Friday, September 12, 2025
Home Blog Page 2

உனைக் கண் தேடுதே|கவிதை|கவிஞர் இளங்கதிர்

உனைக் கண் தேடுதே- கவிஞர் இளங்கதிர்

👁️கடிகார முட்களோடு


பயணித்த வண்ணம் கண்கள்…


உன்னைக் காணாத ஏக்கத்தில்


கலங்கிடும் கண்கள்…


 

👁️ கடிகார முட்களை அசைத்துவைக்கலாமா?


நேரம் உன்னை அழைத்து வருமா?


உனக்காகக் காத்திருப்பது


உயர்ந்த சுகம்.


 

👁️தாமதம் தந்த கோபம்


தண்ணீரில் எழுதியதாகும்.


காத்திருந்தும் நீ வராத நாட்கள்


கானகத்தில் வெறும் முட்கள்.

👁️உன் பயணத்தில் காற்றானால்


என் இதயம் சீராகும்.


நிலவை நான் அழைக்கவா


உள்ளம் நீ நனைக்க.


கனவே நீ சென்று வா


காணாத இதயத்தை ஏந்தி வா.


 

👁️உன் மூச்சுக் காற்றையாவது


அனுப்பி வை 


என் மரணத்தை அதனால்


தள்ளி வை


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் இளங்கதிர்


சென்னை.

 

பரந்து விரிந்த பழங்குடிகள்|கவிதை|சி.அரவிந்த குமார்

பரந்து விரிந்த பழங்குடிகள்-சி.அரவிந்த குமார்

⛰️தொல்குடிகளாகத்


தோகை விரித்தாடினோம்


மலைப்பகுதியில்..!


 

⛰️ அகதியைப் போல


அடித்துத் துரத்தப்பட்டோம்


மலையின் அடிப்பகுதியில்..!


 

⛰️ உணவுக்கு ஏங்கினோம்


நீர்நிலைகளின் ஒதுக்குபுறத்தில்
 

தூங்கினோம்.


 

⛰️ நாடோடிகளாக அலைகிறோம்


நாகரிக வாழ்க்கையில்

நலிவுற்று இருக்கிறோம்


பொலிவுற்ற நகரத்தில்..!


 

⛰️ கொத்துக் கொத்தாய்


செல்கிறோம் கொத்தடிமையாக


ஒரு கொண்டாட்டமும் கண்டதில்லை


புத்தாடை இல்லாத மேனியாக..!


 

⛰️ கானகமும் கண்கலங்கும்


எங்கள் கதறல்களைக் கேட்டு


வனச்சட்டமும் வசம் சேரும்


எங்கள் வாடிய வாழ்கையோடு..!


 

⛰️ பாடுப்பட்டு வாழ்கிறோம்


பரந்த இவ்வுலகில்


பழங்குடியாய் வாழ்ந்தால்


மதிப்பு கிடைப்பது எவ்வுலகில்..!


கவிதையின் ஆசிரியர்

சி.அரவிந்த குமார்


முனைவர் பட்ட ஆய்வாளர்


தமிழ்த்துறை


தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்


திருவாரூர்-610005

 

VAIRAMUTHU, PONMANI  VAIRAMUTHU KAVITHAIGALIL  ILLAKKIYAK KOORUGAL|Dr M.J.MAHESWARI

VAIRAMUTHU PONMANI VAIRAMUTHU KAVITHAIGALIL ILLAKKIYAK KOORUGAL - Dr M.J.MAHES
Abstract
        
          It is no exaggeration to say that literature serves as a guiding light for one’s life. The ideas of literature are indelibly imprinted in the minds of future creators and are the reason for creating new works. In that regard, Vairamuthu and Ponmani Vairamuthu have followed many literary elements in their works, from Tolkappiyam to the poems of Bharathiyar and Bharathidasan. Through this, this study aims to highlight the literary personality and creative ability of Vairamuthu and Ponmani Vairamuthu.


வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் இலக்கியக் கூறுகள்

ஆய்வுச் சுருக்கம்
     
      ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இலக்கியங்கள் திகழ்கின்றன என்றால் மிகையாகாது. இலக்கியங்களின் கருத்துகள் எதிர்கால படைப்பாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவதோடு புதிய புதிய படைப்புகளை உருவாக்குவதற்கும் காரணமாய்த் திகழ்கின்றன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின் கவிதைகளில் தொல்காப்பியம் முதல் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரை தன்னுடைய படைப்புகளில் பல இலக்கியங்களின் கூறுகளைப் பின்பற்றியுள்ளனர். இதன்வழி வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின்  இலக்கிய ஆளுமையையும் படைப்பாக்கத் திறனையும் எடுத்துரைப்பதாக இந்த ஆய்வு அமைகின்றது.

குறிச்சொற்கள்
     
வெண்முத்தம், களிப்பு,இடுக்கண், நகுக, கேளிர், அன்புச்சுரபி, ஊன்

முன்னுரை
         
     இலக்கியத்திற்கு அழகு ஊட்டுவன அணிகள் மட்டுமல்ல. இலக்கியக்கூறுகளும் படைப்பாளிகள் படைக்கும் படைப்புகளுக்கு மேலும் அழகு ஊட்டுவனாக உள்ளன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை உள்ள கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். கவிஞர்கள் இருவரும் இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் உத்தியைக் கையாண்டுள்ளனர்.  இவர்களுடைய பார்வையில் இலக்கியக் கூறுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொல்காப்பியம்
         
         தமிழில் இன்று கிடைக்கும் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமின்றி பொருள் இலக்கணமும் கூறும் முதல் நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. அச்சகம் வைத்துள்ளவர்களெல்லாம் கவிதை எழுதி வெளியிடுகின்றனர். அல்லது கவிதை எழுதுவோரெல்லாம் சொந்தமாக ஒரு அச்சகத்தைத் தொடங்கிவிடுகின்றனர். இந்நிலை நீடிப்பதால் ஏராளமான நூல்கள் வளர்ந்து அவற்றை வாசிக்கத்தான் ஆட்கள் இல்லை என்பதை,

“வடவேங்கடம் தென்குமரி /ஆயிடைத் / தமிழ்க்கூறு
நல்லுலகத்துள் / பழைய புத்தக / வியாபாரிகளே
இன்று / விமர்சகர்கள்”1
      என்னும் அடிகள் வாயிலாக தமிழகம் முழுவதும் இந்நிலை காணப்படுகிறது என்பதைக் குறிக்க தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிர வரிகளை வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.

பரிபாடல்
         
       மதுரை நகரைப் பற்றி சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டிலும், மதுரைக்காஞ்சியிலும் விரிவான குறிப்புகள் உள்ளன. துரைக்காஞ்சி மதுரை நகரின் சிறப்புகளையும்,  தெருக்களையும் அடுக்கிக் கொண்டே போகிறது. மதுரையின் பெருமையை,

“மதுரை தாமரைப் பூவென்றும்-அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை
எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
பாடல் பாடிய பால்மதுரை
வட மதுராபுரியினும் மேல்மதுரை”2
என்னும் வரிகளில் பரிபாடல் கருத்தை வைரமுத்து பதிவு செய்கிறார்.

கலித்தொகை
    
     பொன்மணி வைரமுத்துவின் மாணவி ஒருத்தி திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு தன் வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்து வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கு கலித்தொகை இலக்கியத்திலிருந்து வரிகளைத் தேர்ந்தெடுக்கிறார். உடன் போக்கிற்குச் சென்ற தலைவன் தலைவியரைத் தேடிச் செல்லும் செவிலிக்குக் கண்டோர் கூறுவதாகப் பின்வருமாறு பாடல் அமைகின்றது.

“சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லவை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தான் என் செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே”3
என்று அமையும் பாடல் கருத்தை ஒட்டி,

“நீரிலே பிறந்த முத்துக்களை இங்கு / நீரா அணியும்
வேறொருவன் தான் என்ற கலித்தொகைப் பாட்டு
களிப்பாய்க் கேட்ட கிளிப்பிள்ளை நீ / காலமெல்லாமா
கல்லூரி வானில் / பறக்க முடியும்”4
என்று அறிவுறுத்தி, இல்வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க அறிவுறுத்துகிறார்.

புறநானூறு
       
      பழந்தமிழரின் வீரத்தையும் பண்பாட்டையும் பேசுவது புறநானூறு. மனிதன் வாழ்வதற்கான நன்னெறிகளையும் வகுத்துச் சொல்கிறது இந்நூல்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”5
என்னும் அடிகளில் நமக்கு வரும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணமே ஒழியப் பிறரைக் காரணமாக்குவது சரியல்ல என்பதை கவிஞர் வைரமுத்துவும் இக்கருத்தை உணர்த்த வந்த போது,

“காலமே / என்னைக் / காப்பாற்று / தீதும் நன்றும்
பிறர்தர வாரா / என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்”6
       என்ற பாடலில் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்தியுள்ளார். புறநானூற்றில் வள்ளல் பலரைக் காண்கிறோம். அவர்களுள் தமிழுக்காகத் தன் தலையையும் கொடுக்க முன்வந்தவர் குமணன். வாழையின் கொடையைக் குறிப்பிட வந்த பொன்மணி வைரமுத்து குமணின் கொடையோடு ஒப்பிடுகிறார். இதனை,

“வள்ளல்களை விஞ்சுகின்ற / வாழை இந்த வாழை
குமணன் தன் தலையைக் / கொடுப்பதாய்த் தான் சொன்னான்
இதுவோ / குலையென்னும் தலையைக் / கொடுத்தே விடுகிறது”7
என்னுமிடத்தில் புறநானூற்றுச் செய்தியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

திருக்குறள்
         
         பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். இது நீதி நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. சிரிப்பு என்பது நோய் தீர்க்கும் மருந்து. பிறரைப் புண்படுத்தாத சிரிப்பே விரும்பப்படுவது. தன்னுடைய மனமகிழ்ச்சியைக் சிரிப்பாக வெளிப்படுத்தவேண்டுமே ஒழிய, பிறருடைய துன்பம் கண்டு மகிழ்வதோ பிறரை ஏளனமாகக் கருதி சிரிப்பதோ கூடாது. தன்னுடைய துன்பம் கண்டு தானே சிரிக்கும் மனோபாவம் வாய்க்கும் போதுதான் நம்மால் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொண்டு வாழமுடியும். இதனை,

“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ த/தொப்ப தில்”8
என்கிறார் வள்ளுவர். இக்குறளைத் தழுவி,

“இடுக்கண் வருங்கால் / நகுக என்றான் வள்ளுவன்
சிலர் நகைத்தால்தான் / இடுக்கண்ணே வருகிறது”9
         என்னும் கவிதையில் குறள் கருத்தைக் கொண்டு விளக்குகிறார்.
பொய் சொல்லக் கூடாது என்றுதான் எல்லா அறநூல்களும் அறிவுறுத்துகின்றன. ஆனால் நடைமுறையில் ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று உள்ளது. வள்ளுவப் பெருந்தகையோ நாம் சொல்லும் ஒரு பொய்யால் நன்மை விளையுமானால் பொய் சொல்லலாம் என்கிறார். இதனை,

“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”10
         என்ற குறளின் கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மக்கள் ஏராளமான பொய்களைக் கூற தயங்குவதில்லை என்கிறார். பொன்மணி வைரமுத்து சத்தியத்திடம் உரையாடுவதாக அமைந்த கவிதையில் சத்தியமாகிய  உன்னைப் பற்றி வள்ளுவர் நிறையப் பாடியிருக்கிறாரே என்கிறார். அதற்கு சத்;தியம்,

“குற்றம் இல்லாத நன்மை தருமென்றால்
பொய்யும்கூட / மெய்போலத்தான் என்று பாடியிருக்கிறார்
அவசியம் கருதி அவர் பாடியதை   
வசதியாக்கிக் கொண்டார்களே”11
 
     என்று வருத்தப்பட்டது. பொதுவாகவே நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டாலும், அச்சட்டத்தில் சிறு விதிவிலக்கு இருந்தாலும், அதைக் காட்டித் தப்பிப்பது போல வள்ளுவரின் இக்குறளைப் பயன்படுத்தித் தம் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

சிலப்பதிகாரம்
         
   இரட்டைக்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரால் புகழப்பட்ட சிறப்புடையது சிலம்பு. தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருந்து வந்த தமிழ்க் கவிதை மரபில் முதன்முதலில் காப்பியத்தை இயற்றிப் புரட்சி செய்தவர் இளங்கோவடிகள். மதுரை நகரம் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது.  பண்டைய வரலாற்றோடு தொடர்புடையது. கடைச்சங்கம் தமிழை வளர்த்தப் பெருமைக்குரியது. பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது. இந்நகரத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டு வரும் கவிஞர், இந்நகரம் இன்று சாதியத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பல்வேறு சிறப்புக்களுக்குப் பெயர் பெற்ற நகரம் இன்று சாதிக் கலவரங்களுக்கும் தீண்டாமைக்கும் பெயர்  பெற்றிருக்கிறது என்று வருந்துகிறார். ஒரு காலத்தில் நீதிக்குப்; பெயர் பெற்ற இந்நகரத்தில் இன்று சாதியால் தாழ்ந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். இதனை,

“தென்னன் நீதி பிழைத்ததனால் – அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை”12
என்ற அடிகளில் நீதி நிலைநாட்டப்பட்டதை உணர்த்துகிறார்.

மணிமேகலை
         
‘மணிமேகலைத் துறவு’ என்று அழைக்கப்படுகின்ற ‘மணிமேகலை’ சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. பெற்றோர்கள் பலர் பெண்ணின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. முதல் தேதியானால் கிடைக்கும் அவளது வருமானம் போய்விடக்கூடாதே என்பதற்காகவே பல பெற்றோர்கள் பெண்ணின் திருமணத்தைத் தள்ளிப் போடக் கூடிய அவலமும் நடக்கிறது என்பதை கவிஞர் வைரமுத்து பின்வரும் கவிதைவரிகளில்,

“ஒண்ணாந்தேதி அமுதசுரபிகள்
வைத்ததிருப்பதால் / சில பெற்றோர்கள் அவர்களை
மணிமேகலைகளாய் / மாற்றிவிட்டனர்”13
என்கிறார். மேலும் கவிஞர் பொன்மணி வைரமுத்து அன்னை தெரசா குறித்து எழுதிய கவிதையொன்றில் அவருடைய வற்றாத அன்பையும் குறையாத இரக்கத்தையும் அமுதசுரபிக்கு இணையாக்குகிறார். இதனை,

“அன்புச் சுரபியேந்திய / இன்னொரு மணிமேகலை” 14
என்ற வரிகளில் அன்னை தெரசாவின் கருணையைப் பாராட்டுகின்றார்.

திருமந்திரம்
         
           திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக அமைந்து பக்தி கருத்துக்களைக் கொண்டதாக இருந்தாலும், இறையைப் பற்றிப் பிற இலக்கியங்கள் கூறுவதிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. இதன் ஆசிரியரான திருமூலர் இறை என்பது நமக்குள்ளேதான் இருக்கிறது என்றும் வேறு இடங்களில் அதனைத் தேட வேண்டியதில்லை என்று உணர்த்தியவர்.
          திருமூலர் நமக்குள்ளேயே இறைவன் உள்ளான் என்று பாடியவர். அவருடைய கருத்தை அவ்வாறே கூறிய கவிஞர் பொன்மணி, பெண்ணையும் இறைக்கு நிகராகக் காண்கிறார் என்பதனை,

“ஊனுக்குள் ஈசன் / கோயில் கொண்டிருப்பதால்
உடம்பைக் காக்கின்றேன் என்றார் திருமூலர்
பெண்ணும் அப்படியே / அவள்
தனக்குச் செய்துகொள்ளும்
அலங்கார மெல்லாம் / தனக்குள்ளிருக்கும்
அம்பிகைக்குச் செய்யும் அலங்காரமே”15
என்னும் கவிதை வரிகள் அவருடைய பெண்மை மீதான மதிப்பீட்டைக் காட்டுகின்றன.

ஆண்டாள்
         
    பக்தி இலக்கியங்கள் நாராயணன்மேல் காதல் கொண்டு அவனையே மணாளனாக அடைந்த பெருமைக்குரியவளாகப் படைத்துக் காட்டுக்கின்றன. ஆனால் இன்று வரதட்சணை வாங்காமல் எந்த ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதில்லை. அதனால் நல்ல கணவன் வாய்ப்பதற்கு விடியற்காலையிலே நீராடி நோன்பிருந்தால் மட்டும் போதாது நிறைய நகைகளும் பணமும் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்பதை,

“பாரடி…/ வெளிச்சம் உதிராத கருப்பு விடியலில்
அவரவர் கண்களிலேயே / நீராடிக் கொண்டு…
ஆயிரம் உணர்வுகளோடு / போராடிக் கொண்டு…
உன்  / வில்லிபுத்தூர்த் தோழிகள் இன்னும்
வீட்டிலேயே இருக்கிறார்கள் / வெவ்வேறு வீடுகளில்
வெவ்வேறு ஊர்களில்… / வெவ்வேறு பெயர்களில்;…”16
     என்று பெண்களின் நிலையைப் பாடியதோடு நில்லாமல் வருங்காலத்தில் வரன் வேண்டுமென்றால் வரதட்சணை இன்றி முடியாது. எனவே வரதட்சணைக் கேட்காத மாப்பிள்ளைகள் வரும் வரை இந்தப் பெண்களுக்கு வயது கூடாமல் மார்க்கண்டேயனிகளாய் இருக்கும்படி உன் மாதவனிடம் வரம் வாங்கித்தா என்று ஆண்டாளிடம் கோரிக்கை ஒன்றையும் வைக்கிறார் பொன்மணி வைரமுத்து.

இராமாயணம்         
      நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தையே மனிதன் சிதைத்தான். நெருப்பைக் கடவுளாக வழிபட்டனர். நெருப்பை தீபங்களில் ஏற்றி வழிபட்டனர். குளிர் காய்வதற்காகவும், விலங்குகளை விரட்டவும், சமைக்கவும், சைகை புரியவும், கருவிகள் செய்யவும், களிமண்ணைச் சுட்டப் பாத்திரங்களாக்கவும் பயன்பட்ட நெருப்பை பெண்ணின் கற்பைச் சோதித்தறியும் கருவியாக மாற்றினான் மனிதன். முதன் முதலில் இராமாயணத்தில்தான் பெண் தன் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஏகபத்தினி விரதன் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்றும், புகழப்பட்ட இராமன் இச்செயலால் பலரது விமர்சனத்துக்கும் ஆளாகிறான் என்பதை,

“கருவி செய்ய – களிமண் சுடப் / பயன்பட்ட நெருப்பை
கற்பைக் கண்டறியும் தர்மா மீட்டராய்
அழுக்குச் செய்தான் அயோத்தி மன்னன்”17
      என்னும் அடிகளில் நெருப்பு அழுக்கை நீக்கிப் புனிதப்படுத்தியது போய் தன்னுடைய செயலால் நெருப்பையே அழுக்குச் செய்துவிட்டான் இராமன் என்று ஆதங்கப்படுகிறார் வைரமுத்து.
 பொன்மணி வைரமுத்து தன் எழுதுமேசை பற்றிய கவிதையில் நீண்ட நாட்களாக அது பயன்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்த்து, அதன் பயன்பாடுகளைப் பட்டியலிடுகிறார்.  அதை அழகுபடுத்தலாமா என்று யோசித்த அவர் அதன் பழந்தன்மையே தனக்கு மிகவும் பிடித்திருப்பதாய்க் கூறுகிறார்.  இதனை,

“அலங்காரஞ் செய்யாது / அசோகவனத்திலிருந்தபடியே
ராமனைப் பார்க்க வந்த சீதையைப்போல /
அதன் பழஞ்சுவடுகளோடு அது இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது”18
      என்ற கவிதை வரிகளின் மூலம் கவிஞர் பழைய மேசைக்குச் சீதையை ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஒளவையார்
         
      சங்ககாலம் முதற்கொண்டு ஒளவை என்னும் பெயரில் பல்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். குமரகுருபரர் காலத்தில் வாழ்ந்த ஒளவை கல்வியைக் குறித்து கூறும்போது ‘யாரும் முழுவதும் கற்றவரில்லை. ஒன்றும் அறியாதவரும் இல்லை. அதனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்புக் கொள்ளக்கூடாது’ என்கிறார். ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்னும் நீதிநூல் பாடலில் எறும்பும் தன்கையால் எண்சாண் என்றார். இதே கருத்தினை,

“கற்றது கைம்மண்ணளவு என்று / கலைமகள் ஓதியது
குமரகுருபரர் காலத்தில் / இன்றைய கலைமகள்கள்
கற்றிருப்பது உலகளவு / சுற்றுவது வானளவு”19
       எனும் வரிகள் மூலம் பொன்மணி வைரமுத்து பெண்கள் கற்றிருப்பது கைம்மண்ணளவு அல்ல. உலகளவு, வானளவு என்று கூறி மகிழ்கிறார்.

உமர்கய்யாம்
         
       உமர்கய்யாம் பாரசீகக் கவிஞர். இவரது கவிதைகள் ‘ருபாயத்’ என்னும் தொகுப்பாக வெளிவந்தவை. கவிமணி அவர்கள் அக்கவிதைகளைத் தமிழில் ‘உமர்கய்யாம் கவிதைகள்’ என்னும் பெயரிலேயே மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சிறந்த கவிதையாகப் பெரும்பான்மையான இலக்கிய வரலாற்றாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்படுவது பின்வரும் கவிதையாகும்.

“வெய்யிற் கேற்ற நிழலுண்டு / வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு / கலசம் நிறைய மதுவுண்டு”20
பொன்மணி வைரமுத்து உமர்கய்யாமின் கவிதையை இவரது வார்த்தைகளாக்குகிறார். இதனை,

“வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்
என் / விருப்பத்திற்குரிய வேப்பமரம்
ஒருகையில் தேநீர் / இன்னொரு கையில் புத்தகம்
இதைவிடவா ஒரு வாழ்க்கை”21
என்னும் கவிதை வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

பாரதி         
      பாரதியின் கவிதையையொற்றி பொன்மணி வைரமுத்து ‘புரட்சிப்பெண்கள்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் புதுமைப்பெண்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் என்பதை,

“இந்நூற்றாண்டுப் பூவையர் / நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையுமாய் / புகுந்த வீட்டிற்குப்
புறப்பட்டுப் போய் / ‘காஸ் ஸ்டவ்’ ஏற்றினர்”22
           என்னும் வரிகளில் புதுமைப்பெண்களை எள்ளல் செய்யும் தொனியில் கூறியுள்ளார். முற்காலத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள் இன்று நவீனமாய் காஸ் ஸ்டவ்களால் கொளுத்தப்படுகிறார்கள். தண்டனை வடிவம்தான் மாறியுள்ளதே தவிர தண்டனை மாறவில்லை என்ற அவலத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
          இருபதாம் நூற்றாண்டில் பெண் கல்வி வலியுறுத்தியவர்களுள் பாரதி முன்னோடி. அவருக்குப்பின் பாரதிதாசன் முதலானோர் தொடர்ந்து பெண்கல்வியை வலியுறுத்தினர். இன்று கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இதைப் பொன்மணி வைரமுத்து,

“அப்பா பாரதி / நீ பாடியது சரிதான் / அதிகரிக்கிறது
பெண்கல்வி / ஆணுக்குப்பெண் இளைப்பில்லைதான்”23
என்ற வரிகளில் தன் மகிழ்வைத் தெரிவிக்கிறார்.

பாரதிதாசன்         
       பாரதி பாதையில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன். அதனால்தான் புரட்சிக்கவிஞர் எனப்பட்டார். குறிப்பாகப் பெண் சார்ந்தத சிக்கல்களுகு;கும் விழிப்புணர்வுக்கும் பாரதிதாசன் பாடுபட்டார். பெண் கல்வியை வற்புறுத்தினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும். குடித்தனம் பேணுதற்கே என்றார். அதையே பொன்மணி வைரமுத்து,

“ஐயா! கனகசுப்புரத்தினம் இனி / ஆண்களுக்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே என்று / பாட்டை மாற்றிப்
பாடவேண்டும்”24
      என்று கூறியிருப்பதில் பெண் கல்வியில் சமூகம் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துகிறார். மேலும் ஆண்கள் குடித்தனம் பேணுவதற்கு கல்வி வேண்டும் என்கிறார்.

முடிவுரை
    
         வைரமுத்து, பொன்மணி வைரமுத்து ஆகிய இருவரும் பழைய இலக்கியங்களில் இருந்து ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர். சில கவிதைகளில் இலக்கியங்களின் கருத்துக்களும் இலக்கியச் செய்திகளும் புதுக்கவிதை நடையில் விரித்து கூறப்பட்டுள்ளன.
காப்பியப் பாத்திரங்களை இன்றைய நடைமுறைச் சிக்கல்களுக்குப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளது. இலக்கியக் கருத்துக்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய நிலையிலிருந்து அவற்றை விமர்சிக்கும் வகையிலான கவிதைகளும் அமைந்துள்ளன. திருக்குறள், இராமாயணம் ஆகிய நூல்களில் இருந்து மிகுதியான கருத்துகள் கவிஞர்களால் கையாளப்பட்டுள்ளன. ஒளவையார், உமர்கய்யாம், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் கவிதைவரிகளும் கருத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1.வைரமுத்து ,திருத்தி எழுதிய தீர்ப்புகள்,ப.31

2.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.157

3.விசுவநாதன்,அ.,( உ.ஆ) கலித்தொகை,பா .எண்.34

4.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,பக்.89- 90

5.பாலசுப்பிரமணியன்,கு.வெ.விசுவநாதன். அ. (உ.ஆ) முதலியோர், புறம்.பா.எண் .192,வ.2

6.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.73

7.பொன்மணி வைரமுத்து, பொன்மணி கவிதைகள்,ப.61

8.கல்யாணசுந்தரம். திரு.வி.,(வி.உ), குறள் எண்.621

9.பொன்மணி  வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.129

10.கல்யாணசுந்தரம்.திரு.வி.,(வி.உ), குறள் எண் .292

11.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.206

12.வைரமுத்து,பெய்யென பெய்யும் மழை, ப.157

13.வைரமுத்து, இன்னொரு தேசிய கீதம்,ப.48

14.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.250

15.மேலது,ப.245

16.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.3

17.வைரமுத்து,தமிழுக்கு நிறம் உண்டு,ப.31

18.பொன்மணி வைரமுத்து,மீண்டும் சரஸ்வதி,ப.25

19.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.146

20.தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி சி.,உமர்கய்யாம் ,பா.எண் .106

21.பொன்மணி வைரமுத்து ,மீண்டும் சரஸ்வதி,ப.124

22.பொன்மணி வைரமுத்து,பொன்மணி கவிதைகள்,ப.28
23.மேலது,ப.28

24.மேலது,ப.146
                                                                  
Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மோ.ஜ.மகேஸ்வரி,

இணைப்பேராசிரியர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சேலம் 16.

 

வியர்வை பூக்கள்|கவிதை|காஞ்சி கிருபா

வியர்வை பூக்கள் - காஞ்சி கிருபா

🎯 இளைஞனே வா!


தோல்விகளால்..


துவண்டு விடாதே!!


 

🎯 முயற்சி மூங்கிலெடு


இனி…


உன் புல்லாங்குழலில்


வெற்றிப் பாக்கள்


இசைந்து வரும்
!

 

🎯 தூரத்தில்


வைத்துவிட்ட


நம்பிக்கை என்னும்


தூரிகை எடு!!


வெற்றி ஓவியங்கள்


உன் வீடு தேடி வரும்!!!


 

🎯 உன் வெற்றி


விரல்களுக்கு ஊக்கம் கொடு!!!


சாதனைக் கோலங்கள்


உன் வாசலை


வசீகரிக்கும்!!!


 

🎯 உன் எழுதுகோலுக்கு


எழுச்சிகொடு..


உன் தரித்திர


பக்கங்கள்


சரித்திரமாய் மாறும்!


 

🎯 தடை கற்களைக்


குயவனாய் மிதித்துப் போடு!!


உன் வியர்வை
துளிகளில்….


கிடைக்கும்


வெற்றி பாண்டம்!!


 

🎯 உன் உடலுக்கு


உழைப்பு கொடு!!


வியர்வை பூக்கள்


உனக்கு மாலையாகும்!!!


 

🎯 சிந்தனைச் சிறகுகளை


விரித்துபார்….


வெற்றி வானத்திற்கு…


உன் பயணம் தொடங்கும்…


 

🎯 இளைஞனே வா


தோல்விகளால்


துவண்டு விடாதே!!!!
                     

கவிதையின் ஆசிரியர்

காஞ்சி கிருபா

528/1 கட்டபொம்மன் தெரு,

விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,

சின்ன காஞ்சிபுரம், 631501

 

The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar|Dr.K.Nagammal

The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar -Dr.K.Nagammal
Abstract
       This research paper examines the concept of impermanence as expounded in Thirumoolar’s Thirumandiram, arguing that this doctrine serves as a unique catalyst for spiritual liberation. It highlights how Thirumoolar presents human suffering as a consequence of attachment to transient worldly illusions. The path to true deliverance, the study finds, is a dedicated and urgent pursuit of the eternal Ultimate Reality, or Paramaporul. A central tenet is the imperative to achieve this state of supreme bliss within one’s current lifetime. Ultimately, this analysis validates Thirumoolar’s profound legacy as a moral and spiritual guide whose work offers a compelling framework for human welfare and enlightenment.


திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்

ஆய்வுச் சுருக்கம்
      இறைத்தன்மை மிக்க சித்தர் பாடல்களில் திருமூலரின் திருமந்திரத்தில் எடுத்தியம்பப்பட்டுள்ள நிலையாமை தத்துவங்களை வெளிக்கொணந்து அதனூடாக ஆன்மாக்களை ஆன்ம விடுதலையை நோக்கி உந்தப்படுகிற தனித்துவத்தைத் திருமூலர் முன் வைத்திருப்பதை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் பிறக்கின்ற மனிதர்கள் மாயைகளை நம்பி உலகின் கட்டுக்களால் பின்னப்பட்டு துன்பப்படுகிற நிலையிலிருந்து விடுபட வேண்டுமெனில் அவர்கள் நிலையான பரம்பொருளை எய்திட முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் முயற்சியையும் உடலும் உயிருமுள்ள பொழுதே செய்து வெற்றி காண வேண்டும் அதுதான் வாழ்வின் பேரானந்தம் என்பதைப் புலப்படுத்தியுள்ளது. இவ்வாறு உலகிற்கு நன்மை பயக்கும் நல்லறங்களைக்கூறி ஆற்றுப்படுத்தியப் பங்கை மெய்பித்துள்ளது.

திறவுச் சொற்கள்
           திருமூலர், திருமந்திரம், நிலையாமை, தத்துவங்கள், மெய்யியல்,இறையியல், இறவா நிலை, பேரானந்தம், ஆன்மா, பரம்பொருள், பிறவி, மெய்ப்பொருள், சித்தர் இலக்கியம், சித்தர், சித்தம், சித், யோகம், அறிவுடைமை. 

முன்னுரை
     காலந்தோறும் இலக்கியங்கள் தோன்றி மக்களின் சிந்தனையில் இயங்கி அவர்களை நெறிப்படுத்தி அதன் ஊடாக அவர்தம் வாழ்க்கை முறையை மாண்புற செய்துள்ளது. அந்த வரிசையில் சித்தர் இலக்கியங்கள் உயிர்கள் பிறந்ததன் பயனையுணர்த்தி நிலையில்லா இந்த உலகத்தில் நிலையான மெய்ப்பொருளை அடைவதற்கான வழிவகைகளைக்  கூறி அந்த உயிர்களுக்கான ஆன்ம விடுதலையை வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அச்சித்தர்களில் முதன்மையான சித்தர் என்று போற்றப்படுகிற திருமூலரின் திருமந்திரத்தில் உள்மொழியப்பட்டுள்ள நிலையாமை மெய்யியலை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.

திருமந்திரம்
           திருமூலரால் இந்தயுலக மக்கள் யாவர்க்கும் அளிக்கப்பட்ட அனுபவ பிழிவுதான் திருமந்திரமென்னும் நூல். இந்நூல் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்குவதோடு முதல் ‘சைவ சித்தாந்த சாத்திர நூல்’ என்ற பெருமையும் கொண்டு மிளிர்கிறது. ‘சைவ சித்தாந்தம்’ என்ற சொல்லும் இந்நூலில் தான் முதன் முதலில் கையாளப்பட்டுள்ளது.சேக்கிழாரால் ‘தமிழ் மூவாயிரம்’ என்று சிறப்பிக்கப்பட்ட இப்பனுவலின் ஒன்பது தந்திரங்களில் 1- 4 ஆம் தந்திரங்கள் சிவ ஞானத்தைப் பெறுவதற்கானம சாதனங்களை எடுத்துக் கூறுகிறது. அதேபோல, ஐந்தாம் தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்குகிறது. மேலும், 6-9 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தால் பிறக்கும்   நன்மைகளை விளம்புகிறது. திருமூலர் எண்ணாயிரம் பாடல்களை எழுதியிருந்தாலும் கூட அவரியற்றிய திருமந்திரம் என்னும் படைப்பே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது.

சித்தர்கள் 
         ‘சித்’ – என்ற வடமொழி சொல்லிலிருந்து தோன்றியதுதான் சித்தர் என்ற சொல்.  சித் – என்றால் அறிவு என்று பொருள். அதன் அடிப்படையில் சித்தர்கள் நுண்ணறிவாளராகவும் பேரறிவாளராகவும் மெய்ஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தனர் என்று கொள்ளலாம். ஏனென்றால் சித்தர்கள் பக்தர்களிலிருந்து வேறுபட்டவர்கள். “பக்தி நெறியின்றி வேறு நெறியால் கடவுளைக் கண்டு தெரிந்து இருவினையொட்டி நிகழுங் காணும் உடலோடு உலாவுவோர் சித்தர்.” (அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.) என்று உரைத்துள்ள மு. அருணாசலம் அவர்களின் கருத்தும் இவ்விடத்தில் சிந்திக்க தக்கதாகும்.
அச்சித்தர்கள் சாதி, மதம்,  இனம் இப்படியான சமூகத்தின் பிரிவினைகளுக்கு மிக முக்கிய காரணங்களாக விளங்கக்கூடிய வேறுபாடுகளை ஒழித்து மக்கள் ஒற்றுமையுடன் உயர்ந்த வாழ்வை வாழவேண்டுமென்ற நோக்கில் அவர்களின் விழுமிய வாழ்வியலுக்காகத் தம் படைப்பின் வழியாக உலக மெய்யியலை வழங்கியுள்ளனர். அவற்றில் நிலையாமை தத்துவத்தைப் பற்றி பாடும் பாடல்களை முன் வைத்து இக்கட்டுரைகயில் “திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு பொருள் அமைக்கப்பட்டுள்ளது. 

நிலையாமை தத்துவம் 
         தத்துவம் என்பதனை அறிஞர்கள் ‘மெய்யியல்’ என்கின்றனர். குறிப்பாக நிலையாமை தத்துவம் என்பது இந்த உலகத்தில் நிலையற்ற பொருள்களின் உண்மை தன்மையைச் உறுதிப்படக் கூறுவது. “நிலையில்லாத தன்மையே நிலையாமை” (அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, ப. 832) என்று நிலையாமைக்கு க்ரியா அகராதி பொருள் விளக்கம் தருகிறது. 
இப்படியான சிந்தனைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பதும் அதனை வாழ்க்கையில் பின்பற்றுதல் என்பதும் பெரும்பான்மையான மக்களிடத்தில் எட்டாக்கனியாக இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது. தன் அனுபவத்தால் ஒன்றினை மிக எளிமையாக உள்வாங்கிக் கொள்கின்ற  மானிடயினம் இதுபோன்ற சித்தாந்தங்களில் தன்னை உட்புகுத்திக் கொள்ளாமல் கடந்து செல்ல எண்ணும் போக்கைக் காணமுடிகிறது. இதன் காரணமாக முடிவில் துன்பத்தில் அழுந்தி வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.  அதனால்தான் திருமூலர் மனித ஆன்மாக்களை இதுபோன்ற துன்ப நிலையிலிருந்து மீட்டெடுத்து இறவாத பெருவாழ்வை நோக்கி செலுத்தும் முகமாகத் தன் படைப்பான திருமந்திரத்தில்  யாக்கை நிலையாமை  25 – பாடல்கள், செல்வநிலையாமை  -9 பாடல்கள், இளமை நிலையாமை 10- பாடல்கள் உயிர்நிலையாமை  10- பாடல்கள் என நிலையாமைக்கு நான்கு அதிகாரங்களை வகுத்து 54 பாடல்களைத் தொகுத்தளித்து அப்பாடல்கள் மூலமாகத் திறம்பட ஆற்றுப்படுத்தியுள்ளார். 

நிலையற்ற உடம்பு 
        பரந்து விரிந்த  இப்பூவுலகத்தில் இன்று, நாம் பார்த்த ஒன்று நாளையில்லை. இன்று நம்முன் நடமாடிய மனிதன் அடுத்த நொடியே இறந்து விடுகின்ற நிலையை கண்முன் கண்ட பின்னும் கூட அறியாமையில் மக்கள் நிலையில்லாதவைகளை நிலையானது என்று மயங்கி கிடக்கின்றார்கள். இத்தகைய தன்மை உடையோரை, 

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்  
புல்லறி வாண்மை கடை” (திருக்குறள்.331) 
         
     எனக் கூறி இவ்வாறு நம்புகின்ற அறியாமை இழிவானது என்று இடித்துரைக்கிறார் வள்ளுவர். 
 
“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு 
சூரையாங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந் தார்களே” (திருமந்திரம்.145)
         
       எனப் பாடுகிறார் திருமூலர். இதனினும் மேலாக, அதன் உச்சத்தைக் காட்ட விரும்பி இந்த உடலைவிட்டு போகும் உயிர் மீண்டும் இந்த உடலுக்குள் வந்து புகாது (திருமந்திரம்.146,149) அதேபோல, ஒரு குயவன் செய்த குடம் உடைந்து போனால் அதன் துண்டுகளை ஓடு என்று சொல்லி நாளை உதவுமென்றும் எடுத்து வைப்பார்கள். ஆனால், மனித உடல் அழிந்து போனால் அது ஒன்றுக்குமே பயன்படுவதில்லை மாறாக அது நாறிவிடுமென்று உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை,

“வளத்திடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்;
குடம்உடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந் தால்இறைப் போதும் வையாரே.”  (திருமந்திரம்.158)
         
        என மனமுருகிப் பாடுகிறார் எனவே, உடலின் இத்தகு தன்மையை உணர்ந்து மனிதன் சிவ ஒளியைச் சேரும்போது அந்த உடல் அழிவற்ற நிலையை எய்த முடியும் என்ற உறுதிப்பாட்டை ஒரு குயவன் செய்கின்ற சுட்ட மண்பாண்டமும் பச்சை மண்பாண்டமும் ஒரே மண்ணிலிருந்து செய்வதை நாம் கண்டாலும் கூட தீயினால் சுட்டது இறுகி திண்மை பெறும். சுடாமல் இருப்பதோ இறுக்கம் பெறாததால்  மழைநீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே ஆகிவிடும். அதைப்போலத்தான் மனித உடம்பும் தவத்தால் சிவவொளியைப் பெற்றுவிட்டால் அழியாது. ஆனால், சிவ ஒளியைப் பெறாதபோது வலிமையைப் பெறாது விரைந்து அழிந்து போகின்றது. இப்படித்தான் இவ்வுலகில் எண்ணற்றவர் இறந்து விடுகின்றனர் என்ற பேருண்மையை,

“மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச்  சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டும்மண் ஆவபோல்
எண்ணின்றிமாந்தர் இறக்கின்ற வாறே.”          (திருமந்திரம்.143)
என விளம்புகிறார்.

நில்லாச் செல்வம்
         இன்றைய மானுட வாழ்வில்  அவர்களின் ஓட்டம், ஓய்வு ஓய்வறியா உழைப்பு,ஒருவர் மீது மற்றொருவர் பொறாமை கொள்ளுதல், ஒருவரை பழிவாங்கித் தான் அந்தயிடத்தில் அமர வேண்டுமென நினைத்தல், தனக்கேயிது கிடைக்க வேண்டுமென்ற பேரவா இப்படி இன்னோரன்ன பல காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பது பொருள் தேவை அல்லது பொருளாதாரம் பற்றிய எண்ணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படியெல்லாம் தேடுகிற இந்த செல்வம் நிலையற்றது என்ற உண்மையைப் புறந்தள்ளி விட்டு வாழும் மக்களைப் பார்த்து சித்தர்கள் கவலை கொள்கிறார்கள்.
அரும்பாடுபட்டுத் தேடி வைத்து அறம் செய்யாது பெருக்குகின்ற எல்லா செல்வமும் என்றோ ஒருநாள் அழியும் தன்மையுடையது. இதனை, உணராத மனிதன் காடு, வீடு, நாடு என எல்லா இடங்களிலும் அதனைத் தேடி அலைகிறான். ஏதோ ஒரு வகையில் அதனை அடைந்த பின்னும் அவனுடன் உடன்வரும் ஆற்றல் அதற்கில்லை என்பதுதான் எதார்த்தம். அதனால்தான் திருமூலர், என்றும் குறையாத செல்வமாக விளங்கும் இறைவனிடம் சேர்ந்துவிட்டால் அந்த உயிரானது அரிய தவங்களையும் செய்ய வேண்டாம்; எதற்கும் அஞ்சவும் வேண்டாம் என்று தெளிவுபடுத்துகிறார் இதனை,

“தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில் 
மருளும் பினைஅவன் மாதவம் அன்றே‌”  ( திருமந்திரம்.168)
         
       இவ்வடிகளில் அறியமுடிகிறது. நில்லா இப்பொருள் செல்வத்தை விடுத்து மனித மனமானது என்றும் நிலைக்க வல்ல இறைவனைத் தேடுவதற்கான வழியைக் கண்டு அவனோடு ஒன்றிட வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். 

இளமை நிலையாமை
       மனித உயிர்கள் பிறந்து வளர்ந்து இளமையை அடைந்து முதுமை பெறுவதும் உறுதி. இப்படியிருக்க இளமையே நிலையானது என எண்ணுவது மாயையானதை நம்புவது அது பயனற்றதுமாகும்.இது போன்ற தத்துவ அறிவுறுத்தலை திருமூலர்,

“ஆண்டு பலவும் கழிந்தன; அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்தறி வாரில்லை;
நீண்ட காலங்கள்; நீண்டு கொடுக்கினும் 
தூண்டு விளக்கின் சுடரறி யாரே” ( திருமந்திரம்.178)         
         இறைவனை அறியாமலேயே பல ஆண்டுகள் வாழ்நாளில் கழிந்து விட்டன. இந்த உலக உயிர்களுக்கெல்லாம் அப்பனாக விளங்கும் இறைவனை உள்ளத்திலே கொண்டவர்கள் கூட, ஒளியாகிய அவனை ஆழமாக எண்ணி முழுமையாக அறியவில்லை. அப்படியிருக்க இன்னும் நீண்ட காலம் வாழ்கிற வாய்ப்பு இருந்தும் தூண்டு விளக்கின் பெருஞ்சூடராக இருக்கும் இறைவனை அறிந்து தொழாமல் கழிக்கின்றனரே இந்த மக்கள் என உலக மக்கள் குறித்து வருந்துகிறார். அதேபோல, இளமை என்பது அனுதினமும் தேய்ந்து தேய்ந்து இறுதியிலே மாய்ந்துவிடும் இயல்புடையது. அத்தகைய இளமை கழிந்து விட்டால் எத்தகைய நல்ல அறங்களையும் செய்ய முடியாமல் போகிவிடும் என்பதை,

“தேய்ந்துஅற்று ஒழிந்த இளமை கடைமுறை;
ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள்;
பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும்! உயிருள்ள போதே. ”       (திருமந்திரம்.179) 
         
        எனப்பாடி உயிருள்ளபோதே சிவபெருமானை நன்கு எண்ணி உணர்விலே வைத்துக் கொள்ள வேண்டும் என ஆற்றுப்படுத்துகிறார்.  ஆகவே, உயிர்கள் அனைத்தும் இளமையின் தன்மையை உணர்ந்து அது இருக்கும் காலத்திலேயே இறையொளியோடு கூடுதலே இப்பிறவியின் பயன் என்பதை அறியவைத்துள்ளார்.

உயிர் நிலையாமை
        உயிரைத் தாங்கி நிற்கின்ற உடல் அழியுமேயன்றி உயிர் அழிவதில்லை. உடலும் உயிரும் ஒன்றோடுயொன்று பின்னிபிணைந்தவை அந்த உடலை விட்டு உயிர் பிரிந்து போகும் முன்பே இறைவனின் திருவடி ஒளியைப் போற்றி வழிபட வேண்டும். அப்படி இல்லையேல் எமன் அழைக்கும் நாளில் அந்த இறைவனை அறிந்து போற்றுவதற்கு வாய்ப்பு ஏதுமில்லை என்றுரைப்பதை, 

“தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் 
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.    (திருமந்திரம். 187)
          இவ்வடிகள் சுட்டிக் காட்டுகிறது.   உடல், உயிர் ஆக்கம் அதன் இயக்கம் எனத் தெள்ளத் தெளிந்த திருமூலர் முதலில் உடலைப் பாதுகாத்தல் வேண்டும் அதன் மூலம் நீண்ட நாட்கள் வாழலாம் என்றார் இதனை,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்      தேனே. ”  (திருமந்திரம். 724
)
             இவ்வடிகள் விளக்கி நிற்கிறது. எப்படியோ வாழலாம் என்று இல்லாது இப்படித்தான் வாழ வேண்டும் எனக் கொள்கைகளோடு வாழும் மனிதர்களுக்கும் அந்த வாழ்க்கையின் நிறைவில் அவர்கள் எய்த வேண்டிய பெருவாழ்வு எது என்பதை உணர்த்தும் ஆற்றல் உடையதே சித்தர் இலக்கியங்கள் என்பது பெறப்படுகிறது. 

மெய்ப்பொருள் உணர்தல்
      செல்வம், யாக்கை,இளமை,உயிர் ஆகிய அழியும் தன்மையுடையவற்றை மனித மனம் வெறுத்தொதுக்கி இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நிலைத்தன்மையுடைய இறையை அடைவது தான் வாழ்வின் பயன் என உணர்ந்து அத்தகைய, உயர்ந்த வாழ்வை எய்திட எண்ணும் பொழுது அந்த உயிர்கள் சிவஞானத்தை எய்தி பேரொளியோடு ஓரொளியாகச்  சேருகிற மெய்யிலை உணரும் அந்நிலையே வாழ்வின் உன்னதம் என்பதனைச் சித்தர்கள் மெய்பித்துள்ளனர். இங்கே,
“மெய் என்னும் சொல்லுக்கு உண்மை, உடம்பு என்னும் இரண்டு பொருள்கள் உண்டு.”(அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, ப.141)
என்றுரைக்கும் கருத்து ஒப்பிட்டு எண்ணத்தக்கது.

முடிவுரை 
         
🍁மானுடர்கள் அனைவரும் நிலையில்லாத உலகப் நிலைப்பாட்டினை உள்வாங்கிக் கொண்டு நிலையான பரம்பொருளை அடைய வேண்டும். அப்பரம்பொருள் வேறு நாம் வேறல்ல நமது உள்ளம் தான் அந்த இறைவன்  என்ற மெய்யியலை வழங்கி அவர்களின் வாழ்வியலின் காப்பாகவும்; மனித சமூகம் மேம்பாடாகவும் விளங்கும் இதுபோன்ற மடைமாற்ற சிந்தனையின் மூலமாக மனிதனை மேம்பட்ட ஆன்மாவாக நிலைநிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
         
🍁மனித உடலானது தவத்தால் சிவ ஒளியைப் பெற்றுவிட்டால் அந்த உடம்பின் அழிவிலிருந்து தப்பலாம் அல்லது உடம்பிற்கு அழிவேயில்லை என்று உறுதிப்படுத்தி உயிர்கள் செல்ல வேண்டிய எல்லையை வகுத்து தருகிறார்.
         
🍁ஆன்மாக்கள் மோட்சம் அடையும் வழிமுறைகளை எடுத்துக்காட்டி அவர்களின் எதிர்கால கனவினை மெய்ப்பட செய்யும் பணியைச் செவ்வனே ஆற்றியுள்ளார்.
         
🍁இப்பூமியில் மெய்யான பொருள் இறைவன் என்பதை உணர்த்தி அதனை அடைவதே ஆன்மாக்களின் பெரும்பேறு, இப்பிறவியின் பயன் என்பதனை எடுத்துக்காட்டி அதற்கான வழிகளான தவம், யோகங்களை கைவரப்பெறுதல் வேண்டும்; குறிப்பாக வாழும் காலத்தில் இறைவனை தனக்குள்ளேயே தேட வேண்டும் என்ற தத்துவ போக்கை சித்தர்கள் நிலைநாட்டியுள்ளனர்
         
🍁வாழும் காலத்தில் ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு வாழ்வின் இறுதித் தருவாயில் இறைவனை எண்ணுவதால் பயனில்லை என்று ரைத்து வாழும் காலத்தே அழிவில்லா இறைவனை அடைவதே துன்பம் போக்கும் வழி என வலியுறுத்துவதை அறியமுடிகிறது.
         
🍁எப்பொழுது ஆன்மாக்கள் மாயையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறைவனையடைய வேண்டுமென எண்ணுகிறதோ அப்பொழுததே இறையருளால் குருவின் துணையோடு மோட்சத்தை எய்தும் பாக்கியம் பெறுமென்பதைத் திருமூலரின் திருமந்திரப் பாடல் புலப்படுத்துவதை உணர முடிகிறது.
 
துணைநூற் பட்டியல்
1.அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, க்ரியா, New No.2,  old NO.25, 17th East Street Thiruvanmiyur, Chennai- 41, first edition, 1992.

2.அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, இளங்கணி பதிப்பகம், பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15 பி,தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை – 6000 17.

3.அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.

4.மணிவாசகன் புலவர் அடியன், திருமந்திரம், சாரதா பதிப்பகம், ஜி 4 சாந்தி அடுக்ககம் 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை -14, ஏழாம் பதிப்பு, செப்டம்பர் – 2022.

5.புலியூர்க்கேசிகன்,(ப.ஆ) திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை – 03, 11 – ஆம் பதிப்பு, 2010.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,

இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

Pandiya Tamilargalin Touchh Thozhil Muraigal|Dr.S.Ilavarasi

Pandiya Tamilargalin Touchh Thozhil Muraigal - Dr.S.Ilavarasi
Abstract
           Carpentry is one of the handicrafts of the ancient Tamil people. All the crafts that are useful for the prosperous life and comfort of the people are livelihood crafts. The special characteristics and structures of carpentry crafts can be seen in Sangam literature. Carpenters who have skillful activities along with artistic techniques are known through Sangam literature.


பண்டையத் தமிழர்களின் தச்சுத்தொழில் முறைகள்

ஆய்வுச் சுருக்கம்
         பண்டைய தமிழ் மக்களின் கைத் தொழில் முறைகளில் ஒன்று தச்சுத்தொழில்கள். மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் தச்சு தொழில்களின் சிறப்பு இயல்புகளை அமைப்புகளைக் காணலாம். கலை நுணுக்கங்களுடன் திறன் மிக்கச் செயல்பாடுகளைக் கொண்ட தச்சர்கள் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியப்பெறுகின்றனர்.

ஆய்வுச்சிக்கல்
        பண்டையத் தமிழ் மக்களின் தொழில் முறைகளைப் பேணுவதே நோக்கமாகக் கருதப்படுகிறது தவிர வேறு எந்த இனத்தையும் சார்ந்ததாகக் கூறப்படவில்லை என்பதை இவ்வாய்வின் சிக்கலாகக் கருதப்படுகிறது.

ஆய்வு முறையியல்
பகுப்பாய்வு, தொகுப்பாய்வு முறை, ஆய்வியல் முறைமையில் இவ்வாய்வு விளக்கப்படுகிறது.

முன்னுரை
     பண்டையக் காலத்து நானில இயல்புகளும் மக்களின் ஒழுகலாறும்  அரசியல், வாணிகம் உழவு முதலிய தொழிற்றுறை இயல்புகளும் மக்களின் வாழ்க்கைப் பண்பாடு, அவர்கள் கையாண்ட க் கருவிகளின் இயல்பும் பிறவும் அறிவதற்குச் சங்க காலப் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகையும் நல்ல சான்றுகளைக் கொண்டுள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டையத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியலை பற்றிய பல அரிய நூல்கள் அறிஞர் பலரால் எழுதப்பட்டுள்ளன. வாழ்வியல் சிறக்க அடிப்படைக் காரணமாக விளங்கும் தொழில்கள் பற்றிய நிகழ்வினை இவ்வாய்வில் காணலாம்.
 
“வினையே ஆடவர்க்கு உயிரே”1
 
என வரும் குறுந்தொகை பாடல்கள் வழி உணர்த்தப்படுகிறது.

பண்டையத் தொழில் முறைகள்
         தமிழர்களின் தொழில்களில் பெரும்பாலானவை கைத்தொழில்களேயாவன. பஞ்சை நூலாக்கி துணி நெய்தலும், இரும்பை உருவாக்கிக் கருவிகள் செய்தல் போன்றவை.தொழில்கள் பெருமளவு மனிதன் முயற்சிகளாகவே இருந்தன. இவற்றிற்குப் பயன்பட்ட கருவிகளும் எளிய அமைப்பினை உடையவையாகும். ஒரு தொழில் செய்பவனே தான் செய்யும் தொழிலுக்கு உரிமை உடையவனாகவும் இருந்தனர். அவரவர் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களது தொழிலை மேற்கொண்டனர். இவற்றால் அக்காலத்தில் தொழில் செய்வதில் கடும் உழைப்பும், பொறுப்புணர்ச்சியும், சுதந்திர மனப்பான்மை, ஆர்வத்தின் தேவைகள் இருந்தமையால் தொழில்கள் நேர்மையுடன் நேர்த்தியாகவும் செயல்பட்டன.

அழகுக் கலையின் திறன்கள்
     தொழில்களுடன் அழகுக்கலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கக் கூடியவையாகத் திகழ்கின்றது. தொழில்களில் அழகுக் கலைத் தொழில் சாயல் கையாளுகின்ற திறமைப் போன்றவை இருக்க வேண்டும் அவன் தான் சிறந்த கலைஞனாக இருக்க முடியும் என்பதை புறநானூற்றில் ஒரு நாளில் எட்டு தேர்களைச் செய்யக்கூடிய தச்சன் ஒரு மாதம் முயன்று மிகுந்த கவனத்துடன் ஒரு தேர் காலை உருவாக்கினார். இதனை

“……………………. வைகம்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் ளோனே”2 
         புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவுபடுத்துகிறது என்பதே அறியப் பெறுகின்றது. கலைப்படைப்பின் அழகினை வன்கலை அல்லது தொழில் என்று கூறுகின்றனர் . இதனை

“கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்”3
       எனப் பாரதியார் பாடியது போல நாடு நலம் பெற கலையையும் தொழிலையும் செழிக்கச் செய்தல் வேண்டும். இதற்கு வழிகாட்டிகளாய்த் திகழ்ந்தவர் பண்டையத் தமிழரே ஆவார். காலப்போக்கில் பல்கிப் பெருகித் தழைத்து வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன.

தச்சுத்தொழிகளின் சிறப்புகள்
       இயற்கை தந்த செல்வம் பலவகையான உரம் வாய்ந்த மரங்களே. தகுதி உள்ள மரங்களை அறுத்து வீடு அமைப்பதற்கும், வண்டி, தேர் முதலிய செய்வதற்கும் வழிகண்ட பெருமை தச்சர் என்னும் தொழிலாளர்களுக்கே உரியதாகும்.’ தச்சு’ என்பது ஒன்றையும் மற்றொன்றையும் பொருந்தி இணைப்பதாகும். இத்தச்சுத் தொழிலைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். கல் தச்சு தொழில் செய்வோர் கல்தச்சர் எனவும், மரத்தச்சு தொழில் செய்வோர் மரத்தடச்சர் எனவும் வழங்கப்பட்டனர். தச்சு தொழிலாற்றியதால் தச்சர் எனப்பட்டனர். மரத்தொழில் செய்து வந்த தச்சன் சங்க காலத்து இலக்கிய வழக்கில் மரக்கொல் தச்சன் என வழங்கப்பட்டான். மரம் கொல் என்பது மரத்தை வெட்டுதல் எனப் பொருள்படும் மரக்கொல் தச்சன் என்னும் சொல்

“காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஆர்”4
இப்பாடல் புறநானூற்றில் விளக்கப்படுகின்றது. சங்ககால இலக்கியங்களில் திறமை வாய்ந்த தச்சர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தச்சுத் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டனர். தமிழ்நாட்டுத் தச்சர்கள் மக்கள் வாழ்க்கைக்கு தேவையானப் பொருள்களைச் செய்து கொடுத்தனர். நால்வகைப் படைகளில் தேர் படையும் ஒன்றாக இருத்ததால் தேர்வு செய்வது அன்றையத் தச்சர்களின் தலையாயக் கடமையாக இருந்திருத்தல் வேண்டும். கண்ணைக் கவரும் வண்ணம் நேர்த்தியாகத் தேர்களை அக்காலத்தில் செய்யப்பட்டன. இதனை

“கண்ணோக் கொழிக்கும்
பண்ணமை நெடுந்தேர்”5
அகநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. தச்சரின் தொழில் திறமைகளை உணர்த்தப்படுகின்றன.

‘சகடம்’ பொருள் விளக்கம்
        ‘சகடம்’ ஒன்றின் வரிவான விளக்கத்தைக் காணலாம். திரண்ட வட்டையில் ஆரக்கால்கள் சொருகி அமைக்கப்பட்ட சக்கரங்கள் முழு மரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட குடங்கள் மத்தளங்கள் போன்று உள்ளன. ஆர்கள் குடத்திற்கும் வட்டைக்கும் இடையில் பொருத்தப்பட்டிருந்தன. அச்சு மரத்தின் மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் நெடுகக் கிடைக்கின்ற பருமரங்கள் இரண்டினையும் நெருங்கத் துறைத்து குறுக்கே ஏணி போலக் கோர்த்துப் பார். அதன் மேல் ஆரைப் புல்லான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

“கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழு மர வுருளி
எழூஉப்புணர்ந் நன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிகுன்ற மழைசுமந் தன்ன
ஆரை வேய்ந்த வறைவாய்ச்சகடம்”6
         
    இக்குறிப்பு பெரும்பாணாற்றுப்படையில் தச்சர்களின் திறம்பாட்டை காட்டுகிறது. ஒரு தொழிலாளர்களின் திறமைகள்அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் அவ்வகையில் தச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் திறமைகளை ஆய்ந்து உணரலாம்.

தச்சர்களின் திறமைகள்
      இயற்கை நமக்கு கொடுத்த மரங்களின் பயன்களை தச்சர்கள் தங்களுடையத் திறமைகளின் கை வண்ணத்தில் காண்கின்றனர். இவர்கள் பல அரிய பொருட்களை செய்து தங்களின் திறமை கோல்களை நிலைநாட்டி உள்ளனர். அரண்மனை மதில் கதவுகள், வாயில் நிலைக்கால், அமைப்பு, வாயில் நெடுநிலை ஆகியவற்றை குறித்து கூறுகையில் தச்சர்களின் தொழில் மேம்பாடு வளர்ச்சி நிலை அடைந்து உள்ளதை அறியலாம். இவற்றில்

“ஒருங்குடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பில்
பருஇரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துப்
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை”7
      என்ற பாடல் வரிகள் தச்சரின் அரண்மனையின் வேலைபாடுகளை குறித்தச் சிறப்பினை நெடுநல்வாடையில் விளக்கப்படுகிறது.

முடிவுரை
        பழங்காலம் முதல் இன்று வரை தச்சர்களின் வேலைப்பாடுத்திறன்கள் அதிகரித்து உள்ளது. பண்டையத் தொழில் முறைகளில் தச்சு தொழில்களின் முக்கியத்துவத்தைக் காணலாம். இவர்களின் அழகிய வேலைபாடுத்திறன் நுணுக்கங்கள் கலை நயத்துடன் வெளிப்படுகின்றது. கைத்தொழிலின் சிறப்பு அம்சங்களாக தச்சு தொழில் செயல் படுகிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் சான்றாக அழகு உணர்வுடன் வர்ணனைகளையும் வர்ண பூச்சுக்களையும் கொண்டு அரண்மனைகளையும் வாயில் மதில்களையும் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பினைக் காணலாம். நுண்கலைகளில் ஒன்றான  தச்சுத் தொழிலின் சிறப்பு இயல்புகளை இவ்வாய்வின் மூலம் அறியப்பெறுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.குறுந்தொகை.135

2.புறநானூறு பாடல்.87

3.பாரதியார் கவிதை

4.புறநானூறு.206

5.அகநானூறு.234

6.பெரும்பாணாற்றுப்படை.6

7.நெடுநல்வாடை.79-86 வரி

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். சு. இளவரசி

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி)

திருச்சி.

 

Sanga Ilakkiyathil Isai Kalaingarkalin Vaazhviyal Seithikal|Dr.C.Ramamirtham

Abstract            
         Iyal, Isai, and Nadagam (literature, music, and drama) are collectively known as Muthamizh (the three forms of Tamil). Isai (music) refers to “singing” or “melody.” It is also referred to as Pa or Paavinam. Music has been deeply intertwined with the lives of ancient Tamil people. Forest dwellers, tribal communities, and nomadic groups all had their own unique musical traditions. This essay records the life stories and cultural backgrounds of various musical artists such as Pānan, Porunan, Pāṭiṉi, and Koothar.


சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்


திறவுச்சொற்கள்: இசை என்பதன் பொருள், இசைக்கருவிகள், கலைஞர்கள்,  பொருநர், பாணர், கூத்தர், விறலியர், இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்.

இசை என்பதன் பொருள்          
        இசை என்னும் சொல்லுக்கு  ‘இசைவிப்பது , வசப்படுத்துவது’ என பொருள் கொள்ளலாம். இச்சொல் ‘இயை’என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது.
       இயைதல் என்பதற்கு பொருந்துதல் ,ஒன்று சேருதல், கூடி நிற்றல், புணர்தல் எனப்  பொருள் கொள்ளலாம். ‘இயைபே புணர்ச்சி’ (தொல். உரி:12) என்பது தொல்காப்பிய நூற்பா. ‘இயைபு’ என்னும் சொல்லில் இருந்து ‘இசைப்பு’ என்னும் சொல் உருவாயிற்று. ‘இசைப்பு’ என்பது ‘இசை’ என ஆயிற்று.

“இசைப்பு இசையாகும்” (தொல். உரி:12)
           
       இசை என்பதற்குப் பொருந்துதல் என்று பொருள் கொள்ளும்போது தாளம், பண் , பாடல் , பொருள், பாடுவோன் குரல் போன்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று இசைந்து நிற்றல் எனக் கொள்ளல் வேண்டும். இதனைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகின்றது.
 
“ யாழும் குழலும் சீரும் மிடறும்தாழ்குரல் தண்ணுமை  
ஆடலொடு இவற்றின்இசைந்த பாடல் இசையாகும் “   (சிலம்பு. அரங்கேற்றுகாதை: 26 -28)
இசைக்கருவிகள்
         
       சங்ககால இசைக்கருவிகளில் தலைமை சான்ற இசைக்கருவி யாழாகும். சீறியாழ், பேரியாழ்  என இருவகை யாழ் இருந்ததாக அறிய முடிகிறது.

“வள்ளுகிர்ப் பேரியாழ்”   (மலைபடுகடாம்: 37)
“இடனுடையப் பேரியாழ்” (பெரும்பாணாற்றுப்படை: 462)
என்பதனால் பேரியாழ் அளவில் பெரியது என்பதனை அறிய முடிகின்றது.

“கருங்கோட்டுச் சீறியாழ்”  (நெடுநல்வாடை: 70) 
“ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்” (மதுரைக்காஞ்சி: 559)
         
        என்பவை   சீறியாழைக் குறிப்பிடுகின்றன. மேலும் இசைக்கருவிகள், தோல்கருவிகள், நரம்புக்கருவிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

ஊதுக்கருவிகள்
🐚 குழல்

🐚 தூம்பு

🐚 கோடு

🐚 வயிர்சங்கு

தோல்கருவிகள்
🐚பறை

🐚 தண்ணுமை

🐚 மத்தளம்

🐚 முரசு

🐚 கிணை

🐚தடாரி

🐚 தட்டை

🐚 பதலை

🐚படகம்

🐚 எல்லரி

🐚பம்பை

கலைஞர்கள்
           
       கலை என்பது கற்றுக் கொள்வது.  ஒருவர் மற்றவரிடம் கற்றுக்கொண்டு வளர்க்கும் கலையே இசையாகும். கேட்போரை வயப்படுத்தித் தன்வசம் இசைய வைக்கும் ஆற்றல் வாய்ந்தது இசைக்கலையாகும். கலைஇன்பம் தரக்கூடியவர்கள் கலைஞர்கள். அவர்கள் முறையே பாணர், பொருநர், பாடினி (விறலி), கூத்தர் என்று அழைக்கப்பட்டனர். இச்செய்திகளை ஆற்றுப்படை நூல்கள் எடுத்து இயம்புகின்றன.

பொருநர்
         
      மற்றொருவர் போல் வேடம் கொள்பவர் பொருநர் ஆவார். இவர்கள் மூவகையினராக  ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இருந்தனர். போர்க்களம் பாடுவோரே பெரிதும் குறிக்கப்பட்டுள்ளனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப்படை இவ்வகைப் பொருநானல் பாடப்பட்டதாகும்.
திருவிழாவில் பொருநர்கள் கூடித் தங்கள் கலைத்திறனைக் காட்டிப் பின்னர் விழா முடிந்ததும் வேற்றுர் நாடி செல்வதாக முடத்தாமக் கண்ணியார் பாடலைத் தொடங்குகின்றார்.

“அறாஅ யாணர்  அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாள் சோறுநசை
உறாஅதுவேறுபுலம் முன்னிய விரகறி”           (பொருந:1-3) 
பாணர்
        
       பாணர் என்பதற்கு பண்பாடுவோர் அல்லது இசை பாடுவோர் என்று பொருளாகும். பாணரில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரிவினர் இருந்தனர். யாழ்ப்பாணருள் சிறுபாணர், பெரும்பாணர் என இருவகையினர் இருந்தனர்.

கூத்தர்
      
      ஆடல் மக்கள் கூத்தர் எனப்பட்டனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய கூத்தராற்றுப்படையில்  கூத்தன் ஒருவனை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது.

விறலியர்         
விறல்பட ஆடும் பெண்கலைஞர். அதாவது உள்ளக்குறிப்பு வெளிப்படுமாறு ஆடுபவர் விறலி எனப்பட்டனர்.

இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்
         
          எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. மழை , மடுவு என்ற நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். வறுமையின் எல்லைக்கோட்டை தொட்ட இசைக் கலைஞர்களின் கூட்டம். ‘பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற பறவைபோல’ மன்னர்களையும் வள்ளல்களையும் நாடிச்  செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை, நெஞ்சில் பதியும் வண்ணம் முடத்தாமக் கண்ணியார்  கரிகாலனிடம் பரிசில் பெற விழைந்த பொருநர் கூட்டத்தைக் கீழ் வருமாறு விளக்குகின்றார்.
       வறுமையில் வாடிப் பரிசில் பெறச் சென்ற பொருநர் கூட்டத்திற்கு கரிகாற்சோழன் பெருவிருந்து வைக்கின்றான். முல்லை மொட்டு போன்ற முனை மழுங்காத சோறு, பருக்கைக்கற்கள் போன்ற பொரிக்கப்பெற்ற கறியைத் தின்றுதின்று கழுத்துவரை உணவு வந்துவிட்டது. இறைச்சியைத் தின்று கொல்லை உழு கலப்பையின் கொழுவைப் போலப் பற்கள் தேய்ந்து விட்டனவாம். இதனை,

“அவிழ்பதங் கொள்கென்று இரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலைப் பயின்றினிது இருந்து
கொல்லை  உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து “   (பொருந:112-119) 
         
          மேலும், பத்துப்பாட்டில் மூன்றாவதாக வைத்துல் சொல்லப்படும்  சிறுபாணாற்றுப்படையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பெருமகனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் போற்றிப் பாடுகின்றார். பரிசில் பெற்று வந்த சிற்றியாழ்  இசைக்கும் பாணன் பரிசில் பெறாதவனை  இவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல்   அமைந்துள்ளது. ஆசிரியப்பாவில் அமைந்த இப்பாட்டு நூல் 269 அடிகளைக் கொண்டது.

     சிறுபாணாற்றின் மூலம் பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிந்துக் கொள்ளலாம். கடையெழு வள்ளல்கள் பற்றியும் மதுரை, உறந்தை, வஞ்சி, எயிற்பட்டினம், வேலூர்,ஆமூர் கிடங்கில், கொற்கை எனப் பல ஊர்கள் பற்றியும் இந்நூல் வழி அறிய முடிகின்றது.
   கண் விழிக்காக நாய்க்குட்டிகள் தாயின் காம்பில் பாலை குடிக்க, பசியில் ஆற்றாத குட்டி ஈன்ற நாய் குரைக்கின்றது. பழுதடைந்த குடிசையில் இசைவாணர் கூட்டம் மயங்கிக் கிடக்கின்றது. இல்லத் தலைவி ஏற்கனவே கிள்ளப்பெற்ற வேளைச் செடியின்  கொழுந்துகளை கிள்ளி வந்து வேகவைக்கிறாள் உப்பு இல்லை. இருந்த போதிலும் தன் வீட்டு வறுமை நிலையை அடுத்தவர் அறியாத வகையில் கதவினை அடைத்துக் கொண்டு தம் சுற்றத்தினருக்கு வெந்த உப்பில்லா கீரையைக் கொடுக்கின்றாள் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படையின் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

“ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் …….”        (சிறுபா:135-140)            
        பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் இசை இரண்டற கலந்து இருக்கிறது. இயற்கையும் மனிதனும்  தமக்கே உரிய இசை மரபுகளைக் கொண்டுள்ளன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் மனிதன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் . பாணன், பொருநன், பாடினி, கூத்தர் என்னும்  இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகளை சங்க இலக்கியம் நமக்கு புலப்படுத்துகின்றன.

துணைநூற்பட்டியல்
1.சாமிநாதையர் உ .வே (தொ.ஆ), 1986, பத்துப்பாட்டு மூலமும்
உரையும், நச்சினார்க்கினியர் உரையும்,
                                   தமிழ்ப்பல்கலைக்கழகம்,
   தஞ்சாவூர்.

2.இளம்பூரணனார் (உ.ஆ ),2005, தொல்காப்பியம்,
சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.

3.வேங்கடசாமி நாட்டார் ந. மு, 1992, சிலப்பதிகாரம்,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
  சென்னை – 18.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்சி. இராமாமிர்தம்

உதவிப்பேராசிரியர்

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
 
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
 
இராமாபுரம், சென்னை – 89.

 

Irattaikkappiyankalil Malariyal|Dr.P.Manimegalai

Abstract
         
       Summary of the study The flowers that can be found on the Silappathikaram and Manimekalai, also known as the Double Epic, are associated with the manga and are associated with culture.


இரட்டைக்காப்பியங்களில் மலரியல்

திறவுச்சொற்கள்         
         சிலப்பதிகாரம் ,மணிமேகலை, இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், மலரியியல், மலரும் மங்கையும், மலரும் மங்கையும், மலரும் மணமும், கடவுளும் மலரும், விழாவும் மலரும், மன்னரும் மலரும், பரிசும் மலரும், திருக்குறள்.

ஆய்வுச் சுருக்கம்
         
        ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டைக்காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறக்கூடிய மலர்கள் மங்கையுடன் தொடர்பு உடையதாகவும், பண்பாட்டுடன் தொடர்புயைதாகவும் விளங்குகின்றன. அதுமட்டுமில்லாமல் மலர்களைப் பண் டத்தமிழர்கள் தங்கள் பெயர்காகவும் அமைத்து மகிழ்ந்தனர் மேலும் மன்னர்களின் அடையாளச் சின்னமாகவும் இம்மலர்கள் இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கும முகமாக இக்கட்டுரை அமைகிறது.

முன்னுரை        
     தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை இவ்விரண்டுக் காப்பியங்களும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம் சமண சமயத்தைச் சார்ந்தவை இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவர்.மணிமேகலை காப்பியம் பௌத்த சமயம் கருத்துக்களை வலியுறுத்துகிறது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.இவ்விரு காப்பியங்கள் வெவ்வேறு சமயங்களையும் ஆசிரியர்களையும் கொண்டாலும் சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலை காப்பியத்தில் வருவதால் இவ்விரு காப்பியங்களை ‘இரட்டைக்காப்பியங்கள்” என அழைக்கப்படுகிறது. தமிழர்கள் இன்றளவிலும் மங்கலப் பொருளாகப் போற்றுபவை மலர்களே.பெண்களையும் அவர்களின் கண்களையும் வருணைச் செய்வதற்கு சங்க காலப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை மலர்களைத் தான் உவமைப்படுத்துகின்றளர்.மலர்கள் அழகை மட்டும் தராமல் நம்முடைய பண்பாட்டில் பிரதிபலிப்பாக உள்ளது.இரட்டைக்காப்பிய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையினை மலர்கள் எவ்வாறு அழகுப்படுததுகிறது என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலர்களின் வகை
         
மலர்களின் வகைகளை 99 என வகைப்படுத்தியுள்ளார் கபிலர் என்றாலும் வள்ளுவர் மூன்று வகையாக கூறியுள்ளர்.அவை,

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்”  (குறள் : 1227)       
      காலையில் அரும்பாகவும்,பகலில் போதாகவும்,மாலையில் மலராகவும் விளங்கும் மலரின் மூன்று நிலையினை வள்ளுவர் கூறியுள்ளார்.

‘அரும்ப விழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின் மூசா தொல்யாண்டு கழியினும்”  (மணி.3:67)
         
     பதும பீடத்தில் அரும்புகளை இட்டால் மலராக நிற்கும்.மலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடாமல் இருக்கும்.
‘கோட்டின் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின்”  (சிலம்பு,22: 93-94)
         
      மலர்கள் மரத்தின் செடியின் கிளையில் மலர்வதை கோட்டுப்பூ என்றும்,கொடியில் மலர்வதை கொடிப்பூ எனறும், நிலத்திலுள்ள புதரில் மலர்வதை நிலப்பூ என்றும்,நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் இளங்கோவடிகள் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.
வனமும் மலரும்
         
     மங்கையர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவும், வாசனைப்பூச்சுகள் தயாரிப்பதற்காகவும் வனங்களில் மலர்களைப் வளர்க்கப்பட்டன. அவ்வனங்களுக்கு பெயர்களைச் சூட்டியுள்ளனர். மணிமேகலை தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் கண்ணீர் விழுந்தவுடன் அதைப் பார்த்த மாதவி தன்மகளை வேறொரு மாலையினை தொடுத்து கழுத்தில் அணியுமாறு மாதவி கூறினாள்.

‘பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயிற்புறம் போகின்”  (மணி.3:44-45)       
    மணிமேகலை அவளுடைய தோழி சுதமதியுடன் பல மலர்கள் நிறைந்த இலவந்திகை வனத்திற்கு மலர்களைப் பறிப்பதற்காகச் சென்றாள்.

‘வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை
இலவந்திகையினெயிற் புறம்போகி”  (சில.10:31-32)
         
    சிலப்பதிகாரத்தில்நீராவியல் சூழ்ந்த ஒரு வசந்தச்சோலை இலவந்திகை மலர்ச் சோலை என  குறிப்பிடப்பட்டுள்ளது.

மலரும் மணமும்
         
      அரும்பு நிலையிலும்,போது நிலையிலும் உள்ளடக்கிக் கிடக்கும் மணம்,மலராக விரியும் போது திசையெங்கும் மணத்தை பரப்புகிறது.

‘நாகம் நாறும் நாற்றம் நிறந்தன”   (சிலம்பு.12 :2)
‘திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே”  (சிலம்பு.12 :4)
         
     கொற்றவையின் அருளால் பாலை நிலத்தில் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசியது.

மாமலர் நாற்றம் போன்மணி மேகலை”  (மணி.3:3)         
      மலர்களின் நறுமணம் பற்றி மணிமேகலை காப்பியத்திலும் சீத்தலைச் சாததனார் குறிப்பிட்டுள்ளார்.

மலரும் மங்கையும்         
    பெண்களை தமிழ் இலக்கியங்களில் மலர்களோடு தான் அதிகயளவில் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.பெண்களோடு கண்களுக்குத் தான் மலர்களை பெரும்பாலும் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.மலர்களோடு தொன்மைக் கால மகளிர் முதல் தற்காலத்தில் உள்ள மகளிர் வரை உறவுக் கொண்டுள்ளனர்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு” (குறள்:1234)         
     அரும்பு நிலையில் இருக்கும் மலரின் நறுமணம் போல பெண்ணின் புன் முறுவலில் பொருள் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது.வள்ளுவர் மலரின் தன்மையினைக் குறிப்பிடுவது போல பெண்ணின் தன்மையினை குறளின் வாயிலாக வெளிப்படுகிறது.

‘மாமலர் நெடுந்கண் மாதவி”  (சிலம்பு.3 :170)
மாதவியின் கண்ணை  மாமலர் நெடுங்கண் என மலரோடு ஒபபுமைப்படுத்திக் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

“நறுமலர் நாணின நண்கண்”  (குறள்:1231)
மங்கையர்களின் கண்களுக்கு மலரினை வளளுவர் உவமையாகக் காட்டியுள்ளார்.
‘தாமரை செங்கண் தழல் நிறக் கொற்ற” (சிலம்பு.28:110)
கண்ணகியின் கண்களை செந்தாமரை போன்ற சிவந்த கண்கள் என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

‘மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்” (மணி.3:16)
         
பெண்கள் தலையில் விரும்பி மலர் அணியும் பழக்கம் இன்றளவில் வழக்கம் உள்ளது.  மணிமேகலை தேன் பொருந்திய மலர்களை தலையில் தொடுத்துயிருந்தாள்.

கடவுளும் மலரும்
         
     கடவுள் வழிபாடும் முறையில் மாற்றங்கள் இருந்தாலும் பூவை வைத்து கடவுளுக்கு வழிபாடும் முறை அரசர் முதல் பாமர மக்கள் வரைக் காணப்படுகிறது.கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா வகையான பூஜைகளும் மலர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறப்புச் சடங்குகளிலும் மலர்களைப் பயன்படுத்திகின்றனர்.நம்முடைய வாழ்வில் மலர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

‘…. மதுரை மூதூர்
கொன்றையஞ் கடைமு  மன்றப் பொதியிலில்”   (சிலம்பு.பதிகம்:40)
          சிவப்பெருமான் கொன்றை மாலையைச் சூடினார்.

