Saturday, July 18, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் காடு நமது வாழ்வியல்|முனைவர் ம.கார்த்திகா

காடு நமது வாழ்வியல்|முனைவர் ம.கார்த்திகா

காடு நமது வாழ்வியல்_முனைவர்.ம.கார்த்திகா
முன்னுரை
           
21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொடமுடியாத உயரங்களைத் தொட்டுவிட்டான் ஆனால் பூமியையும் அங்குள்ள இயற்கையைப்  பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை. இயற்கையின் வரமாகப் பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக மனிதன் சுவாசிக்க தேவையான ஒட்சிசனை பூமிக்கு வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற்கையான சூழல் தொகுதியே காடுகளாகும்.
            காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால்தான் திருவள்ளுவர்,

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
எனக் கூறியுள்ளார். இக்காடுகள் மனித தலையீடுகளின்றி பூமியில் தோன்றிய வரப்பிரசதமாகும் இவை தான் சூழலை குளிர்விக்கின்றன. மழையை பொழிவிக்கின்றன. தரைக்கீழ் நீரைப் பிடித்து வைக்கின்றன. அருவிகளை ஆறுகளை உருவாக்கி விவசாயத்தைப் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு நிழலையும் தந்து பல்லாயிர கணக்கான விலங்குகள் பூச்சிகள் பறவைகள் மீன்களுக்கும் வாழ்விடமாக விளங்குகின்றன. அந்தளவுக்கு பசும் போர்வையாக இக்காடுகளே எம்மை இரட்சிக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.

காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரச் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி ஆனால், அதுஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம். ஆனால் மனிதர்களில் சிலர் இதை புரிந்து கொள்ளாது காடுகளை அழித்த வண்ணமே உள்ளனர். இந்தக் கட்டுரையில் காடுகளின்
பயன்கள் பற்றி பார்க்கலாம்.

காடுகளின் முக்கியத்துவம்
            காட்டு வளமே நாட்டுவளம். காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு பூமியின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். காடுகள் வெறுமனே இடபரம்பலை மாத்திரம் கொண்டு காணப்படும் ஒரு வளம் அல்லாமல் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வாய்ப்புகளை வழங்கும் அதி உன்னத பசுமை நிறைந்த இயற்கை வளம் என்றால் அது மிகையாகாது.
           
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும். பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.

காடுகளின் பரம்பல்
உலகினுடைய  காடுகளின் பரம்பலானது புவியியல் அமைவிட ரீதியாக அயனமழைக்காடுகள், ஊசியிலைகாடுகள், சவன்னாக்களும் புல்வெளிகளும் என வகைப்படுத்தபடுகிறது. இவற்றில் அயன மழைக்காடுகள் மத்தியகோட்டை அண்டி காணப்படும் காடுகளாகும். இவை என்றும் பசுமையான அதிக உயிர் பல்வகைமையை கொண்ட காடுகளாகும். இங்குள்ள தாவரங்கள் பெறுமதி மிக்கனவாக உள்ளதால் அதிகம் மனிதனால் அழிக்கப்பட்டும் வருகின்றன.

உதாரணமாக அமேசன் மழைக்காடுகள் கொங்கோ மழைக்காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள் தென்கிழக்காசியாவின் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் லாவோஸ் போன்றவற்றில் அயன மழைக்காடுகளை காணமுடியும்.மேலும் இடைவெப்பவலய நாடுகளான ஐரோப்பாவடஅமரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஊசியிலை ஆப்பிரிக்கா ஆர்ஜென்ரினா ஆஸ்ரேலியா போன்றநாடுகளில்சவன்னா புல்வெளிகளும் பரம்பியுள்ளன.இக்காடுகள் வெவ்வேறான சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றன.

மரங்களின் பயன்கள்
🎤 சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது.

🎤 பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது.

🎤 மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.

🎤 மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.

🎤 சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது.

🎤 மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும்.

🎤 மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
காடுகளின் எண்ணற்ற பயன்களை பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் வழங்கி ஒருகவசமாக தொழிற்படுகிறது காடுகளை பூமியின் நுரையீரல் என்று சிறப்பித்து கூறுவார்கள். நாம் சுவாசிக்க சுத்தமான காற்றையும் நாம் குடிக்க சுத்தமான நீரையும் நாம் உண்ண காய்கறிகள் தளபாடங்களையும் மருந்து மூலிகைகளையும் மனதை மகிழ்விக்கும் கிழங்குகள் உணவையும் நாம் வாழ தேவையான வீடுகளை உருவாக்க அழகான சூழலையும் இக்காடுகளே தருகின்றன.

காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள்அழிக்கப்பட்டுவருகின்றன. நிலக்கரிஉள்ளிட்டகனிம வளங்கள்  வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப்பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமானநிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப்பாதைகள் அமைத்தல், அணைகள்-பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள்  வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று காடுகள் வேகமாக குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன அபிவிருத்தி நகராக்கம் எனும் போர்வையில் மனிதன் காடுகளை அழித்து வருவதானது யானைதன் தலையில் மண்ணை அள்ளி
போடுவதற்கு ஒப்பானதாகும்.

காடுகளை அழிப்பதனால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் காடழிப்பதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் இதனால் வளிமண்டல வெப்பநிலை உயர்வடையும். இதனால் நாம் வாழும் புவியின் வெப்பநிலை உயர்வடைவதனால் பூமியில் காலநிலை மாற்றம் பாலைவனமாதல் கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் தோன்றி வருகின்றமையால் மனித வாழ்க்கை சவால் மிக்கதாக அண்மைக்காலங்களில் மாறிவருவதைகண்கூடுகாணமுடிகிறது.

முடிவுரை
காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்கப்பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்று பல்வேறு நாடுகள் சூழல் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் காடுகளை பாதுகாக்க முன்வருகின்றன. காடுகளை பாதுகாக்கும் முகமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 உலகளவில் ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆகவே காடுகள் பாதுகாக்க படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து காடுகளைப் பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு வளங்களைக் காத்து வளமான வாழ்க்கை வாழ காடுகளை வாழ வைப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்.ம.கார்த்திகா
உதவிப்பேராசிரியர்
தகவல் தொழில் நுட்பவியல் துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பசுமலை, மதுரை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »