருத்தம். ஐயை என்ற அடிமை பேதை இருக்கின்றாளா? இறந்தாளா? ஏன ஒரு வரிக்கூட எழுதவில்லையே. அப்படி நான் என்ன பிழை செய்தேன் எனக் காதலின் மிகுதியால் தன் அத்தையிடமே கேட்கின்றாள். திருக்குறளில்,

                                    “நனவினால் நல்கா தவரைக் கனவினால்

                                    காண்டலின் உண்டுஎன் உயிரியர்” (குறள்.122-1213)

            நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் இருக்கிறது என தலைவியின் நிலைப் பற்றி வளளுவர்   கூறுகிறார். கனவிலே அத்தானின் முகத்தையும், அள்ளும் விழி அழகையும், பழகு நெஞ்சையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு காயைப் பொறித்தெடுத்தாள். ஒரு காயை வெட்டி மோர்க்குழப்பு வைத்தாள். ஒன்றைப் பருப்பிலே வேகவைத்தாள். ஒரு காயைச் சீவி உறைத்தயிர் ஊற்றி உறைப்புக்கு மிளகோடு சேர்த்து வைத்தாள். உருகாத நெய்யை உருக்கி உருகுகின்ற அன்பால் உண்ணுவதற்கு பெருவாழை இலை விரித்து பெரும்படையை இட்டாள் ஐயை. தினமும் குன்றுக்குச் செல்வாள்? அங்கு நன்கு விளைந்த கதிரோடும் இலையோடும் மரத்தோடும் தன்னைப் பற்றியும் தன் காதல் பற்றியும் பேசி வருவாள்.

ஐயையின் மகிழ்வு:

            புலியூருக்கு செம்மல் வருகின்றான். முத்தம்மையும் ஐயையும் வாசல் வந்து அவனது இருக்கைகளை வாங்கி வந்து குடியிலே வைக்கின்றனர். ஐயைக்கு செம்மல் வந்ததில் பெரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். அழகிய மலரை மாலையாகத் தொடுப்பதும், ஆட்டுக் குட்டியினை அன்போடு அணைப்பதும், கால் சிலம்பு ஒலிக்க தாவி நடப்பதும், தன் கூந்தலில் வாசனை நிறைந்த மலரினைச் சூடுவதும், செம்மலின் நகர்ப் பற்றியச் செய்திகளைக் கேட்பதும், அவன் பேசும் அழகை ரசிப்பதும், குறுநெல் புடைத்து அன்போடு உண்ணக் கொடுப்பதும், உண்பதைப் பார்த்து மகிழ்வதும், ஏடு கொணர்வதும், எழுதுகோல் எடுத்துக் கொடுப்பதும், பாடெனக் கேட்டால் பாடுவதும் என அவனே எல்லாம் என மனதை முழுமையாக காதலில் தன்னை மறந்தாள்.

                                                “மின்னென மானென மீனெனத் திரிவதும்

                                                அத்தான் கண்முன் அடிக்கடி மேய்ந்த

                                                முத்து நகைச்சியின் மொய்ம்புக் குறும்புகள்!” (ஐயை. 417-419)

            ஐயையின் மனம் முழுக்க செம்மலின் எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது. தனக்கு வரப்போகின்ற வாழ்க்கையை நினைத்து பெருமிதம் கொண்டாள். இக்காதலுக்கு சாதி,மதம் தடையில்லை. உறவுகள் தடையில்லை. ஆசைக்கனவை நிறைவேற்றுவதில் மனம் தடைக்கற்களாய் மாறிப்போனது.

காதல் முறிந்தது:

            தன் காதலை செம்மலிடம் சொல்ல துடித்தாள் ஐயை. அதற்கேற்ப காலமும் விரைவில் வாய்த்தது. ஆடுகளை ஓட்டி குன்றுக்குப் புறப்பட்டாள். ஆடுகள் மேய்ந்தன. பெருங்கல் மேல் ஐயை அமர்ந்தாள். அப்போது செம்மல் அங்கே வருகின்றான். அப்போது,

                                                “உள்ளமும் அன்பைக் காதலால் வளர்த்து

                                                ஊனும் கொள்ளாது உறக்கமும் இன்றி

                                                பனியினும் குளிரினும் வெயிலினும் சாகாது

                                                பிழைந்துக் கொண்டுள பேதை ஏழையின்

                                                தழைத்த அன்பினை உணர்வீரா?”  (ஐயை.476-483)

            தன் காதலைப் பற்றி ஐயை கூறுகிறாள். ஆனால் செம்மலோ தும்பை என்ற பெண்ணின் மீது வைத்துள்ள காதலைப் பற்றிக் கூறுகிறான். ஐயையின் தலையில் இடி விழுந்தது. நெஞ்சு நொறுங்கியது. மயங்கி விழுகின்றாள். அப்போது ஆந்தை அலறியது., தனி நாய் தொண்டை கிழிய ஊளையிட்டது. கழுத்து மணி ஒலிக்கக் காளைகள் இராப்புல் அருந்தாக் கத்தின. ஐயையின் உடல் அசைவற்று இருந்தாள். முத்தம்மை தன் மகனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் செம்மல் கேட்காமல் தும்பையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாகக் கூறுகிறான். அதற்கு முத்தம்மை மகனை வீட்டை விட்டுச் செல்லுமாறு கூறுகின்றாள். அவனும் வீட்டை விட்டுச் சென்று தும்மையை மணந்துக் கொண்டு ஓர் ஆண்பிள்ளைக்கும் தந்தையாகின்றான்.

இளமையைக் கடிதல்

            முறித்;து விட்டுப்போன செம்மலை மறக்க முடியாமல் தவித்தாள் ஐயை. இந்த உள்ளமும் உடலும் செம்மலுக்கு பயன்படாமல் போனதை எண்ணித் துடித்தாள்.

                                    “இறவாக் காதற்கு இளமையைக் கடிந்தாள்” (ஐயை.605)

            தன்னுடைய காதல் மெய்மையைப் போற்றும் கற்பின் பெருமையைக் காறி உமிழ்ந்தாள். தாய்தந்தையை இழந்து அன்பாய் நேசித்தவனையும் துறந்து மனச்சுமையை அதிகமாக கூட்டிக்கொண்டாள். செம்மல் வந்தால் தன் அத்தையிடம் சொல்லி தும்பையிடம் பேசி இரண்டாதாரமாகக் கூட மணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் ஐயைக்கு இருந்தது.

தாய்மை உள்ளம்

            தன் காதலை மறக்கவும் முடியவில்லை, மறைக்கவும் முடியவில்லை. ஆடுகளை ஓட்டி குன்றுக்குச் செல்வாள். மீண்டும் இயற்கையின் மீது தன் மனச்சுமையினைக் கொட்டித்தீர்ப்பாள். அவன் வரவை எண்ணி அடுக்கியக் கற்களை மீண்டும் எண்ணத் துவங்குவாள். அப்படியிருக்க ஒருநாள் செம்மலும் – தும்பையும் இறந்து பட, அவர்களின் மகன் சேரனை ஐயையிடம்  ஒப்படைத்து விடுகிறான் ஒருவன். சேரனை அள்ளி முத்தமிடுகிறாள் ஐயை,

                                                “செம்மா துளைஇதழ் சிரித்திட மலர்ந்தே

                                                ‘அம்மா’ என்றான்! அள்ளி எடுத்தே

                                                நூறு முறைசொல், நுங்குவாய் திறந்து என” (ஐயை.932-935)

            அம்மா என அழைக்கக் கேட்டு காதல் உள்ளம் தாய்மை உணர்வைப் பெறுகின்றாள். குழந்தையின் விளையாட்டிலும்; பேச்சிலும்;; அழகிலும் கொஞ்ச கொஞ்சமாக செம்மலை மறக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அவ்வவ்போது செம்மலின் நினைவும், இம்மையில் இல்லையென்றாலும் மறுமையிலாவது மணக்க வேண்டும் என மனதை மயக்கிக்கொண்டிருந்தது. தன் மகன் சேரனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். தானும் அவனோடு சேர்ந்துப் படித்தாள். நகருக்கு அழைத்துச் சென்று கல்லூரிப் படிப்பை படிக்க வைக்கிறாள். சேரனும் நன்றாகப் படிகின்றான். சேரனுக்கு நெய்தல் என்ற பெண்னை சொந்தமாக்கி விட்டு உயிர் துறக்கிறாள் ஐயை.

தெய்வக் காதலாள்

            சமூக வரலாற்றில் எத்தனையோ காதல் வாழ்ந்து வந்திருக்கலாம். அவற்றில் பாதி வெற்றியும் மீதி தோல்வியும் பெற்றிருக்கலாம். பெருஞ்சித்திரனார் படைத்த ஐயையின் பாத்திரம் வியப்புக்குரியது. ஒரு கிராமத்தில் சாதாரணமான பெண்களின் இயல்பான நிலை, வீடு, இடம் அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆகியவையை அழகாகப் படைத்துள்ளார். இந்த ஐயையின் படைப்பானது ஆசிரியரின் வாழ்கையில் நடந்த சம்பவமாகவே நான் கருதுகிறேன். பெண்ணினத்தை துச்சமாக நினைக்கின்ற ஆணாதிக்கத்தை இப்படைப்பிலேக் காணமுடியும். ஒரு பெண் தன்னுடைய அன்பான காதல் கிடைக்கவில்லையென்றாலும், அவனையே நினைத்து உள்ளம் உருகி வாழ்கிறாள். அவன் பெற்ற மகனை தன் பிள்ளை போல் வளர்த்து ஆளாக்கி விடவும் செய்கிறாள். இதைவிட ஒரு காதலுக்கு வேறென்ன செய்ய முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

முடிவுரை:

            ஐயையின் காதலை வானம், மழை, நீர், காற்றெல்லாம் சொல்லும். ஐயை இறந்த பின்பு குன்றிலே செம்மல் வர சேர்த்து வைத்திருந்த கற்களைக் கொண்டு வெண்மேடைக் கட்டி, அங்கு வெண்பளிங்கு சிலையொன்றை ஐயைக்கு எழுப்புகிறான் சேரன். ஐயையின் காதல் இவ்வுலகம் உள்ளவரை வாழும். காதலுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஐயையின் உறைவிடமானது கோயிலாகக் கொண்டு விழா எடுப்புது நலம்.

             

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

                     

 

 

 

 

       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here