வண்துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு”  (சிலம்பு.17:16)       
திருமால் துளசி மாலையை ஆய்ச்சியர்கள் கழுத்தில் இட்டனர்.

‘தூநிற மாமணி சுடரொளி விரிந்த
தாமரை பீடிகை தானுண் டாங்கிடின்”  (மணி.3:65-66)
         
வெண்மை நிறமுடைய  மாணிக்கம் போன்று ஒளி உடையது பதுமபீடம் (தாமரை பீடிகை).கடவுளை வழிபாடும்  பீடிகை தாமரை மலரை போன்ற அமைப்பில் இருந்தாக மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.

‘இடக்கை பொலம்பூந் தாமரை எந்தினும்”  (சிலம்பு.5.69)         
மதுரையில் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை எந்தியுள்ளது.

விழாவும் மலரும்
         
மலர்களை மங்கலப் பொருளாக வைத்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள தலைமுறையினாரிடம் வரை இவ்வழக்கம் உள்ளது.

வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று”  (மணி 3 : 50-51)
         
இந்திரனுக்கு விழாச் செய்யும் நாட்களில் பெருமைப் பொருந்திய வாடாத பூ மாலைகளை தொங்கவிட்டனார் என மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.
‘பூவும்,புகையும்,பொங்கலும் சொரிந்து”   (சிலம்பு.5 : 69)
மன்னரும் மலரும்
         
மங்கல நிகழ்வான திருமணத்தின் போது மணமகன்,மணமகள் மலர் மாலை அணியக்கூடிய வழக்கம் இன்றளவில் நம்முடைய மரபில் இருந்து வருகிறது. பழங்காலத்தில் நாட்டினை ஆட்சிச் செய்த மன்னர்கள் மலர்களை மாலையாக அணிந்திருந்தனார் என சிலம்பதிகார காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.

‘ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்” (சிலம்பு.பதிகம் : 12)
‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து”   (சிலம்பு.28 :211)
         
ஆத்தி மாலை சூடும் சோழன் என இப்பாடல் சோழ மன்னனின் அடையாளமாக அத்தி மாலை குறிப்பிடப்படுகிறது.

‘சினைஅலர் வேம்பன் தேரான் ஆகிக்”  (சிலம்பு.பதிகம் : 28)         
வேம்பம் பூவை மாலையாக சூடாக்கூடிய மன்னன் பாண்டியன் எனவே வேம்பன் தேரான் என சிலப்பதிகாரம் சுட்டுகிறது.

‘இலைதார் வேந்தன் எழில்வான் எய்த”  (சிலம்பு.27 : 62)         
சேரன் செங்குட்டுவன் இதழ் செறிந்த பனை பூவினை மாலையாக சூடினான்.

மலரும் பரிசும்
         
ஒருவரை வரவேற்காகவும்,வாழ்த்தவும் மலர்க் கொத்துகளை பரிசாக தரும் வழக்கம் இன்றைய காலக்கட்டத்திலும் நடைமுறையில் உள்ளது.

‘காவிதி; மந்திரக் கணக்கர் -தம்மொடு”  (சிலம்பு.22 : 9)         
எட்டி மரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களை பரிசாக வழங்கினார்.

‘வருக தாம் வாகைப் பொலந்தோடு” (சிலம்பு.27 : 43)         
சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களை வருக என வரவேற்று அவர்களுக்கு பொன்னால் செய்யப்பட்ட வாகை மலரினைப் பரிசாக அளித்தார்.

தொகுப்புரை
🌻இரட்டைக்காப்பியங்களில் இடம்பெற்றுள்ள மகளிரோடு மலர்கள் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்பதை விளக்குவதாக உள்ளது.

🌻 மலரின் வகைகள் பற்றியும்,மலரும் தன்மை பற்றியும் இரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

🌻பெண்களைத் தமிழ் இலக்கியங்கள் மகளிரோடுதான் ஒப்பிட்டுக் கூறுகின்றன. இரட்டைக்காப்பியங்களும் மகளிரின் கண்களுக்கு மலர்களையே ஒப்புமைப்படுத்துகின்றள.

🌻கடவுளை வழிபடும் நிலையிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றுள்ளன.தெய்வங்களுக்கு மலர் மாலையைச் சூட்டி மகிழ்ந்தனர்.
விழாக்களிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றிருந்தன.

🌻 மூவேந்தர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களாகிய மாலைகளை அணிந்திருந்தனார் என்பது தெரிகிறது.

🌻எட்டி மரத்தின் பூ போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களைப் பரிசளித்துள்ளனர் என்பதையும் இரட்டைக்காப்பியங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை
         
     காப்பியக் காலத்தில் வாழ்ந்த மக்கள்  அவர்களின் வாழ்க்கை முறையில் மலர்கள் கடவுளை வழிபாடுவதற்கும்,மன்னர்களின் அடையாளமாகவும் மலர்கள் முக்கியத்துவம் பெறுகிறது.விழாக்களில் அழகினைச் சேர்க்கும் வாடா மலர்களாகவும்,வீரர்களுக்கு பரிசளிக்கும் பொன் மலர்களாகவும்,நறுமணத்தை தரும் வசனை மலர்களாகவும்,இயற்கைக்கு அழகுச் சேர்க்கும் வன மலர்களாகவும் இரட்டைக்காப்பியங்கள் மலர்களின் மகத்துவத்தைக் கூறுகிறது.மலர்களில் வசனைத்தரும் மெல்லிய இதழ் மட்டும் இல்லை நம் மரபினை வெளிப்படுத்தும் வரலாறு ஆகும்.  இரட்டைக்காப்பியங்களில் உள்ள மலரியியலை இக்கட்டுரை விளக்குகிறது. 

துணைநின்ற நூல்கள்
 
1.சிலப்பதிகாரம் – ராமையா பதிப்பகம்,பதிப்பு ஆண்டு : 2013,
     சென்னை – 14

2.திருக்குறள் – சாரதா பதிப்பகம்,
     ஜி-4 சாந்தி அடுக்கம்,
     3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,  
     ராயப்பேட்டை,
     பதிப்பு ஆண்டு : 2002,
     சென்னை -14.      

3.மணிமேகலை – அமிழ்தம் பதிப்பகம்,
     பி-11,குல்மோகர் குடியிருப்பு,
     35,தெற்கு போக்கு சாலை,
     தியாகராயர் நகர்,
     பதிப்பு ஆண்டு : 2014
     சென்னை – 17
 
Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. மணிமேகலை

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோயம்புத்தூர் – 4

 

PENNIN PERUNTHAKKA YAVULA|Dr.K.MUTHAMIL SELVI

ABSTRACT           
           Pathinen Kilkanakku , a collection of eighteen Tamil literary works, were written primarily to impart righteousness during the  Sangam period. Values to uplift the society, and ideas related to women were written by writers with unique talents. Thirukurral   depicts that the honour bestowed upon a women is the honour bestowed upon the society. To insist this value he has dedicated a chapter on “Valkai Thunai Nallam” to the world. He has rightly pointed out that the basement for a family life is only love. Thus a husband and wife bonded by love are created for the welfare of the family.  Works written during Sangam period portray women as characters not only engaged in household works but also in education and art. Therefore this paper aims at bringing out the high qualities possessed by women as expressed by Thiruvalluvar in his Thirukurral, written in the form of couplets.

Keywords:Aram, Menmai, Sangam, Iilaram, karbu, Anbu, Panbu


“பெண்ணின் பெருந்தக்க யாவுள”

ஆய்வுச்சுருக்கம்       
          Dr.K.MUTHAMIL SELVI பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றில் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பெண்மை சார்நத கருத்துக்கள் தனித்துவமான புலவர்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. திருக்குறள் பெண்மையின் மேன்மையினை சமூகத்தின் மேன்மையாகவே எடுத்துக்காட்டுகிறது. திருவள்ளுவர் அக்கருத்தை வலியுறுத்த “வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி, இல்லற வாழ்க்கையின் அடித்தளம் அன்பு மட்டுமே என்றும் அவ்வன்பில் வேரூன்றிய கணவனும் மனைவியும் குடும்பத்தின் நன்மைக்காக விதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். சங்ககாலத்தில் பெண்கள் இல்லறவேலைகளில் மட்டுமல்லாது கலை மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினர் என்பதை சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் பெண்களின் மேன்மையை குறட்பாக்களின் வழியாக உலகத்திற்கு உணர்த்திய திருவள்ளுவரின் கருத்துக்களை அறிவதே இக்கட்டுறையின் நோக்கமாகும்.

குறியீட்டுச் சொற்கள்
: அறம், மேன்மை, சங்கம், இல்லறம், கற்பு, அன்பு, பண்பு.

முன்னுரை
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” (தொல். பொருள்.141)
         
       என்னும் தொல்காப்பிய நூற்பா பெண்ணின் திறத்தை உயர்வாகச் சுட்டுகிறது. நிலஉடைமைச்சமுதாயமாக இருந்த திருக்குறள் காலத்தில் சமூக பண்பாட்டுச் சிதைவுகளும், தனிமனித ஒழுக்கச் சீர்கேடுகளும் நாட்டையே கலகத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதனாலே அக்காலகட்டத்தில் அறத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருந்தது. அவ்வறத்தின் வழியாக ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி வாழ்கின்ற நெறிகளை புறத்தார்க்குப் புலப்படும் வண்ணம் வள்ளுவர் தம் நூலில் வாழ்க்கைத்துணைநலம் என்னும் ஓர் அதிகாரத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

      அறக்கருத்துக்களைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்ட நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற போதும் அவற்றுள் சமுதாயத்தைச் சீர்படுத்தும் செறிவான கருத்துக்களும், பெண்மைக்கருத்தியலும் எடுத்தோதப்பட்டுள்ளன. திருக்குறளும் பெண்மையின் முக்கியத்துவத்தைக் கூறி அவர்களின் மேன்மையே சமுதாயத்தின் மேன்மை என்றும், பென்மையின் தனித்திறமையை போற்றவேண்டும் என்றும் விளம்புகிறது. தவறிழைப்பது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையானது. ஆண் தவறிழைக்கும் போது பெண்ணும் பெண் தவறிழைக்கும் போது ஆணும் உள்ளன்புடன் பிழைகளை தட்டிக்கேட்டு மனதால் உணரவைப்பதே சிறந்த இல்லறமாகும். இல்லறத்தை மேன்மையடையச் செய்யும் இல்லாளைக் குறிப்பிடும் வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தில் பெண்மையைப் போற்றும் திருவள்ளுவரின் கருத்துக்களை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

பெண்மையின் திறம்
         
     பெண்களின் அழகையும், நிறத்தையும் மட்டுமே பாடிய புலவர்களுக்கு மத்தியில் பெண்மையின் தனித்திறன்களையும், மனஉணர்வுகளையும் மதிப்பீடு செய்து வெளியிட்ட பெருமை திருவள்ளுவரையேச் சாரும். ஆணைத் தலைமையாகக் கொண்ட பெண்மை சேர்ந்த இல்லறம் சங்ககாலத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. அதனை திருவள்ளுவரும்,
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”    (திருக்குறள் – 51)         
    என்று மனையாளிடம் சிறந்த குணங்கள் இருந்து கணவனிடமும் நற்குணங்கள் அமைந்திருந்தால் அந்தக்குடும்பம் என்றும் வளமாக இருக்கும் என்று கூறுவதிலிருந்து உணரமுடிகிறது. அன்பு, தியாகமனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் திறன் இம்மூன்று பண்புகளும் இல்லறத்தில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளாம். இவைகுறையும் பொழுது அகம்பாவம் மேலிட்டு ஒற்றுமை குலைந்து இல்லறத்தின் மேன்மை கெடும். இல்லறம் என்னும் நல்லறப் பண்பே இல்லாளிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்பு ஆகும். இது குறையும் பொழுது கணவன் மிகப்பெரிய செல்வந்தனாயினும் பயனில்லை என்பதை,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை 
எனைமாட்சித் தாயினும் இல்”       (திருக்குறள் – 52)         
      என்ற கருத்தின் வழி உணர வைக்கிறார் வள்ளுவர். இதே கருத்தை மொ.அ.துரை. அரங்கசாமியும், “அன்பு காரணமாகத் தான் அடைந்த கணவனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அவள் சொல்வழி நின்று, அவனைத் தெய்வமாகக் கொண்டொழுகும் ஒருத்தியும், அவ்வாறே அவளைத் துணைவியாகக் கொண்டு அவளுக்கு வழித்துணையாய் மற்றவர்களுக்கெல்லாம் உற்றவிடத்து உறுதுணையர் அறவழி நிற்பான் ஒருவனும் ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர் விட்டு நீங்காது வாழவேண்டும் என்பதே திருக்குறளின் துணிவாகும்” (மொ.அ.துரை அரங்கசாமி, திருக்குறள் நெறியும் திருவள்ளுவர் நெறியும்) என்று கூறுகிறார். இல்லறத்தின் வாழ்வும் வளமும் சிறக்க வாழ்க்கைத் துணைநலமாகிய இல்லாளின் நற்பண்புகளே அடிப்படையாகும்.

இல்லாளின் மாண்பு
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்த குடி”  (புறப்பொருள் வெண்பாமாலை-35)         
      எனத் தமிழ் மறக்குடி போற்றப்பட்டது. அக்குடியில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மனத்தளவிலும் துன்பம் நினைக்காது, அறவழியில் இல்லறத்தை பேணிக்காப்பர். இல்லறம் நல்லறம் ஆவதற்கு ஆண், பெண் இருவருக்குமே கற்பு இன்றியமையாதது என்று குறிப்பிடும் திருக்குறளார்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்”       (திருக்குறள் – 54)         
       என்று கூறுவதில், கற்பை பெண்ணிற்கு முதன்மைப்படுத்தி அவளை சமுதாயத்தினர் உயர்வாகவே எண்ணுமாறு சிம்மாசனத்தில் உயர்த்திவிடுகின்றார். உயர்ந்த நெறிமுறைகளை உலகத்தார்க்கு புலப்படுத்தவே பெண்களுக்கு கற்பு எனும் பண்பை இறைவனும் வகுத்தனன் போலும்.
      பெண்ணின் உடல் மாறுபாடே பெண்ணினத்துக்கு கற்பு என்னும் வேலி போட்டு அடக்கிவிடுவதற்குக் காரணமாகும். இதனால் தான் பெண்ணைப் போதைப் பொருளாகவும், காமப்பொருளாகவும் உலகத்தார் பார்க்கின்றனர். கற்பிற்கு பல உரையாசிரியர்களும் பல்வேறு உரைகளைத் தந்த போதும், ஒளவையாரின்,

“கற்பெனப்படுவது சொல்திறம்பாவை”  (கொன்றைவேந்தன்-14)
         
       என்பதே பொருத்தமாகும். இல்லறஉறவில் ஈடுபடும் கணவனும், மனைவியும் அவரவர் சொன்ன சொல்லில் தவறிழைக்கக்கூடாது என்பதே சரியானதாகும். கற்பு என்பது ஒவ்வொரு பெண்ணிடமும் அமைந்துள்ள குணம் என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர்,

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை” (திருக்குறள் – 57)
         
         என்று பெண்களுக்கு மேலும் மேன்மை கொடுத்து, பெண்களுக்கு பெண்களே தலைவி என்றும் உலகத்தார் எவரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை என்பதையும் பெண்ணின் மனமறிந்து கூறிச்செல்கிறார். நீதிநூல்கள் அனைத்தும் ஒவ்வொரு பெண்டிர்க்கும் கற்பு இன்றியமையாப்பண்பாம் என்று கூறுகின்றன. அதேவேளையில் ஆண்களையும் இல்லாள்விட்டு அகலாதே என்று அறிவுரையும் கூறுகின்றன.

