◊கண்களை மூடினேன்
மூடிய கண்களுக்குள் காட்சி விரிந்தது!
விரிந்ததோ வியப்பிற்குரியது!
வியக்க வைத்ததோ இயற்கை
இயற்கையில் இருப்பது என்ன?
என்னென்னவோ இருக்கிறது!
இருந்தும் அதனை காட்டிக் கொள்ளாத
கொள்ளை அழகான மௌனம் – ஆம்!
மௌனமும் ஓர் அதிசயம்தானே
அதிசயம் என்பது இயல்பின் இலக்கணம்
இயல்பின் இலக்கணமே இயற்கையாகிறது..!
◊மூடிய சிப்பிக்குள் முத்தும்
மூடிய விழிகளுக்குள் கண்ணீரும் – இயற்கை
வானின் மழை, மண் தொடுவதும்
விழியின் மழை கன்னம் தொடுவதும் – இயற்கை
◊இயல்பாய் இருத்தலே இயற்கை
உள்ளம் உருக உணர்ந்தும்
கண்கள் குளிரக் கண்டும்
செவிகள் சாய்த்துக் கேட்டும்
நாசி நனைய நுகர்ந்தும்
உதடு மடித்து ஓங்கரித்துக் கத்தியும் – என
ஐம்பொறிகளையும் கவர்ந்து
தனக்குள் கொள்வது – இயற்கை!
◊இயற்கை!
உயிர் இருந்தும்
உயிரற்ற நிலையைத் தருவது..!
◊இயற்கையில் ஒன்றும்போதே
நாமும் இயல்பாக
இயற்கையாகிறோம்..!
◊இயற்கையின் மௌன மொழியில்
மொழிகளற்றுக் கரைகிறோம்
கரைந்து ஒழுகி உரைந்து மடிந்தும்
மடியாமல் நிற்கிறது இயற்கை..!
◊இயற்கை காத்த பாரி
பாரி காத்த பறம்பு
பறம்பு தந்த உணர்வு
உணர்வு அளித்த வெளிச்சம்
வெளிச்சத்தின் உச்சிதனில் இயற்கை
இயல்பாக நிற்கிறது
பார் காத்த பாரியால்..!
கவிதையின் ஆசிரியர்
ச. பிருந்தா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருமுருகன் பூண்டி, திருப்பூர்.