இது இலக்கல்ல தனல் (நெருப்பு) - முனைவர் நா.சாரதாமணி
          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்
        
         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.
        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது
     
      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.
துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.
உங்களை வித்தியாசப்படுத்துங்கள்
     
         உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.
நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும்.
            மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.
யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here