மைவிழியார் மனை அகல்’            (ஆத்திச்சூடி 95)
      என்றும்,

“இருதாரம் ஒருநாளும் வேண்டாம்’ (உலகநீதி 7)
          என்றும் கூறுகின்றனர்.
          மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் ஆடவன் பதருக்குச் சமம் என்றும் கூறுகின்றன. ஆண்களுக்கு வீரம் என்பதை உயர்வாகப் பேசும் சமூகத்தில் பெண்களுக்கு கற்பு என்பதையும் உயர்வாகப் பேசும்படி குறிப்பிடுகிறார், வள்ளுவர்.
 ஆண், பெண் இணையும் மண வாழ்க்கையில் இருவருமே கருத்தொருமித்து உள்ளத்தால் ஒன்றுபடவேண்டும். அவர்களின் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே அன்பு மட்டும்தான். கணவனும், மனைவியும் அன்பால் வேரூன்றி இல்லறம் என்னும் நல்லறத்திற்கு நீர்பாய்ச்சும் பொழுதுதான், வான் பொய்க்காது மழையாகப் பொழியும் என்ற உளக்கருத்தை தன் குறளில் பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை” திருக்குறள்-55)         
       என்பதில் தெய்வத்தை தொழாமல் தன் கணவனைத் தொழும் இல்லறத்தாள் சொல்லும் பொழுது பெய்யும் மழை என்று குறிப்பிடுகிறார். இக்குறளுக்கு உரையாசிரியர்கள் அவரவர் உரையைக் கூறினாலும் ஆராய்ந்து நோக்கின் கணவனுக்கும் இல்லாளுக்கும் இடையே உள்ள தூய்மையான அன்பு மட்டுமே தெளிவாகின்றது என்பது நிரூபணமாகின்றது.

இல்லாளின் பெருமைகள்
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் மிக்கவர்களாக இருந்தமையால், இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை எனும் பெருமை மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இதனை திருவள்ளுவர்,

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை”     (திருக்குறள்-54)         
என்றார். இதனையே இல்லறத்திற்கு இன்றியமையாதவள் மனைவி என்பதை,
“இல்லாளும் இல்லாளே
ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம்
உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்       (மூதுரை 21)         
      என்று கூறுவதிலிருந்து இல்லாளின் குணம் அறமற்றதாக இருந்தால் அந்த இல்லம் புலியின் குகை போலாகிவிடும் என்றும்,

“……………. பாழேமடக்கொடி இல்லா மனை”   (நல்வழி-24)         
     என்றும் ஒளவையார் கூறுவதன் மூலம் பெண்ணுக்கு அக்காலத்தில் உயர்ந்த மாட்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும், இல்லறத்திற்கு இன்றியமையாதவள் இல்லாள் என்பதும் பெறப்படுகிறது. இல்லாளின் திறமையைப் பார்க்கும் பொழுது ஆணினம் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் வாரிசை நல்வழிக்கு கொண்டு செல்லுதல் இயலாது. பொறுமையும் அக்கறையும் கொண்ட பெண்ணினமே வாரிசை நல்நிலமைக்குக் கொண்டு செல்லும் என்ற கருத்தியல் இக்குறட்பாவின் மூலம் பெறப்பட்டதை உணரலாம். இல்லாள் கணவனின் குறிப்பறிந்து ஒழுகுபவளாகலின அறக்கடவுளும் அவளுக்கு வீடுபேறு அளிப்பான் என்பதை,

“பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு”   (திருக்குறள்-58)
         
      என்று திருவள்ளுவர் கூறுவதன் மூலம் கணவனின் நலத்திற்காகவும், அவனது பெருமைக்காகவும் அவனுடன் மனம் ஒருமித்து வாழும் இல்லாளே மிகச் சிறந்தவள் என்னும் கருத்தும் புலப்படுகின்றது. இல்லறத்தையே நல்லறமாக மேற்கொள்ளும் பெண்கள் தங்களையும் கவனிக்கவேண்டும் என்பதை,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (திருக்குறள்-56)         
  என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து மகளிர் இயல்பிலேயே உடலால் மென்மையானவர்கள் என்பதையும் மனையுறை மகளிர் தங்கள் கணவனுடன் இணைந்து நன் மக்கட் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் இல்லறக் கருத்தியலாக பதிவு செய்கிறார். அக்குறள்,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”     (திருக்குறள்-60)
 
என்று விளம்புகிறது.

தொகுப்புரை
    திருவள்ளுவர் பெண்களை நேரடியாகவே உயர்த்திப் பேசுகிறார்.
திருவள்ளுவர் ஆண்களை மறைமுகமாகச் சாடுகிறார்.

முடிவுரை         
       இல்லறப் பெண்கள் சங்ககாலத்தில் இல்லறத்தை மட்டும் கவனியாது கலைத்துறையிலும், கல்வித் துறையிலும் சாதித்தனர் என்பதை சங்க நூல்கள் வழிகாண முடிகிறது. காப்பிங்களும், பக்தி நூல்களும் பெண்ணினத்தை பெருமையாகவே வைத்திருந்தன. திருவள்ளுவரும் பெண்களுக்கு தம் நூலில் ஏற்றம் கொடுத்து வெளிப்படையாக அவர்களை உயர்த்தியே காட்டியுள்ளார். எனினும் ஆண்மகனுக்குள்ள கடமைகளைச் சொல்லத் தவறவில்லை என்பதும் இக்கட்டுரை வழி அறியலாகிறது.

பார்வை நூல்கள்
1.திருக்குறள் – பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை-600014

2.எம்.சிவசுப்ரமணியம் – திருக்குறள் குறளும் விளக்கவுரையும், கமர்சியல் பதிப்பகம், சிவகாசி.

3.மு.வரதராசனார் – திருக்குறள் தெளிவுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-600018.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.முத்தமிழ்ச் செல்வி,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
சௌராஷ்டிரக் கல்லூரி, மதுரை

Kanini vazhi Tamil karpithal|Dr.R.Chitra

Kanini vazhi Tamil karpithal -Dr.R.Chitra
Abstract           
         Computer plays and vital role in student’s education. It encourages them to learn in a innovative way. All the new technology ideas can be using computers. Students can make use of the computer in all the fields like science technology and language studies. Since it gives innovative ideas in modern technology. Students were motivated to learn all the field with technological ideas. According to Leib – 1982, the computer replaces teachers in classroom learning. The main purpose of this article is how to teach Tamil language with all the technological terms and its growth by using computers.
Keywords
               
Computer plays, Student’s education, Innovative, Science technology, Language studies, Technological ideas, Classroom learning, Article, Tamil language, computer

Kanini vazhi Tamil karpithal | Dr.S.Chitra

கணினி வழித் தமிழ் கற்பித்தல்

முன்னுரை       
        உயர்தனிச் செம்மொழி என்று இன்று உலக அரங்கில் உலா வரும் நமது தாய் மொழியாம் செம்மொழித் தமிழை மேலும் சீரிளமைத் திறத்தோடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பிற்கு நவீன உத்திகளும் தொழில் நுட்ப சாதனங்களும் இன்றியமையாதவைகளாகும்.

“உலத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (கு 140)         
     என்பது நமது தமிழ்த் திருமுறை தந்த வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. கற்பித்தலின் ஒவ்வொரு நிலையும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறி இன்று தொழில்நுட்ப சாதனங்களின் கோலோச்சுதலுக்கு ஆட்பட்டு நிற்கின்றது. விஞ்ஞானத்தின் இத்தகைய நவீன தொழில் நுட்ப உத்திகளுக்கு ஆட்பட்டு கற்பித்தல் முறை மாறி வருகிறது. வரவேற்கத்தக்க இவ்வளர்ச்சியினை நாம் கைக்கொள்ள வேண்டியது, நமது மொழி வளர்ச்சிக்கு முக்கியமானதொரு தேவையாகும்.

கணினியில் தமிழ் மொழியின் தாக்கம்
         
         கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், காகிதம் எனப் பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்ற தமிழ் தற்போது இணையத்தில் உலா வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் கணினியில் இடம்பெறத் துவங்கியது தமிழ். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் அறிவியல் தமிழ் நான்காகவும், கணினித் தமிழ் ஐந்தாம் தமிழாக இன்று வளர்ந்திருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில் நுட்பம் தோன்றியது. இதன் பயனாகத் தமிழ் மிக உயர்ந்த நிலையிலுள்ளது. முன்பு கணினியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்தது. ரோமன் எழுத்துக்களில் தான் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய வளர்ச்சியும், தமிழ் எழுத்துக்களையே நேரடியாகத் தட்டச்சு செய்து கொள்ளக் கூடிய வளர்ச்சியை எட்டியது.

இணையத்தில் தமிழ்க்கல்வி
         
        தமிழ்ப் பட்டமேற்படிப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகள் இணையம் வழி, அதிகமாகக் காணக்கிடக்கின்றன. தமிழ் கற்க, தமிழ்வழிக் கல்வி என்ற சொல்லைக் கூகுள் போன்ற தேடு பொறிகளில் உள்ளீடு செய்தால் பல ஆயிரம் தளங்கள் தமிழைக் கற்றுத்தர ஆயத்தமாக நிற்கின்றன. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி எழுதும் முறையைக் கூறிப் பயிற்சி அளிப்பதுடன் அதனை உச்சரிக்கும் முறையை ஒளி ஒலிப் பல்லூடகக் காட்சிகளாக இத்தளங்கள் தருகின்றன. இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்கள் ரோமன் ஆங்கில எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. நூலின் பாடுபொருள், தேடுபொருள் போன்றவற்றை எளிய முறையில் தேடிப்பெறும் வகையில் மின்நூலகம் அமைந்திருப்பது சிறப்பு. தமிழர்களின் பண்பாட்டு நாட்டுப்புறக் கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள், வழிபாட்டுத்தலங்கள் இவற்றை நினைவில்கொள்ள, ஒலி ஒளிக்காட்சித் தொகுப்புகளைப் பதிவு செய்யவும், தமிழகக் கலைகளான நாட்டியம், கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, தாலாட்டு, மயிலாட்டம், கோலாட்டம், கும்மி போன்றவற்றின் தரமான காலப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

கணினி வழிக் கல்வி
         
      கணினி வழிக் கற்றல் கற்பித்தலினால் குறிப்பிடத்தக்க விளைக்கின்றன.

🖥️ பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடிகிறது.

🖥️ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கவும் பல புதிய சிந்தனைகளை வெளிக்காட்டவும் பயன்படுகிறது.

🖥️ எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித்தொடர்பு என பல வகையில் கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கின்றது.

🖥️ மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திடவும் உதவுகிறது.

🖥️ மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி ஆய்வு மனப்பான்மையை வளர்க்கிறது.

🖥️ கற்பதற்குரிய அனைத்து தகவல்கள் விரைவாகவும், விரிவாகவும் பெற முடிகின்றது.

கற்றலும் கற்பித்தலும்
         
       கற்றல் – கற்பித்தல் பலமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் நிகழ்வாகும். கணினி வழிக் கற்றல் – கற்பித்தலில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. மொழியியல் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் முதலிய திறன்களையும் மொழியியல் பகுப்பாய்வு, பண்பாடு, தொழில், சான்றாண்மை போன்ற நிலைகளையும் மையமாகக் கொண்டு கணினி வழிக் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது.

இணையத்தில் தமிழின் இடம்
         
       இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் பலதரப்பட்ட இடங்களில் எல்லாம் பரவ எளிதாக வழி பிறந்துள்ளது.

முடிவுரை
         
         நேற்றைய உலகம் இருண்டு கிடந்தது, இன்றைய உலகம் வெளிச்சமாக இருக்கிறது. நாளைய உலகம் பிரகாசமாக இருக்க வேண்டும். தமிழ் மொழியைக் கற்பிக்கும்போது அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறன்களை இரு வழிகளில் கற்பிக்க முடியும். இதனால் திருத்தமான பேச்சு, வேற்றொலி, மயங்கொலிப் பிழைகள், குறில், நெடில் வேறுபாடறிதல் முதலியனவற்றை மாணவர்களுக்கு எளிதாகக் கற்பிக்க வேண்டும். கேள்வியோடு காட்சியும், இணையும்போது கற்றல் மேம்படுகிறது. ஒலி – ஒளி இரண்டும் இணையும் போது ஈர்ப்புடைய துணைக்கருவியாகவும், ஆர்வத்துடன் தொடர்ந்து சலிப்பில்லாமற் கற்கவும் கற்பிக்கவும், துணை செய்கிறது. கணினி வழியாகக் கற்பிக்கும்போது விரைவு, நுட்பம், தெளிவு, மாணவர் ஈர்ப்பு, அறிவுத்திறனை நிலைநிறுத்துதல், தன்னார்வம் முதலிய பல விளைதிறன்கள் வலுப்படுத்துகின்றன.

துணைநூற்பட்டியல்
1.ஆண்டோபீட்டர்,  மா., தமிழும் கணினிப்பொறியும், சாப்ட் வியூ பதிப்பகம், முதற்பதிப்பு  ஜீலை 2002, சென்னை.

2.இரத்தின சபாபதி, தி. , தமிழ் கற்க கற்பிக்க, அம்சா பதிப்பகம், சென்னை

3.இராதா செல்லப்பன், தமிழும் கணினியும், 2011, கவிதை அமுதா வெளியீடு  (திருச்சி)

4.பன்னிருகை வடிவேலன், தமழ் மென்பொருள்கள், நோக்கு (2014)

5.மணிகண்டன்,  துரை. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம் , 2012, தஞ்சாவூர்.

6.முத்து நெடுமாறன், கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல், 2012, தமிழ்மொழிக் கருத்தரங்கு கல்வி அமைச்சு, சிங்கப்பூர்

7.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி மையம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. சித்ரா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மீனாட்சி சுந்தரராஜன்  பொறியியல் கல்லூரி, 
சென்னை.

 

அன்பை விதை|கவிதை|முனைவர் து.சரஸ்வதி

அன்பை விதை - முனைவர் து. சரஸ்வதி
👣 அம்மாமுன் மண்டியிடு

      கரு சுமந்ததால்..!
👣 அப்பாவை வணங்கு

      தோளில்சுமந்ததால்..!
👣 ஆசிரியரிடம்  
நன்றி மறவாதே

      ஆற்றுப்படுத்தியதால்!

👣 உறவுகளை விட்டுக் கொடுக்காதே,

      உன் அடையாளம் என்பதால்..!

👣 உழைப்பை போற்று

      உன்னை உயர்த்தும் என்பதால்..!

👣 இயற்கையிடம் கற்றுக்கொள்

      இன்பத்தோடு நீ வாழ்வதால்..!

👣 இறைவனிடம் நம்பிக்கை கொள்

      இசைப்பட வாழ்வதால்..!

👣 உயிர்களிடம் இரக்கம் கொள்

      உனை உயிர்ப்போடு வாழ வைப்பதால்..!

👣 உடலைப் பேணிக் கொள்

      நீ யார் என்று காட்டுவதால்..!

👣 காலத்தை கவனித்து நட

      கண்டிப்பான ஆசான் என்பதால்..!

👣 கடமையை உள்ளத்தே வை

      கவலை இன்றி வாழலாம் நீ..!

👣 எண்ணங்களை தூய்மையாய் வை

      நினைத்தது கிடைக்கும் என்பதால்..!

👣 எளிமையாய் எவரிடமும் இரு

      ஏற்றங்களே பெறுவாய் நீ..!

👣 புன்னகையை அணிந்திடுவாய்

      புதுப்பொலிவும் பெற்று விடுவாய் நீ..!

👣 குழந்தைகளிடம் கனிவாய் இரு

      குற்றமற்றிருப்பாய் அப்போது நீ..!

👣 பணிவை பழகிக்கொள்

      பாதுகாப்பாய் இருப்பாய் நீ..!

👣 எவரிடமும் இனிமையாய் இரு

      இன்னலின்றி வாழ்வாய் நீ..!

👣 அன்பின்றி அமையாது உலகு

      அதனால் நீ அனைவரிடமும் பழகு..!


கவிதையின் ஆசிரியர்

                              முனைவர் து. சரஸ்வதி

                              உதவிப்பேராசிரியர்,

                             தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)

     ஸ்ரீமதி தேவ் குன்வர் நானா  லால் பட் 

மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை -44.

 

மரபுச் சங்கிலி|சிறுகதை|முனைவர் சுகந்தி அன்னத்தாய்

மரபுச் சங்கிலி-சிறுகதை-முனைவர் சுகந்தி அன்னத்தாய்
   சென்னை மாநகரின் பரபரப்பான வாழ்க்கைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவள் வேல்மதி, அடுக்குமாடிக் குடியிருப்பின் பத்தாவது மாடியில், காலைநேர சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் கண்ணாடிச் சாளரங்களுக்குப் பின்னே அவளது உலகம் சுழன்றது. ஆனாலும், அவளது கிராமத்து வேர்கள் அவ்வளவு எளிதில் அறுபட்டு விடவில்லை. அவள் கிராமத்தை விட்டு வந்தாலும், கிராமத்தின் உயிர் அவளைவிட்டு நீங்கவில்லை.
         
        ஒவ்வொரு மாதமும் தவறாமல், கிராமத்தில் இருந்து ஒரு பெரிய மூட்டை சென்னைக்கு வரும். அது வெறும் மூட்டை அல்ல, அன்பு, உழைப்பு, மற்றும் தலைமுறை கடந்த பாரம்பரியத்தின் பெட்டகம். வேல்மதியின் ஆச்சி, அம்மா, மாமியார் என மூன்று தலைமுறைப் பெண்கள், தங்களது கையால் விளைவித்த காய்கறிகள், நெல் வயலில் விளைந்த புது அரிசி, வீட்டிலேயே அரைத்த தானிய மாவுகள், பருப்பு வகைகள், வீட்டுத் தோட்டத்துக் கீரைகள், பாட்டி போட்ட வற்றல், மாமியார் தட்டிய வடகம் என அனைத்தையும் கவனமாகப் பொட்டலம் கட்டி அனுப்புவார்கள்.
         
      மாமியார், “அந்த நகரத்துல டீ.வி-ல பாத்து, உடனே கிடைக்கிற நூடுல்ஸ், பர்கர்னு குழந்தைகள் விரும்புறாங்க. ஆனா, அதெல்லாம் உடம்புக்குக் கெடுதல். நம்ம தாத்தா, பாட்டி காலத்துல இருந்து சமைக்கிற பாராம்பரிய உணவு முறையிலதான் ஆரோக்கியம் இருக்கு. இட்லி, தோசை, கூழ், கஞ்சி, இந்த கீரைன்னு நம்ம வீட்டு உணவுகள் ஒவ்வொன்னும் உடம்புக்கு நல்லது. வெளியில கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டா சீக்கிரம் நோய் வரும். நம்ம பாரம்பரிய உணவுதான் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இதெல்லாம் நகரத்துல கிடைக்காதுடி, பார்த்துப் பத்திரமா வச்சுக்கோ. கொஞ்சம் அக்கம் பக்கத்துலயும் கொடு,” என்று அக்கறையுடன் அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்.
           
           “ஊரில் விளைஞ்சது, பேத்திக்கு மட்டும் இல்ல, அவளோட சுத்தி இருக்குறவங்களுக்கும் கொடுக்கணும்,” என்று ஆச்சி சொல்ல, அம்மா அதை ஆசையுடன் அனுப்பி வைப்பார். இந்த மூட்டையில் வரும் பொருட்களை வெறும் உணவுப் பொருட்களாக வேல்மதி ஒருபோதும் கருதியதில்லை. அவை அவளுடைய வேர்கள், அவளது குடும்பத்தின் வரலாறு, தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்த அன்பு.
         
        வேல்மதிக்கு இந்தப் பொருட்கள் வந்தடைந்ததும், ஒருவித மகிழ்ச்சி மனதில் பரவும். முதல் வேலையாக, தனது பக்கத்து வீட்டு ஐயங்கார் குடும்பத்திற்குப் பச்சரிசியும், வடகமும் எடுத்துச் செல்வாள்.
எதிர்த்த வீட்டு ஜெயலட்சுமி அக்காவுக்கு கீரைக்கட்டுகளைக் கொடுப்பாள். “அக்கா, எங்க கிராமத்துல இருந்து வந்தது. ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும்,” என்று சொல்ல, ஜெயலட்சுமி அக்கா மனம் உருகிப் போவாள். “வேல்மதி, உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பாக்குறது கஷ்டம்டி. எல்லாம் சுயநலம் பாக்குற காலம்,” என்று புகழ, வேல்மதி வெட்கத்துடன் சிரிப்பாள்.
         
            ஒருமுறை, சங்க இலக்கியத்தில் படித்த ஒரு பாடல் வேல்மதி நினைவுக்கு வந்தது. பெரும் பரிசு பெற்று வந்த ஒரு புலவன், தன் மனைவியிடம், “பெரிய புகழுடன் பெரும் பரிசுகளைப் பெற்று வந்திருக்கிறேன். இவை அனைத்தும் நமக்கே சொந்தமல்ல. இதை நமக்கு அளித்த மன்னன், நம் சுற்றத்தாருக்கும் இதைப் பங்கிட்டளிக்கவே அளித்திருக்கிறான். எனவே, பசித்தவர்களுக்கும், நம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுப்போம்,” என்று கூறியது போல, வேல்மதிக்குத் தனது கிராமத்து உறவுகளின் அன்பளிப்புகளும் தோன்றின. இது தனக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் அல்ல; தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு பெரும் கருணை என்பதை உணர்ந்திருந்தாள்.
         
          ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவள் கணவரின் அலுவலக நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர அவர்களை நல்லமுறையில் உபசரித்து, அவர்கள் புறப்படுகிற சமயத்தில், “எங்க மாமியார் கிராமத்துல இருந்து வற்றல், ஊறுகாய் அனுப்பியிருக்காக. கொஞ்சம்  தர்றேன், எல்லாரும் சாப்பிடுங்க,” என்றவாறு அவற்றை எடுத்து வர சமையலறை சென்றபோது, நண்பர் ஆச்சரியத்துடன் “இந்த நகர வாழ்க்கையில இதெல்லாம் எப்படிங்க? எவ்வளவு பெரிய மனசுங்க உங்க மனைவிக்கு?” என வினவு,
           
         “இந்தக் குணம் இவளுக்குப் புதுசா வரல. இவங்க பரம்பரை வழக்கமே அப்படித்தான். இவங்க பாட்டி, அம்மா, மாமியார்… அதான் எங்க அம்மா.. எல்லாரும் இப்படித்தான். அவங்க கிட்ட இருந்துதான் இந்தக் குணம் அவளுக்கு வந்திருக்கு” என்று சிரித்தவாறே பதிலளித்தார் வேல்மதியின் கணவன்.
அதற்குள் தான் எடுத்துவந்த பொருட்களை நண்பரின் மனைவியிடம் வேல்மதி கொடுக்க, “வாரத்தில் ஒருநாள்தான் விடுமுறை. அதில் ஏகப்பட்ட வேலை இருக்கும். அதற்கிடையில் எங்களையும் முகங்கோணாமல் உபரித்து, இதுவேறேயா”  என அவற்றை மனமகிழ்வுடன் வாங்கியவாறே  கேட்க, மெல்லிய புன்னகையுடன்,
“உணவுபரிமாறுதல் என்பது வெறும் பசியைப் போக்குறது மட்டுமில்ல. அது அன்பை, உறவைப் பகிரும் ஒரு சாதனம்.” என்று தன்னடக்கத்துடன் சொன்னாள்.
         
          இந்தமுறையும் வேல்மதி, தனது கிராமத்து வீட்டுப் பெரியவர்கள் கொடுத்தனுப்பிய கீரைக்கட்டுக்களிலிருந்து ஒரு பகுதியைத் தனது அலுவலக நண்பர்களுக்கும், காய்கறிகளில் ஒரு பகுதியைத் தனது வீட்டுப் பணியாளருக்கும் கொடுத்தாள். அந்த மாலையில், அவளது மனம் நிறைந்திருந்தது.
         
           அன்று மாலை,  பள்ளி சென்று திரும்பிய வேல் மதியின் பிள்ளைகள், கௌசிக்கும் நரேனும், அம்மாவைப் பார்த்து கேள்விக் கேட்க ஆரம்பித்தனர்.
”அம்மா, இத்தனை நிறைய காய்கறி, தானியங்கள் எல்லாம் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது தானே, ஏன் எல்லாருக்கும் கொடுக்கிறீங்க?” என்று நரேன் கேட்டான். அவன் கையில், அவன் அப்பத்தா அனுப்பியிருந்த எள்ளுருண்டை இருந்தது.
கௌசிக்கும் அவன் ஆச்சி அனுப்பியிருந்த மரப் பொம்மையைக் குலுக்கியவாறே,, “ஆமாம்மா, நம்ம வீட்லயே நாலு பேரு இருக்கும்போது, எதுக்கு நாம அடுத்தவங்களுக்குக் கொடுக்கணும்? மிச்சம் இருந்தா கொஞ்ச நாளைக்கு வைத்து சாப்பிடலாமில்லையா?” என்றான்.
அவர்கள் பார்வையில், பகிர்ந்து கொடுப்பது என்பது வீணாக்குவது போலத் தோன்றியது. வேல்மதி புன்னகைத்தாள்.
         
           “கண்ணா, நல்ல கேள்வி கேட்டீங்க. நாம எதுக்காக அடுத்தவங்களுக்குக் கொடுக்கிறோம் தெரியுமா? இது வெறும் உணவுப் பொருட்களைக் கொடுக்கிறது இல்லை. இது அன்பைக் கொடுக்கிறது. இன்னைக்கு நீங்க எள்ளுருண்டை சாப்பிடுறீங்க, பொம்மையோட விளையாடுறீங்க. ஆனா, ஒரு காலத்துல எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கிறது கஷ்டம். அப்போ, ஒரு வீட்டுல எதாவது விளைஞ்சா, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துதான் வாழ்ந்தாங்க.”
         
                அவள் தொடர்ந்தாள், “உங்க பாட்டிகள், கொள்ளுப்பாட்டி எல்லாரும் இப்படித்தான் வாழ்ந்தாங்க. அவங்ககிட்ட எதாவது ஒண்ணுன்னா, அதைத் தனக்கு மட்டும் வச்சுக்க மாட்டாங்க. அக்கம் பக்கத்துல, உறவினர்கள்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க. இங்க பாருங்க, கிராமத்துல விளையிற இந்தக் காய்கறிகளை எப்படி விளைவிக்கிறாங்க தெரியுமா? வற்றல், வடகம் எல்லாவற்றையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்றாங்க தெரியுமா? அதை நாம அனுபவிக்கிற மாதிரி, அடுத்தவங்களும் அனுபவிக்கணும்னு நினைக்கிறதுதான் மனிதாபிமானம்.”
                 “நம்ம ஆச்சி எப்பவுமே சொல்வாங்க, ‘பசியோட இருக்கிறவங்களுக்கு ஒரு கைப்பிடி சோறு கொடுத்தா, அது நூறு மடங்கு புண்ணியத்தைத் தரும்’னு. அதுமட்டுமில்ல, இப்படிப் பகிர்ந்து கொடுக்கும்போதுதான், நமக்கும் அடுத்தவங்களுக்கும் இடையில ஒரு பாசம் உருவாகும். கஷ்டம்னா உடனே ஓடி வருவாங்க. இது வெறும் பொருள் இல்லை, உறவு. நீங்க பாருங்க, பக்கத்து வீட்டு ஆன்டி நமக்கு எவ்வளவு உதவிகள் செய்றாங்க? நம்ம கஷ்டத்துல வந்து நிற்கிறாங்க. அதுக்குக் காரணம், நாம அவங்களுக்கு அன்புடன் சிலவற்றைக் கொடுக்கிறோம். அவர்களும் நமக்கு ஏதாவது தருகிறார்கள். இந்தச் சின்னச் சின்னப் பகிர்வுகள் தான் பெரிய பெரிய உறவுகளை உருவாக்கும்.”

          திடீரென்று கௌசிக் “அம்மா, போன மாசம் நான் காய்ச்சல் என்று ஸ்கூலில் இருந்து சீக்கிரம் வந்தப்போ, பக்கத்து வீட்டு ஆன்டி வந்து எனக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாங்க இல்லையா? அதுக்கு நாம கொடுத்த காய்கறிகள் தான் காரணமா?” என்று கேட்டாள்.
வேல்மதி புன்னகைத்தாள். “அதுமட்டுமே காரணம் இல்லை கண்ணா. அன்புடன் ஒன்றைப் பகிர்ந்து கொடுக்கும்போது, அது பல மடங்கு பெருகித் திரும்பி வரும். இது ஒரு மாயசக்தி மாதிரி. நம்ம முன்னோர்கள் இதைத்தான் புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நீங்க இந்த நகரத்துல இருந்தாலும், இந்தக் கிராமத்து மனசு நமக்குள்ள இருக்கணும். கிராமத்திலிருந்து வரும் இந்த உணவுகள் மட்டும் இல்லை, நம்மிடம் இருக்கும் எதையுமே, நம்மால் முடிந்த உதவிகளை கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்ய வேண்டும். அது ஒரு நல்ல பழக்கம்.”
  
        நரேனும் கௌசிக்கும் அம்மாவின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டனர். அவர்கள் கண்களில் ஒரு புதிய புரிதல் தோன்றியது. அம்மாவின் மனம் அவர்களுக்குப் புரிந்தது.
 நரேன் மெதுவாகச் சொன்னான், “அப்போ, நாங்களும் இனிமே எங்களுக்குக் கிடைச்ச எதையும் தனியா வச்சுக்காம, மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும் இல்லையா?  தின்பண்டங்கள், பொம்மைகள் எல்லாமே?” என்று கேட்டான்.
         
         கௌசிக் தலையாட்டினான் “ஆமாம்மா, நாங்களும் உங்கள மாதிரி, பாட்டிகள் மாதிரி, அடுத்தவங்களுக்குக் கொடுத்து வாழணும். எங்ககிட்ட இருக்கிறதை மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும். இந்த அன்பு மாயத்தை நாங்களும் கத்துக்கணும். கிராமத்துல இருந்து வர்ற பொருட்கள் மட்டுமில்ல, எங்ககிட்ட இருக்குற எந்த விஷயமா இருந்தாலும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவ நாங்க தயாரா இருப்போம்.”
         
         வேல்மதிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவளது கண்கள் கலங்கின. ஐந்தாவது தலைமுறைக்கும் இந்த மரபு தொடரும் என்ற நம்பிக்கை, இன்று அவளது பிள்ளைகள் வாயிலாகவே உறுதிப்படுத்தப்பட்டது. வெறும் உணவுப் பொருட்களைப் பகிர்வது மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் பகிரும் இந்த அரிய பாடத்தையும், ஆரோக்கியமான பாரம்பரிய வாழ்க்கை முறையையும், கஷ்டப்படும்போது உதவி செய்யும் மனப்பான்மையையும், தனது பிள்ளைகள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள முடிவெடுத்தது அவளுக்குப் பெருமையாய் இருந்தது.
         
         கிராமத்தின் மண் வாசனையும், உறவுகளின் பாசமும், சங்க இலக்கியத்தின் பகிர்வு மனப்பான்மையும், தன் வாழ்க்கைப் போராட்ட அனுபவமும், பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவமும் வேல்மதியின் வாழ்க்கையை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன. இந்த வாழ்க்கை நெறி, மரபுச் சங்கிலி தனது பிள்ளைகள் மூலம் அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும் என்ற உறுதியுடன், வேல்மதி படுக்கையறையின் ஐன்னல் வழியே சென்னையின் இரவு விளக்குகளைப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்,

 உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,

குரோம்பேட்டை, சென்னை 44.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »